Jump to content

குழந்தை வளர்ப்பு ஆரோக்கியமான கட்டுரைகள்


Recommended Posts

குழந்தை அதிகம் அழுவது ஏன்?

Child_cry_2258673f.jpg

 

குழந்தை வளர்ப்பில், கைக்குழந்தையைக் கையாள்வது ஒவ்வொரு தாய்க்கும் சவாலான விஷயம்தான். அதிலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம்.
 
கைக்குழந்தையைப் பொறுத்தவரை ‘அழுகை’என்பது ஒரு மொழி. தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு. இந்தக் கால அளவு அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால், அதைக் கவனிக்க வேண்டும்.
 
பசிக்கு அழும் குழந்தை!
 
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும்.
 
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.
 
பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும்.
 
பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.
 
ஆடைகளில் கவனம்!
 
அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். பருத்தி நூலில் தயாரிக்கப்பட்ட `டயபரு’க்குப் பதிலாக, நாகரிகம் என்ற பெயரில் இப்போது செயற்கை இழையில் தயாரிக்கப்பட்ட `டயபரை’த்தான் குழந்தைக்குப் பெரும்பாலும் அணிவிக்கிறார்கள்.
 
அதிலும் `டயபர்’ என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.
 
பூச்சி கடித்தால்?
 
தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும். புட்டிப்பாலில் சர்க்கரை கலந்து குழந்தைக்குக் கொடுக்கும்போது, அதில் சில சொட்டுகள் வாய் ஓரத்தில் ஒழுகியிருக்கும். சர்க்கரை வாசனைக்கு வரும் எறும்பு கடித்துவிடும். அப்போது குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டுச் சிவந்த தடிப்புகள் ஏற்படலாம்.
 
சில நேரம், ஒவ்வாமை குழந்தையின் குரல் நாணையும் தாக்கியிருந்தால், சருமத் தடிப்புகளோடு சரியாக மூச்சுவிட முடியாமல் குழந்தை அழும். அப்போது குழந்தையின் குரலும் மாறுபட்டிருக்கும்.
 
வயிற்று வலி – காது வலி
 
குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
 
குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.
 
சில வேளை குழந்தைக்குக் குடல் சொருகிக்கொள்ளும். இதனால் குழந்தைக்கு வயிறு வீங்கி, வலி தாங்க முடியாமல் தொடர்ந்து அழும். அப்போது மலத்தில் ரத்தம் போகும். கூடவே வாந்தியும் வரும். உணவு ஒவ்வாமை காரணமாகவும் வயிற்றில் வலி வந்து குழந்தை அழும்.
 
காதின் உட்பகுதியில் செவிப்பறைக்குப் பின்னால் சீழ் இருக்கும்போது குழந்தைக்குக் காது வலிக்கும். அப்போது காதுப் பகுதியைத் தொட்டால், அதிகமாக அழும். செவிப்பறையில் சீழின் அழுத்தம் அதிகமாகி அதில் துளை விழுந்து, வெளிக்காதின் வழியாகச் சீழ் வடிந்துவிட்டது என்றால், காது வலி குறைந்துவிடும். இதன் பிறகு குழந்தை அழாது.
 
சளி, ஜலதோஷம், வயிற்றுப்போக்கு
 
சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும். இந்த மாதிரி நேரங்களில் குழந்தை பால் குடிக்காது; தொடர்ந்து அழுவது, வீறிட்டு அழுவது, உடலை முறுக்கி அழுவது என்று அழுகைச் சத்தம் வேறுபடும்.
 
வயிற்றுப்போக்கு காரணமாகக் குழந்தைக்கு வயிற்றில் வலி வந்து அழும் அல்லது உடலில் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறி, தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு அழுவது வழக்கம். மருத்துவரைப் பார்ப்பதற்குள் சிறிது உப்புச் சர்க்கரைக் கரைசலைத் தண்ணீரில் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால், அழுகை நின்றுவிடும்.
 
குழந்தைக்குக் குளிர் அடித்தாலும் அழும். புழுக்கமாக இருந்து உடல் வியர்த்தாலும் அழும். வாஷிங் மெஷின், வாக்குவம் கிளீனர், ஹேர் டிரையர் போன்றவற்றின் சத்தம் பிடிக்காமல் குழந்தை அழலாம். இந்தப் பிரச்சினைகளைச் சரி செய்தால் மட்டுமே குழந்தையின் அழுகை நிற்கும்.
 
பால் பற்கள் ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கும்போது குழந்தை அழும். சில மருந்துகளின் பக்க விளைவால் வயிற்றைப் புரட்டும்; வாந்தி வருவது போலிருக்கும். இதனாலும் குழந்தை அழலாம்.
 
தூக்கும்போது கவனம்!
 
ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தையின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்துத்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்படும். அப்போது தொடர்ச்சியாக அழும். இதற்குச் சுளுக்கு எடுக்கிறேன் என்று சுய மருத்துவம் செய்யக் கூடாது. உரிய மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும்.
 
களைப்பும் உறக்கமும்
 
குழந்தை தொடர்ச்சியாக அழுவதற்குக் களைப்பு ஒரு முக்கியக் காரணம். எந்த நேரமும் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொஞ்சுவது, விளையாடுவது, தொட்டிலில் போட்டு ஆட்டுவது, உறவினர் படையெடுப்பு போன்றவற்றால் குழந்தை களைத்துவிடும். இதனாலும் அழும். இந்தப் பழக்கங்களைக் குறைத்துக்கொண்டால் குழந்தை அழுவதும் குறையும்.
 
குழந்தைகளுக்குப் பொழுதுபோகாதபோது, தனியாக இருக்கும்போது, விளையாடத் துணை கிடைக்காதபோது, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று நினைக்கும்போது… இப்படிப் பல சந்தர்ப்பங்களில் குழந்தைகள் அழும். அப்போது குழந்தையைக் கைகளில் தூக்கி வைத்துக்கொண்டாலேயே அழுகையை நிறுத்திவிடும். அல்லது, குழந்தையுடன் பேசி, சேர்ந்து விளையாடி, சிரிப்பூட்டினால் அழுகை நிற்கும்.
 
பொம்மை, பந்து என்று வயதுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களைக் கையில் கொடுத்துவிட்டால் குழந்தை அழுவதை நிறுத்திவிடும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால் சிறிது நேரம் காரில்/இரண்டு சக்கர வாகனத்தில் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லலாம்.
 
குழந்தைக்கு உறக்கம் வந்தால்கூட, சிறிது நேரம் அழும். அப்போது தாலாட்டுப் பாடி உறங்க வைப்பதுதான் ஒரே தீர்வு. ஆனால், இன்றைக்கு எத்தனை இளம் தாய்மாருக்குத் தாலாட்டுப் பாடத் தெரியும்? இதற்கும் ஒரு வழி இருக்கிறது. செல்போனில் தாலாட்டுப் பாடல்களைப் பதிந்துகொண்டு, இம்மாதிரி நேரங்களில் போட்டுவிட்டால், அதைக் கேட்டுக்கொண்டே குழந்தை உறங்கிவிடும்.
 
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர். 
தொடர்புக்கு: gganesan95@gmail.com

 

ganesan_2251157a.jpg
 
 
Link to comment
Share on other sites

குழந்தைகளே கற்றுக்கொள்வார்கள்

 

kulanthai_2264015f.jpg

 

மாற்றுப் பள்ளிகளும் மாற்றுக் கல்வியும் குழந்தைகளின் கற்றல் திறனை எந்த அளவுக்கு மேம்படுத்துகின்றன?

 
இன்றைய மாற்றுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சிரமப்படுத்தாமல், அவமானப்படுத்தாமல், அன்புடன் விளையாட்டு மூலம் பாடங்களைச் சொல்லிக்கொடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் விளையாட்டு என்று சொல்வதையே நான் கேள்விக்கு உட்படுத்துகிறேன். தனியாகவோ கூட்டாகவோ குழந்தைகள் தாங்களாகவே விளையாட்டுகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள். இந்தச் சொந்த மான விளையாட்டுகள்தான் உண்மையிலேயே தங்கள் அறிவை முழுமையாக வளர்க்க உதவும் என்பது எனது கருத்து. கடந்த ஐந்தாண்டுகளாக எனது மகள் தானாகவும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்தும் (பெரியவர்களின் எந்தவிதமான தலையீடுமின்றி) கற்பனை செய்து, உருவாக்கி, விளையாடுவதை மிகுந்த ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்துவருகிறேன். இதில் ஒரு விளையாட்டைப் பார்ப்போம்.
 
சட்டையைத் தொங்க விடும் ஹாங்கர்களை ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களாகக் கற்பனை செய்துகொள்வாள். அப்பா - அக்கா, அம்மா - பாப்பா என்று கைகோக்கச்செய்து எங்கோ இழுத்துக்கொண்டு போவாள். அந்தப் புதிய இடத்தில், அவர்களைக் கொண்டு ஒரு புதிய கதை உருவாகும். இப்படித் தினம் தினம் தன்னிச்சையாக உருவாகும் புதிய விளையாட்டுகளின் மூலம், புதிய விஷயங்களைத் தோண்டித்துருவிக் கற்றுக்கொள்வாள். இதில் வீட்டில் கிடக்கும் தட்டு, கரண்டி, குச்சி, தொப்பி, தலையணை, புட்டிகள் அனைத்துமே வெவ்வேறு பொருட்களாகவும் மனிதர்களாகவும் மிருகங்களாகவும் மரங்களாகவும் மாறும். நம்மில் யாராவது இவ்வகையான கற்பனையைச் செய்ய முடியுமா? நாம் எப்படி இவர்களின் மனங்களை அறிந்துகொண்டு இவர்களுக்கான பொம்மைகளையும் விளையாட்டுகளையும் உருவாக்க முடியும் என்று எண்ணுகிறோம்?
 
இன்றைய பெரியவர்களுக்கு விளையாட்டைப் பற்றி இருக்கும் புரிதல் கவலைக்குரியது! விளையாட்டு என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு அர்த்தமற்ற செயல் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில், குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தேவையானதை விளையாட்டு மட்டுமே பெரிய அளவில் செய்துகொடுக்கிறது.
 
சுதந்திரம் எதுவரை?
 
சில மாற்றுப் பள்ளிகளில் “உங்கள் சொந்த வரிகளில் சரியான விடையளிக்கலாம்.” “ஆசிரியர் நடத்தும் பாடம் பிடிக்கவில்லை என்றால், அமைதியாக வெளியில் சென்று ஒரு நடை சென்று வரலாம். ஆனால், திரும்பி வந்து பாடங்களைக் கவனிக்க வேண்டும்” என்பன போன்ற சலுகைகளையெல்லாம் சுதந்திரம் என்னும் பெயரில் கொடுப்பார்களாம். “இந்தக் கேள்வியே எனக்குத் தவறாகத் தோன்றுகிறதே!” அல்லது “எனக்கு இந்தப் பாடத்தில் சுத்தமாக ஆர்வமே இல்லை! மாறாக, அதோ அங்கே இரும்புக் கதவை வெல்டிங் செய்துகொண்டிருப்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது! அது எப்படி இரண்டு இரும்புத் துண்டுகளை ஒன்றோடொன்று ஒட்ட வைக்கிறார்கள்?” என்பன போன்ற அவர்களது சொந்த எண்ணங்கள், விருப்பங்கள், கேள்விகளையெல்லாம் சகித்துக்கொள்ளும் பள்ளிக்கூடங்களை நான் ஒன்றிரண்டே கண்டிருக்கிறேன்! பத்து வயது வரை இவற்றுக்கு ஓரளவு இடம்கொடுத்தாலும் அதன் பிறகு இழுத்துப் பிடித்து ஓட்டப் பந்தயத்தில் ஓட வைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதட்டாமல், மிரட்டாமல் செல்லமாகப் பேசியே!
 
