Jump to content

ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’


Recommended Posts

மெக்டொனால்ட்ஸ் இந்தியாவில் வெற்றி பெற்றது எப்படி?
 
mcdonalds_2336460f.jpg
 
1954 ம் ஆண்டு. அமெரிக்காவில் வசித்த ரேமண்ட் க்ராக் (Raymond Kroc) தன் 52 வருட வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தார். தோல்விகள், தோல்விகள், தோல்விகள். குடும்ப வறுமையால், கல்லூரிப் பக்கமே போகாமல், பள்ளிப் படிப்போடு நிறுத்தினார். 15 வயதில் ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்குப் போனார்.
 
அதற்குப் பிறகு, பியானோ வாசிப்பவர், இசைக்குழு உறுப்பினர், ஓட்டல் ரூம் பாய், பேப்பர் கப் விற்பவர் என்று பல வேலைகள். அத்தனை வேலையிலும் அவர் ராசியில்லாத ராஜாதான். அவர் உப்பு விற்கப்போனால், மழை பெய்தது; மாவு விற்றால் புயல் அடித்தது.
 
50 ம் வயதில், மில்க் ஷேக் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்தார். முதல் இரண்டு வருடங்கள் சுமாராக ஓடின. இப்போது அதிலும் பிரச்சினை விலை மலிவான போட்டி இயந்திரங்களின் வருகையால், விற்பனை சரியத் தொடங்கியது. 52 வயதில் இன்னொரு புது வேலை தேடவேண்டும்.
 
ஆர்டரால் வந்த மாற்றம்
 
இப்போது ஒரு ஆச்சரியம் நடந்தது. கலிபோர்னியா மாநிலத்தில், செயின்ட் பர்னார்டோ என்னும் இடத்தில் மெக்டொனால்ட்ஸ் என்ற பெயரில், மாரிஸ் மெக்டொனால்ட்ஸ், ரிச்சர்ட் மெக்டொனால்ட்ஸ் என்னும் இரு சகோதரர்கள் துரித உணவு விடுதி நடத்தி வந்தார்கள்.
 
அவர்கள் ஆறு மில்க் ஷேக் தயாரிக்கும் இயந்திரங்கள் ஆர்டர் செய்தார்கள். அமெரிக்கா முழுக்க மில்க் ஷேக் இயந்திரங்களின் விற்பனை சரியும்போது, மெக்டொனால்ட்ஸ் தந்த பெரிய ஆர்டரைப் பார்த்து க்ராக் ஆச்சரியப்பட்டார். அப்படி என்ன தொழில்தான் அவர்கள் நடத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்ள, செயின்ட் பர்னார்டோ போனார். அங்கே அவருக்கு இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.
 
மூன்று உணவு வகை
 
மெக்டொனால்ட்ஸ் சிறிய அளவிலான துரித உணவு விடுதி. சாதாரண ஓட்டல்களில்கூட மிக நீளமான மெனு கார்ட் இருக்கும். இங்கே மெனு கார்டே கிடையாது. ஏனென்றால், அவர்கள் சப்ளை செய்தவை மொத்தம் மூன்றே மூன்று ஐட்டங்கள்தாம் மாட்டு இறைச்சி அல்லது பன்றி இறைச்சி வைத்த பர்கர், மில்க் ஷேக், உருளைக்கிழங்கு ப்ரைஸ்.
 
(பர்கர் இரண்டு பன்களுக்கு நடுவே, இறைச்சித் துண்டு, சீஸ், வெங்காயத் துண்டுகள், கோசு இலை மற்றும் சுவையூட்டும் பொருள்கள் கொண்ட உணவு.)
 
க்ராக் மெக்டொனால்ட்ஸ் பர்கரை சுவைத்துப் பார்த்தார். மயங்கிப்போனார். இத்தனை ருசியான பர்கரை அவர் இதுவரை சாப்பிட்டது கிடையாது. அத்தனை சூப்பராக இருந்தது. கடையில் கூட்டம் அலைமோதியது ஏன் என்பதை க்ராக் புரிந்துகொண்டார். அவர் மனதில் திடீரென ஒரு ஐடியா- மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் அமெரிக்கா முழுக்கக் கிளைகள் திறந்தால், அவர்கள் தொழில் அமோகமாக வளருமே?
 
க்ராக், மெக்டொனால்ட்ஸ் சகோதரர்களோடு பேசினார். அத்தனை ரிஸ்க் எடுக்க அவர்கள் தயாராக இல்லை. மெக்டொனால்ட்ஸின் கிளைகள் திறக்கும் உரிமையை பிரான்சைஸீஸ் முறையில் வழங்கலாம் என்று க்ராக் சொன்னார்.
 
அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டால், அவருக்குக் கமிஷன் தருவதாக மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் சம்மதித்தார்கள். க்ராக், மில்க் ஷேக் இயந்திர நிறுவனத்தின் வேலையை விட்டார். மெக்டொனால்ட்ஸில் சேர்ந்தார்.
 
அபரிமித வளர்ச்சி
 
``இறைச்சி பர்கர் என்றால் மெக்டொனால்ட்ஸ் மட்டுமே” என்னும் பொசிஷனிங்கை மக்கள் மனங்களில் உருவாக்கினார். ஐந்தே வருடங்களில் 600 கிளைகள் திறக்கப்பட்டன. மெக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் நிறுவனத்தை அவருக்கே விற்றுவிட்டார்கள்.
 
1986 இல், தன் 84 ம் வயதில் க்ராக் மரணம் அடைந்தார். அப்போது, அவர் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி, உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவர். இன்று மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்துக்கு 118 நாடுகளில் 36,000 கிளைகள் இருக்கின்றன.
 
ஆண்டு விற்பனை 35 பில்லியன் டாலர்கள் (சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்). இதற்கு அடிப்படைக் காரணம், ``இறைச்சி பர்கர் என்றால் மெக்டொனால்ட்ஸ் மட்டுமே” என்று மக்கள் மனங்களில் க்ராக் உருவாக்கிய பொசிஷனிங்.
 
இந்தியாவில்…
 
1991. மெக்டொனால்ட்ஸ் இந்தியாவில் நுழைய முடிவு செய்தது. ஆனால், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர்கள் கடை திறக்கவில்லை. 5 வருடங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்தார்கள்.
 
இந்திய மக்கள் தொகையில் 81 சதவீதம் இந்துக்கள். இவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடமாட்டார்கள். 13 சதவீதம் இஸ்லாமியர்கள். இவர்கள் பன்றி இறைச்சி சாப்பிடமாட்டார்கள். மொத்த மக்களில் சுமார் 42 சதவீதம் சைவர்கள். எந்த மாமிசத்தையும் தொடமாட்டார்கள். இது மட்டுமல்ல. மாமிசம் சமைக்கும் அடுக்களையில் சமைக்கப்படும் சைவ உணவுகளையும் சாப்பிடமாட்டார்கள்.
 
ஆகவே, இந்தியாவில் மெக்டொனால்ட்ஸ் வெற்றி பெற வேண்டுமானால், ``மெக்டொனால்ட்ஸ் மாமிச உணவு விடுதி” என்னும் அபிப்பிராயத்தை மக்கள் மனங்களிலிருந்து மாற்றவேண்டும், சைவ, அசைவ உணவுகள் இரண்டுமே மெக்டொனால்ட்ஸில் தயாரிக்கப்பட்டாலும், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இயங்குபவை என்பதைக் வாடிக்கையாளர்களுக்குச் சந்தேகமே இல்லாமல் தெளிவாக்கவேண்டும்.
 
நுணுக்கமான அணுகுமுறை
 
இதற்காக மெக்டொனால்ட்ஸ் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்தையும் நுணுக்கமாகத் திட்டமிட்டார்கள். இந்தியாவில் மாட்டு இறைச்சியே பரிமாறக்கூடாது என்னும் முக்கிய முடிவை முதலில் எடுத்தார்கள்.
 
1996. தில்லியில் மெக்டொனால்ட்ஸ் முதல் கிளை திறந்தார்கள். சாதாரணமாக ஓட்டல்களில் சைவமும், அசைவமும் ஒரே அடுக்களையில் சமைக்கப்படும். இங்கே, தனித்தனி அடுக்களைகள் அமைத்தார்கள். சைவ அடுக்களையில் வேலை பார்ப்பவர்கள் பச்சை நிறச் சீருடையும், அசைவ அடுக்களை ஊழியர்கள் சிவப்பு நிறச் சீருடையும் அணிந்தார்கள். சைவ, அசைவச் சமையல்களுக்குள் தொடர்பே இல்லை என்பதை இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாக்கினார்கள்.
 
சைவ உணவு அதிகம்
 
பிற நாடுகளில், மெக்டொனால்ட்ஸின் மெனுவில் 70 சதவீதம் அசைவ உணவுகள், 30 சதவீதம் சைவ உணவுகள். இந்தியாவில் இந்த சதவீதம் தலைகீழாக்கப்பட்டது. அதாவது, இந்திய மெனுவில் 70 சதவீதம் சைவ உணவுகள், 30 சதவீதம் அசைவ உணவுகள். நம் நாட்டுக்கென்றே, மாமிசத்துக்குப் பதிலாக உருளைக் கிழங்கு கொண்ட பர்கர்கள் தயாரிக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றையும் உருவாக்க மெக்டொனால்ட்ஸ் எடுத்த சிரமம், செலவிட்ட நேரம், பணம்.....
 
பன்னீர் பர்கர்
 
உதாரணமாக, இந்தியாவுக்கென்றே ஸ்பெஷலான பர்கர் உருவாக்க முடிவெடுத்தார்கள். சுதா நாராயணன் என்னும் பொது மேலாளர் இந்த முயற்சிக்குத் தலைமை ஏற்றார். நம் நாட்டுக்கே தனித்துவமானது, பன்னீர் எனப்படும் பாலாடைக் கட்டி. இதை வைத்து பர்கர் தயாரித்தால்.....எண்ணம் சுலபமாக இருந்தது.
 
ஆனால், இதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் ஆயிரம் பிரச்சனைகள். மாமிசத்தோடு காரம், புளிப்பு போன்ற சுவையூட்டும் பொருள்களைச் சேர்த்தால், மாமிசம் அவற்றைத் தன்னுள் ஏற்றுக்கொள்ளும். பன்னீர் அவ்வாறு வேற்றுச் சுவைகளை எளிதாக ஏற்கவில்லை. அப்புறம், பர்கர் செய்யும்போது பன்னீர் உதிர்ந்துபோனது.
 
இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மெக்டொனால்ட்ஸ் இந்தியாவின் சமையல் நிபுணர்கள் சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்தனர். அங்குள்ள உணவுத்துறை நிபுணர்களோடு ஆலோசனைகள் நடத்தினார்கள்.
 
பன்னீரின் சுவை, குணாதிசயங்கள் ஆகியவை, அதைத் தயாரிக்கப் பயன்படும் பாலை பொறுத்து இருக்கும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பால் கிடைப்பதால், அது பல சுவைகள் கொண்டதாக இருக்கிறது. அப்புறம் இன்னொரு விஷயம் எருமைப் பால், பசுவின் பால். எதிலிருந்து பன்னீர் தயாரிப்பது?
 
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, மஹாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் கோல்ஹாப்பூர் என்னும் ஊரில் கிடைக்கும் எருமைப் பால்தான் சிறந்தது என்று குழு முடிவெடுத்தார்கள். இதேபோல், சுவையூட்டும் ஸாஸ் (Sauce) பஞ்சாப் மாநில மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது.
 
இரண்டு வருடக் கடும் முயற்சிகளின் பலனாக, 2011 இல் மெக்ஸ்பைசி பன்னீர் (McspicyPaner) அறிமுகம் செய்யப்பட்டது. உழைப்புக்குப் பலன் கிடைத்தது. மெக்ஸ்பைசி பன்னீர் சூப்பர் ஹிட்!
 
பொற்கோவிலில்...
 
இப்போது இந்தியாவில் 300 மெக்டொனால்ட்ஸ் கிளைகள் இருக்கின்றன. இவற்றுள், வைஷ் ணவி தேவி, சீக்கியர்களின் தங்கக் கோயில் இருக்கும் அமிர்தசர் ஆகிய புனிதத்தலங்களில் முழுக்க முழுக்கச் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகின்றன. இந்தியாவில் தொடரும் மெக்டொனால்ட்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணம்? வாடிக்கை யாளர்களின் எதிர்பார்ப்புகளைச் சரியாகக் கணித்து, தங்கள் பொசி ஷனிங்கில் அவர்கள் செய்த மாற்றம், அதற்காகச் செய்த கடும் உழைப்பு!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொரு பதிவு ஆதவன் 

Link to comment
Share on other sites

நல்ல தொரு பதிவு ஆதவன் 

 

நன்றி சசி , தொட்ர்புடைய இணைப்பு ஒன்று கீழே சிலவேளை உங்களுக்குப் பிடித்திருக்கலாம்.

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/154161-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மெக்ஸிகோவில் சோப் பவுடர் விற்பனையில் பாடம் கற்ற பி அண்ட் ஜி

 

positioning_2366251f.jpg

 

பிராக்டர் அண்ட் கேம்பிள் (பி அண்ட் ஜி) நிறுவனம், ஏரியல், டைடு சோப் பவுடர்கள், விக்ஸ் ஜலதோஷ மருந்து, ஜில்லெட் ரேசர்கள், ஓரல் பி டூத் பிரஷ்கள் போன்ற ஏராளமான பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் அமெரிக்காவில் இருக்கிறது.
 
அமெரிக்காவின் அண்டை நாடு மெக்ஸிகோ. பொருளாதார ரீதியில் பின் தங்கிய நாடு. 1980 களின் பிற்பகுதியில், பி அண்ட் ஜி மெக்ஸிகோவில் ஏர்டெல் அல்ட்ரா என்னும் சோப் தூளை அறிமுகம் செய்தது. ஏர்டெல் அல்ட்ரா போட்டித் தயாரிப்புகளைவிட விலை அதிகமானதாக இருந்தது. ஆனால், இரண்டு மடங்கு அதிகத் துணிகளை வெளுக்கும் சக்தி கொண்டது.
 
விற்பனை அதிகரிக்கவில்லை
 
``உலகத்தின் நம்பர் 1 சோப்புத்தூள்”, “தரத்தின் சிகரம்”, “துணிகளைப் பளிச் என்று வெளுக்க வைக்கும் சோப் பவுடர்” என்றெல்லாம் விளம்பரம் செய்தார்கள். பதினைந்து வருடங்களுக்கும் அதிகமாக ஓடின. விற்பனை மந்தமாகவே இருந்தது. விலை அதிகமாக இருப்பதால் மக்கள் வாங்கத் தயங்குகிறார்களோ என்று நினைத்தார்கள். விலையைக் குறைத்தார் கள். விற்பனை கொஞ்சம் கூடியது. ஆனால், கணிசமான முன்னேற்றமில்லை. ஏன்? யாருக்கும் புரியவில்லை.
 
வித்தியாசமான அணுகுமுறை
 
காரணங்களைக் கண்டுபிடித்தாக வேண்டும். அப்போதுதானே உத்திகளில் மாற்றங்கள் செய்ய முடியும்? சாதாரண மாகக் காரணங்களைக் கண்டுபிடிக்கக் கருத்துக் கணிப்புகளைப் பயன்படுத்து வார்கள். ஏராளமான குடும்பப் பெண்களைப் பேட்டி கண்டு, அவர்கள் ஏர்டெல் அல்ட்ரா பயன்படுத்துகிறார்களா, இல்லையா, இல்லை என்றால் ஏன் என்னும் விவரங்களைக் கேட்டு அறிந்து, அவற்றை ஆராய்வார்கள். பி அண்ட் ஜி கருத்துக் கணிப்பைப் பயன்படுத்தவில்லை. இன்னொரு வித்தியாசமான முறையைக் கையாண்டார்கள்.
 
வீட்டிற்குச் சென்று ஆய்வு
 
மெக்ஸிகோ நாட்டின் தலைநகரம் மெக்ஸிகோ நகரம். (ஆமாம், நாட்டுக்கும், தலைநகரத்துக்கும் ஒரே பெயர்தான்.) அங்கே கார்லோஸ், அவர் மனைவி மார்த்தா, அவர்களுடைய இரண்டு பெண் குழந்தைகள் ஆகியோர் ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தார்கள். கார்லோஸ் கார்கள் ரிப்பேர் செய்யும் கம்பெனியில் கணக்காளராக வேலை பார்த்தார். மார்த்தா வேலைக்குப் போகவில்லை. குடும்ப நிர்வாகம் மட்டுமே. நடுத்தரக் குடும்பம்.
 
