Jump to content

பொட்டம்மானை நோக்கி வந்த ஆபத்து (அவலங்களின் அத்தியாயங்கள்- 86) – நிராஜ் டேவிட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலைஞர்களுடன் இயங்கியவர்களை ஏன் கொன்றீர்கள் என இன்றும் கேள்வி கேட்கும் ஆட்கள் இத்தளத்தில் உள்ளார்கள் யுவரோனர்.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலைஞர்களுடன் இயங்கியவர்களை ஏன் கொன்றீர்கள் என இன்றும் கேள்வி கேட்கும் ஆட்கள் இத்தளத்தில் உள்ளார்கள் யுவரோனர்.

  என்ன செய்வது kalyani அவ்வளவுக்கு அவர்களின் படிச்சபடிப்பு மேற்கொண்டு சிந்திக்கவிடாது .

 

 

புலிகளின் ‘பேரூட் தளம்” மீது தாக்குதல்- (அவலங்களின் அத்தியாயங்கள்- 34): நிராஜ் டேவிட்
  • by admin
  • November 19, 2012
images-21.jpgமட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையின் மவுன்டன் டிவிசன்( Mountain Division) படைப்பிரிவு பாரிய படை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்.

குறிப்பிட்ட அந்தப் படை நடவடிக்கைக்கு “ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்” ( Operation Blooming Tulip) என்று இந்திய இராணுவம் பெயரிட்டிருந்தது.

அப்பொழுது மட்டக்களப்பு தரவைக் காடுகளின் மத்தியில் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் முக்கிய தளத்தை ஒன்றைத் தாக்கி அழிப்பதே அந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்ததாக இந்தியப்படையின் மட்டக்களப்புத் தலைமை புதுடில்லிக்கு அறிவித்திருந்தது.

புலிகளின் அந்த முக்கிய தளத்தின் பெயர் பேரூட் பேஸ் என்று இந்தியப் படையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள், பிராந்தியத் தலைமை, பயிற்சி முகாம்கள், நடவடிக்கைத் தலைமையகம், தொலைத்தொடர்பு மையங்கள் என்பன இந்த “பேரூட்” பேசிலேயே அமைந்திருப்பதாகவே இந்தியப்படையினர் நம்பியிருந்தார்கள்.

பேரூட் தளம்

புலிகளின் “பேரூட் தளம்” மீதான இந்தியப்படையினரின் தாக்குதல் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், மட்டக்களப்பில் அந்தக் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்ற “பேரூட் தளம்” அல்லது “பேரூட் பேஸ் ( Beirut Base)) பற்றிப் பார்ப்பது அவசியம்.

மட்டக்களப்பில் அந்தக் காலத்தில் இருந்த புலிகளின் “பேரூட் தளம்” மக்கள் மத்தியில் மாத்திரமல்ல சிறிலங்காப் படைகள் மத்தியிலும், மற்றயை தமிழ் இயக்கங்கள் மத்தியிலும் இந்தியப் படையினர் மத்தியிலும் மிகவும் பிரபல்யமாகவே இருந்தது.

மட்டக்களப்பில் இருந்த புலிகளின் மிகப் பெரிய தளமே “பேரூட் தளம்” என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அந்த பேரூட் தளத்தில் பலவகையான கனரக ஆயுதங்கள், பயிற்சி முகாம்கள் நிலக்கீழ் சுரங்கங்கள்” பாரிய ஆயுதக் களஞ்சியங்கள் எல்லாம் அமைந்திருப்பதாகவே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். மட்டக்களப்பின் தரவை மற்றும் குடும்பிமலைப் பிரதேசித்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே புலிகளின் இந்த பாரிய பேரூட் தளம் அமைந்திருப்பதாகவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பேச்சடிபட்டுக்கொண்டிருந்தது.

ஆனால் உண்மையிலேயே “பேரூட் பேஸ் ( Beirut Base) என்று புலிகளால் குறிப்பிடப்பட்ட அந்தத் தளம் தரவையிலோ அல்லது குடும்பிமலைப் பிரதேசத்திலோ அமைந்திருக்கவில்லை.

மட்டக்களப்பின் படுவான் கரைப்பிரதேசத்தில் உள்ள கொக்கட்டிச் சோலையில் உள்ள காடுகளின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு முகாமையே புலிகள் “பேரூட் பேஸ்” என்று சங்கேத பாஷையில் அழைத்துவந்தார்கள்.

மக்கள் பேசிக்கொண்டது போன்று அல்லது மற்றய தமிழ் இயக்கங்கள் நம்பிக்கொண்டிருந்தது போன்று, அல்லது சிறிலங்காப் படையினர் அச்சப்பட்டுகொண்டிருந்தது போன்று புலிகளின் அந்த பேரூட் முகாமில் கனரக ஆயுதங்களோ அல்லது நிலக்கீழ் சுரங்கங்களோ இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்னும் குறிப்பாகக் குறிப்பிடுவதானால் அந்த பேரூட் தளத்திலும் அதனை அண்டிய கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலும் 48 போராளிகள் மாத்திரமே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.

பின்நாட்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத்தளபதியாக இருந்த தளபதி ரீகன் தலைமையில் பின்நாட்களில் பிரபல்யமான தளபதிகளான தளபதி ராம், தளபதி ரமேஷ்,தளபதி ரமணன் போன்றோர் அந்தக் காலகட்டத்தில் இந்த பேரூட் பேசிலேயே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் பற்றிய மிகைப்படுத்தல்கள் மக்கள் மத்தியில் மிக மிக வேகமாகப் பரவிக்கொண்டிருந்தன் ஒரு அங்கமாக இந்த பேரூட் பேஸ் பற்றிய மாயை மக்கள் மத்தியில் பெரிய அளவில் உருவாகி அடிக்கடி அச்சத்துடனும், பெருமையுடனும் பேசப்படுகின்ற ஒரு விடயமாக மாறியிருந்தது.

லெபனானின் தலைநகரம்

அத்தோடு அந்தக் காலகட்டத்தில் லெபனானின் தலைநகரான பேரூட் என்ற பெயரானது போராடுகின்ற இனக் குழுமங்களினால் ஆச்சரியமாக நோக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற ஒரு பெயராகவே இருந்தது.

அந்த நேரத்தில் தமிழ் இயக்க உறுப்பினர்களில் பல முக்கியஸ்தர்கள் லெபனானில் இராணுவப் பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்ததால், லெபனானின் தலைநகரான பேரூட்டின் பெயர் போராளிகள் மத்தியில் அதிகம் பிரபல்யமாகியிருந்தது.

இவை அனைத்தையும்விட 1983ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் லெபனான் தலைநகரில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தளம் மீது இஸ்லாமிய போராளிகள் மேற்கொண்டிருந்த ஒரு பாரிய தற்கொலைத்தாக்குதலும், அந்த தாக்குதல் பற்றிய செய்தியும் தமிழ்ஈழப் போராளிகள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாலும் பேரூட் என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபல்யமாகியிருந்தது.

1983 ஒக்டோபர் மாதம் 23ம் திகதி லெபனான் தலைநகரான பெரூட்டில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படையினரின் தளம் மீது இஸ்லாமிய ஜிகாத் போராளிகள் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.

அதில் அமெரிக்காவின் 220 சிறப்பு அதிரடிப்படையினர், உட்பட 299 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் – குறிப்பாகப் போராடும் இனக்குழுமங்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகப் பேசப்பட்ட தாக்குதல் அது.

இரண்டாம் உலகப் போருக்கு அடுத்ததாக அமெரிக்க மரைன் பிரிவுக்கு மிகப் பெரிய இழப்பினை ஏற்படுத்திய தாக்குதல் இடம்பெற்ற பிரதேசம் என்பதால் மக்கள் மத்தியில் பேரூட் என்ற பெயர் மிகவும் பிரபல்யமாகியிருந்தது.

குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் இந்த பேரூட் என்ற பெயர் அதிக மரியாதையுடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயராகவே இருந்தது. ஆக்கிரமிப்பாளருக்கு அச்சத்தையும், போராடும் இனத்திற்கு விடுதலை உணர்வையும் ஏற்படுத்தும் ஒரு பெயராகவே இந்த பேரூட் என்ற பெயர் அந்த நேரத்தில் உலகில் வலம் வந்துகொண்டிருந்தது.

(புளொட் அமைப்பு இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது தளத்தின் ஒரு முகாமிற்கு பேரூட் முகாம் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேபோன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்குப் பெயர்போன ஒரு விடுதிக்கு பேரூட் விடுதி என்று பெயரிட்டிருந்தார்கள். பேரூட் என்ற பெயர் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும் போராளிகள் மத்தியிலும் எந்த அளவிற்குப் பிரபல்யமாக இருந்தது என்பதற்கு இவைகள் சில உதாரணங்கள்)

சரி. குறிப்பாக மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகளின் இந்த முகாம் அல்லது தளத்திற்கு பேரூட் பேஸ் என்று எவ்வாறு பெயர் வந்தது?

இதற்கான காரணம் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பல ஊகங்கள் இருக்கின்றன.

தொலைத்தொடர்புக் கருவி

அந்தக் காலகட்டத்தில் பிரதேசவாரியாக விடுதலைப் புலிகள் தமது தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்திய சக்திவாய்ந்த பிரதான தொலைத்தொடர்பு கருவிகளை மையப்படுத்தி சில குறியீட்டுகளைப் பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தொடர்பாடலை மையப்படுத்தி அவர் சார்ந்த தொடர்பாடல் பிரதேசத்தை 1-4 அதாவது ஒவன்-போர் ( One-Four) பேஸ் என்று அழைப்பார்கள்.

புலிகள் தலைவர் இந்தியாவில் தங்கியிருந்த பொழுது இந்தியாவில் இருந்த வன்-போர் தளம் பின்னர் அவர் வன்னியில் அலம்பில் காடுகளில் தங்கியிருந்த பொழுது அங்கு செயற்பட்டது இந்தக் காரணத்தினால்தான்.

இதேபோன்று யாழ்பாணத்தை 2-2 டு-டு ( Two-Two) பேஸ் என்றும் வடமாராட்சியை 2-3 டு-திறீ ( Two-Three) பேஸ் என்றும் அழைப்பார்கள்.

இவை அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் புலிகளின் பிரதான தொலைத்தொடர்பு கருவிகளை அடிப்படையாக வைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டன. ஒரு பெரிய தொலைத் தொடர்பு கருவி. ஏதாவது மரமொன்றில் அதன் அன்டனாக்களை உயரத்தில் கட்டிவிட்டால் இலங்கை முழுவதும் மாத்திரமல்ல, இந்தியாவில் உள்ள புலிகளைக் கூட இதனூடாக இலகுவாகத் தொடர்பு கொண்டுவிட முடியும்.

அந்தக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் மாத்திரமே இருந்த தொலைத் தொடர்பு வசதிகள் அவை.

80களின் நடுப்பகுதியில் தளபதி அருணா மட்டக்களப்பிற்கு வந்தபொழுது அவரால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கென்று ஒரு பிரதான தொலைத்தொடர்புக் கருவி கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பு வந்தறுமூலைப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட அந்தத் தொலைத்தொடர்பு கருவியை அடிப்படையாக வைத்து 4-6 போர்-சிக்ஸ் ( Four-Six) பேஸ் என்று மட்டக்களப்பு பிரதேசதம் குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டது.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் இருந்து புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட முதலாவது போராளியும், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவரும், பின்நாட்டகளில் புலிகள் அமைப்பில் மூத்த தளபதியாகப் பல களம் கண்டவரும் தற்பொழுதும் ஐரோப்பிய நாடொன்றில் உயிருடன் இருப்பவருமான தளபதி காந்தன் அவர்களே மட்டக்களப்பின் முதலாவது பிரதான தொலைத் தொடர்புக் கருவியை கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்திற்கான தொலைத் தொடர்புக் கருவி அங்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறைப் பிரதேசத்தை 4-8 போர்-எயிட் ( Four-Eight) பேஸ் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகள் அணிகளுக்கான தொலைத்தொடர்புகள் அம்பாறை மாவட்டத்துடனோயே அதிகம் இருந்ததால், கொக்கட்டிச்சோலை புலிகள் அணியின் தளங்களையும் ஆரம்பத்தில் 4-8 போர் எயிட் ( Four-Eight) பேஸ் என்றே அழைத்துவந்தார்கள். இந்த போர்- எயிட்தான் கால ஓட்டத்தில் பேரூட்டாக திரவடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

அதேபோன்று அந்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உலகின் பிரபல்யமா நகரங்களின் பெயர்களைச் சூட்டி அழைப்பது வழக்கம்.

யாழ்பாணப் பிரதேசத்தை சிக்காக்கோ என்றும், வடமாராட்சிப் பிரதேசத்தை கலிபோர்ணியா என்றும் அழைப்பதைப் போன்று மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தை பேரூட் என்று அழைத்திருப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

ஆக மொத்தத்தில் பேரூட் பேஸ் என்பது மட்டக்களப்பில் புலிகளின் பிரபல்யமான ஒரு முகாம் என்பதும், இந்த பேரூட் பேஸ் என்பது கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலேயே அமையப்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட புலிகளின் பேரூட் தளத்தைத் தாக்கி அழிக்க என்று கூறித்தான் இந்திய இராணுவத்தின் மவுன்டன் டிவிசன் ( Mountain Division) படைப்பிரிவு “ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்” ( Operation Blooming Tulip) என்ற பெயரில் ஒரு பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

ஆனால் புலிகளின் பேரூட் பேஸ் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் தரவையில் இருந்த புலிகளின் வேறொரு முகாமை நோக்கித்தான் படையெடுத்திருந்தார்கள் என்பதுதான் இங்கு முரன்நகையான விடயம்.

சோரம்போன படை நடவடிக்கை

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம், வாழைச்சேனை காகித ஆலையில் அமைக்கப்பட்டிருந்த முகாம் போன்றவற்றில் இருந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட இந்தியப்படையினர் உற்சாகமாக தமது நகர்வினை ஆரம்பித்தார்கள்.

இராணுவ கவச வாகனங்கள் முன் நகர, சீக்கியப் படையினர் அணிவகுத்து நடையாகவே புலிகளின் இந்த முகாமை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். புலிகளை ஒரு வழிபண்ணிவிடும் முனைப்பு அவர்களிடம் காணப்பட்டது.

மட்டக்களப்பின் பிரதான பகுதியில் இருந்து குறிப்பிட்ட தரவைப் பிரதேசத்தை அடையவேண்டுமானால் முப்பதிற்கும் அதிகமான கிராமங்களைக் கடந்துதான் அவர்கள் சென்றாக வேண்டும்.

இந்தியப் படையினரும் அவ்வாறுதான் வீரநடைபோட்டுச் சென்றார்கள். இந்தியப் படையினர் முதலாவது கிராமத்தைக் கடந்துசெல்லும் போதே புலிகளுக்குச் செய்தி பறந்துவிட்டது. புலிகள் நிதானமாக தமது முகாமைக் காலி செய்துகொண்டு அடர்ந்த காடுகளுக்குள் தப்பிச் சென்று விட்டார்கள்.

போராளிகளைச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்து மக்களுடன் மக்களாகக் கலைத்தும் விட்டார்கள். சுமந்து கொண்டு செல்லமுடியாத ஆயுதங்களில் சிலவற்றையும், வெடி பொருட்களையும் கைவிட்டுச் செல்லவேண்டி ஏற்பட்டது.

நீண்ட நடைபோட்டு தரவையில் இருந்த புலிகளின் முகாமை அடைந்த இந்தியப் படையினர் அங்கு எவரையும் காணாமல் திகைப்படைந்தார்கள். மவுன்டன் டிவிசன் இலங்கையில் களம் இறக்கப்பட்டு முதலாவதாக மேற்கொண்ட நடவடிக்கை இப்படிச் சோரை போவதா?

அயல் கிராமத்தில் வயல்வேலைகளில் ஈடுபட்டிருந்த சில அப்பாவிகளை முகாமிற்கு அழைத்துவந்து சுட்டுக்கொன்று, அருகில் ஆயுதங்களைப் போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

முகாமில் எஞ்சியிருந்த சில வெடிபொருட்களுடன், தாங்கள் கொண்டுவந்த ஆயுதங்களில் சிலவற்றையும் சேர்த்துவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

பாரிய சண்டையின் பின்னர் புலிகளின் முக்கிய தளமான பேரூட் தளம் கைப்பற்றப்பட்டதாக மறுநாள் செய்திகள் வெளியிடப்பட்டன. பல புலிகள் கொல்லப்பட்டதாகவும் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் புகைப்படங்களுடன் வெளியாகின. (கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் அமெரிக்காவினதும், பாக்கிஸ்தானினதும் ஆயுதங்கள் காணப்பட்டதாக சில இந்திய பிராமணிய நாளிதழ்கள் கதைவிட்டிருந்தது சுவாரசியமாக மற்றொரு விடயம்.)

தொடர் நடவடிக்கைகள்

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு பிராந்தியத்தில் நிலைகொள்ள ஆரம்பித்த இந்திய இராணுவத்தின் 57வது மவுன்டன் டிவிசன் ( Mountain Division) சீக்கியர்கள், தொடர்ச்சியாக நடவடிக்கைளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.

விடுதலைப் புலிகள் மீள அணிதிரளக் கூடாது என்கின்ற யுத்தியைக் கையாளுவதற்காக அவர்கள் இடைவிடாத தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இவர்கள் எதிர் கெரில்லாப் போரியலில் உண்மையிலேயே கைதோர்ந்தவர்கள்.

புலிகளின் நடவடிக்கையின் வேகம் குறையும் அளவிற்கு இவர்களின் நடவடிக்கைள் மிக உறுதியாகவும், வேகமாகவும் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. குறுகிய காலப்பகுதியில் இவர்கள் பல இராணுவ நடவடிக்கைகளை மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடாத்தியிருந்தார்கள்.

அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைளுள் சில:

Operation rolling trumpets

Operation Red Rose

Operation lilac

Operation sweep strike

Operation steel Cray

Operation sward fish.

அவலங்கள்

இந்தப் பிரிவனரின் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் பலத்த சவால்களை எதிர்நோக்கியிருந்தாலும், தமிழ் மக்கள் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்தாலும், தமது இருப்பிடங்கள், கிரமங்களை விட்டு வெளியேற வேண்டிய அளவிற்கு இன்னல்களை அனுபவித்த தரப்பினராக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முஸ்லிம்களைக் குறிப்பிட முடியும்.

முஸ்லிம்களை விடுதலைப் புலிகளை நோக்கி இழுத்துத்தந்த பெருமை இந்த மவுண்டன் பிரிகேட் சீக்கிய ஜவான்களையே சாரும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

இந்தியப் படையினர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் சமூகம் அனுபவித்த அவலங்கள் பற்றி தொடர்ந்துவரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

http://www.nirajdavid.com/புலிகளின்-பேரூட்-தளம்-மீ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் புளொட் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் (அவலங்களின் அத்தியாயங்கள்- 35) –நிராஜ் டேவிட்
  • by admin
  • November 19, 2012
6123333987_e8bc98f950_o.jpg
 
 

13.09.1987 அன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மீது விடுதலைப் புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.  இந்தியப் படையினர் ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் மட்டக்களப்பில் நடைபெற்ற முதலாவது தாக்குதல் என்று இதனைக் கூறலாம்.

இந்தத் தாக்குதலில் புளொட்| அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.

புளொட் அமைப்பின் அரசியல் துறைச் செயலாளர் வாசுதேவா, இராணுவத்துறைச் செயலாளர் கண்ணன், மட்டக்களப்பு பொறுப்பாளர் சுபாஸ், ஆனந்தன் போன்றவர்கள் உட்பட, இந்தியாவில் இருந்து அப்பொழுதுதான் இலங்கை திரும்பியிருந்த முக்கிய உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள்.

புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மீது புலிகள் மேற்கொண்ட இந்தத் தாக்குதலானது அந்தக் காலகட்டத்தில் மாத்திரமல்ல, தற்பொழுது கூட அதிகம் சிலாகிக்கப்படுகின்ற ஒரு தாக்குதல் என்றால் மிகையில்லை.

பேச்சுவார்தைக்கு என்று அழைக்கப்பட்ட புளொட் முக்கியஸ்தர்கள் புலிகளால் நயவஞ்சகமாகப் படுகொலைசெய்யப்பட்டதாக இந்தத் தாக்குதல் பற்றிய ஒரு பேச்சு தற்பொழுதும் இருந்துகொண்டிருக்கின்றது.

புளொட் முக்கியஸ்தர்கள் மீதான தாக்குதல் இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவினாலேயே உத்தரவிடப்பட்டு புலிகளால் மேற்கொள்ளப்பட்டதான ஒரு குற்றச்சாட்டு அந்த நாட்களில் புளொட் அமைப்பினரால் வெளியிடப்பட்டிருந்தது. புளொட் முக்கியஸ்தர்களது நடமாட்டம் பற்றிய தகவல்கள் றோவினாலேயே புலிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் கூட ஒரு பேச்சு அந்த நேரத்தில் அடிபட்டது.

ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட வதந்திகள், பேச்சுக்கள் அனைத்தையும் கடந்து உண்மையில் என்ன நடந்தது என்கின்ற சரியான தகவல்கள் ஊடகங்களில் பெரிதாக வெளிவில்லை என்றுதான் கூறவேண்டும்.

புளொட் முக்கியஸ்தர்கள் மீதான புலிகளின் தாக்குதலின் உண்மையான பின்னணி என்ன? உண்மையிலேயே என்ன நடந்தது? – இந்த விடயம் பற்றித்தான் இந்த அத்தியாயத்தில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

புளொட் அமைப்பினர் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் பற்றியும், அந்தத் தாக்குதலின் பின்னணி பற்றியும் நாம் பார்ப்பதானால், முதலில் அந்தக் காலகட்டத்தில் புளொட் அமைப்பின் செயற்பாடுகள் பற்றி மேலோட்டமாகப் பார்ப்பது நல்லது என்றது என்று நினைக்கின்றேன்.

புளொட்டின் புதிய பின்னணி

இந்தியப் படையினர் ஈழ மண்ணில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற மூன்று அமைப்புக்களும் இணைந்து திறீ ஸ்டார் என்ற பெயரில் இந்தியப் படையினரால் களமிறக்கப்பட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கைளை மேற்கொள்வதே இவர்களது பிரதான செயற்பாடாக இந்தியாவின் ~றோ| அமைப்பினால் திட்டமிடப்பட்டிருந்தது. (இந்த தமிழ் ஆயுத அமைப்பினது சில நடவடிக்கைகளை முன்னர் பார்த்திருந்தோம்)

இதேவேளையில், அக்காலப்பகுதியில் ~புளொட்| அமைப்பும் தமிழ் பிரதேசங்களில் அதிக அளவில் ஊடுருவி நிலை கொள்ள ஆரம்பித்திருந்தது. ~புளொட்| அமைப்பின் நடவடிக்கைளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவே அமைந்திருந்தன.

ஆனால் புளொட் அமைப்பின் செயற்பாடுகளின் பின்னணி, மற்றய தமிழ் இயக்கங்களின் பின்னணியில் இருந்து மாறுபட்டு காணப்பட்டது.  புளொட் அமைப்பின் செயற்பாடுகளுக்குப் பின்னால் இந்திய றோவின் கைகள் நிச்சயமாக இருக்கவில்லை.

புளொட் இற்கு அக்காலத்தில் அனுசரனை வழங்கிக்கொண்டிருந்தது வேறொரு தரப்பு.

எவருமே எதிர்பார்க்காத வகையில், புளொட் அமைப்பு ஸ்ரீலங்கா அரசிடம் அனுசரனைகளைப் பெற்றே அக்காலகட்டத்தில் செயற்பட ஆரம்பித்திருந்தது.

கையறு நிலையில் புளொட்

புலிகளைப் போலவே புளொட் அமைப்பும் ஆரம்பம் முதலே இந்தியாவின் கைகளுக்குள் சிக்கவில்லை.

இந்தியா வழங்கிய பயிற்சிகளைப் புளொட் பெற்றிருந்தாலும், இந்தியாவின் கைக்கூலிகளாக அவர்கள் செயற்படத் தலைப்படவில்லை. அதனால் ஈழத்தில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே புளொட் அமைப்பு பலவழிகளிலும் இந்தியாவினால் ஓரங்கட்டப்பட்டே வந்தது.

இந்தியப்படை இலங்கைக்கு வருவதற்கு சிறிது காலத்தின் முன்னர், புளொட் அமைப்பு ஈழத்தில் தனது போராட்டத்தை விரைவுபடுத்துவதற்கு என்று வெளிநாடொன்றில் இருந்து கொள்வனவு செய்திருந்த பெரும் தொகை ஆயுதங்கள் தமிழ் நாட்டுக் கரையில் வந்திறங்கிய போது, இந்தியா அதனைக் கைப்பற்றியிருந்தது. அதேபோன்று தமிழ் நாட்டில் பலவழிகளிலும் புளொட் அமைப்பிற்கு எதிராக தனது நடவடிக்கைகளை இந்தியா முடுக்கிவிட்டிருந்தது.

அதேவேளை, அளவிற்கதிகமான போராளிகளை உள்வாங்கிவிட்ட நிலையில் அவர்களைப் போஷிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த புளொட் அமைப்பினுள், உள் முரண்பாடுகளும் தலைவிரித்தாட அரம்பித்திருந்தன. திறமையான பல போராளிகள் புளொட் அமைப்பினுள் காணப்பட்டிருந்த போதிலும், சரியான வழிநடத்தல்கள் இல்லாத காரணத்தால் புளொட் அமைப்பு சரியான முறையில் இயங்கமுடியாத ஒரு அமைப்பாகவே மாறி இருந்தது.

உட்படுகொலைகள், தலைமைத்துவ ஊழல்கள், கீழ்மட்டப் போராளிகளிடையேயான வறுமை, கந்தசாமி அணியினர் ஆடிய தாண்டவம் என்பன, புளொட் அமைப்பை பலவழிகளிலும் செயற்படமுடியாத ஒரு அமைப்பாக மாற்றியிருந்தது.

கட்டுப்பாடிழந்த நிலையில் விரக்தியுடன் கூடிய பல போராளிகள் தமிழ் நாட்டில் சமுக விரோத செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் புளொட்டிலிருந்த ஒரு முக்கிய தளபதியான பரந்தன் ராஜன் என்பவர் இந்திய றோ அமைப்பினால் உள்வாங்கப்பட்டு, முக்கிய போராளிகள் அடங்கிய ஒரு குழுவுடன் ஈ.என்.டி.எல்.எப்.(Eela National Democratic Liberation Front- ENDLF)என்ற அமைப்பை ஸ்தாபித்துச் சென்றுவிட, எஞ்சிய புளொட் அமைப்பு செயற்பட முடியாத அளவு தனித்து நிற்கவேண்டி இருந்தது.

ஆரம்பம் முதலே புலிகளுக்கு எதிராக புளொட் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டுவந்த அமைப்பென்ற காரணத்தினால், புலிகளுடனும் கைகோர்த்துக்கொள்ள முடியாத நிலை புளொட்டிற்கு இருந்தது. அத்தோடு, புலிகள் அமைப்பு மீது ஜென்மப் பகை கொண்ட ஒரு அமைப்பாகவே புளொட் அமைப்பும், அதன் தலைமையும் செயற்பட்டு வந்திருந்தது.

புளொட் அமைப்பின் இந்த கையறு நிலையை ஸ்ரீலங்கா அரசு நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டது.

இந்தியப் படையின் வருகையின் பின்னர், எதுவுமே செய்யமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த புளொட் தலமையை தொடர்பு கொண்ட ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, புளொட் அமைப்பிற்கு அபயம் அளிப்பதற்குத் தாம் விரும்புவதாக தெரிவித்தார்.

அப்பொழுது ஈழமண்ணில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த புலிகள் மற்றும் இந்தியா- என்ற தமது இரண்டு எதிரிகளையும் மீறி, எவ்வாறு அங்கு மீண்டும் கால்பதிப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்த புளொட் அமைப்பின் தலைமைக்கு, அத்துலத் முதலியின் அழைப்பு ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே இருந்தது.

ஸ்ரீலங்கா அரசின் அழைப்பின் பெயரில் புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் கொழும்பிற்கு வந்தார். ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியுடன் பல பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். இதனைத் தொடர்ந்து, புளொட் அமைப்பு கொழும்பில் பல முகாம்களை அமைக்க ஆரம்பித்தது. பெருமளவு போராளிகள் அந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா படை அதிகாரிகளுடன் இணைந்து செயற்படவும் ஆரம்பித்தார்கள்.

ஸ்ரீலங்காவை திருப்திப்படுத்த புலிகள் மீது பாய்ச்சல்:

வவுனியாவிலும் பல புளொட் முகாம்கள் அமைக்கப்பட்டன. அப்பொழுது வவுனியாவில் தங்கியிருந்த மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, வவுனியாவில் புளொட் அமைப்பு முகாம்களை அமைக்க உதவி புரிந்தார். மாணிக்கதாசன் தலைமையில் வவுனியாவில் புளொட் அமைப்பு காலூன்ற ஆரம்பித்தது.

இதேபோன்று மட்டக்களப்பிலும், புளொட் அமைப்பின் அரசியல்துறைச் செயலாளர் வாசுதேவா மற்றும் பொறுப்பாளர் சுபாஸ், சிவராம் போன்றவர்கள் தலைமையில் அந்த அமைப்பு காலூன்ற ஆரம்பித்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவு போராளிகள் புளொட் அமைப்பில் இருந்ததால், அந்தப் போராளிகளின் பெற்றோர், உறவினர்களை சந்தித்து தமது அமைப்பிற்கு ஆதரவு தேடிக்கொள்ளும் எண்ணத்துடனும், தமது அமைப்பை மீளவும் கட்டியெழுப்பும் நோக்கத்துடனும், செயற்பட ஆரம்பித்தார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்திலேயே மன்னாரில் புலிகள் அமைப்பு மீது புளொட் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

அந்தத் தாக்குதலில் கில்மன், அர்ச்சுனா, ரஞ்சன் என்ற மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். புலிகள் மீது புளொட் உறுப்பினர்கள் காலாகாலமாக கொண்டிருந்த பகை உணர்வின் வெளிப்பாடாக அந்தத் தாக்குதல் இருந்தாலும், தமது புதிய எஜமானர்களாகிய ஸ்ரீலங்காப் படையினரைத் திருப்திப்படுத்துவதற்காகவே புளொட் அந்தத் தாக்குதலை அப்பொழுது மேற்கொண்டிருந்தது.

புலிகளின் பதிலடி:

தமது உறுப்பினர்கள் மீது புளொட் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல்கள் பற்றி இந்தியப் படையினரிடம் தமது முறைப்பாட்டை தெரிவித்த புலிகள் சம்பந்தப்பட்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரினார்கள். இந்தியப்படை எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராத காரணத்தினால், புலிகள் புளொட்டிற்கு பதிலடி கொடுக்க தயார் ஆனார்கள்.

மன்னாரில் புளொட் அமைப்பு மீது புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 50 இற்கும் அதிகமான புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் மட்டக்களப்பிலும் புளொட் அமைப்பிற்கு எதிராக தாக்குதல்களை நடாத்தவேண்டும் என்ற முடிவை புலிகள் எடுத்திருந்தார்கள்.

அதிலும் புளொட் அமைப்பின் ஒரு குறிப்பிட்ட முக்கியஸ்தரைக் குறிவைத்து தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என்று மட்டக்களப்பில் உள்ள புலிகள் தீர்மானம் எடுத்தார்கள். அந்த குறிப்பிட்ட புளொட் முக்கியஸ்தரைக் குறிவைத்து அவர்கள் தேடித்திரியவும் ஆரம்பித்தார்கள்.

இதற்கு முக்கிய காரணம்: கருணா.

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவினால் அந்த நேரத்தில் குறிவைக்கப்பட்ட புளொட் முக்கியஸ்தின் பெயர்: பவானந்தன்.

அந்த நேரத்தில் புளொட்| அமைப்பின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இருந்தார் பவாணந்தன். அவரது இயக்கப்பெயர் சுபாஸ். 1978ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்த பவாணந்தன்;, தனிப்பட்ட ரீதியில் பல கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு புலிகள் அமைப்பில் இருந்து விலக்கப்பட்டார்.

புலிகளால் தேடப்பட்டநிலையில் சிறிலங்கா அரசாங்கத்திடம் சரணடைந்து சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த பொழுது, 1983ம் ஆண்டு மட்டக்களப்பு சிறை உடைப்பில் தப்பித்து இந்தியா சென்று புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். புலிகள் அமைப்பில் இருந்து ஏற்கனவே பிரிந்து புளொட் அமைப்பை ஸ்தாபித்திருந்த உமாமகேஸ்வரனுடன் அவருக்கு இருந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி புளொட் அமைப்பில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.

இந்தியப்படையின் வருகையைத் தொடர்ந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்த பாவாணந்தன்(சுபாஸ்) புலிகள் அமைப்பிற்கு மிகுந்த சாவாலாகவே செயற்பட்டார். அதுவும் சிறிலங்கா அரச படைகளின் தொடர்பு, பின்னணி என்பன இவருக்கும், இவர் சார்ந்த பிரிவினருக்கும் இருந்ததால், மட்டக்களப்பில் புலிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலை இவரால் தொடர்ந்து ஏற்படுத்த முடிந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் பவாணந்தனுக்கும், புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு தளபதியாக அந்த நேரத்தில் இருந்த கருணாவுக்கும் இடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. கருணாவுக்கு அந்த நேரத்தில் 21 வயது. கருணாவையும், புலிகள் அமைப்பையும் மிகக் கேவலமாக விமர்சித்தார் பவாணந்தன். ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் முற்றி கருணாவை சுட்டுவிடும்படி தனது போராளிகளுக்கு கட்டளை பிறப்பித்தார் பவாணந்தன்.

கருணாவுடன் துணைக்குச் சென்ற அர்ஜூனா என்ற போராளி நிலமையைச் சமாளித்து கருணாவை அழைத்துக்கொண்டு திரும்பி வந்தார். இந்தச் சம்பவம் கருணாவை மிகவும் பாதித்திருந்தது. பவாணந்தனை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்று நினைத்த கருணா, பவாணந்தனை குறிவைக்கும்படி தனது பேராளிகளுக்கு கட்டளை பிறப்பித்தார்.

பவாணந்தனின் நடமாட்டங்கள் பற்றிய தகவல்கள் கவனமாகத் திரட்டப்பட்டன புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால்.

குழப்பப்பட்ட புலிகளின் பொதுக்கூட்டம்

1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் இந்தியப்படைகள் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை புலிகள் பகிரங்கமாக வெளியிட ஆரம்பித்திருந்தார்கள். திலீபன் யாழ் கோட்டையில் ஆற்றிய உரையில் இதனை முதன் முதலில் வெளியிட்டிருந்தார்.

அதேவேளை வடக்கு கிழக்கு முழுவதிலும் இந்தியப்படையனருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வந்தன. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் புலிகள் ஒரு பாரிய பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். புலிகள் அமைப்பின் பிரதித்தலைவர் மாத்தையா, அரசியல்துறைப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி போன்றவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்பாடாகியிருந்தது.

ஆனால் இரண்டு காரணங்களினால் இந்தப் பொதுக்கூட்டம் கைவிடப்பட்டது.

முதலாவது காரணம் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவென வருகைதரும் விடுதலைப் புலி முக்கியஸ்தர்களைப் படுகொலைசெய்ய புளொட் அமைப்பு திட்டமிட்டிருந்ததாக புலிகளின் புலனாய்வுத் துறை தெரிவித்திருந்தது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த திலீப்(சொந்தப் பெயர்: திருச்செல்வம்) மற்றும் நீலன் போன்றவர்கள் இந்தத் தகவலை புலிகளின் தலைமைக்கு அறிவித்திருந்தார்கள். புலிகளின் தலைவர்களைப் படுகொலை செய்யும் நோக்குடன் புளொட் அமைப்பின் இராணுவச் செயலாளர் கண்ணன் மட்டக்களப்பிற்கு வருகை தந்திருப்பதாகவும் அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக பொதுக்கூட்டம் நடைபெற இருந்த தினத்தில் சிறிலங்கா அரசாங்கம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்தக் காரணங்களினால் புலிகள் ஏற்பாடு செய்த பாரிய பொதுக்கூட்டம் தடைப்பட்டிருந்தது.  இதுவும் மட்டக்களப்பில் புலிகள் அமைப்பிருக்கு புளொட் மீது பாரிய கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.  புளொட் அமைப்பினருக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும் எற்று தீர்மானம் எடுத்தார்கள் புலிகள்.

தாக்குதல்

1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ம் திகதி பாவனந்தன் தனது நன்பர்களுடன் பாசிக்குடா சென்று திரும்புவதாக கருணாவுக்கு தகவல் கிடைத்தது.

‘பாவானந்தனை போடுங்கள். நான் அங்கு வந்துகொண்டிருக்கின்றேன்” உத்தரைவை கருணா கிரானில் இருந்த போராளிகளுக்கு தொலைத்தொடர்பில் அறிவித்தார்.  அந்த நேரத்தில் கிரான் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த கப்டன் ரதீஷ் மற்றும் சாண்டோ என்ற போராளி உட்பட ஒரு சிறு குழு பாவனந்தன் பயணம் செய்த வாகனம் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள்.

கொல்லப்பட்ட புளொட் உறுப்பினர்களின் உடல்கள் கிரான் சந்தியில் கருணாவினால் பார்வையிடப்பட்டது. பவானந்தனைத் தவிர மற்றவர்களை புலிகளுக்குத் தெரியவில்லை. மட்டக்களப்பில் இருந்து கிராணுக்கு வந்த அரசியல்துறைப் போராளிகள்தான் கொல்லப்பட்டவர்களில் புளொட் அமைப்பின் அரசியல் துறைச் செயலாளர் வாசுதேவாவையும் மற்றய சிலரையும் அடையாளம் காண்பித்தார்கள்.

கொல்லப்பட்டவர்களில் புளொட் அமைப்பின் இராணுவத்துறைச் செயலாளர் கண்ணனும்; அடங்கியிருந்தது பின்னரேயே புலிகளுக்குத் தெரியவந்தது. பொதுக்கூட்டத்திற்கு வருகை தர இருந்த புலி முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்வதற்காக கண்ணன் மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ளதாக புலிகளின் புலனாய்வுத்துறை ஏற்கனவே வழங்கியிருந்த தகவலை கண்ணனின் உடல் ஊர்ஜிதப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் புளொட் அமைப்பிற்கு எதிராக புலிகள் பாரிய தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்தார்கள். இந்த நடவடிக்கையில் 70 இற்கும் அதிகமான புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் புளொட் உறுப்பினர்கள் துரத்தித் துரத்தி புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள்.

புலிகளால் புளொட் அமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதலை இந்தியப்படை வேடிக்கை பார்த்தபடி இருந்தது. இந்தியப்படையினரைப் பொறுத்தவரையில், இந்த இரு அமைப்புக்களுமே அவர்களுக்கு வேண்டப்படாத அமைப்புக்களாகவே இருந்தன.

 

தமிழ் மண்ணை நனைத்த சிங்கள இரத்தம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 36) –நிராஜ் டேவிட்
  • by admin
  • November 19, 2012
Kent-farm-Sri-Lanka-204x300.jpgஇந்தியப்படை காலத்தில் கிழக்கில் இடம்பெற்ற மிக முக்கியமான ஒரு சம்பவம் பற்றி இந்த வாரம் அவலங்களின் அத்தியாயத்தில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகளுடன் இனிப் பேசுவதில்லை என்கின்ற முடிவை உறுதியாக எடுப்பதற்கு இந்தியாவையும் சிறிலங்காவையும் நிர்பந்தித்த சம்பவம் என்று இதனைக் குறிப்பிடலாம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலையை ஜே.ஆர் அறிவிப்பதற்குக் காரணமாக அமைந்த சம்பவம் என்றும் இதனைக் குறிப்பிடலாம்.

புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் போர் பிரகடனம் செய்வதற்குக் காரணமாக அமைந்த விடயம் என்றும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அந்த மோசமான சம்பவம், இலங்கையில் பாரிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படவும், அவலங்களின் அத்தியாயங்கள் பல தமிழர்களின் வாழ்வில் இடம்பெறவும் காரணமாக அமைந்தது.

இலங்கையின் வரலாற்றில் முதன்முதலில் சிங்கள மக்கள் மீது தமிழர் தரப்பு மேற்கொண்ட ஒரு இன வன்முறை நடவடிக்கை என்று இதனைக் குறிப்பிடலாம்.

வடக்கு கிழக்கு மண்னை சிங்கள இரத்தம் நனைத்த முதலாவது சந்தர்ப்பம் என்றும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

இவை பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்தச் சம்பவம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த பின்னணி பற்றிப் பார்ப்பது அவசியம்.

சயனைட் சம்பவம்

3.10.1987 அன்று அதிகாலை 2 மணியளவில், பருத்தித்துறைக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 17 விடுதலைப் புலி முக்கியஸ்தர்களில் 13 பேர் 1987ம் ஆண்டு அக்டோபர் 5ம் திகதி சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்கள்.

சிறிலங்கா படையினரால் பலவந்தமாக கொழும்புக்குக் கொண்செல்லப்படவிருந்த நிலையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்த தற்கொலை நடவடிக்கையைச் செய்திருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 13 போராளிகள் சயனைட் அருந்தித் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, தமிழீழம் முழுவதும் மிக இறுக்கமான ஒரு சூழ்நிலை உருவானது.

அதேவேளை, சயனைட் உட்கொண்டு தம்மை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்பட்ட போராளிகள் சிலரது உடல்களில் காயங்கள் காணப்பட்டதாக வெளிவந்திருந்த செய்தியும் தமிழ் மக்களை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது.

குறிப்பாக புலேந்திரனின் உடலின் முதுகுப் புறத்திலும், பின் கழுத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. துப்பாக்கி முனையில் பொருத்தப்படும் பயனைட் என்ற கத்தியினால் புலேந்திரன் குத்தப்பட்டதாக விடுதலைப் புலிப் போராளிகள் மிகுந்த சினத்துடன் தெரிவித்திருந்தார்கள். கைதுசெய்யப்பட்ட போராளிகளை உயிருடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லமுடியாத தமது இயலாமையை, ஸ்ரீலங்காப் படையினர் அவர்களின் உயிரற்ற உடல்களின் மீது காண்பித்திருந்தார்கள்.

மாவீரர்களின் இறுதி ஊர்வலத்தின் போதே, போராளிகளின் உடல்கள் ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களின் கத்திக்குத்துக்களுக்கு இலக்கான கதை பொதுமக்கள் மத்தியிலும், போராளிகளிடையேயும் பரவியிருந்தது. மரணச் சடங்குகள் முடிவடைந்ததும் மக்களினதும், சக போரளிகளினதும் சோகம் கோபமாக மாற ஆரம்பித்தது.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெளியான தினசரிகள் அனைத்துமே, மிக அண்மையில் திருமணமான குமரப்பா, புலேந்திரன் போன்றோரது திருமண புகைப்படங்களை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தன. இந்தப் புகைப்படங்களைப் பார்த்த தமிழ் மக்களின் மனங்கள் ஏற்கனவே கணன்றுகொண்டிருந்தது. மரணமடைந்தவர்களது உடல்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து மக்களும், போராளிகளும் தமது கட்டுப்பாட்டை இழந்திருந்தார்கள்.

சிறிலங்கா இராணுவத்தினர் மீதான புலிகளின் கோபம் உச்சத்தை எட்டியிருந்தது. புலித் தளபதிகளின் இறந்த உடலங்கள் மீது கூட தமது காழ்ப்புணர்வைத் தீர்த்துக்கொள்ளத் தயங்காத சிங்களப் படையினர் மீதான அவர்களது கோபம் படிப்படியாக சிங்கள மக்களை நோக்கியும் திரும்ப ஆரம்பித்தது.

அடுத்த சில நாட்கள், வடக்கு-கிழக்கு இரத்தமயமாகக் காட்சியளித்தது.

சிறிலங்காப் படையினரின் உடல்கள்

6ம் திகதி காலை யாழ் பஸ் நிலையத்தின் முன்னால் 8 ஸ்ரீலங்காப் படைவீரர்களின் உடல்கள் போடப்பட்டிருந்தன. அவர்களது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன.

23.03.1987 அன்று பண்ணை தொலைத்தொடர்பு கோபுர இராணுவ முகாம் தாக்குதல் சம்பவத்தின் பொழுது புலிகளினால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த 8 ஸ்ரீலங்காப் படையினரின் உடல்களே அவை.

புலிகளின் எல்லை கடந்த கோபம் ஸ்ரீலங்காப் படையினரை நோக்கித் திரும்பியிருந்ததை அது வெளிப்படுத்தியது.

சிங்கள இரத்தத்தால் நனைந்த தமிழ் மண்:

காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையின் பொது முகாமையாளர் ஜெயமண்ண மற்றும் உதவி முகாமையாளர் கஜநாயக்க போன்றோர் படுகொலை செய்யப்பட்டு காங்கேசன்துறை சீமேந்துத் தொமிற்சாலையின் முன்பாக வீசியெறியப்பட்டிருந்தன.

சுன்னாகத்தில் பேக்கறி வைத்திருந்த ஒரு சிங்கள முதலாளி கொலைசெய்யப்பட்டார்.

அன்றைய தினம் யாழ்பாணத்தில் தங்கியிருந்த ரூபவாகினி தொலைக்காட்சி ஊழியர்களான அத்தனாயக்க, காமினி ஜெயந்த, நிலாந்த, கருணபால என்ற நான்கு பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளே இந்தப் படுகொலைகளைப் புரிந்திருந்ததாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

போராளிகளுக்கு நடந்த நீதியால் ஆத்திரமடைந்த பொதுமக்களே இதனைச் செய்திருந்ததாக புலிகள் தரப்பு தெரிவித்திருந்தது.

அடுத்த சில தினங்கள், தமிழ் பிரதேசங்கள் எங்கும் இரத்த வெள்ளமாக காட்சி தந்தன.

ஆனால், இம்முறை சிந்தப்பட்ட இரத்தம் தமிழருடையது அல்ல. காலாகாலமாகவே தமிழர்கள் சிந்திய குருதியினால் நனைந்து வந்த தமிழ் மண்ணை, முதல்முறையாக சிங்கள இரத்தம் செந்நிறமாக்கியது.

புலேந்திரன்- குமரப்பா

சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட விடுதலைப் புலித் தளபதிகளில் புலேந்திரன் திருகோணமலையைச் சேர்ந்தவர். திருகோணமலைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளை வளர்த்ததுடன் நீண்ட காலம் திருகோணமலைப்பிராத்தியத்தில் தளபதியாகப் பணியாற்றியிருந்தவர்.

அதேபோன்று தளபதி குமரப்பா அவர்கள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக புலிகள் அமைப்பின் தளபதியாகப் பணியாற்றியிருந்தவர்.

பல போராளிகளை அங்கு உருவாக்கியதுடன் ஏராளமான போராளிகளை அந்தப் பிராந்தியத்தில் வளர்த்திருந்தார்.

எனவே இந்தத் தளபதிகளின் மரணம் என்பது இயல்பாகவே கிழக்கில் பாரிய உணர்வலையை போராளிகள் மத்தியில் உருவாக்கிவிட்டிருந்தது. போதாததற்கு விடுதலைப் புலிகளின் தலமைப்பீடத்தின் கண்ணசைவும் கிடைத்ததைத் தொடர்ந்து சிங்கள பாதுகாப்புப் படையினருக்கு எதிராகவும், சிங்கள மக்களுக்கு எதிராகவும் வன்முறைகள் மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தன.

கிழக்கில் பரவிய வன்முறை

மட்டக்களப்பு நகரின் மத்தியில் கம்பீரமாகக் காட்சிதந்துகொண்டிருப்பது சிறிபால கட்டிடம். மட்டக்களப்பில் சிங்கள முதலாளி ஒருவருக்குச் சொந்தமான கடை மற்றும் குடிமனைத்தொகுதி அது. தமிழ் மக்களுக்கு எதிரான ஸ்ரீலங்காப் படையினரின் அடக்குமுறைகள் முனைப்படைய ஆரம்பித்ததின் பின்னர், இந்தக் கட்டிடமும், அதில் வசிப்பவர்களும் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைய ஆரம்பித்திருந்தார்கள்.

ஸ்ரீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படும் தமிழ் இளைஞர்களின் விடுதலை தொடர்பான பேரம்பேசல்கள் இந்தக் கட்டிடத்தில் வசிப்பவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஸ்ரீலங்காவின் விஷேட அதிரடிப் படையினர் சகட்டுமேனிக்கு கைதுசெய்யும் தமிழ் இளைஞர்களை பணத்தை வாங்கிக்கொண்டு விடுவிக்கும் கைங்காரியத்தை ஸ்ரீபால கட்டிடத்தில் வசித்துவந்த சிங்கள முதலாளிகள் ஒரு வியாபாரமாகவே செய்துவந்தார்கள். (சுறனைகெட்ட சில தமிழர்கள் இதனை ஒரு உதவியாகக் கருதி பாராட்டி வந்தது வேறு விடயம்.)

கிழக்கிற்கு பரவிய கலவரத்திற்கு முதலில் பலியானவர்கள் இந்தச் ஸ்ரீபால கட்டிடவாசிகளே. 06.10.1987ம் திகதி நள்ளிரவில் இந்த கட்டிடத்திற்குள் புகுந்த போராளிகள்; சிலர், அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களை வாளினாலும், கத்திகளினாலும் வெட்டிக்கொன்றார்கள்.

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட இருதயபுரம் என்ற பிரதேசத்திற்கு அருகாமையில், ஜயந்திபுர என்றொரு சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பிற்குப் பணியாற்றவென வந்த சிங்களப் பொலிஸ் மற்றும் அரச ஊழியர்களின் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தன. இந்தக் குடியேற்றப் பிரதேசமும் தாக்குதலுக்கு உள்ளானது. பலர் கொல்லப்பட்டார்கள்.

மறுநாள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் புறப்பட்ட புகையிரதமும், வாழைச்சேனை காகித ஆலைக்கு அருகில் வழிமறிக்கப்பட்டது. அதில் பயணம்செய்த 40 சிங்கள மக்கள் கொல்லப்பட்டு, இரயில் பெட்டிகளில் போட்டு எரிக்கப்பட்டார்கள். மயிலங்கரச்சியைச் சேர்ந்த, தமிழ்-சிங்கள கலப்புப் பெற்றோருக்குப் பிறந்த சுனில், ரவி என்ற விடுதலைப் புலி உறுப்பினர்களே இந்தக் கொலைச் சம்பவத்தை முன்னின்று நடாத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கல்குடா பிரதேசத்திலும் அங்கு வாழ்ந்து வந்த சிங்கள மக்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 25 சிங்கவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

வாழைச்சேனை மற்றும் கல்குh பகுதியில் சிங்கள மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைப் பார்வையிடுவதற்காக சிறிலங்கா அரசாங்கக் குழு ஒன்று பல வாகனங்களில் புறப்பட்டது. சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்க இந்த விசேட குழு மட்டக்களப்பு நகரில் இருந்து புறப்பட்டது. சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பெருமளவில் தொடரணியாக வருவதான தகவல்கள் புலிகளுக்குக் கடைத்தது. இந்த தொடரணிமீது தாக்குதலை மேற்கொள்ளும்படியா திட்டத்தைத் தீட்டிய விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு கொமும்பு நெருஞ்சாலையில் கொம்மாதுறை என்ற இடத்தில் ஒரு கன்னிவெடித்தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலி போராளியான மேஜர் அகத்தியன் என்பவரால் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் மாவட்ட இணைப்பதிகாரி நிமால் டி சில்வா உட்பட 8 சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டார்கள். விசேட அதிரடிப்படை வாகனத் தொடரனியில் பயணம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து உட்பட ஐந்து அரசாங்க அதிகாரிகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். இதனை புலிகள் எதிர்பார்க்கவில்லை.

அரச அதிபர் அந்தோனிமுத்துவின் இல்லத்திற்குச் சென்ற புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரான்ஸிஸ், தாரிணி, டிலினி என்ற அரச அதிபரின் இரண்டு மகள்களிடமும் தமது ஆழ்ந்த கவலையை தெரிவித்திருந்தார்.

தாக்கப்பட்ட சிங்களக் கிராமங்கள்

அக்டோபர் 6, 7 மற்றம் 8ம் திகதிகளில் கிழக்கில் உள்ள பல சிங்களக் கிராமங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் தமிழ் இளைஞர்களினால் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகின.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிங்கபுர சிங்களக் கிராமம் மீது 6.10.87 நள்ளிரவு நடைபெற்ற தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டார்கள்.

07.10.1987 அன்று அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் மொனராகல வீதியில் அரச பேரூந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த சிங்கள சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டார்கள். இதேபோன்று புல்மோட்டை வழியாகப் பயணம் மேற்கொண்ட ஒரு தனியார் பேரூந்து ஆயுதம்தாங்கிய சில தமிழ் இளைஞர்களால் இடைமறிக்கப்பட்டு அதில் பயணம் செய்த 11சிங்கள மக்கள் இறக்கியெடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.

அதேபோன்று திருகோணமலைப் பிரதேசத்தில் பல சிங்களக் கிரமங்கள் தாக்குதலுக்கு இலக்காகின. அந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 700 சிங்களவர்கள் தமிழர் தரப்பினரால் கொலைசெய்யப்பட்டதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

கண்டனம்

ஒரு யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்படாத சிவிலியன்கள் கொல்லப்படுவதென்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாததும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாததுமானதே என்பதில் சந்தேகம் இல்லை.

கிழக்கில் சிங்கள மக்களுக்கு எதிராகத் தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த படுகொலை நடவடிக்கைகள் கண்டிக்கப்படவேண்டியவையே.

என்னதான் உணர்ச்சியின் வேகம் என்று கூறிக்கொண்டாலும், 1987ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில், வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் மீது தமிழ் தரப்பினர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை, மனவருந்தத்தக்க ஒரு நிகழ்வுதான். சிங்களத்தின் வெறித்தனமான பிடிவாதத்தைத் தொடர்ந்து, 12 போராளிகள் அநியாயமாக தமது உயிர்களை இழக்க நேரிட்டதன் சோகம், இப்படியான ஒரு ரூபத்தில் வெளிப்பட்டதாக இந்தச் சம்பவங்களுக்கு காரணம் கற்பிக்கப்பட்டாலும், ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒரு கறைதான் என்பதில் சந்தேகம் இல்லை.

முக்கிய விடயம்

ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாகக் குறிப்பிடவேண்டிய மற்றொரு முக்கிய விடயமும் இருக்கின்றது.

1987 அக்டோபர் முதல் வாரத்தில் தமிழர் தரப்பினால் சிங்கள மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டிப்பதற்கும், விமர்சிப்பதற்குமான உரிமை சாதாரன தமிழ் மக்களுக்கு அல்லது சிங்கள முஸ்லீம் மக்களுக்கு இருக்கின்றதே தவிர, இந்தச் சம்பவம் பற்றி வாய்திறப்பதற்கான தகுதி சிறிலங்கா அரசாங்கத்திற்கோ, இந்திய அரசாங்கத்திற்கோ அல்லது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசாங்கங்களுக்கோ கிடையாது என்பதுதான் யதார்த்தம்.

1984ம் ஆண்டு, இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி சீக்கியத் தீவிரவாதிகளினால் கொலைசெய்யப்பட்ட போது, ஆத்திரம் அடைந்த இந்திய மக்கள் நாடுமுழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் இறங்கியிருந்தார்கள். இரண்டு நாட்களில் இந்தியா முழுவது நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

இந்தியாவின் இராணுவத்திலும் சரி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இந்தியாவின் விளையாட்டுத்துறையிலும் சரி, பாரிய பங்களிப்பைச் செய்துவந்த சீக்கிய இன மக்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டார்கள்.

டெல்லி, கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களின் தெருக்களிலெல்லாம் அப்பாவிச் சீக்கியர்களின் பிணங்கள்.

சில நாட்களில் பிரதமர் பதவி ஏற்றுக்கொண்ட ராஜிவ் காந்தியிடம், சீக்கியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைகள் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த ராஜீவ் காந்தி, ’’ஒரு பெரிய மரம் சாயும் போது, சில அதிர்வுகள் அங்கு ஏற்படத்தான் செய்யும். அந்த அதிர்கள் காரணமாக அருகில் இருக்கும் சில புல்பூண்டுகள் அழிந்துவிடுவது தவிர்க்கமுடியாதது’’ என்று பதில் அளித்திருந்தார்.

இதேபோன்று, 83ம் ஆண்டு ஜுலையில் புலிகளின் கன்னிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி 13 சிறிலங்காப்படைவீரர்கள் யாழ்பாணத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் அயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழர்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதால் கோபம் கொண்ட சிங்கள மக்கள் உணர்ச்சிவசப்பட்டு, இப்படியான காரியத்தைப் புரிந்துவிட்டதாக இந்தச் சம்பவத்திற்கு சிறிலங்கா அரச தரப்பால் நியாயம் கற்பிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சந்தர்ப்பத்திலும், தமிழ் நாட்டிலும், பெங்களுரிலும் வாழ்ந்துவந்த நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியப் பொலிசாரினால் வகைதொகையின்றிக் கைதுசெய்யப்பட்டார்கள். அடித்து நொறுக்கப்பட்டு பழிவாங்கப்பட்டார்கள்.

கடைகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழ் பேசிய பலர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். (இத்தனைக்கும்  ராஜீவ்காந்தியை புலிகள்தான் கொலைசெய்தார்கள் என்ற ஒரு சந்தேகம் மட்டுமே அப்பொழுது அங்கு நிலவியிருந்தது).

பிரதமரை இழந்த சோகத்தில் மக்கள் இவ்வாறு நடந்துகொள்ளுகின்றார்கள் என்று நியாயம் கூறப்பட்டது.

2001ம் ஆண்டு செப்டெம்பர் 11 இல், நியுயோர்க் மற்றும் வோஷிங்டனில் இஸ்லாமிய அல்கயிதா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதிபலிப்பு, முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியிருந்தது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கத் தெருக்களில் தாக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள்.

போதாததற்கு அமெரிக்க காவல்துறையும் அமெரிக்காவில் வாழ்ந்த பல முஸ்லிம் மக்களை கைதுசெய்து துன்புறுத்தியது. தாடியுடன் தலைப்பாகை அணிந்து காணப்படும் சீக்கியர்களைக் கூட, முஸ்லிம்கள் என்று நினைத்து தாக்குதலை நடாத்தியிருந்தார்கள். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர், ’’மக்கள் தமக்கு ஏற்பட்ட தாங்கமுடியாத இழப்பினால் கோபம் கொண்டிருக்கின்றார்கள்“ என்று கூறியிருந்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடொன்றில் ஒரு உல்லாச ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில், அவுஸ்திரேலிய பிரஜைகள் சிலரும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் பல முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவம் பற்றியும் ஊடகங்களில் அறிய முடிந்தது. இந்தச் சம்பவத்திற்கும், இயல்பான கோபம் காரணமாகக் கூறப்பட்டது.

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், இழப்புகள் நேர்ந்து, தாங்க முடியாத சோகம் ஏற்படும் போது இயல்பான கோபம் வரலாம், ஆனால் தமிழ் மக்களுக்கு மட்டும் அப்படியான கோபம் எதுவும் வந்துவிடக் கூடாது.

07.09.1996 இல் கிருஷாந்தி போன்றவர்கள் கொல்லப்பட்டதுடன், யாழ்குடாவில் 600இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படையினரால் கொலை செய்யப்பட்டால், அது புலிகள் முல்லைத்தீவு மீது தாக்குதல் நடாத்தியதால் படைவீரர்களுக்கு ஏற்பட்ட மனப்பாதிப்பின் வெளிப்பாடு என்று நியாயம் கற்பிக்கும் சிறிலங்கா அரசாங்கம், 1992ம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 9ம் திகதி மைலந்தனையில் 12 சிறுவர்கள் உட்பட 36 தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டதற்கு, – அது டென்சில் கொப்பேகடுவ கொலை செய்யப்பட்டதால் படையினருக்கு ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு என்று நியாயம் கற்பிக்கத் தெரிந்த சிங்கள தேசம், – தமிழ் மக்களுக்கு தாங்கமுடியாத சோகம் ஏற்படும்போது, அவர்களுக்கும் கோபம் ஏற்படத்தான் செய்யும் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

காலாகாலமாகவே சிங்களவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு, பலவிதமான துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வந்த தமிழ் சமுகம், கிளர்ந்து எழுந்த முதலாவது சந்தர்ப்பம் என்று இதனைக் குறிப்பிடலாம்.

வன்முறைகள் மலிந்திருந்த அந்தக் காலத்தில், அதுவும் குறிப்பாக சிங்களப் படையினராலும், சிங்களக் காடையர்களினாலும் தொடர்ந்து வன்முறைக்கு இலக்காகி வந்த தமிழ் சமுகம், ஆற்றமுடியாத தமது கோபத்தை வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பம்தான் என்பதை வேறு வழியில்லாமல் இந்தியா நியாயப்படுத்தியேயாக வேண்டும்.

தமிழ் மக்கள் தமது உரிமையைக் கேட்டாலும் அடி, உண்ணாவிரதம் இருந்தாலும் அடி, சத்தியாக்கிரகம் இருந்தாலும் அடி, தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடாத்தினால் வெடி,

சரி எதுவுமே வேண்டாம் என்று கொழும்புக்கு ஒதுங்கிச் சென்றவர்களுக்கு எதிராகவும் வன்முறை, கலவரம். இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஒருவாறு சமாதானம் திரும்பிவிட்டது என்று நினைத்து, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து, படிப்படியாக சுமுக நிலைக்குத் திரும்புகின்ற வேளையில், இப்படியான ஒரு சம்பவம் இடம்பெற்றுவிட்டதை நினைத்து தமிழ் சமுகம் சோகமும், ஆதங்கமும், கோபமும் கொள்ளத் தலைப்பட்டதில் உள்ள நியப்பாட்டை வேறுவழியில்லாமல் மேற்குலகமும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

ஏனென்றால் தங்களுடைய தரப்பில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்ற சந்தர்பங்களில் சிறிலங்கா தேசமும், இந்தியாவும், மேற்குலகும் இவற்றை நியாயப்படுத்தியிருக்கின்றனவே…

அவலங்கள் தொடரும்…

avalam11.jpg

avalam22.jpg

 

முஸ்லிம்கள் மீது கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 37) –நிராஜ் டேவிட்
  • by admin
  • November 19, 2012
Image-25-300x203.jpgமட்டக்களப்பு நகரின் மத்தியில், மத்திய வீதியில் அமைந்துள்ள ரீயோ கூல் பார் (Rio Cool Bar) மிகவும் பிரபல்யமான குளிர்பானக் கடை. இந்தக் குளிர்பானக் கடையுடன் இணைந்து ரியோ இலக்ரிகல்ஸ் (Rio Electrical) என்கின்ற மின்சார உபகரணக் கடையும் இருந்தது.

மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான கடைகள் இவை. இந்தியப் படையினர் இந்தக் கடைகளில்தான் தமக்குத் தேவையான மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்வது வழக்கம். அருகில் உள்ள குளிர்பானக் கடையில் குளிர்பானம் அருந்திவிட்டு, ரியோ இலக்ரிகல்சில் தமக்குத் தேவையான மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்வார்கள்.

அன்றைய தினம் ரியோ கூல்பாரில் குளிர்பானம் அருந்திவிட்டு அருகில் இருந்த மின்சார உபகரணக் கடைக்கு சில இந்தியப் படையினர் சென்றார்கள். கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த முதலாளிக்கு மகிழ்ச்சி. கடையின் உள்ளே இருந்த தனது உதவியாளரிடம் வருபவர்களை நன்றாகக் கவனிக்கும்படி உரிமையாளர் தெரிவித்தார். தனது கடைக்கு வந்த இந்தியப் படை ஜவான்களைக் குறிப்பிட்டு தனது உதவியாளனிடம் “மச்சான்கள் வாறாங்கள் உள்ளே கூட்டிக்கொண்டு போய் கவனி“ என்று தெரிவித்தார்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சாதாரணமாக “மச்சான்’’ என்கின்ற வார்த்தையை அதிகம் உபயோகிப்பார்கள். அதிகம் நட்புரிமை பாராட்டுகின்ற நபர்களை அவர்கள் ’’மச்சான்’’ என்கின்ற வார்த்தையை உபயோகித்துத்தான் அழைப்பார்கள்.

கடைக்கு வந்த இந்தியப் படை ஜவான்களுள் ஒரு தமிழ் நாட்டுப் படைவீரரும் வந்திருந்தார். கடை உரிமையாளர் “மச்சான்’’ என்று தம்மை அழைத்தது அந்த இந்திய வீரருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. கடை உரிமையாளரை சட்டையைப் பிடித்து வெளியில் இழுத்து வந்து தெருவில் போட்டார். நல்ல அடி, உதை கிடைத்தது. கூட வந்த ஹிந்தி ஜவான்களுக்கு என்ன நடக்கின்றது என்று புரியவில்லை. ஆனால் அவர்களும் தம்பங்கிற்கு அந்த கடை உரிமையாளரைப் போட்டு மிதித்தார்கள்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் எம்.சீ.எம் இஸ்மைல் அன் சன்ஸ், மொட் சென்டர் என்று நிறைய முஸ்லிம் கடைகள் காணப்பட்டன. தெருவிலும் நிறைய பேர் இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். நிறையப் பேர் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். எதற்கு அந்த வயோதிப நபரைப் போட்டு அடிக்கின்றாhகள் என்று எவருக்குமே புரியவில்லை. கேட்கவும் தைரியம் இல்லை.

