Jump to content

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?


Recommended Posts

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?
 

article_1440393045-gg1.jpg-என்.கே.அஷோக்பரன்

இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் 1948இல் ஜி.ஜி. பொன்னம்பலம் இணைந்து கொண்டு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் கபினட் அமைச்சராகினார். அதுவரைகாலமும் ஜி.ஜி.பொன்னம்பலம் பின்பற்றிய அரசியல்வழியில் இது ஒரு திருப்பம்தான். ஆனால், இந்த இணைப்பின் மூலம் ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தமிழ் மக்களுக்கென தமிழர் பிரதேசங்களில் பல ஆக்கபூர்வமான திட்டங்களை உருவாக்க முடிந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் பனிக்கட்டித் தொழிற்சாலைகள், மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரி, மானிப்பாய் ஆஸ்பத்திரி, கடற்றொழில் அபிவிருத்தி, கைதடி வயோதிபர் மடம், வட மாகாணத்தில் கடற்றொழில் அபிவிருத்தி எனப் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியமாயின. இது மட்டுமல்லாது இலங்கைத் தேசியக் கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களையும் அடையாளப்படுத்தும் நிறங்களையும் உள்ளடக்கியது ஜி.ஜி.யினது பங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த இணைப்பு- அரசியல் ரீதியில் ஜி.ஜி.யின் 50ற்கு 50-யோ, தமிழ் மக்களின் சுயாட்சியையோ வென்றெடுக்கும் வாய்ப்பைத் தரவில்லை. ஜி.ஜி.யின் இந்த நிலைப்பாட்டு மாற்றத்தை சா.ஜே.வே.செல்வநாயகம், சி.வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் எதிர்த்ததன் விளைவாகவே பிரிவு உண்டானதாக பல கட்டுரையாளர்களும் கருத்துரைக்கிறார்கள்.

சிலர், செல்வநாயகம் உட்பட்ட சில முக்கிய தலைவர்களுக்கு கபினெட் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுத்தர ஜி.ஜி. தவறியதுதான் பிரிவுக்கு மூல காரணம் எனச் சுட்டிக்காட்டுகிறார்கள். எது எவ்வாறாயினும், குறிப்பிட்ட பிரிவை கொள்கை ரீதியில் செல்வநாயகம் தலைமையிலான குழுவினரால் நியாயப்படுத்த முடிந்திருந்தது.

இதனிடையே இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் அன்றைய நாடாளுமன்றினால் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள், அது தொடர்பிலான ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் நிலைப்பாடு அவர் மீது பலத்த விமர்சனங்களை உருவாக்கியது. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோனதற்கு ஜி.ஜி. ஆதரவளித்தார் என்பது அன்றுமுதல் இன்றுவரை ஜி.ஜி.பொன்னம்பலம் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனமாகும்.

குறிப்பாக தமிழரசுக் கட்சி அன்று இந்த விமர்சனத்தைக் கடுமையாக முன்வைத்ததுடன், ஜி.ஜி.பொன்னம்பலத்துக்கு எதிரான வலிமையான பிரசாரமாக இதனைக் கைக்கொண்டது. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் என்ன செய்தார், அவர் இழைத்த தவறு என்ன என்பது பற்றி இங்கு ஆராய்தல் அவசியமாகிறது.

இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் அக்கறையற்றுச் செயற்பட்டவராக இருக்கமுடியாது. ஏனெனில் அவர் ஆற்றிய 50இற்கு 50 உரையிலாகட்டும், சோல்பரி குழு முன்பு ஆற்றிய உரையிலாகட்டும், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் சம உரிமை, பிரதிநிதித்துவ ஒதுக்கீடு பற்றியெல்லாம் பேசியவர். குறிப்பாக சோல்பரி குழு தமிழ்க் காங்கிரஸின் சாட்சியத்தைக் கேட்பதற்கென ஒதுக்கிய மூன்று நாட்களில், ஒருநாள் முழுவதையும் ஒதுக்கி இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகள் பற்றியும், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றியும் பேசினார் ஜி.ஜி.

ஆகவே, இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பில் ஜி.ஜி. அக்கறையற்றிருந்தார் என்று சொல்லமுடியாது. அப்படியாயின் அம்மக்களின் பிரஜாவுரிமை பறிபோவதற்குக் காரணமான சட்டங்களுள் ஒன்றுக்கு ஜி.ஜி. ஆதரவளித்தாரா? அப்படி ஆதரவளித்தாராயின் அதன் மூலம் அம்மக்களுக்கு ஜி.ஜி. பெரும் அநீதி இழைத்துவிட்டாரல்லவா? என்ற கேள்வி நிச்சயம் எழுகிறது.

இந்த விஷயம் கொஞ்சம் சிக்கலானது. ஆனால், எளிமையாக புரியவைக்க முயல்கிறேன். இங்கே இரண்டு சட்டங்கள் முக்கியம் பெறுகின்றன. முதலாவதாக 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை பிரஜாவுரிமைச்சட்டம், மற்றயைது 1949ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் காலனித்துவ நாடுகளிலுள்ள அனைத்து மக்களும் பிரித்தானிய முடியின் குடிமக்களாக இருந்தார்கள். காலனித்துவத்திலிருந்து நாடுகள் சுதந்திரம் பெற்றபோது ஒவ்வொரு சுதந்திர நாடும் தமக்கென குடியுரிமைச் சட்டத்தை வரைந்து கொள்ளுதல் அவசியமானது.

அவ்வகையில் 1948இல் அன்றைய டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இது சமர்ப்பிக்கப்பட்டபோது ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எதிர்க்கட்சியில் இருந்தது. குறித்த சட்டமூலமானது பின்வருமாறு வழங்கியது:

(அ) இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன் இலங்கையில் பிறந்தவராகவோ, அல்லது

(ஆ) அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையிற் பிறந்தவர்களாகவோ இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவர். அத்துடன்,

(இ) இலங்கைக்கு வெளியே பிறந்தவர் இலங்கைப் பிரஜையாக மதிக்கப்பட வேண்டுமேயானால் அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையிற் பிறந்திருத்தல் வேண்டும். அல்லது,

(ஈ) அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும்.

இச்சட்டமூலம் இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமையைப் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தியது. இதனை அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஜி.ஜி.பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்தார். இதனைக் கடுமையாக எதிர்த்து அவர் பேசியது 1948ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்ற ஹன்சார்டின் 1821 - 1861 பக்கங்களில் பதிவாகியுள்ளது.

இதனை இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் கூட கடுமையாக எதிர்த்தன. ஆகவே, இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோவதற்கு ஜி.ஜி. பொன்னம்பலம் ஆதரவளித்தார் என்பதில் உண்மையில்லை. மாறாக, அனைத்துத் தமிழ்க் கட்சிகளைப் போலவும் அவர் அன்று அதனை மிகக் கடுமையாக எதிர்த்தார் - எதிர்த்தே வாக்களித்தார். ஆயினும் அன்றைய அரசாங்கம் அச்சட்டத்தை நிறைவேற்றியது.

இதன் பின்னர், ஜி.ஜி.பொன்னம்பலம் - அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவுடன் 'எதிர்வினை - ஒத்துழைப்பு' வழங்குவது பற்றிப் பேச்சு நடத்தியபோது, பிரஜாவுரிமை இழந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் முக்கிய கோரிக்கையாக வைத்திருந்தார்.

அதனை அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ஏற்றுக்கொண்டிருந்தார். அதன்பின்னர் அன்றைய அரசாங்கத்தில் இணைந்து கபினெட் அமைச்சரானார் ஜி.ஜி.பொன்னம்பலம். பிரஜாவுரிமை இழந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதாகத் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற டி.எஸ்.சேனநாயக்க 1949ஆம் ஆண்டில் இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார்.

இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை மசோதாவின்படி இலங்கையில் குடும்பமாக ஏழு வருடங்கள் வசித்தவர்களும், விவாகமாகாமல், பத்து வருடங்கள் வசித்தவர்களும் பிரஜா உரிமை பெறுவதற்கு உரிமை பெற்றார்கள். இலங்கை இந்திய காங்கிரஸும், தமிழ்க் காங்கிரஸும் ஏழு வருட காலப்பகுதியை, ஐந்தாகக் குறைக்கக் கோரின. ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த மசோதா சட்டமானால் ஏறத்தாழ 100,000 பிரஜாவுரிமையை இழந்த இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமையைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. இந்த மசோதாவுக்குத்தான் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்திருந்தார். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் இழைத்த அநீதியை, இந்திய-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் முற்றாக சரிசெய்து விடவில்லை. அது ஒரு முழுமையான தீர்வுமில்லை.

உண்மையில் இதைவிட நியாயமான, முழுமையான தீர்வொன்றுக்காக ஜி.ஜி.பொன்னம்பலம் உழைத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோக ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரவளித்தார் என்ற கருத்தில் உண்மையில்லை. ஏனெனில், அந்த மசோதாவை ஜி.ஜி.பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்திருந்தார். மாறாக இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒருதொகை இந்திய வம்சாவளி மக்களுக்கேனும் பிரஜாவுரிமை வழங்கிய இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை சட்டத்துக்கே அவர் ஆதரவளித்திருந்தார் என்பதே நிதர்சனம்.

அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸிலிருந்து 1949இல் பிரிந்து, இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதானது, ஜி.ஜி.யின் அபிவிருத்தி சார் இணக்க அரசியலுக்கு மாற்றாக தமிழ் மக்களுக்கான சுயாட்சி சார் உரிமை அரசியலுக்கான பாதையின் தொடக்கமாகக் கருதப்படத்தக்கது.

தொடரும்...

- See more at: http://www.tamilmirror.lk/152667#sthash.pPQmD2sZ.dpuf
Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?
 
31-08-2015 09:32 AM
Comments - 0       Views - 210

article_1440993943-swrd.jpg-என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

இலங்கைத் தமிழரசுக் கட்சியை (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்த சா.ஜே.வே.செல்வநாயகம், சி. வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் உருவாக்கினார்கள். அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து போகும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முடிவினை எதிர்த்தே இந்த பிரிவு உருவானது.

'சமஷ்டிக் கட்டமைப்பு அடிப்படையில், மொழிவாரியான தமிழருக்கான சுயாட்சிப் பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதனூடாக இலங்கையின் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தல்' என்ற கொள்கையினடிப்படையில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) உருவானது. ஆரம்ப காலங்கள் தமிழரசுக் கட்சிக்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லை.

புதிதாகத் தோன்றிய கட்சி எதிர்நோக்கும் சவால்களைக் கடந்து வரவேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு இருந்தது. தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்று மூன்றாண்டுகளுக்குள்ளாக 1952இல் பொதுத் தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தலில் 2 ஆசனங்களை மட்டுமே இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வெல்லக் கூடியாதாக இருந்தது. கோப்பாயில் சி.வன்னியசிங்கமும் திருகோணமலையில் எஸ்.சிவபாலனும் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார்கள். காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்ட சா.ஜே.வே.செல்வநாயகம் தோல்வி கண்டார்.

அந்தத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனான எஸ்.நடேசன் வெற்றி பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 4 ஆசனங்களை வெற்றி கொண்டிருந்தது. 1947ஆம் ஆண்டு தேர்தலில் (தமிழரசுக் கட்சி பிரிவுக்கு முன்பதாக) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 7 ஆசனங்களை வெற்றி கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடப்படவேண்டியது.

1952ஆம் ஆண்டு தேர்தல் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லையெனினும், 1956ஆம் ஆண்டு தேர்தல் வித்தியாசமான பெறுபேற்றை வழங்கியது. இதற்குக் காரணம் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க.

1952ஆம் ஆண்டு தேர்தல் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் புதிதாக உருவாகியிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மட்டும் முதலாவது பொதுத் தேர்தலாக இருக்கவில்லை. 1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான 'மத்திய-இடது கொள்கையை' உடைய குழுவினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினர்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் புதிதாக தோன்றியிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சந்தித்த முதலாவது பொதுத் தேர்தலும் 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலே. 1952ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 54 ஆசனங்களை வெற்றிகொண்ட போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெறுமனே 9 ஆசனங்களையே வெற்றி கொண்டிருந்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இது அவர்கள் எதிர்பார்த்த ஆரம்பமாக இருக்கவில்லை. ஆனால், 1956ஆம் ஆண்டு தேர்தலில் இந்த நிலை நேரெதிராக மாறியது.

1948இல் சுதந்திரம் பெற்றது முதலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி மேலைத்தேயம் சார்பான ஆட்சியாகவே காணப்பட்டது. இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவினுடைய அணிசேராக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத, கம்யூனிசத்தை கடுமையாக விமர்சிக்கும் கட்சியாக, அரசாங்கமாக இருந்தது.

ஆரம்பத்தில் இலங்கை - ஐக்கிய நாடுகளில் இணைவதற்கான முயற்சியை அன்றைய சோவியத் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைமறித்ததற்கு இதுவும் ஒரு காரணம் எனப்படுகிறது. (பின்னர் 1955-லே இலங்கை ஐ.நா.-வில் இணைந்து கொண்டது) இவ்வாறாக மேலைநாடுகள் சார்பாக இருந்த அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை விழுத்தும் புதிய தந்திரோபாயத்தை 1952 தேர்தல் நிறைவுபெற்றவுடனேயே பண்டாரநாயக்க ஆரம்பித்துவிட்டார்.

1956இல் ஆட்சியைக் கைப்பற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கையில் எடுத்த ஆயுதம் 'சிங்கள-பௌத்த தேசியம்'. எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பொறுத்தவரையில் 'சிங்கள-பௌத்த தேசியத்தை' அவர் எப்போதோ கையிலெடுத்துவிட்டார். 1937இலேயே சிங்கள மகாசபையை பண்டாரநாயக்க உருவாக்கியிருந்தார்.

'மேலைத்தேயம் சார்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பௌத்த கலாசாரத்தை சீரழிக்கிறது. இது ஒரு கிறிஸ்துவர்கள் சார்பான மேட்டுக்குடி ஆட்சி. 1948இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதில் உண்மையில்லை என்று பொதுநலவாயத்திலிருந்து இலங்கை விலகுகிறதோ அன்றைக்குத்தான் இலங்கைக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்' என தனது 'சிங்கள-பௌத்த' தேசியவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டார் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க.

இதனை 'சுதேசியம்' என்பதாக பொருள்கோடல் செய்யும் அரசியல் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். ஆனால், ஓர் இனத்தையும் மதத்தையும் மையப்படுத்திய தேசியம் எவ்வாறு ஒட்டுமொத்த நாட்டின் சுதேசியமாக இருக்க முடியும்? மாறாக அது பெரும்பான்மையின் தேசியமாக, குறுந் தேசியவாதமாகவே கருதப்படவேண்டியதாகிறது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தந்திரோபாயம் 'மக்கள் ஐக்கிய முன்னணி' (மஹஜன எக்ஸத் பெரமுண) என்ற வடிவில் உருப்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கெதிராக இருந்தக் கட்சிகளை இந்த முன்னணியின் கீழ் ஒன்றிணைத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் போட்டியில்லா ஒப்பந்தம் ஒன்றையும் கைச்சாத்திட்டு, அவைகளைத் தோழமை ஆக்கிக்கொண்டார்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தேசிய மயமாக்கல் கொள்கை, தனியார்மயத்துக்கு எதிரான நிலைப்பாடு என்பனவே இந்தத் தோழமை சாத்தியமாகக் காரணமாயின. வங்கிகள், பெருந்தோட்டங்கள், காப்புறுதி நிறுவனங்கள் என்பனவெல்லாம் தேசியமயமாக வேண்டும் என உரைத்த பண்டாரநாயக்க, வணிக மற்றும் வர்த்தகத்துறை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் கூறினார். ஆனால், பின்னர் பண்டாரநாயக்க 'தனிச் சிங்களச்' சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வவைத்த போது அதனைக் கடுமையாக இந்த இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்தன என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

'பஞ்ச மா பலவேகய' (ஐம்பெரும் சக்திகள்) என்ற பெயரில் பௌத்த பிக்குகள், தொழிலாளர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் ஆகியோரை ஒன்றிணைத்து தனது 1956ஆம் ஆண்டு வெற்றிக்கான பயணத்தை ஆரம்பித்தார் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க. 1948ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின் இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கும் என நம்பப்பட்டன.

1949ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவில்கூட இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. 1956 தேர்தலையொட்டி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது 'சிங்கள-பௌத்த' தேசியவாதக் கொள்கையைப் பலப்படுத்துவதற்காக சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனம் செய்வேன் என சூளுரைத்தார். இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றிப் போட்ட புள்ளியாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 'தனிச் சிங்களச் சட்டம்' அமைந்தது.

பண்டாரநாயக்கவின் புத்துணர்ச்சியுடன் எழுச்சிபெற்ற 'சிங்கள-பௌத்த' தேசியவாதமும், 'பஞ்ச மா பலவேகய'வும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் சவாலாக மாறியது. அதுவும் தேர்தல் இடம்பெற்ற 1956ஆம் ஆண்டானது கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2500ஆவது ஆண்டு நிறைவாகவும், விஜயன் இலங்கையில் காலடி எடுத்து வைத்ததன் 2500ஆவது ஆண்டு நிறைவாகவும் இருந்ததானதும் 'சிங்கள-பௌத்த' தேசியவாத உணர்ச்சிகளுக்கு இன்னும் உயிரூட்டுவதாகவும் அமைந்தது.

இந்நிலையில் இறுதி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் 'தனிச் சிங்களம்' என்ற கொள்கையை தனது களனி மாநாட்டில் முன்னிறுத்தியது. ஆனால், இந்த இறுதி நேர மாற்றம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பலனளிக்கவில்லை. பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி 51 ஆசனங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 8 ஆசனங்களே கிடைத்தன. இந்தத் தேர்தல் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் வெற்றிகரமான தேர்தலாக அமைந்தது. அதற்குக் காரணம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 'சிங்கள-பௌத்த' தேசியவாதம்.

பண்டாரநாயக்கவினால் எழுச்சியுறச் செய்யப்பட்ட 'சிங்கள-பௌத்த' தேசியவாதம், ஐக்கிய தேசியக் கட்சி தனது சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இருமொழிக் கொள்கையினின்று விலகி பண்டாரநாயக்கவின் 'தனிச் சிங்களக்' கொள்கையை தானும் ஏற்றமை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஐக்கிய தேசியக் கட்சியுடனான இணக்க அரசியல் என்பனவெல்லாம் சேர்த்து தமிழ் மக்கள் இவற்றுக்கு மாற்றான தமிழ்த் தேசிய சக்தியாக, சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சியைத் தெரிவு செய்வதற்கு ஏதுவான காரணிகளாக அமைந்தன. 1956ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மிகப்பெரியதொரு வெற்றியை ஈட்டியது. 14 வேட்பாளர்கள் போட்டியிட்டு 10 பேர் வெற்றியீட்டினர்.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் மட்டும் யாழ்ப்பாணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்றி 'சிங்கள-பௌத்த' தேசியவாதத்துக்கெதிரான தமிழ் மக்களது உரிமைக் குரலாகப் பார்க்கப்பட்டது.

சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். தனது தந்தையாரினுடைய 'தனிச் சிங்களச்' சட்டமே இந்தநாட்டின் இனப ;பிரச்சினையின் மூல காரணங்களுள் ஒன்று என 2011 ஜூலை 24ஆம் திகதி இடம்பெற்ற நீதியரசர் பாலகிட்ணர் நினைவுப் பேருரையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் மகளுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டிருந்ததை நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.

அவர் மேலும், 'தனிச் சிங்களச்' சட்டம் 450 வருடங்களாக பாழ்பட்டிருந்த இலங்கைச் சுதேசியத்தைத் தட்டியெழுப்பியது. ஆனால், அது 'மற்றவர்களான' தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர், மலே ஆகியோரை அரவணைத்துச் செல்லத் தவறிவிட்டது, இதனால் அவர்களால் சம உரிமையுடன், கௌரவத்துடன், ஒரு தேசமாக வாழும் நிலை இல்லாது போய்விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.

1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக 'தனிச் சிங்களச் சட்டம்' இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும். இது சட்டமூலமாகப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அங்கு எழுந்த வாதப்பிரதிவாதங்கள், அன்றைய தலைவர்கள் பதிவுசெய்த கருத்துக்கள், அது சட்டமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னான விளைவுகள் என்பவை விரிவாக அலசப்பட வேண்டியதாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/153054#sthash.pUERycdN.dpuf
Link to comment
Share on other sites

‘தனிச் சிங்களச்’ சட்டமூலம் நிறைவேற்றம்: தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-3)

‘தனிச் சிங்களச்’ சட்டமூலம் நிறைவேற்றம்:  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-3)
 

 

சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும்.

1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக ‘தனிச் சிங்களச் சட்டம்’ இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை.

தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவை உருவாகத் தொடங்கியது இங்குதான். மொழியுரிமைப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததன் மூலம், இலங்கையின் எதிர்கால அரசியலை இனப்பிரச்சினை எனும் காலனிடம் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் கையளித்தது.

1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தான் வழங்கிய சிங்கள மொழியை இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக்குவேன் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் முகமாக, தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து விரைவிலேயே உத்தியோகபூர்வ மொழிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

‘சிங்கள மொழி இலங்கையின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும்’ அச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்றைய நிலவரத்தின்படி இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 70 சதவீதம்.

சிங்கள-பௌத்த தேசியத்தின் மீட்பராக, அதையே இலங்கையின் சுதேசியமாக, மேற்கத்தேய காலனித்துவத்திலிருந்து பெறும் விடுதலையாக வியாக்கியானம் செய்த பண்டாரநாயக்க, இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் நலன்கள் பற்றிச் சிந்திக்காது, தான் செய்யப் போகும் காரியம் இந்நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் எனும் தூரதரிசனத்தை துறந்து செயற்பட்டார். இதன் விளைவுகளையே இந்த நாடு இன்று வரை அனுபவிக்கிறது.

இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்ட போது அதனைச் சுற்றி இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களை நாம் கருத்திற் கொள்ளுதல் முக்கியமானதாகும். சுயநல, பேரினவாத அரசியல் பேச்சுக்களையும், அதற்கெதிரான தீர்க்கதரிசனங்கொண்ட கருத்துக்களையும் இந்த வாதப்-பிரதிவாதங்களில் காணலாம்.

DR.N._M._Perera  'தனிச் சிங்களச்' சட்டமூலம் நிறைவேற்றம்:  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-3) DRDR.N._M._Perera.jpg

குறிப்பாக கலாநிதி என்.எம் பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆகிய இடதுசாரித் தலைவர்களின் கருத்துக்கள் தீர்க்கதரிசனம் மிக்கவையாக அமைந்தன.

அதுபோல பேரினவாத அரசியலின் அபத்த முகத்தையும் இந்த வாதப்-பிரதிவாதங்களில் காணலாம்.

ஜூன் 14, 1956ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய அன்றைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பிலிப் குணவர்த்தன (இன்றைய அமைச்சரான தினேஷ் குணவர்த்தனவின் தந்தையார்) ‘இந்தச் (தனிச் சிங்கள) சட்டத்தினூடாக எமது தேசியப் போராட்டத்தில் ஒரு முக்கியத்துவம் மிக்க அடைவை எய்துகிறோம்.

சிங்கள மொழியை அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பு அது இருந்த நிலைக்கு மீட்டு வருதலானது இந்தத் தீவின் வரலாற்றில் முக்கியத்துவமிக்கதொன்றாகும்’ என்று பேசினார்.

அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பதாக, இந்தத் தீவு ஒரு நாடாக இருந்ததா என்ற கேள்வி எழுகிறது.

அதுபோலவே அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பு இலங்கையில் சிங்களம் மட்டும்தான் பேசப்பட்டதா? இலங்கை ஒருநாடாகவே இல்லாத பொழுதில் ஒரு தேசமாக எவ்வாறு இருந்திருக்க முடியும்?

வரலாற்றில் கண்டி இராச்சியம் தனித்துவம் மிக்கதாகவும், றுகுணு இராச்சியம் தனித்துவம் மிக்கதாகவுமே இருக்கின்ற போது, சிங்கள தேசம் கூட அந்நியர் ஆட்சிக்கு முன்பு ஒரு தேசமாக இருக்கவில்லை என்பது புலனாகிறது.

இந்நிலையில் சிறுபான்மையினரின் நலன்களை மறந்து, பேரினவாத அரசியலைக் கட்டவிழ்த்து விட்ட ஒரு சட்டத்தை சுதேசியத்தின் பெயரால் நியாயப்படுத்துதல் என்பது எவ்வளவு அபத்தமானது.

சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்பது பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட எண்ணக்கரு என்று சொல்லிவிட முடியாது.

இலங்கையில் ‘சுயபாஷா’ பற்றி 1932களிலிருந்து முன்மொழிவுகள், வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவை சிங்கம், தமிழ் எனும் இரு சுதேசியர் பேசும் மொழிகளையும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகள் ஆக்குதல் பற்றியே பேசின.

சிங்கள மொழியை இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்ற பிரேரணையை 1943, ஜூன் 22ஆம் திகதி அரச சபையில் (டொனமூர் யாப்பின் கீழ் சட்டவாக்கத்துறை அரச சபை என அழைக்கப்பட்டது) முன்வைத்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன.

images-53  'தனிச் சிங்களச்' சட்டமூலம் நிறைவேற்றம்:  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-3) images 53அப்பிரேரணை, 1944ஆம் ஆண்டு மே 24இல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனது பேச்சில் சிங்களம் உத்தியோகபூர்வ மொழி ஆக்கப்பட வேண்டும் எனச்சொன்ன ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழ் மொழிக்குரிய இடம் பற்றிப் பின்வருமாறு கூறினார்: ‘தமிழ் மொழியையும் இணைத்துக்கொள்வதற்கான எனது விருப்பம் பற்றி விளக்க விரும்புகிறேன்.

தமிழ் பேசும் மாகாணங்களில் தமிழ் பேசப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். அத்தோடு தமிழ் பேசும் மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாக இருக்க வேண்டும்’.

சிங்கள-தமிழ் தேசிய சமத்துவ நிலையிலிருந்து தமிழ், தமிழ் பேசும் மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் எண்ணத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்மொழிந்திருந்தார்.

இலங்கையில் மூன்றிலிரண்டுக்கு மேற்பட்டோர் பேசும் மொழியாக சிங்களம் இருப்பதால், சிங்களமே இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக வேண்டும் எனப் பேசிய அவர், தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தாய்மொழியான தமிழ்மொழியும், சிங்களமொழியுடன் சம அந்தஸ்தில் இணைக்கப்பட வேண்டும்’ என்றார்.

அன்று இந்த இருமொழி நிலைப்பாட்டை (அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த) பண்டாரநாயக்க ஏற்றுக் கொண்டார்.

சிங்கள மொழி மட்டும் எனத் தொடங்கிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, விவாதத்தின் இறுதியில் இருமொழி என்ற நிலைப்பாட்டை எட்டியிருந்தார்.

இது நடந்து ஏற்தாழ 12 ஆண்டுகளின் பின் தனது புதிய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமரான பண்டாரநாயக்க ‘தனிச் சிங்கள’ சட்டத்தைக் கொண்டு வந்தார்.

பண்டாரநாயக்கவின் ஆதரவாளரும் தீவிர சிய்கத் தேசியவாதியுமான மெத்தானந்த ‘ஐதரசன் குண்டுகளால் கூட தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்படுவதை தடுக்க முடியாது’ என்று கூறினார்.

தனிச் சிங்களச் சட்டத்தை 1956இல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரித்தது. ஒன்றுக்கொன்று வைரிகளான இரு பெரும் தேசியக் கட்சிகளும் ‘தனிச் சிங்கள’ சட்டத்தை ஆதரித்தே வாக்களித்தன.

தமிழ்க் கட்சிகளும் (இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), இடதுசாரிக் கட்சிகளுமே ‘தனிச் சிங்களச்’ சட்டத்தை கடுமையாக எதிர்த்தன.

லங்கா சமசமாஜக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லெஸ்லி குணவர்த்தன, ‘திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும்.

தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிறுபான்மையினர் ஆழமாக எண்ணுவார்களெனின் அது எதிர்ப்பையும் போராட்டத்தையும் விளைவிக்கும்.

நான், இனக் கலவரம் எனும் ஆபத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதைவிடப் பாராதூரமான ஆபத்தாக இந்நாடு பிரிவினையை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.

இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர், அம்மக்கள் தமக்கு மாற்றமுடியாத அநீதி இழைக்கப்படுவதாக உணர்ந்தால், அவர்கள் இந்நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கும் சாத்தியம் இருக்கிறது’ என்று 1956, ஜூன் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பேசினார்.

பிரபல சட்டத்தரணியும், வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா, ‘உங்களுக்கு இருமொழிகள் – ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி – இரு நாடு வேண்டுமா’ என்று நாடாளுமன்றத்தில் கர்ஜித்தார்.

‘சமத்துவம்தான் எமது நாட்டின் சுதந்திரத்துக்கான பாதை, அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தும். எங்களுக்கு ஓர் அரசு வேண்டுமா, இல்லை இரண்டா?

எமக்கு ஓர் இலங்கை வேண்டுமா, இல்லை இரண்டா? மொழிப் பிரச்சினை என்ற வெளித் தோற்றத்துக்குள் நாம் இந்தக் கேள்விகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் தமிழர்களை பிழையாக நடத்தினால், நீங்கள் தமிழர்களை துன்புறச்செய்தால், நீங்கள் தமிழர்களை அடக்கி ஆண்டால், நீங்கள் அடக்கியாளும் இனத்தவர்கள் வேறானதொரு தேசமாக உருவாகி இப்போதுள்ளதை விட அதிகமாக அவர்கள் கேட்கும் நிலை உருவாகும்.

f-4  'தனிச் சிங்களச்' சட்டமூலம் நிறைவேற்றம்:  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-3) f 4நாம் சமத்துவத்தை மறந்து தமிழர்களை அடக்கியாண்டால், பிரிவினையே உருவாகும்’ என கொல்வின் ஆர்.டி. சில்வா தீர்க்க தரிசனத்துடன் பேசினார்.

மற்றுமொரு பிரபல நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி என்.எம்.பெரேராவும் ‘தனிச்சிங்கள’ சட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.

‘பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் இந்நாட்டிலுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது. 50 சதவீதம் அல்லது 60 சதவீதம் என்ற எண்ணிக்கையைக் காட்டுவதனூடாக ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை மீற முடியாது.

இந்த சறுக்கும் பலகையில் நீங்கள் கால்வைத்தால், நீங்கள் கீழே விழுந்துகொண்டேயிருப்பீர்கள். அடிவரை விழுவதைத் தவிர வேறு முடிவில்லை.

அந்த முடிவானது சிங்கள ‘கொவிகம’ தலைமையிலான பாஸிஸ சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும். இந்தத் திணிப்பை சிறுபான்மையினர் ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை, ஆனால், அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இதனைச் செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா?

அவர்கள் மீது இதனைத் திணிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் என்னைக் கொல்லலாம், எம் தோழர்களைக் கொல்லலாம் ஆனால், அதன் மூலம் நீங்கள் பிரச்சினையைத் தீர்க்கவில்லை.

நீங்கள் சிறுபான்மையினர் பிரச்சினையை, எமது தோழர்களைக் கொல்வதனூடாக, தீர்க்கவில்லை. நான் உங்களிடம் மன்றாடுகிறேன், தயவுசெய்து நீங்கள் செய்யும் இந்தக் காரியத்தினது (சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வமொழி ஆக்குதல்) பாராதூரதன்மையை உணருங்கள்.

நீங்கள் இந்த நாட்டை பல தலைமுறைகள் பின்கொண்டு செல்கிறீர்கள். இனி வரும் சந்ததி இந்த நாட்டைப் பாழாக்கியதற்காக எம் அனைவரையும் சபிக்கப்போகிறது’ என்று உணர்ச்சி பொங்க கலாநிதி என்.எம். பெரேரா பேசினார். எத்தனை

தூரநோக்குடைய கருத்துக்கள். ஆனால், இவையெல்லாம் பண்டாரநாயக்கவையோ, அவருக்கு ஆதரவளித்த ஐ.தே.க-வின் நிலைப்பாட்டையோ மாற்றவில்லை.

விரக்தியின் உச்சத்தில் நாடாளுமன்ற உறுப்பின் சி.சுந்தரலிங்கம், பிரதமர் பண்டாரநாயக்கவை நோக்கி இப்படிப் பேசினார்:

‘பிரதமர் அவர்களே எனது வேலை இனி இங்கில்லை, வெளியில்தான் இருக்கிறது. இந்த அநியாயத்துக்கு எதிரான, அநீதிக்கு எதிரான யுத்தத்தை எப்படி முன்னெடுப்பது என நான் எண்ணுகிறேன்.

நீங்கள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்புகிறீர்கள். பிரதமர் அவர்களே, நான் உங்களுக்கொன்றை உறுதியளிக்கிறேன், இறைவன் அருளால் நீங்கள் பிரிவடைந்த இலங்கையைப் பெறுவீர்கள்’ என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

‘தனிச் சிங்களச்’ சட்டம் பற்றிப் பேசும் போது, ‘ஏற்கெனவே இது இனக் கலவரத்தை உருவாக்கிவிட்டது. இன்றிலிருந்து பத்துவருடங்களில் இது இன்னும் பல மடங்கு அதிகமாகும்.

இந்தச் சட்டமூலம் நாட்டைப் பிரிப்பதை நோக்கியே நகர்கிறது. இதன் கீழ் உருவாகும் ஒவ்வொரு உத்தரவும் இன்னும் பிரிவினையைத் தூண்டும்’ என கம்யுனிஸ்ட் கட்சியின் பீற்றர் கெனமன் கூறினார்.

என்.எம்.பெரேரா, ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் 8 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் ‘தனிச் சிங்களச்’ சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தீர்க்கதரிசனம் மிக்க தலைவர்களின் கணிப்பின் படி கலவரங்களும் அமைதியின்மையும் உருவானது.

இலங்கை அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாகத் திகழும் ‘தனிச் சிங்கள’ சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, தமிழரது எதிர்ப்பரசியல் சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையில் சத்தியாக்கிரக வடிவமெடுத்தது. அது பலன் தந்ததா?

( தொடரும்…)

http://ilakkiyainfo.com/தனிச்-சிங்களச்-சட்டமூலம/

Link to comment
Share on other sites


 
 
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-4)
 
07-09-2015 09:46 AM
Comments - 0       Views - 138

 article_1441599562-der.jpg-என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக 'தனிச் சிங்களச் சட்டம்' இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவை உருவாகத் தொடங்கியது இங்குதான். மொழியுரிமைப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததன் மூலம், இலங்கையின் எதிர்கால அரசியலை இனப்பிரச்சினை எனும் காலனிடம் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் கையளித்தது.

1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தான் வழங்கிய சிங்கள மொழியை இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக்குவேன் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் முகமாக, தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து விரைவிலேயே உத்தியோகபூர்வ மொழிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 'சிங்கள மொழி இலங்கையின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும்' அச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்றைய நிலவரத்தின்படி இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 70 சதவீதம். சிங்கள-பௌத்த தேசியத்தின் மீட்பராக, அதையே இலங்கையின் சுதேசியமாக, மேற்கத்தேய காலனித்துவத்திலிருந்து பெறும் விடுதலையாக வியாக்கியானம் செய்த பண்டாரநாயக்க, இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் நலன்கள் பற்றிச் சிந்திக்காது, தான் செய்யப் போகும் காரியம் இந்நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் எனும் தூரதரிசனத்தை துறந்து செயற்பட்டார். இதன் விளைவுகளையே இந்த நாடு இன்று வரை அனுபவிக்கிறது.

இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்ட போது அதனைச் சுற்றி இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களை நாம் கருத்திற் கொள்ளுதல் முக்கியமானதாகும். சுயநல, பேரினவாத அரசியல் பேச்சுக்களையும், அதற்கெதிரான தீர்க்கதரிசனங்கொண்ட கருத்துக்களையும் இந்த வாதப்-பிரதிவாதங்களில் காணலாம். குறிப்பாக கலாநிதி என்.எம் பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆகிய இடதுசாரித் தலைவர்களின் கருத்துக்கள் தீர்க்கதரிசனம் மிக்கவையாக அமைந்தன. அதுபோல பேரினவாத அரசியலின் அபத்த முகத்தையும் இந்த வாதப்-பிரதிவாதங்களில் காணலாம்.

ஜூன் 14, 1956ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய அன்றைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பிலிப் குணவர்த்தன (இன்றைய அமைச்சரான தினேஷ் குணவர்த்தனவின் தந்தையார்) 'இந்தச் (தனிச் சிங்கள) சட்டத்தினூடாக எமது தேசியப் போராட்டத்தில் ஒரு முக்கியத்துவம் மிக்க அடைவை எய்துகிறோம். சிங்கள மொழியை அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பு அது இருந்த நிலைக்கு மீட்டு வருதலானது இந்தத் தீவின் வரலாற்றில் முக்கியத்துவமிக்கதொன்றாகும்' என்று பேசினார்.

அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பதாக, இந்தத் தீவு ஒரு நாடாக இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. அதுபோலவே அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பு இலங்கையில் சிங்களம் மட்டும்தான் பேசப்பட்டதா? இலங்கை ஒருநாடாகவே இல்லாத பொழுதில் ஒரு தேசமாக எவ்வாறு இருந்திருக்க முடியும்? வரலாற்றில் கண்டி இராச்சியம் தனித்துவம் மிக்கதாகவும், றுகுணு இராச்சியம் தனித்துவம் மிக்கதாகவுமே இருக்கின்ற போது, சிங்கள தேசம் கூட அந்நியர் ஆட்சிக்கு முன்பு ஒரு தேசமாக இருக்கவில்லை என்பது புலனாகிறது. இந்நிலையில் சிறுபான்மையினரின் நலன்களை மறந்து, பேரினவாத அரசியலைக் கட்டவிழ்த்து விட்ட ஒரு சட்டத்தை சுதேசியத்தின் பெயரால் நியாயப்படுத்துதல் என்பது எவ்வளவு அபத்தமானது.

சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்பது பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட எண்ணக்கரு என்று சொல்லிவிட முடியாது. இலங்கையில் 'சுயபாஷா' பற்றி 1932களிலிருந்து முன்மொழிவுகள், வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவை சிங்கம், தமிழ் எனும் இரு சுதேசியர் பேசும் மொழிகளையும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகள் ஆக்குதல் பற்றியே பேசின.

சிங்கள மொழியை இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்ற பிரேரணையை 1943, ஜூன் 22ஆம் திகதி அரச சபையில் (டொனமூர் யாப்பின் கீழ் சட்டவாக்கத்துறை அரச சபை என அழைக்கப்பட்டது) முன்வைத்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன.

அப்பிரேரணை, 1944ஆம் ஆண்டு மே 24இல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனது பேச்சில் சிங்களம் உத்தியோகபூர்வ மொழி ஆக்கப்பட வேண்டும் எனச்சொன்ன ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழ் மொழிக்குரிய இடம் பற்றிப் பின்வருமாறு கூறினார்: 'தமிழ் மொழியையும் இணைத்துக்கொள்வதற்கான எனது விருப்பம் பற்றி விளக்க விரும்புகிறேன். தமிழ் பேசும் மாகாணங்களில் தமிழ் பேசப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். அத்தோடு தமிழ் பேசும் மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாக இருக்க வேண்டும்'. சிங்கள-தமிழ் தேசிய சமத்துவ நிலையிலிருந்து தமிழ், தமிழ் பேசும் மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் எண்ணத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்மொழிந்திருந்தார்.

இலங்கையில் மூன்றிலிரண்டுக்கு மேற்பட்டோர் பேசும் மொழியாக சிங்களம் இருப்பதால், சிங்களமே இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக வேண்டும் எனப் பேசிய அவர், தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தாய்மொழியான தமிழ்மொழியும், சிங்களமொழியுடன் சம அந்தஸ்தில் இணைக்கப்பட வேண்டும்' என்றார். அன்று இந்த இருமொழி நிலைப்பாட்டை (அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த) பண்டாரநாயக்க ஏற்றுக் கொண்டார்.

சிங்கள மொழி மட்டும் எனத் தொடங்கிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, விவாதத்தின் இறுதியில் இருமொழி என்ற நிலைப்பாட்டை எட்டியிருந்தார். இது நடந்து ஏற்தாழ 12 ஆண்டுகளின் பின் தனது புதிய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமரான பண்டாரநாயக்க 'தனிச் சிங்கள' சட்டத்தைக் கொண்டு வந்தார்.

பண்டாரநாயக்கவின் ஆதரவாளரும் தீவிர சிய்கத் தேசியவாதியுமான மெத்தானந்த 'ஐதரசன் குண்டுகளால் கூட தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்படுவதை தடுக்க முடியாது' என்று கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தை 1956இல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரித்தது. ஒன்றுக்கொன்று வைரிகளான இரு பெரும் தேசியக் கட்சிகளும் 'தனிச் சிங்கள' சட்டத்தை ஆதரித்தே வாக்களித்தன.

தமிழ்க் கட்சிகளும் (இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), இடதுசாரிக் கட்சிகளுமே 'தனிச் சிங்களச்' சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. லங்கா சமசமாஜக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லெஸ்லி குணவர்த்தன, 'திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிறுபான்மையினர் ஆழமாக எண்ணுவார்களெனின் அது எதிர்ப்பையும் போராட்டத்தையும் விளைவிக்கும்.

நான், இனக் கலவரம் எனும் ஆபத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதைவிடப் பாராதூரமான ஆபத்தாக இந்நாடு பிரிவினையை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர், அம்மக்கள் தமக்கு மாற்றமுடியாத அநீதி இழைக்கப்படுவதாக உணர்ந்தால், அவர்கள் இந்நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கும் சாத்தியம் இருக்கிறது' என்று 1956, ஜூன் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பேசினார்.

பிரபல சட்டத்தரணியும், வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா, 'உங்களுக்கு இருமொழிகள் - ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி - இரு நாடு வேண்டுமா' என்று நாடாளுமன்றத்தில் கர்ஜித்தார். 'சமத்துவம்தான் எமது நாட்டின் சுதந்திரத்துக்கான பாதை, அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தும். எங்களுக்கு ஓர் அரசு வேண்டுமா, இல்லை இரண்டா? எமக்கு ஓர் இலங்கை வேண்டுமா, இல்லை இரண்டா? மொழிப் பிரச்சினை என்ற வெளித் தோற்றத்துக்குள் நாம் இந்தக் கேள்விகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் தமிழர்களை பிழையாக நடத்தினால், நீங்கள் தமிழர்களை துன்புறச்செய்தால், நீங்கள் தமிழர்களை அடக்கி ஆண்டால், நீங்கள் அடக்கியாளும் இனத்தவர்கள் வேறானதொரு தேசமாக உருவாகி இப்போதுள்ளதை விட அதிகமாக அவர்கள் கேட்கும் நிலை உருவாகும். நாம் சமத்துவத்தை மறந்து தமிழர்களை அடக்கியாண்டால், பிரிவினையே உருவாகும்' என கொல்வின் ஆர்.டி. சில்வா தீர்க்க தரிசனத்துடன் பேசினார்.

மற்றுமொரு பிரபல நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி என்.எம்.பெரேராவும் 'தனிச்சிங்கள' சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். 'பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் இந்நாட்டிலுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது. 50 சதவீதம் அல்லது 60 சதவீதம் என்ற எண்ணிக்கையைக் காட்டுவதனூடாக ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை மீற முடியாது.

இந்த சறுக்கும் பலகையில் நீங்கள் கால்வைத்தால், நீங்கள் கீழே விழுந்துகொண்டேயிருப்பீர்கள். அடிவரை விழுவதைத் தவிர வேறு முடிவில்லை. அந்த முடிவானது சிங்கள 'கொவிகம' தலைமையிலான பாஸிஸ சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும். இந்தத் திணிப்பை சிறுபான்மையினர் ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை, ஆனால், அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இதனைச் செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? அவர்கள் மீது இதனைத் திணிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் என்னைக் கொல்லலாம், எம் தோழர்களைக் கொல்லலாம் ஆனால், அதன் மூலம் நீங்கள் பிரச்சினையைத் தீர்க்கவில்லை.

நீங்கள் சிறுபான்மையினர் பிரச்சினையை, எமது தோழர்களைக் கொல்வதனூடாக, தீர்க்கவில்லை. நான் உங்களிடம் மன்றாடுகிறேன், தயவுசெய்து நீங்கள் செய்யும் இந்தக் காரியத்தினது (சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வமொழி ஆக்குதல்) பாராதூரதன்மையை உணருங்கள். நீங்கள் இந்த நாட்டை பல தலைமுறைகள் பின்கொண்டு செல்கிறீர்கள். இனி வரும் சந்ததி இந்த நாட்டைப் பாழாக்கியதற்காக எம் அனைவரையும் சபிக்கப்போகிறது' என்று உணர்ச்சி பொங்க கலாநிதி என்.எம். பெரேரா பேசினார். எத்தனை

தூரநோக்குடைய கருத்துக்கள். ஆனால், இவையெல்லாம் பண்டாரநாயக்கவையோ, அவருக்கு ஆதரவளித்த ஐ.தே.க-வின் நிலைப்பாட்டையோ மாற்றவில்லை.

விரக்தியின் உச்சத்தில் நாடாளுமன்ற உறுப்பின் சி.சுந்தரலிங்கம், பிரதமர் பண்டாரநாயக்கவை நோக்கி இப்படிப் பேசினார்: 'பிரதமர் அவர்களே எனது வேலை இனி இங்கில்லை, வெளியில்தான் இருக்கிறது. இந்த அநியாயத்துக்கு எதிரான, அநீதிக்கு எதிரான யுத்தத்தை எப்படி முன்னெடுப்பது என நான் எண்ணுகிறேன்.

