Jump to content

மனசு போல வாழ்க்கை


Recommended Posts

மனசு போல வாழ்க்கை 22: மன வளத்தால் மண் வளமும் மாறும்

manasu_jpg1_2514657g.jpg

எனக்குத் தெரிந்த ஒரு நண்பருக்கு உடல் நலம் பற்றிய பயம்தான் பிரதான எண்ணம். உடல் நலம் பற்றி வருவது அனைத்தையும் விடாமல் படிப்பார். பெரும்பாலும் உடல் நலம் என்றால் வியாதிகள் பற்றிய செய்திகள்தானே? “அது சாப்பிட்டால் அது வரும்; இது சாப்பிட்டால் இது வரும்” என்று நிறைய கட்டுப்பாடுகள் வைத்திருப்பார். மூன்று வேளைக்கும் உணவு கட்டிச் செல்வார் அலுவலகத்துக்கு. மூலிகை வைத்தியரே பொறாமைப்படுமளவுக்கு அத்தனை அயிட்டங்கள் இருக்கும். சத்து மாவு, மோர், வேக வைத்த கடலை, கீரை என அனைத்தும் கொண்டுசெல்வார். கொதிக்காத தண்ணீர் குடிக்க மாட்டார்.

பயம் எனும் வியாதி

ஆனால், அவருக்கென்று ஏதாவது உடம்புக்கு வந்துகொண்டே இருக்கும். வருவதற்கெல்லாம் வைத்தியம் வைத்திருப்பார். “உங்களுக்கு எப்படி இதெல்லாம்?” என்று கேட்டால் சொல்வார்: “தவறுதலாக ஒரு நாள் வெளியே சாப்பிட்டாலோ தண்ணீர் குடித்தாலோ இதுதான் நிலை. கட்டுப்பாடாய் இருக்கணும். இப்போ தெரியுதா நான் ஏன் இவ்வளவு பயப்படறேன்னு?” என்பார்.

என்ன நடக்கிறது நிஜத்தில்? உடல் நலம் அவர் கவனம் அல்ல. வியாதிகள் தவிர்ப்பில்தான் கவனம். காரணம், பயம் வியாதிகளை நினைக்க வைக்கும். நம்பிக்கையுடன் நலத்தை நினைக்க வைக்காது. வியாதிகளைத் தடுக்க வேண்டும் என்றால் வியாதிகளையே நினைக்க வேண்டும். எண்ணம், உணர்வு அனைத்திலும் வியாதி, வியாதி தடுப்புதான். ஆரோக்கியம் சுகம் என்பதை விட வியாதி தரும் வலியைத் தடுக்க வேண்டும். இதில்தான் கவனம்.

உள்ளத்தின் ஆற்றல்

கவர்ச்சி விதியின்படி அவர் செய்கைகள் வியாதிகளை இழுத்து வரும். வியாதிகள் தடுக்கப்படுவதற்கான நோய் எதிர்ப்பு சக்திக்கு (immunity) மனம் ஒரு மிகப் பெரிய காரணம் என்று மருத்துவ உலகம் கூறத் தொடங்கிவிட்டது. உளவியல் நோய் எதிர்ப்பு சக்தி (Psycho-Immunity) பற்றியெல்லாம் இன்று நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

இன்னமும் சாதாரணமாக விளக்குவதென்றால் இவர் எவ்வளவு கால தாமதம் ஆனாலும் வெளியில் தண்ணீர் குடிக்க மாட்டார். அதனால் வயிற்றுக் கடுப்பு வரும். அலுவலகத்தில் ஏற்படும் மன உளைச்சலில் வயிற்றுப் புண் உண்டு. அதற்கு நன்கு சாப்பிட வேண்டும். எவ்வளவு ஆசையிருந்தாலும் கடையில் போட்ட வடையைச் சாப்பிட மாட்டார்.

வெளிவேலை என்றால் கொலைப் பட்டினியாய்த்தான் வீட்டுக்கு வருவார். இப்படி ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் ராணுவ ஒழுங்கில் கண்காணித்து உபாதைகளை வரவழைத்துக்கொள்கிறார். எதற்குப் பயந்தாரோ அதுவே நடக்கும். ஆனால் தன் பயத்துக்குக் காரணம் தன் உடல் நிலை என்று அவர் கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கும்.

இது எல்லா மனநிலைகளுக்குப் பொருந்தும். உங்கள் வாழ்வில் உங்களுக்கு அதிகம் வரும் எண்ணம் என்ன, உணர்வு என்ன என்று பாருங்கள். அவைதான் அத்தனை நிகழ்வுக்கும் காரணங்கள். ஆனால், தங்கள் வாழ்வின் அனுபவங்களால் தான் அப்படி நினைப்பதாக, உணர்வதாக அவர்கள் சொல்வார்கள். அதுதான் மனம் செய்யும் மாயம்!

சந்தேகப்படுபவருக்கு அவர் சந்தேகிப்பது சரி என்பது போன்ற சாட்சியங்கள் கிடைக்கும். அது அவர் சந்தேகத்தை உறுதி செய்யும். கோபம் கொள்பவரைக் கோபப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கும். தான் கோபம் கொள்வது இவற்றால்தான் என்று நியாயம் சொல்வார் அவர்.

கிழக்கும் மேற்கும்

தமிழ்நாட்டின் இரு பகுதிகளை ஒப்பிட்டால் இந்த உண்மை புரியும். கிழக்குப் பகுதியான காவிரி டெல்டா பகுதியில் கடந்த 25 வருடங்கள் முன்பு வரை செழிப்பு இருந்தது. மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் என்றும் அந்த அளவுக்குச் செழிப்பு இருந்ததில்லை. கிணறு வெட்டுவது என்றால் சொத்தை விற்றுத்தான் செய்யணும். அவ்வளவு கடுமையான பூமி.

ஆனால், விவசாயம் முழுவதுமாகப் பொய்த்த பின்னும் கோழிப்பண்ணை, லாரித் தொழில், பால் வியாபாரம், நெசவுத் தொழில், கல்வி நிறுவனங்கள், ஃபவுண்டரி, நூற்பாலைகள் என கொடி கட்டிப் பறக்கிறார்கள். எவ்வளவு வசதிக் குறைவு என்றாலும் சொந்தமாக ஒரு லேத்தாவது வைத்துப் பிழைக்கப் பார்ப்பார்கள். மேற்கின் வளர்ச்சிக்குக் காரணம் அவர்கள் முயற்சி.

ஆனால், கலை, இலக்கியம், பண்பாடு என்ற பெரும் பாரம்பரியம் கொண்டது கிழக்கு. வெளிநாட்டு மோகத்தில் அங்கு சென்று கடை நிலை பணி செய்பவர்களும் கிழக்கின் மக்களே. பணம் கொடுத்தோ, சிபாரிசு பிடித்தோ ஒரு வேலையை வாங்கி வெளியே சென்றுவிட வேண்டும் என்பது இந்தப் பகுதி இளைஞர்களின் எண்ணம். சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் குறைவு. கிழக்கில் கொஞ்சம் தளர்ச்சி காணப்படுகிறது.

ஏன் இந்த ஒப்பீடு? இன்று கிழக்கு, மேற்கு இரண்டிலும் விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. இரண்டிலும் வறண்ட ஆறுகள்தான், அழியும் கிராமங்கள்தாம். ஆனால் கிழக்கில் மக்கள் மாறுதலுக்குக் காத்திருக்கின்றனர். மேற்கில் மக்கள் மாறுதலை ஏற்படுத்தியுள்ளனர்.

மண் வளத்தையும் தீர்மானிப்பது மன வளம் என்றால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?

manasu_2514658g.jpg

http://tamil.thehindu.com/general/education/மனசு-போல-வாழ்க்கை-22-மன-வளத்தால்-மண்-வளமும்-மாறும்/article7553265.ece?widget-art=four-rel

 

 

Link to comment
Share on other sites

மனசு போல வாழ்க்கை 23: லயிப்பதே மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

manasu_2523219f.jpg

மன வளம்தான் மண் வளத்தை தீர்மானிக்கிறது. இயற்கையை வணங்கும் மனம் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும். இயற்கையைப் பயன்படுத்த நினைக்கும் மனம் இயற்கையை விலக்கி செயற்கையான வாழ்க்கையை நாடிச்செல்லும். காடுகள் அழிந்ததும் கட்டடங்கள் பெருகியதும் மனிதரின் மன மாற்றங்களினால்தானே!

மன விகாரம்

புற உலகில் நீங்கள் காணும் மாற்றங்கள் யாவும் அக உலகில் நிகழ்ந்த மாற்றங்களினால்தான். நீங்கள் பார்க்கும் அனைத்தும் நீங்கள் உருவாக்கியவை. அல்லது பிறர் உருவாக்கும்போது நீங்கள் சம்மதம் தெரிவித்தவை. நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்கள் பங்கு உள்ளதை உணருங்கள். அதனால் எதையும் குறை சொல்வதில் பயன் இல்லை.

“எல்லாம் மோசம்; எதுவும் சரியில்லை” என்று சொல்வதும் ஒரு மன விகாரம்தான். உலகில் அனைத்தும் உள்ளது. எதைப் பார்ப்பது, என்ன செய்வது என்பதெல்லாம் நம்மிடம்தானே உள்ளது?

மாற்றி யோசி

என் நண்பர் ஒருவர் இளையராஜாவின் தீவிர ரசிகர், என்னைப் போலவே. இளையராஜாவின் அதிகம் பிரபலமாகாத அற்புத பாடல்கள் நிறைய உள்ளன என்று ஒருநாள் பேசினோம். பின் ஒரு 20, 25 பாடல்களை பட்டியல் போட ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிடத்தில் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் முழுவதுமாக நனைந்தோம். எல்லாம் கற்பனையில் தான். எல்லா பாடல்களையும் கேட்ட திருப்தி.

அவர் ஒரு பிரச்சினை பற்றி விவாதிக்க வந்தவர் அவர் எழுந்து போகும்போதும் அந்தப் பிரச்சினை எள்ளளவும் குறைவில்லை. ஆனாலும் உற்சாகமாக கிளம்பிப்போனார் அவர். இது தான் மனதின் செயல்பாடு.

மிக மோசமான மன நிலையிலும் எண்ணத்தை திசை திருப்பி ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். உற்சாகப்படுத்திக்கொள்ள முடியும். மாற்றி யோசிக்க முடியும். முயற்சிதான் முக்கியம். பிரச்சினை முடிந்த பின்தான் ஆறுதல் கிடைக்க வேண்டும் என்றால் இந்த உலகில் யார் நிம்மதியாக நடமாட முடியும்? அப்படியே ஒரு பிரச்சினை முடிந்தாலும் அடுத்தது வராமல் போய்விடுமா என்ன?

இசையும் கவிதையும் ஓவியமும் விளையாட்டும் மனிதனை எந்த நேரத்திலும் இளக வைக்க உதவுகின்றன. மனம் ஒன்றிச் செய்யும் எந்த செயலும் மனக்கவலையிலிருந்து விடுதலை அளிக்கக் கூடியவை. இதை இப்படிக் கூட புரிந்துகொள்ளலாம்: மனக் கவலையிலிருந்து விடுதலை பெற ஏதாவது ஒரு செயலை மனம் ஒன்றிச் செய்தாலே போதும்! இதைத் தான் ‘mindfulness’ என்று புத்த மதம் சொல்கிறது. மனம் லயித்துச் செய்யும் காரியம் மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

உழைப்பின் பயன்

ஒரு பிரச்சினை மனதை எதிர்மறையாகக் குவிக்கிறது. அதைச் சிதறடிக்க ஒரு சிறு நேர்மறை விஷயம் போதும். ஒரு குழந்தையின் சிரிப்போ, நகைச்சுவை துணுக்கோ, அந்நியரின் அர்த்தமற்ற செய்கையோ கூட போதும். அது பிரச்சினையிலிருந்து உங்கள் மனதை நொடிப்பொழுதில் வெளியே கொண்டு வந்து விடும்.

ஒரு கணவனும் மனைவியும் பெரிதாக சண்டை போட்டுக் கொண்டிருக்க, அழைப்பு மணி கேட்கிறது. கணவன் முகத்தை சரி செய்து கொண்டு போய் பார்க்கிறான். அடுத்த வீட்டு தம்பதி பொழுது போகாமல், அரட்டை அடிக்க இங்கு உரிமையாக கதவைத் தட்டுகிறார்கள். முகம் கழுவி வந்த மனைவி பிரமாதமாக உபசரிக்கிறாள். கணவனும் எதுவும் நடக்காதது போல மிக உற்சாகமாக நடந்து கொள்கிறான். சில நிமிடங்களில் சமூக உறவுகளுக்காக சொந்த சோகம் கிடப்பில் போடப்படுகிறது. இதுதான் நிஜம்.

இதில் இன்னொரு உண்மையும் பொதிந்துள்ளது. சமூக உறவுகள் நிறைய உள்ளவர்களுக்கு சொந்த சோகங்களை கையாள்வது எளிமையாகிறது. அதே போல உடல் உழைப்பு அதிகம் இருந்தாலும் மன உளைச்சல் அதிகம் தங்காது.

சந்தோஷமாக நடி

ஒரு இந்திப் படத்தில் வந்த உரையாடல் இது.

“நான் என் கணவனை பிரிய முடிவு செய்து பெட்டியைக் கட்டி வைத்து விட்டு அவனிடம் சொல்லிவிட்டுப் போகத் தயாராக இருந்தேன்”

“அப்புறம் என்னாயிற்று?”

“அவன் வருவதற்குள் தூங்கிப்போய்விட்டேன். மறு நாள் எழுகையில் மனம் மாறிவிட்டது!”

இப்படித்தான் பல தீவிர முடிவுகள் கூட அற்பக் காரணங்களால் கலைக்க கூடியவை. கோபத்தில், பயத்தில், அவசரத்தில் நாம் எடுக்க நினைக்கும் முடிவுகளைச் சற்று தள்ளிப் போட்டால் பக்குவமான முடிவுகள் எடுக்க முடியும்.

சரியான மன நிலையில் இல்லாத போது முடிவுகள் எடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். அந்த மன நிலையிலிருந்து தற்காலிகமாக வெளியே வர எடுக்கும் முயற்சிகள் கூட நல்ல பலன் தரும்.

சந்தோஷமாக இருக்க வழி சந்தோஷமாக இருப்பது போல நடிப்பது கூடத்தான். Fake it till you Make it!

பெரும் பிரச்சினையா? அதே எண்ணமாக இருக்கிறதா? ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். செய்வதற்கு எதுவுமில்லை; என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்பது மட்டும்தான் வேலை என்றால் முதலில் மனதை திசை திருப்புங்கள்.