உயர்ந்த லட்சியங்களுடன் தொடங்கப்படும் பள்ளிகள்கூட “என்ன செய்வது? பெற்றோர்கள் இதைத் தானே கேட்கிறார்கள்!' என்று கூறி, நுகர்வோரின் தேவைக்கேற்பத் தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன.
 
கல்வி என்பது என்ன?
 
இன்று பள்ளிகள் சிறப்பாகச் செய்வதெல்லாம் முதலாளித்துவத் தொழிற்சாலைகளில் வெவ்வேறு மட்டங்களுக்கான தொழில் வல்லுநர்களையும் தொழிலாளர்களையும் தரம் பிரித்துப் பயிற்றுவித்துக் கொடுக்கும் வேலையைத்தான். இந்த வேலை ‘ப்ரி-கேஜி’ நேர்முகத் தேர்விலேயே தொடங்கிவிடுகிறது. இப்படித் தொழில்மயமான சமுதாயத்துக்குத் தேவையான செயல் திறனை வளர்க்கும் பயிற்சியைத்தான் நாம் ‘கல்வி’ என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் உண்மையில், கற்றல் என்பது எவ்வாறு நிகழ்கிறது?
 
ஒவ்வொரு ஜீவனும் அத்தனை அறிவையும் உள்ளடக்கியபடிதான் உருவாகின்றது. ஆனால், இந்த அறிவை உணர்வதற்கு அதன் மேல் படிந்திருக்கும் பல அடுக்குகளாலான தேவையற்ற விஷயங்களைக் களைந்தெறிய வேண்டும். இப்படிப்பட்ட உணர்தலே உண்மையான கற்றல் ஆகும். ஆங்கிலத்தில் இதை “ஆஹா! தருணம்” என்பார்கள். இதை ஒருவகையான நிகழ்வு எனலாம். இந்த நிகழ்வுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமே நம்மால் செய்ய முடியும். கற்றலைச் செய்விக்க முடியாது. அது தானாக நிகழ வேண்டும். மண்ணை வளப்படுத்தி விதையை விதைக்கத்தான் முடியும். அது முளை விட்டு வளர்வது அதன் கையில் உள்ளதல்லவா? அதுபோல, உண்மையான கற்றல் அவரவரின் சுயமான தேடல் முயற்சியால்தான் நிகழும். சுயமான கேள்விகளுக்கு, அனுபவபூர்வமாகவும், உள்ளுணர்வின் வழிகாட்டுதலாலும் சுயமான பதில்களையும் பாதைகளையும் கண்டறிய வேண்டும். அந்தப் பதில்கள் மற்றவர்களைப் பொறுத்தவரையில் தவறானதாக இருந்தாலும், அதை உணர்ந்து ஏற்றுத் திருத்திக் கொள்வதும் சுயமுயற்சியாலேயே நடைபெற வேண்டும்.
 
ஆனால், மாற்றுப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் என்ன நடக்கிறது? ‘தங்கள் சொந்த வரிகளில் ஓரளவுக்குத் தங்கள் சொந்த பதில்களை’எழுத ஊக்குவிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், யாருடைய கேள்விகளையோ அவர்கள் மேல் திணிக்கும் வரை, இந்தக் கற்றல் எப்படி உண்மையான கற்றலாக இருக்க முடியும்? ஆங்கிலமும் கணிதமும் வாரத்தில் எல்லா நாட்களும் பயில வேண்டும். நடனம், கைவேலை, விளையாட்டு, சமையல், தோட்டக்கலை போன்றவற்றை வாரத்தில் சில நாட்கள் செய்தால் போதும் என்பது போன்ற முடிவுகளெல்லாம் குழந்தைகள் சார்பாக எடுப்பதற்கு நமக்கு இருக்கும் தகுதி என்ன? நமது இன்றைய தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தில், அது ‘வெற்றி’என்று வரையறை செய்வதை அடையத் தேவையான ‘ஆங்கிலம், கணிதம், நவீன அறிவியல்’ ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதை, நான் எல்லா மாற்றுப் பள்ளிகளிலும் பார்க்கிறேன்.
 
சுயமாகக் கற்றுக்கொள்ளுதல்
 
எல்லா விஷயங்களையும் ஒவ்வொரு குழந்தையும், சுயமாகக் கேள்வி கேட்டுத் தானாகவே கற்றுக் கொள்ள வேண்டுமா? ஏற்கெனவே நன்கறிந்த விஷயங் களை முதிர்ந்த தலைமுறையினர் இளைய தலைமுறை யினருக்குக் கைமாற்றிக்கொடுப்பதற்கு இந்தக் கல்வி முறையில் இடமில்லையா என்கிற கேள்வி எழலாம். அதை ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்தித்து, கேள்விக்கு உட்படுத்தி அந்த உண்மையை உணர்ந்தால் மட்டுமே அதைக் கற்றல் என்று சொல்ல முடியும். அதுவரையில், எத்தனை ஆழ்ந்த உண்மையாக இருந்தாலும், அது மூளையில் தேக்கி வைத்திருக்கும் ஒரு தகவல் மட்டுமே. இந்த செயல்முறையில் சில விஷயங்கள் சரியென்று தோன்றவில்லை என்றால், அவற்றைத் தற்காலிகமாக நிராகரிப்பதற்கும்கூட இடமுண்டு. மற்றவர்கள் சொல்வதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும்போதுதான் பல குழப்பங்கள் எழுகின்றன. இதை லெபனீய தத்துவவாதி கலீல் ஜிப்ரான் எத்தனை அழகாக விளக்கியுள்ளார்!
 
“உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர, உங்கள் சிந்தனையை வழங் காதீர்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் சொந்த சிந்தனையைக் கொண்டவர்கள். அவர்களுடைய தேகங் களுக்கு ஒரு இல்லத்தை வழங்கலாம். அவர்கள் ஆன்மாக்களுக்கல்ல. ஏனெனில், அவர்களின் ஆன்மா, கற்பனையிலும் பிரவேசிக்க முடியாத எதிர்காலம் எனும் வீட்டில் வசிக்கிறது. நீங்கள் அவர்களைப் போன்று இருக்க முயலலாம். ஆனால், உங்களைப் போன்று அவர்களை ஆக்க முயற்சிக்காதீர்கள்.”
 
எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று உள்ளது. நாம் மேற்கொள்ளும் எல்லாக் கல்வியும் நமது வாழ்க்கை நோக்கத்தைப் பூர்த்திசெய்யுமாறுதான் அமைய வேண்டும். “குழந்தை வளர்ப்பு ஒரு வழிபாட்டைப் போன்றது” என்றார் விவேகானந்தர். இதை உணர்ந்து, தங்களது சொந்த வாழ்க்கைத் தேடலில் தீவிரமாக இருக்கும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் மட்டுமே மாற்றுக் கல்வியைப் பற்றிய சிந்தனையிலும் செயல்பாட்டிலும் உண்மையாக ஈடுபட முடியும்.
 
- சங்கீதா ஸ்ரீராம், சமூக ஆர்வலர், ‘பசுமைப் புரட்சியின் கதை’ என்ற நூலின் ஆசிரியர்,
 
தொடர்புக்கு: sriram.sangeetha@gmail.com
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
குழந்தைகளைத் தாராளமாகப் பாராட்டுங்கள்

child1_2285546f.jpg

 
புத்திசாலித்தனமும் கல்வித் திறனும் குழந்தைகளுக்குக் கிடைப்பதற்கு எது காரணம்?
 
“அப்பா, நான் முதல் ரேங்க் வாங்கிவிட்டேன்!” என்று ஒரு பிள்ளை பெருமையுடன் தன் மதிப்பெண் சான்றிதழைத் தந்தையிடம் காட்டுகிறான். “அதிலென்ன ஆச்சரியம், நீ என் பிள்ளை ஆச்சே!” என்று தகப்பனார் நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறார்.
 
அடுத்து அம்மா, தான் தினமும் பிள்ளைக்குக் கரைத்துக் கொடுக்கும் ஓர் ஆரோக்கிய பானத்தின் ஜாடியை விஷமச் சிரிப்புடன் உயர்த்திக் காட்டுகிறார். இந்த விளம்பரத்தை அடிக்கடி எல்லாத் தொலைக்காட்சிகளிலும் பார்த்திருக்கிறோம்.
 
தனது பரம்பரையின் புத்திசாலித்தனமும் கல்வித் திறமையும் தனது பிள்ளைக்கும் வந்திருக்கிறது என்கிறார் அப்பா. தான் அவனுக்கு ஊட்டச்சத்துகளை ஊட்டி வளர்த்ததால்தான் அவன் படிப்பில் சிறந்து விளங்குகிறான் என்று அறிவிக்கிறார் அம்மா. யார் சொல்வது சரி?
 
சில நூறு மாணவர்களின் ‘ஐ.க்யூ’ எனப்படும் புத்திக் கூர்மையை அளவிட்டதுடன், அவர்களுடைய குடும்பச் சூழ்நிலை மற்றும் முன்னோர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களையும் திரட்டி ஆராய்ந்து, ஒரு மாணவரின் கல்வித் திறன் எந்த விதமான காரணிகளைப் பொறுத்திருக்கிறது என ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வர்கள் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அண்மையில் ஒரு முதல்கட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.
 
ஐ.க்யூ வளர்ச்சியின் காரணங்கள்
 
மரபியல் காரணிகளுடன் சுற்றுச்சூழல், உடல் ஆரோக்கியத் தரம், போஷாக்கு, வளர்ப்பு ஆகியவையும் பிள்ளையின் ஐ.க்யூவை வளர்ப்பதில் பங்குவகிக்கின்றன. மரபியல் கூறுகளுடன் பெற்றோரின் நடவடிக்கைகளும் ஐ.க்யூ அபிவிருத்தியில் பங்களிக்கின்றன. குறிப்பாக, சிசுக்களின் மூளை உருவாகும் காலகட்டத்தில் அவை ஐ.க்யூவை வளர்க்கும் மூளையின் சுற்றுகள் உருவாக உதவுகின்றன. அதன் நற்பயன்களைச் சிசுப் பிராயத்திலேயே காண முடியும்.
 
ஆய்வுக்குட்பட்ட சிறார்களில் வறிய குடும்பத்தினரும் இருந்தனர். அவ்வாறான சில குடும்பங்களில் மூத்தவர்கள் அன்புடன் பழகிக் கதை சொல்லவும் அரட்டையடிக்கவும் செய்தனர். விடுகதைகளும் விளையாட்டுகளும் என்று பொழுது கழிந்தது. வேறு சில வறிய குடும்பங்களில் சோற்றுக்குப் பஞ்சம் இல்லாதிருந்தபோதிலும் பெரியவர்களின் அன்பும் அரவணைப்பும் இல்லை.
 
இவர்களில் முதல் வகையினரின் ஐ.க்யூ. கூடுதலாக இருந்தது. பள்ளிப் படிப்பை முடித்தபோது மொழிப் பயன்பாட்டிலும் கணிதத்திலும் அவர்கள் மேம்பட்டிருந்தனர். சிசுப் பருவத்தின் ஆரம்பகால அனுபவங்கள் ஐ.க்யூவை மேம்படுத்துவது மெய்ப்பட்டது.
 
