Jump to content

கி.பி. அரவிந்தன்: உறைபனிக் கால கட்டியக்காரனின் மரணம்


Recommended Posts

aravi1_2337354f.jpg
 
புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர் கி.பி. அரவிந்தனுக்கு அஞ்சலி.
 
கிறிஸ்தோபர் பிரான்சிஸ் என்னும் இயற்பெயரை கொண்ட எழுத்தாளரும் போராளியுமான கி.பி. அரவிந்தன் மார்ச் 8 அன்று பாரீஸில் காலமானார். இலங்கையின் வரலாற்றுப் புகழ் மிக்க நெடுந்தீவில் பிறந்த இவர், 62 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். ஆனால், நூறாண்டுகள் வாழ்ந்திருந்தால்கூட பெற முடியாத அனுபவத்தை 62 ஆண்டுகளிலேயே இவர் பெற்றுவிட்டார். அவர் வாழ்ந்த அன்றைய நாட்களில் ஈழத்துச் சூழல், ரத்தத்தை சிந்த வைத்து, ஆழ்ந்த அனுபவத்தைக் கற்றுத்தந்திருக்கிறது.
 
அரசியல் அனுபவத்தை இலக்கிய அனுபவமாக மாற்ற, சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது, லத்தீன் அமெரிக்கப் பெருவெளியில், இவ்வாறான தனித்துவங் களைக் காண முடியும். அரசியல் செயல்பாடு, இலக்கியச் செயல்பாடாக மாறி, அரசியல் விடுதலைக்கான விதைகள் அங்கு,உற்பத்தியாகின்றன. அரவிந்தனும் அர்ப்பணிப்புக்குப் பின்னர், அரசியல் கதவுகளைத் திறந்து, இலக்கியப் பெருவழியைச் சென்றடைந்து, விடுதலை முழங்கங்களைக் கடைசி நாள் வரை முழங்கி, தனித்துவத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.
 
மரணத்தை அடிக்கடி முத்தமிட்டவர்
 
மார்க்சியத்தின் மீது தீராத ஈடுபாடு கொண்ட பல்கலைக்கழக மாணவப் பருவத்திலிருந்து, ஈழ விடுதலை நோக்கித் தனது பயணத்தை வேகப்படுத்திக்கொண்டார் அரவிந்தன். இதன் பின்னர் அமைந்த இவரது போராட்ட அரசியல் வாழ்க்கை, யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அதிபயங்கரங்களைக் கொண்டிருந்தது. மரணத்துக்கு அருகில் அடிக்கடி சென்று திரும்பினார். சயனைட் அருந்தி முதலில் உயிர் தியாகம் செய்த, விடுதலைப் போராளி சிவகுமாரனுடன் தனது போராட்டப் பயணத்தைத் தொடங்கியவர்தான் அரவிந்தன்.
 
1972 - அரசியல்சட்டத் திருத்தம்
 
இலங்கை அரசியலில் 1972-ம் ஆண்டு ஓர் முக்கியமான காலகட்டம். அரசியல் சட்டம், தமிழ் மக்களுக்கு எதிரான வஞ்சகத்துடனேயே திருத்தப்பட்டது. அரசியல் சட்டம் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்ற வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைளை அரவிந்தனும் அவரது தோழர்களும் விநியோகம் செய்தார்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புப்படுத்தப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார். மீண்டும் 1978-ம் ஆண்டு, இலங்கை கப்பற்படையால் கைதுசெய்யப்பட்டு, சித்ரவதைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
‘லு மெஸாஜெ லு இவ’ (ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்) என்னும் இவரது கவிதை நூல் பிரஞ்சு மொழியில் ‘றிவநெவ்’ என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, அண்மையில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அரசியலை மானுட முகம் கொண்டதாக மாற்றிக்கொள்வதற்குக் கவிதையை ஆயுதமாகத் தேர்வு செய்துகொண்டவர்தான் அரவிந்தன். ‘இனியொரு வைகறை’, ‘முகங்கொள்’, ‘கனவின் மீதி’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதில் மிகவும் புகழ் பெற்றவை. பல்வேறு காலப் பின்னணிகளைக் கொண்ட இவரது பேட்டிகள் ‘இருப்பும் விருப்பும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
 
சமூக மாற்றத்துக்கான விடுதலையை நோக்கிய இவரது படைப்புகள், ஆழத்தையும் விரிவையும் உள்ளடக்கியவை. குறி தவறாமல் இலக்குகளை நோக்கிப் பாய்ந்து செல்லும் எழுத்தின் வீரியம் இவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், எழுத்துகள் ஈழத்தின் ஏக்கங்களையும் மண்ணின் மணத்தையும் இயல்பாகவே பெற்றுள்ளன. இன்றைய காலத்தில் மறைந்துபோன ஈழத்துப் பழமொழிகள் பல இயல்பாகவே இவரது எழுத்தில் வந்துகொண்டேயிருக்கும்.
 
நாயைப் பிடிங்கோ
 
‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடிங்கோ’ என்ற வரிகள் இவரது கட்டுரை ஒன்றில் இடம்பெற்றிருந்தது. இதன் அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றாலும், இது ஒரு பழமொழி என்பதை மட்டும் புரிந்துகொண்டேன். அதன் உண்மை அர்த்தத்தை உணர்ந்துகொண்டபோது நான் பெரிதும் ஆடிப்போனேன். ஒருவன் பிச்சை கேட்டு வருகிறான். வீட்டுக்காரன் பிச்சை போடவில்லை. அதற்குப் பதிலாக, கட்டியிருந்த நாயை அவிழ்த்து, ஏவி விடுகிறான். “பசிக்கும் வயிற்றுக்குப் பிச்சைக் கேட்டுதான் வந்தேன். எனக்குப் பிச்சை வேண்டாம். நாய்க் கடியிலிருந்து தப்பித்தால் போதும், நாயைப் பிடியுங்கோ” என்கிறான் பிச்சைக்காரன். இந்திய அணுகுமுறையோடு ஒப்பிட்டு, இந்தப் பழமொழியைப் பயன்படுத்தியிருந்தார் அரவிந்தன்.
 
ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் தமிழ்!
 
‘அப்பால் தமிழ்’, இவர் உருவாக்கிய இணைய மின்னிதழ். இதன் குறிக்கோள் வாசகம் நம்மைப் பெரிதும் யோசிக்க வைக்கிறது.
 
“அப்பாலும் விரிகின்றது வேற்றுமை சூழல். அணையாமல் எரிகின்றது நெஞ்சினில் தணல். ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் தமிழ்.” இது உலகளாவிய தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவே தோன்றுகிறது. 2012-ல் பாரீஸ் நகரில் அவரது வீட்டில் நான் தங்கியிருந்தபோது, இதே உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்தினார் அரவிந்தன்.
 
குடும்பத்துடன் பல ஆண்டுகள் பிரான்சில் வசித்த போதும், குடியுரிமை பெறவில்லை. பனை மரக் காடுகளடர்ந்த, அந்த ஈழ மண்ணில் இறுதி மூச்சை விட வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்திருக்கலாம்.
 
- சி. மகேந்திரன், ‘தாமரை’ இதழாசிரியர், தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com
 
Link to comment
Share on other sites

எனது தம்பி எம்சி லோகநாதனின் மரணம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மறைவதற்கு முன்னர் எனது அருமை நண்பர் கி.பி அரவிந்தனின் மரணச் செய்தி என்னை உலுக்கியது.

இந்த உலகில் பிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் இறந்தே தீரவேண்டும் என்பது நியதியாக இருந்தாலும் எம்முடைய வாழ்க்கையில் இலட்சக் கணக்கானோரின் மரணங்கள் எம்மை கடந்து சென்றாலும் ஒரு சிலரின் மரணங்கள் நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு எங்களை உலுக்கிவிடுகின்றன.

அப்படி என்னை உலுக்கிய மரணங்களில் நண்பர் அரவிந்தனின் மரணமும் ஒன்று.

தோழர் கி.பி.அரவிந்தனுக்கும் எனக்குமான முதல் அறிமுகமும் சந்திப்பும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலிருந்த அச்சகம் ஒன்றில் 1974 ல் இடம்பெற்றது.

அப்போது அவர் தீவிர தமிழ் வலதுசாரி அமைப்பான தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாட்டாளராக இருந்தார்.நானோ யாழ்பாண சாதிய சமூக அமைப்பை ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்டங்காண வைத்த இடதுசாரி பாரிபரியத்தை கொண்டவனாக இருந்தேன்.

