Jump to content

மானுடம் தோற்றிடுமோ!


karu

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1988ஆம் ஆண்டு வீரகேசரியினால் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை.

மீள் பிரசுரம் - 13-12-2015 ஞாயிறு வீரகேசரி வாரவெளியீடு
நன்றி வீரகேசரி.

மானுடம் தோற்றிடுமோ!

அந்த நள்­ளி­ரவில் தூரத்தே வெடிச்­சத்­தங்கள் கேட்­டன. குழந்­தைக்குப் பாலூட்டிக் கொண்­டி­ருந்த அவ­ளுக்கு நெஞ்­சுக்குள் சிலீ­ரென்­றது. வந்­திற்­றா­னுகள் ரவண்­டப்­புக்கு! இவர இப்ப என்ன செய்­யிற! என்ன மாதிரி ஒளிக்­கிற! - குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்­டி­ருந்த கண­வனைப் பார்த்தாள். மனம் கிடந்து பத­றி­யது. தற்­செ­யலா வந்து இவ­ரையும் கூட்­டிற்றுப் போனா­எ­னக்கும் என்ர புள்ளக் குஞ்­சு­க­ளுக்கும் என்ன கெதி! போட்டு அடிச்சுப் போடு­வா­னு­களோ தெரியா? இவர் அது­களத் தாங்­கவும் மாட்டார். - கண­வனை நினைக்க அவ­ளுக்குப் பரி­தா­ப­மாக இருந்­தது. இவ­ருக்கு என்­னவும் நடந்தா நான் எப்­பிடி அதத் தாங்­குவன்? அப்பா எங்க? எண்டு கேக்­கிற இந்தக் குஞ்­சு­க­ளுக்கு என்ன பதிலைச் சொல்­லுவன்? மனம் கிடந்து தவித்­தது. அவனை எழுப்­பவும் மன­மில்லை. பாவம் பகல் முழுக்க வேலை செய்து போட்டுக் களைப்­பில படுக்கார். எழுப்­புனா என்னக் காட்­டியும் உரமாப் பயந்து போவார்.

மீண்டும் பட பட பட் பட் டொம்! - சே! வெளி­யால போகோணும் போகவும் பய­மா­ரிக்கி. என்ன கரைச்சல் ராப்பா? எப்­பதான் இந்தச் சனியன் தொலை­யுமோ தெரியா? கட­வு­ளுக்கும் கண்­ணில்லை. - அலுத்துக் கொண்டாள்.

“இஞ்­சா­ருங்க!” - கண­வனை அழைத்தாள். அவன் ஏற்­க­னவே விழித்து விட்டான். என்ன? - என்று கேட்டான்.

“சத்தங் கேட்­டுதா?”

“ஓ! கேட்­டுது”

“நாய் குலைக்­குது கடு­மையா, றவுண்­டப்போ தெரியா, இப்ப என்ன செய்­யிற?” - அவள் கேட்டாள்.

“என்­னத்தச் செய்­யிற? சும்மா படு நடக்­கி­றது நடக்கும்.” அவன் திரும்பி அவள் மார்­ப­கங்­களில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். அவ­ளது இதயத் துடிப்பு அவ­னுக்குக் கேட்­டது.

“நீ என்­னத்­துக்குப் பயந்து சாகிறா? வாற­வனும் மனு­சன்தான் நாமளும் மனு­சர்தான். நடக்­கி­றத ஒரு­வ­ரா­லையும் தடுக்­கேலா வாறது வந்­துதான் ஆகும்.” - அவன் தத்­துவம் பேசினான். அவ­ளையும் சமா­தா­னப்­ப­டுத்தித் தன்­னையும் தேற்­றிக்­கொள்ள. அதை விளங்­கிக்­கொள்ளும் ஆற்றல் அவ­ளுக்­கில்லை. தெரிந்­தது தனது புரு­சனும் பிள்ளைக் குஞ்­சு­க­ளும்தான்.

“கொஞ்சம் வெளி­யில போகோணும் சத்தம் தூரத்­தி­லதான் கேக்­குது வாற­ியளா?” - அவனை அழைத்தாள்.

அவ­னுக்கு எரிச்சல் வந்­தது. பேசாம அடக்­கிற்றுப் படு. உனக்கு வாற­நே­ர­மெண்டா!” தத்­துவம் வாய­ள­வோடு நின்­று­விட்­டது. “அவ­னுக்கு மட்­டும்­தானா, ஆள்­ப­வ­னுக்கும் அப்­ப­டித்­தானே.”

அவ­ளுக்கு அவனை நினைக்கப் பாவம் போல இருந்­தது. பேசாமல் இருட்டில் தடவித் தட­விப்போய்க் கதவைத் திறந்தாள். தன்­னைப்­பற்றி அவ­ளுக்கு எப்­போதும் பய­மில்லை. புரு­சனை எண்­ணித்தான் பயம்.

அவ­னுக்கு மனம் கேட்­க­வில்லை. “தனியப் போறாளே!” பின்னாற் சென்றான்.

வந்து கதவைப் பூட்டப் போன­போது, இருளைக் கிழித்­துக்­கொண்டு இரா­ணுவ வாக­ன­மொன்று உறுமிச் சென்­றது. “சந்­தே­க­மில்லை றவுண்­டப்தான். யார் யாரைக் கொண்டு போகப் போறா­னு­களோ!” இரு வர் மனமும் அடித்துக் கொண்­டது.

குழந்­தை­களைப் போர்த்­தி­விட்டு விள க்கை அணைத்த போது இருளில் ஏதோ நிம்­மதி. பூனை கண்ணை மூடிக் கொள்­வ­துப்­போல இரு­வரும் இறுக்கி அணைத்துக் கொண்­டனர். உடலை இறுக்­கி­யதில் என்ன பயன்? ஊயிரைப் பிடிக்க முடி­யுமா?