மனமும் நிலா போலதான்

பெரிதாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும் பிடித்ததைச் செய்யுங்கள். பழைய அலமாரியை சுத்தம் செய்யுங்கள். முடி வெட்டிக்கொள்ளுங்கள். நிறைய நேரம் நிதானமாக குளியுங்கள். வண்டி ஓட்டும் போது பாட்டு பாடிக்கொண்டே செல்லுங்கள். காமெடி சீன் பாருங்கள். நீண்ட நாட்கள் பேசாத நண்பரிடம் பேசுங்கள். யூ டியூப் அல்லது டெட் வீடியோ பாருங்கள். தனி வாகனத்தில் செல்வோர் பொது வாகனத்தில் சென்று வாருங்கள். சுடோகு போடுங்கள். இது வரை செய்யாத ஏதாவது செய்யப்பாருங்கள். மனம் மாறும்.

மதி என்றால் நிலா என்றும் பொருள். மனம் என்றும் பொருள். மனமும் நிலா போலத்தான். வளரும். தேயும். முழுதாக இருக்கும். ஒன்றுமில்லாமல் போகும். ஒரு நாள் இருப்பது போல மறு நாள் இருப்பதில்லை. இந்த நிலையில்லாத தன்மையை புரிந்து கொண்டால் விதியை மதியால் வெல்வது சாத்தியமே!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

http://tamil.thehindu.com/general/education/மனசு-போல-வாழ்க்கை-23-லயிப்பதே-மனதின்-சிக்கலுக்கு-சிகிச்சை/article7578300.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

மனசு போல வாழ்க்கை 24: மாறட்டும் மனம்

manam1_2531413g.jpg

பெற்றோர்களுக்கு எப்போதும் தங்கள் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு. அதனால் விரைவில் “சுற்றியுள்ள உலகம் மோசமாகி வருகிறது. நம் காலம் போல எதுவும் இல்லை. இவர்கள் என்ன ஆவார்களோ?” என்ற எண்ணத்துக்குப் போய்விடுவார்கள்.

“இந்தக் காலத்துல குழந்தை வளத்தறது பெரிய வேலை!” என்பார்கள். என்ன பிரச்சினை என்று கேட்பதற்கு முன்னே பெரிய பட்டியல் வந்து விழும்.

மாற்றத்தின் தெளிவு

“ நேரத்துக்கு எழுந்துக்கறது கிடையாது. சதா செல்போன் நோண்டறது. பெரியவங்ககிட்ட பயமோ மரியாதையோ கிடையாது. சொந்தக்காரங்க பத்தின எண்ணமும் கிடையாது. எல்லாத்துலயும் ஆயிரம் சாய்ஸ் வேணும். எதுலயும் திருப்தி கிடையாது. சாப்பிடறது எல்லாம் ஜங்க் ஃபுட் தான். செலவு பத்தி கவலையே கிடையாது.

ஒரு அஞ்சு நிமிஷம் முகம் கொடுத்துப் பேச முடியாது. நினைச்ச மாதிரிதான் எல்லாம் நடக்கணும்னு நினைக்கிறாங்க. சின்ன விஷயத்துக்குக் கூட இடிஞ்சு போயிடறாங்க. இவங்கெல்லாம் நாளைக்கு எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக் குடும்பம் நடத்துவாங்களோ? நினைச்சாலே பயமா இருக்கு!”

இந்தக் கவலையில் நிறைய நிஜங்களும் நியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், காலத்தின் மாற்றம் பற்றிய தெளிவு முதலில் வேண்டும்.

எல்லாக் காலத்திலும் பிள்ளைகள் பொறுப்பற்றவர்களாகப் பக்குவமற்றவர்களாகத் தான் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் தெரிவார்கள். அதே போல உலகில் வரும் மாற்றங்களைப் பயத்தோடும் சந்தேகத்தோடும் அணுகுவது வயதானவர்களின் இயல்பு. உலகில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் நல்லதல்ல என்று வயதானவர்கள் நினைக்கக் காரணம் தங்கள் அறிவும் அதிகாரமும் ஆட்டம் கண்டு விடுமோ என்ற அச்சம்தான்.

மாற்றத்தின் பயம்

மாற்றம் வெளியிலிருந்து வருகையில் எதிர்ப்பதும், அவை நல்லதில்லை, நிலைக்காது என்று ஆருடம் சொல்வதும் என்றும் நடந்து வருபவை தான்.

“உலகில் கம்ப்யூட்டர்கள் கொஞ்சம்தான் பயன்படும் ” என்று 50-களில் பேசினார்கள். பேசுகிற முதல் திரைப்படம் வந்த போது, “இந்த நடிகர்களை யார் பேசச்சொன்னது, நடித்தால் போதாது?” என்றார்கள். ரயில் வண்டியைப் பார்த்துப் பயந்து ஏற மறுத்தவர்கள் நம் ஆட்கள்.

கிரஹாம் பெல் தொலைபேசிக்கான தனது காப்புரிமையை விற்க நினைத்த போது, “ஒலியைக் கடத்தும் இந்தக் கருவியால் எந்த வியாபாரப் பலனும் இல்லை” என்று மறுத்தன பிரபல நிறுவனங்கள். தாமஸ் ஆல்வா எடிசன் எதிர்ப்புகளையும், வழக்குகளையும், துரோகங்களையும், தோல்விகளையும் கண்டவர். அடிப்படைக் காரணம், எல்லா மாற்றங்களையும் உலகத்தினர் என்றும் பயத்தோடு எதிர்த்ததுதான்.

சாதகங்கள் பாதகங்கள் இரண்டையும் மாற்றங்கள் ஏற்படுத்தும். ஒன்றை அனுபவிக்கும்போது இலவச இணைப்பாய் மற்றதும் கூடவே வரும். கால்குலேட்டர் வந்தது. பெரிய கணக்குகள் சுலபமாய்த் தவறில்லாமல் கைக்குள் வந்தது. மனக் கணக்கு போய்விட்டது. என் பாட்டி காலத்தில் அனைவருக்கும் மனக் கணக்கு தெரியும். என் பெற்றோர் காலத்திலேயே அது வழக்கொழிந்துவிட்டது.

இந்தத் தொடர்ச்சியில் தான் இன்றைய தொழில்நுட்பத்தையும் அது ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றங்களைப் பார்க்க வேண்டும்.

கொடுத்தது நாம்தானே!

ரயில் டிக்கெட் வாங்க அரை நாள் லீவு போட்டுவிட்டுக் கியூவில் நின்ற பெற்றோருக்கு இன்று உட்கார்ந்த இடத்தில் செல்போனில் இருக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. தொழில்நுட்பம் என்பது பூதம் போல. நீங்கள் சொல்வதையும் செய்யும். சொல்லாததையும் செய்யும். எல்லாப் பரிமாற்றங்களும் செல்போனில் நடக்க ஆரம்பித்தால், அப்புறம் நேரத்துக்கு வெளியில் போய்க் காத்திருப்பது குறையத்தானே செய்யும்?

எல்லாக் கியூவிலும் நின்று நின்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் வந்தது முன்பு. கேட்டது அனைத்தும் உடனே கிடைக்கையில் காத்திருத்தல் எப்படிச் சாத்தியமாகும்? பொறுமையும் மனப்பக்குவமும் எப்படிக் கிடைக்கும்? பிறரிடம் கை நீட்டி கடன் வாங்குவது கேவலம் என்று இருந்த சமூகம் கடன் அட்டையில் காலம் தள்ளுகையில் எப்படிப் பழைய நல்ல பண்புகளைத் தூக்கிப் பிடிக்க முடியும்?

இன்று நம் பிள்ளைகள் வாழும் வாழ்க்கை முறை அனைத்தும் நாம் அருளியவை. எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுப் பிள்ளைகளை நோவதால் என்ன பலன்?

ஒவ்வொரு அறைக்கும் ஒரு டி.வி. பீட்சா, மாத தவணையில் வண்டி, வீடியோ விளையாட்டுக்கள், விலை உயர்ந்த உடைகள், டி.வியில் பார்த்து, வீட்டுக்குப் பயன்படாப் பொருட்களையும் கூட தருவித்தது நாம். அவர்கள் அனுபவிக்கையில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளுக்கும் நாம் தானே பொறுப்பேற்க வேண்டும்!

நாம் அவர்களிடம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயத்தை எதிர்பார்க்கிறோம். அதை நீங்களே புரிந்து கொள்ளாத போது எப்படி உங்கள் பிள்ளைகள் புரிந்து கொள்ள முடியும்?

ஒப்படைத்தலே வழி!

முன்பெல்லாம் மாமியார்- மருமகள் சண்டைகளின் காலம். அடுத்த தலைமுறையில் கணவன் மனைவி சண்டை தான் பிரதானம். இன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சண்டை. ஆக, உறவுச்சிக்கல்கள் என்றும் இல்லாமல் இல்லை.

என்ன செய்யலாம்? உங்களின் நேற்றைய கனவுகளை அவர்களின் நாளைய கற்பனைகள் மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கான நேரத்தையும் இடைவெளியையும் கொடுத்து விட்டு, கண்ணியமாக விலகியிருங்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் மட்டும் தான் தீர்மானிக்கப் போகிறார்கள். தடுமாறுகையில் பின்னாலிருந்து தாங்குவதற்கு நான் இருக்கிறேன் என்று மட்டும் உணர்த்துங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக வெளியேற்றுங்கள். இதனால் உங்களுக்கு ஏற்படும் மன நெருக்கடிகளை என்றாவது சாவகாசமாகப் பேசுங்கள். புரிய வையுங்கள். பணிய வைக்க நினைக்காதீர்கள்.

அவர்கள் மாறணும் என்றால் அதற்கு நீங்கள் முன் மாதிரியாக இருங்கள். கோபப்படாதே என்று அறிவுரை சொல்வதற்குப் பதில் நீங்கள் கோபப்படாமலிருங்கள். “யோகா செய்” என்று அறிவுரை செய்வதை விட நீங்கள் செய்து காட்டுங்கள்.

உங்கள் பிள்ளையை நீங்கள் மட்டும் தான் காக்க வேண்டும் என்ற மமதையிலிருந்து வெளியே வாருங்கள். உங்கள் பிள்ளையை உண்மையில் காக்கும் சக்தி ஒன்று உண்டு. அதனிடம் ஒப்படைப்பதுதான் சிறந்த வழி.

நம்புபவர்கள் அதை இறைமை என்பர். மற்றவர்கள் அதை இயற்கை என்பர்.

manam_2531414g.jpg

http://tamil.thehindu.com/general/education/மனசு-போல-வாழ்க்கை-24-மாறட்டும்-மனம்/article7603147.ece

 

 

Link to comment
Share on other sites

மனசு போல வாழ்க்கை 25: தோல்விகளுக்கு நன்றி!

manasu1_2539885g.jpg

தோல்விகள் நமக்கான பாடங்கள் என்று தெரிந்தும் தோல்விகளைப் பற்றி நாம் அதிகம் நினைப்பதில்லை. வெற்றியைக் கொண்டாட நினைக்கிறோம். தோல்வியை மறக்க நினைக்கிறோம். தோல்வி தரும் வலிதான் காரணம். தோல்வியை நினைக்கையில் நம்மையும் அறியாமல் சிறுமைப்பட்டுப் போகிறோம். வெளியில் சொல்லாவிட்டாலும் குறுகிப்போகிறோம். இது எனக்கு நடந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறோம்.

மூடி மறைத்தல்

காரணம் இல்லாமல் காரியம் இல்லை. தோல்வி வருவது நமக்கு ஒரு பாடம் புகட்டத்தான். அந்தப் பாடத்தை வலிமையாகக் கற்றுத்தரத் தோல்வியால் தான் முடியும். வெற்றியால் வரும் பாடங்கள் அகந்தையை வளர்க்கும். தோல்வி தரும் பாடங்கள் அகந்தையை அழிக்கும்.

நம் அகந்தை அழிய அவ்வளவு சீக்கிரம் நாம் அனுமதிப்போமா?

பொய்யான காரணங்களை அகந்தை உற்பத்தி செய்யும். ஒரு தற்காலிக அமைதியை உருவாக்கி அதில் தோல்வி அனுபவத்தை மூடி வைக்கும். அந்த மூடி மறைத்தலில் தோல்வி நமக்குக் கற்பிக்கும் பாடங்களும் மனதில் ஏறாமல் போய்விடும்.

தோல்வி நிலையானதா?

வெற்றியாளர்களின் சாகசங்களைக் கேட்பதில் 100- ல் ஒரு பங்கு கூடத் தோல்வியாளர்களின் அனுபவங்களை நாம் கேட்பதில்லை. வெற்றி பெற்றவர்களின் பழைய தோல்வி அனுபவங்கள்கூட சாகசங்களாகத்தான் பார்க்கப்படும். நிறைய தோல்விகளைச் சந்தித்தவர்களின் அனுபவங்கள் வளமான வாழ்க்கைப் பாடங்கள். அனைத்துத் தோல்விகளையும் நாமே பெற்றுக் கற்றுக்கொள்வதைவிடப் பிறர் தோல்விகளில் பாடம் கற்பது புத்திசாலித்தனம்.

தோல்வியடைந்தவர்களை உடனே உதாசீனப்படுத்துவது போன்ற மடத்தனம் எதுவுமில்லை. முதலில், வெற்றி, தோல்வியை வைத்து மனிதர்களை மதிப்பிடுவது மலிவான செயல். இரண்டாவது, தோல்வி என்பது நிரந்தர நிலையில்லை. ஒரு வெற்றி கூடச் சமயத்தில் வாழ்க்கையின் உச்சத்துக்கு இட்டுச் செல்லலாம். மூன்று, தோல்வியாளர்கள் தங்கள் பாடங்களைப் பகிரத் தயாராக இருப்பார்கள். ஆறுதல் கிடைக்கக் கூடப் பகிரலாம். ஆனால், வெற்றி பெற்றவர்கள் பலர் தங்கள் தோல்வி அனுபவங்களைப் பகிர மாட்டார்கள். ஆதலால் தோல்விகள் பாடங்கள் என்றால் தோல்வி அடைந்தவர்கள் ஆசிரியர்கள்.

நாம் ஏன் தோல்வி களைக் கண்டு இப்படிப் பயந்து நடுங்குகிறோம்? சிறு வயது முதலே தவறுகளையும் தோல்விகளையும் ஒதுக்கத்தான் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

வெற்றியின் மீதான வெறி

சரியும் தவறும் கலந்ததுதான் வாழ்க்கை. வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பது தான் இயல்பு. ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை. நம் தெய்வங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல.