புரட்சிகர அரசியல் கட்சி ஒன்றால் தலைமை தாங்கப்படாத ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்ற நிலைப்பாடே என்னிடம் அப்போது இருந்தது.அவரோ பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான இளைஞர்களின் எதிர்பு;புணர்வு என்று அன்றைய தாக்குதல்களை (சத்திய சீலன் மற்றும் சிவகுமாரன் ஆகியோரின் செயற்பாடுகளை ) நியாயப்படுத்தும் ஒருவராக இருந்தார்.

1979 ல் நாங்கள் இருவரும் ஹட்டன் நகரில் மறுபடி சந்தித்தபோது அவரது முன்னைய நிலைப்பாடு மாறியிருந்தது.மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டிய தேவையை அவர் உணர்ந்திருந்தார்.அதற்காக கலை இலக்கிய தளத்தில் அதிகம் வேலை செய்யவேண்டும் என்றும் அவர் கருதினார்.

1984 ல் மீண்டும் நாங்கள் சந்தித்த போது அவர் ஈழப் புரட்சி அமைப்பின் உறுப்பினராக தோழர் சுந்தராக எனக்கு அறிமுகமானார்.அதன் பின்னர் அவருக்கும் எனக்கமான நெருக்கம் அதிகமாகியது.அதன் பின் நாங்கள் பல தடவைகள் சந்தித்து யாழ்ப்பாண சமூக அமைப்பு பற்றியும் மலையக மக்கள் பற்றியும் மணிக்கணக்காக பேசியிருக்கிறோம்.

1990 ல் பிரான்சுக்கு புலம் பெயர்ந்து வந்த பின்னர் 1992 ம் ஆண்டு நான் மறுபடியும் அவரை சந்தித்தேன்.

இந்தச் சந்திப்பும் ஒரு வித்தியாசமான சந்திப்பாக இருந்தது.அந்தக்காலகட்டத்தில் புலி எதிர்ப் பு அரசியல் என்பது ஒரு அறிவுசீவி தனமான செயற்பாடாக விளம்பரப்பட்டுவந்தது.இந்த புலிஎதிர்ப் பு அரசியலுக்கு பின்னால் பௌத்த சிங்கள பேரனவாதத்தை நியாயப்படுத்தும் கள்ளத்தனம் ஒழிந்திருந்ததை கிபி அரவிந்தன் மறுக்கவில்லை.விடுதலைப்புலிகளின் தவறுகளை ஆக்க பூர்வமாக விமர்சிப்பதென்பது வேறு புலி எதிர்ப்பு என்ற போர்வையில் சிறீலங்கா அரசுக்கு துணைபோவது வேறு என்பதில் கி.பி.அரவிந்தனுக்கு சரியான பார்வை இருந்தது.

பௌத்த சிங்கள பேரினவாதத்தின் பக்கமா அல்லது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கமா என்ற கேள்விக்கு பேராட்டத்தின் பக்கமே என்ற பதில் மட்டும் தான் அவரிடம் இருந்தது.

1996 ல் நான் ஈழமுரசு ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்ட போது அவர் என்னுடன் இணைந்து கொண்டார்.ஈழ முரசு தளத்தில் இருந்து இலக்கியம் சார்ந்தும் புலம்பெயர் சமூகம் சார்ந்தும் நிறைய வேலைகளை அவர் செய்தார்.

ஈழமுரசை விட்டு அவர் வெளியேறிய பின்னும் அவரது பணிகள் முன்னரைவிட அதிக வீச்சுடன் தொடர்ந்தன.

சிறந்த கவிஞராக பன்முக ஆளுமையுள்ள மனிதராக விளங்கிய அவர் ஒருபோதும் தன்னைச் சுற்றி ஒளிவட்டங்களை சூட்டிக் கொள்ளவில்லை.எப்போதும் 

எளிமையானவராக உண்மையானவராக நல்ல மனிதனாக அவர் இருந்தார்.அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பாகும்.

எனது அன்புத் தோழருக்கு எனது மரியாதை வணக்கங்கள் உரித்தாகட்டும்

 

மரண அறிவித்தல்

கி. பி. அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்)

தோற்றம்: 17.09.1953 (யாழ்ப்பாணம்)

மறைவு: 08.03.2015 (மொந்தினி - பிரான்சு)

நெடுந்தீவை மூலத்தொடர்பாகக்கொண்ட குடும்பத்தின் வழியாக, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும், பிரான்சு மொந்தினி லே கோர்மை நகரைப் புலம்பெயர் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கி. பி. அரவிந்தன் ஆகிய கிறீஸ்தோப்பர் பிரான்சிஸ் அவர்கள் 08. 03. 2015 ஞாயிறன்று காலமாகினார்.

இவர் காலம் சென்றவர்களான பேதுறு கிறிஸ்தோப்பர் - கிறிஸ்தோப்பர்மாசிலாமணி (இளைப்பாறிய தாதி) இணையர்களது மூத்த புதல்வனும் சுமத்திரியின் அன்புக் கணவரும், அங்கதன், மானினி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலம்சென்ற சிவசுப்பிரமணியம் பவானி இணையரது மருமகனுமாவார்.

இவர் ஜோர்ஜ் கிளமென்ற் (ஜெயா- பிரான்சு), மரிய அல்போன்ஸ் (றூபன் - நோர்வே), சகாயமேரி பப்ரிஸ்ற் (விஜிதா - பிரான்சு), லூட்ஸ் மேரி கொன்சலா (வனிதா - ஜேர்மனி), ஜெறாட் ஜேம்ஸ் (ரவி - ஜேர்மனி), யூஜின் மேரி இமெல்டா (குமுதா - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவகுமரன், கேசவன், தனஞ்செயன் மாதவி (இலங்கை), அஞ்சலீசம்மா (பிரான்சு), மரிய செல்வராணி (நோர்வே), யேசு ரொபின்சன் (பிரான்சு), இம்மானுவேல் சுரேஸ் (ஜேர்மனி), தேவ வதனா (ஜேர்மனி), அன்ரன் றெஜி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

மேலும் ரிற்றோ, சமீரா, நிலானி, நிலவன், மாதினி, வேலவன், பகலவன், பாலிகை, அம்பிகை ஆகியோரது பாசமிக்க மாமாவும், ஜெனி ஜெறோம், நயனி, ஜெயனி, யாதவி, வித்தகி ஆகியோரது பாசப் பெரியப்பாவுமாவார்.

தொடர்புகளுக்கு:

0033134506256 மற்றும் 0033760194974 - மனைவி சுமத்திரி பிரான்சிஸ்

0033625285233 - சகோதரன் ஜோர்ஜ்

004915129002155 - சகோதரன் ஜேம்ஸ்

004790185892 - சகோதரன் அல்போன்ஸ்

0033664118809 - மைத்துனர் றொபின்சன்

0014168435832 - மைத்துனர் றெஜி

004925015882699 - மைத்துனர் சுரேஸ்

0033663653151 - மருமகன் ரிற்றோ

தகவல் : திருமதி சுமத்திரி பிரான்சிஸ்

பார்வையிடல் – 11 March 2015 and 12 March 2015 from 2pm and 5pm only

Address : 

Centre Hospitalier Victor Dupouy

69 rue du Lieutenant - colonel Prudhon, 95107 Argenteuil

Gmaps : https://www.google.fr/…/data=!4m2!3m1!1s0x0:0xbc9b2373329c7…

இறுதி வணக்க நிகழ்வு – Friday 13 March 2015 from 12.00pm to 1.30pm

Address : 

Cimetière Intercommunal des Joncherolles

95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse

Gmaps : https://www.google.fr/…/data=!4m2!3m1!1s0x0:0x8fc22e364cbed…

How to come: 

- by Tramway : Tramway T5 – station Joncherolles or Tramway T8 – station Jean Vilar (http://www.mairie-villetaneuse.fr/…/…/lignet8_ghraphique.gif)

- by bus : bus n°256 – station Carnot / rue de la Division E.Leclerc

Link to comment
Share on other sites

மனதைப் பிசையும் நூல் ஒன்றினை அனுப்பியிருந்தார் நண்பர் வைகறை. பிரான்ஸ் நாட்டில் அகதியாய் உழலும் நண்பர் கி.பி.அரவிந்தன் எழுதிய “இருப்பும் விருப்பும்” என்கிற நூல்தான் அது. ”பாட்ஷா” படத்தில்…..….. ” அண்ணே எனக்கு இன்னொரு பேர் இருக்குண்ணே” என வருவதைப்போல கி.பி.அரவிந்தனுக்கு பல பெயர்கள். அன்றைக்கு போராட்ட உலகில் Ori.ki.piசுந்தர் ஆக அறியப்பட்ட எமது தோழரேதான் பிற்பாடு கி.பி.அரவிந்தனாக இலக்கிய உலகிற்கு அறிமுகம் ஆனவர்.. கி.பி.அரவிந்தனாக அவரைத் தெரிந்த பலருக்கு அவர் ”:போராளி சுந்தராக” ஆற்றிய பல பணிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஈழத்தில் முதல் களப்பலி சிவகுமாரனோடு தோளோடு தோள் நின்ற இளைஞனாக…..…..

