Jump to content

துப்புத் துலக்கியது எப்படி? இப்படி? - பட்டுக்கோட்டை பிரபாகர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுஜாதாவின் கதைகள் கணேஸ் + வஸந் , தமிழ்வாணணின் கதைகள் சங்கர்லால் எல்லாம் நல்ல கதைகள்...!

ஆயினும் இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் பட்டி விக்கிரமாதித்தன் கதைகள்...!!

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி!- 21: மரமே... நீ சாட்சி!

pkp_2560507f.jpg

பல குற்ற வழக்குகளில் குற்ற வாளியைக் கண்டுபிடிக்க காவல் துறை பல வருடங்கள் பல விதமாக போராடும். கடைசியில் ஒரு சின்ன தடயம் குற்றவாளியை நோக்கி விரல் நீட்டும்.

அதே போல தடயவியல் துறை வளர்ச்சி அடையாத அல்லது அப்படி ஒரு துறையே தொடங்கப்படாத காலங் களில் நிகழ்ந்த பல குற்றங்கள் கடைசி வரை கண்டுபிடிக்கப்படாமல், அதன் கோப்புகளை பரணில் போட்டுவிடுவார் கள். இப்படிப்பட்ட வழக்குகளை ‘கோல்ட் கேசஸ்’ (cold cases) என்பார்கள்.

அப்படி கிடப்பில் போடப்பட்ட பல பழைய வழக்குகள் தடயவியல் துறை நவீனமடைந்த பிறகு, தூசி தட்டப்பட்டு பல பத்தாண்டுகள் கழித்தும் குற்றாவாளி களைத் தேடிப் பிடித்துத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு வழக்கைப் பற்றிப் பார்க்கலாம்.

லண்டனில் ஃப்ரெட் - சார்கலாட்டி கிராப் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதி. முதலில் மண வாழ்க்கை மேகம் ஒன்பதில்தான் மிதந்து கொண்டிருந்தது. போகப் போக சர்க்கரை போடாத காபியாக கசக்கத் தொடங்கியது. அடிக்கடி வாக்குவாதம். சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்கள் தலையிட்டு சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.

விவகாரம் விவாகரத்து வரை சென்றது. பிரிந்த பிறகு இரண்டு பேருக்கும் மனசாட்சியின் உறுத்தல். ‘‘காதலித்தோமே.. அந்தக் காதலுக்கு என்ன அர்த்தம்?’’ என்று தனித்தனி யாகப் புழுங்கினார்கள். மீண்டும் சந்தித் தார்கள். மனம்விட்டுப் பேசினார்கள். விவாகரத்தை ரத்து செய்துவிட்டு மீண் டும் திருமணம் செய்துகொண்டார்கள். இது சிறுகதையாக இருந்தால் இத் துடன் சுபம்.

ஆனால், கதை முடியவில்லை. கொஞ்ச நாட்கள் போனதும் மீண்டும் அவர்களுக்குள் தகராறு. சென்ற முறை யார் விட்டுக் கொடுப்பது என்கிற ஈகோ பிரச்சினை. இந்த முறை, பிரச்சினைக்குக் காரணம் இன்னொரு பெண். விவாக ரத்து ஆகி பிரிந்து இருந்தபோது ஃப்ரெட்டுக்கு முளைத்த ஒரு காதல் ரகசியமாக தொடர்வதை ஒரு மனைவி எப்படி அனுமதிப்பாள்?

ஒரு நல்ல காலைவேளையில் சார் கலாட்டி வீட்டை விட்டு வெளியேறினாள். அவள் வீட்டை விட்டுச் சென்றதை, தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சொல்லி அவளை சமாதானப்படுத்தச் சொன்னான் ஃப்ரெட்.

ஆனால், யாராலும் அவளைத் தொடர்புகொள்ள முடிய வில்லை. அவள், தான் இருக் குமிடத்தை யாரிடமும் சொல் லாமல் எங்கோ சென்றுவிட் டாள். புதிய காதலியுடனும் ஒன்றமுடியாமல், மனைவியை யும் மறக்க முடியாமல் தினம் புழுக்கத்துடனேயே ஃப்ரெட் வாழ்ந்து வருகிறான் என்று இங்கேகூட கதையை முடிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், உண்மைக் கதை இன் னும் முடியவே இல்லை. எங்கோ சென்றுவிட்ட மனைவியை அவளது தோழியான கார்லி ரோஸ்லின் விடாமல் தேடிக் கண்டுபிடிக்க முயன்றாள். ஃப்ரெட்டை சந்தித்து பல முறை விசாரித்தாள். ‘அதெப்படி ஒரு சின்ன தகவல்கூட இல்லாமல் ஒரு பெண் தொலைந்து போக முடியும்?’ என்று அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தோழி ஃப்ரெட்டின் புதிய காதலியான விண்ட்லா மேரியை தனிமையில் சந்தித் தாள். ‘‘எனக்கு ஃப்ரெட் மேல் சந்தேக மாக இருக்கிறது. அவன்தான் அவளை ஏதாவது செய்திருக்க வேண்டும்’’ என்று சொன்னாள்.

‘‘ஒருவேளை உன் புதிய காதலுக் காக தன் காதல் மனைவியை அவன் கொலை செய்திருந்தால், நாளைக்கு இன் னொரு பெண்ணுக்காக உன்னையும் அவன் கொலை செய்ய மாட்டான் என்று என்ன நிச்சயம்?’’ என்று கார்லி ரோஸ் லின் கேட்ட கேள்வி விண்ட்லா மேரியை சிந்திக்க வைத்தது. அவளுக்குள் உயிர் பயத்தை விதைத்தது. இருவரும் உண்மையைக் கண்டுபிடிக்கத் தீர் மானித்து ஒரு திட்டம் வகுத்தார்கள்.

ஃப்ரெட்டை ஒரு விடுமுறைக்கு ஒரு படகு வீட்டுக்கு அழைத்துச் சென்றாள் மேரி. அவனுக்கு நிறைய மது ஊற்றிக் கொடுத்தாள். தன்னுடன் சரசமாட அனு மதித்தாள். அவன் இரண்டு விதமான மயக்கத்தில் இருந்தபோது மெதுவாக ஆரம்பித்தாள்.

‘‘நீ எனக்காக எது வேண்டுமானாலும் செய்வாயா?''

’’நிச்சயமாக செய்வேன்!''

‘‘எனக்காக ஒரு கொலை கூட செய்வாயா?''

‘‘ஏற்கெனவே உனக் காக ஒரு கொலை செய்து விட்டேன் கண்ணே…'' என்று அவன் உளறி விட்டான்.

அவள் அதிர்ச்சியில் உறைந்துபோனாள். தன் அதிர்ச்சியை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு, அவன் செய்கைக்கு மகிழ்ந்தவள்போல காட்டிய படியே ‘‘எப்படிக் கொலைசெய்து, பிணத்தை எப்படி அப்புறப்படுத்தினாய்?’’ என்று கேட்டாள்.

‘‘ஊருக்கு வெளியே இருந்த ஒரு காட்டுப் பகுதிக்கு பிக்னிக் அழைத் துச் சென்று, தனிமையான ஓர் இடத் தில் அவள் கழுத்தை நெரித்துக் கொன்றேன். பிறகு, தயாராக வாங்கிச் சென்ற பெட்ரோலை அவள் சடலத்தின் மீது ஊற்றி எரித்தேன். பொறுமையாகக் காத்திருந்து ஒரு எலும்புத் துண்டைக்கூட விட்டுவைக்காமல் பொறுக்கி எடுத்து, ஆற்றில் வீசிவிட்டேன். அதன் பின்னர் மனைவி கோபித்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டதாக எல்லோரிடமும் சொன் னேன்’’ என்று நடந்ததை சொன்னான் ஃப்ரெட்.

மேரியும், ரோஸ்லினும் காவல் துறைக்குச் சென்று ஓர் போலீஸ் அதி காரியை அணுகி எல்லாவற்றையும் சொன்னார்கள். அவனே ஒப்புக்கொண்டி ருந்தாலும் ஆதாரம் தேவைப்பட்டது. கொலை நடந்த காட்டுப் பகுதிக்குச் சென்றுத் தேடினார்கள்.

கொலை நடந்த வருடம் 1981. உண்மை வெளிப்பட்ட வருடம் 1990. ஒன்பது ஆண்டுகள் ஆனதால் எந்தத் தடயமும் போலீஸுக்குக் கிடைக்கவில்லை. அதே போல எலும்புத் துண்டுகள் வீசப்பட்ட ஆற்றிலும் தேடினார்கள். எதுவுமே கிடைக்கவில்லை.

கைது செய்து அதிரடியாக விசாரிக்க முடிவுசெய்து, ஃப்ரெட்டைக் கைது செய்தார்கள். ‘‘மேரியிடம் அப்படி நான் எதுவும் சொல்லவே இல்லை. தற்போது மேரிக்கும் எனக்கும் சில பிரச்சினைகள். அதனால் என்னைப் பழிவாங்க இப்படிப் பொய் சொல்கிறாள்’’ என்று சாதித்தான்.

அவன் சொல்வதுதான் பொய் என்பது புரிந்தாலும் அதை நிரூபிக்க முடியாமல் போலீஸார் தவித்தார்கள். அந்தக் காவல் அதிகாரி கொலை நடந்த காட்டுப் பகுதியில் மீண்டும் மீண்டும் சுற்றி வந்தார். ஒரு விஷயம் மட்டும் அவரை ஈர்த்தது.

கொலை நடந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு மரம் மட்டும் வளர்ச்சி குறை வாக இருப்பதைப் பார்த்தார். தடயவியல் துறை, விவசாய விஞ்ஞானிகளுடன் களமிறங்கியது. வளர்ச்சி குன்றிய மரத்தை சோதனை செய்தார்கள். பெட்ரோலியப் புகை படிந்ததால் குறிப் பிட்ட அந்த ஒரு மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த ஆராய்ச்சி முடிவு மற்றும் மேரி யின் வாக்குமூலம் இவற்றின் அடிப்படை யில் கொலை செய்யப்பட்டவரின் உடல் இல்லாமலேயே சந்தர்ப்ப சாட்சியங் களின் அடிப்படையில் ஃப்ரெட்தான் கொலைகாரர் என்று கோர்ட் தீர் மானித்து, 75 வருடங்கள் சிறைத் தண்டனை அளித்தது.

இதனால் ஃப்ரெட் ஒரு பாடம் கற்றுக் கொண்டிருப்பான். இனிமேல் கொலை செய்தால் பிணத்தை எரிக்கும்போது மரங்கள் இல்லாத பகுதியில் வைத்து எரிக்க வேண்டும் என்று. ஆனால், நவீன தடயவியல் துறையின் முன்னேற்றத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியும் என்பதே உண்மை!

- வழக்குகள் தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-21-மரமே-நீ-சாட்சி/article7688399.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி! 22 - மனித மிருகங்கள் ஜாக்கிரதை!

eppadi_2569209f.jpg

குற்றங்கள் பல வகைப்படும். பணத் துக்காக, புகழுக்காக, பதவிக்காக, கவுரவத்துக்காக, பகைக்காக ஏன் பொழுதுபோக்குக்காகக் கூட குற்றங்கள் உலகெங்கிலும் நிகழ்ந்து வருகின்றன. இதில் எதிலும் சேராத இன்னொரு வகை இருக்கிறது. அது மனநலம் பாதித்தவர்கள் செய்யும் குற்றங்கள்!

தம் வாழ்வில் ஏற்பட்ட ஏதோ ஒரு பாதிப் பின் காரணமாக சட்டம், சம்பிரதாயம் எதற்கும் கட்டுப்படாமல் பயங்கரமான குற்றச் செயல்களைச் செய்யும் இவர் கள் இந்தச் சமுதாயத்துக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்கள்.

இதிலும் இரண்டு வகைகள் உண்டு. சைக்கோ என்று வகைப்படுத்தப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட இவர்களில் வெளிப்படையாக தெரிபவர்கள் ஒரு வகை. வெளிப்படையாகத் தெரியாத வர்கள் மற்றொரு வகை.

குடும்பத்திலும் சரி, அவர்களோடு பழகுபவர்களுக்கும் சரி, அவர்கள் சைக்கோ குற்றவாளிகள் என்பது சிறிதள வும் தெரியாது. தமிழ் சினிமாவில் ‘மூடுபனி’, ‘நூறாவது நாள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படங்களின் கதாநாயகர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

அப்படி ஒரு சைக்கோ குற்றவாளிதான் டட்ரோக்ஸ். பெல்ஜியம் நாட்டின் புரூ ஸல்ஸ் நகரைச் சேர்ந்தவன். வெளி உலகத்துக்குத் தெரியாமல் அவன் செய்துவந்த குற்ற லீலைகள் வெளிப் பட்டபோது நாடே அதிர்ந்தது.

சில நடைமுறை காரணங்களால் டட்ரோக்ஸ் மீதான வழக்கு 8 ஆண்டு களுக்கு நத்தை வேகத்தில் ஊர்ந்த போது, ஆத்திரம் அடைந்த பொது மக்கள் காவல்துறையின் மெத்தனத் தைக் கண்டித்து புரூஸல்ஸ் நகரத்தில் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி, தங்கள் எதிர்ப்பைக் காட்டினார் கள். எத்தனை பேர் தெரியுமா? 3 லட்சத்து 50 ஆயிரம் பேர். டட்ரோக்ஸ் அப்படி என்ன செய்தான்?

1996-ம்

வருடம். மார்ச் 28. அந்த அழகான பள்ளிக்கு வெளியில் ஒரு மரத்தடியில் தனது காரை நிறுத்திக் காத்திருந்தான் டட்ரோக்ஸ். அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாணவி சபீன், வகுப்பு முடிந்து நடந்து வந்தாள். சபீன் அழகான கண்களையும், சுருட்டை முடியையும் கொண்ட 12 வயதே நிரம் பிய சிறுமி. சபீனை நெருங்கிய டட் ரோக்ஸ் அவளைத் தடுத்து நிறுத்தினான்.

‘‘உன் பெயர்தானே சபீன்?’’

‘‘ஆமாம்’’ என்றாள் ஆச்சரியமாக.

‘‘உன் தந்தை ஒரு போலீஸ் அதிகாரிதானே?’’

‘‘ஆமாம். யார் நீங்கள்?’’ என்றாள் அப்பாவியாக.

‘‘நானும் ஒரு போலீஸ் அதிகாரிதான். ஆனால், ரகசிய போலீஸ். உன் தந்தைதான் என்னை அழைத்து ஒரு வேலை கொடுத்திருக்கிறார்.’’

‘‘என்ன வேலை?’’

‘‘உன்னைப் பாதுகாக்கும் வேலை. அதாவது ஒரு கடத்தல் கும்பல் உன்னைக் கடத்தி கொலை செய்யப் போவதாகவும், அப்படி செய்யாமலிருக்க ஒரு குறிப்பிட்ட தொகை பணம் தர வேண்டும் என்றும் உன் தந்தையிடம் கேட்டிருக்கிறார்கள்.’’

‘‘ஐயையோ!’’ மிரண்டாள் அந்த சின்னப் பெண்.

‘‘பயப்படாதே. அப்படி எதுவும் நடக்க விடாமல் தடுக்கத்தான் என்னை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடத்தல் கும்பலைப் பிடிக்கும்வரை உன்னைப் பத்திரமாக ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கச் சொல்லியிருக்கிறார். போகலாமா?’’

தயங்கித் தயங்கி அவனுடன் காரில் ஏறினாள் சபீன்.

கார் நகர எல்லையைக் கடந்து நடமாட் டமே இல்லாத இடத்தில் தனிமையாக இருந்த ஒரு பழைய வீட்டுக்கு முன்பாகப் போய் நின்றது. அந்த இடமே பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.

அந்த வீட்டுக்குப் பின்புறத்தில் பூமிக்கு அடியில் கான்கிரீட்டால் கட்டப் பட்ட ஒரு பதுங்கு குழி இருந்தது. படிகள் வழியாக அங்கே அழைத்துச் சென்றான். அங்கே ஒரு ஓரத்தில் டாய்லெட் வசதி இருந்தது.

‘‘கொஞ்ச நாளைக்கு நீ இங்கேதான் தங்க வேண்டும்.’’

‘‘எங்கப்பா, அம்மாவிடம் முதலில் போன் பேச வேண்டும்!’’

‘‘நோ! அந்தக் கடத்தல்காரர்கள் உன் வீட்டு போனை ஒட்டுக் கேட்கிறார்கள். நீ போன் பேசினால் நீ இருக்குமிடம் தெரிந்துகொண்டு, இங்கே வந்து தூக்கிச் சென்றுவிடுவார்கள்.’’

‘‘சரி சரி… லெட்டர்?’’

‘‘லெட்டர் எழுதி என் னிடம் கொடுத்தால் சேர்த்து விடுகிறேன்!’’

அந்த சைகோ சொன்ன கதையை நம்பிய சபீன், அந்த சின்ன பதுங்கு குழி அறை யிலேயே வாழத் தொடங்கி னாள். அவள் தன் குடும்பத் துக்கும், தோழிகளுக்கும் எழுதிக் கொடுத்த கடிதங்களை அவன் ரகசியமாக கிழித்து எரித்தான்.

சபீனுக்கு உணவுடன் சேர்த்து மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து அவ ளுடன் பாலியல் வல்லுறவு கொண்டான் அந்தக் கொடூரன். தனக்கு நடக்கும் கொடுமைகளை சரியாக புரிந்துகொள்ள இயலாத அவளைத் தொடர்ந்து 70 நாட்களுக்கும் மேல் வதைத்தான்.

