Jump to content

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 3.0


Recommended Posts

வணக்கம்,

கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் மீளாய்வு செய்யப்பட்டு தெளிவற்றவை சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 3.0 கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் 15 டிசம்பர் 2014 ஞாயிறு முதல் (15.12.2014 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆகவே யாழ் கள உறுப்பினர்கள் விதிமுறைகளை உள்வாங்கி ஆக்கபூர்வமான கருத்துக்களை வைத்து யாழின் வளர்ச்சிக்குத் துணைபுரியுமாறு வேண்டிக்கொள்கின்றோம். மேலும் கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதும், பதிவர்கள் மீதும் மட்டுறுத்துதலும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.


அ) உறுப்பினர்கள்

1. உறுப்பினர் பெயர்

  • யாழ் கருத்துக்களத்தில் இணையும் உறுப்பினர்கள் இரண்டு வகைப் பெயர்களைத் தெரிவு செய்துகொள்ளலாம்.
    • பயனர் பெயர் (username): இது யாழ் கருத்துக்களத்தில் கள உறுப்புரிமைப் பதிவிற்கான பெயர்.
    • புனைபெயர் (nickname): இது கள உறுப்பினர் ஒருவர் யாழ் கருத்துக்களத்தில் தன்னை அடையாளப்படுத்துவதற்கான பெயர்.
  • இவை இரண்டும் கற்பனைப் பெயர்களாகவோ அல்லது உண்மைப் பெயர்களாகவோ இருக்கலாம்.
  • பயனர் பெயராக மின்னஞ்சல் முகவரியை அல்லது புனைபெயரைப் பாவிக்கலாம். பயனர் பெயர் கள உறுப்பினருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
  • கள உறுப்பினர் ஒருவர் யாழ் கருத்துக்களத்தில் உள்நுழைவதற்குப் பயனர் பெயரினையும் கடவுச் சொல்லையும் பாவிக்கவேண்டும்.
  • பெயர்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படலாம். (சில தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக நீளமான பெயர்களை தமிழில் எழுத முடியாதுள்ளது).
  • பின்வரும் பெயர்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:
    • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் பெயர்கள்.
    • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்).
    • பண்பற்ற பெயர்கள்/பிறரை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்படும் சொற்கள் (எ.கா.: சொறிநாய்).
  • பின்வரும் முறையில் பெயர்கள் எழுதப்படல் ஆகாது:
    • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
    • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
    • இலக்கங்கள் (எ.கா.: 12345678)
    • குறியீடுகள் (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , . )

2. உறுப்பினர் படம்

  • யாழ் களத்தில் இரண்டு வகைப் படங்களை உங்கள் படமாக இணைக்கலாம்.
    • பயனர் படம் (profile photo): யாழ் கருத்துக்களத்தில் உங்கள் "எனது அகம்" (profile) பக்கத்தில் இந்தப்படம் காண்பிக்கப்படும்.
    • அவதாரம் (avatar): யாழ் கருத்துக்களத்தில் எழுதும் உங்கள் கருத்துக்களோடு இந்தப்படம் காண்பிக்கப்படும்.
  • இவை இரண்டும் கள உறுப்பினர்களின் உண்மையான படமாகவோ அல்லது கணினியில் உருவாக்கப்பட்ட படங்களாகவோ இருக்கலாம்.
  • படங்களின் அளவு பின்வருமாறு இருக்க வேண்டும்:
    • பயனர் படம்: 90px * 90px
    • அவதாரம்: 80px * 80px
  • பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:
    • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள்.
    • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்.
    • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் படங்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்).
    • மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்).
    • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்.

3. கையொப்பம்
யாழ் கருத்துக்கள உறுப்பினர்களின் கையொப்பம் தொடர்பான விதிகள்:

  • கையொப்பம் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • கையொப்பத்தில் பேரழிவு ஆயுதங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான தளங்களுக்கும், வன்முறைகளைத் தூண்டும் தளங்களிற்கும், தகவல் திருட்டுக்களில் ஈடுபடும் தளங்களிற்கும், வக்கிரமான பாலியல் தளங்களிற்கும் இணைப்புக்கள் கொடுப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • விரும்பிய நிறங்களைப் பயன்படுத்தமுடியும். எனினும் "சாதாரண அளவு" எழுத்தில் கையொப்பம் இருத்தல் விரும்பப்படுகின்றது.
  • கையொப்பத்தின் உயரம் அதிகமாக இருந்தால் கருத்துக்களை வாசிப்பதில் இடையூறுகள் உண்டாகலாம். எனவே இணைக்கப்படும் படங்களின் அளவு "உயரம்: 80px" க்கு உள்ளடங்கியதாக இருத்தல் விரும்பப்படுகின்றது.
  • இணைக்கப்படும் படங்களின், அசைபடம் (animation) அடங்கலாக, கோப்பு அளவு (file size) அதிகமாக இருப்பது யாழ் கருத்துக்களத்தின் வேகத்தைக் குறைக்கலாம். எனவே இயலுமானவரை கோப்பு அளவு குறைந்த படங்களைப் பாவிப்பது விரும்பப்படுகின்றது.
  • சீண்டும் வகையிலும், பிறரை இழிவுபடுத்தும் அல்லது அவதூறு செய்யும் வகையிலும் கையொப்ப வசனங்கள் இருத்தல் ஆகாது.