கடைசியில் அந்த இந்தியப் படை வீரரே சுற்றிநின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கு விளக்கினார்.

‘’என்னை இவன் மச்சான் என்று அழைத்தான். இவனுக்கு நான் எப்படி மச்சான் ஆக முடியும்? இவன் ஒரு முஸ்லிம். பாக்கிஸ்தானி. நானோ இந்து. என்னை மச்சான் என்று அழைத்ததன் மூலம் எனது தங்கையை இவன் பெண்டாளக் கேட்கிறான். இது சரியா??’’ என்று கேட்டார். சுற்றி நின்றவர்களுக்கோ திகைப்பு. வேறு வழியில்லாமல் அங்கு திரண்டு நின்ற முஸ்லிம்களும், ’’அவர் மச்சான் என்று அழைத்தது பிழைதான்’’ என்று தெரிவிக்கவேண்டி இருந்தது.

முஸ்லிம்கள் இந்தியப் படை ஜவான்களால் எதற்கெல்லாம் தாக்கப்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டும்தான். இதுபோன்ற, இதனையும்விட மோசமான நிறையச் சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன.

முஸ்லிம்கள் சாதாரணமாக அணியும், அவர்களது மார்க்க தனித்துவ அடையாளமான தொப்பிகளை அணிந்து செல்லும் முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு ’’பாக்கிஸ்தானி??’’ என்று கேட்டுக் கேட்டுத் தாக்கப்பட்டார்கள்.

பஸ்வண்டிகளில் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இந்தியப்படையினரின் சோதனைச் சாவடிகளில் இறங்காது விட்டால் போதும். அவர் இறக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள். பயணங்களின் போது முஸ்லிம் பெண்கள் ’பர்தா’ அணிவதைத் தவிர்க்கும் ஒரு சூழ்நிலை கூட இந்தியப்படையின் காலங்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உருவாகி இருந்தது. முஸ்லிம் பெண்கள் என்று இந்தியப் படையினர் அடையாளம் கண்டு கொண்டால் பாலியல் சேஷ்டைகள் அதிகம் இடம்பெறும். இந்தியப் படையினருடன் கூட இருந்த தமிழ் இயக்க உறுப்பினர்களும் இதில் சற்று மோசமாகவே நடந்துகொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் முஸ்லிம்கள்:

இந்தியப் படையினரின் இதுபோன்ற துன்புறுத்தல்களின் பலனாக நிறைய முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். பொறுப்பாளர்கள் தரத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் செயற்படும் அளவிற்கு முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு அக்காலகட்டத்தில் காணப்பட்டது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத் தளபதிகளான கரிகாலன், விசு போன்றவர்களின் மெய்ப்பாதுகாவலர்களாக முஸ்லிம் போராளிகளே இருக்கும் அளவிற்கு முஸ்லிம் இளைஞர்கள் இந்தியப் படையினருக்கு எதிரான போராட்டங்களில் முனைப்பு வெளிப்படுத்தியிருந்தார்கள்.

விளைவு: பல முஸ்லிம் கிரமங்கள் இந்தியப் படையினருதும், இந்தியக் கைக்கூலிகளினுடையதும் தாக்குதல்களுக்கு உள்ளாகவேண்டிய துர்பாக்கிய நிலை உருவானது.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு, பொத்துவில், காத்தான்குடி, மூதூர், ஓட்டைமாவடி போன்ற முஸ்லிம் கிராமங்கள் இந்தியப் படையின் தாக்குதல் கொடுமைகளுக்கு உள்ளாயின.

தாக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்கள்:

முஸ்லிம்கள் மீதான இந்தியப் படையினரின் தாக்குதல்களுக்கு முத்தாய்ப்பாக அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

இந்திய றோவினால் வழிநடத்தப்பட்ட திறீ ஸ்டார் அமைப்புடன் இணைந்து சென்ற இந்தியப்படையினர் அம்பாறை மாவட்டத்தில் சாந்தமருது மற்றும் மாளிகைக்காடு முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

1988ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்த கிராமங்களுக்கு இந்தியப் படையினர் வாகனங்களில் வந்திறங்கி சகட்டுமேனிக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 16 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 67 வீடுகள் சூறையாடப்பட்டு சேதமாக்கப்பட்டன. 65 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், உடமைகள் சேதமாக்கப்பட்டதாக கணிப்பிடப்பட்டது. பல முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளானார்கள். இரண்டு வயதுக் குழந்தைகள் முதல் 60 வயது முதியவர்கள்வரை இந்தியப் படையினரால் கொல்லப்பட்டிருந்தார்கள்.   விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இந்தக் கிராமத்து மக்கள் தஞ்சம் அளித்தார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு.

இந்தக் கிராமங்கள் முழுக்கமுழுக்க முஸ்லிம் கிராமங்கள் என்பதும் இந்தக் கிராமங்கள் மீது இந்தியப் படையினர் தாக்குதல் மேற்கொள்ளுவதற்கான இரண்டாவது காரணம்.  இதேபோன்ற தாக்குதல் சம்பவங்கள் பொத்துவில், காத்தான்குடி, மூதூர், ஓட்டைமாவடி போன்ற முஸ்லிம் கிராமங்களில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

“அது நாங்கள் அல்ல..“

முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியப் படையினர் தாக்குதல் நடாத்துவது பற்றி பல கண்டனங்கள் எழுந்தன.

இந்திய முஸ்லிம் அமைப்புக்கள் மூலமாக இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட ஆரம்பித்தன. களத்தில் இருந்த இந்தியப் படையினர் இலகுவாகவே பொறுப்பை திறிஸ்டார் அமைப்பின் மீது சுமத்தியிருந்தார்கள்.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து 1988 ஏப்ரல் மாதம் இந்தியப்படைத் தளபதிகளுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியப் படையின் அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்த கிருஷ்ணசுவாமி லோகநாதன் அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் “இந்திய-இலங்கை ஒப்பத்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்கமறுத்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை முற்றாகவே அழிக்கும்படியான உத்தரவு இந்தியப் படையினருக்கு கிடைக்கப்பெற்றது. அதனால் புலிகளுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் அரவணைக்கவேண்டிய ஒரு தேவை எங்களுக்கு உருவானது. திறிஸ்டார் என்ற அமைப்பும் அந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த திறிஸ்டார் உறுப்பினர்கள் தங்களுடைய ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு எதிராக இப்படித் திருப்புவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்று தெரிவித்திருந்தார்.

அதாவது தமக்கெதிராக எழுப்பப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை மிகவும் இலகுவாக தமிழ் இயக்கங்கள் மீது அவர் திருப்பிவிட்டிருந்தார்.

வரப்பிந்திய படையினர்:

இதில் ஒரு விடயம் முக்கிமானது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற இடங்களில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இந்தியப் படையின் முகாம்கள் அமைந்திருந்தன. முஸ்லிம் கிராமங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சுமார் ஒன்று முதல் மூன்று மணி நேரம்வரை நீடித்தன. ஆனால் ஒவ்வொரு தடவையும் தாக்குதல் நடைபெற்று முடிந்து சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர்தான் இந்தியப் படையினர் ஸ்தலத்திற்கு வருகை தந்திருந்தார்கள்(தமிழ் சினிமாக்களில் இந்தியப் பொலிசார் வருவதைப் போன்று).

இந்தியப் படையினரே இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமாணவர்கள் என்று முஸ்லிம்கள் நம்புவதற்கு இவைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

அவலங்கள் தொடரும்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடன் முஸ்லிம்கள் செய்துகொண்ட ஒப்பந்தம்!- (அவலங்களின் அத்தியாயங்கள்- 38) –நிராஜ் டேவிட்
  • by admin
  • November 19, 2012
images-13.jpg
 

இந்தியப் படையினர் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப் பகுதிகளில் முஸ்லிம்கள் மீது அவர்கள் வெளிப்படுத்திய வெறுப்புணர்விற்கான சில மாதிரிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்.

கிழக்கு முஸ்லிம்களின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு மோசமான அவலநிலையை அவர்கள் சந்தித்த காலம் என்று இந்தியப்படையின் ஆக்கிரமிப்பு காலத்தைக் குறிப்பிடலாம்.

அதேவேளை முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிக நெருக்கத்தினை ஏற்படுத்திய காலப்பகுதி என்றும் அந்தக் காலப்பகுதியைக் குறிப்பிடலாம்.

ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு இந்தியப்படையினரைப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தார்கள். கால ஓட்டத்தில் அவ்வாறு செய்யவும் தலைப்பட்டார்கள்.

மட்டக்களப்பு தரவை, தாண்டியடி, கிளிநொச்சி போன்ற இடங்களில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏராளமான முஸ்லிம் மாவீரர்களின் கல்லறைகள் அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. (சிறிலங்காப் படைகளால் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்படும்வரை முஸ்லிம்களின் கல்லறைகள் அங்கு பேணப்பட்டுவந்தன)

இந்தியப்படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், அந்தப் பங்களிப்பினால் இலங்கையின் இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்ட அவலங்கள் பற்றியும் மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

அதற்கு முன்பாக இந்தியப்படை காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

முஸ்லிம்களும் ஈரோஸ் அமைப்பும்

தமிழீழ போராட்ட அமைப்புக்களிலேயே ஈரோஸ் (EROS- Eelam Revolutionary Organisation of Students) அமைப்புத்தான்; கிழக்கு முஸ்லிம்களையும் உள்ளடக்கியதான ஒரு விரிந்த போராட்டப்பாதையை உருவாக்கி அதில் பயணிக்கவும் தலைப்பட்ட முதலாவது அமைப்பு என்று கூறலாம்.

1975ம் ஆண்டு இளையதம்பி இரட்ணசபாபதி மற்றும் பொறியியலாளர் ஏ.ஆர். அருட்பிரகாசம் (அருளர்) போன்றவர்களால் லண்டனில் வைத்து ஈரோஸ் அமைப்பு உருவாக்கப்பட்டபொழுதே கிழக்கு வாழ் இஸ்லாமியர்களின் தேவைகள், இருப்பு, எதிர்காலம் போன்றனவற்றையும் கருத்தில் கொண்டே அந்த அமைப்பின் கொள்கைகள், செயற்பாடுகள் போன்றன வடிவமைக்கப்பட்டிருந்தன.

போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் இஸ்லாமியர்களின் தனித்துவம் போணப்படவேண்டும் என்பது ஈரோஸ் அமைப்பின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாவே இருந்துவந்தது.

ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அனைத்தும் கிழக்குவாழ் முஸ்லிம்களை தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பகுதியாகவே கருதி அவர்களைக் கையாள முற்பட்ட காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்ற பார்வையைத் தனதாகக் கொண்ட ஒரே தமிழ் போராட்ட அமைப்பு ஈரோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் அமைப்பும் ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான தேசிய இனமாகக் கருதி அவர்களை அனுகவில்லை என்றுதான் கூறவேண்டும்.

(இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட இருந்த வடக்கு கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகசபையின் பிரதிநிதிகளாக சில இஸ்லாமிம்களை புலிகள் பிரேரித்திருந்தாலும், அந்த முஸ்லிம் பிரதிநிதிகள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதைவிட புலிகள் அமைப்பின் முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற அடையாளத்தையே அப்பொழுது கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது)

இப்படியான பின்னணியில்தான் 17.04.1988 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் ஒரு வரலாற்று ஒப்பந்தம் ஏற்பட்டது.

இலங்கையின் இனவிடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு தமிழ் அமைப்பிற்கும் இஸ்லாமியச் சமூகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முதலாவது ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தூதுக்குழு

சென்னை அடையாற்றில் உள்ள இந்திரா நகரில்தான் புலிகளின் அலுவலகம் இருந்தது. அலுவலகத்திற்கு பொறுப்பாக கஸ்ரோ இருந்தார். புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி சுப்பிரமணியம், கிட்டு போன்றோரும் அங்கு இருந்தார்கள்.

இந்தியப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலகட்டத்திலும் இந்த அலுவலகம் செயற்பட்டுக்கொண்டுதான் இருந்தது.

சென்னையில் இருந்த கிட்டு உட்பட பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துகொண்டிருந்த பொழுதும் இந்திரா நகரில் இருந்த புலிகளின் அலுவலகம் இயங்கிக்கொண்டுதான் இருந்தது.

அந்த அலுவலகத்தில் இருந்த சக்திவாய்ந்த தொலைத்தொடர்புக் கருவிகளினுடாக வன்னியில் இருந்த புலிகளின் தலைமையுடன் கிட்டு தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

(புலிகளின் நடவடிக்கை தொடர்பான முக்கியமான தகவல்களை ஒட்டுக்கேட்டு அறிந்துகொள்ளமுடியும் என்ற காரணத்தால் இந்த தொலைத்தொடர்பு கருவிகளை புலிகள் சென்னையில் வைத்திருப்பதற்கு இந்தியப் புலனாய்வுத்துறை தெரிந்தே அனுமதித்திருந்தது)

1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் துதுக்குழு விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை சென்னை அடையாற்றில் இந்திரா நகரில் இருந்த புலிகளின் அலுவலகத்தின் ஆரம்பித்தது.

இந்த பேச்சுவார்தைக்கு முஸ்லிம்கள் தரப்பில் பதியுதீன் முகமட் தலைமை தாக்கினார். கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான எம்.ஐ.எம். மொகைதீன் அவர்களும் அங்கம் வகித்திருந்தார். புலிகள் தரப்பில் தளபதி கிட்டு தலைமைதாங்கினார். பேபி சுப்ரமணியம் உட்பட சில முக்கியஸ்தர்கள் புலிகள் தரப்பில் கலந்துகொண்டார்கள்.

முன்னர் சிறிலங்காவின் கல்வி அமைச்சராக இருந்த பதியுதின் முகமட் பற்றிப் பெரிதாக எனக்குத் தெரியாது. வியாபாரத்ததையே முதன்மையாக நினைத்துக்கொண்டிருந்த கிழக்கு முஸ்லிம்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை கல்விப்பாதையில் நடப்பித்த ஒரு முஸ்லிம் தலைவர் என்பதைத் தவிர அவர் பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது.

ஆனால் முஸ்லிம்களின் துதுக்குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்ர் எம்.ஐ.எம்.முகைதீன் எனக்கு நன்கு பரிச்சயமானவர். முஸ்லிம்கள் தொடர்பான ஆழ்ந்த அக்கரை உள்ளவர். அதேவேளை தமிழ் முஸ்லிம் உறவு நீடித்து நிலைக்கவேண்டும் என்பதில் அதிக கரிசனை உள்ளவர்.

2002 சமாதான காலத்தில் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையினால புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் குலைக்கும் சதிகளுக்கு இந்தியா கிழக்கின் முஸ்லிம்களைப் பயன்படுத்த நினைத்த நேரத்தில், இந்தியச் சதியை முறியடிக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறையை வெளிப்படுத்தியவர் முகைதீன்.

கிழக்கு முஸ்லிம்களின் பிரதான பிரச்சனை அவர்களது வயல் நிலங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருப்பதுதான் என்பதை உணர்ந்துகொண்டு, புலிகளுடன் இதுபற்றிப் பேசி, முஸ்லிம்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள தமது வயல்நிலங்களில் பயிர் செய்யும் ஏற்பாட்டை தனி மனிதனாக நின்று மேற்கொண்டவர் முகைதின்.

புலிகளின் பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் தொடர்சியான கலறந்துரையாடல்களை ஏற்பாடு செய்து, அந்தச் சந்திப்புக்களினூடாக கிழக்கில் தமிழ் முஸ்லிம் கலவரம் ஏற்படால் தடுத்தவர் ஜனாப் முகைதீன் என்றால் மிகையாகாது. (2002 சமாதான காலத்தில் முகைதீன் தலைமையில் நடைபெற்ற புலிகள்-முஸ்லிம் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)

இப்படியான சில பேச்சுவார்தைகளில் ஒரு ஊடகவியலாளனாகக் கலந்துகொண்டவன் என்கின்ற ரீதியிலும் தமிழ் சமூகத் தலைவர்களிடையேயான சில சந்திப்புக்களை ஏற்பாடுசெய்து ஒருங்கமைப்பாளனாகக் கடமையாற்றியவன் என்கின்ற ரீதியிலும் ஜனாப் எம்.ஐ.எம்.மொகைதீன் அவர்கள் பற்றியும், தனது இனம் தொடர்பான அவர் கொண்டிருந்த வைராக்கியமும் பற்றியும், தமிழ் முஸ்லிம் உறவின் எதிர்காலம் பற்றிய அவரது ஆழ்ந்த அக்கறை பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும்.

எனவே புலிகளுடனான அந்தப் பேச்சுவார்த்தை சம்பிராயபூர்வமானது என்பதைக் கடந்து தமிழ் முஸ்லிம் உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் உயரிய நோக்கத்துடன் கூடியதாக இருந்திருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.

1988 ஏப்ரல் 15ம் திகதி ஆரம்பமான பேச்சுவார்த்தை 16ம் திகதியும் நடைபெற்றது. முஸ்லிம்களின் தனித்துவம், முஸ்லிம்களின் தாயகம், அதிகாரப் பகிர்வு போன்ற முக்கியவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

பேச்சுவார்தையில் பேசப்பட்ட அத்தனை விடயங்களும் வன்னியில் இருந்த புலிகளின் தலைமைக்கு தொலைத்தொடர்பு கருவிகளினூடாக அறிவித்தபடி இருந்தார் கஸ்ரோ. ஒப்பந்தம் பற்றிய முடிவு புலிகளின் தலைமையினால் தொலைத்தொடர்பினூடாக அறிவிக்கப்பட்டதும், 17ம் திகதி புலிகளுக்கும் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.

அந்த ஒப்பந்தத்தில் காணப்பட்ட விடயங்களில் சில:

1. இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட, தமிழ் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஒரு இனக்குழு என்பதையும், வடக்கு கிழக்கு மாகானம் ஏனய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகமாக உள்ளது போலவே முஸ்லிம்களினது பாரம்பரிய தாயகமாக உள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்கின்றோம்.

2. 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது.

3.  தமிழ் பேசும் சமூகத்தின் தாயகத்தற்கும் ஒருமைப்பாட்டிற்கும் முஸ்லிம்கள் குந்தகம் விளைவிக்கக்கூடாது.

4.  ஒன்றிணைந்த வடக்கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம்கள் 30வீதமான பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்க உரித்துடையவர்கள்.

5.  பொதுத்துறை வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள் அந்தந்தப் பிரதேசத்தில் விகிதாசார அடிப்படையில் தெரிவுசெய்யப்படவேண்டும்.

6.  வடக்கு கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் முறைப்படி தெரிவுசெய்யப்படாத பட்சத்தில் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நபர் நியமிக்கப்படவேண்டும்.

7.  தமிழ்பேசும் மக்களின் தாயகத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் அங்குள்ள இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் வகையிலும் அவர்களது பொருளாதார அரசியல் நிர்வாகப் பலத்தினை முறியடிக்கும் கொள்கையுடனும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரச குடியேற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை களையும் வகையில் ஒரு குடியகல்வுக் கொள்கை உருவாக்கப்படவேண்டும்.

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் முக்கியமான விடயங்கள் இவைதான்.

புலிகள் தரப்பில் கிட்டுவும், முஸ்லிம்கள் தரப்பில் பதியுதீன் முகமட் அவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள்.

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் தரப்பும் முஸ்லிம்கள் தரப்பும் முதன்முதலாக ஒரு உடன்பாட்டுக்கு வந்த சந்தர்ப்பம் என்ற வகையில் இந்த ஒப்பந்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

அத்தோடு, விடுதலைப் புலிகளுடன் முஸ்லிம்தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தி உடன்பாடுகண்ட முதலாவது சந்தர்ப்பம் என்ற வகையிலும் இந்த உடன்படிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.

தொடரும்

ind_army01.jpg

ind_army02.jpg

ind_army03.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 39) –நிராஜ் டேவிட்
  • by admin
  • November 19, 2012
ipkf4-1-300x180.jpg
80களின் பிற்பகுதியில் இந்தியப் படைகள் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதி. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியத் துருப்புக்கள், இந்தியாவின் முப்படைகள், ஆயிரக்கணக்கான இந்தியச் சார்பு தமிழ் ஆயதக்குழுக்கள் என்பன, தமிழீழ மக்கள் மீது பாரிய ஆக்கிரமிப்பொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

தமிழீழம் ஒரு திறந்தவெளிச் சிறையாக மாற்றப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் கைதிகளாகவே நடத்தப்பட்டார்கள். வகைதொகையின்றி தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார்கள். கொள்ளைகள், கொலைகள் பரவலாகவே இடம்பெற்றுக் கொண்டிருந்தன.

இப்படி பல காரியங்கள் ஒரு பக்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், மறுபக்கத்தில் மற்றொரு முக்கியமான காரியத்தை இந்தியப் படையின் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தார்கள்.

மிகவும் இரகசியமாக, அதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தைக்  குறிவைத்து பரந்த அளவில் இந்தக் காரியத்தை அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள்.

கஞ்சாச் செய்கை.

வடக்கு கிழக்கு முழுவதிலும் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் கஞ்சா விதைகளை தூவி, கஞ்சா செடிகளை உருவாக்கும் காரியத்தைத்தான் அவர்கள் அதிசிரத்தையுடன்; செய்துகொண்டிருந்தார்கள்.

வடக்கு கிழக்கில் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கஞ்சாச் செடிகளை இந்தியப் படைகள் உருவாக்கினார்கள்.

இந்தியப் படைகள் வடக்கு கிழக்கில் கஞ்சாச் செடிகளை இத்தனை ஆர்வமாக உருவாக்குவதற்கு காணம் என்ன ?

அப்பொழுது இந்த விடயத்தைப் பற்றி தமிழ் மக்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை. அக்காலகட்டத்தில் இந்தியப் படை ஜவான்கள் ஈழத்தில் பல வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

வெளிநாட்டு மின்சார உபகரணங்களை மலிவு விலையில் கொள்வனவு செய்து இந்தியாவிற்கு கொண்டு செல்வது முதல், நுற்றாண்டுகள் பழமைவாய்ந்த பாரிய மரங்களை வெட்டி இந்தியாவிற்கு கொண்டு செல்வது வரை, பல வியாபார நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். கஞ்சா செடிகளை உருவாக்கி கஞ்சாவை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காகவே இந்தியப் படையினர் கஞ்சா செய்கையில் ஆர்வம் காண்பிப்பதாக நினைத்து தமிழ் மக்கள் இந்த விடயத்தில் அத்தனை ஆர்வம் காண்பிக்கவில்லை.

ஆனால் ஈழத்து இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே, இந்தியா இத்தகைய கைங்காரியத்தைச் செய்து வருகின்றது என்று பாவம் எமது மக்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

கேவலமான சதி:

தமிழர் பிரதேசங்களில் இந்தியப் படைகள் கஞ்சா செடிகளை வளர்த்ததற்கு பல காரணங்கள் இருந்தன.

முதலாவது, தமிழ் மக்களை கஞ்சா வியாபாரம் செய்வதற்குத் தூண்டுவது. யுத்த நிலை காரணமாக அக்காலகட்டத்தில் பல தமிழ் விவசாயக் குடும்பங்கள் பொருளாதார இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். நல்ல வருமானமுள்ள ஒரு தொழிலாக கஞ்சா வியாபாரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆயிரக்கணக்கான தமிழ் விவசாயக் குடும்பங்களை, கஞ்சாப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தமுடியும் என்று இந்தியத் தரப்பினர் நினைத்திருக்கலாம்.

ஆனால், இந்தியப் படையினர் வடக்கு கிழக்கு மாகாணத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையை பாரிய அளவில் மேற்கொள்ளுவதற்கு, மேற் கூறப்பட்டதை விட மற்றொரு மற்றொரு முக்கிய நோக்கம் அவர்களுக்கு இருந்ததாக பின்நாட்களில் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருந்தார்கள். வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்களை கஞ்சாப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் ஒரு கேவலமான நோக்கம் இந்தியாவிடம் காணப்பட்டதாக புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

கஞ்சா புழக்கம் தமிழ் பிரதேசங்களில் அதிகமாக, அதிகமாக, தமிழ் இளைஞர்கள் கஞ்சாவைப் புகைக்க ஆரம்பிப்பார்கள். படிப்படியாக கஞ்சாப் பழக்கம் தமிழ் இளைஞர்களிடையே பரவிவிடும்.

கஞ்சா புகைப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று எம்மில் அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கும். எதற்கும் கவலைப்படாமல், அனைத்திற்குமே சிரித்தபடி, ஒருவித போதை மிதப்பில் இருப்பார்கள். அவர்களுக்கு கோபம் என்பது ஒருபோதும் வராது. எந்தவித உணர்ச்சியும் ஏற்படாது. எப்படியான நிகழ்வுகளும் அவர்களைப் பாதிக்காது. ஒரு முறை கஞ்சாவை உட்கொண்டவர்கள், தொடர்ந்து கஞ்சாவை உள்கொள்ளும்படியான போதைக்கு அடிமைகளாக மாறிவிடுவார்கள். இதுதான் கஞ்சாவின் மகிமை.

இப்படிப்பட்ட போதைக்கு, தமிழ் இளைஞர்களை அடிமையாக்க இந்தியா ஏன் விரும்பியது?

சிதைக்கும் நோக்கம்:

ஈழத்தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்ச்சிகளை அழிக்க இந்தியா விரும்பியது. எதிர்கால ஈழத் தமிழ் சந்ததியினரை, தமது இனம் சார்ந்த எந்தவித பிரஞ்சையும் இல்லாத ஒரு சந்ததியாக உருவாகவேண்டும் என்று இந்தியா திட்டமிட்டது. தனது இந்த கேவலமான சதியின் ஒரு நகர்வாகத்தான், இந்தியத் தரப்பினர் தமிழீழப் பிரதேசங்களில் கஞ்சாச் செடிகளை இலட்சக்கணக்கில் உருவாக்கியிருந்தார்கள்.

இந்தியப் படையினர் உருவாக்கியிருந்த கஞ்சாச் செடிகள், தற்பொழுது கூட வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இந்தியப் படையினர் உருவாக்கியிருந்த கஞ்சாச் செடிகளை அழிக்க, இந்தியப் படையின் வெளியேற்றத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் வனவளத்துறை கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருந்ததாக புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஒருதடவை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சண்டைகள் அதிகம் இடம்பெறும் பிரதேசங்களான வாகநேரி, பொண்டுகள்சேனை, காயங்கேணி, குளத்துமேடு போன்ற பிரதேசங்களில் இந்தியப் படையினர் விதைத்த இலட்சக்கணக்கான கஞ்சாச் செடிகள் இப்பொழுதும் இருக்கத்தான் செய்கின்றன.

முகாம்களிலும்:

தமிழ் இளைஞர்களிடையே போதைப் பழக்கவழக்கத்தை உருவாக்கும் நோக்குடன் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையின் மற்றொரு பக்கம், அக்காலங்களில் இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழ் ஆயுதக் குழக்களின் முகாம்களில் அரங்கேறியிருந்தது. தமிழ் குழுக்களது முகாம்களுக்கு இந்திய ’ரம்’ மதுப்புட்டிகள் பெட்டி பெட்டியாக வினியோகிக்கப்பட்டன.

தமிழ் ஆயுதக் குழுக்களில் அங்கம் வகித்த இளைஞர்களில் பலர் இந்தியாவின் விஷேட மதுபானமான ரம் இற்கு அடிமையாகியிருந்தார்கள். அத்துடன் வெற்றிலை பாக்குடன் ஒரு வகைப் போதை வஸ்தை கலந்து தயாரிக்கப்படும் ’பாண் பராக்’ எனப்படும்- மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பொருளுக்கும், தமிழ் ஆயுதக் குழுக்களில் அங்கம் வகித்த இளைஞர்களில் பலர் திட்டமிட்டு அடிமையாக்கப்பட்டிருந்தார்கள்.

பங்களாதேஷிலும்….

இந்த கஞ்சாச் செடி வளர்க்கும் சதியை இந்தியா ஈழத்தில் மட்டும் அரங்கேற்றியிருக்கவில்லை. ஏற்கனவே பங்காளதேஷை விடுவிக்கவென்று இந்தியப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்த காலத்திலும், இதே வகையான பயிர் வளர்ப்பை அங்கு மேற்கொண்டிருந்தார்கள். ஈழத்தைப் போலல்லாது பங்காளதேஷில் இந்தியா தனது சதியின் பயனை அறுவடைசெய்து வருகின்றது.

முன்னர் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்த பங்களாதேஷ் நாட்டின் இன்றைய தலைமுறையினரில் அதிகமானவர்கள் கஞ்சா போதைப் பழக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். பங்களாதேஷின் இளம் தலைமுறையினரிடையே இன்று புரையோடிக் காணப்படும் போதை வஸ்துப் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பதற்கு அந்நாட்டு அரசு இன்றைக்கும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் விடுதலைப் போராட்டம் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களிலுள்ள காடுகளிலும், கிராமங்களிலும் கூட இந்தியப் படைகள் கஞ்சாப் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதும் நோக்கத்தக்கது.

இரகசிய நடவடிக்கைகள்.

இலங்கையைப் பொறுத்த வரையில் இந்திய இராணுவத்தினர் பல்வேறு சந்தர்பங்களில் பலவிதமான இரகசிய இராணுவ நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்தார்கள். மிகவும் இரகசியமாகத் திட்டமிடப்பட்டிருந்த இத்தகைய நடவடிக்கைகளில் சில நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தன. சில வெளித்தெரியவராமல் மறைக்கப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான இந்தியாவின் இரகசியப் புலனாய்வு நடவடிக்கைகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இலங்கையில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட சில முக்கிய இராணுவ நடவடிக்கைகள் பற்றி இன்றைய அத்தியாயத்தில் ஓரளவு மேலோட்டமாக ஆராய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இலங்கையின் இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா நேரடியாகவும், மறைமுகமாகவும், இரகசியமாகவும் பல தலையீடுகளைச் செய்து வருகின்ற இன்றைய காலகட்டத்தில், இலங்கை தொடர்பான இந்தியாவின் கடந்தகால அணுகுமுறை எவ்வாறு இருந்தது என்பது பற்றிய அறிவும் தெளிவும் தமிழ் இனத்தின் மத்தியில் இருப்பது அவசியம் என்பது – காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது.

இராணுவ நடவடிக்கைகள்:

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் இராணுவத் தலையீடுகள் முதன்முதலில் 1971ம் ஆண்டு ஆரம்பமாகி இருந்தன – என்று கூறலாம்.  ஜே.வீ.பி.யை அடக்குவதற்கு என்று, ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையின் பெயரில், இந்தியப்படைகள் இலங்கைக்கு வந்திருந்தன.

அதன் பின்னர் 1987ம் ஆண்டில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு என்று கூறி, இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்திருந்தன.

இந்த இரண்டு நடவடிக்கைளும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் அரசாங்கத்தின் அழைப்பின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதேபோன்று விடுதலைப்புலிகள் யாழ் குடாவைக் கைப்பற்ற மேற்கொண்டிருந்த ஓயாத அலைகள்-4 நடவடிக்கைகளின் போது, யாழ் குடாவில் முற்றுகைக்கு உள்ளாகி இருந்த ஸ்ரீலங்கா படையினரைக் காப்பாற்ற இந்தியப் படையினர் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி இருந்தார்கள்.

பலாலி தளத்தைக் கைப்பற்றி ஒரு நாள் முழுவதும் அதனைத் தக்கவைத்தபடி ஸ்ரீலங்காப் படையினரை வெளியேற்றுவதற்கு இந்தியப் படையினர் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இறுதி நேரத்தில் பலவேறு காரணங்களினால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டன.

அந்த நடவடிக்கையும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பெயரிலேயே மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

அதேவேளை, ஸ்ரீலங்கா அரசின் அனுமதி இல்லாமல் இலங்கையில் படைநடவடிக்கைள் எடுப்பதற்கான திட்டங்கள் சிலவற்றையும் இந்தியப் படையினர் முன்னர் வகுத்திருந்தார்கள்.

அவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியுமிருந்தார்கள்.

1987ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஸ்ரீலங்காப் படைகள் யாழ்ப்பாணம் வடமாராட்சியில் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது, யாழ் மக்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போடும் ஒப்பரேசன் பூமாலை நடவடிக்கை 04.06.1987 அன்று இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுமதி இன்றி இலங்கையில் இந்தியா மேற்கொண்ட ஒரு அதிரடி இராணுவ நடவடிக்கை இது.

இரகசியத் திட்டங்கள்:

இது போன்று சிறிலங்கா அரசுக்கு எதிராக இலங்கை மண்ணில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு இந்தியா பல இரகசியத் திட்டங்களை வகுத்திருந்த விடயம் பின்நாட்களிலேயே வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

80 களின் ஆரம்பத்தில் ஈழப் போராளிகளை அடக்குவதற்கு என்று ஜே.ஆர். அரசாங்கம் மேற்குலக நாடுகளின் பக்கம் சாய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சிறிலங்காவை வழிக்குக் கொண்டு வருவதற்கும், இலங்கை மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கும் – இந்தியா பல திட்டங்களை வகுத்திருந்தது.

இனப்பிரச்சினையைக் காரணம் காண்பித்து இந்தியாவின் அப்போதைய ஜென்ம விரோதிகளான அமெரிக்கா, பாக்கிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் இருந்தெல்லாம் ஸ்ரீலங்கா அரசாங்கம், ஆயுதம் மற்றும் பல்வேறு உதவிகளையெல்லாம் பெற ஆரம்பித்திருந்ததைத் தொடர்ந்து, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கம் இந்திய அரசியல் தலைமையிடம் வலுப்பெற ஆரம்பித்திருந்தது.

அதற்கான ஒரு இராணுவத் திட்டமும் தீட்டப்பட்டது.

அதேவேளை, இந்திய இராணுவத்தின் தளபதி பொறுப்பை கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜீ புதிதாக ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தியப் படைகள் நவீனமயப்படுத்தப்பட்டன. புதிய போர் யுக்திகள் வகுக்கப்பட்டன. நவீன ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவம் தான் புதிதாகப் பெற்றிருந்த தனது பலத்தைப் பரீட்சித்துப்பார்க்க ஒரு இடத்தைத் தேடிவந்தது.

அதேவேளை இலங்கை மீது ஒரு ஆக்கிரமிப்பை மேற்கொள்ளவேண்டிய அரசியல் தேவையும் உருவாகி இருந்ததால், இலங்கைத் தீவை தனது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு நிலையமாகத் தெரிவுசெய்து கொண்டது. இலங்கை மீது இராணுவ நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்தியப் படைத்தளபதி சுந்தர்ஜீயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை மீது மேற்கொள்ளப்பட இருந்த படையெடுப்பிற்கு யார்யார் தலைமை தாங்குவது, எந்தெந்த இலக்குகளைத் தாக்குவது, எந்தெந்தப் படைப்பிரிவுகள் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்குபற்றுவது என்றெல்லாம் திர்மாணிக்கப்பட்டிருந்தது. இலங்கை மீது மேற்கொள்ளப்பட இருந்த தாக்குதல் நடவடிக்கைக்கு திரிஷக்தி என்று பெயரும் சூட்டப்பட்டிருந்தது.

ஏதோ காரணத்திற்காக இந்த நடவடிக்கை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது.

ஸ்ரீலங்காவிற்கான பணி:

இதேபோன்று இலங்கைக்கு எதிரான மேற்கொள்வதற்கென்று மற்றொரு இரகசிய நடவடிக்கையும் திட்டமிட்டப்பட்டிருந்தது. ராஜீவ் காந்தியின் பணிப்புரையின் பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்காக இந்திய இராணுவத்தின் பல்வேறு படை அணிகளைக் கொண்ட தனிப் பிரிவொன்றும் 1987ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. `MO-SL’  என்று இந்த இராணுவ நடவடிக்கைக்குப் பெயரிடப்பட்டிருந்தது.

`MO-SL’ என்றால் (Mission Of Sri Lanka) என்று அர்த்தம்.

87ம் ஆண்டு ஜுன் மாதம் 4ம் திகதி இந்தியப் படையினர் இலங்கையில் மேற்கொண்ட ஒப்பரேசன் பூமாலை(Operation Poomalai) நடவடிக்கைக்கு ஸ்ரீலங்காப் படையினர் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தால் இந்தியப் படையின்; இந்த விஷேட பிரிவினர் களமிறக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் ஒப்பரேஷன் பூமாலை நடவடிக்கையின்போது ஸ்ரீலங்காப் படையினர் எதுவுமே செய்யமுடியாது அடங்கிப்போயிருந்ததால் அதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயிருந்தது.

இதேபோன்று, இலங்கையில் மேற்கொள்ளுவதற்கென்று இந்தியா மற்றொரு இரகசிய இராணுவ நடவடிக்கையையும் திட்டமிட்டிருந்தது.

ஒப்பிரேஷன் கொழும்பு:

இந்தியப் படைகள் இலங்கைக்கு வருவதற்கு சற்று முந்திய காலப்பகுதியில், கொழும்பில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன்; இரகசிய இராணுவ நடவடிக்கை ஒன்றை இந்திய இராணுவம் திட்டமிட்டிருந்தது.

யாழ்பாணத்தில் ஆப்பரேசன் பூமாலை(Operation Poomalai) இராணுவ நடவடிக்கை இடம்பெறுவதற்கு சற்று முன்னர் இந்த இரகசிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டிருந்தது.

வெளியே எவருக்கும் தெரியாது இந்தியா மேற்கொண்டிருந்த இந்த இரகசிய நடவடிக்கை பற்றி, ராஜேஷ் காடியன் என்கின்ற இந்திய இராணுவ ஆய்வாளர் பின்னாட்களிலேயே தகவல் வெளியிட்டிருந்தார். INDIA’S SRI LANKA FIASCO என்ற தனது ஆய்வு நூலில் இந்தியாவின் இந்த இரகசிய இராணுவ நடவடிக்கை பற்றி அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.

1987 இல், ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பு மீது, அல்லது கொழும்பிலுள்ள முக்கிய இலக்கொன்றின் மீது திடீர் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு இந்தியா திட்டமிட்டிருந்தது. அதற்காக இந்திய இராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற பராக் கொமாண்டோக்கள் 100 பேர் கொழும்பிற்கு அனுப்பப்பட்டிருந்தார்கள்.

இந்தப் பராக் கொமாண்டோக்கள் பொதுமக்கள் போலவும், வியாபாரிகள் போலம் மாறுவேடமிட்டே கொழும்புக்கு வந்திருந்தார்கள். கொழும்பின் புறநகர் பகுதியில் இருந்த இந்திய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா ஒன்றிலும், மற்றொரு இந்தியருக்குச் சொந்தமான ஆடம்பர ஹோட்டல் ஒன்றிலும் இவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.

இவர்கள் மேற்கொள்ள இருந்த தாக்குதலுக்கு உதவுவதற்காகவும், மேலதிக துருப்பக்களை ஏற்றி இறக்குவதற்கு ஏதுவாகவும், நான்கு எம்.ஐ.-8 ரக உலங்குவானூர்திகள் இந்தியாவின் தென்கரைப் பகுதி ஒன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஏதோ காரணத்தினால் இறுதி நேரத்தில் அந்த இரகசிய நடவடிக்கை கைவிடப்பட்டது. பின்னர் அந்தப் பராக்கொமாண்டோக்களில் சிலர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைப் பாதுகாக்க அனுப்பட்டார்கள் மற்றவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்பட்டார்கள்.

மலையகத்தில்:

இதேபோன்று,1987-88ம் ஆண்டுகளில் இலங்கையில் இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தபோதும், இலங்கையில் மேற்கொள்வதற்கு என்று இந்திய இராணுவத்தினர் மற்றொரு இரகசியத் திட்டத்தை தீட்டியிருந்தார்கள்.

இந்தியாவிற்கு எதிராக ஜே.வீ.பியினர் தென்பகுதியில் பிரச்சாரங்களைக் கட்விழ்த்துவிட்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வன்முறையில் இறங்கியிருந்த காலப்பகுதியில் இந்தியப் படையினர் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டடிருந்தனர்.

இந்தியப் பொருட்களை கடைகளில் விற்கக்கூடாது என்று உத்தரவிட்டு இந்திய விரோதப் போக்கை ஜே.வீ.பியினர் மிக மேசமாக தென்பகுதிகளில் மேற்கொண்டு வந்த வேளையில், மலைநாட்டில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு எதிராகவும் ஏதாவது தாக்குதல்கள் இடம்பெற்றுவிடும் என்று இலங்கையில் இருந்த இந்தியப் படையினர் எதிர்பார்த்தார்கள்.

அப்படி மலையகத்தில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது தாக்குதல்கள் இடம்பெறும் பட்சத்தில் மலையகத்தில் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு, இந்தியப் படையின் அதிகாரி லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங்கின் தலைமையில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

இதற்காக பலாலி தளத்தில் இந்திய இராணுவத்தின்ஒரு விஷேட பரசூட் கொமாண்டோ அணி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஹெலிக்கொப்பர்ஸ் மூலமாக இவர்களை மலைநாட்டில் தரையிறக்குவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. அதேவேளை மட்டக்களப்பில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் 76வது காலட் படைப்பிரிவை மட்-பதுளை ஏ-5 வீதி வழியாக மலைநாட்டிற்கு நகர்த்தும் திட்டத்தையும் இந்தியப்படையினர் கைவசம் தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.

ஆனால் மலையகத்தில் இந்தியத் தமிழர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் எதுவும் ஏற்படாததால் இந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

மாத்தையாவிற்கு துணையாக..

இதேபோன்று புலிகள் அமைப்பின் பிரதித்தலைவர் மாத்தையா, புலிகளின் தலைமைக்கு எதிராக சதி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போதும், இந்தியா தனது படைகளை வன்னிக்கு அனுப்பி மாத்தையாவிற்குத் துணையாகக் களம் இறக்கும் திட்டத்தை வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

ஆனால் அந்தச் சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டுவிட்டதால், அது கை கூடாமல் போயிருந்தது.

இதேபோன்று புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததைத் தொடர்ந்தும், இந்தியாவில் இருந்த ஈ.என்.டி.எல்.எப் அமைப்பை கருணாவுடன் இணைத்து ஒரு இரகசிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டிருந்தது. (அந்த நடவடிக்கை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்ப்போம்)

கேள்விகள்

இந்த இடத்தில் எமது வாசகர்களாலும், பொதுவாக பல தமிழ் மக்களாலும், குறிப்பாக இளையதலைமுறையினராலும் எழுப்பப்படுகின்ற சில கேள்விகள் பற்றிப் பார்க்கவேண்டி இருக்கின்றது.

1)இந்தியா எதற்காக ஈழப்பிரச்சனையில் தலையீடு செய்தது?

2)தமிழ் மக்களைக் காப்பாற்றத்தானே இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டது?

3)தமிழ் மக்களில் அக்கறைகொண்டு இலங்கைப் பிரச்சனையில் தலையிட்ட இந்தியா மீது விடுதலைப் புலிகள் எதற்காகத் தாக்குதல் நடாத்தினார்கள்?

4)புலிகள் செய்தது சரியா?

5)புலிகள்-இந்திய யுத்தம் எவ்வாறு ஆரம்பமானது?

6)ஏன் ஆரம்பமானது?

எமது வாசகர்கள் மத்தியில் இருந்து எழுகின்ற இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை அடுத்தவாரம் முதல் தேடுவதற்கு முனைவோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கும் இந்தியப்படையினருக்கும் இடையில் ஏன் யுத்தம் மூண்டது? (அவலங்களின் அத்தியாயங்கள்- 40) – நிராஜ் டேவிட்
  • by admin
  • November 19, 2012
image0121.jpg
 
 

இந்தியாவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏன் முரண்பாடு ஏற்பட்டது? புலிகளுக்கும் இந்தியப்படையினருக்கும் இடையில் ஏன் யுத்தம் மூண்டது? தமிழர்களைக் காப்பாற்றவென்று இலங்கை வந்த இந்தியப் படையினரை விடுதலைப் புலிகள் எதற்காகத் தாக்கினார்கள்?

அவலங்களின் அத்தியாயங்கள் என்ற இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்துவருகின்ற வாசகர்கள் அடிக்கடி எழுப்புகின்ற கேள்விகள் இவை.

இந்தியாவின் தமிழ்நாட்டில் இருக்கின்ற மாணவர்கள், புலம்பெயர் இளையதலைமுறையினர் போன்றவர்களுக்கு இதுபோன்ற சந்தேகங்கள் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

எனவே இந்தக் கேள்விகள், சந்தேகங்கள் போன்றனவற்றிற்கான பதிலைச் சரியானபடி தேடியதன் பின்னர்தான் இந்திய-புலிகள் யுத்தத்தின் மற்றய பக்கங்களை இந்தத் தொடரில்; பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

வரலாறு

இந்தியாவின் கடந்தகால சரித்திரம் தெரிந்தவர்களுக்கும், இந்தியா இலங்கை விடயத்தில் கடைப்பிடித்துவந்த கடந்தகால கொள்ளைகள் பற்றிய அறிவை ஓரளவு கொண்டிருப்பவர்களும், ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பெரிதாக ஒன்றும் ஆச்சரியம் இருக்கச் சந்தர்பம் இல்லை.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர, இந்தியா ஒருபோதும் ஈழத்தமிழருக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்தது கிடையாது என்பதுதான் உண்மையான வரலாறு.

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவின் தேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்புகள் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்ததாக வரலாறு இல்லை. சினிமாவை அடிப்படையாகக்கொண்ட கலாச்சாரத் தொடர்புகள் அல்லது வியாபார ரீதியிலான தொடர்புகள் என்பன தவிர மிகவும் மேலோட்டமான ஒரு அரசியல் தொடர்பு மாத்திரமே இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்து வந்தது.

1948ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் காரணமாக 10 இலட்சம் மலைநாட்டுத் தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டு, இலங்கையின் பூர்வீகத் தமிழ்க் குடிகள் சந்தேகப் பிரஜைகள் ஆக்கப்பட்ட காலம் தொடக்கம், இலங்கையில் இருந்த தமிழர்கள் பற்றி இந்தியா ஒருவிதப் பாராமுகப் போக்கையே கடைப்பிடித்து வந்தது.

ஈழத் தமிழரில் அக்கறை இன்றி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்:

1954 இல் கைச்சாத்திடப்பட்ட நேரு-கொத்தலாவல ஒப்பந்தம், 1964 இல் கைச்சாத்திடப்பட்ட சாஸ்திரி-சிறிமா ஒப்பந்தம், 1974 கச்சத்தீவு ஒப்பந்தம் போன்றவை முதற்கொண்டு, 1987 இலங்கை-இந்திய ஒப்பந்தம் வரை, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் போதிய அக்கறை இன்றியே இந்த ஒப்பந்தங்கள்; இந்தியாவினால் செய்துகொள்ளப்பட்டிருந்தன.

குடியுரிமைப் பறிப்பில் சிங்களப் பேரினவாதிகள் இலங்கையில் ஆரம்பித்த தமிழ் இன விரோத நடவடிக்கைகள், மொழி உரிமை, நில உரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை, கலாச்சார உரிமை என்று தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தபோதும், சிங்களத்தின் இந்த அநீதியை எதிர்த்து இந்தியா எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

சிங்கள அடக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் பல்வேறு காந்திவழி சாத்வீகப் போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதும், அவற்றிற்குத் தார்மீக ஆதரவைக்கூட வழங்க அந்த ’காந்தியின் தேசம்’ அப்பொழுது முன்வரவில்லை.

தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டம் சிங்கள இனவாத அரசுகளினால் அடக்கி ஒடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் சரி, 1956, 1958, 1961 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராகச் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடாத்தி நூற்றுக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த காலங்களிலும் சரி, குறிப்பிடத்தக்க எந்தவொரு பிரதிபலிப்பையும் இந்தியா வெளிக்காண்பிக்கவில்லை.

1958 இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் இலங்கைத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து சென்னையில் ஒரு பேரணி நடாத்தப்பட்டது. அது போன்று ஈழத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து சிறிய அளவிலான ஒருசில அடையாள போரட்டங்கள் தமிழ் நாட்டில் அவ்வப்பொழுது இடம்பெற்றனவே தவிர, இந்தியாவின் நடுவன் அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடியதான நடவடிக்கைகள் எதுவும் இலங்கைத் தமிழர்களுக்குச் சார்பாக அக்காலத்தில் எடுக்கப்படவேயில்லை.

ஈழத்தமிழ் தலைவர்களின் நகர்வுகள்

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவை எப்படியாவது சம்பந்தப்படுத்திவிட இலங்கையில் இருந்த தமிழ்த் தலைவர்கள் பல முயற்சிகளையும் அப்பொழுது மேற்கொண்டிருந்தார்கள்.

இந்தியாவின் தேசியத் தலைவர்களைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி விளக்கி அவர்களது அனுதாபத்தைப் பெற்றுவிடும் நோக்கத்தில் தமிழ் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வியில்தான் முடிவடைந்தன.

இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழருக்குச் சார்பான ஒரு எழுச்சி அலையை ஏற்படுத்தி இந்தியாவின் மத்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலமே இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவை தலையிடவைக்கமுடியும்; என்று எண்னிய தமிழ் தலைவர்கள் அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு சென்ற ஈழத்தமிழ் தலைவர்கள்:

1972ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தந்தை செல்வா தலைமையில் அமிர்தலிங்கம் அடங்கலான ஒரு குழு தமிழ் நாடு சென்று அப்போதய முதலமைச்சர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் உட்பட பல தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும், சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றி விலாவாரியாக விளக்கம் அளித்தார்கள்.

தமிழ் தலைவர்களின் இந்த விஜயத்தின் போது தந்தை செல்வா அவர்கள் புதுடெல்லி சென்று பாரதப் பிரதமரைச் சந்திக்கவேண்டும் என்று பலத்த முயற்சி மேற்கொண்ட போதிலும், தமிழ் தலைவர்களைச் சந்திக்க டெல்லி மறுப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ் தலைவர்களின் இந்த தமிழ் நாட்டு விஜயம் மற்றும் அவர்கள் தமிழ் நாட்டில் மேற்கொண்ட பிரச்சாரங்கள் என்பன இலங்கைத்தமிழர் பற்றி இந்தியத் தமிழர்களிடம் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியதுடன், இலங்கைத் தமிழருக்கு சார்பான ஒரு நிலையை அவர்கள் எடுப்பதற்கும் ஏதுவாக அமைந்தது.

தமிழ் நாட்டில் வீச ஆரம்பித்த ஈழத் தமிழ் அலை இந்திய நடுவன் அரசிற்கு பாரிய அழுத்தத்தைக் கொடுத்ததுடன், இலங்கை சம்பந்தமாக இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்துவந்த அதன் கொள்கையை மீள்பரிசீலனை செய்யவேண்டிய ஒரு தர்மசங்கடத்தையும் அதற்கு ஏற்படுத்தியிருந்தது.

அக்காலத்தில் ஈழத் தமிழருக்கு சார்பாக தமிழ்நாட்டு அரசு காண்பித்த ஆதரவு, கடைப்பிடித்திருந்த கொள்கை என்பன, 1975 இல் கருணாநிதி தலைமையிலான தமிழ் நாட்டு அரசை இந்தியாவின் மத்திய அரசு கலைப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது. கருணாநிதி தலைமையிலான அரசைக் கலைப்பதற்கு ~இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தமிழர்களுக்குச் சார்பாக தி.மு.க. தலையிட்டதையும் ஒரு காரணமாகக் இந்தியாவின் மத்திய அரசு குற்றம் சுமத்தியிருந்தது.

இந்திய அரசின் பாராமுகத்திற்கான காரணம்:

இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு தென் இந்தியாவில் வசித்து வந்த தமிழர்கள் தனி திராவிட நாடு கேட்டுப் போராட்டம் நடத்திவந்ததும், இந்தி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்று அங்குள்ள தமிழர்களின் போராட்டம் அடிக்கடி தொடர்ந்து வந்ததும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாததற்கு ஒரு பிரதான காரணமாக இருந்தது.

அத்தோடு அக்காலகட்டத்தில் சீனா, பாக்கிஸ்தான் என்று தனது அயல்நாடுகளுடன் இந்தியா சிண்டுமுடித்துக்கொண்டு இருந்ததால் மற்றய அயல்நாடான இலங்கை பக்கம் இருந்து சிக்கல்கள் எதுவும் எழுவதை அது அப்போது விரும்பவில்லை என்பதும் மற்றொரு காரணம்.

ஈழப் பிச்சனையில் அக்கறையெதுவும் காண்பிக்காது, இலங்கை அரசின் சண்டித்தனத்தையெல்லாம் கண்டும் காணாதது போன்று இருந்துவந்த இந்தியாவிற்கு, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டேயாகவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் 1980களின் ஆரம்பத்தில் ஏற்பட்டது.

ஈழத்தமிழர்கள் மீது கொண்ட பாசத்தினால் அல்ல, இந்தியாவின் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் விவகாரங்களில் மூக்கை நுளைக்கவேண்டிய அவசியமொன்று இந்தியாவிற்கு தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டது.

avalam40_01.jpg

avalam40_02.jpg

avalam40_03.jpg

 

இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சதி: (அவலங்களின் அத்தியாயங்கள்- 41) – நிராஜ் டேவிட்
  • by admin
  • November 9, 2012
gun_50-300x225.jpg
 

இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியா எதற்காகத் தலையிடவேண்டிவந்தது என்று தற்பொழுது பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இலங்கையின் இனப்பிரச்சனை விடயங்களில் தமிழர்கள் தொடர்பில் ஒருவிதப் பாராமுகப் போக்கைக் கடைப்பிடித்துவந்த இந்தியா ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை விவகாரத்தினை நோக்கித் தனது பார்வையைச் செலுத்தியேயாகவேண்டிய நிலமை உருவானது.

1977ம் ஆண்டு ஸ்ரீலங்காவின் ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் தனது அரசியல் பாதையில் கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்த வெளிநாட்டுக் கொள்ளைகளே இந்தியாவை இலங்கையின் பக்கம் தனது பார்வையைத் திருப்பவைத்த ஒரு முக்கியமான காரணி என்று கூறலாம்.

இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று கூறியபடி, திறந்த பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்த ஜே.ஆர். அரசு, மேற்கு நாடுகளின் பொருளாதாரச் சந்தைகளுக்கு இலங்கையில் களம் அமைத்துக் கொடுத்திடும் ஒரு அதிரடி அரசியலை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தது. இது இந்தியா அக்காலத்தில் கடைப்பிடித்து வந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு பாரியதொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்ததுடன், இலங்கையின் வளர்ச்சியையிட்டு இந்தியாவை பொறாமை கொள்ளவும் வைத்தது.

அத்தோடு, திருகோணமலையில் ஆங்கிலேயர் விட்டுச்சென்ற எண்ணெய் குதங்களை ஒரு அமெரிக்க நிறுவணத்திற்கு குத்தகைக்கு விடும் முயற்சியையும் இலங்கை அரசு திரைமறைவில் மேற்கொண்டிருந்தது.

கூட்டணி இரகசியமாக வழங்கிய ஆதாரங்கள்:

இலங்கை அரசினால் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் அனுதாபத்தை எப்படியாவது பெற்றுவிட பகிரதப்பிரயத்தனம் மேற்கொண்டிருந்த தமிழ் தலைவர்களுக்கு இந்த விடயம் அவலாகக் கிடைத்தது. எண்ணெய் குதம் விவகாரத்தை த.வி.கூ. தலைவர்கள் இந்தியாவின் காதுகளில் போட்டுவைத்ததுடன் அதற்கான ஆதாரங்களையும் இரகசியமாகத் திரட்டி இந்திய அரசின் பார்வைக்கு அனுப்பிவைத்தார்கள்.

இது இலங்கை விடயத்தில் இந்தியா அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த மற்றுமொரு காரணமாக அமைந்தது. இந்தக் காலகட்டத்தில், இலங்கை அரசின் அடக்குமுறைகளினால் ஏற்கனவே இலங்கையை விட்டு வெளியேறி தமிழ் நாட்டில் தஞ்சமடைய ஆரம்பித்திருந்த ஈழப் போரளிகளின் தீவிரமான பிரச்சாரங்களும், செயற்பாடுகளும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் துன்பங்கள் பற்றிய ஆழ்ந்த அனுதாபத்தையும், உணர்ச்சி வேகத்தையும் ஏற்படுத்த ஆரம்பித்திருந்தன.

1981ம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டது, உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிங்களப் படையினரால் குழப்பப்பட்டது, தமிழ் நாட்டில் இருந்து கதிர்காம யாத்திரை வந்த தனபதியின் கொலை போன்ற பல்வேறு சம்பவங்கள் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கொந்தளிப்பின் விளைவாக ஏற்பட்ட அழுத்தங்கள், இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட்டேயாகவேண்டிய கட்டாயத்தை இந்தியாவின் மத்திய அரசிற்கு ஏற்படுத்தியது.

இந்திராவின் நிலைப்பாடு:

அனைத்திற்கும் மேலாக, 1980 ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறியிருந்த திருமதி. இந்திரா காந்தியின் கரிசனை ஈழத்தழிழர்களுக்குச் சார்பாக மாற ஆரம்பித்திருந்ததும், இந்திய நிலைப்பாட்டில் படிப்படியாக மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்தது.

தமிழ் நாட்டு மக்களிடம் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக அக்காலத்தில் ஏற்பட ஆரம்பித்திருந்த அணுதாபமும், தமிழ் நாட்டு அரசுடன் இந்திராவின் காங்கிரஸ் கட்சி அக்காலகட்டத்தில் செய்துகொண்டிருந்த தேர்தல் உடன்படிக்கையும், ஈழத்தமிழருக்குச் சார்பான ஒரு நிலைப்பாட்டை எடுத்தேயாகவேண்டிய கட்டாயத்தை இந்தியாவின் நடுவன் அரசிற்கு ஏற்படுத்தியிருந்தது.

விளைவு, இந்திரா தலைமையிலான இந்திய அரசின் தலையீடுகள் படிப்படியாக ஈழத்திழர்களுக்கு சார்பாக மாற ஆரம்பித்தது.

1983 ஜுனில் இலங்கை அரசினால் தமிழர்களது போராட்டங்களை அடக்குவதற்கென்று கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டப் பிரிவுகளை எதிர்த்ததன் மூலம் இலங்கையில் இந்தியாவின் தலையீடு ஆரம்பமானது. தொடர்ந்து இந்தியாவின் தலையீடுகள் 83 ஜுலைக் கலவரத்தில் தலையிட்டு சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது முதற்கொண்டு, இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட மனிதப் படுகொலையை சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தியது, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய மண்ணில் புகலிடம் அளித்தது, ஈழப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியை வழங்கியது என்று தொடர்ந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கைப் பிரச்சனையில் ஈழத்தமிழருக்குச் சார்பான நிலைப்பாட்டை முழுமனதுடன் எடுத்திருந்ததுடன், அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் செயற்பட்ட முதலாவதும் இறுதியுமான ஒரே இந்திய தேசியத் தலைவர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர் விடயத்தில் நம்பிக்கைத் துரோகமிழைத்த ராஜிவ் காந்தி:

திருமதி. இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து ஆட்சியைப் பொறுப்பேற்ற அவரது புதல்வர் ராஜீவ் காந்தி ஈழத் தமிழர் விடயத்தில் ஓரளவு அக்கரை காண்பிப்பவர் போன்று வெளிப்பார்வைக்கு செயற்படாலும், நிஜத்தில் அவர் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை.

இந்தியாவின் சுயலாப நலன்களை அடிப்படையாகக் கொண்ட செயற்திட்டங்களை மட்டுமே அவர் கையாண்டதுடன், ஈழத்தமிழர்கள் விடயத்தில் ராஜீவ் காந்தி ஒரு நம்பத்தகுந்த தலைவராக ஒருபோதும் நடந்துகொண்டதும் கிடையாது. அவரது சக்தியையும் மீறி தமிழ் நாட்டில் வளர்ந்துவிட்டிருந்த ஈழப் போராளிகளை இந்தியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்து, அவர்களை இந்தியாவின் ஒரு கூலிப்படையாக செயற்படவைக்கவே அவர் விருப்பம் கொண்டு செயற்பட்டு வந்தார்.

இந்திய உளவு அமைப்புக்களின் விருப்பமும், திட்டமும் கூட இதுவாகத்தான் இருந்தது. ஈழப் போரட்ட அமைப்புக்கள் இந்தியாவின் சொல்கேட்டு நடக்கக்கூடிய, இந்தியாவின் தேசிய நலன் சார்ந்து செயற்படக்கூடிய ஒரு கூலிப்படையாக செயற்படவேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தியாவைக் கவனிக்காது மேற்குலக நாடுகளின் பக்கம் தனது பார்வையைச் செலுத்த ஆரம்பித்திருந்த இலங்கையை சிறிது தட்டி வைக்கும் நோக்கத்துடனேயே இந்தியா ஈழப்போரளிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியிருந்தது. தமிழருக்கு ஒரு தனிநாட்டை அமைத்துக் கொடுக்கும் நோக்கம் இந்தியாவிற்கு என்றைக்குமே இருந்தது கிடையாது.

இப்படி இருக்கையில், இந்தியாவின் இந்த திட்டத்தைப் புரிந்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஒரு சில போராட்ட அமைப்புக்கள், இந்தியாவின் உளவுப் பிரிவினருக்குத் தெரியாமல் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள், நிதி என்பனவற்றை இரகசியமாக பெற்று தம்மை வளர்த்துக்கொள்ள முயன்றதுடன், தனி ஈழம் ஒன்றை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் தம்மை சுயமாக வளர்த்துக்கொள்ளவும் முயன்றனர்.

சில ஈழப்போராட்ட அமைப்புக்களின் இந்த நடவடிக்கையானது ஈழப்போராளிகள் தமது கைகளைவிட்டுச் சென்றுவிடுவார்களோ என்கின்ற பயத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.

ஈழப் போரளிகளின் அசுர வளர்ச்சி, போராட்டக் களங்கில் அவர்கள் காண்பித்த வேகம், சர்வதேச ரீதியாக அவர்கள் பெற்றுக்கொள்ள ஆரம்பித்த ஆதரவுகள் என்பன, இந்த அமைப்புக்களின் செயற்பாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், இந்த அமைப்புக்கள் விடயத்தில் சற்றுக் கடுமையாக நடந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தையும் இந்திய அரசுக்கு ஏற்படுத்தியது.

இந்தியாவிற்கு ஏற்பட்ட இந்தக் கட்டாயம், ஈழத்தமிழர் நலன்களில் இந்தியா கொண்டிருந்த உண்மையான நிலைப்பாட்டை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதாக அமைந்தது.

அடுத்ததாக ஆட்சிக்கு வந்த இந்தியாவின் மத்திய அரசாங்கம் ஈழப்போராளிகள் விடயத்தில் கடைப்பிடிக்க ஆரம்பித்த நடவடிக்கைகள், ஈழ விடுதலை பற்றி இந்தியாவின் திட்டத்தை தோலுரித்துக் காண்பிப்பதாக அமைந்ததுடன், இந்தியா பற்றி ஈழத்தமிழர்களுக்கும்- ஏன் தமிழ் இயக்கங்களுக்கும்கூட இருந்த நம்பிக்கை, எதிர்பார்ப்புக்களை சிதறடிப்பதாக அமைந்திருந்தன.

இந்தியப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சதி:

ஈழப் போராளிகள் தனது கைகளை விட்டுச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவும், ஈழப் போராளிகள் இந்தியாவின் தயவில் மட்டுமே வாழவேண்டும் என்கின்ற பாடத்தை அவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கத்திலும் இந்தியாவின் மத்திய அரசாங்கம் அப்பொழுது சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது..

சென்னையில் இருந்த புலிகளின் அலுவலகங்கள் இந்தியப் பொலிஸாரால் முற்றுகை இடப்பட்டு புலிகளின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன் புளொட் அமைப்புக்கென்று வெளிநாடு ஒன்றிலிருந்து தருவிக்கப்பட்ட ஆயுதத் தொகுதியை இந்தியா இராணுவம் கைப்பற்றிக்கொண்டதுடன் அவற்றை மீளவும் அவர்களுக்கு வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தது. தமிழ் இயக்கங்களுடன் தொடர்புடைய மூன்று ஈழத்தமிழ் தலைவர்கள் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டார்கள்.

இது போன்ற பல நடவடிக்கைகளை தமிழ் இயக்கங்களை அச்சுறுத்தும் நோக்கத்திலும், அவர்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நோக்கத்திலும் இந்தியா மேற்கொள்ள ஆரம்பித்திருந்தது.

ரொமேஷ் பண்டாரி வெளியிட்ட அதிர்ச்சி தரும் கொள்கைகள்:

இந்த நேரத்தில் இந்தியாவின் வெளிநாட்டுச் செயலாளராக திரு.ரொமேஷ் பண்டாரி பதவி ஏற்றதைத் தொடர்ந்து, ஈழத்தமிழர் தொடர்பான இந்தியாவின் உண்மையான நிலைப்பாட்டை ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழ் இயக்கங்களின் பிரதிநிதிகள், த.வி.கூ. தலைவர்கள் போன்றவர்களை அழைத்த திரு ரோமேஷ் பண்டாரி, இந்தியா ஈழத்தமிழர் தொடர்பாக கடைப்பிடித்துவரும், தொடர்ந்து கடைப்பிடிக்கப்போகும் கொள்கைகள் என்ற அடிப்படையில் மூன்று முக்கிய விடயங்களை தெரிவித்தார்.

