Jump to content

ஆகாயத்தாமரை (வல்வை சகாறா)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாயத்தாமரை

 

2421954896_58d792ab36_m.jpg

மீனா சலனங்கள் அற்ற பார்வையுடன் என்னை நோக்கினாள். அவளின் பார்வை எனக்குள் பலத்த அதிர்வை ஏற்படுத்தி என் எண்ணங்களை புரட்டிப்போட்டது. அவளுடைய பார்வையை மீறி பேசும் நிலையை அடைய முடியாத தவிப்பு என்னை ஆக்கிரமித்தது…..

 

ஐரோப்பாவிலிருந்து உறவினர்களின் திருமண விழாவில் கலந்து கொள்ள கனடா வந்த எனக்கு மன ஆழத்தில் புதைந்திருந்த ஆவல் தலைதூக்கியதில் வியப்பில்லை பதின்ம வயதில் மறுக்கப்பட்ட காதலின் தாக்கம் ஐம்பதைத் தாண்டியும் மனதில் துயரமாக யாரும் அறியாமல் அழவைத்திருந்தது. நம்பியவளை  ஏமாற்றிவிட்டோமோ என்று சிறுகச் சிறுக என்னைச் சாகடித்து எனக்குள் தன்னை மட்டும் உயிர்ப்பாக வைத்திருக்கும் உணர்வு காதலுக்கு மட்டுந்தான் இருக்கமுடியும். அவளைப் பார்த்தே ஆகவேண்டும் இன்னும் இருநாட்கள்தான் இங்கு நிற்கமுடியும் எப்படி அவளைப்பார்ப்பது…… கண்ணாடிக்கூண்டுக்குள் பறக்க விட்ட பறவைபோல எண்ணங்கள் எல்லாத்திசைகளிலும் வேகத்துடன் எழுவதும் கண்களுக்குத் தெரியாத தடைகளில் முட்டி சுழன்று விழுவதுமாக அந்த இரவு என்னை வாட்டி எடுத்தது. கனடாவின் உறைந்தபனியில் நாயக்கரா வீழ்ச்சியின் தோற்றத்தை காண்பதற்காக அதன் அழகை இரசிக்கும் கொலிடே இன் ஹோட்டலில் இருந்தபடி ரொரன்ரோவில் வாழும் அவளைச்சந்திக்க மனதில் ஆர்ப்பாட்டம்.

. மேசையில் கண்ணாடி குவளையில் நிரப்பப்பட்ட பொன்நிற திரவம் தன்னைப்பருக அழைப்பு விடுத்தபடி கிடக்க…அனைத்தையும் விழுங்கியபடி பதின்மவயது மீனா உடலின் இயக்கங்களைச் சிறைப்படுத்திக் கொண்டிருந்தாள். எப்படியாவது… எப்படியாவது அவளைப்பார்த்தே ஆகவேண்டும்…..

 

கைத்தொலைபேசி ஒலித்தது..

கரிணி….. ……

என்னுடைய மனைவி அழைத்துக்கொண்டிருந்தாள். தொலைபேசியை எடுக்க மறுத்து மனம் குளறுபடி செய்தது. மீளவும் தொடர்ச்சியாக ஒலித்த தொலைபேசி அழைப்பை மறுக்கமுடியாமல் எடுத்தேன்.

எதிர்ப்பக்கத்தில் நீண்டநேரம் தொலைபேசியை எடுக்காத கோபத்தில் என்னைப் பேசவிடாமல் கரிணி பொரிந்து தள்ளினாள்  மௌனமாக கண்களை இறுக மூடிக்கொண்டேன் மீனா என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

 

“ வினோத் ஆர் யூ தெயா?”

என்று கரிணி கேட்க சட்டென மீனா மறைந்து போனாள்

 

“ஆங் கேட்கிறேன் “

என்னுடைய குரல் உயிர்ப்பிழந்து கரகரத்தது…..

 

“ஆர் யூ ஓகே வினோத்”…..