4. கருத்தாடல்

  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
  • புதிய உறுப்பினர்களை நட்போடும், பண்போடும் வரவேற்றல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும்.
  • கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • யாழ் கருத்துக்கள உறுப்பினர்கள் பற்றிய குறைகளையும், விமர்சனங்களையும் நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு முறை (Report) மூலமாகவோ அல்லது தனிமடல் மூலமாகவோ அறியத்தரல் வேண்டும். (அதற்கான தனித் தலைப்புகள் தொடக்கப்படல் ஆகாது).
  • சக கருத்தாளரின் தனிப்பட்ட விடயங்களை எழுதுவதையும், அவரது குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் எழுதும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது.
  • கருத்தாளர் ஒருவர் தனது அடையாளங்களை பகிரங்கமாக குறிப்பிடுவதை கூடியவரைக்கும் தவிர்த்தல் வேண்டும். இணையத்தில் இடம்பெறும் தகவல் / தனிநபர் தகவல் திருட்டுக்களைத் தடுக்கும் நோக்கில் உறுப்பனர்கள் தங்கள் சுயவிபரங்களை பகிரங்கப்படுத்தாது இருப்பது விரும்பப்படுகின்றது. தனிப்பட்ட விபரங்களை உறுப்பினர்கள் பகிர்ந்தால் அவர்களே அதற்கான விளைவுகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.
  • யாழ் கருத்துக்களத்தை விளம்பர நோக்கில் வெறும் செய்திகளையும் ஆக்கங்களையும் இணைக்கும் தளமாக மட்டும் பாவித்தல் தவிர்க்கப்படவேண்டும்.
  • கருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலும் தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலும், வீண் விதண்டாவாதங்களாகவும் எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
  • சக உறுப்பினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பதும், அவர்களின் அனுமதி இல்லாமல் நையாண்டி செய்வதற்கு அவர்களது பெயர்களைப் பயன்படுத்துவதும் கூடாது.
  • யாழ் கருத்துக்களத்தினைக் குப்பைக்கூடமாகவும், மனவக்கிரங்களையும், மனோவிகாரங்களையும் கொட்டும் இடமாகவும் பயன்படுத்தக்கூடாது.

5. தனிமடற் சேவை

  • யாழ் கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினைப் பயன்படுத்தலாம்.
  • தனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது. (அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்).
  • தனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.
  • ஒருவரின் தனிமடலை நிர்வாகப் பிரிவில் இருப்பவர்கள் தவிர்ந்த இன்னொருவருக்கு அனுப்புவதும், யாழ் கருத்துக்களத்தில் அல்லது பிற தளங்களில் பகிரங்கப்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். இவ்விதி நிர்வாகத்தில் உள்ளவர்களால் அனுப்பப்படும் தனிமடல்களுக்கும், நிர்வாக நடவடிக்கைகள் சம்பந்தமான தொடர்பாடல்களுக்கும் பொருந்தும்.
  • கள உறவுகளுக்கிடையில் ஆபாசமாகவோ அல்லது வக்கிரமாகவோ தனிமடல் பிரயோகம் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

 

6. உறுப்பினர் குழுமங்கள்
யாழ் கருத்துக்களத்தில் பின்வரும் உறுப்பினர் குழுமங்கள் உள்ளன.



 

விண்ணப்பித்தோர்:
இக்குழுமத்தில் உள்ளவர்கள் யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணைந்தவர்களெனினும் யாழ் களத்தினால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் உள்ள இணைப்பைச் சொடுக்கி அவர்தம் மின்னஞ்சல் முகவரிகளை உறுதிப்படுத்தாதோர் ஆவர்.

எனவே இக்குழுமத்தில் உள்ளவர்களால் அவர்தம் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தி புதிய உறுப்பினர்கள் குழுமத்திற்குள் அனுமதிக்கப்படும்வரை யாழ் கருத்துக்களத்தில் பதிவுகள் எதனையும் மேற்கொள்ளமுடியாது.

புதிய உறுப்பினர்கள்:
இக்குழுமத்தில் உள்ளவர்கள் யாழ் கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் கருத்துக்கள் பதியலாம். ஆயினும் யாழ் அரிச்சுவடி பகுதியில் மட்டுமே புதிய தலைப்புகளை அவர் தம்மை அறிமுகப்படுத்தவும் உதவிகளை நாடவும் திறக்கலாம்.

கருத்துக்கள உறுப்பினர்கள்:
இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு யாழ் கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் புதிய தலைப்புக்களைத் திறக்கவும், கருத்துக்களைப் பதியவும், திண்ணையில் உரையாடவும் அனுமதி உண்டு.

ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை தமிழில் பதிந்த புதிய உறுப்பினர்கள் “கருத்துக்கள உறுப்பினர்கள்” எனும் நிலைக்கு மாற்றப்படுவார்கள். எனினும் கருத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் இந்நிலைக்கு அங்கத்துவம் வழங்கப்படமாட்டாது. எழுதப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே “கருத்துக்கள உறுப்பினர்கள்” குழுமத்தில் சேர்த்துக்கொள்வது பற்றி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்படும். குறிப்பாகத் தமிழில் எழுதுகிறார்களா, ஏனைய கருத்துக்கள உறுப்பினர்களுடன் பண்போடும், நட்போடும் பழகுகின்றார்களா போன்ற விடயங்கள் முதன்மையாகக் கவனிக்கப்படும்.