1. இலங்கையில் இந்தியாவின் இராணுவத் தலையீடு சாத்தியமற்றது.

2. தனிநாடு பிரிவினையை இந்தியா ஏற்றுக்கொள்ளாது.

3. இந்தியாவில் தற்பொழுதுள்ள ஒரு மாநிலத்தின் அதிகாரத்திற்கு கூடுதலான அதிகாரத்தை இலங்கையில் தமிழ் மாநிலத்திற்கு வழங்குமாறு கோர முடியாது.

இவையே திரு.ரொமேஷ் பண்டாரி அறிவித்த இந்தியாவின் கொள்ளைகள்.

இந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்தியா எதிர்காலத்தில் செயற்படும் என்றும் அவர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.

தமிழ் இயக்கங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள்.

பங்காளதேஷில் நடந்துகொண்டது போன்று, இந்தியா இலங்கைக்கு தனது இராணுவத்தை அனுப்பி தமிழ் மக்களுக்கு தனிநாட்டைப் பெற்றுக் கொடுத்துவிடும் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் மக்களுக்கும், ஒருசில தமிழ் ஆயுத இயக்கங்களுக்கும் இந்தியாவின் இந்த அறிவித்தல் பேரிடியாக அமைந்தது. இந்தியாவின் இந்த அறிவிப்பை உடனடியாக அவர்களால் நம்ப முடியாமல் இருந்ததுடன் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலகுவில் அவர்களால் ஜீரணித்துக்கொள்ளவும் முடியாது இருந்தது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு உண்மையானால் பின்னர் எதற்காக இந்தியா எங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது, எதற்காக எங்களைப் போராடச் சொன்னது? என்று இந்தியாவை மட்டுமே நம்பி இருந்த தமிழ் இயக்கங்கள் கேள்வி எழுப்பின. ஆனால் முற்று முழுதாக இந்தியாவின் தயவில் மட்டுமே வாழ்க்கை நடாத்திவந்த அந்த இயக்கங்களால் வெறும் கேள்விகளை மட்டுமே அப்பொழுது எழுப்ப முடிந்தது.

அவர்களால் வேறு எதையுமே செய்ய முடியவில்லை. எனென்றால் இந்த இயக்கங்கள் வெளிப்பார்வைக்கு ஒரு விடுதலை அமைப்புப் போன்று தோற்றம் அளித்திருந்தாலும் உண்மையில் இவர்கள் இந்திய அரசின் அபிலாஷைகளை மட்டுமே நிறைவுசெய்ய உத்தரவிடப்பட்ட ஒரு கூலிப்படையாகவே கட்டமைக்கப்பட்டிருந்தார்கள். ( இதே அமைப்புக்கள்தான் பின்நாட்களில் இந்திய அமைதிப்படையுடன் இலங்கைக்கு வந்து, இந்தியா ஈழத் தமிழர்கள் மீது மேற்கொண்ட அனைத்து அட்டூழியங்களுக்கும் உடந்தையாகவிருந்ததுடன், பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்கும் இந்தியாவின் எண்ணங்களுக்கு செயல் வடிவமும் கொடுத்தவர்கள்.)

தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று தனி நாடு ஒன்றைத் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் எண்ணம் இந்தியாவிற்கு என்றுமே இருந்தது கிடையாது. மேற்குலக நாடுகளின் பக்கம் சாய ஆரம்பித்திருந்த இலங்கை அரசை மிரட்டி பணியவைக்கும் நோக்கத்திற்கே ஈழப் போராட்ட இயக்கங்களைப் பயன்படுத்த இந்தியா எண்ணியிருந்தது. ஈழப் போராட்ட அமைப்புக்களை அது வளர்த்துவந்ததும், இலங்கை அகதிகளுக்கு இந்தியா புகளிடம் அளித்ததும், ஈழத்தமிழர்களுக்காக அது நீலிக்கண்ணீர் வடித்ததும் இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான்.

ஆனால் ஒருசில தமிழ் இயக்கங்களது வளர்ச்சியின் வேகமும், அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தனித் தமிழீழம் அமைக்கும் தமது இலட்சியத்தில் காண்பித்த உறுதி போன்றன, இந்தியாவின் உண்மையான பக்கத்தை தமிழ் மக்களுக்கும் உலகிற்கும் அவசர அவசரமாக வெளிப்படுத்தவேண்டிய அவசியத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியிருந்தது.

இந்தியாவில் தனது பார்வையில் தங்கியிருந்து சிறுசிறு தாக்குதல்களை நடாத்திவந்த தமிழ் இயக்கங்கள் ஈழத்தில் தளம் அமைத்து போராட்டம் நடாத்த ஆரம்பித்திருந்தமை, இந்தியாவின் செல்லப் பிள்ளைகளாக இருந்த சில இயக்கங்கள் ஈழத்தில் மக்கள் ஆதரவை இழந்த நிலையில் மாற்று இயக்கங்களால் அழிக்கப்பட்டமை, தனிஈழம் கைக்கெட்டிய தூரத்தில் இருந்தமை போன்றன இலங்கை விடயத்தில் இந்தியா நேரடியாகத் தலையிட்டு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டிய அவசியத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.

ஈழம் வேண்டிப் போராட்டம் நடாத்திக்கொண்டிருந்த பிரதான போராட்ட அமைப்புக்கள் தனது பிடிக்குள் இல்லாததாலும், இந்தியா தனது நலனுக்காகவென்று வளர்த்துவந்த இயக்கங்கள் போராட்ட சக்தியை இழந்துவிட்டிருந்ததாலும், தமிழ் விடுதலை இயக்கங்கள் மூலமாக காரியம் சாதிக்கும் தனது திட்டத்தை இந்தியா கைவிட்டதுடன், தமிழ் இயக்கங்களை கைகழுவிவிடவும் இந்தியா தீர்மானித்தது.

தனி நாடு அல்லாத ஒரு அரைகுறைத் தீர்வை தமிழ் இயக்கங்கள் மீது தினிக்கும் பல நடவடிக்கைகளை இந்தியா அடுத்தடுத்து எடுக்கத் தலைப்பட்டது. ஸ்ரீலங்கா அரசுடன் அல்லது ஸ்ரீலங்கா அரச பிரதிநிதிகளுடன் தமிழ் இயக்கங்களுக்குச் சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து, அரைகுறை தீர்வொன்றை ஈழத்தமிழர் மீது திணித்து, இலங்கைப் பிரச்சனையில் கையோங்கிய நிலையில் காணப்பட்ட ஈழப்போராளிகளின் பங்கை குறைத்துவிடும் முயற்சியில் இந்தியா ஈடுபட ஆரம்பித்தது.

ஆனால், தீர்வு விடயத்தில் ஈழப் போராட்ட அமைப்புக்கள் மிகவும் கவனமாகவே காய்நகர்த்தின. இந்தியாவினதோ அல்லது இலங்கையினதோ எந்தப் பொறிகளுக்குள்ளும் அவை விழுந்துவிட தயாராக இருக்கவில்லை.

இந்தியாவின் உண்மையான எண்ணங்களை அறிந்திருந்த இயக்கங்கள் இந்தியாவின் விடயத்தில் கவனமாகவே நடந்துகொண்டன.

தமிழர்களது விடுதலை சம்பந்தமாக இந்திய அரசாங்கம் கொடுத்துவந்த நிர்பந்தங்களை தட்டிக்கழித்து தமது தலைவிதியை தாமே தீர்மாணிக்கவேண்டும் என்ற விடயத்தில் மிகவும் கவனமாகவே செயற்பட்டார்கள்.

உதாரணமாக, ஜுலை 1985 இல் நடைபெற்ற திம்பு மாநாட்டில் தமிழ் அமைப்புக்கள் தாம் எடுத்த நிலைப்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்புக்களுக்கும் உடன்படாது உறுதியாக இருந்தார்கள்.

அதேபோன்று, 31.08.1985 அன்று இந்தியா சென்றிருந்த இலங்கைத் தூதுக் குழுவிற்கும், இந்திய அரசிற்கும் இடையில் டெல்லியில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரைகுறை ஒப்பந்தத்தை தமிழ்  இயக்கங்கள் ஏற்றேயாகவேண்டும் என்ற இந்திய அரசின் நிர்ப்பந்தத்தை தமிழ் இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளாததுடன், அதனை பகிரங்கமாகவே எதிர்த்தும் இருந்தார்கள்.

அதேபோன்று, 1986 ஜுலையில் இந்தியா கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீலங்கா அரசுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவதற்கும் தமிழ் இயக்கங்கள் மறுப்புத் தெரிவித்திருந்தன.

தமிழ் இயக்கங்களின் இந்த நடவடிக்கைகள், இந்தியா தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களில் இருந்த தனது பிடிமாணங்களை இழந்து வருவதை உணரும்படி செய்தன.

தமிழ் ஈழ இயக்கங்களை தொடர்ந்தும் தனது தேச நலன்களுக்காப் பயன்படுத்த முடியாது என்ற உண்மையை இந்தியா படிப்படியாக உணரத் தொடங்கியது.

இது, இயக்கங்கள் விடயத்தில் மாற்று நடவடிக்கை ஒன்றை எடுக்கும் முடிவுக்கு இந்தியாவை இட்டுச்சென்றது. இந்தியாவின் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி தமிழ் இயக்கங்களைப் பலவீனப்படுத்தும் திட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்தத் தயாரானது.

தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் ஈழப்போராளிகள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் சதித்திட்டமும் அதில் அடங்கியிருந்தது.

ஈழப்போராட்ட அமைப்புக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தவும், ஈழப்போரட்ட அமைப்புக்களை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தவும் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சதி நடவடிக்கைகளை அடுத்தவாரம் பார்ப்போம்

தொடரும்..

 

தமிழ் இயக்கங்களை நசுக்க “ரோ” அமைப்பு மேற்கொண்ட திட்டமிட்ட சதி: (அவலங்களின் அத்தியாயங்கள்- 42): நிராஜ் டேவிட்
  • by admin
  • November 17, 2012
RAW-244x300.gif
 
 

இந்தியாவில் தங்கியிருந்த ஈழ விடுதலை இயக்கங்களைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தவும், தமிழ்நாட்டு மக்களிடம் இந்த இயக்கங்களுக்கு இருந்து வந்த ஆதரவை குறைக்கவும் இந்தியாவின் உளவுப் பிரிவான “ஆய்வு-பகுப்பாய்வு பிரிவு”(RAW – Research and Analyse Wing) பல சதித் திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்தது.

இயக்கங்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தியது முதல், இயக்கங்களுக்கு உள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தியதன் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான RAW  இனது கைகள் இருந்ததாக பல தமிழ் இயக்கங்கள் பின்நாட்களில் குற்றம் சுமத்தியிருந்தன.

இந்திய RAW அமைப்பின் பூரண கண்காணிப்பின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் செயற்பட்டு வந்த தமிழ் இயக்கங்களின் உள்ளே திடீர் திடீர் என்று உட்பூசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. இயக்கங்களின் இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கு திடீரென்று பதவி ஆசை ஏற்பட ஆரம்பிக்கலாயிற்று.

மாற்று இயக்கங்களுடன் முரண்பாடுகள் வளர்ந்தன.  தமது இயக்க நடவடிக்கைகளை மாற்று இயக்கங்கள் கண்காணிக்கின்றன. தமது இயக்க நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு மற்றைய இயக்கங்கள் வழங்குகின்றன என்பது போன்ற சந்தேகங்கள் ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஏற்பட்டன. “சந்தேகங்கள் ஏற்பட்டன” என்று கூறுவதைவிட சந்தேகங்கள் ஏற்படுத்தப்பட்டன என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

இயக்கங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுகள்,  அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இயக்க மோதல்கள் போன்றனவற்றிற்கு இந்தியப் புலனாய்வு பிரிவான “ரோ” அமைப்பினரது சதிவேலைகளே காரணமாக இருந்தன. ஒவ்வொரு இயக்கத்திற்கும் மாற்று இயக்கங்கள் பற்றி பிழையான அல்லது பிழையான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடியதான தகவல்களை இந்திய “ரோ” அமைப்பினரே வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் இயக்கங்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கும், தமக்குப் பிடிக்காத ஈழத் தமிழ் தலைவரைகளை மற்றைய தமிழ் அமைப்பினைக் கொண்டே பழிவாங்குவதற்கும் ரோ பல சதிகளை நடாத்தியிருந்தது.

இதோ ஒரு உதாரணம்:

த.வி.கூ. தலைவர்கள் படுகொலை

1985ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுமான திரு.தர்மலிங்கம் மற்றும் திரு.ஆலாலசுந்தரம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்ல இந்தியா மற்றும் சர்வதேசம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்த அரசியல் கட்சிகள், தலைவர்கள் இந்தப் படுகொலையை மிகக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

கொலைப்பழி விடுதலைப் புலிகள் மீது வந்து விழுந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளே இந்தப் படுகொலைகளைச் செய்ததாக அனைவருமே நம்பினார்கள். விடுதலைப் புலிகளே இந்த படுகொலைகளைச் செய்ததாகக் த.வி.கூட்டணித் தலைவர்களும் குற்றம் சுமத்தினார்கள்.

1986ம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோ அமைப்பிற்கும் இடையில் ஈழத்தில் மோதல் உருவாகி,  அதனைத் தொடர்ந்து டெலோ அமைப்பு விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டது. டெலோ அமைப்பின் தலைவர் சிறிசபாரெத்தினம் அவர்களும்,  நூற்றுக்கணக்கான டெலோ உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள்.

நூற்றுக்கணக்கானவர்கள் புலிகளால் கைது செய்யப்பட்டார்கள். அவ்வாறு புலிகளால் கைதுசெய்யப்பட்ட டெலோ உறுப்பினர்களுள் கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் ராஜன் என்ற உறுப்பினர்,  ஒரு அதிர்ச்சிகரமான தகவலை புலிகளிடம் வெளியிட்டார்.

அந்தத் தகவல் இந்திய உளவுப் பிரிவான ரோவினது ஒரு முக்கிய சதியை அம்பலப்படுத்துவதாக அமைந்திருந்தது.

ஒப்புதல் வாக்குமூலம்

அதாவது த.வி.கூட்டணித் தலைவர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் போன்ரோரின் படுகொலையில் தானும் பங்கேற்றதாக அந்த டெலோ உறுப்பினர் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளால் அவர் தீவிரமாக விசாரிக்கப்பட, ஒரு பெரிய இரகசியச் சதி அம்பலமானது.

தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் படுகொலை செய்யும்படியான உத்தரவு டெலோ அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான பொபி என்பவரால் தமக்கு வழங்கப்பட்டதாகவும், தாம் காரணம் கேட்டபொழுது இது தலைமைப் பீடத்தின் முடிவு. இது ஒரு அரசியல் தந்திரம். விளக்கம் தேவையில்லை என்று அவர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அந்த டெலோ உறுப்பினர் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

அந்த டெலோ உறுப்பினர் வழங்கியிருந்த வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறியிருந்தார்.

‘இக்கொலைகளுக்கு வலன்டைன் தலைமை தாங்கினார். நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் நடவடிக்கையில் பங்குபற்றினோம். சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் வல்வெட்டித்துறையில் இருந்த எங்களது முகாமில் பழுப்பு நிற மொறிஸ் ஒகஸ்பேர்ட் கார் எங்களிடம் தரப்பட்டது.

இந்தக் கார் சம்பவத்திற்கு முன்னய நாள் கிருபா என்பவரால் எங்கிருந்தோ கடத்திக் கொண்டு வரப்பட்டிருந்தது. அந்தக் காரில் நாம் நால்வரும் மாலை 7.30 மணிக்கு ஆலாலசுந்தரத்தின் வீட்டுக்குச் சென்றோம். பாஸ்போர்ட் விடயமாக அவருடன் பேசவேண்டும் என்று கூறினோம். வெளியே வந்த அவரைப் பலவந்தமாக காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கம் வீட்டிற்குச் சென்றோம்.

ஆலாலசுந்தரம் உங்களுடன் கதைப்பதற்கு வந்துள்ளார் என்று கூறி அவரையும் காரில் ஏற்றினோம். அவர்களை அழைத்துக் கொண்டு 8 அல்லது 8.30 மணியளவில் கோண்டாவிலை அடைந்தோம். தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் அங்கு இறக்கிவிட்டு ஆலாலசுந்தரத்தை  நல்லூர் இராஜ வீதிச் சந்திக்குக் கொண்டு சென்றோம்.

சனநடமாட்டம் அற்ற ஒதுக்குப் புறத்தில் ஆலாலசுந்தரத்தின் கண்களைக்கட்டி நானும் வலன்டைனும் அவரைச் சுட்டுக் கொன்றோம். பின்னர் திரும்பிவந்து தர்மலிங்கத்தை ஏற்றிக்கொண்டு தாவடி றோட்டில் உள்ள தோட்டவெளிக்குக் கொண்டு சென்றோம். அவரையும் சிட்டிபாபு சுட்டுக் கொன்றார். பின்னர் அவர்களது உடல்களை அவர்களது தொகுதிகளுக்குக் கொண்டு சென்று போட்டோம்.

பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் தொலைவில் இருந்ததால் அன்றிரவு அவரைக் கொல்லமுடியாமல் போய்விட்டது. நீலன் திருச்செல்வத்தையும் கொல்வதற்கு ஆயத்தங்கள் நடைபெற்றதாக அறிந்தேன். இக்கொலைகளுக்கு ஒரு உப இயந்திரத் துப்பாக்கி, இரண்டு ஏ.கே-47 ரகத் துப்பாக்கிகள் எம்மால் உபயோகப்படுத்தப்பட்டன“ இவ்வாறு அந்த டெலோ உறுப்பினர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்படியான உத்தரவை டெலோவை இயக்கிய இந்திய உளவுத்துறை அதிகாரியாலேயே டெலோவின் வழங்கப்பட்டதாக பின்னர் தெரியவந்தது.

காரணம்?

பல்வேறு அரசியல் காரணங்களுக்காக ஈழத் தமிழ் தலைமையை மிதவாத தலைமைகளிடம் இருந்து பிடுங்கி தமது கட்டுப்பாட்டின்கீழ் செயற்பட்ட ஆயுத அமைப்புகளிடம் கொடுக்க விரும்பிய இந்தியப் புலனாய்வுப் பிரிவு, அந்த நேரத்தில் தனது பூரணகட்டுப்பாட்டின் கீழ் செயற்படாத விடுதலைப் புலிகளையும் இந்தக் கொலைகளினூடாக மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அதனை நோக்காகக் கொன்டே இது போன்ற இரகசிய நடவடிக்கைகள் அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் தங்கியிருந்த ஈழ விடுதலை இயக்கங்களைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தவும், தமிழ்நாட்டு மக்களிடம் இந்த இயக்கங்களுக்கு இருந்துவந்த ஆதரவை குறைக்கவும் இந்தியாவின் உளவுப் பிரிவான “ஆய்வு-பகுப்பாய்வு பிரிவு”  பல சதித் திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்தது.

பிடிபட்ட உளவுத்துறை அதிகாரி

தமிழ் நாட்டு பொலிஸ் உளவுத்துறையின் டீ.ஐ.ஜி ஆக இருந்த கே.மோகணதாஸ் அவர்கள் இந்தியாவில் தங்கியிருந்த விடுதலை இயக்கங்கள் பற்றிய விபரங்களை ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கினார் என்ற விடயம் பின்னாளிலேயே இயக்கங்களுக்கு தெரியவந்தது.

இயக்க தலைமைகள் பற்றியும், உறுப்பினர்கள் தொகை பற்றியும், அவர்களது நடவடிக்கைகள்,  அவர்களிடமுள்ள ஆயுதங்கள் போன்ற விபரங்களை ஸ்ரீலங்கா அரசிற்கு இவர் வழங்கியிருந்தார் என்ற தகவல் நீண்ட காலத்தன் பின்னரே வெளிவந்தது. தமது இயக்க நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் மாற்று இயக்கங்கள் மூலமாகவே ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சென்றடைகின்றன என்றே அதுவரை ஒவ்வொரு இயக்கங்களும் நம்பியிருந்தன.

மாட்டிக்கொண்ட றோ அதிகாரி

இதேபோன்று இயக்கங்களுடன் நெருங்கிப் பழகி பின்னர் இயக்கங்கள் பற்றிய தகவல்களை ஸ்ரீலங்கா அரசிற்கும் இயக்கங்களின் மீது தனது கழுகுப் பார்வையைச் செலுத்த ஆரம்பித்திருந்த அமெரிக்க உளவு ஸ்தாபனமான CIA அமைப்பிற்கும் வழங்கிவந்த ஒரு அதிகாரியின் குட்டு நீண்ட நாட்களின் பின்னரே உடைந்தது.

தமிழ் நாட்டில் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிவந்த இந்திய ‘ஆய்வு-பகுப்பாய்வு பிரிவு” (RAW) தமிழ் இயக்கங்களுடனான தனது தொடர்புகளுக்கு உண்ணிக்கிருஷ்ணன் என்ற மலையாள அதிகாரியை நியமித்திருந்தது. உண்ணிக்கிருஷ்ணன் தமிழ் இயக்கங்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு இயக்க நடவடிக்கைகளுக்கு பலவிதமான ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

இயக்கங்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி, இயக்கங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்திய சதியில் இந்த அதிகாரியே பிரதானமாகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(பின்னாளில் இந்த அதிகாரிக்கும் CIA  நிறுவனத்திற்கும் இடையில் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இந்திய அரசால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.)

இயக்கங்களுக்கு இடையிலான பகையை ஏற்படுத்திய கைங்காரியத்தில் “ரோ” அமைப்பின் திட்டமிட்ட செயற்பாடுகள் இருந்துவந்தது நீண்ட காலத்தின் பின்னரே இயக்கங்களுக்கு தெரியவந்தது. ஆனால் இயக்கங்கள் “ரோ” இனது சித்து வேலைகள் பற்றி அறிந்துகொண்டபோது காலம் கடந்துவிட்டிருந்தது.

பிரதான இயக்கங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி அவற்றைப் பலவீனப்படுத்தும் பல நடவடிக்கைகள் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த அதேவேளை தமிழ் நாட்டில் ஈழ விடுதலை இக்கங்கள் மீது தமிழ் நாட்டு மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் பல முயற்சிகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் வெறுப்பு ஏற்படுத்தும் முயற்சி

அப்பொழுது இந்திய அரசின் செல்லப் பிள்ளைகளாக இருந்த “டெலோ” அமைப்பினரும், சிதறிப் போகும் ஆரம்ப கட்டத்தில் இருந்த “புளொட்” அமைப்பினரும்,  மற்றய சில உதிரி ஈழ இயக்கங்களும் தமிழ் நாட்டில் பல்வேறு கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.

முற்றுமுழுதாக இந்தியாவின் உதவிகளையும், ஆலோசனைகளையும் மட்டுமே நம்பி போராட்டம் நடாத்திவந்த இதுபோன்ற இயக்கங்கள், கொள்ளைகளையும், சமுகவிரோத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் நிலைக்கு திட்டமிட்டுக் கொண்டு செல்லப்பட்டார்கள். இந்த இயக்கங்களின் தலைமைகளின் திறமையின்மை மற்றும் கட்டுப்பாடு இன்மை என்பன ஒருபுறம் இருக்க,  கொள்ளை, களவு என்பனவற்றில் இவ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஈடுபடும் வகையில் நிலமையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஏற்படுத்தப்பட்டன.

வீடுகளில் கொள்ளை, வங்கிக் கொள்ளை, ஆட்கடத்தல், கொலை என்று தமிழ் நாட்டில் இந்த இயக்க உறுப்பினர்களின் சமூக விரோத நடவடிக்கைகள் 1986ம்,  87ம் வருடங்களில் உச்சத்தை அடைந்தன.

அதேவேளை இயக்க உறுப்பினர்கள் ஈடுபட்ட இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளும் வேடிக்கையாகவே இருந்தன. தமிழ் நாட்டில் இதுபோன்ற சமுகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுத்திரிந்த போரளிகளை தமிழ் நாட்டுப் பொலிஸார் கைதுசெய்யும் சந்தர்ப்பங்களில், “ரோ” அதில் தலையிட்டு அவர்களை விடுதலைசெய்து தமிழ் நாட்டு மக்களின் கோபத்தை கனகச்சிதமாக போராளிகளின் பக்கம் திருப்பிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

“அண்ணா நகரில் கொள்ளை. ஈழப்போராளி கைது” என்று கொட்டை எழுத்துக்களில் முதல் நாள் பத்திரிகைகளில் செய்தி வரும். மறுநாளே ”பொலிஸார் கைதுசெய்த போராளி விடுதலை” என்றோ அல்லது “போராளி தப்பி ஓட்டம்” என்றோ செய்தி வெளியாகும்.

“ஈழப்போராளிகளுக்கு உதவுகின்றோம் பேர்வழிகள்” என்று கூறிக்கொண்டு செயற்பட்ட மத்திய உளவு அமைப்பான “ரோ” உண்மையிலேயே தமிழ் நாட்டு மக்கள் மத்தில் ஈழப் போராளிகளுக்கு இருந்த ஆதரவை சிதைப்பதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டன. அதில் படிப்படியாக வெற்றியும் கண்டன.

அக்காலத்தில் எந்த ஒரு ஈழப் போராளியையும் “விடுதலைப் புலி” என்றே தமிழ் நாட்டு மக்கள் அழைத்து வந்தார்கள். “புளொட்” என்றும் ”டெலோ” என்றும் வேறுபடுத்திப் பார்க்க தமிழ் நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஸ்ரீலங்காவில் எந்த இயக்கப் போராளி கொல்லப்பட்டாலும் “கொட்டியா” என்று சிங்கள இராணுவத்தினர் அழைத்தது போன்று தமிழ் நாட்டில் அனைத்து இயக்கங்களையும் “விடுதலைப் புலிங்க” என்றுதான் அழைப்பார்கள். புலிகளின் செயற்பாடுகள், அவர்களது நடவடிக்கைகள், அவர்கள் மேற்கொண்ட பிரசாரங்கள், புலிகள் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் நடந்துகொண்ட விதம் போன்றன புலிகள் பற்றிய பிரமிப்பை தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியருந்தது.

ஆனால் தமிழ் நாட்டில் புலிகள் பெற்றிருந்த பிரபலமே புலிகளில் பெயரைச் சிதைப்பதற்கும் சதிவேலைகளில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. மற்றய இயக்க உறுப்பினர்களால் பல சந்தர்ப்பங்களில் தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமுகவிரோத செயல்கள் அனைத்தும் புலிகளாளேயே மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் நாட்டில் உள்ள ஒரு தொகுதி மக்கள் நினைத்துவிடும் அபாயம் இதனால் ஏற்படலாயிற்று.

களவுகள், கொள்ளைகளில் ஈடுபட்ட “புளொட்” இயக்க உறுப்பினர்கள் தங்களை புலிகள் என்று கூறி கொள்ளையடித்த சந்தர்ப்பங்கள் பலவும் உள்ளன. அக்காலத்தில் SOLT ( Students Organisation of Liberation Tigers) என்ற பெயரில் விடுதலைப் புலிகள் சென்னை அடையார் உட்பட பல இடங்களில் அலுவலகம் திறந்து,  தமது இயக்க நடவடிக்கைகள் பற்றிய பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்கள்.

அதேபோன்று தமிழ் நாட்டில் தங்கியிருந்து கல்வி கற்றுக் கொண்டிருந்த ஈழத் தமிழ் மாணவர்களது நடவடிக்கைகளினாலும், அகதிகளாக தமிழ் நாடு வந்து தங்கியிருந்த இளைஞர்களின் தீய செயல்களினாலும் ஈழத்தமிழர்கள் பற்றி தமிழ் நாட்டு மக்களுக்கு இருந்த அபிப்பிராயம் கெட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பல செயற்திட்டங்களை இந்த SOLT உறுப்பினர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

ஈழத் தமிழர்கள் எங்காவது பிரச்சினைப்படுத்தினால் தமிழ் நாட்டிலுள்ள பொதுமக்கள் அவர்களைப் பிடித்து புலிகளின் இந்த ளுழுடுவு அலுவலகத்தின் ஒப்படைக்கும் அளவிற்கு இதன் செயற்பாடுகள் அங்கு பிரசித்திபெற்றிருந்தது.

ஆனால் ஈழத்தமிழர்கள் பற்றி நல்ல எண்ணத்தை தமிழ் நாட்டு மக்களிடம் கட்டி எழுப்பும் நோக்குடன் புலிகள் மேற்கொண்ட இதுபோன்ற பல நடவடிக்கைகள்,  மாற்று இயக்கங்களின் திட்டமிட்ட சதி காரணமாக சிதறிப் போகலாயின.

ஈ.பி.ஆர்.எல்.எப்.

அதேபோன்று,  விடுதலைப் புலிகள் போலவே அந்த நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பும் (டக்ளஸ் தலைமையிலான சூழைமேட்டுச் சம்பவங்கள் போன்ற ஒன்றிரண்டைத் தவர) பெரிதாக சமூக விரோத நடவடிக்கைகளில் தமது உறுப்பினர் ஈடுபடாமல் பார்த்துக் கொண்டதையும் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

ஈழத் தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடக்கூடாது என்பதிலும், அவர்கள் தமக்கும் மோதுபட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என்பதிலும், ஆரம்பம்முதலே இந்திய உளவு அமைப்புக்கள் உறுதியாக இருந்தன. ஆதில் அவர்கள் வெற்றியும் கண்டிருந்தார்கள்.

அத்தோடு 1986ம் ஆண்டில் இந்திய அரசு சிறிலங்கா அரசாங்கத்துடன் நேரடியாகப் பேச நினைத்த உடனேயே,  தமிழ் நாட்டு மக்களின் மனங்களில் இருந்து போராட்ட இயக்கங்களை அன்னியப்படுத்தும் சதிகளை இந்த புலனாய்வு அமைப்பு கனகச்சிதமாக அரங்கேற்றியிருந்தது. போராட்ட இயக்கங்கள் தமக்குள் மோதுபட்டு தம்மைத்தாமே பலவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சதியையும் மிகக் கவனமாகவே இந்தியப் புலனாய்வாளர்கள் அரங்கேற்றியிருந்தார்கள்.

தொடரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பற்றி புலிகள் வெளியிட்ட அதிர்ச்சிதரும் தகவல்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 43) – நிராஜ் டேவிட்
  • by admin
  • November 22, 2012
 
010-743121-300x200.jpgஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருந்த துரோக நடவடிக்கைகள் பற்றி நிறைய விடயங்களைக் கூறமுடியும்.

இந்திய அரசியல்வாதிகளும், இந்தியப் புலனாய்வு பிரிவினரும் ஈழத் தமிழரின் விடுதலைப் போருக்கு எதிராக மேற்கொண்டிருந்த வரலாற்றுத் துரோகங்கள் பற்றி அக்காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வெளியாகி இருந்தன.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, புலிகளுக்கும் இந்திய படைகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிராகரித்து இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றியும், இதில் தமது நிலைப்பாடு பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கும் முகமாக புலிகள் இந்த நூலை வெளியிட்டிருந்தனர்.

`இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்` என்ற தலைப்பில் 1987 டிசம்பர் மாதம் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் இந்த நூல் புலிகளால் வெளியிடப்பட்டது.

அதிர்ச்சி தரக்கூடியவைகளும், சர்ச்சைக்குரியவைகளுமான பல தகவல்கள் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்திய அரசின் துரோக நடவடிக்கைகள் பலவும் இந்த புத்தகத்தில் தோலுரித்துக் காட்டப்பட்டிருந்தன.

அந்தப் புத்தகத்தில் தொரிவிக்கப்பட்டவைகளுள் சில:

‘’1987 ஜனவரியில் சிங்கள இனவாத அரசு யாழ் குடாநாட்டில் பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தியருந்ததுடன், வடக்கிலும் கிழக்கிலும் பெரியளவிலான இராணுவப் படையெடுப்பையும் மேற்கொண்டிருந்தது. வடக்கில் மாத்திரம் இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்ரீலங்காத் துருப்பினர் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் எமது விடுதலைப் புலிகள் அணியினரோ, பல்வேறு அரங்குகளில் ஸ்ரீலங்கா அரச படையினரை எதிர்த்து வீராவேசத்துடன் போரிட்டு வந்தனர். ஆயுதங்கள், வெடிமருந்துகள் பற்றாக்குறையுடன் கூட எமது எதிரியை நாம் மிகவும் வெற்றிகரமாகச் சமாளித்துக்கொண்டிருந்தோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் இந்திய அரசிடம் ஆயுத உதவி கோரினோம். எமது மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகின்றார்கள் என்பதைச் சுட்டிக் காண்பித்து எமது மக்களை காப்பாற்ற உதவிசெய்யுமாறு நாம் பாரதத்திடம் பலதடவைகள் கோரிக்கைவிடுத்திருந்தோம்.

எமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறிக்கொண்ட பாரதம் மௌனமாகவே இருந்துவந்தது. நாம் கோரிய ஆயுதப் பட்டியல் விபரங்கள், எமது வெடிமருந்துப் பற்றாக்குறைகள் போன்றவற்றைச் சேகரித்த ’’றோ’’ அதிகாரிகள் அதனை ஸ்ரீலங்கா அரசிடம் சமர்ப்பித்திருந்தார்கள். ’’றோ’’ அதிகாரியான உன்னிக்கிருஷ்ணனே இந்த விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் வழங்கியிருந்த தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீலங்கா இராணுவம் தமது போர் உபாயங்களை வகுத்து யுத்தத்தை தீவிரப்படுத்தியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், களத்தில் நின்று போராடிய எமது இயக்கத்திற்கு ஆயுத உதவி அளித்து எமது மக்களைப் பாதுகாக்கத்தயங்கிய இந்தியா, தமிழ் நாட்டில் செயலிழந்து கிடந்த இயக்கங்களுக்கு பயிற்சியும், ஆயுத உதவியும் வழங்க முன்வந்தது.

அத்தோடு இந்த இயக்கங்களை தமிழ் மக்களுக்காகப் போரடிவரும் எமது அமைப்பிற்கெதிராகத் திருப்பிவிடுவதிலும் இந்தியா கவனம் செலுத்தியது. இந்த நடவடிக்கையானது எமக்கு இந்தியா மீதிருந்த நம்பிக்கையை தகர்த்தது. இதன் மூலம் இந்திய அரசின் நோக்கம் எமக்கு தெளிவானது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பலம்வாய்ந்த இராணுவ சக்தியாக உருவெடுத்து ஸ்ரீலங்காப் படையினரைத் தோற்கடிப்பதை இந்தியா விரும்பவில்லை. “ஸ்ரீலங்காப் படையினர் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, புலிகளை அழித்து, அவர்களை இராணுவரீதியாகப் பலவீனப்படுத்தவேண்டும். புலிகளால் தமிழ் மக்களைப் பாதுகாக்கமுடியாத சூழ்நிலை உருவாகவேண்டும். மக்கள் மத்தில் புலிகள் மீதிருந்த நம்பிக்கை தளரவேண்டும். அந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் இரட்சகர் என்ற போர்வையில் நேரடியாக இராணுவரீதியில் தலையிட்டு தனது நலன்களைப் பேணிக்கொள்ளவேண்டும்’’.- இப்படித்தான் இந்திய அரசு திட்டமிட்டது.

அதேசமயம் இந்திய அரசு ஜயவர்த்தனவை மிரட்டி ’’ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்களை ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு வழங்கி ஸ்ரீலங்கா இரணுவத்தை முறியடிப்போம். பெரிய அழிவுகளை உண்டுபண்ணுவோம். எந்தவொரு ஏகாதிபத்திய சக்தியிடம் உதவிபெற்றாலும் யுத்தத்தில் வெல்லமுடியாமல் பண்ணுவோம்’’ என்று மிரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

தமிழர் நலனில் இந்தியா உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதவி வழங்கி தமிழ் மக்களின் அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா அதனை விரும்பவில்லை. புலிகளின் வெற்றிக்கு வழிவகுத்துக்கொடுத்துவிட்டால் தனது தலையீட்டுக்கு வாய்ப்புகள் இல்லாமல்போய்விடும் என்று இந்தியா கருதியது.

ஒரு அப்பட்டமான இனப்படுகொலையைத் தடுக்க வேண்டும் என்கின்ற மனிதாபிமான நிலைப்பாட்டைக் கைவிட்டு, தனது பூகோள நலன்களில் மட்டுமே இந்தியா அக்கறை காண்பித்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தமானது தமிழீழ மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. இலங்கையில் வாழும் பல்லின மக்களில்; ஒரு சமுகக் குழுவாகவே தமிழீழ மக்கள் கணிப்பிடப்படுகின்றார்கள்.

இந்த ஒப்பந்தமானது தமிழர் தாயகத்தையும், அந்தத் தாயகத்தில் தமிழரின் ஒருமைப்பாட்டு உரிமையையும் அங்கீகரிக்கவில்லை.

தற்காலிக வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றிக் குறிப்பிட்டபோதும், கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழர் தாயகத்தை பிரிவுபடுத்தும் ஆபத்தான விதிகளையும் கொண்டிருக்கின்றது. இப்படி தமிழீழ மக்களுக்கு பாதகமான பல குறையாடுகள் இந்த ஒப்பந்தத்தில் காணப்படுகின்றது.

இந்திய அரசானது எம்மை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணாகதியடையச் சொல்லுகின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிபந்தனையின்றி ஆதரிக்கச் சொல்லுகின்றது.

நாம் ஆயுதத்தில் காதல்கொண்ட அராஜகவாதிகள் அல்லர். நாம் பலாத்காரத்தை வழிபடும் பயங்கரவாதிகளும் அல்லர். நாம் யுத்த வெறிகொண்ட, இரத்த வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சமாதானத்தையே விரும்புகின்றோம். எமது மக்கள் சமாதானமாக, நிம்மதியாக, சுயகௌரவத்துடன் சுதந்திரமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள்.

ஒடுக்கப்பட்ட எமது மக்களின் உரிமையை மீட்டெடுக்கவே நாம் ஆயுதங்களை ஏந்தினோம். அந்த இலட்சியத்திற்காகவே நாம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றோம். அந்த இலட்சியத்திற்காக இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது வீரர்கள் தமது உயிரை அற்பனித்துள்ளார்கள்.

எமது வீரவரலாற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எம்மைச் சரணாகதி அடையச் சொல்லுகின்றது இந்திய அரசு.

நாம் பாரத நாட்டுடன் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்களுடன் போர் புரியவும் விரும்பவில்லை. நாம் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கின்றோம். ஆனால் நாம் ஆயுதங்களைக் கையளித்துவிடுவதால் எமது மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு தரப்பட்டுவிடுமா? எமது மக்கள் நிம்மதியாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வழி பிறக்குமா?

நாம் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கின்றோம். ஆனால் எமது மக்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். இந்திய அரசு தனது இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு, புலிகளை வேட்டையாடுவதைக் கைவிட்டு, எமது மக்களுக்கு சுபீட்சமான ஒரு வாழ்வை, ஒரு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு முன்வரவேண்டும். அப்பொழுது நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம்.

இந்திய இராணுவம் எமது மண்ணில் நிகழ்த்திவரும் அடாவடித்தனங்களைக் கண்டு நாம் அஞ்சி அடிப்பணிந்து போனால், ஜயவர்த்தன அரசிற்கு எமது தமிழ் இனம் அடிமைகளாகப் போக நேரிடும். இத்தனை காலமாக நாம் இரத்தம் சிந்திப் போராடியதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இன்று நாம் இந்தியாவிற்கு அடிப்பணிந்து போய்விட்டால் அடுத்த எமது தலைமுறை எம்மை மன்னிக்கப்போவதில்லை. நாம் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்களுக்கு அஞ்சப்போவதில்லை.

இந்தியா ஒரு அந்நிய நாடு. இங்கு வந்து எமது மண்ணை ஆக்கிரமித்துக்கொண்டு இந்திய இராணுவம் எம்மை அடிமைப்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது.

எமது மக்களுக்கு எதிராக தான் செய்யும் அட்டூழியங்களையும், அநியாயங்களையும் இந்திய அரசு உலகின் முன்பாக இருட்டடிப்புச் செய்கின்றது. அபாண்டமான பொய்களைக் கூறிவருகின்றது.

பொய்மையின் திரைகளைக் கிழித்துக்கொண்டு உண்மை ஒருநாள் வெளிவரத்தான் செய்யும். அப்பொழுது பாரதம் உலக மனச்சாட்சியின் முன்பு தலை குணிந்து நிற்கும். அப்பொழுது வரலாறு எமது பக்கம் திரும்பும். அன்றுதான் எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். அதுவரை நாம் உண்மைக்காக, நீதிக்காகப் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம்.|“

இவ்வாறு புலிகள்; 1987 டிசம்பர் மாதம் சென்னையில் பிரசுரித்திருந்த ’’இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்’’ என்ற தமது புத்தகத்தில் தெரிவித்திருந்தார்கள்.

இதேபோன்று, இந்தியா தமிழ் மக்களுக்கு எதிராக தமிழ் ஈழ மண்ணில் மேற்கொண்டிருந்த அட்டூழியங்களை எல்லாம் பட்டியலிட்டு, புலிகள் ஆங்கிலத்திலும் ஒரு நூலை வெளியிட்டிருந்தார்கள்.

‘’இந்தியா….நீயுமா???“(You too India?) என்ற தலைப்பில் வெளியான இந்த நூலும் இந்தியாவின் பல துரோக நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டுவதாக இருந்தது.

ஈழத்தமிழர் பற்றி ஒன்றுமே தெரியாத ராஜீவ் காந்தி

ஈழத் தமிழர் பிரச்சனையில் அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதாக வெளி உலகிற்கு காண்பித்துக்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, உண்மையிலேயே ஈழத்தின் வராலாறு பற்றி ஒன்றுமே தெரியாதவராக இருந்தார். புலனாய்வு அதிகாரிகள் வழங்கும் தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு தீர்மானங்களை எடுக்கும் ஒரு நிலையிலேயே ராஜீவ் காந்தி இருந்துவந்தார்.

இந்தியாவின் பிராந்திய நலன்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்கும் நோக்கத்தில் காய்களை நகர்த்திக்கொண்டிருந்த இந்திய புலனாய்வுப் பிரிவினரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்களை மூடிக்கொண்டு அவர் அனுமதி வழங்கிவந்தார். இதனால் ஈழத் தமிழர் பற்றி உண்மையான அக்கறை எதனையும் அவரால் காண்பிக்கமுடியாமல் போயிருந்தது.

‘’ஈழப்பிரச்சனையில் இந்தியா முழுமூச்சுடன் இறங்கியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், இந்தியாவின் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு ஈழத்தின் நிலப்பரப்பு பற்றிய அறிவு போதியளவு இல்லாது இருந்திருந்தது’’ என்று ஈழத் தமிழர்களின் முக்கிய தலைவர் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.

அந்தத் தமிழ் தலைவர் வேறு யாரும் அல்ல! இந்தியாவின் அத்தனை ஈழ விரோத நடவடிக்கைகளுக்கும் துணை போய்கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களே, ராஜீவ் காந்தி பற்றி இவ்வாறு தெரிவித்திருந்தார். ’’செல்வா ஈட்டிய செல்வம்’’ என்ற தலைப்பில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு பற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் எழுதியிருந்து நூல் ஒன்றிலேயே இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

‘’செல்வா ஈட்டிய செல்வம்’’

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மகாநாடு இந்தியாவின் பெங்களுர் நகரில் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அந்த மாநாட்டின்போது ஈழப் பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவுடன் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடாத்தனார்.

இனப்பிரச்சனைக்கு தீர்வாக தெரிவிக்கப்பட்டிருந்த உத்தேச மாநில சுயாட்சி பற்றி அங்கு ஆராயப்பட்டது. காணிப் பங்கீடு, கவர்ணரின் அதிகாரம் போன்ற விடயங்களுக்கு ஸ்ரீலங்கா தரப்பில் இருந்து சில மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதாவது, வடக்கு கிழக்கு மாகாண இணைப்புப் பற்றிய யோசனைக்கு மாற்றாக, கிழக்கு மாகாணத்தை மூன்று மாகாணங்களாகப் பிரிக்கும் ஓர் ஆச்சரியமான திட்டம் ஸ்ரீலங்கா அரசினால் முன்வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தோடு திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் உள்ள தமிழ் பகுதிகளை இணைத்து ஓர் தமிழ் மாகாணமும், எஞ்சிய திருகோணமலை மாவட்டம் ஒரு சிங்கள மாகாணமாகவும், அம்பாறை மாவட்டம் ஒரு முஸ்லிம் மாகாணமாகவும் பிரிக்கப்படுவதற்கான யோசனையை ஜே.ஆர். முன்வைத்திருந்தார்.

கிழக்கு மாகாணக் குடிசன இனவாரி அமைப்பு பற்றி மிகத் தவறான கருத்தைக் கொடுக்கக்கூடிய வரைபடங்களையும் ஜே.ஆர். இந்திய அதிகாரிகளிடம் வழங்கியிருந்தார். இந்த பொய்யான வரைபடங்கள் பற்றி தமிழர்கள் தரப்பு எவ்வளவோ எடுத்துக் கூறியபோதிலும், ராஜீவ் காந்தி அவர்களும், இந்திய அதிகாரிகளும் அதனை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.

இந்த பொய்யான வரைபடங்களின் அடிப்படையில், ஜே.ஆர். முன்வைத்த காணிப்பங்கீட்டுத் திட்டத்திற்கு தமிழ் அமைப்புக்களைச் சம்மதிக்கவைக்க இந்திய அரசு அவசரம் காண்பித்தது. இரவோடு இரவாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வே.பிரபாகரனை பெங்களூருக்கு அழைத்து இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி அவரை இந்திய அரசு நிர்ப்பந்தித்தது.

ராஜீவ் காந்தி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் திரு.பிரபாகரன் நீண்ட விவாதங்களை நடாத்தியபோதும், இதற்கு தீர்வெதுவும் காணப்படவில்லை. இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு திரு.பிரபாகரன் ஒரேயடியான மறுப்புத் தெரிவித்து விட்டார்.

திருகோணமலையை சிங்கள மாகாணமாக்கித் தன்பிடிக்குள் வைத்திருக்கும் ஜே.ஆரின் திட்டத்தில், நீண்ட கால நோக்கத்தில் அமைந்த சதி ஒன்றும் காணப்பட்டிருந்தது.

வடக்கையும், கிழக்கையும் இணையவிடாது, இடையில் சிங்கள பிரந்தியம் ஒன்றை அமைத்து வடக்கு கிழக்கை நிரந்தரமாகக் கூறு போட்டுவிடும்; திட்டத்திலேயே ஜே.ஆர். அந்த மூன்று கிழக்கு மாகாணங்களின் யோசனையை முன்வைத்திருந்தார். ஜே.ஆரின் இந்த கபட திட்டம் பற்றி பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தமிழ் தலைவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த யோசனையை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்.

கிழக்கு மாகாணம்

இந்த விடயம் பற்றி திரு. அமிர்தலிங்கம் அவர்கள் தனது நூலில் குறிப்பிடும் போது, ’’…….. இந்திய அதிகாரிகளும், இந்தியப் பிரதமரின் ஆலோசகர்களும், கிழக்கு மாகாணம் பற்றிய மிகத் தவறான கருத்தையே கொண்டிருந்தார்கள். வடக்கு மாகாணத்தில் இருந்து நிலத்தொடர்புகள் எதுவும் அற்ற ஒரு தனி பிரதேசமே இந்தக் கிழக்கு மாகாணம் என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள்.

கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றத்தின் வரலாறும் அதன் தாக்கமும் பற்றியும், அங்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட தேர்தல் தொகுதிகள் மற்றும் நிர்வாகப் பிரிவுகள் பற்றியும், புதிய சிங்கள நிர்வாகப் பிரிவுகளில் அபிவிருத்தி செய்யப்படாத தமிழ் நிலங்களையெல்லாம்; சேர்த்த சிங்கள அரசின் சூழ்ச்சி பற்றியும், 1983ம் ஆண்டு கலவரங்களின் பின் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றியும், இந்திய அதிகாரிகளுக்கு முதலில் இருந்து விரிவாக விளக்கவேண்டி இருந்தது..’’ என்று திரு. அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதியே இதுபற்றி இந்திய அதிகாரிகளிடம் தாம் இந்தத் தரவுகளை வழங்கியிருந்ததாக திரு.அமிர்தலிங்கம் தனது நூலில் தொவித்திருக்கின்றார்.

அப்படியானால், ஈழமக்கள் போராட்டம் மேற்கொள்வதற்கு அடிப்படையாக இருந்த காரணங்கள் தெரியாத நிலையிலேயே இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட்டிருந்ததா என்கின்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

1986ம் ஆண்டு டிசம்பரில், இனப்பிரச்சனைத் தீர்வு பற்றி பேச்சுவார்த்தை நடாத்துவதற்கென்று இந்திய அமைச்சர்களான சிவசிதம்பரமும், நட்வர்சிங்கும் கொழும்பு செல்வதற்கு முன்னர், சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் அவர்களைச் சந்தித்து, இலங்கையின் கிழக்கு மாகாணம் பற்றிய உண்மையான வரைபடத்தையும், அதன் பூகோள விபரத்தையும் தாம் வழங்கியதாக திரு.அமிர்தலிங்கம் தனது நூலில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

இது, ஈழத்தமிழர்களுக்கு சார்பாகவென்று கூறிக்கொண்டு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த இந்திய அதிகாரிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும், ஈழநாட்டின் வரைபடம் முதற்கொண்டு ஈழ வரலாறு பற்றிய எந்தவித அடிப்படையும் இல்லாது இருந்திருக்கின்றது என்பதை புலப்படுத்துவதாக உள்ளது.

அதுவும் இலங்கை நாட்டில், ஈழ மண்ணில் இந்தியாவின் நேரடித் தலையீடு இடம்பெறுவதற்கு சில மாத காலம் வரை கூட ஈழத்தின் பூகோள வரைபடவிபரம் இந்தியாவிடம் இல்லாதிருந்தது ஆச்சரியமான விடயம்தான்.

அப்பொழுது இந்தியாவிடம் இருந்ததெல்லாம் இந்திய நாட்டின் பூகோள நலன் மட்டும்தான் என்பது இதிலிருந்து தெளிவாகவில்லையா?

தொடரும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புலிகளின் தலைவரை இந்தியா வஞ்சித்த சந்தர்ப்பங்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 44): நிராஜ் டேவிட்
  • by admin
  • November 29, 2012
Frame-061-150x150.jpgதமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவை பகைத்துக் கொண்டதற்கும், இந்தியா மீது போர்தொடுத்ததற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புலிகள் இந்தியாவை தமது எதிரியாக ஆக்கிக்கொண்டதற்கு இந்தியா புலிகளுக்கு செய்த பல நம்பிக்கைத் துரோகங்களே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

புலிகளின் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பல தலைவர்களது மரணத்திற்கும், புலிகளின் யாழ் அரசியல் பொறுப்பாளர் திலீபனது மரணத்திற்கும் இந்தியா நேரடியாகக் காரணமாக இந்ததும், இது இந்தியா மீது புலிகளை நம்பிக்கை இழக்கச்செய்திருந்ததும், அதனைத் தொடர்ந்து இந்தியப் படை- புலிகள் மோதல்கள் ஆரம்பமானதும் யாவரும் அறிந்ததே.

ஆனால் இந்திய அரசு மீது புலிகள் வைத்திருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் நீக்கிவிடக் கூடியதாக இருந்ததும், இந்தியா மீது புலிகளை தீராப் பகைகொள்ள வைத்ததுமான இரண்டு சம்பவங்களைக் முக்கியமாகக் குறிப்பிட முடியும்.

இந்தியாவை இனி நம்பிப் பிரயோஜனமில்லை என்று புலிகளை தீர்மானம் எடுக்க வைத்ததற்கும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று புலிகளை உறுதிபூணவைத்ததற்கும் அடிப்படையாக இரண்டு முக்கியமான சம்பவங்கள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக் காண்பிக்கப்படுகின்றன.

இந்திய விரோத உணர்வை ஏற்படுத்திய சம்பவங்கள்

•முதலாவது சம்பவம் 8.11.1986 அன்று இடம்பெற்றது. தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியா கைது செய்தது. அவர்களது ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளைக் கைப்பற்றியது.

•அடுத்த சம்பவம் 24.07.1987 இல் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை பேச்சுவார்த்தைக்கு என்று இந்தியாவிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை வீட்டுக்காவலில் வைத்ததுடன், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றேயாகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்தியது.

இந்த இரண்டு சம்பவங்களுமே, ராஜீவ் காந்தி தலைமையிலான இந்தியாவை எதிர்ப்பதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என்பதை புலிகளுக்குப் புரியவைத்திருந்த சம்பவங்களாகும்.

இந்தியாவிற்கு எதிராகச் செயற்படும் பாதையை புலிகள் தெரிவுசெய்வதற்கும், இவ்விரு சம்பவங்களுமே பிரதான காரணங்களாகவும் அமைந்திருந்தன.

பின்நாட்களில் இந்தியாவிற்கு எதிராக ஒரு “துன்பியல் சம்பவம்” புலிகளால் மேற்கொள்ளப்படுவதற்கும், இந்த இரண்டு சம்பவங்களுமே பிரதான காரணங்களாக அமைந்திருந்தன.  இதிலே முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட சம்பவம், 1986ம் ஆண்டு இந்தியா பெங்களுரில் நடைபெற இருந்த “சார்க்” மகாநாட்டை அடிப்படையாகக்கொண்டு இடம்பெற்றிருந்தது.

1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம், 16ம், 17ம் திகதிகளில் பெங்களுரில் நடைபெற இருந்த “தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியா வருவதாக இருந்தது. இவரது இந்திய விஜயத்தின் போது புலிகள் மற்றும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள் தரப்பில் இருந்து ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்தியாவின் புலனாய்வுத் துறை இந்தியப் பிரதமரை எச்சரிக்கை செய்திருந்தது.

இவ்வாறு ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடச் சந்தர்பம் உள்ளது என்றே இந்தியப் பிரதமர் ராஜீவும் நம்பினார். அப்பொழுது ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு எதிராக இந்தியா தனது நகர்வை ஆரம்பித்திருந்த காலம். ஆகவே, சார்க் மாநாட்டை அடிப்படையாக வைத்து புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவும் ராஜீவ் காந்தி எண்ணினார்.

“தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் ஈழப் போராளிகள் “சார்க்” மாநாடு நடைபெறும் பெங்களுருக்குச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு, இந்திய மத்திய உள்துறையில் இருந்து தமிழ் நாடு தலைமைச் செயலாளருக்கு ரகசியத் தகவல் அனுப்பிவைக்கப்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள போராட்ட அமைப்புக்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு, தமிழ் நாட்டு உளவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த டீ.ஜீ.பி. மோகனதாஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

நவம்பர் மாதம் 8ம் திகதி அதிகாலை தமிழ் நாட்டிலிருந்த ஈழ விடுதலை இயக்கங்களின் முகாம்கள் அனைத்தும் தமிழ் நாட்டுப் பொலிஸாரால் திடீரென்று சுற்றிவளைக்கப்பட்டன.

அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் ஒன்றுவிடாமல் முற்றுகையிடப்பட்டு அவர்களது ஆயுதங்கள் தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகுதியினுள், SAM-7 (Surface to Air Missile) விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் அடங்கி இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகி இருந்தன.

பிரபாகரன் கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தமிழ் நாடு பொலிஸார் கைது செய்தார்கள். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவரை தமிழ் நாடு பொலிஸார் புகைப்படம் எடுத்ததுடன், அவரை அங்கு அவமானப்படுத்தும் விதத்தில் பொலிஸார் நடந்துகொண்டதாகவும் அப்பொழுது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன் பின்னர் சார்க் மாநாட்டுக்காக இந்தியா வந்திருந்த ஜே.ஆர்.ஜயவர்தனாவுடன் இந்தியப் பிரதமர் உடன்பாடு கண்டிருந்த ஒரு ஒப்பந்தத்திற்கு,  திரு.பிரபாகரனையும் சம்மதிக்கவைக்கும் நோக்கத்தில் திரு பிரபாகரன் அவர்கள் பெங்களுருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். (திரு.பிரபாகரன் அவர்கள் பெங்களுர் அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு அவர் இந்த உடன்பாடை ஏற்க மறுத்தது போன்ற விடயங்கள் பற்றி இத்தொடரில் ஏற்கனவே விபரித்திருந்தேன்.)

விடுதலைப் புலிகள் மீது இந்தியாவின் தீர்மானங்களைத் திணிக்கும் நோக்கத்திலேயே, புலிகளின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன், புலிகளின் தலைவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று புலி உறுப்பினர்கள் அப்பொழுது நம்பினார்கள். தமது அதிருப்தியையும். மனவருத்தத்தையும் பரவலாக வெளியிட்டிருந்தார்கள்.

ஆனால் தலைவர் பிரபாகரன் இந்தியாவின் எந்தவிதமான அழுத்தத்திற்கும் மசியவில்லை. தனது நிலையில் அவர் அசைக்கமுடியாத உறுதியையே கடைப்பிடித்தார். இந்தியாவினதும், ஸ்ரீலங்காவினதும் கூட்டுத்தந்திரத்திற்கு அகப்படாமல் சென்னை திரும்பிய திரு.பிரபாகரனுக்கு மற்றொரு அதிர்ச்சி வைத்தியம் செய்ய இந்தியா முடிவு செய்திருந்தது. “இந்தியாவின் பேச்சை மீறினால் இப்படியான இன்னல்களையெல்லாம் சந்திக்க நேரிடும்” என்பதை புலிகளுக்கு உணர்த்தவே இந்தியா இந்த நகர்வை எடுத்திருந்தது.

புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகள் பறிமுதல்

புலிகள் வைத்திருந்த தொலைத்தொடர்பு கருவிகளையும் இந்தியப் பொலிஸார் கைப்பற்றினார்கள். புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் தமது உயிரைப் போன்று மதிக்கும் முக்கிய விடயங்களான “ஆயுதங்கள்”, “சயனைட்” போன்று அவர்களது தொலைத்தொடர்பு சாதனங்களும் மிக முக்கியமான ஒன்று. அந்தக் காலத்தில் ஈழமண்ணில் நின்று போராடிய அத்தனை தமிழ் இயக்கங்களிலும் பார்க்க புலிகளது தொலைத் தொடர்பு வலைப்பின்னல்கள் பல மடங்கு முன்னேற்றகரமானவைகள் என்பதுடன் அக்காலத்திலேயே புலிகள் தமது தொலைத்தொடர்பு நடவடிக்கைகளுக்காக மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த காலத்தில் யாழ் மண்ணில் புலிகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்து செயற்பட்டுவந்த கிட்டு அவர்கள், சண்டைக்கள நிலவரங்கள் பற்றி, இந்தியாவில் தமிழ் நாட்டில் தங்கியிருந்த தலைவர் பிரபாகரனுடன் உடனுக்குடன் தொடர்புகொண்டு உத்தரவுகளை பெற்றுக்கொள்ள அதி நவீன தொலைத் தொடர்புக் கருவிகளை கையான்டுவந்தது பற்றி அக்காலத்திலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதேபோன்று இந்தியப் படைகள் ஈழமண்ணில் புலிகளிடம் அடிவாங்கிக் கொண்டிருந்த காலத்தில் புலிகள் தரப்பில் இருந்து இந்தியப் படைகளை ஆச்சரியப்பட வைத்திருந்த பல விடயங்களுள், புலிகளின் தொலைத் தொடர்பு செயற்பாடுகளும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி மிகவும் அக்கறையுடன் புலிகளால் கட்டியெழுப்பப்பட்டிருந்த புலிகளின் தொலைத் தொடர்பு சாதனங்கள் இந்தியப் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்ட விடயமானது, இனி இந்தியாவை நம்பிப் பிரயோஜனமில்லை என்று புலிகளை தீர்மானம் எடுக்கும்படி வைத்தது.இந்தியாவை நம்பி தொடர்ந்தும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து போராட்டம் நடாத்த முடியாது என்பதை

புலிகளுக்கு உணர்த்தும்படியாக இந்தச் சம்பவம் அமைந்திருந்தது.

பிரபாகரனின் உண்ணாவிரதம்.

இதனைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் இருந்த புலிகளது அலுவலகத்தில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்து புலிகளின் ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றை புலிகளிடம் ஒப்படைக்கும்படி தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். உத்தரவு பிறப்பித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் முதற் தடவையாக ஒரு சாத்விகப் போராட்டத்தை நடாத்தும்படியான சந்தர்பத்தை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவமே, இந்தியா மீது புலிகளை பகைகொள்ள வைத்த முதலாவது சம்பவம் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றர்கள்.

இந்தியாவிற்கு எதிராக புலிகளை விரோதம் கொள்ள வைத்த இரண்டாவது சம்பவம் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரோதத்திற்கு வித்திட்ட பயணம்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 45) – நிராஜ் டேவிட்
  • by admin
  • December 5, 2012
 
Frame-061-150x150.jpg

இந்தியாவுடன் புலிகளைப் பகைகொள்ளவைத்த முதலாவது சம்பவம்பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம். இந்தியாவிற்கு எதிராகப் புலிகளை களம் இறங்கும்படி செய்த இரண்டாவது சம்பவம், இந்தியப் படைகளின் நேரடித் தலையீடு இலங்கையில் ஏற்பட்ட பின்பு இடம்பெற்றிருந்தது.

“ஒப்பரேஷன் பூமாலை“ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.

ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் குள்ளநரித் தந்திரத்துடனும், இந்தியாவின் பூகோள நலனை நோக்காகவும் கொண்டும் தயாரிக்கப்பட்டிருந்த இந்த ஒப்பந்த யோசனைகள் பற்றி புலிகளுக்கு எதுவும் முதலில் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

அக்காலத்தில் ஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே நின்று போராடிக்கொண்டிருந்தார்கள். “ஈரோஸ்“ அமைப்பு தவிர மற்றைய ஈழ இயக்கங்கள் அனைத்தும் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமன்னில் தமது தலமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.

இந்த ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். இந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது

(இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் துறை உயரதிகாரியாகக் கடமையாற்றியவர்தான் ஹாதீப் பூரி. இந்திய பாதுகாப்புத்துறை சம்பந்தமான நடவடிக்கைளுக்கு பொறுப்பான அதிகாரியாக இந்திய தூதரகத்தில் கடமையாற்றிய அதிகாரிதான் கப்டன் குப்தா)

ஸ்ரீலங்கா அரசிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகின்றது என்றும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்“ என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அந்த இந்திய அதிகாரிகள் புலிகளிடம் தெரிவித்தார்கள்.

தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்|| என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

19.07.1987 இடம்பெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பல தடவைகள் இந்திய அதிகாரிகளுக்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

தவிர்க்க முடியாமல் இந்திய நேரடித் தலையீடுகள் ஈழப் பிரச்சனையில் ஏற்பட்ட பின்னர், அதனை எப்படியாகிலும் எதிர்கொண்டேயாகவேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருந்தது. அதனால் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியா பயணமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியில் தீர்மானித்தார்.

இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணமாக விமர்சகர்களால் கருதப்பட்ட பிரபாகரனின் அந்த இந்தியப் பயனம், 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய ஹெலிக்காப்பரில் திரு.பிரபாகரன் புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்டார்.

ஏமாற்றப்பட்ட தமிழ் இயக்கங்கள்

புலிகளுடன் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த இந்தியா, தனது அரைகுறை ஒப்பந்தத்திற்கு புலிகளின் தலைவர் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்பதை நன்கு உணர்ந்திருந்தது. ஆனாலும் மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு என்ற ரீதியிலும், அப்பொழுது ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த ஒரே அமைப்பு என்ற ரீதியிலும் புலிகளை இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது ஏற்றுக்கொள்ளவைத்துவிட வேண்டும் என்பதில் ராஜீவ் காந்தி திண்ணமாக இருந்தார். அதனால் புலிகளை இணங்க வைக்க அவர் சில தந்திரங்களை கையாண்டார்.

தமிழ் இயக்கங்களுக்கு இடையே அக்காலங்களில் காணப்பட்ட முரன்பாடுகளை கனகச்சிதமாக தனது திட்டத்திற்கு பயன்படுத்த ராஜீவ் காந்தி தீர்மானித்தார். (இப்படி, இந்தியாவிற்கு சாதகமான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன்தான் இந்தியாவின் “றோ“ புலனாய்வு அமைப்பு ஆரம்பத்தில் ஈழப் போராட்ட அமைப்புக்களிடையே விரோதத்தை திட்டமிட்டு வளர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விடயங்கள் பற்றி ஏற்கனவே இத்தொடரின் 5ம் அத்தியாயத்தில் விரிவாகத் தெரிவித்திருந்தேன்.)

ஈழமண்ணில் இருந்து வெளியேறி தமிழ் நாட்டில் இந்திய அரசின் தயவில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், டெலோ, ஈ.என்.டீ.எல்.எப்., த.வி.கூட்டணி போன்ற அமைப்புக்களை அழைத்த ராஜீவ் காந்தி, இந்திய இலங்கை உத்தேச ஒப்பந்தத்திற்கு இந்த இயக்கங்கள் தமது முழு ஆதரவைத் தருவதாக அவர்களது சம்மதத்தைப் பெற்றார். இதற்காக இந்திய அதிகாரிகள் மேற்கொண்டிருந்த தந்திர நடவடிக்கையையும் இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

இயக்கங்களுக்கு இடையிலான மோதல்கள், இயக்கங்களின் உள்ளேயான பிளவுகள், ஈ.என்.டீ.எல்.எப். போன்ற புதிய அமைப்புக்களின் தோற்றங்கள் போன்றவற்றை கவனத்தில் எடுத்து, சரியான தருணத்தில் இந்தியத் தரப்பால் காய் நகர்த்தப்பட்டது.