ஈழப் புரட்சி அமைப்பின் போராளியாக…..…..

வாழ்வின் வலிகளை உணர்த்தும் இலக்கியவாதியாக…..…..

மனச் சுமைகளை சுமந்து திரியும் அகதியாக…..…..

என அம்மனிதனுக்கு ஏகப்பட்ட முகங்கள்.

அப்படிப்பட்டவரின் நூலுக்கு அணிந்துரை ஒன்றினை நான் எழுத வேண்டும் என்பது நண்பர் வைத்த வேண்டுகோள். நூலை வாசிக்க வாசிக்க என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவேயில்லை. மனம் வெகுவாகக் கனத்துப் போனது. அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன் நான். பிற்பாடு என்னை நானே சரிப்படுத்திக் கொண்டு எழுதத் தொடங்கிய அந்த “அணிந்துரையை” மீண்டும் உங்களோடு பகிர்ந்துகொள்வது ஒன்றும் படுபாதகச் செயல் ஆகிவிடாது என்பதால் அப்படியே அதனை உங்கள் பார்வைக்குப் பணையம் வைக்கிறேன்.

“இது அணிந்துரை அல்ல தோழர்களே…..

ஈழத்து உறவுகளோடு நகர்ந்த என் நாட்களைப் பற்றிய நினைவுகள்.

உண்மையைச் சொன்னால்…..அப்போது கி.பி.அரவிந்தனைத் தெரியாது எமக்கு. அதைப் போலவே அவருக்கு பாமரனையும்.

இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எமக்குத் தெரிந்ததெல்லாம் தோழர் சுந்தரைத்தான். “பூவுலகின் நண்பர்கள்” நெடுஞ்செழியன்தான் ஈரோஸ் (ஈழப் புரட்சி அமைப்பு) அமைப்பை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

அந்த அறிமுகம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் இன்றைக்கும் நான் ஒரு தறுதலையாக…… உதவாக்கரையாக…… இருந்திருப்பேன். அல்லது குறைந்தபட்சம் ஒரு எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.பி.ஆகவோ ஆகியிருப்பேன். தமிழ் மக்களை அந்தத் துயரில் இருந்து காப்பாற்றிய பெருமை ஈரோசையும், நெடுஞ்செழியனையுமே சாரும்.

அப்போது சென்னையில் எனக்குத் தெரிந்ததெல்லாம் கோடம்பாக்கத்தில் பெஸ்ட் மருத்துவமனை அருகில் இருந்த ஈ.என்.எல்.எப் (ஈழத் தேசிய விடுதலை முன்னணி) அலுவலகம்…… யுனைடெட் காலனியில் இருந்த ஈரோஸ் நண்பர்களது அறை…… அண்ணாநகரில் இருந்த B செல்…… இதுதான் எனது உலகம். சுந்தரைக் கண்டாலேயே ‘பாலஸ்தீன இயக்க பயிற்சி பெற்றவர்’ என்கிற பெரிய பிரமிப்பு எமக்கு. ஆனால் மனுசன் ஒரு நாள் கூட அதை சொல்லிக் கொண்டதில்லை.

”தோழர்….. இப்ப பிரச்னை எப்படி இருக்கு?” என்றால்…..

“பிரச்ச்ச்ச்ச்ச்சனை இருக்கு” என்பார்

“பிரச்னையையே பிரச்ச்ச்ச்சனையாகச் சொல்லக்கூடியவர் தோழர் சுந்தர்தான்” என நக்கலடிப்பார் செழியன்.

தோழர்களோடு உணவு உண்ணும்போது ஈழப் பிரச்சனையை நினைத்துக் கண்ணீர் விடுகிறோமா இல்லையோ….. ஆனால் ஒரு கவளம் வாயில் வைத்ததுமே கண்களில் நீர் தழும்பி நிற்கும். அவ்வளவு காரம். ”தோழர் உங்களுக்காக இன்னைக்கு உறைப்பு கொஞ்சம் குறைவா போட்டிருக்கு” என்கிற விளக்கம் வேறு தருவார்கள்.

சென்னையில் தங்கி இருக்கும் பொழுதுகள் தோழர்கள் பாலகுமார்….. சுந்தர்….. ராஜா….. பார்த்திபன்….. அன்னலிங்கம்….. என எண்ணற்றவர்களோடு நகரும்.

ஈழம் குறித்த கனவுகளோடு…..

எதிர்ப்படும் எதார்த்தங்களை எவ்விதம் எதிர்கொள்வது என்கிற விவாதங்களோடு பொழுதுகள் விடியும். இத்தனைக்கும் கத்துக்குட்டி நான். இவனுக்கெல்லாம் என்ன தெரியும் என்று தோழர். சுந்தரோ, பாலாவோ ஒருபோதும் எண்ணியதில்லை. அபத்தமாக என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் மிக நிதானத்துடன் விளக்கிச் சொல்வார்கள். அந்தப் சகிப்புத்தன்மையும், பண்பும், அன்பும் இன்றைய வரைக்கும் எனக்குள் முளைவிடாத ஒன்று. ஈரோசின் நிறுவனர்களில் ஒருவரான தோழர்.ரத்னாவும் அவ்வப்போது எம்முள் பல கேள்விகளை கிளப்பி விட்டுவிட்டு கிளம்பிச் செல்வார்.

Mr.Balakumar meets PM today என்று செய்தித்தாளில் முந்தைய நாள்தான் பார்த்திருப்போம். ஆனால் மறுநாளே balkumar“தோழர்” எனக் கை அசைத்தவாறு தனது சைக்கிளில் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருப்பார் பாலா. அநியாயத்துக்கு எளிமையானது ஈரோஸ் என்கிற மொச்சைக்கொட்டை பட்டாளம்.

சுந்தர் சென்னைப் பொறுப்பாளராக இருந்தபோது வெளிக்கொண்டு வந்த ”இந்த மண்ணும் எங்கள் நாட்களும்” நூலையும், “பொதுமை” இதழ்களையும் இன்னமும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

சென்னையில்தான் இப்படிப்பட்ட உறவுகள் என்றால்….. கோவைக்கு திரும்பினாலோ ஈரோஸின் கோவைப் பொறுப்பாளர்களோடுதான் போகும் பொழுது. கோவையை சுற்றியுள்ள குக்கிராமங்களுக்கெல்லாம் தோழர்களைக் கூட்டிக் கொண்டு போகவேண்டும். கரும்பலகைகளை வைத்து வகுப்பெடுப்பார்கள் தோழர்கள். ”சித்திரையில் ஈழம் மலரும்….. தை யில் கொடியேற்றுவோம்….. என்றெல்லாம் உங்களை ஏமாற்றத் தயாராயில்லை நாங்கள். இந்த விடுதலைப் போராட்டத்திற்கு காலக்கெடுவெல்லாம் விதிக்க முடியாது. உங்கள் அடுத்த தலை முறை கூட போராட வேண்டி வரலாம்” என்று தொடரும் வகுப்பு. மக்கள் ஆழமாக அவதானித்துக் கொண்டிருப்பார்கள் அதை.

பல நாட்கள் விடிந்தும் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னை எழுப்பிவிட வேண்டும் என்றால் “தோழர் ஈழம் கிடைச்சுடுச்சு தோழர். எழும்புங்க…..” என்றுதான் எழுப்புவார்கள் குட்டியும், மெல்ட்டசும். அவர்களுக்கு வழிகாட்ட அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் சுந்தரின் மச்சான் முகிலன்.

1986 ஜூலை 23 ஆம் தேதி ஈழ நண்பர்கள் கழகத்தின் சார்பாக சுந்தரின் கருத்தரங்கம் கோவையில். ஜூலைப் படுகொலைகள் நினைவு தினத்திற்காக. எதிர்பாராத கூட்டம் அன்று. ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியின் அவலங்களையும், திம்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கான காரணங்களையும், ஈழத்தின் தேவைகளையும் எடுத்துரைக்கிறார் சுந்தர். இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மறுநாள் ரயில் ஏற்றி அனுப்பி வைக்கிறோம்.

