Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 பொன்னம்மா அத்தையைத் தெரியாதவர் எம்மூரில் இல்லை. ஆனாலும் அவர் பற்றி விபரம் கேட்டால் யாருக்கும் சொல்லத்தெரிவதில்லை. உண்மையில் அவர் எனக்கு அத்தை கிடையாது. என் பெரியம்மாவின் கணவரின் தங்கை அவர். பெரியம்மாவின் பிள்ளைகள் அத்தை என்று கூப்பிடுவதனால் நாங்களும்  அப்படியே கூப்பிட்டுப் பழகிவிட்டது. கூப்பிடுவது மட்டுமேயன்றி அவருக்கும் எமக்குமான நெருக்கமோ அன்பான பார்வையோ கூட என்றும் இருந்ததில்லை. 
 
என் வீட்டிலிருந்து இரண்டாவது வீடு அவர்களது எனினும் எண்ணிக்கை நினைவில் உள்ள நாட்களே நான் அங்கு செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்கள் வீடும் கூட ஒரு ஒதுக்குப்புறமாக இருந்ததும் வீட்டைச் சுற்றி யாரும் இனி வைத்தும் பார்க்க முடியாதவாறு சுற்றிவர மதிலும் இருந்ததாலுமோ என்னவோ நான் மட்டுமல்ல மற்றையவர்கள் கூட அங்கு சென்றதை நான் கண்டதே இல்லை.
 
என் பெரியம்மாவுக்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது. அவரைப்பற்றி எவ்வளவோ விடயங்களை நாம் சிறியவர்கள் என்றுகூட எண்ணாது எம்மிடம் கூறி ஆதங்கப்படுவார். எனக்கு பெரிய அண்ணனுடன் தான் இருக்க விருப்பம். அதனால் எனது சீதன வீட்டை அண்ணனின் வீட்டுக்குப் பக்கத்திலேயே கட்டுங்கள் என்று அடம் பிடித்து கட்டிக்கொண்டு வந்தது பெரியம்மாவிர்ர்க்கு அவர்மேல் வெறுப்பை விதைத்திருக்கலாம் என நான் எண்ணினேன். ஆனாலும் என் பத்து வயது தொடங்கி பெரியப்பா இறக்கும் வரை தன் தங்கையுடன் கதைக்கவே இல்லை. அம்மாவிடம் கேட்டதற்கு நீங்கள் சிறு பிள்ளைகள். உங்களுக்கு விளங்காது என்றதுடன் மேற்கொண்டு புதினம் கேட்பதற்கும் முற்றுப்புள்ளி விழுந்து விட்டது.
 
அவர் மற்றவர்களுடன் அதிகம் கதைக்காமல் விட்டதற்கும் ஒரு காரணம் இருந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு பெண். ஒரு ஆண். ஆணுக்கு என் வயது. பெண்ணுக்கு என்னில் இரண்டு வயது அதிகம். அவள் எம்மைப் போன்று சாதாரனமானவளாக இல்லாது சிறிது குறைபாடுகளுடன் பிறந்திருந்தாள். கால்கள் இரண்டையும் நிலத்தில் வைத்து நடக்க மாட்டாள். பேச்சும் கோர்வையாக வராது. இவை இரண்டையும் விட்டால் நல்ல முகவெட்டு, உயரத்துடன் பார்ப்பதர்க்குச் சாதாரணமாகவே இருப்பாள்.
 
அவள் பள்ளி சென்று பார்த்திருக்கிறேன். பின்னர் பத்துப் பன்னிரண்டு வயதுக்குப் பின்னர் அவளைப் பள்ளிக்கு அனுப்பாது அத்தை நிறுத்தி விட்டார். தானே வீட்டில் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதாக அம்மா கூறக் கேட்டிருக்கிறேன். ஆவலுடன் வந்து நீயும் விளையாடலாமே என அத்தை ஒருமுறை கேட்டு, அதைத் தட்ட முடியாது அவர்கள் வீட்டுக்குச் சில நாட்கள் சென்றஈருக்கிறேன். அவளுடன் எனதான் செய்வது. ஒழித்து விளையாடினால் எப்படியோ அவளைக் கண்டுபிடித்து விடலாம். ஏனெனில் சத்தம் கேட்காது ஒளிந்து நிற்க அவளால் என்றுமே முடிந்ததில்லை.
 
கிட்டிப்புள்ளோ, கிளித்தட்டோ அவளால் விளையாட முடியாது. கொக்கான் வெட்டி விளையாடினாலும் பெரிதாகக் கதைக்காத எந்தச்சுவாரசியமும் அற்ற விளையாட்டை என்னால் பொறுமையுடன் இரசிக்க முடியவில்லை.அதன் பின்தான் நான் அவர்கள் வீட்டுக்குப் போகாது தவிர்க்கத் தொடங்கியது. நானும் வளர என் ஆர்வங்களும் மாற அவர்கள் என் நினைவில் இருந்து நீங்கத் தொடங்கினர். சில ஆண்டுகளின் பின்னர் அவர்கள் வீடு ஆள் அரவமற்று இருக்க எங்கே அவர்கள் என்று பெரியம்மாவைக் கேட்டபோது அவர்கள்  கொழும்புக்கு வசிக்கச் சென்றுவிட்டதாகக் கூறிய பெரியம்மாவின் முகல் நின்மதியாய் இருப்பது போன்று இருந்தது.
 