இந்த இயக்கங்களின் தலைமைகளையும், பிரதிநிதிகளையும் தனித்தனியாக சந்தித்த இந்திய அதிகாரிகள் தமது ஒப்பந்தம் பற்றி விளக்கம் அளித்ததுடன், ஒப்பந்தத்தின் பிரதிகளையும் கொடுத்திருந்தார்கள். அத்தோடு இயக்கங்களின் மாற்று அமைப்புக்கள் அல்லது அந்த குறிப்பிட்ட இயக்கங்களில் இருந்து பிரிந்திருந்த அணியினர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றும் மற்றைய இயக்கங்களிடம் கூறிவைத்தார்கள்.

உதாரணத்திற்கு “புளொட்“ அமைப்பினரைச் சந்தித்த இந்திய அதிகாரிகள், அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றிருந்து பரந்தன் ராஜன் தலைமையிலான குழுவினர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று கூறியிருந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமையைச் சந்தித்த இந்திய அதிகாரிகள், அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தா அணியினர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு செயற்படத் தயார் என்று அறிவித்துவிட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்கள். இதேபோன்று டெலோவிடம் சென்ற அதிகாரிகள், “புளொட் அமைப்பு ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்க ஒப்புக்கொண்டுவிட்டது“ என்று தெரிவித்திருந்தார்கள். இப்படி ஒவ்வொரு இயக்கத்திடமும் மாற்றிமாற்றி கூறி இந்தியா தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டது.

அக்காலத்தில் புலிகள் அமைப்பால் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவின் தயவை மட்டுமே முற்று முழுதாக நம்பியிருந்த இந்த இயங்கங்களோ, தமது மாற்று இயக்கங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தாம் இதனை ஏற்காது போனால், எங்கே இந்தியா தம்மை கைகழுவிவிட்டுவிடுமோ என்கின்ற பயத்தில், இந்தியாவின் திட்டத்திற்கு பலியாகின.

அக்கால கட்டத்தில், தமது கொள்கைகளையும், கட்டுப்பாடுகளையும் இழந்த நிலையில், பெயருக்கு இயக்கம் நடத்திக்கொண்டிருந்த இந்த இயக்கத் தலைமைகள், இந்தியாவின் வலையில் தெரிந்துகொண்டே விழுந்தன. அத்தோடு இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதைத் தவிர இந்த இயக்கங்களுக்கு அப்பொழுது வேறு மார்க்கங்கள் எதுவும் இருக்கவில்லை.

26.07.1987 அன்று, தமிழ் அரசினர் விருந்தினர் விடுதியில் தமிழ் இயக்கத் தலைவர்களுடன் இந்த ஒப்பந்தம் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் அழைக்கப்படவில்லை. இந்தியத் தரப்பில், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கே.பி.எஸ்.மேனனும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீக்ஷித்தும் பங்கு பற்றினார்கள். ஒப்பந்தம் பற்றிய விளக்கத்தை தமிழ் இயக்கத் தலைவர்களுக்கு வழங்கிய அவர்கள், நயவஞ்சகமான ஒரு பொய்யை கூறினார்கள். புலிகள் அமைப்பு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாக மற்ற அமைப்புக்களிடம் தெரிவித்தார்கள்.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதில் தமிழ் இயக்கங்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச தயக்கமும் இதனால் உடைக்கப்பட்டது. இறுதியில் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை அனைத்து தமிழ் இயக்கங்களும் எடுத்தார்கள்.

“புலிகளே இதனை ஏற்றுக்கொண்ட பின்னர் தாம் இதனை ஏற்காது அடம் பிடித்தால், தமது அமைப்புக்கள் ஓரங்கட்டப்பட்டுவிடும்“ ஏற்கனவே அழியும் தறுவாயில் நின்றுகொண்டிருக்கும் தமது இயக்கங்களை இந்தியாவும் கைவிட்டால் முற்றுமுழுதாகவே அழிந்துவிடுவோம்“ என்று நினைத்த இயக்கங்கள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுச் செயற்படும் தீர்மானத்தை எடுத்தன.

இதேவேளை, ஒப்பந்தத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறப்பட்ட விடுதலைப்புலிகளோ, உண்மையிலேயே ஒப்பந்தம் பற்றி எதுவும் அறிந்திராத நிலையில் புது டில்லியில் தங்கியிருந்தனர்.

“புதுடில்லியில் தங்கியிருந்தார்கள்“ – என்று கூறுவதைவிட, “புதுடில்லியில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள்“ என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

புதுடில்லியின் அடைத்துவைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது?

அங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்ன?

அதற்கு பிரபாகரனின் பதில் நடவடிக்கை எப்படியாக இருந்தது?

இது பற்றி தொடர்ந்துவரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லியில் சிறைவைக்கப்பட்ட புலித்தலைவர்கள்- (அவலங்களின் அத்தியாயங்கள்- 46) – நிராஜ் டேவிட்
  • by admin
  • December 14, 2012
Frame-062-150x150.jpg
 

இந்திய விமானப்படை ஹெலிக்கொப்டரில் 24.07.1987 அன்று புதுடில்லி அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள “அஷோகா” ஹோட்டலில், 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.

“தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்” என்று கூறுவதை விட, சிறை வைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். புலிகளின் தலைவர்கள் இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் “கறுப்புப் பூனைகள்” பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அறையில் இருந்த தலைவர்கள் வெளியே நடமாட இந்தக் “கறுப்புப் பூனை” பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர்கள் வெளியில் எவரையும் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

விடுதியின் உள்ளே இருந்த தொலையேசியின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் பிரத்தியோகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் நேர்மையில் புலிகளைச் சந்தேகம் கொள்ளவைத்த மற்றுமொரு சம்பவமாக இந்த “அஷோக்கா ஹோட்டல்” சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது. இந்தியா மீது புலிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த ஒரு சம்பவமாக இந்த சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.

இந்தியாவை நம்பி அதன் விருந்தினராக வந்திருந்த புலிகளின் தலைவரை கைதுசெய்து சிறைவைத்தது போன்று நடந்துகொண்ட இந்தியாவின் நம்பிக்கைத் துரோகச் செயலே, இந்தியா பற்றிய ஒரு எதிர் நிலைப்பாட்டை புலிகள் பிற்காலத்தில் எடுப்பதற்கும் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காண்பிக்கின்றனர்.

இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும், இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனையும் நினைக்கவைத்த ஒரு சம்பவமாக இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடமுடியும்.

இந்தியாவின் நம்பிக்கைத் துரோகம்

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை அடைத்துவைத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்தத்தை அவர் மீது திணித்த இந்திய அரசின் அடாவடித்தனத்தையும், எதேச்சாதிகாரத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும், எந்த ஈழத் தமிழனும் மன்னிக்கவோ, மறக்கவோமாட்டான் என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தியது.

24ம் திகதி முதல் “அஷோகா” ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை, 28ம் திகதியே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார். இந்த நான்கு நாட்கள் இடைவெளியை, அவர் மற்றய இயக்கங்களைச் சமாளிப்பதற்கும், ஒப்பந்தத்திற்கான அவற்றின் ஒப்புதல்களைப் பெறுவதற்கும் பயன்படுத்திக்கொண்டார்.

புலிகளின் தலைவர்கள் வெளித் தொடர்புகள் எதுவும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் “புலிகள் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள்” என்று இந்திய தரப்பினரால் வெளி உலகிற்கு கூறப்பட்ட பொய்யையும் மறுப்பதற்கு எவருமே இல்லாமல் போயிருந்தது.

சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ராஜீவ் காந்தி, பலவாறான நெருக்குதல்களை பிரயோகித்து புலிகளை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்.

புதுடில்லியிலுள்ள “அஷோக்கா ஹோட்டலில்” புலிகளின் தலைவர்களுக்கும், இந்தியத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் பற்றி சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருமே உடனே எதுவும் வெளியே தெரிவிக்கவில்லை. வெவ்வேறு மனநிலையில் இருந்த இந்த இரண்டு தரப்பினரும் தங்களுக்கிடையில் நடைபெற்ற அந்த சம்பாஷனைகளின் விபரங்களை வெளியிட விரும்பவும் இல்லை.

ஆனால், அன்றைய தினம் “அஷோக்கா ஹோட்டலில்” நடைபெற்ற கலந்துரையாடல்கள் பற்றிய செய்திகள் படிப்படியாக இந்திய ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. வெறும் கலந்துரையாடல்களுக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டிருந்த தமிழீழ தலைவர்கள் மீது இந்தியா எப்படியான அழுத்தங்களையெல்லாம் பிரயோகித்திருந்தது என்ற விபரங்கள் வெளியாகி, ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் துரோகத்தை இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, முழு உலகிற்குமே வெளிப்படுத்தியிருந்தது.

ஜூலை மாதம் 28ம் திகதி இரவு “அஷோக்கா ஹோட்டலில்” புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களையும், புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களையும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார். தமிழ் நாடு அமைச்சர் பண்டிருட்டி ராமச்சந்திரன் மற்றும் இந்திய மத்திய உளவுத்துறைத் தலைவர் எம்.கே.நாராயணன் போன்றோரும் இந்தியப் பிரதமருடன் அங்கு சென்றிருந்தார்கள்.

“சிங்கள அரசுகளை நம்பி பல தடவைகள் நாம் ஏமாந்துவிட்டோம். தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவது தற்கொலைக்கு ஒப்பானது” என்று பிரபாகரன் ராஜீவ் காந்தியிடம் உறுதியாகத் தொரிதித்திருந்தார்.

“ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். ஸ்ரீலங்கா அரசு ஒப்பந்தத்திற்கு மாறாக நடந்துகொள்ளாமல் இந்தியா பார்த்துக்கொள்ளும்” என்று கூறி பிரபாகரனின் மனதை மாற்றுவதற்கு ராஜீவ் காந்தி முயன்றார்.

ஆனாலும் பிரபாகரன் தனது பிடியை விட்டுக்கொடுக்க தயாரில்லாதவராகவே நிலைப்பாடு எடுத்தார். ராஜீவ் காந்தயின் எந்தவொரு நெருக்குதலுக்கும் மசியாதவராகவே பிரபாகரன் காணப்பட்டார். இதனால் மிகவும் கோபமடைந்த ராஜீவ்காந்தி, “உங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் கிடையாது” என்று மிரட்டியதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.

இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்கள் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களைச் சந்திக்கும் முன்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீட்ஷித் அவர்கள் பிரபாகரனைச் சந்தித்திருந்தர். புதுடில்லி “அஷோக்கா ஹோட்டலில்” கறுப்புப் புனைகளின் பாதுகாப்பில் அடைத்துவைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவரைச் சந்தித்த தீட்ஷித், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விபரங்களை விளக்கி, புலிகள் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினார்.

கவனமாகச் செவிமடுத்த புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள், ஒப்பந்தத்தில் உள்ள பல விடயங்களில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, புலிகளின் ஆயுத ஒப்படைப்பு மற்றும் வடக்கு-கிழக்கு இணைப்பு சம்பந்தமாக சர்வஜன வாக்கெடுப்பு போன்ற விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓரேயடியாக மறுத்திருந்தார்.

“இது மிகவும் குழப்பம் அளிக்கும் ஒப்பந்தம்”, “எமக்கு ஏமாற்றத்தைத் தரும்படியான ஒப்பந்தம்” என்று அவர் தெரிவித்தார். இதனால் மிகவும் கோபமுற்ற தீட்ஷித், “நீங்கள் நான்கு தடவைகள் எங்களை முட்டாளாக்கி ஏமாற்றியுள்ளீர்கள்” என்று தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த புலிகளின் தலைவர், “அப்படியானால், நான்கு தடவைகள் நாங்கள் எங்கள் மக்களைக் காப்பாற்றி இருக்கின்றோம் என்று அர்த்தம்” என்று தெரிவித்தார்.

வைகோவின் கவலை

இந்தியத் தலைவருடனான சந்திப்பின் போதான அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் காணப்பட்ட மனநிலை பற்றி, அப்பொழுது தி.மு.கா.வின் “போர் வாள்” என்று அழைக்கப்பட்டவரும், தற்போதய ம.தி.மு.கா.வின் தலைவரும், ஈழ விடுதலை பற்றி பேசி “பொடா” சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றவருமான வை.கோபால்சாமி (வைக்கோ) பின்னர் ஒரு தடவை நினைவு கூர்ந்திருந்தார்.

அஷோக்கா ஹோட்டலில் பிரபாகரன் அவர்கள் மீதான கடும் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின்னர், திரு. பிரபாகரன் அவர்கள் வை.கோபால்சாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். அப்போது திரு.பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததை வை.கோபால்சாமி இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்.

“அவரது குரல் இப்பொழுதும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது. பிரபாகரன் என்னிடம் கூறினார்:

“நாங்கள் இந்திய அரசாங்கத்தினாலும், பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம். எனது முதுகில் குத்தப்பட்டுவிட்டது. என்னிடம் “சயநைட்” கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துவிடலாமோ என்றுகூட நினைத்தேன். ஆனால், பல்லாயிரக்கணக்கான எனது சகோதர சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவை எடுக்கமுடியவில்லை”. இவ்வாறு திரு.பிரபாகரன் தெரிவித்ததாக வைகோ குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் இந்த துரோக நடவடிக்கையே, பின்னாலில் இந்தியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை புலிகள் எடுக்கக் காரணமாக அமைந்திருந்தன.

இந்தியத் தலைவருக்கு எதிரான “துன்பியல் சம்பவம்“ இடம் பெறவும், இந்திய அரசின் இந்த நம்பிக்கைத் துரோகச் செயலே பிரதான காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தொடரும்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ராஜீவ் காந்தி அனுப்பிய இரகசியக் கடிதமும்! இலங்கை-இந்திய ஒப்பந்தமும்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 47): நிராஜ் டேவிட்
  • by admin
  • December 22, 2012
 
TimemagcoverAug101987-150x150.jpgபேச்சுவார்த்தைக்கு என்று இந்திய அரசால் புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்,  அங்கு “அஷோகா ஹோட்டலில்” அடைத்துவைக்கப்பட்டிருந்தது பற்றியும், இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட இருந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது பற்றியும் ஏற்கனவே விரிவாகப் பார்த்திருந்தோம்.

புதுடில்லியில், இந்தியாவின் விஷேட கொமாண்டோ பயிற்சி பெற்ற கறுப்புப் பூனை படைப் பிரிவு வீரர்களின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் பூட்டப்பட்ட அறைகளுக்குள் இந்திய பிரதமருக்கும், புலிகளின் தலைவர்களுக்கும் இடையில் நடந்திருந்த சம்பாஷனைகள் பற்றி அதிகம் வெளியே தெரியச் சந்தர்ப்பம் இல்லை. ஆனால் அங்கு புலிகளின் தலைவர்கள் ஒருவகையில் சிறைக் கைதிகள் போன்று வைக்கப்பட்டார்கள் என்பதற்கான மற்றொரு ஆதாரம் 5 வருடங்களின் பின்னரே வெளியிடப்பட்டது.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிற்கு 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி அனுப்பியிருந்த ஒரு இரகசியக் கடிதம் பின்னர் அம்பலமானபோதுதான் இந்த உண்மை வெளிவந்தது.

ராஜீவின் இரகசியக் கடிதம்:

இலங்கை-இந்திய ஒப்பந்தம் இரண்டு நாடுகளின் தலைவர்களாலும் 29.07.1987 அன்று கைச்சாத்திடப்பட்டபோது புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவின் தலை நகர் புதுடில்லியில் கறுப்புப் பூணைகளின் பாதுகாவலிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

30.07.1987 அன்று இந்தியப் படைகள் அமைதிகாக்கவென்று கூறி ஈழ மண்ணில் கால் பதித்தபோதும், ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் இந்தியாவிலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில்லேயே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகவும் அந்தரங்கமான அந்த இரகசியக் கடிதத்தை ஸ்ரீலங்காவின் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தார்.

பிரபாகரன் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு, பிரபாகரன் விடயத்தில் எதிர்காலத்தில் இந்தியா எவ்வாறு நடந்துகொள்ள இருக்கின்றது போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக அந்த இரகசியக் கடிதம் அமைந்திருந்தது.

ளுழுருவுர் SOUTH ASIAN NETWORK ON CONFLICT RESEARCH (SANCOR) என்ற அமைப்பு 1993ம் ஆண்டு கொழும்பில் வெளியிட்ட மிகவும் பிரபல்யமான ஆய்வு நூலான “ஸ்ரீலங்காவில் இந்திய தலையீடும், அதில் இந்திய உளவு அமைப்பு வகித்த பங்கும்” (INDIAN INVATION IN SRI-LANKA –THE ROLE OF INDIA’S INTELLIGENCE) என்ற நூலில் வெளியிடப்பட்டிருந்த அந்த இரகசியக் கடிதத்தில் காணப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

1. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அமைய இருக்கும் இடைக்கால நிர்வாக சபைக்கு எப்படியான பணிகள் இருக்கும் என்பது பற்றி தீக்ஷித் மூலம் 01.08.1987 அன்று அறிவித்திருந்தேன். ஆயுதங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் தமிழ் இயக்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படக்கூடியதான தொழில் வசதிகள் பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தீக்ஷித் அறிவித்தபோது, அதற்குப் பிரபாகரன்:

அ) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆ) ஆயுதங்களை ஒப்படைக்கச் சம்மதம் தொவித்துள்ளார்.

இ) ஆயுதங்களை ஒப்படைக்கும்போது அவரும் யாழ்பாணத்தில் இருந்து ஆயுத ஒப்படைப்பை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விரும்புகின்றார்.

2) ஒப்பந்தத்தை நல்லமுறையிலும், அமைதியான முறையிலும்  நடைமுறைப்படுத்தப்படுவதைக் கருத்தில்கொண்டு, பிரபாகரன் ஆகஸ்ட் 2ம் திகதி யாழ்பாணம் கொண்டுவரப்படுவார். இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட பின்வரும் அட்டவணைப்படி ஆயுதங்களை ஒப்படைக்க பிரபாகரன் சம்மதித்துள்ளார்.

02.08.1987-மாலை: பிரபாகரனின் யாழ் வருகை.

03.08.1987: இந்தியப் படைகள் யாழ் நகர் உட்பட குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக நிலைகொள்ளும்.

03.07.1987- நன்பகல்: ஆகஸ்ட் 4ம் திகதி மாலை 6மணிக்கு முன்னர் புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்துவிடுவார்கள் என்பதை முறைப்படி இந்தியத் தூதருக்கு அறிவிக்கும். இச் செய்தி பகிரங்கமாக வெளியிடப்படும்.

04.07.1987, 05.07.1987: புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பார்கள். இது பத்திரிகைகளிலும்,  தொலைக்காட்சி ஊடகங்களிலும் காண்பிக்கப்படும்.

05.07.1987: வடக்கு கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால சபை அமைக்கப்படும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அறிவிக்கவேண்டும். இதுபற்றிய விடயங்கள் இந்திய அரசுடன் பின்னர் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

3) பிரபாகரன் கொடுத்த வாக்கையும் மீறி ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் புலிகளிடமுள்ள ஆயுதங்களை இந்தியப்படையினர் பலவந்தமாக களைவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

4) ஆகஸ்ட் 3ம் திகதி முதல் 5ம் திகதிவரை ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்படவேண்டுமானால் மேலும் 48 மணி நேரம் நீடிக்கப்படலாம். போர் நிறுத்தம் இந்தியப்படைகளால் கண்காணிக்கப்படும்.

அந்தக் கடிதத்தில் காணப்பட்ட சில முக்கிய விடயங்கள் இவைதான்.

இந்தக் கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர், இந்தக் கடிதத்திலுள்ள விடயங்கள் பற்றி கருத்துத் தெரிவித்த ஆய்வாளர்கள், “இந்தியா புலிகள் விடயத்தில் கடும் போக்குடன் நடந்துகொண்டதும், புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது பிடியில் உள்ள ஒருவர் போன்று ராஜீவ் கருதிச் செயற்பட்டதும் இக்கடிதத்தின் மூலம் தெளிவாக வெளித்தெரிவதாகத் குறிப்பிட்டிருந்தார்கள்.

தமது அழைப்பை ஏற்று இந்தியா சென்றிருந்த ஒரு இனத்தின் தலைவரை தம்மிடம் உள்ள ஒரு கைதி போன்று இந்தியப் பிரதமர் கருதி செயற்பட்டதுதான், பின்னாட்களில் பல விபரீதங்கள் இடம்பெறக் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காண்பித்துள்ளார்கள்.

“ரோ” வை இனி நம்பமாட்டேன்- பிரபாகரன்.

இதேபோன்று, புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவில் இருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் எப்படியான நிலையில் காணப்பட்டார் என்பது பற்றி, தென் இந்தியாவின் இராணுவ கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் பின்நாட்களில் நினைவு கூர்ந்திருந்தார்.

இலங்கைக்கான இந்தியப் படைகளின் நடவடிக்கைகள் அனைத்திற்கும் அப்பொழுது பொறுப்பாக இருந்த திபீந்தர் சிங்கை, இந்தியாவில் பிரபாகரன் சந்தித்திருந்தார். அஷோக்கா ஹோட்டலில் பிரபாகரன் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், அவர் இலங்கைக் மீண்டும் கொண்டுசெல்லப்பட முன்னதாக, சென்னையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் பிரபாகரனுடனான தனது சந்திப்புப் பற்றி IPKF in SriLanka என்ற தலைப்பில் 1992 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலில் இவ்வாறு நினைவுகூறுகின்றார்.

“என்றுடைய அணுபவத்தில் பிரபாகரனுடனான சந்திப்பு நான் மிகவும் விரும்பிய ஒரு விடயமாகவே இருந்தது. அப்பொழுது நான் தங்கியிருந்த சென்னையின் பிராந்திய இராணுவ தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினருக்கான பகுதியில் பிரபாகரனை அழைத்துவருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மொழிபெயர்ப்பு செய்வதற்காக யோகரெட்ணம் யோகி மற்றும் வேறு இரண்டு போராளிகளுடன் பிரபாகரன் அங்கு வருகைதந்தார். அவர் எனது அறைக்குள் நுளைவதற்கு முன்னர் தனது காலில் இருந்த பாத அணிகளை அறையின் வாசலில் கழட்டிவிட்டே அறைக்குள் பிரவேசித்தார்.

நீளமான காற்சட்டையும், வெளியில் விடப்பட்ட மேற்சட்டையும் அணிந்திருந்த அவர் அதிகம் உயரமில்லாதவராகவும் அனால் மிகவும் திடகாத்திரமானவராகவும் உறுதியான உடற்கட்டை கொண்டவராகவும் காட்சி தந்தார். அவரது முகம் கடுமையானதாகவும், உறுதியானதாகவும் அதேவேளை சாந்தமான தோற்றத்தைக் கொண்டதாக காணப்பட்டது.

இக்காலகட்டத்தில் புலிகளைப் பொறுத்தவரையில் ஒரு மாபெரும் “இரட்சகராக” கருதப்பட்ட பிரபாகரனைப் பற்றி வெளியாகியிருந்த பல சாகசக் கதைகளில் சில உண்மையானதாகவும், பல மிகைப்படுத்தப்பட்டதாகவே இருந்தன.தேநீர் அருந்தியபடி அவர் பேசியபோது, இந்தியாவின் வற்புறுத்தலின் பெயரிலேயே தாம் ஸ்ரீலங்கா அரசுடனான யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டி ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் யுத்தத்தினாலும், பொருளாதார தடைகளினாலும் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட பாரிய கஷ்டங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன்தான் இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான இந்த அழுத்தத்தை பிரயோகிக்கவேண்டி இருந்தது என்று நான் பிரபாகரணுக்கு விளக்கினேன். அதற்கு பிரபாகரன் பலமாக தலையை அசைத்து அதனை மறுத்தார்.

இப்பேச்சுவார்த்தைகளின் போது பிரபாகரன் உண்மையிலேயே புதுடில்லியில் வீட்டுக்காவலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என்ற செய்தியை உறுதிப்படுத்துவதற்கோ அல்லது மறுப்பதற்கோ நாங்கள் இரண்டு தரப்பினருமே நினைக்கவில்லை. இப்படியான பல சம்பாஷனைகளின் பின்னர், இறுதியாக கருத்து தெரிவித்த பிரபாகரன்,

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சையோ அல்லது “ரோ” புலனாய்வு பிரிவையோ தாம் இனி ஒரு போதும் நம்பப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். இவ்வாறு லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் பிரபாகரனுடனான தனது சந்திப்புப் பற்றி நினைவு கூர்ந்திருந்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம்- இந்தியாவின் நற்பெயருக்குத் தோண்டப்பட்ட படுகுழி

ஈழ மண்ணில் இருந்துகொண்டு ஸ்ரீலங்கா படைகளுடனான போருக்கு தனித்து முகம்கொடுத்துக் கொண்டிருந்த ஒரே விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள்,  ஈழமண்ணில் இருந்து இந்தியாவினால் அபகரித்துச் செல்லப்பட்ட நிலையில்தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஈழத்தமிழர்களின் ஒரே தலைவனாக அப்பொழுது இருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனை நயவஞ்சகமாக அழைத்துச்சென்று இந்தியாவில் தடுத்துவைத்துவிட்டு, ஈழத்தமிழர்களைக் காப்பாற்றவெனக்கூறி ஒரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்தார்.

1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி காலை 11மணிக்கு இலங்கை கட்டுநாயக்கா விமாண நிலையத்தில் வந்திறங்கிய ராஜீவ் காந்தி, அன்று பிற்பகல் 3.37 மணிக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். எதிர்காலத்தில் இந்தியாவின் சரித்திரத்தில் ஒரு மிகப்பெரிய அவப்பெயரைப் பெற்றுக்கொடுக்க இருக்கின்ற ஒரு ஒப்பந்தத்தில் தான் கைச்சாத்திடுகின்றேன் என்றும் அப்பொழுது ராஜீவ்காந்தி நினைத்திருக்கமாட்டார்.

ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை, அவர்களின் அரசியல் இருப்பை குழிதோண்டிப் புதைத்துவிடக் கூடியதான இந்த ஒப்பந்தம், ஸ்ரீலங்காவினதும், இந்தியாவினதும் தேசிய மற்றும் கேந்திர நலன்களை மட்டுமே கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவின் கேந்திர நலனை மட்டுமல்ல தனது உயிரைக்கூட பறித்துவிடக்கூடியதாக இந்த ஒப்பந்தம் அமைந்துவிடும் என்பதை பிரதமர் ராஜீவ் காந்தி அப்பபொழுது எண்ணியிருக்கமாட்டார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியாவின் நற்பெயருக்கு தோண்டப்பட்ட ஒரு பாரிய படுகுழி என்பதையும் எவருமே அப்பொழுது உணர்ந்துகொள்ளவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நலன்களுக்காக விற்கப்பட்ட ஈழத்தமிழர்கள்(அவலங்களின் அத்தியாயங்கள்- 48)– நிராஜ் டேவிட்
  • by admin
  • December 28, 2012
prabhadixitandharkiratsinghsept261987-15
 

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்னாவுடன் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, இலங்கையில், குறிப்பாக தலைநகர் கொழும்பிலும், இலங்கையின் தென் பகுதிகளிலும் பாரிய எதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.

ஸ்ரீலங்கா அரசுடனான பிரச்சினையில் நேரடியாச் சம்பந்தப்பட்டிருந்த ஈழத்தமிழர்களையும், தமிழ் தலைவர்களையும் வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைத்துவிட்டு, இந்தியப் பிரதமரினால் எதேச்சாதிகாரத்துடன் செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் உண்மையிலேயே ஈழத்தமிழருக்கு சார்பான எந்தவொரு விடயமும் அடங்கியிருக்கவில்லை.

இப்படி இருந்தும் சிங்கள மக்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்ததுதான் வேடிக்கை. ஈழத்தமிழருக்கு சார்பாக இந்த நாட்டில் எதுவுமே நடந்துவிடக்கூடாது என்பதில் திண்ணமாக இருந்த சிங்களப் பேரினவாதிகளும், பௌத்த அடிப்படைவாதிகளும் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கத் தலைப்பட்டார்கள்.

இலங்கையின் தென் பகுதியில் பாரிய கலவரம் வெடித்தது.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இராணுவ மரியாதை அணிவகுப்பின்போது, ~விஜயமுனி விஜித்த றோகன டீ சில்வா| என்ற ஸ்ரீலங்காவின் கடற்படை வீரரால்; தாக்கப்பட்டார்.

சிங்கள மக்களாலும், ஈழத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காத இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம், உண்மையிலேயே இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன் என்பனவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை வடிவமைத்தவரும், இந்த ஒப்பந்தம் பின்நாட்களில் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கு முன் நின்று உழைத்தவருமான, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜே.என்.தீட்ஷித் அவர்கள், இந்த ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கம் பற்றி பின்னொரு தடவை தெளிவுபடுத்தியிருந்தார்.

ஈழ மண்ணில் இந்தியப் படைகள் புலிகளுடன் யுத்தம் புரிந்து பலத்த அடி வாங்கிக்கொண்டு தடுமாறியபோது, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள ஐக்கிய சேவைகள் மன்றத்தில் (United Service Institute)ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

10.03.1989 இல் நடைபெற்ற இந்த மாநாட்டில், ~இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினரது குறிக்கோளும், நடவடிக்கைகளும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்த ஜே.என்.தீட்ஷித் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பட்டன.  இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைந்திருந்த உற்காரணிகள் எவை, அமைதிப் படை இலங்கையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன? போன்றன பற்றி தனது உரையில் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

தீட்ஷித் தனது உரையில் தெரிவித்திருந்த கருத்துக்களில் சில:

எங்களுடைய நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதுடன், எங்களுக்கு நாங்களே செய்து கொண்டிருந்த வித்தியாசமான சோதனை நடவடிக்கை ஒன்றின் வெற்றியை நிச்சயப்படுத்திக் கொள்ளவே நாங்கள் இலங்கைக்கு செல்லவேண்டி இருந்தது.

1972ம் ஆண்டு முதல் இலங்கையில் அதிகரித்து வந்த தமிழ் தீவிரவாதத்தை எதிர்கொள்ளுவதற்காக என்று கூறி ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வந்த சில நடவடிக்கைகளின் விழைவாகவே இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிடவேண்டி ஏற்பட்டது.

தனது சொந்தப் பலத்தையும், உள்நாட்டில் அவர்களிடம் இருந்த வளங்களையும் மட்டும் கொண்டு தமிழ் தீவிரவாதத்தை அடக்கிவிட முடியாது என்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் உணர்ந்துகொண்டது.

அதேவேளை இந்தியாவில் வாழும் 50 மில்லியன் தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றிய சந்தேகத்தை மனதில் வைத்துக்கொண்டு, சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஸ்ரீலங்கா அரசு, இந்தியாவிடம் உதவி கோரவும் தயங்கியது. இதனால் தமிழ் தீவிரவாதத்தை அடக்குவதற்கு ஸ்ரீலங்கா அரசானது வேறு சில சக்திகளிடம் இருந்து உதவிகளைபெற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

1978ம் ஆண்டு தொடக்கம் 1986ம் ஆண்டுவரை இலங்கை இராணுவம் தனது படைகளின் எண்ணிக்கையை 12,000 இலிருந்து 35,000 இற்கு அதிகரித்துக் கொண்டது. அமெரிக்க மற்றும் பிரித்தானிய யுத்தக் கப்பல்களை இலங்கையிலுள்ள கொழும்பு, திருகோணமலை, காலி துறைமுகங்களுக்கு கொண்டு வருவதற்கான சில இரகசிய ஒப்பந்தங்களை அந்த நாடுகளுடன் ஸ்ரீலங்கா அரசு செய்துகொண்டது.

இங்கிலாந்தின் இரகசிய தகவல் துறை அமைப்பொன்றை ஸ்ரீலங்கா இராணுவம் தனது புலனாய்வு நடவடிக்கைகளுக்கு உதவியாக வரைவழைத்திருந்தது. அதேபோன்று, சின்பெட் (Shin Bet), மொஸாட் (Mossad)போன்ற கூலிப் படைகளின் உதவியையும் ஸ்ரீலங்கா இராணுவம் பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

தனது கடற்படைகளையும், ஊர்காவல் படைகளையும் பயிற்றுவிக்கவென்று கூறி பாகிஸ்தானிடம் இருந்தும் உதவிகளைப் பெற்று வந்தது. வொய்ஸ் ஒப் அமெரிக்கா (Voice of America) தனது ஒலிபரப்பை ஸ்ரீலங்கா மண்ணில் மேற்கொள்ளுவதற்கும் ஸ்ரீலங்கா அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதன் மூலம் சக்திவாய்ந்த, அதி நவீன தொலைத்தொடர்புக் கருவிகளை இலங்கையில் நிறுவி, இந்தியாவின் இராணுவ மற்றும் அரசியல் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைகளை அமெரிக்கா ஒட்டுக்கேட்கக் கூடியதான அபாயம் எமக்கு அங்கு ஏற்பட்டிருந்தது.

அத்தோடு, இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த பல நாடுகளிடம் இருந்தும் ஸ்ரீலங்கா போர் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருந்தது.

இதுபோன்ற ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவுமே நாங்கள் இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ளவேண்டி ஏற்பட்டது.

இந்தியாவில் இருந்து 15,000 மைல்களுக்கு அப்பால் உள்ள பிஜி தீவு போன்று இலங்கையும் இருந்துவிட்டால் இந்தியாவின் தலையீடு இலங்கையில் இல்லாது இருந்திருக்கும். ஆனால் இந்தியக் கரையில் இருந்து 18 மைல்கள் தொலைவில் மட்டுமே அமைந்துள்ள இலங்கை நாட்டில் நடப்பவற்றைப் பார்த்து நாம் கைகட்டிக்கொண்டு இருந்துவிடமுடியாது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறைமைக்கும் நேரடியாகச் சவால் விட்டுக்கொண்டிருக்கும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விடயத்தில் நாங்கள் அக்கறை செலுத்தினால் மட்டும் போதாது. எமது நாட்டின் பாதுகாப்பிற்கு மறைமுகமாக அச்சுறுத்தல்களை விடுத்துவரும் விடயங்கள் பற்றியும் நாங்கள் அக்கறை காண்பித்தேயாகவேண்டி உள்ளது.

1498ம் ஆண்டு முதல் இந்தியாவின் தென்கரையில் இருந்து இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டு வந்த அச்சுறுத்தல்களையும் நாம் இலகுவில் மறந்துவிடக்கூடாது.

விஸ்தரிக்கப்பட்ட எமது கடற்படை, நவீனமயப்படுத்தப்பட்ட எமது விமானப்படை, நுணுக்கங்கள் பல சேர்த்துக்கொள்ளப்பட்ட எமது தொலைத்தொடர்புகள் என்பனவற்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, எமது நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் நாம் திருப்திப்பட்டுக்கொண்டு இருந்துவிட முடியாது.

எமக்கெதிரான ஆபத்துக்கள் ஒருவேளை நேரடியான இராணுவத் தலையீடாக அல்லாமல், வேறு ரூபத்திலும் வந்துவிடக்கூடிய சாத்தியமும் உள்ளது. எமது அயல் நாடுகளில் ஏற்படுகின்ற அரசியல் நிர்ப்பந்தங்களும், சமுக மாற்றங்களும் கூட, எமது நாட்டின் கொள்கைகளில் பாரிய பாதிப்புக்களை ஏப்படுத்தக்கூடியதான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

இந்தியா இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்கு இவைகள்தான பிரதான காரணம்.

இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

ராஜீவின் நிலைப்பாடு:

இது இவ்வாறு இருக்க, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் மாற்றுக் கருத்து கொண்டவராகவே இருந்தார். இதனை ராஜீவ் காந்தியே தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பின்னொரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.

றொகான் குணரட்ன என்ற பிரபல சிங்கள எழுத்தாளருக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றின் போதே ஜே.ஆர். இதனைத் தெரிவித்திருந்தார்.

ராஜீவ் காந்தி தன்னிடம் பேசும் போது,  ‘I don’t want these fellows to have the northeast merged. I will help you’ என்று தெரிவித்ததாகவும், தனக்கு உதவியாக அவர் இந்தியப்படைகளை இலங்கைக்கு அனுப்பச் சம்மதித்ததாகவும் ஜே.ஆர். அந்தச் செவ்வியில் நினைவு கூர்ந்திருந்தார்.

மறந்து விடப்பட்ட ஈழத்தமிழர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், தெற்காசியப் பிராந்தியத்தில் தனது கேந்திர பாதுகாப்பையும், தனது பிராந்திய வல்லாதிக்கத்தையும் விஸ்தரிக்கும் நோக்கத்துடன்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.

புலிகளுக்கோ, ஈழத்தமிழருக்கோ ஒரு விடிவைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அதற்கு சிறிதும் இருந்தது கிடையாது. உண்மையிலேயே இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈழத்தமிழர், இந்தியாவின் நலனுக்காக விற்கப்பட்டிருந்தார்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம், அவர்களது தியாகங்கள், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் போன்றவற்றின் பெறுபேறுகளை அடகு வைத்து, தனது நலனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இந்தியா மேற்கொண்டிருந்த ஒரு நகர்வே இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாகவோ, அல்லது தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவோ இல்லை என்று, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருந்த விடுதலைப் புலிகள் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்கள்.

ஈழ மண்ணில் இந்தியப் படைகள்:

ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத அந்த ஒப்பந்தம் இவர்கள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, ஈழத்தமிழர்களைப் பாதிக்கும்படியான மற்றொரு நகர்வையும் இந்தியா மேற்கொண்டது.

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பியது.

30.07.1987ம் ஆண்டு இந்தியப் படைகள், இந்திய அமைதி காக்கும் படைகள் (Indian Peace Keeping Force)  என்ற பெயரில் ஈழ மண்ணில் கால்பதித்தன.

ஒரு மாபெரும் கெரிலாப் போரை அங்கு எதிர்கொள்ளப் போகின்றோம் என்பதை எதிர்பார்க்காத சுமார் ஒரு இலட்சம் இந்திய ஜவான்கள் உற்சாகத்துடன் ஈழமண்ணில் வந்திறங்கினார்கள்.

தங்களது வருகை ஆயிரக்கணக்காண ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பறிக்கப் போகின்றது என்றோ, கோடிக்கணக்கான அவர்களின் சொத்துக்களை நாசமாக்கப் போகின்றது என்றோ அவர்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

இவர்களில் 3000 ற்கும் அதிகமான ஜவான்கள் மீண்டும் உயிரோடு தமது நாட்டிற்கு திரும்பிப் போகமாட்டார்கள் என்பதையும், பாவம் அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.

தொடரும்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்
  • by admin
  • January 4, 2013
165951_317405458346047_1129318065_n-150x
 

இந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து வருகின்றது.

ஸ்ரீலங்காப் படைகள் 1987ம் ஆண்டில் மேற்கொண்டிருந்த “ஒப்பரரேசன் லிபரேசன்” நடவடிக்கையினால் யாழ்ப்பாணம் சிங்களப் படைகளிடம் வீழ்ந்துவிடாமல் தடுப்பதற்காகவே இந்தியா தனது படைகளை யாழ்பாணத்திற்கு அனுப்பிவைத்ததாக சிலர் கூறுகின்றார்கள்.

ஸ்ரீலங்காப் படைகளிடம் இருந்து யாழ்ப்பாணத்தையும், தமிழர் வாழும் மற்றப்பகுதிகளையும் விடுவித்து தமிழ் அமைப்புக்களிடம் வழங்குவதற்கே இந்தியப்படைகள் இலங்கை வந்ததாக வேறு சிலர் கருதிக்கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கைப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென்று இலங்கைக்குள் நுழைந்திருந்த இஸ்ரேலிய “மொஸாட்”  மற்றும் பாக்கிஸ்தான் இராணுவத்தினரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், திருகோணமலைத் துறைமுகம் அமெரிக்காவின் கைகளில் விழுந்துவிடாமல் தடுக்கவுமே இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.

இலங்கையின் தென்பகுதியில் எழுந்த புரட்சியை அடக்குவதற்கு இந்தியப் படைகளின் உதவியை ஸ்ரீலங்காவின் ஜணாதிபதி ஜே.ஆர். கோரி இருந்ததன் காரணமாகவே இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பபட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேற்கூறப்படுகின்ற கருத்துக்களில் காணப்படுகின்ற உண்மைத்தன்மை, அல்லது இவை பற்றி எழுப்பப்படுகின்ற சந்தேகங்கள் போன்றன எல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தியப் படைகளின் இலங்கை வருகைக்கான காரணங்களில், “இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அழுல்படுத்துவது” என்பதும் பிரதானமாக இருந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமாக அமைந்திருந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதுடன், இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக இருந்த புலிகளைப் பலவீனப்படுத்துவதும் இந்தியப் படைகளது இலங்கை வருகையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு முக்கியமான அம்சமாக இருந்த “புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவது” என்கின்ற சரத்தை அழுல்படுத்தவே இந்தியப்படைகள் அவசரஅவசரமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

ஏனெனில், தமிழர்களின் நலன்களை சிறிதும் கருத்திலெடுக்காது, அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடியதான ஒரு ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா அரசுடன் இந்தியா கைச்சாத்திட்டுவிட்டு, “தமிழர்களைக் காப்பாற்ற” தனது படைகளை அது அனுப்பிவைத்ததாக கூறுவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

அதேபோன்று, இலங்கையின் தென் பகுதியில் ஏற்பட்டிருந்த சிங்கள இளைஞர்களின் புரட்சியை அடக்குவதற்குத்தான் இந்தியப்படைகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டன என்று அப்பொழுது ஜே.ஆர் தெரிவித்திருந்தது உண்மையானால், இந்தியப்படைகள் இலங்கையின் தென்பகுதிக்குத்தான் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். எதற்காக தமிழ் பிரதேசங்களுக்கு அவை வரவழைக்கப்பட்டிருந்தன என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது.

“ஒப்பந்தத்தை அமுல்படுத்துகின்றோம் பேர்வழிகள்” என்று கூறிக்கொண்டு, புலிகளை நிராயுதயாணிகள் ஆக்கவே இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது. பின்னர் புலிகள் மீது இந்தியப்படைகள் தொடுத்திருந்த யுத்தம் இதனை உறுதிப்படுத்தியது.

இவற்றை விட, இலங்கை வந்த இந்தியப்படைகளின் சில உயர் அதிகாரிகளும், இந்தியப் படைகளின் வருகையுடன் சம்பந்தப்பட்ட சில இந்திய இராஜதந்திரிகளும், பின்நாட்களில் வெளியிட்ட சில கருத்துக்களும், இவற்றை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருந்தன.

இலங்கைக்கு உதவவே இந்தியப் படைகள்

இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொறுப்பாக இருந்த லேப்டினன்ட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் அவர்கள் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியின்போது, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கம் இந்தியப்படைகளுக்கு என்றுமே இருந்தது கிடையாது என்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.

“ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக இந்தியப்படைகளின் பலத்தைப் பிரயோகிக்கும் நோக்கம் எங்களுக்கு என்றுமே இருந்ததில்லை. அத்தோடு இலங்கையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோகூட கைப்பற்றும் எண்ணம் இந்தியப்படைகளுக்கு இருந்தது கிடையாது. அப்படியான ஒரு செயலை இந்தயாவில் உள்ள எவருமே விரும்பியிருக்கமாட்டார்கள் என்பதும் நிச்சயம்” என்று அந்த இந்திய இராணுவ உயரதிகாரி அண்மையில் வழங்கியிருந்த அந்தச் செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அப்பொழுது கடமையாற்றியவரும், புலிகள் மீது இந்தியப் படைகளை ஏவிவிடுவதில் முதன்மையானவராக புலிகளாலும், இந்திய இராணுவ அதிகாரிகளாலும் குற்றம்சாட்டப்பட்டவருமான ஜே.என்.தீட்ஷித் அவர்கள் பின்நாட்களில் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், “ஸ்ரீலங்காவின் ஜணாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அழைப்பின் பெயரிலேயே இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக” குறிப்பிட்டிருந்தார்.

ஜோஷி ஜோசப் என்ற பிரபல இந்தியப் பத்திரிகையாளருக்கு அவர்  வழங்கியிருந்த அந்தச் செவ்வியில், “இலங்கைக்கு எமது படைகளை அனுப்புவதற்கு உண்மையிலேயே நாங்கள் விரும்பவில்லை. இலங்கைக்குப் படைகளை அனுப்புவது என்பது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு அம்சமும் அல்ல.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தினமான 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் திகதி காலைவரை இந்தியப்படைகளை இலங்கைக்கு அணுப்பும் எண்ணம் எமக்கு இருக்கவேயில்லை. இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்புவது இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த மிகவும் அவசியம் என்று ஜே.ஆர். தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால்தான், படைகளை அனுப்ப ராஜீவ் காந்தி சம்மதம் தெரிவித்தார். இதற்கான எழுத்து மூல கோரிக்கையையும் ஜே.ஆர்.எமக்கு அனுப்பிவைத்தார்|| என்று தீட்ஷித் தெரிவித்தார்.

மேற்கூறப்பட்ட இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டவர்கள் வேறு யாரும் அல்ல. இந்தியப் படைகள் இலங்கையில் மேற்கொண்ட பல நடவடிக்கைகளிலும் பிரதான பங்குவகித்த அதி உயர் அதிகாரிகளே இவர்கள்.

இவர்களின் கூற்றுக்களில் இருந்து ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, ஸ்ரீலங்கா அரசு மீதோ அல்லது ஸ்ரீலங்காப் படைகள் மீதோ நிர்ப்பந்தம் செலுத்தும் நோக்கத்துடன் இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை – என்ற விடயம் மட்டும் உறுதியாகத் தெரிகின்றது.

அப்படியானால் எதற்காக இந்தியப்படைகள் ஈழமண்ணில் வந்திறங்கின?

இதற்கான பதிலையும் இந்தியப் படைகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அதி உயர் அதிகாரிகளே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். இந்தியப் படைகள் ஈழ மண்ணில் கால்பதிக்கும் முன்னதாகவே, அங்கு புலிகளை இராணுவ ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், திட்டமும் அவர்களிடம் இருந்தன என்பதை அந்த இந்திய அதிகாரிகளே பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

பிரபாகரனை கைப்பற்றிவிடுவோம்.

இலங்கையில் இந்தியப் படைகளின் நடவடிக்கைகளில் ஆரம்பம் முதல் பங்குபற்றிய கேணல் ஜோன் டெய்லர் என்ற முதன்மை நிலை அதிகாரி பின்நாட்களில் இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்: IPKF இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை முழுக்க முழுக்க இந்திய புலனாய்வு அமைப்பான “றோ” இனது திட்டமிடலிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கையில் அமைதிப் படையின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி இராணுவ உயரதிகாரிகளுடன் ராஜீவ் காந்தி திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது, புலிகளின் பலம் பற்றி அவர் கேள்வியெழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த “றோ” உயரதிகாரி ஒருவர், “நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் பிரபாகரனை நாங்கள் கைப்பற்றிவிடுவோம்” என்று அடித்துக் கூறியிருந்தார், என்று கேணல் ஜோன் டெய்லர் நினைவுகூர்ந்திருந்தார்.

இதேபோன்று, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில், இந்தியப் படைகள் இலங்கையில் புலிகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்று ஆராய்ந்ததாகவும், அப்பொழுது இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் “புலிகள் 1977ம் ஆண்டு முதல் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். அவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்துமே எங்களுக்கு அத்துபடி. அவர்களில் பலர் எங்கள் சொல்லை மீறமாட்டார்கள்” என்று தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் பற்றி ஜே.என்.தீட்ஷித் எழுதி வெளியிட்டிருந்த Assignment Colombo என்ற புத்தகத்திலும் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் தனது புத்தகத்தில், “ஒருவேளை இந்திய இராணுவம் இலங்கையில் புலிகளுடன் மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று இந்தியத் ராணுவத் தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியிடம் நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி முன்நிலையிலேயே நான் இதனைக், கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, “ஒரு இராவிற்குள் நாங்கள் அவர்கள் கதையை  முடித்துவிடுவோம்” என்று தெரிவித்தார். இதே கேள்வியை இந்தியப் புலனாய்வு பிரிவின் உயரதிகாரி ஆணந்வர்மாவிடம் ராஜீவ் காந்தி கேட்டபோது, அதற்கு அவர், “அவர்கள் எங்களுடைய பையன்கள். அவர்கள் எங்களுடன் உடன்படுவதற்கு மாறாக எதுவும் செய்யமாட்டார்கள்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக தீட்ஷித் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தவறான கருத்து

“இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்தபோது, இங்கு புலிகளை எதிர்கொள்ளும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. புலிகளே அவர்களை சண்டைக்கு வலிந்திழுத்துக் கொண்டார்கள்.” – என்பது போன்ற ஒரு தவறான கருத்து தற்பொழுதும் இங்குள்ள சிலரிடம் காணப்படவே செய்கின்றது.

ஆனால், உண்மையிலேயே இந்திய இராணுவம் ஈழமண்ணில் கால் பதித்தபோது புலிகளை எதிர்கொள்ளும் நோக்கம் அதற்கு இருந்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. புலிகளை நீராயுதபாணிகளாக்கி, அவர்களது கட்டுக்கோப்புக்களை சிதறடித்து, முடியுமானால் அந்த இயக்கத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவே இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அல்லது புலிகளைப் பலவீனப்படுத்திவிட்டு தனது செல்லப்பிள்ளைகளான EPRLF, ENDLF, TELO போன்ற அமைப்புக்களை முதன்மைப்படுத்தி, வடக்குக் கிழக்கின் மீது ஆதிக்கும் செலுத்தும் திட்டமே இந்தியாவிற்கு இருந்தது.

ஆனால், அக்காலத்தில் புலிகள் பெற்றிருந்த பலம், அவர்கள் புரிந்திருந்த தியாகங்கள, அவர்கள் தமது குறிக்கோளில் கொண்டிருந்த உறுதி என்பன, இந்தியாவின் தனது இந்த நோக்கத்தை அடைவதற்கு பலத்த சவாலாக இருந்தன.

இவற்றை எதிர்கொள்ள, புலிகள் மீது போர் தொடுக்க இந்தியா எப்படியான திட்டங்களை தீட்டியிருந்தது என்றும் ஒரு மாபெரும் ஜனநாயக நாடு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இந்தியா தனது குறிக்கோளை அடைவதற்கு எப்படியான இழி செயல்களையெல்லாம் செய்தது என்றும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்றும், தொடர்நதுவரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்

இந்திய-விடுதலைப் புலிகள் யுத்தத்தின் பக்கங்கள் பற்றியும்,  ஈழத் தமிழரைக் குறிவைத்து இந்தியப்படைகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றியும், வன்னிக்காடுகளில் புலிகள் சந்தித்த சவால்கள் பற்றியும், இவைகள் அனைத்திலும் அகப்பட்டு ஈழத் தமிழர் சந்தித்த அவலங்கள் பற்றியும் தொடர்ந்து நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த கசப்பான முதல் அனுபவம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 50) – நிராஜ் டேவிட்
  • by admin
  • January 12, 2013
looking_enemy-150x150.jpg
 
இந்தியாவில் உள்ள செகுந்தலாபாத் இராணுவத் தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையின் ஒரு தொகுதி, 30.07.1987 அன்று இலங்கையில் வந்திறங்கியது. இந்திய இராணுவத்தின் சில முக்கிய படைப்பிரிவுகள் இந்த முதலாவது தரை இறக்கத்தின் மூலம் இலங்கையில் தரையிறக்கப்பட்டன.

இந்தியாவின் 24வது காலாட் படைப்பிரிவு,

340வது காலாட் படைப் பிரிவு,

பிரந்திய ரிசேவ் படைப்பிரிவினர்,

10வது பரா மிலிடரி கோமாண்டோ படைப்பிரிவினர்,

65வது கவச வாகனப் பிரிவினர்,

91வது காலட் படைப்பிரிவு,

5வது மெட்ராஸ் ரெஜிமென்ட்,

8வது மராத்திய ரெஜிமென்ட்,

போன்ற படைப்பிரிவுகள் முதற் கட்டமாக தரையிறக்கப்பட்டன.

இலங்கையில் தரையிறக்கப்பட்ட இந்தியப் படைகளுக்கு மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், பொறுப்பாக வந்திருந்தார். அவருக்கு துணையாக, பிரிகேடியர் குல்வந் சிங் மற்றும் பிரிகேடியர் பெர்ணான்டஸ் போன்றோரும் வந்திருந்தார்கள்.

பலப்பரிட்சை:

இந்தியப் படைகளின் இந்த முதலாவது தரை இறக்கத்திற்கு, AN-12 மற்றும் AN-32 வகை அட்டனோவ் ரக விமானங்கள் 24 பயன்படுத்தப்பட்டன. விமானங்கள் மூலமான தரை இறக்கம் பலாலி விமானத் தளத்திலும், கப்பல்கள் மூலமான தரையிறக்கம் காங்கேசன்துறை துறைமுகத்திலும் இடம்பெற்றன.

T-72 பிரதான யுத்தத் தாங்கிகள், கவச வாகனங்கள்( Infantry Combat Vehicles) போன்ற கனரக யுத்த தளபாடங்களும் பெருமளவில் தரையிறக்கப்பட்டன.

இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு பின்னர் இந்தியப் படைகள் மேற்கொண்ட மிகப் பெரிய தரை இறக்கம் என்று போரியல் ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்ட இந்த தரை இறக்கத்தை, இந்தியா தனது இராணுவத்தின் பலத்தை பரிசீலித்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவும் திட்டமிட்டிருந்தது. வான் மூலமாகவும், கடல் வழியாகவும் இந்தியா தனது படைகளை எத்தனை வேகமாக தரை இறக்க முடிகின்றது என்பதை இந்தியா, இந்த தரை இறக்கத்தில் பரீட்சித்துப் பார்த்திருந்ததாக, இந்தியப்படைகளின் உயரதிகாரிகள் பின்நாட்களில் தெரிவித்திருந்தார்கள்.

இப்படியான பாரிய ஏற்பாடுகளுடன் இந்திய இராணுவம், ’’இந்திய அமைதி காக்கும் படைகள்’’ (Indian Peace Keeping Force) என்ற பெயரில் இலங்கைக்கு வந்திறங்கின.

தமிழ் மக்களின் வரவேற்பு

இந்தியப்படைகள் யாழ்பாணத்தில் வந்திறங்கிய செய்தி காட்டுத் தீ போல் தமிழ் மக்களிடையே பரவியது. அவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள். தமது பிறவிப் பயனை அடைந்துவிட்டது போன்ற ஒரு சந்தோஷத்தில் அவர்கள் திளைத்திருந்தார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு அது ஒரு பொன் நாளாகவே இருந்தது. தம்மை மீட்க இந்தியப்படைகள் வந்திறங்கிவிட்டார்கள். இனி எதற்கும் கவலைப்படத்தேவையில்லை. ஸ்ரீலங்கா இராணுவம் பற்றியோ, அல்லது ஸ்ரீலங்கா விமானங்களின் குண்டுவீச்சுக்களுக்கோ, இனிமேல் பயப்படத்தேவையில்லை என்று குதூகலித்தார்கள். விரைவில் தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என்றே தமிழ் மக்கள் அனைவரும் நம்பினார்கள்.

தமிழீழத்தைப் பெற்றுத்தருவதற்கே இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்திருந்ததாக தமிழ் மக்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில், காலாகாலமாக அவர்களிடம் இருந்துவந்த எதிர்பார்ப்புக்களின் வெளிப்பாடாகவே அவர்களது அந்த நம்பிக்கை இருந்தது.

ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், தமிழ் விடுதலை இயக்கங்கள் சுயமாக ஒரு தனி ஈழத்தை அமைக்கும் என்று அவர்கள் ஒருபோதும் நம்பியது கிடையாது. அல்பட் துரையப்பா, பஸ்தியாம்பிள்ளை கொலைகளில் தொடங்கிய இயக்கங்களில் ’’களையெடுப்பு’’ நடவடிக்கைகள், ஈழத்தில் பரவலாக இடம்பெற்று வந்த ’’வங்கிப் பணமீட்பு நடவடிக்கைகள்’’, ஸ்ரீலங்கா இராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பதுங்கியிருந்து தாக்குதல் நடவடிக்கைகள் போன்று, ஈழ இயக்கங்கள் மேற்கொண்டு வந்த அனைத்து நடவடிக்கைகளையும்; ஈழத்தமிழர்கள் பாராட்டி, ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்றாலும், இந்த இயக்கங்கள் தனி நாடொன்றைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதில் ஆரம்பம் முதலே எவரும்; நம்பிக்கை கொள்ளவில்லை.

யாழ்பாணத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கிவைப்பதில் ஈழ இயக்கங்கள் வெற்றி கண்டிருந்த காலகட்டத்தலும் கூட, ஈழ இயக்கங்கள் தனித்து நின்று தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுக்கும் என்று எவருமே அப்பொழுது நினைத்துப் பார்க்கவும் இல்லை.

கடைசிக் கட்டத்தில் இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி, தனி ஈழத்தை ஸ்தாபிக்க உதவும் என்றே ஒவ்வொரு ஈழத் தமிழனும் நினைத்திருந்தான். எதிர்பார்த்திருந்தான்.

ஈழ விடுதலைக்காகப் போராடிய பெரும்பாலான விடுதலை இயக்கங்கள் கூட, இதே வகையிலான கருத்துக்களைத்தான் வெளியிட்டு வந்தன. இந்தியா பங்காளதேஷில் செய்தது போன்று, இலங்கைக்கும் தனது படைகளை அனுப்பி ஈழத்தை மீட்டுத்தரும் என்ற நம்பிக்கையையே, விடுதலை இயக்கங்களும்; தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து வந்தன.

இந்த அடிப்படையில், இந்தியப் படைகள் ஈழமண்ணில் வந்திறங்கியபோது, ஈழத்தமிழர்களை மீட்கவே இந்தியப்படைகள் வந்துள்ளதாக தமிழ் மக்கள் நம்பினார்கள். ஆரவாரத்துடன் இந்தியப் படைகளை வரவேற்கவும் செய்தார்கள். வந்திறங்கிய இந்திய ஜவான்கள் திக்குமுக்காடும் அளவிற்கு தமிழ் மக்களின் வரவேற்பு யாழ்ப்பாணத்தில் இருந்தது.

கசப்பான முதல் சந்திப்பு

யாழ்பாணம் வந்திறங்கிய இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்கின் முதல் பணி, புலிகளுடன் ஒரு சுமுகமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதாகவே இருந்தது.

புலிகளுடன் நட்புடன் கூடிய ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அந்தத் தொடர்பின் மூலம் இந்தியப்படைகளின் பணிகளைச் சுமுகமாக்கிக் கொள்ளவே அந்த உயரதிகாரி விரும்பினார்.

இந்த நோக்கத்துடன் அவர் புலிகளின் உள்ளூர் தலைவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார். புலிகளின் யாழ் நகர பொறுப்பாளராக இருந்த குமரப்பா என்பவர், மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்கை, புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவிடம் அழைத்துச் சென்றார்.

புலிகளின் வாகனத்தில், குமரப்பாவுடன்; மேஜர் ஜெனரல் ஹரிகிரத்சிங்கும், இந்தியப்படைகளின் பிரிகேட் கொமாண்டர் பெர்ணாண்டஸும் புறப்பட்டார்கள்.

யாழ் நகரின் மத்தில் சென்ற அவர்களது வாகனம், ஒரு வீட்டின் முன்பதாக நிறுத்தப்பட்டபோது, அந்த வீட்டின் வாசலில் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா நின்றுகொண்டிருந்தார்.

வாகனத்தில் இருந்து இறங்கிய இந்தியப்படை உயரதிகாரி மாத்தையாவுடன் பேச முற்பட்டபோது, “ஜெனரல், நான் உங்களுடன் எதுவும் பேசத் தயாரில்லை… ’’ என்று தெரிவித்த மாத்தையா, அவர்களை அந்த வீட்டினுள் செல்லவும் அனுமதிக்கவில்லை.

தொடரும்

 

புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி பரப்பட்ட வதந்திகள்!- (அவலங்களின் அத்தியாயங்கள்- 51) – நிராஜ் டேவிட்
  • by admin
  • January 25, 2013
Frame-063-150x150.jpgஇலங்கையில் வந்திறங்கிய முதலாவது இந்தியப்படைத் தொகுதிக்கு தலைமை தாங்கி வந்த இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவைச் சந்திக்கச் சென்றபோது, மாத்தையா அந்த இந்திய உயரதிகாரியுடன் பேசத் தயாராக இருக்கவில்லை.

எக்காரணம் கொண்டும் இந்தியப்படை அதிகாரிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடாத்த மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

மாத்தையாவின் இந்தச் செய்கை இந்திய அதிகாரிகளுக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருவதாக அமைந்திருந்தது. இப்படியான ஒரு கட்டத்தை அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவும் இல்லை.

நாங்கள் உங்களுக்கு சமாதானத்தின் செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றோம். இந்தியாவின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவே இங்கு வந்துள்ளோம்|| என்று அந்த இந்திய உயரதிகாரி மாத்தையாவிடம் தெரிவித்தார்.

அதற்கு மாத்தையா, எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களை மீண்டும் எங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் வரை உங்களுடன் பேச நாங்கள் தயாரில்லை என்று உறுதியாகவே தெரிவித்து விட்டார்.

பின்னர் அந்த இந்திய உயரதிகாரிகளை புலிகள் தமது அலுவலகத்தினுள் அழைத்துச் சென்று உபசரித்த போதிலும், எந்தவிதப் பேச்சுவார்த்தையையும் நடாத்தவில்லை.

இந்திய அதிகாரிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் தமது முகாமிற்குத் திரும்பிச் சென்றார்கள்.

பரப்பப்பட்ட வதந்திகள்

இதேவேளை, புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியா தடுத்துவைத்துள்ள செய்தி தமிழ் மக்களிடையே மிக வேகமாகப் பரவ ஆரம்பித்திருந்தது. இந்தச் செய்தியுடன் பல வதந்திகளும் சேர்ந்து பரவ ஆரம்பித்தன.

தலைவர் பிரபாகரன் இந்தியச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரபாகரன் பலாலி இராணுவத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பலவாறான வதந்திகள் தமிழ் மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தன.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததினால், புலிகளின் தலைவர் அந்தமான் தீவுகளுக்கு இந்தியாவினால் கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் சில வதந்திகள் யாழ்ப்பாண மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தன.

இந்தியப் படைகளின் வருகையினாலும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதினாலும் ஒருவித மாயையில் இருந்த தமிழ் மக்கள் அப்பொழுதுதான் விழித்தெழ ஆரம்பித்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கே என்ற கேள்வி அப்பொழுதுதான் அவர்களின் மனங்களில் எழ ஆரம்பித்தது.

இதேவேளை, இந்தியாவிடம் இருந்து ஒரு பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு புலிகளின் தலைவர்கள் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் சொகுசு பங்களாக்களில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதாகவும், ஒரு வதந்தி சென்னையில் பரப்பப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பெருந்தொகைப் பணத்தை இந்திய அரசிடம் பெற்றுக்கொண்டு, தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், மற்றொரு வதந்தி தமிழ்நாட்டில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.

புலிகளினால் தடைசெய்யப்பட்ட நிலையில் இலங்கைக்கு செல்ல முடியாமல் தமிழ் நாட்டிலேயே தங்கியிருந்த டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் போன்ற அமைப்புக்களின் உறுப்பினர்களே இந்த வதந்திகளைப் பரப்புவதில் முன்நின்று செயற்பட்டார்கள். ஈழத் தமிழர்கள் தங்கியிருந்த வீடுகள், விடுதிகளுக்குச் சென்ற இவ் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இதுபோன்ற வதந்திகளை பரப்பினார்கள்.

உண்மையிலேயே, இப்படியான வதந்திகள் தமிழ் மக்களிடையே பரவிக்கொண்டிருந்த இந்தக் காலகட்டத்தில், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியாவினால் புதுடில்லியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இலங்கையில் தனது எண்ணத்தை ஈடேற்றிக்கொள்வதற்கான சூழ்நிலை ஒன்று உருவாகும் வரையில், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை தனது கண்காணிப்பின் கீழ் வைத்துக்கொள்ளவே இந்தியா திட்டம் தீட்டியிருந்தது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் சந்தர்ப்பத்திலும், இந்தியப் படைகள் தமிழ் மண்ணில் வந்திறங்கும் சந்தர்ப்பத்திலும், புலிகளிடம் ஆயுதங்களை களையும் சந்தர்ப்பத்திலும், புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழ மண்ணில் இருப்பது தமது நடவடிக்கைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று ராஜீவ் காந்தி நினைத்திருந்தார்.

பிரபாகரனின் குணம் அவருக்கு நன்கு தெரியும். பிரபாகரனின் கொள்கைப்பிடிப்பு பற்றியும், அவரது போர்க் குணம் பற்றியும் இந்தியாவின் பிரதமர் நன்கு அறிந்திருந்தார்.

அதனால், தமது இந்த தகிடுதத்தங்கள் எல்லாம் நிறைவடையும் வரை பிரபாகரனை ஈழ மண்ணில் இருந்து அன்னியப்படுத்தி, தனது கண்காணிப்பில் வைத்துக்கொள்வது அவசியம் என்று அவர் எண்ணியிருந்தார்.

புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் பிரபாகரனை யாழ்ப்பாணம் அனுப்புவதில்லை என்றுதான் இந்தியா முதலில் எண்ணியிருந்தது. ஆனால் கள நிலவரம் அதற்கு ஒத்துளைக்கவில்லை.

ஆயுத ஒப்படைப்பு சம்பந்தமான எந்விதப் பேச்சுவார்த்தைக்கும் முன்னதாக தமது தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணம் வரவேண்டும் என்று புலிகள் தரப்பு ஊறுதியாகவே தெரிவித்துவிட்டது.

அத்தோடு, யாழ்ப்பாணம் வந்திறங்கிய இந்தியப்படைகள் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாத அளவிற்கு பல நெருக்குதல்கள் அங்கு அவர்களுக்கு ஏற்பட ஆரம்பித்தன.

பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்தியப்படைகள் வெளிக்கிளம்பும் போது, வீதிகளில் பெரும் திரளாக மக்கள் திரண்டு வந்து, பிரபாகரன் எங்கே? என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தார்கள்.

வீதிகளின் நடுவில் நூற்றுக்கணக்கில் மக்கள் அமர்ந்து இந்திப்படைகளின் நகர்வுகளை தடுக்க ஆரம்பித்தார்கள்.

இது போன்ற நடவடிக்கைகள், இந்திய அரசிற்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தின. இந்தியப்படைகளின் வருகையை சிங்கள மக்கள் பெருமளவில் எதிர்க்க ஆரம்பித்திருந்த நிலையில், தமிழ் மக்களிடம் இருந்தும் தமக்கு எதிர்ப்புக்கள் உள்ளன என்று வெளி உலகிற்கு காண்பிக்க இந்தியா அப்பொழுது விரும்பவில்லை.

தமிழ் மக்களின் வீதி மறியல் போராட்டத்தால், இந்தியப்படைகளின் சமாதான முயற்சிகள் பற்றிய சந்தேகம் சர்வதேச மட்டத்தில் தோற்றுவிக்கப்படக் கூடியதான ஒரு அபாயத்தை இந்தியா எதிர்கொண்டது.

ஈழத் தமிழர்களை மீட்க இந்தியா தனது படைகளை அனுப்பியதாகவே தமிழ் நாட்டு மக்களுக்கு கூறப்பட்டிருந்த நிலையில், ஈழத்தமிழ் மக்கள் இந்தியப் படைகளுக்கு அங்கு காண்பிக்க ஆரம்பித்திருந்த எதிர்ப்புக்கள் தமிழ் நாட்டில் ஒரு புதிய சிக்லைத் தோற்றுவித்து விடும் என்றும் ராஜீவ் காந்திக்கு அச்சம் ஏற்பட்டிருந்தது..

அத்தோடு, இலங்கை சென்றிருந்த இந்தியப் படைகளுக்கு தலைமை தாங்கிச் சென்ற மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், உடனடியான பிரபாகரனை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று, தென்னிந்தியாவின் இராணுவ கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் இடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரபாகரன் இங்கு இல்லாமல் இந்தியப்படைகளால் எந்த ஒரு விடயத்தையும் சீரானமுறையில் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. புலிகள் ஒழுங்கான முறையில் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உடனடியாக பிரபாகரனை இங்கு அனுப்பி வையுங்கள் என்றும் அவர் தெளிவுபட அறிவித்திருந்தார்.

பிரபாகரன் வருகை

02.07.1987ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் பலாலி விமானப்படைத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவருடன் அவரது மெய்ப்பாதுகாவலர்கள், புலிகளின் முன்னைநாள் யாழ்.மாவட்ட தளபதி கிட்டு போன்றோரும் வந்திறங்கியிருந்தார்கள்.

(இந்த விமாணத்தில், பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகளும் வந்ததாக, இந்திய இரணுவப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது இந்தக் கூற்றை உறுதிப்படுத்தக்கூடிய மேலதிக தரவுகள் எதுவும் என்னிடம் இல்லை.)

பலாலி வந்திறங்கிய பிரபாகரனும் குழுவினரும் பலத்த பாதுகாப்புடன் இந்தியப்படைகளின் கவச வாகனங்களின் மூலம் (APC- Armoured Personal Carriers)  யாழ்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.

தலைவர் பிரபாகரனின் பாதுகாப்புக் கருதி ஒரே தோற்றத்தில் அமைந்த பல கவச வாகனங்கள் இந்தியப் படையினரால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றின் ஒன்றிலேயே பிரபாகரன் அவர்கள் பயணம் செய்த போதிலும், அவர் எந்த வாகனத்தில் பயணிக்கின்றார் என்பது வெளியில் எவருக்கும் தெரியாமல் இருப்பதற்காக, அனைத்து கவச வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பயணம் செய்தன. இந்த வாகனத் தொடரணிக்கு ஆயுதம் தாங்கிய புலிகளும், இந்தியப் படையினரும் பாதுகாப்பு வழங்கினார்கள்.

இதேவேளை, தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பை முன்னிட்டு, அவரது வாகனம் பயணம் செய்த பிரதேசங்களில் புலிகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தார்கள். வீதிகளில் எவரும் நடமாட புலிகள் அணுமதிக்கவில்லை. வீதிகள் தோறும் ஆயுதம் தாங்கிய புலிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

சுதுமலை அம்மன் கோவிலில் வைத்து புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவிடம் பிரபாகனை கையளித்த இந்தியப் படையினர், பிரபாகரனை தாம் பாதுகாப்பாக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்ட ஒரு படிவத்தில் கையொப்பமும் பெற்றுக் கொண்டார்கள்.

இதே சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் வைத்துத்தான் 24.07.1987ம் திகதி இந்திய விமானம் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத இருக்கும் ஒரு சரித்திர நாயகன் என்கின்ற எண்ணமோ, கர்வமோ சிறிதும் இல்லாமல், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் அன்று மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி இருந்தார்.

தொடரும்…

 

இந்தியப் படையினருக்கு பிரமிப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் – (அவலங்களின் அத்தியாயங்கள்- 52) – நிராஜ் டேவிட்
  • by admin
  • January 25, 2013
   
ipkf_check_post-150x150.jpgஇலங்கை வந்த இந்தியப் படையினருக்கு யாழ்பாணச் சூழலும், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை முறையும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன. இலங்கைத் தமிழர்கள் எனப்படுபவர்கள் இத்தனை அந்தஸ்துடன் வாழ்க்கை நடாத்தும் ஒரு பிரிவினர் என்பது சாதாரண இந்திய ஜவான்களுக்கு ஆச்சரியமான ஒரு விடயமாகவே இருந்தது.

இந்திய இராணுவ வீரர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மையான குடும்பங்களிலில் இருந்தே வந்தவர்கள். அத்தோடு 80களில் இந்தியமக்களின் வாழ்க்கை முறை மிகவும் தரம் குறைந்ததாகவே காணப்பட்டிருந்தது. மிகவும் சிறிய வீடுகளை உடையவர்களும், நாளாந்த உணவுக்கே கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்வர்களாகவே இங்கு வந்திருந்த அனேகமான இந்தியப்படை வீரர்கள் இருந்தார்கள்.

அத்தோடு, இப்படியான பின்னணியில் இருந்து வந்த இந்திய இராணுவ வீரர்கள் இலங்கையில் தரை இறங்கியபோது, அவர்கள் எதற்காக இங்கு வருகின்றார்கள் என்பது பற்றிய தெளிவும் அவர்களுக்கு போதிய அளவு வழங்கப்பட்டிருக்கவில்லை. இலங்கைப் பிரச்சினை பற்றி இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்கள், இலங்கைத் தமிழர்களை ஒரு பரிதாபமான ஜென்மங்களாகவே அவர்களது கற்பனையில் வடித்திருந்தது. மிகவும் பரிதாபகரமான ஒரு மனிதக் கூட்டத்தை தாம் இலங்கையில் சந்திக்கப்போகின்றோம் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து மிகவும் வறுமையில் பரிதவிக்கும் ஒரு பிரதேசமாகத்தான் யாழ்ப்பாணத்தையும், இங்கு வாழும் மக்களையும் இந்திய ஜவான்கள் கற்பனையில் எதிர்பார்த்து வந்திருந்தார்கள்.

ஆனால் அவர்கள் யாழ்பாணத்தில் நடமாடத் தொடங்கிய போது அவர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்து வந்ததற்கு மாறாக யாழ்ப்பாணமும், அங்கு வாழ்ந்த மக்களும் காணப்பட்டார்கள். யாழ்பாணத்தில் இருந்த வீடுகள் அவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தன. யாழ்பாணத் தமிழர்களின் உணர்ந்த வாழ்க்கைத்தரம் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.

யாழ்ப்பாண மக்கள் நல்ல தரமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். அங்கிருந்த வீடுகள் அனைத்தும் விசாலமாகவும், அனைத்து வசதிகளையும் கொண்டதாகவே இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள், ரேடியோக்கள் என்று பலவிதமான மின்சார உபகரணங்கள் காணப்பட்டன. கடைகள் அனைத்திலும் நவீன ஜப்பான் பொருட்கள் நிறைந்திருந்தன. இந்தியா திறந்த பொருளாதாரக் கொள்கையை பின்பற்ற ஆரம்பித்திருக்காத அந்தக் காலத்தில், இந்தியாவில் ஒரு பெரிய அதிகாரியின் வீட்டில் கூட இப்படியான சௌகரியங்கள் காணப்படுவது கிடையாது. யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்திப்படை வீரர்களுக்கு இவைகள் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.

இந்தியாவில் தண்ணீர், மற்றும் மலசலகூட வசதிகள் அவ்வளவாக கிடையாது. கிரமங்களில் குளங்களிலும், வாய்கால்களிலும்தான் தமது தண்ணீர் தேவைகளை பெரும்பான்மையான மக்கள் பூர்த்தி செய்வது வழக்கம். சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும். ஒரு குடம் தண்ணீருக்காக நெடுநேரம் வரிசையில் காத்திருக்கவேண்டும். இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்வதில் கூட இந்தியாவில் பலவித சிக்கல்கள் உள்ளன. ஒரு சிறிய செம்பு நீரில் தமது காலைக் கடன்களை முடிக்கவேண்டிய கட்டாயம் சாதாரண மக்களுக்கு அங்கு காணப்பட்டது. அங்கு தெருக்களிலும் வீதி ஓரங்களிலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மலசலம் கழிப்பது சாதாரண ஒரு விடயம். இப்படியான பின்னணியில் இருந்து வந்த இந்தியப்படை வீரர்களுக்கு, யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு வீடு கிணறும் மலசல கூடமும்  இருப்பது பெரிய விடயமாகத் தென்பட்டது.

இந்தியாவில் உள்ளது போன்று, தெருவோரங்களில் வாழ்க்கை நடாத்தும் மனிதக்கூட்டங்களை அவர்களால் யாழ்ப்பாணத்தில் காணமுடியவில்லை.

இந்தியப்படை வீரர்கள் யாழ்பாணத்தில் வந்திறங்கியதும் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். “என்ன செழிப்பான பூமி“ என்று தமிழ் நாட்டு வீரர்கள் தமது வியப்பை வெளிப்படுத்தினார்கள். “இது எம் நாட்டு கேரளா போன்று இருக்கின்றது“ என்று சிலரும், “இது குட்டி சிங்கப்பூர்“ என்று மற்றும் சிலரும் வியப்படைந்தார்கள்.

`இலங்கையில் நாளாந்தம் தமிழ் மக்கள் சிங்களவர்களால் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்| என்று கேள்விப்பட்டிருந்த இந்திய ஜவான்கள், யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களையே காணாததால், சிங்களவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று பொதுமக்களிடம் கேட்கும் நிலையில் காணப்பட்டார்கள்.

வல்வெட்டித்துறை பிரதேசத்திற்கு சென்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், ஒரு மீனவக் கிராமம் இத்தனை செழிப்பாக இருப்பது கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தார்கள். அங்கிருந்த மக்களிடம், “நீங்கள் எதற்காகத் தனி நாடு கேட்கின்றீர்கள்? இங்குதான் உங்களுக்கு அனைத்து வசதிகளும் தாராளமாக இருக்கின்றனவே? சொல்லப்போனால், இந்தியாவில் தமிழ் நாட்டு தமிழர்கள் அனுபவிப்பதை விட ஈழத்தமிழர்கள் அதிக சுதந்திரத்தை அணுபவிக்கின்றீர்கள். உங்களுக்கென்று முழுநேர தமிழ் வானொலி சேவை இருக்கின்றது. உங்களது ரூபாய் நோட்டில் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றது. இங்கு சிங்களத்தையே காண முடியவில்லை. நீங்கள் எதற்காக தனிநாடு கேட்டுப் போராடுகின்றீர்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை“ என்று தெரிவித்தார்கள்.

இந்திய ஜவான்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தமது யாழ்ப்பாண விஜயத்தை வெளிநாடொன்றிற்கு சுற்றுலா வந்தது போன்றே கருதினார்கள். வீடியோ ரெக்கோடர்கள், டீவீக்கள், மின்சார உபகரணங்கள் என்று வெளிநாட்டுப் பொருட்களாக வாங்கித்தள்ளினார்கள்.

அவசரப் பயணம்

சாதாரண இந்திய ஜவான்களின் நிலைதான் இதுவென்றால், இந்தியப்படை அதிகாரிகளின் நிலையும், இதற்குச் சற்றும் குறையாமலேயே இருந்தது.

இந்தியப்படை அதிகாரிகளுக்கும் தாம் இலங்கைக்கு வந்ததற்கான உண்மையான நோக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. தாம் இலங்கையில் செய்யவேண்டிய பணி பற்றிய அறிவுறுத்தல்களும் சரியானபடி வழங்கப்பட்டிருக்கவில்லை. கடுமையான இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு முகாம்களிலும், பாக்கிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசங்களிலும் வாழ்க்கை நடாத்திக்கொண்டிருந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு, இலங்கைக்கான இந்த பயண உத்தரவு மிகக் குறுகிய ஒரு கால அவகாசத்திலேயே வழங்கப்பட்டிருந்தது. அனேகமான இந்தியப்படை அதிகாரிகளுக்கு தமது இலங்கைப் பயணம் பற்றி தமது உறவுகளுக்கு அறிவிக்கக்கூட அவகாசம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கையில் வந்திறங்கிய முதலாவது இந்தியப் படையணிகளுக்கு தலமை தாங்கிவந்த மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் அவர்களுக்குக் கூட தமது இலங்கைப் பயணம் பற்றிய முழு விபரமும் சரியானபடி வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனை, பின்நாட்களில் செய்தி ஊடகமொன்றிற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில் உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்டிருந்தார்.

“வெளிநாடு ஒன்றில் ஒரு பயிற்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய நான், செகுந்தலாபாத்தை சென்றடைந்தேன். விமான நிலையத்தில் நான் வந்திறங்கியபோது, அங்கு என்னுடைய உப இராணுவ உத்தியோகத்தர்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ~எதற்காக இங்கு வரிசையாக நின்றுகொண்டிருக்கின்றீர்கள்“ என்று அவர்களிடம் கேட்டேன். எனெனில் என்னை வரவேற்ற எனது உதவி உத்தியோகத்தர் ஒருவர் மட்டுமே வருவது வழக்கம்.

அதற்கு அவர்கள், “சேர், முதலாவது விமானம் இன்றிரவு ஒரு மணிக்கு புறப்படுகின்றது“ என்று தெரிவித்தார்கள்.

“விமாணம் எங்கே புறப்படுகின்றது“ என்று நான் அவர்களிடம் கேட்டேன். `ஸ்ரீலங்காவிற்கு` என்று பதில் வந்தது.

அப்பொழுது நேரம் காலை 10 மணி. இந்த அளவு குறுகிய நேர இடைவெளியில் எப்படி இதனை மேற்கொள்ளுவது என்று எனது சக அதிகாரிகளிடம் வினவினேன். அதற்கு அவர்கள், “சேர், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விட்டது. இந்தியாவின் பிரதம மந்திரி தற்பொழுது கொழும்பில் இருக்கின்றார். இந்திய இராணுவத்தின் தளபதி திபீந்தர் சிங்கை அவர் தொலையேசியில் தொடர்பு கொண்டு இலங்கைக்கு இந்திய இராணுவத்தின் ஒரு டிவிசனை உடனடியாக நகர்த்தும்படி கூறியுள்ளார்“ என்று தெரிவித்தார்கள்.

எல்லோரையும் கட்டுப்பாட்டு காரியாலயத்திற்கு செல்லும்படி உத்தரவிட்டுவிட்டு, நானும் அங்கு சென்று எமது அவசர இலங்கை பயணம் பற்றி அவசர அவசரமாக விவாதித்தோம்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றிய தொலை நகல் செய்தி எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இலங்கைக்குச் சென்று அங்கு சமாதானத்தை நிலைநாட்டும்படியாக எனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

கடைசியில் மறுநாள் காலை 5 மணிக்கு எனது விமானம் செகுந்தலாபாத்தில் இருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நிடமும் அங்கிருந்து ஒவ்வொரு விமானம் இலங்கைக்கு புறப்பட்டபடி இருந்தது.

எந்தவித ஏற்பாடுகளும் இன்றி நாங்கள் இலங்கைக்குப் புறப்பட்டோம். எங்களது எதிரி யார்?, அவர்களது பலம் என்ன? – போன்ற புலனாய்வு விபரங்கள் எதுவும் இல்லாமலேயே எங்களது நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பிக்கவேண்டி இருந்தது. இலங்கை தொடர்பான ஒரு ஒழுங்கான வரைபடம் கூட எங்களிடம் இருக்கவில்லை. என்னுடன் இருந்த மேனன் என்ற ஒரு அதிகாரியிடம் இலங்கை வரைபடம் ஒன்று இருந்தது. அவரிடம் அதைப் பெற்று போட்டோ பிரதி எடுத்தே என்றுடைய மற்றய அதிகாரிகளுக்கு வழங்கினேன்…’’ இவ்வாறு, மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் தனது செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு தொடர்பான தீர்மாணங்கள் அனைத்தையும், ராஜீவ் காந்தியும், சில இராஜதந்திரிகளும், றோ அமைப்புமே எடுத்துவந்தது.

தொடரும்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நேசித்த(?) பிரபாகரன்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 53) – நிராஜ் டேவிட்
  • by admin
  • January 31, 2013
sud-150x150.jpg
 

ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்டுவந்த துரோக நடவடிக்கைகளின் உச்சமாக, ஸ்ரீலங்காவுடன் அது செய்துகொண்ட ஒப்பந்தம் அமைந்திருந்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் நலன்களை அடகுவைத்து எழுதப்பட்டிருந்தது என்பதையும், இந்த ஒப்பந்தத்தை ஏற்றேயாகவேண்டிய நிர்ப்பந்தம் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்தது என்பதையும் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், 04.08.1987ம் திகதி மாலை, சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஆற்றிய உரையில் தெளிவாக விளக்கியிருந்தார்.

“நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம்’’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில், அன்றைய காலகட்டத்தின் யதார்த்த நிலையை அவர் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் அவர்களின் பிரசித்திபெற்ற சுதுமலை பேச்சின் சாராம்சம் இதுதான்:

“எனது அன்புக்குரிய தமிழீழ மக்களே!

இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. எமக்கு அதிர்ச்சி ஊட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டது போல, திடீரென்று ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எங்களையோ கலந்தாலோசிக்காமல் மிகவும் அவசர அவசரமாக, இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அமுலாக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேள்விகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது.

ஆகவே, இந்த ஒப்பந்தத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய அரசிடம் தெள்ளத் தெளிவாக விளக்கினோம்.

ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்த ஒப்பந்தத்தை அமுலாக்கியே தீருவோம் என்று இந்தியா கங்கணம் கட்டி நின்றது. இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியம் அடையவில்லை.

இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சனையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது பிரதானமாக இந்திய இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லரசின் வியூகத்தின் கீழ் ஸ்ரீலங்காவைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருந்தன. ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதில் அதிக அக்கறை காண்பித்தது.

அதேசமயம், தமிழீழ மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடியதாகவும் இந்த ஒப்பந்தம் அமைந்திருப்பதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம்.

ஆனால் எமது ஆட்சேபத்தால் பயன் எதுவும் ஏற்படவில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?

15 வருடங்களாக, இரத்தம் சிந்தி, தியாகங்கள் பல புரிந்து, சாதனைகள் செய்து எத்தனையோ உயிர்பலி கொடுத்து கட்டி எழுப்பப்பட்ட போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால், அதனை எம்மால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

இந்தியப் பிரதமரின் உறுதிமொழிகள்:

இந்தியாவின் மான்புமிகு பிரதமர் ராஜீவ் காந்தி என்னைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். நான் அவரிடம் எமது மக்களின் நிலைப்பாட்டையும், எமது பிரச்சனைகளையும் மனம்திறந்து எடுத்துரைத்தேன். இனவாத சிங்கள அரசாங்கத்தின் மீது எனக்கு சிறிதளவேனும் நம்பிக்கை இல்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் சுட்டிக்காண்பித்தேன். இந்த ஒப்பந்தத்தை சிங்கள அரசு ஒரு போதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று எமது அவநம்பிக்கையையும் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உத்தரவாதத்தையிட்டும் அவருடன் பேசினேன்.

இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.

இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.

எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தகைய மாபெரும் தியாகங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். இவற்றையெல்லாம் நாங்கள் மீண்டும் விபரிக்க வேண்டியதில்லை.

ஆயுத ஒப்படைப்பு

ஆயுதங்களை நாம் ஒப்படைப்பதானது, எம்மிடையேயுள்ள பொறுப்புக்களை கைமாற்றிக் கொடுப்பதையே காட்டுகின்றது. ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப் படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை. நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.

எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன. எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தனித் தமிழீழம்

எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்.

இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டுமென்று நான் கருதவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இவ் ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கான நிரந்தரத் தீர்வு, தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும்.

ஒரு விடயத்தை இங்கு எத்தகைய சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவுபடுத்த விரும்புகின்றேன். தமிழ் ஈழம் என்ற குறிக்கோளினை அடையும் வரை நான் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பேன்.

எமது போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது குறிக்கோளினை அடைவதற்கான போராட்டங்கள் மாறப்போவதேயில்லை.

எமது குறிக்கோளினை ஈடேற்றுவதற்கு எமது மக்களாகிய உங்கள் முழுமனதுடனான, முழுமையான ஒன்றிணைந்த ஆதரவு எப்பொழுதும் எமக்கு இருக்கவேண்டும்.

தமிழீழ மக்களின் நன்மையைக் கருத்தில்கொண்டு, இடைக்கால நிர்வாக அமைப்பில் நாம் இணையக்கூடிய அல்லது தேர்தலில் நிற்கக்கூடிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எச்சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ அல்லது முதன் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.’’

புலிகளின் தலைவர் வே.பிரபாகன் அவர்களின் சுதுமலைப் பேச்சு வித்தியாசமான பல உணர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன.

புலிகள் விரும்பாத ஒரு விடயத்தை இந்திய அரசு தமிழ் மக்கள் மீது திணிக்க முனைகின்றதோ என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் முதன்முதலாக ஏற்பட ஆரம்பித்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பாதகமான சில காரியங்கள் நடைபெறக்கூடியதான அபாயநிலை ஏற்பட்டுள்ளதா என்கின்ற அச்சம் தமிழ் மக்கள் மனங்களை படிப்படியாக ஆட்கொள்ள ஆரம்பித்தது.

ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற சரத்துக்கள் பற்றியும், இந்தியப் படைகளின் வருகையைப் பற்றியும் தமிழ் மக்கள் சந்தேகம்கொள்ள ஆரம்பித்தார்கள்.

கொடிய யுத்தம் நின்றுபோயிருந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஈழத்தமிழர்கள், நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தார்கள். இந்தியாவின் நகர்வுகள் பற்றியும், அது மேற்கொள்ள ஆரம்பித்திருந்த நடவடிக்கைகள் பற்றியும், ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகள் பற்றியும் மக்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தியாவின் உள்நோக்கம் பற்றிய சந்தேகம் படிப்படியாக மக்கள் மனங்களில் தோன்ற ஆரம்பித்தன.

மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டு, மிகவும் உணர்ச்சிகரமாக  வழங்கப்பட்டிருந்த பிரபாகரன் அவர்களின் சுதுமலை உரை, இத்தனை காரியங்களையும் தமிழ் மக்கள் மத்தியில் நிகழ்த்த ஆரம்பித்திருந்தது.

தொடரும்…

 

ஆரம்பம் முதலே இந்தியாவை சந்தேகித்த விடுதலைப் புலிகள்!- (அவலங்களின் அத்தியாயங்கள்- 54): நிராஜ் டேவிட்
  • by admin
  • February 6, 2013
Frame-0012-150x150.jpg
 
 

தலைவர் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி:

ஈழ மண்ணில் இந்தியப் படைகளால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களின் மிக மோசமான அத்தியாயங்கள் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னதாக, இந்தியா தொடர்பாக அக்காலத்தில் விடுதலைப் புலிகள் கொண்டிருந்த நிலைப்பாடு பற்றி ஓரளவு மேலோட்டமாகப் பார்த்துவிடுவது நல்லது என்றே நினைக்கின்றேன்.

இந்தியாவின் விடயத்தில் ஆரம்பம் முதல் புலிகள் ஓரளவு எச்சரிக்கை உணர்வுடனேயே இருந்து வந்துள்ளார்கள். குறிப்பாக புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இந்தியா பற்றி அதிக எச்சரிக்கையை தன்னகத்தே கொண்டுள்ளவராகவே இருந்து வந்துள்ளார் என்பதற்கு, அந்நாட்களில் வெளியான பல செய்திகள் சாட்சி பகர்வனவாக இருக்கின்றன.

தனது பிராந்திய மேலாதிக்க நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தியா ஈழத்தமிழ் அமைப்புக்களை வளர்க்க முனைந்ததே தவிர, ஈழத்தமிழர்களில் ஒன்றும் அக்கறை கொண்டு அது எந்தக் காரித்தையும் மேற்கொண்டிருக்கவில்லை.

இதனை புலிகள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள். இந்தியாவின் இந்த நோக்கத்தை இயன்றவரை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே புலிகளும் எண்ணியிருந்தார்கள்.

இந்திய அரசியலை, அந்த அரசியலில் உள்ள ஓட்டைகளை, தமது இன விடுதலைப் போருக்கான ஒரு தளமாக முடியுமான அளவு பயன்படுத்திக் கொள்ளும் திட்டமே புலிகளின் தலைமையிடம் இருந்து வந்துள்ளது.

ஈழ விடுதலைக்காக போராட முன்வந்த அனைத்து இயக்கங்களும் இந்திய அரசினால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டன என்பதில் எந்வித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. ஆனால், புலிகளைப் பொறுத்தவரையில், ஆரம்பம் முதலே அவர்கள் இந்தியாவின் விடயத்தில் அதிக எச்சரிக்கை உணர்வுகளைக் கொண்டிருந்தார்கள்.

இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையின் உண்மையான நோக்கம் பற்றி அவர்கள் அதிகம் சிந்தித்தார்கள். இந்தியாவின் ஒவ்வொரு அசைவினதும் உண்மையான காரணம் பற்றிய தெளிவினை அவர்கள் நன்றாகவே பெற்றிருந்தார்கள்.

மற்றைய இயக்கங்கள் போன்று முற்று முழுதாக இந்தியாவை மட்டுமே நம்பி புலிகள் ஒருபோதும் தமது போராட்டத்தை நடாத்தவில்லை. மற்றைய இயக்கங்கள் அனைத்தும் காலத்தால் அழிக்கப்பட்டுவிட, புலிகள் அமைப்பு மட்டும் காலத்தையும் வென்று, இன்றும் நிலைத்து நிற்பதற்கு இதனைத்தான் பிரதான காரணம் என்று நான் கூறுவேன்.

இன்று உலகத் தலைவர்களால் வியப்புடன் நோக்கப்படும் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், அக்காலத்திலேயே இந்தியாவிடம் ஏமாறாத ஒரு மனிதனாக, எதிர்காலத்தை கணிப்பிடும் ஒரு அறிஞராக இருந்து வந்திருக்கின்றார் என்பதற்கு அக்காலத்தில் வெளியான பல செய்திகள் சான்று பகர்கின்றன.

கதறி அழுத கிட்டு:

80களின் ஆரம்பத்தில், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் வைத்து புலிகளின் ஒரு தொகுதி போராளிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சியை வழங்கியது. பொன்னம்மான் (குகன்) என்பவர் தலைமையில், விடுதலைப்  புலிகள் அமைப்பின் ஒருதொகுதிப் போராளிகள் பயிற்சிக்காக சென்றிருந்தார்கள்.

புலிகளின் முன்னாள் யாழ் தளபதி கிட்டு அவர்களும் பயிற்சிக்காகச் சென்றிருந்தார். மிகவும் குளிர் சூழ்ந்த இடத்தில் நடைபெற்ற பயிற்சிகளின் போது, போராளிகள் அதிக கஷ்டங்களை அனுபவித்தார்கள்.

பயிற்சி நெறிகளுக்கு இந்தியப் படையைச் சேர்ந்த கேணல் ஒருவர் பொறுப்பாக இருந்தார். அவர் இலங்கைத் தமிழ் மக்கள் பற்றி அதிக அனுதாபம் கொண்டவராக இருந்ததுடன், பயிற்சி பெறச் சென்ற போராளிகள் விடயத்திலும் அதிக அக்கறையை வெளிப்படுத்தினார். புலிகளுடன் அதிக பரிவுடனும், பாசத்துடனும் அவர் நடந்துகொண்டார்.

பயிற்சிகள் முடிவடைந்து விடைபெறும் நேரம். அந்த இந்திய கேணலின் கண்கள் கலங்கிவிட்டன. போராளிகளும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கிட்டு ஓடிச் சென்று அந்த இந்திய கேணலின் மடியில் புரண்டு விம்மி விம்மி அழத்தொடங்கிவிட்டார். பயிற்சியை முடித்துக் கொண்ட புலிகள் கண்ணீரோடு விடைபெற்று சென்னையை வந்தடைந்தார்கள்.

சென்னை அடையாற்றில் தங்கியிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் தமது பயிற்சி அனுபவங்களை போராளிகள் பகிர்ந்து கொண்டார்கள். இடைநடுவே, கிட்டு இந்தியப்படை கேணலின் மடியில் புரண்டு விம்மியழுத கதையையும் போராளிகள் பிரபாகரனிடம் கூறிவைத்தார்கள்.

அதனை கேட்டு சிறிது நேரம் மௌனம் சாதித்த பிரபாகரன் இவ்வாறு தெரிவித்தார்:

“நாங்கள் ஒரு நோக்கத்திற்காகப் பயிற்சி எடுக்கப் போனோம். ஆனால் இந்தியாவோ வேறொரு நோக்கத்திற்காக எங்களுக்குப் பயிற்சி தந்திருக்கின்றார்கள்.

எங்களுடைய நோக்கத்திற்கு எதிராக என்றோ ஒரு நாள் இந்திய இராணுவம் திரும்பினால், இதே கேணலுக்கு எதிராக சண்டை பிடிக்கும்படி கிட்டுவுக்கு நான் உத்தரவிடுவேன். கிட்டுவும் சண்டை பிடித்தேயாகவேண்டும்.”

கிட்டுவும் மற்றைய போராளிகளும் திகைத்துப் போனார்கள். முழுத் தமிழ் இனமும் இந்தியாவை மட்டுமே நம்பி இருந்த அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக பிரபாகரன் தெரிவித்த கருத்துக்கள் அவர்களுக்கு அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தன.

புலிகளின் தலைவர் ஆரம்பம் முதலே ஒரு நிதர்சனத் தலைவராக இருந்து வந்துள்ளார் என்பதுடன், அவர் இந்தியாவின் விடயத்தில் மிகவும் அவதானமாகவே சிந்தித்து வந்துள்ளார் என்பதற்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் சான்று பகர்கின்றது.

வெளிநாடுகளிடம் இருந்து ஆயுதங்கள்:

இந்தியா பற்றி புலிகளின் தலைவர் கொண்டிருந்த எச்சரிக்கை உணர்வுக்கு,  அக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகின்ற மற்றொரு நிகழ்வையும் உதாரணமாகக் கூற முடியும். இந்தியா ஈழத் தமிழ் போராளிகளுக்கு பயிற்சியை வழங்கிய பின்னர் ஆயுதங்களையும் கொடுக்க முன்வந்தது.

இந்தியா தமக்கு ஆயுதங்களைத் தர முன்வந்த செய்தியை அறிந்த போராளிகளுக்கும், இயக்கத் தலைவர்களுக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி. தமது விடுதலை நோக்கிய பாதையில் இனிமேல் துணிகரமாக பயணிக்கலாம் என்ற எண்ணம் ஒவ்வொரு போராட்ட அமைப்புக்கள் மத்தியிலும் காணப்பட்டது.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் மத்தியிலும் இந்த மகிழ்ச்சி காணப்படவே செய்தது.

இந்தியா தமக்கு ஆயுதம் வழங்கப் போகின்றது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை பகிர்ந்து கொள்வதற்காக புலிகளின் முக்கியஸ்தர்கள் பிரபாகரனைச் சந்திக்கச் சென்றார்கள். கிட்டுவும் அவர்களுடன் சென்றிருந்தார். மிகவும் குதூகலத்துடன் சென்ற அவர்களிடம் தலைவர் பிரபாகரன் தெரிவித்த கருத்து, அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“நாங்கள் உடனடியாக வெளியில் இருந்து ஆயுதம் வாங்கவேண்டும்” என்று பிரபாகரன் அவர்களிடம் தெரிவித்தார்.

பிரபாகரனின் கருத்தைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி. இந்தியாதான் ஆயுதம் தரப் போகின்றதே…. பின்னர் எதற்காக வெளியில் இருந்து ஆயுதம் வாங்கவேண்டும்?  அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை.

அவர்களுடைய மனங்களில் ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட பிரபாகரன் இவ்வாறு தெரிவித்தார்:

“இந்தியா ஆயுதம் தருகின்றது என்றால், எம்மை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கத்தில்தான் அது எமக்கு ஆயுதங்களைத் தருகின்றது. நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டுமானால், சொந்தமாகவும் நாம் ஆயுதங்களைத் தேடிக்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்பொழுது, பிரபாகரன் அவர்களுக்கு ஒரு புதிராகவே தென்பட்டார். பிரபாகரன் அவர்களின் உள்நோக்கத்தின் ஆழத்தை புரிந்துகொள்ள அவர்களுக்கு பல வருடங்கள் பிடித்தன. இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு, புலிகள் ஒப்படைக்க வேண்டிய ஆயுத விபரங்கள் இந்தியப் படையினரால் வெளியிடப்பட்ட போதுதான், தமது தலைவனின் தீர்க்கதரிசனத்தின் பரிமானத்தை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

இந்தியப்படைகள் புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பலவந்தமாக களைய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கிடையேயும் பாரிய யுத்தம் மூண்ட போதுதான், புலிகள் வெளியில் இருந்தும் ஆயுதங்களைத் தருவித்துக்கொண்டதன் அனுகூலத்தை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஒரு தலைவன், எதிர்காலம் பற்றி எந்த அளவிற்கு சிந்திக்கவேண்டும், எப்படியான தொலைநோக்குகளையெல்லாம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த உதாரணம்.

இந்தியாவின் ஏஜண்டுகள்:

இந்தியாவின் உள்நோக்கத்தை ஆரம்பம் முதலே புலிகள் அறிந்து செயற்பட்டிருந்தார்கள் என்பதற்கு பல உதாரணங்களை கூறமுடியும்.

1986ம் ஆண்டு மே மதம் 7ம் திகதி புலிகளுக்கும், டெலோ அமைப்பினருக்கும் இடையில் பாரிய மோதல் வெடித்தது. டெலோ அமைப்பிற்கு எதிராக புலிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அந்த அமைப்பையும் தடைசெய்தார்கள்.

டெலோ அமைப்பின் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் புலிகளால் கொலை செய்யப்பட்டார். நுற்றுக்கணக்கான டெலோ உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்பட்டும், கைதுசெய்யப்பட்டும் இருந்தார்கள்.

டெலோ அமைப்பிற்கு எதிராக புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களுக்கும், டெலோ அமைப்பை புலிகள் தடைசெய்ததற்கும், அந்த அமைப்பிற்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை புலிகள் முன்வைத்திருந்தார்கள்.

1) டெலோ உறுப்பினர்கள் மக்களைத் துன்புறுத்தி, கொள்ளையிட்ட குற்றவாளிகள்.

2) டெலோ – இந்திய ஏகாதிபத்தியத்தின் “ஏஜண்டாக” செயற்பட்டுக்கொண்டு இருந்தது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை திசை திருப்புவதில் இந்தியா காண்பித்து வந்த அக்கறையை ஆரம்பத்திலேயே புலிகள் அறிந்துவைத்திருந்தார்கள். இந்தியா தனது திட்டத்திற்கு டெலோ அமைப்பை பயன்படுத்த ஆரம்பித்ததையும் புலிகள் அறிந்துவைத்திருந்தார்கள்.

தமிழீழத்திற்கு எதிரான இந்தியாவின் எந்தவொரு திட்டத்தையும் தவிடுபொடியாக்கும் மாற்றுத் திட்டங்களை வகுப்பதில் புலிகள் ஆரம்பம் முதலே மிகவும் எச்சரிக்கையுடன் செயலாற்றி வந்துள்ளார்கள். டெலோ அமைப்பிற்கு எதிராக 1986ம் ஆண்டு மே மாதத்திலேயே புலிகள் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

இந்த அடிப்படையில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் அதனைத் தொடர்ந்து ஈழமண்ணில் இந்தியா புலிகளுக்கு எதிராக மேற்கொள்ள ஆரம்பித்திருந்த ஆயுதக் களைவையும் புலிகள் அணுகினார்கள்.

தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் இவை பற்றி சற்று விரிவாகவே பார்ப்போம்.

தொடரும்…

 

புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு!- (அவலங்களின் அத்தியாயங்கள்- 55): நிராஜ் டேவிட்
  • by admin
  • February 26, 2013
Arms-Handingover-150x150.jpgஆயுதங்களை ஒப்படைப்பதைத் தவிர புலிகளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்காத பட்சத்தில், புலிகளிடம் இருந்து பலவந்தமாக ஆயுதங்களை களையவும் இந்தியப் படைகள் தயாராக இருந்தன.
அதனால் தமது உயிரிலும் மேலாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு புலிகள் முன்வந்திருந்தார்கள்.

ஆயுத ஒப்படைப்பு தினம், 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. பாலாலி விமானப் படைத்தளத்தில் முதலாவது ஆயுத ஒப்படைப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

ஆயுத ஒப்படைப்பு மிகவும் சுமுகமாக ஆரம்பமானது. ஸ்ரீலங்காவின் அரச பிரதிநிதிகளாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல,  ஸ்ரீலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க, ஸ்ரீலங்கா இராணுவத்தின் வடபிராந்திய தளபதி பிரிகேடியர் ஜெரி.டி.சில்வா போன்றோர் அங்கு வந்திருந்தார்கள். அவர்களுடன் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் பல உயரதிகாரிகளும் அங்கு வந்திருந்தார்கள்.

இந்திய அமைதிகாக்கும் படைகள் சார்பாக, ஜெனரல் திபீந்தர் சிங் (OFC, IPKF), மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் (GOC, 54 Division, IPKF), பிரிகேடியர் பெர்ணான்டஸ் (Pacification Specialist, IPKF) உட்பட மேலும் பல இராணுவ உயரதிகாரிகளும் சமுகம் அளித்திருந்தார்கள்.

புலிகளின் ஆயுத ஒப்படைப்பை தமது ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக மாற்றிவிடும் ஆர்வத்திலும், வேகத்திலும், உள்ளூர் மற்றும் வெளியூர் ஊடகவியலாளர்கள் பலர் அங்கு திரண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளால் ஒப்படைக்கப்பட இருந்த ஆயுதங்களை ஏற்றியபடி புலிகளின் ”பிக்கப்” வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பலாலி விமானப்படைத் தளத்தை நோக்கி வந்தன.

தமிழீழ இலக்கத் தகடுகளுடனும், புலிக் கொடிகளைப் பறக்கவிட்டபடியும், புலிகளது வாகனங்கள் அணிவகுத்து வந்த காட்சி, அங்கு திரண்டிருந்த அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டது.

விடுதலைப் புலிகளின் சார்பில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் யோகரத்தினம் யோகி, ஆயுத கையளிப்பின் அடையாளமாக, ஒரு கைத்துப்பாக்கியை, ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமது “பிக்கப்” வாகனங்களில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கி அணிவகுத்து வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக ஒப்படைத்தார்கள்.

ஆயுத ஒப்படைப்பைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல, ஸ்ரீலங்கா சிறைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து, அவர்களை விடுதலை செய்வதற்கான, ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அறிவித்தலை பகிரங்கமாக வெளியிட்டார்.

சேபால ஆட்டிக்கல கூறும்போது,“ஸ்ரீலங்காவின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இன்றைய தினம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாகும். இரத்தம் சிந்துதல் மற்றும் வன்முறை போன்றனவற்றால் எமது ஜனநாயக சமுகம் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வந்ததை, இந்த ஆயுத ஒப்படைப்பு இன்று முடிவிற்குக் கொண்டுவந்துள்ளது. இன்றய தினத்தில் இருந்து, இலங்கையர்களாகிய நாங்கள் அனைவரும் எங்களுடைய சொந்த நாட்டில் சமாதானமாகவும், நல்லினக்கத்துடனும் வாழுவோம் என்று நான் உண்மையாகவே எண்ணுகின்றேன்…” என்று குறிப்பிட்டார்.

சுவாரஸ்யமான நிகழ்வுகள்:

மிகவும் சுமுகமாக நடைபெற்று முடிந்த இந்த ஆயுதக் கையளிப்பு நிகழ்வுகளின் போது, ஒருசில சுவாரசியமான சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன:

புலிகள் சார்பாக முதன்முதலில் ஆயுதத்தை ஒப்படைத்த யோகி, மிகவும் கவலை அடைந்த மனநிலையுடன், ஏனோதானோ என்று நடந்து கொண்டார். மிகவும் வேகமாக அவர் தனது கைத்துப்பாக்கியை சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்து விட்டதால், அவர் ஆயுதத்தை ஒப்படைக்கும் காட்சியை தமது கமராக்களில் படம் பிடித்துக்கொள்ளுவதற்கு, புகைப்படப்பிடிப்பாளர்களும், வீடியோ படப்பிடிப்பாளர்களும் தவறிவிட்டார்கள்.

எனவே, மீண்டும் ஒரு தடவை ஆயுத கையளிப்பை மேற்கொள்ளும்படி அவர்கள் யோகியிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் யோகியோ அதற்கு ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

மறுபடியும் அடையாள ஆயுதக் கையளிப்புக் காட்சியை நடாத்துவதற்கு சேபால ஆட்டிக்கல தயாராக இருந்த போதிலும், யோகி அதற்கு உடன்பட உறுதியாக மறுத்துவிட்டார். இதனால், ஆயுதக் கையளிப்பை பதிவு செய்வதற்கு படப்பிடிப்பாளர்களால் முடியவில்லை. யோகியால் கையளிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, அங்கிருந்த மேசை ஒன்றின் மீது வைக்கப்பட அதன் மீது சேபால ஆட்டிக்கல தனது கைவைத்தபடி புகைப்படங்களுக்கு காட்சி தந்தார்.

இந்தப் படங்களே பின்னர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி இருந்தன. புலிகளின் ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக, யோகியால் ஒப்படைக்கபட்டிருந்த கைத்துப்பாக்கியை, ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆரிடம் கையளிக்க வேண்டும் என்று கூறிய சேபால ஆட்டிக்கல, அதனை தன்னுடன் எடுத்துச் சென்றார்.

ஆயுத ஒப்படைப்பு நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு என்று கூறி, ஒரு தொகுதி இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை, இந்தியா தனது விமானங்களின் முலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்திருந்தது.

கடவுச் சீட்டுக்களோ,விசாக்களோ, ஸ்ரீலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியோகூட இல்லாமல், இவ்வாறு அழைத்துவரைப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள், ஆயுதக் கையளிப்பு நடைபெற்ற கட்டிடத்தில் முன்னுரிமை கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

இலங்கை ஊடகவியலாளர்கள் உட்பட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருக்கையில், இந்தியாவின் தூரதர்ஷன் உட்பட, இந்தியாவில் இருந்து விஷேட விமானத்தில் வந்த ஊடகவியலாளர்களுக்கு, நிகழ்வுகளை பதிவு செய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு விஷேட விமானத்தில் பலாலியில் வந்திறங்கியிருந்த ஊடகவியலாளர்கள், பலாலி விமானத்தளத்தின் அனைத்து இராணுவ நிலைகளையும் பார்வையிடவும், வீடியோ படம் பிடிக்கவும் அனுமதிக்கப்பட்டார்கள். அது, ஸ்ரீலங்கா பாதுகாப்பு படை அதிகாரிகளின் முணுமுணுப்புக்கு இலக்கானது. ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், இந்திய “றோ” உளவாளிகளும் அங்கு வந்துள்ளதாக, ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப்படை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தார்கள்.

இந்திய அதிகாரிகள், புலிகளுடனும், ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளுடனும், ஊடகவியலாளர்களுடனும் புலிகளது ஆயுத ஒப்படைப்பு பற்றி பேசும் போது, ”Surrender” (சரணாகதி) என்ற வார்த்தைப் பிரயோகத்தை பாவிக்காது தவிர்த்துக்கொண்டார்கள். “ஆயுதக் கையளிப்பு” , ஆயுத ஒப்படைப்பு, (Arms Handing over) என்றுதான் குறிப்பிட்டார்கள்.

புலிகளும், தாங்கள் ஆயுதங்களை கைவிட்டதாகவோ அல்லது தாம் தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டதாகவே (Lay down) எச்சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவேயில்லை.

தொடரும்..

 

Link to comment
Share on other sites

புலிகளும், தாங்கள் ஆயுதங்களை கைவிட்டதாகவோ அல்லது தாம் தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டதாகவே (Lay down) எச்சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவேயில்லை.

அதே போல வன்னிப்போரின் பின்னரும் ஆயுதங்களை மௌனிக்கிறோம் (we silence our guns). என்றுதான் சொன்னார்கள்.. என்ன விளையாடுறீங்களா??!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்களை நேசித்த புலிகளும், அவற்றைப் பறிக்க முனைந்த இந்தியாவும்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 56) – நிராஜ் டேவிட்
  • by admin
  • April 20, 2013
sri_lankaphoto500_011008.jpg
 

1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெற்ற முதலாவது ஆயுத ஒப்படைப்பின் போது, விடுதலைப் புலிகள் தம்மிடம் இருந்த சுமார் 800 ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார்கள்.

அதேவேளை புலிகள் தம்வசம் வைத்திருக்கும் ஏனய ஆயுதங்களையும் மறுநாள் ஒப்படைத்துவிட வேண்டும் என்று இந்தியப்படைத் தளபதி புலிகளுக்கு அறிவித்திருந்தார்.

புலிகளின் இரண்டாம் கட்ட ஆயுத ஒப்படைப்பு தொடர்பாக, புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், இந்தியப்படை உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு கலந்துரையாடல், ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக அமைந்திருந்த புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மேஜர். ஜெனரல் ஹரிகிரத் சிங், பிரிகேடியர் பெர்ணான்டஸ் போன்றவர்களுடன் மற்றொரு இந்தியப்படை உயர் அதிகாரியும் கலந்துகொண்டார்.

சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் மிகவும் காரசாரமாக இருந்தது.

‘’புலிகள் தம்மிடம் மிகுதியாக உள்ள ஆயுதங்களை நாளை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில், இந்தியப்படைகள் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பலவந்தமாகப் பறிக்கவேண்டி இருக்கும்’’ என்று இந்திய அமைதி காக்கும் படையின் தளபதி ஹரிகிறத் சிங் புலிகளின் தலைவரிடம் உறுதியாகத் தெரிவித்தார்.

இதற்கான உத்தரவு புதுடில்லியில் இருந்து தமக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், புலிகளிடம் இருந்து ஆயுதங்களை உடனடியாக களையவேண்டும் என்ற நெருக்குதல்கள் தமது மேலிடத்தில் இருந்து தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியப் படைகள் ஸ்ரீலங்காப் படைகளுடன் இணைந்து இந்த ஆயுதக் களைவு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அவர் தமது திட்டத்தை புலிகளின் தலைவரிடம் தெரிவித்தார்.

புலிகளை நீராயுதபாணிகளாக்கி செயலிழக்க வைத்துவிட்டு, பின்னர் களத்தில் இருந்து புலிகளை முற்றாகவே அகற்றிவிடும் இந்தியாவின் கபட திட்டத்தை, புலிகளின் தலைவர் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.

தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த மற்றய தமிழ் அமைப்புக்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வந்து, அவர்களுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்கி இருந்ததையும் பிரபாகரன் அறிந்திருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற அமைப்புக்களை தமிழீழத்தில் பலப்படுத்தவேண்டுமானால், புலிகள் பலவீனப்படுத்தப்படவேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்தையும் அவர் நன்றாகவே புரிந்துவைத்திருந்தார்.

எனவே, காரணத்தை காரணத்தினாலேயே உடைக்கவேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் காரியங்களை முன்னெடுக்க அவர் எண்ணியிருந்தார்.

எதிரிக்கு, அவனது பாணியிலேயே பதில் கொடுக்கவேண்டும் என்று தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார்.

தம்மிடம் உள்ள மற்றொரு தொகுதி ஆயுதங்களையும் ஒப்படைக்கச் சம்மதிப்பதாக இந்தியப்படை அதிகாரிகளிடம் கூறி, அவர்களை அனுப்பிவைத்தார்.

தலைவர் கூட்டிய நள்ளிரவுக் கூட்டம்:

அன்றய தினம் மாலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் போராளிகளுடனாக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். விடுதலைப் புலிகளின் பிராந்தியத் தளபதிகள், பொறுப்பாளர்கள் உட்பட நூற்றிற்கும் அதிகமான போராளிகள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

நள்ளிரவு வரை அந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், அங்கு வந்திருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இருந்த ஆயுதங்கள், புலிகளின் அரசியல் பிரிவினரால் சேகரிக்கப்பட்டன. புலிகளின் யாழ் அரசியல் பொறுப்பாளர் திலீபன் மற்றும் அவரது உதவியாளர் நவீனன் போன்றவர்கள் இந்த ஆயுத சேகரிப்பை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இதேவேளை, புலிகளின் காரியாலயத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்று கண்களில் எண்ணை விட்டுக்கொண்டு சிலர் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திய மற்றும் ஸ்ரீலங்காப் படைகளுக்கு தகவல் வழங்குபவர்களும், சில ஊடகவியலாளர்களும், இந்தச் சம்பவத்தை அருகில் உள்ள கட்டிடங்களில் தங்கியிருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்கள்.

கைத்துப்பாக்கிகள், AK47, T56 ரக துப்பாக்கிகளை விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசியல் பிரிவு பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பதையும் அவர்கள் அவதானித்தார்கள். மறுநாள் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த 2வது ஆயுத ஒப்படைப்பின்போது ஒப்படைக்கப்படுவதற்காக இந்த ஆயுதங்கள் அவர்களது அரசியல் பிரிவினரால் சேகரிக்கப்படுவதாக, இந்த நிகழ்வை அவதானித்துக் கொண்டிருந்தவர்கள் நம்பினார்கள்.

தமது நம்பிக்கையை அப்படியே தமது மேலதிகாரிகளுக்கும், ஊடகங்களுக்கும் அறிவிக்கவும் செய்தார்கள்.

இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு:

ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி, புலிகளின் இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு இடம்பெற்றது. இம்முறை ஆயுத ஒப்படைப்பு யாழ் கோட்டையினுள் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சார்பில், இராணுவத்தின் வடபிராந்திய நடவடிக்கைத் தளபதி கேணல் விஜய விமலரெட்ன கலந்துகொண்டார்.

விடுதலைப் புலிகள் சார்பில் இம்முறை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் யோகி கலந்துகொள்ளவில்லை. பதிலாக, புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் தளபதி குமரப்பா, மற்றும் புலிகளின் இராணுவப் பிரிவைச் சேர்ந்த நாராயன், ராஜு, ராஜா போன்றோர் கலந்து கொண்டார்கள்.

இதுவரை புலிகளின் அரசியல் பிரிவினரால் கையாளப்பட்டு வந்த புலிகளின் ஆயுத ஒப்படைப்பு விடயம், புலிகளின் இராணுவப் பிரிவினரின் கைகளுக்கு மாறிவிட்டிருந்ததை, புலிகளின் இந்த இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு நிகழ்வு வெளிப்படுத்தியது.

ஆயுதங்களில் உயிரை வைத்திருந்த போராளிகள்:

இது இவ்வாறு இருக்க, ஆயுத ஒப்படைப்பு தொடர்பான விடுதலைப் புலி உறுப்பினர்களின் மனவோட்டம் மிகவும் மறுபட்டதாகவே இருந்தது.

எந்தவொரு விடுதலைப் புலியும் இந்த ஆயுத ஒப்படைப்பை வரவேற்கவில்லை. மாறாக ஆயுத ஒப்படைப்பிற்கு தமது எதிர்ப்புக்களையே வெளிப்படுத்தி வந்தார்கள்.

புலிகள், ஆயுதங்களை தமது உயிரினும் மேலாக மதித்தார்கள். நேசித்தார்கள். சண்டைகளின் போது, எதிரியிடம் இருந்து ஒரு ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக பல உறுப்பினர்களை இழக்கும் அளவிற்கு புலிகள் ஆயுதங்களுக்கு முன்னுரிமை வழங்கி வந்தார்கள்.

புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில், ஒரு போராளி, ஸ்ரீலங்கா படை வீரனைச் சுட்டுக்கொல்வது பெரிய விடயம் அல்ல. அவ்வாறு கொல்லப்பட்ட படை வீரனின் ஆயுதத்தை கவர்ந்து சென்று தனது பொறுப்பாளரிடம் காண்பிப்பதுதான் பாராட்டுக்குரிய ஒரு விடயமாக இருந்தது.

அக்காலத்தில் ஸ்ரீலங்காப் படையினருடனான சண்டைகளின் போது, புலிகள் தாம் சுட்டுத் தீர்த்த ரவைகளின் வெற்றுக் கூடுகளைக்கூடச் சேகரித்து செல்வது வழக்கம். அந்த வெற்று ரவைகளில் வெடிமருந்து நிறப்பி மீண்டும் பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்துவந்தார்கள்.

அக்காலத்தில் துரோகிகளுக்கும் சமுக விரோதிகளுக்கும் தண்டனை வழங்க போராளிகளை அனுப்பும்போது, ’’எம்டி (empty) கொண்டு வா..” என்று கூறித்தான் பொறுப்பாளர்கள் அனுப்புவார்கள்.

குறிப்பிட்ட நபரைச் சுட்டு தண்டணை வழங்கிவிட்டு, வெற்றுத் தோட்டாவை எடுத்துக்கொண்டு திரும்பவேண்டும் என்பதே அப்போதைய நடைமுறையாக இருந்தது.

அந்த அளவிற்கு புலிகள் ஆயுதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.

அப்படி புலிகள் மதித்த, நேசித்த தமது ஆயுதங்களை ஒப்படைப்பதென்பது, அதுவும் தமது ஜென்ம விரோதியிடமே ஒப்படைப்பதென்பது, புலி உறுப்பினர்களால் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகவே இருந்தது.

தமிழீழத்தை உயிரிலும் மேலாக நேசித்த புலிகள்:

அக்காலத்தில் புலிகளின் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டு, 85 அல்லது 86ம் ஆண்டளவில் தெரிவித்ததாகக் கூறப்பட்ட ஒரு வசனம், தமிழ் மக்களிடையே பிரபல்யம் அடைந்திருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் அப்பொழுது இந்தியாவில் தங்கியிருந்து விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது இந்தியாவின் டில்லி, பெங்கலூர், திம்பு என்று அடிக்கடி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

த.வி.கூ. உட்பட பல அமைப்புக்களும் அந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டன. பிரபாகரன் அவர்களும் அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார். இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு பற்றி அக்கூட்டங்களில் ஆராயப்பட்டன.

அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருந்த கிட்டு, ’’தமிழீழத்தை கைவிட்டு ’’தம்பி’’ வந்தாலும் வெடிதான்’’ என்று கூறிய வார்த்தைகள் அக்காலத்தில் போராளிகளிடையேயும், தமிழ் மக்களிடையேயும் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தன.

கிட்டுவின் இந்த வார்த்தைகள், தலைமை மீதுள்ள தமது அவநம்பிக்கையை வெளிக்காண்பிப்பதாக அமையவில்லை. தமிழீழத்தின் மீது அவர் கொண்டிருந்த உறுதியை வெளிக்காண்பிப்பதாக அமைந்திருந்தன.

கூட்டனி மற்றும் ஏனைய அமைப்புக்களின் தலைவர்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விடுவார்களோ என்று மக்கள் மத்தியில் எழும்பியிருந்த சந்தேகத்தை அடிப்படையாக வைத்து, தமிழீழம் பற்றிய புலிகளின் உறுதியை வெளிப்படுத்தவே கிட்டு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

புலிகள் தம்மிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைப்பது தமிழீழத்தை கைவிடுவதற்கு சமம் என்பதால், ஆயுத ஒப்படைப்பு விடயத்தில் புலி உறுப்பினர்கள் எதிர்மாறான போக்கையே கொண்டிருந்தார்கள்.

ஆயுத ஒப்படைப்பை எதிர்த்து சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் ’’சயனைட்’’ உட்கொண்டதாகவும் அப்பொழுது செய்திகள் வெளிவந்திருந்தன.

ஆயுதங்களை ஒப்படைத்து சரனாகதி அடைவதைவிட, போரிட்டு வீரச்சாவடைவது மேல் என்றே பெரும்பாண்மையான போராளிகள் அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். அதனை தமது தலைவரிடமும் எடுத்துரைத்தார்கள்.

ஆனால், எதிர்காலத்தை கச்சிதமாகக் கணக்கிடக்கூடிய ஒருவர் என்று அவரது எதிரிகளால் கூட மெச்சப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் உள் மனதில் பல தீர்மானங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தன.

தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கும், தமிழீழத்தின் எதிர்காலத்திற்கும் எதிராக மாபெரும் சக்திகள் திரண்டிருக்கும் போது, புத்திசாதுர்யமாக, நிதானமாகத்தான் அவற்றை எதிர்கொள்ளவேண்டும் என்று புலிகளின் தலைவர் நினைத்தார். திட்டமிட்டார்.

ஆகஸ்ட் 6ம் திகதி நள்ளிரவு யாழ்பாணத்தில் புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட்டிய கூட்டத்தில், புலிகளின் எதிர்கால நகர்வுகள் பற்றிய தனது திட்டத்தை போராளிகளுக்கு விளக்கினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட புலி உறுப்பினர்களின் முகங்கள் பிரகாசித்தன.

தொடரும்..

 

ஈழமண்ணுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்ட தமிழ் அமைப்புக்கள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 57) – நிராஜ் டேவிட்
  • by admin
  • April 20, 2013
EP-with-IPKF.jpg
 
 

ஈழ மண்ணில் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்த மற்றைய தமிழ் அமைப்பு உறுப்பினர்களை இந்தியா மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்திருந்தது. ‘அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட’ என்று கூறியே இந்த உறுப்பினர்கள் வந்திருந்தார்கள்.

இவர்கள் தமிழ் பிரதேசங்களில் முகாம்கள் அமைக்கவும், அலுவலகங்கள் அமைத்துச் செயற்படவும் இந்தியப்படை அனுமதி அளித்திருந்தது. இவர்களின் பாதுகாப்பிற்கென்று பெருமளவு ஆயுதங்களும் இந்தியப்படையினரால் வழங்கப்பட்டிருந்தன.

யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டு, ஸ்ரீலங்காப் படைகள் முகாமிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்திய அமைதி காக்கும் படைகள் அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதுவும் புலிகளிடம் இருந்து ஆயுதக் களைவு இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், மற்றய தமிழ் இயக்கங்களுக்கு இந்தியப்படை ஆயுதங்களை வழங்கி வந்தது நோக்கத்தக்கது.

புலிகளின் சந்தேகம்:

இந்த விடயம் புலிகளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. களத்தில் எந்தவித ஆபத்தும் இல்லாத நிலையில், அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவென வந்த இந்த தமிழ் அமைப்புக்களுக்கு எதற்காக ஆயுதங்கள் வழங்கப்படவேண்டும் என்று புலிகள் கேள்வி எழுப்பினார்கள்.

மாற்று தமிழ் இயக்கங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை அழிக்கும் இந்திய ’’றோ’’ இனது திட்டம் புலிகளுக்கு நன்றாகவே புரிந்தது.

ஈழ மண்ணில் மக்கள் மத்தியில் இந்தியப்படைகள் போதிய புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், புலிகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில், மக்கள் மத்தியில் அதனை நியாயப்பபடுத்தவும், புலிகளுக்கு மாற்றீடாக பலம்வாய்ந்த அமைப்புக்கள் ஈழத்தில் இயங்கவேண்டியது அவசியம் என்று இந்திய உளவு அமைப்பான ~றோ| எண்ணியிருந்தது. அதற்காகவே இந்த அமைப்புக்களை அது திட்டமிட்டு ஈழத்திற்கு அழைத்து வந்திருந்தது.

தமிழ் அமைப்புக்களின் நடவடிக்கைகள்:

புலிகளால் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு தப்பியோடிய மற்றய தமிழ் அமைப்புக்கள் இந்தியப்படையினரால் மீண்டும் ஈழமண்ணிற்கு அழைத்துவரப்பட்டதானது, அந்த அமைப்புக்களைப் பெறுத்தவரையில் ஒரு பாரிய வரப்பிரசாதமாகவே இருந்தது.

அரசியல் அனாதைகளாக, அகதிகள் போன்று அயல்நாட்டிற்கு தப்பியோடிய இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள், அதிக அதிகாரங்களுடன் மீண்டும் தமிழீழம் திரும்பியது அவர்களுக்கு ஒரு பெரிய விடயமாகவே பட்டது. எனவே, இப்படியான கிடைத்ததற்கரிய சந்தர்ப்பத்தை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவே நினைத்தார்கள். இந்திப் படை அதிகாரிகளை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் தமது நடவடிகளை அமைப்பதைத் தவிர இந்த அமைப்புக்களுக்கு வேறு மார்க்கமும் இருக்கவில்லை.

ஏற்கனவே புலிகளை எதிரிகளாக நினைத்து செயற்பட்ட இந்த அமைப்புக்கள், புலிகளை முற்றாகவே தமிழ் மண்ணில் இருந்து ஓரம்கட்டிவிடும் ’’றோ’’ இனது திட்டத்திற்கு முழுமூச்சுடன் துணைபோக ஆரம்பித்தன.

இந்த அமைப்புக்கள் ஈழத்தில் கால்வைத்தது முதல், புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை ஆரம்பித்திருந்தார்கள். தமது உறவினர்கள், ஆதரவாளர்கள், நன்பர்கள் என்று அரம்பித்த இவர்களது புலி எதிர்ப்புப் பிரச்சாரங்கள், படிப்படியாக வளர்ச்சி அடைந்து சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குள் என்று சென்றுகொண்டிருந்தன.

ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற மூன்று அமைப்புக்களும் இணைந்து ’’திறீ ஸ்டார்’’ என்ற பெயரில் தமது நடவடிக்கைளை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.

புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளுவதுடன் மட்டும் இவர்கள் தமது பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. புலிகளின் ஆதரவாளர்களை மிரட்டுவது, கடத்துவது, பொதுமக்களிடம் இருந்து பணம் பறிப்பது என்று தமது செயற்பாடுகளை அதிகரித்துக்கொண்டே சென்றார்கள். ஆயுதங்களுடன் சென்ற இவர்கள் புலி உறுப்பினர்களையும் நேரடியாக மிரட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

புலிகள் அதிருப்தி:

மாற்றுத் தமிழ் அமைப்புக்கள் ஈழத்தில் இந்தியப்படையினரால் வளர்க்கப்பட்டு வருவது பற்றி விடுதலைப் புலிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்கள்.

இது தொடர்பாக அந்நேரத்தில் புலிகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ’’புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிட்டு, சமாதான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டுவரும் இந்த வேளையில், இந்தியப்படைகள் எதற்காக மாற்றுத் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி தமிழ் கிராமங்களுக்கு அனுப்பி வருகின்றது? இது எங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம், தமிழர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது| என்று அந்த அறிக்கையில் புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

இதேபோன்று, மாற்று தமிழ் அமைப்புக்கள் தொடர்பாக புலிகள் தமது அதிருப்தியை பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டிருந்தார்கள்.

இந்தியப் படைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெணரல் திபீந்தர் சிங் ஒரு தடவை திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட பொழுது, அங்குள்ள தமிழ் அமைப்புக்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார். அப்பொழுது திருகோணமலையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் 54வது காலாட்படையின் துணைத்தளபதி பிரிகேடியர் குல்வந் சிங் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். தமிழ் அமைப்புக்களின் பிராந்திய பொறுப்பாளர்கள் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகள் சார்பாக, புலிகளின் திருகோணமலைப் பொறுப்பாளர் புலேந்திரனும் அங்கு வருகை தந்திருந்தார்.

