Jump to content

எங்கே இன்னொரு பூமி?


Recommended Posts

eart_2609611f.jpg
 

பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது என்று கூறுவது அறிவுடைமை ஆகாது

மனிதன் பல ஆண்டுகாலமாகக் காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறான். விண்வெளியிலிருந்து ஏதாவது குரல் கேட்கிறதா என்று தேடுகிறான். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகத்தான் சீனா இப்போது உலகிலேயே மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை நிறுவிவருகிறது. இது அடுத்த ஆண்டில் செயலுக்கு வந்துவிடும். அதன் நோக்கம், அண்டவெளியில் எங்கேனும் மனிதனைப் போன்றவர்கள் இருக்கிறார்களா என்று அறிவதே. இதற்கு உதவியாக சமீபத்தில் ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர் 10 கோடி டாலர் (ரூ 640 கோடி) நன்கொடையை அறிவித்திருக்கிறார்.

மனிதர்களைப் போன்றவர்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க வேண்டும் என்றே பல அறிவியலார்களும் கருதுகின்றனர். ஆனால், அப்படியான வேற்றுலகவாசிகளைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. இதற்குக் காரணம் உண்டு. நாம் கற்பனைப் பயணமாக அண்டவெளிக்குச் சென்றால், இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

ஆபத்தான அண்டவெளி

நீங்களும் நானும் ஒரு விண்கலத்தில் ஏறி, பூமியிலிருந்து ஏதோ ஒரு திசையில் கிளம்புகிறோம். போய்க்கொண்டே இருக்கிறோம். பூமி நமது பார்வையிலிருந்து மறைகிறது. ஏறத்தாழ 8,000 கோடி கி.மீ. தொலைவுக்குச் சென்ற பிறகு, திரும்பிப் பார்க்கிறோம். சுற்றிலும் ஒரே கும்மிருட்டு. எவ்வளவு மாதங்கள் ஆனாலும் அதே கும்மிருட்டுதான். விண்கலத்துக்கு வெளியே கடும் குளிர். அத்துடன் ஆபத்தான கதிர்கள். அதுதான் அண்டவெளி.

அங்கிருந்து பார்த்தால் சூரியன் தெரியவில்லை. மிகத் தொலைவு வந்துவிட்ட காரணத்தால் சூரியன் ஒரு சிறிய நட்சத்திரமாகத்தான் தெரியும் போலும். குறிப்பிட்ட திசையில் பார்க்கிறோம். நம்மிடம் உள்ள கருவிகளைக் கொண்டு ஆராய்ந்தால் அந்த நட்சத்திரம் சூரியனாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சூரியனைச் சுற்றுகிற பூமி உட்பட ஒன்பது கிரகங்களில் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை.

நாம் பூமியிலிருந்து வந்திருக்கிறோம் என்பதைச் சற்றே மறந்துவிட்டு சுற்றிலும் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை நோட்டமிடுகிறோம். நட்சத்திரமாகக் காட்சி அளிக்கிற சூரியன் இருக்கிற திசையில் கையை நீட்டி அதோ அந்த நட்சத்திரத்தைச் சுற்றுகிற ஒரு கிரகத்தில், அதாவது பூமியில் உயிரினங்கள் உள்ளன என்று அங்கிருந்தபடி உறுதியாகச் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.

இதிலிருந்து சில விஷயங்கள் புலனாகின்றன. சூரியனும் ஒரு நட்சத்திரமே என்பதை உணர்கிறோம். மிகத் தொலைவுக்குச் சென்றுவிட்டால், பூமி இருக்கிற இடத்தையே கண்டுபிடிக்க முடியாது என்பதுபோலவே பூமியில் இருந்து பார்த்தால் எங்கோ இருக்கிற வேறு பூமிகளை எளிதில் கண்டறிய இயலாது என்பதையும் புரிந்து கொள்கிறோம். சூரியனுக்கு ஒரு பூமி இருப்பதைப் போலவே வேறு பல நட்சத்திரங்களுக்கும் பூமி மாதிரி கிரகங்கள் இருக்கலாம் என்பது புரிகிறது. அவ்விதம் எங்கோ இருக்கிற பூமிகளிலும் உயிரினங்கள் இருக்கலாம்.

இயற்கைக்குப் பாரபட்சம் இல்லை

இயற்கையானது அண்டவெளியில் ஒரு மூலையில் இருக்கிற பூமியை மட்டும் விசேஷமாகத் தேர்ந்தெடுத்து, மனிதன் உட்பட உயிரினங்களை உண்டாக்கியுள்ளதாகக் கருத முடியாது. இயற்கைக்கு அவ்விதமான பாரபட்சம் இருக்க முடியாது.

பூமியை எடுத்துக்கொண்டால், உயிரினங்கள் நிலப் பகுதியில் இருக்கின்றன, தரைக்கு அடியில் இருக்கின்றன, தரைக்கு மேலும் இருக்கின்றன. கடல்களிலும் இருக்கின்றன, சுட்டெரிக்கும் பாலைவனங்களிலும் உள்ளன. பனிக்கட்டியால் மூடப்பட்டு கடும் குளிர் வீசுகின்ற அண்டார்ட்டிகாவின் பாதாள ஏரிகளிலும் இருக்கின்றன. கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்களில் தொடங்கி ராட்சத திமிங்கிலங்கள் வரையிலான இந்தப் பல்வகையான உயிரினங்களை யாரும் ஒரே நாளில் உண்டாக்கிவிடவில்லை. கடந்த பல நூறு கோடி ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி மூலம் இவை உண்டாகின.

பூமியில் உள்ள சூழ்நிலைகள் வேறு எங்கேனும் உள்ள ஒரு கிரகத்தில் இருக்குமானால், அங்கும் இதே போன்று பலவகையான உயிரினங்கள் இருக்க முடியும். ஆனால், அவற்றை நம்மால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நமக்குத் தெரியவில்லை என்பதால், பூமி தவிர வேறு எங்கும் உயிரின வகைகள் கிடையாது என்று அடித்துக் கூறுவது அறிவுடைமை ஆகாது.

நாம் இதுவரை வெளியே போய் எங்கும் பார்க்கவில்லை. அதனால் நமக்குத் தெரியவில்லை. நாம் பூமியின் கைதிகளாக வாழ்ந்துவந்துள்ளோம். விண்வெளி யுகம் பிறந்ததற்குப் பிறகுதான் நமக்குக் கால் முளைத்தது. மனிதன் சந்திரனுக்குப் போய்விட்டு வந்திருக்கிறான். ஆனாலும், நாம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வெளியே சென்றதாகக் கூற முடியாது. ஏனெனில், சந்திரனும் பூமியின் பிடிக்குள் தான் இருக்கிறது. ஆகவேதான் அது பூமியைச் சுற்றி வருகிறது. வருகிற நாட்களில் செவ்வாய்க்குச் செல்கிறவர்கள்தான் பூமியிலிருந்து விடுபட்டுச் செல்கிற முதல் நபர்களாக இருப்பர்.

நாஸாவிலிருந்து புளூட்டோவுக்கு…

பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களுக்கு மனிதன் சென்றது கிடையாது என்றாலும் மனிதன் அனுப்பிய பல ஆளில்லா விண்கலங்கள் சென்று ஆராய்ந்துள்ளன. புளூட்டோ ஒன்றுதான் பாக்கியாக இருந்தது. நாஸா அனுப்பிய நியூ ஹொரைசன்ஸ் என்னும் ஆளில்லா விண்கலம் ஒன்பது ஆண்டுப் பயணத்துக்குப் பிறகு, இப்போது புளுட்டோவை ஆராய்ந்து தகவல்களையும் படங்களையும் அனுப்பியுள்ளது. பூமியிலிருந்து புளூட்டோ உள்ள தூரம் சுமார் 500 கோடி கி.மீ. கிட்டத்தட்ட சூரிய மண்டலத்தின் எல்லை.

சூரிய மண்டலத்துக்கும் அப்பால் மிக விஸ்தாரமான அண்டவெளி உள்ளது. அந்த அண்டவெளியில் சூரியன் மாதிரி கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கும் கிரகங்கள் உள்ளன என்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவில் நாம் காணும் நட்சத்திரங்களிலிருந்து ஒளி மட்டுமல்லாமல், பல வகையான கதிர்களும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரேடியோ அலைகளும் அவற்றில் அடங்கும். இயற்கையாகத் தோன்றும் அந்த ரேடியோ அலைகள் காலம் காலமாகப் பூமிக்கு வந்துகொண்டிருக் கின்றன. அவற்றை நம் கண்களால் காண முடியாது.

இயற்கையாகத் தோன்றும் ரேடியோ அலைகளைப் போலவே செயற்கையாக ரேடியோ அலைகளை உண்டாக்க மனிதன் கற்றுக்கொண்டுள்ளான். ஒலியை அவ்வித ரேடியோ அலைகளாக மாற்றவும் மறுபடி அந்த அலைகளை ஒலியாக மாற்றவும் மனிதன் கற்றுக்கொண்டபோது வானொலிப்பெட்டி தோன்றியது.

நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற ரேடியோ அலை களைப் பெற்று ஆராய்வதற்காக பெரிய பெரிய ஆன்டெனாக்களைக் கொண்ட ரேடியோ டெலஸ் கோப்புகள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. ஏதோ ஒரு நட்சத்திரத்தின் அருகே இருக்கின்ற கிரகத்தில் வாழக்கூடிய புத்திசாலி மனிதர்கள் ரேடியோ அலைகள் வடிவில் செய்திகளை அனுப்பினால் அவற்றையும் அந்த டெலஸ்கோப்புகள் மூலம் பெற முடியும்.

நட்சத்திரங்களிலிருந்து வருகிற ரேடியோ அலைக ளுக்கும் வேற்றுக்கிரகப் புத்திசாலி மனிதர்கள் அனுப்பும் ரேடியோ அலைகளுக்கும் இடையே வித்தியாசம் உண்டு. ஆகவேதான், அண்டவெளியிலிருந்து வித்தியா சமான சிக்னல்கள் வருகின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிவருகிறார்கள்.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/எங்கே-இன்னொரு-பூமி/article7844972.ece?homepage=true&theme=true

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மனிதன் பல ஆண்டுகாலமாகக் காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறான். விண்வெளியிலிருந்து ஏதாவது குரல் கேட்கிறதா என்று தேடுகிறான். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகத்தான் சீனா இப்போது உலகிலேயே மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை நிறுவிவருகிறது. இது அடுத்த ஆண்டில் செயலுக்கு வந்துவிடும். அதன் நோக்கம், அண்டவெளியில் எங்கேனும் மனிதனைப் போன்றவர்கள் இருக்கிறார்களா என்று அறிவதே. இதற்கு உதவியாக சமீபத்தில் ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர் 10 கோடி டாலர் (ரூ 640 கோடி) நன்கொடையை அறிவித்திருக்கிறார்.

பூமியில் அன்றாடம் கேட்கும் அவஸ்தை குரல்கள் கேட்கவில்லையா? முதலில் அதற்கு பரிகாரம் காணுங்கள். அதன் பின்னர் அண்டவெளி குரல்களை தேடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்.... எங்கோ வாசித்தது இது....
ஒரு 35 வயது இளைஞர்..... அவருக்கு மது, புகைததல், மாமிசம் உண்ணும் பழக்கம் கிடையாது. தாவர உணவுகள்  தான் உண்பவர்.
திடீரென்று.... நாக்கில் புற்று நோய் அறிகுறி. அதற்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்க... அது பரவி தொண்டைக்  குழி, உணவுக் குழாய் எல்லாம் பரவி இறந்து விட்டார்.
அதற்கு, மருத்துவர்கள் கூறிய  காரணம்...... தாவரத்துக்கு அடித்த கிருமி நாசினி, உரம் போன்றவை என்ற போது, அதிர்ச்சியாக இருந்தது.

நாம்  இருக்கும் பூமியில் இப்போதே... சுத்தமான தண்ணீருக்கு மக்கள் அலையத் தொடங்கி விட்டார்கள்.
இருக்கும் பூமியை, காப்பாற்றத் தெரியாத மனிதனுக்கு.... வேற்றுக் கிரக ஆராய்ச்சி தேவையற்றது.
அதிலும்.... உலகை பாழாக்கியதில் சீனாவுக்கும் முக்கிய பங்கு உண்டு, அது... இந்த ஆராய்ச்சியில் இறங்கியது கேவலம்.
வேற்றுக் கிரகவாசிகள் இருந்தால்....  அந்தக் கிரக வாசிகளையாவது, நிம்மதியாக இருக்க விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எங்கே இன்னொரு பூமி?- பச்சை நிற மனிதர்கள்!

 

pachai_2617195h.jpg

பூமியில் மட்டும் உயிரினங்கள் இருப்பதற்கு இங்கு உள்ள விசேஷத் தன்மையே காரணம்

1938 அக்டோபர் 30. ஞாயிற்றுக்கிழமை. இரவு சுமார் 8 மணி. அமெரிக்காவின் என்.பி.சி. ரேடியோவில் ஒரு பிரபல நிகழ்ச்சி. அதைக் கேட்டு முடித்தவர்கள் அடுத்ததாக சி.பி.எஸ். ரேடியோவின் நிகழ்ச்சிக்கு மாறுகின்றனர். அதில் ஏற்கெனவே நிகழ்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. அந்த அலைவரிசையில் செய்தி அறிவிப்புகள்போல அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருந்தன.

“செவ்வாய் கிரகவாசிகள் நியூயார்க்கில் இறங்கி தாக்குதல் நடத்துகின்றனர். விஷப் புகையை வீசி மக்களைக் கொன்றுகொண்டிருக்கின்றனர். 7,000 ராணுவப் படையினர் இதுவரை மடிந்துவிட்டனர். சிகாகோ, செயின்ட் லூயி உட்பட பல நகரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன...” மேலும் சிறிது நேரம் இப்படியாக அறிவிப்புகள் வெளியாகின்றன.

இதைக் கேட்டவர்கள் நிஜமாகவே செவ்வாய் கிரகவாசிகள் பூமி மீது படையெடுத்துவிட்டதாக நினைத்து, அலறியடித்துக்கொண்டு பதுங்குமிடங்களை நோக்கி ஓடினர். கார் ரேடியோவில் இந்த அறிவிப்புகளைக் கேட்டவர்கள் ஆங்காங்கு கார்களை நிறுத்திவிட்டு, எங்காவது பதுங்குவதற்கு ஓடினர். பல நகரங்களில் ஒரே பீதி.

வருத்தம் தெரிவித்த வெல்ஸ்

சில நிமிடங்களுக்குப் பின்னர்தான் இது ஒரு ரேடியோ நாடகத்தின் எடுப்பான ஆரம்பம் என்று அவர்களுக்குப் புரிகிறது. மெதுவாக, ஆங்காங்கு சகஜ நிலை திரும்புகிறது. செவ்வாயிலிருந்து பூமி மீது படையெடுப்பு நடப்பதுபோல இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர் எச்.ஜி.வெல்ஸ் 1897-ல் ஒரு கதை எழுதினார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்சன் வெல்ஸ் அந்தக் கதையைத்தான் ரேடியோ நாடகமாக்கியிருந்தார். அதன் தொடக்கம் செய்தி அறிவிப்புகள் பாணியில் இருந்தது. அதன் விளைவாகத்தான் பெரும் பீதி ஏற்பட்டது. இதனால் பலரும் பலவித இன்னல்களுக்கு உள்ளானார்கள். ஆர்சன் வெல்ஸ் பின்னர் இதுகுறித்து வருத்தம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களைக் காட்டியது. செவ்வாய் கிரகத்தில் யாரோ இருக்கிறார்கள் என்று மக்கள் கருதினர். செவ்வாய் கிரகவாசி களால் பூமி மீது படையெடுக்க முடியும் என்று அவர்கள் நம்பினர். அதன் விளைவாகவே ரேடியோ நாடகத்தில் வெளியான அறிவிப்புகளை அவர்கள் நிஜம் என நம்பினார்கள்.

பச்சை நிறமனிதர்கள்

கிட்டத்தட்ட சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வெள்ளி, செவ்வாய், சந்திரன் அல்லாமல் கற்பனையான கிரகங்களில் நிகழ்வதாகக் கூறும் நாவல்களும், திரைப் படங்களும் நிறையவே வந்தன. இவற்றில் பலவும் பூமியின் மீது வேற்றுலகவாசிகள் படையெடுப்பதுபோல் அமைந்திருந்தன. எனவே, பூமியின் மீது வேற்றுலகவாசிகள் ஒரு வேளை படையெடுத்துத் தாக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவில் பலரும் நினைக்க ஆரம்பித்தனர்.

செவ்வாய் கிரகத்தில் பச்சை நிற மனிதர்கள் இருப்பதாகவும் ஓர் எண்ணம் ஏற்பட்டது... அது எப்படி?

டார்ஸான் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. டார்ஸான் படக் கதை, டார்ஸான் காமிக்ஸ் (படக்கதைப் புத்தகம்) டார்ஸான் சினிமா என நிறையவே உண்டு. டார்ஸான் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் அமெரிக்காவைச் சேர்ந்த எட்கார் ரைஸ்பரோ ஆவார். ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தில் சேர முடியாமல் போன பின், அவர் ஏதேதோ வேலையில் சேர்ந்து பின்னர் எழுத்தாளரானார்.

ரைஸ்பரோவின் முதல் நாவலே செவ்வாய் கிரகத்தைப் பற்றியதுதான். ‘செவ்வாய் கிரகத்தின் சந்திரன்கள்’என்பது அதன் தலைப்பு. முதலில் அது ஒரு வார சஞ்சிகையில் தொடராக வந்தது. பின்னர் அது, ‘செவ்வாயின் இளவரசி’என்ற தலைப்பில் புத்தகமாக வந்தது. செவ்வாய் கிரகத்தை மையமாக வைத்து மட்டும் அவர் சுமார் 10 புத்தகங்களை எழுதினார்.

செவ்வாய் பற்றிய தமது முதல் நாவலில் ரைஸ்பரோ செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இருப்பதாகவும் அவர்கள் பச்சை நிறத்தில் இருப்பதாகவும் வருணிப்பார். காலப்போக்கில் செவ்வாய் பற்றிய திரைப் படங்களிலும் செவ்வாய் ‘மனிதர்கள்’ பச்சை நிறத்தில் காட்டப்பட்டனர். படக் கதைகள் மற்றும் சினிமாப் படங்களின் விளைவாக செவ்வாயில் மனிதர்கள் இருக்கின்றனர் என்றும் அவர்கள் பச்சை நிறத்தவர் என்றும் மேற்கத்திய நாடுகளில் மக்களிடையே ஆழ்ந்த கருத்து வேரூன்றியது.

ஹெர்ஷலும் லுனாரியன்ஸும்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் விஞ்ஞானிகளில் சிலரும் வேறு கிரகங்களில் மனிதனைப் போன்றவர்கள் இருக்கலாம் என்று நம்பினார்கள். சிலர் அக்கருத்தை பகிரங்கமாக வெளியிட்டனர். சிலர் அக்கருத்துகளை வெளியிடத் தயங்கினர். அப்படியான விஞ்ஞானிகளில் ஒருவர் சர் வில்லியம் ஹெர்ஷல் ( 1738-1822) ஹெர்ஷல் மாபெரும் விஞ்ஞானிகளில் ஒருவர். டெலஸ்கோப் மூலம் யுரேனஸ் கிரகத்தைக் கண்டுபிடித்தவர். ஹெர்ஷல் சொந்தமாகப் பல டெலஸ்கோப்புகளை உருவாக்கியவர். அவர் வடிவமைத்த டெலஸ்கோப் ஒன்று அக்காலகட்டத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தது. கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தமது டெலஸ்கோப் மூலம் ஆராய்ந்த அவர் சந்திரனையும் ஆராய்ந்தார்.

சந்திரனில் வட்ட வடிவிலான சிறிய டவுன்கள் உள்ளதாகவும் அவற்றில் மக்கள் இருப்பதாகவும் அவர் கருதினார். ஹெர்ஷல் அவர்களை லுனாரியன்ஸ் என்று வர்ணித்தார். அவர் சந்திரனோடு நிறுத்திக்கொள்ளவில்லை. சூரியனிலும் மனிதர்களைப் போன்றவர்கள் இருக்கலாம் என்று நம்பினார். ஆனால், வேற்றுலகவாசிகள் பற்றிய தமது கருத்துகளை ஹெர்ஷல் தமது குறிப்புகளில் எழுதி வைத்தாரே தவிர, பகிரங்கமாக அறிவிக்கவில்லை. பின்னர்தான் அவை தெரியவந்தன.

சந்திரனும் வால்வெர்க் நகரும்

சமகாலத்தவரான ஜெர்மன் வானவியல் விஞ்ஞானி குருய்தூசியன் தமது டெலஸ்கோப் மூலம் சந்திரனை ஆராய்ந்தபோது, சந்திரனில் ஓரிடத்தில் கட்டிடங்களும் தெருக்களும் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. அந்த நகருக்கு அவர் வால்வெர்க் என்று பெயரிட்டார். வெள்ளிக் கிரகத்தையும் ஆராய்ந்த அவர் அக்கிரகம் சூரியனுக்குச் சற்று அருகில் இருப்பதால் பூமியில் பிரேசில் நாட்டில் இருப்பதைக் காட்டிலும் வெள்ளியில் மிக அடர்ந்த காடுகள் இருந்தாக வேண்டும் என்றார். அவரது கருத்துகள் அடங்கிய நூல் 1824-ல் வெளியானது.