 

ஆ) வடிவம்

1. எழுத்து

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் எழுதப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள் அனைத்தும் "சாதாரண அளவு" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • தலைப்புகளுக்கு மட்டும் "அளவு 2" இனைப் பயன்படுத்தலாம்.
  • வேறுபடுத்திக் காட்டுவதற்கு "மொத்த(bold) – சரிந்த(italic) – அடிக்கோடிட்ட(underline)" எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தலாம்.
  • தலைப்புக்களில் (Topic Title) வடிவமைப்புக்களை இணைக்க முடியாது என்பதால் தலைப்புக்கள் அனைத்தும் வடிவமைப்புகள் இன்றியே இணைக்கப்பட வேண்டும்.

2. நிறம்

  • வேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்கள் பயன்படுத்தப்படல் வேண்டும்.

3. படம்

  • இணைக்கப்படும் படங்களின் அளவு "அகலம்: 640px" க்கு உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.

 

இ) பதிவுகள்

1. கருத்து/விமர்சனம்
யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் கருத்துக்கள், பின்னூட்டங்கள் விமர்சனங்கள் சம்பந்தமான விதிகள்:

  • கருத்துக்கள், பின்னூட்டங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் சமூகப் பொறுப்புடனும் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான கருத்துக்கள் இயலுமானவரை தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு துணைபுரியும் நோக்கில் வைக்கப்படும் கருத்துக்களுக்கு இவ்விதியில் தளர்வுப்போக்கு காட்டப்படும்.
  • தனிநபர்களைத் தாக்குதல், சக கள உறுப்பினர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களையும் செயற்பாடுகளையும் விமர்சிப்பவர்கள் அவதூறுகளைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான முறையில் ஆதாரங்களை இயன்றவரை குறிப்பிட்டு விமர்சிக்கவேண்டும்.
  • நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களையும் (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்), சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், கலைஞர்களையும் (சினிமாத்துறை உள்ளடங்கலாக) ஒருமையில் விளித்தலும் அவதூறான சொற்களால் இகழ்தலும் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • பிரதேசவாதம். சாதீயம் என்பனவற்றை ஊக்குவிக்கும் கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • வன்முறைகளைத் தூண்டுதல், ஊக்குவித்தல் தொடர்பான சகல கருத்துக்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஆயுதங்களை தயாரித்தல், ஏவுகணை, இரசாயன ஆயுதம், உயிரியல் ஆயுதம் போன்ற பேரழிவு ஆயுதங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான சகல கருத்துக்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • இணையத்தினூடாக தனிப்பட்டவர்களின் பெறுமதியான தரவுகளையும், வங்கி அட்டைகள் போன்றவற்றையும் திருடும் வழிமுறைகள் தொடர்பான சகல கருத்துக்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். மாறாக இணையப் பாதுகாப்பு பற்றிய அறிவூட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படும்.

2. தலைப்பு
யாழ் கருத்துக்களத்தில் ஆரம்பிக்கப்படும் தலைப்புகள் பற்றிய பொதுவான விதிகள்:

  • ஆரம்பிக்கப்படும் திரிகளின் தலைப்புகள் அனைத்தும் தமிழில் எழுதப்படல் வேண்டும்.
  • தலைப்புகள் சுருக்கமானதாகவும், பொருள்பொதிந்ததாகவும் எழுதப்படல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தைப் பார்வையிடும் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் தலைப்புகள் அமைதல் ஆகாது.
  • வன்முறைகளையும், பாலியல் உணர்வுகளையும் தூண்டும் வகையிலான தலைப்புகள் இடப்படல் கூடாது.
  • பின்வரும் முறையில் தலைப்புகள் எழுதப்படல் ஆகாது:
    • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
    • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
    • குறியீடுகள்: (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , .)

3. மொழி

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும். தமிழில் எழுதப் பின்வருவனவற்றைப் பயன்படுத்தலாம்.
    • விண்டோஸ் இயங்குதளத்தில் அமைந்த கணினி:
      • இகலப்பை. காணொளி விளக்கம்:
      • Keyman - தமிழ் சுரதா பாமுனி. கட்டணமற்றது. விண்டோஸ் 8 எனில் அதில் உள்ள Short-Cut வசதியைப் பாவித்து தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றிக் கொள்ள முடியும்
      • Keyman Tavultesoft * கட்டணம் செலுத்தவேண்டும்.
    • iOS இயங்குதளத்தில் அமைந்த iPad வரைபட்டிகை (tablet), iPhone திறன்பேசி (smartphone):
      • தமிங்கில விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Anjal
      • தமிழ்99 விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Tamil 99
    • Android இயங்குதளத்தில் அமைந்த வரைபட்டிகை (tablet), திறன்பேசி (smartphone):
  • கொச்சைத் தமிழிலும் தமிங்கிலத்திலும் எழுதுவது இயன்றவரையில் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • பிறமொழி ஆக்கங்களாக இருப்பின்:
    • மிகவும் முக்கியமானதும் நிகழ்காலத்துக்குரியதுமான ஆங்கில அல்லது பிறமொழிச் செய்தியினது அல்லது அரசியல் ஆய்வுக்கட்டுரையினது உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை சுருக்கமாகத் தமிழில் தந்துவிட்டு நேரடி மூலத்துடன் முழுமையாக மூலமொழியில் இணைத்தல் வேண்டும்.
    • உள்ளடக்கத்தை மாற்றாது இயலுமானவரை தமிழில் மொழிபெயர்த்து இணைத்தல் வேண்டும்.
    • பிறமொழிப் பகுதியான யாழ் திரைகடலோடிப் பிரிவில் மட்டும் பதியப்படல் வேண்டும்.

