Jump to content

துப்புத் துலக்கியது எப்படி? இப்படி? - பட்டுக்கோட்டை பிரபாகர்


Recommended Posts

எப்படி? இப்படி?- 1
 
pkp1_2399302f.jpg
 
குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்...
 
தொடர்’வதற்கு முன்..
 
அன்புள்ள உங்களுக்கு…
 
வணக்கம்.
 
பள்ளி நாட்களில் இருந்தே துப்பறியும் கதைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். முத்து காமிக்ஸ் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்த காலம். ‘இரும்புக் கை மாயாவி’-க்கு ரசிகர் மன்றம் வைக்காததுதான் பாக்கி. துப்பறியும் கதாபாத்திரங்களில் தேவனின் சாம்பு என்னை வெகுவாக கவர்ந்தார். பிறகு, சுஜாதாவின் கணேஷ்-வஸந்த். கல்லூரி காலத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் பைத்தியமானேன். ஜெய்சங்கர் நடித்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களை விடாமல் பார்ப்பேன். அவர்தானே அப்போது தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!
 
ஒரு படத்தில் சி.ஐ.டியான ஜெய்சங்கர் தன் நண்பருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பார். இருவரும் வெளியே புறப்படும்போது ஒரு சிறிய காகிதத் துண்டை மடக்கி கதவின் ஓரத்தில் செருகி வைத்து கதவை மூடுவார். ‘என்ன செய்கிறாய்?’ என்று நண்பர் கேட்பார். ‘வா, சொல்கிறேன்’ என்று அழைத்துப் போவார். வெளியே வேலை முடிந்து இருவரும் திரும்புவார்கள். அந்த மடக்கப்பட்ட துண்டு சீட்டு கீழே கிடக்கும். ‘யாரோ கதவைத் திறந்தி ருக்காங்க’ என்பார் ஜெய். எனக்கு ‘அட’ என்று இருந்தது.
 
இதுபோல சின்னச் சின்ன ஐடியாக்களை எங்கே படித்தாலும், பார்த்தாலும், பேசினாலும் நான் ரசிக்கத் தொடங்கினேன். நான் கதை எழுதத் தொடங்கியபோது ‘அட’ என்று நினைக்க வைக்கிற கதைகள் அதிகம் எழுத வேண்டும் என்று ஆர்வப்பட்டேன்.
 
நான் எழுதிய முதல் சிறுகதையான ‘அந்த மூன்று நாட்கள்’ கதையில் அரைக் கிறுக்காக நடித்து ஒருவனை நம்ப வைத்து, அவனுக்கே தெரியாமல் கடத்தி வைத்து, அவனுடைய பெற் றோரை பிளாக் மெயில் செய்து பணம் பெற்றபின் அவனை விடுவிப்பான் ஒருவன். தான் கடத்தப்பட்டதோ, தன்னை வைத்து மிரட்டி பணம் வாங் கப்பட்டதோ தெரியாமல் கூலாக வீட்டுக்குத் திரும்பி பெற்றோர் சொன்ன பிறகுதான் உணர்வான் அவன்.
 
இந்த முதல் கதை எனக்குப் பெற் றுத் தந்த பாராட்டுக்கள்தான் என் னைத் தொடர்ந்து எழுத வைத்தது பரத், சுசிலா என்கிற துப்பறியும் ஜோடியை உருவாக்க வைத்தது. அவர்கள் காத லித்துக்கொண்டே துப்பறிந்தார்கள். இப்போதும் என்னைச் சந்திக்கும் வாசகர் கள் அவர்களை நலம் விசாரிக்கிறார்கள்.
 
துப்பறியும் கதைகளை எழுதும்போது எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆர்வம் சேர்ந்து கொள்ளும். செஸ் விளையாடுவது போல மூளை துறுதுறுக்கும். ஒரு புதி ருக்கு விடை தேடுவது எப்படி சுவாரஸ் யமான விஷயமோ அதுபோல சுவாரஸ் யமான புதிரை உருவாக்குவது இரண்டு மடங்கு சுவாரஸ்யமான விஷயம்.
 
‘Who Done it?’ என்கிற குற்றத்தை யார் செய்தது என்று கண்டுபிடிக்க வைக்கும் வகையான கதைகளில் பல கதாபாத்திரங்களின் மேல் சந்தே கத்தை விதைப்பதும், இறுதியில் ஒரு எதிர்பாராத முடிவைத் தருவதும் சவாலான வேலை. படிக்கும்போது பரபரப்பாக இருக்க வேண்டும் என்றால் எழுதும்போது கொஞ்சம் மண் டையை உடைத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.
 
இப்போது குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் விஞ்ஞானத்தின் பங்கு அதிகமாக இருக்கிறது. மிகவும் குயுக்தி யான, விசித்திரமான உத்திகளுடன் குற்றங்களை செய்கிறார்கள் என்றால், அதை கண்டுபிடிப்பதிலும் அதே மாதிரி நுணுக்கமான புத்திசாலித்தனமான அணுகுமுறை அவசியமாகின்றன.
 
இந்தியாவின் உளவு ஸ்தாபனமான ரா (RAW), யுரேனியத்தைப் பயன் படுத்தி பாகிஸ்தான் அணு ஆயுத ஆராய்ச்சி நடத்தி வருவதை ரகசியமாக உளவு பார்த்து, அப்போது பிரதம ராக இருந்த மொரார்ஜி தேசாயிடம் தெரி வித்தது. இந்தத் தகவலை ’ரா’ எப்படி கண்டுபிடித்தது தெரியுமா? பாகிஸ் தானின் அணு ஆராய்ச்சி நிகழும் கவுட்டா ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக் கும் பகுதியில் உள்ள சலூன்களில் வெட்டப்படும் தலைமுடிகளை சேகரித்து அதை கதிரியக்க ஆராய்ச்சி செய்து இந்தமுக்கியமான தகவலைக் கண்டுபிடித்தது.
 
பல குற்ற வழக்குகளில் குற் வாளிகளைக் கண்டுபிடிக்க சின்ன தடயங்களே உதவியாக இருந்திருக் கின்றன. சில வழக்குகளில் அந்தத் தடயங்கள் உடனடியாக கிடைக் காமல் 10 ஆண்டுகளுக்குப் பிறகுகூட கிடைத்திருக்கின்றன. கற்பனை களைவிடவும் உண்மைகள் வித்தியாச மானவை என்பார்கள்.
 
இந்தத் தொடரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ந்த பல வகையான குற்ற வழக்குகளில் குற்ற வாளிகளை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று விரிவாக பார்க்கலாம். அத்தோடு இலவச இணைப்பாக நான் எழுதிய துப்பறியும் கதைகளில் கையாண்ட சில உத்திகளைப் பற்றியும் எழுத இருக் கிறேன்.
 
‘எப்படி? இப்படி!’ என்கிற புதிய தொடர் ‘அட’ என்று உங்களை புருவம் உயர்த்த வைக்கும். அல்லது ‘அடப் பாவிகளா!’ என்று அங்கலாய்க்க வைக் கும். அடுத்த வெள்ளி முதல் வாரா வாரம் சந்திப்போம். அதுவரை ஏற்கெனவே வணக்கம் கூறிவிட்டதால் ‘காத்தி ருங்கள்’ என்று மட்டும் கூறுகிறேன்.
 
பிரியங்களுடன்,
 
பட்டுக்கோட்டை பிரபாகர்
 
pkp_2399304a.jpg
 
 
Link to comment
Share on other sites

எப்படி? இப்படி?- 2: இரண்டு துப்பாக்கிகள் மூன்று தோட்டாக்கள்

 

pkp_2407067f.jpg

 

குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்...
 
1967 பிப்ரவரியில் நடந்த சட்டசபைத் தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் வர லாற்றில் பல முக்கியமான நிகழ்வுகளை ஏற்படுத்தியது.
 
திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக ஆட்சியில் அமர்ந்தது. தேர்தலில் போட்டியிடாத அண்ணா, தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு முதல்வர் ஆனார். முன்னாள் முதல்வர் காமராஜர் ஒரு மாணவரிடம் தோற்றுப்போனார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி தேர்தல் மனு தாக்கல் செய்த எம்.ஜி.ஆர். பறங்கி மலை தொகுதியின் சட்டமன்ற உறுப் பினர் ஆனார்.
 
அந்தத் தேர்தலின் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். ஜனவரி 12, ஒரு முக்கியமான நாள். அன்று மாலை வெளிவந்த இரண்டு செய்திகள் அனைவரையும் உலுக்கின. எம்.ஜி.ஆர் அவரது ராமாவரம் தோட் டத்தில் சுடப்பட்டார் என்பது முதல் செய்தி. அவரை சுட்டதாகச் சொல் லப்பட்ட எம்.ஆர்.ராதாவும் சுடப்பட்டார் என்பது அடுத்த செய்தி.
 
நகரமே ஸ்தம்பித்தது. எங்கு பார்த்தாலும் பரபரப்பு! கடைகள் மூடப் பட்டன. பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ராதாவின் தோட்ட வீட்டில் கல்லெறிதல் மற்றும் தீ வைத்தல் தொடங்கி ஆங் காங்கே கலவரங்கள். ரத்தக் காயங் களுடன் இருந்த இரண்டு பேரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தார்கள். விபத்து பிரிவில் அருகருகில் இரண்டு படுக்கைகளில் படுக்கவைக்கப்பட்டு முதலுதவிகள் அளிக்கப்பட்டன. உடல் களில் பாய்ந்து உள்ளே தங்கிவிட்ட குண்டுகளை அறுவை சிகிச்சை செய்து நீக்க, அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவானது.
 
தகவலறிந்து கூடிவிட்ட ஆயிரக் கணக்கான மக்களின் உணர்ச்சிபூர்வ மான கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த இயலாமல் போலீஸ்காரர்கள் தடியடி நடத்த... மக்கள் திருப்பித் தாக்க.. போர்க்களம் போன்ற காட்சி. ஆர்ப்பரித்த மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வழி அமைத்து ஒரே ஆம்புலன்ஸில் இருவரையும் கொண்டு சென்றார்கள்.
 
எம்.ஜி.ஆரின் இடது காதுக்குக் கீழே துளைத்துச் சென்று முதுகெலும்பின் முதல் எலும்பில் சிக்கியிருந்த குண்டை நீக்குவது அவரின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என்பதால், அதை அப்படியே விட்டுவிட முடிவு செய்தார்கள். (இரண்டு மாதங்களுகக்குப் பிறகு அந்த குண்டு நகர்ந்து தொண்டை அருகே வந்து வலியெடுத்ததால், அப்போது அறுவை சிகிச்சை செய்து அதை நீக்கினார்கள்.
 
அதன் பிறகுதான் அவரின் குரல் பாதிக்கப்பட்டது.) ராதாவின் வலது புருவத்துக்கு மேலும், நெஞ்சு எலும்பு அருகிலும் சிக்கியிருந்த இரண்டு குண்டுகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கினார்கள். எம்.ஜி.ஆர். 57 நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பினார். ராதாவுக்கு 18 நாட்களில் சிகிச்சை முடிந்ததும் அவர் சிறைக் காவலில் வைக்கப்பட்டார்.
 
நடந்தது என்ன?
 
அன்று ‘பெற்றால்தான் பிள்ளையா?' படத்தின் தயாரிப்பாளர் வாசுவும், எம்.ஆர்.ராதாவும் ஒரு புதிய படத்தில் எம்.ஜி.ஆரை நடிக்க வைப்பது தொடர் பாகப் பேச ராமாவரம் தோட்டத்துக் குச் சென்றார்கள். எம்.ஜி.ஆருக்காக வீட்டின் வரவேற்பறையில் காத்திருந் தார்கள். எம்.ஜி.ஆர் வந்தார்.இருவரிட மும் பேசினார். அப்போதுதான் சம்பவம் நிகழ்ந்தது.
 
முதலில் சைதாப்பேட்டை முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலும், பிறகு செங்கல்பட்டு செஷன்ஸ் நீதி மன்றத்திலும் இந்த வழக்கு நடந்த போது அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.பி.ராமனும், பி.ஆர்.கோகுலகிருஷ் ணனும் வாதாடினார்கள். எம்.ஆர்.ராதா வுக்காக வழக்கறிஞர்கள் மோகன் குமாரமங்கலம், என்.நடராஜன், என்.டி.வானமாமலை ஆகியோர் வாதாடி னார்கள். நடந்த சம்பவத்தை எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் இரண்டு விதமாக கோர்ட் விசாரணைகளில் தெரிவித்தார்கள்.
 
எம்.ஜி.ஆர். அளித்த வாக்கு மூலத்தின் சாரம்: ‘நான் வாசுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம். என் காதருகில் குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது. திரும்பிப் பார்த்தால் எம்.ஆர்.ராதா கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார். ‘என்னண்ணே இப்படி பண்ணிட்டீங்க?' என்றேன் நான். ‘சண்டாளா… சதிகாரா! இப்படி பண் ணிட்டியே!' என்று பதறினார் வாசு. இதற்குள் ராதா தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
 
எம்.ஆர். ராதா அளித்த வாக்கு மூலத்தின் சாராம்சம்: ‘நாங்கள் எம்.ஜி.ஆருக்காகக் காத்திருந்தோம். எம்.ஜி.ஆர் வரும்போதே மிக கோபமாக வந்தார். ஒரு பத்திரிகையில் அவரைப் பற்றி நான் அவதூறாக எழுதியதாக சத்தம் போட்டார். நான் மறுத்துப் பேசினேன். ‘உங்களை சுட்டா என்ன பண்ணுவிங்க?' என்று கேட்டார். ‘மனுஷன்னா எப்பவும் சாவறவன்தான், சுட்டுத்தான் பாரேன்' என்றேன். எம்.ஜி.ஆர் எனது துப்பாக்கியை எடுத்து என்னை சுட்டார். நான் தற்காப்புக்காக அவர்மேல் பாய்ந்து அந்தத் துப்பாக் கியைப் பறித்து அவரைச் சுட்டேன்.'
 
எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் 50 ஆண்டு காலமாக நண்பர்கள். இருவரும் சிறுவயதில் ஒரே நாடக கம்பெனியில் பணிபுரிந்தவர்கள். இருவரும் பெரியாரின் மேல் மதிப்பு கொண்டவர்கள். இருவருமே மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். எம்.ஜி.ஆர் அப்போது தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்த்தில் இருந்த ஹீரோ. எம்.ஆர்.ராதா நாடகங்களிலும் சினிமாவிலும் தனி முத்திரை பதித்து உயர்ந்தவர். எம்.ஜி.ஆர் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் என்றால் ராதா திராவிடர் கழகத்தின் முக்கிய பிரமுகர்.
 
இரண்டு பேருமே துணிச்சல்காரர்கள். எம்.ஜி.ஆர் ஒரு முறை படப்பிடிப் பின்போது நடிகைகளிடம் வம்பு செய்த ரவுடிக் கும்பலை நிஜமாகவே அடித்து உதைத்தவர். ’குலேபகாவலி’ படத்தில் நிஜமான புலியுடன் சண்டை போட்டு நடித்தவர். எம்.ஆர்.ராதா தனக்கு சம்பளத்தில் 300 ரூபாய் பாக்கி வைத்த தயாரிப்பாளர் மேல் வழக்கு தொடுத்து பணத்தை வசூலித்தவர். அப்போது குடியரசு தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் தமிழ் நாட்டுக்கு வருகை தந்தபோது இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த ராதாவிடம் இருந்த விலை உயர்ந்த காரை அதிகாரிகள் கேட்டபோது மறுத்தவர்.
 
இந்த வழக்கில் முக்கியமான விஷயம்... இருவரிடமும் துப்பாக்கிகள் உண்டு. இருவருமே அதற்கு லைசென்ஸ் பெற்றிருந்தார்கள். (ராதாவின் துப்பாக்கி 64-ம் வருடத்துக்குப் பிறகு புதுப்பிக்கப்படவில்லை என்று பிறகு தெரிய வந்தது) இருவர் வைத்திருந்ததும் ஒரே மாதிரியான துப்பாக்கிகள். இரண்டு துப்பாக்கிகளிலும் ஒரே மாதிரி யான குண்டுகளைப் பயன்படுத்த முடியும். இப்போது கேள்வி... யாரை யாரை சுட்டார்கள்? எம்.ஜி.ஆர். சொன்னது உண்மையா? எம்.ஆர்.ராதா சொன்னது உண்மையா? நீதிமன்றத்தில் உண்மையை எப்படி நிரூபித்தார்கள்?
 
இந்த வழக்கின் முடிவு வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப் படுகிறது.
 
கதையில் உத்தி
 
நான் எழுதிய ஒரு நாவலில் ஒரு கடத்தல் கும்பலை போலீஸ் தேடி வரும். சில மணி நேரங்கள் அவர்கள் தங்கிச் சென்ற ஒரு சிதிலமான கட்டிடத்தைக் கண்டுபிடிப்பார்கள். அங்கே அவர்கள் ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு வீசிய இலைகளும் பதார்த்தங்களும் கிடக்கும். அவற்றைப் பொறுமையாக ஆராய்ந்து அவை என்ன பதார்த்தங்கள் என்று பட்டியல் போடுவார்கள்.
 
பிறகு அந்த வட்டாரத்தில் உள்ள எல்லா ஹோட்டல்களுக்கும் சென்று பட்டியலைக் காட்டி, அவற்றை யாராவது பார்சல் வாங்கிச் சென்றார்களா என்று விசாரிப்பார்கள். ஒரு ஹோட்டலில் பார்சல் வாங்கிச் சென்றவன் பற்றிய தகவல் கிடைக்கும். அதை வைத்து கடத்தல்காரர்களைக் கண்டு பிடிப்பார்கள்.
 
Link to comment
Share on other sites

எப்படி? இப்படி?- 3: இரண்டு துப்பாக்கிகள்... மூன்று தோட்டாக்கள்!

 

pkp_2414198f.jpg

 

12.01.1967 அன்று எம்.ஜி.ஆர் சுடப் பட்டார். எம்.ஆர். ராதாவும் சுடப் பட்டார். வழக்கின் விசாரணையில் ‘எம்.ஆர். ராதா என்னை சுட்டார். பிறகு தன்னைத் தானே கூட்டுக்கொண்டார்' என்றார் எம்.ஜி.ஆர். ‘எம்.ஜி.ஆர் என்னை சுட்டதால், அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கி நான் அவரை சுட்டேன்' என்றார் எம்.ஆர். ராதா. எது உண்மை?
 
சம்பவத்தை கண்ணால் பார்த்த ஒரே சாட்சி எம்.ஆர். ராதாவுடன் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றிருந்த தயாரிப்பாளர் வாசு மட்டுமே. அவர் தன் சாட்சியத்தில், ‘எம்.ஆர். ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டுப் பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். அவ ரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கப் போராடினேன். அப்போது அவர் தன் னைத் தானே இரண்டாவது முறையாக சுட்டுக் கொண்டார். அதன் பிறகு நான் அந்தத் துப்பாக்கியைப் பறித்தேன். பிறகு போலீஸில் ஒப்படைத்தேன்' என்றார்.
 
எம்.ஜி.ஆர் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும், எம்.ஜி.ஆர் தரப்பின் நிர்பந்தத்தாலும் தயாரிப்பாளர் வாசு பொய் சாட்சி சொல்கிறார் என்றது டிஃபன்ஸ் தரப்பு.
 
அரசுத் தரப்பு இருவருக்கும் இடை யில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு களைப் பதிவு செய்தது. ‘தொழிலாளி' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப் பட்ட ஒரு காட்சியில், தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு பஸ் வாங்கும் சூழலில் எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ்தான் இனி தொழி லாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' என்று வசனம் பேச வேண்டும். எம்.ஜி.ஆர் ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என்றார். அதை எம்.ஆர்.ராதா ஆட்சேபித்தார். ‘சினிமாவுக்குள் உன் கட்சியின் சின்னத்தைக் கொண்டு வராதே' என்றார். இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட, படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தி இறுதியில் திரைக்கதையில் இருந்தபடி ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார்.
 
‘நாத்திகம்’ பத்திரிகையில் எம்.ஆர். ராதா எழுதிய ஒரு கட்டுரையில் எம்.ஜி.ஆரின் பெயரைக் குறிப்பிடாமல், ஆனால் அது எம்.ஜி.ஆர்தான் என்று புரியும்விதமாக ஒரு செய்தியைக் குறிப் பிட்டிருந்தார். காமராஜரைக் கொலை செய்ய ஒருவர் சதி செய்வதாக குறிப் பிட்டிருந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் மனம் புண்பட்டது.
 
டிஃபன்ஸ் தரப்பில் எம்.ஜி.ஆர் சினிமா வில் எம்.ஆர். ராதாவை வளரவிடாமல் இடையூறுகள் செய்ததாகவும், எம்.ஆர். ராதாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்ததாகவும் வாதிட்டார்கள்.
 
போலீஸ் தரப்பு தங்களிடம் வாசு ஒப்படைத்த ராதாவின் துப்பாக்கியின் ஆறு சேம்பர் களில் மூன்றில் மட்டுமே குண்டுகள் இருந்ததாகவும், எம்.ஜி.ஆர் வீட்டில் கைப்பற் றப்பட்ட அவரது துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் நிரப்பப்படாமல் இருந்ததாகவும் தெரிவித்தது.
 
சம்பவம் நிகழ்ந்தபோது எம்.ஜி.ஆர் அணிந்திருந்த உடைகள் அவசரமாக ஏன் துவைக்கப்பட்டன என கேள்வி எழுப்பியது ராதா தரப்பு. அவற்றில் ரத்தக் கறைகள் அழிக்கப்படாமல் இருந்திருந் தால் அதில் எம்.ஜி.ஆரிடம் இருந்து துப் பாக்கியைப் பறிக்க ராதா முயன்றபோது, சிந்திய அவரின் ரத்தத் தடயங்களை நிரூபித்திருக்க முடியும் என்றது.
 
வழக்கு விசாரணை முடிந்து 1967-ம் வருடம் நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித் தார். தீர்ப்பின் சுருக்கம்: ‘எம்.ஆர். ராதா குண்டுகள் நிரப்பப்பட்டத் துப்பாக்கியை எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு எடுத்துச் சென்றதிலேயே அவரின் கொலை நோக்கம் தெரிகிறது.
 
அரசியல் விரோதம் காரணமாக ராதாதான் தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத் தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத் தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது. ஆகவே, ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்குகிறேன்.'
 
இந்த வழக்கில் உண்மை யைக் கண்டறிய மிக உதவி யாக இருந்தது தடயவியல் துறைதான். ஒரு துப்பாக்கி யில் இருந்து குண்டு வெளி யேறும்போது வெப்பத்தினால் சற்றே விரிவடைந்து சுழன்ற படி துப்பாக்கியின் குழலின் உட் பகுதியில் கடுமையான அழுத்தத் துடன் உரசியபடி வெளியேறும். அப்படி உரசுவதால் குண்டின் மேல் கோடுகள் விழும். குழலின் உட்புற அமைப்பு எல்லாத் துப்பாக்கிகளிலும் ஒரே மாதிரி இருக்காது. இரண்டு வெவ்வேறு துப்பாக்கிகளில் இருந்து சுடப்பட்ட குண்டுகளின் மேல் இருக்கும் உராய்வுக் கோடுகள் வெவ்வேறு விதமாகவே இருக்கும்.
 
இதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா இருவரின் துப்பாக்கிகளி லும் குண்டுகள் போட்டு சோதனைக்காக சுட்டு அந்த குண்டுகளையும் அவர் களின் உடல்களில் இருந்து நீக்கப்பட்ட குண்டுகளையும் மைக்ராஸ்கோப் வழியாக ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந் தார்கள்.
 
தடயவியல் துறையின் நிபுணர் களான டாக்டர். கே.சி.பி.கோபால கிருஷ்ணன், டாக்டர். பி.சந்திர சேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த சோதனைகளை நடத்தி மூன்று குண்டு களும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்டவை என்று உறுதி செய்தார்கள்.
 
தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே அவரது அப்பீல் தள்ளுபடி செய்யப் பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண் டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவ ருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.
 
விடுதலைக்குப் பின் மலேசியாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ராதா பேசியபோது, ‘எம்.ஜி.ஆரும் நானும் 50 வருஷமா நண்பர்கள். சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுக்கிட்டோம். அந்த சமயம் கம்பு இருந்திருந்தா, கம் பால சண்டை போட்டிருப்போம். துப் பாக்கிதான் இருந்துச்சி. அதனால துப் பாக்கியால சுட்டுக்கிட்டோம்' என்றார்.
 
அன்றைய தினம் ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் ஆப்ரஹாம் சுகுமார் ராதாவுக்கு முதலுதவி செய்தபோது அவர், ‘நான் தான் சுட்டேன், போலீஸுக்கு ஸ்டேட் மெண்ட் கொடுத்தாச்சு' என்று சொன்ன தாக தன் பிளாக்கில் எழுதியிருக்கிறார்.
 
பிறகு ஒருநாள் எம்.ஜி.ஆர் தடயவியல் நிபுணர் பி.சந்திரசேகரனிடம், ‘மிகவும் பக்கத்தில் இருந்து சுடப்பட்டபோதும் நானும், எம்.ஆர்.ராதாவும் எப்படி பிழைக்க முடிந்தது?' என்று கேட்ட தால், அவர் அந்த ரவைகளை (குண்டு) தீவிரமாக ஆராய்ந்தார். ஒரு துப்பாக்கி ரவையின் வேகத்தை உள்ளேயிருக்கும் ரவையின் பிடிப்புதான் தீர்மானிக்கிறது. ராதா பயன்படுத்திய ரவைகள் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட் டவை.
 
அவற்றை ஒரு தகர டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை யின் டிராயரில் வைத்திருந்தார். டிரா யரை ஒவ்வொரு முறை இழுத்து மூடும் போதும் ரவைகள் உருண்டு ஒன்றோடு ஒன்று உரசி தேய்ந்திருக்கின்றன. அத னால் ரவையின் மேல் பிணைக்கப் பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. இப்படி அழுத்தம் குறைந்த ரவைகளைப் பயன்படுத்திய தால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றார்.
 
கதையில் உத்தி
 
நான் எழுதிய ஒரு கதையில் ஒரு கொலை. போலீஸ் சந்தேகிக்கும் ஒருவனைச் தேடிச் செல்வார்கள். அவன் தங்கியிருக்கும் அறை பூட்டப்பட்டிருக்கும். காத்திருப்பார்கள். அவன் கையில் சூட்கேஸோடு வருவான். தான் மூன்று நாட்களாக ஊரில் இல்லை என்று சொன்னபடி அறைக் கதவை சாவி போட்டு திறப்பான். கதவின் கீழ் இடுக்கு வழியாக உள்ளே தள்ளப்பட்டிருந்த மூன்று தினங்களின் தினசரி பேப்பர்களை எடுத்து மேஜையில் வைப்பான்.
 