இவர்களுக்கு முன்னதாக வாழ்ந்த பிரெஞ்சு விஞ்ஞானி போண்டெனெல்லி 1486-ல் எழுது ம்போது வெள்ளிக் கிரகத்தில் வாழும் வேற்றுலகவாசிகள் கருப்பு நிறத்தவர்களாக இருப்பர் என்றார். அவர்கள் இசையிலும் கவிதையிலும் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருப்பர் என்றும் அவர் கூறினார். இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலஸ் குசானஸ் 1439-ல் எழுதும்போது சூரியனில் வசிப்போர் அதி புத்திசாலிகளாக இருப்பர் என்றார். சந்திரனில் இருப்பவர்கள் மரை கழன்றவர்களாக இருப்பர் என்று குறிப்பிட்டார். இவை எல்லாமே அறிவியல் ஆராய்ச்சி என்ற அடிப்படையில் கூறப்பட்டவை.

ஆனால், விண்வெளி யுகம் தொடங்கிப் பல்வேறு கிரகங்களுக்கும் ஆளில்லா விண்கலங்களை அனுப்பி ஆராய்ந்தபோது, சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பது கிரகங்களில் பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதரைப் போன்றவர்கள் இல்லை என்பது தெரியவந்தது. பூமியில் மட்டும் மனிதன் உட்பட பல்வகையான உயிரினங்கள் இருப்பதற்கு பூமியில் உள்ள விசேஷத் தன்மைகளே காரணம்.

- என்.ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%9

Link to comment
Share on other sites

பூமி அப்படி என்ன ஒசத்தி?

boomi_2626087f.jpg
 

சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை!

குளிர் காலத்தில் காட்டுப் பகுதியில் இரவில் குளிர் காய்வதற்காக சுள்ளிகளைப் போட்டு தீ மூட்டுவர். அதைச் சுற்றிலும் கும்பலாகப் பலர் உட்கார்ந்திருப்பர். மிக அருகில் உட்கார்ந்தால் சூடு அதிகம் தாக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். மிகவும் தள்ளி உட்கார்ந்தால் இதமான வெப்பம் கிடைக்காது. எனவே, இதமான வெப்பம் கிடைக்கின்ற அளவுக்கு உகந்த தூரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். பூமியும் சரி, ‘குளிர் காய்வதற்கு’ ஏற்ப சூரியனிலிருந்து உகந்த தூரத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், புதனும் வெள்ளியும் சூரியனுக்கு அருகில் உள்ளன. செவ்வாய் கிரகம் சற்றே தள்ளி அமைந்துள்ளது.

முதலில் நாம் சூரிய மண்டல அமைப்பு பற்றிக் கவனிப்பது நல்லது. ஒரு காகிதத்தில் ஒரு புள்ளி வையுங்கள். அதுதான் சூரியன். அந்த புள்ளியைச் சுற்றி நெருக்கமாக ஒரு சிறிய வட்டம் போடுங்கள். புதன் கிரகம் அந்த வட்டத்தில் அமைந்தபடியாக சூரியனைச் சுற்றுகிறது. முதல் வட்டத்தைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அதுதான் வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை. அதைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அந்த வட்டத்தில்தான் பூமி அமைந்துள்ளது. நான்காவது வட்டத்தில் செவ்வாய் கிரகம்.

பனிக்கட்டி, பாறை: கோள்கள்

மேலும் வட்டங்களைப் போடலாம். ஐந்து முதல் ஒன்பது வரையிலான வட்டங்களில்தான் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை அமைந்துள்ளன. இந்த ஐந்துமே பனிக்கட்டி உருண்டைகள். இவை எல்லாமே சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருப்பவை. பூமியிலிருந்து பார்த்தால் சூரியன் 25 பைசா அளவில் தெரிவதாக வைத்துக்கொண்டால், வியாழன் கிரகத்திலிருந்து பார்க்கும்போது சூரியன் மிளகு அளவில்தான் தெரியும். வியாழனில் வெயில் சிறிதும் உறைக்காது. எனவேதான் வியாழனும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களும் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.

மாறாக புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவற்றைப் பாறைக் கோள்கள் என்று சொல்வர். அதாவது, இந்த நான்கிலும் தரை உண்டு. மண் உண்டு. மலைகள், பள்ளத்தாக்குகள் ஆகியனவும் உண்டு.

பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு உகந்த மற்ற சூழ்நிலைகளையும் கவனிப்போம். முதலாவதாக பூமியில் போதுமான அடர்த்தி கொண்ட காற்று மண்டலம் உள்ளது. இரண்டாவதாக இந்தக் காற்று மண்டலம்தான் சூரியனிலிருந்து வருகின்ற ஆபத்தான எக்ஸ் கதிர்களைத் தடுத்து உயிரினங்களைக் காப்பாற்றுகிறது. உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய சில வகை புற ஊதாக் கதிர்களையும் காற்று மண்டலம் தடுக்கிறது. விண்வெளியிலிருந்து வருகின்ற கதிர்வீச்சிலிருந்தும் நம்மை இந்தக் காற்று மண்டலம் காக்கிறது.

நீர்சூழ் உலகு!

மூன்றாவதாக பூமியில் உயிரினத்துக்குத் தேவையான தண்ணீர் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் 71 சதவிகிதம் கடல்களால் ஆனது. தண்ணீரானது துருவப் பகுதிகளில் பனிக்கட்டி வடிவில் உள்ளது. காற்றில் ஆவி வடிவில் உள்ளது. பூமியின் நிலப் பகுதிகளில் ஆறுகளாக ஓடுகிறது. பூமி ஒன்றில்தான் நீர் வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் ஆவி வடிவிலும் தண்ணீர் இருக்கிறது.

நான்காவது சாதக அம்சம் பூமியின் பருமன். பூமி தகுந்த பருமன் கொண்டதாக உள்ளதால், அதற்குச் சரியான ஈர்ப்பு சக்தி உள்ளது. அவ்விதம் ஈர்ப்பு சக்தி உள்ளதால்தான் பூமி தனது காற்று மண்டலத்தை இழக்காமல் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டுள்ளது.

ஐந்தாவது அம்சம், பூமியின் சுழற்சி வேகம். பூமி தனது அச்சில் உகந்த வேகத்தில் சுற்றுவதால்தான் பூமியில் பொதுவில் கடும் குளிரோ கடும் வெப்பமோ இல்லை. இல்லத்தரசிகள் நெருப்பில் அல்லது தணலில் அப்பளம் சுடும்போது அப்பளம் தீய்ந்து விடாமல் இருக்க அதைத் தக்கபடி திருப்பிப் போடுவார்கள். பூமியின் சுழற்சி வேகம் அந்த அளவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் சந்திரனில் 14 நாள் பகல். 14 நாள் இரவு.

ஆறாவது அம்சம், பூமியின் காந்தப் புலம். சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் பூமியைத் தாக்காதபடி இந்தக் காந்தப் புலம் தடுக்கிறது. மேலே கூறிய அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து பூமியில் உயிரினம் தோன்றித் தழைக்க உதவியுள்ளன.

வியாழன் உள்ளிட்ட ஐந்து பனிக்கட்டி உருண்டைகளும் உயிரினத்துக்கு உகந்த சூழல்களைக் கொண்டவை அல்ல. மீதியுள்ள புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்களில் உள்ள நிலைமைகளைக் கவனிப்போம்.

சாத்தியமற்ற கிரகங்கள்

புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. எனவே, பகல் வேளையில் அதிகபட்ச வெப்பம் 430 டிகிரி செல்சியஸ். இரவாக உள்ள பகுதியில் குளிர் மைனஸ் 170 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தில் உயிரினம் கிடையாது என்பதில் வியப்பில்லை. தவிர, புதன் கிரகத்தில் அனேகமாகக் காற்று மண்டலம் கிடையாது.

வெள்ளி கிரகத்துக்கு ஜோசிய சாஸ்திரத்தில் சுக்கிரன் என்று பெயர். சுக்கிரன் என்றாலே சுக்கிர தசைதான் நினைவுக்கு வரும். ஆனால், வெள்ளி கிரகத்துக்கு சுக்கிர தசை அடிக்கவில்லை. மாறாக, நிரந்தர ‘சனி தசை’தான். வெள்ளி கிரகத்துக்குக் கடந்த காலத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் அனுப்பிய ஆளில்லா விண்கலங்கள் ‘அமுக்குப் பிசாசு’ அழுத்தியதுபோல நொறுங்கின. வெள்ளி கிரகத்தில் நிலவும் பயங்கரக் காற்றழுத்தமே அதற்குக் காரணம். அது போதாதென வெள்ளியில் எந்த இடமானாலும் வெப்பம் 460 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. வெள்ளி கிரகம் ஒரு அக்கினிக் குண்டம். இது போதாதென வானிலிருந்து அமில மழை பெய்கிறது.

செவ்வாய் தேறுமா?

சூரியனிலிருந்து தள்ளி நான்காவதாக அமைந்த செவ்வாயில் வெயில் தாக்கம் குறைவு. மெல்லிய காற்று மண்டலம் உள்ளது. தண்ணீர் கிடையாது. வடிவில் பூமியை விடச் சிறியது என்பதால், காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்துக்கொள்ள இயலவில்லை. இன்னமும் அது தனது காற்று மண்டலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது. செவ்வாயின் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உண்டு என்றாலும் காற்று மண்டல அடர்த்தி இன்மை காரணமாக செவ்வாயில் பனிக்கட்டிகள் உருகி நீராக மாறாமல் நேரடியாக ஆவியாக மாறுகின்றன. சூரிய மண்டலத்தில் பூமிக்கு வெளியே குறைந்தது நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்பு கொண்ட ஒரே கிரகம் செவ்வாய்தான். ஆனால், இதுவரை தேடியதில் செவ்வாயில் நுண்ணுயிர்கள்கூட இல்லை.

ஆக, சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமியைத் தவிர, வேறு எந்தக் கிரகத்திலும் உயிரினம் கிடையாது.

பூமி பெற்றுள்ள விசேஷ சாதகங்களால் பூமியில் உயிரினம் தோன்றியதாகக் கூறலாம். அப்படியானால் சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற ஒரு கிரகம் பூமி போன்று அதே சாதக நிலைமைகளைப் பெற்றிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியான கிரகத்தில் உயிரினம் இருக்குமா? அப்படியும் சொல்லிவிட முடியாது.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

எங்கே இன்னொரு பூமி?- சூரியன் மாதிரியில் ஒரு நட்சத்திரம்

sun_2643545f.jpg
 

‘சூரியன்’கள் மிகவும் தொலைவில் இருப்பதால் நட்சத்திரங்களாகத் தெரிகின்றன

நமது சூரிய மண்டலத்தில் பூமியைத் தவிர, வேறு (செவ்வாய் உட்பட) எந்தக் கிரகத்திலும் மனிதர்கள் அல்லது மனிதர்கள் மாதிரியில் யாரும் கிடையாது. இது தெளிவு. எனினும், சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகத்தில் மனிதர் மாதிரியானவர்கள் அதாவது வேற்றுலகவாசிகள் இருக்கலாம். அதாவது, அந்த நட்சத்திரம் சூரியன் மாதிரியில் இருந்தாக வேண்டும். ஆகவே, நாம் அந்த மாதிரி நட்சத்திரத்தைத் தேடியாக வேண்டும்.

நிலவற்ற நாளில் நீங்கள் இரவு வானைக் கவனித்தால் எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரியும். சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் இருந்துகொண்டு வானை நோக்கில் அவ்வளவாக நட்சத்திரங்கள் தெரியாது. நகரில் உள்ள தெரு விளக்குகள், கார்களின் விளக்குகள் மற்றும் விளம்பரப் பலகைகள் ஆகியவற்றின் வெளிச்சத்தில் ஒரு பகுதி வானை நோக்கியும் செல்கிறது. அந்த வெளிச் சமானது நகரங்களுக்கு மேலே காற்றில் உள்ள தூசியால் சிதறடிக்கப்படுகிறது. எனவே, வானத்து நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியாதபடி அது மறைக்கிறது.

அற்புதக் காட்சி

வான் காட்சியைக் காண முதலில் அமாவாசை நாளில் ஒரு கிராமத்துக்குச் செல்ல வேண்டும். பின்னர், அக்கிராமத்திலிருந்து தள்ளி வெளியே போய் சிறிதுகூட வெளிச்சம் இல்லாத இடத்தை அடைந்து இருட்டுக்குக் கண்கள் பழகிக்கொண்ட பின்னர் வானை நோக்க வேண்டும். பெரிய கருப்பு நிற வெல்வெட் துணியில் ஏராளமான வைரக் கற்களைப் பரப்பியது போன்று வானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரியும். இது அற்புதக் காட்சியாக இருக்கும்.

இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் ‘சூரியன்’களே. இவை மிகவும் தொலைவில் இருப்பதால் நட்சத்திரங்க ளாகத் தெரிகின்றன. சூரியன் என்கிற நட்சத்திரம் நமக்கு

‘அருகில்’ (சுமார் 15 கோடி கி.மீ. தொலைவில்) இருப்பதால் நமக்கு சூரியனாகத் தெரிகிறது.

இரவு வானில் தெரிகின்ற நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. வெறும் கண்ணால் பார்த் தாலே வித்தியாசம் தெரியும். சில நட்சத்திரங்கள் பளீரெனச் சற்றே நீல நிறத்தில் தெரிகின்றன. சில நட்சத்திரங்கள் வெண்மையான ஒளியுடன் காட்சியளிக்கின்றன. சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற நட்சத்திரங்கள் உண்டு. சில நட்சத்திரங்கள் சிவப்பாகத் தெரியும். நட்சத்திரங்களின் வெளிப்புற வெப்பத்தைப் பொறுத்து அவற்றின் நிறம் மாறுபடுகிறது.

அல்பாயுசு நட்சத்திரங்கள்

பருமனைப் பொறுத்தும் நட்சத்திரங்கள் வித்தியாசப்படுகின்றன. சில நட்சத்திரங்கள் பூதாகாரமானவை. அவை நமது சூரியனைப் போலப் பல மடங்கு பெரியவை. நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே வயது கொண்டவையும் அல்ல. சில நட்சத்திரங்கள் மிக நீண்ட ஆயுளைக் கொண்டவை. நமது சூரியன் மிக நீண்ட ஆயுளைக் கொண்டது. சூரியனுடன் ஒப்பிட்டால் பல நட்சத்திரங்கள் ’அல்பாயுசு’ கொண்டவையே.

ஒரு நட்சத்திரத்தின் பருமனுக்கும் அதன் ஆயுளுக்கும் தொடர்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வானில் உள்ள திருவாதிரை நட்சத்திரம் வடிவில் மிகப் பெரியது. ஆனால், அது குறைந்த ஆயுளைக் கொண்டது. கேட்டை நட்சத்திரமும் அப்படிப்பட்டதே. திருவாதிரையும் கேட்டையும் ஜோசியத்தில் வருகின்ற நட்சத்திரங்களாயிற்றே என்று கேட்கலாம். உண்மையில், அந்தப் பெயர்களைக் கொண்ட நட்சத்திரங்கள் வானில் இருக்கின்றன. திருவாதிரையும் கேட்டையும் வடிவில் பெரிதாகவும் சிவந்த நிறத்துடனும் காணப்படுவதால் இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கும் ‘செம்பூதம்’ என்ற பட்டப் பெயர் உண்டு.

சூரியன் நீண்ட ஆயுளைக் கொண்டது என்று கூறினோம். சூரியன் தோன்றி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன. பூமியும் மற்ற கிரகங்களும் சூரியன் தோன்றிய போதே உண்டானவை. ஆகவே, பூமியின் வயதும் அதேதான். சூரியன் இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு இருக்கும்.

செம்பூத திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரம் சூரியனைப் போல 20 முதல் 30 மடங்கு பெரியது. சூரியனைப் போல ஒரு லட்சம் மடங்கு பிரகாசமானது. மிகத் தொலைவில் இருப்பதால் வானில் அது சற்றே சிவந்த புள்ளியாகத் தெரிகிறது. திருவாதிரை நட்சத்திரத்தின் வயது சுமார் ஒரு கோடி ஆண்டுகளே. சில லட்சம் ஆண்டுகளில் அதன் ஆயுள் முடிந்துவிடும். கேட்டை நட்சத்திரத்தின் கதையும் அதேதான். சூரியனைப் போல சுமார் 18 மடங்கு பெரியதான அந்த நட்சத்திரத்தின் வயது சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ஆண்டுகள். அதுவும் சில லட்சம் ஆண்டுகளில் அழியக்கூடியதே.

செலவாளிக் கேட்டை

திருவாதிரை, கேட்டை நட்சத்திரங்களுக்கு ஏன் ஆயுள் குறைவு? நமது சூரியனில் ஹைட்ரஜன்தான் எரிபொருள். சூரியனின் மையத்தில் நிலவும் பயங்கரமான வெப்பத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன. இதுவே அணுச் சேர்க்கை எனப்படுகிறது. இந்த அணுச் சேர்க்கையின் பலனாகப் பெரும் ஆற்றலும் ஒளியும் வெளிப்படுகின்றன.

திருவாதிரை, கேட்டை போன்ற பிரம்மாண்டமான நட்சத்திரங்களில் எரிபொருள் மிக வேகமாக எரிந்து தீர்ந்துபோகிறது. அவை ‘பெரிய செலவாளிகள்’. எனவே, ஆடம்பரமாக வாழ்ந்து கெட்டவன் கதைதான். பூமியின் கதைக்கு வருவோம். பூமியில் உள்ள உகந்த சூழ்நிலைகள் காரணமாக உயிரினம் தோன்றியது. பூமி தோன்றி சில நூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதன் தோன்றினான். உயிரின வரலாற்றுப்படி மனிதன் ‘நேற்று’ தோன்றியவன். மனிதன் நாகரிக மனிதனாக மாறிச் சில ஆயிரம் ஆண்டுகளே ஆகியுள்ளன.

அப்படிப் பார்க்கும்போது, சூரியன் போன்று நீண்ட ஆயுளைக்கொண்ட நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகத்தில்தான் உயிரினம் தோன்ற முடியும் என்று சொல்லலாம். ஏதோ ஒரு நட்சத்திரத்தின் அருகே பூமி போன்று பல உகந்த சூழ்நிலைகளையும் கொண்ட கிரகம் இருந்தாலும், அதில் நம்மைப் போன்ற புத்திசாலி மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னர் அந்த நட்சத்திரமே அழிந்து போய்விடும் என்றால் எப்படி?

சிவப்புக் குள்ளனும் வெள்ளைக் குள்ளனும்

இந்த விஷயத்தில் இரவு வானில் ‘வயது பத்தாது’ என்று ஒதுக்கி வைக்கத் தக்க நட்சத்திரங்கள் பலவும் உள்ளன. அந்த வகையில் பார்க்கும்போது சூரியன் சைஸில் உள்ள நட்சத்திரங்களே பூமி மாதிரி கிரகத்தைப் பெற்றிருக்க மிகவும் பொருத்தமானவை என்று சொல் லலாம். சிவப்புக் குள்ளன் என்ற பட்டப் பெயர் கொண்ட நட்சத்திரங்கள் மிக நிறையவே உள்ளன. இவை சூரியனைவிடச் சிறியவை. அதே சமயம், சூரியனைவிட அதிக ஆயுளைக் கொண்டவை. இவையும் கிரகங்களைப் பெற்றுள்ளதை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், சிவப்புக் குள்ளன் நட்சத்திர மண்டலத்தில் பூமி போன்ற கிரகம் இருக்குமானால், அந்த கிரகம் சில விசேஷப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக இருக்கும்.

வெள்ளைக் குள்ளன் எனப்படுகிற நட்சத்திரங்களும் சூரியனைவிடச் சிறியவையே. ஆனால், அவற்றில் பூமி போன்ற கிரகங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பூமி போன்ற கிரகங்களைப் பெற்றுள்ள நட்சத்திரங்கள் மிக நிறையவே உள்ளன . நிபுணர்கள் இது விஷயத்தில் விரிவாகவே கணக்குப்போட்டு வைத்துள்ளனர்.

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிக்கு நன்றி ஆதவன்

Link to comment
Share on other sites

  • 3 months later...

வானில் எவ்வளவு நட்சத்திரம்?

 

light_year_2651461f.jpg
 

பஞ்சாங்கத்தைப் புரட்டினால் அஸ்வினி, பரணி, . . என்று தொடங்கி 27 நட்சத்திரங்களின் பெயர்கள் போடப்பட்டிருக்கும். இந்த 27 நட்சத்திரங்கள்தான் வானில் இருக்கின்றனவா? இரவில் வானைப் பார்த்தால் எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரிகின்றனவே என்று கேட்கலாம்.

சூரியன் உதித்தது முதல் அஸ்தமிக்கின்ற வரையில் அது தினமும் வானில் பயணிக்கின்ற பாதை என ஒன்று உள்ளது. வானில் இந்தப் பாதையில்தான் குரு (வியாழன்) பெயர்ச்சியும் சனிப் பெயர்ச்சியும் நிகழ்கின்றன. இந்தப் பாதையில்தான் மற்ற கிரகங்கள் நகர்ந்து செல்கின்றன. 12 ராசிகளும்

இந்தப் பாதையில்தான் உள்ளன. அந்தக் காலத்தில் ஜோசிய சாஸ்திர வல்லுநர்கள் அந்தப் பாதையில் இருக்கின்ற நட்சத்திரங்களை மட்டும் கணக்கில்கொண்டு இவ்விதம் 27 நட்சத்திரங்களின் பட்டியலைத் தயாரித்தனர். மற்றபடி வானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன.

இரட்டை நட்சத்திரங்கள்

நமது சூரிய மண்டலத்துக்குள் சூரியன் என்கிற ஒரே ஒரு நட்சத்திரம்தான் உள்ளது. நல்ல வேளை. சூரியனுக்குப் பக்கத்திலேயே இன்னொரு நட்சத்திரம் இருந்திருக்குமேயானால் பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் இந்த இரண்டு நட்சத்திரங்களையும் சேர்த்து எப்படிச் சுற்றுவது என்று திண்டாடியிருக்கும்.