4. உரையாடல்

  • "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • துரோகி, பச்சோந்தி, பன்னாடை, நாதாரி, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சோனி, காக்கா, தொப்பி பிரட்டி, பயங்கரவாதி, காட்டுமிராண்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • க ற் ப ழி ப் பு (பாலியல் வல்லுறவு/வன்புணர்வு), விபச்சாரி (பாலியல் தொழிலாளி), விபச்சாரம் (பாலியல் தொழில்), அலி (திருநங்கை) போன்ற பிற்போக்கான பதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். பதிலாக அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ள பதங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • சாதிப்பெயர்களாலும், இழிவான வசைச் சொற்களாலும் சுட்டுதல், திட்டுதல், தூற்றுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகளைத் தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.

5. அரட்டை

  • யாழ் கருத்துக்களம் அரட்டைக்களம் அல்ல - எனவே, அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஒரு தலைப்பில் அதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள், அரட்டைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அதே போன்று வேறு ஒரு திரியில் எழுதியவற்றை மீண்டும் இன்னொரு திரியில் அவசியமின்றிப் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியிலும் யாழ் உறவுகள் பகுதியில் உள்ள யாழ் நாற்சந்தி பிரிவிலும், திண்ணையிலும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது.
  • எனினும் மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் புதிய ஆக்கங்களை இணைப்போர், அதில் அரட்டையடிப்பதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பின் அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களம் உறுப்பினர்கள் அல்லாத பார்வையாளர்களுக்கும் பொதுவானது என்பதால் கள உறுப்பினர்களுக்கு மட்டுமான திண்ணையில் அரட்டை அடிப்பது போன்று கருத்துக்களத்தில் அரட்டை அடிப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
  • தனியே முகக்குறிகளால் மட்டும் கருத்துக்கள் பதிவதைத் தவிர்த்தல் வேண்டும். எனினும் திண்ணையில் மாத்திரம் இவ்விதிமுறை தளர்த்தப்படுகின்றது.

6. செய்திகள்/ஆக்கங்கள்/பதிவுகள்
யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் செய்திகள், ஆக்கங்கள், பிற பதிவுகள் சம்பந்தமான பொதுவான விதிகள்:

  • செய்திகள், ஆக்கங்கள், பிற பதிவுகள் அவற்றுக்குரிய பிரிவுகளில் இணைக்கப்படல் வேண்டும்.
  • காப்புரிமை காரணமாகப் பகிர்வதற்குத் தடை உள்ளவற்றை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • செய்திகள், ஆக்கங்கள், பதிவுகள் முழுமையாக இணைக்கப்படல் வேண்டும். விளம்பரக் கட்டணம் செலுத்திப் பதியப்படும் செய்திகளுக்கும், ஆக்கங்களுக்கும் இவ்விதி தளர்த்தப்படுகின்றது.
  • இணைக்கப்படுபவை யாழ் கள உறுப்பினர்களின் சுயமான பதிவு இல்லையாயின் மூலம் கண்டிப்பாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
  • சிறுவர் துஷ்பிரயோகம், பெண்ணடக்குமுறை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை ஊக்குவிக்கும் பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • அப்பட்டமாகப் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வக்கிரமான ஆக்கங்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும். தீவிர நம்பிக்கையை ஊக்கப்படுத்தாமல் பொழுதுபோக்காக அமையும் பதிவுகளுக்கு இவ்விதி தளர்த்தப்படுகின்றது.
  • மானுடம், மக்கள் நலன், நன்நெறி, பண்பாடு, சீர்திருத்தங்கள், தனிமனித ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்து மக்களை நெறிப்படுத்தும் மெய்யியல்/இறையியல் சம்பந்தமான பதிவுகள் ஊக்குவிக்கப்படுகின்றது. எனினும் மதப் பிரச்சாரம் செய்யும் வகையிலான பதிவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.
  • யாழ் கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகளை நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு முறை (Report) மூலம் அறியத்தருவது விரும்பப்படுகின்றது. இது கருத்துக்களத்தின் தரத்தினைப் பேண உதவும்.

யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் செய்திகள் சம்பந்தமான விதிகள்:

  • செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும்.
  • யாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • செய்திகளின் உண்மைத்தன்மை முடிந்தளவு உறுதிப்படுத்தப்பட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.
  • செய்திகளை இணைக்கும்போது அதுதொடர்பான தலைப்பொன்று ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அத்தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.
  • செய்திகள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று தேடற்கருவி மூலம் பார்த்துவிட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.
  • பார்வையாளர்களைக் கவரும் வகையில் இணைக்கப்படும் செய்திகளின் தலைப்பை மாற்றுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஆர்வத்தைத் தூண்டும் வினோதச் செய்திகள் செய்தித் திரட்டி பிரிவில் இணைக்கப்படல் வேண்டும். எனினும் வக்கிரமான செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • யாழ் கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களைப் புதிய செய்திகளாக செய்திப் பிரிவுகளில் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.

யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் ஆக்கங்கள் சம்பந்தமான விதிகள்:

  • யாழ் கள உறுப்பினர்கள் சுயமான ஆக்கங்களை பதிவது விரும்பப்படுகின்றது.
  • யாழ் கருத்துக்கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்கள், படைப்புக்களிற்கு சக கள உறுப்பினர்கள் பச்சைப்புள்ளிகளை வழங்கி ஆதரவு கொடுத்து ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
  • யாழ் கருத்துக்கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது.
  • பிற தளங்களில் இருந்து இணைக்கப்படும் ஆக்கங்களின் உள்ளடக்கம் யாழ் களவிதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

7. சமூகவலைத்தள இணைப்புக்கள்
சமூகவலைத் தளங்களில் (முகநூல், டுவிட்டர் போன்றவை) இருந்து இணைக்கப்படும் பதிவுகள் தொடர்பான விதிகள்:

  • சமூகவலைத் தளத்தில் இருந்து இணைக்கப்படும் பதிவுகள் அவ்வலைத் தளங்களின் உறுப்புரிமை இல்லாதவர்களாலும் பார்க்கக் கூடியதாக இருத்தல்வேண்டும்.
  • இணைக்கப்படும் பதிவுகளை உறுதிப்படுத்த அப்பதிவுகளுக்கு நேரடி இணைப்புக் கொடுக்கப்படல் வேண்டும்.
  • சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
  • தனிப்பட்டவர்களின் சமூகவலை தளங்களின் நிலைத் தகவல்களை அவர்களின் அனுமதி இல்லாமல் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும். இத்தகைய அனுமதிகளை சமூகவலைத் தளங்களினூடாகப் முன்கூட்டியே பெற்று வைத்திருப்பது விரும்பத்தக்கது.
  • தனிப்பட்டவர்களின் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், விழாக்களின் போது எடுக்கப்படும் ஒளிப்பதிவுகள், அவர்களது தனிப்பட்ட விபரங்கள் என்பனவற்றை இணைப்பதும் பகிர்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மக்கள் போராட்டம் மற்றும் கவனியீர்ப்பு போன்ற விடயங்களையும் நிகழ்வுகளையும் யாழ் இணையத்தின் பொதுவான கள விதிகளுக்கு ஏற்ப இணைப்பது அனுமதிக்கப்படுகின்றது. எ.கா: உதாரணமாக மாணவர் போராட்டங்கள், நினைவு தின ஒன்றுகூடல்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள், மாவீரர்களின் முக்கிய நிகழ்வுகள் போன்றன.
  • சமூக வலைத்தளங்களில் இணைக்கப்படும் ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது. இவ்வாறு இணைக்கப்படுபவை யாழ் களவிதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். பார்க்க: விதி எண் இ) 8.
  • மத வழிபாட்டுக்குரிய தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றை இணைப்பது அனுமதிக்கப்படுகின்றது. எ.கா: கோயில்/தேவாலயத் திருவிழாக்களின் புகைப்படங்கள், காணொளிகள், மதங்களின் நன்நெறிக் குறிப்புகள் போன்றவை.
  • யாழ் கள உறுப்பினர் ஒருவர் தனது சமூகவலைத் தளத்தில் பகிர்வதை யாழ் கருத்துக்களத்திலும் பகிர விரும்பின் அவை யாழ் களவிதிகளுக்கு உட்பட்டதாக இருப்பின் அனுமதிக்கப்படும். எனினும் இவ்வாறு பகிர்வதன் மூலம் ஏற்படும் விளைவுகளுக்கு யாழ் களம் பொறுப்பேற்காது.
  • யாழ் கருத்துக்களத்தில் உள்ள ஆக்கங்களையும் கருத்துக்களையும் முகநூல், டுவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் இணைத்து யாழ் களத்தின் வளர்ச்சிக்கு உதவுவது விரும்பப்படுகின்றது. எனினும் நாற்சந்திப் பகுதி கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கக்கூடியவாறு உள்ளதால் இப்பகுதியில் உள்ள பதிவுகளை சமூகவலைத் தளங்களில் பகிர்வது கூடாது.

8. படங்கள்/காணொளிகள்
யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் கருத்துக்களோடும் ஆக்கங்களோடும் இணைக்கப்படும் படங்கள்/காணொளிகள் தொடர்பான விதிகள்:

  • காப்புரிமை காரணமாக பகிர்வதற்குத் தடை உள்ள படங்கள்/காணொளிகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட அடையாளங்களைக் காட்டும் படங்களையும், காணொளிகளையும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களினதும் நண்பர்களினதும் படங்களையும், காணொளிகளையும் இணைப்பதைக் இயலுமானவரை தவிர்த்தல் வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் சக கள உறுப்பினர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் என்பனவற்றை அவர்களின் எழுத்துமூல முன் அனுமதி இன்றி பிரசுரித்தல் ஆகாது.
  • கள உறுப்பினர்களுக்குச் சொந்தமற்ற படங்கள்/காணொளிகள் இணைக்கப்படும்போது அவற்றைப் பகிர்வதற்கு அனுமதி உள்ளதா என்று சரிபார்க்கப்படல் வேண்டும். இவ்விதி அரசியல், சினிமா மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் படங்கள், காணொளிகளுக்கு தளர்த்தப்படுகின்றது.
  • குழந்தைகள், சிறுவர்களது படங்கள்/காணொளிகள் இணைப்பதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்று சரி பார்க்கவேண்டும்.
  • அப்பட்டமாக பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள்/காணொளிகள் இணைக்கப்படல் ஆகாது.
  • வக்கிரங்களையும், வன்முறையையும் தூண்டும் படங்கள்/காணொளிகள் இணைக்கப்படல் ஆகாது.
  • சடலங்களிலும் காயமடைந்து இருக்கும் உடல்களிலும் பாலுறுப்புகள் மறைக்கப்பட்டே படங்கள்/காணொளிகள் இணைக்கப்படல் வேண்டும். இவ்விதி பிற தளங்களில் இருந்து எடுத்து ஒட்டப்படும் படங்களுக்கும், காணொளிகளுக்கும் பொருந்தும்.
  • சிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணப் படங்களும், காணொளிகளும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • செய்திகளோடு தொடர்புடையதாக இணைக்கப்படும் படங்களில் சடலங்கள், இரத்தம் போன்றன இடம்பெற்றிருந்தால் - தலைப்பில் அது பின்வருமாறு குறிப்பிடப்படல் வேண்டும்:
    • எ.கா.: [எச்சரிக்கை!] சுனாமியும் அதன் வடுக்களும்
  • படங்களினதும் காணொளிகளினதும் மூலம் குறிப்பிடப்படல் வேண்டும். (பார்க்க: மூலம்)
  • காணொளிச் செய்திகள் இணைக்கப்படும்போது அச்செய்தியின் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை இயன்றவரை சுருக்கமாகக் குறிப்பிடுதல் வேண்டும்.

9. மூலம்

  • யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகள், பதிவுகள், ஆக்கங்கள் வேறு இடத்திலிருந்து பெறப்பட்டதாயின் மூலம் கண்டிப்பாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
    • அது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும்.
    • அது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்.
    • நேரடி மூல இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.
  • மூலம் பற்றிய விபரங்கள் தெரியாதவிடத்து, அது இணைப்பவரது சொந்த ஆக்கம் இல்லை என்று குறிப்பிடல் வேண்டும்.
  • அதேபோல், யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்களை வேறெங்கும் (வேறு ஊடகங்களில்) பயன்படுத்தும் போது:
    • மூலம்: யாழ் இணையம் என்று குறிப்பிடப்பட வேண்டும்.
    • ஆக்கத்தை எழுதிய கருத்துக்கள உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.
    • ஆக்கத்துக்கான நேரடி இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.

10. பொறுப்பு

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு யாழ் இணையம் பொறுப்பேற்காது.
  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு அவற்றை எழுதும் உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • கள உறுப்பினர்கள் எழுதும் கருத்துக்கு வருகின்ற எதிர்வினைகளுக்கும், விளைவுகளுக்கும் அவரவரே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • யாழ் களத்தில் கள உறுப்பினர்களால் அறியத்தரப்படும் மற்றும் யாழில் விளம்பரம் செய்யப்படும் அமைப்புகள், நிதி நிறுவனங்கள் / மனித நேய அமைப்புகள் என்பனவற்றுடனான கள உறுப்பினர்களின் தனிப்பட்ட தொடர்புகளுக்கும் அவர்களுக்கிடையான கள உறுப்பினர்களின் தொடர்பாடலின் விளைவுகளுக்கும் அவரவரே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.

 

ஈ) திருத்தங்கள்

1. கருத்துகளை திருத்துதல்

  • கள உறுப்பினர்கள் தமது பதிவில் கருத்துகளில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மற்றும் தவறான மூலம் என்பனவற்றை மட்டுமே திருத்தலாம்.
  • சக கள உறுப்பினர்கள் பதில் கருத்துக்களை வைத்தபின்னர் தாம் எழுதிய கருத்துகளை நீக்குவதும் அல்லது பிரதான கருத்தில் மாற்றத்தைச் செய்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கள உறுப்பினர்கள் நிர்வாகத்தின் அனுமதி இன்றி திரியில் எழுதியவற்றை முழுமையாகவோ, பகுதியாகவோ நீக்குதல் கூடாது.
  • கள உறுப்பினர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்றை பூட்ட வேண்டுமாயின் மட்டுறுத்தினர்களுக்கு தனிமடலில் அறியத் தருதல் வேண்டும். மட்டுறுத்தினர்களின் இறுதி முடிவே செயல்படுத்தப்படும்.

2. மட்டுறுத்தப்பட்ட கருத்துகள்:

  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மட்டுறுத்தப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக திரிகளில் கருத்துக்கள் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஏதாவது ஒரு நியாயமான காரணத்திற்காக ஒருவரின் சுயபடைப்பு திருத்தப்படவோ அல்லது சில பகுதிகள் நீக்கப்படவோ வேண்டி ஏற்படின், அப் படைப்பை எழுதியவரிடமே அதற்கான பொறுப்பு வழங்கப்படும். அவ்வாறு படைப்பாளி அதனை திருத்தும் வரைக்கும் அப்படைப்பு நிர்வாகத்தினரைத் தவிர வேறு எவரும் பார்க்க முடியாத பகுதிக்கு நகர்த்தப்பட்டு, படைப்பாளி திருத்தம் செய்து அனுப்பிய பின்னர் மூன்று நாட்களுக்குள் மீண்டும் வழமையான இடத்தில் இணைக்கப்படும்.
  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் மட்டுறுத்தினர்களிடம் முறைப்பாட்டு முறை மூலமாக அல்லது தனி மடலில் விளக்கம் கோரலாம்.
  • மேற்கூறிய விடயத்துக்கு மட்டுறுத்தினர்கள் பொதுவாக 12 இல் இருந்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிப்பர். அவ்வாறு பதில் அளிக்கவில்லையாயின் அதனையும் குறிப்பிட்டு நாற்சந்திப் பகுதியில் மட்டும் தனித் திரி திறந்து மட்டுறுத்தியதற்கான காரணங்களை தெளிவுபடுத்தக் கேட்கலாம்.