அந்த இறுக்­கத்தை உணர்ந்து அவள் கேட்டாள், “என்ன பயமா இருக்கா? பயப்­ப­டா­தங்க, உங்­கள அவ­னுகள் கடை­சி­வ­ரையும் கேம்­புக்குக் கொண்­டு­போக நான் விட­மாட்டன்.” - அவ­னுக்கு வியப்­பா­யி­ருந்­தது. என்ன தைரி­யத்தில் இவள் இப்­படிக் கூறு­கிறாள்? என் ஒரு கைப்­பி­டியை”க் கூடத் திமிற முடி­யாத இந்தப் பெண்­மைக்கு என்னைக் காப்­பாற்றும் சக்தி எங்­கி­ருந்து வரும்! - அவன் சொன்னான் - “ஆயு­தத்­தோட வாற­வ­னிட்ட நாம என்­னத்தைச் செய்ய முடியும்.” - அவ­ளுக்கு அவன் கதை சிரிப்­பா­யி­ருந்­தது.

“ஓ! நீங்க பெரிய மல்யுத்த வீரர். என்னோட புடிக்கிற மல் யுத்தங்களப் பார்த்தத் தெரியுது.” -அவள் அவனைப் பரிகசித்தாள். அந்தத் திகிலிலும் அவன் ஆண்மை விழித்துக் கொண்டது. அந்த விடயத்தில் தான் அது விழிக்கும்……

அவர்கள் அந்த ஊருக்கு வந்து இரண்டு மாதங்­கள்தான் ஆகி­றது. வேலை மாற்றல் கிடைத்­ததால் அந்த நெருக்­க­டி­யான நிலையில் இரண்டு மாதக் கர்ப்­பி­ணி­யான தன் இளம் மனை­வி­யையும் இரண்டு குழந்­தை­க­ளையும் விட்டுப் பிரிந்­தி­ருக்க மன­மில்­லாமல் தன்­னுடன் அழைத்­துக்­கொண்டு வந்­து­விட்டான். அவ்வூர் ஆட்­களை அவ­னுக்கு அதிகம் பழக்­க­மில்லை. நாட்டுப் புதி­னங்­களால் அவன் யாரு­டனும் அதிகம் பேசிக் கொள்­வ­து­மில்லை. தற்­செ­ய­லாகப் பிடித்­துக்­கொண்டு போய்­விட்டால் உட­ன­டி­யாக உத­வி­செய்ய, வெளியே எடுத்­து­விட ஆட்கள் இல்லை. அதனால் வீணான அர­சியல் விவா­தங்­களில் கூட அவன் அதிகம் கலந்து கொள்­வ­தில்லை. விடிந்தால் வேலை, பின்­னேரம் தன் மனை­வி­யோடும் பிள்­ளை­க­ளோடும் கூட்டில் அடைந்து கொள்­ளுதல் என்ற குருவி வாழ்க்கை இப்­போ­தெல்லாம் அவ­னுக்கு மிகவும் பிடித்துப் போய்­விட்­டது.

“மனி­த­னுக்குப் புத்தி புகட்ட மரணம் ஒன்றே போது­மா­னது.” என்று ஒரு ஹதீஸ் சொல்­கி­றது. அது எவ்­வ­ளவு உண்மை. “மௌத்­தையே நீ மறந்து வாழ­லா­குமா…” - என்ற அந்தப் பாடலை வானொ­லியில் கேட்கும் போதெல்லாம் அவன் மெய் சிலிர்க்கும். அவ­னுக்கு இப்­போ­தெல்லாம் கடவுள் பக்தி அதிகம். அவ­னுக்கு மட்­டும்­தானா? பல­ருக்கும் தான்.

வறுமை அவனை அதிகம் உறுத்­தி­ய­தில்லை. ஆனால் மரண பயம் உறுத்­தித்­தான்­விட்­டது. தனி மனி­த­னா­யி­ருந்­தி­ருந்தால் அதுவும் அவனை அதிகம் உறுத்­தி­யி­ராது. ஆனால் பாசம் கொண்ட தந்­தை­யா­கவும், கண­வ­னா­கவும் மாறி­விட்­டானே! என்ன செய்­வது? என்றோ ஒருநாள் மரணம் வந்­துதான் தீரும் என்­பது உண்­மைதான். ஆனால் அது இன்றோ நாளையோ வந்து விடக் கூடும் என்ற நிச்­ச­ய­மற்ற நிலைதான் கொடி­யது. அதுவும் நீதியாய் நிய­தியாய் வராமல், அநீ­தியாய் அரக்­கத்­த­ன­மா­க­வன்றோ வரு­கி­றது.

இலட்­சியத் தீயில் தம்மை ஆகுதி செய்யும் எண்­ணற்ற இளம் நெஞ்­சங்­களின் முன்னே தான் ஒரு கோழையாய் இருப்­பதை எண்ண அவ­னுக்குச் சில வேளை­களில் வேத­னை­யா­கவும் இருக்கும். என்ன செய்­வது எல்லா விரல்­களும் ஒன்­றா­யி­ருப்­ப­தில்­லையே! வாழ்க்கை வாழ்­வ­தற்­காக, இலட்­சியம் வெல்­வ­தற்­காக அன்றேல் சாவ­தற்­காக. இலட்­சி­யத்தை எல்­லோரும் தம்­மீது திணித்­துக்­கொள்ள முடி­யுமா? அவ­ர­வ­ருக்கு அதது பெரிசு என்று யோசிப்பான். சமூக அநீ­தி­களைக் களைந்­தெ­றி­வதில் எல்­லோ­ருக்கும் பங்­குண்டு என்­பதை அவன் இய­லாமை நிரா­க­ரிக்கும். தானுண்டு தன் குடும்­ப­முண்டு, ஆளை­விடு என்று வாழ்ந்து விடு­வோ­மென்றால் அதற்கும் வழி­யில்­லையே என்று மனம் அங்­க­லாய்க்கும்.

