Jump to content

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

thraiapa-680x365.jpg
 

“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி. மாறாக இத் தொடரில் முக்கியமான அரசியல்வாதிகளது கொலைகள் பற்றியே சொல்லப்படும்.

அவற்றை ஒட்டி அந்தக் கொலைகள் நடந்த காலச் சூழலில் அரசியல் வெப்ப தட்ப நிலைகள் பற்றியும் சுருக்கமாக சொல்லப்படும்.இடைக்கிடையே சில சுவையான சம்பவங்கள், சூடான திருப்பங்கள், மற்றும் சில சுத்துமாத்துக்கள் பற்றியும் தொட்டுக் காட்டப்படும். தொடர் முடியும் போது உங்கள் அபிப்பிராயங்களை அறிய மிக மிக ஆவல்

பிரியமுடன்

அற்புதன்

(19.11.1994 தினமுரசில் அற்புதன் எழுதிய தொடர் நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது

-தொடரின் ஆரம்பம்

1970களில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் பேசுவதே இளைஞர்கkasiananathanளுக்கு வேதம்.

“ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை..||

இது காசி ஆனந்தன் எழுதிய கவிதையொன்றில் உள்ள வரிகள்.

மட்டக்களப்பு அமிர்தகழியில் பிறந்த காத்தமுத்து சிவானந்தன் தனது பெயரை சுருக்கி வைத்துக் கொண்டு நிறைய கவிதைகளை எழுதினார். அநேகமான காசி ஆனந்தனின் கவிதைகள் தமிழக புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளின் சாயலில் பிரசவமாயின.

kasiananathan.jpg

பாரதிதாசனின் ஒரு கவிதை-

“ கொலை வாளினை எடடா – மிகு

கொடியோர் செயல் அறவே

குகை வாழ் ஒரு புலியே

உயர் குணமேவிய தமிழா||

என்று உணர்ச்சி தந்து அழைக்கும் அதே சாயலில் காசி ஆனந்தனின் ஒரு கவிதை.

“ பத்துத் தடவை பாடை வராது

பதுங்கிப் பாயும் புலியே தமிழா,

செத்து மடிதல் ஒரு தரமன்றோ

சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா||

செருக்களம் வருமாறு அன்று இந்தக் கவிதையை எழுதிய காசி ஆனந்தன் இப்போது களத்தில் இல்லை தமிழ்நாட்டில் இருக்கின்றார்.

“ வெறி கொள் தமிழர் புலிப்படை

அவர் வெல்வார் என்பது வெளிப்படை.

மறவர் படை தான் தமிழ்ப்படை.

குலமான ஒன்றே அடிப்படை||

இதுவும் காசி ஆனந்தன் எழுதிய கவிதை தான். ஆனால் காசி ஆனந்தன் அந்தக் கவிதையை எழுதியபோது புலிகள் இயக்கம் உருவாகியிருக்கவில்லை.

ஒரு சுவையான சம்பவம் சொல்கிறேன்.கேளுங்கள்.

1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது நடவடிக்கைகளுக்கு முதன் முதலாக உரிமை கோரியது. அதன் பின்னர் தான் புலிகள் இயக்கம் என்று ஒரு அமைப்பு இருக்கின்றது என்று வெளியே தெரிய வந்தது.

பத்திரிகைகளில் புலிகள் இயக்கத்தின் அறிக்கை வந்தவுடன் சி.ஐ.டி. பிரிவினரின் சந்தேகப்பார்வை காசி ஆனந்தன் மீது விழுந்தது.

எப்போதோ எழுதிய கவிதைக்காக சந்தேகவலையில் சிக்கிய காசி ஆனந்தன் சிறைக்கும் போகவேண்டியேற்பட்டது.

காசி ஆனந்தன் கதையை இந்த அரசியல் தொடரில் சொன்னதற்குக் காரணம் இருக்கின்றது. காசி ஆனந்தன் போலத் தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களும். தமது பேச்சுக்கும் செயலுக்கும் எந்தவித தொடர்புமில்லாமல் மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்தார்கள்.

இன்னமும் தெளிவாகச் சொல்வதானால் தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கு தாமே பிற்காலத்தில் உதாரணமாக மாறப்போவது தெரியாமல் உணர்ச்சிகளை விதைத்துக் கொண்டிருந்தார்கள். 1972ம் ஆண்டு  ஏப்ரல் மாதத்தில் தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கியது. அந்த ஒற்றுமையும் தமிழ்பேசும் மக்களிடையே புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்தது.

1971 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசு கொண்டு வந்த ‘தரப்படுத்தல் கல்வி முறை| தமிழ் மாணவர்களை கொதிப்பேற்றியது. பல்கலைக்கழக அனுமதியை நாடிய தமிழ் மாணவர்கள் தரப்படுத்தலால் தூக்கி வீசப்பட்டனர்.

அன்றைய கல்வி அமைச்சர் பதிய+தீன் முஹ்முதினீன்  கொடும்பாவிகள் தமிழ் மாணவர்களால் கொழுத்தப்பட்டன. தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ‘தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும்’ என்ற எண்ணத்திற்கு விதை போட்ட பெருமை தரப்படுத்தல் முறைக்கே சாரும்.

v_navaratnam.jpgதமிழ் இளைஞர்களதும் மாணவர்களதும் நாடித்துடிப்பையறிந்து கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தமிழ் ஈழக் கோரிக்கையை முன் வைக்க ஆரம்பித்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழக் கோரிக்கையை முன் வைப்பதற்கு முன்னரும் வேறு சிலர் தமிழ் ஈழக்கோரிக்கையைப் பற்றிப் பேசினார்கள்.

தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் வி.நவரட்ணம், அடங்காத் தமிழர் எனப்படும் அமரர் சுந்தரலிங்கம் போன்றோரே அவர்கள்.

அவர்களது தமிழ் ஈழக்கோரிக்கைக்கு தமிழர்களது ஆதரவினைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. “நாமே முதலில் தமிழ் ஈழம் கேட்டோம் என்று அவர்களும் அவர்களது விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஆதரவாளர்களும் பின்னர் சொல்லிக் கொள்ள மட்டுமே அது பயன்பட்டது.

தமிழ் ஈழம் கேட்ட   தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் வி.நவரட்ணம்  தமிழரசுக்கட்சியிடம் படுதோல்வியடைந்தார். ஊர்காவற்றுறைத் தொகுதியில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் பண்டிதர் கா.பொ.இரத்தினத்திடம் பரிதாபமாகத் தோற்றுப்போனதே முதலில் தமிழ் ஈழம் கேட்டவரின் வரலாறு.

எந்தவொரு கோரிக்கையும் அது எத்தகைய சூழலில் முன்வைக்கப்படுகின்றது என்பதனைப் பொறுத்தே மக்களைப் பற்றிக் கொள்கின்றது. மாக்சிச தத்துவ வித்தகர் தோழர் மாக்ஸ் சொன்னது இது: “கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்||

தமிழர் விடுதலைக் கூட்டணி காலம் அறிந்து போட்ட உணர்ச்சி விதை தமிழ்த் தேசிய நெருப்பாகியது. இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் உணர்ச்சி வெள்ளம். தலைவர் அமுதர் முதல் அடிமட்டப் பேச்சாளர்கள் வரை தமது எதிராளிகளையெல்லாம் துரோகிகள் என்று தமிழ் மக்களிடம் சுட்டிக்காட்டத் தொடங்கினார்கள்.

அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டவர்களில் முதன்மையானவர்கள்-

யாழ்.நகர முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பா, முன்னாள் அமைச்சர் செல்லையா குமாரசூரியர், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ராஜன் செல்வநாயகம், நல்லூர் பா.உ.அருளம்பலம்,வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா, யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி.எக்ஸ்.மார்ட்டின்…..

இவர்களில் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் அருளம்பலமும் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசாவும் தமிழ் காங்கிரஸ் கட்சி மூலம் தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றவர்கள். பின்னர் கட்சி மாறிய பட்சிகளானவர்கள்.

யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் சி.எக்ஸ்.மார்ட்டின் தமிழரசுக்கட்சி மூலம் வெற்றி பெற்று பின்னர் கட்சி தாவியவர்.

மார்ட்டின் கட்சி மாறியது பற்றி பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் மேடைகளில் கேலி செய்து பாடுவார்.

“எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த எம் மார்ட்டின் எம்மை விட்டுப் போனானாடி||

கூட்டத்தில் சிரிப்பொலி அலை மோதும்.ஆனால் பாராளுமன்றம் அப்போது இருந்தது இரண்டடுக்கு மாடியில் தான்.

எப்படியோ சொல் அலங்காரங்களாலும் இடி முழக்கப் பேச்சுக்களாலும் ‘துரோகிகள்’ எனத் தம்மால் கூறப்பட்டோரை கூட்டணியினர் தாக்கினார்கள்.

இளைஞர்கள் மத்தியில் ~துரோகிகளை’ வாழவிடக்கூடாது என்ற எண்ணம் வெறியாகியது.

வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசாவை கொழும்பில் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி ஒன்று நடந்தது. (ஆண்டு நினைவில் இல்லை)

இரு இளைஞர்கள் தியாகராசாவின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.

ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லி “ஐயாவைப் பேட்டி காண வந்திருக்கின்றோம்|| என்று சொன்னார்கள்.

“குமாரசூரியர் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றார் இருங்கோ தம்பி||

ஒரு இளைஞர் ஆசனத்தில் அமர மற்றவர் கதவருகில் நின்று சூழலை அவதானித்தபடி தன் இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை உருவிக்கொண்டார்.

(தொடரும்)

1978 இல் உரிமை கோரியவை:

1978 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற கடிதத் தலைப்போடு ஓர் அறிக்கை சகல பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பிரதியே இங்கு காணப்படுகின்றது

அந்த அறிக்கையில் புலிகள் உரிமை கோரியிருந்த நடவடிக்கைகள்:

1. அல்பிரட் துரையப்பா (யாழ்.மேயரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வடபகுதி அமைப்பாளரும்)

2. திரு.என்.நடராஜா (உரும்பிராய் பெற்றோல் நிலைய அதிபரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும்)

3. திரு.கருணாநிதி (காங்கேசன்துறை சி.ஐ.டி. பொலிஸ் உத்தியோகத்தர்)

4. திரு.சண்முகநாதன் (காங்கேசன்துறை சி.ஐ.டி. பொலிஸ்)

5. திரு.சண்முகநாதன் (வல்வெட்டித்துறை சி.ஐ.டி. பொலிஸ்)

6. திரு.தங்கராசா (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்,நல்லூர் பா.உ.அருளம்பலத்தின் செயலாளர்)

7. திரு.சி.கனகரத்தினம் (தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் பின்னர் ஐ.தே.க பா.உ,இவர் சுடப்பட்டு உயிர் தப்பியவர்)

8. திரு.பஸ்தியாம்பிள்ளை (சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்)

9. திரு.பேரம்பரம் (சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டர்)

10. திரு.பாலசிங்கம் (சி.ஐ.டி. சாரஜன்ட்)

11. திரு.ஸ்ரீவர்த்தன (சி.ஐ.டி.பொலிஸ் சாரதி)

இக்கொலைகள் நடந்த சூழல்களும் இத்தொடரில் விளக்கப்படும்.

நன்றி http://ilakkiyainfo.com/2014/11/04/தொடர்-கட்டுரைகள்/அல்பிரட்-துரையப்பா-முதல்/

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 2

thuraijapa-680x365.jpg
 
சிவகுமாரன் போட்ட விதை – பிரபாகரன் வைத்த குறி

தியாகராசாவின் புத்தி

கொழும்பில் வைத்து தன்னைக் கொலை செய்யும் துணிச்சல் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படாது  என்று  தான் வட்டுக்கோட்டை பா.உ.தியாகராசா நினைத்திருந்தார். அதனால் தான் முன் பின் அறிமுகமில்லாத இரு இளைஞர்கள் பத்திரிகை ஒன்றின் பெயரைச் சொல்லி பேட்டி கேட்டபோது சந்திக்கச் சம்மதித்தார். ஆனாலும் முதல் அனுபவம் என்பதால்  இளைஞர்கள் இருவரதும் நடவடிக்கைகளில் தியாகராசாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

கதவருகில் நின்ற இளைஞர் கைத்துப்பாக்கியை உருவிக்கொண்டதைக் கண்ட தியாகராசா உசாராகிவிட்டார்.

மரண தூதன் எதிரே நிற்கும் உணர்வில் எப்படியாவது தப்பித்தாகவேண்டுமே என்று உள் மனம் உந்த தரை நோக்கி குனிந்தார்.

அச்சமயம் கதவருகில் நின்ற இளைஞரோ தியாகராசாவின் அருகில் நின்ற தனது சகாவான இளைஞரை “ திசை இங்கே வா|| என்று அவசரமாக குரல் கொடுத்தார்.

பயிற்சியும் இல்லை. கைத்துப்பாக்கியும் உள்ளுர் தயாரிப்பு. வெடிக்கலாம். ரவையைத் துப்பாமலும் அடம்பிடிக்கலாம் தவிர, தான் சுடுவது தப்பித்தவறி சகாவுக்கும் பட்டுத் தொலைத்துவிடலாம் என்ற பயம் வேறு.

~திசை’என்று அழைக்கப்பட்ட இளைஞர் கதவை நோக்கி ஓட, கதவருகில் நின்ற இளைஞர்  தியாகராசாவை குறி வைத்து விசையை அமுக்க அதே தருணத்தில் தரையை நோக்கி குனிந்த தியாகராசா அபயக்குரல் எழுப்பியபடி தரைவிரிப்பின் முனையில் பிடித்து இழுத்தார்.

தியாகராசா குனிந்ததும் தரைவிரிப்பு இழுக்கப்பட்டதால் அதன் மறுமுனையில் நின்ற இளைஞர் தனது சமநிலை தவறிய நிலையில் சுட நேர்ந்ததும் குறி தவறக் காரணமாயின.

துப்பாக்கி ரவை சுவரில் பாய்ந்தது. திட்டம் தோல்வியாகிவிட்டதை உணர்ந்து இரு இளைஞர்களும் தப்பி ஓடினார்கள்.

அவர்கள் இருவரும் தனியார் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியே வந்திருந்தனர்.

வெடிச்சத்தமும் அபயக்குரலும் சிங்களவரான வாகனச்சாரதிக்கு விபரீதத்தை தெரியப்படுத்திவிட ஓடி வந்த இளைஞர்களைக் கண்டதும் வாகனச் சாவியை வீசி எறிந்துவிட்டு சாரதி ஓடிவிட்டார்.

பின்னர் எப்படியோ இரு இளைஞர்களும் தப்பிக் கொண்டார்கள்.

ஒருவர் திசைவீரசிங்கம். மற்றவர் ஜீவன் அல்லது ஜீவராசா.

அவர்களைத் திட்டத்தோடு அனுப்பி வைத்தது தமிழ் மாணவர் பேரவைத் தலைவர் பொன்.சத்தியசீலன். இந்த மூவரும் இப்போது வெளிநாட்டில் உள்ளனர்.

அனுப்பி வைப்பார் வரமாட்டார்

சத்தியசீலன் பற்றி அவரோடு இருந்தவர்கள் சொல்லும் விமர்சனம் இது. “அவர் யாரைச் சுடவேண்டும் என்று சொல்லி  அனுப்பி வைப்பார். எந்த நடவடிக்கையிலும் தான் மட்டும் பங்கு கொள்ளமாட்டார். பொலிசார் விசாரிக்கும்போது ஆதியோடு அந்தம் வரை சொல்லிவிடுவார்.

~சிறை மீண்டு செம்மல்’ என்று அழைக்கப்பட்ட சத்தியசீலன் ஜெர்மனுக்கு கொள்ளை விளக்கம் அளிக்க அழைப்பு வந்துள்ளதாகக் கூறிச் சென்றவர் தான் திரும்பி வரவே இல்லை.

கூட்டணித் தலைவர்களால் உணர்ச்சிகரமாகத் தூண்டிவிடப்பட்ட ~துரோகி ஒழிப்பு’ படலத்தில் முதலில் குறிவைக்கப்பட்ட அரசியல்வாதியான தியாகராசா தப்பிக் கொண்டார். (பின்னர் 1981 ஆம் ஆண்டு இவர் வட்டுக்கோட்டையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். புளொட் அமைப்பே கொலைக்கு காரணம் என்று நம்பப்பட்டது)

அவர் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தியாகராசா உயிர்தப்பியபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அருளம்பலம், சி.எக்ஸ்.மார்ட்டின், குமாரசூரியர், ராஜன் செல்வநாயகம் போன்ற பா.உ.க்களும் யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பாவும் தமக்கு குறிவைக்கப்படலாம் என்று உணர்ந்தேயிருந்தனர்.

ஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களால் யார் கடுமையாக வசைபாடப்படுகிறார்களோ அவர்களே உடன் ஒழிக்கப்படவேண்டியவர்கள் பட்டியலில் முதலிடம் பெறுவார்கள்.

துரையப்பாவின் இரு பக்கங்கள்

யாழ்.மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு இரு பக்கங்கள் உண்டு.

தமிழ் பேசும் மக்களது அரசியல் அபிலாசைகள் பற்றிய கோரிக்கைகளை அவர் அலட்சியம் செய்தார்.

அதன் மூலமாக தமிழர்களுக்கு எதிரானவராக தான் சித்தரிக்கப்படுவதையிட்டு அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.

திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அப்போது பிரதமராக இருந்தார். அவரிடம் தனது சொல்லுக்கு மதிப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் அவர் கவனம் செலுத்தினார்.

இது அவரது ஒரு பக்கம்.

யாழ்.நகரை அழகுபடுத்துவது, நவீனப்படுத்துவது என்பவற்றில் தனக்கு முன்னும் பின்னும் வந்த நகர முதல்வர்களை விட துரையப்பாவே ஆர்வத்தோடு செயற்பட்டார்.

யாழ்.நகரில் வள்ளுவருக்கும் ஒளவையாருக்கும் சிலைகள் நிறுவினார்.

யாழ்.நகரில் உள்ள நவீன சந்தைக் கட்டிடம் துரையப்பாவின் முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.

யாழ்.நகரில் நவீன விளையாட்டரங்கும் உருவாக்கப்படவும் துரையப்பாவே ஏற்பாடு செய்தார்.

கூட்டுறவுச் சங்கங்களில் துரையப்பாவின் மூலமாக நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்புப் பெற்றார்கள். இது அவரது மறுபக்கம்.

ஆனால் இவற்றையெல்லாம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கேலி செய்தனர்.

images2.jpg

சோறா சுதந்திரமா?

“தன்மானத் தமிழனுக்கு சோற்றை விட சுதந்திரமே முக்கியம்.||

“தமிழ்ஈழம் கிடைத்த பின்னர் நவீன சந்தைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்|| என்றனர்.

“கூப்பன் கள்ளன்|| என்றும்  அவர் கேலி செய்யப்பட்டார்.

இதற்கிடையே இளைஞர்களுக்கு துரையப்பா மீது கடும் சினம் ஏற்படக்கூடிய வகையில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமைந்தது.

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது.

இந்த மாநாடு மூலம் கூட்டணியினர் அரசியல் லாபம் அடைந்துவிடுவார்கள் என்று துரையப்பா நினைத்தார்.

அதனால் மாநாடு நடைபெறுவதை தடுக்கவும் அதையும் மீறி நடந்தபோது இடைய+றாகவும் இருக்க முற்பட்டார்.

. யாழ்.நகரெங்குமே விழாக் கோலம் பூண்டு எங்கும் தமிழ் முழக்கம் கேட்ட அந்த நாட்களில் ஒரு நாள் துப்பாக்கி வேட்டொலிகள்!

திரண்டிருந்த மக்கள் சிதறியோடினார்கள்.தேமதுரத் தமிழோசை கேட்க வந்த 9 தமிழர்கள் செத்துப் போனார்கள்.

வேட்டோசை எழுப்பி பொலிசார் நடத்திய அட்டூழியத்தை அன்றைய அரசு மூடி மறைக்கப் பார்த்தது.

மின்சார வயர்களை மிதித்ததும் கூட்ட நெரிசலும் சாவுக்கு காரணம் என்பது போல் விளக்கம் சொல்லப்பட்டது

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு மீதும் துரையப்பா மீதும் இளைஞர்களது கோபாவேசத்தை வளர்த்துவிட்டன.

கல்வியில் தரப்படுத்தல் கொள்கை, தமிழரசு – நமக்கொரு தனியரசு வேண்டுமென்ற சிந்தனைக்கு நீர்வார்த்தது.

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் ~ ஆயுதம் ஏந்தாமல் விமோசனம் இல்லை| என்ற சிந்தனைக்கு கொம்பு சீவிவிட்டது.

படுகொலைக்குக் காரணமான பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவுக்கும் துரையப்பாவுக்கும் குறி வைத்து சிவகுமாரன் தலைமையில் சில இளைஞர்கள் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் கைலாசநாதர் கோவில் அருகில் வைத்து பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா மீது கைத்துப்பாக்கியால் சுட்டார். ஆனால் கைத்துப்பாக்கி சிவகுமாரனைக் கைவிட்டது – இயங்க மறுத்தது.உள்ளுர் தயாரிப்பு உருப்படியாக இல்லை.

பல்வேறு முறை மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகளில் சந்திரசேகரா தப்பினார். அதேவேளை பொன்னாலை பாலத்தில் வைத்து துரையப்பாவைக் கொல்ல சிவகுமாரன் போட்ட திட்டமும் பலிக்கவில்லை.

பொன்.சிவகுமாரன் உரும்பிராயைச் சேர்ந்தவர்.ஆயுதம் ஏந்துவது ஒன்றே தமிழர்கள் விடுதலைக்கு ஒரே வழி என்று உறுதியாக நம்பியவர். துரோகிகள் ஒழிப்புத் தான் அவரது முதல் குறியாக இருந்தது.எனினும் அதில் அவர் வெற்றி பெறவில்லை.

1974 ஆம் ஆண்டு ஜுலை 5 ஆம் திகதி கோப்பாய் வங்கிக் கொள்ளை முயற்சியில் கைதானபோது விஷம் அருந்தித் தற்கொலையானார்.

தற்கொலைக் கலாச்சாரத்திற்கு கால்கோள் நாட்டியவர் சிவகுமாரன் தான்.

பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக சில காலம் தமிழ்நாட்டில் தங்கிருந்து விட்டு வருவதற்கு சிவகுமாரன் திட்டமிட்டார்.

கடல் வழியாகத் தப்பிச் செல்ல சிவகுமாரனுக்கு பணம் தேவைப்பட்டது.

ஐயாயிரம் ரூபா தந்துதவுமாறு  அன்றைய கோப்பாய் பா.உ. கதிரவேற்பிள்ளையிடம் கேட்டிருந்தார்.

உதவ ஒப்புக் கொண்ட கதிரவேற்பிள்ளை கடைசியில் கைவிரித்துவிட்டார்.

அப்போது கதிரவேற்பிள்ளைக்கு ~சிந்தனைச் சிற்பி| என்ற பட்டம் இருந்தது.

சிந்தனைச் சிற்பிக்கு சிவகுமாரனைக் காக்கும் சிந்தனையே இல்லாமல் போனதால் சிவகுமாரன் குழுவினர் கோப்பாய் வங்கியில் குறிவைத்தனர்.

கொள்ளை முயற்சி தோல்வியடைந்தது.தப்பி ஓடிய சிவகுமாரும் ஏனையோரும் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சிக்கினார்கள்.

சிவகுமாரன் ஓடிப்போய் பதுங்கியிருந்த இடம் பற்றி பொலிசாருக்கு தகவல் சொன்னவன் பெயர் ந. நடராசா.

(உரும்பிராய் பெற்றோல் நிலைய அதிபரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமான ந.நடராசா 02.07.1980 ஆம் ஆண்டு புலிகளால் கொல்லப்பட்டார்.)

சிவகுமாரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தபோதும் அது ஆற்றலின்மையின் வெளிப்பாடு அல்ல. முன் அனுபவமற்ற எந்தவொரு நடவடிக்கையும் அப்படித் தான் ஆரம்பமாகும்.

சிவகுமாரன் போட்ட விதை

sivakumaran.jpg

சிவகுமாரனின் மரணச் சடங்கில்  கடல் அலையாக மக்கள் கண்ணீர் வெள்ளம்.~எங்கள் பொடியளாவது ஆயுதம் ஏந்துவதாவது’ என்று நினைத்தவர்கள் கூட காலம் மாறத்தொடங்கிவிட்டது என்பதை கவனத்தில் கொண்டனர்.

மரண வீட்டில் முன் வரிசையில் நின்றவர்கள் இன்று வரை தம்மை அகிம்சைவாதிகள் என்று கூறிக்கொள்ளும் கூட்டணித் தலைவர்கள் தான். அது தவிர ஆவேசமாக அஞ்சலிக் கூட்ட உரைகளும் நிகழ்த்தினார்கள்.

~இந்திய சுதந்திர போராட்ட தியாகி பகவத்சிங் மாதிரித் தான் தம்பி சிவகுமாரனும்| என்றார் தலைவர் அமிர்.

கூட்டத்தில் சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளையும் கலந்து கொண்டு சிவகுமாரன் பற்றி புகழ மறக்கவில்லை.

கூட்டணியின் குரலாக அன்று வெளிவந்த ‘சுதந்திரன்| பத்திரிகை சிவகுமாரன் புகழ் பாடியது. உரும்பிராயில் சிவகுமாரனுக்கு சிலை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது அந்தச் சிலையை திறந்துவைத்தவர் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் முத்துக்குமாரசாமி (தற்போதைய ரெலோ அல்ல அது )

அகிம்சையே எம் வழி என்று சொன்ன கூட்டணித் தலைவர்கள் சிவகுமாரன் பாதை தவறு என்று ஒரு நாளும் சொன்னதில்லை.

மகாத்மாகாந்தி பகவத்சிங்கைப் பற்றி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகுமாரனின் மரணம் ஆயுதப் போராட்ட எண்ணத்திற்கு நெய் வார்த்தது.

சிவகுமாரனால் குறிவைக்கப்பட்டு தப்பிய துரையப்பா 1975 ஜுலை 27 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு முன் வந்திறங்கினார்.

அங்கு துரையப்பாவின் வருகை பற்றிய தகவல் அறிந்து நான்கு இளைஞர்கள் காத்திருந்தனர்.

பிரபாகரன், கலாபதி, கிருபாகரன்,பற்குணராஜா ஆகியோரே அந்த நால்வர்.

துரையப்பா காரிலிருந்து இறங்கியதும் இளைஞர்களில் ஒருவர் முன்னால் வந்து ~வணக்கம் ஐயா| என்றார்.

(தொடரும்)

பஸ்தியாம்பிள்ளை கொலை தொடர்பாக தேடப்பட்ட தமிழ் இளைஞர்களது படங்கள் சுவரொட்டி மூலமாக  குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 1978 இல் வெளியிடப்பட்டன. துரையப்பா கொலை முதல் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை வரை தேடப்பட்ட பிரபாகரனின் சிறுவயது புகைப்படம் மட்டுமே புலனாய்வுத்துறையினரிடம் சிக்கியது.

வீட்டிலிருந்த தனது புகைப்படங்கள் அனைத்தையும் முன்கூட்டியே பிரபாகரன் எடுத்துச் சென்றுவிட்டார். தேடப்பட்ட இளைஞர்களில் மாவைசேனாதிராசா, வண்ணை ஆனந்தன், கல்லாறு நடேசானந்தன், புஸ்பராஜா, சபாலிங்கம் (கடந்த மே மாதம் 1 ஆம் திகதி பாரிசில் கொல்லப்பட்டவர்) போன்றோர் பொலிசில் சரணடைந்தனர்.

பிரபாகரன், சிறீசபாரத்தினம் போன்றோர் சரணடையவில்லை. துரையப்பா கொலையில் பிரபா நேரடியாக பங்கேற்றிருந்தார். சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொல்லப்பட்டதில்  பிரபா பங்கேற்கவில்லை.

 

thuraijapa.jpg

நன்றி http://ilakkiyainfo....ுரையப்பா-முதல்/


அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 3)

amartalinkam-680x365.jpg
 

இருக்கும்போது பாடப்பட்ட வசை இறந்தபின் தெரிவிக்கப்பட்ட வருத்தம்

நான்கு இளைஞர்களும் “வணக்கம் ஐயா’ என்றதும் பதில் வணக்கம் சொன்னார மேயர் அல்பிரட் துரையப்பா.

அதுவே அவரது இறுதிவணக்கமும் ஆனது. துரையப்பா என்ன நடக்கப்போகின்றது என்று நிதானிப்பதற்கிடையிலேயே இளைஞர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டார்.

மார்பில் ரவைகள் பாய இரத்த வெள்ளத்தில் விழுந்தார் யாழ்.மேயர்.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் தொண்டைக்குழாய்களால் தினமும் பிரசார மேடைகளில் சுடப்பட்டுக்கொண்டிருந்த துரையப்பாவின் கதையை இறுதியாக கைத்துப்பாக்கி முடித்து வைத்தது.

1975 ஆம் ஆண்டு ஜுலை 27 ஆம் திகதி துரையப்பா உயிரிழந்த செய்தி காட்டுத் தீயாக நாடெங்கும் பரவியது. அப்போது பிரதமராக இருந்தவர்  திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா. செய்தி கேட்டு அவர் துடித்துப் போனார்.

உடனடியாக கொலையாளிகளை கண்டுபிடிக்குமாறு அரசு உத்தரவிட்டது.அப்போது யாழ்ப்பாணத்தில் பொலிஸ்துறையில் தமிழ் அதிகாரிகள் தான் துப்புத்துலக்குவதில் பிரபலமானவர்களாக இருந்தனர்.

இன்ஸ்பெக்டரகள்; பஸ்தியாம்பிள்ளை , பத்மநாதன் , தாமோதரம்பிள்ளை ஆகியோர் முக்கியமானவர்கள்.

பொலிசாரின் சந்தேகப் பார்வையில் முதலில் விழுந்தவர்கள் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் தான்.

இறுதிச்சடங்கின் முன்னர் கொலையாளிகளை வளைத்துப் பிடித்துவிடவேண்டும் என்று பொலிஸ் தீவிரமாகியது.