அதற்கிடையில் ஈழ இயக்கங்களை அணுகும் போக்கில் இந்திய அரசிடம் எண்ணற்ற மாற்றங்கள். ”இலங்கை அரசுக்கு இந்தியா எச்சரிக்கை”, ”இந்திய விமானங்கள் வடக்கில் உணவுப் பொட்டலங்கள் வீச்சு” போன்ற அநேக நாடகங்கள். அதை அடுத்து வந்த ஒப்பந்தக் காட்சிகள். ஒவ்வாத ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி இந்திய அரசின் வற்புறுத்தல்கள்….. இல்லையில்லை அச்சுறுத்தல்கள்.

உங்களுக்காக சோறெல்லாம் போட்டோமே….. ஏன் ஒத்துக் கொள்ளக்கூடாது ஒப்பந்தத்தை? என்கிற அரைவேக்காட்டுத்தனமான உளறல்கள். மனம் நொறுங்கிப் போயினர் போராளிகள். எரிச்சலும்,அவமானமும் தாள முடியாமல் அப்போது சுந்தர்தான் ஒரு மேடையில் கேட்டார்: ”சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?” என்று. அதைத்தான் நான் 21 ஆண்டுகள் கழித்து ஈழ இன்னல்கள் குறித்து ஒரு வார இதழுக்கு எழுதும்போது தலைப்பாக்கினேன். உண்மையில் அந்தத் தலைப்புக்குச் சொந்தக்காரர் சுந்தர்தான்.

ஒப்பந்தத்தை ஏற்காத போராளிகளை ஒப்புக்கொள்ளுமா மத்திய அரசு?. அந்த வேளையில் அவர்கள் வேண்டா விருந்தாளிகள். மனம் நொந்து கப்பல் ஏறுகிறார் சுந்தர். கப்பல் ஏறும் முன் அவர் கி.பி.அரவிந்தனாக பாலம் இதழுக்கு அனுப்பிருந்த ”எங்கள் நினைவுகளை உங்களிடம் கையளித்துள்ளோம்” என்கிற கடிதம் ஈழத்தை நேசித்த ஒவ்வொரு உயிரையும் என்ன பாடுபடுத்தி இருக்கும் என்பதை வரிகளால் வர்ணித்து விட முடியாது. இன்னமும் தோழர்களும் நானும் தோன்றும்போதெல்லாம் எடுத்து வாசிக்கும் ஒரு உன்னதம் அது. அதில் உள்ள வரிகளை வாசித்தால் புரியாது. அவர்களுடன் வாழ்ந்திருந்தால் மட்டுமே புரியும்.

எல்லாம் முடிந்தது. காலை தொடங்கி நடுச்சாமம் வரைக்கும் எனது உலகமாக இருந்த தோழர்கள் எல்லாம் புறப்பட்டாயிற்று. பாலா, சுந்தர் தொடங்கி….. குட்டி மெல்ட்டஸ் வரையிலும் எல்லோரும் கிளம்பியாயிற்று.

நான் மட்டும் தனியே கரையில் நின்றபடி.

எனக்கு இங்கு எவரைத் தெரியும்? தெரிந்தாலும் அவர்களோடு என்ன பேசுவது? குறைந்தபட்சம் ஏதாவது கட்சியில் இருந்திருந்தாலாவது நேரத்தை ஓட்டி விடலாம். ஏதாவது ரசிகர் மன்றத்தில் இருந்திருந்தாலாவது எங்காவது மன்றத்தில் உட்கார்ந்து கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கலாம்.

என்ன செய்யப்போகிறேன் இனி?

”ஈழம் கிடைச்சிடுச்சு தோழர்….. எழும்புங்க.” என எவர் எழுப்பப் போகிறார்கள் என்னை?

”எங்கிருந்தோ வந்தான்….. இடைச்சாதி நான் என்றான்.” என்பதைப் போல எங்கிருந்தோ வந்தார்கள். அரைவேக்காடாய்த் திரிந்த என்னைப் போன்றவர்களுக்கு மானுடத்தை நேசிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். மனிதனாக்கினார்கள். திடுதிப்பென ஒரு பொழுதில் புறப்பட்டு விட்டார்கள். எனது உலகம் தொலைந்து போயிற்று.

இனி நான் இந்த மண்ணில் வாழப் பழக வேண்டும்.

“ஓடம் நதியினிலே…..” என்கிற பாடல் வரிகள் என்னுள்ளே கேட்கிறது.

முதலிலேயே சொன்னதைப் போல இது அணிந்துரை அல்ல நண்பர்களே. எப்படி எழுத முடியும் என்னால்? ஈழத்தின் முதல் தற்கொடைப் போராளி சிவகுமாரனோடு எழுபதுகளில் களமாடிய தோழனின் நூலுக்கு…..

ori.wrapper -eelamஈழத்தின் விடிவுக்காய் பாலஸ்தீனப் பயிற்சி பெற்று போராளியாய்ப் படைக்கருவிகளை பாவித்தவன் படைப்புக்கு…..

”விண்ணப்பித்தால் ஈழக் குடியுரிமைக்கே விண்ணப்பிப்பேன். அதுவரை அகதியாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன். அல்லது அகதியாகவே செத்துப் போகிறேன்…..” என்று பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்காது நிற்கும் ஒரு சுயமரியாதைக்காரனின் நினைவலைகளுக்கு…..

எப்படி எழுத முடியும் என்னால்.

இதில் இருப்பவையெல்லாம் வெறும் எழுத்துக்கள்….. வார்த்தைகள்….. வாக்கியங்களாகப் படவில்லையே எனக்கு. வலிகளாக இருக்கிறதே. என்ன செய்வேன் நான்?

அம்மாவின் இறுதிப் பயணத்தைப் பற்றி வாசிக்க வாசிக்கவே கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. என்ன செய்வதென்று புரிபடாமல் இணையதளத்தைத் திறந்து இப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்தேன் பிரான்ஸிஸ் ஆகவும்….. சுந்தராகவும்….. அறியப்பட்ட கி.பி.அரவிந்தனுக்கு :

சுந்தர்……

இப்போது நான் உங்களுடன் இருக்கிறேன்.

அம்மாவின் தலைமாட்டிற்கு அருகே ஐயா, தம்பியரோடு நானும்…..

உங்கள்,

பாமரன்.

இதை வாசிக்க வாசிக்க

யாழ்

லெபனான்

கொழும்பு

வெலிக்கடை சிறை

தமிழகம்

பிரான்ஸ் என இப்படி ஒவ்வொரு இடமும் நீங்களும் அரவிந்தனோடுதான் இருந்து கொண்டு இருப்பீர்கள்.

இனி, அவருடனான உங்கள் பயணம் தொடங்க நான் விடைபெறுகிறேன் இப்போதைக்கு.

தோழமையுடன்,

பாமரன். “

இப்படித்தான் எழுதியிருந்தேன் அதில்.

இந்நூலில் எனக்குப் பிடித்த விசயமே…..…..

”நான் எவ்வளவு பெரிய ஜாம்பவான் தெரியுமா?

ஈழப்போராட்டமே எனது தலையில்தான் நடந்தது…..…..” என்றெல்லாம் பீற்றிக்கொள்ளாமல்…..…..

பலத்தையும், பலவீனத்தையும் சமமாய் பாவித்து…..…..

இன்றைக்கு ஈழப்போராட்டம் வேறொரு முக்கிய கால கட்டத்தில் வந்து நிற்கும் நிலையில் புலம்பெயர்ந்து வாழும் நம் மக்கள் நிதானித்து தேர்வு செய்ய வேண்டிய வழி எது என்பதைச் சொல்வதுதான்.

இதில் முரண்படவும் உண்டு சில விசயங்கள். ஆனால் அம்முரணும் பல ஓடுகாலிகளது விமர்சனங்களைப் போல் பகை முரணாய் இன்றி நட்பு முரணாய் இருப்பது மனதுக்கு பெரும் ஆறுதல் அளிக்கும் விசயம்.

ஈழப்போரின் பல்வேறு காலகட்டங்களை…..…..

அது கடந்து வந்த பாதையை…..…..

அது சென்றடைய வேண்டிய திசையை…..…..

ஓரளவுக்காவது உணர்த்தும் இந்த நூலைப் பெற…..…..

வழக்கம்போல் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் 09445182142 என்கிற எண்ணுக்கு அழைத்து நூலின் விலையையும் அதை வாங்கும் வழிமுறையையும் விசாரிக்க வேண்டியதுதான்.

