Jump to content

இரண்டாம் முள்ளிவாய்க்கால்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் முள்ளிவாய்க்கால்

- சிவா சின்னப்பொடி

sri-lanka-war-zone.jpg

இந்தத் தொடர் எவரையும் எந்த அமைப்பையும்  நியாயப்படுத்துவதற்கோ எவர் மீதும் எந்த அமைப்பின் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுவதற்கோ எழுதப்படுவதல்ல. இது முள்ளிவாய்க்காலின் பின்னரான பின்போர் சூழலில் நடந்துவரும் பிழைப்பவாத அரசியலை  கட்டுடைப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்த தொடரை நடுநிலை என்ற போலியான பொய்யான கருத்தியில் வெளிப்பாட்டு முறையில் நின்று எழுதவில்லை.நடுநிலை என்று ஒன்று இந்த உலகத்தில் இருக்க முடியாது என்று உறுதியாக நம்புவன் நான்.

ஓரு கருத்தின் கருத்தியல் பெறுமதியை தான் வாழும் சமூகத் தளத்தில் அதிலும் எப்போதும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் பரந்துபட்ட மக்கள் தளத்தில் இருந்து பார்க்கவேண்டும், அந்த சமூகத்தின்-மக்களின் குரலை அந்த கருத்து அந்த எழுத்து பிரதிபலிக்க வேண்டும் என்கின்ற சமூக பிரதிபலிப்பு முறையை பின்பற்றுபவன் நான்.

எனது இந்தத் தொடர் முழுவதையும் அந்த முறையிலேயே அதாவது பௌத்த சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்குள்ளான எமது மக்களின் தளத்தில் இருந்தே எழுதுகிறேன்.

இந்த தொடரை காய்தல், உவர்த்தல் இன்றி படிப்பவர்களை, அறிதல் – தெளிதல் – வினையாற்றல் என்ற மூன்று செயற்பாட்டு தளத்துக்கு அது கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஈழத்தமிழர்களாகிய நாம் முதலில் வாழ்வதற்காக போராடுவோம்…

பின்னர் போராடுவதற்காக வாழ்வோம்….

கடந்த கால தவறுகளை திருத்துவதற்காக ஆக்கபூர்வமாக விமர்சிப்போம்..

எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமல் தடுப்பதற்காக உண்மையான சுயவிமர்சனத்தை முன்வைப்போம்.

நன்றி

சிவா சின்னப்பொடி

 முரண்பாடுகளை புரிந்து கொள்வது பற்றி…

 ‘தியாகியும் எதிரியும் துரோகியும் ஒருபோதும் வானத்தில் இருந்து அவதாரம் எடுத்து குதித்து வருவதில்லை. அதேபோல யாரும்  பிறக்கும் போதும் இந்த அடையாளாங்களுடன் பிறப்பதில்லை’

 

0000

ஒரு விடுதலைப்போராட்டம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கின்ற பொழுது போராடிய தரப்புக்கு அடுத்த கட்டமாக இரண்டு தெரிவுகள் தான் இருக்கும்.

ஒன்று சரணாகதி அரசியல்; மற்றது சமரச அரசியல்

மக்களின் விடுதலைக்காக உண்மையாக போராடிய எந்தவொரு விடுதலை இயக்கமும் ஒரு போதும் சரணாகதி அரசியலை ஏற்றுக்கொள்வதில்லை.

பிழைப்பவாத மற்றும் சந்தர்ப்பவாத அமைப்புகளாக மாறிப் போய்விட்ட விடுதலை இயக்கங்கள் தான் மக்களுக்காக மக்களின் நலனுக்காக என்று ஆயிரம் விளக்கங்களை கூறிக்கொண்டு எதிரியிடம் சரணடைந்து போராட்டத்தையும் அதற்காக உயிர் கொடுத்த போராளிகளின் உயிர்தியாகத்தையும் இரத்தம் சிந்திய போராளிகளின் அர்ப்பணிப்பையும் காட்டிக்கொடுத்து பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும்.

இவ்வாறான ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் உண்மையாக மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலை இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட அமைப்பையும் தற்காத்து கொள்வதற்காக சமரச அரசியலை தேர்தெடுக்கும்.

சமரச அரசியல் என்கிற போது எதிரியிடம் சமரசம் செய்வதல்ல.அது எதிரியின்; எதிரியுடன் சமரசம் செய்து கொள்வதாகும்..இதற்கு உதாரணமாக 1988-1999 களில் இந்திய அமைதிப்படையின் யுத்த முன்னெடுப்பின் போது விடுதலைப் புலிகள் பிரேமதாசாவுடன் சமரசம் செய்து கொண்டதை குறிப்பிடலாம்.இந்த சமரச அரசியலின்  போது விடுதiலை இயக்கங்கள் தங்கள் போராளிகளையும் போராட்டத்துக்கான வளங்களையும் ஓய்வு நிலையில் வைத்துக் கொண்டு தங்களது ஆதரவு சக்திகளை களம் இறக்கவேண்டும்.இது கூட எதிரியை அவனது வழியில் சென்றுபலவீனப்படுத்தும் யுத்த தந்திரவகையை சேர்ந்தாகும்.

மக்களின் விடுதலை என்ற இலக்கில் உறுதியாக நிற்கும் எந்த வொரு விடுதலை இயக்கமும் விடுதலைப்போராட்டம் மிகப்பெரிய தோல்வியை அழிவை சந்தித்த காலகட்டத்தில் எதிர்பரசியலை முதன்மைப்படுத்துவதில்லை. இப்படி முதன்மைப்படுத்துவது  தற்கொலைக் கொப்பானது என்பது அந்த இயக்கங்களின் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தெரியும். இப்படி பலவீனமான நிலையில் எதிர்பரசியலை முன்னெடுக்கும்  போது எதிரி எஞ்சியுள்ள போராட்ட சக்திகளையும் வழங்களையும் இனங்கண்டு துடைத்து அழித்துவிடுவான்.

இதை சுலபமாக புரிந்து கொள்ளும்படி சொன்னால் ஒரு ஐம்பது இராணுத்தினர் எந்தேரமும் சுடவதற்கு தயாரான நிலையில் நிற்கும்   போது ஒரு இரண்டு போராளிகள் ஒரு ஒரு வில்லுக்(சிறு)கத்தியுடன் சென்று ‘உங்களை கொல்லுவோம் வெட்டுவோம் குத்துவோம்’ என்று வாயச் சவடால் விட்டால் அவர்களை மட்டுமல்ல அவர்கள் தங்கியிருந்த வீடு கிராமும் அங்கிருந்த ஆட்கள் என்று துடைத்தழித்துவிடுவார்கள்.அவர்களை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இருக்காது.

ஆனால் நமக்கு முள்ளிவாய்க்காலில் நடந்ததைப் போல, ஓரு பேரவலம் நிகழ்ந்த சூழ்நிலையில்  அதன் பாதிப்பிலிருந்து மக்கள் மீழுவதற்கு முன்பே எதிரி தனது உளவுத்துறையை வைத்து தீவிரமான எதிர்ப்பரசியலை முன்னெடுப்பான்.

இந்த எதிர்பரசியல் தளத்தில் களமிறக்கப்படும் உளவாளிகளும் அவர்களது முகவர்களும் அதிதீவிரமான போராட்டக் கருத்துக்களை மக்கள் முன் வைப்பார்கள். அனல் பறக்கும் வீர வசனங்களும் கொள்கை விளக்கங்களும் மக்களே வியந்து போகும் அளவுக்கு அவர்கள் முன் வைக்கப்படும்.புதிய திட்டங்கள் புதிய செயற்பாடுகள் என்று எல்லாவற்றையும் விரைந்து உடனடியாக செய்ய வேண்டும் என்று வேகம் காட்டப்படும்.

இந்தப் பரபரப்பு வேகம் கொள்கை விளக்கங்களுக்கு ஊடாக கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே விடுதலைச் செயற்பாட்டில் இருந்தவர்களைப்பற்றியும் போராளிகளைப் பற்றியும்  பொய்யான வதந்திகளை பரப்புவதும் சேறடிப்பதும் நடக்கும்.எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்கள் உண்மைபோல பரப்பப்படும். ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைப்பதாக சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுப்புகள் நடக்கும்.இதற்கென ஊடகங்கள் விலைக்கு வாங்கப்படும்.போலியான இணையத்தளங்கள் இணையப் பத்திரிகைகள் உருவாக்கப்படும்.இந்தப் போலிகள் தாங்கள் தான் நூற்றுக்கு நூறு விதம் உண்மையானவர்கள் என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருப்பார்கள்.

மக்களுக்கு யாரை நம்புவது என்று குழப்பம் ஏற்படும். உண்மையான போராட்ட சக்திகளுக்கு இதனால் ஆத்திரம் ஏற்படும்.

எதிரியின் நோக்கம் மக்களை குழப்பி போராட்டத்தளத்தில் இருந்து அவர்களை அந்நியப்பட வைப்பது,மறைந்திருக்கும் உண்மையான போராளிகளை வெளியே வரவைப்பது. அவர்களை சீண்டுவதன் மூலம் ஆத்திரப்பட வைத்து வன்முறையில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளுவது

அப்படி அவர்கள் ஆத்திரப்பட்டு இவர்கள் மீது கைவைக்கச் செய்யும்  அல்லது இவர்களை எச்சரிக்கும் நிலையை திட்டமிட்டு உருவாக்கி பின்னர் அதை அந்ததந்த நாடுகளிலுள்ள காவல்துறைக்கு எங்களிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள்.எங்களது ஜனநாயக செற்பாட்டை குழப்புகிறார்கள், எங்களை கொலை செய்யப் போவதாக மிரட்டுகிறார்கள் என்று புகார் கொடுப்பது..இந்த புகார்களை பதிவு செய்யும் காவல்துறையினரை விடுதலை இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதற்கான ஆதாரமாக இவற்றை சேர்த்துக் கொள்ள செய்வதாகும்.

ஓரு விடுதலைப் போராட்டம் தோல்வியை தழுவியபின் என்ன நடக்குமோ அத்தனை விடயங்களும் நமது போராட்ட தளத்திலே முள்ளிவாய்க்காலின் பின்னர் இங்கே புலத்திலே நடந்தன-இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த இடத்திலே நமது போராட்ட சூழ்நிலையிலே இங்குள்ள சிலர் குற்றம்சாட்டுவதைப் போல தடுப்பிலிருந்த போராளிகளை சிறீலங்கா அரசு விலைக்கு வாங்கி இங்கு குழப்பங்களை ஏற்படுத்த இங்கு அனுப்பி வைத்திருக்கலாம் தானே அவர்களை எப்படி நம்புவது என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.

இதற்கான  தெளிவை  போராளி என்பவர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலில் இருந்து பெறலாம் என்று நினைக்கிறேன்.

போராளிகள் பொழுது போக்குக்காக ஆயுதம் தூக்கியவர்கள் அல்ல.தாங்கள் தூக்கிய ஆயுதத்தால் தங்களுக்கு பட்டம் கிடைக்கும் பதவி கிடைக்கும் அல்லது தங்களது  குடும்பங்களுக்கு பொன்னும் பொருளும் கிடைக்கும் அல்லது தாங்கள் புலம் பெயர்ந்து வந்தால் அகதி அந்தஸ்த்து கிடைக்கும் என்று எண்ணி களம் சென்றவர்கள் அல்ல அவர்கள். விடுதலை ஒன்றையே நேசித்து அதற்காக இளமையின் ஆசாபாசங்களை துறந்து கல்வியை துறந்து பெற்றொர் உற்றோரின் அரவணப்பை துறந்து இரத்தம் சிந்தி சாவின் விளிம்புக்கு சென்று வந்தவர்கள் அவர்கள்.இது அனைத்து இயக்க போராளிகளுக்கும் பொருந்தும்.

ஓரு உண்மையான  போராளி எப்போதும் போர் குணத்தோடு தொடர்ந்து செயற்படுவான், அது முடியில்லை என்றால் ஒதுங்கிப் போவானே தவிர போராட்டத்துக்கு துரோகம் செய்யமாட்டான். அதற்கு அவனது மனச்சாட்சி இடங்கொடுக்காது.விதி விலக்காக சிலர் இருக்கலாம். ஒரு போராட்டத்தில் அவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருப்பார்கள்.

அதேபோல உண்மையான  போராளிகள் யாரையும் துரோகிகள் என்று சொல்லமாட்டார்கள் . யாரையும் காட்டிக்கொடுக்கமாட்டார்கள்

சக போராளி தன்னை அடித்தால் கூட அதை புலம் பெயர்ந்த நாட்டு காவல்துறைக்கு திரித்துச் சொல்லி தாங்கள் சார்ந்த விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அடையாளப்படுத்த  இடமளிக்கமாட்டார்கள். ஊடகங்களில் பொய்யையும் புரட்டையும் எழுதி மக்களை குழப்பி பேராட்ட தளத்தில் இருந்து ஒதுங்கும் படி செய்ய மாட்டார்கள். இயக்கத்தினுடைய எந்த வொரு ஆவணங்களையும் சொத்துக்களையும்  தங்களது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தமாட்டார்கள் இயக்க பொறுப்பாளர்களின் மின்னஞ்சல்களை உடைத்து   தகவல்களை திருடி இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தவர்களை பகிரங்கப்படுத்தமாட்டார்கள்.இவையெல்லாம் ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் அவர்கள் எடுத்த சத்திய பிரமாணத்துக்கு எதிரானது என்று அவர்களுக்குத் தெரியும்.

இவற்றையெல்லாம் யார் செய்யவில்லையோ அவர்களே உண்மையான போராளிகள் என்றும் மற்றவர்களை போராளிகளின் முகமுடியணிந்த ‘பேராளிகள்'(பேரை பயன்படுத்துபவர்கள்) என்றும் நாம் சுலபமாக இனங்கண்டு கொள்ளலாம்.

இது எதோ நமது விடுதலைப் போராட்டத்தில் மட்டும் தான் இவ்வாறு நடந்தது- நடக்கிறது என்று நாங்கள் எண்ணிவிடக்கூடாது.கொலம்பியா பிலிப்பைன்ஸ் மேற்கு சஹாரா, கிழக்கு தீமோர், பலஸ்தீனம் என்றும் பல்வேறு நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் அவர்களது எதிரிகளால் நசுக்கப்பட்ட காலங்களில் இந்த எதிர்ப்பரசியல் அணுகு முறைதான் கையாளப்பட்டது. அந்த விடுதலைப் போராட்ட தளங்களிலே குழப்பங்களும் பிளவுகளும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கோலாச்சி மக்களை சலிப்படைய வைத்தன. நிறைய போராளிகள் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள் அல்லது கொலை செய்யப்பட்டார்கள்.ஏராளமான போராளிகள் அவர்கள் புலம் பெயர்ந்து மறைந்திருந்த நாடுகளில் இருந்து நாடுகடத்தப்பட்டார்கள்.

இந்த நெருக்கடியை  அந்த விடுதலை இயக்கங்கள் எவ்வாறு கையாண்டன. எப்படி அதிலிருந்து மீண்டன என்பதற்கு நிறைய முன் உதாரணங்கள் இருக்கின்றன.நான் அவற்றில் இருந்த அரசியலை மட்டும் தான் எடுத்துக்கொள்கிறேன்.

முதலாவது இந்த எதிர்ப்பரசியலை முன்னிடுப்பவர்கள் எவ்வளவு ஆத்திரமூட்டினாலும் நிதானத்தை இழக்கமால் அமைதியாக இருப்பது.

மக்களோடு மக்களாக இருந்து(அது ஒரு சிறிய தொகையாக இருந்தாலும்) சொல்லிலும் செயலிலும் நடத்தையிலும் நேர்மையையும் ஒழுகக்தையும் வெளிப்படுத்துவது.எதிரியினுடைய முழு நோக்கமும் போராளிகளை பொது மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி அவர்களை வெறுக்க வைப்பது. ஆதன் மூலம் இந்தப் போராட்டமே எங்களுக்கு தேவை இல்லை என்ற முடிவுக்கு அவர்களை வரவைப்பது.இதற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் இடமளிக்கக் கூடாது. இதை முறியடிப்பதற்கு போராளிகள் எப்போதும் பொது மக்களை நோக்கிச் செல்ல வெண்டும்.அவர்களிலேயே தங்கியிருக்க வேண்டும் .அவர்கள் வெறுத்தாலும் ஏசினாலும் பணிவேடு அவற்றை எதிர் கொள்ள வேண்டும்.

பொது மக்கள் மத்தியில் இருக்கின்ற சந்தேகங்கள் என்ன என்பதை கண்டறிந்து அவற்றை தீர்த்துவைப்பதற்கான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய விடயங்களுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

முதலில் பொது மக்களில் மாவீரர் குடும்பங்கள் போராளி குடும்பங்கள் போரில் அதிகளவு இழப்புக்களை சந்தித்த குடும்பங்கள் போராட்டத்துக்கு பெரும் பங்களிப்புச் செய்த குடும்பங்களை முதலில் தேர்ந்தெடுத்து அவர்களை சந்தித்து அவர்கள் மனதில் விதைக்கப்பட்ட சந்தேகங்களை போக்க வேண்டும்.எதையும் அவர்களுக்கு மறைக்கக் கூடாது.மக்களின் மனங்களை வெல்வது தான் ஒரு போராட்டம் தோற்றுப் போன காலத்தில் எதிரி முன்னெடுக்கும் எதிர்பரசிலை முறியடிப்பதற்கான முதல் படியாகும்.

எதிரியால் முன்னெடுக்கப்படும் எதிர்பரசியலில் பண பலம் ஆள்பலம் அடியாட்கள் பலம் ஊடகபலம் என்று அனைத்தும் எதிரியால் ஒழுங்கமைக்கப்பட்டு களமிறக்கப்படும்.

இதைக்கண்டு சோர்ந்து போகவோ நம்பிக்கை இழக்கவோ கூடாது.இலட்சிய உறுதியும் நேர்மையும் ; அடுத்த கட்டத்தை நோக்கிய சரியான வேலைத் திட்டமும் இருந்தால் போராளிகளால் எந்த தடையையும் தகர்த்தெறிந்து முன்னேற முடியும்.

 

 

- தொடரும்

http://www.puthinappalakai.net/2016/01/04/news/12442

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம் : 02

 

‘ஒரு விடுதலை இயக்கம் சுலோக அரசியல் நடத்தும் வாக்குச் சீட்டு அரசியல் கட்சியை போன்றதல்ல. அதன் உறுப்பினர்களான போராளிகள் தேர்தல் காலங்களில் கிளர்ந்தெழுந்து ‘வாழ்க’ ‘வீழ்க’ கோசம் போட்டு வாக்குச் சேகரிக்கும் தொண்டர்களல்ல.

அவர்கள் தாங்கள் கொண்ட இலட்சியத்துக்காக தொடர்ச்சியாக தங்களை ஒறுத்து தங்களை வருத்தி உயிரைக்கொடுத்து உதிரத்தை கொடுத்து உடல் அவயங்களை கொடுத்து வரலாற்றை படைத்தவர்கள். நாங்கள் பணம் திரட்டித் தருகிறோம் நீங்கள் போராடுங்கள் என்று சொல்வதற்கு அவர்கள் ஒன்றும் கூலிப்படைகள் அல்ல.”

00000

போராளிகளின் துயரங்களை புரிந்துகொள்வது பற்றி…..

ஒரு விடுதலைப் போராட்டம் ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் போது விடுதலைக்கு போராடிய இனம் அல்லது சமூகம் சந்திக்கின்ற மிகப் பெரிய ஆபத்து, மக்களையும் போராளிகளையும் பிரிப்பதற்கு அனைத்து தளங்களிலும் எதிரி மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களாகும்.

இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது எந்த மக்களுக்காக அந்தப் போராளிகள் போராடினார்களோ அந்த மக்களைக் கொண்டே அவர்களை வெறுக்கவைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பற்றியதாகும்.

எந்த மக்கள் அவர்களை வீரர்கள் இனத்தின் -சமூகத்தின் விடிவெள்ளிகள் என்று போற்றிக் கொண்டாடினார்களோ, அதே மக்களைக் கொண்டே அவர்களை துரோகிகள், கொலைகாரர்கள், பயங்கரவாதிகள் என்று வசைபாடி வெறுக்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் சூழ்ச்சித் திட்டங்களை பற்றியதாகும்.;

ஓரு போராட்டத்தில் போராளிகளுக்கும் மக்களுக்குமான உறவென்பது ஒரு பெரிய குளத்தில் இருக்கும் தண்ணீருக்கும் அதில் வாழும் மீன்களுக்குமான உறவைப் போன்றது.