பிறந்த சிசுவின் மூளையில் பல நூறு கோடி செல்களும் நியூரான் இணைப்புகளும் உள்ளன. கருப்பை வாசத்தின்போதே சுவாசம், இதயத் துடிப்பு போன்ற ஜீவாதாரச் செயல்களுக்கான நியூரான் இணைப்புகள் தோன்றிவிடும். பிரசவிக்கப்பட்ட பின், அது அனுபவிக்கும் ஒலி, ஒளி, தொடுதல்கள் போன்ற புலனுணர்வுகள் கூடுதலான நியூரான் இணைப்புகளை உண்டாக்கும்.
 
சிசு வளர வளர மூளை செல்கள் உடலின் பிற செல்களுடன் இணைப்புகளை வளர்த்துக்கொள்கின்றன. அவையே அதன் நடவடிக்கைகளை நிர்ணயிக்கின்றன. உதாரணமாக, கண்ணின் பார்வை நரம்பு மூலம் வரும் மின் சமிக்ஞைகளைப் பார்வைப் புறணி புரிந்துகொண்டு மற்ற இணைப்புகள் மூலம் பிற உறுப்புகளுக்குத் தேவைக்கேற்றபடி இயங்க ஆணை அனுப்புகிறது. ஒரு குறிப்பிட்ட அனுபவம் திரும்பத் திரும்ப ஏற்படும்போது அத்தகைய இணைப்புப் பாலங்கள் வலுப்பெறு கின்றன.
 
இரண்டு வயது முடிவதற்குள் மூளையில் மூன்று லட்சம் கோடி நியூரான் இணைப்புகள் உருவாகிவிடுகின்றன. இணைப்பு ஏற்படாத அல்லது பயன்படாத செல்களும் நரம்பு இணைப்புகளும் அழிந்துபோகும்.
 
வாய்ப்பு வாசல்
 
வாழ்க்கை அனுபவங்களுக்கு மூளை பழகுவது ஒரு கால அட்டவணையின் பிரகாரம் நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட இணைப்பு ஒரு காலகட்டத்தில்தான் ஏற்படும். அதை வாய்ப்பு வாசல் என்பார்கள். பார்வைக்குப் பழகும் செல்கள் முதல் ஆறு மாதங்களில் வேகமாகப் பெருகி, எட்டு மாதத்தில் பிற செல்களுடன் 15,000 கோடி இணைப்புகளைப் பெற்றுவிடும். அது முடிந்ததும் வாசல் மூடிக்கொள்கிறது.
 
ஒரு வாய்ப்பு வாசல் காலகட்டத்தைத் தவறவிட்டு விட்டால்கூடக் கவலையில்லை. குழந்தைப் பருவம் முழுவதுமே ஏராளமான வாய்ப்புகள் கிட்டும். மூன்று முதல் பத்து வயது வரை குழந்தைகளின் மூளை பெரியவர்களுடையதைப் போல இரு மடங்கு ஆற்றலைச் செலவழிக்கிறது. அதில் பெரியவர்களுக்கு இருப்பதைவிடப் பன்மடங்கு அதிக இணைப்புகள் இருப்பதே அதற்குக் காரணம். இதன் காரணமாகச் சிறுவர்கள் புதிய திறமைகளை எளிதாகக் கையகப்படுத்துவார்கள். புதிய மொழிகளைக் கற்பதிலும் சிறுவர்கள் பெரியவர்களைவிட மேம்படுகிறார்கள்.
 
ஐந்து வயதுக்கு மேல்தான் குழந்தைகளின் விரல்களுக்குப் பென்சில் அல்லது பேனா இயக்கும் லாவகம் வரும். அதுவரை வீட்டிலோ, மழலையர் பள்ளியிலோ விளையாட்டு மற்றும் கதை, பாட்டு போன்றவற்றின் மூலம் ஐ.க்யூவை வளர்க்க முயல வேண்டுமே தவிர, கணக்குப் போடவும், பாடம் எழுதவும் பலவந்தப்படுத்தக் கூடாது. படங்களைக் காட்டி விவரிப்பது நல்லது.
 
குழந்தை முதன்முதலாகத் தலையைத் தூக்குவது, தவழ்வது, நடப்பது போன்றவையெல்லாம் வாய்ப்பு வாசல்கள் ஆகும். ஒன்றரை மாதக் குழந்தையால் 20 சென்டிமீ்ட்டர் தொலைவில் உள்ள பொருட்களைத்தான் தெளிவாகப் பார்க்க முடியும். பெற்றோர் அந்தத் தொலைவில் தமது முகங்களை வைத்துக் கொஞ்சினால், அவை மூளை இணைப்புகளில் ஒரு பழகிப்போகும் பதிவை உண்டாக்கும். பரிச்சயமானது, புதியது, ஒரே மாதிரியானது, வேறுபட்டது எனப் பிம்பங்களை வகைப்படுத்தும் திறன் பெருகும். வடிவங்களையும் நிறங்களையும் பிரித்தறியும் திறன் வரும். பிறந்த நாளில் இருந்தே சிசுவுடன் ஏதாவது பேசிக்கொண்டேயிருந்தால், அதன் மொழித்திறன் வளரும். அவ்வாறான வீடுகளில் மூன்று வயதுக்குள்ளாகவே குழந்தைகள் தொடர் வாக்கியங்களாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். மனக்கணக்குகளில் அதிகத் திறமை ஏற்படும்.
 
தாலாட்டுகள் அவசியம்
 
மூளை வளர்ச்சியில் தாலாட்டுகள் பெரிதும் உதவும். இடம் மற்றும் தர்க்க அறிவை இசை வளர்க்கிறது. சிறு வயதிலிருந்து முறையாக இசை பயில்பவர்கள் புதிர்களை விடுவிப்பதிலும் ஜிக்சா படங்களை இணைப்பதிலும் பிறரை விட அதிக வேகமும் திறமையும் பெற்றிருக்கின்றனர். கணிதம் பயிலும்போதும் இசை பயிலும்போதும் மூளை செல்கள் ஒரே மாதிரியாக இயங்குகின்றன. எனவே, இசை பயிலும் குழந்தைகள் கணிதத்திலும் மேம்பட்டிருப்பார்கள்.
 
பாராட்டு, குழந்தையின் மனதுக்கு உரம். பாராட்டினால் அது மகிழும்போது அறிவு மையமான மூளைப் புறணிக்கும் உணர்வு மையமான நடு மூளைக்கும் இடையிலான இணைப்புகள் வலுப்பெறுகின்றன. இவை எட்டாவது முதல் பதினெட்டாவது மாதம் வரையிலான காலகட்ட வாசலில் உருவாகும். பாராட்டுகளால் குழந்தை குதூகலிக்கிறபோது, மூளையில் வேதிகள் பெருகி அவ்விணைப்புகளை வலுப்படுத்தும். குழந்தைகளைப் பாராட்டாமல் போனால், அந்த இணைப்புகள் வலுக்குன்றிப் புதிய சாதனைகளைப் படைக்கும் ஆர்வம் மங்கிவிடும். குழந்தை முதன்முதலாக எழுந்து நிற்கும்போது ‘பலே பலே’ என்று கைதட்டிச் சிரிப்பதும், கொஞ்சுவதும் கூடப் பாராட்டுதான்.
 
பதின்வயதுகளில் உணர்ச்சி தொடர்பான நரம்பிணைப்புகள் அதிகரிக்கும். அப்போது பெற்றோர் கூடுதலான கவனத்துடன் இருக்க வேண்டும். பாலுணர்வுகள் தலைதூக்கும் அந்த காலகட்டங்களில் கண்காணிப்பும் கலந்துரையாடலும் வழிகாட்டலும் விபத்துகளைத் தவிர்க்கும்.
 
பள்ளிப் பாடத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுவது வேறு. ஐ.க்யூ. எனப்படும் கூர் அறிவு வேறு. பள்ளிப் படிப்பு ஏறாத பலர், கூர் அறிவினால் சாதனை படைத்திருக்கின்றனர். சம வயதினரின் சகவாசம், குடும்பச் சூழல், மூத்தோர் ஆதரவு போன்றவை கூர் அறிவையும் மனப் போக்குகளையும் பண்படுத்த உதவும்.
 
பெற்றோரால் குழந்தையை மாமேதையாக்க முடியாமல் போகலாம். ஆனால், அந்த இலக்கை நோக்கிக் குழந்தையைச் செலுத்துவதில் அவர்களுடைய பங்கு முதன்மையானது.
 
கே.என். ராமசந்திரன்,
 
அறிவியல் கட்டுரையாளர்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பெற்றோரின் கனவுகளை சுமப்பவர்களா பிள்ளைகள்?

 

hi1_2299639f.jpg

 

பிளஸ் 2 தேர்வுகள் நெருங்கி வருகின்றன. அதற்கு முன்னதாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எளிமையாக ஒரு தேர்வு...
 
உங்கள் குழந்தைக்கு பிடித்த உணவு எது?
 
பிடித்த உடை எது?
 
பிடித்த விளையாட்டு எது?
 
பிடித்த பாடம் எது?
 
பிடித்தமான ஆசிரியர் யார்?
 
உங்கள் குழந்தை என்னவாக விரும்புகிறார்?
 
மேற்கண்ட ஆறு கேள்விகளில் ஐந்து கேள்விக்கு பதில் தெரியும் எனில் நீங்கள் தேர்ச்சி அடைந்துவிட்டீர்கள். தேர்ச்சி அடையவில்லையா? ஒன்றும் பிரச்சினை இல்லை. இப்போதுகூட உங்கள் குழந்தையிடம் கேட்டு அறிந்துகொண்டு தேர்ச்சி பெறுங்கள்.
 
சரி, விஷயத்துக்கு வருவோம். வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் உங்கள் மகன்/மகள் பெறும் மதிப்பெண் களுக்கான பொறுப்பு அவர்களுக்கானது மட்டும் அல்ல... அது ஆசிரியர்களுக்கு நிகராக உங்களையும் சார்ந்தே உள்ளது. இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொண்டுள்ள ஒவ்வொரு வீடும் பரபரப்பு களமாக மாறியுள்ளது. தேர்வைச் சுற்றியே பெற்றோர், குழந்தைகளின் கவனம் சுழன்று கொண் டிருக்கும் தருணம் இது. இப்போது நிதானமாக பெற்றோர்கள் யோசித்து, ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.
 
இந்த போட்டியில் மூன்று தரப்பிலி ருந்து உங்கள் குழந்தை அழுத்தங்களை எதிர்கொள்கிறது. 1. பெற்றோர் 2. பள்ளி நிர்வாகம் 3. சமூகம். உங்கள் குழந் தையின் பலம், பலவீனம், எதிர்பார்ப்பு, கோபம், ஆனந்தம், ஆத்திரம் உள்ளிட்ட சகல குணங்களை அறிந்து ஏற்றுக் கொண்டிருக்கும் பெற்றோரால் மட்டுமே மேற்கண்ட மன அழுத்தத்தை நேர்மறை மன அழுத்தமாக, ஆரோக்கியமான மன அழுத்தமாக உங்கள் குழந்தையின் மீது செலுத்த முடியும். ஏனெனில் சமூகத்துக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் அந்த பொறுப்புகள் கிடையாது. பொரு ளியல் அல்லது ஏதோ ஓர் எதிர்பார்ப்பு அடிப்படையில் அவை இயங்குகின்றன.
 
பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகள் முதல் மதிப்பெண் பெற வேண்டும்; மருத்துவராக அல்லது பொறியாளராக வர வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளனர். இது இயலும் அல்லது இயலாது என்பது அடுத்த விஷயம்.
 
ஆனால், ஒவ்வொரு குழந்தையும் தங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ப மட்டுமே மதிப்பெண் பெறும் என்கிற அடிப்படை உண்மையை பெற்றோர் உணர வேண்டும். படிப்பு வராத குழந் தைக்கு ஓவியத்திலோ அல்லது வேறு ஏதோ ஒன்றிலோ அபரிமிதமான தனித் திறமை இருக்கும். திறமையே இல்லாத குழந்தை என்று யாரும் கிடையாது.
 