“கொலையாளிகள் யார்?|| யாழ்ப்பாணம் எங்கும் வலைவீசித் தேடல் நடந்தது.

அந்த நான்கு இளைஞர்கள் யார் என்று நாடே அறியாத இரகசியத்தை அறிந்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் தான் கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள். அவர்களே இலக்கை அடையாளம் காட்டினார்கள். அவர்கள் தான் அந்த இலக்கை அழித்தவர்களையும் அறிந்து வைத்திருந்தார்கள்.

குறிப்பாக தலைவர் அமிர்தலிங்கம் அந்த நான்கு இளைஞர்களதும் வரலாற்றை ஆதியோடு அந்தம் வரை அறிந்தவர்.

நான்கு இளைஞர்களில் ஒருவரான பிரபாகரனை ‘தம்பி’ வாஞ்சையோடு அழைத்துப் பேசுவார் அமிர். அப்போது பிரபாகரனுக்கு ‘தம்பி’, ‘கரிகாலன்’ போன்ற பெயர்கள் வழங்கி வந்தன.

‘துரோகி துரையப்பா’ என்று எதுகைமோனையோடு, சந்தநயத்தோடு தமிழர் விடுதலைக் கூட்டணியால் வசைபாடப்பட்டபோதும் யாழ்ப்பாணத்தில் அவருக்கென்றும் கணிசமான செல்வாக்கு இருந்தது.

கூட்டணி எதிர்ப்பாளர்கள் மற்றும் அவரால் வேலைவாய்ப்புப் பெற்ற இளைஞர், யுவதிகள்,சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் துரையப்பாவை ஆதரித்தவர்களில் அடங்கியிருந்தனர்.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் அப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழீழக் கோரிக்கை குறித்து அச்சத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

இடது,வலது என்று பிரிந்திருந்தபோதும் சகல கம்யூனிஸ்ட் கட்சிகளுமே தமிழீழக் கோரிக்கையை எதிர்த்துக் கொண்டிருந்தன.

“ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என காசி ஆனந்தன் கவிதை எழுதியிருந்தாரல்லவா?

ஆண்ட பரம்பரை என்பது உயர்சாதியினரைத் தான் குறிக்கும்.அவர்கள் மீண்டும் ஆள வந்தால் நீங்கள் சிரட்டையில் தான் தேநீர் குடிக்கவேண்டும்.கைகட்டி வாய் பொத்தி நிற்கவேண்டியிருக்கும் என்றெல்லாம் கம்யூனிஸ்ட்டுக்கள்|| என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள் விளக்கம் சொன்னார்கள்.

காங்கேசன்துறைத் தொகுதி எம்.பி.பதவியைத் துறந்து தமிழ்ஈழக் கோரிக்கையை முன் வைத்து அமரர் தந்தை செல்வநாயகம் (தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்) போட்டியிட்டபோது ஒரு தமிழர் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

அவர் தான் சமீபத்தில் கனடாவில் காலமான கம்யூனிஸ்ட் ||வி.பொன்னம்பலம்.

தந்தை செல்வநாயகத்தை செவிடன் என்றெல்லாம் திட்டித் தீர்த்தார்கள் கம்யூனிஸ்ட்கட்சியினர். அப்போது வெளிவந்துகொண்டிருந்த “தினபதி|| பத்திரிகை கூட்டணியினரை கேலி செய்தும் கிண்டல் செய்தும் எழுதியது.

அதனால் தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை என்று யாழ்ப்பாணத்தில் “தினபதிகருதப்பட்டது.

அனைத்தையும் மீறி தந்தை செல்வா காங்கேசன்துறை இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டினார்.

எனினும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடம் கம்ய+னிஸ்ட்டுக்கள் தீவிரமாகப் பணியாற்றியதால் அவர்களிடம் தமிழீழக் கோரிக்கை குறித்து அச்சம் நிலவியது.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து பலருக்கு துரையப்பா கூட்டுறவுச் சங்கங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.

துரையப்பாவின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பலர் கண்ணீர் விட்டுக் கதறினார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் துரையப்பா மறைவுக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

கூட்டணி கண்டனம்

“கொலைக்கு காரணமானவர்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக|| தெரிவித்து அகிம்சை வழியே தம் வழி என்று சொல்லிக் கொண்டனர்.

கூட்டணி மீதும் தலைவர் தளபதி அமுதர் மீதும் இருந்த தீவிர நம்பிக்கையால் கூட்டணியினரது அறிக்கையை ‘சாணக்கிய தந்திரம்| என்று இளைஞர்கள் நினைத்தனர்.

விசாரணைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசாரால் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மட்டுமே கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள்.

ஒருவர் கலாபதி, மற்றவர் கிருபாகரன். பிரபாகரனும் பற்குணராஜாவும் கைது செய்யப்படவில்லை.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது கொழும்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழர்விடுதலைக் கூட்டணியில் சட்டத்தரணிகளாக இருந்த தலைவர்களில் அநேகமாக எல்லோருமே சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரானார்கள்.

வழக்கில் தலைவர்கள்

அவர்களில் முக்கியமானவர்கள் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலமும் அமரர் திருச்செல்வமும்.

குற்றவாளிக்கூண்டில் நின்ற இளைஞர்கள் சிலர் தமது சட்டையில் உதயசூரியன் ‘பட்ஜ்’ அணிந்திருந்தனர். அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னம்.

தமிழ்ஈழ சுதந்திரக் கொடியாகவும் உதயசூரியன் கொடியை கூட்டணி அறிவித்தது.

பெப்ரவரி 4ஆம் திகதி சிங்கக்கொடிகளை ஏற்றுங்கள் என்று அரசு அறிவிக்கும்.

‘அன்று இல்லங்கள் தோறும் உதயசூரியன் கொடியை ஏற்றி சுதந்திர தாகத்தை வெளிப்படுத்துங்கள’; என்று தமிழர் விடுதலைக் கூட்டணி ஆணையிடும்.

அது சுதந்திரக் கொடியாக நீடித்ததோ இல்லையோ தேர்தல்களில் கூட்டணியின் சின்னமாக இன்றுவரை இருக்கின்றது.

வாக்காளர்கள் சுலபமாக கூட்டணியின் சின்னத்தை இனம் காணவும் கொடி ஏற்றங்களும் ‘பட்ஜ்’ அணிதல்களும் மிக வசதியாகப் போய்விட்டன.

தேர்தல் சின்னத்தையே தேசியக் கொடி என்று அறிவித்து பிரபலப்படுத்திய கூட்டணித் தலைவர்களது விவேகத்தை இப்போது கூட மெச்சத் தோன்றுகின்றது.

அது மட்டுமல்ல, துரையப்பா கொலை வழக்கையே பாரிய பிரசாரமாகவே மாற்றியமைத்துவிட்டனர் கூட்டணியினர்.

மறுபுறம், ‘எங்களைக் காக்க கூட்டணியினர் இருக்கின்றார்கள். சட்டம் எதுவும் செய்ய இயலாது’ என்ற நம்பிக்கையும் தீவிரவாத இளைஞர்களிடம் ஏற்பட்டது.

“நீங்கள் செய்யுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்|| என்ற மறைமுகச் செய்தியும் துரையப்பா கொலை வழக்கில் அணி அணியாக ஆஜரான சட்டத்தரணிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது எனலாம்.

தமிழ் ஈழம் ஒரு தனிநாடு. இறைமையுள்ள நாடு. ஸ்ரீலங்கா சட்டங்கள் அதனைக் கட்டுப்படுத்த முடியாது என்று ஆதாரங்களை அள்pளி வைத்து வாதாடியவர் திருச்செல்வம்.

செல்வரும் லிங்கமும்

திருச்செல்வம் பற்றிய ஒரு சுவையான குறிப்பு-

1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு பிரதியமைச்சர் சோமவீர சந்திரசிறி விஜயம் செய்தார்.அவரது காருக்கு குண்டு வீசப்பட்டது. வீசியது சிவகுமாரன்.

அதனைத் தொடர்ந்து சிவகுமாரன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சிவகுமாரன் சார்பில் ஆஜரானவர் அமரர் சுந்தரலிங்கம்

‘அடங்காத் தமிழர்’ என்று அழைக்கப்பட்ட சுந்தரலிங்கம் “பணம் தராவிட்டால் வழக்காடமாட்டேன்|| என்று சிவகுமாரின் தாயார் திருமதி அன்னலட்சுமி பொன்னுத்துரையிடம் அடம் பிடித்தார்.

தருவதாகச் சொன்னார் சிவகுமாரின் அம்மா. ஆனால் கொடுக்க வசதியில்லை.

சுந்தரலிங்கத்தின் கார்சாரதி தினமும் சிவகுமாரின் வீட்டு வாசலில் காவல் நின்று நச்சரிப்பார்.

“ஐயா வாங்கி வரச் சொன்னார் என்பார் சாரதி. மல்லாகம் நீதிமன்றம் தனக்கு சிவகுமாரன் விடயத்தில் பிணை வழங்கும் அதிகாரம் இல்லை என்று விட்டது.

உடனே தலைவர் அமிரை சிவகுமாரன் வீட்டார் சந்தித்தனர்.

அவர் கொழும்பில் இருந்த திருச்செல்வத்திற்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். மேல்நீதிமன்றத்தில் மனுப்போட்டு பிணை வாங்கிக் கொடுக்குமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடிதத்தோடு வந்த இளைஞர் கொழும்பில் திருச்செல்வத்தை சந்தித்தார்.

கடிதத்தைப் படித்துவிட்டு திருச்செல்வம் அந்த இளைஞரைப் பார்த்துக் கேட்டார்.

“எங்களைக் கேட்டோ செய்தனீங்கள்?||

பிணை கேட்க மறுத்துவிட்டார் திருச்செல்வம்.

செத்தபின் வாழ்த்து

பின்னர் பல மாதங்கள் சென்று சிவகுமாரன் விடுதலையானார்.

1974 ஜுலை 5 ஆம் திகதி இறந்த சிவகுமாரனுக்கு கொழும்பில் ஒரு அஞ்சலிக்கூட்டம்.

இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்த அந்த அஞ்சலிக்கூட்டத்தை தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையினர் ஒழுங்கு செய்திருந்தனர்.

பிரதான பேச்சாளர் திருச்செல்வம், அவர் தனது உரையில் கரகோஷத்தின் மத்தியில் கூறினார்.

“தம்பி சிவகுமாரன் எங்களுக்கு வழிகாட்டிவிட்டார்||

முன்னர் கடிதத்தோடு திருச்செல்வத்தை சந்தித்த அந்த இளைஞரும் அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தார் என்பது தான் இன்னும் சுவாரசியம்.

(தொடரும்)

நன்றி http://ilakkiyainfo....ுரையப்பா-முதல்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 4

LTTE_leadersat_Sirumalai_camp-680x365.jp
ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் போராட்டம் – அதன் பெயரால் அமுதரின் மகனுக்கு புகலிடம். யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலைக்கு காரணம் தமிழ் புதிய புலிகள்.

ஆங்கிலத்தில் TNT என்று சுருக்கமாக அழைக்கப்பட்டனர். TNT என்ற பெயர் வெடி மருந்து ஒன்றையும் குறிக்கும்.

தமிழ் புதிய புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் செட்டி. தனபாலசிங்கம் என்ற செட்டி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அடலேறு ஆலாலசுந்தரம்.

(இவர் தான் பின்னாளில் யாழ்.கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர். விடுதலைப் புலிகளால் காலில் சுட்டு (22.02.83) எச்சரிக்கப்பட்டவர். இவர் கதையும் பின்பு சொல்லப்படும்.)

ஆலாலசுந்தரமும் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர் தான்.

செட்டியை வைத்து பயன்படுத்தலாம் என்று நினைத்த ஆலாலசுந்தரம் செட்டி குழுவினரை அழைத்துப் பேசினார்.

‘தமிழ் புதிய புலிகள்’ என்ற பெயரில் ஒரு குழுவாக இயங்குமாறு ஆலோசனை கூறினார்.

தமிழ் புதிய புலிகள் இயக்கத்தில் முக்கியமாக இருந்தவர்களில் சிலர் செட்டி, பிரபாகரன், சிவராசா, ரமேஷ், இன்பம், கண்ணாடி, பத்மநாதன், பற்குணராஜா, கலாபதி, கிருபாகரன், ரட்ணகுமார் ஆகியோர்.

தமிழ் புதிய புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சில:

யாழ்.தெல்லிப்பழை கூட்டுறவு பண்டகசாலையில் 97 ஆயிரம் ரூபா கொள்ளை (1974), யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலை (1975),புத்தூர் வங்கியில் ரூபா ஏழு லட்சம் கொள்ளை (1976 மார்ச் 5). தமிழ் புதிய புலிகளின் சகல முக்கிய நடவடிக்கைகளிலும் பிரபாகரன் பங்கு கொண்டிருந்தார்.

தமிழ் புதிய புலிகளின் தலைவராக இருந்த செட்டி பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கும் நபராக மாறினார்.

சி.ஐ.டி.இன்ஸ்பெக்டராக இருந்த பத்மநாதன் செட்டியை தனது கைக்குள் போட்டுக்கொண்டார்.

செட்டி மூலமாக தீவிரவாத இளைஞர்களின் விபரங்கள் பத்மநாதனால் சேகரிக்கப்பட்டன.

இதனால் வெறுப்புற்ற பிரபாகரன் செட்டியை தேடித் திரிந்தார்.

1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரியருகே செட்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.

செட்டியை சுட்டுக்கொன்றவர் குட்டிமணி. அப்போது பிரபாகரனும் குட்டிமணி குழுவினரோடு இருந்தார்.

5.5.76 அன்று தமிழ் புதிய புலிகள் இயக்கத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) என்னும் புதிய பெயர் சூட்டப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளில் முக்கியமானவர்களாக இருந்தவர்கள் – பிரபாகரன், உமா மகேஸ்வரன், நாகராசா, செல்லக்கிளி (இவர் செட்டியின் தம்பி) ஐயர், விச்சுவேஸ்வரன், ரவி ஆகியோர்.

துரையப்பா கொலையில் பங்கு கொண்ட பற்குணராசா என்னும் சரவணன் பிரபாகரனால் கொல்லப்பட்டார்.

மைக்கல் என்னும் இன்னொரு உறுப்பினரும் 1976ல் பிரபாகரனால் கொல்லப்பட்டார்.

இயக்க முடிவின்படியே மேற்கண்ட இருவரையும் பிரபா சுட்டுக்கொன்றார். ஆனால் அந்த முடிவுக்கு காரணமான சிலர் பின்னர் பிரபா மீது அவரது தனிப்பட்ட தவறு என்பது போல அக்கொலைகள் பற்றி சொல்லித் திரிந்தனர்.

பற்குணராசா என்ற சரவணனை பிரபாகரனிடமிருந்து தந்திரமாக அழைத்துச் சென்றவர்களில் ஒருவர் நாகராசா (வாத்தி). இவர் பின்னர் இயக்கத்திலிருந்து வெளியேறினார்.

வெளியேறிய பின்னர் பிரபாகரன் மீது கொலைகளுக்கான விமர்சனத்தை முன் வைத்தார். அதனால் கோபம் கொண்ட பிரபாகரன் தமிழ்நாட்டில் சென்னையில் இருந்த நாகராசாவை கடத்திச் சென்றார்.

அதன் பின்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘நக்சலைட்’ குழுக்களின் தலையீட்டாலும் தமிழக இரகசிய பொலிசாரின் முயற்சியாலும் நாகராசா விடுவிக்கப்பட்டார்.

புலிகள் இயக்க தலைவர்களாக அரசால் தலைக்கு விலை வைத்து தேடப்பட்ட முக்கியமான மூவர் பிரபாகரன், உமாமகேஸ்வரன், நாகராசா.

நாகராசா இயக்கத்தில்இருந்து வெளியேறி கடத்தல் தொழிலில் ஈடுபட்டு தற்போது செல்வந்தராக தமிழ்நாட்டில் இருக்கின்றார்.

இரகசியமான தலைமறைவு இயக்கத்தின் கட்டுப்பாட்டு விதிகள் நெகிழ்வானதாக இருக்கக்கூடாது என்று பிரபா நினைத்ததை முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது.

இயக்கத்தை விட்டு விலகிய பின் இயக்கத்தில் இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகளை வெளியே தெரிவிப்பது போராட்ட காலத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தும்.

கிய+பா புரட்சியின் போது சேகுவேராவும் கட்டுப்பாட்டை மீறுவோர் தண்டிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

கட்டுபாட்டை மீறிய ஒரு போராளியை சேகுவேரா சுட்டுக்கொன்ற நிகழ்வும் கிய+பா புரட்சியின்போது நடந்திருக்கின்றது.

உமா மகேஸ்வரனும் பிரபாகரனின் உட்கொலைகளை கண்டித்துப் பேசியவர்களில் ஒருவர்.

ஆனால், அவர் பின்பு புளொட் இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தியபோது புளொட் இயக்கத்தில் நூற்றுக்கணக்கான உட்கொலைகள் உமாவின் உத்தரவுப்படி நடந்ததாக புளொட் முக்கியஸ்தர்களே விமர்சித்தனர்.

இறுதியாகத் தனது இயக்க உறுப்பினரும் மெய்ப்பாதுகாவலருமான ஒருவராலேயே உமா மகேஸ்வரன் கொழும்பில் வைத்து கொல்லப்பட்டார்.

இனி , துரையப்பா கொலைக்குப் பின் நடந்த சம்பவங்களுக்கு வருவோம்.

துரையப்பா கொலையைப் பற்றி விசாரணை செய்ய பொலிசார் பல முனைகளில் முயற்சிகளை மேற்கொண்டனர்.

தீவிரவாத இளைஞர்களை வேரோடு களையவேண்டும் என்ற முனைப்போடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதே சமயம் துரையப்பா கொலையோடு தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் காண்டிபனின் பெயரும் சேர்க்கப்பட்டது.

காண்டிபனைத் தேடி பொலிசார் அலைந்தனர்.

துரையப்பாவை சுட்டது யார் என்பது கூட அமிர்தலிங்கம் சொல்லித் தான் காண்டிபனுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனாலும், காண்டிபனை பொலிசார் தேடிய வேகத்தைப் பார்த்த மக்கள் அமுதரின் மகனும் ஒரு வீரன் தான் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்டனர். இதனால் அமுதருக்கு இருந்த மதிப்பும் உயர்ந்தது.

காண்டிபன் இலண்டனுக்கு பத்திரமாகப் போய்ச் சேர்;ந்தார்.

அவருக்கு அரசியல் அடைக்கலம் பெற்றுக் கொடுக்க பலத்த முயற்சிகள் நடந்தன.

இறுதியில் அரசியல் புகலிடம் கிடைத்தது. தமிழர்கள் சந்தோசப்பட்டார்கள். தேடப்பட்டவுடன் தப்பிஓடி அரசியல் புகலிடம் தேடுவதா?

அப்படியானால் இங்கே போராடும் இளைஞர்கள், சுவரொட்டி ஒட்டி தலைக்கு விலை வைத்து தேடப்படும் இளைஞர்கள் புத்திகெட்டவர்கள் என்று தான் அர்த்தமா? என்றெல்லாம் தமிழர்களில் பலர் யோசிக்கவேயில்லை.

அந்தளவுக்கு அமுதர் மீது கண்மூடித்தனமான விசுவாசம் நிலவிய காலம் அது.

காண்டிபன், துரையப்பா கொலையில் தேடப்பட்டதால் ஏற்பட்ட இலாபங்கள் இரண்டு.

ஒன்று: அமுதர் குடும்பமே தியாகத்திற்கு தயாரான குடும்பம் என்ற பெருமை. அதனால் தளபதி என்ற பட்டம் அமுதருக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

இலாபம் இரண்டு: அந்தக் காலத்தில் இலண்டன் சென்று புகலிடம் பெறுவது சாதாரண காரியமல்ல. ஆனால் காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாக காண்டிபனுக்கு புகலிடம் சுலபமாகக் கிடைத்தது.

இலண்டனில் புகலிடம் தேடிய காண்டிபன் தமிழர்கள் போராட்டத்திற்கு அங்கிருந்து செய்த காரியம் என்னவென்று கேட்டால், பதில் ஒன்றுமேயில்லை என்பது தான்.

அமுதரின் தியாகங்களை மறுத்துப் பேசுவது என் நோக்கமல்ல: தமிழர்களுக்குக் கிடைத்த ஆளுமையுள்ள, உணர்ச்சிகரமான தலைவர் அவர்.

ஆனால், காண்டிபன் விடயத்தில் அமுதரின் போக்கு சரியானதாக இருக்கவில்லை.

அமுதரின் மகன் லண்டனில் புகலிடம் தேடிக்கொண்டார். வடக்கு – கிழக்கில் தீவிரவாத இளைஞர்கள் பொலிசாரின் தேடுதல் வேட்டைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள அங்கும் இங்கும் ஓடி அலைந்தார்கள்.

தேடுதலில் முன் நிற்கும் பொலிசாரை அழித்துவிடுவது தான் தப்பிக் கொள்ளவழி என்று தீவிரவாதக் குழுக்கள் முடிவு செய்தன.

குறிப்பாக தமிழ் பொலிஸ் அதிகாரிகள் மீது தான் இளைஞர்கள் அதிகமாகக் கோபப்பட்டார்கள்.

துப்பு துலக்குவதில் திறமையான பொலிஸ் அதிகாரி பத்மநாதன்.

சி.ஐ.டி. இன்ஸ்பெக்டரான பத்மநாதனின் வீடு நல்லூர் முடமாவடியில் இருந்தது.

1978 ஆம் ஆண்டு (திகதி – மாதம் நினைவில் இல்லை) சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பத்மநாதன் வீட்டின் முன்பாக இளைஞர்கள் சிலர் காத்திருந்தனர்.

இரவு நேரம். வெளியே காரில் சென்றிருந்த பத்மநாதன் எப்படியாவது வீடு வந்து சேர்ந்தேயாகவேண்டும்.

இளைஞர்களிடம் பரபரப்பு,குறி சரியாக அமையவேண்டுமே என்றும் படபடப்பு.

இது புலிகள் குழுவினரல்ல. வேறு குழு.

தூரத்தில் கார் ஒன்றின் ஹெட்லைட் வெளிச்சம்.

இளைஞர்களின் இதயத்துடிப்பு அதிகரித்தது. பத்மநாதனிடமும் கைத்துப்பாக்கி இருந்தது.

(தொடரும்)

நன்றி http://ilakkiyainfo....ுரையப்பா-முதல்/

 

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 5

tamil-tigers-5-680x365.jpg
 

தவறிய குறி இரண்டு – தவறாத குறி மூன்று

 

பத்மநாதனுக்கு முன்னர்

இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தன்   மீது உடனடியாக குறி வைக்கப்படும் என று எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது வீட்டின் முன்பாக காரை நிறுத்திவிட்டு கேற் திறப்பதற்காக தாமதித்த விநாடிகளில் முதல் சூடு விழுந்தது கைத்துப்பாக்கியை எடுத்துக் கொள்ளக்கூட அவகாசம் இல்லை.

கார்க்கதவைத் திறந்து இறங்கி ஓடிய பத்மநாதன் மீது மேலும் பல துப்பாக்கிச் சூடுகள் விழுந்தன.அவர் பலியானார்.

பொலிஸ் வட்டாரம் அதிர்ச்சியடைந்தது. தமிழ் பத்திரிகை ஒன்று,சூடுபட்ட நிலையிலும் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைஞர்களை சிறிது தூரம் துரத்திச் சென்றார் என்று செய்தி போட்டது.

‘இன்ஸ்பெக்டர் பத்மநாதன், பஸ்தியாம்பிள்ளை போன்றவர்கள் அப்போது ‘ஹீரோக்கள்’ போலவே மதிக்கப்பட்டார்கள்.

இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவது மக்களால் வியப்பாக நோக்கப்பட்டது. அதேநேரம் பொலிசார் அவர்களை சுலபமாக பிடித்துவிக்கூடும் என்றும் நம்பப்பட்டது.

1978இல் நடந்து முடிந்த பத்மநாதன் கொலை முக்கியமானதாக இருந்தபோதும் அதற்கு முன்னரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கொல்லப்பட்டிருந்தனர்.

அல்பிரட் துரையப்பா கொலை வழக்கின் துப்புத் துலக்கலில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கருணாநிதி. இவர் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்.

1977ஆம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி கொன்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

துரையப்பா கொலை வழக்கில் துப்புத் துலக்கிய மேலும் இரு கொன்ஸ்டபிள்கள் ஒரே பெயரைக் கொண்டவர்கள். ஒருவர் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர். மற்றவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்.

நோக்கம் ஒன்று தான் துரையப்பா கொலைக்கு காரணமானவர்களைக் கண்டறிவது.

பெயரும் ஒன்று தான், சண்முகநாதன்! இரண்டு சண்முகநாதன்களும் தமக்கு கிடைத்த ஒரு தகவலை ஆராய ஒன்றாகச் சேர்ந்து இணுவில் என்ற இடத்திற்குப் போனார்கள்.

சிவில் உடையில் இருந்த இரு சண்முகநாதன்களையும் இனம் கண்டு கொண்ட இளைஞர்கள் இருவர் சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

இணுவில் பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்ற இரு கொன்ஸ்டபிள்களும் திடீரென துப்பாக்கி வேட்டுக்களை எதிர்கொண்டனர்;.

தமக்குக் கிடைத்த தகவலை ஆராயவோ, அல்லது பஸ்ஸை பிடிக்கவோ சந்தர்ப்பமே இல்லாமல் இரு சண்முகநாதன்களும் பலியானார்கள்.

இது நடந்தது 18.05.77- நேரம் காலை 9.15 மணி.

கொன்ஸ்டபிள் கருணாநிதி மற்றும் கொன்ஸ்டபிள்கள் சண்முகநாதன்  மற்றும் கொலைகளுக்கு காரணமானவர்கள் விடுதலைப்புலிகள்.

ஆனால்,இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள் அல்ல.

குட்டிமணி குழுவினர்

 

tamil-student-in-struggle.jpg

குட்டிமணி, தங்கத்துரை ,சிறிசபாரத்னம், பெரியசோதி ,சின்னசோதி போன்ற இளைஞர்கள் தாம் ஒரு தனிக்குழுவாக இயங்கிக் கொண்டிருந்தார்.

பின்னர் 1974ஆம் ஆண்டளவில் அக்குழுவினரோடு தொடர்புகளை முறித்துக் கொண்டு தமிழ் புதிய புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

குட்டிமணி குழுவினரே இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைக்கு காரணமாக இருந்தனர்.

இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைக்கு முன்பாக குட்டிமணி குழுவினரால் குறி வைக்கப்பட்டவர், அப்போது நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அருளம்பலம்.

தமிழ் காங்கிரஸ் கட்சி மூலமாக பாராளுமன்றம் சென்ற அருளம்பலம் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தாவினார்.

ஒரெயொரு தடவை தனது கணவர் பாராளுமன்றம் செல்ல உதவுமாறு திருமதி அருளம்பலம் வாக்காளர்களிடம் வீடு வீடாகச் சென்று உருக்கமாக வேண்டிக்கொண்டார்.

“எங்கள் பலம் பொன்னம்பலம். எங்கள் பலம் அருளம்பலம்,||, “போடு புள்ளடி சைக்கிளுக்கு நேரே|| என்ற கோஷங்கள் அப்போது தேர்தல் காலத்தில் செவிகளுக்குள் வந்து விழும்.

உருகிப்போன நல்லூர் தொகுதி மக்கள் அருளம்பலத்துக்கு வாக்குகளை அள்ளிப் போட்டனர். பாராளுமன்றம் சென்றவருக்கு ஆளும் கட்சிக்குச் செல்லும் ஆவலும் வந்துவிட கட்சி மாறிவிட்டார்.

இரும்பு மனிதன்

அருளம்பலத்திற்கு முன்னர் நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அமரர் டாக்டர் இ.எம்.பி.நாகநாதன்.

நாகநாதன் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.

‘இரும்பு மனிதன்’ என்று அழைக்கப்பட்டவர்.

நாகநாதன் பாதி அகிம்சைவாதி – மீதி தீவிரவாதி.

சத்தியாக்கிரகப் போராட்டங்களை தமிழரசுக்கட்சி நடத்தும்போது அடிபட்டாலும் மிதிபட்டாலும் தமிழரசுக்கட்சித் தலைவர்கள் சகித்துக் கொண்டிருப்பார்கள்.

நாதகநாதன் பதிலடி கொடுக்க எழுந்து விடுவார்.

யாழ்.கச்சேரிக்கு முன் நடந்த சாத்வீகப் போராட்டத்தில் பொலிஸ் ஜீப்பின் முன்பாக குறுக்கே படுத்துவிட்டார் நாகநாதன்.

ஆத்திரம் அடைந்த பொலிஸ் அதிகாரி குண்டாந்தடியால் நாகநாதனை அடித்தார். அடி கழுத்தின் பின்புறம் விழுந்தது.

நாகநாதன் அசையவில்லை. குண்டாந்தடி தான் உடைந்தது என்று அப்போது பேசப்பட்டது.

அந்த அடியில் பட்ட உட்காயமும் இரும்பு மனிதன் நாகநாதனின் விரைவான இழப்புக்கு காரணம் என்று அப்போது நம்பப்பட்டது.

அமரர் நாகநாதன் போன்றோர்களின் செந்நீரும் வியர்வையும் தான் தமிழ்த்தேசிய எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் உரமாக அமைந்தன.

அருளம்பலம் பாராளுமன்ற உறுப்பினரானார்.கட்சி மாறினார்.

1972இல் தமிழரசு கட்சியம் – தமிழ் காங்கிரசும் ஒற்றுமை கண்டன. தமிழர் கூட்டு முன்னணி (வுருகு)உருவாகியது.(இ.தொ.கா.வும் கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்தபோதும் வடக்கு – கிழக்கு அரசியலுக்குள் தலை போடவில்லை)

கூட்டணி மேடைகளில் அருளம்பலம் ‘கள்ளன்’,’துரோகி’ போன்ற வார்த்தைகளால் அர்ச்சிக்கப்பட்டார்.