கார்லோஸ் வீட்டில் ஒரு மாதம் தங்கி, அவர்களுடைய துணி துவைக்கும் பழக்கங்களைத் தெரிந்துகொள்ள பி அண்ட் ஜி கம்பெனி முடிவெடுத்தார்கள். கார்லோஸ் சம்மதித்தார். மார்த்தா எப்படித் துவைக்கிறார், சோப் தூளை எப்படிப் பயன்படுத்துகிறார் என்று கவனித்தார்கள்.
 
பல பிரச்சினைகள் ஏர்டெல் அல்ட்ரா எப்படி இரண்டு மடங்கு துணிகளை வெளுக்கும் என்று அவர்களுக்குச் சந்தேகம். ஆகவே, பயன்படுத்தும் சோப் தூள் அளவைக் குறைக்கவில்லை. இதனால், சோப் தூளுக்கான மாதச் செலவு அதிகமானது. பிற சோப் பவுடர்களில் நுரை அதிகமாக வரும்: ஏர்டெல் அல்ட்ராவில் நுரை குறைவாக வரும். நுரை அதிகமாக அதிகமாக வெளுக்கும் சக்தி கூடும் என்று மக்கள் நினைத்தார்கள்.
 
சலவைத் தூளுக்கு பதில் சோப்பு
 
மெக்ஸிகோவில் பயங்கரத் தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்தது. நகரங்களில் தினமும் சில மணி நேரங்களுக்குத்தான் வீட்டுக் குழாய்களில் தண்ணீர் வரும். கிராமப்புறங்களில், பொது இடங்களில் தண்ணீர் தொட்டி இருக்கும். பெண்கள் அங்கிருந்து தண்ணீர் பிடித்துக்கொண்டு வருவார்கள். சோப் பவுடர் பயன்படுத்தினால், சோப் போவதற்காகத் துணிகளைப் பலமுறை அலச வேண்டியிருந்தது. இந்த நாட்களில் மார்த்தா சோப் தூளுக்குப் பதிலாகச் சோப்பு கட்டிகளை உபயோகப்படுத்தினார்.
 
சலவைத் தூள் பயன்படுத்தும்போது, துணிகளைப் பலமுறை அலச வேண்டியிருந்தது. இதற்கு அதிக நேரம் எடுத்தது. இரண்டு குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு, எல்லா வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு, துணி துவைப்பதற்கு அதிக நேரம் செலவிட மார்த்தாவால் முடியவில்லை. ஏர்டெல் அல்ட்ராவை மட்டுமல்ல, எந்தச் சோப் பவுடர் பயன்படுத்துவதையும் தவிர்த்தார்.
 
மூன்று காரணம்
 
மார்த்தாவின் அனுபவம்தான் ஏராளமான மெக்ஸிகோ பெண்களின் அனுபவமாகவும் இருக்கும் என்று பி அண்ட் ஜி பிரதிநிதிகள் கணித்தார்கள். ஏர்டெல் அல்ட்ராவின் மந்தமான விற்பனைக்கு முக்கிய மூன்று காரணங்களைப் பட்டியலிட்டார்கள்:
 
பலமுறை அலச வேண்டிய கட்டாயம். அதற்கான தண்ணீரும், நேரமும் கிடைக்காத பற்றாக்குறை.
 
கம்மியான நுரை
 
ஏர்டெல் அல்ட்ரா எப்படி இரண்டு மடங்கு துணிகளை வெளுக்கும் என்று மக்களுக்கு இருந்த சந்தேகம். பி அண்ட் ஜி மூன்று அம்சங்களுக்கும் தீர்வு காணும் முயற்சிகளை வேகமாகத் தொடங்கினார்கள். இரண்டு மாற்றங்கள் தேவைப்பட்டன. முதல் பிரச்சினைக்குத் தயாரிப்புப் பொருளில் மாற்றம் செய்யவேண்டும்: இரண்டாம், மூன்றாம் பிரச்சினைகளுக்கு மக்கள் மனங்களில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்.
 
விஞ்ஞானிகளிடம் பொறுப்பு
 
துவைக்கும்போது தேவைப்படும் தண்ணீரின் அளவைக் குறைப்பது எப்படி? சோதனைச் சாலை விஞ்ஞானிகளிடம் இந்தப் பொறுப்பைத் தந்தார்கள். அன்றைய சோப் பவுடர்கள் கீழ்க்கண்ட எட்டு படிநிலைகளில் துணிகளைத் துவைத்தன. துவைத்தல், அலசுதல், அலசுதல், அலசுதல், துணிகளை மிருதுவாக்கும் Softener என்னும் கெமிக்கல் சேர்த்தல், அலசுதல், அலசுதல், அலசுதல். கடும் ஆராய்ச்சிகளுக்குப் பின், விஞ்ஞானிகள் இதை மூன்றே மூன்று படிநிலைகளாகக் குறைத்தார்கள் துவைத்தல், Softener சேர்த்தல், அலசுதல். அதாவது, ஆறு அலசல்கள் ஒரே அலசலானது. தேவைப்படும் தண்ணீர், நேரம் ஆகியவை அறுபது சதவிகிதம் குறைந்தன.
 
விஞ்ஞானிகள் அடுத்தபடியாக “நுரை” பிரச்சினையைக் கைகளில் எடுத்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை இது சுலபமான வேலை. கெமிக்கல்களில் கொஞ்சம் மாற்றங்கள். முடிந்தது வேலை. பொங்கியது நுரை.
 
மூன்று படிநிலைகளில் துவைக்கும், அதிக நுரை கொண்ட புதிய ஏர்டெல் அல்ட்ரா சோப்புத் தூளை, மேம்பட்ட (Improved) ஏர்டெல் அல்ட்ரா என்னும் பெயரில் விற்பனை செய்ய முதலில் பி அண்ட் ஜி நிறுவனத்தினர் நினைத்தார்கள். ஆனால், ஏற்கெனவே இருந்த எதிர்மறை எண்ணங்கள் புதிய தயாரிப்பைப் பாதிக்கும் என்று உணர்ந்தார்கள். ஆகவே, இந்த மேம்பட்ட சோப் பவுடரை, டோட்டல் எஃபெக்ட்ஸ் (Total Effects) என்னும் புதிய பெயரில் அரங்கேற்றம் செய்தார்கள்.
 
செயல் விளக்கம்
 
டோட்டல் எஃபெக்ட்ஸ் உபயோகித்தால் குறைந்த அளவு தண்ணீர்தான் தேவைப்படும், துவைக்கும் வேலை வேகமாக முடியும், அதிக நுரை தரும், அதன் துவைக்கும் சக்தி பிற சோப் தூள்களைவிட இருமடங்கு, என்னும் பலங்களைப் பி அண்ட் ஜி விளம்பரங்களில் மக்கள் முன் வைத்தார்கள். ஏராளமான பொது இடங்களில் செயல் விளக்கங்கள் (Demonstrations) நடத்தி நிரூபித்தார்கள்.
 
டோட்டல் எஃபெக்ட்ஸ் மெக்ஸிகோ வில் அமோக வெற்றி கண்டது. ஏராளமான எம்பிஏ கல்லூரிகள் பி அண்ட் ஜி நிறுவனத்தின் மெக்ஸிகோ அனுபவத்தைக் கேஸ் ஸ்டடியாக விவாதிக்கிறார்கள்.
 
பொசிஷனிங்கில் செய்த ஆரம்பத் தவறையும் அதனால் வந்த தோல்வியையும் ஒத்துக்கொண்ட துணிச்சல், தாங்கள் குறிவைத்த மத்திய தர குடும்பத்தின் அனுபவத்தை அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து அறிந்துகொண்ட புதுமை முயற்சி, பொசிஷனிங் என்றால் மக்கள் மனதை மாற்றும் வெறும் விளம்பர முழக்கங்களல்ல, நுகர்வோர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தயாரிப்புப் பொருளில் செய்யும் மாற்றங்கள், அதற்காகப் போட்ட முதலீடு, செலவழித்த விஞ்ஞானிகளின் நேரம், கடும் முயற்சிகள் என எல்லாமே அனைத்து பிசினஸ்மேன்களுக்கும் அருமையான மார்க்கெட்டிங் பாடம்!
 
 
69106-P-G_products_medium.jpg
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவராசியமான பதிவுகள், ஆதவன்.
தொடர்ந்து இணையுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

நல்ல சுவராசியமான பதிவுகள், ஆதவன்.

தொடர்ந்து இணையுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இணையுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல Informative பதிவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க ஆவலாக உள்ளோம்....  தொடர்ந்து இணையுங்கள் ஆதவன்,     ! :D

Link to comment
Share on other sites

வித்தியாச முடிவெட்டல்!

 

haircut_2283411f.jpg

 

ஜப்பானியர்கள் நேரத்தைப் பொன்னாக நினைப்பவர்கள். அவர்களால் சும்மா இருக்கவே முடியாது. எப்போதும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான். நாம் சலூனுக்கு முடிவெட்டிக் கொள்ளப் போனால், சாதாரணமாக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்? அரை மணி நேரம். ஆனால், நேரத்துக்கு இத்தனை மதிப்புக் கொடுக்கும் ஜப்பானியர்கள் சலூனில் முடிவெட்டிக்கொள்ளப் போனால், குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். ஏன் தெரியுமா?
 
முடிவெட்ட 3000 யென்
 
ஜப்பானில் சலூனுக்குப் போய் முடிவெட்டுவது ஒரு சடங்குமாதிரி நடக்கும். முதலில் வெந்நீர் டவல்களால் பலமுறை உடலைத் துடைப்பார்கள்: தோள்களை மஸாஜ் செய்வார்கள்: கழுத்தில் டவல் கட்டுவார்கள்: குடிக்க க்ரீன் டீ தருவார்கள்: டீ குடித்து முடித்தபிறகுதான் முடி வெட்டலே ஆரம்பிக்கும். ஷேவிங் கட்டாயம் செய்துகொள்ளவேண்டும்.
 
முடிந்தவுடன் ஷாம்பூவால் தலையைக் கழுவுவார்கள், ஈரம் போகத் துடைப்பார்கள். மொத்தம் ஒரு மணி நேரம் எடுக்கும். இதற்கு 3000 யென் (சுமார் 1600 ரூபாய்) செலவாகும்.
 
1997 காலகட்டம். டோக்கியோவில் சராசரி மாத வருமானம் 4 லட்சம் யென் (அன்றைய நிலவரப்படி, 1,20,000 ரூபாய்.) டோக்கியோ ஜனநெருக்கடியான நகரம். வீட்டு வாடகை மிக அதிகம். அடுக்குமாடிக் குடியிருப்புகளில், ஒற்றை பெட்ரூம் மாத வாடகை 1,40,000 யென். இதுபோக, கையில் மிஞ்சும் தொகை 2,60,000 யென். வீட்டில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் இருந்தால், மாதாமாதம் முடி வெட்டவே 12,000 யென் ஆகும். இது மிகப் பெரிய தொகை. ஆகவே, மாதாமாதம் முடிவெட்டிக்கொள்வதற்குப் பதில், மக்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை முடி வெட்டிக் கொண்டார்கள். இதனால், சலூன்களின் வருமானம் குறையத் தொடங்கியது.
 
வருமானம் குறைந்தது
 
கஸ்டமர்களை ஈர்க்க, சலூன்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு, தங்கள் கடைகளில் ஆடம்பர அலங்காரங்கள் செய்தார்கள், வாடிக்கையாளர்களிடம் அதிக நேரம் செலவிட்டார்கள். ஆனால், வருமானம் அதிகரிக்கவில்லை. எல்லோருக்கும் லாபம் குறைந்தது. டோக்கியோவில் வசித்த க்யூனிட்டோ கோனிஷி (Kunito Konishi) ஒரு மெடிக்கல் கருவிகள் தயாரிக்கும் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்த்தார்.
 
நடுத்தர வர்க்கம். குறைந்த செலவில், குறைவான நேரத்தில் முடிதிருத்தும் சலூன்களுக்கு ஆசைப்பட்டார். ஆனால், அவர் விருப்பம் நிறைவேறாத ஆசையாக இருந்தது. ஏனென்றால், ஜப்பானில் முடி வெட்டிக் கொள்வது என்றால், மேலே சொன்ன அத்தனையையும் சலூன்கள் செய்தேயாகவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. காலம் காலமாக அத்தனை சலூன்களும் இந்தச் சம்பிரதாயத்தைப் பின்பற்றினார்கள். ஜப்பானிய சமுதாயம் பாரம்பரியங்களைப் பின்பற்றும் சமுதாயம். ஆகவே, சலூன்களும், தங்கள் வழக்கங்களை மாற்றிக்கொள்ள முயற்சிகளே எடுக்கவில்லை.
 
குறைந்த செலவில்…
 
தானே அப்படிப்பட்ட சலூன் தொடங்கலாமா என்று கோனிஷி நினைத்தார். அவருக்கு அதிகம் பணவசதி கிடையாது. ஆனால், தன் ஐடியா மேல் அபார நம்பிக்கை இருந்த்து. எடுத்த காரியங்களைப் பக்காவாகத் திட்டமிட்டுக் கனகச்சிதமாகச் செய்வது ஜப்பானியரின் வழக்கம். கோனிஷியும் இதைத்தான் செய்தார். ஏராளமான பொதுமக்களைப் பேட்டி கண்டார். “1000 யென் செலவில், பத்தே நிமிடங்களில் முடிவெட்டிக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?” என்னும் ஒரே கேள்வியைக் கேட்டார். 30 சதவீதம் பேர் “ஆமாம்” என்று பதில் சொன்னார்கள்.
 
சிறிய அளவில்…
 
1997. கோனிஷி QB ஹவுஸ் (QB House - QB என்றால், Quick Barber அல்லது Quick Beauty என்பதன் சுருக்கமாக இருக்கலாம்) என்னும் தன் முதல் சலூனைத் திறந்தார். மற்ற சலூன்களைவிட QB ஹவுஸ் முழுக்க முழுக்க வித்தியாசமானதாக இருந்தது. சாதாரணமாக ஜப்பானில் சலூன்கள் முக்கிய வீதிகளில், ஆடம்பரமாக இருக்கும். இவற்றுக்கு வாடகை மிக அதிகம். தான் திட்டமிடும் பிசினஸுக்கு இது கட்டுப்படியாகாது என்று கோனிஷிக்குத் தெரியும். ஆகவே, QB ஹவுஸ் ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்தில், ஒரு குட்டி அறையில் அடிப்படை வசதிகளோடு வந்தது. 10 நிமிட ஹேர்கட் 1000 யென் என்று கொட்டை எழுத்துக்களில், எல்லோரையும் ஈர்க்கும்படி கடையின் கண்ணாடியில் எழுதப்பட்டிருந்தது.
 
கடையின் வெளியே ஒரு வென்டிங் மெஷின். அதில் 1000 யென் நோட்டைப் போடவேண்டும். 1000 யென் தவிர வேறு எந்த நோட்டும் போட முடியாது. சில்லறை கொடுக்க ஆகும் நேரத்தைக் கம்மியாக்கும் வழி இது. டோக்கன் வரும். கடைக்கு வெளியே, எந்த டோக்கன் எண் உள்ளே போகலாம் என்று அறிவிப்பு பளிச்சிடும். அதன்படி, கடைக்குள் நுழையவேண்டும், நாற்காலியில் உட்காரவேண்டும். நாற்காலியில் இருக்கும் ஒரு கருவி நேரத்தைக் கணக்குப் போடத் தொடங்கும். முடி திருத்தும் கலைஞர் தயாராக இருப்பார்.
 
