Jump to content

கமல்- முடிவிலா முகங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கமல்- முடிவிலா முகங்கள்

ஜெயமோகன்

kamal-60.jpg

கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஆடிக்கொண்டிருந்தார். உண்ணாயி வாரியர் எழுதிய கதகளி நாடகம், நளதமயந்தி. நளன் தமயந்திக்கு அன்னப்பறவையை தூதனுப்பும் காட்சி. அன்னத்தை மென்மையாக, மிகமிக மென்மையாக தொட்டு எடுக்கிறான். வருடுகிறான். இதயத்தோடு சேர்த்து வைக்கிறான். உருகுகிறான், சிலிர்க்கிறான்,கொஞ்சுகிறான், அழுகிறான். பறவை திரும்பத்திரும்ப அவனிடமே வருகிறது. மூச்சுத்திணற ஓடிப்போய் எடுக்கிறான். ஏன் போகவில்லை என்ற பதற்றம், நல்லவேளை போகவில்லை என்ற ஆறுதல்

விழித்துக்கொண்டேன். பதினெட்டு வயதில் நான் திருவட்டாறு ஆலயத்தின் களியரங்கில் பார்த்த கதகளி துல்லியமாக நினைவுக்கு வந்தது. அதை எண்ணியபடி இருளில் கிடந்தேன்.இன்னொருநினைவு. நான் என் என் பிற்கால மனைவியான அருண்மொழிக்கு காதலைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். முதற் காதல்கடிதம். அதை எழுத நாலைந்துநாட்கள் ஆயிற்று. எழுதிக்கிழித்தவை பெரியநாவல் அளவுக்கு வரும். அதை முடித்து ஒட்டுவதற்கே ஒருநாள் ஆகியது. இன்னொருநாள் முழுக்க அதை தபாலில் சேர்ப்பதா வேண்டாமா என்று தயங்கி தெருக்களில் அலைந்தேன். துணிந்து பெட்டியில் போட்டபின் அதை திரும்ப எடுக்கமுடியுமா என்று தபால் அலுவலகம் தோறும் சென்று கெஞ்சினேன். அது போய்விட்டது என்று சொல்லப்பட்டதும் ஆறுதல். கூடவே படபடப்பு.

Krishnan_Nair_Remembered_By_Chennnithala

கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர்

வியப்பாக இருந்தது. அதைத்தானே கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் நளனாக வந்து நடித்தார்? எவ்வளவு பழைய கதகளிப்பாடல் அது. எத்தனையோ நடிகர்கள் அந்த அன்னப்பறவைக் காட்சியை நடித்திருகிறார்கள். தலைமுறை தலைமுறையாக மலையாளியின் காதலுணர்ச்சியை அந்த வடிவில் மேடையில் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

அப்போது தோன்றியது மகாநடிகர்கள் அவர்களின் காலகட்டத்தின் பொதுவான உணர்ச்சியை தங்கள் உடல்களில் பிரதிபலிக்கிறார்கள் என்று. அவர்கள் நடிக்கவில்லை, நாமெல்லாம் சேர்ந்து அவர்களை நடிக்கவைக்கிறோம். அதில் நம்மை பார்த்துக்கொள்கிறோம்.

அவர்கள் தனிமனிதர்கள் அல்ல. அவர்களின் உடல் அவர்களுடையதே அல்ல. அவர்கள் வழியாக அச்சமூகம் , அந்தப் பண்பாடு தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.காற்றுமானியில் இருக்கும் சேவல்போன்றவர்கள் பெரியநடிகர்கள். அவர்கள் திரும்புவது அவர்களின் சொந்த விருப்பப்படி அல்ல. பெருக்கெடுத்தோடும் காற்றுதான் அவர்களைத் திருப்புகிறது.அந்தக்காற்றை வானமும் கடலும் சூரியனும் சேர்ந்து தீர்மானிக்கின்றன.