ஆனால், அதனை கண்டறிவதுதான் பெற்றோரின் சாமர்த்தியம். குழந்தை யின் திறமை குறித்து தெரிந்து கொள்ள முடியாத பெற்றோர், உங்கள் பிள்ளையின் நண்பர்கள், நெருங்கிப் பழகும் உறவினர்கள், குழந்தையின் ஆசிரியர் ஆகியோரிடம் கேட்டு அறிந்து கண்டறிய வேண்டும். அந்த தனித் திறமைக்கு ஏற்ற வகையிலான துறை சார்ந்த பணிக்கான பாடப் பிரிவுகளை தேர்வு செய்ய பெற்றோர் உதவ வேண்டும்.
 
ஆனால், மேற்கண்ட விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது பெற்றோரின் சுயநலமே. விருப்பத்தை, நிறைவேறாத அல்லது தங்களால் சாதிக்க இயலாத ஒன்றை குழந்தையின் தலையில் சுமத்துவதே நடைமுறையில் அதிகமாக இருக்கிறது. உங்கள் நிறைவேறாத ஆசைகளின் வடிகால் அல்ல உங்கள் பிள்ளைகள். உங்களின் நிறைவேறாத கனவுகளை கண்டடையும் தேவதூதர்களும் அல்ல அவர்கள். அவர்களுக்கு உங் களைப் போன்றே சுயமான ஆசைக ளும் கனவுகளும் கொண்ட சராசரி மனிதர் கள்தான். அவர்களை சூப்பர் மேன்களாக கற்பிதம் செய்துகொள்ளாதீர்கள். எனவே, ஒருபோதும் உங்கள் பிள்ளையின் விருப்பத்துக்கு மாறான படிப்பை, தொழிலை உருவாக்கி கொடுக்கும் சூழலை ஏற்படுத்திவிட வேண்டாம்.
 
மிரட்டல் அல்லது கட்டாயப்படுத்தும் விதத்தில் மதிப்பெண் இலக்கு நிர்ண யிக்கக் கூடாது. இலக்கு அடைய முடியாதபட்சத்தில் விபரீதமாக எதையும் செய்யத் துணியும் பதின்ம வயதில் உங்கள் பிள்ளை இருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக தேர்வுக்கு தயாராகி வரும் குழந்தைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு படுக்கைக்கு குழந்தைகளை அனுப்பி அதிகாலை 5 மணிக்கு எழுப்பி படிக்க வையுங்கள். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் ஓய்வு அவசியம்.
 
தேர்வு சமயத்திலும்கூட குழந்தை கள் தினமும் அரை மணி நேரமாவது அவர்கள் விரும்பிய இசை, தொலைக் காட்சி, விளையாட்டு உள்ளிட்ட பொழுது போக்குகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது தான், கவனக்குறைவின்றி (Lack of concentration) தேர்வுக்கு அவர்க ளால் தயாராக முடியும்.
 
பெற்றோரின் அன்பும் அரவ ணைப்புமே குழந்தைகளின் தேர்வு பயத்தை போக்கும் அருமருந்து. தினமும் குழந்தைகளை பத்து நிமிடம் தியானப் பயிற்சி எடுக்கச் செய்யலாம்.
 
தியானத்தில் இருக்கும் போது, தேர்வு அறையில் பதற்றமின்றி அமர்ந்து இருப்பதை போன்றும், கேள்வித்தாள் எளிமையாக இருப்பதாகவும், நல்ல முறையில் தேர்வு எழுதி முடிப்பதை போலவும் அழகான கற்பனை உலகை நினைவில் நிறுத்த கற்றுக்கொடுங்கள். இதனால், உளவியல் ரீதியாக மனதில் நேர்மறை சிந்தனை அதிகரித்து, நல்ல முறையில் தேர்வுக்கு தயாராக முடியும்.
 
கட்டாயம் தவிர்க்க வேண்டிய வசனங்கள்...
 
 “உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக்கொள்... எது வேண்டுமானாலும் செய்துகொள். மதிப்பெண் மட்டும் வாங்கிவிடு...” ரீதியிலான வசனங்களை தவிர்க்கவும். காசு கொடுத்து வாங்குவது அல்ல மதிப்பெண்கள்!
 
 அவரைப் போல வரவேண்டும்; இவரைப் போல வர வேண்டும் என்று ஒப்பிடாதீர்கள். ஏனெனில் உங்கள் பிள்ளை என்பவர் உங்கள் பிள்ளை மட்டுமே. நீங்கள் குறிப்பிடும் அவரோ இவரோ அல்ல.
 
 “மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டால் எங்களால் வெளியே தலைகாட்ட முடியாது...” என்று சொல்லி உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட திறன் சார்ந்த விஷயத்தை சமூகம் சார்ந்த பிரச்சினையாக உருவாக்காதீர்கள்.
 
 “நீ எடுக்கும் மதிப்பெண்ணில்தான் நம் குடும்பத்தின் எதிர்காலமே இருக்கிறது...” என்று உங்கள் பொறுப்பை உங்கள் பிள்ளையின் மீது சுமத்தாதீர்கள்.
 
பேராசிரியர் எஸ்.கதிரவன், உளவியல் துறைத் தலைவர், பெரியார் பல்கலைக்கழகம்
 
 
Link to comment
Share on other sites

  • 2 months later...

Tamil_News_large_122743020150411025011.j

 

பிரியா எனக்கு அறிமுகம் ஆன போது அவள் வயது பத்து. அதிர்ந்து கூட பேசாத மென்மையான குழந்தை. இரண்டு, மூன்று முறை என்னிடம் கவுன்சிலிங் வந்தாள். எல்லா பத்து வயது குழந்தையை போல் தான் பிரியாவும் தோன்றினாள், அவளது மணிக்கட்டை பார்க்கும் வரை. அதில் சிவப்பாய் ஒரு பெரிய வெட்டுக்காயம் இருந்தது.
பிரியாவுக்கு என்ன நடந்தது? கோபத்தில் ஒரு நாள் வீட்டில் உள்ள 'டிவி' யை தள்ளி சாய்த்து விட்டு அடுத்த வினாடி உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து தன் கையையே கீறிக்கொண்டாள். தந்தை ஊரில் பெரிய டாக்டர். தாய் குழந்தைகளே உலகம் என்று வாழ்பவர். மூன்று வயது தங்கை, பெரிய வீடு, பிரபலமான பள்ளி என எல்லாம் நிரம்ப கிடைத்த பிரியாவிற்கு என்ன பிரச்னை? பள்ளியில் 'ஏ' கிரேடு வாங்கிக் கொண்டிருந்தவள், என்னிடம் கவுன்சிலிங் வந்த போது, 'சி' கிரேடிற்கு சறுக்கியிருந்தாள். அறிவான அமைதியான தங்கள் குழந்தைக்கு என்ன நேர்ந்து விட்டது. விடையறிந்த போது, அந்த பிஞ்சு நெஞ்சுக்குள் எத்தனை உணர்ச்சி போராட்டங்கள், குழப்பங்கள்.
 
தனித்த வாழ்க்கை:
 
இயற்கையிலேயே கூச்ச சுபாவம் கொண்ட பிரியாவுக்கு, இரண்டு ஆண்டாக புதிய பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழக தெரியவில்லை. தோழி இல்லாமல் தனித்தே வாழ்ந்தாள். அந்த வயதிற்கே உரிய சில குழப்பங்கள். 'நான் ரொம்ப குண்டாய் இருக்கிறேன். அதான் பள்ளியில் யாருக்கும் என்னை பிடிக்கவில்லை' என்பது போன்ற எண்ணங்கள் கொண்டிருந்தாள். தன் தங்கை மேல் பொறாமை கொண்டால், உடனே தங்கையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பிரியாவின் ஆழ்மனதில் எப்படியோ ஒரு நம்பிக்கை உருவாகி உள்ளது. பெரியவர்கள் ஏதோ நல்ல கருத்து சொல்லப்போக, அது மருவி தவறாய், விஷமாய் மனதில் பதிந்து இப்படி ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்.
 
பிரியா எதற்காகவோ தன் தங்கையுடன் போட்டி போட, அந்த நேரம் எதேச்சையாக தங்கையின் உடல் நலம் குன்றிப்போனது. இதனால் பிரியாவின் அந்த நம்பிக்கை எண்ணம் இன்னும் ஆழப்பதிய தொடங்கியது. இயற்கையாகவே குழந்தைகளுக்குள் ஏற்படும் காழ்ப்புணர்ச்சியை பிரியாவால் தடுக்கவும் முடியவில்லை. அவளால் தான் தங்கையும், பெற்றோர்களும் சிரமப்படுகின்றனர் என்ற குற்ற உணர்ச்சியே அவள் மனஅழுத்தத்திற்கு காரணமாக இருந்தது. ஆனால் தங்கை இயல்பாகவே ஆஸ்துமாவால் அவதிப்படுகிறாள் என்பதெல்லாம் அவளுக்கு புரியவில்லை.
 
நல்லதை விதைப்போம்:
 
குழந்தைகளின் மனம் ஒரு வளமான நிலம். அதில் எந்த கருத்தை விதைத்தாலும் விருட்சமாய் வளரும். பல நேரங்களில் நாம் குழந்தைகளிடம், 'கோபப்படாதே, தம்பி மேல் பொறாமைப்படாதே, என்ன இந்த வயசுல சோகம், காதல் என்றால் என்னவாம்? இது என்ன கேள்வி? என்றெல்லாம் கூறி அவர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை தடை செய்கிறோம். இப்படி தடை செய்தால், அது தவறான இடத்தில், தவறான நேரத்தில், தவறான விதத்தில் வெளிப்படும். எப்படி குழந்தைக்கு சுத்தமாக இருக்க பழக்குகிறோமோ அதேபோல் உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிக்காட்டவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
 
இன்று எத்தனை குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆசிரியையை குத்திக் கொல்லும் அளவிற்கு வன்மம் ஏன் வந்தது. இன்று எங்களிடம் கவுன்சிலிங் வருபவர்களில் மனநோய் என்று வருபவர்கள் சிலர் மட்டுமே. மற்ற அனைவரும் ஏதோ ஒரு உணர்ச்சி போராட்டத்தால், மன அழுத்தம், அதன் விளைவாக படிப்பில் கவனம் இல்லாமை, இயல்பான குணத்தில் இருந்து மாற்றம் என்றே வருகின்றனர். ஒரு மனிதனின் வாழ்வின் வெற்றியை உறுதிப்படுத்துவது அறிவாற்றல் மட்டுமின்றி, அவர்களின் உணர்வு சார் நுண்ணறிவே. வெளிநாட்டு பள்ளிகளில் இதனை உணர்ந்தே இவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உணர்ச்சி பற்றி கற்க, காண நடைமுறைப்படுத்தி பழக, ஓர் பள்ளிக்கூடமாய் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. பாட்டி, அத்தை, அக்காள் என்று மூன்று தலைமுறையினர் ஆசிரியர்களாக இருந்து வழிநடத்தினர். கால மாற்றத்தில் ஒரு குடும்பம், ஒரு குழந்தை என்று மாறியது. கம்ப்யூட்டர், மொபைல் போன்என்று விஞ்ஞான முன்னேற்றங்களும் குழந்தை பருவத்தை சிதைத்து கொண்டு உள்ளன.
 