அவனை சிக்க வைக்கும் எந்தத் தடயமும் கிடைக்காது. அந்த மூன்று தினங்களின் பேப்பர்களை செக் செய்வார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமையின் இலவச இணைப்புப் புத்தகம், சனிக்கிழமை பேப்பருக்குள் இருக்கும். அதை வைத்து அதட்டி விசாரித்ததும், தான் பேப்பர்களை செட்டப் செய்தபோது மாறிவிட்டதாகச் சொல்வான். செய்த குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
 
- வழக்குகள் தொடரும்…
 
Link to comment
Share on other sites

எப்படி? இப்படி?- 4: படம் பார்த்தேன்... கொள்ளை அடித்தேன்!

 

pkp_2420994h.jpg

 
2007-ம் வருடம், கேரளா - மலப்புரம் மாவட்டத்தில் இடுமுழிக்கால் நகரம். டிசம்பர் மாதத்தின் சில்லென்ற குளிரை அனுபவித்தபடி, இரண்டு தினங்களில் பிறக்க இருக்கும் புத்தாண்டை எப்படிக் கொண்டாடலாம் என்று மக்கள் வகை வகையாக திட்டமிட்டுக்கொண்டிருந்த 30-ம் தேதி இரவில் ரகசியமாக நிகழ்ந்தது அந்த விபரீதம்.
 
அதை அவர்கள் உணர்ந்தது மறுநாள் தான். தென் மலபார் ‘கிராமின் வங்கி’க் கிளை மேனேஜரும் ஊழியர்களும் என்றும்போல மதிய உணவை டப்பாவில் அடைத்துக் கொண்டு வங்கிக்கு வந்து சேர்ந்தார்கள். வங்கியின் சேஃப்ட்டி லாக்கர் இருக்கும் பாதுகாப்பான(?) தனியறைக்கு வந்து பார்த்த ஊழியர் வீல் என்று மலையாளத்தில் அலறினார்.
 
லாக்கர் உடைக்கப்பட்டு, தங்கமும் பணமும் இருக்க வேண்டிய இடத்தில் காற்று மட்டுமே இருந்தது. கீழே பார்த்தால் அறையின் நடுவில் தரையில் ஒரு ஓட்டை. தளத்தின் கான்கிரீட் ஸ்லாப் உடைக்கப்பட்டு ஓட்டை உருவாக்கப்பட்டிருந்தது.
 
சைரன் சத்தத்துடன் விரைப்பாக வந்து சேர்ந்தது போலீஸ். பயிற்சி பெற்ற போலீஸ் நாய்கள் குதித்து இறங்கின. தடயவியல் நிபுணர்கள் கை ரேகை, கால் தடம் சேகரிக்க பூதக் கண்ணாடி, பவுடர், பிரஷ் சகிதம் வந்து சேர்ந்தார்கள்.
 
லாக்கர் ‘கேஸ் கட்டர்’ கொண்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. தளத்தின் கான்கிரீட்டைப் பெயர்த்து உடைக்கப் பயன்படுத்திய ஆயுதம் எதுவும் சிக்கவில்லை. லாக்கர் அறை யின் சுவர் ஒன்றில் ‘ஜெய் மாவோ' என்று எழுதப்பட்டிருந்தது.
 
மேனேஜர் கம்ப்யூட்டரைத் தட்டி திருடுபோன தங்கம், ரொக்கம் இரண் டின் மொத்த மதிப்பு 9 கோடி என்றார். வாயைப் பிளந்தது கேரள போலீஸ்! கேரளா மாநிலத்தில் நடந்த வங்கிக் கொள்ளைகளிலேயே பெரிய கொள்ளை என்கிற அந்தஸ்து பெற்றுவிட்டது அந்தக் கொள்ளை!
 
மீடியாக்கள் உச்ச சத்தத்தில் அல றின. வாட்ஸ் அப் அப்போது இல்லாத தால், மக்கள் கடைகளிலும் தொலை, அலைபேசிகளிலும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
 
பலவிதமான குழுக்கள் அமைக்கப் பட்டன. விசாரணைகள் முடுக்கிவிடப்பட் டன. வங்கி இருந்த அந்தக் கட்டிடத் தின் கீழ்த் தளத்தில் ‘ஜனவரி 8 அன்று புதிய உணவகம் திறக்கப்படும்' என்கிற போர்டு வெளியே வைக்கப்பட்டிருக்க, உள்ளே மேஜை, நாற்காலிகள் கொஞ்சம் இருக்க, ஆயத்த ஏற்பாடுகள் அரைகுறையாக நடந்திருக்கும் நிலை யில் இருந்தது.
 
கட்டிடத்தின் உரிமையாளர் விசாரிக் கப்பட்டார். ‘உணவு விடுதி தொடங்க வாடகை பேசி 50 ஆயிரம் முன் பணம் கொடுத்தார்கள். அதற்காகத்தான் வேலைகள் நடக்கின்றன' என்றார் அவர். வாடகை ஒப்பந்தத்தில் இருந்த முகவரியில் விசாரித்தபோது அது போலி யான முகவரி என்பது தெரிய வந்தது.
 
கொள்ளையர்கள் மிகவும் சாமர்த்திய மாக திட்டம் போட்டிருப்பதும் புரிந்தது. வெளிப் பார்வைக்கு அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக உணவு விடுதி வரப் போவதாக ஒரு போர்டை வைத்துவிட்டு, பேருக்கு சில மேஜை, நாற்காலிகளையும் கொண்டு வந்து போட்டுவிட்டு, வங்கி நேரம் முடிந்ததும் இரவுகளில் கீழ்த் தளத்தில் இருந்து, லாக்கர் அறைக்கு நேர் கீழே ஸ்லாபில் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து ஓட்டை போட்டு வந்திருக்கிறார்கள்.
 
மலப்புரம் எஸ்பி விஜயன் தலைமையில் ஒரு குழு தீவிரமாக விசாரணையில் இறங்கியது. கட்டிடத் தின் உரிமை யாளர், மற்றும் அவர்களைப் பார்த்த சிலர் சொன்ன அடையாளக் குறிப்புகளைக் கொண்டு கம்ப்யூட்டர் மூலம் கொள்ளையர்களின் முகங்களை வரைந்தார்கள். (இந்த முறையில் குற்றவாளிகளை வரைவதற்கு முன் னோடி ஜான்பென்ஸ் என்பவர். விதவித மான கண்கள், மூக்குகள், காதுகள், கன்னங்கள் வைத்து முதலில் ஃபோட்டோ ஃபிட் சிஸ்டம் ஒன்றை இவர்தான் அறி முகப்படுத்தினார். இப்போது கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் கோடிக்கணக்கான முகங்களை வரை யவும், ஒப்பிடவும் முடியும்.)
 
வரையப்பட்ட முகங்கள், மற்றும் கிடைத்த கைரேகைகள் இவற்றை பழைய குற்றவாளிகளின் பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது எவற்றுடனும் அவை பொருந்தவில்லை. ‘ஜெய் மாவோ' என்று சுவரில் எழுதப்பட்டிருந் ததால், ‘இது நக்சல் கூட்டத்தின் வேலை’ என்றுதான் முதலில் நினைத்தார்கள். ஆனால், போலீஸைக் குழப்புவதற்காக அவர்கள் செய்த சதி வேலை என்பது பிறகுதான் தெளிவாகியது.
 
போலீஸுக்குக் கிடைத்த 12 விதமான துப்புகளை வைத்து கொள்ளையர் களைப் பிடிக்கப் போராடியும் ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒரு துப்பு அவர்கள் ஹைதராபாத்தில் ஒரு லாட் ஜில் இருப்பதாகச் சொன்னது. ஒரு படை அங்கு விரைந்தது. அவர்கள் அந்த அறையைக் காலி செய்திருந்தார்கள்.
 
அந்த அறையில் திருடப்பட்ட தங்கத் தில் ஒரு கிலோவை மட்டும் விட்டு விட்டுச் சென்றிருந்தார்கள். மீதி தங்கம் ஹைதராபாத்தில்தான் யாரிடமோ விற்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற நோக்கில், ஆந்திர போலீஸின் உதவி யுடன் ஹைதராபாத்தை அலசியெடுத் தார்கள். ‘என்னாச்சு?' என்று உயரதிகாரி கள் கேட்டபோது, போனவர் கள் உதடுகளைப் பிதுக் கினார்கள்.
 
விசாரணை அதிகாரி களுக்கு கோவாவில் இருந்து ஒரு போன். ‘எங்களை உங் களால் பிடிக்க முடியாது' என்று சவால்விட்டது அந்தக் குரல். ஒரு டீம் கோவாவுக்கு ஒடியது. வாயில் நுரை தள் ளாத குறையாக அலைந்தது. இப்போது பெங்களூரில் இருந்து போன். கர்நாடகா போலீஸின் உதவியைக் கோரி பெங்களூரில் தேடுதல் வேட்டை நடத்தியது இன்னொரு டீம். அடுத்த போன் தமிழ்நாட்டில் இருந்து. இந்த விபரீதமான கண்ணாமூச்சி தொடர... கேரளா போலீஸுக்கு இந்தக் கொள்ளைக்காரர்களைப் பிடித்தேயாக வேண்டும் என்று வெறி ஏறியது.
 
57 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கோழிக்கோட்டில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் நான்கு பேரையும் மடக்கிப் பிடித்தது போலீஸ் படை. அந்த நால்வரில் ஜோசஃப் என்கிற ஜெய்சன்தான் கொள்ளை டீமின் தலைவன். மற்ற மூவரில் ஒருத்தி பெண். (இன்னொரு கொள்ளைக்காரனின் மனைவி)
 
நால்வரையும் விசாரிக்கிற விதத்தில் விசாரித்ததும் தங்கம், ரொக்கம் இவற் றைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்தை அவர்கள் கக்க, இரண்டு கட்டங்களாக அவற்றைக் கைப்பற்றினார்கள். கோர்ட் டில் தொடரப்பட்ட வழக்கில் மூன்று ஆண் களுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பெண்ணுக்கு 5 ஆண்டு கள் சிறைத் தண்டனையும் கிடைத்தன.
 
விசாரணையில் ஜோஃசப், ‘‘இந்தி யில் வெளிவந்த ‘தூம்’ திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில் புத்தாண் டுக்கு முதல் நாள், ஓர் அபார்ட்மெண்ட் டில் உள்ள ஒரு லாக்கரை தளத்தில் ஓட்டை போட்டுக் கொள்ளையடிப்பது போல காட்சி வரும். அதைப் பார்த்து தான் நான் இந்தக் கொள்ளைத் திட்டத்தை உருவாக்கினேன். மொத்தம் இரண்டு மாதங்கள் யோசித்து திட்டம் வகுத்தேன்’’ என்றான்.
 
எப்படி கண்டுபிடித்தார்கள்?
 
கொள்ளை நடந்த 30-ம் தேதி இரவில் அந்த நால்வரில் யாராவது ஒருவர் செல்போன் உபயோகித்திருக்க வேண்டும் என்று முதலில் ஊகித்தது போலீஸ். அந்த ஊகம் உண்மை என்று உறுதியானது. அந்த வங்கிக்கு அருகில் உள்ள செல்போன் டவர்களில் இருந்து அன்று அழைப்புகள் கடத்தப்பட்டவை கிட்டத்தட்ட 20 லட்சம். இதில் எந்த போன் நம்பர் கொள்ளைக்காரனுடையது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? கடற்கரை மணலில் விழுந்த கடுகைத் தேடும் வேலை!
 
இதை சவாலாக எடுத்துக் கொண் டார்கள். செல்போன் சர்வீஸ் தருகிற அத்தனை பேரின் உதவியையும் நாடினார்கள். ஐ.டி-யில் வேலை பார்க்கிற தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் நிறையப் பேரை அழைத்தார்கள். ஒரு மிகப் பெரிய படை அமைக்கப்பட்டது. 20 லட்சம் போன்களையும் மானிட்டர் செய்தார்கள். சந்தேகப் பட்டியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி, கடைசியில் 1,057 அழைப்புகளை அழுத்தமாக சந்தேகப்பட்டார்கள். அந்த போன்களை விடாமல் ரகசிய மாக கண்காணித்தார்கள். பட்டியலைச் சுருக்கி ஒற்றை எண்ணுக்கு வந்துவிட் டார்கள். அந்த எண்ணை வைத்து கொள்ளையர்களை நெருங்கி விட்டார் கள். ஒரு மிகப்பெரிய நெட் வொர்க் மூலம் பலரின் ஒத்துழைப்புடன் இதைச் சாதிக்க முடிந்தது என்று பெருமை யுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித் தார்கள் போலீஸ் அதிகாரிகள்.
 
கதையில் உத்தி
 
நான் எழுதிய ஒரு கதையில்... ஒரு வில்லன் ஒரு பெண்ணைக் கொலை செய்வான். பழி அவள் கணவன் மேல் விழுவது போல செட்டப் செய்வான். போலீஸ் சோதனையிடும்போது சமையலறையில் ஒரு கள்ளக் காதலன் எழுதிய மூன்று காதல் கடிதங்கள் கிடைக்கும். அந்தக் கள்ளக் காதலனைப் பிடித்து விசாரிப்பார்கள். அவன் 'ஆமாம் ரகசிய காதல் உண்மைதான்' என்பான். அவன் வில்லனின் ஆள்.
 
அந்தக் கடிதங்கள் செட்டப். போலீஸின் கையில் கிடைப்பதற்காகவே ரகசியமாக வைக்கப்பட்டவை. கடிதங்களை நுணுக்கமாக கார்பன் பவுடர் தடவி சோதிக்கும்போது... சதி அம்பலமாகும். 7-ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தின் அச்சுப் பதிவுகள் 2-ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில் இருக்கும். அதாவது, ஒரே சமயத்தில் மூன்று கடிதங்களும் எழுதப்பட்டிருக்கும். இயல்பாக எழுதி முடித்த கடிதத்தை அடியில் வைத்து அடுத்த கடிதத்தை எழுதியதால் மாட்டிக் கொள்வான்!
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எப்படி? இப்படி?- 5: சுட்டான்... சுடப்பட்டான்!

 

pkp1_2436561f.jpg

 

அமெரிக்க வரலாற்றில் இது வரை நான்கு ஜனாதிபதி கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக் கிறார்கள். 1865-ல் ஆபிரஹாம் லிங்கன், 1881-ல் ஜேம்ஸ் கார்ஃபீல்ட், 1901-ல் வில்லியம் மெக்கன்லேயும், 1963-ல் ஜான் எஃப் கென்னடியும் கொல்லப்பட்டார்கள்.
 
ஜேம்ஸ் கார்ஃபீல்டை சுட்ட சார்லஸ் உடனே பிடிபட்டு, விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்டான். வில்லியம் மெக்கின்லேயைச் சுட்ட லியானும் உடனே பிடிபட்டு, பிறகு மின்சார நாற்காலி மூலம் கொல்லப்பட்டான். ஜான் எஃப் கென்னடியைச் சுட்ட ஆஸ்வால்ட் உடனடியாக கைது செய்யப்பட்டாலும் மூன்றாம் நாள் அவன் சிறைக்கு மாற்றப்பட்டபோது, ஜேக் ரூபி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
 
ஆனால், லிங்கனை சுட்ட ஜான் வில்க்ஸ் பூத் மட்டும் அமெரிக்க ராணுவத்துக்கே மிகப் பெரிய சவாலாக அமைந்தான்.
 
லிங்கன் ஜனாதிபதியாக பதவி யேற்றவுடன் அடிமைத்தனத்தை ஒழிப் பதில் தீவிரமாக இருந்தார். இதனால் அடிமைத்தனத்தை ஆதரித்த பல தெற்கு மாகாணங்களின் எதிர்ப்பைப் பெற்றார்.
 
அந்த எதிர்ப்புக் கும்பலில் ஒருவன் தான் ஜான் வில்க்ஸ் பூத். இவன் ஒரு மேடை நடிகன். இவனுக்கு நிறைய ரசிகர் கள் இருந்தார்கள். சொல்லப்போனால் லிங்கனே கூட இவனுடைய ரசிகர்.
 
பூத்தும், அவனுடைய நண்பர்கள் சிலரும் லிங்கனை முதலில் கடத்திச் செல்ல திட்டமிட்டனர். அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. பிறகுதான் கொலை செய்ய முடிவெடுத்தனர். 1865 ஏப்ரல் 14 வெள்ளியன்று, பூத் நடித்த ‘அமெரிக்கன் கஸின்’ நாடகத்தை பார்க்க ஃபோர்ட் ஹால் தியேட்டருக்கு தன் மனைவியுடன் லிங்கன் வரப்போவதை அறிந்ததும், தன் கொலைத் திட்டத்தை நிறைவேற்ற அதுதான் சந்தர்ப்பம் என்று தீர்மானித்தான் பூத்.
 
நாடகம் தொடங்கியது. சற்றே தாமத மாக தன் மனைவியுடன் வந்த லிங்கன், பால்கனியில் தனி அறையில் அமர்ந்து நாடகத்தை ரசிக்கத் தொடங்கினார். இரவு மணி 10-க்கு மேல், பூத் பங்கு பெறாத ஒரு காட்சி மேடையில் நடந்தபோது, அவன் ஒப்பனை அறையில் இருந்து மெல்ல நழுவி லிங்கன் அமர்ந்திருக்கும் பால்கனி பகுதிக்கு வந்தான். சத்தமில்லாமல் கதவைத் திறந்தான்.
 
நாடகத்தில் ஒரு நகைச்சுவை காட்சி. வந்திருந்த 1,700 பார்வையாளர்களும் அந்தக் காட்சியை உரக்க சிரித்து ரசிக்க… லிங்கனும் சிரித்தபடி இருக்க, பூத் தன் டெரின்ஜர் கைத் துப்பாக்கியால் லிங்கனின் பின் மண்டையில் சுட்டான். லிங்கன் நிலைகுலைந்து சரிந்தார். லிங்க னின் மனைவி அலறினார்.
 
லிங்கனுடன் வந்திருந்த ஓர் ராணுவ அதிகாரி பூத்தை பிடிக்க முயற்சிக்க, அவரை அவன் கத்தியால் குத்திவிட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்தான். அப்போது பூத்துக்குக் காலில் அடிபட்டது. அப்படி யும் அவன் சமாளித்துக்கொண்டு வெறியோடு மேடையேறி, ‘பழிக்குப் பழி வாங்கிவிட் டேன்’ என்று கத்தினான்.
 
முதலில் அதை ஏதோ நாடகத்தின் ஒரு பகுதி என்றே நினைத்தார்கள். பால்கனி பகுதியில் இருந்து அலறலும், ‘அவ னைப் பிடியுங்கள்’ என்ற ராணுவ அதிகாரியின் கத்தலுமே நடந்ததை உணர வைத்தது. உடனே பலர் அவ னைப் பிடிக்க துரத்தினார்கள். பூத்துக்கு அந்த நாடக அரங்கின் அமைப்புகள் நன்கு தெரியும் என்பதால் அத்தனை பேருக்கும் போக்குக் காட்டி ஓடி, நாடக அரங்கின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்த குதிரையில் ஏறி தப்பிவிட்டான்.
 
நாடகத்துக்கு வந்திருந்தவர்களில் இரண்டு டாக்டர்களும் இருந்தார்கள். அவர்கள் மயங்கிய நிலையில் இருந்த லிங்கனுக்கு முதலுதவி செய்தார்கள். அரங்கத்துக்கு வெளியில் இருந்த ஒரு வீட்டுக்கு லிங்கன் தூக்கிவரப்பட்டார். சிறந்த மருத்துவர்கள் வந்தார்கள். லிங்க னின் கபாலத்தைத் துளைத்து மூளைப் பகுதியில் தங்கிவிட்ட தோட்டாவை நீக்க முயற்சித்தார்கள். மறுநாள் காலையில் லிங்கனின் உயிர் பிரிந்தது.
 
பூத்தும், அவனது நண்பன் ஹெரால் டும் கிளிண்டன் என்னும் சிறிய நகரத்துக் குப் போனார்கள். பால்கனியில் இருந்து குதித்தபோது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு வைத்தியம் செய்ய மட் என் னும் டாக்டரை சந்தித்தார்கள். அவரிடம் குதிரையில் இருந்து விழுந்துவிட்ட தாக பொய் சொன்னான் பூத். டாக்டர் வைத்தியம் செய்து, ஒரு ஜோடி தாங்குக் கட்டைகளும் கொடுத்தார். பிறகு, டாக்ட ருக்கு லிங்கன் கொலையில் ராணுவத் தால் தேடப்படுபவன் பூத் என்பது தெரிய வந்ததும், அங்கிருந்து போகச் சொல்லி விட்டார்.
 
பூத் தன் நண்பனுடன் பிரிவினை வாதக் குழுவைச் சேர்ந்த சில நண்பர் களைத் தேடிச் சென்றான். அவர்கள் அடைக்கலம் கொடுக்கத் தயங்கினார் கள். கடைசியாக கேரட் என்கிற புகை யிலை விவசாயிக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் இருவரும் தங்கினார் கள். உள்நாட்டு யுத்தத்தில் பங்கெடுத்த பிரிவினைவாதக் குழுவின் படை வீரர்கள் என்று பொய் சொன்னார்கள்.
 
லிங்கன் சுடப்பட்டு 12 நாட்களுக்குப் பின்னர், ஏப்ரல் 26-ம் தேதி அன்று அவர்கள் தங்கியிருந்த பண்ணை வீட்டை அமெ ரிக்க ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தார்கள். இருவரை யும் வெளியே வருமாறு எச்சரித்தார்கள். இருவரும் வெளியே வரவே இல்லை. அவர்களை வெளியே வர வைப்பதற்காக, அந்த வீட்டைச் சுற்றிலும் தீ வைத்தார்கள். உயிர் பயத்தில் நண்பன் ஹெரால்டு மட்டும் வெளியே வந்து சரணடைந்தான்.
 
ஆனால், பூத், ‘என்னை உங்களால் உயிருடன் பிடிக்கவே முடியாது’ என்று கத்திவிட்டு வீரர்களை சுடுவதற்கு ஆயத்தமானான். இதை ஒரு இடுக்கு வழியாக கவனித்த ஒரு ராணுவ வீரன், பூத்தை தலையின் பின்புறம் சுட்டான். ரத்தம் தெறிக்க தடுமாறி விழுந்தவனை வெளியே இழுத்து வந்தார்கள். அதன் பிறகு மூன்று மணி நேரம் உயிருக்குப் போராடி இறந்தான் பூத். அவன் கடைசி யாக படை வீரர்களிடம், ‘என் தாயிடம் சொல்லுங்கள், அவள் மகன் தன் நாட்டுக் காக இறந்தான் என்று!’ என்றான்.
 
பூத்துடன் சதியில் ஈடுபட்டவர்களில் நான்கு பேர். இவர்கள் ராணுவ விசா ரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார் கள். அவர்களில் ஒருவர் பெண். மேரி சூரத் என்கிற அந்தப் பெண்மணி, ‘‘என் மகன் சூரத்தின் நண்பர்கள் என்பதால் அவர்கள் தங்குவதற்கு என் வீட்டை வாடகைக்குவிட்டேன்.
 
அதைத் தவிர இந்தச் சதியில் எனக்கு பங்கில்லை’ என்று கடைசி வரையில் வாதாடினார். தலை மறைவான தன் மகன் இருக்குமிடம் பற்றி தூக்கிலிடும் வரை சொல்லவில்லை. கனடாவுக்குத் தப்பிச் சென்ற ஜான் சூரத் 18 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டான். ஆனால், அவனுடைய வக்கீல்களின் சாமர்த்தியமான வாதங்களால் அவன் விடுதலையானான்.
 
லிங்கனின் உடல் வாஷிங்டனில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டப் பிறகு, ‘லிங்கன் ஸ்பெஷல்’ என்று குறிப்பிடப்பட்ட தனி ரயிலில் 1,6754 கிலோ மீட்டர் கடந்து, லிங்கனின் ஊரான ஸ்பிரிங்ஃபீல்டில் அடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
 
அந்த ரயில் 180 நகரங் கள் வழியாக 13 நாட்கள் பயணம் செய் தது. வழியெங்கும் முக்கியமான நகரங் களில் லிங்கனின் உடல் பொது மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாற்றில் மிக அதிகமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது லிங்கனுக்குதான்.
 
பூத் எப்படி பிடிபட்டான்?
 
பூத் இருக்குமிடம் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் டாலர்கள் தருவதாக அரசாங்கம் அறிவித் தது. (1865-ம் வருஷம் என்பதை நினை வில் கொள்க!) பூத்தை பிடிக்க 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் களத்தில் இறக்கப் பட்டார்கள். வீடுகளிலும், காடுகளிலும் அவர்கள் இரவு, பகலாக தேடினார்கள்.
 
அந்தத் தேடலில் ஓர் ஆற்றைக் கடக்கும்போது ஏற்பட்ட படகு விபத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படைவீரர்கள் உயிரை இழந்தார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு பண்ணை வீட்டில் பூத் பதுங்கியிருக்கும் தகவலை அதன் உரிமையாளர் கேரட் தெரிவித்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது. கேரட் மூலம் தகவல் தெரியவில்லை என்று இன்னொரு குறிப்பு அதை மறுக்கிறது.
 
இன்னும் சொல்லப்போனால் ராணுவப் படை சுட்டு கைப்பற்றியது பூத்தே அல்ல; பூத் சாயலில் இருந்த வேறு ஒருவனைத்தான் என்றும், பூத் 40 ஆண்டுகள் தலைமறைவாகவே வாழ்ந்து இறந்தான் என்றும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இன்றைய அறிவியல் சாத்தியத்தில் இந்த சந்தேகத்தை சுலபமாக போக்க முடியும் என்று பூத்தின் குடும்ப வாரிசுகளில் சிலர் சட்டபூர்வமாக போராடி வரு கிறார்கள்.
 
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு புதைக்கப்பட்ட பூத்தின் உடலை கல்லைறையில் இருந்து தோண்டி அவன் எலும்புகளில் டி.என்.ஏ சோதனை செய்யலாம் என்று கோர்ட்டில் அனுமதி கேட்டார்கள். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு கூட மற்றொரு முயற்சியாக மெரிலாண்ட் நேஷனல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் குண்டு துளைத்த பூத்தின் எலும்புகளை டி.என்.ஏ சோதனைக்கு வழங்க வேண்டும் என்று வழக்கு போட்டனர் குடும்பத்தினர். இதற்கும் மியூசியக நிர்வாகம் மறுத்துவிட்டட்து. இந்த வரலாற்று சந்தேகம் இன்றளவும் தொடர்கிறது.
 