சலீல் சௌதுரியின் பழைய பாடல்களை யூடியூபில் கேட்கப்போய் எழுபதுகளில் கமலஹாசன் நடித்த பழைய மலையாளப்பாடல்களைப் பார்க்க ஆரம்பித்தேன். பதினெட்டு பத்தொன்பது வயது இருக்கும். ஒல்லியான நீளமுகம். உணர்ச்சி நிறைந்த பெரிய கண்கள். ததும்பிக்கொண்டே இருக்கிறார். நடனத்தில், நடையில், ஏன் அமர்ந்திருக்கும்போதுகூட ஒரு துள்ளல். அது கமலஹாசனின் சொந்த இயல்பு மட்டும் அல்ல. அந்தக்காலகட்டத்தின் இயல்பு அது. ஜான் டிரவோல்ட்டா அப்படித்தான் இருந்தார். ரிஷிகபூர் அப்படித்தான் இருந்தார்.

எழுபதுகளின் இறுதியில் இந்திய இளைஞன் அடைந்த ஒருவகைச் சுதந்திரம் அவர்களின் அசைவில் இருந்தது. அதை பொறுப்பின்மையின் விளைவான கொண்டாட்டம் என்று சொல்வேன். முந்தையதலைமுறைகளுக்கு அரசியல்கனவுகள் இருந்தன. காந்தியும் பகத்சிங்கும் ஸ்டாலினும் மாவோவும் முதல் தலைமுறைக்கு ஆதர்சங்கள். சே குவேராவும் பாப்மார்லியும் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகள். பீட் தலைமுறை அது எனலாம்

Elvis-Presley.jpg

எல்விஸ் பிரெஸ்லி

அதற்குப்பின் ஒரு தலைமுறை உருவாகி வந்துகொண்டிருந்தது. அரசியல்கனவுகளின் சுமைகள் இல்லாமல் வாழ்க்கையை உற்சாகமாக கொண்டாடத் துடித்த தலைமுறை. அதை நான் டிஸ்கோ தலைமுறை என்பேன். உயரமான செருப்பு. காதைமறைக்கும் நீளமான முடி. ப வடிவ மீசை.ஆட்டுக்காது காலர்கொண்ட இறுக்கமான சட்டை. பெல்பாட்டம் பாண்ட். சட்டையில் முதல் மூன்று பித்தான்களை திறந்துவிட்டு எதைப்பற்றியும் கவலையில்லை என்றபாவனையில் நடை. அதுதான் அந்தக்கமல்.

எழுபதுகளில் கமலஹாசன் நடித்த பாடல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பெண்களைக் காணும்போது கண்களில் என்ன ஒரு ஒளி. வெட்கப்படும் ஷீலாவை ஓரக்கண்ணால் பார்க்கையில் முகமே பரபரக்கிறது. கண்களில் வேட்கை வழிகிறது. [ஐ.வி.சசி இயக்கத்தில் 1978ல் வெளிவந்த ஈற்றா ] பாண்ட் போட்ட ஸரீனா வகாபை நெருங்கும்போது கால்கள் பின்னுகின்றன. [என்.சங்கரன் நாயர் இயக்கத்தில் 1978ல் வெளிவந்த மதனோத்ஸ்வம்].

அந்தத் தலைமுறையின் பிரச்சினை- ஆண்பெண் உறவுதான். பழைய வகை ஆண்பெண் உறவுகள் காலாவதியாகிவிட்டிருந்தன. புதியவகை உறவுகள் உருவாகி வரவுமில்லை. அடக்கமான, நாணமான பெண் சலிப்பூட்டினாள். துடிப்பான,சுதந்திரமான பெண் பயமூட்டினாள். இரண்டுக்கும் நடுவே ஊசலாடும் கதாபாத்திரங்களை பல வண்ணங்களில் கமலஹாசன் நடித்தார். நினைவில் சினிமாக்களாக எழுகின்றன.