செத்த பாம்புக்கு சொல் அடி

நல்லூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னன் சங்கிலியன்.

அந்த சங்கிலியனை காட்டிக் கொடுத்தவனும் ஒரு தமிழன்.

அந்த எட்டப்பனின் மறுபிறவியாகவே அருளம்பலம் கூட்டணியினரால் சுட்டிக்காட்டப்பட்டார்.

அருளம்பலம் அரசியல் செல்வாக்குப் படைத்த ஒருவரல்ல.

அதுவும் கட்சி மாறிய பின் அவர் ஒரு செத்த பாம்பு.

ஆனாலும் செத்த பாம்பையும் விடாமல் கூட்டணித் தலைவர்கள் சொல்லால் அடித்துக் கொண்டிருந்தனர்.

அரசியலில் தமக்கு எதிராக கடைவிரித்த எவரையுமே கூட்டணித் தலைவர்களால் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்தது.

தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் தனித்தனியே அரசியல் நடத்தியபோது அக்கட்சிகளைச் சார்ந்தோர் அரசில் அங்கம் வகித்தார்கள்.அமைச்சர் பதவிகளும் பெற்றார்கள்.

தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சராக இருந்திருக்கின்றார்.

தமிழரசுக் கட்சி பிரமுகராக இருந்த அமரர் திருச்செல்வமும் அமைச்சராக இருந்திருக்கின்றார்.

வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழர்கள் அரசோடு இருப்பதையோ அமைச்சர்களாக இருந்ததையோ அந்த இரு கட்சிகளாலுமே சகிக்க முடியாமல் போய்விட்டது.

கூட்டணியாகிய பின் இரு கட்சிகளும் ஒன்றாய் நின்று ஒரே குரலில் துரோகிப் பட்டியலை ஒப்புவித்தார்கள்.

தாம் அமைச்சர்களாக இருந்தது சாணக்கிய தந்திரம்.

பிறகு தமிழர்கள் அமைச்சர்களானால் அது காட்டிக்கொடுக்கும் காரியம்.

அது தான் தமிழர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் தலைவர்களாக இருந்தவர்களது அகராதி.

அரசோடு சேர்ந்த அருளம்பலமும் கூட்டணியின் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்று தீவிரவாத இளைஞர் குழுக்களது கொலைப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்.

1976இல் குட்டிமணி குழுவினரால் அருளம்பலம் சுடப்பட்டார்.

சூடுபட்டவுடன் அருளம்பலம் சுருண்டு விழுந்துவிட்டார்.

செத்துவிட்டார் என்று நினைத்து குட்டிமணி குழுவினர் சென்றுவிட்டனர்.

ஆனால் அருளம்பலம் பிழைத்துக் கொண்டார்.

இந்தக் கொலை முயற்சியை கூட்டணியினர் கண்டித்ததாக நினைக்கவில்லை.

வலது கரம் வீழ்ந்தது

அதே ஆண்டு குட்டிமணி குழுவினரால் குறிவைக்கப்பட்டு தப்பிக் கொண்ட இன்னொருவர் கு.விநோதன்.

இவர் உடுவில் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராக இருந்தவர்.

அருளம்பலத்தின் வலதுகரமாக இருந்தவர் தாடித் தங்கராஜா.

கூட்டணி சார்பான இளைஞர்கள் பலர் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுத்து வந்தார்.

1977;ம் ஆண்டளவில் கொக்குவிலில் இருந்த அவரது வீட்டுக்குள் புகுந்த குட்டிமணி குழுவினர் சரமாரியாக சுட்டுத் தீர்த்தனர்.

தாடித்தங்கராஜாவின் கதை முடிந்தது. அரசியல்வாதிகளுக்கு எதிரான கொலை நடவடிக்கைகளில் ஒன்றாக தாடித் தங்கராஜாவின் கொலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

1978ம் ஆண்;டில் குட்டிமணி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கை பொலிஸ் அதிகாரி குருசாமிக்கு குறி வைப்பு!

‘சுடடா என்றார் குட்டி மணி.

தயங்கி நின்றார் ஓபரோய் தேவன்!

பிறகென்ன நடந்தது?

(தொடரும்)

_____________________________________________________________________________________________________________

கட்டம் இடப்பட்ட செய்தி

இத் தொடரின் பல குறிப்புக்களுக்கு ஆதார ஆவணங்கள் இருக்கின்றன. வேறு சில ஞாபகசக்தியை நம்பி எடுத்துத் தரப்படுபவை. சில சமயம் எழுதும் வேகத்தில் ஞாபகசக்தி தவறிழைத்துவிடலாம். உதாரணமாக அமரர் திருச்செல்வம் பற்றி கூறியபோது துரையப்பா கொலை வழக்கில் ஆஜராகி ‘ஸ்ரீலங்கா சட்டங்கள் தமிழ் ஈழத்துக்குப் பொருந்தாது’ என அவர் வாதிட்டதாக குறிப்பிட்டிருந்தேன். தொடரை மீண்டும் திருப்பிப் பார்த்தபோது அது தவறு என்று மூளையில் உறைந்தது.

துரையப்பா கொலை வழக்கில் கூட்டணித் தலைவர் அமிர்,சிவசிதம்பரம், நவரத்னம் உட்பட முக்கியமான சட்டத்தரணிகள் ஆஜரானது உண்மை தான். ஆனால், திருச்செல்வம் ஸ்ரீலங்கா சட்டம் தமிழ் ஈழத்துக்கு பொருந்தாது என வாதிட்டது துரையப்பா கொலை வழக்கில் அல்ல. தமிழ் ஈழம் கோரும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து கைதான தமிழ் தலைவர்கள் மீதான வழக்கில்!

‘ட்ரயல் அற்பார்’ என்னும் விசேட நீதிமன்றத்தில் (ஜுரிகள் இல்லாத நீதிமன்றம்} அந்த வழக்கு நடந்தது. அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழ் ஈழம் என்ற சொல்லையே உச்சரிக்காமல் சட்டவாதம் செய்தார். அமரர் திருச்செல்வம் ‘தமிழ் ஈழம் இறைமையுள்ள நாடு’ என்று எடுத்துக்காட்டி வாதம் செய்தார். தமிழ் ஈழக் கோரிக்கைக்கு மிகப் பெரும் பிரசார லாபமாக அமைந்த வழக்கு அது.

நன்றி http://ilakkiyainfo....ுரையப்பா-முதல்/

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 6

piraba-and-uma-680x365.jpg
உறுதியற்ற தலைமையால் உருக்குலைந்த இயக்கம் – ஓடினார்கள் – ஓடினார்கள்…. பேசியதை மறந்து ஓடினார்கள்  குறியைத் தேடி பிரபா கொழும்பு வந்தார்

(பொலிஸ் அதிகாரி குருசாமியின் வீடு யாழ்ப்பாணத்தில் ஓட்டுமடம் எpiraba-and-umaன்ற இடத்தில் இருந்தது. 1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பொலிசார் வன்முறை நடவடிக்கைகள், துப்பாக்கிப் பிரயோகங்கள் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண நகரமே சுடுகாடாக மாறியது. பொலிசாரின் மீது யாழ்.மக்கள் தீராத வெறுப்புக் கொள்ளக் காரணமாக அமைந்த சம்பவங்களில் 1977 ஆம் ஆண்டின் அத்துமீறல்கள் முக்கியமானவை…..

சன்சோனிக் கமிஷன்

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு சன்சோனிக் கமிஷனை நியமித்தது.

விசாரணை நடப்பதாக காட்டவும் மக்களது கோபத்தை தணிக்கவும் உபயோகமான ஒரு தந்திரம் கமிஷன் அமைப்பது தான்.  இலங்கை , இந்தியா போன்ற நாடுகளில் அநேகமான விசாரணைக்கமிஷன்களின் நோக்கம் அது தான்.

கமிஷன் அமைக்கும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

கமிஷனின் விசாரணையில் கண்டறியப்படும் உண்மைகள் மட்டும் ஒரு ஓரத்தில் தூக்கிப் போடப்பட்டு விடும்.

சன்சோனிக் கமிஷனும் அவ்வாறான நோக்கத்தில் நியமிக்கப்பட்ட ஒன்று தான்.எனினும் சன்சோனிக் கமிஷன் முன்பாக சொல்லப்பட்ட சாட்சியங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன.

குருசாமியின் சாட்சி

பொலிசார் எப்படியெல்லாம சட்டத்தை மீறி நடந்து கொண்டனர் என்பதையெல்லாம் மக்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக அது அமைந்தது.  அந்த வகையில் சன்சோனிக்கமிஷன் விசாரணை அரசு மீதான – அதன் பொலிஸ் படையினர் மீதான அதிருப்தியை உருவாக்க உதவியது தான் போராட்டத்திற்கு கிடைத்த இலாபம்.

பொலிஸ் அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் தாமோதரம்பிள்ளை நியாயமாக சாட்சி சொன்னார்.

சீருடையில் – இலக்கத்தகடுகள் இல்லாத பொலிசார் தீ வைப்புக்கள் போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அவர் சாட்சி சொன்னார்.

இன்ஸ்பெக்டர் குருசாமியும் சன்சோனிக் கமிஷனால் அழைக்கப்பட்டார்.

பொலிசார் அத்துமீறல் எவற்றிலும் ஈடுபடவில்லை என்று நிரூபிக்கும் விதமாக சாட்சி சொன்னார் குருசாமி.

பத்திரிகைகளில் குருசாமியின் சாட்சியத்தைப் படித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தீவிரவாத இளைஞர்கள் அவரை ஒரு துரோகி என்று குறித்துக் கொண்டனர்.

அரசு குருசாமிக்குரிய பாதுகாப்பை அதிகரித்தது.

தானியங்கி இயந்திரத் துப்பாக்கி ஒன்றுடன் யாழ்ப்பாணத்தில் நடமாடினார் குருசாமி.

P1050786.jpg

குட்டிமணி குழுவினர் குருசாமி வீட்டிற்கு சென்றபோது எதிர்பாராத ஒரு வாய்ப்பு அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.  குருசாமியின் வீட்டுக்கு அருகில் திருமண வைபவம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. திருமண வீட்டார் பட்டாசுகளை கொழுத்தி ஆரவாரித்துக் கொண்டிருந்தனர்.

இன்ஸ்பெக்டர் குருசாமி வீட்டிற்குள் சென்ற குட்டிமணி குழுவினரில் ஒருவர் ஒபரோய் தேவன்.

கொழும்பில் உள்ள ஒபரோய் ஹோட்டலில் பணியாற்றியவர் என்பதால் அப்படி அழைக்கப்பட்டார்.

ஒபரோய் தேவன் தான் குருசாமியை சுடவேண்டும் என்பது தான் திட்டம்.

குருசாமி எதிரில் வர ஒபரோய் தேவனைப் பார்த்து ‘சுடடா’ என்றார் குட்டிமணி.

முதல் சம்பவம்,முதல் அனுபவம் என்பதால் தேவனுக்குப் பதட்டம் தயங்கி நின்றார்!

“சுடடா டேய்|| என்றார் இரண்டாவது தடவையாக குட்டிமணி.

‘சுட்டார்;’ ஒபரோய் தேவன்.

வெளியே – திருமண வைபவத்தில் கேட்ட பட்டாசு சத்தங்களோடு சத்தமாக துப்பாக்கி வேட்டொலிகளும் சேர்ந்து கொண்டன. எவ்வித இடையூறும் இல்லாமல் குட்டிமணி குழுவினர் தப்பிச் சென்றுவிட்டனர்.

‘இன்ஸ்பெக்டர் குருசாமி கொலை’! என்ற செய்தி மறுநாள் ‘ஈழநாடு’பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது!

குருசாமி கொலைக்குப் பின்னர் குட்டிமணி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கை குமார் கொலை!

குமார் ஓய்வு பெற்ற ஒரு பொலிஸ் அதிகாரி.

வடமராட்சியில் உள்ள தீவிரவாத இளைஞர்கள் பற்றிய விபரங்களை ஓய்வு பெற்ற பின்னரும் திரட்டிவந்தார் என்று சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த நடவடிக்கைகளையடுத்து குட்டிமணி பொலிசாரால் தீவிரமாகத் தேடப்பட்டார்.

kuddymani.jpg

சிறைக்குள் பிரிவுகள்

ஏற்கனவே பொலிசாரால் கைது செய்யப்பட்டு குட்டிமணி சிறையில் இருந்திருக்கின்றார்.

குட்டிமணி பற்றிய ஒரு சம்பவம் – சிறையில் இருந்தபோது குட்டிமணியிடம் சிறkuddimani2ையில் கூட இருந்த ஏனைய தமிழ் இளைஞர்களுக்கு பயம்.

குத்துச்சண்டை போன்றவற்றில் குட்டிமணி சூரன் என்று பேர் எடுத்திருந்தார்.

அச்சமயம் ஆனந்தன் என்னும் தமிழ் இளைஞரும் தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாக சந்தேகிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்.

குட்டிமணி ஒரு பயில்வான் போன்ற தோற்றத்தோடு இருப்பார்.

ஆனந்தனுக்குப் பலவீன உடல் போன்ற தோற்றம்.

ஒரு நாள் குட்டிமணிக்கும் ஆனந்தனுக்கும் தகராறு. தகராறு முற்றி கைகலப்பாகி விட்டது. ஆனந்தன் குட்டிமணியை அடித்து வீழ்த்திவிட்டார்.

குட்டிமணி அதனை எதிர்பார்க்கவில்லை. சிறையை விட்டு வெளியே சென்றவுடன் ஆனந்தனை ஒரு வழி பண்ணப் போவதாகக் குட்டிமணி சபதம் செய்தார்.

ஒரே இலட்சியத்திற்காக சிறைசென்ற போதும் உள்ளே முரண்பாடுகளும் மோதல்களும் மட்டுமல்ல@ சாதிப்பிரிவுகள் கூட தலைதூக்கியிருந்தன என்பது தான் மாபெரும் வேதனை.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவையில் முக்கியமான மூவர் காசி ஆனந்தன், மாவைசேனாதிராஜா, வண்ணை ஆனந்தன்.

காசி ஆனந்தனும் வண்ணை ஆனந்தனம் வாய்த்தர்க்கப்பட்டுக் கொள்வார்கள். சோற்றுக் கோப்பைகளும் பறக்கும். மாவைசேனாதிராஜா மட்டுமே பிரச்னைகளில் பட்டுக்கொள்ளாமல் இருந்தவர்.

ஈழ விடுதலை இயக்கம்

குட்டிமணியும் அவரது ஆதரவாளர்களும் தனி ஒரு பிரிவு.

இளைஞர் பேரவையினர் மற்றொரு பிரிவு. இதற்குள் ஈழவிடுதலை இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தனி ஒரு பிரிவு.

இளைஞர் பேரவையில் இருந்து பிரிந்தது தான் தமிழ் ஈழ விடுதலை இயக்கம். (இன்றைய ரெலோ அல்ல)

இதன் தலைவராக இருந்தவர் த.முத்துக்குமாரசாமி.ஈழவிடுதலை இயக்க இளைஞர்கள் மத்தியில் சிறைக்குள் சாதி முரண்பாடுகள்.

தமக்குள்ளாகவே முரண்பட்டுக் கொண்டு முட்டி மோதினார்கள்.

1976ல் புலோலி வங்கிக் கொள்ளையை நடத்தியது ஈழ விடுதலை இயக்கம் தான்.

இன்ஸ்பெக்டர் பத்மநாதனால் கொள்ளையில் ஈடுபட்ட அனைவருமே மடக்கிப் பிடிக்கப்பட்டார்கள்.

ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் வாய்வீச்சில் கெட்டிக்காரர்களாக இருந்தார்களே தவிர செயல் முனைப்பு இருக்கவில்லை.

இதனால் புலிகளோ, குட்டிமணி குழுவினரோ அவர்களை நம்பவில்லை. நல்லுறவுகளும் இருக்கவில்லை.

காலக்கிரமத்தில் ஈழ விடுதலை இயக்கம் தானாகவே அழிந்தது. அதன் முக்கியஸ்தர்கள் மக்களையும் தமது உறுப்பினர்களையும் கைவிட்டு ஒதுங்கினார்கள்.

வியாபாரிகளான போராளிகள்

சிலர் நாட்டை விட்டு சென்று வெளிநாடுகளில் வியாபாரிகளானார்கள்.சிலர் உள்நாட்டிலேயே வியாபாரம் செய்தார்கள்.

தமிழர் கூட்டணியை விமர்சித்து ஈழ விடுதலை இயக்கம் உருவாகியபோது அதில் முக்கியமான ஒருவர் ஹென்ஸ் மோகன். புலோலி வங்கிக் கொள்ளையிலும் சம்பந்தப்பட்டவர்.

இதே ஹென்ஸ் மோகன் பின்னர் யாழ்.பா.உறுப்பினராக இருந்த யோகேஸ்வரனுடன் தன்னை நெருக்கமானவராக காட்டிக்கொண்டார். அதன் மூலம் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டருக்கு முன்புறம் கடை ஒன்று நிறுவி சொந்த வியாபாரத்தை வளப்படுத்திக் கொண்டார்.

இப்போது வெளிநாட்டில் இருக்கின்றார்.

மற்றொருவர் சந்திரமோகன். இவரும் புலோலிக் கொள்ளையில் பங்கு கொண்டவர். பின்னர் யாழ்ப்பாணத்தில் கைக்கடிகார கடை நடத்திவிட்டு வெளிநாடு பறந்துவிட்டார்.

தங்கமகேந்திரன் என்று ஒருவர். திருமலையைச் சேர்ந்தவர். புலோலி வங்கிக் கொள்ளையில் கிடைத்த நகையில் ஒரு பகுதியை விழுங்கியவர். பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் சேர்ந்து கொண்டார்.

அவர் தங்குவதற்காக வீடொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அது ஒரு பீடிக்கம்பனி உரிமையாளரது வீடு. மானிப்பாயில் இருந்தது. அங்கு ஒரு அறையில் இருந்த பெறுமதியான உடமைகள், மறைத்துவைக்கப்பட்டிருந்த வீட்டு உரிமையாளரது நகைகள் போன்றவற்றை இயக்கத்திற்கே தெரியாமல் கையாடினார்.

நடவடிக்கை எடுக்க விசாரித்தபோது ‘கொள்ளை முரண்பாடு’ என்று விலகிவிட்டார்.

பெண்களும் போராட்டத்திற்கு வந்து விட்டார்கள் என்று கூட்டணி தலைவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்ட ஒருவர் அங்கையற்கண்ணி.

இவரும் ஈழ விடுதலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக நடந்து கொண்டவர்.

அங்கையற்கண்ணிக்கு பெண் விடுதலை பற்றியும் தெரியாது. இயக்கத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் தெரியாது.

ஈழ விடுதலை இயக்கம் அழிந்த பின் புலிகள்,ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி போன்ற பல இயக்கங்களோடு இழுபட்டார். எங்கும் நிரந்தரமாக தங்க அவரது குணவிசேஷம் இடமளிக்கவில்லை.

தற்போது புலிகளுக்கு ஆதரவாக லண்டனில் பேசித் திரிவதாக தகவல். இவரைப் புலிகள் நம்புவதில்லை என்பது வேறு விவகாரம்.

ஈழவிடுதலை இயக்கத்தில் இருந்தவர்களில் க. பத்மநாபா மட்டுமே தொடர்ச்சியாகப் போராட்டத்தில் பங்கு கொண்டார். பின்னர் ஈபிஆர்எல்எவ் செயலதிபராக இருந்தவரும் அவரே!

ஈழவிடுதலை இயக்கம் பற்றியும் அதன் முக்கியஸ்தர்கள் பற்றியும் இங்கே குறிப்பிடக் காரணம் இருக்கின்றது.

செயலிழந்த இயக்கம்

அந்த இயக்கம் மட்டுமே ஆயுதப் போராட்டம் பற்றிய வாய்வீச்சுக்களோடு உருவாகி அழிந்து போன வரலாற்றைக் கொண்டதாகும்.

அந்த இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் பிரபலமான பெயர்கள் உடையவர்களாக இருந்தார்கள்.

அந்தக் காலத்தில் புலிகளில் இருந்தவர்கள் பற்றியோ குட்டிமணி குழுவில் இருந்தவர்கள் பற்றியோ வெளியே தெரியாது.

ஆனால் அவர்கள் காரியத்தில் கண்ணாக இருந்தார்கள்.

ஈழவிடுதலை இயக்கத்தில் பத்துப் பேர் இருந்தால் 9 பேர் தலைவர்கள்.

யாரை யார் கட்டுப்படுத்துவது என்பதுதான் பிரச்சனை.

ஒரே ஒரு கொள்ளை நடவடிக்கையோடு சுருண்டு போனார்கள்.

உறுப்பினர்கள் விலகிச் சென்றமை சகல இயக்கங்களிலும் நடந்திருக்கிறது.

ஆனால் இயக்கத்தின் தலைவர் உட்பட முக்கியமானவர்களே விலகி ஓடியது ஈழ விடுதலை இயக்கத்தில் மாத்திரமே நடந்தது.

அதுவும் போராட்டம் பற்றிய நம்பிக்கைகள் நிலவிய வளர்ச்சிக் கட்டத்தில் கஷ்டங்களைத் தாங்காமல் ஓடினார்கள் என்பது முக்கியமானது.

அந்த தமிழீழ விடுதலை இயக்கம் செயலிழந்த பின்னர் குட்டிமணி – தங்கத்துரை குழுவினர் அந்தப் பெயரை தமது குழுவுக்கு சூட்டிக் கொண்டனர்.

தற்போதுள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) குட்டிமணி – தங்கத்துரை குழுவினரால் உருவாக்கப்பட்டதாகும்.

ஆனால் இன்றைய ரெலோ அமைப்பினர் தமது பிரசார பாடல் கசெட் ஒன்றில் ‘முதன் முதல் தோன்றிய இயக்கம் தமிழீழ விடுதலை இயக்கம்’என்று ஒரு வரியையும் சேர்த்துக் கொண்டது தான் வேடிக்கை.

Prabaharan1.jpg

கொழும்பில் பிரபாகரன்

குட்டிமணி குழுவினர் பொலிசாரால் தேடப்பட்டுக் கொண்டிருந்த போது,புலிகள் துரோகிகள் பட்டியலில் இருந்த ஒருவரை குறி வைத்தனர்.

பிரபாகரன் குறியைத் தேடி கொழும்புக்கு வந்தார்.

கொழும்பில் அவருக்காக இன்னொருவர் காத்திருந்தார்.

(தொடரும்)

நன்றி http://ilakkiyainfo....ுரையப்பா-முதல்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 7

pirapa-and-uma-680x365.jpg
 

திரு.பிரபாகரனை பொலிசார் தேடிக் கொண்டிருந்தபோதும் அவரது தோற்றத்தை அடையாளம் காணும் புகைப்படம் எதுவும் பொலிசாரிடம் இருக்கவில்லை.

அதனால் பிரபா கொழும்புக்கு வருவது சுலபமாக இருந்தது.

1978ம் ஆண்டு கொழும்பில் பிரபாகரனுக்காக காத்திருந்தவர் திரு.உமா மகேஸ்வரன்.

நில அளவையாளராக கொழும்பில் கடமையாற்றியவர் திரு.உமா மகேஸ்வரன். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையிலும் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

உமா மகேஸ்வரன் பின்னர் புளொட் அமைப்பின் செயலதிபராக இருந்தவர் என்பது பரவலாக தெரிந்த விசயம்.

பரவலாக அறியப்படாத விசயமும் ஒன்று இருக்கின்றது. சிலருக்கு அதிர்ச்சியாகவும் கூட இருக்கலாம்;.

கியூபாவுக்கு கூட்டணி அனுப்பிய புலிகள்

 இரத்தத் திலகமிட்ட இளைஞர்களும் தலைவர்களின் புன்னகையும்

 உமாவின் பாத்திரம்

 

தமிழ் புதிய புலிகள் (TNT) இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாக மாறியபோது ஐந்து பேர் கொண்ட செயற்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

அந்தச் செயற்குழுவில் பிரபாகரனும் அங்கம் வகித்தார். முக்கியமானவராக இருந்தார். ஆனால் செயற்குழுவின் தலைவராக இருந்தவர் உமா மகேஸ்வரன்.

1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் புலிகளுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் கலந்து கொண்டவர் தளபதி அமிர்தலிங்கம்.

புலிகளில் மட்டுமல்ல, அக்காலகட்டத்தில் இயங்கிய சகல தீவிரவாத தமிழ் குழுக்களில் இருந்த சகல இளைஞர்களின் விபரமும் அவருக்குத் தெரியும்.

அமுதர் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவான ஒருவராகவே தீவிரவாத இளைஞர்கள் பலரால் கருதப்பட்டார். அமுதரும் அந்தக் கருத்துக்கு ஏற்பவே நடந்து கொண்டார்.

தந்தை செல்வா காலத்தோடு அகிம்சை வழியில் மட்டுமே பிரச்னைகளைத் தீர்க்கும் காலகட்டம் முடிந்துவிட்டது.

தளபதி அமுதர் தலைமையில் ஆயுதப்போர் மூளும் என்று இளைஞர்கள் நம்பினார்கள்.

77ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தை அடுத்து அமுதர் பொதுக்கூட்டங்களில் ஆவேசமாகப் பேசினார்:

“தமிழர்கள் சிங்களப் படைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள தமிழர்கள் தமக்கென்று ஒரு சொந்தப் படையை உருவாக்கிக் கொள்ளும் அவசியம் ஏற்பட்டு விட்டது||

கரகோசம் வானைப் பிளக்கும்.

இரத்தத் திலகம்

அமுதர் உட்பட மு.சிவசிதம்பரம் போன்றவர்களும் அமர்ந்திருந்த பொதுக்கூட்ட kasi-anandanமேடைகளில் கவிஞர் காசி ஆனந்தன் பேசுவார்:

“பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் போல் இங்கும் ஓர் இயக்கம் உருவாகும். அது வானை அதிர வைக்கும்||

தலைவர்கள் புன்னகைத்தபடி இருப்பார்கள்.

பொதுக்கூட்ட மேடைகளில் நீண்ட கியூ வரிசைகளில் இளைஞர்கள் காத்திருப்பார்கள்.

தமது வீரத்தலைவர்களுக்கு கைகளை பிளேட்டால் கீறி இரத்தப் பொட்டு வைப்பதில் போட்டி போட்டு முண்டியடிப்பார்கள்.

தலைவர்கள் தடுக்கமாட்டார்கள். ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் நடத்துவதே எமது நோக்கம். இரத்தப் பொட்டு வைப்பது அகிம்சையை கறைப்படுத்தும்’என்று அன்று எந்தவொரு தலைவரும் சொன்னதே கிடையாது.

இதனை ஏன் சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது என்றால் தற்போது கூட்டணித் தலைவர்கள் சிலர் கேட்கிறார்கள், “நாங்களா ஆயுதம் ஏந்தச் சொன்னோம்? நமது வழி அகிம்சை என்று நாடே அறியும் அல்லவா|| என்று கேட்கிறார்கள்.

இன்றைய கூட்டணியில் உள்ளவர்களில் திரு.மாவை சேனாதிராஜாவுக்கு மட்டும் தான் தீவிரவாதகுழுக்களோடு கூட்டணி நடத்திய பேச்சுக்கள் பற்றியும் உறவு பற்றியும் தெரிந்திருக்கும்.

திரு.மு.சிவசிதம்பரம் அவர்களும் 1977ம் ஆண்டு  பொதுத்தேர்தலில் இரத்தப் பொட்டு வைக்கப்பட்டவர் தான்.

காந்திகளின் கோபம்

கூட்டணியில் இன்று உள்ள திரு.ஆனந்தசங்கரி கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது வீட்டில் தான் பரந்தன் ராஜன் போன்ற தீவிரவாத இளைஞர்கள் நடமாடினார்கள். தமக்கு செல்லப்பிள்ளைகளாக இருந்தவரையும் தீவிரவாத இளைஞர்களைப் பார்த்து தலைவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். தங்களைப் பார்த்து கேள்விகள் கேட்க ஆரம்பித்த போதும், தங்கள் கட்டுப்பாட்டை மீறி இளைஞர்கள் தனிவழி சென்றபோதும் மட்டும் தலைவர்கள் ‘காந்தி’களாக மாறிவிட்டார்கள்.

‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்று போதிக்கத் தொடங்கினார்கள். வேளாண்மை தங்கள் வீடுகளுக்கு வந்து சேரும் என்றால் இந்தக் காந்திகள் தீவிரவாத இளைஞர்களைக் கட்டியணைத்துக் கொண்டே இருந்திருப்பார்கள்.

சிறுபிள்ளைகளை சிங்கக்குட்டிகள் என்று சிரசு தொட்டு வாழ்த்தியிருப்பார்கள்.

சாந்தன், யோகேஸ்வரன் ஆகிய மூவரும் கலந்து கியூபா மாநாட்டில் கலந்து கொண்டனர்.

kasiananthan01.jpegகியூபா மாநாட்டில் காசி ஆனந்தன் வாசித்த கவிதையில் சில வரிகள்-

“நாங்கள் இதழ்கள் உள்ள பறவைகள்

ஆனால் பாடமுடியவில்லை

நாங்கள் சிறகுகள் உள்ள பறவைகள்

ஆனால் பறக்கமுடியவில்லை

நாங்கள் அடிமைகள்………||

கியூபா மாநாட்டில் புலிகள் சார்பாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் இருந்த கையொப்பம் உமா மகேஸ்வரனுடையது.

இளைஞர் பேரவையினர் என்று இலங்கை அரசை ஏமாற்றிக் கூட்டணியினர் புலிகள் மூவரை 1978ல் கியூபாவுக்கு அனுப்பியது அகிம்சைக்கு ஆரத்தி எடுக்கத் தான் என்று சொன்னால் விழுந்து சிரிக்கத்தான் வேண்டும்.

கூட்டணித் தலைவர்கள் காந்தியின் அகிம்சையை மறந்தது பற்றி வருத்தமில்லை. ஆனால் காந்தி சொன்ன சத்தியத்தையும் மறந்துவிட்டுப் பேசுவது தான் வருத்தமாக இருக்கின்றது.