- வழக்குகள் தொடரும்…
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி ஆதவன் ஜி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, அடப்பாவிகளா ....! பெரிய தில்லாலங்கடி வேலைகள் செய்து , சிறுபிள்ளைத்தனமாய் மாட்டிட்டாங்களே... எல்லாம் விதி...! :lol::)

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி?- 6: ஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி

 

pkp_2436489f.jpg

 

‘இந்தியாவில் பணமும் பதவியும் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதி என்பது ஆமை வேகத்தில்தான் கிடைக்கும்’- இது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த கருத்து. ‘இந்தியாவில் உண்மையான குற்றவாளிகளில் தண்டிக் கப்படுகிறவர்கள் 30 சதவீதத்துக்கும் கீழ்தான்' - இது லண்டன் பி.பி.சி-யின் கருத்து. உண்மைதானா? சில வழக்குகளை அலசிப் பார்த்தால் இது உண்மைதான் என்கிற முடிவுக்குதான் வர வேண்டியிருக்கிறது.
 
எப்படி உண்மை?
 
1999.
 
ஏப்ரல் 29. டெல்லி. ஒரு பார். நள்ளிரவு 12.30-க்கு தன் மூன்று நண்பர் களுடன் பாருக்கு வந்தான் மனு ஷர்மா. மது கேட்டான். மது தீர்ந்து விட்டதாலும், நள்ளிரவைக் கடந்து விட்டதாலும், பாரில் பணிபுரிந்த மாடல் அழகி ஜெசிகா மது தர மறுத்தாள்.
 
1,000 ரூபாய் தருவதாக சொன்னான் மனு. ஜெசிகா அப்போதும் மறுக்கவே, கோபத்தின் உச்சத்தில் தன் பிஸ்டலை எடுத்தான். அவளை எச்சரிக்கும்விதமாக ஒரு முறை கூரையை நோக்கி சுட்டான். ஜெசிகா தொடர்ந்து மறுக்கவே அவளை சுட்டான். ஜெசிகா இறந்தாள். மனு ஷர்மா தன் நண்பர்களுடன் தப்பித்துச் சென்றான்.
 
அந்த சமயம் பாரில் இருந்த 32 பேர் இந்த சம்பவத்துக்கு சாட்சிகள். ஆனால், டெல்லி போலீஸ் இந்த வழக்கில் தீவிரம் காட்டத் தயங்கியது. ஏன்?
 
மனு ஷர்மா மிகப் பெரிய கோடீஸ் வரன். இரண்டு சர்க்கரை ஆலைகள் மற்றும் சாராய ஆலைகளுக்குச் சொந்த மானவன். மிக முக்கியமான அரசியல் புள்ளியான வினோத் ஷர்மாவின் மகன். வினோத் ஷர்மா ஹரியானா மாநிலத்தில் அமைச்சர்.
 
முதல்வரின் நண்பர். முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் ஷர்மாவின் உறவினர். இதைத் தவிர, இவர் ஒரு முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். செல்வாக்குக்குக் கேட்க வேண்டுமா?
 
ஆகவே, சம்பவம் நிகழ்ந்து 5 நாட்கள் வரை மனு ஷர்மாவை டெல்லி போலீஸ் தேடிக் கொண்டிருந்தது. அவனுடைய இரண்டு நண்பர்கள் மட்டும் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அலறியதும் மனு ஷர்மா கைது செய்யப்பட்டான்.
 
விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு அதன் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி ஏழு வருடங்கள் இழுத்தடிக் கப்பட்டது. அரசுத் தரப்புக்கு டெல்லி போலீஸ் சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை. சம்பவத்தை கண் ணால் பார்த்ததாக போலீஸில் முதலில் வாக்குமூலம் கொடுத்த 32 சாட்சிகளும் பல்டியடித்தார்கள்.
 
அதில் ஒரு சாட்சியான முன்ஷி என்கிற நடிகர், ‘நான் ஆங்கிலத் தில் சொன்னதை போலீஸ் ஹிந்தி யில் குறிப்பு எழுதிக் கொண்டது. எனக்கு ஹிந்தி தெரியாததால் கையெ ழுத்துப் போட்டுவிட்டேன்' என்று சொன்னார்.
 
ஜெசிகாவைச் சுடப் பயன் படுத்தப்பட்ட துப்பாக்கியை டெல்லி போலீஸ் கடைசிவரை கைப்பற்றவே இல்லை. துப்பாக்கி நிபுணர் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட இரண்டு தோட்டாக்களும் ஒரே துப்பாக்கியில் இருந்து வெளிப் பட்டவை தான் என்று சொல்ல முடியாது என்று சாட்சியம் அளித்தார். ஷர்மா வின் நண்பர்களும் ஷர்மா வுக்கு ஆதரவாகவே சாட்சி யளித்தார்கள்.
 
இதையெல்லாம் வைத்து நீதிபதி, ‘ஷர்மாவும், அவன் நண்பர்களும் குற்றவாளிகள் இல்லை' என்று தீர்ப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்தார். தீர்ப்பில், ‘இந்த வழக்கில் டெல்லி போலீஸ் சரியான ஆதாரங்களை வழங்க வில்லை' என்றும் குறிப்பிட்டார்.
 
ஷர்மா விடுவிக்கப்பட்டது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத் தியது. அனைத்து ஊடகங்களும் இந்தத் தீர்ப்பைக் கண்டித்தன. மக்கள் தங்கள் எதிர்ப்பை மெழுகுவர்த்தியுடன் ஊர் வலம் நடத்தி பதிவு செய்தார்கள். அலைபேசிகளிலும், மின்னஞ்சல்களிலும் தீர்ப் பைக் கண்டித்து செய்திகள் பறந்தன.
 
முன்னாள் முதன்மை நீதிபதி வி.என். காரே இந்தத் தீர்ப்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். ‘தெஹல்கா’ செய்தி நிறுவனம் களத்தில் இறங்கியது. அமைச்சர் வினோத் ஷர்மா சாட்சிகளை விலைக்கு வாங்க பணம் கொடுத்தார் என்று ‘ஸ்டார் நியூஸ்’ தொலைக்காட்சி சேனலில் ஆதாரங்களை வெளிப்படுத்தி யது. மத்திய அரசின் அழுத்தத்தால் வினோத் ஷர்மா தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
அரசுத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடந்தது. முடிவில் மனு ஷர்மாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. மேலும். கீழ்க்கோர்ட்டில் அவசரகதியில் தீர்ப்பு தந்த நீதிபதியை விமர்சனமும் செய்தது. பொய் சாட்சி சொன்னதற்காக துப்பாக்கி நிபுணர் மற்றும் நடிகர் முன்ஷி மேல் தனியாக வழக்கு தொடரவும் சிபாரிசு செய்தது.
 
மனு ஷர்மா உச்சநீதி மன்றத் தில் அப்பீல் செய்தான். அங்கு அவனுக்காக வாதாடினார் புகழ்மிக்க வக்கீலான ராம்ஜெத்மலானி. மீடியாவின் அழுத்தத்தால்தான் உயர்நீதி மன்றம் மாற்றி தீர்ப்பளித்திருக்கிறது என்று அவர் வாதாடினார். ஆனால், உச்சநீதிமன்றம் அதை ஒப்புக்கொள்ளா மல் உயர்நீதி மன்றத்தின் தண்டனைத் தீர்ப்பை உறுதி செய்தது. மனு ஷர்மா ஜெயிலில் அடைக்கப்பட்டான்.
 
மனு ஷர்மா ஜெயிலில் இருந்தாலும் அடிக்கடி பெயிலில் வந்தான். ஒருமுறை பெயில் கேட்கக் காரணமாக தன் பாட்டி இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டான். உண்மையில் அவன் பாட்டி ஒரு வருடம் முன்பே இறந்துவிட்டார்.
 
இன்னொரு முறை தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தான் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் பெயில் கோரியிருந் தான். அடுத்த நாள் பார்த்தால் அவன் அம்மா தொலைக்காட்சியில் பெண்கள் கிரிக்கெட் பற்றி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
இன்னொரு முறை தன் படிப்புக்காக பரீட்சை எழுத வேண் டும் என்று விண்ணப்பித்திருந்தான். ஆனால், அவன் பரோலில் வந்து இரவு விடுதிகளில் டிஸ்கொதே ஆடிக் கொண்டிருந்தான். 2015, ஏப்ரலில் பரோலில் வெளியே வந்து திருமணமும் செய்துகொண்டான்.
 
வினோத் ஷர்மா திகார் ஜெயிலுக்கு அருகில் ஒரு நட்சத்திர ஹோட்டலை விலைக்கு வாங்கினார். அந்த ஹோட்ட லில் திகார் ஜெயிலின் வார்டனின் மக னுக்கு ஒரு முக்கிய பதவி தரப்பட்டிருப் பதாகவும், அந்த ஹோட்டலில் மனு ஷர்மா அடிக்கடி தென்படுவதாகவும் சில பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. இந்தக் கொலை சம்பவத்தை மையமாக வைத்து ‘நோ ஒன் கில்ட் ஜெசிகா' என்று ஒரு ஹிந்தி திரைப்படம் வெளிவந்தது.
 
டெல்லியில் 1996-ம் வருடம் பிரியதர் ஷினி என்கிற சட்டக் கல்லூரி மாணவி சக மாணவன் குமார்சிங் என்பவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். வழக்கு வழக் கம்போல நத்தை வேகத்தில் நகர்ந்தது. காரணம், குமார் சிங்கின் தந்தை முதலில் பாண்டிச்சேரி காவல்துறையில் ஐ.ஜியாக பணிபுரிந்தவர். வழக்கு நடந்தபோது அவர் டெல்லி போலீஸில் துணை கமிஷனர்.
 
10 வருடங்கள் கழித்து 2006-ல் விசா ரணை கோர்ட் நீதிபதி, குமார் சிங்கை குற்றமற்றவர் என்ற விடுதலை செய்தார். தன் தீர்ப்பில், அவர், 'டெல்லி போலீஸ் சரிவர இந்த வழக்கை நடத்தவில்லை என்றும், முக்கியமான சாட்சியை ஆஜர் படுத்தவில்லை என்றும், டி.என்.ஏ. சோதனை முடிவுகளில் குழப்பம் செய்த தாகவும், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆதரவாக நடந்துகொண்டது என்றும் குறிப்பிட்டு, குமார் சிங்தான் இந்தக் கொலையை செய்தார் என்று தெரிந் தாலும், சந்தேகத்தின் பலனை அளித்து அவரை விடுதலை செய்ய வேண்டி யிருக்கிறது' என்றார்.
 
பிரியதர்ஷினியின் வயதான தந்தை தீர்ப்பைக் கண்டித்து, எல்லா தொலைக் காட்சி சேனல்களிலும் பேசினார்.பத்திரிகைகளின் ஆதரவு அவருக்குப் பெருகியது. மீடியாவும் மக்களும் தந்த அழுத்தத்தால் வழக்கு உயர்நீதி மன்றத்திற்குச் சென்றது.
 
நான்கு வருடங்கள் விசாரிக்கப்பட்டு 2010-ம் வருடம் குமார் சிங்குக்கு தூக்கு தண்டனை அளித்தது. குமார் சிங் உச்சநீதி மன்றத்துக்குச் சென்று அதை ஆயுள் தண்டனையாக மாற்றிக்கொண்டான். தற் போது அவன் ஜெயிலில் இருந்தாலும் அடிக்கடி பரோல் வழங்கப்படுகிறது. வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே அவன் திருமணம் செய்து கொண்டான். வக்கீலாகவும் பணியாற்றிக் கொண்டிருந் தான்.
 
இவை இரண்டும் சாம்பிள்கள்தான். இதைப் போல பண பலம், பதவி பலம் மிக்கவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சில சமயம் தாமதமான நீதியும், பல சமயங்களில் அந்த தாமதமான நீதிகூட கிடைக்காமலும் போயிருப்பதே உண்மை.
 
- வழக்குகள் தொடரும்…
 
கதையில் உத்தி
 
நான் எழுதிய ஒரு கதையில், வில்லன் ஒரு விமானத்தை கடத்தி வைத்துக்கொண்டு மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பான். அதிரடிப் படை உயர் அதிகாரி யோசிப்பார். வீரர்களில் அந்த பயங்கரவாதிகளின் உடலமைப்புடன் கிட்டத்தட்ட பொருந்தும் மூன்று வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மிகப்பெரிய ஒப்பனைக் கலைஞரை அழைத்து பயங்கரவாதிகளின் முக அமைப்பைப் போல ப்ராஸ்தெடிக் மேக்கப் போடு (தசாவதாரம் போல) அவர்களை விடுதலை செய்வதாக அழைத்துச் செல்வார். அந்த மூன்று வீரர்களும் விமானத்தில் ஏறியதும் அங்குள்ள பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று பயணிகளைக் காப்பாற்றுவார்கள்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ரசித்து வாசிக்கக் கூடியதாக இருக்கின்றது
தொடர்ந்து இணையுங்கள் ஆதவன்

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி?- 7: கொலைக் குற்றவாளிக்கு பூ மாலை!

pkp_2444420f.jpg

ஒருவன் ஒரு கொலை செய்கிறான். வழக்கு விசாரணைக்காக நீதிமன் றத்துக்கு அவன் வரும்போது அவன் மீது பூக்கள் அள்ளி வீசுகிறார்கள். பல இளம்பெண்கள் அவனை திருமணம் செய்ய தயார் என்கிறார்கள். என்ன, கற்பனையான சினிமா காட்சிகள் போல இருக்கிறதா? இவை அத்தனையும் நிஜத்தில் நடந்தவை!

ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரப்பட்டது?

1959-ம் வருடம் நடந்த சம்பவம் அது. கவாஸ் மானெக் ஷா நானாவதி இந்திய கடற்படையில் கமாண்டராக இருந்தவன். கம்பீரமான அழகான தோற்றம். அவன் இங்கிலாந்தில் இருந்த போது சில்வியா என்கிற ஆங்கிலப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டான். பிறகு, பம்பாயில் வேலை. உல்லாசமான வாழ்க்கை. அழகான 3 குழந்தைகள்!

ஒருமுறை நானாவதி வேலை தொடர் பாக மைசூர் சென்று திரும்பினான். வீட்டில் ஏதோ அசாதாரணமாக உணர்ந் தான். சில்வியாவிடம் வழக்கமான உற் சாகம் இல்லை. அழுத அடையாளங் களுடன் வாட்டமான முகம்.

விசாரித்தான். சில்வியா வெடித்து அழுதாள். மெதுவாக சொன்னாள், “நான் உங்களுக்கு துரோகம் செய்துவிட் டேன்…’’ நானாவதி அதிர்ந்தான்.

சில்வியாவின் தனிமையை நானாவதி யின் 15 வருட நண்பனும், தொழிலதிபனு மான அகூஜா பயன்படுத்திக் கொண்ட தாகவும், கொஞ்சம் கொஞ்சமாக அவனு டைய காதல் வலையில் விழுந்துவிட்ட தாகவும் அவள் சொன்னாள்.

தன் காதல் மனைவியின் இரண்டாவது காதலை, அதுவும் அவள் வாயாலேயே கேட்டதும் நொந்துபோன நானாவதி, “நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்…’’ என்றான். சில்வியா துடித் தாள். “நான் செய்த தப்புக்கு நீங்கள் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்?’’ என்று அவனை சமாதானம் செய்தாள்.

நானாவதி சூழ்நிலையை மாற்றுவதற் காக சில்வியாவையும், குழந்தைகளை யும் அழைத்துக்கொண்டு ஒரு சினிமா வுக்கு சென்றான். படம் தொடங்கியதும், தனக்கு ஒரு வேலை இருப்பதாகவும், படம் முடிந்ததும் வந்து அழைத்துப் போகிறேன் என்று சொல்லி தியேட்டரில் இருந்து தனியாகப் புறப்பட்டான்.

தன் அலுவலகத்துக்கு வந்தான். சொந்த பாதுகாப்புக்காக என்று குறிப் பிட்டு ஆயுத அறையில் இருந்து ஒரு துப்பாக்கியும், தோட்டாக்களும் வாங்கிக் கொண்டுப் புறப்பட்டு அகூஜாவின் வீட்டுக்கு வந்தான்.

அகூஜா தன் அறையில் இருப்பதாக கதவைத் திறந்த வேலைக்காரி சொன் னாள். நானாவதி நேராக அகூஜாவின் அறைக்குள் சென்றான். மூன்று முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. பதறியபடி அங்கே ஓடி வந்தாள் அகூஜாவின் தங்கை. அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்த அகூஜா இடுப்பில் கட்டிய டவலுடன் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். கையில் துப்பாக்கியுடன் நின் றிருந்த நானாவதி எதுவும் பேசாமல் வெளியேறி காவல் நிலையத்துக்கு வந்து சரண டைந்தான்.

9 ஜூரிகளுடன் வழக்கின் விசாரணை தொடங்கியது. (சமூகத்தில் பல துறைகளில் இருந்த கண்ணியமான நபர்கள் நீதிபதியால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அவர்கள் வழக்கின் விசா ரணயைக் கவனித்து இறுதியில் தங்கள் தீர்ப்பை தனித்தனியாக நீதிபதிக்கு தெரிவிப்பார்கள். இந்த ஜூரிகளுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.) நானாவதி வழக்கில் பெரிய சிக்கல் இல்லை. அது திட்டமிட்ட கொலையா அல்லது திட்டமிடாத கொலையா என்பது மட்டுமே தீர்மானிக் கப்பட வேண்டும்.

நானாவதியின் வாக்குமூலம்: “நான் தற்கொலை செய்துகொள்ளவே துப் பாக்கி வாங்கினேன். எனக்குப் பிறகு என் மனைவி, மற்றும் குழந்தைகளின் கதி என்ன என்று நினைத்துப் பார்த்தேன். அகூஜாவைப் பார்க்கப் போனேன்.

அப்போதுதான் குளித்துவிட்டு அறைக்குள் வந்த அவனிடம், “என் மனை வியை நீ திருமணம் செய்து கொண்டு, என் குழந்தை களை ஏற்றுக்கொள்வாயா?’’ என்று கேட்டேன். அதற்கு அவன், “நான் படுத்த எல்லா பெண்களையும் திருமணம் செய்துகொள்ள முடியுமா?’’ என்று கேட்டதோடு, என் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்க வந்தான். அந்தப் போராட்டத்தில் துப்பாக்கி வெடித்தது.

பிராசிகியூஷன் தரப்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியின் வாதம்: “நானாவதி அறைக்குள் இருந்ததே ஒரே ஒரு நிமிடம்தான். மூன்று குண்டுகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெடித் திருக்கின்றன. அங்கே உரையாடலோ, போராட்டமோ நிகழவில்லை.

போராட் டம் நிகழ்ந்திருந்தால் குண்டுகள் தொடர்ச்சி யாக வெடிக்க வாய்ப்பு இல்லை. அகூஜா வின் இடுப்பில் இருந்த டவலும் அவிழ்ந் திருக்கும். நானாவதி கொலைத் திட்டத் துடன் துப்பாக்கி வாங்கிச் சென்றான். அறைக்குள் அகூஜாவைப் பார்த்ததும் மூன்று முறை சுட்டான். வெளியேறினான். இதுதான் நடந்திருக்கிறது.’’

வழக்கு விசாரணையில் பல சாட்சி கள் விசாரிக்கப்பட்டனர். இறுதியாக 9 ஜூரிகளில் 8 பேர், ‘இது திட்டமிட்ட கொலை அல்ல’ என்றும், ஒரே ஒரு ஜூரி ‘இது திட்டமிட்ட கொலைதான்’ என்றும் தீர்ப்பு வழங்கினார்கள். அரசு அப்பீல் செய்ய, வழக்கு உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. அங்கே அது திட்டமிட்ட கொலைதான் என்று முடிவு செய்து நானா வதிக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது கோர்ட்டுக்கு அவன் வரும் போதுதான் பூக்களும், ரூபாய் நோட்டுக் களும் வீசப்பட்டன. சில பெண்கள் ரூபாய் நோட்டுக்களில் லிப்ஸ்டிக் முத்தம் பதித்து வீசினார்கள். நானாவதி பயன்படுத்தியது போன்ற பொம்மைத் துப்பாக்கிகளும் அகூஜா கட்டியிருந்ததைப் போன்ற டவல்களும் விற்பனை செய்யப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணைச் செய்தி களை விடாமல் வெளியிட்டு வந்த ‘பிளிட்ஸ்’ பத்திரிகை அப்போது மட்டும் ரூபாய் இரண்டுக்கு விற்பனையானது (அதன் விலை 25 பைசாதான்). ‘பிளிட்ஸ்’ பத்திரிகை நானாவதியைப் பகிரங்கமாக ஆதரித்தது. “இப்படி உங்கள் குடும்பத் தில் நிகழ்ந்திருந்தால் நீங்கள் என்ன செய் திருப்பீர்கள்?’’ என்று வாசகர்களைக் கேள்வி கேட்டது. கவர்னருக்கு மன்னிப் புக் கோரும் மனுவை பத்திரிகையில் வெளியிட்டு, அதில் கையெழுத்திட்டு அனுப்பச் சொன்னது.

பெரும்பான்மையான மக்கள் நானா வதிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். சில்வியா மட்டுமில்லாமல் பல ராணுவ அதிகாரிகளின் மனைவிகளுடன் தொடர்பு வைத்திருந்த அகூஜா கொல்லப் பட வேண்டியவனே என்று மக்கள் வாதிட்டார்கள். ஊர்வலம் சென்றார்கள்.

அப்போது கவர்னராக இருந்த நேரு வின் சகோதரியான விஜயலட்சுமி பண்டிட் நானாவதியை மன்னித்து விடு தலை செய்ய உத்தரவிட்டார். மூன்று வருட சிறைத் தண்டனையோடு வெளியே வந்த நானாவதி, சில்வியா மற்றும் குழந்தைகளுடன் கனடா சென்று, அங் கேயே வாழ்ந்து 2003-ல் இறந்து போனான்.

நானாவதி வழக்கின் அடிப்படையில் சுனில்தத், வினோத்கன்னா நடித்த பல ஹிந்தி திரைப்படங்களும், நாடகங் களும், புத்தகங்களும் வந்தன. 40 வருடங் கள் கழித்து ‘ஹிந்துஸ்தான்’ டைம்ஸ் பத்திரிகை ஒரு சிறப்புக் கட்டுரைக் காக நானாவதியைத் தொடர்புகொண் டது. அவன், “உங்களுக்கு இது சுவாரசிய மான கதை. எனக்கு என் வாழ் வில் மறக்க வேண்டிய அத்தி யாயம். மன்னிக்கவும்!’’ என்று பதில் எழுதினான்.

அன்று நானாவதிக்கு எதிராக தீர்ப் பளித்த ஜூரி பியர்ஸுக்கு 2009-ல் 102 வயது. அவரைக் கேட்டபோது, “நானா வதி நல்லவன். ஆனால், கொலை கொலைதானே? எதிர்த்து தீர்ப்பு சொன் னது நான்தான் என்று தெரிந்திருந்தால், மக்கள் நீதிமன்றத்துக்கு வெளி யிலேயே என்னைக் கொன்றிருப்பார்கள்’’ என்றார்.

இந்த வழக்கு இந்தியாவில் முக்கிய மான வழக்காக மாறியதற்கு மற்றும் ஒரு காரணமும் உண்டு. இந்த வழக்கு தான் ஜூரிகள் கலந்துகொண்ட கடைசி வழக்கு. மீடியா மற்றும் பொதுமக்கள் கருத்துகளின் பிரதிபலிப்பாகவே ஜூரிகளின் தீர்ப்பு அமைந்து வந்ததால் இந்திய அரசு இந்த வழக்கோடு ஜூரி முறையை ஒழித்தது.

கதையில் உத்தி

ஒரு பணக்கார வீட்டுக் குழந்தை கடத்தப்படும். உறவினர்களில் ஒருவனை சந்தேகப்படும் துப்பறியும் நிபுணன் பரத், அவன் வீட்டுக்கு வெளியே நின்று கண்காணிப்பான். அவன் யாருக்கோ போன் செய்து பேச, அதை டேப் செய்வான் பரத். இந்தக் கதை நிகழும் காலத்தில் டயல் செய்து பேசும் லேண்ட் லைன் போன் மட்டும் இருந்தது. ஒவ்வொரு எண்ணையும் டயல் செய்யும்போது அது ’டர்ர்ர்…’ என்கிற சத்தத்துடன் சுழன்று மீண்டும் அதனிடத்துக்கு வரும். அந்த ஓசையின் நீளத்தை வைத்து, தன் போனில் ஒவ்வொரு எண்ணாக டயல் செய்து அந்த ஓசையுடன் ஒப்பிட்டு, அவன் பேசிய போன் எண்ணைக் கண்டுபிடிப்பான். பிறகு அந்த விலாசத்துக்கு போலீஸுடன் சென்று குழந்தையை மீட்பான்!

- வழக்குகள் தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-7-கொலைக்-குற்றவாளிக்கு-பூ-மாலை/article7332663.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி?- 8: குற்றம் செய்யாத குற்றவாளிகள்!

pkp_2452090f.jpg

அமெரிக்காவில் ‘இன்னொசன்ஸ் புராஜெக்ட்’ என்கிற அமைப்பு 1992-ல் தொடங்கப்பட்டு, தவ றாக தண்டிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடி வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர் களுக்கு சட்டரீதியாக போராடி விடுதலை வாங்கித் தந்துள்ளது. அதில் தூக்கு தண்டனைக்குக் காத்திருந்த 18 பேரின் உயிரைக் காப்பாற்றியிருப்பது குறிப்பிட வேண்டிய விஷயம்!

இந்த அமைப்பின் முயற்சியால் புதிய தீர்ப்பு எழுதப்பட்ட வழக்குகளில், முக்கியமான வழக்கு வர்ஜினியா ராபர்ட்சனின் கொலை வழக்காகும். இந்த வழக்கில் ஒரு அப்பாவி எப்படி குற்றவாளியாக தண்டிக்கப்பட்டான்? அவன் நிரபராதி என்று எப்படி நிரூபனம் ஆனது?

1986-ம் வருடம். நியூயார்க் மாகாணத்தில் புரூக்ளின் நகரம். ஓர் அதிகாலை. ஒரு சாலையின் நடை பாதையில் ஓர் ஆசாமி ஜாகிங் செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் ஒரு காட்சியைப் பார்த்தான்.

ஒரு சாம்பல் நிற கார் வந்து நின்றது. சிவப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்த உயரமான, பருமனான நபர் காரில் இருந்து இறங்கினான். காரின் பின்சீட்டில் இருந்து போர்வையால் சுற்றப்பட்டு இருந்த பெண்ணைத் தூக்கி வந்து சாலையோரத்தில் கிடத்தினான். மீண்டும் காரில் ஏறி போய்விட்டான். எல்லாம் சில விநாடிகளில் நடந்து முடிந்துவிட்டன.

