Jump to content

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?


Recommended Posts

கறுப்பு ஜூலை இன அழிப்பு
 Comments - 0 Views - 171

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 100)

 தொடர்ந்த இன அழிப்பு  

1983 ஜூலை 24 ஆம் திகதி கொழும்பின் பொரளைப் பகுதியில் தொடங்கிய ‘கறுப்பு ஜூலை’, தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு 25 ஆம் திகதி கொழும்பின் மற்றைய பகுதிகளுக்கு பரவியதோடு, 25 ஆம் திகதியின் நண்பகலைத் தாண்டிய பொழுதில் கொழும்பை அண்டிய ஏனைய பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.  

image_344953a261.jpg

 தமிழ் மக்களின் வீடுகள், வியாபார மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள், தொழிற்சாலைகள் என்பன திட்டமிட்டுத் தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு, எரியூட்டப்பட்டு, அழிக்கப்பட்டதோடு, தமிழ் மக்களும் கொடூரமான தாக்குதல்களுக்கும் சித்ரவதைகளுக்கும் உயிர்க்கொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.   

25 ஆம் திகதி காலை ஜனாதிபதி ஜே.ஆர் தலைமையில் கூடிய பாதுகாப்புச் சபை 25 ஆம் திகதி மாலை ஆறு மணி முதல் கொழும்பில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருந்தது.   

ஆனால், அதற்கிடையில் கொழும்பெங்கும் கொடூரமாக இன அழிப்பு நடந்தேறியிருந்ததுடன், தொடர்ந்தும் கொண்டிருந்தது. ஆறு மணிக்கு என்று முதலில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, பின்பு நான்கு மணிக்கும், அதன் பின் இரண்டு மணிக்கும் முன்னகர்த்தப்பட்டதாகவும் தாக்குதல்கள் கடவத்தை, களனி மற்றும் நீர்கொழும்பு ஆகிய கொழும்பு மாவட்டத்தைத் அண்டிய கம்பஹா மாவட்டத்தின் பகுதிக்கும் பரவியிருந்ததால் ஊரடங்கு கம்பஹாவுக்கும் அறிவிக்கப்பட்டதாகத் தனது 1983 இன அழிப்பு பற்றிய ‘இங்கையின் பெருந்துயர்’ (ஆங்கிலம்) என்ற நூலில்  ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார்.   

ஊரடங்கால் நிலைமையில் மாற்றமில்லை  

ஆனால், அரசாங்கத்தின் இந்த ஊரடங்கு அறிவிப்பு, எதையும் அடக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்புத் தொடர்ந்து கொண்டிருந்ததுடன், பரவிக்கொண்டும் இருந்தது. களுத்துறை மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.   

களுத்துறையில் தமிழ் மக்களின் வீடுகள் தாக்கியழிக்கப்பட்டதுடன், தமிழ் மக்களும் தாக்குதலுக்குள்ளானார்கள். குறிப்பாக களுத்துறையில் பிரபலமாக இருந்த தமிழருக்குச் சொந்தமாக இருந்த ‘ரீ.கே.வீ.எஸ் ஸ்டோர்ஸ்’ என்ற வர்த்தக நிலையம் தாக்குதலுக்குள்ளாகியதுடன், அதைத் தாக்கிய காடையர்கள் அதற்கு எரியூட்டினர்.   

அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தனது வர்த்தக நிலையத்தின் மேல்மாடியில் தஞ்சம் புகுந்திருந்தார். தீ மேல்மாடிக்கும் பரவவே, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, மேல்மாடியின் ஜன்னலினூடாக வெளியே குதித்த அவரை, வெளியிலிருந்த இன அழிப்புக் காடையர்கள் கைப்பற்றி, கடுமையாகத் தாக்கியதுடன், அவரைக் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்த நெருப்புக்குள் தூக்கியெறிந்தனர்.

இத்தகைய ஈவிரக்கமற்ற வன்முறைதான் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அரங்கேறிக்கொண்டிருந்தது.  

அழிக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதார வளங்கள்  

கொழும்பு நகரின் தெற்கிலே இரத்மலானை நகரம் அமைந்திருக்கிறது. கொழும்பு நகருக்கான விமான நிலையம் அங்குதான் அமைந்திருக்கிறது (தற்போது இரத்மலானை விமான நிலையம் என அறியப்படுவது

இரத்மலானை நகரம் பல தொழிற்சாலைகளின் இருப்பிடமாகவும் இருந்தது. அங்கமைந்திருந்த தமிழருக்குச் சொந்தமான ‘ஜெட்றோ காமண்ட்ஸ்’ என்ற ஆடைத்தொழிற்சாலையும் ‘டாடா காமண்ட்ஸ்’ என்ற ஆடைத்தொழிற்சாலையும் இன அழிப்புக் காடையர்களின் தாக்குதலுக்குள்ளாகி முற்றாக அழித்தொழிக்கப்பட்டது.   

இதைவிடவும் இரத்மலானை பகுதியிலும் அதை அண்மித்த பகுதியிலும் அமைந்திருந்த எஸ்-லோன் குழாயகத் தொழிற்சாலை, பொண்ட்ஸ் தொழிற்சாலை, றீவ்ஸ் ஆடைத் தொழிற்சாலை, ஹைட்றோ ஆடைத்தொழிற்சாலை, ஹைலக் ஆடைத்தொழிற்சாலை, ஏ.ஜீ.எம். ஆடைத்தொழிற்சாலை, மன்ஹட்டன் ஆடைத்தொழிற்சாலை, பொலிபக் தொழிற்சாலை என்பனவும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, எரியூட்டி அழிக்கப்பட்டன.  

மேலும், பெரெக் தொழிற்சாலை மற்றும் மஸ்கன்ஸ் அஸ்பெஸ்ரஸ் தொழிற்சாலை என்பனவும் தாக்கியழிக்கப்பட்டன. ஏறத்தாழ இரத்மலானை பகுதியில் மட்டும் தமிழர்களுக்குச் சொந்தமான 17 தொழிற்சாலைகள் அழித்தொழிக்கப்பட்டன. கொழும்பில் அமைந்துள்ள தமிழ் மக்களின் பொருளாதார அஸ்திவாரங்கள் அழித்தொழிக்கப்பட்டன என்று சொன்னால் அது மிகையல்ல.   

மஹாராஜா நிறுவனம், சென் அந்தனீஸ் ஹாட்வெயார் ஸ்டோர்ஸ், கே.ஜீ.இண்டஸ்ட்ரீஸ், ஈஸ்வரன் பிரதர்ஸ் எனத் தமிழர்களுக்குச் சொந்தமான பல வணிக, கைத்தொழில் நிறுவனங்கள் இலங்கையில் கோலோச்சிய காலமது. இந்த அத்தனை நிறுவனங்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளும் வணிக, வர்த்தக நிலையங்களும் தாக்குதலுக்குள்ளாகி அழிக்கப்பட்டன.  

அன்று இலங்கையின் மிகப் பெரிய வணிக நிறுவனமாக உபாலி விஜேவர்த்தனவுக்குச் சொந்தமான உபாலி குழுமத்துக்கு அடுத்ததாக மஹாராஜா நிறுவனமே இருந்தது. தமிழர்களுக்குச் சொந்தமான மஹாராஜா நிறுவனத்தின் இரத்மலானையில் அமைந்திருந்த எஸ்-லோன், பொண்ட்ஸ், பெரெக் உள்ளிட்ட ஆறு தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன.

இதைவிட மஹாராஜா நிறுவனத்துக்குச் சொந்தமாக ‘ஹெட்டியாரச்சி பிரதர்ஸ்’ என்ற நிறுவனமும் இருந்தது. சிங்களப் பெயரைக் கொண்டிருந்தாலும், இது தமிழர்களுக்குச் சொந்தமான மஹாராஜா நிறுவனத்துக்குச் சொந்தமானது என்ற விடயம் தெரிந்து, அது தாக்கப்பட்டு, எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்தக் கலவரம் தற்செயலாக, எழுந்தமானமாக நடத்ததொன்று என்று கூறிவிடமுடியுமா என்ற கேள்வி எழுகிறது.   

1983 இனக்கலவரம் என்பது வெறுமனே திடீரென்று நடந்த சம்பவமொன்றின் விளைவால் ஏற்பட்ட ஆத்திரத்தினால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள், அவர்களது சொத்துகள் அழிக்கப்பட்டன என்று சொல்லுமளவுக்கு குறுகிய நோக்கல் பார்க்கப்பட வேண்டியதொன்றல்ல, மாறாக தமிழர்களின் அடிப்படைகளைச் சிதைப்பதற்கான ஒரு திட்டம் 1983 கலவரத்தின் அடிநாதமாக இருப்பதை அதை மீளாய்வுக்கு உட்படுத்தும் எவரும் காணலாம்.   

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரத்மலானையின் சொய்ஸாபுர பகுதியிலமைந்திருந்த அரச தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த இன அழிப்புக் காடையர்கள், அங்கிருந்த தமிழ் மக்களின் வீடுகளை அடையாளம் கண்டு தாக்கியழித்ததுடன், அவற்றுக்கு எரியூட்டினர். 

 ஏறத்தாழ 500 வீடுகள் அளவில் அமைந்திருந்த சொய்ஸாபுர தொடர்மாடிக் குடியிருப்பில் ஏறத்தாழ 92 வீடுகள் தமிழர்களுக்குச் சொந்தமானவை. அதில் ஏறத்தாழ 81 வீடுகள் தாக்கியழிக்கப்பட்டன.   

1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக் கலவரங்களின்போது, கொழும்பில் அமைந்திருந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பொருளாதார அஸ்திவாரங்களும் தமிழ் மக்களின் வீடுகளும் இன அழிப்பில் ஈடுபட்டவர்களின் இலக்குகளாக இருந்தன என்று ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க கருத்துரைக்கிறார்.   

இது பற்றித் தனது நூலொன்றில் கருத்துரைக்கும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்ஹ, ‘25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மிகத் திறமாகத் திட்டமிட்ட காடையர்களின் குழுக்களானது, வாக்காளர் பதிவேடுகளின் உதவியுடன், எந்த வீடு யாருக்குச் சொந்தமென அடையாளம் கண்டு, வீதியெங்கிலுமுள்ள தமிழர்களது வீடுகளை இல்லாதொழித்துச் சென்றனர்’ என்று பதிவு செய்கிறார்.   

இதைப் பற்றி குறிப்பிடும் ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க, “காடையர்கள் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பதிவேடுகளை கொண்டிருந்தனர், இந்தப் பதிவேடுகளை ஒரு சிறிய தொகையை செலுத்தி எந்தக் குடிமகனும் பெற்றுக்கொள்ள முடியும்” என்று பதிவு செய்கிறார்.  

 ஒரு சிறிய தொகையைச் செலுத்தி, எந்தக் குடிமகனும் வாக்காளர் பதிவேடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்தான், ஆனால், எந்த சாதாரண குடிமகன் வாக்காளர் பதிவேடுகளை பணம் செலுத்திப் பெற்றுக் கொள்கிறான்? பொதுவாக, இவற்றை அரசியல் கட்சிகள்தான் பெற்றுக்கொள்வது வழமை. ஆகவே, இந்தச் சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது, இரண்டு சாத்தியப்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன.  

 ஒன்று, இதன் பின்னணியில் அரசியல் கட்சி அல்லது அரசியல் கட்சிகள் இருக்கிறது. இரண்டு, 1983 ஜூலை இன அழிப்பு ஏதோ ஒரு வகையில் ஒரு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டிருக்கிறது.   

துல்லியமாக நடத்தப்பட்ட இனஅழிப்பு  

தமிழர்கள் அதிகம் செறிந்து வாழ்ந்த வௌ்ளவத்தை மற்றும் தெஹிவளையில் இன அழிப்புக் கும்பல் புகுந்தபோது, அதன் விளைவு பாரதூரமாக இருந்தது. ஒரு திட்டமிட்ட வகையில் இன அழிப்புக் காடையர்கள் இயங்கிக் கொண்டிருந்தார்கள். 

மூன்று கட்டளைகளின் பிரகாரம் இந்த காடையர்கள் இயங்கியதாக 
ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார். முதலாவது கட்டளை “கட”; அதாவது சிங்களத்தில் உடை. இரண்டாவது “அத”; அதாவது சிங்களத்தில் இழு (இது உள்ளிருப்பவர்களை இழுத்து வெளியில் போடுதலைக் குறிக்கிறது). மூன்றாவது “கினி”; அதாவது சிங்களத்தில் நெருப்பு (இது எரியூட்டுவதைக் குறிக்கிறது). எவ்வளவு தூரம் இது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்கு ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவு செய்யும் ஒரு சம்பவமே மிகச் சிறந்த உதாரணமாக அமைகிறது.   

தெஹிவளை, ரட்ணகார வீதியில் மொத்தம் 53 வீடுகள் அமைந்திருந்தன. இதில் 26 வீடுகளில் சிங்களவர்கள் வசித்தார்கள். 27 வீடுகளில் தமிழர்கள் வசித்தார்கள். தமிழர்கள் வசித்த வீடுகளில் 24 வீடுகள் தமிழர்களுக்குச் சொந்தமானது. 3 வீடுகள் சிங்களவர்களுக்குச் சொந்தமானவை; ஆனால், அதில் தமிழர்கள் வாடகைக்கு குடியிருந்தார்கள்.

இதில் தமிழர்களுக்குச் சொந்தமான 24 வீடுகளும் தாக்கி, எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன. தமிழர்கள் வாடகைக்கு குடியிருந்த சிங்களவர்களுக்குச் சொந்தமான மூன்று வீடுகளில் இருந்த பொருட்கள் வீதியில் வீசியெறிப்பட்டு, வீதியில் எரியூட்டப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டனவேயன்றி, சிங்களவர்களுக்குச் சொந்தமான அந்த வீடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

அவ்வளவு தூரத்துக்கு இந்த இன அழிப்பு துல்லியமாகத் தமிழர்களும் அவர்களது சொத்துகளும் தெளிவாக அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டன.   

தமிழர்களும் தமிழர்களின் வீடுகள், வணிக, வர்த்தக மற்றும் வியாபார நிலையங்கள் என்பனவெல்லாம் தாக்கியழிக்கப்பட்டபின் “அபி சுத்த கரா” - சிங்களத்தில் “நாம் சுத்தம் செய்துவிட்டோம்”, “சிங்கள ஹமுதாவட்ட ஜயவேவா” - சிங்களத்தில் “சிங்களப் படைக்கு வெற்றியுண்டாகுக” என்ற ஜய கோசங்கள் இன அழிப்புக் காடையர்களால் எழுப்பப்பட்டன என தன்னுடைய கட்டுரையொன்றில் ராஜன் ஹூல் பதிவு செய்கிறார்.  

வீதியில் இன அழிப்புக் காடையர்களிடம் சிக்கிய தமிழ் மக்களின் நிலை படுமோசமாக இருந்தது. இதற்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த செல்லையா குமாரசூரியரும் விதிவிலக்காகவில்லை. வௌ்ளவத்தை, விவேகானந்தா வீதியின் தொடக்கப்பகுதியில் நீள்க்காற்சட்டையும் பெனியனும் அணிந்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லையா குமாரசூரியர், காடையர் குழுவொன்றினால் கைகள் கட்டி இழுத்துவரப்பட்டார்.

அருகே ஆயுதம் தாங்கி நின்றிருந்த பொலிஸ் இதைக் கண்டும் காணாது நின்றிருந்ததாகவும் அங்கே நின்றிருந்த இராணுவ வீரன் ஒருவனைக் கண்ட முன்னாள் அமைச்சர், “தான் ஸ்ரீமாவோவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்” என்பதை எடுத்துச் சொல்ல முயன்றும், அந்த வீரம் “போய் தொலை” என்று சொல்லிக் கொண்டும் காணாது நின்றதாகவும் ராஜன் ஹூல் சில மேற்கோள்களுடன் தனது கட்டுரையொன்றில் பதிவு செய்கிறார்.  

ஸ்ரீ மாவோ அரசாங்கத்தில் அங்கம் வகித்ததால் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களாலும் தமிழ் அரசியல் தலைமைகளாலும் “துரோகி” முத்திரை குத்தப்பட்ட செல்லையா குமாரசூரியர், இன்று சிங்களக் காடையர்களாலும் நட்ட நடு வீதியில் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.   

ஜே.ஆர்.செய்யாதவைகளும் செய்தவைகளும்  

1983 ஜூலை இனக்கலவரம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஜே.ஆர் அரசாங்கம் ஊரடங்கு அறிவித்ததைத் தவிர வேறெந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. ஆனால், தனக்கு நெருங்கிய தமிழர்களை மீட்க ஜே.ஆர் படைகளையும் பொலிஸாரையும் அனுப்பியிருந்த சம்பவங்களைப் பற்றிப் பலரும் பதிவுசெய்திருக்கிறார்கள்.   

பல தமிழ் முக்கியஸ்தர்களினது வீடுகள் தாக்கப்பட்டபோதும், அவர்கள் காப்பாற்றப்பட்டமையிலும் அவர்கள் பாதுகாப்பாக வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தமையிலும் ஜே.ஆரினதும் ஜே.ஆர் அரசாங்கத்தினதும் பங்கு இருந்ததாக பலரும் பதிவு செய்கிறார்கள்.   

குறிப்பாக கைகள் கட்டப்பட்டு வீதியில் இழுத்துவரப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லையா குமாரசூரியருக்கு விபரீதமாக ஏதேனும் நடப்பதற்கு முன்பே இராணுவப் படை ஒன்று அனுப்பப்பட்டு, அவர் மீட்கப்பட்டு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சில தமிழ் அரசியல் தலைமைகளின் வீடுகள் தாக்கப்பட்டபோதும், அவர்கள் அப்போது அங்கிருந்திருக்கவில்லை. வேறு சில தமிழ் முக்கியஸ்தர்கள் கூட அவர்களது வீடுகளிலிருந்து பாதுகாப்பாக முதலே வெளியேற்றப்பட்டிருந்ததாக சில பதிவுகளுண்டு.   

ஜே.ஆரின் மகனான ரவி ஜெயவர்த்தனவின் முதலாவது மனைவி சாமைன் வன்டர்கூன் தமிழ்ப் பூர்வீகத்தைக் கொண்டவர். அவரைப் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அழைத்துச் செல்ல ஒரு படையை ஜே.ஆர் அனுப்பியிருந்ததாக சிலர் பதிவு செய்கிறார்கள். 

இதைவிடவும், சாதாரண சிங்கள மக்கள் பலர்கூடத் தமது நண்பர்கள், அயலவர்களான தமிழர்களுக்கு தமது வீடுகளில் தஞ்சம் அளித்துப் பாதுகாத்தார்கள். இப்படிச் செய்வது தமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலானது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தபோதும் அதை அவர்கள் செய்திருந்தமையும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியதே.   

(அடுத்த திங்கள்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கறுப்பு-ஜூலை-இன-அழிப்பு/91-200452

Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply
சிறைச்சாலையிலும் இன அழிப்பு
 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 101)

வெலிக்கடைச் சிறைச்சாலை 
இன அழிப்புப் படுகொலை

1983 ஜூலை 24 இரவு, பொரளையில் தொடங்கிய “கறுப்பு ஜூலை” இன அழிப்புத் தாக்குதல்கள், 25ஆம் திகதி மாலையளவில், கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளென வேகமாகப் பரவியிருந்தது. கொழும்பு நகரத்தில், சிறுபான்மையினரின் சொத்துகளும் உடமைகளும் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தன. மறுபுறத்தில், தமிழ் மக்களின் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. 

ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கமும் அதன் அதிகாரக் கரங்களும், இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவில்லை. அரசாங்கம் அறிவித்த ஊரடங்கு கூட, வலுவற்றதாக இருந்தது. ஏனெனில், இன அழிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது என்று, 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பை நேரில் கண்ட பலரும் பதிவு செய்கின்றனர்.

35 தமிழ்க் கைதிகள்

கொழும்பு எரிந்து கொண்டிருந்த சூழலில், ஜூலை 25ஆம் திகதி மாலை, வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் இந்த பதற்ற சூழல் உணரப்பட்டது. வெலிக்கடைச் சிறைச்சாலை என்பது, கொழும்பில் அமைந்துள்ள அதிகபட்ச பாதுகாப்புக் கொண்ட சிறைச்சாலையாகும். 

1841இல் பிரித்தானிய காலனித்துவ ஆளுநர் கமரனின் ஆட்சிக்காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சிறைச்சாலையாகும். “கறுப்பு ஜூலை” இன அழிப்பு நடைபெற்ற போது, இந்தச் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சுமத்தப்பட்ட 29 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட 6 பேர், சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

25ஆம் திகதி மாலை 2 மணியளவில், வெலிக்கடைச் சிறைச்சாலையின் “சப்பல் பிரிவில்” பரபரப்பு ஏற்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்டிருந்த சப்பல் பகுதிக் கட்டடம், ஏறத்தாழ 850 சிறைவாசிகளைக் கொண்டிருந்ததாக, ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவுசெய்கிறார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் என மொத்தமாக 35 பேர், சப்பல் பகுதியின் கீழ் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மேல் மாடியில் சிறைவைக்கப்பட்டிருந்த மற்றைய சிறைவாசிகள் சிலர், கீழ் மாடியை அடைந்து, சிறைக்காவலர்களைத் தாக்கி, அவர்களிடமிருந்த சிறைப் பூட்டுகளுக்கான திறப்புகளைக் களவாடி, வெலிக்கடைச் சிறையின் சப்பல் பகுதிக் கட்டடத்தை, உள்ளிருந்து தாழிட்டுப் பூட்டினர்.

சிறையறைகளின் இரும்புக் கதவுகளிலிருந்து உடைத்தெடுக்கப்பட்ட இரும்புக் கம்பிகளையும் மரக்கட்டைகளையும் தமது கைகளில் ஆயுதமாக ஏந்தியிருந்த இவர்கள், அடுத்து பாரியதொரு கொடூரத்தை அங்கு நிறைவேற்றினர்.

அரங்கேறிய கொடூரம்

அங்கு அன்று அரங்கேறிய கொடூரத்தை, “இலங்கை - பயங்கரத்தின் தீவு (ஆங்கிலம்)” என்ற தமது நூலில் ஈ.எம்.தோன்டனும் ஆர்.நித்தியானந்தனும், இவ்வாறு பதிவு செய்கின்றனர்: “தப்பிப் பிழைத்த ஏனைய தமிழ் சிறைக்கைதிகளின் கூற்றுப்படி, சிங்களக் கைதிகள், சிறைக் காவலர்கள், சிவிலுடையிலுள்ளோர் என ஏறத்தாழ 400 பேர், தமிழ் சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் நுழைந்தனர்.

சிறைக் கதவுகளைச் சிறைக் காவலர்கள்  திறந்துவிட, கத்திகள், இரும்புக் கம்பிகள், கோடரிகள் என்பவற்றால், தமிழ் சிறைக்கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

அங்கிருந்த தமிழ் சிறைக்கைதிகளில் பெருமளவிலானோர், அடித்தே கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தோரே (அல்லது தண்டனை பெற்றோரே). இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் டெலோ அமைப்பின் (தமிழீழ விடுதலைக் கழகம்) தலைவரான ‘குட்டிமணி’ என்றறியப்பட்ட செல்வராசா யோகசந்திரனும், அரசியல் எழுத்தாளரான கணேஷானந்தன் ஜெயநாதனும் உள்ளடக்கம்.

இவ்விருவரும் மரண தண்டனைக் கைதிகள். நீதிமன்றிலே குற்றவாளிக் கூட்டிலிருந்து தனது கண்களைத் தானம் செய்ய விரும்புவதாகவும், தான் காணமுடியாத தமிழீழத்தை தனது கண்கள் காணட்டும் என்று குட்டிமணி கூறியிருந்ததை ஞாபகம் வைத்திருந்த தாக்குதல் நடத்தியவர்கள், குட்டிமணியை  முழங்கால்களில் மண்டியிடச் செய்து, இரும்புக்கம்பிகளால் குட்டிமணியின் கண்களைக் குத்திக் கிண்டியெடுத்து வீசிய பின், குட்டிமணியைக் கொன்றனர்.

தப்பிப்பிழைத்த ஒரு தமிழ்க் கைதியின் கூற்றுப்படி, குட்டிமணியின் நாக்கை வெட்டிய ஒருவன், அந்த இரத்தத்தைக் குடித்துவிட்டு  ‘புலியின் இரத்தத்தை நான் குடித்துவிட்டேன்’ என்று கூக்குரலிட்டதாகத் தெரிகிறது.

இதன் பின்னர் கொல்லப்பட்ட 35 பேரின் உடல்களும், சிறைவளாகத்திலிருந்து புத்தர் சிலை முன் வைக்கப்பட்டு, ‘சிங்கள இராட்சசர்களின் இரத்தவெறியை ஆற்றுவதற்காக தியாகம் செய்து’ படைக்கப்பட்டனர்.

அப்போதுகூட, உயிர் உடலில் தங்கியிருக்க தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டியவர்களை, அங்கேயே அடித்துக் கொன்றனர். இவற்றை, அன்றைய தாக்குதலில் தப்பிப் பிழைத்த எஸ்.ஏ.டேவிட் பதிவு செய்கிறார். இதையொத்த விவரணத்தையே தனது நூலில், எம்.ஆர்.நாராயன் சுவாமியும் பதிவு செய்கிறார்.

இதேவேளை, இந்தச் சம்பவங்கள் பற்றிய பதிவுகள் ஆதாரமற்றவை என நிராகரிப்போரும் உள்ளனர். ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க உள்ளிட்ட சில சிங்கள எழுத்தாளர்கள், சிறைச்சாலைக் கலவரத்தில் பயங்கரவாதிகள் 35 பேர் கொல்லப்பட்டனர் என்பதைப் பதிவு செய்வதோடு சரி, அதன் விவரங்களுக்குள்ளும் விவரணங்களுக்குள்ளும் அவர்கள் செல்லவில்லை. 

ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க, கொழும்பு பிரதான நீதவான் கே.சீ.விஜேவர்தனவின் வெலிக்கடைச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பிலான மரண விசாரணை அறிக்கையிலிருந்து, பின்வரும் பகுதியை மேற்கோள் காட்டுகிறார், “என்னால் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்களிலிருந்து, 1983 ஜூலை 25ஆம் திகதி, சப்பல் பிரிவின் மேல்மாடிகளின் பொதுவான அமைதியின்மை ஏற்பட்டு, அதன் விளைவாகக் கலவரம் ஒன்று நடந்துள்ளமை தெட்டத்தௌிவாகத் தெரிகிறது.

இந்தச் சிறைக்கைதிகள், கீழ் மாடியில் அமைந்துள்ள பி3 மற்றும் டி3 ஆகிய சிறைக்கூண்டுகளுக்குள் நுழைந்திருக்கிறார்கள். வன்முறை வெடித்திருக்கிறது. அதன் விளைவாக 35 சிறைக்கைதிகளின் மரணம் சம்பவித்திருக்கிறது.

குறித்த சிறைக்கூண்டுகளுக்குள் சென்ற சிறைக்கைதிகள் யாரென சந்தேகநபர்களாக அடையாளங்காண, சாட்சியங்கள் ஏதுமில்லாதிருக்கின்றன. சில சிறைக்கைதிகள், வன்முறையை அடக்குவதற்கு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியங்கள் உள்ளன.

சிறை அதிகாரிகளோ, பின்னர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளோ, தாக்குதலைத் தவிர்ப்பதற்கு அந்தச் சூழ்நிலையில் செய்திருக்கத்தக்கவை ஏதுமில்லை. அவர்கள் அனைவரும் ஆட்கொள்ளப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவத்துக்குக் கண்ணால் கண்ட சாட்சியமாக இருந்த எந்த சிறைக்கைதியும், இன்று என்முன் சாட்சியமளிக்க முன்வரவில்லை.

என்முன் சாட்சியமளித்த இருவரும், கண்ணால் கண்ட சாட்சிகள் அல்லர், அவர்கள் எதனையும் காணவில்லை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட மரணித்த 35 சிறைக்கைதிகளினது பிரேத பரிசோதனை அறிக்கைகளை, நான் கவனமாக வாசித்துள்ளேன்.

அதன்படி 35 மரணங்களும், சிறையில் நடந்த கலவரத்தின் விளைவால் நடந்த கொலைகள் என்று தீர்மானிக்கிறேன். ஆகவே, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை, மேலதிக விசாரணைகளை நடத்துமாறு நான் பணிக்கிறேன்” என்றார்.

பின்னணியில் யார்?

1983 வெலிக்கடைச் சிறைச்சாலை இன அழிப்பின் பின்னணியில், அரசாங்கமும் அரசாங்கத்துடன் தொடர்புபட்ட பாதாள உலகக் கோஷ்டிகளுக்கும் தொடர்புண்டு என்ற விடயங்கள், சில நீண்டகாலத்தின் பின்பு வௌிவரத் தொடங்கின.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களுக்கும் பாதாள உலகக் கோஷ்டிகளுக்குமான தொடர்புகள் பற்றி, அரசல் புரசலான பேச்சுகளும் கிசு கிசுக்களும், நீண்டகாலமாக இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக, பிரேமதாஸ தொடர்பில், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன.

இதைப் பற்றிப் பலரும் பல்வேறு தளங்களிலும் எழுதியிருக்கின்றனர். ஆனால், இதன் உண்மைத் தன்மைகள் பற்றிய நிச்சயங்கள் எதுவுமில்லை. இது ஓர் அழுக்குக் கிடங்கு. இதைத் திறப்பது, புழுக்கள் நிறைந்த பேணியைத் திறப்பதற்கு ஒப்பானதாகும்.

ஆனால், 1983 “கறுப்பு ஜூலை” வெலிக்கடைச் சிறைச்சாலை இன அழிப்புப் படுகொலைகளுக்கு பின்னணியில், கொணவால சுனில் என்ற பாதாள உலகத் தலைவன் இருந்ததாக, ஓய்வுபெற்ற பிரதி சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆர்.ஜே.என்.ஜோர்டன், 1999இல் பத்திரிகைகளுக்கு வௌிப்படையாக எழுதியிருந்தார்.

கொணவால சுனிலின் ஆட்களே, வெலிக்கடைச் சிறைச்சாலை இன அழிப்பின் பின்னணியில் இருந்ததாக இவர் தெரிவித்தார். கொணவால சுனில் என்ற இந்த பாதாள உலக நபருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தொடர்புண்டு என்று, பலரும் பதிவு செய்திருக்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் கொணவால சுனிலின் குடும்பம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்பட்ட குடும்பங்களில் ஒன்று. ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிய கூட்டங்கள் பலவும், கொணவால சுனிலின் வீட்டில் நடந்ததாக, சிலர் பதிவு செய்கின்றனர்.

கடன தொகுதி இடைத் தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக வாக்குப் பெட்டிகளைக் களவாடியதாகக் கூட, கொணவால சுனில் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. 15 வயது சிறுமி ஒருத்தியை வன்புணர்ந்த குற்றத்துக்காக, கொணவால சுனிலுக்கு, 1970களின் இறுதிப்பகுதியில் 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேன்முறையீட்டிலும் அந்தத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், 1982 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக, கொணவால சுனில், ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டான்.

இது கொணவால சுனிலுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமான தொடர்பை நிரூபிப்பதில் வலுச்சேர்க்கிறது. 15 வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றவாளிக்கு, ஜனாதிபதி மன்னிப்பு அளிக்க வேண்டியது ஏன்? பதிலில்லை. 1999இல் ஓய்வுபெற்ற பிரதி சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆர்.ஜே.என்.ஜோர்டன் வௌிப்படுத்திய மேற்குறித்த விடயம் பற்றி, அவரிடம் கூட விசாரணை நடத்தப்படவில்லை.

எந்தவித நடவடிக்கையும் இது சார்ந்து முன்னெடுக்கப்படவில்லை என்பது, கவலையளிக்கும் விடயமாகும். இந்த பாதாள உலக நடவடிக்கைகள் பற்றிய உண்மைகளைத் தேடப் போனால், அது இன்னும் நிறைய அழுக்குகளை நிச்சயம் வௌிக்கொண்டு வந்திருக்கும்.

ஜே.ஆரின் ஆட்சியினதும், தொடர்ந்த பிரேமதாஸவின் ஆட்சியினதும் இன்னொரு கொடூரமான, பயங்கரமான, அழுகிய முகம் வௌிக்கொண்டு வரப்படலாம். நிற்க.
1983 ஜூலை 25ம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் 35 தமிழ்க் கைதிகள் இன அழிப்புப் படுகொலையில் பலியெடுக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், இத்தோடு இது நின்றுவிடவில்லை, இன்னும் இரண்டு நாட்களில், இந்தக் கொடூரத்தின் இரண்டாவது அத்தியாயம், இதே வெலிக்கடைச் சிறைச்சாலையில் நிறைவேற்றப்படக் காத்திருந்தது. 

தாக்குதலுக்காளான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினர்

இதேவேளை, கொழும்பு நகரில் பற்றியெரிந்த “கறுப்பு ஜூலை” இன அழிப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்டனர். தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ப் பெயர்களையொத்த பெயர்களைக் கொண்டிருந்த அவர்களும் தாக்குதலுக்காளானார்கள்.

குறிப்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிய சிலர், வௌ்ளவத்தைப் பகுதியில் வசித்துவந்தனர், அவர்களது வீடுகள், இன அழிப்பு காடையர்களால் தாக்கப்பட்டது.

உடனடியாகச் செயற்பட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம், தமது பணியாளர்களை அங்கிருந்து வௌியேற்றி, கொழும்பு ஒபரோய் ஹோட்டலில் தங்க வைத்தது. இதுவேளை, மாலையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் எம்.ஜே.ஆப்ரஹாம்ஸின் வாகனத்துக்கு, பம்பலப்பிட்டிப் பகுதியில் வைத்துத் தீ வைக்கப்பட்டது.

இதில், ஆப்ரஹாம்ஸூம் அவரது உதவியாளர் கே.வி.ஐயரும் காயமடைந்தனர். படுகாயங்களுக்கு உள்ளான கே.வி.ஐயர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம், உடனடியாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கான பாதுகாப்பை அதிகரித்ததுடன், உயர்ஸ்தானிகராலயத்தினர் அடைந்த பாதிப்புகளுக்காக, ஒரு மில்லியன் 217 ஆயிரம் ரூபாயை நட்டஈடாகச் செலுத்தியதாக, ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவுசெய்கிறார். 

25ஆம் திகதி, கொழும்பும் கொழும்பை அண்டிய பகுதிகளும் மேல்மாகாணத்தின் வேறு சிலபகுதிகளிலுமே இன அழிப்பு வன்முறைகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் 26ஆம் திகதி, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு இந்த வன்முறைகள் பரவின. 
(அடுத்த வாரம் தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறைச்சாலையிலும்-இன-அழிப்பு/91-200793

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
நாடெங்கிலும் இன அழிப்பு
என்.கே. அஷோக்பரன் / 2017 ஜூலை 24 திங்கட்கிழமை, பி.ப. 08:48 Comments - 0 Views - 199

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 102)

நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவிய இன அழிப்பு  

1983 ஜூலை 25ஆம் திகதி, கொழும்பை மையமாகக் கொண்டு, தமிழ் மக்கள் மீதான இன அழிப்புத் தாக்குதல்கள் நடந்தேறின. கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மேல்மாகாணத்தின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்குதலுக்குள்ளானதோடு, தமிழ் மக்களின் சொத்துகளும் உடைமைகளும் தீக்கிரையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன. 

கொழும்பைத் தாண்டி காலி, கேகாலை, திருகோணமலை, வவுனியா ஆகிய நகரங்களிலும் தமிழ் மக்களின் சொத்துகளுக்கும் உடைமைகளுக்கும் எரியூட்டும் தாக்குதல்கள் நடந்தேறின.   

அத்துடன், தமிழ் மக்களின் சொத்துகளைச் சூறையாடும் சம்பவங்களும் நடந்தன. இத்தனை நடந்தும் இலங்கையின் ‘அதிமேதகு’ ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் ‘கள்ள மௌனம்’ சாதித்துக் கொண்டுதான் இருந்தனர்.   

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதேயன்றி, அது வினைத்திறனாகச் செயற்படுத்தப்பட்டு, இந்த இன அழிப்பு வன்கொடுமையைக் கட்டுக்குள் கொண்டுவரவில்லை.   

முழுமையாக அரச இயந்திரத்தின் பாதுகாப்பு வேலிகள் நிறைந்த வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கூடத் தமிழ்க் கைதிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை, 35 தமிழ்க்கைதிகள், இன அழிப்புத் தாக்குதலில் பலியெடுக்கப்பட்டார்கள்.   

ஜூலை 26 ஆம் திகதி, கொழும்பில் முன்னைய நாளைவிடக் கொஞ்சம் அமைதியாகவே விடிந்தது. ஆனால், மத்திய மலைநாட்டின் தலைநகர் என்றறியப்படும் கண்டி நகரிலும் நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட மலையகத்தின் ஏனைய சில பகுதிகளிலும் நிலைமை மோசமடையத் தொடங்கியிருந்தது.   

மதியமளவில், கண்டி நகரின் பல பகுதிகளிலும் தமிழருக்குச் சொந்தமான வணிக, வர்த்தக நிலையங்கள் மீது, இன அழிப்புத் தாக்குதல்கள் நடத்தப்படத் தொடங்கின. 

பேராதனை வீதி, காசில் வீதி, கொழும்பு வீதி, திருகோணமலை வீதி எனக் கண்டி நகரின் முக்கிய வீதிகள் எங்கிலுமிருந்த தமிழருக்குச் சொந்தமான வணிக, வர்த்தக ஸ்தாபனங்கள் மீது இனவெறிக் கும்பல் எரிபொருள் வீசி, எரியூட்டியழித்தது.  

 கண்டியில் தமது இன அழிப்புத் தாக்குதல்களை நடத்திய இந்தக் கும்பல், கண்டி நகரிலிருந்து அடுத்து கம்பளை நகருக்கு நகர்ந்து அங்கும் தமது கோர இன அழிப்புத் தாக்குதல்களை நடத்தியது. 26ஆம் திகதி மாலையில், கண்டியிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.   

மலையகத்தைப் பொறுத்தவரையில், அங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதியாக இருந்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான். இவர் ஜே.ஆருக்கு ஆதரவளித்ததோடு, ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்.   

‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் கோரமுகம் மலையகத்துக்கும் பரவியபோது, ஜூலை 26 ஆம் திகதி, அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஜனாதிபதி ஜே.ஆரைக் காண ஜனாதிபதி மாளிகைக்கு விரைந்தார்.   

ஜே.ஆரைச் சந்தித்த தொண்டமான், உடனடியாக அவசரகாலநிலையைப் பிரகடனப் படுத்த வேண்டும் என்று வேண்டினார். ஆனால், ஜே.ஆர் தயக்கம் காட்டினார். “அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டாலும், படைகள் என்னுடைய உத்தரவுக்குப் பணிவார்களா”? என்று ஜே.ஆர் தனது தயக்கத்தை வெளிப்படுத்தியதாக சௌமியமூர்த்தி தொண்டமான் பற்றித் தன்னுடைய நூலில் ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.  

 மலையகத்தில் நடந்த தாக்குதல்கள் பற்றித் தனது நூலொன்றில் கருத்துரைக்கும் ரஜீவ விஜேசிங்ஹ, ‘கொழும்பிலே தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காது, பிரிவினைக்குச் சோரம் போகிறார்கள் என்று அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சாக்குச் சொன்னார்கள்.

 ஆனால், மலையகத்தின் பிரதிநிதியான சௌமியமூர்த்தி தொண்டமான், கடந்த ஐந்து வருடங்களாக, இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக, அரசாங்கத்தோடுதான் இருந்து வருகிறார். இன்று அவருடைய மக்களின் நிலையும்தான் மோசமாகியிருக்கிறது. இது அரசாங்க ஆதரவாளர்களின் மேற்கூறிய தர்க்கத்தைத் தகர்க்கிறது’ என்று பதிவு செய்கிறார்.   

பற்றியெரிந்த திருகோணமலை  

இதேவேளையில், 26ஆம் திகதி இரவு, திருகோணமலை நகரின் நிலைமை இன்னும் மோசமாகியது. தமது முகாமிலிருந்து வெளியே வந்து, திருகோணமலை நகருக்குள் நுழைந்த கடற்படையைச் சேர்ந்த 80 சிப்பாய்கள், டொக்யாட் வீதி, பிரதான வீதி, மத்திய வீதி, வடக்கு கடற்கரை வீதி மற்றும் திருஞானசம்பந்தன் வீதி உட்பட்ட பல இடங்களிலுமுள்ள தமிழ் மக்களுக்கு, சொந்தமான கட்டடங்கள், சொத்துகள் மற்றும் உடைமைகள் மீது, இன அழிப்புத் தாக்குதல் நடத்தி, அவற்றை எரியூட்டி அழித்தனர். 

இந்தக் கடற்படைச் சிப்பாய்களால் ஏறத்தாழ 170 எரியூட்டல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றோடு இவர்கள் நின்றுவிடவில்லை. திருகோணமலை சிவன் கோவில் மீதும் தாக்குதல்கள் நடத்தியிருந்தார்கள்.   

கடற்படைச் சிப்பாய்களின் இந்தத் தாக்குதலுக்கு ஒரு வதந்திதான் காரணம் என 1983, ‘கறுப்பு ஜூலை’ பற்றிய தன்னுடைய நூலில் ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார்.

அதாவது, ‘யாழ்ப்பாணத்திலுள்ள காரைநகர் கடற்படை முகாம், விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கைப்பற்றப்பட்டுவிட்டது என்றும், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நாக விகாரை, தமிழர்களால் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் வந்த ஒரு வதந்தியினால் சினம் கொண்டே, திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து வெளியே வந்த 80 சிப்பாய்கள் இன அழிப்புத் தாக்குதல் நடத்தினார்கள்’ என்று அவர் பதிவு செய்கிறார்.  

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 27ஆம் திகதி காலை, ஆகாயமார்க்கமாக திருகோணமலை விரைந்த கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அசோக டி சில்வா, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், 81 கடற்படைச் சிப்பாய்களைக் கடற்படையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி 81 சிப்பாய்களும் கடற்படையிலிருந்து நீக்கப்பட்டனர்.   

ஆக, 170 எரியூட்டல் சம்பவங்களை நடத்தி, சிவன் கோயில் மீது தாக்குதல் நடத்தி, மிகப்பெரிய இன அழிப்பு தாக்குதல் நடத்தியவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய தண்டனை, கடற்படையிலிருந்து நீக்கப்பட்டதுதான்.  

27ஆம் திகதியும் தொடர்ந்த பெரும் இன அழிப்பு  

ஜூலை 27 ஆம் திகதி, புதன்கிழமையும் இன அழிப்புத் தாக்குதல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தன. இன்னும், ஜே.ஆரும் அவரது அரசாங்கமும் தமது கள்ள மௌனத்தைத் தொடர்ந்தனர்.  

 ஒரு நாட்டிலே பெருங்கலவரங்கள் ஏற்படும்போது, அந்நாட்டின் தலைவர் ஊடகங்களூடாக மக்களுடன் நேரடியாக உரையாடி, நிலைமையை எடுத்துரைத்து, மக்களை அமைதி காக்குமாறு வேண்டுவதுதான் உலக வழமை.   

24ஆம் திகதி இரவு வெடித்த கலவரம், 25, 26, 27ஆம் திகதிகளிலும் தொடர்ந்தது. இந்த நான்கு நாட்களிலும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவோ, அவரது அமைச்சரவைச் சகாக்களோ, அமைதியே காத்து வந்தனர். இது மிகவும் அசாதாரணமான மௌனம். இது நிறையக் கேள்விகளையும் ஐயங்களையும் நிச்சயம் எழுப்புகிறது.   

27ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அது நடந்தவேளையில் நாடெங்கிலும் பல இன அழிப்புச் சம்பவங்களும் நடந்தேறின. 27ஆம் திகதி திருகோணமலையில் ஒரு தமிழ் தாதியும் அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டார்கள்.   

பற்றியெரிந்த மலையகம்  

கண்டியிலிருந்து கம்பளைக்கும், நாவலப்பிட்டிக்கும், ஹட்டனுக்கும் இன அழிப்புத் தாக்குதல்கள் பரவியிருந்தன. பதுளையில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.

27ஆம் திகதி மதியமளவில் பஸார் வீதிக்குள் நுழைந்த இன அழிப்புக் கும்பலொன்று, தமிழருக்குச் சொந்தமான வணிக, வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.   

அங்கிருந்த பொருட்களைத் தூக்கி வீதியில் வீசியது. பின்னர், வீதியில் வீசப்பட்ட பொருட்களுக்கு, இந்த இன அழிப்புக் கும்பல் எரியூட்டியது. பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாதிருந்தது. அங்கிருந்து பரவிய இன அழிப்புத் தாக்குதல்கள் பதுளையில் அமைந்திருந்த தமிழ் மக்களின் வீடுகளை நோக்கி நகர்ந்தது.   

தமிழ் மக்களின் வாசஸ்தலங்கள் மீது இன அழிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டு அவை எரியூட்டி அழித்தொழிக்கப்பட்டன. இதில் சட்டத்தரணி எஸ்.நடராஜா மற்றும் அறுவைச்சிகிச்சை நிபுணர் டொக்டர் சிவ ஞானம் ஆகியோரின் வீடுகளும் உள்ளடக்கம்.  

பொலிஸாரினால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது போகவே, தியத்தலாவ இராணுவ முகாமிலிருந்து, இராணுவத்தினரைப் பொலிஸார் வரவழைத்தனர். 

இந்த நிலையில், பதுளையிலிருந்த பஸ்களிலும் வான்களிலும் வெளியேறிய இன அழிப்புக் கும்பல், ஹாலி-எல்ல, பண்டாரவளை மற்றும் வெலிமட பகுதிகளை நோக்கிப் பயணித்தது.   

27ஆம் திகதி மாலை, ஹாலி-எல்ல, பண்டாரவளை, வெலிமட ஆகிய நகர்களிலும் இன அழிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அந்நகரங்கள் கொழுந்து விட்டெரிந்தன. இதற்கடுத்து, இரவுப் பொழுதில் லுணுகல நகர்மீது, இன அழிப்புத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. மலையகத்தின் பல்வேறு பகுதிகளும் 27ஆம் திகதி கொழுந்து விட்டெரிந்தன.   

உயிரோடெரிப்பு  

கொழும்பைப் பொறுத்தவரையில் 27ஆம் திகதி கொஞ்சம் அமைதியாகவே இருந்தாலும், கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு பெரும் சம்பவம் நடந்தேறியது.   

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 27ஆம் திகதி காலை, யாழ். செல்லவிருந்த ரயில் புறப்படத் தாமதமானது. இதேவேளை, அநாதரவாக ஒரு பொருள், ரயிலில் இருப்பதைக் கண்ட ரயில்வேப் பாதுகாவலர்கள், தேடுதலுக்காகப் படையினரை அழைத்தனர்.   

யாழ்ப்பாணம் செல்லும் ரயிலில் கணிசமானளவில் தமிழர்களும் சிங்களவர்களும் இருப்பது வழமை. இந்த இடத்தில், ரயிலில் இருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படத் தொடங்கியது. 

அங்கிருந்த தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்தே, தாக்குதல் நடத்தப்பட்டதாக ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவு செய்கிறார். இந்த இன அழிப்புத் தாக்குதலில் 11 தமிழர்கள் உயிரோடு எரியூட்டப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டனர்.   

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மீண்டும் இன அழிப்புத் தாக்குதல்கள்  
25ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் நடந்த இன அழிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, சப்பல் பகுதியில் எஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளும் வேறு சில தமிழ்க் கைதிகளும் பாதுகாப்பு கருதி, இளையோர் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தனர். 27ஆம் திகதி மீண்டும் ஒரு கலவரம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் வெடித்தது.   

சப்பல் பகுதியிலிருந்த சிறைக்கைதிகள் இரவுணவுக்காகச் சென்றபோது, ஏறத்தாழ 40 சிறைக்கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு, விறகுவெட்டும் பகுதிக்கு விரைந்து, அங்கிருந்த மரக்கட்டைகள், கோடரிகள் என்பற்றை ஆயுதமாக எடுத்துக் கொண்டு, தமிழ்க்கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளையோர் பகுதிக்கு விரைந்தனர்.   

அங்கிருந்த சிறைப் பூட்டுகளை உடைத்து, உள்நுழைய அவர்கள் முயன்று கொண்டிருந்த போது, அவர்களை நோக்கிச் சென்ற காந்தியம் அமைப்பின் இணை ஸ்தாபகரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமான டொக்டர் இராஜசுந்தரம், தம் அனைவரையும் தயவுசெய்து விட்டுவிடுமாறும், தாம் கொலையோ, கொள்ளைகளோ செய்தவர்கள் அல்ல என்றும், தாம் அஹிம்சை மீது நம்பிக்கை கொண்ட இந்துக்கள் என்றும், பௌத்தர்களாகிய நீங்களும் கொலை செய்வது தகாது என்றும் மன்றாடியதாகவும், இதன்போது பூட்டை உடைக்கும் தமது முயற்சியில் வெற்றிகண்ட இன வெறிக் கும்பல், உடனடியாக உள்நுழைந்த டொக்டர் இராஜசுந்தரத்தைப் பிடித்து இழுத்துச் சென்று அடித்துக் கொன்றதாகவும், இந்தச் சம்பவத்திலிருந்து தப்பிய காந்தியம் அமைப்பின் இணை ஸ்தாபகரான ஏ.எஸ்.டேவிட் பதிவு செய்திருக்கிறார்.   