கட்சி மாறிய பட்சி

1977ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் கூட்டணி அறிமுகப்படுத்திய வேட்பாளர்களில் ஒருவர் திரு.கனகரத்தினம்.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டு அவரும் தமிழீழம் அமைக்க ஆணை கேட்டார்.

நல்ல விசயம்.தமிழ் ஈழத்தை அமையுங்கள் என்று கூட்டணியினரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தார்கள்  வாக்காளப் பெருமக்கள்.

கனகரத்தினமும் தெரிவானார். போராட்ட வரலாற்றில் அனுபவமும் ஈடுபாடும் உள்ள பலர் இருக்க கனகரை வேட்பாளராக நியமித்தபோதே அதிருப்தி எழுந்தது.

‘வடலி வளர்த்தவர்கள் பயனை அனுபவிப்பவர்கள் யாரோ’ என்ற கதையாக எம்.பி.பதவி கிடைத்தது கனகருக்கு. அவரிடம் பணம் இருந்தது. அது தான் தகுதி.

கூட்டணியில் ஊறி வளர்ந்த திரு.இராசதுரை வெற்றி பெறுவதைக் கூட அமுதரால் சகிக்கமுடியாதிருந்தது.

போட்டிக்கு காசி ஆனந்தனையும் மட்டக்களப்பில் நிறுத்தினார்.

இராசதுரை உதயசூரியன் சின்னத்திலும் காசி ஆனந்தன் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திலும் போட்டியிட்டனர்.

அப்போது மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதி.

நியாயமாக ஒரு தமிழரும் ஒரு முஸ்லிம் உறுப்பினருமாக இருவர் தெரிவாக வேண்டும்.

ஆனால் கூட்டணி உட்கட்சிப் பூசலால் முஸ்லிம்களை மறந்தது. இரண்டு தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் வெற்றி பெற்றது இராசதுரை தான்.

இராசதுரை தீவிரமாக இயங்கவில்லை என்ற குறை இளைஞர்களிடம் அப்போதிருந்தது உண்மை. ஆனால் இராசதுரை மீது தீவிரம் காணாது என்ற கோபம் கூட்டணிக்கு இருந்திருந்தால் கனகரத்தினம் என்ற போராட்ட அனுபவமற்ற ஒருவரை பொத்துவிலில் எப்படி நிறுத்த முடிந்தது?

தேர்தல் முடிந்தது. பொத்துவில் கனகர் குத்துக்கரணம் அடித்தார்.

கட்சியை வளர்த்திருந்தால் அல்லவா கட்சி விசுவாசம் இருந்திருக்கும்? தவறு கனகர் மீதல்லவே. தவறான ஒருவரை தெரிவு செய்தவர்கள் மீது தானே!

ஆனால் கூட்டணியினர் கனகர் துரோகி என்றார்கள்.

அப்போது கூட்டணியின் குரலாக வெளிவந்த ‘சுதந்திரன்’ பத்திரிகை தனது முன் பக்கத்தில் சவப்பெட்டிக்குள் கனகர் இருப்பது போல் கருத்துப்பட அவரது படத்தை வெளியிட்டது.

“பொத்துவில் கனகரத்தினம் குத்துக்கரணம் .ஐ.தே.கட்சியில் சேர்ந்துவிட்டார்|| என்ற செய்தி போட்டது சுதந்திரன்.

மன்னார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் திரு.சூசைதாசன்.

கனகர் கட்சி மாறிய பின்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது.சூசைதாசன் நன்றாகப் பாடக்கூடியவர். அவர் மேடையில் பாடியது இது:

“போகாதே போகாதே என் கனகா

 பொல்லாத சொர்ப்பனம்

 நான் கண்டேன்||

கூட்டத்தினர் ரசித்துச் சிரித்தார்கள்.சூசைதாசன் என்ன சொல்கிறார் என்று மக்கள் புரிந்துகொண்டனர்.

1978ம் ஆண்டு 28ஆம் திகதி காலையில் தினசரிகளின் நெற்றியில் ஒரு செய்தி.

“பொத்துவில் கனகருக்கு துப்பாக்கிச் சூடு!||

பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கனகரத்தினம் இனம் தெரியாத இரு இளைஞர்களால் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுடப்பட்டார்.

“திரு.கனகரத்தினத்திற்கு நெஞ்சிலும் வலது காதிலும் முதுகிலுமாக மூன்று சூடுகள் மட்டுமே பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது||

பத்திரிகைச் செய்திகளை படித்த மக்கள் அது கூட்டணி இளைஞர்களின் வேலை தான் என்று நினைத்துக் கொண்டனர்.

கூட்டணியினர் கண்டிப்பது என்பது மக்களைப் பொறுத்தவரை ஒரு புத்தசாலித்தனமான நடவடிக்கையாகவே கருதப்பட்டது. உண்மையும் அது தான்.

கனகர் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பங்கு கொண்டவர்கள் இருவர். ஒருவர் பிரபாகரன்;; மற்றவர் உமா மகேஸ்வரன்.

கனகரத்தினம் மீது வைத்த குறி தப்பியது.அவர் உயிர் தப்பிக் கொண்டார். எனினும் சூடுபட்ட காயங்கள் காரணமாக அவர் மரணமானார்.

உமா மகேஸ்வரன் சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் குறி தப்பியதாக புலிகள் தற்போது தமது உறுப்பினர்களுக்கு நடத்தும் வகுப்புக்களில் கூறி வருகின்றனர்.

பொலிசார் வலை விரித்துத் தேடினார்கள். பிரபா தப்பி யாழ்ப்பாணம் சென்றார். துப்பாக்கிப் பிரயோகத்தில் ஓர் உயரமான இளைஞர் சம்பந்தப்பட்டதாக பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.

அவர்கள் மாவை சேனாதிராசாவைப் பின் தொடர்ந்தார்கள். இளைஞர் பேரவைத் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா உயரமாக இருந்தமையால் ஏற்பட்ட சந்தேகம் அது.

கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து பின்னர் பொலிசார் ஓரளவு விபரம் அறிந்தனர்.

பஸ்தியாம்பிள்ளை குழுவினர்

பொத்துவில் கனகர் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை வளைத்துப்  பிடிக்கவும் தீவிரவாத இளைஞர்களை மடக்கிப் பிடிக்கவும் யாழ்ப்பாணத்தில் ஒரு பொலிஸ் குழு தயாரானது.

அதன் தலைவர் சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை.

பஸ்தியாம்பிள்ளை தனது குழுவினருடன்07.04.78 அன்று ஒரு தேடுதல் வேட்டைக்குப் புறப்பட்டார்.

தாம் எங்கே போகிறோம் என்று சக அதிகாரிகளுக்கு அவர் கூறவில்லை.

அது ஏன் காரணம் இல்லாமல் இல்லை

தொடரும்…

நன்றி http://ilakkiyainfo....ுரையப்பா-முதல்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 8

ஆயுதப் போராட்டத்தில் முதல் பெரும் தாக்குதல்

அமுதரின் காரியாலயத்தில் தயாரான புலிகளின் செய்தி

காட்டுக்குள் முற்றுகை

சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை தீவிரவாத இளைஞர்கள் பற்றிய பல்வேறு தகவல்களைத் திரட்டி வைத்திருந்தார். சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொல்லப்பட்ட பின்னர் பஸ்தியாம்பிள்ளை தான் தீவிரவாத இளைஞர்களை கண்டறிவதில் முழு மூச்சாய் ஈடுபட்டார்.sellakili

பொத்துவில் கனகர் மீது கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தனக்குத் தெரியும் என்று பஸ்தியாம்பிள்ளை கூறிக்கொண்டிருந்தார். தமிழ் அதிகாரி என்பதால் விபரங்களை திரட்டுவதற்கு வசதியாக இருந்தது. இதேவேளை தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்வதில் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை கைதேர்ந்தவர் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களது ஆண் உறுப்புக்களை மேசைலாச்சியில் வைத்து நெரிப்பது, மோட்டார் சைக்கிள்க சைலன்ஸர் குழாய்க்குள் ஆண் உறுப்பை வைக்கச் சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளை ‘ஸ்ராட்’ பண்ணுதல் போன்ற பல்வேறு சித்திரவதைகளை சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை மேற்கொண்டதாக ‘சுதந்திரன்’பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தன.

முருங்கன் - மடு வீதிக்கு உட்புறமான காட்டுப் பகுதியில் தீவிரவாத இளைஞர்கள் சிலர் முகாமிட்டுள்ளதாக பஸ்தியாம்பிள்ளைக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.

தனக்கு கிடைத்த தகவலை அவர் மிக இரகசியமாக வைத்துக் கொண்டார்.

தீவிரவாத குழுவை மடக்கிப் பிடிக்கும் புகழைத் தானே முழுதாக பெற்றுக்கொள்வதே அவரது நோக்கம்.

பிரபலம், மற்றும் பதவி உயர்வுக்கு தனது திறமையை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்று நினைத்தார் பஸ்தியாம்பிள்ளை.

சப்- இன்ஸ்பெக்டர் பேரம்பலம், சார்ஜன் பாலசிங்கம், சாரதி சிறிவர்த்தனா ஆகியோரை அழைத்துக் கொண்டு அவர் யாழ்ப்பாணத்திலிருந்து முருங்களுக்குப் புறப்பட்டார்.

தாம் எங்கே போகிறோம் என்ற தகவலைக் கூட பஸ்தியாம்பிள்ளை தனது மேலதிகாரிகளுக்;குத் தெரிவிக்கவில்லை.

04.07.1978 அன்று முருங்கன் - மடு வீதிக்கு உட்புறம் இருந்த காட்டுப்பகுதி பஸ்தியாம்பிள்ளை குழுவினரால் முற்றுகையிடப்பட்டது.

முற்றுகையை முகாமில் இருந்த இளைஞர்களும் எதிர்பார்க்கவில்லை.

புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் அந்த முகாமில் இருந்தனர்.

உமா மகேஸ்வரன், செல்லக்கிளி, நாகராசா, ரவி, ஐயர் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் அங்கிருந்தனர். பிரபாகரன் அந்த நேரத்தில் அங்கிருக்கவில்லை.

இளைஞர்களிடம் “நீங்கள் யார் ?இங்கு என்ன செய்கிறீர்கள்?|| என்று கேட்டார் பஸ்தியாம்பிள்ளை.

“விவசாயம் செய்கிறோம். அது தான் பண்ணையில் இருக்கிறோம்|| என்றனர் இளைஞர்கள்.

ஆனால், பஸ்தியாம்பிள்ளை அவர்களில் சிலரை அடையாளம் கண்டு கொண்டார்.

அடையாளம் கண்டதைக் காட்டிக் கொள்ளாமல் அவர்கள் சொன்னதை நம்புவது போல நடித்தார்.

“பொலிஸ் நிலையத்திற்கு வந்து ஒரு வாக்குமூலம் கொடுத்துவிட்டு நீங்கள் திரும்பி வந்துவிடலாம்.என்னோடு வாருங்கள். ஒரு பிரச்னையும் இருக்காது|| என்றார் பஸ்தியாம்பிள்ளை.

இளைஞர்களும் உடன்படுவது போல் நடித்து தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர்.

“தேநீர் குடித்துவிட்டுச் செல்லலாம்|| என்றார் ஒரு இளைஞர்.தேநீர் தயாரானது. பஸ்தியாம்பிள்ளை பண்ணைக்குள் இருந்தார்.

சப்- இன்ஸ்பெக்டர் பேரம்பலமும் ஏனைய இரு பொலிசாரும் வெளியே சென்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

முந்திக் கொண்ட இளைஞர்கள்

இது தான் சமயம் என்று இளைஞர்கள் உஷாரானார்கள். செல்லக்கிளி பஸ்தியாம்பிள்ளை மீது பாய்ந்தார். பஸ்தியாம்பிள்ளையிடம் இயந்திரத் துப்பாக்கி இருந்தது. செல்லக்கிளியால் அது பறிக்கப்பட்டது.

பஸ்தியாம்பிள்ளை சூழ்நிலையின் தீவிரத்தைக் கணக்கெடுக்கத் தவறிவிட்டார். தனது புத்திசாலித்தனம் மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்.

எதிர்தரப்பின் பலத்தை குறைவாக எடை போட்டிருந்தார்.

தனது தவறுகளை பஸ்தியாம்பிள்ளை உணர்ந்து கொள்ள அவகாசமே கொடுக்கப்படவில்லை.

அவரது இயந்திரத் துப்பாக்கியே அவருக்கு எமனாய் மாறியது.

இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை மீது இயந்திரத் துப்பாக்கி ரவைகளைப் பொழிய சப்- இன்ஸ்பெக்டர் பேரம்பலம், சார்ஜன் பாலசிங்கம், பொலிஸ் சாரதி சிறிவர்த்தனா ஆகியோர் ‘என்ன சத்தம்?’ உன்று ஓடி வந்தனர்.

அவர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. முற்றுகையிட்ட பொலிஸ் குழு முற்றாக அழிக்கப்Bastiampillaiபட்டது.

அருகில் இருந்த கிணற்றில் உடல்களைப் போட்டுவிட்டு பொலிஸ் குழு வந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு இளைஞர்கள் குழு தப்பிச் சென்றது.

“சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளையும் அவரோடு மூன்று பொலிஸ் அதிகாரிகளும் முருங்கன் காட்டுப் பகுதியில் கோரக் கொலை!||

பத்திரிகைகளுக்கு ஒரு வாரகாலமாக செய்திகளுக்கு பஞ்சமேயில்லை. கொலையாளிகள் யார்? கொலை எப்படி நடந்திருக்கலாம்? பொலிஸ் வட்டார ஊகங்கள் பத்திரிகைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்தன.

கொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களைத் தவிர பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிறையிலடைக்கப்பட்டார்கள். சித்திரவதைக்கு உள்ளானார்கள்.

கொலையாளிகளில் ஒருவர் சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளையை சந்தித்து தந்திரமாகப் பேசி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். அங்கு தயாராய் காத்திருந்த கொலையாளிகள் வேட்டையை நடத்தியிருக்கலாம் என்று பொலிஸ் தரப்பு ஊகம் ஒன்று வெளியாகியது.

சில நாட்களின் பின் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகள் விரைவில் வலையில் மாட்டிவிடுவார்கள் என்றது பொலிஸ்.

அபாய அறிவிப்பு

ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நடைபெற்ற பாரிய தாக்குதல் பஸ்தியாம்பிள்ளை குழுவினருக்கு எதிரான நடவடிக்கை தான்.

அந்த நடவடிக்கை அரசாங்கத்திற்கு அபாய அறிவிப்பாக விளங்கியது.

அமைதிக்குப் பெயர் பெற்ற வடபகுதியில் தீப்பொறிகள் பரவத் தொடங்கிவிட்டன.தீ பரவி காட்டுத் தீயாக முன்னர் அணைத்து விடவேண்டும் என்று அரசு நினைத்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் போல் அல்ல, நாம் கடுமையாக நடந்து கொள்வோம் என்று காட்டிக்கொள்ள ஜே.ஆர்.தலைமையிலான ஐ.தே.கட்சி அரசாங்கம் திட்டமிட்டது.

அரசும், அதன் பொலிஸ் படையினரும் பஸ்தியாம்பிள்ளை குழுவினரை அழித்த இளைஞர்களை வடபகுதியில் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தபோது,

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் பாராளுமன்றக் காரியாலயத்தில் இருந்த தட்டச்சு இயந்திரம் ஒரு பெண்ணால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

‘தமிழீழ விடுதலைப் புலிகள்’என்னும் கடிதத் தலைப்பில் அந்தப் பெண் எழுத்துக்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

அவர் தான் ஊர்மிளாதேவி!.தமிழர்விடுதலைக் கூட்டணியின் மகளிர் பேரவை தீவிரமாக இயங்கிய காலகட்டம் இது

மகளிர் பேரவைக்கு தலைவியாக இருந்தவர் அன்னலட்சுமி பொன்னுத்துரை.

இவர் ஆயுதப் போரில் ஈடுபட்டு முதல் களப் பலியான பொன்.சிவகுமாரனின் அம்மா.!

மகளிர் பேரவைக்கு செயலாளராக இருந்தவர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம். இவர் தலைவர் அமுதரின் பாரியார்.

“வாழ்க ஈழத்தமிழகம் வாழ்க வாழ்க வாழ்கவே|| உணர்ச்சி ததும்ப பாடுவார் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம்.

தமிழ் ஈழ தேசியக்கொடி உதயசூரியன் கொடி! அதனை ஏற்றி வைப்பார் அமுதர். கொடி வணக்கப் பாடலை பாடுவார் மங்கையற்கரசி.

பெண்களுக்கு அழைப்பு

“பெண்களும் தமிழ் ஈழ மீட்புப் போரில் அணி திரளவேண்டும்|| அறைகூவல் விடுப்பார் மங்கையற்கரசி.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உண்ணாவிரதங்கள், சத்தியாக்கிரகங்கள்,சட்டமறுப்பு போராட்டங்கள் போன்றவற்றில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

ஊர்மிளாதேவி, திலகவதி போன்றவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள்.

1978ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு யாழ்ப்பாணம் ஆவரங்காலில் நடைபெற்றது.

மாநாட்டு மேடையில் ஒரு பெண் பாடினார். “ துவக்கு போரை துவக்கு, துவக்கும் போரை துவக்கு||

அமுதர் உட்பட மேடையில் அமர்ந்திருந்த மு.சிவசிதம்பரம் வரை அனைவருமே இரசித்துக் கேட்டனர்.

பாடலில் இரு பொருள் இருந்தது. அகிம்சைப் போரை ஆரம்பியுங்கள் என்றும் அர்த்தப்படுத்தலாம். ஆயுதப் போரை (துவக்குப் போர்) ஆரம்பியுங்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

அகிம்சைவாதிகள் பாடலை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பொருள் தெரியும். ஆயுதம் ஏந்தியவர்களின் முகங்களும் தெரியும்.

இப்போது எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்திற்கு மீண்டும் செல்வோம்.

ஊர்மிளாதேவி தயாரித்துக் கொண்டிருந்தது புலிகள் இயக்கத்தின் உரிமை கோரும் கடிதம்.

அரசின் விழிப்பு

1978 ஏப்ரல் மாதம் 25ம் திகதி சகல பத்திரிகை காரியாலயங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிமை கோரும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆங்கில தட்டச்சு செய்யப்பட்ட அந்தக் கடிதத்தில் புலிகளது மத்திய குழு சார்பாக உமா மகேஸ்வரன் கையொப்பமிட்டிருந்தார்.

அல்பிரட் துரையப்பா கொலை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் என்.நடராசா கொலை, சி.ஐ.டி.பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கருணாநிதி, சண்முகநாதன் மற்றும் சண்முகநாதன் கொலை, பொத்துவில் பா.உ.கனகரத்தினம் கொலை முயற்சி, பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை போன்றவை உரிமை கோரப்பட்டிருந்தன.

கடிதத்தின் பிரதி ஒன்று இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அரசாங்கம் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மூளையில் ஒரு திட்டம் உருவானது.
(தொடரும்)

http://www.yarlnatham.com/2014/12/8.html

Link to comment
Share on other sites

தொடர்ந்து இணையுங்கள் எத்தனை தரமும் வாசிக்கலாம் .

இரு சிறு தவறுகள் இருக்கு -

சிவகுமார் பிரதி அமைச்சர் சோமசிறிக்கு குண்டு எறிந்தது உரும்பிராய் இந்துவில் அல்ல உரும்பிராய் சைவ தமிழ் பாடசாலையில் ,

தாடி தங்கராசாவை குட்டிமணி சுட்டது கொக்குவிலில் அல்ல கோண்டாவில் அவர் வீட்டில் .அதி காலை நாங்கள் போகும் போது சூடு வாங்கிய அல்சேசன் நாய் அரை உயிரில் துடித்துக்கொண்டிருந்தது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வருகைக்கும் கருத்திட்க்கும் மாற்று இயக்க ஆட்களால்  மண்டையில் போட்ட பொதுமக்களை புலிபோட்டதெண்டு கதை பரப்பினம் அதனால்   மீள்இனைப்பு . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சகோதரா..

 

முன்னர் படித்தது தான்

ஆனாலும் படிக்கணும்

தேவையான பதிவு

காலம் உணர்ந்து பதிவை இடுவதற்கும் நேரத்திற்கும் நன்றிகள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்த காலகடம்தான் எனக்கு இலங்கை போலிசை ஞாபகம் இருக்கிறது ....
இதில் எனது அண்ணர் ஒருவர் பற்றியும் இருக்கிறது.
 
பதிரிக்கையில் இவர் தலைமையில் இந்த வங்கி கொள்ளை. என்றுதான் தலைப்பு செய்தி வந்தது. (இவர் அப்படியே எழுதி இருக்கிறார்)
அப்போது அதை பார்த்திருக்கவில்லை பின்பு வீட்டில் இருந்த அந்த பத்திரிக்கையை எடுத்து வாசித்தேன்.
அப்போது ஒரே போலிஸ் காலடி சத்தமாகவே இருக்கும்.
 
பின்பு எனக்கு வயது வந்து வெளியில் வந்த போது ஒரு பொலிசுமில்லை எல்லாம் முகாம்களுக்குள் முடங்கி விட்டார்கள்.
பின்பு எங்கும் ஆமிதான். 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
 

thuraiyapa.jpgஈழப்போராளிகளுக்கு பாலஸ்தீன இயக்கப் பயிற்சி

முதன் முதலில் கடத்தப்பட்டு வந்த வெளிநாட்டு ஆயுதம்

 

பலஸ்தீன தொடர்பு

RatnaSabapathy.gifஈழப்புரட்சி அமைப்பாளர்கள் (ஈரோஸ்) குழுவின் தலைவர் இரட்ணசபாபதி   சுருக்கமாக இரட்ணா என்று அழைக்கப்படுவார்.

தமிழரசுக் கட்சி விசுவாசியாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

உயர்கல்வி கற்க இலண்டனில் உள்ள ‘பேர்மிங்ஹாம்’பல்கலைக்கழகத்திற்கு சென்றது தான் இரட்ணாவின் அரசியல் பாதையை மாற்றியது.

மார்க்சிய தத்துவத்தை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்த இரட்ணா- அதனைச் சரிவர கற்றுக்கொண்டாரோ இல்லையோ- தன்னை ‘ஈழத்து லெனின்’ என்று மிக உயர்ந்த பட்சமாக நினைத்துக் கொண்டார்.

‘பேர்மிங்ஹாம்’ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்க உறுப்பினர்களது நட்பு இரட்ணாவுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பல்வேறு அமைப்புக்கள் உள்ளன. அதில் முக்கியமானது யாசீர் அரபாத்தின் தலைமையிலான ‘அல்பட்டா’ என்னும் அமைப்பு.

அந்த ‘அல்பட்டா’அமைப்பின் உறுப்பினர்களோடு தான் இரட்ணாவுக்கு பரிச்சயம் ஏற்பட்டது.

ஈழப்போராட்டத்திற்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் இராணுவப் பயிற்சி வழங்கலாம் என்றும் ‘அல்பட்டா’ உறுப்பினர்கள் கூறினார்கள்.

உண்மையில் அந்தக் காலகட்டத்தில் அது ஒரு அரிய வாய்ப்புத் தான்.

இலண்டனிலேயே திருமணத்தையும் (இலங்கைப் பெண்ணை) முடித்துக் கொண்ட இரட்ணாவின் மிகப் பெரிய பலவீனம் இடைவிடாமல் குடிப்பது.

எந்த மனிதனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும் என்று சொல்வார்கள்.

இருக்கலாம்.ஆனால் ஒருவனது பலவீனம் அவனை அடிமையாக்கிக் கொள்ளுமானால் அவன் அந்த பலவீனத்தின் கைதியாகி விடுகிறான்.

இரட்ணா மதுவின் கைதி. மார்க்சிசம், புரட்சி பற்றியெல்லாம் பேசிய இரட்ணா தனது வாழ்க்கைத் துணைவியாக வந்தவரை தினமும் உதைப்பதில் புரட்சி செய்தார்.

இலண்டனில் இரட்ணா தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்த அருளர், அருளரிடம் “அண்ணர் இரட்ணா இலண்டனில் என்ன பணி செய்தார்?|| என்று கேட்டேன்.

அதற்கு அருளர் சொன்ன சுவாரசியமான பதில்

“குடிப்பது பெண்டிலுக்கு அடிப்பது!||

இதனை இங்கே கூறுவது ஏன் என்றால் அடிப்படையிலேயே தான் சொல்வதை தனது வாழ்வில் கடைப்பிடிக்கமுடியாத ஒருவராக இரட்ணா இருந்தார் என்பதை தெரிவிக்கவேண்டியிருக்கின்றது.

புரட்சி பற்றிப் பேசிய சிலர் இப்படித் தான் இருந்தார்கள்.

அதனால் தான் அவர்களால் புரட்சியும் நடத்த முடியவில்லை.

நிகழ்ச்சி நிரலில் தமது சாதனைகளையும் பதிய வைக்க இயலவில்லை.

பாலஸ்தீன விடுதலை அமைப்பான ‘அல்பட்டா’வில் இராணுவப் பயிற்சி பெற முடியும் என்ற செய்தியோடு இலண்டனில் சில தமிழ் இளைஞர்களைத் திரட்டினார் இரட்ணா.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் உறுப்பினராக இருந்த க. பத்மநாபா அப்போது இலண்டனில் இருந்தார்.

அழைப்பு வந்தது ஆட்கள் இல்லை

புலோலி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு உதவியதாக கூறி கைது செய்யப்பட்டவர் பத்மாநாபா.

பத்மநாபாவை கைது செய்த இன்ஸ்பெக்டர் பத்மநாதனுக்கு நெருங்கிய சிநேகிதராக இருந்தவர் பத்மநாபாவின் உறவினர் ஒருவர்.

இலஞ்சம் வாங்குவதில் கெட்டிக்காரரான பத்மநாதன் அதற்கு உதவியாக இருந்த தனது சிநேகிதரின் வேண்டுகோளின்படி க.பத்மநாபாவை விடுதலை செய்தார்.

அதன் பின்னர் பத்மநாபாவை அவரது குடும்பத்தினர் இலண்டனுக்கு அனுப்பி வைததிருந்தனர்.

ஒரு அதிகாரியின் பலவீனத்தை பயன்படுத்தி பத்மநாபா தப்பிக் கொண்டமையை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் குடும்பத்தினரின் விருப்பப்படி இலண்டனுக்குச் சென்றமையைச் சரியென்றும் கொள்ள முடியாது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செயலிழந்து போன 75இன் பிற்பகுதியில்தான் இரட்ணாவின் புதிய பிரவேசம் ஆரம்பமாகியது.

க.பத்மநாபா, தற்போது ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகமாக உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட இலண்டனில் இருந்த இளைஞர்களை அழைத்து தனது புதிய கருத்துக்களை கொட்டினார் இரட்ணா.

 

 

அவர்களும் இரட்ணாவை ஒரு இரட்சகராக நினைத்துக் கொண்டனர். இதற்கிடையே பாலஸ்தீன இராணுவ பயற்சிக்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் சில இளைஞர்கள் இரட்ணாவை விட்டு விலகிவிட்டனர்.

அந்த நேரத்தில் பயிற்சிக்கு ஆட்களை அனுப்புமாறு ‘அல்பட்டா’பச்சைக் கொடி காட்டியது.

பயிற்சிக்கு அழைப்பு வந்துவிட்டது அனுப்பி வைக்க ஆட்கள் இல்லை. தனது வீட்டில் இருந்த அருளரோடு ஆலோசித்தார் இரட்ணா. பொறியியலாளரான அருளர் தானும் பயிற்சிக்கு செல்ல ஒப்புக் கொண்டார்.

கடத்தப்பட்ட ஆயுதம்

ஈழப் போராட்டத்தில் முதன் முதலாக வெளிநாட்டு இராணுவப் பயிற்சிக்கு இலண்டனில் இருந்து ஒரு குழு புறப்பட்டுச் சென்றது.

ஈழப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சியளித்தது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதற்கு முன்னரே – 78 இன் பிற்பகுதியில், ஈழப்போராளிகளுக்கு பயிற்சியளித்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்புக்களில் ஒன்றான ‘அல்பட்டா’.

இந்தியா ஈழப்போராளிகளுக்கு ஆயுதம் வழங்கியதும் அனைவரும் அறிந்தது தான்.

ஆனால் அதற்கு முன்னரே ‘அல்பட்டா’வின் ஆயுதம் ஈழத்திற்கு வந்தது.

அது ஒரு கைக்குண்டு. அதனைக் கொண்டு வந்தவர் டக்ளஸ் தேவானந்தா.

(இப்போது ஈபிடிபி செயலாளர் நாயகம்) விமான நிலைய சோதனைகளையும் ஏமாற்றிவிட்டு டக்ளஸ் தேவானந்தா கொண்டு வந்த அந்த கைக்குண்டு தான் ஈழப்போராளிகளுக்கு வெளிநாடு மூலம் முதலில் கிடைத்த ஆயுதம்

Epdp-04.jpg

இதில் ஒரு சுவாரசியமான சம்பவமும் உண்டு.

டக்ளஸ் தேவானந்தா கைக்குண்டோடு புறப்படும்போது தன்னோடு பயிற்சியில் இருந்த அருளரிடம் விசயத்தைச் சொல்லி விட்டுத் தான் புறப்பட்டார்.

அவர் மாட்டிக்கொள்ளாமல் சென்றுவிட்டார் என்பதையறிந்த அருளர் தானும் சாகசம் செய்ய நினைத்தார்.

சூட்கேஸ் நிறைய கைக்குண்டுகளையும் வெடிமருந்துகளையும் நிரப்பிக் கொண்டு பயணத்திற்காக ‘பெய்ரூட்’ விமான நிலையம் சென்றார் அருளர்.

அவரது கெட்ட நேரம், சோதனையில் மாட்டிக்கொண்டார்.