வாழ்க்கையில் வெற்றியை மட்டும் தனியாகப் பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகி விட்டன. இதைப் படி, இதைக் குடி, இதைச் செய், இதை வாங்கு, இங்கு செல், இவரிடம் போ என்றெல்லாம் பிரித்துப் பிரித்துச் சந்தையைப் பிடித்துக் கொண்டதன் காரணம் நமக்கு வெற்றியின் மீது இருக்கிற வெறி தான்.

வாழ்க்கையில் வெற்றியை மட்டும் தனியாகப் பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகி விட்டன. இதைப் படி, இதைக் குடி, இதைச் செய், இதை வாங்கு, இங்கு செல், இவரிடம் போ என்றெல்லாம் பிரித்துப் பிரித்துச் சந்தையைப் பிடித்துக் கொண்டதன் காரணம் நமக்கு வெற்றியின் மீது இருக்கிற வெறி தான்.

படிக்காதவர்கள், நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள், நல்ல வேலை கிடைக்காதவர்கள், பணம் சம்பாதிக்காதவர்கள், சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் என்று நம்ப ஆரம்பித்து விட்டோம். அப்படி என்றால் படிப்பு, வேலை, சொத்து சேர்த்தவர்கள் முழுமையான வெற்றியாளர்களா? பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள், விவாகரத்துகள், விவகாரங்கள்? இவையெல்லாம் தோல்விகள் இல்லையா?

நம்பிக்கையே மருந்து

யோசித்துப் பார்த்தால், வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை. வாழ்க்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி. அது தவறினாலோ அல்லது தாமதமானாலோ அதைத் தோல்வி என்று சொல்கிறோம். அவ்வளவு தான்.

எந்தத் தோல்வியும் பெரிதல்ல. அதைப் பூதாகரமாக ஆக்கி விடுவது நம் எண்ணங்கள் தான். அந்தந்தப் பருவத்தில் பெரிதாகத் தெரியும் தோல்விகள் காலமும் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும்.

மதிப்பெண்கள் குறைவதும், காதல் கை கூடாததும் அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையே ஸ்தம்பிக்க வைப்பவை. ஆனால் அதைக் கடந்தும் வாழ்க்கை ஓடும். அதை விடச் சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும். நாளை பற்றிய நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.

தோல்விகளுக்கு நன்றி

மரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள். விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில் போக்குவரத்து சகஜமாகிறது. இயற்கை சீற்றம் நிகழ்ந்த இடம் சுற்றுலா மையம் ஆகிறது. எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் ஈடு செய்யப்படுகின்றன.

உங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும் போது, “அங்கு வழுக்கல் அதிகம். பார்த்துப் போ!” என்று சொல்லாமல் சொல்கிறார். உங்கள் விபத்தைத் தடுக்கிறார்.

உங்களுக்குக் கிடைத்த அனைத்துத் தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள். உங்கள் தோல்விக்குக் காரணமான அனைவரையும் மனதாரப் பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள்.

வெற்றியைத் தலைக்கு மேலே எடுத்துக் கொள்ள வேண்டாம். தோல்வியை மனதுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டாம். இரவும் பகலும் போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொள்வோம்!

manasu_2539886g.jpg

http://tamil.thehindu.com/general/education/மனசு-போல-வாழ்க்கை-25-தோல்விகளுக்கு-நன்றி/article7628788.ece?widget-art=four-all

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மனசு போல வாழ்க்கை 26: உங்களுக்கு நன்றி

vanakkam_2548389f.jpg

நன்றி கூறுதல் ஒரு நல்ல பழக்கம் என்று மட்டும் நினைத்துக் கொள்கிறோம். “தேங்க்ஸ்” என்பதை மேலோட்டமாக உதிர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அதற்கும் மேலாக, நன்றி பாராட்டுதல் எவ்வளவு பெரிய உளவியல் சிகிச்சை தெரியுமா?

நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பிறந்து, வளர்ந்து, படிப்பறிவு, வசதி பெற எவ்வளவு பேர் உதவியிருப்பார்கள் என்று பட்டியல் போடுங்கள். பெற்றெடுத்த அம்மா, அப்பா, வளர்த்த பாட்டி, தாத்தா, மருத்துவர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், காதல் கொண்டவர்கள், அக்கம்பக்கத்தினர், வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர், பயிற்சி கொடுத்தவர், திருமணம் முடிக்க உதவியவர், உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், தூர இருந்து ஆறுதலும், அறிவும், அன்பையும் தரும் எண்ணற்றவர்கள்...!

இவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க முடியாது. இவர்களை எத்தனை முறை நாம் நன்றியோடு நினைக்கிறோம்? மாறாக பல நேரங்களில் இவர்களில் பலரை குற்றம் சொல்கிறோம். எப்படிப்பட்ட நன்றியில்லாத செயல் பாருங்கள்!

பெத்த மனம் பித்து

குறிப்பாக பெற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள். அதிகமாக தூற்றப்படும் உறவுகள் இவர்கள் எனலாம். ஒரு தாய் படும் வலியும் வேதனையும் எந்த உறவும் பட முடியாது. ஆனாலும் தாயிடம் தான் ஆயிரம் குறைகள் கண்டுபிடிப்போம். நமக்கு அள்ளித் தரும் கைகளைத்தான் அதிகம் கடிக்கிறோம். ‘பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி எவ்வளவு செறிவானது என்று உட்கார்ந்து யோசித்தால் புரியும்.

“எனக்கு பெரிசா எதுவும் எங்கப்பா செய்யலை!” என்று பேசத் துவங்குவதற்கு முன் அப்பா இல்லை என்றால் இந்த உயிரே இல்லை என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு தகப்பனும் தனக்குத் தெரிந்ததைத் தன்னால் முடிந்ததைத் தன் பிள்ளைக்கு செய்கிறான். தந்தையின் பொருள் உதவி இல்லாமல் யாரும் பிழைத்திருக்க முடியாது.

அதே போல ஆசிரியர்கள். ஒரே நேரத்தில் 50 குழந்தைகளுக்குப் பெற்றோராகவும் போதகராகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் அறிவில் குறை இருக்கலாம். வழிமுறைகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் யாரும் ஒரு பைசா சம்பாதித்திருக்க முடியாது. உங்கள் விரல் பிடித்து முதல் எழுத்து எழுதிய ஆசிரியர், முதல் வேலை சொல்லித்தந்த ஆசிரியர் வரை எத்தனை ஆசிரியர்கள் நம்மைச் செதுக்கியிருப்பார்கள்? ஆசிரியர்களை கேலி செய்த அளவுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

மறைமுக உதவி

செய்கிற வேலை தப்பு என்று எடுத்துரைக்கிற போது வருகின்ற கோபம் இயல்பானதுதான். ஆனால் உங்கள் திறனை நுட்பமாக வடிவமைக்க, உங்கள் தொழிலில் நீங்கள் பிரகாசிக்க உங்கள் மேலதிகாரி தரும் நெருக்கடிகள் அனைத்தும் பாடங்கள்தானே? உங்களை உயரத்துக்கு இட்டுச் செல்லும் முதலாளிகள், மேலாளர்கள், மேலதிகாரிகள் என எத்தனை பேர்? அத்தனை பேரை நினைவுகூருகிறோமா?

பிரிவிலும் மறைவிலும் மட்டும் உணரும் வாழ்க்கைத் துணையின் அருமையை வாழ்கின்ற காலத்தில் உணர்ந்து நன்றி பாராட்டுபவர்கள் எத்தனை பேர்?

இவர்களைத் தவிர நம் வாழ்க்கையில் முகம் தெரியாத பலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு உதவியிருப்பார்கள். பிரசவ நேரத்தில் உதவுவார் ஆட்டோக்காரர். வேலை கிடைத்தும் ஒருவர் சேராததால் ‘வெயிட்டிங் லிஸ்ட்’டில் அந்த வேலை உங்களுக்கு கிடைக்கிறது. இப்படி நிறைய நடந்திருக்கும்.

அது மட்டுமா? உங்களை ஒவ்வொரு நாளும் பத்திரமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் நன்றி சொல்ல வேண்டுமே? ஒரு விபத்து நடக்க இருக்கையில் அதைத் தடுத்த ஓட்டுநருக்கு நன்றி சொல்வோம். ஆனால், தினம் ஒழுங்காக ஓட்டிச்சொல்லும் ஓட்டுநருக்கு சொல்வோமா?

பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். எங்கோ வளர்ந்த கீரை உங்கள் தட்டுக்கு வரும் வழியில் எத்தனை கைகளை கடந்து வந்திருக்கிறது? உங்கள் பத்து ரூபாயையும் மீறி எத்தனை பேரின் உழைப்பால் அது உங்களுக்கு கிடைக்கிறது? உங்கள் உணவுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றால் எத்தனை பேர் இருப்பார்கள் யோசியுங்கள்!

உங்கள் பட்டுப்புடவைக்காக உயிர் தந்த பட்டு பூச்சிகள் முதல் உங்களின் அழகு சாதனங்களைத் தயாரிப்பதற்காகச் செய்யப்படுகிற சோதனைக்காக உயிர் விட்ட எண்ணற்ற பறவைகள், மிருகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி சொல்லுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல மனிதர்களின் பங்களிப்பு உள்ளது. உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக பலர் வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள். அவர்களை ஒரு முறையாவது நினைக்கிறோமா?

இன்று இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய அனைவரையும் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்கும் மானசீகமாக நன்றி சொல்லுங்கள். இத்தனை நாள் நினைக்காததற்கு மன்னிப்பு கேளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள்.

நன்றி கூறுகையில் நீங்கள் கொடுத்தது எவ்வளவு, எடுத்தது எவ்வளவு என்று புரியும். இந்த உலகில் நீங்கள் மட்டுமே தனியாக எதையும் செய்து விட முடியாது என்று தெரியவரும். பணிவும் அன்பும் பெருகும். அகந்தை அழியும்.

கடைசியாக இத்தனை பேரை உங்கள் வாழ்க்கையில் இணையச் செய்த அந்த மகா சக்திக்கு நன்றி கூறுவீர்கள்.

பெருங்கடலில் சிறு துளி நாம். கடலை உணர்கையில் துளி தொலைந்து போகும். ஆழ்கடலாய் மனம் அமைதி கொள்ளும்.

http://tamil.thehindu.com/general/education/மனசு-போல-வாழ்க்கை-26-உங்களுக்கு-நன்றி/article7654795.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

மனசு போல வாழ்க்கை 27- மன்னிப்பே சுகத்தின் வழி!

relax_2556424f.jpg

உலகின் தீமைகள் ஒரு எதிர்மறை எண்ணத்தில் தான் தோன்றுகின்றன. அதற்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம். ஆனால் தீமைகள் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமற்ற சிந்தனையில் தான் உருவாகின்றன. ஒரு மனதில் வரும் ஒரே எண்ணம்தான் விதை. அது வெளியில் சொல்லாய்ச் செயலாய் மாறுகையில் பலரைப் பாதிக்கிறது. பின் அது சங்கிலித் தொடராகிச் சரித்திரமாய் மாறுகிறது. ஆரம்ப எண்ணம் மட்டும் மட்டுப்பட்டிருந்தால் பல எதிர்வினைகள் நிகழாமல் மட்டுப்பட்டிருக்கும்.

உறவுச் சிக்கல்கள்

வெறுப்பு, நிராகரிப்பு, அச்சம், சந்தேகம், ஆத்திரம், பொறாமை என ஏதோ ஒரு எதிர்மறை உணர்வுடன் தான் முதல் எண்ணம் பிறக்கிறது. உங்கள் உணர்வு எதிர்மறையாக இருந்தால் எண்ணம் நிச்சயம் எதிர்மறையாகத்தான் இருக்கும். கடுங்கோபத்திலோ அல்லது துக்கத்திலோ நேர்மறை எண்ணங்கள் வர முடியுமா என்ன?

ஒருவர் உணர்வும் சிந்தனையும் இன்னொருவரைத் தீவிரமாகப் பாதிக்கிறது. இதனால்தான் நம் உறவுகள் நம் உணர்வுகளைப் பல சமயம் தீர்மானிக்கின்றன. உறவுகளில் காயங்களும் விரிசல்களும் பிளவுகளும் நிகழ்வதற்கும் ஆயிரம் நிகழ்ச்சிகளைக் காரணமாகச் சொல்லலாம். ஆனால், அத்தனைக்கும் மூலக் காரணம் சில ஆதார எதிர்மறை உணர்வுகளும் எண்ணங்களும்தான்.

இன்றைய சந்ததியினரிடம் உறவுச் சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், உறவினர்கள், பணியிடத் தோழர்கள் என அனைவரிடமும் கருத்து வேறுபாடுகளும் ஒவ்வாமைகளும் பெருகி வருகின்றன.

காப்பது எம்பதி

குடும்ப வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது. மனிதர்களின் எண்ணிக்கையை விட அறைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. நாமே சுவர்களை எழுப்பிக்கொண்டு நாமே தனிமையில் வாடுவதாகப் புலம்புகிறோம். எல்லா மனிதர்களின் மேலும் புகார் பட்டியல் இருக்கிறது. நீங்கள் யாருடனும் நிம்மதியாய், அமைதியாய் இல்லை என்பது உண்மை என்றால் ஒன்று தான் நிஜம். நீங்கள் உங்களிடம் மனதளவில் நிம்மதியாய், அமைதியாய் இல்லை!

உறவுகள் யாரையும் தனியாகக் குற்றம் சொல்ல முடியாது. உங்களைப் போலவே உங்கள் எதிராளியும் அமைதி கெட்டுப்போய்ப் புகார் பட்டியலோடு சுற்றிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் பல நேரங்களில் நிஜம். யாரோடு பிரச்சினையோ அவரிடம் பேசினால் அவர் தரப்பு நியாயங்களைப் புட்டு புட்டு வைப்பார். யாராவது அதை முதலில் தனியாகக் கேட்டிருந்தால் உங்களைத் தான் குற்றவாளியாகப் பார்ப்பார்கள்.

உறவுகளைப் புரிந்து கொள்ளப் பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் திறன் வேண்டும். இதை ஆங்கிலத்தில் எம்பதி என்பார்கள். அலோபதி, ஹோமியோபதியை விட வெங்கடாஜலபதிக்கு அடுத்து உங்கள் உறவைக் காப்பது இந்த எம்பதியாகத் தான் இருக்கும்!