இதேவேளை, ஏற்கெனவே 25ஆம் திகதி தாக்குதல்களில் தப்பியிருந்த ஏனைய தமிழ்ச் சிறைக் கைதிகள் இம்முறை தம்மைப் பாதுகாக்கத் தயாராக இருந்தார்கள், அவர்கள் கதிரை, மேசைகளை உடைத்து, மரக்கட்டைகளை ஆயுதமாகத் தாங்கி, தம்மைத் தாக்க வந்த இனவெறிக் கும்பலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டார்கள். 

இதேவேளை, சிறைச்சாலையினுள் நுழைந்த படைகள், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இத்தோடு, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த தமிழ்க் கைதிகள் உடனடியாக மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.   

இதேவேளை, 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், நடந்த கலவரங்களுக்கு உண்மையான காரணங்களைத் தேடுதல், அல்லது விசாரணை நடத்துதல் பற்றி ஆராயாமல், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கையையும் சாடும் களமாக மாறியிருந்தது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாடெங்கிலும்-இன-அழிப்பு/91-201260

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை எனது கண்ணில் இதுபடவே இல்லை ..........
இணைப்புக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

ஜே.ஆரின் உரையும் அரசாங்கத்தின் எதிர்வினையும்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 103)

அமைச்சரவைக் கூட்டம்  

‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு நிகழ்ந்து நான்கு நாட்கள் கழிந்த நிலையில், இந்த நிலைபற்றி விவாதித்து முடிவெடுக்க ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் அமைச்சரவை கூடியது.   

இன அழிப்புத் தாக்குதல்களையும் வன்முறையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல், இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உடனடித் தேவைகளை நிறைவேற்றுதல், பாதுகாப்பை உறுதிசெய்தல், நிவாரணமும் நட்டஈடுகளும் வழங்குதல் பற்றியெல்லாம் அமைச்சரவைக் கூட்டம் அமைந்திருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும்.   

ஆனால், அமைச்சரவையில் ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்கான பழி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீதும், அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மீதும் சுமத்தப்பட்டது.   

ஜே.ஆர் அமைச்சரவையிலிருந்து பேரினவாத வெறிகொண்ட அமைச்சராக அறியப்பட்ட சிறில் மத்யூ, “அமிர்தலிங்கத்தை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்” என்றும், “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்” என்றும் அமைச்சரவையில் முன்மொழிந்தார்.   

சிங்கள மக்களைச் சினமூட்டியதுதான் இந்த வன்முறைகளுக்கு காரணம், ஆகவே, சிங்கள மக்களின் சினம் குறைக்க, ஒரு வழியை ஜே.ஆர் முன்மொழிந்தார்.   

அதாவது, அரசமைப்பில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவதனூடாக, நாட்டில் பிரிவினையைத் தூண்டும் எந்தவொரு அரசியல் கட்சியையும் தடைசெய்ய வேண்டும் என்பதுதான் ஜே.ஆரின் முன்மொழிவு.   

இதை மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கத்தக்கதாக அமைய வேண்டும் என்பதும் உள்ளடக்கம்.   

இவ்வாறான ஓர் ஏற்பாடு, சிங்கள மக்களின் சினத்தைக் குறைக்க வல்லது என்று ஜே.ஆரும் அவரது அமைச்சரவையினரும் நம்பினார்கள்.   

இந்த முன்மொழிவின்படி, ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக இருப்போம், பிரிவினைக்குத் துணைபோக மாட்டோம் என்று சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஓர் ஏற்பாடு, அரசமைப்பில் ஒரு திருத்தமாக முன்வைக்கப்படத் தயாரானது.   

1983 ஜூலை 28 ஆம் திகதி பதுளையில் வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. மேலும் வன்முறை, லுணுகலையிலிருந்து பசறைக்கும் பரவியிருந்தது.   

நுவரெலியா மற்றும் சிலாபம் பகுதிகளிலிலும் வன்முறைகள் முளைவிடத் தொடங்கின.   
ஆனால், ஒப்பீட்டளவில் கொழும்பு, கண்டி, திருகோணமலை நகரங்கள் பெரும் இன அழிப்புக்குப் பின்னரான ஓர் அமைதியைக் கொண்டிருந்தன. நாடு முழுவதும் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து அதிகாலை ஐந்து மணிவரை ஊரடங்கு அமுலிலிருந்தது.   

ஜே.ஆரின் தொலைக்காட்சி உரை  

இந்தநிலையில், கலவரம் ஆரம்பித்து ஐந்தாவது நாள்தான், நாட்டின் தலைவர், நிறைவேற்று அதிகாரங்கள் பொருந்திய அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.   

பொதுவிலே இதுபோன்ற பெரும் இன அழிப்பு வன்முறைகள் இடம்பெற்றால், அந்த நாட்டின் தலைவர்கள், தொலைக்காட்சியில் தோன்றி, நடந்த பேரழிவு தொடர்பிலான தமது கவலையையும் வன்முறைகள் தொடர்பிலான தமது கண்டனத்தையும் பேரழிவைச் சந்தித்த மக்களுக்கு தமது ஆதரவையும் ஆறுதல் வார்த்தைகளையும் கூறுவது வழமை. ஆனால் ஜே.ஆரது உரை வேறு மாதிரி அமைந்தது.   

28 ஆம் திகதி பிற்பகலளவில் ஒளிபரப்பான ஜே.ஆரின் உரை இவ்வாறு அமைந்தது. “ஆழ்ந்த வருத்தத்துடனும் கவலையுடனும் நான் உங்கள் முன் உரையாற்றுகிறேன்.

என்னைச் சுற்றி நடந்த அழிவுகளைப் பார்க்கும் போதும், வன்முறைப் பிரவாகத்தின் எழுச்சியைப் பார்க்கும்போதும் அது மிகுந்த துயரைத் தருகிறது.   

இந்த வன்முறைகள் குறிப்பாக தமிழ் மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. இதற்குச் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே பல வருடங்களாக வளர்ந்து வந்த தவறான உணர்வுகளும் மற்றும் சந்தேகமுமே காரணம். நம்பிக்கையீனம் இருக்கும்போது, மனக்குறைகள் இருக்கும்போது, மக்களை வன்முறைகள் நோக்கிக் கொண்டு செல்வது இலகுவாகிறது.   

இந்த அரசாங்கம் மக்களுக்கு உறுதியளித்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் இந்த வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவே நாம் உணர்கிறோம்.   

1956 இலிருந்து தான் சிங்கள-தமிழ் மக்களிடையே இந்தச் சந்தேகம் முதன் முதலில் ஆரம்பித்தது. 1976 இல் முதன்முறையாக நாம் நேசிக்கும் எமது தாய்நாட்டைப் பிரிவினைக்கு உட்படுத்துவதற்கான, ஒன்றுபட்ட இலங்கையை இரண்டு தேசங்களாகப் பிரிப்பதற்கான இயக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2500 ஆண்டுகளாக ஒன்றுபட்டிருந்த ஒரு தேசத்தை பிரிப்பதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள்.   

முதலில், இந்தப் பிரிவினைவாத இயக்கம், அஹிம்சை வழியிலமைந்தது. ஆனால், 1976 முதல் அது வன்முறையாக மாறியது. வன்முறை அதிகரித்ததுடன், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆயுதப்படையினர், பொலிஸார், இந்த வன்முறை இயக்கத்துடன் ஒத்துப்போகாத அரசியல்வாதிகள், அவர்கள் தமிழர்களாக இருந்தாலும், சிங்களவர்களாக இருந்தாலும், கொல்லப்பட்டார்கள். 

 இது எந்தளவுக்குப் பெரியதாக வளர்ந்திருக்கிறதென்றால் வெறும் சொற்பப்பேரல்லாது நூற்றுக்கணக்கானவர்கள் இந்த இயக்கத்தால் கொல்லப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இந்தப் பயங்கரவாதிகளின் வன்முறை காரணமாக, சிங்கள மக்கள் எதிர்விளைவைக் காட்டியிருக்கிறார்கள்.   

இந்தப் பிரிவினைக்கான இயக்கம் மிக நீண்ட காலத்துக்கு முன்பாகவே தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். இதைத் தடைசெய்யாத பொறுப்பை ஏற்க வேண்டிய அரசாங்கங்களில் நானும் அங்கத்தவனாக இருந்திருக்கிறேன்.   
சில நாட்கள் முன்பு சர்வகட்சி மாநாட்டைக் கூட்ட அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால், அது நடைபெறவில்லை. முதலாவது காரணம், எல்லாக் கட்சிகளும் எனது அழைப்பை ஏற்கவில்லை; இரண்டாவதாக நடைபெற்ற வன்முறைகளும் ஊரடங்கும் காரணம்.   

அந்தச் சர்வ கட்சி மாநாட்டில், நாம் சில அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் 1977 ஆம் ஆண்டின் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம் என்பதைச் சொல்வதுடன், அதைச் செய்த பின்னர், நாட்டைப் பிரிப்பதை சட்டவிரோதமாக்குவது தொடர்பில் அபிப்ராய ஒற்றுமையைக் கோருவதற்கு எண்ணியிருந்தேன்.   

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த மாநாட்டை எம்மால் நடத்த முடியவில்லை. ஆனால், இப்போது அரசாங்கமானது சிங்கள மக்களின் தேசிய கோரிக்கையான நாட்டைப் பிளவுறச்செய்யும் இயக்கம் வளர இனியும் அனுமதிக்க முடியாது என்பதற்கும், அதற்கான ஆரவாரத்துக்கும் இணங்க வேண்டிய காலம் வந்துவிட்டது.   

ஆகவே, இன்று காலை அமைச்சரவையானது, முதலாவதாக தேசத்தைப் பிரிக்கும் நாட்டம் கொண்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் சட்டவாக்க சபைக்குள் (நாடாளுமன்றத்துக்கு) நுழைவதைத் தடுக்கும் வகையிலும், இரண்டாவதாக தேசத்தை பிளவுபடுத்தும் நாட்டம் கொண்ட கட்சிகளை சட்டவிரோதமானவையாக்கி, தடைசெய்யும் வகையிலுமான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.   

ஆகவே, இந்தத் தடை வந்ததும் அதன் உறுப்பினர்கள் சட்டவாக்க சபையில் அமர முடியாது. அந்தக் கட்சியினர் அல்லது நாட்டின் பிரிவினைக்கு பரிந்துபேசுவோர் தமது குடியியல் உரிமைகளை இழப்பதுடன், எந்தப் பதவியும் வகிக்க முடியாதவாறும் தமது உத்தியோகத்தில் ஈடுபடமுடியாதவாறும் இந்நாட்டின் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளில் இணைய முடியாதவாறும் தடுப்பதை நாம் பார்த்துக் கொள்வோம்.  

இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதையிட்டு நாம் வருந்துகிறோம். ஆனால், நாட்டின் பிரிவினை தடுக்கப்படுவதோடு, பிரிவினைக்காகப் பேசுபவர்கள் அதைச் சட்டரீதியாகச் செய்ய முடியாத நிலை வரவேண்டும் என்ற சிங்கள மக்களின் இயற்கையான விருப்பையும், கோரிக்கையையும் வேறு எந்த விதத்திலும் திருப்திப்படுத்த முடியும் என்று எனக்கோ, எனது அரசாங்கத்துக்கோ தெரியவில்லை”.  

ஜே.ஆரின் உரைதந்த அதிர்ச்சி  

மேற்கூறிய விடயங்களை உள்ளடக்கிய ஜே.ஆரின் உரை, தமிழ் மக்களுக்கு பேரதிர்ச்சியைத்தான் தந்தது. இதை ரஜீவ விஜேசிங்ஹ தன்னுடைய நூலொன்றில் இவ்வாறு விவரிக்கிறார்: ‘பெரும் பாதிப்புகளை சந்தித்த நிலையிலும் ஜே.ஆரை ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவர் என்று பார்த்துக் கொண்டிருந்த, தமது வீடுகளிலும் அல்லது அகதி முகாம்களாக மாற்றப்பட்டிருந்த பல்வேறு பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் இருந்த, ஜனாதிபதியின் அறிவிப்புகளில் ஏதாவது ஆறுதலை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்த தமிழ் மக்களுக்கு கசப்பான ஆச்சரியமே எஞ்சியது.   

நடந்தவைகள் வருத்தத்துக்குரியவை; எனினும் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிக்கெதிரான சிங்களவர்களின் மிகப் புரிந்துகொள்ளக்கூடிய எதிர்வினையே இது என்று அவர் கூறினார்.   

ஆகவே, அவர், தான் பிரிவினைவாதிகளோடு தளர்வாக நடந்து கொண்டதை ஏற்றுக்கொண்டு, நடந்த துன்பங்களுக்கான அரசாங்கத்தின் எதிர்வினையாக, பிரிவினைக்கு பரிந்துபேசும் கட்சியை தடை செய்யும் சட்டம் அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் பொதுச் சேவையாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் எடுக்கச்செய்யும் நடவடிக்கையும் முன்வைக்கப்பட்டது’.  

 உண்மையில் ரஜீவ விஜேசிங்ஹ சொல்வதுபோல, ஜே.ஆரின் உரை தமிழ் மக்களுக்கு கசப்பான ஆச்சரியம் மட்டுமல்ல; அவ்வுரை அடிப்படை மனிதாபிமானத்துக்கும் முரணாகவே அமைந்தது என்பதுதான் உண்மை.  

பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதில் காட்டிய அக்கறையில் ஒரு பங்கையேனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதில் அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர் காட்டவில்லை.   

இந்தியாவிலும் எதிர்வினை  

27 ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபாவில், தமிழ் பேசும் மக்கள் மீது இலங்கையில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் பற்றியும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினர் மீதும் அவர்களின் வீடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் விவாதம் நடைபெற்றது.   

சபையில் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சராக அன்று இருந்த நரசிம்ம ராவ், “கொழும்பில் நடந்த வன்முறைகளினால் சில இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் நிகழவில்லை” எனவும் இந்தியன் ஓவஸீஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஒஃப் இந்தியா ஆகியவை எரியூட்டப்பட்டது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த, தான் முயன்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.   

இந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவிலும், இந்த விவாதம் முன்னெடுக்கப்பட்டது.   

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த வை.கோபால்சாமி (வைகோ) “பலஸ்தீன விடுதலை இயக்கத்தை (பீ.எல்.ஓவை) இந்தியா அங்கிகரித்தது போல, தமிழ் விடுதலை இயக்கத்தையும் இந்தியா அங்கிகரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.   

மேலும், இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட வேண்டும் என்றும், இரத்தம் குடிக்கும் அரசாங்கத்தின் முகவராக இருக்கும், இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் திருப்பியனுப்பப்பட வேண்டும் என்றும் கோரினார்.   

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 
சீ.ரீ.தண்டபாணியும் இந்தியா, இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று கோரினார்.   

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இராஜ்ய சபா உறுப்பினராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.கல்யாணசுந்தரம், “தமிழ் மக்கள் மீதான தாக்குதல், இந்தியாவின் மீதான தாக்குதல்” என்று கூறினார். “இந்தியா, தமிழ் இளைஞர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.   

ஜனதா கட்சியின் தலைவரான ராஜ நாராயண், “இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் ஆராய இந்தியப் படைகளை, இந்திரா காந்தி அனுப்பி வைக்க வேண்டும்” என்றார்.   

இந்திய மாநிலங்களிலிருந்தும், ஏனைய கட்சிகளிலிருந்தும் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிரான வன்முறை பற்றி நடவடிக்கையெடுக்க இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.   

குறிப்பாக, தமிழ் நாட்டிலிருந்து கடுமையான அழுத்தம் இந்திரா காந்திக்கு வழங்கப்பட்டது. தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த 
எம்.ஜி. இராமச்சந்திரன், “பிரதமர் இந்திரா காந்தி, இலங்கையில் நடந்த தமிழருக்கெதிரான வன்முறைகள் பற்றி ஐ.நா பொதுச் சபையில் பேச வேண்டும்” என்றார்.   

தமிழ் நாட்டின் சர்வ கட்சிக் குழு, இலங்கைக்கு ஐ.நா படைகள் அனுப்பிவைக்கப்படுவதற்கு இந்திரா காந்தி அழுத்தம் தர வேண்டும் என்று கோரியது.   

ஆந்திர முதல்வர் என்.டீ.ராம ராவ், தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்தார். கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெட்கே தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு “மத்திய அரசாங்கமானது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.   

தமிழ் நாட்டில் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன, தமது ஆதரவாளர்களை வீதிக்கிறக்கி, இலங்கையில் நடைபெற்ற தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தின.

  இந்த நிலையில், ஜூலை 28 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஜனாதிபதி 
ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது.  
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜே-ஆரின்-உரையும்-அரசாங்கத்தின்-எதிர்வினையும்/91-201553

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
1983 ‘கறுப்பு ஜூலை’: இந்தியத் தலையீடு
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 104)

இந்திரா - ஜே.ஆர், தொலைபேசி உரையாடல் 

‘1983 கறுப்பு ஜூலை’ கலவரங்கள் தொடர்பில், இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபா, ராஜ்ய சபா ஆகியவற்றில், நடந்த விவாதங்களும் பேச்சுகளும் மத்திய, மாநில அரசியல் தலைமைகளிடமிருந்து வந்த அழுத்தமும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டிய அவசியத்தை உருவாக்கியது.  

 1983 ஜூலை 28 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, ஜனாதிபதி 
ஜே.ஆர்.ஜெயவர்தனவுடன் தொலைபேசி ஊடாக உரையாடினார்.   

இந்த உரையாடலின் போது, இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக, நடைபெற்றுவரும் வன்முறைத் தாக்குதல்கள் பற்றி, இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றதைக் குறிப்பிட்ட இந்திரா காந்தி, தாம் இது பற்றி வருந்துவதாகத் தெரிவித்தார்.   

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, தானும் இது பற்றி அக்கறை கொண்டுள்ளதாகவும் கலவரத்தையும் அதன் விளைவுகளையும் கட்டுப்படுத்த, தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.   

இதை ஏற்றுக்கொண்ட இந்திரா காந்தி, தனக்கு அது பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டதுடன், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உதவியாக, தாம் வழங்க விரும்புவதாகத் தெரிவித்தார்.   

இந்திரா காந்தியின் இந்த அக்கறைக்கு நன்றி செலுத்திய ஜே.ஆர், “எமக்கு அவசியமானால், நிச்சயம் அறியத்தருகிறோம்” என்று கூறினார்.  

இந்திரா காந்தி, அடுத்துக் கேட்ட விடயம்தான், ஜே.ஆரைக் கொஞ்சம் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கியது. “எங்களுடைய வெளிவிவகார அமைச்சர், உங்களுடைய நாட்டுக்கு விஜயம் செய்து, உங்களுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபடுவது பற்றி, உங்களுக்கு ஓர் ஆட்சேபனையும் இல்லையே” என்று இந்திரா காந்தி கேட்டார்.   

ஓர் இன அழிப்பு வன்முறை, அதுவும் சிங்களக் காடையர்களால், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட, இன அழிப்புத் தாக்குதல்கள் தணிந்து கொண்டிருந்த வேளையில், சர்வதேச அழுத்தங்கள் பெருமளவுக்குத் தலையைச் சூழ்ந்து கொண்டிருந்த பொழுதில், உள்நாட்டில் சிங்கள மக்களைத் தணிவிக்க ஜே.ஆரும் அரசாங்கமும் சாமரம் வீசிக் கொண்டிருந்த பொழுதில், இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையானது, அதுவும் இன அழிப்பு கலவரம் பற்றிக் காண, கலந்துரையாட வருவதானது, நிச்சயம், ஜே.ஆருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் தர்மசங்கடமானது.   

சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரையில், ஜே.ஆர், ஒருவகையில், நழுவல் போக்குக் காரர். அவர், இந்திய அரசாங்கத்தின் தலையீட்டை விரும்பாவிட்டாலும், அதை விரும்பவில்லை என்று சொல்லாதவர். இராஜதந்திரமான அணுகுமுறையும் அதுதான்.   

ஆகவே, இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஜே.ஆரால் மறுக்கவோ, தட்டிக் கழிக்கவோ முடியவில்லை.“நான் உங்கள் வெளிவிவகார அமைச்சரை வரவேற்பேன்” என்று ஜே.ஆர் பதிலளித்தார்.   

நரசிம்மராவ் விஜயம்  

இந்தத் தொலைபேசி உரையாடல், முடிந்த ஆறு மணி நேரத்திலேயே, இலங்கையின் நிலைமையை ஆராய்வதற்காக, இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் தலைமையிலான, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷங்கர் பாஜ்பாய் உள்ளிட்ட குழு, இந்திய விமானப் படையின் விசேட விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.   

இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் 
ஏ.ஸீ.எஸ். ஹமீட், விமானநிலையத்தில் வரவேற்றார்.   

இந்திய இராஜதந்திரக் குழு, ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டனர். 29 ஆம் திகதி காலை, இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், ஜனாதிபதி ஜே.ஆரை காலை உணவுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.   

இந்தச் சந்திப்பில் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டும் ஷங்கர் பாஜ்பாயும் உடனிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளில், இந்திய ஓவஸீஸ் வங்கி உட்பட இந்தியர்களுக்குச் சொந்தமான சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிச் சுட்டிக் காட்டிய நரசிம்ம ராவ், தமது சகோதரர்கள் இங்கு தாக்கப்படுவது பற்றித் தமிழ் நாட்டின் கோபத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார்.   

ஜே.ஆரும் களநிலவரம் பற்றிய தனது பார்வையைப் பதிவு செய்தார். இதன் பின்னர், இதேதினம் வெளிவிவகார அமைச்சில், வெளிவிகார அமைச்சர் 
ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டுடன் நரசிம்ம ராவ் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.   

இலங்கையின் அப்போதைய பிரதமர் ஆர். பிரேமதாஸவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் சந்திக்க விரும்பினார். இதையும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்தது.   

ஆனால், பிரேமதாஸவுக்கு இதில் பெரிய உடன்பாடிருக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்குள், இந்தியா பற்றிய பிரேமதாஸவின் அணுகுமுறை, வித்தியாசமாக இருந்தது.   

இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டைப் பிரேமதாஸ விரும்பவில்லை. ஜே.ஆரைப் போன்று, இதை இராஜதந்திரமாக, நாசூக்காகக் கையாள்வதில் கூட, பிரேமதாஸ பெரிதாக அக்கறை கொள்ளவில்லை.   

நரசிம்ம ராவை சந்திக்க சம்மதித்திருந்தாலும் அவரையும் அவரது குழுவினரையும் தனது அலுவலக வரவேற்பறையில் 20 நிமிடங்கள் அளவுக்குக் காக்க வைத்த பின்னர்தான், பிரேமதாஸ அவர்களைச் சந்தித்தார். பிரேமதாஸவின் இந்த இந்திய விரோதப் போக்கு, எதிர்காலத்திலும் கடுமையான அளவில் தொடர்ந்தது.   

நரசிம்ம ராவ் தலைமையிலான குழுவினர் கண்டிக்கும் விஜயம் செய்து, அங்கிருந்த இந்தியத் தூதுவராலயத்தில் உள்ளவர்களோடு ஒரு சந்திப்பை நடத்தி, மீண்டும் கொழும்பு திரும்பியிருந்தனர்.   

கொழும்பிலும், கொழும்புக்கு வெளியிலுமான பயணங்களின் போது, நடந்திருந்த பேரழிவுகளைக் கண்ணுற்றனர். கொழும்பு திரும்பிய நரசிம்ம ராவ், தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட பெருமளவிலான தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களைப் பார்வையிட விரும்பி, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தார்கள். 

இதை, இலங்கையின் உள்விவகாரங்களில் நேரடியான, தலையீடாகக் கருதிய இலங்கை அரசாங்கமானது, நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய இராஜதந்திரக் குழுவின் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது.   

ஆகவே, அகதி முகாம்களைப் பார்வையிடாது, மக்களுடனான நேரடியான சந்திப்புகள் இல்லாது, இந்திய இராஜதந்திரக் குழு நாடு திரும்பியது.   

நரசிம்ம ராவ் உரை  

நாடு திரும்பிய, இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்தார். 

இதன் பின்னர், ஓகஸ்ட் இரண்டாம் திகதி, இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நரசிம்ம ராவ், ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் காரணமாக, வீடற்றவர்களாகவும் இடம்பெயர்ந்தவர்களாகவும் ஆகியிருக்கும் மக்கள் பற்றியும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினரின் பாதுகாப்பு பற்றியும் இலங்கையிலுள்ள இந்தியர்கள் பற்றியுமான அக்கறையைப் பதிவு செய்ததுடன். இலங்கையில் ‘நாடற்றவர்களாக’ இருக்கும் இந்திய வம்சாவளி மக்கள், இந்த வன்முறைத் தாக்குதலில் அடைந்த இழப்புகளையும் பாதிப்புகளையும் சுட்டிக் காட்டியிருந்தார்.  

“இது மனிதநேயப் பிரச்சினை. தேசம், குடியுரிமை என்ற எல்லைகள் எம்மைப் பிரித்திருந்தாலும், எம்மருகே வாழும், பெருந்தொகையான மக்கள் அடைந்துள்ள துன்பம் பற்றி, நாம் மௌனித்திருக்க முடியாது” என்று நரசிம்ம ராவ் குறிப்பிட்டார்.   

அத்தோடு, இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கமானது, தமிழ் மக்களைக் கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதற்கான, போக்குவரத்து வசதிக்கான கப்பல்கள், எரிபொருள், மருந்துகள் மற்றும் அகதி முகாம்களில் உள்ளோருக்கான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பிலான உதவியைக் கோரியிருந்ததாகத் தெரிவித்தார்.   

இந்த உதவிகளையும் கப்பலையும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, உடனடியாக அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

ஆயுத உதவி கேட்ட இலங்கை?

இதைத் தாண்டி இன்னொரு விடயம் பற்றியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், தனது கரிசனத்தை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கையானது, ஒரு வெளிநாட்டுச் சக்திக்கெதிராக அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிடம் ஆயுத உதவி கேட்டுள்ளதாகச் செய்திகள் வெளியானதையும் அந்த வெளிநாட்டுச் சக்தி, இந்தியாவாக இருக்கலாம் என்று சில பத்திரிகைகள் ஊகம் தெரிவித்திருந்ததையும் சுட்டிக்காட்டிய நரசிம்ம ராவ், இது பற்றி, இந்தியா அவதானமான உள்ளதைப் பதிவு செய்தார்.   

உடனடியாக இந்தச் செய்தியை மறுத்து, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் அறிக்கை வெளியிட்டார். இலங்கை, இந்தியாவுக்கெதிராக வெளிநாடுகளின் உதவியை நாடியது என்பதை, அவர் அடியோடு மறுத்தார்.   

குறித்த செய்தியை, முதலில் வெளிக் கொண்டு வந்ததாகக் குற்றஞ்சாட்டி, சர்வதேச ஊடக நிறுவனமொன்றின் இலங்கை நிருபராகக் கடமையாற்றிய அமெரிக்க பிரஜையொருவரை உடனடியாக நாட்டிலிருந்து, இலங்கை அரசாங்கம் வெளியேற்றியது.   

தமிழ் மற்றும் இந்திய எதிர்ப்புணர்வு  

ஆனால், இலங்கையிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள், வேறொன்றை உணர்த்தியது. ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தாக்குதலின் பின்னணியில், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இருந்ததாக, இன்று வரை நம்பப் படுகிறது.  

 அரசாங்கத்தின் ஆதரவு அல்லது பின்புலம் இல்லாமல், இத்தகையதொரு பாரியளவிலான இன அழிப்பு, நடத்தப்பட்டிருக்க முடியாது என்ற கருத்தைப் பலரும் முன்வைக்கிறார்கள்.  

 இது பற்றிய உண்மைகளை அறிவதற்கு, முழுமையான சுயாதீன விசாரணைகள் எவையும் நடத்தப்படவில்லை. 

அவ்வாறு நடத்தப்பட்டு இருக்குமானால், நிறைய உண்மைகள் வெளிவரக்கூடும். ஆனால், தமிழ் மக்களுக்கெதிரான, இந்த இன அழிப்பு வன்முறைகளுக்கு, எதிர் வினையாக இந்தியா, நேரடியாகக் களமிறங்கும் என்ற அச்சம், சிங்களப் பேரினவாதிகளுக்கு இருக்கவே செய்தது.  

 மலையகத்தில் நடந்த கூட்டமொன்றில் பேசிய அமைச்சர் காமினி திஸாநாயக்க, “இந்தியா, இலங்கையில் ஆக்கிரமிப்பு செய்யுமானால், 24 மணி நேரத்துக்குள் தமிழர்கள் அனைவரும் கொன்றொழிக்கப்படுவார்கள்” என்று கொக்கரித்திருந்தார்.   

இது, ஜே.ஆரின் அரசாங்கத்திலிருந்த இளம் அமைச்சரொருவர் பகிரங்கமாக, மக்கள் மத்தியில், கூட்டமொன்றில் சொன்னது. இது, இலங்கையின் பேரினவாதம், இந்தியா மீது கொண்டிருந்த, அச்சம் மற்றும் சந்தேகப் பார்வையையும் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த இன வன்மத்தையும் தெளிவாகச் சுட்டி நிற்கிறது.  

சொந்தநாட்டில் அகதிகளாக்கப்பட்டவர்கள்  

‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பில், ஏறத்தாழ 300,000 மக்கள் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அதேவேளை, கொழும்பிலும் கொழும்பை அண்டிய பகுதிகளிலும் தமது வீடுகளையும் சொத்துகளையும் இழந்த அப்பாவித் தமிழ் மக்கள் (ஏறத்தாழ 64,000 பேர்) பொது இடங்களில் அகதிகளாகத் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் என 
ரீ.டீ.எஸ்.ஏ.திஸாநாயக்க குறிப்பிடுகிறார்.   

எந்த உத்தியோகபூர்வ விசாரணையும் நடத்தப்படாத நிலையில், பாதிக்கப்பட்டோர் பற்றிய உத்தியோகபூர்வப் புள்ளிவிபரங்கள் இல்லை.   

இரத்மலானை விமான நிலையத்தில், ஏறத்தாழ 4,500 பேரும், 

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 14,000 பேரும்,

பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியில் 1,400 பேரும்,

கொழும்பு - 7 இல் அமைந்திருந்த பாடசாலைகளான சிறிமாவோ பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்தில் 2,300 பேரும், தேர்ஸ்டன் கல்லூரியில், 4,000 பேரும், மஹாநாம கல்லூரியில் 12,600 பேரும், திம்பிரிகஸ்யாய அருகில் அமைந்திருந்த இசிப்பதன கல்லூரியில் 4,300 பேரும்,

கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள பாடசாலைகளான புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி, புனித லூஸியாஸ் கல்லூரி, நல்லாயன் கன்னியர்மடம் மற்றும் கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் 17,000 பேரும், கொட்டாஞ்சேனை சிவன் கோவிலில் 1,100 பேரும், ஜிந்துப்பிட்டியில் 1,750 பேரும்,

நுகேகொட அநுலா வித்தியாலயத்தில் 1,300 பேரும் அகதிகளாகத் தங்கவைக்கப்பட்டிருந்தனரென ரீ.டீ.எஸ்.ஏ.திஸாநாயக்க குறிப்பிடுகிறார். இவர்களில் பலரை யாழ்ப்பாணத்துக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.   

சர்வதேச அழுத்தத்தைச் சமாளித்தல்  

‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பில் இந்தியா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச அழுத்தம், இலங்கை அரசாங்கத்தின் கழுத்தை நெரிக்கவே, இந்த அழுத்தத்தைச் சமாளிக்க வேண்டிய உடனடி நிர்ப்பந்தம், இலங்கை அரசாங்கத்துக்கு  இருந்தது. இதற்கு ஓர் உடனடி உபாயத்தை, இலங்கை அரசாங்கம் கையாண்டது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/1983-கறுப்பு-ஜூலை-இந்தியத்-தலையீடு/91-201982

Link to comment
Share on other sites

1983 ‘கறுப்பு ஜூலை’: புலியும் பலிகடாவும்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 105)

பெட்டாவில்புலி  

image_6b0906a7b8.jpg

நரசிம்ம ராவ் இலங்கைக்கு வந்த 29 ஆம் திகதி, முன்னைய நாட்களோடு ஒப்பிடுகையில், கொழும்பில் வன்முறைகள் பெருமளவில் அடங்கியிருந்தன. ஆனால், பெட்டா (புறக்கோட்டை) பகுதியில், மீண்டும் ஒரு வன்முறைச் சம்பவம் நடக்கக் காத்திருந்தது.   

இலங்கையின் வர்த்தகத்தின் மையம் கொழும்பென்றால், கொழும்பின் வர்த்தக மையம் புறக்கோட்டை. வணிக, வர்த்தக நிலையங்கள் செறிந்த பகுதி; பொன் கொழிக்கும் மையம்.   
1983 ஜூலைக்கு முன்பு, புறக்கோட்டையில் தமிழ் வர்த்தகர்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். குறிப்பாகத் தங்க நகைகள், மொத்த விற்பனை, ஆடையகங்கள் எனச் சகல வர்த்தகத் துறைகளிலும் தமிழ் வர்த்தகர்கள் கோலோச்சிய காலம் அது. 

இந்த நிலையில்தான், 1983 ஜூலை 25 ஆம் திகதி, பெட்டா, இன அழிப்புக் காடையர்களின் இலக்காக மாறியது. மூன்று தினங்களுக்குள் பலநூறு கடைகள், தாக்கியும் உடைத்தும் எரியூட்டப்பட்டும் அழிக்கப்பட்டிருந்தன.  

தமிழ் வர்த்தகர்களின் சொத்து, மூலதனம், செல்வம், வர்த்தகம், வணிகம், தொழில் என்பன அழிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த நாட்களில், செட்டியார் தெரு (ஸீ ஸ்றீட்) ஒப்பீட்டளவில் பாதுகாப்பாகவே இருந்ததாக, 1983 கலவரம் பற்றி எழுதிய சிலர் குறிப்பிடுகிறார்கள்.   

செட்டியார் தெரு என்பது, தங்கநகை வியாபாரத்தின் மத்திய நிலையம் எனலாம். வரிசையாகத் தங்க நகைக் கடைகள் நிறைந்த வீதி. கிட்டத்தட்ட அத்தனை கடைகளும் தமிழர்களுக்குச் சொந்தமானவை.  

 1983 ஜூலை 25 ஆம் திகதி முதல், 28 ஆம் திகதி வரையான, நிறைந்த இன அழிப்பு வன்முறைகளிலும் இந்த வீதி ஒப்பீட்டளவில் அதிக பாதுகாப்பாக இருந்தமைக்கு, சிலர், அரசியல் பின்னணியை, முக்கிய காரணமாகக் குறிப்பிடுகிறார்கள்.  

 செட்டியார் தெருவில் நகைக் கடைகள் வைத்திருந்த தமிழ் வணிகர்களில் அநேகர், பெரும் செல்வந்தர்கள். அத்துடன், ஆட்சியிலிருந்த ஜே.ஆர் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருக்கு, நீண்டகாலமாகப் பண ரீதியிலாக ஆதரவளித்து வந்தவர்கள்.   
ஐக்கிய தேசியக் கட்சியின் தூண், குறிப்பாக, மத்திய கொழும்பு பகுதியின் சிங்கம், என்று அறியப்பட்ட அந்தத் தலைவர், கட்சியிலும் ஆட்சியிலும் ஜே.ஆருக்கு அடுத்த முக்கியஸ்தர்.   

இந்தத் தொடர்பு காரணமாக, ‘ஜூலை 25-28 ஆம் திகதி வரை, செட்டியார் தெருவின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, எந்தவித பெரும் அசம்பாவிதங்களும் நடக்காது, இந்த நகைக் கடைகள் பாதுகாக்கப்பட்டன’ என்று, கறுப்பு ஜூலை பற்றிய மனித உரிமைகளுக்கான, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பெட்டாவே, சுற்றிவரப் பற்றியெரிந்து கொண்டிருந்தபோது, செட்டியார் தெருவின் பெரும் நகைக் கடைகள் பத்திரமாகவே இருந்தன. இது இன்னொன்றையும் உணர்த்துகிறது.  

இந்தச் சம்பவங்களுக்குப் பின்னணியில் யார் இருந்திருந்தாலும், நிச்சயமாக அரசாங்கம் திடமாக எண்ணியிருந்தால், 1983 ஜூலை இன அழிப்பைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.  

செட்டியார் தெரு பாதுகாக்கப்பட முடியுமென்றால், முழுக் கொழும்பும், ஏன் முழு நாடுமே பாதுகாக்கப்பட்டிருக்கலாம். செட்டியார் தெருவைப் பாதுகாக்கப் படைகள் சம்மதித்தன என்றால், கொழும்பையும் முழு நாட்டையும் பாதுகாக்கப் படைகள் ஒத்துழைத்திருக்கும்.  

ஆகவே, ஜே.ஆர் “நான் சொன்னால் கேட்கும் நிலையில் படைகள் உள்ளனவா” என்று தொண்டமானிடம் வினவிய குழந்தைத்தனமான கேள்வி, வெறும் சப்பைக்கட்டாகவே தோன்றுகிறது.   

நிச்சயம் ஜே.ஆர் அரசாங்கத்தின் பின்புலமின்றி, ஆதரவின்றி இத்தகையதொரு பாரியளவிலான இன அழிப்பு நடத்தப்பட்டிருக்க முடியாது. அதுவும் தொடர்ந்து ஏறத்தாழ ஐந்து தினங்களுக்கு.   

1983 ஜூலை 29 ஆம் திகதி, கொழும்பு அமைதியாகவே இருந்ததில், செட்டியார் தெருவின் பாதுகாப்பும் தளர்த்தப்பட்டிருந்தது. ஆனால், நகைக் கடை ஊழியர்கள், எதுவும் நடக்கலாம் என்று தம்மைத் தாமே பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.  
 தமது கடைகளில், பயன்பாட்டிலிருந்த அமிலங்கள் உள்ளிட்ட இரசாயனங்களை மின்குமிழ்களுக்குள் நிரப்பி, தமக்கான சிறிய பாதுகாப்பை அவர்கள் தயார் செய்து வைத்திருந்தார்கள்.  

 காலை 10.30 அளவில், செட்டியார் தெருவின் பிரதான வீதி (மெயின் ஸ்றீட்) முடிவில் ஒன்று சேர்ந்த காடையர் கூட்டமொன்று, செட்டியார் தெருவுக்குள் நுழைந்தது.   

இதுவரையான தாக்குதல்களில், தாக்குதலுக்கு உள்ளான அப்பாவித் தமிழர்கள் திரும்பித் தாக்கவில்லை. ஆகவே, தமிழர்கள் திரும்பித் தாக்கமாட்டார்கள் என்ற எண்ணத்துடன், செட்டியார் தெருவின் நகைக் கடைகளைச் சூறையாடும் நோக்கத்துடன் நுழைந்த காடையர் கூட்டம், நகைக் கடை ஊழியர்களின் தற்காப்புத் தாக்குதலுக்கு இலக்கானது.   

அமிலங்களும் இரசாயனங்களும் நிரம்பிய மின்குமிழ்கள் வீசப்பட்டதைக் கண்ட இன அழிப்புக் காடையர் கூட்டம் அதிர்ச்சி அடைந்து “கொட்டி (புலி)” “கொட்டி” என்று கத்தியது.  

இதைப்பற்றி மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு, தனது நூலில், மிகப் பொருத்தமான ஒரு கருத்தைக் குறிப்பிடுகிறது. அதாவது, இந்தக் காடையர்களின் சிற்றறிவைப் பொறுத்த வரையில், திருப்பித் தாக்குகிற தமிழர்களெல்லாம் புலிகளாகத்தான் இருக்க வேண்டும்.

இதனால், நிர்க்கதி நிலையில் நின்ற நகைக் கடை ஊழியர்களின், தற்காப்புத் தாக்குதலை எதிர்கொண்ட இன அழிப்புக் காடையர்கள் “கொட்டி” “கொட்டி” என்று கூக்குரலிட்டபடி, அருகே சென்.ஜோன்ஸ் மீன் சந்தையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை வரவழைத்தனர்.   

அங்கு விரைந்த இராணுவத்தினர் நடத்திய திறந்த துப்பாக்கிச் சூட்டில், ஏறத்தாழ 12 அப்பாவித் தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள், மட்டக்களப்பையும் மலையகத்தையும் சேர்ந்தவர்கள். பிழைப்புக்காக கொழும்பில் வந்து செட்டியார் தெரு நகைக் கடைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள். “கொட்டி” “கொட்டி” என்று இன அழிப்புக் காடையர்களின் கூக்குரல் கேட்டு, அப்பாவி இளைஞர்களைக் கொல்ல முடிந்த இராணுவத்தினால், அந்த இன அழிப்பை நடத்தியவர்களை, காடையர்களை சுட்டுக் கொன்று, இன அழிப்பை ஏறத்தாழ ஐந்து நாட்களாகியும் கட்டுப்படுத்த முடியவில்லை. இராணுவம், இவ்வாறுதான் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.  

வரலாற்றைத் திரித்தல்

மறதி மனிதனுக்கு இயல்பானது. ஆனால், பெருந்துயரங்களை மனிதர்கள் மறப்பதில்லை; வரலாறும் மறப்பதில்லை.   

அதனால்தான் வரலாறு பலருக்குப் பயத்தை உருவாக்கிறது. வென்றவன் தனக்கேற்றவாறு வரலாற்றை எழுதிக் கொள்வதும் இதனால்தான்.   

ஆனால், உண்மைகளைப் புதைத்தாலும் அழிந்துவிடுவதில்லை. இலங்கை அரசாங்கத்துக்கு 1983 இன அழிப்பு என்பது அழிக்க முடியாத கறை. 1983 இற்கு முன்னர் நடந்த ஜேர்மனின் ‘ஹொலோகோஸ்ட்’, ‘இஸ்தான்புல் இன அழிப்பு’, ‘கெமர் ரூஜ் இன அழிப்பு’, ‘பர்மாவில் ரொஹிங்கியாக்களுக்கெதிரான இன அழிப்பு’ ஆகியவற்றுக்கும் 1983 இற்குப் பின்னர், நடந்த சீக்கியப் படுகொலை, இராக்கின் குர்திஷ் இன அழிப்பு, பூட்டானின் இன அழிப்பு, ருவண்டா இன அழிப்பு, ஸ்றப்றெனிக்கா இன அழிப்பு, ஜகார்ட்டா இன அழிப்பு ஆகியவை போன்று உலக அளவில் நடந்த மாபெரும் இன அழிப்புகளில் ஒன்றாக ‘1983 கறுப்பு ஜூலை’ இன அழிப்பும் வரலாற்றின் துயரம் மிகு கறுப்புப் பக்கங்களில் இடம்பிடிக்கிறது.   

ஆக, அழிக்க முடியாத இந்தக் கறையை மூடிமறைக்கவும் சப்பைக்கட்டு கட்டவும் நீண்டகாலமாகவே, பல மட்டங்களிலும் புலமைத்தளங்களிலும் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.  

1983 இன அழிப்பைத் தமிழர்கள் மீது சாட்டிவிடும் முயற்சி இதிலொன்று. அதாவது, அந்த 13 இராணுவ வீரர்கள் அன்று திண்ணைவேலியில் கொல்லப்பட்டமைதான், 1983 இன அழிப்புக்கான ஆத்திரமூட்டலாக (provocation) அமைந்தது என்ற நியாயப்படுத்தல்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இன அழிப்புக்கு, ஆத்திரமூட்டல் ஏற்புடைய நியாயமாக, அடிப்படைப் புத்தியுள்ள எந்த மனிதனாலும் கூட, ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  

இதன் பின்னர், 1983 இன அழிப்பை, திட்டமிட்ட இன அழிப்பாக அன்றி, ஒரு சாதாரண சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகச் சித்திரிக்கும் தன்மை, பாணி கைக்கொள்ளப்பட்டது.  

ஜீ. டீ.ஸீ. வீரசிங்ஹ, தன்னுடைய ‘இலங்கைக்கான இன முரண்பாட்டுத் தீர்வுகள்’ (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டில், 1983 இல் சட்ட ஒழுங்கின் சீர்குலைவுதான் இடம்பெற்றது.

அங்கு எந்தப் பாகுபாடும் இருக்கவில்லை. இந்தச் சட்ட ஒழுங்குச் சீர்குலைவானது, யாழ்ப்பாணத்தில் இராணுவத்தைத் தாக்கியதனூடாகப், பயங்கரவாதிகளினால் திட்டமிடப்பட்டது. சட்ட ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, உடனடி நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத ஜே.ஆர்.ஜெயவர்த்தன பொறுப்புக் கூற வேண்டும்’ என்று பதிகிறார்.   

அதாவது, இலங்கையின் இன உறவுகள், முறிவுகள் பற்றி அவர் எழுதியுள்ள இந்தச் சிற்றேட்டில், இனப்பாகுபாடே இங்கு இல்லை என்று சுற்றிவளைத்துப் பக்கம் பக்கமாகச் சப்பைக் கட்டு கட்டியவர், உலகில் நடந்த பெரும் இன அழிப்புகளில் ஒன்றான, 1983 கறுப்பு ஜூலை இனப் படுகொலையை இரண்டே வரிகளில், இது சட்ட ஒழுங்குப் பிரச்சினை என்று கூறிக் கடந்துவிடுகிறார்.   

இதை ஒத்த போக்கை, பல நூலாசிரியர்களும் கடைப்பிடித்திருக்கிறார்கள். ‘கோட்டாவின் யுத்தம்’ (ஆங்கிலம்), ‘நந்திக் கடலுக்கான பாதை’ (ஆங்கிலம்) உள்ளிட்ட இலங்கையின் போர் வரலாறு மற்றும் போர் வெற்றி பற்றி மிக விரிவாகக் கூறும் நூல்களும் 1983 ‘கறுப்பு ஜூலை’ கலவரங்களைச் சில பக்கங்களில் சொல்லிவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.ஆருமே காரணம் என்று சாடிவிட்டுக் கடந்துவிடுகின்றன.  

1983 கறுப்பு ஜூலை, இன அழிப்பை நியாயப்படுத்த முடியாது விட்டால், அடுத்த கட்டம் அதை முக்கியமற்றதாக்கி விடுதல்; அதை நீண்டகாலத் திட்டமாக, முன்னெடுப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.   

இதன் இன்றைய வடிவம்தான், அண்மையில் அமைச்சரொருவர், “1983 கறுப்பு ஜூலை இன அழிப்பில், வெறும் ஏழு பேர் மாத்திரம்தான் கொல்லப்பட்டார்கள்” என்று சொன்னது.   

ஓர் இன அழிப்பு நடந்திருக்கிறதென்றால், அதைப்பற்றி சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட்டிருக்க வேண்டும்; இழப்பின் அளவு கண்டறியப்பட்டிருக்க வேண்டும்; இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பிலிருந்தவர்கள் பொறுப்புக் கூறியிருக்க வேண்டும்.

இங்கு 34 ஆண்டுகளாகியும் எந்தச் சுயாதீன விசாரணைகளும் இல்லை; பொறுப்புக் கூறலுமில்லை.  

 மாறாக, ‘1983 கறுப்பு ஜூலை’ என்ற மாபெரும் இன அழிப்பை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக அல்லது அது பெரும் அழிப்பே அல்ல, என்று அதை ஒரு பொருட்டில்லாத சம்பவமாக மாற்றிச் சித்திரிக்கும் முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.  

‘மனித உரிமைகளுக்கான வடக்கு-கிழக்கு செயலகம்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, ‘தமிழர்களின் படுகொலைகள் 1956-2008’ (ஆங்கிலம்) என்ற நூலில், ‘1983 கறுப்பு ஜூலை’ இன அழிப்பில் கிட்டத்தட்ட, 3,000 தமிழர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே தமிழ் அமைப்புகள் சிலவற்றின் கணக்கெடுப்பின்படியான தரவு என்று பதிவு செய்கிறது.   

அத்தோடு, சொந்த நாட்டுக்குள்ளாகவே ஏறத்தாழ 200,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டார்கள் என்று பதிவு செய்கிறது. எத்தனை பெரிய கொடூரம் இது? ஆனால், இந்தக் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த நீதி என்ன? நீதியின் தார்ப்பரியம் என்பது, ‘உலகமே அழிந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ என்பதாகும். (fiat justitia et pereat mundus) ஆனால், ‘1983 கறுப்பு ஜூலை’ இன அழிப்பைப் பொறுத்தவரை நீதிதான் இங்கு புதைக்கப்பட்டு விட்டது.   

இடதுசாரிகள் பலிக்கடா  

சர்வதேச அழுத்தங்கள் கழுத்தை நெரிக்கவே, 1983 இன அழிப்புக்கான பழியை யார் மீதாவது சுமத்திவிட வேண்டிய தேவை, ஜே.ஆர் அரசாங்கத்துக்கு இருந்தது.   

இலகுவான பலிக்கடாக்களாக ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளே ஜே.ஆரின் கண்களில் தென்பட்டன.   