புலிகளின் திருகோணமலைத் தளபதி புலேந்திரன்

சந்திப்பு ஆரம்பமாகி அங்கு பல விடயங்கள் விவாதிக்கப்பட்ட போதும், புலேந்திரன் வாய் திறக்கவில்லை. வழமைக்கு மாறாக, ஒரு அசாதிய அமைதியை அங்கு அவர் கடைப்பிடித்தார். இது அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவென வந்திருந்த அனைவருக்கும் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

சந்திப்பு முடிவடைந்த பின்னர் புலேந்திரனை தனியாகச் சந்தித்த இந்தியப்படை உயரதிகாரி திபீந்தர் சிங், புலேந்திரனின் அமைதிக்கான காரணத்தை வினவினார். அதற்கு பதிலளித்த புலேந்திரன், ’’நம்பிக்கைத் துரோகம் செய்யும் இதுபோன்ற கோழை அமைப்புக்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள விரும்பவில்லை. இனிமேல் எதாவது பேசுவதாக இருந்தால், புலிகளுடன் தனியாகப் பேசுங்கள்’’ என்று இந்தியப்படை உயரதிகாரியிடம் தெரிவித்தார்.

தமிழ் அமைப்புக்கள் தொடர்பான புலிகளின் அதிருப்தியை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் நேரடியாகவே, இந்தியப்படை உயரதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

15.08.1987 அன்று இந்தியப்படை உயரதிகாரி திபீந்தர் சிங்குடன் யாழ்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, புலிகளின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்:

‘’புலிகள் மேற்கொண்டிருக்கும் ஆயுதக் கையளிப்பைத் தொடர்ந்து பலவீனமடைந்திருக்கும் புலி உறுப்பினர்கள் மீது மற்றய தமிழ் குழுக்களைக் கொண்டு தாக்குதல் நடாத்தும் நோக்குடன் ’’றோ’’ அமைப்பு செயற்படுவது பற்றி எங்களுக்கு பல தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக ’’திறீ ஸ்டார்“ என்ற அமைப்பை இந்த விடயத்தில் “றோ“ தூண்டிவிட்டுள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது.’’ என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார். (இதுபற்றி, பின்னர் திபீந்தர் சிங் எழுதியிருந்த IPKF in SriLanka என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளர்.)

இந்தியப்படை உயரதிகாரிகள் பிரபாகரனின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்கள்.  புதுடில்லியும், இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

ஆனால், மாற்று தமிழ் குழுவினரால் புலிகளின் ஒரு முகாம்; சுற்றிவளைக்கப்பட்டு, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் வெளித்தெரிந்தபோதுதான், புலிகளின் குற்றச்சாட்டுக்களில் இருந்த உண்மைத்தன்மையை அனைவரும் உனர்ந்துகொண்டார்கள்.

மன்னாரில் விடுதலைப் புலிகள் மூவர் புளொட் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நிலமையை மேலும் சிக்கலாக்கியது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த கில்மன்(அடம்பன்), அர்ச்சுனா(கல்வியன்காடு), ரஞ்சன்(பிச்சைக்குளம்) போன்ற உறுப்பினர்கள் புளொட் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புலிகள் தமது ஆயுதக் கையளிப்பு தொடர்பாக பகிரங்கமாகவே மாற்று நிலைப்பாடொன்றை எடுக்க ஆரம்பித்தார்கள்.

ஆயுதங்களை ஒப்படைப்பது தமது உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று புலிகள் தெரிவித்தார்கள். தம்மிடம் இருந்து ஆயுதங்களை களைந்துவிட்டு, மாற்று அமைப்புக்களைக் கொண்டு தமக்கெதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இந்தியாவின் எண்ணத்தை புலிகள் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.

புலிகளின் கருத்துக்களில் அடங்கியிருந்த நியாயத்தை தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள்.

தொடரும்..

 

றோவை ஏமாற்றி ஆயுதம் சேகரித்தார்கள் விடுதலைப் புலிகள்!- (அவலங்களின் அத்தியாயங்கள்- 58): நிராஜ் டேவிட்
  • by admin
  • April 20, 2013
tamilTigerDM0306_468x252.jpg
 

விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதென்பது எப்பொழுதுமே சிக்கலான ஒரு விடயம்தான்.. புலிகளுக்கு எதிரான இந்தியாவின் முதலாவது ஆயுதக் களைவு 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி சென்னையில் இடம் பெற்றது.

தமிழ் நாட்டுப் பொலிஸார் புலிகளின் அலுவலகங்களைச் சுற்றிவளைத்து, புலிகள் வசமிருந்த ஆயுதங்களையும், தொலைத்தொடர்பு கருவிகளையும் கைப்பற்றியிருந்தார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மேற்கொண்ட சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீண்டும் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் புலிகளுக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருந்தது.

புலிகளிடம் ஆயுதங்கள் இருப்பதை இந்தியா தொடர்ந்து அனுமதிக்காது என்பதுடன், அந்த ஆயுதங்களை களையும் நடவடிக்கையை இந்தியா எந்தச் சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் மீண்டும் மேற்கொள்ளலாம் என்பதையும் புலிகளுக்கு அந்தச் சம்பவம் நன்றாக உணர்த்தியிருந்தது.

அதனால், தமது ஆயுதங்கள் விடயத்தில் புலிகள் மிகுந்த எச்சரிக்கையாகவே நடந்துகொள்ளத் தலைப்பட்டார்கள். அத்தோடு இந்தியா என்றாவது ஒரு நாள் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதற்கு முயற்சி செய்யும் என்பதை புலிகளின் தலைவர் தெளிவாகவே உணர்ந்திருந்தார்.

அதனால், இந்தியா புலிகளுக்கு ஆயுதங்களை வினியோகித்து வந்த காலத்திலேயே வேறு நாடுகளிடம் இருந்து புலிகள் இரகசியமாக பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்து வந்ததுடன், தம்மிடமுள்ள ஆயுதக் கையிருப்பு விடயத்தில் இந்தியாவை பலவழிகளிலும் ஏமாற்றியும் வந்திருந்தார்கள்.

“றோ”வை ஏமாற்றிய புலிகள்

1980களின் ஆரம்பத்தில், புலிகள் உட்பட தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கும் பொறுப்பு “றோ” அமைப்பினரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

“றோ” வும் தம்மால் பயிற்றப்பட்ட போராளிகளின் விபரங்கள், போராட்ட அமைப்புக்களுக்கு தம்மால் வழங்கப்பட்ட ஆயுத தளபாடங்களின் பட்டியல்கள் என்பனவற்றை மிகவும் கவனமாகவே பேணி வந்தது.

ஒவ்வொரு போராட்ட அமைப்பிடமும் எப்படியான ஆயுதங்கள் இருக்கின்றன. எத்தனை ஆயுதங்கள் இருக்கின்றன போன்ற விபரங்களை மாதாமாதம் கணக்கிட்டு கண்காணித்து வந்தது. இயக்கங்களும், தாம் பாவித்த மற்றும் தம்மிடம் வைத்துள்ள ஆயுதங்களின் விபரங்களை றோ அதிகாரிகளிடம் மாதாமாதம் தெரிவிக்கவேண்டும் என்றும் கேட்கப்பட்டிருந்தார்கள்.

சரியான சந்தர்ப்பத்தில் தமிழ் அமைப்புக்களிடம் இருந்து ஆயுதங்களை மீள பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனே “றோ” இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தது.

விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களின் விபரங்களும், “றோ” அதிகாரிகளால் மிகவும் கவனமாக திரட்டப்பட்டன. புலிகளும் தம்மிடமுள்ள ஆயுதங்கள் பற்றிய விபரங்களை அவ்வப்போது “றோ” அதிகாரிகளிடம் வெளியிட்டே வந்தார்கள்.

இருந்த போதிலும், புலிகள் தம்மிடமுள்ள ஆயுதங்களின் கணக்குகளை வெளியிடும் விடயத்தில் “றோ” அதிகாரிகளை எவ்வாறு ஏமாற்றியிருந்தார்கள் என்ற விபரத்தை, “India’s Sri Lankan Fiasco” என்ற ஆய்வு நூல் விபரித்திருக்கின்றது.

“புலிகளிடம் உள்ள ஆயுத கையிருப்பு பற்றிய விபரங்கள் றோ விடம் இருந்தன. ஆனால் சண்டைக்குச் சென்று திரும்பும் புலிகள், சண்டைகளின்போது பாவித்த ரவைகள் மற்றும் இழந்த ஆயுதங்கள் போன்றனவற்றின் கணக்குகளை அதிகமாகவே “றோவிடம் வெளியிட்டுவந்தார்கள்.

அதேவேளை, சண்டைகளின் போது எதிரியிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களின் உண்மையான விபரங்களை அவர்கள் வெளியிடுவதில்லை. இதனால், புலிகளிடம் உள்ள ஆயுதங்கள் தொடர்பான கணிப்பீடுகளில் றோ அதிகாரிகளுக்கு பலத்த தடுமாற்றம் இருந்துவந்தது.

“டெலோ” அமைப்பின் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களின் போதும், பெருமளவு ஆயுதங்களை புலிகள் கைப்பற்றி இருந்தார்கள். இவ்வாறு “டெலோ” அமைப்பிடம் இருந்து புலிகள் கைப்பற்றிய ஆயுதங்களின் தொகையையும் ”றோ” அதிகாரிகளினால் சரியாக கணக்கிட முடியவில்லை.

இதனால்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த போதிலும், புலிகளிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களின் விபரத்தை இந்தியப்படை அதிகாரிகளால் சரியாகக் கணிப்பிட முடியாமல் போயிருந்தது.றோ அதிகாரிகள் புலிகளிடம் இருப்பதாக வெளியிட்ட ஆயுதங்களின் தொகையுடன் ஒப்பிடும்போது, புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களின் தொகை ஓரளவிற்கு பொருந்தவே செய்தன.

புலிகள் கட்டம்கட்டமாக மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்புக்களின் பின்னர், புலிகளிடம் ஒரு சிறிய தொகை ஆயுதங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக இந்தியப்படை அதிகாரிகள் கணித்திருந்தார்கள்.

பதுக்கப்பட்ட ஆயுதங்கள்?

1987ம் ஆண்டு செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் இந்தியப்படைகளின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினட் ஜெணரல் திபீந்தர் சிங்கிற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய அறிக்கை ஒன்று கிடைத்தது. அந்த அறிக்கையில், யாழ் குடாவில் திடீரென்று பெரும் எண்ணிக்கையிலான “பொலித்தீன்” பைகளும், பெருமளவிலான “கிறீஸ்” உம் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் தங்களிடம் உள்ள பெருமளவிலான ஆயுதங்களை நிலத்தின் அடியில் புதைத்து வைப்பதற்காகவே, “கிறீஸ்” மற்றும் பொலித்தீன்களை பெருமளவு கொள்வனவு செய்து வருவதாக புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்ட அந்த அறிக்கையில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் பற்றி, புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான அடுத்த சந்திப்பின்போது திபீந்தர் சிங் தமது சந்தேகத்தை தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த பிரபாகரன், “புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்தில் தமிழ் ஈழத்தில் இயங்கிவரும் மாற்றுக் குழுக்களின் கைங்காரியம்” என்று அதனைக் குறிப்பிட்டார்.

ஆயுத இறக்குமதி:

அடுத்த வாரமும் அந்த இந்தியப்படை உயரதிகாரிக்கு மற்றொரு புலனாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றது. புலிகள் சிங்கப்பூரில் இருந்து பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

700 துப்பாக்கிகளும், பெருமளவு வெடி பொருட்களும் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்டு, “இல்லனா” என்ற கப்பல் மூலம் இந்து சமுத்திரத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிய சிறிய படகுகள் மூலம் தரையிறக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய கடற்படை அந்த கப்பலை கண்டதாகவும், சர்வதேச கடற்பரப்பில் தரித்து நின்ற அந்தக் கப்பலை எதுவும் செய்யமுடியாது போய்விட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் பற்றி புலிகள் தரப்பினரிடம் இந்தியப்படை அதிகாரிகள் விசாரித்த போதும், அந்தக் குற்றச்சாட்டை புலிகள் மறுத்துவிட்டார்கள்.

ஆயினும், புலிகளின் ஆயுதக் கொள்வனவு பற்றிய தகவல்களுடன், “பொலித்தின்” மற்றும் “கிறீஸ்” விற்பனை பற்றிக் கசிந்திருந்த தகவல்களையும் முடிச்சுப்போட்ட இந்தியப்படை அதிகாரிகள் ஒரு முடிவிற்கு வந்திருந்தார்கள்.

அத்தோடு இந்தியப்படை அதிகாரிகளுக்கு ஒரு விடயம் நன்றாகவே புரிந்தது. புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதென்பது தாம் நினைத்தது போன்று அவ்வளவு இலேசான காரியமாக இருக்காது என்பதை இந்தியப்படை உயரதிகாரிகள் முதன்முதலாக உணர ஆரம்பித்தார்கள்.

அடுத்த சில நாட்களில் யாழ்குடாவில் பல காட்சி மாற்றங்கள் அடுத்து அடுத்து இடம்பெற ஆரம்பித்திருந்தன. விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் சில நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

அந்த நகர்வுகளில் சில பகிரங்கமாகவும், பல இரகசியமாகவும் இடம்பெற ஆரம்பித்திருந்தன.

புலிகள் மேற்கொண்ட அந்த நகர்வுகள் பற்றி தொடர்ந்துவரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்..

 

’’அரசியல் இலக்கை அடையத் துணைசெய்கின்ற கருவிகளே ஆயுதங்கள்’’ – வே.பாலக்குமார்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 59) – நிராஜ் டேவிட்
  • by admin
  • April 20, 2013
02_02_07_family_05.jpg
 
 

இந்திய அமைதிகாக்கும் படைகள் தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த போது, ஈழத்தில் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த ஒவ்வொரு தமிழ் அமைப்புக்களும் எப்படியான நிலைப்பாடுகளை எடுத்திருந்தன என்பது பற்றி இத் தொடரில் முன்னர் பார்த்த்திருந்தோம்.

விடுதலைப் புலிகள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டீ.எல்.எப். போன்ற அமைப்புக்கள் முற்றுமுழுதாகவே இந்தியப்படைகளுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள்.

’’புளொட்|’’அமைப்பினரோ ஸ்ரீலங்கா அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, ஸ்ரீலங்காப் படைகளுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில், ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பான ’’ஈரோஸ்’’ அமைப்பு எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருந்தது என்பது பற்றியும் ஆராய்வது இச்சந்தர்ப்பத்தில் அவசியமாகின்றது.

இந்து நாளிதழுக்கு பாலக்குமார் வழங்கிய செவ்வி:

இந்திய அமைதிகாக்கும் படை தொடர்பாகவும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாகவும், ஈரோஸ் அமைப்பு கொண்டிருந்த நிலைப்பாட்டை, அந்த அமைப்பின் புரட்சிகர நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வி.பாலகுமார் அவர்கள், இந்தியாவின் பிரபல இந்து ஆங்கில நாளிதழுக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், தெளிவுபடுத்தியிருந்தார். 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியான அந்தப் பத்திரிகைப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பாலக்குமாரின் பதில்களும்:

கேள்வி: ஆயுத ஒப்படைப்பு பற்றி…

பதில்: முதலில் நான் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்குச் சென்றதை பாராட்டியாகவேண்டும். எங்கள் பகுதிகளில் அமைதியை நிலைநிறுத்த இந்தியப்படைக்கு உதவி புரியுமாறு எங்கள் தோழர்களுக்கு நாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். அமைதியை நோக்கிய இந்தியப்படையின் முயற்சிகளுக்கு எங்கள் தோழர்கள் ஒருபோதும் தடங்கலாக இருக்கமாட்டார்கள் என்பதற்கு

எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியும். இந்திய அமைதிகாக்கும் படையினரிடம் எங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்திய அரசு எமது கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.

கேள்வி: என்ன கஷ்டங்கள்?

பதில்: கடந்த பத்து வருடங்களாகப் போராடிவரும் எமது தோழர்களை திடீரென்று ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு ஒப்புக்கொள்ளச் செய்வது அவ்வளவு சுலபமான வேலையல்ல. எங்கள் தோழர்கள் தங்கள் மனங்களிலும் ஆயுதங்களைத் தரித்திருக்கின்றார்கள். இந்தப் போராட்ட உணர்வே எங்கள் தோழர்களுக்கும், மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு கேடயமாக விளங்குகின்றது.

அதனால்தான் சாதகமான ஒரு சூழல் உருவாகாத இந்த நேரத்தில் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு எமது தோழர்களின் இசைவைப் பெறுவது எளிதான, சுலபமான வேலையல்ல என்று கூறினேன்.

எதுவாயினும் சரி, நான் இங்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நாம் ஆயுதங்களின் பின்னால் பித்துப்பிடித்துத் திரியவில்லை.

ஆயுதங்கள் என்பதற்காகவே அவற்றை நாம் ஏந்தியிருக்கவும் இல்லை. எங்களின் சக்தி ஆயுதங்களுக்குள் மாத்திரமே அடங்கியிருக்கவில்லை. அதாவது எங்களுக்கு ஆயுதங்கள் வெறும் அதிகாரச் சின்னமல்ல.

உண்மையைச் சொல்வதானால், எங்களின் மகத்தான அரசியல் இலக்கை அடையத் துணைசெய்கின்ற கருவிகளே ஆயுதங்கள்.

கேள்வி: இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஸ்ரீலங்காப் பாராளுமன்றம் அங்கீகரிக்கவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதனால் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு உரிய கால அவகாசம் தேவை. ஒப்பந்தத்தை ஸ்ரீலங்காப் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டதற்கான நம்பிக்கையை எங்கள் தோழர்களிடம் ஏற்படுத்திய பின்னரே, ஆயுதங்களைக் கைவிட இயலும். ஆனால், எது எப்படியாயினும், இந்திய அமைதிகாக்கும் படை சென்றிருக்கும் இச்சூழ்நிலை பற்றி எங்கள் தோழர்களோடு விவாதித்து வருகின்றோம். விரைவில் ஒரு முடிவைக் காண்போம் என்று நம்புகின்றோம்.

கேள்வி: இந்த ஒப்பந்தம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றதா? அல்லது வேதனையைத் தருகின்றதா?

பதில்: நாங்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கவில்லை. அதாவது இந்த ஒப்பந்தம் எங்களுக்கு மனநிறைவைத் தருவதாக இல்லை. ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமூச்சாக எதிர்க்கவும் இல்லை.

எனினும் இந்த ஒப்பந்தம் வெளிநாட்டுச் சக்திகளுக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இழிந்த கைக்கூலிகளுக்கு, குறிப்பாக மனிதாபிமானத்தின் முதல் எதிரியும், எண்ணற்ற பலஸ்தீனப் போராளிகளைப் படுகொலை செய்ததுமான  இஸ்ரேல் மொசாட் இற்கு, இலங்கையை விட்டு வெளியேற வழி வகுத்திருக்கின்றது. மேலும் இந்த ஒப்பந்தம், இந்துமகா சமுத்திரத்தின் மீதான அமெரிக்காவின் நாசகாரச் செயல்முறைகளை தடுத்துள்ளது. இத்திட்டங்களை நிறைவேற்றுவதால் ஒப்பந்தத்தை இந்த நோக்கில் நாங்கள் வரவேற்கவே செய்கின்றோம்.

அதேவேளை, நாங்கள்  இந்த ஒப்பந்தத்தை ஏன் முழுமனதுடன் வரவேற்கவில்லை என்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. 1975 இல் நிறுவப்பட்ட ஈழப் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) மலையகத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் தனது அடிப்படைக் கொள்கைத் திட்டமாகக் கொண்டிருக்கின்றது. தமிழ் தேசிய இனத்தில் மலையக மக்களே ஜீவனான, இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றார்கள்.

தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு தீர்வும், அல்லது எந்தவொரு ஒப்பந்தமும் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ஒப்பந்தம் அவ்வாறு இல்லை. ஆதலால் அரசியல் ரீதியிலான பலவகைப் போராட்டங்களில் தொடர்ந்து நாம் ஈடுபடுவதாக கூறியிருக்கின்றோம். ஸ்ரீலங்கா அரசு எங்களைப் போராடவிடாமல் தடுத்தால் நிச்சயம் நாங்கள் வேறு பல போராட்ட வடிவங்களை கைக்கொள்ளுவோம்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்போவதாய்க் கூறியிருப்பதை நாங்கள் எதிர்க்கவே வேண்டியிருக்கின்றது. இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறையை எண்ணி நாங்கள் வருந்தவில்லை. மாறாக கடந்த 40 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளதை எண்ணியே பெரிதும் வருந்துகின்றோம். 1986 டிசம்பர் 19இல் அறிவிக்கப்பட்ட புதுத் தீர்மானங்கள் விவாதத்திற்குரிய பல கேள்விகளை எழுப்பின.

அந்தத் தீர்மானத்தின் ஒரு கூறு, கிழக்கு மாகாணத்தில் இருந்து அம்பாறை தேர்தல் தொகுதியை விலக்கி வைத்ததாய் அறிவித்தது. ஆனால் இன்றோ அவர்கள் அம்பாறையை கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப் போகின்றார்களாம். இந்த நேரத்தில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறை குறித்து எங்களது கவலை, அவர்கள் சிங்களப் பெரும்பாண்மையினரைக் கொண்டு இந்த மாகாணங்களின் கூட்டிணைவிற்கு எதிராக வாக்களிக்கச் செய்துவிடுவார்கள் என்பதே. கிழக்கு மாகாணத்தில் இனவாத ஸ்ரீலங்கா அரசின் உதவியோடு, நிகழ்ந்த சிங்களக் குடியேற்றத்தை இந்தக் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முறை, சட்டப் பொருத்தமுடைய செய்கையாக மாற்றிவிடுமோ என்று அஞ்சுகின்றோம். ஆகவே இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இந்தியாவிற்கு முடிந்த அளவு நாங்கள் துணை புரிய முயற்சிப்போம்.

இவ்வாறு, ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலக்குமார், இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.

ஈரோஸ் நடாத்திய ஹர்த்தால்:

இலங்கை இந்திய ஒப்பந்த விடயத்தில் ஈரோஸ் எடுத்திருந்த நிலைப்பாடானது, புலிகளுக்கு சார்பான ஒரு நிலைப்பாடாகவே ஸ்ரீலங்கா அரசிற்கு தோன்றியது. அத்தோடு, மலையகத் தமிழர்கள் தொடர்பாக ஈரோஸ் கொண்டிருந்த நிலைப்பாடும், ஸ்ரீலங்காவில் மத்திய மாகாணத்தில் மற்றொரு பிரச்சனையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தையும் சிங்கள அரசுக்கு ஏற்படுத்தியிருந்தது. இதனால் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு தனது படையினரை ஏவிவிட்டது.

ஒரு நாள் திடீரென்று சில ஈரோஸ் உறுப்பினர்கள் காணாமல் போயிருந்தார்கள். ஸ்ரீலங்காப் படைகளே தமது அமைப்பின் உறுப்பினரைக் கடத்திக் கொலை செய்துவிட்டதாக ஈரோஸ் குற்றம் சுமத்தியது.

இந்தச் சம்பவத்தை கண்டித்து 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி, பூரண ஹர்த்தால் ஒன்றிற்கான அழைப்பையும் அந்த அமைப்பு விடுத்திருந்தது.

இந்தச் சம்பவம் பற்றி, ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் அவர்கள், சென்னையில் இருந்து ஈழ நண்பர் கழகத்தினால்| வெளியிடப்பட்ட நட்புறவுப் பாலம் சஞ்சிகைக்கு வழங்கியிருந்த செவ்வியில், போர் நிறுத்தம் அமுலில் இருந்துவரும் வேளையிலும் ஸ்ரீலங்காப் படைகள் எமது தோழர்கள் மீது தாக்குதல் நடாத்திவருவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதுபோன்ற செய்கைகளின் மூலம், இன்னமும் ஆயுதம் தாங்கிக்கொண்டு முகாமிற்கு வெளியே திரிந்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் திட்டமிட்டு சீர்குலைக்க ஸ்ரீலங்கா இராணுவத்தின் தீய சக்திகள் முயற்சி செய்கின்றன.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடூரத் தன்மை மாறாதிருப்பதும் இச்சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

கொடூரமாகக் கொல்லப்பட்ட எமது போராளிகளின் உடல்களை அழித்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறும் ஸ்ரீலங்கா அரசின் நாடகம், அதன் சுயரூபத்தை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது.

ஸ்ரீலங்கா இராணுவம் முற்றாக எமது பகுதிகளில் இருந்து வெளியேறாதவரை எமக்குப் பூரண அமைதி கிட்டாது என்பதை இச்சம்பவம் துலாம்பரமாக வெளிப்படுத்துகின்றது.’’ என்று பாலக்குமார் தெரிவித்திருந்தார்.

(தொடரும்…)

 

இந்தியா தொடர்பாக புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிப்படுத்திய நிலைப்பாடு! (அவலங்களின் அத்தியாயங்கள்- 60) – நிராஜ் டேவிட்
  • by admin
  • April 20, 2013
14569_520883221262905_1272812803_n.jpg
 
 

இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பான தமிழ் அமைப்புக்களின் உணர்வலைகள் பற்றியும், இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் அமைப்புக்களும் எடுத்திருந்த நிலைப்பாடுகள் பற்றியும், கடந்த சில வாரங்களாகப் பார்த்து வருகின்றோம்.

ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டிருந்த இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலுமாக தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்த விடுதலைப் புலிகள், இந்த ஒப்பந்தத்தினால் ஈழத் தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு ஏற்பட இருந்த அபாயத்தையும் நன்கு உணர்ந்தே இருந்தார்கள். அதனால் இந்திய அரசின் செயல்களை எதிர்க்கும் முடிவுக்கும் வந்திருந்தார்கள்.

திலீபனின் உண்ணாவிரதத்தின் மூலம், அகிம்சை வழியில் தமது எதிர்ப்புக்களை இந்தியாவிற்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஆனால், இந்த உண்ணாவிரதத்தின் போதும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இடம்பெற்ற சில அசம்பாவிதங்களின் போதும் இந்தியா நடந்துகொண்ட விதம், வேறு வழி இல்லாமல் புலிகளை மீண்டும் ஆயுதங்களை நோக்கியே நகரவைத்தன.

இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியை மிக விரிவாக ஆராயும் முன்பதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை உலகிற்கும், குறிப்பாக இந்தியாவிற்கும் வெளிப்படுத்தியிருந்த மற்றொரு சம்பவத்தையும் பார்த்துவிடுவது அவசியம்.

பிரபாகரனின் புரொன்ட்லைன் சஞ்சிகைப் பேட்டி:

இந்தியாவில் இருந்து வெளியாகும் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு பிரபாகரன் அவர்கள் செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் செவ்வியின் போது, ஒப்பந்தம் பற்றிய புலிகளின் நிலைப்பாட்டையும், ஒப்பந்தம் தொடர்பான புலிகள் மேற்கொள்ள இருந்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும், பிரபாகரன் அவர்கள் மிகவும் சூட்சுமமாக தெளிவுபடுத்தியிருந்தார்.

ஒப்பந்தம் தொடர்பாக எதிர்காலத்தில் புலிகள் மேற்கொள்ள இருந்த நடவடிக்கைகளின் எதிர்வுகூறலாகவும் இந்தச் செவ்வி அமைந்திருந்தது.

அந்தப் பேட்டியின் சாராம்சம் இதுதான்:

கேள்வி: இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: இந்த ஒப்பந்தம் இந்திய அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு உடன்பாடு. இது பற்றி எமது மக்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தில் சர்வஜன வாக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமானால், கிழக்கு மாகான மக்கள் மத்தியில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தவேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண பெரும்பாண்மையினால் இந்த இணைப்பு தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்குகிழக்கு மாகாணங்கள் அடங்கிய நிலப்பரப்பானது எமது தாயகப் பூமி. இதில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.்

1983 இல் வடக்குகிழக்கில் ஒரு சில இராணுவ முகாம்களே இருந்தன. ஆனால் தற்பொழுது 200 இற்கும் அதிகமான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பகுதிகளில் உள்ள சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாக்கும் நோக்குடன்தான் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த இராணுவ முகாம்களை அகற்றாமல் சிங்களக் குடியேற்றங்களை அகற்றமுடியாது என்பதுடன், இந்த இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பாகவோ அல்லது இந்தச் சிங்களக் குடியேற்றங்களை அகற்றுவது தொடர்பாகவோ, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இது, இந்த ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற மிகப்பெரிய குறைபாடு.

தமிழ்ப் பகுதிகளை ஊடுருவி உள்ள ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகள் தமிழ் மக்கள் மீது புரிந்து வரும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவே இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், தமிழ் பிரதேசங்களில் சிங்களப் படைகள் நிலைகொண்டுள்ள இடங்களுக்கு இந்தியப்படைகள் செல்லவில்லை. இந்தியப்படையணிகள் பெரும்பாலும் யாழ்பாணக் குடாநாட்டுக்குள்ளேயே முகாமிட்டு நிலைகொண்டுள்ளன. இயக்கச்சி, பளை, கொடிகாமம், தாளையடி, பண்டத்தரிப்பு, காங்கேசன்துறை என்று இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணக் குடாநாட்டினுள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார்கள்.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் 200 இற்கும் அதிகமான சிங்கள இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும் என்ற எமது கோரிக்கைகளுக்கு இந்திய அரசு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்துவரும் யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயே இந்திய இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் எமது மக்கள் மத்தியில் அச்சமும், சந்தேகமும் தோன்றியுள்ளது.

தமிழர் தேசியப் பிரச்சனையில் இரண்டு அடிப்படையான அம்சங்கள் உள்ளன. ஒன்று தமிழர் தாயகம். அதாவது வடக்கு கிழக்கு இணைந்ததும், பூகோள ரீதியாக முழுமையுடையதும், பிரிக்கமுடியாததுமான தமிழரின் தாயகப் பூமி. இரண்டாவது, தமிழரின் நில உரிமைப்பாடு. இந்த இரண்டு அடிப்படையான பிரச்சனைகளையும் இந்திய-இலங்கை உடன்படிக்கை தீர்த்துவைக்கத் தவறிவிட்டது என்றே கூறவேண்டும்.

ஸ்ரீலங்கா இராணுவம் வெளியேறவேண்டும்:

கேள்வி: இந்தியா பற்றியும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றியும் உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில்: இந்திய அரசு தனது சொந்த தேசிய நலனை மட்டுமே கருத்திற் கொண்டு அவசரஅவசரமாக இந்த ஒப்பந்தத்தை செய்திருக்கின்றது. நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டுவரும் ஈழத்தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், பிரச்சனைகளையும் இந்தியா கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

கேள்வி: இது பற்றி மேலும் விளக்க முடியுமா?

பதில்: இன்று முல்லைத்தீவில் தமிழ் மக்கள் அகதிகளாக வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றார்கள். தமிழ்ப் பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்தி வருகின்றார்கள். எமது மக்களின் பிரச்சனைகள் எதுவும் இதுவரை தீர்க்கப்பட்டதாக இல்லை. இதற்கிடையில் நாங்கள் எமது ஆயுதங்களைக் கையளிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். மக்களின் பிரச்சனைகள் முதலில் தீர்க்கப்படவேண்டும்.

அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளச் சென்று குடியமர வேண்டுமானால், அப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஸ்ரீலங்கா படைகளின் இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும். ஆனால், சிங்கள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு இந்திய இராணுவம் தயாரில்லை போன்றே தெரிகின்றது. ஆகவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக இந்தியா எம்முடன் பேச்சுக்களை நடாத்தியிருந்தால் சிங்கள இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் இருந்து அகற்றப்படவேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருப்போம். ஆனால் அப்படியான பேச்சுக்கள் எதையும் இந்தியா எம்முடன் மேற்கொள்ளவில்லை.

கேள்வி: ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி, சுதுமலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நீங்கள் உரை நிகழ்த்தும்போது, ராஜீவ் காந்தியுடன் மனம் விட்டு பேசியதாக தெரிவித்ததுடன், அப்போது அவர் உங்களிடம் சில வாக்குறுதிகளை தந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். எப்படியான வாக்குறுதிகளை ராஜீவ் காந்தி உங்களிடம் தந்திருந்தார்?

பதில்: வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்ளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ராஜீவ் காந்தி எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லமுடியாத நிலைதான் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டிருக்கின்ற போதிலும், தமிழ் மக்கள்  அங்குள்ள பல பிரதேசங்களுக்கு செல்லமுடியாத நிலைதான் உள்ளது. சிங்கள இராணுவத்தினர், சிங்கள ஊர்காவல் படையினர், சிங்களக் குடியேற்றவாசிகள் ஆகியோரின் கடும் எதிர்ப்புக்கள் காரணமாக தமிழ் மக்கள் தமது சொந்தக் கிராமங்களுக்கு திரும்ப முடியாதிருக்கின்றது. தனியார் வீடுகள், பாடசாலைகள், பொதுக்; கட்டிடங்கள், போன்ற இடங்களில் எல்லாம் சிங்கள இராணுவம் நிலைகொண்டுள்ள நிலையில், மக்கள் எவ்வாறு அங்கு மீளக் குடியேறுவது?

கேள்வி: கிழக்கில் விடுதலைப் புலிகள் பலம் வாய்ந்த அமைப்பாகச் செயற்பட முடிகின்றதா?

பதில்: கிழக்கில் எமது அமைப்பு பலம்வாய்ந்த ஒரு அமைப்பாகச் செயற்பட முடிகின்றது. திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களில் நாம் இணக்கவேலைகளை விரிவாக்கி வருகின்றோம். இப்பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேறியுள்ள இடங்களில்கூட எமது உறுப்பினர்கள் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். மூதூரில் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றிவைத்த பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த இந்திய இராணுவத்தினரும், அரசாங்க அதிபரும் புலிக்கொடியை இறக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்கள். இருந்த போதிலும் அதற்கு கட்டுப்பட பொதுமக்கள் மறுப்புத் தெரிவித்ததுடன், தமது நடவடிக்கைகளில் உறுதியாக இருந்திருக்கின்றார்கள். கிழக்கிலங்கை மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்களாக, எமது அமைப்பிற்கு அனைத்து ஆதரவினையும் வழங்கி வருகின்றார்கள்.

இவ்வாறு, பிரபாகரன் அவர்கள் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

15.09.1987 அன்று இந்திய அரசிற்கும், இந்தியப் படைகளுக்கும் எதிராக விடுதலைப் புலிகள் தமது முதலாவது யுத்தத்தை ஆரம்பித்தார்கள். அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கொண்டு புலிகள் மேற்கொண்ட அந்த யுத்தம் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மீது புலிகள் தொடுத்த முதலாவது யுத்தம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 61) – நிராஜ் டேவிட்
  • by admin
  • April 20, 2013
02.jpg
 
 

இந்திய அரசிற்கும், இந்தியப் படைகளுக்கும் எதிராக விடுதலைப் புலிகள் தமது முதலாவது யுத்தத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த யுத்தம் போராயுதங்களைக் கொண்டு நடாத்தப்பட்ட ஒரு யுத்தமல்ல.

முழுக்க முழுக்க அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கொண்டே புலிகள் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

எந்த அகிம்சை ஆயுதத்தை தமது கைகளில் எடுத்து மகாத்மா காந்தியும், காங்கிரஸ{ம் வெள்ளையர்களுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கண்டிருந்தார்களோ, எந்த சாத்வீகப் போராட்டம் என்கின்ற தமது ஆயுதம் பற்றி இந்தியர்கள் உலக மட்டத்தில் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ, அதே அகிம்சை ஆயுதத்தின் மூலமே இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று விடுதலைப் புலிகள் தீர்மானித்தார்கள்.

இந்தியப்படை வெயியேறவேண்டும்

இந்தியப் படைகள் ஸ்ரீலங்காப் படைகளுக்கு சார்பாக நடந்துகொள்வதாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த சந்தேகங்களின் வெளிப்பாடு, பலவிதமான போராட்டங்கள் வாயிலாக வெளிக்காண்பிக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில், இந்தியப் படை முகாம்களுக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களையும், அமைதிப் பேரணிகளையும் மேற்கொண்டு, இந்தியப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

யாழ்ப்பாண கோட்டையினுள் உள்ள இந்தியப்படை முகாமுக்கு முன்பாக, இந்தியப் படையினருக்கு எதிரான ஒரு மறியல் போராட்டம் நடைபெற்றது. யாழ் பொது அமைப்புக்களும், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினரும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த மறியல் போராட்டத்தின் இறுதியில், விடுதலைப் புலிகளின் யாழ் அரசியல் பொறுப்பாளர் திலீபன் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், இந்தியாவிற்கு எதிரான புலிகளின் குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அவர் தனது உரையில்,

இந்த யாழ் கோட்டையிலே சில காலங்களின் முன்பதாக தமிழனின் கொடி பறந்தது. அந்தக் கொடியை போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர். போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும், ஒல்லாந்தரிடம் இருந்து ஆங்கிலேயரும் பறித்தெடுத்தனர். ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களவர் கைப்பற்றிய இந்த கொடியை, இன்று இந்தியர்கள் கைப்பற்றியுள்ளார்கள். இந்தக் கோட்டையில் தமிழ்க் கொடி, புலிக்கொடி பறக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

எங்கள் விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியப்படையும் வந்து சேர்ந்தது.

எமது தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். இந்தக் கோட்டையிலே தமிழர்களின் சுதந்திரக் கொடி, புலிக்கொடி பறக்கவேண்டும் என்று திலீபன் உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.

இந்தியப்படை தமிழ் மண்ணை விட்டு வெளியேறவேண்டும் என்ற புலிகளின் நிலைப்பாட்டை, புலிகள் பகிரங்கமாக அறிவித்த முதலாவது சந்தர்ப்பம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் இந்தியத் தூதரிடம் விடுத்த கோரிக்கைகள்:

13.09.1987 ம் திகதி, விடுதலைப் புலிகள் முக்கியமான ஐந்து கோரிக்கைகளை, இந்தியத் தூதருக்கு அனுப்பி வைத்தார்கள்.

(அ) தமிழ் மண்ணில் இருந்து சிங்கள இராணுவம் விலக்கிக் கொள்ள வேண்டும்.

(ஆ) மணலாற்றில் முடுக்கி விடப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தடுத்து  நிறுத்தப்பட வேண்டும்.

(இ) வடகிழக்கில் இடைக்கால ஆட்சி அமையுமட்டும் சகல மீளமைப்பு வேலைகள் நிறுத்தப் படவேண்டும்.

(ஈ) தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களவர்களைக் கொண்ட காவல்துறை திறக்கப்படுவது நிறுத்தப் படவேண்டும்.

(உ)அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இந்தியத் தூதுவருக்கு மேற்படி கோரிக்கைகளை முன்வைத்த விடுதலைப் புலிகள், 24 மணி நேரத்திற்குள் இந்தியா தனது பதிலை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்கள். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்தியா தயங்கினால், சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தாம் மேற்கொள்ளப்போவதாகவும் புலிகள் அறிவித்திருந்தார்கள்.

புலிகள் விடயத்தில் எப்பொழுதுமே ஒருவித மேலாதிக்க மனப்பான்மையுடன் நடந்துகொண்டுவந்த இந்தியத் தூதுவர் தீக்ஷித், புலிகள் தன்னை மிரட்ட எத்தனிப்பதாக நினைத்தார். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியத் துருப்புகள் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த நிலையில் புலிகள் வீணான மிரட்டல்களை விடுத்து வருவதாகவே அவர் நினைத்தார். புலிகளால் பெரிதாக எதுவும் செய்துவிடமுடியாது என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால், புலிகள் விடுத்திருந்த கோரிக்கைகள் பற்றி அவர் அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் புலிகள் தாம் அறிவித்தபடி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்கள்.

விடுதலைப் புலிகளின் யாழ்பாண அரசியல் பொறுப்பாளர் திலீபன், சாகும் வரையிலான தனது உண்ணாவிரதத்தை 15.07.1987ம் திகதி காலை 9.45 இற்கு ஆரம்பித்தார்.

யாழ் தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டு மையம் என்று கருதப்படுகின்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்பு, திலீபனின் வரலாற்றுப் புகழ்மிக்க அந்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.

திலீபனின் ஒப்பற்ற தியாகம்:

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இந்தியாவின் விருந்தாளியாக புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், அங்கு புதுடில்லியில் அவர் சிறை வைக்கப்பட்ட போதும், திலீபனும் உடனிருந்தார். புதுடில்லியில் புலிகளின் தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானகரமான சம்பங்கள் பற்றிய அனுபவத்தை திலீபனும் பெற்றிருந்தார்.

அங்கு இந்தியத் தலைவர் ராஜீவ் காந்திக்கும், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த எழுதப்படாத ஒப்பந்தங்கள் போன்றனவற்றின் விபரங்கள் அனைத்துமே திலீபனுக்கு தெரிந்திருந்தது.

அதனால் நடைமுறையில் புலிகளை ஏமாற்றும் விதமாக இந்தியா நடக்க ஆரம்பித்தபோது, திலீபன் மிகவும் கோபம் அடைந்தார்.

இந்தியாவின் உண்மையான முகத்தை தமிழ் மக்களுக்கும், உலகிற்கும் தோலுரித்துக் காட்டவேண்டும் என்று அவர் நினைத்தார். அந்த நோக்கத்திற்காக தன்னை மாய்த்துக்கொள்ளவும் அவர் துணிந்தார்.

உலகின் மிகப் பெரும் மக்களாட்சி நடைபெறும் நாடு என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் இந்தியாவிடம் நீதிகேட்டு போராட தனி மனிதனாக புறப்பட்ட திலீபன், அகிம்சையையே தனது ஆயுதமாகத் தரித்துக்கொண்டதானது, இந்தியாவிற்கு, சர்வதேச அரங்கில் மிகப் பெரிய தலைகுணிவை ஏற்படுத்தியதாக அமைந்தது. அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியா, திலீபன் என்ற தமிழ் இளைஞனின் அகிம்சைப் போராட்டத்தை தனது ஆணவத்தால் சிதைத்துவிட்டதை தனது சரித்திரத்தில் வெட்கத்துடன் பதித்துக்கொண்டது.

இந்தியா என்ற மாயையில் அதுவரை சிக்கிக்கிடந்த பல ஈழத் தமிழர்களுக்கு, இந்தியாவின் உண்மையான நோக்கத்தையும், நிலைப்பாட்டையும் வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பமாக திலீபனின் இந்த உண்ணாவிரதப் போராட்டமும். அவரது ~தற்கொடையும்| அமைந்திருந்தது.

தமிழ் இனத்தின் ஆண்மாவை, திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொட்டிருந்தது. அந்த இளைஞனின் ஒப்பற்ற தியாகம், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தெளிவையும், உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது.

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமானது, ஒரு பொது நலனுக்காக தனியொருவன் தன்னை உதிர்த்த ஒப்பற்ற தியாகம். தனது இனம் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் வாழவேண்டும் என்பதற்காக, வீரம் மிக்க ஒரு இளைஞன் தனக்குத் தானே மரணதண்டனை வழங்கும் ஒரு உயர் கொடை@ தன்னைத்தானே சிலுவையில் அறைந்த ஒப்பற்ற அர்ப்பணிப்பு.

திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தில் இடம்பெற்ற முக்கியமான சில விடங்களை அடுத்தவாரம் முதல் சற்று விரிவாகப் பார்ப்போம்.

http://www.youtube.com/watch?v=H1xS9SQFnUI

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போராளி மேற்கொண்ட வரலாற்றுப் பயணம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 62) – நிராஜ் டேவிட்
  • by admin
  • April 24, 2013

033.jpg

புலிகளின் வரலாற்றில் இது இரண்டாவது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் என்று கூறலாம்.

முதலாவது உண்ணாவிரதப் போராட்டம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால், 1986 நவம்பர் நடுப்பகுதியில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டது.

1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி, புலிகளிடம் இருந்து ஆயுதங்கள், தொலைத்தொடர்பு கருவிகளை இந்திய அரசு கைப்பற்றியிருந்ததைத் தொடர்ந்து, அவற்றை மீள ஒப்படைக்கவேண்டும் என்று கோரி, புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், நீர் கூட அருந்தாமல் சாகும் வரையிலான உண்ணாவிரத்தை மேற்கொண்டார். புலிகளின், குறிப்பாக பிரபாகரன் அவர்களின் தீவிர அனுதாபியாக இருந்த தமிழக முதலமைச்சர் ஏம்.ஜீ.ஆர். அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால், இந்திய அரசு புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பொருட்களை மீள ஒப்படைக்க முன்வந்தது. அதனைத் தொடர்ந்து பிரபாகரன் அவர்களின் உண்ணாவிரதம் முடிவிற்கு வந்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் திலீபன் மேற்கொண்ட உண்ணாவிரதம், விடுதலைப் புலிகளின் வரலாற்றில் இரண்டாவது உண்ணாவிரதம். திலீபனும் தனது தலைவன் வழியில், நீர் கூட அருந்தாமலேயே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.

புலிகளின் வரலாற்றில் இடம்பெற்ற இரண்டு உண்ணா விரதங்களுமே, இந்தியாவிற்கு எதிராக, இந்தியாவின் செயலைக் கண்டித்தே நடைபெற்றிருந்தன. இந்தியாவைப் பொறுத்தவரையில், உண்ணாவிரதம் என்ற அகிம்சை வழிப் போராட்டம் ஒரு பாரிய உணர்வினை வெளிக்காண்பிக்கும் ஒரு விடயமாகவே இருந்து வந்தது. இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி முதல், இந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனைவருமே உண்ணாவிரப் போராட்டங்கள் மூலமே பல விடயங்களைச் சாதித்திருந்த வரலாறு இந்தியாவின் சரித்திரத்தில் நிறைவே காணப்படுகின்றன. சாதாரணமாகவே இது போன்ற உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு, அது நியாயமாக இருக்கும் பட்சத்தில், செவிசாய்க்கும் வழக்கம் எந்தவொரு இந்திய அரசாங்கத்திற்கும் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. தனது தமிழ் இனத்தின் நியாயமான கோரிக்கைக்கு இந்தியா நிச்சயம் செவிசாய்த்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் திலீபனும் இந்தியாவின் போக்கிற்கு எதிரான தனது போராட்டத்திற்கு ஆயுதமாக உண்ணா விரதத்தை தேர்ந்தெடுத்திருந்தான்.

திலீபனின் தியாகப் பயணம்:

15.09.1987 காலை 9.45 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஷகந்தன் கருணை| என்னும் இல்லத்தில் இருந்து வோக்கி டோக்கி சகிதமாக திலீபன் புறப்பட்டார். வேனில் ஏறுவதற்கு முன்னதாக, வோக்கி மூலம் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சிறிது நேரம் பேசி விட்டே, தனது வரலாற்றுப் பயணத்தை ஆரம்பித்தார். அது வரலாற்றில் என்றுமே மறைந்துவிடாத ஒரு பயணமாக அமையப்போகின்றது என்பதை திலீபன் அப்பொழுது அறிந்திருந்தாரோ தெரியவில்லை. பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பெருமளவில் கூடி நின்று திலீபனை வழியனுப்பி வைத்தார்கள். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த உண்ணா விரத மேடையில், ஏற்கனவே சோகம் குடிகொண்டிருந்தது. தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு இளைஞன், இந்த மேடையில் தன்னை மாய்த்துக்கொள்ள முன்வரும் செய்தி ஏற்கனவே அங்கு திரண்டிருந்த மக்களின் நெஞ்சங்களை கனக்க வைத்திருந்தது. ஷவானில|; வந்திறங்கிய திலீபனை, புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா கட்டியணைத்து வரவேற்றார்.

கண்ணீருடன் ஒரு தாய் திலீபனின் நெற்றியில் வீரத் திலகமிட்டார்.

காலை 9.55 இற்கு உண்ணா விரத மேடையில் வந்தமர்ந்த திலீபன், விடுதலைப் புலிகளின் சரித்திரத்தில் என்றுமே மறையாத ஒரு உன்னத பயணத்தை ஆரம்பித்தான்.

திலீபனின் உண்ணாவிரத மேடைக்கு அருகில் மற்றொரு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக, இரண்டாவது மேடையில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

கவிஞர் காசி ஆனந்தன், நடேசன் போன்ற முக்கியஸ்தர்கள், எதற்காக திலீபன் உண்ணா விரதம் இருக்கின்றார் என்றும், புலிகளின் நிலைப்பாடு பற்றியும் விளக்கமளித்தார்கள். திலீபனின் உண்ணா விரதத்திற்கு துணையாக பலர் அடையாள உண்ணா விரதம் மேற்கொள்ள முன்வத்தார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், தாய்மார்கள், பொதுமக்கள் என்று பலர், சுழற்சி முறையில் உண்ணா விரதத்தை மேற்கொண்டார்கள்.

திலீபனின் உண்ணாவிரத மேடையைச் சூழ பெரும் திரளான ஜனக்கூட்டம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தார்கள். யாழ்பாணத்தின் குக்கிராமங்கள், மூலை முடுக்குக்களில் இருந்தெல்லாம், இந்த வீர இளைஞனின் தியாகத்தை தரிசிக்க மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்தபடி இருந்தார்கள். பாடைசாலை மாணவர்கள் அணிஅணியாக அங்கு திரண்டு வந்தார்கள். உணர்ச்சிகரமான ஒரு சூழ்நிலை அங்கு உருவாக ஆரம்பித்திருந்தது.

இந்த இளைஞனின் முடிவிற்கு இந்தியாதான் காரணம் என்ற உண்மை அங்கு திரண்டிருந்த மக்களின் மனங்களில் படிப்படியாக உதிக்க ஆரம்பித்திருந்தது. இந்தியாவிற்கு எதிரான உணர்வலை, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உள்ளங்களில் ஏற்பட ஆரம்பித்தது.

அங்கு திரண்டிருந்த தமிழ் மக்களது உணர்வுகளின் வெளிப்பாடுகள்,

இந்தியாவிற்கு எதிரான முணுமுணுப்புக்களாகவும், பின்னர் இந்தியப்படைகளுக்கு எதிரான கோஷங்களாகவும், மாற்றமடைய ஆரம்பித்தன. இந்தியப் படைகளுக்கு எதிரானதும், இந்தியாவின் போக்கிற்கு எதிரானதுமான ஒரு இறுக்கமான நிலை படிப்படியாக யாழ் மக்களின் மனங்களில் உருவெடுக்க ஆரம்பித்தன.

உண்ணாவிரதம் ஆரம்பமான தினம் இரவு 11 மணியளவில் பிரபாகரன் அவர்கள் திலீபனை பார்வையிட வந்திருந்தார். திலீபனுடன் பல விடயங்கள் பற்றி உரையாடிய பிரபாகரன், திலீபனின் தலையை வருடிவிட்டுச் சென்றார்.

திலீபனின் உரை:

உண்ணாவிரதம் ஆரம்பமாகி இரண்டாவது நாள், திலீபன் உரை நிகழ்த்தினார்.

ஒரு துளி நீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதம் இருந்தால், சிறுநீர் கழிக்க முடியாமல் அவர் பெரும் சிரமப்பட்டார். அதிக உடல் உபாதை காரணமாக மிகவும் கஷ்டங்களை அனுபவித்த அவரால் நின்று கொண்டு உரை நிகழ்த்த முடியவில்லை. அதனால் இருந்த நிலையிலேயே அவர் உரையாற்றினார்.

ஷஷஎனது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்றுகொண்டு பேச முடியாத நிலையில் நான் இருப்பதால், இருந்துகொண்டே பேசுகின்றேன்.

நாளை நான் சுய நினைவுடன் இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேசவேண்டும் என்று விரும்புகின்றேன்.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். எமது இலட்சியப் போராட்டத்தில் இன்று வரையில் 650 போராளிகளை நாங்கள் இழந்துள்ளோம்.

மில்லர் இறுதியாகப் போகும் போது அவருடன் நான் கூட இருந்தேன். அவர் என்னிடம் ஒரு வரி கூறினார்: ஷநான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது, மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன். எமது மக்கள் விடுதலை அடைவதை எனது கண்களால் காணமுடியாது என்பதே எனது ஒரே ஏக்கம்| என்று கூறிவிட்டு, மில்லர் வெடிமருந்து நிறப்பிய லொறியை எடுத்துச் சென்றிருந்தார்.

எமது விடுதலைப் போரில் மரணித்த 650 போராளிகளும், அனேகமாக எனக்குத் தெரிந்துதான் மரணித்தார்கள். அவர்களை நான் மறக்கமாட்டேன்.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க தலைவரின் அனுமதியைக் கேட்டேன். அப்பொழுது தலைவர் கூறிய வார்த்தைகள் எனது நினைவில் உள்ளன. ஷஷதிலீபா, நீ முன்னால் போ. நான் பின்னால் வருகின்றேன்|| என்று அவர் கூறினார்.

இத்தகைய ஒரு தெளிவான தலைவனை, தனது உயிரை சிறிது கூட மதிக்காத ஒரு தலைவனை நீங்கள் பெற்றிருக்கின்றீhகள்.

அந்த மாபெரும் வீரனின் தiலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழர்களின் அடிப்படை உரிமைகளை, தமிழீழத்தைப் பெற்றுத் தரும். அந்த அற்புதக் காட்சியை வானத்தில் இருந்து, அந்த 650 போராளிகளுடன் நானும் பார்த்து மகிழ்வேன்.||

என்று திலீபன் உரையாற்றினார்.

திலீபனின் உரை முடிவடைந்ததும், அங்கு திரண்டிருந்த மக்கள் கண்ணீர் விட்டார்கள். ஓவெனக் கதறி அழுதார்கள்.

தொடர்புபட்ட காணொளி:

 

இந்தியப் படைகளுக்கு எதிராக திரண்டெழுந்த தமிழ் மக்கள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 63) – நிராஜ் டேவிட்

Frame-0014.jpg

மூன்றாவது உண்ணாவிரதப் போராட்டம்:

விடுதலைப் புலிகளின் வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக, இரண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம்பெற்றதாக நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

முதலாவது – புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் வைத்து மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.

இரண்டாவது – திலீபன் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.

புலிகளின் வரலாற்றில் மூன்றாவதாகவும் ஒரு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றிருந்தது.

விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மகேந்திரராஜா மாத்தையா அவர்களே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

1993ம் ஆண்டு மார்ச் மாதத்தில், யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில், விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் மாத்தையாவின் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் இந்தியா ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்தது.

ஆனால் மாத்தையா மேற்கொண்ட அந்த உண்ணாவிரதத்தில் இந்தியாவின் பங்கு வேறுவிதமாகவே இருந்தது.

மிகவும் சுவாரசியமானதும், பரபரப்பானதுமான இந்தச் சம்பவம் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

இப்பொழுது திலீபனின் உண்ணாவிரத மேடைக்குச் செல்லுவோம்.

ஷஷஎன்னை அவமானப் படுத்தவேண்டாம்|| -திலீபன்

திலீபன் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து மூன்றாவது நாள், அவரின் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது. நீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதம் இருந்துவந்ததால், அவரது நாக்கு வரண்டு போயிருந்ததுடன், மாறாட்டமும் மயக்க நிலை கூட அவருக்கு ஏற்பட ஆரம்பித்தது. அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை. வயிற்றினுள் பலவித உபாதைகள் ஏற்பட ஆரம்பித்தன. உடற் சூடு அதிகரிக்க ஆரம்பித்ததுடன், இரத்த அழுத்தம் குறையவும் ஆரம்பித்தது.

சிறிது நீர் அருந்தினால், அவரது உடல்நிலை ஓரளவு தேறிவிடும்; என்று அங்கிருந்தவர்கள் கருதினார்கள்.

இந்தியா எப்படியாவது மனமிரங்கிவிடும், திலீபன் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டுவிடலாம் என்றே அங்கிருந்தவர்கள் கருதினார்கள்.

இந்தியா இன்னும் ஓரிரு தினங்களுக்குள் புலிகளுக்கு சாதகமான தனது முடிவை அறிவித்துவிடும், எனவே அதற்குள் திலீபனின் உடல் நிலை மோசமாக அனுமதிக்கக்கூடாது என்றுதான் அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள்.

இந்தியா, சத்தியத்தின் மீதும், சாத்வீகத்தின் மீதும் மதிப்பு வைத்திருப்பதாக அங்கிருந்த சிலர் அப்பொழுதும் நம்பியதுதான் வேடிக்கை.

திலீபனின் உண்ணாவிரத மேடைக்கு அருகில் உள்ள மேடையில், திலீபனின் உண்ணாவிரதத்திற்கு வலுச்சேர்க்கும்படியாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதங்கள் பலரால் மேற்கொள்ளப்பட்டன. அந்த மேடையில் பல பிரமுகர்கள், உண்ணாவிரதத்திற்கு சார்பாக உரையாற்றியபடி இருந்தார்கள்.

கருணானந்த சிவம் என்ற ஆசிரியர், திலீபனை மிகவும் நேசித்த ஒருவர். திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக மேடையில் அவர் உரை நிகழ்த்தும் போது, திலீபனின் உடல்நிலை மோசமடைந்து செல்வது பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவர் தனது பேச்சின் போது, திலீபனிடம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்.

ஷஷதிலீபன் புலிகளுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் முழுத் தமிழினத்திற்கும் சொந்தமானவர். அப்படிப்பட்ட திலீபன் ஒரு சொட்டு நீராவது அருந்தி தனது உடலைக் காப்பாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமல்ல, இங்கு திரண்டு வந்துள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் வேண்டுகோளும் இதுதான்|| என்று பேசினார்.

அதைக் கேட்ட திலீபனின் முகம் வாடிவிட்டது. ஒலிவாங்கியை தன்னிடம் தருமாறு கேட்ட திலீபன் ஆசிரியர் கருணானந்தம் அவர்களின் வேண்டுகோளுக்கு பதில் வழங்கிப் பேசினார்:

ஷஷஇந்த மேடையில் பேசிய அன்பர் என்னிடம் நீராகாரம் அருந்தும்படி கேட்டுக்கொண்டது, என்னை அவமானப்படுத்துவது போன்று இருக்கின்றது. நான் இந்த மேடையில் நீராகாரம் அருந்தாமல்தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன். இறுதிவரை இந்த முடிவில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையானால், எவரும் என்னை நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்தவேண்டாம். என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால், இறப்பேனே தவிர இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக எனது இலட்சியத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்|| என்று தெரிவித்தார்.

திலீபன் மீது கொண்டிருந்த அளவுக்கதிகமான பாசம் தமது கண்களை மறைத்துவிட்டிருந்ததை, திலீபனை நீர் அருந்தும்படி கோரியவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அதன் பின்னர் எவருமே திலீபனை நீர் அருந்தும்படி வற்புறுத்த முன்வரவில்லை.

கலவரங்களாக வெளிப்பட்ட ஷமக்களின் எழுச்சி|:

திலீபன் என்ற 23 வயது இளைஞனின் இந்த வித்தியாசமான உண்ணாவிரதம் யாழ்ப்பான தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய உணர்வலைகள் ஒரு பாரிய எழுச்சியாகவே மாற ஆரம்பித்திருந்தது. திலீபனின் கோரிக்கைகளுக்கு இந்தியா செவிசாய்க்க தயாரில்லை என்பதான செய்திகள் யாழ் மக்களிடம் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும், அதன் அமைதிப்படையினருக்கும் எதிராக மக்கள் பாரிய உணர்வலைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். ஷபுலிகள் எதனைக் கேட்டுவிட்டார்கள்? பெரிதாக ஒன்றும் அவர்கள் கேட்டுவிடவில்லையே. தமிழ்மக்களின் நலன் சார்ந்த விடயங்களைத்தானே அவர்கள் கேட்டுள்ளார்கள். இதற்காக ஒரு இளைஞனை பலிகொடுக்கும் அளவிற்கு இந்தியாவிற்கு இப்படி ஒரு கல்நெஞ்சு இருப்பது அவசியம்தானா? இந்த சிறு விடயத்தைக் கூட நிறைவேற்ற முடியாத, நிறைவேற்ற விரும்பாத இந்தியாவினால், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பான முக்கிய விடயங்களை எவ்வாறு நிறைவேற்ற முடியும்| என்று மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

விளைவு:

இந்தியப் படையினருக்கு எதிராக மக்கள் தமது உணர்வுகளை பகிரங்கமாகவே வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். இந்தியப் படையினருக்கு எதிராக மக்கள் கோஷமெழுப்பினார்கள். ஊர்வலங்களை நடாத்தினார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்தியப்படையினரை நோக்கி கற்களை வீசவும் செய்தார்கள்.

மன்னார், தலைமன்னார் வீதியில் இருந்த இந்தியப்படை முகாமை நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடாத்தப்பட்டது. மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தியாவிற்கும், இந்தியப்படைகளுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியபடி அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். இந்தியப்படையின் முகாமை அடைந்த ஊர்வலத்தின் மக்கள் கூட்டம் முகாமின் வாயிலை அடைத்தபடி நின்று, கோஷம் எழுப்பியது. திலீபனின் உண்ணாவிரதத்தில் இந்தியா காண்பிக்கும் மௌனத்திற்கு எதிராக தமது கண்டணங்களை வெளிப்படுத்திய பொது மக்கள், இந்தியா தமிழர் பிரதேசங்களை விட்டு வெளியேறவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

முகாமின் வாயிலில் காவல் கடமையில் இருந்த இந்தியப்படை வீரர் ஒருவர் மிகவும் கோபம் அடைந்தவராக தனது துப்பாக்கியை எடுத்து, ஊர்வலத்தை நோக்கி ஒரு சில துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தார். ஊர்வலத்தின் முன்வரிசையில் நின்ற ஒருவர் சுடப்பட்டுவிழ, ஏனையவர்கள் கலைந்து ஓடினார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமுக்குள் நுழைய முற்பட்ட வேளையிலேயே தாம் வேறு வழி இல்லாமல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக இந்தியத் தரப்பால் அந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

முகாமுக்குள் பொதுமக்கள் நுழைய முற்பட்டது ஒருவேளை உண்மையாக இருந்தால் கூட, அவர்களைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை எதனையும் மேற்கொள்ளாது, எச்சரிக்கை வேட்டுக்கள் கூட தீர்க்காது, நேரடியாகவே பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இந்தியப் படைகளின் செயல், பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது.

இதுபோன்ற இந்தியப்படைகளுக்கு எதிரான பொதுமக்களின் கோபம் பல வழிகளிலும் வெளிப்படுத்தப்பட்டன. இந்தியப் படைகளின் வாகனங்கள் வீதிகளில் செல்லமுடியாத அளவிற்கு நிலமை மோசமாக ஆரம்பித்தது. இந்தியப்படைகளுடன் பேசுவதற்கும் பொதுமக்கள் விரும்பவில்லை. இந்தியப் படை அதிகாரிகளுடன் சினேகபூவமான தொடர்புகளை வைத்திருந்த யாழ்வாசிகள் தமது உறவுகளை நிறுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். இந்தியப் படைவீரர்களுக்கு தண்ணீர் வழங்கக் கூட தயக்கம் காண்பித்தார்கள்.

திலீபனின் உண்ணா விரதம் பற்றி ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்த இந்தியப்படை அதிகாரிகள், நிலமையின் விபரீதத்தை படிப்படியாக உணர ஆரம்பித்தார்கள்.

தமிழ் மக்களின் உணர்வுகளை விடுதலைப் புலிகள் இந்தியப்படைகளுக்கு எதிராக மிகவும் புத்திசாலித்தனமாக திருப்பிவிட்டுள்ளதை அவர்கள் உணர ஆரம்பித்தார்கள். நிலமை இந்த அளவிற்கு மோசமாகும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவேளை திலீபன் இறந்துவிட்டால் நிலமை இதைவிட மோசமடையலாம் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

திலீபனின் உண்ணாவிரதத்திற்கு மாற்றீடாக இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியப்படை உயரதிகாரிகள் தமது மேலிடத்திடம் கேட்டிருந்தார்கள். ஆனால், இந்திய அரசின் தலைமையோ, புலிகள் ஷபூச்சாண்டி காண்பிக்கின்றார்கள்| என்றே நினைத்தது.

புலிகளை எப்படியும் சமாளித்துவிட முடியும், இதற்கெல்லாம் பயப்பட்டால் தொடர்ந்தும் புலிகள் இதுபோன்ற மிரட்டல்களை விடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்து வாழாவிருந்துவிட்டார்கள்.

இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான விடயத்தில், திலீபனின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் எப்படியான ஒரு பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்பதை இந்தியாவின் அரசியல் தலைமை அப்பொழுது உணர்ந்திருக்கவில்லை.

தொடரும்…

தொடர்புபட்ட காணொளி:

 

இந்தியப் படைகளுக்கு எதிராக திரண்டெழுந்த தமிழ் மக்கள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 63) – நிராஜ் டேவிட்

Frame-0014.jpg

மூன்றாவது உண்ணாவிரதப் போராட்டம்:

விடுதலைப் புலிகளின் வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக, இரண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம்பெற்றதாக நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

முதலாவது – புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் வைத்து மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.

இரண்டாவது – திலீபன் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.

புலிகளின் வரலாற்றில் மூன்றாவதாகவும் ஒரு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றிருந்தது.

விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மகேந்திரராஜா மாத்தையா அவர்களே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

1993ம் ஆண்டு மார்ச் மாதத்தில், யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில், விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் மாத்தையாவின் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் இந்தியா ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்தது.

ஆனால் மாத்தையா மேற்கொண்ட அந்த உண்ணாவிரதத்தில் இந்தியாவின் பங்கு வேறுவிதமாகவே இருந்தது.

மிகவும் சுவாரசியமானதும், பரபரப்பானதுமான இந்தச் சம்பவம் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

இப்பொழுது திலீபனின் உண்ணாவிரத மேடைக்குச் செல்லுவோம்.