“பெட்­டை­யி­னோ­டின்பம் பேசிக் களி­கொண்டு பீடை­யில்­லா­ததோர் கூடு­கட்­டிக்­கொண்டு முட்­டை­தருங் குஞ்சைக் காத்து மகிழ்­வெய்தி முந்­த­வு­ணவு கொடுத்­தன்பு செய்­திங்கு விட்டு விடு­த­லை­யாகி நிற்பாய் அந்த சிட்­டுக்­கு­ரு­வியைப் போலே..” - என்ற பார­தியின் பாடல் அவ­னுக்கு மிகவும் பிடித்­தி­ருந்­தது.

அப்­பா­டலை உணர்­வு­களால் உந்­தப்­படும் போதெல்லாம் ராகத்­தோடு அடிக்­கடி அவன் முணு முணுப்பான். சரா­சரி ஏழ்­மையில் உழலும் ஒரு சாதா­ரண கிர­கஸ்­த­னுக்கு இதை­விட வேறு கடமை என்ன இருக்­கி­றது? ஆனால் அந்த அன்­றாட வாழ்­வைக்­கூட மகிழ்ச்­சி­யாக வாழ முடி­ய­வில்­லையே! என்ன அநி­யாயம் என்று அலுத்துக் கொள்வான்.

“ஓ! அந்த உயர்ந்த கதி­ரை­க­ளி­லி­ருப்போர் எவ்­வா­றெல்லாம் எம்­போன்ற சாதா­ர­ணர்­களை ஆட்டிப் படைக்­கி­றார்கள்! மனி­த­வுள்­ளங்­க­ளையே மனி­த­வுள்­ளங்­க­ளுக்­கெ­தி­ராகக் கையில் ஆயு­தத்தைக் கொடுத்து ஏவி விடு­கி­றார்கள்!” - என்­பதை எண்ணும் போது ஒரு சிப்பாய் அன்­றொரு நாள் தெருவில் நடந்த செக்­கிங்கின் போது ஒரு இளை­ஞ­னிடம் கூறிய வார்த்­தை­களின் உண்மை புரியும்.

அன்று அந்­த­ரா­ணுவ வீரன் கொச்சைத் தமிழிற் சொன்னான் “அடோ அவங்­கெல்லாம் கொண்­பிரன்ஸ் வைக்­கி­றது, பாட்டி போடு­றது, கை குலுக்­கி­றது. நீயும் நானும் தாண்டா சாவு­றது. நாங்க வானத்­தில பறந்து பறந்து சாவு­றது நீ நாய்­மா­திரி சாவு­றது.” - அந்தக் கொச்சை வாச­கங்­க­ளிற்தான் எவ்­வ­ளவு உண்மை தொனிக்­கி­றது! உலகின் யதார்த்த நிலையை எவ்­வ­ளவு அழ­காக அச் சொற்கள் படம் பிடிக்­கின்­றன. “ஓ! மானு­டமே என்­றுதான் நீயுன்னை யாரென்று இனங்­கா­ணு­வாயோ?” - என்று அவன் மனம் அங்­க­லாய்க்கும்.

…..சூழ்­நி­லையின் ஆபத்தை மறந்து மனம் நிறைந்த திருப்­தி­யுடன் சோர்ந்து போய்க்­கிடந்த அவ­னது தலையைக் கோதி உடலைத் துவாயாற் துடைத்­த­வாறே, “ஹும் பாரிக்­குது எழும்­புங்க இதி­லெண்டா நீங்க வீரர்தான். என்று அவனைப் பாசத்­தோடு அவள் புகழ்ந்தாள். விலகி சிணுங்­கிய குழந்­தையை அணைக்கத் திரும்­பிய அவளின் இடையை இழுத்துத் தன்­னோடு இணைத்துக் கொண்டான். அவள் பிட­ரியில் அவ­ளது வெப்­ப­மான நெடு­மூச்­சொன்று விரவிச் சென்­றது. அவள் சிலிர்த்தாள். வெளியே இரா­ணுவ வாக­ன­ங்­களின் நட­மாட்டம் அதி­க­ரித்துக் கொண்­டி­ருந்­தது.

“என்ன? நித்­திர கொள்­ளு­றயா?” - அவன் கேட்டான். “நித்­திர எப்­பிடிக் கொள்­ளுற? இந்தப் பயங்­க­ரத்­தில.” - அவ­னுக்குக் கவ­லை­யாக இருந்­தது. “நம்­மட வீட்­டயும் வாறா­னு­களோ தெரியா… அப்­பிடி வந்து என்­னையும் கேம்­புக்குக் கூட்­டிற்றுப் போனா… நீ தனிய என்ன செய்வா? நெடுகக் காம்­புக்கு முன்­னால வந்து நிண்டு இந்தப் புள்ளக் குஞ்­சு­க­ளோட வெயில் வழிய காவல் காக்க உன்­னால ஏலுமா? அடிச்சுப் போட்­டெண்­டாலும் விடு­ற­துக்கு ஐஞ்­சாறு நாளா­கும்…­க­டு­மையாப் பயந்து போகா­த…­அப்­பா­வி­யளப் பெரும்­பாலும் விட்­டி­ரு­வா­னுகள், ஆனாத் தலை­யாட்டி முண்­டத்­துக்­குத்தான் பயம். சும்மா கிடக்­கிற நம்­ம­ளையும் பயத்­தில காட்டி விட்­டுற்­றெண்டா என்ன செய்­யிற? எல்­லாத்­துக்கும் கடவுள் இருக்­கார்­தானே.” - நிர்க்கதி­யான இய­லா­மையில் அந்த மூலத்திற் சர­ண­டைந்து அவன் கூறிய வார்த்­தைகள் அவ­ளது மென் மனதைத் தாக்­கிற்று. குழந்­தையை அணைத்­த­படி விசித்துக் குலுங்­கினாள். இந்த நெருக்­க­டி­யான நேரத்தில் இரண்டு மாதக் கர்ப்பி­ணி­யான அவளை தை­ரி­யப்­ப­டுத்­தி­விட்டுத் தன் தவறை உணர்ந்து முத்­த­மிட்டு அவளைத் தேற்­றினான்.