வானில் இரட்டை நட்சத்திரங்கள் நிறையவே இருக்கின்றன. உண்மையில் சூரியன் போன்று ஒண்டிக்கட்டை நட்சத்திரங்கள் மிக அபூர்வமே. ஒரு காலத்தில் ஒண்டிக்கட்டை நட்சத்திரத்துக்குத்தான் கிரகங்கள் இருக்கும் என்றும் இரட்டை நட்சத்திரங்கள் கிரகங்களைப் பெற்றிராது என்றும் கருதப்பட்டது. ஆனால், தற்போது கிரகங்களைப் பெற்றுள்ள இரட்டை நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் ஒண்டிக்கட்டை நட்சத்திரம்தான் பூமி மாதிரியான கிரகத்தைப் பெற்றிருக்க முடியும்.

பூமி போன்ற கிரகத்தைப் பெற்றுள்ள வேறு ஒண்டிக்கட்டை நட்சத்திரங்கள் எங்கே உள்ளன என்று தேடுவதற்கு வானில் நிறையவே இடம் இருக்கிறது.

சூரிய மண்டலத்தின் எல்லை என்பது சுமார் 1,800 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. அதற்கு அப்பால் உள்ள இடம் அண்டவெளி ஆகும். சூரியன் மாதிரியான நட்சத்திரங்களைத் தேட வேண்டிய பிராந்தியம் இதுதான். அண்டவெளி என்பது என்ன?

கோடானு கோடி கிரகங்கள்

சென்னை நகரில் எண்ணற்ற கட்டிடங்கள் உள்ளன. அது மாதிரியில் எண்ணற்ற நட்சத்திரங்களைக் கொண்டது அண்டம் ஆகும். நமது சூரியன் அடங்கிய அண்டத்துக்கு ஆகாய கங்கை என்று பெயர். ஆகாய கங்கை அண்டத்தில் சூரியன் உட்படக் குறைந்தது 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. நமது அண்டத்தில் மட்டும் நமது சூரியன் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பூமி மாதிரியான கிரகங்களின் எண்ணிக்கை 1,100 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். அதாவது, இவை உயிரின வாய்ப்பு கொண்டவை. சிவப்புக் குள்ளன் நட்சத்திரங்களையும் கணக்கில் கொண்டால் பூமி மாதிரி கிரகங்கள் 4,000 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிரபஞ்ச வெளியில் நமது அண்டம்போல 10 ஆயிரம் கோடி முதல் 20 ஆயிரம் கோடி அண்டங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு அண்டத்திலும் நமது அண்டத்தில் உள்ளதுபோலவே கிரகங்கள் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆகவே, நமது பிரபஞ்சம் முழுவதிலும் பூமி போன்று கோடானு கோடி கிரகங்கள் உள்ளன. எனவே, எங்கோ இருக்கின்ற வேறு பூமியில் அல்லது பூமிகளில் மனிதனைப் போன்றவர்கள் இருக்கலாம்.

இதற்கிடையே ஆராய்ச்சியாளர்கள் பூமி சைஸில் எங்கோ ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கிரகம் சிவப்புக் குள்ளன் வகையைச் சேர்ந்த ஒரு நட்சத்திரத்தை உகந்த தூரத்தில் அமைந்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்த சிவப்புக் குள்ளன் நட்சத்திரம் சூரியன் சைஸில் பாதிதான் உள்ளது.

கெப்ளர்–186 எப்

கெப்ளர் எனப்படும் பறக்கும் டெலஸ்கோப் மேற்படி கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. அந்தக் கிரகத்துக்கு கெப்ளர்-186 எப் என்று பெயர் வைத்துள்ளனர். அந்தக் கிரகம் பாறைகளால் ஆனது. அதில் தண்ணீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வானில் பூமி சைஸில் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இந்தக் கிரகம் குறித்து மேற்கொண்டு எந்தத் தகவலும் பெற முடியவில்லை. கெப்ளர் டெலஸ்கோப் கடந்த 2009-ம்

ஆண்டிலிருந்து கிரக வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகும். கெப்ளரின் வேட்டை பற்றி பின்னர் விரிவாகக் கவனிப்போம்.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘இன்னொரு பூமி’ விஷயத்தில் உள்ள ஒரு பிரச்சினை, அது பூமியிலிருந்து 500 கோடி ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது என்பதாகும். இங்கு நாம் ஒளியாண்டு என்றால் என்ன என்பதை விளக்குவது பொருத்தமாக இருக்கும்.

ஒளியாண்டு தூரம்

ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பதாகும். சின்ன ஊர்களில் சைக்கிள் கடை எங்கிருக்கிறது என்று கேட்டால் ‘‘இங்கிருந்து கூப்பிடு தூரம்” என்பார்கள். உரக்கக் கூப்பிட்டால் காதில் விழுகிற தூரம் என்பது அதன் பொருள். அதாவது, தூரத்தை நேரமாக மாற்றிக் கூறுவார்கள். ஏதோ ஒரு ஊர் உள்ள தூரத்தைக் குறிப்பிடும்போது ராத்திரி ரயில் ஏறினால் காலையில் போய்ச் சேர்ந்துவிடலாம் என்பார்கள். இப்படிச் சொல்லும்போது அடுத்தவர் நன்கு புரிந்துகொண்டுவிடுவாரே தவிர, எவ்வளவு தூரம் என்பதை கி.மீட்டரில் சொல்லுங்கள் என்று கேட்க மாட்டார். ஒளியாண்டு அது மாதிரியானதே.

ஒளியானது ஒரு விநாடியில் சுமார் 3 லட்சம் கி. மீ. தூரத்தைக் கடந்துவிடும். இதுவே ஒளி வேகம் ஆகும். ஒளி ஓரிடத்திலிருந்து கிளம்பி ஓராண்டு காலத்துக்குப் பிறகு இன்னோர் இடத்தை அடைவதாக இருந்தால், எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்குமோ அதுவே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த அளவில் ஒளியாண்டு தொலைவு என்பது சுமார் 9,46,000 கோடி கி.மீ. ஆகும். இதை 500 ஆல் பெருக்கிக்கொள்ளுங்கள். கெப்ளர்-186 எப் கிரகம் அந்த அளவு தூரத்தில் உள்ளது.

மேற்படி கிரகம் உள்ள தூரத்தை கி.மீ. கணக்கில் சொல்ல முற்பட்டால் யாருக்கும் புரியாது.

பேண்ட் தைக்க ஜவுளிக் கடையில் துணி எடுக்கும் இளைஞர் இவ்வளவு மீட்டர் வேண்டும் என்று கூறுவார். பிளவுஸ் தைக்கத் துணி எடுக்கும் பெண்மணி எவ்வளவு துணி வேண்டும் என்பதை செ.மீ-ல் கூறுவார். இந்த இருவருமே எவ்வளவு துணி வேண்டும் என்பதை மி.மீ-ல் கூற மாட்டார்கள்.

நட்சத்திரங்கள் அனைத்துமே மிகமிகத் தொலைவில் உள்ளதால் எந்த நட்சத்திரமானாலும் அதற்குள்ள தூரத்தை ஒளியாண்டு என்ற அலகைப் பயன்படுத்துகின்றனர். பல ஒளியாண்டு தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்துக்குக் கிரகங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க இயலுமா என்று கேட்கலாம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. அப்படிக் கண்டுபிடிக்கின்ற கிரகத்துக்குக் காற்று மண்டலம் இருக்கிறதா என்பதையும் விரைவில் கண்டுபிடித்துவிட முடியும் என்றும் அந்தக் காற்று மண்டலத்தை இங்கிருந்தபடி ஆராய முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆராய்ச்சித் துறையில் அந்த அளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. எல்லாம் சமீப ஆண்டுகளில்தான்.

ஆனால், வேற்றுலகவாசிகள் இருக்கிறார்களா என்ற தேடல் கடந்த நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது.

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article7966949.ece

எங்கே இன்னொரு பூமி? - விஞ்ஞானிகளின் ‘பெரிய காதுகள்’

dish_2660287f.jpg
 

வேற்றுலகவாசிகள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நம்புகிறார்

செல்போன் வைத்திருக்கின்ற அனைவருக்கும் எப்போதாவது சிக்னல் பிரச்சினை ஏற்படுவது உண்டு. சிக்னல் கிடைக்கவில்லை என்றால், மறுமுனையில் இருப்பவர் பேசுவது கேட்காது. மனிதனைப் போன்ற புத்திசாலிகள் வாழ்கின்ற கிரகங்களை அண்டவெளியில் தேடிவரும் விஞ்ஞானிகளுக்கும் ஒரு வித சிக்னல் பிரச்சினை உள்ளது. அவர்களின் பிரச்சினை வித்தியாசமானது. அவர்களுக்கு ஏராளமான சிக்னல்கள் கிடைக்கின்றன. ஆனால், விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்ற சிக்னல்கள்தான் கிடைக்கவில்லை.

எதிர்பார்ப்பது யாரை?

எதற்கு சிக்னலைத் தேட வேண்டும்? பூமியை நோக்கி யார் சிக்னல் அனுப்பப்போகிறார்கள் என்று கேட்கலாம். அண்டவெளியில் பூமி போன்று கோடானுகோடி கிரகங்கள் உள்ளன. அதில் ஐயமில்லை. அவற்றில் நம்மைப் போன்ற புத்திசாலிகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அப்படியான கிரகங்களில் இருப்பவர்கள் தங்களைப் போலவே எங்கேனும் யாரேனும் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. அந்த எண்ணத்தில் அவர்கள் ரேடியோ சிக்னல் வடிவில் ஏதேனும் செய்தி அனுப்பலாம்.

அல்லது ஒரு கிரகத்தில் உள்ளவர்கள் இன்னொரு கிரகத்தில் உள்ளவர்களுக்கு சிக்னல் அனுப்பலாம். அவர்கள் அப்படி சிக்னல்கள் அனுப்பினால் நிச்சயம் அவை பூமிக்கும் கிடைக்கும். எனவேதான் அண்டவெளியிலிருந்து வித்தியாசமான சிக்னல்கள் ஏதேனும் வருகின்றனவா என்று விஞ்ஞானிகள் தேடிவருகிறார்கள்.

இந்தத் தேடலை ஆரம்பித்து வைத்தவர்களில் பிராங்க் டிரேக் முதன்மையானவர். 1930-ல் பிறந்த அவருக்கு இப்போது 85 வயது. இந்த வயதிலும் அவர் உற்சாகமாக வேற்றுலகவாசிகளைத் தேடும் விஷயத்தில் ஆர்வம் குன்றாதவராக விளங்குகிறார்.

அஸ்ட்ரானமி எனப்படும் வானவியல் படிப்பு படித்த அவர், பின்னர் ரேடியோ டெலஸ்கோப் மூலம் வானை ஆராயும் துறையிலும் பட்டம் பெற்றார். அண்டவெளியில் இருக்கின்ற பூமி போன்ற கிரகங்களில் வேற்றுலகவாசிகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்று இளம் வயதிலேயே அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டது. டிரேக்கின் சமகாலத்து விஞ்ஞானியான கார்ல் சாகன் உட்பட மற்ற விஞ்ஞானிகளும் அதே போலக் கருதினர். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுலகவாசிகள் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறார். சமீபத்தில்கூட அவர் இது பற்றிப் பேசியிருக்கிறார்.

ரேடியோ டெலஸ்கோப்புகள்

சிக்னல்கள் வருகின்றனவா என்று தேடுவதற்கு இவர்களுக்கு ரேடியோ டெலஸ்கோப்புகள் உதவு கின்றன. இந்த டெலஸ்கோப்புகளை விஞ்ஞானிகளின் ‘காதுகள்’ என்றும் வருணிக்கலாம். இவைதான் அண்டவெளியிலிருந்து வித்தியாசமான சிக்னல் வருகிறதா என்று ‘காது கொடுத்து’க் கேட்டுவருகின்றன. இவை நாம் அறிந்த சாதாரண டெலஸ்கோப்புகளிலிருந்து வேறுபட்டவை.

சாதாரண டெலஸ்கோப்புகளிலேயே இரண்டு வகை உண்டு. ஒன்றில் கண்ணாடி லென்ஸ்கள் இருக்கும். இந்த டெலஸ்கோப்புக்கு அடியில் இருந்தபடி வானை ஆராயலாம். இன்னொரு வகை டெலஸ்கோப்பில் லென்ஸுக்குப் பதில் வெள்ளி அல்லது அலுமினியம் பூசப்பட்ட பெரிய உலோகத் தகடு இருக்கும். மிக பளபளப்பான அந்த உலோகத் தகட்டின் உட்புறம் குழிவாக இருக்கும். நாம் பயன்படுத்தும் முகம் பார்க்கும் கண்ணாடி எதிரே உள்ளதைப் பிரதிபலிப்பது போன்று இந்த டெலஸ்கோப்பின் உலோகத் தகடும் வானில் உள்ளதைப் பிரதிபலிக்கும். அதே நேரத்தில், வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும் அண்டவெளியில் உள்ள கிரகங்களையும் பெரிதாக்கிக் காட்டும். இந்த இரண்டையுமே தமிழில் தொலைநோக்கி என்றும் கூறலாம்.

ரேடியோ டெலஸ்கோப்புகள் முற்றிலும் வேறு பட்டவை. இவற்றை அலை திரட்டிகள் என்று வேண்டுமானால் கூறலாம். நட்சத்திரங்களிலிருந்து ஒளி மட்டுமன்றி எக்ஸ் கதிர், புற ஊதாக் கதிர், ரேடியோ அலைகள் எனப்படும் கதிர்கள் ஆகியவையும் வெளிப்படுகின்றன. இவை அனைத்தும் சேர்ந்து மின்காந்த அலைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டபடி எக்ஸ் கதிர், புற ஊதாக் கதிர்களில் ஒரு பகுதி ஆகியவற்றைக் காற்று மண்டலம் தடுத்துவிடுகிறது.

ஆனால், ரேடியோ அலைகள் தடுக்கப்படுவதில்லை. இந்த அலைகளைப் பெறுவதுதான் ரேடியோ டெலஸ்கோப்புகளின் வேலை. இவை பெறுகின்ற சிக்னல்களைத் தகுந்த கருவிகளைக் கொண்டு ஒலி அலைகளாகவும் மாற்றலாம். அந்த அளவில் கேட்பான் கருவிகளைக் காதில் மாட்டிக்கொண்டு சிக்னல்களைக் காதால் கேட்கலாம். எனவேதான், அமெரிக்காவில் ஓகையோ மாகாணத்தில் இருந்த ஒரு ரேடியோ டெலஸ்கோப் ‘பெரிய காது’ என்று வருணிக்கப்பட்டது.

காத்திருக்கும் காதுகள்

ரேடியோ டெலஸ்கோப்புகள் அனைத்திலும் பெரிய டிஷ் ஆண்டெனாக்கள் உண்டு. டிவி நிகழ்ச்சிகளைப் பெற சில வீடுகளின் மொட்டை மாடிகளில் டிஷ் ஆண்டெனாக்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அனுப்புகின்ற சிக்னல்களைப் பெறுபவை. ரேடியோ டெலஸ்கோப்புகளும் இதே மாதிரியில் வேறு வித அலைகளைப் பெறுகின்றன.

நட்சத்திரங்கள் பல ஒளியாண்டு தொலைவில் இருப்பவை. அவற்றிலிருந்து வரும் சிக்னல்கள் மிகப் பலவீனமானவை. அந்த சிக்னல்கள் அதிக அலைநீளம் கொண்டவை. எனவேதான் ரேடியோ டெலஸ்கோப்புகளின் டிஷ் ஆண்டெனாக்கள் வடிவில் பெரியவையாக உள்ளன. இந்த டிஷ் ஆண்டெனாக்களின் குறுக்களவு 30 மீட்டர் 40 மீட்டர் என்ற அளவிலும் இருக்கலாம். 300 மீட்டர் ரேடியோ டெலஸ்கோப்பும் உண்டு. சில வகை ரேடியோ டெலஸ்கோப்புகளில் டிஷ் ஆண்டெனாவுக்குப் பதில் குறுக்கும் நெடுக்குமான கம்பிகள் இருக்கும்.

ரேடியோ டெலஸ்கோப்புகளுக்கும் சாதாரண டெலஸ்கோப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. சாதாரண டெலஸ்கோப்புகளை இரவில் தான் பயன்படுத்த இயலும். ஆனால், ரேடியோ டெலஸ்கோப்புகளை இரவு பகல் 24 மணி நேரமும் பயன்படுத்த முடியும்.

கோடானுகோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருந்து நட்சத்திரங்கள், அண்டங்கள், நட்சத்திரங்கள் தோன்றும் பகுதிகள் முதலியவற்றிலிருந்து இயற்கையாக ரேடியோ சிக்னல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவ்விதம் ரேடியோ சிக்னல்கள் வருகின்றன என்பது 1933 வாக்கில்தான் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நட்சத்திரங்கள் பற்றி மேலும் விவரமாக அறிந்துகொள்ள அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ரேடியோ டெலஸ்கோப்புகள் நிறுவப்படலாயின.

நம்மைப் போல் ஒருவன்

இயற்கையான ரேடியோ அலைகள் பற்றி அறிந்து கொண்ட மனிதன் ரேடியோ அலைகளைச் செயற்கையாக உண்டாக்கவும் கற்றுக்கொண்டான். ஏற்கெனவே, வேறு அத்தியாயத்தில் கூறியபடி நட்சத்திரங்களிலிருந்து இயற்கையாக வரும் ரேடியோ அலைகளுக்கும் மனிதன் உண்டாக்கி அனுப்பும் ரேடியோ அலைகளுக்கும் இடையே எளிதில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும்.

எங்கோ அண்டவெளியில் இருக்கின்ற பூமி போன்ற கிரகங்களில் இருக்கக்கூடியவர்கள், ரேடியோ அலைகள் வடிவில் சிக்னல்களை அனுப்புகிறார்களா என்று தேடுவதில் பல விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர். அப்படியான சிக்னல்கள் கிடைத்தால் எங்கோ பூமி போன்ற கிரகத்தில் அல்லது கிரகங்களில் நம்மைப் போன்ற புத்திசாலி மக்கள் இருக்கின்றனர் என்பது உறுதியாகிவிடும்.

அந்த நோக்கில் டிரேக் 1960-ல் ‘ஆஸ்மா’ என்னும் திட்டத்தின் கீழ் ரேடியோ டெலஸ்கோப்புகளைப் பயன் படுத்தி தீவிரத் தேடலில் ஈடுபட்டார். பின்னர் பல ரேடியோ டெலஸ்கோப்புகள் இதில் ஈடுபட்டன. இவ்விதத் தேடல் சுருக்கமாக ‘சேட்டி’ என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலப் பெயரின் சுருக்கம். பின்னர் இதே பெயரில் ஒரு தனி அமைப்பே ஏற்படுத்தப்பட்டது.

(வியாழன்தோறும் தொடர்வோம்... )

- என். ராமதுரை, 
மூத்த எழுத்தாளர், 
தொடர்புக்கு: nramadurai@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7999544.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கத்தோன்றும் பயன்மிக்க பதிவுகள் ஆதவன். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

அண்டவெளியிலிருந்து மர்ம சிக்னல்கள்...

signal_2686331f.jpg
 

சிலவகை ரேடியோ டெலஸ்கோப்புகளில் சிக்னல்களைப் பெறவும் அனுப்பவும் இயலும்

 

அண்டவெளியிலிருந்து வித்தியாசமான சிக்னல்கள் வருகின்றனவா என்ற தேடலில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தபோது, இந்த ஆண்டு மார்ச் மாதம் திடீரென்று கிடைத்த வித்தியாசமான சிக்னல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த சிக்னல்கள் 134 விநாடிகள் நீடித்தன.

இந்த சிக்னல்கள் அண்டவெளியில் இருக்கின்ற ஏதோ ஒரு கிரகத்திலிருந்து வேற்றுலகவாசிகளால் அனுப்பப்பட்டவையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால், அவர்களது கருத்தை உறுதிப்படுத்த ஆதாரம் ஏதுமில்லை.

பெரிய டெலஸ்கோப்

அமெரிக்காவுக்குத் தென் கிழக்கே போர்ட்டோ ரிக்கோ தீவில் இருக்கும் அரசிபோ ரேடியோ டெலஸ்கோப் மூலம் இந்த சிக்னல்கள் கிடைத்தன. இந்த டெலஸ்கோப் உலகிலேயே மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஆகும். இதன் டிஷ் ஆண்டெனாவின் குறுக்களவு 305 மீட்டர். இங்கு நிலத்தில் இயற்கையாக அமைந்த குழிவானது கிண்ணம்போல வடிவமைக்கப்பட்டு, ரேடியோ டெலஸ்கோப் நிறுவப்பட்டது.

அண்டவெளியில் எங்கேனும் ஒரு கிரகத்திலிருந்து வேற்றுலகவாசிகள் சிக்னல்களை அனுப்பினால் அவற்றைக் கண்டுபிடிக்க இந்த டெலஸ்கோப் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டுவருகிறது.

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் பெர்க்லி என்னுமிடத்தில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அரசிபோ டெலஸ்கோப் மூலம் வானை ஆராய்ந்துகொண்டிருந்தபோது, மார்ச் 19-ம் தேதி பிற்பகல் திடீரென இந்த சிக்னல்கள் கிடைத்தன. இவை எண்களும் எழுத்துகளும் கலந்த வடிவில் இருந்தன.

வெர்த்திமரின் கூற்று

ஆனால், இந்த சிக்னல்கள் எதைத் தெரிவிக்கின்றன என்று புரிந்துகொள்ள இயலவில்லை. “இவை நிச்சயம் பூமியில் உள்ள ஏதோ ஒரு இடத்திலிருந்து வந்தவையல்ல. எங்கோ உள்ள வேற்றுலகவாசிகளிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. தவிர, நமக்காகவே அனுப்பப்பட்டதாக நான் கருதுகிறேன்” என்று விஞ்ஞானிகள் குழுவின் தலைவரான டான் வெர்த்திமர் கூறினார்.