மீனை ஒழிப்பதற்கு தண்ணீரை விட்டு அதை பிரிக்க வேண்டும். தூண்டில் போட்டும் வலை வீசியும் மீன்களை பிடித்து தரையில் போடுவதன் மூலம் தன்ணீரை விட்டு அவற்றை பிரித்துக் கொல்லலாம். ஆனால் ஒரு மாபெரும் குளத்தில் உள்ள அனைத்து மீன்களையும் இந்த முறையில் பிடிக்க முடியாது.

பெரிய மீன்களை பிடித்தாலும் அந்த குளத்தில் இருக்கும் சிறிய மீன்களும் மீன் குஞ்சுகளும் வலையிலும் தூண்டிலும் அகப்படாமல் தப்பித்துக் கொள்ளும்; பின்னர் அவை வளர்ந்து பெரிய மீன்களாகிவிடும். இது ஒரு தொடர்கதையாக  நடந்து கொண்டே இருக்கும்.

அதேபோல மீன்களை ஒழிப்பதற்கு ஒரு மாபெரும் குளத்தை ஒரேயடியாக வற்ற வைக்க முடியாது. ஓரு குறிப்பிட்ட மட்டத்துக்கு இறைக்க இறைக்க தண்ணீர் ஊறிக்கெண்டே இருக்கும். தண்ணீர் ஊற ஊற மீன்களும் மீன் குஞ்சுகளும் அதில் வாழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த குளத்து நீரில் தேவையான அளவு நஞ்சை கலந்து விட்டால் பெரிய மீன், சின்ன மீன், குஞ்சு குருமன் என்று அனைத்தும் அழிந்துவிடும்.

அதே போலத்தான் ஓரு விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படுகின்ற போது மக்களையும் போராளிகளையும் பிரிப்பதற்கும், உயிர்தப்பிய போராளிகள் மக்கள் மத்தியில் இருந்து புதிய போராளிகளை உருவாக்காமல் இருப்பதற்கும், எதிரி தன்னால் ஆக்கிரமிக்கப்பட்ட போராடிய தரப்பின் தாயகத்தில் நேரடியாக தனது படையினர் மூலமாக, மக்களை அச்சுறுத்தியும் அதற்கு வெளியே உள்ள பின்தளம் மற்றும் செல்வாக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுடைய கருத்தியல் தளத்திலே கனகச்சிதாமாக நச்சுக்கருத்துக்களை விதைப்பான்.

இந்தக் கருத்துக்கள் போராளிகளை கொச்சைப்படுத்தி சிறுமைப்படுத்தி மக்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான பிணைப்பை உடைக்கும் வேலைத் திட்டத்தை கொண்டதாக இருக்கும். இந்தத் திட்டம் இரண்டு தளங்களில் நடைபெறும்.

முதலாவது- ஏற்கனவே போராட்டத்தின்  எதிர்தரப்பு என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ‘அரச ஒத்தோடிகள்” மூலமாக ‘போராட்ட வழிமுறை தவறானது, போராட்டத்தை வழிநடத்திய தலைமை தவறானது, போராளிகள் தவறானவர்கள்- அவரை கொன்றார்கள், இவரை கொன்றார்கள், அவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்கும், இவர் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்கும், சிறுவர்களை படையில் இணைந்து பலி கொடுத்து விட்டார்கள், மக்களுடைய பேரவலத்தும் இழப்புகளுக்கும் எல்லாம் இவர்கள் தான் காரணம், இவர்கள் பாசிஸ்டுகள்- மக்கள் விரோதிகள், அரசாங்கமும் அரசபடைகளும் நல்லவர்கள்- வல்லவர்கள்,  மக்களுக்கு தீங்கே இழைக்காதவர்கள்;” என்ற மாதிரி இவர்களது பிரச்சாரம் நடத்தப்படும்.

இது விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் நடந்த ஒன்று தான், என்றாலும் பின் போர் சூழலில் இது தீவிரப்படுத்தப்படும்

இரண்டாவது- முகமூடி அணிந்த புதிய ஒத்தோடிகள் மூலமாக இந்த கருத்தியல் நச்சுக்கலப்பு நடக்கும்.

இந்த புதிய ஒத்தோடிகள் போராட்டத்தை குறை சொல்லமாட்டார்கள். போராட்ட அமைப்பை குறை சொல்லமாட்டார்கள். போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தலைமையை குறை சொல்லமாட்டார்கள். ஆனால் அரச கட்டுப்பாட்டுக்குள் இருந்து தப்பிவந்த, இறுதிப் போரில் உயிர்தப்பிய போராளிகள் எல்லோரும் துரோகிகள், தவறானவர்கள், இவர்கள் போர் களத்திலேயே மடிந்திருக்க வேண்டும் என்று போராளிகளை இலக்கு வைத்து சேறடிப்பு பரப்புரை நடத்துவர்கள்.

இவர்களது இந்தப் பரப்புரையை அறிவுபூர்வமாக அணுகி கட்டுடைத்தால், அது போராட்டத்தையும் போராடிய அமைப்பையும்; அதன் தலைமையை கொச்சைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பரப்புரை என்பதையும், மக்களுக்கு போராளிகள் என்றால் நேர்மையற்றவர்கள் தாங்கள் நினைத்ததை போல இவர்கள் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் அல்ல, இவர்கள் எல்லாம் சுயநலவாதிகள் திருடர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி, அவர்களை சலிப்படைய வைத்து போராளிகள் என்ற சொல்லே வெறுப்புக்குரிய அவமானத்துக்குரிய சொல் என்று அவர்கள் நினைக்கும் படி செய்ய வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

போராளிகள் அவதார புருசர்களாக வானத்தில் இருந்து குதித்து வருவதில்லை. அவர்கள் மக்களில் இருந்துதான் உருவாகிறார்கள். மக்களுக்கு எதிரியால் இழைக்கப்படும் அநீதிகள் அல்லது ஒடுக்குமுறைகள் தான் சமானிய மனிதர்களை போராடத் தூண்டுகிறது. ஒரு விடுதலை அமைப்பும் அதன் தலைமையும் தான் அவர்களை போராளிகளாக ஒருங்கிணைத்து உருவாக்குகிறது.

பிள்ளைகளுடைய உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் பெற்றோர் எப்படிப் பொறுப்பானவர்களோ அப்படியே போராளிகளது உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆளுமைக்கும் அவர்களை உருவாக்கிய அமைப்பும் அதன் தலைமையும் தான் பொறுப்பாகும்;.

இந்த இடத்திலே ‘போர்க்களத்தில் உயிர்தப்பிய  போராளிகள் எல்லாம் தவறானவர்கள் என்றால், அரச கட்டுப்பாட்டு பகுதிக்கூடாக புலம்பெயர்ந்த போராளிகள் எல்லாம் துரோகிகள் என்றால், அதாவது போராளிகளில் பெரும்பாலானவர்கள் துரோகிகள் என்றால், அவர்கள் போர்க்களத்தில் மடிந்திருக்க வேண்டுமல்லவா? ஏன் உயிர்தப்பி வந்தார்கள்” என்றால், அவர்களை உருவாக்கிய விடுதலை அமைப்பும் அதன் தலைமையும் அல்லவா தவறென்றாகி விடும். இந்தக் கருத்தை  மறைமுகமாக மக்களின் மனங்களிலே விதைப்பது தான் இந்த புதிய ஒத்தோடிகளின் நோக்கமாகும்;

இதைத்தான் பழைய ஒத்தோடிகள் ‘போராளிகளின் தலைவர் ஒரு பாசிஸ்ட். அவரால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஒரு பாசிச அமைப்பு, அதன் உறுப்பினர்கள் எல்லோரும் பாசிஸ்ட்டுகள், அவர்கள் விடுதலைப் போராளிகள் அல்ல, அவர்கள் மக்கள் விரோதிகள்” என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள்.

இந்த விடயத்தை உணர்வுபூர்வமாக அல்லாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து  ஒப்பிட்டு பார்த்தால் இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் உள்ள ஒற்றுமை புரியும்.

பழைய ஒத்தோடிகள் புலம்பெயர்ந்த நாடுகளின் காவல்துறைக்கு கடந்த காலங்களில் செய்த முறைப்பாடுகளையும், இப்போது இந்த புதிய ஒத்தோடிகள் செய்த- செய்து வரும் முறைபாடுகளையும்  ஒப்பிட்டுப் பார்த்தால் இதற்கு பின்னால் இருக்கும் நோக்கத்தில் ஆழ அகலம் நன்கு புரியும்.

இதேநிலை அதாவது மக்களை விட்டு போராளிகளைப் பிரிக்கும் தந்திரோபாயம் எமது விடுதலைப் போராட்டத்தில் மட்டும் தான் நடந்தது, நடந்து வருகிறது என்று நினைத்துவிடக் கூடாது. இந்தியாவின் நக்சல் பாரி போராட்டம், பிலிப்பைன்ஸ் செம்படைகளின் போராட்டம், பெருவில் நடந்த இடதுசாரி புரட்சிகர அமைப்பின் ஒளிரும் பாதை போராட்டம், கிழக்கு தீமோர் விடுதலைப் போராட்டம், தென்சூடான் விடுதலைப் போராட்டம், பலஸ்தீன விடுதலைப் போராட்டம் என்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் இது காலங்காலமாக நடந்திருக்கிறது. இன்றும் நடந்து வருகிறது.

உதாரணமாக 1967இல் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் காசா மற்றும் மேற்கு கரையில் இருந்த பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தளப்பிரதேசங்களை இஸ்ரேலும், லெபனானில் இருந்த பின்தளப் பிரதேசங்களை லெபனானும் கைப்பற்றி விட, பலஸ்தீன விடுதலை இயக்கம் மிகப்பெரிய தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்தது. அதன் முக்கிய தளபதிகள் மற்றும் ஏராளமான போராளிகள் எல்லாம் கொல்லப்பட எஞ்சியிருந்தோர் சிரியா, ஈராக் மற்றும் மேற்குலகிற்கு புலம்பெயர்ந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் பலஸ்தீன தேசியம், பலஸ்தீன மக்களின் விடுதலை என்ற இலக்கில் தான்  பயணித்துக் கொண்டிருந்தது. மதம் அந்த விடுதலைப் போராட்டத்தில் குறுக்கிடவில்லை. பிறப்பால் கிறிஸ்தவரும் இடதுசாரி தலைவருமான ஜோர்ஜ் ஹபாஷ் (பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்) பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தார். பலஸ்தீன விடுதலை இயக்கம், அரபாத்தின் அல்பத்தா, பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பலஸ்தீன ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் என்று பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பாக இருந்தது.

இந்தத் தோல்விக்கு பின்னர் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் புதிய ஒத்தோடிகளை களம் இறக்கி போராளிகள் மீதும் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தளபதிகள் மீதும், தலைவர்கள் மீதும் மார்க்க (இஸ்லாம்) விரோதிகள், இஸ்லாமிய ஒழுக்க விதிகளை போராளிகள் கடைப்பிடிக்கவில்லை என்றெல்லாம் வகைதொகையின்றி அவதூறு மற்றும் சேறடிப்பு பிரச்சாரங்களை மேற்கொண்ணடது. அதுவும் ‘உண்மையான பலஸ்தீன விடுதலைக்காக” என்று கூறிக்கொண்டு தான் இந்தப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

விளைவு- பல உண்மையான போராளிகள், இஸ்லாமிய விரோதிகள் -துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டார்கள். பலர் கொலை செய்யப்பட்டார்கள். பலஸ்தீன விடுதலைக்காக ஒன்றுதிரண்டு நின்ற மக்கள் சலிப்படைந்து சிதைந்து போனார்கள். அல்லது ஒதுங்கிப் போனார்கள்.

இஸ்ரேல் தனது திட்டப்படி பலஸ்தீனியர்களுடைய தாயக நிலங்களை ஆக்கிரமித்து யூதக் குடியேற்றங்களை உருவாக்கியது. பலஸ்தீன விடுதலைப் போராட்டம் இஸ்லாமிய மத குடுவைக்குள் அடைக்கப்பட்டு அந்த மதத்தின் சன்னி, சியா பிரிவு  முரண்பாடுகளுக்குள் சிக்கி இன்று வரை மக்களின் உண்மையான விடுதலை என்ற இலக்கை அடையாமல் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.

இது நாங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு பாடமாகும்.

இந்த ஆபத்தான மிகமிக நெருக்கடியான சூழ் நிலையை போராளிகள் எப்படி எதிர்கொள்வது மற்றும் அதை எப்படி கையாள்வது என்பது மிகவும் சிக்கலான ஒரு விடயமாகும்.

ஏனென்றால் பழைய ஒத்தோடிகள் வெளிப்படையானவர்கள். போராட்ட அமைப்பு, அதன் தலைமை மற்றும் போராளிகள், அவர்களின் போராட்ட வடிவங்கள், தங்களது அரச சார்பு நிலைப்பாடு இவற்றை சொல்வதற்கு அவர்கள் முகமூடி அணிந்து வருவதில்லை. தங்களது பேச்சு, எழுத்து, சந்திப்பு என்று எல்லா தளங்களிலும் தாங்கள் யார் என்பதை அவர்கள் நேர்மையாக வெளிக்காட்டியே வந்திருக்கிறார்கள். அவர்களை ஆதரிப்பவர்களின் தொகை என்பது சிறியது, மட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தப் புதிய ஒத்தோடிகள் மறைமுகமானவர்கள். மக்கள் முன்னால் வந்து திட்டமிட்டு நடிப்பவர்கள். போராட்டம் சரியானது, தலைமை சரியானது, போராளிகள் தான் சரியில்லை என்று இவர்கள் மக்கள் மத்தியில் செல்லும் போது மக்கள் குழம்பிப் போவார்கள்.

ஏற்கனவே போராட்டத்தை வைத்து தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட போர் பிரபுக்களான இவர்கள் மக்களுக்கு அறிமுகமானவர்கள். இவர்கள் சொல்வதை உணர்வு நிலையில் இருந்து சிந்திக்கும் மக்கள் உடனே நம்பிவிடுவார்கள். ஆனால் மக்களின் இந்த உணர்வு நிலை அறிவு பூர்வமாக சிந்திக்கும் நிலையாக மாறும் போது இவர்களின் முகமூடிகள் கழன்று இவர்கள் அம்பலப்பட்டு போவார்கள்.

அதனால் உண்மையான விடுதலையை நேசிக்கும் சக்திகள் குறிப்பாக போராளிகள் இவர்களை கணக்கிலேயே எடுக்காமல் கடந்து செல்லவேண்டும். இவர்கள் என்னதான் அவதூறாக பேசிலும் எழுதினாலும் பொய்யும் புரட்டையும் சொல்லியும் எழுதியும் போராளிகளை  களங்கப்படுத்தினாலும் அவர்கள் மௌனமாக அவற்றை கணக்கில் எடுக்காமல் கடந்து செல்ல வேண்டும்.

போராளிகளுடைய மௌனமும் அவர்கள் இவர்களை  ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்ற செய்தியும் தான் இவர்களுடைய தோல்வியாகும். மாறாக இவர்களுடைய பரப்புரைக்கு உடனே போராளிகள் எதிர்பரப்புரை செய்ய முற்பாட்டால் அல்லது அவர்களை எச்சரிக்க அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் அதுவே அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் போராளிகளுக்கு கிடைத்த தோல்வியாகவும் இருக்கும்.

இந்த புதிய ஒத்தோடிகளுடைய  முழு நோக்கமுமே போராளிகளை ஆத்திரப்பட வைத்து, நிதானமிழக்க வைத்து வன்முறையில் ஈடுபட வைப்பதாகும்.

பின்னர் மக்கள் மத்தியில் இதை காரணம் காட்டி போராட்டத்துக்கான கட்டமைப்புக்களை இவர்கள் சிதைக்கிறார்கள். போராட்டத்துக்கான வளங்களை பாழ்படுத்துகிறார்கள் என்று பரப்புரை செய்து தங்களை நியாயவான்களாகவும் போராளிகளை துரோகிகளாகவும் காட்டி மக்களிடம் இருந்து அவர்களை பிரித்து எதிரி அவர்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதாமாக செய்து முடிப்பார்கள்.

மறுபுறத்திலே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் போராளிகளால் மேற்கொள்ளப்படும் ஒரு சிறு வன்முறையை கூட இவர்கள் கொலை முயற்சி, ஆட்கடத்தல், பணப்பறிப்பு முயற்சி என்று புலம்பெயர் நாட்டு அரசாங்கங்களுக்கு முறைப்பாடு செய்து, அதுவும் தங்களை புலம்பெயர் நாட்டு ஜனநாயக செயற்பாட்டாளர்களாகவும் நாட்டிலிருந்து வந்த இயக்கப் போராளிகளை வன்முறையாளர்களாகவும் ஜனநாயக விரோதிகளாகவும் காட்டி ஏற்கனவே போராட்டத்தின் மீதும் போராட்ட அமைப்பின் மீதும் சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத முத்திரையை இன்னும் வலுப்படுத்தும் எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.

இந்த இடத்திலே இதை படிப்பவர்களுக்கு இந்த புதிய ஒத்தோடிகள்  சொல்வதைப் போல சிறீலங்கா அரசால் அனுப்பப்பட்ட போராளிகள் போராட்டத்தையும் போராட்ட அமைப்பையும் பயங்கரவாதிகளாக காட்டுவதற்கு  ஏன் இவற்றை திட்டமிட்டு செய்யக் கூடாது என்று சந்தேகம் வரலாம்.

இந்த சந்தேகத்தை இரண்டு விதங்களில் தீர்க்கலாம்.

முதலாவது ஒரு போராளி என்பவன் தன்னுடைய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டு மனம் கொதித்து அவற்றை நிறுத்துவதற்கு அதற்கு தீர்வுகாணப் புறப்பட்டவன். அவனது நெருக்கடி நிறைந்த நீண்ட போராட்ட வாழ்க்கை அவனுக்கு எதிரி யார், நண்பன் யார் என்பதை ஆழமாகவே அவனது மனதில் பதிய வைக்கும். தன்னுடைய     சொந்த மக்களை தன் கண்முன்னாலேயே வகை தொகையின்றி கொன்று குவிக்கும் துடைத்தழிக்கும் எதிரியை நண்பனாக ஏற்றுக் கொள்ளவும் அவனுக்காக வேலை செய்யவும் உண்மையான போராளியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது.

எந்த எதிரிக்கு எதிராக ஒரு போராளி தீரத்துடன் போரிட்டானோ, அந்த எதிரியிடம் மண்டியிட்டு கைதியாகும் நிலை ஒரு போராளிக்கு ஏற்பட்டால்  அதைவிட உச்சபட்ச துன்பமும் கொடுமையும் அவனுக்கு வேறு இருக்கமுடியாது.

எதிரியின் அடிகளும் உதைகளும் வதைகளும் இன்னும் அவனை பக்குவப்படுத்தி இன்னும் உத்வேகத்துடன் போராடத்தூண்டுமே தவிர கோழையாக எதிரியின் இரண்டாம் படையாக அவனை மாற்றாது. ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். அதுவும் மிக சொற்பமானவர்களாகத்தான் இருப்பார்கள்.

இன்றைக்கு புலம்பெயர்ந்து வந்திருக்கக் கூடிய போராளிகள் தானுண்டு தன்குடும்பம் உண்டு என்று இருக்காது  முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கும் செயற்படுவதற்கும் இது தான் அடிப்படையாகும்.

அடுத்து உண்மையில் சிறீலங்கா அரசால் அனுப்பப்பட்ட ஒருவன் அல்லது ஒரு குழுவினர் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக தொடர்ந்து வைத்திருக்க வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை ‘தனிநபர்கள் தனிப்பட்ட வன்முறைக் குழுவினர்” என்றுதானே காவல்துறையில் முறைப்பாடு செய்ய வேண்டும். ஆனால் ஆயுதம் தூக்கிய போராளிகள், நாட்டில் இருந்து வந்தவர்கள், பணப்பறிப்பு, ஆட்கடத்தல், கொலை முயற்சி என்பவற்றில் ஈடுபடுகிறார்கள் என்றல்லவா- அதுவும் சிறீலங்கா அரசுக்கு சாதகமான விதத்தில் அல்லவா முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதுவே இவர்கள் புதிய ஒத்தோடிகள் எப்பதற்கு வலுவான ஆதாரம் அல்லவா?

- சிவா சின்னப்பொடி

(தொடரும்)

http://www.puthinappalakai.net/2016/01/10/news/12619

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 03

JAN 17, 2016

‘தனது விடுதலைக்காக போராடும் ஒரு இனத்தின் மீது எதிரி ஆயுதங்களைக் கொண்டு நடத்துகின்ற யுத்தம் அந்த இனத்திற்கு உடனடி பேரழிவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அது நிரந்தரமானதல்ல. அந்த இனத்தால் அதிலிருந்து மீள முடியும்.