கரிணி குரலில் கலவரம் கலக்க நெருக்கமாகிக் கேட்டாள்

 

“ஐ”ம் ஓக்கேடா”

என்னுடைய பதில்  அவள் கலவரத்தை குறைத்திருக்கவேண்டும் சற்று சமாதானமாகி என் வரவுக்காக காத்திருப்பதாக காதலோடு சொல்லி போனை வைத்தாள்.

கரிணி என் மனைவி பெற்றோரால் தெரிவு செய்யப்பட்டு என் மனைவியாக்கப்பட்டவள். என் மனச்சிம்மாசனத்தில் அமர மீனா என்கிற என்னுடைய பதின்மவயது காதலியோடு எனக்குள் சண்டைபோட்டுக் கொண்டிருப்பவள். ஆனால் கரிணிக்கு மீனாவோடு அவள் சண்டைபோடுவது தெரியவே தெரியாது. தெரிவதற்கான வாய்ப்பையும் வழங்காதவனாக இன்றுவரை இரகசியத்திற்குள் என் அக உருவம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

 

நான் இங்கு வருவதற்கு முன்பே என்னுடன் படித்த நண்பர்கள் பலருக்கு தகவல் கொடுத்திருந்தேன் உறவினரின் திருமணநிகழ்வில் பலர் என்னை சந்தித்து அளவளாவி சென்றனர் நாளை மதி ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறான் போகவேண்டும். விடுபட்ட சில நண்பர்களையும் அழைப்பதாக கூறியிருந்தான் பழைய தோழர்களை சந்திக்கும்போது யாரிடமாவது மீனாவைப்பற்றி கேட்கவேண்டும் என்று சிந்தனை மையமிட்டது… மீனாவும் என்னுடன் படித்தவள்தான் ஆனால் ஆண் நண்பர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கின்ற படியால் மீனாவைப்பற்றிய விடயங்கள் தெரியாது. அவளைப்பற்றி அறிவதற்காக யாரிடமும் தகவல் சேகரித்ததும் இல்லை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் இரகசியமாக மீனாவை பத்திரப்படுத்தியது மனம்.

கடிதப்பரிமாற்றங்கள், பார்வைமொழிகள் கிடைத்த சில நிமிட தனிமையில் உடல் அதிர பரபரக்க, வியர்த்து விறுவிறுக்க அவளை இழுத்தணைத்து கொடுத்த முத்தம். உதறி திமிறி மானாக அவள் ஓடிய கணம்………. எல்லாம் என்னை விழுங்கியபடி…. இரவென்னும் நரகம் உறைபனியினூடே மந்தமாக நகர்ந்து மறைந்தது.

புதிய காலை யன்னல்களுக்கு வெளியே வெண்பனியோடு உறவாட கதிர்கரங்கள் சிரித்தன. நிர்மல வானின் முகில்களில் காற்றின் கைகள் ஓவியங்களை தீட்டுவதும் அழிப்பதுமாக நகர்ந்து கொண்டிருந்தது. இன்று நண்பர்களை சந்திக்க ரொரன்ரோ நகருக்கு செல்வதற்கான டாக்சியை ஒழுங்கு செய்து விட்டு வந்து குளித்து சவரம் செய்து மெல்லிய நீல நிறத்தில் சேர்ட்டை அணிந்தபடி கண்ணாடியில் ஒரு கணம் நிலைத்து  என்னை உற்று நோக்கினேன். அரைவாசிக்கு அதிகமாக தலைமுடியும், மீசையும் நரைத்திருந்தன. இளவயதில் இருந்த ஒற்றைநாடி உடல் மறைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதை உடல்வாகு காட்டியது. துருதுருவென்றிருந்த கண்களும் கனத்த இமைகளுக்குள் சோர்வாக ஒளித்திருந்தன. தடித்த தாடைகள் முதுமையின் பயணத்தை ஆரம்பித்துவிட்ட அரும்பலை காட்டத்தயங்கவில்லை. புன்னகையிற்கூட இயற்கை மறைந்து ஒரு இயந்திரத்தனம்  தெரிவதாக மனம் சொல்லியது. அன்று என்னைத் தள்ளிவிட்டு மானாக ஓடிய மீனா கண்ணாடிக்கு அப்பால் இருந்து கைகொட்டி ஏளனமாக சிரிப்பதாக தெரிந்தது.