அண்டவெளியில் சிக்னல்களைத் தேட ஆரம்பித்த திலிருந்து கடந்த பல ஆண்டுகளில் இதுவே மிக நீண்ட, மிகத் தெளிவான சிக்னல்களாகும் என்றும் அவர் சொன்னார். அந்த சிக்னல்களைக் கவனித்தால் அவை நாம் பயன்படுத்துகின்ற மோர்ஸ் சங்கேத முறை மாதிரியில் வேற்றுலகவாசிகள் பயன்படுத்துகின்ற சிக்னல் முறை போன்று தோன்றுகிறது என்றும் வெர்த்திமர் கூறினார்.

இந்த சிக்னல்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பாலி ருந்து வந்தவை என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், மிகச் சிறிது நேரமே நீடித்த இந்த சிக்னல்கள் வானில் குறிப்பாக எந்த இடத்திலிருந்து வந்தன என்பது தெரியவில்லை. இதை ஆராய்ந்து கண்டுபிடிக்கப் பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதல்முறை அல்ல

அண்டவெளியிலிருந்து வித்தியாசமான சிக்னல் கள் கிடைப்பது இது முதல் தடவையல்ல. வேற்றுலகவாசிகள் அனுப்பியதாக இருக்கலாம் என்று சந்தேகப்படும்படியான வகையில் கடந்த பல ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட தடவைகள் சிக்னல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அவை வேற்றுலகவாசிகளிடமிருந்து வந்தவைதான் என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கு முன்னர் 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கிடைத்த சிக்னல்களும் புதிராக இருந்தன. அவற்றுக்கு விஞ்ஞானிகள் ‘வாவ்’ சிக்னல் என்று பெயரிட்டனர். ஓகையோ மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெர்ரி ஆர். ஈஹ்மான் அண்டவெளியில் சிக்னல்களைத் தேடும் சேட்டி திட்டத்தின் கீழ் அந்தப் பல்கலைக்கழகத்தின் ‘பெரும் காது’ ரேடியோ டெலஸ்கோப்பில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது விசித்திரமான சிக்னல்களைக் கண்டுபிடித்தார். அந்த சிக்னல்கள் 72 விநாடி நேரம் நீடித்தது.

இந்த விஷயம் விஞ்ஞானிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்திரிகைகளிலும் இது பெரிய செய்தியாக வெளியாகியது. சிக்னல்கள் வானில் எந்த இடத்திலிருந்து வந்திருக்கலாம் என்று ஆராய்ந்தபோது, தனுர் ராசியில் உள்ள ஒரு நட்சத்திரக் கொத்து அருகே உள்ள இடத்திலிருந்து வந்திருக்கலாம் என்று தோன்றியது.

‘வாவ்’ சிக்னல்கள்

சிக்னல்கள் வருகின்றனவா என்று ரேடியோ டெலஸ்கோப் மூலம் ஆராயும் விஞ்ஞானிகள், காதில் மணிக்கணக்கில் கேட்பான் கருவியை மாட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதில்லை. அண்டவெளியிலிருந்து வருகிற எல்லா வகையான சிக்னல்களும் தாமாக கம்ப்யூட்டரில் பதிவாகும். அடுத்து, அவற்றின் பிரின்ட் அவுட்டுகள் கிடைக்கும். விஞ்ஞானிகள் அவற்றை ஆராயும்போது வித்தியாசமான சிக்னல்கள் பதிவாகியுள்ளனவா என்று கவனிப்பர். குறிப்பிட்ட ஒரு பிரின்ட் அவுட்டில் வித்தியாசமான சிக்னல்கள் இருப்பதைக் கண்டு விஞ்ஞானி ஈஹ்மான் அவற்றை வட்டமிட்டு அருகே ‘வாவ்’ என்று எழுதினார். எனவேதான், இந்த சிக்னல்களுக்கு வாவ் சிக்னல்கள் என்று பெயர் வந்தது.

அண்டவெளியிலிருந்து வரும் வித்தியாசமான சிக்னல்கள் அதே பாணியில் திரும்பத் திரும்ப வருமேயானால், அவை அநேகமாக வேற்றுலகவாசிகள் அனுப்பியவை என்று கருதலாம். வாவ் சிக்னல் மாதிரி மறுபடி வருகிறதா என்று அறிய 1987 மற்றும் 1989-ம் ஆண்டுகளிலும் பின்னர் 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளிலும் மொத்தம் சுமார் 50 தடவை வானில் அதே பகுதி ஆராயப்பட்டது. ஆனால், முன்னர் கிடைத்த மாதிரியான சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் 2012-ம் ஆண்டில் அரசிபோ ரேடியோ டெலஸ்கோப் மூலம் வானில் அதே பகுதியை நோக்கி பூமியிலிருந்து சிக்னல்கள் அனுப்பப்பட்டன.

ரேடியோ டெலஸ்கோப்புகள் பிரதானமாக அண்டவெளியிலிருந்து சிக்னல்களைப் பெறுவதற்காக அமைக்கப்பட்டவை. எனினும், இவற்றில் சிலவற்றில் வானை நோக்கி சிக்னல்களை அனுப்புவதற்கான வசதிகளும் உண்டு. அவ்வித வசதி அரசிபோவில் உண்டு.

நாம் பல்வேறு காரியங்களுக்கும் பயன் படுத்து கின்ற கருவிகளும் சிக்னல்களை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த சிக்னல்கள் அண்டவெளி சிக்னல்களைத் தேடும் பணியில் குறுக்கிட்டுக் குழப்பக் கூடாது என்பதற்காகவே ரேடியோ டெலஸ்கோப்புகள் கூடிய வரை மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நிறுவப்படுகின்றன. தவிர, வழக்கமான சிக்னல்களை வடிகட்டும் வசதியும் இவற்றில் உண்டு.

அமெரிக்க ரஷ்ய போட்டி

வேற்றுலகவாசிகள் சிக்னல்களை அனுப்பு கிறார்களா என்று அமெரிக்காவில் மட்டும்தான் ஒட்டுக்கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூற முடியாது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா - சோவியத் யூனியன் (இப்போதைய ரஷ்யா எனலாம்) இடையே கடும் விரோதப்போக்கு நிலவிவந்தது. குறிப்பாக, விண்வெளித் துறையில் கடும் போட்டா போட்டி நிலவிவந்தது. அமெரிக்கர்கள் முந்திக்கொண்டு புதிதாக எதையாவது கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற கவலையில் ரஷ்யர்களும் விண்வெளியிலிருந்து வித்தியாசமான சிக்னல்கள் வருகின்றனவா என்று ஆராய்வதில் ஈடுபட்டனர்.

ரஷ்யர்கள் குறிப்பாக, சூரியன் போன்ற நட்சத்திரங்கள் இருக்கும் திசையை நோக்கி ரேடியோ டெலஸ்கோப்புகளின் ஆண்டெனாக்களைத் திருப்பி ஆராய்ந்தனர். சூரியன் போன்ற நட்சத்திரமே பூமி போன்ற கிரகத்தைப் பெற்றிருக்க அதிக வாய்ப்பு கொண்டது என்பதே அதற்குக் காரணம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இந்தத் தேடலில் ஈடுபட்டனர். சேட்டி அமைப்பின் கீழ் பீனிக்ஸ் என்ற பெயரில் 1995 முதல் 2004-ம் ஆண்டு வரை நீண்டதொரு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இங்கிலாந்தில் ஜோட்ரல் பாங்க் வான் ஆய்வுக்கூடத்தின் ரேடியோ டெலஸ்கோப், அமெரிக்காவின் கிரீன் பார்க் ரேடியோ டெலஸ்கோப், ஆஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ டெலஸ்கோப், அரசிபோ டெலஸ்கோப் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டன.

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

(வியாழன்தோறும் தொடரும்)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8076038.ece

Link to comment
Share on other sites

எத்தனை காலம்தான் தேடுவாய்...

அரசிபோ ரேடியோ டெலஸ்கோப்.
அரசிபோ ரேடியோ டெலஸ்கோப்.

வேற்றுலகவாசிகளைத் தேடுவது என்பது பல தலைமுறைகள் நீடிக்கும் விஷயம்

 

‘வைக்கோல் போரில் தொலைந்த ஊசியைத் தேடுவது போல...’ என்று ஒரு பழமொழி சொல்வதுண்டு. அண்டவெளியிலிருந்து ஏதேனும் வித்தியாசமான சிக்னல்கள் வருகின்றனவா என்று தேடுவது அதைப் போன்றதே. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகள் அவ்விதமான சிக்னல்களைத் தேடி வருகிறார்கள். அப்படி சிக்னல் கிடைத்தால் அண்டவெளியில் எங்கோ நம்மைப் போல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆனால், இதுவரை உருப்படியான பலன் ஏதும் கிட்டவில்லை.

காரணம் என்ன? ஒன்று, நமது மொத்தப் பிரபஞ்சத்திலும் பூமியைத் தவிர, வேறு எங்குமே நம்மைப் போல மனிதர்கள் கிடையாது என்பது காரணமாக இருக்கலாம். ஒரு வேளை, அதனால்தான் நமது அண்டத்தில் மட்டும் பூமியைப் போல 1,100 கோடிக் கிரகங்கள் இருந்தாலும், எங்கிருந்தும் சிக்னல் வரவில்லை. இரண்டாவது காரணம், வேறு எங்கேனும் பல கிரகங்களில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருந்தாலும், அவர்கள் நம்மைப் போன்ற அளவுக்குத் தொழில்நுட்பத்தில் முன்னேறவில்லை என்பதாகவும் இருக்கலாம். மூன்றாவது காரணம், நாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோல் ஆடைகளை அணிந்து பச்சை இறைச்சியைத் தின்றுகொண்டிருந்த காலத்தில், மிக முன்னேறிய வேற்றுலகவாசிகள் நம்மை நோக்கி நீண்ட காலம் சிக்னல்களை அனுப்பிப் பார்த்து அலுத்துப்போய், கடைசியில் அதைக் கைவிட்டிருக்கலாம். நான்காவதாகவும் ஒரு காரணம் கூறலாம், வேற்றுலகவாசிகள் பூமியை நோக்கி சிக்னல்களை அனுப்பி, தாங்கள் இருக்கின்ற இடத்தைக் காட்டிக்கொள்ள விரும்பாதவர்களாகவும் இருக்கலாம். கடைசியாக ஒரு காரணம் சொல்லலாம், நாம் போதுமான அளவுக்குத் தேடவில்லை.

வெறும் பத்து நிமிஷம்

அண்டவெளி சிக்னல்களைத் தேடுவதற்காகவே அமைக்கப்பட்ட சேட்டி என்னும் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துவரும் ஷோஷ்டாக் அதைத்தான் கூறுகிறார். சேட்டி திட்டத்தைச் சேர்ந்த டெக்மானும் அதைத்தான் சொல்கிறார். “வெறும் பத்து நிமிஷம்” தேடினால் பலன் கிடைத்துவிடுமா என்றும் அவர் கேட்கிறார். போதுமான அளவில் தேடவில்லை என்பதைத்தான் அவர் “வெறும் பத்து நிமிஷம்” என்கிறார்.

எனினும் அண்டவெளியில் ஏதாவது ஒரு கிரகத்தில் நம்மைப் போன்ற புத்திசாலி மனிதர்களை இன்னும் 20 ஆண்டுகளில் கண்டுபிடித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நிபுணர் பால் ஷூச் கூறும்போது அடுத்த சில ஆண்டுகளில் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறார். ஆனால், நீண்டகால அளவில் சாத்தியமே. இன்னும் சொல்லப்போனால் வேற்றுலகவாசிகளைத் தேடுவது என்பது பல தலைமுறைகள் நீடிக்கும் விஷயமாகவும் இருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

டக்ளஸ் வாகோச் என்னும் மற்றொரு நிபுணர் கருத்து தெரிவிக்கும்போது விடா முயற்சி தேவை என்றார். போதுமான நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அநேகமாக 2035-ம் ஆண்டு வாக்கில் வெற்றி கிட்டலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஐம்பது சதவீத வாய்ப்பு

ஜெர்ரி ஹார்ப் கூறும்போது, இன்னும் 30 ஆண்டுகளில் வேற்றுலகவாசிகளைக் கண்டுபிடிப்பதற்கு 50% வாய்ப்பு உள்ளதென்றார். இது ஒரு புறம் இருக்க, வேற்றுலகவாசிகளைத் தேடும் பணியை 1960 வாக்கில் ஆரம்பித்து வைத்தவரான பிராங்க் டிரேக், ஒரு கட்டத்தில் உற்சாகம் குறைந்தவரானார். அவரது முக்கிய வருத்தம் அமெரிக்காவின் நாஸா, இது விஷயத்தில் ஒதுங்கியிருக்கிறது என்பதாகும். “நமது பிரபஞ்சத்தில் மனிதன் தனி மரமா” என்று கேள்வி எழுப்பிய நாஸா, வேற்றுலகவாசிகளைத் தேடுவதில் தீவிரம் காட்டவில்லை என்கிறார் அவர்.

அவரது மன வருத்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆரம்பத்தில் சேட்டி திட்டத்துக்கு நாஸா நிதி உதவி அளித்துவந்தது. ஆனால், பின்னர் அமெரிக்க சட்டமன்றத்தின் தலையீடு காரணமாக நாஸா 1993-ம் ஆண்டில் அந்த உதவியை நிறுத்திவிட்டது. இப்போது சேட்டி அமைப்பு நன்கொடைகளை நம்பி நிற்கிறது. டிரேக்கின் இன்னொரு கவலை, ரேடியோ டெலஸ்கோப்புகளைப் பற்றியது. சிக்னல்கள் வருகின்றனவா என்று தேடுவதற்கு ரேடியோ டெலஸ்கோப்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

டிரேக்கின் கவலை

ஏற்கெனவே குறிப்பிட்டபடி போர்ட்டோ ரிக்கோ தீவில் உள்ள அரசிபோ ரேடியோ டெலஸ்கோப்தான் உலகிலேயே மிகப் பெரியது. இது அமெரிக்க நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன் என்னும் அமைப்பின் கீழ் செயல்படுவதாகும். நிதிப் பிரச்சினை காரணமாக அரசிபோ ரேடியோ டெலஸ்கோப்பை மூடிவிட அல்லது அதை வேறு யார் பொறுப்பிலாவது தள்ளிவிட அந்த பவுண்டேஷன் உத்தேசித்துள்ளது. இது பற்றி டிரேக் கவலை தெரிவித்துள்ளார். மற்றொரு பெரிய ரேடியோ டெலஸ்கோப்பான கிரீன் பேங்க் ரேடியோ டெலஸ்கோப்பும் அதே கதிக்குள்ளாகும் நிலையில் உள்ளதாக டிரேக் அஞ்சுகிறார். இந்த இரு ரேடியோ டெலஸ்கோப்புகளும் மூடப்பட்டால், அது தற்கொலைக்கு ஒப்பாகும் என்று அவர் ஒரு சமயம் கூறினார்.

டிரேக் இவ்விதம் வருந்திக்கொண்டிருந்த நிலையில்தான், ரஷ்ய கோடீஸ்வரரான யூரி மில்னர், சிக்னல்களைத் தேடும் திட்டத்துக்கு 10 கோடி டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளார். “முனைப்பான தேடல்” என்னும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை இல்லாத அளவுக்குத் தேடல் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மில்னரின் உதவி

எங்கிருந்தேனும் வித்தியாசமான சிக்னல்கள் வருகின்றனவா என்று தேடுவதற்கு ரேடியோ டெலஸ்கோப்புகளைப் பயன்படுத்துவதானால் அதற்குப் பணம் கட்டியாக வேண்டும். அமெரிக்காவில் உள்ள கிரீன் பேங்க் ரேடியோ டெலஸ்கோப், ஆஸ்திரேலியாவில் உள்ள பார்க்ஸ் ரேடியோ டெலஸ்கோப் ஆகிய இரண்டையும் ஆண்டு தோறும் பல ஆயிரம் மணி நேரம் பயன்படுத்திக்கொள்வதற்கு மில்னரின் நிதி உதவி பயன்படுத்திக்கொள்ளப்படும்.

இத்துடன் ஒப்பிட்டால் இதுவரை ஆண்டில் 24 அல்லது 36 மணி நேரமே தேடல் நடந்துவந்தது. தவிர, அண்டவெளியிலிருந்து லேசர் கற்றை வடிவில் சிக்னல்கள் வருகின்றனவா என்று புதிதாக ஆராய அமெரிக்காவில் உள்ள ஒரு வான் ஆராய்ச்சிக்கூடம் பயன்படுத்தப்படும்.

இதல்லாமல், அண்டவெளியிலிருந்து வரக்கூடிய சிக்னல்களைப் பகுத்து ஆராய புதிய தொழில் நுட்பங்கள் உருவாக்கப்படும். சிக்னல்களைத் தேடும் திட்டத்துக்கு இந்த அளவுக்கு வாரி வழங்கும் தொழிலதிபர் யூரி மில்னர் ஏதோ விளம்பரத்துக்காக இவ்விதம் செய்வதாகக் கூற முடியாது. ரஷ்யாவில் பிறந்தவரான அவர், உயர் இயற்பியல் படித்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தவர். பின்னர், அவர் வர்த்தகத் துறையின் பக்கம் திரும்பி பெரும் கோடீஸ்வரரானார். மில்னர் இதற்கு முன்னர் இயற்பியல், உயிரியல், கணிதம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வருடாந்திரப் பரிசுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அவர் இப்போது அண்டவெளி சிக்னல்களை ஆராய்வதற்காக அறிவித்துள்ள உதவித்தொகை 10 ஆண்டு காலத்துக்கானது ஆகும். இந்த 10 ஆண்டுகளில் எதுவும் பலன் கிட்டாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்விக்கு அவரே விடை அளித்தார்.

‘‘மேலும் 10 ஆண்டுக் காலம் முயற்சிப்போம். எதற்கு இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும்’’ என்று அவர் கேட்டார்.

(வியாழன்தோறும் தொடர்வோம்...)

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பூமியைக் காட்டிக்கொடுக்கலாமா?

 

sounds_of_earth_2704431f.jpg
 

வேற்றுலகவாசிகள் புரிந்துகொள்ளும் வகையில் செய்தி தயாரிப்பது எளிய வேலையல்ல

 

விஞ்ஞானிகள் வேற்றுலகவாசிகளிடமிருந்து குறிப் பிடத்தக்க வகையிலான சிக்னல்கள் வருகின்றனவா என ரேடியோ டெலஸ்கோப்புகளைப் பயன்படுத்தி வானை அலசிவருகிறார்கள். அதாவது, வெளியிலிருந்து செய்தி வருகிறதா என்று மட்டுமே தேடுகிறார்கள்.

வலுவான காரணங்கள்

இதற்கு மாறாக “பூமி என்ற கிரகத்திலிருந்து பேசுகிறோம்” என்று தெரிவித்து அண்டவெளியை நோக்கி நாம் செய்தி அனுப்பலாம். அப்படி அனுப்பினால் வேற்றுலகவாசிகள் அதைக் கேட்டுவிட்டு நமக்குப் பதில் அனுப்பலாம். ஆனால், அவ்விதம் பூமியிலிருந்து செய்தி அனுப்புவது உசிதம்தானா என்ற கேள்வி எழுகிறது. இவ்விதம் அனுப்பக் கூடாது என்றே பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நாமாக வலியப் போய் செய்தி அனுப்பக் கூடாது என்பதற்கு அவர்கள் வலுவான காரணங்களைக் கூறுகிறார்கள்.

நாம் செய்தி அனுப்பினால் நம்மிடமிருந்து செல்கின்ற சிக்னல்களை வைத்து பூமி எங்கே இருக்கிறது என்பதை வேற்றுலகவாசிகள் அறிந்துகொள்வார்கள். இது நல்லதல்ல. ஏனெனில், வேற்றுலகவாசிகள் நல்லவர்களாக இருப்பார்கள் என்று ஊகிக்க முடியாது.

அண்டவெளியில் பூமி மாதிரியில் எவ்வளவோ கிரகங்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தக் கிரகங்களில் இருப்பவர்கள் அனைவருமே ஒரே மாதிரியானவர்கள் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட கிரகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு நோக்கு கொண்டவர்களாக இருக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் பிறரை அடிமைப்படுத்துபவர்களாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் பூமி மீது படையெடுத்து, இங்கிருந்து தங்களுக்கு வேண்டிய வளங்களைக் கொள்ளையடித்துச் செல்ல முற்படலாம்.

ஆபத்து நேரலாம்

வேறு ஒரு கிரகத்தைச் சேர்ந்தவர்கள் நம்மைவிட சக்திவாய்ந்த ஆயுதங்களைப் பெற்றவர்களாக இருக்கலாம். அப்படியானவர்கள் பூமியில் உள்ளவர்களை அச்சுறுத்தி அடிமைகளாக்க முற்படலாம். பூமியானது வேற்றுலகவாசிகளுக்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது கடினம்.

மாறாக, வேறு ஏதோ கிரகத்தில் உள்ளவர்கள் அமைதியை விரும்புபவர்களாக, நமக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கலாம். தங்களிடம் உயர்ந்த தொழில்நுட்பம் இருந்தால் அதை பூமிவாசிகளுக்கு அளிக்கலாம்.

எனினும் யார் எப்படி இருப்பார்கள் என்று தெரியாத நிலையில், நாமாக வலியப் போய் பூமி இருக்குமிடத்தைத் தெரிவிப்பது உகந்ததல்ல. பல விஞ்ஞானிகளும் இவ்விதம் கருதுகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவ்விதமாகத்தான் கருதுகிறார். கொலம்பஸ் அமெரிக்காவில் போய் இறங்கிய பிறகு என்ன ஆச்சு என்று அவர் ரத்தினச் சுருக்கமாகக் கேட்டார்.