ஆனால் அந்த யுத்தத்தின் பின்னர் அந்த இனத்தின் கலாச்சார தளத்திலே எதிரி ஒத்தோடிகளைக் கொண்டு நடத்துகின்ற நிழல் யுத்தம் மிகவும் ஆபத்தானது. இந்த கலாச்சார ஆக்கிரமிப்பு  யுத்தத்தை தனது விடுதலைக்காக போராடிய ஒரு இனம் முறியடித்து வெற்றிகொள்ளவில்லை என்றால் அந்த இனம் நிரந்தரமாக தோற்றுப்போய் விடும். அதனால் மீளெழுச்சி கொள்ளவே முடியாது.’

0000

நிழல் யுத்தத்தின் ஆபத்தை புரிந்து கொள்வது தொடர்பாக….

ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வியடைகின்ற போது எதிரி உடனடியாக  மேற்கொள்ளுகின்ற அடுத்த கட்ட நடவடிக்கை அந்த இனத்தின் கலாச்சாரத் தளத்தை குறிவைத்து நடத்துகின்ற நிழல் (கலாச்சார) யுத்தமாகும்.

இந்த யுத்தம் –

போராட்ட கலாச்சாரத்தை இல்லாதொழிப்பது.

இன (தேசிய) அடையாளத்தை சிதைப்பது.

தாயக கோட்பாட்டை சாத்தியமற்றதாக்குவது, என்ற மூன்று இலக்குகளை குறிவைத்து நடத்தப்படுகிறது.

போராட்ட கலாச்சாரம் என்று  சொல்கிறபோது சிலர்  அதை ஆயுத கலாச்சாரம், வன்முறை கலாச்சாரம்,  பாசிச கலாச்சாரம் என்ற தங்கள் பார்வை கோளாறுக்கு ஏற்ற கண்ணாடிகளை அணிந்து அதற்கு பொழிப்புரை , விளக்கவுரை என்று பல்வேறு வியாக்கியானங்களை செய்யக் கூடும்.

நாம் அவற்றை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் போராட்டக் கலாச்சாரம் அல்லது புரட்சிக் கலாச்சாரம் என்றால் என்ன? அது எதை சாதித்தது என்பவை பற்றிப் பார்க்கலாம்;.

இந்தக் கலாச்சாரத்தை நாங்கள் புரிந்து கொள்வதற்கு முதலில் முரண்பாடுகள் பற்றிய புரிதல் நமக்கு அவசியமாகும்.

நாம் வாழுகின்ற இந்தப் பிரஞ்சமும் அதன் ஒரு அங்கமான இந்த உலகமும் இந்த உலகத்தில் வாழும் நாமும் முரண்பாடுகளின் அடிப்படையிலே இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

கூட்டலும் – கழித்தலும், பெருக்கலும்- பிரித்தலும் , வினையும்- எதிர்வினையும், பிரிதலும்-சேர்தலும்,கொந்தளிப்பும்-அமைதியும், வெப்பமும் -குளிரும் , போரும்- சமாதானமும் என்று இப்படி எண்ணற்ற முரண்பாடுகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

முரண்பாடு என்பது ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கும் அதே நேரத்தில், அது ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகவும் கூட இருக்கும்.

உதாரணமாக யுத்தமும் -சமாதானமும் என்ற முரண்பாட்டை எடுத்துக்கொண்டால்,  யுத்தம் நடந்தால் தான் சமாதானம் என்பதற்கான தேவை வரும். சமாதானம் குலைந்து போனால் தான் மறுபடி யுத்தம் வரும். எந்த இடத்திலும் யுத்தம் என்ற ஒன்று நடைபெறாமல்  சமாதானம் வந்தது என்று சொல்லமுடியாது. அதாவது யுத்தம் என்ற  செயல் தான் சமாதானம் சொல்லுக்கு அர்த்தமும் வடிவமும் கொடுக்கிறது.

இன்னொரு உதாரணமாக,  தொழிலாளி- முதலாளி என்ற முரண்பாட்டை எடுத்துக்கொண்டால், தொழிலாளிகளின் உழைப்பினால்தான் முதலாளி முதலாளியாக இருக்கிறான். மறுபுறத்தில் முதலாளி முலதனம் போட்டு தொழில் நடத்துவதால் தான் தொழிலாளிக்கு வேலை கிடைக்கிறது. அதன் மூலம் அவனுக்கு கிடைக்கும் ஊதியத்தை வைத்துக்கொண்டு தான்,  அவன் உயிர்வாழ்கிறான். ஆனால் அவன் பெறும் அந்த ஊதியம் முதலாளி போட்ட முலதனத்தில் இருந்து எடுக்கப்படவில்லை. அவனது அதாவது தொழிலாளியின் உழைப்பால் கிடைக்கும் உபரியில் (இலாபத்தில்) இருந்தது தான் அவனுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த உழைப்பால் வந்த உபரியின்(இலாபத்தின்) பெரும்பகுதியை முதலாளி தனதாக்கிக் கொள்கிறான். தொழிலாளியின் உழைப்பு முதலாளி,  முதலாளியாக இருக்க உதவுகிறது. முதலாளியின் முதலீடும் இலாப வேட்டையும் தொழிலாளி, தொழிலாளியாக இருக்க வைக்கிறது.

ஒன்றில் ஒன்று தங்கியும் ஒன்றை விட மற்றது வேறுபாட்டுடனும் இருக்கும் இந்த முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் வளர்ச்சி அல்லது மாற்றம் என்று நாங்கள் குறிப்பிடுகின்ற சொற்களுக்கு அடித்தளமாக இருக்கிறது.

ஓரு இனம் அல்லது சமூகம் என்று பார்த்தால் ஓவ்வொன்றும் தனக்குள்ளும் தனக்கு வெளியிலும் முரண்பாடுகளை கொண்டதாக இருக்கும்.

உதாரணமாக தமிழீழத் தமிழர்களான எம்மை எடுத்துக் கொண்டால் பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கும் எமக்கும் இடையே ஆழமான  முரண்பாடு இருக்கிறது. இந்த முரண்பாடு எமக்குரிய புற (வெளி) முரண்பாடாகும். இது ஒரு பகை முரண்பாடும் கூட.

அதேநேரம் எமக்குள்ளே ஊர் முரண்பாடு, பிரதேச முரண்பாடு, சாதிய முரண்பாடு, மதமுரண்பாடு என்று எண்ணற்ற முரண்பாடுகள் இருக்கின்றன.இவை எம்முடைய உள் முரண்பாடுகளாகும்.

இவற்றை விட உலகெங்கிலும் இருக்கக் கூடிய அனைத்து சமூகங்களிலும் இருக்கக் கூடிய அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாடு தமிழீழத் தமிழர்களிடமும் இருக்கிறது. ஆனால் இதை உழைக்கும் வர்க்கம் எதிர் ஆளும் வர்க்கம் என்ற பொதுவான வரையறையை கொண்டு மதிப்பிட முடியாது.

தமிழீழ சமூகம் ஏனைய ஐரோப்பிய சமூகங்களைப் போல் படிமுறை வளர்ச்சியைக் கொண்ட சமூக அமைப்பை கொண்டதல்ல.அது இன்னமும் தாய் வழி சமூக அமைப்பு, அடிமை சமூக அமைப்பு, நிலபிரபுத்துவ சமூக அமைப்பு ஆகியவற்றின்  எச்சங்களை  கட்டிக்காத்துக் கொண்டு அவற்றை இன்றைய உலக பெருமுதலாளித்துவ சமூக அமைப்புக்கு எற்றாற்போல மறு நிர்மாணம் செய்து கொண்டு வாழுகின்ற தனித்துவமான சில குணாம்சங்களைக் கொண்ட ஒரு சமூக அமைப்பாகும். இந்த சமூக அமைப்பை நாம்  பொதுவான அரசியல் சித்தாந்த கோட்பாடுகளுக்குள் அடக்க முடியாது.

1970 களிலே தமிழீழ தமிழ் சமூகத்துக்கான புறமுரண்பாடான இனமுரண்பாடு கூர்மையடைந்த போது இயங்கியல் விதிகளின் படி அதன் உள்முரண்பாடுகள் தீர்ந்திருக்க வேண்டும் அல்லது நீர்த்துப் போயிருக்க வேண்டும்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  தமிழ் மக்கள் ஒற்றுபட்டு நிற்கிறார்கள் என்று மேடைகளில் நீட்டி முழங்கினாலும், யதார்த்தத்தில் போரினால் இடம்பெயர்ந்த போதும் சாதியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு இடம் பெயர்ந்ததும்,  குடி தண்ணீர் கிணறுகளில் நஞ்சு கலந்ததும்,  பிரதேச வேறுபாடுகள் பார்த்ததும், ஊர் வேறுபாடுகள் பார்த்ததும் தொடர்ந்தன.

இதை ஒழிக்க வேண்டிய தேவை அனைத்து விடுதலை இயக்கங்களுக்கும் ஏற்பட்டது. இதை கட்டிக்காத்து வந்த சீரழிவு கலாச்சாரத்துக்கு பதிலாக புரட்சிக் கலாச்சாரம் அல்லது போர் கலாச்சாரம் ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை போராட்ட அமைப்புக்களுக்கு ஏற்பட்டது.

உதாரணமாக நாம் நாளாந்தம் பயன்படுத்தும் மின்சாரத்திலே  நேர் மின்சாரம், எதிர் மின்சாரம் என்று  எதிர் முரண்பாடுகள் கொண்ட 2 பிரிவுகள் இருக்கின்றன. இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டால் தீப்பிடித்தக்கொள்ளும். ஆனால் அந்த தீயை வெளிச்சமாகவே அல்லது வேறு தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த இரண்டையும் ஒரு மின் விளக்கில் இணைத்தால் நாங்கள் வெளிச்சத்தை பெறமுடியும். அல்லது வேறு மின் சாதனத்தில் இணைத்தால் அந்த சாதனத்தை இயக்க முடியும்.

அதே போலத்தான் ஒரு விடுதலைப் போராட்ட சூழலிலே ஒரு புரட்சிகர கலாச்சாரத்தை முன் வைப்பதன் மூலம் தான் ஒரு விடுதலை அமைப்பு அக-புற முரண்பாடுகளை சரியாகக் கையாண்டு தனது  இலக்கை அடைய முடியும். புற முரண்பாடும் -அக முரண்பாடுகளும் ஒரேநேரத்தில் ஒரே கொதிநிலையோடு கூர்மையாக இருந்தால் எதிரியை வெற்றிகொள்ள முடியாது.

இதில் அனைத்து இயக்கங்களும் தங்களது கொள்ளளவுக்கு ஏற்ப இந்த புதிய போர் கலாச்சாரத்தை  நடைமுறைப்படுத்த முயன்றாலும், இதில் ஒரளவுக்கு வெற்றியடைந்தது விடுதலைப்புலிகள் மட்டுமே.

சமூகத்தின் சரி அரைவாசிப் பேராக இருக்கும் பெண்களை அவர்களுக்கு காலா காலமாக இடப்பட்ட சமூகத் தழைகளில் இருந்து விடுவிக்காமல் இனவிடுதலை சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அவர்கள்,  அதை நடைமுறையில் செய்து காட்டினார்கள். பெண் என்பவள் ஆணின் மூலதனம் (சீதனம் வழங்குபவள்) அவனது பாலியல் அடிமை, குழந்தை பெறும் இயந்திரம் என்ற மரபு வழி சிந்தனையை மாற்றி பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்கள் அவர்கள். விடுதலைப்புலிகளால் கொண்டு வரப்பட்ட மணக் கொடை தடைச் சட்டம் இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

சாதி மறுப்புத் திருமணம்.

மக்களுக்காக மரணித்தவர்களை நினைவு கூர்தல்.

தமிழ் தேசிய ஊடக கருத்தியல்.

இளையேரின் ஆளுமை,தலைமைத்துவ பண்பு கூட்டுச் செயற்பாடு என்பவற்றை ஊக்குவிக்கின்ற கல்விமுறையை நடைமுறைப்படுத்தல்.

கிராமிய மற்றும் பாராம்பரிய கலை வடிவங்களை பாதுகாத்தல்.

முதியோரை பாதுகாத்தல்.

இயற்கையை- சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல்.

மொழியை பாதுகாத்தல்

என்று விடுதலைப் புலிகளின் போர் கலாச்சாரத்தில் அடங்கியிருந்த எண்ணற்ற நல்ல விடயங்களை பட்டியலிட்டுக்கொண்டு செல்லலாம்.

பார்வையற்ற ஒருவன் யானையின் வாலை பிடித்துப் பார்த்துவிட்டு யானை என்றால் அதனுடைய வாலின் அளவில் தான் இருக்கும் என்று சொல்வதைப் போன்ற புலி எதிர்ப்பு அரச ஒத்தோடிகளின் ‘புலிகள் பாசிஸ்டுகள், அவர்களது போர்; கலாச்சாரம் வன்முறை கலாச்சாரம் ‘ என்ற ஒற்றை விமர்சனத்தக்கு அப்பால் யதார்த்தத்தில் ஒரு புரட்சி கலாச்சாரம் அங்கே நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் இன்றைக்கு முள்ளிவாய்க்காலின் பின்னர் இதற்கு முற்றிலும் எதிரான கலாச்சார யுத்தம் ஒன்று களத்திலும் புலத்திலும் எதிரியால் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

இன்று தமிழர் தாயகப்பகுதியிலே சர்வ சாதாரணமாக நடந்துவரும் போதைப் பொருள் வியாபாரம் இந்த கலாச்சார யுத்தத்தின் ஒரு அங்கமாகும் .அதுவும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தப் போதைப்பொருள் வியாபாரம் இளையோரின் ஆளுமை, தலைமைத்துவப் பண்பு மற்றும் கூட்டுச் செயற்பாடு என்பற்றை அழிக்கும் நோக்கத்தை கொண்டது.

அடுத்து தாயகத்தில் இன்றைக்கு என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும்  முறைகேடான பாலியல் உறவுகள், சிறுமிகள் கர்ப்பமாதல், மணமுறிவுகள் என்பனவும் இந்த கலாச்சார யுத்தத்தின் மற்றொரு பகுதியாகும். இது குடும்ப உறவுகளை சிதைத்து ஆரோக்கியமற்ற சீரழிவு கலாச்சாரத்தை பின்பற்றும் ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

சிங்கள இராணுவத்தினரைக் கொண்டு சிறுமிகளையும், பெண்களையும் போதைக்கும் பாலியல் இச்சைக்கும் அடிமையாக்கி கர்ப்பமாக்கிவிட்டு,  உங்கள் உடலில் சிங்கள இரத்தம் கலந்துவிட்டது என்று சொல்லுவது, அல்லது தமிழ் பெண்களை அவர்களது இன அடையாளத்தை அழிக்கும் நோக்கத்துடன் திருமணம் செய்வது என்பவையும் இந்தக் கலாச்சார யுத்தத்தின் மிக முக்கியமான பகுதியாகும்.

உளவுத்துறையினரையும் ஒத்தோடிகளையும் வைத்து சாதிய பெருமைகளை பேசியும் சாதிய ஒடுக்குமுறையை அதிகார பலத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும்  திணித்தும் சாதிய முரண்பாடுகளை தூண்டிவிடுவது, வன்முறைக் குழுக்களை வளர்த்து விடுவது,  குழு மோதல்களை உருவாக்குவது, ஊர் சண்டைகளை தோற்றுவிப்பது என்பன இந்த கலாச்சார யுத்தத்தின் மற்றொரு அங்கமாகும்.

இவற்றை விட பெண் போராளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவர்களுக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலை கொடுத்து அவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தை  உருவாக்கி அதை திட்டமிட்டு மக்கள் மத்தியிலே பரப்புவது. இதன் மூலம் பெண் என்பவள் ஒரு போராளியாக இருக்க முடியாது இருக்கவும் கூடாது என்ற செய்தியை மக்களுக்கு செல்வதும் இந்த கலாச்சார யுத்த நிகழ்ச்சி நிரலுக்குள் அடங்கும் ஒரு செயற்திட்டமாகும்;

தாயகத்திலே எதிரியால் இந்த முனைகளிலே நடத்தப்படும் இந்த கலாச்சார யுத்தம் புலத்திலே இதே செயற்திட்டங்களின் அச்சொட்டான பிரதியாக அல்லாமல் வேறு வடிவத்தில் நடத்தப்படுகிறது.

புலம் என்பது எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசம் அல்ல. இங்கே அவனால் புலம் பெயர்ந்த சமூகத்தின் மத்தியில் போதைப்போருள் பாவனை, பாலியல் சீரழிவு நடவடிக்கைகள் கட்டாய திருமணம் போன்ற எதையும் நேரடியாக செய்ய முடியாது. அந்த வடிவத்திலும் இங்கு செய்ய முடியாது.

புலத்திலே இருக்கக் கூடிய மக்களுக்கும் களத்திலே இருக்கக் கூடிய மக்களுக்குமான முரண்பாடுகள்  வேறுபட்ட தன்மையை கொண்டவை. புலத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு வேற்றுமொழி வேற்றுக் கலாச்சார சூழலிலே ஏற்படுகின்ற அந்நியமாதல் ஒரு பெரிய முரண்பாடாகும். அவர்கள் இந்த அந்நியமாதலில் இருந்து விடுபடுவதற்கு தமது தாயகத்திலே போராடும் அமைப்பால் முன்வைக்கப்படும் புரட்சிக் கலாச்சாரத்தால் அதிகளவுக்கு ஈர்க்கப்படுவார்கள். இந்த ஈர்ப்புத்தான் அவர்களை போராட்டத்துக்கு பங்களிப்பு செய்ய வைக்கும். போராட்ட நிகழ்வுகளில் பங்குபற்றத் தூண்டும்.

எனவே பின் போர் சூழலில் புலத்தில் எதிரியின் முழு வேலைத்திட்டமும், புரட்சிக் கலாச்சாரத்தை முறியடிப்பதை நோக்கமாக கொண்டிருக்கும்.

இதன் முதல் படி புலம்பெயர்ந்த மக்களை நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய வரையறைக்குள் நாட்டுக்குள் வர அனுமதிப்பது, நாட்டில் திருவிழாக்கள், களியாட்டங்கள், கொண்டாட்டங்களை பிரமாண்டமாக நடத்த அனுமதிப்பது, புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் இந்த விழாக்களை மட்டுமல்லாமல் கடல், மலை, ஆறு என்று போர் நடந்த காலத்தில் தமிழ் மக்கள் செல்வதற்கும் படம் எடுப்பதற்கும் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு செல்லவும் விதம்விதமா படம் எடுக்கவும் அனுமதிக்கப்படும்,

அவர்கள் மீண்டும் புலத்துக்கு திரும்பியதும் தாங்கள் அங்கு விதம் விதமாக எடுத்த கண்கவர் படங்களை எல்லாம் தங்களது சமூகவலைத் தளங்களிலே பதிவேற்றி வேண்டியவர்களுக்கு பகிர்ந்து மகிழ்வார்கள்.இதை பார்த்ததும் மற்றவர்களுக்கும் அங்கு சென்று திரும்ப வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும்.

இதன் அடுத்த கட்டமாக நாட்டுக்கு வரும் யாராவது ஒரு போராட்ட செயற்பாட்டாளர் அல்லது ஆதரவாளர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார். இந்தச் செய்தி அதிக முக்கியத்துவம் கொடுத்து பரப்பப்படும்.

அதேநேரம் புலத்திலே சில ஊடகங்களையும் பத்தி எழுத்தாளர்களையும் விலைக்கு வாங்கி தியாகி- துரோகி வரலாறு எழுதப்படும். போராட்டத்துக்கு வேலைசெய்தவர்கள் புலம் பெயர்ந்து வந்த போராளிகள் பெயர் குறிப்பிடப்பட்டு இனங்காட்டப்படுவார்கள். விடுதலை இயக்க பொறுப்பாளர்கள், தளபதிகளுடைய மின்னஞ்சல் உடைக்கப்பட்டு அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களுடைய விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்.

இந்த இனங்காட்டல்கள் பகிரங்கப்படுத்தல்கள் அதில் சம்பந்தப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்காக மட்டும் நடப்பதில்லை.’நீங்கள் போராட்டத்துக்கு உதவிசெய்தால் அல்லது வேலை செய்தால் கண்டிப்பாக எங்களுக்கு தெரியவரும் என்றாவது ஒரு நாள் நீங்கள் இனங்காட்டப்படுவீர்கள்’ என்ற செய்தியை மக்களுக்கு சொல்வதாகும்.

