Jump to content

வீரயுக நாயகன் வேள் பாரி


Recommended Posts

On 12/4/2017 at 1:58 PM, suvy said:

இன்னும் இல்லை  முத்து 86,   இப்பொழுதுதான் முத்தம் ஆரம்பித்திருக்கு.....!  tw_blush:

காத்திருக்கிறோம்

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply

வீரயுக நாயகன் வேள்பாரி - 59

,

 

p83a_1511848317.jpg

றம்பின் தலைவனுக்கு ஆதினியை மணமுடித்து எவ்வியூருக்கு அழைத்துவந்தனர். கொண்டாட்டங்களும் கூத்துகளும்தாம் எத்தனை வகை! விருந்துகளும் விளையாட்டுகளும் முடிந்தபாடில்லை. பொதினிவாழ் வேளிர்கள், இயற்கையின் அதிநுட்பங்கள் பலவற்றைக் கண்டறிந்தவர்கள்; தாதுக்களையும் உலோகங்களையும் நுட்பமாக அவதானித்த மாமனிதர்கள். அந்தக் குலமகள், பறம்புத் தலைவனை மணந்து எவ்வியூர் புகுந்தாள்.

மணமுடித்துச் செல்லும் குலமகளோடு பதினெட்டுக் குடிகளை அனுப்பிவைப்பது பொதினி வேளிர்களின் குலமரபு. பச்சிலை, தாதுக்கள், உலோகங்கள், உடற்கூறுகள் எனப் பலவற்றிலும் தேர்ந்த பதினெட்டு மருத்துவக்குடிகளை உடன் அனுப்பிவைத்தான் மேழகன். மதிப்பிட முடியாத மனிதச் செல்வங்களோடு ஆதினி எவ்வியூருக்குள் நுழைந்தாள்.

பொதினி, மலையடிவாரத்து ஊர். எவ்வியூர் பச்சைமலையின் உச்சியில் நிலைகொண்டுள்ள ஊர். மேகத்துக்குள் வாழ்வதுபோலவே எவ்வியூரின் பகற்பொழுது இருக்கும். நழுவி நகரும் மேகங்களுக்குள் கூந்தல் பறக்க ஓடவேண்டும் என்று ஆசை தோன்றியது ஆதினிக்கு. தான் ஒன்றும் குழந்தை அல்லள் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள். மரங்களின் எல்லா இலைகளின் மீதும் நீர் தேங்கியிருப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

``ஆண்டின் பெரும்பான்மையான மாதங்களில் உலராத ஈரத்தோடுதான் இலைகள் இருக்கும்” என்றான் பாரி.

இயற்கையின் குளுமையைவிட ஆதினியின் ஆழ்மனம் அதிகம் குளிர்ந்திருந்தது. மேல்மாடத்தில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். மாடத்துக்குள் மலர்ப்படுக்கையை ஆயத்தம்செய்யும் பணி நடந்துகொண்டிருந்தது. எவ்வியூர்ப் பெண்கள் பொதினிக்குச் சென்ற அன்று மாலைதான் மணவிழா நடந்தது. அன்று இரவு பாரிக்கும் ஆதினிக்கும் தலைநாள் இரவு. பொதினியின் குலவழக்கப்படி குலசடங்குகளைச் செய்தனர்.

இரவு மலர்ப்படுக்கை ஆயத்தமானது. படுக்கையின் நடுவில் ஆவாரம்பூவின் இதழ்களைப் பரப்பியிருந்தனர். அது மஞ்சள் நிறத்திலானது. அதை அடுத்து அத்திப்பூவின் நீல நிறத்தாலான வளைந்த கோடுகளை உருவாக்கியிருந்தனர். மூன்று கோடுகளைச் சுற்றி வெண்டாழையின் வெண்மை பரவிக்கிடந்தது. அதன் விளிம்புப் பகுதியில் செந்தாழையின் சிவப்பு அணிவகுத்திருந்தது. அது ஒரு மாயப்படுக்கையைப்போல வண்ணத்திலும் மணத்திலும் பெருமயக்கத்தை உருவாக்குவதாக இருந்தது.

அது பொதினியின் பூப்படுக்கை என்றால், எவ்வியூரின் மலர்ப்படுக்கை வேறுவிதமாக இருந்தது. ஐவண்ணக் குறிஞ்சியினால் படுக்கையை ஆயத்தம் செய்தனர். பல்லாண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி, பச்சைமலையின் எத்திசையில் எல்லாம் பூத்துக்கிடக்கிறது என்பதை அறிந்து எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்த்தனர். பொன்வண்ணக் குறிஞ்சியின் மஞ்சள் இதழ்களைப் படுக்கையின் நடுவில் விரித்தனர். பச்சைமலையின் வடகோடியில் மட்டுமே பூத்துள்ள மழைவண்ணக் குறிஞ்சியின் நீலநிற இதழ்கொண்டு நடுவிலிருந்த மஞ்சளைச் சுற்றி அழகிய வட்டம் அமைத்தனர். பவளக்குறிஞ்சியின் செம்மை நிற இதழ்களையும், பெருங்குறிஞ்சியின் வெண்மை நிற இதழ்களையும் மாற்றி மாற்றி அடுக்கினர். ஒரு சுடர் படபடத்து எரிவதைப்போன்ற ஒரு தோற்றம் கொள்ளச்செய்தது. வாடாக்குறிஞ்சியின் செந்நீல இதழ்களை விளிம்பெங்கும் வரிசைப்படுத்தினர்.

குறிஞ்சி காமத்துக்கான பூ. அதன் மணமும் வண்ணமும் கணநேரத்தில் மனித ஆழ்மனத்தைத் தன்னகப்படுத்திக்கொள்ளும். குறிஞ்சி பூக்கத் தொடங்கினால் காடு முழுவதும் பூக்கும். காமத்தின் தன்மையும் அதுதான். கால்விரல் நுனியிலிருந்து நெற்றியில் சுருண்டுகிடக்கும் கூந்தல் வரை எல்லாவற்றிலும் காமத்தீ இணையாகப் பற்றும். பற்றியெரியும்போது மிச்சமின்றி எரியும் தீ அது. மொத்தக் காடும் எரிவதைப்போலத்தான் இருக்கும் குறிஞ்சி பூக்கும் காலம். அதுதான் காமத்தின் காலம். காத்திருந்து எரிந்து காலகாலத்துக்கு மணக்கும்.

படுக்கையின் தன்மைக்கு ஏற்ப அதுவே மணத்தை அறையெங்கும் நிரப்பியிருக்கும். மாலை நேரத்துக் கதிரவன் ஒளி மங்க, சிறிது நேரமே இருந்தது. சட்டென ஒரு சிந்தனை தோன்றியது பாரிக்கு. ஆதினியை அழைத்துக்கொண்டு மாடத்தை விட்டுக் கீழிறங்கி வந்தான். மாடத்தின் வெளிப்புறத்தில் புதிதாகச் செய்யப்பட்ட தேர் நின்றிருந்தது. குதிரைகளை அதில் பூட்டச் சொன்னான். வீரர்கள் குதிரைகளைப் பூட்டினர். ஆதினியைத் தேரில் அமரவைத்து பாரி தேரை ஓட்டினான்.

வீரர்களும் மற்றவர்களும் பார்த்திருக்க, நாகப்பச்சை வேலியைக் கடந்து தேர் வெளியேறிப் போனது. எங்கே போகிறான் என யாருக்கும் தெரியாது. `ஆதினியைத் தேரிலே உட்காரவைத்து, சுற்றிக்காண்பித்து வருவான்’ என நினைத்தனர்.

ஆதினி இதுவரை தேர்ப்பயணம் செய்ததில்லை. மாலை நேரத்துச் சுருங்கும் ஒலியும், சீறிப்பாயும் தேரின் ஓசையும், மலை மடிப்புகளின் இளம்பச்சையும் காணக்கிடைக்காத காட்சியாக இருந்தது. அவளது முகம், இயற்கையின் ஆதிச்சுவையை உணர்ந்துகொண்டிருந்தது. முறையான பாதைகள் உருவாக்கப்படாததால் வேகத்தைக் குறைத்து, தேரை மெதுவாக ஓட்டினான். தேர் சென்றுகொண்டே இருந்தது. கதிரவன், ஒளி சிறுத்து அணைய ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. மலை உச்சியில் ஒளி அகலுதல், விளக்கை ஊதி அணைப்பதைப்போலச் சட்டென நிகழ்ந்துவிடும். ஆனாலும் தேரைத் திருப்பாமல் முன்னோக்கி ஓட்டிச்சென்றான் பாரி. ஆதினி எதுவும் கேட்கவில்லை.

மலைமுகட்டோரம் போய் தேர் நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய பாரி, ஆதினி இறங்க உதவி செய்தான். சற்றே சிந்தித்தபடி நின்றவன், தேரிலிருந்து குதிரைகளைக் கழற்றி விட்டான். அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை ஆதினியால் கணிக்க முடியவில்லை.

``உன்னை ஓரிடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் வா” எனச் சொல்லி, மலைமுகடு நோக்கி நடந்தான். ஒளி முற்றிலும் அகன்று இருள் கவிந்துவிட்டது. அவனைப் பின்பற்றி நடந்தாள் ஆதினி.

``குதிரைகளை அப்படியே விட்டுவிட்டு வந்திருக்கிறீர்களே, காட்டுக்குள் ஓடிவிடாதா?”

``போகாது. இந்த மேட்டில் மட்டுமே முயற்புல் இருக்கிறது. அதற்கு மிகப் பிடித்த உணவு அதுதான். இந்த இடம் விட்டு எளிதில் அகலாது.”

``அப்படியா!” எனக் கேட்டபடி நடந்தாள். இருள் முழுமையாக நிலைகொண்டுவிட்டது. முகட்டை அடைந்ததும் மலையின் சரிவை நோக்கி இறங்கத் தொடங்கினான்.

``கால்களை கவனமாக எடுத்து வை” என்றான்.

p83b_1511848332.jpg

நீருக்குள் மூழ்கும்போது உள்ளே போகப் போக அடர்ந்த ஓசை பெருகிவந்து காதடைக்குமே, அப்படித்தான் காட்டின் ஓசையும். நேரம் ஆக ஆக இருள் அடரோசையாக மாறிக் கொண்டிருந்தது. சிறிதும் பெரிதுமான பாறைகளுக்கு நடுவில் ஆதினியைக் கவனமாக அழைத்துக்கொண்டு கீழிறங்கினான் பாரி.

இருளுக்குள் மீன்களைப்போல் மிதந்துகொண்டிருக்கும் செடிகொடிகளின் இலைகளைக் கையால் தட்டியபடி நடந்த ஆதினி கேட்டாள், ``எங்கே போகிறோம்?”

குறுக்கிட்டுக்கிடந்த மரக்கட்டையை அகற்றி ஆதினி நடப்பதற்கு வழி அமைத்தபடி பாரி சொன்னான், ``நீ பொதினி மலையின் பேரதிசயத்தை எனக்குக் காண்பித்தாய் அல்லவா, அதேபோல பறம்பின் அதிசயத்தை உனக்குக் காட்ட அழைத்துச் செல்கிறேன்.”

``அன்று முழுநிலவு நாள். சிறகுநாவல்பழங்கள் மிதந்துவந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இன்று நிலவற்ற காரிருள் நாள். இந்தக் கும்மிருட்டில் எதைப் பார்க்க முடியும்?”

``பொதினியின் அதிசயத்தைப் பார்க்க நிலவின் ஒளி தேவைப்பட்டது. ஆனால், பறம்பின் அதிசயத்தைத் தெளிவாகப் பார்க்க ஒளியற்ற காரிருள்தான் தேவை.”

ஆதினிக்கு வியப்பும் ஆர்வமும் ஒருசேரப் பெருகின. `ஒளியற்ற இருளில்தான் தெளிவாகப் பார்க்க முடியும் என்றால், அது என்னவாக இருக்கும்?’ என்று சிந்தித்தபடியே நடந்தாள்.

நின்று பொறுமையாக வழிக்குறிப்புகளைக் கவனித்தபடி முன்நடந்தான் பாரி. இருளில் இறக்கத்தில் கால் எடுத்து வைப்பதில் கூடுதல் விழிப்பு உணர்வு தேவை. பாரி முன் நடப்பதால் பதற்றம் இல்லாமல் நடந்தாள் ஆதினி.

நேரம் கூடியது. இருளின் அடர்த்தி அதிகரித்துக்கொண்டிருந்தது. முன் நடக்கும் பாரியின் கை பற்றிக் கீழிறங்குவதும், தோள் பிடித்து நடப்பதுமாக ஆதினி வேறொரு விளையாட்டை விளையாடியபடி வந்துகொண்டிருந்தாள். ஆனாலும், என்னதான் காண்பிக்கப்போகிறான் என்பதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

``நீங்கள் காண்பிக்கப்போகும் பறம்பின் அதிசயம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?”

``கண் முன்னால் அதைக் காண்பித்துச் சொல்கிறேன். அப்போது அடையும் அனுபவத்தை ஏன் இழக்க வேண்டும்?” 

பற்றிய தோளை ஆதினியின் கை இறுகப்பிடித்தது. கால்கள் தடுமாறுகின்றனவோ எனப் பாரி நின்றான். ஆதினி சொன்னாள், ``பறம்பின் பேரதிசயத்தோடுதான் நான் நடந்துகொண்டிருக்கிறேன். இந்த உணர்வு மற்ற எல்லாவற்றையும்விட மிக உயர்ந்தது. நான் புதிதாக எதையும் அடையப்போவதுமில்லை, இழக்கப்போவதுமில்லை. நீங்கள் தயங்காமல் சொல்லலாம்.”

அவளின் சொற்களுக்குள் இருந்த காதல், பாரியைக் கிறங்கச்செய்தது. பிடித்து இறங்க முடியாத பள்ளம் இருந்தது. மிகப் பாதுகாப்போடு அவளைப் பிடித்து இறக்கினான். தோள் தொடுவதும் கை தொடுவதுமாகத்தான் இவ்வளவு நேரப் பயணம் இருந்தது. ஆனால், இந்தப் பள்ளத்தைக் கடந்தது அப்படியல்ல. கடக்க முடியாத பள்ளமாகப் பாரிக்குத் தோன்றியது. ஆதினியின் உணர்வோ அதையும் கடந்ததாக இருந்தது.

சற்றே கால் சரிந்து பாரியின் மேல் விழுந்தவளை, தூக்கி விலக்கி நிறுத்த முடியவில்லை பாரியால். அந்த இடைவெளி உருவானால்தான் நடக்க முடியும் எனத் தெரிந்தும் அதை உருவாக்குவது எளிதாக இல்லை. செங்குத்தாகச் சரிந்துகிடக்கும் மலைச்சரிவில், கும்மிருட்டில் கண்கட்டி விளையாடுவதுபோல காதல் விளையாடியது. பாரி சற்றே சிந்தித்து `இந்த விளையாட்டுக்குள் மனம் சிக்கிவிடக் கூடாது, கவனமாகக் காலடியெடுத்து வைக்கவேண்டும்’ என நினைத்து நடந்தான்.

ஆதினிக்கு அதுவெல்லாம் இல்லை. பாரி மட்டுமே அவளின் பார்வையில் இருந்தான். முன் நடந்த பாரி சொன்னான், ``நான் காண்பிக்கப்போவதை, இதற்கு முன் மிகச் சில மனிதர்களே பார்த்திருப்பார்கள்.”

``அப்படியா!” என்றாள் ஆதினி.

``ஆம், அதன் பெயர் இராவெரி மரம்.”

ஆதினிக்கு சட்டெனப் புரியவில்லை. ``என்ன மரம்?”

``இராவெரி மரம். அதன் இலைகள் பகலிலே வாங்கிய ஒளியை இரவிலே உமிழும். பார்ப்பதற்கு எண்ணிலடங்காத சுடர்கள் எரியும் விளக்கைப்போல் இருக்கும்.’’

கிறங்கி நின்றாள் ஆதினி. ``என்ன சொல்கிறீர்கள்? அப்படியொரு மரம் இருக்கிறதா?”p83c_1511848343.jpg

``ஆம். மழைநீரை உள்வாங்கிய மண், ஊற்றாகக் கசியவிடுகிறதல்லவா. அதேபோல பகல் முழுவதும் ஒளியை உள்வாங்கி இரவு முழுவதும் வெளிச்சத்தைக் கசியவிடும். பார்ப்பதற்கு மரம் பற்றி எரிவதுபோல் இருக்கும்.”

சொல் கேட்டு நின்ற ஆதினியின் தோள் தொட்டான் பாரி. கனவிலிருந்து மீண்டவளைப்போல மீண்டாள்.

``இன்னும் எவ்வளவு தொலைவில் அந்த மரத்தைப் பார்க்கலாம்?”

``சிறிது தொலைவு இறங்கினால் சரிவுப்பாறைகள் முடிச்சிட்டதுபோல் கிடக்கும். அங்கிருந்து பார்த்தால், எதிரில் இருக்கும் மலைச்சரிவில் இராவெரி மரம் தெரியும்.”

ஆதினியால் ஆசையை அடக்க முடியவில்லை. ஒளிரும் மரத்தைப் பார்க்க வாய்க்கும் அந்தக் கணத்தை அடைய மனம் தவித்தது. ``இப்போதுதான் இன்னும் கவனத்தோடு நடக்கவேண்டிய இடம். எனவே பார்த்து வா” என்று சொல்லியபடியே நடந்தான் பாரி.

``நீங்கள் எப்போது அந்த மரத்தைப் பார்த்தீர்கள்?”

``காடறியப் பயணப்படும்போது. தேக்கன் காண்பித்தார்.”

``பல ஆண்டுகள் ஆகியிருக்குமே. அதன் பிறகு பார்க்கவில்லையா?”

``இல்லை. பகலில் அந்த மரத்தை நம்மால் கண்டறிய முடியாது. அந்த மரம் பகலில் எப்படி இருக்கும் என்று இன்று வரை யாருக்கும் தெரியாது. இரவு நேரத்தில் எதிர்க் குன்றில் நின்று பார்த்தால்தான் கண்டறிய முடியும். அதுவும் நிலவற்ற இதுபோன்ற காரிருள் நாளின் நள்ளிரவில்தான் நன்றாகக் காண முடியும். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்துள்ளது” என்று சொல்லியபடி அழைத்துச்சென்றான்.

சரிவுப்பாறைகள் முடிச்சிட்டதுபோல் திருகிக்கிடக்கும் இடம் வந்தது. அவற்றின் ஓரத்தில் நின்றபடி பார்த்தான், எதிரில் எதுவும் தெரியவில்லை. கும்மிருட்டாக இருந்தது. பாறையின் இன்னொரு முனையில் போய்ப் பார்த்தான். அப்போதும் எதிரில் மலைத்தொடர் தெரியவில்லை. தான் வந்தது சரியான பாதைதானா எனச் சிந்தித்தான். அந்த மலைச்சரிவில் இந்த இடம் மட்டும்தான் சரிவுப்பாறைகள் முடிச்சிட்டுக்கிடக்கும் ஒரே இடம். எனவே, தான் வந்துள்ளது சரியான இடம்தான் என்பதை முடிவுசெய்தபோதுதான் ஓர் உண்மை பிடிபட்டது.

p83d_1511848362.jpg

ஆதினியிடம் சொன்னான், ``நாம் சரியான இடத்துக்குத்தான் வந்துள்ளோம்.  ஆனால், மேகக்கூட்டங்கள் இரு மலைகளுக்கும் இடையில் முழுமையாக இறங்கி நிற்கின்றன. அதனால் எதிரில் இருக்கும் மலைத்தொடர் நம் கண்களுக்குத் தெரியவில்லை.”
``ஆதினியின் முகம் சற்றே கவலையடைந்தது. அப்படியென்றால், நம்மால் இன்று பார்க்க முடியாதா?”

அவள் கேட்டுக்கொண்டிருந்தபோதுதான் பாரிக்குத் தோன்றியது. `இன்னும் சிறிது நேரத்தில் மழை வந்துவிடும். நாம் இருப்பது மிகவும் ஆபத்தான இடம். பெருமழை என்றால் சரிவுப்பாறையில் மழைநீர் எவற்றையெல்லாம் இழுத்துக்கொண்டுவரும் எனத் தெரியாது. நாம் உடனடியாகப் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும்’ என்று.

தொலைவில் இடியோசை கேட்டது. பாறையை இழுத்து அடிக்கையில் தோலின்மீது இருக்கும் தூசி அதிர்வதைப்போல மாமலை அதிர்ந்தது. பெருமின்னல் ஒன்று வெட்டி இறங்கியது. மொத்த மலைத்தொடரின் மீதும் ஒளியின் கண்திறந்து மூடியது.
சரிவுப்பாறையைக் கடந்து இடப்புறம் போவதுதான் பாதுகாப்பு எனக் கருதிய பாரி, ஆதினியின் கையைப் பிடித்துக்கொண்டு வேக வேகமாக நடந்தான். இவ்வளவு வேகமாக இருளுக்குள் நடப்பது சரியில்லை எனத் தோன்றியது. ஆனாலும் வேறு வழியின்றி நடந்தான்.

அடுத்தடுத்து மின்னல்கள் இறங்கத் தொடங்கின. மின்னல் ஒளியால் தென்பட்ட பாதையை வைத்து விரைந்து அழைத்துச்சென்றான். அவன் எண்ணிவந்ததுபோலவே பிளவுண்ட பாறைகளுக்கு நடுவில் பெருங்குகை ஒன்று இருந்தது. விரைந்து வந்து குகைக்குள் நுழைந்தனர்.

கொட்டும் மழையின் கொட்டம் தொடங்கியது. எங்கும் மழையின் பேரோசை, இடியால் நடுங்கியது காடு. ``உரிய நேரத்தில் குகைக்குள் அண்டியதால் ஆபத்திலிருந்து தப்பித்தோம். நாம் இருப்பது மலையின் சரிவான பகுதி. மேலேறவும் முடியாது; கீழிறங்கவும் முடியாது. இந்தப் பகுதியில் பாதுகாப்பாக அண்டுவதற்கு இந்த ஒற்றைக் குகை மட்டுமே உண்டு” என்று பாரி சொல்லிக்கொண்டிருந்தான்.

காரிருளும் அடர்மழையும் சற்றே அச்சத்தை வரவைப்பனவாக இருந்தன. மின்னல்கள் இடைவெளியின்றி இறங்கிக்கொண்டிருந்தன. ஆனாலும் மின்னல் ஒளியில் குகையின் உட்புறத்தைப் பார்க்க முடியவில்லை. `எவ்வளவு உள்வாங்கிய குகை இது! இதற்குள் விலங்குகள் எதுவும் பதுங்கியிருக்குமோ?’ என்ற எண்ணங்கள் தோன்றியபடி இருக்க, ஆதினி அமைதியானாள். இடுப்பில் இருக்கும் சிறு வாள் தவிர, பாரியிடம் வேறு ஆயுதங்கள் இல்லை என்பதையும் அவள் கவனித்தபடி இருந்தாள்.

மழையின் பேரோசை அடங்கும் வரை ஆதினியின் அமைதி நீடிக்கும் என்பதை உணர்ந்தான் பாரி. குகையின் நடுவில் இருந்த சிறுபாறையின் மீது ஆதினியைத் தோள் சாய்த்து உட்கார்ந்திருந்தான். இராவெரி மரத்தை ஆதினிக்குக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் மேகத்தின் தன்மையைக் கவனிக்காமல் இருந்துவிட்டோம் எனத் தோன்றியது. கவனித்திருந்தாலும் வராமல் இருந்திருப்போமா என்பது தெரியாது. காதல், இடிமின்னலுக்கு விலகி நடக்கத் தெரியாத உயிரினம் என்று மனதில் நினைத்தபடி உட்கார்ந்திருந்தான். ஒளியை உருவாக்க எந்த ஏற்பாடும் இல்லாமல் வந்துவிட்டோமே என்பதுதான் பாரிக்குக் குறையாகப் பட்டது.

நீண்டநேரம் கழித்து மழை நின்றது. அதன் பிறகுதான் நீரின் ஓசை மேலேறிவந்தது. காற்றெங்கும் ஈரம் மிதந்தபடி இருந்தது. குகையின் உள்ளொடுங்கித்தான் உட்கார்ந்திருந்தனர். ஆனாலும் நீர்த்தொட்டிக்குள் இருப்பதுபோலத்தான் இருந்தது. குளிர் நடுக்கியது. முகம் பார்க்க முடியாத கும்மிருட்டு. மழை பெய்யும் வரை விடாது வெட்டிய மின்னல் ஒளியில் அவ்வப்போது குகைக்குள் வெளிச்சம் தென்பட்டது. மழை நின்ற பிறகு, இருளின் அடர்த்தி மிக அதிகமானது. பாரியின் இடதுகையை இறுகப் பிடித்தபடி சாய்ந்திருந்தாள் ஆதினி.

பொழுதாகிக்கொண்டிருந்தது. `இந்நேரம் நள்ளிரவு கடந்திருக்கும்!’ என்று நினைத்த பாரிக்கு, முதன்முறையாக ஐயம் வந்தது. `பொழுது நள்ளிரவைக் கடந்திருக்குமா... இல்லையா... ஏன் குழப்பம்? ஆதினியின் பாதுகாப்புமீதே கவனம் குவித்திருந்த தால் பொழுதின் ஓட்டத்தைச் சரியாக மதிப்பிட முடியவில்லை. எப்படியோ, விடிந்த பிறகுதான் குகை விட்டு அகல முடியும். ஆதினியை இங்கேயே படுக்கச் சொல்லலாம். ஆனால், அவள் படுக்க மாட்டாள்’ என்று எண்ணியபடியே இருந்தான்.

கும்மிருட்டின் அச்சம் எளிதில் மனம் விட்டொழியாது. அதுவும் உள்காட்டின் அடர்குகைக்குள். ஆதினிக்கு அவ்வப்போது எழும் ஐயமே, தான் கண்ணைத் திறந்திருக்கிறோமா... மூடியிருக்கிறோமா என்பதுதான். இரண்டுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லாத நிலையில் பாரியின் கையை இறுகப்பற்றுவதன்றி வேறு எதையும் கவனிக்க முடியவில்லை.

`எந்தச் சொல்கொண்டு இந்த அமைதியைக் கலைப்பது?’ எனப் பாரி சிந்தித்துக்கொண்டிருக்கையில், குகையின் உள்ளடுக்கிலிருந்து சிற்றொளி வெளிப்பட்டது. அதை உணர்ந்த கணம், சட்டென குகையின் உட்பகுதியை நோக்கித் திரும்பினான் பாரி. தோளிலே சாய்ந்திருந்த ஆதினி திடுக்கிட்டு நடுங்கினாள். `உள்ளே இருப்பது விலங்கா... எந்த வகையான விலங்கு?’ எதையும் கணிக்க முடியவில்லை. `சட்டென குகையை விட்டு வெளியே போய் நின்று அதை எதிர்கொள்வது பாதுகாப்பானதா? உள்ளேயே எதிர்கொள்வது பாதுகாப்பானதா?’ பாரியால் முடிவெடுக்க முடியவில்லை.

ஒளியின் அளவு கூடிக்கொண்டே இருப்பதுபோல் தெரிந்தது. ஒளியின் தன்மை எதையும் கணிக்க முடியாததாக இருந்தது. `பரவும் ஒளிக்குப் பின்னால் இருப்பது பாறையா... இருளா? அல்லது மிருகத்தின் உடலா?’ எதுவும் புலப்படவில்லை. இவ்வளவு குழப்பங்கள் வாழ்வில் இதுவரை ஏற்பட்டதில்லை. இயற்கையின் கணிக்க முடியாத கூர்முனையில் முன்னால் நின்றுகொண்டிருந்தான் பாரி. காடு அறியும் காலத்தில்கூட இவ்வளவு பதற்றமான கணத்தைச் சந்தித்ததில்லை. இப்போது ஏற்படும் பதற்றத்துக்குக் காரணம், ஆதினி; எது நடந்தாலும் அவளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான்.

ஒளியின் அளவு கூடிக்கொண்டே இருந்தது. மஞ்சள் கலந்த வெண்ணொளி பாறை இடுக்கின் ஓரத்தில் நீரோடுவதுபோல் கசிந்து ஓடியது. பாரியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. `இது என்ன உயிரினமா... தாதுக்களின் கசிவா? அல்லது ஏதாவது ஆபத்தின் அடையாளமா?’ ஒன்றும் புரியவில்லை. சட்டென ஆதினியை இழுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம் எனத் தோன்றியது. ஆனால், மனம் அதைச் செய்ய மறுத்தது.

ஒளியின் நீளம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அதன் நீளம் அதிகமாக அதிகமாக குகை முழுவதும் செவ்வொளி பரவியது. இது என்ன எனப் புரியவேயில்லை. துணிந்து அருகில் போக முடிவெடுத்தான் பாரி. ஆதினியின் இறுகிய பிடியைத் தளர்த்த முயற்சிசெய்யும்போது பரவும் நீளொளியின் முனைப்பகுதி குச்சிபோல மேலெழுந்தது. ஒருகணம் குப்பென வியர்த்தது பாரிக்கு.

p83e_1511848376.jpg

அறிவு, ஐயத்தின் புள்ளியைக் கண்டறிந்தது. அந்த ஐயத்தை நோக்கியே சிந்திக்கத் தொடங்கியது. ஏறக்குறைய பாரி அது என்ன என்று கணிக்கத் தொடங்கினான். சற்று முன்னால் நகர்ந்து பார்ப்போம் என்று எண்ணி, அதற்கு இடப்புறமாக மெள்ள நகர்ந்து பார்த்தான். அவன் கணித்தது சரியானது என்று உறுதிப்படுத்திய கணம், காடு அதிர்வதைப்போல கத்த வேண்டும் என்று தோன்றியது. ஆனால், ஆதினி அச்சமடைவாள். அதுவும் இடம் விட்டு விலகி பொந்துக்குள் ஓடிவிடும் என்பதால் மகிழ்வை அடக்க முடியாமல் அடக்கினான்.

அவ்வளவு நேரமும் உறையிலிருந்த ஆயுதத்தைப் பிடித்திருந்த வலக்கையை எடுத்து இப்போது ஆதினியை இறுக அணைத்தான். அவளுக்குக் காரணம் புரியவில்லை. கட்டற்ற மகிழ்வை கசியும் காதல்மொழியில் சொன்னான், ``ஆதினி, நீ பார்த்துக்கொண்டிருப்பது இந்தப் புவியின் பேரதிசயம்.”

அவளுக்குப் புரியவில்லை.

``இராவெரி மரத்தைப் பார்த்த பறம்பு மக்கள் பலர் உண்டு. ஆனால், பல தலைமுறைகளாக மனிதர்கள் பார்த்திராத ஒன்றை இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”

அச்சம் நீங்காத குரலில் பாரியின் கைகளை இழுத்து அணைத்தபடி, ``என்ன அது சொல்” என்றாள்.

``இதுதான் ஒளி உமிழும் வெண்சாரை. நாகர்குடியின் குலதெய்வம். இதைப் பார்த்தவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார்கள் என்று நாகர்கள் நம்புகிறார்கள்.”

பாரியின் சொல், ஒளியில் மிதந்தபடி இருந்தது. நேரம் ஆக ஆக அந்தக் குகை மிளிரும் வெண்மஞ்சள் ஒளியால் நிரம்பியது. சொற்கள், நாகர்களின் ஆதிவரலாற்றிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தன.

ஆதினியின் முகத்தில் பூத்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை. பாரியின் முகம், அதைவிடப் பெருமகிழ்வை வெளிப்படுத்தியது. பெருமின்னல் வெட்டி மீண்டும் மழை தொடங்கியது. குகைக்குள் மகிழ்வு எல்லையற்றதாக இருந்தது.

அவர்கள் அதைப் பார்த்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தனர். அது பாறையின் ஓரம் அசையாமல் இருந்தது. செதில்களின் அசைவு, சிற்றகலின் நாக்கு அசைவதைப்போல ஒளியை அசைத்துக்கொண்டே இருந்தது. காலம் காலமாக இருக்கும் கதை ஒன்று காட்சியாக மாறிக்கொண்டிருக்கும் அதிசயத்தைக் கண்ணருகே பார்த்துக்கொண்டிருந்தனர். இருவருக்கும் இமைகள் துடிக்கவில்லை. உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் முகம் அசையவில்லை. ஆனாலும் ஒளியின் அளவு கூடுவதை அவர்களால் கவனம்கொள்ள முடியவில்லை.

அதிசயத்தை அளவிட முடியாது. மனம் கரைந்த ஒன்றைக் கணக்கிட முடியாது. அதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த ஆதினி, சட்டென திடுக்கிட்டுத் துள்ளியெழுந்தாள். என்னவெனப் பார்த்தான் பாரி. ஆதினியின் அருகில் இருந்த பாறையிடுக்கிலிருந்து இன்னொன்று ஊர்ந்து அதை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. 

பார்த்தபடி பாரியின் வலப்புறம் வந்து பதுங்கி உட்கார்ந்தாள். ஒளி உமிழும் இரு வெண்கோடுகளும் ஒன்றாகச் சந்தித்தன. சிறிது நேரத்தில் ஒன்றை ஒன்று சுற்றிப் பின்னத் தொடங்கின. காற்றுக்கு அசையும் சுடரொலிபோல வெண்ணொளி கூடிக்குறைந்துகொண்டிருந்தது. இரவு முழுவதும் ஒளிச்சுடர்கள் இரண்டும் ஒன்றை ஒன்று பின்னியபடியே இருந்தன.

ஆதினி, பாரியின் கைகளை இறுகப் பற்றினாள். அச்சம் உதிர்ந்த கணத்தில் ஆசை மேலேறத் தொடங்கியது. வெண்ணொளி பின்னுவதுபோல இருளுக்குள் இருந்த உருவங்களும் தயங்கித் தயங்கிப் பின்னத்தொடங்கின. மழையின் ஓசையைப்போல மூச்சுக்காற்றின் ஓசையும் கூடிக்கொண்டே இருந்தது.

எவ்வியூர் மாளிகையில் ஐவகைக் குறிஞ்சிமலர் கொண்டு படுக்கையை ஓர் ஓவியம்போல வரைந்து வைத்திருந்தனர். ஆனால், குறிஞ்சி நிலத்தின் உள்ளங்கைக்குள் காமம் தானே தனக்கான ஓவியத்தை வரைந்துகொண்டிருந்தது.

p83f_1511848390.jpg

ஆதினி கால்களில் அணிந்திருந்த தண்டை இவ்வளவு ஓசையை எழுப்பியபோதும் பின்னிய நாகங்கள் விலகவில்லை. காமம், விலக முடியாத விளையாட்டு. நாகங்களும் விலகவில்லை, நாகங்கண்டும் விலகவில்லை.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 60

 

 

பொழுதுவிடிந்து நீண்ட நேரமாகிவிட்டது. நண்பகல் கடந்த சிறிது நேரத்திலேயே ஒளி அகன்றுவிடும். எனவே, வேகமாக நடக்க வேண்டும் என முடிவுசெய்து குகையை விட்டு வெளியேறினர். இரவு முழுவதும் கடுமழை பெய்ததால் சரிவில் நடந்து மேலேறுவது எளிதல்ல என்பது தெரியும். கவனமாக நடந்து செல்லத் துணிந்தனர். மலையெங்குமிருந்து நீரூற்று கசிந்துகொண்டே இருந்தது. நீரோடும் பாறையை அழுத்தி மிதித்தாலும் வழுக்கும், அழுத்தாமல் மிதித்தாலும் வழுக்கும். பாறையின் செதில்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்தே காலடியை முன்னெடுக்க வேண்டும்.

p83a_1512543161.jpg

பாறைகளைக் கடக்கும்போது பாரி முன்னால் நடந்தான். பாறையின் தன்மை அறிந்து ஆதினிக்கு வழிகாட்டிச் சென்றான். மண்ணை மிதித்து நடக்கும்போதும் அதே அளவு கவனம் தேவை. பல நேரம் ஆதினியை முன்னால் நடக்கவைத்துப் பின்னால் வந்துகொண்டிருந்தான்.