ஜாகிங் ஆசாமி அந்த காரின் எண்ணை கவனிக்கவில்லை. போனில் தகவல் கொடுக்க, நியூயார்க்கின் போலீஸ் படை வந்துசேர்ந்தது. லூயிஸ் எப்போ லிட்டோ என்கிற போலீஸ் அதிகாரி இந்த வழக்கைக் கையாண்டார்.

அவள் பெயர் வர்ஜினியா ராபர்ட்சன். தனியாக வசிக்கும் அவள் ஒரு விலைமாது. கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டி ருந்தாள். இவை முதல் கட்ட விசாரணை யில் தெரிந்த தகவல்கள்.

வர்ஜினியாவின் வீடு சோதனை செய்யப்பட்டது. தொலைபேசி விவரங் கள் சேகரிக்கப்பட்டன. அக்கம்பக்கத்தில் பலர் விசாரிக்கப்பட்டார்கள். போலீஸ் சிலரை சந்தேகப்பட்டது. அவர்களை அணிவகுத்து நிற்கவைத்தது. பிணத்தை முதலில் பார்த்த ஜாகிங் ஆசாமியை அழைத்து, அவர்களில் அடையாளம் காட்டச் சொன்னபோது, அவன் விரல் நீட்டிய நபர்… பேரி கிப்ஸ் என்கிற 42 வயது ஆசாமி.

பேரி கிப்ஸுக்கும் வர்ஜினியாவுக்கும் தொடர்பு இருந்ததும் அவர் களுக்குள் சண்டை ஏற்பட்டதும் உண்மை. ஆனால், ‘நான் கொலை செய்ய வில்லை’ என்றான் கிப்ஸ். சம்பவ இடத்தில் கிப்ஸின் கைரேகை எதுவும் இல்லை.

கிப்ஸிடம் ஒரு கார் இருந் தது. அதுவும் சாம்பல் நிறம். ஆனால், அதன் இரண்டு டயர்களில் காற்று இறங்கியிருந்தது. தான் அதை உபயோகித்து பல நாட்களாயிற்று என்றான் கிப்ஸ். அவனது வீட்டை சோதனை செய்தபோது, சாட்சி சொன்னதைப் போலவே ஒரு சிவப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் கைப்பற்றப்பட்டது. அது தன்னுடைய பழைய பேண்ட் என்றும், தற்போது தனக்கு சேராது என்றும் சொன்ன கிப்ஸ் அதைப் போட்டும் காட்டினான். அது அவனுக்குச் சேரவில்லை.

ஆனால், இந்த வழக்கில் கண்ணால் பார்த்த சாட்சி மிகவும் உறுதியாக இருந்ததாலும், வர்ஜினியாவுக்கும் கிப்ஸுக்கும் முன் பகை இருந்ததாலும், அந்தக் கொலையைச் செய்தது கிப்ஸ் தான் என்று தீர்மானமாகி அவனுக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை என்று கோர்ட்டில் தீர்ப்பானது.

கிப்ஸ் கடைசி வரை தான் குற்ற வாளி இல்லை என்றுதான் சொல்லி வந்தான். தன் விதியை நொந்தபடி சிறை தண்டனையை அனுபவித்த அவன், 1992-ம் வருடம் தனக்கு உதவுமாறு ‘இன்னொசன்ஸ் புராஜெக்ட்’ அமைப்புக்கு கோரிக்கை விடுத்தான். அப்போது வழக்கத்துக்கு வர ஆம்பித்திருந்த டி.என்.ஏ. சோதனை செய்தால், தான் குற்றம் செய்யாதவன் என்பது தெரிந்துவிடும் என்று அவன் கேட்டிருந்தான்.

நீதிமன்றத்தில் கிப்ஸின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அப்போது வழக்கு தொடர்பான பல சாட்சியங்கள் தொலைந்தும், அழிந்தும் போயிருந்தன. இருந்த சில சாட்சியங்களில் கிப்ஸுக்கு பலனளிக்கும் முடிவுகள் எதுவும் வரவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம், கிப்ஸின் வழக்கு ஃபைலையே காணவில்லை என்கிற அதிர்ச்சியான செய்தியும் கிடைத்தது.

2005-ம் வருடம் கிப்ஸின் வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியான எப்போலிட்டோ கைது செய்யப்பட்டார். அவர் பலவிதமான குற்றங்களை செய்துவந்த ஒரு மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனையுடன் 100 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எப்போலிட்டோவின் வீட்டில் சோதனை போட்டபோது அங்கு கிப்ஸின் வழக்கு ஃபைல் கைப்பற்றப்பட்டது.

‘இன்னொசன்ஸ் புராஜெக்ட்’ அமைப்பு மீண்டும் முனைப்புடன் கள மிறங்கியது. சாட்சியை மீண்டும் விசா ரித்தபோது, அவன் எப்போலிட்டோ தனக்கு பணம் தந்ததுடன், தன்னை மிரட்டி அடையாள அணிவகுப்பில் கிப்ஸை அடையாளம் காட்டச் சொன்ன தாகச் கூறினான். தனக்கு தொடர்புள்ள மாஃபியா கும்பலைச் சேர்ந்த ஒருவனை அந்தக் கொலைக் குற்றத்தில் இருந்து காப்பாற்ற கிப்ஸை எப்போலிட்டோ பலிகடாவாக்கியது தெரியவந்தது.

கிப்ஸ் விடுதலை செய்யப்பட்டான். எப்போது? தன் தண்டனை காலமான 20 வருடங்களில் 19 வருடங்களை சிறையில் கழித்த பிறகு.

விடுதலையான கிப்ஸ் நியூயார்க் நகர அரசின்மீது தான் சிறையில் இருந்த வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் வீதம் மொத்தம் 19 மில்லியன் டாலர்கள் கேட்டு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தான். அந்த வழக்கு நான்கு ஆண்டுகள் நடந்தது. 2010-ம் வருடம் கிப்ஸுக்கு 909 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.50 கோடி) வழங்க வேண்டும் என்று தீர்ப்பானது. இதுதான் நியூயார்க் நகர வரலாற்றில் ஒரு தனி மனிதனுக்கு அரசு அளித்த உச்சமான நஷ்ட ஈடு தொகையாகும்.

விடுதலையான கிப்ஸ் பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் மனம்விட்டுப் பேசினான். ‘‘சிறையில் இருந்த ஒவ்வொரு நாளும் மரண வேதனைதான். எந்தத் தவறும் செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறோமே என்று மனம் நொந்துபோனேன்.

மனஅழுத்தம் ஏற்பட்டு மன நலம் கெட்டுப்போனது. உடல் நலமும் கெட்டது. கம்ப்யூட்டர், செல்போன் என்று உலகமே முற்றிலு மான மாறிப் போயிருக்கிறது. இனி, ஒவ்வொரு நாளும் இதுதான் என் கடைசி நாள் என்று நினைத்துக் கொண்டு வாழப் போகிறேன். என்னை இந்த வழக்கில் சிக்க வைத்த அந்த அதிகாரி, நான் அனுபவித்த சிறை என்னும் அதே நரக வேதனையை அனுபவிக்கப் போகிறான் என்பதை நினைத்தால் ஆறுதலாக இருக்கிறது.’’

‘இன்னொசென்ஸ் புராஜெக்ட்’ போன்ற ஓர் அமைப்பு இந்தியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. இல்லை என்றால் சிறந்த வழக்கறிஞர்கள் அப்படி ஓர் அமைப்பை உருவாக்கலாம்.

கதையில் உத்தி

ஒரு கதையில் ஒருவர் கடத்தப்படுவார். அவரை விடுவிக்க பணயத் தொகை கேட்டு போனில் மிரட்டுவான் கடத்தல்காரன். அந்தத் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்து, பெரிதுபடுத்தி கேட்கும்போது ஒரு பரபரப்பான கடைத் தெருவின் சத்தங்கள் கேட்கும். அதில் ஒருவன் ராகமாக ‘மூன்று பேனா… ஒரு ரூபா…’ என்று கத்தி விற்பதைக் கேட்க முடியும்.

சென்னையில் எங்கு இப்படி கூவி விற்பனை செய்வார்கள் என்று விவாதிப்பார்கள். பாரிமுனைக்கு வருவார்கள். அதே போல ராகமாக கூவி பேனா விற்பவனைக் கண்டுபிடிப்பார்கள். அவன் நிற்கும் இடத்துக்கு அருகில் உள்ள லாட்ஜ்களில் சோதனை போட்டு கடத்தல்காரனைக் கண்டுபிடிப்பார்கள்.

- வழக்குகள் தொடரும்….

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-8-குற்றம்-செய்யாத-குற்றவாளிகள்/article7357376.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி?- 9: வெளிச்சம் படாத ஹீரோக்கள்!

pkp_2460680f.jpg
 

ஹீரோ என்றால் திரை நட் சத்திரத்தை நினைப் போம். சாதனைகளை சத்தமில்லாமல் செய்துவிட்டு விளம்பரம் தேடாமல் வாழும் நிஜமான ஹீரோக்கள் சிலர் இருக்கிறார்கள். யார் அவர்கள்?

அடிக்கடி பாலியல் வன்முறை செய்தி கள் வெளிவந்து நம்மைப் பதற வைக் கின்றன. டெல்லியில் நடைபெற்ற மருத் துவக் கல்லூரி மாணவியின் பாலியல் வன்முறை நாடு முழுவதும் உச்சமான பரபரப்பை ஏற்படுத்தியது. மீடியாக் களில் கிழித்தார்கள். பெண்கள் அமைப்பு கள் கொடி பிடித்தன. தொலைக்காட்சி களில் இந்தப் பக்கம் இரண்டு பேர் அந்தப் பக்கம் இரண்டு பேரை வைத்துக் கொண்டு விளம்பர இடைவேளை களுக்கு நடுவில் வறுத்தெடுத்தார்கள்.

23 வருடங்களுக்கு முன்பு ஒரே கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்களை ஒரே நேரத்தில் அதுவும் சீருடை அணிந்த அரசு அதிகாரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியபோது இத்தனை பரபரப்பு ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.

1992. தருமபுரி மாவட்டத்தில் அரூர் வனப் பகுதியில் சித்தேரி மலையடி வாரத்தில் உள்ள சிறிய கிராமம் வாச் சாத்தி. அங்கே மொத்த மக்கள் தொகையே 600தான். மலையாளம் பேசும் பழங்குடி இனத்து மக்கள் அவர்கள். பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள்.

சந்தனக் கடத்தல் வீரப்பனை மடக்கிப் பிடிப்பதில் அரசு முனைப்பாக இருந்த நேரம் அது. வீரப்பன் போர்வை யில் சிலர் வனத்துறை அதிகாரி களை கைக்குள் போட்டுக் கொண்டு சில தொழிலாளி களின் துணையோடு சந்தன மரங்களை வெட்டி ரகசிய மாகக் கடத்திக் கொண்டிருந் தார்கள்.

இந்தக் கிராமத்தில் பல வீடுகளில் ஏராளமான மரங் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நம்பிய வனத்துறை, மாவட்ட கலெக்டர் அனுமதி யோடு காவல்துறை அதிகாரிகள், மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஒரு கூட்டுச் சோதனை நடத்த மொத்தம் 300 பேர் அந்த கிராமத்துக்குள் நுழைந்தனர். அதில் 80 பேர் பெண்கள்.

சோதனை என்கிற பேரில் அங்கு நடந்ததோ அநாகரிகமான, பதற வைக் கும் கொடுமையான செயல்கள். ஆண் கள், பெண்கள் என்று அத்தனை பேரும் அடித்து உதைக்கப்பட்டார்கள். அவர் களின் வீடுகள் சின்னாபின்னமாக்கப் பட்டன. தானியங்கள் தெருக்களில் கொட்டப்பட்டன. மின்சாரம் நிறுத்தப் பட்டது. ஊரில் இருந்த ஒரே மளிகைக் கடை உடைத்து நொறுக்கப்பட்டது. ஊருக்கு தண்ணீர் கொடுத்த கிணற்றில் சைக்கிள்களும், உடைக்கப்பட்ட பம்ப் செட்டுகளும் போடப்பட்டன.

அத்தனை பேரையும் ஒரு ஆல மரத்துக்குக் கீழே அமர வைத்தார் கள். 18 இளம் பெண்களை மட்டும் ‘ஆற்றங்கரையில் தோண்டியெடுக்கப் பட்ட மரங்களை லாரியில் ஏற்ற வேண்டும்’ என்று சொல்லி சில அதிகாரிகள் அழைத்துச் சென்றார்கள். உடன்புறப்பட்ட பெண் காவலர்களை அங்கேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

ஆற்றங்கறையில் வெட்ட வெளியில் அந்தப் பெண்களை தனித்தனியாகவும், கூட்டாகவும் சில அதிகாரிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார்கள். அதில் 10 பெண்கள் திருமணமாகாத கன்னிப் பெண்கள். அதில் ஒரு பெண்ணுக்கு வயது 13.

இதன் பிறகு அழுதுத் துடித்த அந்தப் பெண்களையும், மரத்தடியில் இருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 217 பேரையும் அரூரில் இருந்த வனத்துறை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றார்கள். அங்கேயும் கொடுமை தொடர்ந்தது. பெண்களை மிரட்டி ஒருவர் உடையை மற்றவர் உருவ வைத்தார்கள். ஊர் பெரியவரை அந்த மக்களைவிட்டே விளக்குமாற்றால் அடிக்க வைத்தார்கள்.

இரண்டு தினங்கள் சித்திரவதைத் தொடர்ந்தது. மெதுவாக விஷயம் வெளியே கசிந்ததும் அவர்களில் 105 பேர் மீது சோதனை போடச் சென்ற அதிகாரிகளைத் தாக்கியதாகச் சொல்லி, போலீஸில் புகார் கொடுத்து, கைது செய்து சேலம் சிறையில் அடைத்தார்கள்.

தமிழ்நாடு பழங்குடியினர் அமைப்பின் பிரமுகர்களான பி.சண்முகம், பி.பாமாதி, பாஷா ஜான் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலை, ராஜ்ய சபா உறுப்பினர் ஏ.நல்லசிவம் ஆகியோர் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத் தார்கள். நீதிமன்றத்தை நாடினார்கள்.

ஒப்புக்கு ஒரு ஆர்.டி.ஓ சென்று விசா ரணை நடத்திவிட்டு பாலியல் வன்முறை சம்பவம் நடந்ததாகச் சொல்வதை நம்ப முடியவில்லை என்றும், வீடுகளை அவர்களே சேதப்படுத்திவிட்டு அதிகாரி கள் மீது பழி போடுவதாகவும் அறிக்கை தந்தார். உச்ச நீதி மன்றத்தின் உத்தரவால் சி.பி.ஐ இந்த வழக்கை விசாரித்தது. பாலியல் வன்முறை நடந்ததும், மக்கள் பாதிக்கப்பட்டதும் உண்மை என்று அதன் அறிக்கை சொன்னது. அதன் பிறகுதான் தருமபுரியில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது.

அரசு அதிகாரிகளின் மீதான வழக்கு என்பதால் இந்த வழக்கை எல்லா வழிகளிலும் இழுத்தடித்தது அரசுத் தரப்பு. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகம் என்பதால் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஏகப்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். அதில் பலர் மிரட்டலுக்கு பயந்து முரண்பட்டு வாக்குமூலம் அளித்தார்கள்.

தங்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்களை, பாதிக்கப்பட்ட வர்கள் அடையாளம் காட்ட வேண்டியது சட்டப்படி முக்கியமான ஒரு விஷயம். அந்த அடையாள அணிவகுப்பை அரசுத் தரப்பு வேண்டுமென்றே நான்கு முறை தள்ளி வைத்தது. சாட்சி சொல்ல வந்த பெண்கள் மிரட்டப்பட்டார்கள்.

அடையாள அணிவகுப்புக்கு அந்தப் பெண்களை வேட்டி-சட்டை அணிவித்து, தலைப் பாகை கட்டி, ஆண்களைப் போல வேடமிட்டு அழைத்து வந்தார்கள். பெண்களைக் குழப்புவதற்காகவே 1,500 பேருக்கு நடுவில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கலந்து நிறுத்தினார்கள். ஆனாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களைக் அசிங்கப்படுத்தியவர்களை சரியாக அடையாளம் காட்டினார்கள்.

2011-ம் வருடம். அதாவது குற்றம் நடந்து 19 வருடங்கள் கழித்து இந்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு வருடம் முதல் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி எஸ்.குமரகுரு. அவர் தன் தீர்ப்பில், ‘‘இது மிகவும் வெறுக்கவும் வெட்கப் படவும் வேண்டிய சம்பவம். இந்த நாகரிக காலத்தில் அநாகரிகமான கற்காலத்தின் காட்டுமிராண்டித்தனத்தை நினைவுபடுத்தும் சம்பவம் இது’’ என்று குறிப்பிட்டார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தண்டனை பெற்றவர்களில் 54 பேர் இறந்துபோயிருந்தார்கள். பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்கள். சிலர் உடனே உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்து விடுதலையானார்கள்.

தீர்ப்பு வந்த மறுநாள் வாச்சாத்தியில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். கோயில்களுக்கு சென்று நேர்த்திக் கடன் செய்தார்கள். அன்று ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தீர்ப்பு வந்த நாளில், ‘‘அன்று நான் விடுப்பில் இருந்தேன். பள்ளிக்குச் சென்று இருந் தால், அந்தப் பாலியல் கொடுமையில் இருந்து தப்பியிருப்பேன். என் கல்வி, இளமை எல்லாம் போயிற்று’’ என்று அழுதார்.

பாதிக்கப்பட்ட பெண்களை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திருமணம் செய்துகொண்டு, இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சம்ப வத்தை அடிப்படையாக வைத்து சில குறும்படங்கள் எடுக்கப்பட்டிருக் கின்றன. ‘வாச்சாத்தி’ என்னும் பெயரில் ஒரு திரைப்படமும் வந்தது.

பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தின் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக 19 நீண்ட வருடங்கள் பொறுமையாகவும், மன உறுதியோடும் போராடிய கம்யூனிஸ்ட் பிரமுகர்களும், பழங்குடி அமைப்பின் பிரமுகர்களும், நியாயத்துக் காக வாதாடிய வழக்கறிஞர்களும், நல்ல தீர்ப்பு தந்த நீதிபதிகளும், இவர் களையெல்லாம்விட பாதிக்கப்பட்ட பெண்களை மணந்து, வாழ்வு தந்த பெயர் தெரியாத அந்த வாச்சாத்தி இளைஞர்களும்தான் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள்!

கதையில் உத்தி

நான் எழுதிய ஒரு கதையில் ஒருவன் மனைவியை தன் படுக்கையறையில் கொலை செய்வான். பிணத்தை காரில் எடுத்துச்சென்று தொலைதூரத்தில் ஒரு சாக்கடையில் போட்டுவிட்டு வந்து, காரை சுத்தம் செய்துவிட்டு அறையையும் தண்ணீர் விட்டு கழுவிய பிறகு, போலீஸுக்கு போன் செய்து, ”வெளியே சென்ற என் மனைவியைக் காணவில்லை’’ என்பான். போலீஸ் அதிகாரி வீட்டுக்கு வருவார். பிரமாதமாக நடிப்பான். ஆனால், அதிகாரிக்கு அவன்மேல் சந்தேகம் வரும். சில தினங்களில் ஆதாரங்களுடன் அவனைக் கைது செய்வார். முதல் சந்தேகத்தை ஏற்படுத்திய விஷயம்: படுக்கை அறையில் உள்ள ஒரு மர டீப்பாயின் கால்களில் காயாமல் இருந்த ஈரத்தின் தடயம்!

- வழக்குகள் தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-9-வெளிச்சம்-படாத-ஹீரோக்கள்/article7382261.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி?- 10: ஹீரோவாக மாறிய வில்லன்!

pkp_2468377g.jpg

ரத்னாகர் ஒரு கொள்ளைக்காரன். அவன் நாரதரிடமே கொள்ளை யடிக்க முற்பட்டபோது மாட்டிக் கொண்டான். ‘‘இந்தப் பாவத்தில் பங்கெடுக்க உன் குடும்பத்தினருக்கு சம்மதமா?’’ என்று கேட்டார் நாரதர். ரத்னாகர் குடும்பத்தில் கேட்க, அவர்கள் யாரும் சம்மதிக்கவில்லை. அன்று மனம் திருந்திய ரத்னாகர், நாரதர் சொல்லித் தந்த மந்திரத்தை ஜெபித்து தவம் இருந்தான். உடல் மறையும் அளவுக்கு எறும்பு கோபுரமாக புற்று கட்டியது. வரம் கிடைத்தது. அவர்தான் இராமாயணத்தை எழுதிய வால்மீகி. (சமஸ்கிருதத்தில் வால்மீகம் என்றால் எறும்புப் புற்று என்று ஒரு பொருள்)

இன்று அமெரிக்காவில் வாழும் ஒரு ரத்னாகர்தான் ஃபிராங்க் அபாக்னேல். ஒரு சமயம் அமெரிக்கா, சுவீடன், ஃபிரான்ஸ் என்று 12 நாடுகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தவன். அமெரிக்காவின் குற்றப் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ-க்குப் பெரிய சவாலாக இருந்த இவன், இப்போது அதே துறையால் ஒரு ஹீரோவாக மதிக்கப்படுபவன்.

வில்லன் எப்படி ஹீரோ?

அபாக்னேலுக்கு 12 வயதானபோது பெற்றோருக்குள் விவாகரத்து நடந்தது. அப்பாவிடம் பாசமாக வளர்ந்த அபாக்னேல், தன்னுடைய 16-வது வயதில் முதன்முதலில் அப்பாவின் கிரெடிட் கார்டு மூலம் 3,400 டாலர்கள் மோசடி செய்தான். அதில் சுவை கண்டு, பல வங்கிகளில் பொய்யான பெயர்களில் கணக்குகள் தொடங்கி போலி காசோலைகளைத் தயாரித்து, புத்திசாலித்தனமாக கிட்டத்தட்ட 25 லட்சம் டாலர்களுக்கு மோசடிகள் செய்தான்.

அபாக்னேலுக்கு பிடித்த விஷயம் ஆள் மாறாட்டம் செய்வது. விமானி யாக, டாக்டராக, வக்கீலாக, சிறை அதி காரியாக, காவல்துறை அதிகாரியாக, கல்லூரி விரிவுரையாளராக வெவ் வேறு பெயர்களில் புதுப் புது அடையாளங்களில் பல நிறுவனங்களை சாமர்த்தியமாக ஏமாற்றினான்.

‘பான் ஆம்’ என்கிற பிரபலமான விமான நிறுவனத்தில் ஆரம்பித்தது இந்த ஆள் மாறாட்ட விளையாட்டு. போலி அடையாள அட்டை தயாரித்து, தன் சீருடை தொலைந்து போனதாகச் சொல்லி, உடைப் பிரிவில் இருந்து சீருடை பெற்று, பயிற்சி விமானி என்கிற போர்வையில் விமானங்களில் பறக்கத் தொடங்கினான். அப்படி 26 நாடுகளுக்கு 250 பயணங்களை மேற்கொண்டான்.

ஒருமுறை 30 ஆயிரம் அடி உயரத்தில் 140 பயணிகளுடன் பறந்த விமானத்தை இயக்க இவன் அனுமதிக்கப்பட்டபோது பதற்றம் வந்தது. தன் உயிரையும் சேர்த்து இத்தனை பேரின் உயிர்களைப் பணயம் வைக்கிறோமே என்கிற பயத்தின் காரணமாக, அந்த வேடத்தைக் கலைத்தான். அதுவரை ஒரு விமானிக்கு உரிய சம்பளம் மற்றும் அத்தனைச் சலுகைகளையும் அனுபவித்தான்.

அடுத்து டாக்டர் சான்றிதழ் தயாரித்துக் கொண்டான். சூபர்வைசர் வேலையில் ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்ந்தான். அந்த வேலையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கத் தேவையில்லை. அதிலும் ஒருநாள் சிக்கல் வந்தது. ஓர் இரவு அவசர நோயாளியாக சேர்க்கப்பட்ட ஒரு குழந்தைக்கு இவனை வைத்தியம் பார்க்கச் சொல்லிவிட்டார்கள். புரியாமல் விழித்த அபாக்னேல் அந்த சமயம் பயிற்சிக்கு வந்திருந்த மருத்துவ மாண வர்களை அழைத்து, அவர்களுக்கு இது பயிற்சி என்று உத்தரவிட்டு வைத்தியம் பார்க்க வைத்தான். மனசாட்சி உறுத்தவே அந்த வேலையில் இருந்தும் விலகினான்.

இவனை கைது செய்வதற்காக நிய மிக்கப்பட்ட காவல் அதிகாரி, பல விதமாக பொறி வைத்துக் கொண்டிருந் தார். ஆனால், இவன் அவருடன் தொடர்பில் இருந்தபடி அவருக்குப் போக்குக் காட்டி ஊர் ஊராக தப்பித்துச் சென்றான். பிறகு, பிடிபட்டு சுவீடன் நாட்டிலும், ஃபிரான்ஸ் நாட்டிலும் தலா ஆறு மாதங்கள் சிறைகளில் இருந்தான்.

அமெரிக்காவில் இவன் மேல் இருந்த வழக்குகளுக் காக அதிகாரி இவனைக் கைது செய்து விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்து வந்தார். விமானம் ரன்வேயில் நிறுத்தத்துக்கு வரும் சமயம், விமானத்தின் அத்தனை வழிகளும் இவனுக்கு அத்துப் படி என்பதால் கழிவறையில் இருந்து நைசாக நழுவி வேறு வழியில் தப்பித்து, விமான நிலையத்தைவிட்டு ஓடிவிட்டான்.

ஆனால், போலீஸின் இடைவிடாத துரத்தலில் மாட்டிக் கொண்டான். அமெரிக்காவின் கோர்ட் இவனுக்கு 12 வருடங்கள் சிறைத் தண்டனை கொடுத்தது. அந்தச் சிறையில் இருந்தும் சாமர்த்தியமாக தன்னை சிறைத்துறை அதிகாரியாக நம்பவைத்து தப்பித்தான். மீண்டும் பிடித்து சிறையில் அடைத்தார்கள்.

இவனைக் கைது செய்த காவல் துறை அதிகாரிக்கு இவன் மேல் கோபம் இருந்தாலும் இவனுடைய அபாரமான புத்திசாலித்தனத்தின் மீது மிகுந்த மரியாதை இருந்தது. பல காசோலை மோசடி வழக்குகளில் இவனிடம் ஆலோசனை கேட்டார் அவர். சிறைத் தண்டனையை 5 வருடங்களோடு முடித்து, இவனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மோசடி வழக்கு களைத் தீர்க்க உதவி செய்ய வைத்தார்.