மொத்தத்தில்…..…..

மனித உயிர்களை கிள்ளுக்கீரைகளாக…..…..

ஆயுதங்கள் ஏதுமற்ற அப்பாவி உயிர்களை காலில் தேய்க்கும் கரப்பான்பூச்சிகளாக…..…..

தேய்த்து அழித்திருக்கிறது ஒரு நேர்மையற்ற யுத்தம்.

மானுட தர்மங்களை மீறிய யுத்த வெறியைக் கண்டு விக்கித்துப் போனவர்கள் மக்களுக்காக தங்கள் ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..

“மக்களுக்காக ஆயுதம் ஏந்தியது மாபாதகச் செயல்” எனக் குற்றம் சுமத்திய சர்வதேச சமூகம் இனி அந்த மக்களைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறது? என்கிற வினாவோடு ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..

“உங்கள் வழிமுறைகள் தவறானவை” எனச் சகட்டுமேனிக்கு பழித்தவர்கள் அநாதரவாய் முகாம்களில் முடங்கிக் கிடக்கும் அந்த மூன்று லட்சம் மக்களுக்காக தம் சுட்டு விரலையாவது அசைக்கிறார்களா? என்கிற வினாவோடு ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..

இந்த உலகத்தின் மெளனத்தைக் கலைக்க

ஆயுதங்கள் மெளனமாக்கப்பட்டிருக்கிறதே தவிர

அவைகளுக்கு முற்றாக விடை கொடுக்கப்படவில்லை.

இதையே மாவோவின் வார்த்தைகளில் சொல்வதானால்.…..…..

”அரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம்.

யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல்.”

ஆம்.

முன்னதான அந்த ரத்தம் சிந்தா யுத்தத்தினை உலகம் முழுக்கக் கொண்டுபோகும் பணி பரந்து விரிந்திருக்கிற நம் தமிழ் மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அதுவரை பின்னதற்கான ஒரு சிறிய விளம்பர இடைவேளை இப்போது

https://pamaran.wordpress.com/2009/07/14/ஒரு-சிறிய-விளம்பர-இடைவேள/

Link to comment
Share on other sites

 

1970 களின் ஆரம்பங்களே எமது உரிமை போராட்ட வரலாற்றில் நான் முதன் முதலில் தடம் பதித்த காலம். அந்நாட்களில் நான் பார்த்து பழகியவர்களில் பிரதானமானவர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ் அவர்கள் (குருநகர்). 

இவரை கி.பி. அரவிந்தன் என்றும் சுந்தர் என்றும் பிரான்சிஸ் என்றும் பலரும் தோழமையோடும் நட்போடும் அழைப்பார்கள். அவரது இழப்பின் செய்தி அறிந்து நான் மனத்துயரம் அடைகின்றேன்.

அதே 1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பங்களில் என்று நினைக்கின்றேன். தமிழரசு கட்சியின் இளைஞர் அணியாக அப்போது இளைஞர் பேரவையே இருந்து வந்தது. மாவை சேனாதிராஐh அவர்களின் தலைமையிலான அந்த இளைஞர் பேரவை தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதாக பலராலும் உணரப்பட்டது. வெறும் பதவி மோகத்திலேயே அவர்கள் செயற்படுகிறார்கள் என்பதை உணர்ந்த இளைஞர்கள் பலர் இளைஞர் பேரவையில் இருந்து வெளியேறி தமிழீழ விடுதலை இயக்கம் (வுநுடுழு) என்ற அமைப்பை ஆரம்பித்தனர். அதில் பிரதானமானவர் தோழர் கி.பி அரவிந்தன் அவர்கள்.

ஈழப்போராட்ட அமைப்புகளின் வரலாற்றில் முதன் முதலாக தமிழரசு கட்சி, மற்றும் அதிலிருந்து உருவான தமிழர் விடுதலை கூட்டணியை எதிர்த்து முற்போக்கு சிந்தனைகளோடு செற்பட்ட ஒரே இயக்கம் இந்த தமிழீழ விடுதலை இயக்கமே. இந்த பெயரையே 1980 களில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் தமது இயக்கத்திற்கும் சூட்டிக்கொண்டனர்.

ஈழப் புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவனாக நான் இருந்த போது கி.பி அரவிந்தன் அவர்களும் அதில் முக்கியஸ்தராக இருந்து இலங்கையிலும், இந்தியாவிலும் செயற்பட்டவர். அந்நாட்களில்  நானும் அவரும் நெருங்கி பழகியிருக்கின்றோம்.

1977 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தால் லெபனான் நாட்டில் வைத்து ஈழப்போராட்ட முன்னோடிகள் சிலருக்கு எமது ஈரோஸ் அமைப்பின் ஊடாக ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டது. அதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட முதலாவது குழுவில் நானும் தோழர் கி.பி அரவிந்தனும் மற்றும் தோழர் அருளரும் சென்று அங்கு ஆயுதப்போராட்டப்பயிற்சி பெற்றிருந்தோம்.

பாலஸ்தீன பயிற்சிக்களத்திலும் உறுதி, அர்ப்பண உணர்வு,

அனைத்தையும் தோழர் கி.பி அரவிந்தன் அவர்களிடம் நான் கண்டிருக்கிறேன். 

1984, 1985 ஆம் ஆண்டுகளில் ஈழப்போராட்ட அமைப்புகளை ஒன்றிணைக்கும் பணிகள் இந்தியாவில் நடந்தன. போராட்ட அமைப்புகள் யாவும் பொது வேலைத்திட்டத்துடன் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என்ற எனது விருப்பமும் தோழர் நாபா அவர்களது விரும்பமும் தோழர் கி.பி.அரவிந்தள் அவர்களது  விருப்பமும் ஒன்றாகவே இருந்தன. ஓற்றுமைக்காக உறுதியோடு தோழர் கி.பி அரவிந்தன் அவர்கள்; எம்மோடு இணைந்து உழைத்த நாட்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

எளிமையான ஒருவர், கொண்ட கருத்துக்களில் ஆளுமை மிக்கவர்,

ஆழமான அறிவும் தேடலும் உள்ள ஓர் உன்னதமான மனிதர்.

ஆனாலும் 1980 களின் இறுதிப்பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்ற அவரது சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் நான் உடன்படவே முடியாத மாற்றம் தெரிந்தது.

ஓன்றாய் இணைந்தோம், பேசினோம், விவாதித்தோம், உடன்பட்டு புனித இலக்கு நோக்கி பயணித்தோம். ஆனாலும் அவர் அவரது பாதையிலும், நாம் எமது பாதையிலும் செல்வதற்கு சந்தி பிரித்துக்கொண்டோம்.

அரசியல் செயற்பாடுகளில் முரண்பாடு கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் முழுமையாக நிராகரிப்பது அரசியல் நாரீகமல்ல. 

எமது உரிமைப்போராட்டம் என்ற நெடும்பயணத்தில் குறிப்பிட்டதொரு காலச்சூழலின் பின்னர் தோழர் கி.பி அரவிந்தன் அவர்களது கருத்துக்களும் செயற்பாடுகளும் எம்மோடு முரண்பட்ட ஒன்றாக இருந்தாலும்,

ஈழப்போரட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்ற வகையில் 

தோழர் கி.பி அரவிந்தன் அவர்களுக்கு நான் அஞ்சலி மரியாதை செலுத்துகின்றேன்.

இழப்பின் துயரத்தில் துடி துடிக்கும் அவரது மனைவி சுமதி, 

இரு பிள்ளைகள், மற்றும் உறவினர்களுக்கும் எனதும், எமது கட்சியின் சார்பிலும் ஆறுதல் தெரிவிக்கிறேன்.

செயலாளர் நாயகம் 

டக்ளஸ் தேவானந்தா, பா. உ.

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி. ஈ.பி.டி.பி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குக் கி.பி.அரவிந்தனுடன் நேரடியாகப் பழகிய அனுபவம் இல்லையெனினும்.. அவரது துணைவியார் மூலம் அவர் எழுதிய நூலொன்றைப் பெற்று வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!

 

அந்தப் புத்தகம் பிரான்சிலிருந்து நேரடியாக அனுப்பப்பட்டிருந்தது!

 

ஏனோ தெரியவில்லை.. அதை வாசிக்க வேண்டும் என்ற மன உந்துதலில்.. புத்தகத்தைத் திறந்தேன்! 

 

இறுதி வரை .. அதை வாசித்து முடிக்கும் வரை.. என்னால் அதைக் கீழே வைக்க முடியவில்லை!