இறங்கும் நீரையும் பாறையையும் மண்ணையும் வேர்களையும் குனிந்து பார்த்தபடியே நீண்டநேரம் நடந்துகொண்டிருந்தாள் ஆதினி. எங்கும் நீர் இழுத்து ஓடியபடியே இருக்க, தொடர்ந்து நடப்பது மிகவும் கடினமாக இருந்தது. சற்றே ஓய்வு தேவைப்பட்டது. ஓரிடத்தில் நின்று இளைப்பாறியபடி பார்வையை எல்லாப் பக்கங்களிலும் ஓடவிட்டாள். அப்போதுதான் ஆபத்தின் அளவு புரிந்தது. செங்குத்தான பெருஞ்சரிவின் நடுவில் அவர்கள் நின்றுகொண்டிருந்தனர். ஆதினி அதிர்ச்சிக்குள்ளானாள்.

“இந்தச் சரிவிலா இரவில் நடந்தோம்?”

“ஆம். இந்தப் பெருஞ்சரிவில்தான் நடந்தோம். அதுவும் காதல்கொண்டே.”

பாரி சொல்வது தனது செயலைத்தான் என்பது புரிந்தது. ஆனாலும் எந்த மறுமொழியும் சொல்லவில்லை. ``இந்த இடத்தைப் பகலில் பார்த்த ஒருவர், இங்கு இரவில் நடக்கத் துணிய மாட்டார்” என்றாள்.

``இரவிலே நடந்த ஒருவர், பகலில் எளிதில் நடந்து கடப்பார்” என்றான்.

அவனது சொல் ஆதினிக்கானது. அவன் சொல்லில் இருக்கும் உண்மையை அவளது மனம் ஏற்றது. கால்கள் முன்னிலும் வீரியத்தோடு முன்னகர்ந்தன. ஒற்றைச் சொல்லால் விசை கூட்டும் வித்தையை பாரியின் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எனத் தோன்றியது.

`அவனை நினைத்து மகிழத்தான் எவ்வளவு இருக்கின்றன!’ என்று எண்ணியபடியே நடந்தாள்.

``பின்னிக்கிடக்கும் வெண்சாரைகள் அந்த இடம் விட்டு விடியும் வரை நகராது. நீ அஞ்ச வேண்டாம்” என்று நேற்றிரவு அவன் கூறிய சொல்லிலிருந்துதான் எல்லாம் மாறின. `அவை இந்தப் பக்கம் திரும்பாது என்றால், நாம் ஏன் அந்தப் பக்கம் திரும்ப வேண்டும்?’ எனத் தோன்றியது. அவ்வளவு நேரமும் வெண்சாரையைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதினி, பாரியின் பக்கம் திரும்பினாள். 

மெல்லிய ஒளி அவனது முகத்தில் பூசி மறைந்தது. வெண்சாரைகள் இரண்டும் இறுக்கி முறுக்கிக்கொள்ளும்போது ஒளியின் அளவு இரு மடங்கு அதிகமானதுபோல் இருந்தது. ஆனால், அதை அவர்கள் கவனிக்கவில்லை; முறுக்கி இறுகும் வெண்சாரைகளும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. தலைக்குப் பின்புறமாக குகை விட்டு வெளியே பேரிடி விடாது விழுந்துகொண்டிருந்தது. கால்களின் கீழ்ப்புறம் வெண்சாரைகள் இறுகிப் புரண்டுகொண்டிருந்தன. மழையின் பேரோசை கூடியபடியே இருக்க, காற்றெங்கும் நீர் மிதந்துகொண்டிருந்தது. இவற்றில் எதையும் காதல் பொருட்படுத்தவில்லை.

இப்போதுதான் அவற்றை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து கொண்டே நடந்தாள்.   தங்களைச் சுற்றி எவையெல்லாம் இயங்கின என எண்ணிப் பார்த்தாள். எதை நினைத்தாலும் தாங்கள் இயங்கியதில்தான் எண்ணங்கள் முடிவடைகின்றன. `பாரிக்கும் இப்படித்தான் எண்ணங்கள் ஓடுமா? அவனது உள்மனம் இப்போது எதை நினைத்துக் கொண்டிருக்கும்?’ ஆதினியின் சிந்தனை, பாரியை நோக்கி ஓடியது. அவன் கவனமாகச் செடி கொடிகளை விலக்கி முன்நடந்து கொண்டிருந்தான்.

அவனுடைய சொற்களின் வழியே, செயல்களின் வழியே அவனது எண்ண ஓட்டத்தைக் கண்டறிய முயன்றபடியே வந்தாள். அது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஆனாலும் ஆதினி தொடர்ந்து முயன்றாள். பெரும்பள்ளம் ஒன்றின் மேலேற வசதியாக அவளைக் கைபிடித்துத் தூக்கினான். அவள் பாரியின் கண்களைப் பார்த்தபடியே முன்காலைத் தூக்கி வைத்து மேலேறினாள். அந்தக் கண்களில் எதையும் கண்டறிய முடியவில்லை. `ஆண்களின் கண்கள் மொழியற்றவையோ!’ எனத் தோன்றியது.

p83b_1512543179.jpg

`இல்லையே, நேற்றிரவு என்ன செய்வது என அறியாத கணத்தில் அவன் பார்த்த பார்வைதானே காமத்துக்குள் கட்டற்ற வேகத்தில் நம்மை இழுத்துச்சென்றது. `பெண் கண் செருகும்போது தொடங்கும் ஆட்டம், ஆண் கண் செருகி இருக்கும்போது முடிவுறுகிறது’ எனச் சொல்லக் கேட்டுள்ளேன். ஆனால், இவை எல்லாம் யாரால் பார்த்தறிய முடியும்? மற்றவர்கள் பார்க்க முடியாது, சம்பந்தப்பட்டவர்களால் பார்க்கவே முடியாது. அப்புறம் எப்படி இவை எல்லாம் கதைகளால் சொல்லப்படுகின்றன?’ மனதுக்குள் எண்ணியபடியே நடந்தாள்.

குறுகிய பள்ளத்தில் நீரின் வேகம் சற்றே அதிகமாக இருந்தது. முதலில் அதைக் கடந்த பாரி, அவள் கடப்பதற்குக் கைகொடுத்து இழுத்தான். அவள் கடந்து வந்ததும் முன்னே நடக்கவிட்டுப் பின்தொடர்ந்தான்.
அப்போதுதான் கவனித்தான், ஆதினியின் முதுகில் சிறிய சிறிய கீறல்கள் கோடுகளாய் அங்குமிங்குமாக இருந்தன. `கற்படுக்கையால் இப்படி நேர்ந்துவிட்டதே!’ எனக் கவலை கொண்டான். மழை பெய்து குளிர் நீங்காமல் இருப்பதால் எரிச்சல் தெரியாமல் இருக்கிறது. கோடைக்காலமாக இருந்தால் கடும் எரிச்சல் இருந்திருக்கும் என எண்ணியவனுக்கு, அதன் ஆபத்து அப்போதுதான் புரியவந்தது, `இப்படியே போனால் இவள் தோழிகள் கேள்விகள் கேட்டே இவளைத் திணறடித்து விடுவார்களே!’ என்று.

என்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எப்படி நடந்திருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில்தான் எல்லோரின் விருப்பமும் இருக்கும். இதுபோன்ற தடயங்கள்தான் அவர்கள் பயன்படுத்தப்போகும் ஆயுதங்கள். நிலைமையை ஆதினியால் சமாளிக்க முடியாத அளவுக்கு இருக்கும். ஏனென்றால், அவளது முதுகில் இருக்கும் தடயங்கள் அவ்வளவு. இதைப் பற்றித் தெரியாமல் ஆதினி ஏதோ சிந்தனையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பாரி, ``நீ சிறிது நேரம் இங்கே இரு. நான் அருகில் இருக்கும் செம்பாறை வரை போய் வருகிறேன்” என்றான்.

``ஏன்?” எனக் கேட்டாள் ஆதினி.

``உனது முதுகு முழுவதும் பாறையின் செதில்களால் கீறப்பட்ட கோடுகளும் தடயங்களும் நிறைய இருக்கின்றன. தோழிகள் பார்த்தால் கேலிசெய்வார்கள்” என்றான்.

அவள் முற்றிலும் எதிர்பாராத ஒன்றைப் பற்றிப் பாரி பேசினான். அவனது சொல்லில் இருப்பது அளவிட முடியாத காதல். அதனால்தான் அடுத்த கணமே அது உள்ளுக்குள் இன்பத்தைச் சுரக்கிறது. அவன் காமத்தின் தடயங்களை மறைக்கப் பார்க்கிறான். அந்தக் கணத்தைக் கற்பனையில்கூட அடுத்தவர் நெருங்கக் கூடாது எனத் தவிக்கும் ஆணின் தவிப்புதான் காதலின் ஆகச்சிறந்த பரிசு என அவளுக்குத் தோன்றியது.

அவனது சொல்லைக் கடக்க முடியாமல் நின்றிருந்த ஆதினியைப் பார்த்துப் பாரி சொன்னான், ``செம்பாறையின் ஓரம் இழுத்தோடும் நீரில் பொன்போல மின்னும் மண் துகள் படிந்திருக்கும். அந்த மண் துகளை எடுத்துவந்து முதுகில் பூசிவிடுகிறேன். அது ஒளியை மினுக்கிக்கொண்டிருக்கும். பார்ப்பவர்களுக்கு மினுக்கும் ஒளிதான் தெரியுமே தவிர, முதுகில் உள்ள கீறல்கள் எளிதில் தெரியாது” என்றான்.

நுனிநாக்கால் மேலுதடைத் தொட்டு நனைத்துக் கொண்டாள். சிரிப்பை மறைக்க அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.

p83c_1512543194.jpg

ஆனால் பாரி கண்டறிந்தான், ``ஏன் சிரிக்கிறாய்?”

``முதுகெல்லாம் ஏன் பொன்மணல் படிந்திருக்கிறது எனக் கேட்டால்?”

``படுத்திருக்கும்போது ஒட்டியிருக்கும் எனச் சொல்.”

``அதனால்தான் பாரியின் முதுகில் பொன்மணல் ஒட்டவில்லையோ எனக் கேட்பார்கள்.”

ஒரு கணம் திகைத்துப்போனான்.

அவன் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து சிரித்தாள். அடுத்தடுத்து எழும் வினாக்களை நோக்கி அவள் உள்ளே போய்க்கொண்டிருந்தாள். திகைத்த இடத்திலே பாரி நின்றுவிட்டான். கேலி விளையாட்டில் பெண்கள் செல்லும் ஆழம் ஆண்களால் அறிய முடியாதது. இது, பெண்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக்கொண்ட கலையின்பம். அதனால்தான் எழப்போகும் வினா பாரிக்குத் திகைப்பை உருவாக்கிய கணமே ஆதினிக்குச் சிரிப்பை உருவாக்கியது. தோழிகள் கேட்கப்போகும் வினாக்களுக்குள் நுழைந்தபோது அவளது சிந்தனை திக்குமுக்காடியது. `வெண்சாரைகளின் நிழலில் எங்களின் காமம் நிகழ்ந்தது எனச் சொன்னால் நிலைமை என்ன ஆகும்!’ வேளிர் குலம் முழுக்க தலைமுறை தலைமுறையாக இந்தக் கதை நிலைத்துவிடும் என அவளுக்குத் தெரியும்.
 
எத்தனை தலைமுறைகளாலும் முதுகில் கீறல்கொண்ட இளம்பெண்கள் இந்த வினாவிலிருந்து தப்பவே முடியாது. காலம்காலமாகப் பாரியின் குறியீடாக பதில்கள் சொல்லப் பட்டுக்கொண்டே இருக்கும். அவன் செய்யப்போகும் செயல் எல்லா இளம்பெண்களின் முதுகிலும் படிந்துவிடும் என நினைத்தபடி பாரியின் கையைப் பிடித்து, ``பொன்மணல் துகள் வேண்டாம். தோழிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள்.

அவள் சொல்வதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. `என்ன சொல்லி சமாளிப்பாள்?’ எனச் சிந்தித்தபடியே அவன் நடந்தான். அவனுக்குள் வினாக்கள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்தன. ஆனால், எண்ணங்கள் கேட்க விடாமல் தடுத்துக்கொண்டே இருந்தன. சிறுபாறையின் மேலே ஏறி அவளைக் கைபிடித்துத் தூக்கிவிட்டான்.

மேலேறியவுடன் நிமிர்ந்து பார்த்தாள் ஆதினி. எதிரில் சமவெளி விரிந்துகிடந்தது. `செங்குத்தான பெருஞ்சரிவை அதற்குள் ஏறிக் கடந்துவிட்டோமா!’ வியப்பு குறையாமல் முன்னும் பின்னுமாகத் திரும்பிப் பார்த்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. வியப்போடு பாரியைப் பார்த்தாள். அவன் உள்ளும் வெளியுமாக இயக்கும்விதம் மேலும் மேலும் வியப்பூட்டுவதாக இருந்தது.

கதிரவன், எதிர்க்குன்றின் பின்னால் மறையத் தொடங்கினான். இருவரும் சிறிது தொலைவு சமவெளியில் நடந்து சென்றனர். எதிரில் சிறுமேடு ஒன்று இருந்தது. ``இந்த மேடு ஏறி இறங்கினால், கீழ்த்திசையில் நாம் நிறுத்தி வந்த தேர் இருக்கும். நான் குதிரைகளைக் கண்டறிந்து வருகிறேன். அதுவரை நீ இங்கேயே இரு” என்று சொல்லி நடந்தான்.

காற்று சற்றே அதிகரிக்கத் தொடங்கியது. மாலையானதும் இன்றும் கடுமழை வரப்போகிறது எனச் சிந்தித்தபடி குதிரைகளைப் பிடித்துவர விரைந்தான்.

ஆதினி அவன் வரும் வரை மரத்தடியில் அமர்வோம் என நினைத்து, அருகில் இருந்த செங்கிளுவை மரத்தின் அருகே போய் உட்கார்ந்தாள். குதிரைகளை நோக்கி விரைந்த பாரி, ஏதோ எண்ணம் தோன்ற, திரும்பி ஆதினியைப் பார்த்தான். அவள் அப்போதுதான் செங்கிளுவையில் சாய்ந்தாள்.

``மரத்தை விட்டு விலகி வந்து ஓய்வெடு. நான் விரைந்து வருகிறேன்” என்று சொல்லியபடி ஓடினான். அவள் மரம் விட்டு நீங்கினாள். அருகில் இருந்த சிறுபாறையின் மீது உட்கார்ந்து மரத்தைப் பார்த்தாள். `ஏன் அதன் அருகே உட்கார வேண்டாம் என்று சொன்னான்?’ என்று சிந்தித்தபடியிருந்தாள்.

சற்று நேரம் கழித்து குதிரைகளோடு வந்தான் பாரி. இருவரும் பேசியபடியே குன்றின் மேல் நடந்தனர். குதிரையைத் தொட்டு வருடும் ஆசையை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. கைகூசியபடி அதனுடைய முதுகை வருடிக் கொண்டே கேட்டாள், ``ஏன் மரத்தை விட்டு அகலச் சொன்னீர்கள்?”

``காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது. அந்த மரம் பெருங்காற்றைத் தாங்காது. அதனால்தான் தள்ளி உட்காரச் சொன்னேன்.”

``பார்த்தால் வலிமையான மரம்போல் தெரிந்தது. அதனால்தான் அருகில் போனேன்.”

``மலையுச்சி மரங்களின் தன்மையைக் கணிப்பது சற்றே கடினம். எளிதில் நம்மை ஏமாற்றிவிடும்.”

``நீங்கள் எப்படிக் கண்டறிந்தீர்கள்?”

p83d_1512543217.jpg

``உதிரும் அதன் இலையை வைத்துதான்.”

``இலையை வைத்தா?”

``ஆம், இலையில்தான் மரத்தின் குறிப்பு இருக்கிறது.”

குதிரைமீதிருந்த கையை விலக்கி அவனைப் பார்த்தாள்.

பாரி சொன்னான், ``உதிரும் இலையின் நுனிப்பகுதி கீழ்நோக்கி வருகிறதா,  அடிப்பகுதி கீழ்நோக்கி வருகிறதா அல்லது சம எடையுடன் காற்றை வெட்டி வெட்டி மிதந்து வருகிறதா என்பதை இலையின் கீழ்ப்புறம் உள்ள நரம்பின் தன்மையே தீர்மானிக்கிறது. மரங்களுக்கு வயது ஆக ஆக நரம்பின் பிடிமானமும் கன அளவும் மாறும். அது மாற மாற உதிரும் இலையின் தன்மையும் மாறும். எனவே, உதிரும் இலை எந்த நிலையில் உதிர்கிறது என்பதை வைத்தே மரத்தின் வயதையும் ஆற்றலையும் சொல்லி விடலாம்.”

``வியப்பாக இருக்கிறது” என்றாள் ஆதினி.

``இதிலென்ன வியப்பு இருக்கிறது... ஓடும் நரியைப் பார்த்தவுடன் வயதைச் சொன்னார் உன் தந்தை. அதுதான் வியப்பு.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே தொலைவில் தேர் நிற்பது தெரிந்தது. பாரி கை நீட்டி அதைக் காண்பித்தான். அதைப் பார்த்தபடியே ஆதினி கேட்டாள், ``தேரின் நேரெதிர் திசையில்தானே கீழே இறங்கினோம். இப்போது இடப்பக்கமாக ஏறி வருகிறோம்?”

``காட்டில் எதையும் நாம் தீர்மானிக்க முடியாது. காடுதான் தீர்மானிக்கும். நாம் பார்க்கப்போனது ஒன்றை; பார்த்தது வேறொன்றை. அப்படித்தான் எல்லாமும்.”

பேசியபடியே தேரை நெருங்கினர். கதிரவன் மலையில் சரிபாதி மறைந்துவிட்டான். காற்றின் வேகம் கூடியபடி இருந்தது. குதிரைகளைத் தேரில் பூட்ட முன்புறமாகப் போனான் பாரி. ஆதினி, வலப்புறமாகத் தேரை நோக்கி நடந்தாள். காற்று பலம்கொண்டு வீசியதில் குதிரை காதுவிடைத்து, கனைத்தது. அதன் கழுத்துப் பகுதியைத் தடவிக்கொடுத்து அமைதிப்படுத்த முயன்றான். அப்போது ஆதினி அழைக்கும் குரல் கேட்டது. குதிரை மீண்டும் எதிர்காற்றில் துள்ளிக் கனைத்தது. குதிரையை அருகில் இருந்த சிறு மரத்தில் கட்டிவிட்டு ஆதினியின் அருகில் வந்தான்.

அவள் தேர்ச்சக்கரத்தின் அருகில் உட்கார்ந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கு உட்கார்ந்து என்ன செய்கிறாள் என்று எண்ணியபடி அருகில் வந்தான் பாரி. தேர்ச்சக்கரத்தின் ஆரக்காலில் முல்லைக்கொடி ஒன்று முழுச்சுற்று சுற்றி, தலையை வெளிப்புறமாக நீட்டியபடி இருந்தது. இன்னொரு கொடி பக்கத்தில் இருந்த ஆரக்காலில் பாதி சுற்றி, தலை நீட்டியிருந்தது.

அருகில் வந்த பாரி அதைப் பார்த்தான். கொடியின் தளிர், காற்றுக்கு அசைந்தபடி ஆரக்காலைத் தழுவியிருந்தது. ஆதினியின் முகத்தைப் பார்த்தான். சற்றே பதற்றத்தோடு இருந்தாள். ``தேரை எடுத்தால் இரு கொடிகளும் அறுந்துவிட வாய்ப்புள்ளது. இந்த முல்லைக் கொடியைப் பக்குவமாகப் பின்னோக்கிச் சுழற்றி வெளியில் எடுத்துவிடலாமா?” எனக் கேட்டாள்.

பாரி, எதுவும் சொல்லாமல் முல்லைக் கொடிகளையே பார்த்துக்கொண்டிருந்தான். காற்று பெரும்வேகத்தோடு வீசியது. நின்றிருந்த தேர், சற்றே அசைந்துகொடுத்தது. சட்டென சக்கரத்தை இறுகப்பிடிக்க முயன்றாள் ஆதினி. ஆனால், பாரியின் கை அதைப் பிடித்துக் கொண்டிருந்தது. இது நிகழ்ந்துகொண்டிருக்கும் போது குன்றுக்குப் பின்னால் சடசடவெனப் பேரோசை கேட்டது. அதிர்ந்து திரும்பினாள்.

திரும்பாமலே பாரி சொன்னான், ``அந்தச் செங்கிளுவை விழுந்துவிட்டது.”

p83e_1512543316.jpg

ஆதினிக்கு, பதற்றம் இன்னும் அதிகமானது. விழுந்த மரத்தில் அடைந்திருந்த பறவைகள் கலைந்து வெளியெங்கும் ஓசையெழுப்பின. அதைக் கவனித்தபடியே ஆதினியிடம் சொன்னான், ``இலையில் மரத்தின் குறிப்பு இருந்ததைப்போல இந்த முல்லைக்கொடிகளில் இருக்கும் குறிப்பு என்னவென்று பார்.”

அவள் முல்லைக்கொடிகளை உற்றுப் பார்த்தாள். சக்கரத்தின் ஆரக்காலை முழுமையாகச் சுற்றிய கொடி, தலையாட்டியபடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது. அது ஆரத்தைச் சுற்றியிருக்கும் விதத்தைக் கவனித்தாள். எங்கோ பார்த்ததுபோல் இருந்தது. எங்கே என்று சிந்தித்தபோது வெண்சாரைகளின் நினைவு வந்தது. அதே பின்னல்கொண்டு வளைந்து மேலேற முயன்றது முல்லைக்கொடி. பக்கத்து ஆரத்தின் மீதும் அதே முயற்சியைச் செய்து கொண்டிருந்தது இன்னொரு கொடி.

கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஆதினியின் கண்கள் கலங்கின. பாரியைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கண்கள் எண்ணில்லா சொற்களைப் பேசின. ஆண்களின் கண்களைப் படித்தறிய வேறு வழியுண்டா என மனம் பதறியது. ஆனாலும் தொடர்ந்து முயன்றாள். `இடப்புறம் இருப்பதுதான் நானா?’ என்று ஆதினியின் ஆழ்மனம் கேட்க, `இல்லை வலப்புறம் இருக்கும் கொடிதான் உனது சாயலில் தலைசாய்ந்தே இருக்கிறது’ என்று பாரி சொல்ல, மனதுக்குள் நீங்கா உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. `வெண்முல்லையும் வெண்சாரையும் வடிவத்திலும் வாசனையிலும் ஒன்றே!’ என ஆழ்மனம் சொல்லியது. காற்று வீறுகொண்டு வீசியது. ஆதினி, பாரியின் கைகளை இறுக அணைத்துத் தோள் சாய்ந்தாள்.

``குகை நமக்கானதாக மாறியதுபோல, தேர் முல்லைகளுக்கானதாக மாறிவிட்டது” என்றான் பாரி.

வெட்கம் கலையாத சிரிப்போடு ஆதினி சொன்னாள், ``நேற்று நாகம் கற்றுக்கொடுத்தது. இன்று முல்லை கற்றுத்தருகிறது.”

``காடு, கணம்தோறும் நமக்குக் கற்றுத்தந்து கொண்டேதான் இருக்கும்” எனச் சொல்லியபடி தேர் விட்டு நகர்ந்தான் பாரி. தன் விரல்களால் சக்கரங்களின் ஆரங்களைத் தொட்டு வருடியபடி அந்த இடம் விட்டு எழுந்தாள் ஆதினி.

இருவரும் நடக்கத் தொடங்கினர். ஆதினி மெல்லிய குரலில், ``படர்வது குறுமுல்லை. ஒரு மலர் பூத்தால் போதும். காடே மணக்கும்” எனச் சொல்லிவிட்டு, பாரியின் முகத்தைப் பார்த்தாள்.

‘என்ன பொருள் இதற்கு?’ பாரியின் கண்கள் தடுமாறின. பெண்ணின் கண்கள் சொல்வதை முழுமையாகக் கற்க ஆண்களால் முடியுமா என்ன? ‘உதிரும் இலையின் குறிப்பு தெரிந்த உனக்கு வீசும் பார்வையின் பொருள் புரியாதா?’ என்று கேட்பதுபோல் இருந்தது.

p83f_1512543348.jpg

இருவரும் காதல் மயக்கம் கலையாமல் நடக்கத் தொடங்கினர். பொன்மணல் துகள் மனமெல்லாம் மின்னிக்கொண்டிருந்தது. கீறல் தழும்புகளிலிருந்து குறுமுல்லையின் நறுமணம் கசியத் தொடங்கியது. பாரியின் வலக்கையைத் தனது இடக்கையால் பின்னியபடி நடந்தாள். வெண்சாரை ஒருபுறமும் குறுமுல்லை மறுபுறமுமாகப் படர்ந்து கொண்டிருந்தன. இருவரும் எவ்வியூர் நோக்கி நடந்தனர்.

இன்றும் ஐவகைக் குறிஞ்சியில் மலர்ப்படுக்கை அமைத்திருப்பர். ஆனால், மலராத முல்லையின் மணமேந்தி, சுடரின்றிப் பரவும் ஒளியேந்தி வந்துகொண்டிருக்கும் இந்தக் காதலர்களின் இரவை மற்றவர்களால் எதுகொண்டு அலங்கரிக்க முடியும்?

போகும்போது கட்டிப்போட்டிருந்த குதிரைகளைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்தனர். இரு குன்றுகளைத் தாண்டியபோது எதிரில் பாணர் கூட்டம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எவ்வியூர் வந்து திரும்பும் பாணர்களை, வீரர்கள் அழைத்துக்கொண்டு போயினர்.

``பாரி தேரில்தானே வந்ததாகச் சொன்னார்கள். இப்போது குதிரைகளைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து போவானேன்?” என்று ஒரு பாணன் கேட்க, ``அதோ, தேர் அங்கே நிற்கிறது. அருகில் போய்ப் பார்த்தால் காரணம் தெரியப் போகிறது” என்று இன்னொரு பாணன் சொன்னான்.

``முல்லைக்குத் தேரைக் கொடுத்ததாகப் பாணர்கள் பாடுகிறார்களே அது உண்மையா?” என்று கபிலர் கேட்டதற்குத்தான் இந்த முழுக் கதையையும் பாரி சொல்லி முடித்தான். கேள்வி என்னமோ முல்லைக்கொடியைப் பற்றித்தான். ஆனால், பாரி தனது திருமணக் காலத்திலிருந்து நடந்ததை விளக்கியதற்குக் காரணம், காலம்பன் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

சோமப்பூண்டின் பானம் இருந்தும் அன்று யாரும் ஒரு குவளைகூடக் குடிக்கவில்லை. பாரி நடந்ததைச் சொல்லி முடிக்கும்போது அனைவரும் பெரும்வியப்பில் மூழ்கிப் போயிருந்தனர். முல்லைக்கொடி பற்றிக் கேட்ட கபிலரோ, இராவெரி மரம் பற்றிக் கேள்விப் பட்டதும் அதிர்ந்துபோனார். ``இதைத்தான் வடதேசத்து முனிகள் `ஜோதி விருட்சம்’ எனச் சொல்கிறார்களோ!’’ எனக் கேட்டார்.

தேக்கனின் வியப்பு வேறுவிதமாக இருந்தது. ``நீயும் ஆதினியும் வெண்சாரையைப் பார்த்தீர்களா? இதுவரை சொல்லவேயில்லையே” எனக் கேட்டார். பாரியைப் பற்றிய தேக்கனின் வியப்பு காலகாலத்துக்கு நீங்காது என்பது அவரின் பார்வையிலேயே புலப்பட்டது.

காலம்பனின் வியப்பு முல்லைக்கொடியோ, வெண்சாரையோ அல்ல; `ஆயுதங்களைக் கூர்மையாக்கும் கல் இருக்கிறதா? பல்வேறு தாதுக்களை ஆற்றலாக மாற்றத் தெரிந்த பொதினியின் பதினெட்டுக் குடிகள். அவர்கள் எதையெல்லாம் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள்?’ அடுக்கடுக்காய் மேலெழுந்தபடி இருந்தது காலம்பனின் வியப்பு.

எல்லோரும் வியந்ததைப்போல பாரியும் வியப்பு நீங்காமல்தான் இருந்தான். இந்த நிகழ்வு எப்படி வெளியில் தெரிந்திருக்கும் என எண்ணிப்பார்த்தான். ``பேசியபடி தங்களைக் கடந்துபோன பாணர்கள் தேர்ச்சக்கரத்தில் முல்லைக்கொடி பின்னிக்கிடப்பதைப் பார்த்துப் பாடல் புனைந்துள்ளனரோ?!” என்றான்.

கேள்வி, கபிலருக்கு வியப்பைக் கொடுத்தது. ``நிலமெங்கும் உனது புகழைப் பரப்பும் குறியீடு இதுதான்” என்றார் கபிலர்.

p83g_1512543368.jpg

``படர வழியின்றிக் கொடி தவித்தால் யாராக இருந்தாலும் அதற்கு வழிசெய்துவிட்டுத்தானே போவார்கள். இதில் வியக்க என்ன இருக்கிறது?” எனக் கேட்டான் தேக்கன்.

``மலைமக்களின் வாழ்வை சமவெளி மனிதர்கள் புரிந்துகொள்வது எப்படி எளிதில்லையோ, அதேபோல்தான் சமவெளி மக்களின் எண்ண ஓட்டங்களையும் சிந்தனை நிலையையும் மலைமக்கள் புரிந்துகொள்வதும் எளிதல்ல” என்றார் கபிலர்.

தேக்கனுக்கு அவர் சொல்லவருவது விளங்கவில்லை,

``உங்களுக்கு இது வாழ்வின் பகுதி. எனவே, நின்றுபார்க்க ஒன்றுமில்லை. ஆனால், தவித்து அலையும் மக்களுக்கு இது கனவு. எனவே, கடக்க வழியின்றிப் பாடியபடியே இருக்கின்றனர்.”

கபிலரின் சொற்கள் ஆழத்துக்குப் போயின. அதைப் பற்றிய சிந்தனையும் அவ்வாறே. இரவெல்லாம் பேசினர். சோமப்பூண்டின் பானம் விட்டு மனமும் உடலும் வெளியேறிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்தனர். குடியும் இரவும் அவர்களை விட்டு அகன்றன.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 61

 

 

p88a_1513158013.jpg

வனத்தின் சாகசத் தளபதி ஹிப்பாலஸ், வஞ்சி மாநகரத்தில் வந்திறங்கினான். வைப்பூர்த் துறைமுகம் பற்றி எரிந்து பல மாதங்களாகப்போகின்றன. நீண்டநாள்களாக வைப்பூர்க் கோட்டையிலேயே இருந்தவன், பிறகு ஓரிரு இடங்களுக்குப் பயணம் போய் இப்போது வஞ்சியை வந்தடைந்துள்ளான். அவனோடு எபிரஸ், திரேஷியன், கால்பா, பிலிப் ஆகியோர் வந்துள்ளனர்.

பெருவணிகன் வெஸ்பானியன் தலைமையில் யவனத்திலிருந்து ஆறு நாவாய்களில் பாண்டிய இளவரசனின் மணவிழாவுக்குப் புறப்பட்டனர் யவனர்கள். `மீனாள்’ என்று யவனத்தில் எழுதப்பட்ட யானை வடிவம் தாங்கிய நாற்சதுர நாணயத்தோடும் எண்ணற்ற பரிசுப்பொருள்களோடும் பாண்டிய நாட்டில் வந்திறங்கினர்.

இந்தப் பெருஞ்சிறப்பு, தமிழ்நிலத்தில் எந்த மன்னனுக்கும் தரப்பட்டதில்லை. அதற்குக் காரணம், யவன வணிகத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ள பாண்டிய நாட்டு முத்துகள். அதன்பொருட்டே யவனப் பெருவணிகன் வெஸ்பானியனும் அரச பிரதிநிதிகளும் துறைமுகப் பொறுப்பாளர்களும் வருகைபுரிந்தனர்.

இவர்கள் வருகைபுரிந்த ஆறு நாவாய்களும் வைகை ஆற்றில் சாம்பலாகக் கரைந்தன. வெஸ்பானியன் நெருப்பிலே மாண்டான். வேதனைகளையும் இழப்புகளையும் தாங்க முடியவில்லை. கடக்க முடியாத துயரங்களைக் கடக்க வழியின்றி நாள்கணக்கில் குடித்தான் ஹிப்பாலஸ். கம்பீரமிக்க தனது நாவாய் எரிந்தபடியே மூழ்கிய காட்சி, அவன் கண்களைவிட்டு எளிதில் அகல மறுத்தது.

எல்லோரையும்போல இது விபத்து என்றுதான் அவனும் முதலில் நினைத்தான். ஆனால், பிறகுதான் செய்தி தெரியவந்தது, பறம்பு வீரர்கள் பற்றவைத்த நெருப்பு என்று. ஆனாலும் காரணம் எளிதில் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. சேர அரசுகளான குட நாட்டுக்கும் குட்ட நாட்டுக்கும் பறம்போடு பன்னெடுங்காலப் பகை இருக்கிறது. பாண்டியனோடு எந்தப் பகையும் பறம்புக்கு இல்லையே. பிறகு ஏன் பறம்பு வீரர்கள் இந்தக் கொடுஞ்செயலைச் செய்ய வேண்டும் என்பது, விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

காரணம் அறியாமல் வைப்பூர்க் கோட்டையை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவோடு இருந்தான். செய்திகள், எல்லா முனைகளிலிருந்தும் ஹிப்பாலஸுக்கு வந்துகொண்டிருந்தன. கடலோடிகள், பெருவணிகர்கள், கடற்கரைப் பணியாளர்கள், வைப்பூர் மக்கள், பாண்டிய அரண்மனைப் பணியாளர்கள், போர்வீரர்கள் என எல்லோரும் ஆளுக்கோர் உண்மையை ஹிப்பாலஸுக்குச் சொன்னார்கள். எல்லாவற்றையும் தொகுத்தபடியே இருந்த அவன், கடைசியாகக் கேள்விப்பட்டது தேவாங்கு பற்றிய செய்தியை.

அந்தக் கணத்திலிருந்து அவனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. `திசை உணர்த்தும் ஒரு விலங்கா!’ காலம் முழுவதும் கடலிலேயே பயணப்படும் ஒருவனுக்கு, தேவாங்கு போன்ற விலங்கு நம்ப முடியாத கற்பனையாகத்தான் இருக்கும். ஆனாலும் எல்லா வகைகளிலும் அவன் அதை உறுதிப்படுத்தினான்.

p88b_1513158031.jpg

குலசேகரப்பாண்டியன் அந்த விலங்கைக் கைப்பற்றப் பறம்புக்குத் திரையர்களை அனுப்பிவைத்ததை அமைச்சர்கள்மூலமே தெரிந்துகொண்டான். திரையர்களோடு பறம்பு வீரர்கள் உடன் வந்துதான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏனென்றால், விடுதலையான திரையர் குடும்பங்களும் கப்பலிலிருந்து தப்பித்த திரையர்குல வீரர்களும் பறம்புக்குள்தான் நுழைந்துள்ளனர். எனவே, எல்லாம் பாரியின் செயல்தான் என்பதைக் குலசேகரப்பாண்டியன் உறுதிசெய்துள்ளான் என்பது வரை ஹிப்பாலஸுக்குத் தெரியவந்தது.