டவலுக்குப் பதில், கழுத்தில், ஒரு பேப்பரைச் சுற்றுவார். இப்போது முடிவெட்டல் ஆரம்பம். மனிதர்களின் முடி மாதத்துக்குச் சராசரியாக 12 மில்லி மீட்டர் முதல் 14 மில்லி மீட்டர்வரை வளரும். QB ஹவுஸ் முடிவெட்டுக் கருவிகள் இந்த அளவு முடியை வெட்டியெடுக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
 
ஷாம்பூ கிடையாது
 
சாதாரணமாக சலூன்களில் முடிவெட்டி முடித்தவுடன், தலையை ஷாம்பூவால் கழுவுவார்கள். இதற்கு சுமார் 10 நிமிடங்கள் எடுக்கும். ஷாம்பூ செலவு வேறு. QB ஹவுஸில் ஷாம்பூ கிடையாது. ஒரு எந்திரத்தால், தலையில் காற்றை வேகமாக அடிப்பார்கள். உதிரி முடி பறந்துபோகும். தலை க்ளீன்! நாற்காலியில் இருக்கும் கருவி 9 அல்லது 10 நிமிடங்கள் காட்டும். 10 நிமிட ஹேர்கட் 1000 யென் என்று தாங்கள் சொன்னதைச் செய்பவர்கள் என்று QB ஹவுஸ் நிரூபிக்கும் செய்கை இது. பணியாளர் குனிந்து வணங்கி விடை கொடுப்பார்.
 
எதிர்ப்பு அதிகரிப்பு
 
ஆரம்ப நாட்களில், பிற சலூன்கள் QB ஹவுஸை ஒரு போட்டியாகவே நினைக்கவில்லை. ஆனால், QB ஹவுஸில் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கோனிஷி டோக்கியோவில் மட்டுமே 20 கிளைகள் திறந்தார். சலூன்காரர்கள் பயந்தார்கள், அணி திரண்டார்கள். “QB ஹவுஸ் சலூன்களில் சுகாதாரம் இல்லை. மக்கள் உடல்நலத்தைப் பாதிக்கும்” என்று அரசாங்கத்துக்குக் குற்றப் பத்திரிகை அனுப்பினார்கள். அரசாங்கம் QB ஹவுஸின் பல கிளைகளில் சோதனைகள் நடத்தியது. குற்றச்சாட்டுக்கள் நிரூபணமற்றவை என்று தள்ளுபடி செய்யப்பட்டன.
 
வெற்றிப் பாதை
 
QB ஹவுஸ் புகழும், வளர்ச்சியும் இன்னும் வேகமாயின, பரவலாயின. இன்று ஜப்பானில் 480 கிளைகள்: சீனா (ஹாங்காங்), சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளில் 85 கிளைகள். மொத்தக் கஸ்டமர்கள் ஒரு கோடி எழுபது லட்சம் பேர். ஆண்டு வருமானம் சுமார் 1700 கோடி யென், அதாவது 901 கோடி ரூபாய்!
 
QB ஹவுஸ் ஜெயித்தது எதனால்? “முடிவெட்டுவது” என்றால் என்ன என்று காலம் காலமாக இருந்த இலக்கணத்தை உடைத்துத் தனிப் பாதை போட்டதுதான்!
 
slvmoorthy@gmail.com
 
 
100__580x580_qb-house.jpg
 
 
c_img02_on.jpg
 
 
201205251157115650.jpg
 
Link to comment
Share on other sites

ஷாம்பூ விற்பனையில் சாதனை புரிந்த சாஷேக்கள்

 

chik_2373601f.jpg

 

1964. ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி இந்தியாவில் சன்ஸில்க் ஷாம்பூவை அறிமுகம் செய்தார்கள். அடுத்த 15 வருடங்களில், லீவரின் இன்னொரு தயாரிப்பான கிளினிக் பிளஸ், பான்ட்ஸ் ஷாம்பூ ஆகியவை மார்க்கெட்டுக்கு வந்தன. லீவர், பாண்ட்ஸ் ஷாம்பூகள் 100 மில்லி, 200 மில்லி ஆகிய அளவு பாட்டில்களில் விற்பனை செய்யப்பட்டது. விலை சுமாராக 100 மில்லி பாட்டிலுக்கு 10 ரூபாய், 200 மில்லி பாட்டிலுக்கு 20 ரூபாய். அன்றைய காலகட்டத்தில் இது பெரிய தொகை. ஆகவே, நகரங்களில் இருந்த வசதி படைத்தவர்கள் மட்டுமே இவற்றை வாங்கினார்கள்.
 
கடலூரில் சின்னி கிருஷ்ணன் என்னும் பள்ளி ஆசிரியர் இருந்தார். இவருக்கு அறிவுத்தேடல் அதிகம். வீட்டில் பல பரிசோதனைகள் செய்துகொண்டிருப்பார். சென்னைக்கு ஒரு முறை வந்தபோது பலர் குளி யலுக்கு ஷாம்பூ உபயோகிப்பதைப் பார்த்தார். கடலூர் போன்ற சிறு நகரங் களிலும், கிராமங்களிலும் மக்கள் தலைமுடியை சோப்பு அல்லது சீயக்காய் போட்டுக் கழுவினார்கள். அவர்களும் ஷாம்பூ உபயோகித்துப் பயனடையவேண்டும் என்று சின்னி கிருஷ்ணன் விரும்பினார்.
 
ஆடம்பரப் பொருள்
 
சிறுநகர, கிராம மக்கள் ஷாம்பூ உபயோகிக்காததற்குப் பல காரணங்கள் இருந்தன. முதல் காரணம் விலை. இரண்டாம் காரணம், ஒரு குளியலுக்கு 5 மில்லி ஷாம்பூதான் தேவை. பெரும்பாலானோருக்கு வீட்டில் குளியலறை கிடையாது. ஆற்றில் அல்லது குளத்தில் குளிப்பார்கள். 100 / 200 மில்லி பாட்டிலைக் கையோடு எடுத்துக்கொண்டு போகவேண்டும். குளிக்கும்போது பாதுகாக்க வேண்டும். வாரம் ஒருமுறைதான் ஷாம்பூ குளியல். வீட்டில் நான்கு பேர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். வாரம் 20 மில்லி ஷாம்பூ செலவாகும், ஆகவே, 100 மில்லி பாட்டில் 5 வாரத்துக்கு வரும். அத்தனை நாட்களும் பாட்டிலை வீட்டில் பத்திரமாக வைத்திருக்கவேண்டும். ஆகவே, ஷாம்பூ உபயோகிக்க விரும்பியவர்களும், அந்த ஆசைகளை அடக்கிக்கொண்டார்கள். ஷாம்பூ என்றாலே ஆடம்பரமான பொருள் என்னும் அபிப்பிராயம் கிராம மக்கள் மனங்களில் பதிந்துவிட்டது.
 
சாஷேயில் ஷாம்பூ
 
சின்னி கிருஷ்ணன் ஒரு லட்சியவாதி. “நான் எதைத் தயாரித்தாலும், அது ரிக் ஷா இழுக்கும் ஏழைக்கும் பயன்படும் பொருளாக இருக்கவேண்டும்” என்னும் கொள்கை உடையவர். முகப் பவுடர், உப்பு ஆகியவற்றை சாஷேக்களில் போட்டுக் கடைகளுக்கு சப்ளை செய்துவந்தார். இதேபோல் ஷாம்பூவையும் சாஷேக்களில் போட்டு விற்கலாம் என்று அவர் மனதில் மின்னல் வெட்டியது. சோதனை முயற்சிகள் தொடங்கினார். ஒரு குளியலுக்குத் தேவைப்படும் ஐந்து மில்லி ஷாம்பூ ஒரு சாஷேயில். விலை வெறும் எட்டணா (அதாவது ஒரு ரூபாய்க்கு இரண்டு சாஷேக்கள்.) சாமானியரும் வாங்கும் விலை. கடைகளுக்கு சப்ளை செய்தார். வாடிக்கையாளர்களும் வாங்கி உபயோகிக்கத் தொடங்கினார்கள்.
 
இப்போது சாஷேக்கள் ஒழுகுவதாகப் புகார்கள் குவிந்தன. சின்னி கிருஷ்ணன் இதுவரை, முகப் பவுடர், உப்பு போன்ற “பொடி” களைத்தான் சாஷேக்களில் நிரப்பி விற்பனை செய்துவந்தார். ஷாம்பூ ஒரு திரவம். திரவத்தை சாஷேக்களில் அடைப்பது அவருக்குப் புதிய அனுபவம். ஆனால், அவர் திறமைசாலி, தொழில் நுணுக்கங்கள் தெரிந்தவர். ஆகவே, ஒழுக்கு வரும் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட்டார்.
 
ஷாம்பூ சாஷேக்கள் விற்பனை கிராமப் புறங்களிலும், சிறு நகரங்களிலும் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஷாம்பூ ஆடம்பரப் பொருள் என்னும் மக்கள் அபிப்பிராயம் மாறியது. ``ஷாம்பூ சாஷே தங்களுடைய ஒரு குளியலுக்குத் தேவையான அளவில், கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் அத்தியாவசியப் பொருள்” என்னும் எண்ணம் மக்கள் மனங்களில் வேரூன்றத் தொடங்கியது.
 
சாதாரண மக்களுக்கும் ஷாம்பூவைக் கொண்டு சேர்த்ததில் சின்னி கிருஷ்ணனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. தான் செய்திருப்பது மகத்தான கண்டுபிடிப்பு, அதை அடித்தளமாக வைத்துக் கோடிக் கோடியாக வியாபாரம் செய்யலாம் என்று அவர் நினைக்கவேயில்லை. இப்படிப்பட்டவர்களை இன்வென்ட் டர்கள் (Inventors) என்று சொல்லு வோம். இன்னோவேட்டர்கள் (Inno vators) என்று இன்னொரு வகை யினர் உண்டு. இன்வென்ட்டர்கள் கண்டுபிடிப்பவர்கள், அதி புத்திசாலிகள்: இன்னோவேட்டர்கள் புதுமையாளர்கள், சாமர்த்தியசாலிகள்.
 
இன்வென்ட்டர்கள் நோபல் பரிசுகூட வாங்கலாம். ஆனால், அவர்கள் இன்னோவேட்டர்களாக இருக்காவிட்டால், பிசினஸில் ஓரளவு வெற்றியே காண்பார்கள். இந்த இரண்டு குணங்களும் சேர்ந்திருப்பவர்கள் சிகரம் தொடுவார்கள். ஹென்றி ஃபோர்ட், தாமஸ் ஆல்வா எடிசன், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோர் இரண்டு குணங்களும் ஒருசேரக் கொண்ட இன்வென்ட்டர் + இன்னோவேட்டர்கள்.
 
விற்பனை உத்தி
 
சின்னி கிருஷ்ணனின் வாரிசுகள் இன்னோவேட்டர்கள். அப்பாவின் அபாரக் கண்டுபிடிப்பை இந்தியா முழுக்க விரிவாக்கி, அதன் பலன்களை அறுவடை செய்துவருகிறார்கள். மூத்த மகன் ராஜ்குமார் வெல்வெட் ஷாம்பூ என்னும் பெயரிலும், கடைசி மகன் ரங்கநாதன் சிக் ஷாம்பூ என்னும் பெயரிலும் சாஷே ஷாம்பூ விற்பனை தொடங்கினார்கள். வெற்றிபெற வேண்டுமானால், சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து திட்டமிட்டார்கள்.
 
மார்க்கெட்டிங் கொள்கைபடி, எல்லாக் கம்பெனிகளிடமும் நான்கு ஆயுதங்கள் இருக்கின்றன. இவற்றை 4 P க்கள் என்று சொல்கிறோம். அவை:
 
Product (தயாரிப்புப் பொருள்)
 
Price (விலை)
 
Promotion (விளம்பரம்)
 
Physical Distribution (விநியோகம் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டுச் சேர்க்கும் முறை)
 
இந்த 4 P க்களையும் திறமையோடு பயன்படுத்தும் கம்பெனிகளே சூப்பர் ஸ்டார் ஆகிறார்கள்.
 
ராஜ்குமார், ரங்கநாதன் இருவரும், 4 P க்களில் தங்கள் பலங்களையும் பலவீனங்களையும் ஆராய்ந்தார்கள். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அத்தனையையும் திருப்தி செய்யும் அற்புதமான தயாரிப்புப் பொருள், கவர்ந்திழுக்கும் கம்மி விலை. மக்களிடம் இந்த உண்மைகளைச் சென்று சேர்க்கும் விளம்பரத்தைப் பலப்படுத்தவேண்டும். அப்புறம், நாடு முழுக்க எல்லாப் பெட்டிக் கடைகளிலும் தங்கள் ஷாம்பூ கிடைக்கும்படி விநியோகத்தை விரிவாக்கவேண்டும். அப்போது, வெற்றி நிச்சயம்.
 
அண்ணன் ராஜ்குமார், தம்பி ரங்கநாதன் இருவரும் இருவேறு யுக்திகளைக் கையாண்டார்கள். சிந்தால், லிரில் ஆகிய சோப்கள் விற்பனை செய்யும் கோத்ரெஜ் நிறுவனம் பாரம்பரியப் பெருமை கொண்டது, அகில இந்திய மார்க்கெட்டிங் அனுபவம் கொண்டது. ராஜ்குமார் கோத்ரெஜ் துணையோடு களத்தில் இறங்கினார். ரங்கநாதன் சிக் ஷாம்பூ மார்கெட்டிங்கைத் தானே செய்ய முடிவெடுத்தார்.
 
முன்னணி நிறுவனங்களுக்கு சவால்
 
லீவர், பாண்ட்ஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் நகரங்களில் மட்டுமே தங்கள் ஷாம்பூவை விற்பனை செய்தார்கள். கிராம மக்கள் ஷாம்பூ வாங்கவே மாட்டார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டார்கள். ரங்கநாதன் போட்டியே இல்லாத கிராமங்களில் புயலெனப் புகுந்தார். போட்டியாளர்களின் காலி சாஷேக்களைக் கொடுத்தால், சிக் சாஷே இலவசம், சினிமா தியேட்டர்களில் சிக் பயன்படுத்தித் தலைமுடியைக் கழுவும் செய்துகாட்டல்கள் எனப் பல்வேறு புதுமையான யுக்திகளைக் கையாண்டார். லீவர், பாண்ட்ஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சவால் விடும் அளவில் சிக் விற்பனை எகிறியது. சிக் பாணியில் அவர்களும், ஷாம்பூவைச் சாஷேக்களில் விற்பனை செய்யும் கட்டாய நிலைக்கு வந்தார்கள்.
 
சிக் என்னும் பெயரை ஆங்கிலத்தில் Chik என்று எழுதுகிறார்கள். இரண்டு காரணங்கள். ஆங்கிலத்தில் Chic என்றால் புதுமையானது, அழகானது என்று அர்த்தங்கள். ரங்கநாதன் இந்தப் பெயருக்கு இன்னொரு அர்த்தமும் வைத்திருக்கிறார். Chik என்பதன் முதல் எழுத்து C, கடைசி எழுத்து K Chinni Krishnan என்னும் அப்பா பெயரின் சுருக்கம். ஷாம்பூ உலகின் மாபெரும் கண்டுபிடிப்பாளருக்கு ஒரு சல்யூட்!
 
Link to comment
Share on other sites

வேட்டியின் வெற்றி

 

vetti_2358758f.jpg

 

1987. நாகராஜன் திருப்பூரிலிருந்து சென்னை வந்திருந்தார். அவரும், பத்து நண்பர்களும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குப் போனார்கள். வாயிற்காப்பாளர் அவர்களை நிறுத்தி னார்.
 
“நீங்கள் ஹோட்டலுக்குள் போக முடியாது.”
 
“ஏன்?”
 
“பான்ட் சட்டை போட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்பது எங்கள் ஹோட்டல் விதிமுறை.”
 
நாகராஜன் மட்டும் வேட்டி கட்டி யிருந்தார். மற்ற அனைவரும் பான்ட் சட்டைகளில். நண்பர் வரக்கூடாது என்றால், தாங்களும் அங்கே சாப்பிடப் போவதில்லை என்று முடிவு செய்தார்கள். தனக்காக ஒரு சுகானுபவத்தை அவர்கள் இழக்கவேண்டாம் என்று நாகராஜன் முடிவு செய்தார்.
 
“நீங்கள் உள்ளே போய்ச் சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் வெளியே அந்த மரத்தடியில் காத்திருக்கிறேன்.”
 
நாகராஜன் வற்புறுத்தியதால், நண்பர்கள் அரைகுறை மனதுடன் ஹோட்டலுக்குள் போனார்கள். நாகராஜன் மரத்தடியில் உட்கார்ந்தார். மனம் கொந்தளிப்பில். “வேட்டிதான் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையே? அந்த வேட்டி அணிந்தவன் தமிழ்நாட்டி லேயே இரண்டாம் தரக் குடிமகனா?”
 