விடுதலையான அபாக்னேல் சில வேலைகளில் சேர்ந்தான். ஆனால், இவனுடைய குற்றப் பின்னணி தெரிந் ததும் உடனே வேலையைவிட்டு நிறுத் தினார்கள். மனம் நொந்துபோன அபாக்னேல் தன் புத்திசாலித்தனத் தையே ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி னால் என்னவென்று யோசித்தான்.

அபாக்னேல் ஒரு வங்கியின் உயர் அதிகாரியிடம் தன் குற்ற வரலாறு முழுவதும் சொல்லிவிட்டு, “உங்கள் வங்கி ஊழியர்கள் மத்தியில் ஒரு மணி நேரம் நான் பேசுகிறேன். காசோலை மோசடிகளை எப்படி தடுக்க முடியும் என்று விளக்குகிறேன். என் பேச்சு உபயோகமாக இருந்தால், எனக்கு 500 டாலர்கள் தாருங்கள்’’ என்றான். அனுமதி அளிக்கப்பட்டது. அற்புதமாகப் பேசினான் அபாக்னேல். பணம் தந்ததுடன் மற்ற வங்கிகளுக்கும் சிபாரிசு செய்தார் அந்த அதிகாரி.

காசோலை மோசடிகளுக்கு எதிரான வழிமுறைகளை வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் வழங்குவதையே தொழிலாக மேற்கொண்டான். காவல் துறைக்கும் ஆலோசகராக பணியைத் தொடர்ந்தான். 67 வயதான அபாக்னேல் இன்று மிகப் பெரிய இடத்தில் இருக்கிறான். தவறு… இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அபாக்னேல் தொடங்கி வெற்றி கரமாக நடத்தி வரும் இந்த நிறுவனம் இப்போது 14,000 நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். நிறைய விருதுகள் பெற்று, பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுத்துள்ளார். ஒரு தொண்டு நிறு வனம் நிதி திரட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதில் அபாக்னேலின் சிறப்புரைக்கும் அவருடன் ஒரு இரவு விருந்து சாப் பிடவும் 250 டாலர்கள் என்று நிர்ணயித்து டிக்கெட்டுகளை விற்று, 4 லட்சம் டாலர்களை நிதியாக திரட்டியது என்றால் ஒரு பேச்சாளராக இவரின் பிரபல்யத்தைப் புரிந்துகொள்ளலாம்.

அபாக்னேலின் மூன்று மகன்களில் ஒரு மகன் இன்றைக்கு காவல்துறையில் ஓர் அதிகாரியாக இருக்கிறார். அபாக்னேலின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் எடுத்த ‘கேட்ச் மி இஃப் யூ கேன்' திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது.

அபாக்னேல் ஒரு பேட்டியில், ‘‘நான் செய்த குற்றங்கள் மிகவும் மோச மானவை. ஒழுக்கமற்றவை. நியாய மற்றவை. அதனால்தான் மூன்று ஜனாதிபதிகள் எனக்கு பொது மன்னிப்பு வழங்க முன்வந்தபோதும் நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மோசடி குற்றங்களைப் பொறுத்தவரையில்..மோசடிகள் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பதுதான் சிறந்ததாக நான் கருதுகிறேன்'’ என்றார்.

pkp1_2468376g.jpg

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-10-ஹீரோவாக-மாறிய-வில்லன்/article7407195.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எப்படி? இப்படி?- 11: அழகியின் அழகற்ற மரணம்

manro_2476607f.jpg

மர்லின் மன்றோ ஹாலிவுட் நடிகை. 1945 முதல் 1962 வரை திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். சிறந்த கவர்ச்சி மங்கையாக பல பத்திரிகைகள் தேர்வு செய்த இவரது அழகில் பல இளைஞர்கள் கிறங்கியிருந்தார்கள். 1953-ல் தொடங்கப்பட்ட ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழில் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

தந்தை இல்லை. தாய்க்கோ மன நலப் பிரச்சினைகள். ஆகையால், அநாதை இல்லங்களில் வளர்ந்தார். 16 வயதி லேயே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. பிறகு அந்தத் திருமணத்தை ரத்து செய்தார். நடிகையான பிறகு இரண்டு திருமணங்கள். இரண்டும் தோல்வி. மீண்டும் மீண்டும் விவாக ரத்துகள். குழந்தை இல்லை. தனிமை யான வாழ்க்கை.

மர்லின் மன்றோ கல்லூரியில் படிக்காதவர். ஆனால், புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவர். வீட்டில் தனி லைப்ரரியே வைத்திருந்தவர். கவிதைகள் எழுதுவார். இசை பிடிக்கும். லிப்ஸ்டிக், மஸ்காரா மிகமிகப் பிடிக்கும். நகைகளில் ஆர்வமே இல்லை. நாய்கள் பிடிக்கும். சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர்.

அவருடைய கருத்துகள் எல்லாமே பலரை புருவம் உயர்த்த வைத்தன.

‘‘ஒரு பெண்ணின் அழகான உடல் மூடி மறைப்பதற்கல்ல; மற்றவர்கள் பார்த்து ரசிக்கவே; ஹாலிவுட் என்பது ஒரு பெண்ணின் முத்தத்துக்கு 50 ஆயிரம் டாலர்களும், அவள் மனசுக்கு வெறும் 50 செண்ட்டும் தரக் கூடியது’’ இவையெல்லாம் அவர் சொன்னவை.

அமெரிக்காவின் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் 45-வது பிறந்த நாள் விழாவில் கவர்ச்சியான உடையில், வந்து ‘‘ஹேப்பி பர்த் டே டு பிரெசிடெண்ட்…’’ என்று மேடையில் மன்றோ பாடினார். கென்னடி பேசும்போது, ‘‘மன்றோவின் குரலால் வாழ்த்து பெற்ற பிறகு இன்றுடன் நான் பதவியில் இருந்தே ஓய்வு பெற்றுவிடலாம் போலிருக்கிறது’’ என்றார். அன்று இரவு நடந்த விருந் திலும் மர்லின் மன்றோ கலந்துகொண் டார். அன்றைக்கு மர்லின் மன்றோ அணிந்திருந்த உடை அவரது மரணத் துக்குப் பிறகு 12 லட்சம் டாலர்களுக்கு ஏலத்தில் விலைபோனது.

தொடர் தோல்விகள் மன்றோவை மதுப் பழக்கத்துக்கும், போதை மாத்திரை பழக்கத்துக்கும் தள்ளியது. அதனால் அவருக்குத் தொழிலில் கவனம் சிதறி யது. சில படங்களில் இருந்து நீக்கப்பட் டார். மன அழுத்தத்துக்கு வைத்தியம் செய்து கொண்டார். சில முறை தற் கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.

1962, ஆகஸ்ட் 5-ம் தேதி அதி காலை 3 மணிக்கு மர்லின் மன்றோ தன் படுக்கையறையில் கட்டிலில் நிர் வாணமாக, கையில் தொலைபேசியின் ரிசீவரைப் பிடித்தபடி மூச்சில்லாமல் கிடந்தார். டாக்டர் அழைக்கப்பட்டார். கண்ணாடி ஜன்னல் உடைக் கப்பட்டு உள்ளே சென்று முதலுதவி செய்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவப் பரிசோதனையில் அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கள் சாப்பிட்டிருப்பதைக் கண்டுபிடித்தார் கள். தற்கொலை என்று வழக்கு மூடப்பட்டது.

ஆனால், இந்த மரணம் குறித்து சர்ச்சைகளும், பதில் இல்லாத பல கேள்விகளும் தொடர்கின்றன. அது ஒரு திட்டமிட்ட கொலை என்கிற கோணத்தில் பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பல தொலைக்காட்சிகள் தங்கள் டீமை வைத்து துப்பறிந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள்.

இவர்களின் ஊகம் இதுதான்:

அதிபர் ஜான் எஃப் கென்னடிக்கும் மன்றோவுக்கும் காதல் ஏற்பட்டது. நடி கரும்,கென்னடியின் மைத்துனருமான பீட்டர் லாஃபோர்டின் வீட்டில் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். அதிபர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை மணந்துகொள்வார் என்று மன்றோ நம்பினார்.

அதிபர் தன் சகோதரர் ராபர்ட் கென் னடியை அழைத்து மன்றோவைச் சந் தித்து, ‘இனிமேல் வெள்ளை மாளி கைக்கு போன் செய்து தன்னை அழைக் கக் கூடாது’ என்று எச்சரித்து விட்டு வரச் சொன்னார். எச்சரிக்கை செய்வதற்காக சென்ற ராபர்ட்டுக்கு மன்றோவைப் பிடித்துவிட்டது.

ராபர்ட்டுடன் மன்றோவுக்கு புதிய காதல் ஆரம்பித்தது. ராபர்ட்டுக் கும் அவரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கம் இல்லை. மன்றோ, ‘‘உங்கள் இருவரைப் பற்றிய ரகசியங்களை பத்தி ரிகை யாளர்கள் சந்திப்பு நடத்தி பகிரங்கப்படுத்துவேன்’’ என்று ராபர்ட்டை மிரட்டினார்.

மன்றோ இறந்த தினத் துக்கு முதல் நாள் மன்றோ வுக்கும் ராபர்ட் கென்னடிக்கும் வாக்குவாதம் உச்சத்துக்குச் சென்றது. அருகில் பீட்டர் லாஃபோர்டும் இருந்தார். கோபத்தின் உச்சத்தில் மன்றோ கத்தி எடுத்து ராபர்ட் கென்னடியைக் குத்த முற்பட்டார். கத்தி வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டது.

அவருக்கு சில குறிப்புகள் தந்து விட்டு கென்னடி யும், பீட்டர் லாஃபோர்டும் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு அடியாட்களின் உதவியுடன் மன்றோவை நிர்வாணப்படுத்தி டாக்டர் எனிமா மூலம் உயிரைப் போக்கும் அளவுக்கு மருந் தைச் செலுத்தினார். மன்றோவை கட்டிலில் படுக்க வைத்து தற்கொலை போல செட்டப் செய்தார்கள்.

இந்த ஊகங்களுக்கு ஆதாரமாக பலர் குறிப்பிடும் அம்சங்கள்:

அந்தப் படுக்கையின் விரிப்பு கசங்காமல் இருந்தது. மேஜையில் காலியாக இருந்த மாத்திரை பாட்டி லின் மூடி சரியாக மூடப்பட்டிருந்தது. மாத்திரைகளை விழுங்க ஒரு கண்ணாடி டம்ளரோ, தண்ணீரோ, மது வகைகளோ எதுவும் இல்லை.

போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்ட ரின் அறிக்கையின்படி மன்றோ வயிற்றில் கிட்டத்தட்ட 60 மாத்திரை கள் அளவுக்கு மருந்து இருந்தது. அது வாய்வழியாக உட்கொள்ளப் படவில்லை.

மன்றோவின் வழக்கு விசாரணைத் தொடர்பான பல மருத்துவ அறிக்கை களும், விசாரணை அறிக்கைகளும் பிறகு காணாமல் போயின.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட போது மருத்துவர் க்ரீன்சன் மன்றோ வுக்கு முறையான முதலுதவிகள் செய்யவில்லை.

1985-ல் பி.பி.சி தொலைக்காட்சி நடத் திய ஒரு பேட்டியில் மன்றோவின் உதவியாளர் முர்ரே போலீஸிடம் தெரி வித்ததையே சொல்லிவிட்டு, விளக்கு கள் அணைக்கப்பட்டதும் (ஆனால் மைக் அணைக்கப்படாததைக் கவனிக் காமல்) சலிப்புடன், ‘‘இந்த வயதி லும் நான் பொய் சொல்ல வேண் டுமா? மன்றோவுக்கு இரண்டு கென்னடி களோடும் தொடர்பு இருந்தது’’ என்று உளறிவிட்டார்.

சமீபத்தில் 2014-ம் வருடம் ‘தி மர்டர் ஆஃப் மர்லின் மன்றோ கேஸ் க்ளோஸ்ட்’ என்கிற புத்தகம் வெளியிடப்பட்டு, விற்பனையில் சாதனை படைத்தது. அதை எழுதியவர்கள் ஜாய் மார்க்லோஸ் மற்றும் ரிச்சர்ட் பஸ் கின். இதில், பீட்டர் லாஃபோர்ட் மனம் விட்டு சொன்ன பல ரகசிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மன்றோவை மனசுக்குள் காதலித் தவர்கள் பலர். அதில் ‘பிளேபாய்’ பத்திரிகையின் ஆசிரியரான ஹக் யஹஃப்னர் முக்கியமானவர். அவர் மன்றோவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் மன்றோவின் கல்லறைக்கு அருகில் தனக்காக இடம் வாங்கினார்.

‘முதுமையை நினைத்தால் பயம்’ என்று அடிக்கடி சொன்ன மன்றோ, தன் 36-வது வயதில் முதுமையைக் காணாமலேயே மறைந்தார். ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்த அவரின் மரணத்தின் பக்கங்கள் மட்டும் மூடப்பட்ட பக்கங்களாகவே இருக்கின்றன.

- வழக்குகள் தொடரும்

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-11-அழகியின்-அழகற்ற-மரணம்/article7433449.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி?- 12: விமானக் கடத்தலில் விசித்திரம்!

pkp_2484825f.jpg

1971-ம் வருடம், நவம்பர் 24. அமெரிக்காவின் போர்ட் லேண்ட் விமான நிலையத்தில் இருந்து 30 நிமிடப் பயணத்தில் சியாட்டில் விமான நிலையத்தை அடையப் போகிற போயிங் 727 விமானம், 36 பயணிகளுடன் புறப்பட்டு வானில் பறக்கத் தொடங்கியது.

சூட், டை அணிந்து பின் சீட்டில் கடைசி யாக அமர்ந்திருந்த டி.பி.கூப்பர் என்னும் பயணி பணிப்பெண்ணை அழைத்து ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தான். தன் பெட்டியில் வெடிகுண்டு இருப் பதாகவும், தன்னருகில் அமரும்படியும் அதில் டைப் செய்யப்பட்டிருந்தது.

அவள் அமர்ந்தாள். அவன் தன் பெட்டியைத் திறந்து காட்டினான். அதில் டெட்டனேட்டர்கள் இணைக்கப்பட்ட வெடிகுண்டுகள் இருந்தன.

விமானக் கடத்தல் பற்றி சக பயணி களுக்குத் தெரியக் கூடாது என்றான். விமானி மூலம் தன் கோரிக்கைகள் சொல்லப்பட வேண்டும் என்றும், அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை விமானம் தரை இறங்காமல் வானத் திலேயே வட்டமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்தான்.

அவனது கோரிக்கைகள் : 1. இரண்டு லட்சம் டாலர்கள் 20 டாலர் நோட்டுக் களாக வேண்டும். 2. விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும். 3. நான்கு சிறப்பான பாராசூட்டுகள் வேண்டும்.

விமானி மூலம் நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டதும், காவல்துறையின் உயரதிகாரிகள், விமானக் கடத்தலைக் கையாளும் நிபுணர்கள் சியாட்டில் விமான நிலையத்தில் குவிந்தார்கள். பயணிகளின் உயிர் முக்கியம். கோரிக்கை களை நிறைவேற்றுவதைத் தவிர வேறுவழியில்லை.

அவசர அவசரமாக அவன் கேட்டதை எல்லாம் தயார் செய் தார்கள். விமானம் 3 மணி நேரம் வானிலேயே வட்டமிட்டது. பயணி களுக்கு எதுவும் தெரியாமல் பொருத்த மான காரணங்களை விமானிகள் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். 20 டாலர் நோட்டுக்களாக 10 ஆயிரம் நோட்டுகள். அவை ஒவ்வொன்றும் மைக்ரோ ஃபிலிமில் படம் பிடிக்கப்பட்ட பின் பண்டல்களாக்கப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டன.

எல்லாம் தயார் என்று தகவல் சொல்லப்பட்ட பிறகு விமானம் தரை இறங்கியது. அதிரடி நடவடிக்கைக்குத் வீரர்கள் தயாரானார்கள். தீயணைப்புக் கருவிகளும், பேரிடர் மீட்புக் குழுவும் தயாராக இருந்தன.

பயணிகள் தங்கள் விமானம் கடத்தப் பட்டது அறியாமலேயே இறங்கினார்கள். எரிபொருள் நிரப்பப்பட்டது. பாராசூட்டு களும், உணவும், பணமும் ஒப்படைக்கப் பட்டன. விமானம் மீண்டும் புறப்பட்டது.

அந்த விமானத்தில் இருந்து பார்த் தால் தெரியாதபடி அதன் மேலேயும், கீழேயும் 2 அதிரடிப் படை விமானங்கள் பறந்தன. ஒரு ஹெலிகாப்டரும் தொடர்ந்தது.

அவன் உத்தரவுகளை விமானிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த பணிப் பெண்ணை காக்பிட்டுக்குச் செல்லும்படி கட்டளையிட்டான். அவளும் சென்றாள். விமானத்தின் வால் பகுதியில் உள்ள கதவைத் திறப்பதற்கான உத்தரவிடப் பட்டிருப்பதை காக்பிட்டின் பேனல் போர்டில் தகவலாக அறிந்த விமானி, அது ஆபத்தானது என்று எச்சரித்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் கதவு திறக்கப்பட்டுவிட்டது.

பிறகு விமானத்தை ரீனோ விமான நிலையத்தில் இறக்கியதும் பயணிகள் பகுதிக்கு வந்து பார்த்தால், கூப்பர் அங்கு இல்லை. அவன் அணிந்திருந்த டை மட் டுமே கிடந்தது. கூப்பர் பின்புறக் கதவைத் திறந்து பாராசூட்டைக் கட்டிக் கொண்டு குதித்திருக்கிறான்.

காவல்துறை துரிதமாக இறங்கியது. முதலில் அவன் குதித்த நேரம் இரவு 8.13 என்று முடிவுக்கு வந்தார்கள். அடுத்து சியாட்டிலில் இருந்து ரீனோவுக்குப் பறந்த விமானத்தின் பயணப் பாதையை சரியாகத் தீர்மானித்து அவன் குதித்த இடத்தை அனுமானித்தார்கள்.

அந்த விமானத்தைக் கண்கானித்த மற்ற இரண்டு விமானங்களும் சரி, ஹெலி காப்டரும் சரி, இந்த விமானத்தின் பின் கதவு திறந்ததையோ, ஒரு ஆசாமி குதித் ததையோ ஒரு பாராசூட் விரிந்ததையோ பார்க்கவே இல்லை.

அவன் தரையிறங்கிய இடம் லீவிஸ் ஆற்றின் அருகில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை ஏரியான லேக் மெர்வின் என்று ஊகம் செய்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் வீரர்கள் அந்தப் பகுதியில் வேட்டை யாடினார்கள். அந்தப் பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் விசாரித்தார்கள்.

கூப்பரைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. அவனைப் பார்த் தவர்கள் தெரிவித்த அடையாளங்களை வைத்து கூப்பரின் முகத்தை உருவாக்கி பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். அவன் விட்டுச் சென்ற டையில் இருந்து டி.என்.ஏ எடுத்தார்கள். அவனிடம் ஒப் படைக்கப்பட்ட டாலர்களின் வரிசை எண்களை எல்லா வங்கிகளுக்கும் கொடுத்தார்கள். பிறகு பத்திரிகைகளி லும் வெளியிட்டார்கள். ஒரு நோட்டைக் கொண்டு வந்து ஒப்படைத்தால் அதற்கு ஈடாக 5 ஆயிரம் டாலர்கள் தரப்படும் என ஒரு பத்திரிகை அறிவித்தது.

7 வருடங்கள் கழித்து 1978-ல் இவர்கள் தேடிய பகுதியில் இருந்து 20 கி.மீ தள்ளி, டினா பார் என்கிற பீச் ரிசார்ட்டுக்கு ஒரு குடும்பம் வந்தது. அதில் ஒரு சிறுவன் கேம்ப் ஃபயர் உருவாக்க பள்ளம் தோண்டியபோது, 20 டாலர் நோட்டுகள் 3 பண்டல்களை கண்டுபிடித்தான். அதில் மொத்தம் 290 நோட்டுகள் இருந்தன. அவை கூப்பருக்குக் கொடுத்த நோட்டுகள்.

அந்த நோட்டுகளை வைத்து மீண்டும் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. அவற்றை அங்கே கூப்பர் புதைத்தானா? அல்லது எங்கோ விழுந்து கரை ஒதுங்கியவையா? அப்படி என்றால் மீதி நோட்டுகள் எங்கே?

கூப்பர் எங்காவது உயிரோடு இருக் கிறானா, இல்லையா? பாராசூட் சரியாக திறக்காமல் அவன் இறந்து போயிருந் தால் அவன் உடல் கிடைத்திருக்க வேண் டுமே. அந்த பாராசூட்டின் ஒரு பகுதிகூட ஏன் கிடைக்கவில்லை? இப்படி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடை காண, அரசாங் கத்தால் ஒரு புது டீம் நியமிக்கப்பட்டது. அந்த டீம் 2009 முதல் பல நவீன கருவிகளை வைத்து மீண்டும் ஆராய்ச்சி களில் இறங்கியிருக்கிறது.

இந்தக் கடத்தல் நடந்த அடுத்த வருட மான 72-ம் வருடத்தில் மட்டும் மொத் தம் 31 விமானக் கடத்தல்கள் நிகழ்ந்தன. அதில் 15 கடத்தல்களில் கடத்தல்காரர் கள் கூப்பரைப் போலவே பணயத் தொகையோடு பாராசூட்டும் கேட்டார் கள். அத்தனைக் கடத்தல்களும் காவல் துறையால் முறியடிக்கப்பட்டன. ஒன்று, கடத்தல்காரர்கள் சுடப்பட்டார்கள் அல் லது ஓரிரு தினங்களில் பிடிக்கப்பட்டார் கள். ஆனால், அமெரிக்க விமானக் கடத்தல் விவகாரங்களில் இன்றுவரை தீர்க்கப்படாத புதிராக இருந்து வருவது இந்த கூப்பரின் கடத்தல் மட்டுமே.

இன்னொரு முக்கியமான செய்தி: அவன் பெயர் கூப்பர் என்பது அவன் போர்ட்லேண்டில் வாங்கிய டிக்கெட்டால் தான் தெரியவந்தது. அதுவே, பொய் யான பெயராகவும் இருக்கலாம்

இந்தக் கடத்தலுக்குப் பிறகு நிகழ்ந்த முக்கியமான மாற்றங்கள்: 1. விமான நிலையங்களில் பயணிகளின் உடைமை களை கடுமையாக சோதனையிட்டார் கள். 2. விமானத்தில் பயணிகள் பகுதியில் இருந்து பின்புறக் கதவைத் திறக்க முடியாதபடி விமானங்கள் வடிவமைக் கப்பட்டன. 3. காக்பிட்டில் இருந்து பயணிகள் பகுதியைப் பார்ப்பதற்கு வசதியாக ஒரு பீப்ஹோல் வைத்து விமானங்களைத் தயாரித்தார்கள்.

- வழக்குகள் தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-12-விமானக்-கடத்தலில்-விசித்திரம்/article7459975.ece

 

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி?- 13: இறந்தவர்கள் வாழ்கிறார்கள்!

pkp_2493080f.jpg

உங்கள் நிலத்துக்கு ஒரு சான்றிதழ் கேட்டு வருவாய்த்துறை அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள். ‘‘அந்த நிலம் இப்போது உங்கள் பெயரில் இல்லையே’’ என்கிறார் அங்குள்ள அதிகாரி.

நீங்கள் இதை ‘போலி பத்திர மோசடி’ என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அதிகாரி மேலும், ‘‘நீங்கள் இறந்துவிட்டதாக உங்கள் இறப்புச் சான்றிதழைக் கொடுத்து, உங்கள் மாமா அந்த நிலத்தை தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்டுவிட்டாரே. சட்டப்படி நீங்கள் இப்போது உயிருடனேயே இல்லை’’ என்கிறார்.

உங்களுக்கு எப்படி இருக்கும்?

அப்படித்தான் இருந்தது லால் பிஹாரி என்கிற அந்த 22 வயது இளைஞருக்கு. இது நடந்தது 1976-ம் வருஷம். உத்தரப்பிரதேசத்தில் அசம்கார் மாவட் டத்தில் காலியாபாத் நகரில் இருந்த அலுவலகத்தில்தான் அந்த அதிர்ச்சி அவருக்குக் கிடைத்தது.

‘‘நான் சிறுவனாக இருந்தபோதே என் தந்தை இறந்ததும், எனது தாய் இந்த ஊரைவிட்டு அமீலோ என்னும் ஊருக்கு என்னை அழைத்துச் சென்றுவிட்டார். பல வருஷங்களுக்குப் பிறகு இப்போது தான் இங்கு வருகிறேன்’’ என்று விளக்கம் தந்தார் லால் பிஹாரி.

ஆனால், ‘‘நீங்கள் இறந்துவிட்டதாக உங்கள் மாமா உரிய மருத்துவச் சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்து சட்டப்படி உத்தரவு பெற்று, உங்கள் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டதால் எங்களால் எதுவுமே செய்ய முடியாது’’ என்றார் அதிகாரி.

லால் பிஹாரி முதலில் போலீஸுக் குப் போனார். ‘‘லால் பிஹாரி இறந்து விட்டான். நீ பொய்யாக புறப்பட்டு வந்திருக்கிறாய்’’ என்று போலீஸும் அவரைத் துரத்தியது. அடுத்து பிஹாரி தன்னுடைய மாமா வீட்டுக்குப் போனார். அங்கும் ‘‘நீ லால் பிஹாரி இல்லை. அவன் இறந்துபோய்விட்டான்’’ என்று முகத்தில் அடித்ததுபோலச் சொல்லி விரட்டினார்கள்.

‘இதை நான் சும்மா விடப்போவ தில்லை…’ என்று தீர்மானித்த லால் பிஹாரி, ஒரு வழக்கறிஞரைப் பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பத்திரிகைகளுக்கு எழுதிப் போட்டார்.

மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக தன் பெயருக்கு முன் பாக ‘இறந்தவன்' என்று அடைமொழி யுடன் லெட்டர் பேட் அடித்து, அதில் எல்லோருக்கும் கடிதங்கள் எழுதினார். தன் பெயரைப் போட்டு இறுதி ஊர்வலம் என்று நோட்டீஸ் அடித்து விநியோகித்து பொம்மை சிதைக்கு கொள்ளி வைத்து ‘காரியம்’ செய்தார்.

தன் மனைவிக்கு ‘விதவைக்கான நல நிதி வேண்டும்’ என்று மனு போட்டார். அவர் உயிருடன் இருப்பதால் அதைத் தர முடியாது என்று அதிகாரிகள் கடிதம் எழுதினால், அது தனக்குச் சாதகமான சான்றாகும் என்பது அவரின் நோக்கம். நேரில் வந்து விசா ரித்துச் சென்ற அதிகாரி, லால் உயிருடன் இருப்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல், அவர் மனைவியின் நெற்றியிலும், வகிட்டின் உச்சியிலும் குங்கு மம் வைத்திருப்பதால் அவர் விதவை இல்லை என்றும், அதனால் அவருக்கு நல நிதி தர முடியாது என்றும் பதில் கடிதம் அனுப்பினார்.