உறவுச் சிக்கல் வரும் நேரத்தில் அடுத்தவர் நிலையில் நம்மை நிறுத்திப் பார்ப்பது தான் புரிதலை ஏற்படுத்தும். இது சுலபமல்ல. ஆனால் சற்று முயன்றால் சாத்தியப்படும்.

அதற்கு முதலில் சில பாலபாடங்கள் அவசியம்.

பார்வைக் கோணம்

எந்த விஷயத்திலும் ஒருவர் மட்டும் சரி, மற்றொருவர் தான் தவறு என்ற நிலையிலிருந்து விலகி வர வேண்டும். இருவரும் சரியாகவோ அல்லது இருவரும் தவறாகவோ கூட இருக்கலாம். அதனால் குற்றத்தை யார் மீது திணிக்கலாம் என்ற பார்வையை விடுத்து நடுநிலைக்கு வாருங்கள்.

எங்கிருந்து பார்க்கிறோமோ அங்கிருந்து உண்மைகள் மாறும். நமக்குப் பகத் சிங் விடுதலை வீரர். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தீவிரவாதி. அதே போல நாம் தீவிரவாதி என்று கருதுபவர்களை வேறுபலர் விடுதலை வீரர்களாகக் கொண்டாடுவார்கள். இது பார்வைக் கோணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

பிறரைக் குற்றம் சொல்லுமுன் அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்று கற்பனை செய்து பார்ப்பது இந்த எம்பதியை வளர்க்கும்.

லஞ்சம் பற்றிப் புலம்புபவர்கள் ‘அவ்வளவு பெரும் பணம் உங்களைத் தேடி வந்தால் கண்டிப்பாக மாட்டேன் என்று சொல்வீர்களா?’ என்று யோசியுங்கள். அரசு இலவசங்கள் பற்றிக் குறை சொல்பவர்கள், ‘ உங்கள் ரேஷன் கார்டில் இலவசமாகக் கார் கிடைத்தால் என்ன செய்வீர்கள்’ என்று யோசியுங்கள். ‘அந்த ஆள் கேரக்டர் சரியில்லை’ என்று குற்றம் சொல்லுமுன் அந்த வாய்ப்பும் வசதியும் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள்.

இது பிறர் குற்றங்களை நியாயப்படுத்தும் செயலில்லை. பிறர் சூழலைப் புரிந்து கொள்ளும் முயற்சி. அவ்வளவு தான்.

எல்லா மனிதர்களும் தங்களுக்கு அந்த நேரத்தில் சரி என்று படும் விஷயங்களைச் செய்கிறார்கள். அந்த நேர அறிவுக்குத் தக்க முடிவுகள் எடுக்கிறார்கள்.

மன்னிப்பு

பிறர் செய்த தீங்கால் மனதில் வரும் வன்ம எண்ணம் கூட மிகவும் தீமையானது என்று சொல்கிறார் புத்த மகான்.

வெறுப்பு அன்பை வளர்க்காது. பழி உறவைச் சரி செய்யாது. ஒன்று மட்டும் தான் உறவைச் சுகப்படுத்தும் வழி. அது மன்னிப்பு.

மன்னிப்பவர்கள் திடமானவர்கள். அன்பு மயமானவர்கள். அறிவாளிகள். வெறுப்பும் கோபமும் எதிராளியைவிட தன்னை அதிகமாக அழிக்கும் என்று உணர்ந்தவர்கள். சிக்கல் சங்கிலியைத் தங்கள் பக்கத்திலிருந்து அறுக்கத் தெரிந்தவர்கள்.

மன்னிப்பவர்கள் தாழ்ந்து போவதில்லை. மாறாகப் பெரும் ஆன்மப் பலம் பெறுகிறார்கள். உறவுகளில் குற்றம் பார்த்தால் நீங்கள் தனிமைப்பட்டுப் போவீர்கள். எதிராளியின் பலவீனத்தை உணர்ந்து, அந்த நிலையில் தன்னை வைத்துப் பார்த்து, மன்னித்து விடும்போது மீண்டும் உறவு பலப்படும்.

மன்னிக்க முடியாத தவறு என்று ஒன்று இல்லை. அதை உங்கள் எதிராளி மட்டும் செய்யவில்லை. அதே போல நீங்களும் தவறே செய்யாத பிறவி அல்ல. பிறர் தவறை மன்னிக்கையில் நீங்கள் உங்கள் தவறுகளுக்கு உங்களை மன்னிக்கிறீர்கள். அன்பும், மன்னிப்பும், கருணையும் தான் இந்தப் பூமியை வாழ்விக்க வல்ல சக்திகள்.

‘என் வாழ்க்கையில் என்னைக் காயப்படுத்திய அனைவரையும் மனமாற மன்னிக்கிறேன்!’ என்ற அஃபர்மேஷன் உங்களுக்கு அமைதி தரும். பல உடல் உபாதைகளிலிருந்தும் காப்பாற்றும்

http://tamil.thehindu.com/general/education/மனசு-போல-வாழ்க்கை-27-மன்னிப்பே-சுகத்தின்-வழி/article7677271.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

மனசு போல வாழ்க்கை 28: காட்சிகள் காட்டும் பிம்பங்கள்

pic_2565181f.jpg

ஒரு முறை கிடைக்கும் தகவலை வைத்துக்கொண்டே “இது இப்படித் தான்!” என்று முடிவு கட்டுவது மனதின் முக்கியமான தன்மை. ஒரே முறை ஒரு ஓட்டலில் சாப்பாடு சரியில்லை என்றால் அந்த ஓட்டல் சரியில்லை என்று முடிவு கட்டும். முதல் முறை பார்க்கும்போது சரியாக முகம் கொடுத்துப் பேசாத உறவினரை மண்டைக் கனம் பிடிச்சவன் என்று எண்ண வைக்கும். முதல் முறையாகத் தோன்றும் அபிப்பிராயத்தை எப்படியாவது தக்க வைக்கத் துடிப்பதும் மனதின் இயல்புதான்.

நாடு, மதம், இனம், மொழி, ஊர், தொழில் இப்படி எல்லாவற்றைப் பற்றியும் கருத்து வைத்திருக்கிறோம். இந்தக் கருத்தைப் பெரும்பாலும் பத்திரமாக வளர்த்துவருகிறோம்.

தோற்றத்தின் உள்ளே..

டி.வியில் அறிவுசார்ந்த நிகழ்ச்சிகளை நடத்து பவரைப் பெரிய அறிவாளியாக நினைக்கிறோம். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் பின்னால் ஒருவர் சொல்ல ‘டாக் பேக்கில்’ உள்வாங்கி ஏற்றஇறக்கமாக பேசுகிறார் என்பதையும் தெரிந்துகொண்டால், அவ்வாறு நினைப்போமா? சினிமாவில் கதாநாயக நடிகர்களைப் பெரிய வீரர்கள் என்று நினைப்போம். அவர்கள் தங்கள் படம் வெளிவரவும் அதை ஓடவைக்கவும் எந்த அளவுக்கும் பணிந்துபோகிறார்கள் என்ற செய்திகளும் வரத்தானே செய்கின்றன.

அதற்குப் பிறகும் அவர்களை மாவீரர்கள் என கருதுவீர்களா? டாக்டர் என்றாலே அவர் எல்லா வியாதிகளுக்கும் தீர்வு தெரிந்தவர் என்று நினைக்கிறோம். அவரது மருத்துவத் துறையைத் தவிர மற்ற மருத்துவத் துறைகளில் நிபுணர் அல்ல என்று ஒரு மறுபக்கம் இருக்கிறதே. அதை நம்ப மறுக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்.

ஏட்டுப்படிப்பு அதிகமாக இல்லாதவரை அறிவுஜீவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அதேபோல நிறைய பட்டங்கள் படித்தவர் என்பதாலே அவரை அறிவுஜீவி என்று நம்புகிறோம். ஏராளமான எழுத்தாளர்கள் பெரிய கல்வித் தகுதிகள் இல்லாதவர்கள். முனைவர் பட்டம் பெற்ற பலருக்கு பாடப்புத்தகமும், வாரப்பத்திரிகையும் தவிர மற்ற வாசிப்பு இல்லை இருந்தும் படித்தவர்கள் பற்றிய அபிப்பிராயத்தை அப்படியேதான் வைத்திருப்போம்.

கொட்டுமா, உதிருமா?

அதே போல காசுக்காக எதையும் செய்பவர்கள் வியாபாரிகள் என்று நினைக்கிறோம். விளம்பரம் இல்லாமல் சேவை புரியும் நிறைய வியாபாரிகள் இருக்கிறார்கள். மிக நாணயமாக, மக்களுக்குத் தீங்கு வரக்கூடாது என்று செயல்படுகிற பல வியாபாரிகள் இருக்கிறார்கள். சேவை செய்பவர்களில் பலர் மிகுந்த வியாபார நோக்குடனும் மக்கள் விரோதமாகச் செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி நம் கற்பிதங்களுக்கு நேர்மாறாகப் பலர் பல திறமைகளுடனும் ஆளுமைகளுடனும் இருக்கிறார்கள்.

முரடானது காவல்துறை. அதன் அதிகாரியாக இருந்த திலகவதி ஐ.பி.எஸ் மென்மையாக எழுதுகிறார். அதேபோல இறையன்பு ஐ.ஏ.எஸ். ஜென் துறவி போலத் தத்துவம் பேசுகிறார். அரசியல்வாதியான வைகோ வரலாற்றுப் பேராசிரியர்களுக்குச் சவால் விடும் வகையில் பேசுகிறார். என் நண்பர் டாக்டர் விஜயராகவன் அற்புதமாகத் தமிழில் செய்யுள் இயற்றுவார். அதை விட அபாரமான நகைச்சுவைத் திறனும் அவருக்கு உண்டு. புற்று நோய்க்குச் சிகிச்சை அளித்தாலும் நம்பிக்கையும் நகைச்சுவையும் குறையாமல் செயல்படுவார்.

“முடி கொட்டுமா டாக்டர்?” என்பார்கள். “ தேள்தான் கொட்டும். முடி உதிரும்!” என்று இலக்கணமும் நகைச்சுவையும் பேசி வைத்தியம் பார்ப்பார். அதே போல, சிவ ஆலயங்களைச் சுத்தம் செய்யும் உழவாரப் பணியில் ஈடுபடும் ஐ.டி. பணியாளர்களை எனக்குத் தெரியும். தங்கள் சொற்பமான சம்பளத்தின் பெரும்பங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளுக்குச் செலவு செய்யும் தம்பதியை எனக்குத் தெரியும்.

அதே போல, கார்ப்பரேட் நிறுவனங்கள் போலச் செயல்படும் கட்சிகளும் மடங்களும் மதச் சார்பு நிறுவனங்கள் உண்டு. அரசியல் தலைவரை மிஞ்சுகிற கவர்ச்சி மிக்க சாமியார்கள் இருக்கிறார்கள். துறவிகளாக வாழும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

வேண்டாம் பிம்பங்கள்

ஆனாலும் நம் மனம் சில அபிப்பிராயங்களை அப்படியே தக்க வைக்கத் துடிக்கிறது. “இவர்கள் இப்படித்தான்” எனும் அபிப்பிராயமே நமது சிந்தனையைக் கட்டிவைக்கும் ஒரு சங்கிலி. அதை உடைத்துவிட்டுச் சுதந்திரமாகப் பார்க்கும் பொழுது உலகம் இன்னமும் நிஜமாகவும் தெளிவாகவும் புரியும்.

எனக்குத் தமிழில் எழுத வராது. சில “ஆவி எழுத்தாளர்களை” பணித்துத் தான் கட்டுரைகளைச் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளுகிறேன் என்று ஒரு பேராசிரியர் பேசிவந்தார். ஆவிக்குத் தரும் அங்கீகாரத்தை இந்தப் பாவிக்குத் தர அவர் மனம் மறுக்கப் பல காரணங்கள். “ நீங்கள் சொல்வதை நிருபர்கள் எழுதுவார்கள் அல்லவா?” என்று பல முறை என் தொழில் முறை நண்பர்கள் கேட்பார்கள். “எழுத ஏது நேரம்?” என்பார்கள். “பேச்சு முழுதும் ஆங்கிலத்தில், எழுத்து மட்டும் எப்படி தமிழில்?” என்று லாஜிக்கலாக மடக்குவார்கள் சிலர்.

இவர்களின் பிரச்சினை நானல்ல. அவர்கள் என்னைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் தான்!

நான் கோபப்படுகையில் என் நண்பர்கள், “நீங்களே கோபப்படலாமா?” என்று என் உளவியல் பின்னணியை இணைத்துக் கருத்து சொல்வார்கள். உளவியல் படித்தவர்கள் எல்லாம் மனதை வென்ற மகான்கள் அல்ல என்று சொல்வேன். படைப்புகளை வைத்துப் படைப்பாளி பற்றிய அபிப்பிராயம் வளர்த்தல் ஆபத்தானவை.

இப்படித்தான் நடிகர்களிடம் நாட்டைக் கொடுக்கிறோம். அதிகம் தெரியாத சாமியார் காலில் குடும்பமாகச் சென்று காலில் விழுகிறோம். நன்கு பேசுகிறார் என்றால் உடனே அறிவுஜீவியாக உயர்த்திவிடுகிறோம். கூட்டத்தை வைத்துப் பிரபல்யத்தைக் கணக்கிடுகிறோம்.

இவை மனதின் செயல்பாடுகள் என்பதை மட்டும் புரிந்துகொள்வோம். வண்ணம் பூசாத கண்ணாடி கொண்டு வாழ்க்கையைப் பார்ப்போம். அதுதான் அழகு. அது தான் ஆரோக்கியம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

http://tamil.thehindu.com/general/education/மனசு-போல-வாழ்க்கை-28-காட்சிகள்-காட்டும்-பிம்பங்கள்/article7701565.ece

Link to comment
Share on other sites

மனசு போல வாழ்க்கை 29: கோபத்தைக் கரைக்கலாமே?

buddha_2573746f.jpg
 

கோபம் ஒரு பலவீனமான உணர்ச்சி. இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம். எரிச்சல், ஆத்திரம், கொந்தளிப்பு என எந்த உருவத்தில் வந்தாலும் கோபம் ஒரு வலிமையில்லாதவர்களின் ஆயுதம். ஆனால், நாம் கோபத்தை வீரமாகப் பார்க்க பழகியிருக்கிறோம்.