நாகராஜனின் சோகம், நட்சத்திர ஹோட்டலுக்குள் போக முடியவில் லையே, நண்பர்களோடு ஜாலியாக உட் கார்ந்து, அரட்டை அடித்து, ருசித்துச் சாப்பிட முடியவில்லையே என்பது மட்டுமல்ல, இன்னும் ஆழமானது. ஏனென்றால், அவருக்கு வேட்டி ஒரு ஆடை மட்டுமல்ல, அவர் வாழ்வாதாரம்.
 
நாகராஜன் தன் 27 வருட வாழ்க்கை யைத் திரும்பிப் பார்த்தார். (அன்று கோவை மாவட்டத்தில் இருந்த) அவிநாசியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், திருப்பூரில் இருந்த வேட்டிகள் தயாரிக் கும் கம்பெனியில் ஆந்திரப் பிரதேசத் துக்கான விற்பனைப் பிரதிநிதியாகச் சேர்ந்தார். சில ஆண்டுகள். வேட்டித் தயாரிப்பு, தரம், விலை, வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள், போட்டியாளர் யுக்திகள் என அத்தனை நுணுக்கங்களையும் உள்வாங்கிக் கொண்டார்.
 
தரமில்லாத வேட்டிகள்
 
1983. தொழில் முனைவராகும் உத்வேகம். தெரிந்த தொழில் வேட்டிதானே? திருப்பூரில் ஒரு சிறிய அறையில் பயணம் தொடங்கியது. வேட்டித் தொழிலில் அவர் முதல் ஆளல்ல. ஆனால், நாகராஜன் கொண்டுவந்தது புதிய சிந்தனை. அன்றைய காலகட்டத்தில், மலிவான விலையில் வேட்டிகளை விற்றால்தான் மக்கள் வாங்குவார்கள் என்று தயாரிப்பாளர்கள் நினைத்தார்கள்.
 
விற்பனை விலை ஐம்பது ரூபாயைத் தாண்டக்கூடாது என்று தாங்களே முடிவு செய்தார்கள். நூல் விலையோ, தொழிலாளிகள் சம்பளமோ உயர்ந்தால், தரத்தில் கை வைத்தார்கள். இதனால், ஏராளமான வேட்டிகள் ஒரே மாதத்தில்கூடக் கிழிந்தன. தயாரிப்பாளர்களுக்கே தங்கள் பொருளில் நம்பிக்கையும், மதிப்பும் இருக்கவில்லை. ஆகவே, யாரும் தங்கள் வேட்டிகளுக்குப் பெயர் வைக்கவில்லை, வேட்டியில் பிராண்ட்களை உருவாக்கவில்லை.
 
இத்தகைய தயாரிப்பாளர்களால், வேட்டி என்பது மலிவு விலை உடை என்னும் அபிப்பிராயம் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது. வேட்டி கட்டுவதைத் தவிர்த்தார்கள். ஆங்கிலேயர் ஆட்சி இதற்குத் தூபமிட்டது. பான்ட் மதிப்புக்குரிய ஆடையானது.
 
நாகராஜன் வித்தியாசமாகச் சிந்தித்தார். பொங்கல், புதுவருடம், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மட்டுமே நாம் புத்தாடைகள் வாங்குகிறோம். ஒரு வருடம் உழைக்கிற தரமான வேட்டிகளைத் தந்தால் மக்கள் வாங்குவார்கள். பெரும் பாலானோருக்கு விலையைவிடத் தரம்தான் முக்கியம் என்று நினைத்தார்.
 
வேட்டியில் பிராண்ட்
 
எல்லோரும் ஐம்பது ரூபாய்க்கு வேட்டிகள் விற்றுக்கொண்டிருந்தபோது, ராம்ராஜ் பிராண்ட் வேட்டிகள் மார்க்கெட்டுக்கு வந்தன, 125 ரூபாய் விலையில். நூல், நெய்தது ஆகிய அத்தனை அம்சங்களிலும் உயர்தரம். தினப்படி உடுத்தினாலும், வருடம் தாண்டி உழைத்தது. மலிவான வேட்டிகளையே விற்றுப் பழகிய கடைக்காரர்கள், “யானை விலை” ராம்ராஜ் வேட்டிகளை ஸ்டாக் செய்யவே முதலில் தயக்கம் காட்டினார்கள்.
 
ஆனால், வாங்கிக் கட்டிப் பழகியவர்கள் ராம்ராஜ் வேட்டிகள் மட்டுமே வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். நான்கே ஆண்டுகளில், ராம்ராஜ் என்றால் தரமான வேட்டிகள் என்னும் பொசிஷனிங்கை நாகராஜன் உருவாக்கிவிட்டார்.
 
மாபெரும் சாதனை செய்துவிட்டோம் என்னும் பெருமிதத்தில் இருந்த நாகராஜனுக்கு இந்த நட்சத்திர ஹோட்டல் அனுபவம் பேரதிர்ச்சி. மனதுக்குள் போராட்டம். ஒரு மனம் சொன்னது, “நீ வெற்றிகரமான பிசினஸ் நடத்துகிறாய், பணம் பண்ணுகிறாய். ஆனால், நீ தயாரிக்கும் வேட்டி, சமுதாயத்தில் மதிப்பு இல்லாத உடை. உன் பாதையை மாற்று. திருப்பூரில் எல்லோரும் செய்வதுபோல் பின்னலாடைகள் தொழிலில் இறங்கு. ஏற்றுமதி செய். டாலர்கள் கொட்டும்.”
 
இன்னொரு மனம் சொன்னது, “நம் நாட்டின் பாரம்பரிய உடை வேட்டி. காலக்கோளாறுகளால் அதன் மதிப்பை மக்கள் மறந்துவிட்டார்கள். வேட்டித் தொழிலிலிருந்து நீ வெளியேறினால், அது நம் பாரம்பரியத்துக்குச் செய்யும் துரோகம், சவாலைச் சந்திக்கும் துணிச்சல் இல்லாமல் ஓடிப்போகும் கோழைத்தனம்..”
 
போதிமரம்...
 
சில மணி நேரங்கள். நண்பர்கள் சாப்பாட்டை முடித்து வந்தார்கள். “பாவம், பசியோடு இருக்கிறாய். வா, பக்கத்தில் இன்னொரு ஹோட்டலுக்குப் போகலாம்” என்றார்கள். “இல்லை, வேண்டாம். என் வயிறும், மனமும் நிறைந்த திருப்தியில் இருக்கிறேன்” என்று தெளிவோடு, உறுதியோடு நாகராஜன் சொன்னார். தான் உட்கார்ந்திருந்த ஆலமரத்தை நன்றியோடு பார்த்தார். அது ஆலமரமல்ல, அவருக்கு ஒரு போதிமரம்!
 
நாகராஜனுக்கு இப்போது ஒரு வெறி, வேகம். பணம் பண்ண வேண்டும் என்னும் குறிக்கோள் மட்டுமே இருந்தால், வேகம் இருக்கும். அதையும் தாண்டி, நாம் சமுதாயத்தில் மனமாற்றம் கொண்டுவரப் போகிறோம், இழந்த பாரம்பரியப் பெருமையை மீட்கப்போகிறோம் என்னும் லட்சியம் உந்தும்போது ஆயிரம் யானை பலம் வரும். நாகராஜனுக்கு வந்தது.
 
விளம்பரத்தில் வித்தியாசம்
 
வேட்டி கட்டுவதால், தனக்கும், பிறருக் கும் ஏற்பட்ட, ஏற்படும் அனுபவங்களை, அவமானங்களை மனதில் பட்டியலிட் டார். இந்த எதிர்மறைச் சம்பவங்களைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டு, மக்கள் மனங்களில் வேட்டி பற்றிய பாசிட்டிவ் அபிப்பிராயங்களை ஏற்படுத்தும் உற்சாக டானிக் ஆக்கினார்.
 
ஆரம்பமாயின தொலைக்காட்சி விளம்பரங்கள். ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டல். சொகுசுக் கார் ஒன்று வந்து நிற்கிறது. கம்பீரமான ஒருவர் தும்பைப் பூ வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும் அணிந்து இறங்குகிறார். அவர் தோற்றத்தைப் பார்த்து, செக்யூரிட்டி தன்னை அறியாமலே பணிவோடு கதவைத் திறக்கிறார். கம்பெனி போர்ட் மீட்டிங். நம்ம ஆள் வந்தவுடன், எல்லோரும் எழுந்துநின்று வரவேற்கிறார்கள்.
 
அடுத்து, ஹோட்டலில் ஒரு இசைக் கச்சேரி நடந்துகொண்டிருக்கிறது. மனத்தை ஒருமுகப்படுத்திப் பாடும் அந்தக் கலைஞரின் கவனம் இந்த வி.ஐ.பி யைப் பார்த்ததும் சிதறுகிறது. வணங்குகிறார். வெளியே யானை சல்யூட் அடிக்கிறது. விளம்பரத்தின் பின்னணியில் “அணிந்தாலே கம்பீரம், எப்போதும் முதலிடம், செல்வாக்கு, மரியாதை, அந்தஸ்தும் வழங்குதே, ராம்ராஜ் வேட்டிகளுக்கு சல்யூட்” என்னும் பாடல் வரிகள்.
 
சாதனையாளரின் ஆடை
 
வேட்டிகள் இரண்டாம் தர உடைகள் என்னும் எண்ணத்தை உடைத்தெறிந்து, அவை சாதனையாளர்களின் ஆடைகள் என்னும் பொசிஷனிங்கை இந்த விளம்பரங்கள் உருவாக்கின.
 
ராம்ராஜ் தங்கள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் புதுமைத் தயாரிப்பு கள் மூலமாக விரிவாக்கிக்கொண்டே யிருக்கிறார்கள். பஞ்சகச்சம், கோவில் வேட்டிகள், திருமண வேட்டிகள், அலுவலக வேட்டிகள், ஓய்வுநேர வேட்டி கள், விழாக்கால வேட்டிகள், அரசியல் வேட்டிகள், ஒரு வயதுக் குழந்தையும் உடுத்தும் வேட்டிகள், வெல்க்ரோ இணைத்த இளைய தலைமுறையினர் வேட்டிகள், இஸ்லாமிய சகோதரர் களுக்கான தொழுகை வேட்டிகள், ஹஜ் பயண வேட்டிகள், நறுமணம் கொண்ட வேட்டிகள், கறை படாத வேட்டிகள், இரவு உடை வேட்டிகள், குழந்தைகளுக்குத் தூளி கட்டும் வேட்டிகள் எனப் பதினைந்து வகைகள். இவற்றுள் ஜரிகை, கரை, நிறம் ஆகிய மாறுபாடுகளால், மொத்தம் 2500 வேட்டி ரகங்கள். இப்போது, இவற்றோடு, சட்டைகள், உள்ளாடைகள் ஆகியவையும் மக்கள் மனங்களில் முத்திரை பதித்து வருகின்றன.
 
வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் எனப் பல பகுதியினரையும் கவர்வதால், வெவ்வேறு விதமான விளம்பர யுக்திகளை ராம்ராஜ் கையாள்கிறார்கள் - குழந்தைகள், பெற்றோர்கள் கவனத்தைக் கவர, தொலைக்காட்சியில் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி, இளைஞர்களை ஈர்க்க, மாடலாகக் கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன்.
 
வேட்டிக்கு கவுரவம்
 
ராம்ராஜ் வேட்டிகள், சட்டைகள் பிரபல ஜவுளிக்கடைகள், சொந்த ஷோரூம்கள், இணையதளம் மூலமாக வாடிக்கையாளர்களைச் சென்று சேருகின்றன. விற்பனை பல நூறு கோடிகளைத் தாண்டி, இந்த வருடம் ஆயிரம் கோடிகளைத் தொடவிருக்கிறது. மாபெரும் சாதனைகள். ஆனால், நாகராஜன் இவை அனைத்தையும்விட மகத்தானதாக நினைப்பது எதைத் தெரியுமா?
 
தமிழக அரசு, தமிழகத்தின் கிளப்கள், பொழுதுபோக்கு இடங்கள், நிறுவனங்கள் ஆகியவை வேட்டி கட்டி வருவோருக்கு அனுமதி மறுத்தால், அது குற்றம் என்னும் சட்டத்தை 2014 இல் அமலாக்கியிருக்கிறது. தமிழகத்தின் பாரம்பரியப் பெருமையை மீட்கும் இந்தச் சட்டம், ஒரு கலாசார மாற்றம், மக்களின் மனமாற்றம். இதை நிஜமாக்கியவர் நாகராஜன்தானே?
 
Link to comment
Share on other sites

அமேஸான் - புத்தக விற்பனையிலிருந்து பூதாகர வளர்ச்சி

 

amazon_2321001f.jpg

 

இ-காமர்ஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இணையதள வியா பாரம் இந்தியாவில் சுமார் 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கணக்கிடப் பட்டுள்ளது.
 
பிளிப்கார்ட், ஜபாங், ஜங்லீ, மைந்த்ரா, ஸ்நாப்டீல் போன்ற இ காமர்ஸ் கம்பெனிகள் புத்தகங்கள், சமையல் சாதனங்கள், எலெக்ட்ரானிக் கருவிகள், செல்போன்கள், உடைகள், வாட்ச்கள், நகை கள் என நமக்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களையும், ஏகப்பட்ட பிராண்ட்களில் தருகிறார்கள்.
 
பெரும்பாலான இ-காமர்ஸ் கம்பெனிகளின் ஆண்டு விற்பனை பல்லாயிரம் கோடிகளுக்கும் அதிகம். பல லட்சம் பேருக்கு இந்தக் கம்பெனிகள் வேலை வாய்ப்புத் தருகின்றன.
 
இது மட்டுமல்ல, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கும் வாய்ப்பை இ-காமர்ஸ் தருகிறது. சிதம்பரம், கோயம்பத்தூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய தமிழகத்தின் பல ஊர்களில் இ காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
 
புத்தகங்கள், எலெக்ட்ரானிக் சாமான்கள், ஜூவல்லரி மட்டுமல்லாமல், திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, தூத்துக்குடி மக்கரூன்ஸ், நாகர்கோவில் சிப்ஸ், சாத்தூர் காரச்சேவு என, நாம் இணையதளங்களில் விற்கும் என்று நினைத்தே பார்த்திராத பல ஐட்டங்களை இந்தப் புதிய தொழில் முனைவர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.
 
இத்தனைக்கும் காரணம் என்ன தெரியுமா? ``தரமான பொருட்களை மலிவான விலையில், கடை கடையாகத் தேடி அலையாமல், வீட்டில் இருந்தபடியே, நாம் கேட்கும் பொருள் வீடு தேடி வரும் வசதி கொண்டது ஆன்லைன் மார்க்கெட்டிங்” என்னும் அபிப்பிராயம் ஆழமாக மக்கள் மனங்களில் பதிந்திருப்பதுதான். இந்தப் பொசிஷனிங்கை உருவாக்கியிருப்பவர், ஜெஃப் பெஸோஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜெஃப்ரி பெஸோஸ் (Jeffrey Bezos).
 
இ-காமர்ஸ் என்கிற கோடிக் கோடியாய்ப் பணம் கொட்டும் புதுத் துறையைக் கண்டுபிடிக்கிற ஐடியா ஜெஃப் பெஸோஸூக்கு எப்படி வந்தது?
 
ஜெஃப் படிப்பில் எப்போதும் முதல் ராங்க்தான். புகழ் பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் துறைகளில் பட்டம் பெற்றார். கம்ப்யூட்டர் தொடர்பான வேலையில் தன் வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொள்ள முடிவு செய்தார்.
 
பங்குச் சந்தையில் கம்ப்யூட்டர் அதிகமாகப் பயன்படத் தொடங்கியிருந்த காலம் அது. கம்ப்யூட்டரில் அபாரத் திறமை கொண்ட அவரைத் தேடி வேலைகள் வந்தன. பிட்டெல் (Fitel), பாங்கர்ஸ் டிரஸ்ட் (Bankers Trust), டி. ஈ. ஷா கம்பெனி (D. E. Shaw and Co) ஆகிய பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனங்களில் பணியாற்றினார். முப்பது வயதில் மூத்த துணைத் தலைவர் பதவிக்கு உயர்ந்தார்.
 