தன்னைக் கைது செய்து வழக்கு போட வேண்டும் என்பதற்காகவே போலீஸ்காரர்களிடம் தகராறு செய் தார். அப்படியும் இவரைக் கைது செய்யவில்லை. ஒரு கான்ஸ்டபிளுக்கு ஐநூறு ரூபாய் லஞ்சம் கொடுத்து தன் மேல் வழக்கு பதியச் சொல்ல, விவரம் புரிந்ததும் அவர் மறுநாள் வந்து பணத்தைத் தந்துவிட்டுப் போய்விட்டார்.

அடுத்த திட்டமாக தன் நிலத்தை சாமர்த்தியமாக அபகரித்த மாமாவின் 5 வயது பையனைக் கடத்திகொண்டு வந்து தன் வீட்டில் வைத்தார். மாமா தன் பெயர் போட்டு புகார் கொடுக்க வேண்டும் என்பது அவர் நோக்கம். ஆனால், அந்த ‘எம்டன்’ மாமா இவர் பையனை எதுவும் செய்ய மாட்டார் என்கிற நம்பிக் கையில் கடத்தப்பட்டு 5 நாட்களாகியும் புகாரே கொடுக்கவில்லை. மனசாட்சி உறுத்தவே பையனை அவன் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் பிஹாரி.

ஒரு பத்திரிகையாளர் இவரின் நூதன மான போராட்டங்களைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதினார். அதைப் படித்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் உத்தரப்பிரதேச சட்டசபையில் இவரின் பிரச்சினையைப் பற்றிப் பேசினார். அந்தச் செய்தியைப் படித்த லால், லக்னோ சென்று தனக்கு நீதி வேண்டும் என்று ஒரு தட்டி எழுதிப் பிடித்துக்கொண்டு சட்டசபைக்கு வெளியில் தனி நபராக தர்ணாவில் இறங்கினார். போலீஸ் வந்து இவரை இழுத்துச் சென்றது.

சட்ட மன்றத்துக்குப் பார்வையாள ராகச் சென்றார். சபை நடந்து கொண்டி ருந்தபோது தன் பிரச்சினைகளை விளக்கி அச்சடித்த நோட்டீஸ்களை சபைக்கு நடுவில் வீசினார். சபைக் காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டார். 7 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடு விக்கப்பட்டார்.

ஒரு பக்கம் இவரின் வழக்கு நீதிமன்றத்தில் வாய்தாக் களுக்கு நடுவில் தொடர்ந்து கொண்டிருக்க, 1988-ல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அலஹாபாத் தொகுதியில் வி.பி.சிங்குக்கு எதிராக தேர்தலில் நின்றார். தனக்கு ஓட்டு எதுவும் விழாது என்று நினைத்த இவருக்கு 1,600 ஓட்டுக்கள் கிடைத்தன. 1989-ம் வருடம் அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியை எதிர்த்து தேர்தலில் நின்றார்.

கடைசி முயற்சியாக 1994-ல் தாசில் தார் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழை யப் போவதாக போஸ்டர் அடித்து ஒட்டி னார். ஆனால், அதற்குள் இவரின் இடைவிடாத 18 ஆண்டு சட்டப் போராட் டத்தின் பலனாக, இவர் உயிருடன் இருப்ப தாக நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்தது.

இடைப்பட்ட காலத்தில் மாமாவுடன் சமாதானமாகிவிட்டதால் அந்த நிலத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டார்.

“எனக்கு சொத்து பெரிதில்லை. உயி ரோடு இருக்கும் என்னை இறந்துவிட்ட தாக சொன்ன அரசாங்கத்தின் பொறுப் பற்ற செயலை உலகுக்குக் காட்ட விரும் பினேன். அதற்காக நான் பட்ட அவமானங் கள் அதிகம். என்னை பைத்தியக்காரன் என்று விமர்சித்தார்கள். சாலைகளில் நான் நடந்தால், இறந்தவன் போகிறான் என்று கிண்டல் செய்வார்கள். என் மனைவி தினமும் அழுவாள். வழக்குக்காக என் சொத்து, சேமிப்பு எல்லாம் இழந்தேன்' என்கிறார் லால்.

சொத்துக்காக மோசடி செய்யப்பட்டு தன்னைப் போலவே போலிச் சான்றி தழ்கள் மூலம் இறந்துவிட்டதாக அறிவிக் கப்பட்டவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் இருப்பார்கள் என்கிறார். அவர்களுக்கு உதவ ‘இறந்தவர்கள் சங்கம்' என்னும் அமைப்பை இவர் தொடங்கினார். அதில் இப்போது 20 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். இவரைத் தேடி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்கூட ஆலோசனைக்காக வந்து போகிறார்கள்.

1999-ல் இவரைப் பற்றியும் இவரின் அமைப்பைப் பற்றியும் ஒரு விரிவான கட்டுரையை ‘டைம்’ இதழ் வெளியிட்டது. அந்தக் கட்டுரையையே புகாராக எடுத் துக்கொண்ட உத்தரப்பிரதேச உயர் நீதி மன்றம், இந்த விவகாரத்தை உடனே கவனிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது. அரசின் நடவடிக்கை களைத் தேசிய மனிதஉரிமை அமைப்பு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன் பிறகே அரசாங்கம் விழித்துக்கொண்டு இதுபோன்ற வழக்குகளில் முன்னுரிமை தந்து, இறந்துபோனதாக அறிவிக்கப்பட்ட பலரை உயிருடன் இருப்பதாக திருத்தச் சான்றிதழ் அளிக்கத் தொடங்கியது.

லால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணைகொண்டு தகவல் அறிந்தபோது 2008-ல் 335 பேர்களும் 2012-ல் 221 பேர்களும் உயிருடன் இருப் பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இவருக்கு கண்ணீருடன் நன்றி சொன்னார்கள்.

அமெரிக்காவில் முதலில் கோமாளித் தனமாக நினைக்கிற, ஆனால் பிறகு மக் களுக்கு பலன் அளிக்கிற செயல்களைச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் ‘இக் நோபல்' பரிசு 2003-ம் வருடம் லாலுக்கு அளிக்கப்பட்டது. இவரின் கதையை இந்தியில் திரைப்படமாக எடுக்க இயக்கு நர் சதீஷ் கடாக் முன்வந்திருக்கிறார்.

தன்னைப் போன்ற பாதிக்கப்பட்ட வர்களுக்கு சேவை செய்வதையே தன் முழு நேர வேலையாக ஏற்றுக்கொண்டு வாழும் லால் பிஹாரிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. தன் மகன் மற்றும் நண்பர்களின் உதவிகளோடுதான் இந்த அமைப்பை நடத்தி வருகிறார்.

- வழக்குகள் தொடரும்

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-13-இறந்தவர்கள்-வாழ்கிறார்கள்/article7484790.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி!- 14: அமிலக் குளியல்!

ஓவியம்: ஷ்யாம்

லண்டனில் மேடம் டுஸாட்ஸ் மெழுகுச் சிலை காட்சியகத்தில் உலகம் முழுவதும் பிரபலமான பிரமுகர்களின் சிலைகளை வைத் திருக்கிறார்கள். எதிர்மறை செயல்களால் பிரபலமானவர்களின் சிலைகளும் உள்ளன. அந்த வகையில் அங்கே சிலை யாக நிற்கும் ஒருவன் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஜார்ஜ் ஹேக்.

அப்படி என்ன செய்தான் அவன்?

ஹேக்குக்கு இரக்கம் என்றால் பொருள் தெரியாது. பாறாங்கல் நெஞ் சன். பணத்துக்காக எதுவும் செய்வான். உச்சமான குற்றமான கொலையை சர்வ சாதாரணமாக செய்தவன். எத்தனை? 9 கொலைகள். தடயம் எதுவும் இல்லாமல் சாமர்த்தியமாக செய்தவன், கடைசியில் ஒரு சிறு தவறினால் மாட்டிக் கொண்டான்.

ஹேக் அதிகம் படிக்காதவன். பலவிதமான வேலைகள் செய்தான். பணம் கையாடல் செய்து மாட்டி பல முறை சிறைக்குச் சென்று திரும்பியவன். விடுதலையானதும் ஊரை மாற்றிக் கொள்வான். ஆனான், திருட்டை விடமாட்டான்.

ஹேக் தலைநகர் லண்டனுக்கு வந்து சேர்ந்தான். ஒதுக்குப்புறமாக வீடு எடுத்துத் தங்கினான். முன்பகுதியில் ஒரு மெக்கானிக் கடை வைத்துக் கொண்டான். அதில் வந்த வரு மானம் ஆடம்பரச் செலவுகளுக்கு போதவில்லை. பெரிய தொகையை பார்க்க வழி யோசித்தான்.

1943-ல் மேக்ஸ்வான் என்கிற பணக்காரனின் நட்பு கிடைத்தது. அவன் லண்டனில் தனி வீட்டில் தங்கியிருக்க, அவனுடைய பெற்றோர் வெளியூரில் இருந்தார்கள். ஹேக் மேக்ஸ்வானிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பழகி னான்.

ஒரு கொலைக் குற்றத்தில் கொலை செய்யப்பட்ட மனிதனின் உடல் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் குற்றவாளியைத் தண்டிக்க முடியாது என்று சட்டம் இருப்பதைத் தெரிந்து கொண்டான். ஒரு துண்டு எலும்புகூட காவல்துறைக்குக் கிடைக்காமல் செய்ய முடியுமா என்று யோசித்தான்.

கடைக்குச் சென்று கொஞ்சம் கந்தக அமிலம் வாங்கி வந்தான். ஒரு எலியைக் கொன்று, அந்த அமிலத்தில் போட்டு கவனித்தான். 30 நிமிடங்களில் அந்த எலி முற்றிலும் கரைந்து கூழாகியது. அதுதான் திட்டம் என்று தீர்மானித்தான்.

ஓர் இரவில் மேக்ஸ்வானை தனது வீட்டுக்கு வரவழைத்தான். திடீரென்று அவன் கழுத்தை நெரித்தான். மேக்ஸ் வான் இறந்ததும், அவன் உடலை 40 கேலன் கந்தக அமிலம் நிரப்பப்பட்ட தொட்டியில் தூக்கிப் போட்டான். மறுநாள் சோதித்துப் பார்த்தான். அந்த உடல் முழுக்க கரைந்து சதை, எலும்பு எல்லாம் கூழாக மாறியிருந்தது. அந்த சதைக் கூழை பாதாளச் சாக்கடையில் கொட்டிவிட்டான்.

மேக்ஸ்வானின் வீட்டுக்குப் போய் தங்கிக்கொண்டு அவனுடைய பெற் றோருக்குத் தகவல் கொடுத்தான். மேக்ஸ்வான் போருக்குச் செல்வதைத் தவிர்க்க, தலைமறைவாகச் செல்வ தாக தன்னிடம் சொல்லிவிட்டுப் போயி ருப்பதாக சொன்னான்.

மேக்ஸ்வானின் உடைமைகளை எல்லாம் விற்று பணமாக்கிக் கொண் டான். அந்த வீட்டையும் போலிப் பத்திரங்கள் தயாரித்து தன் பெயருக்கு மாற்றி விற்கும் முயற்சியில் இருந்த போது பெற்றோருக்கு இவன் மேல் சந்தேகம் வந்தது.

அதை உணர்ந்த ஹேக், மேக்ஸ் வானைப் பற்றிய தகவல் தருவதாகச் சொல்லி இருவரையும் தன் வீட்டுக்கு வரவழைத்தான். இருவரையும் மண்டை யில் தாக்கி கொலை செய்தான். அவர்களின் உடல்களையும் அமிலத் தொட்டியில் போட்டு கரைத்து, சாக்கடையில் கொட்டிவிட்டான்.

மேக்ஸ்வானின் வீட்டை விற்று பணமாக்கிக் கொண்டு சீட்டாட்டம், உல்லாசம் என்று ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தான். மூன்று கொலை களைப் பற்றியும் உலகம் அறியவில்லை. மேக்ஸ்வானின் உறவினர்கள் அவர்கள் எங்கோ வாழ்வதாக நினைத்தார்கள்.

ஐந்து வருட உல்லாச வாழ்க்கையில் பணம் எல்லாம் தீர்ந்துவிட, 1948-ல் அடுத்து இவன் பார்வையில் விழுந்தவர் டாக்டர் யஹனிர்சன். டாக்டரும் அவர் மனைவி ரோஸும் ஒரு கிளப்பில் அறிமுகமானார்கள். டாக்டருக்கு ஒரு வீடு விற்க வேண்டியிருந்தது. தான் விற்றுத் தருவதாக பொறுப்பேற்றுக் கொண்டான் ஹேக். அது சம்பந்தமாக அவர் வீட்டுக்கு பல முறை சென்று நம்பிக்கையை வளர்த்தான்.

ஒருநாள் டாக்டரை மெக்கானிக் கடைக்கு வரவழைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான். அடுத்து வழக்கம்போல அமிலக் குளியல்தான். டாக்டரின் மனைவிக்கு போன் செய்தான். தன்னைச் சந்திக்க வந்த டாக்டர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டதாகச் சொன்னான். அவர் மனைவி ரோஸ் அலறிக்கொண்டு அங்கு வந்தாள். அவளையும் சுட்டான். அமிலத்தில் தூக்கிப் போட்டான். அவர்களின் வீட்டுப் பத்திரங்களை தன் பெயருக்கு மாற்றி விற்று பணமாக்கினான்.

அடுத்து வலையில் விழுந்தது கணவரை இழந்து தனியாக வாழ்ந்த ஆலிவ் டுராண்ட் என்கிற 69 வயது பெண்மணி. அவரிடம் செயற்கை நகங் கள் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக வும், தன் தொழிலில் முதலீடு செய் யும்படியும் கேட்டுக் கொண்டான். அது பற்றிப் பேச தன் மெக்கானிக் கடைக்கு அழைத்தான்.

ஆலிவ் டுராண்ட்டும் அமிலத்தில் கரைந்தார். சாக்கடையில் கலந்தார். அவரின் உறவினர்கள் காவல்துறைக்குச் சென்றார்கள். ஹேக்குடன் ஆலிவ் பழகி வந்ததைப் பற்றி ஒருவர் சொல்ல, ஒரு அதிகாரி ஹேக் மேல் சந்தேகம் எதுவுமில்லாமல் ஒரு சாதாரண விசாரணைக்காகத்தான் அவனைத் தேடி வந்தார்.

இங்கேதான் ஹேக்கின் ஓர் அல்ப புத்தி… அவனை சறுக்கிவிட்டது. ஹேக் வீட்டில் அதிகாரியின் கைக்கு ஒரு லாண்டரி பில் கிடைத்தது. பெண்கள் அணியும் பெர்சியன் ஆட்டுத் தோலால் ஆன ஓவர் கோட்டுக்கான பில் அது. இறந்தபோது ஆலிவ் அணிந்திருந்தது. அந்தக் கோட்டின் மேல் ஆசைப்பட்டு அதை அமிலத்தில் போடாமல் ஹேக் எடுத்து வைத்து லாண்டரிக்குப் போட்டிருந்தான்.

அது போதாதா அதிகாரிக்கு? வீட்டை முற்றிலும் குடைந்தார். ஏற்கெனவே அவன் விற்ற சொத்துக்களின் பத்திரங்கள் கிடைத்தன. அவன் வீட்டின் சாக்கடையில் கொஞ்சம் கூழாக இருப்பதை கவனித்த அதிகாரி அதை எடுத்து சோதனைக்கு அனுப்பினார். மேலும் ஒரு மெட்டல் ஸ்பிரிங் கம்பியும் அங்கே கிடைத்தது.

அந்தக் கூழில் மூன்று வெவ்வேறு மனிதர்களின் பித்தப்பை கற்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அந்த மெட்டல் ஸ்பிரிங் செயற்கைப் பல்லை வாயில் பொருத்துவது. அது ஆலிவுக்கு தன்னால் பொருத்தப் பட்டதாக ஆலிவின் பல் மருத்துவர் சான்றளித்தார்.

கடுமையாக விசாரித்ததும், போலீஸ் கண்டுபிடித்த 6 கொலைகளைத் தவிர மேலும் 2 பெண்கள், ஒரு ஆண் என்று மொத்தம் 9 கொலைகளைத் தான் செய்ததாக ஹேக் ஒப்புக்கொண்டான்.

ஆனால், தன்னை சில குரல்கள் துரத்துவதாகவும், அந்தக் குரல்கள் கொலை செய்யச் சொன்னதாகவும், தனக்கு ரத்தம் தொடர்பான கனவுகள் அடிக்கடி வருமென்றும் கோர்ட்டில் சொன்னான். அவனைப் பரிசோதித்த மனநல மருத்துவர்கள் அவன் பொய் சொல்வதாகச் சொல்லவே, ஜூரிகள் அவனைக் குற்றவாளி என்று தீர்மானித்தார்கள். 1949-ம் வருடம் தூக்கிலிடப்பட்டான் ஹேக்.

‘அமிலக் குளியல் கொலைகள்’ என்று அப்போது இந்த வழக்கு மிகவும் பேசப்பட்டது. வழக்கு நடந்தபோது தீர்ப்புக்கு முன்பே ’மிர்ரர்’ பத்திரிகையில் ஹேக்கைக் குற்றவாளி என்று கட்டுரை எழுதியதால், அதன் ஆசிரியர் சில்வெஸ்டர் கைது செய்யப்பட்டு கோர்ட் அவமதிப்பு குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

இங்கிலாந்தின் குற்ற வரலாற்றில் தடயவியலின் உதவியால் தீர்ப்பளிக் கப்பட்டது இதுவே முதல் வழக்காகும். கொலை செய்யப்பட்ட நபரின் உடல் கிடைக்கவில்லை என்றாலும் சூழ்நிலைகளும், தடயங்களும் கொலை நடந்ததை உறுதி செய்தாலே குற்றவாளியைத் தண்டிக்க முடியும் என்று இந்த வழக்கு புதிய தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 1954-ல் சட்டத் திருத்த மும் செய்யப்பட்டது.

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-14-அமிலக்-குளியல்/article7511554.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எப்படி? இப்படி!- 15: ஒரு காதல் செய்த அரசியல் மாற்றம்!

eppadi_2509764f.jpg

ஒரு காதலால் ஒரு மாநில அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? ஒரு காதலால் தேர்தலில் ஒரு கட்சி தோல்வியைத் தழுவ முடியுமா? முடியும்!

கொல்கத்தாவில் 2007-ம் வருடம் நடந்த ஒரு காதலும், அதன் தொடர்பான சம்பவங்களும் 2011-ம் வருடம் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் 34 வருட ஆட்சி முடிவடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தன.

‘லக்ஸ்’ நிறுவனம் ஆண்களுக்கான உள்ளாடைகள் தயாரிக்கும் 200 கோடி மதிப்புள்ள நிறுவனம். அதன் அதிபர் அசோக் டோடி. இவர் ஓர் இந்து. அவரின் மகள் பிரியங்கா டோடி. அவர் கம்ப்யூட்டர் அனிமேஷன் கற்க ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். அவருக்கு பாடம் எடுத்த இளைஞர் ரிஸ்வனூர் ரஹ்மான். இவர் இஸ்லாமியர்.

ரஹ்மானுக்கும், பிரியங்காவுக்கும் மன்மதன் அம்புவிட்டு காதல் மலர்ந் தது. மதம், அந்தஸ்து, வேற்றுமை காரணமாக குடும்பத்தினர் கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள் என்பதால்,ரகசிய மாக சில நண்பர்களை மட்டும் சாட்சி களாக வைத்து, பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், அதை வெளிப்படுத்தாமல் அவரவர் வீட்டில் சாதாரணமாக நடந்துகொண்டார்கள்.

சில மாதங்கள் கழித்து ரஹ்மான் தன் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் தகவல் சொன்னார். அவர்கள் அதிர்ந்து போனார் கள். பிரியங்காவை வீட்டுக்கு அழைத்து வந்தார். பிரியங்காவை விட்டு தன்னை மன்னித்து, தங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அசோக் டோடிக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னார்கள்.

கடிதம் பார்த்ததும் அசோக் டோடிக்கு கோபம் தலைக்கேறியது. அவர் தனக் குத் தெரிந்த காவல்துறை அதிகாரியின் உதவியை நாடினார்.

காவல்துறை ரஹ்மான் வீட்டுக்கு வந்தது. பிரியங்காவை அவர் தந்தை வீட்டுக்கு அனுப்பிவிடும்படியும், காதலை மறந்துவிடும்படியும் மிரட்டல் தொணியில் பேசினார்கள். இருவரையும் காவல்துறையின் ஒரு அலுவலகத்துக்கு வரச் சொன்னார்கள். வர மறுத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழுத்துப் போவோம் என்றார்கள்.

ரஹ்மானும், பிரியங்காவும் அவர்கள் சொன்ன அலுவலகத்துக்குச் சென்றார் கள். அங்கு பெரிய அதிகாரிகள் மிரட்டத் தொடங்கினார்கள். ரஹ்மான் தன் மனைவியைப் பிரியாவிட்டால் விளைவு விபரீதமாக இருக்குமென்று எச்சரித்தார்கள். பெரிய தொகை வாங் கித் தருவதாக ஆசை காட்டினார்கள். இதுபோல மூன்றுமுறை தங்கள் அலுவ லகங்களுக்கு அழைத்துப் பேசினார்கள்.

மூன்றாவது முறை பேசியபோது பிரியங்காவின் மாமா வந்திருந்தார். மகளைப் பார்க்காமல் அவளின் பெற் றோர் கவலையில் இருப்பதாகவும், ஒரு வாரத்துக்கு மட்டும் பிரியங்காவை அனுப்பி வைக்கும்படியும், ஒரு வாரத்துக்குப் பிறகு பிரியங்காவை மீண்டும் ரஹ்மான் வீட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் எழுத்துபூர்வமாக அதி காரிகள் முன்னிலையில் உறுதியளித்தார் மாமா. அதை நம்பி பிரியங்காவை அவ ருடன் அனுப்பி வைத்தார் ரஹ்மான்.

ஆனால், பிரியங்கா ஒரு வாரம் கழித்து வரவில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது புரியாமல் ரஹ்மான் துடித்துப் போனார்.

“செல்வாக்குள்ள பெரிய இடம். அவர் களுடன் மோத முடியாது. நீ அவளை மறந்துவிட வேண்டியதுதான்'’ என்று உற வினர்கள் சொல்ல, கோபப்பட்டார் ரஹ்மான். “அதெப்படி? அவள் என் மனைவி, அவளை எதற்காக மறக்க வேண்டும்?’’ என்று வாதிட்டார் ரஹ்மான்.

சில தினங்கள் கழித்து வெளியே சென்ற ரஹ்மானைக் காணவில்லை. அவரை முகம் உருக்குலைந்த நிலையில் ஒரு ரயில்வே தண்டவாளத்தில் பிரேத மாகக் கண்டெடுத்தார்கள். அது தற்கொலையென்று காவல்துறை வழக்கை முடிக்க நினைத்தது. ரஹ்மா னின் குடும்பத்தினரும், நண்பர்களும் அது தற்கொலை அல்ல; கூலிப்படை வைத்து கொலை செய்துவிட்டார்கள் என்றார்கள். ரஹ்மான் படித்த கல்லூரி யின் மாணவர்களும், தன்னார்வஅமைப் புகளும், சில இஸ்லாமிய அமைப்புகளும் ஒரு பெரிய போராட்டத்தில் இறங்கின.

இது தொடர்பாக வெடித்த கலவரத் தில் போலீஸ்காரர்களும், பொது மக் களும் பரஸ்பரம் தாக்குதல் நடத்த பலர் காயமடைந்தார்கள். காவல்துறையின் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பொது மக்கள் தினமும் மெழுகுவத்தி ஏந்தி நீதிக்காக ஊர்வலம் சென்றார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக முதல்வர் சில காவல்துறை அதிகாரிகளைப் பணிமாற்றம் செய்தார். தனி நபர் விசாரணை கமிஷன் அமைத் தார். கோர்ட்டின் உத்தரவுக்குப் பிறகு வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது எதிர் கட்சித் தலைவியாக இருந்த மம்தா பேனர்ஜி இப் பிரச்சினை யைக் கையிலெடுத்தார். காவல் துறையை தன் பொறுப்பில் வைத்திருக் கும் முதல்வரை கடுமையாக விமரிசித் தார். தேர்தலில் நாங்கள் வெற்றி பெற் றால் அந்தக் குடும்பத்துக்கு நியாயம் வாங்கித் தருவோம் என்று முழங்கினார்.

சி.பி.ஐ, விசாரணைக்குப் பிறகு ‘‘ரஹ் மான் தற்கொலைதான் செய்துகொண் டார், ஆனால் அவரை தற்கொலை செய் யத் தூண்டியதாக பிரியங்காவின் தந்தை, மாமா, மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலரின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று அறிக்கை தந்தது. அசோக் டோடி சுப்ரீம் கோர்ட்டுக் குச் சென்று சி.பி.ஐ அறிக்கையின் மேல் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்து உத்தரவு வாங்கினார்.

தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்று திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மம்தா பேனர்ஜி முதல்வரானார். “இந்த விவகாரம் எங்கள் கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது உண்மை'’ என்று ஒப்புக்கொண்டார் தலைவர் ஜோதி பாசு.

சமீபத்தில் சி.பி.ஐ குற்றம்சாட்டிய ஒரு காவல்துறை அதிகாரிக்கு பணி உயர்வு உத்தரவு கொடுத்ததற்காக மம்தா பேனர்ஜி கடுமையாக விமரிசிக்கப்பட் டார். “ரஹ்மான் மரணத்தை ஒரு தேர்தல் ஆயுதமாக மட்டும் பயன்படுத்தினாரா?'’ என்று மீடியா கேள்வி கேட்டு வருகிறது.

வெகு நாட்கள் இந்த விவகாரம் பற்றி வாயே திறக்காத பிரியங்கா டோடி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, “ரஹ்மான் குடும் பத்தினரின் சில நடவடிக்கைகளால் தான் விவகாரம் பெரிதாக வெடித்தது, இல்லையென்றால் சுமூகமாக சரிசெய் திருக்க முடியும்'’ என்று குற்றம் சாட்டி னார். அது பற்றி ரஹ்மானின் தாயாரிடம் கேட்டபோது, “அவை நியாயமே இல் லாத குற்றச்சாட்டு என்றும், இறந்த தன் கணவனின் உடலைக் காணக்கூட பிரியங்கா வரவில்லை, அதன் பிறகு தன் னையும் சந்திக்கவில்லை. இந்த வீட்டில் இருந்த அவரது உடைமைகளை ஒப் படைக்கச் சொல்லி ஒரு வக்கீல் மூலமாக கடிதம் அனுப்பினார் அவர்’’ என்றார்.