உள்ளத்தின் அலைக்கழிவைத்தாங்க முடியாமல் “ ச்சீ வேண்டாம்” என்று உதறினாலும் போக மறுத்தவளாக உறுதியாக நின்றாள். மீனா திருமணம் செய்தாளா என்ற தகவல்கூடத் தெரியாமல்…… கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவளை தேடுகிற விசித்திரம் காதலுக்கு மட்டுந்தான் சாத்தியம்.

 

ரொரன்ரோ பயணம்… 2 மணித்தியாலங்களில் மதியை சந்தித்து நேராக ஒரு இத்தாலியன் ‘வுப்பே’க்கு கூட்டிச் சென்றான் அங்கு கரன், உதயா, பரணி  அவர்களின் துணைவியர் என்று ஒரு நண்பர்கள் குழாமே இருந்தது. ஒவ்வொருவரும் அறிமுகம் செய்தபின் பள்ளிக்கதைகள் பேசி கலாய்த்து அவ்விடம் களைகட்டியது அப்போது மதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர

“வினோத் இன்னும் இரு நண்பர்கள் எங்களோடு இணைகிறார்கள் இரு அழைத்து வருகிறேன்” என்று வெளியே சென்றவன் எங்கள் வயதையொத்த இரு பெண்களை அழைத்து வந்தான்.

கலகலப்பாக வந்த இருவரும் என்னை உற்று பார்த்தபடி நெருங்கி வந்தனர் கைகளை குலுக்கி சிரித்தவளைப்பார்க்க தெரிந்தவளாக இருந்தாள் அடையாளம் பிடிக்க கடினமாக தடுமாற “டேய் வினோத் நான் மனோடா” என்று சிரித்தவளுக்குப் பின்னால் வந்தவளை பார்த்ததும் என் புலன்கள் அனைத்து அதிர்ந்து போயின. தலை லேசாக கிறுகிறுக்க கால்கள் தள்ளாட மூர்ச்சையாகி போவதுபோல ஒரு மாயைக்குள் அமிழ்ந்து தத்தளித்தது இயல்பு. “ஹாய் வினோத்” என்றபடி எனது கைகளை குலுக்கியவள் சிறிய புன்னகையுடன் சுற்றிவரப் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் எனக்கு எதிரில் அமர்ந்து கொண்டாள்.

நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்  அவளைப் நேராக பார்க்கும் துணிவும் அற்றவனாக…… கோழைமையில் தகர்வதை அவள் பார்த்திருப்பாளோ......... என்ற வீம்பு வர மிகுந்த பிரயத்தனப்பட்டு நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன்

மீனா எந்தவித சலனங்களும் இன்றி மிக நிதானமாக என்னை பார்த்து புன்னகைத்தபடி இருந்தாள். ம்… அவள் திடமாகத்தான் தெரிந்தாள் நான்தான்…. நான்தான் இன்னும் பதின்ம நினைவுகளில் இருந்து விடுபடாமல் உள்ளுக்குள் உருக்குலைந்து கொண்டிருக்கிறேன்.

இதோ எதிரே அவள்….. அவள் கண்களுக்குள் என் தேடல் விரிந்தது அவளிடம் பார்வை மொழி புலப்படவில்லை….. என்ன ஒரு அழுத்தம் இவளிடம்…..

நண்பர்கள் பேச்சுகள் ,கேலிகள், சிரிப்பு வெடிகளாக அன்றைய விருந்து அமர்க்களமாக நண்பர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர் முன்பே எனக்காக காத்திருந்த உதயா பரணி, கரன் ஆகியோர் துணைகள் சகிதம் விடை பெற நானும் மதியும் மனோவும் மீனாவும் எஞ்சியிருந்தோம்…..

அப்போதுதான் மதியை அவதானித்தேன் அவன் மனோவை உற்று நோக்கியபடியே இருந்தான் மனோவும் அவனை அன்றைய நாட்களில் திட்டுவதுபோல ஆனால் பக்குவமாக முறைப்பது  விளங்கியது.

‘ஓ… கதை இதுவா….”……….

“ஏன்டா மதி நீ திருந்தவே மாட்டாயா?”