1994 ம் வருடம். 1993 ஐவிட, இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 23 மடங்கு அதிகமானது. ஜெஃப் இன்டர்நெட்டின் மாபெரும் சக்தியை உணர்ந்தார். இந்த வலிமையான ஆயுதம் தகவல் பரிமாற்ற வட்டத்துக்குள் மட்டுமே முடங்கி விடக்கூடாது என்று உணர்ந்தார்.
 
‘என்ன செய்யலாம்?’ ஜெஃப் மனதுக்குள் ஆயிரம் ஆயிரம் கனவுகள், திட்டங்கள், கணக்குகள். அப்போது மெயில் ஆர்டர் பிசினஸ் என்னும் . தபால் அஞ்சல் முறை வியாபாரம் பிரபலமாக இருந்தது.
 
இன்டர்நெட் என்பது தபால் அஞ்சலின் இருபதாம் நூற்றாண்டு அவதாரம். தபால் அஞ்சலில் பொருள்களை விற் பதைப்போல் இன்டர்நெட்டில் விற்றா லென்ன? இதுதான் ஜெஃப்பின் ஐடியா.
 
ஜெஃப் வித்தியாசமான ஆள். ``கிடைச்சாச்சு ஐடியா” என்று கண்ணை மூடிக்கொண்டு ஆக்‌ஷனில் குதிப்பவரல்ல, பக்காவாகப் பிளான் போட்டுத்தான் முயற்சியைத் தொடங்கு வார்.
 
தொடங்கியது ஆராய்ச்சி
 
முதல் படி - தபால் அஞ்சல் முறை வியாபாரம் செய்யும் 20 முன்னணி நிறுவனங்கள் யார் யாரென்று கண்டுபிடித்தார்.
 
இரண்டாம் படி - அவர்கள் என்னென்ன பொருட்களை விற்கிறார்கள்?
 
மூன்றாம் படி - இவற்றுள் எந்தப் பொருட்களை இன்டர்நெட் மூலமாக விற்றால் வியாபாரம் அதிகரிக்கும்?
 
அந்த நாள்களில், ஆடைகள், காமிராக் கள், வீட்டு பர்னிச்சர், விளையாட்டுப் பொருள்கள், சூட்கேஸ் போன்ற பயண சாமான்கள், ஆடியோ மற்றும் வீடியோ காஸெட்டுகள், புத்தகங்கள், ஆகியவற்றைத்தாம் பெரும்பாலான மக்கள் தபால் அஞ்சல் முறையில் வாங்கிக் கொண்டிருந் தார்கள்.
 
ஒவ்வொரு கம்பெனியும் தமது தயாரிப்புப் பொருள்களின் படங்கள், விவரங்கள், விலை ஆகியவற்றை விலாவாரியாகச் சொல்லும் காட்டலாக் வெளியிடுவார்கள். அதைப் பார்க்க வேண்டும், தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும், ஆர்டர் செய்ய வேண்டும், பணம் கொடுக்கவேண்டும், பொருள் வீடு தேடி வரும்.
 
ஆடைகள், டிரெஸ்கள், காமிராக்கள், வீட்டு பர்னிச்சர், ஸ்போர்ட்ஸ் சாமான்கள், சூட்கேஸ் போன்ற பயணச் சாமான்கள், ஆடியோ வீடியோ காஸெட்டுகள், ஆகியவற்றுக்கு காட்டலாக் சரி. ஆனால் புத்தகங்களுக்கு?
 
ஆயிரம் ஆயிரமாய்ப் புத்தக வெளியீட்டாளர்கள், லட்சம் லட்சமாகப் புத்தகங்கள். எனவே புத்தகம் விற்கும் கம்பெனி காட்லாக்குகளில் புத்தகம், எழுத்தாளர், பதிப்பாளர் ஆகியோரின் பெயர்கள் கொண்ட லிஸ்ட் மட்டுமே இருக்கும்.
 
தான் வாங்கப்போகும் புத்தகத்தின் அட்டைப்படம் எப்படி இருக்கும், புத்தகத்தின் உள்ளடக்கம் என்ன, முக்கிய அம்சங்கள் என்ன என்பதை வாடிக்கையாளர்களால் தெரிந்துகொள்ளவே முடியாது.
 
காட்லாக்கில் கொடுக்க முடியாத இத்தனை விஷயங்களையும் இணையதளத்தில் கொடுக்க முடியும். தான் வாங்கப்போகும் புத்தகம் பற்றி வாசகன் மனத்தில் ஒரு டிரெய்லரே ஓட்ட முடியும் என்பதை ஜெஃப் உணர்ந்தார். இப்போது ஜெஃப் மனத்தில் தெளிவு. இன்டர்நெட்டில் புத்தகம் விற்பதுதான் நம் பிஸினஸ்.
 
``புத்தகங்களை விவரமாகப் பார்த்து அறிந்து, கடைக்கே போகாமல் வீட்டில் இருந்தபடியே வாங்கும் வசதி தரும் கடை” என்னும் சுகானுபவப் பொசிஷனிங்கை மக்கள் மனங்களில் இந்தப் புதிய பிசினஸ் உருவாக்கவேண்டும் என்று ஜெஃப் முடிவு செய்தார்.
 
வேலையை ராஜிநாமா செய்துவிட்டு பிசினஸ் தொடங்கினார். தன் கம்பெனிக்கு அவர் வைத்த பெயர் அமேஸான்.காம். ஏன் இந்தப் பெயர்?
 
இரண்டு காரணங்கள்
 
அமேஸான் ஆறு உலகிலே மிகப்பெரிய ஆறு. இதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் உண்டு. தன் கம்பெனியும் பிரம்மாண்டமாக வளர வேண்டும், புத்தகங்கள் மட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேலான பொருள்கள் சங்கமிக்கிற இணையதளச் சந்தையாக இருக்கவேண்டும் என்பது முதல் காரணம்.
 
இரண்டாவது காரணம்? இணைய தளத்தில் விவரம் தேடுகிறீர்கள். யாஹூ, கூகிள் ஸெர்ச் எஞ்சின்களைப் பயன் படுத்துகிறீர்கள். இணையதளங்கள் அகர வரிசையில் பட்டியலிடப்பட்டு இருக்கும். தேடுதலில் A என்ற எழுத்தில் தொடங்கும் இணையதளங்கள்தாம் முதலில் வரும்.
 
B எழுத்தில் தொடங்கும் இணையதளங்கள் அடுத்துத் தொடரும். அமேஸான் என்று பெயர் வைத்தால் முதல் பக்கத்தில் வாடிக்கையாளர் கண்ணில் படுமே? ஜெஃப் எத்தனை நுணுக்கமாகத் தன் பிஸினஸ் திட்டத்தைத் தீட்டினார் என்பதற்கு இந்தப் பெயர் வைத்தல் ஒரு உதாரணம்.
 
ஜூலை 16, 1995. குட்டி வாடகை ஆபீஸ், மூன்று கம்ப்யூட்டர்கள். அமேஸான் ஆரம்பம். முதல் சில மாதங்களி லேயே, பிரமிக்கவைக்கும் வெற்றி. அமெரிக்காவின் எல்லா மாநிலங்களி லிருந்தும் மட்டுமல்லாமல், உலகின் 45 நாடுகளிலிருந்து ஆர்டர்கள் கொட்டின.
 
முக்கிய காரணம்? உலகின் எல்லாப் பதிப்பாளர்களின் புத்தகங்களையும் ஒரே இணையதளத்தில் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு, புத்தகங்களைப் புரட்டிப் படிப்பதுபோன்ற உணர்வு. புத்தகம் வாங்குவதைச் சுகானுபவமாக மாற்றிய புதுமை.
 
பத்தொன்பது வருடங்கள் ஓடி விட்டன. இன்று 89 பில்லியன் டாலர்கள் (சுமார் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய்) வருட விற்பனை.
 
புத்தகங்கள், ஆடியோ, வீடியோ சிடிக்கள், இசைக் கருவிகள், டிவிக்கள், கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், வீட்டு சாமான்கள், ஆடைகள், ஆபரணங்கள், செருப்புகள், விளையாட்டு சாமான்கள். அத்தனையையும் அள்ளித்தரும் அட்சய பாத்திரம் அமேஸான். ஜெஃப்பின் சொத்து 34 பில்லியன் டாலர் (சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய்).
 
Link to comment
Share on other sites

wallmart_2395650f.jpg

 

ஜூலை 2, 1962. உலக சில்லறை வர்த்தக வரலாற்றில் முக்கிய மான நாள். சாம் வால்டன் அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாகா ணத்தின் ரோஜர்ஸ் நகரில், தன் முதல் வால்மார்ட் கடையைத் திறந்தார். 4,000 சதுர அடியில் சிறிய இடம், மக்கள் தொகை அதிகமில்லாத ஊர் என்பதால் வாடகை கம்மி. இந்த அனுகூலங்களால், குறைவான முதலீடுதான்.
 
ஆனால், இத்தனை பணம்கூட வால்டனிடம் இருக்கவில்லை. வங்கியில் இருந்த மொத்தச் சேமிப்பையும் எடுத்தார், வீடு, சொத்துகள் அத்தனையையும் அடகு வைத்துக் கடன் வாங்கினார். அப்புறமும் துண்டு விழுந்தது. அவர் தம்பி ஜேம்ஸ் வால்டன், மேனேஜராக வேலைக்குச் சேர்ந்த டான் விட்டேகர் இருவரும் பணம் போட்டு உதவினார்கள்.
 
இன்று, வால்மார்ட்டுக்கு 27 நாடுகளில் 11,000 கடைகள், 22 லட்சம் ஊழியர்கள். ஆண்டு விற்பனை 486 பில்லியன் டாலர்கள் (சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்).
 
இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் ரகசியம் என்ன? தன் முதல் கடையில் வால்டன் வைத்திருந்த இரண்டு சிறிய விளம்பரப் பலகைகள் அந்த ரகசியத்தைப் பிரகடனம் செய்தன.
 
நாங்கள் குறைந்த விலைக்கு விற்கிறோம் (We sell for less) திருப்தி உத்தரவாதம் (Satisfaction Guaranteed) எல்லா வியாபாரிகளும் இதைத்தானே சொல்கிறார்கள்? வால்மார்ட் மட்டும் சிகரம் தொட்டது ஏன்? மக்கள் முட்டாள்கள் அல்ல. வியாபாரத்துக்காக நிறுவனங்கள் உறுதிமொழிகளை அள்ளி வீசுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். இந்தக் கம்பெனிகள் வெறும் வாய்ச்சொல் வீரர்களாக, உறுதிமொழிகளை நிறைவேற்றா தவர்களாக இருந்தால், மக்கள் அவர்களைத் தங்கள் மனங்களிலிருந்து தூக்கி எறிந்துவிடுவார்கள். நம்பிக் கையை இழந்த நிறுவனங்கள் மறுபடியும் அதைத் திரும்பப் பெற முடியாது. ஆட்டம் க்ளோஸ்!
 
வெற்றி ரகசியம்
 
பொசிஷனிங் என்பது நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரும் வாக்குறுதி. நேர்மையோடு கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து வெற்றி காண்கிறார்கள். மற்றவர்கள் காணாமல் போகிறார்கள். வால்டன் ”எல்லோரையும்விட மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யும் கடை” என்னும் பொசிஷனிங்கை உருவாக்க விரும்பினார். இந்தக் கனவை நனவாக்க வால்டன் எடுத்த சிரமங்கள், முயற்சிகள்தான் வால்மார்ட் வெற்றியின் ரகசியங்கள்.
 
விலை 20% குறைவு
 
``குறைந்த விலை” என்பது தெளிவில்லாத ஒரு வார்த்தைப் பிர யோகம். இதை ஒரு கணித எண்ணாக, இலக்கமாக மாற்றினால்தான், இலக்கை எட்ட முடியும் என்பதை வால்டன் அறிவார். ஆகவே, அவர் எடுத்த முடிவு, “வால்மார்ட் கடைகளில் போட்டியா ளர்களைவிட விலை இருபது சதவிகிதம் குறைவாக இருக்கவேண்டும்.” இந்த இலக்கை வாடிக்கையாளர்களுக்கும் தெரிவித்தார். அப்போதுதானே அவர் களை ஈர்க்கமுடியும், இலக்கை எட்டும் உந்துதல் சக்தியை வாடிக்கையாளர்கள் தருவார்கள்?
 
சிக்கன நடவடிக்கை
 
வால்மார்ட் தர்ம ஸ்தாபனமல்ல. லாபம் பார்க்கவேண்டிய தொழில். ஆகவே, வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீதம் குறைந்த விலையில் பொருட்களைத் தரவேண்டுமானால், பொருட்களின் வாங்கும் விலையும், பிற செலவுகளும் போட்டியாளர்களைவிட, 20 சதவீதத்தைவிடக் கம்மியாக இருக்க வேண்டும். கம்பெனி சிஇஓ மட்டுமல்ல, கடைநிலை ஊழியர்வரை அத்தனை பேரும் செலவைக் குறைக்கும் வகையில் வெறியோடு செயல்படவேண்டும்.
 
நிர்வாகத்தின் ஒவ்வொரு சின்னஞ்சிறு அம்சத்திலும் வால்டன் இந்த வெறியைக் காட்டினார். கடைக்குப் பெயர் வைப்ப திலேயே இது தொடங்கியது. அவரும், கடை மேலாளராக வேலைக்குச் சேர்ந்திருந்த பாப் போகிள் (Bob Bogle) என்பவரும் சேர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.
 
வால்டன் நான்கு பெயர்கள் எழுதிவைத்திருந்தார். முதல் மூன்று பெயர்களில் மூன்று அல்லது நான்கு வார்த்தைகள் இருந்தன. நான்காம் பெயர் ஒரே வார்த்தை Walmart. நான்காம் பெயரை இருவரும் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம்,
 
‘‘இந்தப் பெயரில் ஏழே ஏழு எழுத்துகள்தாம். கடையில் விளம்பர பலகை வைக்கும்போது செலவு கம்மியாகும்.”
 
ஆரம்ப காலம் முதலே, வால்டன் இடைத்தரகர்களிடமும், நிறுவன முகவர்களிடமும் பொருட்களை வாங்கமாட்டார். நேரடியாகத் தயாரிப் பாளர்களிடம்தான். இவர்களிடமும், வால்டன் அடிமாட்டு விலை பேசுவார். தன் பர்ச்சேஸ் அதிகாரிகளுக்கு அவர் இட்டிருந்த கட்டளை, “நீங்கள் தயாரிப்பாளர்களோடு பேரம் பேசும் போது வால்மார்ட்டுக்காகப்பேசவில்லை. நம் வாடிக்கையாளர்களுக்காகப் பேசு கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். அவர்களிடம் ஈவு இரக்கமில்லாமல் நடந்துகொள்ளுங்கள்.”
 
ஊழியர்களுக்கு லாபம்
 
ஊழியர்களுக்கும் லாபத்தில் பங்கு இருப்பதால், தயாரிப்பாளர்களோடு நடத்தும் பேரப் பேச்சு வார்த்தைகளைத் தான் மட்டும் நடத்தக்கூடாது, இவற்றை ஒளிவு மறைவு இல்லாமல் நடத்தவேண்டும் என்று வால்டன் முடிவெடுத்தார். குறைந்தது ஐந்து பேரையாவது தன்னோடு அழைத்துப் போவார். ஊழியர் தேர்வில் புதிய உத்திகடைகளின் முக்கிய செலவு அம்சம் ஊழியர்களின் ஊதியம். ``வேர்க்கடலை சம்பளம் தந்தால், குரங்குகள்தாம் வேலைக்கு வருவார்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும், அவர்களை அர்ப்பணிப்போடு வேலை செய்ய வைக்கவேண்டும்.
 
அதே சமயம், அவர்களுக்குக் குறை வான சம்பளமும் தரவேண்டும். போகாத ஊருக்கு வழி கேட்பது போல் இருக்கிறதே? வழி கண்டார் வால்டன்.போட்டிக் கடைகளுக்கு அடிக்கடி போவார். அபாரத் திறமை சாலிகள் யாராவது இருக்கிறார்களா என்று எடை போடுவார். அவர்களைத் தனியாகச் சந்திப்பார்.
 
வால்மார்ட்டைப் பிரம்மாண்ட நிறுவனமாக்கும் தன் கனவுகளை விவரிப்பார். அந்தக் கனவுகளை நிஜமாக்கும் முயற்சியில் தனக்குத் தோள் கொடுக்குமாறு கேட்பார். அவர்கள் அப்போது வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாகத் தரமாட்டார்.
 