இது நடந்தது 78ம் ஆண்டு. 15 நாட்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் ‘அல்பட்டா’வின் தலையீட்டால் அருளர் விடுதலை செய்யப்பட்டார்.

arular-arudpragasam.jpgயோசிக்காமல் மாட்டியவர்கள்

“இலங்கைப் பொறியியலாளர் பெய்ரூட் விமான நிலையத்தில் வைத்து கைது.வெடிமருந்துகளோடு சிக்கிக்கொண்டார்|| என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியாகியது.

செய்தியைப் பார்த்த இலங்கை உளவுத்துறை அருளரின் பின்னணி பற்றி துருவியது.

அப்போது தான் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொல்லப்பட்டிருந்தனர்.

அருளரின் வீடு வவுனியா- கண்ணாட்டி என்ற இடத்தில் இருந்தது. இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொல்லப்பட்ட காட்டுப்பகுதி பண்ணைக்கு சமீபத்தில் தான் வீடு இருந்தது.

அங்கும் ஒரு பண்ணையிருந்தது. அங்கும் இளைஞர்கள் குழு ஒன்று தங்கியிருந்தது. பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

துப்பாக்கிகள் அவர்களிடம் கிடையாது. தடிகளை துப்பாக்கிகளாக பாவித்து பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் ஈழப்புரட்சி அமைப்பாளர் குழுவைச் சேர்ந்தவர்கள்.

பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன் அவர்கள் புத்திசாலித்தனமாக வெளியேறியிருக்கலாம். ஆனால் வெளியேறவில்லை. அங்கேயே இருந்தார்கள்.

அருளரின் வீட்டுக்குச் சென்ற பொலிசாருக்கு ‘காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை’யாக கண்ணில் பட்டது பயிற்சி முகாம்.

அங்கிருந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலையோடு சம்பந்தம் இருக்கிறதா என்று கண்டறிய வழக்கமான – கடுமையான கவனிப்புக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.

தாக்குதல் நடத்திய புலிகள் வெற்றிகரமாக தப்பிக் கொண்டார்கள். பாவம்-இவர்களோ தடிகளோடு இருந்து மாட்டி அடிகளும் உதைகளும் பெற்றுக் கொண்டார்கள்.

நிச்சயமாக தங்கள் புத்திசாலித்தனத்தை நினைத்து வருந்தியுமிருப்பார்கள்.

புலிகளுக்கு பயிற்சி

ஈழப்புரட்சி அமைப்பாளர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இரு பகுதியினரும் புரிந்துணர்வோடு இணக்கமாக செயற்படுவது என்றும், புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாலஸ்தீன இராணுவப் பயிற்சி பெற்றுக் கொடுப்பது என்றும் முடிவாகியது.

பயிற்சிக்கு அனுப்பும் செலவுகளுக்காக என்று புலிகளிடம் பணம் கேட்டார் இரட்ணா

65ஆயிரம் ரூபா புலிகளால் இரட்ணாவிடம் கொடுக்கப்பட்டது.

அக்காலகட்டத்தில் 65ஆயிரம் ரூபா பெரிய தொகை.

‘வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டால் அரசு தமிழ்பிரதேசங்களில் வங்கிகளை மூடிவிடும். மக்களிடம் நிதி திரட்டவேண்டும்| என்பது ஈழப்புரட்சி அமைப்பாளர்களது கொள்கை.

ஆனால் வங்கிக் கொள்ளை போன்றவற்றால் புலிகள் திரட்டி வைத்திருந்த பணத்தில் உதவி கேட்க அந்தக் கொள்கை தடையாக இருக்கவில்லை என்பது தான் வேடிக்கை.

புலிகள் சார்பில் இரண்டு பேரை பாலஸ்தீன விடுதலை இயக்க இராணுவ பயிற்சிக்கு கேட்டார் இரட்ணா.

புலிகள் இயக்கத் தலைவராக இருந்த உமா மகேஸ்வரன், விச்சுவேஸ்வரன் ஆகியோர் புலிகள் அமைப்பின் சார்பாக பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.

புலிகள் இயக்க இராணுவத் தளபதியாக இருந்த பிரபாகரன் வெளிநாட்டு பயிற்சிக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். புலிகள் அமைப்பை பொறுத்தவரை பிரபாகரன் மூத்த உறுப்பினராக இருந்த போதும் உமா மகேஸ்வரன் மத்திய குழு தலைவராக இருப்பதற்கு பிரபா சம்மதித்தார்.

தலைமைப் பதவி மீது தணியாத தாகம் பிரபாவுக்கு இருந்தது என்று கூறப்படும் விமர்சனங்களை அந்த நடைமுறை கேள்விக்குள்ளாக்குகிறது. பிரபாவின் சம்மதமும் விருப்பமும் இல்லாதிருந்தால் உமா மகேஸ்வரன் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.

umamakeswaran.jpg

திருப்பிக் கேட்ட பணம்

பாலஸ்தீன ‘அல்பட்டா’ இயக்கத்திடம் பயிற்சிக்குச் சென்ற உமா மகேஸ்வரனும் விச்சுவேஸ்வரனும் திரும்பி வந்தனர்.

தமக்கு ஒழுங்காகப் பயிற்சி தரப்படவில்லை. முகாமில் வெறுமனே இருக்க வைத்துவிட்டார்கள். எனவே இரட்ணா பணத்தை திருப்பி தரவேண்டும் என்று கேட்டார்கள்.

இரட்ணாவிடம் பணமில்லை. தனது குழுவின் உறுப்பினர்கள் பணம் கேட்டுச் செல்லும்போதே, கரத்தில் மது கிளாசுடன் இருந்து, “போராட்டம் என்றால் பசி பட்டினி இருக்கத் தான் வேண்டும்|| என்று உபதேசிப்பவரிடம் பணம் மிஞ்சியிருக்க முடியுமா?|

இரட்ணாவின் இவ்வாறான குணாம்சம் ஈழப்புரட்சி அமைப்பாளர் குழுவிற்குள் முரண்பாடுகளை தோற்றுவித்தது.

ஈழப்புரட்சி அமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஈழமாணவர் பொது மன்றம் (Gues) அப்போது ஓரளவு வேலை செய்யத் தொடங்கியிருந்தது.

உள் முரண்பாடுகளை இரட்ணா கண்டு கொள்ளவில்லை. தன்னை சிவப்பு சிந்தனையாளர் என்றவர் தினமும் குடித்து சிந்தனையை தழைக்கச் செய்து கொண்டிருந்தார்.

ஈழமாணவர் பொதுமன்றம்

ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் இரண்டு பிரிவானார்கள்.

ஒரு பிரிவு ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்)(பாலகுமாரால் கலைக்கப்படவில்லை என்று கொழும்பில் ஒரு சாராரால் கூறப்படுவதும் இந்த அமைப்புத் தான்)

மறுபிரிவு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்று தன்னை அழைத்துக் கொண்டது. இந்தப் பிரிவினரோடு ஈழமாணவர் பொதுமன்றமும் இரட்ணாவின் கையை விட்டுப் போனது.

இரட்ணாவை இரட்சகராக நம்பி அவரோடு இருந்தவர்களில் முக்கியமானவர்கள் வே.பாலகுமார், சங்கர்ராஜி, சின்னபாலா எனப்படும் பால நடராஜா (தற்போது ஈழநாதம் பத்திரிகை ஆசிரியராக இருக்கிறார்) கைலாஸ், அன்னலிங்கம் ஐயா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இரட்ணாவின் தனிப்பட்ட நடைமுறைகளால் வெறுப்புற்று பிரிந்தவர்களில் க.பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஸ் பிரேமச்சந்திரன், குணசேகரன், பேரின்பராசா ஆகியோர் முக்கியமானவர்கள்.

ஈழமாணவர் பொதுமன்றம் (Gues) புதுவேகத்துடன் செயற்பட்டது. இதன் மத்திய குழுவில் சிறீதரன், ரமேஷ், செழியன், தயாபரன், சேகர், சிவா, குமார், நடேசலிங்கம் ஆகியோர் முக்கியமானவர்கள். டேவிற்சன் இந்த மாணவர் அமைப்பின் மத்திய குழுவில் முதலில் இல்லாதபோதும் இந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் முக்கிய பங்கெடுத்தார்.

ஈழமாணவர் பொதுமன்றம் வெளியிட்ட ‘ஈழ மாணவர் குரல்’ பத்திரிகை தமிழர் விடுதலைக் கூட்டணியை அம்பலப்படுத்தியது. கூட்டங்கள், கருத்தரங்குகள் மூலமும் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட மாபெரும் சுவரொட்டி பிரசாரம் மூலமும் கூட்டணித் தலைமைக்கு சவாலாக மாறியது ஈழ மாணவர் பொதுமன்றம்

கூட்டணிக்கு சாட்டை

இதனால் தலைவர் அமிர்தலிங்கம் ஈழமாணவர் பொதுமன்றம் குறித்து பொது மேடைகளில் காரசாரமாகக் கண்டித்தார்.

ஈழ மாணவர் பொது மன்றத்தின் அரசியல் வளர்;ச்சியை எடுத்துக்காட்ட ஒரு நல்ல உதாரணம் 82ம் ஆண்டு நடைபெற்ற மே தினம். ஈழ மாணவர் பொதுமன்றம் யாழ். முற்றவெளி மைதானத்தில் டேவிற்சன் தலைமையில் மே தினக் கூட்டத்தை நடாத்தியது. அங்கே மக்கள் வெள்ளம்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தனது மே தினக் கூட்டத்தை யாழ்.நகரசபை மண்டபத்தின் உள்ளே நடத்தியது.

முற்றவெளிக் கூட்டத்தில் டேவிற்சன் இப்படிச் சொன்னார்: “மைதானத்தில் கூட்டம் நடத்தியவர்கள் இன்று மண்டபத்திற்குள் சென்றுவிட்டார்கள். மண்டபத்திற்குள் இருந்த நாம் இன்று மைதானத்திற்கு வந்துவிட்டோம்||

இனி நாம் மீண்டும் 1978ற்கு செல்லவேண்டியுள்ளது.

(தொடரும்)

http://nadunadapu.com/?p=60582

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – தொடர் 10 – அற்புதன்

pirapakaran-1-680x365.jpg
 

பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியை வைத்து மட்டும் ஆயுதம் ஏந்தும் இயக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. இதனை ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் உணர்ந்திருந்தார்.  ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முதலில் தேவையானது துணிச்சல். இரண்டாவது தேவை அந்த இயக்கத்தை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் என்பதில் தெளிவு.அனைத்துக்கும் மேலாக கட்டுப்பாட்டு விதிகள் தேவை

 

 

போராட வா என்று அழைத்தனர் – வாடியபோது உதவ மறுத்தனர்!

ஆயுதமும் பணமும்

rasaratnam-2.jpgபொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியை வைத்து மட்டும் ஆயுதம் ஏந்தும் இயக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. இதனை ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் உணர்ந்திருந்தார்.

ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முதலில் தேவையானது துணிச்சல். இரண்டாவது தேவை அந்த இயக்கத்தை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் என்பதில் தெளிவு.அனைத்துக்கும் மேலாக கட்டுப்பாட்டு விதிகள் தேவை.

புலிகளை விமர்சித்த குழுக்களும் தம்மைப் புத்திஜீவிகள் என்று அழைத்துக் கொண்டவர்களும் மிக முக்கியமாகக் கவனிக்கத் தவறியது நம் நாட்டுச் சூழலுக்கேற்ப ஒரு போராடும் அமைப்பை எப்படி உருவாக்குவது என்பதைத் தான்.

எதிரியே நம்மை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தான் என்று தான் சகல இயக்கங்களும் சொல்லிக் கொண்டன. ஆனால் பிரபாகரன் மட்டுமே நிர்ப்பந்தித்த எதிரி மூலமாகவே இயக்கத்தை நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கருத்துக் கொண்டிருந்தார்.

ஆயுதம் தேவை. அதை வாங்கப் பணம் தேவை.

அந்த நேரத்தில் கூட்டணித் தலைவர்கள் சிலரிடம் பணம் இருந்தது.ஆனால் அதை வழங்கும் மனம் இருக்கவில்லை. சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளைக்கு ஐயாயிரம் ரூபா வெறும் சில்லறை தான்.

அந்த சில்லறையைக் கூட சிவகுமாரன் கேட்ட நேரத்தில் அவருக்குக் கொடுக்க மனம் வரவில்லை. கையை விரித்தார்.உங்களுக்கு இந்த நேரத்தில் ஒரு சிறு சோக சம்பவம் சொல்லவேண்டும்.

ஓடினான் – வாடினான்

வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தியாகராசாவை கொழும்பில் வைத்துசுட்டுக் கொல்லும் முயற்சி நடந்தது பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

அந்த முயற்சியில் ஈடுபட்டவரில் ஒருவர் ஜீவராசா. இவர் சாவகச்சேரியைச் சேர்ந்தவர். தமிழ் மாணவர் பேரவைத் தலைவராக இருந்த பொன்.சத்தியசீலனைப் பிடித்து பொலிசார் இரண்டு தட்டுத் தட்டி அவர் அரிச்சந்திரனாக மாறி சகல உண்மையையும் கக்கவிட்டார்.

பொலிசாரின் கையில் சிக்காமல் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றவர் ஜீவராசா. படகில் ஏறும்போது ஜீவராசா என்ற இளைஞனுக்கு நிறைய நம்பிக்கை. தமிழ்நாட்டுக்கு சென்றுவிட்டால் போதும் தமிழனத் தலைவர் கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் அங்கு இருக்கும்போது என்ன குறை?

தமிழகத்தின் நிலப்பரப்பில் நம்பிக்கையோடு கால் பதித்து கலைஞரை தேடி ஓடினான் ஜீவராசா. “யார் நீர் எங்கிருந்து வருகிறீர்?, எதற்காக தலைவரைப் பார்க்கவேண்டும்?

கலைஞரின் கட்சிக்காரர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னான் அந்த இளைஞன். “எனக்கு எந்த உதவியும் வேண்டாம்.

ஒருமுறை ஒரே ஒரு முறை கலைஞரைப் பார்த்து பேசிவிட்டால் போதும்.” என்று வேண்டுகோள் விடுத்தான். கலைஞர் கருணாநிதியின் வீடு சென்னையில் கோபாலபுரத்தில் இருக்கின்றது.

கலைஞர் செவிக்கு ஜீவராசாவின் வேண்டுகோள் சென்றது. ஆனால் கடைசிவரை கோபாலபுரத்தின் கதவுகள் திறக்கவேயில்லை.

“தலைவர் பிஸி” என்ற பதிலைத் தவிர வேறு எந்த மொழியும் ஜீவராசாவின் செவிக்கு தரப்படவில்லை. தளர்ந்து போனான். பசி, பட்டினி மயங்கி வீதியில் கிடந்தவனை கனிவோடு உபசரித்தாள் ஒரு ஏழை தமிழ்ப்பெண்.அவள் ஒரு கூலித்தொழிலாளி.

தான் பணியாற்றும் செங்கல் சூளையொன்றில் அவனுக்கும் கூலி வேலை பெற்றுக்கொடுத்து உதவினாள். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடிக்காக மூச்சை விடத் தயங்கேன் என்பார் தலைவர் கலைஞர்.

அந்த மூத்த குடிக்காக பேராடிய ஒரு போராளி கலைஞரின் புறக்கணிப்பால் தலையிலே கல் சுமந்து வயிற்றைக் கழுவினான். அதிர்ச்சியாக இருக்கும்.ஆனால் நடந்து தான் இருக்கின்றது இப்படியான சோக நிகழ்வுகள்

இராசரத்தினமும் பசியும்

Rasaratnam-1.jpgமற்றொரு சோகத்தையும் கேளுங்கள். தமிழரசுக் கட்சியின் தூணாக இருந்தவர் இராசரத்தினம். இவரும் சாவகச்சேரியைச் சேர்ந்தவர் தான்.

ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான தாணு இந்த இராசரத்தினத்தின் மகள் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இராசரத்தினத்தின் நினைவாக அவரைக் கௌரவித்து பிரபாகரன் ஒரு விருது வழங்கியதாலும் அந்த சந்தேகம் வலுத்திருக்கின்றது.

யார் இந்த இராசரத்தினம்?

தமிழனத்தின் போராட்ட வரலாற்றிலே ஒரு சில தலைவர்களது வரலாறாக சாதனையாக நினைத்தே பழக்கப்பட்ட நமக்கு இந்த இராசரத்தினத்தை தெரியாமல் போவதில் வியப்பில்லை. 1973 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்தார் அமைச்சர் செல்லையா குமாரசூரியர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் தபால் அமைச்சராக இருந்தவர். துரோகி குமாரசூரியர் என்று கூட்டணித் தலைவர்களால் தூற்றப்பட்டவர். பாலத்தில் சென்று கொண்டிருந்த காரையும் அமைச்சரையும் குண்டு வைத்து தகர்க்க முயன்றார் இராசரத்தினம்.

பொலிசார் வலை வீசினர். இராசரத்தினம் தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடினார்.

“இலங்கை மீண்டு எரிகிறது” என்றொரு நூல் அப்போது இலங்கை அரசை கோபமூட்டியது. அந்த நூலின் பெரும்பகுதி ‘சேரன்’ என்ற புனைபெயரோடு இராசரத்தினத்தால் எழுதப்பட்டது. அவர் எழுதிய இன்னொரு நூலின் பெயர் ‘தமிழர்கட்கு ஏன் ஒரு நாடு வேண்டும்?’

இந்த இராசரத்தினம் தான் தமிழ்நாட்டில் உள்ள கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களை 1972 தந்தை செல்வநாயகம் சந்திக்க வழி செய்தவர். தந்தை செல்வா, ‘தளபதி அமிர்’ ஆகியோர் தமிழகத் தலைவர்களைச் சந்தித்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன.

கூட்டணியின் தேர்தல் பிரசாரங்களுக்கு 1977 வரை அந்தப் புகைப்படங்கள் பேருதவி செய்தன.

ஆனால் 1973 இல் மீண்டும் தமிழகத்திற்குச் சென்ற இராசரத்தினத்திற்கு எந்த தமிழகத் தலைவர்களும் உதவ முன் வரவில்லை.

பசி, பட்டினி, தொய்வு நோய் வேறு அவரை வாட்டியது.

ஒரு நாள் அதிகாலை 1.30 மணிக்கு தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு தலைவர் அமிர்தலிங்கத்தோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார் இராசரத்தினம். ‘தனது கஸ்டத்தை எடுத்துச் சொன்னார்’

தமிழீழ முதல்வர் என்றும் தளபதி என்றும் அழைக்கப்பட்ட அமுதர் ஒரே வார்த்தையில் சொன்ன பதில்:

“பணம் அனுப்ப வசதியில்லை”

இராசரத்தினம் குடும்பஸ்தர். அப்பா எங்கே என்று பிள்ளைகள் தேடுமே? பாசம் இருக்காதா? அங்கே இங்கே பணம் திரட்டி ஐந்து மீற்றர் துணி வாங்கினார்.

அப்போது சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் கர்மவீரர் என்று அழைக்கப்பட்ட வ.நவரத்தினம். அவரது மனைவி திருமதி நவரத்தினம் தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தார். இராசரத்தினத்தையும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

ஐந்து மீற்றர் துணியோடு போய் “இதனை ஊரில் எனது பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டும்.” என்றார் இராசரத்தினம்.

கர்மவீரரின் மனைவி சொன்ன “பதில்; என்னால் முடியாது.” ஆனால் திருமதி நவரத்தினம் தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் 1500 ரூபாவுக்கு (அப்போது பெரிய தொகை)பொருட்கள் கொள்முதல் செய்து கொண்டு புறப்பட்டார்.

அழைத்தவர் மறுத்தார்

“செத்து மடிதல் ஒரு தரமன்றோ

சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா”

என்று காசி ஆனந்தன் கவிதையை மேடைகளில் உணர்ச்சிபொங்கப் பாடுவார்.

திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம்.

அந்த வீரத்தமிழ்த் தலைவி தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்தார்.

பசியால் துடித்த இராசரத்தினத்திற்கு பசியே தீர்ந்தது போல திருப்தி. திருமதி அமிர் வந்துவிட்டா. நிச்சயம் உதவி பெறலாம்.ஓடினார்.

“ஒரு முன்னூறு ரூபா கடனாகத் தாருங்கள்” என்று கேட்டார்.

செருக்களத்திற்கு அழைத்த செந்தமிழ்ச் செல்வி சொல்லிய பதில்,

“என்னிடம் பணம் இல்லை.”

பட்டினி, அவலம் வெட்கப்பட்டால் முடியுமா? எனவே இராசரத்தினம் விடாமல் கேட்டார்.

“ஒரு வளையல் தந்தால் அடகுவைத்து பணம் எடுக்கலாம். பின்னர் மீட்டுத் தந்துவிடுவேன்”

“முடியாது” என்று முகத்தில் அடித்தது போல் மறுத்தார் மங்கையற்கரசி

வாழ்க ஈழத் தமிழகம் என்று மேடைகளில் பாடிய மங்கையற்கரசி அக்கா வாடிய ஒரு ஈழத்தமிழ்ப் போராளியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இதில் இன்னொரு வேதனை. அமுதரின் மகன் காண்டிபன் தமிழ்நாட்டிலிருந்தபோது இராசரத்தினம் சாப்பாடு போட்டிருக்கின்றார்.

பட்டினிக் கொடுமை நோயை வளர்த்துவிட 1975 இல் காலமானார் இராசரத்தினம்.

செத்த பின் மரியாதை

அவரது உடல் மீது உதயசூரியன் கொடியைப் போர்த்திவிட்டுச் சொன்னது இது:

rasaratnam-diary.png“இலங்கைத் தமிழர்களின் நேதாஜி இங்கே உறங்கிறார்”

நேதாஜி என்பது இந்திய சுதந்திரப் போரில் தேசிய இராணுவத்தை உருவாக்கிய சுபாஸ் சந்திரபோசைக் குறிக்கின்றது.

தளபதி அமிர் விடுத்த அறிக்கை இன்னும் உணர்ச்சிகரமானது.

“இராசரத்தினம் அவர்களின் மறைவின் மூலம் எங்கள் இயக்கம் எறும்பு போல் ஓயாமல் உழைக்கும் ஒரு உத்தமத் தொண்டனை இழந்துவிட்டது”

இது அமுதரின் பேச்சு. கர்மவீரர் நவரத்தினம் என்ன பேசினார் தெரியுமோ?

“இராசரத்தினம் கூட்டணியின் தீவிர உறுப்பினர் தந்தை செல்வாவின் தலைமையின் கீழ் செயற்பட்ட செம்மல் அவர்.”

இராசரத்தினம் என்ற தன்னலமற்ற தொண்டனுக்கு கூட்டணித் தலைவர்கள் செய்தது நியாயமா துரோகமா? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை இதனை வாசித்தறியும் உங்களிடமே விட்டு விடுகின்றேன்.

இராசரத்தினம் கதை பொய் என்று யாராவது நினைத்தால் இங்கு வெளியாகியுள்ள நாட்குறிப்பின் ஒருபக்கம் உண்மை சொல்லும்.இராசரத்தினம் அவர்களால் 1973 இல் எழுதப்பட்ட சோகவரிகள் அவை.

இன்னும் பல சோக நிகழ்வுகள் உண்டு. அவை அவ்வப்போது சொல்லப்படும்.

வங்கியில் குறி

இவ்வாறான சூழல்கள் நிலவிய போது தான் ஆயுதம் ஏந்தவேண்டும் ஆயுதம் ஏந்தும் போராளிகள் வாழவும் ஆயுதம் வாங்கவும் பணம் வேண்டும். பணத்தை அரசின் நிர்வாகத்திலிருந்து பறித்தெடுக்கவேண்டும் என்பதில் புலிகள் தீர்க்கமான நம்பிக்கையில் இருந்தனர்.

யாழ்ப்பாணம் நல்லூர்த் தொகுதியில் திருநெல்வேலியில் இருந்தது மக்கள் வங்கி.குறிப்பிட்ட திகதியில் அந்த வங்கியில் பெருந்தொகைப்பணம் இருக்கும் என்ற துல்லியமான தகவலை புலிகள் அறிந்தார்கள். வங்கியின் உள்ளமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விபரங்களும் புலிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

அந்த விபரங்களைச் சொன்னவர் மக்கள் வங்கியில் காசாளராக இருந்த சபாரத்தினம்.

இந்த சபாரத்தினம் தான் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதிப்பொறுப்பாளராக இருக்கிறார்.ரஞ்சித் அப்பா என்று அழைக்கப்படுகிறார்.

1978 டிசம்பர் 5ஆம் திகதி காலை நேரத்தில் மக்கள் வங்கிக்குள் புலிகள் புகுந்தார்கள்.

பாதுகாப்புக்காக இருந்த பொலிஸ்காரரின் துப்பாக்கி பறிக்கப்பட்டதுடன் நடவடிக்கை ஆரம்பித்தது

(தொடரும்)

அரசியல் தொடர் – அற்புதன் எழுதுவது

http://ilakkiyainfo.com/2014/12/22/தொடர்-கட்டுரைகள்/அல்பிரட்-துரையப்பா-முதல-10/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 
 

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி-11)

puli-680x365.jpg
 
 

05.12.1978 இல் நடைபெற்ற திருநெல்வேலி மக்கள் வங்கி கொள்ளையிLtte cycleல் பிரபாகரனும் நேரடியாகப் பங்கு கொண்டார். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளையடுத்து பாதுகாப்பை அரசு பலப்படுத்தியிருந்தது.——-

…………………………………………..

இளைஞர்களைக் கடந்து சென்ற தலைவர்!

கண்ணீர் விட்டுக் கதறிய இளைஞர்கள்

Ltte-cycle.png05.12.1978 இல் நடைபெற்ற திருநெல்வேலி மக்கள் வங்கி கொள்ளையிLtte cycleல் பிரபாகரனும் நேரடியாகப் பங்கு கொண்டார்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளையடுத்து பாதுகாப்பை அரசு பலப்படுத்தியிருந்தது.

திருநெல்வேலியில் மக்கள் வங்கியில் மூன்று பொலிசார் பாதுகாப்புக்காக இருந்தனர்.ஒருவர் இயந்திரத் துப்பாக்கியும் வைத்திருந்தார். அந்த இயந்திரத்துப்பாக்கியை பறித்தெடுத்து பொலிசாரை நோக்கிச் சுட்டனர் புலிகள்.

ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கழிவறைக்குள் ஓடிச்சென்று கதவை மூடிக்கொண்டார். கதவை உடைத்து அந்தக் கான்ஸ்டபிளைச் சுட்டுக் கொன்றார்கள்.

கிங்ஸ்லி பெரேரா, சத்தியநாதன் என்ற இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். செல்வம் என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயமடைந்தார்.

12 லட்சம் ரூபா பணத்துடன் அங்கிருந்த கார் ஒன்றை பறித்தெடுத்துக் கொண்டு புலிகள் தப்பிச் சென்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் நடைபெற்ற மிகப் பெரிய வங்கிக்கொள்ளை அது தான்.

78 ஆம் ஆண்டு 12 லட்சம் ரூபா என்பது மிகப் பெரிய தொகை தான்.

வெளவால் கதை

இக்காலகட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையின் கீழ் இயங்கிய தமிழ் இளைஞர் பேரவைக்குள் பிளவுகள் ஏற்படத் தொடங்கின.

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையின் தீவிரம் போதாது என்று இளைஞர் பேரவையில் ஒரு சாரார் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார்கள்.

1978ஆம் ஆண்டு கியூபாவில் நடைபெற்ற இளைஞர் மாணவர் மாநாட்டுக்கு கூட்டணி சார்பில் அனுப்பப்பட்டவர்களில் மூவர் புலிகளைச் சேர்ந்தவர்கள். காசிஆனந்தன், மாவைசேனாதிராஜா ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்கள்.

கியூபாவுக்கு தன்னை அனுப்பி வைக்கவில்லை என்று வண்ணை ஆனந்தனுக்கு கோபம்.

1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் பிரச்சாரப் பீரங்கியாக இருந்தவர் வண்ணை ஆனந்தன்.

உண்மையாகவே சிறந்த பேச்சாளர். வண்ணை ஆனந்தன் பேசும் கூட்டங்கள் என்றால் மக்கள் திரளுவார்கள்.

கூட்டத்தின் முன்னால் அமர்ந்திருக்கும் சிறுவர்களைப் பார்த்து வண்ணை ஆனந்தன் கேள்வி ஒன்று கேட்பார்.

“மரம் பழுத்தால்

என்ன வரும்?”

உடனே சிறுவர்கள் பதில் சொல்வார்கள்,

“வெளவால் வரும்’’

சிறுவர்கள் பதில் சொன்னவுடன் வண்ணை ஆனந்தன் சொல்வார்

“வரும் வெளவால் காலில் பீரங்கியுடன் தான் வரும்”

கூட்டத்தில் கரகோசம் வானைப் பிளக்கும்.

தமிழீழக் கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு உண்டென்று தெரிந்தால் வெளிநாட்டு உதவி கிடைக்கும்.ஆயுத உதவியாகவும் அது கிடைக்கும் என்பது தான் “வெளவால்” கதையின் அர்த்தம்

குமார் மீது தாக்குதல் 

ஒரு சுவாரசியமான தகவலை இந்த நேரத்தில் சொல்லவேண்டும்.

1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் ஒரு ஆசனம் கேட்டவர் குமார் பொன்னம்பலம்.

கூட்டணி ஆசனம் கொடுக்கவில்லை.குமாருக்கு ஆவேசம் வந்துவிட்டது.

யாழ்.தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.

யாழ்ப்பாணத்தில் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டவர் யோகேஸ்வரன்.

தமிழீழக்கோரிக்கையைக் கிண்டல் செய்தும் கூட்டணித் தலைவர்களைக் கேலி செய்தும் பிரச்சாரங்களை நடத்தினார் குமார் பொன்னம்பலம்.

குமாரை மேடைகளில் கிழிக்கத் தொடங்கினார் வண்ணை ஆனந்தன்.

குமாரின் சின்னம் மரம். அது வண்ணை ஆனந்தனுக்கு வசதியாகிவிட்டது.

“குமார் நீ மரமாக வந்து குறுக்கே நிற்கிறாய்.எட்டப்பா வேலை செய்கிறாய்.”என்று ஒருமையில் அழைத்து வசைபாடுவார்.