கதை சொல்லுங்கள்:
 
பிள்ளைகள் படித்து, நல்ல வேலையில் அமர்ந்து சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பது பெற்றோர் கனவு. இதற்காக படும்பாடு கொஞ்சம் இல்லை. நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை பிள்ளைகள் முழுமையாக வாழ்கிறார்களா? அப்படி வாழ கற்றுத்தந்துள்ளோமா? பெற்றோரே, குழந்தையின் முதல் ஆசான். குழந்தையின் முதல் மூன்று ஆண்டுகள் பொக்கிஷம் போன்ற காலம். தண்ணீரை முழுமையாக உறிஞ்சும் ஸ்பான்ச் போன்று, குழந்தையின் மூளை அத்தனையையும் கிரகித்துக் கொள்ளும் சக்தி படைத்தது.
 
குழந்தையின் இயற்கையான குணம் மரபு அணுக்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றாலும், நாம் வளர்க்கும் விதத்தில் அதனை உருவாக்கலாம். பிறந்த நான்கு மாதத்தில் இருந்தே குழந்தைகளுக்கு கதை கேட்பதும், பாட்டு கேட்பதும் பிடித்தமான விஷயம். வார்த்தைகள் புரியாவிட்டாலும், தாயின் குரல், தொடுதல், அருகாமை மட்டுமே குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு போதுமானது. ஒரு வயதில் இருந்தே புரிந்து கதை கேட்பார்கள். கதை கூறுதல் ஒரு சக்தி வாய்ந்த யுக்தி. பல வார்த்தைகளில் சொல்லக்கூடிய கருத்தை குழந்தைகள் ஒரு குட்டிக்கதை மூலம் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளின் கேட்கும் திறன், கற்பனை வளம் மூலம் பல புதிய ஆற்றல்களை உருவாக்கலாம். 'டிவி' பார்க்க வைத்து சோறு ஊட்டுவதை விட, கதை கூறி, வாழும் கலை கூறி சோறு ஊட்டலாம். ஆறு மாதத்தில் இருந்தே குழந்தைக்கு புத்தகங்களை அறிமுகம் செய்யுங்கள்.
 
விளையாட்டு:
 
ஒன்றரை வயது முதல் பொம்மை போனில் பேசுவது, பொம்மையை குளிக்க வைப்பது போன்று தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை கிரகித்து புரிந்த அளவில் வெளிக்காட்டிக்கொள்வார்கள். இதுவே அவர்களுக்கு சமூக திறனை கற்றுக் கொடுக்கும் பயிற்சி. குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க இதுவே சிறந்த பயிற்சி. விதவிதமான பொம்மைகளை வாங்கிக் கொடுத்து அதனை எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். இந்த யுக்திகள் எளிதாக தெரிந்தாலும், குழந்தையின் உணர்வு சார் நுண்ணறிவு வளர்ச்சிக்கு இதுவே அஸ்திவாரம். "நாளை ஒரு மனிதனின் வாழ்க்கையை செப்பனிடுதலை காட்டிலும், இன்றே சிறப்பாக ஒரு குழந்தையை வளர்க்கலாமே”
 
- வி.ரம்யவீணா, குழந்தைகள் மனநல நிபுணர், சென்னை. 88700 02060.
 
Link to comment
Share on other sites

  • 3 months later...

குழந்தை வளர்ப்பு - ஒரு நடைமுறைக் கையேடு

http://www.yarl.com/forum3/topic/161228-குழந்தை-வளர்ப்பு-ஒரு-நடைமுறைக்-கையேடு/

Link to comment
Share on other sites

  • 10 months later...

பெற்றோரே! இது உங்களுக்கான வீட்டுப்பாடம்!

student frustrated

“நீயா நானா” கோபிநாத் ஒரு கூட்டத்தில் சொன்ன கதை இது!  தெருவில் ஒரு நோஞ்சான் அப்பாவும் 3 வயது மகனும் போய்க் கொண்டிருக்கிறார்கள்.  திடீரென அவர்கள் எதிரே பெரிய பயில்வான் ஒருவன் நடந்து வேகமாக நடந்து வருகிறான்.  அவனுடைய நடையைப் பார்த்து “ஐயையோ, இவன் நம்மை அடிக்கத் தான் வருகிறான்”என்று நினைத்துக் குழந்தை அப்பாவின் பின்னால் போய் ஒழிந்து கொள்கிறது.  பயில்வான் நினைத்தால் குழந்தையை மட்டுமல்ல, நோஞ்சான் அப்பாவையும் பதம் பார்த்து விட முடியும் என்று கதையைப் படிக்கின்ற நமக்கு நன்றாகத் தெரிகிறது.  ஆனால் குழந்தைக்கு அது தெரியாது.  எல்லாக் குழந்தைகளுக்குமே தன்னுடைய அப்பா தான் நம்பிக்கை!  அம்மா தான் அன்பு!  அந்த நம்பிக்கையில் தான் பயில்வானிடம் இருந்து எப்படியும் அப்பா நம்மைக் காப்பாற்றி விடுவார் என்று குழந்தை நினைக்கிறது. 

student frustratedஅவர் சொன்ன இந்தக் கதை உருவகம் தான்!  பெரிய பயில்வானாகச் சமூகம் எப்படிப்பட்ட தொந்தரவுகளைக் கொடுக்க முன்வந்தாலும் பொறுப்பான பெற்றோராக நாம் நம்முடைய குழந்தைகளுக்கு இருந்தோம் என்றால் போதும்!  குழந்தை எத்தகைய பயில்வான் பிரச்சினைகளையும் ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா” என்று பந்தாடத் தொடங்கி விடும்.  உங்கள் மகனோ மகளோ +2இல் பெயில் ஆகி இருக்கலாம்; சில நாட்களுக்கு முன் வந்த பத்தாம் வகுப்பு முடிவுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்திருக்கலாம். 

“என் மானத்தை வாங்கிட்டே!  மத்தவங்க முன்னாடி நான் எப்படித் தலை காட்டுறது!  என் கண் முன்னாடி நிற்காதே!   எங்கேயாவது போயிடு!  அவனும் உன் கூட படிச்ச பையன் தான்!  எப்படி மார்க் வாங்கியிருக்கான், நீயும் இருக்கியே!”  என்றெல்லாம் கரித்துக் கொட்டுவதற்குப் பதிலாக நீங்கள் காலாற ஒரு வாக்கிங் போவது ரொம்ப நல்லது.  இந்த வாக்கிங், உடம்புக்கு அல்ல, மனத்துக்கு!  வீட்டிலேயே இருந்து நீங்களும் டென்சனாகி, மகன்/மகளின் நம்பிக்கையையும் சீர் குலைப்பதற்கு முன்பு, ஒரு பெற்றோராக நாம் யோசிப்பது சரி தானா என்று முடிவெடுப்பதற்குத் தான் இந்த வாக்கிங்! 

மெல்லக் கிளம்பி அப்படியே கடைத் தெருவிற்கு வாருங்கள்.  வந்து விட்டீர்களா?  இப்போது அங்குள்ள பெரிய பெரிய கடைகளைப் பட்டியலிடுங்கள்.  உங்கள் பட்டியலில், ஒரு ஹோட்டல், ஒரு பர்னிச்சர் கடை, ஒரு செல்போன் கடை, தியேட்டர், பலசரக்குக் கடை என்று எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  நடந்து கொண்டே, மனத்துக்குள் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களைப்  பட்டியலிடுங்கள். இந்தப் பட்டியலையும் எடுத்து விட்டீர்களா?  இதே போல் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்கள், தெரிந்த தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள்  ஆகிய பட்டியலையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் பட்டியல் எப்படிப் பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால் அந்தப் பட்டியலில் இருப்பவர்களுக்கு உள்ள பொதுவான குணாதிசயம் என்ன தெரியுமா? 

அவர்கள் அனைவருமே (அல்லது பெரும்பாலானோர்) படிப்பில் தோற்றுப் போனவர்களாக இருப்பார்கள்.  “அட!  ஆமா” என்று உங்கள் மனம் இப்போது சொல்லும்.  படிப்பில் தோற்றுப் போன இவர்கள் எல்லோருமே எங்காவது கூலி வேலைக்குத் தானே போய் இருக்க வேண்டும்.  பெரிய பெரிய படிப்பு படித்தவர்கள் தானே – பெரிய முதலாளிகளாக, தலைவர்களாக வந்திருக்க வேண்டும்.  அப்படி நடக்கவில்லையே!  ஏன் தெரியுமா? இவர்கள் படிப்பைத் தான் விட்டிருந்தார்களே தவிர, நம்பிக்கையை அல்ல! 

இப்போது அதே பட்டியலைத் திரும்பவும் எடுங்கள்.  அதே ஓட்டல்கள், அதே தியேட்டர்கள், அதே பர்னிச்சர் கடைகள், பலசரக்குக் கடைகள்! அங்கு வேலை செய்பவர்களைக் கணக்கில் எடுங்கள்.  அவர்களுடைய சராசரி படிப்பு என்ன என்று நினைத்துப் பாருங்கள்.  ஏறத்தாழ அவர்கள் முதலாளிகள் என்ன படித்திருக்கிறார்களோ அதே அளவு தான் இவர்களும் படித்திருப்பார்கள் (சிலர் சற்றுக் கூடுதலாகக் கூடப் படித்திருப்பார்கள்).  அதே படிப்பு படித்த இவர்கள் ஏன் குறைந்த சம்பளத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?  ஏனென்றால் இவர்களில் பெரும்பாலானோர் படிப்பை விட்டது மட்டுமின்றி, ‘நாம் பெரிய ஆளாக வருவோம்’ என்ற நம்பிக்கையையும் சின்ன வயதில் இழந்து விட்டிருப்பார்கள்.  ஆக, ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தைப் படிப்பு முடிவு செய்யவில்லை – நம்பிக்கை தான் முடிவு செய்கிறது. 

இப்போது சொல்லுங்கள்!  உங்கள் மகனுக்குப் படிப்பு முக்கியமா?  அல்லது நீங்கள் கொடுக்கப் போகும் நம்பிக்கை முக்கியமா?  “சரியாகத் தான் தெரிகிறது - ஆனால் சொந்தக்காரர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது?  அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடம் என் மகன் பெயில் ஆகிட்டான்’ என்று எப்படிச் சொல்வது” என்று கேட்கிறீர்களா?  சொந்தக் காரர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் உங்கள் மகன் பெயிலானது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல. அவர்களைப் பொறுத்த வரை, தேர்தல் முடிவுகளைப் போல – அது ஒரு நிமிடச் செய்தி!  அவ்வளவு தான்!  அவர்கள் ஒரு நிமிடம் கவலைப்படுவார்களே என்று நினைத்து உங்கள் மகனை/மகளைக் காலம் முழுக்க வருத்தப்பட வைத்து விடாதீர்கள்.  பிறர் என்ன நினைப்பார்கள் என்று  மெனக் கெட்டு, உங்கள் மகன்/மகளின் எதிர்காலத்தை வீணடித்து விடாதீர்கள்.  பக்கத்து வீட்டுக்காரரின்  ஒரு நிமிடக் கவலை உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டுமா அல்லது உங்கள் மகன்/மகள் மீது நீங்கள் வைக்கப் போகும் நம்பிக்கை அவர்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டுமா?  இந்த இரண்டில் எதை உங்கள் மகன்/மகள் மீது ஏற்றப் போகிறீர்கள்?  யோசித்துப் பாருங்கள். 