பல­வீ­னப்­பட்ட அந்த இரு உள்­ளங்­களும் எப்­படி ஒன்­றை­யொன்று தேற்ற முடியும்.

இறைவா! நீ மானு­டத்தை ஏன் படைத்தாய். அன்பை, காதலை, பாசத்தை ஏன் அதில் மேலும் அமைத்தாய். அதுதான் போகட்டும் நல்­ல­வற்­றோடு மட்டும் விட்­டி­ருக்கக் கூடாதா? சுய­ந­லத்தை, இன­வெ­றியை, அதி­கார போதையை இன்னும் எத்­தனை­ எத்­தனை கொடு­மை­களை இணைத்து விட்டாய்.

“ஓ! அந்த ஆதா­மும்­ ஏ­வாளும் செய்த பாவத்தின் சம்­ப­ளம்தான் இதுவோ! - அவன் கண்­களை மூடிப் பிரார்த்­தித்தான்.

“மானு­டத்தின் அனைத்துப் பாவங்­க­ளையும் நான் பொறுப்­பேற்­கிறேன். மானு­டமே நீ உன்னைத் தூய்மைப்படுத்­திக்கொள்.” - என்று சிலு­வையில் உயிர் மாய்த்த அந்தப் புனி­தனை எண்ணி ஒரு­தரம் சிலிர்த்துக் கொண்டான்.

அந்த சோக நாட்­களில் மானு­டத்தின் மன மத­கு­களூடே பாய்ந்த பக்திப் பிர­வாகம் மத வரம்­பு­க­ளை­யு­டைத்­தெ­றிந்து விட்டு எங்­கெல்லாம் பாய்ந்­தது என்­பது அனு­ப­வித்த அவ­ர­வ­ருக்­குத்தான் தெரியும்.

அவள் விசித்துக் கொண்டே சொன்னாள், “இப்­பிடிப் போட்டு வருத்­து­றதக் காட்டி ஒரே­ய­டியாக் குண்டப் போட்டு எல்­லா­ரையும் அழிச்சு விட­லாமே. ஒரு பாவ­மு­ம­றி­யாத உங்­க­ளை­யெல்லாம் கொண்­டுபோய் அடைச்சி வச்சி, கொடுமைப் படுத்தி, அதப் பார்த்து நாங்க மனம் புழுங்­கு­றதக் காட்­டியும், எல்­லோரும் ஒரு­மிக்கச் செத்தா ஒண்டும் தெரியா.” - அவள் திரும்பி அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். இரண்டு மாதக் கர்ப்­பி­ணி­யான அவள் மனங்­க­லங்­கு­வது அவ­னுக்குக் கவ­லை­யாக இருந்­தது. அதிர்ச்­சி­யாலும் பயத்­தாலும் தற்­செ­ய­லாக அபோ­ஷ­னா­கி­விட்டால் அதற்கு வேறு செலவு வேண்டும். அந்த மூன்றாவதும் அவர்­க­ளுக்கு அழையா விருந்­தா­ளிதான். எவ்­வ­ளவோ கவ­ன­மாக இருந்தும் பிழைத்து விட்­டது. “சிருஷ்­டிப்பைத் தடுக்க மனி­தனால் முடி­யுமா? அப்­ப­டி­யானால் அழி­வையும் தடுத்து விட­லாமே!”

வெளியே வாக­னங்­களின் போவதும் வரு­வ­து­மான உறுமல் சத்தம் தொடர்ந்து கேட்­டது. அழுகைக் குரல்கள் கேட்­கா­ததால் ஏதோ வந்­தி­ருப்­பது மனி­தர்­கள்தான் என்று தெரிந்­தது. அந்­த­ளவில் ஒரு நிம்­மதி.

நீ கவ­லைப்­ப­டாத, இந்தக் குழந்­தை­யள்ற முகத்தைப் பார்த்­திற்று என்ன விட்­டி­ரு­வா­னுகள்.” - என்று அவளைத் தேற்­றினான்.

பட பட வென்று கதவு தட்­டப்­பட்­டது. “ஏ! கதவைத் திற, இல்­லாட்டி உடைக்­கி­றது.” - என்ற ஆண­வ­மான குரல். இருளில் என்ன செய்­வ­தென்று அவ­ளுக்குப் புரி­ய­வில்லை. தட்­டுத்­த­டு­மாறி நெருப்புப் பெட்­டியை எடுத்து விளக்கைக் கொளுத்­தினாள். புயந்து பயந்து முன்­னுக்குப் போனாள். அவன் பின் தொடர்ந்தான். அவனை அவள் முன்­செல்ல விட­வில்லை.

மீண்டும் பட பட வென்று தட்டல். அதி­காரத் தோர­ணையில் திறக்­கும்­படி உத்­த­ரவு. இனி என்ன செய்­வது? எப்­ப­டியோ திறக்­கத்­தானே வேண்டும். திறந்தாள்.

டோர்ச் லைட் முகத்தில் ஒளி­பாய்ச்­சி­யது. முன்­னுக்கு நிற்­பது பெண்­ணென்­றதும் ஏனோ சற்றுத் தயக்கம். பின்னால் நின்ற அவனைக் கண்­டதும் வந்­த­வனின் கையில் பள­ப­ளத்த ஏகே47 கல­க­லத்து அவர்­களின் நெஞ்சை நோக்கி நீண்­டது.

“அடே! இங்க வா உனக்கு எத்­தினை வயசு?” அவ­னுக்குப் பேச நா வர­வில்லை. அவள்தான் பேசினாள். “அவ­ருக்கு முப்­பத்­தைந்து.” - கொஞ்சம் கூட்டிச் சொன்னாள்.