இடதுசாரிகளை நக்ஸலைட்டுகள் என்று வர்ணித்த ஜே.ஆர் அரசாங்கம், ‘1983 கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் பழியை அவர்கள் மீது சுமத்தத் தயாரானது. அன்றைய காலகட்டத்தில் சர்வதேச அளவில், குறிப்பாக மேற்கு நாடுகளிடையே இருந்த கம்யூனிஸ, இடதுசாரி எதிர்ப்பலை மற்றும் இந்தியாவிலிருந்த நக்ஸல் எதிர்ப்புணர்வு ஆகியவற்றோடு, தாம் சங்கமித்துவிட முடியும் என்பதுடன், இடதுசாரிக் கட்சிகளுக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம் என்ற நோக்கங்கள் இதன்பின் இருந்திருக்கலாம்.   

இந்த ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளைத் தடைசெய்ய, ஜே.ஆர் அரசாங்கம் தயாரானது. அத்தோடு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஆப்பு வைக்க, அரசியலமைப்புக்கான ஆறாவது சீர்திருத்தத்தை முன்வைக்கவும் ஜே.ஆர் அரசாங்கம் தயாரானது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/1983-கறுப்பு-ஜூலை-புலியும்-பலிகடாவும்/91-202323

Link to comment
Share on other sites

ஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்கிய அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 106)

பலிகடாக்கள்  

1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது.   

‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த ஊடகத் தணிக்கை, உள்நாட்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்தினாலும், அதனால், வெளிநாட்டு ஊடகங்களின் வாயை அடக்க முடியவில்லை’ என்று இயன் குணதிலக, 1983 ‘கறுப்பு ஜூலை’ பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.   

ஆகவே, வெளிநாட்டு ஊடகங்கள், ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்ததோடு, ஜே.ஆர் அரசாங்கத்தின் அசமந்தப் போக்கையும் கடுமையாகச் சாடின.   

இதன் விளைவாக, ஜே.ஆர் அரசாங்கம், கடும் சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்க நேரிட்டது. அந்த அழுத்தங்களைச் சமாளிக்க வேண்டிய, கடுஞ்சூழலுக்குள் சிக்கிய ஜே.ஆர், மூன்று இடதுசாரிக் கட்சிகளைப் பலிக்கடாக்களாக முன்னிறுத்தினார்.   

1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்கு, ‘மார்க்ஸிய சதி’ என்ற வசதியான சாட்டு, ஜே.ஆர் தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.   
1983 ஓகஸ்ட் இரண்டாம் திகதி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), நவ சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுமே, நடைபெற்ற கலவரங்களுக்குக் காரணமென்றும், அவற்றை அவசரகாலம் நிறைவடையும் வரை, தடை செய்வதாகவும், குறித்த கட்சிகளோடு எவ்வகையான தொடர்பையேனும் பேணுவோர் அல்லது குறித்த கட்சியினர் பற்றித் தகவல் வழங்காது மறைப்போர், மரண தண்டனை, ஆயுள் தண்டனை, சிவில் உரிமைகளைப் பறித்தல் உள்ளிட்ட கடுந்தண்டனைகளுக்கு ஆளாவார்கள் என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்தது.   

1970 களில், சிறிமாவோவுடன் கூட்டாக, ‘தோழர்கள்’ ஆட்சி அமைத்தபோது, தமிழ் மக்களுக்கெதிராக அமைந்த சிறிமாவோ அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் இவர்கள் ஆதரவாக இருந்தார்கள்.   

சிறிமாவோ ஆட்சியில், ஐக்கிய முன்னணியில் பங்குபற்றிய இடதுசாரிக் கட்சிகளே, பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரிகள், பேரினவாதத்தை அரவணைத்திருந்த காலகட்டமது. பேரினவாதத்தை அரவணைக்காது ஆட்சிக் கட்டிலில் ஏறமுடியாது என்ற சூழ்நிலை, சில இடதுசாரிகளையும் பேரினவாதம் நோக்கி நகர்த்தியிருந்தது.   

ஆனால், 1983 காலப்பகுதியில், தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்வு மிக்க பேரினவாத வெறி என்பது, இடதுசாரிகளிடம் இருந்தது. ஆனால், ஜே.ஆர் அரசாங்கம், குறித்துத் தடைசெய்த, இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகளும்தான், தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்குப் பின்னணியில் இருந்தார்கள் என்பதற்கு, எந்தச் சான்றுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.   

அதேவேளை, ஜே.ஆர் அரசாங்கமும் இந்த இடதுசாரிக் கட்சிகள்தான், ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்குக் காரண கர்த்தாக்கள் என்பதற்கு, எந்த சாட்சியங்களையும் முன்வைக்கவில்லை.   

ஆகவே, எந்தச் சாட்சியங்களாலும் நிறுவப்படாத, எழுந்தமானமானதொரு குற்றச் சாட்டை மூன்று இடதுசாரிக் கட்சிகள் மீது சுமத்தி, ஒரு மாபெரும் இன அழிப்புக்கான பழியிலிருந்து, ஜே.ஆர் அரசாங்கம் தப்ப முயன்றது என்பதுதான் யதார்த்தம்.   

இதேவேளை, ஜே.ஆர் அரசாங்கத்திலிருந்த பல அமைச்சர்களும் பேரினவாத வெறியைப் பகிரங்கமாகத் தொடர்ந்து கக்கினார்கள். குறிப்பாக, சிறில் மத்யூ, ஜே.ஆர் அரசாங்கத்தின் பேரினவாத முகமாகக் கருதப்படக் கூடியவர். வேறும் சில அமைச்சர்களும், இதில் உள்ளடக்கம்.   

இதைவிட, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான பலர், இந்த இன அழிப்பில் ஈடுபட்ட சம்பவங்களையும் சிலர் பதிவு செய்கிறார்கள். ஆகவே வெளிமுகமான சாட்சியங்கள் (prima facie evidence) ஆளும் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையே சுட்டி நின்றன.   

நியாயமாக, இத்தகைய பாரியதொரு இன அழிப்பு தொடர்பில், அரசாங்கமானது சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் செய்யவில்லை.  

ஒருவேளை, ஜே.ஆர் அரசாங்கம் சொன்னது போல, இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகளும் ‘மார்க்ஸிய சதியும்’தான், 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்குக் காரணமென்றால், சுயாதீன விசாரணை ஒன்றுக்குச் சென்று, முறைப்படி அவற்றுக்கெதிரான சாட்சியங்களை முன்வைத்து, சட்டத்தின்படி நடவடிக்கையெடுப்பதில் ஜே.ஆர் அரசாங்கத்துக்கு என்ன தயக்கம்?  

ஏன்? எழுந்தமானமாக மூன்று இடதுசாரிக் கட்சிகள் மீது பழிசுமத்தி, எழுந்தமானமாக அவற்றைத் தடைசெய்து, அக்கட்சியில் தலைமைகளைக் கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்?  

இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகளைத் தடைசெய்ததோடு, அதனோடு தொடர்புடைய 31 பேரின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதுடன், அவர்களைக் கைது செய்ய, ஜே.ஆர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.   

இதில், ஏறத்தாழ பாதியளவானோர் ஏலவே கைது செய்யப்பட்டிருந்தார்கள். ஜே.வி.பியின் தலைவர்கள் பலரும் உடனடியாகவே பதுங்கிவிட்டார்கள். ஜே.ஆர் அரசாங்கம் அவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது.   

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்  

ஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒருபுறத்தில் வடக்கு, கிழக்கிலிருந்து தமிழர்களின் அரசியல், அதிலும் குறிப்பாக தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பெரும் அழுத்தமாக இருந்த வேளையில், தெற்கிலே இடதுசாரிகளில் அழுத்தமும் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படத் தொடங்கியிருந்தது.   

ஜே.ஆர் அரசாங்கத்தின் தாராளமயமாக்கல் கொள்கைகளை எதிர்த்த ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிகள், சிங்களக் கிராமத்து இளைஞர்களிடையே மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருந்தார்கள்.  

ஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்கு, இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகள் மீது பழிபோட்டு, அவற்றைத் தடைசெய்தமையானது, சர்வதேசத்துக்குத் தாம், நடவடிக்கை எடுத்ததாகக் காட்டக்கூடியதொன்றாக அமைந்ததுடன், தமக்குத் தலையிடியாக உருவாகிக் கொண்டிருந்த அமைப்புகளை நசுக்கக் கூடிய வாய்ப்பாகவும், அதாவது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தும் வாய்ப்பாகவும் அமைந்தது.   

ஆனால், இத்தோடு ஜே.ஆர் நின்று விடவில்லை. ஒரு கல்லில் மூன்று மாங்காய்களை விழுத்த ஜே.ஆர் அரசாங்கம் தயாரானது.   

தொண்டாவின் கவலை  

1983 ஓகஸ்ட் மூன்றாம் திகதி, ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் பெற்றிருந்த, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டானின் உருக்கமான, அதேவேளை காட்டமான அறிக்கை, பத்திரிகையில் வெளியாகியிருந்தது.   

1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு வன்முறைகளில், கொழும்பிலும் மலையகமெங்கிலும் இந்திய வம்சாவளித் தமிழர் பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன், பெரும் இழப்பையும் சந்தித்திருந்தார்கள்.   

இந்த நிலையில்தான் தொண்டமானின் அறிக்கை வெளியானது. அதில் ‘இந்திய வம்சாவளி மக்கள், ஏறத்தாழ 100 வருடங்களுக்கு மேலாகத் தாங்கள் வேரூன்றிய இடங்களில் இருந்து பிடுங்கியெறியப்பட்டிருக்கிற இந்த சூழலில், அண்மையில் நடந்த இன அழிப்புச் சம்பவங்களை, எமக்கெதிரான சிங்கள மக்களின் எழுச்சி என்று சிலர் சொல்வதைப் போன்றே பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளோம். எங்களின் எண்ணத்தின்படி, இது வன்முறைத் தாக்குதல்கள், கலவரம், கொள்ளை மற்றும் எரியூட்டல் என்பவற்றில் திட்டமிட்டு ஈடுபட்ட குழுக்களின் செயற்பாடாகத்தான் தெரிகிறது. இந்த அழிவுச் சக்திகள், குண்டர்கள், கீழ்மையானவர்கள் வீதிகளிலே சுதந்திரமாகத் திரண்டு, இந்த அழிவையும் அவலத்தையும் இந்தளவுக்குச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது துரதிஷ்டவசமானது’ என்று தொண்டமான் நொந்துகொள்கிறார்.  

மூன்றாவது மாங்காய்  

1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பில், சிங்களப் பேரினவாதிகள் ஈடுபட்டமைக்கு, தமிழ் இனவாதிகளின் கோபமூட்டல் (provocation) தான் காரணம் என்ற நியாயப்பாடு தொடர்ந்தும் சொல்லப்பட்டு வந்தது.  

‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூட, ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிதான், இந்த வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம். அவர்களது பிரிவினைக் கோரிக்கைதான், இந்தப் பிரச்சினை தோன்றுவதற்கே அடிப்படைக்காரணம்; ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தடைசெய்யப்பட வேண்டும்; அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், கைது செய்யப்பட வேண்டும்’ என்ற குரல்கள் ஒலித்தன.   

மூன்றாவது மாங்காயாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.   

இந்தக் கைங்கரியம், 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.   

அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம்  

1983 ஓகஸ்ட் மூன்றாம் திகதி, அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை விவாதிப்பதற்காக, நாடாளுமன்றம் ஓகஸ்ட் நான்காம் திகதி கூட்டப்படுவதாக ஜே.ஆர் அரசாங்கம் அறிவித்தது.   

அவசர மசோதாவாக, முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் தொடர்பிலான, நீதியாய்வுத் தீர்ப்பை வழங்கியிருந்த உயர்நீதிமன்றமானது, அதிலிருந்த இரண்டு சரத்துகள் தவிர்த்து, ஏனையவை அரசியலமைப்புக்கு இயைபானவை என்று தீர்மானித்திருந்தது. ஆயினும், அரசியலமைப்போடு இயைபற்றவற்றையும் 2/3 பெரும்பான்மையோடு நிறைவேற்றும் பலம், ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு இருந்தது.   

1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவினால் அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலம் அவசர மசோதாவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 
  
இந்த அமர்வில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான பெரும் இன அழிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டிருந்த நிலையில், முழுமையான சுமுக நிலை திரும்பியிராத நிலையில், தமிழ் அரசியல் தலைமைகளுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களுக்கு எதிராகக் கடும் வெறுப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்துபோவதற்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடச் செய்து தரப்படாத நிலையில், அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகையானது.   

ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் கலந்து கொள்ளாத அமர்வில், அந்த கட்சியையும் பெரும்பான்மைத் தமிழ் உறுப்பினர்களையும் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுத்தது.   

ஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்குதல்  

அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்த மசோதாவின் மூலம், இலங்கையின் ஆட்புலக்கட்டுக்கோப்பை, மீறுவதற்கான தடையொன்றை, அரசியலமைப்பில் 157அ என்ற புதிய சரத்தை உள்ளிணைப்பதினூடாக அறிமுகம் செய்யப்பட்டது.   

குறித்த, புதிய இணைப்பானது, இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று ஸ்தாபிக்கப்படுவதற்கு ஆளெவரும், இலங்கைக்கு அல்லது இலங்கைக்கு வெளியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளித்தல் , ஆக்கமளித்தல், ஊக்குவித்தல், நிதியுதவியளித்தல் அல்லது பரிந்துரைத்தல் ஆகாது என்றும் அப்படிச் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகவும் ஆக்கப்பட்டது.  

குறித்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது, மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டநடவடிக்கையை மேற்கொண்டு, ஏழு வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை, சொத்துகளைப் பறித்தல், குடியியல் உரிமைகளைப் பறித்தல், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அரசசேவைப் பதவியை இழத்தல் உள்ளிட்ட தண்டனைகளை வழங்குவதற்கும் அந்த ஏற்பாடு அமைந்தது.   

இதனுடன் நிற்கவில்லை. மேலும், அரசியற்கட்சி அல்லது வேறு அமைப்பு அல்லது ஒழுங்கமைப்பு எதுவும், இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்றை ஸ்தாபித்தலை, தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டிருத்தல் ஆகாது என்றும் அவ்வாறு செய்யும் கட்சிகள், கழகங்கள், ஒழுங்கமைப்புகளுக்கு எதிராக உயர்நீதிமன்றிலே விண்ணப்பமொன்றைச் செய்வதன் மூலம், அந்தக் அமைப்பைத் தடைக்கு உள்ளாக்கல், அதனுடன் தொடர்புடையோர் மீது, ஏழு வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை, சொத்துகளைப் பறித்தல், குடியியல் உரிமைகளைப் பறித்தல், நாடாராளுமன்ற உறுப்பினர் பதவி, அரசசேவைப் பதவியை இழத்தல் உள்ளிட்ட தண்டனைகளை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.   

இவை தவிரவும், அரசியலமைப்பின் கீழ் உறுதியுரையை, சத்தியப்பிரமாணத்தை எடுக்க வேண்டிய ஆளெவரும், ஏற்கெனவே நடைமுறையிலிருந்த உறுதியுரைக்கு அல்லது சத்தியப்பிரமாணத்துக்கு மேலதிகமாக இலங்கையின் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக, மேலதிகமாக அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையாகப் புதிதாக, ஆறாவது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட உறுதியுரையையும் சத்தியப்பிரமாணத்தையும் எடுக்க வேண்டும் என்ற ஏற்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டது.   

ஆகவே, இதன்படி இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குச் சவால் விடுகிற ஆளெவரும் அமைப்பெதுவும் சட்டவிரோதமாக்கப்பட்டதுடன், அது தண்டனைக்குரிய குற்றமாகவும் ஆக்கப்பட்டது.   

அவசர சட்டமூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்த மசோதா மீது பாராளுமன்றத்தில் தொடர்ந்து 13 மணித்தியாலங்கள் விவாதம் நடந்தது.   

 (திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆட்புல-ஒருமைப்பாட்டை-எதிர்ப்பதைக்-குற்றமாக்கிய-அரசியலமைப்புக்கான-ஆறாவது-திருத்தம்/91-202576

Link to comment
Share on other sites

ஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 107)

ஆறாவது திருத்தமும் பிரிவினையும் ஜனநாயகமும்  

1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் ரணசிங்க பிரேமதாஸவால், அரசமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலம், அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.   

குறித்த அரசமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, இலங்கையின் ஆட்புலக் கட்டுக்கோப்பை மீறுவதற்கான தடையை, அரசமைப்பில் 157அ என்ற புதிய சரத்தை உள்ளிணைப்பதினூடாக அறிமுகம் செய்யப்பட்டது.   

சுருங்கக் கூறின், இலங்கையின் ஒற்றையாட்சியை சித்தார்ந்த ரீதியில், ஜனநாயக அரசியலின் மூலம் கூட, எதிர்க்க முடியாத நிலையை உருவாக்குவதே, இந்த அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தின் நோக்கம் ஆகும்.   

இந்த ஆறாம் திருத்தத்தின் விளைவை, நாம் இன்று வரை கண்டுகொண்டே இருக்கிறோம். சந்திரசோம என்ற நபர், 2014 ஆம் ஆண்டு, இலங்கை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.   

அந்த மனுவில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர், தேர்தல் ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, அவரது மனுவானது, இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, நாட்டில் பிரிவினையைக் கோருவதைத் தனது நோக்கமாகக் கொண்டிருப்பதால், அதற்கு எதிராக அரசமைப்புக்குச் செய்யப்பட்ட ஆறாவது திருத்தத்தின் படியாக, 154அ(4) மற்றும் 154அ(5) சரத்துகளின் கீழ், உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற மன்றாட்டத்தை கொண்டமைந்தது.   

சுருங்கக் கூறின், இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, இந்நாட்டுக்குள் தனிநாடொன்றைக் கோரும் நோக்கத்தைக் கொண்டிருப்பதனால், அது ஆறாம் திருத்தத்தின் கீழ் தடைசெய்யப்படுவதோடு, அதன் உறுப்பினர்கள் மீது, ஆறாம் திருத்தம் அறிமுகப்படுத்திய பிரிவுகளின் கீழ், தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதுதான் மனுவின் நோக்கம்.   

ஏறத்தாழ மூன்று வருடங்கள், வாதப் பிரதிவாதங்களின் பின்பு, 2017 ஓகஸ்ட் நான்காம் திகதி, பிரதம நீதியரசர் ப்ரியசத் டெபால், நீதியரசர்களான உபாலி அபேரத்ன மற்றும் அணில் குணரட்ண ஆகியோரது இணக்கத்துடன் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான சமஷ்டியையே வேண்டுவதால் அரசியலமைப்பின் 154அ(4) சரத்தின் கீழான நடவடிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது.   

இந்த வழக்கை, இங்கு குறிப்பிடக் காரணம், ஜே.ஆர் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசமைப்புக்கான ஆறாவது திருத்தம், தமிழர்களின் அரசியலின் மேல் ஏற்படுத்திய கட்டமைப்பு ரீதியிலான செயலிழப்பு நிலையை (செக்மேட்) உணர்த்தவாகும்.   

ஜனநாயக அரசியல் என்பதில், எதுவிதமான அரசியல் சித்தாந்தத்தையும் ஜனநாயக விரோதமில்லாது முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட வேண்டும். இதற்கான பொருத்தமானதொரு உதாரணமாக, 2014 இல் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்தில் நடந்த ‘ஸ்கொட்லாந்து சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பை’ குறிப்பிடலாம்.   

ஐக்கிய இராச்சியத்தின் ஓர் அங்கமான ஸ்கொட்லாந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரமடைய (அதாவது பிரிந்து தனிநாடாக) வேண்டுமா, இல்லையா? என்று ஸ்கொட்லாந்து மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.   

இதில், ஐக்கிய இராச்சியத்தின் தேசியளவிலான கட்சிகளான ‘டோரீஸ்’ மற்றும் ‘தொழிலாளர் கட்சி’ ஆகியன, ஸ்கொட்லாந்து சுதந்திரமடையக் கூடாது, என்பதற்கான பிரசாரத்தை முன்னெடுத்திருந்த வேளையில், ஸ்கொட்லாந்து மைய கட்சிகளான ஸ்கொட்லாந்து தேசிய கட்சி, ‘ஸ்கொட்டிஷ் பச்சைக் கட்சி’ மற்றும் ‘ஸ்கொட்டிஷ் சோசலிஸக் கட்சி’ ஆகியன, ஸ்கொட்லாந்தின் பிரிவினைக்கான பிரசாரத்தை முன்னெடுத்திருந்தன.   

image_ebbbdb64d5.jpg

இந்தச் சர்வஜன வாக்கெடுப்பு, ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பில், நேரடியாக விளைவைக் கொண்டிருக்காத வெறும் ‘ஆலோசனை நிலை’, சர்வஜன வாக்கெடுப்பே என்பதுதான், பிரதானமான சட்ட அபிப்பிராயமாக இருந்தது.   

இருந்தபோதிலும், ஜனநாயக ரீதியில் பிரிவினைக் கோரிக்கையை முன்னெடுக்கும், அதை வலியுறுத்தும் உரிமையையும் இடைவெளியும் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சிகளுக்கு தாராளமாகவே இருந்தன.   

ஆனால், மிகச் சிறியதொரு வாக்கு விகிதாசார வித்தியாசத்தில், (55.3% : 44.7%) ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரமடையத் (பிரிய) தேவையில்லை என, ஸ்கொட்லாந்து மக்கள் தீர்ப்பளித்திருந்தார்கள்.  

ஆனால், தொடர்ந்தும் ஸ்கொட்லாந்தில் ஆளும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி, பிரிவினையை வலியுறுத்தியதோடு, இன்னொரு சர்வஜனவாக்கெடுப்புக்கான கோரிக்கையை ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிகொலாஸ் ரேஜன் முன்வைத்திருக்கிறார்.   

இலங்கை, பிரித்தானியாவிடமிருந்து நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பெற்றுக்கொண்டது என்பதை யாரும் மறுப்பாரில்லை. ஆனால், பிரித்தானியாவிடமிருக்கும் ஜனநாயக இடைவெளி, இங்கு சுருங்கிவிட்டது என்பதுதான் உண்மை.   

பிரிவினையை நோக்கமாகக் கொண்ட ஒரு கட்சி, ஸ்கொட்லாந்து நாட்டில் தமது அரசியலை முன்னெடுக்க முடியும். ஆனால், 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்புக்குச் செய்யப்பட்ட ஆறாவது திருத்தத்தின் பின்னர், இலங்கையின் எந்தவொரு கட்சியோ, அமைப்போ சட்ட ரீதியாக, சட்டவிரோமற்ற முறையில், ஜனநாயக வழியைப் பின்பற்றி பிரிவினை கோர முடியாத நிலை உருவாக்கப்பட்டது.   

பிரித்தானியாவில், சுதந்திர ஸ்கொட்லாந்து கோரிக்கை, இன்று, நேற்று உருவானதல்ல; அது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஸ்கொட்லாந்து மக்கள், தம்மைத் தனித்த ஒரு தேசமாக அடையாளப்படுத்துகிறார்கள். அந்த அடையாளத்தை, ஆங்கிலேயரோ, வெல்ஷ் மக்களோ நிராகரிக்கவில்லை.  

 மாறாக, வெஸ்மினிஸ்டர் அரசாங்கமானது, ஸ்கொட்லாந்துக்கான அதிகாரப் பகர்வை, படிப்படியாக அதிகரித்தே வந்துள்ளது. இதன் முக்கிய கட்டமாக, 1999 இல் ஸ்கொட்லாந்துக்கென தனித்த ‘ஸ்கொட்டிஷ் நாடாளுமன்றம்’ ஸ்தாபிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.   

ஸ்கொட்லாந்தில் எழுந்த பிரிவினைக் கோரிக்கையை, அதிகாரப் பகர்வை அதிகரித்து, அம்மக்களை ஜனநாயக ரீதியில் திருப்திப்படுத்தியே வெஸ்மினிஸ்டர் அரசாங்கம், ஸ்கொட்லாந்தின் பிரிவினையைத் தடுத்துவருகிறதேயன்றி, சட்டங்களாலும் இரும்புக்கரத்தாலும் அல்ல.  

இதற்கு ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து பிரிவினையில், கற்ற பாடங்கள் முக்கிய காரணம் எனச் சுட்டிக்காட்டுவோரும் உளர். அந்த ஆய்வு இங்கு அவசியமில்லை. ஐக்கிய இராச்சியத்தின் ஆட்புல ஒருமைப்பாடும், ஒன்றுபட்ட ஆட்சியும் இன்றும் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளினூடாக காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.   

ஆனால், ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான இலங்கை அரசாங்கமோ, சட்டத்தைக் கொண்டும் இரும்புக்கர அணுகுமுறையைக் கொண்டும் ஜனநாயக வெளியை அடைத்து, இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டையும் ஒற்றையாட்சியையும் காப்பாற்ற முனைந்தது. அதன், உருவம்தான் அரசமைப்புக்கான ஆறாவது திருத்தம்.   

ஆறாம் திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதம் 

அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தின் மீதான விவாதம், ஏறத்தாழ 13 மணித்தியாலங்களுக்கு நடந்தது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்லிங்கம் உள்ளிட்ட, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே சமுகமளித்திருக்கவில்லை.  

 20 ஆம் நூற்றாண்டில் பெரும் இன அழிப்புகளிலொன்று நடந்து, ஓய்ந்து, ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீதான வெறுப்புணர்வும் எதிர்ப்புணர்வும் அரசாங்கத்தை சார்ந்தவர்களாலேயே பரப்பப்பட்டு வந்த நிலையில், எதுவித விசேட பாதுகாப்புகளும் வழங்கப்படாது, கொழும்பு வந்து, நாடாளுமன்றத்தில் கலந்துகொள்வதானது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சவாலான ஒன்றுதான்.   

மேலும், அவர்கள் வரவேண்டும் என்று ஜே.ஆர் அரசாங்கம் எண்ணியிருக்கவும் நியாயங்களில்லை. இந்த நிலையில், நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் பேரினவாதத்தின் முகமாக இருந்த அமைச்சர் சிறில் மத்தியூ, பெரும்பான்மையின் மேலாதிக்கத்தை நியாயப்படுத்திப் பேசினார்.   

அதற்கு, அவர் எடுத்துக் கொண்ட உதாரணம் மலேஷியா. தனது உரையில், “இந்நாட்டின் 70 சதவீதமானவர்கள் சிங்கள மக்களாவர். மலேசியா போன்றதொரு நாட்டில், வெறும் 53 சதவீதம்தான் மலாயர்கள். அந்நாட்டில் வாழ்ந்த சீனர்கள், மேலாதிக்கமாக நடந்துகொண்ட போது, மலாயர்கள் வெறும் ஆறு நாட்களுக்கு மட்டுமே பொறுமையாக இருந்தார்கள் (அதாவது மலேஷியாவில் நடந்த 1969 கலவரத்தை பற்றிப் பேசுகிறார்). ஆனால், இந்த நாட்டின் சிங்கள மக்கள், 10 வருடங்களாகப் பொறுமையாக இருந்திருக்கிறார்கள். சிங்களவர்கள், பெரும்பான்மை இனமென்றால், அவர்கள் ஏன் பெரும்பான்மையைப் போல நடந்துகொள்ள முடியாது?” என்று பேரினவாதம் கொப்பளிக்கப் பேசினார்.   

தொண்டாவின் எச்சரிக்கை  

ஆனால், ஜே.ஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரண்டு முக்கிய சிறுபான்மை இனத்தவர்களான ஏ.ஸீ.எஸ்.ஹமீட் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகிய இருவரும், ஆறாவது திருத்தத்தின் பாரதூரத்தன்மை பற்றி, நாடாளுமன்ற விவாதத்தின் போதான தமது பேச்சில் எடுத்துரைத்தார்கள்.   

ஆறாம் திருத்தத்தை அறிமுகப்படுத்துவதானது, நாட்டின் இன முரண்பாடு தொடர்பில் ஆரோக்கியமானதொன்றல்ல என்றே தொண்டமான் கருதினார். இதன் மூலம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளுவதானது, அவர்களைப் பிரிவினையை நோக்கியே மேலும் தள்ளும் என்பதே அவரது எண்ணப்பாடாக இருந்தது.   

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “நீங்கள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தடைசெய்தால், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறச் செய்தால், உங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த யாரும் இருக்க மாட்டார்கள். பிறகு, நீங்கள் சிலவேளை இடைத்தரகர்களோடுதான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டி வரும்” என்ற எச்சரிக்கையையும் முன்வைத்தார்.   

தொழிற்சங்கவாதியான சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு, பேச்சுவார்த்தைகளினூடாக, பேச்சுவார்த்தை உபாயங்களினூடாகத் தமது கோரிக்கைகளை, அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நிறைய நம்பிக்கையிருந்தது.   

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு, பேச்சுவார்த்தைக் கலை தெரியாது என்பது அவரது அபிப்பிராயம். வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைமைகள் பெரும்பாலும் சட்டத்தரணிகள்; அவர்களுக்குத் தமது தரப்பின் நியாயங்களை சிறப்பாகவும் வலுவாகவும் எடுத்துரைக்கத் தெரியுமே தவிர, பேச்சுவார்த்தைகளினூடாக, சமரசத் தீர்வுகளை எட்டும் கலை தெரியாது என்பது அவரது எண்ணம்.   

ஆனால், வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைமைகள் விட்டுக் கொடுப்புக்கே தயாரில்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒரு மக்கள் கூட்டத்தின் அரசியல் தலைமைகளாக தொண்டமானுக்கும், அமிர்தலிங்கத்துக்கும் இருந்த நோக்கங்கள் மற்றும் இலக்குகள் வேறுவேறு.   

ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தடை செய்வதானது, பேச்சுவார்த்தைக் கதவை அடைத்துவிடும்; அது தமிழ்த் தலைமைகளையும் தமிழ் மக்களையும் மேலும் பிரிவினையை நோக்கித் தள்ளுமே அன்றி, பிரிவினையைத் தடுக்க உதவாது என்ற தொண்டானின் எண்ணம் சரியானது என்பதை, தமிழ் மக்களின் தலைமை, அரசியல் தலைமைகளிடமிருந்து, ஆயுதத் தலைமைகளிடம் மாறிய 1983 இற்குப் பின்னரான வரலாறு சாட்சியமாக உணர்த்துகிறது.   

ஹமீட்டின் எச்சரிக்கை  

அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை, வெளிவிவகார அமைச்சராக இருந்த, ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டும் ஆதரிக்கவில்லை. அவரது பார்வை வேறாக இருந்தது. அவர் சர்வதேச உறவுகளின் கண்ணாடி கொண்டு, இதன் விளைவுகளை நோக்கினார்.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தடைசெய்தால், அது இலங்கையின் இன முரண்பாட்டு விவகாரத்தில், இந்தியா தலையிடுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார். அவர் கூறியது, தீர்க்கதரிசனமோ, யதார்த்தத்தின் வெளிப்பாடோ என்பதை அவர் மட்டுமே அறிவார்.  

ஆனால், அவர் சொன்னது போலவேதான், காய்கள் நகரத் தொடங்கின. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை ஓரங்கட்டும் ஆறாம் திருத்தத்தின் விளைவாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், இந்தியாவின் தலையீட்டை வேண்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன், அது இலங்கை அரசியலில், இந்தியா நேரடியாக உள்நுழைவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது.   

ஏறத்தாழ 13 மணிநேர தொடர் விவாதத்துக்குப் பின் 1983 ஓகஸ்ட் ஐந்தாம் திகதி அதிகாலை நான்கு மணியளவில், இலங்கையின் 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்புக்கான ஆறாம் திருத்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.   

அரசமைப்பின் மீதான ஆறாவது திருத்தம் மீதான, நாடளுமன்ற விவாதத்தின் போது, 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் காரணகர்த்தாக்கள் எனப் பழிபோடப்பட்டு, தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான சரத் முத்தெட்டுவேகம, தமது கட்சிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் எதிராக, அபாண்டமாகப் போடப்பட்ட பழி பற்றியும் இன அழப்பின் பின்னால் உண்மையில் இருந்தவர்கள் யார் என்பது பற்றியும் காரசாரமான உரையொன்றை ஆற்றியிருந்தார்.   

இதேவேளை, ஆறாம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு பற்றிய வேறொரு பார்வையை ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த, அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆட்புல-ஒருமைப்பாடும்-பிரிவினையும்-ஜனநாயகமும்/91-202945

Link to comment
Share on other sites

“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 108)

சரத் முத்தெட்டுவேகமவின் ஆதங்கம்  

1983 ஓகஸ்ட் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசமைப்புக்கான 6ஆவது திருத்தச் சட்டமூலம் விவாதிக்கப்பட்ட போது, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் முத்தெட்டுவேகம, ஆதங்கம் மிக்க உரையொன்றை ஆற்றியிருந்தார்.

1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்புக்கு, மார்க்ஸிய - இடதுசாரிக் கட்சிகளே காரணம் என்று கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய மூன்று கட்சிகளையும், ஜே.ஆர் தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தடை செய்திருந்த நிலையில், தமது கட்சி மீது சுமத்தப்பட்டிருந்த அபாண்டமான பழிக்கெதிராக, சரத் முத்தெட்டுவேகம, ஆதங்கம் மிக்க பேச்சொன்றை நிகழ்த்தியிருந்தார்.  

“தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் அரசுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களே, காடையர்களை ஏற்றி வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நான் இதனை ஒரு கருத்தாகச் சொல்லவில்லை. அந்தப் பிரதேசங்களிலுள்ள உங்களுடைய நண்பர்களிடம் போய்க் கேட்டுப் பார்த்தால், உங்களுக்கு இது தெரியும்.

அகலவத்தைப் பிரதேசத்துக்குக் காடையர்களை அழைத்து வந்தது, மின்சார சபைக்குச் சொந்தமான வாகனங்கள். இதனால் மின்சார சபைத் தலைவரோ, அதற்குரிய அமைச்சரோ இதற்கு ஆணை பிறப்பித்தார்கள் என்று நான் சொல்லவில்லை. அது என்னுடைய கருத்தல்ல. ஆனால் அரச இயந்திரம் பயன்படுத்தப்பட்டது” என்று, 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பில், அரச இயந்திரத்தின் பயங்களிப்பைச் சுட்டிக் காட்டியதுடன், தணிக்கை அதிகாரி, யாழ்ப்பாணத்தில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியை மட்டும், 25ஆம் திகதி காலை பத்திரிகைகளில் பிரசுரிக்க அனுமதித்தது எப்படி?; நாட்டை அதற்கு எந்த வகையிலும் தயார்படுத்தாது, அந்தச் செய்தி எப்படி அனுமதிக்கப்பட்டது?; நாட்டின் இரண்டு இடங்களில் வன்முறை வெடித்த பின்பும், 25ஆம் திகதி காலையிலேயே, ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தாது விட்டது ஏன் என்று, காரசாரமாக அரசாங்கத்தை நோக்கி, நியாயமான கேள்விகளையும் முன்வைத்தார்.  

ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த தொண்டமான், பத்திரிகையில் வௌியிட்டிருந்த அறிக்கையில், “காடையர்கள் எந்தவித தடையுமின்றி வலம்வர அனுமதிக்கப்பட்டார்கள்” என்று கவலையுடன் குறிப்பிட்டிருந்ததை, தனது நாடாளுமன்ற உரையில் சுட்டிக்காட்டிய சரத் முத்தெட்டுவேகம, “காடையர்களை எந்தவித தடையுமின்றி உலாவர அனுமதித்தது, இடதுசாரிக் கட்சிகளா, அல்லது வேறு நபரோ, அதிகாரமிக்கவரோ அதனைத் தடுக்கக்கூடிய நிலையில் இருந்தாரா? நீங்கள் உங்கள் அறிக்கையில் சொன்னதை அர்த்தத்துடன் சொல்லியிருந்தால், இதனை நீங்கள் விளக்க வேண்டும்” என்று,தொண்டமானை நோக்கி கேட்டுக்கொண்டார்.   

சரத் முத்தெட்டுவேகமவின் ஆதங்கம் நியாயமானதே. 1983 “கறுப்பு ஜூலை” கலவரங்களின் பின்னணியில், அரச இயந்திரத்தின் பங்களிப்பு இருந்தமைக்கான சாட்சியங்களை, ஆதாரங்களை பலரும் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

1983 “கறுப்பு ஜூலை” பற்றிய சுயாதீன விசாரணையொன்று நடந்திருக்குமாயின், இதுபற்றி நிறைய உண்மைகள், ஆதாரங்கள், சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும், “காடையர்கள்தான்” இந்த பெரும் இன அழிப்பைச் செய்தார்கள் என்றால், அதனைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இருக்கவில்லையா? ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்துவதிலாகட்டும், காடையர்களைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும், அரசாங்கம் மெத்தனப் போக்கையும், அலட்சியத்தையும் காட்டியது ஏன்? சரத் முத்தெட்டுவேகமவுக்கு மட்டுமல்ல, நாட்டிலுள்ள சரியாகச் சிந்திக்கும் மக்கள் அனைவருக்கும் இருந்த கேள்விகள் இவையும், இதுபோல பலவும்.   

இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளும் நிலையில் ஜே.ஆரோ அவரது அரசாங்கமோ இருக்கவில்லை. எந்தச் சட்டத்தையும், அரசமைப்புக்கான எந்தவொரு திருத்தத்தையும் கொண்டு வந்து நிறைவேற்றும் தனிப்பெரும் பெரும்பான்மை, ஜே.ஆருக்கு இருந்தது. ஜே.ஆருக்கு இருந்த ஒரே சவால், தன்னுடைய கட்சியினரைத் திருப்திப்படுத்துவது மட்டுமே.  

“கறுப்பு ஜூலையும்” அரச இயந்திரமும்

1983 “கறுப்பு ஜூலை”, திட்டமிட்டு நடத்தப்பட்டதொன்று என்று வாதம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஜே.ஆர், பிரித்தானியாவின் டெய்லி ரெலிகிராஃப் பத்திரிகைக்கு “கறுப்பு ஜூலை” நடைபெற சில நாட்கள் முன்பு, “யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயம் பற்றி நான் கவலைப்படவில்லை- அவர்களது உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப்பற்றி கொண்டுள்ள அபிப்பிராயம் பற்றியோ [கவலைப்படவில்லை- வடக்கின் மீது நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அழுத்தம் வழங்குகிறீர்களோ, இங்கிருக்கும் சிங்கள மக்கள் அவ்வளவுக்கவ்வளவு சந்தோஷப்படுவார்கள்” என்று வழங்கிய செவ்வியாகட்டும், 1983 ஜூலை ஆரம்பப் பகுதியில், நீர்கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் அமைச்சரொருவர் “கொஞ்ச நாள் பொறுங்கள், அவர்களுக்கொரு பாடம் கற்பிக்கப்படும்” என்று சொன்னதாகட்டும், 1983 “கறுப்பு ஜூலை” சிங்கள மக்களின் கோபத்தால் விளைந்ததல்ல, மாறாக இதன் பின் பலமான திட்டமிருந்தது என்பதையே உணர்த்தி நிற்கிறது.  

இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவரும் லேக் ஹவுஸின் டைம்ஸ் ஒஃப் சிலோன், சிலோன் டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவருமான மேவின் டி சில்வா 1992இல், 1983 “கறுப்பு ஜூலை” பற்றி எழுதிய கட்டுரையொன்றில், “காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட, குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பு ஏதோ ஒன்று நடக்கப் போவது பற்றிய பேச்சு அடிபட்டது- ஏதோ ஒன்று மிகப்பயங்கரமாக, பாடம் ஒன்று கற்பிப்பது பற்றி-” என்று குறிப்பிட்டிருந்தார். 1983 “கறுப்பு ஜூலை” பற்றி சர்வதேச நீதித்துறை வல்லுநர்களை ஆணையத்தின் அறிக்கையில் போல் சீகார்ட், “இது திடீரென்று சிங்கள மக்களிடையே எழுந்த இனவெறுப்பு எழுச்சியோ, அல்லது சிலர் குறிப்பிடுவது போல, 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமைக்கான எதிர்வினையோ இல்லை என்பது தௌிவாகத் தெரிகிறது- இது முன்னரே தௌிவாகத் திட்டமிடப்பட்டு, அந்தத் தௌிவான திட்டத்தின் படி தொடர் செயற்பாடுகளால் அறிந்தே நடத்தி முடிக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்.   

1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பில் அரச இயந்திரத்தின் பங்கை எல். பியதாஸ “இலங்கை: மாபெரும் இன அழிப்பும் அதற்குப் பிறகும் (ஆங்கிலம்)” என்ற தனது நூலில் பின்வருமாறு பதிவு செய்கிறார்: “களனியில் கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்யுவின் காடையர் கூட்டமே செயலில் இறங்கியிருந்தது என்று அடையாளங்காணப்பட்டது.

அரசாங்கத்தின் தொழிற்சங்கமான (ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கம்) ஜாதிக சேவக சங்கமயவின் பொதுச் செயலாளரே, கொழும்பில் நடைபெற்ற அழிவுக்கும், உயிரிழப்புகளுக்கும், குறிப்பாக வௌ்ளவத்தையில் ஒரே வீதியிலிருந்த பத்து வீடுகள் அழிக்கப்படக் காரணம் என அடையாளங் காணப்பட்டார்.

தெஹிவளை-கல்கிஸை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரே, கல்கிஸைப் பகுதியில் காடையர்களைத் தலைமையேற்று வழிநடத்தியிருந்தார். புறக்கோட்டைப் பகுதியில் (442 கடைகள் அழிக்கப்பட்டு, பல கொலைகள் நடத்தப்பட்ட இடம்) பிரதமரின் வலது கரமாக இருந்த அலோசியஸ் முதலாளியின் மகனே, கட்டளையிடுபவராக இருந்திருந்தார். 

இதுபோலவே நடந்திருந்தது. ஐக்கிய தேசிய கட்சிக்கும், அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும், கட்சித் தலைமையகத்துக்கும் வேலை செய்த காடையர்களும், சில இடங்களில் சீருடையிலிருந்த படையினரும், பொலிஸாருமே தாக்குதலை முன்னின்று நடத்தியிருந்தார்கள்.

அவர்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (பொறுப்பான அமைச்சர், எம்.எச்.மொஹமட்) சொந்தமான வாகனங்களையும், ஏனைய அரச திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான வாகனங்களையுமே பயன்படுத்தியிருந்தார்கள். வௌ்ளவத்தையின் பல பகுதிகளை அழித்த பலரும், பல மைல்களுக்கப்பாலிருந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானத்துக்கு சொந்தமான ட்ரக் வண்டிகளில் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். இதுபோன்ற நிறைய சாட்சியங்கள் இருக்கின்றன.”  

“கறுப்பு ஜூலையின்” நோக்கம்  

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, அமைச்சர்களான சிறில் மத்யு, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி என, அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பை பல வகைகளில் நியாயப்படுத்த முயன்றனரே அன்றி, அதற்காக வருத்தப்படவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் தரவோ முயலக்கூட இல்லை என்பதுதான் உண்மை. பின்பு, தன்னை தமிழ் மக்கள் தொடர்பிலான ஜே.ஆர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து அந்நியப்படுத்திக்கொண்ட அமைச்சர் ரொனி டி மெல் கூட, இது நடந்த வேளையில் கள்ள மெளனம்தான் சாதித்தார்.   

1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பின் பின்னால் ஒரு திட்டமிருந்தது உண்மையானால், அதன் முதல் இலக்கு, தமிழ் மக்களின் பொருளாதாரப் பலத்தை சிதைப்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் “கறுப்பு ஜூலை” ஏற்படுத்திய பெரும்தாக்கம், தமிழ் மக்களை பொருளாதார ரீதியில் சிதைத்தழித்துதான், அதிலிருந்து இன்றுவரை தமிழ் மக்கள் மீளவேயில்லை. அடுத்தது, தமிழ் மக்கள் பலரும் நாட்டை விட்டு வௌியேறியமை. இதற்கு அடுத்ததாக, தமிழ் மக்களின் அரசியலுக்கும் தடை போட்டுவிடவே அரசமைப்புக்கான 6ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

நிச்சயமாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் தனிநாட்டுக்காக வழங்கிய மக்களாணையை மீறி 6ஆவது திருத்தத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் எடுத்து நாடாளுமன்றத்தில் தொடர மாட்டார்கள் என்று ஜே.ஆர் அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும், அல்லது அப்படி 6ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொண்டால், பிரிவினைக்கான கோரிக்கையை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கைவிட வேண்டி வரும், இதில் எது நடந்தாலும் ஜே.ஆர் அரசாங்கம் அதை தனக்குச் சாதகமானதாகவே பார்த்தது.  

ரணிலின் தர்க்கத்தவறு  

இதற்கு மத்தியில் ஜே.ஆர் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த இளைஞரான ரணில் விக்கிரமசிங்க, 1983 “கறுப்பு ஜூலை” தொடர்பில் இன்னொரு பார்வையை முன்வைத்தார். 

அவரது குறி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சாடுவதாக இருந்தது. தமிழ்க் கைதிகள் சிலரை ஏனைய கைதிகள் கொலை செய்தமை வருத்தத்துக்குரியது என்று சொன்ன ரணில் விக்கிரமசிங்க, 1971இல் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது ஏறத்தாழ 10,000 இளைஞர்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கொன்றொழித்ததைச் சுட்டிக் காட்டினார். 

மேலும் சிங்களவர் அல்லாத வணிகர்கள், தமது வியாபார ஸ்தலங்கள், தொழிற்சாலைகள் எரியூட்டப்பட்டதால் சந்தித்த இழப்பும் துன்பமும், 1956 முதல் பண்டாரநாயக்கர்களின் ஆட்சிகளில் சிங்கள வணிகர்கள் அடைந்த இழப்போடும், துன்பத்தோடும் ஒப்பிடுகையில் ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஒப்பீடு, தர்க்க ரீதியில் தவறானதாகும். சம்பந்தமில்லாத இரண்டு விடயங்களை சம்பந்தப்படுத்தி நியாயம் கற்பிக்க எடுக்கும் முயற்சி இது.

ஆனால் இதில் அவரது தனிப்பட்ட ஆதங்கம் ஒன்று, உள்ளூர இருக்கிறது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தேசியமயமாக்கலால் அதிகம் பாதிக்கப்பட்ட பெரும் வணிகக் குடும்பங்களில், ரணில் விக்கிரமசிங்கவினது விஜேவர்தன-விக்ரமசிங்க குடும்பம் ஒன்று. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் பண்டாரநாயக்கர்கள், சிங்கள வணிகர்களின் வணிகத்தைச் சிதைத்தமை, 1983 “கறுப்பு ஜூலையில்” தமிழ் வணிகர்களின் வணிகத்தைச் சிதைத்தமையை எப்படித் தொடர்புபடுத்தி நியாயப்படுத்த முடியும்?   

இந்தியத் தலையீட்டின் ஆரம்பம்  

அரசமைப்புக்கான 6ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் செயலாகவே அமைந்தது. வேறு வழியின்றி இந்தியாவிடமும் மேற்கிடமும் சென்று முறையிட, உதவிகோர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இலங்கை அரசாங்கமே, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தள்ளியிருந்தது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், தமிழ் நாட்டுக்கு விரைந்திருந்தார்கள். 

இந்த நேரத்தில் “கறுப்பு ஜூலை” இன அழிப்பும், 6ஆவது திருத்தமும், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தையும் இலங்கைப் பக்கம் திருப்பியிருந்தது. 6ஆவது திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது, ஜே.ஆர் அமைச்சரவையில் வௌிவிவகார அமைச்சராக இருந்த ஏ.ஸீ.எஸ்.ஹமீட், 6ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, அரசியலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஓரங்கட்டப்பட்டால், அது இலங்கையில் இந்தியத் தலையீட்டை உருவாக்கலாம் என எச்சரித்திருந்தார், அந்த எச்சரிக்கை உருப்பெறத் தொடங்கியது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்...)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கறுப்பு-ஜூலை-நியாயங்களும்-அநியாயங்களும்/91-203245

Link to comment
Share on other sites

ஜே.ஆரின் அச்சம்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 109)

ஆறாம் திருத்தமும் தமிழ்த் தலைமைகளும்

1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை, ஜே.ஆர் அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன்படி, மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரப் பதவிகளிலுள்ளவர்கள், இலங்கையின் அரசமைப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் விசுவாசமாகவும், பிரிவினைக்கு, ஆதரவாகவோ, துணைபோகவோ மாட்டோம் என்று, சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டியதாயிற்று. அவ்வாறு இல்லையெனில், அவர்கள் பதவிகளை இழக்கும் நிலையும், குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய நிலையும், ஆறாவது திருத்தத்தின் விளைவாக உருவாகியிருந்தது. 

ஆறாவது திருத்தத்தின் பின்னரான, தமது நிலைப்பாடு பற்றியும், எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றியும் கலந்துரையாடித் தீர்மானிப்பதற்காக, ஆறாவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு தினங்களில், அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் 16 பேரைக் கொண்ட நாடாளுமன்றக் குழு, வவுனியாவில் கூடியது. 

தனிநாட்டுக்கான கோரிக்கையைத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னிறுத்தி, அதற்கான மக்களாணையைப் பெற்றிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், அந்த மக்களாணைக்கு முற்றிலும் முரணாக அமைந்த, ஆறாம் திருத்தத்தின் கீழான சத்தியப்பிரமாணத்தை, நிச்சயம் செய்ய முடியாது. அது, தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருந்த ஆணையை மட்டுமல்லாது, அவர்கள் முன்னிறுத்தியிருந்த அடிப்படைக் கொள்கைக்கே விரோதமாக அமைந்திருக்கும்.