காதலித்தபோது ஒருமுறை ரஹ்மான் பிரியங்காவிடம் சொன்னாராம், “மதம் தான் பிரச்சினை என்றால்.. நான் வேண்டு மானாலும் ஹிந்துவாக மாறிவிடுகிறேன்’' என்று. அதேப் போல பிரியங்கா தன் மாமியார் “வசதியாக வாழ்ந்த உன்னால் எப்படி இந்த வசதியற்ற வீட்டில் வாழ முடியும்?’' என்று கேட்டபோது, “நான் சில மாதங்களாக எங்கள் வீட்டில் ஏ.சி போட்டுக்கொள்ளாமல் தூங்கிப் பழகி வருகிறேன், ரஹ்மானுக்காக எந்த வீட்டிலும் என்னால் வாழ முடியும்’’ என்றாராம்.

தந்தை பெரியாரிடம் ஒருவர் தன் புது மனைவியுடன் வந்து, “அய்யா, நாங்க வெவ்வேறு ஜாதி. இது கலப்புத் திருமணம்’' என்றார். பெரியார் சிரித்தபடி, “நீ ஒரு கழுதையையோ குதிரையையோ திருமணம் செய்திருந்தால்தான் அது கலப்புத் திருமணம். ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்வதில் எங்கே கலப்பு வருகிறது?’’ என்றார். ஆனால் இன்னும் நம் நாட்டில் ஜாதி, மதம் தாண்டி நிகழும் காதல் திருமணங் களைப் பலர் ஏற்பதில்லை.

இதன் வெளிப்பாடாகத்தான் ஆயிரக் கணக்கில் கவுரவக் கொலைகள் நிகழ் கின்றன. (சுப.வீர பாண்டியன் இவற்றை ஆதிக்கக் கொலை என்றோ அல்லது ஆணவக் கொலை என்றோ குறிப்பிட வேண்டும் என்கிறார்.)

இவர்களின் திருமணத்தில் சாட்சிக் கையெழுத்துப் போட்ட ரஹ்மானின் மாணவரான ஹுஸ்ஸேய்ன், “ரஹ்மான் மிரட்டியதால்தான் திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டேன் என்று சொல்ல வேண்டும்’’ என்று போலீஸ் மிரட்டியதால் நான்வேறு ஊருக்குப் போய்விட்டேன். இந்த விவகாரத்தில் பல மனிதர்களின் வேறு முகங்கள் வெளிப்படுவதை உணர்ந்தேன். அதை மையமாக வைத்து நான் எழுதிய கவிதைத் தொகுப்புக்கு ‘சாகித்திய அகாடமி’ பரிசு கிடைத்தது. இந்தக் காதலும், தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் சாதாரண எழுத்தாளனாக இருந்த என்னை வீரியமிக்க சிறந்த எழுத்தாளனாக மாற்றியது’’ என்கிறார்.

- வழக்குகள் தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-15-ஒரு-காதல்-செய்த-அரசியல்-மாற்றம்/article7536312.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எப்படி? இப்படி!- 16: சிரிக்க வைத்தவர் சிரிக்கவில்லை!

chaplin_2518636f.jpg

சார்லி சாப்ளின் என்கிற பெயரை உச்சரிக்கும்போதே அவரின் வித்தியாசமான உருவம் மனதில் வந்து உதடுகளில் ஒரு புன்னகை பரவும்.

சாப்ளின் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை குடிகாரர். தாய் மன நோயாளி. 7 வயதில் வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலை. ஓரளவுதான் படித்தார். 14 வயதில் மேடை நடிகரானார்.

லண்டனில் பிறந்து ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இவர் உடல் மொழி மற்றும் பாவனைகளால் சிரிக்க வைக்கும் ஸ்லாப்ஸ்டிக் காமெடியில் மேதை. கதை, திரைக்கதை, வசனம், இசை, எடிட்டிங், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என்று அத்தனைத் துறைகளிலும் இயங்கியவர். உலகிலேயே உச்சமான சம்பளத்தைப் பெற்றவர். 1915-ம் வருடம் அதாவது 100 வருடங்களுக்குமுன் மியூச்சுவல் ஃபிலிம் கார்ப்பரேஷன் அவருக்குக் கொடுத்த வருட சம்பளம் 6 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள்.

தி கிட், கோல்டு ரஷ், சர்க்கஸ், சிட்டி லைட்ஸ், தி கிரேட் டிக்டேட்டர், மாடர்ன் டைம்ஸ் போன்ற அவரின் பல படங்கள் காலம் கடந்தும் ரசிக்க வைப்பவை. கோடிக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைத்த அவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மிகவும் குறைவு. அவர் சந்தித்த வழக்குகளும் அதிகம்.

சாப்ளின் நான்கு முறை திரு மணம் செய்தவர். முதல் மூன்று திருமணங்களிலும் மன வேதனைதான் மிஞ்சியது. மூவருமே நடிகைகள். 17 வயதான மில்ட்ரெட் ஹாரிசை முதல் மனைவியாக்கிக் கொண்டபோது சாப்ளி னுக்கு வயது 29. இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து. இவர்களுக்குப் பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்தது மற்றொரு சோகம்.

16 வயது லிடா கிரேவை இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டபோது சாப்ளினுக்கு வயது 35. திருமணத்துக்கு முன்பே லிடா கிரே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துவிட்டார். சட்டப்படி சாப்ளினைக் கைது செய்து பாலியல் வல்லுறவு வழக்கு போட சாத்தியம் இருந்ததால், அவசரமாக வெகு சில நண்பர்களை அழைத்து லிடா கிரேயை திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்தன.

ஆனால் லிடா கிரேக்கும் சாப்ளி னுக்கும் ஒத்துப் போகவில்லை. சாப்ளின் மன உளைச்சலுக்கு ஆளானார். தன் குழந்தைகளுடன் பிரிந்து சென்ற லிடா கிரே விவாகரத்து வழக்கு தொடுத்ததோடு சாப்ளினைப் பற்றி தரக்குறைவாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத் தார். சிலஅமைப்புகள் சாப்ளினுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அவர் நடித்த திரைப்படங்களைத் தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

லிடா கிரேக்கு 6 லட்சம் டாலர்கள் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு சாப்ளின் ஆளானார். அப்போது அமெரிக் காவில் விவாகரத்து வழக்கில் மனை விக்கு கணவனால் வழங்கப்பட்ட மிகப் பெரிய தொகை இது. மனச் சோர்வால் ஒரு வருடம் சாப்ளின் சினிமா தொடர்பாக எந்த வேலையும் செய்யவில்லை.

1928-ல் ஆங்கிலப் படங்கள் மவு னத்தை உடைத்து பேசும் படங்களாக வரத் தொடங்கின. ஆனால் சாப்ளின் ‘சர்க்கஸ்’ என்கிற மவுனப் படத்தைக் கொடுத்து வெற்றிபெற்றார். அடுத்து ‘சிட்டி லைட்ஸ்’ படத்தையும் மவுனப் படமாகவே கொடுத்தார். தன் பாணியை தொடர்வதா, பேசும் படங்களில் இறங்கு வதா என்கிற பெரிய குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. அதனால் கிட்டத்தட்ட 2 வருடங்கள் படம் எதுவும் எடுக்காமல் திரைக்கதை மட்டும் எழுதி ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்னும் பேசும்படம் எடுக்கத் தயாரானார்.

அந்த சமயம் இவர் 21 வயது பவுலட் கோர்ட் என்கிற நடிகையுடன் நெருக்க மாகப் பழகி வந்தார். எங்களுக்குள் ரகசியமாக திருமணம் நடந்தது என்று பிறகு அறிவித்தார். அப்போது சாப்ளி னுக்கு வயது 43.

இவர் நட்புடன் பழகிய இன்னொரு நடிகையான ஜோன் பெர்ரி தான் கர்ப்ப மாகஇருப்பதாகவும், அதற்குக் காரணம் சாப்ளின்தான் என்றும் அறிவித்தார். சாப்ளின் அதை திட்டவட்டமாக மறுத் தார். பெர்ரி வழக்கு தொடுத்தார்.

அதுவரை அரசியல் கலப்பு எதுவும் இல்லாமல் படங்கள் செய்துகொண்டி ருந்த சாப்ளின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தில் ஹிட்லரைக் கடுமை யாக கிண்டல் செய்திருந்தார். அந்தத் திரைப்படத்தை அப்போதைய ஜனாதி பதி ரூஸ்வெல்ட்டும் இங்கிலாந்து ஜனாதிபதி சர்ச்சிலும் மிகவும் ரசித்தா லும், அமெரிக்க அரசாங்கம் சாப்ளின் மேல் அரசியல் சாயம் பூசியது. அவரை கம்யூனிஸ்ட் என்று விமரிசித்தது. எஃப்.பி.ஐ அவருக்கு மறைமுகமாக பல தொல்லைகளைத் தரத் தொடங்கியது.

ஜோன் பெர்ரி வழக்கு தொடுத்த அதே சமயத்தில் எஃப்.பி.ஐயும் அவர் மேல் உப்புசப்பில்லாத நான்கு காரணங் களுக்காக வழக்கு தொடுத்தது. சாப்ளின் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளா மல் அமெரிக்க விரோதப் போக்கிலேயே வழக்குகளைச் சந்தித்தார்.

ஜோன் பெர்ரிக்கு கரோல் என்கிற பெண் குழந்தை பிறந்தது. சாப்ளினின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. (மரபணு பரிசோதனை அப்போது இல்லை) சோதனை முடிவு சாப்ளினுக்கு சாதகமாக இருந்தபோதும், அதை ஏற்காமல் அந்தக் குழந்தைக்கு சாப்ளின்தான் தந்தை என்றும் கரோலுக்கு 21 வயது நிரம்பும் வரை பராமரிப்பு செலவுகளை கொடுத்தாக வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது கோர்ட்.

வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த 18 வயது ஊனா ஓநில் என்கிற பெண்ணை சாப்ளின் 4-வது திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 54. சாப்ளின் கடைசிவரை ஒற்றுமையாக வாழ்ந்த ஓநிலைப் பற்றி தன் சுயசரிதையில் ‘அவருடன் ஏற்பட்டது மட்டுமே மிகச் சரியான காதல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தம்பதி 8 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.

அமெரிக்க உளவுத் துறையின் தொடர்ந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தால் சாப்ளின் மனம் நொந்து போனார். அவரை நாடு கடத்த வேண்டும் என்று குரல்கள் ஒலித்தன. தன் அடுத்த படத்தின் முதல் காட்சியை வெளியிட லண்டனுக்குப் புறப்பட்டார் சாப்ளின். அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்புவதற்கான பர்மிட்டை அரசு ரத்து செய்தது. பர்மிட் வேண்டுமானால் விசாரணையை சந்திக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

சாப்ளின் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்ப மாட்டேன் என்று அறிவித்தார். சுவிட்சர்லாந்தில் தங்கிக்கொண்டார். மனைவியை அமெரிக்காவுக்கு அனுப்பி தன் ஸ்டுடியோ, வீடுகள், பங்குகள் என்று அனைத்து சொத்துக்களையும் விற்றார்.

அடுத்து அமெரிக்காவை விமர்சிக் கும் விதமாக ‘கிங் ஆஃப் நியூயார்க்’ என்கிற படத்தை எடுத்தார் சாப்ளின். அந்தப் படத்தை அமெரிக்காவில் வெளியிடவில்லை. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு அமெரிக்க பத்திரிகையாளர்கள் வரக் கூடாதென்றும் உத்தரவிட்டார். அதுதான் அவரின் கடைசிப் படம். அது ஒரு மிகப் பெரிய தோல்விப் படமானது.

அதன் பிறகு உடல்நலம் குன்றி சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நடத்திய சூழலிலும், தன் மகளை நடிகையாக்கும் நோக்கத்தில் ஒரு கதையைத் தயார் செய்தார். ஆனால் அந்தப் படம் வரவேயில்லை.

1952-ல் அமெரிக்காவைவிட்டு வெளியேறிய சாப்ளினை 1972-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொள்ள அகாடமி அழைத்தது. தயக்கத்துக்குப் பிறகு அழைப்பை ஏற்று அமெரிக்கா வந்த சாப்ளினுக்கு அரங்கில் அத்தனை பேரும் எழுந்து நின்று இடைவிடாமல் 12 நிமிடங்கள் கை தட்டினார்கள். இது ஆஸ்கர் விருது விழா வரலாற்றில் மிகவும் நீளமான கை தட்டலாகும்.

1977-ல் தனது 88-வது வயதில் சாப்ளின் காலமானார். அதன் பிறகும் ஒரு வழக்கு. சாப்ளினின் கல்லறையில் இருந்து அவரின் சவப் பெட்டியைத் திருடிச் சென்று குடும் பத்தினரிடம் பணம் கேட்டு மிரட் டினார்கள். பெரிய போலீஸ் படை இறங்கி குற்றவாளிகளைப் பிடித் தார்கள். சவப்பெட்டி மீண்டும் புதைக் கப்பட்டு கடுமையான பாதுகாப்பு செய்யப்பட்டது.

கடைசியாக ஒரு லேட்டஸ்ட் வழக்கு..சாப்ளின் வாழ்ந்த சுவிட்சர்லாந்து வீடு 2016-ல் மியூசியமாகிறது. அதில் வைக்கப்பட இருந்த சாப்ளின் வாங்கிய ஆஸ்கர் விருதை இந்த ஜனவரியில் திருடிவிட்டார்கள். ஏதாவது தகவல் தெரிந்தால் தெரிவிக்கச் சொல்லி சாப்ளினின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

- வழக்குகள் தொடரும்…

pkp_2399304a.jpg

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-16-சிரிக்க-வைத்தவர்-சிரிக்கவில்லை/article7565218.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி!- 17: நம்புங்கள், நான்தான் அவன்!

pkkp_2527115f.jpg

வழக்கமாக ஒருவர் இன்னொரு வராக நடித்து ஆள் மாறாட்டம் செய்வார். பல ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் ஒரு வழக்கில் குமார் என்கிற ஒருவர் ‘நான்தான் குமார்’ என்று நிரூபிக்க பல வருடங்கள் நீதிமன்றங்களில் போராடினார்.

1909-ம் வருடம் அந்த சம்பவம் நடந்தது. அப்போது இந்தியாவுடன் சேர்ந்திருந்த பங்களாதேஷில் டாக்கா நகரத்துக்கு அருகே 2,300 கிராமங்களை உள்ளடக்கிய பாவல் என்கிற ஜமீன் இருந்தது. அதன் தலைநகர் ஜெய்தேப்பூர்.

3 ராஜகுமாரர்கள் அந்த ஜமீனை நிர்வகித்தார்கள். அதில் மோஜோ குமார் என்று அழைக்கப்பட்ட இரண்டாவது ராஜகுமாரன்தான் நம் கதாநாயகன். குமாருக்கு மிருகங்களை வேட்டையாடுவதும், பெண்களோடு உல்லாசமா க இருப்பதும்தான் வேலை. பிபாவதியை திருமணம் செய்தபிறகும் ஆட்டம் குறையவில்லை.

மலைவாசஸ்தலமான டார்ஜி லிங்கில் ஓய்வெடுக்க குமாரை அழைத்தான் பிபாவதியின் அண்ணன் சத்யன். அங்கு சென்ற ஓரிரு நாள் கழித்து குமார் இறந்துவிட்டதாக பாவல் ஜமீனுக்கு தகவல் வந்தது. மறுநாள் காலை டார்ஜிலிங்கில் குமாரின் உடலை சுடுகாட்டில் எரித்தார்கள். பிபாவதி அரண்மனையை விட்டு வெளியேறி தன் அண்ணனுடன் சென்றாள்.

அடுத்த சில வருடங்களில் மற்ற ராஜகுமாரர்களும் இறந்து போனார்கள். 3 பேருக்குமே வாரிசு இல்லாததால் பாவல் ஜமீனின் நிர்வாகப் பொறுப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்துக் கொண்டது.

12 வருடங்கள் கழித்து 1920-ம் வருடம் டாக்காவுக்கு ஒரு சாமியார் வந்தார். அவர் இறந்துபோன ராஜகுமாரன் குமார் சாயலில் இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட குமாரின் சகோதரி ஜோதிர்மயி சாமியாரை தன் வீட்டுக்கு அழைத்தாள்.

நடை, உடல் மொழி, பேச்சு எல் லாமே குமாருடைய சாயலோடு ஒத்திருந்தது. சாமியாரிடம் அவரைப் பற்றி கேட்டதற்கு, ‘‘டார்ஜிலிங் அருகில் ஒரு காட்டில் நினைவில்லாமல் கிடந்த என்னை தரம்தாஸ் என்கிற சாது காப்பாற்றி தன் சீடராக்கிக் கொண்டார், அதற்கு முன்பான என் வாழ்க்கை நினைவில் இல்லை. கடந்த 12 வருடங் களாக குருவோடு பல ஊர்களுக்கு போய்வந்தேன்’’ என்றார்.

இறந்துபோனதாக நம்பப்பட்ட குமார்தான் அந்த சாமியார் என்று ஜோதிர்மயியும், ஊர் மக்களும் நம்பி னார்கள். டாக்காவுக்குத் திரும்பிய சாமியாருக்குக் கொஞ்சம் கொஞ்ச மாக பழைய நினைவுகள் வரத் தொடங்கின.

சாமியார் மீண்டும் ஜெய்தேப்பூருக்கு அழைக்கப்பட்டார். மக்கள் கூட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சாமியாரை பலரும் கேள்விகள் கேட்டார்கள். சின்ன வயதில் தன்னை வளர்த்த தாதி, அரண்மனை பணியாளர்களின் பெயர்களை எல்லாம் சரியாக சொன்னார்.

எல்லோரும் சாமியார்தான் ராஜ குமாரன் என்று நம்பினார்கள். ஆனால், அராசாங்கத்திடம் இருந்து சொத்துக்களை அடைய சாமியார் நடத்தும் நாடகம் என்றார்கள் குமாரின் மனைவி பிபாவதியும், சத்யனும்.

மாவட்ட கலெக்டர் சாமியாரிடம் விசாரணை நடத்தி, குமாரின் உடல் எரிக்கப்பட்டதற்கு சரியான சாட்சிகள் இருப்பதால் ‘இவர் ராஜகுமாரன் இல்லை’ என தீர்ப்பு வழங்கினார்.

சாமியார் நம்பிக்கை இழந்து கொல்கத்தா சென்று தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டார். தாரா தேவி என்கிற பெண்ணை திருமணமும் செய்துகொண்டார். ஆனால் அவர் மேல் நம்பிக்கை கொண்ட ஆதர வாளர்கள் சேர்ந்து நிதி திரட்டி, பெரிய வக்கீல் மூலமாக கோர்ட்டுக்குப் போனார்கள்.

டாக்கா நீதி மன்றத்தில் 1933-ம் வருடம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. வழக்கு 3 ஆண்டுகள் நடந்தது. நிறைய சாட்சிகள் விசாரிக் கப்பட்டனர். மருத்துவர்கள் சாமியாரைப் பரிசோதித்தார்கள். புகைப்பட நிபுணர் கள், சிலை வடிப்பவர்கள் என்று பலரும் குமாரின் பழைய புகைப்படங்களை வைத்து சாமியாருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார்கள்.

குமாரின் ஆசை நாயகியாக இருந்த எலோகேஷி நீதிபதியிடம் குமாரின் அந்தரங்க உறுப்பில் இருந்த மச்சம் பற்றி சொன்னாள். சாமியாரை நீதிபதி சோதித்ததில் அந்தக் குறிப்பு சரியாக இருந்தது.

குமார் எப்படி யானை மேல் ஏறு வார்? எப்படி உண்பார் போன்ற கேள்விகளுக்கு சாமியார் சரியான பதில்களைச் சொன்னார். பிபாவதியும் சத்யனும் குமார் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தவர் என்று சில கடிதங்களை சமர்ப்பித்தனர். சாமியார் அதை மறுத் தார். பிறகு அந்தக் கடிதங்கள் போலி யாகத் தயாரிக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. சாமியாரின் குருவும், மற்ற சீடர்களும் விசாரிக்கப் பட்டனர். டார்ஜிலிங் அருகே ஒரு காட்டில் நினைவு தவறிய நபரை கண்டெடுத்த நிகழ்வை அவர்கள் ஒரே மாதிரி சொன்னார்கள்.

குமார் இறந்த மறுநாள் சுடுகாட்டில் எரிக்கப்பட்டபோது முகத்தை யாரும் பார்க்கவில்லை என்றும், அது துணி யால் மூடப்பட்டிருந்தது என்றும் பலர் சாட்சி சொன்னார்கள்.

நீதிபதி தன் இறுதித் தீர்ப்பில் சாமியார் தான் ராஜகுமாரன் என்று சொன்னார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பிபாவதி அப்பீல் செய்தார். 3 நீதிபதி களைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. ஒரு நீதிபதி சாதகமாகவும், ஒரு நீதிபதி பாதகமாகவும் தீர்ப்பு சொல்ல.. தலைமை நீதிபதி இங்கிலாந்தில் இருந்து தபாலில் அனுப்பிய தீர்ப்பு மக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது. அவர் சாமியாருக்கு ஆதரவாக தீர்ப்பு தந்திருந்தார்.

அப்போது இந்தியாவில் சுப்ரீம் கோர்ட் இல்லாததால் வழக்கு லண்டனில் இயங்கிய பிரிவி கவுன்சிலுக்குச் சென்றது. அங்கே அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது.

தீர்ப்பு வந்த தினம் குமார் கோயி லுக்குச் சென்றார். அங்கே திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அடுத்த 2 நாட்களில் இறந்து போனார்.

குமாரின் சொத்துக்களுக்கு பிபாவதி சொந்தம் கொண்டாட முடியாது என்று, குமாரின் 2-வது மனைவி தாரா தேவி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சொத்துக்கள் இரண்டு மனைவிகளுக்கும் சரிசமமாக ஒப்படைக் கப்பட வேண்டும் என்று தீர்ப்பானது. ஆனால் பிபாவதி தன் பங்காக வந்த சொத்துக்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிபாவதி சாகும் வரை சாமியாரை குமாராக ஏற்கவேயில்லை.

சரி, டார்ஜிலிங்கில் குமார் இறந்த இரவில் என்னதான் நடந்தது?

அப்போது சத்யனுடன் இருந்தவர்கள் பிறகு சொன்ன சம்பவம் இதுதான்: குமாரின் சொத்துக்கு சத்யன் ஆசைப் பட்டு உணவில் விஷம் கலந்து குமாருக்குக் கொடுத்தார்கள். அவசர மாக அன்றிரவே உடலை மயானத் துக்கு எடுத்துச் சென்றார்கள். திடீ ரென்று புயலுடன் கூடிய மழை வர, பாடையை கீழே வைத்துவிட்டு அருகில் இருந்த குடில்களில் ஒதுங்கி னார்கள். மழை நின்றதும் வந்து பார்த்தால் குமாரின் உடலை அங்கு காணவில்லை.

இரவோடு இரவாக வேறு ஒரு உடலைத் தேடிப் பிடித்து முகம் தெரியாமல் துணியைச் சுற்றி அதுதான் குமாரின் உடல் என்று சொல்லி மறுநாள் சுடுகாட்டில் எரித்துவிட்டார்கள்.

கொடுக்கப்பட்ட விஷத்தால் நினைவு தப்பிய குமார் மழையில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு தரம்தாஸ் என்ற சாதுவிடம் கிடைத்திருக்கிறார்.

தன்னை கொலை செய்ய முயன்றதாக குமார் ஒரு புகார் கொடுத்திருந்தால், தனியாக ஒரு குற்ற வழக்கு நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். ஜமீன் சொத்துக்களை அனுபவிக்காமல் தன் 63-வது வயதில் குமார் இறந்துவிட்டாலும், ஜமீனின் ராஜா நானே என்று போராடி உலகத்துக்கு நிரூபித்துவிட்டார்.

- வழக்குகள் தொடரும்…

 

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-17-நம்புங்கள்-நான்தான்-அவன்/article7590303.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி!- 18: வென்றவன் தோற்றான்!

pkp_2535424f.jpg

1994-ம்

ஆண்டு. அமெரிக்காவில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பு வெளிவந்த நாளில், அதன் நேரடி ஒளிபரப்பை 10 கோடி பேர் பார்த் தார்கள். நியூயார்க் பங்குச் சந்தையில் அன்று வர்த்தகம் 41 சதவிகிதம் குறைந் தது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 48 கோடி டாலர்கள் பாதிப்படைந்தது. அப்படி என்ன வழக்கு அது?

ஓ.ஜே.சிம்சன் புகழ்மிக்க கால்பந் தாட்ட வீரர். நடிகர். தொலைக்காட்சித் தொகுப்பாளர். முதல் மனைவியின் விவாகரத்துக்குப் பிறகு, நிகோல் பிரவுன் என்பவரை மணந்தார். ஆனால், அடிக்கடி சண்டை. பிரவுனை சிம்சன் திட்டியும் அடித்தும் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பிரவுன் சிம்சனை விட்டு விலகி தனியாக வாழ ஆரம்பித்தார். விவாகரத்து வழக்கும் தொடுத்தார். 1994-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி இரவு. பிரவுன் தன் வீட்டு வாசலில் கத்திக் குத்துப்பட்டு இறந்து கிடக்க, அருகில் ரொனால்ட் கோல்ட்மேன் என்கிற பிரவுனின் நண்பரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். போலீஸ் விசா ரணையில் இந்தக் கொலைகளில் சிம்ச னைத் தொடர்புப்படுத்தும் சில தடயங்கள் கிடைத்தன. பிரவுன் வீட்டுக்கு அருகில் இருந்து சிம்சனின் கார் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்ததாக பக்கத்து வீட்டுப் பெண் சொன்னாள். தடயங்களை ஆராய்ந்ததில் சந்தேகம் வலுத்ததால் சிம்சனை விசாரணைக்கு அழைத் தார்கள்.

ஜூன் 17-ம் தேதி சிம்சன் காவல் நிலை யத்துக்கு வரப் போவதை அறிந்து பத் திரிகையாளர்கள் எல்லாம் காத்திருக்க, சிம்சன் வரவில்லை. அவருடைய வக்கீல் சிம்சன் கொடுத்ததாக ஒரு கடிதத்தைப் பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார். அதில் சிம்சன் தனக்கும் அந்தக் கொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், மனம்வெறுத்து எங்கோ போவதாகவும், கிட்டத்தட்ட தற்கொலை கடிதம் போல எழுதியிருந்தார்.