சில நாட்களில் ஏதோ தப்பு நடப்பது அவளுக்குப் புரிந்தது. பயம் அவளை ஆக் கிரமித்தது. தனக்கு போரடிப்பதாகவும், யாராவது ஒரு பள்ளித் தோழியையாவது பார்க்க வேண்டும் என்றாள்.

அடுத்த நாளே அவளுடைய பள்ளித் தோழி லட்டீட்டா அந்தப் பதுங்கு குழியில் இருந்தாள். அவளிடம் வேறு வகையான பொய்கள் சொல்லி கடத்தி வந்துவிட்டான். நீங்கள் இருவரும் என் பாதுகாப்பில்தான் இருந்தாக வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டியதோடு, அந்தத் தோழியுடனும் பலவந்தமாக உறவுகொண்டான்.

லட்டீட்டாவைக் கடத்தியபோது அவன் பயன்படுத்திய காரின் எண்ணை ஒருவன் பார்த்திருந்தான். லட்டீட்டாவின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸ் பள்ளியிலும் பல இடங்களிலும் விசாரித்தபோது, கார் எண்ணைப் பார்த்தவன் சொல்லிவிட்டான். அடுத்த சில மணி நேரத்தில் டட்ரோக்ஸின் வீட்டு வாசலுக்கு வந்து நின்றன போலீஸ் வாகனங்களும் மீடியா வாகனங்களும்.

அவனைக் கைது செய்து விசாரிக்க விசாரிக்க பல அதிர்ச்சியான தகவல்கள் வந்தன. ஏற்கெனவே இதே போல நான்கு இளம் பெண்களைக் கடத்தி வந் திருக்கிறான். அவர்களில் இருவர் பதுங் குக் குழியில் இருந்தபோது டட்ரோக்ஸ் ஒரு கார் திருட்டு வழக்கில் போலீஸிடம் சிக்கினான். அந்த வழக்கில் இருந்து விடு பட்டு அவன் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த இரண்டு பெண்களும் பட்டினியில் இறந்து உடல்களாகக் கிடந்தனர். அந்த உடல்களை தன் தோட்டத்திலேயே புதைத்திருக்கிறான். இன்னும் இரண்டு பெண்களைக் கடத்தி வந்து பாலியல் வன்முறைக்குப் பின் உயிரோடு புதைத்திருக்கிறான்.

கோர்ட்டில் அவன் கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல், நாடு முழு வதும் சிறுமிகளை அனுபவிக்கும் வக்கிரப் புத்தியுடன் ஓர் அமைப்பே இயங்கிக் கொண்டிருப்பதாகவும், அதில் தான் ஓர் உறுப்பினர் என்று சொன்னான். விசாரித்துப் பார்த்த காவல்துறை அவன் பொய் சொல்வதாக சொன்னார்கள். கோர்ட் அவனுக்கு மரண தண்டனை கொடுத்தது.

2006-ல்

சபீன் தன் தந்தையின் விருப் பப்படி அவரைப் போலவே ஒரு போலீஸ் அதிகாரியானாள். தன் பதுங்கு குழி அனு பவங்களை ஒரு புத்தகமாக எழுதினாள். அந்தப் புத்தகத்தின் தாய் மொழித் தலைப்பு: ‘I was twelve years old, I took my bike and I left for School’ ஆங்கிலத் தலைப்பு: I Choose to Live.

அந்தப் புத்தகம் இதுவரை 22 மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளிவந்த வருடத்தில் ஐரோப்பாவில் மிக அதிக எண்ணிக்கையில் விற்கும் பெஸ்ட் செல்லர் வரிசையில் இடம் பிடித்தது.

- வழக்குகள் தொடரும்

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-22-மனித-மிருகங்கள்-ஜாக்கிரதை/article7715493.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி! 23 - தீவிரமிருந்தால் முடியும்!

pkp_2577896f.jpg
 

தனியார் துப்பறியும் நிறுவனம் என்பது முன்பு ஆங்கில திரைப்படங்களில் மட்டும் இருந்தது. இப்போது இந்தியாவில் அநேகமாக அத்தனை பெரிய நகரங்களிலும் நிறைய துப்பறியும் நிறு வனங்கள் இயங்கிக் கொண்டிருக் கின்றன.

தமிழில் எழுதப்பட்ட, எழுதப்படுகிற துப்பறியும் நாவல்களில் கற்பனையாக உருவாக்கப்பட்ட பல கதாப்பாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறார்கள்.

அதே போல சர்வதேச அளவில் புகழ் பெற்ற துப்பறிவாளன் ஜேம்ஸ்பாண்ட். இந்தப் பாத்திரத்தைப் படைத்தவர் இயன் ஃபிளெமிங். துறுதுறுவென்று ஆராய்ச்சி மனப்பன்மையுடன் யாரா வது செயல்பட்டால் ‘‘இவரு பெரிய ஜேம்ஸ்பாண்ட்’’ என்று கிண்டல் செய் யும் அளவுக்குப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட்டை வைத்து ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கிழக்கு லண்டனில் கிறிஸ்டியன் போத்தா என்கிற நிஜ ஜேம்ஸ்பாண்ட் ஒரு வெற்றிகரமான துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் துப்பறிந்த வழக்குகளைப் பற்றி ‘The Shallow Grave’ என்னும் புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். அதில் இருந்து ஒரு வழக்கைப் பார்க்கலாம்.

2004-ம் ஆண்டு. பிரிக்ஸ்டன் நகரத்தில் வசித்த ஸ்டீன்கெம்ப் தனக்கு வரவேண்டிய பெரிய கடன் தொகையை வசூலிப்பதற்காக கென்னத் டவுனி என்னும் நண்பரைப் பார்க்க காரில் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை. மறுநாள் வரை அங்குமிங்கும் தேடிப் பார்த்த அவரின் மகள் சமந்தா காவல்துறையிடம் சென்றார்.

காவல்துறை அதிகாரிகள் ஸ்டீன் கெம்ப் கடைசியாகச் சந்தித்த கென்னத் டவுனி வீட்டுக்கு வந்து விசாரித்தார்கள். தன் வீட்டுக்கு வந்த ஸ்டீன்கெம்ப் பணத்தை வாங்கிக்கொண்டு உடனே புறப்பட்டுவிட்டதாகவும், ஜூஸ் குடிக் கிறீர்களா என்று கேட்டதற்கு, ஓர் அவசர வேலை திடீரென்று வந்துவிட்டதால் நேரமில்லை என்று சொல்லிப் புறப்பட்ட தாகவும் சொன்னார். அவருக்குக் கடனைத் திருப்பித் தருவதற்காக வங்கியில் பணம் எடுத்து வைத்திருந்த விவரத்தையும் காட்டினார்.

அவருக்குத் தீடீரென்று வந்த அந்த அவசர வேலைதான் என்ன? அவசர வேலை என்றால் அது அலைபேசி மூல மாகத்தான் தெரிவிக்கப்பட்டிருக்க வேண் டும். ஸ்டீன்கெம்ப்பின் குடும்பத்தினர் யாரும் அவரை அலைபேசியில் அழைக்க வில்லை என்றார்கள். அவரின் அலை பேசி எண்ணை வைத்துக்கொண்டு அதற்கு வந்த அழைப்புகளின் விவரங் களை சேகரித்தபோது ஒரு தகவல் கிடைத்தது.

கென்னத் டவுனி வீட்டுக்கு அவர் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பாக ஒரு புதிய எண்ணில் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருந்தது. அது ஒரு பொது தொலைபேசியின் எண். ஆகவே, அதற்குமேல் அழைத்த நபரைப் பற்றி வேறெதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால், அந்த நபர் தான் ஸ்டீன்கெம்ப் பின் மர்மமான தலைமறைவுக்கான காரணம் என்று மட்டும் புரிந்தது. அந்த நபர் போனில் ஏதோ ஒரு பொய்யான அதிர்ச்சி தரும் தகவலைச் சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லியிருக்க வேண் டும். அங்கே இவர் சென்றதும் இவரைக் கடத்தியிருக்க வேண்டும். இப்படி ஊகித்த காவல்துறை அதிகாரிகள் பணயத்தொகை கேட்டு அந்த மர்மநபரிடம் இருந்து தகவல் வரும் என்று எதிர்பார்த்தார்கள்.

ஸ்டீன்கெம்ப்பின் வீட்டில் இருந்த தொலைபேசிக்கு வரும் அழைப்புகளை ஒட்டுக் கேட்பதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டது. இரண்டு, மூன்று நாட்கள் கடந்தும் அப்படி எந்த அழைப்போ, மிரட்டல் கடிதமோ வரவில்லை.

மூன்றாவது நாள் ஊருக்கு வெளி யில் இருந்த ஓர் உணவு விடுதியின் பார்க் கிங் பகுதியில் ஒரு கார் அதன் உரிமை யாளரால் எடுத்துச் செல்லப்படாமல் காலையில் இருந்து நிற்பதாக ஓட்டல் நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் தந்தது. போலீஸ் அந்த காரை கைப்பற்றி விசாரித்தபோது அது ஸ்டீன்கெம்ப்பின் கார் என தெரியவந்தது. மாற்றுச் சாவி போட்டுத் திறந்து பார்த்தபோது, அவர் அன்றைய தினம் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்த சிறிய பிரீஃப்கேஸும் அலைபேசியும் இருந்தன. பெட்டியில் கென்னத் டவுனியிடம் வசூலித்த பணம் இல்லை.

போனில் அழைத்த மர்ம நபருக்கு ஸ்டீன்கெம்ப் பெரிய தொகையை வசூல் செய்துவிட்டுத் திரும்பப் போகிற தகவல் தெரிந்திருக்க வேண்டும். அத னால் திட்டமிட்டு வரவழைத்து பணத் தைப் பறித்துக்கொண்டு அவரைக் கொலை செய்திருக்க வேண் டும். போலீஸ் தலையிட்டதை அறிந்ததால் அவரின் உடை மைகளை இப்படி போட்டு விட்டுப் போயிருக்க வேண்டும் என்று கருதினார்கள்.

அந்த காரில் கைரேகைகள் எடுத்தார்கள். அந்த உணவு விடுதியில் பலரை விசாரித் தார்கள். நகரத்தில் நிகழ்ந்த கொலைகளை ஆராய்ந்தார் கள். அடையாளம் தெரியாமல் கைப்பற் றப்பட்டப் பிணங்களை அடையாளம் காட்டச் சொல்லி குடும்பத்தினர் அலைக்கழிக்கப்பட்டார்கள்.

நாட்கள் வாரங்களாகின. வாரங்கள் மாதங்களாகின. மாதங்கள் வருடங்களா கின. ஸ்டீன்கெம்ப் பற்றி எந்த ஒரு தகவ லும் இல்லை. அவர் எங்கோ உயிருடன் இருப்பதாக நினைத்து நம்பிக்கையுடன் வாழ்வதா? இறந்துவிட்டார் என்றெண் ணித் துக்கப்படுவதா என்று புரியாமல் அந்தக் குடும்பம் மன உளைச்சலில் தத்தளித்தது.

அவரின் மகள் சமந்தா நம் ஜேம்ஸ் பாண்ட் கிறிஸ்டியன் போத்தாவிடம் வந்தார். அவர் இதில் தீவிரமாக இறங் கினார். 8 ஆண்டுகளாக விடை தெரியாத இந்த வழக்கின் கேள்விகளுக்கு இரண்டே நாட்களில் விடை கண்டு பிடித்தார். குற்றவாளி பிடிபட்டான். கோர்ட்டில் நிறுத்தப்பட்டு அவனுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. காவல் துறை கிறிஸ்டியன் போத்தாவைப் பாராட்டியது.

ஸ்டீன்கெம்ப்புக்கு

என்ன நடந்தது? கிறிஸ்டியன் போத்தா குற்றவாளியை எப்படிக் கண்டுபிடித்தார்?

முதலில் காவல்துறையிடம் இருந்து அவர்களின் விசாரணை அறிக்கை களைக் கேட்டுப்பெற்று அவற்றை நிதான மாகப் படித்தார் போத்தா. கடைசியாக ஸ்டீன்கெம்ப்பைச் சந்தித்த கென்னத் டவுனியின் வீட்டுக்குச் சென்றார். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் விசா ரிக்க, கென்னத் டவுனி காலி செய்து விட்டுப் போனபிறகு வேறு எவரும் குடி வரவில்லை என்றும், சாவி தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்கள். வீட் டைச் சோதனை செய்தார் போத்தா.

அந்தத் தூசியடைந்த வீட்டில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன தடயம் கிடைக்கும் என்கிற சந்தேகத்துடன் நுழைந்தார். எந்தப் பொருளும் கிடைக்க வில்லை. பல மணி நேரம் நுணுக்கமாக பார்த்தபடி சுற்றி வந்தவரின் கண்ணில் அது தென்பட்டது.

ஹாலில் போடப்பட்டிருந்த கார்ப் பெட்டின் ஒரு ஓரம் சிறிதளவு கத்தரிக் கப்பட்டிருப்பது தெரிந்தது. முதல் சந் தேகம் விழுந்தது. ஒரு கார்ப்பெட் கிழிந் திருக்கலாம்; நைந்து போயிருக்கலாம்; சுருண்டிருக்கலாம். ஒரு பகுதி மட்டும் ஏன் கத்தரிக்கப்பட வேண்டும்? அடுத்து வீட்டின் வெளிப்புறமாகச் சுற்றி வந்தார். தோட்டத்தில் நடப்பதற்காகப் போடப்பட்டிருந்த சிமென்ட் ஸ்லாப்கள் பதிக்கப்பட்ட பாதையில் சில ஸ்லாப்கள் கொஞ்சம் தரையிறங்கியிருந்தன.

காவல்துறைக்குத் தகவல் தெரிவித் தார். தடயவியல் நிபுணர்களுடன் காவல் துறை வந்தது. அந்த சிமென்ட் ஸ்லாப் களைப் பெயர்த்துப் பார்த்தபோது, பூமிக்கு அடியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ஸ்டீன்கெம்ப்பின் எலும்பு மிச்சங்கள் கிடைத்தன.

வேறு அடையாளத்தில் வேறு பெய ரில் தலைமறைவாக இருந்த கென்னத் டவுனியை அடுத்த சில நாட்களிலேயே வளைத்துப் பிடித்தார்கள். விசாரித்த போது, ‘தனக்குக் கடன் தொகையைத் திருப்பித் தர விருப்பமில்லாததால், ஸ்டீன்கெம்ப் வந்ததும் கழுத்தை நெரித் துக் கொலை செய்தேன். தன் மேல் சந்தேகம் வரக் கூடாதென அரை மணி நேரத்துக்கு முன்னதாக பொது தொலை பேசிக்குச் சென்று ஸ்டீன்கெம்ப்பை அழைத்து குரலை மாற்றி ஓர் அவசர வேலைக்காக அழைத்ததாகவும், போலீஸ் நம்ப வேண்டும் என்பதற்காக வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வீட்டில் பீரோவில் வைத்துக் கொண்ட தாகவும் கென்னத் டவுனி தெரிவித்தான். வழக்கின் முடிவில் டவுனிக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

- வழக்குகள் தொடரும்

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-23-தீவிரமிருந்தால்-முடியும்/article7742390.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எப்படி? இப்படி! 24 - சாத்தானின் திடீர் வருகை!

pkp_2586779f.jpg
 

உலகிலேயே மிகவும் புத்திசாலித் தனமானதும் அதே சமயம் புதிரானதுமான ஒரே விஷயம் மனித மனம்தான். அடுக்குக்குள் அடுக் காக மரக் கிளைகள் போல விரிந்து கொண்டே செல்லும் மனித மனம் பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

மனித மனம் பற்றி இங்கு குறிப்பிட வேண்டியதன் அவசியம், இந்த வழக் கைப் பற்றிப் புரிந்துகொள்ளும்போது விளங்கும்.

2008-ம் வருடம். அமெரிக்காவில் ஒகலஹோமா நகரத்துக்கு அருகில் ஒரு சின்ன ஊர். அங்கே ஸ்கைலா, டெய்லர் பிளாக்கர் என்று இரண்டு சிறுமிகள். வயது 11 மற்றும் 13. இருவரும் இணைப் பிரியாத தோழிகள். அன்று, ஊரில் ஓடும் ஆற்றின் கரையோரம் கூழாங்கற்கள் பொறுக்குவதற்காகச் சென்றார்கள். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பெற்றோர் கவலைப்பட்டு அவர் களைத் தேடினார்கள். காணவில்லை. காவல்துறைக்குச் சென்றார்கள். அவர்கள் கூழாங்கற்கள் பொறுக்கச் சென்ற ஆற்றிலும் ஆழம் அதிகமில்லை; வெள்ளம் எதுவும் வரவுமில்லை; இருவருக்குமே நீச்சல் தெரியும்; அதனால் ஆற்றோடு சென்றிருக்க வாய்ப்பு இல்லை.

இரண்டு குடும்பத்தினரும் அப்படி யொன்றும் பணக்காரர்களும் இல்லை. ஆகவே, கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதற்கான நோக்கத் தில் எதுவும் நடந்திருக்க வாய்ப்பும் இல்லை என்கிற முடிவுக்கு வந்தார்கள். நகரமெங்கும் பல வழிகளில் தேடிப் பார்த்து சோர்ந்து போனார்கள்.