கொலம்பஸ் அமெரிக்காவில் போய் இறங்கியதைத் தொடர்ந்து, வடஅமெரிக்கக் கண்டத்திலும் தென்அமெரிக்கக் கண்டத்திலும் போய் இறங்கிய ஐரோப்பியர்களில் பலர் அந்த நாடுகளில் வசித்தவர்களிடமிருந்து தங்கத்தைக் கொள்ளையடிப்பதில் ஈடுபட்டனர். இதைத்தான் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

சேதி கேட்டோ!

எனினும், கடந்த காலத்தில் பூமியிலிருந்து அண்டவெளியில் இருக்கக்கூடிய கிரகங்களை நோக்கி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. 1974-ம் ஆண்டில் போர்ட்டோ ரிக்கோ தீவில் அரசிபோ என்னுமிடத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் மூலம் பூமி பற்றி சிக்னல்கள் அனுப்பப்பட்டன. 2012-ம் ஆண்டிலும் அனுப்பப்பட்டன. இதல்லாமல், ஆவண வடிவிலும் பூமியைப் பற்றிய செய்திகள் அண்டவெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன. பயனீர் 10, பயனீர் 11 ஆகிய விண்கலங்களில் பூமியைப் பற்றி விலாவாரியான தகவல்கள் அடங்கிய தகடு வைத்து அனுப்பப்பட்டது. வாயேஜர் 1, வாயேஜர் 2 ஆகிய விண்கலங்களில் இதே போல பூமியைப் பற்றியும் மனிதர்கள் பற்றியும் தகவல்கள் அடங்கிய சி.டி. வைத்து அனுப்பப்பட்டது. இந்த விண்கலங்கள் அண்டவெளியில் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன.

சரி, நாம் பூமியைப் பற்றி வேற்றுலகவாசிகளுக்கு எதுவுமே தெரியாதபடி செய்துவிட முடியுமா என்று கேட்கலாம். நாம் எதுவும் தெரிவிக்காமலேயே நம்மைப் பற்றி வேற்றுலகவாசிகள் தெரிந்துகொள்ள நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.

பலரும் வானொலிப் பெட்டியில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஒலிபரப்பு, பீகிங் ரேடியோ, பிபிசி ஒலிபரப்பு, மாஸ்கோ ரேடியோ ஆகியவற்றைக் கேட்பதுண்டு. இவை ரேடியோ அலைகள் மூலமே சாத்தியமாகின்றன. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் வந்த பிறகு, உலகின் பல பகுதிகளில் நடக்கின்ற நிகழ்ச்சிகள் டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இந்த சிக்னல்கள் அனைத்தும் எந்நேரமும் அண்டவெளிக்குக் கசிந்துகொண்டுதான் இருக்கின்றன.

50 ஆண்டு இடைவெளி

சுமார் 50 ஒளியாண்டு தொலைவில் நம்மைப் போன்ற புத்திசாலிகள் வாழும் ஒரு கிரகம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அல்லது அதைவிடப் பெரிதாக உள்ள டிஷ் ஆண்டெனாவைப் பயன்படுத்தினால் பூமியிலிருந்து செல்கின்ற சிக்னல்கள் அனைத்தையும் அவர்களால் பெற முடியும். ஆனால் ஒன்று, 50 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை டிவி நிலையம் ஒளிபரப்பிய வயலும் வாழ்வும் நிகழ்ச்சி போன்றவைதான் இப்போது அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும்.

நிஜமாகவே இது சாத்தியமா என்று கேட்கலாம். நம்மால் 300 ஒளியாண்டு தொலைவுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களிலிருந்து ரேடியோ அலைகளைப் பெற முடிகிறது. அந்த அளவில் பூமியிலிருந்து செல்லும் சிக்னல்களை அவர்களால் நிச்சயம் பெற முடியும்.

இதற்கிடையே ரஷ்ய கோடீஸ்வரரான யூரி மில்னர், வேற்றுலகவாசிகளுக்கு எந்தவிதமான செய்தியை அனுப்பலாம் என்பது குறித்து ஒரு பரிசுப் போட்டியை அறிவித்துள்ளார். தகுந்த செய்தியை உருவாக்கித் தருபவருக்கு 10 லட்சம் டாலர் பரிசு அளிக்கப்படும் என்று அவர் கடந்த ஆண்டு ஜூலையில் அறிவித்தார். சிக்னல்கள் வடிவில் இவ்விதம் செய்தி தயாரிக்கப்படுமே தவிர, அதை அனுப்பலாமா என்பது பற்றிப் பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

எந்தவிதமான செய்தியை அனுப்புவது என்று முடிவுசெய்வது பெரிய விஷயமா என்று கேட்கலாம். நீங்கள் உங்கள் தாய்மொழியில் ஒரு செய்தியைத் தயாரித்து அதைப் பின்லாந்தில் அல்லது மங்கோலியாவில் உள்ள ஒருவருக்கு அனுப்புகிறீர்கள். மொழி தெரியாவிட்டால் உங்களது அந்தச் செய்தியை அவரால் புரிந்துகொள்ள முடியுமா? எனவே, வேற்றுலகவாசிகள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் செய்தி தயாரிப்பது என்பது எளிய வேலையல்ல.

வேற்றுலகவாசிகளுக்கென நாம் ஒரு செய்தி தயாரித்து, அதை அண்டவெளியில் உள்ள கிரகங்களை நோக்கி அனுப்புகிறோம். கெடுமதி கொண்ட வேற்றுலகவாசிகளுக்கு அது போய்ச் சேருகிறது. அவர்கள் பூமி மீது படையெடுத்து வருகின்ற ஆபத்து உண்டா? குறைந்தபட்சம் 100 ஆண்டுகளுக்கு நமக்கு ஆபத்து எதுவும் இராது. அது எப்படி?

பூமியிலிருந்து குறைந்தபட்சம் 50 ஒளியாண்டுகளுக்கு அப்பால்தான் பூமி போன்ற ஒரு கிரகம் இருக்க முடியும் என விஞ்ஞானிகள் ஒரு கணக்குப் போட்டு வைத்துள்ளனர். ஆகவே, நாம் அனுப்புகிற செய்தி போய்ச் சேரவே 50 ஆண்டுகள் ஆகும். அந்தக் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் பூமி இருக்குமிடத்தை அறிந்துகொண்டு உடனே பெரும் படையுடன் கிளம்பினாலும் பூமிக்கு வந்து சேரக் குறைந்தது மேலும் 50 ஆண்டுகள் ஆகும். ஆகவே, 100 ஆண்டுகளுக்கு நமக்குக் கவலையில்லை.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%

Link to comment
Share on other sites

இருளில் ஒளிந்திருக்கும் வேற்றுக் கிரகங்கள்

 

boomi_2713783f.jpg
 

வெகு தொலைவில் உள்ள நட்சத்திரங்களுக்கு அருகே கிரகங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்கிறது கெப்ளர் டெலஸ்கோப்.

நம்மைப் போன்ற புத்திசாலி மனிதர்கள் அண்டவெளியில் வேறு ஏதேனும் கிரகங்களில் இருக்கிறார்களா என்று தேடுவதற்குக் குறைந்த பட்சம் மூன்று வழிகள் உண்டு. முதல் வழி, யாரேனும் நம்மை நோக்கிக் குரல் கொடுக்கிறார்களா என்று காதைத் தீட்டிக்கொண்டு கேட்பது. இரண்டாவது வழி, அப்படியான மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகளைக் கொண்ட கிரகங்களை வானில் தேடிக் கண்டுபிடிப்பது. மூன்றாவது வழி நாமே நேரில் சென்று தேடுவது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் வழி மட்டுமே கையாளப்பட்டு வந்தது. சமீப ஆண்டுகளாக இரண்டாவது வழி பின்பற்றப்படுகிறது. மூன்றாவது வழி சாத்தியமா என்பதைப் பின்னர் கவனிப்போம்.

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள வேகமான வளர்ச்சியின் பலனாக இரண்டாவது வழியில் நாம் பெருமைப்படுகின்ற அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். கடந்த ஆறு ஆண்டுகளில் சில ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பூமி போன்றவை அல்ல. பூமி போன்ற கிரகம் ஒன்றோ இரண்டோ தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கெட்டிக்கார கெப்ளர்

கெப்ளர் என்னும் பறக்கும் டெலஸ்கோப் இதைச் சாத்தியமாக்கியுள்ளது. நாஸாவின் இந்த டெலஸ்கோப் 2009 மார்ச் மாதம் உயரே செலுத்தப்பட்டது. ஹப்புள் என்னும் பெயர் கொண்ட பறக்கும் டெலஸ்கோப் ஏற்கெனவே செயல்பட்டு வந்தாலும் ஹப்புள் டெலஸ்கோப்புக்கும் கெப்ளர் டெலஸ்கோப்புக்கும் முக்கிய வித்தியாசங்கள் உண்டு.

ஹப்புள் டெலஸ்கோப் ஒரு செயற்கைக்கோள் போல பூமியைச் சுற்றி வருகிறது. ஆனால் கெப்ளர் டெலஸ்கோப் சூரியனைச் சுற்றி வருகிறது. ஹப்புள் டெலஸ்கோப்பானது அதன் பெயருக்கு ஏற்ப சக்திமிக்க டெலஸ்கோப்பைப் பெற்றுள்ளது. அது எங்கோ இருக்கின்ற நட்சத்திரங்களையும் அத்துடன் சூரிய மண்டலத்துக்குள்ளாக நமக்கு அருகே உள்ள கிரகங்களையும் ஆராய்ந்து படம் பிடித்து அனுப்புகிறது. ஆனால் கெப்ளர் டெலஸ்கோப்பானது வெகு தொலைவில் உள்ள நட்சத்திரங்களுக்கு அருகே கிரகங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்கிறது.

பூமி சூரியனைச் சுற்றி வருவதை நாம் அறிவோம். கிட்டத்தட்ட பூமி செல்லும் அதே பாதையில் கெப்ளர் சுற்றி வருகிறது. பூமி முன்னே செல்ல கெப்ளர் பின் தொடர்ந்து வருகிறது. பூமி சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 365 நாட்கள் ஆகின்றன. கெப்ளர் டெலஸ்கோப் 372 நாட்களை எடுத்துக்கொள்கிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஜோகான்னஸ் கெப்ளர் (1571-1630) என்ற விஞ்ஞானியைக் கவரவிக்கும் வகையில் அந்த டெலஸ்கோப்பானது கெப்ளர் டெலஸ்கோப் என அழைக்கப்படுகிறது. சூரியனை பூமி உட்பட கிரகங்கள் சுற்றி வருவது தொடர்பான பல அடிப்படை விதிகளைக் கண்டுபிடித்துக் கூறியவர் கெப்ளர். ஒரு கிரகம் எந்த அளவுக்குச் சூரியனிலிருந்து தொலைவில் உள்ளதோ அந்த அளவுக்கு அந்த கிரகம் தனது பாதையில் மெதுவாகச் செல்லும் என்பது அவர் கண்டுபிடித்துக் கூறிய விதிகளில் ஒன்றாகும்.

கெப்ளர் டெலஸ்கோப் நேரடியாக அண்டவெளி கிரகங்களைக் கண்டுபிடிப்பதாகச் சொல்ல முடியாது. அது கண்டுபிடித்துள்ள கிரகங்களை அது படம் பிடித்துள்ளதாகவும் சொல்ல முடியாது. கெப்ளர் நட்சத்திரங்களைத்தான் ஆராய்கிறது. நட்சத்திரங்களின் ஒளியில் ஏற்படும் நுண்ணிய மாறுபாடுகள், நட்சத்திரம் மீது கிரகங்கள் ஏற்படுத்தும் விளைவு போன்ற அம்சங்களை வைத்து கெப்ளர் டெலஸ்கோப்பானது கிரகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறது.

இருட்டுக்குள் தேடல்

முந்தைய அத்தியாயம் ஒன்றில் கூறியபடி கிரகங்களுக்குச் சுய ஒளி கிடையாது. அண்டவெளி என்பது கும்மிருட்டாகும். அந்த அளவில் எல்லா கிரகங்களுமே கும்மிருட்டில்தான் உள்ளன. இரவில் நீங்கள் வானைக் கவனித்தால் எண்ணற்ற நட்சத்திரங்களைக் காணலாம். ஆனால் அந்த நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்ற கிரகங்களைக் காண இயலாது. நீங்கள் பல ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தூரத்துக்குச் சென்று அங்கிருந்து சூரியனைப் பார்த்தால் சூரியன் சிறிய நட்சத்திரமாகத் தெரியும். சூரியனைச் சுற்றுகின்ற (பூமி உட்பட) எந்த கிரகத்தையும் பார்க்க இயலாது. டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் அனேகமாகத் தெரியாது. அது போலத்தான் இரவு வானில் தெரிகின்ற நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்ற கிரகங்களை நம்மால் காண இயலவில்லை.

கெப்ளர் டெலஸ்கோப் வானம் முழுவதையும் ஆராய்ந்து கிரகங்களைத் தேடுவதாகச் சொல்ல முடியாது. உண்மையில் அது வானில் சிறு பகுதியை மட்டும் தொடர்ந்து நோக்கியபடி ஆராய்கிறது. வானில் அப்பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் நட்சத்திரங்கள் ஆராயப்படுகின்றன. வானில் அப்பகுதியைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் உண்டு. வானில் அப்பகுதியில் சூரியன் போன்ற நட்சத்திரங்கள் ஏராளமாக உள்ளன. மேலும் விளக்கமாகச் சொல்வதானால் வானில் சிக்னஸ், லைரா, டிராகோ ஆகிய மூன்று நட்சத்திர மண்டலங்கள் (ராசிகள் என்றும் கூறலாம்) மட்டும்தான் இவ்விதம் ஆராயப்படுகின்றன. (வானவியல் விஞ்ஞானிகள் வானம் முழுவதையும் 88 நட்சத்திர மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இவற்றில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் அடங்கும்).

வானம் முழுவதையும் இதே அளவில் ஆராய்வதென்றால் கெப்ளர் டெலஸ்கோப் போல 400 டெலஸ்கோப்புகள் தேவை. அவ்விதம் ஆராயத் தேவையில்லை என்பது நாஸா விஞ்ஞானிகளின் கருத்தாகும். அதாவது ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டத்தின் ஒரு சிறு பகுதியை ஆராய்ந்தால் அண்டவெளியின் மற்ற பகுதிகளிலும் அதே போன்ற நிலைமை இருக்கலாம் என்று ஊகித்துக் கொள்ள முடியும்.

தொடரும் ஆராய்ச்சிகள்

கெப்ளர் டெலஸ்கோப்பில் கேமராக்களும் உள்ளன. மேலும் பல நுட்பமான கருவிகளும் உள்ளன. அவற்றில் ஒன்று நட்சத்திரத்தின் ஒளியில் ஏற்படும் மிகச் சிறிய மாறுதலையும் கண்டறிவதற்கானது. இந்த டெலஸ்கோப்பிடமிருந்து மாதம் இரண்டு தடவை தகவல்கள் பூமிக்கு வந்து சேருகின்றன. அமெரிக்காவில் உள்ள விசேஷ ஆராய்ச்சிக்கூடம் இத்தகவல்களைப் பகுத்து ஆராய்கிறது.

கெப்ளர் ஆராய்கின்ற நட்சத்திரங்கள் எல்லாமே சுமார் மூன்று முதல் 300 ஒளியாண்டு தொலைவில் உள்ளவை.

கெப்ளர் டெலஸ்கோப்பில் 2012-ல் சில நுட்பமான கருவிகள் செயலற்றுப் போயின என்றாலும் அது தொடர்ந்து சற்றே மாறுபட்ட வகையில் ஆராய்ந்து வருகிறது. 2016-ம் ஆண்டுடன் அதன் ஆயுட்காலம் முடிவடையும் என்று கருதப்படுகிறது. எனினும் பூமி மாதிரி கிரகங்கள் அண்டவெளியில் வேறு எங்கேனும் உள்ளனவா என்ற ஆராய்ச்சி கெப்ளர் டெலஸ்கோப்புடன் நின்று விடப் போவதில்லை. இப்போதுதான் நாம் ஓர் ஆரம்பத்தை மேற்கொண்டிருக்கிறோம். மேலும் பணிகள் தொடரும் என்று நாஸா கூறுகிறது.

கெப்ளர் டெலஸ்கோப் எவ்விதம் கிரக வேட்டையில் ஈடுபட்டுள்ளது என்பதை அடுத்து கவனிப்போம்.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%B

Link to comment
Share on other sites

நட்சத்திரக் கிரகணம்

poomi_2723299f.jpg

 

சூரியனைச் சுற்றுவது போலவே நட்சத்திரங்களையும் சில கிரகங்கள் சுற்றி வரலாம்

 

இரவு நேரம். ஒரு குக்கிராமத்துக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை. கடைசி பஸ்ஸைப் பிடிக்க ஊருக்கு வெளியே சாலை ஓரமாக நின்றுகொண்டிருக்கிறீர்கள். சுற்றிலும் ஒரே இருட்டு. ஆனால், தூரத்தில் ஏதோ விளக்கு இருப்பது தெரிகிறது. லாந்தர் விளக்காக இருக்கலாம். அந்த விளக்கின் அருகே யாராவது இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. திடீரென விளக்கு சில கணம் மறைந்து மறுபடி தெரிகிறது. யாரோ குறுக்கே சென்றிருக்க வேண்டும். அடுத்து மறுபடியும் விளக்கு மறைகிறது. இன்னொருவர் குறுக்கே சென்றிருக்க வேண்டும். ஆள் உருவம் தெரியாவிட்டாலும் விளக்கு மறைவதிலிருந்து அருகே ஆட்கள் இருப்பதாக ஊகிக்கலாம்.

அண்டவெளியில் எங்கோ இருக்கின்ற நட்சத்தி ரங்களுக்கு இருக்கக்கூடிய கிரகங்கள் இவ்வித ஊக அடிப்படையில் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த மாதிரி மறைமுக வழிகள் மூலம் அண்டவெளிக் கிரகங்களைக் கண்டறிய முடியும். இதை நட்சத்திரக் கிரகண முறை என்றும் வர்ணிக்கலாம். இப்படிச் சொல்வதற்குக் காரணம் உண்டு.

ஒளி குன்றும் நட்சத்திரம்

நமக்கு சூரிய கிரகணம் தெரியும். பூமிக்கும் சூரியனுக்கும் நேர் நடுவே சந்திரன் வந்து நின்றால், அது சூரியனை முற்றிலுமாக அல்லது ஓரளவுக்கு மறைக்கிறது. இது சூரிய கிரகணம். இப்போது நட்சத்திரக் கிரகணத்துக்கு வருவோம். நட்சத்திரமும் சூரியன் மாதிரிதான். சூரியனுக்குப் பல கிரகங்கள் இருப்பதுபோல நட்சத்திரங்களுக்கும் கிரகங்கள் இருக்கலாம். அந்தக் கிரகங்கள் அந்த நட்சத்திரத்தைச் சுற்றிச் சுற்றி வரு கின்றன. அப்படி அவை சுற்றிக்கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு கட்டத்தில் அவை சூரிய கிரகண மாதிரியில் நட்சத்திரத்துக்கும் நமக்கும் இடையே அமைய நேரிடலாம்.

நீங்கள் இரவு வானில் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது அந்த நேரம் பார்த்து, அந்த நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகம் ஒன்று உங்களுக்கும் நட்சத்திரத்துக்கும் குறுக்கே வந்து நிற்கிறது. அதுவே நட்சத்திரக் கிரகணம். இதன் விளைவாக நட்சத்திரத்தின் ஒளி வட்டம் முற்றிலுமாக அல்லது அதன் ஒரு பகுதி சிறிது நேரம் சற்றே மறைக்கப்படும். இதன் பலனாக நட்சத்திரத்தின் ஒளி சற்று குன்றும்.

ஆனால், பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்கும் போது நமக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால், மிக நுட்பமான டெலஸ்கோப் மூலம் அதுவும் பூமியின் காற்று மண்டலத்துக்கு மேலே செயல்படும் டெலஸ்கோப்பினால் இதை நன்கு கண்டுபிடிக்க முடியும்.

பறக்கும் டெலஸ்கோப்

நாம் முந்தைய அத்தியாயத்தில் கெப்ளர் பறக்கும் டெலஸ்கோப் பற்றிக் குறிப்பிட்டோம். நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பல கிரகங்களை கெப்ளர் டெலஸ்கோப் இவ்வித முறையில் கண்டுபிடித்துள்ளது.

கெப்ளர் பறக்கும் டெலஸ்கோப்பில் இதற்கென நுட்ப மான கருவி வைக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஒளி எந்த அளவுக்குக் குன்றுகிறது என்பதை அது துல்லியமாகக் கணக்கிட்டுத் தெரிவிக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நட்சத்திரத்துக்குக் கிரகம் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்துள்ளது.

நட்சத்திரத்தின் ஒளி எந்த அளவுக்கு மங்குகிறது என்பதை வைத்து, அந்தக் கிரகம் எவ்வளவு பெரியது, அது அந்த நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது போன்ற பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். ஒரு நட்சத்திரத்தை அதைச் சுற்றுகின்ற கிரகம் மறைக்கும்போது, அந்தக் கிரகத்துக்குக் காற்று மண்டலம் உள்ளதா என்பதையும் அறிய முடிகிறது.

அந்த நட்சத்திரத்தின் ஒளி எப்போதெல்லாம் மங்குகிறது என்பதை வைத்து அந்த நட்சத்திரத்துக்கு எவ்வளவு கிரகங்கள் உள்ளன என்பதையும் தெரிந்துகொள்ளலாம். கெப்ளர் டெலஸ்கோப் இதுவரை பல ஆயிரம் கிரகங்களை இந்த முறையில் கண்டுபிடித்துள்ளது.