அந்தச் சோக நாட்­களில் வாலி­பத்­திற்­கி­ருந்த பல­வீனம் அவ­ளுக்குத் தெரியும். பெண்­மைக்கு, முது­மைக்கு, பாலி­யத்­திற்கு, ஏழ்­மைக்கு, அறி­யா­மைக்கு, ஊனத்­திற்­குத்தான் அந் நாட்­களில் பலம் அதிகம். வாலி­பத்­திற்கு, வலி­மைக்கு, வாட்­ட­சாட்­டத்­திற்­குத்தான் பெரும்­பாலும் அடி­யுதை, பூஸா (ஓர் தடுப்பு முகாம்).

வந்­தவன் சொன்னான், “காரி­ய­மில்லே போய் றோட்­டில ஆக்­க­ளோட நில்லு.”

தன் இளம் மனை­வியை இவ­னுடன் விட்­டு­விட்டு றோட்­டுக்குப் போவதா? - மனை­வியைப் பார்த்தான். பயமும் தவிப்­பு­மாக என்ன செய்­வ­தென்று தெரி­யாமல் தயங்­கினான்.

“அடோ! நீ போறது, இல்லே சூட் பண்­றது.” - வந்­தவன் துப்­பாக்­கியை நீட்­டினான்.

அவள் பெண்மை விழித்துக் கொண்­டது. ஏன் பயப்­பட வேண்டும். குறுக்கே வந்து நின்றாள். “அவர் என்­னத்­துக்குப் போகோணும் றோட்­டுக்கு? நாங்க அப்­பா­வியள்.” - அர­சியல் கலைச் சொற்கள் அவ­ளுக்குப் பத்­தி­ரிகை வாயி­லாகக் கொஞ்சம் பாடம். “நாங்க பயங்­கர வாதி­களில்ல.” கண­வனைப் போக விடாமல் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“எல்­லோரும் போறது, நீ மட்டும் பெரிய ஆள் என்­ன…­ரெண்டு பேரும் போ.” - அவன் இரு­வ­ரையும் தள்­ளினான்.

“வீட்­டுக்­குள்ள குழந்­தையள் இருக்கு நாங்க போகேலா.” - அவள் சொன்னாள்.

“எத்­தின பிள்ள? “ரெண்டு”

“எங்க காட்டு.” - அவன் உள்ளே சென்றான் படுத்துக் கிடந்த இரண்­டையும் பார்த்தான். “சரி சரி பேசாமப் படு வெளியே வர­வாணா” என்று சொல்­லி­விட்டுப் போய்­விட்டான்.

இரு­வ­ருக்கும் சற்று மூச்சு வந்­தது. அவ­ளது பல­வீ­ன­மான பெண்­மையின் பலம் அப்­போது அவ­னுக்கு விளங்­கி­யது.

பெண்­ணுக்கு, பிள்­ளை­க­ளுக்குப் பாது­கா­வ­லாக ஆணி­ருந்த காலம் போய், நமக்குத் துணை­யாக நம்மைக் காப்­பாற்ற மனை­வியும் குழந்­தை­களும் உதவ வேண்­டிய காலத்­தை­யெண்ண வியப்­பா­யி­ருந்­தது.

வந்­த­வ­னிடம் வாய்­பே­சக்­கூடச் சக்­தி­யற்று அவனை எம­னாக நினைத்துத் தான் நின்­ற­போது அச் சிப்­பாயின் மனி­தத்­தன்­மையை இனங்­கண்டு அவ­னுடன் வாதாடி அவனைத் திருப்­பி­ய­னுப்பி விட்­டாளே, பெண்­க­ளுக்கு இது இயல்­பான கலையோ! - தன் மனை­வியை அவன் பெரு­மி­தத்­தோடு பார்த்தான். கதவைப் பூட்­டி­விட்டு இரு­வரும் படுக்கப் போன­போது!

மீண்டும் கதவு தட்­டப்­பட்­டது. அவள்தான் வந்து திறந்தாள். “ஏ! எங்க புருசன்.” - புதி­ய­வனின் உறுமல் இரு­வ­ரையும் அதிர வைத்து விட்­டது. அறைக்­குள்­ளி­ருந்து பயந்து பயந்து அவள் பின்னே வந்து நின்றான்.

“அடே! றோட்­டுக்கு கூப்­பிட்டு ஏன் வரல்லே? வாடா இங்கே.” புதி­யவன் அவளைத் தாண்டி அவனைப் பாய்ந்து பிய்த்­தெ­றிந்­து­விட முயன்றான். அவள் குறுக்கே நின்று கொண்டாள்.

“அவரை நான்தான் றோட்­டுக்குப் போக விட­வில்ல..” “அவரை ஏன் அடிக்கப் போறயள்?” - அவள் கேட்டாள்.

அந்தக் கத எனக்கு வாணா ஏ! வாடா இங்க அவனை நோக்கி உயர்ந்த புதி­ய­வனின் சப்­பாத்துக் கால்கள் குறுக்கே விழுந்த அளைத் தாக்­கி­யது.

“அம்மா!” என்று அடி­வ­யிற்றைப் பொத்­தி­ய­படி கண­வனின் மார்பில் சாய்ந்தாள். வந்­தவன் சற்றுத் தடு­மா­றி­விட்டான்.

மனை­விக்கு ஏற்­பட்ட நிலையை எண்ண மனம் கொதித்­தது. என்ன செய்­வது? நம்­மி­ட­முள்ள ஒரே ஆயுதம் பொறுமை, பாது­காப்புக் கவசம் பயம், பணிவு என்று ஆகி­விட்ட பிறகு எப்­படி கொடு­மையைத் வீரத்­துடன் எதிர்­கொள்ள முடியும்?

“அவ புள்­ளத்­தாச்சி சேர் இரண்டு மாதம்.” - மனை­வியைத் தாங்­கி­ய­படி தைரி­ய­மாகக் கூறினான். அதற்கும் அந்த நாட்­களில் நிறையத் தைரியம் வேண்­டி­யி­ருந்­தது.