ஆனால், ஆறாம் திருத்தத்தின் கீழ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாதங்களுக்குள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லையெனில், அவர்களது பதவிகள் பறிபோகும் நிலை இருந்தது. இதனையெல்லாம் அவர்கள் நிச்சயம் அலசி ஆராய்ந்திருக்கக்கூடும். இறுதியாக, அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்துக்குக் கீழாக, தாம் சத்தியப்பிரமாணம் செய்யப் போவதில்லை என, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்தது. 

தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடு

அடுத்த இரண்டு நாட்களில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அ. அமிர்தலிங்கம் விடுத்திருந்த அறிக்கையொன்றில், 1983 ‘கறுப்பு ஜூலை’ இனஅழிப்பை, பாரதூரமான அரச பயங்கரவாதம் என வர்ணித்த அவர், இந்தப் பாரதூரமான அரச பயங்கரவாதத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஆயுதம் ஏந்தவும் தயார் என்றார். 

மேலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, அமைதி வழியிலான இலக்குகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், ஆனால், தமிழ் மக்கள் மிகவும் அதிர்ந்து போயுள்ளார்கள் என்றும், இனி அவர்களால் சிங்கள மக்களோடு இணைந்து வாழ முடியாது என்றும் குறிப்பிட்டார். அகதிகளைத் தாங்கிய ஒவ்வொரு கப்பலும் யாழ்ப்பாணத்தை வந்தடைகிறபோது, அது நடந்தேறிய கொடூரத்தை மீண்டும் மீண்டும் எதிரொலிக்கிறது என்று மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டதுடன், இந்திய அரசாங்க‍ம், உடனடியாக இதில்த் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

ஆறாம் திருத்தத்தை எதிர்கொள்வது தொடர்பில் மாற்று வழிகள் பற்றியும் தமிழ்த் தலைமைகள் ஆலோசித்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. 1983 ‘கறுப்பு ஜூலை’ பற்றி, ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் எழுதியிருந்த சல்தன்யா கல்பக், ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, தனது குறிக்கோள்களில் தனிநாடு என்பதைச் சுயநிர்ணயம் என்று மாற்றிக் கொள்ள முடியுமென்றும், ஏனெனில், சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினைக்கான உரிமையையும், சுதந்திரமான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கியது என்றும் அல்லது தாம் ஒரு கட்சியாக மறைந்திருந்து செயற்படலாம்’ என்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரொருவர் கூறியதாகப் பதிவு செய்கிறார். மேலும், ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படை, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என ஐ.நாவுக்கு  வேண்டுகோளையும்  அமிர்தலிங்கம் அனுப்பினார். 

பெரியண்ணனின் தலையீடு பற்றிய அச்சம்

அந்நியத் தலையீடு, அதிலும் குறிப்பாக இந்தியத் தலையீடு பற்றிய அச்சம், ஜனாதிபதி ஜே.ஆருக்கு, கொஞ்சகாலமாகவே அதிகமாக இருந்தமை அவரது அறிக்கைகள், கருத்துகள், நடவடிக்கைகளிலிருந்து தௌிவாகத் தென்படுகிறது. மே மாதம் ஜே.ஆர், இந்தியாவின் ‘த இந்து’ பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வியொன்றில், “இந்தியா எம்மை ஆக்கிரமிக்குமானால், எம்முடைய கொள்கை கோட்பாடுகளை, இந்தியாவினால் எவ்வகையிலும் சிதைக்க முடியாது. நீங்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆளுங்கள். 

ஆனால், 15 மில்லியன் மக்கள் உங்களை எதிர்க்கும்போது, உங்களால் ஆட்சி நடத்த முடியாது. நான் உயிரோடிந்தால், அத்தகைய ஆக்கிரமிப்புக்கெதிரான இயக்கத்தை நானே முன்னின்று நடத்துவேன்” என்று கூறியிருந்தார். 

மேலும், ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பைத் தொடர்ந்து, வௌியுறவு அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட், டெல்லி விரைந்து, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் “இந்தியா, இலங்கை மீது நேரடி நடவடிக்கை எடுக்குமா” என்ற கேள்வியை முன்வைத்து, “இந்தியா நேரடியாக எந்த நடவடிக்கையையும் உடனடியாக எடுக்காது” என்ற உறுதிமொழியையும் இந்திரா காந்தியிடமிருந்து பெற்றுவந்திருந்தார்.  

இதேவேளை, 1983 ஓகஸ்ட் ஏழாம் திகதி, இங்கிலாந்தின் ‘த சன்’ பத்திரிகைக்கு ஜனாதிபதி ஜே.ஆர் வழங்கிய செவ்வியொன்றில், “இந்தியா எம்மை ஆக்கிரமிக்கத் தீர்மானித்தால், நாங்கள் அதற்கெதிராகப் போராடுவோம். அந்தப் போரில் நாம் நிச்சயமாகத் தோல்வியடைவோம். ஆனால், தன்மானத்தோடு தோற்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். 

இதைவிடவும், இந்தியத் தலையீடு, இலங்கையில் ஏற்படும் என்ற எச்சரிக்கையை, ஆறாம் திருத்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் வௌிவிவகார அமைச்சரான ஏ.ஸீ.எஸ்.ஹமீட் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம், ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம், இந்தியத் தலையீடு பற்றிய பெரும் அச்சத்தைக் கொண்டிருந்தமையை எடுத்துக் காட்டுகின்றன. 

இந்தியாவிலும் அழுத்தம்

மறுபுறத்தில் இந்தியாவிலும், இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்ததுடன், இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் மேல், அந்த அழுத்தம் கடுமையாக இருந்தது. மேலும் தமிழ்நாடு கொதித்துக் கொண்டிருந்தது. ஆகவே, இந்த விடயத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாத அரசியல் நிர்ப்பந்தம், இந்திரா காந்திக்கு இருந்தது.

மேலும் இந்தியா, இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுவதற்கான அருமையானதொரு வாய்ப்பாகவும் இதைப் பொருள்கோடல் செய்யும் அரசியல் ஆய்வாளர்களும் உளர். இதுபோன்ற சந்தர்ப்பங்கள், பிராந்திய பெரியண்ணனாகத் தன்னைக் கருதும் இந்தியாவுக்கு, இலங்கைக்குள் வேரூன்றவும், தமது நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கவும் வழிசமைக்கின்றன. 

இந்தப் பின்புலத்தில்தான், 10 நாட்களுக்குள் இரண்டாவது தடவையாக, 1983 ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆருடன் உரையாடியிருந்தார். இந்த உரையாடலில், இலங்கையில், இந்தியா நேரடியாகத் தலையிடாது என்ற உறுதிமொழியை மீண்டும் வழங்கியிருந்த இந்திரா காந்தி, இலங்கை விவகாரம் தொடர்பில் தாம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகவும், ஏனெனில், அது இலங்கையை மட்டுமல்லாது இந்தியாவையும் பாதிக்கிறது என்பதை ஜே.ஆருக்கு எடுத்துரைத்திருந்ததுடன், தமிழ் மக்கள் தொடர்பிலான இனப்பிரச்சினைக்கு, விரைவில் தீர்வொன்றை எட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். 

இந்த உரையாடல் பற்றி, இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபாவில் பேசிய இந்திரா காந்தி, இலங்கையில் நடக்கின்ற விடயங்கள் இந்தியாவையும் பாதிப்பதாகவும், இலங்கையும், இந்தியாவும் இதில் நேரடிக் கரிசனமும் பாதிப்பும் கொண்ட இரண்டு நாடுகள் என்றும், இதற்கு வௌியிலிருந்து அழுத்தங்கள் வந்தால், அது இரண்டு நாடுகளையும் பாதிக்கும் என்றும் பதிவு செய்கிறார். 

தொலைபேசி உரையாடலின்போது, இந்திரா காந்திக்குப் பதிலளித்த ஜே.ஆர், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தாம் அக்கறை கொண்டுள்ளதாகவும், அதற்காகத்தான் ஜூலை 27 ஆம் திகதி, சர்வகட்சி மாநாடு ஒன்றை நடத்தத் தீர்மானித்திருந்ததாகவும், ஆனால், கலவரங்கள் வெடித்ததனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மாநாட்டை நடத்த முடியாது போனதாகவும் தெரிவித்ததுடன், தனது சகோதரரும், இலங்கையின் முன்னணி வழக்குரைஞர்களில் ஒருவருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை, தனது விசேட பிரதிநிதியாக இந்திரா காந்தியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

ஜே.ஆரும் அதிகாரக் குழுக்களும்

ஜே.ஆர், பலம் வாய்ந்ததொரு தலைவராகவே உருவகப்படுத்தப்பட்டாலும், அந்தப் பலம் வாய்ந்த பிம்பத்துக்குப் பின்னால், நிறைய சிக்கல்கள் தொடர்ந்து இருக்கவே செய்தன. 

ஜே.ஆரின் ஆட்சியில் பங்குபெற்றிருந்தவர்கள், ஆளுங்கட்சியினர், உயரதிகாரிகள் ஆகியோரிடையே, சிறு அதிகாரக் குழுக்கள் உருவாகியிருந்ததாகவும் அவர்களுடைய அதிகாரப் போட்டியின் அழுத்தங்களைச் சமாளிக்க வேண்டிய சிக்கலுக்குள் 76 வயதான ஜே.ஆர் சிக்கியிருந்ததாகவும், சல்தன்யா கல்பக், தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். 

இந்த வெவ்வேறு குழுக்கள் பற்றி, பேராசிரியர் ஸ்ரான்லி ஜெயராஜா தம்பையா, தன்னுடைய இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான நூலொன்றில் இவ்வாறு விவரிக்கிறார்: “முதலாவது குழுவானது, இலங்கையின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்ததுடன், ஆயுதப் படைகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. இந்தக் குழுவில், அமைச்சரவையின் செயலாளர் ஜீ.வீ.பீ.சமரசிங்ஹ, ஜனாதிபதியின் செயலாளர் டபிள்யூ.எம்.பீ.மனிக்திவெல, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிகல, லெப்டினன் ஜெனரல் வீரதுங்க, ஜே.ஆரின் உறவினரும், இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நளின் செனவிரட்ன ஆகியோரைக் கொண்டமைந்தது. இந்தக் குழு, ஜனாதிபதிக்கு மிக அருகில் சூழமைந்து கொண்டதுடன், ஜனாதிபதியை எப்போதும் தொடர்புகொள்ளக் கூடிய நிலையிலிருந்தது. 

அடுத்ததாக, ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி இயந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விசுவாசமான குழு ஒன்று இருந்தது. இதன் முக்கிய உறுப்பினர்களாக ஐ.தே.கவின் தவிசாளர் என்.ஜீ.பீ.பண்டிதரட்ன, ஐ.தே.கவின் செயலாளர் ஹர்ஷ அபேவர்த்தன, கைத்தொழில் அமைச்சரும் ஐ.தே.க சார்பான தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமயவின் தலைவரும் பௌத்த-வாதியுமான சிறில் மத்யூ, இளைஞர் விவகார மற்றும் கல்வி அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இருந்தனர். இந்தக் கட்சி இயந்திரமே, நாட்டின் முக்கிய சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளை அச்சிடும், தேசிய மயமாக்கப்பட்டு, அரசால் நிர்வகிக்கப்படும் ‘லேக் ஹவுஸ்’  பத்திரிகைகளாக இருந்த ‘த டெய்லி நியூஸ்’, ‘தினமின’ ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியது. 

மூன்றாவது குழு, பிரதமரும் வீடமைப்பு அமைச்சருமான, ரணசிங்க பிரேமதாஸவை மையப்படுத்தி, அவரைச் சூழ அமைந்திருந்தது. ஜனாதிபதி ஜே.ஆரின் மேல் எதிர்ப்புக் கொண்ட ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள்”. மேலும், பிரேமதாஸ தனிமைப்படுத்தப்பட்டமைக்கு, அவரது சாதிய, சமூக அடையாளங்கள் காரணமாகிறது என்பதையும் பேராசிரியர் ஸ்ரான்லி ஜெயராஜா தம்பையா சுட்டிக்காட்டுகிறார். 

இதைவிடவும் கல்தன்யா கல்பக் தன்னுடைய கட்டுரையில், இரண்டு வேறு குழுக்களையும் சுட்டிக்காட்டுகிறார். காமினி திசாநாயக்கவும் அவரது ஆதரவாளர்களும் தனிக்குழுவாகச் செயற்பட்டதாகவும் 1983 பெப்ரவரி 13ஆம் திகதி, இலங்கையின் முன்னணி தொழிலதிபரும், ஜே.ஆரின் எதிர்கால அரசியல்வாரிசு என ஆரூடம் சொல்லப்பட்டவருமான உபாலி விஜேவர்தனவின் விமான விபத்து, மர்ம இறப்புக்குப் பின்பு, ஜே.ஆரின் அடுத்த அரசியல் வாரிசாக காமினி திசாநாயக்க முன்னிறுத்தப்படத் தொடங்கியதையும், கல்பக் குறிப்பிடுகிறார். 

இதைவிடவும், அமைச்சர் ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ் தலைமையில் அவருடைய ஆதரவாளர்களும் ஒரு தனிக்குழுவாகச் செயற்பட்டதாக கல்பக் கருத்துரைக்கிறார்.

ஆகவே, கட்சிக்குள் முரண்டுபட்டு நின்ற இந்தக் குழுக்களைச் சமாளிப்பதுடன், நேச சக்திகளையும் ஒன்றிணைத்து, அரவணைத்து ஆட்சியைக் கொண்டு செல்ல வேண்டிய சிக்கலுக்குள்தான், 76 வயதான ஜே.ஆர் சிக்கியிருந்தார். 

இந்தியா விரைந்த எச்.டபிள்யூ

இந்த நிலையில்தான் இந்தியாவின் தலையீட்டுக்கான சாத்தியம், ஜே.ஆருக்குப் பெரும் தலையிடியாக மாறியிருந்தது. அதனால், உடனடியாகவே தனது சகோதரரான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை, தனது விசேட பிரதிநிதியாக, இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வைத்தார்.

இந்தியா விரைந்த எச்.டபிள்யூ ஜெயவர்தன, 1983 ஓகஸ்ட் 11ஆம் திகதி, இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களும், இந்தியா செல்லத் தயாராகினர்.

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜே-ஆரின்-அச்சம்/91-203552

Link to comment
Share on other sites

இந்தி(யா)ரா காண் படலம்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 110)

இந்திய விஜயம்  

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, தனது சகோதரரும் இலங்கையில் பிரபல்யமிக்க வழக்குரைஞருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை தனது விசேட பிரதிநிதியாக, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைத்தார்.   

1983 ஓகஸ்ட் 11ஆம் திகதி எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன, டெல்லியை சென்று அடைந்திருந்தார். அதேதினத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், விமானம் மூலம் சென்னையை வந்தடைந்திருந்தார்.   

சென்னை வந்த அமிர்தலிங்கத்தை, இந்திய உள்துறை அமைச்சர் பென்டகன்டி வெங்கடசுப்பையாவும் இந்திய வௌிவிவகாரச் செயலாளர் கே.எஸ்.பாஜ்பாயும் சென்னையில் வரவேற்றனர். இதற்காக இவ்விருவரும் டெல்லியிலிருந்து சென்னை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இந்திரா-எச்.டபிள்யு. ஜெயவர்த்தன சந்திப்பு  

டெல்லி வந்திருந்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை, நடந்துமுடிந்திருந்த 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு பற்றி விடயத்துடன் ஆரம்பமானது.   
இந்திரா காந்தி, அண்மையில் தமிழ் மக்களுக்கெதிராக இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைகள் பற்றி இந்திய நாடாளுமன்றமும் இந்திய மக்களும் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாக எச்.டபிள்யூ.ஜெயவர்தனவிடம் தெரிவித்ததோடு, இந்தியா எப்போதும் இதுபோன்ற வன்முறைகளையும் கொலைகளையும் பாகுபாட்டையும் கண்டித்து வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.   

அதுவும் குறிப்பாக, பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராக அது நிகழ்த்தப்படுவது பெரிதும் கண்டிக்கப்பட வேண்டியது என்று கூறினார். மேலும், இலங்கையின் சுந்திரத்தையும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் இந்தியா மதிப்பதாகக் குறிப்பிட்ட இந்திரா காந்தி, மற்றைய நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதில்லை; ஆனால், இரு நாட்டு மக்களிடையே உள்ள கலாசார, வரலாற்று மற்றும் ஏனைய நெருங்கிய தொடர்புகளின் காரணமாக, அதுவும் குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் காரணமாக, அங்கு நடக்கும் சம்பவங்கள் இந்தியாவைப் பாதிக்காது என்று கூறமுடியாது என்று எச்.டபிள்யூ.ஜெயவர்தனவிடம் எடுத்துரைத்தார்.   

1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பைத் தொடர்ந்தான நிலைமைகள் பற்றி இந்திரா காந்தி கொண்டிருந்த அக்கறையை உணர்ந்து கொண்ட எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன, இலங்கையில் நிலைமை விரைவாக சுமுக நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அகதிகள் பலரும் தத்தம் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் இந்திரா காந்தியிடம் எடுத்துரைத்தார்.   

ஆனால், ஓகஸ்ட் 11 திகதி வரையில் அகதிகள் பெருமளவுக்குத் தமது வீடுகளுக்குத் திரும்பிய பதிவுகள் இல்லை. குறிப்பாக, கொழும்பிலிருந்து கப்பல்களில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுசென்று சேர்ப்பிக்கப்பட்ட, கொழும்பில் சொத்துகளைக் கொண்டு வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், இன்னமும் யாழ்ப்பாணத்திலேயேதான் இருந்தனர்.   
ஆனாலும், எச்.டபிள்யூ.ஜெயவர்தன, நிலைமை விரைவில் சுமுகமாகிக் கொண்டு வருவதாக இந்திரா காந்தியிடம் தெரிவித்ததுடன், வீடுகளை, சொத்துகளை இழந்தவர்களுக்கு அதை மீட்பதற்காகவே அரசாங்கம் சொத்துகள் மற்றும் கைத்தொழில் புனரமைப்பு அதிகாரசபையை (REPIA - Rehabilitation of Property and Industries Authority) அமைத்துள்ளதாகவும் இதனுதவியுடன் தமிழ் மக்கள் தமது வீடுகளைப் புனரமைக்க முடியுமென்றும் தெரிவித்தார்.   

அத்தோடு, அரசாங்கம் தமிழர்களின் சொத்துகளை கபளீகரம் செய்ய அல்லது சுவீகரிக்கப் பார்க்கிறது என்ற கருத்தில் துளியேனும் உண்மையில்லை என்றும் இந்திரா காந்தியிடம் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன எடுத்துரைத்தார்.   

இதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி பிரதமர் நிதியைக் கொண்டு, தான் இலங்கைக்கான நிவாரண நிதியம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் அதற்கு உதவித் தொகை பொதுமக்களிடமிருந்து குவிந்தவண்ணமுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், உடனடி நிலைமைகளைச் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளைத் திருப்தி செய்யும், தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிரந்தரத் தீர்வொன்றை, எட்டுவதற்கான செயற்பாடுகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.   

இதற்குப் பதிலளித்த, எச்.டபிள்யூ.ஜெயவர்தன, ஏற்கெனவே ஜனாதிபதி அத்தகைய செயற்பாடொன்றை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் ஆனால், அத்தகைய செயற்பாடு வெற்றிகரமாக நிறைவேற வேண்டுமானால், எல்லாத் தரப்பு மக்களையும் ஜனாதிபதி ஜே.ஆர் தன்னுடன் அரவணைத்துச் செல்வது அவசியமென்றும், அதற்காகவே ஜனாதிபதி ஜே.ஆர், சர்வ கட்சி மாநாட்டை நடத்தத் தீர்மானித்திருந்ததாகவும் தெரிவித்ததுடன். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அடிப்படையாக அமையத்தக்கதாக, ஜே.ஆரினால் சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்படவிருந்த ஐந்து அம்ச நடவடிக்கைத் திட்டத்தை, இந்திரா காந்தியிடம் எடுத்துரைத்தார்.  

 மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பிலான சட்டங்களை, முழுமையாக அமுல்படுத்துதல்; அரசியலமைப்பில் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் அதன் பயன்பாட்டை முன்னெடுத்தல் (கவனிக்க: தேசிய மொழி, உத்தியோகபூர்வ மொழி அல்ல), வன்முறை கைவிடப்படும் என்ற நிபந்தனையின் பாலான பொதுமன்னிப்பு வழங்கப்படுதல் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல், பயங்கரவாதமும் வன்முறையும் நிறைவுக்கு வரும்போது, யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின்  செயற்பாட்டைத் தொடராதிருத்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்படுதல் ஆகிய ஐந்து அம்சத் திட்டத்தை ஜே.ஆர் முன்வைக்கவிருந்ததாக எச்.டபிள்யூ.ஜெயவர்தன தெரிவித்தார்.   

இதைவிடவும், பிரிவினைக் கோரிக்கையை கைவிடும் பட்சத்தில், சிறையில் குற்றவாளியாகக் காணப்படாது, வழக்கு விசாரணை முடியாது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவது பற்றி கலந்துரையாடவும் வேறும் ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டுள்ள வேறேதும் விடயங்களை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி ஜே.ஆர் தயாராக இருப்பதாகவும் இந்திரா காந்தியிடம் எச்.டபிள்யூ.ஜெயவர்தன எடுத்துரைத்தார்.   

எச்.டபிள்யூ.ஜெயவர்தன சொன்னவற்றைக் கேட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இந்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் திருப்தி செய்யப் போதுமானவை அல்ல என்று தனது எண்ணத்தை வௌிப்படுத்தினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை முன்னேற்றுவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக எச்.டபிள்யூ.ஜெயவர்தன தெரிவித்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் தான், முக்கிய விடயத்தை இந்திரா காந்தி முன்வைத்தார்.   

தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினருடன் இலங்கை அரசாங்கம், பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியது அவசியம் என்று இந்திரா காந்தி கூறினார். இதற்குப் பதிலளித்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனது பிரிவினைக் கோரிக்கையை கைவிடும் வரையில் அவர்களுடன் பேசுவதில்லை என்று இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.   

அப்படியானால் இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி தமிழ்த் தலைவர்களுடன் இதுபற்றிப் பேசத் தயாராக இருப்பதாக இந்திரா காந்தி தெரிவித்தார். இது பற்றித் தான் மேலும் பேசுவதற்கு முன்பு, ஜனாதிபதி ஜே.ஆருடன் பேச வேண்டும் என்று எச்.டபிள்யூ.ஜெயவர்தன தெரிவித்தார்.   

இத்துடன் இந்திரா காந்தியுடனான முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, எச்.டபிள்யூ.ஜெயவர்தன, இந்திய வௌிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவுடனும் இந்திரா காந்தியின் விசேட ஆலோசகர் கோபால்சாமி பார்த்தசாரதியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்திரா காந்தியுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் மறுதினம் 1983 ஓகஸ்ட் 12 அன்று நடைபெறவிருந்தது.   

இந்த நிலையில் ஓகஸ்ட் 11 எம்.சிவசிதம்பரம் மற்றும் இராஜவரோதயம் சம்பந்தன் ஆகியோரோடு, சென்னை வந்திருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தன்னை வரவேற்ற உள்துறை அமைச்சர் வெங்கடசுப்பையா மற்றும் வௌிவிவகார செயலாளர் பாஜ்பாய் ஆகியோரோடு பேசினார். அதைத் தொடர்ந்து தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனை (எம்.ஜி.ஆர்) சந்தித்துப் பேசினார்.   

அதன் பின்னர், திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.கருணாநிதியையும் சந்தித்துப் பேசினார். இதனிடையே ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அமிர்தலிங்கம், இனப்பிரச்சினை தொடர்பில் இணக்கமான முயற்சிகள் நிராகரிக்கப்பட்டதால்தான், தமிழர்கள் தனிநாடு கேட்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதாகவும் 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி, தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த பின்னரும் கூட, தாம் இணக்கமான தீர்வொன்றை எட்டவே ஜே.ஆரின் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட முயற்சித்ததாகவும் அதனடிப்படையில்தான் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தாம் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் ஆனால், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இயங்குவதற்குத் தேவையான நிதியோ, அதிகாரங்களோ வழங்கப்படாத பட்சத்தில் அது வெற்றியளிக்கவில்லை எனவும் நிதியையும் அதிகாரத்தையும் தாம் கோரியபோது, தாம் அரசாங்கத்திடமிருந்து கடும் எதிர்ப்பையே சந்தித்ததாகவும் தெரிவித்தார்.   

அமிர்தலிங்கத்தின் இந்த ஆதங்கத்தில் நிறைய நியாயங்கள் இருக்கின்றன. தமிழ் ஆயுதக் குழுக்களின் எதிர்ப்பினாலும் அழுத்தத்தினாலும் பல கட்சிகள் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலிலிருந்து பின்வாங்கிய போது, வௌிப்படையான மிரட்டல்களை மீறியும் தமிழர் உருவாக்கிய விடுதலைக் கூட்டணி, அத் தேர்தலில் பங்கேற்றிருந்தது.   

பிரிவினையைக் கோரி, பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்களில் போட்டியிட்டதே, அவர்கள் தனிநாட்டை விட்டிறங்கி நியாயமானதொரு தீர்வுக்கு சமரசமாகத் தயார் என்ற நல்லெண்ணத்தைச் சொல்லும் நேசக்கரத்தை நீட்டும் சமிக்ஞைதான்.   

இது ஜே.ஆருக்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் நிச்சயம் தெரியும். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஊடாக இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்ட, ஜே.ஆர் அரசாங்கம் விரும்பியிருந்தால், நிச்சயமாக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அச்சபைகளுக்குரிய அதிகாரங்களையும் நிதியையும் வழங்கி, அதை இயங்கச் செய்வதனூடாக அதற்கான முதற்படியை எடுத்திருக்கலாம்.   

ஆனால், அதைச் செய்யாது, மாவட்ட அபிவிருத்தி சபைகளை அதிகாரமோ, நிதியோ அற்ற வெற்று அலங்காரமாக வைத்துக் கொண்டு, மறுபுறத்தில் தமிழ் மக்கள் மீதான பாரிய அடக்குமுறையும் இன அழிப்பும் பிரயோகிக்கப்பட்டபோதும் அதற்கான நீதியோ நியாயமோ தர முன்பு தமிழர்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்தை விட்டு நீக்கத்தக்க ஆறாவது திருத்தத்தை கொண்டு வந்து, இணக்கப்பாடு விரும்பிய தமிழ்த் தலைமைகளைக் கூட பிரிவினையின் எல்லைக்குத் தள்ளிவிட்டு, பிறகு இந்திய பிரதமரிடம் சென்று, அவர்கள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டால்தான் நாம் பேசுவோம் என்பது என்ன வகையான நியாயம்? 

மீளிணக்கப்பாடு என்பது இருதரப்பு இசைவினாலும் உருவாக்கப்பட வேண்டியது. ஒரு தரப்புத் தான் நிற்குமிடத்தில் நின்று கொண்டு, மறுதரப்பை இறங்கி வரச் சொல்வது மீளிணக்கப்பாடு அல்ல.   

அது சரணாகதி. அப்படியானால், தமிழ்த் தரப்புப் பிரிவினை என்ற இடத்தில் நின்று கொண்டு, மீளிணக்கப்பாடு எப்படிப் பேசுவது என்ற கேள்வி வரும். ஆனால், கொள்கையளவில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பிரிவினையை முன் நிறுத்தியிருந்தாலும் அவர்கள் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்களில் ஆயுதக் குழுக்களின் கடும் எதிர்ப்பையும் மீறிப் போட்டியிட்டதனூடாக, தாம் எவ்வளவு தூரம் இறங்கி வரத் தயார் என்பதை நடத்தையுடாகவே வௌிப்படுத்தியிருந்தார்கள்.   

நல்லலெண்ணத்துடன் மீளிணக்கப்பாட்டை ஜே.ஆர். அரசாங்கம் விரும்பியிருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தை ஜே.ஆர் அரசாங்கம் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாது போனது, இந்த நாட்டின் துரதிஷ்டம் மட்டுமல்ல துயரமும் கூட.   

ஜே.ஆர் அரசாங்கத்தின் மீது, முற்றிலும் நம்பிக்கையிழந்திருந்த அமிர்தலிங்கம், இந்திய ஊடகங்களிடம், “இந்தியாவும் சர்வதேசமுமே இனி எமது இரட்சகர்கள்; நாம் ஜே.ஆர் மீதும் இந்த அரசாங்கத்தின் மீதும் கொண்ட நம்பிக்கையை இழந்துவிட்டோம்; அவர்களோடு பேசுவதில் இனிப் பயனில்லை. அவர்கள் தமிழர்களை அழிக்கவே தலைப்பட்டிருக்கிறார்கள்” என்று ஆதங்கத்துடன் தனது விரக்தியைப் பதிவு செய்தார்.   

ஓகஸ்ட் 12 ஆம் திகதி இந்திரா காந்திக்கும் எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுக்குமிடையில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்தி-யா-ரா-காண்-படலம்/91-203957

Link to comment
Share on other sites

இந்தி(யா)ரா காண் படலம் - 2: ஜே. ஆரின் பெரும் ஆறுதல்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 111)

இந்திரா - எச்.டபிள்யு இரண்டாம் சுற்று   

1983 ஓகஸ்ட் 12 ஆம் திகதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் விசேட பிரதிநிதியாக ஜே.ஆரால், இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வைக்கப்பட்ட அவரது சகோதரரும் இலங்கையின் பிரபல்யம்மிக்க வழக்குரைஞருமான எச்.டபிள்யு.ஜெயவர்தனவுக்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.   

முன்னைய தினம், ஓகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெற்ற முதற்சுற்றுப் பேச்சுவார்த்தையில், இந்திய அரசாங்கம், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேசத் தயார் என்று தெரிவித்திருந்தது.   

ஜனாதிபதி ஜே.ஆருடன், இது பற்றிப் பேசியிருந்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன, அதை இந்தியா செய்வதானால், அதற்குத் தாம் சம்மதிப்பதாக, ஜனாதிபதி ஜே.ஆர் தெரிவித்ததாக, இந்திரா காந்தியிடம் தெரிவித்ததுடன், இந்திய நாடாளுமன்றத்தின் சர்வ கட்சிக் குழுவொன்றை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி ஜே.ஆர் அழைப்பதாகவும் தெரிவித்தார்.   

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, இந்திரா காந்தி இறுதியில் இப்படிக் கூறியதாக, தன்னுடைய கட்டுரையொன்றில் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். “இப்போதைய காலத்தின் தேவை பதற்றத்தைத் தணித்து, நம்பிக்கையை கட்டியெழுப்புதலாகும். இந்தப் பிரச்சினையில் அக்கறை கொண்டுள்ள யாவரும், நல்லெண்ணமும் இருதரப்பு நம்பிக்கையும் கொண்ட சூழலும் கொண்ட மாநாட்டு மேசையில் சந்தித்து, தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்”.   

இதைத் தொடர்ந்து, எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுடனான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை பற்றி, இந்திய நாடாளுமன்றத்தில் பகர்ந்து கொள்ள எண்ணியிருப்பதாகவும், தனது அந்த அறிக்கையில் ஏதேனும் விடயம் தொடர்பில், முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று இலங்கை விரும்பினால் அதை அறியத்தருமாறு எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுக்கு இந்திராகாந்தி சந்தர்ப்பமளித்தார்.   

பேச்சுவார்த்தை அறிக்கை  

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுடனான தன்னுடைய சந்திப்புப் பற்றி, இந்திய நாடாளுமன்றத்துக்கு அளிக்கவிருந்த அறிக்கையைத் தயார் செய்யும் பொறுப்பு, இந்திய மற்றும் இலங்கை ஆகிய இருதரப்பை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.   

இதன்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான, அதேவேளை இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றோடு தொடர்புடைய, ஒரு சம்பவமொன்றைத் தனது கட்டுரையொன்றில் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.   

அதாவது, குறித்த அறிக்கையின் முன்வரைவு தயாரிக்கப்பட்டபோது, இந்திய பிரதமர், இலங்கை இனப்பிரச்சினையானது ஒன்றுபட்ட (united) இலங்கை என்ற கட்டமைப்புக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று கருதுவதாக இந்திய அதிகாரிகள் பதிவு செய்தனர். இதில் இலங்கைத் தரப்பைச் சார்ந்த ஓர் அதிகாரி ‘ஒன்றுபட்ட’ (united) என்ற சொற்பதம் மாற்றப்பட்டு ‘ஒற்றையாட்சி’ (unitary) என்ற சொற்பதம் பயன்படுத்தப் பட வேண்டும் என்று தெரிவித்து, அழுத்தம் தந்ததாகவும் உடனே எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலையிட்டு, இந்தியப் பிரதமரின் வாய்க்குள் சொற்களை இலங்கை நுழைக்கக்கூடாது என்றும் இந்தியப் பிரதமர்தான் விரும்பும் வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்றும் அந்த இலங்கை அதிகாரிக்குச் சொல்லியிருந்தார்.   

ஆனால், இந்தச் சிக்கல் இங்கு முடிவடையவில்லை. எச்.டபிள்யூ.ஜெயவர்தன, இலங்கை திரும்பிய பின், ஜே.ஆர் அமைச்சரவையின் சில அமைச்சர்கள், ‘ஒன்றுபட்ட’ இலங்கை என்ற பதம் இந்திரா காந்தியால் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது என்று தமது ஆட்சேபத்தைப் பதிவு செய்திருந்தனர். குறைந்த பட்சம், இலங்கை தனது எதிர்ப்பையாவது பதிவு செய்திருக்க வேண்டும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது.   

ஆனால், எச்.டபிள்யூ.ஜெயவர்தன தன்னுடைய நிலைப்பாட்டில் மிகத் தௌிவாக இருந்தார். இந்தியாவினுடைய கொள்கையை இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும்; இலங்கை தீர்மானிக்க முடியாது என்பது அவரது உறுதியான நிலைப்பாடாக இருந்தது.  

‘ஒன்றுபட்ட’ எதிர் ‘ஒற்றையாட்சி’  

‘ஒன்றுபட்ட’ (‘united’) மற்றும் ‘ஒற்றையாட்சி’ (‘unitary’) என்ற சொல்லாடல் முரண்பாடு இன்று சமகாலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அரசமைப்புக் குழு வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  

 இலங்கையில் நடைமுறையிலிருக்கும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசமைப்பின் இரண்டாம் சரத்து, மிகத் தௌிவாக இலங்கை குடியரசு ஓர் ஒற்றையாட்சிக் குடியரசு என்று தெரிவிக்கிறது.   

1972 ஆம் ஆண்டில் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது ‘தோழர்களினால்’ கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு அரசமைப்பின் தொடர்ச்சி இதுவாகும்.

இந்தச் சரத்தை மாற்ற, 1978 இல் ஜே.ஆருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால், ஜே.ஆர் அதைச் செய்யவில்லை. மாறாக, அவர் அரசமைப்பில் 83 ஆம் சரத்தினூடாக இன்னொரு மட்டுப்பாட்டையும் கொண்டுவந்தார். 

அதாவது அரசமைப்பின் 83 ஆம் சரத்தின் படி, மேற்குறித்த இரண்டாம் சரத்து உள்ளிட்ட சில சரத்துகள் திருத்தவோ, நீக்கவோ பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை தேவைப்படுவதோடு, அது சர்வசன வாக்கெடுப்பு ஒன்றில் மக்களால் அங்கிகரிக்கப்படவும் வேண்டும் என்ற பெரும் மட்டுப்பாட்டை ஜே.ஆர் கொண்டுவந்தார்.   

இந்த மட்டுப்பாட்டைக் கடக்க முடியாதுதான், இன்றுவரை பல சண்டைகளுள் ஒன்றாக இந்தச் ‘சொல்லாடல்’ சண்டையும் தொக்கி நிற்கிறது. ஆகவே, இந்த வரலாறு எமக்கு ஒன்றைத் தௌிவாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. இன்று எம்முன்னால் இருக்கும் பிரச்சினை, இன்றுநேற்றுத் தோன்றிய ஒரு பிரச்சினையல்ல.   

இன்று நாம் தேடிக் கொண்டிருக்கும் தீர்வுகளும் புதிதாய் நாம் கட்டியெழுப்பிய தீர்வுகளல்ல; பல தசாப்தங்களாக நடந்து வருகின்ற ஒரு சுழற்சியின் நீட்சிதான் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. வரலாறு மீண்டும், மீண்டும் ஏறத்தாழ ஒரே மாதிரியில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிற்க.  

ஓகஸ்ட் 12 ஆம் திகதி மாலை, இந்திரா காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில் எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுடனான சந்திப்பு பற்றிய அறிக்கையொன்றை வாசித்தார். அந்த அறிக்கையில், இலங்கை ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக டெல்லி வந்த எச்.டபிள்யூ.ஜெயவர்தனவிடம் இந்திய நாடாளுமன்றத்தினதும் இந்திய மக்களினதும் கரிசனத்தை எடுத்துரைத்தாகவும் இலங்கை ஜனாதிபதி நடத்தவிருந்த, ஆனால் நடத்து முடியாது போன சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கவிருந்த சில விடயங்களை அவர் தனக்கு எடுத்துரைத்ததாகவும் பதிவு செய்த இந்திரா காந்தி, அந்த முன்மொழிவுகள் தமிழ்ச் சமூகத்தின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது என்று எடுத்துரைத்ததாகவும் அதற்குப் பதிலளித்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளாகத் தமிழ் மக்களுக்கு நாட்டு விவகாரங்களில் அவர்களுக்குரிய பங்கையாற்றத்தக்க வகையிலமையும் வேறு முன்மொழிவுகளை கருத்திற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்ததாகவும் தெரிவித்ததுடன், தீர்வானது மாநாட்டு மேசையிலேயே எட்டப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் சமூகத்துக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் பரந்துபட்ட அளவில் நடத்தப்படுவது இதற்குப் பயனளிக்கும் என்று தான் தெரிவித்திருந்ததாகவும், அதற்கு இந்தியா, தனது செல்வாக்கைத் தேவைக்கேற்றபடி வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்ததாகவும், இதை ஏற்பதாக, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் அவரது விசேட பிரதிநிதியான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவூடாக அறியத்தந்ததாகவும் இந்திரா காந்தி தெரிவித்திருந்தார்.   

ஜே.ஆரின் ஆறுதல்  

ஓகஸ்ட் 12 ஆம் திகதி, இது நிறைவுற்ற பின்னர் எச்.டபிள்யூ.ஜெயவர்தன இலங்கை திரும்பியிருந்தார். ஜே.ஆரைப் பொறுத்தவரையில் இது வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்தியா தனது படைகளை அனுப்பக்கூடும் என்று ஜே.ஆர் அஞ்சியிருந்தார்.   

1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு என்பது ஜேர்மனியில் நடந்த ‘ஹொலோகோஸ்ட்’ இக்கு (பெரும் இன அழிப்புக்கு) நிச்சயம் ஒப்பானதே. எண்ணிக்கை வேறுபடலாம்; ஆனால் அதன் அடிநாதம் ஒன்றுதான்.   

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பும் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பும் இலங்கையில் நடந்தேறியது வெறும் ‘இனக்கலவரம்’ அல்ல. 1983 ‘கறுப்பு ஜூலையை’ இனக்கலவரம் என்று விளிப்பது அதன் தீவிரத்தை குறைக்கும் செயல்; இங்கு நடந்தேறியது ஒரு மாபெரும் மனிதப்பேரவலம்.   

இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர், ‘மனித உரிமைகள்’ கருத்துருவாக்கத்தின் எழுச்சியின் கீழுருவான சர்வதேச சட்டங்களினதும் நியமங்களினதும் கீழாகப் பார்த்தால் கூட, இது சர்வதேசம் உடனடியாகத் தலையிட்டிருக்க வேண்டிய மனிதப் பேரவலம். இது ஜே.ஆருக்கு நிச்சயம் தெரியும்.   

அமெரிக்காவின் ஆதரவாளராக அறியப்பட்ட ஜே.ஆருக்கு, மேற்கு நாடுகளைப் பற்றிப் பெருங்கவலை இருக்கவில்லை. ஆனால், இந்தியாவைப் பற்றியே அவர் பெரிதும் அச்சம் கொண்டிருந்தார். பங்களாதேஷ் பிரிவினையில் இந்திரா காந்தி தலைமையிலான இந்தியாவின் பங்கை அவர் அறிவார்.   

அதற்கான அரசியல், இந்த அரசியலிலிருந்து வேறுபட்டது என்றாலும் இந்தியா எந்தளவுக்குச் செல்லக் கூடியது என்பதற்கு அது ஓர் உதாரணம். ஆகவே, பேச்சுவார்த்தை மூலமான தீர்வு என்ற நிலைப்பாட்டை, இந்தியாவே முன்மொழிந்திருந்தமையானது ஜே.ஆரைப் பொறுத்த வரையில் பெரும் ஆறுதல் தரும் விடயம்தான்.   

இந்திரா-அமீர் சந்திப்பு  

எச்.டபிள்யூ.ஜெயவர்தனவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைகளைச் சந்திக்க இந்தியப் பிரதமர், இந்திரா தயாரானார். ஓகஸ்ட் 11 ஆம் திகதி, தமிழ்நாட்டை வந்தடைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம் மற்றும் இராஜவரோதயம் சம்பந்தன் ஆகியோர் ஓகஸ்ட் 14 ஆம் திகதி, டெல்லியில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தனர்.   

இந்தச் சந்திப்பு ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நீடித்ததுடன், இந்தச் சந்திப்பில் இந்திரா காந்தியின் விசேட ஆலோசகர் கோபால்சாமி பார்த்தசாரதியும் இந்திரா காந்தியின் செயலாளர் பி.ஸீ.அலெக்ஸாண்டரும் கலந்து கொண்டிருந்தனர்.   

ஆரம்பத்தில், இலங்கையின் இனப்பிரச்சினையின் வரலாற்றை இந்திரா காந்திக்கு எடுத்துரைத்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், அஹிம்சை வழிப்போராட்டத்தின் தோல்வியை அழுத்தமாக எடுத்துரைத்தோடு, தமிழ் மக்கள் உடனடியாகச் சந்தித்த பாதுகாப்பு பிரச்சினையையும் கூறினார்.   

நாங்கள் சுயாட்சியோடு கூடிய ஒரு சமஷ்டிப் பிராந்தியத்தையே கேட்டோம். அது மறுக்கப்பட்டதனால்தான், நாங்கள் தனி நாடு கேட்க வேண்டி வந்தது என்ற தமது யதார்த்தத்தையும் அமிர்தலிங்கம், இந்திரா காந்திக்கு எடுத்துரைத்தார்.   

இதன் பின்னர், இந்திரா காந்தி இலங்கையில் தமிழர் பிரச்சினை தொடர்பிலான இந்திய நிலைப்பாட்டை தெட்டத் தௌிவாக எடுத்துரைத்தார். 

இலங்கை பிளவுபடுவதை, இந்தியா விரும்பவில்லை; இலங்கைக்குள் வேறொரு தனியரசு உருவாகுவதை இந்தியா ஆதரிக்காது; ஆகவே, தமிழ் மக்கள் பிரிவினையை விடக் குறைவான ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான சுயாட்சிப் பிராந்தியம் என்ற தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். தனிநாடு கேட்பதற்கு முன்பதான உங்களுடைய முதல் கோரிக்கைக்கு, நீங்கள் மீண்டும் செல்ல வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக இந்திரா காந்தி, அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தலைமைகளிடம் தெரிவித்தார்.   

தன்னால் வௌிப்படையாகத் தமிழர் அல்லது சிங்களவர்களிடையே ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயற்பட முடியாது என்பதை எடுத்துரைத்த இந்திரா காந்தி, சிங்கள மக்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கு பாதிப்பு வராத வகையில், தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரத் தான் முயல்வதாகச் சொன்னார். தமிழ் மக்களை, இலங்கையின் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் சுயமரியாதையுடனும் வாழச் செய்வதே தனது முயற்சியின் குறிக்கோள் எனவும் தெரிவித்த இந்திரா காந்தி, இதைச் சிங்கள மக்களின் ஒட்டுமொத்த நலன்கள் பாதிக்காதவாறு செய்யவே தான் முயற்சிப்பதாகச் சொன்னார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்தி செய்யும் தீர்வுகள் எட்டப்பட்டால், அதைத்தான் வரவேற்பதாகச் சொன்ன அமிர்தலிங்கம், இந்திரா காந்தியின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்டார்.   

மேலும், தமிழ் மக்களின் அபிலாஷைகளாக 1956 இல் திருகோணமலையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (சமஷ்டிக் கட்சியின்) மாநாட்டின் சா.ஜே.வே.செல்வநாயகம் முன்வைத்த (1) தமிழ்த் தேசியம்; (2) தமிழ்த் தாயகம்; (3) தமிழர் சுயநிர்ணய உரிமை; (4) குடியுரிமை (இது குடியுரிமை இழந்த இந்தியா வம்சாவளி மக்கள் தொடர்பிலானது) ஆகிய நான்கு விடயதானங்களை இந்திரா காந்தியிடம் எடுத்துரைத்திருந்தார்.   

இதைத் தொடர்ந்து இந்திரா காந்தி,  எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுடனான தன்னுடைய சந்திப்புப் பற்றி, அமிர்தலிங்கம் குழுவினருக்கு எடுத்துரைத்தார்.   

( திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்தி-யா-ரா-காண்-படலம்-2-ஜே-ஆரின்-பெரும்-ஆறுதல்/91-204400

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
கொதித்தெழுந்த தமிழகமும் இந்திராவின் நிலைப்பாடும்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 112)

இந்தி(யா)ரா காண் படலம் - 3

கொதித்தெழுந்த தமிழகம்  

இலங்கை - இந்திய அரசியல் தலைமைகளின் சந்திப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு உருவாகியிருந்தது. தமிழக அரசியல் தலைமைகளும் ஈழத் தமிழர் அரசியலை தமது அரசியலுக்கு உவப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைப்போரும் உளர்.

ஆயினும், தலைமைகளின் எண்ணம் எதுவாக இருப்பினும், கொதித்தெழுந்த அந்த மக்கள் எண்ணம் தூய்மையானது. அது தமது சகோதரர்கள், அல்லது பொதுவாக பலரும் குறிப்பிடுவது போல “தொப்புள் கொடி உறவுகள்” அனுபவித்த பெருந்துயரின் கொடுமை கண்டு கனன்று எழுந்த ரௌத்திரத் தீ! தமிழகத்தின் திராவிட அரசியலிலும், வாக்குவங்கி அரசியல் தந்திரோபாயங்களிலும் மு.கருணாநிதி ஒரு தகையுயர் அரசியல்வாதி என்று சொன்னால் அது மிகையோ, வெறும் புகழ்ச்சியோ ஆகாது.

தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை ஆட்சியிலிருந்து அகற்ற, ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக எதிர்ப்பலையை உருவாக்கக் காத்திருந்த கருணாநிதிக்கு “கறுப்பு ஜூலை” ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம்.  

ஈழத் தமிழ் மக்களைக் காக்க மத்திய அரசுக்கு எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, போதுமான அழுத்தத்தைத் தரவில்லை என்று குற்றம் சுமத்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த கருணாநிதி, ஈழத் தமிழ் மக்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 1983 ஓகஸ்ட் 10ஆம் திகதி தன்னுடைய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்து, இராஜினாமாக் கடிதத்தை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் கே.ராஜாராமிடம் கையளித்தார். 

கருணாநிதியோடு இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் கே.அன்பழகனும் தனது இராஜினாமாக் கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்திருந்தார்.   

ஆனால், குறித்த இராஜினாமாக் கடிதங்கள் அதற்குரிய வகைமுறையில் அமையவில்லை என்ற தொழில்நுட்பக் காரணத்தைக் காட்டி, சபாநாயகர் கே.ராஜாராம் இராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். கருணாநிதியோ, அன்பழகனோ மீண்டும் உரிய வகைமுறையிலான இராஜினாமாக் கடிதத்தைக் கையளிக்கவுமில்லை, அதேவேளை அவர்கள் சட்டசபைக்குச் செல்வதையும் தவிர்த்தனர்.

ஆகவே நடைமுறையில், சட்டசபையிலிருந்து ஒதுங்கியிருந்தனர். இதே காலப்பகுதியில் தான் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் ஆதரவாளராக அறியப்படும் பழ.நெடுமாறன் இலங்கை நோக்கிய பெரும் நடைப் பயணம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். 1983 ஓகஸ்ட் 7ஆம் திகதி தொடங்கிய அந்த நடைப் பயணத்தின் இலக்கு, இராமேஸ்வரத்தை அடைந்து அங்கிருந்து படகுகள் மூலம் இலங்கையை அடைதல். இந்த நடைப் பயணத்தில் ஏறத்தாழ 5,000 பேர் கலந்து கொண்டதாகச் சில பதிவுகள் சொல்கின்றன.   

இந்திரா-அமீர் சந்திப்பின் தொடர்ச்சி  

இவையெல்லாம் நடந்து தமிழகம் கொதிநிலையிலிருந்த போதுதான், இந்திரா-எச்.டபிள்யூ.ஜெயவர்தன சந்திப்பும் அதனைத் தொடர்ந்து இந்திரா-அமீர் சந்திப்பும் நடைபெற்றன. இந்திரா-அமீர் சந்திப்பு பெரும் இணக்கமான சந்திப்பாகவே அமைந்தது. 