 

அரவிந்தனைப் பொறுத்தவரையில் எனக்குப் பிடித்துக் கொண்டது.. அவரது கொள்கைப் பிடிப்பு! தாலி கட்டித் திருமணம் செய்வது தமிழனது வரலாற்றில் இடையில் புகுத்தப் பட்ட ஒன்று என்ற நான் நம்புகின்றேன்!

 

அதற்கேற்ப அந்தக் காலத்திலேயே, தாலி கட்டாமல் திருமணம் செய்த அவரது 'துணிவு' என்னை மிகவும் கவர்ந்த ஒன்று!

 

தனது வாழ்வைப் பற்றி.. ஒரு திறந்த புத்தகமாக அவர் எழுதியிருந்த விதம் என்னைக் கவர்ந்தது!

 

நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார் என்று அறிந்திருந்தேன்!

 

ஆனால்.. இவ்வளவுக்கு அந்த நோயின் தாக்கம் இருந்திருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை!

 

ஆழ்ந்த அஞ்சலிகள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்

சில தினங்களுக்கு முன்னர் ஈழ விடுதலை அரசியல் முன்ணோடிகளில் ஒருவரும், ஈழத்தின் பிரபல கவிஞர்களில் ஒருவரும் புதினப்பலகை மற்றும் அப்பால் தமிழ் ஆகிய இணைய தளங்களின் ஆசிாியருமான கி.பி.அரவிந்தன் அவர்கள் பாாிசிஸ் நகாில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் திருகோணமலையில் நினைவேந்தல் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்திருக்கிறோம். அவரது நன்பர்கள் மற்றும் சமூக அரசியல் நேசர்கள் அனைவருக்கும் இத்தகவலை பகிருமாறு தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன்.

இடம் - யெசுவிட் ஆங்கில கலாசாலை மண்டபம், உடதுறைமுக வீதி, திருகோணமலை (புனித சூசையப்பர் கல்லூாிக்கு பின்புறமாக)

நேரம் - மாலை 4 மணிக்கு

காலம் - 15/3/2015 (ஞாயிற்றுக்கிழமை)

சமூகத்திற்கென களம் புகுவோர் சமூகத்தின் அங்கிகாரத்தை எதிர்பார்த்து வருவதில்லை. ஆனால் அவ்வாறான உயாிய மனிதர்களை நினவு கொள்ள வேண்டியது சமூகத்தின் உயர் பண்பாகும். நமது பண்பை நாம் நிரூபிப்போம்.

நன்றி முகநூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கி.பி.அரவிந்தன்: தமிழ்ச்சூழலில் ஒரு வரலாற்று வகிபாகத்தையுடைய பேராளுமை! - நினைவுக்குறிப்பு

ரூபன் சிவராஜா

c4fa9846-f6be-4811-ae1b-4a17902ab17d1.jp

கி.பி அரவிந்தன் அண்ணை இனி எம் மத்தியில் இல்லை. நோய் பறித்துவிட்டது அவர் உயிரை. நான் ஆழமாக நேசித்துப் பழகிய உன்னதமான மனிதர்களில் ஒருவர்.

இறப்பு என்பது எப்பொழுதுமே துயரத்தைத் தருவதுதான். ஆனாலும் எம்மோடு நெருங்கிப் பழகிய மனிதர்களின் இழப்பு எம்மைத் தாங்கொணாத் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. ஒருவித வெறுமைக்குள் தள்ளிவிடுகிறது.

ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியாக அவரது பங்களிப்பு, போராட்டச் செயற்பாடுகள், இலக்கிய, இதழியல் மற்றும் ஊடகவியல் பங்களிப்புகள் சார்ந்து அறிந்திருந்தாலும் 2008ஆம் ஆண்டுதான் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

2008இன் இறுதியில் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய 'இலங்கைத் தமிழர் – முழுமையான வரலாறு' நூல் அறிமுக விழாவில் விமர்சன உரையாற்றுவதற்காகவும், 2009 மே ஆரம்பத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள்வாக்கெடுப்பு செயற்திட்டத்தினை மக்கள் முன் எடுத்துச் செல்வதற்குரிய கருத்துரைகளை வழங்குவதற்காகவும் நோர்வேக்கு வருகைதந்தபோதே நேரடியாக சந்திக்க முடிந்தது.

முள்ளிவாய்க்கால் துன்பியலுக்குப் பின்னர் புலம்பெயர் அரசியலில் அராஜகப்போக்கு தலைதூக்கியதையடுத்து புதினம், தமிழ்நாதம் ஆகிய இணையத்தளங்கள் பிற்போக்கு சக்திகளால் முடக்கப்பட்டன. அந்த இணையத்தளங்களை மீள இயங்கவைப்பதில் அரவிந்தன் அண்ணை அதிக சிரத்தையெடுத்தார். அம்முயற்சி கைகூடவில்லை. வெவ்வேறு நாடுகளிலிருந்த அந்தத் தளங்களின் பங்களிப்பாளர்களை ஒருங்கிணைத்து 'புதினப்பலகை' செய்தித்தளத்தினை புதிதாக உருவாக்கும் பணியில் முனைப்புடன் இறங்கினார்.

புதினம், தமிழ்நாதம் தளங்களில் எனது பங்களிப்பும் இருந்ததை அறிந்து என்னுடனும் தொடர்பு கொண்டார். தொடர்ச்சியாக புதினப்பலகையை வெளிக்கொணர்வதில் அவரின் நெறிப்படுத்தலின் கீழ் பங்களிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலிருந்து அவரோடு நெருக்கமாகப் பழகுகின்ற, அடிக்கடி உரையாடக்கூடிய அரிய வாய்ப்புக் கிட்டியது. பன்முகப் பரிமாணம் கொண்ட பேராளுமைமிக்க அந்த மனிதருடன் பழகும் வாய்ப்பு நிறைய விடயங்களைக் கற்றுக்கொடுத்தது.

'அறி-தெளி-துணி' என்பதனைப் புதினப்பலகையின் தாரகமந்திரமாகக் கொண்டு தமிழ் அரசியல் பரப்பில் புத்தாக்க சிந்தனையை வளர்க்கவேண்டுமென்ற நோக்கில் நேர்மையுடன் உழைத்தவர். மாயைகளுக்குள்ளும், தேக்கநிலைக்குள்ளும் ஈழத்தமிழர் அரசியல் நிரந்தரமாகச் சென்றுவிடக்கூடாது என்ற பிரக்ஞையைக் கொண்டிருந்த அவர், கொடிய நோயொன்றின் பிடியில் அகப்பட்டபோதும் ஊடகப்பரப்பில் காத்திரமான பணிகளை முன்னெடுத்தார்.

இலக்கியப் படைப்பாளி, விடுதலைப் போராட்ட முன்னோடி என்ற பரிமாணங்களோடு மக்களை நேசித்த ஒரு சமூகப் போராளி என்ற அடையாளம் அவருக்கு உண்டு. அவருடைய போராட்ட வாழ்க்கை, இலக்கியப் பங்களிப்புகள் உட்பட்ட வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்வதனூடாக அரசியல் விடுதலையை அவாவி நிற்கும் தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களையும் ஒருசேரப் பதிவுசெய்யவும் ஆவணப்படுத்தவும் முடியுமென நான் நம்புகின்றேன்.

c4fa9846-f6be-4811-ae1b-4a17902ab17d4.jp

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் வடிவம்கொடுத்த மூலவர்களில் ஒருவர், அதற்காகத் தனது இளமைக்காலங்களை அர்ப்பணித்தவர் என்ற வகையில் தமிழ் அரசியல் பரப்பில் அவரது வகிபாகம் முக்கியத்துவம் வாய்ந்தது. படைப்பாளியாகவும் அவரது கவிதைகளும் எழுத்துகளும் தனித்துவப் பெறுமதி மிக்கவை.

இதற்கு சிறப்புமிக்கதொரு வகிபாகத்தினைத் தமிழ்ச் சமூக, இலக்கிய மற்றும் அரசியல் பரப்பில் கொண்டிருந்த போதும் எளிமையும் தோழமையும் அவரது முதன்மை அடையாளங்களாக இருந்தன. அவரிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளத்தக்க பண்பியல்புகளில் இவை முக்கியமானவையென பல தடவைகள் உணர்ந்திருக்கின்றேன்.

