Jump to content

பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 76. தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே… நெஞ்சினிலே உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.

இந்தியாவிலேயே திரைப்படங்களில் அதிகப் பாடல்கள் பாடிய பின்னணி பாடகி என்ற சாதனையைப் படைத்தவர் லதா மங்கேஷ்கர். ஆனால், 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற சாதனைக்கு உரியவர் எஸ்.ஜானகி.

ஜானகி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற ஊரில், 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி பிறந்தார் சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் ஏற்பட்டது. 1956-ல் அகில இந்திய வானொலி, பாட்டுப்போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டு, இரண்டாம் பரிசு பெற்றார். அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திரபிரசாத்திடம் பரிசு பெற்றார்.

இதைத்தொடர்ந்து, ஏவி.எம்.ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமிக்கப்பட்டார். தமிழில், ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்துக்காக அவர் முதன் முதலாக பின்னணி பாடினார். இசை அமைத்தவர் டி.சலபதிராவ். இதற்கு அடுத்த நாளே, கண்டசாலாவுடன் சேர்ந்து ஒரு தெலுங்கு பாடலைப் பாடினார். முதல் வருடத்திலேயே, எவ்வித முயற்சியும் செய்யாமல் 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடினார்.

ஜானகியின் வாழ்க்கையில், பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் ‘கொஞ்சும் சலங்கை (சிங்கார வேலனே தேவா… நாதஸ்வர இசையுடன் போட்டி போட்டு பாடும் பாடல், மிகவும் இனிமையான பாடல்) . இசைத்தட்டு விற்பனையிலும் சாதனை படைத்தது இப்படம். இதனைத்தொடர்ந்து, ஜானகி ரொம்பவும் `பிசி’யாகி விட்டார். அவர் பாடல் இடம் பெறாத படமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. எல்லா பிரபல கதாநாயகிகளுக்கும் குரல் கொடுத்தார்.

அது மட்டுமல்ல. குழந்தையின் குரலிலும் (டாடி டாடி ஒ மை டாடி, டூத் பேஸ்ட் இருக்கு டவல் இருக்கு எழுந்திரு மாமா), 60 வயது கிழவியின் குரலிலும் (குரலை மாற்றி) பாடக்கூடிய ஆச்சரியமான திறமையும் அவருக்கு இருந்தது. சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். 16 வயதினிலே’ படத்தில் பாடிய ‘செந்தூரப் பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற காற்றே’ என்ற பாடலுக்கு இவருக்கு சிறந்த பாடலுக்கான தேசிய விருது கிடைத்தது. ‘தேவர் மகன்’ படத்தில் இடம் பெற்ற ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்காகவும் இதே விருதை பெற்றார்.

சில பாடல்கள் ஜானகி அம்மா அவர்களுக்கு என்றே விதிக்கப்பட்டவை. இஞ்சி இடுப்பழகி ,நாதம் என் ஜீவனே,, பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம், ஊருசனம் தூங்கிருச்சு, கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம், ஆயிரம் தாமரை மொட்டுக்களே, பாடவா என் பாடலை, ஒரு பூங்காவனம் புதுமணம்… எத்தனை பாடல்கள்

இளையராஜாவின் கற்பனைவீச்சை தன் குரலால் சென்று எட்டமுடிந்த ஒரே பாடகி எஸ்.ஜானகிதான்..அளக்க முடியாத வானம் இளையராஜாவின் இசையென்றால், அந்த வானத்தின் ஒரே வானம்பாடி எஸ்.ஜானகியே!

ஜானகி A.R ரஹ்மான் இசையிலும் காதலன், உயிரே, ஜோடி, சங்கமம் உள்ளிட்ட பல படங்களில் பாடி இருக்கிறார். சங்கமம் படத்திக்காக இவருக்கு தமிழ் நாடு அரசு விருது கிடைத்தது.

அவருக்கு விருது வாங்கித் தந்த படங்கள்:

16 வயதினிலே (தமிழ்) 1978, ஓப்போல் (மலையாளம்) 1981, சிதாரா (தெலுங்கு) 1985, தேவர் மகன் (தமிழ்) 1993. இது தவிர 13 முறை கேரள அரசின் விருதையும், 5 முறை தமிழக அரசின் விருதையும், 7 முறை ஆந்திர அரசின் விருதையும், ஒரு முறை ஒரிசா அரசின் விருதையும் பெற்றவர். இது தவிர கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.

எஸ்.ஜானகிக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம பூஷன் விருது அளித்து கவுரவித்தது. காலம் தாழ்த்தி வந்த விருது என்று அதை ஏற்க ஜானகி மறுத்து விட்டார்.

http://yaalvili.com/?p=355

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.