எச்.டபிள்யூ.ஜெயவர்தனவுடனான சந்திப்புப் பற்றி அமிர்தலிங்கத்துடன் பகிர்ந்து கொண்ட இந்திரா காந்தி, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபைகளைப் பலப்படுத்துவதனூடாக இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்க எண்ணம் கொண்டுள்ளதாகத் தன்னிடம் தெரிவித்ததாகவும், ஆயினும் அது மட்டுமே தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதல்ல என்று தான் சுட்டிக்காட்டியதாகவும், அதற்கு வேறு முன்மொழிவுகளை பரிசீலிக்கத் தனது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதற்காக சர்வகட்சி மாநாடொன்றை நடத்தவிருப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் அமிர்தலிங்கம் குழுவினருக்கு தெரிவித்ததுடன், அந்தச் சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்திடம் முன்வைத்தார்.   

இந்திரா காந்தியின் இந்தக் கோரிக்கை, அமிர்தலிங்கத்தை ஒரு தர்மசங்கடமான சூழலில் தள்ளியது. ஜே.ஆர் அரசாங்கத்துடன் பேசுவதில்லை என்ற தீர்மானத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஏலவே எடுத்திருந்தது. ஆனால் இந்தியாவையும் இந்திராவையும் தமக்குச் சாதகமாக வைத்திருக்க வேண்டிய தேவையும் அமிர்தலிங்கத்துக்கு இருந்தது.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தமது மன்னார் மாநாட்டில், ஜே.ஆருடன் இனிப் பேசுவதில்லை என்று முடிவெடுத்திருந்ததாக இந்திரா காந்தியிடம் சொன்ன அமிர்தலிங்கம், ஜே.ஆர் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வார், ஆனால், ஒருபோதும் அவற்றை நடைமுறைப்படுத்த மாட்டார் என்று சொன்னவர், இந்திரா காந்தியிடம் ஜே.ஆருடனான தன்னுடைய 11 மாதகால பேச்சுவார்த்தை விளையாட்டின் கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.   

இந்திரா காந்தியின் கோரிக்கையை மறுக்காது, அதனை ஒதுக்காது, தமது பக்க அனுபவத்தை அமிர்தலிங்கம் இந்திராவுக்கு எடுத்துரைத்ததுடன், “இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம். ஏனெனில் முன்னர் நாம் இணங்கிய விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை” என்று தனது ஆதங்கத்தை இந்திரா காந்தியிடம் முன்வைத்தார். இதனை செவிமடுத்த இந்திரா, தனக்கும் ஜே.ஆரில் நம்பிக்கையில்லை என்று சொன்னதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். ஆயினும் தான் முன்னர் சொன்னது போல இந்தப் பிரச்சினை, பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதனால், பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மறுக்கக்கூடாது என்று இந்திரா காந்தி எடுத்துரைத்தார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தமிழர்  ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டளையை இந்திரா காந்தி இராஜதந்திர மொழிகளில் சொன்னார் என்றும் பொருள் கொள்ளலாம்.   

பூகோள அரசியலின் முக்கியத்துவம்  

இந்த இடத்தில் பூகோள அரசியல் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம். பூகோள அரசியல் என்றால் என்ன? உலக அரசியலில் அமெரிக்காவின் தந்திரோபாயம் பற்றிய தனது நூலொன்றில் நிகலஸ் ஸ்பைக்மன் இப்படிச் சொல்கிறார்: “அமைச்சர்கள் வந்து போகலாம்; சர்வாதிகாரிகள் கூட மரணிக்கலாம்; ஆனால் நீண்ட மலைத் தொடர்கள் அசையாது நிற்கும்” என்கிறார். பூகோளவியல் நிலைமைகளை நாடுகளால் மாற்றமுடியாது.

அந்த மாற்றமுடியாத நிலைமைகள், ஒவ்வொரு நாட்டினதும் சர்வதேச உறவுகளைத் தீர்மானிப்பதிலும், வௌிநாட்டுக் கொள்கையை வடிவமைப்பதிலும் முக்கியத்துவம் வகிக்கிறது. “ஒரு நாட்டின் பூகோளவியலை அறிந்து கொள்ளுதல், அதன் வெளிநாட்டுக் கொள்கையை அறிதலுக்குச் சமன்” என்று நெப்போலியன் போனபார்ட் சொன்னதாகத் தனது பூகோள அரசியல் நூலொன்றில் றொபேட் டீ. கப்லன் குறிப்பிடுகிறார்.   

சுருங்கக் கூறின், பூகோள நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு, அரசியலை அணுகும் வகைமுறையைத் தான் பூகோள அரசியல் என்கிறோம். சில உதாரணங்கள் பூகோள அரசியலின் முக்கியத்துவத்தை உணர்த்த உதவும். 2014 இல் உக்ரேனின் க்ரிமியா பகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரஷ்யா, அதனை ரஷ்யாவுடன் இணைத்தது. இதற்கெதிராக மேற்குலகின் கடும் எதிர்ப்பு உருவானதோடு, ரஷ்யா மீதான சில தடைகளும் மேற்குலகால் அறிவிக்கப்பட்டது. ரஷ்யா ஏன் க்ரிமியாவை தன்னுடன் இணைத்தது? பல அரசியல் ஆய்வாளர்களும் பல கருத்துகளை முன்வைக்கிறார்கள். 

பூகோள அரசியலாளர்களின் கருத்துப்படி ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரேயொரு வெது நீர் துறைமுகம் க்ரிமிய பகுதியில் கருங்கடல் எல்லையில் அமைந்துள்ள ‘செவஸ்டபொல்’ துறைமுகமாகும். இங்குதான் ரஷ்யாவின் பெரும் கடற்படை நீண்டகாலமாக முகாமிட்டிருக்கிறது. ரஷ்யாவின் ஏனைய துறைமுகங்கள் குளிர் நீர்த் துறைமுகங்களாகும், குளிர்காலத்தில் அவை பனியுறைந்த நிலையில் பயன்படுத்த இயலாத துறைமுகங்களாகிவிடும்.  

 உக்ரேனின் நேட்டோவுக்கும், மேற்குக்கும் சாய்வான எழுச்சி, ரஷ்யாவை அச்சம் கொள்ளச் செய்தது. தனது ஒரேயொரு வெது நீர் துறைமுகத்தைப் பாதுகாத்துக் கொள்ளவே, உலக எதிர்ப்பையும் எதிர்கொண்டு, க்ரிமியாவை ரஷ்யா தன்னகப்படுத்தியது என்கிறார்கள் பூகோள அரசியலாளர்கள். இதுபோல இன்று சீனாவின் இன்றைய சர்வதேச முதலீடுகள் பெரும்பாலும், அதன் “பட்டுப்பாதையை” பலப்படுத்தும் வகையில் அமைவதையும் பூகோள அரசியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஜேர்மனியின் அமைச்சராக இருந்த ஈகொன் பஹர் “சர்வதேச அரசியல் என்பது ஒருபோதும் ஜனநாயகம் பற்றியதோ, மனித உரிமைகள் பற்றியதோ அல்ல, அது அரசுகளின் நலன் சார்ந்தது” என்று குறிப்பிடுகிறார். இந்தப் பூகோள அரசியல் அடிப்படைகளினூடாக நோக்கினால், இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை எத்தனை தூரம் பூகோள முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் உணரலாம். இது பற்றி இந்தத் தொடரில் உரிய இடங்களில் நாம் மேலும் தேடலாம்.   

விசேட விருந்தினராக அமீர்  

இந்திய நலனுக்கு இலங்கையுடனான பகை ஏற்புடையதல்ல என்பதை இந்தியா நன்கறியும். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து கடும் அழுத்தம் இந்திரா காந்திக்கு இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை அலட்சியம் செய்துவிட முடியாது சந்தர்ப்பசூழலை உருவாக்கியிருந்தது.

இந்தப் பின்னணியில்தான் ஜே.ஆர் அரசாங்கத்தைப் பேச்சுவார்த்தைக்கு தயார்படுத்தியபின், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் பேச்சுவார்த்தைக்கு உடன்படச் செய்யும் நகர்வை இந்திரா காந்தி முன்னெடுத்திருக்க வேண்டும். இந்திரா காந்தியின் அழைப்பை அமிர்தலிங்கம் ஏற்றுக் கொண்டார்.அமிர்தலிங்கத்தின் அணுகுமுறை இந்திரா காந்திக்கு மிகப் பிடித்திருக்க வேண்டும், அவர் அமிர்தலிங்கத்துக்கு ஒரு மிகப்பெரிய கௌரவத்தை அளித்தார்.   

மறுநாள், ஓகஸ்ட் 15ஆம் திகதி இந்தியாவின் சுதந்திரதின நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அமிர்தலிங்கத்துக்கு அழைப்பு விடுத்தார். டெல்லி, செங்கோட்டையில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் வழமையாக வௌிநாடுகளின் அரசுத் தலைவர்கள் விருந்தினராகக் கலந்துகொண்டு அமரும் பகுதியில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அமரவைக்கப்பட்டிருந்தார்.

தனது சுதந்திரதின உரையில், இலங்கையில் தமிழருக்கெதிராக நடைபெற்ற வன்முறைகளை இனஅழிப்பு என்று இந்திரா காந்தி குறிப்பிட்டு அதனைக் கண்டித்ததுடன், தமிழ் மக்கள் கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் வாழ இந்தியா உதவிசெய்யும் என்று குறிப்பிட்டதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். இந்திரா காந்தி, இந்திய சுதந்திர தின உரையில், இலங்கைத் தமிழர் பற்றியும் குறிப்பிட கொதித்துக் கொண்டிருந்த தமிழகம் முக்கிய காரணம் எனலாம்.   

இராமேஸ்வரத்துடன் முற்றுப்பெற்ற நடைபயணம்  

மறுபுறத்தில், ஓகஸ்ட் 15ஆம் திகதி, இந்திய சுதந்திர தினத்தன்று இலங்கை நோக்கிய தனது நடைப் பயணத்தின் எட்டாவது நாளில் இராமேஸ்வரத்தை அடைந்து, அங்கிருந்து படகுகள் மூலம் இலங்கையைக் கடக்கும் திட்டத்துடன் நெடுமாறன் பயணித்துக் கொண்டிருந்தார். இது பற்றித் தகவலறிந்த ஜே.ஆர், இலங்கை எல்லைகளுக்குள் எந்தப் படகுகளும் நுழையாது பாதுகாக்க இலங்கை கடற்படைக்குக் கட்டளையிட்டிருந்தார்.

இந்திய மத்திய அரசுக்கும் இது பெரும் சிக்கலைத் தோற்றுவித்திருந்தது. தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை தொடர்புகொண்ட இந்திரா, சுதந்திர தினத்தில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்றும், நெடுமாறன் இலங்கைக்கு படகேறிச் செல்வதைத் தடுக்குமாறும் வேண்டினார்.

எம்.ஜி.ஆரின் துரித நடவடிக்கையில் இராமேஸ்வரத்திலிருந்த படகுகள் அகற்றப்பட்டன. இராமேஸ்வரத்தை அடைந்த நெடுமாறன் இலங்கை செல்லப் படகுகள் இல்லாது, தனது நடைப் பயணத்தை அங்கேயே முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் எம்.ஜி.ஆரைக் கடுமையாகச் சாடினார்.   

ஜே.ஆரின் சினம்  

ஓர் அரசுத்தலைவருக்கு தர வேண்டிய மரியாதை எதிர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு வழங்கப்பட்டதும், இலங்கையைக் கண்டித்து இந்திரா காந்தி தனது உரையில் குறிப்பிட்ட விடயங்களும், ஜே.ஆருக்கு அதிருப்தியையும் விசனத்தையும் தந்தது என்று சொல்வதைவிட சினத்தை உண்டாக்கியது என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். 

இந்தியாவுக்கு எதிராக இலங்கை ஊடகங்கள் பொங்கியெழுந்தன. இதில் அரச ஊடகங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வல்லாதிக்கத்தையும் “பெரியண்ணன்தனத்தையும்” கண்டித்து இலங்கை ஊடகங்களில் கட்டுரைகள் பிரசுரமாயின.  

(திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொதித்தெழுந்த-தமிழகமும்-இந்திராவின்-நிலைப்பாடும்/91-204797

Link to comment
Share on other sites

இலங்கையும் தமிழரும் இந்திய நலனும்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-113)

இந்தியக் கோட்பாடு

இந்திய சுதந்திர தினத்தில், விசேட விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு, இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அளித்த மரியாதை, ஜனாதிபதி ஜே.ஆருக்கும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், கடும் சினத்தையும் விசனத்தையும் அளித்தது. 

இதன் எதிரொலியை, தேசிய நாளேடுகளில் வந்த இந்திய எதிர்ப்புக் கருத்துகளில் காணலாம். இந்திரா காந்தி, இலங்கையைக் கண்டிக்கும் வகையில் பேசியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு நாட்டுக்கும், ஒரு வெளியுறவுக் கொள்கையுண்டு. அரசாங்கங்கள் மாறினாலும், வெளியுறவுக் கொள்கைகள், பெருமளவில் மாறுவதில்லை என்பது, பொதுவாக அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படும் கருத்து. 

இதற்குக் காரணம், வெளியுறவுக் கொள்கைகளானவை, அந்த நாட்டின் தேசிய நலன்களை முன்னிறுத்திக் கட்டமைக்கப்படுகிறது. எந்த அரசாங்கம் வந்தாலும், நாட்டின் தேசிய நலன்கள் பற்றிய எண்ணப்பாடுகள் பெருமளவு மாறுவதில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், உலகளாவிய வர்த்தகம், அதன் பிரதான நலன். அதன் வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்காகவும் அதன் பொருளாதார நலன்களை மையப்படுத்தியுமே, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை கட்டமைக்கப்பட்டது. 
இரண்டாம் உலகப் போர் வரை, “தலையீட்டு” (interventionist) வெளியுறவுக் கொள்கை, அமெரிக்காவிடம் காணப்படவில்லை எனலாம். 

இரண்டாம் உலகப் போருக்குப் பின், “தலையீடு” என்பது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பிரதானமானதோர் அங்கமாகவே மாறிவிட்டது. இதன் பின்னணியில், அதன் வணிக, வர்த்தக நலன்களே பிரதானமாக இருக்கின்றன.

அமெரிக்க-சோவியத் பனிப் போரின் முடிவின் பின்னர், சோவியத் ஒன்றியம் பிளவடைந்ததன் பின்னர், சமகாலத்தில் நிகரில்லா வல்லரசாக அமெரிக்கா திகழ்கிறது என்பது, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மறுக்க முடியாத உண்மையாகிறது.

“நீல நீர் கடற்படைகளில்” அமெரிக்கக் கடற்படையின் பலத்துக்கும் பரவலுக்கும் வீச்சுக்கும் நிகராக, சமகாலத்தில் இன்னொரு கடற்படை கிடையாது. சீனா, இப்பொழுதுதான் மிகப்பெரும் “நீல நீர் கடற்படையை” உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 

ஆகவே, உளகளவில் வல்லரசு என்று கருதும் நிலையில், அமெரிக்கா இருப்பினும், பிராந்திய வல்லரசுகளாக வேறு சில நாடுகள் உருவெடுத்துள்ளன. அந்த வகையில், சீனா தன்னை, தென்கிழக்காசிய பிராந்தியத்தின் வல்லரசாகக் கருதுகிறது. இதைப் போலவே, இந்தியா தன்னை தெற்காசியாவின் வல்லரசாகப் பார்க்கிறது. 

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும், இந்த அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நேருவின் காலம் முதல், சுதந்திர இந்தியாவானது, சர்வதேச அளவில் தன்னை அணிசேரா நாடாக முன்னிறுத்தி வருகிறது. 
ஆனால், அதன் பிராந்திய வெளியுறவுக் கொள்கைகளிலும், அணுகுமுறைகளிலும் 1980ஆம் ஆண்டுக் காலப் பகுதியளவில், சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. 

இவை பெரும்பாலும் பிராந்திய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டமைந்தவை. சுர்ஜித் மான்சிங், ராஜு தோமஸ் ஆகிய இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய ஆய்வாளர்கள், இந்திய வெளியுறவுக் கொள்கைகள், 30 ஆண்டுகளில் பெருமளவு மாறியிருந்தாலும், அமெரிக்காவின் “மொன்றோ கோட்பாடு”, “ஐசன்ஹவர் கோட்பாடு”, “நிக்ஸன் கோட்பாடு” (குவாம் கோட்பாடு) போன்று வெளிப்படையானக் கொள்கைகளை, இந்தியா, பிராந்திய பாதுகாப்புத் தொடர்பில் கொண்டிருக்கவில்லை என்று கருத்துரைக்கிறார்கள். 

ஆனால், பிரபலமான அரசறிவியலாளரும் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஆய்வாளருமான பபானி சென் குப்தா, வெளிப்படையாக இந்தியா அறிவிக்காவிட்டாலும், பிராந்திய பாதுகாப்பு தொடர்பில், வெளிநாட்டுக் கொள்கை ஒன்றைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். 

இதனை அவர் முதலில், “பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான இந்தியக் கோட்பாடு” என்று விளித்தார். காலவோட்டத்தில், அது “இந்தியக் கோட்பாடு” என்றும் “இந்திரா கோட்பாடு” என்றும், பின்னர் “ராஜீவ் கோட்பாடு” என்றும் குறிக்கப்பட்டது. 

பபானி சென் குப்தா குறிப்பிட்ட இந்தியக் கோட்பாடானது, மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாடுகளில் தலையிட, இந்தியாவுக்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது. அதேவேளை, எந்த நாடும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை, இந்தியா கடுமையாக எதிர்க்கும். 

இரண்டாவது, இந்திய நலன்களுக்கு, வெளிப்படையாக அல்லது உள்ளார்ந்த வகையில் எதிராக அமையும் வகையில், வெளிநாடொன்று, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாட்டில் தலையிடுவதை, இந்தியா சகித்துக் கொள்ளாது. ஆகவே, எந்தத் தெற்காசிய நாடும் இந்தியாவுக்கு எதிராக அமையத் தக்கவகையில், வெளிநாடொன்றிடமிருந்து இராணுவ உதவியைப் பெறக் கூடாது. 

மூன்றாவது, ஒரு தெற்காசிய நாட்டுக்குப் பாரதூரமான உள்ளக முரண்பாட்டை எதிர்கொள்ள அல்லது சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்துக்குச் சகிக்கமுடியாத அச்சுறுத்தல் காரணமாக, வெளியக உதவி உண்மையாகவே தேவைப்படுமானால், அது இந்தியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளிடம் உதவி கோரலாம். அத்தகைய சூழலில், இந்தியாவைத் தவிர்த்தலானது, குறித்த அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும். 

இந்த மூன்று அடிப்படைகளையும் கொண்டதுதான் “இந்தியாவின் பிராந்திய பாதுகாப்புக் கொள்கை” என்று 1983ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி, ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் பபானி சென் குப்தா எழுதியிருந்தார். சுருக்கமாக இந்தக் கொள்கையானது, இந்தியா, தன்னை தெற்காசியப் பிராந்தியத்தின் (பாகிஸ்தான் தவிர்த்து) “பெரியண்ணனாக” உருவகித்துக் கொள்வதைச் சுட்டுகிறது. 

இலங்கை விவகாரத்தை “இந்தியக் கோட்பாட்டின்” பின்னணியில் ஆராயும் போது, நடைபெற்ற சம்பவங்களுக்கு மேலும் வெளிச்சம் கிடைப்பதைக் காணலாம். 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பு, அதற்குப் முன்னரான தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் ஆகியவற்றின் பின்னணியில், இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு உதவியை, குறிப்பாக மேற்கின் இராணுவ உதவியை வேண்டியதாகச் செய்தி பரவியது. இந்தச் செய்தி, டெல்லியையும் எட்டியது. 

இதன் பின்னணியில்தான், 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பின் நிமித்தம், இந்தியா தன் படைகளை இலங்கைக்கு அனுப்பவிருந்ததென, இலங்கை அச்சம் கொண்டது. 
இதனைத் தொடர்ந்துதான், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டின், உடனடி இந்திய விஜயமும் இலங்கை யாரிடமும் இராணுவ உதவி கோரவில்லை என்ற தெளிவுபடுத்தலும், இந்தியா, இலங்கை மீது நேரடியாக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளாது என்று உறுதிமொழியும் பெறப்பட்டது.

இலங்கையின் முக்கியத்துவம்

இலங்கை ஒரு சிறிய தீவு. நேபாளத்தின் அளவில் பாதியளவே இலங்கை. இந்தியாவைக் கொலனித்துவ ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்த பிரித்தானியா, நேபாளத்தையும் பூட்டானையும் போரிலே வெற்றி கொண்டிருப்பினும், அந்நாடுகளைக் கொலனியாதிக்கத்துக்குள் கொண்டு வரவில்லை. 

இதற்கு அடிப்படைக் காரணம், அங்கிருந்து எடுத்துக் கொள்வதற்கு கிழக்கிந்திய கம்பனிக்கு எதுவுமில்லை என்பதே. இலங்கை கூட, பெரும் இந்திய நிலப்பரப்போடு ஒப்பிடுகையில், கிழக்கிந்தியக் கம்பனி விரும்பத்தக்க வர்த்தக வலுவுடைய வளங்கள் நிறைந்த நிலப்பரப்பாக இருக்கவில்லை.

அப்படியானால், அந்நியர், இலங்கை மீது ஆர்வம் கொள்ளக் காரணமென்ன? இன்று சீனா, பெரும் உற்பத்திவளம், கவர்ச்சிமிகு மனிதவளம் இல்லாத இலங்கை மீது இத்தனை அக்கறை கொள்ளக் காரணமென்ன? இலங்கையின் உலகளாவிய முக்கியத்துவத்துக்குக் காரணம், இலங்கையில் பூகோள அமைவிடம். 

இந்தப் பூகோள அமைவிடம்தான், இலங்கையின் பெரும் வளம்; பெரும் பலம் எல்லாமே. கிழக்கு-மேற்கு கப்பல் போக்குவரத்தைப் பொறுத்தவரை, இலங்கை ஒரு மத்திய நிலையம். 

இது இவ்வாறாக இருக்க, இந்தியாவைப் பொறுத்தவரையில், அதன் தென் எல்லையாக இலங்கை இருக்கிறது. பாகிஸ்தான் என்பது, இந்தியாவின் மாற்றமுடியாத “தலைவலி”. ஆனால், அதைத்தாண்டி, மற்றைய தெற்காசிய நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில், அல்லது தன்னுடைய சார்பு நாடுகளாக வைத்துக் கொள்வதில், இந்தியா எப்போதும், அதுவும் குறிப்பாக இந்திரா காந்தியின் காலத்திலிருந்து, முனைப்பாக இருந்திருக்கிறது. 

இலங்கை - இந்திய வரலாற்று உறவுகள் இனிப்பும் கசப்பும் கலந்தவையாகவே இருந்திருக்கின்றன. படையெடுப்புகளும் கைப்பற்றல்களும் நடைபெற்ற அதேவேளை, சில மன்னர்களிடையே சுமூகமான, நட்பான உறவுகளும் இருந்திருக்கின்றன.

எது எவ்வாறாயினும், இந்தியா மீதான ஓர் அந்நியப் பார்வை, இலங்கையிடம், குறிப்பாக பெரும்பான்மை இலங்கை மக்களிடையே இருக்கவே செய்தது. 1981ஆம் ஆண்டு நடந்த சம்பவமொன்றை, இங்கு சுட்டிக்காட்டுதல் முக்கியமாகிறது.

1981ஆம் ஆண்டு மே மாதத்தில், இலங்கை முன்னாள் பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ, தென் கிழக்காசியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்த பிரதமர் பிரேமதாஸ, பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது, இலங்கை “ஆசியான்” (ASEAN) அமைப்பில் இணைய விருப்பம் கொண்டிருக்கின்றதெனத் தெரிவித்திருந்தார். 

இதை, பிரேமதாஸ கூ‌றியதற்கு ஒரு வாரமளவுக்கு முன்னர்தான், தெற்காசிய அமைப்பொன்றை ஏற்படுத்துவது தொடர்பான பங்களாதேஷின் முன்மொழிவை, ஏலவே ஏற்றிருந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர், கொழும்பில் அது பற்றிய கூட்டமொன்றை நடத்த அழைத்ததன் பேரில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள், இலங்கை ஆகியவற்றின் வெளிவிவகார அமைச்சர்கள், கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். 

இந்த நிலையில்தான், பிரேமதாஸவின் கருத்து வெளிவந்திருந்தது. நுட்பமாகப் பார்த்தால், இலங்கை, தென்கிழக்காசிய நாடு அல்ல; ஆனால், தெற்காசிய அமைப்பொன்று உருவானால், அதில் இந்திய ஆதிக்கம் தவிர்க்க முடியாதது. 

ஆகவே, பிரேமதாஸ உள்ளிட்ட இந்திய ஆதிக்க எதிர்ப்புக் கொள்கையுடையவர்கள், தெற்காசிய ஒன்றியம் ஒன்றுக்குப் பதிலாக, ஆசியானில் இணைய விரும்பியிருக்கலாம். 
அண்மையில் கூட, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை “சார்க்” (SAARC) அமைப்புக்கு பதிலாக “ஆசியான்” (ASEAN) அமைப்பில் இணைந்திருக்கலாம் என்ற அர்த்தப்படக் கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார். 

இலங்கையின் இந்தப் போக்கு இந்தியாவுக்கு, குறிப்பாக “பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இந்தியக் கோட்பாட்டுக்கு” முரண்பாடாகச் செல்வதை, இந்தியா அவதானித்துக் கொண்டுதான் இருந்திருக்கும். இந்தியாவின் இந்த அதிருப்தியை, ஜே.ஆரும் அவரது அரசாங்கமும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

உளவு அரசியல்

இங்கு இன்னொரு விடயமும் குறிப்பிடப்பட வேண்டும். சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில், அதிகம் உச்சரிக்கப்பட்ட உளவு நிறுவனமொன்றின் பெயர் என்றால், அது “றோ” (RAW) ஆகத்தான் இருக்கும். 

இந்திரா காந்தியின் ஆட்சியில், பிரதமர் அலுவலகத்துக்குக் கீழாக இயங்கும் படி உருவாக்கப்பட்ட இந்தியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனம் தான் இந்த “றோ” என்று சுருக்கமாக அறியப்படும் “ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு” (Research and Analysis Wing). 

இலங்கையின் ஆரம்பகால தமிழ் இளைஞர், ஆயுதக் குழுக்களுக்குப் பயிற்சிகளையும் வளங்களையும் வழங்கியதில், RAW வின் பங்கு உண்டு என்று, அந்த வரலாற்றை எழுதிய பலரும் குறிப்பிடுகிறார்கள். 

இந்திரா காந்தியின் ஆட்சி, 1977ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து, மொரார்ஜி தேசாய் பிரதமரானபோது, “றோ”வின் முக்கியத்துவம் குறைந்தது. ஆனால், மீண்டும் இந்திரா பிரதமரான பின்பு, “றோ”வின் செயற்பாடுகள் புத்துணர்ச்சிபெற்று ஆரம்பமாயின. 

மீண்டும், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களை வளர்த்து விடுவதில், “றோ”வின் பங்கு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள், அதிலிருந்து பிரிந்து உமா மகேஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்ட புளொட், இதைவிடவும், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களும், டெலா, டெலே, ஈ.என்.டீ.எல்.எப் என்று ஏறத்தாழ இன்னும் 25 இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. இவற்றில், கணிசமானவை, இந்தியாவோடு தொடர்புகளைக் கொண்டிருந்தன.

பிரச்சினைதான் துருப்புச் சீட்டு

இந்தியா விரும்பியிருந்தால், தமிழர்களுக்குத் தனிநாட்டை உருவாக்கியிருக்கலாம். ஓர் இன அழிப்பு இடம்பெற்று முடிந்த சூழலை விட, அதற்குச் சாதகமான வேறொரு சூழல் இருந்திருக்க முடியாது என்பதுடன், அதற்கான படைபலமும் அரசியல் பலமும் கூட, அன்று இந்தியாவிடம் இருந்தது.

இந்தியா அதை அன்று ஏன் செய்யவில்லை? ஏன் என்றுமே அதைச் செய்யப் போவதில்லை? 

வெறுமனே இன்னொரு தெற்காசிய நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடாத அதன் வெளிநாட்டுக் கொள்கை மட்டும்தான் காரணமா? 

அப்படியானால், வேறு தெற்காசிய நாட்டுக்குள் பிரிவினை கோரும் இயக்கங்களுக்குப் பயிற்சியளித்தல், அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் செயற்பாடில்லையா? 
இந்தியாவோ, வேறு எந்த நாடோ, அதன் முதலும் கடைசியுமான அக்கறை அதனுடைய சொந்த நலனில் மட்டும்தான். 

இலங்கையின் பிரிவினையைவிட, இலங்கையில் பிரச்சினையிருப்பதுதான், நிச்சயமாக இந்திய நலனுக்கு சாதகமானது என்பதுடன், இந்தியா இலங்கையின் மீது ஒரு கைவைத்திருக்கக் கூடிய நிலையையும் தரும் என்பதை, இந்தியா நிச்சயம் அறிந்திருந்திருக்கும். ஏனென்றால், இலங்கையின் இனப்பிரச்சினைதான், இந்தியாவின் துருப்புச் சீட்டு.

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையும்-தமிழரும்-இந்திய-நலனும்/91-205175

Link to comment
Share on other sites

‘மனிதாபிமானத் தலையீடு’ எனும் துருப்புச் சீட்டு
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 114)

சர்வதேசத் தலையீடு  

நவீன சர்வதேசச் சட்டவியலின் தந்தை என்று கருதப்படும் லஸ்ஸா பிரான்ஸிஸ் லோரன்ஸ் ஒப்பன்ஹய்ம், ‘சர்வதேசத் தலையீடு’ என்பதை, ‘ஒரு நாடு, பிறிதொரு நாட்டின் மீது, அந்த நாட்டில் சில நடவடிக்கைகளை அல்லது விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கில், பலாத்காரமாக அல்லது எதேச்சாதிகாரமாக தலையீடு செய்தல்’ என்று வரையறுக்கிறார்.   

தலையீடு என்பது, நேரடி இராணுவத் தலையீடுகளைத் தாண்டி, பொருளாதாரத் தலையீடுகள், இராஜதந்திரத் தலையீடுகள் என்றும் வகைப்படும்.  

சர்வதேசத் சட்டத்தின்படி, ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது பலாத்காரமாக, அல்லது எதேச்சாதிகாரமாகத் தலையிடுதல் சட்டவிரோதச் செயற்பாடாகும். இதற்குக் காரணம், ஒவ்வோர் அரசும் (நாடும்) கொண்டுள்ள இறைமை. ‘இறைமை’ என்ற பதம் உணர்த்தும் கோட்பாட்டின் பொருள் பற்றி உலகளாவிய உடன்பாடு ஏதுமில்லை. ஆனால் சுருக்கமாகச் சொல்வதானால், எவராலும் முறியடிக்கப்பட முடியாது; முற்று முழுதான மீயுயர் அதிகாரமே இறைமை எனலாம்.  

இந்த இறைமையின் வழியேதான், அரசுகள் தங்கள் மக்கள் மீது அதிகாரம் செலுத்துகின்றன; அதுபோல, இந்த இறைமையின் வழியாகத்தான் ஏனைய அரசுகள், தம்மீது அதிகாரம் செலுத்துவதிலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றன. ஆகவே, இறைமையுள்ள ஒரு நாட்டின் மீது, அந்நாடு வேண்டிக் கொண்டாலன்றி, தலையிடுதல் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.  

மனிதாபிமானத் தலையீடு  

அதேவேளை, மனிதாபிமான காரணங்களுக்காகத் தலையிடுவதன் நியாயம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள், இன்று வரை தொடர்கின்றன. 1999 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் உரையாற்றிய அன்றைய ஐ.நா செயலாளர் நாயகம் கொபி அனான், “பாரதுரமான, திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் பொழுது, உலகம் ஒரு மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்றார்.  

ருவாண்டாப் படுகொலைகளைச் சுட்டிப் பேசிய அவர், “அந்தக் கறுப்பு நாட்களில், பெரும் இனஅழிப்பு நடைபெறவிருந்த மணித்தியாலங்களில், டுட்ஸி மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கத் தயாராக இருந்த இணைந்த அரசுகள் சிலவற்றுக்கு, சபை அங்கிகாரம் அளிக்காது விட்டிருந்தால், அந்த இணைந்த நாடுகள் ஒரு மூலையில் நின்று கொண்டு, ஒரு பெருங்கொடுமையை அரங்கேற விட்டுப் பார்த்திருந்திருக்க வேண்டுமா?” என்று கேள்வியெழுப்பினார்.   

‘மனிதாபிமானத் தலையீடு’ என்ற சித்தாந்தம், புனித அகஸ்தீனார் காலமளவுக்கு (ஐந்தாம் நூற்றாண்டு) பழமையானது. புனித அகஸ்தீனார், இதை ‘நியாயமான போர்’ என்றழைத்தார்.   

ஆனால், ‘மனிதாபிமானத் தலையீடு’ என்பது மதம், இனம், ஓர் அரசின் சுயநலம் என்பவற்றை நோக்காகக் கொண்ட, எதேச்சாதிகார படையெடுப்புகளுக்கு நியாயம் கற்பிக்கும் செயலாக மாறிய வரலாற்றை, நாம் 19 ஆம் - 20 ஆம் நூற்றாண்டுகளிலே பார்க்கக் கூடியதாக இருந்தது.   

அந்நிய மண்ணில், ஜேர்மன் இனச் சிறுபான்மையினர் அடக்குமுறைக்கானதைத் தடுக்க, ‘மனிதாபிமான நடவடிக்கை’ எடுக்கப்படும் என்று, ஹிட்லர் முழங்கியமை, இங்கு ஞாபகப்படுத்தத்தக்கது.   

அமெரிக்கா தோல்வியடைந்த ‘நிக்கரக்குவா’ வழக்கில், சர்வதேச நீதிமன்றமானது, அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிராக நிக்காரக்குவாவுக்குச் சார்பாகத் தீர்ப்பளித்திருந்தது.   
அதில் நீதிமன்று, “மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கும், மனித உரிமைகள் மீதான மதிப்பை உறுதிப்படுத்தவதற்கும் பலத்தைப் பிரயோகித்தல் என்பது பொருத்தமானதாக இருக்காது” என்ற அபிப்பிராயத்தை உரைத்திருந்தது.   

ஆகவே, ‘மனிதாபிமானத் தலையீடு’ என்ற விடயத்தில் கூட, இருவேறுபட்ட கருத்துகளே நிலவுகின்றன. ஆனால், ஒரு நாடு, இன்னொரு நாட்டில் தலையிடுவதற்கான ஒருசாராரேனும் ஏற்றுக் கொள்ளும் காரணமாக ‘மனிதானிமானமே’ திகழ்கிறது.   

இந்தியாவின் உபாயம்  

இந்தியாவைப் பொறுத்தவரை, பூகோள அமைவியலின்படி, இலங்கையானது இந்தியாவுக்கு மிகமுக்கியமானதொரு தந்திரோபாயப் புள்ளியில் அமைந்திருக்கிறது.   

இலங்கை மீது, இந்தியா ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதை விட, வேறு நாடுகள் ஆதிக்கம் செலுத்தி விடக் கூடாது என்பதில்தான், இந்தியா குறியாக இருக்கிறது என்பதை பபானி சென் குப்தா வரையறுத்த ‘இந்தியக் கோட்பாடு’ வெளிப்படுத்தி நிற்கிறது.   

இந்தப் பின்புலத்தில், இலங்கையின் இனப்பிரச்சினையையும் அதில் இந்தியாவின் வகிபாகத்தையும் நாம் உற்று நோக்குதல் அவசியமாகிறது. ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம், மேற்கு சார் அரசாங்கம் என்பது வெளிப்படையாகவே தெரிந்த விடயமாக இருந்தது. ஜே.ஆர் மிக வெளிப்படையாகவே அவரது அமெரிக்க சார்பைக் குறிக்கும் வகையில் ‘யங்கி டிக்கி’ (Yankie Dickie) என்றழைக்கப்பட்டார்.   

ஒப்பீட்டளவில் இந்திரா காந்திக்கு, ஜே.ஆரைவிட சிறிமாவுடன் நெருங்கிய உறவு இருந்தது என்று பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே, ஜே.ஆர் ஆட்சி மீதான ஐயப்பார்வை, இந்திரா காந்தியின் இந்தியாவுக்கு இருந்தது.   

ஜே.ஆர் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியொன்றைச் சந்தித்த வேளையில், இந்தியா பெருமளவுக்குப் பொருளாதார உதவிகளை அளித்திருந்தது. ஆனாலும், ஜே.ஆர், முழுமையாக இந்தியாவின் நம்பிக்கையை வென்றிருந்தவர் அல்ல.   

சர்வதேச அரசியலைப் கவனித்தால், அனைத்து நாடுகளும், தமக்கு வரக்கூடும் என்று அவை எண்ணும் மோசமான சூழலை, எதிர்கொள்ளத் தம்மைத் தயாராக்கும் நடவடிக்கைகளையே, தொடர்ந்து செய்வதைக் காணலாம்.   

இந்தியாவுக்கு, இலங்கை அரசாங்கத்தின் இந்தியா தொடர்பான நிலைப்பாடு பற்றிய ஐயம் தொடர்ந்த வேளையில், இந்தியா தனக்கு வரக்கூடும் என்ற மோசமாக சூழலுக்குத் தன்னைத் தயார்படுத்தத் திட்டமிட்டிருக்கலாம்.   

ஆனால், இலங்கை, அமெரிக்காவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ நல்லுறவை ஏற்படுத்தினால், அதை இந்தியாவால் நேரடியாகத் தடுக்க முடியுமா? அல்லது இந்தியா தன் படைகளை, இலங்கைக்கு அனுப்பி, இலங்கையை ஆக்கிரமிக்க முடியுமா? அத்தகைய ஆக்கிரமிப்புகள் சர்வதேசச் சட்டங்களின் கீழ் ஏற்புடையவையல்ல. அதை அவ்வளவு இலகுவாக இந்தியாவால் செய்ய முடியாது.   

அப்படியானால் இலங்கை, இந்தியாவுக்கு விரோதமான போக்கை எடுக்கும் சூழலொன்று உருவானால், இந்தியா அதைத் தடுப்பதற்கு, இலங்கை மீது நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கான வெளியொன்று அவசியமாகிறது. இலங்கையின் இனப்பிரச்சினை என்பதுதான் அந்த வெளி; அந்த வெளிதான், இந்தியாவின் துருப்புச்சீட்டு என்று வாதிடுபவர்களின் வாதத்தில் நியாயங்கள் இல்லாமல் இல்லை.   

இந்த அடிப்படையிலான வாதத்தை முன்வைப்பவர்கள், இந்தியா, இலங்கையில் தனிநாடு கோரிய, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் பலவற்றுக்குப் பயிற்சியும் உதவியும் அளித்ததன் பின்னணி இதுதான் என்கிறார்கள்.  

இந்த இடத்தில்தான் முக்கியமானதொரு கேள்வி எழுகிறது. இலங்கையில் நடந்து முடிந்த 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு என்பது, ‘மனிதாபிமான ரீதியில்’ இந்தியா, இலங்கையில் தலையிடவும், தமிழ்த்தரப்புக் கோரிய பிரிவினையை ஏற்படுத்திக் கொடுக்கவும் பொருத்தமான ஒரு வாய்ப்பாக இருந்திருக்குமே; அப்படி ஒரு தனி நாடு, இந்திய உதவியுடன் ஸ்தாபிக்கப்பட்டால், அது இந்தியச் சார்பாக இருந்திருக்குமே; அதை ஏன் இந்தியா செய்யவில்லை?   

ஒரு சாரார், அது இந்தியாவின் தமிழ் நாடு பிரிவடைவதற்கு வழிவகுத்திருக்கும். தமிழ் நாடும், தமிழீழமும் ஒன்றிணைந்து தனித் தமிழரசு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் என்று காரணமுரைப்பார்.   

ஆனால், தமிழ்நாடு, இந்தியாவிலிருந்து பிரிவதற்கான வாய்ப்புகள் ஈ.வே.ராமசாமி மற்றும் சீ.என்.அண்ணாதுரையின் ஆரம்பகால ‘திராவிடநாடு’ கொள்கை கூட, 1963களோடு கைவிடப்பட்டுவிட்டது. அதன் பின்னர், அத்தகையதொரு எழுச்சி எழவில்லை. மாறாக ‘இந்திய தேசிய’ அடையாளத்தை இந்தியாவெங்கும் வேரூன்றச் செய்வதில், இந்திய அரசு பெருமளவில் வெற்றிபெற்று விட்டது என்றே சொல்லலாம்.   

மேலும், தமிழ்நாடு பிரிவதை வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும், தமிழ்நாடு மற்றும் தமிழீழத்தின் சமூகக்கட்டமைப்பையும், சித்தாந்த அடிப்படைகளையும் கொண்டு பார்த்தால், அவை இணைவதற்கான சாத்தியக் கூறுகள் என்பது ஐயத்துக்குரியதே.   

இன்னொரு பார்வையில் பார்த்தால், இலங்கையில் தமிழர் அரசு ஒன்று உருவாவதற்கான பிரிவினையை, இந்தியா சாத்தியப்படுத்தியிருக்குமானால், அது இந்தியாவின் பிரச்சினையை இரட்டிப்பாக்கியிருக்கும் என்பதோடு, இன்னும் சிக்கல்மிக்கதாக ஆக்கியிருக்கும் எனலாம்.   

இன்று, இந்தியாவின் தென் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரே நாடு இலங்கை. தனித்து இலங்கை என்ற நாடு இந்தியாவுக்கு ஓர் அச்சுறுத்தல் அல்ல; ஆனால் இலங்கையில், இந்திய நலன்களுக்கு எதிரான வேறொருநாடு மையம் கொள்ளுமானால், அது இந்தியாவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.   

குறிப்பாக, இந்துசமுத்திரத்தின் கடல் போக்குவரத்திலும், அதைக் கண்காணிப்பதிலும் இலங்கை என்ற நிலப்பரப்பு ஒரு முக்கிய தந்திரோபாயப் புள்ளி. ஆகவே, வேறு நாடுகள் இலங்கையில் தலையிடாதவாறு, இலங்கையை நட்பு நாடாக வைத்துக் கொள்வதுதான், இந்தியாவுக்கு ஏதுவான தந்திரோபாயமாக இருக்கும்.   

இலங்கைக்குள் ஒரு பிரிவை உண்டாக்கினால், அது அந்த நிலப்பரப்பில் ஒன்றுக்கொன்று, பகையான இரண்டு அரசுகளைத் தோற்றுவிக்கும்; இந்தச் சூழலில் பிரிவினைக்குத் துணைபோன இந்தியாவுக்கு, முற்றிலும் எதிரான நாடாக இலங்கை அரசு மாறும்.   

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தமிழர் அரசும் எப்போதும் இந்திய சார்புடையதாகவே இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. அப்படி இருந்தாலும் கூட, அது இலங்கை என்ற நிலப்பரப்பின் ஒரு பகுதிக்கே மட்டுப்பட்டதாக இருக்கும். எஞ்சிய பகுதி வெளிப்படையாக இந்தியாவுக்கு விரோதமாகவே இருக்கும்.   

இது நடப்பில் உள்ளதைவிட, இந்தியாவுக்கு நிச்சயமாக, மேலும் அச்சுறுத்தலான சூழலையே உருவாக்கும். ஆகவே, இலங்கை ஓர் அரசாக இருப்பதுதான், இந்தியாவுக்குச் சாதகமான தீர்வாக இருக்கும்.  

அதேவேளையில், இலங்கையின் போக்கைக் கட்டுப்படுத்த, இலங்கை, இந்தியாவை விட்டுவிலக முடியாதபடி ‘செக்’ வைத்துக் கொண்டிருக்க ஒரு துருப்புச் சீட்டு இந்தியாவுக்குத் தேவை. இனப்பிரச்சினை என்பது அத்தகையதொரு துருப்புச் சீட்டு. எப்போது வேண்டுமானாலும், இந்தியா ‘மனிதாபிமானத் தலையீட்டை’ செய்வதற்கான ஏதுநிலையை எப்போதும் ஏற்படுத்தி வைத்திருக்கும்.   

இந்தத் தர்க்கத்தின் மீது, பின்வரும் சம்பவங்களைப் பொருத்தி வைத்துப் பாருங்கள். இந்திரா காந்தி, 27 வருடங்களாகப் பேச்சுவார்த்தைகளில் தொடர் ஏமாற்றத்தை மட்டுமே கண்ட அமிர்தலிங்கத்தை, பேச்சுவார்த்தை மூலம் ஒரே நாட்டுக்குள் (அரசுக்குள்) தீர்வைப் பெறச் சம்மதிக்க வைக்கிறார். எச்.டபிள்யு.ஜெயவர்த்தனவிடம் தமிழ்த் தலைவர்களின் கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தை மேசையில் பரிசீலிக்க வேண்டுகிறார்.

அதேவேளை, இலங்கையில் நடைபெற்ற ‘இனப்படுகொலையை’ கண்டித்து உரையாற்றுகிறார்.   

பின்னணியில், இந்திய உளவுத்துறை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு உதவிகளைச் செய்கிறது. இந்திய மண்ணில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் ‘விடுதலை’ அதாவது, பிரிவினைக்காகப் போராடப் பயிற்சி பெறுகிறார்கள்.   

தவிர்க்க முடியாத இந்தியா  

இந்திய தலையீடு பற்றி இத்தனை நீண்ட தர்க்கமும் பார்வையும் அவசியப்படுவதற்குக் காரணம், அடுத்த 26 வருட இனப்பிரச்சினை வரலாற்றில், அரசியலிலும் போரிலும் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக அமைகிறது.

இந்த, இந்தியத் தலையீட்டின் முன்னணி ‘மனிதாபிமானம்’, ‘தமிழர் நலம்’ எனப்பட்டாலும், அதன் பின்னணி மீதான ஐயங்கள் தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட, ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்களால் முன் வைக்கப்பட்டே வந்துள்ளது.   

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றை, மிகக் குறிப்பாக 1980களுக்குப் பிறகு இந்தியாவைத் தவிர்த்துவிட்டு, நாம் ஆராய முடியாது.   

இலங்கை வந்த கோபால்சாமியும் இந்தியா சென்ற தொண்டமானும்  

இந்திய சுதந்திர தினத்தன்றே, இந்திரா காந்தியின் விசேட ஆலோசகர் கோபால்சாமி பார்த்தசாரதி, இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கையில் பலரையும் சந்தித்த பார்த்தசாரதி, அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமானையும் சந்தித்தார்.   

1983 ‘கறுப்பு ஜூலை’யில் பெருமளவில் மலையகத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். தொண்டமான் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தாலும் பதவி விலகுவது போன்ற முடிவுகளை எடுக்கவில்லை.  

 தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறாம் திருத்தத்தை தொடர்ந்து, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த வேளையில், நாடாளுமன்றத்திலிருந்த தமிழ்க்குரல் தொண்டமான் தான்.   

தனது சந்திப்பின் பின்னர், தொண்டமானை இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பார்த்தசாரதி அழைத்திருந்தார். அதை ஏற்றுத் தொண்டமானும் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.  

இந்திய சுதந்திர தினத்தில், விசேட விருந்தினராகக் கலந்து கொண்ட, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், அதைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே தங்கியிருந்தார். அவரோடு, எம்.சிவசிதம்பரமும் இரா.சம்பந்தனும் கூட அங்கேயே தொடர்ந்து தங்கியிருந்தனர்.   

இலங்கையில் காணப்பட்ட நிலைவரம், இதற்கு ஒரு முக்கிய காரணம். இந்தியா வந்த தொண்டமான் பலரையும் சந்தித்ததோடு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மனிதாபிமானத்-தலையீடு-எனும்-துருப்புச்-சீட்டு/91-205582

Link to comment
Share on other sites

இந்தியாவின் மத்தியஸ்த முயற்சி
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 115)

தொண்டமானின் இந்திய விஜயம் 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த வேளையில், நாடாளுமன்றத்திலிருந்த தமிழ்க்குரல் சௌமியமூர்த்தி தொண்டமானுடையதாக இருந்தது.   

இதற்கு அர்த்தம், வேறு தமிழர்கள் இருக்கவில்லை என்பதல்ல. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் பலம் வாய்ந்ததொரு அமைச்சராக, கிழக்கு மாகாணத்தின் கல்குடா தொகுதியில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே. டபிள்யூ.தேவநாயகம் இருந்தார்.   

இவரைவிடவும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு, வெற்றியீட்டி, பின்னர் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட சீ. இராஜதுரையும் ஜே.ஆரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். ஆயினும், இவர்களிடமிருந்து தொண்டமான் அளவுக்குக்கூட, தமிழ் மக்கள் சார்பான கருத்துகள் வந்திருக்கவில்லை.   

கோபால்சாமி பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில், இந்தியா சென்றிருந்த தொண்டமான், டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.   