ஆனால், சம்பளத்தோடு, கம்பெனி லாபத்தில் பங்கு தருவார். இதனால், குறைந்த சம்பளத்தில், வால்மார்ட் செலவைக் குறைத்து லாபத்தை அதிகமாக்கும் உத்வேகம் கொண்ட திறமைசாலி ஊழியர்கள் வால்டனுக்குக் கிடைத் தார்கள். வால்மார்ட் வேலையின் இன்னொரு முக்கிய அம்சத்தையும் வால்டன் அவர்களோடு பேசிச் சம்மதம் வாங்குவார். உதாரணமாக, வால்மார்ட்டில் விற்பனைப் பிரிவில் சேருபவர், என் வேலை வாடிக்கை யாளர்களோடு பேசி அவர்களைப் பொருட்கள் வாங்கவைப்பது மட்டுமே என்று சட்டம் பேச முடியாது.
 
தேவைப்பட்டால், கடையைச் சுத்தம் செய்யவும், லாரிகளிலிருந்து சாமான்களை ஏற்றி இறக்கவும், ஷெஃல்ப்களில் பொருட்களை அடுக்கவும் தயாராக இருக்கவேண்டும். அவர்களும் தயங்காமல் செய்வார்கள். ஏன் தெரியுமா? அவர்களுடைய முதலாளியே பந்தா எதுவும் பண்ணாமல் அவர்களோடு சேர்ந்து அனைத்து வேலைகளையும் செய்தாரே?
 
வாடிக்கையாளர்களுக்காக...
 
வால்டனைக் கஞ்சன் என்றே பலர் அழைத்தார்கள். அவர் சிக்கனம் காட்டியது நிஜம். ஆனால், இது சுயநலத்துக்காக அல்ல, வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் பொருள்களைத் தரவேண்டும் என்னும் இலட்சியத்துக்காக. ஏனென் றால், செலவைக் குறைப்பதற்காகத் தன் சுகங்களையே அவர் தியாகம் செய்வார்.
 
வால்டனும் அவர் குழுவும் பயணம் கிளம்பும் முன் எவ்வளவு செலவு செய்யலாம் என்று பட்ஜெட் போடுவார்கள். உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும் செலவு பட்ஜெட்டைத் தாண்டக்கூடாது.
 
முதலாளியும், தொழிலாளிகளும் ஒரே ஹோட்டலில் தங்குவார்கள். நட்சத்திர ஹோட்டல்கள் கிடையவே கிடையாது. தனி அறைகள் எடுத்தால் அதிகச் செலவு என்பதால், சாதாரண ஹோட்டல்களில் இரண்டு அறைகள் எடுப்பார்கள். அறைக்கு மூன்று பேர் தங்குவார்கள். ஒரே அறையில் ஆறு பேரும் சுருண்டு கிடந்த நாட்களும் உண்டு.
 
ஆகவே, வால்டனும் அவர் சகாக்களும் எப்போதும் நடராஜா சர்வீஸ்தான். வால்டன் காலடிபடாத சந்துகளும், குறுக்குத் தெருக்களும் நியூயார்க் நகரத்தில் கிடையவே கிடையாது. வால்மார்ட் சில்லறை வியாபாரத்தில் ஆண்டாண்டு காலமாக உலக நம்பர் 1. காரணம்? குறைந்த விலை என்னும் பொசிஷனிங், இதை வெறும் வார்த்தை ஜாலமாக நினைக்காமல், வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்த சத்தியப் பிரமாணமாகக் கருதி, ஒவ்வொரு நிமிடமும் இதற்காகச் செய்யும் முயற்சிகள்தான்.
 
Link to comment
Share on other sites

ஓரியோ பிஸ்கெட்டின் வயது 103

 

oreo_2306081f.jpg

 

நடிகர் கார்த்தி தோன்றும் ஓரியோ பிஸ்கெட் விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இரண்டு வட்ட வடிவச் சாக்லெட் பிஸ்கெட்கள், அவற்றுக்கு நடுவே கிரீம். கார்த்தியும் அவர் தங்கை(யாகத் தோன்றும் நடிகை)யும் வருவார்கள். கையில் ஓரியோ பிஸ்கெட்டை வைத்துக்கொண்டு கார்த்தி தங்கையைச் செல்லமாகச் சீண்டுவார். பிறகு பிஸ்கெட்டை இரண்டாக உடைப்பார். இருவரும் பாலில் முக்குவார்கள். சிரித்துக்கொண்டே சாப்பிடுவார்கள்.
 
அமெரிக்காவில் உருவானது
 
ஓரியோ பிஸ்கெட் இந்தியாவுக்கு வந்தது 2011- ம் ஆண்டு. ஆனால், ஓரியோ வயது என்ன தெரியுமா? 103! ஆமாம், 1912 இல் அமெரிக்காவில் நபிஸ்கோ (Nabisco) என்னும் நிறுவனம் ஓரியோவை அறிமுகம் செய்தார்கள். அன்றைய பெரும்பாலான கிரீம் பிஸ்கெட்கள் சதுர வடிவில் இருந்தன, சாதாரண பிஸ்கெட்டுகளுக்கு நடுவில் ஓரளவு கிரீம் இருந்தது.
 
ஓரியோவில், இரண்டு வட்ட வடிவ சாக்லெட் பிஸ்கெட்களுக்கு நடுவில் கணிசமான வனிலா கிரீம் இருந்தது. சாக்லெட் கசப்பும், வனிலா இனிப்பும் தனிச் சுவை தந்தன. வித்தியாசத் தோற்றம், சுவை ஆகியவற்றால், ஓரியோ விரைவில் பிரபலமானது.
 
அதிலும், ஓரியோவைப் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதில் ஏனோ குழந்தைகளுக்குத் தனி த்ரில். இதனால், நபிஸ்கோ கம்பெனியும் குழந்தைகள் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதுபோல் ஓரியோவை விளம்பரம் செய்தார்கள். ஓரியோ அமெரிக்காவின் நம்பர் 1 பிஸ்கெட் ஆனது.
 
பிற நாடுகளுக்கு 1990 களில் வியாபாரம் உலகமயமாகத் தொடங்கியது. சீனா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் கதவுகளைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறக்கத் தொடங்கின. மக்கள் தொகை, உயரும் பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தப் புதிய சந்தைகளைத் தேடி வந்தார்கள்.
 
சீனாவில் படு தோல்வி
 
1996. சீனாவில் ஓரியோ விற்பனை தொடங்கியது. 14 பிஸ்கெட்கள் கொண்ட பாக்கெட் விலை 72 சென்ட்கள் (அன்றைய டாலர் மதிப்பில் இது சுமார் 25 ரூபாய்). அமெரிக்காவில் மாபெரும் வெற்றி கண்ட அதே வடிவம், அதே சுவை. நாளிதழ்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றில் ஏகப்பட்ட விளம்பரங்கள். அவை அனைத்திலும், குழந்தைகள் ஓரியோவைப் பாலில் தோய்த்துச் சாப்பிடும் காட்சி.
 
2005. ஒன்பது ஆண்டுகள் ஓடி விட்டன. ஏனோ, விற்பனை சூடு பிடிக்கவேயில்லை. ஏகப்பட்ட நஷ்டம். சீன நாட்டிலிருந்து வெளியேறிவிடலாம் என்னும் சோகமான முடிவை நபிஸ்கோ எடுத்தார்கள். ஒரே ஒரு விற்பனை மேனேஜருக்கு மனம் நிறையக் கேள்விகள்.
 
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய ஓரியோ சீனாவில் மண்ணைக் கவ்வியது ஏன்? சீனாவை விட்டு வெளியேறும் முன், கருத்துக் கணிப்பு நடத்தித் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க விரும்பினார். நபிஸ்கோவின் அமெரிக்கத் தலைமைச் செயலகம் பச்சை விளக்குக் காட்டியது.
 
கருத்துக் கணிப்பு முடிவால் பிரபலமானது
 
கருத்துக் கணிப்பு சொன்ன உண்மைகள் நபிஸ்கோவுக்கு ஞானோதயம் தந்தன. சாக்லெட் கசப்பும், கிரீம் இனிப்பும் கலந்த இரட்டைச் சுவைக் கலவை சீனர்களுக்கு மிகவும் பிடித்தது. ஆனால், ஒரு பிரச்சனை “இனிப்பு திகட்ட வைக்கிறது: கசப்பு வயிற்றைப் புரட்டுகிறது. இரண்டுமே அதிகமாக இருக்கின்றன. இனிப்பு, கசப்பு இரண்டையும் மிதமாக்கவேண்டும்.”
 
நபிஸ்கோ கம்பெனி கிரீம் இனிப்பையும், சாக்லெட் கசப்பையும் வெவ்வேறு அளவுகளில் குறைத்து, 20 வகையான சாம்பிள்கள் தயாரித்தார்கள். அவற்றை ஆயிரக் கணக்கான சீன ஆண், பெண்கள், பல்வேறு வயதுள்ள குழந்தைகள் ஆகியோரிடம் சாப்பிடச் சொல்லி, அவர் களுக்கு எந்த சாம்பிள் பிடிக்கிறது என்று அவர்கள் கருத்துகளைக் கேட்டார்கள். இந்த அடிப்படையில், 20 சாம்பிள் களிலிருந்து பெரும்பாலா னோருக்குப் பிடித்த ஒரு சாம் பிளைத் தேர்ந்தெடுத்தார்கள்.
 
புதிய சுவைகளில் இன்னும் சில தனிப்பட்ட சுவைகளும் வந்தன. வனிலா கிரீம் மட்டுமே முதலில் இருந்தது. பல குழந்தைகளுக்கு வனிலாவைவிடச் சாக்லெட் கிரீம் இன்னும் அதிகமாகப் பிடித்தது. ஆகவே, ஓரியோ, சாக்லெட் கிரீம் அறிமுகம் செய்தார்கள். சீனர்கள் கிரீன் டீ என்னும் கொழுந்து வகைத் தேநீருக்கு அடிமைகள். அது புத்துணர்ச்சி தருவது என்னும் உறுதியான நம்பிக்கை கொண்ட வர்கள்.
 
நாள் முழுக்க கிரீன் டீ குடிப்பார்கள். ஆகவே, அடுத்து வந்தது இன்னொரு ஓரியோ . அதன் நடுவே கிரீன் டீ கிரீம். இதைப்போல் உள்ளூர் டேஸ்ட்டுக்கு ஏற்றபடி ஆரஞ்சு, மாம்பழம் இரண்டின் சுவையும் கலந்த புளிப்பும் இனிப்புமான கிரீம் அறிமுகம் செய்யப்பட்டது. .
 
ஓரியோ ஏன் வட்டவடிவமாக மட்டுமே இருக்கவேண்டும்? பல சீனர்கள் கேட்டார்கள். மக்கள் குரல் மகேசன் குரல் என்று கம்பெனி நிர்வாகிகள் முடிவு செய்தார்கள். கை விரல்கள் போன்ற வடிவம் பலருக்கும் பிடித்தமானதாக இருந்தது. வந்தது குச்சிபோல் நீளமான ஓரியோ. 14 பிஸ்கெட்கள் கொண்ட பாக்கெட் விலை 72 சென்ட்.
 
இத்தனை விலை கொடுத்துப் பிஸ்கெட் வாங்க சாமானியச் சீனக் குடும்பம் தயாராக இல்லை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, நபிஸ்கோ 5 ஓரியோக்கள் கொண்ட சின்ன பாக்கெட் 29 சென்ட் விலையில் அறிமுகம் செய்தார்கள். பெரிய பாக்கெட்களும் தொடர்ந்தன.
 
உத்தியில் மாற்றம்
 
அமெரிக்க அனுபவத்தின்படி, ஓரியோ பாலில் தோய்த்துச் சாப்பிடும் பிஸ்கெட் என்னும் பொசிஷனிங்கை நபிஸ்கோ மக்கள் மனங் களில் உருவாக்கிக் கொண்டிருந்தது.
 
இந்தப் பொசிஷனிங்கைச் சீனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் பழக்கம் அமெரிக்கத் தனமானது, சீனப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றதல்ல என்று நினைத்தார்கள்.
 
ஓரியோ நிர்வாகிகளுக்கு ஒரே குழப்பம் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதுதான் ஓரியோவின் வித்தியாசமான தனித்துவம். இதை இழக்கக் கம்பெனி தயாராக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள்.
 
சீனாவிலும் முதலிடம்
 
பால் ஆரோக்கியம் மிகுந்த பானமாகச் சீனாவில் கருதப்படுகிறது தினமும் குழந் தைகளைப் பால் குடிக்க வேண்டுமென்று சீனப் பெற்றோர்கள் வற்புறுத்துவார்கள். எல்லா ஊர்களையும்போல், சீனாவிலும் குழந்தைகள் பால் குடிக்க அடம் பிடிக்கும்.
 
நபிஸ்கோ ஓரியோ விளம்பரங்களில் சிறு மாற்றம் கொண்டுவந்தார்கள். குழந்தைகள் பால் குடிக்க ஓரியோ உதவும் என்னும் கருத்தை மையப்படுத்தினார்கள். சீனப் பெற்றோர்கள் மனம் மாறியது. ஒவ்வொரு வருடமும் ஓரியோ விற்பனை இரண்டு மடங்கானது. இன்று சீனாவில் நம்பர் 1 பிஸ்கெட் ஓரியோதான்!
 
2009 இல் ஓரியோ பிஸ்கெட்டை நபிஸ்கோ கம்பெனியிடமிருந்து சாக்லெட் தயாரிக்கும் காட்பரீஸ் கம்பெனி வாங்கிவிட்டார்கள். 2010 இல் இந்தியாவில் ஓரியோவை அறிமுகம் செய்திருக்கும் காட்பரீஸ், சீனாவில் நபிஸ்கோ படித்த பாடத்தை இந்தியாவில் பின்பற்றி வருகிறார்கள்.
 
நம் நாட்டில் ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு ஆகிய சுவைகள் ஏராளமான குழந்தை களுக்குப் பிடித்தவை. ஆகவே ஓரியோ வனிலா, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு ஆகிய கிரீம்களோடு வருகிறது.
 
இந்தியாவில் இந்தியப் பாக்கெட்களும், விலைகளும் அமெரிக்க பாணியில் அல்ல, சீனப் பாணியில்தான். 3 ஓரியோக்கள் கொண்ட பாக்கெட் 3 ரூபாய்: 7 ஓரியோக்கள் பாக்கெட் 10 ரூபாய்: 14 ஓரியோக்கள் பாக்கெட் 20 ரூபாய்.
 
சீன முறைப் பொசிஷனிங் இந்தியாவிலும் வெற்றிகண்டு வருவதாக ஆரம்ப தகவல்கள் சொல்கின்றன. இந்த வெற்றி தொடருமா? வருகின்ற நாட்கள் பதில் சொல்லும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""1986 இல், தன் 84 ம் வயதில் க்ராக் மரணம் அடைந்தார். அப்போது, அவர் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி, உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவர். இன்று மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்துக்கு 118 நாடுகளில் 36,000 கிளைகள் இருக்கின்றன.""

 

MC  D  இல்லாவிட்டால் எங்கடை ஆக்கள் கனபேர் வேலை இல்லாத் திண்டாட்டத்துக்குள் அடங்கியிருப்பார்கள்

Link to comment
Share on other sites

ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்...

 

ebay_2330044f.jpg

 

தான் நடத்தும் தொழிலில் வெற்றி காண வேண்டும் என்றால், எந்தக் நிறுவனமும், மக்கள் மனங்களில் தங்கள் தயாரிப்புப் பொருட்கள் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தவேண்டும். இந்த பொசிஷனிங்கை உருவாக்க நிறுவனங்கள் ஏராளமான பணம், நேரம், ஊழியர்களின் திறமை ஆகியவற்றைச் செலவிடுகிறார்கள்.
 
இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. அவர்கள் தொழில் தொடங்கும்போது, தானாகவே இந்த பொசிஷனிங் அமைந்துவிடும். இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அதே சமயம், இவர்களுள் ஒரு சில திறமைசாலிகள் தற்செயலாக அமையும் பொசிஷனிங்கை உறுதியாக்குவார்கள், அதை அடித்தளமாகக் கொண்டு மென்மேலும் வெற்றிகளை அடைவார்கள்.
 