நீங்கள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்புகிறீர்கள். பிரதமர் அவர்களே, நான் உங்களுக்கொன்றை உறுதியளிக்கிறேன், இறைவன் அருளால் நீங்கள் பிரிவடைந்த இலங்கையைப் பெறுவீர்கள்' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

'தனிச் சிங்களச்' சட்டம் பற்றிப் பேசும் போது, 'ஏற்கெனவே இது இனக் கலவரத்தை உருவாக்கிவிட்டது. இன்றிலிருந்து பத்துவருடங்களில் இது இன்னும் பல மடங்கு அதிகமாகும். இந்தச் சட்டமூலம் நாட்டைப் பிரிப்பதை நோக்கியே நகர்கிறது. இதன் கீழ் உருவாகும் ஒவ்வொரு உத்தரவும் இன்னும் பிரிவினையைத் தூண்டும்' என கம்யுனிஸ்ட் கட்சியின் பீற்றர் கெனமன் கூறினார்.

என்.எம்.பெரேரா, ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் 8 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் 'தனிச் சிங்களச்' சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்க்கதரிசனம் மிக்க தலைவர்களின் கணிப்பின் படி கலவரங்களும் அமைதியின்மையும் உருவானது.

இலங்கை அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாகத் திகழும் 'தனிச் சிங்கள' சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, தமிழரது எதிர்ப்பரசியல் சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையில் சத்தியாக்கிரக வடிவமெடுத்தது. அது பலன் தந்ததா?

( தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/153528#sthash.YTNJfVmx.dpuf
Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-5)
 
14-09-2015 10:18 AM
Comments - 0       Views - 192

article_1442206513-dc.jpg-என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

இலங்கை வரலாற்றில் 'தனிச் சிங்களச்' சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதல் இனமுரண்பாடு கொதிக்கும் நிலையை அடையத் தொடங்கியது. 'தனிச் சிங்கள' சட்டமானது சிங்கள மொழியை மாத்திரம் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி ஆக்கியதன் ஊடாக, தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியது. அரசாங்க உத்தியோகமே பெருமளவு காணப்பட்ட அந்தக் காலப்பகுதியில், சிங்களம் உத்தியோகபூர்வ மொழி ஆக்கப்பட்டமையானது, சிங்களம் தெரியாத தமிழ் உத்தியோகத்தர்கள் வேலை செய்ய முடியாத நிலையைத் தோற்றுவித்தது.

அரச ஆவணங்கள் முதல் அரச இயந்திரத்தினது சகல பகுதிகளும் சிங்களத்தை மட்டும் கொண்டிருக்கக்கூடிய நிலை ஏற்பட்டதால் சிங்களம் அறியாத சிறுபான்மை மக்கள் கடுமையாகப் பாதிப்படையும் நிலை உருவானது.

'தனிச் சிங்கள' சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளில், சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக (பழைய நாடாளுமன்ற கட்டடம் - இன்றைய ஜனாதிபதி செயலகம்), காலி முகத்திடலில், 'தனிச் சிங்கள' சட்டமூலத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராட்டமொன்றை நடத்தினர். இந்தியாவின் தந்தை எனக் கருதப்படும் மகாத்மா காந்தியின் பாதையில், அதன் தாக்கத்தில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் ஏறத்தாழ 300 அளவிலான தமிழரசுக் கட்சியினர் (நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட) காலி முகத்திடலில் கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அமைதி வழியில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாக காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகமிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களை ரௌடிகளும் காடையர்களும் தாக்கத் தொடங்கினர். சுற்றிவர பொலிஸ் காவலுக்கு நின்றபோதும், பொலிஸார் ரௌடிகளையும் காடையர்களையும் தடுக்கவில்லை. அமைதி வழியில் சத்தியாக்கிரகம் இருந்தவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். சிலர் நாடாளுமன்றக் கட்டடமருகே உள்ள 'பேர' வாவியில் காடையர்களால் தூக்கி எறியப்பட்டார்கள். சத்தியாக்கிரகிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 'தமிழ்த் தேசத்தின் எழுச்சியும் விழுச்சியும் (ஆங்கிலம்)' என்ற நூலில் வி.நவரட்ணம் அன்று காலிமுகத்திடலில் நடந்த சம்பவமொன்றை இவ்வாறு பதிவு செய்கிறார்: 'தலைவர்களும் தொண்டர்களும் ஹொட்டேல் முடிவிலே (கோல்‡பேஸ் ஹொட்டேல் முன்பதாக) ஒன்று கூடியபோது, அங்கு காத்துக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள் அவர்களை நரிக்கூட்டமொன்று பாய்ந்தாற் போல, மனிதாபிமானமற்ற கோழைத்தனமான முறையில் தாக்கினார்கள். சத்தியாக்கிரகிகள் நிலத்திலே தூக்கி வீசப்பட்டார்கள். சத்தியாக்கிரகிகள் வைத்திருந்த பதாதைகள் கைப்பற்றப்பட்டு, அதில் இணைக்கப்பட்டிருந்த மரக் கோல்கள் - சத்தியாக்கிரகிகளைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டன. சிலர் கீழே போட்டு நசுக்கப்பட்டார்கள், சிலர் அடித்து, உதைக்கப்பட்டார்கள், சிலர் மீது எச்சில் உமிழப்பட்டது. டொக்டர் நாகநாதனைத் தவிர வேறு எந்தவொரு சத்தியாக்கிரகியும் தம்மைத் தாக்கிய காடையர்களை எதிர்த்து வன்முறையைப் பிரயோகிக்க கையைத்தானும் தூக்கவில்லை. ஐந்து காடையர்கள் வரை டொக்டர் நாகநாதனை காலிமுகத்திடலின் எல்லை வரை துரத்தினார்கள். சத்தியாக்கிரகமோ, இல்லையோ, இயல்பிலேயே தன் ஆண்மை சவாலுக்குட்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளாதவர் அவர், அந்த ஐவரையும் தனது கரங்களையும் கால்களையும் பயன்படுத்தியே தாக்கினார். சத்தியாக்கிரகிகள் நாடாளுமன்றப் பக்கத்திலே பொலிஸாரால் தடுக்கப்பட்டனர். அவர்கள் அங்கேயே உட்கார்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். சத்தியாக்கிரகிகளோடு இணைந்து சட்டத்தரணி பரணவிதான மற்றும் பிதா. சேவியர் தனி நாயகம் அடிகளார் ஆகியோரும் சத்தியாக்கிரகத்தில் அமர்ந்து கொண்டனர்'.

அஹிம்சை வழியில் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் இவ்வாறாக இம்சைப் படுத்தப்பட்டார்கள். எஸ்.பொன்னையா தன்னுடைய 'சத்தியாக்கிரகமும் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமும் (ஆங்கிலம்)' என்ற நூலிலே பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க, நாடாளுமன்றத்துக்கு தனது வாகனத்தில் வருகை தந்த போது, அவர் காலிமுகத்திடல் பகுதியைக் கடக்கும் போது, ஒரு பொலிஸ் அதிகாரி அவரை அணுகி, இங்கு பல காடையர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சத்தியாக்கிரகிகளைத் தாக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதனைத் தடுக்க, காடையர்களைக் கட்டுப்படுத்த தாம் ஏதும் நடவடிக்கை எடுப்பதா? என வினவியபோது, பண்டாரநாயக்க 'அதன் சுவையை அவர்கள் உணரட்டும்' என்று கூறிச் சென்றதாக பதிவு செய்கிறார். இந்தச் சம்பவம் உண்மையோ, இல்லையோ, இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் உண்டு. அந்தக் கடமையிலிருந்து அரசாங்க இயந்திரம் தவறியதானது மாபெரும் வரலாற்றுத்தவறாகும்.

இந்த வன்முறைகள் இதனோடு நிற்கவில்லை. சுதந்திர இலங்கை அரசியலில் இரத்தக்கறை படிந்த வரலாறு எழுதப்படத் தயாரானது. காலி முகத்திடலில் தொடங்கிய வன்முறை கொஞ்சம், கொஞ்சமாக மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. கொழும்பு வீதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழர்கள் பாதுகாப்புக்காக வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல் உருவானது. காடையர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். தமிழர்களின் கடைகள் சூறையாடப்பட்டன, தமிழர்களின் வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. தமிழர்களை எப்படியாவது 'தனிச் சிங்கள' சட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக பிக்குகளும் சிங்களப் பேரினவாதிகளும் சேர்ந்து இந்த வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக 'இலங்கை: தேசிய முரண்பாடும் தமிழர் விடுதலைப் போராட்டமும் (ஆங்கிலம்)' என்ற நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.

இப்படியாக நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவிய வன்முறை, அம்பாறை மற்றும் கல்-ஓயாவில் தனது கோர முகத்தை வெளிக்காட்டியது. கல்-ஓயா குடியேற்றத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் பல்லாயிரம் சிங்கள மக்கள், குறைந்த எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்களைச் சூழ  டியமர்த்தப்பட்டிருந்தனர். இங்கு நடந்த வன்முறையில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 150 பேர் கொல்லப்பட்டனர். இனவாதத்தின் கோரமுகம் 150 உயிர்களைப் பலிவாங்கியது. ஆனால், இது இனவெறித்தாக்குதலின் தொடக்கம் மட்டும்தான்.

தனிச்சிங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது ஒரு புறம், அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறைகள் மறுபுறம். தமிழர்களின் பெரும்பான்மைப் பிரதிநிதிகளைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமானதொரு முடிவெடுக்க வேண்டிய நிலையில், ஓகஸ்ட் 19, 1956இல் திருகோணமலையில் கட்சி மாநாட்டைக் கூட்டியது. தமிழில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எனச் சொல்லப்பட்டாலும், ஆங்கிலத்தில் '‡பெடரல் பார்ட்டி' (சமஷ்டிக் கட்சி) என்றே அது பிரபலமாக அறியப்பட்டது. அந்த 'சமஷ்டி'க்கு தனது திருகோணமலை மாநாட்டில் உயிர்கொடுத்தது 'சமஷ்டிக் கட்சி' (இலங்கைத் தமிழரசுக் கட்சி). திருகோணமலை மாநாட்டில் நான்கு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.

01. சமஷ்டி அடிப்படையிலான ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுதனூடாக தமிழ்ப் பிராந்தியங்கள் தன்னாட்சி அதிகாரமுள்ளவையாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

02. தமிழ்மொழியை சிங்கள மொழிக்கு சமனான அந்தஸ்துக்கு மீளக்கொண்டு வருவதனூடாகத் தமிழ் மொழியையும் இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனப்படுத்த வேண்டும்.

03. நடைமுறையிலுள்ள குடியுரிமைச் சட்டங்கள் நீக்கப்பட்டு, இந்நாட்டின் வாழ்தலினூடாக இந்நாட்டை தமது சொந்த வாழ்விடமாகக் கொண்டுள்ள யாவருக்கு குடியுரிமை வழங்கப்படுதல். (பிரஜாவுரிமைச் சட்டத்தினால் பிரஜாவுரிமையை இழந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான நிவாரணமாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது)

04. பூர்வீக தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்த நான்கு தீர்மானங்களும் ஓகஸ்ட் 20, 1957இற்கு முன்பு, அதாவது ஒரு வருடத்துக்குள் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், அஹிம்சை வழிப் போராட்டம் நடக்கும் என 'சமஷ்டிக் கட்சி' (இலங்கைத் தமிழரசுக் கட்சி) அறிவித்தது.

இந்தச் சூழலில் 'தனிச் சிங்களச்' சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இனவாத சக்திகள் பண்டாரநாயக்கவுக்கு அழுத்தத்தைக் கொடுத்தன. ஒருவகையில் பார்த்தால் பண்டாரநாயக்க எதிர்பார்க்காத அழுத்தம் இது. இயல்பில் லிபரல் மற்றும் ஜனநாயகவாதியாகவே பண்டாரநாயக்க இருந்தார். இலங்கையில் முதன்முதலாக சமஷ்டி முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டவர் பண்டாரநாயக்க. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக 'இனவாதத்தை', 'இன-மைய அரசியலை' கையில் எடுத்தவர். இன்று அந்த 'இனவாதம்' அவரை விடுவதாக இல்லை. 'தனிச் சிங்களச்' சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றும் போது கூட முதலில், தமிழ் மக்களுக்கு தமது மொழியில் கல்வி கற்கும் உரிமை, உத்தியோகபூர்வ காரியங்களைக் கூட தமிழிலும் ஆற்றக்கூடிய உரிமை ஆகியவை 'தனிச் சிங்கள' சட்டத்தின் உள்ளடக்கமாக வேண்டும் என்றே பேசினார். அவரைப் பொறுத்தவரையில் 'தனிச் சிங்களம்' என்ற 'லேபிள்' அவரது அரசியல் இருப்புக்கு அவசியமான அரசியல் மூலதனமாக இருந்தது. ஆனால், அவர் உருவாக்கியிருந்த, எழுச்சி பெறச் செய்திருந்த பேரினவாதம் அவரை விடுவதாக இல்லை. 'தனிச் சிங்களம்' என்பது தனியே சிங்களமாக இருக்கவேண்டும் என்ற பேரினவாதத்தின் அழுத்தம் பண்டாரநாயக்கவை இறுக்கியது. இதேவேளை சமஷ்டித் தீர்வு வேண்டியும், தமிழுக்கு சம அந்தஸ்து வேண்டியும் தமிழ்த் தரப்பு பண்டாரநாயக்க மீது அழுத்தத்தைப் பிரயோகித்தது.

இலங்கை தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி)-யின் அழுத்தம், அவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடத்தயாரான நிலையில், பண்டாரநாயக்க கொஞ்சம் இறங்கி வந்தார். 1957, ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் 'தமிழ்மொழியின் நியாயமான பாவனை' பற்றி சில பொதுவான முன்மொழிவுகளை பண்டாரநாயக்க முன்வைத்தார்.

01. தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியிலேயே கல்வி (உயர் கல்வி உட்பட) பெறும் உரிமை.

02. பொதுச்சேவை நுழைவுத் தேர்வை தமிழில் எழுதும் உரிமை. தேர்வாகும் பட்சத்தில், தற்காலிக சேவையாளராக உள்ளபோது ஒரு குறிப்பிட்ட காலத்தினுள் சிங்கள மொழி கற்றுத் தேற வேண்டும்.

03. தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தோடு தமிழில் தொடர்பாடக்கூடிய உரிமை. தமிழில் பதில் பெறக்கூடிய உரிமை.

04. தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி அமைப்புக்கள் அரசாங்கத்துடன் தமிழில் தொடர்பாடக்கூடிய வசதி.

என்பவற்றைத் தனது பொதுவான முன்மொழிவுகளாப் பதிவு செய்தார் பண்டாரநாயக்க. 'சிங்களம் உத்தியோகபூர்வ மொழியானதால், இந்நாட்டின் சிங்களம் பேசாத மக்கள் பாதிக்கப்பட விட முடியாது. ஆதலால், அதனைச் சரிசெய்யவே இந்த முன்மொழிவுகள்' எனக் குறிப்பிட்ட அவர், 'இருதரப்பிலும் தீவிர எண்ணங்கொண்டவர்கள் உள்ளார்கள். ஆனால், தீவிர எண்ணங்களின் அடிப்படையில் நாம் முடிவெடுக்க முடியாது' எனவும் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்கவின் இந்த (முன்னைய நிலையிருந்து) 'இறக்கம்', தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு சாத்தியமான தீர்வுகளை எட்டக்கூடிய ஒரு சூழலைத் தோற்றுவித்தது. இதனைத் தொடர்ந்துதான் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கும் சா.ஜே.வே.செல்வநாயகத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்று, இரு தரப்பு விட்டுக் கொடுப்புக்களின் பேரில் 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் உருவானது.

- See more at: http://www.tamilmirror.lk/154104#sthash.96MK98T6.dpuf
Link to comment
Share on other sites

 
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-6)
 
 

இலங்கை அரசியல் வரலாற்றைப் பற்றி பேசும் யாரும் உச்சரிக்கக்கூடிய முக்கிய பதங்களில் ஒன்று 'பண்டா-செல்வா ஒப்பந்தம்'. தமது திருகோணமலை மாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி)-யின் அழுத்தம், அவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடத் தம்மைத் தயாராக்கிக்கொண்டமை என்பன பண்டாரநாயக்க கொஞ்சம் இறங்கி வரக்காரணமானது. பெப்ரவரி 4, 1957இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி 'தனிச்சிங்கள' சட்டத்தை எதிர்த்து ஹர்த்தால் போராட்டத்தை நடத்தியது.

இந்த ஹர்த்தால் வெற்றிகரமாக இடம்பெற்றது. ஹர்த்தால் தினத்தில் வடக்குக்- கிழக்கு ஸ்தம்பித்துப் போனது. இதன் எதிரொலியாக சிங்களப் பகுதிகளில் எதிர்ப்புக் கிளம்பியது. பெயர்ப் பலகைகளில் காணப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாரூற்றி அழிக்கப்பட்டன. இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை அதிகரித்தது.

தொடர்ந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர்களை முற்றுகையிடும் போராட்டத்தையும் தமிழரசுக் கட்சி நடத்தியது. மட்டக்களப்பு, மற்றும் யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சர்கள் சத்தியாக்கிரகிகளால் முற்றுகையிடப்பட்டார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதி தொழில் அமைச்சர் சிறிவர்த்தன, புகையிரத நிலையத்திலிருந்து வெளியேற முடியாதவாறு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான சத்தியாக்கிரகிகளினால் முற்றுகையிடப்பட்டார். வெளிறேமுடியாத அவர், அடுத்த 'யாழ் தேவியில்' கொழும்பு திரும்பினார்.

இவ்வாறு தொடர்ந்த அஹிம்சை வழிப் போராட்டங்கள்தான் 1957ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் 'தமிழ்மொழியின் நியாயமான பாவனை' பற்றி சில பொதுவான முன்மொழிவுகளை பண்டாரநாயக்க முன்வைக்கக் காரணமானது. நாட்டில் இன முறுகல் நிலை உச்சத்தையடைவதை உணர்ந்த பண்டாரநாயக்க, இதைத் தொடரவிடுவது நல்லதல்ல என்பதை உணர்ந்த நிலையில் கொஞ்சம் 'விட்டுக்கொடுப்புக்கு' தயாரானார்.

இந்த 'விட்டுக் கொடுப்பு' அல்லது 'இறக்கம்', எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கும் - சா.ஜே.வே.செல்வநாயகத்துக்குமிடையிலான (பண்டா-செல்வா) பேச்சுவார்த்தைக்கு வழிகோலியது. முதலாவது பேச்சுவார்த்தை ஹொரகொல்லையிலுள்ள பண்டாரநாயக்கவின் பாரம்பரிய வீட்டில் நடந்தது. இதில் செல்வநாயகம் தலைமையில் வி.ஏ.கந்தையா, என்.ஆர்.ராஜவரோதயம், டொக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன் மற்றும் வி.நவரட்ணம் ஆகியோரும், பண்டாரநாயக்க தலைமையில் அமைச்சர் ஸ்ரான்லி டி சொய்சா மற்றும் நவரண்டராஜா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்பு றொஸ்மீட் பிளேஸிலுள்ள பண்டாரநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்றது. இறுதிப் பேச்சுவார்த்தை ஜூலை 26, 1957இல் நாடாளுமன்ற செனட் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாகப் பிறந்ததே 'பண்டா-செல்வா ஒப்பந்தம்'. இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள், அதன்போது இடம்பெற்ற சுவாரஸ்யங்கள் என இதுபற்றி எழுத நிறைய விடயங்கள் இருப்பினும், 'தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன' என்ற தேடலை நோக்கிய இந்தத் தொடருக்கு அவை மிகை என்பதால் அதனைத் தவிர்க்கிறேன். ஆனால், ஓரிரெண்டு சம்பவங்களைக் குறிப்பிடுவதானால், 'தனிச்சிங்கள' சட்டத்தைக் கொண்டு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு சிங்களத்தில் எழுதவோ, வாசிக்கவோ தெரியாது. இதனை தேஜா குணவர்த்தன வழக்கில் சாட்சியமளித்தபோதே பண்டாரநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, 'சிங்களம் நிர்வாக மொழியாவது உடனடியாக நடக்காது, முதலில் நான் சிங்களம் படிக்க வேண்டும், நானோ மெதுவாகக் கற்றுக்கொள்பவன்' என்று பண்டாரநாயக்க சொல்லிச் சிரித்ததாக, டி.பி.எஸ்.ஜெயராஜ் தன்னுடைய பத்தியொன்றில் குறிப்பிடுகிறார். மேலும் பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டது என்று அன்று இரவு இரு தலைவர்களும் ஊடகங்களின் முன் அறிவித்த போது, உண்மையில் ஒப்பந்தம் எழுத்து மூலத்தில் அமைந்து கைச்சாத்திட்டிருக்கப்பட்டிருக்கவில்லை.

மறுநாளை காலையில் வி.நவரட்ணம் அவர்களால் தயாரிக்கப்பட்டு, மதியத்தின் பின்பு பிரதமர் அலுவலகத்தில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டது. மூன்று மூலப் பிரதிகள் கொண்ட அந்த ஒப்பந்தத்தின் ஒரு மூலப்பிரதி பண்டாரநாயக்கவிடமும் இன்னொன்று செல்வநாயகத்திடமும் மற்றையது, அதை வரைந்த நவரட்ணம் அவர்களிடமும் இருந்தது.

வி.நவரட்ணம் அவர்களிடமிருந்த பிரதி, பின்னாட்களில் இந்திய இராணுவத்தின் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எ‡ப் போராளிகளால் அழிக்கப்பட்டதாக வி.நவரட்ணம் தன்னிடம் தெரிவித்திருந்ததாக தனது பத்தியொன்றில் டி.பி.எஸ்.ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார்.

'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' உள்ளடக்கத்தை நாம் அலசுதல் அவசியமாகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள-தமிழ் அரசியல் தலைவர்களிடையே இடம்பெற்ற முதலாவது முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் என்பது மட்டுமல்லாது, தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்த பண்டாரநாயக்கவுக்கும், அதை எதிர்த்து சமஷ்டி ஆட்சி வேண்டிய செல்வநாயகத்துக்குமிடையில் இணக்கப்பாடு எந்தப் புள்ளியில் இடம்பெற்றது என்பதையே நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இதை இணக்கப்பாடு என்று சொல்வதை விட 'சமரசம்' என்று சொல்வது தான் சாலப்பொருத்தமானதாக இருக்கும். இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இதனை ஓர் 'இடைக்காலச் சமரசமாகவே' பார்த்தது.

'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' முக்கிய அம்சம் 'பிராந்திய சபைகள்'. ஏற்கெனவே பண்டாரநாயக்க அரசு நாடு முழுவதிலும் பிராந்திய சபைகளைத் ஸ்தாபிப்பதற்கான சட்டமூல வரைபுகளைத் தயார் செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' படி வடக்குக்கு ஒரு பிராந்திய சபையும் கிழக்குக்கு இரு பிராந்திய சபைகளும் வழங்க இணக்கப்பாடு ஏற்பட்டது. வடக்கு-கிழக்கை ஒரு பிராந்தியமாகக் கொள்ள விரும்பிய தமிழரசுக் கட்சிக்கு இது திருப்திதரக்கூடியதொன்றாக இருக்கவில்லையெனினும் அதனை செல்வநாயகம் ஏற்றுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தினூடாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் இப் பிராந்திய சபைகள் அமையும் எனவும் அவை நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எனவும், விவசாயம், கூட்டுறவு, காணி, காணி அபிவிருத்தி, குடியேற்றம், கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் மீன்பிடி, வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள், மின்சாரம், நீரமைப்பு மற்றும் வீதிகள் ஆகியன தொடர்பான அதிகாரங்களைக் கொண்டமைந்திருக்கும் எனவும் இணங்கப்பட்டது.

பிராந்திய சபைகளுக்கான நிதி - மத்திய அரசிலிருந்து வரும் எனவும், அத்துடன் வரி வருவாய் மூலமும் இருக்கும் எனவும் இணங்கப்பட்டது. சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த தமிழரசுக் கட்சிக்கு இது திருப்திகரமான ஒரு தீர்வல்ல. ஆனால், விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் இதனை ஏற்றுக்கொண்டது.

இதைத் தவிர இலங்கைத் தமிழரசுக் கட்சி வைத்த முக்கிய கோரிக்கை 'தனிச் சிங்களச் சட்டம்' நீக்கப்பட்டு, தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பது. ஆனால், 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்' படி 'தனிச்சிங்களச் சட்டத்தை' நீக்க பண்டாரநாயக்க மறுத்துவிட்டார். பண்டாரநாயக்கவைப் பொறுத்தவரை அவர் 'தனிச்சிங்களச் சட்டத்தை' பேரினவாத சக்திகளை திருப்திப்படுத்திவிடக்கூடிய ஒரு விஷயமாகக் கருதினார்.

'தனிச்சிங்களச் சட்டம்' இருக்கும் வரை தன்னுடைய ஏனைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வராது என்றும் அவர் நம்பினார். 'பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்படி' தேசிய சிறுபான்மையின் மொழியாக தமிழ் அங்கிகரிக்கப்படும் எனவும், 'தனிச் சிங்களச் சட்டத்துக்கு' இடையூறு ஏற்படாத வகையில் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமிழ் நிர்வாக மொழியாக இருக்கும் எனவும், பண்டாரநாயக்க, நாடாளுமன்றத்தில் முன்பு முன்வைத்த நான்கு முக்கிய முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் எனவும் இணங்கப்பட்டது.

தமிழுக்கு சம-அந்தஸ்து கேட்ட தமிழரசுக் கட்சிக்கு 'தேசிய சிறுபான்மையினரின் மொழி' என்பதுதான் கிடைத்தது. விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் இதுவும் ஏற்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இணங்கப்பட்டது.

உண்மையில் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினை இங்கு தமிழரசுக் கட்சியினால் 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்ற அளவை விட இன்னும் அதிகமாக முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால், தமிழரசுக் கட்சி அதனைச் செய்யத் தவறிவிட்டது. இந்த இணக்கப்பாடுகளின் அடிப்படையில் தாம் திட்டமிட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கைவிட தமிழரசுக் கட்சி இணங்கியது.

'பண்டா-செல்வா ஒப்பந்தம்' ஒரு சமரசங்களின் தொகுப்பு. உண்மையில் இங்கு அதிகம் விட்டுக்கொடுத்தது என்னவோ தமிழ்த் தரப்புதான். பண்டாரநாயக்கவைப் பொறுத்தவரை பிராந்திய சபைகள் என்பது, அவர் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த ஒன்று, அது தமிழருக்கான தனித்துவமான தீர்வு கிடையாது.

மேலும், 'தனிச்சிங்களச் சட்டத்திலும்' மாற்றமில்லை, தமிழ் மொழிக்கும் சம-அந்தஸ்து இல்லை, சமஷ்டி முறையில் தீர்வு இல்லை, இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுமில்லை. ஆகவே பண்டாரநாயக்க இந்த சமரசத்தை ஒரு வெற்றியாகப் பார்த்தார். இன்னொரு பார்வையில் தமிழ்த் தரப்புக்கும் இது கொஞ்சம் முன்னேற்றகரமான விளைவுகளைத் தந்தது.

'தனிச் சிங்களச் சட்டத்தின்' பின் எந்த அங்கிகாரமுமின்றி இருந்த தமிழ் மொழிக்கு 'தேசிய சிறுபான்மையினரின் மொழி' அந்தஸ்து, வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழி, பிராந்திய சபையூடாக அதிகாரப் பகிர்வு என தாம் விரும்பிய சமஷ்டி கிடைக்காவிடினும், முன்னிருந்த நிலையிலும் ஓர் அடியேனும் முன்னேற்றகரமானதொரு தீர்வு கிடைத்தது, அதுவும் இனவாத அரசியல் தலையெடுத்துள்ள பொழுதில் இது கிடைக்கப்பெற்றது சாதகமான ஒன்றே என்று தமிழ்த் தரப்பு சிந்தித்தது.

இந்த ஒப்பந்தத்தை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார். சி.சுந்தரலிங்கம் அவர்கள், சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'சுதந்திரத் தமிழ் இலங்கையொன்றுதான் ஏற்புடைய தீர்வு' என்று கூறினார்.

உண்மையில் 'பண்டா-செல்வா ஒப்பந்தம்' செல்வநாயகத்துக்கோ, அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ திருப்தியைத் தந்திருக்கவில்லை, இதனை வி.நவரட்ணம் அவர்கள் தன்னுடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இது இவ்வாறாக இருக்க பண்டாரநாயக்கவின் தரப்பில் அவர் ஒன்று நினைத்திருக்க, வேறு ஒன்று நடந்தது.

'தனிச் சிங்களச் சட்டம்' தந்த 'வீரன்' என்பதால் தான் எது செய்தாலும் பேரினவாதம் அதனை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு டட்லி சேனநாயக்க தலைவராக இருந்தார்.

ஆனால், கட்சிக்குள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான குழுவினர் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். அரசியல் சித்து விளையாட்டுக்களில் ஜே.ஆர். ஒரு நிபுணர். அரசியல் களநிலைவரங்களைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதில் அவர் ஒரு சாணக்கியன். பேரினவாத சக்திகளை 1956ஆம் ஆண்டு தேர்தலில் விழுந்திருந்த தன்னையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் மீண்டும் எழுச்சிபெறச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இதனைப் பார்த்தார். ஜே.ஆர். பிக்குகள் முன்னணியும் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதை எதிர்த்தது. இது தான் சமயம் என்பதை உணர்ந்த ஜே.ஆர். கொழும்பிலிருந்து - கண்டிக்கு எதிர்ப்பு நடைபயணம் ஒன்றைத் திட்டமிட்டார்

தொடரும்...

- See more at: http://www.tamilmirror.lk/154655#sthash.cX2JGD4K.dpuf
Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-7)
 
28-09-2015 01:23 PM
Comments - 0       Views - 201

article_1443426914-1.jpg-என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, 1956ஆம் ஆண்டு தேர்தல் பெருத்த தோல்வியாகும். அந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழச் சாதகமானதொரு காலத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்கியிருந்தது. 1952இல் டி.எஸ்.சேனநாயக்கவின் மரணத்துக்குப்பின் சேர்.ஜோன் கொத்தலாவலதான் பிரதமராவார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில், அன்றைய ஆளுநர் சோல்பரி பிரபு டி.எஸ்.சேனநாயக்கவின் மகனான டட்லி சேனநாயக்கவை பிரதமராக நியமித்திருந்தார். ஆனால், 1953ஆம் ஆண்டு ஹர்த்தாலைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலகினார் டட்லி சேனநாயக்க, அத்தோடு அரசியலிலிருந்தும் விலகினார்.

அதைத் தொடர்ந்து டட்லி சேனநாயக்கவின் உறவினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான சேர். ஜோன் கொத்தலாவல பிரதமரானார். ஆனால், 1956ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, 1957இல் டட்லி சேனநாயக்க மீண்டும் அரசியலினுள் பிரவேசித்தார். இவ்வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியினுள் இன்னொரு செல்வாக்கு மிக்க தலைவராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன இருந்தார். இந்தத் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீள ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவர சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். குறிப்பாக 1956ஆம் ஆண்டு தேர்தலில் களனித் தொகுதியில் ஆர்.ஜி.சேனாநாயக்கவினால் தோற்கடிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மீண்டும் அரசியல் எழுச்சிக்கான வாய்ப்பொன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இந்தச் சூழலில்தான் 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் உருவாகியிருந்தது. அத்தோடு சிங்களப் பேரினவாத சக்திகள் மத்தியில் அதற்கு எதிர்ப்பும் உருவாகியிருந்தது. பிக்குகள் முன்னணி 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தது. பண்டாரநாயக்க எழுச்சிபெறச் செய்த பேரினவாதம், பண்டாரநாயக்கவுக்கு எதிராகத் திரும்பத் தொடங்குவதை தமக்கு உகந்த சந்தர்ப்பமாக மாற்ற நினைத்தார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. 'கலரி பொலிடிக்ஸ்' என்று சொல்லப்படும் ஜனரஞ்சக அரசியல் சித்து விளையாட்டுக்களில் கைதேர்ந்தவரான ஜே.ஆர். இந்தச் சூழலில் ஒரு நடைப் பயணத்தை நடத்தத் திட்டமிட்டார். முதலில் கொழும்பிலிருந்து, அநுராதபுரம் வரை நடைப்பயணம் செல்வது எனவும், அநுராதபுரத்தை அடைந்ததும் அங்கு போதி மரத்தின் முன்பாக, அதனைச் சாட்சியாக வைத்து நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என எல்லோரும் சத்தியப்பிரமாணம் செய்வது எனவும் திட்டமிட்டார்.

ஆனால், கொழும்பு- அநுராதபுரம் என்பது தூரம் அதிகமானதாகவும், அதிலும் மக்கள் பெருமளவு வசிக்காத காட்டுப்பகுதி அதிகமாகவும் இருப்பதும் சிக்கலானதாகவும், பயன்குறைவானதாகவும் இருந்தது. அதனால் கொழும்பிலிருந்து- கண்டி வரை நடை பயணம் செய்வது எனவும், தலதா மாளிகை புனித தந்ததாது முன்பு 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தின் படி நாட்டைப் பிளவுபடுத்த அனுமதிக்கப்போவதில்லை எனச் சத்தியப்பிரமாணம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஒக்டோபர் 3ஆம் திகதி கொழும்பிலிருந்து நடைபயணமாகப் புறப்பட்டு, ஒக்டோபர் 8ஆம் திகதி பௌர்ணமி (போயா) தினத்தன்று கண்டியை அடைந்து அங்கு கூட்டம் நடத்துவதே திட்டம். அதன்படி கொழும்பிலிருந்து பெரும் பேரணியாக நடைபயணம் புறப்பட்டது.

பண்டாரநாயக்கவும், அவரது அரசாங்கமும் இந்த அரசியல் விளையாட்டின் சூத்திரத்தை அறிந்திருந்தார்கள். இந்த பயணம் வெற்றியளித்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியைப் பலமாக்குவதனூடாகத் தமது அரசாங்கத்தைப் பலமிழக்கச்செய்யும், ஆதலால் இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள்.

அரசாங்கத்தின் தேசியப் பத்திரிகைகள் இந்த நடைபயணத்தைக் கடுமையாக விமர்சித்தன. நடைபயணம் கொழும்பிலிருந்து புறப்பட்டநாளில் நடைபயணம் மீது கல்லெறித்தாக்குதல் நடத்தப்பட்டது, நடைபவனி சென்றவர்கள் தாக்கப்பட்டார்கள்.

முதல்நாள் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் நடைபவனியில் பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இரண்டாம் நாள் நடைபயணம் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்லை வரைசென்று அங்கு இரவு தங்குவதாகத் திட்டம். அத்தனகல்லை பண்டாரநாயக்கவின் ஆதரவுப் பிரதேசம். அங்கு ஜே.ஆர். தங்க முடிவெடுத்ததை தனக்கெதிரான தனிப்பட்ட சவாலாக பண்டாரநாயக்க கருதினார். ஜே.ஆரின் பேரணியைக் காலையிலேயே தடுத்து நிறுத்தும் பொறுப்பு பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் உறவினரும், கம்பஹாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.டி.பண்டாரநாயக்க வசம் ஒப்படைக்கப்பட்டது.

காலையில் இம்புல்கொட சந்தியில் வைத்து பண்டாரநாயக்கவின் தலைமையில் வீதியின் நடுவே கூடியிருந்த பெருமளவிலான ஆதரவாளர்களினால் ஜே.ஆரின் அளவில் சிறுத்திருந்த நடைபவனி தடுத்து நிறுத்தப்பட்டது. பொலிஸாரும் நடைபவனியைத் தொடர்வது வன்முறையை ஏற்படுத்தும் என்பதால் அதனைக் கைவிடச் சொன்னார்கள். ஜே.ஆர். தான் மட்டும் தனியே செல்ல அனுமதி கேட்டார், அதுவும் மறுக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி ஜே.ஆர். நடைபவனியைக் கைவிடுவதாக அறிவித்தார்.

ஆனால், 8ஆம் திகதி திட்டமிட்டபடி கண்டியில் கூட்டம் இடம்பெற்றது. அதில் டட்லியும், ஜே.ஆரும் 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கண்டித்து உரையாற்றியிருந்தனர். ஜே.ஆரின் கண்டி நடைபயணம் தோல்வி அடைந்திருந்தாலும், அதன் நோக்கம் தோல்வியடையவில்லை. 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்துக்கெதிரான அலை பெருக்கெடுத்தது.

'பண்டா-செல்வா' ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஏறத்தாழ 5 மாதங்களாகியும் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் எந்தவொரு நடவடிக்கையையும் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் எடுக்காது இருந்தமை செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியினரிடத்தே அதிருப்தியை அதிகரித்தது. இந்நிலையில் அதிகரித்துவரும் பேரினவாத சக்திகளின் அழுத்தத்தைச் சமாளிக்கவும், சிங்களமயமாக்கலின் ஒரு பகுதியாகவும் பண்டாரநாயக்க அரசாங்கம் 1957ஆம் ஆண்டு  டிசெம்பரில் புதியதொரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது.

அதுவரை மோட்டார் வாகனப் பதிவுகள் இரண்டு ஆங்கில எழுத்துக்களையும், எண்களையும் கொண்டு இருந்தது. புதிய சட்டத்தினூடாக ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக சிங்கள எழுத்தான ස්‍රි (ஸ்ரீ)அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாற்றம் ஒரு தேவையாக இருக்கவேயில்லை, இதனால் அடையப்பெறப்போகும் விளைபயனொன்றும் இல்லை. 'தனிச் சிங்களச்' சட்டம் கூட சிங்களம் மட்டும் பேசும் மக்களுக்கு சாதகமானதொன்றென்று கூறலாம், அதாவது ஆங்கிலம் அல்லாமல் சிங்களம் பயன்படுத்தப்படுவதானது, சிங்கள மக்கள் தங்கள் கருமங்களை ஆற்ற ஏதுவாக அமைந்தது, ஆனால் வாகனங்களில் சிங்கள 'ස්‍රි'யை அறிமுகப்படுத்துவதால் யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது. வெறுமனே சிங்கள பேரினவாத சக்திகளுக்கு கிளுகிளுப்பூட்டுதற்கான ஓர் அடையாளபூர்வ உத்தியாகவே இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இது தமிழ் மக்களை இன்னும் அலட்சியப்படுத்தி, அவர்களைச் சினங்கொள்ளச் செய்யும் நடவடிக்கையானது. இலங்கைத் தமிழரசுக் கட்சி சிங்கள 'ස්‍රි'க்குப் பதிலாக 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தின் கொள்கைப்பிரகாரம் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் 'ஸ்ரீ' பயன்படுத்த சட்டத்தில் இடம்தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் பண்டாரநாயக்கவினால் நிராகரிக்கப்பட்டது.

'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்மொழிப் பாவனைக்கு இணங்கிய பண்டாரநாயக்க, அந்த இணக்கப்பாட்டுக்கு எதிராக தமிழ் 'ஸ்ரீ' யை அனுமதிக்காது, சிங்கள 'ස්‍රි'யைத் திணித்தமையானது தமிழரசுக்கட்சியையும், தமிழர்களையும் கடும் அதிருப்திக்கும், விசனத்துக்கும் உள்ளாக்கியது.

 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஒப்பந்தத்துக்கு முரணான நடவடிக்கையொன்றை எடுத்தமை, ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது தொடர்பில் கடும் ஐயப்பாட்டை தோற்றுவித்தது. இந்நிலையில், சிங்கள 'ස්‍රි' திணிப்பை எதிர்த்து அரசியல் ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாரானது.

ஜனவரி 1, 1958 முதல் தமிழர்களுடைய வாகனங்களில் தமிழ் 'ஸ்ரீ' பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழரசுக்கட்சி வேண்டுகோள் விடுத்தது. பல இடங்களிலும் கூட்டங்கள் கூட்டி இந்தக் கருத்தைப் பரப்பியது. தமிழ் 'ஸ்ரீ'-யைப் பயன்படுத்துவதனூடாக சிங்கள 'ස්‍රි' திணிக்கப்படுவதை எதிர்ப்பதே தமிழரசுக் கட்சியின் நோக்கம். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் வாகனங்களில் சிங்கள 'ස්‍රි'-க்குப் பதிலாக தமிழ் ';ஸ்ரீ'-யைப் பயன்படுத்தினர். இதனைத் தொடர்ந்து '(சிங்கள)› எதிர்ப்பு' போராட்டம் வடக்கிலும், கிழக்கிலும் பரவலாகப் பரவியது.

பஸ்களில் உள்ள சிங்கள 'ස්‍රි' அழிக்கப்பட்டு தமிழ் 'ஸ்ரீ' எழுதப்பட்டது. இதனைப் பற்றி எஸ்.சிவநாயகம் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'யாழ்ப்பாணத்துக்கு சிங்கள 'ස්‍රි' பொறிக்கப்பட்ட பேருந்துகளை அனுப்பியதனூடாக அரசாங்கம் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இந்த அர்த்தமற்ற புதிய சட்டம் தமிழர்களைக் கோபம் கொள்ளச் செய்தது. '(சிங்கள) ස්‍රි'-க்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் எழுச்சி பெற்றது, அதன் ஒரு பகுதியாக அரசாங்க பஸ்களில் உள்ள சிங்கள 'ස්‍රි' அழிக்கப்பட்டு, தமிழ் 'ஸ்ரீ' எழுதப்பட்டது.'

சா.ஜே.வே.செல்வநாயகம் நேரடியாக இரண்டு '(சிங்கள)›' எதிர்ப்பு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். ஒன்று 1958ஆம் ஆண்டு மார்ச்சில் யாழ்ப்பாணத்திலும், மற்றையது 1958ஆம் ஆண்டு ஏப்ரலில் மட்டக்களப்பிலும் இடம்பெற்றது. மட்டக்களப்பில் பஸ்களில் சிங்கள 'ස්‍රි' எழுத்தை மாற்றியமைக்காக குற்றஞ்சாட்டப்பட்ட செல்வநாயகம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். அவருக்கு ஒருவார காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மட்டக்களப்புச் சிறையில் ஒருவாரகாலம் சிறைவாசம் அனுபவித்துத் திரும்பினார் செல்வநாயகம்.

தமிழரசுக் கட்சியின் '(சிங்கள) ස්‍රි' எதிர்ப்புப் போராட்டம் ஒரு புறம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, மறுபுறத்தில் 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் கைவிடப்படவேண்டும் என்ற அழுத்தம் சிங்களப் பேரினவாத சக்திகளினால் கடுமையாக முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியும் தன் பங்குக்கு இந்த அழுத்தத்தைக் கடுமையாகக் கொடுத்தது. இந்நிலையில் ஏப்ரல் 9, 1958 அன்று 100 பிக்குகள் மற்றும் 300 பேர் கொண்ட குழுவொன்றும் அமைச்சர் விமலா விஜயவர்த்தன தலைமையில் பிரதமர் பண்டாரநாயக்கவின் இல்லத்துக்கு முன் சென்று அமர்ந்து 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் இரத்துச்செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

அந்த எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத பண்டாரநாயக்க, தன்னுடைய கபினட் அமைச்சர்களுடன் கலந்துரையாடிய பின் 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். அத்துடன் அக்குழுவினரின் வேண்டுகோளின்படி, தான் 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தை இரத்துச்செய்வதாக பிரதமர் பண்டாரநாயக்க எழுத்துமூலம் அறிவித்தார். சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிங்கள-தமிழ் தலைவர்களிடையே எட்டப்பட்ட முதலாவது உடன்படிக்கை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்குள்ளாகவே, நிறைவேற்றப்படாது கிழித்தெறியப்பட்டது. இங்கு கிழித்தெறியப்பட்டது வெறும் ஒப்பந்தம் மட்டுமல்ல, இலங்கையில் சிங்கள-தமிழ் மக்களிடையேனான இணக்கப்பாடு பற்றிய நம்பிக்கையும் கிழித்தெறியப்பட்டது.

'பண்டா-செல்வா' ஒப்பந்தம் இரத்துச்செய்யப்பட்டதை 'இலங்கையின் இன உறவுகளின் வரலாற்றில் இது ஒரு கவலை பொருந்திய நாள்' என சௌமியமூர்த்தி தொண்டமான் வர்ணித்தார். தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பலரும் இதனைக் கடுமையாகக் கண்டித்தனர். செல்வநாயகம் தமிழரசுக் கட்சி இந்நிலையயை எதிர்கொள்ளத் தயார் என அறிவித்தார். தான் வளர்த்த பாம்பு தன்னைத் தீண்டியதுதான் பண்டாரநாயக்கவுக்கு நடந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ் பிரதேசங்களின் '(சிங்கள) ස්‍රි' எதிர்ப்பு நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றன. இதற்கு எதிராக பௌத்த பிக்குகள் அரசாங்கக் கட்டடிடங்களிலிருந்த பெயர்ப்பலகைகளிலிருந்த தமிழ் எழுத்துக்களை அழிக்கத் தொடங்கினார்கள். அத்தோடு தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்வும், வெறுப்புணர்ச்சியும் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆங்காங்கே தாக்குதல்களும், வன்முறைச் சம்பவங்களும் ஆரம்பமாயின. இந்தச் சம்பவங்கள் மாபெரும் கலவரமாக மாறி இனப்பிரச்சினையின் இன்னொரு கோரமுகத்தை '1958 கலவரமாக' வெளிக்காட்டியது.

- See more at: http://www.tamilmirror.lk/155209#sthash.eInUNsLs.dpuf
Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-8)
 
05-10-2015 09:59 AM
Comments - 0       Views - 152

article_1444019500-w120.jpg-என்.கே.அஷோக்பரன்

சிங்கள 'ஸ்ரீ' எதிர்ப்புப் போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்திக் கொண்டிருந்த வேளையிலே, அதற்கு மறுதாக்கமாக சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், தமிழ் மக்களுக்கெதிரான வன்முறை, நாட்டில் ஆங்காங்கே தலை தூக்க ஆரம்பித்தது. தமிழ் மொழியின் நியாயமான பாவனையை அனுமதிக்க பண்டாரநாயக்க நினைத்த போதும், தீவிர சிங்களத் தலைமைகள் அதனைப் பலமாக எதிர்த்தன.

