Jump to content

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்


Recommended Posts

மெட்ராஸ் டே... ( மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-24)

 

tamilmahan.jpg- தமிழ்மகன்

டற்கரையை ஒட்டிய நரிமேட்டையும், கரும்புத் தோட்டத்தையும் ஒரு வெள்ளைக்காரன் 16 ஆயிரம் வராகன் கொடுத்து வாங்கிய தினம்.... இதை நாம் மெட்ராஸ் தினம் என்று கொண்டாடுவது சரியா?

வெங்கடப்ப நாயக்கரின் கன்ட்ரோலில் இருந்த இந்த கடற்கரைப் பகுதியை பிரான்ஸிஸ் டே என்ற வியாபார ஏஜென்ட்,  இதே ஆகஸ்ட் 22-ம் தேதிதான் வாங்கினார். பிறகு அவர்களின் பாதுகாப்புக்காகவும், நமக்கும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சொல்லி கோட்டை கட்டினார்கள். சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்தார்கள். வரி வசூலித்தார்கள். நம்மை ஆட்சி செய்தார்கள். அடிமைப்படுத்தினார்கள். அடக்கு முறை செய்தார்கள். இந்த நாளை நாம் கொண்டாட வேண்டுமா? என்று கேட்பவர்கள் ஒரு சாரார்.

எல்லா தீமையிலும் சில நன்மைகள் உண்டு. நான்கைந்து கிராமங்களாக, ஏரிகளாக, தோப்புகளாக இருந்த பகுதியை உலக நகரங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை வெள்ளைக்காரர்களையே சாரும். கடற்கரையை ஒட்டியுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மண்ணடி காளிகாம்பாள் கோயில் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில், திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோயில் போன்றவை சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

அந்தக் கோயில்களுக்கும் முன்னரே இங்கே மக்கள் கிராமங்களாக வாழ்ந்தனர். ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அவை கிராமங்கள்தான். பிரான்ஸிஸ் டே வாங்கிய பிறகுதான் இதற்கு நகரத்துக்கான முகாந்திரங்கள் ஏற்பட்டன. ஒருவகையில் இந்தக் கொண்டாட்டங்கள் சரிதான்.

'மெட்ராஸ் டே' என்பது சரிதானா என்பது போலவே மெட்ராஸ் என்பது இன்று யாருக்குச் சொந்தமானதாக இருக்கிறது என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று.

madras%20old.jpg

கூட்டிக்கழித்துப் பார்த்தால் சென்னையில் பிரபலமான பிரமுகர்கள் 1000 பேர் இருப்பார்கள். இவர்கள்தான் சினிமா, அரசியல், வணிகம், கலை என்ற பெயர்களில் அடிக்கடி செய்திகளில் வெளியாகிறார்கள்.

தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி, எம்.ஜி.ஆர். ரஜினி, கமல்... கே.வி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, அஜித், விஜய், தனுஷ், சிம்பு.... பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ், டி.ஆர்., வசந்த், எஸ்.ஜே.சூர்யா, பத்மினி, சரோஜாதேவி, ரோஜா, குஷ்பூ, தேவயானி, ராதா, அம்பிகா, காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி... போன்ற எண்ணற்ற சினிமா கலைஞர்கள் புகழின் உச்சியைத் தொட்டனர்.

பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா டி.ஆர்., மூப்பனார், வாசன், ப.சிதம்பரம், வைகோ, விஜயகாந்த் என எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் சென்னையில் வலம் வந்தவர்களாகவும், வந்து கொண்டிருப்பவர்களாகவும் உள்ளனர்.

madras%20day%201.jpg

பாரதியார், புதுமைப்பித்தன், க.நா.சு, கல்கி, தி.ஜானகிராமன், கண்ணதாசன், வைரமுத்து, சுஜாதா என எத்தனையோ எழுத்தாளர்கள் கோலோச்சியதும், கோலோச்சிக்கொண்டிருப்பதும் சென்னையில்தான்.

அண்ணாமலைச் செட்டியார், மெய்யப்ப செட்டியார், அழகப்ப செட்டியார், ஸ்பிக், அமால்கமேஷன், டி.வி.எஸ்.,  கோயங்கா, ஜெமினி நிறுவனம், சன் நெட்வொர்க் போன்ற எண்ணற்ற நிறுவனங்கள்- நிறுவனர்களின் தொழில் இடமும் சென்னைதான்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, ருக்மணி அருண்டேல், லால்குடி ஜெயராமன், வீணை காயத்ரி, சுதா ரகுநாதன் என எத்தனையோ இசைக்கலைஞர்களின்  புகழ் கொடி பறந்ததும், பறந்துகொண்டிருப்பதும் சென்னையில்தான்.

- இப்படி இந்த நேரத்தில் நினைவுக்கு வந்த சிலருடைய பெயரை இங்கே சொல்லியிருக்கிறேன்... இவர்கள் யாருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் இல்லை. இன்னும் இரண்டு மூன்று தலைமுறை இங்கேயே அவர்கள் வாழ நேர்ந்துவிட்டால், ஒருவேளை அவர்கள் தங்கள் சொந்த ஊர்களை சொந்தம் கொண்டாடாமல் மாறிவிடக்கூடும்.

madras%20day%202.jpg

விஷயம் இதுதான்... சென்னை என்பது சில நூறு பிரபலங்களால் ஆனது. அதில் சென்னையின் மண்ணின் மைந்தன் சில பத்து பேர்கள்தான். சென்னையில் உள்ள பிரபல ரௌடிகளும்கூட சென்னையைச் சேர்ந்தவர்கள்  இல்லை என்பதே வேடிக்கையான உண்மை.

மதுரை, நெல்லை, கோவை, திருச்சி என சென்னை என்பது தமிழக மக்களால் நிரம்பியது. இங்கே குஜராத்தி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, வங்காளம், பஞ்சாபி என எல்லா இந்திய பிராந்திய மக்களும் வசிக்கிறார்கள். பெரு நகரம் அப்படி கலவையான மக்களைக் கொண்டதாகத்தான் இருக்கும். இத்தனை சுவாரஸ்யங்களும் கூட சென்னைக்கான ஒரு அடையாளம்தான்.

ஆனால் மெட்ராஸை சொந்தமாகக் கொண்டவர்கள் அயோக்கியர்கள் போலவும், அவர்கள் பேசும் மொழி கொச்சையானது என்றும், இந்த நகரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பேசுவது இந்த மண்ணின் பூர்வக்குடி கிராமத்தவர்களை கேலி செய்வதாகும். எங்கெங்கிருந்தோ இந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்த 90 சதவீதம் பேர் செய்யும் தவறுகளை, மெட்ராஸ் மக்கள் சுமக்கிறார்கள்.

madras%20day%203.jpg

தினக்கூலிகளாக, ஆட்டோ ஓட்டுநர்களாக, கட்டடக் கொத்தனார்களாக, ரிக்‌ஷா ஓட்டுபவர்களாக, கூவம் கரை ஓரம் ஒதுங்கிப் போனவர்களாகப் பெரும்பகுதி சென்னை கிராமத்து மக்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

தருமமிகு சென்னை என்கிறார் வள்ளலார் பெருமான். தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்கிறது சரித்திரம். இந்த சென்னை நாளில் அதை நினைகூர விரும்புகிறேன்.

நிறைந்தது!

http://www.vikatan.com/news/article.php?aid=51363

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.