ஷஷஎன்னை அவமானப் படுத்தவேண்டாம்|| -திலீபன்

திலீபன் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து மூன்றாவது நாள், அவரின் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது. நீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதம் இருந்துவந்ததால், அவரது நாக்கு வரண்டு போயிருந்ததுடன், மாறாட்டமும் மயக்க நிலை கூட அவருக்கு ஏற்பட ஆரம்பித்தது. அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை. வயிற்றினுள் பலவித உபாதைகள் ஏற்பட ஆரம்பித்தன. உடற் சூடு அதிகரிக்க ஆரம்பித்ததுடன், இரத்த அழுத்தம் குறையவும் ஆரம்பித்தது.

சிறிது நீர் அருந்தினால், அவரது உடல்நிலை ஓரளவு தேறிவிடும்; என்று அங்கிருந்தவர்கள் கருதினார்கள்.

இந்தியா எப்படியாவது மனமிரங்கிவிடும், திலீபன் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டுவிடலாம் என்றே அங்கிருந்தவர்கள் கருதினார்கள்.

இந்தியா இன்னும் ஓரிரு தினங்களுக்குள் புலிகளுக்கு சாதகமான தனது முடிவை அறிவித்துவிடும், எனவே அதற்குள் திலீபனின் உடல் நிலை மோசமாக அனுமதிக்கக்கூடாது என்றுதான் அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள்.

இந்தியா, சத்தியத்தின் மீதும், சாத்வீகத்தின் மீதும் மதிப்பு வைத்திருப்பதாக அங்கிருந்த சிலர் அப்பொழுதும் நம்பியதுதான் வேடிக்கை.

திலீபனின் உண்ணாவிரத மேடைக்கு அருகில் உள்ள மேடையில், திலீபனின் உண்ணாவிரதத்திற்கு வலுச்சேர்க்கும்படியாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதங்கள் பலரால் மேற்கொள்ளப்பட்டன. அந்த மேடையில் பல பிரமுகர்கள், உண்ணாவிரதத்திற்கு சார்பாக உரையாற்றியபடி இருந்தார்கள்.

கருணானந்த சிவம் என்ற ஆசிரியர், திலீபனை மிகவும் நேசித்த ஒருவர். திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக மேடையில் அவர் உரை நிகழ்த்தும் போது, திலீபனின் உடல்நிலை மோசமடைந்து செல்வது பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவர் தனது பேச்சின் போது, திலீபனிடம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்.

ஷஷதிலீபன் புலிகளுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் முழுத் தமிழினத்திற்கும் சொந்தமானவர். அப்படிப்பட்ட திலீபன் ஒரு சொட்டு நீராவது அருந்தி தனது உடலைக் காப்பாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமல்ல, இங்கு திரண்டு வந்துள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் வேண்டுகோளும் இதுதான்|| என்று பேசினார்.

அதைக் கேட்ட திலீபனின் முகம் வாடிவிட்டது. ஒலிவாங்கியை தன்னிடம் தருமாறு கேட்ட திலீபன் ஆசிரியர் கருணானந்தம் அவர்களின் வேண்டுகோளுக்கு பதில் வழங்கிப் பேசினார்:

ஷஷஇந்த மேடையில் பேசிய அன்பர் என்னிடம் நீராகாரம் அருந்தும்படி கேட்டுக்கொண்டது, என்னை அவமானப்படுத்துவது போன்று இருக்கின்றது. நான் இந்த மேடையில் நீராகாரம் அருந்தாமல்தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன். இறுதிவரை இந்த முடிவில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையானால், எவரும் என்னை நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்தவேண்டாம். என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால், இறப்பேனே தவிர இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக எனது இலட்சியத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்|| என்று தெரிவித்தார்.

திலீபன் மீது கொண்டிருந்த அளவுக்கதிகமான பாசம் தமது கண்களை மறைத்துவிட்டிருந்ததை, திலீபனை நீர் அருந்தும்படி கோரியவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அதன் பின்னர் எவருமே திலீபனை நீர் அருந்தும்படி வற்புறுத்த முன்வரவில்லை.

கலவரங்களாக வெளிப்பட்ட ஷமக்களின் எழுச்சி|:

திலீபன் என்ற 23 வயது இளைஞனின் இந்த வித்தியாசமான உண்ணாவிரதம் யாழ்ப்பான தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய உணர்வலைகள் ஒரு பாரிய எழுச்சியாகவே மாற ஆரம்பித்திருந்தது. திலீபனின் கோரிக்கைகளுக்கு இந்தியா செவிசாய்க்க தயாரில்லை என்பதான செய்திகள் யாழ் மக்களிடம் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும், அதன் அமைதிப்படையினருக்கும் எதிராக மக்கள் பாரிய உணர்வலைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். ஷபுலிகள் எதனைக் கேட்டுவிட்டார்கள்? பெரிதாக ஒன்றும் அவர்கள் கேட்டுவிடவில்லையே. தமிழ்மக்களின் நலன் சார்ந்த விடயங்களைத்தானே அவர்கள் கேட்டுள்ளார்கள். இதற்காக ஒரு இளைஞனை பலிகொடுக்கும் அளவிற்கு இந்தியாவிற்கு இப்படி ஒரு கல்நெஞ்சு இருப்பது அவசியம்தானா? இந்த சிறு விடயத்தைக் கூட நிறைவேற்ற முடியாத, நிறைவேற்ற விரும்பாத இந்தியாவினால், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பான முக்கிய விடயங்களை எவ்வாறு நிறைவேற்ற முடியும்| என்று மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

விளைவு:

இந்தியப் படையினருக்கு எதிராக மக்கள் தமது உணர்வுகளை பகிரங்கமாகவே வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். இந்தியப் படையினருக்கு எதிராக மக்கள் கோஷமெழுப்பினார்கள். ஊர்வலங்களை நடாத்தினார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்தியப்படையினரை நோக்கி கற்களை வீசவும் செய்தார்கள்.

மன்னார், தலைமன்னார் வீதியில் இருந்த இந்தியப்படை முகாமை நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடாத்தப்பட்டது. மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தியாவிற்கும், இந்தியப்படைகளுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியபடி அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். இந்தியப்படையின் முகாமை அடைந்த ஊர்வலத்தின் மக்கள் கூட்டம் முகாமின் வாயிலை அடைத்தபடி நின்று, கோஷம் எழுப்பியது. திலீபனின் உண்ணாவிரதத்தில் இந்தியா காண்பிக்கும் மௌனத்திற்கு எதிராக தமது கண்டணங்களை வெளிப்படுத்திய பொது மக்கள், இந்தியா தமிழர் பிரதேசங்களை விட்டு வெளியேறவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

முகாமின் வாயிலில் காவல் கடமையில் இருந்த இந்தியப்படை வீரர் ஒருவர் மிகவும் கோபம் அடைந்தவராக தனது துப்பாக்கியை எடுத்து, ஊர்வலத்தை நோக்கி ஒரு சில துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தார். ஊர்வலத்தின் முன்வரிசையில் நின்ற ஒருவர் சுடப்பட்டுவிழ, ஏனையவர்கள் கலைந்து ஓடினார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமுக்குள் நுழைய முற்பட்ட வேளையிலேயே தாம் வேறு வழி இல்லாமல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக இந்தியத் தரப்பால் அந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

முகாமுக்குள் பொதுமக்கள் நுழைய முற்பட்டது ஒருவேளை உண்மையாக இருந்தால் கூட, அவர்களைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை எதனையும் மேற்கொள்ளாது, எச்சரிக்கை வேட்டுக்கள் கூட தீர்க்காது, நேரடியாகவே பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இந்தியப் படைகளின் செயல், பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது.

இதுபோன்ற இந்தியப்படைகளுக்கு எதிரான பொதுமக்களின் கோபம் பல வழிகளிலும் வெளிப்படுத்தப்பட்டன. இந்தியப் படைகளின் வாகனங்கள் வீதிகளில் செல்லமுடியாத அளவிற்கு நிலமை மோசமாக ஆரம்பித்தது. இந்தியப்படைகளுடன் பேசுவதற்கும் பொதுமக்கள் விரும்பவில்லை. இந்தியப் படை அதிகாரிகளுடன் சினேகபூவமான தொடர்புகளை வைத்திருந்த யாழ்வாசிகள் தமது உறவுகளை நிறுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். இந்தியப் படைவீரர்களுக்கு தண்ணீர் வழங்கக் கூட தயக்கம் காண்பித்தார்கள்.

திலீபனின் உண்ணா விரதம் பற்றி ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்த இந்தியப்படை அதிகாரிகள், நிலமையின் விபரீதத்தை படிப்படியாக உணர ஆரம்பித்தார்கள்.

தமிழ் மக்களின் உணர்வுகளை விடுதலைப் புலிகள் இந்தியப்படைகளுக்கு எதிராக மிகவும் புத்திசாலித்தனமாக திருப்பிவிட்டுள்ளதை அவர்கள் உணர ஆரம்பித்தார்கள். நிலமை இந்த அளவிற்கு மோசமாகும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவேளை திலீபன் இறந்துவிட்டால் நிலமை இதைவிட மோசமடையலாம் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

திலீபனின் உண்ணாவிரதத்திற்கு மாற்றீடாக இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியப்படை உயரதிகாரிகள் தமது மேலிடத்திடம் கேட்டிருந்தார்கள். ஆனால், இந்திய அரசின் தலைமையோ, புலிகள் ஷபூச்சாண்டி காண்பிக்கின்றார்கள்| என்றே நினைத்தது.

புலிகளை எப்படியும் சமாளித்துவிட முடியும், இதற்கெல்லாம் பயப்பட்டால் தொடர்ந்தும் புலிகள் இதுபோன்ற மிரட்டல்களை விடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்து வாழாவிருந்துவிட்டார்கள்.

இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான விடயத்தில், திலீபனின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் எப்படியான ஒரு பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்பதை இந்தியாவின் அரசியல் தலைமை அப்பொழுது உணர்ந்திருக்கவில்லை.

தொடரும்…

தொடர்புபட்ட காணொளி:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீட்சித்தின் ஆணவமும், பிரபாகரனின் ஆத்திரமும் (அவலங்களின் அத்தியாயங்கள்- 64) – நிராஜ் டேவிட்
 
Praba-with-Dixit.jpg
 

திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து நான்கு நாட்கள் கடந்தவிட்டுள்ள நிலையில், நிலமை தமது கைகளைவிட்டு வெகு தூரம் சென்றுகொண்டிருப்பதை இந்தியப்படை அதிகாரிகள் உணர ஆரம்பித்தார்கள்.

டில்லியிலும், கொழும்பிலும் இருந்தபடி அரசியல் ரீதியாகக் காய்களை நகர்த்திக்கொண்டிருந்த இந்திய இராஜதந்திரிகளுக்கு புரியாத பல விடயங்கள், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு புரிய ஆரம்பித்தன.

‘’யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் இந்தியப்படைகளை மிகவும் வெறுக்க ஆரம்பித்துள்ளார்கள்@ எந்த நிமிடத்திலும் இந்தியப் படைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வரக்கூடிய மனநிலை மக்கள் மத்தியில் உருவாகி வருகின்றது: திலீபனின் உண்ணாவிரதம் மேலும் தொடர்ந்து, இந்திய அரசும் தொடர்ந்தும் பாராமுகமாவே இருந்தால், நிலமையை இந்தியப் படைகளால் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்” என்று அந்த அதிகாரிகளுக்கு நன்றாகவே புரிந்தது.

தமிழர் பிரச்சனையும், புலிகள் மீதான தமது கட்டுப்பாடுகளும், தமது கைகளை விட்டு முற்றாகவே சென்றுகொண்டிருக்கின்றது என்று இந்தியப்படை உயரதிகாரிகள் அச்சம் கொள்ளத் தலைப்பட்டார்கள்.

இவர்களது அச்சத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பது போன்று, வேறு சில சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற ஆரம்பித்தன.

பொலிஸ் நிலையத் தாக்குதல்:

18.09.1987 அன்று பெரும்திரளான மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று வடமாராட்சியில் நடைபெற்றது.

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு கோஷம் எழுப்பியபடி சென்றுகொண்டிருந்தார்கள்.

இந்த ஊர்வலம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை நெருங்கியதும், ஊர்வலத்தில் வந்த பொதுமக்கள் திடீரென்று பொலிஸ் நிலையத்தினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த தளபாடங்களையும், பொலிஸ் நிலைய கட்டிடங்களையும் தாக்கி உடைக்க ஆரம்பித்தார்கள். எதிர்த்த பொலிஸாரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

பொலிஸ் வீரர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஏனெனில் அவர்கள் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இத்தனை காலமாக தங்களது நிழலைக் கண்டால் கூட பயந்து அடங்கி ஒதுங்கும் இந்த அப்பாவி மக்களுக்கு, அப்படி ஒரு ஆவேசம் வரும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

ஸ்ரீலங்கா பொலிஸாரை உடனடியாகவே பொலிஸ் நிலயத்தை விட்டு வெளியேறுமாறு பொதுமக்கள் உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவிற்கு பணிவதைத் தவிர பொலிஸாருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. தமது உடமைகளை தலையில் சுமந்தபடி பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் போதே, பொலிஸ் நிலையம் தீவைக்கப்பட்டது. தமது உடமைகளை தலைகளில் சுமந்தவண்ணம் பொலிஸ் வீரர்கள் பருத்தித்துறை ஸ்ரீலங்கா இராணுவ முகாமை நோக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இந்தச் சம்பவம் நிலமையின் தீவிரத்தை இந்தியப் படைகளுக்கு உணர்த்துவதாக இருந்தது. இந்தியப் படை முகாம்களுக்கும் இப்படி ஒரு நிலமை ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை, பருத்தித்துறை பொலிஸ் நிலையச் சம்பவம் எடுத்தியம்பியது.

இந்தியாவின் அணுகுமுறை:

அதுவரை திலீபனின் உண்ணாவிரதம் பற்றி ஒருவித பாராமுகப் போக்கைக் கடைப்பிடித்துவந்த இந்தியப்படை அதிகாரிகள், திலீபனின் உண்ணாவிரதம் பற்றி முதன் முறையாக அக்கறைப்பட ஆரம்பித்தார்கள். யாழ் கோட்டை இந்தியப்படை முகாமின் பொறுப்பாளராக இருந்த, இந்தியப்படை உயரதிகாரி ~பரார்| என்பவர், 20ம் திகதி, திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்து நிலமையை அவதானித்துச் சென்றார். திலீபனின் கோரிக்கைகள் பற்றியும், நிலமையின் தீவிரம் பற்றியும் தாம் தமது மேலதிகாரிகளுக்கு அறிவித்திருப்பதாகவும், யோகியிடம் தெரிவித்துவிட்டு சென்றார்.

21.09.1987 அன்று, இந்தியப் படை உயரதிகாரிகள் சிலருக்கும், புலிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியப்படை சார்பில் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், பிரிகேடியர் ராகவன், எயார் கொமாண்டர் ஜெயக்குமார், உட்பட வேறு சில அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

விடுதலைப் புலிகள் தரப்பில் அன்டன் பாலசிங்கம், மாத்தையா, யோகி போன்றோர் கலந்துகொண்டார்கள்.

தமது ஐந்து அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதில் திலீபன் மிகவும் உறுதியாக இருப்பதாக புலிகளின் பிரதிநிதிகள் இந்தியப்படை அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள். திலீபனின் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறும்படியும், கோரிக்கைகள் பற்றிய சாதகமான பதிலை இந்திய அரசுடன் கலந்தாலோசித்து தாம் நிறைவேற்றிவைப்பதாகவும், இந்தியப்படை உயரதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள்.

முடிவு எதனையும் காணாது அந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றது. முடிவுகள் எதனையும் எடுக்கக்ககூடிய அதிகாரம் உடைய எவரும் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புலிகளின் கோரிக்கைகளுக்கு இந்தியா பணிந்து போகக் கூடாது என்ற இந்தியத் தூதுவர் தீட்ஷித்தின் பிடிவாதமே, இந்தப் பிரச்சனையில் சுமுகமான முடிவு எதுவும் ஏற்பட்டுவிடாததற்கு பிரதான காரணம்.

மரணத்தை நோக்கி திலீபன்

இதற்கிடையில் திலீபனின் உடல் நிலை மேலும் மோசமடைந்து கொண்டேசென்றது. உண்ணாவிரத மேடையில் போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்திருந்தபடி திலீபனின் உண்ணாவிரதம் தொடர்ந்தது.

பேசமுடியாமல் கஷ்டப்பட்ட நிலையில், திலீபன் உரை நிகழ்த்தினார்:

‘’அன்பார்ந்த தமிழீழ மக்களே!

விளக்கு அணையும் முன்பாக பிரகாசமாக எரியுமாம். அதுபோன்று நானும் இன்று உற்சாகமாக இருக்கின்றேன். இன்று என்னால் நன்றாகப் பேசமுடிகின்றது. போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.

என்னை இந்தப் போராட்டத்தை கைவிடுமாறு எவருமே கேட்கவேண்டாம். நானும், தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது.

மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651வது ஆளாக மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்.

எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் யாரும் தடுக்கமுயலவேண்டாம். அவர்கள் ஐந்து ஆறுபேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

நான் மூன்று தடவை பேசியுள்ளேன். மூன்று தடவையும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்.

இவ்வாறு திலீபனின் உரை அமைந்திருந்தது.

திலீபனின் உண்ணா விரதப் போராட்டம், யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கு முழுவதிலுமே பாரிய உணர்வலைகளை தோற்றுவித்திருந்தது. திலீபனின் போராட்டத்திற்கு வலுச்சோக்கும் வகையில் வடக்கு கிழக்கு முழுவதிலும், உண்ணாவிரதப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் திருமதி நல்லையா, செல்வி குகசாந்தினி போன்ற பெண்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களை ஆரம்பித்தார்கள். மட்டக்களப்பில் மதன் என்ற இளைஞன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பித்தான்.

இதேபோன்று முல்லைத்தீவிலும், வவுனியாவிலும், மன்னாரிலும், திருகோணமலையிலும் பல்வேறு உண்ணாவிரதங்கள் ஆரம்பமாகி இருந்தன. முல்லைத்தீவில் திருச்செல்வம் என்ற போராளி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

திருகோணமலையிலும் கிருபா என்ற விடுதலைப் புலி உறுப்பினர் சாகும்வரையிலான உண்ணாநோன்பை ஆரம்பித்திருந்தார்.

தமிழ் பிரதேசம் எங்கும் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. மக்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்கள். இந்தியா மன்னிக்கமுடியாத தவறை செய்துவிட்டது போன்ற உணர்வு ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்டிருந்தது.

யாழ்பாணம் வந்த ’தீட்ஷித்:

திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 8 வது நாள், இலங்கைக்கான இந்திய தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.

திலீபனின் கோரிக்கைகள் பற்றிய தமது இறுதி முடிவை அறிவிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வருவதாகவும், திலீபனுக்கு சாதகமான முடிவையே அவர் வெளியிடுவார் என்றும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. திலீபனின் உண்ணா விரதத்தை முடித்துவைக்கும் நல்ல செய்தியையே இந்தியத் தூதுவர் அன்றைய தினம் கொண்டு வருவதாக தமிழ் மக்கள் பேசிக்கொண்டார்கள்.

22.09.1987 அன்று பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய தீட்ஷித்தை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், அன்டன் பாலசிங்கமும் சென்று சந்தித்தார்கள்.

யாழ்ப்பாண மக்கள் நினைத்தது போன்று இந்தியத் தூதுவருடனான புலிகளின் சந்திப்பு ஒன்றும் சுமுகமான ஒன்றாக அமைந்திருக்கவில்லை.

தன்னைச் சந்திக்க வந்த புலிகளின் தலைவர்களுடன், இந்தியத் தூதுவர் மிகவும் ஆணவத்துடன் நடந்துகொண்டார். புலிகளை மிகவும் கடுமையாக விமர்சிக்கவும் தலைப்பட்டார்.

அன்றைய சந்திப்பின் போது, இந்தியத் தூதுவர் தீட்ஷித் மட்டும் திலீபன் மீது ஓரளவு அனுதாபம் கொண்டு செயற்பட்டிருந்தால், ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் பங்கு நிச்சயம் வேறொரு வடிவம் பெற்றிருக்கும்.

இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீராத பகைக்கு வித்திட்டவர் என்று பின்னாட்களில் இந்தியப்படை அதிகாரிகளாலேயே விமர்சிக்கப்பட்ட தீட்ஷித், அன்று நடந்துகொண்ட விதம் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகவும் ஆத்திரப்பட வைத்தது.

தொடர்புபட காணொளி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்-இந்திய மோதல்களின் உண்மையான காரணகர்த்தா.. (அவலங்களின் அத்தியாயங்கள்- 65) – நிராஜ் டேவிட்

Frame-042.jpg

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கம் மிக மோசமாக நடந்துகொண்டதற்கும், அதனைத் தொடர்ந்து இந்தியா மூக்குடைபட்டுக் கொண்டதற்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அக்காலத்தில் கடமையாற்றிய ஜே.என் தீக்ஷித் அவர்களே பிரதான காரணம் என்று பின்நாட்களில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பல அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறை பற்றிய கொள்கை வகுப்பாளராக இருந்த ஒரு முக்கிய இராஜ தந்திரியான ஜே.என் தீக்ஷித் அவர்கள், புலிகள் விடயத்தில் கடைப்பிடித்திருந்த பிழையான அணுகுமுறைகளே, இலங்கையில் இந்தியா மிகப் பெரியதும், அவமானகரமானதுமான தோல்வியை அடைந்து திரும்ப காரணம் என்று பல இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அரசியல் விடயங்களில் போதிய அனுபவமற்ற ஒருவராகவே இருந்தார். வெளிநாடுகள் தொடர்பான விடயங்கள் அனைத்திற்கும் அவர் பெரும்பாலும் இராஜதந்திரிகளையும், ஆலோசகர்களையுமே நம்பியிருந்தார். அந்தவகையில் இலங்கை பிரச்சனையில் ஜே.என்.தீக்ஷித் அவர்களை பெரிதும் நம்பிச் செயற்பட்ட ராஜீவ் காந்தியை, புலிகள் விடயத்தில் தீக்ஷித் பிழையாக வழிநடத்திவிட்டதாகவே இந்தியப் படைகளின் தளபதிகள் பலர் குற்றம் சுமத்துகின்றார்கள்.

திலீபனை சந்திக்கத் தயங்கிய தீட்ஷித்:

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளுக்கு பொறுப்பாக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் என்ற உயரதிகாரி.

திலீபனின் உண்ணாவிரதத்தை இந்தியா அணுகியது தொடர்பாக இணையத் தளம் ஒன்றிற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில், “ஈழத் தமிழர் பிரச்சினை இத்தனை மோசமாகுவதற்கு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீக்ஷித்தே காரணம்” என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

ஹரிகிரத் சிங் தனது செவ்வியில், மேலும் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

“திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தை சுமுகமாகத் தீர்த்துவைப்பதற்கு எங்களாலான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டிருந்தோம். திலீபனைச் சந்திப்பதற்கு நான் விரும்பினேன். அதற்கான முயற்சியையும் எடுத்திருந்தேன். ஆனால் சில புலிப் போராளிகள் என்னிடம் கூறினார்கள், “ஜெனரல், மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் நீங்கள் மக்களின் முன்னால் செல்வது உங்களுக்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்திவிடும்” என்று என்னிடம் கூறி, உண்ணாவிரத மேடைக்கு செல்ல என்னை அனுமதிக்கவில்லை. நான் திலீபனிடம் சென்று, உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் கோர இருந்தேன்.

ஆனால் திலீபனால் எப்படி உண்ணாவிரதத்தை கைவிட முடியும்? இந்தியப் பிரதமரால் புலிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட முடியாது என்று திலீபன் ஏற்கனவே உறுதியாகத் தெரிவித்திருந்தார். இந்தியப் பிரதமர் தரப்பில் இருந்து புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது எனக்கு நன்றாகவே விளங்கியிருந்தது.

திலீபனை வந்து சந்திக்கும்படி நான் இந்திய தூதுவரை பல தடவைகள் கேட்டிருந்தேன். “வந்து சந்தியுங்கள்..”, “வந்து சந்தியுங்கள்…”, “வந்து சந்தியுங்கள்…” என்று தொடர்ந்து அவரிடம் கோரியபடியே இருந்தேன். ஆனால், அவர் அங்கு வர மிகுந்த தயக்கம் காண்பித்தார். அங்கு வருவதற்கு அவர் விரும்பவும் இல்லை. கடைசியாக இந்தியத் தூதுவர் அங்கு வந்தபோது, எல்லாமே முடிந்துபோயிருந்தது. அந்த இளைஞன் அநியாயமாக இறந்துவிட்டிருந்தான். இந்தியத் தூதுவர் திலீபனின் உயிரை நிச்சயம் காப்பாற்றி இருக்க வேண்டும். இலங்கையில் பின்நாட்களில் இந்தியாவிற்கு பல சங்கடங்கள் நிகழ்வதற்கு இந்தச் சம்பவமே முதற் காரணமாக அமைந்திருந்தது.

தீக்ஷித்தின் ஆணவத்திற்கு “வைகோ” கொடுத்த அடி:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஸ்தாபகரான திரு.வை.கோபால்சாமி (வைகோ) அவர்கள், தி.மு.கா.வின் ஒரு “போர் வாளாக” இருந்த காலத்தில், மகாத்மா காந்தியை திலீபனுடன் ஒப்பிட்டு, தெரிவித்திருந்த கருத்தை, இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

திலீபன் பற்றி தீக்ஷித் வெளியிட்டிருந்த ஒரு கருத்திற்கு பதிலாகவே, திரு.வைகோ இதனைத் தெரிவித்திருந்தார்.

திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருந்த போது, இந்தியத் தூதுவர் தீக்ஷித் இடம் திலிபனின் உண்ணாவிரதம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த தீக்சித், “திலீபன் என்ன மகாத்மா காந்தியா?” என்று இறுமாப்புடன் தெரிவித்திருந்தார்.

தீட்சித்தின் இந்தக் கூற்று பற்றி பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த திரு.வை.கோபால்சாமி அவர்கள், “திலீபன் மகாத்மா காந்தியைவிட சிறந்தவன்” என்று அடித்துக் கூறியிருந்தார். திரு வைகோ, தனது இந்த வாதத்திற்காக மகாத்மா காந்தியின் சுயசரிதையான “சத்தியசோதனையில் இருந்து ஒரு சம்பவத்தையும் எடுத்துக் காண்பித்திருந்தார்.

மகாத்மா காந்தியின் இளமைப்பருவத்தின்போது அவரது தந்தை காலமாகிவிட்டார். தந்தையின் பூதவுடல் அஞ்சலிக்காக வீட்டின் கூடத்தில் கிடத்தி இருக்கையில், தனது இளமையின் பாலியல் உணர்ச்சிகளை காந்தியால் கட்டுப்படுத்தமுடியாமல் மறைவில் சென்று அதனை தீர்த்துக்கொண்டதாக “சத்தியசோதனையில் காந்தி தெரிவித்திருந்தார்.

இளவயதின் உணர்ச்சிகளை மகாத்மாவினாலேயே அடக்கமுடியாது இருந்துள்ளது. ஒரு சோகமான நேரத்தில்கூட மகாத்மாவினால் தனது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்தமுடியாமல் அதற்கு வடிகால் தேடிச் சென்றுள்ளார்.

ஆனால் திலீபனோ தனது இள வயதில், அந்த வயதிற்கான அனைத்து உணர்ச்சிகளையும் உதறித்தள்ளிவிட்டு, தனது கொள்கைக்காக தன்னுயிரை தியாகம் செய்ய முன்வந்திருந்தான். அந்த வகையில் “திலீபன் மகாத்மா காந்தியை விட சிறந்தவன்” என்று திரு.வை.கோபால்சாமி, தீக்ஷித்தின் கருத்துக்கு பதில் அளித்திருந்தார்.

பிரபா-தீட்ஷித் சந்திப்பு:

1987ம் ஆண்டு, செப்டெம்பர் 22ம் திகதி இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் பலாலி விமானத் தளத்தை வந்தடைந்தார். தீட்ஷித்தை சந்திப்பதற்காக, புலிகளின் தலைவர் பிரபாரகரன் அவர்களும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களும் அங்கு சென்றிருந்தார்கள்.

(இந்தியாவில் தங்கியிருந்து அரசியல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த திரு.அன்டன் பாலசிங்கம் அவர்கள், திலீபனின் உண்ணாவிரதத்தைத் தொர்ந்து ஈழத்தில் ஏற்பட ஆரம்பித்திருந்த அரசியல் குழப்பங்களின் நிமிர்த்தமே புலிகளின் தலைவரால் யாழ்ப்பாணத்திற்கு அவசரஅவசரமாக அழைக்கப்பட்டிருந்தார்.)

புலிகளின் தலைவர்களைச் சந்தித்த தீக்ஷித் பெருஞ் செருக்கோடும், கடும் சினத்தோடும் காணப்பட்டதாக, புலிகளின் அரசியல் ஆலோசகர் பின்னாளில் நினைவு கூர்ந்திருந்தார்.

“திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் இந்திய அரசுக்கு எதிராக தமிழ் மக்களைத் தூண்டிவிடும் செயல்” என்றும் தன்னைப் பொறுத்தவரையில் “இது ஆத்திரமூட்டும் ஒரு செயல்” என்றும் தீக்ஷித் கண்டனம் தெரிவித்தார். புலிகளை மிகவும் மோசமாக விமர்சித்த தீக்ஷித், புலிகள் அமைப்புக்கு எதிராக பலவித மிரட்டல்களையும் விடுத்தார்.

பிரபாகரன் அவர்கள் அங்கே நிறையப் பொறுமையைக் கடைப்பிடித்திருக்கின்றார். தீக்ஷித்தின் ஆத்திரமூட்டும் வார்த்தைகளை பொறுமையாக செவிமடுத்த திரு. பிரபாகரன், தீக்ஷித்திடம் ஒரு வேண்டுகோளை வினயமாக விடுத்தார்.

“தீக்ஷித் நல்லூர் சென்று, மரணப் படுக்கையில் இருக்கும் திலீபனுடன் பேசி, இந்தியா ஏற்கனவே வழங்கியிருந்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்தி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு திலீபனிடம் கோரிக்கைவிடவேண்டும்” என்று திரு.பிரபாகரன் தீக்ஷித்திடம் பரிந்து கேட்டுக்கொண்டார்.

ஆனால், தீக்ஷித் தனக்கே உரித்தான செருக்குடனும், மமதையுடனும், புலிகளின் தலைவர் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தார்.

தனது பயணத்திட்டத்தில் திலீபனைச் சந்திக்கும் விடயம் உள்ளடக்கப்படவில்லை என்று கூறி, புலிகளின் தலைவரின் வேண்டுகோளை உதறித்தள்ளினார். அன்றைய தினம், தீக்ஷித் மட்டும் சிறிது கருணை காண்பித்திருந்தால், தமிழ் மக்கள் மிகவும் நேசித்த ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்றி இருக்கமுடியும்.

தமிழை நேசித்த பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். தமிழர் தாயகத்திற்கு அழையா விருந்தாளிகளாக வந்திருந்த பல இந்தியப் படை வீரர்களின் உயிர்களையும் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் தீக்ஷித்தின் ஆணவம், ஈழ மண்ணில் ஒரு மிகப் பெரிய அலவத்தை நிகழ்த்தும் ஒரு முடிவை நோக்கி அனைத்தையும் இட்டுச் சென்றது.

ஈழ தேசம் முழுவதும் பரவ ஆரம்பித்த உண்ணா விரதங்கள்:

இதற்கிடையில், திலீபனுக்கு ஆதரவாகவும் அவர் முன்வைத்த கோரிக்கைகளை முன்வைத்தும், ஈழ தேசம் முழுவதும் பல இளைஞர்கள் உண்ணாவிரதத்தில் குதித்திருந்தார்கள். மட்டக்களப்பில் மதன் என்ற போராளி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

அதேபோன்று முல்லைத்தீவில் திருச்செல்வம் என்ற போராளி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். திருகோணமலையிலும் கிருபா என்ற விடுதலைப் புலி உறுப்பினர் சாகும்வரையிலான உண்ணாநோன்பை ஆரம்பித்திருந்தார். தமிழ் தேசம் முழுவதுமே உணர்ச்சியின் உச்சத்திற்கு சென்றிருந்தது.

மறுநாள், அதாவது 26ம் திகதி முதல் யாழ்குடா முழுவதிலுமுள்ள ஆரச மற்றும் தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவைகளும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும், மறியலும் செய்து வேலைப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்கள்.

திலீபன் மரணம்:

26.09.1987 காலை 10.48 மணிக்கு, திலீபன் என்ற மாவீரன் தனது உயிரை தமிழுக்காக, தான் நேசித்த தமிழ் மக்களுக்காக தியாகம் செய்திருந்தான்.

இந்தியாவின் வரலாற்றில் இரத்தத்தால் பொறிக்கப்பட்ட ஒரு “ஆச்சரியக் குறியாக” – திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமும், அவனது மரணமும் அமைந்திருந்தது.

தொடர்புபட்ட காணொளி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதத்துடன் தர்மயுத்தம்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 66) – நிராஜ் டேவிட்

Frame-0020.jpg

திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.

உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் முடித்துக்கொண்ட திலீபன், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவனாக இருந்தபோதுதான், தமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார்.

யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் யாழ்.குடா பொறுப்பாளராக இருந்த கிட்டுவுடன் இணைந்து, ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களில் திலீபன் பங்குபற்றியிருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் வட்டுக்கோட்டைப் பகுதி பிரச்சாரப் பொறுப்பாளர், நவாலி பிரதேசப் பொறுப்பாளர், யாழ் அரசியல் பொறுப்பாளர் என்று திலீபன் கடமையாற்றியதால், மக்களுடன் நெருங்கிப் பழகி, யாழ் மக்களின் ஒட்டுமொத்த அன்பையும், நட்பையும் திலீபன் பெற்றிருந்தார்.

இதனால், திலீபன் இறந்துவிட்டான் என்ற செய்தி மக்கள் மத்தியில் பரவியபோது, மக்களால் தமது சோகத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. யாழ். குடாவே சோகத்தில் மூழ்கியது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் திலீபனின் உருவப் படம் தாங்கிய சிறிய கூடுகள் ஓலையாலும், சீலையாலும் அமைக்கப்பட்டு, அவற்றினுள் தீபம் ஏற்றப்பட்டிருந்தன.

வீதியெங்கும் வாழை மரங்களாலும், தென்னங் குருத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அந்த தியாக இளைஞனின் இறுதி ஊர்வலத்திற்கு தமது மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்த தயாராக இருந்தன.

யாழ். குடாவில் அழாத மக்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒப்பாரிகள் முகாரிகளாக ஒலித்தபடி இருந்தன. போதாததற்கு ஒவ்வொரு வீதிகளிலும், கோவில்களிலும், பாடசாலைகளிலும் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளில் சோக கீதங்களும், சோக நாதங்களும் ஒலித்தபடி இருந்தன.

இதே நிலைமை வடக்கு கிழக்கு முழுவதிலும் காணப்பட்டது. ஒவ்வொரு தமிழன் மனதிலும் தாங்கமுடியாத வேதனை. இந்திய அரசு மீது வெறுப்பும், கோபமும், அதனைத் தீர்த்துக்கொள்ள முடியாத தமது இயலாமையை நினைத்து அவமானமும் குடிகொண்டிருந்தன.

சிலருக்கு புலிகளின் பதிலடி எப்படி இருக்கும் என்ற பயமும் ஏற்பட்டிருந்தது. மொத்தத்தில் தமிழ் இனமே பலதரப்பட்ட உணர்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டது.

இராணுவச் சீருடை தரித்து, புலிக்கொடியால் போர்த்தப்பட்டு, மலர்ப்போர்வையால் மூடப்பட்ட அமரர் ஊர்தியில், கரும்புலிகளின் அணிவகுப்புடன் திலீபனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. யாழ் குடாவில் கிராமம் கிராமமாக இறுதிப் பயணம் மேற்கொண்ட தங்களது வரலாற்றுத் தியாகிக்கு, இதய அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்தார்கள்.

சத்தியாக்கிரகத்தின் பிதாமகர் என்று கூறப்படுகின்ற மகாத்மா காந்தியையே, நீராகாரம்கூட அருந்தாத தனது உண்ணாவிரதத்தினாலும், தற்கொடைத் தியாகத்தினாலும் விஞ்சியிருந்த அந்த வீர இளைஞனுக்கு இறுதி அஞ்சலியைச் செலுத்த, ஒவ்வொரு தமிழ் மகனும் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

தலைவரின் செய்தி:

ew025.jpg

திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், ஒரு இரங்கல் செய்தியை வெளியிட்டார்.

எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைச் செய்திருக்கின்றது. வீர காவியங்களைப் படைத்திருக்கின்றது. இவை எல்லாமே எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள்.

ஆனால் எமது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது. வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது.

சாத்வீகப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து திலீபன் ஈடிணையற்ற தியாகத்தைப் புரிந்துள்ளான்.

அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

தமிழீழ தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி.

பாரத தேசத்தை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி.

உலகத்தின் மனச்சாட்சியைத் தீண்டிவிட்ட நிகழ்ச்சி.

திலீபன் தமிழ் மக்களுக்காகவே இறந்தான். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே இறந்தான். தமிழ் மக்களின் மண்ணுக்காக இறந்தான். தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக இறந்தான். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக திலீபன் தன்னை மாய்த்துக்கொண்டான்.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு..என்று தெடர்ந்த தலைவரின் இரங்கல் செய்தியில், இந்தியாவின் பாராமுகத்தையும் அவர் பகிரங்கமாக கண்டித்திருந்தார்.

பாரதத்துடன் தர்மயுத்தம்:

திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கின்றது. இது அர்த்தமற்ற சாவு என்று இந்தியத் தூதுவர் கூறியிருக்கின்றார். தமது உறுதிமொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயிர் தப்பியிருப்பான் என்றும் அவர் சொல்லியிருக்கின்றார். ஆனால், உண்மையில் நடந்தது என்ன, நடந்து கொண்டிருப்பது என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எமது உரிமைகள் வழங்கப்படும். எமது மக்களுக்கும், எமது மண்ணுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பூமியில் தம்மைத்தாமே ஆழும் வாய்ப்பு அளிக்கப்படும் – இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி, நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.

இதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எமது மக்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிரமங்களுக்குச் செல்ல முடியாமல் அகதி முகாம்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க, சிங்களக் குடியேற்றம் துரித கதியில் தமிழ் மண்ணை விழுங்க ஆரம்பித்தது. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ் பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது.

சிங்கள இனவாத அரச இயந்திரம் அவசர அவசரமாக தமிழ் பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில், சமாதானப் படைகளின் அனுசரனையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழத்தில் நிலைகொள்ள முயன்றது.

இந்தப் பேரபாயத்தை உணர்ந்துகொண்ட திலீபன், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க திடசங்கற்பம் கொண்டான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. பாரதம்தான் எமது இனப் பிரச்சினையில் தலையிட்டு, எம்மிடம் இருந்த ஆயுதங்களை வாங்கியது. பாரதம்தான் எமது போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆகவே பாரத அரசிடம்தான் நாம் உரிமை கோரிப் போராட வேண்டியிருந்தது.

எனவேதான் திலீபன் பாரதத்துடன் தர்மயுத்தம் ஒன்றை ஆரம்பித்தான். பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாகவும் அவன் எடுத்திருந்தான்.

நீராகாரம் கூட அருந்தாது மரண நோன்பைத் திலீபன் தழுவிக் கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னரே இந்தியத் தூதுவர் டிக்சித்துக்கு நாம் முன்னறிவித்தல் கொடுத்திருந்தோம். உண்ணாவிரதம் ஆரம்பமாகி எட்டு நாட்கள் வரை எதுவுமே நடைபெறவில்லை.

பதிலுக்கு இந்திய அரசின் கீழுள்ள தொடர்பு சாதனங்கள் எம்மீது விஷமத்தனமான பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டன. திலீபனின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தின.

உண்ணாவிரதம் ஆரம்பமாகி ஒன்பதாவது நாளே இந்தியத் தூதர் வந்தார். உருப்படியில்லாத உறுதி மொழிகளைத் தந்தார். வெறும் உறுதிமொழிகளை நம்பி காலாகாலமாக எமது இனம் ஏமாற்றப்பட்டு வருகின்றது.

உருப்படியான திட்டங்களை முன்வையுங்கள்! எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வையுங்கள்: அதுவரை உண்ணாவிரதத்தை கைவிட திலீபன் சம்மதிக்கமாட்டான் என்பதை அவருக்கு தெரியப்படுத்தினோம்.

உங்களுக்கு திலீபனின் உயிர் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், நீங்கள் அவனை வந்து பாருங்கள். எமது மக்கள் முன்னிலையில் அவனிடம் உறுதிமொழியினைக் கூறுங்கள். அப்பொழுதுதான் திலீபன் உண்ணா விரதத்தை கைவிடுவான் என்று அவரிடம் கூறினேன். அதற்கு இந்தியத் தூதுவர் மறுத்துவிட்டார். இவ்வாறு பிரபாகரன் அவர்களின் செய்தி தொடர்ந்தது.

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இந்தியா மிகவும் கேவலமான, பிற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. திலீபனின் போராட்டத்தையும், அவனது தியாகத்தையும் கொச்சைப்படுத்தும்படியான பலவித நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருந்தது.

இந்திய அரசின் உத்தியோகபூர்வ வானொலி சேவையான ~அகில இந்திய வானொலி (ALL INDIA RADIO) திலீபனின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தும்படியான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. திலீபனைப் பற்றியும், புலிகளின் தலைவரைப் பற்றியும் தவறான கருத்துக்களை தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில், அது முழுமூச்சுடன் இறங்கியிருந்தது.

மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தவர்தான். ஆனால் அவர் தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி கூறவில்லை. மகாத்மாவே நேரடியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தார். ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனோ, தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி ஆணையிட்டுள்ளார் என்று அகில இந்திய வானொலி பிரச்சாரம் செய்தது.

அதேபோன்று, திலீபன் தொடர்பாக, மற்றொரு வதந்தியும் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டது. திலீபன் ஏற்கனவே நடைபெற்றிருந்த சண்டை ஒன்றில் காயம் அடைந்திருந்ததால், அவனது ஈரலில் ஒரு பகுதியும், மற்றைய சில உள்ளுறுப்புக்களும் ஏற்கனவே வைத்திய சிகிச்சையின் போது அகற்றியெடுக்கப்பட்டுவிட்டன.

திலீபன் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதனால்தான் திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை துணிந்து மேற்கொண்டு வருவதாக வதந்திகள் பரப்பப்பட்டன.

(இந்தியப்படையுடன் ஈழத்திற்கு வந்திருந்த தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் இப்படியான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் அரும்பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.)

அதேபோன்று, திலிபன் மரணம் அடைந்த பின்பும், இந்தியாவின் சகபாடிகளால் மேலும் பல வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. இறுதி நேரத்தில் திலீபன் தன்னைக் காப்பாற்றும்படி சக போராளிகளிடம் கெஞ்சியதாகவும், ஆனால், புலிகள் திலீபனை வலுக்கட்டாயமாக உண்ணாவிரதம் இருந்து சாகடித்ததாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன.

திலீபன் புலிகளால் விஷ ஊசி ஏற்றிக் கொல்லப்பட்டதாகவும் தமிழ் மக்கள் மத்தியில் இந்தியாவின் அடிவருடிகளால் வதந்திகள் பரப்பப்பட்டன.

திலீபனின் போராட்டமானது, இந்தியா பற்றி தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மாயையை உடைந்திருந்தது. இதனைப் பொறுக்க முடியாத இந்தியாவின் உளவுப் பிரிவினரே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதில் பிரதான பங்கு வகித்திருந்தார்கள்.

அவர்கள் தமது திட்டத்திற்கு இந்தியப் படைகளின் தயவில் தங்கியிருந்த தமிழ் அமைப்பின் உறுப்பினர்களையும், அவர்களின் குடும்பத்தினர்களையும் பயன்படுத்தினார்கள்.

ஆனால், இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்கள் மத்தியில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்களை இந்தியாவிற்கு எதிராக மேலும் கோபம் கொள்ள வைத்ததுடன், திலீபன் மீது தாம் கொண்டிருந்த அன்பை மென்மேலும் அதிகரிக்கவும் செய்தது.

சண்டைகளின் போது விழுப்புண் அடைவது புலிகளுக்கு புதிதல்ல. இதை புலிகளுடன் தோளோடு தோள் நின்ற தமிழ் மக்கள் நன்கறிவார்கள். சுமார் ஆறு மாத காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சண்டையின் போது திலீபன் வயிற்றில் காயமடைந்திருந்தது உண்மைதான்.

ஆனால் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அளவிற்கு திலீபனுக்கு உடல்நிலை ஒன்றும் மோசமாக இருக்கவில்லை என்பதை, திலீபனின் வாழ்க்கையில் பிண்ணிப் பிணைந்திருந்த யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.

அத்தோடு, மரணத்திற்கு முன்பதாக திலீபன் ஆற்றியிருந்த உரை, தனது குறிக்கோளில் திலீபன் கொண்டிருந்த உறுதியை வெளிப்படுத்துவதாக இருந்தது.

நான் என் உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்.

மக்கள் அனைவரும் எழுச்சியடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க வேண்டும். இதற்கு வேறு யாருடைய தயவையும் எதிர்பார்க்கக் கூடாது.

ஈழப் பிரச்சனையின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா:

திலீபனின் மரணமும், அது தொடர்பான உணர்வலைகளும் தமிழ் மக்களை ஆட்கொண்டிருந்த அதேவேளை, இந்திய இராணுவம் தனது 36வது காலாட் படைப்பிரிவை மிகவும் இரகசியமாக யாழ். குடாவிற்கு நகர்த்த ஆரம்பித்தது.

சென்னை, பறங்கிமலைப் பகுதியில் உள்ள Defence Colony இல் ஏற்கனவே முகாம் அமைத்து நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் இந்தப் படைப்பிரிவு, சிறிது சிறிதாக யாழ். குடாவை நோக்கி நகர்த்தப்பட்டது.

இந்தியா, ஈழப் பிரச்சனையின் அடுத்த கட்டத்திற்குள் தன்னை நுழைத்துக் கொள்வதற்கு தயாரானது.

தொடர்புபட்ட காணொளி:

 

இடைக்கால நிர்வாகசபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும் (அவலங்களின் அத்தியாயங்கள்- 68) – நிராஜ் டேவிட்
6123903442_810739fe82_o.jpg
 

திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பையும், சர்வதேச மட்டத்திலும் ஏற்பட்ட சங்கடங்களையும்; தனிக்கவேண்டிய தேவை இந்திய அரசிற்கு ஏற்பட்டது.

இந்தியா புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் பாதகமான ஏதோ ஒன்றைச் செய்து வருகின்றது என்பது போன்ற ஒரு பேச்சு தமிழ் மக்கள் மனங்களிலும், சர்வதேச நாடுகள் மத்தியிலும் ஏற்பட ஆரம்பித்தன. திலீபனின் மரணம் இப்படியான ஒரு எண்ணத்தையும், சந்தேகத்தையும் அனைத்து மட்டங்களிலும் பரப்பியிருந்தது.

தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள்:

இதற்கு மேலாக, தமது 5 அம்சக் கோரிக்கைகளை முன்நிறுத்தி, விடுதலைப் புலிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை, தமிழீழத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வந்தார்கள்.

திலீபன் முன்வைத்த 5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, மட்டக்களப்பில் மதன் என்ற இளைஞன் சாகும் வரையிலான தனது உண்ணா விரதத்தை, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பித்திருந்தான். இதேபோன்று தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும், உண்ணாவிரதப் போராட்டங்கள் மிகுந்த உணர்ச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன.

இது போன்ற உண்ணாவிரதப் போராட்டங்கள் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தன. இந்தியாவின் மீது தமிழ் மக்களை காழ்ப்புணர்வு கொள்ள வைத்தன. ஏற்கனவே திலீபனின் மரணம் இந்தியாவின் அமைதிகாக்கும் பணிக்கு  தமிழ் மக்கள் மத்தியிலும், சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தியிருந்த சேதத்தை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் வழங்காமல், தொடர்ந்து பல உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததானது, இந்திய அதிகாரிகளை ஆட்டம் காண வைத்தன. இந்தியப் படை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் அவர்களுக்கு பெரிய தலையிடியாகவே அமைந்திருந்தன.

இந்தியப் படை தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கச் சென்ற ஒரு படை என்பது போன்ற எண்ணம் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுவிடக் கூடிய அபாயத்தை, இந்தியா எதிர்கொள்ள ஆரம்பித்தது.

இப்படியான ஒரு எண்ணப்பாடு வேகமாகப் பரவுவதைத் தடுக்க இந்தியா அவசர அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டியது. புலிகளுக்கு ஏதாவது ஒன்றை வழங்கிவிட்டு, அதன் பின்னரே புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியா திட்டம் தீட்டியது.

திலீபனின் மரணத்தை தொடர்ந்து உலகத்தின் பார்வையில் புலிகள் மீது ஏற்பட ஆரம்பித்திருந்த அனுதாபத்தை புலிகளைக் கொண்டே உடைத்து விட்டு, அதன் பின்னரே புலிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வது நல்லது என்று இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.

வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை உடனடியாக அமைத்து, உலகத்தின் சந்தேகத்தைப் போக்கிவைப்பதற்கு இந்தியா தீர்மாணித்தது. ஜே.ஆருடன் கலந்தாலோசித்த இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் இதற்கான திட்டத்தை வரைந்தார்.

வடக்கு கிழக்கை நிர்வகிப்பதற்கென்று 11 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது என்றும், அதில் விடுதலைப் புலிகள் 5 உறுப்பினர்களை நியமிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இரகசிய ஒப்பந்தம்:

இதற்கான கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக செப்டெம்பர் 28ம் திகதி இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்குடாவிற்கு விரைந்தார். பலாலி விமானப்படைத் தளத்தில் அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்து உரையாடினார். புலிகள் தரப்பில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மற்றும் பிரதித் தலைவர் மகேந்திரராஜா மாத்தையா போன்றோரும் சென்றிருந்தார்கள். மிகவும் காரசாரசாக நடைபெற்ற அந்தச் சந்திப்பில், இடைக்கால நிர்வாகசபை அமைப்பது தொடர்பான ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

அதே தினத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. ‘‘India’s Intervention in Sri-Lanka’ என்ற ஆய்வு நூலில், இந்த இரகசிய ஒப்பந்தம் பற்றிய விபரம் வெளியிடப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் சார்பில் பிரதித் தலைவர் மகேந்திரராஜா மாத்தையாவும், இந்திய அரசு சார்பில் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் முதல் நிலை அதிகாரி ஹர்தீப் பூரி|யும், அந்த இரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்கள்.

அந்த ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற விபரங்கள் இவைதான்:

பின்வரும் அடிப்படையில் வடக்கு கிழக்கிற்கான ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு, ஸ்ரீலங்காவின் பிரதமர் இந்திய தூதுவரிடம் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.

த.வி.புலிகள் - 5

த.வி.கூ. - 2

முஸ்லிம்கள் - 2( இருவரில் ஒருவர் புலிகளாலேயே நியமிக்கப்படுவார்)

சிங்களவர்கள்- 2

மொத்தம் 12 பிரதிநிதிகள். இந்த இடைக்கால நிர்வாக சபையின் தலைவரை புலிகள் ஆலோசனையுடன் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி நியமிப்பார்.

-பெங்களூர் முன்மொழிவுகளின் 10.1, 10.2 பிரிவுகளின்படி, ஜே.ஆர். தனது நிறைவேற்று அதிகாரங்களில் சிலவற்றை, இடைக்கால நிர்வாக சபையின் தலைவருக்கு வழங்குவார்.

-வடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரம் இந்த இடைக்கால நிர்வாக சபைக்கு இருக்கும்.

-இந்தியத் தூதுவரிடம் 13.10.1987ம் திகதி புலிகள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைககள், இந்த இடைக்கால நிர்வாக சபை மூலம் நிறைவேற்றப்படும்.

-1987ம் ஆண்டு ஜுலை மாதம் இந்தியப் பிரதமரால் புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அழுல்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் விடுதலைப் புலிகள் வழங்குவார்கள்.

-புலிகள் அமைப்பின் உறுப்பினர்களதும், தலைவர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் புலிகள் தங்களிடம் மிகுதியாக உள்ள ஆயுதங்களை கையளிப்பார்கள்.

-மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு புலிகள் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

-இந்தியாவும் விடுதலைப் புலிகளும் ஒருவருக்கு எதிராக மற்றவர் மேற்கொண்டுவரும் பிரச்சார நடவடிக்கைளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

-30ம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா அரசாங்கம் இடைக்கால நிர்வாகசபை பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.

-இந்திய அரசும், இலங்கை அரசும், இந்த இரகசிய ஒப்பந்தத்தின் வெளிப்படையான அம்சங்கள் சிலவற்றை மட்டுமே வெளியிட வேண்டும்.

-இவற்றிற்கு பதிலாக விடுதலைப் புலிகள் தமது உண்ணாவிரதப் போராட்டங்களை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு அந்த இரகசிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜே.ஆர்.மேற்கொண்ட தந்திரம்:

இலங்கை-இந்திய ஒப்பந்திற்கு எதிராக தென் இலங்கையில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பு, சில சந்தர்ப்பங்களில் ஜே.ஆர்.இனது காய்நகர்த்தல்களுக்கு தொல்லையாக இருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அதுபோன்ற எதிர் அலைகள் ஜே.ஆருக்கு உதவவே செய்தன.

தென்பகுதி பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்கு என்று கூறி, ஒப்பந்தத்தின் சரத்துக்களில் ஸ்ரீலங்கா அரசிற்கு சாதகமான அம்சங்களை இணைத்துக் கொள்ளுவதற்கு ஜே.ஆரால் முடிந்திருந்தது.

தென்னிலங்கையில் ஏற்படுகின்ற நெருக்குதல்களை சமாளிப்பதற்காகவே இடைக்கிடையே சில கடுமையான முடிவுகளை தான் எடுக்கவேண்டி இருப்பதாக, இந்தியத் தரப்பை நம்பவைப்பதற்கும் ஜே.ஆரால் முடிந்திருந்தது.

இடைக்கால நிர்வாக சபை ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜே.ஆர். மிகவும் அழகாக காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.

இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியினாலோ, இந்தியத் தூதுவர் தீட்ஷித்தினாலோ, ஜே.ஆரின் காய் நகர்த்தல்களைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை@ அவரது தந்திரங்களுக்கு ஈடுகொடுக்கவும் முடியவில்லை.

ஜே.ஆரின் தந்திரோபாய நடவடிக்கைளைப் பரிந்துகொள்ளும் அனுபவமும் அவர்களுக்கு இருக்கவில்லை. மிகவும் இலகுவாகவே அவர்கள் ஜே.ஆரின் வலையில் வீழ்ந்துவிட ஆரம்பித்தார்கள்.

இரகசிய விவாதம்:

இது இவ்வாறு இருக்க, ஜே.ஆரின் காய் நகர்த்தல்கள் பற்றிய ஒரு விவாதம் யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள், ஜே.ஆர். மேற்கொள்ள ஆரம்பித்திருந்த சதியை வெற்றிகொள்வது எப்படி என்று ஆராய்ந்துகொண்டிருந்தார்கள்.

ஜே.ஆரின் தந்திர வலைக்குள் புலிகள் சிக்காமல் தப்பி விடுவதுடன், அவரது வலையை எப்படி தமது அடுத்த நகர்வுகளுக்கு சாதகமாக்கிக்கொள்வது என்றும் அவர்கள் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள்.

தொடரும்…

 

கைதுசெய்யப்பட்ட முக்கிய தளபதிகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 70) – நிராஜ் டேவிட்
485743_494281307256430_1335942315_n-292x
 
 

வடக்குகிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகசபை தொடர்பான இடம்பெற்றுவந்த சர்ச்சைகளுக்கு புலிகள் ஒரு முற்றுப் புள்ளியை வைத்ததைத் தொடர்ந்து, இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் காணப்பட்டு வந்த விரிசல்கள் அதிகரிக்க ஆரம்பித்தன.

இந்த விரிசல்களை மேலும் அதிகரிப்பதுபோன்ற மற்றொரு சம்பவம், 03.10.1087 அன்று பாக்குநீரினை கடற்பரப்பில் இடம்பெற்றது.

இந்தியா மீது முற்றாகவே நம்பிக்கையை இழந்திருந்த விடுதலைப் புலிகள்@ புலிகளை அடிமைப்படுத்த அல்லது அழித்துவிடத் தருனம் பார்த்துக்கொண்டிருந்த இந்தியா இந்தியாவையும் விடுதலைப் புலிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்த ஸ்ரீலங்கா. இந்த மூன்று தரப்பினருமே எதிர்பார்த்திராத நிகழ்வொன்று அக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இடம்பெற்றது.

ஒரு மோசமான இன அழிப்பை மேற்கொண்ட படையினர் என்று இந்தியாவை சர்வதேசத்தின் முன்னர் தலைகுனிய வைக்கும்படியாக அமைந்திருந்த புலிகள்-இந்திய யுத்தத்திற்கு அத்திவாரம் போட்டதாக ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்ற அந்த நிகழ்வு, ஜே.ஆருக்கு மட்டுமே நன்மை பயக்கும்படியாக அமைந்திருந்தது.

படகில் வந்த புலிகள்:

3.10.1987 அன்று அதிகாலை 2 மணியளவில், பருத்தித்துறைக் கடற்பரப்பில் சில விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் படகொன்றில் வந்துகொண்டிருப்பதாக இந்திய அமைதிப்படைக்கு, இந்தியக் கடற்படையினரிடம் இருந்து தகவல் வந்து சேர்ந்தது.

புலிகள் தொடர்பாக அதிருப்தி கொண்டிருந்ததுடன், புலிகளின் ஆயுதங்களைக் களையும் நோக்கத்திலும் இருந்த இந்திய அமைதி காக்கும் படையினர், இந்தத் தகவலை ஸ்ரீலங்கா கடற்படையினரின் காதுகளில் போட்டு வைத்தார்கள். உடனடியாகவே ஸ்ரீலங்கா கடற்படையின் ரோந்துக் கப்பல் ஒன்று புலிகளின் படகை வழிமறிக்கப் புறப்பட்டது.

அக்காலத்தில் புலிகள் கடல் புலிகள்| என்ற பிரமாண்டமான கடற்படைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஈழத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான போக்குவரத்திற்கும், ஆயுத மற்றும் உணவு வினியோகத்திற்கும் என்று சிறிய அளவிலான கடற் பிரிவொன்றையே கட்டமைத்திருந்தார்கள். ~கடல் புறா| என்ற பெயரில் சில வள்ளங்களில், உயர்வலு இயந்திரங்களையும், எல்.எம்.ஜி. இயந்திரத் துப்பாக்கிகளையும் பொருத்தி, சிறிய படைப்பிரிவொன்றையே புலிகள் தமதாகக் கொண்டிருந்தார்கள். (பிரபல சரித்திர எழுத்தாளர் சாண்டில்யன் எழுதியிருந்த ~கடல் புறா| என்ற சரித்திர நாவலில், தமிழருக்குச் சொந்தமான பாரிய கடற்படையின், பிரதான கப்பலுக்கே ~கடல் புறா| என்று பெயரிடப்பட்டிருந்தது. சாண்டில்யனின் அந்த நாவலை மிகவும் விரும்பிப் படித்த புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், புலிகளின் கடற் பிரிவுக்கு, கடல் புறா என்ற பெயரைச் சூட்டியிருந்தார்)

கடல் புறா என்று பெயர் பொறிக்கப்பட்ட புலிகளின் அந்தப் படகை ஸ்ரீலங்கா கடற்படையினர் வழிமறித்தார்கள். புலிகளின் படகில், மட்டக்களப்பு மாவட்ட தளபதி குமரப்பா மற்றும் திருகோணமலை மாவட்டத் தளபதி புலேந்திரன் உட்பட 17 போராளிகள் பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.

ஆரியதாச என்ற அதிகாரியின் தலைமையில் சென்ற ஸ்ரீலங்கா கடற்படைப் படகு, புலிகளின் படகை வழிமறித்தது. புலிகளின் படகை கரையை நோக்கித் திருப்பும்படி கட்டளையிட்டது. புலிகள் தம்மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றே கடற்படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புலிகள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. யுத்தநிறுத்தம் அமுலில் இருந்த காரணத்தினாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவும், புலிகள் தாக்குதல் முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. ஸ்ரீலங்காப் படையினரின் கட்டளைக்குப் பணிந்து நடந்துகொண்டார்கள்.

படகில் இருந்து 17 புலி உறுப்பினர்களும், காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். புலிகள் தமது பாதுகாப்பிற்கென்று கொண்டு சென்ற சில துப்பாக்கிகளையும், படகில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகளையும் தவிர, படகில் வேறு ஆயுதங்கள் எதுவும் கடத்திச் செல்லப்படவில்லை. எனவே பாரதூரமாக எதுவும் நடைபெறமாட்டாது என்ற நம்பிக்கையில்தான் புலிகள் ஸ்ரீலங்காப் படையினருடன் புறப்பட முடிவுசெய்தார்கள். அத்தோடு, காங்கேசன்துறை தளத்தில் இந்தியப்படையினரும் நிலைகொண்டிருந்ததால், தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எதுவும் நடைபெறச் சந்தர்ப்பம் இல்லை என்றும் அவர்கள் எண்ணியிருந்தார்கள். புலிகளை அழைத்துச் சென்ற ஸ்ரீலங்கா கடற்படை அதிகாரியான ஆரியதாசவும், புலிகளுடன் மிகவும் நட்புடன்தான் நடந்துகொண்டார்.

காங்கேசன்துறை தளத்தில் புலிகள் தரையிறங்கியபோது, அங்கிருந்த ஒரு இராணுவவீரன் புலேந்திரனை அடையாளம் காணும்வரை நிலமை சுமுகமாகவே இருந்தது.

புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட தளபதி புலேந்திரன், சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர்.

சிறிது காலத்தின் முன்னர் ஹபரனை பிரதேசத்தில் உள்ள கித்துலொட்டுவ என்ற இடத்தில், இரண்டு பஸ்களில் பயணம் செய்துகொண்டிருந்த 126 சிங்கள மக்கள் ஆயுததாரிகளினால் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். அந்தச் சம்பவத்திற்கு புலிகளே காரணம் என்று ஸ்ரீலங்கா அரசு கூறியிருந்ததுடன், திருகோணமலைப் பிரதேசப் பொறுப்பாளர் புலேந்திரன் தலைமையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து புலேந்திரன் சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பயத்துடனேயே நோக்கப்பட்டுவந்தார்.

காங்கேசந்துறை துறைமுகத்தில் ஸ்ரீலங்காப் படையினரால் அழைத்துவரப்பட்ட 17 விடுதலைப் புலிகள் மத்தியில் புலேந்திரனும் இருந்ததை, ஒரு சிங்களச் சிப்பாய் அடையாளம் கண்டுவிட்டார். அதன் பின்னரே, தாங்கள் கரைக்கு அழைத்துவந்த நபர்களின் பெறுமதியை ஸ்ரீலங்கா கடற்படையினர் உணர்ந்து கொண்டார்கள்.

avalam_03.jpg

கைது உத்தரவு:

செய்தி கொழும்புக்குப் பறந்தது. கொழும்பில் இருந்து கடற்படையினருக்கு ஒரு உத்தரவு வந்தது. ~உடனடியாக படகில் வந்த 17 பேரையும் கைது செய்து, ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவு வந்தது. படகில் வந்த புலி உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். ஸ்ரீலங்கா இராணுவத்தின் வடபிராந்திய துணைக் கமாண்டர் பிரிகேடியர் ஜயரட்னா (பின்னாளில் இவர் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டு, 1988 அக்டோபரில் மரணம் அடைந்தார்) புலி உறுப்பினர்கள் 17 பேரையும் தனது பொறுப்பில் கொண்டு வந்தார்.

புலிகள் உட்பட ஈழப் போராளிகள் அனைவருக்கும் ஸ்ரீலங்கா அரசினால் ஏற்கனவே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததால், தாம் கைது செய்யப்பட்டதையோ, அல்லது தம்வசமிருந்த ஆயுதங்கள், சயனைட் குப்பிகள் என்பவை பறிமுதல் செய்யப்பட்தையோ புலிகள் ஆட்சேபிக்கவில்லை. தாங்கள் விரைவிலேயே விடுதலை செய்யப்பட்டுவிடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், புலிகள் முரண்டுபிடிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசிடம் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான உத்தரவு, பிரிகேடியர் ஜயரெட்னாவிற்கு வந்தது. ~கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை உடனடியாகவே கொழும்புக்கு அனுப்பி வைக்கும்படியும், அவர்களைக் கொழும்புக்கு கொண்டு வருவதற்கு ஒரு விஷேட விமானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்| அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் வரலாற்றிலும், ஈழத்தமிழர் வரலாற்றிலும் ஒரு பாரிய அனர்த்தம் இடம்பெற இருப்பதைக் கட்டியம் கூறுவது போன்று அந்த செய்தி அமைந்திருந்தது.