ஆனாலும், அந்த விலங்கைப் பார்க்காமல் அவனால் நம்ப முடியவில்லை. அந்த விலங்குகள் எல்லாம் பறம்பு வீரர்களால் மீட்கப்பட்டுவிட்டதாகவும் மிஞ்சிய சில, நெருப்பிலே எரிந்துவிட்டதாகவும் சொன்னார்கள். ஒன்றிரண்டாவது எஞ்சியிருக்காதா என்று ஹிப்பாலஸ் தொடர்ந்து முயன்றான். அவன் முயற்சி வீண்போகவில்லை.

வைப்பூர்த் துறையில் நெருப்பு பற்றுவதற்கு முன்னரே இரண்டு கலங்கள் துறையை விட்டு வெளியேறியுள்ளன. இறலித்தீவுக்கும் தெங்கின்தீவுக்கும் பயணமான அவை இரண்டிலும் தேவாங்குகள் இருந்திருக்கின்றன. சூழ்கடல் முதுவன் யாரும் அறியாதபடி நள்ளிரவுக்கு முன்னதாகவே அந்தக் கலங்களை வெளியேற்றியுள்ளான் என்பதை ஹிப்பாலஸ் அறிந்தான். 

p88c_1513158048.jpg

எப்படியாவது அந்தக் கலங்களில் உள்ள தேவாங்குகளைப் பார்த்துவிட வேண்டும் என்று பெருமுயற்சி செய்தான். வைப்பூரிலிருந்து கொற்கைக்கு வந்தவன் சிறிய வடிவிலான வங்கத்தை எடுத்துக்கொண்டு இறலித்தீவுக்குப் புறப்பட்டான். அங்கு போய் சூழ்கடல் முதுவனுக்கு நம்பகமான வணிகத் தோழனிடம் அதிகப்படியான விலைபேசி தேவாங்கைக் கைப்பற்றினான். அதைப் பார்த்த கணத்திலிருந்து இப்போது வரை அவனது வியப்பு நீங்கவில்லை.

`கடலின் எல்லாவித ஆபத்துகளையும் நீக்கும் தேவதை இது!’ என அவன் தேவாங்கை வர்ணித்தான். இப்படியொரு விலங்கு இருக்கும் செய்தி யவனத்தை எட்டுமானால், உலகெங்கும் இருக்கும் கடல் வணிகர்கள் அனைவரும் பாண்டிய நாட்டை முற்றுகையிடத் தொடங்கிவிடுவர். மற்றவர்கள் அறியும் முன், இந்த விலங்கை நாம் கைப்பற்ற வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தான் ஹிப்பாலஸ்.

இறலித் தீவிலிருந்து மீண்டும் கொற்கைக்குத் திரும்பிய அவன், நேராக மதுரைக்குச் சென்றான். குலசேகரப்பாண்டியனைக் கண்டு பேசிவிட்டுத்தான் இப்போது வஞ்சி மாநகருக்கு வந்துள்ளான்.

அவனது வருகை உதியஞ்சேரலுக்குத் தெரிவிக்கப்பட்டது. யவனத்தின் பெருமைமிகு வணிகர்களும் கடல் பயண சாகசத் தளபதிகளும் வந்துள்ளதை மகிழ்வோடு வரவேற்றான் உதியஞ்சேரல்.

அவனுடைய உற்சாகத்துக்கு இப்போது கூடுதல் முக்கியத்துவம் இருந்தது. வணிகப் போட்டியில் சேரனின் மிளகை, பாண்டியனின் முத்து கடந்து முன் சென்றுவிட்டது. எனவே, யவன வணிகர்களின் முதல்மரியாதை பாண்டியனை நோக்கியே கடந்த சில ஆண்டுகளாக இருப்பதை யாவரும் அறிவர். அதன்பொருட்டே பாண்டிய இளவரசனின் மணவிழாவுக்கு யவனத்திலிருந்து சிறப்பு ஏற்பாட்டோடு பலரும் வந்து பங்கெடுத்தனர்.

p88d_1513158097.jpg

ஆனால், வைப்பூரில் பற்றிய தீயால் யவன வணிகர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பாண்டியனின் நற்பெயரில் அழிக்க முடியாத கரும்புகை படிந்துவிட்டது. வைப்பூரில் ஏற்பட்ட இழப்பிலிருந்து எந்த ஒரு வணிகனும் எளிதில் மீண்டுவிட முடியாது. பாண்டியனால் ஏற்பட்ட கசப்பையும் கண்ணீரையும் கடலோடிகளால் எளிதில் கடந்துவிட முடியாது. நெருப்பின் சூட்டைக் கடல் மறக்க, நீண்ட காலமாகும். அதுவரை வஞ்சி நகரே வணிகத்தின் தலைவாசலாக இருக்கும் என்று கணித்தான் உதியஞ்சேரல்.

வைப்பூரில் பற்றிய நெருப்பு, பாண்டியப் பேரரசுக்குப் பெருங்களங்கத்தை உருவாக்கியது உண்மைதான். அதனால் யவன வணிகர்கள் கடுஞ்சினம்கொண்டிருந்ததும் உண்மைதான். ஆனால், இறலித்தீவுக்குப் போய் தேவாங்கை ஹிப்பாலஸ் நேரில் பார்த்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதனால்தான் அவன் மீண்டும் கொற்கைக்குத் திரும்பினான். மதுரைக்குப் போய் குலசேகரப்பாண்டியனைக் கண்டான்.
கடுங்குற்றச்சாட்டைப் பகிர்ந்து கொள்வதற்காகவே அவன் திரும்பி வந்திருப்பதாக குலசேகரப்பாண்டியன் நினைத்தார். ஆனால் ஹிப்பாலஸ், ``தங்களைக் கண்டு நன்றி சொல்லவே வந்தேன்”  என்றான். பேரரசருக்கு விளங்கவில்லை.

``காலம் முழுவதும் கடலிலேயே வாழ்வைக் கழிக்கும் கடல்மனிதன் நான். திசை அறியும் ஆற்றல்கொண்ட விலங்கு ஒன்று இருக்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காகவே உங்களைக் கண்டு நன்றி சொல்ல வந்தேன். பாண்டிய நாட்டு வானியல் அறிஞர்களின் ஆற்றல் பற்றி நிறையவே கேள்விப்பட்டுள்ளேன். எமது நாட்டின் மூத்த அறிஞர்கள், பாண்டியர்களைப் பற்றி எண்ணற்ற குறிப்புகளை எழுதிவைத்துள்ளனர். நாட்டை 365 பாகங்களாகப் பிரித்து, நாள்தோறும் ஒவ்வொரு பாகத்தில் குடியிருப்பவர்கள் அரசுக்குத் திறை கட்ட வேண்டும் என்று விதி செய்தவர்கள் பாண்டியர்கள். `பல தலைமுறைக்கு முன்பே ஆண்டை நாள்கணக்கில் துல்லியமாகப் பகுத்து, அதை நிர்வாகத்தோடு இணைத்த அறிவு பாண்டியர்களுடையது’ என எழுதிவைத்துள்ளனர். உங்களின் வானியல் ஆற்றலை நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், திசை காட்டும் விலங்கொன்று இருக்கிறது என்பதைக் கண்டறிந்த உங்களின் பேரறிவுக்கு, எங்களின் மரியாதையைச் செலுத்துகிறோம். நீங்கள் கண்டறிந்தது மகத்தான ஒன்று. கடல் இருக்கும் வரை இந்தக் கண்டுபிடிப்புக்காகப் பாண்டியப் பேரரசின் புகழை உலகம் பாடும்” என்றான் ஹிப்பாலஸ்.

அவமான உணர்வால் துவண்டுபோயிருந்த குலசேகரப்பாண்டியனுக்கு, மீண்டும் புத்துணர்வு ஊட்டுவதாக இருந்தது ஹிப்பாலஸின் பேச்சு. பறம்பின் மீதான பழிவாங்கும் உணர்வு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நேரத்தில், அதற்கு இன்னொரு பரிமாணத்தை அவன் வழங்கினான்.

நீண்ட நெடுங்காலமாகத் தமிழ் நிலத்துக்கும் யவனத்துக்கும் இடையில் கடல் வணிகம் நடந்துவருகிறது. நுரைதள்ளும் கரைவழிப் பயணமாக இரு நிலத்துக் கடலோடிகளும் பல தலைமுறைகளைக் கழித்துவிட்டனர். இரு நாகரிகங்களும் எண்ணற்றவற்றைப் பரிமாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இரு நிலப்பரப்புகளில் இருப்பவர்களும் கண்டு பெரிதும் வியக்கும் கண்டுபிடிப்பாக தேவாங்கு இருக்கிறது. `சாகசத் தளபதி’ என்று உலகெங்கும் பெயர்பெற்ற ஹிப்பாலஸ், தனது மிகப்பெரிய நாவாய் எரிந்த துயரைக் கடந்து, கண்டறியப்பட்ட தேவாங்குக்காக, தன்னை வணங்கி நிற்கிறான் என்றால் அது எளிதான ஒன்றல்ல.

ஹிப்பாலஸும் குலசேகரப்பாண்டியனும் அடுத்து நடக்க வேண்டியவற்றைப் பற்றி நிறைய பேசினர். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது உதியஞ்சேரலைப் பார்க்க வந்துள்ளான்.

p88e_1513158110.jpg

பறம்பின் மீதான உதியஞ்சேரலின் போர்த் திட்டங்களைப் பற்றித்தான் அவன் உரையாடினான். ஹிப்பாலஸுடன் எபிரஸ், திரேஷியன் இருந்தனர். குடநாட்டு அமைச்சன் கோளூர் சாத்தன் கொல்லிக்காட்டு விதையைப் பெற்றுத்தருவதாகக் கூறி, பறம்புக்குச் சென்று பாரியிடம் வணிகம் பேசியதையும், அதன் பொருட்டு கை துண்டிக்கப்பட்டதையும் கூறிய அவர்கள், குடநாட்டினர் இப்போது உதியஞ்சேரலோடு இணைந்து பறம்புக்கு எதிராகச் செய்யும் முயற்சியையும் பகிர்ந்துகொண்டனர்.

யவனர்கள் இங்கு நிகழும் எல்லாவற்றையும் அறிந்துவைத்துள்ளது உதியஞ்சேரலுக்கு வியப்பளிக்கும் ஒன்றாக இல்லை. பல தலைமுறைகளாகச் செழித்தோங்கியிருக்கும் வணிகம், அரசியலுக்குள் ஆழமான வேர்களைச் செலுத்தியிருக்கும் என்பதை அவன் அறிவான்.

ஆனால், பாரியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நீண்டநெடுங்காலமாக சிந்தித்துச் செயல்பட்டுக்கொண்டிருப்பது குட்டநாடு. உதியஞ்சேரலின் தந்தையான செம்மாஞ்சேரலைக் கொன்றழித்தவன் பாரி. அதற்குப் பல காலத்துக்கு முன்பே பகை தொடங்கிவிட்டது. உதியஞ்சேரல் பட்டமேற்ற பிறகு பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறான்.

அவனோடு முரண்பட்டு விலகியிருந்த குடநாட்டு வேந்தன் குடவர்கோவும் இப்போது இணைந்து செயல்பட முன்வந்துள்ளான். இது சூழலை மிகவும்  ஏதுவாக மாற்றியுள்ளது என்று உதியஞ்சேரல் எண்ணிக்கொண்டிருக்கும் போதுதான் வைப்பூரின் மீதான பாரியின் தாக்குதல் நடந்துள்ளது.

எதிரிகளின் எண்ணிக்கையை, பாரி போதுமான அளவுக்கு அதிகப்படுத்திக்கொண்டான். இதைவிட நல்லகாலம் இனி வாய்க்காது என்று உதியஞ்சேரல் நினைத்துக்கொண்டிருந்தபோது தான் ஹிப்பாலஸ் வந்துசேர்ந்துள்ளான். பேரியாற்றங்கரையின் நெடுவுயர் மன்றத்தில் நடந்தபடியே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

வைகையின் தென்கரைப் படித்துறையில் இருந்த நிலைமாடத்தில் தனித்திருந்தார் குலசேகரப்பாண்டியன். பொழுது கவியக் காத்திருந்தது. ஆற்றங்கரை எங்கும் கூடு திரும்பும் பறவைகளின் கீச்சொலி கேட்டுக்கொண்டிருந்தது. வைகை சீற்றமின்றி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், குலசேகரப்பாண்டியனின் எண்ணவோட்டம் அப்படியில்லை. அது கட்டுக்கடங்காமலே இருந்தது. நீண்டநெடும் அரசியல் அனுபவம், அவருடைய எண்ணங்களை வழிநடத்த முடியாமல் திணறியது. அவர் சிறிது நேரம் நடப்பதும் பிறகு உட்காருவதும் உட்கார்ந்த உடனே எழுந்து நடப்பதுமாக இருந்தார்.

தொலைவில் காவல் வீரர்கள் நின்றிருந்தனர். அவர்களைக் கடந்தே முசுகுந்தரும் மற்றவர்களும் நின்றிருந்தனர். யாரும் நெருங்க முடியாச் சீற்றம்கொண்டிருந்தார் பேரரசர். ஓடும் வைகை, மூழ்கும் கலங்களைக் கண்களுக்குக் காட்டிக் காட்டி மறைத்துக்கொண்டிருந்தது. அவர் தனிமையில் சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் எவ்வளவோ இடங்கள் உண்டு. ஆற்றங்கரை மண்டபத்துக்குப் போனால் வைப்பூரின் நினைவே மீண்டும் மீண்டும் வரும். எனவே, அதைத் தவிர்க்கலாம் என்றுதான் பலரும் சொல்லிப்பார்த்தனர். ஆனால், பேரரசர் வேறு எங்கும் போகாமல் தொடர்ந்து இங்குதான் வருகைதந்தார். அதற்குக் காரணமும் இருந்தது.

p88f_1513158149.jpg

பாரியின் புகழ், நிலமெங்கும் பரவியிருந்தது. அது ஆள்வோருக்கு இயல்பாகப் பொறாமையை உருவாக்கியிருந்தது. இடைவிடாது பாடித் திரியும் பாணர்கள் தங்கள் குரல் நாளங்கள் விடைப்புற்று வலியெடுக்கும்போதும் பாரியைப் பற்றியே பாடுகின்றனர். சொற்களுக்குள் உருளும் பாரியின் நினைவு, குரல் நாளங்களுக்கு இதம் தருவதாக பாணர் குலமே கருதியது. தோற்பறையை நெருப்பிலே சூடேற்றி ஒலியெழுப்பும் பக்குவத்துக்குக் கொண்டுவருதல்போல பாடிக் களைத்த குரல் நாளங்களை மீண்டும் பாடும் பக்குவத்துக்குக் கொண்டுவர பாரியைப் பற்றிய பாடல்கள் உதவி செய்வதாகவும் பேசினார்கள். பாரியைப் பற்றிய பாணர்களின் பேச்சும் பாட்டும் இசையும் கூத்தும் வேந்தர்களின் ஆழ்மனதில் வெறுப்பை இடைவிடாது உமிழ்ந்துகொண்டிருந்தன. புகழைப் பழுக்கக்காய்ச்சி வேந்தர்களின் அடிநெஞ்சில் இடைவிடாமல் ஊற்றினர். அது எல்லா வகைகளிலும் வினையாற்றிக்கொண்டே இருந்தது.

பாரியின் மீது வெறுப்பும் பொறாமையும் குலசேகரப்பாண்டியனுக்கும் உண்டு. ஆனாலும் தேவாங்குக்காகப் போர் தொடுக்க வேண்டும் என்று கருங்கைவாணனும் பொதியவெற்பனும் கூறியபோதும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், பொறாமையும் வெறுப்பும் மனித மனத்தைக் குறைந்த அளவே இயக்கும் ஆற்றல்கொண்டவை. பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல்கொண்டது. பாண்டிய நாட்டுக்குப் பறம்பின் மீது பகை உருவாகவேயில்லை. அதன்பொருட்டே குலசேகரப்பாண்டியன் போர்தொடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. பெரும் மலைத்தொடருக்குள் இருக்கும் ஒரு நாட்டைக் கைப்பற்ற வளமிக்க போர்ப்படை மட்டும் போதாது; அதை வழிநடத்துபவர்களுக்கு ஆறாப்பகை இருக்க வேண்டும். அதுதான் அவர்களைச் சினம் குறையாமல் இயக்கிக்கொண்டேயிருக்கும். பகை, கணம்தோறும் ஊறிப் பெருகக்கூடியது. சூழலில் நிகழும் ஒவ்வொரு காரணத்தையும் பகை தன்னைப் பெருக்கிக்கொள்ள இயல்பாகப் பயன்படுத்திக்கொள்ளும். வெறும் பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும். பகை மட்டுமே மூட்டியவனால்கூட அணைக்க முடியாத பெருநெருப்பு.

இப்போது பாண்டிய நாட்டுக்குப் பறம்பின் மீது தீராப்பகை உருவாகிவிட்டது. நகரும் நதிநீரை கணம்தோறும் பார்த்தவண்ணமே அந்தப் பகையைக் கொழுந்துவிட்டெழச் செய்துகொண்டிருக்கிறார் குலசேகரப்பாண்டியன்.

பேரியாற்றங்கரையின் நெடுவுயர் மன்றத்தில் நடந்தபடியே உதியஞ்சேரலும் ஹிப்பாலஸும் பேசிக்கொண்டிருந்தனர். உதியஞ்சேரல் வயதில் மிக இளையவன். ஹிப்பாலஸைப்போல நெடிய உயரம்கொண்டவன். அவனது அறிவுக் கூர்மையைப் பலரும் பாராட்டுவதை எத்தனையோ முறை கேட்டுள்ளான் ஹிப்பாலஸ். 

குலசேகரப்பாண்டியன் பறம்புக்கு எதிரான வேலைகளைத் தொடங்கிவிட்டதாக ஹிப்பாலஸ் சொன்னபோது, உதியஞ்சேரல் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

சிற்றலைகள் எழுந்தபடியிருந்த பேரியாற்றின் கரையில் கண்களை அங்குமிங்குமாக ஓடவிட்டவாறு உதியஞ்சேரல் சொன்னான், ``பகைமைகொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான். பகை, சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும். போருக்குத் தேவை சினமன்று. ஆனால், இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பகை பின்னுக்குத் தள்ளிவிடும். எனவே, பாண்டியன் இப்போது எடுக்கும் முடிவால் பறம்புக்கு எந்த ஆபத்தும் நிகழப்போவதில்லை.”

உதியஞ்சேரலின் உரை கேட்டு அதிர்ச்சியானான் ஹிப்பாலஸ். பறந்துவந்த மீன்கொத்தி ஒன்று சட்டென மீனைக் கொத்தித் தூக்கியதைப் பார்த்தபடி உதியஞ்சேரல் சொன்னான், ``தேவாங்கின் ஆற்றலைக் கண்டறிந்தது பாண்டியனின் அறிவுக்கூர்மையைக் காட்டுகிறது. ஆனால், அதைப் பிடித்துவர திரையர்களை அனுப்பியது மலைமக்களைப் பற்றிய அறிவற்றதனத்தையே காட்டுகிறது.”
ஹிப்பாலஸ், புரியாமல் விழித்தான்.

``நாம்     இவ்விடம்  வந்து   இருபொழுது களாகின்றன. அந்த மீன்கொத்தி, நீண்டநேரம் நாணலில் உட்கார்ந்திருந்தது. பிறகு அந்த மரக்கிளையில் போய் உட்கார்ந்திருந்தது; காற்றிலே வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு கணத்துக்காக அது காத்திருந்தது. அந்தக் கணம் வந்தவுடன் மலையின் மேலிருந்து பாய்ந்து இறங்கும் வீரனைப்போல காற்றைக் கிழித்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் மீனைக் கவ்வித் தூக்கியது.

நீருக்குள் இருக்கும் மீனை நீரைவிட்டு வெளியில் இருக்கும் ஓர் உயிரினம் வேட்டையாடுவதைப்போல சவால் நிறைந்தது வேறில்லை. நீரின் மேற்பரப்பில் நீந்திக்கொண்டிருக்கும் மீன், மீன்கொத்தியின் அலகைத் தாண்டிய ஆழத்துக்குப் போகும் முன் காற்றைக் கிழித்துக் கீழிறங்கி வரவேண்டும். அப்படியென்றால், எவ்வளவு துல்லியமான கணிப்பு தேவை. பார்வையின் கூர்மை, சிறகு அசைக்கும் வேகம், கொத்தித் தூக்கும் அலகின் துடிப்பு எல்லாம் ஒருங்கிணைய வேண்டும். ஆனால், எந்தக் காத்திருப்பும் ஆயத்தமும் இல்லாமல் கடகடவெனக் காட்டுக்குள் இறங்க முடிவெடுத்தான் பாண்டியன். அவனது அறியாமை எல்லையற்றது” என்றான் உதியஞ்சேரல்.

p88g_1513158189.jpg

வயதில் மிக மூத்தவரான பேரரசர் குலசேகரப்பாண்டியனின் அரசியல் நடவடிக்கையை, சொற்களால் இடித்துத் தள்ளினான் உதியஞ்சேரல். ஹிப்பாலஸுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
``பறம்பின் மீது போர் தொடுப்பது என நான் முடிவெடுத்து, பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் நாணலின் மீது உட்கார்ந்தும் கொப்பில் அமர்ந்தும் காற்றில் பறந்தபடியும்தான் இருக்கிறேன். நீரை நோக்கிப் பாயும் நேரம் இன்னும் கைகூடவில்லை” சொல்லும்போது அவன் கண்கள் சிவந்தன. முறுக்கேறிய கைகளின் ஆவேசத்தை அவனால் கட்டுப்படுத்த முடிந்தது.

``அந்தக் கணம் வரை நான் காத்திருப்பேன். சீவப்பட்ட என் தந்தையின் தலைக்கு ஈடாக, பாரியின் தலையை மண்ணில் சரிப்பேன்.” சொற்களிலிருந்த உறுதி ஹிப்பாலஸையே உலுக்கியது.

``குடநாடும் நீங்களும் பறம்புக்கு எதிராகப் போர்புரிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கியுள்ளதாக அறிகிறேன். அதேபோல பாண்டியருடனும் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கலாம் அல்லவா?”
``அதற்கான தேவையும் இல்லை. அதனால், எந்தப் பலனும் நேரப்போவதில்லை.”

``ஏன்?”

``எங்களைவிட மூன்று மடங்கு பெரும்படை பாண்டியர்களிடம் இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால், பாண்டிய நாட்டின் நிலவியல் அமைப்பு, பச்சைமலைத் தொடரின் தன்மை இவற்றைக்கொண்டு பார்த்தால், கீழ் திசையிலிருந்து பறம்பை எதுவும் செய்துவிட முடியாது. காரமலையைக்கூட அவர்களால் தாண்ட முடியாது. மேலேறும் பாண்டியர் படையை அழித்தொழிக்க, பாரிக்கு அதிகப்பொழுது தேவைப்படாது.”

``பேரரசின் படையை அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியும் என்றா சொல்கிறீர்கள்?”

``பறம்பின் ஆற்றல் என்ன என்று பத்தில் ஒரு பங்குகூட பாண்டியர்களால் உணர முடியாது. அதனால்தான் அறிவீனமான செயல்களைச் செய்துதொலைக்கிறார்கள்.”

உதியஞ்சேரலின் கோபத்துக்கான காரணத்தை ஹிப்பாலஸால் புரிந்துகொள்ள முடியவில்லை. ``குடநாடும் குட்டநாடும் பச்சைமலைத் தொடரின் பெருங்காட்டின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறோம். எங்களாலேயே அவனது ஆற்றலை இன்று வரை அளவிட முடியவில்லை. எல்லை கடந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறான் அவன். அப்படி இருக்கும்போது, எங்கோ இருந்த திரையர்களையும் அவர்களோடு சேர்த்துவிடும் மூடத்தனத்தைக் கண்டு சினம்கொள்ளாமல் என்ன செய்வது?”

உதியஞ்சேரலின் சினத்துக்கான காரணத்தை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.

``இதுவரை பாரியின் புகழை மட்டுமே பாடிக்கொண்டிருந்த பாணர்கள், இப்போது `வேந்தர்களை மீறிய வீரம்கொண்டவன் பாரி’ எனப் பாடுகின்றனர். வேளிர்களை வேந்தர்களுக்கு இணையாகச் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் தளம் அமைத்துக்கொடுத்துவிட்டான் பாண்டியன்.”

உதியஞ்சேரல் அடுக்கடுக்காக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைக் கேட்டபடி நின்றுகொண்டிருந்தான் ஹிப்பாலஸ். அடுத்து என்ன சொல்வதென அவனுக்குத் தெரியவில்லை.

பேரியாற்றைப் பார்த்துக்கொண்டே பேசிய உதியஞ்சேரலின் முகத்தில் சற்றே மாறுபட்டதன்மை வெளிப்பட்டது. இழுத்து மூச்சுவாங்கி விட்டபடி சொன்னான், ``நடந்தவை எல்லாவற்றையும் நினைத்துப்பார்க்கும்போது பாண்டியன் செய்தது எல்லாமே பிழை. ஆனால், பறம்பின் வீரர்கள் செய்த பிழையும் ஒன்று இருக்கிறது. அதைத்தான் முக்கியமாகக் கவனிக்கவேண்டியுள்ளது.”

இவ்வளவு நேரம் நிகழ்ந்த உரையாடலில் மிக முக்கியமான ஒன்றைப் பற்றி இப்போது உதியஞ்சேரல் பேசுவதாக ஹிப்பாலஸுக்குத் தோன்றியது.

சற்றே ஆர்வத்தோடு கேட்டான், ``என்ன அது?”

``இளமாறனை வெட்டி வீசியது.”

ஹிப்பாலஸ் வியப்பு நீங்காமல் பார்த்தான்.

p88h_1513158203.jpg

``மையூர்கிழாரின் மகன் இளமாறனின் தலையை வெட்டி வீழ்த்தியதன் மூலம் வெங்கல் நாட்டின் பகையைத் தேடிக்கொண்டனர். எந்தக் காரணம்கொண்டும் பறம்புக்குத் தீங்கு செய்ய மாட்டோம் என்று உறுதிபூண்ட குலம் அது. ஆனால், இன்று வெங்கல் நாட்டுத் தலைவர் மையூர்கிழார் தன் மகனின் சாவுக்குப் பழிதீர்க்கச் சூளுரைத்துள்ளார். வெங்கல் நாட்டின் பல ஊர்கள் பச்சைமலைத் தொடரில் உள்ளடங்கியுள்ளன. பறம்பின் ஊர்கள் பலவற்றோடு அந்த மக்களுக்கு நல்ல உறவு உள்ளது. இது எங்களுக்குக்கூடக் கிடைக்காத வாய்ப்பு.”

ஹிப்பாலஸின் கண்கள் அசைவற்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தன.

உதியஞ்சேரல் இறுதியாகச் சொன்னான், “குலசேகரப்பாண்டியன் சரியாகத் திட்டமிடுபவனாக இருந்தால், பாரியின் முடிவைத் தீர்மானிப்பவனாக மையூர்கிழாரை மாற்ற முடியும்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 62

 

 

p83a_1513662493.jpg

மூன்று வகையான திட்டங்களை முன்வைத்தான் கருங்கைவாணன். மழைக்காலம் முடிந்துவிட்டது; இனி நெடுங்கோடைதான். எனவே  கோடைக்காலத்துக்கேற்ப உத்திகளை வகுத்தான். பாண்டியப் பெரும்படையின் வலிமை அளவற்றது; வேறெந்தப் பேரரசுடனும் ஒப்பிட முடியாதது; தொடர்ந்து எண்ணற்ற வெற்றிகளை ஈட்டிவருவது. அறுவடைக்காலம் முடிந்ததும் இதுபோல் இன்னொரு மடங்கு வீரர்களைத் திரட்ட முடியும். எனவே, கருங்கைவாணன் வகுத்த திட்டத்தில் இடம்பெற்றிருந்த வீரர்களின் எண்ணிக்கை இந்த மண் அறியாதது.

``பாண்டியப்படை கேடயத்தோடு வாள் உரசும் ஓசையை, மூன்றாம் மலை கடந்து பாரி உணர்வான்’’ என்றான் கருங்கைவாணன். அவனது திட்டங்களையும் போர் உத்திகளையும் கண்டு பொதியவெற்பனும் முசுகுந்தரும் வாயடைத்துப்போயினர். திதியன், கருங்கைவாணனின் நிழல்போல் எந்நேரமும் உடன் இருந்தான். மலைப்பகுதியில் அமைக்கவேண்டிய உத்திகளைப் பற்றி அவன்தான் ஆலோசனைகளை வழங்கியவன். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துத்தான் திட்டங்களை வகுத்திருந்தனர்.

போரில், வழக்கமாக வெற்றியே நோக்கமாக இருக்கும். ஆனால், இந்தப் போரில் அதைக் கடந்த நோக்கங்கள் நிறைய இருந்தன. ஆறாப்பகையைத் தீர்த்துக்கொள்ளவேண்டிய தேவையிருந்தது. வாழ்வில் இதுவரை அடையாத அவமானத்தை அடைந்தவனாகக் கூனிக்குறுகிப்போயிருக்கிறான் கருங்கைவாணன். அவன் வழிநடத்திய ஒரு போரில்கூட பாண்டியர் படை தோல்வியைத் தழுவவில்லை. ஆனால், அவனது தவறுதலான கணிப்பால் நெஞ்சுக்குழிக்குள் ஈட்டியை இறக்கிவிட்டனர் திரையர்கள். பகலையும் இரவையும் கடக்க முடியாமல் துடிக்கும் ஒருவனாக அவன் இருக்கிறான். வேதனைக்கு அணுஅணுவாக முகங்கொடுக்கும் கருங்கைவாணன், எப்போதும் அரண்மனையில் தலை கவிழ்ந்தே நிற்கிறான்.

p83b_1513662483.jpg

போருக்கான அனுமதியைப் பேரரசர்  தராமல் காலங்கடத்தும் ஒவ்வொரு நாளும் அவன் அடையும் வேதனை அளவற்றதாக இருக்கிறது. இந்த முறை வகுக்கப்பட்டுள்ள திட்டத்தைப் பேரரசர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தான் அவன்.

நேற்று மிக நீண்டநேரம் வைகையின் தென்துறை நிலைமாடத்தில் இருந்த பேரரசர், அதன் பிறகு யாரையும் சந்திக்கவில்லை. காலையில் அவரின் வருகைக்காக இளவரசனும் முசுகுந்தரும் கருங்கை வாணனும் காத்திருந்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு பேரரசர் வருகை தந்தார். அவரது முகத்தை மகிழ்வோடு எதிர்கொள்ள இன்னும் யாருக்கும் துணிவு வரவில்லை. வணங்கி வரவேற்ற அவர்கள், குனிந்த தலையை நிமிர நீண்டநேரமானது.

கருங்கைவாணன், போருக்கான மூன்றுவிதமான திட்டங்களையும் விளக்கினான். தோல் மடிப்புகளை ஒவ்வொன்றாக விரித்து விரித்து, படை நகர்வுகளையும் தாக்குதலையும் மிகுந்த நிதானத்தோடு சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் பேரரசர், கவனமாகக் கேட்பதைப்போல்கூடக் காட்டிக்கொள்ளவில்லை. அவரின் கண்ணசைவுகள் எல்லாவற்றையும் எளிதில் கடந்து போய்க்கொண்டிருந்தன. யாராலும் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எதிர்பார்ப்புதான் என்ன என்பது விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

அவர் அடுத்த பணிக்காக அவையை விட்டு நீங்கியபோது கருங்கைவாணனும் பொதியவெற்பனும் கூனிக்குறுகிப்போயினர். முசுகுந்தர், கலங்கிய முகத்தோடு அவருக்குப் பின்னால் போய்க் கொண்டிருந்தார்.

முன்புபோல் கலங்கிப்போயிருக்கவில்லை பொற்சுவை. அவளின் முகம் தெளிவுகொண்டிருந்தது. காலம் எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும்; கற்றுக்கொள்ளும் சுவை அறிந்தவளுக்குக் கணக்கின்றிக் கற்றுக்கொடுக்கும். வெளிமாடத்தில் நின்றபடி சக்கரவாகப் பறவை பறந்து சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே இருந்த காலம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்தாள். தன்னுள்ளும் தன்னைச் சுற்றியும் என்னதான் நிகழ்கிறது என்பதை அறியத் தொடங்கினாள்.

வைப்பூரில் நெருப்புப் பற்றிய செய்தி வந்தபோது, அரண்மனையே அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தது. ஆனால், அவள் அதிர்ச்சியடைய அதில் ஒன்றுமில்லை. நெருப்பினும் கொடும் அழிவை அகவாழ்வில் கண்ட ஒருத்திக்கு, நெருப்பின் சூடு புதியதாகத் தாக்க என்னவிருக்கிறது? மூழ்கிய கலங்களைப் பற்றியும் மிதந்த சாம்பலைப் பற்றியும் நாள் கணக்கில் பேசினர். அதற்கு வெகுநாள்களுக்கு முன்பிருந்தே அவள் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஏறக்குறைய அவளின் அனைத்துக் கனவுகளுக்கும் அதுதான் நிகழ்ந்தது; எந்தவித மிச்சமுமின்றி நிகழ்ந்தது. வைப்பூருக்காவது வைகை மிஞ்சியது; பொற்சுவைக்கு மிஞ்ச எதுவுமில்லை.

துயரம், தன்னுள் மட்டுமல்ல... அரண்மனையின் வெளி முழுவதும் பரவியிருக்கிறது என்பதை உணர்ந்தாள். குலசேலரப்பாண்டியனும் பொதியவெற்பனும் சூல்கடல் முதுவனும் ஒருசேர மனமொடிந்து கிடப்பதாகக் கேள்விப்பட்டாள். மேல் மாடத்தில் வீற்றிருந்த அவளை, வைகையின் இளங்காற்று தழுவிக் கடந்தது. நெருப்பும் துயரமும் தன்னை நோக்கி வர மறுப்பதை அறிந்தபோது வைகை நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தாள்.

p83c_1513662513.jpg

அழிவு நீக்கமற நிகழ்ந்துவிட்டது. மணவிழாவின் நினைவுப்பரப்பெங்கும் துயரம் பரவிக்கொண்டிருப்பதைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் அமைதியுடன் கவனித்தபடி இருந்தாள். நீண்ட தனிமை அவளுக்குத் தேவைப்பட்டது. தனித்திருத்தல், அவளின் இயல்புக்கு முற்றிலும் மாறானது. ஆனாலும் அதற்குள் புகுந்தாள். நீண்டநாள்களாக சுகமதியைக் கண்டு பேசவில்லை.

மாதங்கள் சில ஓடிய பிறகு இப்போதுதான் சுகமதியை அழைத்துவரச் சொல்லி, பணிப் பெண்களை அனுப்பினாள்.  

பின்தொடர்ந்து போன முசுகுந்தர் விரைந்து நடந்து அவரை அணுகவும் முடியாமல், மிகவும் பின்தங்கியும்விடாமல் நடந்து வந்தார். அதாவது, பேரரசருக்குப் பின்னால் அமைச்சர் நடந்து வருகிறார் என்பதைப் பேரரசர் உணரக்கூடிய நிலையில் வந்துகொண்டிருந்தார்.