அடே! பொய் சொல்­லு­றது என்று உறுக்­கிய புதி­யவன் துவக்குச் சோங்கால் அவ­னது முது­குப்­பு­றத்தில் வந்து இடித்தான்.

“ஏன் சார் நான் பொய் சொல்ல வேணும்.” - என்­றவன் தன் கால்­களில் ஏதோ சொட்டுச் சொட்டாய் விழ… அடித்­த­வனைக் கவ­னி­யாது தன் மனை­வியின் முகத்தை நிமிர்த்­தினான். அவ­ளுக்கு அதிர்ச்­சியில் அந்த விடயம் நடந்­து­விட்­டது, அவ­னுக்குத் தெரிந்து விட்­டது.

மெது­வாக அவளைக் கதி­ரையில் இருத்­தி­ய­போது, நிலை­மையை உணர்ந்து கொண்ட சிப்­பாய்க்குத் தன் தவறு புரிந்­து­விட்­டது.

“ஏ மொக்­கத வுணே (என்ன நடந்­தது) - சிப்­பா­யிடம் மனி­தத்­தன்மை எங்­கி­ருந்தோ அப்­போ­துதான் வந்து சேர்ந்­தி­ருந்­தது.

“நங்கி (தங்கச்சி), வவுத்தில அடி ஒரமாப் பட்டது?” - சிப்பாய் மனிதன் தவித்துப் போய்க் கேட்டான். அவள் சோர்வோடு இல்லையென்று தலையாட்டினாள்.

“மட்ட சமாவெண்ட… (மன்னிச்சுக்கோ)” ஆஸ்பத்திரிக்குப் போகவேணுமா? ஜீப்பில கூட்டிப் போறது.”

அவளுக்கு விருப்பமில்லை. “நாளைக்குப் போகலாம் தேவல்லெண்டு சொல்லுங்க.” - கணவனிடம் கூறினாள்.

வந்­தவன் மீண்டும் இரு­வ­ரி­டமும் சமா­வெண்ட போட்டு விட்டு சகா­வுடன் தப்­பினோம் பிழைத்­தோ­மென்று போய்­விட்டான்.

அவனுக்கு நடந்ததெல்லாம் ஒரு கனவு போலத் தோன்றிற்று. அவளை அணைத்துக் கொண்டு “என்னம்மா செய்யுது,” என்று தவித்துப் போய்க் கேட்டான்.

அவள் சென்னாள் “பயப்படாதங்க எனக்கு ஒண்டுமில்ல. வயிற்றில அடிபடல்ல. தொடையிலதான் ஒரு உதை. ஆனா இப்பிடி நடந்திற்றுது. பயத்திலதான் இப்பிடி நடந்திருக்கு. நாளைக்குக் காலையில ஆஸ்பத்திரிக்குப் போவம்.”

வேதனையோடு சோர்ந்திருந்த அவளைத் தூய்மைப்படுத்த ஒரு தாய்போல் உதவிய அவன் மெதுவாக அழைத்துச் சென்று படுக்கையில் சேர்த்தான்.

“உங்களுக்கு அடி உரமா?” என்று அந்த வேதனையிலும் அவள் கேட்டாள். அவளைக் கவலைப்படவிடாமல் “சின்னதாய் ஒரு அடி.” என்று முதுகைக்காட்டினான். அவனுக்கு சிப்பாய் அடித்த அடி இன்னும் வலித்துக் கொண்டிருந்தது.

மானு­டத்தை மானு­டத்தால் தற்­கா­லி­க­மா­க­வேனும் வென்­று­விட்ட அந்த இரண்டு உள்­ளங்­களும் தாம் அடி­பட்ட அங்­கங்­களை பாசத்­தோடு ஒன்­றுக்­கொன்று தேய்த்­து­விட்டுக் கொண்டன.

- முற்றும் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கரு , இதற்குமேல் எதுவும் எழுதத் தோணவில்லை...இதுபோன்ற சிலவற்றைக் கடந்து வந்திருக்கின்றோம்....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி.  லைக் செய்த புங்கையூரானுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

எழுத்தாளர் பெயர் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் எழுதியதா கரு?

88ம் ஆண்டு இந்தக் கதை எழுதப்பட்டிருப்பதும் அது அன்றைய காலத்தில் ஒரு தமிழ் தினசரியில் பிரசுரிக்கப்பட்டிருந்ததும் ஒருவகையில் பிரமிப்பாக இருக்கிறது. 

அந்தக்காலத்தில் சிறுவனாய் ஊரில் நானும் இருந்திருந்தேன் என்றவகையில், இக்கதையினைப் படித்தபோது தோன்றிய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்தக்கதையில் 88ம் ஆண்டு ரவுண்டப்பிற்கு இலங்கை இராணுவம் ஏ-கே-47 எடுத்துவந்தது என்று வாசிக்கையில் என்னையறியாது, அவங்கள் அப்ப எஸ்.எல்.ஆர் எல்லோ கொண்டு வருவாங்கள் என்று தோன்றியது. நான் இராணுவ வல்லுனரோ பயிற்சி பெற்ற போராளியோ இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் வௌ;வேறு துப்பாக்கி வெடிக்கும் ஓசைகளை இனம்பிரித்துத் துல்லியமாகக் கூறக் கூடிய ஆற்றல் பலரையும் போல எனக்கும் இருந்தது. வெடி எழுப்புவது இராணுவமா இல்லையா என்பதை அறிவது உயிர்தப்புவதற்கு அவசியம் என்பதால் அப்படி இருந்தது. எஸ்.எல்.ஆர் வேட்டொலிகள் மத்தியில் இயக்கத்தின் வெடிகளும் கேட்கின் மனதில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழும்—எங்களை இராணும் இலகுவில் அணுகிவிடமுடியாது, எனவே அவசரப்பட்டு நாங்கள் பற்றைகளிற்குள் ஓடத்தேவையில்லை என்ற உணர்வில் தோன்றும் சுயநல நிம்மதி அது. அனுபவம் சார்ந்து மேற்படி பொருட்பிழை மனதின் முன்னிலைக்கு வந்தது ஒரு காரணம் என்றால், அரசியல் சார்ந்த இன்னுமொரு காரணமும் இருக்கவே செய்கிறது.