இவருடைய கவிதைகளின் தனித்துவத்தையும் வீரியத்தையும் உணர்த்துவதற்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இவரது 'கனவின் மீதி' கவிதைத் தொகுப்பிற்கு வழங்கிய அணிந்துரையிலிருந்து சில வார்த்தைகளை இங்கு குறிப்பிடலாம்:

'கி.பி.அரவிந்தனுக்கு மாத்திரம் நல்லதொரு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பாரேயானால் அவருடைய வாசகர் வட்டம் விரியும். ஒரு நாட்டில் வாழுகின்ற – ஒரு அகதியின் அவலத்தை, இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்குக் கைவந்துள்ளது என்றே கருதுகிறேன்' என்பது பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களது கூற்று.

பேராசிரியரின் இந்தக் கூற்றே இவருடைய கவிதைகளை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்கின்ற உந்துதலை மொழியியல் ஆய்வாளரும் விரிவுரையாளருமான அப்பாசாமி முருகையனுக்கு வழங்கியிருந்தது என அரவிந்தன் அண்ணை கூறியிருக்கின்றார். அவருடைய 'முகம்கொள்' 'இனியொரு வைகறை' 'கனவின் மீதி' ஆகிய கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் பிரெஞ்சு மொழியில் 'ஒரு உறைபனிக்கால கட்டியக்காரன் – ‘Le messager de l’hiver’ எனும் தலைப்பில் மொழியாக்க நூலாக்கப்பட்டு கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளியீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் 1978 முதல் 1988 வரையான பத்தாண்டுகள் தங்கியிருந்தவாறு ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான அரசியல், இலக்கிய ஊடகப்பணிகளை மேற்கொண்டவர். தமிழகத்துடனான அவரது உறவும் தோழமையும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழக அரசியல், இலக்கிய, ஊடக மட்டங்களில் பலராலும் வெகுவாக மதிக்கப்பட்ட ஒரு ஆளுமையாகத் திகழ்கின்றார். இன்னொரு வகையில் சொல்வதானால் தமிழகத்திற்கும், ஈழத்திற்கும், புலம்பெயர் சமூகத்திற்குமிடையிலானதொரு பாலமாக விளங்கினார் என்பது மிகையன்று.

90களின் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் புலம்பெயர் சமூக வாழ்வியலை மேம்படுத்தவல்ல பல்வேறு செயற்பாடுகளுக்கு உந்துதலாகவும் அறிவுசார் பங்களிப்பாளராகவும் விளங்கியதைப் பலரும் அறிவோம். 'அப்பால் தமிழ்' எனும் கலை இலக்கியப் படைப்புகளுக்கான இணைய இதழை நெறிப்படுத்தியதோடு, தமிழகத்திலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய, சமூக அரசியல் இதழான 'காக்கைச் சிறகினிலே' மாத இதழின் நெறியாளர்களில் ஒருவராக இயங்கியவர்.

எவ்வித பாரபட்சமுமின்றி ஈழத்து கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரை குறிப்பாக இளையவர்களை எழுத்துலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். எழுதத் தூண்டியுள்ளார். படைப்பாளிகளுக்கான களங்களை அமைத்துக் கொடுத்து வந்துள்ளார் என்பதை நான் நன்கறிவேன். என்னையும் ஊக்குவித்து எழுதவைத்தவர். மறையும்வரை அத்தகு ஊக்குவிப்புகளை வழங்கி, உறுதுணையாக இருந்து வந்துள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முகநூலில் கருத்துகளைப் பகிர்ந்துள்ள எழுத்தாளர்கள் பலர் தாம் கி.பி.அரவிந்தன் அவர்களால் எழுத்துலகிற்குக் அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

முள்ளிவாய்க்கால் சம்பவம் அவரை அதிகமாகத் தாக்கியிருந்தது. 1970களின் ஆரம்பத்திலிருந்து பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட முன்னோடி, ஆயுதப்போராட்டத்தை முன்மொழிந்த முன்னோடிகளில் ஒருவர் என்ற வகையில் இந்தப்போராட்டம் வெல்லப்பட வேண்டுமென்ற வேணவாவைச் சுமந்திருந்த அவருக்கு முள்ளிவாய்க்கால் நிகழ்வு சொல்லொணாத் துயரத்தைக் கொடுத்திருந்தமை புரிந்துகொள்க்கூடியதே.

போராட்டத்தில் பின்னடைவுகள், தோல்விகள் என்பது இயல்பானவை. ஆனால் முள்ளிவாய்க்கால் என்பது அவற்றையெல்லாம் தாண்டிப் பாரிய அளவில் சிதறல்களையும் சிதைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது என்ற கருத்தினைக் கொண்டிருந்தார். தமிழர் போராட்டத்தினுடைய சிந்தனைகள், திட்டங்கள், அறிவுசார் மூலங்கள், தந்திரோபாயங்கள் அனைத்தும் எதிரியிடம் ஒப்படைக்கப்பட்ட துன்பியலாகிவிட்டதென்று தனது கவலையைத் தமிழ்3 வானொலி உரையாடலில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில், முள்ளிவாய்க்கால் துன்பியலிலிருந்தும், தோல்வியிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் இவ்வாறான சிதைவுகளைத் தமிழர்கள் சந்திக்காதிருப்பதற்கு தோல்வியின் காரணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும் அவசியமென்று கருதியவர். அதன் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் விடுதலை அரசியலுக்கு பலம் சேர்க்கும் வகையில் அவரது ஊடகப்பணி அமைந்தது.

அவருடன் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் நோர்வே தமிழ்3 வானொலிக்காக ஒரு உரையாடலை மேற்கொண்டிருந்தேன். அவருடைய பிரெஞ்சு மொழியாக்கக் கவிதைத்தொகுப்பு நூல்வெளியீட்டினை முன்வைத்து தொடங்கிய அந்த உரையாடல், அவருடைய ஆரம்பகால போராட்டச் செயற்பாடுகள், தியாகி பொன் சிவகுமாரனோடு இயங்கிய காலம் மீதான நினைவுத் தெறிப்புகள், அவருடைய இளமைக்கால இலக்கிய ஈடுபாடு, இலக்கியவாதியாக உருவாகிய புறச்சூழல், தமிழகத்திலிருந்து அரசியல், ஊடகப்பணி ஆற்றிய காலங்கள், ஈழ விடுதலைக்கான போராட்டச் செயற்பாடுகள், புலம்பெயர் வாழ்வியல், புலம்பெயர் இளைய சமூகம், மொழி, பண்பாடு சார்ந்த செயற்பாடுகளில் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் என நீண்டு சென்றது. இவை அனைத்திற்குமான தனது பார்வையையும் அனுபவங்களையும் விரிவாகவும் ஆழமாகவும் பகிர்ந்து கொண்டார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்கூட ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ அவர்களுக்கான தமிழ்3 இன் நினைவுப்பகிர்வு நிகழ்ச்சியிலும், எஸ்.பொ அவர்களின் இலக்கிய வீரியம் பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இத்தனை விரைவில் அவர் எம்மைவிட்டுப் பிரிவார் என்று அப்பொழுது நினைத்திருக்கவில்லை.

நோய்வாய்ப்பட்ட அவரின் இறுதிக்காலங்கள் கிகிச்சையால் மட்டும் நீட்சிப்படவில்லை. புதினப்பலகை அவரின் உயிர்வாழ்தலை சற்று நீடித்திருக்கிறது எனலாம், அத்தோடு 'காக்கைச் சிறகினிலே' இதழையும் குறிப்பிடலாம். இளையராஜாவின் பாடல்களாலும் அவர் மனதளவில் இறுதிக்காலங்களில் அதிகம் லயித்துள்ளார், ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளார். அவருடைய முகநூல் பக்கத்தில் இளையராஜாவின் இசைப்பாடல்கள் பலவற்றையும் இளையராஜாவின் உயிர்ப்புமிகு இசையாளுமை பற்றிய தகவல்களையும் அவ்வப்போது பகிர்ந்துள்ளமையை அவதானிக்க முடியும்.

தமிழ் அரசியல், இலக்கியப் பரப்பில் அவருடைய வகிபாகத்தினை தனிமனித வகிபாகமாகச் சுருக்கிவிட முடியாது. அவர் எத்தகையை சிந்தனைகளைக் கொண்டிருந்தார், எப்படி வாழ்ந்தார், மக்கள் மீது எத்தகைய நேசிப்பினைக் கொண்டிருந்தார், விடுதலையை அவாவிநின்ற மக்களுக்காக எந்தெந்தத் தளங்களில்; செயற்பட்டார், தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் எத்தகைய முற்போக்கான மாற்றங்கள் ஏற்படவேண்டுமென கனவு கண்டார் என்று நோக்குமிடத்தும், அவருடைய நான்கு தசாப்த பொதுவாழ்க்கையை ஆராயுமிடத்தும், தமிழ் அரசியல், சமூக, படைப்பிலக்கியப் பரப்பில் வரலாற்று வகிபாகமொன்றினை அவர் கொண்டிருக்கின்றார் என்பதைக் கண்டடையவும் உணரவும் முடியும்.