நமது ஆக்ஷன் ஹூரோக்கள் அனைவரும் கோபப்படுவார்கள். அதனால் கோபத்தை நாயக அடையாள மாக பார்க்க ஆரம்பித்தோம். வீட்டிலும் கோபப்படும் பெற்றோரைக் கண்டு அதிகம் பயந்தோம். கோபப்பட்டால்தான் காரியம் ஆகும் என்று அர்த்தப்படுத்திக்கொண்டோம். மீட்டிங்கில் பாஸ் கோபப்பட்டு கடிந்து கொண்டால் அதுதான் அதிகார தோரணை என்று வியந்தோம். போட்டியும் பொறாமையும் இயல்பு என்று ஆகிவிட்ட புது உலக நியதியில் கோபத்தை சகஜமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.

பெண் கோபம்

கோபத்தில் கொலை செய்வதும் தற்கொலை செய்வதும் செய்திகளாக வரும் போது மரத்துப்போய் வேறு சிந்தனையில்லாமல் அடுத்த பக்கம் திருப்புகிறோம். “இந்த வயசிலேயே என்ன கோபம் தெரியுமா என் பாப்பாவுக்கு?” என்று பெருமை பேசும் தாய் விரைவிலேயே அந்த குழந்தைக்குத்தான் அடிமை ஆவதை உணர ஆரம்பிக்கிறாள். “அவன் கேட்டது கிடைக்கலேன்னா வீட்டை இரண்டு பண்ணிடுவான். அவ்வளவு கோபம். அவ்வளவு பிடிவாதம்!” என்று பெற்றோர்கள் சொல்லக் கேட்பது சாதாரணமாகிவிட்டது.

என்னிடம் மன சிகிச்சைக்கு வரும் பலர் கோபத்தில் செல்போனை வீசி உடைப்பதாக சொல்கிறார்கள். கோபத்தில் நம்மிடம் சிக்கி சீரழிவது பொருட்கள் மட்டுமல்ல, மனிதர்களும் தான்.

கோபத்தின் வெளிப்பாடுகள் மாறுகின்றன. கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு அழகாய் சண்டையை ஆரம்பிப்பதில் பெண்கள் கில்லாடிகள். ஆண்கள் இந்த விஷயத்தில் புத்திசாலித்தனம் குறைந்தவர்கள். பேச்சில் ஜெயிக்க முடியாததால் இயலாமையை மறைக்க கையை ஓங்குவான். உள்ளத்தின் வன்முறையை உடல் வன் முறையாக மாற்றி விடுகிறார்கள்.

கோபத்தின் நோய்

உடலின் உள்ளே காலகாலமாய் அழுத்தி வைக்கப்படும் கோபம்தான் புற்று நோயாக மாறுகிறது என்பது லூயிஸ் ஹேயின் கூற்று. குறிப்பாக பெண்களின் மார்பக, கர்ப்பப்பை புற்று நோய்கள் எல்லாம் ஆண்கள் மேலுள்ள தீராத கோபத்தில் ஏற்படுபவை என்கிறார். தன் பெண்மைச் சின்னங்களை அழிப்பதை தன் வாழ்வில் தன்னைக் காயப்படுத்திய ஆண் அல்லது ஆண்களுக்கு தரும் தண்டனையாக உள் மனதில் அவள் பாவிக்கிறாள் என்று லூயிஸ் ஹே சொல்வது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.

கோபம் என்பது பலவீனம் என்பதை உணரும் போதே பாதி வேகம் குறைகிறது. இடம் பார்த்து வரும் கோபம் வெற்றுக் கோபம் தானே? ஒரு பக்கத்து கோபத்தை இன்னொரு பக்கத்தில் காண்பிப்பது என்ன வீரம்?

பின் “ரௌத்திரம் பழகு” என்றானே மகாகவி பாரதி? அவன் சொல்ல விரும்பியது இதுதான்: “சமூக அநீதிகளைக் கண்டால் தைரியமாகத் தட்டிக்கேள்!” கண்டவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவது ரௌத்திரம் அல்ல. சமூகக் கொடுமைகளை எதிர்க்கையில்கூட கண்ணியத்தையும் நயத்தையும் கையாள்பவர்கள் ஞானிகள். நம்மிடையே வாழும் நல்லகண்ணு போல.

கருத்தில் எதிர்நிலையில் இருந்தாலும், நடப்பவைக்கு சம்மதம் இல்லாவிட்டாலும், அதற்கு எதிராக போராடினாலும் அதை பக்குவமாகக் கையாளத் தெரிந்தவர்கள்தான் நிஜமான வெற்றியாளர்கள். காந்தி மகானுக்கு கடைசிவரை ஆங்கிலேயர்களிடம் பகையில்லை. அவர்களிடம் பேசுகையிலும் நகைச் சுவை உணர்வுக்கு குறைவில்லை.

உறவுகளில் வரும் கோபம், எதிர்பார்ப்புகள் பொய்ப்பதினால் வருபவை. சுய நலமான கோபம். “இதை உன்னை செய்ய வைக்க என்னால் முடியவில்லையே?” என்பதுதான் கரு. எல்லாவற்றையும், எல்லாரையும் தன் கட்டுக்குள் கொண்டு வர நினைப்பவர்கள் அதிகம் கோபப்படுவார்கள். வாழ்க்கையை அதன் இயல்பில் ஏற்று வாழ்பவர்கள் கோபத்தைக் கரைத்துக்கொள்கிறார்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் மேலைநாடுகளில் பிரபலமாகி வருகின்றன. ஒரு உள சிகிச்சையாளன் என்பதை விட கோபத்தால் வெல்ல நினைப்பவனின் அனுபவரீதியான ஆலோசனைகள் இதோ:

கோபம் இயலாமையின் வடிவம் என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொள்ளுங்கள். முடிந்ததைச் செய்யலாம். முடியாததை ஏற்றுக்கொள்ளலாம். இயலாமை உணர்வை நேரடியாக எதிர்கொள்ளும் போது கோபம் கரைந்து போகும்.

கோபம் எனும் வெடிகுண்டு

கோபம் நமக்குள் நாமே பொத்தி வைத்திருக்கும் ரகசிய வெடிகுண்டு. தூர ( யார் மீதும் படாது) எறிந்துவிடுதல்தான் உடல் நலத்துக்கு நல்லது. கோபத்தினால் ஏற்படும் வியாதிகளின் பட்டியல் மிக நீண்டது.

கோபம் உறவுகளைச் சீர்குலைக்கும். எவ்வளவு பெரிய ஒழுக்கசீலராக இருந்தாலும் எல்லா நேரமும் பிறாண்டிக் கொண்டிருப்பவரை சொந்த குழந்தைகளே அண்ட பயப்படுவார்கள். சொல்வதைக் கோபப்படாமல் சொல்லத் தெரிந்துகொள்ளுதல் மனிதர்களைச் சம்பாதித்துக் கொடுக்கும்.

எல்லாவற்றையும் மாற்ற நினைப்பதை விட எல்லாவற்றையும் ஏற்க நினைப்பது தான் மனநலத்தை பேணும். உங்கள் வாழ்க்கையை, உங்கள் உறவுகளை, உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். கோபம் இடம் தெரியாமல் காணாமல் போகும்.

“கோபத்தால் என் உடலில் ஏற்பட் டுள்ள அனைத்து பாதிப்புகளையும் வெளியேற்றுகிறேன்” என்று அஃபர்மேஷன் கூறுங்கள். உங்களை முதலில் மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாவிதமான கோபங்களும் காலத்தால் அடித்துச் செல்லப்படுபவை என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஆன்மிகப் பயணத்தில் கோபத்தை முழுமையாகக் கரைத்தல் ஒரு முக்கியமான மைல் கல். அதனால்தான் பேருண்மையை கண்ட ஞானிகள் தவக்கோலத்திலும் ஒரு புன்னகை சிந்திக்கொண்டிருப்பார்கள்.

புத்தரின் புன்னகையை விட ஒரு செறிவான புன்னகை எங்காவது உண்டோ?

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

http://tamil.thehindu.com/general/education/மனசு-போல-வாழ்க்கை-29-கோபத்தைக்-கரைக்கலாமே/article7729960.ece?widget-art=four-rel

 

 

Link to comment
Share on other sites

மனசு போல வாழ்க்கை 30: அன்பும் ஆக்கிரமிப்பு உணர்வும்

manasu_2582871f.jpg
 

நாம் அன்பு செலுத்தும் மனிதர்கள் மீதே தொடர்ந்து வன்முறை நிகழ்த்திக் கொண்டிருப்பது வாழ்க்கையின் வினோதங்களில் ஒன்று.

“தெரிந்தே கெடுப்பது பகையாகும்; தெரியாமல் கெடுப்பது உறவாகும்!” என்ற கண்ணதாசன் வரிகள் இதை மிகவும் எளிமையாகச் சொல்லிவிடுகின்றன

நல்ல உள்நோக்கம்

நாம் நல்லது செய்வதாக நினைத்துச் செய்யும் பல விஷயங்களால் பாதகம் நிகழ்ந்திருக்கின்றன. “உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்” என்று ஆரம்பித்து பெற்றோர் செய்த பல காரியங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவது இயற்கை.

“பொண்ணு கம்ப்யூட்டர்தான் படிக்க ஆசைப்பட்டா. ஐ.டி கம்பெனிக்கு வேலைக்குப் போனால் என்ன செய்யறாங்கன்னுதான் சினிமாலயும் பத்திரிகையிலயும் காட்டறாங்களே. அதான் ஒரே மனசா வேண்டாம்னு சொல்லிட்டேன். வேற எந்த வேலைக்கு வேணா போம்மான்னுட்டேன்” என்று பேசிக் கொண்டிருந்த தகப்பனைப் பார்த்தேன்.

தன் மகள் மீது வைத்துள்ள மிதமிஞ்சிய அன்பினாலும் பாதுகாப்பு உணர்வாலும், தனக்குக் கிடைத்த தகவல் அறிவை வைத்துக்கொண்டு, மகள் வாழ்க்கைக்கு உதவும் என்று தான் இந்த முடிவை எடுக்கிறார். அவரின் உள் நோக்கம் உன்னதமானது. ஆனால் பாதிப்பு மகளுக்கு நிகழ்கிறது.

அறியாமையாலும் தவறான தகவலாலும் எடுக்கப்படும் பல முடிவுகளுக்குப் பின்னும் ஒரு நல்ல உள் நோக்கம் கண்டிப்பாக இருக்கும்.

ஆக்கிரமிப்பு உணர்வு

தீவிரவாதியின் செயல் தீமை செய்கிறது. ஆனால் மீட்சிக்கு அதுதான் வழி என்று நம்புகிறான் அவன். அதுதான் அவனுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. தன் உயிரையே தியாகம் செய்கிறான். உள் நோக்கம் சிறந்தது. ஆனால் செயல் தீங்கானது.

குழந்தையை அடித்து விளாசும் ஒரு தாய் ஒழுக்கத்துடன் வளர அடி அவசியம் என நம்புகிறாள். உள்நோக்கம் சிறந்தது. ஆனால் உடலாலும் மனதாலும் காயப்படும் அந்தக் குழந்தையின் வலி அந்த உள் நோக்கத்தால் மாறிவிடாது. வளர்கையில் அந்த குழந்தை அதை எப்படி எடுத்துக் கொள்ளும் எனவும் தீர்மானிக்க முடியாது.

நாம் யாரை அதிகம் துன்பப்படுத்தி யிருக்கிறோம்? தாயை. காதல் வசப்பட்டவரை. வாழ்க்கைத்துணையை. குழந்தையை. உற்ற தோழரை. இவர்களைத் தான். அளவற்ற அன்பு ஆக்கிரமிப்பு உணர்வைத் தருகிறது. என் காதலி எனக்கு மட்டும் தான் என்ற ஆக்கிரமிப்பு வந்தவுடன், “அவனுடன் அதிகம் பேசாதே” என்று தடை போட வைக்கிறது. பொறாமை கொள்ள வைக்கிறது.

விலங்கின் நியாயம்

நாம் நினைப்பது கிடைக்காதபோது சந்தேகப்பட வைக்கிறது. கோபம் வருகையில் தகாத வார்த்தைகள் பேச வைக்கிறது. என்னுடன் பேசாதே என்று தள்ளிப்போக வைக்கிறது. அன்பை வைத்துக் கொண்டு வெறுப்பைக் காட்ட வைக்கிறது. பொய் பேசத் தூண்டுகிறது. உறவுகளில் நாடகம் துவங்குகிறது.

“இவனுக்கு எவ்வளவு செய்தேன் நன்றி இருக்கா?” என்ற கணக்கு பார்ப்பது இதன் தொடர்ச்சியில்தான். “உங்களுக்கு மனசாட்சியே கிடையாது” என்று நீதிபதியாகத் தீர்ப்பு கூற வைக்கும். “ என் எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது” என்று போலி தத்துவம் பேச வைக்கும்.

தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பயத்தால் நம்மைத் தாக்கும் விலங்கின் நியாயம் புரிந்தாலும் அது விளைவை எள்ளளவும் மாற்ற முடியாது. வாழ்க்கையின் எல்லாச் சம்பவங்களுக்கும் இது பொருந்தும்.

இதன் நீதி: “உங்கள் நெருங்கிய உறவுகளுக்கு நீங்கள் இழைக்கும் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் உங்கள் உள் நோக்கத்தைக் காரணமாகக் காட்டி நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது!”

பல வருஷ பழங்கதை

எவ்வளவுதான் அன்பு இருந்தாலும் அவரிடம் ஆக்கிரமிப்பு உணர்வு இருந்தால் அது கூண்டுக்குள் சிக்கியிருக்கும் உணர்வைத் தரும். எவ்வளவு நன்மைகள் செய்தாலும் நன்மை செய்தவர் சுடு சொற்கள் பேசினால் அது காயங்களைத்தான் தரும். மிகவும் சரியான நோக்கத்துக்காகத்தான் பிடிவாதம் பிடிக்கிறார் என்றபோதும் அந்த பிடிவாதம் ஒரு இறுக்கத்தைத்தான் தரும்.

“ நான் சென்னை வந்த போது காசில்லை. எப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா? உனக்கு என் கஷ்டம் ஏதாவது உண்டா? படிக்கறத தவிர என்ன வேலை..?” என்று கண்ணீர் மல்கப் பேசிக் கொண்டிருந்த அப்பாவின் பேச்சை இடைமறித்துச் சீரியஸாகக் கேட்டான் மகன்: “பீட்சாவை ஆர்டர் பண்றோமா? இல்லப் போய்ச் சாபிடறோமா?”

நொந்து போய் என்னிடம் மீண்டும் அந்தச் சம்பவத்தை வாழ்ந்து பார்த்து மனம் உடைந்து சொன்னார் அவர். “என் அக்கறையே அவனுக்குப் புரியலை. நீங்க தான் பேசிப் புரிய வைக்கணும்!”