அதாவது, இந்தக் கதையில் காட்டுமளவிற்கான சொற்ப மனிதாபிமானத்தைத் தன்னும் சிங்கள இராணுவத்திற்குத் தர மனம் இன்னமும் சம்மதிப்பதாய் இல்லை என்பதே அந்த அரசியல். அதன் காரணம், நாங்கள் அரசியலிற்குள் வளர்ந்தவர்கள். பிரச்சாரங்களை மட்டுமே நுகர்ந்;ததால், சில வரிகள் எங்களை அறியாது இப்போதும் எங்களைப் பிரச்சார மனநிலைக்கு எடுத்துச் சென்றுவிடுவதனை இக்கதையினை வாசிக்கும் போது உணர்ந்தேன். இன்று என்னால் இந்தக் கதை எழுத்தாளரின் அடிமனதின் ஓலத்தை,ஆதங்கத்தை,விருப்பத்தை அப்படியே புரிந்து கொள்ள முடிகிறது என்பதற்கப்பால் ஆதரிக்கவும் முடிகிறது. ஆனால், இன்றைய தேதியில் கனடாவில் இருந்து வாசிக்கும் போது கூட, எழுத்தாளரின் அடிமனதின் ஏக்கத்திற்குள் எடுத்த எடுப்பில் செல்ல முடியாது கதையில் பிழைகளும் அதைச்சாhந்து கதையினை நிராகரிக்கும் எண்ணமுமே முதலில் எனக்குள் எழுகிறது. இன்றைக்கு கனடாவில் இப்படி என்றால், 88ல் ஈழத்தில் இந்தக் கதை, தமிழர் மத்தியில், செல்லாக்காசாகவே இருந்திருக்கும். எங்களைப் பயங்கரவாதிகள் என்ற சொல் மட்டும் கொண்டு திருப்பத்திருப்ப அழைத்ததனால் எங்களிற்குள் சிங்களம் உருவாக்கிய மனநிலை இது மட்டுமே.

நாங்கள் கண்பார்;க்கப் பொதுமக்களளைக் கொலைசெய்து விட்டு லங்காபுவத் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கும் சூழ்நிலையில் வாழ்ந்த சிறுவனிற்குக், கர்ப்பிணியினை உதைத்த இராணுவம் மன்னிப்புக் கேட்டது என்ற கட்டத்தைத் தாண்டிக் கதையின் நோக்கத்தினைப் பார்ப்பதற்கு இன்றைக்குமே முயற்சி தேவைப் படுகிறது என்கையில் அன்றைய நிலையில் இந்தக்கதை நிச்சயம் நிராகரிக்கப்பட்டிருக்கும். ஒருவேளை வீரகேசரியில் அன்றைக்கு இது பிரசசுரமாவதற்கான சாதத்தியம் கூட இதனால் தான் எழுந்ததோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதாவது கதையினை நிராகரித்தது எங்கள் தப்பு மட்டுமல்ல, சிங்களம் எங்களை அந்த மனநிலையில் தான் வைத்திருக்க விரும்பியது—அப்போது தானே எங்களை அழித்தொழிக்கும் அவர்களது பேரினவாத ஆசை சாத்தியப்படும்.

ஆனால் நிச்சயமாக இன்றைய தேதிக்கு இந்தக்கதை பொக்கிசம். சிங்களத்தின் பிரச்சாரத்திற்கு எதிர்வினையாற்றும் அரசியல் சூழ்நிலை மட்டுமே எமக்குள் அன்றிருந்ததை மீளுணர்வதற்கு இக்கதை உதவும். எங்கள் கற்பனைகளைக் கூட சிங்களம் நிர்ணயித்த ஒழுங்கில் மட்டும் நாம் வைத்திருந்த உணரா நிலையினை உணர்வதற்கு இக்கதை உதவும். இந்தக் கதைக்குள் வருகின்ற ஒரு வரியான 'மனிதரின் அனைத்துப் பாவங்களினையும் நான் ஏற்கிறேன் என்று சிலுவை ஏறிய' கதை, மத வேறு பாடுகளிற்கப்பால், பாவ புண்ணிய நம்பிக்கைகளிற்கு அப்பால், மயிர்க்கூச்செறியச் செய்கிறது. குறிப்பாக இந்தக் கதைக்குள் அது பாவிக்கப்பட்ட விதம் அருமையாக இருக்கிறது. (அதே நேரம், இதை ஒத்த அல்லது இதைக்காட்டிலும் மேலான தியாங்களை எமது உறவுகள் எங்களின் கண்முன்னே அன்று நிறையவே, அதுவும் தமது மக்கள் மீதிருந்த அன்பால் செய்து கொண்டிருந்தார்கள் என்பதும் கவனிக்கப்படவேண்டியது--ஒரே ஒரு வித்தியாசம் எதிரி சார்ந்த எமது பார்வை எதிரியால் கட்டமைக்கப்படதாய் மட்டுமானதாய் இருந்ததது.). 88ம் ஆண்டில் இத்தகைய வகையில் உணர்ந்தவர்கள் எமக்குள் இருந்தார்கள் என்பதும் பெருமையாக இருக்கிறது. ஆனால் அப்படியான சிந்தனைகள் அன்றையத் தேதியில் சுதந்திரமாய்த் தமிழர் மத்தியில் முன்னிடம் பெற முடியாமல் போனமைக்குப் புலிகளை மட்டும் காரணம் காட்டி எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. ஒரு சமூகமாக எங்களது தன்மை அது. புலிகள் மீது பலர் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மேற்படி குற்றச் சாட்டாளார்கள் உள்ளடக்கமாகப் பெரும்பான்மைத் தமிழ்க் குடுப்பங்களிற்குள் இருக்கும் மனவவைப்பு. எதிரி—அது வேலிச் சண்டையால் உருவான பக்கத்து வீட்டுக்காரனாகத் தானிருப்பினும்—என்று வந்து விட்டால் பின்னர் அந்ததத் தரப்பினை அந்த ஒரு சொல்லிற்குள் மட்டும் சுருக்கிக் கொள்வது எமது இயல்பு. அப்பாவினை எதிரியாகப் பார்த்த மகன்கள் இருக்கிறார்கள் என்கையில் சிங்களம் சார்ந்து எமக்கிருந்த மனநிலை ஒன்று பிரமிப்பி;ல்லை.

