Jump to content

சுந்தரத் தீவினுக்கோர் பாலமமைப்போம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நானும் என் துணைவியும் சில காலம் சென்னையில் வாழும்படி நேர்ந்தது. நான் எனது தூய தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் தயங்கிய காலப்பகுதி அது. அதையும் மீறிச் சிலவேளை என் இயல்பு மொழியில் நான் பேசினால் “என்ன நீங்கள் மலையாளம் பேசுறிங்களா?” எனச் சிலரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும்?

 

இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் காணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நான் தயங்கியதேயில்லை. இவ்வாறுதான் அன்று ஒருநாள் என் நண்பருடன் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் சென்னையைச் சேர்ந்தவர் அவருக்கு ஈழத் தமிழர் பற்றிய ஆழமான புரிதல் உண்டு. சங்க காலத்தில் பேசப்பட்ட பல சொற்கள் இன்றும் ஈழத்து தமிழில் உள்ளதை அவர் நினைவு கூர்ந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒருவர் “ உங்களுக்கும் சிங்களத்தமிழ் தெரியுமா?’’ என ஆச்சரியமாக அவரைக் கேட்டார். என் நண்பர் அவருக்கே உரிய விதத்தில் சரியான பதிலளித்தார். இன்னும் பலர் நாம் உரையாடுவதை வேடிக்கையுடன் பார்த்துச் சென்றனர்.

 

உண்மையை ஆராய்ந்து பார்த்தால் இவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. என்னைப் பொறுத்தவரையில் என்தமிழை, எந்தமிழரைப் பற்றி எழுதிய எனக்குப் பிடித்த கவிஞர் பாரதி எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் மீதும் எனக்கு மனவருத்தம் உண்டு.

 

“சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்

சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்”

 

என்று பாரதி எழுதியிருக்கக் கூடாது என்பது என் வாதம். பாரதியை அதுவும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் கவிஞனாக புகழப்படும் மகாகவி பாரதியை எப்படி விமர்சிப்பது? என்ற தயக்கம் எனக்கு உண்டு. இங்கு நான் யாரையும் விமர்சிக்க வரவில்லை. ஆனால் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த, வாழ்ந்துவரும் ஈழத்தை “சிங்களத்தீவு” என அவர் எதற்காகச் சொல்ல வேண்டும்?

 

“சுந்தரத் தீவினுக்கோர் பாலமமைப்போம்

சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்”

 

என்று பாரதி பாடியிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். தன் தேசிய ஒருமைப்பாட்டிற்காக தன் நாட்டை “ பாரத நாடென்றோ, ஆரிய நாடென்றோ” எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும் அதற்கான முழுச் சுதந்திரமும் அவருக்கு உள்ளது. அதைவிடுத்து என் அப்பா, அம்மா, அம்மம்மா, அப்பப்பா, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, கொள்ளுப்பாட்டன், கொள்ளுப்பாட்டி எனப் பரம்பரை பரம்பரையாக எம்மவர்கள் வாழ்ந்த என் தாய்த் திருநாட்டை “சிங்களத் தீவு” என்று சொல்லும் அதிகாரத்தை பாரதிக்கு யார் வழங்கியது.

 

இன்னொருவர் நான் முன்பே சொன்னதுபோல எழுத்தாளர் ‘சுஜாதா’ அவர்கள். ‘’என் இனிய இயந்திரா’’வை எழுதிய என் மனம் கவர்ந்த அதே ‘சுஜாதா’ தனது “ஒரு லச்சம் புத்தகங்கள்” என்ற சிறுகதையில்; “சிங்களத் தமிழர்” என்றே எம்மை அழைக்கிறார். இந்த உரையாடலை பாருங்கள்

 

“இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.

 

"நீங்கதானா செல்வரத்னம்?"

 

"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்."

 

“ சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்"

 

"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?"

 

யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வைச் சொல்லும் ஒரு சிறுகதையில் ஈழத் தமிழர்களை சிங்களத் தமிழர் என சுஜாதா ஏன் அழைத்திருக்க வேண்டும்.? இந்தச் சிறுகதையில் ஈழத்தமிழர்களை தமிழகம் நடத்தும் விதத்தை சுஜாதா அவர்கள் தோலுரித்துக் காட்டியிருந்தாலும் அவரின் ஈழம் பற்றிய வரலாற்று அறிவின்மையை இச் சிறுகதையில் காண முடிகின்றது.

 

என் மனம் கவர்ந்த இந்த இரு பெரும் இலக்கியவாதிகளின் இரண்டு படைப்புக்களினூடாக நான் சொல்ல விளைவது யாதெனில்; ஈழத்தமிழ், மற்றும் ஈழத் தமிழர் பற்றிய படைப்புக்களை படைப்பதற்கு  முன்னர் அவர்களைப் பற்றி அல்லது அவர்களின் வரலாறு பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள் என்பதேயாகும்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.