அதன் பின்னர் தமிழ் நாட்டுக்கு வந்த அவர், முதலமைச்சர் எம்.ஜி. இராமசந்திரனைச் சந்தித்துப் பேசியதுடன், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதியையும் சந்தித்திருந்தார்.   

முக்கியமாக, தமிழ்நாட்டில் தங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம் மற்றும் இரா. சம்பந்தன் ஆகியோரைச் சிலமுறை சந்தித்துப் பேசினார். தொண்டமான், நாடு திரும்புவதற்கு முன்னதான சந்திப்பின் போது, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் நலனைக் கவனித்துக் கொள்ளுமாறு, தொண்டமானிடம் அமிர்தலிங்கம் கேட்டுக் கொண்டிருந்தார்.   

இது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிச்சயமாக ஆறாம் திருத்தத்தின் கீழான சத்தியப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் நாடாளுமன்றம் வரப்போவதில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது.   

இதைவிடவும், தொண்டமான் நடத்திய இன்னொரு சந்திப்பு, இலங்கை திரும்பியவுடன் அவருக்கு பெரும் சிக்கலைத் தோற்றுவிப்பதாக அமைந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (PLOTE) ஸ்தாபித்திருந்த உமா மகேஸ்வரனையும் தமிழ்நாட்டில் சந்தித்துப் பேசியிருந்தார்.   

இந்த இடத்தில், தொண்டமான் என்ற தமிழ்த் தலைவரோ அல்லது தொண்டமான் என்கிற தொழிற்சங்கத் தலைவரோ ஒரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவின் தலைவரோடு சந்தித்துப் பேசினார் என்பதைவிட, இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சரொருவர், பிரிவினை கோரி ஆயுதம் ஏந்திய, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றின் தலைவர் ஒருவரைச் சந்தித்தப் பேசியிருந்தார் என்ற பார்வையே, இலங்கையில் தொண்டமானுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.   

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை உண்மையில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில், சாதகமானதொன்றாக இருந்ததாகவே தொண்டமானின் கருத்துகளிலிருந்து தெரிகிறது.   

இலங்கை திரும்பிய தொண்டமான்   

தனது, பத்து நாள் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்ட தொண்டமான், 22 ஆம் திகதி இலங்கை திரும்பியிருந்தார். மறுநாள், ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்த தொண்டமான், அன்று மாலை ஊடகங்களைச் சந்தித்து, தனது இந்தியப் பயணத்தைப் பற்றி விவரித்தார்.   

அதன்போது, இலங்கையின் தமிழர் பிரச்சினை தொடர்பில், தமிழ் நாட்டு மக்கள் கடும் கரிசனையைக் கொண்டுள்ளதாகவும் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தமிழர்களை அடக்குமுறைக்குள்ளாக்குவதிலும், அவர்களை அழிப்பதிலுமே எண்ணம்கொண்டிருப்பதாகவே இந்திய மக்களின் உணர்வுகள் இருப்பதாகவும், தற்போது இது வெறுமனே தமிழர்கள் மற்றும் இந்தியா மட்டும் கரிசனை கொண்டுள்ள விடயமாக அல்லாது, சர்வதேச சமூகமே கரிசனை கொள்ளும் விடயமாக மாறியிருப்பதாகத் தெரிவித்தார்.   

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர், இலங்கை அரசாங்கமானது, சிங்கள இனவாத சக்திகளால், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைக் கண்டும் காணாதிருந்ததாகவே தமிழ் நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

சிங்களவர்கள் இரவிலே “சில்” (பௌத்த வழிபாடு) எடுத்துவிட்டுக் காலையிலே “கில்” (கொலை) பண்ணுகிறார்கள் என்பதே அங்குள்ளவர்கள் எனக்குச் சொன்னது. நடந்துமுடிந்த கலவரங்கள் கூட, “போயா” (பூரணை) தினத்துக்கு மறுநாள் ஆரம்பித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது என்றார்.   

அரசாங்கத்தின் அமைச்சர் என்பதைத் தாண்டி சௌமியமூர்த்தி தொண்டமான், தமிழர் தரப்பின் கருத்துகளை, தனது பாணியில் எடுத்துரைக்கும் பேச்சாளராகவே மாறியிருந்தார் எனலாம். அதை, அவரே ஊடகங்களிடம் ஒத்துக் கொண்டிருந்தார். தற்போதுள்ள சூழலில், தமிழர்களின் ஒரே பிரதிநிதி தான்தான் என்று அவர் ஊடகங்களிடம் சொல்லியிருந்தார்.   
இதன்போது ஊடகங்களிடம், தான், புளொட் இயக்கத்தின் தலைவர் உமா மகேஸ்வரனைச் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியதைக் குறிப்பிட்டவர், தனி நாட்டுக்கு மாற்றான தீர்வொன்றை ஏற்றுக் கொள்ள, உமா மகேஸ்வரன் தயாராக இருப்பதாகத் தன்னிடம் தெரிவித்திருந்ததாக தொண்டமான் கூறினார்.   

இதில் பேசப்பட்டிருக்க வேண்டியது, பிரிவினை வேண்டிய முக்கியமான தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றின் தலைவர், பிரிவினைக்கு மாற்றான தீர்வொன்றுக்குத் தயாராக இருக்கிறார் என்பதாகும். ஆனால், பலரிடையே தொண்டமான், ஓர் அமைச்சர், ஒரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவின் தலைவரைச் சந்தித்துப் பேசியது, அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.   

சிலருக்கு, தொண்டமான், இந்தியாவுக்குச் சென்று இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி மிகக்குறைந்தளவு பேசியிருந்ததே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.   

இந்தியத் தலையீட்டை எதிர்த்த அமைச்சர்கள்   

இந்த நிலையில், 1983 ஒக்டோபர் 24 ஆம் திகதி, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, ஜே.ஆரின், இந்திரா காந்தியுடனான தொலைபேசி உரையாடல் பற்றியும், இந்தியாவின் செல்வாக்குடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவது பற்றியும் குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டது.   

இலங்கையிலுள்ள பிரச்சினையில் இந்தியா தலையிடுவதை அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் விரும்பவில்லை. குறிப்பாக, பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, அமைச்சர்களான காமினி ஜயசூர்ய, காமினி திசாநாயக்க, ரஞ்சித் அத்தபத்து ஆகியோரும் இதற்குத் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். உணர்ச்சி மிகுந்தெழுந்த அமைச்சர் காமினி ஜயசூர்ய, “இந்தியாவின் தலையீட்டை நாம் ஏற்றுக் கொண்டால், நாம் வீதியில் நடக்க முடியாது போய்விடும்” என்று கூறினார். இது ஜே.ஆரை எரிச்சலூட்டியது.   

இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று சிறிமாவோ பண்டாரநாயக்க சொல்கிறார். இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இந்திரா காந்தியின் விசேட ஆலோசகர் பார்த்தசாரதியை நாம் அழைக்க வேண்டும் என்றும் திருமதி பண்டாரநாயக்க சொல்கிறார். அவர் வீதியில் சுதந்திரமாகத்தானே நடமாடுகிறார்? என்று ஜே.ஆர் கோபத்துடன் பதிலுரைத்திருந்தார்.   

 உண்மையில், ஜே.ஆருக்கு இந்தியா இந்த விடயத்தில் தலையிடுவதில் துளிகூட விருப்பமில்லை. ஆனால், வேறு வழி இல்லை என்பதை ஜே.ஆர் அறிந்திருந்தார். பெரும் நாடுகளின் தலையீடுகள், பெரியண்ணன் தன்மைகள், சிறிய நாடுகளின் கையறு நிலை என கொஞ்சக் காலமாகவே ஜே.ஆர் ‘புலம்பிக் கொண்டுதான்’ இருந்தார்.   

சில நாட்கள் முன்பு நடந்த ஊடகச் சந்திப்பின் போது கூட, “நாம் ஒரு சிறிய தேசம்; ஆகவே இவற்றைச் சகித்துதான் ஆக வேண்டும். ஒருவேளை சிறிய தேசங்களின் தலைவிதி இதுதானோ என்று இந்திய தலையீட்டைச் சுட்டி, ஜே.ஆர் புலம்பியிருந்தமையும்” இங்கு குறிப்பிடத்தக்கது.   

அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் பிரமேதாஸவின் நிலைப்பாடு கொஞ்சம் வேறுபட்டதாக இருந்தது. இந்திய தலையீட்டை பிரேமதாஸ எதிர்த்தார். பிரேமதாஸவின் இந்திய எதிர்ப்பு மனநிலை யாரும் அறியாததல்ல. பிரேமதாஸவின் நிலைப்பாடானது, தமிழர் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம்; அதில் இந்தியா தலையிடுவதானது இலங்கையின் இறைமையை மீறும் செயலாகும்; நாங்கள் தமிழர்களோடு பேசித் தீர்வைக் காண்போம்; இந்தியாவை இந்த விடயத்தில் தலையிட அனுமதிக்கக் கூடாது என்றார்.   

 அமைச்சரவையில் இருந்த தமிழ் அமைச்சர்களான கே.டபிள்யூ. தேவநாயகத்தையும், சீ. இராஜதுரையையும் சுட்டிய பிரதமர் பிரேமதாஸ, இவர்களுடன் பேசிப் பிரச்சினைக்கு ஒரு முடிவைக் காண்போம் என்றார். இதைக் கேட்ட அமைச்சர் தேவநாயகம், அப்படியானால் நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு தரத் தயாராக இருந்த தீர்வை விடக் கூடுதலான தீர்வொன்றை தரத் தயாராக இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.   

 ஜே.ஆர் எல்லாத் தரப்பினதும் கருத்துகளையும் செவிமடுத்திருந்தாலும், அவர் ஏற்கெனவே இந்த விடயத்தில் முடிவெடுத்து விட்டிருந்தார்.   

இந்திரா காந்தியின் கோரிக்கையை ஏற்று, கோபால்சாமி பார்த்தசாரதியின் மத்தியஸ்தத்தை முதலில் வரவேற்பதைத் தவிர அவருக்கு வேறு உடனடி மார்க்கமேதுமிருக்கவில்லை. இறுதியில் ஜே.ஆர் தனது முடிவை அமைச்சரவைக்குத் தெரிவித்தார்.   

கடமைகளைத் தொடங்கிய பார்த்தசாரதி   

மறுபுறத்தில், இந்தியாவில் கோபால்சாமி பார்த்தசாரதி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களோடு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தார். அவரது பணி, ஜே.ஆர் அரசாங்கம் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிடையே பேச்சுவார்த்தைகள் மூலம், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இருதரப்பும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்றை எட்டச் செய்தல் ஆகும். தன்னுடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்களைத் தாண்டி இந்திரா காந்தி, கோபால்சாமியைத் தெரிவு செய்தமைக்குக் காரணம், அவரது பேச்சுவார்த்தைக் கலைத் திறன் என்று சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.   

ஆனால், இந்தத் தெரிவில் ஒரு சிக்கல் இருந்ததை, இந்திரா அன்று உணர்ந்திருப்பாரோ தெரியாது, ஆனால், அந்த ஆயுதத்தை ஜே.ஆர் கையிலெடுக்க நீண்ட காலமாகவில்லை.   

தமிழ் நாட்டிலிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர். டெல்லி புறப்பட முன்பு, சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய அமிர்தலிங்கம், இந்திரா காந்தி “ஒன்றுபட்ட” நாட்டுக்குள் தீர்வு என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டார். 

இந்தியாவுக்கு மதிப்பளித்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், தனிநாடு என்பதற்கு மாற்றானதொரு தீர்வு பற்றிப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், மாற்றுத் தீர்வு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நாம் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடப் போவதில்லை என்றார்.   

மேலும், “இலங்கையைத் தமிழர்கள் பிரிக்கவில்லை; மாறாகச் சிங்களக் காடையர்களின் நடவடிக்கைகளும், இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளும் தான் நாட்டை பிளவடையச் செய்கின்றன. நடைமுறை யதார்த்தத்தை சட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ளுமாறு தான் நாங்கள் கேட்கிறோம்” என்று சொன்னவர், இனியும் கலவரங்கள் தொடருமானால், இந்தியா தனது படைகளை அனுப்பிப் பாதுகாக்க வேண்டும் என்றார்.   

அமிர்தலிங்கத்தின் நிலைமையும் மிகவும் தர்மசங்கடம் நிறைந்ததாக இருந்தது. இந்திரா காந்தியுடனான சந்திப்பின் போது, இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாக இந்திரா காந்தி எடுத்துரைத்துவிட்டார்.   

 இந்தியா படைகளை அனுப்பப் போவதுமில்லை; தனிநாடு பெற்றுத்தரப் போவதுமில்லை. மாறாக இந்தியா பேச்சுவார்த்தை மூலம் தனிநாட்டுக்கு மாற்றான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது; இதை மறுக்கவும் முடியாது. ஆனால், இதனை முற்றுமுழுதாக உடனடியாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது.   

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை தனது கொள்கையாக முன்னிறுத்தியது. 1977 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை முன்னிறுத்தியே தமிழ் மக்களிடம் மக்களாணையைப் பெற்றுக் கொண்டது.

இந்தச் சூழலில் கட்சி மாநாடு கூட நடத்தாது அமிர்தலிங்கம், தனித்துக் கொள்கை நிலைப்பாடொன்றை, அதுவும் அவர்களது அடிப்படைக் கொள்கையை இல்லாது செய்து விடக்கூடிய புதிய கொள்ளை நிலைப்பாட்டை எடுப்பது சாத்தியமல்ல என்பதை விட, அது மக்களால், குறைந்தபட்சம் அவரது கட்சியினரில் பெரும்பகுதியினரால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகம்தான்.  

இதனால்தான், அமிர்தலிங்கம் மிகக் கவனமாக “மாற்றுத்தீர்வு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நாம் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட மாட்டோம்” என்று ஊடங்களிடம் பதிவு செய்தார். கோபால்சாமி பார்த்தசாரதியைச் சந்தித்த போது, அவர் நீங்கள் மாற்றுத் தீர்வொன்றை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டீர்கள், இப்பொழுது நீங்கள் எந்த அடிப்படையிலான தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என்று வினவினார்.

அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் பார்த்தசாரதியின் எண்ணம்.   

 (அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்தியாவின்-மத்தியஸ்த-முயற்சி/91-205936

Link to comment
Share on other sites

அமிர்தலிங்கத்தின் செவ்வி
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 116)
 

இந்தியாவிலிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், ‘த ஹிந்து’ பத்திரிகையின் சென்னைப் பதிப்புக்கு, நீண்டதொரு செவ்வியை வழங்கியிருந்தார்.  

 1983 ஓகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் அந்தச் செவ்வி பிரசுரமாகியிருந்தது. அந்தச் செவ்வியில், 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புப் பற்றியும் இனப்பிரச்சினை பற்றியும் இலங்கை அரசியல் பற்றியும் முக்கியமான பல கருத்துகளை, அமிர்தலிங்கம் பதிவு செய்திருந்தார்.   

1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு, திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்றும் ஆயுதப் படைகள், தமிழர்களையும் மற்றும் தமிழர்களது சொத்துகளையும் தாக்குவதில், தீர்மானமுடைய ஒரு பங்கை வகித்திருந்தார்கள் எனவும் தெரிவித்த அமிர்தலிங்கம், இது அதிகாரத்திலுள்ள ‘யாரோ’தான் திட்டமிட்டு, ஆயுதப்படைகளையும் சிவிலியன்களையும் ஒருங்கிணைத்துச் செய்வித்திருக்க வேண்டும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார்.   

இந்தத் தாக்குதல்களானவை, தமிழர்களை வன்முறைகளினூடாக அடக்குமுறைக்குள்ளாக்கி, சிங்களப் பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றி, தமிழர்களது தொழிற்றுறைகளை அழிப்பதனூடாக, தமிழ் மக்களது பொருளாதார அடிப்படைகளைச் சிதைத்து, மேலும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களை, ஒருவித மயமனநிலையுடன் வாழச்  செய்தல் ஆகிய மூன்று அடிப்படைகளைக் கொண்டமைந்தது என்று, அமிர்தலிங்கம் தெரிவித்தார்.   

இந்தத் தாக்குதல்களில் முப்படைகளினதும் பங்கைப் பற்றிக் குறிப்பிட்ட அமிர்தலிங்கம், எவ்வாறு ‘கறுப்பு ஜூலை’ இடம்பெறுவதற்கு முன்பே,   ஆயுதப்படைகள், தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை யாழ்ப்பாணம், திருக்கோணமலை, கொழும்பு, பதுளை ஆகிய பிரேதசங்களில் ஆரம்பித்திருந்தன என்பதையும் விளக்கினார்.   

திருக்கோணமலையும் பூகோள அரசியலும்  

இதில், திருக்கோணமலையில் நடந்த சம்பவங்களின் முக்கியத்துவம் பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், கடற்படையினர், நேரடியாகவும் மறைமுகமாகவும் திருக்கோணமலையில், தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட வன்முறைகள் பற்றிக் குறிப்பிட்டதுடன், திருக்கோணமலையை (குறிப்பாக எண்ணைக் குதங்கள்) அமெரிக்காவிடம் கையளிக்கும் முயற்சிக்கும், தமிழர்கள் மீதான வன்முறைக்கும் நிச்சயம் தொடர்புண்டு என்றும் பெற்றோலியத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சிறில் மத்யூவே இதில் அக்கறை கொண்டுள்ள அமைச்சர் என்றும் தெரிவித்தார்.   

பௌத்தத்தை ஆயுதமாகக் கொண்டு, திருக்கோணமலையைச் சிங்களப் பிரதேசமாக மாற்றும் நோக்கில், அங்குள்ள இந்து ஆலயங்களையும் அழிப்பதற்கான முயற்சிகளும் சிறில் மத்யூவினால் முன்னெடுக்கப்படவிருப்பதாகத் தாம் அறிந்ததாகவும் அமிர்தலிங்கம் தெரிவித்திருந்தார்.   

ஆகவே அமெரிக்கா, திருக்கோணமலையில் நிலைகொள்வதை ஏதுவாக்கவே, தமிழர்கள் மீதாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதென அமிர்தலிங்கம் கருத்துரைத்தார். இந்தக் கேள்விகளையும் பதில்களையும் ‘சர்வதேச அரசியல்’ (அல்லது பூகோள அரசியல்) கண் கொண்டு பார்த்தல் அவசியமாகிறது.   

திருக்கோணமலை மீது, பல்வேறு வல்லரசுகளும் வரலாற்றுக் காலம் முதல் ஆர்வம் கொண்டிருந்திருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்த வரையில், திருக்கோணமலை ஒரு தந்திரோபாயப் புள்ளி. அதில் வேறு ‘வல்லரசுகள்’ ஆதிக்கம் செலுத்துவதை, இந்தியா தனது நலன்களுக்கு எதிரானதாகவே கருதும்.   

மேலும், திருக்கோணமலையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதில், எப்போதும் இந்தியா அக்கறை கொண்டு செயற்பட்டிருக்கிறது. மேலும், அன்றிருந்த இந்திய-அமெரிக்க உறவு, இன்றுள்ளது போன்றதல்ல; 1961இல் இந்தியா, அணிசேரா நாடுகள் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினராகியிருந்தது. அமெரிக்க - சோவியத் யூனியன் ‘பனிப்போரிலிருந்து’ விலகியிருக்கவே இந்தியா விரும்பியது.  

 1962இல் இந்திய - சீனா யுத்தத்தின் போது, ஜனாதிபதி ஜோன் எப் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், கென்னடியின் மறைவின் பின்னர், அந்த உறவின் வலிமை, குறையவே தொடங்கியிருந்தது.   

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அமெரிக்காவுக்கு பாகிஸ்தானுடன் இருந்த நெருக்கமான உறவு ஆகும். மேலும், நேருவிய சோசலிஸத்துக்கு, சோவியத் மீதிருந்த மென்மையான அபிமானமும் இதற்கொரு காரணமெனலாம். 1971 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தில், பாகிஸ்தானை அமெரிக்கா ஆதரித்திருந்தமையும் இந்திய - அமெரிக்க உறவை மேம்படுத்த உதவவில்லை. இடை நடுவிலே, மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியின் கம்யூனிஸ விரோதப் போக்கு, அமெரிக்க உறவை ஓரளவு புதுப்பிக்க உதவியிருந்தாலும், அமெரிக்க - இந்திய உறவுகள் 1990கள் வரை வலுவடைந்தன என்று சொல்ல முடியாது.   

ஆக, இந்தச் சூழலில்தான், திருக்கோணமலை மீதான அமெரிக்க ஆதிக்கம், அதற்கு சார்பான அமெரிக்க ஆதரவாளர் என்று பகிரங்கமாக அறியப்பட்ட ஜே.ஆர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ற கருத்தை அமிர்தலிங்கம், இந்தியாவில், இந்திய ஊடகத்தில் முன்வைக்கிறார். திருக்கோணமலையை முக்கியத்துவப்படுத்தி, அந்த ஊடகவியலாளர் கேள்வி கேட்டமையும் இதனால்தான் என்பது இலகுவில் ஊகிக்கத்தக்கது.   

குறைந்த தீங்கு  

அடுத்து, இன்னொரு முக்கியமான கேள்வி, அமிர்தலிங்கத்திடம் முன்வைக்கப்பட்டது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில், இருப்பதற்குள் சிறந்த தெரிவு, ஜே.ஆர் தான் என்றொரு கருத்து நிலவுவது பற்றி அமிர்தலிங்கத்திடம் வினவப்பட்டது. அதாவது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட, ஐக்கிய தேசியக் கட்சியே சிறுபான்மையினருக்குள்ள சிறந்த தெரிவு (அல்லது குறைந்த தீங்கு) என்று, பொதுவாகக் காணப்படும் கருத்துப் பற்றிய கேள்வி என்று, நாம் புரிந்து கொள்ளலாம்.   

இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “ஜெயவர்தனவின் கடந்தகால நடத்தைகள், அவர் சிறுபான்மையினருக்கு நீதி செய்யக் கூடியவர் என்று உணர்த்துவதாக இல்லை. 1957 இல் பண்டா - செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக, பெரும் நடை பவனியை, கண்டி வரை நடத்தத் தொடங்கி, அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்படவும், 1958 இல் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படவும் காரணமாக இருந்தவர் ஜே.ஆர்.   1977 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இடம்தெரியாமல் செய்து மாபெரும் பெரும்பான்மையோடு, அசைக்க முடியாத பலத்தோடு, ஜே. ஆர் ஆட்சிக்கு வந்தபோது, தமிழர்கள் பிரச்சினைக்கு அவரால் தீர்வொன்றைக் காண முடியும் என்று நாம் எண்ணினோம். அந்த நம்பிக்கையில்தான், 1977 வன்முறைத் தாக்குதல், கலவரங்களுக்கு பின்னர் கூட, நாம் அவரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். அவர் காகிதத்தில் எமது பல உரிமைகளை ஏற்றுக் கொண்டார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளையும் அறிமுகம் செய்தார். ஆனால், நடைமுறைப்படுத்துதல் என்பது, மிகவும் திருப்தியற்றதாகவே இருந்தது. அரசமைப்பில் சொல்லப்பட்ட தமிழ் மொழி உரிமைகள் பற்றிய ஓர் எழுத்துக் கூட, கடந்த ஐந்து வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், நாடற்றவர்களாகக் காணப்படுவோரை (பெரும்பாலான இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குடிமக்களாகப் பதிவு செய்வோம் என்ற உறுதிமொழியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு சரி; அவை வினைதிறனுடன் இயங்குவதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, வெறும் காகிதத்திலுள்ள உரிமைகளும் காகிதத்திலுள்ள பாதுகாப்புகளையும் தாண்டி, எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறோம். மாறாக, தமிழர்களது நிலைமை ஜே.ஆரின் ஆட்சியில் மோசமாகியிருக்கிறது. குறிப்பாக, தொழில்வாய்ப்பில் முன்பிருந்த எந்த அரசாங்கத்தையும் விட, இந்த அரசாங்கத்தில் தமிழர்களின் நிலைமை மோசமாகியிருக்கிறது” என்று அமிர்தலிங்கம் பதிவு செய்தார்.   

மாற்றுத் தீர்வு  

தனிநாட்டுக்கு மாற்றானதொரு தீர்வு பற்றிக் கருத்துரைத்த அமிர்தலிங்கம், “சுதந்திர அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான மக்களாணையை நாம் பெற்றுள்ளோம். ஆரம்பத்திலிருந்தே நாம் பெற்றுக்கொண்ட இந்த மக்களாணையிலிருந்து, பின் செல்ல முடியாது என்பதைச் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். ஆனால், தனிநாட்டுக் கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய எமது குறைகளை, நிவர்த்தி செய்யத் தக்க மாற்றுத் தீர்வொன்று ஏற்படுத்தப்படுமானால், அதை எமது மக்கள் முன்வைத்து, அதைச் செயற்படுத்த முயல்வோம்” என்றார்.  

 1977 பொதுத்தேர்தலின் போது, தமிழ் மக்களுக்குக் குறைகளுண்டு என்பதை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டிருந்ததையும், தாம் தேர்தலில் வென்றால், சர்வகட்சி மாநாடு ஒன்றினூடாகத் தமிழ் மக்களது குறைகளைத் தீர்க்க முயற்சி முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி சொல்லியிருந்ததையும் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதைச் செய்யத் தவறிவிட்டது என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.

 “நாம் அவர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம். அரசாங்கம் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதெல்லாம் நாங்கள் பேசச் சென்றோம். ஒரு தீர்வை எட்டுவதற்கு எம்மால் இயன்ற அனைத்தையும் செய்தோம். நாம் எமது நிலையிலிருந்து இறங்கி வர மாட்டோம் என்றோ, சமரசத்துக்குத் தயாரில்லை என்றோ சொல்லவில்லை. எங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தபோதும், சமாதானமாகத் தீர்வொன்றை எட்டவே முயன்றோம். அரசாங்கம் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தோற்றுவித்திருந்தாலும், அது வினைத்திறனுடன் இயங்கச் செய்வதில் தவறியிருந்தது. அரசாங்கத் தரப்பிலிருந்து நிறையத் தடைகள் வந்தன. அரசியல் ரீதியிலும் சரி, நிர்வாக ரீதியிலும் சரி, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு நிறையத் தடைகள் இருந்தன. அது வினைத்திறனற்ற அதிகார பன்முகப்படுத்தல் முயற்சியாகவே இருந்தது. இந்தச் சூழலும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட வன்முறைகளும் 1977, 1979, 1981 மற்றும் தற்போது மிகப்பாரியளவில் தமிழ் மக்களை அழித்தொழித்த 1983 வன்முறைகளும் - நாம் எமது மன்னார் மாநாட்டில், ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்துடன் பேசுவதில்லை என்ற முடிவை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியது. அத்தோடு, எமது ஆறு நாடாளுமன்ற ஆசனங்களைத் துறப்போம் என்றும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும்; எமது மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; அதிகார பரவலாக்கல் தொடர்பான அரசாங்கத்தின் உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ஆகியவற்றுக்காக அஹிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் தீர்மானித்திருந்தோம்” என்ற யதார்த்தத்தை அமிர்தலிங்கம் எடுத்துரைத்திருந்தார்.   

அமிர்தலிங்கத்தின் செய்தி  

இந்தியாவின் அழுத்தமானது ஒன்றுபட்ட இலங்கைக்குள், பேச்சுவார்த்தை மூலமான, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அடிப்படையிலான தீர்வொன்றை நோக்கி அமைவதை இந்திரா காந்தியுடனான சந்திப்பின் பின், அமிர்தலிங்கம் உணர்ந்து கொண்டார்.   

பங்களாதேஷின் உருவாக்கம் போல, தனிநாடொன்றை இலங்கைக்குள் ஸ்தாபிக்க, இந்தியா துணை போகப் போவதில்லை என்பது நிச்சயம் தெளிவாகியிருக்க வேண்டும். அதேவேளை, இதுவரையான அஹிம்சை ரீதியிலான, பேச்சுவார்த்தை மூலமான, அதிகாரப் பரவலாக்கல் தீர்வுகள் ஏன் சாத்தியப்படவில்லை என்பதை, இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டிய தேவையும் அமிர்தலிங்கத்துக்கு இருந்தது. 

இந்த நீண்ட செவ்வியை அதற்கான களமாக அமிர்தலிங்கம் பயன்படுத்தியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஆனால், இது எதையும் மாற்றப் போவதில்லை என்பதை அவரும் நிச்சயம் அறிந்திருப்பார்.

பார்த்தசாரதியின் நான்கு கட்டளைகள்   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் ஜே.ஆர். அரசாங்கத்துக்குமிடையில் மத்தியஸ்தம் வகிக்க, கோபால்சாமி பார்த்தசாரதி தயாராகியிருந்த நிலையில், தமிழர் தரப்பின் கோரிக்கையை முன்வைக்குமாறு, அவர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தலைவர்களிடம் கேட்டிருந்தார். அது தொடர்பில், நான்கு கோட்பாடுகளை கோபால்சாமி பார்த்தசாரதி முன்வைத்தாரென, ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.   

முதலாவதாக, தமிழர் தரப்பின் கோரிக்கையானது உள்ளக ரீதியில் சீரான கோட்பாடுகளினடிப்படையில் அமையவேண்டுமேயன்றி, காலத்தின் வசதி கருதி அமையக் கூடாது (அதாவது உடனடிச் சூழலின் அடிப்படையிலான கோரிக்கையாக அமையக்கூடாது).   

இரண்டாவதாக, அது தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக அமையும் அதேவேளை, தனிநாடு என்ற பிரிவினையை விடக் குறைவானதொரு தீர்வாக அமையவேண்டும்.   

மூன்றாவதாக, தமிழர் தரப்பின் கோரிக்கையின் உள்ளடக்கமானது, சிங்கள மக்களின் எதிர்ப்பைத் தூண்டத்தக்க வகையிலான உணர்ச்சிமிகு உள்ளடக்கத்தையோ வார்த்தைகளையோ கொண்டிராத ஒரு திட்டத்தினுள் உள்ளடங்கக் கூடியதாக அமைய வேண்டும்.   

நான்காவதாக, தமிழர் தரப்பு முன்வைக்கும் திட்டமானது, இலங்கையின் ஒற்றுமையையும் இறைமையையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் ஏற்றுக் கொள்வதாக அமைய வேண்டும். இந்த நான்கு கோட்பாடுகளின் அடிப்படையிலான கோரிக்கையை முன்வைக்குமாறு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களிடம், கோபால்சாமி பார்த்தசாரதி கோரிக்கை விடுத்தார்.இரண்டுநாட்கள் கழித்து அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், தமது கோரிக்கை யோசனையை பார்த்தசாரதியிடம் கையளித்தனர்.   

( அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமிர்தலிங்கத்தின்-செவ்வி/91-206277

Link to comment
Share on other sites

தீண்ட கூடாததாகிய சமஷ்டி
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 117)

கூட்டணி சொன்ன தமிழர்களின் நிலைப்பாடு   

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் விசேட ஆலோசகராக இருந்த கோபால்சாமி பார்த்தசாரதியின் அறிவுறுத்தலின் படி, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள், தமது தரப்புக் கோரிக்கையின் முதலாவது வரைபை, பார்த்தசாரதியிடம் கையளித்தனர்.   

இந்தியக் குடியரசின் அரசமைப்பின் முதலாவது சரத்தின் முதலாவது பிரிவு, ‘இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒரு ஒன்றியமாகும்’ (Union of States) என்று வழங்குகிறது.

இதையொத்தே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ‘மாநிலங்களின் ஒன்றியம்’ (Union of States) என்ற வார்த்தைகளைத் தனது கோரிக்கை வரைபில் பயன்படுத்தியிருந்தது. 

 இலங்கை அரசாங்கத்தின் நிலை பற்றி உணர்ந்ததாலோ என்னவோ, அந்த வார்த்தைப் பிரயோகத்தை மாற்றுமாறு கோபால்சாமி பார்த்தசாரதி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.   

‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்பது சமஷ்டிக் கட்டமைப்பைச் சார்ந்து வருகிறது. சமஷ்டிக் கட்டமைப்பைச் சிங்களவர்கள் முற்றாக எதிர்க்கிறார்கள். ஆகவே, இந்த வார்த்தைப் பிரயோகம் பொருத்தமானதல்ல என்று சொன்ன பார்த்தசாரதி, டட்லி சேனநாயக்க ‘பிராந்திய சபைகள்’ என்பதை ஏற்றிருந்தார் என்ற அடிப்படையில், ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ (Union of Regions) என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு கோரினார்.   

இலங்கையின் இறைமைக்கும், ஒற்றையாட்சித் தன்மைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் ஏற்படாதவாறு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கை இருக்க வேண்டும் என்பதில், பார்த்தசாரதியும் இந்திராவும் இந்தியாவும் தெளிவாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 

பார்த்தசாரதியின் எண்ணப்படி அமைந்த, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கை வரைபுடன், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்திக்க, பார்த்தசாரதி இலங்கை விரைந்தார். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள், இந்தியாவிலேயே தொடர்ந்து இருந்தனர்.   

ஜே.ஆர் சொன்ன சிங்கள மக்களின் நிலைப்பாடு  

இலங்கையின் அரசாங்கத்தினதும், சிங்களத் தலைவர்களினதும் ‘சமஷ்டி விரோத’ப் போக்கை பார்த்தசாரதி அறிந்திருந்தார், அதனால்த்தான், அவர் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையோ, அல்லது இலங்கையின் இறைமை, ஒற்றையாட்சித் தன்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கோரிக்கைகளை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முன்வைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்.   

ஆனால், ஜே.ஆர் தலைமையிலான இலங்கை அரசாங்கத்தினதும், சிங்களத் தலைமைகளினதும் ‘சமஷ்டி ஒவ்வாமை’ இந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பது, அவருக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.   

ஜே.ஆரைச் சந்தித்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கை வரைபை முன்வைத்த பார்த்தசாரதி, பேச்சுவார்த்தையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு இதுதான் என்று குறிப்பிட்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறியத்தருமாறும் கோரினார்.   

“எனது அரசாங்கமும் இந்த நாட்டு மக்களும் இந்த நாடு பிரிவடைய ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை” என்று சொன்ன ஜே.ஆர், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடனான பேச்சுவார்த்தைகளினூடாகத் தாம் அறிந்திருந்ததாகவும், தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தாம் அறிந்திருந்தமையை, ஐக்கிய தேசியக் கட்சியினுடைய 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருந்தேன்” என்று சுட்டிக் காட்டிய ஜே.ஆர், “அந்தப் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும்” என்றார்.   

அத்துடன்,“மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதுடன், முழுமையாக அமுல்படுத்துதல் மட்டுமே, தன்னால்ச் செய்ய இயன்ற காரியம்” என்றார். அதுவே, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக, பார்த்தசாரதியிடம் முன்னிறுத்தப்பட்டது.   

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, 1977 இல் ஜே.ஆர் திடசங்கற்பம் கொண்டிருந்தாராயின், அதன்பின்னர், 1977, 1981 மற்றும் 1983 எனத் தமிழ் மக்கள் மீது, இன அழிப்பு வன்முறை, கட்டவிழ்த்து விடப்பட்டது ஏன் என்ற கேள்வி, இயல்பாகப் புத்தியுள்ள அனைவரிடமும் எழக்கூடியதொன்றே! அதை உணர்ந்த ஜே.ஆர், 1983 கலவரங்களுக்கு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பிரிவினைவாதமும், தனது அரசாங்கத்தை இல்லாதொழிக்க உருவான இடதுசாரிகளின் சதியும்தான் காரணமென்றார்.  

இதன் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவை, பார்த்தசாரதி சந்தித்தபோது, சிறிமாவோவும் சமஷ்டியைக் கடுமையாக எதிர்த்ததுடன், ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பு மாற்றப்பட முடியாது என்பதில், உறுதியாக இருந்த தனது நிலைப்பாட்டை, பார்த்தசாரதியிடம் பகிர்ந்து கொண்டார். மீண்டும் பார்த்தசாரதி, ஜே.ஆரைச் சந்தித்தபோது, சிறிமாவினதும் தன்னுடையதும் நிலைப்பாட்டின் ஒற்றுமையைச் சுட்டிக்காட்டிய ஜே.ஆர், “தற்போது சிங்கள மக்களின் நிலைப்பாட்டை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்” என்று பார்த்தசாரதியிடம் சொன்னார்.   

“இலங்கையின் ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் ஒரு பொது நிலைப்பாட்டில் இருக்கிறோம். எந்தத் தீர்வாக இருந்தாலும் அது இலங்கை அரசின் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றுவதாக அமைய முடியாது. இதுவே, சிங்கள மக்களின் நிலைப்பாடு. எனது அரசாங்கத்தினால், இயலுமான உச்சபட்சத் தீர்வு என்பது மாவட்ட அபிவிருந்தி சபைகளைப் பலப்படுத்துவதுடன், அதை முழுமையாக அமுல்படுத்துவதாகும்” என்று ஜே.ஆர், திட்டவட்டமாகப் பார்த்தசாரதியிடம் எடுத்துரைத்தார்.   

தூதுபோன பார்த்தசாரதிகள்  

ஜே.ஆரிடம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கை வரைபுடன் தூதுபோன, கோபால்சாமி பார்த்தசாரதியின் நிலையும், துரியோதனனிடம் பாண்டவர்களின் கோரிக்கையோடு தூதுபோன அந்தப் பார்த்தசாரதியின் நிலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.   
துரியோதனனும் நாட்டைப் பிரிக்க முடியாது என்று விட்டான்; ஜே.ஆரும் அதே நிலைப்பாட்டிலேயே இருந்தார். ஆனால், அந்தப் பார்த்தசாரதி, பாண்டவரின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டிருந்தார். இந்தப் பார்த்தசாரதியின் நிலைவேறு! தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினதோ, இலங்கை வாழ் தமிழ் மக்களினதோ நலன்தான் கோபால்சாமி பார்த்தசாரதியின் தூதின் நோக்கம் என்று சொல்லமுடியாது.  

இங்கு மேலோங்கிய நலன் என்பது, இந்தியா என்ற ‘பிராந்திய மேலாதிக்க’ அரசாங்கத்தின் நலன். இதில் ஆச்சரியப்படுவதற்கோ, ஆத்திரப்படுவதற்கோ, ஆதங்கப்படுவதற்கோ எதுவுமில்லை. சர்வதேச அரசியலினதும் இராஜதந்திரத்தினதும் அடிப்படையே இதுதான்.   

அன்று இனித்த சமஷ்டி  

ஆனால், இங்கு குறிப்பிட்டு நோக்க வேண்டிய இன்னொரு விடயம், இலங்கை சிங்கள அரசியல் தலைமைகளிடையே ஏற்பட்டிருக்கும் சமஷ்டி ஒவ்வாமை என்பது மிக விசித்திரமானதாகவே தோன்றுகிறது.   

‘சமஷ்டி’ என்ற கருத்தையும், இலங்கை ‘சமஷ்டி’ அரசாக அமையவேண்டும் என்ற கோரிக்கையையும் இலங்கையில் முதன் முதலில் முன்வைத்தவர்கள் தமிழர்களோ, தமிழ்த் தலைமைகளோ அல்ல; மாறாக சிங்களத் தலைவர்களே அதை முன்வைத்திருந்தனர்.  

இந்தத் தொடரின் ஆரம்ப பகுதிகளில், இதை நாம் சற்று விரிவாகவே நோக்கியிருந்தோம். குறிப்பிட்டுச் சொல்வதாயின், 1926 இல், எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க (சொலமன் வெஸ்ட் றிஜ்வே டயஸ் பண்டாரநாயக்க), யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையொன்றில், “இலங்கையில் கீழ் நாட்டுச் சிங்களவர், கண்டியச் சிங்களவர், தமிழர்கள் ஆகிய மூன்று இனக்குழுமங்களுக்குமான, மாகாண சுயாட்சி முறையிலான சமஷ்டி முறை வேண்டும்” என்பதை உறுதியாக வலியுறுத்தியிருந்தார்.  

தன்னுடைய உரையில் அவர், “நாம் முன்னைய வரலாற்றை நோக்கினோமானால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, இங்கு வாழ்ந்துவரும் தமிழர், கண்டியச் சிங்களவர் மற்றும் கீழ்நாட்டுச் சிங்களவர்கள் ஆகிய மூன்று இனக்கூட்டமும் ஒன்றிணைவதற்கான எந்த எண்ணத்தையும் கொண்டிராததைக் காணலாம். அவர்கள் தங்களது மொழி, பாரம்பரியம் மற்றும் மதத்தைப் பாதுகாத்தார்கள். இந்தப் பிரிவுகள் காலத்தோடு இல்லாது போகும் என்று நம்புகின்ற மனிதன், அலட்சியம் கொண்ட நபராகவே இருப்பார். இலங்கையில் ஒவ்வொரு மாகாணமும் சுயாட்சியைக் கொண்டிருக்க வேண்டும். இந்த முறைக்கு எதிராக, ஆயிரம் எதிர்ப்புகளை முன்வைக்கலாம். ஆனால், அந்த எதிர்ப்புகள் மறையும் போது, சமஷ்டி முறையே, ஒரே தீர்வாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.   

இது மட்டுமல்ல, இலங்கைக்கு சமஷ்டியின் பொருத்தப்பாடு பற்றி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, நாடு திரும்பியிருந்த இளைஞரான எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க, சிலபல கட்டுரைகளையும் எழுதினார். 1925 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த, கண்டித் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கண்டி தேசிய பேரவை, அடுத்த இரண்டு வருடங்களிலேயே கண்டிப் பிராந்தியத்துக்கான சுயாட்சி பற்றிப் பேசியதுடன், கண்டிச் சிங்களவர், கீழ் நாட்டுச் சிங்களவர், மற்றும் தமிழர்கள் ஆகிய மூன்று தரப்புக்குமான சுயாட்சிப் பிராந்தியங்களைக் கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பைக் கோரினார்கள். இதே சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து, தலதா மாளிகையில் நடந்த கூட்டத்திலும் பேசினார்கள்.   

சமஷ்டி, சுயநிர்ணயம் என்பவை, சிங்களத் தேசியவாதிகளின் (குறிப்பான கண்டி தேசியவாதிகளின்) கோரிக்கையாக மட்டும் இருக்கவில்லை. இடதுசாரிகளும் இதையே முன்மொழிந்திருந்தார்கள். ஒக்டோபர் 1944 இல், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கையின் எதிர்கால அரசமைப்பு தொடர்பில் மேற்கொண்ட தீர்மானத்தில், ‘இலங்கையில் வரலாற்று ரீதியில் வேறுபட்டுக் கூர்ப்படைந்த தேசங்கள் இருப்பதனால், உதாரணமாகத் தமிழர்களும் சிங்களவர்களும் தமக்கென்று தனிப்பட்ட தாயக பிரதேசத்தையும், தமக்கென்றொரு மொழியையும், பொருளாதார வாழ்வையும், கலாசாரத்தையும், உளவியல் உருவாக்கங்களையும் கொண்டிருப்பதோடும், இந்தத் தேசங்களின் பிரதேச எல்லைகளுக்குள் பரவி வாழும் சிறுபான்மைகள் உள்ளதனாலும், இந்தக் கூட்டமானது, சுதந்திர மற்றும் ஒன்றுபட்ட இலங்கையின் அரசமைப்பானது, பின்வரும் ஜனநாயகப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரகடனம் செய்கிறது என்று குறிப்பிட்டு, தேசங்களும் எவ்வித தடையுமற்ற சுயநிர்ணய உரிமையைக் கொண்டிருக்க வேண்டும்; அந்தச் சுயநிர்ணய உரிமையானது, அவை விரும்பும் பட்சத்தில், தமக்கான சுதந்திர அரசை ஸ்தாபிக்கக் கூடிய உரிமையையும் உள்ளடக்கி அமைய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.   

பின்பு கசக்கும் சமஷ்டி  

ஆக, இதெல்லாம் 1949 இல் சா.ஜே.வே. செல்வநாயகம், ‘சமஷ்டிக் கட்சி’ என்று ஆங்கிலத்தில் அறியப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து, தமிழர் தலைமையொன்று, சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்க முன்பு நடந்தவை.  
ஆக, இலங்கையில் சிங்களத் தலைவர்களே, முதன் முதலில் சமஷ்டி என்ற கருத்தியலை, இலங்கைக்கு மிகப் பொருத்தமான தீர்வென்று முன்வைத்திருந்தார்கள். குறிப்பாக கண்டித் தலைவர்கள், இதற்காக நீண்ட பிரசாரமும், பிரித்தானிய கொலனித்துவத்திடம் வலுவான கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தார்கள்.   

பெயர்போன சிங்களத் தலைவர்கள் பலரைக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் இதற்கு ஒருபடி மேலேபோய், பிரிந்து செல்லத்தக்க உரிமையுடைய தேசங்களின் சுயநிர்ணயம் பற்றித் தீர்மானமே நிறைவேற்றியிருந்தார்கள். இதுதான் இலங்கையின் வரலாறு.   

தமக்குத் தேவைப்பட்டதென அவர்கள் நினைத்தபோது, இனித்த சமஷ்டி, தமிழர்கள் அதை வேண்டியபோது ஒவ்வாததாய், கசப்பானதாய் போனது ஏன்? அவர்கள் வேண்டியபோது, வேறுபட்ட தேசங்கள் கொண்ட நாட்டை, அந்தத் தேசங்களுக்கான சுயநிர்ணய உரிமைகளைப் பாதுகாப்பதோடு, ஒன்றுபட்ட நாடாகப் பேணத்தக்கதொரு உபாயமாகத் தெரிந்த சமஷ்டி, தமிழர்கள் கோரிய போது, பிரிவினைக்கான அடிப்படையாக, தீண்டத்தகாததாக மாறியது ஏன்?   

இதற்கு முக்கிய காரணியாகப் பங்களித்தவை எனச் சிலவற்றை அடையாளம் காணமுடியும். 1930கள் வரை, கண்டிச் சிங்களவர், கீழ் நாட்டுச் சிங்களவர் இடையேயான அடிப்படை வேறுபாடுகள், பெருமளவு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.   

கீழ் நாட்டுச் சிங்களவரிடமிருந்து தம்மைத் தனித்த தேசமாகவே கண்டிச் சிங்களவர் அடையாளப்படுத்தினர். ‘சிங்களவர்’ என்ற ஒற்றைத் தேசிய அடையாளம், பெரிதளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1931இல் டொனமூர் சீர்திருத்தம், சர்வசன வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதானது, ஆட்சியில் தெளிவான சிங்களப் பெரும்பான்மைக்கு வழிசமைத்தது.   

அத்தோடு, அதன் பின்னர் பௌத்த பிக்குகளின் அரசியல் எழுச்சியையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணக் கூடியதாக இருக்கிறது. இவையெல்லாம் கண்டி, கீழ் நாடு என்ற வேறுபாடுகளைத் தாண்டிய, ‘சிங்கள - பௌத்த’ பெரும்பான்மைத் தேசிய அடையாளமொன்றைக் கட்டியெழுப்ப வழிசெய்தது.  

‘சிங்கள - பௌத்த’ பெரும்பான்மைத் தேசிய அடையாளத்துக்குள் கண்டிய - கீழ் நாட்டு வேறுபாடுகள் பெருமளவுக்குத் தொலைந்து போனது. மாறாக, சிங்களவர் - தமிழர் என்ற இரண்டு தேசங்கள் பெரும்பான்மை - சிறுபான்மை என்ற முரண் நிலையை அடையும் வண்ணம், பேரினவாத அரசியல் முன்னெடுக்கப்பட்டது.   

முழு இலங்கை மீதான அதிகார மேலாதிக்கத்தை விட்டுக் கொடுக்க விரும்பாத பெரும்பான்மைப் பேரினவாத அரசியல், தமிழர்களுக்கு உரியதென சில தசாப்தங்களுக்கு முன்பு, அவர்களே கருதிய தனித் தேச அடையாளத்தையும், சுயநிர்ணயத்தையும் மறுத்தது. அதன் விளைவும், தொடர்ச்சியும்தான் இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது.   

(அடுத்த திங்கள்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தீண்ட-கூடாததாகிய-சமஷ்டி/91-206660

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
இந்தியாவும் தமிழ்த் தலைமையும்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 119)

அரசியலில் முக்கியத்துவம் பெற்ற ஆயுதக் குழுக்கள்  

‘Out of sight is out of mind’ என்பது ஒரு பிரபலமான ஆங்கிலக் கூற்று. அதன் அர்த்தம், ‘பார்வையிலிருந்து விலகிவிட்டால், விரைவில் மனதிலிருந்தும் விலகிவிடுவர்’ என்பதாகும்.   

அரசனின் முக்கிய பண்புகளுள் ஒன்றாக வள்ளுவன், ‘காட்சிக்கு எளியனாக’ இருப்பதைக் குறிக்கிறான். அதாவது, மக்கள் இலகுவில் காணத்தக்கவாறு, அவர்களுடைய தலைவன் இருக்க வேண்டும்.   

ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கும் மேலாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள், இந்தியாவில் இருந்தார்கள். அதற்கான நியாயங்கள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால், தாயகத்தில், தமது தலைவர்கள் அல்லது பிரதிநிதிகளைத் தமிழ் மக்களுக்குக் காணவே கிடைக்கவில்லை.  

 அதுவும், 20 ஆம் நூற்றாண்டில், ஆசியாவில் கட்டவிழ்த்து விடப்பட்ட, மிகப்பெரும் இன அழிப்பைச் சந்தித்த மக்கள் முன், அவர்களின் தலைவர்கள் இல்லை. இந்த இடத்தில்தான், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செல்வாக்கு, தமிழ் மக்களிடையே பெரிதும் முக்கியத்துவம் பெறுவதை, நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.   