இந்தியாவின் வியட்னாம் என்று சரித்திரத்தில் குருதியினால் பொறிக்கப்பட்டுள்ள, புலிகளுடனான இந்தியாவின் யுத்தத்திற்கு வித்திட்ட அந்தச் சம்பவம், ஜே.ஆரின் விருப்பப்படியே நடைபெற்றது.

இந்த சம்பவம் பற்றி பின்நாட்களில் ஜே.ஆர். ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: நான் போடவேண்டிய குஸ்தி சண்டையை தான் போடுவதற்காக மத்தியஸ்தரான ராஜீவ் காந்தி கோதாவில் குதித்திருந்தார் என்று கிண்டலுடன் குறிப்பிட்டிருந்தார்.

புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையில் நீண்டகால விரோதத்திற்கு வித்திட்ட அந்தச் சம்பவத்தின் சுவையான, பரபரப்பான அதேவேளை மிகவும் வருந்தத்தக்க விடயங்களை அடுத்தவாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.

 

 

இரத்த ஆறு ஓடுவதற்கு காரணமான உத்தரவு (அவலங்களின் அத்தியாயங்கள்- 71) � நிராஜ் டேவிட்
0-300x225.jpg
 
 

ஸ்ரீலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 விடுதலைப் புலிப் போராளிகளையும், உடனடியாகவே பிரத்தியேக விமானத்தின் மூலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கும்படி, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கு கொழும்பில் இருந்து உத்தரவிடப்பட்டது.

அப்பொழுது ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியே இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

அப்பொழுது இந்திய- இலங்கை ஒப்பந்த்திற்கு எதிராக தென் பகுதியில் ஜே.வி.பி.யினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு ஏதுவாக, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள அத்துலத் முதலி எண்ணியிருந்தார்.

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு வந்து, தொலைக்காட்சி முன்பு அவர்களை தோன்ற வைத்து மலிவான ஒரு பிரச்சாரத்தை தேடிக்கொள்ளும் திட்டத்திலேயே லலித் அத்துலத் முதலி இவ்வாறான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

அக்காலத்தில் லலித் அத்துலத் முதலிக்கு சிங்கள மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்தது. அதுவும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வடமாராட்சியில் மேற்கொண்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, லலித் அத்துலத்முதலி சிங்கள மக்களின் ஒரு கதாநாயகனாகவே வலம்வந்தார்.

இந்தியப்படைகளின் வருகையைத் தொடர்ந்தே, லலித் அத்துலத் முதலியின் மவுசு கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது.

ஜே.வி.பியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், லலித், ஜே.ஆர். போன்றவர்களை கையாலாகாதவர்கள் என்று விமர்சித்து பிரச்சாரம் செய்தும் வந்ததால், விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் ஸ்ரீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது அந்தஸ்தை சிங்கள மக்கள் முன்பு உயர்த்திக்கொள்ள அவர் தீர்மானித்திருந்தார்.

அது ஒருபுறம் இருக்க, இந்தியாவையும், புலிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் புலிகள் கைது சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்வது ஜே.ஆர். இன் திட்டமாக இருந்தது. அதனால் இந்தப் பிரச்சனையை லலித் அத்துலத் முதலியின் போக்கிலேயே விட்டுவிடும் முடிவுக்கு ஜே.ஆர். வந்திருந்தார்.

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கும்படி கடுமையான உத்தரவொன்றை லலித் அத்துலத் முதலி, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கு அனுப்பிவைத்திருந்தார்.

புலிகள் அதிர்ச்சி:

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு செல்லும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரது திட்டம் வெளியானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் தலைமை அதிர்ச்சி அடைந்தது. மிகுந்த கோபமும் அடைந்தது.

காங்கேசன்துறை மற்றும் பலாலியில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினருக்கு பொறுப்பாக இருந்த இந்தியப் படை உயர் அதிகாரியான ஜெனரல் ரொட்ரிகஸ் அவர்களைச் சந்தித்த விடுதலைப் புலித் தலைவர்கள், ஸ்ரீலங்கா படையினால் கைது செய்யப்பட்டுள்ள தமது உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு இந்தியப் படைகளே பொறுப்பு என்று தெரிவித்தார்கள்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக தமது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தார்கள்.

அப்பொழுது இந்தியாவின் இராஜதந்திரிகள் புலிகளுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியப் படையின் சில அதிகாரிகள் புலிகள் மீது ஓரளவு அனுதாபம் கொண்டவர்களாகவே காணப்பட்டார்கள். பல அதிகாரிகள் புலி உறுப்பினர்களுடன் மிகவும் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார்கள்.

சில அதிகாரிகள் விடுதலைப்புலி தலைவர்களினது திருமணங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு புலிகளுடன் நட்புப் பாராட்டி வந்தார்கள். ஜெனரல் ரொட்ரிகசும், அப்படியான அதிகாரிகளில் ஒருவர். புலிகள் மீது ஓரளவு அன்பும், அனுதாபமும் கொண்டவர்.

கைது செய்யப்பட்டு, ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி முக்கியஸ்தர்களை மீட்டுவருவேன் என்று கூறி புறப்பட்டார் ஜெனரல் ரொட்ரிகஸ்.

ஸ்ரீலங்கா இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவைச் சந்தித்த இந்தியப் படை அதிகாரி, கைது செய்யப்பட்ட புலிகளை இந்தியப் படையிடம் கையளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஏற்கனவே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

அதற்குப் பதிலளித்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, ~ஏற்கனவே புரிந்திருந்த குற்றச் செயல்களுக்கே பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்றும், புதிதாக இவர்கள் புரிந்துள்ள ஆயுதக் கடத்தல் குற்றத்திற்கு அந்தப் பொது மன்னிப்பு செல்லுபடியாகாது என்றும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலி முக்கியஸ்தர்களை கொழும்புக்கு கொண்டு செல்வதால் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றி எடுத்துரைத்த ரொட்ரிகஸ், இதனை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு ஸ்ரீலங்கா படை அதிகாரியை கேட்டுக்கொண்டார்.

அதற்கு பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, ~தான் ஒரு இராணுவ அதிகாரி என்றும் தனக்கு இடப்படும் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதே தனது கடமை என்றும் தெரிவித்து, அவருக்கு கொழும்பில் இருந்து கிடைக்கப்பட்டிருந்த கடுமையான உத்தரவு பற்றியும் தெரிவித்தார்.

இறுதி உத்தரவு:

இந்த இரண்டு அதிகாரிகளிடையேயும் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக, புலிகள்-இந்திய யுத்தம் பற்றி பின்நாட்களில் ஆய்வுகள் மேற்கொண்ட சுஜீஸ்வர சேனாதீர என்ற சிங்கள எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் படை அதிகாரி ரொட்ரிகஸ் இற்கும் ஸ்ரீலங்காப் படை அதிகாரி பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கும் இடையில் மிகவும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் பரிமாறப்பட்டன.

ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தியப் படை அதிகாரி இவ்வாறு தெரிவித்திருந்தார்:

நான் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் உங்களது விமானம் செல்வதற்கு அனுமதிக்கமாட்டேன். இந்தியப்படையின் கவச வாகனங்களை விமான ஓடு தளத்தில் நிறுத்திவைப்பேன் என்று எச்சரித்தார்.

அதற்கு பதிலளித்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, ~அப்படி நீங்கள் நடந்து கொண்டால், அந்த கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும்படி நான் எனது படைவீரர்களுக்கு உத்தரவிட வேண்டி இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இறுதியில், தனது குரலை தாழ்த்திய இந்திய அதிகாரி ரொட்ரிகஸ், ஒரு வேண்டுகோளை வினயமாக விடுத்தார்.

புலி உறுப்பினர்களை விமானத்தில் ஏற்றி அனுப்புவதை 12 மணி நேரம் தாமதிக்கும்படியும், புதுடில்லியில் இருக்கும் இந்தியத் தூதர் தீட்ஷித் மறுநாள் கொழும்பு வந்ததும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டுவிடலாம் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன கொழும்பை மீண்டும் தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினார்.

கொழும்பில் இருந்து உறுதியான ஒரு பதில் வந்தது.

இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் கைதிகளை விமானத்தில் ஏற்றி அனுப்புவதற்கு உங்களால் முடியாவிட்டால், உங்களது பொறுப்புக்களை உங்களுக்கு அடுத்ததாக உள்ள அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு, கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்புக்கு வந்து சேருங்கள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு இரத்த ஆறு ஓடுவதற்கு அந்த உத்தரவு காரணமாக இருந்தது.

தொடரும்…

 

சயனைட் குப்பிகளை அனுப்பி வைக்கும்படி பிரபாகரனிடம் கோரிய தளபதிகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 72) – நிராஜ் டேவிட்
 
14569_520883221262905_1272812803_n-150x1குமரப்பா வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் அயர்லாந்து நாட்டில் கடற்-பொறியியல் கற்கைகளை மேற்கொண்டவர். ஐரோப்பா முழுவதும் வலம் வந்தவர். மேற்குலக நாடொன்றிலேயே நிரந்தர வதிவிட வசதி பெற்று தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் பலவற்றை பெற்றிருந்தவர்.

70களில் ஈழ விடுதலை தொடர்பான சிந்தனைகளை தனதாகக் கொண்டு செயற்பட ஆரம்பித்திருந்த குமரப்பா, 1983ம் ஆண்டு இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலைகளைத் தொடர்ந்து, ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்.

இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தடைந்த குமரப்பா, மட்டக்களப்பு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு அம்பிளாந்துறை மற்றும் படுவான்கரை பிரதேசத்தில்; தங்கியிருந்து, மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருந்தார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த ரஜனி என்பவரை காதலித்து மணம் முடித்தார். இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொர்ந்து யாழ்ப்பாணத்தில் இவரது திருமணம் நடைபெற்றது.

இவரது திருமணத்திற்கு முதற் சாட்சியாக அன்டன் பாலசிங்கம் கையொப்பமிட்டிருந்திருந்தார். இவரது திருமணச் சடங்கில் பல இந்தியப் படை உயரதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குமரப்பாவின் திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் புலேந்திரனின் திருமணம் நடைபெற்றிருந்தது.

தமிழ் நாடு திருப்போரூர் முருகன் கோவிலில் சுபா என்ற பெண்ணை அவர் மணம் முடித்திருந்தார். (இந்த தமிழ்நாடு திருப்போரூர் முருகன் கோவிலில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கும், மதிவதனி அவர்களுக்கும் 01.10.1984 அன்று திருமணம் நடைபெற்றது.)

இந்த இரண்டு தளபதிகளுமே திருமணம் முடித்து இரண்டு மாதங்களைக்கூட கடந்துவிடாத நிலையில், இப்படியான ஒரு சோதனையைச் சந்தித்திருந்தார்கள்.

குமரப்பா புலேந்திரன் உட்பட கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலி உறுப்பினர்களையும் சந்திக்க, புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் புறப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் இரண்டு தளபதிகளும் இந்தியப் படை அதிகாரிகளுக்கு நன்கு பரிட்சயமானவர்கள் என்பதால், உடனடியாக அவர்களுக்கு ஏதாவது ஆபத்துக்கள் இடம்பெற்றுவிடச் சந்தர்ப்பம் எதுவும் இல்லை என்ற எண்ணத்துடன், ஓரளவு ஆசுவாசப்பட்ட மனதுடன்தான் அவர்களைப் பார்க்க திரு அன்டன் பாலசிங்கம் புறப்பட்டார்.

ஆனால் நிலமை நினைத்த அளவிற்கு சுமுகமாக இல்லை என்பதை அங்கு அவர் சென்றதும் உணர்ந்துகொண்டார்.

துப்பாக்கிகளை நீட்டியபடி சிங்கள இராணுவம் மூர்க்கமாகச் சூழ்ந்து நிற்க, விடுதலைப் புலிகள் அமைப்பின் மறவர்கள் குற்றவாளிகள் போன்று வைக்கப்பட்டிருந்தது, திரு அன்டன் பாலசிங்கத்தை மிகவும் கலவரப்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிப் போராளிகளை விசாரணைக்காக உடனடியாக கொழும்புக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவு பற்றி, பாலசிங்கத்திற்கு எடுத்துக் கூறப்பட்டது.

மிகவும் சினமடைந்த பாலசிங்கம், இது பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அறிவித்தார்.

புலிகளின் தலைவரது ஆலோசனையின் பெயரில் அவர் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித்தைத் தொடர்பு கொண்டு, தீட்ஷித் தனது இராஜதந்திர வல்லாண்மையைப் பயன்படுத்தி, கைதுசெய்யப்பட்டிருக்கும் 17 போராளிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

எமது போராளிகளில் சிலர் மூத்த தளபதிகளாகவும், போர்க்கள நாயகர்களாகவும் இருப்பதால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு நேரும் பட்சத்தில், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் தீட்ஷித்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

போராளிகளை விடுவிக்க தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக, தீட்ஷித் பாலசிங்கம் அவர்களுக்கு உறுதிமொழி அளித்தார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் விசாரணைகள்:

விசாரணை செய்வதற்காகவே விடுதலைப் புலி உறுப்பினர்களை தாம் கொழும்புக்குக் கொண்டு செல்லப்போவதாக ஸ்ரீலங்கா அரசு அறிவித்திருந்தது.

ஸ்ரீலங்கா அரசின் பாஷையில் விசாரணை  என்ற வார்த்தைக்கு, சித்திரவதை என்றுதான் அர்த்தம்.

ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் நேரடி கண்காணிப்பில் செயற்பட்டு வந்த ஸ்ரீலங்காவின் புலனாய்வுப் பிரிவினரின் சித்திரவதைகள் அக்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம்.

வகைவகையான சித்திரவதை முறைகளை, நுணுக்கமாக மேற்கொள்ளுவதில் ஸ்ரீலங்காப் புலனாய்வுப் பிரிவினர் மிகவும் கைதேர்ந்தவர்கள்.

ஸ்ரீலங்காப் புலனாய்வு பிரிவினர் அக்காலங்களில் தமிழ் இளைஞர்கள் மீது மேற்கொண்டிருந்த சித்திரவதை விசாரணை முறைகள் பற்றி எழுதுவதானால், இன்றும் ஐந்து அத்தியாயங்கள் அதற்கென தனியாக ஒதுக்கவேண்டும்.

கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து, விசாரித்து, அவர்களை தொலைக் காட்சியின் முன்பு தோன்றச் செய்து, தமிழ் இயக்கங்கள் பற்றிய மாற்றுக் கருத்துக்களை அவர்கள் வாயாலேயே கூறவைக்கும் நடைமுறையை அக்காலத்தில் ஸ்ரீலங்காப் படையினர் கடைப்பிடித்து வந்தார்கள்.

மிகவும் மோசமான சித்திரவதையை அனுபவித்த தமிழ் இளைஞர்கள், வலி தாங்க முடியாமல், ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவனர் கூறுவதையெல்லாம் தொலைக்காட்சி முன்பு ஒப்புவிப்பார்கள். இந்த தொலைக் காட்சி ஒலிப்பதிவு பின்னர் ரூபவாகினி ஊடாக காண்பிக்கப்படும்.

தமிழ் இயக்கங்களுக்கு எதிரான பிரச்சாரமாகவும், சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடனும், இதுபோன்ற தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்தி வந்தது.

கைதுசெய்யப்பட்ட 17 விடுதலைப் புலி உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைத்துச் செல்ல லலித் அத்துலத்முதலி விரும்பியதற்கு இதுவே பிரதான காரணம். விசாரணை என்ற பெயரில் இந்தப் போராளிகளைச் சித்தரவதை செய்து, தொலைக்காட்சி முன்பு அவர்களை நிறுத்தி, புலிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய எதையாவது அவர்கள் வாயால் கூறவைப்பதே, அத்துலத் முதலியின் நோக்கமாக இருந்தது.

கைதுசெய்யப்பட்ட நிலையில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களும் இதனை நன்கு உணர்ந்திருந்தார்கள்.

தம்மைச் சந்திக்க வந்த அன்டன் பாலசிங்கம் அவர்களிடம் தமது தீர்மானத்தைத் தெரிவித்தார்கள். பலவிதமான விவாதங்களின் பின்னர், தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அன்டன் பாலசிங்கம் ஊடாக அவர்கள் சில கடிதங்களை அனுப்பிவைத்தார்கள்.

போராளிகள் அனுப்பிவைத்த கடிதங்கள்:

அவர்களது கடிதங்களைப் படித்த தலைவர் வே.பிரபாகரன் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். கடுஞ்சீற்றமும் கொண்டார்.

ஏகமனதாகவும், இரகசியமாகவும் அந்தப் போராளிகள் எடுத்துக் கொண்டிருந்த முடிவை, அவர்களது கடிதங்கள் புலிகளின் தலைவருக்கு எடுத்துக் கூறியிருந்தன.

விசாரணை என்ற போர்வையில் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைக்கும், அனேகமாக மரணத்திற்கும், சிங்கள அரசால் தாம் உள்ளாக்கப்படுவதைக் காட்டிலும், விடுதலைப் புலிகளின் மரபுப்படி தமது உயிரை தாமே மாய்த்துக்கொள்ள தாம் விரும்புவதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அந்தக் கடிதங்களின் மூலம் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

சிங்கள இனவாத அரசின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து கொடுத்தால், அது தங்கள் எதிரிக்கு எதிராக நடாத்தும் தற்காப்புப் போரின் நீண்ட, உறுதியான வரலாற்றைக் கறைபடுத்திவிடும் என்றும், அதற்கு நேரெதிராக, கௌரவமான மரணத்தைத் தழுவத் தாம் விரும்புவதாகவும், அக்கடிதத்தில் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

சயனைட் குப்பிகளை அனுப்பி வைக்கும்படியும், அக்கடிதத்தில் அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.

தொடரும்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு இந்தியா செய்த மிகப் பெரிய துரோகம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 73) – நிராஜ் டேவிட்

genocide2-150x150.jpg

விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்து வந்த பூசல்கள் வெளிப்படையாக வெடிப்பதற்கும், இந்தியா தனது சரித்திரத்தில் என்றுமே மறக்கமுடியாத ஒரு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் காரணமாக இருந்த சம்பவம் என்று சரித்திரவியலாளர்களால் குறிப்பிடப்படுகின்ற அந்தப் ஷபடகுச் சம்பவம்|, உண்மையிலேயே இந்தியாவின் ஆசீர்வாதத்துடன்தான் நடைபெற்றிருந்தது.

குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்காவின் கடற்படையால் கைதுசெய்யப்படுவதற்கும், இறுதியில் அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொள்வதற்கும், ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்றவர்களே காரணமென்று என்னதான் குற்றம் சுமத்தினாலும், அடிப்படையில் இந்தச் சம்பவம் தொடர்பான அத்தனை அசம்பாவிதங்களுக்கும் இந்தியத் தரப்பினரே பிரதான காரணமாக இருந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.

முதலாவதாக 3.10.1987ம் திகதி அன்று பருத்தித்துறைக் கடலில் புலிகளின் படகொன்று ஆயுதங்களைக் கடத்துவதாக ஸ்ரீலங்காவின் கடற்படையினருக்கு இந்தியாவே தகவலை வழங்கியிருந்தது.

ஸ்ரீலங்கா கடற்படை கைப்பற்றிய படகில் இருந்த விடுதலைப் புலி தளபதிகள் தமது சொந்தப் பாதுகாப்புக்குத் தேவையான சிறிய ஆயுதங்களைத் தவிர, வேறு ஆயுதங்கள் எதுவும் அந்தப் படகில் கடத்தப்படவில்லை என்பதை இந்தியா வெளியிடவும் இல்லை, அதைக் காரணம் காண்பித்து கைதான புலிகளை விடுவிக்க முயற்சிக்கவும் இல்லை.

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை கொழும்புக்கு கொண்டு செல்லும் ஸ்ரீலங்காப் படைகளின் முயற்சிகளை இந்தியா தனது இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகித்தோ அல்லது தனது படைபலத்தைப் பயன்படுத்தியோ இலகுவாகத் தடுத்திருக்கமுடியும். ஆனால் இந்தியா அதனைத் செய்வதில் அக்கறை காண்பிக்கவில்லை.

இந்தியாவின் இந்தச் செய்கையானது, இந்தியாவை நம்பி தமது அயுதங்களை ஒப்படைத்திருந்த விடுதலைப் புலிகளுக்கு இந்தியா இழைத்த மிகப் பெரிய துரோகம் என்றே கூறவேண்டும்.

இந்தியப்படை அதிகாரியின் ஆதங்கம்:

ஸ்ரீலங்காப் படைகளின் காவலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளை விடுவிப்பதில், இந்தியப் படையினருக்கு இடையேயும், இந்திய அதிகாரிகளுக்கு இடையேயும் பாரிய குழருபடிகள் காணப்பட்ட விடயம் பின்நாட்களிலேயே வெளிவந்தன. விடுதலைப் புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்ட சில இந்திய அதிகாரிகளும், இத்தியாவின் அரசியல் உயர்மட்டமும், புலிகள் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட இருந்த அந்தச் சந்தர்ப்பத்தை ஒருவகையில் தமது எண்ணங்களுக்குச்; சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தலைப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிகாக்கும் படைக்கு முதன்முதலாக தலமை தாங்கிவந்தவர், இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் அவர்கள்.

இந்தப் ஷபடகுச் சம்பவத்தில்| நேரடியாக பங்குபற்றியவரும் அவரே. இராணுவ சேவையில் இருந்து அவர் இளைப்பாறிய பின்னர், ஜோசி ஜோசப் என்ற பிரபல இந்திய ஊடகவியலாளருக்கு அவர் ஒரு செவ்வியை வழங்கியிருந்தார். அந்தச் செவ்வியில், புலேந்திரன், குமரப்பா போன்றவர்களின் மரணம் தொடர்பாக, இந்தியா கடைப்பிடித்திருந்த அனுகுமுறைகள் பற்றி வெளிப்படுத்தியிருந்தார்.

இணையத் தளம் ஒன்றில் வெளியான அவரது செவ்வி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பிட்ட அந்தப் படகுச் சம்பவத்தில் இந்தியா விட்ட தவறுகள் பல அவரது செவ்வியில் வெளிவந்தன. இந்தியாவின் உண்மையான முகத்தையும், ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா செய்த துரோகங்களையும் வெளிப்படுத்துவதாக அந்தச் செவ்வி அமைந்திருந்தது.

அவர் தனது செவ்வியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

ஷஷஎன்னைச் சந்தித்த மாத்தையா ஒரு விடயத்தை உறுதியாகத் தெரிவித்தார். ஷஷஜெனரல், எப்படியென்றாலும் ஸ்ரீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள எமது உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். என்ன விலை கொடுத்தாவது அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். இந்திய அமைதிகாக்கும் படை எங்களை காப்பாற்றுவதற்காகவே இங்கு வந்துள்ளது. எனவே எமது உறுப்பினர் கொழும்பு கொண்டு செல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தும் தார்மீகக் கடமை இந்தியப்படைகளுக்கே உள்ளது. கொழும்புக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவார்கள்|| என்று மாத்தையா என்னிடம் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் அந்த இடத்தில் நல்லதொரு ஷதமாஷ்| நிலமை காணப்பட்டது. கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள்- அவர்களைச் சூழ இந்தியப்படைகள்ளூ அவர்களைச் சூழ்ந்து ஸ்ரீலங்காப் படைகள்ளூ மீண்டும் ஸ்ரீலங்காப் படைகளைச் சூழ இந்தியப்படைகள்ளூ இவை அனைவரையும் சூழ ஸ்ரீலங்கா இராணுவத்தின் கவச வாகனங்கள்.

இந்த இடத்தில் ஸ்ரீலங்காப் படைகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் ஒரு சண்டை மூழுவதற்கான ஏதுநிலையும் உருவாகி இருந்தது.

ஸ்ரீலங்கா படைகளுக்கு பொறுப்பாக இருந்த பிரிகேட் கொமாண்டருக்கு கடுமையான உத்தரவு அவரது மேலிடத்தினால் வழங்கப்பட்டிருந்தது. கைதிகளை கொழும்புக்கு அழைத்துவர முடியாவிட்டால் அந்த அதிகாரியை வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு கொழும்புக்கு திரும்பும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை எனக்கும் எனது மேலிடத்தினால் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. திருகோணமலைக்குச் சென்று மேலதிகமான ஸ்ரீலங்காவின் துருப்புக்கள் யாழ்பாணத்திற்கு அனுப்பப்படுவதைத் தடுக்கும்படி எனக்கு பணிப்புரை கிடைத்திருந்தது.

அதன்படி நான் திருகோணமலையை அடைந்து திருகோணமலை விமான நிலயத்தையும், கட்டுப்பாட்டுக் கோபுரத்தையும் எமது கொமாண்டோக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தோம். இது ஸ்ரீலங்கா படையினருக்கும் எங்களுக்கும் இடையிலான வேற்றுமை உணர்வை மேலும் அதிகரிக்கும்படியாக இருந்தது.

இந்த நேரத்தில்; விடுமுறையில் புதுடில்லி சென்றிருந்த இந்தியத் தூதுவர் தீட்சித் அவர்களை, உடனடியாக கொழும்பு திரும்பி, கைதுசெய்யப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களது விடுதலை விடயத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கோரி இருந்தேன்.

திபீந்தர் சிங் அவர்களும் கொழும்புக்குச் சென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனாலும் இதுபோன்றதொரு விடயத்தைக் கையாளும் அளவிற்கு அவர் ஒரு உறுதியான மனிதர் கிடையாது என்பது எனக்குத் தெரியும்.

நான் திருகோணமலை விமானத் தளத்தை பாதுகாக்கும் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்களை விமானத்தின் மூலம் கொழும்புக்குக் கொண்டு செல்ல இருப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக எமது படைகள் யாழ் விமானப் பாதையிலும் நிலைகொண்டிருந்தார்கள்.

திபீந்தர் சிங், தீட்சித் உடன் வேறு சில உயரதிகாரிகளும் திருகோணமலை விமானத்தளத்தில் வந்திறங்கினார்கள். அவர்களால் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை சமாளிக்கமுடியவில்லை என்ற விடயத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அவர்களுடன் ஒப்பிடும் போது ஜெயவர்த்தனா மிகவும் கெட்டிக்காரராகவே இருந்தார்.

புலிகளை ஒப்படைத்துவிடுங்கள்

மறுநாள் அங்கு வந்த திபீந்தர் சிங் எனக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார். ஷஷபுலிகளை இலங்கைப் படையினரிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்கள் விரும்பிய எதனையாவது செய்து கொள்ளட்டும். தற்பொழுது நாங்கள் ஸ்ரீலங்கா அதிகாரிகள் சிலருடன் சென்று தேனீர் அருந்தலாம்|| என்று என்னை அழைத்தார்.

அவ்வாறே அந்த ஸ்ரீலங்காவின் படைத்தளபதிகளுடன் சென்று நாங்கள் தேனீர் அருந்தினோம்.

2 மணியளவில் புது டில்லியில் இருந்து எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. ஷஷஅமைதிகாக்கும் படை அதிகாரி எதற்காக ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பு தொடர்பான விடயங்களில் தலையிட்டுக்கொண்டிருக்கின்றார்?|| என்று அந்தச் செய்தியில் கேட்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மெட்ராஸில் உள்ள எமது தலைமைக் காரியாலயத்தில் இருந்து எனக்கு மற்றொரு உத்தரவு வந்தது. ஷஷயாழ்ப்பானத்தில் கைதிகள் விடயத்தில் நீங்கள் மேற்கொண்டுள்ள முற்றுகையை விலக்கிக் கொள்ளுங்கள். ஸ்ரீலங்காப் படைகள் அவர்கள் இஷ்டப்படி எதைவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்.|| என்பதே அந்த உத்தரவு.

எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. நான் திருகோண மலையில் இருந்தேன். எனது சக அதிகாரிகள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். அங்கு கைதுசெய்யப்பட்ட நிலையில் இருந்த புலி உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் ஏற்கனவே செய்திருந்தோம்.

குமரப்பா, புலேந்திரன் இருவருமே எனக்கு நன்கு பரிட்சயமானவர்கள். புலேந்திரன் பலதடவைகள் என்னை தனது வாகனத்தில் அழைத்துச்சென்று யாழ்பாணத்தை சுற்றிக்காண்பித்திருந்தார். மிகவும் அன்புடன் பழகக்கூடியவர். இவர்கள் கைதுசெய்யப்பட்டு இந்தியப்படையினரின் பாதுகாப்புடன் இருக்கும் போது என்னைச் சந்தித்த பிரிகேடியர் செனிவரட்ன, புலேந்திரனை மட்டுமாவது தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டிருந்தார். கொலைக் குற்றச்சாட்டுகளுக்காக புலேந்திரன் ஸ்ரீலங்காப் படையினரால் மிகவும் வேண்டப்பட்ட நபர். அதற்கு நான் செனிவரெட்னவிடம், ஷஷபுலேந்திரனை உங்களிடம் ஒப்படைக்க முடியாது. புலேந்திரனை நான் விரைவில் எனது ஜீப்பில் எனது அருகில் அமர்த்தி அழைத்துச் செல்வதை நீங்கள் பார்ப்பீர்கள்|| என்று தெரிவித்திருந்தேன்.

ஆனால் எனது தலைமைக் கரியாலயத்தில் இருந்து எனக்குக் கிடைக்கப்பெற்ற உத்தரவு என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது.

இறுதியில் எனக்கு மேலிடத்தில் இருந்து கிடைத்த உத்தரவுப்படி நாங்கள் எங்கள் படைகள் அனைத்தையும் விலக்கினோம். தமது கடமைகளை ஸ்ரீலங்கா படையினர் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்தே புலிகள் ஷசயனைட்டை| உட்கொண்டார்கள். இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையேயான புரிந்துணர்வில் மிகவும் பிளவை ஏற்படுத்திய சம்பவமாக இது மாறி இருந்தது. அமைதிகாக்கவெனச் சென்ற எம்மால் அனியாயமாகப் பறிக்கப்பட்ட அந்த இளம் உயிர்களைக் காப்பாற்றமுடியாமல் போயிருந்தது. அதற்கு தீட்சித் அவர்களே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அந்த புலி உறுப்பினர்களைக் காப்பாற்றுவது ஒரு பெரிய விடயமாக இருக்கவில்லை. சில கவச வாகனங்களை வைத்தே அந்தப் போராளிகளை என்னால் மீட்டிருக்க முடியும். ஸ்ரீலங்காப் படைகளால் அதனைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்திருக்க முடியாது. இத்தனை பிரச்சினைகள் ஏற்படாமல் அந்த நிலமையை சுமுகமாக்கி இருக்கமுடியும். ஆனால் அதனைச் செய்வதற்கு எனக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கான முழுப் பொறுப்பையும், இந்திய இராஜதந்திரிகளும், இந்திய இராணுவத் தலைமையகமுமே ஏற்கவேண்டும்.

குறிப்பாக இந்தியத் தூதுவர் தீட்சித்தே இந்த அனர்த்தத்திற்குப் பிரதான காரணம் என்று நான் கூறுவேன். இலங்கைப் பிரச்சினையில் ராஜீவ் காந்தியை வழி நடத்தியவர் தீட்சித்தான். அவர் நினைத்திருந்தால் நிச்சயம் இந்தப் போராளிகளைக் காப்பாற்றி அனர்த்தங்களைத் தடுத்திருக்கமுடியும். அவரது ஆனவமே அனைத்தும் அனர்த்தமாக மாறக் காரணமாக அமைந்திருந்தது.||

இவ்வாறு இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

தொடரும்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் கொடுத்த சயனைட் (அவலங்களின் அத்தியாயங்கள்- 74) – நிராஜ் டேவிட்

ew021-150x150.jpg

கைது செய்யப்பட்டிருந்த 17 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் இந்தியப்படையினர் அதுவரை வழங்கிவந்த பாதுகாப்பை உடனடியாக விலக்கி;கொள்ளுமாறு புது டில்லி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்தியப் படை ஜவான்கள் அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தார்கள்.

புலி உறுப்பினர்களின் பாதுகாப்பைப் பொறுப்பேற்ற ஸ்ரீலங்காப் படையினர், அவர்களை உடனடியாகக் கொழும்புக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.

விமானத்தை தயார் நிலையில் வைத்துவிட்டு, புலி உறுப்பினர்களை அழைத்துச் செல்ல விரைந்த ஸ்ரீலங்காப் படை உயரதிகாரி பிரிகேடியர் ஜயரெட்னவிற்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. கைதுசெய்யப்பட்டிருந்த 17 புலி உறுப்பினர்களும் தமது கைகளில் ஷசயனைட்| குப்பிகளை வைத்திருந்தார்கள். தாம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டால், தாம் ஷசயனைட்டை| உட்கொள்ளப்போவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

பிரிகேடியருக்கு இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஷபுலிகளின் கைகளில் திடீரென்று எங்கிருந்து ஷசயனைட்| குப்பிகள் முளைத்தன என்பது பிரிகேடியருக்கு புரியாமல் இருந்தது.

புலி உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், ஷசயனைட்டுக்கள்| என்பன படையினரால் அகற்றப்பட்டிருந்தன. அப்படி இருக்க தற்பொழுது புலிகள் எங்கிருந்த இந்த சயனைட்டுக்களைப் பெற்றிருந்தார்கள் என்பது, இலங்கைப் படை அதிகாரிக்கு விடை காண முடியாத கேள்வியாகவே இருந்தது.

பிரபாகரன் கொடுத்த சயனைட்

இந்தப் போரளிகளுக்கான ஷசயனைட்| குப்பிகளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களே அனுப்பிவைத்திருந்தார்.

தாம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, எதிரியினால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதை விட, புலிகளின் மரபுப்படி தமது உயிரை தாமே மாய்த்துக் கொள்ள அனுமதிக்குமாறு, கைதுசெய்யப்பட்ட நிலையில் இருந்த 17 விடுதலைப் புலி உறுப்பிர்களும்; புலிகளின் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். தமது விருப்பத்தை கடிதங்கள் மூலம் பிரபாகரன் அவர்களிடம் அனுப்பிவைத்திருந்தார்கள். அன்டன் பாலசிங்கம் கொண்டுவந்திருந்த அவர்களது கடிதங்களைப் படித்த புலிகளின் தலைவர் பெரும் சினம் கொண்டார்.

தடுப்புக் காவலில் உள்ள தமது போராளிகளின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவது தனது கடமை என்று அவர் உணர்ந்தார்.

முக்கிய தளபதிகளுடன் கலந்தாலேசித்துவிட்டு ஒரு முடிவிற்கு வந்தார்.

தனது கழுத்தில் இருந்த ஷசயனைட்| குப்பியைக் களட்டி மாத்தையாவிடம் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து அங்கு இருந்த மற்றய தளபதிகளும் தங்கள் கழுத்தில் இருந்த சயனைட் குப்பிகளை களட்டிக் கொடுத்தார்கள். கனத்த மனங்களுடனேயே அவர்கள் இதனைச் செய்தார்கள்.

அந்த ஷசயனைட்| குப்பிகளை, மாத்தையாவும், அன்டன் பாலசிங்கமும் தமது கழுத்துக்களில் மாட்டிக்கொண்டு, கைதுசெய்யப்பட்டிருந்த 17 விடுதலைப் புலி உறுப்பினர்களையும் சந்திக்கப் புறப்பட்டார்கள். தயக்கத்தோடும், மனமின்றியும் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.

கைது செய்யப்பட்ட நிலையில் இருந்த புலி உறுப்பினர்களைச் சந்தித்த அவர்கள் ஷசயனைட்டுக்களை| இரகசியமாக ஒப்படைத்தார்கள்.

குமரப்பா தனது மனைவிக்கு கூறும்படி சில செய்திகளை தெரிவித்தார்.

குமரப்பா திருமணம் முடித்த ஒரு மாதமே ஆகியிருந்தது.

புலேந்திரனும் தனது மனைவிக்கு சில செய்திகளை தெரிவிக்கும்படி கூறியிருந்தார்.

திருமணமாகி இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு தந்தையாகி இருந்த கரன், தனது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஆவலை வெளியிட்டார்.

அன்டன் பாலசிங்கமும், மாத்தையாவும் அந்த 17 போராளிகளையும் விட்டுப் பிரிய மனமில்லாது, அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

பாயத் தயாரான பிரிகேடியர்:

1987ம் ஆண்டு அக்டோபர் 5ம் திகதி, ஸ்ரீலங்காப் படை அதிகாரி பிரிகேடியர் ஜெயரெட்ன, பலாலி தளத்தில் இருந்த தனது படைவீரர்களை திரட்டினார். அவர்களுள் நல்ல திடகாத்திரமாக இருந்த 34 படைவீரர்களை அவர் தேர்ந்தெடுத்தார்.

புலிகள் ஷசயனைட்| உட்கொள்வதைத் தடுப்பதே அவரது நோக்கமாக இருந்தது. தேர்ந்தெடுத்த 34 படைவீரர்களுக்கும் கடுமையான உத்தரவுகளை வழங்கினார்.

இரண்டு இராணுவ வீரர்கள் – ஒரு புலிப் போராளியை சமாளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்களை வகுத்தார்.

ஷசயனைட்| பற்றியும், அதனை எவ்வாறு புலிகள் உட்கொள்வார்கள் என்றும், அதனை எப்படித் தடுப்பது என்பது பற்றியும் விளக்கம் அளித்தார்.

புலிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையினுள், எந்த வாசல் வழியாக உள்நுழைவது, யார்யார் எவ்வாறு நடந்துகொள்வது, ஒவ்வவொரு படைவீரரும் எந்தெந்த புலி உறுப்பினரை கைப்பற்றுவது என்றெல்லாம் திட்டம் தீட்டப்பட்டது. ஓரிரு முறை ஒத்திகையும் பார்க்கப்பட்டது.

புலிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகே சகல வசதிகளுடனும் கூடிய மூன்று முதலுதவிக் கூடங்கள் அவசரஅவசரமாக அமைக்கப்பட்டன. திறமையான வைத்திய நிபுணர்கள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டார்கள். அம்புலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. உட்கொண்ட நஞ்சை வயிற்றில் இருந்து வெளியேற்றத் தேவையான பம்புக்கள், உபகரனங்கள், மருந்துகள் சகலமும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

கடைசியில் படையினர் நடவடிக்கையில் இறங்கினார்கள்.

திடீரென்று புலிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறையினுள் பல முனைகளில் இருந்தும் பாய்ச்சல் நடத்தினார்கள்.

ஆனால் அதேவேளை புலி உறுப்பினர்கள் 17 பேரும் சயனைட்டை உட்கொண்டு விட்டிருந்தார்கள்.

புலேந்திரன், குமரப்பா உட்பட ஒன்பது போரளிகள் அந்த இடத்திலேயே மரணம் அடைந்திருந்தார்கள். நான்கு போராளிகள் வைத்திய முகாமில் மரணம் அடைந்தார்கள். மிகுந்த போராட்டத்தின் பின்னர் நால்வரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது.

விடுதலைப் புலிகளின் சரித்திரத்தில் மட்டுமல்ல, ஸ்ரீலங்காவின் சரித்திரத்திலும், ஏன் இந்தியாவின் சரித்திரத்திலும் கூட மிகவும் மோசமான விழைவுகளை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக இந்தச் சம்பவம் அமைந்திருந்தது.

இந்தியா ஈழத்தமிழர்களைக் காப்பாற்றும் என்பதில் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் இந்தச் சம்பவம் சிதறடித்தது.

எந்த ஒரு நிர்ப்பந்தங்களுக்கும் இனிப் பணிந்து பயனில்லை என்று, இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகளை எண்ணவைத்தது.

தமிழ் மக்களுக்கு இப்படி ஒரு சோகத்தைத் தந்த ஸ்ரீலங்காவிற்கும், அதற்கு ஆசீர்வாதம் வழங்கியிருந்த இந்தியாவிற்கும் ஒரு பாடத்தைப் படிப்பிக்கவேண்டும் என்று புலிகளை நினைக்கவைத்தது.

ஸ்ரீலங்கையின் வரலாற்றிலும், இந்தியாவின் வரலாற்றிலும், தமிழ் மக்களின் வரலாற்றிலும் என்றுமே மறக்கமுடியாத நிகழ்வுகள் அடுத்த சில நாட்களில் இடம்பெற ஆரம்பித்தன.

தொடரும்..

 

புலிப் போராளிகளின் கூட்டுத் தற்கொலை (அவலங்களின் அத்தியாயங்கள்- 75) – நிராஜ் டேவிட்
  • by admin
  • August 8, 2013

395265_3346319982951_1417337913_33375402

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள் சயனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, தமிழீழம் முழுவதும் மிக இறுக்கமான ஒரு சூழ்நிலை உருவானது.

துக்கம், கோபம், ஆவேசம், பயம் என்று பலவித உணர்வுகள் கலந்த நிலையில் தமிழ் மக்கள் காணப்பட்டார்கள்.

சுதந்திர வேட்கை

இந்த 12 போராளிகளின் மரணம் பற்றியும், அது தொடர்பான மற்றய நிகழ்வுகள் பற்றியும் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் திரு.அன்டன் பாலசிங்கம் அவர்களின் மனைவி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள், ‘சுதந்திர வேட்கை’ என்ற அவரது சுயசரிதையில் மிகவும் உணர்வு பூர்வமாக, அழகாக விபரித்திருந்தார்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற காலத்தில் அவர் யாழ்பாணம் வல்வெட்டித் துறையில் தங்கியிருந்தார். மரணமடைந்த குமரப்பா, புலேந்திரன் போன்றவர்களின் குடும்பங்களுடன் அன்னியோன்யமான நெருக்கத்தைக் கொண்டிருந்தார். இந்தச் சம்பவம் பற்றி அவர் தனது நூலில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஷஷவிடுதலைப் புலிப் போராளிகளின் கூட்டுத் தற்கொலைச் செய்தி பொதுமக்களுக்கும், எனக்கும் அறிவிக்கப்பட்டது. ஒக்டோபர் 5ம் திகதி மாலையிலேயே வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலித் தளத்தில் இருந்து ‘வாக்கி ரோக்கி’ மூலம் செய்தி அறிவிக்கப்பட்டது. அழுத்தம் திருத்தமாக, ஆறுதலாக பெயர்கள் படிக்கப்பட்டன: ‘குமரப்பா போய்விட்டார்;…, புலேந்தி அம்மான் போய்விட்டார்…’ அதன் பின்னர் ஒவ்வொரு பெயராக, இந்த அவலத்தின் பெயர்ப்பட்டியல் முழுமையாகப் படிக்கப்பட்டது. எனது செவிகளையே நம்பமுடியாதவளாக விக்கித்துப் போய் உட்கார்ந்தேன். இது எப்படி நடந்திருக்கலாம்? இது உண்மையாக இருக்கமுடியாது. என்ன நடந்தது?

அதன் பின்னர் தூரத்தில் இருந்து ஓலம் ஒன்று சன்னமாகக் கேட்டது. எமது வீட்டில் இருந்து ஒரு கால் மைல் தூரத்தில் குமரப்பாவின் மனைவிக்குத் தகவல் தரப்பட்டிருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் இருந்து வருத்தமும், துயரமும் கலந்த உணர்ச்சி ஒப்பாரி ஓவென்று கேட்டது. இது இன்னொரு குடும்பத்திற்குத் தகவல்.

அதன் பின்னர் இன்னொன்றுளூ இன்னொன்றுளூ இப்படியே கிராமம் முழுவது ஒரே செத்த வீடாக ஒப்பாரி ஓலம் ஓங்கியது.

மறக்கமுடியாத மரணச் சடங்கு:

தமிழ்ச் சமுதாய மரபுப்படி, மக்கள் செத்த வீட்டுக்குப் போய் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவது மரபு. ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த வல்வெட்டித்துறை போன்ற சிறிய கிராமத்தில் அது பொதுவான ஒன்று. மாவீரராகப் பலர் உயிர் நீத்து தேசிய வீரர்களாகிவிட்ட இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த மாவீரர்களின் தீரத்திற்கு வணக்கம் செலுத்தவும், அவர்களது குடும்பத்தினரோடு துயர் பகிரவும், எல்லோரும் விரும்பினார்கள். மறுநாள் காலை, வல்வெட்டித்துறையில் வாழ்ந்துகொண்டிருந்த மூத்த விடுதலைப் புலி போராளியான நடேசன் அவர்களுடைய மனைவி வனித்தாவுடன் மாவீரர்களாகிவிட்ட அனைவரது வீடுகளுக்கும் சென்றோம். வனிதா ஒரு சிங்களப் பெண்மணி. கிராம மக்களும் மாறிமாறி ஒவ்வொரு வீட்டுக்குப் போவதும், இந்தச் துயரமான சம்பவம் பற்றிக் கூடிப் பேசுவதுமாக இருந்தார்கள். ஆற்றாமை, துயரம் ஆகிய இரண்டு உணர்வுகளும் எங்கும் வியாபித்திருந்தன. ஆண்கள் கூடிக் கூடி கீழ் குரலில் உரையாடினார்கள். பெண்கள்- உறவினர்களும் சரி, சினேகிதர்களும் சரி, தரையில் இருந்து மார்பில் அடித்து ஒப்பாரி வைத்தார்கள். தங்கள் கூட்டுத் துயரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

பாலா வீடு திரும்பும்வரை காத்திருந்து குமரப்பாவின் இளம் மனைவி ரஜனியைப் பார்க்க மறுநாட் காலையிலேயே போனேன். ரஜனியைச் சந்திப்பதை நினைக்க எனக்கு உள்ளூர நடுக்கம். இந்த இளம் பெண்ணின் முகத்தை நான் எப்படித்தான் பார்க்கப்போகிறேனோ? என்ன கூறப் போகிறோம்? அவர் வீட்டுக்குப் போவதற்காக ஆடை மாற்றும் போது எனது வயிறு பிசைந்தது.

துயர் தோய்ந்து ஆடிப்போயிருந்த கிராமத்தின் ஊடாக, குமரப்பாவின் வீட்டிற்கு நடந்து சென்றோம். அங்கேதான் ரஜனி இருந்தார். வீட்டுக்கு அருகே வரும்போது, அதே பக்கமாக ஊர்ந்துகொண்டிருக்கும் சனத்திரளில் நாமும் அங்கமானோம். வீட்டுக்கு அருகே செல்லச்செல்ல ஒப்பாரியும் பலத்து ஒலித்தது. குமரப்பாவின் வீட்டுக்குள் செல்லும் வாயிலில் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றார்கள். ஆனாலும் நாம் உள்ளே செல்வதற்காக பிரிந்து வழிவிட்டார்கள்.

ரஜனி நாராய் கிழிந்து கிடந்தார். துயரத்தால் உருக்குலைந்திருந்தார். பிதற்றிக்கொண்டிருந்தார். தமது துயரத்தை எங்கே எவ்வாறு போக்குவது என்று வகையறியாது தவித்துக்கொண்டிருந்தார். முன் வாயிலுக்கு சில யார் தூரத்தில் எம்மைக் கண்டதும் பிய்த்தெறிந்து என்னிடம் பாய்ந்து வந்தார். என்னைக் கட்டி அணைத்து வேலியோடு சாய்ந்து, நெஞ்ச அவலத்தோடு ஓலமிட்டார். ‘அன்ரி, அன்ரி என்ரை அவர்.. என்ரை அவர்..’ என்று கதறினார். எனது தோழில் சாய்ந்தவராக ஆற்றமுடியாதவராக விம்மினார். அவரை மெதுவாக அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றேன். எண்ணுக்கணக்கற்ற சொந்தக்காரப் பெண்கள் தரையில் அமர்ந்திருந்தார்கள். ரஜனியோடும், குமரப்பா குடும்பத்தோடும் துயர் பகிர்ந்து, ஆறுதல் கூற அங்கே எல்லோரும் கூடியிருந்தார்கள்.

ரஜனியின் வீட்டில் துயர் பகிர்வதோடு செத்தவீட்டுச் சடங்கு முடியவில்லை. பிரதான ஈமச் சடங்குகள் மறுநாள் மாலை நடைபெற இருந்தன.

கிராமத்தின் விளையாட்டு மைதானத்தில், ஒரு பெரிய பொதுவான இறுதிச் சடங்காக நடத்த ஏற்பாடாகி இருந்தது.

பலியாகிவிட்ட விடுதலைப் புலி மாவீரர்களுக்கு ஒரு தேசிய பிரியாவிடை வீர வணக்கம் செலுத்த ஏற்பாடாகிக் கொண்டிருந்த அதேசமயம், மீட்கப்பட்ட மாவீரரின் உடலங்கள் இறுதி இராக் காவலுக்காக அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

வல்வெட்டித்துறை மைதானம் சனத்திரளால் நிரம்பி வழிந்தது. வீழ்ந்து பட்ட பன்னிரெண்டு மாவீரர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டிருந்தார்கள். துயரக் கனதி எங்கும் வியாபித்திருந்தது. திறந்திருந்த உடலப் பேளைகளைக் கடந்து மக்கள் மரியாதையுடன் வரிசையாக நடந்தார்கள். தமக்குத் தெரிந்த வீரரின் காலடியில் நின்று சிலர் விம்மினார்கள். ரஜனியும், புலேந்திரனின் மனைவி சுபாவும் அலறியடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உறவினர்கள் அவர்களைக் கட்டுப்படுத்தியபடி நின்றார்கள். கரனின் மனைவி குகாவும், அவருடைய இரண்டு பிள்ளைகளும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். விம்மலும் ஓலமும், ஒப்பாரியும், ஒவ்வொரு திக்கிலும் கேட்டன. கவிதை, பாடல் இரங்கல் உரை என்று புகழாரம் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிபரப்பிகளை நிறைத்தன. இன்னும் சில நாட்களில் இந்தியப்படையுடன் நடைபெற இருந்த சமரில் உயிர்துறக்க இருந்த சந்தோசமும் புலிகள் சார்பில் அன்று உரை நிகழ்த்தியவர்களில் முக்கியமான ஒருவர்.

விசுவாசிகளுக்கு வீரவணக்கம்:

கனத்த இதயங்களோடும், சுரத்தே இல்லாதவர்களுமாக பிரபாகரன் அவர்களும், ஏனைய விடுதலைப் புலித் தலைமை உறுப்பினர்களும் உடல் பேழைகளை மெதுவாகக் கடந்து சென்றார்கள். கடந்துபோன ஆண்டுகளில் பிரபாகரன் அவர்களைப் பின்பற்றிய மிகுந்த விசுவாசமும், நம்பிக்கையும் உடைய சில மூத்த விடுதலைப் புலிப் போராளிகளினுடைய உடல் பேழைகளைக் கடக்கும் போது கால்கள் தயங்கின, பழைய நினைவுகள் சுரந்து வந்தன.

பிரபாகரன் அவர்கள் அங்கிருந்து அகன்றதும், தீ மூட்டுவதற்கு முன்னதாக, தமிழ் மரபுப்படி, அந்தக் களத்தில் இருந்த ரஜனியும், சுபாவும், குகாவும் அகற்றப்பட்டார்கள். ஒவ்வொன்றாக, மிகக் கண்ணியமாக ஒரு வரிசையில் சுமந்து செல்லப்பட்ட உடல் பேழைகள் அடுக்கப்பட்ட சிதைகளில் வைக்கப்பட்டன. இராணுவ மரியாதை வேட்டுக்கள் காற்றில் கலந்த பின்னர் சிதைகளுக்கு தீ மூட்டப்பட்டது.

உப்பிய கரும் புகைத் திரள் வானை ஊடறுத்ததுளூ மக்கள் விறைத்து நின்றார்கள்ளூ பொருமல் ஒலி அந்தப் பெருங்கூட்டத்தில் இருந்து விம்மலாக எகிறியது. எல்லாமே ஒரு கோரக் கனவாகத் தோன்றியது.

ஏன் இது நேர்ந்தது? இத்தனை தொகை மக்களின் இதயங்கள் ஏன் சீலம் சீலமாகக் கிழிந்தன? இத்தனை பேரிழப்பையும், துயரத்தையும் அடைய மக்கள் அப்படி என்ன கொடுமை புரிந்தார்கள்? போரோய்வு ஒன்று நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படும் போது மக்கள் இத்தனை துயரத்திற்கு உள்ளாக்கப்பட்டமையும், போராட்டம் இத்தகைய சோதனைக்கு உட்பட்டமையும் இயல்புக்கு மாறான புதிரல்லவா?

திலீபன் பலியானதை உடனடுத்து இப்படி ஒரு பேரிடர் நேர்ந்தமை, மக்களை வகையறாத் திகைப்புக்கு உள்ளாக்கியது. பொதுமக்கள் பார்வையில் இந்திய அமைதிப்படையும்,, புதுடில்லி நிர்வாகிகளும் சாயம் வெழுத்து நின்றார்கள். கொழும்பு மீதிருந்த அவநம்பிக்கையும் அதிகரித்தது. காயங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை என்றுமே பூரண குணம் காணும் என்று எனக்குப் படவில்லை||.

இவ்வாறு திருமதி அடல் பாலசிங்கம் தனது புத்தகத்தில் தனது அனுபவங்களை உணர்ச்சிகளாகக் கொட்டியிருந்தார்.

துரதிஷ்டவசமான வெளிப்பாடு

ஈழ மக்கள் எதிர்கொண்ட பல துயரச் சம்பவங்களுள் இந்தச் சம்பவமும் ஒன்று என்பது உண்மையானாலும், ஈழத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணமாக அமைந்த சம்பவம் இது என்பதால், இந்தச் சம்பவத்தின் பரிமானத்தை வாசகர்களுக்கு சற்று அழுத்தமாக ஞாபகப்படுத்தவே இங்கு இந்தச் சம்பவத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருந்;தேன்.

இந்தச் சம்பவம் பற்றிய உண்மையான உணர்வினை வெளிப்படுத்த, திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களுடைய வரிகளை விட சிறந்த எழுத்துக்கள் வேறு எதுவுமே இல்லை என்பதனால்தான், அவரது அனுபவ வரிகளை அப்படியே இங்கு தந்திருந்தேன்.

இந்த தேசிய துயரச் சம்பவத்தின் துரதிஷ்டவசமான வெளிப்பாடக இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றி அடுத்தவாரம் பார்ப்போம்.

தொடரும்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியஸ்தம் வகிக்க வந்த ராஜீவை சண்டையில் குதிக்க வைத்த ஜே.ஆர். (அவலங்களின் அத்தியாயங்கள்- 76) – நிராஜ் டேவிட
  • by admin
  • August 8, 2013

TimemagcoverAug101987-150x150.jpgஇந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அக் காலகட்டத்தில் இடம்பெற்றுவந்த தேன்நிலவிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு நிகழ்வாகவே, புலேந்திரன் குமரப்பா உட்பட 12 போராளிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமைந்திருந்தது.

இந்த விடயத்தில் இந்தியா பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளத் தவறியதே, பிற்காலத்தில் இந்தியப்படைகள் ஈழத்தில் ஒரு மாபெரும் அவலத்தைச் சந்திக்க பிரதான காரணமாக அமைந்திருந்தது என்று அறிஞர்கள் கூறிப்பிடுகின்றார்கள். இது இந்தியா விட்ட மாபெரும் வரலாற்றுத் தவறு என்று, இந்தியாவின் சரித்திரத்தை வரைந்த பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஜே.ஆரினதும், அத்துலத் முதலியினதும் சூழ்ச்;சி வலையில் இந்தியா தெரிந்துகொண்டே விழுந்திருந்த சந்தர்ப்பம் என்றும் இந்தச் சம்பவம் பற்றி பலர் கண்டணம் வெளியிட்டிருந்தார்கள்.

‘An Independent view from London’ என்ற புத்தகத்தில் ஷபுறுர்ஸ் போலிங்| என்ற ஆய்வாளர் இந்தச் சம்பவம் பற்றி இவ்வாறு எழுதியிருந்தார்:

ஷஷஅத்துலத் முதலி, ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த 1984 முதல் 1989ம் ஆண்டு காலம் வரை, அவர் ஸ்ரீலங்காவின் அரசியலில் முக்கிய பாத்திரத்தை வகித்து வந்தார். ஊடகத்துறையுடன் நேரடியான தொடர்புகளை வைத்திருந்த ஒரே அமைச்சரும் அத்துலத் முதலியாகவே இருந்தார். மிகவும் புத்திசாலியான இவர் பல சந்தர்பங்களில் இரக்கமற்ற ஒரு மனிதராகவும் நடந்துகொண்டிருந்தார். 1987ம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் போது, பாக்கு நீரினையில் கைதுசெய்யப்பட்ட சில விடுதலைப் புலிகளை இந்தியப்படைகள் ஸ்ரீலங்காப் படைகளிடம் கையளிக்கவேண்டும் என்பதில் அத்துலத் முதலி மிகவும் பிடிவாதமாக இருந்தார். இந்தச் சம்பவத்தில் பல விடுதலைப் புலிப் போராளிகள் தற்கொலை செய்துகொள்ள, இந்தியப் படைகளுக்கு எதிராக புலிகள் நேரடி யுத்தத்தில் இறங்கும் சூழ்நிலை அங்கு உருவானது. இந்த விடயம் பற்றி நான் அத்துலத் முதலியிடம் பேசும் பொழுது, ஷநிலமை இப்படி மோசமாக மாறிவிடும் என்பதை நீங்கள் முன்னரே உணர்ந்து, இதனைத் தவிர்த்திருக்கவேண்டும்| என்று தெரிவித்தேன், அதற்கு அத்துலத் முதலி, “உண்மையிலேயே என்ன நடக்கவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தோமோ, அதுதான் நடைபெற்றது. இந்தியாவை எங்கள் பக்கம் திருப்புவதற்கு ஒரு சரியான சந்தர்ப்பத்தை நாங்கள் பலகாலமாகவே எதிர்பார்த்த்துக் காத்துக்கொண்டிருந்தோம் என்பதே உண்மை|| என்று பதிலளித்திருந்தார்.||

இவ்வாறு ஷபுறுஸ் பேலிங்| தனது அந்தப் பத்தியில் தெரிவித்திருந்தார். இந்தப் பத்தியை, THE SUNDAY TIMES ஆங்கிலப் பத்திரிகை 02.05.93 இல் மறுபிரசுரம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜே.ஆரும், அத்துலத் முதலியும் எவ்வளவு கெட்டித்தனமாக இந்தியாவை தமது வலையில் விழச் செய்திருந்தார்கள் என்பது இதில் இருந்து புரிகின்றது.

சிங்களத் தரப்பே காரணம்:

இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் சரி, அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்கு இடையில் முறுகல் நிலை உருவானதிலும் சரி, முக்கிய பங்கு வகித்த நபர் என்று பல தரப்பினராலும் விமர்சிக்கப்படும் ஒரு நபர் இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அக்காலகட்டத்தில் பணியாற்றிய ஜோதின்ரா நாத் தீட்ஷித் (ஜே.என்.தீட்ஷித்). இவர், பின்னர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின், தனது பதவிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் தவறுகள் பற்றி மனம் திறந்து வெளிப்படுத்தியிருந்தார். இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பகை மூண்டது பற்றி, தீட்ஷித் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், இந்தியப்படையின் காலத்தில் சாமாதானம் குழம்பியதற்கு சிங்களத் தரப்பே காரணம் என்று தெரிவித்திருந்தார். 1994ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ம் திகதி வெளிவந்த THE SUNDAY LEADER ஆங்கிலப் பத்திரிகையில் தீட்ஷித்தின் செவ்வி பிரசுரமாகி இருந்தது. அவர் அந்தச் செவ்வியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

ஷஷ1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதக் கடைசியில் இருந்து அக்டோபர் மாத நடுப்பகுதி வரை, சமாதான முயற்சிகளில் பாரிய ஒரு தேக்கநிலை காணப்பட்டது. சமாதான முயற்சிகளுக்கு எதிராக சிங்களத் தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்களே அதிகமானதாக இருந்தது. தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்குவதற்கு இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதிகாரப் பரவலாக்கத்தையும், நிதி கையாள்கை சம்பந்தமான தீர்வுகளையும் திட்டமிட்டு ஸ்ரீலங்கா அரசாங்கம் இழுத்தடித்து வந்தது. ஆகவே, 1983 காலப்பகுதியில் இருந்த நிலமையை நோக்கியே சமாதான முயற்சிகள் சென்றுகொண்டிருப்பதாக தமிழ் மக்கள் சந்தேகப்பட ஆரம்பித்திருந்தார்கள். இது அப்பொழுது இடம்பெற்றுகொண்டிருந்த ஒரு முக்கியமான பிரச்சினை.

ஆனால் இந்தியாவை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நோக்கித் திருப்புவதற்கு பிரதானமாக ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தது. 17 இளைஞர்களை கொழும்புக்கு கொண்டு வரவேண்டும் என்ற விடயத்தில் அத்துலத் முதலி மேற்கொண்டிருந்த பிடிவாதமே இந்தப் பிரசினை ஆரம்பமாவதற்கு மிகவும் பிரதான காரணம் என்று கூறவேண்டும். அவர்கள் இந்தியப் படைகளினது பாதுகாப்பிலேயே தொடர்ந்தும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். சில விடயங்களில் எம்மால் இணக்கம் காண முடிந்திருந்தது. ஆமாம், ஜே.ஆர். சில அரசியல் நகர்வுகளுக்கு சம்மதித்திருந்தார். ஆனால், அத்துலத் முதலி சில சதித்திட்டங்களை தன்னகத்தே கொண்டு செயற்பட முனைந்ததால்தான், இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பிரச்சினைகள் உருவானது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் விருப்பத்திற்கு மாறாக அத்துலத்முதலி நடந்துகொள்ள முயன்றதால்தான், அந்த இளைஞர்கள் அநியாயமாக நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள நேரிட்டது. இந்தச் சம்பவம் மிகவும் துக்ககரமான ஒரு சம்பவம் என்பதுடன், புலிகளின் தலைமைத்துவத்தை மிகவும் கோபமடையவும் வைத்த ஒரு சம்பவம் என்றே கூறவேண்டும். அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு நம்பிக்கைத் துரோகமான ஒரு செயலாகவே பார்க்கப்பட்டது. ஒரு வகையில் இது உண்மையும் கூட.||

இவ்வாறு தீட்ஷித் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இதில் இருந்து, ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தியவை எப்படி திட்டமிட்டு தனது வலையில் விழ வைத்திருக்கின்றது என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது.

இதேபோன்று, 13.11.1994 அன்று வெளியான THE ISLAND பத்திரிகையில், `தேசிய சமாதானப் பேரவையில் தலைவரும், பிரபல சிங்கள ஊடகவியலாளருமான ஜெகான் பெரேரா இவ்வாறு தெரிவித்திருந்தார்: ஷஷஆரம்பம் முதலே ஜெயவர்த்தனாவும், அவரது லெப்டினட்களும் இந்த ஒப்பந்தத்தை எப்படி முறியடிப்பது, இந்தியாவை எப்படி ஏமாற்றுவது என்று திட்டமிட்டபடியே இருந்தார்கள். இதற்கான முயற்சிகளை அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டபடியே இருந்தார்கள். படிப்படியாக அவர்கள் மேற்கொண்டு வந்த முயற்சிகள் இறுதியில் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஈழப் போராளிகளைச் சமாளிப்பதற்கும், சிதைப்பதற்கும் இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் ஜேஆரும், லலித்தும் ஆரம்பம் முதலே திட்டமிட்டு செயலாற்றி வந்திருந்தார்கள். ராஜீவை அவர்கள் மிகவும் தந்திரமாக தமது பொறியில் விழ வைத்திருந்தார்கள்.|| இவ்வாறு ஜெகான் பெரேரா தனது பத்தியில் எழுதியிருந்தார்.

இந்தியாவை புலிகளுக்கு எதிராக திருப்பிவிட்ட தனது தந்திரம் பற்றி ஜே.ஆர் பல சந்தர்ப்பங்களில் பெருமிதம் வெளிப்படுத்தியிருந்ததும் நோக்கத்தக்கது. அவர் ஒரு தடவை பாராளுமன்றத்தில் இதனை புன்முறவலுடன் தெரிவித்திருந்தார்: “குஸ்திக்கு மத்தியஸ்தம் வகிக்கவென்று வந்த ராஜீவே கடைசியில் கோதாவில் குதிக்கும்படியாக ஆகிவிட்டது” என்று நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.

தலைவர் பிரபாகரனின் செவ்வி:

இந்தியப் படைகள் புலிகளால் தோற்கடிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் டைம்ஸ்| சஞ்சிகைக்கு வழங்கிய ஒரு செவ்வியில், இந்தியாவுடன் யுத்தம் மூண்டதற்கான காரணத்தை குறிப்பிட்டிருந்தார். பிரபல இந்திய பத்திரிகையாளர் அனிதா பிரதாபிற்கு அவர் வழங்கியிருந்த செவ்வி 08.04.1990 இல் வெளிவந்த TIMES சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

அந்தச் செவ்வியில் அவர் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், ஷஒப்பந்த காலத்தில் ஸ்ரீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த எமது போராளிகள் பன்னிருவரை விடுவிக்க இந்தியா தவறியிருந்தது. அவர்களுடைய பரிதபகரமான மரணம் இந்தியாவுடன் மோதவேண்டும் என்ற முடிவுக்கு எம்மைக் கொண்டு சென்றிருந்தது.

இவ்வாறு தலைவர் பிரபாகரன் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா விட்ட தவறால், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் 12 பேர் அநியாயமாக பலியானதுதான், புலிகள் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு காரணமாக இருந்தது. இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்திருந்த விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்து இந்தியா தவறி இருந்தது. ஸ்ரீலங்கா அரசு விரித்திருந்த வலையில் இந்தியா தெரிந்துகொண்டே விழுந்தது.

இது இந்தியாவை நம்பியிருந்த ஈழத்தமிழர்களுக்கு இந்தியா செய்திருந்த மிகப்பெரிய துரோகம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

தொடரும்…

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.