குமார் பொன்னம்பலத்தின் மாமனார் முருகேசபிள்ளை யாழ்.அரசாங்க அதிபராக இருந்தவர்.

பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழ்ப்பாணம் வந்தபோது தமிழர் விடுதலைக் கூட்டணி ஹர்த்தால் நடத்தியது.

அந்த நேரத்தில் நல்லூர் கோவிலுக்குச் சென்றார் பிரதமர் சிறிமாவோ.

அவரது காலுக்குத் தண்ணீர் ஊற்றி வரவேற்றவர் முருகேசம்பிள்ளை.

அந்தச் சம்பவத்தையும் மேடைகளில் குறிப்பிடுவார் வண்ணை ஆனந்தன்.

“தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் ஆசனம் கேட்கவில்லை.எங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றார்.

ஆனால் குமார் எங்களிடம் ஆசனம் கேட்டு விட்டு அதனைக் கொடுக்கவில்லை என்பதற்காக எதிர்த்துப் போட்டியிடுகின்றார்.

“என்ன காரணம்?

தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் இரும்புமனிதன் நாகநாதனின் மருமகன்.

குமார் பொன்னம்பலம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் காலுக்குத் தண்ணீர் ஊற்றிய முருகேசம்பிள்ளையின் மருமகன். அது தான் துரோகமான வேலை செய்ய ஏவப்பட்டிருக்கின்றார்.”என்று சொல்வார் வண்ணை ஆனந்தன்.

இவ்வாறு பிரச்சார பீரங்கியாக இருந்த வண்ணை ஆனந்தனை கியூபாவுக்கு அனுப்பவில்லை கூட்டணி.

எங்கே தேசிய மன்றம்

1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மக்களிடம் சொன்னார்கள்.

“தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தமிழீழ தேசிய மன்றத்தை உருவாக்குவோம்.தமிழீழ அரசியல் சட்டத்தை வகுப்போம்”

சொன்னார்களே தவிர வெற்றி பெற்றவுடன் அதனை மறந்துவிட்டார்கள்.

தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த தீவிர போக்குடைய இளைஞர்கள் “தமிழீழ தேசிய மன்றத்தை கூட்டு” என்று குரல் கொடுக்கத் தொடங்கினார்கள்.

அவர்களோடு சேர்ந்து வண்ணை ஆனந்தனும் குரல் கொடுத்தார்.

கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை தயாரிக்கவேண்டுமென்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசினார் வண்ணை ஆனந்தன்.

திறப்பு விழா

யாழ்ப்பாணத்தில் காப்புறுதிக் கூட்டுத்தாபன திறப்புவிழா ஒன்று நடைபெற்றது.

திறப்பு விழாவில் யாழ்.தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தனர்.

விசயமறிந்த இளைஞர்கள் நூறு பேர் வரை யாழ்.பா.உ.யோகஸ்வரன் வீட்டின் முன்பாக குழுமி விட்டனர்.

“சிங்கள அரசின் கூட்டுத்தாபனத்தை திறந்து வைக்கும் விழாவுக்கு செல்லவேண்டாம்’’ என்றார்கள் இளைஞர்கள்.

யோகேஸ்வரன் இளைஞர்களிடம் சொன்னார்:

“இது அமுதரின் கட்டளை. நான் மீறவேமுடியாது. போயே ஆகவேண்டும்” அப்போது அங்கே வந்தார் வண்ணை ஆனந்தன்.அவரைக் கொண்டு சென்று யோகேஸ்வரன் முன்பாக நிறுத்திவிட்டு

“எடுத்துச் சொல்லுங்கள் வண்ணை அண்ணா” என்றனர் இளைஞர்கள்.

வண்ணை ஆனந்தன் கண்ணீர் விட்டார்.

“இவர்களை மீறிப்போகவேண்டாம்” என்று சொன்னார்.

யோகேஸ்வரன் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இளைஞர்கள் யோகேஸ்வரன் வீட்டின் வாயில் முன்பாக அமர்ந்துவிட்டனர்.

“எங்களைத் தாண்டி போக நினைத்தால் போகலாம்.” என்றனர்.

உதயசூரியன் சின்னம் பொறித்த சால்வையோடு இளைஞர்களைக் கடந்து கூட்டுத்தாபன விழாவுக்கு போனார் யோகேஸ்வரன்.

அவர் கடந்து சென்றபோது இளைஞர்கள் சிலர் கண்ணீர்விட்டபடி சொன்னார்கள்.

“போகிறீர்களே அண்ண”!

காப்புறுதிக்கூட்டுத்தாபனம் முன்பாக வந்திறங்கினார் மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்.

கூட்டணியின் தீவிர தொண்டனாக இருந்த அப்பையா என்ற இளைஞன் ஓடிச் சென்று அவரது கையில் பிடித்தான்.

“போகவேண்டாம் அண்ணா”!

கையை உதறி விடுவித்துக் கொண்டு விழாவுக்குச் சென்றார் தர்மலிங்கம்.

யாழ்.நகர மேயர் துரையப்பா போன்றவர்கள் திறப்புவிழா நடத்தியபோது துரோகிகள் என்ற தலைவர்கள்.

தாமே நேரடியாக அரச திறப்புவிழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

இளைஞர்களின் நம்பிக்கையீனம் மெல்ல மெல்ல வளர்ந்தது.

ஆவரங்கால் மாநாடு

1978ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோப்பாய் தொகுதியில் உள்ள ஆவரங்காலில் கூட்டணி மாநாடு நடத்தியது. இளைஞர் மாநாட்டுக்கு கோப்பாயைச் சேர்ந்த பரமேஸ்வரன் தலைமை தாங்கினார்.

இவர் கைதடி வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர். இளைஞர் பேரவை ஆயுதம் ஏந்தவேண்டும் என்ற கொள்கையுடையவர்.

“தலைவர்கள் தீவிரமாகச் செயற்படவேண்டும். வேகம் போதாது. கல்லும் முள்ளும் காடுமே வாழ்க்கையாகிவிட்ட எங்கள் இளைஞர்களைப் பாருங்கள். போராடத் திட்டம் வகுத்துத் தாருங்கள்.” என்று பேசினார் பரமேஸ்வரன்.

இறுதியாக மாநாட்டு நிறைவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அச்சுவேலிச் சந்தியிலிருந்து ஆவரங்கால் நோக்கி ஒரு ஊர்வலம் வந்தது.

“தமிழீழ தேசிய மன்றத்தை கூட்டுக” என்று அந்த ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் கோஷமெழுப்பிக் கொண்டு வந்தார்கள்.

மாநாட்டுக்குள் ஊர்வலம் வந்தவுடன் கூடியிருந்த மக்கள் ஏதோ பிரச்னை என்று பயந்து எழுந்து ஓடத் தொடங்கிவிட்டனர்.

மேடையில் “வாழ்க ஈழத்தமிழகம்” என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தார்கள்.

தேசிய கீதம்

அது தான் தமிழீழ தேசிய கீதம் என்று கூட்டணியினரால் கூறப்பட்ட பாடலாகும். கூட்டங்கள் ஆரம்பிக்கும்போது தேசிய கீதம் இசைக்கப்படுவது கூட்டணியின் அன்றைய நடைமுறை.

“வாழ்க ஈழத்தமிழகம்

வாழ்க இனிது வாழ்கவே…

தமிழீழ தேசிய கீதம் என்று சொல்லப்பட்ட இந்தப் பாடலை இயற்றியவர் புலவர் பரமஹம்சதாசன். இவர் ஒரு இந்தியக் குடிமகன்.அந்தப் பாடலையும் காசிஆனந்தனே எழுதியதாக தவறாக நினைக்கப்பட்டதுமுண்டு.

மாநாட்டு மேடையில் பாடல் தடைப்பட்டது.மேடையில் அமிர்தலிங்கம் – சிவசிதம்பரம் போன்ற தலைவர்களும் நின்று கொண்டிருந்தனர்.

சிவசிதம்பரம் சற்று அதிர்ந்து போனார். அமுதர் முகம் சிவந்தது. ஊர்வலத்தில் வந்தவர்களை ஒரு முற்று உற்றுக் கவனித்துவிட்டு அமுதர் சொன்னார்,

“இது ஈழவிடுதலை இயக்கக்காரர்களின் வேலை, தொடர்ந்து பாடுங்கள்”

சிவசிதம்பரம் பாடல் முடிந்ததும் கூடியிருந்த மக்களைப் பார்த்துச் சொன்னார்.

“தமிழீழ தேசிய கீதத்திற்கு மதிப்புக் கொடுக்காதவர்கள் தமிழீழத்திற்காகப் போராடப் போகிறார்களா?”

ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய முத்துக்குமாரசுவாமி உடனே ஒரு சிறு குறிப்பு எழுதி சிவாவிடம் அனுப்பினார்.

“தேசிய கீதம் பாடுவதை குழப்ப நாம் நினைக்கவில்லை.ஊர்வலம் வந்தபோது பாடலும் இசைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தற்செயல் சம்பவம்”

சிவா குறிப்பை படித்துவிட்டு அலட்சியமாக இருந்துவிட்டார்.

கூட்டத்திற்குள் ஊர்வலத்தினர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார்கள்.

அமுதருக்கு கோபம் வந்துவிட்டது. “தொண்டர்களே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? பிரசுரம் விநியோகிப்பதை தடுத்துநிறுத்துங்கள்.” என்று ஒலிபெருக்கியில் கட்டளையிட்டார்.

(தொடரும்)

http://ilakkiyainfo.com/2014/12/29/தொடர்-கட்டுரைகள்/அல்பிரட்-துரையப்பா-முதல-11/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி பெருமாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13_Page_1.jpg

ஐந்து பேர் கொண்ட செயற்குழுவே 1980 இன்முற்பகுதி வரை புலிகளது தலைமையாக இருந்தது.அந்த செயற்குழுவின் தலைவராக உமா மகேஸ்வரன் இருந்தார். இராணுவத் தளபதியாகவும் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். பிரபாகரன் சில கட்டுப்பாட்டு விதிகள்,வரையறைகள் விதித்தே செயற்பட்டு வந்தார். புகைபிடிக்கக்கூடாது, காதலிக்கக்கூடாது, வீண்செலவுகள் கூடாது, இரகசியங்களை வெளியிடக்கூடாது,கட்டுப்பாட்டை மீறக்கூடாது போன்ற விடயங்களைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் பிரபாகரன்…..

…………………………………………………..

பிரபா மீது அமுதரின் நம்பிக்கை – வீரதுங்காவுக்கு ஜே.ஆர். போட்ட உத்தரவு

தொண்டர்கள் பாய்ந்தனர்.

மாநாட்டில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த இளைஞர்களை தனக்கு எதிரானவர்கள் என்றே அமிர் தீர்மானித்துவிட்டார்.

“தொண்டர்களே என்ன செய்கிறீர்கள்?” என்று அமுதர் ஒலிபெருக்கியில் கேட்டது தனது ஆதரவாளர்களை உசுப்பிவிடுவதற்காகத் தான்.

கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒரு தொண்டர் எழுந்தார். அவரை ஒரு குண்டர் என்றும் வர்ணிக்கலாம். வாட்டசாட்டமாக இருந்தார்.

பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவரை அவர் சட்டையில் பிடித்து ஒரு அடி கொடுத்து பிரசுரங்களைப் பறித்தார் அந்த தொண்டர்.

அடி வாங்கியவரின் பெயர் சுந்தரலிங்கம்.அவரது மூக்குக் கண்ணாடியும் பறிக்கப்பட்டது.

மேடையிலிருந்து இவற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்தார் தளபதி அமிர்.

பிரசுரம் விநியோகித்தவரைத் தாக்கிய தொண்டரை அழைத்துப் பேச நினைத்தார்கள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள்.

கூட்டத்தின் மத்தியில் சென்று அந்த தொண்டரைப் “பேசவேண்டும் வாருங்கள்” என்று அழைத்து வந்தார்கள். வந்தார் தொண்டர். பேசவில்லை. பிரசுரம் கொடுத்த அந்த இளைஞர்கள் மீது அந்த தொண்டர் தாக்குதலை ஆரம்பித்து வைத்தார்.

கூட்டணி விசுவாசிகளால் சுற்றி வளைத்து தாக்கப்பட்டார்கள் ஊர்வலம் வந்த இளைஞர்கள்.

ஈழ விடுதலை இயக்கத் தலைவர் முத்துக்குமாரசுவாமி அதே இயக்கத்தில் இருந்த கோவை நந்தன் போன்றவர்கள் தமது ஆட்கள் தாக்கப்பட்டதை தடுக்கவும் பயந்து கூட்டத்திற்குள் பதுங்கிக் கொண்டார்கள்.

அமுதரின் தொண்டர்களாக தாக்குதல் நடத்தியவரில் முக்கியமானவர் பரந்தன் ராஜன்.

இவர் தான் புளொட் அமைப்பிலிருந்து விலகி ஈஎன்டிஎல்எவ் அமைப்பிற்கு தலைவராக இருந்தவர். சொந்தப் பெயர் ஞானசேகரன்.

ஞானசேகரன் மட்டுமல்ல பிரபாகரன் உட்பட தமிழ் இயக்கங்களது தலைவர்களாகவும் முக்கியமானவர்களாவும் இருந்தவர்கள் இருப்பவர்கள் பலரும் ஆரம்பத்தில் அமுதரின் விசுவாசிகளாகவே இருந்தார்கள்.

வாயடைக்கும் தந்திரம்

ஆவரங்கால் மாநாட்டில் தமிழீழ தேசிய மன்றத்தைக் கூட்டுவதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது. கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை தயாரிக்கவும் ஒரு குழு நியமிக்கப்பட்டது.

இந்த இரண்டு குழுக்களிலுமே வண்ணை ஆனந்தன் இடம்பெற்றார். இது ஒரு சிறந்த தந்திரம் சில கருத்துக்கள் உரமாக முன்வைக்கப்படும்போது அதனை ஏற்பது போல நடிப்பது ஆனால் நிறைவேற்றாமல் இருந்து விடுவது.

கருத்து முன்வைப்போரை சமாளிக்க ஒரு கமிட்டி அமைத்து அந்தக் கமிட்டியில் அவர்களை உறுப்பினர்களாகப் போட்டுவிடுவது

“தமிழீழ தேசிய மன்றத்தை கூட்டு” என்றார் வண்ணை ஆனந்தன். அந்த மன்றத்தைக் கூட்டும் குழுவில் அவரும் ஒருவராக இருப்பதால் இனி சத்தம் போடமாட்டார்.

இளைஞர்களை தந்திரமாக சமாளிக்க தலைவர்கள் கையாண்ட தந்திரங்களில் இதுவும் ஒன்று.

வண்ணை ஆனந்தன் பின்னர் வாயே திறக்கவில்லை. சர்வதேச பிரச்சாரம் நடத்தவென்று ஜெர்மனுக்கு சென்று அங்கு நிரந்தரமாக தங்கிவிட்டார்.

மரம் பழுத்தால் வெளவால் வரும் என்றவர் பழுக்க முன்னரே பறந்துவிட்டார்.

இளைஞர் பேரவையில் பிளவு

இளைஞர்களைக் கட்டுப்படுத்த தளபதி அமிர் அடிக்கடி கூறும் வார்த்தை ஒன்று மிகப் பிரபலமானது. “போர்க்களத்தில் தளபதியின் கட்டுப்பாட்டை மீறி முன்னால் ஓடுபவனுக்குத் தான் முதற் சூடு”! மிக உண்மையான கருத்துத் தான்.

ஆனால் 1977 இல் ஜெயவர்த்தனா அரசாங்கம் பதவிக்கு வந்தது. தளபதி மௌனமானார்.

ஜே.ஆர்.புத்திசாலி. புன்னகை செய்தே எதிரிகளை நிராயுதபாணிகளாக்கிவிடுவார்.

1977 இன் பின்னர் பொதுமக்கள் பங்கு கொள்ளும் அகிம்சைப் போர்க்களம் எதற்கும் தளபதி அமிர் அழைப்பு விடுக்கவில்லை.

அரசுக்கு அறிவித்துவிட்டு சுவரொட்டி ஒட்டி, துண்டுப்பிரசுரம் விநியோகித்து கைதாகும் போராட்டங்கள் மட்டும் நடத்தினார்கள்.

“போர்க்களத்தில் தானே முன்னால் ஓடக்கூடாது. போர்க்களமே இல்லையே, பின்னர் தளபதிக்கு கட்டளைக்கு எங்கே இடம்?” என்று நினைத்தார்களோ என்னவோ 78 ஆம் ஆண்டு யாழ்.முற்றவெளியில் தமிழ் இளைஞர் பேரவை ஒரு கூட்டம் நடத்தியது.

அதற்கு தலைமை தாங்கியவர் சந்ததியார்.

இவர் தான் புளொட் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக இருந்து உள்முரண்பாட்டால் கொல்லப்பட்டவர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை மீது நம்பிக்கையீனம் தெரிவித்து கூட்டத்தில் பேசப்பட்டது.

“தேர்தலுக்காகவே தமிழீழக் கோசம் தலைவர்களுக்குத் தேவைப்படுகின்றது”என்றெல்லாம் கூட்டத்தில் பேசியவர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள்.

“தமிழ் இளைஞர் பேரவை இனி தனிவழியே செல்லும்”என்றார் சந்ததியார்.

தமிழ் இளைஞர் பேரவைத் தலைவராக இருந்தவர் மாவை சேனாதிராஜா

அமுதர் விசுவாசியாக இருந்த மாவை சேனாதிராஜா மூலமாக தமிழ் இளைஞர் பேரவை தனி வழி செல்லாமல் தடுத்தார் அமுதர்.

இளைஞர் பேரவையிலிருந்து சந்ததியார், இரா.வாசுதேவா, இறைகுமாரன், யோகநாதன் போன்ற பலர் வெளியேறினர்.

தமிழ் இளைஞர் பேரவை (விடுதலை அணி) என்ற பெயரில் அவர்கள் தனி அமைப்பாக இயங்கத் தொடங்கினார்கள்.

கோவை மகேசன்

தந்தை செல்வநாயகத்தால் தமிழரசுக்கட்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரன்

பின்னர் தினபதி ஆசிரியராக இருந்து தமிழர் விடுதலைக்கூட்டணியையும் ஈழப்போராட்டத்தையும் கண்டித்தும் கேலி செய்தும் எழுதியவர் சிவநாயகம். இவர் தான் முதலில் சுதந்திரன் ஆசிரியராக இருந்தவர்.

அதன் பின் சுதந்திரன் ஆசிரியராக இருந்தவர் கோவை மகேசன்.

கோப்பாய் தொகுதியைச் சேர்ந்த மகேஸ்வர சர்மா தனது பெயரை சுருக்கி கோவை மகேசன் என்று வைத்துக் கொண்டார்.

தமிழரசுக்கட்சியின் ஏடாக இருந்த சுதந்திரன் தமிழர் விடுதலைக்கூட்டணியின் ‘குரலாக’ மாறியது.

‘அரசியல் மடல்’என்ற பெயரில் கோவை மகேசன் எழுதிய கட்டுரைகள் இளைஞர்கள் மத்தியில் எழுச்சி விதைகளை தூவியதை மறுக்க இயலாது.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு தளபதி அமிர்,தமிழீழ முதல்வர் அமிர், சிந்தனைச் சிற்பி,கர்மவீரர், எல்லைக்காவலன், உடுப்பிட்டிச் சிங்கம் (பின்னர் திரு.சிவசிதம்பரம் நல்லூர் தொகுதியில் தேர்தலில் நின்றதால் உடுப்பிட்டிச் சிங்கம் என்ற பட்டம் வாபஸ் பெறப்பட்டது.), உணர்ச்சிக் கவிஞர்,அடலேறு போன்ற பட்டங்களைப் பிரபலமாக்கியதும் சுதந்திரன் தான்.

அமிர்தலிங்கம் கூட்டத்தில் பேசினால் சுதந்திரன் இப்படித் தான் செய்தி போடும்.

“தமிழீழ முதல்வர் அமிர் முழக்கம்”

மு.சிவசிதம்பரம் அரசைக் கண்டித்தால் அந்த வார சுதந்திரன் செய்தி இப்படி வரும்

“உடுப்பிட்டி சிங்கம் ஸ்ரீலங்கா அரசுக்கு எச்சரிக்கை”

அதே போல தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிரிகளை அக்குவேறு ஆணிவேறாக கிழிப்பதிலும் சுதந்திரன் முன்னால் நின்றது

சுதந்திரன் பாய்ச்சல்

அந்த சுதந்திரன் பத்திரிகை தான் 1977 இன் பின்னர் கூட்டணித் தலைவர்களது போக்கு சரியில்லை என்று எழுதத் தொடங்கியது.

கூட்டணித் தலைவர்கள் ஜே.ஆர். பின்னால் சென்று சுதந்திரப் பயிரை வாட வைக்கின்றார்கள் என்று வருத்தப்பட்டார் கோவை மகேசன்.

தனது அரசியல் மடலில் கோவை மகேசன் வருத்தத்தோடு நினைவ+ட்டிய பாரதியார் பாடல் வரிகள் இவை

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ?” இவற்றையெல்லாம் கூட்டணித் தலைவர்கள் கண்டுகொள்ளவேயில்லை.

அமுதர் என்ன சளைத்தவரோ? திருவள்ளுவரை உதவிக்கு அழைத்து, “காற்றான் வலியும் தன் வலியும் அறிந்தே போர் செய்யவேண்டும் திருவள்ளுவரே சொல்லியிருக்கின்றார். தம்பிமாருக்கு தெரியவில்லையே” என்றார்.

இளைஞர்களது கோபத்தை அமுதர் அலட்சியம் செய்தமைக்கு ஒரு காரணம் இருக்கின்றது.

புலிகள் இயக்கம் தமது கையைவிட்டுப் போகாது என்று அமிர் நம்பியிருந்தார்.

அப்போது தம்பி, கரிகாலன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டவர் பிரபாகரன்.

தம்பியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று நினைத்தார் அமிர். அதனால் பிரபாகரனுடன் நெருக்கமாக தொடர்புகளையும் வைத்திருந்தார்.

அடக்குமுறைச் சட்டம்

இதேநேரத்தில் 1979 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா படுமோசமான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்.

78ம் ஆண்டு ஜே.ஆர் அரசு கொண்டு வந்த புலிகள் தடைச்சட்டத்தை விடவும் மிகக் கொடுமையான சட்டம் அது.

1979ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் திகதி அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அச்சட்டம் ‘பயங்கரவாத தடைச்சட்டம்’என்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜுரிமார் இல்லாமல் வழக்கு விசாரணை நடத்த அந்தச் சட்டம் இடமளித்தது.

18மாத காலத்திற்கு சந்தேக நபர் ஒருவரை வெளியுலகத் தொடர்பே இல்லாமல் சிறையில் வைத்திருக்கவும் வழி செய்தது.

சித்திரவதை மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை சான்றாக பாவிக்க நீதிமன்றத்திற்கு அனுமதியளித்தது.

எவர் வீட்டுக்குள் புகுந்தும் தேடுதல் நடத்தலாம்.எவரையும் கைது செய்யலாம்.

சுருக்கமாகச் சொன்னால் தமிழ் பேசும் மக்களது போராட்டத்தை ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்ய ஜே.ஆர்.கொண்டு வந்த சட்டம் அது.

ஆயுதப்படைகளது கரங்களை சுதந்திரமாக்கி வடக்கில் ஒரு வேட்டைக்கான மறைமுக அனுமதி வழங்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றிய சூட்டோடு சூடாக யாழ்ப்பாணத்தில் அவசரகாலநிலையை அரசு பிரகடனம் செய்தது.

பிரிகேடியர் வீரதுங்காவை அழைத்தார் ஜே,ஆர்.

“யாழ்.மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் முழுப்பொறுப்பும் உங்களுக்கு வழங்கப்படுகின்றது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு (1979)முன்னர் நாட்டிலிருந்து குறிப்பாக யாழ்.மாவட்டத்திலிருந்து வன்செயல்கள் ஒழிக்கப்படவேண்டும்.” உத்தரவிட்டார் முப்படைத் தளபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.

யாழ்ப்பாணம் சென்ற பிரகேடியர் வீரதுங்கா சட்டத்தின் பலத்துடன் பயங்கரவாத ஆட்சி ஒன்றை நடத்திக் காட்டினார்.

இன்பம் – செல்வம் கொலை

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இன்பம்- செல்வம் உட்பட பல இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பிணமாக வீதியில் வீசியெறியப்பட்டனர்.

யாழ்.குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்தன.ஜே.ஆர்.கண்டு கொள்ளவேயில்லை.

அடக்குவதாக நினைத்துக் கொண்டு தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தை நோக்கி தட்டியெழுப்பினார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.

இயக்கங்களது முக்கிய தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர்.

1979- 80 காலப்பகுதியில் ஆயுதமேந்திய இயக்க நடவடிக்கைகள் சற்றே ஓய்ந்திருந்தன.

1980இன் முற்பகுதியில் புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிளவும் அதற்கு காரணம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட முதல்; பிளவு அது தான்.

ஐந்து பேர் கொண்ட செயற்குழுவே 1980 இன்முற்பகுதி வரை புலிகளது தலைமையாக இருந்தது.

பிரபாவின் வரையறைகள்

அந்த செயற்குழுவின் தலைவராக உமா மகேஸ்வரன் இருந்தார். இராணுவத் தளபதியாகவும் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.இதனை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன்.

பிரபாகரன் சில கட்டுப்பாட்டு விதிகள்,வரையறைகள் விதித்தே செயற்பட்டு வந்தார். புகைபிடிக்கக்கூடாது, காதலிக்கக்கூடாது, வீண்செலவுகள் கூடாது, இரகசியங்களை வெளியிடக்கூடாது,கட்டுப்பாட்டை மீறக்கூடாது போன்ற விடயங்களைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் பிரபாகரன்.

ஆனால் உமாமகேஸ்வரன், நாகராசா போன்றவர்கள் இவற்றை விரும்பவில்லை.

இதேசமயம் ஊர்மிளாதேவி புலிகள் அமைப்பின் தீவிர உறுப்பினராக செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

 

ஊர்மிளா தேவி விடயத்தில் ஒரு பிரச்னை ஆரம்பமானது.

நன்றி தினமுரசு 

 


14_Page_1.jpg

புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கியவர் ஊர்மிளா.

ஊர்மிளாதேவி பற்றி இலங்கையின் இரகசியப் பொலிசாருக்குத் தெரிந்துவிட்uma.mடது. அவர்கள் தேடத் தொடங்கினார்கள். ஊர்மிளாதேவியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்.

தமிழ்நாட்டில் புலிகளின் அலுவலகம் ஒன்று இருந்தது .ஊர்மிளாதேவியிடம் அந்த அலுவலகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஊர்மிளாவுக்கும் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.

இதேநேரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் போக்கு குறித்து புலிகளுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படத் தொடங்கின.

பிரபாகரன் கூட்டணியினரின் வேகம் போதாது என்று நினைத்தபோதும் அமுதர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிடவில்லை.

தமிழ்நாட்டில் இருந்த உமா மகேஸ்வரன் மற்றும் புலிகளது முக்கியஸ்தர்கள் பிரசுரங்கள் அச்சிட்டு யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் அனுப்பினார்கள்.

அந்தப் பிரசுரங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரை குறை கூறும் வாசகங்களைக் கொண்டிருந்தன.

தமக்கு எதிரான பிரசுரங்கள் வந்திறங்கியுள்ள விசயம் அமுதரின் காதுக்கு எட்டியது.

பிரபாவை அழைத்துப் பேசினார் அமுதர்.துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படாமல் எரிக்கப்பட்டன.

ஊர்மிளா விவகாரம்

இதே நேரம் பிரபாகரனால் உமா மகேஸ்வரன் மீது ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இயக்க உறுப்பினர்கள் காதலிக்கக்கூடாது என்ற விதியை உமா மீறிவிட்டார்.

உமாவும் ஊர்மிளாவும் காதலிக்கின்றனர்.இது இயக்க விரோதம் என்று குற்றம் சாட்டினார் பிரபா.

‘காதலிப்பது தவறு’என்ற வாதத்தை உமா ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த முரண்பாடு பெரிதாகியபோது உமா மகேஸ்வரன் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினார்.

உமா மகேஸ்வரனுக்கு மரணதண்டனை விதிப்பதாக பிரபாகரன் அறிவித்தார்.

தண்டனையை நிறைவேற்ற உமா மகேஸ்வரனை தேடித் திரிந்தார் பிரபாகரன்.

கூட்டணியால் முரண்பாடு

உமா மகேஸ்வரன் வெளியேறிய பின்னரும் புலிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தன.

பிரபாகரனின் கூட்டணி சார்பான போக்கை புலிகளுக்குள் ஒரு சாரார் விரும்பவில்லை.

1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நீர்வேலியிலும் காரைநகரிலும் புலிகள் இயக்கத்தினரின் மாநாடு ஒன்று நடைபெற்றது.

போராளிகளைத் தேடி யாழ்.குடாநாட்டில் படையினர் சல்லடை போட்டுத் தேடித் திரிந்தபோது 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடினார்கள்.

அந்த மாநாட்டில் புலிகளுக்குள் இருந்த கருத்து முரண்பாடுகள் வெடித்தன

பிரபாகரனின் அமிர் ஆதரவு நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டன.

பிரபாகரனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் புலிகளுக்குள் இரு பிரிவுகள் உருவாகின. 19பேர் பிரபாகரனுக்கு ஆதரவாகவும் 13 பேர் எதிராகவும் நின்றனர்.ஏனையோர் ஒதுங்கிக் கொண்டனர்.

சுந்தரம், செல்லக்கிளி, நாகராசா,ஐயர் போன்றோர் அந்தக் காலகட்டத்தில் விலகியவர்களில் முக்கியமானவர்கள்.

இதில் சுந்தரத்திடம் தான் இயக்கத்தின் ஒரு பகுதி ஆயுதங்கள் இருந்தன.

மக்கள் மத்தியில் அரசியல் வேலைகளில் ஈடுபடவேண்டும் என்ற கருத்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.

சுந்தரம் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று கேட்டார் பிரபாகரன்.