முசுகுந்தரின் மனம், பேரரசரைப் புரிந்து கொள்ள இடைவிடாது முயன்றுகொண்டிருந்தது. வைப்பூரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் பாண்டிய நாட்டின் புகழில் நிரந்தரமான கறை விழுந்துவிட்டது என்று பலரும் பேசுகின்றனர். அதைச் செய்தவர்களை அழித்தொழித்தால் மட்டுமே, இந்தக் கறையை அகற்ற முடியும்; பேரரசின் புகழை நிலைநாட்ட முடியும். ஆனால், பேரரசர் ஏன் தாக்குதலுக்கான அனுமதியைக் கொடுக்க மறுக்கிறார்?

``வைப்பூர்த் துறைமுகத்தைப் புதுப்பிக்கும் பணியை உடனடியாகச் செய்ய வேண்டும்; முன்னிலும் பெருந்துறைமுகமாக அதை வடிவமைக்க வேண்டும்’’ என்று வெள்ளிகொண்டார் கேட்டதற்கும் பேரரசர் அனுமதி வழங்கவில்லை.

பேரரசின் வலிமை என்பது, அழிக்கப்பட்ட ஒன்றை அதைவிடப் பல மடங்கு சிறப்போடு கட்டி எழுப்புவதில் உள்ளது. ``துறைமுகம் என்பது செல்வத்தின் கண்; நாம் அதை விரைந்து செப்பனிட வேண்டும்” என்று வெள்ளிகொண்டார் கேட்டுள்ளார்.

``எரித்தவனை அழிக்காமல், எரிக்கப்பட்ட பொருளை மீண்டும் அலங்கரிக்க நினைப்பது அவமானம்” என்று கூறியுள்ளார் பேரரசர்.

அப்படியென்றால் பாரியை வீழ்த்திவிட்டுத்தான் வைப்பூரைப் புதுப்பிக்கும் பணியைச் செய்யும் முடிவோடு இருக்கிறார் என்பது புரிகிறது. பிறகு ஏன் படையெடுப்புக்கான எந்தவித அனுமதியும் வழங்க மறுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் முசுகுந்தரின் மனம் தவித்தது.

பேரரசர், சித்திரக்கால் மண்டபத்துக்குள் நுழைந்தார். குழம்பிய மனதோடு அவரின் பின்னாலேயே போன முசுகுந்தர், அரசரைப் பார்க்க அனுமதி கேட்டு, பணியாளனை உள்ளே அனுப்பினார்.

சுகமதி உள்ளே நுழைந்தாள்.

கார்காலப் பள்ளியறையிலிருந்து வேனிற்காலப் பள்ளியறைக்கு இளவரசி மாறப்போவதால், இங்கிருந்து அங்கு எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களைப் பணிப்பெண்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.

சுகமதியைப் பார்த்ததும் உள்ளறைக்குப் போய் செய்தி சொன்னாள் ஒருத்தி. உள்ளிருந்த பொற்சுவை, மாளிகையின் நடுமண்டபத்துக்கு வந்தாள். வேலை செய்துகொண்டிருந்த பணிப் பெண்கள் இடம் விட்டு வெளியேறினர்.

நடுவில்  இருந்த பெருங்கட்டிலில் பட்டுமெத்தைப் படுக்கையின் மீது செந்நிறப்  பட்டால் வடிவமைக்கப் பட்ட எலிமயிர்ப் போர்வை ஒழுங்கற்ற மடிப்போடு கிடந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த சுகமதியின் கண்கள் சட்டெனத் திரும்பி உள்நுழையும் பொற்சுவையைப் பார்த்தன.

p83d_1513662526.jpg

பார்த்த கணத்தில் இயல்பான பேச்சு தொடங்கியது. ``கார்காலம் முடிந்துவிட்டது. எனவே, வேனிற்காலப் பள்ளியறைக்கு இளவரசி இடம்பெயர்வது அரண்மனை வழக்கமாம். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன சுகமதி” என்றாள்.

சற்றே மெல்லிய குரலில் ``எல்லாம் வழக்கப்படி தான் நடக்கின்றனவா?” என்று கேட்டபடி இடப்புறமாகத் திரும்பி ஒழுங்கற்ற போர்வை மடிப்பைப் பார்த்தாள் சுகமதி.

அசட்டுச் சிரிப்போடு பொற்சுவை சொன்னாள், ``நானும் உன்னைப்போல்தான் நினைத்தேன். இதே கேள்வியை எனக்குள் கேட்டுக்கொண்டேன்.”

சுகமதிக்குப் புரியவில்லை.

``எல்லாம் வழக்கப்படி நடக்கின்றனவா? அப்படி நடக்கவில்லையே என முடிவுசெய்து உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், காலம் தாழ்த்திதான் உணர்ந்தேன் எல்லாம் வழக்கப்படிதான் நடக்கின்றன.”

சுகமதி கேட்டதன் பொருள் சற்றே வெளிப்படையாகத்தான் இருந்தது. ஆனால், பொற்சுவை சொல்வதற்குள் என்ன பொருள் இருக்கிறது என்பது புரியவில்லை.

`வெளிப்படையாகவே கேட்போம்’ என்று சுகமதிக்குத் தோன்றியது. படுக்கையின் அருகில் வந்தாள், எலிமயிர்ப் போர்வையை மெள்ளத் தொட்டுப் பார்த்தபடி, ``இந்தப் போர்வை உங்கள் இருவரின் உடல்களை உணர்ந்ததா?”

``அதை நீ அறியவேண்டாம் சுகமதி. என்னைப்போல் நீயும் சிக்கிக்கொள்ள நேரிடும்.”

பழைய சுகமதியென்றால் தலை கவிழ்ந்து சொற்களை உள்வாங்கி நிதானமாக அடுத்த வினாவைக் கேட்டிருப்பாள். ஆனால், இப்போது அப்படியல்ல. கவிழ்ந்த தலையைச் சட்டென நிமிர்த்திக் கேட்டாள், ``உண்மையில் நீங்கள் யாரிடம் சிக்கிக்கொண்டுள்ளீர்கள், காதலனிடமா... பொதியவெற்பனிடமா?”

``பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக்கொள்ள மாட்டாள். அவள் சிக்கிக்கொள்வது அவளிடம் மட்டும்தான்” எனக் கண நேர இடைவெளியின்றிச் சொற்களை எறிந்துவிட்டு நடந்தாள் பொற்சுவை. சுகமதிக்கு எதிர்பாராத பதிலாக இருந்தது.

பொற்சுவை தொடர்ந்தாள், ``ஆண் ஒருபோதும் பெண் மனதைக் கண்டறிய முடியாது. பெண்ணுடல், பிரித்தறிய முடியாத மர்மங்களின் சேர்மானம். ஆண்களால் கணிக்கவே முடியாத கற்பாறை. எனவே, ஆணைக் கண்டு எனக்கு எப்போதும் பயம் இல்லை. நான் சிக்கிக்கொண்டிருப்பது என்னிடம்தான்.”

``உங்களிடமே நீங்கள் சிக்கிக்கொண்டுள்ளீர்கள் என்றால், உங்களை விடுவிக்கும் ஆற்றலும் உங்களிடம் உள்ளது என்றுதானே பொருள்!”

``உனது பேச்சுமொழியே மாறிவிட்டது சுகமதி. முன்னிலும் தெளிவாகப் பேசுகிறாய்” என்று சுகமதியை வெகுவாகப் பாராட்டினாள். ஆனால், அவளின் சிக்கல் என்னவென்று மட்டும் சொல்லவில்லை.

பொற்சுவையின் பின்னால் நடந்தபடியிருந்த சுகமதி, தான் எழுப்பிய கேள்வியிடமிருந்து மட்டும் நகரவில்லை, ``பெண் மனதை ஆண் கணிக்கவே முடியாது என்றா சொல்கிறீர்கள்?”

``ஆம், அதில் என்ன ஐயம்? நதியின் ஆழத்தைப் படகு அறியாது. நீரின் போக்கில் நகர்வதே அதற்கு இன்பம் பயக்கக்கூடியது. அதன் தேவையும் அதுதான்.”

``எல்லா ஆண்களையும் அப்படிச் சொல்லிவிட முடியுமா?”

``ஆண் என்ற வடிவத்துக்கு விதிவிலக்குகள் இல்லை சுகமதி.”

அதிர்ந்தாள். அவளது முகம், பொற்சுவை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறியது.

``நீலம் என்பது வானத்தின் விதியல்ல, இயல்பு. விதியாக இருந்தால் விதிவிலக்கு இருக்கும். இயல்பாக இருந்தால்?”

சுகமதி திகைத்து நின்றாள்.

காரணம் புரியாத திகைப்பிலும் குழப்பத்திலுமிருந்து முசுகுந்தர் மீளவில்லை. உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்தார்.

பேரரசரின் அழைப்பை, பணியாளன் வந்து சொன்னான். உள்நுழைந்தார் முசுகுந்தர்.

பேரரசரைப் பார்த்துவிட்டுச் சிலர் வெளியேறினர். அவர்கள் யாரென முசுகுந்தரால் அறிந்துகொள்ள முடியவில்லை. யாராக இருக்கும் என்ற சிந்தனையிலேயே பேரரசரின் முன் வந்து நின்றார்.

வந்து நின்ற கணத்தில் பேரரசர் கேட்டார், ``நாம் செய்த பிழை என்ன அமைச்சரே?”

அழுத்திக்கொண்டிருந்த கட்டி வெடித்ததைப்போல் இருந்தது. இந்தக் கேள்வியைக்கூட இத்தனை நாள் அவர் கேட்கவில்லை. வாழ்க்கை முழுவதும் சந்தித்திராத அவமானத்தை இந்தக் காலத்தில்தான் முசுகுந்தர் சந்தித்தார். வைப்பூரின் அழிவுக்குப் பிறகு ஒற்றைக் கேள்விகூட அவர் கேட்கவில்லை. அந்தப் பெரும் அழிவை நேரில் பார்த்தவர் முசுகுந்தர்தான்.  எதையும் கேட்க மறுத்ததன்மூலம் உருவான நிராகரிப்பை, அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

`இப்போதாவது கேட்டாரே!’ என்று சற்றே ஆறுதலுடன் சொன்னார், ``தேவாங்கைக் கொண்டுவந்தவர்கள் எல்லாம் திரையர்கள்தானா என்பதைச் சோதிக்கத் தவறியது.”

``இல்லை. `திரையர்கள் வீழ்ந்து விட்டார்கள்’ என்று கருங்கைவாணன் சொல்லியதை நம்பியது.”

பேரரசரின் எண்ணம் எவ்வளவு உள்ளோடியதாக இருக்கும் என்பதை நன்கு தெரிந்த முசுகுந்தரே முதல் கேள்வியிலேயே மூச்சுமுட்ட நின்றார்.

பேரரசர் தொடர்ந்தார், ``படைவீரர்கள் தாம் தோற்றவுடன் வீழ்வார்கள். குலம் காக்கும் போராளிகள் ஒருபோதும் வீழ மாட்டார்கள்; கடைசிக் கணத்திலும் வெகுண்டெழுவார்கள்.”

பேரரசரின் சொல் முசுகுந்தருக்கு எந்தச் சொல்லையும் விட்டுவைக்க வில்லை.

``வெற்றி என்பது, போர் வீரர்களாலும் போர் உத்திகளாலும் நிகழ்வது என்று நம்புகிறான் கருங்கைவாணன். இல்லை,  இறுதியாக  அது கனிவது எதிரி தரும் வாய்ப்பில்தான். எதிரியையே நம்மால் கணிக்க முடியாதபோது, அவன் தரும் வாய்ப்பை நம்மால் எப்படி அறிய முடியும்?”
 
``இ
யல்பாக அமைந்த வாய்ப்புகள் அல்ல, திட்டமிட்டே உருவாக்கப்பட்ட வாய்ப்புகள்” என்றாள் பொற்சுவை.

சுகமதி அதிர்ச்சி நீங்காமல் அவள் சொல்வதைக் கவனித்தாள்.

``மணவிழாக் காலத்திலும், மணம் முடிந்த பிறகும் இளவரசர் நாட்டியப் பெண் நீலவல்லியுடன் மட்டுமே இருந்தார். எனது அருகில் வராதது, எனது தேவையாகவும் இருந்தது. எனவே, அந்த நாள்களை எனது விருப்ப நாள்களாக அமைத்துக்கொண்டேன். நான் நானாக இருப்பதால் கிடைக்கும் இன்பம் பறிக்கப்படாமல் இருந்தால் மகிழ்ச்சிதானே. அந்த மகிழ்ச்சி எல்லையின்றி நீடித்தது.

p83e_1513662542.jpg

ஆனாலும் உள்ளுக்குள் ஓர் ஐயம் உருவாகியபடியே இருந்தது. `எல்லாவற்றுக்கும் விதி செய்துள்ள இந்தப் பேரரசில் இதற்கு மட்டும் விதியின்றி இருக்காதே! விதியை மீறிச்செயல்பட வாய்ப்பில்லையே!’ எனத் தோன்றியது. சிறிது சிறிதாக விசாரித்தேன். அரண்மனைபோல உண்மைகள் எளிதில் ஒழுகுமிடம் வேறுண்டா என்ன? முழு உண்மையும் வெளிப்பட்டது.”

பொற்சுவை என்ன சொல்லவருகிறாள் என்பதைத் திகைப்போடு கவனித்தாள் சுகமதி.

``இளவரசனுக்கு மனைவிமீது காதல் கூடாது. அது நாணத்தக்க நடத்தை. காதல் மரியாதையை உருவாக்கும்; மரியாதை பணிவை உருவாகும். மனைவியிடம் பணிவதுபோல் இழிசெயல் இன்னொன்றில்லை. மனைவியின் அன்புக்கும் அழகுக்கும் பணிவது ஆண்மையல்ல. மனைவி மீது மோகம்கொள்ளுதல் அரச நடவடிக்கையிலிருந்து அவனது சிந்தனையை மாற்றும்.”

பொற்சுவை சொல்வதை சுகமதியால் உள்வாங்க முடியவில்லை.

அவள் தொடர்ந்தாள், ``இவை எல்லாம்தான் இளவரசனின் அகவாழ்வு பற்றி அரண்மனையில் உருவாக்கப்பட்டுள்ள விதிகள். ஆனால், காமத்தை விதிகளால் கட்டுப்படுத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, காமம்கொண்டே அதை ஒழுங்கு படுத்த விதியமைத்துக்கொண்டனர்.

எலிமயிர்ப் போர்வையைச் சற்றே விலக்கி, மெத்தையில் அமர்ந்து, தலையணையில் சாய்ந்தபடி சுகமதியைப் பார்த்தாள் பொற்சுவை.

அடுத்து சொல்லப்போகும் சொல்லை நோக்கியபடி இருந்தாள் சுகமதி. பொற்சுவை தொடர்ந்தாள், ``வழக்கமான வடிவுடைய பெண்ணாக இருந்தாலே மணம் செய்யப்போகும் இளவரசன் அவளின் மீது காதல்கொண்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அரசகுலம், பேரழகு கொண்ட ஒருத்தியை மணப்பெண்ணாகத் தேர்வுசெய்துவிட்டால் எவ்வளவு கவனம்கொண்டு செயல்படும்?! எனது  வாழ்க்கையிலும் அதுதான் நடந்துள்ளது.

மணப்பெண்ணாக என்னைத் தேர்வுசெய்த உடனே முடிவுசெய்துள்ளனர், ‘இவ்வளவு அறிவும் அழகும் படைத்த ஒருத்தியிடம் இளவரசன் எக்காரணம்கொண்டும் மயங்கிவிடக் கூடாது’ என்று. எனவே என்னைவிட அழகுவாய்ந்த ஒருத்தியைத் தேடத் தொடங்கியுள்ளனர்.”

சுகமதி, இமை மூடாத வியப்பில் உறைந்து நின்றாள்.

``அழகுக்கலையின் பேரழகி என்று வர்ணிக்கப்பட்ட வேணாட்டு மங்கை நீலவல்லியைக் கண்டறிந்துள்ளனர். மணவிழாவுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு பெருவிருந்தின் நடன அரங்கில் இளவரசரின் முன் அவளது அரங்கேற்றம் நிகழ்ந்துள்ளது. கலையின் உச்ச சுழற்சியில் காமத்தின் கனியைப் பொதியவெற்பனுக்குப் பரிமாறியுள்ளாள் நீலவல்லி.

திருமணத்துக்கு முன் விருந்தினரோடு நாட்டியம் காண அரசியார் என்னை அழைத்ததாக நீ வந்து சொன்னாய் அல்லவா? அதை இயல்பான நிகழ்வாக நாம் நினைத்தோம். அது இயல்பாக நடந்ததன்று; முன்னேற்பாட்டோடு இளவரசனுக்கும் தெரியாமல் நடத்தப்பட்டது.

p83f_1513662555.jpg

கலையின் வழியாக ஆணுக்குள் இறங்குபவள், இயல்பாகவே அடியாழம் வரை இறங்க முடியும். அப்படித்தான் அவள் அவனுக்குள் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளாள். அரண்மனையில் மணவிழா என்பது மணப்பெண்ணைச் சுற்றி மட்டும் நடப்பதல்ல; அதற்கு எதிர் திசையில் இன்னொரு பெண்ணைச் சுற்றியும் நடக்குமாம்.

மணப்பெண்ணின் வாசனையை நுகர்வதற்குச் சற்றுமுன் இன்னொருத்தியின் வாசனையில் அவன் கரைக்கப்படுகிறான். அந்த வாசனையிலிருந்து அவன் மீள நெடுங்காலமாகும். அக்கால இடைவெளி இயல்பாகவே மணப்பெண்ணின் மீதான புதுமையை உள்ளுக்குள் உதிரச்செய்துவிடும்.”

கேட்டுக்கொண்டிருக்கும் சுகமதி என்ன ஆகிறாள் என்பதைக்கூடப் பார்க்க பொற்சுவை ஆயத்தமாகவில்லை. அவள் பேசியபடியே இருந்தாள்.

பேச்சை இழந்து நின்றார் முசுகுந்தர்.

``போர் என்பது, எதிரியின் மீது தொடுக்கும் ஓர் ஆயுதம்தான். அதுபோல வலிமையுடைய வேறு பல ஆயுதங்களும் இருக்கின்றன.  நான்   அவற்றை      உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றார் பேரரசர்
பேரரசரின் அமைதிக்குக் காரணம், சிறிது சிறிதாக முசுகுந்தருக்குப் புரியத் தொடங்கியது. அவர் பல வழிகளில் இயங்கிக்கொண்டிருக்கிறார். புதிய வழிமுறைகளையும் அதற்கான மனிதர்களையும் அவர் கண்டறிந்துவிட்டார் என்பது தெரிகிறது. ஒருமுறை பாதிப்பை உருவாக்கிவிட்டால் அனைவரின் மீதிருக்கும் நம்பிக்கை எப்படிப் பொய்த்துப் போகிறது என்பதை வெட்கத்தோடு ஏற்றுக்கொள்பவராக முசுகுந்தர் தலைகவிழ்ந்து நின்றார்.

பேரரசர் தொடர்ந்தார், ``இம்மண் காணாத பெரும் படையோடு நிற்கும் கருங்கைவாணன், நான் ஏவப்போகும் ஒற்றை ஆயுதம்தான். அதைப் பொருத்தமான நேரத்தில் பயன்படுத்துவேன். ஆனால், மற்ற ஆயுதங்களை உருவாக்க சற்றே காலம் தேவைப்படுகிறது.”

``அதன் பொருள், நான் தேவைப்படவே இல்லை என்பதல்ல. எப்போது என்பதை அவர்கள் முடிவுசெய்கிறார்கள்.”

கலங்கிப்போய் இருந்த சுகமதி, அவள் பேச்சை உள்வாங்கும் வலிமையற்று நின்றாள். p83g_1513662566.jpg

``பொருத்தமான நேரத்தில் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடப்பட்டதால் சில நாள்களுக்கு முன் அவர் இங்கு வந்தார்.” சொல்லி நிறுத்தினாள் பொற்சுவை.

`என்ன நடந்தது?’ எனக் கேட்க சுகமதிக்குத் துணிவு வரவில்லை, அமைதியானாள். ஆனால், பொற்சுவை யிடமிருந்தும் எந்தச் சொல்லும் வரவில்லை. அமைதியே நீடித்தது. கொடும் அமைதியைப் பொறுக்க முடியாமல் பொற்சுவையை நிமிர்ந்து பார்த்தாள். அவளோ படுக்கையில் படுத்தபடி மாளிகையின் மேற்கூரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

`ஏன் திடீரெனப் பேச்சை நிறுத்திவிட்டாள்?’ என்று எண்ணியபடி சுகமதியும் அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தாள். அமைதி நீடித்தபடியே இருந்தது.

மெல்லிய குரலில் பொற்சுவை கேட்டாள், ``மேலே வரையப்பட்டுள்ளது என்ன தெரியுமா?”

அண்ணாந்து பார்த்தபடியே சுகமதி சொன்னாள், ``விண்மீன்களும் கோள்மீன்களும் வரையப்பட்டுள்ளன.”

மெத்தையில் சாய்ந்துபடுத்து நிலைகொத்தி அதைப் பார்த்தபடி பொற்சுவை சொன்னாள், ``அது பொதியவெற்பன் பிறந்தபோதிருந்த வானியல் அமைப்பு. இந்த அமைப்பு கொண்டவன் தனது வழித்தோன்றல்களை உருவாக்குவதற்கான காலக்குறிப்பு உள்ளதாம். அதைக் கணித்தே அவன் இந்த அறைக்கு அனுப்பப்பட்டான்.”

அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத சுகமதி, எலிமயிர்ப் போர்வையிலிருந்து மெள்ள கைகளை விலக்கினாள்.

அசைவறிந்து அதைப் பார்த்தபடி பொற்சுவை சொன்னாள், ``அப்படி என்னால் விலகிவிட முடியாதே சுகமதி.”

கதறவேண்டும் எனத் தோன்றியது. கட்டுப்படுத்த முயன்றாலும் கண்கள் பீறிடத் தொடங்கின.

``வேட்டை விலங்கைக் கண்டு எந்த விலங்கும் அழுவதில்லை சுகமதி. வேட்டையின் ஒரே விதி போராடுதல் மட்டும்தான்.”

சொல்லியபடி படுக்கையிலிருந்து எழுந்தாள். ``நள்ளிரவுக்குப் பிறகு திடீரென எனது அறைக்குள் அரண்மனையின் முதுபெண்கள் நுழைந்தனர். விளக்குகள் எல்லாம் ஏற்றப்பட்டன. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் திடுக்கிட்டு எழுந்தேன். விளக்கொளியில் கண்கள் கூசின. எனது உடலை அவர்கள் சடங்குப்பொருளாக்கினர். முதலில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் புரிந்துகொண்டேன். முற்றிய தேறலின் கடிமணம் காற்றில் மிதந்து வந்தபோது அவர்கள் எல்லோரும் அறையைவிட்டு வெளியேறினர்.

எனது உடலை இவர்கள் என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை, குனிந்து இங்கும் அங்குமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போது மூச்சுக்காற்று எனது முகத்தில் பட்டது.”

பேரரசர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அடுத்தடுத்து வந்து முகத்தில் அறைந்து கொண்டிருந்தது.

``இதுவரை கருங்கைவாணன் நடத்திய அனைத்துப் போர்களிலும் பாண்டிய நாடு வெற்றிபெற்றது என்பது உண்மை. ஆனால், அவை அனைத்தும் படையின் வலிமையால் அடையப் பெற்ற வெற்றியே. தளபதியின் வலிமையாலும் தந்திரத்தாலும் அடைந்த வெற்றி என எதுவுமில்லை. திரையர்களை வெற்றிகொண்டதற்குத் திதியனே காரணம்.”

பேரரசர் இதைச் சொல்வது எதற்காக என, முசுகுந்தரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சொல்லை அத்துடன் நிறுத்திய பேரரசர் எழுந்து முசுகுந்தரை ஒரு பார்வை பார்த்தபடி அவை விட்டு அகன்றார்.

`இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்? இந்தப் பார்வைக்கு என்ன பொருள்? கருங்கைவாணன் போதிய திறமைகொண்டவனல்லன் என்று சொல்கிறாரா அல்லது அவனை மட்டுமே நம்பி படை நடத்த முடியாது என்று சொல்கிறாரா? திதியனின் தந்திரத்தைப் பாராட்டுகிறாரா? அவர் பயன்படுத்திய இந்தச் சொற்களின் வழியாக நான் புரிந்துகொள்ளவேண்டியது என்ன? மற்றவர்களுக்கு நான் சொல்லவேண்டிய செய்தி என்ன? இப்போது தீட்டப்பட்டுள்ள எந்தத் திட்டமும் குறைந்த அளவுகூடத் தகுதியான திட்டமில்லை என்பதைத்தான் அவர் சொல்லிச் செல்கிறாரா?’

சிந்தித்தபடியே நீண்ட நேரம் அந்த இடம் விட்டு அகலாமல் அப்படியே நின்றார் முசுகுந்தர்.

``எவ்வளவு நேரம்தான் அப்படியே நிற்பாய்? வா” என்று கைபிடித்து இழுத்தாள் பொற்சுவை.

உயிரற்ற ஒருத்தியாய் அவளின் இழுவைக்கு உடன்போனாள் சுகமதி.

``பரவிக்கிடப்பது அடர் இருளென்றாலும் அதிகாலையில் செவ்வொளி பரவத்தானே செய்யும். முழுமையாக வேட்டையாடப்பட்டதாக உணர்ந்த பிறகுதான் இன்னொன்றையும் உணர்ந்தேன்.”

சுகமதியின் உயிரற்ற கண்கள் அவளை நோக்கி மெள்ளப் புருவம் உயர்த்தின.

``எவ்வளவு வேட்டையாடப்பட்டாலும் என்னிடமிருக்கும் எதையும் எடுத்துச் சென்றுவிட முடியாதல்லவா? மறுநாள் காலை நிலைக்கண்ணாடி முன் வெகுநேரம் நின்றேன். மெள்ளப் புன்னகைத்துப் பார்த்தேன். எனது புன்னகை என்னிடம்தான் இருந்தது. நான் எதையும் இழக்கவில்லை என்று உணர்ந்தபோதுதான், என்னை வேட்டையாட முடியாது என்பதையும் உணர்ந்தேன்.”

பேசியபடியே கைபிடித்து இழுத்துக்கொண்டே படிகளில் ஏறினாள். `எங்கே அழைத்துச் செல்கிறாள்?’ என்ற குழப்பத்திலே வந்தாள் சுகமதி.  மேல்நிலையில் இருக்கும் ஓர் அறைக்குள் நுழைந்ததும் சொன்னாள், ``இதுதான் வேனிற்காலப் பள்ளியறை.”

p83h_1513662584.jpg

பொற்சுவை சொன்னதும் சட்டெனத் தலை நிமிர்த்தி மேற்கூரையைப் பார்த்தாள் சுகமதி. அங்கேயும் வானியல் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்தபடி பொற்சுவையைப் பார்த்தாள்.

``இது, நான் பிறந்த வானியல் அமைப்பைக் குறிக்கும் ஓவியம்.”

மூர்ச்சைகொண்டு நின்றாள் சுகமதி.

மெல்லிய சிரிப்போடு சொன்னாள் பொற்சுவை, ``ஒருவேளை, இனி எனது வேட்டைக்கான காலமாக இருக்குமோ!”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீரயுக நாயகன் வேள்பாரி - 63

 

 

p139a_1514366293.jpg

வாய்நிறைய வெற்றிலையை மென்றபடி கபிலரின் குடிலுக்கு வந்தார் வாரிக்கையன். காலையிலேயே பெரியவர் வந்துள்ளாரே என வேகமாக வெளியில் வந்து திண்ணையில் உட்கார்ந்தார் கபிலர்.

உள்ளிறங்கும் வெற்றிலையின் சாற்றுக்கு இடையூறில்லாமல் பேச்சைத் தொடங்கினார். “எதிரிநாட்டு அரசன் வீழ்ந்துவிட்டான் என்பதன் குறியீடாக அவன் நாட்டுக் காவல்மரத்தை வெட்டியெடுத்துச் செல்வார்கள். பறம்பின் காவல்மரம் எதுவெனத் தெரியாது. அதனால் பறம்பைக் காக்கும் கொற்றவையின் குழந்தையான தேவவாக்கு விலங்கினை எடுத்துச்சென்றால் பறம்பை வென்றதாகப் பொருள். அதனால்தான் காலம்பன் கூட்டத்தை அனுப்பி தேவவாக்கு விலங்கினை எடுத்துவரச் சொல்லியுள்ளான் பாண்டியன் என்று நீங்கள் சொன்னதாக வீரர்கள் சொல்கிறார்களே அது உண்மையா?”

மெல்லும் வெற்றிலையை இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஒதுக்கியபடியே பக்குவமாய்ப் பேசினார் வாரிக்கையன். வெற்றிலையின் சிறப்பு, மெல்லுகிறவரின் வாயில் எவ்வளவு ஊறுமோ அதே அளவு அருகில் இருப்பவரின் வாயிலும் ஊறும். கபிலர் கைநீட்டும்பொழுதே வாய் அசையத் தொடங்கிவிட்டது.  

வாரிக்கையன் ஒவ்வொரு வெற்றிலையாய் எடுத்துக் கொடுத்தார். வாங்கி, தடம்பார்த்து மடித்தபடியே கபிலர் சொன்னார், “இதுவும் காரணமாக இருக்கலாம் என்றுதான் சொன்னேன். இதுதான் காரணம் என்று சொல்லவில்லை.”

“இது காரணமாக இல்லாமலிருக்கவும் வாய்ப்பிருக்கிறதா?”

“இருக்கிறது.”

மூன்று வெற்றிலைகளை ஒன்றாக மடித்து இடதுகடவாயின் கடைசிப்பல்லுக்குக் கொடுத்தபடி வாரிக்கையன் கேட்டார் “என்ன அது?”

“இந்தக் காரணத்துக்காக எடுத்துச்செல்லப்பட்டிருந்தால், அவற்றை ஏன் துறைமுகத்துக்கும் கலங்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும்? யவனர்கள் விலங்குகளையும் பறவைகளையும் அவர்களின் நாட்டுக்கு வாங்கிச்செல்வர். சற்றே வேறுபட்டு இருக்கிறது என்பதால் இதனை வாங்கியிருக்கலாம் என்றுகூடத் தோன்றும். ஆனால், நம் வீரர்கள் சொல்லும் குறிப்பைப் பார்த்தால் தேவவாக்கு விலங்குகளை யவன நாவாய்களில் ஏற்றியதாகத் தெரியவில்லையே. தமிழ்வணிகர்களின் கலங்களில்தான் ஏற்றுப்பட்டுள்ளன.”

“எப்படி அவையெல்லாம் யவன நாவாய்கள் இல்லையென உங்களால் சொல்ல முடிகிறது?”

“எல்லாம் பட்டறிவுக்கணக்குதான். உங்கள் வாய்க்குள் போகும் வெற்றிலைகள் மட்டும் ஆண்வெற்றிலைகளாக இருக்கின்றன அல்லவா? அதுபோல அறிவைத்  தன்னியல்பாக்கிக்கொள்வதுதான்.”

“கண்டறிகிறானடா கபிலன்” என்று சிறுவனைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டுவதுபோல கபிலரைப் பாராட்டிய வாரிக்கையன் தொடர்ந்து கேட்டார், “பின்னர் எதற்குத்தான் அவர்கள் இதனை எடுத்துச்சென்றனர்?”

“இந்தக் கேள்வி ஏன் உனக்குத் தோன்ற மறுக்கிறது எனப் பாரியிடம் கேட்டால், அவன் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிடுகிறான். ‘வேந்தர்கள் எந்தச் செயல் செய்தாலும் அது அவர்களின் அதிகாரத்துக்கானது. மனிதருக்கும் இயற்கைக்கும் எதிரானது. அதில் கூடுதலாகச் சிந்திக்க என்ன இருக்கிறது?’ என்று.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாரியும் தேக்கனும் வேகமாக நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. “எங்கே போகிறார்கள்?” எனக் கேட்டார் கபிலர்.

இடப்பக்கமாகத் திரும்பி உதடுகுவித்து வெற்றிலை எச்சிலைத் துப்பியபடி வாரிக்கையன் சொன்னார், “வாயில் வெற்றிலை இருக்கும்பொழுது அதற்கு மட்டுந்தான் வாயசைக்க வேண்டும். சாறு உள்ளிறங்கும்போது ஓசையை வேகமாக வெளியேற்றக் கூடாது, அருகில்போய்க் கேளுங்கள்.”

புறப்பட்டுப் போனார் கபிலர். பாரியும் தேக்கனும் நாகப்பச்சை வேலியினருகே இருந்த காலம்பனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். காலம்பனோடு திரையர்குல வீரர்கள் ஏழுபேர் இருந்தனர். அறுவர் இளம் வீரர்கள்; ஒருவர் மிகவும் வயதான கிழவர். அவரது பெயர் ஏதோ சொன்னார்களே என்று நினைவுகூர்ந்தபடியே போனார் கபிலர். அருகில் போனவுடன் நினைவிற்கு வந்தது. அவரது பெயர் அணங்கன்.

திரையர்குல வீரர்கள் நீண்ட பயணத்துக்கான ஆயத்தத்தோடு இருப்பதை அறியமுடிந்தது. பெரியவர் அணங்கன் எதையோ துணியிற்சுற்றிக் கையில் வைத்திருந்தார்.

p139b_1514366314.jpg

பார்த்தபடி தேக்கன் கேட்டான், “எங்கே புறப்பட்டுவிட்டீர்கள்?”

“நான் போகவில்லை. இவர்கள் அறுவர்தான் போகப்போகிறார்கள். நானும் செதிலனும் இவர்களை அனுப்பிவைத்துவிட்டு வந்துவிடுவோம்” என்றான் காலம்பன்.


“அதுதான், எங்கே போகப்போகிறார்கள்?” என்று தேக்கன் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே பாரி சொன்னான், “பறம்பின் காட்டுக்குள் இவர்கள் மட்டும் ஏன் தனியாகப் போகவேண்டும். பறம்பு வீரர்களும் உடன்போகட்டும்.”

பாரி சொல்லி முடிக்கும்முன் சற்றுத் தள்ளி நின்றிருந்த பறம்பு வீரர்கள் சிலர் திரையர்களோடு இணைந்து நின்றனர்.

அவர்களைப் பார்த்தபடி காலம்பன் சொன்னான், “பறம்பு வீரர்கள் உடன்செல்ல வேண்டாமே.”

“ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய்?” என்றார் தேக்கன்.

“இவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது” என்றான் காலம்பன்.

பாரிக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது.

“காடறியும் பயிற்சி முடித்த சிறந்த வீரர்கள் இவர்கள்” என்றான் தேக்கன்.

காலம்பன் மீண்டும் சொன்னான், “செய்யப்போகும் வேலைக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாது, அதனால்தான் வேண்டாம் என்கிறேன்.”

“என்ன வேலைக்குத்தான் போகிறார்கள்?” சற்றே வேகமாக இருந்தது தேக்கனின் குரல்.

“காட்டெருமைகளின் மந்தைக்குள் நுழையப்போகிறார்கள்.”

மறுமொழி எதிர்பாராததாக இருந்தது. வியப்பைக் கடந்து ஐயமே மேலெழுந்தது.  “காட்டெருமைகளின் மந்தைக்குள் எப்படிப் போகமுடியும்? அங்கு போய் என்ன செய்யப்போகிறார்கள்?” என்றான் தேக்கன்.
 
“காட்டெருமையின் மந்தைக்குள் பல்வேறு குணங்களைக்கொண்ட காட்டெருமைகள் உண்டு. அவற்றில் மந்தையை வழிநடத்தும் காட்டெருமையைக் கண்டறியப் போகிறார்கள்.”