மனோ மதியைநோக்கி சொல்லிக் கொண்டிருந்தாள்……

“வினோத்!....... இவன் கதையை கேள் இப்பவும் என்னைக் காதலிக்கிறானாம் இவனை என்ன செய்யலாம் சொல்லு?”

என்று என்னை நோக்கி மனோ சொன்னாள்.

 

மதியும் கிண்டலாக

“ மனோ உன்னை எப்ப என்னால மறக்க முடியும் சொல் என்னுடைய முதல் காதல் நீ என்ன நீ காதலிக்காவிட்டாலும் நான் சாகும்வரைக்கும் காதலிப்பேன்…..”

 

“ டேய் டேய் முட்டாளே இப்படி லாசுத்தனமாக உளறுவதை நிற்பாட்டு அதுக்குத்தான் நான்  உங்களை எல்லாம் சந்திக்கிறதை விரும்பிறேல்லை…… இப்படி ஏடாகூடமாக எதையாவது கதைக்கிறதை நீ நிற்பாட்டினால்தான் நான் இனிமேல் இப்படியான நண்பர்கள் சந்திப்புக்கு வருவேன்”

என்று மனோ டென்சனாகிக் கொண்டிருந்தாள்….

மீனா அவர்களின் உரையாடலை மெல்லிய புன்னகையுடன் இரசித்தபடி இருந்தாள்……. மீனாவுடன் பேச்சுக் கொடுக்க அவா ஏற்பட்டது ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது.

மீனாதான் பேசினாள் நலம் விசாரித்தாள். மனைவியைப்பற்றிக் கேட்டாள். தான் தனது குடும்பம் பிள்ளைகள் பற்றி சொன்னாள். கணவனைப்பற்றி மிகப் பெருமையாக சொன்னாள். எனக்கு சிறிது எரிச்சலாக இருந்தது. என்னுடைய இடத்தில் இன்னொருவன் என்ற குரோதம் எட்டிப்பார்த்தது. சிம்பிளாகப் பேசி நட்புடன் கைகுலுக்கிவிட்டு மனோவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டாள்.

இப்போதும் என்னுடைய நப்பாசை விடவில்லை அவளுடைய செயலில் முகத்தில் பார்வையில் எங்காவது என்னை உணர்ந்ததற்கான அடையாளம் தெரிகிறதா என்று துருவித் துருவித்தேடினேன் தோல்வி மட்டுமே எனக்கு கிடைத்தது. என்னுடைய எண்ணத்தை உருவத்தை அவளின் அகவெளியிலிருந்து அகற்றி எறிந்துவிட்டாள் என்றே அவளுடைய ஒவ்வொரு செயலும் நிரூபித்தன.....

நாளை நானும் மீளவும் ஐரோப்பாவுக்கு பயணமாகவேண்டும். மதியுடன் விடை பெற்றுக் கொண்டு மீளவும் ஒரு டாக்சியில் நாயக்கராவை நோக்கிப் புறப்பட்டேன். மனிதர்களை, நிலத்தை, மரங்களைப் பார்க்க பிடிக்கவில்லை டாக்சியின் இருக்கையைச் சரித்துவிட்டு வான் நோக்கி என் பார்வையை நகர்த்தினேன் இப்போதும் காற்று முகிலில் ஓவியங்களை வரைவதாகவும் களைவதாகவும்...., அதைப்போல மனமும் ஒரு நிலையிழந்து அலைக்கழிந்தது.

 

கண்ணெதிரே முகிலில் போட்ட தாமரையை காற்று கண்களுக்குத் தெரியாத கரங்களால் கலைத்துக் கொண்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் காதலின் முறிவானது  கிணற்றில் போட்ட கல் போன்று சலனமற்று இருக்கும் உயிர்ப்புடன்....! 

 

ஆண்களின் காதல் முறிவானது அதே கிணற்றில் வாழும் தவளை போல , எப்பவும் சலனத்துடனும் அப்பப்ப நீருக்கு மேல் வந்து இரை மீட்டுச் செல்லும்...!