அதற்கமைய அவரது வாழ்வியல் பக்கங்கள் அந்தந்தக் காலங்களில் அவரோடு நெருங்கிப்பழகிய, செயற்களத்தில் ஒன்றாக இயங்கியவர்களால் விரிவாகவும் ஆழமாகவும் பதிவு செய்யப்படவேண்டியது தமிழ்ச்சூழலுக்கும், தமிழர் அரசியலுக்கும் அவசியமானது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=c4fa9846-f6be-4811-ae1b-4a17902ab17d

Link to comment
Share on other sites

அஞ்சலி | கி.பி.அரவிந்தன் - காடு வரை அகதி

 

aravin_2342127f.jpg

 

1953-ம் ஆண்டு பிறந்த கி.பி.அரவிந்தனின் இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். 1978-ம் ஆண்டிலிருந்து 1988-ம் ஆண்டுவரைத் தமிழகத்திலிருந்தபோது அவருக்குப் பெயர் சுந்தர். புலம்பெயர்ந்தோர் இலக்கிய உலகில் கி.பி.அரவிந்தன் என்ற பெயரை எப்படி மறக்க முடியாதோ அவ்வாறே ஈழ விடுதலைப் போராட்ட அரசியலில் சுந்தர் என்ற பெயரை மறக்க முடியாது.

 
1987-ம் ஆண்டு ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் மூலம் தமிழகத்தைப் போராட்டப் பின்தளமாகப் பயன்படுத்திய வாழ்க்கை முறை முடிவுக்கு வந்தபோது போராட்ட இயக்கத்தவர்கள் இந்திய இராணுவ விமானத்தில் ஈழத்திற்குத் திரும்பினர். ‘சுந்தர்’மட்டும் மண்டபம் முகாமுக்குச் சென்றார். கப்பலில் இலங்கை செல்ல அகதியாகப் பதிவுசெய்தார். கப்பலிலேயே காங்கேசன்துறை வழியாக 16 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பினார்.
 
எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் உடனிருந்தவர்கள் மேல் நம்பகத்தன்மை போயிருந்தது ‘நம்பகத்தன்மையற்றவர்கள்’ சூழ இருந்தபோதுதான் மிகவும் உடைந்திருந்தார். இந்த விரக்தியைத்தான் இந்தத் தோல்வியைத்தான் கவிஞனாகத் தன்னை வடிவமைத்துக் கொள்ள, மடைமாற்றிக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார்.
 
இருபத்தைந்து ஆண்டுக் காலம் பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்த அகதி வாழ்க்கை முறையில் இலக்கிய ஆளுமையாக, கலை ஆர்வலராக கி.பி.அரவிந்தன் உச்சம் பெற்றார். தாயகமான ஈழத்தின் நிகழ்வுகள் பற்றியும் மொழியால் ஒன்றுபட்ட தமிழக நிகழ்வுகள் பற்றியும் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார். அன்றாட நடப்புகளின் விவரங்களை விரல்நுனியில் வைத்திருந்தார்.
 
தமிழகத்துப் படைப்பாளிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஓவியர்கள் என்று ஒரு பெரும் உறவு வட்டத்தையே கட்டிக்காத்து வந்தார். நோய் அவரை வாட்டியபோதும் தொலைபேசி வாயிலாக, மின்னஞ்சல் மூலமாக, ஸ்கைப் வழியாகப் பேசிக்கொண்டே இருந்தார். தமிழகத்தில் போராளியாக வாழ்ந்ததைவிட கலை இலக்கியம் பயிலும் தீவிர மாணவனாகச் செயல்பட்டார். கி.பி.அரவிந்தனுக்கு ஐரோப்பிய நாடோடிகளை நிரம்பப் பிடிக்கும். அவர்களுடைய வண்ணமிகு ஆடைகள் அவர்களின் கலைமேவிய வாழ்க்கை முறையை வியந்து வியந்து பேசுவார்.
 
எதையும் கண்டுகொள்ளாத ஐரோப்பிய தேசங்களின் அவசர உலகத்தில் தமிழ்க் கலைஞர்களே தமிழ்ப் படைப்பாளிகளே நாங்கள் இருக்கிறோம் என்று வருவிருந்து காத்து வரவேற்க அவர் இல்லக் கதவு எப்போதுமே திறந்திருந்தது. விருந்தினர்களைக் கலைக்கூடங்களுக்கும் வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கும் அழைத்துச் செல்ல நண்பர்கள் பட்டாளத்தையே கூட வைத்திருந்தார். இவ்வளவுக்கும் அவர் செல்வச் செழிப்பு மிகுந்தவரல்ல.
 
நீங்கள் ஆரம்பத்தில் என்ன வேலை செய்தீர்கள் என்று அவரிடம் ஒரு முறை கேட்கப்பட்டபோது அவர் சொன்னார், “கிளீனிங் வேலைதான் செய்தேன். கார்ப்பெட் சுத்தம் செய்ய வேண்டும், டாய்லெட் கழுவ வேண்டும் மேசை துடைக்க வேண்டும். சிகரெட் ஆஷ்ட்ரே துடைக்க வேண்டும். காலையில் ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்புபோய் வேலை செய்ய வேண்டும். அலுவலகம் முடிந்ததற்குப் பின் இரவு ஏழு மணியிலிருந்து பத்து மணி வரை வேலை செய்யவேண்டும்” இப்படிப்பட்ட உழைப்பில்தான் விருந்தினரை அவர் வரவேற்றார். அவர்கள் மனம் நோகாமல் உபசரித்தார்.
 
பிரான்சிலிருந்து மௌனம் எனும் காலாண்டிதழை கி.பி.அரவிந்தன் ஆசிரியராக இருந்து நடத்திவந்தார். ஓசை, சுவடு, ஈழமுரசு ஆகிய இதழ்களிலும் பங்களிப்புச் செய்துள்ளார். இனியொரு வைகறை, முகங்கொள், கனவின் மீதி மூன்று கவிதைத் தொகுப்புகள் தனித்தனியாக வெளிவந்துள்ளன. இம்மூன்று நூல்களும் ஒருசேரத் தொகுக்கப்பட்டு ‘மிச்சமென்ன சொல்லுங்கப்பா’ எனும் பெயரில் 2015-ம் ஆண்டு வெளிவந்துள்ளது. கி.பி.அரவிந்தனின் தன் வரலாறு, நேர்காணல்கள் கட்டுரைகள் அடங்கிய ‘இருப்பும் விருப்பும்’ எனும் நூல் வெளிவந்துள்ளது.
 
2009, மே 17, முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் கி.பி. அரவிந்தனின் அரசியல் எதிர்பார்ப்பையும் அரசியல் ஈடுபாட்டையும் நொறுக்கிப் போட்டது.
 
“ஈழக்குடியுரிமை விண்ணப்பிக்கும் போதே எனது அகதி நிலையை மாற்ற விரும்புகிறேன். அப்படி ஒரு நிலை தோன்றும் என்றே நம்புகிறேன். அதுவரை சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதுதான். பரவாயில்லை. அகதியாகவே வாழ்ந்து விட்டுப் போகிறேன். அல்லது அகதியாகவே செத்துப் போகிறேன்” என்று சொன்ன கி.பி. அரவிந்தன் மார்ச் 8ஆம் தேதி அகதியாகவே செத்துப் போய்விட்டார் என்பது நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
 
கட்டுரையாளர், பதிப்பாளர் - தொடர்புக்கு: saalaramvaigarai@gmail.com
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருடன் நேரடிப் பழக்கம் இல்லாவிடினும்அவரது பெயரை பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தத் திரியே அவரது ஆளமைக்கும் உறுதிக்கும் ஒரு சான்று. ஆழ்ந்த இரங்கல்கள்!!!

Link to comment
Share on other sites

  • 1 month later...

மிகவும் முக்கியமான பதிவு. அதிவு அளவுக்கு முக்கியமான பின்னூட்டங்கள். இது யாழில் வந்த மிக ஆரோக்கியமான கருத்துபரிமாற்றங்களில் ஒன்று.

நேரமுள்ளபோது மீண்டும் வந்து  பின்னூட்டங்களை முழுமையாக  வாசிக்கவேணும்.

 

எனது அஞ்சலி

http://www.yarl.com/forum3/index.php?/topic/157286-%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.