இந்த இனங்காட்டல்கள்; பகிரங்கப்படுத்தல்களை உள்வாங்கிக் கொள்ளும் மக்கள் ‘இவர்கள் துரோகிகள்- அவர்கள் தியாகிகள்’ என்று முடிவெடுத்துக் கொண்டு போராட்ட செயற்பாடுகளில் அதி தீவிரமாக பங்கெடுக்கப் போவதோ அல்லது பங்களிப்பு செய்யப் போவதே இல்லை. மாறாக ‘ஐயையோ நாங்கள் நாட்டுக்கு போய் வரவேண்டும் எங்கள் வீட்டை பார்க்க வேண்டும் காணியை பார்க்க வேண்டும். நல்லூர் , சந்நிதி, வல்லிபுரக்கோவில், வற்றப்பளை மாமாங்கேஸ்வரர், கோணேஸ்வரர் கோவில் திருவிழாக்களுக்கு செல்ல வேண்டும். இயக்கதோடு தொடர்பு வைத்தால் போகமுடியாது. ஆளை விட்டால் போதும்உங்களுடைய சண்டைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் ‘ என்று ஓதுங்கிப் போய்விவார்கள்.

எதிரியின் தேவை என்பது இது தான். புலத்திலே அவன் நடத்தும் கலாச்சார யுத்தத்தின் முக்கியமான அம்சமும் இதுதான்.

 – சிவா சின்னப்பொடி

(தொடரும்)

http://www.puthinappalakai.net/2016/01/17/news/12755

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

இரண்டாம் முள்ளிவாய்க்கால்-04

ஒரு விடுதலைப் போராட்டத்தில் வெற்றிகளும்; தோல்விகளும்; ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. விடுதலை என்ற இலக்கை அடையும் வரை இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உண்மையான விடுதலைப் போராளிகள் வெற்றிகளை கண்டு மமதையடையவோ  தோல்விகளை கண்டு  சோர்ந்து போகவோமாட்டார்கள்’

000
விடுதலை அமைப்பை மீள ஒருங்கிணைப்பது தொடர்பாக….
0000
ஒரு விடுதலைப்போராட்டம் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கின்ற போது அந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கம் எதிர் கொள்கின்ற மிகப்பெரிய நெருக்கடி அதன் கட்டமைப்புகள் சிதைந்து போவதாகும்;.

அதிலும் இவ்வாறான நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் தலைமைத்துவ  வழிகாட்டல் இல்லாமல் போகும் போது அந்த அமைப்பை மீள ஒருங்கிணைப்பது,தோல்விக்கான காரணங்களை ஆராய்வது,அந்தத் தோல்வியில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி போராட்டத்தை நகர்த்தவது என்பவற்றை யார் செய்வது என்பதில் பிரச்சனை ஏற்படும். சந்தர்பவாதம் பிழைப்புவாதம் இரட்டை உளவாளிகளின் பிரச்சைனை என்று ஒரே நேரத்தில் பல நெருக்கடிகளை அந்த விடுதலை இயக்கம் சந்திக்கும்.

இது உலகம் பல்வேறு பகுதிகளிலும் தமது மக்களின் விடுதலைக்காக போரிட்ட பல்வேறு விடுதலை இயக்கங்கள் எதிர் கொண்ட பொதுவான பிரச்சனை தான்.குறிப்பிடத் தக்க அளவில் ஒவ்வாரு விடுதலை இயக்கங்களும் தமக்கென சில தனித்துவங்களையும் தனியான பிரச்சனைகளையும் கொண்டிருந்தாலும் அமைப்பு ரீதியான நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் சில நடைமுறைகள் இருக்கின்றன.இந்த நடை முறைகள் பல்வேறு விடுதலை இயக்கங்களில் அனுபவ பாடங்களில் இருந்து பெறப்பட்டவையாகும்.

ஓரு விடுதலை இயக்கம் ஒரு விடுதலைப் போரை நடத்துகின்ற பொழுது அது தளப்பிரதேசம் (களம்) பின்தளப் பிரதேசம் (புலம்) செல்வாக்குப் பிரதேசம் என்ற மூன்று தளங்களில் தனது செயற்பாட்டை கொண்டிருக்கும.;
(தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வடக்கு கிழக்கு தளப்பிரதேசமாகவும் 1987 வரை தமிழகமும் 1990 களில் இருந்து புலம் பெயர்ந்த நாடுகளும்; பின்தள பிரதேசங்களாகவும் 1992 க்குப் பின்னர் தமிழகமும் செல்வாக்குப் பிரதேசமாகவும் இருந்தது.)
அதேபோல ஒரு விடுதலை இயக்கம் தனக்கான உறுப்பினர்களை கொண்டிருக்கும் அதேநேரத்தில், தனக்கென செயற்பாட்டாளர்களையும்(தொண்டர்களையும்) பணியாளர்களையும்(ஊதியம் பெறுபவர்கள்) கொண்டிருக்கும்.உறுப்பினர்கள் அநேகமாக போராளிகளாகவும் ஒரு சிலர் புரட்சிகர அரசியல் செயற்பாட்டாளர்களாகவும் இருப்பார்கள்.இவர்கள் அநேகமாக களத்திலேயே இருப்பார்கள்.ஒரு சிலர் மட்டும் சில பொறுப்புகளுக்காக பின் தளம் மற்றும் செல்வாக்கு பிரதேசத்துக்கு அனுப்பப்படுவார்கள்.அவர்களுக்கென்று எப்போதும் இயக்கப் பெயரும் அவர்களுக்கான (தகட்டு)இலக்கமும் இருக்கும்.

அடுத்து செயற்பாட்டாளர்கள் என்ற வரையறைக்குள் அடக்கப்படுபவர்கள் இயக்க உறுப்பினர்கள் அல்ல. இவர்கள் இயக்கத்தினுடைய தீவிரமான ஆதரவாளர்கள் என்ற நிலையில் வைத்தே பார்க்கப்படுவார்கள்.இயக்கம் இவர்களை தனது வேலைத்திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளும்.இவர்கள் பெரும்பாலும் தங்களது சொந்த வேலைகளை பார்த்துக்கொண்டே இயக்க செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.விதி விலக்காக ஒரு சிலர் முழுநேர செயற்பாட்டாளராக செயற்படும் போது இயக்கம் அவருக்கு பயிற்சி கொடுத்து அவரை தமது உறுப்பினராக இணைத்துக்கொள்ளும். இயக்கம் ஒருபோதும் செயற்பாட்டாளர்களுக்கு இயக்கப்பெயரோ, தகட்டு இலக்கமோ வழங்குவதில்லை.இவர்கள் இயக்கத்தை கட்டுப்படுத்தவோ இயக்க உறுப்பினர்களுக்கு உத்தரவிடவோ அல்லது அவர்களை ஆதிகாரம் செய்யவோ முடியாது.இவர்களுக்கு இயக்கம் ஒரு நிர்வாக பொறுப்பை வழங்கி அந்த நிர்வாகத்தில் பணிபுரியுமாறு சில போராளிகளை அனுப்பிவைத்தால் அவர்களுக்கு இவர்கள் உத்தரவிடலாம்.ஆனால் அவர்களை இவர்கள் தண்டிக்க முடியாது.அவர்கள் விட்ட தவறை இயக்கத்துக்க அறிவிக்க வேண்டும்.

இயக்கம் தனக்கான சில வேலைகளை செய்விப்பதற்காக சம்பளம் வழங்கி பணிக்கமர்த்தப்படுபவர்கள் ‘இயக்கப்பணியார்கள்’ என அழைக்கப்படுகின்றனர்.இவர்களும் இயக்கத்தின் ஆதரவாளர்கள் தான். ஆனால் இவர்களுக்கும் இயக்கத்தின் மீது அதிகாரம் செலுத்தம் எந்த உரிமையும் இல்லை.

பொதுவாக ஒரு விடுதலை இயக்கம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து தனது தளப்பிரதேசங்களை இழக்கின்ற போது அது உடனடியாக தனது நிர்வாகக் கட்டமைப்பை பின்தளப்பிரதேசத்துக்கு மாற்றும்.இந்த காலகட்டத்தில் தலைமையின் வழிகாட்டல் இல்லாது போனால் உடனடியாக போரில் உயிர் தப்பிய மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய இடைக்கால நிர்வாக அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.இந்த அமைப்பில் தளப்பிரதேசத்தில் இருந்து வந்த இயக்க உறுப்பினர்கள் ஏற்கனவே பின்தள மற்றும் செல்வாக்கு பிரதேச வேலைகளுக்காக அனுப்பப்பட்ட இயக்க உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள்.
இவர்களில் இருந்து 3 அல்லது 5 பேர் கொண்ட இடைக்கால உயர்மட்ட செயற்பாட்டு குழு ஒன்று அமைக்கப்படும்;.இந்த மூன்று அல்லது 5 பேருமே இயக்கம் பழைய நிலைக்கு வரும் வரை அதனை வழிநடத்துவார்கள்.இவர்களது வழி நடத்தலை ஏற்று இயக்க செயற்பாட்டாளர்கள் பணியாளர்கள் செயற்பட வேண்டும்.எந்தக் காரணத்தைக் கொண்டும் இயக்கத்தின் நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி இயக்க உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இயக்கத்தை வழி நடத்தவும் இயக்க உறுப்பினர்களை கட்டுப்படுத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை.

பொதுவாக ஒரு அமைப்பின் உறுப்பினரல்லாத ஒருவர் அந்த அமைப்பின் செயற்பாட்டை தீர்மானிக்க முடியாது என்பது இதற்கான பொது விதியாக இருந்தாலும் பெரும்பாலும் புலம் பெர்ந்த நாடுகளிலும் செல்வாக்கும் பிரதேசங்களிலும் இருக்கும் ஒரு விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டு தளத்துக்குள்ளும் ஆதரவு தளத்துக்குள்ளும் எதிரி சுலபமாக ஊடுருவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிலும் ஒரு போராட்டம் பெரும் தோல்வியை சந்திக்கும் போது இது அதிகமாக நடக்கும். அதை எதிர் கொண்டு  முறிடிப்பதற்காகவே போராளிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லாதவர்களையும் புதியவர்களையும் உடனடியாக நிர்வாக அமைப்பில் இணைத்துக் கொள்வதையும் அவர்களுக்கு பொறுப்புக்களை கொடுப்பதையும் நெருக்கடி காலகட்டத்தில் செய்யக் கூடாத ஒரு செயலாக விடுதலை இயக்கங்கள் கருதுகின்றன

abdullah_oecalan1999ம் ஆண்டு பிகேகே எனப்படும் குர்திஷ்தான் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலான் கென்யாவில் வைத்து இஸ்ரேலிய உளவு படையான மொசாட்டின் உதவியுடன் துருக்கி கொமாண்டே படையினரால் கைது செய்யப்பட்ட போதும் 1992 ம் ஆண்டு பெருவின் சைனிங் பாத் எனப்படும் ஒளிரும் பாதை விடுதலை இயக்கத்தின் தலைவர் அபிமல் குஸ்மான் பெரு அரசபடைகளால் கைது செய்யப்பட்ட போதும் அந்த விடுதலை இயக்கங்கள் நாம் இன்று எதிர் கொள்ளும் நெருக்கடிகளை போல பா220px-Abinaelரிய நெருக்கடிகளை சந்தித்தன.

உடனடியாக இந்த விடுதலை இயக்கங்கள் மேலே குறிப்பிட்டதைப் போன்ற இடைக்கால புரட்சி குழு ஒன்றை அமைத்து இந்த நெருக்கடியில் இருந்து மீண்டன.

இதிலே குர்திஷ்தான் விடுதலைப் போராட்டத்துக்கும் நமக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்களது தற்போதைய நிலைமையில் இருந்து சில பாடங்களை நாங்கள் கற்றுக் கொள்ளலாம்.

தமிழ் மக்களைப் போலவே குர்திஷ் மக்கள் நீண்ட வரலாற்றையும் தங்களுக்கான வரலாற்று தாயகம் என்று சொல்லக் கூடிய மிகப் பெரிய நிலப்பரப்பையும் கொண்டிருந்தவர்கள்.

இந்த நிலப்பரப்பு இன்றைய துருக்கி, ஆர்மேனியா, ஈராக், ஈரான்,சிரியா ஆகிய நாடுகளின் கணிசமான பகுதிகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பாக இருந்தது.முதலில் துருக்கியின் ஒட்டமான் சாம்ராட்சியம் குர்தியர்களை அடிமைப்படுத்தியது.அதன் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்த இடத்தை கைப்பற்றிய பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியார்கள் குர்திஷ் இனம் ஒரு பெரும் தேசிய இனமாகவும் அவர்களது தாயக நிலப்பரப்பு ஒரு பெரும் தேசமாகவும் உருவாகமாதல் திட்டமிட்டு தடுத்து அவர்களை துருக்கி, ஆர்மேனியா, ஈராக், ஈரான்,சிரியா ஆகிய நாடுகளுக்குள் ஏனைய பெரும்பான்மை சமூகத்தின் அதிகாரத்தின் கீழ் வாழும் சிறுபான்மையினராக ஆக்கிவிட்டார்கள்.

முதலாம் உலகயுதத்தத்தின் பின்னர் துருக்கியில் ஆட்சிக்கு வந்த முஸத்தபா கமல் அட்டாதுர்க் என்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் தலைமையிலான அரசாங்கம் ஆர்மேனிய மக்களை இனப்படுகொலை செய்ததைப் போல குர்திஷ் மக்களையும் மிகக் கொடுமையாக ஒடுக்கியது.

குர்திஷ் மக்களுடைய குர்து மொழி தடை செய்யப்பட்டது.குர்திஷ் மக்கள் துருக்கி அரசின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின் எந்தப் பகுதியையும் தங்களது “மரபு வழித்தாயகம்” என்று அழைப்பது தேசத்துரோக குற்றமாக பிரகடனப்படுத்தப்பட்டது.குர்திஷ் மக்களின் தாயக கோட்பாட்டை சிதைப்பதற்காக அவர்கள் அவர்களது பாரம்பரிய கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் ஈராக்கிய எல்லையிலுள்ள மிகவும் பின் தங்கிய மலைப்பகுதியில் குடியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.அங்கும் அவர்கள் தங்களை குர்தியர்கள் என்று அழைக்கமாமல் மலைநாட்டு துருக்கியர்கள் என்றே அழைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.குர்திஷ் மொழி பாடசாலைகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் துருக்கி மொழியிலேயே அவர்களின் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
மறு புறத்திலே ஈராக்கிலும் ஈரானிலும் கூட குர்திஷ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள்.ஈரானில் வாழ்ந்த குர்தியர்கள் தங்கள் மொழியை இழந்து ஈரானின் பெர்சி மொழியை பேசுபவர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள்.
100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த இந்த ஒடுக்குமுறை மற்றும் இனஓதுக்கல் கொள்கைக்கு எதிராகவும் தங்களது அடையாளத்தையும் சுய நிர்ணய உரிமையையும் நிலைநாட்டுவதற்காகவும் 1960 களில் குர்திஷ் விடுதலை இயக்கங்கள் உருவாக ஆரம்பித்தன.ஆனால் இந்த இயக்கங்களில் மத அடிப்படைவாதம் ஆணாதிக்க சிந்தனை முதலானவை தலை தூக்கியதால் அவற்றால் குர்திஷ் மக்களை ஒற்றுமைப் படுத்தவோ அவர்களது விடுதலையை வென்றெடுக்கவோ முடியவில்லை.
இந்த நிலையில் 1970 ம் ஆன்டு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) என்ற புரட்சிகர இயக்கம் உருவாகியது.

auchalan 2

இந்த இயக்கம் குர்தியர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமையுடன் அவர்களது சமூக விடுதலையையும் வலியுறுத்தியது.குர்திஷ் மக்களுடைய மரபுவழி தாயகத்தை மீட்டு சுதந்திர குர்திய அரசை நிறுவதே தமது குறிக்கோள் என்று பிரகடனப்படுத்தியது.1980 ல் துருக்கிய இராணுவ அடக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தையும் கெரில்லா தாக்குதல் முறையையும் அந்த இயக்கம் ஆரம்பித்தது.பல்லாயிரக் கணக்கான இளவயதினர் ஆண்களும் பெண்களும் இந்த இயக்கத்தில் வந்து இணைந்தனர்.குர்திஸ் மக்கள் மத்தியில் இந்த இயக்கம் அமோக ஆதரவை பெற்றது.இந்த இயக்கத்தின் தலைவர் அப்;துல்லா ஒச்சலான் குர்திஷ் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டார்.

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் இந்த வளர்ச்சி துருக்கிக்கு அச்சத்தை கொடுத்தது.மக்களின் செல்வாக்குடன் இலட்சிய உறுதிமிக்க புரட்சிப்படையை கொண்டிருந்த இந்த அமைப்பை வெற்றிகொள்வது துருக்கிக்கு முடியாத விடயமாக இருந்தது.இதனால் அது அமெரிக்கா மற்றும் மேற்குலகின் நேட்டோ எனப்படும் வட அத்திலாந்திக் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக இருப்பதை பயன்படுத்தி பிகேகேயை ஒடுக்குவதற்கு அமெரிக்காவினதும் மேற்குலகினதும் உதவியை நாடியது.சதாம் ஹுசேனின் ஆட்சிக்காலத்தில் ஈராக்கிய எல்லைக்குள் இருந்த குர்திஸ் போராளிகளின் தளப்பிரதேசங்களை துருக்கியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.pkk 1
‘அகண்ட குர்திஸ்தான் என்ற நாட்டின் உருவாக்கம் தனது நாட்டுக்கும் நலனுக்கும் அச்சுறுத்தலாக அமையும்’ என்று கருதிய அப்போதைய ஈராக்கிய அரசுத்தலைவர் சதாம் ஹுசேனை அணுகிய அமெரிக்கா துருக்கிய எல்லப்பகுதியில் ஈராக்குக்குள் இருந்த குர்தியர்களின் தளப்பிரதேசங்கள் மீது ஈராக் படைகளைக் கொண்டு கொடூரமான இனஅழிப்பு தாக்குதலை நடத்திவித்தது.அப்போது சதாம் ஹுசேன் அமெரிக்க விசுவாசியாக இருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.1992 ல் அவர் அமெரிக்க விரோதியாக மாறிய பின்பு அவருக்கு எதிரான போர் குற்றங்களில் ஒன்றாக குர்தியர்களுக்கு எதிராக அவர் நடத்திய இந்தத் தாக்குதல்களை அமெரிக்கா முதன்மை படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அமெரிக்காவாலும் மேற்குலகாலும் குர்திஷ்தான் தொழிலாளர்கட்சி பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்பட்டது.
இது பிகேகே அமைப்புக்கு நெருக்கடியை கொடுத்தது.அதேநேரம் ஈராக்கில் இடம்பெற்ற அமெரிக்கா ஈராணுவத்தலையீடும் சதாம் ஹுசேனின் வீழச்சியும் துருக்கிய படைகள் தங்கு தடையின்றி ஈராக்கிலுள்ள குர்தியர்களின் தளப்பிரதேசங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வழிவகுத்தது.

இதனால் முன்னாள் சோவியத் ஒன்றிய ஆதரவு நாடும் தற்போதைய ரஷ்ய ஆதரவு நாடுமான சிரியாவுக்கு பிகேயின் தளப்பிரதேசங்கள் மாற்றப்பட்டன.அப்துல்லா ஒச்சலானும் தனது இருப்பிடத்தை சிரியாவுக்கு மாற்றிக் கொண்டார்.

துருக்கி அமெரிக்காவின் உதவியுடன் சிரியாவிலுள்ள அப்துல்லா ஒச்சலானை கைது செய்ய முயன்றது.பயங்கரவாதி என்று தங்களால் அடையாளப்படுத்தப்பட்ட ஒச்சலானை சிரியா கைது செய்து துருக்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா சிரியாவை நிர்ப்பந்தித்தது. ஆனால் சிரிய அதிபர் ஆசாத் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்காவும் விடாமல் ஈராக்கை போல சிரியா மீதும் படையெடுக்க ஒச்சலான் காரணமாக இருப்பார் என்று மிரட்டியது.ஏற்கனவே அமெரிக்காவாலும் மேற்குலகாலும் தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு கலவரங்களால் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த சிரிய அதிபர் ஆசாத் ஒச்சலானை தனது நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்.

வேறு வழியின்றி ஒச்சலான் சிரியாவை விட்டு வெளியேறி இத்தாலிக்குச் சென்றார். அங்கிருந்தும் அவர் வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். .இந்தப் பின்ணியில் தான் அவர் கென்யாவில் வைத்து துருக்கிய கொமாண்டோகளால் கைது செய்யப்பட்டு துருக்கிக்கு கொண்டு வரப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.துருக்கி நீதி மன்றம் முதலில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.பின்னர் அது சிறையை விட்டு வெளியே வரமுடியாத ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.அத்துடன் ஐரோப்பிய நீதி மன்றம் பிகேகேயை பயங்கரவாத பட்டியலில் இட்டது தவறென்று தீர்பளித்ததுடன் ஒச்சலானின் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.