இரண்டு தினங்கள் கழித்து ஒரு சாலையோரப் புதருக்குள் இரண்டு சிறுமி களின் பிணங்கள் கிடப்பதாக தகவல் வந்து, சென்று பார்த்தபோது… இவர்கள் தான். இரண்டு பேரும் பல முறை சுடப் பட்டிருந்தார்கள். அந்தப் பிரதேசத்தில் துப்பாக்கித் தோட்டாக்களின் உலோக உறைகள் கண்டெடுக்கப்பட்டன.

மருத்துவ சோதனை செய்யப்பட்ட தில், இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் வன்முறை நிகழவில்லை என்பது தெரிந் தது. ஸ்கைலாவின் உடலில் எட்டு முறை சுடப்பட்டதன் காயங்களும், டெய்லரின் உடலில் ஐந்து முறை சுடப்பட்டதன் காயங்களும்இருந்தன. இரண்டு சிறுமிகளும் வேறு வேறு இரண்டு வகை துப்பாக்கிகளால் சுடப்பட்டிருந்தனர்.

காவல்துறை மண்டையைப் பிய்த்துக் கொண்டது. அவர்களைச் சுட்டது யார்? பெரிய குற்றம் ஏதாவது நடந்து, அதை அவர்கள் பார்த்துவிட்டார்களோ? சாட்சி களை விட்டுவைக்கக் கூடாதென்று இவர்களைச் சுட்டிருப்பார்களோ?

ஆனால், அந்தப் பகுதியில் ஒரு கொலையோ, கொள்ளையோ நடந்ததற் கான அறிகுறியே இல்லை. காவல்துறை போராடிப் பார்த்து கைவிட்டுவிட்டது. சிறுமிகளின் பெற்றோர் அழுது ஓய்ந்து, அவர்களுடைய உடல்கள் கண்டெடுக் கப்பட்ட இடத்தில் சிறுமிகளுக்கு சிலை கள் வைத்து, அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்களை வைத்து அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள்.

கொஞ்ச நேரம் அந்தச் சிறுமிகளை மறந்துவிட்டு, மூன்று ஆண்டுகள் கழித்து 2011-ல் நிகழ்ந்த ஒரு காதல் கதையைப் பார்ப்போம்.

கெவின், ஆஷ்லே இருவரும் காதலர் கள். விரைவில் திருமணம் நடக்கவிருந் தது. நிச்சயதார்த்தம் முடிந்து உல்லாச மாக சுற்றித் திரிந்தார்கள். கெவின் தன்னிடம் பாசமாக இருந்தாலும் அவ னிடம் ஏதோ ஒரு ரகசியம் இருப்பதாக ஆஷ்லே உணர்ந்தாள். எதையோ நீ என்னிடம் மறைக்கிறாய் என்று அவனிடம் கேட்டபோதெல்லாம் கெவின் மறுத்து வந்தான்.

‘‘கெவின், நாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்தானே?’’

‘‘அதிலென்ன சந்தேகம் ஆஷ்லே?’’

‘‘என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரியுமல்லவா?’’

‘‘தெரியுமே. அதனால்தானே காதலித்தேன்...’’

‘‘அதேப்போல உன்னைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரிய வேண் டாமா?’’

‘‘உனக்குத்தான் தெரியுமே!’’

‘‘இல்லை… தெரியாது. உன் நடவடிக்கைகளில் ஏதோ மர்மம் இருக்கிறது. அவ்வப்போது ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்கிறாய். திடீரென்று படபடப்பாகிறாய். ஏதோ ஒரு பிரச்சினை உன்னை வாட்டுகிறது. எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்…’’

‘‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை…’’

‘‘பொய்! ஒரு குற்ற உணர்ச்சியில் நீ சிக்கியிருப்பதுபோல உணர்கிறேன். சொல்… ஏதாவது தப்பு செய்துவிட்டாயா? அல்லது உனக்கு ரகசியமாக வேறு காதலி இருக்கிறாளா? நான் எதையும் தாங்கிக்கொள்கிறேன்… சொல்!’’

‘‘நீயாக கற்பனை செய்துகொண்டு ஏதேதோ கேட்கிறாய். அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று சொன்னால் விட்டுவிடு!’’

- இருவரும் கெவின் காரில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த வாக்கு வாதம் இது. அன்று மாலை ஆஷ்லே வீடு திரும்பவில்லை. அவள் பெற்றொருக்கு அவளுடைய காதல் விஷயம் தெரியும் என்பதால் கெவினைக் கேட்டார்கள்.

‘‘நானும் அவளும் காரில் வந்து கொண்டிருந்தபோது எங்களுக்குள் வாக்கு வாதம் நடந்தது. அவள் கோபத் தின் உச்சத்துக்குச் சென்றாள். உடனே காரை நிறுத்தச் சொன்னாள். நிறுத்தி னேன். சட்டென்று இறங்கிக்கொண்டு நான் கூப்பிட்ட கூப்பிடத் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டாள்…’’ என் றான் கெவின்.

அனைவருமாக ஆஷ்லேயைத் தேடினார்கள். அவளிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. காவல்துறையிடம் சென்றார்கள். காவல்துறை கெவினை கேள்விகளால் குடைந்தது.

அவள் காரிலிருந்து இறங்கிச் சென்ற இடத்தைச் சுற்றிலும் தேடிப் பார்த்தார் கள். உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்திருக்கலாமோ என்று அதற்கு சாத்தியமுள்ள கோணங்களிலும் விசாரித் தார்கள். ஒன்றும் தெரியவில்லை.

காவல் அதிகாரி ஆஷ்லேயின் முகப் புத்தகக் கணக்கில் அவள் போட்டிருந்த அத்தனைப் பதிவுகளையும் படித்த போது, ஒரு பதிவு அவரின் புருவங் களைச் சுருங்க வைத்தது.

அது: ‘கெவினிடம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது. அதை அவன் சொல்ல மறுக்கிறான். இவனை திருமணம் செய்ய ஏன்தான் முடிவெடுத்தேனோ என்று சமயங்களில் தோன்றுகிறது’.

அதிகாரியின் சந்தேகப் பார்வை கெவின் பக்கம் திரும்பியது. விசா ரணைக்கு அழைத்தார். கிடுக்கிப் பிடி போட்டு கேள்விகளை வீசினார். அவரின் கேள்விகளின் அழுத்தம் தாங்காமல் உடைந்து, ‘‘ஆமாம்… நான்தான் அவ ளைக் கொன்றேன்’’ என்று வெடித்து விட்டான் கெவின்.

அன்று வாக்குவாதம் எல்லை கடந்து சென்றபோது தனக்குள் திடீரென்று ஒரு சாத்தான் புகுந்து ‘அவளைக் கொல்’ என்று உத்தரவிட்டதாகவும், உடனே காரை நிறுத்தி டேஷ்போர்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவள் கழுத்தை அறுத்ததாகவும், பிறகு தன் வீட்டின் பின்புறம் அவள் உடலை எரிந்து, எலும்புகளை மண்ணுக்குள் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டான்.

அவன் மறைத்து வரும் ரகசியம் என்ன என்ற கேள்விக்கும் பதில் சொன்னான், ‘‘மூன்று வருடங்களுக்கு முன்பு காரில் ஓர் ஊரைக் கடந்தபோது, கூழாங்கற்கள் பொறுக்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் என்னை நோக்கி ஓடி வந்தார் கள். காரை நிறுத்தினேன். அவர்கள் ஏதோ சொன்னார்கள். அது என் காதில் விழவில்லை. மாறாக அந்த நிமிடம் எனக்குள் புகுந்த ஒரு சாத்தான் ‘அவர் களைக் கொல்லச் சொன்னது’. எதையும் யோசிக்காமல் ஒரு சிறுமியை மட்டும் கண்மூடித்தனமாக சுட்டேன். அங்கிருந்து புறப்பட இருந்தேன். அதிர்ச்சியில் உறைந்து நின்ற இன்னொரு சிறுமியை யும் கொல்லச் சொல்லி சாத்தான் உத்தர விட, அந்தத் துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்ததால் என்னிடம் இருந்த இன்னொரு துப்பாக்கியால் அந்தச் சிறுமியையும் சுட்டேன். உடல்களைப் புதருக்குள் இழுத் துப்போட்டுவிட்டுச் சென்றுவிட்டேன்.’’ என்றான்.

நீதிமன்றத்திலும் மீண்டும் மீண்டும் இந்த சாத்தான் கதையை கெவின் சொன் னான். அவனுக்கு மூன்று ஆயுள் தண் டனை வழங்கப்பட்டது. தனக்காக வாதா டிய வக்கீலை நீதிமன்றத்திலேயே ஒரு முறை கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற அவன், அதுவும் ‘சாத்தானின் உத்தரவு’ என்றான். தீர்ப்பு நாளின்போது தன்னை யாராவது சுட்டுவிடுவார்கள் என்று புல்லட் புரூப்ஃ ஜாக்கெட் அணிந்து வந்தான்.

அவனை சோதனை செய்த மனநல மருத்துவர்கள், அவன் மனநலம் சரியாக இருப்பதாகச் சொன்னதால் அவனுடைய சாத்தான் கதையை யாரும் நம்பத் தயா ராக இல்லை. ஆனால், அன்றைய தினம் அந்தச் சிறுமிகள் காரை நிறுத்தி அவனிடம் என்ன சொல்லியிருப்பார்கள்? எதற்காக அவர்களை அவன் வெறித்தன மாக சுட்டான்… போன்ற கேள்விகளுக்கு இன்று வரை பதிலே இல்லை. மனித மனம் புதிரானதுதானே?

- வழக்குகள் தொடரும்…

 

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-24-சாத்தானின்-திடீர்-வருகை/article7769268.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி! 25 - நல்லவளா? கெட்டவளா?

pkp_2594313f.jpg
 

பேட்டி யஹர்ஸ்ட் அழகான புத்திசாலித்தனமான பெண். வயது 19. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பெர்க்லி நகரத்தில் சுதந்திரமாகச் சுற்றி வந்த கால் முளைத்த தென்றல்!

தாத்தா வில்லியம் ரடால்ஃப் யஹர்ஸ்ட் பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவான். தவிர ரேடியோ, தொலைக்காட்சி, சினிமா என்று அனைத்து ஊடகங்களிலும் தயாரிப்பாளராக இயங்கிக் கொண்டிருந்தவர்.

1974. பிப்ரவரி 4-ம் தேதி பேட்டி யஹர்ஸ்ட் தனியாக தங்கியிருந்த குடியிருப்பில் போனில் தன் காதலனுடன் “என்ன கலர் சட்டை? மீசை ட்ரிம் பண்ணிவிட்டாயா?’ என்று கடலை போட்டுக் கொண்டிருந்தவள் அழைப்பு மணி கேட்டதும் “அப்புறம் பேசுகிறேன்’’ என்று போனை துண்டித்தாள். சின்ன ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ஓர் இளைஞன் நின்றிருந்தான். அவன் கையில் ஒரு கவர். ‘‘யார்?’’ என்றாள்.

‘‘உங்கள் தாத்தாவின் பத்திரிகையில் சேர வேண்டும். அது தொடர்பாக உங்களுக்கு எழுதப்பட்ட ஒரு சிபாரிசுக் கடிதத்துடன் வந்திருக்கிறேன்’’ என்றான் அவன்.

கதவைத் திறந்து அவனை உள்ளே அழைத்து அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்தாள். படித்து முடித்து நிமிர்ந்தபோது அவள் முன்னால் நின்றது அவன் மட்டுமல்ல; இன்னும் ஆறு இளைஞர்கள். ஒரே நேரத்தில் அவர்கள் அவள் மேல் பாய்ந்து, வாயைப் பொத்தி, கை, கால்களைக் கட்டி… அடுத்த மூன்றாவது நிமிடம் அவள் ஒரு கைதியாக அவர்களுடன் ஒரு வேனில் எங்கோ சென்று கொண்டிருந்தாள்.

மறுநாள். பேட்டி யஹர்ஸ்ட்டின் தந்தைக்கு ஒரு போன்.

‘‘வணக்கம். உங்கள் மகள் பேட்டி யஹர்ஸ்ட்டை நாங்கள் கடத்திவிட்டோம். எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிற அவள், இனி கற்போடு இருப்பதும் உயிரோடு இருப்பதும் உங்கள் முடிவில்தான் உள்ளது.’’

‘‘நீங்கள் யார்?’’

‘‘சிம்பியான்ஸி விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள். இந்த நாட்டில் வறுமையில் வாடு பவர்களும் எளியவர்களும் மிகவும் துன்பப்படு கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவானவர் கள். அரசாங்கத்துக்கு எதிரானவர்கள்.’’

‘‘என் மகளை சேதமில்லாமல் என்னிடம் ஒப்படைக்க நான் என்ன செய்ய வேண்டும்?’’

‘‘உன் தந்தை முக்கிய அரசியல் புள்ளிகளோடு தொடர்புடையவர். அவர் மூலம் அரசாங்கத்தை அணுகு. எங்கள் இயக்கத் தோழர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்!’’

ஆனால், ‘கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களை வெளியே விட்டால் சமூகத்துக்கு ஆபத்து’ என்று சொல்லி விடுதலை செய்ய மறுத்துவிட்டது அரசாங்கம். கடத்திச் செல்லப்பட்ட பேட்டி யஹர்ஸ்ட்டை பத்திரமாக மீட்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

காவல்துறை மாகாணம் முழுவதும் பரபரப்பாக இயங்கி விடுதலைப் படையினரை மடக்க முயற்சிகள் செய்தது. ஆனால் அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து வந்த உத்தரவு: மாகாணத்தில் வறுமையில் வாடும் மக்கள் அனைவருக்கும் ஒரு மனிதருக்கு 70 டாலர் மதிப்பில் உணவளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் பேட்டி யஹர்ஸ்ட் விடுதலை செய்யப்படுவாள்.

கணக்கு போட்டுப் பார்த்தால் அன்றைய தேதிக்கு இந்தியக் கணக்கில் ரூ.320 கோடி தேவைப்படும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, பேட்டி யஹர்ஸ்ட்டின் தந்தை வங்கியில் கடன் வாங்கி ரூ.2 கோடி மதிப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்த வறுமையில் வாடிய மனிதர்களுக்கு உணவளித்தார். கடத்தல்காரர்கள் மனம் மாறவில்லை.

‘‘உங்கள் மகளை விடுவிக்க முடியாது’’ என்று அறிவித்தார்கள்.

குடும்பத்தினரும், காவல்துறையும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்தபோது, ஒரு திடீர் திருப்பம் நிகழ்ந்தது. பேட்டி யஹர்ஸ்ட்டின் ஒரு புகைப்படத்தையும், அவளின் செய்தியாக ஒரு குரல் பதிவையும் அனுப்பினார்கள்.

அந்தப் புகைப்படத்தில் பேட்டி யஹர்ஸ்ட் கையில் விடுதலைப் படையினர் பயன்படுத்தும் ஒரு இயந்திரத் துப்பாக்கியை தூக்கிப் பிடித்தபடி இருந்தாள். அவளின் குரல் செய்தி இதுதான்:

‘‘இனி யாரும் என்னை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இந்த இயக்கத்தின் நோக்கமும், செயல்பாடுகளும் நியாயமானவை என்பதை நான் உணர்ந்ததால், நான் இவர்களின் இயக்கத்தில் ஒருவராக இணைந்துவிட்டேன். இனி, இவர்களின் லட்சியத்துக்காக நானும் இணைந்து போராடப் போகிறேன்!’’

அத்தனை பேரும் ஸ்தம்பித்துப் போனார்கள். கொஞ்ச நாள் கழித்து நகரின் ஒருமுக்கியமான வங்கிக்குள் கொள்ளை நோக்கத்துடன் நுழைந்தது அந்த விடுதலைப் படை. அதில் தளபதியாக துப்பாக்கி ஏந்தியது பேட்டி யஹர்ஸ்ட். வங்கியின் கேமராக்களில் தான் பதிவாவது பற்றி கவலைப்படவில்லை அவள். அனைவரையும் மிரட்டினாள். ‘‘எங்கள் இயக்கத்தை நடத்த எங்களுக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. அதனால், எங்களுக்குக் கொள்ளையடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது தொடரும்…’’ என்று முழங்கினாள். அந்தக் கொள்ளையைத் தடுக்க வந்த இரண்டு பேரை சுட்டும் கொன்றாள்.

இப்போது காவல்துறைக்கு அவள் ஒரு மிகப் பெரிய தலைவலியானாள். யாரை மீட்பதற்காக அலைந்தார்களோ, இப்போது அவளை மடக்கிப் பிடிப்பதற்காக அலைந்தார்கள். அரசாங்கத்தின் தேடப்படும் குற்றவாளியாக பேட்டி யஹர்ஸ்ட் அறிவிக்கப்பட்டாள். சில மாதங்கள் தீவிரமாக போராடி அவளின் கூட்டாளிகள் சிலரை காவல் துறை நெருங்கியது. ஒரு அதிரடி நடவடிக்கையில் விடுதலைப் படையினர் பலர் கொல்லப்பட்டார்கள். பேட்டி யஹர்ஸ்ட் உயிருடன் பிடிக்கப்பட்டாள்.