கெப்ளர் டெலஸ்கோப் சூரியனைச் சுற்றி வந்தபடி வானில் சிறு பகுதியை ஆராய்கிறது. அது ஒரே நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நட்சத்திரங்களை ஆராயும் திறன் கொண்டது. எந்த நட்சத்திரத்தின் ஒளி சற்றே மங்குகிறது என்பதை அது கண்டுபிடித்துக் கூறுகிறது. வானில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் அது தொடர்ந்து ஆராய்வதால் நட்சத்திரங்கள் எண்ணற்ற தடவை டெலஸ்கோப்பின் பார்வைக்கு உள்ளாகின்றன. ஆகவே, கிரகங்களால் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மறைக்கப்படுமானால் அது நன்கு உறுதிப்படுத்தப்படுகிறது. நட்சத்திரத்தின் ஒளி ஆயிரத்தில் ஒரு பங்கு அளவுக்கு மங்கினாலும் கெப்ளரில் உள்ள கருவி அதைப் பதிவு செய்துகொண்டு விடுகிறது. வானில் குறிப்பிட்ட பகுதியில் அதிக நட்சத்திரங்கள் இருக்க வாய்ப்பு உண்டா என்று நீங்கள் நினைக்கலாம்.

பொதுக்கூட்ட நட்சத்திரம்

வானம் என்பது கூரை போன்றது அல்ல. ஒரு பொதுக்கூட்டத்தில் முன்வரிசையில் 100 பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் இன்னொரு வரிசை. அதற்குப் பின்னால் மேலும் ஒரு வரிசை என மைதானத்தின் பரப்பளவைப் பொறுத்து மக்கள் எவ்வளவு வரிசைகளில் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாம். அது போல நட்சத்திரங்களுக்குப் பின்னால் மேலும் பின்னால் எவ்வளவோ நட்சத்திரங்கள் இருக்க முடியும்.

இரவு வானில் ஒரு நட்சத்திரம் தெரிகிறது. அது 25 ஒளியாண்டு தொலைவில் உள்ளதாக அறிகிறோம். அந்த நட்சத்திரத்தின் அருகே இன்னொரு நட்சத்திரம் தென்படலாம். அது 36 ஒளியாண்டு தொலைவில் இருக்கலாம். நம் பார்வையில் அவை அருகருகே இருப்பது போன்று தோன்றினாலும் இவை ஒன்றன் பின் ஒன்றாக வெவ்வேறு தொலைவில் அமைந்திருப்பதாக அறிகிறோம்.

சிதறடிக்கும் காற்று மண்டலம்

பூமியில் நிறுவப்பட்டுள்ள டெலஸ்கோப்புகள் மூலம் நட்சத்திரங்களை இவ்விதம் ஆராய்ந்து கிரகங்களைக் கண்டுபிடிக்க முடியாதா என்று கேட்கலாம். முதலாவதாக, காற்று மண்டலம் ஒரு பிரச்சினையாகும். நட்சத்திரங்களின் ஒளியானது காற்று மண்டலம் வழியேதான் வந்தாக வேண்டும். காற்று மண்டலத்தில் உள்ள நுண்ணிய துணுக்குகள் ஒளியைச் சிதறடிக்க முற்படுகின்றன. நட்சத்திரங்கள் மினுக்குவதற்கு இதுவே காரணம். எனவே, நட்சத்திரத்தின் ஒளி மங்குகிறதா என்பதைத் துல்லியமாக அறிய இயலாது.

தவிர, நட்சத்திரங்கள் தொடர்ந்து ஆராயப்பட வேண்டும். பூமி தனது அச்சில் சுழல்வதால் நட்சத்திரங்கள் டெலஸ்கோப்பின் ‘பார்வையில்’ தொடர்ந்து இருக்க முடியாது போய்விடும். அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வழி இருக்கிறது. டெலஸ்கோப்பும் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப நகரும்படி செய்ய முடியும். ஆனால், இரவு முடிந்து பகல் வந்துவிட்டால் அந்த நட்சத்திரங்களை டெலஸ்கோப்பினால் ஆராய முடியாது. இரவு நேரங்களிலும் சரி, மழை பனி மூட்டம், மேக மூட்டம் ஆகிய காரணங்களால் நட்சத்திரங்களைத் தொடர்ந்து ஆராய முடியாமல் போய்விடும்.

இப்படியான பல காரணங்களால்தான் கெப்ளர் டெலஸ் கோப்பை உயரே செலுத்தி அங்கிருந்து நட்சத்திரங்களை ஆராயும்படி செய்துள்ளனர். விண்வெளியில் எப்போதும் இரவுதான். காற்று மண்டலப் பிரச்சினையும் இல்லை. கெப்ளர் டெலஸ்கோப்பினால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை வைத்த கண் வாங்காமல் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தொடர்ந்து ஆராய முடிகிறது.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article8191753.ece

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சூரியனை நகர்த்தும் பூமி

boomi_2732308f.jpg
 

சூரியனுடன் ஒப்பிட்டால் கிரகங்கள் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தி மிகவும் குறைவு

 

பம்பர விளையாட்டின்போது சில சமயம் பம்பரம் தூங்குகிறது என்பார்கள். அதாவது, அப்போது பம்பரம் ஆடாது அசையாது சுற்றிக்கொண்டிருக்கும். அப்படி உறங்கும் பம்பரமும் சரி, மிக அற்ப அளவுக்கு இப்படியும் அப்படியுமாக நகரும். அதாவது, அந்த பம்பரத்தின் ஆணி தரையில் சிறிய வட்டம் போடும். தனது அச்சில் சுழன்றுகொண்டிருக்கின்ற சூரியனும் ஒரு புள்ளியில் நிலைத்து நிற்காமல் இவ்விதம் சிறு வட்டம் போடுகிறது.

இது ஏன் என்பதைக் கவனிப்போம். சூரிய மண்டலத்தில் பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றிச் சுற்றிவருகின்றன. இந்தக் கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதை நிறுத்திவிட்டு, சூரிய மண்டலத்திலிருந்து வேறு ஏதோ திசையில் செல்ல முற்படுவதில்லை. இதற்கு சூரியனின் ஈர்ப்புச் சக்தியே காரணம்.

வியாழனைச் சுற்றும் கிரகங்கள்

சூரியனுக்கு ஈர்ப்புச் சக்தி உள்ளதுபோலவே கிரகங்களுக்கும் ஈர்ப்புச் சக்தி உண்டு. சூரியனின் ஈர்ப்புச் சக்தி மிக மிக அதிகம். சூரியனுடன் ஒப்பிட்டால் கிரகங்கள் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தி மிகவும் குறைவு. தவிர, கிரகங்களின் ஈர்ப்புச் சக்தி அதனதன் அளவைப் பொறுத்தது.

பூமியின் ஈர்ப்புச் சக்தி காரணமாக, பூமியைச் சந்திரன் சுற்றிவருகிறது. மனிதன் உயரே அனுப்பியுள்ள எண்ணற்ற செயற்கைக்கோள்களும் இதே காரணத்தால் பூமியைச் சுற்றிவருகின்றன. பூமியைச் சந்திரன் சுற்றுவதுபோலவே வியாழன் கிரகத்தை 64 சந்திரன்கள் சுற்றிவருகின்றன. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் வியாழன்தான் மிகப் பெரியது. எனவே, அது மற்ற கிரகங்களைவிட அதிக ஈர்ப்பு சக்தி கொண்டது. வியாழனின் ஈர்ப்புச் சக்தியானது பூமியின்மீதும் சிறு அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது.

கிரகங்கள் சூரியனின் ஈர்ப்புச் சக்திக்கு உட்பட்டுள்ள அதே நேரத்தில், அவை ஒன்றின்மீது மற்றவை ஈர்ப்புச் சக்தியைச் செலுத்துகின்றன. இது மெல்லிய அளவுக்கு உள்ளது. யுரேனஸ் கிரகம் 1781-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதன் சுற்றுப்பாதையில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. யுரேனஸ் மீது அதற்கு அப்பால் இருக்கக்கூடிய ஏதோ ஒரு கிரகத்தின் ஈர்ப்புச் சக்தியானது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தோன்றியது. இதை வைத்துத்தான் 1846-ம் ஆண்டில் யுரேனஸுக்கு அப்பால் நெப்டியூன் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க பூமியின்மீது சந்திரனின் ஈர்ப்புச் சக்தி மிக மெல்லிய அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது, கடல் அலைகள் கொந்தளிப்பதற்கு சந்திரனின் ஈர்ப்புச் சக்தியே காரணம். அப்படியானால் வியாழன், சனி, பூமி முதலான கிரகங்கள் சூரியன்மீது பாதிப்பை உண்டாக்குகின்றனவா என்று கேட்கலாம். அப்படியான பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இவை அனைத்தும் சூரியன்மீது ஏற்படுத்துகின்ற பாதிப்பு மிக அற்ப அளவில்தான் உள்ளது. இந்தப் பாதிப்பு காரணமாகவே சூரியன் மிக அற்ப அளவுக்கு இப்படியும் அப்படியுமாக நகருகிறது.

இப்போது விண்வெளி சமாச்சாரத்துக்கு வருவோம். மிகத் தொலைவில் உள்ள ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை மிக நுட்பமான கருவிகளைக் கொண்டு ஆராய்கிறோம். அந்த நட்சத்திரம் மிக அற்ப அளவுக்கு அசைவதாகத் தெரிகிறது. அப்படியானால் அந்த நட்சத்திரத்தை ஒரு கிரகம் அல்லது பல கிரகங்கள் சுற்றி வருகின்றன என்று ஊகித்துக்கொள்ளலாம். விண்வெளியில் எங்கோ சூரியன் போன்று இருக்கின்ற நட்சத்திரத்துக்கு அருகே கிரகங்கள் உள்ளனவா என்று கண்டுபிடிக்க இந்த முறை உபயோகமாக உள்ளது.

வானில் எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராய்கின்ற கெப்ளர் என்னும் பறக்கும் டெலஸ்கோப் இந்த வழியைப் பின்பற்றி நட்சத்திரங்களுக்குக் கிரகங்கள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடித்துவருகிறது. கெப்ளர் டெலஸ்கோப் இந்த முறையின் மூலம் பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது.

டெலஸ்கோப்புகளின் பங்கு

பல சமயங்களிலும் கெப்ளர் சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில் தரையில் உள்ள டெலஸ்கோப்புகளும் ஒருங்கிணைந்து வானை ஆராய்கின்றன. ஆலன் டெலஸ்கோப், தென் அமெரிக்காவில் உள்ள டெலஸ்கோப்புகள் ஆகியவை இதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

எனினும் இந்த விஷயத்தில் ஒரு குறைபாடு உண்டு. சூரியன்மீது பூமி ஏற்படுத்தும் பாதிப்பைவிடப் பூமியைப் போல 1,300 மடங்கு பெரிய வியாழன் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். அந்த வகையில் எங்கோ இருக்கின்ற ஒரு நட்சத்திரத்தின்மீது வியாழன் கிரகத்தைப் போல உள்ள பெரிய கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். எனவே, அண்டவெளியில் உள்ள கிரகங்களை ஆராயும்போது, வியாழன் போன்று உள்ள பெரிய கிரகங்களை நன்கு கண்டுபிடித்துவிட முடிகிறது. இக்காரணத்தால்தான் கெப்ளர் கண்டுபிடித்துள்ள கிரகங்களில் பெரும்பாலானவை வியாழன் கிரகத்தைப் போல அல்லது அதைவிடப் பெரிதாக உள்ளன.

பூமி சைஸில் உள்ள ஒரு கிரகம் அதன் தாய் நட்சத்திரம்மீது ஏற்படுத்தும் விளைவு குறைவு என்பதால், பூமி போன்ற கிரகங்கள் எளிதில் தட்டுப்படுவதில்லை. எதிர்காலத்தில் மேலும் நுட்பமான ஆய்வுமுறை உருவாக்கப்படும்போது, பூமி போன்ற கிரகங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியலாம்.

சூரிய மண்டலத்தில் வியாழன் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 140 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. (சூரியனிலிருந்து பூமியானது சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது). ஆனால், கெப்ளர் ஆராய்ந்த நட்சத்திரங்களில் சிலவற்றில் வியாழன் போன்ற பெரிய கிரகம் அந்த நட்சத்திரத்துக்கு அருகிலேயே உள்ளது.

நட்சத்திரத்தின் வளையும் ஒளி

கிரகங்களைக் கண்டுபிடிக்க கெப்ளர் டெலஸ்கோப் வேறு ஒரு முறையையும் பின்பற்றுகிறது. இரவு வானைக் காணும்போது நம் பார்வையில் ஒரு நட்சத்திரத்துக்கு மிக அருகில் இன்னொரு நட்சத்திரம் தென்படலாம். உண்மையில், அவை அருகருகே இல்லாமல் ஒரு நட்சத்திரத்துக்குக் கிட்டத்தட்ட நேர் பின்னால் - பல சமயங்களிலும் - வெகு தொலைவில் வேறு நட்சத்திரம் அமைந்திருக்கலாம். அப்படியான நிலையில் நம் பார்வையில் இந்த இரண்டும் அருகருகே இருப்பது போன்று தோன்றும்.

எனவே, பின்னால் இருக்கின்ற நட்சத்திரத்தின் ஒளியானது முன்புறத்தில் உள்ள நட்சத்திரத்தை மிக நெருக்கமாகக் கடந்து வர நேரிடும். முன்புறத்தில் உள்ள நட்சத்திரத்தின் ஈர்ப்புச் சக்தி காரணமாகப் பின்னால் உள்ள நட்சத்திரத்தின் ஒளி சற்றே வளைந்துவரும். அதே சமயத்தில், ஒரு கிரகம் இருந்தால் அது சற்றே பெரிதாகத் தெரியும். இந்த விளைவுகளை வைத்துப் பின்னால் இருக்கின்ற நட்சத்திரத்துக்கு இருக்கக்கூடிய கிரகங்களைக் கண்டறிய இயலும்.

சூரியன் மாதிரியான நட்சத்திரங்களுக்கு அருகே உள்ள கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் இந்த முறை உபயோகமாக உள்ளது. இவ்விதமாக கெப்ளர் டெலஸ்கோப் எங்கோ இருக்கின்ற கிரகங்களைக் கண்டுபிடிக்கப் பல முறைகளைப் பின்பற்றுகிறது. கெப்ளரின் சாதனை பற்றி அடுத்து கவனிப்போம்.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

(வியாழன்தோறும் தொடர்வோம்...)

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%

அண்டவெளியில் பூமிக்கோர் அண்ணன்

boomi_2750409f.jpg
 

பூமியைப் போன்ற கிரகங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்

மிகப்பெரிய டெலஸ்கோப்பே ஒரு செயற்கைக்கோளாக மாற்றப்பட்டு வானில் மிக உயரத்தில் பறந்து கொண்டி ருக்கிறது. அதுதான் கெப்ளர் விண்ணோக்கி செயற்கைக்கோள். வானில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நட்சத்திரங்களை ஆராய்ந்து இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான கிரகங்களை அது கண்டுபிடித்துள்ளது. ஆனால் அவற்றில் நான்கு மட்டுமே சம்பந்தப்பட்ட நட்சத்திரத்திலிருந்து உகந்த தொலைவில் உள்ளன. இந்த நான்கில் எதுவுமே பூமியின் அளவில் இல்லை. மூன்று கிரகங்கள் பூமியை விட சற்று பெரியவை. நான்காவது கிரகம் பூமியை விட மிகவும் பெரியது. இவற்றில் ஒரு கிரகத்தைச் சில நிபுணர்கள் ‘பூமியின் அண்ணன்’ என்று வர்ணிக்கின்றனர். ஆனாலும் இந்த கிரகத்துக்குப் பூமிக்கு உரிய ‘லட்சணங்கள்’ எதுவும் இல்லை.

இல்லை ஆனால் இருக்கலாம்

வேறுவிதமாகச் சொல்வதானால் இதுவரை பூமி மாதிரியான கிரகம் ஒன்றுகூடக் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், இதனால் மனம் தளர வேண்டிய அவசியம் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அண்டவெளியில் பூமியைப்போன்ற கிரகம் உள்ளதா என்று நாம் கடந்த சில ஆண்டுகளாகத்தான் தீவிரமாகத் தேடி வருகிறோம். பறக்கும் டெலஸ்கோப்பான கெப்ளர், அண்டவெளியின் குறிப்பிட்ட சிறு பகுதியில் மட்டும்தான் தேடி வருகிறது. ஆகவே, இதுவரை நடந்துள்ள தேடலை வைத்து பூமி மாதிரியான கிரகம் அண்டவெளியில் வேறு எங்கும் இல்லை என்ற முடிவுக்கு நாம் வந்து விட முடியாது என்று விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

வானில் உள்ள நட்சத்திரங்களை மொத்தம் 88 ராசிகளாகப் பிரித்துள்ளனர். கெப்ளர் டெலஸ்கோப் அவற்றில் மூன்று ராசிகளில் மட்டும்தான் கிரகங்களைத் தேடி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

கெப்ளரின் சொத்து

கெப்ளரின் தேட்டம் பற்றிய புள்ளி விவரங்களைக் கூறுவதானால் 2016 பிப்ரவரி முதல் வார நிலவரப்படி 2,056 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வெவ்வேறு நட்சத்திரங்களைச் சுற்றி வருபவை. இவை தவிர, சுமார் 4,700 உத்தேசமான கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனேகமாக கிரகங்களாக இருக்கலாம் என்ற கருத்தில் ‘உத்தேச’ கிரகங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. கெப்ளர் அனுப்பிய தகவல்களை ஆராயும் விஞ்ஞானிகள் இந்த உத்தேச கிரகங்கள் பற்றிய விவரங்களை நுணுக்கமாக ஆராய்ந்துவருகின்றனர்.

கெப்ளர் செயற்கைக்கோள் எவ்விதம் கிரகங்களைக் கண்டுபிடித்துவருகிறது என்பதை முந்தைய கட்டுரைகளில் கவனித்தோம். கெப்ளர் தனது ஆராய்ச்சிகளின்போது நிறைய தகவல்களைச் சேகரித்தது. குறிப்பிட்ட கிரகம் அது சுற்றி வருகின்ற நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது, அந்த கிரகத்தின் சுற்றுப்பாதை, அந்த நட்சத்திரத்தை ஒரு தடவை சுற்றி முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகின்றன, கிரகத்தின் நிறை, அதன் குறுக்களவு, அதன் அடர்த்தி, நட்சத்திரத்தின் நிறை, அந்த நட்சத்திரத்தின் வெளிப்புற வெப்பம் இப்படியாக பல தகவல்களைச் சேகரித்து வந்துள்ளது.

ஆகவே கெப்ளர் செயற்கைக்கோளின் ஆயுட்காலமே முடிந்தாலும் அது சேகரித்து அனுப்பியுள்ள தகவல்களை நிபுணர்கள் பகுத்தாராயும்போது பல புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகலாம்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அண்டவெளியில் எங்கோ இருக்கின்ற நட்சத்திரங்களுக்குக் கிரகங்கள் உள்ளனவா என்று தேடும் பணியை கெப்ளர் தான் முதன் முதலில் ஆரம்பித்து வைத்ததாகக் கூற முடியாது. 25 ஆண்டுகளுக்கு முன்பே இது தொடங்கிவிட்டது. தரையில் அமைந்த டெலஸ்கோப்புகள்தான் இதைத் தொடங்கி வைத்தன. 1995-ல் முதலாவது கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. அது வியாழன் அளவுக்குப் பெரியது.

பின்னர் 2006-ல் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ‘காரோட்’ எனும் செயற்கைக்கோளைச் செலுத்தியது. அது சில ஆண்டுக்காலம் செயல்பட்டு 32 கிரகங்களைக் கண்டுபிடித்தது. இவற்றில் எதுவும் பூமி மாதிரியானது அல்ல. எல்லாமே வியாழனை விடப் பெரியவை.

மறைக்கும் தந்திரம்

இதற்கிடையே பூமியிலிருந்தே டெலஸ்கோப்புகள் மூலம் கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் இத்தனை காலமாக இருந்து வந்துள்ள பெரிய பிரச்சினை நட்சத்திரத்தின் பிரகாசம். ஒரு மேஜையில் பிரகாசமான பெட்ரோமாக்ஸ் விளக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே யாராவது நின்றால் அந்த விளக்கின் பிரகாசம் காரணமாக அவரது முகம் தெளிவாகத் தெரியாது அல்லவா? நாம் ஒரு கையால் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு பார்த்தால் அருகே நிற்பவரின் முகம் தெளிவாகத் தெரியும்.

அதுபோலத்தான், நட்சத்திரத்தை மறைத்து அருகே இருக்கின்ற கிரகம் மட்டும் தெரிகின்ற வகையிலான உத்தி இப்போது கையாளப்படுகிறது. தென் அமெரிக்காவில் சிலி நாட்டில் உள்ள ஜெமினி சவுத் டெலஸ்கோப்பில் இவ்வித ஏற்பாடு பின்பற்றப்படுகிறது. ஆனாலும் இப்போதைக்கு இது வியாழன் போன்ற பெரிய கிரகங்களைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமே பயன்படுவதாக உள்ளது. பூமி மாதிரி சிறிய கிரகங்களையும் இவ்வித முறையில் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

காரோட் செயற்கைக்கோளின் பணி ஏற்கெனவே முடிந்து விட்டது. கெப்ளரின் பணியும் விரைவில் முடிந்து விடும் என்ற நிலைதான். அதனால், அண்டவெளியில் உள்ள கிரகங்களை, குறிப்பாக பூமி மாதிரி கிரகங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி நின்று போய் விடும் என்று நினைக்கக்கூடாது.