இதேவேளை சுந்தரம் குழுவினரும் தம்மை தமிழீழ விடுதலைப் புலிகள் என்றே அழைத்துக் கொண்டனர்.

புலிகள் இயக்கத்திலிருந்து பிரபாகரனுடன் முரண்பட்டு வெளியேறிய உமா மகேஸ்வரனையும் சுந்தரத்தையும் சந்திக்க வைக்க ஒரு முயற்சி நடந்தது.

இந்த முயற்சியில் முன்னணியில் இருந்தவர் சந்ததியார்.

1980ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுந்தரம் குழுவினரோடு உமாமகேஸ்வரன் சேர்ந்து கொண்டார்.

பிரபாவின் முடிவு

இதேவேளையில் பிரபாகரன் அணியினர் மத்திய செயற்குழு ஒன்றை உருவாக்கினார்கள்.அதில் ஏழு பேர் இருந்தனர்.

பிரபாகரன்,கலாபதி,கடாபி,அன்ரன்,சாந்தன்,சீலன்,ராகவன் ஆகியோரே அந்த ஏழு பேர்.

சுந்தரம் குழுவினரும் உமாமகேஸ்வரனும் இணைந்து கொண்டதையடுத்து பிரபாகரன் ஒரு முடிவுக்கு வந்தார்.

குட்டிமணி, தங்கத்துரை குழுவினருடன் இணைந்து செயற்படலாம் என்பதுதான் பிரபாraghavanகரன் செய்த முடிவு.

இதனை ராகவன், கடாபி, கலாபதி ஆகியோர் விரும்பவில்லை.

சாந்தன் இயக்கத்தை விட்டு ஒதுங்கிச் சென்றார். இதனால் புலிகளது செயற்குழு 3-3 என்று இரு அணியாக நின்றது.

குட்டிமணி, தங்கத்துரை குழுவினரோடு பிரபாகரன் அணியினர் இணைந்து கொண்டனர்.

இரு அணியினரும் இணைந்து நிதிசேர்க்கும் நடவடிக்கையில் குதித்தனர்.

யாழ்ப்பாணத்தில் குரும்பசிட்டி என்னுமிடத்தில் பிரபலமான நகை அடைவு பிடிக்கும் கடை ஒன்று இருந்தது.

அதன் உரிமையாளர் வன்னியசிங்கம்.அந்த நகைஅடைவு கடை குறிவைக்கப்பட்டது.

இயக்கம் என்றால் அரச வங்கிகளில் தான் கொள்ளை நடத்துவார்கள். தனியாரிடம் கொள்ளையிடமாட்டார்கள் என்று அப்போதெல்லாம் பொதுமக்கள் நம்பியிருந்தனர்.

மக்கள் எதிர்ப்பு

இதனால் நகை அடைவு கடையில் கொள்ளை நடந்தபோது அதனை மக்கள் இயக்க நடவடிக்கை என்று நினைக்கவில்லை.

தனிப்பட்ட கொள்ளையர்கள் என்று நினைத்த மக்கள் உண்மை அறிந்ததும் பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை,ஸ்ரீசபாரத்தினம் ஆகியோரை நோக்கி கற்களை வீசினார்கள். தாக்குவதற்கு முற்பட்டார்கள்.

கல்லுகள்,பொல்லுகள், கத்திகள், கம்புகள் சகிதம் ஊரவர் திரண்டதைக் கண்ட குட்டிமணி வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்.

கூட்டம் கலையமறுத்து முன்னேறியது. கூட்டத்தை நோக்கி துப்பாக்கி திரும்பியது. அதில் சிலர் காயமடைந்தனர். ஒருவர் கொல்லப்பட்டதாகவும் நினைவிருக்கின்றது.

‘குரும்பசிட்டியில் துணிகரக் கொள்ளை’, ‘கொள்ளையர் வெறியாட்டம்’

1981 இல் நடைபெற்ற அக்கொள்ளை பற்றி பத்திரிகைகள் அவ்வாறு தான் செய்திகள் வெளியிட்டன.

பொலிசார் இயக்கங்கள் மீது சந்தேகம் எழுப்பியபோதும் அதனை மக்கள் நம்ப மறுத்தனர்.

தனியாரிடம் அதுவும் ஒரு தமிழரிடம் இயக்கக்காரர் கொள்ளையிடமாட்டார்கள் என்று நம்பப்பட்டதே அதற்கான காரணமாகும்.

‘தமிழ் புதிய புலிகள்’(TNT) என்ற பெயரில் இயங்கி பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

தமிழ் புதிய புலிகள் என்ற பெயரில் இயங்கியபோது அதன் தலைவர் போல செயற்பட்டவர் செட்டி என்றழைக்கப்படும் தனபாலசிங்கம்.

இவர் பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுப்பவராக மாறினார்.

1981ஆம் ஆண்டு கல்வியங்காட்டில் செங்குந்தா வீதியிலுள்ள செட்டியின் வீட்டுக்கு குட்டிமணியுடன் சென்றார் பிரபாகரன்.

செட்டியை சுட்டுக் கொன்றார் குட்டிமணி.

பிரபாகரன் அணியினர் குட்டிமணி- தங்கத்துரை குழுவினரோடு இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை கடாபி, ராகுலன் போன்றோர் விரும்பவில்லை.

யாழ்.பல்கலைக்கழகத்திரல் படித்துக் கொண்டிருந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த ரி.சிவகுமாரன் ‘உணர்வு’ என்னும் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தார்.

பிரபாகரன் அணியினரது நடவடிக்கைகளை மறைமுகமாக அப்பத்திரிகை விமர்சித்தது.

பொலிஸ் நிலையத் தாக்குதல்

இதே நேரத்தில் உமா-சுந்தரம் குழுவினர் யாழ்ப்பாணத்திலுள்ள ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் மீது குறிவைத்தார்கள்.

1981 ஆம் ஆண்டு ஜுலையில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்தனர் உமா-சுந்தரம் குழுவினர்.

பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் ஒன்று நடத்தக்கூடும் என்பதையே அப்போது நினைத்துப் பார்க்காத நேரம்.

பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கியே தீருவது என்று அரச படையினர் கங்கணம் கட்டியிருந்தனர்.

ஆனால் போராளிகள் அரச படைகளின் கோட்டைகளுக்குள்ளேயே தேடி வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதலில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம் போராளிகளின் கைக்கு வந்தது.

அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றிக் கொண்டு வெற்றிகரமாக தப்பிச் சென்றனர் உமா- சுந்தரம் குழுவினர்.

முதன் முதலில் தமிழ் போராளிகளால் நடத்தப்பட்ட பொலிஸ் நிலையத் தாக்குதல் அது தான்.

அரசாங்கம் திகைத்துப் போனது. பொலிஸ் நிலைய பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டன.

புதிய பாதை

பேராhளிகளது வளர்ச்சியை அரசாங்கம் கவலையோடு கவனித்தது.

கூட்டணித் தலைமையும் உமா-சுந்தரம் குழுவினரது வளர்ச்சியை அதிருப்தியோடு நோக்கியது.

அதற்குக் காரணம் இல்லாமலில்லை. ; ‘புதிய பாதை’ கடுமையாகச் சாடியது.

‘புதிய பாதை’ பத்திரிகையை நடத்தியதால் உமா-சுந்தரம் குழுவினர் ; ‘புதிய பாதை’ குழுவினர் என்று அழைக்கப்பட்டனர்.

உமா-சுந்தரம் குழுவினர் மக்கள் மத்தியில் வேலை செய்வதன் ஒரு கட்டமாக புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

கே.சி.நித்தியானந்தா

1947ஆம் ஆண்டு இலங்கையில் அரச ஊழியர் வேலைநிறுத்தம் ஒன்று நடைபெற்றது. அந்த வேலை நிறுத்த இயக்கத்தில் முக்கிய பாத்திரம் வகித்தவர் கே.சி.நித்தியானந்தா.

இவர் (GCSU) தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். வேலைநிறுத்தம் காரணமாக வேலை இழந்த கே.சி.நித்தியானந்தா ஆயுதப் போராட்ட அமைப்புக்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்.

இவரது உதவியோடு நெடுங்கேணிப் பகுதியில் சில புனர்வாழ்வு நடவடிக்கைகளில் உமா மகேஸ்வரன் ஈடுபட்டிருந்தார்.

கே.சி.நித்தியானந்தாவின் பெறாமகன் தான் ஈபிடிபி செயலாளர் நாயகமாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.J.R

கே.சி.நித்தியானந்தா ஈரோஸ் அமைப்போடும் தொடர்பு கொண்டிருந்தார்.

இதனால் உமா-சுந்தரம் குழுவினர் பின்னர் ‘காந்தீயம்’என்னும் அமைப்போடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

கட்டிடக் கலைஞரான டேவிட் என்பவரது தலைமையில் இயங்கிய ‘காந்தீயம்’அமைப்பின் ஊடாக உமா-சுந்தரம் குழுவினர் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

1983ஆம் ஆண்டு ஜுலையில் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட டாக்டர் ராஜசுந்தரம் ‘காந்தீயம்’அமைப்பின் அமைப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதப் போராட்ட அமைப்புக்கு காந்தியின் பெயரிலான நிறுவனமே ஒரு கவசமாகச் செயற்பட்டது ஆச்சரியமல்லவா? ஆனால் அது காலத்தின் கட்டாயம்.

இராணுவம் மீது தாக்குதல்

1981ஆம் ஆண்டு அக்டோபர் பிரிகேடியர் வீரதுங்காவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு கொடுத்தார் ஜே.ஆர்.

இலங்கையின் இராணுவத் தளபதியாகவும் வீரதுங்கா நியமிக்கப்பட்டார்.

வடக்கில் வன்முறைகளையும் அரசபயங்கரவாதத்தையும் வீரதுங்காக கட்டவிழ்த்துவிட்டார் அதனை கௌரவிக்கவே அவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்று கண்டனம் எழுந்தது.

பொலிசாரால் ஆயுதம் ஏந்திய போராளிகளை சமாளிக்கமுடியாது. இராணுவத்தினரால் போராளிகளால் எதிர்க்கமுடியாது என்று நினைத்தது அரசு.

அதனால் யாழ்ப்பாணத்தில் இராணுவ ரோந்துகள் அதிகரிக்கப்பட்டன. முக்கிய சந்திகளில் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இரண்டு இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கையில் துப்பாக்கி இருந்தபோதும் தம்மைத் தாக்கும் துணிச்சல் யாருக்கும் வராது என்ற நம்பிக்கையில் விழிப்பாக இருக்கத் தவறினர். சைக்கிளில் வந்து இறங்கினார்கள் சில இளைஞர்கள். இராணுவ வீரர் ஒருவரது அருகில் வந்தார் ஒரு இளைஞர். இராணுவ வீரர் என்ன நடக்கப்போகிறது என்று ஊகிப்பதற்கு இடையில் அந்த இளைஞர் கைத்துப்பாக்கியை உருவினார்.

தோட்டா பறந்தது. அதேசமயம் இன்னொரு இராணுவ வீரரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இரண்டு இராணுவத்தினரும் உயிரிழந்தனர். அவர்களது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சைக்கிளில் தப்பிச் சென்றனர் இளைஞர்கள்

1981ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது அந்தத் தாக்குதல்.

இலங்கை இராணுவத்திற்கெதிராக முதன் முதலில் தமிழ்ப் போராளிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதல் அது தான்.

ஆதற்குத் தலைமை தாங்கியவரர் சீலன் என்றழைக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி.

இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர்.


குட்டிமணி –தங்கத்துரை குழுவோடு பிரபாகரன் அணியினர் இணைந்திருந்தபோதே இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

சாள்ஸ் அன்ரனி பிரபாகரன் அணியைச் சேர்ந்தவர். அதனால் அத்தாக்குதல் நடவடிக்கையை புலிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பட்டியலில் குறித்து வைத்துள்ளனர்.

வீரதுங்காவுக்கு பதவியுயர்வு கொடுக்கப்பட்டதைக் கண்டித்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி சபை

ஆயுதப் போராட்டம் காட்டில் பற்றிய தீயாக வளர்ந்து வருவதை அவதானித்தார் ஜே.ஆர்.ஜயவர்த்தனா.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரை அழைத்துப் பேசினார் ஜே.ஆர்.

“மாவட்ட அபிவிருத்தி சபை தருகின்றேன். ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

தமிழீழ தேசிய மன்றத்தைக் கூட்டுவதற்கு 77 தேர்தலில் மக்களது ஆணை கேட்டவர்கள் கூட்டணியினர்.

1981இல் ஜே.ஆர்.கொடுத்த மாவட்ட அபிவிருத்தி சபையோடு மக்களிடம் வந்தார்கள்.

“கிடைப்பதை பெற்றுக் கொண்டு தொடர்ந்து போராடுவோம். தமிழீழத்தை கைவிடவில்லை “என்றனர் கூட்டணியினர். கொதித்துப் போனார்கள் இளைஞர்கள்.

“கேட்டது தமிழீழம் கிடைத்தது மாவட்டம்”

“பிடிப்பது ஆலவட்டம் பெற்றுக்கொண்டது மாவட்டம்” என்றெல்லாம் சுவர்களில் சுலோகம் எழுதினார்கள் இளைஞர்கள்.

“தம்பிமார் இரத்தத்துடிப்பில் பேசுகிறார்கள், இராஜந்திரம் புரியவில்லை”என்றார்கள் கூட்டணித் தலைவர்கள்.

உமா-சுந்தரம் குழுவினர் ஒரு திட்டம் தீட்டினார்கள். ஒரு விபரீதத்திற்கு வித்திட்ட திட்டம் அது.

 

(தொடரும்)

நன்றி தினமுரசு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15_Page_1.jpg

இத்தேர்தலில் நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும்  “தமிழீழம்” அமைப்பதற்கான ஆணையாகும். அடுத்த பொது தேர்தல்  சுதந்திரம் பெற்ற  தமிழீழத்தில்தான் நடைபெறும்.

1977 ஆம் ஆண்டு  நடைபெற்ற  பொது தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் பொதுக் கூட்ட மேடைகளில் செய்த முழுக்கம் இதுதான்.

அரசியலில் வாக்குறுதிகளின்  ஆயுள்  எப்போதும்  மிகக் குறைவானதாகவே இருக்கிறது.கூட்டணியினர் மக்களுக்கு வழங்கிய நான்கு வயதுவரைக் கூட வாழவில்லை.

1981ம் ஆண்டு  தமிழீழ  கோரிக்கைக்கு பதிலாக கிடைத்த மாவட்ட அபிவிருத்தி சபையோடு  தேர்தலில் போட்டியிட்டனர்  தமிழர் விடுதலைக் கூட்டணியினர்.

மாவட்ட அபிவிருத்தி சபை  தேர்தலை நிராகரிப்பது  என்று உமா-சுந்தரம்  குழுவினர் முடிவு செய்தனர்.  “புதிய பாதை”  பத்திரிகையில்  மாவட்ட அபிவிருத்தி சபையை கண்டித்து  காரசாரமான  விமர்சனங்கள்  தொடுக்கப்பட்டன.

புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவை ஆதியோடந்தமாய்  அமிர் அறிந்து வைத்திருந்தார். அதனால்  உமா-சுந்தரம்  குழுவினர் தனது தலைமைக்கு எதிரானவர்கள் என்ற  கோபத்தில் இருந்தார்.

பிரபாகரன்  தனக்கு எதிராக செல்லமாட்டார்  என்ற நம்பிக்கையில் இருந்த அமிர்.  உமா-சுந்தரம்  குழுவினரது  நிராகரிப்பு  பிரச்சாரத்தைக்  காதில் போட்டுக்கொள்ளவில்லை.

amirthar.jpgஅமுதர் குனிந்து நின்றார்.

யாழ் நகரில்   தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பிரச்சாரக்  கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.  தலைவர்  அமிர் உட்பட  மாவட்ட அபிவிருத்தி சபை  தேர்தல்  வேட்பாளர்கள்  மேடையில்  அமர்ந்திருந்தனர்.

திடீரென  கூட்டத்தில் சலசலப்பு  ஆயுதங்களோடு தோன்றினார்கள் சில இளைஞர்கள்.  அவர்கள் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

கூட்டத்தினர்  சிதறி ஓட தொடங்கினர்.

உயிர்  தமிழுக்கு,  உடல் மண்ணுக்கு”

 “உச்சி மீது வானிடிந்து வீழந்தாலும் அஞ்சோம்”

என்றெல்லாம் சிங்கம் போல் கர்ஜிக்கக்கூடிய  பேச்சாளர்கள்  மேடையில் வீற்றிருந்தனர். வான் இடிந்து விழவில்லை.  வானை நோக்கி  துப்பாக்கி  வோட்டுக்கள்  மட்டுமே  தீர்க்கப்பட்டன.

பொதுக் கூட்டமேடையில் தளபதி அமிர் மட்டுமே  தனித்து நின்றார். அவரோடு வீற்றிருந்தவர்களை காணவில்லை.

உடல் மண்ணுக்கும்,  உயிர் தமிழுக்கும் கொடுக்க  இது   தரணமல்ல  என நினைத்து  தப்பியோடினார்களோ  தெரியவில்லை

அமுதர் ஓடவில்லை அசையாமல் நின்றார். ‘கூவிப் பிதற்றட்டுமே’ தெரிந்த தனது அணியினரை நினைத்து நிச்சியம் அவர் வருந்தியிருப்பார்.

துணிச்சலை பொறுத்தவரை இரும்பு மனிதன் நாகநாதனுக்கு  பின்னர் அமுதர்தான். அவரது இடத்தை நிரப்ப அப்போதும் சரி இப்போதும் சரி  கூட்ணியில் ஆள் கிடையாது.

யாழ் நகர் கூட்டம் குழுப்பத்தில் முடிந்தது.   உமா-சுந்தரம்  குழுவினரே அந்த கூட்டத்தை குழப்பினார்கள்.

அவர்கள் நினைத்திருந்தால்  அமுதரை சுட்டிருக்க முடியும்.  அவ்வாறான ஒரு எண்ணம்  அப்போது யாருக்கும்  எழுந்திருக்கவில்லை.   ஏனெனில்..,  ஆயதப் போராட்ட   அமைப்புகளை  சேர்ந்தவர்கள் அனைவருமே  அமுதரை  நேசித்து வளர்ந்தவர்கள்.

தலைவர்களது வேகம் போதாது  என்று  கோபப்பட்டார்கள்,  அவர்களது  உயிர் வேண்டும் என்று  குறிவைக்கவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி  முதலாலித்துவ தலைமை.. “தமது நலன்கள், பதவிகள் என்பவற்றை பாதுகாத்துக்கொண்டு தான் உரிமை போராட்டம் பற்றிய முடிவுகளை எடுப்பார்கள்″.

இவ்வாறு  இடதுசாரி  சிந்தனையுள்ள  தமிழ்  இளைஞர்கள்  கூறினார்கள். உமா- சுந்தரம்  குழுவினர்களும் அவ்வாறு தான்  கருத்துக்கொண்டிருந்தனர்.

அதற்கு அமுதர் உடனடியாக பதில் அளித்தார்.

“நான் இலங்கையின்  பிரபல இடதுசாரி என். எம்  பேரேராவின் மாணவன். சோசலிசத்தை விரும்புபவன்.  சோசலிச  தமிழீழம்  என்ற எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும்  குறிப்பிட்டிருக்கிறோம்”. என்று பேசுவார் அமிர்.

இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை  கூறவேண்டும்.

1980களில் பல்கலைகழக மாணவர்கள்  தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக  கிழந்தெழுந்தார்கள்.

“வேகம் போதாது. தமிழீழத்தை கூட்டணி பெற்று தராது. பாராளுமன்றவாதிகளினால் போராட்டம் நடத்தமுடியாது” என்றெல்லாம் பிரச்சாரம் செய்த பல்கலைகழக யாழ் மாணவர்கள்  செய்த ஒரே காரியம் கூட்டணியினரை கோபப்படவைத்தது.

அமிர்தலிங்கத்தின் கொடும்பாவியை      வீதீ வீதியாக  இழுத்துச் சென்று கொழுத்தி எரித்தனர்.

பல்கலைகழக யாழ் மாணவர்கள்  தங்கள் கையைவிட்டுச் செல்லத்தொடங்கிவிட்டதை  கூட்டணி   கவலையோடு கவனித்தது.

1971இல் தரப்படுத்தலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த  தமிழ் மாணவர்களையும், தமிழ் மாணவர் பேரவையையும் தனது தலைமையின் கீழ் கொண்டு வந்தவர்கள்  கூட்டணியினர். 1980களில் மாணவர்கள் தமக்கெதிராக மாறிவிட்டதை சகிக்கமுடியவில்லை.

கொடும்பாவி எரிப்பை கண்டிக்க  யாழ் பல்கலைகழகம் முன்பாக உள்ள ஒரு வளவுக்குள்  தமிழர் விடுதலைக் கூட்டணி  ஒரு பொதுக் கூட்டம் நடத்தியது.  பொதுக் கூட்ட மேடையை சுற்றி  பொலிசார் பாதுகாப்பு வழங்கினார்கள்.

மேடையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம்வரை கயிறுகட்டி  யாரும் மேடையை நெருங்க முடியாதவாறு பாதுகாப்பு  செய்யப்பட்டது.

மாணவர்கள் மீது பாச்சல்

தமக்கு எதிரான அரசியல்வாதிகளை துரோகிகள் என்று கூட்டணியினர்கள் முன்னர் கூறுவது வழக்கம்.

கூட்டணியினர்கள்  யாரைப் பார்த்து  துரோகிகள் என்று சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்களை மாணவர்களும்  இளைஞர்களும் விரேதமாக நோக்குவது 1970வதுகளில் நடந்த கதை.

ஆனால்… 1980களில் நிலமை தலைகீழாக மாறிவிட்டது.

மாணவர்கள் மீது சீறினார்கள் கூட்டணியினர்.  அரசாங்கத்திடம் சலுகைகள் எதிர்பார்க்கும் விரிவுரையாளர்கள் சிலர் மாணவர்களை தூண்டிவிடுகிறார்கள் என்றும் பேசினார்கள்.

அனைத்து வசைகளையும்   மிஞ்சிவிட என்ற வேகத்தோடு  மேடையில் பேசினார் ஆலாலசுந்திரம்   “அடலேறு”   ஆலால சுந்தரம்.

குதிரை ஓடி வந்த -சிலதுகள்  யாழ்   பல்கலைகழகத்துக்குள்  படிக்கவிருப்பமில்லாமல்  குழப்ப  வேலைசெய்கின்றன என்றார் அவர்.

கூட்டத்தை அவதானித்துக்கொண்டிருந்த   மாணவர்களில் சிலர்  கற்களை எடுத்துக்கொண்டனர்.  அவர்களை  வேறு சில மாணவர்கள் தடுத்துவிட்டதால்  ஆலால சுந்தரத்தின் தலை தப்பியது.

குதிரை ஓடுவதென்றால் தனக்கு பதிலாக இன்னொருவரை பரீட்சை எழுதவைத்து  பாஸ் ஆகுவது என்று பொருள்.

தமக்கு எதிரானவர்கள் என்றால்  அவர்களை   தரம் தாழ்த்துவதுவதில் சகல நாகரீக எல்லைகளையும்  தாண்டிச்சென்று  வசைபாட தலைவர்கள் தயங்குவதில்லை.

அந்தக்கூட்டத்தில்  மிகமுக்கிய பேச்சாளராக விளங்கியவர்  உணர்ச்சி கவிஞ்ஞர் என்றழைக்கப்படும் காசி ஆனந்தன்.

“மார்கசியம் படித்தவன் -கிழித்தவன் எவனாவது  இருந்தால் வா  என் தலைவர்  அமிரொடு விவாதிக்க  உங்களுக்கு தகுதியில்லை. என்னோடு வா விவாதம் நடத்தலாம்”
பல்கலைகழக மாணவர்களுக்கு  சவால் விட்டு காசியானந’தன்  பேசியது.

kasiananthan01.jpeg

கும்பியும் தளபதியும்

காசி ஆனந்தன் என்றவுடன்  இன்னொரு சம்பவம்  நினைவுக்கு வருகிறது. அதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.
1983 க்கு பின்னர் – ஆண்டு நினைவில்?
தமிழ் நாட்டில் மதுரையில் ஒரு பொதுக் கூட்டம். அதில் கலந்துகொண்டு காசியானந்தன் உரையாற்றினார்.

“தம்பி பிரபாகரன்  தமிழீழத்தை  மீட்டெடுத்து தளபதி அமுதரின் காலில் சமர்ப்பிப்பார்”

 pirapa.jpg

என்று பேசிவிட்டார் காசி ஆனந்தன்.

அப்போது அமுதரோடு  பிரபா முரண்பட்டிருந்த  நேரம்.

 

காசியானந்தனை  கூப்பிட்டனப்பினார்  பிரபாகரன்.  அவ்வாறான பேச்சுக்களை நிறுத்துமாறு  பிரபாகரன் கண்டிப்பாக தெரிவித்து விட.. கப்சிப்  ஆகிவிட்டார் காசியானந்தன்.

நன்றி தினமுரசு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17_Page_1.jpg

நன்றி தினமுரசு

பேப்பர் மீது மௌஸ்ஆல்  அமத்தவும் எழுத்துக்கள் பெரிதாகும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பர் மீது மௌஸ்ஆல்  அமத்தவும் எழுத்துக்கள் பெரிதாகும் நன்றி

 

18_Page_1.jpg

நன்றி தினமுரசு

பேப்பர் மீது மௌஸ்ஆல்  அமத்தவும் எழுத்துக்கள் பெரிதாகும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பர் மீது மௌஸ்ஆல்  அமத்தவும் எழுத்துக்கள் பெரிதாகும் நன்றி

19_Page_1.jpg

நன்றி தினமுரசு

பேப்பர் மீது மௌஸ்ஆல்  அமத்தவும் எழுத்துக்கள் பெரிதாகும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பர் மீது மௌஸ்ஆல்  அமத்தவும் எழுத்துக்கள் பெரிதாகும் நன்றி.

20_Page_1.jpgநன்றி தினமுரசு.

பேப்பர் மீது மௌஸ்ஆல்  அமத்தவும் எழுத்துக்கள் பெரிதாகும் நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

21 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:

சிறைக்குள் சிந்திய புனித இரத்தம் :

அரசியல் கைதிகள்:

ஜூலை 25ம் திகதி வெலிக்கடை சிறையில் ஒரு திட்டம் உருவானது.

சோபாலலோகேனயா, சந்திரே போன்ற கிரிமினல் குற்றவாளிகள் ஏனைய சிங்கள கைதிகளோடு சேர்ந்து ரச்கசியமாக போட்ட திட்டம் அது.

இந்தத் திடம் பற்றி சிறைகாவலர்கள் சிலருக்கும் தெரிந்திருந்தது என்று நம்பபடுகிறது.

வெலிக்கடை சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் 73 பேர் வரை இருந்தனர்.

குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், தேவன், டக்லஸ் தேவானந்தா, மாணிக்கம், தாசன், றொபட், வணபிதா சிங்கராஜர், டாக்டர் தர்மலிங்கம், கோவை மகேசன், பரந்தன் ராஜன், டாக்டர் இராஜசுந்தரம், பனாகொடை மகேஸ்வரன், டேவிட் ஐயா, நடேசுதாசன், பாஸ்கரன், தேவகுமார், சிவபாதம் மாஸ்டர், வணபிதா சின்னராசா, ஜெயதிலகராஜா, ஜெயகுலராஜா, ஜெயகொடி ஆகியோர் உட்பட 71 தமிழ் கைதிகள் வரை சிறையில் இருந்தனர்.

சிறையில் இருந்த போதும் 73 அரசியல் கைதிகளும் சிறைக்காவலர்களோடு அரசியல் கைதிகளுக்கான உரிமைகளுக்காக அடிக்கடி போராடிக் கொண்டிருந்தார்கள்.

அதே சமயம் சிங்களக் கைதிகள் பலரோடு தமிழ் அரசியல் கைதிகள் நட்பாகவே இருந்தனர்.

பயங்கரமான கிரிமினல்குற்றவாளிகளான சிங்களக் கைதிகள் தான் வெலிக்கடை சிறையில் இருந்தனர்.

உணவு கொண்டுவந்து கொடுப்பது போன்ற காரியங்களை சிங்களக் கைதிகள் சிலரே கவனித்து வந்தனர்.

அவ்வாறு கவனித்து வந்த கைதிகளில் ஒருவர் அசப்பில் பிரபாகரன் மாதிரி இருப்பார்.

இதனால் அவரை குட்டிமணி 'தம்பி'என்று அழிக்கத் தொடங்கினார். ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் 'தம்பி' என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.

அவர் மீது தனி பிரியத்தோடு நடந்துக்கொண்டார்கள். தங்களின் ஒருவராகவே அந்தக் கைதியைக் கருதினார்கள்.

மதியம் 2 மணி :

ஜூலை 25ம் திகதி மதியம் 2 மணிக்கு சிறைக்குள் திடீரென்று ஒரே கூச்சல்கள்.

தமிழ் அரசியல் கைதிகள் 73 பேரும் தனியாக சிறைக் கூண்டுகளுக்குள் இருந்தார்கள்.

அரசியல் கைதிகளை அவர்களுக்குரிய கூண்டுகளுக்குள் மத்திய நேரத்திலும் பூட்டி  வைத்திருப்பது வழக்கம்.

கிரிமினல் கைதிகளை மாலை நேரம் வரை வெளியே நடமாட அனுமதித்திருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் திறந்துதான் வெட்டடா, குத்தடா என்று கூச்சல் போட்டுக் கொண்டு தமிழ் கைதிகளின் கூண்டுகளை நோக்கி ஓடிவந்தார்கள்.

கூண்டுகளின் சாவிக் கொத்து சிறைக்கவலர்களிடம்தான் இருக்கும். சாவிக் கொத்துக்களில் சில கூச்சல் போட்டுக்கொண்டு வந்த கைதிகளிடம் இருந்தது.

எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சாவிக்கொத்துக்களை காவலர்கள் கொடுத்துவிட்டார்கள்.