John-Travolta-john-travolta-21332482-116

ஜான் டிரவோல்ட்டா

ஆனால் ஏறக்குறைய அதை பலர் நடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே அந்த பத்தாண்டுகளுக்குள் காலாவதியானார்கள். ரிஷிகபூரை மும்பையின் நட்சத்திர விடுதி ஒன்றில் எடைமிகுந்த களைத்த முதியவராகப் பார்த்தேன். ஜான் டிரவோல்டா அப்படியே காணாமலாகி நீண்ட இடைவேளைக்குப்பின் வேறு ஒருவராகத் திரும்பி வந்தார். ஆனால் கமல் மிக இயல்பாக உருமாறி அடுத்த காலகட்டத்துக்கு வந்தார். அறிவிலும் ஆற்றலிலும் பலவீனனாக இருந்தும் வாழ்க்கையைத் திடமாக எதிர்கொள்ளும் பதினாறு வயதினிலே சப்பாணி அவரில் நிகழ்ந்தான்.

அதன்பின் கமலஹாசன் தென்னிந்தியாவின் ரசனைக்கு இயைய தன்னை உருமாற்றிக்கொண்டே வந்திருக்கிறார். சப்பாணி ஓர் எல்லை என்றால் சமூகப்புறக்கணிப்பின் சீற்றம் நிறைந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் கதாநாயகன் ஓர் எல்லை. சிகப்பு ரோஜாக்களின் வன்மம் கொண்ட கொலைகாரன் இன்னொரு எல்லை. ஆனால் அந்த முகங்களெல்லாம் துடிப்பான இளங்காதலன் என்ற அவரது மையப்படிமம் மீதுதான் அமைந்தன.

அந்த பிம்பம் உருவாக்கப்பட்டது என்பதை விட உருவாகி வந்தது என்பதே பொருத்தம். நகைச்சுவை உணர்வு, இளமைத்துடிப்பு போன்ற கமலஹாசனின் தனிப்பட்ட குணாதிசயங்களும் அவரது நடனத்திறன், அழகிய நாகரீகத் தோற்றம் போன்றவையும் அந்த பிம்ப உருவாக்கத்தில் முக்கியமான பங்கு வகித்தன. ஆனால் தொடர்ந்து ரசிகர்களின் எதிர்வினைகளுக்கேற்ப அவரது அந்தக்கதாபாத்திரம் மாற்றியமைக்கப்பட்டு மேலும் மேலும் கூராக்கப்பட்டது.

madanolsavam.png

[மதனோத்ஸ்வம்]

இப்படிச் சொல்லலாம். காமிரா நம் கையில் இருந்து நம்மால் இயக்கப்பட்டாலும் அதை எந்தக் காட்சியை நோக்கி குறிவைக்கிறோமோ அக்காட்சியின் தொலைவும் இயல்பும்தான் காமிராவின் ஃபோகஸை தீர்மானிக்கின்றன என்பதுபோலத்தான். கமலஹாசன் என்னும் நடிகரின் அனைத்து இயல்புகளும் விரிவான நோக்கில் தென்னிந்தியச் சமூகத்தால்தான் தீர்மானிக்கப்பட்டன. எது மக்களால் ஏற்கப்பட்டதோ அது மேலும் சேர்க்கப்பட்டது. அவர் உருவாகிக்கொண்டே இருந்தார்.

கமலஹாசன் நடித்த காதலர் கதாபாத்திரங்களைப் பார்க்கையில் நம் மரபில் உள்ள குறும்புக்காரனாகிய கிருஷ்ணன் அதில் உள்ளதைக் காணலாம். அதேயளவுக்கு எல்விஸ் பிரெஸ்லியையும் காணமுடியும். பல பிம்பங்களைக் கலந்து கலந்து அதை உருவாக்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.ரசனை மாற மாற அதை மாற்றிக்கொண்டே இருந்தார்கள்.

மெதுவாக கமலஹாசன் ஒரு நட்சத்திரமாக உருவானார். அவரை நட்சத்திரமும் நடிகரும் கலந்த கலவை என்று சொல்லலாம். நட்சத்திரத்துக்குரிய இயல்பு என்பது பெருந்திரளான மக்களின் விருப்பத்துக்குரியவராக இருப்பதும் அவர்களின் ரசனைக்கு முற்றிலும் உகந்த முறையில் மாறிக்கொள்வதும்தான். கமல்ஹாசன் என்னும் நட்சத்திரம் தமிழின் ஒரு நட்சத்திரத்திற்கு அவசியமான முகங்களை எல்லாம் அணிந்துகொண்டது. சாகசக்காரன், நீதிக்காகப் போராடுபவன், காதலன், குடும்பத்தின்மேல் பற்றுள்ளவன் ஆகிய குணங்களின் கலவை.