நீதிமன்றத்தில் பேட்டி யஹர்ஸ்ட்டின் வழக்கறிஞரின் வாதம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ‘‘பேட்டி யஹர்ஸ்ட் இயல்பில் ஒரு பயங்கரவாதி இல்லை; கடத்திவைக்கப்பட்டு இருந்தபோது அவளை ஓர் அடிமை போல நடத்தினார்கள். இருட்டு அறையில் வைத்திருந்தார்கள். பாலியல் கொடுமைகளைச் செய்தார்கள். சரியாக உணவு கொடுக்காமல் வதைத்தார்கள். தவிர, தங்கள் இயக்கத்தின் கோட்பாடுகளை அவள் மனதில் திணித்து அவளை மூளைச் சலவை செய்தார்கள். உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் அவர்கள் கொடுத்த தொல்லைகளின் காரணமாக அவர்களின் இயக்கத்தில் இணைவதாக நாடகமாடினாள் பேட்டி யஹர்ஸ்ட். அதனால் அவளை அவர்கள் சுதந்திரமாக நடத்தினார்கள். அந்த வங்கிக் கொள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தால் அந்தக் கூட்டத்தினர் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் சில அவளை குறி பார்த்துக் கொண்டிருக்கும். அதன் பொருள் என்ன? அந்த வங்கிக் கொள்ளையை அவள் நடத்தியாக வேண்டும் என்பது அவர்களின் கட்டளை. அவர்களின் மிரட்டல் காரணமாகவே அவள் ஒரு பயங்கரவாதியாக அங்கே நடந்து கொண்டாள். அவள் ஒரு கருவியே!’’

பேட்டி யஹர்ஸ்ட்டை பல மனநல மருத்துவர்கள் சோதனை செய்தார்கள். தற்சமயம் அவளின் மனநிலையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால் மூளைச் சலவை கதையை நம்ப மறுத்தார்கள். அவளுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பிறகு, கருணை மனுக்கள் மூலம் அந்தத் தண்டனை 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு பிறகு அதுவும் விலக்கப்பட்டு மன்னிப்பு வழங்கப்பட்டது.

விடுதலையான பேட்டி யஹர்ஸ்ட் தான் சிறையில் இருந்தபோது தன்னைக் காவல் காத்த அதிகாரியை திருமணம் செய்துகொண்டாள். தன் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினாள். பிறகு ஒரு பெரிய நாவல் எழுதினாள். பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தாள். (Cry baby, A dirty shame, serial Mom) மூன்று குழந்தைகளுக்குத் தாயான பேட்டி யஹர்ஸ்ட்டுக்கு இப்போது வயது 61. இன்றுவரை அவள் செய்த குற்றங்கள் சொந்த முடிவுகளா அல்லது மிரட்டல் முனையில் செய்யப்பட்டவையா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றன.

- வழக்குகள் தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-25-நல்லவளா-கெட்டவளா/article7794530.ece

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி! 26 - பட்டை தீட்டப்பட்டத் திட்டம்!

pkp_2602731f.jpg
 

108 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.702 கோடி) என்பதுதான் உலகிலேயே மிக அதிக மதிப்பில் நடத்தப்பட்ட வைரத் திருட்டு!

வைரங்களால் பிரபலமான நாடு பெல்ஜியம். அங்கே ஜெம் மாகாணத்தில் அண்ட்வெர்ப் டைமண்ட் சென்டர் மிகவும் பரபரப்பானது. நகரத்தின் 80 சதவீத மக்கள் வைரம் தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள். உலகத்துக்குத் தேவைப்படும் 84 சதவீத வைரம் உருவாகும் இடம் இது. 380 வைரத் தொழிற்சாலைகள் வைரங்களைத் தயாரித்து 1,500 நிறுவனங்களுக்கு சப்ளை செய்கின்றன. இங்கே இயங்கும் வைரத்தரகர்கள் மட்டும் 3,500 பேர்.

அண்ட்வெர்ப் டைமண்ட் சென்டர் என்பது இரண்டு மாடிகளும் அண்டர் கிரவுண்டும் கொண்டது. அங்கேதான் ஷேஃப்ட்டி லாக்கர்கள் அடங்கிய பாது காப்பு அறை உள்ளது. அந்த லாக்கர்களை பொதுமக்களும், வர்த்தகர்களும் வைரம், தங்கம், பணம், பத்திரங்களை பாதுகாக்க உபயோகித்தார்கள்.

இந்தக் கட்டிடத்துக்கும் பாதுகாப்பு அறைக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக நவீனமானவை. வானத்தில் எப்போ தும் போலீஸாரின் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றிக் கொண்டேயிருக்கும். ஆயுதம் ஏந்திய வீரர்கள் வாகனங்களில் உலா வருவார்கள். கட்டிடத்துக்கு அருகில் குண்டு துளைக்க முடியாத போலீஸ் பூத். இன்னொருபுறம் ஒரு போலீஸ் ஸ்டேஷன். பொல்லார்ட்ஸ் என்றழைக்கப்படும் இரும்புக் கம்பங்கள் சாலைகளின் குறுக்கில் அமைக்கப்பட்டிருக்கும். வாகனங்கள் அவ்வளவு சுலபமாக கட்டிடத்தை நெருங்கிவிட முடியாது. வெளி கேட்டில் எல்லா அடையாள அட்டைகளும் சரியாக இருந்தால், அவர்கள் இயக்கியதும் இந்த இரும்புக் கம்பங்கள் தரையோடு இறங்கிக் கொண்டு வாகனத்துக்கு வழி தரும்.

கட்டிடத்தை 24 மணி நேரமும் கேமராக்கள் பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டேயிருக்கும். அந்தப் பாதுகாப்பு அறைக்குச் செல்வதற்கு முன்பாக இரண்டு கதவுகள். கண்ட்ரோல் அறையில் இருந்து அனுப்பப்படும் சங்கேத ஓசையைக் கேட்ட பிறகே கதவுகள் திறக்கும். பிரதான பாதுகாப்பு அறையின் முக்கியமான கதவு ஸ்டீல் மட்டும் காப்பரால் செய்யப்பட்டது. அந்தக் கதவின் எடை மூன்று டன். அந்தக் கதவை இயந்திரம் கொண்டு டிரில் செய்து திறக்க முயன்றால் இடைவிடாமல் 12 மணி நேரம் மிக சக்தி வாய்ந்த இயந்திரம் செயல்பட வேண்டும். அந்தக் கதவைத் திறக்க சாவியும் போட வேண்டும். அந்த சாவியின் சைஸ் என்ன தெரியுமா? கிரிக்கெட் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கும்போது, அடையாளமாக பெரிய சைஸில் ‘அட்டை சாவி' செய்து கொடுப்பார்கள் அல்லவா, அந்த மாதிரி நிஜத்தில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட சாவி அது.

தவிர லாக்கர்களின் உரிமையாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகத் தரப்பட்டுள்ள நான்கு இலக்க ரகசிய எண்களையும் பதிய வேண்டும். இதைத் தவிர, அந்தப் பகுதியில் மனித உடலில் இருந்து வெளிப்படும் வெப்பத்தைக் கண்டுபிடித் தால் எச்சரிக்கும் இன்ஃப்ராரெட் ஹீட் டிடெக்டர்ஸ், புதிய அசைவுகள் மற்றும் வெளிச்சம் தென்பட்டால் எச்சரிக்கும் சென்சார், அந்தப் பிரதேசத்தின் தட்பவெப்பத்தில் மாறுதல் ஏற்பட்டால் உடனே அறிவிக்கும் சீஸ்மிக் சென்சார், இதைத் தவிர கதவை அனுமதியின்றி முறையில்லாமல் திறக்க முயற்சி செய் தால் அதை அறிவிக்கும் காந்த மண்டலம்.

2003 பிப்ரவரி 14 அன்று பெல்ஜியம் தேசம் காதலர் தினத்தைக் கொண்டாடியது. மறுநாள் இரவில் இத்தனை பிரமாண்டமான ஏற்பாடுகளை மீறி அந்த வைர மையத்தின் பாதுகாப்பு அறை கொள்ளையடிக்கப்பட்டது.

தகவல் அறிந்து காவல்துறை வந்து பார்த்தபோது அந்தப் பாதுகாப்பு அறையில் இருந்த 160 லாக்கர்களில் 123 லாக்கர்கள் டிரில்லிங் இயந்திரம் மூலம் திறக்கப்பட்டிருந்தது.

அந்த லாக்கர்களின் உரிமையாளர்களும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் ஆய்வாளர்களும் குவிந்துவிட்டார்கள். இதுதான் உலகிலேயே மிக அதிக மதிப் பில் அடிக்கப்பட்ட லாக்கர் கொள்ளை.

கொஞ்சம் தாவி ஒரு ஃப்ளாஷ்பேக்குக்குச் சென்று வரலாம். அவன் பெயர் லியார்னாடோ நோடார்பார்டோலோ. இத்தாலியைச் சேர்ந்தவன். ‘பார்ன் கிரிமினல்’ என்பார்களே அப்படி சிறு வயதிலேயே சின்னச் சின்ன திருட்டுக்களில் தன் குற்றலீலைகளைத் தொடங்கி, நகைக் கடைகளில் கொள்ளையடிப்பதைத் தொழிலாகவே செய்துவருபவன்.

பழம்பொருள் சேகரிப்பாளர் ஒருவர் 2001-ல் ஒரு குறிப்பிட்ட நகையைக் கொள்ளையடித்துத் தரச் சொன்னார். அவனுக்கு பேசப்பட்ட சம்பளம் ஒரு லட்சம் யூரோ கரன்சிகள். லியார்னாடோ புத்திநுட்பம் கொண்ட பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த சிலரை கூட்டணியாக அமைத்துக்கொண்டு, அந்தக் கொள்ளையை சிறப்பாக செய்து முடித்தான்.

அடுத்து அவனுக்கு வந்த அழைப்பு வேறு ஒரு நபரிடம் இருந்து. ஒரு ரகசிய இடத்தில் சந்தித்தபோது, அங்கிருந்த மூன்று பேரை அந்த நபர் அறிமுகப்படுத்தினான். இந்த லாக்கர்களைக் கொள்ளையடிக்கும் திட்டத்தைச் சொல்லி, அதை தலைமையேற்று நடத்தித் தரச் சொன்னான். லியானார்டோ தன் பக்கத்தில் இருந்து ஒரு நபரைச் சேர்த்துக் கொண்டான். ஐந்து பேர் கொண்ட படை உருவானது. அழகாக திட்டம் போட்டு படிப்படியாக நிறைவேற்றினான். இதற்கு அவன் எடுத்துக் கொண்ட காலம் இரண்டரை வருடங்கள்.

முதல் வேலையாக, அந்தப் பாதுகாப்பு அறையில் தன் பெயரில் ஒரு லாக்கர் எடுத்துக்கொண்டான். அவனுக்கு அடையாள அட்டைகள் தரப்பட்டன. அவன் அடிக்கடி தன் லாக்கரை இயக்க அங்கு சென்று வரத் தொடங்கினான். அந்த இடத்தின் அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவனுக்கு அத்துப்படியாயின.

ஒரு மீட்டர் நீளம் உள்ள அந்த சாவியின் சரியான டூப்ளிகேட்டை ஐவரில் ஒருவன் செய்து முடிக்கவே சில மாதங்களாயின. சின்ன கேமராவை மறைவாகப் பொருத்தி அந்த நான்கு இலக்க பாஸ்வேர்டு எண்களை கச்சிதமாகக் அறிந்தான் லியார்னாடோ. ஒவ்வொரு சென்சார்களையும் கேமராக்களையும் எப்படி ஏமாற்றுவது என்று பாடம் படித்தார்கள். எலெக்ட்ரானிக் செயல்பாடுகளை முறியடிக்கும் கருவிகளை உருவாக்கினார்கள். பாலியெஸ்டர் ஷீல்ட் வெப்பத்தை ஏமாற்றும் என்று புரிந்து அதைச் செய்தார்கள்.

அலுமினியம் பிளாக் செய்து அதைக் கொண்டு காந்த மண்டலத்தைக் கட்டுப்படுத்தினார்கள். பெண்கள் கூந்தலுக்காகப் பயன்படுத்தும் சாதாரண ஸ்ப்ரே மூலம் சில சென் சார்களை கவிழ்க்க முடியுமென்றும், பீன் பேக்குகளில் நிரப்பப்படும் பின் பால்ஸ் மூலம் கேமராக்களை ஏமாற்ற முடியும் என்றும் கண்டறிந்து சின்னச் சின்ன கருவிகள் செய்தார்கள். போலி அடையாள அட்டைகள், இரும்புக் கம்பங்களை இயக்கும் கருவி என்று கச்சிதமான ஏற்பாடுகள். அதற்குத்தான் இரண்டரை வருடங்கள்!

சரி, இதெல்லாம் உலகத்துக்கு எப்படித் தெரிய வந்தது?

இவையெல்லாம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கைது செய்யப்பட்ட பிறகு லியானார்டோவே சொன்னவை. ஆம்! லியானார்டோவும், இவன் ஏற்பாடு செய்த நபரும்தான் மாட்டிக் கொண்டார்கள். திட்டத்தின் சூத்திரதாரியும் அவன் ஏற்பாடு செய்த மூன்று பேரும் கொள்ளையடிக்கப்பட்ட அத்தனை வைரங்கள், நகைகளுடன் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்கள் இந்த நிமிடம்வரை கண்டுபிடிக்கப் படவில்லை. அந்த நகைகளும் மீட்கப்படவில்லை.

இந்த லாக்கர் கொள்ளையைப் பற்றி ஒரு விரிவான புத்தகம் ‘ஃப்ளாலெஸ்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டின் பாரமவுன்ட் நிறுவனத்தினர் இந்த சம்பவத்தைத் திரைப்படமாக எடுக்க உரிமை வாங்கியிருக்கிறார்கள்.

எல்லாம் சரி! இவ்வளவு சாமர்த்திய மாக இரண்டரை வருடங்கள் திட்டம் போட்டு கொள்ளையை செயல்படுத்திய லியார்னாடோ எப்படி போலீஸில் சிக்கினான்?

லியார்னாடோ செய்த ஒரு மிகப் பெரிய முட்டாள்தனம்… கொள்ளை நடந்த அறையில் லாக்கர்களை மற்றவர்கள் டிரில்லிங் இயந்திரம் கொண்டு திறந்துகொண்டு இருந்தபோது எடுத்துச் சென்ற சாண்ட்விச்சை சாப்பிட்டுத் தொலைத்ததுதான். அதிலிருந்து அவ னுடைய எச்சிலுடன் கூடிய ஒரு பிரெட் முனை கீழே விழுந்துகிடக்க… அதிலிருந்து டி.என்.ஏவை எடுத்த போலீஸ் மிக சீக்கிரமே அவனை நெருங்கிவிட்டது. கொள்ளையர்களுக்கு லியார்னாடோ தெரிவிக்கும் அறிவுரை என்பது ‘கொள்ளை சமயத்தில் எதையும் தின்று வைக்காதீர்கள்’ என்பதாக இருக்குமோ?

- வழக்குகள் தொடரும்…

 

 http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-26-பட்டை-தீட்டப்பட்டத்-திட்டம்/article7822112.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி! 27 - பலூன் பையன்!

pkp_2611127f.jpg
 

அமெரிக்காவில்தான் இதுபோன்ற பரபரப்பான கலாட்டாக்கள் அடிக்கடி நடக்கும். ஒரு நாள் ஒஹியோ மாகாணத்தில் ஒரு பெரிய பல்கலைக் கழகத்துக்கு காவல்துறையின் வாகனங்கள் சரசரவென்று நுழைந்தன. அத்தனை வாசல்களும் மூடப்பட்டன. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. உள்ளே இருந்தவர்களை அவசர அவசரமாக பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தினார்கள்.

அங்கே பார்க்கிங் பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட மோட்டார் பைக்கை வெடிகுண்டு நிபுணர்கள் எச்சரிக்கையாக சூழ்ந்தார்கள். பரிசோதித்தார்கள். அந்த வாகனத்தில் எந்த வெடிகுண்டும் இல்லை.

அதற்குள் அந்த வாகனத்தின் சொந்தக்கார இளைஞன் அங்கு வந்து, ‘‘என் வாகனம்தான் இது. இதில் என்ன தேடுகிறீர்கள்?’’ என்றான்.

‘‘வெடிகுண்டு’’ என்றார்கள்.

‘‘இதில் வெடிகுண்டு இருப்பதாக யார் தகவல் தெரிவித்தார்கள்?’’

அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தார்கள், ‘‘நீதான்… இதோ பார்! இதற்கு என்ன அர்த்தம்?’’

பைக்கின் மேல் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ஆங்கிலத்தில் ‘இது ஒரு பைப் வெடிகுண்டு’ என்கிற பொருளில் ‘This is a Pipe Bomb’ என்று எழுதின ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

அந்த இளைஞன் சிரித்துக்கொண்டே ‘‘அது நான் ரசிக்கும் ராக் இசைக் குழுவினுடைய பெயர்’’ என்றான். அப்படியும் அவர்கள் நம்பவில்லை. விசாரித்துப் பார்த்ததில் அந்தப் பெயரில் ஒரு இசைக் குழு இருப்பது உண்மை என்று தெரிய வந்தது. ஆனாலும் பொது மக்களை பீதிக்குள்ளாக்கும் விதமாக அப்படி ஒரு ஸ்டிக்கரை பைக்கில் ஒட்டி வைத்தது குற்றம் என்று அவனைக் கைது செய்து வழக்கு போட்டது காவல்துறை.

இதுகூட சின்ன விஷயம்தான். ஆனால், 2009-ம் வருடம் அக்டோபர் 15-ம் தேதி நடந்தது சின்ன விஷயம் இல்லை.