ஓச்சலானின் கைது குர்திஷ் மக்களிடையே அதிர்வலைகளை தோற்வித்தது.இந்தக் கைதை அடுத்து பிகேகேயின் எஞ்சியிருந்த இராணு தளங்கள் மீது துருக்கி தனது இராணுவ தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பிகேகே இடைக்கால புரட்சிசபை ஒன்றை உருவாக்கி போராட்டத்தை தொய்வின்றி வழி நடத்தியது.மக்கள் முன்னரை விட அதிகமாக எழுச்சி கொள்ள ஆரம்பித்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத துருக்கியின் ரெசெப் தஹீப் எர்கேடன் தலைமையிலான அரசு தந்திரோபாய அடிப்படையிலான புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி அதை தன்னுடைய ஒத்தோடிகளான குர்திய குழுவொன்றை கொண்டு நடைமுறைப்படுத்தியது.

இந்தக் குழு குர்திஷ்தான் விடுதலைப் பற்றி உணர்ச்சி ததும்ப பேசியது. இது தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை பல்வேறு புனை பெயர்களில் எழுதியது.குர்திஷ் மக்கள் மத்தியில் தங்களை மிகப் பெரிய தேசிய உணர்வாளர்களாக காட்டிக்கொண்டது.அதன் பின் ஒச்சலான் துருக்கியிடம் பிடிபட்டு சிறையில் இருப்பதை காரணம் காட்டி பிகேகே தளபதிகள் முன்னணி போராளிகள் எல்லாம் துருக்கி அரசுக்கு விலை போனவர்கள் துரோகிகள் என்று பரப்புரை செய்தது. முன்னணி போராளிகள் மற்றும் தளதிகளின் இருப்பிடங்களை கண்டுபிடித்து காட்டிக் கொடுக்கும் வேலைகளை தங்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட போலி உணர்வலைக்கு மயங்கி தங்களுடன் இணையும் புதியவர்களை வைத்து செய்வித்தது.

இதன் விளைவு குர்திஷ் மக்களின் மாபெரும் சத்தியாக இருந்த பி.கே.கே. இன்று மூன்றாக பிரிந்து விட்டது.

இதில் ஒரு குழு துருக்கி இராணுவத்தின் துணைப்படையாக இயங்கி வருகின்றது. இந்தக் குழுவே தியாகி துரோகி அரசியலையும் அதீத குர்திஷ் தேசியம் பேசும் உணர்ச்சி அரசியலையும் முன்னெடுத்த முன்னைய இரகசியக் குழுவாகும்

ஒச்சலானுக்கு ஆதரவான பிரிவு, ஈராக் குர்திஸ்தானில், காண்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்து அங்கிருந்து துருக்கிக்கும் இப்போது ஐஸ்.ஐஸ் அமைப்புக்கு எதிராகவும் போராடிவருகிறது.

இன்னொரு பிரிவு சிரியாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்பிரிவினரும் அங்கிருந்த படி, துருக்கி இராணுத்தின் மீது தாக்குதல்களை தொடுத்து வருகின்றனார்.

இதில் ஈராக் பிரிவிற்கு ஒச்சலானின் சகோதரனும், மற்ற பிரிவுக்கு அந்த முன்னணி தளபதி ஒருவரும் தலைமை தாங்குகின்றனர். இந்த இரண்டு குழுக்களும் ஒன்றை மற்றொன்று ‘துரோகக் குழு’ என்று குற்றம் சுமத்தி வருகின்றன. இவற்றைவிட சுயேட்சையாக இயங்கும் இரண்டு சிறு பிரிவுகளும் உள்ளன. இந்க் குழக்களுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆயுதம் வழங்கி ஐஸ்.ஐஸ் அமைப்புக்கு எதிராக போராட வைத்திருக்கின்றன.
(தொடரும்)

Link to comment
Share on other sites

இரண்டாம் முள்ளிவாய்க்கால் -05

ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும் உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது.உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான்.அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் என்ற அளவில் தான் இருக்கும். ஆனால் உழைப்பை கொடுப்பவன் அப்படியல்ல.அவனுடைய எதிர்பார்ப்பு அங்கீகாரம் என்ற அளவைத்தாண்டி பட்டம் பதவி புகழ் என்று நீண்டதாக இருக்கும்.’
0000
புலத்தில் திறக்கப்பட்ட இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கான களமுனை
0000
war 2

முள்ளிவாய்க்காலுக்கான களமுனைகளை 26.07.2006 லே திருகோணமலை மாவிலாற்றிலும் 10.07.2007 லே மன்னார் பண்டிவிரிச்சானிலும் சிறீலங்கா அரசாங்கம் திறந்தது அனைவருக்கும் தெரியும்.அவற்றின் நகர்வுகள் மற்றும் அவற்றின் முடிகள் அனைத்துமே அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சத்தமின்றி யுத்தமின்றி 28.06.2007 லே பாரிசிலே விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஒரு களமுனை ஒன்று மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் திறக்கப்பட்டது பலருக்குத் தெரியாது.

மகிந்த ராஜபக்ஷவுக்கு முன் சிறீலங்காவில் ஆட்சியில் இருந்த சந்திரிகா குமாரதுங்காவின் அரசாங்கம் லக்ஸ்மன் கதிர்காமரை முன்நிறுத்தி இராஜந்திர போர்முனை ஒன்றை திறந்து விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக்கி வெற்றிகண்டது.ஆனால் இந்த வெற்றி விடுதலைப்புலிகளின் வளர்ச்சியையோ புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் இருந்த அவர்களது ஆதரவுத்தளத்தையோ எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

1995 ல் விடுதலைப்புலிகளுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்ட தோல்விகளும்,யாழ்ப்பாண இடப் பெயர்வும் புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவுத்தளத்தை சிதைக்கும் என்று சந்திரிகா அரசாங்கம் எதிர்பார்த்தது.ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக மக்கள் தங்களது ஆமோக ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு தந்தார்கள்.

‘விடுதலைப்புலிகள் கொலைகாரர்கள். பணம் பறிப்பவர்கள். பிள்ளை பிடிப்பவர்கள் பாசிஸ்டுகள்’ என்று ஒத்தோடிகளை வைத்து கூவி கூவி சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாங்களை செய்த போதிலும் அவற்றை மக்கள் செவி மடுக்கவில்லை.

‘விடுதலைப்புலிகளின் இருப்பும் அவர்களது பலமும் தான் பௌத்த சிங்கள பேரினவாதிகளை அச்சப்பட வைத்ததுடன்,அவர்களது இனச்சுத்திரிப்பு இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தடையாகவும் இருந்தது’ என்ற உண்மையை நூற்றுக்கு 80 விதமான புலம் பெயர்ந்த மக்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால் சந்திரிகா அரசாங்கத்தால் அவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை.

சந்திரிகாவும் மகிந்தவும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் இரண்டு பேருக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன.சந்திரிகா தனது தந்தையினதும் தாயினதும் ரஷ்ய சீன சார்பு பாரிம்பரியத்துக்கு மாறாக மேற்குலக சார்பாளராக இருந்தார்.

ஆனால் மகிந்தவோ தன்னை உண்மையான சிறீலங்கா சுதந்திரக் கட்சி பாரம்பரியத்தில் வந்த சீன ரஷ்ய ஆதரவாளராக காட்டிக்கொண்டார். ஆனால் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் முகவராக அவர் செயற்பட்டார் .அவர் ஒரு நல்ல நடிகர்.’விடுதலைப் புலிகளை ஒழிக்க எந்தச் சாத்தானுடனும் நான் கூட்டுச் சேருவேன்’ என்று சொன்ன ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான வாரிசு அவர்தான்.

சீனா தன்னுடைய ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைக்கான கடல்வழிப் போக்குவரத்துக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று கருதியது.அமெரிக்கா இந்து சமூத்திர பிராந்தியத்தின் மீதான தனது ஆளுமைக்கு அச்சுறுத்தலான அமைப்பாக அவர்களைப் பார்த்தது.இந்தியா தனது பிராந்தியமேலாதிக்க கொள்கைக்கு தடையாக இருக்கும் அமைப்பாகவும் தன்னுடைய போலித் தேசியவாத கொள்கைக்கு ஆப்பு வைக்கக் கூடிய அமைப்பாகவும் விடுதலைப்புலிகளை கருதியது.உலக பெருமுதலாளித்துவ சக்திகள் இந்தியாவையும் சீனாவையும் உள்ளடக்கிய தங்களுடைய பெரும் சந்தைக்கு விடுதலைப்புலிகளின் வளர்ச்சி சிக்கலை தோற்றுவிக்கும் என்று கணிப்பிட்டன. மொத்தத்தில் உலக பெரு முதலாளித்துவ அதிகார வர்க்கம் ஒன்று சேர்ந்து மகிந்தவை முன்நிறுத்தி தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி முடித்து.

இந்த யுத்தததை திட்டமிட்டதும் வழிநடத்தியதும் உலக உளவு அமைப்புக்களும் உலக பெருமுதலாளித்துவ அமைப்புக்களின் பொருளாதா இராணுவ கொள்கை வகுப்பு மற்றும் திட்டமிடல் அமைப்புக்களும் ஆகும்.

இதனாலேயே மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் முன்னைய ஆட்சிக்காலங்களில் இருந்து வேறுபட்ட விதத்தில் புதிய நிழல் யுத்த களமுனையொன்று பாரிசில் திறக்கப்பட்டது.பாரிஸ் தான் நீண்ட காலமாக விடுதலைப்புலிகளின் புலம் பெயர்ந்த ஆதரவு தளத்தை நிர்வகிக்கும் தலைமை இடமாக இருந்ததால் இந்த களமுனை இங்கு திறக்கப்பட்டது.சந்திரிகா அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான தனது இராஜதந்திர போரை சர்வதேச நாடுகளை குறிவைத்து நடத்தியது. ஆனால் மகிந்த அரசோ புலம் பெயர்ந்த தமிழ் மக்களை குறிவைத்து இந்தப் போரை நடத்தியது.paris_france_october_2012_metroscenes.com_33

28.06.2007 அன்று பாரிசின் 8 வது நிர்வாகப் பிரிவிலுள்ள பிரபலமான 5 நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் இந்த களமுனையை திறப்பதற்கான ஒரு நாள் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் பேசு பொருள் அல்லது தலைப்பு ‘பங்கரவாதிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கான திட்டமிடலும் சவால்களும்’.

இந்தச் சந்திப்பில் சிறீலங்கா தரப்பில் 2 அமைச்சர்கள் 2 அதிகாரிகள் (இதில் ஒருவர் பிரித்தானியாவை சேர்ந்த சர்வதேச கொள்கை வகுப்பு மூலோபாய அமைப்பொன்றின் உறுப்பினர்) 2 இராஜதந்திரிகள் உட்பட 6 பேரும் புலம் பெயர்ந்த சிங்கள அமைப்புகளின் சார்பில் 4 பேரும் (இதில் ஒருவர் முன்னாள் ஜேவிபி உறுப்பினர்) தமிழ் ஒத்தோடிகள் 5 பேரும் கலந்து கொண்டனர்.

காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை நடைபெற்ற இந்த சந்திப்பில் முதலில் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டிய தேவை,அதற்கு சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் என்பன வந்திருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் புலம் பெயர்ந்த கட்டமைப்புகள் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் அவற்றிக்கு தலைமை தாங்குபவர்கள் பற்றியும் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்த பின்பும் அவர்களால் எப்படி செயற்பட முடிகிறது என்பவை பற்றியும் ஆராயப்பட்டது.

மதிய உணவுக்குப் பின்பு விடுதலைப்புலிகளின் ஆதரவு தளத்தை சிதைப்பதற்கு வகுக்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் அவற்றை செயற்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

1. விடுதலைப்புலிகளுக்கொன்று புலம்பெயர்ந்த நாடுகள் ஒவ்வான்றிலும் மக்களை அணி திரட்டுவதிலும் அவர்களிடமிருந்து நிதியாதாரத்தை பெறுவதிலும் நீண்ட அனுபவமும் ஆற்றலும் உள்ள பல மூத்த செயற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள்
2. விடுதலைப்புலிகளின் அனைத்து செயற்பாட்டாளர்களிடமும் தங்களது சக செயற்பாட்டாளரைப் பற்றி பொது இடத்தில் குறைகூறும் விமர்சிக்கும் பழக்கம் கிடையாது.விடுதலைப்புலிகளுக்கு பாதகத்தை உண்டாக்கும் எந்தக் கருத்தையும் அவர்கள் எந்த இடத்திலும் தெரிவிக்க மாட்டார்கள்.அது போன்ற எந்தச் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபடமாட்டார்கள்;.
3. விடுதலைப் புலிகளின் ஆதரவுததளம் என்பது தமிழ் சங்கங்கள் தமிழ்சோலை மற்றும் தமிழாலயம் முதலான பாடசாலைகள்,விளையாட்டுக்கழகங்கள்,ஊடக கட்டமைப்பு என்பவற்றிலேயே தங்கியிருக்கிறது.
4. ஐரோப்பாவில் உள்ள விடுதலைப்புலிகளின் இராஜதந்திர செயற்பாடுகள் ஜெனிவாவை தளங்கொண்டே இயங்குகின்றன.

என்கின்ற விடயங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு இவற்றை எப்படி உடைப்பது அல்லது மாற்றி அமைப்பது என்று ஆராயப்பட்டது.

tamil-protest-geneva

1. மூத்த செயற்பாட்டளார்களை மக்களிடம் இருந்து அந்நியப் படுத்தி மக்கள் அவர்களை வெறுக்கும் அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ள அஞ்சும் சூழ்நிலையை உருவாக்குவது.இதன் மூலம் மக்களை அணிதிரட்டும் நிதிமூலங்களை திரட்டும் விடுதலைப் புலிகளின் ஆற்றலை கணிசமாக குறைக்கலாம் அல்லது மட்டுப்படுத்தலாம் என்று கூறப்பட்டது.இதற்கு இந்த மூத்த செயற்பாட்டாளர்கள் மீது தொடர்சியாக பலமுனைகளில் பொய்யான தகவல்களை உள்ளடக்கிய அவதூறு பரப்பரை மேற்கொள்வது.
2. முதல் செயற்பாட்டின் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் இயக்க செயற்பாட்டாளர்கள் தங்களது சக செயற்பாட்டாளர்களை அல்லது முன்னாள் செயற்பாட்டாளர்களை மக்கள் மத்தியில் குறிப்பாக பொது வெளியில் விமர்சிப்பது தூற்றுவது போன்ற செயற்பாட்டை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பது- இதை தியாகி துரோகி என்ற ஒரு நீண்ட அரசியல் செயல் திட்டமாக நடைமுறைப்படுத்துவது. இதன் மூலம் விடுதலைப்புலிகள் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் ஒழுக்கமானவர்கள் கட்டுப்பாடானவர்கள் என்ற பிம்பத்தை உடைப்பது.
3. உப அமைப்புக்கள் என்று விடுதலைப்புலிகளால் அழைக்கப்படும் தமிழ் பாடசாலைகள் தமிழ் சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள் என்பவற்றுக்குள் ‘தலைவர் வாழ்க போராட்டம் வாழ்க’ என்று அதி தீவிர தேசியம் பேசிக்கொண்டு ஊடவி அவற்றுக்குள் தியாகி துரோகி அரசியலை புகுத்துவது.குறிப்பாக தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் இளவயதினர் மற்றும் குழந்தைகளின் மனங்களில் இந்த தியாகி துரோகி அரசியலை படிப்படியாக திணிப்பது. இதன் மூலம் தமிழ் தேசிய செயற்பாடுகளில் இளைய தலைமுறையின் ஒன்று பட்ட துடிப்பான செயற்பாடுகளை பிளவு படுத்தி திசைதிருப்பி வலுவிழக்கச் செய்வது.
4. சுவிசில் மக்களின் வலுவான ஆதரவுடன் இடம்பெற்று வந்த விடுதலைப்புலிகளின் இராஜதந்திர செயற்பாட்டுத் தளத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு சுவிசில் வேலை செய்து ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி,பெல்ஜியத் தலைநகருக்கு அந்த தளத்தை மாற்றுமாறு ஆலோசனை வழங்குவது.தமிழ் மக்கள் குறைவாக வாழும் அந்த நாட்டில் இந்தச் செயற்பாடுகளை முடக்குவதற்கான வேலைகளை செய்வது.
5. இந்த நான்கு வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு சமூக வலைத்தளங்களையும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பத்தி எழுத்தாளர்களையும் இனங்கண்டு பயன்படுத்துவது.
ஆகிய முடிவுகளுடன் இந்த ஒரு நாள் சந்திப்பு நிறைவுற்றது.

மகிந்தவுக்கு எதிரான புலம்பெர்ந்த சிங்கள ஊடகவியலாளர்கள் மூலமாக பெறப்பட்ட இந்தத் தகவல்கள் ஒன்றுக்கு இரண்டு தடவை வெவ்வேறு தரப்புகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டு தகுந்த ஆதாரங்களுடன் ஒரு அறிக்கையாக தொகுக்கப்பட்டு 15.07.2007 அன்று தேசியத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

17.07.2007 அன்று இந்த அறிக்கை வன்னிக்கு கிடைத்ததாகவும் அதை தேசியத்தலைவரிடம் சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதை பெற்றுக்கொண்டவர்கள் அதை அனுப்பியவர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
(தொடரும்)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இரண்டாம் முள்ளிவாய்க்கால்-06

ஒரு விடுதலைப்போராட்டத்தின் வரலாறு கணனி விசைப்பலகைகளில் தட்டுவதன் மூலமோ மை கொண்டு காகிதத்தில் எழுதுவதன் மூலமோ உருவாக்கப்படுவதில்லை.அது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் உயிராலும் இரத்தத்தாலும் பல இலட்சக்கணக்கான மக்களின் உழைப்பாலும் வியர்வையாலுமே எழுதப்படுகிறது. அந்த வரலாற்றை அதன் மகத்துவத்தை ஒருபோதும் எதிரிகளாலோ அவர்களது ஒத்தோடிகளாலோ புரிந்துகொள்ள முடியாது.
0000
தேசிய விடுதலைச் செயற்பாடுகளில் புதியவர்களை இணைப்பது பற்றி….
0000

ltteschool-495x335
ஒரு அரசியல் கட்சிக்கு அல்லது ஒரு சங்கத்திற்கு அல்லது ஒரு பொது அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பதற்கும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன.

ஓரு அரசியல் கட்சியில் ஒரு சங்கத்தில் அல்லது ஒரு பொது அமைப்பில் பொதுவாக ஒருவர் அங்கத்துவ படிவம் ஒன்றை நிரப்பிக் கொடுத்து அதற்குரிய அங்கத்துவ பணத்தை செலுத்துவதன் மூலம் அவற்றின் உறுப்பினராகலாம்.

ஆனால் ஒரு விடுதலை இயக்கத்துக்கு இதே முன்மாதிரியில் அங்கத்துவ படிவம் நிரப்பி அங்கத்துவ பணம் பெற்றுக்கொண்டு ஒருவரை அவ்வளவு சுலபமாக சேர்த்துவிட முடியாது.

ஒரு விடுதலைப்போராட்டமென்பது மூடிய அறைக்குள் நடத்தும் விவாதமோ ஒரு திறந்த வெளியில் நடத்தும் பொதுக்கூட்டமோ அல்லது ஒரு மைதானத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டியையோ போன்றதல்ல.

அது இரத்தம் சிந்தி உயிரைக்கொடுத்து போராடும் களமுனைகளைக் கொண்டது.கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லக்கூடிய கரடுமுரடான ஆபத்தான பயணப்பாதை அது.

பணமும் பட்டங்களும் சமூக அந்தஸ்த்தும் பிரமுகர்களின் பரிந்துரைகளும் இந்தப்பயணத்துக்கு உதவாது.

‘போர்க்குணம்’ என்பது தான் இந்தப்பாதையில் பயணிப்பவனுக்கான முதல் அடிப்படை தகுதியாகும். எவனொருவன் தன்னைச்சுற்றி நடக்கும் அநீதியைக் கண்டு கோபம்கொள்கிறானோ,அதற்கெதிராக போராடத் துணிகிறானோ அவன் தான் போராளியாக இணைத்துக்கொள்ள அல்லது போராட்ட செயற்பாட்டாளனாக இணைத்துக்கொள்ளத் தகுதியானவன்.

பொதுவாக விடுதலை அமைப்புக்கள் தங்களுக்கான செயற்பாட்டாளர்களை அல்லது உறுப்பினர்களை மக்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுப்பதற்கு பொதுவான சில நடைமுறைகளை கையாழ்கின்றன.

ஒரு விடுதலை அமைப்பு தன்னுடைய உண்மையான ஆதரவுத்தளத்தை இனங்காண்பதற்கு தன்னைப்பற்றிய அவதூறு பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தாமே முன்வைக்கவேண்டும்.