குட்டிமணி- தங்கதுரை- ஜெகன், தேவன் ஆகியோர் இருந்த சிறை தொகுதிதான் முதலில் தாக்குதலுக்கு உள்ளானது.

கோடலிகள், இரும்பு சட்டங்கள், பொல்லுகள் சகிதம் சிங்கக் கைதிகள் கூண்டுகளுக்குள் புகுந்தனர்.

குட்டிமணி போன்றவர்கள் எங்கே அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று துல்லியமாக வழிக்காட்டிக் கொண்டிருந்தார் ஒருவர்.

அவர் வேறு யாரும்மல்ல, 'தம்பி' என்று குட்டிமணியால் பிரியமாகப் பெயர் சூட்டப்பட்ட கைதியே தான்.

ஏற்றிபரத தாக்குதல், நிராயதபநிகளாக நிலை, தாக்குதல் நடத்த வந்தவர்கள் தொகையோ அதிகம். குறுகலான சிறை கூண்டு. எதிர்த்துப் போராட வசதியில்லை.

சில தமிழ் கைதிகள் தனித் தனியே அடைக்கபட்டிருன்தனர்.

இறுதிவரை எதிர்த்தனர் :

கூண்டுகள் உடைத்து திறக்கப்பட்ட போது குட்டிமணி- தேவன் ஆகியோர் வெறுங்கைகளால் காடையர்களை எதிர்த்து தாக்கினார்கள்.

குட்டிமணி பலசாலி, குத்துச் சண்டை மல்யுத்தம் போன்றவற்றை தெரிந்து வைத்திருந்தார். இறுதிவரை சளைக்காமல் எதிர்த்து தாக்கினார்.

ஆனாலும்- ஆட்பலமும், ஆயுதங்களும் காடையர் தரப்பில் அதிகம். அவர்கள் கைகளே மேலோங்கின.

குட்டிமணி வெட்டிச் சைக்கப்பட்டார். தொடர்ந்து அந்த சிறைத் தொகுதிக்குள் இருந்த 35 பேர் காடையர்களால் கொல்லப்பட்டனர்.

சிறைகாவளர்கள் வேடிக்கை பார்க்க சிறைக் காடையர்கள் நடத்திய வேட்டையில் 35 போராளிகள் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

குட்டிமணியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கோரமும் அன்று தான் நடந்தது.

"இன்று இது போதும் மிகுதியை நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்று சிறைக் காவலர் ஒருவர் வேட்டையர்களை அழைத்துச் சென்றார் என்றும் தகவல்கள் வெளியாகின.

சிலுவை வடிவில் அமைந்த சிறைத் தொகுதிகளைக் கொண்டது வெலிக்கடை சிறை 25ம் திகதி சிலுவை வடிவத்தில் ஒரு பகுதியில் இருந்து சிறைத் தொகுதியில்தான் வேட்டை நடந்தது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்டர், நடேசுதாசன், போன்றவர்கள் உட்பட 35 பேர் பலியானார்கள்.

ஏனைய சிறைத் தொகுதிகளுக்கும் செய்தி பரவியது.

எச்சரிக்கை :

அடுத்தது தாங்கள் தான் என்று அவர்கள் நினைத்தார்கள்.

சாப்பாட்டு கோப்பைகளை உடைத்தும் வளைத்தும் ஆயுதமாக்கிக் கொண்டார்கள் மீதியிருந்த தமிழ் கைதிகள்.

மறுநாள் 26ம் திகதி ஏனைய தமிழ் கைதிகள் மிரட்டபட்டார்கள்.

யார் தாக்குதால் நடத்தியது என்று சாட்சி சொல்லக்கூடாது. சொன்னால் உங்கள் கதையும் முடிந்துவிடும் என்று சிங்களக் கைதிகள் எச்சரித்தனர்.

தமிழ் கைதிகள் அஞ்சவில்லை பார்வையிட வந்த உயரதிகாரிகளிடம் தாக்குதல் பற்றி விபரித்தனர்.

26ம் திகதி எதுவும் நடக்கவில்லை.

சிறைகாவளர்கள் நினைத்திருந்தால் மீதியிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றாக வைத்திருந்திருக்கலாம்.

ஆனால் அவர்களோ வழக்கம் போல் தனித்தனி கூண்டுகளுக்குள் பூட்டினார்கள்.

ஒன்று அல்லது மூன்று, ஐந்து என்று ஒற்றை எண் வரக்குடியதாகத்தான் ஒரு கூண்டுக்குள் கைதிகள் விடப்படுவார்கள். அதுதான் சிறை விதி.

உயிருக்கே உத்தரவாதமளிக்க முடியாத நிலையில் விதிகளை மட்டும் கடைப்பிடித்து பயன் என்ன?

ஜூலை 27 :

ஜூலை 27ம் திகதி-மதியம் 2 மணி மீண்டும் கூச்சல்கள்.

கொலைகார ஆயுதங்களோடு காடையர்கள் தமிழ் கைதிகளது கூண்டுகளை நோக்கி ஓடி வந்தனர்.

ஒரு சிறைக்காவலர் சிறந்த புத்திசாலி. தனது கைகளை பின்புறமாகக் கட்டிக்கொண்டு நின்றார். கையில் சாவிக் கொத்து. ஓடி வந்தவர்களுக்கு அது மிக வசதியாக இருந்தது. அவர்கள் சாவிக் கொத்தை அவரிடமிருந்து எடுத்துக் கொண்டனர்.

அதற்காகவேதான் அவர் அப்படி நின்றிருந்தார். வேலியே பயிரை மேய அனுமதி கொடுத்த காட்சி தான் அது.

சாவிக் கொத்துகளோடு வந்து கூண்டுகளை திறக்க முற்பட்ட காடையர்களை தமிழ் கைதிகள் தாக்கினார்கள்.

டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கம் தாசன், பாஸ்கரன், தேவகுமார், றொபேட, ஜெயக்கொடி ஆகியோர் உட்பட பல அரசியல் கைதிகள் துணிச்சலோடு எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.

சாப்பாடு கோப்பை மூலமாக தயாரான ஆயுதங்களால் கூண்டுக் கதவில் கைவைத்தவர்கள் மீது தாக்கினார்கள்.

முதிர்ந்தோர் ஆயினும் :

இதோ சமயம் டாக்டர் தர்மலிங்கம், டாக்டர் இராஜசுந்தரம், வணபிதா சிங்கராஜா, கோவை மகேசன், டேவிட் ஐயா போன்றவர்கள் ஒரே தொகுதியில் ஒன்றாக வைக்கபட்டிருன்தனர்.

வயது முதிர்தவர்கள், ஆபத்தில்லாதவர்கள் என்ற காரணத்தினால் அவர்களை ஒன்றாக அனுமதித்திருந்தனர்.

அவர்களும் பொல்லுகள் சகிதம் தயாராக இருந்தனர்.

அவர்கள் இருந்த சிறைத் தொகுதியை நோக்கி ஒரு கும்பல் பாய்ந்து சென்றது.

அப்போது காந்தியம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் இராஜசுந்தரம் கும்பலை நோக்கி முன்னே சென்றார்.

"நாங்கள் காந்தியவாதிகள், எங்களை தாக்குவது முறையல்ல"

என்றார் டாக்டர் இராஜசுந்தரம். காட்டுமிராண்டித்தனத்திடம் காந்தியம் செல்லுமோ?

ஒரு காடையன் தனது பொல்லால் டாக்டர் இராஜசுந்தரத்தின் தலையில் ஓங்கி அடித்தான்.

இரத்த வெள்ளத்தில் விழுந்த காந்தியவாதி தனது கடைசி மூச்சை இழுத்தார்.

அவரை சாய்த்துவிட்டு சிறை தொகுதியை நோக்கி பாய்ந்தது கும்பல்.

முதியவர்கள் என்ற போதும் அவர்கள் கும்பலை தாக்கினார்கள், கும்பல் பின்வாங்கியது.

அதில் சிலரை பிடித்து தமது சிறைத் தொகுதிக்குள் கொண்டுவந்து முழங்காலில் இருத்தி வைத்தனர் அந்த மூததோரான தமிழ் கைதிகள்.

தமிழ் கைதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்திருந்தால் சுலு 25 - 27இல் தாக்குதல் நடத்திய கும்பல் காணமல் போயிருக்கும்.

குறைந்த பட்சம் முதல் தாக்குதல் நடந்த பின்பாவது தமிழ் கைதிகளை ஒன்றாக வைத்திருந்திருக்கலாம்.

18 பேர் பலி :

ஆனால் செய்யவில்லை, ஜூலை 27இல் நடந்த வெறியாட்டத்தில் 18 தமிழ் அரசியல் கைதிகள் பலியானார்கள்.

பலத்த எதிர்தாக்குதல் நடத்தியதால் 18 பேரோடு பலியெடுப்பு நின்றது.

றொபட், டாக்டர் இராஜசுந்தரம், தேவகுமார், பாஸ்கரன் உட்பட 18 பேர் ஜூலை 27 அன்று இரத்தம் சிந்தி இன்னுயிர் இழந்தனர். இரண்டு நாளிலும் 53 பேர் பலியானார்கள்.

அதன் பின்னர் தான் இராணுவம் வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியது.

தம்மிஸ்டர் ஆட்சியில் வெறித்தனம் தம்மிஸ்டப்படி வேட்டை நடத்தியது.

சிறைக்குள் தமிழ் கைதிகள் செத்துக்கொண்டுருக்கும் போது, வெளியேயும் தமிழர்கள் கலவரத்தியில் கருகிக் கொண்டிருந்தனர்.

"என் கண்களை பார்வையற்ற தமிழ் மகன் ஒருவருக்கு கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை அந்தக் கண்கள் மூலம் காண்கிறேன்"

என்று நீதிமன்றத்தில் சொன்னவர் போராளி குட்டிமணி.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குடிமணிக்கு வட்டுக்கோட்டை தொகுதி எம்.பி. பதவி தருவதாகக் கூறியது கூட்டணி.

குட்டிமணி அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

அந்த தியாகப் போராளி வெலிக்கடை சிறையில் இரத்த சாட்சியானார்.

சிறை மாற்றம் :

ஜூலை 27ம் திகதி மாலையில் வெலிக்கடை சிறையில் மீதியிருந்த தமிழ் கைதிகள் இடம் மாற்றப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு தமிழ் கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.

தென்னிலங்கையில் வேறு சிறைகளில் இருந்த தமிழ் கைதிகளும் மாற்றப்பட்டனர்.

மகர சிறையில் இருந்த பரமதேவாவும் அவ்வாறு மாற்றப்பட்டவர்களில் ஒருவர்.

சிறைகளில் கூட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்பதை அரசாங்கமே மறைமுகமாக ஒப்புக்கொண்டதின் அடையலாம் தான் சிறை மாற்றம்.

சிறையில் போராளிகள் படுகொலையான செய்தி உலகெங்கும் அதிர்சியோடு நோக்கப்பட்டது.

ஜே.அரசின் தர்மிஸ்ட முகமூடி கிழிந்து போனது. தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்ட தப்பிய போராளிகள் தயாராக இருந்தனர்.

நேர்மையான விசாரணை மூலம் கொலையாளிகளையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் தண்டிக்க அரசு முன்வரவில்லை.

வெலிக்கடை வேட்டைக்கு தலைமை தாங்கியவர்களின் ஒருவர் சேபால. இவர்தான் பின்னர் ஒரு விமானக் கடத்தலில் ஈடுப்பட்டார். மனநோயாளி என்று கூறப்பட்டார்.

காட்டுத் தீ :

83 ஜூலைப் படுகொலைகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஈழப் போராட்டம் மீதான ஆழமான பிடிப்பை ஏற்படுத்தியது.

இனியும் ஒற்றையாட்சியின் கீழ் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவு திட்டவட்டமாக ஏற்ப்பட்டது.

மாணவர்கள் - இளைஞர்கள் மத்தியில் ஆயுதம் ஏந்துவது தவிர வேறு வழியில்லை என்று கருத்து காட்டுத் தீயாக பற்றிக்கொண்டது.

இந்திய அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. தமிழகம் கொந்தளித்தது.

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மாநில அரசின் சார்பாக பொது வேலை நிறுத்தம் அறிவித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியும் இலங்கை அரசு மீது கண்டனங்களைத் தொடுத்தனர்.

இந்திய பிரதமர் அன்னை இந்திரா காந்தி ஒரு முடிவுக்கு வந்தார்.

எடுத்துச் சொன்னால் ஜே.ஆர். அரசு கேட்கப் போவதில்லை.

போராளி இயக்கங்கள் மூலமாக அடித்துச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்திய பிரதமர் தீர்மானித்தார்.

 

ஆயுதப் பயிற்சி :

போராளி அமைப்புக்களில் முக்கியமனவற்றுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க இந்திய முன்வந்தது.

இயக்கங்களோடு தொடர்பு கொள்ளும் பொறுப்பை இந்திய ஆய்வு பகுப்பாய்வு பிரிவு என்று அழைக்கப்படும் 'றோ' ஏற்றுக்கொண்டது.

தமிழ் நாட்டில் அப்போது எம்.ஜி.ஆரின் ஆதரவோடு செயற்பட்டுக் கொண்டிருந்தது 'புளொட்' அமைப்பு.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் செல்வாக்குள்ள அமைச்சராக இருந்தவர் எஸ்.டி.சோமசுந்தரம். சுருக்கமாக எஸ்.டி.எஸ். என்று அழைபார்கள். எஸ்.டி.எஸ். உமா மகேஸ்வரனுக்கு நெருக்கம்.

புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர் காமராஜர் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த நெடுமாறன்.

கலைஞர் கருணாநிதி ரெலோ அமைப்புக்கு ஆதரவாக இருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் நாட்டில் உள்ள 'நக்சலைட்'என்று அழைக்கப்படும் குழுக்களோடு உறவாக இருந்தது.

இவற்றில் எந்த அமைப்பை தெரிவு செய்வது என்பதில் 'றோ' வுக்கு குழப்பம்.

 

நன்றி தினமுரசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:22

தமிழகத்தின் கொதிப்பு

இலங்கை பிரச்சனை தமிழ் நாட்டு அரசியலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தது.ஜே.ஆர், ஜெயவர்த்தனா ஈவிரக்கமற்ற கொடிய மனிதராகவே தமிழ் நாட்டு மக்களால் கருதப்பட்டார்.

இனப்படுகொலை செய்திகளும், அடைக்கலம்  தேடி தமிழகம் நேக்கிச் சென்ற அகதிகளின் சோகங்களும் தமிழக மக்களிடம் அனுதாப அலையைத் தோற்றுவித்தன.

இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரசனை குறித்து  உரத்துப் பேச  ஆரம்பித்தன.

இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்பது இன உணர்வை வெளிப்படுத்தும் அடையாளமானது.

கலைஞர் கருணாநிதி உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கருதவேண்டும் என்பதில் விருப்பம் உடையவர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் கூடிய கரிசனம் உடையவராகக் காட்டுவதற்கு அவர் முயற்சி செய்தார்.

எம்.ஜி.ஆர் அதனைப் புரிந்து கொண்டார். கலைஞர் கருணாநிதியை முந்திவிட திட்டமிட்டார்.

83 ஜீலை கலவரத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடத்த கலைஞர் தீர்மானித்தார்.

அதனை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர் தமிழக அரசு சார்பாகவே பொது வேலைநிறுத்தம்(பந்த்) நடத்தி கலைஞர் கருணாநிதியை ஓரம் கட்டினார்.

தமிழக அரசியல் போட்டி இலங்கைத்  தமிழர் பிரச்சனையிலும் எதிரொலித்தமைக்கு அது ஒரு சான்று மட்டும்தான். பல சம்பவங்கள் உண்டு. அவ்வப்போது சொல்லப்படும்.

கலைஞரும் டெலோவும்

இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் தந்தை செலவா, தளபதி அமிர் போன்றவர்கள் கலைஞர் கருணாநிதியோடுதான் அதிக நெருக்கமாய் இருந்தார்கள்.

கலைஞரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை இங்கே அரசியலாக்கி லாபம் தேடவும் தலைவர்கள் தவறியதில்லை.

கூட்டணியின் கையில் இருந்த தலைமைத்துவம் போராளிகள் அமைப்புகளிடம் சென்று விட்டதை கலைஞர் கருணாநிதி தெரிந்து கொண்டார். அதனால் - போராளி அமைப்புகள் மத்தியில் தன்னோடு நெருக்கமாகக் கூடிய ஒரு அமைப்பை கலைஞர் கருணாநிதி தேடினர். புளாட் அமைப்பை எஸ்.டி எஸ் சோமசுந்தரத்தின் மூலம் எம்.ஜி.ஆர் வளைத்துக் கொண்டர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் கம்யூனிசத்தை  நம்பும் அமைப்பாக கருதி அதனைக் கலைஞர் கருணாநிதி தவிர்த்து விட்டார்.

புலிகள் நெடுமாறனோடு நெருக்கமாக இருந்தார்கள். நெடுமாறன் அப்போது கலைஞருக்கு எதிராக அரசியல் நடத்திக் கொண்டிருந்தவர். ரெலோதான் பொருத்தமானதாகப் பட்டது.ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் சந்திரகாசனோடு நெருக்கமாக இருந்தார்.

தந்தை செல்வாவின் மைந்தனான சந்திரகாசன் தான் அப் பொது ரெலோவின் ஆலோசகர் என்றும் கருதப்பட்டார்.

சந்திரகாசன் கலைஞருக்கும் அப் பொது வேண்டப்பட்டவராக இருந்தார். சந்திரகாசன் மூலம் ரெலோவுடன் தனது உறவை இறுக்கிக் கொண்டார் கலைஞர் கருணாநிதி.

இதனை அறிந்த எம்.ஜி.ஆர் ரெலோ அமைப்பு மீது கசப்படைந்தார்.

அதனால் புளெட் அமைப்புக்கு எம்.ஜி.ஆர் அரசின் உதவி சற்று அதிகமாகவே கிடைத்தது.

தமிழ்நாட்டில் சட்ட சபை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் புளெட் அமைப்பினர் தங்கியிருக்க வசதி செய்து கொடுக்கப்பட்டது..

எஸ்.டி.எஸ் சோமசுந்தரத்தின் அனுசரணையோடு பயிற்சி முகாம்கள் அமைப்பதற்கான இடங்களையும் " புளெட்" பெற்றுக் கொண்டது.

இதனால் "83" காலப் பகுதியில் ஆட்பலம், நிதி பலம் போன்றவற்றில் புளெட் அமைப்பே முன்னணியில் இருந்தது.

நக்சலைட் தொடர்பு

ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் க.பத்மநாபா "நக்சலைட்"என்றழைக்கப்படும் தீவிர கம்யூனிஸ்ட் அமைப்புகளோடு தொடர்புகள் வைத்திருந்தார்.

இந்திய மத்திய அரசையும் சோவியத் யூனியையும் தீவிரமாக எதிர்த்து வந்தன "நக்சலைட் "குழுக்கள் .

தலைமறைவாக இயங்கிவந்த  "நக்சலைட் "குழுக்கள் பல பிரிவுகளாக சிதைந்து கிடந்தன.

"மக்கள் யுத்தக் குழு" என்று அழைக்கப்படும் கோதண்டராமன் தலைமையிலான குழுவோடுதான் பத்மநாபா நெருக்கமாக இருந்தார்.

நிலப்பிரபு ஒருவரை கத்தியால் குத்திவிட்டு ஓடி வந்தார் "நக்சலைட் "குழு உறுப்பினர் ஒருவர் அவருக்கு சென்னையில் சூளைமேட்டில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் பாதுகாப்புக் கொடுக் கப்பட்டது.

"நக்சலைட் "குழுக்களோடு   ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்பு தெரிந்திருந்தமையால் இந்திய உளவு பிரிவுகளும், தமிழக மாநில உளவுப் பிரிவுகளும்  சந்தேகக் கண் கொண்டுதான் நோக்கிவந்தன.

 ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புகள் பத்மநாபாவின் "நக்சலைட் " ஆதரவு நிலைப்பாட்டை சுரேஷ் பிரேமச்சந்திரன், மணி, குணசேகரன்,ரமேஷ் ஆகியோர் விமர்சித்தனர்.

இந்தியப் பிரதிநிதியாக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்திய மத்திய அரசை விரோதிப்பது புத்திசாலித்தனமல்ல   என்ற கருத்தக் கொண்டிருந்தார். இந்தியாவில் இருந்த  ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு சஞ்சிகை வெளியிட்டது. அதன் பெயர் "ஈழ முழக்கம்"

அதற்கு ரமேஷ் பொறுப்பாக இருந்தார். சுரேஷ் பிரேமச்சந்திரனின் அனுமதியுடன் சோவியத்

யூனியனை  ஆதரிக்கும் கருத்துகள் ஈழ முழக்கத்தில் வெளியாகின.

நபாவின் கருத்து

இந்திய அரசின் உளவுப் பிரிவுகளது சந்தேகங்களை தீர்க்க இரத்து ஓரளவு உதவியது.

"இந்தியா ஒரு முதலாளித்துவ அரசு அது தனது நலனுக்கு மாறாக ஈழத்தில் சோசலிசப் புரட்சி நடத்த ஒத்துழைக்காது" என்பதே பத்மநாபாவின் கருத்தாக நம்பிக்கையாக அப்போதிருந்தது.

83 இன் ஆரம்பப் பகுதியில் பத்மநாபா தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பணம் திரும்பியிருந்தார்.

83 ஜூலை கலவரநேரத்தில் பத்மநாபா யாழ்ப்பாணத்தில்  இருந்தார்.

தமிழ் நாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எப் வேலைகளுக்கு சுரேஷ் பிரேமசந்திரன் பொறுப்பாக இருந்தார்.

முன்னுரிமை

இயக்கங்களுக்கு பயிற்சி கொடுக்க இந்திய முடிவெடுத்திருந்த விடையம் முதலில் ரெலோவுக்கு தெரியவந்தது.

சந்திரகாசனுகும், இந்திய ஆய்வு பகுப்பாய்வு பிரிவான "றோ" அதிகாரி உன்னிகிருஷ்ணனுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது.

அதனால் பயிற்சி வழங்குவதில் ரெலோவுக்கு முன்னுரிமை கொடுக்க "றோ " தீர்மானித்தது.

பத்மநாபா, பிரபாகரன் ஆகியோர் அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர்.

ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம், புளெட் தலைவர் உமா மகேஸ்வரன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்தனர்.

ரெலோவுக்கும் முன்னுரிமை கொடுத்தாலும் புலிகள், புளெட் ,ஈ.பி.ஆர்.எல்.எப் , ஈரோஸ் ஆகிய இயக்கங்களுக்கும் பயிற்சி கொடுக்க "றோ " முன் வந்தது.

வரப்பிரசாதம்.

" ஈரோஸ் " அமைப்பு அபோது மிகச் சொற்ப உறுபினர்களோடுதான் இருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப், புலிகள் ரெலோ புளெட் அமைப்புகள் போல பிரபலமாக அறியப்பட்ட அமைப்பாக "ஈரோஸ் இருக்கவில்லை.

இந்திய ஆயுதப் பயிற்சி என்பது ஈரோஸ் உயிர்வாழக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் போலவே அமைந்தது.

புலிகள் உட்பட சகல அமைப்புகளும் காலப்போக்கில் மறைந்து போகும். ஈரோஸ் மட்டுமே இறுதிவரை நின்று சோசலிச ஈழப் புரட்சியை நடத்தும் என்று தத்துவம் பேசிக் கொண்டிருந்தது ஈரோஸ்.

ஈரோஸுக்கு இருந்த பரிதாபநிலை என்னவென்றால் அதனை தமிழக சோசலிச வாதிகளும் நம்பவில்லை. மிதவாதிகளும் ஆதரிக்கவில்லை. தீவிரவாதிகளும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை

ஈ.பி.ஆர்.எல்.எப்புக்கு சுறு சுறுப்பான இரண்டாம் கட்டத் தலைமை ஒன்று இருந்தது. அதவே அந்த அமைப்பின் மிக பெரிய பலமாக அமைந்தது.

ஈரோஸுக்கு இரண்டாம் கட்ட தலைமை இல்லாமல் இருந்தது அல்லது மிகப் பலவீனமாக இருந்தது.

உதாரணமாக ஈரோஸ் "தர்க்கீகம்" என்றொரு பத்திரிக்கை வெளியிட்டது.

பத்திரிகை மாதாந்தம் ஒழுங்காக வெளிவந்தது பத்திரிகையில் உள்ள விடையங்கள் மட்டும் புரியும் வகையில் இருந்தது.

"தர்க்கீகம்" என்றால் என்ன அர்த்தம் ? விளக்கம் சொல்லவே அவர்களுக்குப் பக்கம் போதவில்லை.

எனவே இந்திய ஆயுதப் பயிற்சி ஈரோஸுக்கு உயிர்ப்பைக் கொடுக்கும் விதத்தில் அமைந்தது.

 

ஆட்சேர்ப்பு

பயிற்சிக்கு உடனே  ஆட்கள் தேவை என்று கேட்டது "றோ".

இந்தியாவில் இருந்த தலைவர்கள் உடனடியாக யாழப்பாணத்திற்கு   செய்தி அனுபினார்கள்.

"உடனடியாக எவ்வளவு பேரை அனுப்ப முடியுமோ அனுபவும்" புலிகள் மட்டுமே ஆள்சேர்ப்பில் நிதானத்தைக் கடைப்பிடித்தார்கள்.

"வருபவரெல்லாம் வரலாம்" என்ற பாணியில் புலிகள் ஆள் திரட்டல் நடத்த முற்படவில்லை.

ரெலோ மினிபஸ் ஒன்றை வடைக்கு அமர்த்திக் கொண்டு ஆள் பிடித்துத் திரிந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப் யாழ்ப்பணத்தில் மட்டுமே நிதானமாக ஆள் திரட்டலில் ஈடுபட்டது.

பத்மநாபாவின் நேரடி உத்தரவு காரணமாக மட்டக்களப்பில் "வருபவரெல்லாம் வரலாம்" பாணியில் ஆள் திரட்டல் நடத்தப்பட்டது.

"ஆயிரம் பேர் வேண்டும் " என்று மட்டக்களப்பில் இருந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவரிடம் தொலைபேசி மூலம் அறிவித்தார் பத்மநாபா.

மட்டக்களப்பில் இருந்த  ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தர்கள் சிறையில் இருந்தனர்.

கட்டுப்பாட்டை விட உறுபினர்களது கூட்டுத்தொகை மட்டுமே முக்கியமாக இருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப், புளெட் அமைப்புகளை வடக்கு -கிழக்கில் வலி நடத்திய இரண்டாம் கட்ட தலைமையினரின் அனுபவமே, கருத்துக்களே தமிழகத் திலிருந்த தலைவர்களால் கணக்கெடுக்கப் படவில்லை.

சிறுகச் சிறுகச் சேர்த்து கட்டிய வீடுபோல, திட்டமிட்டு செயற்பட்டு ஒரு அரசியல் - இராணுவ அமைப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் வளர்ந்து கொண்டிருந்தது.

ஜனநாயக சக்திகளும்,இடதுசாரி சிந்தனையுடையவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்.

எல்லாமே பறந்தது.

தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்திகொண்டிருன்தவர் கேதிஸ்வரன்.லாபம்தரும் தொழில். அவரை ஒரு நாள் சந்தித்தனர் மூன்று இளைஞர்கள்.

நீண்ட நேர விவாதம் பல நாட்கள் கலந்துரையாடல். தனது தொழிலை எல்லாம் துறந்து விட்டு  ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் சங்கமித்தார் கேதிஸ்வரன். அந்த நேரத்தில் இது பெரிய காரியம்.

உறுப்பினர் சேர்ப்பிலும், கட்சியை உருவாக்குவதிலும்  ஈ.பி.ஆர்.எல்.எப்  இரண்டாம் கட்ட தலைமை புதிய அணுகு முறையை கடைப்பிடித்தது.

தோழமை -கட்டுக்கோப்பு -விமர்சனம் -சுயவிமர்சனம் என்பவை மிகச்சிறப்பான தலைமைத்துவத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் தான் ஆள் சேர்ப்பு இடியாக வந்தது.

இயக்கத்தில் சேருவதற்கு தேவையான தகுதிகள் என்று கூறப்பட்டவற்றை எல்லாம் நிராகரித்துவிட்டு ஆட்கள் சேர்க்கப்பட்டார்கள்.

"புளெட் " அமைப்பிலும் இது தான் நடந்தது.

83 ஜூலை கலவரம் இயக்கங்களை நோக்கி இளைஞர்களை தள்ளியது.

ஒரு பேரலை போல அவர்கள் இயக்கங்களை நோக்கி  வந்தனர்.

அந்த லையை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாத இயக்கங்கள் அந்த அலைக்குள் மூழ்கிப்போயின.

"ரெலோ"வைப் பொருத்தவரை ஆள்சேர்ப்பில் கட்டுக்கோப்பு, அமைப்பு வடிவத்தில் புரட்சிகர தன்மை பற்றி எப்போதுமே கவலைப் படவில்லை.

எந்த இயக்கத்தில் சேருகிறோம் என்ற தெள்வு இல்லாமலேயே ரெலோ.புளெட் ,  ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கங்களில் பல நூற்றுக்கணக்கானோர் சேர்ந்தனர்.

உறுப்பினர் தொகையைப் பார்த்த தலைவர்கள் பிரமித்து போனார்கள்.

"நங்கள் எவ்வளவு பெரிய இயக்கமாகிவிட்டோம்" என்று சுலபமான வளர்ச்சியில் மெய்மறந்தனர்.

 ஈ.பி.ஆர்.எல்.எப் முகாமிலிருந்த ஒரு இளைஞர் தாள் ஒன்றில் "பிரபாகரன் வாழ்க"என்று எழுதினர்.

பொறுப்பாளர் அழைத்துக் கேட்டார்."தோழர் என் இப்படி எழுதினீர்கள்?"

உறுபினருக்கு பொறுப்பாளர் என் இப்படிக் கேட்கிறார் என்று புரியவில்லை. உறுப்பினர் கேட்டார் இப்படி;

"ஏன் அவர்தானே எங்கள் இயக்கத் தலைவர்?'               (தொடரும்)

நன்றி தினமுரசு.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.