'முழு இலங்கையும் சிங்களவருக்கே', 'தெய்வேந்திர முனை முதல் பருத்தித்துறை வரை சிங்களம் மட்டுமே' என்ற கோஷத்தை அவர்கள் முன்வைத்தனர். அதனை எதிர்த்து, தமிழ் மொழியின் நியாயமான பாவனையை அங்கிகரிக்கும் திராணி, பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிடம் இருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தின் தோல்வி, சிங்கள 'ஸ்ரீ' அறிமுகம் என தமிழ் மக்களின் குறைந்த பட்சக் கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாமல், தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகும் நிலையே காணப்பட்டது. இந்நிலையில் 1958ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது மாநாட்டை வவுனியாவில் கூட்டியது. இந்த மாநாட்டில் 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் கைவிடப்பட்டதனை எதிர்த்து, அஹிம்சை வழியில் நேரடிப் போராட்டத்தில் இறங்கத் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏற்கெனவே திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து வேலையிழந்த தமிழ்த் தொழிலாளர்களை பொலன்னறுவையில் குடியேற்றும் முயற்சிக்கு, பொலன்னறுவை சிங்கள மக்களிடையே கடுமையான எதிர்ப்புக் காணப்பட்டது. இந்த எதிர்ப்பலையை தமக்குச் சாதகமாக்கிய சிங்கள பேரினவாத அரசியல் சக்திகள், தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு மட்டக்களப்பிலிருந்து வவுனியா செல்லும் கட்சியினரைத் தாக்க இந்த மக்களைப் பயன்படுத்தின.

1958ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி பொலன்னறுவை ரயில் நிலையத்தினுள் அத்துமீறி உட்புகுந்த இந்த வன்முறைக் கும்பல், மட்டக்களப்பிலிருந்து வந்த புகையிரதத்தை அடித்து நொறுக்கினர். அதிர்ஷ்டவசமாக, இந்த வன்முறைக் கும்பல் தாக்கவிருப்பது பற்றிய தகவல் முன்னமே கிடைத்துவிட்டதால், ஒரு பயணியைத் தவிர ஏனையோர் பொலன்னறுவைக்கு முன்பாக வெலிக்கந்தயிலேயே இறங்கிவிட்டனர். ஒரே ஒரு பயணியோடு வந்த ரயில்;, பொலன்னறுவையில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானது. அதன் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த ஒரே ஒரு பயணியும் தாக்கப்பட்டார்.

1958 மே 23ஆம் திகதி, மட்டக்களப்பிலிருந்து, கொழும்பு சென்ற ரயில் 215ஆவது மைல்கல்லுக்கருகே வைத்து தடம்புரளச் செய்யப்பட்டது. இதில் ஒரு பொலிஸ் சாஜனும், புகையிரதத் தொழிலாளியும் உயிரிழந்தனர்.

இன்னும் சிலர் படுகாயமடைந்தனர். வெறும் 47 பேர் மட்டுமே பயணம் செய்த அந்த ரயிலில் பெரும்பான்மையாகப் பயணித்தது சிங்களவர்களே. அந்த ரயிலைத் தடம்புரளச் செய்து தாக்கியவர்களது எண்ணம், வவுனியா செல்லும் தமிழ்ப் பயணிகளைத் தாக்குவதாகும், ஆனால், தவறான ரயிலை அவர்கள் தாக்கியிருந்தார்கள்.

1958ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி, பொலன்னறுவை ரயில் நிலையத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் தாக்கியது. இதில் அங்கு அதிகளவில் நின்றிருந்த சிங்கள மக்களும் தாக்கப்பட்டனர், ரயில் நிலையத்துக்;கும் கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை பொலன்னறுவையில் கடுமையானளவில் அதிகரித்துக் கொண்டிருந்தது.

ஏற்கெனவே, திருகோணமலையிலிருந்து தமிழ்த் தொழிலாளர்கள் இங்கு குடியேற்றம் செய்யப்படும் விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலையில், அன்று எழுந்திருந்த அரசியல் சூழல் அதற்கு எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்தது. இந்த நிலையில், 1958ஆம் மே 25ஆம் திகதி, பொலன்னறுவையில் கூடிய ஏறத்தாழ 3,000 அளவிலான சிங்கள வன்முறையாளர்களால், தமிழ் மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

பெண்கள், கர்ப்பிணிகள் என எந்தவிதப் பேதமின்றி, மனிதாபிமானமின்றி வெறித்தனமான தாக்குதலுக்கு பொலன்னறுவை வாழ் தமிழ் மக்கள் முகம் கொடுத்தனர்.

பொலன்னறுவையைப் பொறுத்தவரை அங்கு பொலிஸாரின் அளவு குறைவாகவே காணப்பட்டது. மூவாயிரம் அளவிலான வன்முறையாளர்களைச் சமாளிக்குமளவுக்கு அவர்களுக்கு ஆட்பலமிருக்கவில்லை.

உடனடியாக மேலதிக படைகளைக் கேட்டும், அரசாங்கம் இந்த வன்முறைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதே 1958ஆம் ஆண்டு மே 25இல் நாட்டின் ஏனைய பாகங்களிலும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.

இத்தகையதொரு சம்பவத்தில் நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் மேயரான டி.ஏ.செனவிரட்ன, மட்டக்களப்பில் உயிரிழந்தார். டி.ஏ.செனவிரட்ன மட்டக்களப்பில் வைத்துக் கொல்லப்பட்டமைதான் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் வெடிக்க காரணம் என பிரதமர் பண்டாரநாயக்க, மே 26ஆம் திகதி சொன்னார்.

ஆனால், டி.ஏ.செனவிரட்ன கொல்லப்பட்ட மே 25க்கு 3 நாட்களுக்கு முன்பதாக, மே 22 இலேயே வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பமாகிவிட்டன. தமிழ் மக்களுக்கு எதிரான ஈவிரக்கமற்ற இனவெறித் தாக்குதலுக்கு பிரதமர் பண்டாரநாயக்க காரணம் கற்பித்தாரே ஒழிய, அதனைத் தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் அதுவரை எடுக்கவில்லை. இதைப் பற்றி தனது 'எமர்ஜென்ஸி 58 (ஆங்கிலம்)' நூலில், 'சிலோன் ஒப்சேவர்' பத்திரிகையின் ஆசிரியராக அன்று இருந்த டாஸி விட்டாச்சி பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார்: 'செனவிரட்னவின் பெயரை மட்டும் பிரதமர் தனியே சுட்டிச் சொன்னமைக்குக் காரணமென்ன? கடந்த நாட்களில் பல மக்களும் உயிரிழந்துள்ளார்கள். செனவிரட்ன ஒரு செல்வந்தர் என்பதுதானா அவரது பெயரை மட்டும் இப்படியொரு முக்கியமான சூழலில் சுட்டிக் காட்டுவதற்குக் காரணம்?'.

சா.ஜே.வே. செல்வநாயகமும், பிரதமர் பண்டாரநாயக்க, செனவிரட்னவின் மரணத்தை சுட்டிக்காட்டியதை கண்டித்தார். செனவிரட்னவின் மரணம் கலவரத்தால் வந்ததா, தனிப்பட்ட பகை காரணமாகக் கொல்லப்பட்டாரா என்பதைக் கண்டறியாது, அன்றைய சூழலில் பிரதமரானவர் செனவிரட்னவினது பெயரைப் பயன்படுத்தியமை மிகத் தவறானது என்று பின்பு நாடாளுமன்றில் பேசிய செல்வநாயகம் சுட்டிக்காட்டினார்.

1958ஆம் ஆண்டு மே 25 - 26 அளவில், கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கூட வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன. புறக்கோட்டை, மருதானை, கொம்பனித்தெரு, வெள்ளவத்தை, தெஹிவளை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் மீது வன்முறையாளர்கள் இனவெறித்தாக்குதலை நடத்தினர். தமிழ் மக்களின் வீடுகள், கடைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

1958ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி காலையில் ஆர்.ஈ.ஜயதிலக தலைமையிலான பல்லினக் குழுவொன்று பிரதமர் பண்டாரநாயக்கவை அவரது ரொஸ்மீட் பிளேஸ் இல்லத்தில் சந்தித்து உடனடியாக அவசரகால (எமர்ஜென்ஸி) பிரகடனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கு பண்டாரநாயக்க 'நீங்கள் (சிறிய விடயத்தை) மிகைப்படுத்துகிறீர்கள். நிலைமை அவ்வளவுக்கு மோசமில்லை' எனப் பதிலளித்தார். பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு அவசரகாலப் பிரகடனம் செய்வதில் நிறையவே தயக்கம் இருந்தது.

1953ஆம் ஆண்டு ஹர்த்தாலின் போது அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்க அவசரகாலப் பிரகடனம் செய்ததும், அதனைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் பிரபல்யமிழந்ததும், டட்லி சேனநாயக்க அதன் விளைவாகப் பதவி விலகியதும், அவசரகாலப் பிரகடனம் செய்வதில் பண்டாரநாயக்கவுக்கு தயக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக இருந்திருக்கும். அவசரகாலப் பிரகடனத்தை பண்டாரநாயக்க தோல்வியின் சாட்சியாகப் பார்த்தார் என்கிறார் அன்றைய 'சிலோன் ஒப்சேவர்' ஆசிரியர் டாஸி விட்டாச்சி. அதே 27ஆம் திகதி இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரும் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்யுமாறு பிரதமர் பண்டாரநாயக்கவிடம் கோரியிருந்தார். ஆனால், பண்டாரநாயக்க எந்த முடிவும் எடுக்கவில்லை.

அதே 1958ஆம் ஆண்டு மே 27இல் பாணந்துறையில் ஒரு வதந்தி பரவியது. பாணந்துறையிலிருந்து மட்டக்களப்புக்குக் கற்பிக்கச் சென்ற சிங்கள ஆசிரியை ஒருவர், அங்கு தமிழ் வன்முறைக் கும்பலால் மார்பகங்கள் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது. இதன் விளைவாக பாணந்துறைப் பகுதியில் தமிழர்களின் கடைகள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டன. இந்த இனவெறிக்கும்பல் பாணந்துறையிலிருந்த இந்துக் கோவிலொன்றுக்குத் தீவைக்க முயற்சித்தது. அது தோல்வியடையவே, அங்கிருந்த கோவில் ஐயர் ஒருவரை உயிருடன் எரித்தார்கள்.

மட்டக்களப்பு ஆசிரியர் பற்றிய வதந்தி கல்வியமைச்சுக்கும் எட்டவே, அவர்கள் அதைப்பற்றி விசாரிக்க ஓர் அதிகாரியை அனுப்பிவைத்தனர். அவரது அறிக்கையில், அந்த வதந்தியில் இம்மியளவும் உண்மை இல்லை எனவும், பாணந்துறையிலிருந்து சென்று மட்டக்களப்பில் ஓர் ஆசிரியர் கற்பிப்பதாகப் பதிவுகளிலே இல்லை எனவும் தெரிவித்தார். இதைப் போல பல வதந்திகள் பரவின. துளியேனும் உண்மையில்லாத இந்த வதந்திகள் இனவெறியையும் வன்முறையையும் தோற்றுவித்தன. மட்டக்களப்பு, ஏறாவூரிலும் கடுமையான இனவெறித்தாக்குதல் இடம்பெற்றது. கொழும்பில் பரவலாகத் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ் மக்களுடைய வீடுகள், கடைகள், வியாபாரஸ்தலங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டன, தீயிட்டுக் கொழுத்தி எரிக்கப்பட்டன. 1958 கலவரத்தின் வன்முறைச் சம்பவங்கள் பற்றி விரிவாக பல

நூல்கள் பதிவு செய்துள்ளன. இதில் டாஸி விட்டாச்சி எழுதிய 'எமர்ஜென்ஸி 1958 (ஆங்கிலம்)' முக்கியமானதொரு ஆவணம். இலங்கையின் முன்னணி பத்தரிகையான 'சிலோன் ஒப்சேவரின்' அன்றைய ஆசிரியரான டாஸி விட்டாச்சி 1958இன் துன்பியல் நிகழ்வுகளைக் காத்திரமாகப் பதிவுசெய்திருக்கிறார். தமிழர்களை அடையாளங்காண முயற்சித்த விதம், பௌத்தரல்லாத சிங்களவர்களும் தாக்கப்பட்டமை பற்றிய பதிவுகள் முக்கியமானவை. ஏனென்றால், இவை இத்தோடு முடிந்துவிடவில்லை. இலங்கையின் இரத்தம் தோய்ந்த இனப்பிரச்சினை வரலாற்றில் இடம்பெற்ற ஒவ்வொரு கலவரத்திலும் இது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதைக் காணவிளையும் போது, இலங்கையில் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதையைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் உணர்ந்துகொள்ளுதல் முக்கியமானதாகும். சுதந்திர இலங்கை வரலாற்றில் 1956ஆம் ஆண்டு கல்ஓயா கலவரத்துக்;குப் பின்னர், தமிழ் மக்கள் மிகக்கொடூரமானதொரு இனவெறித் தாக்குதலை நாடுதழுவிய ரீதியில் 1958ஆம் ஆண்டு மே மாத இறுதியில் சந்தித்திருந்தனர்.

தமிழ் மக்களது மொழியுரிமை பறிக்கப்பட்டது, அவர்கள் மீது சிங்கள மொழி திணிக்கப்பட்டது, சிங்கள 'ஸ்ரீ' அவர்களது வாகனங்களில் பொறிக்கப்பட்டது, இதை அஹிம்சை வழியில் தமிழ்த் தலைமைகள் எதிர்க்க விளைந்தபோது, தமிழ் மக்கள் மீது இனவெறித்தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் பிரதமர் பண்டாரநாயக்கவிடம் நிச்சயம் இருந்தது. ஆனால், அதை அவர் செய்யவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை. 1958 மே 27 நண்பகலை நெருங்கும் வேளையில், அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்க, மரபினை மீறி, பிரதமர் பண்டாரநாயக்கவை, பிரதமரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்தார்.

மதியமளவில், பிரதமரின் சம்மதத்தோடு, ஆளுநர் சேர் ஒலிவர் குணத்திலக்க அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார். நாடு தழுவிய ரீதியில் வன்முறையை அடக்க இராணுவம் மற்றும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். மொழிப் பிரச்சினை தொடர்பில் இருவேறு தீவிர எல்லைகளிலிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (சமஷ்டிக் கட்சி), தேசிய விடுதலை முன்னணியும் (ஜாதிக விமுக்தி பெரமுண) தடைசெய்யப்பட்டன.

- See more at: http://www.tamilmirror.lk/155733#sthash.1DFIi0g8.dpuf
Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 09)
 
12-10-2015 09:32 AM
Comments - 0       Views - 73

article_1444622729-old.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

1958ஆம் ஆண்டு, அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்கவினால் அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் முழு வீச்சாக இராணுவமும், பொலிஸும் கலவரத்தை அடக்குவதில் மும்முரம் காட்டினர்.

இராணுவமும், முப்படையும், பொலிஸும் அன்று ஒப்பீட்டளவில் நேர்மையாக, பக்கச்சார்பின்றி தம் கடமையைச் சரிவரச் செய்யும் அமைப்புக்களாக இருந்தன. பல்லினத்தவர்களும், முப்படையிலும், பொலிஸிலும் இருந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணம் என இலங்கையின் புகழ்பெற்ற நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான பிரட்மன் வீரக்கோன், 'ரெண்டரிங் அன்டு ஸீஸர்' (ஆங்கிலம்) என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். ஆனால், இதுபோன்ற நிலை இதன் பின்னர் இடம்பெற்ற பல்வேறு கலவரங்களில் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அவசரகால நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (சமஷ்டிக் கட்சி), தேசிய விடுதலை முன்னணியும் (ஜாதிக விமுக்தி பெரமுண) தடைசெய்யப்பட்டன. இவ்விரு அமைப்புக்களையும் இந்தப் பிரச்சினையின் மூலகாரணமாக காட்டியே அரசாங்கம் இந்தக் கட்சிகளைத் தடைசெய்தது.

அவசரகாலப் பிரகடனம் செய்த பின் நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்க பத்திரிகையாளர்களோடு உரையாடும் போது, 'இந்தக் இனக்கலவரம் தற்செயலாக எழுந்த ஒன்று அல்ல. இதன் பின்னால் மிகப்பெரிய சூத்திரதாரி இருக்கிறார். அவர் இதனைத் திட்டமிட்டு, தாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்திருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டார். இந்தக் கலவரத்தின் காரணகர்த்தாக்கள் யார் என்பது தொடர்பில் நிறைய வதந்திகள் அன்று உலவின். ஆளுங்கட்சிக்குள் இருந்த வலது சார்பான தரப்பு இதனை ரஷ்யாவின் வேலை என எண்ணியதுடன், கம்யூனிஸ்ட் கட்சியும் தடைசெய்யப்பட வேண்டும் என விரும்பியது. ஆளுங்கட்சியின் இடதுசாரி தரப்பு இதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி, குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன இருப்பதாக எண்ணியது. அன்றைய காலகட்டத்தில் இடதுசாரிகளுக்கு அச்சமூட்டத்தக்க தலைவராக ஜே.ஆர். இருந்தார் என்று தனது 'எமர்ஜென்ஸி 58 (ஆங்கிலம்)' நூலில் பதிவுசெய்கிறார் டாஸி விட்டாச்சி.

இந்நிலையில், கொழும்பையும், கொழும்பை அண்டிய பகுதிகளிலும் ஏறத்தாழ 10,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக நின்றனர். வீடுகள் எரியூட்டப்பட்டு, தமிழர்களின் கடைகளும், வர்த்தக நிலையங்களும் சிதைக்கப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு, மரணத்தின் விழும்பில் தப்பியொட்டி அநாதரவாய் நின்ற அம்மக்களை அரசாங்கம் தற்காலிக அகதிமுகாம்களில் வைத்திருந்ததுடன், ஒரு பகுதியினரை கொழும்பிலிருந்து கப்பலேற்றி பருத்தித்துறைக்கு அனுப்பிவைத்தது! கொழும்பில் அகதிகளான தமிழ் மக்களை யாழ்ப்பாணத்துக்;கு கப்பலேற்றி அனுப்பியதனூடாக தமிழர்களுடைய மண் அது என்பதை அரசாங்கம் சொல்லாமல் சொல்லியிருந்தது. காலங்காலமாக கொழும்பில் வசித்த தமிழர்கள்கூட அன்று அகதிகளாய் யாழ் மண்ணுக்கு கப்பலேற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

1958 மே 22 தொடங்கிய கலவரம் அடுத்தடுத்த நாட்களில் உக்கிரமடைந்து, மே 27ஆம் திகதி நண்பகலுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட அவசரகாலப்பிரகடனத்தை தொடர்ந்து தணியத்தொடங்கியது.

ஜூன் 3ஆம் திகதி, நிலைமைகளை ஆராயும் பொருட்டு நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சிக் குழுக் கூட்டம் பிரதமர் பண்டாரநாயக்க தலைமையில் கூடியது. 'கனவான்களே, நான் நிலைமையை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டேன். இந்த அரசாங்கத்தை தூக்கி எறிந்துவிடலாமென்ற தவறான நோக்கத்துடன் இருந்த குழுக்களெல்லாம் கடந்த இரண்டு வாரங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் உடைப்பதில் ஒன்றிணைந்தன. அந்தக் காடையர்களை தடுத்து நிறுத்துவதில் நாம் வெற்றிகண்டுவிட்டோம்' என அந்தக் கூட்டத்தில் பிரதமர் பண்டாரநாயக்க அறிவித்தார். சமஷ்டிக் கட்சியைத் (இலங்கை தமிழரசுக் கட்சி) தடைசெய்த போதிலும் அதன் தலைவர்கள் இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியை, எஸ்.டி.பண்டாரநாயக்க (கம்பஹா), பனி இலங்ககோன் (வெலிகம) ஆகிய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரநாயக்கவிடம் அங்கு கேட்டனர்.

' நாட்டின் எந்தப் பகுதிகளில் தமிழர்கள் இருந்தாலும் பலம் பொருந்தி வருகிறார்கள், சிங்களவர்களை அவர்கள் இல்லாமல் செய்துவிடுவார்கள். இதனை இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறதா?' என்று உணர்ச்சி பொங்கக் கேட்டார் ஹொரண தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாகர பலன்சூரிய.

 இதற்கும் மேலாகச் சென்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் ராஜபக்ஷ, 'அவர்களை (தமிழர்களை) அழித்துவிடுவோம்!' என்று கத்தினார். இது பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு சினத்தை ஏற்படுத்தியது. 'நீங்கள் உண்மையாகவே தமிழர்களை அழிப்பது பற்றி சிந்திக்கிறீர்களா? இந்த அரசாங்கத்துக்கு அது போன்ற எந்த எண்ணமுமில்லை. இந்தக் கருத்தை ஹம்பாந்தோட்டை எம்.பி. லக்ஷ்மன் சொன்னதைக் கேட்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.

தமிழ்ப் பெண்மணியை மணந்துள்ள நீங்களா இப்படிச் சொன்னது லக்ஷ்மன்?' எனக் கேட்டார் பிரதமர் பண்டாரநாயக்க. தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பிரதமர் பண்டாரநாயக்க, 'இந்தநாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சாந்தியுடனும், சமாதானத்துடனும் வாழ வேண்டும். எனது எண்ணமென்னவெனில் நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றாக வாழவேண்டும். உங்களுடைய பிரதமராகச் சொல்கிறேன், இந்த இலக்கை அடைவதற்காகவே என்னுடைய அரசாங்கம் வேலை செய்யும்' என்று தீர்க்கமாகச் சொன்னார்.

ஜூன் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சா.ஜே.வே.செல்வநாயகம் உரையாற்றினார். ஒரு தளர்ந்து போன செல்வநாயகமாக அவர் காணப்பட்டார். முதல்நாள் அகதிமுகாமில் அவர் கண்டவை, கேட்டவை எல்லாம் அவரைத் தளர்வடையச் செய்திருந்தன எனப் பதிவு செய்கிறார் டாஸி விட்டாச்சி. இரவு 10 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறிய தமிழரசுக்கட்சி (சமஷ்டிக் கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். சா.ஜே.வே.செல்வநாயகம், டாக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டியிலிருந்து அவர்களது வீட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்களது வெளியுலகத் தொடர்பு முற்றாக தடைசெய்யப்பட்டது. கொழும்பில் வீடுகள் இல்லாத ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு 'கோல் ‡பேஸ் ஹொட்டேலின்' இரண்டாவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டனர். வி.ஏ.கந்தையா, டாக்டர். வி.கே.பரமநாயகம், வி.என்.நவரட்ணம், என்.ஆர்.ராஜவரோதயம், சி.வன்னியசிங்கம், சி.ராஜதுரை, அ.அமிர்தலிங்கம் ஆகிய தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள். இதனை விட, ஏறத்தாழ 150 அளவிலான (சில முஸ்லிம்களும் உள்ளடங்கலாக) தமிழரசுக்கட்சியினர் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தடுத்துவைக்கப்பட்டனர். இத்தோடு ஜாதிக விமுக்தி பெரமுணவைச் சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சொகுசான வசதி (அவர்களது வீட்டில் அல்லது 'கோல் ‡பேஸ் ஹொட்டலில்' தடுத்துவைக்கப்படுதல்) கைது செய்யப்பட்ட சிங்களவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற விமர்சனம் பிரதமர் பண்டாரநாயக்க மீது வைக்கப்பட்டது.

அவசரகாலப் பிரகடனம் என்பது அங்கிகாரம் பெற்ற காட்டாட்சி என்ற விமர்சனத்தில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் 'அவசரகாலத்தில்' எதையும் செய்யும் அதிகாரம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவிடும். ஒரு சர்வாதிகாரியின் பலம், 'அவசரகாலத்தில்' ஒரு ஜனநாயக நாட்டின் தலைவருக்கும் கிடைத்தவிடும். ஜனாநயக நாடொன்றில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படைச் சட்டப் பாதுகாப்புக்கள் எல்லாம் செயலிழந்துவிடும். யாரும், எப்போது சுடப்படலாம், கைது செய்யப்படலாம், மரண விசாரணை தேவையில்லை என்ற நிலை 1958 மே - ஜூன் காலப்பகுதியில் உருவாகி 'அவசரகாலம்' நிறைவடையும் வரை தொடர்ந்தது.

பிரதமர் பண்டாரநாயக்க 1958 ஓகஸ்ட் 5ஆம் திகதி தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். தமிழரசுக்கட்சி தடைசெய்யப்பட்டு, அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுதில், மிதவாத தமிழ் மக்களிடையே நல்லெண்ணமொன்றை ஏற்படுத்த பிரதமர் பண்டாரநாயக்க முயற்சித்தார்.

சட்டமூலத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிய பண்டாரநாயக்க, 'இந்த நாட்டில் தீவிரவாதிகளின் அளவு, அது தமிழராக இருந்தாலென்ன சிங்களவராக இருந்தாலென்ன, மிகச்சொற்பமே. ஆனால், பெரும்பான்மையானவர்கள் நியாமும், மிதவாதமும் மிக்க மக்களே. அந்த மக்கள் எமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தின் கீழ் ஒற்றுமையாக, தன்மானத்துடனும், சுயகௌரவத்துடனும் இணைந்து முன்னேறிச் செல்லவே எண்ணுகிறார்கள்.

 சுதந்திரமென்பது அனைவருக்குமானது - அது சிங்களவருக்கானது, ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் அது தமிழருக்குமானது கூட, அது முஸ்லிம்களுக்கானதும், அது மலே மக்களுக்கானது, அது பறங்கியருக்கானதும், அது எல்லா பிரசைகளுக்குமானது. ஜவஹர்லால் நேரு சொன்னதை நான் ஞாபகமூட்ட விரும்புகிறேன், சுதந்திரம் என்பதன் அர்த்தம், உள்ளக இனமுரண்பாடு, அநீதி மற்றும் சிறுபான்மையினரின் ஒடுக்குமுறை என்றால், சுயராஜ்ஜியம் என்பது நரகத்துக்;குப் போகட்டும்' என்று உரையாற்றினார்.

 'தனிச்சிங்களச்' சட்டம் எழுத முன்பே பண்டாரநாயக்க இதனை யோசித்திருக்கலாம். ஆனால், இந்தப் பொழுதில் பண்டாரநாயக்க இதனையாவது செய்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்த சட்டமூலம் மீதான விவாதத்தில் தடுத்து வைக்கப்பட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்குபற்ற தான் அனுமதிப்பதாக பிரதமர் பண்டாரநாயக்க அறிவித்தார். மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துபேசித்தான் தான் இதுபற்றி முடிவெடுக்க முடியும் என் செல்வநாயகம் பிரதமருக்கு அறிவித்தார்.

பொலிஸ் காவலுடன் தடுத்துவைக்கப்பட்ட உறுப்பினர்கள் செல்வநாயகம் அவர்களது வீட்டில் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தின் பின்பு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் 'சுதந்திர மனிதராக' நாடாளுமன்றக் நடவடிக்கைகளில் பங்கேற்பதானால் பங்கேற்போம் இல்லையெனில் பங்கேற்பதில்லை என முடிவெடுத்தனர். அவர்கள் இல்லாமலேயே தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்ததச் சட்டம் தமிழ் மொழி மூலமான பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி, தமிழ் மொழி மூலம் அரசசேவை பரீட்சைகள் எழுதுதல் (சேவையில் இணைந்தபின் குறிப்பிட்ட காலத்துள் உத்தியோகபூர்வ மொழியை (சிங்களம்) கற்றுத் தேற வேண்டும்), வடக்கு, கிழக்கில் குறித்தொதுக்கப்பட்ட நிர்வாக விடயங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ மொழிக்கு (சிங்களம்) எந்த பட்சபாதமுமின்றி தமிழில் கருமமாற்றுதல் ஆகிய ஏற்பாடுகள் இருந்தன.

ஆனால், இவை சட்டரீதியான அங்கிகாரமுடையவை அல்ல. அதாவது இவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பிரதமரிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டம் 1958ல் நிறைவேற்றப்பட்ட போதும் 1966 டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஆகவே இதை நிறைவேற்றுவதில் பிரதமர் பண்டாரநாயக்க காட்டிய மும்முரத்தை, இதனை நடைமுறைப்படுத்துவதில் அவர் காட்டவில்லை.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க என்ற ஆளுமை இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றின் ஒரு முக்கிய புள்ளி. சுதந்திரத்துக்குப் பின்னராக இனப்பிரச்சினையின், குறிப்பாக மொழிப்பிரச்சினையின் தீவரப் போக்கின் ஆரம்பப்புள்ளி. தன்னுடைய ஒக்ஸ்‡போர்ட் பல்கலைக்கழக அனுபவங்கள் பற்றி எழுதும் போது பண்டாரநாயக்க, அங்கு தனது முதலாவது ஆண்டில் தான் சந்தித்த இனரீதியான பாகுபாட்டை, ஒரு வெள்ளை மனிதன் அல்லாதவன், வெள்ளை மனிதனுக்கு சமனாக உருவாவதிலுள்ள சவாலைப் பற்றி எழுதியவர், தான் உணர்ந்துகொண்ட ஞானமாக சொன்னது 'அவர்களுக்குச் சமனானவனாக நான் ஆவதற்கு, முதலில், நான் அவர்களைவிட உயர்ந்தவனாக ஆகவேண்டும்'. ஏறத்தாழ இதேயொரு நிலைக்கு இலங்கையின் தமிழர்களை தள்ளும் கைங்கரியத்தினை பண்டாரநாயக்க தொடங்கி வைத்தார்.

அதிகாரம் என்ற ஒன்றைக் கைப்பற்றவும், அதனைத் தக்கவைக்கவும் பண்டாரநாயக்க தேர்ந்தெடுத்த பெரும்பான்மை இனவாதம் என்ற ஆயுதம், இன்று அவராலேயே கட்டுப்படுத்த முடியாது அளவிற்கு பரந்துவிரிந்துவிட்டது. இதை நிச்சயமாக பண்டாரநாயக்க உணர்ந்திருப்பார். ஆனால் அதே ஆயுதம் தன் உயிரைப் பறிக்கும் என அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

- See more at: http://www.tamilmirror.lk/156281#sthash.Tv3Qt1Zl.dpuf
Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 10)
 
19-10-2015 09:32 AM
Comments - 0       Views - 82

article_1445227613-dcf.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB(Hons)

தமிழ் மக்கள் தனி வழி அரசியலை விரும்பினார்கள் என்ற கூற்று வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் ஏற்புடையதொன்றல்ல. ஏனெனில், தமிழ் மக்கள், தாமாக தமிழ்த் தேசியத்தை நோக்கிய தனி வழிப் பயணத்தைத் தொடங்கவில்லை. மாறாக, சிங்களப் பேரினவாத அரசியலின் விளைவாக, வேறுவழியின்றி - அதன் மறுதாக்கமாக, தமிழ் மக்களைத் தனி வழி அரசியலை நோக்கிப் போக வேண்டிய சூழல் நீண்ட காலத்தில் உருவானது.

இந்த மாற்றத்தை விதைத்ததில் 'தனிச் சிங்கள' சட்டத்தின் பங்கு முக்கியமானது, ஆகவேதான் அதன் வரலாற்றை ஆழமாக, அகலமாக ஆராய்தல் அவசியமானதாகிறது. காலனியாதிக்கத்தின் விளைவான ஆங்கில மொழியினைத் தவிர்த்து, இந்நாட்டின் சுதேசிய மொழியை காக்கும் நோக்கம் தான் 'உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தின்' நோக்கம் என்றால், அது 'தனிச்சிங்கள' சட்டமாக அன்றி, 'சிங்கள-தமிழ்' சட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறில்லாமல் 'தனிச் சிங்கள' சட்டமாக அதனை அறிமுகப்படுத்தியதனூடாக இந்நாட்டின் சிறுபான்மையினர் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் நிலையை எதிர்கொண்டனர். அடையாளம், மொழி உரிமை, சமத்துவம் என்பவற்றைத் தாண்டி வாழ்வாதாரமும் சிவில் வாழ்வும் பாதிக்கப்படும் நிலையை தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க என்ற அரசியல் ஆளுமை, ஓர் இளைஞனாக இலங்கை அரசியலுள் நுழைந்த போது 'சமஷ்டி முறை' அரசு ஒன்றே இலங்கைக்கு ஏற்ற தீர்வு எனச் சொல்லியிருந்தார். அதே மனிதர், அரசியல் அதிகாரத்தை நோக்கிய தனது பயணத்தில், தன்னுடைய பாதையை சுதேசியம் என்ற முகமூடிக்குள் 'சிங்கள-பௌத்த' இன-மைய அரசியலைக் கொண்டதாக மாற்றிக்கொண்டார். தன்னை 'லிபரல்-சோஷலிசவாதி'யாக காட்டிக்கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, 'சிங்கள-பௌத்த' இன-மைய கொள்கைகளை முன்னிறுத்தியதை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கைங்கரியமென வர்ணிப்பவர்களும் உளர். ஆனால், அவர் அவிழ்த்து விட்ட இனவாத சக்திகளை, அவரால் கட்டுப்படுத்த முடியாது போன இடத்தில் அவர் தோற்றுவிட்டார்.

முதலில் சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கி, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாகக் காட்டிவிட்டு, பின்பு தமிழுக்கும் உரிய இடத்தை வழங்குதல் என்பது பண்டாரநாயக்கவின் திட்டமாக இருந்திருந்தால், நிச்சயமாக அதைச் அவர் செய்யவும் இல்லை, அவர் அவிழ்த்துவிட்ட இனவாத சக்திகள் அவரைச் செய்யவும் விடவில்லை. இந்நிலையில் அதே இனவாத சக்தியின் கரத்தால் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவை அவரது றொஸ்மீட் பிளேஸ் இல்லத்தில் வைத்து, 1959 செப்டெம்பர் 25ஆம் திகதி, தல்துவே சோமராம தேரர் என்ற பௌத்த பிக்குவினது துப்பாக்கியினால் சுடப்பட்டு, சிகிச்சைகள் பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். அவரைச் சுட்டவுடன் சோமராம தேரர் - தான் இதனை நாட்டுக்காகவும், இனத்துக்;காகவும், மதத்துக்;காகவும் செய்ததாகக் கத்திச் சொன்னார்.

தனக்கு இதுபோன்ற ஒரு நிலை வரும், அதுவும் பௌத்த பிக்கு ஒருவரினால் கொல்லப்படுவார் என பண்டாரநாயக்க துளி கூட எண்ணியிருக்கமாட்டார். அதனால்தான் அன்று பிரதமருக்கு பெரியளவில் பாதுகாப்பும் இருக்கவில்லை. தேசத்துக்;கான தனது இறுதிச் செய்தியில் கூட இதனை 'பௌத்த பிக்குவின் காவியுடையைத் தரித்திருந்த ஒரு முட்டாள் செய்த காரியம்' எனவும் 'அவன் மீது இரக்கம் காட்டுங்கள், அவனைப் பழிவாங்க வேண்டாம்' எனவும் பண்டாரநாயக்க கேட்டுக்கொண்டார்.

பண்டாரநாயக்கவைச் சுட்டது தல்துவே சோமராம தேரர்வே என்ற சிங்கள-பௌத்த பிக்கு. ஆனால், அன்றிருந்த அரசியல் சூழலில், பண்டாரநாயக்க சுடப்பட்ட செய்தி நாடெங்கிலும் பரவியபோது, அவரைத் தமிழர் ஒருவர் சுட்டுவிட்டதாகவே வதந்திகள் பரவின. அதுவும் அவரை 'சோமராமன்' எனும் தமிழன் சுட்டுவிட்டான் என்றே வதந்தி பரவியது.

ஆனால், அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்க - பண்டாரநாயக்க சுடப்பட்ட செய்தி எட்டியவுடனேயே அவசரகாலப் பிரகடனத்தை மேற்கொண்டதுடன், அவரைச் சுட்டது தமிழரல்ல என்பதை தெளிவாகச் சொல்லுமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். 1958 கலவரத்தின் தாக்கம், குறிப்பாக கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழ்ந்த தமிழ் மக்களை மீண்டும் கடும் அச்சத்துக்;கு உள்ளாக்கியிருந்தது.

ஒரு பௌத்த பிக்குவான தல்துவே சோமராம தேரரினால் பண்டாரநாயக்க ஏன் சுடப்பட்டார்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. இதைப்பற்றி பல வதந்திகளும் பரவியிருந்த நிலையில். களனி விகாரையின் விகாராதிபதி மாபிட்டிகம புத்தரகித தேரர் இந்தக் கொலைக்கான சூழ்ச்சியைப் புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அன்றைய அரசியலைப் பொறுத்தவரை மாபிட்டிகம புத்தரகித தேரர் ஆதிக்கம் மிக்க ஒருவராகக் காணப்பட்டார்.

வணிகச் செயற்பாடுகளிலும் ஈடுபாடுகாட்டியவராக இருந்த அதேவேளை, 'எக்ஸத் பிக்கு பெரமுணவின்' (ஐக்கிய பிக்கு முன்னணி) முக்கியஸ்தராகவும் இருந்தார். தான் ஆதரிக்கும் அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்குப் பண உதவி செய்பவராகவும் இருந்தார். இந்தக் கொலையை அவர் திட்டமிட்டதற்கு வணிக ரீதியான காரணங்களே முன்னிறுத்தப்பட்டன.

அவர் வேண்டிய சில முக்கிய வணிக ரீதியான உதவிகளை பிரதமர் பண்டாரநாயக்க செய்ய மறுத்தமையே முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டாலும், இதற்காக தல்துவே சோமராம தேரர் எனும் 'சிங்கள-பௌத்த' தேசியவாத உணர்வு பொங்கிய நபரை, பண்டாரநாயக்க அந்தத் தேசியத்துக்கு விரோதமாக மாறுகிறார், துரோகியாகிறார் என்று நாட்டின் மற்றும் 'சிங்கள-பௌத்த' தேசியத்தின் நலனுக்காகவே இந்தக் கொலையைச் செய்யத் தூண்டியிருந்தார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 1956இல் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 'எக்ஸத் பிக்கு பெரமுண' (ஐக்கிய பிக்கு முன்னணி) சார்பில் தேசியவாத சக்திகளை ஒன்றிணைத்து முக்கிய பங்காற்றியவர்களில் மாபிட்டிகம புத்தரகித தேரரும் ஒருவர். அதேவேளை பண்டாரநாயக்க ஆட்சியில், 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து, அதைப் பண்டாரநாயக்கவினாலேயே கிழித்தெறியப்படச் செய்தவர்களில் முக்கியமானவர் மாபிட்டிகம புத்தரகித தேரர்.

இறுதியில் பண்டாரநாயக்கவின் கொலைக்கும் சூத்திரதாரியானார். பரபரப்பாக நடந்த வழக்கு, மேன்முறையீடுகளின் பின், கொலையாளி தல்துவே சோமராம தேரருக்கு மரண தண்டனையும், கொலைக்கு சூழ்ச்சி புரிந்த மாபிட்டிகம புத்தரகித தேரருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன. 1958இல் தனது ஆட்சியில் மரண தண்டனையை சட்டரீதியாக பண்டாரநாயக்க இடைநிறுத்தியிருந்தார்.

ஆனால், அவர் கொலையுண்ட பின், அவரது கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்குதற்காக, அவசர அவசரமாக நாடாளுமன்றத்தினால் மீண்டும் மரண தண்டனை 'முற்காலத்துக்கும் வலுவுள்ள வகையில்' (சநவசழளிநஉவiஎந நககநஉவ) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க விடயமொன்றும் நடந்தது. நாட்டுக்காக, 'சிங்கள-பௌத்த' தேசியத்துக்;காக கொலை செய்த தல்துவே சோமராம தேரர் வழக்கு நடந்துகொண்டிருந்த போதே, வழக்குக்கு பிக்குவினுடையில் வருவதை நிறுத்தியிருந்தார். பின்னர் அவர் தூக்கிலிடப்பட முன்பு கிறிஸ்தவராக மாறிய பின்னே தூக்கிலிடப்பட்டார்.

பண்டாரநாயக்கவின் கொலை இலங்கை அரசியலில் அன்று ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியிருந்தது. பண்டாரநாயக்கவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த விஜயானந்த தஹநாயக்க, பண்டாரநாயக்கவின் கொலைக்குப் பின் பிரதமரானார். காலியின் மக்களாதரவுமிக்க அரசியல்வாதியாக இருந்த தஹநாயக்க ஒரு சுயேட்சை அரசியல்வாதியாகவே இருந்தார். பண்டாரநாயக்கவின் 'மஹஜன எக்ஸத் பெரமுண' என்று கூட்டணி அமைந்தபோது, அதன் அங்கமாகி, பண்டாரநாயக்கவின் அமைச்சரவையிலும் இடம்பெற்றார்.

அன்று பண்டாரநாயக்கவுக்கு அடுத்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பலம்பொருந்திய தலைவராக இருந்தவர் சி.பி.டி சில்வா. பண்டாரநாயக்க கொல்லப்பட்டபோது, சி.பி.டி. சில்வா தனது உடல்நலக்குறைவு சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்தார். அன்று நாடாளுமன்ற அவைத் தலைவராக இருந்த சி.பி.டி சில்வா, தான் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவர் இல்லாத சூழலில் தஹநாயக்கவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள அவரால் முடியவில்லை. பண்டாரநாயக்கவினால் கட்டியெழுப்பப்பட்ட 'மஹஜன எக்ஸத் பெரமுண' என்ற கூட்டணி உள்ளுக்குள் பிளவுபடத் தொடங்கியது.

பிரதமர் தஹநாயக்க தனக்கு எதிராகவும், தனது அரசாங்கத்துக்;கெதிராகவும் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்து. அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டாலும் தொடர்ந்து நாடாளுமன்றின் ஆயுட்காலம் முடிவடையும்வரை (1961 வரை) ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாத சூழலில், நாடாளுமன்றைக் கலைக்குமாறு ஆளுநரிடம் பிரதமர் தஹநாயக்க கேட்டுக்கொண்டதன் பேரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 1960ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.

1960ஆம் ஆண்டு மார்ச் மாதத் தேர்லில், 'மஹஜன எக்ஸத் பெரமுண' என்ற பண்டாரநாயக்கவின் கூட்டணி சிதறிப்போனது. தலைவர் இல்லாத நிலையில், உடனடியாக நேரடி அரசியலுக்கு வரும் எண்ணம் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு இல்லாத நிலையில், அவரது ஆதரவுடன் சி.பி. டி சில்வா தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டது.

லங்கா சமசமாஜக் கட்சி 100 வேட்பாளர்களைக் களமிறக்கியது. பிலிப் குணவர்த்தனவின் கட்சி தனியாகவும், எஸ்.டி.பண்டாரநாயக்க தான் புதிதாகத் தொடங்கிய 'போஸத் பண்டாரநாயக்க பக்ஷயவில்' (போஸத் பண்டாரநாயக்க கட்சி) தனியாகவும், பிரதமர் விஜயானந்த தஹநாயக்க தான் புதிதாகத் தொடங்கிய லங்கா பிரஜாதாந்திர பக்ஷயவில் (லங்கா ஜனநாயகக் கட்சி) தனியாகவும், சிங்கள-பௌத்த தேசியவாத தலைவர்களான கே.எம்.பி.ராஜரட்ண 'ஜாதிக விமுக்தி பெரமுணவில்' (தேசிய விடுதலை முன்னணி) தனியாகவும், இன்னொரு தேசியவாதத் தலைவரான எல்.எச்.மெத்தானந்த சிங்கள பௌத்த தர்ம சமாஜ கட்சியில் தனியாகவும் போட்டியிட்டனர். இந்த நிலையின் சாதகத்தன்மையை உணர்ந்து, மீண்டும் அரசியல் களம் புகுந்திருந்த டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 'இனி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இல்லை' என்ற கோசத்துடன் தேர்தல் களத்தை எதிர்கொண்டது. 

1960ஆம் ஆண்டு தமிழர்களுக்கு சிக்கலுடனேயே பிறந்தது. 1960ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி, 'தனிச் சிங்கள' சட்டம் அமுல்படுத்தப்படும் முதலாவது வேலைநாளாக அமைந்தது. இதனை எதிர்த்து இலங்கை தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி) ஹர்த்தால் போராட்டமொன்றை வடக்கிலும் கிழக்கிலும் அறிவித்தது. மார்ச் மாதம் தேர்தலையொட்டிய பிரசாரங்களில் அனைத்து பெரும்பான்மைக் கட்சிகளும், 'தனிச் சிங்கள' சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவோம் என்பதை வேதவாக்காக முன்மொழிந்தன.

தாம் ஆட்சிக்குவந்தால் 'தனிச் சிங்கள' சட்டத்தை எந்த சமரசமுமின்றி அமுல்படுத்துவோம் என்பது சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றானது. தனியாகப் புதிய கட்சியொன்றின் மூலம் தேர்தலைச் சந்தித்த பிரதமர் விஜயானந்த தஹநாயக்க, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் அனைவரையும் மீள இந்தியாவுக்கே அனுப்புவேன் என்று உறுதிமொழி தந்தார்.

பிலிப் குணவர்த்தன பிரதமராவதற்கு ஆதரவு தருவதாக அறிவித்த மெத்தானந்த, பௌத்த மதத்துக்;கு அரசில் அதன் உரிய உயரிய இடம் வழங்கப்படவேண்டும் எனப் பிரசாரம் செய்தார். சிங்கள-பௌத்த தேசியவாதியான மெத்தானந்தவின் ஆதரவுடன் மார்க்ஸிஸப் புரட்சியாளரான பிலிப் குணவர்த்தன, சிங்கள-பௌத்த இனவாதப் புரட்சியாளரானார். மறுபுறத்தில் எஸ்.டி.பண்டாரநாயக்க இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீண்டும் இந்தியாவுக்கே அனுப்பப்படவேண்டுமென்றும், வெளிநாட்டினரின் சொத்துக்களும், பெருந்தோட்டங்களும் தேசிய மயமாக்கப்பட வேண்டும்மெனவும் பிரசாரம் செய்தார்.