அன்று மாலை 6.20 மணியளவில், நண்பர் ஒருவர் கார் ஓட்ட பின் சீட்டில் அமர்ந்து சிம்சன் காரில் செல்வதைப் பார்த்து ஒருவர் தகவல் சொல்ல, அடுத்த நொடியே ஏராளமான போலீஸ் கார்கள் சிம்சனைத் துரத்தத் தொடங்கின. சிம்சன் துப்பாக்கியை தன் நெற்றியில் வைத்து காரை நிறுத்தாமல் ஓட்டச் சொல்லி நண்பருக்கு வெறித்தனமாக கட்டளை யிட்டார். செல்போனில் ஒரு போலீஸ் அதிகாரி பேசினார். துப்பாக்கியை ஜன்னல் வழியாக வீசிவிட்டு சரணடையச் சொன்னார். சிம்சன் கேட்கவில்லை. 20 தொலைக்காட்சி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து வந்து இந்தத் துரத்தலைப் பதிவு செய்தன. சிஎன்என், ஏபிசி நியூஸ் போன்ற பெரிய தொலைக்காட்சிகளில் மற்ற நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு இதை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். (இதை யூ டியூபில் காணலாம்)

இரவு 8 மணி வரை 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தத் துரத்தல் தொடர்ந்து, ஒருவழியாக சிம்சன் சரணடைய சம்மதித்தார். தன் வீட்டு வாசலில் காரை நிறுத்தி இறங்கி, வழக்கை முறைப்படி சந்திக்கிறேன் என்று கைதானார்.

340 நபர்களைப் பரிசீலித்து 12 ஜூரி களைத் தேர்வு செய்தார் நீதிபதி. தினமும் தொலைக்காட்சிகள் படம் பிடிக்க, விசாரணை தொடங்கியது. அரசுத் தரப்பின் குற்றச்சாட்டின்படி, சம்பவம் நடந்த அன்றிரவு சிம்சன் தன் காரில் பிரவுன் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார். கதவைத் திறந்த பிரவுனை கத்தியால் குத்தினார். அப்போது அங்கு வந்த ரொனால்ட் கோல்ட்மேன் சிம்ச னைத் தடுக்க முயல, அவருக்கும் குத்துக் கள் விழுந்தன. இருவரும் இறந்ததும் காரில் ஏறிச் சென்றுவிட்டார் சிம்சன்.

கொலைகள் நிகழ்ந்த இடத்தில் சிம்ச னுக்குச் சொந்தமான ஒரு கையுறையும், பிரவுனின் ரத்தச் சுவடுகளுடன் கூடிய சிம்சனின் எண் 12 சைஸில் இருந்த ஷூ தடயங்களும், சிம்சனின் காரைப் பார்த்த சாட்சியும், சிம்சனுக்கு கத்தி விற்ற நபரின் சாட்சியும், சிம்சனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடந்ததற்கான சாட்சிகளும் அவருக்கு எதிராக வைக்கப்பட்டன.

சிம்சன் தரப்பு எல்லாவற்றையும் மறுத்தது. அந்த ஷூவின் அளவு சரிதான். ஆனால் அது சிம்சனுடையது அல்ல என்றது. அந்தக் கையுறையை கோர்ட்டிலேயே அணிந்து பார்க்க, அது அவருக்கு சேரவேயில்லை. அதற்கு அரசுத் தரப்பு, இடைப்பட்ட காலத்தில் சிம்சன் வழக்கமாக எடுக்கும் மூட்டு வலிக்கான மருந்தை எடுக்காததால் கை வீங்கியிருக்கிறது என்று கொடுத்த விளக்கத்தை சிம்சன் தரப்பு ஏற்கவில்லை.

காரை அந்த நேரத்தில் அங்கு பார்த்ததாகச் சொன்ன சாட்சியும், கத்தி விற்றதாக சொன்ன சாட்சியும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பணம் வாங்கிக்கொண்டு பேட்டிகள் அளித்ததால், அவர் கள் இருவரையும் அரசுத் தரப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தவில்லை.

பிரவுனுடன் தங்கியிருந்த ஒரு தோழி போதை மருந்துக்கு அடிமை என்றும், அவள் மருந்து வாங்கி பாக்கி வைத்த தொகையை வசூலிக்க வந்த போதை மருந்து விற்ற ஆசாமியிடம் தோழிக்காக பிரவுன் வாதம் செய்ததால் கத்தியால் குத்திவிட்டு, தடுக்க வந்த ரொனால்டையும் கொன்றுவிட்டுப் போய்விட்டார்கள் என்பது சிம்சன் தரப்பு வாதமாக இருந்தது.

கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை அரசுத் தரப்பால் கைப் பற்ற முடியவில்லை. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சிம்சன் விலைக்கு வாங்கிய கத்தியை சிம்சன் தரப்பு சமர்ப்பித்தது. அந்தக் கத்தி இன்னும் பயன்படுத்தப் படாமல் புதிதாக இருந்ததை நிரூபித் தார்கள்.

விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கிய நாளில் நாடு முழுதும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பாக மக்கள் அமர்ந்து விட்டார்கள். அலுவலகங்களில் எல்லா அலுவல்களும் ஒத்தி வைக்கப்பட்டன. பத்திரிகையாளர்கள் குவிந்தார்கள். சிம்சனை குற்றவாளி என்று சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஜூரிகள் தீர்ப்பளித்தார்கள்.

இந்த வழக்கு பற்றி அத்தனை பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதின. அத்தனை தொலைக்காட்சிகளும் தொடர்ந்து காட்டின. பல புத்தகங்கள் எழுதப்பட்டன. இந்த வழக்கில் இனப் பிரச்சினையின் தாக்கம் பெரிதும் இருந்த தாக பலர் கருத்து சொன்னார்கள். ஜூரி களில் 8 பேர் கருப்பினத்தவரைச் சேர்ந்தவர்களாக இருந்ததும், நாடு முழு வதும் இதனை சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான வழக்காக மீடியா பிரச்சாரம் செய்ததும், இனக் கலவரம் வந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையும் தீர்ப்பை பாதித்ததாக எழுதினார்கள். கொலைகளால் பாதிக்கப் பட்ட இரண்டு குடும்பத்தினரும் நஷ்ட ஈடு கேட்டு தனியாக வழக்கு தொடர்ந் தார்கள். அந்த வழக்கில் அவர்களுக்கு சிம்சன் 3 கோடியே 30 லட்சம் டாலர்கள் தர வேண்டும் என்று தீர்ப்பானது. அதை அவர் சரியாக செலுத்தாததால் சிம்சனுக் குச் சொந்தமான பல சொத்துக்களை அரசு கைப்பற்றி ஏலத்தில் விட்டு தொகையை அவர்களுக்குக் கொடுத்தது.

சிம்சன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தை விட்டு வெளியேறி லாஸ் வேகாஸ் நகரத்துக்கு வந்து குடியேறினார். 2007-ம் வருடம் ஒரு உணவு விடுதியில் சிம்சனுக் குச் சொந்தமான பல கப்புகளும், மெடல்களும் இருப்பதை அறிந்து அவற்றைக் கைப்பற்ற 3 நண்பர்களோடு சிம்சன் சென்றார். தகராறு ஆனது. துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். பொருட்களைக் கைப்பற்றினார். ஒரு ஆசாமியைக் கடத்தி வந்தார்.

போலீஸ் அவரைக் கைது செய்து விசாரித்தபோது, ‘‘அமைதியாகதான் கேட்டேன். துப்பாக்கி எடுத்துச் செல்ல வில்லை’’ என்று மறுத்தார். ஆனால், உடன் சென்ற நண்பர்கள் தன்டனைக்கு பயந்து அப்ரூவர்களாக மாறி உண்மையைச் சொல்லிவிட்டார்கள். அந்த வழக்கில் 33 வருடங்கள் சிறைத் தண்டனை கிடைத்து, இப்போதும் சிம்சன் சிறையில் இருக்கிறார்.

பெரிய வழக்கில் கோட்டைவிட்டதால் இந்த வழக்கில் காவல்துறை வசமாக அவரைச் சிக்க வைத்துவிட்டதாக எழுதி னார்கள். அந்த இரண்டு கொலைகளை யும் செய்தது யார் என்கிற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

- வழக்குகள் தொடரும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-18-வென்றவன்-தோற்றான்/article7615115.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எப்படி? இப்படி!- 19: சிறை அதிகாரிக்கு சிறை தண்டனை!

pkp_2543732f.jpg

‘‘சந்தேகத்தின் பலனை சாதக மாக்கி அவரை விடுதலை செய் கிறேன்!’’ என்று தீர்ப்பு வாசித்து விட்டு, கண்ணாடியைக் கழற்றும் நீதிபதி களைப் பல திரைப்படங்களில் பார்த்திருப் பீர்கள். டெல்லியில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீஸ் 3 வருடங்கள் துப்பறிந்து, 4 குற்றவாளிகளைக் கைது செய்து, 5 வருடங்கள் வழக்கு நடத்தி, ஆயுள் தண்டனை என்று தீர்ப்பான பிறகு, உயர் நீதிமன்றம் ‘சந்தேகத்தின் பலனை…’ என்று ஆரம்பித்தது. அந்தத் தீர்ப்பு சமூக போராளிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கின் பின்னணி என்ன?

1999-ம் வருடம் ஜனவரி 23-ம் தேதி. டெல்லியில் தன் அடுக்கு மாடி குடியிருப் பின் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்து காத்திருந்தார் ராகேஷ் பட்னாகர். பிறகு தன்னிடம் இருந்த சாவியால் திறந்து உள்ளேச் சென்றுப் பார்த்து அலறினார். உள்ளே அவர் மனைவி ஷிவானி பட்னாகர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தொட்டிலில் அவர்களின் இரண்டு மாதமே ஆன குழந்தை அழுதுகொண்டிருந்தது.

போலீஸ் வந்து தடயங்களை சேகரித்து விட்டு ‘‘விசாரித்து குற்றவாளியைப் பிடிப்போம்’’ என்று பேட்டியளித்து விட்டுச் சென்றது. இந்தக் கொலை செய்திக்கு மீடியாக்களில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. காரணம்… கொலை செய்யப்பட்ட ஷிவானி, பிரபல பத்திரிகையின் சீனியர் பத்திரிகையாளர்.

கூலிப் படை வைத்து ஷிவானியின் கணவரே கொலையை நடத்தியிருக் கலாம் என்றும் யோசித்தது. ராகேஷ் 70 முறை விசாரிக்கப்பட்டார். ஆனால், அவரைக் கைது செய்வதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

3 வருடங்கள் விசாரித்து, 2002-ம் வரு டம் 3 பேரை கைது செய்தது போலீஸ். அந்த 3 பேரும் கூலிப் படையைச் சேர்ந் தவர்கள் என்பதும், இந்தத் திட்டத்தின் மூளையாக செயல்பட்டது ஒரு பெரிய போலீஸ் அதிகாரி என்பதும் தெரியவர, காவல்துறை ஆடிப் போனது.

ரவிகாந்த் ஷர்மா ஒரு ஐ.பி.எஸ் அதி காரி. ஹரியாணாவைச் சேர்ந்த அவர் சிறைத்துறை ஐ.ஜியாக பணியாற்றிய வர். பிரதம மந்திரியின் பாதுகாப்புப் பணி அதிகாரியாகவும் இருந்தவர்.

தகுந்த ஆதாரங்கள் இருந்ததால் ஷர்மாவை கைது செய்ய ஹரியாணா வில் உள்ள அவர் இல்லத்துக்கு போலீஸார் சென்றபோது ஷர்மா தலை மறைவானார்.

ஷர்மா வேலையில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி போலீஸ் அறிவித்தது. அவரைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 50,000 தரப்படும் என்று புகைப்படத்துடன் அறி விப்பு வெளியிட்டது. ஆனால் ஷர்மா தலைமறைவாக இருந்தபடி பாட்னா கோர்ட்டிலும், டெல்லி கோர்ட்டிலும் 3 முறை முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித் தார். மூன்று முறையும் முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு ஷர்மா போலீஸில் சரணடைந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட எல்லா குற்றங்களையும் மறுத்தார்.

போலீஸ் விசாரணைக்கு ஷர்மா ஒத்துழைக்கவில்லை. உண்மை கண் டறியும் லை டிடெக்டர் சோதனைக்கு மருத்துவக் காரணங்களை முன்வைத்து உட்பட மறுத்தார். என்னதான் நடந்தது?

ஷிவானி தன் பத்திரிகை அலுவல் தொடர்பாக பிரதமர் இல்லம் சென்ற போது ஷிவானிக்கு ஷர்மா அறிமுக மானார். அந்த அறிமுகம் நட்பாக மாறி யது. அடிக்கடி டெல்லியின் சில உணவு விடுதிகளில் சந்தித்துக் கொண்டார்கள். (குறிப்பிட்ட அந்த விடுதிகளுக்கு ஷிவா னியை நானே டிராப் செய்திருக்கிறேன். உள்ளே அவள் யாரை சந்திக்கப் போனாள் என்பது எனக்குத் தெரியாது என்றார் ராகேஷ்.)

ஷர்மா டெல்லி வரும்போதெல்லாம் எந்த ஓட்டலில் தங்குவாரோ அங்கு ஷிவானி சென்று சந்தித்திருக்கிறார். (ஷர்மா டெல்லியில் ஓட்டலில் தங்கிய அதே தேதிகளில் ஷிவானி அந்த ஹோட்ட லுக்கு டாக்ஸி பிடித்துச் சென்ற ஆதா ரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.)

ஷிவானியை 3 மாத ஜர்னலிஸம் படிப்புக்காக பத்திரிகை நிறுவனமே லண்டன் அனுப்பி வைத்தது. திரும்பும் போது சில தினங்கள் தாமதித்து சொந்த செலவில்இந்தியா திரும்பினார். டிக்கெட் செலவுக்கு என்ன செய்தாய் என்று ஒரு தோழி கேட்டபோது, ‘‘ஏர் இந்தியாவில் இருக்கும் நண்பர் டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்’’ என்றார்.

ஷிவானி லண்டனில் இருந்தபோது தன் போனில் இருந்து ஷர்மாவை 176 முறை அழைத்துப் பேசியிருக்கிறார். அதேப் போல அந்த மூன்று மாதங் களில் ஷர்மா தன்னுடைய போனில் இருந்து ஷிவானியை 90 முறை அழைத் துப் பேசியிருக்கிறார். (இதற்கான ஆதா ரங்கள் கோர்ட்டில் வழங்கப்பட்டன)

ஷிவானி தன் அந்தரங்கத் தோழியிடமும், தன் தங்கை செவந்தியிட மும் தனக்கும் ஷர்மாவுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைப் பற்றிச் சொன்னதோடு, இருவரும் அவரவர் துணைகளை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வதாக இருக் கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். பிறகு ஒருநாள் இருவரிடமும் ஷர்மா தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதால் எங்கள் உறவைப் பற்றி நான் சமூகத்துக்கும் அவர் மனைவிக்கும் தெரியப்படுத்தப் போகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். (ஷிவானியின் தோழி, தங்கை இருவரும் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொன்னார்கள்)

ஷிவானியின் அலுவலகத்தில் அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரை இயக்கு வதற்கான பாஸ்வேர்டு ‘ரவிகாந்த்’ என் பதாகும். (இதுவும் நிரூபிக்கப்பட்டது)

இதற்கிடையில் ஷர்மாவின் மனைவி தினமும் தொலைக்காட்சிகளில் தோன்றி, தன் கணவர் குற்றமற்றவர் என்றும், ஒரு அரசியல்வாதியை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காக தன் கணவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்றும் பேட்டி கொடுத்தார். அந்த அரசியல்வாதிக்கும் ஷிவானிக்கும் நட்பு உண்டு, அவர்தான் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்க வேண்டும் என்று கண்ணீருடன் குறறம்சாட்டினார்.

கோர்ட்டில் பரபரப்பாக நடந்த விசாரணையின்போது மொத்தம் 209 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். அதில் 51 பேர் போலீஸில் முதலில் சொன்ன வாக்குமூலத்துக்கு எதிராக மாற்றி சாட்சி அளித்தார்கள்.

2008-ம் வருடம் ஷர்மாவும் மற்ற மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அனைவருக்கும் ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே ஷர்மா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார்.

இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து 2011-ம் வருடம் ஷர்மா வும் மற்ற இருவரும் குற்றவாளிகள் இல்லையென்றும், பிரதீப் என்பவர் மட்டுமே குற்றவாளி என்றும் தீர்ப்பளித் தது. 9 வருடங்கள் திகார் ஜெயிலில் இருந்த பிரதீப் விடுதலையானார். உயர் நீதிமன்ற தீர்ப்பில் நீதிபதிகள், ‘‘கீழ்க் கோர்ட்டில் பல ஆதாரங்கள் சரியில்லை. அடிப்படையான சந்தேகத்தை மட்டும் வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்கள்.

அரசுத் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக தெரிவித்தாலும், இந்தத் தீர்ப்பு விமர்சனத்துக்கு ஆளா னது. சுப்ரீம் கோர்ட் வக்கீல் அசோக் அரோரா பலவிதமான கேள்விகளை எழுப்பினார்.

வழக்கின் நடுவில் அரசுத் தரப்பின் வக்கீல்கள் மாற்றப்பட்டது ஏன்? 4 குற்றவாளிகளில் ஒருவருக்கு அளிக் கப்பட்ட தீர்ப்பை மட்டும் உறுதி செய்தது ஏன்? குற்றவாளியான பிரதீப் இந்த கொலையில் ஈடுபட சரியான காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். பிறகு அவர் எப்படி குற்றவாளியாவார்? ஷர்மா குற்றம் செய்யாதவர் என்றால் எதற்காக தலைமறைவானார்? அவருக்கும் ஷிவா னிக்கும் நெருக்கமான தொடர்பு இல்லை என்றால் லண்டனில் இருந்தபோது இருவரும் அத்தனைஅழைப்புகளில் ராக்கெட் விஞ்ஞானம் பற்றிப் பேசினார் களா? இப்படி அவரும் மற்றும் பலரும் கேட்கும் கேள்விகள் தொடர்கின்றன. திடீரென்று ஒரு அபூர்வ சக்தி கிடைத்து கையில் தராசுடன் நிற்கும் நீதி தேவதை பேசத் தொடங்கினால் ஒருவேளை சரியான பதில்கள் கிடைக்கலாம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-19-சிறை-அதிகாரிக்கு-சிறை-தண்டனை/article7640872.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

எப்படி? இப்படி!- 20: முதலாளி ஆன விருந்தாளி!

eppadi_2552013h.jpg

1992-ல் நடந்த அந்த வழக்கை அபூர்வத் திலும் அபூர்வமான தாக வழக்கறிஞர்கள் குறிப்பிடு கிறார்கள். அந்த வழக்கில் இந்தியா வில் முதல்முறையாக தடயவியல் நிபுணர்கள் பயன்படுத்தப்பட்டார் கள். முடி, ரத்தம், மரபணுச் சோதனை களுடன் மண்டை ஓட்டின் நகலின் மீது புகைப்படத்தை கம்ப்யூட்டர் மூலம் மேல்பதிவு செய்து அடை யாளம் காண்கிற முறை இப்படி பல விஷயங்கள் முதல் முறையாக அந்த வழக்கில் உபயோகப்படுத்தப் பட்டன. என்ன வழக்கு அது?

பெங்களூரில் வாழ்ந்த அழகான பெண் ஷகிரா. வயது 40. மைசூர் திவான் மிர்ஸா இஸ்மாயிலின் பேத்தி. கணவர் அக்பர் ஐ.எஃப்.எஸ் படித்து ஆஸ்திரேலியாவில் தூத ராக இருந்தவர். 4 பெண் குழந்தைகள். எக்கச்சக்கமான சொத்துக்கள். ஆண் வாரிசு இல் லையே என்கிற ஏக்கம் ஷகிராவுக்கு.

அப்போது கணவர் ஈரானில் இருந்தார். குழந்தைகள் வெளிநாடு களிலும் ஷகிரா பெங்களூரிலுமாக வாழ்ந்தார்கள். ஒரு விழாவில் சுவாமி ஸ்ரத்தானந்தாவின் அறி முகம் ஷகிராவுக்குக் கிடைத்தது. நிலங்களில் உள்ள பத்திரச் சிக்கல்களை சரிசெய்வதில் சுவாமி நிபுணர் என்று சொன்னதால் தன் நிலங்களில் இருந்த சிக்கல்களைத் தீர்த்துத் தரச் சொன்னார்.

தன்னிடம் அதிசய சக்திகள் இருப்பதாக ஷகிராவை நம்ப வைத்தார் சுவாமி. தன் கணவரை விவாகரத்து செய்யும் அளவுக்கு சுவாமியைப் பிடித்துப் போனது ஷகி ராவுக்கு. தன் பெற்றோர், மகள்களை எதிர்த்துக்கொண்டு சுவாமியை திருமணம் செய்துகொண்டார். வங்கிக் கணக்குகள் இருவர் பெயரிலும் தொடங்கப்பட்டதுடன், கட்டிடத் தொழில் நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால், நாளடையில் சுவாமி யின் சில நடவடிக்கைகள் சுவாமி மேல் ஷகிரவுக்கு வெறுப்பு வர வைத்தது. சின்னச் சின்ன சண்டைகளும் வரத் தொடங்கின. இந்தச் சூழ்நிலையில் திடீரென்று ஷகிராவைக் காணவில்லை.

ஷகிரா தன் மகள்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தார். அவரின் மகள்களில் ஒருவரான சபா போன் செய்தபோது ஷகிரா ஹைதராபாத் சென்றிருப்பதாக சொன்னார் சுவாமி. இன்னும் சில நாட்கள் கழித்து கேட்டபோது, வருமான வரி பிரச்சினையால் தலை மறைவாக இருப்பதாக சொன்னார். சபாவுக்கு லேசாக சந்தேகம் அதிகரிக்கவே வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு வந்துவிட்டாள். சபாவிடம் ஷகிராவைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று நடித்தார் சுவாமி.

சபா போலீஸ் ஸ்டஷன் சென்று தன் தாயைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார். அது 1992-ல். போலீஸ் சுவாமியை விசாரித்தது. தனக்கும் ஷகிராவுக்கும் சில பிரச் சினைகள் இருந்ததாகவும், தான் வெளியூர் சென்று திரும்பியபோது வீட்டில் ஷகிரா இல்லையென்றும் சொன்னார்.

அடுத்த 2 வருடங்கள் ஷகிரா வைத் தேடும் முயற்சியில் போலீஸ் மிகவும் மெதுவாகவே செயல்பட் டது. இதற்கிடையில் சுவாமி தன் னிடம் உள்ள பவர் அதிகாரத்தை வைத்து ஷகிராவின் சொத்துக்களை விற்று பணமாக்கினார். வங்கிக் கணக்குகளில் இருந்து எல்லா பணத்தையும் எடுத்தார். கட்டிட நிறுவன போர்டு மீட்டிங்குகளில் கலந்துகொண்டு தான் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுத்தார்.

ஷகிராவின் மகள் சபா பொறுத் துப் பொறுத்துப் பார்த்து கோர்ட்டில் ஹேபியஸ் கார்ப்பஸ் என்கிற ஆட்கொணர்வு மனு போட்டார். இப்போது புகாரை சிறப்பு கிரைம் பிராஞ்ச் விசாரிக்கத் தொடங்கியது. சுவாமியை மடக்க எந்த ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

சுவாமி வீட்டு வேலைக்காரனுடன் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிநேகமானார். அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பல உண்மை களை அவனிடம் இருந்து பெற்றார்.

அடுத்த நாள் சுவாமி கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப் பட்டபோது, “ஷகிராவை நான் கொலை செய்துவிட்டேன்’’ என்று ஒப்புக்கொண்டார் சுவாமி. எப்படி கொலை செய்தேன் என்பதை சுவாமி விவரித்தபோது காவல் துறை அதிர்ந்துபோனது.

ஒரு சவப்பெட்டி ஆர்டர் செய்து, அதை கெஸ்ட் ஹவுசில் மறைத்து வைத்துக் கொண்டார். ஷகிரா ஊரில் இல்லாதபோது, பங்களாவின் பின் பகுதியில் ஆட்களைவிட்டு கழிவு நீருக்காக என்று சொல்லி ஒரு குழி வெட்டச் சொன்னார். ஷகிரா ஊரில் இருந்து வந்த இரவில் அவருக்குத் தெரியாமல் நிறைய தூக்க மாத்திரைகளை விழுங்க வைத்தார். ஷகிரா ஆழ்ந்த உறக்கத் தில் இருக்கும்போது சவப்பெட் டியை எடுத்து வந்து, அதில் பெட்ஷீட்டைச் சுற்றி ஷகிராவை உயிருடன் படுக்க வைத்தார். பெட்டியை மூடினார். குழிக்குள் தள்ளினார். மணலைத் தள்ளினார். மேலே கடப்பா ஸ்லாபுகளைப் பதித்து, சிமெண்ட் வைத்து அதன் இடைவெளிகளைப் பூசினார். இதையெல்லாம் வேலைக்காரனின் உதவியுடன் செய்திருக்கிறார்.

கோர்ட் உத்தரவின்படி விடியோ பதிவுடன் ஸ்லாபுகள் பெயர்க் கப்பட்டு சவப்பெட்டி வெளியே எடுக்கப்பட்டது. உள்ளே போர்வை சுற்றிய, நைட்டி அணிந்த எலும்புக் கூடாக இருந்தாள் ஷிகிரா. தடயவியல் நிபுணர்களின் துணையுடன் அது ஷகிராவின் எலும்புக் கூடு தான் என்று நிரூபிக்கப்பட்டது. கொஞ்சம்கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்த கொலை என்பதால் சுவாமிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வந்தது. சுவாமி அப்பீல் செய்தார். ஹைகோர்ட்டிலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். 69 வயதாவதாலும், இதய நோய் இருப்பதாலும், கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கச் சொல்லி கோரினார். மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறியது. ஆனால், தண்டனையில் குறைப்பு என்பதே கூடாது, சுவாமி தன் கடைசி மூச்சு வரைக்கும் உண்மையான ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண் டும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

http://tamil.thehindu.com/opinion/blogs/எப்படி-இப்படி-20-முதலாளி-ஆன-விருந்தாளி/article7664205.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துப்பறியும் கதைகள் என்டால் எனக்கு அந்தளவிற்குப் பிடிக்கும்...ப.கோ.பிரபாகரது நாவலகள் பல வாசித்துளளேன்...மனசு சஞ்சலமாக இருக்கும் நேரம் இப்படியான துப்பறியும் நாவல்கள் வாசித்தால் மூளை இலேசாகி மனம் சுறு சுறுப்பாய் இருக்கும்...இணைப்பிற்கு நன்றி.தொடர்ந்து இணையுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.