கதையில் பார்த்தது போல, நீங்கள் உடன் இருந்தால் போதும் - உங்கள் குழந்தை எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் அலேக்காகத் தூசி வீசுவார்கள்.  மெல்லத் திரும்பி நம்பிக்கையுடன் வீட்டுக்குப் போங்கள்!  உங்கள் குழந்தையைத் திட்டாமல் அரவணையுங்கள். “அப்பாவும் அம்மாவும் இருக்கோம்டா உனக்கு, நடந்ததை விடு, இனி என்ன பண்ணலாம்னு யோசிப்போம்” என்று பாசக்கரம் நீட்டுங்கள்.   எந்தக் குழந்தைக்கும் பெற்றோர் தான் நம்பிக்கையின் ஊற்று!  அந்த ஊற்று வற்றிப் போனால் வாழ்க்கை முழுவதும் பாலைவனம் தான்!   நீங்கள் ஊட்டும் நம்பிக்கை தான் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை!  

- முத்துக்குட்டி

http://keetru.com/index.php/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/30992-2016-06-06-17-20-49

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பொறுமையாகபுரிய வையுங்கள்!

முதன் முதலாக பள்ளியில் குழந்தையைச் சேர்க்கும் பெற்றோருக்கு ஆலோசனை தரும், குழந்தை மன நல மருத்துவர் டாக்டர் யமுனா: பிறந்ததிலிருந்து கைக்குள்ளேயே வைத்து வளர்த்த குழந்தையை, முதன் முதலில் பள்ளிக்கு அனுப்பும்போது, பெற்றோருக்கு பயம் ஏற்படுவது இயற்கையே. அதேபோல, குழந்தை இந்த வயதில் பள்ளிச் சூழலுக்குப் பழகிக் கொள்வதும், இயற்கையாகவே நிகழ்ந்துவிடும்.
அதற்காக, 'முதல் நாளே குழந்தை அழாமல், 'டாடா' காட்ட வேண்டும்; ஆசிரியர் சொல்வதைக் கேட்க வேண்டும்; லஞ்ச் பாக்சை காலி செய்துவிட வேண்டும்' என, எதிர்பார்த்து ஏமாறாதீர். 1 - 3 மாதங்களுக்குள் இவையெல்லாம் நடக்கும்; பொறுமையுடன் இருங்கள்.
பள்ளியில் குழந்தைகள், ஆசிரியர்களிடம் நன்றாகப் பேச வேண்டும். இதற்கு அவர்கள் முதலில், வீட்டிலும், பெற்றோர் தவிர்த்து மற்றவர்களிடம் பேசிப் பழகியிருக்க வேண்டும். அவர்கள் முன்னிலையில் நீங்கள், அக்கம் பக்கத்தினரிடம் பேசி, குழந்தைகளையும் அவர்களிடம் இயல்பாக பேச வையுங்கள்.

வீட்டுக்கு பெரியவர்கள், உறவினர்கள் வந்தால், அவர்களிடம் பேச உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் பேசும்போது, 'இதைச் சொல்லு, அதைச் சொல்லு' என குறுக்கிடாமல், அவர்களாகவே பேசட்டும். அப்படிப் பேசும், பழகும் குழந்தைகள் தான், பள்ளியிலும் மனத்தடையின்றி பேச ஆரம்பிக்கும். 'டிவி' மற்றும் மொபைல், 'ஐபேட்' உடன் மட்டுமே குழந்தைகளை பழகிவிட்டால், பேச்சு எங்கிருந்து வரும்?
உங்கள் குழந்தை, சக குழந்தையின் ஸ்லேட், பென்சிலை விரும்பி எடுத்து வந்தால், திட்டாமல், அடிக்காமல், 'இது கெட்ட பழக்கம். உன் பிரெண்ட் பாவம் இல்ல... அவன் அழுவான். நாளைக்குக் கொடுத்துடு. இனிமே எடுக்காதே' என, பொறுமையாகப் புரிய வையுங்கள்.

சில குழந்தைகள், பள்ளியில் கெட்ட வார்த்தை பழகி வருவர். அதற்காக மற்ற குழந்தைகளுடன் பழக விடாமல் இருப்பது முட்டாள் தனம். 'இந்த வார்த்தை எல்லாம் நம்ம வீட்டில் யூஸ் பண்ண மாட்டோம். நீ உன் பிரெண்ட்கிட்டேயும் இதெல்லாம், 'பேடு வேர்ட்ஸ்'னு சொல்லு' என, எடுத்துச் 
சொல்லுங்கள்.ஆங்கிலம் பழக்க, கதை புத்தகங்களை வைத்து, படங்களைக் காட்டி, சிம்பிள் இங்கிலீஷில் அவர்களிடம் கேள்விகள் கேளுங்கள்; நாளடைவில் பேசுவர். மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை ஒப்பிட்டுப் பேசுவது, கூடவே கூடாது. 
'நீ செஞ்ச பூரி நல்லாவே இல்லை. என் பிரெண்ட் கொண்டு வந்த பூரி சூப்பரா இருந்தது' என்றால், அம்மாவாலேயே தாங்க முடியாது எனில், குழந்தைகளின் மனதை ஒப்பீடு எந்தளவு காயப்படுத்தும் என, சிந்தியுங்கள்.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

குழந்தைகளைப் புரிந்து கொள்வோம்!

girl child 600

‘உங்க பையன் பரவாயில்லையே! சொன்னா சொன்னபடி கேட்கிறானே! ஐயோ, என் பையனா இருந்தா இந்நேரம் இந்த இடத்தையே ரெண்டா ஆக்கிருப்பான்’, ‘உங்க குழந்த நேரா நேரம் ஒழுங்காச் சாப்பிடுதே, என் குழந்தைக்குச் சோறு ஊட்டுறதுக்குள்ள, உயிர் போயிரும்’ – இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் பல இடங்களில் கேட்டிருப்போம். நாமே கூடச் சில இடங்களில் சொல்லியிருப்போம். பொதுவாகப் பார்த்தால் குழந்தைகள் தவறு செய்கின்றன என்று தெரிந்தாலும் உண்மையில் பெற்றோர்கள் அந்தத் தவறுகளுக்குப் பொறுப்பாகிறார்கள் என்பது அந்தந்தச் சூழலை ரூம் போட்டு யோசித்தால் தெரிந்து விடும். தவற்றைச் செய்தவர்கள் வேண்டுமானால் குழந்தைகளாக இருப்பார்கள்; ஆனால் அந்தத் தவற்றை அவர்களிடம் தூண்டியதோ விதைத்ததோ பெற்றோராகிய நாமாகத் தான் இருப்போம். அப்படியானால், நாம் முதலில் தவறில் இருந்து விடுபட்டு குழந்தைகளை நன்றாக வளர்ப்பது எப்படி?

குழந்தைகளைக் குழந்தைகளாகப் பாருங்கள்

‘பாட்டி வடை சுட்ட கதை’யும் அதில் காக்கா வடையைச் ‘சுட்ட கதையும் நம் எல்லோருக்குமே தெரியும். அந்தக் கதையை நம்முடைய கோணத்தில் பார்த்தால், பாட்டியிடம் இருந்து காக்கா வடையைத் திருடி விட்டது. காக்காவின் கோணத்தில் இருந்து பார்த்தால்? காக்கா தனக்குப் பசிக்கும் போது பசியைத் தீர்க்கத் தேவையான உணவை எடுத்துக் கொண்டது – திருடவில்லை. ஏனென்றால் காக்காவிற்குத் திருட்டு என்றால் என்னவென்றே தெரியாது. இது நல்லது, இது கெட்டது, இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்பதெல்லாம் ஆறறிவு படைத்த நமக்குத் தானே தவிர, பிற விலங்குகளுக்கோ உயிரினங்களுக்கோ அந்த விதியெல்லாம் பொருந்தாது. சரிதானே!

இதே விதிதான் குழந்தைகளுக்கும்! குழந்தைகளுக்கும் ‘இது நல்லது, இது கெட்டது என்றெல்லாம் அவர்களுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அப்படித் தெரியாமல் தானே, சூடான பாத்திரத்தில் கை வைப்பது, அயன்பாக்சில் கை வைப்பது என்று செய்கிறார்கள்.

ஆபிசிற்குத் திடீரென தவிர்க்க முடியாத ஒரு முக்கிய வேலை காரணமாக லீவு எடுக்கிறீர்கள். மறுநாள் ஆபிசில் நுழைந்த உடன், ‘என்ன சார்! இப்படித் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்து விட்டீர்கள், இதனால் ஆபீஸ் வேலை எவ்வளவு பாக்கி இருக்கிறது தெரியுமா?’ என்று உங்கள் மேலதிகாரி கேட்கிறார். ‘சே, என்ன இவர், நாம் எவ்வளவு முக்கியமான வேலைக்காக லீவு எடுத்தோம், அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படிப் பேசுகிறாரே!’ என்று நினைப்பீர்கள் அல்லவா? அதாவது, பெரியவர்களாகிய நாமே, ‘நம் பிரச்சினைகளை நம்முடைய கோணத்தில் இருந்து’ மேலதிகாரி பார்க்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது சரி என்றால், குழந்தைகள் செய்யும் வேலைகளையும் அவர்கள் கோணத்தில் இருந்து புரிந்து கொள்வது தானே சரியாக அமையும்?

அப்படி இல்லாமல், நாம் எதிர்பார்ப்பதை எல்லாம் குழந்தைகள் மீது திணிக்கத் தொடங்கினால், அந்த உறவு, நமக்கும் மேலதிகாரிக்கும் உள்ள உறவு போல ‘பில்டிங் ஸ்டிராங், ஆனால் பேஸ்மென்ட் வீக்’காகப் போய் விடும். எனவே, பெரியவர்களாகிய நாம் முதலில் செய்ய வேண்டியது – குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நம்முடைய கோணத்தில் இருந்து பார்ப்பதை விடுத்து, குழந்தைகளின் கோணத்தில் இருந்து பார்க்கப் பழகுவது.

இந்தப் பழக்கத்தை முதலில் நடைமுறைப்படுத்துவோம். அப்படி வரும்போது குழந்தைகள் நம்மிடம் நெருங்கி வருவார்கள். அந்த நெருக்கம், அவர்களிடம் திருத்தத்தைக் கொண்டு வரும்.

 ‘நானும் அடிக்க வேண்டாம்னு தான் பார்க்கிறேன், ஆனால் அவன் பண்ற சேட்டை தாங்க முடியாமல் சில சமயம் அடி கொடுத்தாத் தான் சரிப்படும், வேற வழியில்லாமல் அடிக்க வேண்டியதாகி விடுகிறது’ – இது தான் பெரும்பாலான பெற்றோரின் புலம்பல். ‘ஆபிசிற்கு நேரமாயிருச்சு, பஸ்சை விட்டுடுவோமோ னு அவசர அவசரமா கிளம்பிக்கிட்டு இருக்கேன், அப்பப் போய், இந்தக் கலர் சட்டையைத் தான் போடுவேன்’ னு அடம்பிடிக்கிறான். என்ன பண்றது? சுள்ளுன்னு ரெண்டு கொடுத்தேன், அமைதியாயிட்டான்’ – இது வேலைக்குப் போகும் பெற்றோரின் வாதம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் – குழந்தைகள் செய்யும் மிகப் பெரிய தவறுகளை எல்லாம் பட்டியல் போடுங்கள். ‘இந்த டிரெஸ் வேண்டாம்’, இந்தத் தட்டில் சாப்பிட மாட்டேன், எனக்கு அப்பா தட்டில் சாப்பாடு கொடு’, ‘எனக்கு மாம்பழம் வேணும்’, - இப்படிப்பட்ட விசயங்களைத் தான் தவறுகளாகப் பட்டியலிட முடியும். ‘குழந்தை உரிமையோடு தன் அம்மாவிடமோ அப்பாவிடமோ கேட்கிறது. இது தவறா?’ என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். குழந்தைகள் செய்ததில் எந்தத் தவறும் இல்லை. தவறான நேரத்தில் கேட்டது தான் தவறு.