 

முதல் காதலையும் முதல் முத்தத்தையும் முற்றும் துறந்த முனிவனும் /முனிவியும் கூட மறக்க மாட்டினம்...!  :lol::)

 

கதை கலக்கல் சகோதரி...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் காதலின் முறிவானது  கிணற்றில் போட்ட கல் போன்று சலனமற்று இருக்கும் உயிர்ப்புடன்....! 

 

ஆண்களின் காதல் முறிவானது அதே கிணற்றில் வாழும் தவளை போல , எப்பவும் சலனத்துடனும் அப்பப்ப நீருக்கு மேல் வந்து இரை மீட்டுச் செல்லும்...!

 

முதல் காதலையும் முதல் முத்தத்தையும் முற்றும் துறந்த முனிவனும் /முனிவியும் கூட மறக்க மாட்டினம்...!  :lol::)

 

கதை கலக்கல் சகோதரி...!!

 

சுவியண்ணா உண்மைதான் ஆண்களின் அனுபவத்தைத்தானே லொடலொட என்று கேட்க முடியும் அனுபவப்பட்ட பெண்கள் வாயைத்திறந்து அனுபவத்தைச் சொன்னால்தான் நம்மைப்போன்றவர்கள் அந்த உணர்வைப்படம் பிடித்து கதையாக எழுதமுடியும்  பெண்கள் நிலை எப்படி இருக்கும் என்பது என் கற்பனையிலும் எட்டாததாக இருக்கிறது.... அதனால்தான் பெண் கதாப்பாத்திரமாக நின்று எழுத முடியாமல் இருக்கிறது :rolleyes:  உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு உயிரோட்டமாக எழுதியுள்ளீர்கள் . நன்றாக இருக்கிறது . :D

 

சஹாரா , நானும் ஆண்கள் ஒரு பெண்ணை வர்ணிப்பது போன்று கவிதைகள் எழுத போய், அக்கவிதைகளை வாசித்தவர்கள்

எல்லோரும் என்னை ஆண் என்று நினைத்து விட்டார்கள் . நீங்கள் எழுதிய கதையைப்பார்த்த பின்னர் எனக்கு நிம்மதியாக

இருக்கிறது . ஒன்று சொல்லவா ? பெண்கள் ஆண்களை விட கெட்டிக்காரர்கள் . எம்மால் கற்பனையில்

ஒவ்வொரு படைப்புக்கும் உயிர் கொடுக்க முடிகிறது அல்லவா ?

 

இப்ப ஆண்கள் எனக்கு எதிராக போர் கொடி தூக்காட்டி போதும் . சும்மா சொன்னனப்பா . தப்பாக எடுக்காதீங்க !!!!! :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு உயிரோட்டமாக எழுதியுள்ளீர்கள் . நன்றாக இருக்கிறது . :D

 

சஹாரா , நானும் ஆண்கள் ஒரு பெண்ணை வர்ணிப்பது போன்று கவிதைகள் எழுத போய், அக்கவிதைகளை வாசித்தவர்கள்

எல்லோரும் என்னை ஆண் என்று நினைத்து விட்டார்கள் . நீங்கள் எழுதிய கதையைப்பார்த்த பின்னர் எனக்கு நிம்மதியாக

இருக்கிறது . ஒன்று சொல்லவா ? பெண்கள் ஆண்களை விட கெட்டிக்காரர்கள் . எம்மால் கற்பனையில்

ஒவ்வொரு படைப்புக்கும் உயிர் கொடுக்க முடிகிறது அல்லவா ?

 

இப்ப ஆண்கள் எனக்கு எதிராக போர் கொடி தூக்காட்டி போதும் . சும்மா சொன்னனப்பா . தப்பாக எடுக்காதீங்க !!!!! :unsure:

 

நன்றி மீராகுகன்

 