சில ஆண்டுகளின் பின் நானும் பெற்றோருடன் புலம்பெயர்ந்துவிட்டேன். அப்போதெல்லாம் தொலைபேசிப் பாவனை அருகியிருந்த காலம். பந்திபந்தியாகக் கடிதம் எழுதுவதே வெளிநாடு வந்துவிட்ட எங்களுக்குத் தலையாய கடமையாக இருந்தது. அப்படி வந்த கடிதத்தில் தான் என் சித்தி அத்தையின் பெண்ணுக்குத் திருமணமான செய்தியை வியப்புடன் எழுதினார். என்றாலும் முத்தம்மா கெட்டிக்காரிதான் என என் தாயார் அப்பாவிடம் கூறியதைக் கேட்ட நான் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்றேன் அம்மாவிடம்.
 

சாதாரணமானவர்களே திருமணம் செய்யக் கஷ்டப்படும் காலத்தில் இப்பிடிக் குறைகள் கொண்ட பெண்ணை அதுவும் பதினெட்டே வயதில் திருமணம் செய்து கொடுத்தது பெரியவிடயம் தானே என்றார் அம்மா. நான் அம்மாவிடம் தூண்டித் துருவிக் கேட்டதில் ஒரு கஷ்டப்பட்ட பெடியன் ஒருவனுக்குத்தான் அந்தப்பெண்ணைக் கட்டிக் கொடுத்தது என்றும்,திருமணம் நடந்து ஆறு மாதங்களின் பின் அந்தப் பையனை இவர்களே வெளிநாடு அனுப்பி வைப்பார்கள் என்று கூறியதாகவும், அதற்கு இணங்கியே அந்தப் பையன் அத்தையின் பெண்ணைத் திருமணம் செய்தார் என்றும் கூறி நிறுத்தினார்.

என்ன இருந்தாலும் அத்தை காரியக் கள்ளி என்று என்னுள்ளே சொல்லிக்கொண்டாலும் அந்தப் பையனை நினைத்து ஒரு இரக்கம் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. வறுமை என்னும் ஒன்று மனிதரை எந்த அளவு கீழே தள்ளுகிறது. தன் கூடப் பிறந்தவர்களுக்காக, அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும் என்னும் ஆசையில், எத்தனை வேதனைக்கிடையில் தம் விருப்பு வெறுப்பு எதிர்பார்ப்புக்களை எல்லாம் தம்முள்ளே புதைத்துக் குடும்பத்துக்காகத் தம் எதிர் காலத்தைத் தியாகம் செய்கின்றனர் என எண்ணியதில் அவன் மேல் கழிவிரக்கம் அதிகரித்ததைத் தடுக்க இயலவில்லை.

அதன் பின்னர் தொலைபேசியில் என் சிறியதாயாருடன் கதைக்கும் வேளைகளில் நான் அத்தை குடும்பத்தைப்பற்றி விசாரிக்க மறப்பதே இல்லை. நான்கு மாதங்களின் பின்னர் அத்தையின் மகள் கற்பமாக இருப்பதாக சித்தி கூறினார். இன்னும் ஒரு மாதம் முடிய அந்தப் பையனை அத்தை கனடாவுக்கு அனுப்பிய செய்தியும் வந்தது. அத்தையின் கெட்டித்தனத்தை என்னால் மெச்சாது இருக்கவே முடியவில்லை. அதன் பின் நான் அத்தை வீட்டார் பற்றி மறந்து போனேன்.
ஒரு வருடம் கழிய சித்தி கதைக்கும் போது மீண்டும் நினைவு வந்தவளாய் அத்தைக்குப் பேரனா பேத்தியா பிறந்தது என்றேன். அழகான பேரன். பெயர் மகிந்தன் என்றுவிட்டு பெருமூச்சொன்றையும் விட்டார் சித்தி. அந்தப் பையன் வெளிநாடு சென்ற பின்னர் அத்தை அவனுடன் எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ளவில்லை என்றும் ஆனால் அவன் கடிதமூலமும் தொலைபேசியிலும் தன் மனைவியுடன் கதைப்பதற்கு எத்தனையோ தடவை முயன்றும் அத்தை அனுமதிக்கவில்லை என்றும் அவனது குடும்பத்தவர் கொழும்புக்குச் சென்று பேரனைப் பார்க்கக் கேட்டபோது அதற்கும் விடவில்லை என்றும் கூறியபோது, அத்தை விடாவிட்டால் என்ன சட்டப்படி மனைவியை பார்க்க அவனுக்கும் அவன் பெற்றோர்க்கும் உரிமை உண்டுதானே என்றேன்.

உரிமை கொண்டாடுவர் என்று முன்னரே தெரிந்ததனால்த்தான் பொன்னம்மா திருமணப் பதிவே செய்யவில்லை மகளுக்கு என்றதும் எனக்கும் பலவிதமான யோசனை ஓடியது. தன் மகளை வெளிநாட்டுக்குக் கூப்பிட்டபின் அவன் கைவிட்டுவிட்டால் அவளின் கதி என்ன என்று அத்தை எண்ணியிருக்கலாம். அதன் முன்னேற்பாடுகளாகவும் இவை இருந்திருக்கும். மறுபக்கம் தன மகளைத் தன்னுடனேயே வைத்திருக்கும் சுயநலமும் தனக்குப் பின் ஒரு பாதுகாப்பைத் தன மகளுக்கு ஏற்படுத்தியவிதமும் அத்தைக்குச் சபாஸ் போட வைத்தாலும்  ஒருவனின் வறுமையை பகடைக்காயாக்கி தான் நினைத்ததைச் சாதித்த அத்தையின் மேல் ஏனோ வெறுப்புத் தோன்றியது.




 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தை பயங்கர சுழிச்சு போலகிடக்கு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி புத்தன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.