அதிகரிக்கும் செயற்கைக் கோள்கள்

கெப்ளர் குறிப்பாக, மங்கலான, அத்துடன் மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்ந்து வந்துள்ளது. அடுத்ததாக ‘டெஸ்’ எனப்படும் ஒரு பறக்கும் டெலஸ்கோப் 2017-ல் உயரே செலுத்தப்பட இருக்கிறது. இது ஒப்பீட்டளவில் பக்கத்தில் உள்ள, அத்துடன் பிரகாசமான நட்சத்திரங்களை ஆராய்ந்து அவற்றைச் சுற்றும் கிரகங்களைத் தேடும். வானில் குறிப்பிட்ட சிறிய பகுதியைத் தான் கெப்ளர் ஆராய்ந்தது. ‘டெஸ்’ டெலஸ்கோப் வானம் முழுவதையும் ஆராய்வதாக இருக்கும். அது முதல் இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் கிரகங்களைக் கண்டுபிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, ‘எக்சோபிளானட்சாட்’ என்னும் ஒரு செயற்கைக்கோளும் செலுத்தப்பட இருக்கிறது. இந்த செயற்கைக்கோள் உயரே சென்றதும் அதிலிருந்து பல நுண் செயற்கைக்கோள்கள் வெளிப்படும். இவை ஒவ்வொன்றும் தனித்தனியே சென்று நமது சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை ஆராயும்.

செவ்வாய் பயணம்

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு 30 மீட்டர் குறுக்களவுள்ள பிரதிபலிப்புக் கண்ணாடியுடன் கூடிய டெலஸ்கோப்பைத் தயாரித்துள்ளது. தென் அமெரிக்காவில் அடகாமா பாலைவனத்தில் அதை நிறுவ இருக்கிறது. 20 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கக்கூடிய பூமி மாதிரி கிரகங்களையும் இதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம். இது 2020-ம் ஆண்டுவாக்கில் செயல்படத் தொடங்கும். இவ்விதமாக பூமி மாதிரிக் கிரகங்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நீடிக்கும்.

எதிர்காலத்தில் பூமி மாதிரி ஒரு கிரகம் கண்டுபிடிக்கப் படுவதாக வைத்துக்கொள்வோம். நம்மால் ஒரு விண்கலம் மூலம் அந்த கிரகத்துக்குச் சென்று பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இப்போது நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தை வைத்துச் சொல்வதானால் அதற்கு வாய்ப்பு இல்லை. சொல்லப் போனால் நமது பக்கத்து வீடு என்று சொல்லத்தக்க செவ்வாய் கிரகத்துக்குப் போய்விட்டு வருவதற்கே இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

விஞ்ஞானிகள் எப்போதும் இது சாத்தியமே இல்லை என்று எதையுமே ஒதுக்கித் தள்ளுவதில்லை. பல ஆண்டுக்காலம் பிடிக்கக்கூடிய நீண்ட அண்டவெளிப் பயணம் செய்வதில் உள்ள பிரச்சினைகள் பற்றி ஏற்கெனவே ஆய்வுகள் நடந்து வருகின்றன.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

வியாழன்தோறும் தொடர்வோம்...

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வேற்றுலகப் பயணம் சாத்தியமா?

boomi1_2761981f.jpg
 

சூரிய மண்டலத்துக்கு வெளியே, எங்கோ ஒரு கிரகத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்களைப் பார்க்க நமக்கு ஆசையாக இருக்கிறது. நம்மால் நேரில் சென்று பார்க்க முடியுமா? அந்தக் கிரகத்துக்குச் செல்வதில் ஒன்றல்ல, பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நம்மால் சமாளிக்க முடியும் என்றால் அது சாத்தியமே.

முதல் பிரச்சினை, அந்தக் கிரகம் உள்ள தொலைவு. சந்திரனுக்குச் சென்று வந்தோமே என்று கேட்கலாம். சந்திரன் பூமியின் அவுட் ஹவுஸ் மாதிரி. சந்திரன் வெறும் 4 லட்சம் கி.மீ. தொலைவில் இருக்கிறது. கட்டுச்சோறு கட்டிக்கொண்டு சந்திரனுக்கு ஒன்றரை நாளில் போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால், நாம் எங்கோ இருக்கின்ற நட்சத்திரத்தைச் சுற்றிவருகின்ற கிரகத்துக்குச் சென்றாக வேண்டும்.

ஒளியாண்டுத் தொலைவு

பூமிக்கு (சூரியனுக்கு) ‘மிக அருகில்’ இருக்கின்ற நட்சத்திரம் பிராக்சிமா செண்டாரி நட்சத்திரம். அது 4.24 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பிடுகின்ற அலகு ஆகும். ஒளி ஓரிடத்திலிருந்து கிளம்பியதிலிருந்து ஓராண்டுக் காலத்தில் பயணம் செய்யக்கூடிய தூரமே ஒளியாண்டுத் தொலைவு.

ஒளி ஒரு விநாடியில் சுமார் 3 லட்சம் கி.மீ. தூரம் செல்லும். அந்த அளவில் ஒளியாண்டு தூரம் என்பது சுமார் 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கி.மீ. ஆகும். நட்சத்திரங்களுக்கான தூரத்தை கி.மீ. கணக்கில் சொல்வதானால், நிறைய பூஜ்ஜியங்களைப் போட வேண்டியிருக்கும் என்பதால், ஒளியாண்டு என்ற அலகைப் பயன்படுத்துகின்றனர்.

தூரம் ஒரு பெரிய பிரச்சினை அல்ல. தகுந்த தொழில்நுட்பம் இருந்தால் தூரத்தை ஜெயிக்கலாம். பஸ், ரயில், விமானம் ஆகியவை இல்லாத காலத்தில் தமிழகத்திலிருந்து காசி யாத்திரை சென்று

வருவது பெரும்பாடாக இருந்தது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் லண்டனுக்குக் கப்பல் மூலம் பல மாதம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் தூரத்தை வென்றன. ராக்கெட்டும் விண்கலமும் சந்திர மண்டலப் பயணத்தைச் சாத்தியமாக்கின.

அண்டவெளிப் பயணம்

சுமார் 11 ஒளியாண்டுத் தொலைவில் உள்ள டாவ் செடி என்னும் நட்சத்திரத்தை பூமி போன்ற இரு கிரகங்கள் சுற்றுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒளி வேகத்தில் இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் ஒரு விண்கலத்தைச் செலுத்தும் திறன் கொண்ட ராக்கெட்டை நம்மால் உருவாக்க முடியுமானால், நீண்ட அண்டவெளிப் பயணம் பற்றிச் சிந்திக்க முடியும்.

இப்போது நம்மிடம் உள்ள ராக்கெட்டுகள் அதி வேகத்தில் செல்லக்கூடியவை அல்ல. 2006-ல் நாஸா, குட்டிக் கிரகமான புளூட்டோவை நோக்கி ஒரு ஆளில்லா விண்கலத்தைச் செலுத்தியபோது, அந்த ராக்கெட் மணிக்கு 64 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்தது. விண்வெளி விஞ்ஞான வரலாற்றிலேயே ஒரு ராக்கெட் அந்த வேகத்தில் செலுத்தப்பட்டது அதுவே முதல் தடவை.

ஆனால், மிகத் தொலைவில் உள்ள கிரகத்துக்கு நாம் செல்வதானால் ஒரு விண்கலத்தை மணிக்கு பல கோடி கி.மீ. வேகத்தில் செலுத்தக்கூடிய ராக்கெட் தேவை. ராக்கெட்டுகளில் இப்போது நாம் பயன்படுத்துகின்ற திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் எரிபொருட்களால் அவ்வித வேகத்தை அளிக்க இயலாது. எனவே, புதிய வகை எரிபொருளைக் கண்டுபிடித்தாக வேண்டும். அது மட்டும் போதாது. அதி வேகத்தில் செல்கின்ற ராக்கெட்டைப் புதிய வகைப் பொருட்களைக்கொண்டு தயாரிக்க வேண்டியிருக்கும்.

எரிபொருள் தேவையில்லை

பூமியிலிருந்து அந்த வேகத்தில் கிளம்பிய பிறகு, வழி நெடுகப் பயணம் செய்ய எரிபொருள் செலவு எதுவும் கிடையாது. பயணிக்க ஆரம்பித்த பிறகு விண்கலமானது இயற்கை விதிகளின்படி தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும். நாம் காரில் செல்வதானால், போய்ச் சேருகின்ற இடம் வரையில் இன்ஜின் இயங்கியாக வேண்டும். ஆகவே, ஒவ்வொரு விநாடியும் எரிபொருள் செலவாகிக்கொண்டிருக்கும். விண்வெளிப் பயணம் அப்படியானதல்ல. கிளம்பிய பிறகு இன்ஜின் செயல்பட வேண்டியதில்லை. வேகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அல்லது வேகத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போதுதான் மறுபடி இன்ஜினை இயக்கியாக வேண்டும். ஆற்றில் ஆளில்லாப் படகைத் தள்ளிவிட்டால் அது தானாக மிதந்து செல்வதைப் போல விண்கலம் விண்வெளியில் சென்றுகொண்டிருக்கும். சூரியனை கோடிக்கணக்கான ஆண்டுகளாகச் சுற்றிவருகின்ற பூமியில், சூரியனைச் சுற்றி வர ஏதேனும் எரிபொருள் இருக்கிறதா? அதி வேகத்தில் செல்வதற்கு உதவக்கூடிய எரிபொருளை உருவாக்குவதில் வெற்றிபெற்றுவிட்டால், அந்த வேகத்தில் செல்வதற்கான ராக்கெட்டைத் தயாரிப்பது சாத்தியமாகலாம்.

அவ்வளவு தொலைவு செல்லும் விண்கலத்தில் 2 அல்லது 3 பேர் செல்வது உசிதமாக இருக்காது. குறைந்தது 30 பேர் சென்றாக வேண்டும். மிக நீண்ட தூரப் பயணத்துக்கான விண்கலத்தின் பல்வேறு பகுதிகளையும் கவனித்துப் பராமரிக்கவே பலர் தேவைப்படுவர்.

இவ்வித நீண்ட பயணத்தின் முடிவில், அந்தக் கிரகத்தில் இறங்க முடிவதாக வைத்துக்கொண்டாலும் மேலே வருவது எளிதான விஷயமாக இருக்காது.

பூமிக்கு அருகில் உள்ள செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் செல்வதில் உள்ள பிரச்சினையே கீழே இறங்கினால் எப்படி மேலே வருவது என்பதுதான். ஏனெனில், ராக்கெட் இல்லாமல் ஒரு விண்கலம் மேலே வர முடியாது. நாம் எந்தக் கிரகத்துக்குச் சென்றாலும் மேலே ஏறி வருவது என்பது பெரிய பிரச்சினையாகவே இருக்கும்.

ஒன்று செய்யலாம். அந்தக் கிரகத்தில் இறங்காமல் அதை வட்டமடித்துவிட்டுத் திரும்பலாம். இப்படிச் செய்தால் பிரச்சினை இருக்காது. சந்திரனில் 1969 ஜூலையில் முதல் தடவையாக மனிதன் இறங்கியதற்கு முன்னர், நாஸா அனுப்பிய அப்பலோ -10 விண்கலத்தில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூவர் இப்படியாக சந்திரனை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, பூமிக்கு வந்து சேர்ந்தனர். ஒத்திகைப் பயணம் என்பதால் அவர்கள் சந்திரனில் இறங்கவில்லை.

சுமார் 11 ஒளியாண்டுத் தொலைவில் உள்ள கிரகத்துக்கு இவ்விதம் ஒத்திகைப் பயணத்தை மேற்கொள்ளலாம். அது வெற்றிபெற்றால் அடுத்த தடவை கீழே இறங்குவது பற்றிச் சிந்திக்கலாம்.

எங்கோ இருக்கிற கிரகத்துக்குப் போய்ச் சேர்வதற்கு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்றால், விண்கலத்தில் உள்ளவர்கள் எப்படி ஜீவிப்பது? அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் வேண்டாமா? 30 பேருக்கு வேண்டிய உணவைக் கையோடு எடுத்துச் செல்வது என்றால் அவற்றின் எடையே மிகப் பிரம்மாண்டமாக இருக்கும்.

ஆனால், இந்த சாப்பாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி உண்டு. அவசியம் கருதி விழித்துக்கொண்டிருக்கிற சிலரைத் தவிர, யாருக்கும் மாதக் கணக்கில் சாப்பாடே கிடையாது என்றால் பிரச்சினை தீர்ந்துவிடும். அதாவது, சாப்பிட வேண்டிய அவசியமே இன்றி அவர்கள் பல ஆண்டுக்காலம் தொடர்ந்து கட்டாயமாக உறங்கும்படி செய்துவிட்டால் பிரச்சினையைச் சமாளித்துவிடலாம். இப்படியான நீள் துயில் சாத்தியமா என்பது ஏற்கெனவே ஆராயப்பட்டு வருகிறது

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/article8310294.ece

Link to comment
Share on other sites

எதிர்பொருள் ராக்கெட்!

hydro_2804426h.jpg

10 கிராம் எதிர் ஹைட்ரஜன் இருந்தால் போதும், 30 நாட்களில் செவ்வாய் கிரகத்துக்குப் போய்விடலாம்

பொருளையும் எதிர்பொருளையும் எரிபொருளாகப் பயன்படுத்தி இயங்கும் ராக்கெட்டை எதிர்பொருள் ராக்கெட் என்று சொல்லலாம். இப்படியான ராக்கெட்டை உருவாக்க முடியுமானால், கிட்டத்தட்ட ஒளிவேகத்தில் பயணம் செய்வதற்குச் சாத்தியமாகலாம். எங்கோ அண்டவெளியில் இருக்கும் கிரகங்களுக்கும் நம்மால் சென்று வர முடியும்.

பொருள் என்றால் என்ன என்பது பொதுவில் நமக்குத் தெரியும். ஆனால், இங்கு பொருள் என்பது ஹைட்ரஜன். நாம் அறிந்த ஹைட்ரஜனுக்கு எதிர் ஹைட்ரஜன் என ஒன்று உண்டு. ஹைட்ரஜன் எங்கும் உள்ளது. பூமியில் ஹைட்ரஜனுக்குப் பஞ்சமில்லை. அண்டவெளியிலும் ஹைட்ரஜன் நிறையவே இருக்கிறது.

எளிய அணு

முதலில் நாம் ஹைட்ரஜன் அணு என்றால் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஹைட்ரஜன் அணுதான் இருக்கின்ற பல்வகையான அணுக்களில் மிகவும் எளிதானது. ஹைட்ரஜன் அணுவின் மையத்தில் புரோட்டான் என்ற துகள் உள்ளது. பெரும்பாலான ஹைட்ரஜன் அணுக்களில் அணு மையத்தில் புரோட்டான் மட்டுமே இருக்கும். அதுவும் ஒரே ஒரு புரோட்டான்தான் இருக்கும். அந்த புரோட்டான் நேர் மின்னேற்றம் கொண்டது. அந்த புரோட்டானை ஒரே ஒரு எலெக்ட்ரான் சுற்றிச் சுற்றி வரும். அந்த எலெக்ட்ரான் எதிர் மின்னேற்றம் கொண்டது.

இப்போது எதிர் ஹைட்ரஜனுக்கு வருவோம். அதில் உள்ள புரோட்டான் எதிர் மின்னேற்றம் கொண்டதாக இருக்கும். ஆகவே, அதன் பெயர் எதிர் புரோட்டான். அதைச் சுற்றுகிற எலெக்ட்ரான் நேர் மின்னேற்றம் கொண்டதாக இருக்கும். அது எதிர் எலெக்ட்ரான். எனினும் அதை பாசிட்ரான் என்று கூறுகிறார்கள். ஹைட்ரஜனைப் பொருள் என்று கூறினால், எதிர் ஹைட்ரஜன் எதிர்பொருள் ஆகும்.

ஆனால், எங்கும் எதிர் ஹைட்ரஜன் கிடையாது. எனவே, முதலில் எதிர் புரோட்டான்களை உருவாக்க வேண்டும். பின்னர், எதிர் எலெக்ட்ரான்களை (பாசிட்ரான்களை) உண்டாக்க வேண்டும். இந்த இரண்டையும் சேர்த்தால் எதிர் ஹைட்ரஜன் அணுக்கள் கிடைக்கும். அதாவது, எதிர்பொருள் கிடைக்கும். ஆனால், எதிர்பொருள் அருகில் உள்ள பொருளுடன் சேர்ந்து உடனே அழிந்துவிடும். எனவே, எதிர் ஹைட்ரஜனை ஒரு விசேஷக் குடுவையில் சேகரித்துப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அதற்கு விஞ்ஞானிகள் வழி கண்டுபிடித்துள்ளார்கள்.

ஒரு ராக்கெட் இன்ஜினை வடிவமைத்து, அதில் ஹைட்ரஜனும் எதிர் ஹைட்ரஜனும் அதாவது பொருளும் எதிர்பொருளும் சேரும்படி செய்தால் இரண்டும் சேர்ந்து அழிந்துவிடும். அப்போது பிரம்மாண்டமான ஆற்றல் கிடைக்கும்.

மனிதனால் எதிர்பொருளை உண்டாக்க முடியாது என்ற நிலைமை நீண்ட காலம் இருந்துவந்தது. ஆனால், ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்து நாட்டில் ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து அமைத்துள்ள செர்ன் (CERN) எனப்படும் பிரம்மாண்டமான ஆராய்ச்சிக்கூடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு 1995-ம் ஆண்டில் எதிர்பொருளை உண்டாக்கினார்கள்.

ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் சில எதிர் ஹைட்ரஜன் அணுக்களையே உண்டாக்கினார்கள். பின்னர், பல நூறு எதிர் ஹைட்ரஜன் அணுக்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு முன்னேறினார்கள். இப்போது நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தின் மூலம் நிறைய எதிர் ஹைட்ரஜன்களை உருவாக்க முடியாது. செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தில் உள்ள துகள் முடுக்கிகள் அனைத்தையும் பயன்படுத்தினாலும்கூட ஓராண்டில் ஒரு கிராமில் 100 கோடியில் ஒரு பங்கு அளவுக்குத்தான் எதிர் ஹைட்ரஜன்களை உண்டாக்க முடியும். செர்ன் இதுவரையில் மொத்தம் உற்பத்தி செய்துள்ள எதிர் ஹைட்ரஜன் வெறும் 10 நானோ கிராம்தான்.

எதிர் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய நீண்ட காலம் பிடிக்கிறது என்பதுடன் ஏராளமான அளவுக்குச் செலவாகும். எனவே, எதிர் ஹைட்ரஜனை நிறைய உற்பத்தி செய்வது என்பது இப்போதைக்கு நடைமுறையில் சாத்தியமில்லை.

30 நாளில் செவ்வாய் கிரகம்

ஆனால், ஒரு கணக்குப்படி 10 கிராம் எதிர்பொருள் இருந்தால் போதும். 30 நாட்களில் செவ்வாய் கிரகத்து க்குப் போய்விடலாம். இப்போதுள்ள ராக்கெட்டைப் பயன்படுத்துவதானால் போய்ச் சேர 8 மாதங்கள் ஆகும்.

இப்போது பயன்படுத்தப்படும் நவீன ராக்கெட்டுகளில் திரவ ஹைட்ரஜனும் திரவ ஆக்சிஜனும் பயன் படுத்தப்படுகின்றன. இவை அளிக்கும் ஆற்றலுடன் ஒப்பிட்டால் பொருள் - எதிர்பொருள் ராக்கெட் இதைப் போல ஒரு கோடி மடங்கு ஆற்றலை அளிப்பதாக இருக்கும். இவ்வித ராக்கெட் ஒளி வேகத்தில் சுமார் 80% வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்க நாஸா அமைப்பு ஏற்கெனவே பொருள் - எதிர்பொருள் ராக்கெட் இன்ஜினை உருவாக்குவது பற்றி ஆராய்ந்துவருகிறது. ராக்கெட்டில் எதிர்பொருளை எந்தவிதமாகப் பயன்படுத்தலாம் என்பது குறித்துப் பல திட்டங்கள் உள்ளன. ஆனால், இவை அனைத்துமே ஏட்டளவில்தான் உள்ளன.

கால நீட்சி

எதிர்பொருளைப் பயன்படுத்தும் ராக்கெட் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாய்ந்து செல்லக்கூடியது என்று குறிப்பிட்டோம். இவ்வித வேகத்தில் செல்லும்போது கால நீட்சி (Time dilation) விளைவு செயல்பட ஆரம்பிக்கும். அது என்ன கால நீட்சி?

அண்டவெளியில் உள்ள ஏதோ ஒரு கிரகத்துக்கு ஒருவர் அல்லது பலர் கிளம்புகிறார்கள். போக, வர அவர்களுக்கு 5 ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் பூமிக்குத் திரும்புகிறார்கள். இங்கு வந்து பார்த்தால், அவர்களது பிள்ளைகளும் பெண்களும் படு கிழவர்களாகியிருப்பார்கள். விண்வெளிப் பயணம் செய்தவர்களைப் பொறுத்தவரை 5 ஆண்டுகள்தான் கடந்திருக்கும். ஆனால், பூமியில் உள்ளவர்களுக்கு 50 ஆண்டுகள் கடந்திருக்கும். இது எப்படி?

கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பயணம் செய்யும்போது, அவர்களின் கடிகாரங்கள் மிக மெதுவாகச் செயல்படும். அதாவது, காலம் நிதானப்பட்டுவிடும். ஆனால், அது அவர்களுக்குப் புலப்படாது. கடிகாரங்கள் மெதுவாகச் செயல்படும்போது காலண்டரும் அப்படியாகத்தான் இருக்கும். அவர்களுக்கு ஓராண்டு முடியும்போது பூமியில் உள்ளவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கும். ஐன்ஸ்டைன் கூறிய கொள்கையின்படி இவ்விதம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஐன்ஸ்டைன் கூறியது சரிதான் என்பது பின்னர் நிரூபணமாகியுள்ளது.