'இலங்கைத் தேசியம்' என்ற முகமூடிக்குள் அப்பட்டமான 'சிங்கள-பௌத்த' பேரினவாத அரசியல் முன்னிறுத்தப்பட்டது. இங்கு அனைத்துப் பெரும்பான்மைக் கட்சிகளினுடைய நிலைப்பாடும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது. அளவுகள் மட்டுமே ஒன்றுக்கொன்று கூடிக்குறைந்தன. டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

1960ஆம் ஆண்டு மார்ச் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை.

- See more at: http://www.tamilmirror.lk/156921#sthash.FiI9LHsh.dpuf
Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 11)
 
26-10-2015 05:01 AM
Comments - 0       Views - 146

article_1445790805-sddd.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB(Hons)

1960ஆம் ஆண்டு மார்ச் 19இல் நடந்த பொதுத் தேர்தலில் 151 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 50 ஆசனங்களையும், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆதரவுடன், சி.பி.டி சில்வா தலைமையில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 46 ஆசனங்களையும் பெற்றிருந்தது.

தமிழர் பகுதிகளில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி 15 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரேயொரு ஆசனத்தை உடுப்பிட்டித் தொகுதியில் 'உடுப்பிட்டிச் சிங்கம்' எம்.சிவசிதம்பரம் வென்றிருந்தார். யாழ்ப்பாணத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட அல் ப்றட் துரையப்பா, ஜீ.ஜீ.பொன்னம்பலத்தைத் தோற்கடித்து நாடாளுமன்றம் ஏகினார். தனது பதிவு செய்யப்படாத ஈழத் தமிழ் ஒற்றுமை முன்னணி சார்பில் சுயேட்சையாகப் போட்டியிட்ட 'அடங்காத் தமிழன்' சி. சுந்தரலிங்கம் வவுனியா தொகுதியில் மற்றொரு சுயேட்சை வேட்பாளரான ரி.சிவசிதம்பரத்திடம் தோல்விகண்டார்.

101 வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்த லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களையும், 89 வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்த மஹஜன

எக்ஸத் பெரமுண 10 ஆசனங்களையும், பிரதமர் விஜயானந்த தஹநாயக்க தலைமையில் அவர் புதிதாக உருவாக்கியிருந்த லங்கா பிரஜாதாந்த்ர பக்ஷய 4 ஆசனங்களையும் பெற்றிருந்தது.

தனது சொந்தத் தொகுதியான காலி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் விஜயானந்த தஹநாயக்க தோல்வியடைந்தார். தனது கட்சிக்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்த நிலையில் தனது சொந்தத் தொகுதியில் சிறப்பாக பிரசாரம் செய்ய முடியாது போனது பிரதமர் தஹநாயக்க தோற்றதற்கு காரணமாக இருக்குமென அன்றைய பிரதமரின் செயலாளராக இருந்த பிரட்மன் வீரக்கோன் குறிப்பிடுகிறார்.

தான் புதிதாகத் தொடங்கிய போதிஸத்வ பண்டாரநாயக்க பக்ஷயவில் கம்பஹா தொகுதியில் போட்டியிட்ட எஸ்.டி.பண்டாரநாயக்க வெற்றிபெற்றிருந்தார். கட்சிகளைத் தாண்டி, தொகுதிகளில் தனிநபர்களின் அரசியல் செல்வாக்குக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்படும் வரை இதுபோன்ற தொகுதி ரீதியில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைமைகளைக் காணக்கூடியதாக இருந்தது.

தேர்தல் முடிவுகளின் பின், எந்தவொரு தனிக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்காத நிலையில் ஆளுநர் ஒலிவர் குணத்திலக்க, அதிகளவான ஆசனங்களைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான டட்லி சேனநாயக்கவை ஆட்சியமைக்க அழைத்தார்.

வெறும் எட்டு கபினட் அமைச்சர்களுடன், டட்லி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் 'மஹ களு சிங்ஹளயா' (பெரும் கறுப்புச் சிங்களவன்) என வர்ணிக்கப்பட்ட பிலிப் குணவர்த்தன தலைமையிலான மஹஜன எக்ஸத் பெரமுண என்பவற்றின் ஆதரவை அவர் எதிர்பார்த்தார்.

தமிழரசுக் கட்சி - தமிழ்மொழிக்குரிய அந்தஸ்து உள்ளிட்ட சில குறைந்தபட்சக் கோரிக்கைகளை முன்வைத்தே ஆதரவளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டிலிருந்தது. இது டட்லி சேனநாயக்கவுக்கு கடும் சவாலாக இருந்தது. 'தனிச்சிங்களச்' சட்டத்தை முழுமையாக அமுலாக்கும் கொள்கையோடு போட்டியிட்டவர்களால், எப்படி தமிழரசுக் கட்சியின் குறைந்தபட்சக் கோரிக்கைகளோடு சமரசம் செய்து கொள்வது இலகுவாக இருக்கவில்லை. இந்நிலையில் டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் சிம்மாசன உரை தோற்கடிக்கப்பட்டது.

டட்லி, சிறிதேனும் தாமதமின்றி நாடாளுமன்றத்தைக் கலைத்து மீளத் தேர்தல் நடத்துமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தினார். இதன்படி, 1960ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

1960ஆம் ஆண்டு ஜூலைத் தேர்தலைப் பொறுத்தவரையில், களநிலைமைகள் மாறியிருந்தன. 1960 மே 24ஆம் திகதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். இது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தேர்தலில் மேலும் வலுச் சேர்த்தது. ஆனால், அவர் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை. பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கொல்லப்பட்டபின், அரசியலுக்கு வருவதை விரும்பாத, பிரதமர் பதவியை தட்டிலே வைத்துத் தந்தாலும் ஏற்கமாட்டேன் என்று சொன்ன ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, 8 மாதங்கள் கடந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

'எனது கணவர் பண்டாரநாயக்கவின் ஜனநாயக சோசலிசக் கொள்கைகளுக்கு மக்கள் தமது ஆணையை வழங்கியிருந்தார்கள். நான் அதனைப் பாதுகாக்க வேண்டும், இல்லையெனில் அடக்குமுறையைப் பிரயோகிக்கும் சக்திகள் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும். எந்த அடக்குமுறைக்கு எதிராக எனது கணவர் தன் உயிரைத் தியாகம் செய்தாரோ, அது தலைதூக்கினால் அவர் தியாகம் வீண்போகும்' என உணர்ச்சி பொங்க தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க. 'பண்டாரநாயக்கவை' சுற்றியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இந்தத் தேர்தல் பிரசாரம் அமைந்தது. சிங்கள இனத்துக்காக தன் வாழ்வைத் தியாகம் செய்த 'போதிசத்துவர்' பண்டாரநாயக்க என்ற உணர்ச்சி அலை சிங்களக் கிராமங்கள் தோறும் பரவியது என சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.

 'தனிச்சிங்கள' சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல், இந்திய வம்சாவளி மக்களை திருப்பியனுப்புதல் ஆகிய கொள்கைகளில் ஸ்ரீமாவோ உறுதியாக இருந்தார். மறுதரப்பில் எதிர்க்கட்சிகள், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை கடுமையாக விமர்சித்தன. தனது கணவனின் உயிரிழப்பிலிருந்து ஸ்ரீமா ஆதாயம் தேடுவதாக விமர்சித்தன. ஸ்ரீமாவை 'அழுகின்ற விதவை' ('வாந றநநிiபெ றனைழற') என்றழைத்தன. இவ்வளவுக்கும் ஸ்ரீமாவோ நேரடியாகத் தேர்தலில் போட்டியிடவில்லை.

1960 மார்ச் தேர்தலில் தனித்துக் களம் கண்ட லங்கா சமசமாஜக் கட்சி ஒரு விடயத்தைப் புரிந்துகொண்டது. தனியே இடதுசாரிச் சோசலிசக் கொள்கைகள் மட்டும் இலங்கையில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு பெறுவதற்குப் பேதாது. முன்னாள் மார்க்ஸிஸப் புரட்சியாளனும், இந்நாள் 'மஹ களு சிங்ஹளயாவுமான' பிலிப் குணவர்தன நிரூபித்துக் காட்டியது போல, சிங்கள-பௌத்த பேரினவாத ஆதரவு நிலையும் அவசியம்.

சோசலிசக் கொள்கைகளும், சிங்கள-பௌத்த தேசியவாதமும் இணையும்போதுதான் வெற்றி கிட்டுகிறது என்பதை லங்கா சமசமாஜக் கட்சி புரிந்துகொண்டது போலும். இந்தத் தேர்தலில் பண்டாரநாயக்கவின் உறவினரும், பிரபல சட்டத்தரணியுமான ‡பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் முயற்சியில், 1956 போலவே,

ஸ்ரீ லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டியில்லா ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டன.

1960 ஜூலை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 98 வேட்பாளர்களைக் களமிறக்கி, 75 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 128 வேட்பாளர்களைக் களமிறக்கி, வெறும் 30 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியது. இலங்கை தமிழரசுக் கட்சி 20 வேட்பாளர்களைக் களமிறக்கி, 16 ஆசனங்களைக் கைப்பறியிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டியில்லா ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும், முறையே 21 வேட்பாளர்களைக் களமிறக்கி 12 ஆசனங்களையும், 7 வேட்பாளர்களைக் களமிறக்கி 4 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.

மஹஜன எக்ஸத் பெரமுண 55 வேட்பாளர்களைக் களமிறக்கி வெறும் 3 ஆசனங்களையே கைப்பற்றியிருந்தது. தனது லங்கா பிரஜாதாந்த்ர பக்ஷயவில் போட்டியிட்டிருந்த முன்னாள் பிரதமர் விஜயானந்த தஹநாயக்க, மார்ச் மாத தேர்தலில் தோல்விகண்டபோதும், இம்முறை 444 வாக்குகள் வித்தியாசத்தில் காலி தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 10 வேட்பாளர்களைக் களமிறக்கியபோதும், உடுப்பிட்டி தொகுதியில் எம்.சிவசிதம்பரம் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். யாழ்ப்பாணத் தொகுதியில் மீண்டும் அல்‡ப்றட் துரையப்பா 298 வாக்குகள் வித்தியாசத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தை வெற்றிகொண்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவி ஏற்றார். உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். உலகமே இலங்கையைத் திரும்பிப் பார்த்த தருணம் அது. பிரித்தானிய பத்திரிகைகள் இதனை சிலாகித்து எழுதியிருந்தன. இந்திரா காந்தி (இந்தியா), கோல்டா மெயர் (இஸ்ரேல்), மார்கிரட் தட்சர் (பிரித்தானியா) என இவருக்குப் பின்பு பலம்பொருந்திய பல பெண் பிரதமர்கள் உருவாகியிருந்தாலும், உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமை ஸ்ரீமாவோ-வையே சாரும். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அன்று தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை.

சோல்பரி யாப்பின் படியான அன்றைய நாடாளுமன்றம், இரு அவைகளைக் கொண்டதாக இருந்தது. மக்கள் பிரதிநிதிகள் என்ற கீழவையையும், செனட் சபை என்ற மேலவையையும் கொண்டதாக, 'வெஸ்ட்மினிஸ்டர்' நாடாளுமன்றத்தையொத்த அமைப்பில் காணப்பட்டது. 30 அங்கத்தவர்களைக் கொண்ட செனட் சபையின் 15 அங்கத்தவர்கள் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். மற்றைய 15 அங்கத்தவர்கள் கீழ்சபையான மக்கள் பிரதிநிதிகள் சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பான செனட்டர் எம்.பி. டி ஸொய்ஸா பதவி விலகி வழிவிட, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க செனட் சபைக்கு நியமிக்கப்பட்டார்.

செனட் சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். இது 'வெஸ்மினிஸ்டர்' மரபுக்கு மாறுபாடாதொன்றாக இருந்தது. 'வெஸ்மினிஸ்டர்' மரபின்படி பிரதமர் எப்போதும் கீழவையான மக்கள் பிரதிநிதிகள் சபையிலிருந்தே நியமிக்கப்படுவார். இதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று வகைசொல்லும், பதிலுரைக்கும் கடமைப்பாடு. மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டியது கடமை, அதனைச் செய்வதற்கு அவர் மக்கள் பிரதிநிதிகள் சபையில் இருப்பது அவசியமாகிறது. இந்த மரபு தகர்க்கப்பட்டு செனட் சபையிலிருந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில், குறிப்பாக இனப்பிரச்சினை வரலாற்றில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க எவ்வளவு முக்கியமான ஒருவரோ, அவரைவிட ஸ்ரீமாவோ முக்கியமான ஒருவராவார். ஸ்ரீமாவின் ஆட்சிக் காலங்கள் சிறுபான்மை மக்களுக்கு மிகச் சவாலானவையாகவே இருந்திருக்கின்றன. 1960-1965, 1970-1977 என அவர் பிரதமராக இருந்த முதலிரண்டு முறையும் சிறுபான்மையினருக்கெதிரான அநேக அநீதிகள் அரங்கேறின. அத்தனையும் சுதேசியம், தேசியம், சமத்துவம், சோசலிசம் என்ற முகமூடிகளை அணிந்து கொண்டிருந்தன. ஆனால், அவற்றின் விளைவுகள் சிறுபான்மையினரையே பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது.

சிம்மாசன உரையின் போது 'தனிச்சிங்கள' சட்டமும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டமும் அமுல்படுத்தப்படும் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும், அரசாங்கத்துக்குமிடையில் 1960 நவம்பர் 8ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. ஸ்ரீமாவோவின் ஆட்சியில் மீண்டும் ஏமாற்றத்தைச் சந்திக்க சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் தயாராகினார்கள்.

- See more at: http://www.tamilmirror.lk/157475#sthash.XizhhNLL.dpuf
Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி- 12)
 
02-11-2015 09:50 AM
Comments - 0       Views - 149

article_1446438101-dc.jpg-என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் 'சுதேசியம்' என்று முகமூடிக்குள்ளாக ஆதிக்கம் பெறத்தொடங்கிய சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடுத்தகட்ட நிலையை, 1960ஆம் ஆண்டு ஜூலையில் ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கத்தில் காணக்கூடியதாக இருந்தது. இந்நாட்டின் தமிழர்கள் மட்டுமல்ல, சிறுபான்மை இனத்தவர்களும், சிறுபான்மை மதத்தவர்களும் கடும்சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதொரு சூழ்நிலையை எதிர்கொண்டனர். இதன் முதல்கட்ட சமிக்ஞைகள் 1960இன் இறுதிப் பகுதியிலேயே வெளிவரத்தொடங்கின.

1960 நவம்பர் 8ஆம் திகதி, பிரதமர் ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கத்துக்கும், சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 'அலரி மாளிகையில்' இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில், அதன் தலைவர் சா.ஜே.வே.செல்வநாயகம், என்.ஆர்.ராஜவரோதயம், டொக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், வி.ஏ.கந்தையா, எஸ்.எம்.ராசமாணிக்கம், அ.அமிர்தலிங்கம், மசூர் மொளலானா மற்றும் வி.நவரட்ணம் ஆகியோரும், அரசாங்கம் சார்பில் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஸ்ரீமாவின் உறவினரும், நிதி அமைச்சருமான ‡பிலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, நீதி அமைச்சர் செனட்டர் சாம் பீ.ஸி.‡பெர்ணான்டோ, வர்த்தக, உணவு மற்றும் மீன்பிடி அமைச்சர் ரீ.பி.இலங்கறட்ண, அவைத் தலைவரும் விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான சி.பி.டி சில்வா, கல்வி மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பதியுதீன் முஹம்மத், அமைச்சர் பி.பி.ஜி.களுகல்ல மற்றும் டொக்டர் சீவலி ரத்வத்தை ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், இதற்கு முன்னர் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தாம் முன்னிறுத்திய முக்கிய கோரிக்கைகளைத் தமிழரசுக் கட்சி மீண்டும் வலியுறுத்தியது. பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை அமுல்படுத்துதல்;, பிராந்திய சபைகளை ஸ்தாபித்தல், தமிழ்மொழியை சிறுபான்மையினரின் மொழியாகவும், வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாகவும் அங்கிகரித்தல், அத்துடன் ஏனைய மாகாணங்களில் வசிக்கும் தமிழ் மக்கள் தமிழ்மொழியில் கருமங்களையாற்றத்தக்க ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தல் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தினர். அத்தோடு, குறிப்பாக அரச சேவையில் தமிழ் மக்கள் இணைவதற்கு பாரிய முட்டுக்கட்டையைத் 'தனிச் சிங்கள' சட்டம் ஏற்படுத்தியுள்ளமையையும், அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசப்பட்டது.

 இந்தப் பிரச்சினையில் புதிய ஆட்சேர்ப்பு மற்றும் ஏலவே சேவையிலுள்ளவர்கள் என்ற இருதரப்பு இருந்தது. 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்துக்கு முன்பாக சேவையில் இணைந்திருந்த தமிழ் பேசும் மக்களுக்கு 'தனிச் சிங்கள' சட்டத்தின் விளைவாக சேவையில் தொடரமுடியாத நிலையிருந்தது. அதாவது சிங்கள மொழியறிவில்லாத, சிங்கள மொழியில் கருமமாற்ற முடியாதவர்கள் பணியினை இழக்கும் சூழலை எதிர்கொள்ள நேரிட்டது. இவர்களை ஆங்கில மொழிமூலத்தில் பணியாற்றவிடுதல் அல்லது சகல பலாபலன்களுடன் அவர்களை ஓய்வு பெறச் செய்தல் என்ற முன்மொழிவை தமிழரசுக் கட்சி முன்வைத்தது.

அவர்களை சிங்களமொழிமூலம் வேலைசெய்ய வற்புறுத்துதல், அது இயலாத பட்சத்தில் அவர்களுக்குரிய பலாபலன்களேதுமின்றி அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்தல் என்பது அநீதியானது என தமிழரசுக் கட்சி கூறியது. மேலும் 'தனிச் சிங்கள' சட்டத்தின் பின்பான ஆட்சேர்ப்பின் போது சிங்களம் அறியாமையைக் காரணம் காட்டி தமிழர்களை ஆட்சேர்ப்பிலிருந்து விலக்கக்கூடாதெனவும், ஆட்சேர்ப்பின் பின் அவர்களுக்கு சிங்களம் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்மென்றும், அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களில் பணியாற்றும் அரச சேவையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் ஆகியோருக்கு 'தனிச் சிங்கள' சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சி கோரியது.

தமிழரசுக் கட்சி இந்தப் பேச்சுவார்த்தைகளில் மிகக் குறைந்தபட்ச கோரிக்கைகளையே முன்வைத்தது. அவர்கள் தனிநாடு கோரவில்லை, சமஷ்டி அரசொன்றைக் கோரவில்லை, அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை, 'தனிச் சிங்கள' சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது கொள்கையாக இருப்பினும், அவர்கள் அதனைக் கோரவில்லை. மாறாக தமிழ் மொழிக்கு சிறுபான்மையினர் மொழி என்ற குறைந்தபட்ச அந்தஸ்தையேனும் தருமாறும், தமிழ் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை தமிழ் மொழியில் செய்வதற்கு குறைந்தபட்ச வாய்ப்பொன்றையேனும் தரும் தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை அமுல்படுத்துமாறும் அதன்படி வடக்கு-கிழக்கில் மட்டுமேனும் நிர்வாக மொழியாக தமிழை மாற்றுமாறும் ஆகக் குறைந்தபட்ச நியாயமான கோரிக்கைகளையே முன்வைத்தனர்.

இந்த வரலாற்றறை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியமாகும். தமிழ் மக்கள் தனிவழி அரசியலை மேற்கொள்ளும் முடிவை இரவோடிரவாக அல்லது அடாவடியாக எடுக்கவில்லை. சமரசமும், அஹிம்சை வழிப் போராட்டமுமே தமிழ்த் தலைவர்களின் வழிமுறையாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் இவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். தனது கணவரும், முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் கனவினை நனவாக்குவேன் என சபதமிட்டு ஆட்சிப்படியேறிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு, அவரது கணவன் நிறைவேற்றிய 'தனிச் சிங்கள' சட்டத்தை அமுல்படுத்த விளைந்தார். ஆனால், அதே எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அதன்பின் நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் பற்றி அவர் கண்டு கொள்ளவில்லை. 1960 நவம்பர் 23ஆம் திகதி மேலும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இருதரப்பும் இணங்கக்கூடிய தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு நிறைய சமரசங்களைச் செய்ய தமிழ்த் தரப்பு தயாராகவே இருந்தது. ஆனால் 'தனிச் சிங்கள' சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதையே அரசாங்கம் விரும்பியது.

இந்நிலையில் நீதி அமைச்சரான செனட்டர் சாம் பீ.ஸி. ‡பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நீதிமன்றங்களின் மொழிச் சட்டமூலம் தமிழரசுக் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தின் மொழியாக சிங்களமொழியை அமுல்படுத்தும் அதிகாரத்தை நீதியமைச்சருக்கு குறித்த சட்ட வழங்கவிருந்தது. நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வடக்கு-கிழக்கில் தமிழ்மொழியை நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என்ற திருத்தத்தை இலங்கை தமிழரசுக் கட்சி முன்வைத்தது. அந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.

இணக்கப்பாடொன்று எட்டப்படுவதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் போது, இந்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டு வந்ததை முதுகில் குத்தும் செயற்பாடாகவே தமிழ்த் தலைவர்கள் பார்த்தனர். தமிழ் மக்கள் நீதியைப் பெறுவதற்குக் கூட சிங்கள மொழி தேவைப்படும் நிலையை இந்தச் சட்டம் உருவாக்கிவிடக்கூடும். இது, இலங்கையிலுள்ள சிங்கள மொழி பேசாத சிறுபான்மையினங்கள் யாவற்றுக்கும் எதிரான அநீதி என்பதுதான் உண்மை. இலங்கை தமிழரசுக் கட்சி வேறுவழியின்றி இதற்கெதிராக தமது வலுவான எதிர்ப்பை காட்ட வேண்டிய அவசியப்பாட்டிலிருந்தது. அரசாங்கத்தோடு நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக தமிழரசுக் கட்சி அறிவித்தது.

இந்நிலையில், 1961 ஜனவரி 1ஆம் திகதி 'தனிச் சிங்கள' சட்டம் முழுமையாக அமுலுக்குவரும் என அரசாங்கம் அறிவித்தது. இது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. 1960 டிசெம்பர் 18ஆம் திகதி கூடிய தமிழரசுக் கட்சியின் செயற்குழு 'தனிச் சிங்கள' சட்டத்தின் கீழான, முதலாவது வேலை நாளான 1961 ஜனவரி 2ஆம் திகதி அன்று ஹர்த்தால் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்தனர். அவ்வண்ணமே மக்களிடம் வேண்டினர்.

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் சா.ஜே.வே.செல்வநாயகம் தனது அறிக்கையில் 'இது இந்த அரசாங்கத்தால் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இன்னொரு வஞ்சனையாகும். 'தனிச் சிங்கள' சட்டம் நிறைவேற்றப்பட்ட போது அன்றைய பிரதமரால், இது சிங்களமல்லாத மொழியில் அரசசேவையில் ஏலவே ஈடுபட்டுள்ளோரைப் பாதிக்காதவாறே அமுல்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் உறுதியளித்திருந்தார்.

இதனை நாம் இன்றைய அரசாங்கத்துக்கு சுட்டிக் காட்டியிருந்தோம். மறைந்த முன்னாள் பிரதமரின் கனவினை நிறைவேற்றுவதாகச் சொல்லும் இந்த அரசாங்கம் முன்னாள் பிரதமரின் உறுதிமொழிகளை மறந்துவிட்டது' எனக்குறிப்பிட்டார். ஹர்த்தால் போராட்டம் திட்டமிட்டபடி நடந்தேறியது.

இதனைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சி நேரடி நடவடிக்கையில் ஈடுபடுத் தீர்மானித்தது. வடக்கு-கிழக்கில் 'தனிச் சிங்கள' சட்டத்தின் கீழ் சிங்களமொழியில் இயங்கும் அரச அலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துதல் மற்றும் 'தனிச் சிங்கள' அமுலாக்கத்துக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டத்தையும் நடத்துதல் எனத் தீர்மானித்தது. அஹிம்சை வழி ஆர்ப்பாட்டங்கள், ஒத்துழையாமைப் போராட்டம் என்பவையெல்லாம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியினால் வெற்றிகரமாகக் கையாளப்பட்டிருந்த உத்திகளாகும்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் அஹிம்சை வழியில் போராடி பிரித்தானியர்களிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது. இதையொத்த அஹிம்சை வழி உத்தியே இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றத் தரக்கூடிய சிறந்த வழியென்று சா.ஜே.வே.செல்வநாயகமும், தமிழரசுக் கட்சியினரும் நினைத்தனர்.

இந்நிலையில், இன்னொரு முக்கிய பிரச்சினையும் தலைதூக்கியிருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இலங்கையிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத்தொடங்கியது. குறிப்பாக ஒரு சில பௌத்த அமைப்புக்கள் இதனை முன்வைத்தன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அன்றைய பாடசாலைகளின் நிலையைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான பாடசாலைகள் கிறிஸ்தவ மிஷனரிகளினால் நடாத்தப்படுபவையாக இருந்தமையே ஆகும்.

கிழக்கில் தேசங்களைப் பிடிக்க வந்த ஐரோப்பியர், தம்முடன் ஆயுதம் தாங்கிய போர்வீரர்களை மட்டுமன்றி பைபிள் தாங்கிய பாதிரியார்களையும் அழைத்து வந்தனர். ஒரு நாட்டைக் கைப்பற்ற ஆயுதங்களும், போர் வீரர்களும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு கைப்பறிய ஆட்சியைத் தக்கவைக்க மக்களாதரவு முக்கியம், அதனை ஏற்படுத்துவதற்கு மதம் என்பது மிகமுக்கியமானதொரு கருவி என்ற அரசியல் சூட்சுமத்தை அவர்கள் நன்கு புரிந்திருந்தார்கள்.

இலங்கை வரலாற்றில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர்களது நோக்கம் கிறிஸ்தவ சமயம் சார்ந்ததாக இருப்பினும் மேலைத்தேய கல்வி முறையின் அறிமுகம், மேலைத்தேய வைத்திய வசதிகள் என அவர்களூடாக பெற்ற நன்மைகளும் அதிகம். மேலும் சுதேசிய மொழிகளுக்கு அவர்கள் செய்த சேவைகளும் அதிகம். ஆனால், ஆங்கில வழிக் கல்வியினூடாக மதமாற்றம் நடப்பதைச் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து பௌத்தர்களும், இந்துக்களும் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார்கள்.

அநகாரிக தர்மபால, ஆறுமுகநாவலர் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இதன் விளைவாக மிஷனரிப் பாடசாலைகளுக்கு நிகராக ஆங்கிலக் கல்வியை வழங்கத்தக்க பௌத்த மற்றும் இந்துப் பாடசாலைகள் உருவாயின. சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவினால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தப் பாடசாலைகள் அனைத்தும் அதனால் பயன்பெற்றன.

இலங்கையில் பாடசாலைகள் என்பவை வெறும் கல்விக்கூடங்களாக மட்டுமின்றி அவை ஒரு கௌரவத்தின் சின்னமாகவும் மாறியிருந்தன. ஒருவர் எந்தப் பாடசாலையில் கல்வி கற்றார் என்பது முக்கியத்துவமிக்கதொன்றாக பார்க்கப்படும் கலாசாரம் இலங்கையில் இன்றுவரை தொடர்வதைக் காணலாம்.

ஒருவர் கல்வி கற்ற பாடசாலையானது, அவரது சமூக அந்தஸ்த்தை தீர்மானிக்கும் கருவியாக இருத்தல் என்பது பிரித்தானியாவின் பிரபுத்துவ பண்புகளிலிருந்து எமது நாட்டுக்கு வந்திருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும், இலங்கையைப் பொறுத்தவரை பாடசாலைகள் என்பது வெறும் கல்விக்கூடம் மட்டுமல்ல அது ஓர் அடையாளச் சின்னமும் கூட என்பதே நிதர்சனம்.

ஆகவே பாடசாலைகளைத் தேசிய மயமாக்கும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் திட்டம் பலதரப்பட்ட சிக்கல்களை, பல மட்டத்திலும் ஏற்படுத்தியது. குறிப்பாக கத்தோலிக்கர்களின் கடும் எதிர்ப்பை ஸ்ரீமாவோ அரசாங்கம் எதிர்கொண்டது.

- See more at: http://www.tamilmirror.lk/158084#sthash.052TRCos.dpuf
Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 13)
 
09-11-2015 09:59 AM
Comments - 0       Views - 2

article_1447044780-dc.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

பாடசாலைகளைத் தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை, 1930களிலிருந்தே பௌத்த அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கோரிக்கையாகும். சுதந்திரத்துக்குப் பின்பு இந்தக் கோரிக்கை வலுப்பெற ஆரம்பித்தது. குறிப்பாக 1956இல் எஸ்.டபிள்யூ10.ஆர்.டி.பண்டாரநாயக்க 'தனிச் சிங்கள' சட்டத்தை முன்னிறுத்தி தேர்தலில் வென்ற பின்பு, அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் 'ஏமாற்றப்பட்ட பௌத்தம்' என்ற தலைப்பில் நாட்டில் பௌத்தத்தின் நிலை பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டது.

பௌத்தத்துக்கு அதற்குரிய இடத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நிதியளிக்கும் அனைத்துப் பாடசாலைகளையும் தேசிய மயமாக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தது. ஆனால், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க இது சார்ந்து நடவடிக்கை எடுப்பதை இலாவகமாகத் தவிர்த்துக்கொண்டார். ஆனால், பௌத்த அமைப்புக்களின் அழுத்தம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

காலனித்துவ ஆட்சியில் மதம் பரப்பும் முக்கிய நிறுவனமாக இந்தப் பாடசாலைகள் இருந்ததாகவும், அந்நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும், அன்று காலனித்துவ ஆட்சியில் காலனித்துவ அரசால் நிதியளிக்கப்பட்ட இந்தப் பாடசாலைகளுக்கு இன்றும் சுதந்திர இலங்கை அரசும் நிதி அளித்துக் கொண்டிருக்கிறது எனவும் ஆனால், அங்கு பௌத்த மாணவர்களுக்கு பௌத்தம் கற்பிக்கப்படுவதில்லை. ஆனால், பௌத்த மாணவர்களுக்கு கிறிஸ்தவம் கற்பிக்கப்படுகிறது எனவும் பௌத்த அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தின.

இடதுசாரி மற்றும் கம்யூ10னிஸ்ட் கட்சிகள், குறிப்பாக லங்கா சமசமாஜக் கட்சிக்கும் கத்தோலிக்க திருச்சபைக்குமான உறவு சுமுகமானதாக இருக்கவில்லை. 'மதம் என்பது வெகுஜனங்களுக்கான அபின்' எனச் சொன்ன கார்ள் மாக்ஸின் வழி பின்பற்றும் 'தோழர்களுக்கும்', தமது 'மேயப்பனான' கர்த்தரின் வழி பின்பற்றும் திருச்சபையினருக்கும் இடையில் உடன்பாடு ஏற்படாமை ஆச்சரியமான ஒன்றல்ல.

மேலும் கத்தோலிக்கத் திருச்சபையினர் சுதந்திரத்தின் பின் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமையும், வெளிப்படையாகவே இடதுசாரிக், கம்யூ10னிஸ்ட் கட்சிகளை விமர்சித்தமையும் கத்தோலிக்க திருச்சபை மற்றும் இடதுசாரி, கம்யூ10னிஸ்ட் கட்சிகளிடையே முறுகல் நிலையை உருவாக்கியிருந்தது. 1952ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு தினத்துக்கு முன்பாக முதன்மை குரு வண. போர்டின் பின்வருமாறு கூறியிருந்தார்: 'மனதிலே ஒரு துளியேனும் கிறிஸ்தவ நம்பிக்கையுள்ள எந்தக் கத்தோலிக்கனும் திருச்சபையினால் தடைசெய்யப்பட்ட அரசியல் பாசறையைச் சார்ந்த ஒரு வேட்பாளனுக்கு வாக்களிக்கமாட்டான். அது கம்யூ10னிஸமாக இருக்கலாம், அல்லது ஆண்டவருக்கும், திருச்சபைக்கும் எதிரானதொரு கருமத்தை ஆற்ற விளையும் எந்த அரசியல் கொள்கையாகவும் இருக்கலாம்'.

1956ஆம் ஆண்டு தேர்தலில் சிங்கள-கத்தோலிக்கர்கள், சிங்கள-கிறிஸ்தவர்களின் பெரும்பான்மை ஆதரவு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு இருந்தது. அவர்களும் தங்களைப் பெரும்பான்மைச் சிங்களவர்களாகவே கருதினர், 'தனிச் சிங்கள' சட்டம் என்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் முழக்கத்துக்கும் ஆதரவு தந்தனர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கூட பிறப்பால் ஒரு கிறிஸ்தவரே.

ஆனால், இந்த நிலை 1960இல் மாறியது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியில் பாடசாலைகளை தேசியமயமாக்கும் கோரிக்கை வலுவடைந்தது. அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இதற்கான அழுத்தத்தை வழங்கின. இடதுசாரிக் கட்சிகளும் இதனை ஆதரித்தன. இடதுசாரி கம்யூனி

ஸக் கட்சிகளினுடைய ஆதரவுக்கு அவர்கள் அது தமது கொள்கை சார்ந்த நிலைப்பாடு என வியாக்கியானம் சொன்னாலும், கம்யூனிஸக் கட்சிகளுக்கு எதிரான திருச்சபையின் தொடர்ச்சியான நிலைப்பாடும் அதனால் எழுந்த முறுகல் நிலையும் ஒரு முக்கிய பங்குவகித்தது என்பதை மறுக்க முடியாது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் 1960ஆம் ஆண்டின் 5ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 1961ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டம் என்பவற்றினூடாக அரச உதவிபெற்ற அனைத்துப் பாடசாலைகளையும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் தேசியமயமாக்கியது. இந்தத் தேசிய மயமாக்கலிலிருந்து 38 பிரபல்யமான கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகளுக்கு அவற்றுக்கு அரச நிதியுதவி வழங்கப்படாது மேலும் அவை கட்டணம் வசூலிக்கவும் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவற்றின் விருப்புக்கேற்ப தேசியமயமாக்கலிலிருந்து விலக்களிக்கப்பட்டது.

1960 காலப்பகுதியில், 1,170 கிறிஸ்தவப் பாடசாலைகளும், 1,121 பௌத்த பாடசாலைகளும், இந்து சபைக்கு (இந்து போர்ட்) சொந்தமாக 161 பாடசாலைகளும், ஆசிரியர் கலாசாலையும் மற்றும் வேறு 6,000 பாடசாலைகளும் இருந்தன. தாம் தன்னிச்சையாக எந்தவிதக் கட்டணமும் வசூலிக்காது இயங்க தீர்மானித்த 38 மிஷனரிப் பாடசாலைகளைத் தவிர அனைத்து அரச உதவி பெறும் பாடசாலைகளும் தேசிய மயமாக்கப்பட்டன.

இதனால் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாடசாலைகளே பெருமளவு பாதிக்கப்பட்டாலும், இந்துப் பாடசாலைகளும் கணிசமானளவு பாதிக்கப்பட்டன. இந்து போர்ட்டின் கீழ் இந்து மாணவர்கள் இந்துப் பாரம்பரிய சூழலில் தரமான கல்வி பெறத் தக்க வகையில் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தன.

சேர்.பொன் இராமநாதன், சேர். வைத்திலிங்கம் துரைசாமி, 'இந்து போர்ட்' இராஜரட்ணம் ஆகிய தலைவர்களால் தன்னலமற்ற தூரநோக்குச் சிந்தனையோடு ஸ்தாபிக்கப்பட்ட இந்து போர்ட், இந்து மக்களின் கல்விக்காக 161 பாடசாலைகளை உருவாக்கி நிர்வகித்து வந்தது.

அத்தனையும் 1960-1961இல் தேசிய மயமாக்கப்பட்டது. இந்தத் தேசிய மயமாக்கல் சிங்கள-பௌத்தர்களுக்கு சாதகமானதொன்றாக இருந்தது. பாடத்திட்டங்கள் இனி இலகுவாக மாற்றியமைக்கலாம், அனைத்து பாடசாலைகளிலும் சிங்கள மொழிக் கற்பித்தலை கட்டாயமாக்கலாம், பௌத்த விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்ற நிலை உருவானது. இந்தச் சூழல் சிறுபான்மையினங்களுக்கு சவாலானதொன்றாக இருந்தது.

கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும் இந்தத் தேசிய மயமாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தனர், கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குள் சென்று அவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அரசாங்கம், பொலிஸாரை களத்திலிறக்கி போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முனைந்தது. வத்திக்கான் உடனடியாக தலையிட்டு, தனது பிரதிநிதியாக பம்பாயிலிருந்து கர்தினால்

கிரேஷியஸை அனுப்பி, கத்தோலிக்கர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்தப் போராட்டம் தொடருமானால் அது கத்தோலிக்கர்களையே கடுமையாகப் பாதிக்கும், எதிர்காலத்தில், கத்தோலிக்கர்களின் நிலை மோசமாகும் என வத்திக்கான் நினைத்தது. இந்தச் சிக்கல் நிலை கத்தோலிக்க மற்றும் ஏனைய இன-மதங்களின் உயர் குழாமினரைப் பாதிக்கவில்லை.

அவர்கள் கல்விகற்ற, அவர்களது பிள்ளைகளை அனுப்பிய 'பிரபல்ய' மிஷனரிப் பாடசாலைகள் தேசிய மயமாக்கலிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தன. மாணவர்களிடம் நேரடியாகக் கட்டணம் வசூலிக்காது அந்த 'உயர் குழாமினரின்' பாடசாலைகளை நிர்வகிப்பது அவ்வளவு கஷ்டமானதாக இருக்கவில்லை. இலங்கையின் முக்கிய தலைவர்களின் பிள்ளைகள் கூட அந்தப் பாடசாலைகளிலேயே கல்வி பயின்றனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியும் பாடசாலைகள் தேசியமயமாக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தது. தேசியமயமாக்கலின் பின் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு போதிய நிதியாதாரத்தை அரசு வழங்காமல் விட்டுவிடும் என அவர்கள் அஞ்சினர். மேலும் வடக்கு-கிழக்குக்கு அப்பால், தமிழர் சிறுபான்மையினராக உள்ள பிரதேசங்கிளிலிருக்கும் தமிழ்ப் பாடசாலைகள் கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மயப்படுத்தப்படலாம், அதனால் அங்குள்ள தமிழ் மாணவர்கள் வேறு வழியின்றி சிங்கள மொழியிலேயே கல்வி பயில வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் அஞ்சினர். பாடசாலைகளின் தேசியமயமாக்கலை, சிங்கள மயமாக்கலாகவே தமிழரசுக் கட்சியினர் கண்டனர்.

பாடசாலைகளின் தேசியமயமாக்கல் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுதே, 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்தை ஸ்ரீமாவோ அரசாங்கம் கொண்டுவந்தது. இதனை எதிர்த்து ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழரசுக் கட்சி. தமிழ் மொழியின் பாவனை பற்றிய தமது குறைந்தபட்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தாம் அஹிம்சை வழியிலான நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அறிவித்தது.

1961 பெப்பரவரி மாதத்தில் வடக்கு-கிழக்கு எங்கும் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டங்களையும், ஒத்துழையாமைப் போராட்டத்தையும் தமிழரசுக் கட்சி நடத்தியது. அரசாங்கக் கச்சேரி உட்பட அரச அலுவலகங்கள் முன்பு தமிழரசுக் கட்சியினர் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் நடத்தினர்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு. திருக்கோணமலை, வவுனியா ஆகிய நகரங்களில் அரச அலுவலகங்கள் ஸ்தம்பித்தன. தொடர்ந்து இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டங்களால் அவை சுமுகமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்திடம் குறைந்தபட்சம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தையும் அமுல்படுத்துமாறு கோரப்பட்டபோது, ஸ்ரீமாவோவின் வலதுகரமாகவும், அன்றைய ஸ்ரீமாவோ அரசின் மூளையாகவும் இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, 'அது உருவாக்கப்பட்ட காலச்சூழல் வேறுபட்டது. இன்று அதனை நடைமுறைப்படுத்தனால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள தீவிரவாதிகளுக்கு சாதகமானதாக அமையும்' என 1961 பெப்ரவரியில் நடந்த அமைச்சரவைக் கூட்டமொன்றில் கூறியிருந்தார்.

சத்தியாக்கிரகம் வடக்கு-கிழக்கில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதனைக் கண்டு, கள நிலவரங்களை அறிந்து வர 'இம்புல்கொட வீரயா' எஸ்.டி.பண்டாரநாயக்கவும், அன்று நியமன நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமானும் விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றனர். விமானநிலையத்தில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அஹிம்சை வழியில் நடந்த சத்தியாக்கிரக, ஒத்துழையாமைப் போராட்டங்களையும் கண்டனர். தமிழரசுக் கட்சியனரின் கோரிக்கையோடு கொழும்பு திரும்பியவர்கள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறியபோது, இதுபற்றி பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் பேசுமாறு ஸ்ரீமாவோ சொன்னதாகவும், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் பேசிய போது அவர் 'நாங்கள் விட்டுக்கொடுத்தால் சிங்கள மக்களின் எதிர்வினை எப்படியிருக்கும் என சிந்தியுங்கள்' என அவர் கேட்டதாகவும், அதற்கு தொண்டமான் 'ஆனால் நீங்கள் கடும் நிலைப்பாட்டை எடுக்கும் போது, தமிழ் மக்களின் எதிர்வினையைப் பற்றியும் சிந்தியுங்கள்' எனச் சொன்னதாகவும், அதற்கு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, 'எங்களுக்கு தமிழ் மக்களின் எதிர்வினையைவிட சிங்கள மக்களின் எதிர்வினையே முக்கியமானது எனச் சொன்னதாகவும்', பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் அலட்சியமான பதில் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அவர் 'முதலில் கணவனும் (எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க), பிறகு மனைவியும் (ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க), இப்போது மருமகனும் (பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க) சிங்கத் தீவிரவாதிகளைப் பற்றியே யோசிக்கிறார்கள். தமிழர்கள், தமிழர்களின் உணர்வுகள் பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. இதற்கெல்லாம் சிங்கள இனம் என்றாவது ஒருநாள் விலை கொடுக்க வேண்டி வரும்' எனக் கூறியதாகவும் தனது கட்டுரையொன்றில் கே.ரீ.ராஜசிங்கம் குறிப்பிடுகிறார்.

உண்மையில் கணவனும், மனைவியும், மருமகனும் மட்டுமல்ல, மகளும் கூட இந்தப் பட்டியலில் எதிர்காலத்தில் சேர்ந்து கொண்டார் என்பது இந்த கறுப்பு வரலாற்றின் தொடர்ச்சி. சிங்கள மக்களின் நலன், சிங்கள மக்களின் உணர்வு என குறுந்தேசிய அரசியலுக்குள் சிங்கள மக்களை இழுத்துச் சென்றது இந்த அரசியல் தலைமைகள்தான்.

நேர்மையான நல்ல அரசியல் தலைமை யாவரையும் ஒன்றிணைக்கும், உள்ளடக்கும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பியிருக்கும், ஆனால் பதவிக்கான போட்டியில், மக்களுக்குள் புதைந்துகிடக்கும் குறுந்தேசியவாதத்தையும், பேரினவாதத்தையும் தட்டியெழுப்பி, அதற்கு தமது அரசியலால் உரமிட்டு வளர்த்து, இந்த நாட்டை இனவாதத்தின் விடுபடமுடியாத பிடிக்குள் சிக்கவைத்த கைங்கரியத்தை தொடர்ந்து வந்த எல்லா அரசியல் தலைமைகளும் செய்தன.

1961 பெப்ரவரியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சத்தியாக்கிரக மற்றும் ஒத்துழையாமைப் போராட்டங்கள் கடும் நிலையை அடைந்திருந்தன.

- See more at: http://www.tamilmirror.lk/158663/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B7-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4-#sthash.cZfiizF6.dpuf
Link to comment
Share on other sites

 
 
'தனிச் சிங்கள' சட்ட அமுலாக்கத்துக்கெதிரான அஹிம்சைவழி போராட்டம்
 
 

article_1447648136-dc.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB(Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 14)

1961ஜனவரி 21ஆம் திகதி இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி மாநாட்டில் 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்துக்கெதிராக அஹிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தையும், ஒத்துழையாமை மற்றும் குடியியற் சட்டமறுப்புப் போராட்டத்தையும் முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்னர் தமிழரசுக் கட்சி சார்பில் சா.ஜே.வே.செல்வநாயகம் கையெழுத்திட்ட துண்டுப்பிரசுரம் ஒன்று பொதுச் சேவை உத்தியோகத்தர்களிடையே விநியோகிக்கப்பட்டது.

அந்தத் துண்டுப்பிரசுரத்தில் 'அன்புடைய சகோதரரே, உங்களுக்கெதிராக தனிப்பட்ட குரோதமேதும் எமக்கில்லை. ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் 'தனிச் சிங்கள' சட்டத்தை நீங்கள் அமுல்படுத்தும் பணியிலிருந்தால், உங்களிடம் நாங்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம். சிங்களம் பேசும் மக்களுக்கு சிங்களமொழி எப்படியோ, அதுபோலவே தான் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ்மொழி இருக்க வேண்டும். நீதியற்ற, ஜனநாயகமற்ற அரசாங்கமானது, வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் தமிழ்மொழி நிர்வாக மொழியாக இருக்க வேண்டும் என்ற தமிழர்களின் ஏகமனதான கோரிக்கையை நிராகரித்துவிட்டது. மாறாக, அரசாங்கமானது சிங்களத்தை எங்கள் தொண்டையினுள் திணிக்கப்பார்க்கிறது.