 

உ) திண்ணை
யாழ் கள உறுப்பினர்கள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணைப் பகுதி தொடர்பான விதிகள்:

  • திண்ணை உரையாடல்கள் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • திண்ணை உரையாடல்கள் கண்ணியமான முறையிலும் நட்பு ரீதியிலும் இருத்தல் வேண்டும்.
  • தனிநபர் தாக்குதல், சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் உரையாடுதல், நீ, வா, போ என ஒருமையில் சக உறுப்பினரை விளித்தல், அநாகரீகமாக உரையாடுதல், இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்தல் போன்றன கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • திண்ணையில் உரையாடப்பட்டவற்றை யாழ் களத்திற்கு வெளியே கொண்டு செல்வது, பரப்புவது, பிரதியிடுவது போன்றன முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • திண்ணையில் உரையாடப்பட்டவற்றை களத்தில் உள்ள திரிகளில் ஒட்டுதலும், தனியாகத் திரி திறந்து இடுதலும் ஆகாது.
  • திண்ணையில் தமது அடையாளங்களை (பெயர் / முகவரி / பால் / தொலைபேசி இலக்கம் போன்றவற்றை) பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் உரையாடும் சக கள உறுப்பினரின் அடையாளங்களை கோருவதும் (பெயர் / பால் / முகவரி / தொலைபேசி இலக்கம் போன்றவற்றை) கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஒரு திரியில் எழுதிய விடயத்தை அப்படியே கொண்டு வந்து திண்ணையில் இடுவது தவிர்க்கப்படல் வேண்டும். இதற்குப் பதிலாக எழுதிய விடயம் உள்ள திரியின் இணைப்பைக் குறிப்பிடலாம்.
  • யாழ் கருத்துக்களத்தில் இருந்து நீக்கப்பட்ட எந்தக் கருத்தையும் / பதிவையும் கண்டிப்பாகத் திண்ணையில் இடுதல் கூடாது.
  • நிர்வாகத்தால் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக நிர்வாகத்தினரைத் தவிர ஏனையோருடன் திண்ணையில் வைத்து உரையாடுவதும் கலந்தாலோசிப்பதும் தவிர்க்கப்படல் வேண்டும். பார்க்க: விதி எண் ஈ) 2.
  • கள உறுப்பினர் ஒருவர் திண்ணை விதிகளை மீறியது அவதானிக்கப்பட்டால் அல்லது நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டால் பின்வருமாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும்.
    • முதலாவது மீறல்: திண்ணை தொடர்பான விதிகளை அறிவுறுத்தும்/நினைவூட்டும் வகையில் நிர்வாகத்தால் குறிப்பிட்ட கள உறுப்பினருக்கு தனிமடல் மூலம் எச்சரிக்கை வழங்கப்படும் .
    • இரண்டாவது மீறல்: குறிப்பிட்ட கள உறுப்பினர் திண்ணையில் ஒரு மாதம் தடை செய்யப்படுவார்.
    • மூன்றாவது மீறல்: குறிப்பிட்ட கள உறுப்பினர் திண்ணையில் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.

 

ஊ) நடவடிக்கைகள்

கள உறுப்பினர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் சந்தர்ப்பங்களும் முறைகளும் பற்றிய விதிகள்:

  • மீறப்படும் கள விதியின் அடிப்படையில் ஒருவருக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். அவரது கருத்துக்கள நடத்தையில் முன்னேற்றங்கள் இருக்குமிடத்து எச்சரிக்கைப் புள்ளிகள் நீக்கப்படும்.
  • கள உறுப்பினர் ஒருவர் எட்டுக்கு மேற்பட்ட (8+) எச்சரிக்கைப் புள்ளிகள் பெற்றால் அவர் உடனடியாகத் தானியங்கி மூலமாகவோ அல்லது மட்டுறுத்தினர் மூலமாகவோ நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஐந்திற்கு மேற்பட்ட (5+) எச்சரிக்கைப் புள்ளிகள் பெற்றால் அன்றிலிருந்து ஒரு மாதத் தடை வழங்கப்படும்.
  • சக கள உறவுகளை மிரட்டினாலோ, ஆபாசமாக தனிமடல் அனுப்பினாலோ அல்லது யாழின் விதிகளை அப்பட்டமாக மீறினாலோ உடனடியாக குறிப்பிட்ட உறுப்பினர் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.
  • சக கள உறுப்பினர்களை யாழுக்கு எதிராக இயங்குமாறு கருத்துக்களத்தில் நேரடியாகவோ, தனிமடல் மூலமாகவோ கோரினாலோ அல்லது பிற சமூகவலைத் தளங்கள், தொடர்பாடல் சேவைகள் மூலம் கோரினாலோ உடனடியாகக் குறிப்பிட்ட உறுப்பினர் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.
  • குடும்ப உறவுகளை இழுத்து இழிவாகக் கருத்து எழுதுகின்றவருக்கு அன்றிலிருந்து உடனடியாக ஒரு மாதத் தடை வழங்கப்படும். மீண்டும் ஒரு முறை மீறினால் நிரந்தரமான தடை வழங்கப்படும்.
  • கள உறுப்பினர் ஒருவர் வசைச் சொற்கள் (தூஷண வார்த்தைகள்), இழிவான கெட்ட வார்த்தைகள், பாலியல் ரீதியிலான வசைகள் போன்றவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எழுதினால் உடனடியாக ஒரு மாதம் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டு வரப்படுவார். இரண்டாவது முறை மீறினால் ஒரு மாதத் தடையும், மூன்றாவது முறை மீறினால் நிரந்தரமான தடையும் வழங்கப்படும்.
  • வெறுமனே சீண்டுவதற்காக தொடர்ந்து எழுதுகின்றவர்கள் மீதும், ஒருவர் ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை வைக்கும்போது பதிலுக்கு களவிதிகளை மீறும் கருத்துக்களை வைப்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் எச்சரிக்கைப் புள்ளிகளும், பின் மட்டுறுத்துனரின் பார்வைக்குள் உட்படுத்தப்படுவதும், அதன் பின் தடைகளும் வழங்கப்படும். இவற்றில் எத்தகைய நடவடிக்கை முதலில் எடுக்கப்படும் என்பது மட்டுறுத்துனரின் முடிவுக்குட்பட்டது.
  • நிர்வாகத்தின் வேண்டுகோள்களையும், அறிவுறுத்தல்களையும் தொடர்ச்சியாக மீறுபவர்கள் மீதும் ஒரு மாதத் தடையும், மீண்டும் ஒரு முறை மீறுபவர்களுக்கு நிரந்தரமான தடையும் வழங்கப்படும்.
  • கள உறுப்பினர் ஒருவர் தனது கருத்துகளை நிர்வாகத்தின் அனுமதி இன்றி நீக்கினால் அல்லது நிர்வாகத்தினரால் அனுப்பப்பட்ட தனிமடல் அல்லது நடவடிக்கை சார்ந்த விடயங்களைப் பகிரங்கப்படுத்தினால் அவர் தடை செய்வதற்குரிய சூழ்நிலைகளை தோற்றுவித்தவராகக் கருதப்பட்டு தடை செய்யப்படுவார்.
  • பிறரின் ஆக்கங்களை தன் சொந்த ஆக்கமாக பிரசுரித்தால் முதலில் எச்சரிக்கை வழங்கப்படும். மீண்டும் அதே தவறு நிகழுமாயின் அவர் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.

எச்சரிக்கைப் புள்ளிகள் நீக்குவது தொடர்பான நடைமுறை:

  • எச்சரிக்கைப் புள்ளிகள் எடுத்தவர்கள் அடுத்த மூன்று மாதத்திற்கு எதுவித எச்சரிக்கைப் புள்ளிகளும் எடுக்காதவிடத்து மூன்றாவது மாதத்தின் பின்னரிலிருந்து ஒவ்வொரு எச்சரிக்கைப் புள்ளி குறைக்கப்படும்.
  • ஆறு மாதத்திற்குள் எதுவித எச்சரிக்கைப் புள்ளிகளும் எடுக்காதவிடத்து அனைத்து எச்சரிக்கைப் புள்ளிகளும் நீக்கப்படும். இந்நடைமுறை ஒவ்வொரு உறுப்பினரதும் நடத்தைகளில் உள்ள முன்னேற்றங்கள் நிர்வாகத்தால் ஆராயப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும்.
  • நிரந்தரத் தடை தவிர்ந்த ஏனைய நடவடிக்கையை ஒருவர் மீது எடுக்கப்படும் போது அவருக்கு ஆதரவாகத் திரி திறக்கப்படுவது அனுமதிக்கப்படமாட்டாது.
  • இதேபோன்று ஒருவர் நிர்வாகத்தின் நடவடிக்கை மீது கோபம் கொண்டு நிரந்தரமாக விலகுகின்றேன் என விலகினால், அவரை மீண்டும் யாழ் கருத்துக்களத்துக்கு வரச் சொல்லி திறக்கப்படும் திரிகளும் அனுமதிக்கப்படமாட்டாது.

மேற்கூறிய அனைத்து விதிகளின் எல்லைகள் எவை என்பது மட்டுறுத்தினரின் முடிவாகவே இருக்கும். களவிதிகளை மீறும் கருத்தொன்றை எப்படித் தணிக்கை செய்வது (திருத்துவது/ஒரு பகுதியை நீக்கி *** இடுவது/முற்றாக நீக்குவது) என்பதனையும் மட்டுறுத்தினரே தீர்மானிப்பர். மட்டுறுத்தினரின் முடிவே இறுதியானது ஆகும். மேலும் களவிதிகளை மீறும் கள உறுப்பினர் ஒருவர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதனை நிர்வாகத்தினர் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பர்.

நாமார்க்கும் குடியல்லோம்

நன்றி,
யாழ் இணையம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.