இந்த அவதூறு பிரச்சாரத்தை கண்டு யாரெல்லாம் கொதித் தெழுகிறார்களே யாரெல்லாம் இந்த அவதூறு பரப்புரையை முறியடிக்க எதிர் பரப்புரையை முன்னெடுக்கிறார்களோ அவர்களே தமது ஆதரவு தளம் என்பதை இனங்காணலாம்.

பின்னர் இந்த ஆதரவு தளத்தை சேர்ந்தவர்களை அணுகி அவர்களுக்கு இலகுவான சில வேலைத்திட்டங்களை கொடுக்க வேண்டும் அந்த வேலைத்திட்டங்களை செய்து முடிப்பதில் அவர்கள் காட்டும் வேகம் விவேகம், இரகசியம் காக்கும் தன்மை, தனிமனித ஒழுக்கம், ஆளுமை, தலைமைத்துவப் பண்பு, கூட்டுச் செயற்பாடு என்பவற்றை தொடர்ச்சியாக அவதானித்து அதன் பின்பு அவர்களை தீவிர ஆதரவாளர்கள் என்ற நிலைக்கு கொண்டுவரவேண்டும்.

அதன் பின்பு மேலும் பல அவதானிப்பு சோதனைகளை நடத்திய பின்பே அவர்களை செயற்பாட்டாளர்கள் அல்லது உறுப்பினர்கள் என்ற நிலைக்கு கொண்டு வரவேண்டும்;;.

மாறாக ஒரு விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை சந்திக்கின்ற காலகட்டத்தில் திடீர் இட்டலி, திடீர் தோசை திடீர் இடியப்பம் என்கிற மாதிரி திடீர் புரட்சியாளர்கள் ‘தலைவர் வாழ்க ,போராட்டம் வாழ்க, எதிரிக்கு அடிப்போம் உதைப்போம் வெட்டுவோம் முறிப்போம்’ என்று விர வசனங்கள் பேசிக்கொண்டு புற்றீசல்கள் போல பலர் புறப்பட்டு வருவார்கள்.ஒரு விடுதலை அமைப்பு இவ்வாறானவர்களை எந்தவித கண்காணிப்பு உறுதிப்படுத்தல் நிலைக்கும் உட்படுத்தாமல் உள்வாங்குமாக இருந்தால் நிச்சயமாக அந்த விடுதலை இயக்கம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர் கொள்ளும்.எதிரி இந்த திடீர் புரட்சியாளர்கள் வேடத்தில் நிச்சயமாக தன்னுடைய உளவாளிகளையும் ஒத்தோடிகளையும் அந்த விடுதலை அமைப்புக்குள்; புகுத்தி மிகப் பெரிய பேரழிவை உண்டாக்குவான்.

புலத்தில் தமிழ் தேசிய செயற்பாட்டுத் தளத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பிளவுகளும் குழப்பங்களும் சீரழிவுகளும் 2009 மே 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் தான் எற்பட்டது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இது தவறான ஒரு நினைப்பாகும்.

2007 பிற்பகுதிலே இதற்கான அடித்தளம் பிரான்சில் இடப்பட்டுவிட்டது.

2007 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்சில் இருந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் 39 செயற்பாட்டாளர்கள் பிரான்சின் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது.

இது இங்குள்ள தேசிய செயற்பாட்டுத்தளத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது.இவ்வாறான ஒரு நெருக்கடியான நிலையில் உடனடியாக நெருக்கடிகளை சமாளித்து செயற்படுவதில் அனுபவமும் ஆற்றலும் உள்ள மூத்த செயற்பாட்டாளர்களை பொறுப்புக்குக் கொண்டு வந்து செயற்பாட்டுத் தளத்தை மட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கையை துரிதப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு பதிலாக டென்மார்க்கில் இருந்து ஒரு புதிய பொறுப்பாளர் இங்கு நியமிக்கப்பட்டார்.இவர் தேசிய செயற்பாட்டில் நீண்ட அனுபவம் உள்ளவராக இருந்த போதிலும் இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தின் அதி உச்ச ஊடுருவல் தளமாகவும் அதிகளவு ஒத்தோடிகளையும் கொண்டிருந்த பிரெஞ்சு மண்ணில் வேலை செய்வதற்குரிய அனுபவம் இருக்கவில்லை.

இவர் இங்கே பெறுப்பேற்க வந்த காலத்தில் திடீர் புரட்சியாளர்களையும் புதிய ஒத்தோடிகளையும் சிறீலங்கா புலனாய்வுதுறை முன்கூட்டியே இங்குள்ள செயற்பாட்டுத்தளத்துள் புகுத்திவிட்டது.

இவருடைய நியமனம் கூட இங்கிருந்து அனுப்பப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வன்னியில் ஏற்பட்டிருந்த யுத்த நெருக்கடியின் தேவை கருதி அவசரமாக செய்யப்பட்ட ஒன்றாகும்.

இவர் சில மூத்த செயற்;பாட்டாளர்களை இங்கு சந்தித்த போதும் அவர்களை இணைத்து இறுக்கமான தேசிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முடியாத அளவுக்கு சூழ்நிலை கைதியாக மாற்றப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களை விடுவிப்பதற்கும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டை உடைப்பதற்கும் இவருக்கு அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் கிடைக்கவிடாமல் தடுக்கப்பட்டது.இவரை சுற்றியருந்த திடீர் புரட்சியாளர்கள் இவருக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த வேலைகளை செய்தனர்.

இந்த செயற்பாட்டளர்களை விடுவிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனுபவம் மிக்க வழக்கறிஞர்களுக்கு பணங்கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.முன்னாள் போராளிகள் சிலர் தனிப்பட்ட முறையில் பணம் திரட்டி இந்த வழக்குச் செலவை கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் பின்னர் இந்த வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டனர்.அல்லது அவர்களாகவே இந்த வழக்குகளில் வதாடாமல் விலகிச் செல்லும் நிலை உருவாக்கப்பட்டது.

முடிவு ஒரு சிலர் பிறள்; சாட்சிகளாக மாறி முன்ணணி செயற்பாட்டாளர்கள் மீது பாரத்தைப் போட்டு தப்பிக்க அவர்களுக்கு சிறை தண்டனை கிடைத்ததுடன் தமிழர் ஒருங்கிணைப்பு குழு தடை செய்யப்பட்டது.

இது புலத்திலே சிறீலங்கா அரசால் திறக்கப்பட்ட இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கான களமுனையில் அதற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

சிறீலங்கா அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி தனது அடுத்த நடவடிக்கையாக தமிழ் சோலை பாடசாலைகளை குறிவைத்தது.

பிரான்சிலே ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தமிழ் சங்கங்கள் இருக்கின்றன.இந்த தமிழ் சங்கங்கள் அவை இருக்கும் நகரங்களின் பெயருடன் சேர்த்து பிராங்கோ தமிழ் சங்கங்கள் என்று அழைக்கப்பட்டன.
இந்தச் சங்கங்களுக்கு கீழே தமிழ் பாடசாலைகள் இயங்கின.இவை தமிழ் சோலைகள் என்று அழைக்கப்பட்டன.
இந்தத் தமிழ் சங்கங்களுக்கு என்று ஒரு நிர்வாகமும் தலைவரும், தமிழ் சோலைக்கென்று ஒரு நிர்வாகியும் இருப்பர்.பொதுவாக தமிழ் சங்க தலைவர்களுக்கும் தமிழ்சோலை நிர்வாகிகளுக்கும் இடையிலே அதிகார போட்டி இருந்து வந்தது. பல சங்கங்களிலே இவர்கள் பிள்ளைகள் முன்பு சண்டையிட்ட நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

நான் இந்த சங்கங்கங்கள் பாடசாலைகளுக்கு பொறுப்பாக இருந்த காலத்தில் அதாவது உப அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளராக இருந்த காலத்தில் இந்த முரண்பாட்டை சிறீலங்கா அரசும் அதன் ஒத்தோடிகளும் பயன்படுத்திவிடக் கூடாது என்பற்காக இவற்றுக்கான யாப்பு ஒன்றை உருவாக்கி சங்கத் தலைவர்களுடைய அதிகாரம் என்ன? தமிழ்சோலை நிர்வாகிகளுடைய அதிகாரம் என்ன? ஒவ்வொருவருடைய செயற்பாட்டு எல்லைகள் என்ன? என்பதையெல்லாம் தெழிவாக வரையறுத்திருந்தேன்.

இந்த வரையறைக்குள் நின்று செயற்பாடாத நிர்வாகங்களும் நிர்வாகிகளும் மாற்றப்பட்டனர்.

ஒரு தமிழ் சங்கத்தில் நான் ஒரு சிக்கலான பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது.அந்த தமிழ் சங்கத்தின் கீழ் நடந்த பாடசாலையில் படித்த ஒரு மாணவனை அங்கு படிப்பித்த ஒரு ஆசிரியை மற்ற பிள்ளைகளுக்கு முன்னிலையில் அவனது சாதியை சொல்லி தரக்குறைவாக திட்டிவிட்டார்.அதை அந்த மாணவன் வீட்டில் சென்று முறையிட அவனது தந்தை அந்த பாடசாலைக்குச் சென்று அந்த ஆசிரியையை பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் திட்டிவிட்டார்.தன்னை அவர் இப்படி திட்டியதால் தன்னிடம் படிக்கும் பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் தன்னை மதிக்க மாட்டார்கள் என்று அந்த ஆசிரியை தமிழ் சங்க நிர்வாகத்திடம் முறையிட அவர்கள் அவர்கள் அந்த மாணவனை பாடசாலையில் இருந்து நீக்கிவிட்டார்கள். அந்த மாணவனின் தந்தை என்னை சந்தித்து ‘சிறீலங்கா அரசு தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையை பறித்ததால் தான் ஆயுதப்போராட்டமே தொடங்கியது.தமிழீழ தேசியத்தலைவரின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் நடக்கும் ஒரு பாடசாலையில் எனது பிள்ளைக்கு படிக்க இடம் இல்லை என்பது நியாயமா?’ என்று கேட்டார்.

நான் உடனடியாக அந்த சங்கத்தினுடைய பொதுக் கூட்டத்தை கூட்டி நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்த போது ‘அந்த மாணவனின் தந்தை ஒட்டுக்குழுவை சேர்ந்தவர் என்றும் பாடசாலை நிர்வாகத்தை குழப்புவதற்காகவே தன்னை அவர் அவமதித்ததாக’ அந்த அசிரியை குற்றம்சாட்டினார்.

‘அவர் ஒட்டுக்குழுவோ ஒட்டாத குழுவோ ஆனால் ஒரு பிள்ளையை தமிழ் தேசிய செயற்பாட்டுத்தளத்தில் இயங்கும் ஒரு பாடசாலையில் அதுவும் வகுப்பறையில் வைத்து ஒரு ஆசிரியை எப்படி சாதி சொல்லி திட்டலாம்?’ என்ற என்னுடைய கேள்விக்கு அந்த ஆசிரியையிடமோ அந்த நிர்வாகத்திடமோ எந்த பதிலும் இருக்கவில்லை.நான் உடனடியாக அந்த அந்த ஆசிரியையை  பணி நீக்கம் செய்ததுடன் அந்த நிர்வாகத்தை கூண்டோடு கலைத்துவிட்டு புது நிர்வாகத்தை தெரிவு செய்தேன்.பழைய நிர்வாகிகள் திரண்டு சென்று அப்போது பொறுப்பாக இருந்த பருதியிடம் முறையிட்டார்கள்.பரிதி ‘என்னுடைய முடிவு சரியான முடிவு’ என்று கறாராக சொல்லிவிட அவர்களுக்கு திரும்பிச் செல்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

நாங்கள் வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்க்காமல் உண்மையான நியாயத்தின் பக்கம் நின்று எடுத்த முடிவு இன்று அந்தப் பாடசாலையை சிறந்த பாடசாலையாக உருவாக வழிவகுத்திருக்கிறது.

பிரான்சின் 93 வது நிர்வாகப்பிரிவில் இன்னொரு பாடசாலையில் நீண்ட காலமாக நிர்வாக பிரச்சனை இருந்து வந்தது.அந்த சங்கத் தலைவருடைய மனைவி மொரிசியஸ் நாட்டை சேர்ந்தவர்.அவருக்கு அந்த நகர சபையில் நிறைய செல்வாக்கு இருந்தது.அந்த செல்வாக்கினூடாக அந்த நகர முதல்வரும் அந்த பகுதி அரசியல் பிரமுகர்களும் ஈழப்போராட்டம் பற்றியும் விடுதலைப்புலிகள் பற்றியும் உயர்வான எண்ணத்தை கொண்டிருந்தனர்.

இந்த புதிய பொறுப்பாளரின் காலத்தில் இந்த முரண்பாடு புதிய ஒத்தோடிகளால் ஊதிப் பெருக்கப்பட்டு தவறான முடிவுகள் எடுக்க வைக்கப்பட்டதால் அங்கு சிறீலங்கா அரசின் தலையிட்டுக்கு வழிவகுத்தது.அங்கு சிறீலங்கா அரசின் பாடத்திட்டத்தில் இயங்கும் பாடசாலை ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டது. தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக இருந்த அந்த நகரசபை சிறீலங்கா அரசின் செயற்பாட்டை நியாயப்படுத்தும் நகரசபையாக மாற்றப்பட்டது. இது சிறீலங்கா அரசாங்கத்துக்கு புலத்து களமுனையில் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.
(தொடரும்)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இரண்டாம் முள்ளிவாய்க்கால்-07

22FEB
 
 
 
 
 
 
 
Rate This

 

 

Modus_Operandi_20140605_05p4 WORLD

ஒரு விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு எதிரிகள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம் விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான போராளிகளை கொச்சைப்படுத்தும் பரப்புரையாகும். போராளிகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் தான் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் அமைப்பையும் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடக்க முடியும்.

0000
உட்பகை வேரறுக்கும் என்பதை புரிந்துகொள்ளல்……
0000
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அதிகபட்ச துரோகமிழைத்தது கருணா என்பதில் தமிழீழ விடுதலையையும் விடுதலைப்புலிகளின் அர்ப்பணிப்புடன் கூடிய பேராட்டத்தையும் நேசிப்பவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

2004 மார்ச்மாதம் கருணா பிரிந்த போது வன்னியிலே போராளிகள் தளபதிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் கருணா மீதான கோபமும் வெறுப்பும் உசச்த்தில் இருந்தது.அந்தக்காலகட்டத்தில் நான் அங்கே இருந்தேன்.

கருணா பிரிந்ததாக அறிவித்தவுடன் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களிடமிருந்து வந்த முதலாவது உத்தரவு விடுதலைப்புலிகளின் ஊடகங்களில் கருணாவைப்பற்றிய எந்தச்செய்தியையும் வெளியிடக்; கூடாது என்பதே.

இது ஏன் என்று எல்லோருக்கும் முதலில் புரிவில்லை.’அண்ணை ஏன் இப்படி பொறுமை காக்கிறார்.கருணாவை ஒழிக்க வேணும் அவனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேணும்.அவன்ரை ஆட்கள் யாhராரெல்லாம் இருக்கிறாங்கள் என்று கண்டு பிடித்து சுடவேணும்’ என்றெல்லாம் பலரும் கொதித்துக்கொண்டிருந்தார்கள்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேசியத்தலைவர் பிரபாகரன் ,தளபதிகள் பொறுப்பாளர்கள் ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் எல்லோரையும் அழைத்து கூட்டமொன்றை நடத்தினார்.இந்தக் கூட்டத்திலே தளபதிகள் பலர் கருணாவின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பான விமர்சனங்களை முன்வைத்தார்கள்.ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கருணாவை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேணும் அவன் செய்த துரோகங்கள் பற்றி நாங்கள் தொடர்ச்சியாக பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகளில் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.சில மூத்த தளபதிகள் இந்த துரோகியை விட்டு வைக்க கூடாது என்றார்கள்.

அனைவருடைய கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்ட தேசியத்தலைவர் அவற்றிக்கு சொன்ன பதில் எல்லோரையும் ஒரு கணம் திகைக்க வைத்தது.

துரோகிக்கு தண்டனை கொடுக்க எனக்குத் தெரியும்.விசரனுக்கு என்ன தண்டனை கொடுக்கிறது என்றதைத்தான் யோசிக்கிறன்.உவன் விசாரன் அவனை நான் பார்த்துக்கொள்கிறன்.நீங்கள் உங்கடை வேலை எதுவோ அதைப் பாருங்கோ‘ என்பது தான் அவர் அதற்கு சொன்ன பதில்.

ஊடகத்துறையினருக்கு அவர் சொன்ன பதில் ‘நீங்கள் ஒருத்தரும் அவனைப்பற்றி எழுதக் கூடாது.அவன் துரோகி அவன் அது செய்தான் இது செய்தான் என்று எந்த விசயமும் ஊடகங்களிலை வரக் கூடாது’ என்பதாகும்.

அதற்கு அவர் கொடுத்த விளக்கம் தான் மிக முக்கியமானது.’நீங்கள் அவனைப்பற்றி எழுத அவன் எங்களைப்பற்றி எழுதுவிக்க அதை படிக்கிற ஆக்களுக்கு எது உண்மை எது பொய் என்று தெரியாது.நாறடிக்கப்படப் போவது இந்தப் போராட்டமும் பல்லாயிரக்கணக்கான மாவிரர்களினதும் போராளிகளினதும் தியாகத்தாலை கட்டி எழுப்பப்பட்ட எங்கடை இயக்கமும் தான். எது பொய் எது உண்மையெண்டதை நாங்கள் எழுத்தாலை நிரூபிக்கேலாது.செயல்லை தான் நிரூபிக்க வேணும் ‘ என்பது தான் அவர் கொடுத்த விளக்கமாகும்.

ஒரு ஊடகப் பொறுப்பாளர் ‘அண்ணை அவன் எங்களைப்பற்றி பொய்யும் புரட்டும் செல்லிக் கொண்டிருக்கேக்கை நாங்கள் அதை மறுக்காமல் இருந்தால் சனம் அவன் சொல்லுறதைதான் நம்பும்.அதாலை நாங்கள் எங்கடை ஊடகங்களிலை அவனைப்பத்தி எழுதாமல் வெளி ஊடகங்களிலை புனை பெயர்களிலை எழுதலாம்தானே?’ என்றார்.

அதற்கு அவர் ‘பொய் எப்பவும் கற்பூரம் மாதிரி உடனை பத்தியிடும்.உண்மை விளக்குத் திரி மாதிரி. அது பத்த கொஞ்ச நேரம் எடுக்கும்.ஆனால் பத்தியிட்டா எண்னை இருக்குமட்டும் நிண்டு எரியும்.கற்பூரம் உடனே பத்தி எரிஞ்சு இல்லாமல் போயிடும்.ஆனால் விளக்கு எண்ணையும் திரியும் இருக்குமட்டும் நிண்டு எரியும்.நாங்கள் விளக்கு மாதிரி இருக்க வேணும்.எங்கடை செயற்பாடும் நேர்மையும்தான் திரியும் எண்ணையும் போல.’ என்றார்.

அத்துடன்’ இந்த விசயத்திலை நீங்கள் -உண்மை விளம்பி- என்ற பெயரிலை வேறை ஒரு ஊடகத்திலை அவனைப்பத்தி எழுத,அவன் -உண்மையின் நண்பன்- என்று இன்னொரு பெயரிலை இன்னொரு ஊடகத்தில எழுத உதுக்கு முடிவிருக்காது. உதெல்லாம் தேவையில்லாத விசயம். இப்ப நீங்கள் அவனைப்பற்றி அவனோட இருக்கிற ஆக்களை பத்தி எழுதப் போறிங்கள் எண்டால், அவங்கடை பால் குடி பருவத்தை பற்றியா எழுதப் போறீங்கள்? அவங்கள் இயக்கத்தில இருந்த காலப்பகுதியை தான் எழுதப் போறிங்கள்? அப்ப நீங்களும் இயக்கத்தை பத்தித்தான் எழுதப் போறீங்கள்.அவன் பதிலுக்கு ஆட்களை வைத்து புனைபெயர்களில் இயகத்திலுள்ள தளபதிகளைப்பத்தி அவருக்கு இவருடன் தொடர்பு, இவருக்கு அவருடன் தொடர்பு அவர் அங்கை போனார் இவர் இங்கை போனார் எண்டு எழுதினால் எங்கடை வேலையள் பாதிக்குமா? இல்லையா? எங்களிட்டை ஒரு சிறந்த புலனாய்வுத்துறை கட்டமைப்பு இருக்கு.அவை உதை பார்த்துக்கொள்ளுவினம்.இது அவையின்ரை வேலை. நீங்கள் அவையின்ரை வேலையை செய்ய வெளிக்கிட வேண்டாம்.உங்கட வேலை எதுவோ அதை மட்டும் செய்யுங்கோ‘ என்றார் கறாராக.