ஆணாக நம்மை நினைத்துக்கொண்டு எழுதுவது அதிகசாத்தியப்படுகிறது. காரணம் ஆண்களின் திறந்த மனமும் உரையாடல்களுமாக இருக்கலாம். பெண்களின் உணர்வுகளைப்பிரதிபலிப்பதற்கு இன்னும் நான் நிறையத்தூரம் பயணிக்கவேண்டி இருக்கிறது. ஏனெனில் என்னுடன் சுமார் 15 பெண்கள் வேலை செய்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரகம் சில சமயங்களில் ஒவ்வொருவரையும் புரிந்து கொள்வது என்பது மிகக்கடினமாக இருக்கிறது. ஆண்களுக்கு பொதுக்குணாதிசயம் என்பது அதிகபடியாக ஒன்றாகவே உணர முடிகிறது ஆனால் பெண்களின் குண இயல்புகளை ஒரு பெண்ணாக இருந்தும் ஆழமாக நோட்டமிடமுடிவதில்லை. ஒரு படைப்பாளியாக இன்னும் முழுமைபெற முடியாமல் நான் இருப்பதாக உணர்கிறேன். இதன் எதிர்ப்பக்கத்தையும் செவ்வனே எழுத முடிந்தால்தான் நான் இக்கதையை எழுதியதில் வெற்றி பெற்றவளாக கொள்வேன் அதனை செம்மையுற எழுதமுடியாவிட்டால் தோல்வியாகவே உணரமுடியும். எனிவே முயன்று கொண்டிருக்கிறேன்.... ஆமாம் என்னம்மா ஆண்களைச் சீண்டி வம்புக்கு இழுத்திருக்கிறீர்கள்...... :blink: :blink:

Link to comment
Share on other sites

ம்...ம்..... பெண்கள் இலகுவாக அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விடுவார்கள்.......ம்..ம்...வினோத் போல் பலபேர். அக்கா நன்றாக உள்ளது யாரினதும் கடந்த கால வாழ்வை தழுவி எழுதியதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாயத்தாமரை என்றால் சூரியனா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஆண் நண்பர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கின்ற படியால் மீனாவைப்பற்றிய விடயங்கள் தெரியாது. அவளைப்பற்றி அறிவதற்காக யாரிடமும் தகவல் சேகரித்ததும் இல்லை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் இரகசியமாக மீனாவை பத்திரப்படுத்தியது மனம்.

-----

உள்ளத்தின் அலைக்கழிவைத்தாங்க முடியாமல் “ ச்சீ வேண்டாம்” என்று உதறினாலும் போக மறுத்தவளாக உறுதியாக நின்றாள். மீனா திருமணம் செய்தாளா என்ற தகவல்கூடத் தெரியாமல்…… கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவளை தேடுகிற விசித்திரம் காதலுக்கு மட்டுந்தான் சாத்தியம்.

------

 

ஆண்களின் காதல் தோல்வியை.....

ஒரு பெண்ணாக இருந்து, அழகாக வெளிக்காட்டியுள்ளீர்கள் வல்வை சஹாரா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் மன நிலையை படமாக   காட்டும் தங்கள் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா

ரகுநாதனின் உண்மைக் காதல் போலவே உங்கள் கதையும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஆண்கள் நினைப்பினமாம்.. :unsure: அதை இவையள் பிடிப்பினமாம்.. :rolleyes: யாருக்கையா கதை விடுறீங்க.. :wub:

ஆனாலும் கற்பனைக்கதை நல்லாயிருக்கு..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35 வருடங்களாக தனது முதல்க்காதலை இன்னும் மறக்காமல் இருக்கும்

அரைக் கிழவனைக் கதாநாயகனாக்கிய பெருமை உங்களையே சாரும் :):D

Link to comment
Share on other sites

அதை வாசிச்ச பெருமை எங்களை சேரும்

கதை நல்லா இருக்குது அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணெதிரே முகிலில் போட்ட தாமரையை காற்று கண்களுக்குத் தெரியாத கரங்களால் கலைத்துக் கொண்டிருந்தது.

 

என்ற கவித்துவ வரிகளோடு கதையை முடித்திருப்பது அருமை.      பொதுவாக எல்லாருக்கும் இந்தக் கதை பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.. இது கற்பனை போலத் தெரியவில்லை!

 

நானும் ஒன்றை மறக்கலாம் என்று நினைத்துச்... சில வேளைகளில் மறந்து விட்டதாக நினைத்து எனது முதுகில் நானே தட்டிக்கொண்ட நாட்கள் பல உண்டு!