காலம்பன் சொல்வது கேள்விப்பட்டிராததாக இருந்தது. “காட்டெருமைகளின் குணங்களைக் கண்டறிய முடியுமா? அவற்றின் பின்கால் நரம்பில் அடித்து அதனை அசையவிடாமற்செய்ய திரையர்களால் முடியும் என்றுதானே கேள்விப்பட்டுள்ளோம். நீ புதிதாகச் சொல்லுகிறாயே?”

“அதுவெல்லாம் சூலிவேள் காலத்தில் செய்யப்பட்ட வேலைகள். அதன்பின் இத்தனை தலைமுறையாக நாங்கள் வேறு என்னதான் கற்றோம்? காட்டெருமையுடனேதான் கிடந்தோம்” என்று சொன்ன காலம்பன், செய்யப்போகும் வேலையைப்பற்றிச் சொன்னான்.

``மந்தைகளை வழிநடத்தும் காட்டெருமையை இனங்காணுவதுதான் முக்கியமான வேலை. ஒவ்வொரு p139c_1514366326.jpgமந்தைக்கும் தலைமையெருமை ஒன்று இருக்கும். அது தான்தான் மந்தைக்குப் பெரிய ஆள் என்பதை நாள்தோறும் செயல்மூலம் காட்டிக்கொண்டே இருக்கும். அதனைத் தவிர அதற்கு வேறு வேலையில்லை. ஆனால், மந்தையை வழிநடத்துவது வேறொன்றாக இருக்கும். அதுதான் ஓசைகளின் மூலமான உத்தரவைக் கூட்டத்துக்கு வழங்கும். அதனைக் கண்டறிந்து நமது கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும். அதன்பின் அந்த மந்தையின் வழித்தடத்தை நம்மால் அறிய முடியும்.”

காலம்பன் சொல்லுவது நம்பமுடியாததாக இருந்தது. “நீ சொல்லுவது உண்மையா?” எனக் கேட்டான் தேக்கன்.

“எலியை நோக்கிப் பூனையைப் பாயவிடாமல் நிறுத்தும் ஆற்றல் பொதினி வேளிர்களிடம் இருந்திருக்கிறது. விலங்குகளின் குருதியிலிருக்கும் வெறியையும் பசியையும் குணத்தையும் அவர்களால் கட்டுப்படுத்த முடிகிறது. பாம்பின் வலிமையே அதன் நஞ்சுதான். ஆனால், அதற்கே தெரியாமல் அதன் நஞ்சை உருவியெடுத்துப் பயன்படுத்தும் ஆற்றல் பறம்பு வேளிர்களுக்கு இருக்கிறது. இவற்றோடு ஒப்பிட்டால் திரையர்களாகிய நாங்கள் கற்றுள்ளது மிகக்குறைவுதான்” என்றான் காலம்பன்.

தேக்கன் சற்றே தாழ்வுணர்ச்சியுடன் அவனது தோளிலே தட்டிச் சொன்னான். “நீங்கள் எவ்வளவு குறைவாகக் கற்றிருக்கிறீர்கள் என்பது, உடல்முழுக்க வாங்கிய எனக்குத்தானே தெரியும்.”

அனைவரும் சிரித்தனர். “அவர்களை அனுப்பும் வரை நாங்களும் உடன்வருகிறோம்” என்று சொல்லி பாரியும் தேக்கனும் காலம்பனுடன் புறப்பட்டபொழுது கபிலரும் உடன் நடந்துகொண்டிருந்தார்.

திரையர் கூட்டத்திலே மிகவயதான மனிதராக அணங்கன்தான் இருக்கிறார். வந்த புதிதில் கபிலர் அவரோடு பேச முயன்றார். அவர் பேசும்முறையும் மொழி உச்சரிப்பும் புரிந்துகொள்ள மிகக்கடுமையாக இருந்தன. இவர் தமிழ்தான் பேசுகிறாரா அல்லது வேறுமொழி பேசுகிறாரா என்று அவ்வப்பொழுது குழப்பமாக இருக்கும். ஆனால், திரையர் கூட்டத்தில் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் எதுவுமில்லை. அணங்கனுக்கு மிகவும் வயதாகிவிட்டதால் சொற்கள் தெளிவாக இல்லையோ எனத் தோன்றியது. பொதுவாக மலைமக்கள் சொற்களை நீட்டி இழுத்தே உச்சரிப்பர். ஆனால், அணங்கனின் உச்சரிப்பு நேரெதிராக சிறிது சிறிதாக வெட்டி வெட்டி இருக்கும். இவர் ஓசையை ஏதேதோ செய்யப்பார்க்கிறார் என்று தோன்றும். மறுகணமே வயதாகிவிட்டதால் உருவாகும் நிலையிது என்று முடிவுக்குப் போவார் கபிலர். பேசவே அவ்வளவு தடுமாறும் அணங்கனை இவ்வளவு கடினமான வேலைக்கு ஏன் கூட்டிப்போகிறார்கள் என்று எண்ணியபடி நடந்தார் கபிலர்.

காலம்பன் காட்டெருமைகளின் மந்தைக்குள் போவதைப் பற்றிக் கூறினான். “ஒரு மந்தையைக் கண்டறிந்து அதற்குத் தெரியாமலேயே அதைப் பின்தொடர வேண்டும். அந்த மந்தையில் உத்தரவு பிறப்பிக்கும் எருமை எதுவெனக் கண்டறிய வேண்டும். இதற்கே வாரக்கணக்கில் ஆகும். அதுவரை காடுமலைகளில் அதன் கண்ணிற்படாமல் கொம்புகளுக்குத் தப்பி, வாலின் வாசம் பிடித்துக்கொண்டே போகவேண்டும்.

உத்தரவு பிறப்பிக்கும் எருமையைக் கண்டுபிடிப்பதுதான் மிகமிக முக்கியம். அதன் செருமலும் கனைப்பும் தலையாட்டலும் தனித்துவமிக்கதாக இருக்கும். அதனைக் கண்டுபிடித்து, கனைப்போசையை மடக்கி எதிர்கனைப்பை வெளியிட வேண்டும். அது எளிய செயலல்ல; மாமனிதர்களால் மட்டுமே முடியக்கூடியது. இப்பொழுது அதனைச் செய்யக்கூடிய ஒரே மனிதராக அணங்கன் மட்டுமே இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் போரிலே இறந்துவிட்டனர்” என்று பெரியவரைக் கைகாட்டிச் சொன்னான் காலம்பன்.

தேக்கனும் பாரியும் அணங்கனை பெருவியப்போடு பார்த்தனர். கபிலருக்கு இப்பொழுதுதான் அவர் பேசும்முறையின் காரணம் புரிந்தது. ஓசையைக்கொண்டு வேறோர் உயிரினத்துக்குள் புகமுடியும் மாமனிதனான அணங்கன் அமைதியாக முன்நடந்துகொண்டிருந்தார்.

காலம்பன் தொடர்ந்தான். “அந்தக் குறிப்பிட்ட காட்டெருமை கண்டறியப்பட்டுவிட்டாற்போதும், அதன்பின் நடக்கவேண்டியவற்றையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.”

‘இவ்வளவு எளிதாகச் சொல்கிறானே!’ என்கிற வியப்போடு பார்த்தான் தேக்கன். முன்னால் போகிற அறுவரும் யார் என்பது இப்பொழுதுதான் புரியத் தொடங்கியது.

காலம்பன் சொன்னான், “காட்டெருமை யானையைவிட வலிமைவாய்ந்தது. ஆனால், யானையைப்போலக் கூருணர்ச்சி கொண்டதன்று. எளிதில் ஏமாறக்கூடியது. ஒருபோதும் அச்சத்தோடு அவற்றை அணுகக்கூடாது. சிறுபூச்சி ஒன்றை நசுக்கி அழிக்கும் ஆணவத்தோடுதான் அதனை அணுகவேண்டும். அதன் முன்புற நெற்றி இரும்பினைவிட வலிமையானது. அதனை மட்டுமே அது நம்பியிருக்கும். ஆனால் அதைத்தவிர முழுவுடலும் மிச்சமிருக்கிறதே!”

காட்டில் இதுவரை கேள்விப்பட்டிராதவற்றைக் கேட்கும் புதிய மனிதர்களைப்போல பாரியும் தேக்கனும் காலம்பனின் குரலை கவனித்துக்கொண்டிருந்தனர். கபிலரோ மூவரையும் ஒருசேர கவனித்துக்கொண்டிருந்தார்.

p139d_1514366349.jpg

காலம்பன் தொடர்ந்தான். “ஆண் காட்டெருமை விரைவில் காதுகேட்கும் ஆற்றலை இழந்துவிடும்.”

பறம்பின் ஆசான், பறம்பின் தலைவன், பறம்பின் விருந்தினன் ஆகிய மூவரையும் எந்த வேறுபாடும் இல்லாமல் வியப்பின் விளிம்பில் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தின காலம்பனின் சொற்கள்.

அவன் சொன்னான், “ஆண் காட்டெருமையின் காது மடல்களுக்குள் மயிர்க்கால்கள் அடர்ந்து முளைக்கும். அவற்றுள் சிறுகொடுக்குவகைப் பூச்சியினம் அதிகம் அடையும். அதனைக் காட்டெருமையால் ஒன்றுமே செய்யமுடியாது. பூச்சியினம் கட்டும் கூடு காதுகளை அடைத்துக்கொள்வதாலோ, அல்லது தொடர்ந்து உள்ளுக்குள் கொத்திக்கொண்டேயிருப்பதாலோ ஆண்காட்டெருமை கேட்கும் ஆற்றலை முழுமையும் இழந்துவிடுகிறது. ஆனால் பெண் காட்டெருமையின் காது மடல்களில் மயிர்க்கால்கள் முளைப்பதில்லை. எனவே அது காதுகேட்கும் ஆற்றலை இழப்பதில்லை.

குட்டியோடு நகரும் பெண் காட்டெருமைகளைச் சுற்றியேதான் ஆண் காட்டெருமைகளின் நடவடிக்கைகள் இருக்கின்றன. பெண் காட்டெருமைகள் மிகக்கட்டுப்பாடுகொண்டவை. அவை, வழிநடத்தும் தலைமையின் கனைப்பொலிகொண்டே செயல்படுபவை. மந்தைகளை வழிநடத்தும் பெண் காட்டெருமை வயதானதாகத்தான் இருக்கும். அதனை அறிந்து பின்னங்கால் நரம்பைச் சரிக்க வேண்டும். அதன் வேகத்தை முழுமுற்றாகக் கட்டுப்படுத்தியபின் நம்முடைய வேலையைத் தொடங்கவேண்டும். சீண்டலின் மூலமும் செருமலின் மூலமும் நாம் அதனை முன்னகர்த்திச் செல்லலாம். மந்தை முழுமையையும் அது நகர்த்திக்கொண்டு வந்துவிடும்.

ஆனால், இந்தக் கட்டத்தை அடைவது எளிதன்று. வேலையைச் செய்யப்போன ஆறுபேரையும் ஒரேநாளில் முட்டித்தூக்கிக் கொன்ற நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. காட்டெருமைகள் நாள்முழுவதும் இளைக்காமல் ஓடக்கூடியவை. எந்த மேட்டிலும் பள்ளத்திலும் விடாது ஓடுபவை. அவற்றின் ஓட்டத்துக்கு முழுநாளும் தாக்குப்பிடிக்கக்கூடியவன்தான் இந்தப் பணிக்குள்ளே இறங்கமுடியும். காட்டுக்குள் எங்களின் ஓட்டங்களைக் காட்டெருமைகளிடம் இருந்துதான் தொடங்குகிறோம். அவையே எங்களின் ஆசான்கள்” என்றான் காலம்பன்.

ஏறக்குறைய பேச்சற்று இருந்தனர் மூவரும். தேக்கனுக்கு நிறைய கேள்விகள் உருவாயின. ஆனால், அவையெல்லாம் மிக எளிதான கேள்விகள். ‘காட்டெருமைகளின் காதுமடல்களுக்குள் நுழைந்து காலம்பன் பேசிக்கொண்டிருக்கிறான்; அவனிடம்போய் இதனையா கேட்பது?’ என்று தோன்றியதால் எதையும் கேட்கவில்லை. அமைதியே நீடித்தது.

அமைதியைக் குலைத்து, சற்றே குரலுயர்த்தி காலம்பன் சொன்னான், “மலைமக்களுக்குப் பகைகொள்ளத் தெரிவதில்லை. ஆனால், பகை வளர்க்காமல் குலம் காக்கமுடியாது.”

காலம்பனின் ஆவேசமிகுந்த சொற்களால் தன்னிலைக்கு வந்தான் தேக்கன். ‘இப்பொழுது இதனைச் சொல்லும் காரணமென்ன?’ என்று சிந்தித்தான்.

காலம்பன் தொடர்ந்தான், “எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் நாங்கள் அவர்களை அழிக்காமல், எங்களைக் காத்துக்கொள்ளும் போரினை மட்டுமே நடத்தினோம். அதனாலேயே அழிக்கப்பட்டோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடக்கூடாது.”

குரலில் ஆவேசம் உச்சத்தில் இருந்தது.

“என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்?” எனக் கேட்டான் பாரி.

p139e_1514366384.jpg

“பச்சமலையின் நான்கு திசைகளிலும் நான்கு காட்டெருமை மந்தைகளை வழிநடத்தும் ஆற்றலை நாம் பெற்றாக வேண்டும்.அதற்கு இணையான ஆற்றல்கொண்ட படை இவ்வுலகில் இல்லை.”

தேக்கன் வியந்து நின்றபோது காலம்பன் சொன்னான், “யானைப் படைகளேயானாலும் அவை பழக்கப்படுத்தப்பட்டவைதான். காட்டெருமைகளைப் பழக்கப்படுத்த முடியாது. அவற்றின்  சீற்றம்    யானைக் கூட்டத்தை நடுங்கச்செய்துவிடும். அதுவும் பழக்கப்படுத்தப்பட்ட யானைகளைவிட வலிமைகுன்றிய உயிரினம் காட்டில் வேறெதுவும் இல்லை. விலங்குகளின் இயற்கையான ஆற்றலை எதிரிகளை நோக்கிப் பாயவிடும்பொழுது மிஞ்சுவது எதுவும் இருக்காது” சொல்லிய வேகத்தில் பாரியைப் பார்த்தான்; சுண்டாப்பூனையை ஏவி திரையர்குல வீரர்கள் எட்டுப்பேரை வீழ்த்தியவன் பாரி.

பேச்சு நின்ற கணத்தில் பாரியின் சிந்தனையிலும் சுண்டாப்பூனையே வந்து சென்றது. காலம்பன் தொடர்ந்தான், “நாங்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டோம். பாண்டியர்படை அடர்மழைநாளில் எங்கள் குடில்களைச் சூழ்ந்தபொழுது அணங்கன் ஒருவன் மட்டும் வெளியில் இருந்திருந்தாற்கூடப் போதும். காட்டெருமை மந்தையைக்கொண்டு அவர்களின் யானைப்படையை முழுமுற்றாக அழித்திருப்பான்.”

காலம்பன் சொல்லிக்கொண்டிருந்தபொழுது சற்றே மெலிந்த உடலோடு அந்தக் கிழவன் காட்டெருமையின் வாசத்தை நுகர்ந்தபடி முன்னே போய்க்கொண்டிருந்தான்.

வலிமையைவிட நுட்பமே ஆற்றல் வாய்ந்தது என்பதைக் காலம் மீண்டும் மீண்டும் சொல்லித்தருகிறது என்று எண்ணியபடி பின்தொடர்ந்தான் பாரி.

இரண்டு நாள் நடந்து ஆறாம்குன்றை அடைந்தனர். இங்குள்ள மக்கள் எதிரிலுள்ள வெளவால் மலையின் பின்புறச்சரிவில் ஒரு மந்தை மேய்வதாகச் சொன்னார்கள். ஆபத்தான சரிவுப்பகுதி அது. அதில் இறங்கிப்போவது கபிலருக்கு நல்லதன்று: அவரை மட்டும் விட்டுவிட்டுப் போகமுடியாத நிலையில் பாரி சொன்னான், “அருகில் வந்தாகிவிட்டதல்லவா? நீங்கள் மந்தையைக் கண்டறிந்து அந்த அறுவரையும் அனுப்பிவைத்துவிட்டு வாருங்கள். நான் கபிலரை அழைத்துக்கொண்டு எவ்வியூர் திரும்புகிறேன்.”

தேக்கனும் காலம்பனும் “சரி” என்று சொல்லி, இருவரையும் அனுப்பிவைத்தனர். 

பாரியும் கபிலரும் எவ்வியூர் நோக்கி நடக்கத் தொடங்கினர். பேச்சு காலம்பன் சொன்னதைப் பற்றியதாக இருந்தது. “பகை வளர்க்காமல் குலங்காக்க முடியாது என்று காலம்பன் சொல்கிறானே, அது சரிதானா?” எனக் கேட்டான் பாரி.

“பகை, காட்டினில் விளையும் நெருப்புபோல...   பரவிக்கொண்டும் ஆற்றலைப் பெருக்கிக்கொண்டும் இருக்கும்” என்று கபிலர் சொல்லி முடிக்கும் முன் பாரி சொன்னான், “ஆனால் அழித்துக்கொண்டே இருக்கும்.”

“அழித்தல் எல்லாவிதத்திலும் தவறானதா என்ன?”

“எல்லாவிதத்திலும் தவறன்று; ஆனால், எல்லாவற்றையும் அழிக்கும். ஒரு கட்டத்தில் உங்களால் பிரித்தறிய முடியாது.”

அவனது சொல்லின் ஆழத்தைப்பற்றிச் சிந்திக்கும்போதே நிறுத்தாமல் தொடர்ந்தான் பாரி, “காட்டெருமையின் காதுமடல்களில் உள்நுழைய முடியா ஓசையைக் கணிக்க முடிந்த திரையர்களால், அடர்மழையின் ஓசையில் யானைப்படை வருவதைக் கணிக்கமுடியாமற் போயிருக்கிறது. கவனம்கொள்ளுதல்தான் முக்கியம். பகைவளர்த்தல் அன்று.”

“நீ சொல்வது சரிதான். கவனம்கொள்ளுதல்தான் முக்கியம். ஆனால், அழிக்கப்பட்டவனின் குரல் அப்படித்தானே இருக்கும். நிலம் இழந்தவன், குலம் இழந்தவன் உயிர்வாழ ஒரே காரணம் பகைமுடிக்கத்தானே?”

“அதனால்தான் நானும் சொல்கிறேன். அபகரித்துக்கொண்டவன் நம்முடைய வளங்களையும் சேர்த்து மேலும் வலிமையடைவான். இழந்தவர்கள் பகை மட்டும் வளர்த்துக்கொண்டிருந்தால் வலிமை கூடாது. இருப்பது ஒரேயோர் அணங்கன். அவன் இறந்துவிட்டால் திரையர்களின் வலிமை இன்னும் குறையும்.”

பாரியின் சொற்கள் பாறைகள் உருள்வதைப் போலத்தான் எந்தக் கணத்திலும் மேலேபோட்டு அமுக்கும். அமுக்கிய சொல்லிலிருந்து மீண்டெழ கபிலர் நினைத்துக்கொண்டிருந்தபொழுது பாரி சொன்னான், “நான் உங்களை அழைத்துக்கொண்டு எவ்வியூர் திரும்புகிறேன் என்று சொன்னதுக்கு அதுதான் காரணம். தேக்கனை காலம்பனிடம் பேசச்சொல்லியிருக்கிறேன். இப்போது பயிற்சி தேவைப்படுவது மந்தையை வழிநடத்தும் காட்டெருமைக்கன்று. உடன்செல்லும் மனிதர்களுக்குத்தான். அணங்கனைப்போல அதிதிறமையுள்ள ஆசானிடம் எவ்விதப் பயிற்சியும் பெறாமல் மாதக்கணக்கில் நாம் வீணடித்துள்ளோம். பகை நெருப்பைப்போலப் பரவும் என்று சொன்னீர்கள் அல்லவா, இங்கு என்ன நடந்துள்ளது? ஒற்றைக்குச்சியில் மட்டுமே எரியும் நெருப்பை அடுத்தகுச்சிக்குக்கூடப் பரவாமல் வைத்திருக்கிறது.”

கபிலர் சொன்ன உவமை எப்படித் தவறானது என்பதை, கபிலருக்கு பாரி சொல்லிக்கொண்டிருந்தான். அதைக் கேட்டபடி சற்றே அமைதியாய் கபிலர் வந்துகொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப்பின் பாரி கேட்டான், “ஏன் ஏதும் பேசாமல் வருகிறீர்கள்?”

எவ்வியூரிலிருந்து புறப்படும்பொழுது வாரிக்கையன் சொன்னார், “கற்றுக்கொண்டான் கபிலன்” என்று, இப்பொழுது நீ கல்லாத கபிலனை எவ்வியூருக்கு மீண்டும் அழைத்துச்செல்கிறாய்.”

மெல்லிய சிரிப்போடு பாரி மறுமொழி சொன்னான், “நீண்ட ஒலிக்குறிப்போடு பேசும் மலைமக்களுக்கு நடுவில் வெட்டி வெட்டி ஒலியைப் பயன்படுத்துகிறாரே என்று அணங்கனைக் கண்டறிய முயன்றது நீங்கள் மட்டுந்தான். அதைக்கூடக் கண்டறிய முடியாதவர்களாகத்தான் நாங்கள் இருந்துள்ளோம்.” பேசியபடியே குன்றின் உச்சியிலிருந்து இடப்புறமாக இறங்கத் தொடங்கினர்.

p139f_1514366399.jpg

உச்சிப்பொழுது. மலைமடிப்புகளை நின்று பார்க்கத்தோன்றியது. சிறிதுநேரம் குன்றின் உச்சியிலே நின்றார் கபிலர். தென்கிழக்குத் திசையைப் பார்த்தபடி சொன்னார், “அந்த மூன்றாங்குன்றைக் கடந்தால் எவ்வியூரை அடையலாம். சரிதானே.”

“இல்லை” என்றான் பாரி. எவ்வியூர் இருப்பது இடப்புறத்தில்.

“அப்படியென்றால் நாம் ஏன் தென்கிழக்குத் திசையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். இடப்புறக்காட்டை அல்லவா ஊடறுத்துப் போகவேண்டும்.”

“சரியான திசையில் போவதாக இருந்தால் அப்படித்தான் போகவேண்டும். ஆனால், இக்காட்டுக்குள் பறம்பு மக்கள் யாரும் காலடி எடுத்துவைக்கமாட்டோம்.”

“ஏன்?”

“இது ஆளிக்காடு.”

“ஆளியா… கொடூர விலங்கு என்று சொல்வார்களே, அதுவா?’

“ஆம். அது ஈன்ற குட்டியின் முதல்வேட்டையே யானைதான். யானையின் தந்தத்தைப் பிய்த்து அதன் குருத்தைத்தான் விரும்பி உண்ணும் என்பார்கள்.”

``அவ்விலங்கு இன்னும் இருக்கிறதா?”

“இல்லை, எப்பொழுதோ அழிந்துவிட்டது.”

சிறிதுநேரம் பேச்சின்றி நடந்த கபிலர், “அப்படியொரு விலங்கு உண்மையாய் இருந்திருக்கும் என்று நீ நம்புகிறாயா?”

“இருந்திருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“நான் அவ்விலங்கைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எதுவும் நம்பும்படியாக இல்லை. மிகைப்படுத்தப்பட்ட கதையாக இருக்கலாம் அல்லவா?”

மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தியபடி பாரி சொன்னான், “வெறும் கதைகளை நம்ப நாங்கள் குழந்தைகள் இல்லை.”

“அப்படியென்றால் வேறு எதைவைத்துச் சொல்கிறாய்? குகைப்பாறைகளில் முன்னோர்கள் வரைந்த ஓவியம் எதுவும் இருக்கிறதா?”

“இல்லை, அவற்றைவிடப் பெரிய சான்று இருக்கிறது.”

“என்ன?”

“இம்மலைத்தொடர் முழுவதும் எறும்புக் கூட்டங்கள்போல அலைந்து திரியும் யானைகள் எதுவும் இன்றுவரை ஆளிக்காட்டுக்குள் நுழைவதில்லை.”

கபிலர் மிரண்டு நின்றார்.

“உயிரினங்களிலே அதிக நினைவாற்றல் கொண்டது யானைதான்.”

“ஆம்” என்று தலையசைத்தார் கபிலர்.

“அதுமட்டுமன்று, யானைகளுக்கு மனிதர் சொல்லும் கதைகள் தெரியாது.”

பாரியின் சொற்கேட்டு மீளமுடியாமல் நின்ற கபிலர் சற்று நேரங்கழித்துக் கேட்டார். “உங்களைப் பொறுத்தவரை. ஆளி இருந்தது வியப்பன்று, அழிந்ததுதான் வியப்பு?”

“இல்லை” என்றான் பாரி. ``எங்களைப் பொறுத்தவரை ஆளி அழிந்ததில் வியப்பேதுமில்லை.”

“ஏன்?”

“அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழமுடியாது. ஏனென்றால், அது இயற்கைக்கு எதிரானது.”

கபிலர் நிற்கும் இடம்நோக்கி மேலேறினான் பாரி, “விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது.”

கண்ணுருட்டிப் பார்த்துக்கொண்டிருந்த கபிலரின் தோளிலே கையை வைத்து பாரி சொன்னான், “இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்”.

 - பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

வீரயுக நாயகன் வேள்பாரி - 64

 

 

 

p85a_1514720863.jpg

பாரியும்  கபிலரும் எவ்வியூருக்கு வந்து சேர்ந்தபோது இரவாகிவிட்டது. தொடர்ந்து நான்கு நாள்கள் 1_1514721181.jpgநடந்ததால், கபிலரின் கால்கள் துவண்டுபோய் இருந்தன. நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது என்ற எண்ணத்தோடு எவ்வியூருக்குள் நுழைந்தார். `இந்த எண்ணம் வரும்போதெல்லாம், அணங்கன் நினைவுக்கு வந்துவிடுகிறான். இந்த வயதிலும் காட்டெருமை மந்தைக்குள் நுழைய என்ன ஒரு தினவு வேண்டும்! நுழைந்துவிட்டால், எந்தக் கணமும் பல மடங்கு வேகத்தோடு ஓட வேண்டும். அந்த ஓட்டம் என்றைக்கு முடியும் எனச் சொல்ல முடியாது. எப்படி இதுவெல்லாம் அணங்கனால் முடிகிறது?’ என்று எண்ணிக்கொண்டே உள்நுழைந்தார் கபிலர்.

`தேவவாக்கு விலங்கை எடுத்துக்கொண்டு, பறம்பின் அடர்காட்டுக்குள் தொடர்ந்து அத்தனை நாள்கள் எப்படி திரையர்களால் ஓட முடிந்தது?’ என்ற கேள்விக்கான முடிச்சுகள் எல்லாம் தன்போக்கில் அவிழ்ந்துவிட்டன.

பாரி வந்ததை அறிந்து, முடியன் அவர்களை நோக்கி வேகமாக வந்தான். ஏதோ ஒரு செய்தி அவனுக்காகக் காத்திருக்கிறது என்பதைக் கபிலர் உணர்ந்தார். வேட்டுவன் பாறையிலிருந்து நீலன் அனுப்பியுள்ள வீரர்கள் வந்துள்ளதாக அவன் சொன்னான்.

`நீலன் வராமல் ஏன் வீரர்களை அனுப்பியுள்ளான்?’ என்று எண்ணிய கபிலர், ``சரி, நான் போய் ஓய்வெடுக்கிறேன்” என்று சொல்லி விடைபெற முயன்றார்.

``வந்துள்ள செய்தி, உங்களோடு தொடர்புடையது” என்றான் முடியன்.

கபிலர் சற்றே வியப்படைந்தார். ``எனக்கு என்ன செய்தி வந்திருக்கப்போகிறது?!” என்று சொல்லிக்கொண்டிருக்க, வீரர்கள் இருவர் அறைக்குள் வந்தனர்.

பாரியையும் கபிலரையும் வணங்கிவிட்டு, ``உங்களைப் பார்க்க மூவர் வந்துள்ளனர்” என்று கபிலரைப் பார்த்தபடி சொன்னார்கள்.

``என்னைப் பார்க்கவா?!” என்று திகைப்புற்றுக் கேட்டார் கபிலர்.

கபிலர் கேட்டு முடிக்கும் முன் பாரி சொன்னான், ``கபிலரைப் பார்க்க வந்துள்ளவர்களை அழைத்து வந்திருக்கலாமே. ஏன் நிறுத்திவைத்து வந்தீர்கள்?”

வீரர்கள் சொன்னார்கள், ``அவர்களில் ஒருவர் மிக வயதானவர். அவரால் மலையேற முடியாது.”

வியப்பும் குழப்பமுமாக இருந்தது. `யாராக இருக்கும்?’ என்று கபிலர் சிந்தித்துக்கொண்டிருக்கையில் வீரர்கள் சொன்னார்கள், `` `எனது பெயரைச் சொன்னால் அவரே இங்கு வந்துவிடுவார்; போய்ச் சொல்லுங்கள்’ என்று எங்களை அனுப்பிவைத்தார்.”

கபிலருக்கு இன்னும் வியப்பு கூடியது. `நாம் இங்கு இருப்பதை அறிந்து இவ்வளவு உரிமையோடு வீரர்களை அனுப்பிவைத்தது யார்?’ என எண்ணிக்கொண்டிருக்கையில் வீரன் சொன்னான், ``அவரின் பெயர் திசைவேழர்.”

பெயர் சொல்லப்பட்ட கணத்தில் கபிலரின் முகத்தில் ஏற்பட்ட வியப்பைப் பார்த்தபடி கேட்டான் பாரி ``யார் இந்தப் பெரியவர்?’’

அகலத் திறந்திருந்த கபிலரின் கண்கள், ஒளியை உமிழ்ந்தன. வியப்பை உதிர்க்க முடியாமல் திணறியது முகம். கைகளை உயர்த்திக் காட்டி ``வானியல் பேராசான்” என்றார்.

p85b_1514720944.jpg

சொல்லை உச்சரித்த விதத்திலேயே அவரின்பாலுள்ள வாஞ்சையும் மதிப்பும் வெளிப்பட்டன. அதைப் பார்த்து மகிழ்ந்தபடி பாரி சொன்னான், ``அவரை, சிவிகையில் வைத்துச் சுமந்து வரச் சொல்லிவிடலாமா?”

``வேண்டாம் பாரி. அவர் மிக வயதானவர். என் பொருட்டு அவருக்குச் சிறு தொந்தரவுகூட வந்துவிடக் கூடாது. நானே போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்.”

``சரி” என்று ஏற்றுக்கொண்ட பாரி, ``தொடர்ந்து நான்கு நாள்கள் நடந்திருக்கிறீர்கள், மிகவும் களைப்பாக இருக்கும். ஒருநாள் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு புறப்படுங்கள்.”

``வந்துள்ளது பேராசான். எனது மனம் எப்படி ஓய்வெடுக்கும் பாரி? தாயைத் தேடும் கன்று எத்தனை மலைகளைக் கடந்தாலும் துவண்டுவிடவா செய்யும்?”

அவரது உணர்ச்சிக்குள் இருக்கும் உண்மையைப் பாரியால் உணர முடிந்தது. `தேக்கன் இருந்தால் உடன் அனுப்பிவைக்கலாம். அவனோ காலம்பனோடு இருக்கிறான்’ என்று சிந்தித்தபடியே உதிரனையே அழைத்துக்கொண்டு போகச் சொன்னான். ``சரி’’ என்று ஏற்றுக்கொண்டு விடைபெற்றுக் குடிலுக்குப் போனார் கபிலர்.

p85c_1514720963.jpg

மறுநாள் காலை எழுந்ததும், ``கபிலர் புறப்பட்டுவிட்டாரா?” எனப் பாரி கேட்டான்.

``அவர் இந்நேரம் ஆதி மலையில் பாதித் தொலைவைக் கடந்திருப்பார்’’ என்றனர் வீரர்கள்.

பிலர் வேட்டுவன் பாறைக்கு வந்தபோது திசைவேழர் வந்து ஐந்து நாள்களுக்குமேல் ஆகியிருந்தது. அவரைக் காணும் பொழுதைக் கனவுபோலச் சுமந்து வந்தார் கபிலர். `எத்தனை ஆண்டுகளாகிவிட்டன? விரிவடங்கா வானத்தின் விந்தைகளைப் பேசி முடியாத நாள்கள்தான் எத்தனை... எத்தனை!! காலம் கரைகிறதா... நகர்கிறதா?’ என முடிவுறாத பேச்சுகளை எண்ணியபடி திசைவேழர் இருந்த குடில் அருகே வந்தார் கபிலர்.

முதன்முறையாகக் கபிலர், வேட்டுவன் பாறைக்கு வந்த அன்று, அவரைத் தங்கவைத்திருந்த குடில் அது. விரிந்து நீண்ட திறளி மரத்தாலான பலகையில் உட்கார்ந்திருந்தார் திசைவேழர். கபிலர் வருவது தொலைவிலேயே தெரிந்தது. அங்கு இருந்தவர்கள் எழுந்து அவரை வரவேற்றனர். அளவுகடந்த மகிழ்வோடு வந்த கபிலர், திசைவேழரை வணங்கி மகிழ்ந்தார். பெருங்கவியை ஆரத்தழுவிக்கொண்டார் திசைவேழர். கண்களில் கசிந்தது பேரன்பு.

கபிலர் வந்தது அறிந்து வேட்டூர் பழையனும் நீலனும் குடிலுக்கு வந்தனர். வந்து ஐந்து நாள்களாகிவிட்டதால், இவர்கள் அனைவரையும் திசைவேழர் அறிவார். ஆனாலும் பெயர் சொல்லிப் புகழ்ந்தார் கபிலர். நீலனை `மகன்போல்’ எனச் சொல்லி அறிமுகப்படுத்தினார். பேசிக்கொண்டிருக்கும்போது பெண் ஒருத்தி சிறு கூடையில் நாவற்பழம் கொண்டுவந்து வைத்தாள். யார் எனப் பார்த்தார் கபிலர். தனக்கு மகர வாழையில் காரத்துவையல் கொடுத்தவள். கபிலரை வணங்கியபடி அதே சிரிப்போடு அந்த இடம் விட்டு நகர்ந்தாள். இப்போது கைக்குழந்தையோடு இருந்தாள்.

திசைவேழர், கூடையில் வைக்கப்பட்ட நாவல் ஒன்றை உண்பதற்காக எடுத்தார். அதைக் கவனித்த கபிலர், ``வேண்டாம். அதை வைத்துவிடுங்கள்’’ எனச் சொல்லி, இன்னொரு பழத்தை எடுத்து அவருக்குக் கொடுத்தார்.

``உண்பதற்கேற்ப கனிந்துதான் இருக்கிறது. இதை ஏன் வேண்டாம் என்கிறீர்?” எனக் கேட்டார் திசைவேழர்.

கபிலர் சொன்னார், ``அது குழிநாவல்; கார்ப்புச் சுவை அதிகமாக இருக்கும். அதன் பிறகு எந்த நாவலைத் தின்றாலும் கார்ப்புச் சுவை போகாது. எனவே, அதை எடுத்தவுடன் உண்ணக் கூடாது. இதோ சிறுநாவல். இதிலிருந்து தொடங்கலாம். இதற்கடுத்து உண்ணவேண்டியது...” என்று சொல்லி, கூடையைக் கிளறியபடியே சற்றே பெருத்த வெண்ணாவலை எடுத்தார். திசைவேழர் வியப்போடு பார்த்தார்.