கொலரோடோவில் வசித்த ரிச்சர்ட் ஹீன், அவன் மனைவி மயூமி ஹீன் இருவருக்கும் மூன்று குழந்தைகள். ரிச்சர்டுக்கு நிரந்தர வேலை எதுவுமே இல்லை. வீடுகளின் உட்புறமும் வெளிப்புறமும் ஏற்படும் ரிப்பேர்களைச் சரிசெய்து கொடுப்பான்.

இயற்கையின் ரசிகன். குறிப்பாக, இயற்கை சீற்றத்தை இன்னும் அதிகம் ரசிப்பான். மழை, புயல், வெள்ளம், நில நடுக்கம், சுனாமி போன்ற சமயங்களில் இவன் இலக்கு இல்லாமல் பயணித்து சீற்றம் காட்டும் இயற்கையை நெருக்கமாகச் சென்று புகைப் படங்கள் எடுப்பான். வீடியோ எடுப்பான். ஒருமுறை கடுமையான புயலில் மோட்டர் பைக்கில் சென்றான். இன்னொரு முறை கடலில் ராட்சச அலைகள் மற்றும் காற்றின் சுழற்சிக்கு நடுவில் தைரியமாக குட்டி விமானத்தில் பறந்து திரும்பிய சாகச வீரன் அவன். இந்த மாதிரி உயிரைப் பணயம் வைத்து சீற்றங்களைத் துரத்துபவர்களை ‘Storm chaser’ என்பார்கள்.

ரிச்சர்ட் அவ்வப்போது தன் வித்தியாச மான அனுபவங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேட்டியளிப்பான். அவன் மனைவியும் கலந்து கொண்டு பேசுவாள். ஆகவே, இந்தத் தம்பதி தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள்.

ஒருமுறை ரிச்சர்ட் தன் பேட்டியில் சொன்னான்: இந்த பூமியில் இன்றைக்கு வாழும் மனிதர்கள் எல்லோரும் வேறு கிரகத்தில் இருந்து முதலில் வந்தவர்கள் என்பது என் நம்பிக்கை. வேறு வேறு கிரகங்களுக்கு நம்மால் பறக்கும் தட்டுக்களை அனுப்பி தொடர்பு கொள்ள முடியும். அதை நானே செய்யப் போகிறேன்.

அதன் பிறகு ரிச்சர்ட் தன் சொந்த செலவில் அவனே ஒரு பறக்கும் பலூனைத் தயாரித்தான். 20 அடி சுற்றளவும், 5 அடி உயரமும் உள்ள அந்த பலூனை ரப்பர் மற்றும் அலுமினியம் கொண்டு தயாரித்து, அதில் ஹீலியத்தை நிரப்பினான்.

இரண்டு அடுக்குகள் கொண்ட அந்த பலூனுக்குள் அவன், அவன் மனைவி, மூன்றாவது மகன் ஃபால்கன் மூவரும் நுழைந்து, உள்புற அமைப்பை சுற்றிலும் கூடியிருந்தவர்களுக்கு படம் பிடித்துக் காட்டினான்.

அந்த பலூனைப் பறக்கவிடும் நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. ஆகவே, உலகமெங்கும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெளியே வந்து பலூனின் கயிறுகளை விடுவித்து வானத்தில் பறக்கவிட்டதும் அனைவரும் கைத் தட்டி னார்கள். கைத் தட்டல்களை மீறி மனைவியைப் பார்த்துக் கத்தினான் ரிச்சர்ட், ‘‘எங்கே நம் மகன் ஃபால்கன்?''

அங்கும் இங்கும் தேடினார் கள். ஃபால்கனைக் காண வில்லை. பதறினான் ரிச்சர்ட், ‘‘அய்யோ! ஃபால்கன் வெளியே வருவதற்குள் வாசல் கதவை மூடிவிட்டாய். பறக்கும் பலூனில் ஃபால்கன் இருக்கிறான்.’’

அவ்வளவுதான். சுற்றிலும் இருந் தவர்களுக்கும், நிகழ்ச்சியைத் தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர் களுக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

பெற்றோர் இருவரும் அழுதபடி முதலில் காவல்துறையையும், பேரிடர் மீட்புக் குழுவையும் போனில் அழைத்தார்கள். பலூனை மீட்டு பையனைக் காப்பாற்றுவதற்கு கடலோர காவல் படை களத்தில் இறங்கியது.

மீட்பு ஹெலிகாப்டர்கள் வானில் பறக்கத் தொடங்கின. அவற்றுக்குப் போட்டியாக பல தொலைக்காட்சி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் பலூனையும் மீட்பு முயற்சிகளையும் கவர் செய்ய பறக்கத் தொடங்கின.

பலூனின் எடை, உள்ளே நிரப்பப் பட்டிருக்கும் ஹீலியத்தின் எடை, காற்றின் வேகம், அது பயணிக்கும் திசை என்று விஞ்ஞானிகள் கணித்து உதவத் தொடங்கினார்கள். பலூன் வானில் கடந்து கொண்டிருந்த பகுதியில் இருந்த டென்வெர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, எந்த விமானமும் புறப்படவோ, எந்த விமானமும் இறங்கவோ கூடாதென்று உத்தர விடப்பட்டது.

பலவிதமான முயற்சிகள், போராட்டங்களுக்குப் பிறகு அந்த பலூனை தரையிறக்கிப் பார்த்தபோது உள்ளே பையன் இல்லை!

அந்த பலூனுக்குள் நுழைவதற்கான வாசலின் கதவு திறந்தபடி இருந்ததால், பலூனில் பயணித்தபோது பையன் கீழே விழுந்திருக்கலாம் என்று கணித்தார்கள். பலூன் பயணம் செய்த பாதையெங்கும் தேடிப் பார்த்தார்கள். பையன் கிடைக்கவில்லை.

இந்தப் பரபரப்புக்கு மத்தியில் ஒரு பத்திரிகையாளர் அந்த பலூனைப் பறக்க விட்ட இடத்த்துக்கு அருகில் இருந்த கார் ஷெட்டுக்குள் பையன் ஃபால்கன் இருப்பதைக் கண்டுபிடித்தார். அவனை விசாரித்தால் முதலில் விழித்தான். பிறகு என் பெற்றோர்தான் அங்கே பதுங்கியிருக்கச் சொன்னதாக உளறிவிட்டான்.

அதன் பிறகு தம்பதியினர் கடுமையாக விசாரிக்கப்பட்டனர். ‘‘ஒருவிதமான பர பரப்பு ஏற்படுத்துவதற்காகவும், தங்களுக்கு மேலும் புகழ் தேடிக் கொள்வதற்காகவும் இது திட்டமிட்டு நடத்திய நாடகம்’’ என்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. விசாரணையின் முடிவில் ரிச்சர்டுக்கு 90 நாட்கள் சிறை வாசமும், அவன் மனைவிக்கு 20 நாட்கள் சிறைவாசமும் மற்றும் 36 ஆயிரம் டாலர்கள் அபராத மும் விதிக்கப்பட்டன.

இந்தக் கலாட்டாவினால் அந்த மீட்பு முயற்சிகளுக்கு அரசாங்கத்துக்கு ஆன மொத்த செலவு 20 லட்சம் டாலர்கள் என்று ஒரு பத்திரிகை கணக்கிட்டு எழுதியது. அந்த நேரத்தில் மட்டும் கூகுளில் இந்த நிகழ்வைப் பற்றி உலகம் முழுவதும் மிக அதிகம் பேர் தேடியதால் அந்த நிகழ்வுதான் உச்சத்தில் இருந்தது.

சில வருடங்கள் கழித்து ரிச்சர்ட் அந்த பலூனை ஏலத்துக்கு விட்டான். அதை 2,500 டாலர்களுக்கு ஒருவர் எடுத்தார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்ட ஒரு இசை ஆல்பம் பல விருதுகளைப் பெற்றது.

அமெரிக்காவிலாவது ரிச்சர்ட் போன்றவர்கள் அரசாங்கத்துக்குதான் செலவு வைக்கிறார்கள். இங்கே சிலர், மாஞ்சா கயிற்றில் பட்டம் விட்டு உயிர்களையே பறித்துக் கொண்டிருக் கிறார்கள்.

- வழக்குகள் தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-27-பலூன்-பையன்/article7849741.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி! 28 - சதி, சதியைத் தவிர வேறில்லை!

EPPADI_2618796f.jpg
 

அவன் பெயர் கரண்குமார் காக்ரே. வயது 28. மும்பையில் முக்கிய மான பகுதியில் வாழ்ந்துவந்த அவனுக்கு இசையை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பது ஆசை.

அவள் பெயர் சிம்ரன் சூட். மாடல் அழகி. சினிமாவில் சின்ன வேடங்களில் நடித்து வந்தாள். கவர்ச்சியான பெண் ணான அவள், அவன் வசித்த அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருந்தாள்.

சிம்ரன் சூட் கரண்குமாருக்கு அறிமுக மானாள். இருவரும் பேசிப் பழகத் தொடங்கினார்கள். சிம்ரன் சூட் தன்னுடன் தங்கியிருந்த சகோதரன் விஜய் பாலண்டேயையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். விஜய் பாலண்டே, தான் ஒரு பிரபல அரசியல் புள்ளியின் ஏராளமான சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு பினாமி என்றான்.

கரண்குமார் கிரிக்கெட் சூதாட்டங்களில் நிறைய பணத்தை முதலீடு செய்வதையும், விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை வாங்கியதையும் கவனித்த இவர்கள், கரண்குமாருக்கு சொந்தமான அபார்ட்மெண்ட்டையும், அவனுடைய காரையும் அபகரிக்கத் திட்டமிட்டார்கள்.

முதல் கட்டமாக, கரண்குமாருக்கு போதை மாத்திரை சாப்பிடும் பழக் கத்தை ஏற்படுத்தினாள் சிம்ரன் சூட். தனக்குத் தெரிந்த ஒரு பிரபல புள்ளி யிடம் இருந்து கரண்குமாரின் திரைப் படத் திட்டத்துக்காக சில கோடி பணத் தைப் பெற்றுத் தருவதாக வாக்களித்து நம்ப வைத்தான் விஜய் பாலண்டே. அதை நம்பிய கரண்குமார் அவன் கேட்ட கடன் தொகையைக் கொடுத் தான். அந்தத் தொகையை விஜய் திருப் பித் தரவில்லை. அது தொடர்பாக இரு வருக்கும் சின்ன சண்டைகள் வந்தது. மேலும் சிம்ரன் சூட்டுடன் அளவுக்கு மீறி கரண்குமார் உரிமையுடன் பழகியதும் விஜய்க்குப் பிடிக்கவில்லை.

கரண்குமாரை முழு நேரமும் போதைக்கு அடிமையாக்கி, அவனை மிரட்டி பத்திரங்களில் கையெழுத்து வாங்கி சொத்துக்களை பெயர் மாற்றிக் கொள்வதாகத் திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஒரு நாள், கரண்குமாரின் அபார்ட்மெண்ட்டில் விஜய் பாலண்டேக்கும் கரண்குமாருக் கும் ஏற்பட்ட வாக்குவாதம் உச்சத்துக் குப் போனது. விஜய் வெறித்தனமாக கரண்குமாரைக் கத்தியால் குத்தினான். அவன் உயிர் போனது.

இரவு வரைக் காத்திருந்த விஜய், கரண்குமாரின் உடலைப் பல துண்டுகளாக வெட்டினான். பெரிய பிளாஸ்ட்டிக் பைகளில் போட்டான். அவற்றை கரண் குமாரின் பி.எம். டபிள்யூ காரிலேயே ஏற்றிக்கொண்டுப் போய், ஊருக்கு வெளியில் நெடுஞ்சாலையில் நெடுந் தூரம் சென்று, ஓரிடத்தில் பைகளை வீசிவிட்டு காரில் புனே நகருக்குச் சென்றான். அங்கே ஒரு நண்பரின் வீட்டில் காரை நிறுத்திவிட்டு, வெளிநாடு செல்வதாகவும் திரும்பி வந்ததும் எடுத்துக் கொள்வதாகவும் சொன்னான். மீண்டும் மும்பைக்குத் திரும்பிவிட்டான்.

கரண்குமாரிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லாததால் சந்தேகப்பட்ட நண்பரின் குடும்பத்தினர் போலீஸை அணுகினார்கள். சிம்ரன் சூட்டை விசா ரித்தால் கரண்குமார் எங்கே சென்றிருக் கிறான் என்பது தெரியும் என்று குடும்பத்தினர் நம்பினார்கள்.

காவல்துறை சிம்ரன் சூட்டை அழைத்து விசாரித்தது. அவள் கரண் குமாரைத் தனக்குத் தெரியுமே ஒழிய மற்றபடி நெருக்கமான பழக்கமெல்லாம் கிடையாது என்றும், அவனைப் பற்றி எந்தத் தகவலும் தனக்குத தெரியாது என்றும் மறுத்தாள். அவளின் வார்த்தை களை அப்படியே நம்பியது போலீஸ்.

போலீஸ் நெடுஞ்சாலையில் கைப் பற்றிய அடையாளம் தெரியாதப் பிணத்தை தனி வழக்காகவும், கரண் குமார் காணாமல் போன வழக்கை தனி வழக்காகவும் விசாரித்துக் கொண்டேயிருந்தது.

விஜய் பாலண்டே தன் அடுத்த வலையில் சிக்க, எந்த மீன் சரியாக இருக்கும் என்று தேடத் தொடங் கினான். அந்தேரியில் மூன்று அபார்ட் மெண்ட்களைச் சொந்தமாக வைத் திருந்த அனுஜ்குமார் டிக்கு அவன் கண்ணில்பட்டான். அனுஜ்குமாரின் தந்தை அருண்குமார் டிக்கு டெல்லியில் வர்த்தகம் செய்துகொண்டிருந்தார். அனுஜ்குமாருக்கு சினிமாவில் நடிகராகும் ஆசை இருந்தது.

வழக்கம்போல சிம்ரன் சூட் மூலம் அனுஜ்குமாரைத் தொடர்புகொண்டான் விஜய் பாலண்டே. பிறகு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண் டான். நம்பும்படி பேசுவதில் வித்தகனான அவன், அனுஜ் குமாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நபராக தன்னை மாற்றிக் கொண்டான். அவனுடைய மூன்று ஃபிளாட்டுகளில் ஒன்றில் இவனே வாடகைக்குக் குடி வந்தான். அடுத்து, தனது நிழலுலக நண்பர்களான தனஞ்ஜெய் ஷிண்டே மற்றும் மனோஜ் ஷாஜ்கோஷ் இருவரையும் மற்றொரு ஃபிளாட்டில் வாடகைக்குக் குடி வைத்தான்.

அந்த ஃபிளாட்டுகளின் மதிப்பு ரூ.50 கோடி. டெல்லியில் இருக்கும் அருண்குமார் டிக்குவுக்கு தன் மகனின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை. அவனை டெல்லிக்கு வரும்படி அழைத்துக் கொண்டிருந்தார். அது தொடர்பாக தந்தை, மகன் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டிருந்தன.

அருண்குமார் டிக்கு டெல்லியில் இருந்து மும்பை வந்து தங்கினார். மற்ற இரண்டு ஃபிளாட்டுகளில் தன் மகன் குடியமர்த்தியிருக்கும் நபர் களின்மேல் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக காலி செய்யச் சொல்லி வற்புறுத்தினார். பிரச்சினைகள் செய்தார். இதனால், விஜய் பாலண்டேயின் இரண்டு நண்பர்களும் அந்த ஃபிளாட்டைக் காலி செய்ய வேண்டியதாயிற்று.

அருண்குமார் டிக்கு உயிரோடு இருக்கும்வரை அந்த ஃபிளாட்டுகளை அடைய விட மாட்டார் என்று புரிந்தது. தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் வகுத்தான் விஜய்.

குறிப்பிட்ட தினத்தில் அனுஜ் குமாரை விஜய் ஒரு முக்கியமான நபரைச் சந்திக்கலாம் என்று சொல்லி கோவாவுக்கு அழைத்துச் சென்றான். அன்று தனியாக இருந்த அருண்குமார் டிக்குவை விஜய் பாலண்டேயின் இரண்டு நண்பர்களும் மடக்கினார்கள். பாத்ரூமில் வைத்து வெட்டினார்கள்.

அவர்கள் செய்த முட்டாள்தனம் அருண்குமாரின் வாயைப் பொத்தாமல் விட்டதுதான். அருண்குமார் போட்ட அலறல் சத்தத்தில் மொத்த அபார்ட் மெண்ட்டும் விழித்துக்கொண்டது. விபரீதம் நடந்திருப்பதைப் புரிந்து, கதவை உடைக்க முடியாததால் வெளிப்புறம் பூட்டினார்கள். போலீ ஸுக்குச் சொன்னார்கள்.

போலீஸ் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தபோது, அருண்குமார் டிக்கு இறந்து கிடந்தார். அந்த இரண்டு கொலைக்காரர்களும் ஜன்னல் வழியாகத் தப்பித்துச் சென்றது தெரிந்தது. அவசர அவசரமாக அவர்கள் சென்றதால் ஏராளமான தடயங்களை விட்டுச் சென்றிருந்தார்கள். மிகச் சுலபமாக இருவரையும் மடக்கிப் பிடித்தது போலீஸ். இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவன் என்று விஜய் பாலண்டேயைக் கை காட்டி னார்கள். விஜய் ஏற்கெனவே செய்த கரண்குமார் கொலையைப் பற்றியும் போட்டுக் கொடுத்தார்கள்.