அவரது இந்த முடிவு சிறீலங்கா புலனாய்வுத்துறையின் பல திட்டங்களை நிர்மூலமாக்கியது.கருணாவை பிரித்தெடுப்பதன் மூலம் ஏனைய தளபதிகளுக்கும் அரச தரப்புடன் இரகசியத் தொடர்பிருப்பதாக வதந்திகளைப் பரப்பி விடுதலைப்புலிகளின் உட்கட்டமைப்பில் குழப்பநிலையை உண்டாக்கலாம் என்று சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் நம்பினார்கள்.ஒவ்வொரு தளபதிகளின் மீதான நம்பிக்கையின் மீது சந்தேக நிழலை விழ வைப்பதன் மூலம் இயக்கத்தின் ஒட்டு மொத்த செயல் திறனை குலைக்கலாம் என்று அவர்கள் பகல் கனவு கண்டார்கள்.ஆனால் அவர்களது முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

Modus_Operandi_20140605_05p3இதனால் அவர்கள் புலத்தை குறிவைக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்கினார்கள்.ஏற்கனவே இதற்காக பல வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்ட போதும் 2007 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பண்டிவிரிச்சானில் வன்னிக்கான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது  புலம் பெயர் நாடுகளையும் அங்கு வாழும் ஈழத்தமிழ் மக்களையும் அவர்களுக்கான அமைப்புக்களையும் கையாழும் திட்டம் சர்வதேச நிபுணத்துவ நிறுவனங்களின் உதவியோடு வகுக்கப்பட்டது.இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாக…
1. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு மேற்குலகில் போடப்பட்டுள்ள் தடையை மேலும் மேலும் இறுக்கமாக்க ஏற்பாடுகளை செய்வது.
2. இந்த தடைகளுக்கு எதிரான சட்ட முயற்சிகளை உள்ளே புகுந்து திசை திருப்புவது.அல்லது குழப்புவது.
3. வடக்கிலும் கிழக்கிலும் தாங்கள் முன்னெடுக்கும் பாரிய இனி அழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு எந்த நாடும் தீவிரமான முயற்சிகளை எடுக்காமல் தடுத்து நிறுத்துவது. ஏன்பவை உள்ளடங்கியிருந்ததாக உறுதிப்படுத்த முடிந்தது.

இந்தத்திட்டத்தில் பிரான்ஸ் பிரித்தானியா சுவிஸ் ஆகிய 3 நாடுகளுக்கு மற்ற நாடுகளை விட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.பிரான்சும் பிரித்தானியாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவத்தையும் வீட்டோ அதிகாரத்தையும் கொண்ட நாடுகள்.சுவீஸ் விடுதலைப்புலிகளின் நிதி வளத்தக்கான முதுகெலும்பாகவும் ஐநாவை நோக்கிய செயற்பாட்டுக்கான தளமாகவும் இருந்தது.

பிரித்தானியாவை பொறுத்தவரை அது அதிகளவுக்கு தமிழர்கள் வாழும் நாடு என்ற போதிலும் சிறீலங்கா பொதுநலவாய அமைப்பில் இருப்பதாலும் சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு தன்னால் உருவாக்கப்பட்டது என்றவகையில் அதற்கு புறம்பாக தமிழீழம் என்ற ஒரு நாடு உருவாக அது ஒருபோதும் ஆதரவளிக்காது என்று சிறீலங்கா தரப்பு உறுதியாக நம்பியது.பிரித்தானிய அரசியல் வாதிகள் தங்களுடைய தேர்தல் இலாபத்துக்காக ஈழத்தமிழர்களுக்கு உதவுவதாக காட்டிக்கொண்டாலும் ஒரு அரசாங்கம் என்ற வகையில் பிரித்தானிய அரசாங்கம் தங்களை முற்றாக நிராகரித்துக் கொண்டு விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அல்லது அவர்கள் மீதான தடையை நீக்கும் முடிவை எடுக்காது என்று சிறீலங்கா அரச தரப்பு உறுதியாக நம்பியது.அதானால் தனக்கு ஆதரவான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்தக்கொண்டு நிலைமையை கையாளலாம் என்று அது கருதியது.

அதேநேரம் பிரான்சை பொறுத்தவரை சிறீலங்கா அதன் செல்வாக்கு வலயத்துக்கு உட்பட்ட நாடு அல்ல. அதே நேரம் பிரித்தானியாவை போல அது முழுக்க முழுக்க அமெரிக்க சார்பு நாடு அல்ல.அது பலஸ்தீனம் மற்றும் ஆர்மேனிய இனப்படுகொலை விடயங்களில் அமெரிக்காவுடன் ஒத்துப் போகவில்லை.பிரான்சுக்கு எப்போதும் காலணித்துவ பின்புலம் புரட்சிப் பின்புலம் என்று இரண்டு முகங்கள் இருக்கின்றன. இந்தப் புரட்சிப் பின்புலத்தை விடுதலைப்புலிகள் தங்களது ஆதரவுத் தளமாக மாற்றிவிட்டால் அது தங்களுக்கு சிக்கலாக முடியும் என்று சிறீலங்கா அரச தரப்பு நம்பியது.இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அது விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் மற்றும் தாங்கள் நடத்தப் போகும் யுத்தத்தை நிறுத்தம் படி ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவருமளவுக்கு பிரான்ஸ் செல்லக் கூடும் என்று அஞ்சியது.அதனால் பிரான்சுக்கான தனியான செயற்திட்ட மொன்றை சிறீலங்கா உருவாக்கியது.அத்துடன் பிரான்சை கையாழ்வதற்கென்ற தனது ராஜதந்திர செயற்பாட்டு வட்டத்தில் அனுபவமும் திறமையும் மிக்க ராஜதந்திரியான தயான் ஜெயதிலகாவை பிரான்சுக்கான தனது தூதுவராக சிறீலங்கா அரசு நியமித்தது.

சுவிசை பொறுத்தவரை விடுதலைப்புலிகள் விடயத்தில் அந்நாட்டு அரசாங்கத்தின் நெகிழ்வுத்தன்மை, அந்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் மக்களின் அமோகமான விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு, அர்ப்;பணிப்பும் இலட்சிய உறுதியும் மிக்க செயற்பாட்டாளர்கள் என்பன விடுதலைப்புலிகளின் புலம் பெயர்ந்த நாட்டு செயற்பாடுகளுக்கு முன் மாதிரியாகவும் பலமாகவும் இருந்தது.

பிரித்தானியாவைப் போலவோ பிரான்சைப் போலவோ இராஜதந்திர செயற்திட்டத்தை சுவீசுக்கு வகுக்க முடியாதென்பதை சிறீலங்கா அரச தரப்பு உணர்ந்து கொண்டது.விடுதலைப் புலிகளுக்கான ஏகோபித்த ஆதரவு மக்களிடம் இருக்கும் வரை தாங்கள் எந்தத் திட்டத்தை வகுத்தாலும் அது தோல்வியிலேயே முடியும் என்பதை சிறீலங்கா அரசு தரப்பு கணித்தது.

இதனால் உட்பகையை உருவாக்கி வேரறுக்க வைக்கும் வேலைதிட்டம் ஒன்றை சுவீசுக்காக சிறீலங்கா அரசு வகுத்தது.இந்தத் திட்டப்படி செயற்பாட்டாளர்களுக்கு இடையலேயான சிறு சிறு முரண்பாடுகளை ஊதிப் பெருக்கும் வேலைகள் வெளியில் இருந்து திட்டமிட்டு செய்யப்பட்டன.நீண்ட காலமாக பொது மக்கள் மத்தியல் கட்டி எழுப்பப்பட்டிருந்த நன் மதிப்பை குலைக்கும் விதித்திலும் திறமையான செயற்பாட்டாளர்கள் பற்றிய வதந்திகள் மத்தியில் பரப்பப்பட்டன.

உதாரணமாக 2008 ஜனவரியில்  குடும்ப நிகழ்வொன்றுக்காக நான் சுவீசுக்கு சென்ற போது அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஒருவர் மக்கள் சுற்றவர அமர்ந்திருக்க நடுவில் இருந்து கொண்டு கதையளந்து கொண்டிருந்தார்.

ஏதோ குடும்ப விசயம் பேசுகிறார்கள் போலிருக்கிறது என்று நான் அவர்களை கடந்து சென்ற போது சுவிசில் எனக்கு தெரிந்த செய்பாட்டாளர்கள் சிலரைப்பற்றி வார்த்தைகளில் எழுத முடியாத அளவுக்கு சுவாரசியமாக கதை சொல்லிக்கொண்டிருந்தார்.அவர் அந்த கதைகளை சொன்ன விதம் ஒரு சாதாரண ஒருவர் வாய்க்கு வந்தபடி உளறுவது போன்று தெரியவில்லை.பரப்பரை செய்வதற்கு நன்கு பயிற்றப்பட்ட ஒருவராகவே அவர் எனக்கு தென்பட்டார். இது நடந்தது பீல் நகரத்தில்.திரும்பவும் ஒரு 4 நாள் கழித்து பேர்ண் நகரத்தில் இன்னொரு குடும்ப நிகழ்வுக்கு சென்ற போது அங்கேயும் அதே நபர் சாப்பிடும் இடத்தில் வைத்து ஒரு இரண்டு பேருக்கு அரசியல் போதித்துக் கொண்டிருந்தாh.;அவரிடம் சிக்கியிருந்த 2 பேரும் பேர்ண் மாநில செயற்பாட்டாளர்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது.நான் அவரை அவதானிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பின்னால் இருந்த மேசையில் அமர்ந்து கொண்டேன்.

சுவிஸ் பொறுப்பாளர் மற்றும் முக்கியமான செயற்பாட்டளர்கள் எல்லாம் செயற்;படும் வேகம் காணாதென்றும் பழைய பெருச்சாளிகளும் ஊழல் பேர்வழிகளுமான இவர்கள் கதிரைகளை பிடித்து வைத்துக்கொண்டு குந்தியிருக்கிறர்கள் என்றும் இவர்களையெல்லாம் கலைத்து விட்டு இளம் பொடியளை செயற்பாட்டுக்கு கொண்டு வரவேணும் என்றும் அதற்கான முயற்சிகளை எல்லோரும் எடுக்க வேண்டும் என்றும் அந்த இரண்டு செயற்பாட்டாளர்களுக்கும் அவர் போதித்துக்கொண்டிருந்ததார்.

அவருடைய கருத்து பேச்சு தொனி மற்றும் பேசுவதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடங்கள் என்பன மக்களிடமுள்ள இயக்க ஆதரவை சீர் குலைப்பதை நோக்கமாக கொண்டிருப்பதாகத்தான் எனக்குப் பட்டது.இது இயக்க ஆதரவாளர் இயக்க நலன் விரும்பி என்று நடித்துக்கொண்டு இயக்கத்துக்கு ஆப்பு வைக்கும் ஒரு நடவடிக்கையாகவோ எனக்குத் தென்பட்டது.

பின்னர் எனக்கு தெரிந்த ஒரு நீண்ட கால செயற்பாட்டாளரிடம் அவரது அங்க அடையாளங்களை சொல்லி விசாரித்த போது நிறைய இடங்களில் அவர் இப்படி நடந்து கொண்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் ஒரு திடீர் புரட்சியாளர் என்றும் சொன்னார்
(தொடரும்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இரண்டாம் முள்ளிவாய்க்கால்-08

‘நீங்கள் அதிகளவுக்கு விமர்சிக்கப்பட்டால் உங்களுடைய செயற்பாடும் கருத்தும் அதிகளவுக்கு கவனிக்கப்படுகிறது என்று அர்த்தமாகும்.இந்த விமர்சனங்கள் உங்களுடைய குறைகளை தவறுகளை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அவற்றை கவனத்தில் எடுத்து உங்களை திருத்திக் கொள்ள வேண்டும். மாறாக இந்த விமர்சனங்கள் உங்களை கொச்சைப்படுத்துவதாகவும் உங்கள் மீது சேறடிப்பதாகவும் இருந்தால் அதையிட்டு நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இவை உங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். எதிரிகளுக்கு தாங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போய்விடுவோம்; தோற்றுப் போய்விடுவேம் என்று பயம் ஏற்படும் போது தான் அவர்கள் உங்கள் மீது கீழ்த்தரமான வர்த்தைகளை பயன்படுத்தி சேறடிப்பார்கள்;”
0000

Aananthapuram_2012_03_100182_445
மக்களின் எழுச்சியை வீணடித்தமை தொடர்பாக…….

2008 நவம்பர் மாதம்…
நாச்சிக்குடா…
அக்கராயன்…
கிராஞ்சி…
கௌதாரிமுனை..
பூநகரி… என்று பல்வேறு இடங்களை சிறீலங்கா படையினர் கைப்பற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறி வந்த நேரத்தில்…
மறுபுறத்திலே சிறீலங்காபடையினர் நடத்திய எறிகணை வீச்சு விமானக்குண்டு வீச்சுகளில் எமது மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டும் எஞ்சியவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த நிலையில்…..

இங்கே புலம் பெயர்ந்த மக்கள் மத்தியிலே ‘இந்தப் போராட்டம் தோற்றுப் போய்விடக் கூடாது.விடுதலைப்புலிகள் தோற்றுப் போய்விடக்கூடாது. எமது உறவுகள் காப்பாற்றப்பட வேண்டும்” என்கின்ற உணர்வும் ஆதங்கமும் எற்பட்டிருந்தது.இது ஒரு மாபெரும் எழுச்சியாக உருவெடுத்ததும் அனைவரும் அறிந்ததே.விடுதலைப்புலிகள் தங்கள் வாழ் நாளெல்லாம் எதிர்த்தவர்கள் கூட இந்தப்போராட்டம் தோற்றுவிடக் கூடாது என்கிற உணர்வோடு இந்த எழுச்சியிலே பங்குகொண்டதையும் நாம் அறிவோம்.
சிறீலங்கா அரசாங்கம் கூட இந்த எழுச்சியை கண்ட அஞ்சியதும் எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

ஆனால் உணர்வு நிலையிலான இந்த மக்கள் எழுச்சியை நடைமுறை சார்ந்த அறிவுபூர்வமான வேலைதிட்டமாக மாற்றி அதனுடாக எமது இலக்கை அடையக்கூடிய அனுபவம் புலம்பெயர்ந்த நாடுகளின் பொறுப்பாளர்களுக்கு இல்லாமல் இருந்தது.இது அவர்களே எதிர்பார்க்காத ஒரு பேரnழுச்சி.ஏற்கனவே அவர்களுக்கு இருந்த அழுத்தங்கள் நெருக்கடிகள் மற்றும் பேராட்டம் தோல்வி நோக்கிச் செல்வதாக வந்து கொண்டிருந்த செய்திகள்,அவர்களை அதிகளவுக்கு பாதித்தது என்பதை நேர்மையுடன் பதிவு செய்தாகவேண்டும்.

இந்தக் காலகட்டத்திலே அவர்களுக்கு ஆலோசகர்களும் வழிகாட்டிகளும் தேவைப்பட்டார்கள்.நிறைய ஆலோசகர்கள், நிறைய வழிகாட்டிகள், வந்தார்கள்.தமிழர்கள் ஒன்று பட்டு தெருவில் நின்று இரவு பகலாக போராடினால் அமெரிக்கா போரை நிறுத்தும்;.கிளாரி கிளிண்டன் உதவி செய்வவார்.ஓபாமா மீட்டுப்புக்கப்பல் அனுப்புவார், ஐ.நா. நிச்சயம் தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் என்றெல்லாம் பெரிய பெரிய ஆலோசனைகள் எல்லாம் வழங்கப்பட்டன.

இங்குள்ள பொறுப்பாளர்களுக்கு இவையெல்லாம் ஆச்சரியமான விடயங்களாக இருந்தன.இதெல்லாம் நடக்குமா என்று சிந்திக்கக் கூட அவர்களால் முடிவில்லை. அந்தளவுக்கு அவர்களுக்கு நெருக்கடிகள் இருந்தன.அவர்கள் வன்னிக்கு தகவல் அனுப்பி அவர்களையும் இலவு காத்த கிளிகளின் நிலைக்கு தள்ளினார்கள்

இந்த நேரத்திலே பாரிசிலே எனக்கு நன்கு அறிமுகமான குர்திஷ்தான் விடுதலை இக்கத்தின் மகளிர் பிரிவு தளபதிகளில் ஒருவரான சகின் கொன்சியின்(Sakine Consiz) உதவியோடு(பாரிசின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டவர்)  பிரான்சின் முக்கிய அரசியல் கட்சியின் முன்ணித்தலைவர் ஒருவரை சந்தித்து இந்த போரை நிறுத்த உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டோம்.இந்தச் சந்திப்பு 30.11.2008 மாலை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது அவர் எங்களுக்கு சில விடயங்களை புரியவைத்தார்.

  • சிறீலங்கா அரசாங்கம் தான் நடத்துகின்ற யுத்தத்தை பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.
  • விடுதலைப்புலிகள் இயக்கத்தை அமெரிக்கா கனடா அவுஸ்ரேலியா ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா உட்பட பல நாடுகள் பயங்கரவாத இயக்கமாக அறித்திருக்கின்றன.
  • பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு இயக்கத்துக்கு எதிராக ஐநாவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு மேற்கொள்ளும் யுத்தத்தை ஏனைய உறுப்பு நாடுகள் எதிர்த்தால் அது பயங்கரவாதத்தை ஆதரித்ததாக அமையும் என்பதால் எந்த நாடும் தனது இராஜதந்திர நலன்களை தாண்டி இந்த முடிவை எடுக்காது.
  • பிரான்சுக்கு தனிப்பட்ட முறையில் சிறீலங்கா மீது எந்த அக்கறையும் கிடையாது.அதனுடைய செல்வாக்கு வலயத்துக்குள் அது அடங்கவில்லை.சிறீலங்கா விடயத்தில் இந்தியா என்ன முடிவு எடுக்கிறதோ அதைத்தான் பிரான்ஸ் ஆதரிக்கும்.
  • மேற்குலக நாடுகளில் அகதிகளாக தஞ்சம்புகுந்துள்ள தமிழ் மக்கள் இந்த யுத்தத்தை நிறுத்தும்படி முன் வைக்கும் எந்தக் கோரிக்கையும் இந்த நாடுகள் அனுதாபத்துடன் பரிசிலிக்கும்.ஆனால் அவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அவற்றிக்கு இல்லை          

……இவை தான் அவர் எமக்கு புரியவைத்த விடயங்களில் முக்கியமானவை. விடுதலைப்புலிகள் மீதான தடை கொண்டுவரப்பட்ட போது அதை சட்டரீதியாக  எதிர்த்து நீக்குவதற்கு முயற்சிக்காததை கண்டித்த அவர், அந்த இக்கட்டான நிலையில் யுத்தத்தை நிறுத்துவதற்குள்ள சில வழிமுறைகளையும் எமக்குத் தெரிவித்தார்.

  • இந்த யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமென்ற போர்வையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் யுத்தம் என்பதை நிரூபிக்க வேண்டும்.
  • இந்த யுத்தத்தின் பின்னணியில் இருக்கும் இனவாதம் மதஅடிப்படைவாதம் முதலான சகல பிற்போக்கு தனங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.
  • ஒவ்வாரு நாட்டிலும் அந்தநாட்டு குடிமக்களைக்கொண்டு இந்த யுத்தத்தை நிறுத்துமாறு அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
  • பிரான்சும் பிரித்தானியாவும் பாதுகாப்பு சபையிலே வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட நாடுகள்.இந்த இரண்டு நாடுகளிலும் குறைந்த பட்சம் 1 இலட்சம் குடிமக்களது கையொப்பங்களை திரட்டி மக்களுக்கு எதிரான இந்த யுத்தத்தை நிறுத்துமாறு அந்தந்த அரசாங்கங்களுக்க அவசர மனு கொடுக்க வேண்டும்.
  • பிரெஞ்சு குடிமக்கள் ஒரு இலட்சம் பேரின் கையொப்பத்துடன் ஒரு மனு குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டால் கண்டிப்பாக அவர் அந்த மனுமீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.அதனால் இந்த விடயத்தை பிரான்சை கொண்டு ஐநா பாதுகாப்பு சபையில் ஒரு அவசர தீர்மானமாக கொண்டுவரச் செய்யலாம்.சீனாவோ ரஸ்யாவோ தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை நிராகரித்தால் மீண்டும் அதை பொதுச் சபைக்கு கொண்டுவரச் செய்யலாம்.பொதுச் சபையில் பிரான்ஸ் தனது செல்வாக்கு உட்பட்ட நாடுகளை இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக திரட்டும் போது பிரித்தானியாவை கொண்டு அதன் கெல்வாக்கு உட்டபட்ட நாடுகளை ஆதரவாக திரட்டுமாறு நிர்பந்தித்தால் நிச்சயமாக இந்த யுத்தத்தை நிறுத்த முடியும்;…..