கபிலர் ஒவ்வொரு நாவலாக எடுத்து திசைவேழருக்குக் கொடுத்துக்கொண்டே அதன் பெயர், தன்மை, சுவைநுட்பம் என, பழத்தின் சிறப்புகளைக் கூறி மகிழ்ந்தார். கூடையில் இருந்த அனைத்துப் பழங்களைப் பற்றியும் அவரால் விளக்க முடிந்தது. அருகில் இருந்த வேட்டூர் பழையனும் நீலனும் வியப்பேறிய விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.

பழத்தை உண்டபடி நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர். ``சிறிது நேரம் நடந்துகொண்டே பேசுவோம்’’ எனச் சொல்லிப் புறப்பட்டனர். வலக்கையை ஊன்றுகோலில் அழுத்தி, இடக்கையைத் தோதாகப் பிடித்து அழுத்தி எழுந்தார் திசைவேழர். வலதுகாலை மடக்கி நீட்ட முடியாத நிலையைப் பற்றிப் பேசியபடியே இருவரும் சிறிது தொலைவு நடந்தனர். அவர்கள் தனியாகப் பேச விரும்புவது அனைவருக்கும் புரிந்தது. எனவே, மற்றவர்கள் குடிலிலேயே இருந்தனர்.

p85d_1514720980.jpg

கோல் ஊன்றி நடந்தபடியே திசைவேழர் கேட்டார், ``பறம்பில் வாழ்வனுபவம் எப்படி இருக்கிறது?”

``இதுதான் வாழ்வு எனத் தோன்றுகிறது.”

முதல் சொல்லே முழுமைகொண்டிருந்தது. சற்றே திகைப்புற்றார் திசைவேழர். கபிலர் உச்சரிக்கும் சொற்களின் வலிமையை நன்கு உணர்ந்தவர் அவர்.

கபிலர் தொடர்ந்தார், ``இயற்கையைப் பற்றிய மனிதப் பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வு முழுவதும் நான் கற்றுக்கொண்டவற்றை வந்த முதல் நாளே என்னை எடைபோட்டுப் பார்க்கவைத்தவர்கள் பறம்பு மக்கள்.’’

கபிலர் உணர்ச்சி மேலிட்டவராக இருக்கிறார் என திசைவேழருக்குத் தோன்றியது.

``எண்ணற்ற செடிகொடிகளுக்கும் எண்ணிலடங்காத பூக்களுக்கும் இவர்கள் பெயரிட்டு அடையாளப்படுத்தியுள்ளனர். இத்தனை வகையான பூக்களையும் அதன் பெயர்களையும் நாம் எங்கேயும் காண முடியாது” என்று சொன்ன கபிலர், மிக மகிழ்வோடு சொன்னார், ``கடந்த வாரம், நாங்கள் அடர்காட்டுக்குள் மிக முக்கியமான வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது என்னுடன் வந்த பாரி, ஓர் இடத்தில் அப்படியே நின்றான். என்ன காரணம் எனப் புரியாமல் உடன் வந்த அனைவரும் நின்றோம். பாரி எதைக் கவனிக்கிறான் என்பதை, அனைவரின் கண்களும் உற்றுநோக்கின.

பாறையின் மீது வேர்போல தேன் நிறத்தில் படர்ந்து இருந்த சிறு கொடியில் மலர்ந்திருந்தது பூ. அதன் இதழ்கள், காற்றடிக்கும்போது சாய்ந்து எரியும் சுடர்போல இருந்தது. அதைப் பார்த்தபடி பாரி சொன்னான், ``இந்த வகைப் பூவை, இதுவரை நான் பார்த்ததில்லை.’’

``ஆம். இது புதுவகையான செடியாக இருக்கிறது’’ என்றனர் மற்றவர்கள்.

உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த பாரி, ``இந்தப் பூவுக்கு நீங்களே ஒரு பெயர் சூட்டுங்கள்’’ என்றான்.

`பூவுக்கு எப்படிப் பெயர் சூட்டுவது... நிறம்கொண்டா, மணம்கொண்டா... அதன் தனிச்சிறப்பு அறிந்தா?’ என்று எண்ணங்கள் ஓடியபடியே இருந்தன.

கபிலர் உற்சாகத்தோடு பேசுவதைக் கேட்டபடி நடந்துகொண்டிருந்த திசைவேழர், ``என்னதான் பெயர் சூட்டினீர்?” என்றார்.

``அந்தப் பூவைப் பார்த்த கணமே பாரியின் எண்ணத்தில் பெயர் தோன்றியிருக்கும். அந்தப் பெயர், பூவின் வேரிலிருந்து விளைந்ததாக இருக்கும். அதேபோன்ற தோற்றம்கொண்ட பூக்களுக்கு என்ன பெயர் உள்ளது என அனைத்தையும் ஒப்பிட்டு, பெயரைச் சிந்தித்திருப்பான் பாரி. எனவே, நான் உடனடியாக ஒரு பெயரைச் சொல்லிவிட முடியாது அல்லவா? `சிந்தித்துச் சொல்கிறேன்!’ என்று கூறியுள்ளேன்” என்றார்.

``நீங்கள் பெயர்வைக்கும் வரை அது பெயரற்ற `பூ’தானா?”

திசைவேழரின் சொல்லுக்குள் சற்றே எள்ளல் இருப்பதுபோல் கபிலருக்குத் தோன்றியது.

திசைவேழர் தொடர்ந்தார், ``அந்தச் செடி வேறு இடத்திலும் இருக்குமல்லவா? அங்கு அதற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் அல்லவா?”

``இருக்கலாம். வேறு எங்கேயாவது அந்தச் செடி இருக்கலாம். அதற்கு மனிதர்கள் பெயரிட்டிருக்கலாம்” என்றார் கபிலர்.

தலையை நிமிர்த்தாமலேயே மெல்லிய குரலில் திசைவேழர் கேட்டார், ``அப்படியென்றால், அறியாதவர்களுக்கு நடுவில் இருப்பதை அறிவென்று ஏற்க முடியுமா?”

திசைவேழர் சொல் அதிர்ச்சியைக் கொடுத்தது. ``அறியாதவர்கள் என்று, பறம்பு மக்களையா சொல்கிறார்?’’ நம்ப முடியாமல் கேட்டார், ``எப்படி இப்படியொரு சொல்லைச் சொன்னீர்கள்?”

``நீங்கள் ஒன்றை அறிய நினைக்கும்போது உங்களின் அறியாமையை மற்றவர்கள் அறிந்துகொள்ளுதல் இயற்கைதானே?”

திசைவேழரின் சொற்கேட்டுத் திகைத்து நின்றார் கபிலர். அவருக்குள் இந்தச் சொல் உருத்திரண்டு வர, பூ மட்டும் காரணமல்ல என்பது புரியத் தொடங்கியது.

p85e_1514720996.jpg

திசைவேழர் சொன்னார், ``இயற்கை பற்றிய மனிதப் பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்களே, அது சரிதானா?”

பதற்றம், உடலெங்கும் பரவியதை உணர முடிந்தது. பறம்பே தனது உடலாக மாறிவிட்டதைப்போல் இருந்தது. அதன்மீது சொல்கொண்டு எறிவதைக்கூட உடல் ஏற்க மறுக்கிறது, ஆனாலும் தன்னை நிதானப்படுத்தியபடி கபிலர் கேட்டார், ``சரியில்லை என்று எப்படித் தோன்றியது உங்களுக்கு?’’

``தனது உள்ளங்கையில் இருக்கும் ஒன்றின் ஆற்றலையே மதிப்பிட முடியாதவர்களாக இவர்கள் இருப்பதால்.”

``எதைச் சொல்கிறீர்கள்?”

``தேவாங்கு விலங்கைச் சொல்கிறேன்.”

புதுப் பெயராக இருக்கிறதே என நினைத்த கபிலர், தேவவாக்கு விலங்கைத்தான் இப்படிச் சொல்கிறார் எனப் புரிந்துகொண்டார். ``அதன் ஆற்றலைப் பறம்பு மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றா சொல்கிறீர்கள்?”
``ஆம். அதன் ஆற்றலை இப்போது வரை பாரியும் பறம்பு மக்களும் புரிந்துகொள்ளவில்லை.”

கபிலருக்குள் விடை தெரியாமல் உருண்டுகொண்டிருந்த கேள்வி, இப்போது திசைவேழரின் சொல் முனையில் வந்து நின்றது. புருவம் உயர்த்தியபடி திசைவேழரைப் பார்த்து ``என்ன அதன் ஆற்றல்?”

``அது கடலை வெல்லும் ஆற்றல்கொண்ட உயிரினம்.”

கபிலர் அதிர்ந்து நின்றார். அவரின் முகக்குறிப்பு அறிந்து திசைவேழர் தேவாங்கின் சிறப்பைப் பற்றிப் பேசத் தொடங்கினார். எப்போது உட்கார்ந்தாலும் வடதிசை நோக்கியே உட்காரும் அதன் ஆற்றலை, மெய்சிலிர்த்தபடி விளக்கினார். ``பொதிகை மலையில் இதைப் போன்ற உடல் அமைப்பைக்கொண்ட விலங்கு உண்டு. ஆனால், அதற்கு இத்தகைய ஆற்றல் இல்லை. இது ஒருமரத்து விலங்கு. நீண்ட நெடுங்காலம் குறிப்பிட்டதொரு மரத்திலே வாழக்கூடியதால், குறிப்பிட்ட திசை நோக்கி உட்காரும் இயற்கையின் அதிசிறந்த ஆற்றலைப் பெற்றுள்ளது” என்றார்.

கபிலர் மெய்மறந்து கேட்டார். இந்த விலங்குக்காகப் பாண்டியன் ஏன் இவ்வளவு முயன்றான் என்ற விடையின்றித் தத்தளித்த கேள்விக்கு, விடை தெரிந்தது. நூற்றாண்டுகளாகத் தொடரும் யவன வணிகத்துக்கு இதுபோன்ற ஒரு விலங்கு எவ்வளவு முக்கியமான பங்காற்றும் என்பதை, கபிலரால் எளிதில் விளங்கிக்கொள்ள முடிந்தது. பாண்டியனின் பெருமுயற்சிக்குப் பின்னிருந்த உண்மை வெளிவந்தது.

நடையை நிறுத்தி அருகில் இருந்த சிறு பாறையில் சாய்ந்து நின்றார் கபிலர். கோல் ஊன்றியபடி நின்றுகொண்டிருந்த திசைவேழர் சொன்னார், ``கடலையும் வானையும் இணைக்கும் பேராற்றல்கொண்ட உயிரினமாக இது இருக்கிறது. இதைப் பெற வேறு வழியே இன்றிதான் திரையர்களை அனுப்பிவைத்தார் குலசேகரபாண்டியன். நீங்கள் பறம்பில் இருப்பது அப்போது தெரிந்திருந்தால் உங்கள் மூலமே முயன்றிருப்பார் பேரரசர்.”
கபிலர் அசைவின்றி உட்கார்ந்திருந்தார். குலசேகரபாண்டியனின் முயற்சி தொடர்வதை அவரால் உணர முடிந்தது.

திசைவேழர் சொன்னார், ``அந்த அரிய உயிரினத்தால் பறம்புக்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை. அதன் ஆற்றல் வெளிப்படப்போவது கடலில்தான். எனவே, அதைக் கொடுத்து உதவ, பாரிக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.’’

கபிலரின் அமைதி நீடித்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு திசைவேழர் கேட்டார், ``ஏன் பேச்சின்றி நிற்கிறீர்?”

``பாரி எப்போதும் வியப்புக்குரிய தோழன்தான். ஆனால், இப்போது அந்த வியப்பு மேலும் அதிகரிக்கிறது.”

கபிலரின் சொல்லுக்குப் பொருள் புரியவில்லை. கண்களை உருட்டியபடி பார்த்தார் திசைவேழர்.

கபிலர் சொன்னார், `` `தேவவாக்கு விலங்கை இவ்வளவு முயன்று எடுத்துச் செல்லவேண்டிய தேவை என்ன?’ என்று பலமுறை நான் கேள்வி எழுப்பியுள்ளேன். ஆனால், இந்தக் கேள்விக்கு விடையறிய பாரி ஒருபோதும் முயன்றதே இல்லை. எனக்கு அது பெருவியப்பைக் கொடுத்தது. வற்புறுத்திக் காரணம் கேட்டால் சொல்வான், `வேந்தர்கள் எதைச் செய்தாலும் அது அவர்களின் அதிகார நலனுக்கானது; மனிதருக்கும் இயற்கைக்கும் எதிரானது. அதில் கூடுதலாகச் சிந்திக்க என்ன இருக்கிறது?’ என்று. மிக வேகமாக அவன் முடிவுக்கு வந்துவிடுகிறானோ என அப்போது தோன்றியது. ஆனால், இப்போது தெரிகிறது, அவனுடைய சொற்கள் எவ்வளவு ஆழமானவை என்று.”

பாறையை விட்டு எழுந்து, திசைவேழரைப் பார்த்தபடி கபிலர் மேலும் சொன்னார், ``இயற்கையைப் பற்றிய பேரறிவு மட்டுமல்ல, மனிதர்களைப் பற்றிய பேரறிவும் சேகரிக்கப்பட்டுள்ள இடமாக `பறம்பு’ இருக்கிறது.”
தனது சொல்லைத் தனக்கு எதிரானதாக்கிக்கொண்டிருக்கிறார் கபிலர் என்பது திசைவேழருக்குப் புரிந்தது. இருவரும் சிறிது நேரம் பேச்சின்றி நின்றனர்.

நேர்முகம் பார்ப்பதைத் தவிர்க்க எழுந்து நடந்தபடி திசைவேழர் சொன்னார், ``ஆற்றலை அறிவதும் பயன்படுத்துவதும்தான் மனிதனை வெல்லற்கரியவனாக மாற்றியுள்ளன.”

``மனிதன் வெல்லற்கரியவனாக மாறவேண்டியது யாருடைய தேவை?” என்றார் கபிலர்.

சற்றும் இடைவெளியின்றி திசைவேழர் சொன்னார், ``இயற்கையின் தேவை.”

p85f_1514721012.jpg

இளக்காரமானதொரு சிரிப்போடு கபிலர் சொன்னார், ``இல்லை. ஆசைக்கு அடிமைப்பட்ட கணத்தில் மனிதன் எடுத்துக்கொண்ட உறுதி அது.”

``அது ஆசையல்ல, இயல்பு. இயற்கையின் தன்மை அதுதான். ஆற்றல்கொண்டதை மட்டுமே அது அரவணைத்துக்கொள்ளும். எனவே, மனிதன் ஆற்றலைப் பெருக்கவே வாழ்வை அமைத்துக்கொள்கிறான்.”

``அது, மனிதன் இயற்கைக்குக் கொடுத்துள்ள விளக்கம்.”

``தேவாங்கு விலங்கு கடலிலே இருக்கும்போது கிடைக்கும் பயன் எல்லையற்றது. அதன் ஆற்றல் துலங்குமிடம் அதுதான். அந்த இடத்திலே அதைப் பயன்படுத்துதல் அனைவருக்கும் நன்மை செய்வதுதானே?”

``இதைப் பாரியிடம் கேட்டால், என்ன சொல்வான் தெரியுமா?”

``என்ன சொல்வான்?”

`` `அதைப் பயன்படுத்த மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று கேட்பான்.”

திசைவேழரின் நடையின் வேகம் கூடியது. ``இந்தக் கேள்வியை எப்போதோ கடந்து வந்துவிட்டனர் நம் முன்னோர்கள். மலைக்காடுகளில் மட்டுமே விளைந்த தானியக்கதிரின் விதைகளைச் சேகரித்து நதிக்கரையில் நட்டுவைத்தபோதே இதைப் போன்ற கேள்விகளெல்லாம் இறந்துவிட்டன. பயனளிக்கும் இடத்தை நோக்கிப் பாய்ந்து செல்லுதலே வாழ்தலின் விதி” என்று கூறிய திசைவேழர், சற்றே சினத்தோடு குரல் உயர்த்திச் சொன்னார், ``நீங்கள் எழுப்புவது இயற்கையின் மீதான உரிமை பற்றிய கேள்வியல்ல; இயற்கையின் இயங்கு விசையைப் புரிந்துகொள்ளாத அறியாமையிலிருந்து எழும் கேள்வி.”

திசைவேழரின் சினத்தை சற்றே எள்ளலோடு எதிர்கொண்ட கபிலர் கூறினார் ``நீங்கள்தான் முதலிலேயே சொல்லிவிட்டீர்களே, `அறிவுதான் அறியாமையின் அடையாளம்’ என்று.”

சினம் மேலேறாமல் கட்டுப்படுத்த முயன்றார் திசைவேழர். கபிலரை இணங்கவைப்பதுதான் முக்கியமானது. அந்தச் செயலை வெற்றிகரமாகச் செய்தாக வேண்டும். அதற்கு ஒரே வழி அவரை கருத்துகள்மூலம் வெல்வது மட்டும்தான். எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடியபடியிருக்க திசைவேழர் சொன்னார், ``வளைய மறுக்கும் கிளை ஒடிவதும், வளைந்துகொடுக்கும் கிளை நீண்டு தழைப்பதும்தான் இயற்கையின் அமைப்பு.”

சொற்களின் வலிமை அறிந்த இருவர், எதிரெதிர் திசையிலிருந்து அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தேவாங்கில் தொடங்கி அதைத் தர மறுக்கும் பாரியை நோக்கி உருண்டன சொற்கள். அதை எதிர்கொள்ள, கபிலருக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால், இப்படியொரு பணிக்கு திசைவேழர் எப்படி இணங்கினார் என்பதே அவரின் சிந்தனையாக இருந்தது.

``ஒரு தவளை இடும் முட்டையிலிருந்து பல்லாயிரம் தலைப்பிரட்டைகள் உருவாகின்றன. அவை எல்லாம் உயிர்வாழுமேயானால், இந்தப் பூமியில் தவளையைத் தவிர வேறு உயிரினமே இருக்காது. ஒரேயொரு கொக்கு, நாள் ஒன்றுக்கு எண்ணாயிரம் தலைப்பிரட்டைகளை விழுங்கி வாழ்கிறது. இந்த அழிவுகளின் மூலம்தான் இயற்கை சமநிலையைப் பேணுகிறது.”

திசைவேழரின் சொற்களைக் கேட்டபடி கபிலர் அமைதியாக நடந்தார். அழிவுகளின் நியாயத்தைப் பேசத் தொடங்கி, அடுத்து அழித்தலின் அவசியத்தில் வந்து பேச்சு முடியும். திசைவேழர் எதை நோக்கி வருகிறார் என்பதை, கபிலரால் கணிக்க முடிந்தது.

``வலதுகையால் ஊன்றுகோலை இறுகப்பிடித்து இடதுகையால் அழுத்திக்கொடுத்துதான் உங்களால் எழுந்திருக்க முடிந்தது. இவ்வளவு தளர்ந்த நிலையிலும் நெடுந்தொலைவு பயணித்து என்னைக் காண வந்துள்ளீர்கள் எனப் பெருமகிழ்வடைந்தேன். ஆனால், உங்களின் நோக்கம் எனது மகிழ்வை உதிரச்செய்துவிட்டது” என்று சொன்ன கபிலர், சற்றே தயக்கத்தோடு அதேசமயம் உறுதியான குரலில் கேட்டார், ``உங்களுக்கு உடன்பாடற்ற செயலை ஒருபோதும் நீங்கள் செய்ய மாட்டீர்கள். அப்படியிருக்க, எதன் பொருட்டு இந்தச் செயலில் உங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டது?”

திசைவேழர் சொன்னார், ``சான்றோர் போற்றும் பெருங்கவி பறம்பில் உள்ளான் என்ற பெருமகிழ்வுடனே இங்கு வந்தேன். என் கால்கள் இதனினும் தளர்ந்துபோயிருப்பினும் நான் இங்கு வந்திருப்பேன் அல்லது உன்னால் மலையிலிருந்து இறங்கி வர முடியாத நிலை ஏற்பட்டிருப்பினும் நான் மலையேறி அங்கு வந்திருப்பேன். ஏனென்றால், வாழ்வு முழுவதும் நான் பயணித்த பாதையில் இப்படியோர் ஆற்றல்கொண்ட உயிரினத்தைக் கண்டதில்லை.”

திசைவேழரின் குரலில் உணர்ச்சி மேலேறிக் கொண்டிருந்தது. ``எனது இளம்பருவத்தில் நாடியைத் தூக்கி அண்ணாந்து வானத்தை உற்றுப்பார்க்கவைத்தார் என் தந்தை. அன்றிலிருந்து இன்று வரை வானக்கோடுகளின் ஊடேதான் நான் வளைந்தும் நெளிந்தும் போய்க் கொண்டிருக்கிறேன். ஒளி அண்டங்களின் மடிப்புகளுக்குள் பேதலித்து நின்ற காலங்கள் எத்தனையோ! முன்னோருக்கு முன்னோர் என எத்தனை தலைமுறைகளாக வானியலின் வியப்புகளுக்குள் மூழ்கிக்கிடக்கிறோம். கதிரவனும் விண்மீன்களும் இன்றி மூடப்பட்ட அறைக்குள் நம்மால் திசை அறிய முடியும் என்று ஒருவன் சொன்னால், அவனை `மூடன்’ என்று சொல்லியிருப்பேன். ஆனால், தேவாங்கு என்ற இந்தச் சின்னஞ்சிறு உயிரினம் நம் அறியாமையைத் தகர்த்துவிட்டது. எல்லையில்லாத அகண்ட வானத்தைத் துளையிட்டுப் பார்ப்பதைப்போல இருக்கிறது, அது வடதிசை நோக்கி உட்கார்ந்திருப்பது.

இனி நம் பாய்மரங்களுக்கு, கடலும் காற்றும் பொருட்டல்ல. நடந்துகொண்டிருக்கும் தேவாங்கு உட்காரும் கணத்தில் திசைகள் தாமே வந்து மீகானின் சொல் கேட்க உள்ளன. இந்த ஆற்றல், வேந்தர்களுக்கு மட்டுமல்ல... மனிதர்கள் அத்தனை பேருக்கும் பயனளிக்கப்போகும் ஒன்று. இதை நாம் தவறவிட்டுவிடக் கூடாது. இந்த அறிவின் அவசியத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும். மலைமக்கள், வாழ்வின் இயக்கத்தைப் பிடித்து அடுத்த கட்டத்துக்கு நகர முடியாத மந்தநிலைகொண்டவர்கள். நீதான் பாரியிடம் இதை எடுத்துச்சொல்ல வேண்டும். அதற்காகத்தான் வந்தேன்.”

p85g_1514721031.jpg

நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்தபடி மறுமொழியின்றிக் கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.

வேகம் குறையாமல் திசைவேழர் கேட்டார், ``ஏன் பேச்சின்றி நிற்கிறீர்?”

``நீங்கள் சொல்வது எல்லாமே எனக்குப் புரிகிறது. ஆனால், நான் சொல்வது மட்டும் உங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் தேவாங்கினால் ஏற்படும் பயனைப் பற்றிப் பேசுகிறீர்கள். அது தேவாங்குக்கான பயன் அல்ல என்பது உங்களுக்குப் புரியவில்லை. உங்களின் பயனுக்காக அதைப் பயன்படுத்த உங்களுக்கு உரிமை இல்லாததைப்போல, அனுமதி கொடுக்கும் உரிமை பாரிக்கும் இல்லை. இழக்கக்கூடிய வாழ்விடத்தில் எந்த உயிரையும் இயற்கை உருவாக்கவில்லை. எனவே, தனது வாழ்விடத்தை ஓர் உயிர் இழப்பது இயற்கையுடனான ஆணிவேரை அறுத்துக்கொள்வதற்கு நிகர். பயன்பாட்டுக் கணக்குகளும் பண்டமாற்றுக் கணக்குகளும் எல்லாவற்றுக்கும் எப்படிப் பொருந்தும்? நாடியைத் தூக்கி வானத்தைப் பார்த்தபடி உங்கள் தந்தை விதைத்த கனவுக்கு விலை சொல்ல முடியுமா உங்களால்?”

கபிலரின் குரல் திடமாக ஒலித்தது. சொற்களைச் செங்குத்தாகக் கீழ்நோக்கித் தள்ள புலவனுக்குத் தெரியும். ஆசானாக மதிக்கும் ஒருவரின் மீது அந்தச் செயலைச் செய்யக் கூடாது என நினைத்தார். ஆனால், எண்ணங்களை மீறிச் சொற்கள் உருண்டன.

``தேவாங்கு மட்டுமல்ல, பாரியும் அப்படித்தான். என்ன விலை கொடுத்தாலும் சினம்கொண்டாலும் வீழ்ந்து பணிந்தாலும் திசை மாற மாட்டான்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 65

 

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p77a_1515567331.jpg

வ்வியூரிலிருந்து கபிலரை அழைத்துவந்த உதிரன், வேட்டுவன் பாறையில் உள்ள எல்லோருடனும் பேசி நலம் விசாரித்துக்கொண்டிருந்தான். திசைவேழரும் கபிலரும் தனியே பேச எழுந்து சென்றபோது, நீலனும் உதிரனும் இன்னொரு திசை நோக்கி நடந்து சென்றனர். இரு திசைகளையும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் வேட்டூர் பழையன். கற்றறிந்த அறிஞர்கள் இருவர் வலப்புறம் மெதுவாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, பறம்பின் இணையற்ற வீரர்கள் இருவர் இடப்புறமாகப் பேசியபடி நடந்துகொண்டிருந்தனர்.

உதிரனிடம் நீலன் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. ``எவ்வியூருக்குக் கூழையனிடமிருந்து நாள் தவறாமல் செய்தி வந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே..?” என்று தொடங்கினான்.

``ஆம், சேரகுடியினர் இருவரும் போருக்கான வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்தச் செய்திகளைக் கூழையன் நாள்தோறும் அனுப்பிக்கொண்டிருக்கிறான். உதியஞ்சேரலைவிடக் குடநாட்டினரிடம்தான் நாம் கூடுதல் விழிப்பு உணர்வுடன் இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. அவர்கள் தளபதி எஃகல்மாடன் பற்றி மிகக் கொடுமையான கதைகள் மக்களிடம் பரவியிருக்கின்றன. பிடிபட்ட எதிரி நாட்டு வீரர்கள் யாரையும் கண நேரம்கூட அவன் உயிரோடு வைத்திருப்பதில்லையாம். உடல்களைச் சிதைத்துக் கொல்வதை அவன் வழக்கமாக வைத்திருக்கிறானாம். `கோளூர்சாத்தனின் கைகளை வெட்டிய முடியனின் தலையை எடுக்காமல் நான் ஓய மாட்டேன்’ எனச் சூளுரைத்தபடி அலைகிறானாம்” என்றான் உதிரன்.

அவன் சொல்லியதைப் பற்றி சிந்தித்தபடி வந்துகொண்டிருந்தான் நீலன். ``பறம்பினைச் சுற்றியுள்ள வேறெந்த நாட்டினருக்கும் இல்லாத வாய்ப்பு குடநாட்டினருக்குத்தான் உண்டு. நில அமைப்பின் தன்மையைக் கணக்கில் கொண்டால் அவர்களால் பச்சைமலையின் நடுப்பகுதி வரை வந்து சேர முடியும். இந்தச் சாதகமான வாய்ப்பைப் பயன்படுத்துவதாக நினைத்துதான் அவர்கள் ஏமாற்றம் அடைவர். ஏனென்றால், அதன் தொடர்ச்சியாக உள்நுழைந்தால் கரும்பாறைப் பிளவுக்குள் எளிதாகச் சூழப்பட்டு முழுமுற்றாக அழிக்கப்படுவர்” என்றான்.

அடுத்த கேள்வியை நீலன் கேட்கும் முன்னர் உதிரன் கேட்டான், ``சோமப்பூண்டின் பானம் குடிக்க வந்தபோது மீட்டுவந்த கப்பல் அடிமைகளைப் பற்றிக் கூறினாயே, அவர்களின் தலைவன் இன்னும் அப்படித்தான் இருக்கிறானா அல்லது ஏதாவது பேசுகிறானா?”

p77b_1515567350.jpg

``இப்போது முழுமையாகக் குணமடைந்து விட்டான். மிகக் கொடுமையான காயங்கள் ஏற்பட்டதால் இத்தனை மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் அவன் எதையும் வாய் திறந்து பேச ஆயத்தமாக இல்லை. எவ்வளவு முயன்றும் அவன் கூட்டத்தைப் பற்றிய உண்மைகள் எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

உடன் இருக்கும் வீரர்கள் தலைவனின் உத்தரவின்றி ஒரு சொல்கூட உதிர்க்க மறுக்கிறார்கள். அவனது கண் அசைவை வைத்தே பணிபுரிகின்றனர். தேர்ந்த போர்க்குடியாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடும் உறுதியும் எளிதில் வராது” என்றான்.

``கபிலர் அவரின் ஆசானோடு ஓரிரு நாள்கள் தங்குவார். நாம் போய் அவனைப் பார்த்து வரலாமா?”

``விடிந்ததும் புறப்பட்டுப் போவோம்” என்றான் நீலன்.

பிலரும் திசைவேழரும் குடிலுக்குத் திரும்பும்போது நண்பகல் கடந்திருந்தது. அவர்களுக்கான உணவு ஏற்பாடாகியிருந்தது. திறளி மரப்பலகையில் உட்கார்ந்ததும் திசைவேழர் சொன்னார், ``உணவு அருந்தியதும் நாங்கள் புறப்படுகிறோம்.”

``உங்களின் வலதுகாலை மடக்கி எழ முடியாததைப் பற்றி நீங்கள் சொன்னதால், மருத்துவர்கள் மூலிகைகளைப் பறித்துவந்து காத்திருக்கிறார்கள். இன்னும் இரு தினங்கள் தங்குங்கள். அவர்களின் மருத்துவத்தால் முழுமையாகக் குணமடைந்து செல்வீர்கள்” என்றார் வேட்டூர் பழையன்.

மறுமொழி ஏதுமின்றி அமைதியாக இருந்தார் திசைவேழர். வந்த நோக்கம் நிறைவேறாத மனநிலை மட்டுமன்று, இதுவரை தான் கண்டிராத ஒரு கபிலரையும் அவர் கண்டுள்ளார். அவருடைய உணர்வுகள் கொந்தளிப்பாக இருந்தன. பேரரசுக்காகத் தூது வந்ததைப்போல தன்னை கபிலர் நினைத்துவிட்டாரோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை. அமைதி நீடித்தது. அதைக் கவனித்துக்கொண்டிருந்த கபிலர், ``மருத்துவம் பார்த்துக்கொண்டு குணமடைந்து செல்வதுதான் நல்லது” என்றார்.

திசைவேழரின் மனம் அதை ஏற்கவில்லை. பறம்பைப் பற்றிக் கூறிய சொற்கள் அவரைக் கூசிக்கொண்டிருந்தன. ஆனால், நீட்டி மடக்க முடியாத வலதுகால் அவரது மறுப்புச்சொல்லை மடக்கிப் பிடித்துக்கொண்டது. என்ன செய்வது என அறியாமல் திணறிக்கொண்டிருந்தவர், கபிலரின் சொல்லுக்கு இணங்கித் தலை அசைத்தார்.

மாலை நேரம் நெருங்கியதும் மருத்துவர்கள் பச்சிலைகளையும் மரப்பட்டைகளையும் கொண்டுவந்திருந்தார்கள். திறளி மரப்பலகையில் உட்கார்ந்திருந்த அவரை, வலதுகாலை மட்டும் பலகையின் மேல் நேராக நீட்டச் சொன்னார்கள்.

திசைவேழரால் செய்யவே முடியாத பெருஞ்செயலாக அது இருந்தது. வளைந்த கால் அவ்வளவு எளிதில் நீண்டுகொள்ள ஆயத்தமாக இல்லை. அவரால் எவ்வளவு முடியும் என்பதைக் கணிப்பதற்கே மருத்துவர்கள் இதைச் செய்யச் சொன்னார்கள். அவர் முடிந்தவரை கால்களை நீட்ட முயன்றார். ``அரைவட்ட விண்மீன் கூட்டம் ஒருபோதும் நேர்க்கோட்டு சாட்டைக்கம்பு வெள்ளியாக மாறாது” என்று காலை அழுத்திக்கொண்டே சொன்னார். அவரது சொல்லைக் கேட்டுச் சிரித்தார் கபிலர்.

மருத்துவர்கள் பச்சிலையையும் பட்டையையும் கைக்கருவிகளால் ஒன்றாக்கி அரைத்துக் கொண்டிருந்தனர். அடிநரம்பு, சுண்டி இழுத்துக்கொண்டிருந்தது. வலி உச்சந்தலையைத் தொட்டது. மருத்துவர்கள் அரைத்துக் கொண்டிருக்கும் மூலிகைகளைப் பார்த்தபடி, ``என்ன மருந்து இது?” எனக் கேட்டார் திசைவேழர்.

மூத்த மருத்துவர் சொன்னார், ``புலி முன் ஆடு.”

p77c_1515567373.jpg

திசைவேழருக்குப் புரியவில்லை. அவர்கள் சற்றே விளக்குவார்கள் என எதிர்பார்த்தார். மருத்துவர் மூவரும் அவரவர் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். தலைமாட்டில் இருந்த கபிலரைப் பார்த்தார். அவருக்கும் அதற்கான பொருள் புரியவில்லை. மருத்துவர்களைப் பார்த்து கபிலர் கேட்டார், ``அப்படியென்றால் என்ன... மூலிகையின் பெயரா?”

``இல்லை. மருந்தின் சேர்மானத்தையும் நோயின் தன்மையையும் வைத்து நாங்கள் முடிவுசெய்வோம். எங்களின் மருந்துக்கு முன், இந்த நோயானது புலிக்கு முன் ஆடு போல கண நேரத்தில் பதுங்கி ஒடுங்கும். சில நேரத்தில் நோயும் மருந்தும் புலிக்கு முன் புலி போல சம அளவில் நிற்கும். சில நேரத்தில் மருந்தால் கட்டுப்படுத்த முடியாத அளவில் நோய் இருக்கும், புலியை வீழ்த்தும் யானைபோல” என்றார் அவர்.

திசைவேழர் வியப்புடன் பார்த்தார். `மருத்துவத்தைத் தொடங்கும் முன்னரே, புலிக்கு முன் ஆடு போல, இந்த நோயானது மருந்துக்கு முன் பதுங்கி ஒடுங்கும் என எப்படி துணிந்து சொல்ல முடிகிறது இவர்களால்?’ என்று சிந்தித்தபடியே படுத்திருந்தார். வலி உச்சந்தலையைத் தொட்டுத் திரும்பிய இடத்தில் இப்போது புலியும் ஆடும் உலவிக்கொண்டிருந்தன. மனம் வேறொன்றைக் கணித்துக்கொண்டிருக்க, வலி நினைவில் தங்க இடமின்றி மறந்தொழிந்தது.

இரவு நெடுநேரமாகியும் தூக்கம் வரவில்லை. காலில் கட்டு போடப்பட்டிருந்ததால் அசையாமல் படுத்திருக்கவேண்டியிருந்தது. மனம் அலைமோதிக்கொண்டிருந்தது. அருகில் போடப்பட்டிருந்த கட்டிலில் கபிலர் உட்கார்ந்து திசைவேழரைக் கவனித்தபடி இருந்தார். உரிமை கலந்த இயல்பான பேச்சு இருவரிடமும் இல்லை. `நாம் சற்று கடுமையாகப் பேசிவிட்டோமோ!’ என்ற எண்ணம் இருவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது.