 

ஆனால் அவளை.. யாருடனும் ஒப்பிட்டுப் பார்த்து.. ஒப்பிட்டது மட்டும் இல்லை!

 

சில வேளைகளில்.. நள்ளிரவில்.. அவளது குரல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்து விடுவதும் உண்டு..!

 

இரவின் மிகுதி முழுவதையும்.. ஆகாயத் தாமரை கலைந்து போகும் நேரம் எடுத்துக்கொள்ளும்!

 

சில நினைவுகளை மறக்க முயன்றாலும் முடியாது...!

 

கல்லறை வரை காவிக்கொண்டு செல்ல வேண்டியது தான்! :o

 

அருமையான ஒரு கதைக்கு நன்றிகள்..வல்வை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா, இரண்டா வானத்தில் பூத்தது ஏராளம்!

ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல. உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்த அனுபவம் இல்லாவிடினும், சிலவேளை சிலரை மீண்டும் சந்திக்க வேண்டும் போல் இருக்கும். 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்..... பெண்கள் இலகுவாக அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விடுவார்கள்.......ம்..ம்...வினோத் போல் பலபேர். அக்கா நன்றாக உள்ளது யாரினதும் கடந்த கால வாழ்வை தழுவி எழுதியதா?

 

யாருடைய கடந்தகாலத்தையும் என்று குறிப்பாக சொல்லமுடியாது ஆனால் பல ஆண்களின் வெளிப்படையான பேச்சுக்களை வைத்து எழுதியது பலருக்கு இது நியமாக இருக்கலாம் புலிக்குரல் :)

ஆகாயத்தாமரை என்றால் சூரியனா ?

 

மருது இடத்திற்கேற்ப ஆகாயத்தாமரையை உவமிப்பதுண்டு. இந்தக்கதையில் ஓட்டத்தில் சூரியனுக்கும் ஆகாயத்தாமரைக்கும் மிக எட்டம். :)

ஆண்களின் காதல் தோல்வியை.....

ஒரு பெண்ணாக இருந்து, அழகாக வெளிக்காட்டியுள்ளீர்கள் வல்வை சஹாரா. :)

 

பெண்களிடம் இதன் மறுபக்கம் பற்றிய தேடலை ஆரம்பித்துள்ளேன்  ஏதாவது அகப்படுகிறதா என்று பார்ப்போம் :)

ஆண்களின் மன நிலையை படமாக   காட்டும் தங்கள் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

 

நன்றி நிலாக்கா

சகாரா

ரகுநாதனின் உண்மைக் காதல் போலவே உங்கள் கதையும் இருக்கிறது.

 

ரகுநாதனின் பதிவை வாசிக்கவேண்டும் என்று  இருந்தேன் நல்ல காலம் ஞாபகப்படுத்தினீங்கள் ஈழப்பிரியன்  சனி ஞாயிறு கண்டிப்பாக வாசித்து பதிவிடவேண்டும்.

ஆண்கள் நினைப்பினமாம்.. :unsure: அதை இவையள் பிடிப்பினமாம்.. :rolleyes: யாருக்கையா கதை விடுறீங்க.. :wub:

ஆனாலும் கற்பனைக்கதை நல்லாயிருக்கு..! :D

 

எல்லா ஆண்களும் சரண்டர் இவர் மட்டும் என்ன சிலுப்பிக் கொண்டு நிற்கிறார் :icon_mrgreen:

35 வருடங்களாக தனது முதல்க்காதலை இன்னும் மறக்காமல் இருக்கும்

அரைக் கிழவனைக் கதாநாயகனாக்கிய பெருமை உங்களையே சாரும்

 

எல்வோருமே கதாநாயகர்கள்தானே இதில் அநியாயத்திற்கு அரைக்கிழடை கதாநாயகன் ஆக்கியதாக சொல்லக்கூடாது வாத்தியார்.

அதை வாசிச்ச பெருமை எங்களை சேரும்

கதை நல்லா இருக்குது அக்கா

 

நன்றி சுவி அண்ணா......

கண்ணெதிரே முகிலில் போட்ட தாமரையை காற்று கண்களுக்குத் தெரியாத கரங்களால் கலைத்துக் கொண்டிருந்தது.