அரசாங்கத்தினது இந்த கொடுங்கொள்கையை எதிர்ப்பதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் பிறப்புரிமைக்காக நாங்கள் வாழ்வா-சாவா என்ற போராட்டத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆதலால், நாங்கள் உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம், நீங்கள் உங்கள் அலுவலகத்தில் சிங்களத்தில் வேலை செய்யாதீர்கள். சிங்கள மூலமான எந்த உத்தியோகபூர்வ தொடர்பாடலிலும் ஈடுபட வேண்டாம். சிங்களத்தில் எந்த முத்திரையையும் பதிக்க வேண்டாம், சிங்களத்தில் கையெழுத்திடவும் வேண்டாம்' எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆங்கிலம் என்பது அந்நிய மொழி, 150 ஆண்டு கால பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலம் நிர்வாக மொழியாக இருந்தது. அக்காலத்தில் கல்விபெற்ற இலங்கையர் ஆங்கிலத்திலேயே கல்வி கற்று தேர்ந்து நிர்வாக சேவையில் ஆங்கிலத்திலேயே பணிபுரிந்தனர். சுதந்திரத்துக்குப் பின், காலனித்துவத்தின் எச்சங்களைத்தாண்டி சுதேசிய மொழிக்கும், கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற வாதம் ஏற்புடையதே.

அநேக காலனித்துவ நாடுகளும் காலனித்துவ அடையாளங்களைக் கைவிட்டு, தமது சுதேசிய அடையாளங்களை மீட்டுக்கொள்ளும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தின. இலங்கையிலும் சுதேசிய மொழிகளையும், கலாசாரங்களையும் மீட்டெடுத்து, அவற்றுக்குரிய இடத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்தத் தவறுமில்லை.

ஆனால், அதனைச் செய்யும் போது பெரும்பான்மையினரின் மொழியான சிங்களத்தை மட்டும் முன்னிறுத்தி, சிறுபான்மையினரின் மொழியான தமிழைப் புறந்தள்ளியமையானது சுதேசியத்தை முன்னிறுத்தும் செயலாக அன்றி, பெரும்பான்மையினரின் பேரினவாதத்தை முன்னிறுத்தும் செயலாகவே அமைந்தது. ஒட்டுமொத்த இலங்கையிலும் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக இருந்தபோதும் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களே பெரும்பான்மையினராக இருந்தனர்.

இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட முன்பு மலையகத்தின் அநேக பிரதேசங்களிலும் தமிழ் மக்களே பெரும்பான்மையினராக இருந்தனர். ஆகவே, தமிழ் மக்களுடைய மொழியுரிமையைப் புறந்தள்ளி, சிங்களத்தைத் திணித்ததானது இலங்கை அரசியல் வரலாற்றில் அழிக்கப்பட முடியாத பெருங்கறையாக உருவாகிவிட்டிருந்தது. இதுவே பலதசாப்தங்களாக ஓடிய இரத்த வெள்ளத்துக்கும் மூலகாரணமானது.

1961 பெப்ரவரி 4 சுதந்திரதினத்தன்று 'தனிச் சிங்கள' சட்டத்துக்கெதிரான எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 'தனிச் சிங்கள' சட்டத்தின் பிரதிகளையும், நீதிமன்ற மொழிச் சட்டத்தின் பிரதிகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிகளையும் சவப்பெட்டியொன்றிலிட்டு, உரும்பிராயிலிருந்து யாழ்ப்பாணம்வரை ஊர்வலமாக எடுத்துச்சென்று, இறுதியில் அதற்கு ஊர்காவற்றுறை நாடாளுமன்ற உறுப்பினரான வி.ஏ.கந்தையா இறுதிக் கடன்களைச் செய்து எரியூட்டி, சிங்களத் திணிப்புக்கெதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பை வெளிக்காட்டினார்.

1961 பெப்ரவரி 20, சத்தியாக்கிரக போராட்டங்கள் வடக்கு, கிழக்கெங்கும் இடம்பெற்றன. அரச அலுவலகங்களை சத்தியாக்கிரகிகள் முற்றுகையிட்டு, 'தனிச் சிங்கள' சட்டத்துக்கெதிரான தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த அஹிம்சை வழிப் போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்றன.

பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் வேண்டுகோள்

இந்த தொடர்ச்சியான சத்தியாக்கிரக மற்றும் ஒத்துழையாமை மற்றும் குடியியற் சட்டமறுப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து 1961 மார்ச் 25இல் வானொலியினூடாக தேசத்துக்கு உரையாற்றிய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, 'எந்தத் தாமதமுமின்றி சத்தியாக்கிரகத்தை உடனடியாக  கைவிடுமாறு, சத்தியாக்கிரகம் இருக்கும் தலைவர்களை நான் வேண்டிக்கொள்கிறேன். நான் மீண்டும் சொல்கிறேன். உங்கள் பிரச்சினைகளை கேட்க நாம் தயாராக இருக்கிறோம், உரியவற்றைக் கருத்திற்கொண்டபின் தேவையேற்படும் இடங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தயாராக இருக்கிறோம். எனக்கு மேலும் கிடைத்துள்ள தகவல்களின் படி, குறித்த அரசியல் அமைப்புக்கள் சில, தமிழ் மக்களை மொழி உரிமைகளைக் காட்டி தவறாக வழிநடத்தி, வடக்கு- கிழக்கில் அரச இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்வதினூடாக தனி நாடொன்றை ஸ்தாபிக்க முயல்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது' எனக் குறிப்பிட்டார்.

பிரதமரின் வேண்டுகோளைப் பரிசீலித்த இலங்கைத் தமிழரசுக் கட்சி அதனை நிராகரித்தது. பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் வேண்டுகோளானது, எந்தவித நிபந்தனையுமின்றி எமது சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கைவிடக் கோரியதற்கு ஒப்பானது. அவர், எமக்கு எதனையும் தருவதற்கு உறுதியளிக்கவில்லை. குறைந்த பட்சம் எமது மொழியுரிமை பற்றி பரிசீலிப்பதாகக் கூட உறுதிமொழியொன்று தரவில்லை மாறாக 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்தால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமானால் அதுபற்றிக் கவனத்தில்கொள்வது பற்றியே அவர் பேசினார். ஆகவே, பிரதமரது வேண்டுகோளானது தெளிவற்றதொன்றாக, நிச்சயமற்றதொன்றாகவே இருக்கிறது, இந்த விஷயம் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது பற்றிக் கூட அவர் எந்த முன்மொழிவையும் வைக்கவில்லை என சா.ஜே.வே.செல்வநாயகம் கூறினார்.

பிரதமரானவர் உண்மையில் நல்லெண்ணங்கொண்டிருப்பின் குறைந்தபட்சம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நடைமுறைப்படுத்தவேனும் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது, தமிழர்கள் 'தனிநாடு' கேட்கிறார்கள் என்ற பிரிவினைப் பயத்தை பெரும்பான்மை சிங்கள மக்களிடம் விதைக்கும் விதத்திலேயே தனது பேச்சை அமைத்திருந்தமை கவலைக்குரியது. சிங்கள மக்களுக்கு சிங்கள மொழி எப்படியோ, அதுபோலவே தான் தமிழ் மக்களுக்கு தமிழ் மொழி என்ற யதார்த்தம் பெரும்பான்மை மக்களால் புரிந்துகொள்ளப்படவில்லை.

தமிழ்த் தரப்போடு பேச்சுவார்த்தை

இந்நிலையில், 1961 ஏப்ரல் 4ஆம் திகதி நாட்டில், குறிப்பாக வடக்கு-கிழக்கில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு பற்றி ஆராய அமைச்சரவை கூடியது. அமைச்சர் ‡பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தலைமையிலான கடும்போக்காளர்கள் உடனடியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, இராணுவத்தின் மூலம் சத்தியாக்கிரகம் அடக்கப்பட வேண்டும் எனக் கூறினர். அமைச்சர் சி.பி. டி சில்வா, சாம்

பி.ஸி. ஃபெணான்டோ ஆகியோரைக் கொண்ட மிதவாதப்போக்காளர்கள் இந்தப் பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினர். அமைச்சரவை தமிழ்த் தலைவர்களோடு பேசுவதற்கு ஒப்புதல் அளித்தது.

சாம் பி.ஸி.ஃபெணான்டோ, தனது நண்பரும் முன்னாள் மன்றாடியார் நாயகமுமாகிய எம். திருச்செல்வம் அவர்களூடாக, சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி பேச்சுவார்த்தையை முயற்சித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். சா.ஜே.வே. செல்வநாயகம், எஸ்.எம்.ராசமாணிக்கம், அ.அமிர்தலிங்கம், டொக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் நீதி அமைச்சர் சாம் பி.ஸி. ஃபெணான்டோவை, எம்.திருச்செல்வத்தின் இல்லத்தில் சந்தித்துத்துப் பேசினர். ஆனால், எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

செல்வநாயகம் சாம் பி.ஸி. ஃபெணான்டோவிடம் தமிழரசுக் கட்சியின் குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கையளித்தார். தமிழ்மொழி, வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாகவும், நீதிமன்றமொழியாகவும் இருத்தல், 'தனிச் சிங்கள' சட்டத்தினால் அல்லற்படும் தமிழ் பொதுச்சேவை உத்தியோகத்தர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அத்துடன் வடக்கு-கிழக்குக்கு வெளியில்வாழும் தமிழ் பேசும் மக்களின் நிலை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டும் என்ற குறைந்த பட்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அன்றைய நிலையில் தமிழரசுக் கட்சியோ, முக்கிய தமிழ்த் தலைமைகளோ மிகக் குறைந்த பட்சமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான சமரசத்துக்கு தயாராகவே இருந்தார்கள். ஆனால், அந்தக் குறைந்தபட்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவோ, அதனை நிறைவேற்றுவதற்கோ சிங்களத் தலைவர்கள் தயாராக இருக்கவில்லை.

அவர்களால் தொடர்ந்து சொல்லப்பட்ட காரணம் நாம் இதனை ஏற்றுக்கொண்டால் சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்பதாகும். சிங்கள கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, எங்கே தாம் அவர்களை விசனமடையச் செய்துவிட்டால் அது எதிர்க்கட்சிக்கு சாதகமாகிவிடும் என்ற எண்ணத்தால், தொடர்ந்து ஆட்சிக்கட்டிலேறிய ஒவ்வொரு அரசாங்கமும் இனமுறுகலைத் தீர்ப்பதில் தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டை எடுக்கத்தவறின.

அமைச்சர் சாம் பி.ஸி. ஃபெணான்டோ, தமிழரசுக் கட்சியினரின் குறைந்தபட்சக் கோரிக்கைகளை 1961 ஏப்ரல் 6ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். அமைச்சரவை தமிழரசுக் கட்சியினரின் கோரிக்கையை நிராகரிப்பதாகத் தீர்மானித்தது. ஏப்ரல் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சி.பி. டி சில்வா, தமிழரசுக் கட்சியினரின் கோரிக்கை உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்துடன் ('தனிச் சிங்கள' சட்டத்துடன்) முரண்படுவதால் அதனை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தார்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் ஒத்துழையாமை மற்றும் குடியியற் சட்டமறுப்புப் போராட்டத்தையும் தொடர்வதைத் தவிர வேறுவழியில்லை என தமிழரசுக் கட்சி அறிவித்தது.

தமிழரசு முத்திரை வெளியீடு

ஒத்துழையாமை என்பது, அரச இயந்திரம் ஒன்று செயற்படுவதற்கு ஒத்துழைப்பை மறுத்தல். அதுபோல குடியியல் சட்டமறுப்பு என்பது ஒருவரின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிரானது என ஒருவர் கருதும் அரச சட்டங்களையும் செயற்பாடுகளையும் குடிசார் முறையில் முயன்று மறுப்பது அல்லது எதிர்ப்பது ஆகும். சட்ட மறுப்பு என்ற போராட்டம் என்பது அஹிம்சை வழயிலான அறப்போராட்ட வடிவமாகும். அரசு தனிநபர்களின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிராக சட்டமியற்றுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தனது 'குடிசார் சட்டமறுப்பு' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஹென்றி டேவிட்

தூரோ, காந்தியின் போராட்ட வடிவங்களாக சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை மற்றும் குடியியல் சட்டமறுப்பு என்பன இருந்தன. இந்த போராட்ட வடிவத்தை அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கையாண்டார்.

குடியியல் சட்டமறுப்புப் போராட்டத்தின் ஒரு படியாக அஞ்சலகக் கட்டளைச்சட்டத்தை மீற தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது. அச்சட்டமானது முத்திரைகள் வெளியிடும், அஞ்சல் சேவை நடத்தும் அதிகாரத்தை தபால் திணைக்களத்துக்கு வழங்கியது. 1961 ஏப்ரல் 14 அன்று இலங்கை தமிழரசுக் கட்சி 'தமிழரசு' முத்திரைகளை வெளியிட்டது.

சா.ஜே.வே.செல்வநாயகம் தமிழரசு தபாலகத்தில் தபால் அதிபராக இருந்து முதலாவது 10 சத முத்திரையை விற்பனை செய்ய, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் 'உடுப்பிட்டிச் சிங்கம்' எம்.சிவசிதம்பரம் அதனை வாங்கிக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக குடியியல் சட்டமறுப்புப் போராட்டத்தின் ஓரங்கமாக தமிழரசு தபால் சேவை முன்னெடுக்கப்பட்டது.

எம்.சிவசிதம்பரம் மற்றும் வி.என்.நவரட்ணம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசு தபால்சேவையில் தபாற்காரர்களாக அஞ்சல் விநியோகிக்க முன்வந்தனர். இந்த குடியியல் சட்டமறுப்புப் போராட்டம் அரசாங்கத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

- See more at: http://www.tamilmirror.lk/159193/-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B9-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-#sthash.LiWdjWGV.dpuf
Link to comment
Share on other sites

இராணுவப்பலம் கொண்டு அடக்கப்பட்ட அறவழி போராட்டம்
 
 

article_1448253196-ask.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 14)

தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் பிரவேசம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், குடியியல் மறுப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 'தமிழரசு தபால் சேவையைத்' தொடங்கியமை கொழும்பில் அரசாங்கத்துக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. அன்றைய கனிஷ்ட பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும் இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க படைத் தளபதிகளுடனும், நீதியமைச்சர் சாம் பி.ஸி.பெர்ணான்டோவுடனும் கலந்தாலோசித்துவிட்டு உடனடியாக 1961 ஏப்ரல் 15ல், 15 இராணுவ அதிகாரிகள் தலைமையில் 300 இராணுவ வீரர்களை விசேட புகையிரதமொன்றில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தனர். ஏப்ரல் 17ஆம் திகதி, ஆளுநர் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார். அன்றைய தினமே விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினூடாக பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இலங்கை தமிழரசுக் கட்சியையும், ஜாதிக விமுக்தி பெரமுணவையும் தடைசெய்தார்.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் சகல போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தடைசெய்யப்பட்டதுடன், ஊரடங்கும் அமுலப்படுத்தப்பட்டது.

அத்துடன் தணிக்கை முறையும் அமுலுக்குகொண்டுவரப்பட்டது. இலங்கையின் அன்றைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் வின்ஸ்ட்டன் விஜேக்கோன் யாழ்.நகர் விரைந்து, அங்கு முகாமிட்ட படைகளுக்கு தானே நேரடியாகத் தலைமையேற்றார். இந்த இராணுவ நடவடிக்கைகள் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கு எதிராகவோ. வன்முறையாளர்களுக்கு எதிராகவோ எடுக்கப்பட்டதல்ல மாறாக அறவழியில், அஹிம்சைவழியில், காந்திய வழியில் தமது பிறப்புரிமையை காப்பாற்றிக்கொள்வதற்காக ஜனநாயக மாண்புகளின் அடிப்படையில் போராடியவர்கள் மீது ஏவப்பட்டிருந்தன.

தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கெதிராக, அவர்களின் ஜனநாயகவழிப் போராட்டத்தை அந்நாட்டின் அரசாங்கம் இராணுவங்கொண்டு அடக்க விளைவதானது எவ்வகையில் நியாயமானதாகும்?

இந்நிலையில், பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தேசத்துக்கு உரையொன்றை நிகழ்த்தினார். அதில் பெரும்பான்மையான அவசரகால நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கெதிராக போராட்டம் நடத்தும் பிரதேசங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்று சொன்னதோடு மக்களை அமைதியாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் சமஷ்டிக் கட்சியின் (தமிழரசுக் கட்சியின்) கோரிக்கைகள் நியாயமானவை அல்ல எனவும், சமஷ்டிக் கட்சியினர் தமக்கென தனியானதொரு தபால் சேவையையும், பொலிஸ் சேவையையும் ஆரம்பித்துள்ளனர் எனவும், அத்தோடு கச்சேரிகளை ஸ்தாபித்து அரச காணிகளை தமது ஆதரவாளர்களுக்கு வழங்கவுள்ளார்கள் எனவும், இத்தகைய நடவடிக்கைகளால் சமஷ்டிக்கட்சி சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்நாட்டின் அரசாங்கத்தை எதிர்க்கிறதென்றும், தனிநாடொன்று அமைக்கும் நோக்கில் செயற்படுகிறதென்றும் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தனது பேச்சில் குறிப்பிட்டார்.

பிரதமர் தனது பேச்சில், தனியான பொலிஸ், அரச காணிகளை ஆதரவாளர்களுக்கு வழங்குதல், தனிநாடு என்ற அம்சங்களை முன்னிறுத்திப் பேசியமை பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சம் மற்றும் தமிழர்கள் மீதான சந்தேகம், வெறுப்பு என்பவற்றை விளைவிப்பதாகவே இருந்தது. தமது பிறப்புரிமையை மறுக்கும் அரசாங்கத்தின் பேரினவாதச் சட்டத்துக்கெதிரான போராட்டத்தை இந்த நாட்டின் அரசாங்கத்துக்கெதிரான போராட்டமாகச் சித்தரித்தன் வாயிலாகவும், அதனை இராணுவங்கொண்டு அடக்க முனைந்ததன் மூலமும் இன முறுகலை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடுவதை விடுத்து, அதற்கு உரம்போடும் செயலையே அரசாங்கம் செய்தது.

'வரலாற்றுத் தவறு' என்ற சொற்றொடருக்கு இது ஒரு முக்கிய உதாரணம். இதுபற்றி பின்னர் தனது நூலொன்றில் எழுதிய அன்டன் பாலசிங்கம், 'அடக்குமுறையாளனின் வன்முறை, அடக்கப்படுபவனின் அஹிம்சையை அமைதியாக்கியது. இந்த வரலாற்றுச் சம்பவம் தமிழ்த் தேசிய போராட்டத்துக்கான முக்கிய அரசியல் அனுபவம் ஒன்றை உணர்த்தியது. எந்தவித மனிதத்தன்மையும், நாகரிகமும், நெறிமுறைகளுமற்ற இனவெறி கொண்ட அடக்குமுறையாளனின் இராணுவபலத்துக்கு, அடக்கப்படுபவனின் அஹிம்சையினால் ஈடுகொடுக்க முடியாது என்ற பாடத்தை தமிழ் மக்கள் அனுபவரீதியாக உணர்ந்துகொண்டார்கள். துப்பாக்கிகளுக்கு முன்னால் தமிழ் மக்களின் அஹிம்சை பலமும், வீரியமுமற்றதொரு கட்டமைப்பாக இருந்தது' என்று குறிப்பிடுகிறார்.

30 ஆண்டுகால யுத்தம் பற்றி பேசுபவர்கள், தமிழ் பயங்கரவாதம் பற்றி பேசுபவர்கள் அதன் ஆரம்பத்தை, அதன் தோற்றுவாயைப் பற்றி பேசுவதில்லை, யோசிப்பதில்லை. முளையிலேயே களைந்திருக்க வேண்டிய இனப்பிரச்சினையை, குறுகிய அரசியல் இலாபங்களுக்கும், இனவாத வாக்குவங்கி அரசியலுக்குமாக உரமேற்றி வளர்த்து இந்நாட்டையும், நாட்டு மக்களையும் படுகுழிக்குள் தள்ளிய வரலாற்றுத்தவறை நாம் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தலைமைகள் கேட்ட குறைந்தபட்ச மொழியுரிமைச் சமரசங்களையாவது அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்திருக்குமானால், இலங்கையின் வரலாறு மாற்றியெழுதப்பட்டிருக்கும்.

1961, ஏப்ரல் 18இல் இராணுவம் அறவழியில் போராடிக்கொண்டிருந்த தமிழரசுக்கட்சித் தொண்டர்களை கடுமமையாகத் தாக்கி, போராட்டத்தைக் கலைத்தது. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருக்கோணமலை, மட்டக்களப்பு என வடக்கு-கிழக்கு எங்கும் இடம்பெற்ற அஹிம்சைவழி சத்தியாக்கிரக போராட்டங்கள், குடியியல் மறுப்புப் போராட்டங்கள் என்பன இராணுவபலம் கொண்டு கலைக்கப்பட்டன.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தமது மண்ணில் இராணுவம் புகுந்து தம்மைத் தாக்கியமை அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த என்.க்யூ.டயஸின் உத்தரவின் படி, அவசரகாலச் சட்டத்தின் கீழ், அறவழியில் போராடிய தமிழ்த்தலைவர்கள் 90 பேர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார்கள். சா.ஜே.வே.செல்வநாயகம் உட்பட கைதுசெய்யப்பட்ட 90 பேரும் பனாகொட இராணுவப் படைநிலை முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர். ஏறக்குறைய 6 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட தமிழ்த்தலைவர்கள், 1961 ஒக்டோபர் 4ல் விடுவிக்கப்பட்டார்கள்.

பொதுத் தொழிற்சங்கங்களின் பிளவும், தமிழ் தொழிற்சங்கங்களின் உருவாக்கமும்

';தனிச்சிங்களச்' சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் அரசாங்கம் முனைப்புக்காட்டியது. இதேவேளை, தமிழ்த் தலைமைகள் தொடர்ந்தும் 'தனிச்சிங்களச்' சட்டத்தை கடுமையாக எதிர்த்ததுடன், தமிழ் அரச உத்தியோகத்தர்களை சிங்களம் கற்க வேண்டாம் எனவும், சிங்களத்தில் பணிபுரிய வேண்டாம் எனவும் வலியுறுத்தின. 1961 டிசெம்பரில், பிரதமர் ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கம் திறைசேரி சுற்றுநிருபம் இல.560 இனூடாக 1956ன் பின்னர் நியமனம் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது பதவிகளில் நீடிப்பதற்கும், வருடாந்த ஊதிய உயர்வைப் பெறுவதற்கும், பதவி உயர்வைப் பெறுவதற்கும் உத்தியோகபூர்வ மொழியில் (அதாவது சிங்கள மொழியில்) குறைந்தபட்ச தகைமையைப் பெற்றிருத்தல் வேண்டும் என அறிவித்தது. தமிழ் அரச உத்தியோகத்தர்களை சிங்கள மொழியில் குறைந்தபட்ச தேர்ச்சியைப் பெற வைக்கும் முகமாகவும், அதன் மூலம் தமிழ்த்தலைமைகளின் கோரிக்கையை அர்த்தமற்றதாக்குவதும் என சூட்சுமங்கள் நிறைந்ததாக அந்த அறிவிப்பு இருந்தது.

ஊதிய உயர்வு, பதவி உயர்வு என்பவற்றைக் காட்டி தமிழ் உத்தியோகத்தர்களை சிங்கள மொழித் தேர்ச்சி பெற வைத்து, 'தனிச் சிங்களச்' சட்டத்தை தமிழரிடையேயும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தலாம் என்பது ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் திட்டம். அவர்கள் புரிந்துகொள்ளாத ஒரு விடயம், சிங்களவர்களுக்கு சிங்களம் எப்படியோ, அதுபோலவேதான் தமிழர்களுக்கு தமிழும் என்பது. 'சிங்கள தேசத்தின் உயிர்க்குருதி சிங்கள மொழி' என்று சிங்களத் தலைவர்கள் கர்ஜித்த வேளையில், தமிழர்களுக்கும் தமிழ்மொழி அவ்வாறானதொன்றே என்பதை அவர்களை புரிந்துகொள்ளாததுதான் இலங்கை இனப்பிரச்சினையின் மூலவேர் ஆகிறது.

அன்றைய காலகட்டத்தில் பலம்பொருந்திய தொழிற்சங்கங்களுள் ஒன்றாக பொது எழுவினைஞர் சேவை ஒன்றியம் காணப்பட்டது. தமிழ் அரச சேவையாளர்கள் பலருக்கும், சிங்கள மொழியில் தேர்ச்சிபெற ஆறுமாதகால அவகாசம் வழங்கும் அறிவிப்பை அரசாங்கம் வழங்கியது.

தேர்ச்சி பெறாத பட்சத்தில் தமது பதவிகளை இழக்கும் நிலையை அவர்கள் எதிர்கொண்டனர். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் அவர்களை ஆதரித்துக்காக்க வேண்டிய தொழிற்சங்கம் அமைதியாக இருந்தது. சிங்கள அரச சேவையாளர்கள் 'தனிச்சிங்களச்' சட்டத்தை தமக்கு சாதகமான ஒன்றாகப் பார்த்தார்கள் அதனால் அச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரச சேவையாளர்களுக்காக குரல் கொடுக்க அவர்கள் முன்வரவில்லை.

தொழிலாளர் வர்க்கத்தை, இனவாதம் வெற்றிகரமாக இருகூறிட்டது. 1959லேயே சில அரச உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து அரசாங்க சேவையர் சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர். 1956 'தனிச்சிங்களச்' சட்டத்தின் பின் என்றாவது ஒருநாள் தொழிற்சங்கங்கள் இனரீதியில் பிரிவடையும் என்பதற்கான முதல் சமிக்ஞையாக அது இருந்தது. 1961ஆம் ஆண்டு டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபத்துக்கெதிரா, தமிழ் அரச சேவையாளர்களுக்கு ஆதரவான பொது எழுதுவினைஞர் சேவை ஒன்றியம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவ்வமைப்பிலிருந்து தமிழ் அரச சேவையாளர்கள் விலகி, அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர்.

மொழிவாரியாக அல்லது இனவாரியாக தோற்றம் பெற்ற முக்கிய தொழிற்சங்கமாக இது அமைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஒன்றரைத் தசாப்த காலத்தினுள் இன்னும் அதிகமான தமிழ் தொழிற்சங்கங்கள் உருவாகின. அரச கூட்டுத்தாபன ஊழியர் சங்கம், புகைவண்டிப் பகுதி ஊழியர் சங்கம், புகைவண்டிப் பகுதி எழுதுவினைஞர் சங்கம், அஞ்சல் எழுதுவினைஞர் சங்கம், தமிழ் ஆசிரியர் சங்கம், துறைமுக தொழிலாளர் கழகம், நெற்சந்தைப்படுத்தும் சபை ஊழியர் சங்கம், இலங்கைத் தொழிலாளர் கழகம் (பெருந்தோட்டத்துறை) என தமிழ் தொழிலாளர்கள் தமக்கான தொழிற்சங்கங்களை உருவாக்கினர். 1956ல் 'தனிச்சிங்களச்' சட்ட விவாதத்தின் போது கலாநிதி.கொல்வின் ஆர்.டி. சில்வா சொன்ன வார்த்தைகள் உண்மையாகிக்கொண்டிருந்தன: 'இரு மொழி, ஒரு தேசம்; ஒரு மொழி, இரு தேசம்'.

செல்லையா கோடீஸ்வரன், கே. சிவானந்தசுந்தரம், ஆர். பாலசுப்ரமணியம், ரி. சோமசுந்தரம், ஆடியபாதம், ஐயர் உள்ளிட்ட தமிழ் அரச சேவையாளர்கள் பலரும் பொது எழுதுவினைஞர் சேவை ஒன்றியத்திலிருந்து விலகி அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தை உருவாக்கினர். செல்லையா கோடீஸ்வரன் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

அரசாங்க எழுதுவினைஞரான செல்லையா கோடீஸ்வரன் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற மறுத்தார். மேலும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெறாவிட்டால் வருடாந்த ஊதிய உயர்வைத் தர மறுக்கும் ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் 1961 டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபத்தையும், 1956ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தையும் ('தனிச்சிங்களச்' சட்டம்) எதிர்த்து கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய முடிவெடுத்தார். இந்த வழக்கில் முன்னாள் மன்றாடியார் நாயகம் எம்.திருச்செல்வம் க்யு.ஸீ, சீ. ரங்கநாதன் க்யு.ஸீ, சீ. நவரட்ணம் க்யு.ஸீ ஆகிய முன்னணி சட்டத்தரணிகள் ஆஜராகினர். 'கோடீஸ்வரன் வழக்கு' எனப் பிரபலமாக அறிப்பட்ட இவ்வழக்கு 'தனிச்சிங்களச்' சட்டத்துக்கெதிரான சட்டப் போராட்டமாக உருவாகியது.

- See more at: http://www.tamilmirror.lk/159735/%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-#sthash.35JoxEw1.dpuf
Link to comment
Share on other sites

'கோடீஸ்வரன் வழக்கு': 'தனிச்சிங்களச்' சட்டத்துக்;கெதிரான சட்டப் போராட்டம்
 
 

article_1448856554-law.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB(Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 16)

தமிழ் அரச உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவரும், அரசாங்க எழுதுவினைஞருமான செல்லையா கோடீஸ்வரன், சிங்கள மொழியில் தேர்ச்சி பெற மறுத்தார். சிங்கள மொழியில் தேர்ச்சி பெறாவிட்டால் வருடாந்த ஊதிய உயர்வைத் தர மறுக்கும் ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் 1961ஆம் ஆண்டு டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபத்தின் விளைவாக அவருக்கு கிடைக்கவேண்டிய ஊதிய அதிகரிப்பு கிடைக்கவில்லை. இதனால் தனக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வைக் கேட்டும், அது கிடைக்காமைக்கான காரணமாக இருந்த 1961 டிசம்பர் திறைசேரி சுற்றுநிருபம் மற்றும் 1956ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ மொழிச் சட்டம் ('தனிச்சிங்களச்' சட்டம்) ஆகியன அன்று நடைமுறையிலிருந்த சோல்பரி அரசியலமைப்புக்கு முரணானது என்றும் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யதார். இந்த வழக்கில் முன்னாள் மன்றாடியார் நாயகம் எம்.திருச்செல்வம் க்யூ.ஸீ, சீ. ரங்கநாதன் க்யூ.ஸீ, சீ. நவரட்ணம் க்யூ.ஸீ ஆகிய முன்னணி சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

வழக்குப்பற்றிய விடயத்துக்;குச் செல்வதற்கு முன்பதாக சோல்பரி அரசியல் யாப்பு பற்றியும் அதன் 29(2) சரத்து பற்றியும் அறிதல் அவசியமாகும்.

சோல்பரி அரசியல் யாப்பின் 29(2) சரத்து

1833 கோல்புறூக்-கமரன் அரசியலமைப்பு முதல் ஆங்கிலேய காலனித்துவத்தின் கீழ், காலத்துக்;கு காலம் சுதேசிகளுக்கு பிரதிநிதித்துவமும், அதிகாரமும் வழங்கும் வௌ;வேறு அரசியல் யாப்புக்கள் வழங்கப்பட்டன.

ஆங்கிலேய ஆட்சியாளர்களால், 1948இல் இலங்கை டொமினியன் அந்தஸ்த்து பெறுவதற்கு முன்பு வழங்கப்பட்ட அரசியல் யாப்பே சோல்பரி அரசியல் யாப்பாகும். பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்றத்தையொத்ததொரு இரு அவைகள் கொண்ட சட்டவாக்கசபையை இங்கு உருவாக்கியதுடன், வெஸ்மினிஸ்டர் மாதிரியிலான கபினட் நிர்வாக முறையையும் ஸ்தாபித்தது. சோல்பரி அரசியல் யாப்பானது 1944ல் டொனமூர் அரசயிலமைப்பின் கீழ் இயங்கிய அமைச்சரவை சமர்ப்பித்த அரசியல் யாப்பு வரைவையே பெருமளவு கொண்டிருந்தது. இந்த யாப்பு வரைவானது சேர் ஐவர் ஜென்னிங்ஸால் வெஸ்மினிஸ்டர் மாதிரியில் உருவாக்கப்பட்டது.

இந்த சோல்பரி யாப்பில் 29(2) சரத்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றது. 29(2) சரத்தானது மதச் சுதந்திரத்தைத் தடுக்கும் எந்தவொரு சட்டத்தையும்; ஒரு குறுப்பிட்ட சமூகத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறைபாடுகளுக்கு அல்லது தடைகளுக்கு உட்படுத்தும் எந்தவொரு சட்டத்தையும்; அல்லது குறிப்பிட்ட சமூகத்தை மல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஏதேனும் சலுகை அல்லது சாதகத்தன்மை அளிக்கும் எந்தவொரு சட்டத்தையும், எந்தவொரு மதநிறுவனத்தின் யாப்பையும் அதன் இசைவின்றி மாற்றும் எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தால் உருவாக்க முடியாது என்கிறது. 29(2) சரத்தில் குறிப்பிட்ட சட்டங்கள் இயற்றப்படுமானால் அவை வலுவற்ற சட்டமாகும் என 29(3) சரத்து கூறியது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், மதத்தையும் சேர்ந்த மக்களை பெரும்பான்மையாகவும், வேறு சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்த மக்களை சிறுபான்மையாகவும் கொண்ட ஒரு நாட்டின் அரசியல் யாப்பில் இவ்வகைப் பாதுகாப்பு சிறுபான்மை மக்களுக்கு அவசியமான ஒன்றாகிறது. இந்தப் பாதுகாப்பானது சிறுபான்மையினருக்கெதிரான சட்டங்கள் உருவாக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு வழங்கியதே அன்றி சிறுபான்மையினருக்கெதிரான நிர்வாக நடவடிக்கைகள் சார்ந்த பாதுகாப்பை வழங்கவில்லை.

இதுபற்றிக் தனது 'இலங்கை தமிழ்த் தேசியம் (ஆங்கிலம்) என்ற நூலில் பேராசிரியர் ஏ. ஜெயரட்ணம் வில்சன், உரிமைகள் சட்டம் ஒன்று வழங்கப்பட்டிருக்குமேயானால் அது சிறுபான்மையினருக்கு பலமான பாதுகாப்பாக இருந்திருக்கும். ஏனெனில், அது நிர்வாக நடவடிக்கைகள் சார்ந்த பாதுகாப்பையும் வழங்கியிருக்கும் ஆனால், சேர் ஐவர் ஜென்னிங்ஸ் அதனை விட, 29(2) வகையான பாதுகாப்பையே தெரிவுசெய்தார்' என்று குறிப்பிடுகிறார்.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க வல்ல இந்த 29(2) சரத்தானது பொறிமுறை ரீதியில் மிகுந்த வலுவுள்ளதொன்றாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதாவது 29(2) சரத்தை நாடாளுமன்றத்தால் 3ல் 2 பலங்கொண்டும் இல்லாதொழிக்கமுடியாததொன்றாக அது கட்டமைக்கப்பட்டிருந்தது.

இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் எதிர் ரணசிங்ஹ வழக்கில், ப்ரிவி கவுன்ஸில் வழங்கிய தீர்ப்பில் 'இலங்கைப் பிரஜைகளிடையான உரிமைச் சமநிலையை, அவர்கள் அனைவரும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை 29(2) சரத்து பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதனால், 29(2) சரத்து மாற்றியமைக்கப்பட முடியாது' என்று குறிப்பிட்டிருந்தது.

பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தன்னுடைய கட்டுரையொன்றில் '29(2) சரத்தானது சிறுபான்மையினர், கொழும்பின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட அடிப்படை நிபந்தனையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. வேறு வகையில் சொல்வதானால் அது மாற்ற முடியாததும் பாதிப்பிற்குட்படுத்த முடியாததுமான விசேட தன்மையைக் கொண்ட சரத்தாகும்' என்று கூறினார். ஆகவே, கட்டமைப்பு ரீதியில் பலமானதொன்றாகவே அது இருக்கும் என சோல்பரி ஆணைக்குழுவினர் எண்ணங்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், நடைமுறையில் அது அவ்வாறானதொன்றாக இருக்கவில்லை. அதற்கான மிகச்சிறந்த உதாரணம் இந்த கோடீஸ்வரன் வழக்கு.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கோடீஸ்வரன் வழக்கு

தனக்கு முறைப்படி கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வை அரசாங்கம் சட்டத்துக்;கு புறம்பான வகையில் வழங்க மறுக்கிறது என்பதே அரச எழுதுவினைஞரான கோடீஸ்வரனின் வழக்கு. அதாவது, 1961ஆம் ஆண்டு டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபம் சிங்கள மொழியில் தேர்ச்சி பெறாத அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வைத் தடைசெய்தது. இந்தத் திறைசேரி சுற்றுநிருபமானது சட்டவிரோதமானது. ஏனெனில், அது நடைமுறைப்படுத்த விளையும் 1956ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ மொழிச் சட்டம் ('தனிச்சிங்களச்' சட்டம்) அரசியல் யாப்பின் 29(2) சரத்துக்;கு முரணானது ஆகவே அச்சட்டம் செல்லுபடியற்றது, ஆகவே, அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் 1961 டிசம்பர் திறைசேரி சுற்றுநிருபமும் செல்லுபடியற்றது என்பதே கோடீஸ்வரன் தரப்பின் வாதம்.

இதற்கு பதில்தரப்பில் வாதிட்ட அரசாங்கம், 'தனிச்சிங்களச்' சட்டம் 29(2) சரத்துக்;கு முரணில்லை என்று குறிப்பிட்டதுடன், ஒரு அரச உத்தியோகத்தர், முடியின் விருப்பின் பேரில் சேவையாற்றுவதால், அவர் தன் சம்பளத்துக்;காக முடியை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்ய முடியாது என்ற சட்டக்கோட்பாட்டை முன்னிறுத்தி இந்த வழக்கை ஆட்சேபித்தது.

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஓ. எல். டி க்றெஸ்டர் வழக்கினை கோடீஸ்வரனுக்குச் சாதகமாகத் தீர்த்ததுடன், 1956ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ மொழிச் சட்டமும் ('தனிச்சிங்களச்' சட்டம்), 1961 டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபமும், அரசியல் யாப்பின் 29(2) சரத்துக்;கு முரணானது என 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி தீர்ப்பு வழங்கினார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, அரசாங்கத்தரப்பு, உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு பிரதம நீதியரசர் ‡பெனான்டோ மற்றும் நீதியரசர் சில்வா ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றமானது, ஓர் அரச சேவையாளன் தன்னுடைய சம்பளத்துக்;காக முடிக்கெதிராக நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்ற அடிப்படையில், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. இந்த முதற் புள்ளியிலேயே வழக்கு தீர்ந்து விட்ட காரணத்தால், அரசியலமைப்பு சார்ந்த விடயங்கள் பற்றி ஆராய்வதை உயர்நீதிமன்றம் தேவையற்றதெனக் கருதியது.

அரசியலமைப்பு சார்ந்த விடயங்கள் ஆராயப்படும் தேவை ஏற்பட்டிருப்பின் இவ்வழக்கு 5 நீதியரசர்களைக் கொண்ட அவைக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என பிரதம நீதியரசர் ‡பெனான்டோ தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பு 1967இல் வழங்கப்பட்டது. கோடீஸ்வரன் தரப்பில், பிரித்தானிய ப்ரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. ப்ரிவி கவுன்ஸில் என்பது பிரித்தானியாவின் மீயுயர் நீதிமன்றமாகும். சட்டப் பிரபுக்களைக் கொண்ட ப்ரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமை சோல்பரி அரசியல் யாப்பில் வழங்கப்பட்டிருந்தது.

1962ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கானது, 1968ஆம் ஆண்டு பிரித்தானிய ப்ரிவி கவுன்ஸிலில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. கோடீஸ்வரன் தரப்பில் சேர் டிங்கிள் ‡புட் க்யூ.ஸீ., சீ. ரங்கநாதன் க்யூ.ஸீ., எம்.பி.சொலமன், எஸ்.சீ.க்றொசெட்-தம்பையா மற்றும் எம்.ஐ.ஹமவி ஹனீ‡பா ஆகிய சட்டத்தரணிகளும், அரசாங்கத் தரப்பில், ஈ.எ‡ப்.என்.க்றேஷியன் க்யூ.ஸீ., ஆர்.கே.ஹந்து, எச்.எல்.டி.சில்வா ஆகிய சட்டத்தரணிகளும் ஆஜராகினர்.

ப்ரிவி கவுன்ஸிலில் ஹொட்சன் பிரபு, வைகன்ட் டில்ஹோர்ன், டொனவன் பிரபு, பியேர்ஸன் பிரபு, டிப்லொக் பிரபு ஆகிய சட்டப் பிரபுக்கள் முன்னிலையில் கோடீஸ்வரன் வழக்கின் மேன்முறையீடு விசாரிக்கப்பட்டது. ப்ரிவி கவுன்ஸில் தீர்ப்பு டிப்லொக் பிரபுவினால் வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் அரசாங்க சேவையாளளொருவன் தனது சம்பளத்தொகைக்காக முடிக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய முடியாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிரான கோடீஸ்வரனின் மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அரசியலமைப்பு விடயம் பற்றி உயர்நீதிமன்றம் ஆராய வேண்டும் என ப்ரிவி கவுன்ஸில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு 1969ல் வழங்கப்பட்டது.

எந்த அரசியல் அமைப்பு சார்ந்த பிரச்சினையை இந்த வழக்கில் ஆராய்வது தேவையற்றது என உயர்நீதிமன்றம் கருதியதோ, அது ஆராயப்பட வேண்டும் என ப்ரிவி கவுன்ஸில் தீர்ப்பளித்தது. இப்போது அதனை மீண்டும் விசாரித்து, 'தனிச்சிங்களச்' சட்டம் அரசியலமைப்பின் 29(2) சரத்துடன் பொருந்திப்போகிறதா, அல்லதா அதற்கு முரணானதா என்று ஆராய வேண்டிய கடப்பாடு உயர்நீதிமன்றத்துக்;கு ஏற்பட்டது.

சட்டவியல் நிபுணர்களின் கருத்துப்படி, அன்று இந்த அரசியலமைப்பு விடயம் பற்றி உயர்நீதிமன்றம் எந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பினும் அது மீண்டும் ப்ரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டால் 'தனிச்சிங்களச்' சட்டம் அரசியலமைப்பின் 29(2) சரத்துக்;கு முரணானது ஆதலால் அச்சட்டம் வலுவற்றது என்ற தீர்ப்பே யதார்த்தமானது. இது நடந்தால் 'தனிச்சிங்களச்' சட்டம் இல்லாதொழியும் நிலை ஏற்படும். ஆனால் உடனடியா இவ்வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவில்லை.

ப்ரிவி கவுன்ஸில் தீர்ப்பு வந்தபோது, 1969ல் டட்லி சேனநாயக்கவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் டட்லி சேனநாயக்கவின் அரசாங்கம் இருந்தது. ப்ரிவி கவுன்ஸிலின் இந்தத் தீர்ப்பு அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு பெரும் சவாலைத் தந்தது.

1970ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணியினர், 1971ஆம் ஆண்டின் 44ஆம் இலக்கச் சட்டத்தினூடாக ப்ரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் முறையை இல்லாதொழித்தனர். இத்தோடு கோடீஸ்வரன் வழக்கு என்ற 'தனிச்சிங்களச்' சட்டத்துக்;கு எதிரான சட்டப் போராட்டம் அரசாங்கத்தின் இரும்புக்கரத்தால் அடக்கப்பட்டது.

மேலும், 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பை நாடாளுமன்றத்துக்;கு புறம்பாக அரசியலமைப்பு அவை என்ற வடிவில் கூடி ஸ்ரீமாவோ அரசாங்கம் நிறைவேற்றியது. இதன் மூலம் சோல்பரி யாப்பு வழங்கிய 29(2) என்ற சட்டப் பாதுகாப்பும் இல்லாதொழிக்கப்பட்டது.

பி.எச். பாமரின் 'சிலோன் - ஒரு பிரிந்த தேசம் (ஆங்கிலம்)' என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய சோல்பரி பிரபு 29(2) சரத்தின் வலுவின்மை பற்றிய தனதும், சோல்பரி ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களதும் கசப்பான ஏமாற்றத்தைப் பதிவு செய்தார்.

அத்துடன் 'அடிப்படை மனித உரிமைகள், குறிப்பாக தனி மனித சுதந்திரமானது மாற்றமுடியாத, அழிக்கமுடியாத சரத்தொன்றின் ஊடாகப் பாதுகாக்கப்படுதல் எல்லா நாடுகளுக்கும், எல்லா அரசியல் யாப்புகளிற்கும் அவசியமானதொன்றாகும். ஆயினும் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையிலான மீளிணக்கப்பாடென்பது அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பினைத் தாண்டி அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தினதும், அதனை அதிகாரத்துக்;குக்கொண்டு வந்த மக்களினதும் நல்லெண்ணம், பொது உணர்வு மற்றும் மனிதாபிமானம் என்பவற்றிலேயே தங்கியிருக்கிறது' என தனது எண்ணத்தைப் பதிவு செய்கிறார்.