அமைதியைக் குலைக்கும் சொல்லைக் கண்டறிய முடியாமல் கபிலர் தவித்துக்கொண்டிருக்கும்போது திசைவேழரின் மெல்லிய குரல் கேட்டது, ``பல ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலையில் தற்செயலாக ஒரு பாணர் கூட்டத்தைக் கண்டேன். ஒருவார காலம் என்னோடு சேர்ந்து அவர்கள் பயணப்பட்டார்கள். அந்தப் பயணத்தின்போது நான் யார் என்பதை உடன் வந்த மாணாக்கர்கள் மூலம் அறிந்து கொண்டனர். அதன் பிறகு அந்தப் பாணர் குழுவின் தலைவன் நாஞ்சிலன் என்னிடம் வானியல் பற்றி பல ஐயங்களைக் கேட்டான். நான் அவற்றுக்கெல்லாம் விடை சொல்லியபடி வந்தேன்.

p77d_1515567388.jpg

பயண வழியில் விலகிச் செல்லும் இடம் வந்தது. அப்போது அவன் சொன்னான், `பச்சைமலைத்தொடரில் வியப்புறு கனியான கருநெல்லி உள்ளது. அதை உட்கொண்டால் பகலிலும் விண்மீன்களைப் பார்க்கலாம். சென்றமுறை நான் பறம்புக்குச் சென்றபோது நடுமலையின் முகட்டில் அந்த மரத்தைக் கண்டேன். பயிற்சிபெற்ற வீரர்களைத் தவிர மற்றவர்களால் ஏறிச்செல்ல முடியாத பெருமுகடு அது. அந்த அதிசயக் கனியைப் பறித்து யாருக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற எண்ணம் உருவானதால், நான் அதைப் பெரிதாகக் கருதவில்லை. உங்களைப் போன்ற வானியல் பேராசானுக்கு அந்தக் கனி உண்ணக் கிடைத்தால் எவ்வளவு நன்மைபயக்கும்! அடுத்த முறை பறம்பு செல்கிறபோது பாரியிடம் கேட்டு அந்தக் கனியைக் கொண்டுவந்து உங்களுக்குத் தருவேன்’ என்று சொல்லிச் சென்றான்.

அவன் சொல்வதை நான் உண்மை என நம்பவில்லை. பகலிலே விண்மீன் கூட்டத்தை எப்படிப் பார்க்க முடியும்? அவன் ஏதோ கற்பனையாகப் பேசுகிறான் என்று நினைத்தேன். ஆனால், திசைகாட்டும் விலங்கு ஒன்று இருக்கிறது என்பதைப் பார்த்த பிறகு, இப்போது எனது எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது. அந்தச் செய்தியை அறிந்த நான் அப்போதே பறம்புக்கு வந்திருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேனோ எனத் தோன்றுகிறது.”

திசைவேழர் சொல்வதை வியந்து கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர். என்ன சொல்வது எனப் பிடிபடவில்லை. சற்றே திணறி மீண்டார். பேச்சற்றிருந்த கபிலரைப் பார்த்து, ``எதுவும் சொல்லாமல் இருக்கிறாய்?” எனக் கேட்டார் திசைவேழர்.

``கருநெல்லியைப் பற்றி பாரி என்னிடம் சொல்லியுள்ளான். `அதை உட்கொண்டால் பகலிலும் விண்மீன்களைப் பார்க்க முடியும். அந்த ஆற்றல் அதற்கு உண்டு என, குலநாகினிகள் சொல்வார்கள்’ என்று கூறியுள்ளான். அந்தக் கனியைப் பாரிகூடப் பார்த்ததில்லை. ஆனால், அதைப் பார்த்த ஒருவர் உங்களிடம் வந்து சொல்லியுள்ளார் என்பது எவ்வளவு முக்கியமான செய்தி! என்னால் நம்பவே முடியவில்லை” என்று வியப்பில் திணறினார் கபிலர்.

`இயற்கையைப் பற்றிய மனிதப்பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருக்கிறது’ என்று கபிலர் சொன்ன சொல்லின் ஆழம் காண முயன்றார் திசைவேழர்.

``பகலில் அல்ல, இரவில்கூட விண்மீன்களைப் பார்க்க முடியாத அளவுக்கு, அகந்தையும் ஆணவமும் சில நேரங்களில் கண்களை மறைத்துவிடுகின்றன” என்றார் திசைவேழர்.

இதற்கு என்ன மறுமொழி சொல்வதெனத் தெரியவில்லை. அசையும் அவரது வலதுகால் பாதத்தை மெள்ளப் பிடித்தபடி, ``அசைய வேண்டாம். எல்லாம் சரியாகும்” என்றார் கபிலர்.

பெரும்புலவனின் கைவிரல்கள் பாதத்திடம் பேசிய மொழி கேட்டு திசைவேழரின் கண்கள் கலங்கின.

திகாலையில் புறப்பட்ட நீலனும் உதிரனும் இரு குன்றுகள் தாண்டி அருவியின் அருகில் இருந்த மருத்துவக் குடிலை வந்தடைந்தனர். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவு மிகக் கடினமான காயங்கள் ஏற்பட்டிருந்ததால் இந்த இடம்வைத்தே மருத்துவம் பார்த்தனர். இப்போது அந்த வீரனின் உடல் முழுமையாகக் குணமாகிவிட்டது. நெடிய உயரமும் எல்லையற்ற வலிமையும்கொண்ட அவனது உடலை, சிதைவிலிருந்து முழுமையாக மீட்டிருந்தனர் பறம்பு மருத்துவர்கள்.

நீலனும் உதிரனும் அந்த இடம் வந்து தலைமை மருத்துவரைக் கண்டு வணங்கினர். ``எல்லா வகைகளிலும் அவன் குணமாகிவிட்டான்” என்றார் அவர்.

``ஆனால் பேசத்தான் மறுக்கிறான். அதுதான் ஏன் எனப் புரியவில்லை” என்றார் உடன் இருந்த இன்னொரு மருத்துவர்.

``மற்ற வீரர்களோ, தலைவனின் உத்தரவின்றிப் பேசுதல் முறையன்று என்று சொல்கிறார்கள்” என்றார் அருகில் இருந்த உதவியாளர்.

``அவர்களின் குலம் முழுமையாக அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களும் மரணத்தைவிடக் கொடும்வேதனையை அனுபவித்து மீண்டுள்ளனர். அதனால், அச்சம் அவர்களின் ஆழ்மனம் வரை பதிந்திருக்கும். எவரையும் எளிதில் நம்பிவிட முடியாத மனநிலையில் அவர்கள் இருக்கக்கூடும். பறம்பைப் பற்றி அவர்கள் பெரிதாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். எனவே, நம்பிக்கைகொள்ள முடியாத தயக்கமே அவர்களைப் பேசவிடாமல் செய்கிறது என நினைக்கிறேன்” என்றார் தலைமை மருத்துவர்.

எல்லாவற்றையும் கேட்ட இருவரும் புறப்பட்டு அந்த வீரனைக் காணச் சென்றனர். நாய்களை நன்கு பழக்கக்கூடியவர்களாக அந்த வீரர்கள் இருந்தனர். வேட்டைநாய்கள் அனைத்தையும் மிக அணுக்கமாக வைத்திருந்தனர். சுற்றிலும் இருந்த வீரர்கள் நீலனைக் கண்டதும் எழுந்து வணங்கி வழிவிட்டு நின்றனர். அவர்கள் தலைவன், குடிலுக்குள் தனித்திருந்தான். நீலனும் உதிரனும் உள்நுழைந்து அவன் முன் அமர்ந்தனர்.

உடல் முழுக்க வெட்டுத் தழும்புகள் இடைவெளியின்றி இருந்தன. பார்த்த கணம், உதிரனுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. `இவ்வளவு காயங்களையும் மீறி உயிர்பிழைத்து உட்கார்ந்திருக்கிறானே!’ என்ற வியப்பே ஆட்கொண்டது. சிதைந்த உடலை மீண்டும் இறுக்கிக்கட்டும் உடற்பயிற்சியைத் தொடங்கிவிட்டான் என்பதை நீலனால் உணர முடிந்தது. சென்றமுறை பார்த்ததற்கும் இந்தமுறை பார்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அவனுடைய கண்கள் கணித்தன.

p77e_1515567406.jpg

அவனை உற்றுப்பார்த்தபடி உதிரன் சொன்னான், ``உனது குடிலுக்குப் பின்னால் இருக்கும் அருவியின் இடப்புறம் சிறிது தொலைவு நடந்தால் வீரன் ஒருவனின் நடுகல் உண்டு. அவனது பெயர் கடுவன். கடுவனின் கதையை யாவரும் அறிவர். அதைக் கேட்டுத் தெரிந்துகொள். உனக்கு இனி தேவைப்படும் மருத்துவம் அதுதான்” சொல்லிவிட்டு எழுந்தான் உதிரன்.

வந்த இருவரும் நீண்டநேரம் பேசுவார்கள் என அவன் நினைத்திருந்தான். ஆனால் அவர்களோ, ஒற்றைச் சொல்லை மட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டனர். தொலைவில் இருவரின் உருவமும் மறையும் வரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

து ஒரு கொடும் கோடைக்காலம். மழையின்றி விளைச்சல் பாதித்ததால் சமவெளியில் இருந்த மனிதர்களின் சேமிப்புகள் எல்லாம் தீர்ந்தன. உண்ண உணவு ஏதும் இல்லாமல், மனிதர்கள், உணவு தேடி எங்கும் அலைந்துகொண்டிருந்தனர்.

எவ்வளவு கொடும்பஞ்சம் வந்தாலும் மலைவாழ் மக்களைக் கிழங்குகள் கைவிடாது. ஏழு வகைக் கிழங்குகள் மலையில் விளைகின்றன. நீரின்றிச் செடிகொடிகள் எல்லாம் செத்து மடிந்தாலும் மண்ணுக்குள் கிடக்கும் இந்தக் கிழங்குகள் மனிதனின் உணவுக்காக என்றென்றும் காத்திருப்பவை.

சித்திரவள்ளிக்கிழங்கும் காட்டுவள்ளிக் கிழங்கும் இதர கொடிகளும் மனிதர்கள் உண்ண எப்போதும் கிடைக்கக்கூடியவை. அவைகூட விளையாத கொடும்பஞ்சகாலம் என்றால் இருக்கவே இருக்கிறது நூரை, சவலன், நெடுவன், தீச்சி, நாச்சி, சம்பை, நூழி எனும் ஏழு வகையான கிழங்குகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு ஆழத்தில் விளைந்துகிடப்பவை. நிலம் அறிந்த மனிதர்கள் அந்தக் கிழங்குகள் இருக்கும் இடத்தை எளிதில் அடையாளம் கண்டு தோண்டி எடுப்பர்.p77f_1515567421.jpg

சமவெளியில் உண்ண வழியில்லாத நிலையில், பலரும் கிழங்குகளைத் தேடி மலைகளில் ஏறினர். போதன் என்பவன், பட்டினிகிடக்கும் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, கிழங்கு தேடிப் பச்சைமலையில் ஏறியுள்ளான். காலையிலிருந்து உச்சிப்பொழுது வரை தேடி அலைந்துள்ளான். மிகச்சிறிய அளவிலான இரு கிழங்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனாலும் விடாமல் தேடி அலையும்போது பாறை ஒன்றில் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்த்துள்ளான். இளைஞனின் காலில் ஏதோ காயம்பட்டுக் குருதி வழிந்து ஓடியது. பச்சிலைகளைப் பறித்து, காயத்தின்மீது தேய்த்தபடி உட்கார்ந்திருக்கிறான் அந்த இளைஞன். அவன் மலைமகன் என்பதை, பார்த்ததும் போதன் புரிந்துகொண்டான். `இவனிடம் கேட்டால் நமக்கு வழி பிறக்கும்!’ என நினைத்து, ``எத்திசை போனால் கிழங்கு கிடைக்கும்?” எனக் கேட்டான்.

அவன் பதில் ஏதும் சொல்லாமல் போதன் கையில் வைத்திருந்த இரு கிழங்குகளையே உற்றுப்பார்த்தான். ``கேள்விக்கு விடை சொல்லாமல், கைகளில் இருக்கும் கிழங்குகளையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டான் போதன்.

அதற்கு அந்த இளைஞன், ``நீ கையில் வைத்திருப்பது நூழிக்கிழங்கின் வகை. புதிதாகச் சாப்பிடுகிறவர்களுக்கு இது ஒவ்வாது. இதில் உள்ள கருவிதைகள் செரிமானம் ஆகாது” என்றான்.

``வீட்டில் கொடும்பட்டினியில் கிடக்கிறார்கள். அவர்களின் பசிக்கு எதுவும் உணவுதான். புதிதாகக் கிழங்குகள் கிடைக்க வழியிருந்தால் சொல்” எனக் கேட்க, இளைஞனோ அருவி விழும் பாறையைக் காட்டி, “அந்தத் திசையில் போய்ப்பாருங்கள், சித்திரவள்ளிக்கிழங்கு கிடைக்கும்” என்றான்.

``சரி” என்று கூறிப் புறப்படும்போது போதன் கேட்டான், ``நீ பறம்பைச் சேர்ந்தவனா?”

``ஆம். எனது பெயர் கடுவன்.”

“அப்படியென்றால் உன்னை நம்பலாம்” எனச் சொல்லி, கையில் வைத்திருந்த நீர்க்குடுவையையும் கிழங்குகளையும் அவனிடம் கொடுத்துவிட்டு. “இதைப் பார்த்துக்கொள். நான் அந்த இடம் சென்று கிழங்கைத் தோண்டிவந்ததும் வாங்கிக்கொள்கிறேன்” என்றான்.

அலைந்து தவித்து, மிகவும் சோர்வுற்று இருக்கும் ஒருவன் சொல்கிறானே என்று கடுவனும் அதை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிவைத்தான்.

போதன் சென்ற பிறகு காயங்களில் வழியும் குருதி நின்றுவிட்டதா எனப் பார்த்தபடி கடுவன் உட்கார்ந்திருந்தான். அவன் அருகில் போதன் வைத்துவிட்டுப் போன இரு கிழங்குகளும் நீர்க்குடுவையும் இருந்தன. சிறிது நேரத்தில் பெருமுயல் ஒன்று கடுவன் உட்கார்ந்திருந்த பாறையின் வலப்புறமாகத் தவ்விப் புதருக்குள் ஓடியது.

பார்த்தவுடன் கடுவனுக்கு போதனின் உயிரற்ற குரல் நினைவுக்கு வந்தது. கொடும்பட்டினியில் குடும்பம் கிடப்பதால் நூழிக்கிழங்கை எடுத்துப் போகிறான். `இது புதியவருக்குச் சேராதே!’ என நினைத்தவன், `இந்த முயலைப் பிடித்துக்கொடுத்தால் அவன் குடும்பத்துக்கு உணவாகும்’ எனச் சிந்தித்தபடி கையில் இருந்த மூங்கில்குச்சியை எடுத்துக்கொண்டு சட்டெனப் புதரை நோக்கித் தாவினான்.

அந்தப் புதர் முழுவதும் கிண்டிப் பார்த்தான், முயல் தென்படவில்லை. எந்தத் திசையில் போயிருக்கும் எனக் கால்தடம் பார்த்தான். எதுவும் தென்படவில்லை. மழைக்காலத்தில் எளிதில் தடம் அறியலாம், கோடையில் தடம் அறிவது கடினம். எங்கே போயிருக்கும் எனக் கணித்துக் கீழ்திசை நோக்கி, புதர்களைக் கிளறியபடி போனான். நீண்ட தொலைவு கீழிறங்கிச் சென்றான். முயல் அவனது கண்ணில் படவே இல்லை. மிகவும் சோர்வடைந்து பாறை நோக்கி நடந்தான்.

புதர்களுக்குள் நுழைந்து இங்குமங்கும் தேடியதில் குச்சிகள் கிழித்து, காயத்திலிருந்து மீண்டும் குருதி வழிந்தது. `பச்சிலையைத் தேய்ப்போம்!’ என எண்ணியபடி பாறையின் மீது ஏறி அமர்ந்தான். காய்ந்த குச்சிகளின் கீறல் அளவற்றதாக இருந்தன. `எப்படியாவது பிடிக்க வேண்டுமே என்ற பதற்றத்தில், நிதானமின்றிப் புதருக்குள் ஓடியுள்ளோம்’ என நினைத்தபடி பச்சிலையை எடுத்துத் தேய்த்தான்.

காயத்தில் எரிச்சல் அதிகமாக இருக்கிறதே என்று பற்களைக் கடித்துக்கொண்டே பாறையைப் பார்த்தான். வைத்துவிட்டுப் போன இடத்தில் அந்த இரு கிழங்குகளும் இல்லை. நீர்க்குடுவை மட்டும் ஓரத்தில் உருண்டுகிடந்தது. சற்றே பதற்றமடைந்து இங்குமங்குமாகத் தேடினான். எங்கும் இல்லை. ஏதோ விலங்கு வந்து அதைத் தின்றுவிட்டுப் போய்விட்டது என்பது தெரிந்தது.

போதன் வந்து கேட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில், பாறையைச் சுற்றி எங்காவது விழுந்துகிடக்கிறதா எனத் தேடினான். எதுவும் கண்களில் படவில்லை. நேரமாகிக்கொண்டிருந்தது. `அடுத்து என்ன செய்யலாம்?’ எனச் சிந்தித்தான். எங்கிருந்தாவது வேறு கிழங்குகளைத் தோண்டி எடுத்துவந்துவிடலாமா என எண்ணிக்கொண்டிருந்தபோது தொலைவில் போதன்  வருவது தெரிந்தது.

கடுவன், பதற்றத்தோடு அவனது வரவைப் பார்த்துக்கொண்டிருந்தான். போதனின் கையில் சித்திரவள்ளிக்கிழங்குகள் சில இருந்தன. சற்று மகிழ்வோடுதான் அவன் வந்தான். “நீ சரியான இடத்தைச் சொன்னாய், உனக்கு நன்றி” என்று சொல்லியபடியே பாறையின் மீதிருந்த நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டு கிழங்குகளைத் தேடினான். அவற்றைக் காணவில்லை. அப்பக்கம் இருக்குமோ என நினைத்து கடுவனின் பின்திசையில் பார்த்தான். அங்கும் இல்லை. தேடியபடியே, “எங்கே கிழங்குகள்?” என்றான்.

கடுவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தயக்கத்தில் சொற்கள் வரவில்லை.

போதனின் கண்கள் தேடியபடியே “கிழங்குகள் எங்கே?” என மீண்டும்  கேட்டான்.

தயக்கத்தோடு கடுவன் சொன்னான், ``அவற்றை ஏதோ விலங்கு தின்றுவிட்டது.”

அதிர்ச்சியானான் போதன். தலையை மறுத்து ஆட்டி “என்ன சொல்கிறாய்..?” எனக் கேட்டான்.

“முயலொன்று பார்வையில் பட்டது, உங்களுக்குக் கொடுக்கலாமே என அதைப் பிடிக்க ஓடினேன். அந்த நேரத்தில் ஏதோ ஒரு விலங்கு, கிழங்குகளைத் தின்றுவிட்டது” என்றான் மிகுந்த கவலையோடு.

அதிர்ச்சியிலிருந்து மீளாத போதன், “முயல் எங்கே?” என்றான்.

``பிடிக்க முடியவில்லை. தப்பிச்சென்று விட்டது.”

``என்னை ஏமாற்றப்பார்க்கிறாய். கிழங்குகளைத் தின்றுவிட்டு, என்னிடம் மறைக்க, பொய் சொல்கிறாய்” என்றான்.

கடுவன் மிகுந்த பதற்றத்துக்குள்ளானான், “நான் பொய் சொல்லவில்லை. உங்களுக்குக் கொடுக்கத்தான் முயலைப் பிடிக்கப் போனேன், அவசரத்தில் கிழங்கை எடுத்துக்கொண்டு போகாமல் இங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டேன். அதுதான் நான் செய்த தவறு. என்னை மன்னியுங்கள்” என்றான்.

போதனோ, “நீ பறம்பைச் சேர்ந்தவன் என்பதால்தான் நம்பினேன், என்னை நீ ஏமாற்றிவிட்டாய்” என்றான்.

சொற்கள் கடுவனை நிலைகுலையச்செய்தன. அவன் மீண்டும் மீண்டும் தனது நிலையை விளக்கிச் சொல்ல முயன்றான். போதன் அவனது சொல்லை நம்பவில்லை. “கிழங்கை நீ உட்கொண்டுவிட்டு விலங்கின் மீது பழிபோடுகிறாய்” என்று உறுதியாகச் சொன்னான்.

“சரி, தின்று முடித்துவிட்டாய். இனி நான் புலம்பி என்ன ஆகப்போகிறது, கொடும்பஞ்சம் பறம்பு மக்களையும் மாற்றிவிட்டது” என்று துயருற்றுப் புலம்பியபடியே புறப்பட்டான் போதன்.

சிறு பாறையின் மீது நின்றுகொண்டிருந்த கடுவன் இடுப்பில் இருந்த குறுங்கத்தியை எடுத்தபடி, ``ஒரு கணம் நில்லுங்கள்” என்றான்.

நடக்கத் தொடங்கிய போதன் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தான்.

p77g_1515567442.jpg

பாறையின் மீது இருந்த கடுவன், குறுங்கத்தியை அடிவயிற்றின் இடப்புறம் அழுத்தி உள்நுழைத்தான்.

போதனுக்கு அவன் என்ன செய்கிறான் என்பது புரியவில்லை.

அடிவயிற்றின் இடப்புறம் உள்நுழைத்த கத்தியை வலப்புற முனைவரை கண்ணிமைக்கும் நேரத்தில் இழுத்தான்.

அப்போதுதான் போதனுக்கு அவனது செயல் புரிந்தது.

கத்தியை இழுத்துக்கொண்டிருக்கும்போதே கடுவன் சொன்னான், “எனது வயிற்றில் கிழங்கேதும் இருக்கிறதா எனப் பாருங்கள். செரிமானம் ஆகாத கருவிதைகள் ஒன்றேனும் இருக்கிறதா எனவும் பாருங்கள்” என்று சொல்லியபடி வேலையை முடித்தான்.

பதறிய போதன் அவனை நோக்கி ஓடும்போது பாறையிலிருந்து சரிந்துகொண்டிருந்தான் கடுவன். “என்னை மன்னித்துக்கொள்” என போதன் கதறியபடி அவனது தலையை ஏந்திப்பிடித்தபோது கடுவன் சொன்னான், “பறம்பின் மக்கள், நம்பிக்கைக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 66

 
 

 

p69h_1516185037.jpg

ஞ்சித்துறைக்கு அதிகாலையிலேயே வந்துவிட்டான் உதியஞ்சேரல். மன்னன் வந்ததால் பிற வணிக நடவடிக்கைகள் எல்லாம் சற்றே நிறுத்திவைக்கப் பட்டிருந்தன. அரச மாளிகையில் விருந்தினராகத் தங்கியிருந்த ஹிப்பாலஸுக்குச் செய்தி தெரிந்தபோது விடிந்து நீண்ட நேரமாகியிருந்தது. உதியஞ்சேரல் அதிகாலையிலேயே எழுந்து துறைமுகத்துக்கு ஏன் போனான் என்ற காரணம் புரியாத குழப்பத்தில் வேகவேகமாகப் புறப்பட்டு, துறைமுகம் நோக்கி விரைந்தான்.

யவனக் காவல் வீரர்கள் அறுவர் சூழ அவனது வண்டி புறப்பட்டது. புறப்படும் நேரத்தில் வந்து அவனுடன் இணைந்தான் திரேஷியன். பெரும்படையையும் வழிநடத்திச் செல்லும் வல்லமைகொண்ட அவனை ஹிப்பாலஸ் எந்நேரமும் உடன்வைத்துக்கொண்டான். இருவரும் துறைமுகம் அடைந்தபோது சேர அமைச்சன் நாகரையன் இருவரையும் வரவேற்றான்.

துறைமுக மாளிகையில் அரசன் இருப்பதாகக் கூறி, இருவரையும் அங்கு அழைத்துச்சென்றான். உதியஞ்சேரல், தன் தளபதி துடும்பனோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். ஹிப்பாலஸ் இங்கு வந்து நாள்கள் பல ஆகிவிட்டன. ஆனால், குட்டநாட்டுத் தளபதியை இதுவரை பார்க்கவில்லை. அரசவையிலும் அவன் இல்லை. போர் நடவடிக்கையில் தீவிரமாக இருப்பதால் தளபதி அவைக்கு வந்து சேர நாளாகும் என, விசாரித்ததில் தெரியவந்தது. அவன் எங்கு போயிருக்கிறான் என்பது அரண்மனையில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. இதுபோன்ற செய்திகளைப் பெறுவது யவனர்களுக்குக் கடினமில்லை. ஆனால், அரசனைத் தவிர வேறு யாருக்கும் இந்தச் செய்தி தெரியவில்லை என்பதை ஹிப்பாலஸ் உறுதிப்படுத்திக்கொண்டான். அதனால்தான் தளபதியின் நடவடிக்கையை அறியவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது.

p69i_1516185009.jpg

அரண்மனை நடவடிக்கைகளை அறிந்துகொள்வதில் பெருவணிகர்கள் எப்போதும் மிகக் கவனமாக இருப்பர். அவர்களால்கூட இந்தச் செய்தியை அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சற்றும் எதிர்பாராமல் இன்று காலை துறைமுக மாளிகையில் அரசனோடு அமர்ந்திருந்தான் தளபதி துடும்பன். ஹிப்பாலஸும் திரேஷியனும் இன்றுதான் அவனை முதன்முதலாகப் பார்க்கின்றனர். முதல் தோற்றத்திலேயே அவன்தான் குட்டநாட்டுத் தளபதி என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது.

திரேஷியன்போல மிக உயரமான உருண்டு திரண்ட உடலமைப்போடு இருந்தான் துடும்பன். யவன விருந்தினரை எழுந்து வணங்கினான். ஹிப்பாலஸ் மன்னனுக்கு முகம்மன் கூறி இருக்கையில் அமர்ந்தான்.

``அதிகாலையிலேயே வந்துவிட்டீர்களா மன்னா?” என்று பேச்சைத் தொடங்கினான் ஹிப்பாலஸ்.

``ஆம். கப்பல்கள் வந்துவிட்ட செய்தி கிடைத்ததும் புறப்பட்டு வந்தேன்” என்றான்.

என்ன கப்பல், எங்கிருந்து வந்துள்ளது என்று எந்த விளக்கமும் இல்லாமலிருந்தது உதியஞ்சேரலின் கூற்று.

சற்று அமைதிக்குப் பிறகு ஹிப்பாலஸை அழைத்துக்கொண்டு மாளிகையின் பின்புறப் படிக்கட்டின் வழியாக மேல்மாடத்துக்கு நடந்தான் உதியஞ்சேரல். துடும்பனும் திரேஷியனும் கீழேயே இருந்தனர்.

துறைமுகத்தில் வரிசைகொண்டு நிற்கும் கப்பல்களை மேல்மாடத்திலிருந்து பார்த்தனர் இருவரும். துறைமுகம் எங்கும் படைவீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதையும் புதிதாக நிறைய கப்பல்கள் வந்துள்ளதையும் பார்த்தபடி ஹிப்பாலஸ் நின்றுகொண்டிருந்தான்.

``நான் நீண்டகாலம் எதிர்பார்த்துக் காத்திருந்தது இன்று வந்து சேர்ந்துள்ளது” என்றான் உதியஞ்சேரல்.

``உங்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே அதை உணர்த்துகிறது” என்றான் ஹிப்பாலஸ்.

``சாலமலையைக் கடந்தே பறம்பின் எல்லைக்குள் நம்மால் நுழைய முடியும். படைகள் எளிமையாக நுழையக்கூடிய வாகான பகுதிகள் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவற்றின் வழியே உள்நுழைவதற்குத்தான் இதுவரை முயன்றுள்ளோம். அவ்வாறு முயலும்போதெல்லாம் எளிய வழியிலிருந்து அடர்காட்டு வழியே நம்மை உள்ளிழுத்துத் தாக்கும் திட்டத்தை நிறைவேற்றுவான் பாரி. இந்த முறை நமது திட்டமே அடர்காட்டு வழியே உள்நுழைவதுதான் என்று நான் முடிவுசெய்துள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் முடிவுறுவதற்காகத்தான் நான் காத்திருந்தேன்’’ என்று சொல்லியபடியே மாடத்திலிருந்து கீழிறங்கி, துறைமுகம் நோக்கி நடந்தான் உதியஞ்சேரல். அவனைப் பின்தொடர்ந்தான் ஹிப்பாலஸ்.

வந்து நிற்கும் புதிய கப்பல்களிலிருந்து பொருள்களை இறக்குவதற்கான ஆயத்தவேலைகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. எண்ணற்ற படைவீரர்கள் வரிசையாக வந்து நின்றவண்ணம் இருந்தனர். இவர்கள் என்ன பொருளை இறக்கப் போகிறார்கள் எனத் தெரியாத குழப்பத்தில் இங்கும் அங்கும் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான் ஹிப்பாலஸ்.

`இதைத் தாண்டி அருகில் செல்ல வேண்டாம்’ என்று மன்னருக்குச் சொல்வதற்காக, குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டிருந்தான் துடும்பன். அந்த இடம் வந்ததும் உதியஞ்சேரல் நின்றான். உடன் வந்த ஹிப்பாலஸும் மன்னனோடு சேர்ந்து நின்று கொண்டான். காலை நேரக் கடற்காற்று சற்று அதிகமாக வீசியது. அலைகள் விடாது வந்து கரை மோதி ஓசை எழுப்பியபடியிருந்தன. படைவீரர்கள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

``அப்படி என்னதான் கொண்டு வந்திருக்கிறார்கள்?’’ என்று ஹிப்பாலஸ் ஆவலோடு கலன்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென ஊளையிடும் ஓசை கேட்டது. எங்கிருந்து இந்த ஓசை வருகிறது என அவன் சிந்திப்பதற்குள் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணற்ற ஓசைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பேரோசையாக மாறி, கரையில் நிற்பவர்களை நடுங்கச் செய்தன.

உதியஞ்சேரல், ஒரு கணம் மிரண்டு நின்றான். ஹிப்பாலஸுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, அளவிட முடியாததாக இருந்தது. ``அந்தக் கப்பலுக்குள் என்னதான் இருக்கிறது? அலையை மிஞ்சும் பேரோசை நம்மை  நிலைகுலையவைக்கிறது” என்றான்.

ஏற்பட்ட அதிர்ச்சியைக் கடந்து மகிழ்ச்சியை வெளிக்காட்டத் தொடங்கினான் உதியஞ்சேரல். ``இதைக் கொண்டுவரத்தான் இவ்வளவு காலமானது. கடைசியாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டான் என் தளபதி” என்று பாராட்டினான். தோள் தட்டிப் பாராட்டு பெறும் துடியனின் பக்கம் திரும்ப ஹிப்பாலஸ் முயன்றான். ஆனால், அவனுடைய கண்களோ கப்பலைவிட்டு அசையவில்லை. அங்கு தீவிரமான வேலை ஏதோ நடந்துகொண்டிருக்கிறது.

கப்பலின் அடித்தளத்திலிருந்து பெரும்மரச்சட்டங்களின் வழியிலான நாற்சதுரக் கூடுகளை இரும்புக்கம்பிகளால் கட்டி மேலேற்றிக்கொண்டிருந்தனர். ஊளையின் ஓசை பெருகியபடியே இருந்தது. அதைவிடப் பெருங்குரலில் பேசினான் உதியஞ்சேரல், ``இந்தக் கப்பல் எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா?”

`தெரியாது’ என்று ஹிப்பாலஸ் தலையை மறுத்து ஆட்டினான்.

``நக்கவாரத் தீவிலிருந்து.”

அதிர்ந்தான் ஹிப்பாலஸ். ``அந்தத் தீவுக்குள் மனிதக்கறி தின்னும் மனிதர்கள் மட்டுமே இருப்பதாகத்தானே கேள்விப்பட்டுள்ளேன். அங்கு எப்படி?”

அந்தத் தீவு மிக நீளமானது. அதன் கீழ்ப்புறம் மனிதக்கறி தின்னும் மனிதர்கள் உள்ளனர். மேற்புறம் இன்னொரு மனிதக்கூட்டம் உள்ளது. அவர்களுடன்தான் நாம் உறவை உருவாக்கியுள்ளோம்.”

மரச்சட்டத்தால் ஆன பெருங்கூண்டு ஒன்றை, கப்பலின் மேல்தளத்திலிருந்து கரைக்குக் கொண்டுவர முயற்சி நடந்தது. அடித்தொண்டையைக் கிழித்துக்கொண்டு அவை வெளிப்படுத்திய பேரோசை, வீரர்களை அஞ்சி நடுங்கவைத்தது. ஆனால், அந்த மரச்சட்டகங்களைக் கொண்டுவந்த அந்தத் தீவுவாசிகள் அந்த ஓசையைப் பொருட்படுத்தவேயில்லை.

கழுத்தை மேலும் உயர்த்தியபடி பார்த்துக்கொண்டிருந்த ஹிப்பாலஸின் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.

``நிலப்பரப்பெங்கும் இல்லாத புது வகையான விலங்கு இது” என்றான் உதியஞ்சேரல். ஹிப்பாலஸின் ஆர்வம் எல்லை கடந்ததாக இருந்தது. முழு விசையோடு மரச்சட்டகங்களைச் சறுக்குப்பலகையின் வழியே கப்பலின் மேலிருந்து கரைக்கு இறக்கினர். மீண்டும் ஊளையிடும் ஓசை, காற்றைக் கிழித்துக்கொண்டிருந்தது.

p69f_1516184995.jpg

உதியஞ்சேரல் சொன்னான், ``இவைதான் தோகைநாய்கள்.”

ஹிப்பாலஸ் கேள்விப்பட்டதில்லை. ஊளையிடும் ஓசையின் மிரட்டல் ஒருபக்கம். அவற்றை மரச்சட்டங்களின் வழியாகக் கட்டியிழுக்க வீரர்கள் படும் பாட்டைப் பார்த்தபடி, உதியஞ்சேரலின் கூற்றைக் கேட்கத் தொடர்ந்து முயன்றான் ஹிப்பாலஸ். தலையை இந்தப் பக்கம் திருப்புவதா அந்தப் பக்கம் திருப்புவதா என்ற குழப்பம் கணம்தோறும் ஏற்பட்டபடி இருந்தது.

அருகில் இருந்த துடும்பன்தான் சொன்னான், ``தீவுகளில் மிகக் கொடுமையான மனிதர்களும் விலங்குகளும் இருப்பது நக்கவாரத் தீவில்தான். அந்தத் தீவில் உள்ளதிலேயே மிகக் கொடுமையான விலங்கினம் இதுதான்.

கீரியைப்போன்ற நீள்வடிவ உடலும் வாலும் கொண்ட அமைப்பு. வால் நிறைய தோகையும் கொண்டது. நாயின் அளவு உயரம் உடையது. உடல் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு அதனுடைய நீள்வாய். குதிரையின் கழுத்துப் பகுதியை ஒரே கடியில் எடுத்துவிடக்கூடியது. இதன் சிறப்பே தரையில் எவ்வளவு வேகமாக ஓடுமோ அதே அளவு வேகத்தோடு புதரின் மீதும் மரக்கொப்பின் மீதும் ஓடுவதுதான். மரத்தின் மீதிருந்து பாய்ந்து கீழிறங்கும்போது அதன் வால் பகுதி சிலிர்த்து தோகை முழுவதும் விரிந்துவிடும். பெரும் ஊளையோடு மரத்தின் மீதிருந்து விரிந்த தோகையோடு பாய்ந்து இறங்கும் இதைப் பார்த்தால் எப்படையும் சிதறித் தெறிக்கும்.