மகன் பளிச்சென்று பதில் சொன்னான்: “இந்தக் கதையைப் பத்து வருஷமா கேக்கறேன். புதுசா கேக்கற மாதிரி எப்படிக் கேக்க முடியும்? வெளிய போலாம்னு சொல்லிப் பேச ஆரம்பிச்சு ஒன்பது மணி ஆச்சு. ஒரே பசி. அதான் குறுக்கே பேசிக் கேட்டேன்!”

நம் நோக்கங்கள் நம் செயல்களை நியாயப்படுத்தலாம். ஆனால் செயல்களின் விளைவுகளை அவை மாற்றுவதில்லை.

எவ்வளவு நியாயமான காரணத்துக்குப் போட்டு உடைத்தாலும் கண்ணாடிக் கிண்ணம் உடையாமல் இருக்குமா என்ன?

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

http://tamil.thehindu.com/general/education/மனசு-போல-வாழ்க்கை-30-அன்பும்-ஆக்கிரமிப்பு-உணர்வும்/article7756614.ece

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மனசு போல வாழ்க்கை 31: பாராட்டு எனும் மூலதனம்

 

http://www.yarl.com/forum3/topic/164865-மனசு-போல-வாழ்க்கை-31-பாராட்டு-எனும்-மூலதனம்/

Link to comment
Share on other sites

மனசு போல வாழ்க்கை 32: அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே!

amaidhi_2607420f.jpg
 

இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது.

பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம் முடிந்து மற்றுமொரு பகல் புதிதாய்ப் பிறப்பதற்கு இந்த மோனநிலை நமக்குத் தேவைப்படுகிறது.

நல்ல தூக்கம் இல்லாதபோது உடலும் மனமும் சீர்கெட்டுவிடுகின்றன. இதைக் கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் தெரிய வேண்டாம். மூதாதையரின் பாரம்பரிய அறிவே போதும்.

போலிப் பகலாகும் இரவு

இன்றைய தலைமுறையினர் படும் பல அவதிகளுக்குக் காரணம் தூக்கமின்மைதான். வேகமான வாழ்க்கை இரவை விழுங்கிவிட்டது. பகல் முடிந்தும் இரவை ஒரு போலிப் பகலாக உருவாக்குகிறது.

ஐந்து மணிக்கு வேலையை முடித்து ஆறு மணிக்கு வீடு வந்தால் குடும்பத்துடன் உறவாடி உணவருந்தி இரவு பத்துக்குத் தூங்கச்சென்றால் மறு நாள் பளிச்சென்று விடியும்.

இன்று வேலையும் சாலையின் நெரிசலும் எட்டு மணிக்கு முன்பாக வீடு திரும்ப விடுவதில்லை. ஒரு காபி குடித்துவிட்டு டி.வி. சீரியல்களில் உட்கார்ந்தால் பத்து மணிக்குத்தான் தாமதமான, ஆனால் கனமான சாப்பாடு. பிறகு வாட்ஸ் அப் செய்திகளும் கிரிக்கெட்டும் பார்க்கிறோம். ஆடல், பாடல், கேம் ஷோக்களைப் பார்த்து அயர்ந்துபோகிறோம். அதற்குப் பிறகு படுப்பதற்கு செல்கையில் நடுஇரவு ஆகிவிடுகிறது.

படுக்கையில்தான் எல்லா வலிகளும் பெரிதாகத் தெரிகின்றன. சாலை வெளிச்சங்களும் இரைச்சல்களும், அண்டை வீடுகளின் டி.வி சத்தங்களும் தூங்க விடாது. அப்போதுதான் பாக்கி உள்ள அனைத்து வேலைகளையும் மனம் பட்டியல் போடும். கண்ணை மூடியபின் வரும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் செய்தியையும் பார்க்கத் தூண்டும். வெட்டிச் செய்தி என்று தெரிந்த பின்னும் பதில் போட வைக்கும். பின்பு ஃபேஸ்புக் போகத் தூண்டும். ஃப்ரிட்ஜில் தண்ணீர் குடித்துவிட்டு வருகையில் ‘தூக்கம்தான் வரவில்லையே? ஏதாவது வேலை பார்த்தால் என்ன?” என்று லேப்டாபை எடுக்க வைக்கும். பின் அயர்ச்சியில் படுக்கையில் விழும்போது ‘சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமே!’ என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும்.

சிந்தனைகளைக் கழட்டுங்கள்

வாழும் முறையில் மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ள முடியாது. இதற்கு என்ன செய்யலாம்?

என் பரிந்துரைகள் இதோ:

ஏ.ஆர். ரஹ்மான் மாதிரியான பிஸியான பிரமுகர்களில் ஒருவராக நீங்கள் இல்லாதவரை பகல் பொழுது வேலைக்கும் இரவுப் பொழுது ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் என்பதை முதலில் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்து செருப்பைக் கழட்டும்போது உங்கள் வேலை பற்றிய சிந்தனைகளையும் கழட்டி வைக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே எச்சரிக்கை கொடுத்துக் கொள்ளுங்கள்.

தாமதமானால் டீ, காபிக்குப் பதிலாக நேராக உணவுக்குச் செல்லுங்கள். நல்ல குளியலுக்கு பிறகு உண்ணும் மென்மையான இரவுச் சாப்பாடு உங்களுக்கு இளைப்பாறுதல் தரும். டி.வியைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மன நலம் காக்கப்படும். வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். அவசியச் செய்திகள், அழைப்புகள் முடிந்தபின் கைபேசியை தள்ளி வையுங்கள்.

தூக்கத்துக்குத் தயார் செய்தல் முக்கியம். படுத்த பிறகு குடும்பம், அலுவலகம், அக்கம் பக்கம் என செய்திகள் பகிர்வது உங்களை நல்ல உணர்வுகளுடன் தூங்க வைக்காது. குறிப்பாக, தீராத பிரச்சினைகளை விவாதிக்க வேண்டாம். இயலாமை, எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வுகள் சிந்தனைகளைப் பெருக்கி மனதை அமைதி இழக்கச் செய்யும். மனதைக் காலி செய்து, கழுவித் துடைத்து தூக்கத்துக்குத் தயார் செய்தல் அவசியம். எந்த சிந்தனையும் இல்லாது வரும் அந்த உறக்கம் அவ்வளவு நிர்மலமாக இருக்கும்!

கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை நல்லது. அல்லது நல்ல இசை போதும். நன்றி கூறுதல், தியானம், அஃபர்மேஷன் என எது உங்கள் மனதுக்குப் பிடித்ததோ அதைச் செய்து மற்ற சிந்தனைகளை ஓட்டிவிடுங்கள். நீங்கள் எந்த நேரம் தூங்க ஆரம்பித்தீர்கள் என்று தெரியாத அளவுக்கு உறக்கத்துக்குள்ளே நழுவியிருப்பீர்கள்.

நல்ல தூக்கம் மறு நாள் எழும்போது ஒரு சாதனை உணர்வைத் தரும். எழுந்தவுடன் பசியும் புத்துணர்ச்சியும் வர வேண்டும். மனித அத்துமீறல்கள் இல்லாத வனப்பகுதிகளில் வாழும் விலங்குகளில் அவற்றைப் பார்க்கலாம்.

அலாரத்தைப் பார்த்து அலறி எழுந்து, அவசரத்தில், வேகத்தில், கோபத்தில் ஓடும் அட்ரினல் வாழ்க்கை முறை உங்களை விரைவில் வயோதிகத்தில் தள்ளிவிடும். எதிர்மறை எண்ணங்களை எளிதில் கொண்டு வந்துவிடும். வேகம் விவேகம் அல்ல என்பது சாலைகளுக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும்தான்.

வேகத்தை மட்டுப்படுத்த நம் இரவுகளை சமன்படுத்துவோம். ஆறு முதல் எட்டு மணி நேர அமைதியான இரவுத்தூக்கம் அவசியம். வளர்ந்த நாடுகளை பின்பற்றும் நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம். தூக்க மாத்திரைகள் அதிகம் நுகரப்படும் தேசங்கள் அவை. ரசாயன மருந்துகளின் துணை இல்லாமல் தூங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும் வரலாம். மறந்துவிட வேண்டாம்.

என் சிறு பிராயத்தில் சிலோன் ரேடியோ மிகப் பிரபலம். அதில் வரும் ‘இரவின் மடியில்’ நிகழ்ச்சியை நாங்கள் தவற விட மாட்டோம் அதில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல், “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே..!” ஒவ்வொரு முறையும் அந்த பாடல் முடிகையில் தூங்கிப்போன நிலையில் இருக்கும் உடலும் மனமும். இப்படி ஒரு தலைமுறையையே அமைதிப்படுத்தி தூங்க வைத்த பாடல்கள் உண்டு.

நீங்கள் உங்கள் பிள்ளைக்குத் தரும் பெரு வரம் நல்ல தூக்கம். அதற்கான இடையூறுகளைக் களைந்து, நல்ல சூழலை அமைத்து, நல்ல முன்மாதிரிகளாய் நீங்கள் தூங்க ஆரம்பித்தால் உங்கள் பிள்ளைகள் உங்களைப் பின்பற்ற மாட்டார்களா என்ன?

http://tamil.thehindu.com/general/education/மனசு-போல-வாழ்க்கை-32-அமைதி-உன்-நெஞ்சில்-நிலைக்கட்டுமே/article7837051.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

மனசு போல வாழ்க்கை 33: உங்களை உண்ணும் உணவு

 

food_2616049f.jpg
 

நீ எதை உண்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்கிறது கடோபநிஷத்.

மனதைப் பக்குவப்படுத்த உடலைப் பக்குவப்படுத்த வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மதமும் முதலில் உணவுக்கட்டுப்பாட்டை விதிக்கிறது. எல்லா மதங்களும் உண்ணாவிரதத்தைப் பரிந்துரைக்கின்றன. எந்த நாளில், எந்த நேரத்தில் , எப்படிப்பட்ட முறையில் என்பதில்தான் வேறுபாடுகள். பிரார்த்தனை செய்து கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்பதும் எல்லாச் சமயங்களும் பரிந்துரைப்பதே. பிறரோடு பகிர்ந்து உண்பதும் பொதுவாக மதங்கள் வலியுறுத்தும் கருத்து.

உணவின் தேர்வு

உண்ணுதல் புனிதமான செயல். உடல் வளர்ப்பது உயிர் வளர்ப்பது. அது இறைமையைப் போற்றும் செயல். கடவுள் வாழும் ஆலயமே உடல். உணவு சமைப்பதும், பரிமாறுவதும், உண்பதும், பகிர்வதும் தெய்வீகச் செயல்கள். அதனால்தான் சிந்தையை முழுவதுமாக இந்தச் செயல்களில் செலுத்துவது அவசியம்.

அறம் சார்ந்த வாழ்க்கையை மேம்படுத்துவதே சமய நம்பிக்கை. பிற சமய அன்பர்களின் உணவுப் பழக்கத்தில் அத்து மீறல் செய்வது அராஜகம். யார் உணவையும் பறிப்பதோ தடுப்பதோ மிருகச்செயல். உணவு என்பது தனி நபர் உரிமை. தங்கள் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் வசதிக்கும் ஏற்ப உண்ணுதல் அவரவர் தேர்வு.

இது மட்டும்தான் சிறந்த உணவு என்று எண்ணுதல் பேதமை. காரணம் உணவுகள் தட்ப வெப்ப நிலை, வேலை, உடல் உழைப்பு, கலாச்சாரம் சார்ந்தவை. அதனால்தான் ஒரு உணவைச் சிறந்த உணவு என்று யார் மீதும் திணிப்பது அறியாமை.

ஒரே உணவு சரியா?

எஸ்கிமோக்கள் பூமியின் வடதுருவத்தில் உறைந்த பனி மண்டலத்தில் வாழும் பழங்குடி மக்கள். அங்குள்ள மிருகங்களை அவர்கள் உண்டாலும், அவற்றின் கொழுப்பு மாரடைப்பை வரவழைக்காது. ஆனால் நாம் இங்கு எதைத் தொட்டாலும் கொலஸ்ட்ராலுக்குப் பயப்படுகிறோம். அதற்கான காரணம், நாம் இப்போது உண்ணும் பல உணவுகள் நம் பாரம்பரியத்தில் இல்லாதவை. நம் வாழ்வு முறைக்கு ஒவ்வாதவை. அவற்றை ஜீரணிக்க நாம் சிரமப்படுகிறோம்.

அவரவருக்கான உணவு எது என்பதைத் தீர்மானிப்பது அவரவர் கடமை. ஒரு அலுவலகத்திலோ ஒரு குடும்பத்திலோ அனைவருக்கும் ஒரே உணவு என்பதே அடிப்படையில் ஒரு குறைபாடுதான். எல்லோருக்கும் ஒரே உணவு என்பது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் ஒரு நிர்வாகக் கண்ணோட்டத்தில் எளிதானது. அதனால் நிறைய நேரமும் மனித உழைப்பும் மிச்சமாகிறது. ஆனால், தனி நபர் ஆரோக்கியத்துக்கு இது நன்மை பயக்காது.

உடலின் உணவுமொழி

உணவு விடுதிகளில் புதுப் புது உணவுகள் படையெடுப்பது சந்தையின் அசுர வளர்ச்சியால். மெனு கார்டு முன்பு ஒரு அட்டையாக இருந்தது. இன்று அது டெலிபோன் டைரக்டரி போல வீங்கி வருகிறது. உலக நாடுகளில் உள்ள அனைத்து உணவுகளையும் இங்கேயே உட்கார்ந்துகொண்டு ருசி பார்க்கத் தயாராகிவிட்டோம்.

ஆனால் ஒவ்வொரு உணவின் தன்மை பற்றியும் அது நம் உடலையும் மனதையும் என்ன செய்யும் என்பதைப் பற்றியும் யோசிக்கிறோமா? ஒரு உணவின் தயாரிப்பில் என்னவெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்து கொள்கிறோமா? இதற்குப் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் உடலோடு சற்று உறவாடினால் போதும்.

ஒவ்வொரு உணவுக்கும் பிறகு ஏற்படும் உணர்வு, எண்ணம், உடல் மாறுதல்கள் என்று கூர்ந்து கவனியுங்கள். உடல் உங்களோடு பேசத் தயாராக இருக்கிறது. நீங்கள் தயாரா?

தேவாமிர்த ருசி

நட்சத்திர விடுதியில் தட்டை ஏந்தி ஒரு 50 அயிட்டங்களை அரையும் குறையுமாக அள்ளித் தின்றுவிட்டு வீடு வந்திருப்பீர்கள். சாப்பிடும் போது நன்றாக இருக்கும். வீடு வந்து படுக்கும்போது கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றும். இது உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? அப்படி என்றால் ஏன் என்று யோசியுங்கள்.