இ-காமர்ஸ் நிறுவனமான இ-பே (eBay) நிறுவன வரலாறு அத்தகைய ஒரு அனுபவம். இதை நிறுவியவர் பியர் ஒமிடியார் (Pierre Omidyar). பியருக்கு பள்ளி நாட்களிலேயே கம்ப்யூட்டர் மேல் காதல் பிறந்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தார்.
 
அடுத்த ஆறு வருடங்களில் மூன்று வேலை மாற்றங்கள். 1994 இல் ஜெனரல் மாஜிக் என்ற மொபைல் டெலிபோன் கம்பெனியில் வேலை பார்த்தார். அங்கேயே வேலை செய்த பமேலா என்னும் பெண்ணைக் காதலித்தார்.
 
தான் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று பியருக்கு அடங்காத ஆசை. இன்டர்நெட் மாபெரும் வாய்ப்புகளைத் திறந்திருக்கிறது, எப்படியாவது இன்டர்நெட் தொடர்பான தொழில் தொடங்க வேண்டும் என்று ஆலோசித்தார். பியரின் பிசினஸ் ஐடியா தேடலும், பமேலா மீது கொண்ட காதலும் தற்செயலாகச் சந்தித்தன.
 
பெஸ் டிஸ்பென்ஸர் (Pez Dispenser) என்னும் விளையாட்டுப் பொருள் வெளி நாடுகளில் பிரபலமானது. நம் ஊரில் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு போகும் பென்ஸில் பாக்ஸ் போன்ற ஒரு பாக்ஸ். இதற்குள் அரிசி மிட்டாய், பெப்பர்மின்ட் போன்ற சின்ன மிட்டாய்களைப் போடலாம். தலைப்பாகம் பொம்மை வடிவம்.
 
அதை அழுத்தினால், டிஸ்பென்ஸரின் கீழிருந்து மிட்டாய் கொட்டும். இந்த டிஸ்பென்ஸர்கள் வகை வகையான பொம்மைகளாக வரும். மிக்கி மவுஸ், ஸ்நோ ஒயிட், லயன் கிங், ஸ்பைடர்மேன், பேட்மேன், கால் பந்து, ஹாக்கி பந்து என ஆயிரக்கணக்கான ரகங்கள், விதங்கள்.
 
அமெரிக்காவில் பல வகை டிஸ்பென்ஸர்களைச் சேகரிப்பது ஒரு பொழுதுபோக்கு. பமேலாவுக்கும் டிஸ்பென்ஸர்கள் சேகரிக்கும் பழக்கம் இருந்தது.
 
ஒரு நாள் இரவு. பியர், பமேலா இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
 
பமேலா சொன்னார், ‘டிஸ்பென்ஸர் கள் கலெக்‌ஷன் எனக்கு மிகப் பிடித்த பொழுதுபோக்கு. ஒரே மாதிரியான பொம்மைகள் என்னிடம் நிறைய இருக்கின்றன. அவற்றைக் கொடுத்து என்னிடம் இல்லாத பொம்மைகளை வாங்க ஆசைப்படுகிறேன். அவர்களை எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை’
 
வரப்போகிற மனைவியை இம்ப்ரஸ் செய்ய லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு. பியர் தன் மூளையை ஓவர்டைமில் ஓட விட்டார். வழியை கண்டுபிடித்தார். செப்டம்பர் 3, 1995. பியர், தன் காதலிக்காக ஆக்‌ஷன்வெப் (Auction Web) என்னும் இணையதளம் தொடங்கினார்.
 
பமேலாவிடம் உபரியாக இருக்கும் டிஸ்பென்ஸர்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார். அவரோடு டிஸ்பென்ஸர்கள் பரிமாற்றம் செய்ய விரும்புவோரைத் தொடர்புகொள்ளச் சொன்னார். பதில்கள் வரும் என்று பியருக்கு நம்பிக்கையே இருக்கவில்லை. ஆச்சரியம்! ஆச்சரியம்! பதில்கள் வந்து கொட்டின.
 
இந்த வெற்றியால் பியரின் தன்னம்பிக்கை டாப் கியருக்கு போனது. அவர் ஆக்‌ஷன் வெப் இணையதளத்தில் ஒரு குறும்பு செய்தார். அவரிடம் ரிப்பேரான ஒரு லேஸர் லைட் இருந்தது. அதை விற்பனைக்கு விட்டார். ‘உடைந்த லேஸர் பவர் பாயிண்ட் விளக்கு. மாடல் நம்பர்.......புது பாட்டரி போட்டாலும் வேலை செய்வதில்லை.
 
வாங்கிய விலை 30 டாலர். எதிர்பார்க்கும் குறைந்த விலை ஒரு டாலர். நீங்கள் ஏலத்தில் எடுக்க விரும்பும் விலையை இமெயில் செய்யுங்கள். பதினைந்து நாட்களில் யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பொருள் சொந்தம்.’
 
பதில் வருமென்று பியர் எதிர்பார்க்கவில்லை. மூன்று டாலர் தருவதாக முதலில் ஒரு இமெயில் வந்தது. இதை இணையதளத்தில் அறிவித்தார். அடுத்த சில நாட்களில் விலை மெல்ல மெல்ல நான்கு, ஐந்து, ஆறு, ஏழு டாலர்கள் என விலை ஏறியது. கடைசி நாள். பதினான்கு டாலர்கள் தருவதாக இமெயில்.
 
பணம் வந்தது. இன்டர்நெட்டில் பியரின் முதல் போணி, காயலான்கடை லேஸர் லைட் பதினான்கு டாலருக்கு.
 
ஆக்‌ஷன்வெப் இணையதளத்தில் கூட்டம் அலை மோதியது. தினமும் ஆயிரக்கணக்கான ஏலங்கள் அரங்கேறின. பியர் தன் இன்டர்நெட் தொடர்பை, பெஸ்ட் (Best) என்னும் கம்பெனியிடமிருந்து வாங்கியிருந்தார். இணையதள போக்குவரத்தைச் சமாளிக்க முடியாமல் பெஸ்ட் கம்பெனி திணறியது. 1996 இல் அவரிடம் சொன்னது.
 
‘நீங்கள் இப்போது மாதம் 30 டாலர்கள் மாதச் சந்தா தருகிறீர்கள். இனிமேல், மாதம் 250 டாலர் தந்தால்தான் எங்கள் சேவையைத் தொடர முடியும்.’
 
இந்தச் செலவைச் சமாளிக்க, தன் இணையதளத்தைப் பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்க பியர் முடிவு செய்தார். வந்தது விலைப் பட்டியல். பொருட்கள் வாங்குபவர்களுக்கு கட்டணம் கிடையாது. விற்பவர்கள், 25 டாலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கு இரண்டரை சதவீதமும், 25 டாலருக்கு மேற்பட்ட விலைக்கு மேல் விற்பனையாகும் பொருட்களுக்கு ஐந்து சதவீதமும் கட்டணம் கொடுக்க வேண்டும். கம்பெனி பெயரும் இ-பே என்று மாறியது.
 
கட்டணம் வசூலிக்கத் தொடங்கியபின் இணையதளத்தில் கூட்டம் குறையும் என்று பியர் நினைத்தார். மாறாக, எகிறியது. லட்சக் கணக்கானோர் கவரில் பணத்தைப் போட்டு அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். வீடு முழுக்கக் கவர்கள்.
 
அவற்றை பிரித்துப் பணத்தை எடுக்கக்கூட நேரம் இல்லாமல் பியரும், பமேலாவும் திண்டாடினார்கள். ஒத்தாசைக்கு கிரிஸ் அகர்பாவ் (Chris Agarpao) என்ற நண்பர் வேலைக்குச் சேர்ந்தார். அவருடைய வேலை? கவர்களை கிழித்து, பணத்தை எண்ணி வைப்பது!
 
பியருக்கு இப்போது இரண்டு உண்மைகள் புரிந்தன. அவை:
 
ஏராளமான மக்கள் தங்கள் பழைய பொருட்களைப் பரிமாற்றம் செய்ய நம்பிக்கையான இடைத்தரகரை விரும்புகிறார்கள்.
 
ஏல வியாபாரம் செய்வதில் மக்களுக்கு ஒரு திரில் இருக்கிறது.
 
வாடிக்கையாளர்களின் இந்த தேவைகள் அடிப்படையில், நம்பிக்கையான இடைத்தரகு செய்யும் இணையதளமாக இ-பே நிறுவனத்தை பியர் உருவாக்கினார்.
 
நாளுக்கு நாள் இமாலய வளர்ச்சி. இன்று ஏலம் மட்டுமல்ல, சாதாரண வியாபாரமும் இ-பே மூலம் நடக்கிறது.
 
இன்று இ-பே நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 16 பில்லியன் டாலர்கள் (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்). உலகெங்கும் 15 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள்.
 
slvmoorthy@gmail.com
 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கிருஸ்னா நடத்திய கொரில்லாப் போர்

 

rasna_2432863f.jpg

 

முன்குறிப்பு 1980 காலகட்ட உண்மை நிகழ்ச்சி. பெயர்களை மாற்றியிருக்கிறேன்.
 
கிருஸ்னா என்னும் அந்தக் குளிர்பானத் தூள் மக்களிடம் மிகப் பிரபலம். பாக்கெட்டில் ஆரஞ்சு, எலுமிச்சை, கோலா ஆகிய சுவைகளில் இந்தப் பவுடர் வரும். இதை வைத்து ஜூஸ் தயாரிப்பது செம ஈஸி. ஒரு தம்ளர் தண்ணீரில், டேபிள் ஸ்பூன் தூளைப் போட்டு, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கினால் ஜூஸ் ரெடி. குழந்தைகள்கூட ஜூஸ் பண்ணலாம்.
 
விலை மலிவு
 
கடைகளில் விற்ற கேம்ப கோலா, ஃபான்ட்டா, லிம்கா, பவண்டோ, புரூட்னிக் போன்ற குளிர் பானங்கள் விலை இரண்டு ரூபாய். அதே இரண்டு ரூபாயில் கிருஸ்னா வாங்கினால், ஐந்து கப் ஜூஸ் பண்ணலாம். எனவே குழந்தைகள் இருக்கும் வீடுகள், பிறந்த நாள் விழாக்கள் ஆகியவற்றில் கிருஸ்னாதான் தனிக்காட்டு ராஜா. போட்டியே கிடையாது.
 
கோகோ கோலா அறிமுகம்
 
1956. இந்தியாவில் அமெரிக்கக் கோகோ கோலா அறிமுகமானது. உசத்தியான குளிர்பானம் என்றாலே அமெரிக்கத் தயாரிப்புதான் என்று மக்கள் மனத்தில் பிரமையை ஏற்படுத்தியது. 1977 இல் அரசியல் காரணங்களால் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டது. சென்னையின் ஒரு பாரம்பரியம் மிக்க தொழில் குழுமம், குளிர்பானத் தூள் துறையில் அமெரிக்கத் தொழில் நுட்பத்தோடு நுழைந்தால் வெற்றி நிச்சயம் என்று கணக்குப் போட்டார்கள்.
 
அமெரிக்கத் தொழில்நுட்பத்தோடு அமெரிக்கானா குளிர்பானத் தூள் தயாரிப்பு தொடங்கினார்கள்.
 
சோதனை விற்பனை
 
இந்தியா முழுக்க விற்பனை செய்வது லட்சியம். அதற்கு முன்பாக தங்களுடைய தயாரிப்புப் பொருள், விற்பனை விலை, விநியோகம், விளம்பர யுக்திகள் ஆகிய மார்க்கெட்டிங் ஆயுதங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கின்றனவா, என்று சோதிக்க விரும்பினார்கள்.
 
இதைச் சோதனை விற்பனை (Test Marketing) என்று சொல்லுவோம். அமெரிக்கானாவின் சோதனை விற்பனை சென்னையில் தொடங்கியது. வெயில் காலத்தில்தானே நாம் அதிகக் குளிர்பானம் அருந்துவோம்? எனவே, ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு நாளன்று விற்பனை தொடங்க முடிவு எடுத்தார்கள்.
 
கிருஸ்னா கம்பெனியின் தலைவர் ஹோஷங் பட்டேல் இதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அமெரிக்கானா சுவையில், தரத்தில் கிருஸ்னாவுக்கு இணையானது என்று அவருக்குத் தெரியும். விலையும் கிருஸ்னாவின் விலைதான்.
 
அமெரிக்க நாட்டுத் தொழில் நுட்பத்தில் உருவான குளிர்பானத் தூள் என்னும் பொசிஷனிங்கை வாடிக்கை யாளர்கள் மனத்தில் நெத்தியடியாகப் பதியவைக்கும் எண்ணத்தோடு அமெரிக்கானா என்று பெயர் வைத் திருந்தார்கள். இந்த பொசிஷனிங் மக்கள் மனங்களில் பதிந்துவிட்டால், கிருஸ்னா கதை முடிந்துவிடும் என்று பட்டேல் உணர்ந்தார். சென்னை வந்தார். பதிலடி ரெடி.
 
கடைக்காரர்களுக்கு ஊக்க பரிசு
 
ஏப்ரல் முதல் வாரம். தமிழ் நாளிதழ்களில், பத்திரிகைகளில் கலர் கலராய் விளம்பரங்கள். கடைகளில் போஸ்டர்கள். அமெரிக்கானா தயாரிப் பாளர்கள் மக்கள் மனத்தில் எக்கச்சக்க எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டார்கள்.
 
அமெரிக்கானா கம்பெனி கடைக் காரர்களுக்காகத் தனி ஊக்கத் திட்டம் வகுத்தார்கள். ஒவ்வொரு கடையும் தங்கள் கிருஸ்னா, அமெரிக் கானா இரண்டின் ஏப்ரல் 14 முதல் மே 14 வரையிலான ஒரு மாதத்தில், கிருஸ்னாவைவிட அமெரிக்கானா அதிகம் விற்ற பத்துக் கடை முதலாளி களுக்கு சிங் கப்பூர் பயணம். முழுச் செலவும் அமெரிக்கானா உபயம்.
 
விற்பனை தீவிரம்
 
முதல் நாள். அமெரிக்கானா விற்பனை தொடங்கியது. எல்லாக் கடைகளிலும் அழகாய் அமெரிக்கானா கண்காட்சி. மக்கள் வாங்கத் தொடங்கினார்கள்.
 
இரண்டாம் நாள். விற்பனை சூடு பிடித்தது. சென்னை அண்ணா நகர். மாலை மணி ஐந்து. ஏரியாவில் பிரபலமான ப்ளூ ஸ்டார் கடை. சோப், சீப்பு, வளையல், பொட்டு, குளிர் பானங்கள், சாக்லெட், பிஸ்கட் ஆகிய பொருட்கள் கிடைக்கும் இடம்.
 
கடைக்காரர் சிபாரிசு
 
கடையில் எக்கச்சக்கக் கூட்டம். அம்பா, அகிலா, ராஜி, ராம், முகுந்த், மது எனப் பலர் வந்திருக்கிறார்கள். முதலாளி சுலைமான் புதுக் குளிர்பானத் தூளின் மகிமையை அவர்களுக்கு விவரித்துக் கொண்டிருக்கிறார். அவர் களை வாங்க வைத்தால்தானே அவர் சிங்கப்பூர் பறக்க முடியும்? இன்னொரு விஷயம், அவருக்கும் அமெரிக்கானா டேஸ்ட் பிடித்திருந்தது.
 
இப்போது கடையில் எண்ட்ரி சரோஜா மணி. சுமார் முப்பது வயசு. பளிச் தோற்றம். பார்க்கும்போதே கேட்காமலே மதிப்புக் கிடைக்கும் ஆளுமை. ஓரக்கண்ணால் ஆண்கள், பெண்கள் மதிப்புப் பார்வை அவர்மேல்.
 
“தம்பி, சேப்புக் கலர் வளையல் இருக்கா? ”
 
இரண்டு ரூபாய்க்கு வளையல் வாங்குகிறார்.
 
“லேடீஸ் சீப்பு குடுங்க.”
 
வாங்குகிறார்.
 
“சின்ன சைஸ் பொட்டு காட்டுங்க.”
 
வாங்குகிறார்.
 
தான் வாங்கும் ஒவ்வொரு சின்னப் பொருளையும் ரசனையோடு, ஆழ்ந்த சிந்தனையோடு வாங்குபவர் இவர் என்று முதலாளி சுலைமான் மட்டுமல்ல, கடைக்கு வந்திருக்கும் அத்தனை பேரும் நினைக்கிறார்கள்.
 