16-vayathinile.jpg

எந்த சூழலிலும் எந்த நட்சத்திரபிம்பமும் சுயம்புவாக உருவாவதில்லை. ஏற்கனவே இருந்த ஒரு நட்சத்திரத்தின் பிம்பத்துடன் புதியவை சேர்க்கப்பட்டுதான் புதியநட்சத்திரம் உருவாகிறது. கமலஹாசனில் சிவாஜியின் அம்சம் இருந்தது. சிவாஜியை கிருஷ்ணனையும் எல்விஸ் பிரெஸ்லியையும் ஜான் டிரவோல்டாவையும் நோக்கிக் கொண்டுசென்றபோது உருவான வடிவம் போலிருக்கிறது. அதில் கமலஹாசனின் தனிப்பட்ட ஆளுமையும் அவர் நடித்த காலகட்டத்தின் அரசியலும் எல்லாம் கலந்துள்ளன..

அந்த நட்சத்திர உருவகத்திற்குள் அவரது நடிகன் வெளிப்படத் துடித்துக்கொண்டே இருந்திருக்கிறான். ராஜபார்வை,மூன்றாம்பிறை, மகாநதி என அவன் விதவிதமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறான். அந்த நடிகனின் பிம்பம் நட்சத்திர பிம்பத்தின் மறுபக்கமாக தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. அவை இரண்டும் கலந்து இன்றைய கமலஹாசனை உருவாக்கியிருக்கின்றன

kamal_haasan.jpg

எந்தப் பெரிய நடிகரையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஒரு துணுக்குறல் ஏற்படும். அவர் ஒரு தனிமனிதரல்ல என்று தோன்றும். அவர் நடித்த அத்தனைகதாபாத்திரங்களும் அவரில் எஞ்சியிருக்கும். கமலஹாசனை நேரில் சந்திக்கையிலேயே ஒரு மனிதரை அல்ல ஒரு மனிதத் திரளை சந்தித்த அதிர்ச்சி ஏற்படும். எத்தனை முகங்கள். காதல், ஏக்கம், துயரம், வன்மம், உறுதி என எத்தனை உணர்ச்சிகள். திபெத்திய அவலோகிதேஸ்வர புத்தரைப்போல பல்லாயிரம் கரங்கள்,பல்லாயிரம் முகங்கள்.

இந்த அத்தனை முகங்களும் ஒரு நடிகருடையவை அல்ல என்றுதான் தொகுத்துக்கொள்கிறேன். அவை சென்ற நாற்பதாண்டுக்கால தென்னிந்தியச் சமூகம் உருவாக்கி எடுத்த முகங்கள். தென்னிந்தியச் சமூகத்தின் உணர்ச்சிகள் விதவிதமாகத் திரண்டு உருவானவை . ‘மதனோத்ஸ்வ’த்தில் மாடப்புறாவே வா என பாடிய மெலிந்த இளைஞன் முதல் ‘விஸ்வரூபத்தி’ல் தீவிரவாதத்தின் முன் திகைத்து நிற்கும் நாயகன் வரை அவை வெவ்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கின்றன.

இப்படிச் சொல்வேன். தென்னிந்தியச் சமூகத்தை நோக்கி வைக்கப்பட்ட ஒரு பெரிய கண்ணாடி. அதில் ஆயிரக்கணக்கான முகங்கள் பிரதிபலித்துச் சென்றிருக்கின்றன. அந்த முகங்களை தொகுத்து தென்னகத்தின் அரைநூற்றாண்டுக்கால பண்பாட்டுவரலாற்றையே எழுதிவிடமுடியும்.

[கமல்ஹாசனுக்கு 7-11-2014 அன்று 60 வயதானதை ஒட்டி குமுதம் வெளியிட்ட கமல் 60 இதழில் வெளிவந்த கட்டுரை ]

http://www.jeyamohan.in/65684

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.