வேலை செய்யும்போது அலுவலகத்தின் சமாச்சாரங்களைப் பேசியே என்ன உண்கிறோம் என்று உணராமலே மதிய உணவு எடுத்துக் கொள்வோம். எல்லா உணவுகளும் சரியாகத்தான் இருக்கும். ஆனால் பெரிய திருப்தி இருக்காது. ஆனால், ஒரு நாள் சுற்றுலாவின் போது, அருவியில் நீண்ட நேரம் குளித்துவிட்டு உண்ணும் ஒரு சாதாரணக் கடையின் உணவு தேவாமிர்தமாக ருசிக்கும். ருசியைக்கூட விடுங்கள். பசித்துக் காத்திருக்கும்போது வரும் சமையல் நறுமணம் எவ்வளவு தூண்டுதலாக இருக்கும்! இதை எத்தனை நாட்கள் நாம் முகர்ந்திருக்கிறோம்?

நீங்கள் உண்ணும் உணவால் ஏற்படும் உடல் மாற்றங்களையும் மன மாற்றங்களையும் ஒரு வாரத்துக்கு கூர்ந்து நோக்குங்கள். உங்கள் உடல் பற்றிய அறிவும், உணவு பற்றிய விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

உணவே மருந்து

நம் கலாச்சாரம், மரபணுக்கள், கற்றல் மூலமாக நம்மிடம் உள்ள சில ஆதார உணவுகள் உண்டபின் வயிற்றுக்கும் மனதுக்கும் பெரிய திருப்தி தருபவை. அவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்தி உண்பதுதான் புத்திசாலித்தனம். உங்களுக்கான உணவை உங்கள் உடலே தேர்வு செய்யும். அதன் மொழி கேட்டு நடப்பதுதான் உத்தமம்.

நம் பாட்டி, தாத்தாக்களின் தெம்பு நம் பெற்றோர்களுக்கு இல்லை. நம் பெற்றோர்களின் தெம்பு நமக்கு இல்லை. நம் தெம்பாவது நம் பிள்ளைகளுக்கு இருக்குமா? மருத்துவம் வளர்ந்த அளவு ஆரோக்கியம் வளர்ந்துள்ளதா? யோசியுங்கள். நாம் கோட்டை விடும் இடம் உணவு என்று புரியவரும். உணவில் எல்லா அத்துமீறல்களையும் செய்கிறோம். சந்தை, அரசியல், சமூகம் அவற்றை செய்ய வைக்கிறது. ஆனால் நோய்வாய்ப்படுகையில் அவதிப்படுபவர் நீங்கள் மட்டும் தானே!

உலகின் எல்லா மனப்பயிற்சி மையங்களும், சமயங்களும், சோதனைகளும் உணவில்தான் தொடங்குகின்றன. உடல் பயிற்சிகூட அடுத்ததுதான்.

பேசாமல், பிற செயல்களில் ஈடுபடாமல் சாப்பிட்டுப் பாருங்கள். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். டி.வியும் செல்போனும் சாப்பிடும் இடத்திலேயே இருக்க வேண்டாம். கிடைக்கின்ற உணவில் உங்களுக்கு ஏற்றதாய், அளவாய் உண்ணுங்கள். உண்ணும் அளவுக்கு உடல் உழைப்பு உள்ளதா என்று பாருங்கள். பாரம்பரிய உணவுகள், வீட்டில் சமைத்த உணவுகளுக்கு முன்னுரிமை தாருங்கள். வெளி உணவு என்றால் லேபிள் பாருங்கள். டப்பாவில் அடைத்த உணவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் எந்த உணவின் மீதும் வெறுப்பும் விரோதமும் வேண்டாம்.

இந்த உணவை உண்ணும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் உணவு உடல் திடமும் மன நிறைவும் அளிக்கும் மாமருந்து என்பதை மறந்துவிட வேண்டாம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%AE%E0%AE%

 

Link to comment
Share on other sites

மனசு போல வாழ்க்கை 34: அறிவுரைகளும் அனுபவங்களும்

kids_2623539f.jpg
 

பெற்றோர்களின் வாழ்க்கையைப் பிள்ளைகள் வாழ்கிறார்கள். கொஞ்சம் கூட்டல் கழித்தலோடு. சிற்சில மாறுதல்களோடு. கொஞ்சம் வேறுபாடுகளுடன். ஆனால் ஆதார வாழ்க்கை நம் பெற்றோர்களுடையதுதான். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பெற்றோர்களிலிருந்து தொடங்கி நம் முன்னோர்கள் வரை பலரிடமிருந்து பெற்றிருக்கிறோம்.

இதை விஞ்ஞானம் மரபணுக்களின் காரணம் என்கிறது. முன்னோர் செய்த வினை என்று ஆன்மிகம் சொல்கிறது. குறிப்பாக, இந்து மதம் பூர்வ ஜென்மம் என்றும் ஜென்மங்கள் என்றும் சொல்லும். உளவியலாளர்களில் ஒரு சாரார் தட்டையாக நாம் எல்லாவற்றையுமே பெற்றோரைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் உங்கள் நம்பிக்கைகளும் சார்பு நிலைகளும் மாறுபடலாம். ஆனால், பெற்றோர்களின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் குழந்தைகள் வாழத் தொடங்குகிறார்கள் என்பதைப் பொதுவாக யாரும் மறுக்கமாட்டார்கள்.

யாரோட ஜெராக்ஸ்?

அப்பா, அம்மா, தாத்தாக்கள், பாட்டிகள் என நிறைய மனிதர்களின் பங்களிப்பு இருப்பதால் நாம் ஒரு கார்பன் காப்பியாகயாகவோ ஜெராக்ஸ் நகலாகவோ மட்டும் இல்லாமல் ரசமான கலவையாக இருக்கிறோம். ஒவ்வொருவரிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கியிருக்கிறோம். சில பண்புகள் தூக்கலாகத் தெரியும். பல உள்ளார்ந்து இருக்கும். மிகச் சில பண்புகள் நமக்கே தெரியாமல் என்றோ ஒரு நாள் பீறிட்டுக்கொண்டு வரும்.

இந்த ஒற்றுமைகளைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். பிறந்த குழந்தையின் உருவ ஒற்றுமைகளில் இது ஆரம்பமாகும்.

“அப்படியே அம்மா தான்” , “நெத்தி மட்டும் தாத்தா. மத்தபடி அவங்க பக்கம்தான்”, “ அப்படியே டிட்டோவா பொள்ளாச்சி ஃபீச்சர்ஸ்”, “மீசையை ஒட்ட வச்சா அப்படியே அவள் அவங்கப்பாதான். அப்படியேதான் வருவா.” என்று குழந்தையைப் பார்த்து அடிக்கப்படும் டயலாக்குகள் நமக்குத் தெரியும்தானே!

உருவ ஒற்றுமைகளுக்குப் பிறகு சுபாவங்கள் அலசப்படும்.

“அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு. என்ன கோபம் பாரு!” “என்னா அழுத்தம் பாரு. அவ அம்மாவே தான்.” “எப்படி மழுப்பறா பாரு. அவ அத்தை இப்படித்தான் நழுவுவா எதைக் கேட்டாலும்!”

வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால் வாழ்வின் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நடப்பதையும் உணரலாம். தாயின் அதே துயரம் மகள் வாழ்விலும் நடக்கும். தந்தை செய்த அதே தவறை மகனும் செய்வார். வாழ்வின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் இப்படிப்பட்ட பல ஒற்றுமைகளைக் பார்ப்பீர்கள். இவை யதேச்சையானவை அல்ல.

அறிவுரைகளும் அனுபவங்களும்

பாஸ்ட் லைஃப் ஹீலிங் என்று ஒன்று உண்டு. கடந்த காலத்தின் கர்ம வினைகளைக் களைவதற்கான சிகிச்சை முறை. மதங்கள் அனைத்துமே கர்மவினைகளைப் போக்கத்தானே முயல்கின்றன?

கர்ம வினை என்பதை முதலில் எளிமைப்படுத்துவோம். ஒரு செயலைச் செய்து அதிலிருந்து கற்றுக்கொண்ட பிறகு அதைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்கிறோம். ஆனால் செயல் ஏற்படுத்திய பாதிப்பு நமக்கு வந்து விடுகிறது. அந்த பாதிப்பைப் பிறகு குறைக்கப் பார்க்கிறோம். அதன்பின் அந்த அனுபவத்தால் மற்றவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளிடம் அதைச் செய். இதைச் செய்யாதே. இது பாவம். அது புண்ணியம் என்று அறிவுரை சொல்கிறோம்.

ஆனால் அறிவுரைகளை விட அனுபவங்கள்தான் சக்தி வாய்ந்தவை. அப்பாவின் தவறு மகனுக்குப் புரியாது, பட்டுத் தெரியும் வரை. படுவதற்கு முன் தெரிந்து கொள்ள முடியாதா என்பதுதான் ஒவ்வொரு தகப்பனின் ஏக்கமும். ஆனால் தீ சுடும் என்று எவ்வளவு சொன்னாலும் தொட்டால் தானே தீயின் குணம் தெரியும்? இதனால் தான் எவ்வளவு சொல்லியும் தவிர்க்க இயலாமல் பெற்றோர்களின் தவறுகள் பிள்ளைகளால் மீண்டும் செய்யப்படுகின்றன.

அறிவுரைகள் எந்தக் காலத்திலும் பெரிய பலனை அளித்ததில்லை. அறிவுரைகள் சொல்வதை விட நம் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்வதுதான் முக்கியம்.

பிள்ளைகள் பார்த்துத் தெரிந்துகொள்கின்றன. கேட்டுத் தெரிந்து கொள்வதல்ல. பெற்றோர்கள் சொல்வது முக்கியமில்லை. செய்வது தான் முக்கியம்.

“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்று சொல்லிவிட்டு போன் வரும் போது “நான் வீட்டில் இல்லைன்னு சொல்லு” என்று சொல்லும் அப்பாவிடம் குழந்தை எதைக் கற்றுக்கொள்ளும்?

“பொய் சொல்லலாம்; ஆனால் பொய் சொல்லக் கூடாது என்று பேசிக்கொள்ள வேண்டும்!” என்றுதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.

மோசமான கருத்துள்ள திரைப்படத்தையோ தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாமல் பெற்றோர்கள் பார்க்கும்போது குழந்தைகள் அதை சம்மதமாகவே என எடுத்துக்கொள்வார்கள்.

தேர்வு அவர்கள் கையில்

நம் பழக்கங்கள், நாம் பயன்படுத்தும் சொற்கள், நாம் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் எனக் குழந்தைகள் நம்மை நகல் எடுக்கின்றன.

“ நான் அதிகாலை எழுந்திருக்கிறேன். அவன் அப்படி இல்லையே. இதையெல்லாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களிடமிருந்து இதைத்தான் குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தேர்வு செய்வது அவர்கள் கையில். ஆனால் உங்கள் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையோ அவர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். நீங்கள் காட்டும் உலகம்தான் அவர்களுக்கு முதல் உலகம். பிறகுதான் அவர்கள் வாழ்வில் நண்பர்கள், ஊடகம், பயணங்கள் என மற்ற வகையான தாக்கங்கள் நிகழ்கின்றன.

பெற்றோர்களின் வாழ்வுக்கு நன்றி செலுத்திவிட்டு, உங்கள் வாழ்வைச் சீராக்குங்கள். அவைதான் அடுத்த சந்ததிக்கு நீங்கள் செய்யும் மூலதனம். என் வாழ்க்கையை என் பிள்ளை அப்படியே பெறட்டும் என்று சொல்ல முடிந்தால் நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.

உங்கள் வாழ்வைச் செப்பனிடும்போது உங்கள் பிள்ளைகள் வாழ்வு சீராகும். அதனால் மனசு போல வாழ்க்கை என்பது உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் மனசு தான் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன.

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மனசு போல வாழ்க்கை 35: மன நலம் காக்கும் மருந்து எது?

 

manasu_2632161f.jpg
 

“வாழ்க்கை வெறுத்து விட்டது. வாழ்வதில் எந்தப் பயனும் தெரியவில்லை. எதுவும் மாறும் என்ற நம்பிக்கை இல்லை. எந்தப் பிடிமானமும் தெரியவில்லை. சாவதைப் பற்றி யோசிக்கிறேன்.”

இப்படி எண்ணுவோர் எண்ணிக்கை பெருகிவருவது கவலை அளிக்கிறது. வாழ்வில் நம்பிக்கை இழந்து, பிடிமானம் தெரியாமல், ஒரு விளிம்பு நிலையில் மக்கள் யோசிப்பது பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் பின்விளைவு என்றும் சொல்லலாம். பொருட்களின் மதிப்பு உயர்ந்தும் மனிதர்களின் மதிப்பு குறைந்தும் ஒரு அசுர வேகத்தில் பொருட் குவிப்பில் மக்கள் ஓடுவதில் முதலில் நசுங்கிப்போவது மனித உறவுகளே. இல்லாமையில் வாழும் மக்கள் கூட்டங்கள் மரணத்தை யோசிப்பதில்லை. சாலையில் தூங்கும் மனிதர்கள் கூட நாளையைப் பற்றிய நம்பிக்கையில்தான் ஆழ்ந்து உறங்குகிறார்கள். பொருள் வசதியும் தனிமையும் கொண்டோர்தான் அதிகம் மரணம் பற்றி யோசிக்கிறார்கள்.

துக்கமும் மனமும்

தற்கொலைக்குப் பல காரணங்கள். துக்க நோய், மனச்சிதைவு, ஆளுமைக் குறைபாடுகள் போன்ற மனநோய்கள், குடி, போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், குடும்பப் பிரச்சினைகள் என நிறைய உள்ளன. ஆனால் இந்த சமூகக் காரணிகளில் நகர வாழ்வின் அன்னியத்தன்மை கொண்ட வாழ்முறை முக்கியமானது.

சமூக உறவுகள் இற்றுப்போய், குடும்ப உறவுகளிலும் இடைவெளி வந்து, வேலை சார்ந்த உறவுகள் இயந்திரகதியாக இயங்கும்போது, துக்கப்படும் மனம் பிடிமானம் இன்றி தவிக்கிறது.