விஜய் பாலண்டேயும் சிம்ரன் சூட்டும் கைது செய்யப்பட்டார்கள். சின்ன கிராமத்தில் இருந்து சினிமா தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவுடன் மும்பை வந்த விஜய் பாலண்டே ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து, ஓர் உணவுவிடுதியில் வேலை பார்த்து, ஒரு பிரபலமான ரவுடிக் கும் பலில் சேர்ந்து, சிலமுறை சிறைக்கும் சென்று திரும்பியவன் என்பதெல்லாம் பிறகு கிடைத்த இதர தகவல்கள்.

விஜய் பாலண்டேயைச் சிறை மாற்றும்போது அவன் தப்பிச் சென்றான். வெளிநாடு சென்று காஸ்மெடிக் சர்ஜரி செய்துகொண்டு, தன் முகத் தோற்றத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் மும்பைக்கு வந்தான். அவன் மும்பை திரும்பியதுமே போலீஸ் அவனை மடக்கிப் பிடித்துவிட்டது. இப்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

விசாரணையில் தெரியவந்த மிக அதிர்ச்சியான உண்மை என்னவென் றால், சிம்ரன் சூட்… விஜய் பாலண்டேயின் சகோதரி அல்ல என்பதும், அவர்கள் முறைப்படி திருமணம் செய்துகொண்ட கணவனும் மனைவியும் என்பதும் தான்!

- வழக்குகள் தொடரும்

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA

 

 

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி! 29 - மோகம் தரும் சோகம்!

 

pkp_2627828f.jpg
 

கோரக்பூரில் ஆறு ஆண்கள், இரண்டு பெண்கள் கொண்ட பெரிய குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவன் அவன். பள்ளி நாட்களிலேயே அவனுக்குப் படிப்பைவிட பேட்மிண்டன் விளையாட்டில்தான் அதிக கவனம் சென்றது.

அவனுடைய மூத்த அண்ணன்கள் அனைவரையும் அழைத்துப் பேசினாள் அந்தத் தாய்.

“இவனுக்கு எதில் ஆர்வமோ அதில் இவன் முன்னேறவும், பெரிய சாதனைகள் செய்யவும் நீங்கள் அனைவரும் கடைசி வரை உதவ வேண்டும்'' என்றாள். சகோதரர்கள் அனைவரும் உற்சாகமாக ஒப்புக்கொண்டு அதை சபதமாகவே ஏற்றார்கள்.

அந்தச் சிறுவனை பேட்மிண்டன் பயிற்சி பெற சிறந்த கோச்களிடம் சேர்த்துவிட்டார்கள். அவனும் முழு ஈடுபாட்டுடன் விளையாட்டைக் கற்றான்.

சிறுவர்களுக்கான அத்தனை போட்டிகளிலும் வென்று பதக்கங்கள், கோப்பைகளாக வீட்டை அலங்கரித்தான். 14-வது வயதில் அகில இந்தியப் போட்டியில் வென்று தேசிய ஜூனியர் சாம்பியன் ஆனான்.

அந்தச் செய்தியை ரேடியோவில் கேட்ட அவனது குடும்பம் ஆனந்தக் கண்ணீர்விட்டது. தேசிய ஜூனியர் சாம் பியன் பட்டம் கொடுத்த உற்சாகத்தில் இன்னும் தீவிரமாக பயிற்சிகளில் இறங் கிய அவன், 18-வது வயதில் சீனியர்களுக்கான போட்டிகளில் கலந்துகொண்டு தேசிய சாம்பியன் ஆனபோது உலகமே அவனை வியந்தது.

1980-ம் ஆண்டு அவன் செய்த அந்தச் சாதனையை அடுத்த எட்டு வருடங்களுக்கு அவன் விட்டுக் கொடுப்பதாக இல்லை. 1980 முதல் 1987 வரை வரிசையாக எட்டு வருடங்கள் இந்திய தேசிய பேட்மிண்டன் சாம்பியன் அவன்தான். இப்படி வரிசையாக எட்டு முறை எந்த நாட்டிலும் எந்த வீரனும் தேசிய சாம்பியனாக திகழ்ந்து சாதித்ததில்லை.

1988-ம் ஆண்டு. சக பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையான அமிதா குல்கர்ணியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டான். அந்த ஆண்டு நடந்த தேசிய சாம்பியனுக்கான விளையாட் டுப் போட்டியில் முதல்முறையாக சறுக்கலைச் சந்தித்து, தோற்றுப் போனான்.

வெற்றிபெறாத திருமணம் காரணமாக மிகுந்த மனஉளைச்சலில் அவன் இருந்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று ஸ்போர்ட்ஸ் பத்திரிகைகள் எழுதின. இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கான மிக உயர்ந்த விருதான அர்ஜூனா விருதைப் பெற்ற அந்த வீரன் அழகான பெண் குழந்தைக்குத் தந்தையானான். அகன்க்ஷா என்று பெயர் சூட்டினான்.

லக்னோ நகரில் வசித்த அவன் பிறந்து இரண்டே மாதமாகியிருந்த தன் செல்லக் குழந்தையைக் கொஞ்சி விட்டு, பாபு ஸ்டேடியத்துக்கு வழக்கம் போல பயிற்சிக்குச் சென்றான். பயிற்சி முடித்துவிட்டு ஸ்டேடியத்துக்கு வெளியே வந்த அவன் சுடப்பட்டான். அந்த இடத்திலேயே உயிரை விட்ட அவனுக்கு அப்போது வயது 26.

நமது நாட்டின் பேட்மிண்டன் நட்சத்திர வீரர் பிரகாஷ் படுகோனே போல மிகப் பிரமாதமாக சர்வதேச அளவில் ஜொலித்திருக்க வேண்டிய ஒரு இளம் வீரனின் வாழ்வை சில புல்லட்கள் முடித்து வைத்தன.

அந்த வீரனின் பெயர் சையது மோடி. ரயில்வேயில் அவன் பணியாற்றியதால் ரயில்வே நிர்வாகம் சையது மோடியின் நினைவாக சையது மோடி ரயில்வே ஸ்டேடியம் கட்டியது. சையது மோடி கிராண்ட் ப்ரிக்ஸ் என்று அவனுடைய பெயரில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசளித்து வருகிறது பேட்மிண்டன் அசோசியேஷன்.

என்ன நடந்தது?

இந்தியாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் எதற்காக சுடப்பட்டான்? இந்தக் கொலை நடந்து முடிந்து 27 வருடங்கள் ஆன நிலையிலும் சரியான காரணம் வெளிவரவில்லை. ஆனால் வழக்கின் விவரங்களை உன்னிப்பாக கவனித்தால் காரணம் மிகத் தெளிவாகப் புரியும்.

ஸ்டேடியத்துக்கு வெளியே சையது மோடி வந்தபோது ஒரு பைக் வேகமாக வந்ததாகவும், அதில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்திருந்தவன் துப்பாக்கியால் சுட்டதாகவும் கண்ணால் பார்த்த சாட்சி ஒருவன் தெளிவாகச் சொன்னான். ஆனாலும் இந்த வழக்கின் விசாரணை நத்தை வேகத்தில் நகர்ந்ததாலும், பத்திரிகைகள் காவல் துறையைக் கண்டித்து குரல் கொடுத்ததாலும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகே விசாரணை துரிதப்படுத்தப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

அந்த சமயத்தில் உத்தரப்பிரதேசத் தின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜா சஞ்சய்சிங். அவர் சையது மோடி மற்றும் அவரின் மனைவியான அமிதா மோடிக்கு அவர்களின் திருமணத்துக்கு முன்பே அறிமுகமாகி நன்கு பழகிக் கொண்டிருந்த நண்பர். சையது மோடிக்கும் அமிதா மோடிக்கும் திருமணம் செய்து வைத்ததே சஞ்சய்சிங் தான்.

கைது செய்யப்பட்ட ஏழு பேர்களில் இருவர் அமைச்சர் சஞ்சய் சிங் மற்றும் சையது மோடியின் மனைவி அமிதா மோடி. திருமணத்துக்கு முன்பிருந்தே அமிதா மோடிக்கும் சஞ்சய் சிங்குக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாகவும்; இது தொடர்பாக சையது மோடிக்கும், அமிதா மோடிக்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகவும்; கூலிப்படை வைத்து இந்தக் கொலையை இவர்கள் இருவரும் திட்டமிட்டு நடத்தியிருக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டியது அரசுத் தரப்பு.

தங்கள் தரப்பின் ஆதாரங்களாக அவர்கள் சமர்ப்பித்தவற்றில் முக்கியமானவை சையது மோடி மனம் வெறுத்துப் போய் தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகத் தன் தாயாருக்கு எழுதிய கடிதம், மற்றும் அமிதா மோடியின் பழைய டைரி. அந்த டைரியில் உள்ள பதிவுகளில் இருந்து அவருக்கும் சஞ்சய் சிங்கிற்கும் இருந்த காதலை உணர முடியும்.

இந்த வழக்கில் சஞ்சய் சிங்கும் அமிதா மோடியும் தங்கள் மீதான குற்றச்சாட்டைஅடியோடு மறுத்தார்கள். அவர்கள் சார்பாக வாதாடியவர்கள் பிரபலமான வக்கீல் ராம்ஜெத்மலானி யும், அவரின் மகள் ராணியும். டைரியில் உள்ள பதிவுகள் ஒரு பெண்ணின் மன சஞ்சலத்தைக் காட்டுவதாகும். ஒரு பெண்ணுக்கு இப்படியான உணர்வுகள் ஏற்படுவது சகஜமே. ஆனால் அமிதா சையது மோடியை அதிகம் விரும்பியதால்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டு உண்மையாக வாழ்ந்து வந்தார் என்று அவர்கள் வாதிட்டார்கள்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் சிங், அமிதா மோடி இருவருக்கும் இந்தக் கொலை வழக்கிலோ சதியிலோ எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது நீதி மன்றம். மீதி ஐந்து பேர்களில் இரண்டு பேர் பெயிலில் வெளிவந்த போது மர்மமான முறைகளில் சுட்டுக் கொல் லப்பட்டார்கள். அந்த வழக்குகளில் இன்றுவரை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. மீதி மூன்று பேரில் ஒருவருக்கு சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தது கோர்ட். மிச்சம் இரண்டு பேரில் ஒருவன் பைக்கை ஓட்டி வந்தவன். இன்னொருவன் சுட்டவன். பைக்கை ஓட்டி வந்தவனும் விடுதலை செய்யப்பட்டான். சுட்டவனுக்கு மட்டும் ஆயுள் தண்டனை தரப்பட்டது. உயர்நீதி மன்றம் தன் தீர்ப்பில் கடைசி வரை சுட்டதற்கான சரியான காரணத்தை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை என்றே குறிப் பிட்டது.

இப்போது சில தகவல்கள்: 1. ஏற்கெனவே திருமணமான சஞ்சய் சிங் அமிதா மோடியை பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 2. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் பாரதீய ஜனதா கட்சிக்கு மாறினார்.

அரசியல் செல்வாக்கும், திறமையான வக்கீலும் இருந்தால் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு மற்றும் ஒரு சாட்சியே சையது மோடியின் மரணம்!

- வழக்குகள் தொடரும்

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-29-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7899587.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எப்படி? இப்படி! 30 - புகழின் உச்சத்தில் வீழ்ச்சி!

 

palavathar_2636469f.jpg
 

தமிழ் சினிமாவில் இந்த நடிகர் அடைந்த வெற்றியையும், புயும் அப்போது உலகமே திரும்பிப் பார்த்தது. இவரின் உடையும், சிகை அலங்0காரமும் இளைஞர்களால் காப்பியடிக்கப்பட்டது. பெண்கள் இவர் அழகிலும், குரலிலும் கிறங்கிப் போனார்கள். ஒன் பது படங்களிலேயே புகழின் உச்சத்தைத் தொட்டவர்.

அவர்தான் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1934-ல் 60 பாடல்களைக் கொண்ட இவர் நடித்த முதல் திரைப்படம் பவளக் கொடி. இவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 1,000 ரூபாய். படம் சூப்பர் ஹிட்.

இனிமையான குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த, இவர் கர்னாடக சங்கீதத்துடன் தமிழிசைப் பாடல்களும் பாடியவர். இவர் நடித்த ‘ஹரிதாஸ்’ பட சாதனையை தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்தப் படமும் செய்யவில்லை. 1944, 1945, 1946 வருடங்களில் மூன்று தீபாவளிகளைக் கண்டு வசூலை அள்ளிய படம் அது.

பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ படத்தை வெளியிட்டதன் மூலம் சம்பாதித்த பணத்தில் ஒரு தியேட்டரே கட்டி, அதற்கு சிந்தாமணி என்றே பெயரும் வைத்தார் ஒரு திரையரங்க அதிபர்.

இந்தப் புகழ்மிக்க மனிதரின் வாழ்வில் நிகழ்ந்தது ஒரு திருப்புமுனைச் சம்பவம். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் பாகவதர். அவர் கைது செய்யப்பட்டதை ரேடியோவில் கேட்டறிந்த ரசிகர்கள் கொந்தளித்தார்கள். காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பெண்கள் கதறி அழுதார்கள்.

இந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்குள், ‘கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அதே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்’ என்கிற பூகம்பச் செய்தி வந்தது.

அந்த பிரபலங்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள்?

பாகவதரும், கலைவாணரும் லட்சுமி காந்தன் கொலை வழக்குத் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்தனர். அந்த லட்சுமிகாந்தன், வில்லங்கமான ஆசாமி. பத்திர மோசடியில் கைது செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது தப்பிச் சென்றவர். பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டவர்.

தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த லட்சுமிகாந்தன், ‘சினிமா தூது' என்கிற பெயரில் பத்திரிகை ஆரம்பித்து, அதில் பிரபல நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி கொச்சையாக எழுதி வந்தார். பரபரப்பாக விற்ற அந்தப் பத்திரிகையில் லட்சுமிகாந்தன் தங்களைப் பற்றியும் எழுதிவிடுவாரோ என்று திரையுலகப் பிரபலங்கள் பயந்தார்கள். சிலர் அவருக்குப் பணமும் கொடுத்து வந்தார்கள்.

பாகவதரும் கலைவாணரும் அந்த மஞ்சள் பத்திரிகையைத் தடை செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தனர். ‘சினிமா தூது’ தடை செய்யப்பட்டது. அதன் பிறகு லட்சுமிகாந்தன் ‘இந்து நேசன்' என்கிற வேறு ஒரு பத்திரிகையில் அதே போலவே எழுதி வர, அந்தப் பத்திரிகையும் பிரபலமானது.

பாகவதர் மற்றும் கலைவாணர் மீது ஆத்திரத்தில் இருந்த லட்சுமிகாந்தன் இந்துநேசனில் அவர்களைப் பற்றி அவதூறாக எழுதித் தள்ளினார்.

இந்நிலையில்தான் 1944-ல் நவம்பர் 8-ம் தேதி யாரோ இரண்டு பேரால் லட்சுமிகாந்தன் கத்தியால் குத்தப்பட்டார். ரத்தம் சொட்டும் அந்நிலையிலும், தன் வக்கீல் நண்பரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகுதான் மருத்துவமனைக்குச் சென்றார்.

லட்சுமிகாந்தன் முதலில் காவல் துறையில் சொன்ன வார்த்தைகள் “அவன் என்னைக் கத்தியால் குத்தி விட்டான்' என்பதே. அவருடைய புகாரிலும் பாகவதர், கலைவாணர் பெயர்கள் இல்லை. மறுநாள் அவர் இறந்து போனதும் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாறியது.

போலீஸாரின் விசாரணையில், லட்சுமிகாந்தன் மீதான முன்பகை காரணமாக வடிவேலு என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததாக தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அடுத்தக்கட்ட விசாரணையில் லட்சுமிகாந்தனை கொலை செய்யச் சொல்லிப் பணம் கொடுத்ததாக பாகவதர், கலைவாணர் மீது குற்றம் சாட்டியது போலீஸ். அப்ரூவராக மாறிய நித்தியானந்தம் என்பவர் கொடுத்த வாக்குமூலமே போலீஸுக்கு பிரதான ஆதாரமானது.

கைது செய்யப்பட்ட பாகவதரும் கலைவாணரும் போராடித்தான் பெயில் பெறவேண்டியிருந்தது. வழக்கு நடைபெற்றது. குறிப்பிட்ட தினத்தில் தாங்கள் ஊரிலேயே இல்லை என்று வாதிடப்பட்டது. ஆனால், செஷன்ஸ் கோர்ட்டில் ஒன்பது ஜூரிகளை கொண்டு நடந்த வழக்கில் மூன்று பேர் அவர்கள் சதி செய்யவில்லை என்றும்; ஆறு பேர் அவர்கள் சதி செய்ததாகவும் கருத்து சொல்ல, அதன் அடிப்படையில் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பானது.

தீர்ப்பை அறிந்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். ஆத்திரப்பட்ட ரசிகர்கள் கோர்ட் உள்ளே நுழைந்து கையில் கிடைத்த பொருட்களை அடித்து நொறுக்க, போலீஸ் தடியடி நடத்த வேண்டியிருந்தது.

இருவரும் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார்கள். அங்கும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அப்போது இந்தியாவில் உச்சநீதி மன்றம் இல்லாததால் லண்டனில் இருந்த பிரிவியூ கவுன் சிலில் மிகச் சிறந்த வக்கீல்கள் மூலம் வாதிட்டார்கள். ஹைகோர்ட் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற அறிவுரை வழங்கப்பட்டது.

மறுவிசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பு வந்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்த இந்த சட்டப் போராட்டத்தில் மனம் நொந்தார் பாகவதர். வழக்கின் செலவுக்காக பல சொத்துக்களை விற்க நேரிட்டது. அவர்களுக்காக வாதாடிய முன்ஷி என்னும் வக்கீலுக்கு ஒரு நாளைக்கு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பாகவதர் அவர் ஒப்பந்தமாகியிருந்த 9 படங்களுக்காக பெற்ற அட்வான்ஸ் தொகையை திருப்பியளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தன் சொந்த ஊரான திருச்சிக்குத் திரும்பிய பாகவதர், மனம் வெறுத்து இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றார்.

பலரது வற்புறுத்தலால் மீண்டும் சினிமா தயாரித்து நடித்தார். ஆனால், தோல்விகளைத் தழுவினார். தங்கத்தட்டில் சாப்பாடு, பட்டாடை, பத்து விரல்களில் மோதிரம், வெள்ளி ஊஞ்சல், அரண் மனை வீடு, சொந்தமாகக் குதிரை, பல வகை கார்கள் என்று ஆடம்பரமாக வாழ்ந்த பாகவதரின் நிலை மாறியது. நீரிழிவு நோய் ஏற்பட்டு 49-வது வயதில் பாகவதர் காலமானார்.

பாகவதரும் கலைவாணரும் சிறையில் இருந்தபோது சிறை மீட்பு குழு என்கிற பெயரில் ஓர் அமைப்பு திருச்சி யில் உருவாக்கப்பட்டது. அதில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கி.ஆ.பெ.விஸ்வநாதம் போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பாகவதரையும் கலைவாணரையும் விடுவிக்க வேண்டும் என்று கூட்டங்களில் பேசினார்கள்.

இந்த வழக்கில் இன்று வரை முடிச்சு அவிழாத மர்மக் கேள்விகள் சில:

1. அப்ரூவராக மாறிய நித்தியானந்தம் ஹை கோர்ட்டில் வாக்குமூலம் தந்த போது பல்டியடித்து என்னை அப்படி சொல்லச் சொல்லி போலீஸார் வற்புறுத் தினார்கள் என்று சொன்னபோதும், அவரின் முதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜூரிகள் ஏன் தவறான தீர்மானத்துக்கு வந்தார்கள்?

2. லட்சுமிகாந்தன் தன் புகாரில் இந்த இருவரின் பெயர்களைக் குறிப்பிடவே இல்லை எனும்போது, இந்த வழக்கில் அவர்களை ஏன் காவல்துறை சேர்த்தது? இவர்களின் பிரம்மாண்டமான வளர்ச்சியை சகிக்க முடியாத தொழில் எதிரிகள் செய்த சதியா?

- வழக்குகள் தொடரும்

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எப்படி? இப்படி! 31 - ரத்தத்தில் செய்த சபதம்!

 

vanji_2653177f.jpg
 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று - திருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ் வாஞ்சிநாதனால் சுடப்பட்டது.

104 வருடங்களுக்கு முன்பு 1911-ல் நிகழ்ந்தது இந்தக் கொலை. நிகழ்ந்த இடம் மணியாச்சி ரயில் நிலையம். திருமணமான 25 வயது இளைஞரான வாஞ்சிநாதன் வனத்துறையில் பணி புரிந்தபடி வாய்ப்பு கிடைத்தால் நம் நாட்டில் ஊடுருவிய வெள்ளையர்களை கொலை செய்ய வேண்டும் என்கிற வெறியுடன் இயங்கிய ஓர் அமைப்பில் இருந்தவர்.

17.06.1911 அன்று ஆஷ் தன் மனைவி மேரியுடன் கொடைக்கானலில் படித்த தனது பிள்ளைகளைப் பார்க்க திருநெல்வேலியில் இருந்து ரயிலில் புறப்பட்டான். மணியாச்சியில் அவன் வந்த ரயில் பெட்டி வேறு ரயிலில் கோக்கப்படக் காத்திருந்தது. ஆஷின் பாதுகாவலர் தண்ணீர் பிடிக்கப் போன இடைவெளியில் வாஞ்சிநாதன் அந்தப் பெட்டியில் நுழைந்தார். ஆஷின் மார்புக்கு நேராக பெல்ஜியம் நாட்டின் தயாரிப்பான பிரவுனிங் வகை துப்பாக்கியை நிமிர்த்தினார். மூன்று முறை சுட்டார்.

ஆஷின் மனைவி மேரி அலற, ஓடிவந்த பாதுகாவலர் வாஞ்சிநாதனைத் துரத்த, வாஞ்சிநாதன் பிளாட்பார கழிவறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார். காவலர்கள் கழிவறையின் கதவைத் திறந்து பார்த்த போது அங்கே வாஞ்சிநாதன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதை உணர்ந்தார்கள்.

அவருடைய சட்டைப் பாக்கெட் டில் இருந்த இரண்டு காகிதங்களில் ஒன்று - பிரான்சில் இருந்து வெளிவந்த ‘வந்தே மாதரம்’ பத்திரிகையின் தலையங்கப் பகுதி. அதில் ‘வெள்ளையர்களைக் கொன்று பாரத மாதாவுக்கு ரத்த அபிஷேகம் செய்ய வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொன்று, காவல்துறைக்கு வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம். அதில் ‘ராமனும், கிருஷ்ணனும் வாழ்ந்த புண்ணிய பூமியை ஆங்கிலேயர்கள் அரசாள்வதா? ஒவ்வோர் ஆங்கிலேயனுக்கும் நமது பாரதத்தின் புத்திரர்கள் நான் செய்ததைப் போலவே செய்வதுதான் கடமை’ என்று எழுதப்பட்டிருந்தது.

காவல்துறை வாஞ்சிநாதனின் இல்லத்தில் சோதனை போட்டபோது நடந்த கொலை தனி மனித செயல் அல்ல என்பதும், இந்தச் சதியில் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆறுமுகப் பிள்ளை, சோமசுந்தரம் என்கிற இருவர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இரு வரும் அரசுத் தரப்பின் சாட்சிகளாக மாறுவதாகச் சொல்லி அப்ரூவர் ஆனார் கள். நடந்த கொலையை யாரெல்லாம் சேர்ந்து, எப்படி எல்லாம் திட்டம் தீட்டினோம் என்று விரிவாகச் சொன் னார்கள். அவர்கள் கொடுத்தத் தகவல்களை வைத்து மொத்தம் 16 பேரைக் கைது செய்ய காவல்துறை பட்டியல் போட்டது. காவல்துறை கெடுபிடிகளுக்கு பயந்து 16 பேர்களில் இருவர் தற்கொலை செய்துகொள்ள, மீதி 14 பேர்களும் கைது செய்யப்பட்டர்கள்.

இந்த அமைப்பின் தலைமைப் பொறுப் பில் இருந்து செயல்பட்டவர் நீலகண்ட பிரம்மச்சாரி. அவரும் குழுவினரும் அடிக்கடி கூடி சதித் திட்டங்களைப் பேசி வடிவமைப்பார்கள். ஆஷ் கொலை யைப் பற்றி முடிவெடுத்ததும் அதை செயல்படுத்துவது யார் என்று கேள்வி வந்தது. அனைவருமே அதைச் செய்து முடிக்க முன்வந்ததால், அனைவரின் பெயர்களும் எழுதிப் போடப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பட்டவர்தான் வாஞ்சிநாதன்.

இந்தச் சதித் திட்டத்தில் பங்கிருந்த தாக மேலும் ஐந்து பேரை ஆங்கில அரசு சந்தேகப்பட்டது. அந்த ஐவரையும் கைது செய்ய உத்தரவும் போட்டது. ஆனால் அவர்களில் மாடசாமிப் பிள்ளை என்கிறவர் தலைமறைவானார். அவர் என்ன ஆனார் என்பது இன்று வரைத் தகவலில்லை. மீதி நான்கு பேரும் பாண்டிச்சேரி சென்று தங்கிவிட்டதால் அங்கு சென்று அவர் களைக் கைது செய்ய இயலவில்லை.

அப்போது பாண்டிச்சேரி பிரெஞ்சுக் காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் அங்கு சென்று யாரையும் கைது செய்வதானால் அதற்கு பாண்டிச்சேரி அரசின் சம்மதமும் அனுமதியும் தேவை. அதை அத்தனை சுலபமாகப் பெற முடியாது. அங்கே பதுங்கியிருந்த நான்கு பேரையும் ரகசியமாகக் கண்காணித்து அவர்கள் தமிழக எல்லைக்குள் வரும்போது கைது செய்யத் தயாராக ஒற்றர்களையும் காவலர்களையும் நியமித்தது அரசு.

இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட 14 பேர்களையும் குற்றவாளிகள் என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சில் இரண்டு நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் கோர்ட் தீர்மானித்தது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நியமிக்கப்பட்டது. அவர்களில் மூன்று பேர் இவர்களைக் குற்றவாளிகள் என்று கருதியதால் அனைவருக்கும் சிறைத் தண்டனை உறுதியானது.

குறிப்பாக ஆஷ் மேல் வாஞ்சிநாத னுக்கு மிகுந்த கோபம் ஏற்படக் காரணம் சுதந்திரப் போராளிகளுக்கு எதிராக ஆஷ் எடுத்த பல நடவடிக்கைகள். குறிப் பாக வ.உ.சி-யை ஆஷ் தன் எதிரியாகவேக் கருதினான். வெள்ளை யர்களுக்கு எதிராக சுதேசிப் பொருட்களைத் தயாரிப்பதும், மக் களைப் பயன்படுத்த வைப்பதும் நோக்கமாகக் கொண்டு சுதேசி இயக்கம் நிகழ்ந்தபோது தூத்துக்குடியில் வ.உ.சி இரண்டு கப்பல்களை விலைக்கு வாங்கி ஆங்கிலக் கப்பல்களுக்குப் போட்டியாக இயக்கினார்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குச் செல்ல ஆங்கிலக் கப்பல்கள் வசூலித்த பயணக் கட்டணம் 16 அணா. (அதாவது ஒரு ரூபாய்) வ.உ.சி தனது கப்பல்களில் எட்டணா மட்டுமே வசூலித்தார். மக்கள் ஆர்வத்துடன் சுதேசிக் கப்பல் களில் பயணம் செய்யத் தொடங்கினார்கள்.

அப்போது தூத்துக்குடியில் உதவிக் கலெக்டராக இருந்தவன் ஆஷ். வ.உ.சியின் கப்பல் வணிகத்தை நசுக்குவது என்று முடிவெடுத்த ஆஷ் ஆங்கிலக் கப்பல்களை கட்டணமே, இல்லாமல் இலவசமாக இயக்க உத்தரவிட்டான். அது தவிர பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவசமாக ஒரு குடையும் கொடுத்தான். (ஆக, மக்களுக்கு இலவசம் தரும் கவர்ச்சித் திட்டத்தையும் நமக்குக் கற்றுக் கொடுத்தவன் ஆங்கிலேயனே) அத னால் சுதேசிக் கப்பல்கள் பயணிக்க ஆளின்றி முடங்கின. மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தார் வ.உ.சி. வேறு வழியே இல்லாமல் தனது இரண்டு கப்பல்களையும் ஏலத்தில் விட்டார். அவற்றை ஏலத்தில் எடுத்ததும் ஆங்கிலேய அரசே.

ஆஷ் திருநெல்வேலி மாவட்டத்தின் கலெக்டராக இருந்தபோது நிகழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டான். அதில் நான்கு பேர் இறந்தார்கள். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய வ.உ.சியை ஆஷ் கைது செய்து அவருக்கு கோர்ட்டில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்து சிறையில் செக்கிழுக்க வைத்தான்.

வ.உ.சியின் மீது அபரிமிதமான பக்தி கொண்ட வாஞ்சிநாதன் இந்த சம்பவங்களால் ஆஷ் மீது மாறாத கோபமும் கொலை வெறியும் கொண்டிருந்தார். குலுக்கலில் தன் பெயர் வந்ததும் மிகவும் மகிழ்ந்த வாஞ்சிநாதன் பாண்டிச்சேரி சென்று ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டு திட்டமிட்டபடி செயல்பட்டார்.

சுதந்திரப் போராட்டத்தின் தமிழக தியாகியான வாஞ்சிநாதனின் பெய ரைத் தாங்கி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு என்று ரயில் நிலையத்தில் பெயர் பலகை மட்டுமே இருக்கிறது. தவிர வாஞ்சிநாதனுக்கு எங்கும் சிலைகள் கிடையாது. ஆனால் ஆஷின் இந்திய விசுவாசிகள் 32 பேர் பணம் போட்டு தூத்துக்குடியில் ஆஷுக்கு ஒரு மணி மண்டபமும், பாளையங்கோட்டையில் ஒரு சிலையும் வைத்தார்கள்.

2011-ம் வருடம் ஆஷ் சுடப்பட்டு நூறாண்டு ஆன சமயத்தில் ஆஷின் வாரிசுகள் வாஞ்சிநாதனின் குடும்பத் தாருக்கு ‘நடந்ததை மறந்து சமாதான மாக இருப்போம்’ என்று கடிதம் எழுதி அனுப்பினார்கள். வாஞ்சிநாதனின் குடும்பத்தினர் அதற்கு ‘ஆஷின் வாரிசு கள் இந்தியா வந்தால் வரவேற்போம்’ என்று மனிதநேயத்துடன் பதில் சொன்னார்கள்.

- வழக்குகள் தொடரும்..

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E

 

Link to comment
Share on other sites

  • 3 months later...

எப்படி? இப்படி! 32 - விற்பனைக்கு தாஜ்மஹால்!

pkp_2661948f.jpg
 

டெல்லி. ஒரு காலைப் பொழுது. மத்திய அரசாங்கத்தின் முத்திரைபதித்த அந்த கார் மிகப் பெரிய கடிகாரக் கடைக்கு வந்து நின்றது. அதிலிருந்து சஃபாரி உடை அணிந்த, குளிர் கண்ணாடி அணிந்த, கையில் ஒரு ஃபைலுடன் மிடுக்கான அதிகாரி இறங்கினார்.

அந்தக் கடையை அளவெடுப்பது போலப் பார்த்தார். உள்ளே நுழைந்தார். எதிர்ப்படும் ஆசாமியிடம் “உங்கள் முதலாளியைப் பார்க்க வேண்டும்’’ என்று சொல்லி, தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்தனுப்புகிறார்.

கடைக்குள்ளேயே இருக்கும் அலுவலக அறையில் இருந்த முதலாளி விசிட்டிங் கார்டில் மத்திய அமைச்சரின் அந்தரங்கக் காரியதரிசி என்கிற பதவியைப் பார்த்ததும் அடுத்த நிமிடம் ஓட்டமாக வந்து அவரை வரவேற்றார். மிகவும் மரியாதையுடன் அழைத்துச் சென்று அமர வைத்தார்.

“அமைச்சர் தன் பிறந்த நாளுக்காக தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் களுக்கு ஒரு விருந்து கொடுக்கவுள்ளார். அப்போது அனைவருக்கும் ஒரு கை கடிகாரம் பரிசு தர விரும்புகிறார். ஆயிரம் ரூபாய் மதிப்பில் நல்ல கை கடிகாரம் கிடைக்குமா?’’

“ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிறைய மாடல்கள் இருக்கின்றன. எத்தனை வேண்டும் சார்?”

“எண்பத்தைந்து வேண்டும்.’’

பல மாடல்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒரு மாடலைத் தேர்வு செய்தார் அதிகாரி.

“உங்கள் நபர் யாரையாவது கடிகாரங்களுடன் என்னுடன் அனுப்புங்கள். அமைச்சர் இப்போது அலுவலகத்தில்தான் இருக்கிறார். கையோடு செக் வாங்கிக் கொடுத்துவிடு கிறேன்.’’

கடையின் ஊழியர் கை கடிகாரப் பெட்டியுடன் காரில் ஏறிக் கொண்டார். கார் பாராளுமன்றம் அருகில் குறிப்பிட்ட அமைச்சரின் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் வாசலில் நின்றதும் அதிகாரி இறங்கினார்.

ஊழியரை அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு அதிகாரி அந்த அலுவலகத்தின் உள்ளே சென்றார். சில நிமிடங்களில் திரும்பி வந்து, அமைச்சர் கையெழுத்திட்ட செக்கை நீட்டினார்.

அந்த ஊழியரிடம் இருந்து கை கடி காரப் பெட்டியை வாங்கிக் கொண்டு அதிகாரி அலுவலகம் உள்ளே சென்றுவிட்டார். ஊழியர் கடைக்குத் திரும்பி முதலாளியிடம் செக்கைக் கொடுத்தார்.

மறுநாள் முதலாளி தன் வங்கிக்குச் சென்று அந்தச் செக்கைக் கணக்கில் போடச்சொல்லும்போதுதான் அந்தச் செக் ஒரு போலி என்று அதிர்ச்சியான செய்தி சொல்லப்பட்டது.

அப்படி அரசு அதிகாரியாக நடித்து ஏமாற்றிய மிதிலேஷ்குமார் என்கிற நட்வர்லால், உலகளவில் மிகப் பெரிய மோசடி மன்னர்களாகக் கருதப்படும் நபர்களில் ஒருவன். இந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.