அண்டவெளியில் பூமியைவிடப் பல மடங்கு பெரிய கிரகம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் விளைவாக அந்தக் கிரகம் அதிக ஈர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும். அப்படியான கிரகத்தில் கடிகாரம் மெதுவாகச் செயல்படும். அவர்களின் ஒரு மணி நேரம் என்பது பூமியில் உள்ளவர்களுக்குச் சில ஆண்டுகளாக இருக்கலாம். இது ஈர்ப்பு சக்தியின் விளைவாக ஏற்படுகிற கால நீட்சி ஆகும். இதுவும் ஐன்ஸ்டைனின் கொள்கையின்படி ஆனதே. எங்கோ இருக்கும் கிரகத்துக்குச் செல்ல வேண்டாம். பூமியிலிருந்து மிக உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள் விஷயத்தில் மிக அற்ப அளவுக்குக் கால நீட்சி நிகழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘இண்டர்ஸ்டெல்லார்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் இந்தக் கால நீட்சி அம்சம் நன்கு கையாளப்பட்டுள்ளது. அதி வேகத்தில் பயணம் செய்யும்போது கால நீட்சி தலைகாட்டுகிறது. அதேபோல ஈர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும் சூழலிலும் கால நீட்சி ஏற்படுகிறது. அதாவது, நமது பிரபஞ்சத்தில் காலம் (நேரம்) என்பது எங்கும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானது அல்ல.

இதையெல்லாம் பார்க்கும்போது, கிராமாந்திரங்களில் வயதான பெரியவர்கள் ‘காலம் கெட்டுப் போச்சு’ என்பார்கள். அது சரிதான் என்று தோன்றுகிறது!

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர், 
தொடர்புக்கு: nramadurai@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/article8444829.ece

Link to comment
Share on other sites

அணுசக்தியால் இயங்கும் பேட்டரிகள்

 

battery_2822438f.jpg
 

வியாழன் கிரகத்துக்குப் போக சூரிய மின்பலகைகள் பயன்படாது

 

உங்கள் நண்பருக்கு அவசரமாக ஒரு செய்தியைத் தெரிவித்தாக வேண்டும். செல்போனில் நம்பரை அழுத்துகிறீர்கள். கனெக்‌ஷன் கிடைத்த அடுத்த விநாடி பொசுக். பேட்டரி அவுட். ஊருக்கு வெளியே எங்கோ இருக்கிறீர்கள். அருகே பொது டெலிபோன் கிடையாது. அடுத்தவரிடம் செல்போன் கடன் வாங்கிப் பேசலாம் என்றால், சுற்றுமுற்றும் யாரும் இல்லை. பேட்டரி அவுட் என்றால், செல்போன் இயங்க மின்சாரம் இல்லை என்று பொருள்.

நீண்ட தூர விண்வெளிப் பயணத்தில் மிக முக்கியமான பிரச்சினை மின்சாரம்தான். பூமியுடன் தொடர்புகொள்ளவும் விண்கலத்தில் உள்ள பல்வேறு கருவிகள் செயல்படவும் மின்சாரம் தேவை. நிறையவே தேவை.

சூரிய மின்பலகைகள்

சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கான சூரிய மின்பலகைகள் அதாவது, சோலார் செல்கள் 1954-ல்தான் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் இதைத் தயாரிக்க நிறைய செலவானது. ஆனாலும், பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களில் செலவைப் பாராமல் சூரிய மின்பலகைகள் பயன்படுத்தப்பட்டன. ஆரம்பகால செயற்கைக்கோள்களின் வெளிப்புறத்தில் மின்பலகைகளாக இல்லாமல் சிறுசிறு துண்டுகள் ஒட்டப்பட்டன. பின்னர், செயற்கைக்கோளின் இரு புறங்களிலும் இறக்கைகள்போல சூரிய மின்பலகைகளைப் பொருத்தினார்கள்.

இன்றைய உலகில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சூரிய மின்பலகைகள் பட்டிதொட்டிகளில்கூட சர்வசாதாரணம். அவற்றைத் தயாரிக்க எளிய முறைகள் தோன்றிவிட்டன. செலவுகளும் குறைந்துவிட்டன. அவை இன்றைய நிலையைச் சாத்தியப்படுத்தியுள்ளன.

பல ஆண்டுகாலமாக செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வருகின்ற ஆளில்லாத அமெரிக்க, ஐரோப்பிய விண்கலங்களும் அத்துடன் இந்தியாவின் மங்கள்யான் விண்கலமும் சூரிய மின்பலகைகள் மூலமே மின்சாரத்தைப் பெறுகின்றன.

அணுசக்தி பேட்டரிகள்

சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ. தொலைவில் பூமி இருக்கிறது. இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகம் சுமார் 20 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. சூரியனிலிருந்து மேலும் மேலும் தொலைவுக்குச் செல்லும்போது சூரிய ஒளியின் வெப்பத் திறன் குறையும். இது இயற்கை.

வியாழன் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்புவதானால், அதன் வெளிப்புறத்தில் சூரிய மின்பலகைகளைப் பொருத்துவதில் பயனில்லை. வியாழன் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 77 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. வியாழனிலிருந்து பார்த்தால் சூரியன் கிட்டத்தட்ட பட்டாணி சைஸில் தெரியும். எனவே, சூரிய ஒளி வெப்பமாக இராது. ஆகவே, மிகப் பெரிய சூரிய மின்பலகைகளைப் பயன்படுத்தியாக வேண்டும். இதில் பிரச்சினைகள் உள்ளன.

எனவே வியாழன் கிரகம், சனி கிரகம் ஆகியவற்றையும் அவற்றுக்கு அப்பால் மிகத் தொலைவில் உள்ள கிரகங்களை ஆராய்வதற்கு நாஸா ஆளில்லா விண்கலங்களை அனுப்பியபோது, அவற்றில் அணுசக்தி பேட்டரிகளை வைத்து அனுப்பியது. நாஸா உருவாக்கிய இந்த அணுசக்தி பேட்டரிகள் ஆர்.டி.ஜி. என்று அழைக்கப்படுகின்றன. இந்த பேட்டரிகளில் புளூட்டோனியம்-238 எனப்படும் அணுசக்திப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து இயற்கையாக வெளிப்படும் கடும் வெப்பமானது மின்சாரமாக மாற்றப்படுகிறது. சூரிய மண்டலத்திலிருந்தே வெளியேறிவிட்ட பயனீர் மற்றும் வாயேஜர் விண்கலங்களிலும் அணுசக்தி பேட்டரிகள் இடம்பெற்றிருந்தன.

சொல்லப்போனால், சந்திரனுக்கு ஆறு தடவை அமெரிக்க விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்போலோ விண்கலங்களிலும் அணுசக்தி பேட்டரிகள்தான் இடம்பெற்றிருந்தன. அணுசக்தி பேட்டரிகள் மின்உற்பத்திக்கு உதவுகின்றன என்றாலும், தொடர்ந்து ஆபத்தான கதிர் வீச்சை வெளிப்படுத்துபவை. அப்போலோ விண்கலங்களில் அமெரிக்க விண்வெளி வீரர்களை அந்தக் கதிர்வீச்சு தாக்காதபடி தக்க பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த அணுசக்தி பேட்டரிகள் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தாதவை. அதாவது, அவை குறைந்த திறன் கொண்டவை. தவிர, விண்வெளி வீரர்கள் அப்போலோ விண்கலத்தில் தங்கியிருந்த நாட்களும் குறைவு. ரஷ்யாவும் இதேபோல அணுசக்தி பேட்டரிகளை உருவாக்கிப் பயன்படுத்தியது. அவற்றில் வேறு வகை அணுசக்திப் பொருள் பயன்படுத்தப்பட்டது. இப்போதைக்கு அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் மட்டுமே அணுசக்தி பேட்டரிகள் உள்ளன.

அணுசக்தி பேட்டரியிலும் பிரச்சினை

அண்டவெளியில் நீண்ட பயணம் மேற்கொள்ள சூரிய மின்பலகைகள் லாயக்கில்லை. புளூட்டோனியத்தைப் பயன்படுத்தும் அணுசக்தி பேட்டரிகளும் கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது. அணுசக்திப் பொருட்கள் தொடர்ந்து அழிந்து வருபவை. எனவே, நாள் செல்லச் செல்ல அணுசக்தி பேட்டரிகளிடமிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைந்துகொண்டே போகும். வாயேஜர் -1 வாயேஜர்-2 ஆகிய இரு விண்கலங்களும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் செலுத்தப்பட்டவை. இந்த இரு விண்கலங்களிலும் வைத்து அனுப்பப்பட்ட அணுசக்தி பேட்டரிகளின் திறன் இப்போது பெரிதும் குறைந்துவிட்டது. எனவே, அதிலிருந்து வரும் சிக்னல்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. 2025-ம் ஆண்டு வாக்கில் இவற்றிலிருந்து சிக்னல் வருவது நின்றுவிடும்.

ஆகவே, விண்வெளியில் மனிதன் நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமானால் முதலில் மின்சாரப் பிரச்சினைக்கு வழி கண்டுபிடித்தாக வேண்டும். நீண்ட காலம் தொடர்ந்து நிறைய மின்சாரத்தை அளிக்கிற அணுசக்தி பேட்டரியை உருவாக்கியாக வேண்டும்.

அமெரிசியம் -241 எனப்படும் அணுசக்திப் பொருளைப் பயன்படுத்துகிற பேட்டரி அண்டவெளிப் பயணத்துக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தங்களது விண்கலங்களில் பயன்படுத்த ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அமெரிசியம் பேட்டரியை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த வகை பேட்டரிகள் சுமார் 1,000 வருடங்கள் வரை செயலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரிட்டனில் இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ஆயிரம் வருட பேட்டரிகள்

அமெரிசியம் - 241 வெள்ளி போன்று பளபளக்கும் உலோகம். அணு மின்நிலையங்களின் ஒரு பகுதியாக விளங்கும் அணு உலைகளில் எரிந்து தீர்ந்த தண்டுகள் அவ்வப்போது வெளியே எடுக்கப்படும். இவற்றில் அமெரிசியம்-241 உட்பட பல வகையான அரிய அணுசக்திப் பொருட்கள் அடங்கியிருக்கும். எனவே, இவற்றைத் தூக்கி எறியாமல் பத்திரமாகச் சேகரித்து வைப்பார்கள். அணுசக்தித் தொழில்நுட்பத்தை அறிந்த எல்லா நாடுகளிடமும் இவை உண்டு. பிரிட்டனிடம் இவ்வித அணுசக்திப் பொருட்கள் நிறையவே உள்ளன. இவற்றிலிருந்து அமெரிசியம்-241 அணுசக்திப் பொருளைத் தனியே பிரித்தெடுக்கலாம்.

அமெரிசியம் -241 அணுசக்திப் பொருளும் ஓயாது வெப்பத்தை வெளிப்படுத்தும். இந்த வெப்பத்தை மின்சாரமாக மாற்ற முடியும். இவ்விதமாகத்தான் அமெரிசியம் அணுசக்தி பேட்டரிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

செல்போன்களுக்கென அணுசக்தி பேட்டரிகளை உருவாக்க முடியாதா என்று கேட்கலாம். அப்படிச் செய்தால் பேட்டரிகளை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காதே என்றும் கூறலாம். இந்த வகையில் பல முயற்சிகள் செய்யப்பட்டாலும் தக்க பலன் கிடைக்கவில்லை. செல்போன்களில் அணுசக்திப் பொருள் இடம்பெறுமானால், கதிர்வீச்சு ஆபத்து உருவாகும். கதிர்வீச்சு ஆபத்து இல்லாத அணுசக்தி பேட்டரி ஒரு வேளை எதிர்காலத்தில் உருவாக்கப்படலாம்.

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE

Link to comment
Share on other sites

  • 3 months later...

புரட்டிப்போடலாமா செவ்வாய் கிரகத்தை?

kiragam_2874512f.jpg

செவ்வாய் கிரகத்தின் வெப்பத்தை அதிகரிக்க விஞ்ஞானிகள் முயல்கின்றனர்

சூரிய மண்டலத்துக்கு அப்பால், அண்டவெளியில் பூமி மாதிரியான கிரகம் எங்கேனும் உள்ளதா என்று விஞ்ஞானிகள் தேடி வருகிறார்கள்.

இந்தத் தேடல் ஒருபுறம் இருக்க, நமது அண்டை வீடு என்று சொல்லத்தக்க செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலைமைகளை மாற்றி, அதை மனிதர்கள் வாழத்தக்க கிரகமாக ஆக்கினால் என்ன? இது ஒன்றும் புதிய யோசனை அல்ல. இது குறித்து கடந்த காலத்தில் பல்வேறு நிபுணர்களும் பல யோசனைகளைக் கூறியுள்ளனர்.

செவ்வாய் கிரகம் எந்தெந்த வகைகளில் பூமி மாதிரி இல்லை என்று நாம் முதலில் கவனித்தால், எவ்வித மாற்றங்கள் தேவை என்று புரிந்துகொள்ள முடியும்.

ஆக்ஸிஜன் குறைவு

செவ்வாய் கிரகம் அளவில் சிறியது. அது விஷயத்தில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. செவ்வாய் வடிவில் சிறியது என்பதால், அதன் ஈர்ப்புச் சக்தி குறைவு. எனவே, அது தொடர்ந்து காற்று மண்டலத்தை இழந்துவருகிறது. ஆகவேதான் செவ்வாயின் காற்று மண்டலம் அடர்த்தி குறைந்ததாக உள்ளது.

எனினும், செவ்வாயின் காற்று மண்டலத்தைச் சற்று அடர்த்தி கொண்டதாக மாற்ற முடியும். செவ்வாயின் காற்று மண்டலம் பெரிதும் கார்பன் டை ஆக்சைடு வாயுவினால் ஆனது. ஆக்ஸிஜன் வாயு அற்ப அளவுக்கே உள்ளது. ஆனால், உயிர் வாழ்க்கைக்கு ஆக்ஸிஜன் அவசியம். செவ்வாயின் காற்று மண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவையும் அதிகரிக்க முடியும்.

எப்படிச் சூடேற்றலாம்?

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இல்லை. ஆனால், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் செவ்வாயின் நிலப் பரப்பில் பெரிய ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடயங்கள் இன்னும் காணப்படுகின்றன. இதிலிருந்து கடந்த காலத்தில் செவ்வாயில் தண்ணீர் திரவ வடிவில் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. எனவே, அக்கால கட்டத்தில் செவ்வாயில் காற்று மண்டலம் அடர்த்தியாக இருந்ததாக ஊகிக்கலாம். காற்று மண்டலம் அடர்த்தியாக இருந்தால்தான் தண்ணீர் திரவ வடிவில் இருக்க முடியும்.

இப்போது செவ்வாயின் வட, மற்றும் தென் துருவப் பகுதிகளில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் இருக்கிறது. செவ்வாயை மாற்றி அமைப்பதானால் முதலில் அங்கு காற்று மண்டல அடர்த்தியை அதிகரிக்க வேண்டும். இது எளிதான வேலை அல்ல. ஆனாலும் நீண்ட கால அளவில் சாத்தியமே. செவ்வாயின் தென் பகுதியில் கார்பன் டை ஆக்சைடு வாயு உறைந்த ஐஸ் கட்டிபோல உள்ளது. இதை வாயுவாக மாற்றினால், செவ்வாயின் காற்று மண்டலத்தின் அடர்த்தி ஓரளவுக்கு அதிகரிக்கும். கார்பன் டை ஆக்சைடு வாயுவுக்கு ஒரு குணம் உண்டு. அது செவ்வாய் பெறும் வெப்பம் ஒரேயடியாக அண்டவெளிக்குப் போய்விடாதபடி தடுக்கும். வேறு சில வாயுக்களுக்கும் இத்தன்மை உண்டு. இந்த வகை வாயுக்களுக்குப் பசுமைக்குடில் வாயுக்கள் என்று பெயர். பூமியிலிருந்து இந்த வகை வாயுக்களைக் குப்பிகளில் அடைத்து பூமியிலிருந்து ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு அனுப்பலாம். இது நடைமுறையில் சாத்தியமா என்று ஆராய வேண்டியுள்ளது.

செவ்வாயின் காற்று மண்டலத்தின் மேற்புறத்தில் இவ்வகை வாயுக்களின் சேர்மானம் அதிகரித்தால், செவ்வாயின் நிலப்பரப்பில் இப்போது நிலவும் கடும் குளிர் இராது. செவ்வாயின் வெப்பம் உயரும்போது, துருவப் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் உறைந்த நிலையில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகி நீராக ஓட ஆரம்பிக்கும்.

செவ்வாயில் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் பாசிகள் வளரும்படி செய்யலாம். இவை ஆக்ஸிஜனை வெளிவிடும். இதன் மூலம் செவ்வாயின் காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவையும் அதிகரிக்கலாம். இது நடைமுறையில் சாத்தியமே என்று கண்டறியப்பட்டுள்ளது.

சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தை செவ்வாய் கிரகம் நன்கு இருத்திக் கொள்ளும்படி செய்தாலும், செவ்வாயில் வெப்பத்தை அதிகரிக்கலாம். செவ்வாய் கிரகத்தின் மேற்புறத்தில் கருப்பான பொருளைப் பரப்பினால் இது சாத்தியம். கருப்பு நிறமானது வெப்பத்தை நன்கு ஈர்த்துக்கொள்ளக்கூடியதாகும்.

தண்ணீர் உருவாக்கலாம்

பூமியின் காற்று மண்டலத்தில் நைட்ரஜன் வாயு நிறையவே உள்ளது. நமது காற்று மண்டலத்தில் நைட்ரஜன் 78% உள்ளது. செவ்வாயில் இந்த வாயு மிக அற்ப அளவில்தான் உள்ளது. பூமியிலிருந்து இந்த வாயுக்களை செவ்வாய்க்கு சிலிண்டர்கள் மூலம் அனுப்பலாம். விண்வெளியில் உலவும் அஸ்டிராய்டுகள் எனப்படும் ‘பறக்கும் பாறைகளில்’ இந்த வாயு அமோனியா வடிவில் உள்ளது. சிறிய சைஸ் அஸ்டிராய்டுகளைக் கட்டி இழுத்துக் கொண்டு போய், செவ்வாயில் மோதும்படி செய்தால் அந்த வகையிலும் செவ்வாயின் காற்று மண்டல அடர்த்தியை அதிகரிக்க முடியும்.

அஸ்டிராய்டுகளை இப்படிக் கயிறு கட்டி இழுத்துச் செல்ல இயலுமா என்று கேட்கலாம். இதுவரை இம்மாதிரியான முயற்சி மேற்கொள்ளப்பட்டது கிடையாது. ஆனால், இது நடைமுறையில் சாத்தியமே.

நாஸா இப்போது ஓரையன் என்னும் விண்கலத்தை உருவாக்கி வருகிறது. 2020-களில் ஓரையன் விண்கலத்தில் ஏறிச் செல்லும் அமெரிக்க விஞ்ஞானிகள், தகுந்த அளவு கொண்ட அஸ்டிராய்டு ஒன்றைக் கைப்பற்றி, அதைக் கயிறு கட்டி இழுத்து வந்து சந்திரனைச் சுற்றும்படி செய்வதற்குத் திட்டம் உள்ளது. இது சாத்தியமாவதாக வைத்துக்கொண்டால், எதிர்காலத்தில் இதே போல அஸ்டிராய்டுகளை இழுத்து வந்து செவ்வாயில் மோதும்படி செய்யலாம்.

செவ்வாயின் காற்று மண்டலத்தை அடர்த்தி கொண்டதாக மாற்ற முடியுமானால், பின்னர் இயற்கையும் கைகொடுக்கும். காற்று மண்டலம் அடர்த்தி அதிகரித்தால் செவ்வாயில் நீர் ஓடும்படி செய்ய முடியும். அப்போது செவ்வாயில் உள்ள உறைந்த பனிக்கட்டிகள் நீராக மாற வழி பிறக்கும். இவ்விதம் தோன்றும் மொத்த தண்ணீரானது செவ்வாயின் மேற் பரப்பில் 11 மீட்டர் ஆழத்துக்குப் பரவி நிற்கும் அள வுக்கு இருக்கும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.

யார் பொறுப்பு?

செவ்வாய் கிரக நிலைமைகளைப் பெரிய அளவில் மாற்றுவதற்கு அமெரிக்காவுக்கு அல்லது ரஷ்யாவுக்கு யார் அதிகாரம் அளித்தார்கள்? இவ்விதம் மாற்றுவது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. உள்ளபடி சந்திரன் மீதும் மற்றும் செவ்வாய், வெள்ளி முதலான கிரகங்கள் மீதும் இஷ்டப்படி யாரும் கைவைக்கக்கூடாது என்று உலக அளவில் 1979-ல் சர்வதேச அளவில் தடை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அது 1984-ல் அமலுக்கு வந்தது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சில ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகியவை அந்த உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஆனால், அதை அங்கீகரிக்கவில்லை. இந்த நாடுகள் அனைத்துமே பிற கிரகங்களுக்கு விண்கலங்களைச் செலுத்தும் திறன் படைத்தவை.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் செவ்வாயில் ஏதோ செய்யப் போக, அதன் ஒரு விளைவாக இதுவரை அறியப்படாத கிருமிகள் விண்கலங்கள் மூலம் செவ்வாயிலிருந்து பூமிக்குப் பரவினால் என்ன ஆவது.? நியாயமான கேள்வி. இத்தகைய கேள்விகளுக்கான பதில்களையும் விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

- என்.ராமதுரை, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/புரட்டிப்போடலாமா-செவ்வாய்-கிரகத்தை/article8665650.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.