இந்த விசயங்களைக் கையாள, நீங்கள் எடுத்துக்கொண்ட அணுகுமுறைகளை யோசித்துப் பாருங்கள் – பெரும்பாலான நேரங்களில் குழந்தை இப்படிக் கேட்டு அழும்போது அதன் போக்கில் விட்டிருப்பீர்கள். எங்கெல்லாம் குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ நடந்தது என்பதைப் பட்டியலிட்டுப் பாருங்கள். ‘முடிந்த வரை பேசிப் புரிய வைப்பேன்; சில சமயங்களில் என்னுடைய அவசரம் புரிந்து கொள்ளாமல் குழந்தை நடந்து கொள்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ என்பது தான் அந்தப் பட்டியலில் முக்கியமான காரணமாக இருக்கும்.

ஆக, உங்களுடைய அவசரத்தைக் குழந்தை புரிந்து கொள்ளவில்லை என்பது தான் குழந்தையின் மிகப் பெரிய தவறாக இருக்கும். மற்றபடி, குழந்தைகள் செய்வது எல்லாம் அவர்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்துவது தான்! சரி தானே! ‘நீங்கள் ஆபிசிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதோ இன்று நேரமாகி விட்டது என்பதால் உங்களிடம் கேட்கக் கூடாது என்பதோ குழந்தைகளுக்குப் புரிய வேண்டும்’ என்னும் நம்முடைய எதிர்பார்ப்பு பொய்யாகும் போது தான் நமக்கு ஆத்திரமும் ஆவேசமும் வருகின்றன. ஆக, இந்தக் கோபத்திற்குக் காரணம், நம்முடைய தவறான எதிர்பார்ப்பு தானே தவிர, குழந்தைகளின் ஆசைகள் அல்ல.

மழலைக் குழந்தைகள், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப் போன்றவர்கள். நீங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் உங்களையே சுற்றிச் சுற்றி வருபவர்கள். உங்களுக்கு அவர்களைத் தவிர நண்பர்கள், அலுவலகம் என்று வெவ்வேறு உலகங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் பெற்றோர்களாகிய நாம் தாம் அவர்கள் பார்க்கும் முதல் உலகம், நீங்கள் தாம் எல்லாமுமே! என்பதை மறந்து விட வேண்டாம். எவ்வளவு அவசர வேலை இருந்தாலும் அதில் குழந்தைகளுக்கு என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைப்போம். குழந்தைகளைக் குறை சொல்வதை விட்டு விட்டு, நல்ல பெற்றோராக நாம் மாறுவோம். நாம் மாறினால் தானே, குழந்தைகளும் மாறுவார்கள்.

- முத்துக்குட்டி

(கட்டுரை: புதிய வாழ்வியல் மலர் 2016 ஜூன் 1-15 இதழில் வெளியானது) 

 

http://keetru.com/index.php/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/31072-2016-06-21-14-30-54

Link to comment
Share on other sites

  • 1 month later...

குழந்­தை­களின் உடல் வளர்ச்சியை தூக்கமே நிர்ணயிக்கின்றது

baby.jpg

''குழந்­தைகள் பசி, மலம் , சிறுநீர் பிரிதல் ஆகி­யவை ஏற்­பட்டால் தான் தூக்­கத்­தி­லி­ருந்து அழு­து­கொண்டு எழு­கி­றது. இவர்­க­ளுக்கு உணவோ அல்­லது அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட அசௌ­க­ரி­யத்தை நீக்­கி­விட்டு சுத்­தப்­ப­டுத்­தி­விட்­டாலோ மீண்டும் உறங்­கு­வார்கள். அத்­துடன் குழந்தை பிறந்து நான்கு மாதம் வரை அந்த குழந்­தைக்கு பகல் இரவு என்ற வேறு­பாடு தெரி­யாது. இந்த நேரத்தில் இயற்­கையின் உந்­து­த­லுக்கு ஏற்­பவே உறங்­கு­கி­றார்கள். ஆனால் நான்கு மாத முடிவில் அக்­கு­ழந்தை, பகலில் அதி­க­மா­ன­வர்கள் நட­மா­டு­கி­றார்கள். ஒலி அதி­க­மாக இருக்­கி­றது. ஒளியும் இருக்­கி­றது. ஆனால் இரவு நேரத்தில் அதி­க­மா­ன­வர்கள் நட­மா­ட­வில்லை. சத்­தமும் இல்லை. யாரும் சுறு­சு­றுப்­பாக இயங்­க­வில்லை, ஒளியும் குறை­வா­கவே இருக்­கி­றது. என்­பதை உட்­கிரகித்துக் கொள்­கி­றது. இதன் பின் தான் பகல் இரவு என்ற வேறு­பாட்­டை ­உ­ணர்ந்­துகொள்கிறது"என்று எம்­முடன் இயல்­பாக பேசத் தொடங்­கு­கிறார் சென்­னையில் பிர­ப­ல­மான குழந்­தைகள் நல மருத்­து­வரும், குழந்­தைகள் உள­வியல் நிபு­ண­ரு­மான டொக்டர் யமுனா. அவரை அவ­ரது மருத்­து­வ­ம­னையில் சந்­தித்து உரை­யா­டினோம்.

* குழந்­தை­களின் உறக்­கத்தை வைத்து அவர்­களின் நடத்­தையையும் குணத்­தையும் கண்­ட­றிந்து அதனை அவர்­களின் வளர்ச்­சிக்­கு­ரிய நேர்­ம­றை­யாக மாற்ற முடி­யுமா..! என்­பது குறித்து தாங்கள் மேற்கொண்ட ஆய்­வினைப் பற்றி சொல்லுங்களேன்?

பொது­வாக ஒவ்­வொ­ரு­வரும் தங்­களின் வாழ்­நாளில் மூன்றில் ஒரு பங்கு கால கட்டம் தூக்­கத்­திற்­காக செல­வி­டு­கிறோம். இப்­ப­டி­யி­ருக்கும் தரு­ணத்தில் தூக்கம் ஏன் வரு­கி­றது? எதனால் வரு­கி­றது? இதன் உபயோகம் என்ன? தூக்­கத்­திற்கு பின் நாம் எவ்வளவு தூரம் புத்­து­ணர்ச்­சி­ய­டை­கிறோம்? இதன் கார­ண­மாக எம்­மு­டைய மூளை எவ்­வ­ளவு தூரம் சுறு­சுறுப் படைந்து விரி வடை­கி­றது? என்­பதை பற்­றி­யெல்லாம் யோசிக்கும் போது தான் தூக்­கத்தின் முக்­கி­யத்­துவம் புரியும்.

எம்மில் பல­ருக்கும் பல­வித எண்­ணங்கள் ஓடிக்­கொண்­டி­ருக்கும் போது திடி­ரென்று ஒரு நொடியில் தூக்கம் எம்மை ஆக்­கி­ர­மித்­து­விடும். இது எப்­படி வரு­கி­றது என்று யாருக்கும் தெரி­யாது. தூக்கம் எம்மை தழுவ ஆரம்­பித்­த­வுடன் எண் ணங்­களின் பிடி­யி­லி­ருந்து மெல்ல மெல்ல நழுவி உறக்க நிலைக்குச் செல்­கிறோம். இதே தரு­ணத்தில் குழந்­தை­க­ளுக்கு என்று வரும் போது அவர்­க­ளுக்கு தூக்கம் என்­பது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்­கி­றது. ஏனெனில் அண்­மைய ஆய்வு களின் படி ஒவ்­வொரு குழந்­தையின் உடல் வளர்ச்­சியும் உறக்­கத்தின் போது தான் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது. ஒவ்­வொரு குழந்­தையின் வளர்ச்­சிக்கும் மூல காரணம் மூளை­யி­லுள்ள பிட்­யூட்­டரி சுரப்­பி­களின் செயற்­பா­டுகள். இவை ஆழ்­நிலை உறக்­கத்தின் போது தான் செயற்­படத் தொடங்­கு­கி­றது.

ஒவ்­வொ­ரு­வரும் எட்டு மணித் தியாலம் வரை உறங்­க­வேண்டும் என்று பரிந்­து­ரைத்­தி­ருக்­கி­றார்கள். இந்த எட்டு மணித்­தி­யால உறக்­கத்தின் போது எத்­தனை 90 நிமிட தூக்க சுழற்சி வரும் என்­பதை கணக்­கிட்டு, அதி­லி­ருந்து அதனை எப்­படி எதிர்­கொள்­கிறோம் என்­பதைப் பொறுத்து ஒரு­வரின் உடல் வளர்ச்­சியும் ஆரோக்­கி­யமும் கணக்­கி­டப்­ப­டு­கின்­றன. பொது­வாக ஒவ்­வொ­ரு­வரும் தினந்­தோறும் ஐந்து தூக்க சுழற்சி வரை உறங்­க­வேண்டும் என்ற கணக்­கீடு கூறு­கி­றது. அதே போல் பெரும்பாலா­ன­வர்­களின் விழிப்பு நிலை என்­பது கனவு வந்­தபின் தான் நிகழும் என்­பதை அனு­ப­வத்தில் காணலாம். ஒரு சில­ருக்கு கனவு வந்­தபின் உறக்கம் கலையும். அந்த கனவை திரும்ப மீட்­டெ­டுக்க இய­லாது. இப்­படி மீட்­டெ­டுக்க இயலா நிலை­யி­லுள்ள கனவை கண்டு எழுந்­தி­ருப்­பது தான் ஆரோக்கிய­மான உறக்கம் என்று அழைக்­கிறோம். அதே சம­யத்தில் இந்த தூக்க சுழற்சி என்­பது வளர்ந்த ஆண் மற்றும் பெண்­க­ளுக்கு மட்­டுமே பொருந்­தக்­கூ­டி­யது. குழந்­தை­க­ளுக்கு பொருந்­தாது. ஏனெனில் குழந்­தை­களின் பசியைப் பொறுத்தே அவர்­களின் தூக்க சுழற்சி அமையும். அவர்­களின் தூக்க சுழற்சி அதி­க­பட்சம் 45 நிமி­டங்கள் வரையே நீடிக்கும். அதன் பின் அவர்கள் தாங்கள் ஆழ் நிலை உறக்­கத்­திற்கு சென்­றி­ருக்­கி­றார்கள் என்றால் ஏதேனும் சிறிய அளவில் ஒலியை எழுப்­பு­வதோ அல்­லது சிரிப்­பதோ அல்­லது கைகால்­களை அசைப்­பதோ நடை­பெறும். இதனை வைத்து அவர்கள் ஆழ்­நிலை உறக் கத்­திற்கு சென்­றி­ருக்­கி­றார்கள் என்­பதை உண­ரலாம்.

உல­கத்­தி­லேயே இந்­தியா, இலங்கை, சீனா உள்­ளிட்ட ஆசிய நாட்டு குழந்­தைகள் தான் குறைந்த அளவில் உறங்­கு­கி­றார்கள். நியூ­ஸி­லாந்து மற்றும் அவுஸ்­தி­ரே­லியா நாட்டு குழந்­தைகள் தான் அதி­க­ளவில் உறங்­கு­கி­றார்கள் என்று ஓர் ஆய்வில் கண்ட றியப்­பட்­டி­ருக்­கி­றது. இதற்கு அவர்கள் குழந்­தை­களை இளம்­பி­ரா­யத்­தி­லேயே தனி யாக படுக்­கை­ய­றையை ஒதுக்கி அதில் தூங்­க­வேண்டும் என்று பயிற்சி அளித்து பழக்­கப்­ப­டுத்­து­வது தான் காரணம் என்றும் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் இந்த நிலை தெற்­கா­சி­யாவில் இல்லை என்­பது தான் நடை­முறை யதார்த்தம். ஆரோக்­கி­ய­மாக தூங்­கி­யெழும் குழந்­தையின் நட­வ­டிக்கை நன்­றாக இருக்கும். கல்வி கேள்­வியில் முன்­னேற்றம் இருக்கும். சுறு­சு­றுப்­பாக இயங்­கு­வார்கள். நோயெ­திர்ப்பு கூடு­த­லாக இருக்கும். பழகும் பண்பும் இனி­மை­யாக இருக்கும். அந்த தோற்­றப்­பொ­லிவே நன்­றாக இருக்கும்.