- See more at: http://www.tamilmirror.lk/160237/-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-#sthash.5KrT4sK2.dpuf
Link to comment
Share on other sites

பிரிவினையின் விதை
 
07-12-2015 09:50 AM
Comments - 0       Views - 3

article_1449462158-as.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB(Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-17)

ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் கீழ் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள்

ராணுவப் பலங்கொண்டு தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட 'தனிச் சிங்களம்' சட்ட அமுலாக்கத்துக்கெதிரான அஹிம்சைவழிச் சத்தியாக்கிரகப் போராட்டங்களும் குடியியல் மறுப்புப் போராட்டங்களும் அடக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்டு, ஏறக்குறைய 7 மாதங்கள் பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் 1961 ஒக்டோபர் 4இல் விடுதலை செய்யப்பட்டனர். இக்காலத்தில் உடல்நலங்குன்றியிருந்த, இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாகபத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சா.ஜே.வே.செல்வநாயகம் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்வதற்கு ஸ்ரீமாவோ அரசாங்கம் அனுமதித்திருந்தது.

அத்துடன், தடுப்புக்காவலில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.நவரட்ணம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது, தேசிய வைத்தியசாலையில் 'முதற்தர' பிரிவில் ஆயுதந் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்புடன் சிகிச்சைளிக்கப்பட்டதாகவும் தனது நூலில் வி.நவரட்ணம் பதிவுசெய்கிறார்.

தமிழரசுக் கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும் தமிழ் மக்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெறும் மொழிப் பிரச்சினையாக மட்டுமல்லாமல், தமிழ் மக்கள் பல்வேறு தளங்களிலும் இனப் பாகுபாட்டையும், இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படவேண்டிய நிலையையும் எதிர்கொள்ள வேண்டி நேரிட்டது.

இந்த இனப் பிரச்சினை தோன்றிய காலகட்டம் முதல் தமிழ் மக்கள் அதிகம் அடிவாங்கியது கல்வித்துறையிலாகத்தான் இருக்கவேண்டும். 1961இல் நடந்த சம்பவமொன்றை 'இலங்கையின் டட்லி சேனநாயக்க (ஆங்கிலம்)' என்ற தனது நூலிலும், பின்னர் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதிய கட்டுரையொன்றிலும் ரி.டி.எஸ்.ஏ.திஸாநாயக்க பதிவுசெய்கிறார். 1961இல் இலங்கைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் (தற்போது கொழும்புப் பல்கலைக்கழகம்) இளமானிப் பட்டப்படிப்பில் கணேஷ் சண்முகம் என்ற மாணவன் முதல் வகுப்புச் சித்தியையும் முதலிடத்தையும் பெற்றிருந்தான். வி.கே.சமரநாயக்க என்ற மாணவன் முதல் வகுப்புச் சித்தியையும் இரண்டாமிடத்தையும் பெற்றிருந்தான்.

வழக்கத்தில் முதலிடம் பெற்ற மாணவனுக்கே மேற்படிப்புக்கான அரசாங்கப் புலமைப்பரிசில் கிடைக்கும். ஆனால், கல்வித் திணைக்களம் வி.கே.சமரநாயக்கவுக்கு இதனை வழங்கியது. இதனை வி.கே.சமரநாயக்க ஏற்க மறுத்தார். வி.கே.சமரநாயக்கவும், கணேஷ் சண்முகமும் கொழும்பு றோயல் கல்லூரியிலும், பின்பு இலங்கைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திலும் ஒன்றாகப் பயின்றவர்கள், நல்ல நண்பர்கள். முறைப்படி அரசாங்கப் புலமைப்பரிசில் கணேஷ் சண்முகத்துக்கே கிடைக்க வேண்டும், அதனைத் தனக்கு எப்படித் தரமுடியும் என வி.கே.சமரநாயக்க வினவினார்.

அதற்கு தற்போது ('தனிச் சிங்களம்' சட்ட அமுலாக்கத்துக்குப் பின்) அரசாங்கப் புலமைப்பரிசில் கிடைக்க சாதாரண தரப் பரீட்சையில் சிங்கள மொழிப் பாடத்தில் சித்தியெய்தியிருக்க வேண்டும் எனக் கல்வித் திணைக்கள அதிகாரி பதிலளித்தார். இதைக் கேட்ட 22 வயதேயான வி.கே.சமரநாயக்க, 'அது அவ்வாறானால் நான் இப்புலமைப்பரிசிலை ஏற்றுக்கொள்ள மாட்டேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக ரி.டி.எஸ்.ஏ.திஸாநாயக்க பதிவுசெய்கிறார். இதன்பிறகு அவரது நண்பரான கணேஷ் சண்முகத்தினதும், ஏனைய சில நண்பர்களினதும் வேண்டுகோளின்படி புலமைப்பரிசிலை அவர் ஏற்றுக்கொண்டார்.

இருவரும் எதிர்காலத்தில் தமது துறையில் உச்சநிலையை அடைந்த பேராசிரியர்கள் ஆனவர்கள். ஆனால், ஒரு வித்தியாசம், 'வித்தியா ஜோதி' பேராசிரியர் வி.கே. சமரநாயக்க தனது உயர்கல்வியின் பின் இலங்கை திரும்பி கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். ஆனால், பேராசிரியர் சண்முகம் வெளிநாட்டுக் கல்வியின் பின் இங்கிலாந்திலும், பின்னர் அமெரிக்காவிலும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி, அங்கேயே தனது வாழ்வின் இறுதியையும் அடைந்தார். இந்தச் சம்பவம் ஒன்றே 'தனிச் சிங்களம்' சட்டம் தமிழ் மக்களுக்கு விளைவித்த அநீதியை எடுத்துக்காட்டப் போதுமானது.

திறமையிருந்தும் முதலிடம் பெற்றும், சிங்களமொழிச் சித்தியின்மையால் தமிழர்களின் வாய்ப்புக்கள் தட்டிப் பறிக்கப்பட்டன. மிகச்சிறந்த தமிழ் புலமையாளர்களும் திறமையாளர்களும் இந்நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் இங்கிருந்தாலும் அவர்களுக்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கவில்லை. சிவில் சேவையிலும் தமிழர்களின் வாய்ப்புக்கள் 'தனிச் சிங்களம்' சட்டத்தின் பெயரால் அடைக்கப்பட்டன.

ஆகவே, இந்த நாட்டிலிருந்து தமிழ் மக்களின் வெளியேற்றம் என்பது தவிர்க்கமுடியாததானது. இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமல்லாமல் இங்கிருந்து தமிழ் சிவில் சேவையாளர்களும், புலமையாளர்களும் கானா, நைஜீரியா, ஸம்பியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர்.

தோல்விகண்ட இராணுவப் புரட்சிக்கான முயற்சி

1962ஆம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீமாவோ அரசாங்கம் இராணுவப் புரட்சிக்கான முயற்சி ஒன்றை எதிர்கொள்ள வேண்டிவந்தது. இலங்கை பாதுகாப்புப் படைகளைப் பொறுத்தவரை அன்று கணிசமான அளவில் கிறிஸ்தவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து செல்வாக்கோடு இருந்தவர்களால், சுதந்திரத்தின் பின், அதுவும் குறிப்பான 1956இன் பின் ஏற்பட்டுள்ள மாற்றம் அவர்களுக்குக் கசப்பினை ஏற்படுத்தியது. 'சிங்கள-பௌத்தர்கள்' முன்னிலைப்படுத்தப்பட்டு, தாம் இரண்டாம் நிலைக்குத்தள்ளப்படுகிறோமோ என்ற அச்சம் அவர்களையும் ஆட்கொண்டிருந்தது. 'ஒப்பரேஷன் ஹோல்ட் பாஸ்ட்' எனப் பெயரிடப்பட்ட இந்த முயற்சி பற்றிய தகவல்கள் அரசாங்கத்துக்குத் தெரியவந்திருந்ததிலும், கதிர்காமம் செல்லவிருந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் திட்டம் மாறியதன் விளைவாகவும் இராணுவப் புரட்சிக்கான முயற்சி தோல்வி கண்டது.

அரசாங்கம் பாதுகாப்பை அதிகப்படுத்தியதோடு, இந்த முயற்சியுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டார்கள். ‡பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க ஒவ்வொரு குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரியையும் விசாரணைக்கு உட்படுத்தினார். கேணல். எ‡ப்.

ஸீ.டி சேரம் இராணுவப் புரட்சி முயற்சிக்கான முழுப் பொறுப்பையும் ஏற்று வாக்குமூலமொன்றை அளித்திருந்தார். கேணல். எப்.ஸீ.டி சேரம், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் அவசரகதியில் 1962ஆம் ஆண்டின் குற்றவியல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், இந்த அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட சட்டமே, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலைபெறுவதற்கான வழியையும் ஏற்படுத்திக்கொடுத்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் பிரபல சட்டத்தரணிகளான ஜி.ஜி.பொன்னம்பலம், எச்.டபிள்யூ.ஜயவர்தன, எச்.ஜே.கதிர்காமர் ஆகியோர் ஆஜராகினர்.

முதலில் ஆரம்பமான 'ட்ரையல்-அட்-பார்' நீதிபதிகளால் கலைக்கப்பட்டது. நீதிபதிகளை நியமிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் உயர்நீதிமன்றுக்கானது, தமது நியமனம் நிறைவேற்றுத்துறையால் இடம்பெற்றிருப்பதானது அரசியலமைப்புக்குடன்பாடனது அல்ல என்று அறிவித்தனர் நீதிபதிகள். இரண்டாவதாக அமைந்த நீதிமன்றமும் கலைக்கப்பட்டது. இவ்வழக்குக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் ஒருவரான ஏ.டபிள்யூ.எச்.அபயசுந்தர க்யூ.ஸீ., முன்னர் சட்டமா அதிபராக இருந்தபோது இவ்வழக்கு விசாரணைகளில் பங்களிப்புச் செய்தவராதலால், அவர் இவ்வழக்கில் நீதிபதியாக இருக்க முடியாது போனது.

மூன்றாவதாக அமைந்த நீதிமன்றம் 1963ஆம் ஆண்டு ஜூன் 3இல் குற்றஞ்சாட்டப்பட் 24 பேரில், 11 பேரைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்தது. ஆனால், பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டபோது, 1965ஆம் ஆண்டு டிசெம்பரில் பிரிவி கவுன்ஸில் அளித்த தீர்ப்பில், 1962ஆம் ஆண்டின் குற்றவியல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், அரசியல் யாப்புக்கு முரணானது எனவும், அது நியாயமான வழக்கினை மறுக்கிறது, இம்மனிதர்களைக் குற்றவாளியாக்கும் நோக்குடன் அச்சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக பொதுவான குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவருக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்புக்களைக் கூட அது மறுக்கிறது எனக் குறிப்பிட்டதுடன், இந்தப் பொறிமுறை ரீதியிலான வழுவின் காரணமாக 11 பேரையும் விடுதலை செய்தது.

இராணுவப் புரட்சியில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட எவரும் இறுதியில் தண்டனை பெறவில்லை. ஆனால், இது ஏலவே, இனரீதியில் குறுகிய பார்வை கொண்டதாக இயங்கிய அரசாங்கத்தை, இன்னும் குறுகிய நோக்கில் இயங்கச் செய்தது. இந்த இராணுவப் புரட்சி முயற்சியுடன் எந்தச் சம்பந்தமும் இல்லையெனினும் இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் வின்ஸ்டன் விஜயகோன் மாற்றப்பட்டு, 'சிங்கள-பௌத்தரான' மேஜர் ஜெனரல் றிச்சட் உடுகம - இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வின்ஸ்டன் விஜயகோன், பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

இதுபோலவே, இந்த இராணுவப் புரட்சி முயற்சியுடன் சம்பந்தப்பட்டதாகப் பேசப்பட்ட அன்றைய ஆளுநர் சேர் ஒலிவர் குணத்திலக்கவை மாற்ற மகாராணியாரிடம் வேண்டப்பட்டது. ஆளுநர் என்பவர் மகாராணியாரின் பிரதிநிதி என்பதால் அவரை நியமிக்கும், பதவிநீக்கும், மாற்றும் அதிகாரம் மகாராணியாருக்கு மட்டுமே உரியது. குறித்த கடிதத்துடன் தான் லண்டன் சென்ற கதையை அன்றைய பிரதமரின் செயலாளராக இருந்த பிட்மன் வீரக்கோன், தனது 'ரென்டரிங் அன்டு ஸீஸர் (ஆங்கிலம்)' என்ற நூலில் விவரிக்கிறார்.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த மகாராணியார், இலங்கை அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், கண்டிச் சிங்களவரும், 'சிங்கள பௌத்தரும்', இராஜதந்திரியுமான வில்லியம் கோபல்லாவ - ஆளுநரான நியமிக்கப்பட்டார். இலங்கையின் முதலாவது 'சிங்கள-பௌத்த' ஆளுநர் இவராவார். 1962 இராணுவப் புரட்சி முயற்சிக்குப் பின்னர், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தன்னைச் சார்ந்தவர்களை அன்றி மற்றவர்கள் மேல் நம்பிக்கை இழந்ததாகவும், அதன் விளைவாகவே அதிகளவில் 'சிங்கள பௌத்தர்களை', அதிலும் குறிப்பாகக் கண்டிச் சிங்களவர்களை முக்கிய பதவிகளுக்கு நியமித்ததாகவும் தனது நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகின்றார்.

தடம்மாறிய இடதுசாரிகள்

'தனிச் சிங்களம்' சட்டத்தை எதிர்த்ததில், இடதுசாரிக் கட்சிகளுக்கு முக்கியபங்கு இருக்கிறது. கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா, கலாநிதி என்.எம் பெரேரா ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். தன்னை மிகப்பெரும் 'மாக்ஸிஸ புரட்சியாளனாக' முன்னிறுத்திய ‡பிலிப் குணவர்த்தன ஆரம்பத்திலேயே இனவாத முகத்தை அணிந்துகொண்டார். 1963ஆம் ஆண்டளவில் கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் கூட 'தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து' என்ற நிலையிலிருந்து இறங்கி 'தனிச் சிங்களத்தை' ஏற்கும் நிலையை எட்டிவிட்டிருந்தன.

இதற்கு வாக்குவங்கி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை தமிழரசுக் கட்சி பலமான கட்சியாக உருவாகியிருந்தது. அதற்கு மாற்றாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இருந்தது. இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்ந்துகொண்டிருந்தது. ஆகவே, இந்த இடதுசாரிக் கட்சிகளின் பிரதான வாக்குவங்கியானது சிங்கள வாக்குவங்கியாகவே இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தக் கொள்கை மாற்றம் அதிலிருந்த தமிழ் உறுப்பினர்களின் வெளியேற்றத்துக்கு விளைவித்தது. 1964இல் லங்கா சமசமாஜக் கட்சி 'தனிச் சிங்களம்' சட்டத்தை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் விசனமடைந்த பாலா தம்பு தலைமையிலான தமிழ் மாக்ஸிஸவாதிகளும், எட்மண்ட் சமரக்கொடி தலைமையிலான சிங்கள

மாக்ஸிஸவாதிகளும் லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியைத் தோற்றுவித்தனர். 1963இல் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து 'ஐக்கிய இடது முன்னணியை' உருவாக்கின. இதுவே பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து 1970இல் 'ஐக்கிய முன்னணி' அரசாங்கத்தை உருவாக்கியது.

'தனிச் சிங்களம்' சட்டம் பற்றிய பிரதான இடதுசாரிக் கட்சிகளின் கொள்கை மாற்றமானது தமிழ் மக்களின் மொழியுரிமைப் போராட்டத்தில் ஒரு முக்கிய பின்னடைவு. தமிழ் மக்களின் மொழியுரிமையை, சமத்துவத்தை ஆதரித்தவர்களுள் இடதுசாரிகள் முக்கியமானவர்கள். அந்த ஆதரவுப் பலம் இல்லாது போனது நிச்சயம் பின்னடைவுதான். ஆனால், இதைவிட மிகப்பெரும் அநீதிகள் இந்தக் கூட்டணியால் எதிர்காலத்தில் நிகழ்த்தப்படும் என்பது அன்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் 'சிங்கள-பௌத்த' தேசியவாசியான மெத்தானந்தவினால் சிங்களம் மட்டுமல்லாமல் பௌத்தமும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தப்படத் தொடங்கியது.

- See more at: http://www.tamilmirror.lk/160779/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A4-#sthash.EIkysMC9.dpuf
Link to comment
Share on other sites

நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள்
 
 

article_1450066499-dc10.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 18)

இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை

1948இல், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அன்றைய  ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. குறித்த சட்டமானது பின்வருமாறு வழங்கியது:

(அ) இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன் இலங்கையில் பிறந்தவராகவோ, அல்லது.

(ஆ) அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையிற் பிறந்தவர்களாகவோ இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவார். அத்துடன்

(இ) இலங்கைக்கு வெளியே பிறந்தவர், இலங்கைப் பிரஜையாக மதிக்கப்பட வேண்டுமேயானால் அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையிற் பிறந்திருத்தல் வேண்டும், அல்லது,

(ஈ) அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும்.

இச்சட்டமூலம், இந்திய வம்சாவழி மக்கள் பிரஜாவுரிமையைப் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தியது. இதற்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்திய-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை சட்டத்தின்படி, இலங்கையில் குடும்பமாக ஏழு வருடங்கள் வசித்தவர்களும், விவாகமாகாமல், பத்து வருடங்கள் வசித்தவர்களும் பிரஜாவுரிமை பெறுவதற்கு உரிமை பெற்றார்கள். இதன் கீழ் ஏறத்தாழ 100,000 இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாக்குரிமை பெற்றிருந்தார்கள். ஆனால், மிகப்பெருந்தொகையான இந்திய வம்சாவழி மக்கள் பிரஜாவுரிமை இல்லாமல் நட்டாற்றில் விடப்பட்டனர்.

நேரு-கொத்தலாவல ஒப்பந்தம்

1954இல், சேர் ஜோன் கொத்தலாவல பிரதமராக இருந்த போது, அவருக்கும் அன்றைய இந்தியப் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்குமிடையில் இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் 1954 ஜனவரி 18ம் திகதி 'நேரு-கொத்தலாவல' ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இலங்கையானது, வயதுவந்த ஆனால், இதுவரை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்திராத உள்நாட்டில் வதிவோரைப் பதிவுசெய்யும் காரியத்தை முன்னெடுக்கும் எனவும், அதன் பின் அப்பதிவில் இல்லாதோர் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக கருதப்படுவர் எனவும், அவர்கள் இந்திய மொழிகளிலொன்றைப் பேசுபவர்களாக இருந்தால் அவர்கள் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்படுவார்கள் எனவும், அவர்களை திருப்பியனுப்புவதற்கு வேண்டிய வசதிகளை இலங்கைக்கான இந்தியத் தூதுவராலயம் செய்து தரும் எனவும் இணங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் பற்றிக் கருத்துக் கூறிய சௌமியமூர்த்தி தொண்டமான், 'இந்த ஒப்பந்தம் வெற்றியளிக்க வேண்டுமெனில், இதற்கான டெல்லிப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் காட்டிய முனைப்பை, இதன் அமுலாக்கத்திலும் காட்ட வேண்டும்' என்றார். இந்த ஒப்பந்தத்துக்கெதிராக அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கொண்டு வந்த மசோதா, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், தொண்டமான் ஐயம் கொண்டது போலவே, ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் முனைப்புடனோ, செயல்திறனோடோ, நல்லெண்ணத்துடனோ செயற்படவில்லை. 1954 மார்ச் 3ஆம் திகதி நடந்த பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை அரசாங்க அதிகாரிகள், இந்திய வம்சாவழி மக்கள் இலங்கை பிரஜாவுரிமை பெறுவதை ஊக்கமிழப்பு செய்யும் வகையில் நடந்துகொள்கிறார்கள் எனக்குற்றஞ்சுமத்தினார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத் தரப்பிலும் இந்தியாவின் கெடுபிடிகள் பற்றி விசனம் எழுந்தது. இதுபற்றி தனது சுயசரிதை நூலான 'ஓர் ஆசியப் பிரதமரின் கதை (ஆங்கிலம்)'-இல் எழுதும் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல, 'இந்திய தரப்பில் ஒரு பிரஜையேனும்கூட பதிவுசெய்யப்படாத நிலையில், நாம் வேண்டுமென்றே இந்திய வம்சாவழி மக்கள் இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்து கொள்வதில் அக்கறையீனமாக இருக்கிறோம் என்ற குற்றச்சாட்டு இந்தியாவின் தரப்பிலிருந்து வரத்தொடங்கியது. அத்தோடு இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் மனதை மாற்றி இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்ற நிபந்தனையும் இந்தியத்தரப்பில் விதிக்கப்பட்டது. இது இந்திய மக்களை எங்களது கையில் முழுமையாக எறிந்துவிடும் செயல்' எனக்குறிப்பிடுகிறார். அதேவேளை, 1963இல் இலங்கை இராணுவத்தால் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கெதிரான படையணி ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் சட்டவிரோத இந்திய குடியேற்றவாசிகளை (இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாத இந்திய வம்சாவழி மக்களை இவ்வாறுதான் அரசாங்கம் அடையாளப்படுத்தியது) கைதுசெய்து, விசேட தடுப்புக் காவலரண்களில் தடுத்து வைப்பதாகும். இதன் பின் இன்னொரு சுற்றுப் பேச்சுவார்த்தை டெல்லியில் இடம்பெற்றது. ஆனாலும், ஒப்பந்தம் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாது போனது. இந்தப் பிரச்சினை தொடர்பில் அன்று பெரும்பான்மையான இந்திய வம்சாவழி மக்களின் பிரதிநிதியாக இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இலங்கை இந்திய காங்கிரஸ்) முழுவினைத்திறனுடன் செயற்படமுடியாததற்கு அதன் உட்கட்சி முறுகல் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். இலங்கை இந்திய காங்கிரஸில் பலம் பொருந்திய ஆளுமைகளாக சௌமியமூர்த்தி தொண்டமானும், ஏ. அஸீஸும் இருந்தனர். ஹட்டனில் நடைபெற்ற 1954ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், அதன் தலைமைப்பதவியை தொண்டமான் சார்பில் போட்டியிட்ட சோமசுந்தரத்தை தோற்கடித்து ஏ. அஸீஸ் கைப்பற்றினார், ஆனால் மற்றைய பதவிகள் தொண்டமானின் ஆதரவாளர்களாலேயே வெற்றிகொள்ளப்பட்டது. இருதரப்பு முறுகல் நிலை முற்றிய நிலையில் 1955 டிசம்பர் 13 அன்று ஏ.அஸீஸ், இலங்கை தொழிலாளர்

காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கெதிராக அஸீஸ் அவர்கள் தாக்கல் செய்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 1956 ஜனவரி 1இல் அ.அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை உருவாக்கினார்.

'நாடற்றவர்கள்' ஆக்கப்பட்ட அநீதி

உண்மையில், சுதந்திர இலங்கையைப் பொறுத்தவரை இலங்கையில் அன்று வாழ்ந்துகொண்டிருந்த அனைத்து மக்களும் இலங்கைப் பிரஜைகளாகக் கருதப்பட்டிருக்க வேண்டியவர்களே. ஆனால், 'இந்திய வம்சாவழி மக்கள்' என்ற முத்தரை, துரதிர்ஷ்டவசமாக இந்நாட்டில் கணிசமாக அன்று வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தின் மீது பதிக்கப்பட்டது. இதன் பின்னால் இன அரசியல் இருக்கிறதென்றே பல தமிழ் அரசியல் தலைவர்களும், பல அரசியல் ஆய்வாளர்களும் கருதுகிறார்கள். அவர்களின் கருத்துப்படி, 1946இல் (இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்படுதற்கு 2 ஆண்டுகள் முன்பு) இலங்கைச் சனத்தொகையின் 11.7சதவீதம் இந்திய வம்சாவழி மக்களாக இருந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள், பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக பிரித்தானியர்களால் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள். இவர்களனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்கினால் இந்திய வம்சாவழித் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என இலங்கையில் தமிழர்களின் மொத்த சனத்தொகை கணிசமானளவுக்கு உயர்ந்துவிடும் என்ற பெரும்பான்மைச் சிங்களவர்களின் அச்சம்தான், இந்திய வம்சாவழி மக்களுக்குப் பிரஜாவுரிமை மறுக்கப்படக் காரணம். ஆனால், இந்த இன அரசியல் வாதத்தை மறுப்போர் இந்தியாவிலிருந்து பிரித்தானியரால் கொத்தடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அல்ல, மாறாக அவர்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டார்களோ, அங்கே அவர்களைத் திருப்பி அனுப்புவதுதான் நியாயம் என்ற வாதத்தை முன்வைத்தனர். இந்த வாதம் ஏற்புடையதல்ல. இலங்கையில் வாழக்கூடிய பெரும்பான்மை மக்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் இங்கு வந்து குடியேறியவர்கள்தான். இலங்கையின் பிரபல வரலாறு விஜயனிலிருந்து தொடங்குகிறது, விஜயனும் ஒரு வந்தேறுகுடிதானே? சுதந்திர இலங்கையில் அன்று வாழ்ந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களாக அங்கிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை இங்கிருந்த இந்திய வம்சாவழியினரில் எவரேனும் இந்தியப் பிரஜாவுரிமை பெற விரும்பியிருப்பின் அவர்களுக்கு விலக்களித்திருக்கலாம்.ஆனால், இந்நாட்டின் மொத்த சனத்தொகையில், 11.7சதவீதம் இல் வெறும் 0.7சதவீதம் அளவுக்கு மட்டும் பிரஜாவுரிமையை வழங்கிவிட்டு, 11சதவீதத்தினரை 'நாடற்றவர்களாக' பலதசாப்தங்களாக வைத்திருந்த அநீதி, இலங்கை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய கறையாகும்.

பிரஜாவுரிமைப் பிரச்சினையில் அக்கறை காட்டத்தொடங்கிய ஸ்ரீமாவோ அரசாங்கம்

சேர் ஜோன் கொத்தலாவலவுக்குப் பின்னர், இந்திய வம்சாவழி மக்களினுடைய பிரஜாவுரிமைப் பிரச்சினை பற்றி எந்த முக்கிய நகர்வும் முன்னெடுக்கப்படவில்லை. ஏறத்தாழ ஒரு தசாப்தகாலத்துக்கு பின்னர் ஸ்ரீமாவோ அரசாங்கம் இந்தப் பிரச்சினை தொடர்பில் அக்கறைகாட்டத் தொடங்கியதுடன் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக் கதவுகளையும் தட்டத் தொடங்கியது. இலங்கையில் வாழ்ந்துகொண்டிருந்த 'நாடற்றவர்கள்' எனக்கருதப்படும் இந்திய வம்சாவழி மக்களை இலங்கை அரசாங்கம் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப முயல்வதை உணர்ந்துகொண்ட சௌமியமூர்த்தி தொண்டமான், 1963 ஒக்டோபர் 4ஆம் திகதி அன்று இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்து, 'நாடற்றவர்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்வது பற்றி கொழும்பில் கதையொன்றடிபடுகிறது. இது போன்ற குதிரைப் பேரத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது இலங்கை அரசாங்கத்துக்கும், இலங்கை அரசாங்கத்தின் பாகுபாடான சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமிடையிலான பிரச்சினை. இது இந்தியாவின் பிரச்சினை அல்ல' என்று கூறினார். இலங்கையிலிருந்து 'நாடற்றவர்கள்' என அரசாங்கம் முத்திரை குத்தியுள்ள இந்திய வம்சாவழி மக்களை வெளியேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முயல்வதை உணர்ந்துகொண்ட தொண்டமான், அதனைத் தடுப்பதற்காகவே டெல்லி விரைந்தார். விருப்பின் பேரில் மீண்டும் வருவோரை மட்டுமே ஏற்பதாகவும், இதுபற்றிய எதிர்கால பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் போது கட்டாயம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் கலந்தாலோசிப்பதாகவும் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதியளித்தார். தொண்டமானைப் பொறுத்தவரை இந்தச் சந்திப்பு வெற்றிகரமான ஒன்று. குதிரை பேரம் போன்று மக்களை பண்டங்களாக பரிமாற்றிக்கொள்வதில் ஜவஹர்லால் நேருவுக்கு உடன்பாடில்லை என்ற கொள்ளை, இலங்கையில் பிரஜாவுரிமை வேண்டிய இந்தியவம்சாவழி மக்களுக்கு சாதகமானதாக இருந்தது, அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவிடத் துடித்த இலங்கை அரசாங்கத்துக்கு அது சாதகமாக இருக்கவில்லை. ஆனால், 1964 மே 27இல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாரடைப்பினால் உயிரிழந்தார். அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். சாஸ்திரியினுடைய சர்வதேச உறவுகள் பற்றிய அணுகுமுறை நேருவினுடையதை விட வித்தியாசமானதாக இருந்தது. அதன் விளைவாக ஸ்ரீமாவோ அரசாங்கத்தால் சர்வதேச உறவுளில் மிகப்பெருஞ் சாதனை என புகழப்படும் 'ஸ்ரீமா-சாஸ்திரி' ஒப்பந்தத்தை சாத்தியமாக்கக்கூடியதாக இருந்தது. இலங்கையில் வாழ்ந்துகொண்டிருந்த, இலங்கை அரசாங்கம் 'நாடற்றவர்கள்' என்று கருதிய இந்திய வம்சாவழி மக்களை பண்டங்களைப் பிரித்துக்கொள்வது போல பிரித்துக்கொள்வதற்கு இந்திய-இலங்கை அரசாங்கங்கள் ஒன்றுபட்டன

- See more at: http://www.tamilmirror.lk/161398/%E0%AE%A8-%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-#sthash.zKLoUqGl.dpuf
Link to comment
Share on other sites

ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தம் எனும் 'குதிரைப்பேரம்'!
 

article_1450671036-dcf.jpgஎன்.கே. அஷோக்பரன் (LLB Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 19)

ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தம்

'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்தம் என்பது ஒரு வரலாற்றுச் சாதனை, சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரையில் ஒரு மிக முக்கிய நிகழ்வு. 'நாடற்றவர்கள்' என்ற நிலையிலிருந்த ஏறத்தாழ 970,000 மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினதும் லால் பகதூர் சாஸ்த்ரியினதும் சாதனை என்ற பெருமைச் சொற்கள் பல இடங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

ஆனால், அன்று இலங்கையில் வாழ்ந்துகொண்டிருந்த இந்திய வம்சாவழி மக்களின் மக்கள் பிரதிநிதியாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் வார்த்தைகளில் சொல்வதானால் இது ஒரு 'குதிரைப்பேரம்' வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்தம் உண்மையில் ஒரு சாதனையா? இல்லை ஏற்கெனவே பிரஜாவுரிமையின்றி வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்கு வந்த சோதனையா?

இலங்கையில் 1964ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரஜாவுரிமையின்றி 'நாடற்றவர்களாக' வாழ்ந்து கொண்டிருந்த இந்திய வம்சாவழி மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 975,000 ஆக இருந்தது. 'கொத்தலாவல-நேரு' ஒப்பந்தத்துக்;கும் அதன் தோல்விக்கும் பின்னர், ஏறத்தாழ ஒரு தசாப்த காலத்தின் பின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்பில் தனது கவனத்தை திருப்பியது.

சர்வதேச அரசியலில், பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்குத் தனிப்பட்ட அக்கறை இருந்ததாக அன்றைய பிரதமரின் செயலாளராகவிருந்த பிரட்மன் வீரக்கோன் தனது 'ரென்டேர்ட் அன்டு ஸீஸர் (ஆங்கிலம்)' என்ற நூலில் குறிப்பிடுகிறார். 1961ஆம் ஆண்டு பெல்கிரேடில் நடந்த அணிசேரா நாடுகள் மாநாட்டில் உலகின் முதலாவது பெண் பிரதமராக அவர் ஆற்றிய உரையில், 'ஒரு பெண்ணாகவும், ஒரு தாயாகவும் நான் சர்வதேச நாடுகளைக் கேட்டுக்கொள்கிறேன், வன்முறையைக் கைவிடுங்கள்' என்ற அவரது குரல் உலகெங்கும் பேசப்பட்டது என பிரட்மன் வீரக்கோன் குறிப்பிடுகிறார்.

இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் ஏனைய சோசலிச நாடுகளுடன் மிக நெருங்கிய சர்வதேச உறவுகளை ஸ்ரீமாவோ பேணி வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்திய-சீன யுத்த காலத்தில் சமாதானத்தூதுவராக இருநாடுகளுக்கும் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சென்றிருக்கிறார்.

ஆகவே, 'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்தத்தை பல இராஜதந்திர அறிஞர்களும், அரசறிவியலாளர்களும் புகழ்வது போல ஒரு சாதனையாகவே அவரும் பார்த்திருக்கலாம், ஆனால், இந்த இராஜதந்திர விளையாட்டில் பகடைக்காய்களாக அப்பாவி மக்கள் பயன்படுத்தப்பட்டதுதான் சோகத்துக்குரியது.

இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை பற்றி பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்;கும், இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்த்ரிக்குமிடையில் 1964 ஒக்டோபர் 24ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. 4 நாட்களுக்கென திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள், இறுதியில் 6 நாட்கள் நடைபெற்றன.

1964 ஒக்டோபர் 30ஆம் திகதி இந்தியாவுக்கும்-இலங்கைக்குமிடையிலான இந்திய வம்சாவழி மக்களின் நிலை மற்றும் எதிர்காலம் பற்றிய ஒப்பந்தம் (ஸ்ரீமா-சாஸ்த்ரி) ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் இலங்கையில் 'நாடற்றவர்களாக' இருக்கின்ற இந்திய வம்சாவழி மக்களுக்கு 'பிரஜாவுரிமையைப்' பெற்றுக்கொடுத்தலாகும். அதன் படி மொத்தமாக 975,000 அளவிலிருந்த 'நாடற்ற' இந்திய வம்சாவழி மக்களை ஒப்பந்தம் போட்டு தமக்கிடையே பிரித்துக்கொள்ள இந்திய-இலங்கை அரசாங்கங்கள் முடிவெடுத்தன.

இந்த 975,000 பேரில் 300,000 பேருக்கு இலங்கை அரசாங்கம் பிரஜாவுரிமை அளிக்கும் எனவும், 525,000 பேரை இந்திய அரசாங்கம் மீளப்பெற்றுக்கொள்ளும் எனவும், அவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்கும் எனவும், இந்தச் செயற்பாடானது இந்த ஒப்பந்தம் வலுவுள்ள காலமான 15 வருடங்களுக்கு இடம்பெறும் எனவும். மிகுதி 150,000 பேரினது நிலைபற்றி பின்னொரு காலத்தில் இருநாடுகளிடையேயும் பேசித் தீர்மானிக்கப்படும் எனவும் வழங்கிய ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்துக்கு இருநாடுகளும் இணங்கின.

'நாடற்றவர்களுக்கு' பிரஜாவுரிமை பெற்றுக்கொடுத்திருக்கும் மகத்தான சாதனையல்லவா இது? இதுவரை காலமும் யாரும் கண்டுகொள்ளாத இந்தப்பிரச்சினைக்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வெற்றிகரமான தீர்வொன்றினைக் கண்டிருக்கிறார் என்ற கருத்துடையவர்கள் பலர் இருக்கிறார்கள். இதில் பாதி உண்மை இருக்கிறது.

பிரஜாவுரிமை இன்றி வாழ்ந்த மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பாராட்டலாம். ஆனால், அந்த மக்களின் மனநிலையை, விருப்பத்தை அறியாமல், 'குதிரைப்பேரம்' போல இந்தநாட்டில் பிறந்து வாழ்ந்துகொண்டிருந்த மக்களை கூறுபோட்டுப் பிரித்துக்கொண்டதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இதுபற்றி அன்று இந்திய வம்சாவழி மக்களின் மக்கள் பிரதிநிதியாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் தனது 'தேயிலையும் அரசியலும் (ஆங்கிலம்)' என்ற சுயசரிதை நூலில் பின்வருமாறு எழுதுகிறார்: 'இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமை பற்றிய பேச்சுவார்த்தைக்காக டெல்லி செல்வதற்கு முன், அவர் (பிரதமர் ஸ்ரீமாவோ) என்னுடனோ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடனோ

பிரஜாவுரிமைப் பிரச்சினை பற்றி கலந்தாலோசிக்கவில்லை. இதைவிட பாரதூரமானது என்னையோ வேறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களையோ இந்தப் பிரச்சினை பற்றிய எமது தரப்பு நிலைப்பாட்டை எடுத்துச்சொல்வதற்கு இந்தியா செல்ல அனுமதிக்கவில்லை (அன்றைய காலத்தில் நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி தேவைப்பட்டது). இதன் பிறகுதான் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் உருவானது. இது பிரஜாவுரிமைப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை, மாறாக இன்னும் நிறைய பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது.

இந்த ஒப்பந்தம் எனக்கு சினத்தை ஏற்படுத்தியது. நான் அதனை 'குதிரைப்பேரம்' என்று விமர்சித்தேன். இந்திய வம்சாவழி மக்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்காமல், அவர்களது கருத்தைக் கேட்காமல் இந்தப் பிரச்சினைபற்றி பேச்சுவார்த்தை நடத்தவோ, தீர்வொன்றினை எட்டவோ இலங்கை அரசாங்கத்துக்கோ, இந்திய அரசாங்கத்துக்கோ எந்தவித உரிமையுமில்லை என நான் குறிப்பிட்டேன். பிரதமர் ஸ்ரீமாவோ எனது முதுகுக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தியதையும் நான் கண்டித்தேன். நான் எப்போதும் ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தை எதிர்த்தே வந்திருக்கிறேன்.

இன்று இந்த நாளிலும் கூட. நான் நேரடியாகச் சொல்கிறேன், அரை மில்லியன் 'இலங்கை-இந்திய' மக்களின் உரிமைகளைப் பேரம்பேசி இந்தியா மிகப்பெரிய தவறினை இழைத்துவிட்டது. இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையில் பிறந்தவர்கள் - அவர்களது முன்னோர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் - ஆகவே 'மிக அண்மைய இந்திய வம்சாவழி' என்ற ஒரே 'பாவத்துக்காக' அவர்கள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சக்தி வாய்ந்த பிரச்சாரத்தினூடாக இலங்கைவாழ் இந்திய வம்சாவழி மக்களை இந்திய குடியுரிமைப் பெறச் செய்ய முயன்றது, இவ்வாறுதான் இந்த ஒப்பந்தத்தை சாத்தியமாக்க முயன்றனர். ஆனால் இது படுதோல்வியிலேயே முடிந்தது. இந்திய பிரஜைகளாக தம்மை பதிந்து கொண்ட 8,0000 அளவிலானவர்கள் இன்னும் இங்குதான் வாழ்கிறார்கள்.'

சௌமியமூர்த்தி தொண்டமான் தனது சுயசரிதையில் பதிவுசெய்திருந்த இந்த வார்த்தைகளின் நியாயமாக கோபம் பொதிந்திருப்பதைக் காணலாம். ஒரு குறிப்பிட்ட தனித்துவத்தன்மைகள் கொண்ட மக்கள் கூட்டத்தின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் போது, அவர்களினுடைய கருத்தைக் கேட்காமலேயே, அவர்களுக்கான தீர்வினை இருநாட்டு அரசாங்கங்கள் செய்துகொண்டு அவர்களை தமக்கிடையே 'பண்டங்களைப்போல' கூறிட்டுப் பங்கிட்டுக்கொள்வதை எப்படி நியாயமாகும்? மேலும் அவர் பயன்படுத்திய 'மிக அண்மைய இந்திய வம்சாவழி' என்ற சொற்றொடர் ஆழமான விடயத்தை உணர்த்துகிறது.

அதாவது இந்த இலங்கை நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மையானவர்கள் வந்தேறு குடிகள்தான், அதுவும் குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்தவர்கள்தான். விஜயனின் வருகையிலிருந்து இலங்கையின் வரலாறு தொடங்குகிறதென்றால், அந்த விஜயனும் அவன்வழி வந்தவர்களும் இந்திய வம்சாவழிதானே. மகாவம்சம் சொல்கின்ற சிங்கத்துக்கும், கலிங்க இளவரசிக்கும் பிறந்த சிங்ஹபாகு அரசாண்ட சிங்ஹபுர இந்தியாவின் ஒடிசாவிலல்லவா இருந்தது.

இந்த சிங்ஹபாகுவின் மகனல்லவா விஜயன். கண்டிய இராச்சியத்தை ஆண்ட நாயக்க மன்னர்களும், அவர் வழிவந்தோரும் இந்திய வம்சாவழிதான். ஆகவே 'மிக அண்மையில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்' என்ற 'பாவத்திற்காகத்தான்' இந்த மக்கள் அவர்களது விருப்பத்துக்கு மாறாகத் தண்டிக்கப்படுகிறார்களா? என்பதே அவருடைய கேள்வியின் உட்பொருள்.

'இது சர்வதேச உறவுகளில் எங்கும் நடந்திராத நடவடிக்கை. அதிகாரத்தின் விளையாட்டில் அரை மில்லியன் மக்கள் பகடைக்காய்களாக்கப்பட்டிருக்கிறார்கள்' என இலங்கை தமிழரசுக் கட்சியின் சா.ஜே.வே.செல்வநாயகம் 'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்தம் பற்றி பேசும் போது குறிப்பிட்டார். 1964 திருகோணமலை மாநாட்டில் இந்த ஒப்பந்தத்தைக் கண்டித்து தமிழரசுக்கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

பிரஜாவுரிமைப் பிரச்சினையை முக்கிய காரணம் காட்டி, ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தலைமையின் கீழான அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து விலகிய சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலானவர்கள், இது போன்றதொரு சூழலில் இன்னும் காத்திரமான எதிர்ப்பை இந்திய வம்சாவழி மக்களின் தலைவர்ளோடு இணைந்து வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தததுக்கெதிரான எதிர்ப்புக்குரல்கள் இந்தியாவிலும் ஒலித்தன. இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபாவில் உரையாற்றிய ஆச்சார்யா க்ரிபாலனி, இந்த ஒப்பந்தமானது இந்தியாவுக்கு எதிரானதென்றும், இந்திய வம்சாவழி மக்களின் விருப்பமின்றி இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் இதற்கெதிரான கண்டனங்கள் கடுமையாக எழுந்தன. நெடுஞ்செழியன், சி.என்.அண்ணாதுரை ஆகியோர் இதனை இந்திய மத்திய அரசாங்கத்தின் துரோக நடவடிக்கையாகவே சித்தரித்தனர்.

இத்தனை எதிர்ப்புக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில், பேனா மை காய்வதற்கு முன்பாகவே முதலிடியை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இறக்கினார். 1964 நவம்பரில் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைப் பிரஜைகளாகப் பதிவுசெய்யும் இந்திய வம்சாவழிமக்கள் பொதுவான வாக்காளர் இடாப்பிலன்றி, தனியானதொரு வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்யப்படுவார்கள் என பிரதமர் அறிவித்தார்.

பல இந்தியத் தலைவர்கள் இதனைக் கண்டித்தார்கள். சிலர், இது பாகுபாட்டை வெளிப்படுத்தும் நடவடிக்கை, ஒப்பந்தத்தின் நன்நோக்கிற்கு முரணாணது என்று குற்றம் சாட்டினர். ஆனால் இந்நிலையே தொடர்ந்தது.

மக்களைப் பங்கிட்டுக்கொள்ளப் போடப்பட்ட ஒப்பந்தம், அவர்களது விருப்பத்தைப் பற்றிக் கருதவில்லை. இந்தியாவுக்கு மீள அழைக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் பற்றிய திட்டம், அவர்களுக்கான தொழில் வசதிகள், அவர்களது குடும்பம், உறவுகள் பற்றிய நிலை பற்றி எல்லாம் ஒப்பந்தத்தில் எதுவுமில்லை. ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் போது இருநாடுகளின் கண்காணிப்பு, மீளாராய்வு பற்றியெல்லாம் எந்தத்திட்டமுமில்லை.

இலங்கை அரசாங்கம் தனியொரு தேர்தல் இடாப்பில் பதிவு செய்வதைக் கூட கேள்வி கேட்க ஒப்பந்தத்தில் இடமில்லை. அதாவது ஒப்பந்தம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெளிவில்லாத ஒரு நிலையிலேயே இவ்வொப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பங்கீட்டின் பின்னர் பங்கிடாத நட்டாற்றில் நிற்கும் மிகுதி 150,000 பேரின் நிலை என்ன என்ற கேள்விக்கும் பதிலில்லை. இராஜதந்திர நகர்வுகள் என்ற பார்வையில் ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தம் ஒரு சாதனையாக இருக்கலாம், ஆனால், இது நிச்சயம் ஒரு மக்கள் கூட்டத்துக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அநீதி என்ற கருத்தில் நிறைய நியாயங்கள் இருக்கிறது.

- See more at: http://www.tamilmirror.lk/162006/%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%92%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AE-#sthash.fnWSbK1u.dpuf
Link to comment
Share on other sites

கவிழ்ந்தது ஸ்ரீமாவோவின் அரசாங்கம்
 

article_1451276863-as.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 20)

'லேக் ஹவுஸ்' பத்திரிகை நிறுவனத்தைக் கையகப்படுத்தும் முயற்சி

ஆங்கிலேயரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த 'ரைம்ஸ் ஒப் சிலோன்' பத்திரிகைக்கு போட்டியாக, 1918ஆம் ஆண்டு டி.ஆர்.விஜயவர்த்தன எனும் வணிகரால்  'லேக் ஹவுஸ்' ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கைப் பத்திரிகைத் துறையில் 'லேக் ஹவுஸினது' பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 1948இல் இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்பு, இலங்கை பத்திரிகைச் சந்தையில் 2ஃ3 பங்கை லேக் ஹவுஸ் கொண்டிருந்தது. பத்திரிகைத் துறையின் சக்கரவர்த்தியாக மட்டுமல்லாது, அரசியலையும் தீர்மானிக்கும் சக்திவாய்ந்த நிறுவனமாக அது உருவாகியிருந்தது.

1950இல் டி.ஆர்.விஜயவர்த்தனவின் மறைவுக்குப் பின்னர், 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக டி.ஆர். விஜயவர்த்தனவின் மருமகனான எஸ்மண்ட் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், இன்றைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையாவார் அத்துடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் உறவினருமாவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் 'லேக் ஹவுஸ்' பத்திரிகைகளை தமக்கு எதிரான நிலைப்பாடுடையதாகவே கருதினர். 1956 தேர்தல் காலத்திலும் அதன் பின்பும்கூட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு கடும் சவாலாக 'லேக் ஹவுஸ்' பத்திரிகைகள் இருந்ததாக பல அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.

