Jump to content

பெரியார் சிலை தகர்ப்பு- பின்னணிச் சதியை உணர்க! - பழ.நெடுமாறன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் சிலை தகர்ப்பு- பின்னணிச் சதியை உணர்க!

- பழ.நெடுமாறன்

திருவரங்கத்தில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை தகர்க்கப்பட்ட நிகழ்ச்சி தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரையும் கொதித்தெழ வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டை கலவரபூமி ஆக்கும் திட்டத்துடன் இந்தச் செயலை இந்து பாசிச வெறியர்கள் செய்திருக்கிறார்கள்.

தமிழர்களைத் தட்டி எழுப்பி தன்மானம் உள்ளவர்களாக ஆக்கியவர் தந்தை பெரியார் ஆவார். அவருடைய தொண்டு என்பது தமிழர்களை விழிப்படைய வைத்து முன்னேற்றப்பாதையில் நடைபோட வைத்தது.

ஆண்டாண்டு காலமாக வருண தருமத்தின் பெயரால் இம்மண்ணின் மைந்தர்களை சூத்திரர்களாக, தீண்டத்தகாதவர்களாக ஆக்கி அடிமைச் சேற்றில் ஆழ்த்திய கூட்டம் பெரியார் மீது ஆத்திரம் கொண்டு அலைகிறது.

தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை சகல துறைகளிலும் ஒழித்துக்கட்டிய பெருமைக்குரியவர் பெரியார் ஆவார். அவருடைய தொண்டு தொடராமல் போயிருந்தால் பெருந்தலைவர் காமராசரோ, அறிஞர் அண்ணாவோ, கலைஞர் கருணாநிதியோ, ஜீவானந்தம் அவர்களோ அரசியல் தலைவர்களாக உருவாகியிருக்க முடியாது.

50 ஆண்டு காலத்திற்கு மேலாக தனது ஈடுஇணையற்ற உழைப்பின் விளைவாக தமிழ்நாட்டில் மதவெறி, சாதி வெறி , மூடநம்பிக்கை போன்றவற்றை களைந்தெறிந்து பண்பட்ட பகுத்தறிவு நிலமாக பெரியார் ஆக்கிவைத்தார்.

ஆனால் தமிழ்மண்ணில் பெரியார் வாழ்ந்த காலம் வரை தலைதூக்க அஞ்சிய இந்து பாசிச வெறிக்கூட்டத்தை பல்லக்கில் சுமந்து வந்து, தமிழ்நாட்டில் காலூன்ற வைத்தவர்கள் திராவிடக் கட்சிகளைச் சார்ந்தவர்களே ஆவார்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும், போட்டிபோட்டுக்கொண்டு அதிகார வெறியிலும், ஒருவரை யொருவரை அழித்திடவேண்டும் என்ற ஆத்திரத்திலும் இந்து பாசிச வெறியர்களுடன் கூட்டுச் சேர்ந்தார்கள். இவர்களின் தோளில் சவாரி செய்து தமிழ்நாட்டில் காலூன்றிக் கொண்ட இந்து பாசிசக் கூட்டம் பெரியார் சிலையையே உடைக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது.

இதைக் கண்டு இப்போது வருந்திப்பயன் இல்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக இந்து பாசிச வெறிக் கூட்டம் தமிழ்நாட்டில் வெறியாட்டம் போடுகிறது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு, அவர்கள் கூட்டும் மாநாட்டுக்கு தடை, என பாய்ந்து பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் இரு கழக அரசுகளும் கடந்த 10 ஆண்டுக்காலத்தில் மதவெறியை ஊட்டும் வகையில் பேசியும் மதக்கலவரங்களுக்கு வித்திட்டும் வரும் இந்து பாசிச அமைப்புகளுக்கு தடைவிதிக்கவோ அவர்கள் மீது. வழக்குத் தொடரவோ முன்வரவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். அதுமட்டும் அல்ல மத்தியில் இந்து பாசிச ஆட்சி இப்போது இல்லை என்றாலும் கூட இந்த இரு கழகங்களும் இன்று வரையிலும் இந்து பாசிச அமைப்புகளைக் குறித்து எத்தகைய விமர்சனங்களும் செய்வதில்லை என்பது அப்பட்டமான உண்மையாகும். ஏனென்றால் எதிர்காலத்தில் மீண்டும் மத்திய ஆட்சிக்கு இந்து பாசிச அமைப்பு வந்துவிடுமானால் அதனுடன் இணைந்து செல்லவேண்டி இருக்குமே என்ற அச்சத்தினால் அவர்கள் வாய் திறப்பதில்லை.

பெரியார் சிலைத் தகர்க்கப்பட்ட நிகழ்ச்சியைக் கண்டு கொதிப்படைந்து எதிர்போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியது தி.மு.க. அரசு. ஆனால் பெரியார் சிலைத் தகர்ப்பு சதியின் மூலவர்களான தயானந்த சரசுவதி, இராம. கோபாலன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.

திருவரங்கம் பெரியார் சிலைத் தகர்ப்பை இந்த பின்னணியில் நாம் பார்க்கவேண்டும். பெரியார் சிலையைத் தகர்ப்பதின் மூலம் தமிழ்நாட்டில் அவரால் பரப்பப்பட்டுள்ள அனைத்தையுமே வீழ்த்துவதற்கு இந்து பாசிச வெறியர்கள் முயலுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதைப் புரிந்துகொள்ளாமல் நாம் பேசுவது வந்திருக்கக்கூடிய அபாயத்தை முழுமையாக உணரவில்லை என்பதையே காட்டும்

- நன்றி தென் செய்தி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.