பிஹாரைச் சேர்ந்த நட்வர்லால் ஒரு வழக்கறிஞர். அவன் செய்யாத பித்தலாட்டங்களே இல்லை. வாயைத் திறந்தாலே பொய்கள் அருவியாகக் கொட்டும். கொஞ்சம்கூட சந்தேகம் வராத படி மிக சாமர்த்தியமாகப் பேசி மயக்கும் வல்லமை படைத்தவன். தன் பேச்சுக்கு ஆதாரமாக அத்தனை போலி ஆவணங்களையும் தயாரித்துக்கொள்வான். நட்வர்லால் தனக்கு உருவாக்கிக் கொண்ட புனைப் பெயர்கள் ஐம்பதுக்கும் மேல் இருக்கும்.

அவன் மேல் இந்தியாவின் கிட்டத் தட்ட அத்தனை மாநிலங்களிலும் வழக்குகள் இருந்தன. மொத்தம் நூறு வழக்குகளுக்கு மேல் நட்வர்லால் மேல் பதிவு செய்யப்பட்டன.

நட்வர்லால் மொத்தம் ஒன்பது முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அவனுக்கு வழங்கப்பட்ட மொத்த தண்டனை காலம் 113 வருடங்கள். ஆனால், அவன் அனுபவித்தது 20 வருட சிறைத் தண்டனைதான். அதையும் அவன் தொடர்ச்சியாக அனுபவிக்க வில்லை. நட்வர்லால் 8 முறை பல சிறைகளில் இருந்து தப்பிச் சென்றிருக்கிறான்.

எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் கொஞ்சம்கூட திருந்தாமல் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவன் தன் அடுத்த பித்தலாட்டத்தை ஆரம்பித்துவிடுவான். இவனுடைய மோசடிகளுக்கு இலக்கான ஆயிரக்கணக்கான நபர்களில் டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற பிரபல தொழிலதிபர்களும் அடங்குவார்கள்.

அவன் செய்த பித்தலாட்டங்களிலேயே சுவாரஸ்யமானவை சிலவற்றை அறிந்தால்ஆச்சரியமாக இருக்கும். ஒரு வெளிநாட்டு நிறுவன அதிபரிடம் தன்னை இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக அறிமுகப்படுத்திக்கொண்டு, அரசாங்கம் சில காரணங்களால் தாஜ்மஹாலை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக நம்பவைத்து, அதற்குப் பொருத்தமான ஆவணங்களையும் காட்டி ஒரு பெரிய தொகையையும் வாங்கிவிட்டான்.

இதுபோல அவன் மூன்று முறை வேறு வேறு நபர்களிடம் தாஜ்மஹாலை விற்றிருக்கிறான். மேலும் செங்கோட்டையையும் விற்றிருக்கிறான். இதில் உச்சம், நமது பாராளுமன்றக் கட்டிடத்தையே விலை பேசியதுதான். இலவச இணைப்பாக அதில் உள்ள 545 பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து விற்றிருக்கிறான்.

அப்படியென்றால் சம்பந்தப்பட்டவர்களை எத்தனை தூரம் மூளைச் சலவை செய்திருக்க வேண்டும். அவர்களை நம்பவைக்க எத்தனை தூரம் இவன் மெனக்கெட்டிருக்க வேண்டும்.

சாதாரண செக் மோசடியில் தொடங்கி மிகப் பெரிய மோசடிகளைச் செய்த இவன், ஒரு சில கூட்டாளிகளையும் தன் நாடகங்களுக்குப் பயன்படுத்தி யிருக்கிறான். அவர்களை காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை. தனக்கு ஒரு மகன் மட்டுமே என்று இவன் சொன்ன வாக்குமூலமும் பொய். நட்வர்லாலுக்குத் திருமணமாகி ஒரு மகள் மட்டும் இருக்கிறார் என்பதே உண்மை. அந்த மகள் ஒரு ராணுவ வீரரை மணந்தார் என்பது ஓர் அழகான முரண்.

நட்வர்லால் கடைசியாக கைது செய்யப்பட்டபோது அவனுக்கு வயது 84. அந்த வயதிலும் மோசடியைத் தொடர்ந்த நட்வர்லால், மோசடியால் சேர்த்த சொத்துக்களை என்ன செய்தான் என்கிற கேள்விக்கு, தான் ஒரு இந்திய ராபின்ஹுட் என்றும் அத்தனை சொத்துகளையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டேன் என்றும் பதில் சொன்னான்.

நட்வர்லாலைக் கடைசியாக காவல் துறையினர் சிறைக்கு அழைத்துச் செல் லும்போது அவன் சாமர்த்தியமாக தப்பிச் சென்றது 1996-ல். அதன் பிறகு அவனைப் பற்றிய தகவல் இல்லை. பிறகு பல வருடங்கள் கழித்து நட்வர்லால் இறந்துவிட்ட தாக ஓர் ஆவணத்தை சம்ர்ப்பித்து அவன் மீது இருந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்தது காவல்துறை.

ஆனால் 1996-லேயே நட்வர்லால் இறந்துவிட்டதாகவும், தான் அவரை எரித்துவிட்டதாகவும் நட்வர்லாலின் சகோதரர் அறிக்கை வெளியிட்டார். ஆகையால் நட்வர்லாலின் மரணத்திலும் ஒரு மர்மம் நீடிக்கிறது. நட்வர்லாலின் மோசடிகளை மையமாக வைத்து ‘ராஜா நட்வர்லால்’ என்று அமிதாப்பச்சன் நடித்த ஒரு இந்தி திரைப்படம் கூட வெளியானது. தவிர, ஆஜ் தக் என்னும் தொலைக்காட்சி யில் தொடர் ஒன்றும் வெளியானது.

அவன் எத்தனைப் பெரிய மோசடி மன்னனாக இருந்தாலும் பிஹாரில் அவன் பிறந்த கிராமத்தில் பலர் அவனை இன்றும் ஒரு ஹீரோவாகக் கொண்டாடுகிறார்கள். ஒருவேளை அவன் நிஜமாகவே மோசடி செய்து சேர்த்த சொத்துக்களை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.

- வழக்குகள் தொடரும்...

வாஞ்சிநாதனுக்கு சிலை உள்ளது

‘வ.உ.சியின் சுதேசிக் கப்பல் நிறுவனம் விற்கப்பட்டபோது அதை வாங்கியது ஆங்கில அரசு அல்ல; B.I.S.N என்கிற ஆங்கில கப்பல் நிறுவனம்தான் வாங்கியது.

வ.உ.சி கைது செய்யப்பட்டபோது நெல்லையில் எழுந்த மக்கள் எழுச்சியை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஷ் அல்ல; அந்த மாவட்ட கலெக்டராக இருந்த விஞ்ச் என்கிற ஆங்கிலேயர்.

எங்குமே வாஞ்சிநாதனுக்கு சிலை இல்லை என்பதும் தவறு; நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வாஞ்சியின் ஆள் உயரச் சிலை உள்ளது. பாளையங்கோட்டையில் ஆஷின் கல்லறைதான் உள்ளது; சிலை அல்ல.’

- சென்ற வாரம் வெளியான ‘எப்படி இப்படி’ தொடரில் இடம்பெற்ற மேற்கண்ட தவறுகளை சுட்டிக்காட்டிய தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ வேங்கடரமணா, வரலாற்று ஆய்வாளர் தூத்துக்குடி ஆ.சிவசுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றி!

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி! 33 - கொலைகள்... மேலும் கொலைகள்!

eppadi_2670647f.jpg
 

குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்று சொல்வார்கள்.

பெரும்பாலான குற்றவாளிகளின் வாழ்க்கையிலும் அப்படி உருவா வதற்கான சூழல் இருக்கலாம். ஒரே இர வில் ஒருவன் கொள்ளைக்காரனாகிவிட லாம் என்று தீர்மானம் செய்து, அப்படியே கொள்ளைக்காரனாக மாறி வங்கியைக் கொள்ளையடித்துவிட முடியாது. இன்றைக்கு கொலைசெய்யலாம் என்று வண்டிக்கு பெட்ரோல் போடுவது மாதிரி சாதாரணமாக செய்வதில்லை. கூலிப் படையில் காசுக்காக இரக்கமே இன்றி கொலைகளைச் செய்கிற யாரும் “இது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு’’ என்று சொல்வதில்லை. எல்லோரிடமும் ஒரு கதை இருக்கும்.

நேனிதாஸின் கதை மிக அழுத்தமானது. அமெரிக்காவில் பிறந்த நேனி தாஸ், தனது சின்ன வயதில் பள்ளியில் சேர்ந்து படித்துப் பெரிய அரசு அதிகாரி யாக வளரத்தான் ஆசைப்பட்டாள். ஆனால், அவளுடைய தந்தை அவளை பணம் கொடுக்கும் ஒரு இயந்திரமாக நினைத்து, வேலைக்கு அனுப்பி சம்பா தித்து வரச் சொன்னார். அங்கேயே விழுந்தது அவள் மனதில் முதல் விரிசல்.

பதின்பருவத்தில் நேனிதாஸுக்கு ஒரு நல்ல உடை வாங்கித் தந்ததில்லை அவள் தந்தை. அவளுக்கு வயிறார சாப்பாடு போட்டது இல்லை. கொஞ்சம் திருத்தமாக மேக்கப் போட்டுக்கொள்ள வும் அனுமதி இல்லை. வெளியே எங்கும் தனியாகப் போகக் கூடாது. ஆண் நண்பர் களுடன் பழகக் கூடாது. பார்ட்டிகளுக்கு, விழாக்களுக்குப் போகவே கூடாது என்று ஏகப்பட்ட கூடாதுகள்!

ஆனால், மறுக்கப்படுவதைத்தானே மனித மனம் விரும்பிச் செய்யும்? எதை எல்லாம் வீட்டில் மறுக்கப்பட்டதோ, அதையெல்லாம் பிடிவாதமாக நாடியது அவளுடைய மனசு.

நேனிதாஸ் கனவுகளில் மிதந்தாள். கற்பனை சுகத்தில் மகிழ்ந்தாள். மனதில் காதல் பொங்கி வழிந்தது. காதல் தொடர்பான புத்தகங்களை மட்டுமே படித்தாள். பத்திரிகைகளுக்கு தனது பெயர் போடாமல் காதல் கட்டுரைகள் எழுதி அனுப்பினாள். மற்றவர்களின் காதல் அனுபவங்களை ஆர்வமாகக் கேட்டாள். ஆனால், அவளின் காதலைப் பகிர்ந்துகொள்ள ஓர் ஆண் மகனைச் சந்திக்கவே இல்லை. அதாவது சந்திக்க வாய்ப்பு அமையவில்லை.

16 வயதில் பெற்றோர் பார்த்து வைத்த திருமண வாழ்வை ஏற்று, ஆயிரம் கனவுகளுடன் புதிய வாழ்வில் நுழைந்தாள். அங்கே நேனிதாஸின் ஒவ் வொரு கனவும் முறிக்கப் பட்டது. அன்பான கணவன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவளுக்கு அவளு டைய தந்தையைவிட மோச மானவனாக அவன் அமைந் தான். அவனுடைய வார்த்தை கள் சாட்டையடிகளாக விழுந் தன. அவனுடைய நடவடிக்கை எதுவுமே அவளுக்குப் பிடிக்காமல் போனது. ஆனாலும், அவனோடு பொறுமையாக வாழ்ந்து குழந்தைகளும் பெற்றாள்.

வெளியே கடைக்காரர்களிடம், கார் டிரைவர்களிடம் என்று எவரிடம் அவள் பேசினாலும் அவனுக்கு சந்தேகம். மனம் நொந்துபோன அவள் புகைப் பழக்கத்துக்கும், மதுப் பழக்கத்துக்கும் ஆளானாள். தினமும் குடித்தே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு போதைக்கு நேனிதாஸ் அடிமையானாள்.

திடீரென்று உடல்நலம் கெட்டு அவளது கணவன் இறந்தபோது அவள் அழவே இல்லை. மனதுக்குள் கொண் டாடியபடி, வெளியே பொய் துக்கத்தில் இருந்தாள். இதைத் தொடர்ந்து உடனடியாக இரண்டாவது திருமணமும் செய்துகொண்டாள்.

புதிய கணவனின் செயல்களிலோ மர்மம் இருந்தது. அவன் இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்தான். அவனைத் தேடி காவல் துறை ஆசாமிகள் அடிக்கடி வந்து போனார்கள். அந்தத் துறையில் தனக்கு நண்பர்கள் இருப்பதாக அவன் சொன்னதை நேனிதாஸ் நம்பினாள்.

அவன் உடம்பில் இருந்து வீசும் பெண்கள் உபயோகிக்கும் செண்ட் வாசனையைப் பற்றி அவள் கேட்டபோது, அவனால் அவளுக்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால், அது என் பலவீனம் என்று ஒப்புக்கொண்டான். பிறகுதான் தெரிந்தது, தினமும் விதவிதமானப் பெண்களைத் தொட்டாக வேண்டும் என்கிற அவனது காம உணர்வு. அதற்குப் பணம் தேவை. பணத்துக்காக அவன் ரகசியமாக குற்றங்கள் செய்திருக்கிறான். விசாரிக்க வரும் அதிகாரிகளுக்கு லஞ் சம் கொடுத்து சமாளித்திருக் கிறான்.

அவனும் திடீரென்று இறந்துபோனான். உறவினர் கள் நேனிதாஸின் நிலைமைக் காகப் பரிதாபப்பட்டார்கள். ஆறுதல் சொன்னார்கள். அப்போதும் அவள் திருமணத்தின் மீது தனக்கு இருந்த நம்பிக்கையை மாற்றிக்கொள்ளவே இல்லை. மூன்றாவதாகவும் ஒரு கணவனைத் தேடிக் கொண்டாள்.

மூன்றாமவன் இதற்கு முந்தையவர் களைப் போல இல்லை. அவனுக்கு ஒரே ஒரு பலவீனம்தான். அவனுக்கு தினமும் சூதாட வேண்டும். அதற்கு முதலில் அவளுடைய நகைகள் பலியாகின. பிறகு, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் எடுத்துச் சென்று விற்றுவிடுவான்.

மனம் வெறுத்துப் போன நேனிதாஸ் அவன் இறக்கக் காத்திருந்து, கடைசி முயற்சியாக நான்காவதாக ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாள். இந்தக் கணவன் படு மக்கு. அவனோடு இருந்த அவனுடைய அம்மாதான் … அங்கே இவளுக்கு வில்லி. சீரியல்களில் வரும் மாமியாரைப் போல அதிகாரம் செய் வதும் வேலைகள் வாங்குவதுமாக நேனிதாஸைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

மன உளைச்சலுக்கு மருந்தாக தன் அம்மா வீட்டுக்குச் சென்றால், அங் கேயும் இவளை விமர்சித்து இவளின் அம்மாவும் கடுமையாகத் திட்டினாள். தனது உடன் பிறந்த இரண்டு சகோதரி களும் இவளின் வாழ்க்கையைக் கிண்டல் செய்தார்கள். பொது விழாக்களில் வைத்து இவளை அவமானப் படுத்தினார்கள்.

போதாக்குறைக்கு இவளுக்குப் பிறந்த இரண்டு பெண்களும் தாய் என் றும் பார்க்காமல் இவளை அலட்சியப் படுத்தினார்கள். எங்கும் மரியாதை இல்லை. எல்லோருக்கும் நேனிதாஸின் வாழ்க்கை கேலிப் பொருளானது.

ஒரு சுபயோக சுபதினத்தில் இவள் தன் மாமியாரை உணவில் விஷம் வைத்துக் கொன்றாள். முதலில் அது வெளியில் தெரியவில்லை. பிறகு காவல் துறையின் தீவிர விசாரணையில் உண்மை வெளிப்பட்டு, நேனிதாஸ் கைது செய்யப்பட்டாள்.

தொடர் விசாரணையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான தகவல்கலைக் கொட்டினாள் நேனிதாஸ். மாமியாரைக் கொன்றது இவளின் முதல் கொலை இல்லை; அது அவளுடைய பதினோரா வது கொலை!

இவள் மனதைக் காயப்படுத்திய ஒவ் வொருவரையும் ரகசியமாக திட்டமிட்டு, அது கொலை என்று வெளியே தெரியாத படி கொலை செய்திருக்கிறாள். இவளின் நான்கு கணவர்களுக்குமே இயற்கை மரணம் நேரவில்லை. அத்தனை பேரை யும் நேனிதாஸ்தான் கொன்றிருக்கிறாள். கணவர்கள் மட்டுமல்ல; சொந்த தாய், இரண்டு சகோதரிகள், இரண்டு மகள்கள், ஒரு பேரன் உட்பட அவளுக்கு மன வருத்தம் கொடுத்த அத்தனை பேரையும் கொலை செய்திருக்கிறாள்.

இவளை விசாரித்த நீதிமன்றம் மரண தண்டனை தர நினைத்து, பிறகு.. இவளின் சூழ்நிலை, மனநிலை எல்லாவற்றையும் கணக்கில் எடுத் துக்கொண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. சிறையில் இருந்தபோது ரத்தப்புற்று நோய் வந்து நேனிதாஸ் இறந்து போனாள்.

குற்றவாளிகள் பிறப்பதில்லை; உரு வாக்கப்படுகிறார்கள் என்னும் கூற்றை நேனிதாஸின் வாழ்க்கை நிரூபித்தது. ஒரு மனநலக் கணக்கெடுப்பில் திருமணங் களில் தோல்வியைச் சந்தித்த ஒரு சில பெண்கள் தங்களுக்குள் கொலை செய் யும் எண்ணம் வந்ததாக ஒப்புக்கொண் டிருக்கிறார்கள். அந்த எண்ணம் தீவிர மடைகிற தருணத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்தால் அது செயலாகிவிடுறது.

- நிறைந்தது

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in

                             

                                                நிறைந்தது

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.