கடந்த காலத்தைப் பற்றி பிழை பேசுவதில் எந்த நன்மையும் எவரிற்கும் இல்லை. ஆனால், இந்தக் கதையினைப் போன்ற விவாதங்கள் சார்ந்து கடந்த காலத்தை நாங்கள் எங்கள் மட்டத்திலேனும் பிரத்தியேகமாகவேனும் மீள வாசிப்பது ஒரு சமூகமாக நாங்கள் முன்னேறுவதற்கு மிக அவசியம்.

அறிவிற்கு எங்களிற்குள் எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை. மேற்படி கதை றஸ்சியாவில் நடந்தாகக் கூறி ஒரு மொழிபெயர்ப்பாக எங்களிற்குத் தரப்பட்டிருப்பின் கதையின் ஒவ்வொரு இழையினையும் பிரித்து மேயும் அறிவு 88ல் களத்தில் நிறையவே இருந்தது. ஆனால், எமது களம் என்று வரும் போது நாம் உணர்ச்சிகளால் மட்டுமே என்றும் கட்டப்பட்டிருந்தோம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்து இலட்சியக் கதையாக இருக்கும் என்று உடனேயே வாசிக்கவில்லை. சிறந்த சிறுகதையை வாசிக்கத் தூண்டிய இன்னுமொருவனிற்கு நன்றி.

சிங்கள இராணுவம் மனிதாபிமானம் காட்டியதாக உள்ள இந்தக் கதை 88இல் பிரசுரிக்கப்பட்டது ஆச்சரியம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கதையைப்பற்றி மிகநீண்டதொரு விமர்சனத்தை முன்வைத்த இன்னொருவனுக்கும், சிறந்த சிறுகதையென்று பாராட்டிய  கிருபனுக்கும் முதற்கண் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  கதை என்னுடையதுதான்.   நான் வேறுயாருடைய ஆக்கங்களையும் யாழில் பதிவிடுவதில்லை.  அந்தக் காலத்தில் ஏகே 47 யை இராணுவத்தினர் பாவிக்காதிருந்திருந்தால் அப்படி நான் எழுதியிருக்க முடியாது.  என்னைப் போல அந்தக்காலத்தில் எல்லோருக்கும் பொதுவாக ஏகேயைத் தெரிந்திருந்தது. அதை இராணுவத்தினரும் பாவித்தார்கள், இயக்கத்தினரும் பாவித்தார்கள்.     மேலும் சாபதரண மக்களிடம் அந்தக்காலத்திலிருந்த ஒற்றைக் கான் இரட்டைக்கான் துப்பாக்கிகளுக்கும், பொலீஸார் வைத்திருந்த பழைய ரக ரைபிள்களுக்கும் அடுத்த படியாக அதிரடிப்படையினரின் பாவனைக்கு முதலில் வந்து பலராலும் சிலாகிக்கப்பட்டது ஏகேதான்.  ஒரு கதாசிரியனாக நானறிந்த ஏகேயை கதையில் குறித்தபோது, யாரும் அதை மறுத்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆகவே அங்கே பொருட்பிழையென்று கூற எதுவும் இல்லையென்று நினைக்கிறேன்.

அடுத்ததாக கதையின் தலைப்பே ‘மானுடம் தோற்றிடுமோ!‘ என்று விழிப்புக்குறியோடுதான் இருக்கிறது.  அங்கே அந்த  சந்தேகத்தி்ற்குத்தான் முக்கியத்துவம் அதிகம்.  அந்த நிர்க்கதியான நிலைமையில் மானுடம் அடியோடு தோற்றுவிடக் கூடாது என்ற ஆதங்கத்தை அந்தக் கதை வெளிப்படுத்த முயல்கிறதேயன்றி, மானுடம் வென்றுவிட்டதாகக் காட்டப்படவில்லை.  கதையின் சம்பவங்கள் மானுடத்திற்கு எதிரானதாகவே பெருமளவில் காட்டப்பட்டு்ள்ளன. .  கதையின் கடைசி வரியை மிகவும் எச்சரிக்கையோடு ,எந்த இடத்திலும் சமநிலை வழுவாமல் ‘மானு­டத்தை மானு­டத்தால் தற்­கா­லி­க­மா­க­வேனும் வென்­று­விட்ட அந்த இரண்டு உள்­ளங்­களும் தாம் அடி­பட்ட அங்­கங்­களை பாசத்­தோடு ஒன்­றுக்­கொன்று தேய்த்­து­விட்டுக் கொண்டன.‘ என்றுதான் முடித்திருக்கிறேன்.    மற்றும்படி நிரந்தரமாக மானுடம் தோற்றுவிட்டதாகவோ அல்லது வென்றுவிட்டதாகவோ கூறவில்லை.  இதை இதற்குமேல் விபரிப்பது கடினம்.  அவரவர் தம் இயல்புக்கேற்ப உணர்ந்து விளங்கிக்கொள்ள வேண்டிய விடயமிது.    தங்கள் இருவரின் கருத்துக்கும் மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.