“கூல் டிரிங்க் பவுடர் குடுங்க.”
 
சுலைமான் அமெரிக்கானா பாக்கெட் எடுக்கிறார்.
 
“அம்மா, இது புதுசா மார்க்கெட்டுக்கு வந்திருக்குது. பிரமாத டேஸ்ட்ம்மா. அமெரிக்கக் கூட்டுறவில் தயார் பண்றாங்க. விலையும் லோக்கல் பவுடர் விலைதான். “சரோஜா அமெரிக்கானா பாக்கெட்டைக் கையில் வாங்கி மேலும் கீழும் பார்க்கிறார்.
 
“ஐயய்யோ, இது வேணாங்க. புது புராடக்டா இருக்கேன்னு நேத்து வாங்கிட்டுப் போனேன். கிருஸ்னா ரெண்டு ஸ்பூன் போட்டா அமெரிக்கானா நாலு ஸ்பூன் போடவேண்டியிருக்குது. விலையை விடுங்க. டேஸ்ட் சுத்த மோசம். பசங்க ஒரு வாய் குடிச்சிட்டுக் கீழே கொட்டிட்டாங்க. பந்தா பேர் வெச்சு மக்களை ஏமாத்துறாங்க. எனக்கு அமெரிக்கானா வேண்டவே வேண்டாம். நான் எப்பவும் வாங்குற கிருஸ்னாவே குடுங்க.’’
 
கிருஸ்னாவை வாங்குகிறார். கணவரின் மோட்டார் சைக்கிளில் பின் சீட்டில் உட்கார்ந்து புறப்படுகிறார்.
 
அவர் மட்டுமில்லை, அம்பா, அகிலா, ராஜி, ராம், முகுந்த், மது என அமெரிக்கானா வாங்க வந்தவர்கள் கிருஸ்னா வாங்கிக்கொண்டு போகி றார்கள். அடையாறில் தேன்மொழி கண்ணன், புரசைவாக்கத்தில் கோமதி ஆனந்த், தியாகராய நகரில் லதா கண்ணன், அசோக் நகரில் நாகமணி கோபால், சைதாப்பேட்டையில் விஜயா ராம், கிண்டியில் கற்பகம் ராஜா, கோட்டூர்புரத்தில் வள்ளி சிதம்பரம் எனச் சென்னை முழுக்க ஐம்பது பேர். பதினைந்து நாட்கள் சென்னையின் பிரபல கடைகளுக்குப் போனார்கள். சரோஜா மணி பேசிய வசனத்தைத் தங்கள் வார்த்தைகளில் பேசினார்கள்.
 
விற்பனை சரிந்தது
 
கடைக்காரர்களுக்கே அமெரிக்கா னாவின் தரத்தில் சந்தேகம் வந்தது. சூடு பிடிக்கும் முன்பாகவே, விற்பனை சுருண்டது. சென்னைத் தொழில் குழுமம், கை சுட்டது போதும் என்று சென்னைச் சோதனை விற்பனையோடு தங்கள் குளிர்பான விற்பனை முயற் சிக்குக் குட்பை சொன்னார்கள்.
 
கொரில்லா தாக்குதல்
 
அமெரிக்கானா மக்கள் மனங்களில் பொசிஷனிங்கை உருவாக்குவதைத் தடுக்கவேண்டும். தங்களைவிடப் பணபலம், ஆள்பலம் கொண்ட கம்பெனியை நேருக்கு நேர் மோத முடியாது என்று கிருஸ்னாவுக்குத் தெரியும். ஆகவே, அவர்கள் தொடுத் தது ஒரு வகை கொரில்லாப் போர். யார் எங்கிருந்து தாக்குகிறார்கள் என்றே தெரியாமல் அமெரிக்கானா மேல் பாய்ந்த அட்டாக்.
 
கிருஸ்னாவின் கொரில்லாப் படை வீரர்கள் ஐம்பது பேரும் உயர் மட்டக் குடும்பப் பெண்கள். இவர்களுடைய தகுதிகள் - முதல் பார்வையிலேயே பார்ப்பவர்களிடம் மதிப்பையும் நம்பகத் தன்மையும் உருவாக்கும் தோற்றம், தமிழ், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறமை.
 
இவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஏரியாவிலும் பிரபலமான கடைகளுக்கு, வாடிக்கையாளர்கள் அதிகமாக வரும் நேரங்களில் போக வேண்டும். கடையில் நுழைந்தவுடன் அமெரிக்கானா பற்றி விமர்சிக்க முடியாது. கடைக்காரர், பிற வாடிக்கை யாளர்கள், ஆகியோரின் நம்பிக்கை யைப் பெறவும் முடியாது. ஆகையால் அவர் ஒவ்வொரு கடையிலும் சுமார் பத்து ரூபாய்க்குப் பல பொருட்கள் வாங்க வேண்டும். பிறகு குளிர்பானத் தூள் பற்றிய பேச்சைத் தொடங்க வேண்டும்.
 
நீங்கள் விற்பனையில் ஜெயிக்க வேண்டுமானால், போட்டியாளர்களைத் தோற்கடிக்கவேண்டும். அவர்கள் பொசிஷனிங் உருவாக்காமல் தடுக்க வேண்டும். இதற்குத் தேவை கோடிக் கோடியாகப் பணமல்ல, மாத்தி யோசிக்கும் சக்தி. இதைத்தான் கிருஸ்னா செய்தார்கள்.
 
Link to comment
Share on other sites

ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’

 

apple_2440552f.jpg

 

இதயத்தின் ``லப் டப்’’ தெரிய வேண்டுமா?
 
உங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள். எத்தனை கலோரிகள் இழந்தோம் என்று கண்டுபிடிக்கவேண்டுமா?
 
திருக்குறள் படிக்கவேண்டுமா?
 
ஆங்கில வார்த்தைக்குத் தமிழ் அர்த்தம் வேண்டுமா?
 
ஃபோன் பேச வேண்டுமா?
 
மெசேஜ் அனுப்பவேண்டுமா?
 
போட்டோ எடுக்கவேண்டுமா?
 
புதிய ஊரில் வழி தேட வேண்டுமா?
 
இப்படி 3500 க்கும் அதிகமான “வேண்டுமா”க்களுக்கு ஒரே பதில் ஏப்ரல் மாதம் அறிமுகமாகியிருக்கும் ஆப்பிள் வாட்ச் அமெரிக்க ஆப்பிள் கம்பெனியின் புதிய கண்டுபிடிப்பு. ஆமாம், இது வாட்ச்தான். கைக் கடிகாரம்தான். நேரம், நாள், கிழமை, மாதம், காலண்டர் பார்க்கலாம். அத்தோடு செயலிகள் மூலமாக 3500 தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.
 
தன் தயாரிப்புகளுக்கு அதிக விலை வைப்பது ஆப்பிள் கம்பெனியின் பாரம்பரியம். ஐ போன், ஐ பேட், ஆப்பிள் கம்ப்யூட்டர் ஆகியவை அதிக விலை கொண்டவை, ஆப்பிள் வாட்ச் அப்படியான ஒன்று. மூன்று மாடல்கள். 349 டாலர் (சுமார் 21,000 ரூபாய்) தொடங்கி, 12,000 டாலர் (சுமார் ஏழரை லட்சம் ரூபாய்) வரை விலை.
 
இந்த வருடம் 1 கோடி வாட்ச்களும், அடுத்த வருடம் சுமார் 4 கோடி வாட்ச்களும் விற்பனையாகும் என்று பிசினஸ் ஜோதிடர்கள் கணிக்கிறார்கள்.
 
1976 - இல் கம்பெனி தொடங்கிய நாள் முதலே, ஆப்பிளுக்கும், நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கும் ஒரே ஒரு பொசிஷனிங் கொள்கைதான், ``வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் தயாரிப்புகளைத் தந்து அவர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தவேண்டும்.’’ ஒவ்வொரு தயாரிப்பிலும், இதைச் சொல்லி அடித்திருக்கிறார்கள்.
 
மாறுபட்ட சிந்தனை
 
அழகின் பரம ரசிகர் ஸ்டீவ். கம்ப்யூட்டரை எப்படி அழகுச் சாதனமாக்கலாம் என்று 24 x 7 சிந்தனை. சிறு சிறு நுணுக்கங்களைக்கூட மேலெழுந்த வாரியாகப் பார்க்கமாட்டார். ஒவ்வொன்றும் கனகச்சிதமாக இருக்கவேண்டும். அதனால், அவர் அணுகுமுறை மற்றவர் களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
 
அந்த நாட்களில் கம்ப்யூட்டர் தயாரிப் பாளர்கள் எல்லோரும் கேஸிங் (Casing) உலோகத்தால் செய்தார்கள். தன் தயாரிப்புகள் பயன்படுத்த எளிதாக, பார்க்க பரம அழகாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கேஸிங்கைப் பிளாஸ்டிக்கில் உருவாக்கினார். கண்களை ஈர்க்கும் புதுமை.
 
வண்ண கம்ப்யூட்டர்
 
1983, 1984 காலகட்டங்கள், ஸ்டீவ், லிஸா (Lisa), மக்கின்டாஷ் (Macintosh) என்னும் கம்ப்யூட்டர்களை வடிவமைத்துக்கொண்டிருந்தார். அதுவரை இருந்த கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதில் பல சிரமங்கள். Hindu என்கிற ஃபைலை ஹார்ட் டிஸ்கிலிருந்து ஃப்ளாப்பி டிஸ்குக்கு காப்பி பண்ணவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
 
copy c:/docs/myfolder/Hindu:/ என்று கீபோர்டில் டைப் அடிக்கவேண்டும். இதேபோல் ஃபைலை நீக்க, Del c:/docs/myfolder/Hindu என்று டைப் செய்யவேண்டும். தவறுகள் அடிக்கடி வரும், செய்யும் வேலை தடைப்படும். ஜாப்ஸ் மவுஸ், ஐகான்கள் (Icons) ஆகியவற்றைத் தன் கம்ப்யூட்டர்களில் கொண்டுவந்தார். பிரச்சினைகள் போயே போச்சு!
 
பயன்படுத்துவது எளிது
 
ஸ்டீவ் அறிமுகம் செய்த இன்னொரு அட்டகாச வாடிக்கையாளர் நட்புத் தொழில் நுட்பம் கிராஃபிக் யூஸர் இண்டர்ஃபேஸ் (Graphic User Interface), சுருக்கமாக GUI. இது ஒரு கம்ப்யூட்டர் காட்சி வடிவமைப்பு.
 
அதுவரை, Word என்னும் பணியைச் செய்யவேண்டுமானால், கீபோர்டில் Word என்று டைப் செய்யவேண்டும். ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் GUI இருந்தது. Word என்னும் சின்னத்தில் மவுஸால் க்ளிக் செய்தால் போதும். Word திறக்கும். மவுஸ், GUI, இரண்டுமே வாடிக்கையாளர்கள் எதிர்பாராமல், ஆப்பிள் கம்பெனி அவர்களுக்குத் தந்த இன்ப அதிர்ச்சிகள்.
 
ஸ்டீவ் மனதில் ஒருநாள் மின்வெட்டல், கம்ப்யூட்டரை ஏன் வண்ண வண்ண நிறங்களில் தயாரிக்கக்கூடாது? நீலம், ஆரஞ்சு, பச்சை, சிவப்பு எனப் பல நிறங்களில் வந்தன. மக்கள் ஆப்பிளின் பரம ரசிகர்களானார்கள். அள்ளிக்கொண்டார்கள்.
 
ஸ்டீவ் இசைப் பிரியர். அப்போது கிடைத்த எல்லா MP 3 பிளேயர்களும் அவரைப் பொறுத்தவரை, `‘குப்பை.” அவற்றில் 16 பாடல்களுக்குமேல் சேமிக்க செய்யமுடியாது என்பதுதான் அதற்கு காரணம். 2001 வந்தது, 1000 பாடல்கள் சேமிக்கும் திறன் கொண்ட ஐபாட் (iPod). இத்தகைய தயாரிப்புக்காகத்தான் இத்தனை நாட்கள் காத்துக்கொண்டிருந்ததுபோல், மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கினார்கள்.
 
தொலைநோக்கு சிந்தனை
 
ஸ்டீவ் தொலைநோக்கு கொண்டவர். செல்போன்கள் பிரபலமாகத் தொடங்கியிருந்த நாட்கள். 2005 இல் உலகம் முழுதும் 83 கோடி செல்போன்கள் விற்பனையாயின. இதில் கேமரா இருந்ததால், பெரும்பாலானோர் செல்போனில் போட்டோ எடுத்தார்கள்.
 
கேமரா வாங்குவதை நிறுத்தினார்கள். இதேபோல், செல்போனின் எம்பி 3 பிளேயர் ஐபாடைக் காணாமல் போகச் செய்துவிடும் என்று பயந்தார். செல்போனை அரங்கேற்ற முடிவு செய்தார். தன் செல்போனில் அதிரடி வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும். என்ன செய்யலாம்?
 
தொடு திரை செல்போன்
 
மனித உடல் அவயவங்களில் கை விரல்கள் அற்புதமான படைப்பு என்பது ஜாப்ஸ் எண்ணம். கைவிரல்களால் எப்போதும் ஏதாவது செய்து கொண்டேயிருப்பார். விரல்கள், விரல்கள், விரல்கள்... இவற்றை அடிப்படையாக வைத்து ஏதாவது வித்தியாசம் காட்டமுடியுமா? அவரும் டிசைன் டீமும் தூக்கம் மறந்தார்கள். வந்தது வடிவமைப்புப் புரட்சி. ஆப்பிள் செல்போனில் கீபோர்ட் கிடையாது. 26221614 என்னும் எண்ணுக்கு போன் செய்யவேண்டுமா? திரையில் இந்த எண்களைத் தொட்டால் போதும்.
 
இதேபோல், செல்போனின் எல்லா இயக்கங்களும் கீ அழுத்தலால் அல்ல, கை விரல் வருடலால். அதுவரை இருந்த ஸ்க்ரீன் பிளாஸ்டிக்கால் ஆனது. வருடல் சிரமமாக இருந்தது. ``கண்ணாடி ஸ்க்ரீன் போடுவோம்” என்றார் ஸ்டீவ். ஆனால், இது விசேஷக் கண்ணாடி. இந்தத் தயாரிப்பாளரைத் தேடித் கண்டுபிடித்தார்கள்.
 
இத்தனை உழைப்பும், இத்தனை மெனக்கெடலும் பயன்தந்தன. 2007 -ல் சந்தைக்கு வந்த ஐபோன் தான் உலக வரலாற்றிலேயே அதிக விற்பனை படைத்த எலெக்ட்ரானிக் கருவி என்னும் சிறப்புப் பெற்றது. வெற்றிச் சரித்திரம் கம்பீரம் குறையாமல் தொடர்கிறது.
 
தொழில்நுட்பத் தொழில் வேக வேகமான மாற்றங்கள் வரும் தொழில். இன்று முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் நாளையே கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும், காணாமல் போகும்.
 
39 ஆண்டுகளாக, ஆப்பிள் தொழில் நுட்பத் தில் நம்பர் 1 கம்பெனியாக வாடிக்கை யாளர்கள், பொதுமக்கள், கம்ப்யூட்டர் துறை வல்லுநர்கள் என எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
 
சாதாரணமாகப் புதுப் புதுப் பொருட் களைக் கண்டுபிடிக்கும் கம்பெனிகள் மட்டுமே இத்தகைய மேன்மையை அடைய முடியும். ஆனால், ஆப்பிள் கம்பெனி, மவுஸ், GUI, கம்ப்யூட்டர், டேப் ரெக்கார்டர், ஃபோன், வாட்ச் ஆகிய தன் தயாரிப்புகளில் ஒன்றைக்கூடக் கண்டுபிடிக்கவில்லை.
 
பிறர் கண்டுபிடித்த கம்ப்யூட்டர், டேப் ரெக்கார்டர், ஃபோன், வாட்ச் ஆகிய பொருட்களில்தாம் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்.
 
தொட்ட பொருட்களையெல்லாம் துலங்க வைத்திருக்கிறார்கள். இது ஒரு பொசிஷனிங் மேஜிக். ஆப்பிள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் தயாரிப்புகளைத் தந்து அவர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தும் நிறுவனம் என்று உலகம் முழுக்க மக்கள் மனங்களில் இருக்கும் அழுத்தமான நம்பிக்கை.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.