இருத்தலியல் தத்துவத்தின் படி வாழ்க்கைக்கு என்று பெரிய அர்த்தமில்லை. நாம்தான் அதற்கு அர்த்தம் கொடுக்கிறோம். வாழ்வில் சலிப்புத்தன்மை வரும்போது குறிக்கோள் இல்லாமல் திரியும் மனம். வாழ்க்கையின் சகலத்தையும் துப்பிவிட்டு எங்காவது போகலாம் என்று தோன்றும். இதைக் குமட்டல் என்று சொல்வார்கள் இருத்தலியல் தத்துவத்தின் ஆதரவாளர்கள்.

எழுத்தாளர் அம்பை ‘வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை’ என்ற சிறுகதையில் அந்த மார்வாடிப் பெண் தான் வாழ்க்கை முழுவதும் எத்தனை ரொட்டிகள் சுட்டிருப்போம் என்று கணக்கிடுவார். அது போல நம் வாழ்க்கை கூட இயந்திர கதியாக, அர்த்தம் இல்லாமல் தோன்றும்.

கொடுப்பதுதான் மருந்து

“நான் வாழ்ந்து யாருக்கு என்ன லாபம்?” என்று கேட்போர் உண்டு. வேலை, குடும்பப் பொறுப்புகள் முடிந்துவிட்டால் அடுத்து என்ன செய்ய என்று தெரியாத பல பெரியவர்களைப் பார்க்கிறோம். எந்த வயதிலும் வாழ்க்கை அசதியாகவும் அர்த்தமில்லாததாகவும் தோன்றலாம்.

ஆனால் மனித வாழ்க்கை எவ்வளவு மகத்தானது? பல லட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் நமக்குக் கிடைத்த அற்புத வாய்ப்பு. நம் உடலும் மனமும் கொண்டுள்ள சக்தி தான் மனித இனத்தை இந்த உலகத்தின் தலைமையாக ஆக்கி உள்ளது.

நம்மால் என்ன செய்ய முடியாது? மனம் நினைக்கின்ற அனைத்தையும் செய்து முடிக்க வல்லவர்கள் நாம்.

‘‘என்னவெல்லாம் இல்லை என்னிடம்’’ என்று பட்டியல் இடுவதற்குப் பதில் ‘‘என்னவெல்லாம் என்னிடம் இருக்கிறது’’ என்று பட்டியல் போட்டால் அது வாழ்க்கையின் கண்ணோட்டத்தையே மாற்றிவிடும்.

உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க ஒன்று செய்யலாம். உங்களால் பிறருக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசியுங்கள். கொடுப்பது தான் மன நலத்தைக் காக்கும் பெருமருந்து.

சோகத்தை ஒழிக்கும் வழி

என்ன கொடுக்கலாம்? ஒவ்வொருவரிடமும் கொடுக்க நிறைய உள்ளது. பெரிதாகப் பணம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை.

பார்வையற்றவருக்குப் படித்துக் காட்டுங்கள். உங்கள் பணியாளர் குழந்தைகளுக்குப் பாடம் எடுங்கள். உறுப்பு தானம் செய்யலாம். நீங்கள் பயன்படுத்தாத பல பொருட்களை நல்ல நிலையில் இல்லாதவருக்குக் கொடுக்கலாம். ஆலயத்தைச் சுத்தப்படுத்தலாம். முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் அன்பு பாராட்ட. தேர்வுப் பணம் கட்ட முடியாதவருக்குப் பணம் கட்டலாம். மனம் சோர்ந்தவர்களிடம் உற்சாக வார்த்தைகள் பேசலாம். ஆலோசனை சொல்லலாம்.

வசதி உள்ளவர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கு நிறைய செய்யலாம். கொடுப்பது என்பது தான் முக்கியம். யாருக்கு எதைக் கொடுப்பது என்பது அவரவர் தேர்வுகள்.

கொடுப்பது துக்க நிலையை மாற்றும். துக்கம் சுய நலமான உணர்வு. எனக்கு இது இல்லையே என்ற சுய பரிதாபம் தரும் சோகம் தான் துக்கத்தில் பிரதான பகுதி. தன் மேலுள்ள சிந்தனையை மாற்றப் பிறருக்கு உதவ ஆரம்பியுங்கள். துக்கம் விலகும். புதிய நம்பிக்கைகள் பிறக்கும். பல பிடிமானங்கள் வாழ்க்கையில் உள்ளது தெரியும்.

சொந்த வாழ்வில் சோகங்கள் இல்லாதவர்கள் யார்? ஆனால் பிறரின் சோகத்தைத் துடைக்கத் துணிகையில் சொந்த சோகம் இடம் தெரியாமல் போகும்.

எல்லா உலகத் தலைவர்களும் இதை உணர்ந்தவர்கள் தான். டால்ஸ்டாய் மோசமான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்தவர். ஆனால் இலக்கியம் அவரை இளைப்பாற்றியது. தேசத்துக்கே பிதாவான காந்திஜியின் புதல்வர் ஹரிலால். அவருக்கும் காந்திக்கும் ஒரே மோதலும் முரண்பாடும்தான். ஆனால் தேசப்பணி காந்திஜியைச் சோகத்தில் ஆழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது.

தற்கொலை தீர்வா?

படிப்பில்லை. பணமில்லை. சொந்த பந்த ஆதரவில்லை. பிள்ளைகள் சரியில்லை. நோய்கள். பணியில் பிரச்சினைகள். யாருக்குத் தான் சோகமில்லை? ஆனால் மரணம் அதற்குத் தீர்வில்லை. தற்கொலை செய்தவரின் குடும்பம் எத்தனை காலம் அந்த ரணத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்?

வாழ்க்கையில் நம்பிக்கைகள் முக்கியம். நமக்கேற்ற பிடிமானங்களைத் தேர்வு செய்து கொள்வது மிக முக்கியம். அது மதமோ, விளையாட்டோ, அரசியலோ, சினிமாவோ, இலக்கியமோ, சமூகச் சேவையோ, வேலையோ ..ஏதோ ஒன்று இருக்கட்டும்.

வாழ்வின் இன்பங்கள் விரைவில் திகட்டி விடும். துக்கங்கள் என்றும் தொடர்ந்து வரும். ஆனால், வாழ்வில் நாம் வைத்துள்ள குறிக்கோள் நம்மைச் சீராக இயக்கிச் செல்லும். சொந்த வாழ்வின் சோகங்களையும் புறந்தள்ள வைக்கும்.

உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று யோசியுங்களேன்!

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-

 

Link to comment
Share on other sites

மனசு போல வாழ்க்கை 36: நேசித்துப் பெறும் தோல்வி

failure_2641484f.jpg
 

உலகை இயக்கும் மாபெரும் சக்தி எது என்று என்னைக் கேட்டால் அன்புதான் என்பேன்.

உள் மன அமைதி முதல் உலக அமைதி வரை அனைத்தும் அன்பினால் மட்டுமே சாத்தியம்.

அன்பு குறையும்போது மனதில் வன்மம் வளர்கிறது. அன்பு வற்றிய மனம் தான் பிறர் துயரைப் பார்க்க மறுக்கிறது. அன்பு போதாமைதான் குற்றங்கள் செய்யத் தூண்டுகிறது.

நம் எல்லோரிடத்திலும் அன்பு இருக்கிறது. ஆனால் அது மிகக் குறுகிய வட்டத்தில் பலகீனமாக இயங்குகிறது. அதுவும் நிபந்தனைகளுடன் அளிக்கப்படுகிறது. நம் அன்பு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அது வெறுப்பாக மாறுகிறது. நமக்கு வரும் அன்பு பகிரப்பட்டால் நாம் கொடுக்கும் அன்பு குறைகிறது. ஒரு பக்கம் உள்ள அன்பு இன்னொரு பக்கம் செல்கிறது.

சக்தியின் அடையாளம்

அன்பை நிரூபிக்க மனம் பல விளையாட்டுக்கள் புரிகிறது. அன்பைப் பெறவும் பல வித்தைகள் புரிகிறது. பாதகங்கள் செய்யும்போதெல்லாம் அன்பினால் என்று வசனம் பேச வைக்கிறது. எந்த அன்பு நிஜம் என்று தெரியாமல் பல நேரங்களில் குழம்புகிறது மனம்.

தன்னலம் கருதாமல் பிரதிபலன் எண்ணாமல் பிறர் மீது செலுத்தும் உணர்வுதான் அன்பு. அது பெறுபவரின் தகுதி அல்ல. கொடுப்பவரின் தகுதி. அது கொடுக்கல் வாங்கல் வியாபாரம் அல்ல. அள்ளித் தரும் அளவற்ற சக்தியின் அடையாளம்.

பிள்ளை மீது தாய் உயிரையே வைக்கிறாள். காதலியைக் காதலன் உயிரே என்று அழைக்கிறான். நட்பு தான் உயிரைவிடப் பெரிது என்கிறான். கொள்கைக்கு உயிரைக் கொடுப்பேன் என்று பறைசாற்றுகிறான் தொண்டன். அடிப்படையில் அனைத்தும் அன்பு தானே?

ஆள் பார்த்துதான்

இவ்வளவு சக்தி மிகுந்த அன்பு ஏன் தடைபட்டுப் போகிறது?

இரண்டாம் பிள்ளை வந்தவுடன் முதல் பிள்ளை தனிமையை உணர்கிறது. மகன் மணந்தவுடன் தாய் தனிமைப்படுகிறாள். ஒருதலைக் காதல் என்றால் காதலனோ காதலியோ தனிமையைத் தழுவுகிறார்கள். அன்பைப் பெறும் போராட்டத்தில்தான் வலிகள் ஏற்படுகின்றன.

ஆனால், அன்பைக் கொடுப்பவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை. நம் அன்பு எத்தனை பரந்து விரிந்துள்ளது என்பதில்தான் நம் மன வளம் அடங்கியுள்ளது.

நம் குழந்தை மீது கொண்டுள்ள அதே அன்பை பிற குழந்தைகள் மீது நம்மால் கொள்ள முடிந்தால் அது தான் அளவற்ற அன்பு. இது யதார்த்தத்தில் நடக்குமா? சாலையில் யாரோ ஒரு பெண் அடிபட்டுக் கிடக்கிறாள் என்றால் அதை ஒரு செய்தியாக மட்டும் உள்வாங்குகிறது மனம். ஆனால், அது தன் பெண் என்று தெரிந்தவுடன் பதைபதைக்கிறது. ஏன் என்றால் ஆள் பார்த்துதான் அன்பு வருகிறது!

ஆனால், சாலையில் அடிபட்டிருக்கும் பெண்ணைத் தன் பெண்ணாக நினைக்க முடிந்தால், அங்கு நிபந்தனையில்லா அளவற்ற அன்பு சுரக்கிறது என்று பொருள். நம் பிள்ளை சாப்பிடாமல் படுத்தால் மனம் பதைபதைக்கிறது. ஆனால், நம் தெருவிலேயே எத்தனை பிள்ளைகள் பசியோடு உறங்குகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறதா மனம்? இப்படிப் பிறர் மீது நிஜமான அன்பும் அக்கறையும் கொண்டால் நம்மால் குற்றங்கள் செய்ய இயலாது.

அன்பைத் தின்னும் சுயநலம்

மக்கள் மீது அன்பு கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் பணத்தில் ஊழல் செய்ய மாட்டார்கள். மக்கள் வரிப்பணத்தில் மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள். ரசிகர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் சினிமாக்காரர்கள் தாங்களே தங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாத வன்முறையான ஆபாசமான சினிமாக்கள் எடுக்க மாட்டார்கள். துன்பம் இழைக்கப்பட்டவர் மீது உண்மையான அன்பிருக்கும் ஊடகக்காரர்கள் துன்புறுத்தும் கேள்விகள் கேட்டு, அவற்றை எழுதி, படமாகக் காட்டி பாதிக்கப்பட்டவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். வாடிக்கையாளர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் வியாபாரிகள் மோசமான பொருட்களை அநியாயமான விலைக்கு விற்க மாட்டார்கள். பிற மனிதர்கள் மீது அன்பிருந்தால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வறுமையில் தவிக்கையில் நம்மால் குற்ற உணர்வில்லாமல் மிதமிஞ்சிய சுகபோகங்களை அனுபவிக்க இயலாது.

பிறர் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் செல்வதற்குப் பழகுகையில் அன்பு வற்றத் தொடங்குகிறது. அது அதிக பட்சம் ஓரிருவர்மீதுகூடச் செலுத்த முடியாவண்ணம் பற்றாக்குறை ஆகிறது. சுயநலம் அன்பைத் தின்ன ஆரம்பிக்கிறது. இதுதான் நம்மைச் சமூகத்துக்கு எதிரான மனிதர்களாக மாற்றுகிறது.

‘யாருக்கு என்ன நடந்தாலும் நம் வேலை நடந்தால் சரி’ என்பது பொது விதியாகிறது, பிழைக்கச் சொல்லித்தரும் கல்வி, அன்பைப் போதிக்கத் தவறுகிறது. பிறரை மிதித்துப் பெறும் வெற்றியைவிடப் பிறரை நேசித்துப் பெறும் தோல்வி மகத்தானது என்று அடுத்த தலைமுறைக்காவது சொல்லித் தர வேண்டும்.

அன்பை அள்ளித் தரும் மனம் விரிவடையும். உறுதி பெறும். பொலிவு பெறும்.

அன்பு காட்டுபவர்கள் முகத்தில் உள்ள பரவசக் களிப்பை பாருங்கள். அது ஆயிரம் பாடங்கள் சொல்லும். செடிக்கு நீர் ஊற்றும்போதோ, நாய்க்குச் சோறிடும் போதோ, பிள்ளைக்குப் பாலூட்டும்போதோ, ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதோ, ரசிகர்களுக்காகப் பாடகர் குழைந்து பாடும்போதோ, அன்புடன் கொடுக்கும் எல்லாத் தருணங்களிலும் மனிதர்கள் அழகாய்த் தெரிவார்கள்!

பெரிய அறிவும் சிறிய அன்பும் கொண்ட மனிதர்கள் வாழும் சமூகம் ஆபத்தானது. அன்பு கலக்காத அறிவு, நாசத்தை மட்டுமே நடத்திக் காட்டும்.

எல்லா உயிரும் ஓருயிரே என்று உணர்ந்து அன்பு செலுத்துவதுதான் பேரன்பு. அது தான் பேரறிவு. அழியாத அன்பைத் தர ஆயிரம் வழிகள் உள்ளன!

பேரன்பைப் பொழிவதே பேரானந்தம் என்று உணர்கையில் நம் மனம் சுகம் பெறும். வாழ்க்கை வளம் பெறும்!

(முற்றும்)

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0

                                                                 -முற்றும்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோர்வின்றி தன்னலமற்ற அன்புடன் இதுவரை பகிந்தளித்த ஆதவனுக்கு நன்றி...!  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.