 

என்ற கவித்துவ வரிகளோடு கதையை முடித்திருப்பது அருமை.      பொதுவாக எல்லாருக்கும் இந்தக் கதை பிடிக்கும்.

 

அநேகமானர்வளின் கடந்தகால அனுபவத்தை தொட்டுள்ளேன் சேயோன் எது எப்படியாக இருந்தாலும் 89 வீதமானர்களின் கடந்தகாலத்தை அசைபோட இக்கதை வழி சமைத்திருக்கும்.

பதிவிட்ட மிகுதிப்பேருக்கு மாலையில் வந்து பதிவிடுகிறேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கதைக்கு சகாரா....

 

தொடர்ந்து எழுதவும்

ஆனால் 

ஆணாக எங்கள் நிலையிலிருந்து உங்களால் சிந்திக்கமுடியாது..

எதற்கு இந்த வேண்டாத வேலை......... :lol:  :D

 

இது ஒரு ஆணின் பார்வை.... :lol:  :icon_idea:

http://www.yarl.com/forum3/index.php?/topic/153858-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ பேருக்குள்ள கனன்றுகொண்டிருந்த நெருப்பை சகாரா ஊதி விட்டிருக்கிறா. இது இனி கொழுந்து விட்டு எரிந்து காட்டுத்தீயாகாமல் எப்படி அணைப்பது என்று சகாராதான் பதில் சொல்ல வேணும். கதை நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.. இது கற்பனை போலத் தெரியவில்லை!

 

நானும் ஒன்றை மறக்கலாம் என்று நினைத்துச்... சில வேளைகளில் மறந்து விட்டதாக நினைத்து எனது முதுகில் நானே தட்டிக்கொண்ட நாட்கள் பல உண்டு!

 

ஆனால் அவளை.. யாருடனும் ஒப்பிட்டுப் பார்த்து.. ஒப்பிட்டது மட்டும் இல்லை!

 

சில வேளைகளில்.. நள்ளிரவில்.. அவளது குரல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்து விடுவதும் உண்டு..!

 

இரவின் மிகுதி முழுவதையும்.. ஆகாயத் தாமரை கலைந்து போகும் நேரம் எடுத்துக்கொள்ளும்!

 

சில நினைவுகளை மறக்க முயன்றாலும் முடியாது...!

 

கல்லறை வரை காவிக்கொண்டு செல்ல வேண்டியது தான்! :o

 

அருமையான ஒரு கதைக்கு நன்றிகள்..வல்வை! :D

 

என்ன ஒரு ஒப்புதல் வாக்குமூலம் :rolleyes::lol:

 

ரோமியோ பலருடைய வாய்மொழிமூலம் எடுத்த கருதான் கதை இன்னாரடையது என்று குறிப்பிடமுடியாது சம்பவங்களை சூழலை மட்டுமே நாங்கள் கிரியேட் பண்ணினமாக்கும். மற்றப்படி எல்லாம் பல வாலிபக்கிழவர்களின் வாக்குமூலங்கள்தான் :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா, இரண்டா வானத்தில் பூத்தது ஏராளம்!

ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல. உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல!!

 

ஐயே.... தீராத விளையாட்டுப்பிள்ளையாக்கும். வானத்தில தெரிஞ்சதையெல்லாமா காதலிப்பீங்க........ :lol:

 

பட்டாம்பூச்சி பிடிக்கிற சின்னப்பையன்தான் ஞாபகத்தில வருது... பிடிச்ச பட்டாம் பூச்சிகளின்  செட்டைகளைக் காயப்படுத்துறது.... கண்ணாடிக்குடுவைக்குள் அடைச்சுவைச்சு வேடிக்கை பார்க்கிறது இதெல்லாம்  காதலுக்குள்ள வராது கிருமி.... :icon_mrgreen: :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

அக்கா இதை தொடர் கதை ஆக்குங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரமே உங்கள் கதையை வாசித்திருந்தாலும் என் கணனியின் சிக்கலால் உங்களுக்கு எழுத மறந்துவிட்டேன். வித்தியாசமாக இருக்கிறது கதையின் எழுத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.