* குழந்­தை­களை பய­மு­றுத்­து­வது அவர்­க­ளுக்குள் எம்­மா­தி­ரி­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்?

பய­மு­றுத்தும் போது அவர்­க­ளுக்கு இந்த உல­கத்தின் மீது நம்­பிக்கை வராது. இதனை தொடர்ந்து செய்யும் போது, அது நடை பெற­வில்லை என்றால் பய­மு­றுத்­த­லுக்­கான மதிப்­பீடு குறைந்து விடும். அதா­வது ஒரு குழந்­தையை சாப் பிட­வில்லை என்றால் அடித்து விடுவேன் என்று தொடர்ச்­சி­யாக சொல்லிக் கொண்டு இருப்­பது. ஆனால் ஒரு கட்­டத்தில் நீங்கள் அடிக்­காமல் இருந்தால். அடிப்பேன் என்று பய­முறுத்துவது வீணா­கி­விடும். அதே போல் பயமுறுத்­து­வதைக் காட்­டிலும் அன்பு நெறி சார்ந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் போது தான் குழந்­தைகள் அறி­வார்த்­த­மாக வளர்­வார்கள்.

* ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற கருத்­துரு தான் இந்த சமூ­கத்தை பாதிக்­கி­றது என்­கி­றார்­களே உண்­மையா?

பெரிய அளவில் சிந்­திக்­க­வேண்டும் என்றால் இது மக்கள் தொகை கட்டுப்பாட்­டிற்கு உதவும். ஆனால் நாள­டைவில் உற்றார் உற­வினர் என்­ப­வர்கள் குறைந்­து­வி­டு­கி­றார்கள். இதனால் குழந்­தை­களோ அல்­லது வள­ரிளம் பரு­வத்­தி­னரோ தங்­களின் பேச்­சுத்­து­ணைக்கும், தங்­களின் எண்ணப் பகிர்­த­லுக்கும் சம வய­து­டை­ய­வர்கள் கிடைப்­பதில் சிரமம் ஏற்­படும். ஆனால் பெற்­றோர்கள் அவர்­களின் எதிர்பார்ப்­பிற்கு ஏற்ப தோழர்­க­ளையோ தோழி­க­ளையோ உரு­வாக்கி கொடுத்தால் எந்த பிரச்­ச­ினையும் எழு­வ­தில்லை. இத­னை­வி­டுத்து தானும் தன்­னு­டைய குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் சமூ­கத்தில் இருக்கும் யாரு­டனும் பழ­க­வி­டாமல் தனியாக வளர்த்­தெ­டுக்கும் போது பிரச்­சினை ஏற்படும்.

* சிங்கிள் பேரண்ட் குழந்­தை­களின் ஆரோக்­கியம் குறித்து..?

பயப்­ப­ட­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஏனெனில் கூட்­டுக்­கு­டும்­ப­மா­கவோ அல்­லது கணவன் மனைவி சேர்ந்து இருந்­தாலோ குழந்­தையை கவ­னிப்­பது ஒருவர் தான். கதை சொல்­வ­தாக இருந்­தாலும் சரி, வழி நடத்­து­வ­தாக இருந்­தாலும் சரி அன்பு சார்ந்த நெறி­மு­றையை பின்­பற்­றினால் போதும் என்­பதே எம்­மு­டைய பரிந்­துரை

* தாய் தந்தை என இரு­வரும் இரண்டு வித தாய்­மொ­ழி­க­ளாக இருந்தால் பிறக்கும் குழந்­தைக்கு மொழி­ய­றிவு வளர்ச்சி அடை­வதில் குழப்பம் இருப்பதாக கூறு­கி­றார்­களே உண்­மையா?

குழப்பம் இருக்­காது. ஆனால் தாமதம் ஏற்­படும். குழந்தை இரண்டு மொழி­க­ளையும் உள்­வாங்கிக் கொண்டு பேசு­வ­தற்கும் எதிர்­வி­னை­யாற்­று­வ­தற்கும் சற்று தாம­தப்­ப­ட­லாமே தவிர குழப்பம் ஏற்­ப­டாது. அப்பா தமி­ழா­கவும் அம்மா வேறு மொழி­யா­கவும் இருக்கும் பட்­சத்தில் இரண்டு பேரும் இரண்டு மொழியில் கொஞ்சினாலும், அந்த குழந்தை இரண்­டையும் புரிந்து கொண்டு எதில் பதி­ல­ளிக்­க­வேண்டும் என்­பதை கண்­கா­ணித்து அதன் பிறகே பேசத் தொடங்கும். அம்­மா­விடம் அம்­மாவின் மொழி­யையும், அப்­பா­விடம் பேசும் போது அப்­பாவின் மொழி­யையும் பேசும். சில குழந்­தைகள் குறிப்­பிட்ட காலம் வரை சைகையில் பேசக்­கூடும். ஆனால் காலம் செல்ல செல்ல குழந்­தை­யா­னது இரண்டு மொழி­க­ளையும் கற்­றுக்­கொள்ளும் திறன் பெற்­று­விடும்.

* நியோ­நாட்டல் இன்­டென்சிவ் கேர் குழந்­தை­களின் ஆரோக்­கி­யத்­திற்கு எந்த வகையில் உத­வு­கி­றது?

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தை களுக்கும், பிறக்கும் போதே ஏரா­ள­மான மருத்­துவ சவால்­க­ளுடன் பிறக்கும் குழந்தைக­ளுக்கும் இது பெரு­ம­ளவில் உதவி செய்­கி­றது. இதன் போது குழந்­தை­களின் வெப்ப நிலை, ஓக்ஸிஜன் அளவு, மூச்சு விடுதல், இதயத் துடிப்பு கண்காணித்தல் மற்றும் அவர்களுடைய உடலிலுள்ள நீரின் அளவு எந்த விகிதத்தில் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதனை பராமரிப்பது, இது போன்ற செயற்பாடுகளை நியோநாட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட் செய்கிறது. இதன் பிறகு அந்த குழந்தை தாய்பால் அருந்துதற்கு தயாரானவுடன் தாய்ப் பாலை புகட்டுகிறார்கள்.

அதே போல் சில குழந்தைகளுக்கு மூச்சு விடுதலில் சிரமம் இருந்தால் அந்த குழந்தைக்கு வென்டிலேட்டர் கேர் கொடுப்பார்கள். இவர்கள் முதல் மூன்று நாள்கள் தப்பி பிழைத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியம் குறித்து பயப்படத்தேவையில்லை நன்றாக வேயிருக்கும்.

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி dryamunapead@yahoo.com

சந்திப்பு: புகழ்

http://www.virakesari.lk/article/10506

Link to comment
Share on other sites

  • 1 month later...

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன்னம்பிக்கை தான். தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, பிற்காலத்தில் தன்னை காத்து வந்த பெற்றோர்கள் இல்லாவிட்டாலும், பணமோ பிற சொத்துக்களோ இல்லாவிட்டாலும், தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து விட்டாலும், தன்னம்பிக்கை இருந்தால் ஒரு குழந்தை மீண்டும் அனைத்தையும் பெற்று பிழைத்துக் கொள்ள முடியும்.
 
1476526511-4053.jpg
 
 
எல்லா குழந்தைகளுக்கும் சாதாரண வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை அறிவுத்திறன் உண்டு. சராசரியான மனிதனாக இந்த உலகில் வாழ்வதற்கும், அதற்குரிய கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குமான குறைந்தபட்ச அறிவை கடவுள் எல்லா குழந்தைகளுக்கும் அளித்திருக்கிறார். அதனை புரிந்து செயல்படவேண்டும்.
 
பெற்றோர்கள் குழந்தைகளின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் உன் வகுப்பில் படிக்கும் பையன் என்னவெல்லாம் செய்கிறான், நீ தண்டம்’ என்று தன் குழந்தையை திட்டுவது குழந்தையின் தன்னம்பிக்கையை உடைக்கும் சுத்தியல் அடியாகும். பின் நாளில் குழந்தையே ஏதேனும் சாதிக்கலாம் என நினைத்தாலும் முடியாமல் போய்விடுகிறது.
 
குழந்தைகளிடத்தில் எதிர்மறையாகப் பேசுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். 
 
‘நீ இப்படித்தான் தோல்வியடைவாய் என்று எனக்கு முன்பே தெரியும்’ என்பது போன்ற பேச்சுக்களை தவிர்த்து விட்டு ‘இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்து பயிற்சி செய்தால் வெற்றி பெறுவாய்’ என்று சொல்வது நல்லது. 
 
எப்படி பயிற்சி செய்ய வேண்டும், என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றெல்லாம் பெற்றோர் குழந்தைக்கு செய்து காட்டுவது மிகவும் நல்லது.
 
வெற்றியோ தோல்வியோ எது நடந்தாலும் செய்யும் காரியத்தை விட்டு விடக் கூடாது, தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதே ஒருவரை திறமைசாலிகளாக மாற்றும் என்பதை எடுத்துக் காட்டுகளுடன் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
 
பெற்றோர்களின் கட்டாயங்களுக்காக ஆர்வமில்லாத விசயங்களிலெல்லாம் முயற்சித்து தோல்வியடையும் குழந்தைகளே அதிக அளவில் தன்னம்பிக்கை இல்லாமல் வளர்கின்றன. 
 
கட்டாயப்படுத்தப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோர்களை விட மோசமான தோல்வியாளர்களாக உருவாகின்றனர். 
 
தன்மீதான நம்பிக்கை தனக்காக செய்யும்போது தான் அதிகரிக்கும். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.

http://tamil.webdunia.com/article/self-improvement-articles/children-to-have-self-confidence-parents-need-to-do-116101500038_1.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

“குழந்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்”

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்? குழந்தைகளிடம் அழகாக சிரித்து, செல்லமாக பேசுவது அவர்களது மூளை வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சியில் நாம் அவர்களுடன் பேசும் விதம் முக்கிய பங்காற்றுவதாக பிரிட்டனைச் சேர்ந்த மூத்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆய்வின் முடிவுகள் குறித்த செய்தித்தொகுப்பு.

http://www.bbc.com/tamil/science-38071520

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • 3 weeks later...

நாள் ஒன்றிற்கு எவ்வளவு நேரம் சிறுவர்கள் தொலைக்காட்சி, கைத்தொலைபேசி, கணிணி பாவிப்பது அர்த்தமுள்ளது?

http://www.fisp-zh.ch/pdf/internet/handy_ta.pdf

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • 4 months later...

பிள்ளைகளுக்கான சத்துள்ள உணவும் உடலசைவும்
சத்தாகவும் உருசியாகவும் உண்ணுதல் என்றால் என்ன அத்துடன் எதனால் பிள்ளைகளின் உடல் வளர்ச்சிக்கு ஒழுங்கு தவறாத உடலசைவு முக்கியமானது?
13 மொழிகளில் தகவல்கள் உள்ளன.

http://www.migesplus.ch/fileadmin/user_upload/Publikationen/Ernaehrung_und_Bewegung_fuer_Kinder/Merkblatt_ErnaehrungBewegung_TA_2016.pdf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.