ஆயினும் 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தை முடக்கும் எந்தவொரு நேரடி நடவடிக்கையையும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க எடுக்கவில்லை. ஆனால், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அணுகுமுறை, அவருடைய கணவருடையதைப் போலன்றி வேறானதாக இருந்தது. இதற்கு அவருடன் ஆதரவுநிலையில் இருந்த இடதுசாரிக் கட்சிகளின் அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

1960ஆம் ஆண்டு தேர்தல்களின் போது ஸ்ரீமாவின் 'சோசலிஸ-சிங்கள பேரினவாத' போக்கினை 'லேக் ஹவுஸ்' பத்திரிகைகள் கடுமையாகச் சாடின. 1960இல் ஆட்சிப்படியேறியதும், சிம்மாசன உரையிலேயே 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஸ்ரீமாவோ அரசாங்கம் முனைப்புக் காட்டியது. எதிர்க்கட்சிகளும், 'லேக் ஹவுஸ்' நிறுவனமும் இந்த 'ஊடக சுதந்திரத்துக்கெதிரான' நடவடிக்கையை எதிர்த்து கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தன.

இவற்றின் விளைவாக 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சி உடனடியாக நடக்கவில்லை. ஆனால், இந்த விடயம் இதனுடன் நின்று விடவில்லை.

1963 செப்டம்பர் 23இல், ஸ்ரீமாவோ அரசாங்கமானது ஊடகக் கட்டுப்பாடுகள் பற்றி ஆராய ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தது. ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் அரசாங்கத்தின் பகீரதப்பிரயத்தனங்களின் இன்னொரு வழிமுறையாக இது இருந்தது. அன்றைய முன்னணிப் பத்திரிகை நிறுவனங்களான 'லேக் ஹவுஸ்' நிறுவனம், மற்றும் 'ரைம்ஸ் ஒப் சிலோன்' நிறுவனம் ஆகியவற்றை முடக்கி, கையகப்படுத்துவதே இந்த 'ஊடக ஆணைக்குழுவின்' பின்னாலிருந்த அரசியல் நோக்கம் என்பதை, அதன் சிபாரிசுகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

இவ்விரு நிறுவனங்களையும் முதலாளித்துவத்தையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஆதரிக்கும் நிறுவனங்களாகவும் கிறிஸ்தவ ஆதரவுநிலை கொண்ட அமைப்புக்களாகவுமே பிரதமர் ஸ்ரீமாவின் 'சோஸலிஸ-சிங்களபௌத்த பேரினவாத' கொள்கை பார்த்தது. ஆகவே, இதனை முடக்க வேண்டியதை முக்கியத்துவமிக்கதாக பிரதமர் ஸ்ரீமாவின் அரசாங்கம் கருதியது. இதற்கு ஏற்றாற்போலவே, 1964 ஒக்டோபரில் வெளிவந்த ஊடக ஆணைக்குழுவின் அறிக்கையில் 'லேக் ஹவுஸ்'

(அஸோஸியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒ‡ப் சிலோன் லிமிடட்) நிறுவனத்தை அரசாங்கம் கையகப்படுத்தவேண்டும் எனவும், 'ரைம்ஸ் ஒ‡ப் சிலோன்' நிறுவனத்தை நடத்த கூட்டுறவு அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், அந்நியர் இங்குள்ள பத்திரிகை நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் நிலையை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் சிபாரிசுகள் செய்யப்பட்டன.

இதன்படி பத்திரிகைகளைத் தேசியமயமாக்குவதற்கான சட்டமூலம் செனட் சபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு, பின்னர் கீழ்சபையான மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விடத்தில் 'புத்திசாலித்தனமாகச்' செயற்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வந்த சட்டமூலத்துக்கு எதிர்த்தரப்பைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுசரணை அளிக்கச் செய்ததனூடாக, அதன் மீதான வாதம் நடைபெறும் திகதியை 1965 பெப்ரவரிக்கு ஒத்திவைக்கச்செய்தார்.

இது அரசாங்கத்துக்குக் கடுஞ்சவாலாக மாறியது. இதனை முறியடிக்க, நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்துவிட்டு, மீண்டும் புதிய கூட்டத்தொடரொன்றைக் கூட்டி, புதிதாக இந்த சட்டமூலத்தை அரசாங்கமே சமர்ப்பிக்க முடிவெடுத்தது. அதனடிப்படையில் பிரதமரின் வேண்டுகோளின்படி ஆளுநர் நாடாளுமன்றத்தை 1964 நவம்பர் 12ஆம் திகதி ஒத்திவைத்து, புதிய கூட்டத்தொடரை நவம்பர் 20இல் தொடங்க ஆணையிட்டார்.

'பத்திரிகைத் துறையில் தனியுடைமையை இல்லாதொழிக்க எனது அரசாங்கம் எடுத்த முயற்சி நடைமுறைச் சிக்கல்களில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்து, புதிய கூட்டத்தொடரொன்றை ஆரம்பிப்பதே இந்தச் சிக்கலை மீறி, 'ஊடக ஆணைக்குழுவின்' சிபாரிசுகளை அமுலாக்குவதற்கான ஒரே வழியாகும்' என பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நாட்டு மக்களுக்கு விளக்கமளித்தார்.

ஸ்ரீமாவோ அரசாங்கம் கவிழ்ந்தது

1964 நவம்பர் 20இல் நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. ஆளுநரின் சிம்மாசன உரை நிகழ்ந்தது. 1964 டிசம்பர் 3ஆம் திகதி சிம்மாசன உரை மீதான வாக்கெடுப்பு நடந்தது. இதன்போது, மதியம், தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் ஸ்ரீமாவுக்கு அனுப்பிவைத்த அவைத் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரும், அமைச்சருமான

சி. பி. டி சில்வா, மேலும் 13 ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சிக்கு மாறினார். சி.பி. டி சில்வாவுடன், மஹாநாம சமரவீர (இன்றைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் தந்தையார்), பி.பி.விக்ரமசூரிய, விஜேபாஹூ விஜேசிங்ஹ, எட்மண்ட் விஜேசூரிய, ஏ.எச். டி சில்வா, இந்திரசேன டி சொய்ஸா, சி.முனவீர, அல்பேர்ட் சில்வா, சேர் ரஸீக் ‡பறீட், எஸ்.பி.லேனாவ, லக்ஷ்மன் டி சில்வா, டி.இ.திலகரத்ன, ஆர்.சிங்க்ள்டன்-சல்மான் ஆகியோர் ஆளுந்தரப்பிலிருந்து எதிர்த்தரப்புக்கு மாறினர். நாடாளுமன்றின் அவையில் இந்த மாறுதல் எதிர்கட்சியினரின் பலத்த ஆரவாரத்தின் மத்தியில் நடந்தது. சி.பி.டி சில்வா எதிர்த்தரப்பில் சென்று அமர்ந்ததும், எதிர்த்தரப்பிலிருந்த ஆர்.ஜி.சேனநாயக்க எழுந்து, ஆளுந்தரப்புக்கு மாறினார். தான் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததற்கு 'இந்திய-இலங்கை' ஒப்பந்தம் (ஸ்ரீமா-சாஸ்த்ரி) என்ற சாதனை தான் காரணமென்றார். ஆனால் 'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்த்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதியாக சௌமியமூர்த்தி தொண்டமான் ஸ்ரீமாவோ அரசாங்கத்துக்கெதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்சி மாறல்களைத் தொடர்ந்து சிம்மாசன உரை மீதான வாக்களிப்பு இடம்பெற முன்பு, முன்னாள் பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயானந்த தஹநாயக்க, நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை, சிம்மாசன உரையில் திருத்தமாக முன்மொழிந்தார். அந்த திருத்தம் 74க்கு 73 என்ற எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஒரு வாக்கினால் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் கவிழ்ந்தது.

'லேக் ஹவுஸ்' பத்திரிகைகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியை தொடர்ச்சியாகக் கடுமையாகச் சாடியவை. அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த பத்திரிகை ஆக்கங்களே இதற்குச் சான்று. ஆனால், 'லேக் ஹவுஸை' தேசியமயமாக்குவதன்

ஊடாகக் கையகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தமிழரசுக் கட்சியும் கடுமையாக எதிர்த்தது. 1964 ஒக்டோபரில் வெளியிட்ட அறிக்கையொன்றில்,  'லேக் ஹவுஸ்' பத்திரிகைகள் தமிழ்மக்களுக்கும், எமது கட்சிக்கும் எதிராக தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளது, ஆயினும், ஊடக சுதந்திரத்தை அழிப்பது, எவ்வகையிலும் பொருத்தமானதொரு தீர்வல்ல' என்று இலங்கை தமிழரசுக் கட்சி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. ஸ்ரீமாவோவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியும் வாக்களித்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டால் அல்லது அரசாங்கம் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டால், பிரதமர் பதவி விலகுவதுடன், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படுவதே 'வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற' மரபு. 1964 டிசம்பர் 3ஆம் திகதி வாகெடுப்பில், ஸ்ரீமாவோ அரசாங்கம் தோல்வி கண்டிருப்பினும் டிசம்பர் 7ஆம் திகதி வரை அவர் பதவி விலகவில்லை அல்லது, நாடாளுமன்றத்தைக் கலைத்து மீண்டும் தேர்தலை நடத்தும்படி ஆளுநரிடம் கோரவுமில்லை.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் டொக்டர். ஈ.எம்.வி. நாகநாதன், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டதும் விரைவில் பதவி விலகுவதே மரபாகும் என்றும் குறிப்பிட்டார். இறுதியாக 1964 டிசம்பர் 7ஆம் திகதி பிரதமர் ஸ்ரீமாவோவின் வேண்டுகோளுக்கிணங்க ஆளுநரால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 1965 மார்ச் 22ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

1965ஆம் ஆண்டு ஸ்ரீமாவோவின் ஆட்சி வீழ்ந்தமையானது தமிழர் அரசியலைப் பொறுத்தவரையிலும் முக்கியத்துவமிக்கதொன்றாகும். தமிழர் தரப்பின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவிசாயக்காத போக்கு ஸ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் காணப்பட்டது.

ஆகவே, தமிழ் மக்களுக்கும் மாற்றம் ஒன்று தேவைப்பட்டது. ஆனால், தமிழ் மக்களின் தலைவிதியோ அல்லது துரதிர்ஷ்டமோ, இன்று வரை தமிழ் மக்கள் மெத்தப்பிரயத்தனத்துடன் ஆதரவளித்த மாற்றங்கள் எதுவுமே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்ததே கிடையாது. தேர்தலில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு போட்டியாக பலமான கூட்டணியொன்றை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக்க தீர்மானித்தார். ஸ்ரீமாவோ மற்றும் அவரது

'மார்க்ஸிய' நண்பர்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதைத் தடுப்பதற்கும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சி ஒன்றை உருவாக்கவும், ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்மண்ட் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதம நீதியரசரான நீதியரசர் பஸ்நாயக்க ஆகியோரும் மும்முரம் காட்டினர்.

இலங்கை அரசியலின் முக்கிய நிகழ்வுகளைத் தவிர்த்துவிட்டு தமிழர் அரசியல் வரலாற்றை மட்டும் பார்ப்பது ஏற்புடையதொன்றல்ல. ஏனெனில், தமிழர் அரசியல் வரலாற்றையும், அதனூடாக தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு இலங்கை அரசியலின் முக்கிய நிகழ்வுகளையும், அதுசார்ந்த தமிழ்த் தரப்பின் நடவடிக்கைகளையும் அதன் சூழமைவுடன் தெரிந்துகொள்ளுதல் அவசியமாகும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் டட்லி-செல்வா ஒப்பந்தமும், இலங்கை தமிழரசுக் கட்சி டட்லி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் முடிவும் எட்டப்பட்டது. தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கியமாக பேசப்படும் ஒப்பந்தங்களில் டட்லி-செல்வா ஒப்பந்தமும் ஒன்று. மாற்றம் எதிர்பார்த்த தமிழ்மக்களுக்கு மீண்டும் ஏமாற்றம் காத்திருந்தது.

(அடுத்தவாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/162483/%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-#sthash.nZflaTTP.dpuf
Link to comment
Share on other sites

'ஹத் ஹவுள': டட்லி தலைமையில் அமைந்த ஏழுதரப்புக் கூட்டணி
 
04-01-2016 10:17 AM
Comments - 0       Views - 3

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 21)

வளர்ந்த இனவாதமும், வேரூன்றத் தொடங்கிய மதவாத அரசியலும், முளைவிடத் தொடங்கிய பிரிவினையும்

1960-1964ஆம் ஆண்டு டிசெம்பர் வரையான ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் வீறுகொண்டு அமுல்ப்படுத்தப்பட்ட 'தனிச் சிங்களச்' சட்டத்தின் விளைவாக, தமிழர் அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களிடையேயும் 'பிரிந்து' செல்வதற்கான எண்ணம் முளைவிடத் தொடங்கியது. 1961 சத்தியாக்கிரக மற்றும் குடியியல் மறுப்புப் போராட்டத்துக்குப் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எந்தவொரு பாரிய எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இதன் விளைவாக, ஆங்காங்கே சிறிய அரசியல் குழுக்களும் அமைப்புக்களும் தோன்றின. இவை பிரிவினை, தனிநாடு என்ற கொள்கைப்பிரசாரத்தை முன்னெடுப்பவையாக அமைந்தன. பிரதான தமிழ் அரசியல் கட்சிகள், இலங்கை அரசாங்கத்தோடு இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி கண்டமையும், மறுபுறத்தில் தமிழ் மக்களின் தொண்டைக் குழியில் சிங்களம் திணிக்கப்பட்டுக் கொண்டிருந்தமையும் தமிழ் மக்களிடம் ஒரு நிர்க்கதியற்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது.

இவையனைத்தினதும் விளைவாக, ஆங்காங்கே பிரிவினைக்கான கோசங்கள் முளைவிடத் தொடங்கின. 'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கம், 'சிங்களவர்கள் ஒருபோதும் அரசியல் ஒப்பந்தங்களை மதிக்கமாட்டார்கள், சிங்கள அரசியல்வாதிகள், அவர்கள் வலதுசாரியோ, இடதுசாரியோ, நடுநிலைவாதியோ எதுவானாலும் தமிழர்களுடைய மொழியுரிமையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை' என்று ஆணித்தரமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார். அவர், 1963இல் தன்னுடைய 'ஈழம்: விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் (ஆங்கிலம்)' என்ற

நூலில், 'இலங்கையிலிருந்து பிரிந்து, 1802க்கு முன்பு இருந்தது போல தமிழரசு ஒன்றை மீளுருவாக்குவதே தீர்வு என்று கொள்கையை ஏற்றுக்கொள்பவர்களை நான், ஈழத் தமிழ்த் தேசத்தின் விடுதலைக்கும் சுதந்திரத்துக்;குமான போராட்டத்துக்கு அழைக்கிறேன்' என அழைப்பு விடுத்தார்.

இதைவிடவும் 1961இல் உருவாகியதாகக் கூறப்படும் 'புலிப்படை' என்ற அமைப்பும் 'தமிழர் தாயகத்துக்காக' போராடுதல் என்ற எண்ணத்தோடு உருவானதாகவும், இதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் மறைமுக ஆதரவு இருந்ததாகவும் சில அரசியல் ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள். வரலாற்றின் பின்னைய காலங்களிலும் தமிழரசுக் கட்சித் தலைவர்களின் இந்தப் போக்கை நாம் தொடர்ந்து காணலாம்.

வடக்கிலே தமிழரசுக் கட்சியாகவும், தெற்கிலே 'பெடரல் பார்ட்டியாகவும்' (சமஷ்டிக் கட்சி) தன்னை முன்னிறுத்திக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அஹிம்சை வழிப் போராட்டத்தைத் தனது நேரடி போராட்ட ஆயுதமாக முன்னிறுத்தியது. சா.ஜே.வே.செல்வநாயகம், ஈழத்து காந்தி என அவரது ஆதரவாளர்களால் புகழப்பட்டார். ஆனால், வரலாற்றின் பின்னைய காலங்களில், இதே தமிழரசுக் கட்சித் தலைமைகள் ஆயுதப் போராட்டத்துக்கு மறைமுகமாக ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் 'தனிச்சிங்களம்' என்பதும் சிங்கள மேலாதிக்கமும் ஆணித்தரமாக வேரூன்றச்செய்யப்பட்டது. இத்தோடு, 'பௌத்தத்தின்' மேலாதிக்கமும் மெதுவாக முன்னிறுத்தப்படத் தொடங்கியது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அநகாரிக தர்மபாலவின் வருகையோடு, பௌத்த மறுமலர்ச்சி என்பது பாரியளவில் முன்னெடுக்கப்படத் தொடங்குகிறது. ஆங்கிலேய-கிறிஸ்தவ மேலாதிக்கத்தை எதிர்ப்பதனூடாக, பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் அநகாரிக தர்மபாலவின் பங்கு முதன்மையானது.

பௌத்தத்தையும் சிங்கள கலாசாரத்தையும் புகழ்தல், பிரித்தானியரையும் கிறிஸ்தவர்களையும் குற்றம் சுமத்துதல், இலங்கையில் பௌத்தத்தின் அழிவைப் பற்றிய பயத்தை உருவாக்குதல், சிங்கள-பௌத்தத்தின் மறுமலர்ச்சி அல்லது மீளுருவாக்கம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துதல் என்ற நான்கு படிமுறைப் பிரசாரத்தை அநகாரிக தர்மபால முன்னெடுத்ததாக நீல் டிவோட்டா குறிப்பிடுகிறார்.

'அந்நியர்களான முகம்மதியர்கள் இங்கு வந்து வளர்கிறார்கள், ஆனால், மண்ணின் மைந்தர்களான சிங்கள மைந்தர்கள் வேலையற்றுத்திரிகிறார்கள்' என்று அநகாரிக தர்மபால அன்று முழங்கினார். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த 'சிங்கள-பௌத்த' மேலாதிக்கவாதம், 1956இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, பஞ்சமாபலவேகயவின் ஒரு தரப்பாக பௌத்தபிக்குகளைக் களமிறக்கினார். இது பௌத்த பிக்குகளின் அரசியல் ஆதிக்கத்தின் இன்னொரு அத்தியாயத்தை தொடங்கிவைத்தது. மகாவம்சம்-பௌத்தம்-சிங்களம் என்பவை பற்றிய புரிதலின்றி இலங்கையின் அரசியலை விளங்கிக்கொள்வது கடினம். இன்றுவரை இலங்கை அரசியல் போக்கைத் தீர்மானிப்பது இவைதான்.

1965 காலப்பகுதியில் பௌத்த எழுச்சி ஒன்றும் ஏற்படத் தொடங்கியது. 'ஊடகச் சட்டமூலத்தை' எதிர்க்கும் போராட்டத்துக்கு, ஏறத்தாழ 6,000 பௌத்த பிக்குமார்களை ஐக்கிய தேசியக் கட்சி வரவழைத்திருந்தது. 1965 தேர்தலைப் பொறுத்தவரையில் பௌத்த பிக்குகளினதும், சிங்கள-பௌத்த இனவாதத் தலைவர்களினதும் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்தது. ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் 'தனிச்சிங்களக்' கொள்கையை பௌத்த பிக்குகளும், சிங்கள-பௌத்த இனவாத அரசியல் சக்திகளும் ஆதரித்தாலும், ஸ்ரீமாவோடு தோழைமைகொண்டிருந்த 'மாக்ஸிஸக்' கட்சிகள் மீது அவர்களுக்கு நேர்மறையான அபிப்பிராயம் இருக்கவில்லை.

அத்தோடு, 'தனிச்சிங்களச்' சட்டமென்பது அன்றைய நியதியாகிவிட்டதன் விளைவாகவும், ஐக்கிய தேசியக் கட்சியும் அதனை ஏற்றுக்கொண்டிருந்ததன் விளைவாகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு பௌத்த பிக்குகள், மற்றும் சிங்கள-பௌத்த இனவாத அரசியல் சக்திகளின் ஆதரவு 1965இல் அமோகமாக இருந்தது.

'ஹத் ஹவுள': ஏழு கட்சிகளின் கூட்டணி

article_1451883232-sa.jpg

கொள்கையளவில் ஒன்றோடொன்று முரண்பாடான கட்சிகள் கூட்டணி அமைப்பது என்பது எவ்வளவு தூரம் அரசியல் நேர்மையுள்ள செயல் என்ற கேள்விகளுக்கு அப்பால், அவை யதார்த்தத்தில் பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம் பெற்றுக்கொண்டிருப்பதை நாம் இலங்கையில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் காணக்கூடியதாகவே இருக்கிறது. இங்கிலாந்தில் அண்மைக்காலம் வரை பழமைவாதக் கட்சியும், தாராண்மைவாத ஜனநாயகக் கட்சியும் கூட்டணியாக ஆட்சி செய்தன.

பழமைவாதமும், தாராண்மைவாத ஜனநாயகமும் எந்தப் புள்ளியில் இணங்கிப்போவது அல்லது ஒன்றோடொன்று ஒத்திசைந்து இயங்குவது என்ற தத்துவார்த்தப் பிரச்சினைகளும், யதார்த்த முரண்பாடுகளும் எழாமல் இல்லை, குறிப்பாக இரண்டுதரப்பும் முற்றிலுமாக மாறுபட்ட எதிரெதிர்க் கொள்கைகளைக் கொண்ட விடயங்கள் தொடர்பில் எழும் சிக்கல் நிலையை தவிர்க்க முடியாது.

ஆனால், அரசியல் யதார்த்தம், அல்லது அரசியல் சந்தர்ப்பவாதம் அல்லது அரசியல் தேவை இதுபோன்ற கூட்டணிகளை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது. இன்று இலங்கையில் ஆட்சியிலிருக்கும் 'தேசிய அரசாங்கம்' கூட இதுபோன்றதொரு கலவைதான். எந்த ஆட்சியை மக்கள் வேண்டாமென தூக்கி எறிந்தார்களோ, அதே ஆட்சியில் பங்காளிகளாக இருந்தவர்கள், இன்று இந்த ஆட்சியிலும் பங்காளிகளாக இருக்கிறார்கள். இந்தக் கூட்டணி யதார்த்தம் மட்டும் தர்க்கங்களுக்கு முரணாணது போலும். 1965ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர், அரசாங்கமொன்றை டட்லி சேனநாயக்க அமைத்த போது, அது ஏழு கட்சிகளைக் கொண்ட 'தேசிய அரசாங்கமாகப்' பிரகடனப்படுத்தப்பட்டது.

ஆனால், அதில் அங்கம் வகித்த ஏழு கட்சிகளினதும் கொள்கைகள், செயற்பாடுகள், விருப்பங்கள், அபிலாஷைகள் என்பன பலவிடயங்களில் கட்சிக்குக் கட்சி முரண்பட்டதாக இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி (66 ஆசனங்கள்), இலங்கை தமிழரசுக் கட்சி (14 ஆசனங்கள்), சி.பி. டி சில்வா தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர்களின் ஸ்ரீ லங்கா சுதந்திர சோசலிசக் கட்சி(5 ஆசனங்கள்), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (3 ஆசனங்கள்), 'மார்க்ஸிஸப் புரட்சியாளன்' ‡பிலிப் குணவர்த்தனவின் மஹஜன எக்ஸத் பெரமுண(1 ஆசனம்), கே.எம்.பி.ராஜரத்னவின் சிங்கள-பௌத்த இனவாதக் கட்சியான ஜாதிக விமுக்தி பெரமுண (1 ஆசனம்), விஜயானந்த தஹநாயக்கவின் லங்கா ப்ரஜாதாந்த்ரவாதி பக்ஷய (1 ஆசனம்) ஆகியவையே 'ஹத் ஹவுள' (ஏழு தரப்பின் சேர்க்கை) என்று எதிர்த்தரப்பினரால் விமர்சிக்கப்பட்ட கூட்டணியின் தூண்கள்.

தாராண்மைவாத ஜனநாயகக் கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சியுடன், 'மார்க்ஸிஸப் புரட்சியாளன்' ‡பிலிப் குணவர்த்தன கூட்டணி அமைத்தது எப்படி? சிங்கள-பௌத்த இனவாதக் கட்சியான ஜாதிக விமுக்தி பெரமுண இருக்கின்ற கூட்டணியில் தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸும் இருப்பது எப்படி? இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சியையும், தமிழ்க் காங்கிரஸையும் தவிர ஏனைய 5 கட்சிகளும் 'தனிச்சிங்களச்' சட்டத்தை ஏற்றுக்கொண்ட கட்சிகள். தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸும் 'தனிச்சிங்களச்' சட்டத்தை எதிர்ப்பதோடு மட்டுமல்லாது, தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கோரிநின்றன.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 1948லேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு ஆதரவளித்திருந்தது. சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான குழுவினர் அகில இலங்கை தமிழ்

காங்கிரஸிலிருந்து பிரிந்து, தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்ததன் முக்கிய காரணங்களுள் ஒன்றாக ஜீ.ஜீ. பொன்னம்பலம், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்தமை முன்வைக்கப்பட்டது. ஆனால், அதே சா.ஜே.வே.செல்வநாயகம் 1965இல் டி.எஸ்.சேனநாயக்கவின் மகனான டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளித்தார். இந்த முடிவுக்கு 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் என்று பிரபலமாக அறியப்படும், டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான ஒப்பந்தமே காரணம்.

1956க்கும் 1965க்கும் இடையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வீழ்ச்சியையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் எழுச்சியையும் காணலாம். ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்;கு ஆதரவளித்தமையை பெரும் தவறாக, 'துரோகமாக' தமிழரசுக் கட்சியினர் பிரசாரம் செய்தனர். அரசாங்கத்தோடு இணைவது அல்லது அமைச்சர் பொறுப்பினை ஏற்பது என்பது 'துரோகத்தனமான' அல்லது 'தமிழினத்துக்கெதிரான' விடயம் என்பது போன்ற அரசியல் மாயை இந்த ஒரு தசாப்த காலத்தினுள் எழுப்பப்பட்டது.

இதன் காரணமாகவோ என்னவோ, 1965இல் டட்லி சேனநாயக்க தலைமையில் அமைந்த கூட்டணி அரசாங்கத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் அமைச்சுப் பதவியை ஏற்கவில்லை. மாறாக, தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் மன்றாடியார் நாயகம் எம்.திருச்செல்வம், நாடாளுமன்றத்தின் செனட் சபைக்கு நியமிக்கப்பட்டதுடன் உள்ளூராட்சி அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். தமிழ் காங்கிரஸ் கூட அமைச்சுப் பதவியை ஏற்கவில்லை.

'டட்லி-செல்வா' ஒப்பந்தம், 1965ஆம் ஆண்டு தேர்தல் காலத்திலேயே ஒரு முக்கிய பேசுபொருளாக இருந்தது. தேர்தல் காலத்தின் போது டட்லி சேனநாயக்கவினால் இந்த ஒப்பந்தம் இரகசியமாக வைக்கப்பட்டது. இந்த நடைமுறை இன்றுவரை தொடர்வதைக் காணலாம். இதுவே பல ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் வாய்ப்பளித்தது. எதிர்த்தரப்பினது பிரசாரத்தில் 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் பற்றி நிறைய ஊகங்களும், வதந்திகளும் முன்வைக்கப்பட்டன, அதில் குறிப்பிடத்தக்கதொன்று 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தில் 'தனிச்சிங்களச்' சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான உடன்பாடு இருக்கிறது என்ற பிரசாரமாகும். 1965 பெப்ரவரி 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தில் உரையாற்றிய பிரதமர் ஸ்ரீமாவோ (காபந்து பிரதமர்) தன்னுடைய உரையில் கூட பெரும்பான்மையோர் பேசும் மொழி உத்தியோகபூர்வ மொழியாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தினார்.

ஆனால், இந்தவகைப் பிரசாரம் பெருமளவில் எடுபடாததற்குக் காரணம், 'தனிச்சிங்களச் சட்டத்தின் தந்தை' என்றறியப்பட்ட சிங்கள-பௌத்த இனவாத அரசியல்வாதியான மெத்தானந்த, ஸ்ரீமாவோ அரசாங்கத்துக்கு எதிராக இருந்தமை, அத்தோடு ‡பிலிப் குணவர்த்தன, சி.பி. டிசில்வா போன்ற 'தனிச்சிங்களச்' சட்டத்தை ஆதரித்த பெருந்தலைகள் பலரும், ஸ்ரீமாவோ அரசாங்கததுக்கு எதிராக இருந்தமையும் ஆகும். தமிழ் மக்களின் ஏமாற்றமிகு அரசியல் ஒப்பந்தங்களில் முக்கியமான ஒன்றான 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தில் உண்மையில் என்ன விடயங்கள் இருந்தன? எதன் அடிப்படையில் தமிழரசுக் கட்சி இந்த எழுதரப்புக் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவளித்தது, அது என்ன விளைவுகளைத் தமிழருக்குத் தந்தது?

- See more at: http://www.tamilmirror.lk/162972/-%E0%AE%B9%E0%AE%A4-%E0%AE%B9%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A3-#sthash.kl76VO3W.dpuf
Link to comment
Share on other sites

'டட்லி-செல்வா' ஒப்பந்தம்
 
11-01-2016 09:31 AM
Comments - 0       Views - 16

article_1452485140-sd.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 22)

'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் பின்னணி

1964 டிசெம்பரில், ஸ்ரீமாவின் அரசாங்கம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்காகக் கட்சிகள் தயாராகும் போதே, 1965 தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உணர்ந்திருந்தன. இருதரப்பும் தொங்கு நாடாளுமன்றம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியப்பாட்டையும் கருத்திற்கொண்டு, தமது வியூகங்களை வகுக்கத்தொடங்கின. அதன்படி, தமது கட்சியினால் ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத பட்சத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதற்கான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத்தொடங்கின.

அன்றைய நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில் இரண்டு பெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த கட்சி இலங்கை தமிழரசுக் கட்சியாகும். முன்னைய நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கொண்டிருந்தது. லங்கா சமசமாஜக் கட்சி 12 ஆசனங்களையே கொண்டிருந்தது. ஆகவே, தொங்கு நாடாளுமன்றம் ஒன்று ஏற்படுமானால் ஆட்சியைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய சக்தியாக தமிழரசுக் கட்சி இருக்கும் என்பதை இரு பெருங் கட்சிகளும் உணர்ந்திருந்தன. அதன்படி இருபெருங் கட்சிகளும் தமிழரசுக் கட்சியுடன் அதன் ஆதரவைப் பெறும் பொருட்டு தேர்தல் பிரசாரக்காலத்திலேயே இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.

தேர்தல் பிரசாரக்காலத்தில், சா.ஜே.வே. செல்வநாயகம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் வடக்கிலும், கிழக்கிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆகவே, கொழும்பிலிருந்து பேச்சுவார்த்தைகள் நடத்தும் பொறுப்பு தமிழரசுக் கட்சியின் ஆலோசகராக அன்றிருந்த, முன்னாள் மன்றாடியார் நாயகம் எம்.திருச்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டது. எம்.திருச்செல்வம், சா.ஜே.வே. செல்வநாயகத்துக்கு மிக நெருங்கியவராக இருந்தார்.

ஆகவே, நம்பிக்கையுடன் இந்தப் பணி அவருக்கு வழங்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், தமிழரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தையை அன்றை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்த எஸ்மண்ட் விக்கிரமசிங்க முன்னெடுத்தார். (இவர் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையார்). இவருக்குத் துணையாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றார்.

மறுபுறத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - லங்கா சமசமாஜக் கட்சி - கம்யூனிஸ்ட் கட்சி என்று முக்கூட்டமைப்பின் சார்பில் கலாநிதி.என்.எம்.பெரேரா, கலாநிதி.கொல்வின் ஆர்.டி. சில்வா, அணில் முனசிங்ஹ ஆகியோர், எம்.திருச்செல்வத்துடன் தமிழரசுக் கட்சியின் ஆதரவைத் தம் பக்கத்துக்குப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தினர். இவர்களுக்குத் துணையாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஏ.அஸீஸ் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தார். வேறு ஒரு தளத்தில் எம்.திருச்செல்வத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மைத்திரிபால சேனநாயக்கவின் பாரியார் திருமதி. ரஞ்சி சேனநாயக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

பலதரப்பிரனருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தபோதும், இவை கடும் இரகசியமாக நடத்தப்பட்டன. எந்தவொரு தரப்புக்கும் மறுதரப்போடு பேச்சுவார்த்தை இடம்பெற்றுக்கொண்டிருப்பது தெரியாத அளவுக்கு இரகசியம் காக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைகளில், எந்தவொரு உறுதிமொழியையும் எந்தத் தரப்புக்கும் எம்.திருச்செல்வம் வழங்கவில்லை. இறுதி முடிவு சா.ஜே.வே.செல்வநாயகத்தினுடையதாகவே இருக்கும் என்பதை இக்கட்சிகளும் அறிந்திருந்தன.

தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு 66 ஆசனங்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 41 ஆசனங்களும், தமிழரசுக் கட்சிக்கு 14 ஆசனங்களும், லங்கா சமசமாஜக் கட்சிக்கு 10 ஆசனங்களும், ஸ்ரீலங்கா சுதந்திர சோசலிசக் கட்சிக்கு 5 ஆசனங்களும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 ஆசனங்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கு 3 ஆசனங்களும், மஹஜன எக்ஸத் பெரமுண, ஜாதிக விமுக்தி பெரமுண, லங்கா பிரஜாதந்த்ரவாதி பக்ஷய ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனமும், ஏனைய 5 ஆசனங்களும் பெற்றுக்கொண்டன. நிச்சயமாக இரு பெருங்கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு தமிழரசுக் கட்சியின் ஆதரவு முக்கியம் என்ற நிலை இருந்தது. இவ்விடத்தில் எஸ்மண்ட் விக்கிரமசிங்க வேகத்துடன் செயற்பட்டார்.

தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே, எம்.திருச்செல்வத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்திய எஸ்மண்ட் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு எம்.திருச்செல்வத்தை சம்மதிக்கச் செய்ததுடன், உடனடியாக சா.ஜே.வே.செல்வநாயகத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்கச் செய்தார்.

கொழும்பில் டரட் வீதியிலிருந்த டொக்டர்.எம்.வி.பீ.பீரிஸின் இல்லத்தில் டட்லி சேனநாயக்க தலைமையில், ஜே.ஆர்.ஜெயவர்த்தன, வி.ஏ.சுகததாச மற்றும் எஸ்மண்ட் விக்கிரமசிங்க ஆகியோரும் கொண்ட குழுவும், சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் டொக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன், எஸ்.எம்.இராசமாணிக்கம், வீ.நவரட்ணம் மற்றும் எம்.திருச்செல்வம் ஆகியோரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சுமுகமாகவே ஆரம்பித்தது.

ஏலவே, எஸ்மணட் விக்கிரமசிங்க மற்றும் எம்.திருச்செல்வம் ஆகியோர் அடிப்படை விடயங்கள் பற்றி பேசியிருந்தமை இதற்கு உதவியாக இருந்தது. தமிழ் மொழிக்கு நிர்வாக அந்தஸ்து, நீதிமன்றத்தில் தமிழ்மொழியின் பாவனை, அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டன. ஆனால், காணிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதைத் தமிழரசுக் கட்சி கடுமையாக எதிர்த்தது.

இது தமிழ் மக்கள் 'தாயக பூமியாகக்' கருதிய வடக்கு-கிழக்கின் குடியியல் பரம்பலைச் சிதைக்கின்ற செயல் என தமிழரசுக் கட்சி கூறியது. வடக்கு-கிழக்கில் குடியேற்றங்கள் அமைக்கப்படும் போது, அங்கு தமிழ் மக்களே குடியேற்றப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியினர் கேட்டனர், இதன் போது சினங் கொண்ட டட்லி சேனநாயக்க, 'அப்போது என்னுடைய மக்கள் எங்கே போவார்கள்?' என்று கேட்டதாக தனது கட்டுரையொன்றில் டி.பீ.எஸ்.ஜெயராஜ் பதிவு செய்கிறார். இந்த இடத்தில் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்தன.

இவ்வேளையில், ஸ்ரீமாவோ, சமஷ்டிக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்கப் போகிறார் என்ற வதந்தி ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களையும் வந்தடைந்தது. இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியவில்லையானால் இந்த வதந்தி உண்மையாகும் என்ற பதட்டம் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களிடம் ஏற்பட்டது. முட்டுக்கட்டையைத் தகர்த்தெறியும் வேலையை எஸ்மண்ட் விக்கிரமசிங்க செய்தார். ஒரு பிரதேசத்தில் விவசாயக் குடியேற்றங்கள் அமைக்கப்பதற்காக காணிகள் வழங்குகையில் முன்னுரிமையின் அடிப்படையில் அம்மாவட்ட, அதன் பின் அம்மாகாண, அதன் பின் அண்மைய மாகாண மக்களுக்கு வழங்குவதுவும், வடக்கு-கிழக்கில் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்குவது எனவும் எஸ்மண்ட் விக்கிரமசிங்க முன்மொழிந்தார்.

இது இரு தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றின் இருபிரதிகள் தயார் செய்யப்பட்டு, டட்லி சேனநாயக்க மற்றும் சா.ஜே.வே.செல்வநாயகம் என்ற இருதலைவர்களாலும் கையொப்பமிடப்பட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தானதும் இருதலைவர்களும் கைலாகு கொடுத்துக்கொண்டனர். அப்போது,  செல்வநாயகம் டட்லியிடம் 'நான் உங்களை நம்புகிறேன்' என்று சொன்னதாகவும், அதற்கு டட்லி 'நான் முப்பது வருடமாக அரசியலில் இருக்கிறேன். ஒருபோதும் கொடுத்த சத்தியவாக்கிலிருந்து பின்வாங்கியதில்லை' என்று டட்லி சேனநாயக்க கூறியதாகவும் தனது கட்டுரையொன்றில் டி.பீ.எஸ்.ஜெயராஜ் பதிவு செய்கிறார். டட்லி சேனநாயக்கவின் வார்த்தைகள் பொய்யாக அதிக காலம் எடுக்கவில்லை.

'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் உள்ளடக்கம்

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்துக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமாகக் கருதப்படும் 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் 4 விடயங்கள் பற்றி பேசுகிறது. முதலாவதாக எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்கவினால் 1958ல் நிறைவேற்றப்பட்டாலும், 1965 ஆனாலும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாது உள்ள தமிழ் மொழி விசேட சட்டத்தின் கீழ் தமிழ் மொழியை வடக்கு- கிழக்கின் நிர்வாக மொழியாக்குவதற்கு இணங்கப்பட்டது.

இரண்டாவதாக தமிழ் பேசும் நபர் ஒருவர் தன்னுடைய வணிக கொடுக்கல்வாங்கல்களை தமிழ்மொழியில் நாடெங்கிலும் செய்யும் வாய்ப்பு வேண்டும் எனவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி நீதிமன்ற மொழியாக்கப்பட வேண்டும் எனவும் இணங்கப்பட்டது. மூன்றாவதாக மாவட்டசபைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு இருதரப்பு தலைவர்களாலும் இணங்கப்படும் விடயதானங்கள் தொடர்பில் அதிகாரப்பகிர்வு வழங்க இணங்கப்பட்டது.

ஆனால், இச்சபைகளை தேசிய நலன் தொடர்பான விடயங்களில் மத்திய அரசாங்கம் நெறிப்படுத்தும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் எனவும் இணங்கப்பட்டது. நான்காவதாக காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம் சீர்திருத்தப்பட்டு, இலங்கைப் பிரஜைகள் இக்கட்டளைச் சட்டத்தின் கீழ் காணி பெற உரித்துடையவர்கள் ஆக்கப்படுவார்கள் எனவும், மேலும் வடக்கு-கிழக்கில் அமைக்கப்படும் குடியேற்றங்களில், முன்னுரிமையடிப்படையில் முதலில் குறித்த மாவட்டத்திலுள்ள நிலமற்ற மக்களுக்கும், அடுத்ததாக குறித்த மாகாணத்திலுள்ள தமிழ்பேசும் மக்களுக்கும், அடுத்ததாக அண்மைய மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கும் காணி வழங்கப்படும் எனவும் இணங்கப்பட்டது.

இவையே 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் உள்ளடக்கம். 'பண்டா-செல்வா' ஒப்பந்தமோ, 'டட்லி-செல்வா' ஒப்பந்தமோ மிக விரிவான ஒப்பந்தங்கள் அல்ல மாறாக அவை கொள்கையளவிலான இணக்கப்பாட்டை வெளிப்படுத்தும் சான்றுகளாக அமைந்தன. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை இணக்கப்பாட்டுக்கு மட்டுமல்ல. அத்தோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வையே தமிழ்த் தலைமைகள் வேண்டின என்பதற்கும் இதுவே சான்று. மிக எளிதாக, தமிழர்கள் பிரிவினைவாதிகள் என்ற பிரசாரத்தை இன்றை இனவாத அரசியல் மற்றும் சமூக சக்திகள் முன்னெடுக்கின்றன.

இவற்றில் எந்த உண்மையும் இல்லை. 'தனிச் சிங்களச்' சட்டம் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளாகியும், அச்சட்டம் கடுமையாக அமுலப்படுத்தப்பட்டும் இனக்கலவரங்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டும், தமிழ்மக்களின் அஹிம்சை வழிப்போராட்டம் வன்முறை கொண்டு அடக்கப்பட்டும் என தமிழ் மக்களது இருப்பும், உரிமைகளும் ஒரு தசாப்த காலமளவுக்கு சவாலுக்குட்படுத்தப்பட்டும், தமிழ்த் தலைமைகள் பிரிவினையை வேண்டவில்லை.

மாறாக ஒன்றுபட்ட இலங்கைக்குள், தமிழ் பேசும் மக்களும் சமத்தவத்துடன் வாழ சமஉரிமையையும், அதனைச் சாத்தியமாக்கும் அதிகாரப் பகிர்வையுமே வேண்டினர். ஆனால், இந்த முயற்சிகளெல்லாம் வெறும் தோல்வியிலேயே சென்று முடிந்தன. டட்லியோடு ஒப்பந்தம் செய்த செல்வநாயகம் 'நான் உங்களை நம்புகிறேன்' என்று சொன்ன வார்த்தைக்குள் தமிழ் மக்களின் ஏமாற்ற வரலாறு இருக்கிறது.

தான் நம்புகிறவரைப் பார்த்து யாரும் 'நான் உங்களை நம்புகிறேன்' என்று சொல்வதில்லை. நம்பிக்கை பற்றிய ஐயம் உண்டாகிறபோதுதான் அதனை மறுமுறை உறுதிப்படுத்திக்கொள்ள 'நான் உங்களை நம்புகிறேன்' என்ற வார்த்தை தேவைப்படுகிறது.

அண்மையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது, 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் அல்லது 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இலங்கையில் இனமோதல் ஏற்பட்டிருக்காது என்று பேசினார். வரலாற்றை பின்னோக்கிப் பார்த்து இது இப்படியிருந்தால், இன்று இப்படியிருந்திருக்கும் என்று சர்வ நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது.

ஆனால், ஒருவேளை இந்த ஒப்பந்தங்களில் ஏதோ ஒன்று ('பண்டா-செல்வா' நிறைவேறியிருந்தால், 'டட்லி-செல்வா'வுக்கான தேவை இருந்திருக்காது.) நிறைவேறியிருந்தால், இலங்கை வரலாறு ஏதோ ஒரு வகையில் மாறியிருக்கக்கூடும். ஆனால் 'பண்டா-செல்வா'-வுக்கு ஏற்பட்ட முடிவுதான்... 'டட்லி-செல்வா'வுக்கும் ஏற்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/163516/-%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%92%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%AE-#sthash.WKbCF2Mp.dpuf
Link to comment
Share on other sites

 
'டட்லி-செல்வா' இன்னொரு பக்கம்
 
 

article_1453091717-sdc.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 23)

'கே.எம்.பி.ராஜரத்ன எனும் சிங்கள இனவாதத்தலைவரும், தமிழினவாதத் தலைவர்களான சா.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகிய இருதரப்பினரும் டட்லியின் அரசாங்கத்தில் இருந்தனர். 'இலங்கையில் சோஸலிஸத்தின்

தந்தை' என்று அறியப்பட்ட பிலிப் குணவர்த்தனவும், 'யங்க்கி டிக்கி' (அமெரிக்க ஆதரவாளர்) என அறியப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஒரே அமைச்சரவையில் இருந்தனர். டட்லி இந்த எதிர்த்துருவங்களை ஒன்றுபடுத்தியது மட்டுமல்லாது, ஐந்து வருடங்களுக்கு, அதாவது முழுப்பதவிக்காலத்துக்கும் அரசாங்கத்தை நடத்தினார். சுதந்திர இலங்கையில் முழுமையாக ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருந்த முதல் அரசாங்கம் இதுவாகும்.

அதுமட்டுமல்ல இந்த அரசாங்கத்துக்கு பிறகு வேறு எப்போதும், இன்றுவரை தமிழரசுக் கட்சியிலிருந்தோ, தமிழ் காங்கிரஸிலிருந்தோ எந்தவொரு நபரும் அரசாங்கத்தில் அங்கம் வகித்ததில்லை' என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு, டட்லி சேனநாயக்க பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் எழுதியுள்ளார்.