அதுவரை காலமும், தமிழ் அரசியற் தலைமைகள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, குறிப்பிடத்தக்க அரசியல் அங்கிகாரத்தை வழங்கவில்லை. ஆனால், அந்த நிலைமை அப்போது மாறியிருந்தது.  

 1983 ஒக்டோபரில், இந்தியாவிலிருந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் விடுத்திருந்த அறிக்கையொன்றில், ‘ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கம், இந்தியாவின் மத்தியஸ்தத்தின் உதவியுடன், எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த மறுக்குமானால், அவர்கள் ஆயுதப்போராளிகளோடுதான் பேச வேண்டி வரும். அவர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட, அந்தத் தீர்வை, விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  

பல, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் இருந்த சூழலில், விடுதலைப் புலிகள் அமைப்பை, அமிர்தலிங்கம் முன்நிறுத்தியமை ஏன் என்ற கேள்வி எழுவது இயல்பானது.   

அமிர்தலிங்கத்துக்கு நெருக்கமான அமைப்பாக, விடுதலைப் புலிகள் இருந்தது என்று கருத்துரைப்போரும் உளர். இதற்கு அல்பிரட் துரையப்பா படுகொலைச் சம்பவம் முதல், அமிர்தலிங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடையேயான தொடர்புகள் பற்றிய கருத்துகளும் விமர்சனங்களும் பலராலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.   

ஆனால் இந்த இடத்தில், எமக்கு அவசியமான குறிப்பாவது, விரும்பியோ விரும்பாமலோ, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அரசியல் முக்கியத்துவத்தை, அங்கிகரிக்க வேண்டிய தேவையும் சூழலும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு ஏற்பட்டிருந்தது என்பதையாகும்.   

ஒருவேளை ஜே.ஆர் அரசாங்கத்தை, அச்சமூட்டிப் பேரம் பேசும் உத்தியாகக் கூட, தமிழ்த் தலைமைகள் இதைக் கையாண்டிருக்கலாம் என்றும் சிலர் கருதலாம். ஆனால், அந்த உத்தி அவ்வளவு சாதகமானது அல்ல; ஏனெனில், இந்தப் பிரச்சினையை இராணுவ வழியில் தீர்ப்பதற்கு, ஜே.ஆர் பின்நிற்கக்கூடியவரல்லர். தமிழ் அரசியலிலிருந்து ‘மிதவாதிகள்’ ஓரங்கட்டப்பட்டு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முன்நிறுத்தப்படுவதை ஜே.ஆர் சாதகமாகவே பார்த்திருப்பார்.   

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் பிரச்சினையை மறைத்து, இதை ஒரு பயங்கரவாதப் பிரச்சினையாக முன்னிறுத்துவதன் மூலம், சர்வதேச உதவியுடன், இராணுவ ரீதியில் இதை அணுகி, அடக்க முடியும் என்பது அவரது கணக்காக இருந்திருக்கும்.  

அதிருப்தியில் புலம்பெயர் தமிழர்  

அமிர்தலிங்கம் மிகவும் சிக்கலான சூழலில் இருந்தார். இந்தியாவின் மத்தியஸ்தத்தினுடனான பேச்சுவார்த்தைக்கு, அமிர்தலிங்கம் உடன்பட்டிருந்ததுடன், தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, அதிலிருந்து கீழிறங்கி, ‘ஒன்றுபட்ட நாட்டுக்குள்’ அதிகாரப் பகிர்வுத் தீர்வொன்றை எட்டும் நோக்கில், ஜே.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்த அமிர்தலிங்கம் ஒத்துக் கொண்டிருந்தமை, புலம்பெயர்ந்திருந்த அவருடைய ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக் கட்சி, முன்னர் எடுத்திருந்த இரண்டு முக்கிய தீர்மானங்களான ‘தனிநாடு’ மற்றும் ‘ஜே.ஆர் அரசாங்கத்தோடு இனிப் பேசுவதில்லை’ ஆகியவற்றை, அவர் மீறியிருந்தமைதான் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம்.   

1983 ஒக்டோபரில், அமிர்தலிங்கம் ஐரோப்பாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது, கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் சந்திக்க வேண்டியிருந்தது. அமிர்தலிங்கம், இந்தியா இராணுவரீதியில் தலையிடக் கோரியிருக்க வேண்டும் என்பது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் புலம்பெயர் ஆதரவாளர்களின் கருத்தாக இருந்தது.   

ஜே.ஆர், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இது, 1983 இன அழிப்பொன்று மீண்டும் நடத்தப்படும் என்பதையே, கோடிட்டுக்காட்டுகிறது என்பது, அவர்களின் அச்சமாக இருந்தது.   

தமிழ்த் தலைமைகளும் இந்தியாவும்  

தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இன்றும் கூட, இருக்கின்ற மிகப்பெரிய சிக்கல், இதுபோன்றதொரு ‘இருதலைக்கொள்ளி’ நிலையில் மாட்டிக்கொள்வது. 

இந்திரா காந்தியிடம் இராணுவத் தலையீட்டை அமிர்தலிங்கம் கேட்கவில்லையா? இந்திரா காந்தியிடம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை வரலாற்றை அமிர்தலிங்கம் எடுத்துரைக்கவில்லையா? இந்திரா காந்தியிடம் தமிழ் மக்கள் தேர்தலில் ‘தனிநாட்டுக்கு’ மக்களாணை வழங்கியிருந்ததன் தாற்பரியத்தை அமிர்தலிங்கம் எடுத்துரைக்கவில்லையா? நிச்சயமாக அவர் இவற்றையெல்லாம் செய்திருந்தார்.  

ஆனால், அதற்கு இந்திராவின் பதில் என்னவாக இருந்தது? இந்திராகாந்தி, இந்தியாவின் ‘பிராந்தியக் கொள்கை’யை மிகத் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். இந்தியா ஒருபோதும், தன்னுடைய நலனைவிட, இலங்கைத் தமிழரின் நலனை முன்னிறுத்தப் போவதில்லை. 

அப்படியானால் அமிர்தலிங்கம், தமிழ்நாட்டுத் தலைமைகளோடு ஒன்றிணைந்து, மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தத்தை வழங்கியிருக்க வேண்டும் என்று சிலர் வாதிடலாம்.  தமிழ் நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளிலொன்று, இந்திராவுடன் இணக்கமாக இருந்தது.

அடுத்த தேர்தலில், அவை கூட்டணியாகப் போட்டியிட்டன. வாய்ப்புக் கிடைத்திருந்தால், மற்றைய கட்சியும் அந்தக் கூட்டணியை அமைத்திருக்கும். அரசியல் யதார்த்தம் அது.   

தமிழ் உணர்வுகள் தமிழகத்தில் மேலோங்கியிருந்தாலும், தமிழ் மக்கள் மீதான ‘தொப்புள்கொடி’ உறவின்பாலான அன்பும் அக்கறையும் மேம்பட்டிருந்தாலும் இந்திய தேசியத்தை மீறத்தக்களவுக்கு அவை மேம்பட்டவை அல்ல.   

மேலும், அன்று தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி. இராமச்சந்திரன், “தமிழ்நாட்டு மக்கள், இந்தியா தனது படைகளை, இலங்கைக்கு அனுப்பி, தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்கள்” என்று இந்திரா காந்திக்குச் சொன்னபோது, “அப்படிச் செய்வதானது, சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழ் மக்களை, அது ஆபத்தில் போடும் செயல்; குறிப்பாக, இலங்கை அமைச்சரான காமினி திசாநாயக்க போன்றவர்கள், பொதுவிலேயே, இந்தியா ஆக்கிரமிப்புச் செய்தால், இலங்கை இராணுவமானது தமிழ் மக்களைக் கொன்றொழிக்கும்” என்று பேசியதாகச் சுட்டிக் காட்டியதுடன், தமிழ் நாட்டு மக்களுக்கு இதை எடுத்துரைக்கச் சொன்னதுடன், தனது ‘இருவழி அணுகுமுறை’யை எடுத்துரைத்தும் இருந்தார்.   

image_c14ab5168b.jpg

அதாவது, ஒருபுறத்தில் பேச்சுவார்த்தை மூலமான தீர்வை முன்னெடுக்கும் செயற்பாடுகளை, இந்தியா ஊக்குவிக்கும் அதேவேளையில், மறுபுறத்தில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியா பயிற்சி அளிக்கும் என்பதே, இந்திராவின் ‘இருவழி அணுகுமுறை’யாகும்.  “இந்த இருவழி அணுகுமுறை, தமிழ்நாட்டு மக்களைத் திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கை தனக்கில்லை” என்று எம்.ஜி.ஆர், இந்திராவுக்குச் சொல்லியிருந்தாலும், அதனை மீறி, அவர் எதையும் செய்யவில்லை என்பதுதான் யதார்த்தம்.   இலங்கைத் தமிழர் பிரச்சினையை, ஆத்மார்த்தமாக முன்னெடுத்த கட்சிகள் கூட, இன்றளவுக்கும் தமிழ்நாட்டின் அரசியலில் உதிரிகளாகவே இருக்கின்றன என்பதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.   

இலங்கை தொடர்பில், மத்தியரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சி ஏற்படும் என்று இந்திய மத்திய அரசாங்கம் அச்சம் கொண்டிருந்தாலும், அதனை இலாவகமாகச் சமாளிக்கக் கூடிய, நீர்த்துப் போகச் செய்யக்கூடிய தந்திரோபாயங்களை அவர்கள் கையாண்டிருந்தனர்.   

மேலும், இந்திராவோடு நெருக்கமான உறவைக் கொண்டிருந்த சிறிமாவோ அரசாங்கத்தின் காலத்தில், இதுபோன்ற சம்பவம் இலங்கையில் நடந்திருந்தால், இன்று, ஜே.ஆர் அரசாங்கம் தொடர்பில், இந்திராகாந்தி எடுத்தளவு நடவடிக்கைகளைக் கூட எடுத்திருப்பாரோ என்பது கேள்விக்குரியது.   

தமிழ்த் தலைமைகளும் சர்வதேச அரசியலும்  

மறுபுறத்தில், அமிர்தலிங்கம் குழுவினர், இந்தியாவைத் தாண்டிச் சிந்தித்திருக்க வேண்டும். சர்வதேச அரசியலையும் அதன் முரண்பாடுகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று வாதிடுவோரின் வாதத்தில் உண்மை இருக்கிறது.   

ஆனால், அது ஓர் இரவில், சில மாதங்களில் சாதித்திருக்கக் கூடியதொன்றல்ல. சர்வதேச அரசியல் மற்றும் பூகோள அரசியல் பற்றிய தமிழ்த் தலைமைகளின் தந்திரோபாய ரீதியிலான ஈடுபாடு, வரலாற்று ரீதியில், மிகக் குறைவானதாகவே இருந்திருக்கிறது என்பதை அவதானிக்கையில், அது மிகவும் ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது.   

புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கையின் இனப்பிரச்சினையை, சர்வதேசமெங்கும் கொண்டுசென்று சேர்த்துக் கொண்டிருந்த போதும், தமிழ்த் தலைமைகள், சர்வதேசங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்த போதும், சர்வதேச அரசியலைத் தமிழ்த் தலைமைகள், தந்திரோபாய ரீதியில் அணுகியமைக்கான போதிய சான்றுகள் இல்லை.   

ஆனால், இலங்கை அரசாங்கம், குறிப்பாக, ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம், அமெரிக்கா, மேற்கு நாடுகள், பாகிஸ்தான், இஸ் ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மிக நெருங்கிய உறவுகளை வளர்த்திருந்தது.   

இந்தியாவுக்கு ஜே.ஆர் மீதான வெறுப்புக்கு இது ஒரு முக்கிய காரணம். தெற்காசியப் பிராந்தியத்தில் தம்மை மீறி, இன்னொரு நாடு தலையிடக்கூடாது என்ற ‘இந்தியக் கொள்கைக்கு’ ஜே.ஆர் முரண்பட்டுச் செயற்படுவதை, இந்தியா தனக்கெதிரான நடவடிக்கையாகவே பார்த்தது.   

இலங்கையின் திருக்கோணமலைத் துறைமுகத்தை, இலங்கையில் அமைந்த முதலாவது அமெரிக்கத் தளம் என்று விவரித்த இந்திராகாந்தி, 1983 ஓகஸ்டில் ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’வுக்கு ஒலிபரப்புத் தளம் அமைக்க, இலங்கை அனுமதி வழங்கியதை ‘அமெரிக்காவின் இரண்டாவது தளம்’ என்று விவரித்தார்.  

image_0c60f42176.jpg

இலங்கையில், ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ ஒலிபரப்புத் தளம் அமைப்பதற்கு, இந்தியா தனது கடும் கண்டனத்தை வெளியிட்டது. இந்தத் தளம் மூலம், தெற்காசியா, மத்தியகிழக்கு, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவின் சில பகுதிகள், கிழக்காபிரிக்கா ஆகிய பகுதிகளுக்கு, அமெரிக்கா தனது பிரசாரத்தை முன்னெடுக்கும் என்பதுடன், குறித்த பகுதிகளிலுள்ள ஏனைய ஒலிபரப்புகளைக் குழப்புவதற்கும் வாய்ப்புண்டு என்பதைச் சுட்டிக்காட்டிய இந்தியா, இதை அமெரிக்காவின் சித்தாந்தப் பிரசார முகவர் என்றும் விவரித்தது. இந்தியாவின் கண்டனத்தைக் கண்டுகொள்ளாத இலங்கை, “இது புதிய விடயமல்ல; ஏலவே நடைமுறையிலிருந்த ஒப்பந்தம்தான், புதுப்பிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டது. இந்தியாவின் மேலாதிக்கத்திலிருந்து தன்னைக் காப்பாற்றத்தக்க ஒரு கவசமாக அமெரிக்காவை, ஜே.ஆர் பார்த்தார்.   

“கொஞ்சம் பொறுங்கள்”  

ஐரோப்பிய விஜயத்தைத் தொடர்ந்து, இந்தியா திரும்பியிருந்த அமிர்தலிங்கம், பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து, தனது புலம்பெயர் ஆதரவாளர்களின் கருத்தை எடுத்துரைத்தார்.   

அமிர்தலிங்கத்தையும் ஏனைய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களையும் கொஞ்சம் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டதே, இந்திராவின் பதிலாக இருந்தது. 
  
இதுபற்றிச் சந்திப்பின் பின்னர், அமிர்தலிங்கம் குழுவினருக்கு விளங்கப்படுத்திய, இந்திரா காந்தியின் விசேட ஆலோசகர் கோபால்சாமி பார்த்தசாரதி, “தெற்காசியாவின் பிராந்திய சக்தியாக இருக்க, இந்தியா விரும்புகிறது. நாங்கள் ஏகாதிபத்தியவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுவிடக்கூடாது. இலங்கை விவகாரத்தில் நாம் தலையிடுவதை, இதுவரை எந்த நாடும் கேள்விக்குட்படுத்தவில்லை. அதுவே, மற்றைய நாடுகள், எம்மைப் பிராந்திய சக்தியாக அங்கிகரித்திருப்பதன் அடையாளம். எங்களுக்குக் கொஞ்சக் காலம் தாருங்கள். உங்கள் உரிமைகளை நாம் வென்று தருகிறோம்” என்று எடுத்துரைத்திருந்தார். இந்தியா முடியாதென்றிருந்தால் கூட, தமிழ்த் தலைமைகளுக்கு வேறு மாற்று இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.  

வோல்டேர்ஸின் விஜயம்  

பார்த்தசாரதியின் மத்தியஸ்த முயற்சிகள் சில வாரங்களாக எந்த முன்னேற்றமுமின்றி, நட்டாற்றில் நின்று கொண்டிருந்தது. பார்த்தசாரதியை, மீண்டும் இலங்கைக்கு அழைக்க வைக்க, ஜே.ஆருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசர காரணங்கள் சில, இந்தியாவுக்கு எழத்தொடங்கின.   

மறுபுறத்தில், பார்த்தசாரதியின் மத்தியஸ்தத்தைப் பற்றி, எந்த அக்கறையுமற்ற மனநிலையைப் பிரதிபலித்த ஜே.ஆர், 1983 ஒக்டோபர் இறுதியளவில், அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் ரேகனின் விசேட அதிதியாக, இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட லெப்டினன் ஜெனரல் வேர்னன் வோல்டேர்ஸை வரவேற்றுச் சந்தித்தார். இது இந்தியாவை மேலும் சினமூட்டுவதாக அமைந்தது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்தியாவும்-தமிழ்த்-தலைமையும்/91-207470

Link to comment
Share on other sites

ஜே. ஆரின் ‘மூவழிப் பாதை’

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 120)

இந்திராவின் பதற்றம்

 டெல்லியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியையும் அவரது விசேட ஆலோசகரும், இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய மத்தியஸ்தராக செயற்பட்டுக் கொண்டிருந்தவருமான கோபால்சாமி பார்த்தசாரதியையும் 1983 ஒக்டோபர் 17 இல், அ. அமிர்தலிங்கம் குழு, சந்தித்திருந்தது.  

இந்தச் சந்திப்பில் இந்திரா காந்தி, பெரும் சவாலாகக் கருதிய விடயங்களில் ஒன்று, அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் வெற்றிடமாகும் நிலைமையாகும்.   

1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கம், நிறைவேற்றியிருந்த அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தின்படி, இலங்கை அரசாங்கத்துக்கு விசுவாசமாகவும் பிரிவினைக்குத் துணைபோகமாட்டோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்று மாத காலத்துக்குள் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியிருந்தது.   

அதைச் செய்யாதவிடத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும். ஆறாவது திருத்தத்தின் கீழான சத்தியப்பிரமாணத்தை எடுப்பதில்லை என்பதில் அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரும் உறுதியாக இருந்தனர். அப்படிச் செய்வது அவர்களது அடிப்படைக் கொள்கைக்கும் அவர்கள் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட மக்களாணைக்கும் முற்றும் முரணாக அமையும்.   

ஆறாவது திருத்தம் என்பது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியலுக்கு எதிரான ஜே.ஆர். ஜெயவர்தனவின் ‘செக்மேட்’ காய்நகர்த்தல் தான். ஆறாவது திருத்தத்தின் கீழ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் சத்தியப்பிரமாணம் செய்தால், அவர்களது ‘தனிநாட்டு’ கோரிக்கை அர்த்தமற்றதாகிவிடும். அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யாது விட்டால், அவர்கள் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் செல்ல நேரிடும். இதில் எது நடந்தாலும், அது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் பலமிழக்கச் செய்யும். ஆகவே, அதை ஜே.ஆர் வெற்றியாகவே பார்த்தார்.   

ஆனால், இதற்குள் இன்னொரு விடயம் இருக்கிறது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் வளர்ந்து வருவதையும், அதன் பின்னணியில் இந்தியா, குறிப்பாக இந்திய உளவுத்துறை இருக்கிறது என்பதையும் ஜே.ஆர் நன்கறிந்திருந்தார்.   

தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் முகமான, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மேலும் முன்னணிக்கு வருவதற்கான சூழலை அது உருவாக்கும். 

அதன்பின் இராணுவ ரீதியில் இந்தப் பிரச்சினையை அணுகி, பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாக, முன்னெடுத்து, ஆயுத ரீதியில் தமிழ் மக்களின் அரசியலை எதிர்கொள்ள ஜே.ஆர் முடிவெடுத்திருக்கலாம். அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள் இந்தத் தர்க்கத்துக்கு வலுச்சேர்ப்பதாகவே இருக்கின்றன. சிலர் இதனை ஜே.ஆரின் ‘மூவழிப்பாதை’ என்று அடையாளப்படுத்துகிறார்கள்.   

ஜே.ஆரின் ‘மூவழிப்பாதை’  

இலங்கை இனப்பிரச்சினையை எதிர்கொள்வது தொடர்பில் ஜே.ஆர் மூன்று சமாந்தர வழிகளைக் கையாண்டார்.   

முதலாவது, தனது இராணுவத்தைப் பலப்படுத்துதல்; அதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.   

இரண்டாவதாக, தமிழர் அரசியலிலிருக்கும் மிதவாதிகளைப் பலமிழக்கச் செய்தல்; இது தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழர் அரசியலில் முன்னணிக்கு வர உதவும்.  

 மூன்றாவதாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தி, இராணுவரீதியாக அவர்களைத் தோற்கடித்தலுடன், தமிழர் தாயகம் என்று கருதிய பிரதேசங்களில், திட்டமிட்ட குடியேற்றங்களை ஏற்படுத்தி, ‘தமிழர் தாயகம்’ என்பதன் அடிப்படைகளை இல்லாது செய்தல்.   

இந்த ‘மூவழிப் பாதையை’ ஜே.ஆர் கனகச்சிதமாக முன்னெடுத்துக் கொண்டிருந்தார். இந்திரா காந்தியின் இலங்கை தொடர்பான இருவழிப்பாதை அணுகுமுறை, அதாவது, தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் மற்றும் ஜே.ஆர் தலைமையிலான இலங்கை அரசாங்கம் ஆகிய இரண்டு தரப்புகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் அதேவேளையில், மறைமுகமாகத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை வளர்த்தல் ஆகிய இரு சமாந்தர வழிமுறைகளைக் கையாண்டார்.   

இந்தத் தந்திரோபாயமானது, ஜே.ஆரின் ‘மூவழிப்பாதைக்கு’ சாதகமானதாகவே இருந்தது. பேச்சுவார்த்தைகள் தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்தது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சி, ஜே.ஆர் இந்த இனப்பிரச்சினையை எதிர்காலத்தில் இராணுவ ரீதியில் அணுகுவதற்கு வழிசமைப்பதாக இருந்தது.   

ஜே.ஆரும் அமெரிக்காவும் இந்தியாவும்  

ஜே.ஆர், இந்திராவையும் இந்தியாவையும் நம்பவில்லை. இந்திய ஆக்கிரமிப்பு பற்றிய அச்சம் ஜே.ஆருக்கு இருந்தது. அதனால்தான், இந்தியாவை முற்றாகப் புறக்கணிக்க முடியாதநிலை ஜே.ஆருக்கு இருந்தது. இந்தியாவுக்கெதிரான பாதுகாப்பாக மட்டுமல்லாமல், உள்நாட்டிலே வளர்ந்து வரும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு எதிராகவும் இராணுவத்தைத் தயார் செய்ய ஜே.ஆர் பல முயற்சிகளை முன்னெடுத்தார்.   

அதன் முக்கிய படிதான், அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்துதல். அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனுடன் ஜே.ஆர் நல்ல உறவை வளர்த்திருந்தாலும், அமெரிக்கா நேரடியாகத் தனக்கான ஆதரவைத் தரவில்லை என்ற வருத்தம் ஜே.ஆருக்கு நிறையவே இருந்தது.   

இந்தப் பின்னணியில்தான், ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ ஒலிபரப்புத் தளம் முக்கியத்துவம் பெற்றது. இதற்கான ஒப்பந்தத்தை 1983 ஓகஸ்ட்டில் இலங்கையும் அமெரிக்காவும் இந்தியாவின் வெளிப்படையான கடும் அதிருப்திக்கு மத்தியில் ‘புதுப்பித்திருந்தது’.   
இதைத் தொடர்ந்து, 1983 ஒக்டோபர் முதலாம் திகதி, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் கஸ்பர் வய்ன்பேர்கர், இலங்கைக்கு மிகக் குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்திருந்தார். இது இந்தியாவை மேலும் அதிருப்திக்குள்ளாக்கிஇருந்தது.  

 அமெரிக்கா பாதுகாப்புச் செயலாளர் கஸ்பர் வய்ன்பேர்கரின் விஜயத்தை, ‘இலங்கையில் எடுத்த தேநீர் இடைவேளை’ என்று குறிப்பிட்டிருந்தாலும், இந்தியா இதை, இலங்கை - அமெரிக்க பாதுகாப்பு உறவின் பகுதியாகவே பார்த்தது.   

ஆகவே, ஜே.ஆரின் காய்நகர்த்தல்கள் இந்தியாவுக்கும் இந்திராவுக்கும் புரிந்திருந்தன. இதன் அடிப்படையில்தான் ஒக்டோபர் 17 ஆம் திகதி, அமிர்தலிங்கம் குழுவினரோடு நடந்த பேச்சுவார்த்தையில், அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தை இந்திரா காந்தி கோடிட்டுக்காட்டியிருந்தார்.  

 ஆனால், நவம்பர் நான்காம் திகதியோடு, மூன்று மாத காலக்கெடு முற்றுப் பெறும் சூழலே இருந்தது. இந்தச் சில நாட்களில் ஜே.ஆர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கைகளை ஏற்று, ஒரு தீர்வுக்கு இணங்கப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.   

பார்த்தசாரதியை அழைத்துப் பேச்சுவார்த்தைகளை முற்கொண்டு செல்வதில், ஜே.ஆர் துளியும் அக்கறை காட்டவில்லை. மாறாக, அவரது எண்ணம் பேச்சுவார்த்தைகளைக் காலந்தாழ்த்துவதிலும் அதேநேரத்தில், ஏனைய சர்வதேச உறவுகளைக் குறிப்பாக, இராணுவம் மற்றும் அரசியல் ரீதியில் பலப்படுத்துவது தொடர்பில்தான் இருந்தது.   

இதற்கான நடவடிக்கைகளை அவர் மிகநீண்ட காலமாகவே முன்னெடுத்துக் கொண்டிருந்தார். அமெரிக்கா, பிரித்தானியாவுடன் மட்டுமல்லாது, இஸ் ரேல் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடனும் பலமான உறவுப்பாலங்களை கட்டியெழுப்புவதில் அவர் மும்முரமாகச் செயற்பட்டார்.   

ஜே.ஆர், தனது சகோதரரும் இலங்கையில் புகழ்பெற்ற வழக்குரைஞர்களில் ஒருவருமான, எச்.டபிள்யூ. ஜெயவர்தனவை, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு தனது விசேட தூதுவராக அனுப்பி, அந்நாடுகளுடன் பலமான உறவுப் பாலங்களைக் கட்டியமைப்பதில் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தார்.   

வோல்டேர்ஸின் விஜயம்  

இந்த நிலையில்தான், 1983 ஒக்டோபர் இறுதிப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனின் விசேட தூதுவராக லெப். ஜெனரல் வேர்னன் வோல்டேர்ஸ் இலங்கை வந்திருந்தார்.   

வோல்டேர்ஸை இந்திய விரோதப் போக்காளராகவே இந்தியா பார்த்தது. அவரது இலங்கை விஜயம், இந்தியாவை மேலும் விசனம் கொள்ளச் செய்தது. ஜே.ஆரைச் சந்தித்த வோல்டேர்ஸ், தமிழர் தரப்புடனான பேச்சுவார்த்தையை இந்தியாவின் துணையோடு முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.  

ஏனென்றால், இந்தியாவோடு இந்த விடயத்தில் முரண்படுவதானது இந்தியாவைக் கடுமையாக நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டுவதாக அமையும். மேலும், இலங்கையின் இனப்பிரச்சினை இன்னும் முறுகல் நிலையை அடைந்தால், இந்தியா இராணுவ நடவடிக்கையைக் கூட முன்னெடுக்கலாம் என்றும் வோல்டேர்ஸ் சுட்டிக்காட்டினார்.   

இது, ஜே.ஆருக்கும் இலங்கைக்குமான ஆலோசனையாக இருந்தாலும், அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைப்பதாக இருந்தது. இந்தியாவுடனான முரண்பாட்டை அமெரிக்கா விரும்பவில்லை; அத்தோடு, அத்தகைய முடிவை இலங்கை எடுக்குமானால், அதற்கு அமெரிக்காவின் ஆதரவும் உதவியும் இருக்காது என்பதையும் இது உணர்த்தியது.  

மேலும், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய மேலாதிக்கத்தையும் அதனடிப்படையிலான ‘இந்தியக் கோட்பாட்டையும்’ மேற்கும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை இது மீண்டும் வலியுறுத்தியுள்ளது.   

இது, ஜே.ஆரை நிச்சயம் அதிருப்தியடைய வைத்திருக்க வேண்டும். ஆனால், இஸ் ரேலினூடான ஆயுத வழங்கல், மேலும், அமெரிக்க, இஸ் ரேல், பாகிஸ்தான் உளவுத்துறைப் பங்களிப்பு, இராணுவப்பயிற்சி என்பவை தொடர்பில் ஜே. ஆரும், வோல்டேர்ஸும் இணங்கியதாகத் தெரிகிறது.   

இதனடிப்படையில் வோல்டேர்ஸின் உதவியுடன் இஸ் ரேலுடனான இராணுவ உறவுகளைப் பலப்படுத்த, தனது மகன் ரவி ஜெயவர்தனவை நேரடியாக இஸ் ரேலுக்கு அனுப்பி வைத்திருந்தார் ஜே.ஆர்.   

 மேலும், இந்தச் சந்தர்ப்பத்தை அமெரிக்காவுக்குப் பெரிதும் சாதகமாகப் பயன்படுத்த வோல்டேர்ஸ் விரும்பினார். இஸ் ரேலை இலங்கை அங்கிகரிக்க வேண்டும்; திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்க கடற்படை பயன்படுத்த அனுமதித்தல், திருகோணமலை எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.   

இவற்றை அமெரிக்காவுக்குச் சாதகமாகப் பரிசீலித்தாக வேண்டிய சூழல் ஜே.ஆருக்கு இருந்தது. இதுதான் சர்வதேச அரசியல். 

இந்தியா, வோல்டேர்ஸின் விஜயத்தை மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே பார்த்தது. ஏற்கெனவே, இலங்கையில் புதிய ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ ஒலிபரப்புத் தளத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சாதகமான ஒன்றாகவும் தனக்குப் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் பார்த்த இந்தியா, அமெரிக்க, இஸ் ரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இராணுவரீதியில், மிக நெருக்கமான தொடர்பை இலங்கை பேணுவதை, மிகப்பெரும் சவாலாகவே கருதியது.   

இந்தச் சூழலில் இலங்கை இனப்பிரச்சினை என்பதுதான், இந்தியா, இலங்கை மீது பெரும் அழுத்தத்தை வழங்கத்தக்க ஒரே ‘துருப்புச்சீட்டு’. ஆகவே, அதை முன்கொண்டு செல்வதில் இந்தியா மும்முரம் காட்டியது.   

பார்த்தசாரதிக்கு அழைப்பு  

கோபால்சாமி பார்த்தசாரதியை மீண்டும் இலங்கைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜே.ஆருக்கு அழுத்தத்தை இந்தியா வழங்கியது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மூலம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ். ஹமீடினூடாக, ஜே.ஆருக்கு இந்தச் செய்தி இந்தியாவால் தெரிவிக்கப்பட்டிருந்தது.   

மறுபுறத்தில், இந்திய விஜயத்தை மேற்கொண்டு திரும்பியிருந்த சௌமியமூர்த்தி தொண்டமானும் பார்த்தசாரதியை அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜே.ஆரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.   

இதையெல்லாம் விட, முக்கியமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு வேர்னன் வோல்டேர்ஸும் ஜே.ஆருக்கு ஆலோசனை கூறியிருந்தார். ஆகவே, பார்த்தசாரதியை அழைத்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது மட்டுமே, ஜே.ஆர் முன்னிருந்த ஒரேயொரு வழியாக இருந்தது. ஆனால், முடிந்தளவுக்கு கால இழுத்தடிப்புச் செய்வதில் ஜே.ஆர் கொஞ்சம் கூடத் தயக்கம் காட்டவில்லை.   

பதவியிழந்த கூட்டணியினர்  

மீண்டும் பார்த்தசாரதி, இலங்கை வருவதற்கு முன்னதாக, 1983 நவம்பர் நான்காம் திகதியோடு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் வெற்றிடமாகியிருந்தன. வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பிரதான ஜனநாயக பிரதிநிதித்துவம், திட்டமிட்டுச் சட்ட ரீதியில் இல்லாதொழிக்கப்பட்டது.   

சட்டரீதியாகச் செய்வதால் மட்டும் ஒருவிடயம் சரி என்று ஆகிவிடாது. இதைத்தான் அமெரிக்க சிவிலுரிமைப் போராட்டத்தின் முக்கிய தலைவரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் “ஜேர்மனியில் ஹிட்லர் செய்தவை யாவும் சட்டபூர்வமானவையே என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.  

 மகாத்மா காந்தி ஒரு முறை, “மனச்சாட்சி சம்பந்தமான விடயங்களில் பெரும்பான்மையோரின் சட்டத்துக்கு இடமில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.   

புதிய எதிர்க்கட்சித் தலைவராக அநுர  

எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்திருந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அநுர பண்டாரநாயக்க, எதிர்க்கட்சித் தலைவரானார்.   

அதுகூட, ஜே.ஆரின் உதவியுடன்தான். சந்திரிகா - அநுர முரண்பாடு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்திருந்தது. அநுர பண்டாரநாயக்க தலைமையில் மைத்திரிபால சேனநாயக்க உள்ளிட்ட மூவர், ஒரு தனிக்குழுவாகச் செயற்பட்டனர். ஜே.ஆரின் உதவியுடன், இவர்களே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளாக அங்கிகரிக்கப்பட்டிருந்தனர். இதன் அடிப்படையில்தான் அநுர பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவரானார்.   

நீண்ட இடைவெளியின் பின், ஜே.ஆரின் அழைப்பின் பேரில் மீண்டும் பார்த்தசாரதி 1983 நவம்பர் ஏழாம் திகதி இலங்கை வந்தார்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜே-ஆரின்-மூவழிப்-பாதை/91-207946

Link to comment
Share on other sites

ஜே.ஆரின் ‘கொழும்பு முன்மொழிவுகள்’
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 121)

ஜே. ஆரின் அதிகார விளையாட்டு  

ஜே.ஆர். ஜெயவர்தனவை ‘ஆசியாவின் நரி’ என்று பிரபலமாக விளிப்பதற்குப் பின்னால், நிறைய நியாயங்கள் இருக்கின்றன.  

 முற்றுமுழுதான அதிகாரத்தை அடைவதற்கு, ஜே.ஆர் செய்த காய்நகர்த்தல்கள் ‘மாக்கியாவலி’யின் இளவரசனை ஒத்தவை. தன்னுடைய அதிகாரத்தைப் பலப்படுத்துகிற அதேவேளை, எதிரியின் பலத்தைச் சிதைக்கும் கைங்கரியத்தை, ஜே.ஆர் சிறப்பாகவே கையாண்டார்.   

ஜே.ஆரின் பிரதான அரசியல் எதிரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் களையப்பட்டு, அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டிருந்தார்.  

  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் சிறிமாவின் வாரிசுகளான அநுர - சந்திரிக்கா இடையே எழுந்த அதிகாரப் போட்டியை, தனக்குச் சாதகமாக்கிய ஜே.ஆர், பின்னணியில் அநுர குழுவை ஆதரித்ததன் வாயிலாக, ஏற்கெனவே அரசியல் தோல்வியில் உழன்று கொண்டிருந்த சுதந்திரக் கட்சியை இருகூறாக்கினார்.   

அடுத்ததாக, தனது இரண்டாம் கட்ட அரசியல் எதிரிகளான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தினூடாக நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறச் செய்தார்.   

தான் மறைமுகமாக ஆதரித்த, அநுர பண்டாரநாயக்கவை எதிர்க்கட்சித் தலைவராக்கினார். இப்பொழுது கிட்டத்தட்ட முழு நாடாளுமன்றமும் ஜே.ஆரின் கட்டுப்பாட்டிலிருந்தது. இலங்கையின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஜே.ஆரின் கையிலிருந்தது என்று சொன்னால் மிகையில்லை. ஜே.ஆருக்கும் உட்கட்சியில் பிரச்சினைகள், பிளவுகள் இருந்தன. ஆனால் அவையனைத்தும், ஒன்றிணைந்த புள்ளியாக ஜே.ஆர். இருந்தார்.   

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றிலே, முதன் முறையாக, இரவோடிரவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கியிருக்கக்கூடிய அதிகாரபலம் ஜே.ஆருக்கு இருந்தது. ஆனால், அந்த நோக்கம் அவரிடம் இருந்ததா என்பதுதான் கேள்விக்குரியது. ஏனெனில், அவரது நடவடிக்கைகள் அதற்கு மாற்றான போக்கையே சுட்டிக் காட்டின.   

மறைமுகமாகத் தன்னுடைய இராணுவத்தையும் பாதுகாப்புக் கட்டமைப்பையும் பலப்படுத்தும் செயற்பாடுகளை ஜே.ஆர் தொடங்கியிருந்தார். ஆனால், மறுபுறத்தில் இந்திய, அமெரிக்க அரசியல் அழுத்தங்களின் காரணமாக, மீண்டும் பார்த்தசாரதியைப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க, இலங்கைக்கு அழைத்திருந்தார்.   

 1983 நவம்பர் ஏழாம் திகதி, கோபால்சாமி பார்த்தசாரதி இலங்கை வந்தார். ஜே.ஆரை சிலமுறை சந்தித்து, நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பார்த்தசாரதி, இம்முறை மிகத் தௌிவானதொரு கோரிக்கையை ஜே.ஆரிடம் முன்வைத்தார்.   

கடந்த முறை பார்த்தசாரதியின் விஜயத்தின்போது, மாவட்ட அபிவிருத்தி சபைகளைப் பலப்படுத்துவதுடன், அதை நடைமுறைப்படுத்துவதே தன்னால் இயலக்கூடியது என்று ஜே.ஆர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இம்முறை நடந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட அபிவிருத்தி சபைகள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையோ, தமிழ் மக்களையோ திருப்திப் படுத்தாது என்பதை பார்த்தசாரதி தௌிவுபட ஜே.ஆருக்கு எடுத்துரைத்ததுடன், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது இந்தச் சமரசத்துக்காகத் தனிநாட்டுக் கோரிக்கையிலிருந்து இறங்கி வருதையும் சுட்டிக்காட்டினார்.  

 பிராந்திய சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே பார்த்தசாரதியின் கோரிக்கையாக இருந்தது. பிராந்திய சபைகள் என்பது ஜே.ஆருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. நவம்பர் 10ஆம் திகதி வரை பேச்சுவார்த்தைகள் நீடித்தன. இந்தக் காலப்பகுதியில் பார்த்தசாரதி, ஜே.ஆருக்கு நெருக்கமாகவிருந்த அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திசாநாயக்க ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.   
“கொழும்பு முன்மொழிவுகள்”  

இறுதியாக நவம்பர் 10ஆம் திகதி, ஜே.ஆரும் பார்த்தசாரதியும் ஒரு சமரசத்தை எட்டியிருந்தனர். மாவட்ட அபிவிருத்தி சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வில் விடாப்பிடியாக நின்ற ஜே.ஆர், ஒரு மாகாணத்துக்குள் இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்றிணைவதற்குச் சில நிபந்தனைகளுடன் சம்மதித்தார்.   

அந்த நிபந்தனைகளாவன:

 (1) ஒரு மாகாணத்துக்குள்ளாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டுமே இவ்வாறு ஒன்றிணைய முடியும்.   

(2) அம்மாவட்ட அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள், இந்த இணைவுக்கு ஆதரவாக வாக்களிப்பதுடன்,

 (3) குறித்த இணைவுக்கு, குறித்த மாவட்ட அபிவிருத்திச் சபைக்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள், சர்வஜன வாக்கெடுப்பொன்றில் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.  

 (4) திருகோணமலைத் துறைமுகம், முற்றுமுழுதாக மத்திய அரசாங்கத்துக்குட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுடன் ஒரு மாகாணத்துக்குள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இணைவதற்கு, ஜே.ஆர் சம்மதித்தார். இது, ‘கொழும்பு முன்மொழிவுகள்’ என்றும் விளிக்கப்பட்டது.   

இது பற்றி, உத்தியோகபூர்வமாக அறிவித்த ஜனாதிபதி செயலகம், இலங்கையில் வன்முறைகள் தணிய இது உதவும் என்றதுடன், இதற்குப் பிரதியுபகாரமாகத் தமிழர் தரப்பு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடும் என்றும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தது.   
மறுபுறத்தில் பார்த்தசாரதிய, ‘கொழும்பு முன்மொழிவுகளை’ பிராந்திய சபைகள் அமைக்கப்படுவதற்கானதொரு படிநிலையாகவே பார்த்தார்.  

சென்னையிலிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், பெரும் அரசியல் தர்மசங்கடச் சிக்கலுக்குள் இருந்தார் என்று சொன்னால் மிகையல்ல. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவேண்டும் என்பது இந்தியாவின் (இந்திராவின்) அழுத்தம்.  

 தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடக் கூடாது, அதிலிருந்து கீழிறங்கக் கூடாது என்பது புலம்பெயர் தமிழர்களினதும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களினதும் அழுத்தம்.   

இதற்கிடையே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரின் நாடாளுமன்ற ஆசனங்கள் பறிபோயிருந்தன. அ. அமிர்தலிங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோயிருந்தது. தாய் மண்ணிலிருந்தும் தமிழ் மக்களிலிருந்தும் அந்நியப்பட்டுக் கொண்டேயிருந்தனர்.  

 தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழ் மக்களின் அரசியல் சக்தியாக உருப்பெறத் தொடங்கியிருந்தது. மறுபுறத்தில், அமிர்தலிங்கத்துக்கு எதிராக, இலங்கை அரசாங்கம் சார் சக்திகள், கடுமையான பிரசாரத்தை முன்னெடுத்து வந்தன. அ. அமிர்தலிங்கம், எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும், ஆதரவை விட எதிர்ப்பே விஞ்சி நிற்கின்ற சூழல் நிலவிக்கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான், ‘கொழும்பு முன்மொழிவுகளை’ப் பரிசீலிக்க வேண்டிய சூழல் அமிர்தலிங்கத்துக்கு அமைந்தது.   

‘கொழும்புப் பிரகடனத்தை’ விடுதலைப் புலிகள் அமைப்பு, பகிரங்கமாக நிராகரித்தது. ‘இது வெறுமனே, ஜே.ஆரின் காலங்கடத்தும் தந்திரோபாயம்; இதில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சிக்கிவிடக்கூடாது’ என்பது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், இதைப் பரிசீலிக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. விரைவில் ‘கொழும்பு முன்மொழிவுகள்’ பற்றிய, தமது நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு இருந்தது.   

கூட்டணியின் நிலைப்பாடு  

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஜே.ஆர், இந்தியாவின் தலைநகர் புது டெல்லிக்கு வருகைதர வேண்டிய சூழல் உருவானது. 1983 நவம்பர் 23 முதல் 29 வரை, பொதுநலவாய அரசுகளின் தலைவர்களின் மாநாடு, புது டெல்லியில் நடைபெறவிருந்தது. இதில் கலந்து கொள்ளவே ஜே.ஆர் புது டெல்லி வரவிருந்தார்.   

இந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்பாகக் கருதிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தன்னுடன் பேச்சுவார்த்தையொன்றுக்கு, ஜே.ஆருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று ஜே.ஆர், பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு ஆரம்பமாகுவதற்கு இருதினங்கள் முன்பே, புது டெல்லி சென்றிருந்தார். இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள, கோபால்சாமி பார்த்தசாரதி, அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கும் அழைப்புவிடுத்திருந்தார்.   

மறுபுறத்தில், ஜே.ஆருடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாட்டை அறிய, சென்னையிலிருந்த அ. அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம், இரா. சம்பந்தன் ஆகியோர் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர். இவர்களோடு, இலங்கையிலிருந்து கலாநிதி நீலன் திருச்செல்வமும் அழைக்கப்பட்டிருந்தார்.   

1983 நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தினங்களில் புது டெல்லியில் பார்த்தசாரதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ‘கொழும்பு முன்மொழிவுகள்’ தொடர்பில், அமிர்தலிங்கம் திருப்திப்படவில்லை. 

இரண்டுக்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள், இணைய முடியும் என்ற முன்மொழிவைத் தாம் வரவேற்றாலும், அதை ஒரு மாகாணத்துக்குள் மட்டுமே செய்ய முடியும் என்பதையும், அதைச் செய்யச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்ற நிபந்தனைகளையும் தம்மால் ஏற்கமுடியாது என்று அமிர்தலிங்கம் குழுவினர் தெரிவித்தனர்.   

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதிலிருந்து இறங்கி வரவே முடியாது என்று அமிர்தலிங்கம் தெரிவித்தார். அத்தோடு, இணைந்த வடக்கு-கிழக்குக்கான தமிழ்பேசும் பொலிஸ் கட்டமைப்பை ஸ்தாபித்தல் அவசியம் என்பதையும் அமிர்தலிங்கம் எடுத்துரைத்தார். வடக்கு-கிழக்கு இணைவின் போது, அம்பாறை மாவட்ட மக்கள் தனித்துச் செல்ல விரும்பினால், அவர்களது விருப்பின்படி எதிர்காலத்தில் அவர்கள் பிரிந்து செல்லலாம் என்பதையும் அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.   

ஜே.ஆரின் பதில்  

இந்த நிலையில் நவம்பர் 21ம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டுடன் புது டெல்லியை வந்தடைந்தார். டெல்லி வந்த ஜே.ஆரை சந்தித்த பார்த்தசாரதி, ‘கொழும்பு முன்மொழிவுகள்’ தொடர்பான அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாட்டை ஜே.ஆருக்கு எடுத்துரைத்தார்.   

அவற்றைச் செவிமடுத்த ஜே.ஆர், ஒரு மாகாணத்துக்குள்ளான ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இணைவதற்கு அப்பிரதேசங்களில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையைக் கைவிடத் தயார் என்றார். ஆனால், வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பை, தான் எதிர்ப்பதாகவும் அதற்கு, இணங்க முடியாது என்றும் தெரிவித்தார்.   

மேலும், தமிழ்பேசும் பொலிஸ் அமைப்பதையும் எதிர்த்த ஜே.ஆர், வேண்டுமானால் சட்ட அமுல்ப்படுத்தல் அதிகாரம் சிலவற்றை மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குப் பகிர்வது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்றார்.   

சினங்கொண்ட அமிர்தலிங்கம்  

ஜே.ஆரின் இந்த நிலைப்பாட்டை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. தனிநாட்டுக் கோரிக்கையிலிருந்து கீழிறங்கி மாற்றுத் தீர்வைப் பரிசீலிக்கவும் ஜே.ஆரோடு பேசுவதில்லை என்ற கட்சியின் முடிவை மீறிப் பேசவும் முடிவெடுத்தமைக்கே பல இடங்களிலிருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்டிருந்த நிலையில், ஜே.ஆரின் இந்த முன்மொழிவுகள் அவரைச் சினங்கொள்ளச் செய்தன.  

 “இந்த முன்மொழிவுகளுக்கு நான் இசைந்தால், தாய்நாட்டுக்கு அல்ல, நான் சென்னைக்குக் கூடப் போக முடியாது” என்று பார்த்தசாரதியிடம் கொதித்த அமிர்தலிங்கம், “வடக்கு-கிழக்கு இணைப்பு, தனியான பொலிஸ் என்ற இரண்டு நிலைப்பாட்டிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார். அமிர்தலிங்கத்தின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இல்லை என்பது பார்த்தசாரதிக்குப் புரிந்திருந்தது.  

ஜே.ஆர் - இந்திரா சந்திப்பு  

இந்த நிலையில்தான், 1983 நவம்பர் 23ஆம் திகதி மாலை இந்திரா காந்தி மற்றும் ஜே.ஆர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றது. இராஜதந்திரமாகக் காய்நகர்த்திய இந்திராகாந்தி, இலங்கையில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை, இந்தியா  முழுமையாக ஆதரிக்கிறது என்று ஜே.ஆருக்கு நம்பிக்கை வழங்கினார். அத்தோடு, தாம் இலங்கையில் பிரிவினையை ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் ஜே.ஆருக்கு உறுதி வழங்கினார்.   

ஆனால், ஒன்றுபட்ட நாட்டுக்குள் தீர்வொன்றை எட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இந்தப் பிரச்சினை இந்தியாவைப் பாதிப்பதையும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, அதிகரித்துவரும் அகதிகளின் வருகையையும், தமிழ் நாட்டில் ஏற்பட்டுவரும் உணர்வலைகளின் எழுச்சியையும் எடுத்துவிளக்கி, இதற்கு உடனடியாகத் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்றும் ஜே.ஆரைக் கேட்டுக் கொண்டார்.   

இதற்குப் பதிலளித்த ஜே.ஆர், தன்னுடைய சூழ்நிலையைத் தௌிவுபடுத்தினார். தமிழ் மக்கள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திவிடுவார்களோ என்ற அச்சம், சிங்கள மக்களுக்கு உண்டு என்று குறிப்பிட்ட ஜே.ஆர், தமிழ் மக்களுக்குச் சார்பாக ஏதாவது செய்தால், அது சிறிமாவோ பண்டாரநாயக்க தரப்பினால், தனக்கெதிரான பிரசாரமாகச் சிங்கள மக்களிடையே முன்னெடுக்கப்படும்; அது தன்னுடைய ஆதரவுத் தளத்தையே சிதைத்துவிடும் என்று இந்திரா காந்திக்கு எடுத்துரைத்தார். மேலும், முன்னேற்றங்களேதுமின்றி அந்தச் சந்திப்பு நிறைவுக்கு வந்தது. இந்திரா காந்திக்கு ஜே.ஆர் மீது நம்பிக்கை இருக்கவில்லை. அதேபோல, இந்திரா காந்தி மீது ஜே.ஆருக்கு நல்லதோர் அபிப்ராயம் இருக்கவில்லை.   

இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகப் போனாலும், இந்திரா காந்தி மீதான தனது விசனத்தை 24ஆம் திகதி இடம்பெற்ற பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டின் ஆரம்பநாள் பேச்சில், ஜே.ஆர் நாசூக்காக முன்வைத்தார். இது இந்திராவை மிகவும் சினமடையச் செய்திருந்தது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜே-ஆரின்-கொழும்பு-முன்மொழிவுகள்/91-208316

Link to comment
Share on other sites

பிராந்திய சபைகளும் ‘அனெக்ஷர் ‘ஸீ’யும்’
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 122) 

ஜே.ஆரின் உரை  

ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையீனமும் கசப்புணர்வும் உருவாகியிருந்தமையை வெளிப்படையாகவே உணரத்தக்கதாக இருந்தது. 

1983 நவம்பர் 24 அன்று, புதுடெல்லியில் இடம்பெற்ற பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில், ஜே.ஆர். ஜெயவர்தன ஆற்றிய உரையில் இது எதிரொலித்தது. தன்னுடைய உரையில் இந்தியாவின் ‘தேசத்தந்தை’ மகாத்மா காந்தியையும் இந்தியாவின் முதலாவது பிரதமரும் இந்திரா காந்தியின் தந்தையாருமான பண்டிட் ஜவஹர்லால் நேருவையும் மிகவும் புகழ்ந்து பேசினார் ஜே.ஆர்.   

 குறிப்பாக, மகாத்மா காந்தியின் அஹிம்சாவாதத்தையும் ஜவஹர்லால் நேருவின் அணிசேராக் கொள்கையையும் உயர்வாகப் பேசியவர், தன்னைக் காந்தியத்தோடு அடையாளப்படுத்தவும் தவறவில்லை. 

தனது பேச்சின் இறுதியில், “எனக்கு உயிர்வாழும் சக்தி இருக்குமாயின், ஒருபோதும் எனது மக்கள் இன்னொருவருக்கு ஆட்பட்டு வாழ நான் அனுமதிக்க மாட்டேன். இலங்கையில் ஓர் அணுகுண்டு வெடித்தால், 15 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள். இலங்கை மீது அந்நியப்படையெடுப்பு நடக்குமானால், 15 மில்லியன் மக்களும் உயிரிழக்கக்கூடுமேயன்றி, ஒருபோதும் அந்நியப்படையெடுப்புக்கு இடம்கொடுத்து, ஆட்பட்டு விடமாட்டோம்” என்றார்.   

இந்தப் பேச்சின் மூலம் ஜே.ஆர், இரண்டு விடயங்களை உணர்த்தினார். முதலாவதாக காந்தியையும் நேருவையும் பற்றி மட்டுமே பேசியதனூடாக, பதவியிலிருக்கும் இந்தியப் பிரதமர், இந்தியாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்றறியப்பட்ட இந்திரா காந்தியைப் பற்றிப் பேசுவதை முற்றாகத் தவிர்த்தார்.   

இது பற்றிய சுவாரஷ்யமான சம்பவமொன்றை, ரீ. சபாரட்ணம் பதிவு செய்கிறார். இந்தப் பேச்சுக்கு மறுதினம், இந்திரா காந்தியைச் சந்தித்திருந்த, சௌமியமூர்த்தி தொண்டமான், “நேற்றுத் தனது பேச்சில், ஜனாதிபதி ஜே.ஆர், தங்களின் தந்தையாரை வெகுவாகப் புகழ்ந்திருந்தமை, உங்களை மகிழ்வித்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று இந்திரா காந்தியிடம் கூறியிருந்தார்.

  கோபப்பட்ட இந்திரா காந்தி, “அந்தக் கிழவர், என் தந்தையைப் புகழவில்லை; மாறா, நான் எனது தந்தையளவுக்கு இல்லை என்பதை உலகுக்குச் சொல்கிறார்” என்று சினந்து கொண்டாராம்.   

ஆகவே, இந்திரா காந்தியை தனது பேச்சில் தவிர்த்தது, ஜே.ஆர்-இந்திராவிடையேயான பனிப்போரின் வெளிப்பாடு என்றால், அந்நியப் படையெடுப்பு பற்றி ஜே.ஆர் பேசியது, இந்தியா, இலங்கை மீது, இராணுவ நடவடிக்கையொன்றை முன்னெடுத்துவிடுமோ என்ற அச்சத்தின் பாலானது. 

அந்த அச்சம் ஜே.ஆரை உறுத்திக் கொண்டே இருந்திருக்கிறது என்பதற்கு அவரது நடவடிக்கைகளும் பேச்சுக்களுமே சான்று.  

கோவாவில் சந்திப்பு  

ஜே.ஆர்-இந்திரா பனிப்போரின் மத்தியில், கோபால்சாமி பார்த்தசாரதியின் தீர்வு முயற்சிகள் சிக்கியிருந்தன. ஜே.ஆர் வடக்கு-கிழக்கு இணைப்பு மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய விட்டுக்கொடுப்புக்கே இடமில்லை என்று சொல்லிவிட்ட நிலையில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் அந்த இரண்டு விடயங்களில், தன்னால் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்ட நிலையில், இவற்றுக்கிடையில் சமரசமொன்றைத் தேடவேண்டிய சூழல், பார்த்தசாரதிக்கு இருந்தது.   
பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டின் அடுத்த கட்டமாக, டெல்லியிருந்து கோவாவுக்குப் பொதுநலவாய அரசுத் தலைவர்கள் சென்றிருந்த நிலையில், கோவா விரைந்த பார்த்தசாரதி, அங்கு ஜே.ஆரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்ற கட்டமைப்பிலிருந்து மாற, ஜே.ஆர் தயாராக இல்லை. ஆனால், மாவட்ட அபிவிருத்தி சபைகளின் அதிகாரத்தை அதிகரிப்பது தொடர்பில் இணக்கம் தெரிவித்தார்.   

மேலும், தான் முடிவெடுக்க முன்பதாக, சர்வ கட்சி மாநாட்டை நடத்தி, அனைத்துத் தரப்பினரது கருத்துகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் ஜே.ஆர் குறிப்பிட்டார். சில விமர்சகர்கள் இதை, ஜே.ஆரின் காலங்கடத்தும் தந்திரோபாயத்தின் ஒரு பகுதி என்கிறார்கள்.   

எவ்வாறாயினும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தாண்டிய தீர்வொன்றுக்கு, ஜே.ஆரைச் சம்மதிக்க வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில், பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு நிறைவடைந்த பின்பு, ஓரிரு நாட்கள், ஜே.ஆரின் இந்திய விஜயத்தை நீட்டிக்குமாறு, பார்த்தசாரதி வேண்டிக் கொண்டார். அதற்கு ஜே.ஆர் சம்மதித்திருந்தார்.   

டெல்லியில் சந்திப்பு  

நவம்பர் 29 ஆம் திகதி பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு நிறைவடைந்த பின்னர், மாலையில் டெல்லியில் தங்கியிருந்த ஜே.ஆரை, பார்த்தசாரதி சந்தித்தார். இம்முறை தன்னுடன், தொண்டமானையும் நீலன் திருச்செல்வத்தையும் அழைத்துச் சென்றிருந்தார்.   

மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தாண்டியதொரு, பிராந்திய ரீதியிலான தீர்வுக் கட்டமைப்பின் அவசியப்பாட்டை மிக விரிவாக பார்த்தசாரதி, ஜே.ஆருக்கு எடுத்துரைத்தார். 

“தமிழர் தரப்பு, தனிநாடு என்ற கோரிக்கையிலிருந்து இறங்கி வருகிறது” என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டிய பார்த்தசாரதி, “பிராந்திய சபைகள்தான் தமிழ் மக்களின் தனிநாட்டுப் பிரிவினைக்கு, ஏற்றுக்கொள்ளத்தக்க குறைந்தபட்ச மாற்றாக இருக்கும்” என்ற அடிப்படையில் தனது வாதத்தை முன்னெடுத்தார்.  

எதுவிதக் கருத்துமின்றி, தன் முன் வைக்கப்பட்ட கருத்துகளை, ஜே.ஆர் கேட்டுக் கொண்டிருந்தார். பார்த்தசாரதியின் பிராந்திய சபையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கட்டமைப்பு பற்றிய எடுத்துரைப்புகளோடு, அன்றைய சந்திப்பு நிறைவுக்கு வந்தது. 

மறுநாள் நவம்பர் 30 ஆம் திகதி காலையில், மீண்டும் ஜே.ஆரை பார்த்தசாரதி, தொண்டமான், நீலன் ஆகியோர் சந்தித்தனர். 29 ஆம் திகதி மாலை, பார்த்தசாரதி முன்வைத்த கோரிக்கை தொடர்பான, ஜே.ஆரின் முடிவை அறியும் தருணமாக அது இருந்தது.   

பார்த்தசாரதியின் கருத்துகள் தொடர்பில் தான் ஆழமாகப் பரிசீலித்ததாகச் சொன்ன ஜே.ஆர், இதனால் தனக்கு இலங்கையில் பிரச்சினை வரலாம்; ஆனால், பிராந்திய ரீதியிலான கட்டமைப்பைக் கொண்ட தீர்வுக்குத் தான் சம்மதிப்பதாகத் தெரிவித்தார். 

இந்த முடிவு பார்த்தசாரதி உள்ளிட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. இதுபற்றி மிகவும் மகிழ்ச்சியடைந்த தொண்டமான், ஜே.ஆரின் துணிகரமான இந்த முடிவுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.   

ஆனால், சர்வ கட்சி மாநாட்டின் பின்னர்தான் எந்த முடிவும் என்பதில் ஜே.ஆர், தெளிவாக இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பார்த்தசாரதி, ஜே.ஆரிடம் முன்வைத்தார்.   

அதற்குப் பதிலளித்த ஜே.ஆர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, பிரிவினைவாதத்தை கைவிடும் வரை, அவர்களோடு பேசுவதில்லை என்பது, அமைச்சரவையின் முடிவு என்று சொன்னார். 

இதற்குப் பதிலளித்த பார்த்தசாரதி, “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் உங்கள் அரசாங்கத்தோடு பேசுவதில்லை என்று முடிவெடுத்திருந்தார்கள். ஆனால், இந்தப் பிரச்சினை உங்கள் அரசாங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுமே பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை. ஆகவே, கட்டாயம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்” என்று ஜே.ஆரிடம் எடுத்துரைத்தார்.
தான் இந்த விடயத்தை, சர்வ கட்சி மாநாட்டில் முன்வைப்பதாக ஜே.ஆர் உறுதியளித்தார்.  

அனெக்ஷர் ‘ஸீ’  

இந்த அடிப்படை இணக்கப்பாடுகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் உடனடியாக ஈடுபட்ட பார்த்தசாரதி, 30 ஆம் திகதி பகலில், ஜே.ஆரைச் சந்தித்து, அந்த ஆவணத்தின் முன்வரைவைக் கையளித்தார். அந்த ஆவணத்தின்படி பிறந்ததுதான் ‘அனெக்ஷர் ‘ஸீ’’ (Annexure ‘C’) என்று பிரபலமாக அறியப்பட்ட முன்மொழிவுகள் ஆகும்.   

இந்த முன்மொழிவுகள், 1983 டிசெம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமான சர்வ கட்சி மாநாட்டில், ஜே.ஆர் சமர்ப்பித்த அறிக்கையில், பின்னிணைப்பு ‘ஸீ’யாக இணைக்கப்பட்டிருந்தமையே அனெக்ஷர் ‘ஸீ’ என்பதன் பெயர்க்காரணம். அனெக்ஷர் ‘ஸீ’ பின்வரும் முன்மொழிவுகளைக் கொண்டிருந்தது.  

(1) ஒரு மாகாணத்துக்கு உட்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகள், அவை இணங்கும் பட்சத்திலும், அம்மாவட்டத்தில் சர்வஜன ஒப்பங்கோடல் மூலம் பெறப்படும் அங்கிகாரத்தின் படியும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய சபைகளாக இணைய முடியும்.  

(2) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பொறுத்தவரையில், அவற்றின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளமையினால் இயங்காதிருக்கும் காரணத்தினால், ஒரு மாகாணத்துக்குள்ளான  அவற்றின் இணைப்பு, ஏற்றுக் கொள்ளப்படும்.  

(3) மேற்கூறியவாறு, தீர்மானிக்கும் ஒவ்வொரு பிராந்தியமும் ஒரு பிராந்திய சபையைக் கொண்டிருக்கும். பிராந்திய சபையில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியின் தலைவர், அப்பிராந்திய முதலமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்படுமாறு மரபு உருவாக்கப்படும். அந்த முதலமைச்சர், பிராந்திய அமைச்சரவையை ஸ்தாபிப்பார்.  

(4) பிராந்தியங்களுக்கென்று பிரித்தொதுக்கப்படாத விடயங்கள் மீது ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் தொடர்ந்தும் அதிகாரம் செலுத்தும் அதேவேளையில், ஒட்டுமொத்த குடியரசின் இறைமையைப் பாதுகாத்தல் ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாடு, பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலும் ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் தொடர்ந்து அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.  

(5) பிராந்தியத்தின் சட்டவாக்க அதிகாரமானது, பிராந்திய சபையிடம் இருக்கும். பிராந்திய சபையானது, பிராந்தியத்தின் உள்ளகச் சட்டவொழுங்கு, நீதி மேலாண்மை, சமூகப் பொருளாதார அபிவிருத்தி, கலாசார விடயங்கள், காணிக் கொள்கை என்பவை உள்ளிட்ட பிராந்தியங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட விடயதானங்கள் தொடர்பில், சட்டமியற்றும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். பிராந்தியத்துக்கென்று குறித்தொதுக்கப்படும் விடயதானங்கள் விரிவாக எடுத்துரைக்கப்படும்.  

(6) பிராந்திய சபைகள் வரிகளையும் கட்டணங்களையும் அறவிடும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதோடு, வரவுகளானவை அப்பிராந்தியத்துக்குரிய திரட்டிய நிதியமாகக் கட்டமைக்கப்படும். அந்நிதியத்துக்குக் குடியரசானது நிதியுதவிகள், ஒதுக்கீடுகள், மானியங்கள் என்பவற்றை வழங்க முடியும். காலத்துக்குக் காலம் அமையும் நிதி ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பிராந்தியங்களுக்கான நிதி வளம் பகிர்ந்தளிக்கப்படும்.  

7) ஒவ்வொரு பிராந்தியத்திலும் மேல் நீதிமன்றமொன்றை உருவாக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். இலங்கை உயர் நீதிமன்றமானது மேன்முறையீட்டு மற்றும் அரசமைப்புத் தொடர்பிலான சட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.  

 (8) ஒவ்வொரு பிராந்தியமும் அப்பிராந்தியத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பொதுச் சேவையாளர்களையும் அப்பிராந்தியத்துக்கென்று நியமனமளிக்கப்பட்ட ஏனைய அதிகாரிகள் மற்றும் பொதுச் சேவையாளர்களையும் கொண்ட பிராந்திய சேவையைக் கொண்டிருக்கும். பிராந்திய சேவை தொடர்பான நியமன மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவென ஒவ்வொரு பிராந்தியமும் பிராந்திய பொதுச் சேவை ஆணைக்குழுவைக் கொண்டிருக்கும்.  

(9) இலங்கையின் ஆயுதப் படைகள் தேவையான, இலங்கையின் இனங்களின் நிலையை வெளிப்படுத்துவதாகக் கட்டமைக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில், உள்ளக பாதுகாப்புக்கான பொலிஸ்படையானது அவ்வவ் பிராந்தியங்களின் இனத் தொகுப்பைப் பிரதிபலிப்பதாக அமையும்.  

(10) திருகோணமலைத் துறைமுகத்தை நிர்வகிக்க, மத்திய அரசின் கீழான ஒரு துறைமுக அதிகாரசபை ஸ்தாபிக்கப்படும். குறித்த துறைமுக பிரதேசம், அந்த அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். அதற்குரிய மேலதிக அதிகாரங்கள் பற்றி, பின்னர் ஆராயப்படும்.  

(11) காணி அபிவிருத்தி மற்றும் அரசாங்கம், காணிக் குடியேற்றத்தை எவ்வாறு முன்னெடுக்கும் என்பது தொடர்பிலான தேசியக் கொள்கை ஒன்று உருவாக்கப்படும். எல்லாக் குடியேற்றங்களும், பிராதான திட்டங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்தில், குடிப்பரம்பல் சமநிலையைப் பாதிக்காதவாறான இனவிகிதாசாரத்தில் அமையவேண்டும்.  

(12) உத்தியோகபூர்வ மொழி சிங்களம் மற்றும் தேசிய மொழி தமிழ் தொடர்பிலான அரசமைப்பு ஏற்பாடுகள் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகள், தேசியக் கொடி, தேசிய கீதம் பற்றிய அரசமைப்பு மற்றும் சட்ட ஏற்பாடுகள் என்பன ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், நடைமுறைப்படுத்தப்படும்.   

(13) சர்வகட்சி மாநாடானது இந்த முன்மொழிவுகளை சாத்தியமாக்கும் அரசமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்களைச் செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு குழுவை நியமிக்கும். அதற்கான செயலகத்தையும் அவசியமான சட்டச் செல்வாக்கையும் அரசாங்கம் அளிக்கும்.   

(14) சர்வகட்சி மாநாட்டின் இணக்கப்பாடானது, சட்டவாக்க நடவடிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட முன்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினாலும், ஏனைய கட்சிகளின் செயற்குழுக்களினாலும் பரிசீலணைக்கு உட்படுத்தப்படும்.   

இந்திராவுடன் மீண்டும் சந்திப்பு  

பிராந்திய சபைகளுக்கு இணங்கிய ஜே.ஆர், மீண்டும் இலங்கை திரும்ப முன்னர், நவம்பர் 30 ஆம் திகதி மாலை, இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார். இதன்போது இந்திரா காந்தி, ஜே.ஆரிடம் இன்னொரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிராந்திய-சபைகளும்-அனெக்ஷர்-ஸீ-யும்/91-208648

Link to comment
Share on other sites

சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பு
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 123)

ஜே.ஆர் - இந்திரா சந்திப்பு  

பிராந்திய சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்க இணங்கிய ஜே.ஆர், 1983 நவம்பர் 30ஆம் திகதி மாலை, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை மீண்டும் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, பார்த்தசாரதியோடு ஜே.ஆர் இணங்கிய விடயதானங்கள் பற்றி, ஜே.ஆரும் இந்திரா காந்தியும் ஆராய்ந்தனர்.

ஜே.ஆர் பிராந்திய சபைகளை ஏற்றுக்கொண்டதை வரவேற்ற இந்திரா காந்தி, வடக்கு-கிழக்கு இணைப்புக்கும் அவர் இணங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.   

ஆனால், ஜே.ஆர் அதை ஏற்பதாக இல்லை. “முஸ்லிம்களும் சிங்களவர்களும் கிழக்கிலே இணைந்தால், அது பெரும்பான்மையாகும். எனவே, வடக்கு-கிழக்கு இணையும்போது, அவர்களது எதிர்காலம் பற்றிய கவலைகள் உண்டு” என்று ஜே.ஆர் கூறினார்.   

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், ஜே.ஆர் கூறியது, 1981ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களின்படி சரியானதே.   

ஆனால், திருக்கோணமலை, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் விடத் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். இதனால்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் கூட, “அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில், முஸ்லிம்கள் விரும்பினால், அவர்கள் தனித்ததொரு தீர்வை எதிர்காலத்தில் முன்னெடுக்கலாம்” என்று பார்த்தசாரதியிடம் குறிப்பிட்டிருந்தார்.   

மேலும், 1983ஆம் ஆண்டில் ஜே.ஆர், கிழக்கிலே வாழ்ந்த தமிழ் பேசும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் மக்களை, சிங்களவர்களோடு சேர்த்து அடையாளப் படுத்தியமை, சற்றுப் புதுமையான அணுகுமுறை. ஆனால், இது ஜே.ஆரினது மட்டுமல்ல, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் அணுகுமுறையை அடிக்கோடிட்டுக்காட்டி நிற்கிறது.   

வடக்கு, கிழக்கு இணைப்பைத் தடுக்க வேண்டுமென்றால், தமிழ்-முஸ்லிம் மக்கள் “தமிழ் பேசும் மக்களாக” ஒன்றிணைவது தடுக்கப்பட வேண்டும். இதுவும் ஒரு வகை பிரித்தாளும் தந்திரமே. 

ஒரு தந்திரம் வெற்றிபெற, தந்திரம் செய்பவனது திறமையைப் போலவே, தந்திரத்துக்கு ஆட்படுபவனின் பலவீனமும் முக்கிய காரணமாக அமைகிறது.   

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், இந்த விடயம் மிகச் சிக்கலானதும் முக்கியமானதுமாகும். 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு பயணித்த எம்.எச்.எம்.அஷ்ரப், கூட்டணியுடனான பயணத்தை முடித்துக் கொண்டமை ஏன், முஸ்லிம்களின் தனி வழி அரசியலின் ஆரம்பம் என்ன, அதன் நோக்கம் என்ன, இலங்கை முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பது, தனித்து ஆராயப்பட வேண்டியதொன்று. 

ஆனால், இந்த இடத்தில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மேடையொன்றில், “அமிர்தலிங்கம், தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டாலும், அஷ்ரப், தமிழீழக் கோரிக்கையை கைவிட மாட்டான்” என்று 
எம்.எச்.எம்.அஷ்ரப், உணர்ச்சிவசப்  பேசியிருந்தார். 

தமிழ் இளைஞரின் ஆயுதக் குழுக்கள் உருவாகிய கால கட்டங்களில், பல தமிழ் பேசும் முஸ்லிம் இளைஞர்களும் தனிநாட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், இந்த நிலை எப்படி மாறியது?

தமிழ்த் தேசியம் என்பதிலிருந்து, முஸ்லிம் தேசியம் எப்படிப் பிரிந்தது என்ற வரலாறும் கட்டாயம் ஆராயப்பட வேண்டியது. அதை உணரும் போதுதான், இனப்பிரச்சினையின் வரலாற்றை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியும்.   

நிற்க, பிராந்திய சபைகளைத்தான் ஏற்றுக் கொள்ளச் சம்மதிப்பதாகத் தெரிவித்த ஜே.ஆர், “வேண்டுமானால் வடக்கு, கிழக்கு இணைப்பைத் தமிழ்த் தலைமைகள் சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கட்டும்; அதற்கு நான் தடையில்லை” என்று தெரிவித்தார். 

இந்திரா காந்தியைப் பொறுத்தவரை, இதை ஒரு சிறந்த முதற்படியாகப் பார்த்தார். ஆகவே “இறுதித் தீர்வுக்கு இது ஒரு முதற்படியாக இருக்கட்டும்” என்று ஜே.ஆரிடம் சொன்னவர், “வடக்கு, கிழக்கு இணைப்பில்லாத தீர்வை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்பதையும் எடுத்துரைத்தார். 

மேலும், இந்தியா பிரிவினையை ஒருபோதும் ஆதரிக்காது என்பதையும், இலங்கையின் இறைமை, சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாட்டை இந்தியா ஆதரிப்பதாகவும் மீண்டும் ஜே.ஆருக்கு உறுதியளித்தார். 

ஜே.ஆரும் நிச்சயமாக இணங்கிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதாக, இந்திரா காந்திக்கு உறுதியளித்து, இலங்கை திரும்பினார்.  

ஜே.ஆரின் ஊடக அறிக்கை  

1983 டிசெம்பர் முதலாம் திகதி  ஜனாதிபதி ஜே.ஆர், இலங்கை திரும்பினார். அதேதினம், ஜே.ஆர், ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கையில்,   
‘பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள, புதுடெல்லி சென்றிருந்தபோது, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன், இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிக் கலந்துரையாடும் வாய்ப்புக் கிட்டியது. நான், இந்தியா செல்லும் முன்பு இந்த விடயம் பற்றி, இலங்கையிலுள்ள பல்வேறு அரசியல் தலைவர்களுடனும் உரையாற்றியிருந்தேன். அத்தோடு, இந்தியப் பிரதமரின் விசேட தூதுவராக வந்த கோபால்சாமி பார்த்தசாரதியும் இந்த விடயம் பற்றி, என்னுடன் இலங்கையிலும் இந்தியாவிலும் பேசியிருந்தார். 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டால் மட்டுமே, சாத்தியமான தீர்வுத் திட்டங்கள் பற்றி என்னால், அவர்களோடு பேச முடியும் என்பதை நான், அவர்களிடம் தெட்டத்தௌிவாகச் சொல்லியிருந்ததை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துகிறேன்.

எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, தமிழர் பிரச்சினைக்கு, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தீர்வொன்று எட்டப்படுமானால், தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடத் தயாராக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய அரசாங்கமானது, பிரிவினைக்கு எதிரானது என்பதோடு இலங்கையின் இறைமை, சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறது என்று தெட்டத்தௌிவாகச் சொன்னமையும் எனக்கு மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தியப் பிரதமரின் விசேட தூதுவர் பார்த்தசாரதி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நவம்பர் மாதம் எம்மோடு கலந்துரையாடிப் பெற்ற முன்மொழிவுகளுக்கான பதிலை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார். 

முதலில், நான் இந்த விடயங்களை ஆராய, ஒரு சர்வகட்சிக்குழு அமைக்கும் திட்டம் பற்றி சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளேன். சர்வகட்சி மாநாட்டின் திட்டம் பூர்த்தியானதும், எம்மிடையே எழுந்துள்ள பல்வேறுபட்ட முன்மொழிவுகளை அவர்கள் முன் சமர்ப்பிப்பேன்; அவர்கள் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்பதாக, அனைத்து முன்மொழிவுகளையும் கற்றறிந்து ஆராய வழிசமைக்கும்.

அதன்பின்னர், நான் இந்த முன்மொழிவுகளை ஆராய, சர்வகட்சி மாநாடொன்றை நடத்த முன்மொழிகிறேன்’ என்று அந்த ஊடக அறிக்கை அமைந்திருந்தது.  

சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பு  

இதன் சுருக்கம் இதுதான். முதலாவதாக ஒரு சர்வகட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, தீர்வு முன்மொழிவுகள் தொடர்பாக, சர்வ கட்சி மாநாடு ஒன்று நடத்தும் திட்டம் பற்றி ஆராயப்படும். சர்வகட்சி மாநாடு நடத்த எதற்கு சர்வகட்சிக் கூட்டம்? நேரடியாகவே சர்வகட்சி மாநாட்டை நடத்தலாமே? என்ற ஐயம் எழலாம்.   

ஜே.ஆர் தலைமையிலான அமைச்சரவையானது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன், அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடும் வரை, பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று தீர்மானித்திருந்தது. 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோ, தாம் ஏற்றுக்கொள்ளத் தக்க தீர்வொன்று எட்டப்படும் வரை, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடத் தயாராக இல்லை.  
 இதேவேளை இந்தியா, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தை ஜே.ஆருக்குத் தந்திருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தானாக அழைப்பதை ஜே.ஆர் விரும்பவில்லை.  

அதனால்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பது தொடர்பில், சர்வகட்சிக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் முடிவெடுக்கட்டும் என்று ஜே.ஆர் கூறியிருந்தார். ஆகவே, முதலில் நடக்கவிருக்கும் சர்வகட்சிக் கூட்டத்தின் நோக்கம் தீர்வுத்திட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாடொன்று நடத்தவது பற்றியும், அதில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கலந்துகொள்வது பற்றியும் தீர்மானிப்பதாகும்.   

சிலர் இதனை, ஜே.ஆரின் காலங்கடத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதி என்பார்கள். சிலர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசும் முடிவை, தான் மட்டும் எடுத்தால்.அதை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பெரும்பான்மைக் கட்சிகள், ஜே.ஆருக்கு எதிரான பிரசாரமாகச் சிங்கள மக்களிடையே முன்னெடுக்க வாய்ப்பாக அமையும்.   

ஆகவே, அந்த முடிவை சர்வகட்சிகளும் சேர்ந்தெடுத்தால், அது ஜே.ஆரினதோ, ஐக்கிய தேசியக் கட்சியினதோ முடிவாகாது என்பதுடன், அந்த முடிவிலிருந்து ஜே.ஆர், தன்னை எதிர்காலத்தில் விலக்கிக் கொள்ளவும் முடியும். ஆகவேதான், ஜே.ஆர் இந்தத் தந்திரோபாயத்தைக் கையாண்டார் என்பார்கள்.   

எது எவ்வாறாயினும், ஜே.ஆர், 1983 டிசெம்பர் 21ஆம் திகதி சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பை அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியிருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி 
(ஜே.வி.பி) மற்றும் நவ சமசமாஜக் கட்சி ஆகிய தடைசெய்யப்பட்ட காரணத்தின் நிமித்தம் அழைக்கப்படவில்லை.   

அமிர்தலிங்கத்தின் நிலை  

மறுபுறத்தில், ஜே.ஆருடனான சந்திப்புக்குப் பின்னர், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த இந்திரா காந்தி, ஜே.ஆர் இணங்கியுள்ள தீர்வுக்கு அவர்களையும் இணங்குமாறு கேட்டுக்கொண்டார்.   

தீர்வுக்கு இணங்குவதாகத் தெரிவித்த அமிர்தலிங்கம், “ஆனால், வடக்கு-கிழக்கு இணைப்பில்லாது, என்னால் மக்கள் முன் செல்ல முடியாது” என்று இந்திரா காந்தியிடம் தெரிவித்தார். இந்தச் சந்திப்பை அடுத்து, அமிர்தலிங்கம் தலைமையிலான தலைவர்கள் மீண்டும் சென்னை திரும்பினர்.   

சென்னை திரும்பியவர்கள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமிருந்து கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர். எம்.ஜி.ஆர், கருணாநிதி உள்ளிட்ட தமிழகக் கட்சிகளைச் சந்தித்து, தீர்வுத்திட்ட முன்மொழிவுகளைப் பகிர்ந்து கொண்ட அமிர்தலிங்கம் குழுவினர், தொடர்ந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களையும் தமிழ்நாட்டில் சந்தித்து, தாம் இணங்கிய தீர்வுத் திட்ட முன்மொழிவுகளையும், டெல்லி சந்திப்பு விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர்.   

ஆனால், அவர்கள் அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. குறித்த அதிகாரப் பகிர்வுத் திட்டம் குறித்து அவர்கள் தமது அதிருப்தியை வௌிப்படுத்தினர். குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அமிர்தலிங்கம் இதற்கு இணங்கியதைக் கடுமையாக எதிர்த்தார்.   

தமிழ் மக்கள் வழங்கிய மக்களாணையை மீற அமிர்தலிங்கத்துக்கு உரிமையில்லை என்பது பிரபாகரனது நிலைப்பாடாக இருந்தது. தான், இதற்கு இணங்கியதற்குச் சில காரணங்களை அமிர்தலிங்கம் சொன்னார். 

முதலாவதாக, இந்திரா காந்தியின் அழுத்தம். இரண்டாவது, இது தமிழர்களின் நியாயமான உரிமைகளைச் சிங்களத் தலைமைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை உலகுக்கு காட்ட, இது சந்தர்ப்பமாக அமையும், அதன்படி எமது ஆயுதப் போராட்டத்தையும் நியாயப்படுத்த முடியும்,   

அடுத்ததாக, எமது நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைக்க, சர்வகட்சி மாநாடு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று அமிர்தலிங்கம் சில நியாயங்களை முன்வைத்தார்.  தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, இந்தக் காரணங்கள் திருப்தி செய்யவில்லை.  

 ஜே.ஆர் காலங்கடத்தவும், இந்தக் காலப்பகுதியில் தனது இராணுவத்தைப் பலப்படுத்தவும் அதன் பின்னர், தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் கொண்டு சிதைக்கவுமே திட்டமிட்டுள்ளாரென, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் கருதினர். அமிர்தலிங்கம் எதிர்பார்த்தது போலவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது.   

ஆனால், அமிர்தலிங்கம் வேறு எதைச் செய்திருக்க முடியும் என்ற கேள்வி இங்கு முக்கியம். எங்களுக்குத் தனிநாடு வேண்டும் என்பதில் அமிர்தலிங்கம் விடாப்பிடியாக நின்றிருந்தால், அது இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றியிருக்குமா?   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வகட்சிக்-கூட்டத்துக்கான-அழைப்பு/91-208976

Link to comment
Share on other sites

ஜே.ஆரின் தந்திரம்
 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 124)

தொண்டமானின் ஊடக சந்திப்பு  

சர்வகட்சி மாநாடொன்றினூடாக, இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவது தொடர்பில், சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பை ஜே.ஆர் விடுத்திருந்த அதேவேளையில், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியிருந்த அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், இந்தியாவில் நடந்த விடயங்கள், மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கான சூழல் பற்றி விளக்க, ஓர் ஊடக சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார்.   

அந்த ஊடகச் சந்திப்பில், அரசாங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடுகளுக்கும் இடையிலான இடைவௌியாக வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற ஒரு விடயமே இருப்பதாகவும் குறிப்பிட்ட தொண்டமான், இந்த ஒரு விடயத்தினால் இணக்கப்பாடு இல்லாது போய்விடக்கூடாது என்று அழுத்திக் கேட்டுக் கொண்டார்.  

 இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வை எட்டுவதற்குக் குறுகிய மனப்பான்மைக்கப்பால் வந்து சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், முழுமையான இணக்கப்பாடு உடனடியாக ஏற்படாது போனாலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது பிராந்திய சபைகளைத் தீர்வுக்கான ஒரு முதற்படியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.   

இனப்பிரச்சினைக்கு இது மிகப் பொருத்தமான தீர்வாக இல்லாமல் இருக்கலாம்; அதைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். ஆனால், ஒரு விடயத்துக்காக  முற்றாக நிராகரித்துவிடக் கூடாது என்பது தொண்டமானின் கருத்தாக இருந்தது.   

இது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைமைகள் மீது தொண்டான் மிக நீண்டகாலமாகக் கொண்டிருந்த விமர்சனத்தின் தொடர்ச்சிதான். ‘All or none’ (எல்லாம் அல்லது ஒன்றுமில்லை) என்ற அணுகுமுறையில் தொண்டமானுக்கு நம்பிக்கையில்லை. அவர் படிப்படியாக பேச்சுவார்த்தை மூலம் ஒவ்வொன்றாகப் பெற்றுக் கொள்ளுதலில் நம்பிக்கை கொண்டிருந்தார்.   

ஆனால், தமிழ்த் தலைமைகள் ‘All or none’ அணுகுமுறையைக் கையாண்டன என்று மேம்போக்காக சொல்லிவிடவும் முடியாது. தமிழ்த்தலைமைகள் சில அடிப்படைக் கொள்கைகளில் விடாப்பிடியாக நின்றன.   

அதேவேளை, பல விடயங்களை விட்டுக்கொடுக்கவும் எப்போதும் தயாராக இருந்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சி (அதன் ஆங்கிலப் பெயர் சமஷ்டிக் கட்சி) சமஷ்டியை மையப்படுத்தியே ஆரம்பிக்கப்பட்டது.   

ஆனால், பண்டா-செல்வா ஒப்பந்தமாக இருக்கட்டும், டட்லி-செல்வா ஒப்பந்தமாக இருக்கட்டும், அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தை மற்றும் இணக்க முயற்சிகளாக இருக்கட்டும், அவை ஒருபோதும் சமஷ்டிதான் வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றதில்லை.   

தமிழ்த் தலைமைகள் யதார்த்தத்தை உணர்ந்தே செயற்பட்டன. 1972இலே ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்’ பின்னர் கூட, 1977இலே, தனிநாட்டுக்கான மக்களாணையைப் பெற்ற பின்னர்கூட, தமிழ்த் தலைமைகள் அதிலிருந்து இறங்கி வந்து, ‘ஒன்றுபட்ட நாட்டுக்குள்ளான’ தீர்வை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருந்தன. ஆனால், சில அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாத நிர்ப்பந்தம் தமிழ்த் தலைமைகளுக்கும் உண்டு.   

ஆகவேதான், அத்தகைய அடிப்படைக் கொள்கைகளில் அவை சமரசம் செய்யத் தயாராக இருக்கவில்லை. வடக்கு-கிழக்கு இணைப்பை, அத்தகைய அடிப்படை முக்கியத்துவம் மிக்கதொரு விடயமாகத் தமிழ்த் தலைமைகள் பார்த்தன.  

வடக்கு-கிழக்கு தமிழ்த் தலைமைகள் மீது, தொண்டமான் வைத்த இன்னொரு விமர்சனம், இங்கே தனித்து முடிவெடுக்கத்தக்க ஒரு பலமான தலைமை இல்லை என்பது. தமிழர் அரசியல் வரலாற்றில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பலம் மிக்க தலைவராகவே அடையாளப்படுத்தப்படுகிறார்.   

சில முடிவுகளை அவர் உடனடியாகத் தனித்து எடுக்கமுடியாத சூழல் உருவாகியிருந்ததை நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. எந்த மக்களிடம் 1977இல் தனிநாட்டுக் கோரிக்கைக்காக மக்களாணை கேட்டாரோ, அதேமக்களிடம் போய், ‘ஒன்றுபட்ட நாட்டுக்குள்’ தீர்வு, வடக்கு-கிழக்கு இணைப்பில்லை என்று சொல்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல. 

அதுவும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தமிழர் அரசியலில் முன்னிலைக்கு வந்திருந்த சூழலில், பல தரப்புகளையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவை அவருக்கிருக்கிறது.  

சர்வ கட்சி கூட்டம்  

சர்வ கட்சிக் கூட்டத்துக்கு ஜே.ஆர் விடுத்திருந்த அழைப்பின் பேரில், 1983 டிசெம்பர் 21ஆம் திகதி, சர்வகட்சிக் கூட்டம் கூடியது. இதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, மஹஜன எக்ஸத் பெரமுண, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டிருந்தன.  

 சுமார் ஒன்றரைமணி நேரம் நடந்த இந்தக் கூட்டம், இரண்டு முடிவுகளை எடுப்பதற்காக கூடியது. முதலாவதாக, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சர்வகட்சி மாநாட்டுக்குத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பது தொடர்பானது. இரண்டாவது, குறித்த சர்வகட்சி மாநாட்டுக்கான திகதி, இடம் மற்றும் நடைமுறைகளைத் தீர்மானிப்பது.  

 தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பது தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்திருந்தன. தமிழர் தேசிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எங்கள் நீண்டகால நிலைப்பாடு என்று சிறிமாவோ பண்டாரநாயக்க தெரிவித்திருந்தார்.   

இதைத் தொடர்ந்து, சர்வகட்சி மாநாட்டை 1984 ஜனவரி 10ஆம் திகதி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. 

இதன்போது, இந்தியாவுடன் ஏற்பட்ட இணக்கப்பாடு மற்றும் முன்மொழிவுகள் பற்றி சிறிமாவோ பண்டாராநாயக்க, ஜனாதிபதி ஜே.ஆரிடம் வினவியபோது, குறித்த முன்மொழிவுகளை அனைத்துக் கட்சிகளுக்கும் 10 நாட்களுக்குள் சேர்ப்பிப்பதாக உறுதியளித்தார்.   

அத்துடன், டிசெம்பர் 21 சர்வகட்சிக் கூட்டம் முடிவடைந்தது. சர்வகட்சி மாநாட்டின் செயலாளராக, ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல் ஆணையாளர் பீலிக்ஸ் டயஸ் அபேசிங்ஹ நியமிக்கப்பட்டார்.  

கூட்டணிக்கான அழைப்பு  

இதைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வமற்ற முறையில் ஜே.ஆர், நீலன் திருச்செல்வத்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சர்வகட்சி மாநாட்டுக்குத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பதற்கு சகல கட்சிகளும் இணங்கிய செய்தியை அமிர்தலிங்கத்துக்கு அறிவித்தார்.   

இந்தச் செய்தி கிடைக்கப்பெற்ற அமிர்தலிங்கம், இதை வரவேற்று சென்னையில் அறிக்கைவிட்டார். எல்லாம் சுபமாகச் சென்று கொண்டிருப்பது போலவேதான் தோன்றியது. ஆனால், ஜே.ஆரிடம் திட்டம் வேறாக இருந்தது விரைவிலேயே வௌித்தெரிந்தது. ஒருவேளை ஜே.ஆர், இந்தச் சந்தர்ப்பத்தை முழுமையான நல்லெண்ணத்துடன் அணுகியிருந்தால், இலங்கையின் வரலாறு மாற்றியெழுதப்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.   

சர்வகட்சி மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ அழைப்பைச் சென்னையிலிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்திடம் சேர்ப்பிப்பதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது.  இதிலென்ன சிக்கல்? தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன், அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடும் வரை எந்த நேரடியான பேச்சுவார்த்தையோ, தொடர்பாடலோ இல்லை என்பது ஜே.ஆரின் அமைச்சரவை எடுத்த முடிவு. ஆகவே, அந்த முடிவை, ஜே.ஆர் மீற விரும்பாததால், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியை சென்னைக்கு அனுப்பி, அமிர்தலிங்கத்திடம் அழைப்பை கொண்டு சேர்க்க ஜே.ஆர் விரும்பவில்லை.  

 இந்தச் சிக்கல் எழுந்தபோது, இதைத் தீர்க்க இந்தியா முன்வந்தது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் குறித்த அழைப்பை இலங்கை அரசாங்கத்திடமிருந்து, சென்னையிலிருந்த அமிர்தலிங்கத்திடம் கொண்டு போய்ச் சேர்க்க முன்வந்தார். அதன்படி, சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பு அமிர்தலிங்கத்திடம் சேர்ப்பிக்கப்பட்டது.   

அழைப்பு தந்த அதிர்ச்சி  

சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பைப் படித்த அமிர்தலிங்கத்துக்குப் பெருஞ்சினம் ஏற்பட்டது. உடனடியாக, கோபால்சாமி பார்த்தசாரதியை தொடர்புகொண்ட அமிர்தலிங்கம், பெருஞ்சினத்துடன் ‘கிழட்டு நரி மீண்டும் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது’ என்றார்.   

சர்வகட்சி மாநாட்டின் அழைப்பு, அமிர்தலிங்கத்துக்குப் பெருஞ்சினத்தை ஏற்படுத்தக் காரணம் என்ன? குறித்த அழைப்போடு ‘அனெக்ஷர் ‘ஏ’’ மற்றும் ‘அனெக்ஷர் ‘பீ’’ என்று இரண்டு தொகுதி பின்னிணைப்புகள் இணைக்கப்பட்டிருந்தன.   

இவை ‘கறுப்பு ஜூலைக்கு’ பின்னதாக இந்தியாவோடும் பார்த்தசாரதியோடும் நடந்த பேச்சுவார்த்தைகள், முன்மொழிவுகள் பற்றிய விடயங்களைக் கொண்டிருந்தன.   

இந்திய வௌிவிவகார அமைச்சர் நரசிம்ஹ ராவின் இலங்கை விஜயம் தொடர்பான 1983 ஜீலை 29 அன்று வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை, தனது இந்திய விஜயத்தைத் தொடர்ந்து 1983 ஓகஸ்ட் 14 அன்று எச்.டபிள்யு.ஜெயவர்த்தன வழங்கியிருந்த பத்திரிகை செவ்வி, 1983 ஓகஸ்ட் 25 முதல் 29 வரை பார்த்தசாரதியுடனான முதற்சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வௌியிட்ட அறிக்கை, நவம்பர் மாதம் பார்த்தசாரதியோடு நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகம் விடுத்திருந்த அறிக்கை மற்றும் தனது இந்திய விஜயத்திலிருந்து திரும்பிய ஜே.ஆர் 1983 டிசெம்பர் முதலாம் திகதி வௌியிட்டிருந்த அறிக்கை ஆகிய ஐந்து ஆவணங்களைக் கொண்டிருந்தது.  

 ‘அனெக்ஷர் ‘பீ’’யானது ‘சர்வகட்சி மாநாட்டின் நிகழ்ச்சிநிரலை வடிவமைப்பதற்கான முன்மொழிவுகள்’ என்று தலைப்பிடப்பட்டு, 14 முன்மொழிவுகளைத் தாங்கி வந்தது. இந்த ‘அனெக்ஷர் ‘பீ’’-தான் அமிர்தலிங்கத்தைச் சினமுறச்செய்தது. ‘அனெக்ஷர் ‘பீ’’ கொண்டிருந்த முன்மொழிவுகளாவன:  

1. தனிநாட்டு எண்ணத்தைக் கைவிடுதல் 

2. குறித்த மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலும், குறித்த மாவட்டத்தில் சர்வசன ஒப்பங்கோடல் மூலமான ஒப்புதலின் மூலமும், ஒரு மாகாணத்துக்குள்ளான மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இணைக்கப்படலாம். இந்த முன்மொழிவு முழு நாட்டுக்கும் ஏற்புடையதாக அமையும்.  

3. பிராந்திய சபையைக் கொண்டமையும் ஒவ்வொரு பிராந்தியத்திலும், குறித்த பிராந்திய சபையில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியின் தலைவர், அப்பிராந்திய முதலமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கபடுமாறு மரபு உருவாக்கப்படும். அந்த முதலமைச்சர், சபையின் அங்கத்தவர்களைக் கொண்ட குழுக்களை ஸ்தாபித்து அதனோடு இயங்குவார்.  

4. பிராந்தியங்களுக்கென்று பிரித்தொதுக்கப்படாத விடயங்கள் மீது, ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் தொடர்ந்தும் அதிகாரம் செலுத்தும் அதேவேளையில், ஒட்டுமொத்தக் குடியரசின் இறைமையைப் பாதுகாத்தல், ஒற்றுமை,ஆட்புல ஒருமைப்பாடு, பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலும் ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் தொடர்ந்து அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.  

5. பிராந்தியத்துக்கென்று குறித்தொதுக்கப்படும் விடயதானங்கள் விரிவாக எடுத்துரைக்கப்படும். பிராந்தியங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட விடயதானங்கள் தொடர்பில் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பிராந்திய சபைகள் கொண்டிருக்கும்.   

6. பிராந்திய சபைகள் வரிகளையும், கட்டணங்களையும் அறவிடும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதோடு, கடன்பெறும் மற்றும் மத்திய அரசாங்கத்திடமிருந்து ஒதுக்கீடுகள் மற்றும் மானியங்களைப் பெறும் அதிகாரத்தையும் கொண்டிருக்கும்.  

7. திருகோணமலைத் துறைமுக நிர்வாகம் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடாக அங்கிகரிக்கப்படும்.  

8. ஒவ்வொரு பிராந்தியமும் ஒரு மேல் நீதிமன்றமொன்றைக் கொண்டிருப்பதுடன், இலங்கை உயர் நீதிமன்றமானது மேன்முறையீட்டு மற்றும் அரசமைப்பு தொடர்பிலான சட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.  

9. பிராந்தியத்தில் சேவைபுரியும் அரச சேவையாளர்கள் மற்றும் பிராந்தியத்துக்கென நியமிக்கப்பட்ட அரச சேவையாளர்களைக் கொண்ட பிராந்திய அரச சேவை ஸ்தாபிக்கப்படும்.  

10. நியமன மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக பிராந்தியப் பொதுச் சேவை ஆணைக்குழு உருவாக்கப்படும்.  

11. இலங்கை பொதுச் சேவை மற்றும் ஆயுதப்படைச் சேவை என்பன இலங்கையின் தேசிய இன விகிதாசாரத்தைப் பிரதிபலிப்பதாக அமையும்.  

12. உள்ளக பாதுகாப்புக்கான பொலிஸ் சேவையானது, பிராந்தியத்தின் இன விகிதாசாரத்தைப் பிரதிபலிப்பதாக அமையும்.  

13. காணித் தீர்வு தொடர்பான தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும்.   

14. உத்தியோகபூர்வ மொழி சிங்களம் மற்றும் தேசிய மொழி தமிழ் தொடர்பிலான அரசமைப்பு ஏற்பாடுகள் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகள், தேசியக் கொடி, தேசிய கீதம் பற்றிய அரசமைப்பு மற்றும் சட்ட ஏற்பாடுகள் என்பன ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், நடைமுறைப்படுத்தப்படும்.  

15. அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக வன்முறையைப் (பயங்கரவாதத்தை) பயன்படுத்துவதற்கு எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்பு.  

பார்த்தசாரதியிடம் தொலைபேசியில் பேசிய அமிர்தலிங்கம், நிகழ்ச்சி நிரலில் முதலாவதாகவே தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுதல் என்பதைக் குறிப்பிட்டதனூடாக ‘எம்மை பெடியங்களுக்கு எதிராக’ திருப்பும் வேலையை ஜே.ஆர் செய்கிறார் என்று குறிப்பிட்டதுடன், “டெல்லியில் இணங்கிய விடயங்களை ஜே.ஆர் அப்படியே இதில் உள்ளடக்கவில்லை; மாறாக, இணங்கிய சிலதைத் திரிபுபடுத்தியும், சிலதை நீர்த்துப் போன வடிவிலும் குறிப்பிட்டுள்ளதுடன், இணங்காத சில விடயங்களையும் சேர்த்துள்ளார்” என்றார் அமிர்தலிங்கம்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜே-ஆரின்-தந்திரம்/91-209388

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.