இவைதான் அவர் தெரிவித்த வழிமுறைகளாகும்.இந்த நடவடிக்கை மூலம் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றுவதோடு போரளிகளையும் போர் கைதிகளாக பிடிக்கப்படும் இழிநிலையில் இருந்து காப்பாற்றலாம்.யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படும் திகதியில் இருந்து போர்புரிந்த இரண்டு தரப்பையும் அவரவர் நிலைகொண்ட இடங்களில் இருக்க வைத்து சர்வதேச மத்தியத்தியத்துவத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கான தீர்வைக்காணலாம் என்று அவர் அதற்கான விளக்கத்தையும் தந்திருந்தார்.

உண்மையில் அந்த இக்கட்டான நிலையில் மக்களையும் போராட்டத்தையும் போராளிகளையும் தலைமையையும் காப்பாற்றுவதற்கு இது தான் சரியான வழியாக எனக்குப்பட்டது.

அந்த நேரத்திலே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து போராளிகளையும் தலைமையையும் ஆயதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையச் செய்யும் ஒரு சதிவலை விரிக்கப்பட்டு கையறு நிலையில் எல்லோரும் அதில் சிக்கிக் கொண்ட அவலம் தான் நேர்ந்தது.

நான் இந்த விடயத்தை புலத்திலுள்ள உரியதரப்புக்கு எடுத்துச் சொல்லி இராஜதந்திர ரீதியாக அவசர அவசரமாக நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை புரியவைக்க மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.

இவை பற்றி நான் இங்கே விலாவாரியாக எழுத விரும்பவில்லை.அப்படி எழுதினால் அது போராளிகள் செய்த தியகத்தை கொச்சைப்படுத்துவதாக அமையும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறேன்.

எல்லோரும் ‘அமெரிக்கா ஆபத்பாந்தவனாக வந்து மக்களையும் போராட்டத்தையும் தலைமையும் காப்பாற்றும்” என்ற நம்பிக்கையோடு சந்திப்புக்கு கூட நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

உணர்வுள்ள பல இளைஞர்கள் தங்களை ஒறுத்து உண்ணா நோன்பிருந்து
இந்த உலகத்தின் கண்கள் திறக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.எமது மக்கள் கொடுங்குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் ‘இந்த புலம்பெயர்ந்த நாடுகளின் பார்வை எங்கள் மீது விழாதா?” என்ற ஏக்கத்தோடு இரவு பகலாக விதிகளிலே நின்றார்கள்.

புலம்பெர்ந்த தமிழ் பிரமுகர்கள் குழுவினர் பிரித்தானிய பிரெஞ்சு அமைச்சர்களை சந்தித்துப் பேசினார்கள்.

பிரித்தானிய பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் சிறீலங்கா சென்று யுத்தத்தை நிறுத்தும்படி மகிந்த அரசாங்கத்தை கோரினார்கள்.

சீறீலங்கா அரசாங்கமோ ‘மக்களை நாங்கள் கொல்லவில்லை. பங்கரவாதிகள் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருக்கும் அவர்களை மீட்கவே நாங்கள் போர் நடத்துகிறோம்.அதனால் அதை நிறுத்த முடியாது என்றது.

அவர்கள் இருவரும் சிறீலங்காவின் விருந்தோம்பலை மெச்சிவிட்டு திரும்பிவந்தார்கள்.

பிரான்ஸ் அரசாங்கம் பாதுகாப்பு சபையிலே தனக்குரிய பொது நேரம் ஒன்றிலே ஒரு தீர்மானமாக அல்லாமல் எமது பிரச்சனையை எழுப்பியது. சீனாவும் ரஸ்யாவும் அது மக்களுக்கு எதிரான போரல்ல பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அதை விவாதிகக்த் தேவையில்லை என்று உரத்துக் கூறின.பிரான்சோ பிரித்தானியாவோ அதன்பின் எங்கள் விடயம் பற்றி வாய் திறக்கவில்லை.

அந்த முக்கியமான பிரெஞ்சு அரசியல் தலைவர் எங்களுக்குச் சொன்ன அத்தனை விடயங்களும் அச்சொட்டாக நடந்தேறின.

கிளிநொச்சி வீழ்ந்து விட்டது…
ஆனையிறவு விழ்ந்துவிட்டது…
ஆனந்தபுரத்திலே எங்கள் வீரத்தளபதிகள் எதிரியின் நயவஞ்சகமான தாக்குதலில் வீரச்சாவை தழுவிக் கொண்டார்கள்….
எங்கள் மக்கள் நாளாந்தம் வகை தொகையின்றி வதைக்கப்பட்டும் கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டும் இருந்தார்கள்….
நாங்கள் இங்கே ஐரோப்பிய தெருக்களில் கையறு நிலையில் அழுது புலம்பிக்கொண்டிருந்தோம்…

 

(தொடரும்)

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக ஜெயதேவன் வழக்குப்போட முயற்சித்ததாகவும், ஆனால் அன்ரன் பாலசிங்கம் அதனைத் தடுத்து ஜெயதேவனுக்கு "நல்ல" பேச்சு கொடுத்ததாகவும் முன்னர் வாசித்த ஞாபகம். 

ஆலோசகர்கள் பிழையான வழியில் புலிகளின் தலைமைப் பீடத்தை வழிநடாத்தினார்கள் என்பதைவிட புலிகளின் தலைமை தவறான முடிவுகளை விளைவுகளை ஆராயாமல் எடுத்தது என்றுதான் இப்பொது சொல்லமுடியும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இரண்டாம் முள்ளிவாய்க்கால்-09

ஓரு கொடிய ஒடுக்குமுறை மூலம் ஒரு விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்கலாம்.ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவரமுடியாது.இது ஒரு யதார்த்தமான உண்மை.அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் இருக்கும் வரை அதற்கு எதிரான போராட்டமும் இருக்கும்.ஒரு விடுதலைப்போராட்டம் தனது இறுதி இலக்கை அடைவதற்கு முன் ஒரு போதும் முடிவுறாது.
0000

விமர்சனத்துக்கும் அவதூறு பரப்புரைக்குமுள்ள வேறுபாட்டை இனங்காண்பது தொடர்பாக….

criticism_may_2015ஒரு விடுதலைப் போராட்டத்தின் மீது வைக்கப்படும் விமர்சனம் என்பது அந்தப் போராட்டத்தின் தவறுகளில் இருந்து படிப்பினைகளை பெறுவதற்கும் அவற்றின் மூலம் அந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்துவதற்கும் உந்து சக்தியாக இருக்கவேண்டும்.

எந்தவொரு விமர்சனமும் அந்த விமர்சனம் வைக்கும் காலகட்டத்துக்கான களநிலை யாதார்த்தம் மற்றும் அந்த யதார்த்தத்தின் மீது தாக்கம் செலுத்திய அகப் புறச் சூழ்நிலை என்பவற்றை கணக்கில் எடுத்தே வைக்கப்பட வேண்டும்.

ஒரு விடுதலைப்போராட்டத்தின் தோல்வியை அதற்கான காரணங்களை விமர்சிப்பதற்கு எல்லோருக்கும் உரிமையுள்ளது..ஆனால் அந்த உரிமை என்பது அந்த விடுதலைப் போராட்டத்தில் அதை விமர்சிப்பவரது பங்களிப்பு என்ன? அந்தத் தோல்வியை தடுப்பதற்கு அவர் செய்த முயற்சிகள் என்ன? என்கின்ற சுய விமர்சனத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேருக்கு வெந்நீர் ஊற்றும் வேலையை செய்வதற்குப் பெயர் விமர்சனமல்ல.அது அவதூறு பரப்புரை.இப்போது நிறையப் பேர் இந்த வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிட்டது.எல்லா தவறுகளுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைமையும் தான் காரணம்.இனி பௌத்த சிங்கள பேரினவாதிகள் போடும் பிச்சையை பெற்றுக்கொண்டு வாழ்வது ஒன்றுதான் வழி என்று பலர் போதித்;துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓரு கொடிய ஒடுக்குமுறை மூலம் ஒரு போராட்டத்தை தோற்கடிக்கலாம்.ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவரமுடியாது.இது ஒரு யதார்த்தமான உண்மை.அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் இருக்கும் வரை அதற்கு எதிரான போராட்டமும் இருக்கும்.ஒரு விடுதலைப்போராட்டம் தனது இறுதி இலக்கை அடைவதற்கு முன் ஒரு போதும் முடிவுறாது.

யுத்தம் புரட்சியை முன்னுக்கு தள்ளும்.புரட்சி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்பது ஒரு புகழ் பெற்ற யுத்ததந்திரக் கூற்று.

இதன் அர்த்தம் யுத்தம் நடக்கின்ற போது புரட்சி வெடித்து அதை நிறுத்தும் என்பதல்ல.

எதிரி மக்கள் மீது திணிக்கும் ஒரு கொடிய யுத்தத்தின் மூலம் அவர்களது உடமைகளை அழிக்கலாம் அவயங்களை இழக்கம்படி செய்யலாம், உயிர்களை வகைதொகையின்றி பறிக்கலாம்.ஆனால் இவற்றின் மூலம் விடுதலை உணர்வை முற்று முழுதாக ஒழித்துவிட முடியாது.அது போர் காலத்திலும் அதையொட்டிய பின் போர் சூழலிலும் மழுங்கடிக்கப்பட்டது போலத் தோற்றமளிக்கும். ஆனால் அது அமைதியான தோற்றப்பாட்டை காண்பிக்கும் எரிமலைக்கு ஒப்பானது. அது உரிய நேரம் வரும் போது குமுறிக் கொந்தளித்து வெளிப்படும்.இது ஒரு இயங்கியல் விதி.இதை ஒடுக்குமுறையாளர்களாலும் அவர்களது ஒத்தோடிகளாலும் ஒரு போதும் புரிந்துகொள்ள முடியாது.

ஓரு கிரிக்கட்; போட்டியில் 4 ஓட்டங்கள் அடித்தால் கைதட்டல் 6 ஓட்டங்கள் அடித்தால் விசில் ஆட்டமிழந்தால் ‘இவங்களுக்கு விளையாடத்தெரியேல்லை’ என்று வர்ணனை செய்வதை போல விடுதலைப் போராட்டத்தையும் அதேபோன்ற ஒரு இரசிக மனோபாவத்தில் இருந்து ஆதரித்து வந்தவர்களுக்கும், விடுதலைப் போராட்டம் என்பதே சலுகைகளை பெறுவதற்கும் ஆட்சியில் பங்கு பெற்று அமைசசர் பதவிகள் உட்பட்ட அதிகாரப்பதவிகளை பெறுவதற்குமான ஒரு கருவியென நினைத்து செயற்பட்டவர்களுக்கும் இந்தத் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்டது போன்ற தோல்வி ஒரு நிரந்தரமான தோல்வியாகத் தோன்றும்.

ஆனால் தாயக விடுதலையை உண்மையாக நேசித்தவர்களுக்கும் அதற்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்களுக்கும் இந்த தோல்வி என்பது நிரந்தரமானதல்ல என்பது தெரியும்.

ஓரு விடுதலைப் போராட்டத்தில் எந்தளவுக்கு எதிரி அடக்குமுறையை பிரயோகிக்கிறானோ அந்தளவுக்கு அதற்கு எதிராக போராட துணியும் போராளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.ஒடுக்குமுறைக்கு எதிராக போரிட்ட ஒரு சமூகம் ஒருபோதும் அடிமைத்தனத்தை நிரந்தரமாக ஏற்றுக்கொண்டு வாழாது. ஏற்கனவே அந்தச் சமூகம் தோற்றுப் ;போய்விட்டாலும் அந்தத் தோல்விகளில் இருந்து பாடங்கற்றுக் கொண்டு மீண்டும் வீறு கொண்டு எழும் என்பதே வரலாறு.

முள்ளிவாய்க்காலிலே நடந்த இந்த நூற்றான்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்துக்கு இனப்படுகொலைக்கு கண்கண்ட சாட்சிகளாக இருக்கும் இன்றைய குழந்தைகள், தங்களுடைய தாயை தந்தையை சகோதரியை சகோதரனை உறவுகளை துடிக்கத் துடிக்க கொன்ற சிறீலங்கா அரச கட்டமைப்பை தனது கட்டமைப்பென்றும் சிறீலங்கா தேசியத்தை தன்னுடைய தேசியம் என்றும் சிறீலங்காவின் வாளேந்திய சிங்கக் கொடிதான் தன்னுடைய தேசியச் கொடி என்றும் மனதார ஏற்றுக்கொண்டு அடிமை வாழ்வு வாழ்வார்கள் என்று எவராது நினைத்தால், அல்லது கூறினால், நிச்சயமாக அவர் விடுதலைப் போரின் அடிப்படையை புரியாத ஒருவராகத் தான் இருப்பார்.அல்லது பிழைப்பவாத சிந்தனை அல்லது மேலாதிக்க சிந்தனை கொண்ட ஒருவராகத்தான் இருப்பார்

JVP-89உதாரணமாகசிறீலங்காவிலே 1971ம் ஜேவிபி கலவரத்திலே அதை அடக்குவதற்காக இந்திய இராணுவத்தின் உதலியோடு பதினோராயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

1971 லே ஒடுக்கப்பட்டதாக சொன்ன ஜேவிபி 1988-89ல் மீண்டும் கிளர்ந்து எழுந்தது.அந்தக் கிளர்ச்சியை ஒடுக்க 30000 ஆயிரம் பேரைக் கொன்றார்கள். இந்தக்கிளர்ச்சியிலே முன்னணியில் நின்று செயற்ப்பட்டவர்கள் இதிலே கொல்லப்பட்டவர்கள் எல்லாம் 1971 கிளர்ச்சியின் போது படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களாகும்.

நிச்சயமாக இந்த முப்பதாயிரம் பேர்களின் குடும்பங்களிலும் இருந்து இன்னொரு 5 அல்லது 10 வருடங்களில் சாரசரியாக 90000 ஆயிரம் பேர் தங்களுக்கு அநீதி இழைத்த சிறீலங்காவின் அதிகார அமைப்பை தகர்க்க புறப்படுவார்கள்.இது சிறீலங்காவின் அதிகார வர்க்கத்துக்கு நன்கு தெரியும். இதனாலேயே அவர்கள் பௌத்த சிங்கள பேரினவாத வெறியை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிங்கள இளையோருக்கு ஊட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.முன்னெப்போதையும் விட அதிதீவிர சிங்கள இனவாத அமைப்புக்கள் இப்போது உருவாக்கப்படுகின்றன.

இதற்காகத் தான் தமிழின அழிப்பையும் போர் வெற்றியையும் சிங்கள தேசியத்தின் வெற்றியாக பிரகடனப்படுத்தி அவர்கள் இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எல்லா அடக்குமுறையாளர்களும் எல்லா அதிகாரவர்க்கமும் செய்யும் மரபுவழி தவறையே சிறீலங்காவின் அதிகார வர்க்கமும் செய்திருக்கிறது.

ஓரு போர் என்பது தோற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் வென்றவர்களுக்கும் எதிர்விளைவுகளை கொடுக்கக் கூடியது.வெளிப்படையாக பார்த்தால் சிங்கள இனமும் பௌத்த சிங்கள தேசியவாதமும் வென்றுவிட்டது, தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் தமிழ் தேசியம் தோற்றுப் போய்விட்டது என்பது போலத்தான் தெரியும்.

goingஆனால் உண்மையில் தமிழ் தேசியத்தை தோற்கடிக்கப்புறப்பட்டு சிங்கள தேசியம் தான் தோற்றுப் போய்விட்டது.. சிங்கள தேசத்தின் இறைமை சீனவிடவுமும் இந்தியவிடமும் அமெரிக்காவிடவும் உலகவங்கியிடமும் அடகுவைக்கப்பட்டு விட்டது. சிறீலங்காவினுடைய சந்தையை சீனாவும் இந்தியாவும் பங்கு போட்டுக்கொள்ள சிறீலங்காவின் புவிசார் அசைவியக்கத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

தமிழர்கள் மீது சிறீலங்கா தொடுத்த போர் அந்த நாட்டை மிகப் பெரிய கடனாளியாக்கியிருக்கிறது.இந்தக் கடன்களுக்கான வட்டியை கட்டுவத்கு மேலும் கடன்வாங்க வேண்டிய நெருக்கடிக்கு சிறீலங்காவை தள்ளியுள்ளது.

சீனாவும் இந்தியாவும் அவ்வப்போது சிறீலங்காவுக்கு கொடுக்கும் நன்கொடைகள் மீன் பிடிப்பதற்கு தூண்டிலில் கொழுவும் இரைக்கு ஒப்பானது.

காப்பெற் வீதிகளும் தொடரூந்து பாதை புரரமைப்புக்களும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவுவதற்காக போடப்பட்டவையல்ல.இலங்கைத் தீவின் வளங்களை சுரண்டி அவற்றை விரைவாக வெளியே எடுத்துச் செல்வதற்கும் பல்தேசிய நுகர்வுக் கலாச்சாரத்தை விரிவுபடுத்துவதற்கும் உலகப் பெரு முதலாளித்துவம் செய்துள்ள ஏற்பாடு அது என்பது பலருக்கு தெரிவதில்லை.

முள்ளிவாக்கலுக்கு பின் இந்திய சீன பெரு நிறுவனங்கள் சிறீலங்காவில் திணித்துள்ள பல் தேசிய நுகர்வு காலாச்சார ஆக்கிரமிப்பும் சந்தைப் பொருளாதார ஆக்கிரமிப்பும் தமிழர் பகுதிகளை விட சிங்கள கிராமங்களிலே பாரிய தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது.

இந்த நுகர்வுக் காலச்சாரத்துடன் போட்டி போட முடியாமல் கிரமப்புற சிங்கள மக்கள் தங்கள் விவசாய நடவடிக்கைகளையும் சிறு தொழில் முயற்சிகளையும் கைவிட்டுள்ளனர்.சிங்கள பெருந்தேசிய நிறுவனங்கள் கூட இந்திய சீன பெரு நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் அவற்றிடம் சரணாகதியடைந்து கொண்டிருக்கிறன.

வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் சிறீலங்காவின் தென்பகுதி கிராமங்களிலே என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன.

சிங்கள ஆட்சியாளர்கள் இதற்கு வழமைபோல ‘பௌத்த சிங்கள பேரினவாதம்’ என்ற லேகியத்தை கொடுத்து இதை திசை திருப்ப பார்க்கிறார்கள்.

இதன் வெளிப்பாடுதான் அண்மையில் சாவகச்சேரியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை தாக்குதல் அங்கியும் கிளேமோர் குண்டுகளும் மீட்கப்பட்ட சம்பவமாகும்.

‘தினை விதை;தவன் தினை அறுப்பான்,வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது தமிழிலுள்ள ஒரு முது மொழியாகும்.

இது சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமான ஒன்றாக அமைந்துள்ளது.தமிழர் தாயகத்தில் அவர்கள் விதைத்த வினையை இப்போது தங்களது தாயகத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிற்பந்தத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்

இந்த வினை அறுவடை இந்த வருடத்திலும் நடைபெறலாம் அல்லது இன்னும் 5 முதல் 10 வருட காலத்திலும் நடக்கலாம். ஆனால் நிச்சயமாக அது நடந்தே தீரும்.

இதை நோக்கித்தான தமிழர் தரப்பு காய்களை நகர்த்த வேண்டும்.இதை நோக்க்pத்தான் எங்களது திட்டமிடலும் வேலைத்திட்டங்களும் அமைய வேண்டும். நாங்கள் இப்போதைக்கு ஆயுதம் தூக்க வேண்டிய அவசியம் இல்லை..எதிரி அதற்கான தேவையை உருவாக்கும்போது அதற்கான சூழல் தானாக கனிந்து வரும்.
இப்போது நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ….
எங்களுடைய கடந்த கால தவறுகளை திருத்துவதற்கு முதலில் எங்களுக்குள் நாங்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.எதிர் காலத்தில் இத்தகைய தவறுகள் நடைபெறால் தடுப்பதற்கான வழி முறைகளை நாங்கள் கண்டறிய வேண்டும்.

எதிரியின் திட்டமிட்ட ஆத்திரமூட்டல்கள்…
ஒத்தோடிகளின் ஏளனப் பேச்சுக்கள்…எழுத்துக்கள்…
பிழைப்புவாதிகளின் அச்சுறுத்தல்கள்… சேறடிப்புக்கள்… 
இவற்றையெல்லாம் மௌனமாகவும் நிதானமாகவும் கடந்து செல்லவேண்டும்.

எதிரி பலமாக இருக்கும் நாங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.எதிரி பலவீனப்படும் போது நாங்கள் அவன் மீது போர் தொடடுத்து அவனை தோற்கடிக்க வேண்டும்.இது தான் யுத்ததந்திரம்.
(தொடரும்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.