இந்தப் பந்திக்குள்ளேயே நிறைய கேள்விகள் மறைந்திருக்கின்றன. 'டட்லி-செல்வா' ஒப்பந்தமும், ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவும், அமைச்சுப் பதவியுமெல்லாம், தமிழரசுக் கட்சியினரின் முழு மனதோடுதான் நடந்ததா? மாற்றுக்கருத்து பற்றி தமிழர்தரப்பில் ஒவ்வொருகாலத்திலும் நிறையவே பேசப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த இடத்தில் 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் அதன் முன்னான, பின்னான நிகழ்வுகள் பற்றி தன்னுடைய விமர்சனப் பார்வையை முன்வைக்கும் தமிழரசுக் கட்சியின் அன்றைய முக்கியஸ்தரான வி.நவரட்ணத்தின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது 'டட்லி-செல்வா' பற்றிய இன்னொரு பார்வையை, நிகழ்ந்தவைகளின் இன்னொரு பக்கத்தைக் காட்டி நிற்கின்றன.

நடந்தது என்ன? சொல்கிறார் வி.நவரட்ணம்

தமிழரசுக் கட்சியின் அன்றயை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.நவரட்ணம் தனது 'தமிழ் தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் (ஆங்கிலம்)' என்ற நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார்: 'தமிழ்த்தரப்பிலிருந்த அனைத்துக் கட்சிகளுள்ளும் தமிழரசுக் கட்சிக்குதான் சிங்களக் கட்சிகளின் நம்பகத்தன்மையின்மை பற்றி நேரடியான அனுபவம் இருக்கிறது. ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கம் கொள்ள தேர்தலுக்கு முன்பே தமிழரசுக் கட்சி இசைந்து விட்டது ஏன்? மக்களுக்கு இது ஏன் நடந்தது என்ற காரணம் இன்னும் சொல்லப்படவில்லை.

அந்த ஏமாற்றப்பட்ட அனுபவத்தை திருச்செல்வம் கருத்திலெடுக்காமல் விட்டிருக்கலாம், ஆனால், அதை எப்படி செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் மறந்தார்கள். செல்வநாயகம் திருச்செல்வத்தின் தந்தையைப் போன்றவர், அதனால் அவர் சம்மதித்திருக்கலாம். அமிர்தலிங்கம் இதற்கெப்படி தலையசைத்தார்? ஆனால், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் காரணங்களை தெளிவாகப் புலப்படுத்தின. எல்லா அடிப்படையான முடிவுகளும் ஏலவே திருச்செல்வத்தாலும், எஸ்மண்ட் விக்கிரமசிங்கவினாலும் பேசப்பட்டு எடுக்கப்பட்டிருந்தன.

தலைவர்களிடையேயான சம்பிரதாயபூர்வ சந்திப்பு டொக்டர். பீரிஸின் டரட் வீதி இல்லத்தில் நடத்தப்படவிருந்தது. இதில் பங்குபற்றும் குழுவில் நானும் இடம்பெற வேண்டுமென தமிழரசுக் கட்சிகளின் இளைய சக்திகள் அழுத்தம் தந்தன. நான் மிகுந்த சங்கடத்தில் இருந்தேன். நான் குழுவில் இருப்பதை திருச்செல்வம் விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழர்களை 'விற்றுவிடும்' இந்த செயற்பாட்டில் பங்கெடுக்க எனக்கும் விருப்பம் இருக்கவில்லை. அங்கே பேசுவதற்கு ஏதுமில்லை என்று எனக்கு தோன்றியது. எல்லாம் ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுவிட்டன, இது சம்பிரதாயபூர்வமான உறுதிப்படுத்தலாக இருக்கும் என்றே எனக்கு தோன்றியது.

முழுநாடுமே கவனித்துக்கொண்டிருந்த ஒரு விடயத்தில் தலையிட்டு மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய நிலை இருக்கவில்லை. ஆனால் செல்வநாயகம் தன்னுடைய முடிவின் பொருத்தப்பாடு பற்றி முழுத் திருப்தியுடன் காணப்பட்டார், அதன்வழி முற்செல்லவும் திண்ணங்கொண்டிருந்தார். அவருடைய பெயரால் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்திலிருந்து விலக அவர் கைக்கொண்டிருந்த நேர்மை அவரை அனுமதித்திருக்காது.

என் முன்னே நிறைய எண்ணோட்டங்கள் இருந்தன. ஆனால், கட்சி இளையோரின் அழுத்தத்தின் பேரில், அக்குழுவில் நான் பங்கேற்றேன். கூட்டத்திலே இருதரப்பு தலைவர்களிடையே பேசுவதற்கும் கருத்துமுரண்பாட்டுக்கும் எதுவும் இருக்கவில்லை, எல்லாமே ஏற்கெனவே திருச்செல்வத்தாலும், எஸ்மண்ட் விக்கிரமசிங்கவினாலும் பேசித்தீர்மானிக்கப்பட்டிருந்தன. ஆனால், முக்கியமான ஒரு விடயம் பற்றி பேசப்படவில்லை, அது கட்டாயம் பேசப்பட வேண்டும் என நான் சொன்னேன்.

வடக்கு கிழக்கிலே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பற்றி பேசப்படவில்லை, இது பற்றி டட்லி சேனநாயக்கவின் நிலைப்பாடு என்ன? அவர் இதனை நிறுத்துவாரா? என்று கேள்வி எழுப்புவதைத் என்னால் தவிர்க்க முடியவில்லை. இது பேச்சுவார்த்தையில் சங்கடமான சூழலைத் தோற்றுவித்தது. நான் இதனைக் கேட்டபோது டட்லியின் மற்றும் எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் முகங்களில் ஆச்சரியமும், திருச்செல்வத்தின் முகத்தில் அதிருப்தியையும் காணக்கூடியதாக இருந்தது. இது எனக்கு ஒன்றை உணர்த்தியது. ஒன்று இதுபற்றி திருச்செல்வமும், எஸ்மண்ட் விக்கிரமசிங்கவும் பேசவில்லை அல்லது அவர்கள் திருச்செல்வத்தை பேசி இந்தவிடயத்தை தவிர்க்கச்செய்திருக்கிறார்கள்.

டொக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன் எனது கருத்தை உறுதியாக ஆதரித்தார், இந்த விடயம் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அடிப்படையானதொரு கோரிக்கையாகும், இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு தமிழரசுக் கட்சி தயாரில்லை என்று அவர் உறுதிபடக் கூறினார். இறுதியில் எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு தமிழரசுக் கட்சி முழுமனதின்றிச் சம்மதித்தது. இந்த நிலையில் நான் இன்னொரு முக்கிய விடயம் பற்றியும் கேள்வி எழுப்பினேன், அதாவது தனிச்சிங்களச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு, வேலையை இழக்கும் நிலையிலுள்ள தமிழ் அரச உத்தியோகத்தர்களின் நிலை என்ன? இந்தக் விடயமும் திருச்செல்வத்தாலும், எஸ்மணட் விக்கிரமசிங்கவினாலும் பேசப்பட்டிருக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆனால் இந்த விடயம் நிர்வாக ரீதியில் சரிசெய்யப்படக்கூடியது, இதற்காக நிறைய பந்திகளை ஒப்பந்தத்தில் எழுதி ஒப்பந்தத்தை நீளமாக்கத் தேவையில்லை என திருச்செல்வமும், எஸ்மணட் விக்கிரமசிங்கவும் கூறினர். இந்தவிடயம் பற்றி எந்த தீர்மானமுமின்றி ஒப்பந்தம் இறுதியானது, பேச்சுவார்த்தையும் இறுதிகண்டது. இப்படியாக இன்னொரு தோல்வியடைந்த ஒப்பந்தமும் கைச்சாத்தானது. கூட்டம் முடிந்து திரும்பியபின் திருச்செல்வத்தின் இல்லத்தில் வைத்து, சம்ஷ்டிக் கட்சி (தமிழரசுக் கட்சி) அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பொன்றை ஏற்று, அரசாங்கத்தில் இணைந்து தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க முயற்சிக்க வேண்டும் என திருச்செல்வம் கதையோடு கதையாக ஒரு கருத்தைச் சொன்னார்.

தமிழரசுக் கட்சி இன்று அழைத்துச் செல்லப்படும் பாதை பற்றி எனக்கு உடன்பாடிருக்கவில்லை. நான், உடனே குறுக்கிட்டு தமிழரசுக் கட்சி அப்படியொரு காரியத்தை செய்வதை கனவிலும் நினைக்க முடியாது என்றேன். அவர் சிரித்துவிட்டு, இது சும்மா ஒரு யோசனைதான், நாடாளுமன்றக் குழுவில் பேசித் தீர்மானியுங்கள் என்று கூறினார். நான் அடித்துச் சொல்கிறேன், அவ்வேளை தன்னுடைய அந்த எண்ணத்துக்கு எவ்வகையான எதிர்ப்புகள் வரும் என்று திருச்செல்வம் மனதில் குறித்துக்கொண்டிருப்பார். தலைவரை அதற்கேற்ப தயார்படுத்த அவருக்கு போதிய கால அவகாசம் இருந்தது. டட்லியின் அரசாங்கம் அமைந்ததும் ஸ்ரீமாவோ இருதரப்போடும் பேசி ஏமாற்றிய திருச்செல்வத்தைக் கடுமையாக விமர்சித்தார்.

தான், திருச்செல்வம் கேட்ட அமைச்சர் பதவியைக் கொடுக்க மறுத்ததுதான் திருச்செல்வம், ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாயக் காரணம் என ஸ்ரீமாவோ தெரிவித்தார். இதனை திருச்செல்வம் மறுத்தார். ஸ்ரீமாவோ சொன்னதிலும், திருச்செல்வம் மறுத்ததிலும் எது உண்மை என்பதை உலகம் ஒருபோதும் அறியாது.' இவ்வாறு வி.நவரட்ணம் பதிவு செய்கிறார்.

வி.நவரட்ணத்தினுடைய மேற்குறிப்பிட்ட பதிவு முக்கியத்துவம் மிக்கது. 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தின் தோல்வியின் பின்னர் தமிழர்தரப்பு மிகச்சிறந்த பாடமொன்றைக் கற்றிருந்தது. தற்காலிக ஒப்பந்தங்களால் அல்லது சந்தர்ப்பம்சார் ஒப்பந்தங்களால், பெரும்பான்மைக் கட்சிகளின் மைய அரசியலை ஒருபோதும் மாற்ற முடியாது. விரும்பியோ, விரும்பாமலோ இலங்கை அரசியல் இன-மத ரீதியில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. 1956இல் பண்டாரநாயக்கவோடு எழுச்சி பெற்று மையநிலையை அடைந்த 'சிங்கள-பௌத்த' பெரும்பான்மைவாத அரசியல், இலங்கையின் அரசியல் மையத்தின் அஸ்திவாரமாகி, வேர்கொண்டு, விருட்சமாகிவிட்டது.

அதன்பின் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட எந்த மாற்றமும் அந்த அஸ்திவாரத்தின் மேல் அமைந்ததேயன்றி, அந்த அஸ்திவாரத்தை மாற்றியமைக்கவில்லை. இன்றுவரை இதுவே நிலை. இந்த இடத்தில்தான் தமிழ்த்தரப்பின் இனவாதசக்திகள் என்று பெரும்பான்மைக் கட்சிகளாலும், சிங்கள இனவாதத் தரப்பாலும் சொல்லப்படுகிற கட்சிகளின் 'சலுகைகள் வேண்டாம், உரிமைகள் வேண்டும்' என்ற வாதம் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

'பண்டா-செல்வாவாக' இருக்கட்டும், 'டட்லி-செல்வாவாக' இருக்கட்டும் இவை 'சிங்கள-பௌத்த'-மைய அரசியலை மாற்றாது, அதற்குள்ளான ஒரு சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிகளாகவே இருந்தன. இதைச் செய்தவர்கள் எவ்வளவு நல்லெண்ணம் கொண்டு இதைச் செய்திருப்பினும், எத்தனை முயற்சிகள் செய்திருப்பினும் இவை வெற்றி பெறாததற்கு இந்த அடிப்படை மாறாததே காரணம். முற்றுமுழுதாக மாறுபட்ட ஓர் அடிப்படையின் மேல், அதற்கு முரணான ஒரு விடயத்தை சமரசத்தின் பெயரால் நிலைபெறுத்த முயல்வது, மணல் மண்ணில் நெல்விதைக்கும் செயலாகும்.

அது எத்தனை தூரம் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டாலும், அங்கு நெல் விளையப்போவதில்லை. இனப்பிரச்சினை தீர்வு பற்றியும், இனப்பிரச்சினையைத் தீர்க்க திடசங்கற்பம் பூண்டுள்ளதைபற்றியும் ஆண்டாண்டுகாலமாக பேசிய அரசாங்கங்கள், ஏன் ஒருபோதும் அந்தத் தீர்வுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். அடிப்படைகளை இல்லாதொழிக்க தயாராகவில்லை என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், இந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு ஒரு போதும் பின்னின்றது இல்லை. தமிழ் மக்கள் அந்த அரசியல் அஸ்திவாரத்தை மாற்றும்படி கோராத வரை தமிழ் மக்களின் வேண்டுகோள்களை குறிப்பிட்டளவுக்கு ஏற்றுக்கொள்ள அவை தயாராகவே இருந்தன, இருக்கின்றன. தமிழ் அமைச்சர்களை நியமிப்பதிலும், தமிழர் பிரதேசங்களில் ஒன்றிரண்டு அடையாள அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதிலும் அரசாங்கங்கள் செயற்பட்டிருக்கின்றன.

ஆனால், சுயநிர்ணயம், சுயாட்சி, சமஷ்டி, அதிகாரப் பிரிவு, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் இலங்கையை ஆட்சிசெய்த அரசாங்கங்களைப் பொறுத்தவரையிலும், பெரும்பான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரையிலும் கசப்பான சொற்களாகவே இருந்து வந்துள்ளன. தேசங்கள் பிளவுபடாது ஒன்றுபட்டு இயங்குவதற்கேற்ற சமஷ்டி முறையை, நாட்டைப் பிரிப்பதற்குரியதொரு விடயமாகப் பூதாகரமாக்கிப் பிரசாரம் செய்து, பெரும்பான்மை மக்களிடம் அதைப் பற்றிய எதிர்மறையானதொரு விம்பத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் பெரும்பான்மைக் கட்சிகள் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கின்றன. திருச்செல்வம் சொன்ன 'அரசாங்கத்தோடு சேர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்தல்' என்ற கருத்து நல்லெண்ணத்துடன் சொல்லப்பட்டதாகவே இருக்கலாம்.

இன்றும் பல தரப்பிலிருந்து இதையொத்த கருத்து முன்வைக்கப்படுகிறது. நிச்சயமாக தமிழர் பிரதேசத்தின் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு விரிவாக்கம், வேலைவாய்ப்பு என குறுகிய காலத்தில் சில நன்மைகள் அடையப்பெறப்பட முடியும், ஆனால் தமிழ் மக்கள் வேண்டும் உரிமைகள் இதனால் சாத்தியமாகுமா, இல்லை உரிமைகள் என்பது வெறும் அரசியல் கர்ச்சனை மட்டுந்தானா, அது தமிழ் மக்களின் உண்மை விருப்பமில்லையா?  'வரலாறு மீளும்' என்பது பிரபலமான ஒரு கூற்று. வரலாறு முக்கியம் பெறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். தமிழ் மக்களின் அபிலாஷைகள்

என்ன என்ற இந்த தேடலில் நாம் இலங்கையில் தமிழர் அரசியல் வரலாற்றின் ஊடாக தமிழ் மக்களின் தேவைகள் என்ன, அபிலாஷைகள் என்ன, தமிழ் மக்கள் வேண்டுவது என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் தேட முயற்சிக்கிறோம். அந்த வகையில், 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் படி, டட்லி அரசுக்கு ஆதரவளித்த தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களுக்காக எவற்றை அடைந்தது என்று பார்ப்பது முக்கியமாகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/163963/-%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE-#sthash.FHmHDaxD.dpuf
Link to comment
Share on other sites

1956க்குப் பின்னர் தமிழ் அமைச்சர்
 
25-01-2016 10:06 AM
Comments - 0       Views - 11

article_1453696823-lmk.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?(பகுதி 24)

1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, 1965 டட்லி சேனநாயக்க அரசாங்கம் அமைந்தது வரை எந்தத் தமிழரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. அதுவரை 'தனிச் சிங்கள அமைச்சரவையாகவே' இலங்கை அமைச்சரவை தொடர்ந்து இருந்தது. 1948 முதல் 1956 வரையான காலப்பகுதியில் ஆட்சிசெய்த அரசாங்கங்களில் சி.சிற்றம்பலம், சி.சுந்தரலிங்கம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், வி.நல்லையா, சேர். கந்தையா வைத்தியநாதன், எஸ். நடேசன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், 1956இன் பின், 1965 வரை எந்தவொரு தமிழரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. இந்த நிலை 1965 டட்லி சேனநாயக்க தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம் அமைந்த போது மாறியது. அத்தோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சௌமியமூர்த்தி தொண்டாமானும்,

வி. அண்ணாமலையும் பிரதிநிதிகள் சபைக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆர்.ஜேசுதாசனும், எஸ்.நடேசனும் செனட் சபைக்கு நியமிக்கப்பட்டார்கள்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரானார் முருகேசன் திருச்செல்வம்

'ஹத் ஹவுள'வின் (ஏழுதரப்புக் கூட்டு) முக்கிய பங்காளியான இலங்கை தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி) ஆட்சியில் பங்குபற்றுவதற்கென 3 அமைச்சுப்பதவிகளை வழங்க, டட்லி சேனநாயக்க தயாராக இருந்தார். 'ஹத் ஹவுளவின்' இன்னொரு பங்காளியான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்துக்கு ஓர் அமைச்சுப் பதவியை வழங்க டட்லி சேனநாயக்க முன்வந்தபோதும் அதனை ஏற்றுக்கொள்ள ஜீ.ஜீ.பொன்னம்பலம் மறுத்துவிட்டார். தமிழரசுக் கட்சியும் தன்னுடைய முடிவில் தெளிவாக இருப்பதாக அறிவித்தது. தமது இலட்சியமான சமஷ்டிமுறை அதிகாரப் பகிர்வு கிடைக்கும் வரை தமிழரசுக் கட்சியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சுப் பதவியை ஏற்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தது. தமிழ்க் கட்சிகள் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயங்கியதன் முக்கிய காரணம், அது அவர்களது தேர்தல் அரசியலை பாதித்துவிடும் என்ற அச்சமாக இருக்கலாம்.

ஆயினும், தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட ஓர் அமைச்சுப் பதவியை, முருகேசன் திருச்செல்வத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற மன்றாடியார் நாயகமான முருகேசன் திருச்செல்வம் நேரடித் தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர் அல்ல. ஆனால், 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் உருவாகக் காரணமானவர்களில் முக்கியமானவர். ஆகவே, அவரை செனட் சபைக்கு நியமனம் செய்ததுடன், அவரை அமைச்சராக நியமிக்கவும் டட்லி சேனநாயக்கவும் தயாராக இருந்தார். எம்.திருச்செல்வம் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே

சா.ஜே.வே.செல்வநாயகத்தின் கோரிக்கையாக இருந்தது. உள்நாட்டலுவல்கள் அமைச்சராக திருச்செல்வம் இருந்தால், உள்ளக நிர்வாகம் அவரின் கீழ் இருக்கும், இது அதிகாரப்பரவலாக்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதே இவ்வமைச்சைக் கோரியமைக்கு காரணம் என சா.ஜே.வே செல்வநாயகத்தின் வாழ்க்கைச்சரிதை நூலில், அந்நூலை எழுதிய அவரது மருமகனான பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார். ஆனால், டட்லி சேனநாயக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சை வழங்கத் தயாராக இருக்கவில்லை. அந்த அமைச்சுப் பொறுப்பை முன்னாள் பிரதமர் விஜயானந்த தஹநாயக்கவுக்கு வழங்கவே அவர் விரும்பினார். 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் முக்கிய அதிகாரப் பரவலாக்கல் முன்மொழிவான 'மாவட்ட சபைகளை' உருவாக்குவதிலும், நிர்வகிப்பதிலும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அடுத்தபடியாக பொறுப்புக்கொண்ட அமைச்சு உள்ளூராட்சி அமைச்சாகும். உள்ளூராட்சி அமைச்சை திருச்செல்வத்துக்;கு வழங்க டட்லி சேனநாயக்க சம்மதித்தார். ஆனால், உள்ளூராட்சி கனிஷ்ட அமைச்சராக தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ரணசிங்க பிரேமதாஸவை டட்லி சேனநாயக்க நியமித்தார். செனட்டர் திருச்செல்வத்தின் அமைச்சுச் செயற்பாடுகளில் ஒரு கண் வைத்துக்கொள்ள டட்லி சேனநாயக்க விரும்பியிருக்கலாம். 1968இல், திருச்செல்வம் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய போது, பிரேமதாஸ உள்ளூராட்சி அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் காரணகர்த்தா என்ற வகையிலும், இன்று ஒரே ஒரு தமிழ் அமைச்சராகப் பொறுப்பெடுத்துக்கொண்டவர் என்ற வகையிலும், ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு திருச்செல்வத்தின் தோள்களில் இருந்தது. முதல்படியாக தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேலைகளை எம்.திருச்செல்வம் தொடங்கினார்.

தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகள் 1966

1956ஆம் ஆண்டு 'தனிச்சிங்களச்' சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், 1958ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த விசேட ஏற்பாடுகளின் கீழ், தமிழ் மொழி மூலமான பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி, தமிழ் மொழி மூலம் அரசசேவை பரீட்சைகள் எழுதுதல் (சேவையில் இணைந்தபின் குறிப்பிட்ட காலத்துள் உத்தியோகபூர்வ மொழியை (சிங்களம்) கற்றுத் தேற வேண்டும்), வடக்கு கிழக்கில் குறித்தொதுக்கப்பட்ட நிர்வாக விடயங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ மொழிக்கு (சிங்களம்) எந்த பட்சபாதமுமின்றி தமிழில் கருமமாற்றுதல் ஆகிய ஏற்பாடுகள் இருந்தன. ஆனால், இவை சட்டரீதியான அங்கிகாரமுடையவை அல்ல. அதாவது இவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஆனால், 1958 முதல் 1966 வரை எந்தப் பிரதமரும் இதனை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

1958ன் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட ஒழுங்குகளை வரையும் பணியை எம்.திருச்செல்வம் மேற்கொண்டார். மிகச் சுருக்கமாக அமைந்த 1966 தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகள் பின்வரும் ஏற்பாடுகளைச் செய்தது:

சிங்கள மொழியை உத்தியோகபூர்வமொழியாகப் பிரகடனம் செய்த 1956இன் உத்தியோகபூர்வமொழிச் சட்டத்துக்கு ('தனிச்சிங்களச்' சட்டம்) எந்த பாதிப்புமின்றி, தமிழ் மொழியானது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சகல அரச மற்றும் பொதுச் செயற்பாடுகளுக்கும், கூட்டுத்தாபனங்கள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுவதுடன், பதிவுகள் பேணப்படும் மொழியாகவும் இருக்கும்.

அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மொழியில் கருமமாற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களினதும், தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களினதும் தொடர்பாடல் மொழியாகவும் தமிழ் மொழி இருக்கும். சகல சட்டங்கள், கட்டளைச் சட்டங்கள், சட்ட ஒழுங்குகள், விதிகள், அறிவிப்புக்கள், வர்த்தமானி அறிவிப்புக்கள், அரச மற்றும் பொது அமைப்புக்களின் உத்தியோகபூர்வ வெளியீடுகள் ஆகியவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.

இந்த தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகளின் வரைவில் 'Tamil shall be used' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதாவது மேற்குறிப்பிட்ட விடயதானங்கள் தொடர்பில் தமிழ்மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று வரையப்பட்டது. நாடாளுமன்றத்தில் இது விவாதத்துக்கு எடுத்துக்கொள் ளப்பட்டபோது, எதிர்க்கட்சியிலிருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, 'Tamil shall be used' க்கு பதிலாக, 'Tamil may be used' என்று மாற்றப்பட வேண்டும் எனக் கோரினார்.

அதாவது தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக தமிழ்மொழி பயன்படுத்தப்படலாம் என்று அமைய வேண்டும் என அவர் கோரினார். ஏனெனில், தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டும் எனச் சொல்லும் போது தமிழ் மொழியின் பயன்பாடு கட்டாயமாக்கப்படுகிறது. அதனை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை.

1958இல் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை பண்டாரநாயக்க நிறைவேற்றியபோது, அதனை எதிர்த்து, கண்டிக்கு பாதயாத்திரை செல்ல ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைப்பட்டார். இம்முறை களம் மாறியிருந்தது. டட்லி சேனநாயக்க தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம், கொண்டுவந்த தமிழ் மொழி விசேட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் சட்ட ஒழுங்குகளை இப்போது எதிர்க்கட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையாக எதிர்த்தது. அதனுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணிப் பங்காளிகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் கூட தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்ட ஒழுங்குகளை எதிர்த்தது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 'தனிச்சிங்களச்' சட்டத்தைக் கொண்டு வந்த போது அதனைக் கடுமையாக எதிர்த்து, 'இரு மொழி, ஒருநாடு; ஒரு மொழி இருநாடு' என்று சொன்ன அதே இடதுசாரிக் கட்சிகள், தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வேண்டிய அதே இடதுசாரிக் கட்சிகள், இன்று படிப்படியாக தமது கொள்கைளை மாற்றி, பகிரங்கமாக தமிழ் மொழிக்கான குறைந்தபட்ச நடைமுறைப்படுத்தலைக் கூட எதிர்க்கும் நிலைக்கு வந்திருந்தன.

கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் வாக்கு வங்கி அரசியலுக்காக தங்களுடைய கொள்கைகளை அடகுவைத்துவிட்டு, 'சிங்கள-பௌத்த' பேரினவாத அரசியலிடம் சோரம் போயின. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி இந்த தமிழ் மொழி விசேட சட்ட ஒழுங்குகளை எதிர்த்து பௌத்த பிக்குகளையும் ஒன்றுதிரட்டி, கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியது. ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியபோது, பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை வந்தது. பொலிஸார்

நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தம்பராவே ரத்னசார என்ற பிக்கு கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்;குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணித் தலைவர்கள் (கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி உட்பட) 'விகாரமகாதேவி பூங்காவில்' கூடி கொல்லப்பட்ட பௌத்த பிக்குவுக்கு நியாயம் பெறச் சூளுரைத்தனர். ஆர்ப்பாட்டம் கடுமையானது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடத்தலைப்பட்டனர். இதன் போது பொலிஸார் கடுமையாக தடியடி நடத்தினர். தடியடிக்கும் கட்டுப்படாதபோது, துப்பாக்கிச்சூடு நடத்தினர். டட்லி சேனநாயக்க பதற்றம் கொண்டார்.

உடனடியாக ஆளுநரிடம் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யுமாறும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வேண்டினார். அவசரகால நிலை உடனடியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரகாலநிலை டட்லி சேனநாயக்கவின் ஆட்சிக்காலம் முழுவதும் தொடர்ந்தது. நாடாளுமன்றத்திலும் விவாதம் நடந்தது. அதில் பேசிய சா.ஜே.வே.செல்வநாயகம், 'தனிச்சிங்களச் சட்டம்' நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தநாட்டின் தமிழ் பேசும் மக்களின் சுயமரியாதை இல்லாதொழிக்கப்பட்டது. இந்த தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்ட ஒழுங்குகளை நிறைவேற்றுவதன் மூலம் அந்த சுயமரியாதை ஓரளவுக்கேனும் திரும்பக் கிடைக்கும்' எனக் குறிப்பிட்டார். இறுதியில் இந்தச் சட்ட ஒழுங்குகள் 72 வாக்குகள் ஆதரவாகவும், 40 வாக்குகள் எதிராகவும் வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் இந்த சட்ட ஒழுங்குகளுக்கு ஆதரவாக வாக்களித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மையில், இந்த தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகள் என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிப் பாவனையை ஓரளவுக்கு உறுதிப்படுத்தினாலும், வடக்கு-கிழக்குக்கு வெளியே உள்ள தமிழ் மக்களின் நிலை பற்றி பேசவேயில்லை என்பது பெருங்குறையாகும்.

இதன் மூலம், டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் முக்கிய இணக்கப்பாடுகளிலொன்று குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்டது எனலாம். ஆனால், மற்றைய இணக்கப்பாடுகளுக்கு என்ன நடந்தது? தமிழரசுக் கட்சி ஏன் அரசாங்கத்திலிருந்து விலகியது? அரசாங்கத்திலிருந்து விலகினாலும், ஏன் அரசாங்கம் கவிழாது இருக்க தொடர்ந்தும் வெளியிலிருந்து ஆதரவளித்தது?

- See more at: http://www.tamilmirror.lk/164590/-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-#sthash.7rzm09VU.dpuf
Link to comment
Share on other sites

டட்லியின் ஆட்சியில்...
 
01-02-2016 09:14 AM
Comments - 0       Views - 7

article_1454298641-Old.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி 25

1966ஆம் ஆண்டின் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகள் நிறைவேற்றப்பட்டமை ஒரு முழுமையான வெற்றி அல்லது சாதனை என்று சொல்லத்தக்கதாக இருக்கவில்லை. ஏனென்றால், வடக்கு மற்றும் கிழக்குக்கு அப்பாலுள்ள தமிழர்களுக்கு அது எந்தவொரு தீர்வையும் தரவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தனிச் சிங்களச் சட்டத்தின் பாதிப்பை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள். 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்திலிருந்த 'தமிழ் பேசும் நபரொவர் தன்னுடைய கொடுக்கல் வாங்கல்களை தமிழ்மொழியில் நாடெங்கிலும் செய்யும் வாய்ப்பு வேண்டும்' என்ற இணக்கப்பாட்டை 1966ஆம் ஆண்டின் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகள் நிறைவேற்றவில்லை.

தமிழ்த் தரப்பின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத இந்த சட்ட ஒழுங்குகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யுனிஸ்ட் கட்சி ஆகியன கடுமையாக எதிர்த்தன. இந்த எதிர்ப்பு டட்லி சேனநாயக்கவுக்கு கடும் அழுத்தத்தை வழங்கியது. ஆனால், டட்லி சேனநாயக்க 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார் என்று தமிழரசுக் கட்சி நம்பியது.

தமிழ் அரச அலுவலர்கள், சிங்கள மொழியறிவு இல்லாததால் தமது வேலையை இழக்கும் நிலையிலிருந்தார்கள். அவர்கள், தமிழரசுக் கட்சியின் அமைச்சரான எம்.திருச்செல்வத்தைச் சந்தித்து நாம் தமிழரசுக் கட்சியின் கோரிக்கையை மதித்தே சிங்களம் படிக்காமல் இருந்தோம், இப்போது நாம் வேலைகளை இழக்கும் நிலையில் இருக்கிறோம் என தமது ஆதங்கத்தைப் பதிவு செய்தபோது, அமைச்சர் முருகேசன் திருச்செல்வம், தமிழரசுக் கட்சி இப்போது அரசாங்கத்துடன் இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளது. ஆகவே, இனி நீங்கள் சிங்களம் கற்காமல் இருப்பதற்கு காரணமில்லை. நீங்கள் சிங்களம் கற்பதற்கான கால எல்லையை நீடித்துள்ளோம்.

ஆகவே, சிங்களத்தைக் கற்றுத் தேறுங்கள் என்று கூறியதாக தன்னுடைய 'தமிழ் தேசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் (ஆங்கிலம்)' என்ற நூலில் வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார். தமிழ் அரச அலுவலர்களின் நிலையை நிர்வாக ரீதியில் தீர்ப்போம் என 'டட்லி-செல்வா' ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது எஸ்மண்ட் விக்ரமசிங்ஹவும், முருகேசன் திருச்செல்வமும் சொன்னது இந்தத் தீர்வைத்தானா என வி.நவரட்ணம் கேள்வி எழுப்புகிறார். அப்படியென்றால் தமிழரசுக் கட்சி மக்களை ஏமாற்றியல்லா விட்டது என்றும் அவர் குறிப்பிடுகிறார். வேலையை இழக்கும் நிலையிலிருந்த அரச உத்தியோகத்தர்கள், சா.ஜே.வே.செல்வநாயகத்தை அணுகினார்கள்.

அவர், அவர்களை அமைச்சர் திருச்செல்வத்தோடு பேசுமாறு கூறினார். நீங்கள் சிங்களம் கற்கத் தயாராக இல்லையென்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று திருச்செல்வம் கையை விரித்தார். சிங்கள அறிவில்லாததால் அரச உத்தியோகத்தர்களாக பத்மநாதன், சுரேந்திரநாதன், குலமணி ஆகிய மூவரும் வேலையை இழந்தனர். தமிழரசுக் கட்சியை நம்பியவர்களுக்கு, தமிழரசுக் கட்சி செய்த துரோகம் இது என வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார்.

ஐக்கிய நாடுகள் சபைத் தூதுக்குழுவின் தலைவராக ஜீ.ஜீ.பொன்னம்பலம்

1966இல் பிரதமர் டட்லி சேனநாயக்க- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்கான இலங்கைத் தூதுக்குழுவின் தலைவராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும், யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை நியமித்தார். இதனை பிரதமர் டட்லி சேனநாயக்கவின் நல்லெண்ண நியமனம் என்று கருதினாலும், இது தகுதிசார்ந்த நியமனமாகக் கொள்ளப்படவும் முடியும். மிகச்சிறந்த பேச்சாளரான ஜீ.ஜீ.பொன்னம்பலம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அனைவரையும் கவரும்படியான உரையை நிகழ்த்தினார்.

அமைதி காக்கும் நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டவர், இந்நடவடிக்கைகள் ஒரு சில நாடுகளின் தனிப்பட்ட விருப்பில் அல்லது சிலநாடுகளின் உதவியில் அமைவது ஏற்புடையதல்ல என்றார். குறிப்பாக வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகளிடையான அதிகரித்துவரும் இடைவெளி பற்றிய கரிசனத்தை தனது உரையில் பதிவு செய்தார். அத்தோடு, வளர்ந்துவரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களையும் எடுத்துரைத்தார். இந்த உரையின் முடிவில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை சந்தித்து பாராட்டிய அமெரிக்க தூதுவரான பிரான்ஸிஸ். ஈ.வில்லிஸ், 'வளர்ந்துவரும் நாடொன்றின் குரல் இதுவென்றால், நாமும் வளர்ந்து வரும் நாடாகவே இருக்க விரும்புகிறோம்' என்ற கூறியதாக தனது கட்டுரையொன்றில் அ. விநாயகமூர்த்தி பதிவுசெய்கிறார்.

தமிழரொருவர் அமைச்சரானமை, தமிழரொருவர் ஐ.நா.தூதுக்குழுவின் தலைவரானமை எல்லாம் நல்லெண்ணத்தின் வெளிப்பாடுகளாக இந்தன. ஆனால், நல்லெண்ணத்தை காட்டியளவுக்கு, தமிழ் மக்களின் அரசியற் தேவைகளை நிறைவேற்றுவதற்கு டட்லி அரசாங்கம் முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் வரலாறு கூறும் பாடம். ஆங்காங்கே நல்லெண்ண முயற்சிகள் இருதரப்பிலும் இடம்பெற்றன. ஆனால், அவை எதுவும் முழுவடிவம் பெறவில்லை.

பிரதமர் டட்லி சேனநாயக்கவின் 1967 யாழ். விஜயம்

1967இல் பிரதமர் டட்லி சேனநாயக்க யாழ். விஜயம் ஒன்றை மேற்கொண்டார். யாழ். புதிய சந்தைக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டுவதே அவரது விஜயத்துக்கான காரணமாக இருந்தாலும், நல்லெண்ண விஜயமாகவே பிரதமர் டட்லியின் யாழ். விஜயம் பார்க்கப்பட்டது. விமானம் மூலம் யாழ். பலாலி விமானத்தளத்தை வந்தடையவிருந்த பிரதமர் டட்லியை யார் வரவேற்பது என்பதில் தமிழ்த் தரப்புத் தலைவர்களிடம் போட்டியிருந்தது.

பிரதமர் டட்லி - யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வதால் அவரை வரவேற்கும் உரிமை யாழ்ப்பாணத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கே உண்டு என்பது ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் நிலைப்பாடாக இருந்தது. பலாலி விமானத்தளம் காங்கேசன்துறை தொகுதிக்குள் வருவதால், காங்கேசன்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கே வரவேற்கும் உரிமையுண்டு என சா.ஜே.வே.செல்வநாயகம் கூறினார். இது வரவேற்பை ஒழுங்குபடுத்திய அரசாங்க அதிபருக்கு பெரும் சங்கடத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தியது. வரவேற்பது தொடர்பான குறித்த வரைமுறையை அறியத்தருமாறு அவர்கள் பிரதமரின் அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டனர்.

பிரதமர் அலுவலகத்தின் நெறிப்படுத்தலின்படி மயிலிட்டி உள்ளூராட்சிசபைத் தலைவர் முதலில் மாலையிட்டு வரவேற்பதென்றும், இரண்டாவதாக சா.ஜே.வே.செல்வநாயகம் மாலையிட்டு வரவேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. முக்கிய அதிதிகள் விஜயம் செய்யும் போது, அவர்களை குறித்த பிரதேசத்தின் உள்ளூராட்சிசபைத் தலைவர் வரவேற்பது ஆங்கிலேய அரசியல் பாரம்பரியத்திலுள்ளதொன்றாகும். இன்றும் இதுவே பொருத்தமான வரைமுறையாகும்.

பிரதமர் டட்லி சேனநாயக்கவை வரவேற்க பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். அநேக தலைவர்களும் திரண்டிருந்தனர். ஆனால், ஜீ.ஜீ.பொன்னம்பலம் மட்டும் அங்கிருக்கவில்லை. பிரதமர் டட்லி சேனநாயக்க வந்த விமானம் பலாலியில் தரையிறங்கியது. விமானத்திலிருந்து முதல் ஆளாக ஜீ.ஜீ.பொன்னம்பலம் வெளியே வந்தார். தனக்கு வரவேற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை, அதனால் பிரதமரோடு வரும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டார்.

ஆரவாரமான வரவேற்பு பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கு  யாழ்ப்பாணமெங்கிலும் வழங்கப்பட்டது. அனைத்துத் தமிழ்க் கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பிரதமர் டட்லி சேனநாயக்கவை வரவேற்றனர். பிரதமர் டட்லியின் வரவை எதிர்த்த ஒரே கட்சியினர் சண்முகதாசனின், இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி (பீகிங் பிரிவு) மட்டுமே. ஆனால், அவர்களது எதிர்ப்பு நடவடிக்கை பற்றி முன்னமே அறிந்த பொலிஸார், அவர்களை முற்றுகையிட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளைத் முறியடித்தனர்.

பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கான இந்த வரவேற்பை தமிழ்க் கட்சிகளின் அல்லது தமிழ்த் தலைவர்கள் அரசியல் சரணாகதி என்று விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால், இன்னொரு வகையில் பார்த்தால், தமிழ்த் தலைவர்கள் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த இதனை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டார்கள் என்றும் சொல்லலாம். இன்று வரை இலங்கை அரசியல் வரலாற்றில் 'கனவான்' தன்மை மிக்க தலைவர்களாக வெகு சிலரே கருதப்படுகிறார்கள். அவற்றில் டட்லி சேனநாயக்க குறிப்பிடத்தக்கவர்.

சுயலாபத்துக்காக அரசியலை பயன்படுத்தாத தலைவர், 'கனவான்' தன்மையுள்ள நேர்மையான தலைவர் என்பதே பலரும் டட்லி சேனநாயக்கவுக்கு சூட்டும் புகழாரம். ஆகவே, அன்றைய தமிழ்த் தலைமைகள் இத்தகையதொரு 'கனவான்' தன்மை மிக்க ஓர் அரசாங்கத் தலைவருக்கு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதனூடாக தமது மக்களுக்கான நன்மைகளைப் பெற்றுத்தர முனைந்திருக்கக்கூடும். ஆனால், வரலாறு அவர்களுக்கு வேறுவிதமான பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. பேரினவாத சக்திகளின் அழுத்தத்தை எந்தக் 'கனவானினாலும்' இதுவரை முறியடிக்க முடிந்ததில்லை. அதற்கு டட்லி சேனநாயக்கவும் விதிவிலக்கல்ல என்பதை ஒரு வருடகாலத்திலேயே தமிழ்த் தரப்பு புரிந்துகொண்டது.

முடிவுக்கு வரத்தொடங்கிய 'தேனிலவுக்காலம்'

1968 ஒரு சவால்மிக்க வருடமாக இருந்தது. 'டட்லி-செல்வா' கூட்டணியின் 'தேனிலவுக்காலம்' அதன் முடிவை நோக்கி நகரத்தொடங்கியது.

சா.ஜே.வே.செல்வநாயகமும் முதுமையின் ஆதிக்கத்தில் இருந்தார். முதுமையும் அவரை பீடித்திருந்த பாக்கின்ஸன்ஸ் நோயும் அவரது அரசியல் செயற்பாடுகள் முன்னிருந்தது போல இல்லாது பெருமளவு குறைந்துபோகக் காரணமானது. இந்தவேளையில், எம்.திருச்செல்வத்தினதும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தினதும் ஆதிக்கம் கட்சிக்குள் முன்னிறுத்தப்பட்டது. கட்சியின் முக்கிய தலைவர்களான வி.நவரட்ணம், சி.ராஜதுரை ஆகியோர் தாம் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்தனர். சி.ராஜதுரை, அமிர்தலிங்கத்தை 'கார்ட்போர்ட் ஹிட்லர்' என்று வர்ணித்தார்.

1953-லேயே பேராசிரியர் மயில்வாகனம், பேராசிரியர் சின்னத்தம்பி ஆகியோரால் தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் இந்து பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றது. இலங்கை தமிழரசுக் கட்சியோ திருக்கோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றது.

திருகோணமலையின் சிங்கள மயமாக்கத்தை தவிர்க்க இது அவசியம் என தமிழரசுக்கட்சி சொன்னது. திருகோணமலையில் சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதில் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அக்கறையோடு செயற்பட்டுக்கொண்டிருந்தன. 1871இல் 81.8% தமிழர்களைக் கொண்டிருந்த திருகோணமலையில், 1963இல் 31.9% மட்டுமே தமிழர்களாக இருந்தார்கள். அக்காலத்தில் 1.3% லிருந்து 29.6% மாக சிங்களவர்களின் எண்ணிக்கை மாறியிருந்தது.

திருகோணமலைத் துறைமுகம் 1956 வரை பிரித்தானிய கடற்படை வசம் இருந்தது. பிரித்தானிய கடற்படையின் வெளியேற்றத்தின் பின் முக்கிய வணிகத் துறைமுகமாக அது மாறியிருந்தது. கப்பல் கம்பனிகள் பலவும் தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்ததுடன், துறைமுகத் தொழிலாளர்களாகவும் கணிசமானளவு தமிழர்கள் பணியாற்றினர்.

1967இல் தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக திருகோணமலைத் துறைமுகம் தேசியமயமாக்கப்பட்டது. இதனைத் தமிழ் மக்கள் சிங்களமயமாக்கலாகவே பார்த்தனர். அரசின் பங்காளியான தமிழரசுக் கட்சியினால் இதனைத் தடுக்க முடியவில்லை. ஆனால், தொடர்ந்தும் அரசின் பங்காளியாக இருந்தது.

1968இல் எம்.திருச்செல்வம் மதராஸில் (சென்னை) இடம்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இலங்கை அரசின் சார்பாகப் பங்குபற்றி உரையாற்றியிருந்தார். ஆனால், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஏற்பாட்டாளர்களோ, தமிழக அரசோ இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர்களுக்கும், தமிழ்மொழிப் புலமையாளர்களுக்குமான உரிய இடத்தை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. தமிழ் மொழிக்கு ஈழத்தவர் ஆற்றிய பங்களிப்பு புறக்கணிக்கப்படுவதாக ஈழத்து தமிழ் பத்திரிகைகள் குற்றம் சாட்டின. இது இலங்கையில் தமிழ் பல்கலைக்கழகமொன்றின் தேவையை உணர்த்தி நின்றது.

தமிழ் அரசியல் வரலாற்றைப் பார்க்கும் போது நாம் தமிழ், சிங்கள என்ற இரு இன அரசியலுக்கிடையிலான உறவை மட்டும் ஆராய்தல் போதுமானதல்ல. தமிழர்களுடைய அபிலாஷைகளைப்

புரிந்துகொள்வதற்கு தமிழர்களுக்கு உள்ளான அரசியலைப் புரிந்துகொள்வதும் அவசியமாகும். 'தமிழ்த் தேசியம்' என்று மேவி நிற்கும் குடைக்குள் பெருமளவிலான தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், தமிழர்களிடையே பிரதேசவாரி, குறிப்பாக சாதிவாரிப் பிரிவினை கணிசமானளவில் இருந்தது. 1968இல் நடந்த மாவிட்டபுரம் கோயில் நுழைவுப் போராட்டம் இந்த அடிப்படையில் முக்கியம் பெறுகிறது. தமிழர்கள், பெரும்பான்மைச் சிங்களவர்களிடையே தமக்கான உரிமைக்காகப் போராடிய வேளையில், தமிழர்களுக்குள் காலங்காலமாகத் சாதிரீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள், சாதிரீதியில் உயர்ந்ததாகக் கருதிய மக்களிடம் தம்முடைய உரிமைகளுக்காகப் போராடினார்கள்.

இலங்கைத் தமிழ் அரசியலில் யாரும் பேசாத அல்லது பேச விரும்பாத பக்கங்கள் இவை. தமிழ் இனம் தனக்கு எதிரான கொடுமைகளுக்கு நியாயம் தேடிக்கொண்டிருந்த வேளையில், தாம் தமக்கிடையே புரிந்த கொடுமைகளுக்கும் நியாயம் வழங்க வேண்டிய தேவை இருந்தது. அது சாத்தியமாகும் போதுதான் தமிழினம் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுவது சாத்தியமாகும். இந்த பிரதேசவாதமும் தமிழர்களுக்கிடையிலான பிரிவினைகளும் இன்றுவரை தொடர்வதைக் காணலாம்.

(தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/165093/%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%B2-#sthash.9xS1B33j.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.