குறிப்பாக, அடர்காட்டில் எதிரியின் படையில் இருக்கும் விலங்குகளை அழிக்க,  இதற்கு இணையான இன்னொரு விலங்கு இல்லை. பாரியின் பெரும்பலமாக எல்லோரும் சொல்வது அவனது குதிரைப்படையைத்தான். தோகைநாயின் தாக்குதலால் அவனது குதிரைப்படை உருத்தெரியாமல் அழியும்” என்றான்.

ஊளையிடும் ஓசை காதடைக்கச் செய்தது. காலை வெயில் சுள்ளென அடித்துக்கொண்டிருந்தது. ஹிப்பாலஸால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. துடும்பன் விடாமல் பேசினான். பல நாள்களாகக் கடற் பயணம் செய்ததால், தோகைநாயின் ஓசை துடும்பனுக்குப் பழகிவிட்டது. ஆனால், மற்றவர்களுக்கு அப்படியல்ல. ஒவ்வொரு மரச்சட்டகத்திலும் மூன்று தோகைநாய்கள் இருப்பதுபோல வடிவமைத்திருந்தனர்.

ஹிப்பாலஸ், சட்டகங்களுக்குள் அதன் உருவத்தை உற்றுப்பார்க்க முயன்றான். ஆனால், நிற்காமல் அது உள்ளுக்குள் சுழன்றபடி பெருங்கத்தல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இதற்குமேல் இந்த இடத்தில் நிற்க வேண்டாம் என முடிவுசெய்து, ``மாளிகைக்குப் போவோமா?” எனக் கேட்டான். சரியெனச் சொல்லி அழைத்துவந்தான் உதியஞ்சேரல்.

மாளிகைக்கு வந்ததும் இருவருக்கும் பழச்சாறு கொடுக்கப்பட்டது. அருந்தியபோதுதான் சற்று தெளிச்சி வந்தது. ஆனால்,  ஊளையின் ஓசை நிற்காமல் கேட்டுக் கொண்டே இருந்தது. இந்த நாய்களைப் போரில் பயன்படுத்த, தீவிலிருந்து கொண்டுவரப்பட்ட மனிதர்களும் மரச்சட்டகங்களுக்குப் பக்கத்தில் வந்துகொண்டிருந்தனர். அவர்களின் உடலமைப்பும் உடலின் மேல் தொங்கிக்கொண்டிருக்கும் பொருள்களும் காண்போரை நடுங்கச்செய்வதாக இருந்தன.

p69e_1516184961.jpg

ஹிப்பாலஸின் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தன. ஆனால், உதியஞ்சேரலின் எண்ணங்கள் நிதானம்கொண்டிருந்தன. ``கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் தொடர்ந்து முயன்றுவருகிறோம். குடநாட்டினரும் அவ்வப்போது முயல்கின்றனர். அப்படியிருந்தும் பறம்புநாட்டை வீழ்த்த முடியவில்லை. அதற்கான அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா?”

மற்ற எல்லோரையும்விட பறம்பை மிக நன்கு புரிந்துவைத்துள்ளவன் உதியஞ்சேரல்தான் என்பது ஹிப்பாலஸுக்குத் தெரியும். எனவே, அவனது கேள்விக்கு சிந்தித்து விடை சொன்னான், ``அரண் அமைத்து நிற்கும் பறம்புநாட்டின் மலைகள்தான் காரணம்.”

``இல்லை” என்றான் உதியஞ்சேரல்.

தொடர்ந்து அவன் சொல்லப்போகும் சொல்லை உற்று கவனித்தான் ஹிப்பாலஸ். தோகைநாயின் நீள் ஊளை சத்தம் காதுகளுக்குள் இடைவிடாது  அறைந்துகொண்டிருந்தது.

ஓசைகளில் எத்தனையோ வகையுண்டு. அவற்றில், வெளிப்புறம் பெருக்கெடுக்கும் ஓசை ஒரு வகை. ஆனால், சில ஓசைகள் உள்ளுக்குள் கூர்மைகொண்டு இறங்கக்கூடியவை; ஆழ்மனதில் இருக்கும் அச்சங்களை எளிதில் கிளறிவிடக்கூடியவை. தோகைநாயின் ஓசை வெளிப்புறமும் பெருக்கெடுக்கிறது. அதே நேரத்தில் ஆழ்மன அச்சத்தையும் விடாமல் கிளறுகிறது. எனவே, மனதை நிலைகொள்ளச் செய்ய முடியவில்லை. அந்த ஓசை நின்ற கணத்தில் உதியஞ்சேரல் சொன்னான், ``பறம்பின் மலைகள் அல்ல, பாதைகள்தான் காரணம்.”

ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை. ``என்ன சொல்கிறாய்?” என்றான்.

``பறம்புநாடு முழுவதும் மனிதர்கள் உருவாக்கிய பாதைகளே கிடையாது என்பது மட்டுமல்ல, மனிதர்கள் பாதைகளை உருவாக்கக் கூடாது என்பதிலும் பாரி திடமான முடிவோடு இருக்கிறான்.’’

``பாதையை உருவாக்காதது பெரும்பலம் என்று சொல்ல முடியுமா?”

``அவன் இருப்பிடம் நோக்கி எப்படிப் போவது?” என மறுகேள்வி கேட்டான் உதியஞ்சேரல்.

ஹிப்பாலஸ் சற்றே அமைதியானான்.

``இப்பெரும் மலைத்தொடர் இயற்கையின் பேரரண். இதில் எவ்வியூர் எங்கே இருக்கிறது? போய்த் திரும்பும் ஒற்றர்களுக்கும் பாணர்களுக்கும் எவ்வியூர் எப்படி இருக்கிறது என்றுதான் சொல்லத் தெரிகிறதே தவிர, எங்கே இருக்கிறது எனச் சொல்லத் தெரியவில்லை. ஒவ்வொருவனும் ஒவ்வொரு திசையையும் குறிப்பையும் சொல்கிறான். ஒன்றுபோல் சொன்ன இரண்டு ஒற்றர்களை இதுவரை நான் காணவில்லை.”

ஹிப்பாலஸ் மலைத்துப்போய்க் கேட்டுக்கொண்டிருந்தான்.

``நாம் மலைக்குள் படை நடத்திப் போவதெல்லாம் தோராயமான கணிப்பில்தான்” என்று உதியஞ்சேரல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஹிப்பாலஸ் கேட்டான், ``அப்படியென்றால் பறம்பு மலைத்தொடர் முழுவதும் பாதைகளே இல்லையா?”

``உண்டு. விலங்குகள் உருவாக்கிய பாதைகள் உண்டு.”

``அதைப் பயன்படுத்தி முன்னேற முடியாதா?”

p69d_1516184937.jpg

வலதுகையை நீட்டியவுடன் இன்னொரு குவளை பழச்சாறு கொடுக்கப்பட்டது. அதை வாங்கி அருந்தியபடியே உதியஞ்சேரல் சொன்னான், ``காடுகளில் பாதைகளை விலங்குகளே உருவாக்குகின்றன. அதிலும் குறிப்பாக, யானைகள்தான் பெரும்பாலான பாதைகளை உருவாக்கக்கூடியவை. வேறு சில விலங்குகளும் பாதைகளை உருவாக்குகின்றன.”

ஹிப்பாலஸ் இரண்டாம் குவளை பழச்சாற்றில் பாதி குடித்தபடி அவசரமாகக் கேட்டான், ``யானைப் பாதையை மனிதர்களால் பயன்படுத்த முடியுமல்லவா?”

``முடியும். காட்டு வழிகளில் அமைந்துள்ள பாதைகள் எல்லாம் விலங்குகள் உருவாக்கிய பாதைகள்தான். அதன் பிறகு மனிதர்கள் தமது தேவைக்காக அதை விரிவுபடுத்தி அமைத்துக்கொள்கின்றனர். ஆனால், பறம்பில் அந்த வேலை எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் விலங்குப் பாதைகளைத் துல்லியமாகக் கணித்து நடக்கக்கூடிய மலைமக்கள் நிறையபேர் நம்மிடம் உண்டு”.

``அவர்களை முன்களத்தில் பயன்படுத்தி, சிக்கலைத் தீர்க்க முடியாதா?’’

``முடியாது.”

``ஏன்?” என்று வேகமாகக் கேட்டான் ஹிப்பாலஸ்.

சற்றே நக்கலான சிரிப்போடு உதியஞ்சேரல் சொன்னான், ``விலங்குகளின் பாதைகள் எல்லாம் எவ்வியூருக்கா போய்ச் சேர்கின்றன? பாரி, காட்டு மனிதர்களின் கூட்டத்துக்குத்தான் தலைவன்; காட்டு விலங்குகளுக்கு அல்லவே!’’

அதிர்ந்து பார்த்தான் ஹிப்பாலஸ்.

குடித்து முடித்த குவளையைக் கீழே வைத்தபடி உதியஞ்சேரல் சொன்னான், ``விலங்குகளின் எல்லாப் பாதைகளும் இறுதியாகப் போய் முடிவது ஏதாவதொரு நீர்நிலையில்தான்.”

ஹிப்பாலஸ் கண்கள் அசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். சமவெளி மக்களின் வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது மேய்ச்சல். ``மலைவாசிகளுக்கு மேய்ச்சல் தெரியாது. நாயைத் தவிர எதையும் வளர்த்துப் பழகாதவர்கள். மடுவிலிருந்து பால் பீச்சிக் குடிக்கத் தெரியாத அறிவிலிகள்” என்றான், சற்றே கோபத்தோடு.

`பாதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், இதை ஏன் சொல்கிறான்?’ என ஹிப்பாலஸ் சிந்தித்துக்கொண்டிருக்கையில் உதியஞ்சேரல் சொன்னான், ``மேய்ச்சல் தெரிந்த மனிதர்களாக இருந்தால் மலையில் எவ்வளவு தொலைவு ஆவினங்களை மேய்த்தாலும் இரவில் வந்து ஊரடைவார்கள். இயல்பாகவே அந்த ஊரை நோக்கிப் பல பாதைகள் உருவாகிவிடுகின்றன. ஆனால், அங்கு அதற்கும் வழியில்லை” என்றான்.

p69c_1516184911.jpg

``எந்தப் பாதையையும் பாரி உருவாக்கிக்கொள்ளவில்லையா?”

``பெரும்பாலும் விலங்குகளின் பாதைகளையே பயன்படுத்துகிறான். தேவையான இடங்களில் மட்டும் விலகிச் செல்ல சிறுபாதைகளை உருவாக்கியுள்ளான். ஆனால், அவை மற்றவர்கள் கண்டறிய முடியாதபடி இருக்கின்றன. விலங்குகளின் பாதைகளிலிருந்து அவர்கள் எந்த இடம் பிரிந்து செல்ல வேண்டும் என்பதற்கான குறிப்பு அல்லது அடையாளம் எது என இன்று வரை தெரியவில்லை. அடையாளம் தெரியாமல் பாதையை விட்டு சற்று விலகினாலும் போதும், அடர்காட்டுக்குள் மீள முடியாமல் சிக்கிக்கொள்வோம்” என்றான்.

``அவனிடம் வலிமையான குதிரைப்படை இருக்கிறது என்கிறாய். குதிரைப்படையை வைத்துள்ள ஒருவன் எப்படி பாதைகளின் அடையாளங்களைப் பிறருக்குத் தெரியாமல் காப்பாற்ற முடியும்?”

“இன்றுவரை அவனால் முடிகிறது. நான் அறிந்தவரை பறம்பில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அந்தப் பாதை பற்றிய குறிப்பு தெரியும் என்று கருதுகிறேன்.”

``இது படை நடத்துவதற்கான அடிப்படையான சிக்கல். இதற்கு வழிவகை தெரியாமல் போர் தொடுக்க முடியாதே?”

``ஆம்” என்று மகிழ்வோடு சொன்ன உதியஞ்சேரல், ``இதற்கு வழிவகை தெரிந்ததால்தான் இப்போது போர் தொடுப்பதற்கான முயற்சியைத் தீவிரப்படுத்துகிறேன்.”

சற்றும் எதிர்பாராத பதிலாக இருந்தது. ஆர்வத்தோடு ஹிப்பாலஸ் கேட்டான், ``இந்தச் சிக்கலுக்கு என்ன வழிவகை கண்டாய்?”

பெரும் ஊளை ஓசை மீண்டும் கேட்டது. அடுத்த கப்பலிலிருந்து மரச்சட்டகங்களை இறக்கத் தொடங்கிவிட்டனர் என்பது தெரிந்தது. ஆனால், முன்பைவிட இந்த ஓசை இன்னும் கூர்மையாகக் காதின் உள்மடிப்புகளில் போய்க் குத்துவதாக இருந்தது. ஹிப்பாலஸ் தனது விரல்களால் காதுத் துளையை அடைப்பதற்காகக் கைகளைக் கொண்டுசென்றபோது, ஓசையோடு சேர்ந்து உதியஞ்சேரல் பீறிட்டான், ``தோகைநாய்கள்...”

`ஆமாம் தோகைநாய்கள்தான் கத்துகின்றன. இதை ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறான்?’ என்று ஹிப்பாலஸ் எண்ணியபோது கேள்விக்கான விடையாக இதைச் சொல்கிறான் என்பது புரிந்தது.

ஆத்திரம் கலந்த ஆர்வத்தோடு முன்பல்லைக் கடித்துக்கொண்டே உதியஞ்சேரல் சொன்னான். ``முன்கள தோகைநாயை பறம்பின் குதிரைப்படையின் மீது ஏவிவிட்டால், அது குதிரைகளின் குரல்வளையை அறுத்தெரியும். இது என்ன வகை விலங்கு? இதை எப்படி வீழ்த்துவது எனத் தெரியாத குழப்பத்தில் குதிரைப்படையின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, பின்வாங்கத் தொடங்குவார்கள் எதிரிகள். திரும்பிச் செல்லும் குதிரைகளைப் பின்தொடர்ந்து கடைசி வரை போகக்கூடியது தோகைநாய். அடர்காட்டுக்குள் மறைந்தபடி தொடரும் தோகைநாயை எளிதில் அவர்களால் வீழ்த்திவிட முடியாது. குதிரைப்படைகள் போய்ச் சேரும் கடைசி எல்லை வரை ஒரு தோகைநாய் போய்ச் சேர்ந்தால் போதும். கைவசம் இருக்கும் மீதத் தோகைநாய்கள் அதன் வாசனை பிடித்தே எந்த எல்லைக்கும் போய்விடக்கூடியவை.

குதிரைப்படையின் அழிவும் எவ்வியூர் நோக்கிய வழியும் ஒருங்கே நமக்குக் கிடைக்க உள்ளன. இந்தப் புதிய விலங்கின் எதிர்பாராத தாக்குதல் எதிரிகளை நிலைகுலையச் செய்துவிடும். அவர்களின் தாக்குதலால் தோகைநாய்கள் சில மரணிக்கலாம். ஆனால், அவர்களின் குதிரைகளை முழுமுற்றாக இவற்றால் அழிக்க முடியும். இவற்றின் குருதி தாகவேட்டை, எதையும் மிச்சம் வைக்காது.”

ஹிப்பாலஸ் வியந்தபடி கேட்டுக்கொண்டிருந்தான். தோகைநாயின் ஓசையைவிட ஆழத்தில் இறங்கிக்கொண்டிருந்தது உதியஞ்சேரலின் குரல். அவனது நுட்பமான திட்டமிடுதல், ஹிப்பாலஸை திகைப்பிலிருந்து மீள முடியாமல் செய்துகொண்டிருந்தது.

``மாலை அரண்மனைக்கு வாருங்கள், எனது முழுத்திட்டத்தையும் விளக்குகிறேன்” என்று சொல்லி விடைபெற்றான் உதியஞ்சேரல்.

p69b_1516184877.jpg

துறைமுகத்திலிருந்து வஞ்சி மாநகரின் விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்தான் ஹிப்பாலஸ். பகல் உணவு ஆயத்தமாக இருந்தது. ஆனால், அவனது எண்ணங்கள் உதியஞ்சேரலின் தீர்மானமான குரலிலிருந்து விடுபட முடியாதபடி இருந்தன.

நீண்ட நேரம் கழித்துதான் உணவருந்த வந்தான். அவனது வருகைக்காக திரேஷியன், எபிரஸ், கால்பா, பிலிப் ஆகிய நால்வரும் காத்திருந்தனர். உணவு மேசையிலும் அவனது வியப்பின் குரல் தொடர்ந்தது. உணவருந்திவிட்டு மீண்டும் பேசினான்.

``பாண்டியனின் செல்வச் செழிப்பையும் படையின் வலிமையையும் ஒப்பிட்டால் சேரனின் வலிமை சிறியதுதான். ஆனால், பறம்பைக் கைப்பற்றும் திட்டத்தில் சேரன் பெற்றிருக்கும் அனுபவமும் அவனது அறிவுநுட்பமும் பெரும்வியப்பில் ஆழ்த்துகின்றன. பாண்டிய பெரும்படை கீழ்த்திசையிலிருந்து முன்னேறும்போது சேர அரசர்கள் இருவரும் ஒருங்கிணைந்து தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்தால் பறம்பின் அரசனால் சில நாள்களுக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்றே கருதுகிறேன்” என்றான் ஹிப்பாலஸ்.

எபிரஸ் பேசத் தொடங்கினான். வழக்கமாக இதுபோன்ற பேச்சுகளில் மாலுமி கருத்து சொல்வது கிடையாது. ஆனால், இங்கு இருக்கும் யாரையும்விட, தமிழ்த் துறைமுகங்களுடனும் மன்னர்களுடனும் மிக நீண்டகாலப் பழக்கம் கொண்டவன் அவன்தான். எனவே, அவனது கருத்துக்கு ஹிப்பாலஸ் மிகுந்த மதிப்பு கொடுப்பான். எபிரஸும் எளிதில் பேசக்கூடியவன் அல்லன். ஆழ்கடலின் அமைதி எப்போதும் அவனுள் குடிகொண்டிருக்கும், மிகச்சில நேரங்களில்தான் அமைதியைக் கலைப்பான்.

``சேர அரசர்களான குடநாட்டு மன்னனும் குட்டநாட்டு மன்னனும் எத்தனையோ முறை பறம்பின் மீதான தாக்குதலை நடத்தியுள்ளனர். ஒவ்வொரு முறையும் இதுபோல புதிய உத்திகளைக் கண்டறிந்து அந்த நம்பிக்கையில்தான் தாக்குதலைத் தொடங்குகின்றனர். ஆனாலும், அவர்களால் தொடக்கக் கட்டத்தைக்கூடத் தாண்ட முடியவில்லை” என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டான் எபிரஸ்.  

``அது உண்மையாக இருக்கலாம். இப்போது முழு வீச்சில் இறுதிப்போருக்கு ஆயத்தமாகி விட்டார்கள். பாண்டியனும் பறம்பை நோக்கிப் படையைக் கிளப்பப் போகிறான் எனத் தெரிந்ததும், நிலைமையை இன்னும் தீவிரப் படுத்தியுள்ளனர். ஏனென்றால், அதன் பலன் தங்களுக்கே கிட்ட வேண்டும் என்று அவர்கள் மிக உறுதியாக உள்ளனர். இந்தப்  படையெடுப்பைப் பற்றி முழுமையாக விளக்கத்தான் இன்று இரவு என்னை அழைத்துள்ளான்” என்றான் ஹிப்பாலஸ்.

p69a_1516184848.jpg

அவர்கள் தொடர்ந்து பேசியபடியிருந்தனர். இரவு கவியத் தொடங்கியது. அரண்மனையின் அழைப்புக்காக ஆவலோடு காத்திருந்தான் ஹிப்பாலஸ். அதுவரை அவனோடு பேசிக்கொண்டிருந்தனர் மற்ற நால்வரும். பொழுது நீண்டுகொண்டேபோனது. அழைப்பு ஏதும் வரவில்லை. காரணமும் புரியவில்லை. ஆனாலும் காத்திருந்தான்.

`மிகுந்த உற்சாகத்தோடு உதியஞ்சேரல் சொல்லிச் சென்றானே... பிறகு ஏன் இன்னும் அழைக்காமல் இருக்கிறான்?’ என்று சிந்தித்தபடியிருந்தான் ஹிப்பாலஸ். முன்னிரவு முடியும் நேரம் நெருங்கிவிட்டது. இனி அழைப்பு வர வாய்ப்பில்லை எனத் தெரிந்து தூங்கச் சென்றனர். 

ஹிப்பாலஸால் தூங்க முடியவில்லை. உதியஞ்சேரல் சொன்ன செய்திகள் பலவும் நினைவில் வந்துகொண்டேயிருந்தன. தோகைநாய்களின் ஊளையை உதியஞ்சேரலின் குரல் விஞ்சியதை அவன் மனதுக்குள் மீட்டியபடியே இருந்தான். ஆனாலும் அவனது நினைவுப்பரப்பு எங்கும் தேவாங்கின் முகமே பரவியிருந்தது. பெருங்கடலுக்கு நடுவே நாவாய்களுக்குத் திசைகாட்டி அழைத்துச் செல்லும் அதன் ஆற்றல் அவனை விடாது தூண்டிக்கொண்டேயிருந்தது. நீலக்கடல் எங்கும் குறுக்கும் நெடுக்குமாக நாவாய்கள் கடந்து கொண்டிருக்கும் காட்சி அகல மறுத்தது. இமை மூடும்போதெல்லாம் தேவாங்கின் வட்டக்கண்கள் அவனை எட்டிப்பார்த்தபடியே இருந்தன.

பொழுது விடிந்து நெடுநேரமானபோதும் அவன் அறையிலிருந்து எழுந்து வரவில்லை. மற்ற நால்வரும் அவனுக்காகக் காத்திருந்தனர். நடுப்பகலில்தான் எழுந்து வந்தான். அப்போதுதான் அரண்மனையிலிருந்து வரச்சொல்லி அழைப்பும் வந்தது. வேகவேகமாகப் புறப்பட்டுப் போனான்.

அரசவைக்குள் நுழையும் வரை உடன் வந்த திரேஷியன், அவனுக்கான எல்லையறிந்து நின்று கொண்டான். உள்ளே போன ஹிப்பாலஸால், உதியஞ்சேரலைப் பார்த்த கணத்தில் அவனது முகத்தில் தெரிந்த குழப்பத்தை உணர முடிந்தது.

p69_1516184814.jpg

சற்று அமைதிக்குப் பிறகு உதியஞ்சேரல் பேசத் தொடங்கினான். ``நேற்று மாலை என் ஒற்றர்கள் கொண்டுவந்த செய்தி என்னைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அதனால்தான் உங்களை அழைக்க முடியவில்லை” என்றான்.

ஹிப்பாலஸ் உற்று கவனித்தான்.

``செங்கனச்சோழன் பெரும்படையோடு பறம்பின் மீதான போருக்கு ஆயத்தமாகிவிட்டான்” என்றான் உதியஞ்சேரல்.

ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை. ``சோழன் ஏன் பறம்பின் மீது போர் தொடுக்க வேண்டும்?”

``அதுதான் எனக்கும் புரியவில்லை. இதுவரை பறம்பின் மீது அவர்களுக்கு எந்தப் பகையும் உருவாகவில்லை. அப்படியிருக்க, அவன் ஏன் இவ்வளவு பெரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறான்?” என்று கூறிய உதியஞ்சேரல், சற்றே அமைதிக்குப் பிறகு சொன்னான், ``அவனது படையின் தன்மையையும் எண்ணிக்கைகளையும் பற்றி என் ஒற்றர்கள் சொல்லும் கணக்கை என்னால் நம்பவே முடியவில்லை.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 67

 

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p83a_1516706245.jpg

ருப்பன்குடி மூதாதையர்தாம் அதைக் கண்டறிந்தனர். எத்தனை தலைமுறைகளுக்கு முன்னர் அது நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. `எண்ணிலடங்கா காலத்துக்கு முன்னர் அது நிகழ்ந்தது’ எனச் சொல்வார்கள். அந்த ஆற்றுக்கு அப்போது பெயரிடப்படவில்லை. பெயரில்லாத அந்த ஆற்றின் வலக்கரை முழுவதும் செவல்படிந்த சிறுமண் பரப்பு. அதில் புதர் மண்டிய புற்காடு.

புல்லின் வகைகள்தாம் எத்தனை எத்தனை! வடிவத்திலும் நிறத்திலும் அவை ஏற்படுத்தும் வாசனையிலும் வகைப்படுத்த முடியாதவையாகத்தானே இன்று வரை இருக்கின்றன. பறவைகளும் விலங்குகளும் மேய்ந்தறியும் புல்லைக்கொண்டே மனிதன் தனக்கானதைக் கண்டறிந்தான். ஆவினத்தை மேய்த்துக் கொண்டிருக்கையில், புதர் ஒன்றில் நீள்தோகை கொண்ட பெரும்புல் விளைந்து கிடந்திருக்கிறது. மேய்த்துக்கொண்டிருந்தவன் அது என்ன வகைப் புல் என்பதை அறிய அதன் தோகையைக் கைகளால் பறித்துப்பார்க்க முயன்றிருக்கிறான். தோகையின் பக்கவாட்டுக் கூர்மை கிழித்துவிடக்கூடியதாக இருந்தது. அதன் நீள்தண்டு சற்றே வேறுபட்டு இருந்ததையும் பார்த்திருக்கிறான்.

மேய்ச்சல்வெளிதான் மனிதன் இயற்கையின் நுட்பத்தைக் கவனிக்கக் கிடைத்த முதற்பெரும் வாய்ப்பு. பறந்து அலையும் தும்பிகள் காலூன்றாப் புற்கள் எவை என்பது தொடங்கி, நீண்டிருக்கும் புல் நுனியில் செருகி நிற்கும் பனித்துளியின் கனம் வரை அனைத்தையும் அவன் அறிவின் சேகரமாக மாற்றிக்கொண்டிருந்தான்.

p83b_1516706266.jpg

கருநீல நிறமும் நெடுநீள் தோகையும் உடைய அந்தப் புல்லின் தண்டுப்பகுதியை ஒருநாள் தற்செயலாகக் கடித்துப்பார்த்தான். அதன் சாறு அவன் அறிந்திராத தித்திப்பைக் கொடுத்தது. மீண்டும் கடித்தான், தித்திப்பின் அளவு குறையவேயில்லை. மீண்டும் மீண்டும் கடித்துச் சுவைத்தான். சுவை குறையாத இந்தப் புல்லைப் பற்றித் தன் கூட்டத்தார் அனைவருக்கும் போய்ச் சொன்னான். அனைவரும் வந்து கடித்துச் சுவைத்தனர். அதைச் `சுவைப்புல்’ என்றே அழைத்தனர்.

அந்தச் சுவைப்புல் தனது கணுக்களிலிருந்து முளைவிடுவது அறிந்து, கரணைகளாக அதை வெட்டிப் புதிய இடத்தில் நட்டுவைத்தனர். கணுக்கள் தழைத்துப் பெரும்புற்களாகின. பல கரணைகளை ஒரே இடத்தில் பரவலாக நட்டுவைக்க சுவைப்புல் பெருங்காடென வளரத் தொடங்கியது.

இந்த அரிய புல்லைப் பற்றி மற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அறியத் தொடங்கினர். `கருப்பன் குடியினர், அரியவகை சுவைப்புல்லைப் பயிரிட்டு வளர்க்கின்றனர்’ என்ற செய்தி பரவ, பலரும் அவர்களிடம் வந்து சுவைப்புல்லைக் கேட்டு வாங்கிச் சென்றனர். நாளடைவில் `சுவைப்புல்’ என்ற பெயர் நீங்கி, அந்தக் குடியின் பெயரால் `கரும்பா புல்’லென்றும் `கரும்பெ’ன்றும் அதற்குப் பெயர் விளங்கிற்று.

தலைமுறைகள் பல கடந்தோடின. கருப்பன் குடியினர் கரும்பின் எண்ணற்ற நுட்பங்களைத் தங்களது பட்டறிவில் சேகரித்திருந்தனர். கணுக்களின் முகம் பார்த்துக் கரும்பின் சுவையைக் கணிக்கும் பேரறிவைப் பெற்றனர். புதிய நிலங்களில் எந்த வகைக் கரணைகளை நடவேண்டும் என்றும், எந்த வகைக் கரும்புகள் தித்திப்பின் உச்சம் எனவும் அவர்கள் துல்லியமாக அறிந்தனர். பனைச்சாற்றிலிருந்து காய்ச்சப்பட்ட இனிப்புக் கட்டியைப்போலக் கரும்பஞ்சாற்றிலிருந்தும் இனிப்புக் கட்டியைக் காய்ச்சி எடுத்தனர். செய்தி எங்கும் பரவியது. கரும்பென அழைக்கப்படும் சுவைப்புல் அரிதினும் அரியதொன்றாக எல்லோரும் பேசிய காலத்தில்தான், அந்தக் கொடும் தாக்குதல் நடந்தது.

பயிரிடுதலின் நுட்பத்தை அறிய தலைமுறை தலைமுறையாகத் தங்களை ஒடுக்கிக்கொண்டு மண்ணுள் புதைந்திருந்த கருப்பன் குடியினரின் மீது திடீர்த் தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் தங்களைச் `சோழர்குடி’ என முழங்கினர். இரக்கமற்ற கொடும்தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கருப்பன் குடியினர் சிதைவுற்று வீழ்ந்தனர்.

அவர்களை வெட்டி வீசி விளைநிலங்களையும் செல்வங் களையும் கைப்பற்றுவதுதான் அந்தக் காலத்து நடைமுறை. ஆனால், சோழர்குடியின் தலைவன், கருப்பன் குடியினரின் அறிவையும் ஆற்றலையும் நன்கு உணர்ந்தவனாக இருந்தான். எனவே, அந்தக் குடியினரை முழுமுற்றாக அழிக்கவில்லை. எல்லோரையும் விளை நிலங்களில் அடிமைகளாக மாற்றினான். கரும்பை எவ்வளவு அதிகமாக விளையவைக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக விளையவைத்தான்.

கரும்பின் சுவை எங்கும் பரவியது. பனைவெல்லத்தையும் ஈச்சவெல்லத்தையும் கரும்பின் வெல்லச்சுவை மிஞ்சியது. தலைமுறைகள் பல கடந்தாலும் கருப்பன் குடியின் அடிமை வாழ்வு முடிந்தபாடில்லை. அவர்கள் அளவுக்குக் கரும்பை அறிந்த மனிதக்கூட்டம் எதுவும் உருவாகவில்லை. இந்த நிலையில்தான் யவன வணிகம் தொடங்கியது. சேரனின் மிளகுதான் முதலில் யவனர்களை ஈர்த்தது. அந்த வணிகமே பெருமளவு நடந்துகொண்டிருந்தது. அப்போது இந்த நிலத்தில் வேறேதும் புதுமையாகக் கிடைக்காதா எனப் பல யவன வணிகர்கள் கடற்கரை நகரங்களுக்குத் தொடர்ந்து வரத் தொடங்கினர். அவர்களுக்குத் தரப்பட்ட விருந்தொன்றில் கரும்பு பரிமாறப்பட்டது. அதன் தித்திப்பும் தீஞ்சுவையும் அவர்களையும் மயக்கின.

கரும்பின் கெட்டிப்பாகும் விளையவைக்கக் கூடிய விதத்தில் கரும்பின் கரணைகளும் யவனம் நோக்கி நாவாய்களில் பயணப்படத் தொடங்கின. சோழ அரசனின் அவையில் யவனத்தேறலும் மினுக்கும் பாண்டங்களும் மாற்றுப்பொருளாக வந்திறங்கின. காலம் ஓடியபடி இருந்தது.

தம் குலத்தின் விடுதலையைத் தாம் பெற்றே ஆகவேண்டும் என்ற வேட்கையில் அவ்வப்போது கருப்பன்குடி வீரர்கள் முளைத்தெழுவர். ஆனால், அது எப்படியும் சோழனுக்குத் தெரிந்துவிடும். அந்தச் செயல் செய்தவர்களை அழித்தொழிப்பர். ஆனாலும் மொத்தக் குடியையும் அழிக்காமல் பாதுகாத்தனர். கரும்பின் வியப்புறும் சுவையும் நுட்பமும் சோழர்களுக்குத் தேவையாக இருந்தன.

p83c_1516706280.jpg

தீஞ்சுவைப் புல்லைக் கண்டறிந்த குடி, எண்ணிலடங்கா தலைமுறைகளாகக் கண்ணீர் சிந்தியபடியே இருந்தது. முளைத்தெழும் கரும்பின் முன் பகுதியில் கருப்பன் குடியின் கண்ணீர் தேங்கியே இருக்கும் என மக்கள் கருதினர். எப்படியாவது இந்த நிலையிலிருந்து மீளவேண்டும் எனத் திட்டமிட்டது வீரர்களின் கூட்டம் ஒன்று. அதற்குத் தலைமையேற்றவன் ஈங்கையன்.

எத்தனையோ முறை அழிக்கப்பட்ட அவர்களின் போராட்டத்தை இந்தமுறை அழித்துவிட முடியாதபடி நன்கு திட்டமிட்டான். ஈங்கையன் இணையற்ற வீரனாக இருந்தான். `தனிமனிதப் போரில் அவனை வெல்லக்கூடிய மனிதர்கள் எவரும் இல்லை’ எனப் பெயரெடுத்தான். தன் தோழர்களையும் அதேபோல வளர்த்தெடுத்தான். அவனது அறிவுக்கூர்மையும் ஆற்றலின் வலிமையும் பெரும்நம்பிக்கையைக் கொடுத்தன.

ஆனால், சோழன் இப்போது சிறுகுடியன் அல்லன்; பேரரசன். தன் மகன் செங்கனச் சோழனுக்கு சோழவேலன் முடிசூட்ட நாள் குறித்திருந்தான். முடிசூட்டு விழாவுக்கு முன்னர் நடக்கும் களப்பலி சடங்குக்காக சோழர்களின் குதிரைகள் கரும்புக் காட்டுக்குள் சீறிப்பாய்ந்தன. மீண்டும் எதிர்பாராத தாக்குதல். கருப்பன்குடி வீரர்கள் சிதைந்தனர். எதிரிகளின் படையை ஈங்கையன் தன்னந்தனியாக எதிர்கொண்டான். அவனது வாள்வீச்சில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தான் சோழநாட்டுத் தளபதி உறையன்.

ஆவேசமும் அதிசிறந்த வீரமும் உடைய ஈங்கையனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கினான் உறையன். முடிசூட்டு விழாக் காலத்தில் சோழப்படை பின்வாங்கிய செய்தி பேரரசனை எட்டுமாயின் தன்னைக் கொன்றளிப்பான் என முடிவு செய்த தளபதி, இரவோடு இரவாகப் பல மடங்கு படை திரட்டினான். பின்வாங்கி ஓடியவன், விரைந்து திரும்பி வருவான் என ஈங்கையன் எதிர்பார்த்தான். ஆனால், பொழுது விடிவதற்குள்  பெரும் படையோடு வந்து நிற்பான் என எதிர்பார்க்க வில்லை. எண்ணற்ற இனக்குழுக்களை அழித்து, பேரரசாக வளர்ந்து நிற்கும் அரசாட்சிக்கு முதுகெலும்பாக இருப்பது இத்தகைய படைவளம்தான்.

எதிரிகளின் படையை முடிந்தவரை போரிட்டு அழித்தனர் ஈங்கையனின் படையினர். சோழத் தளபதி உறையன் இந்தமுறையும் பின்வாங்க நேருமோ என அஞ்சும் அளவுக்கு இருந்தது ஈங்கையனின் தாக்குதல். ஆனால், அவனது வீரர்கள் பலரால் நிலைமையை நீண்டநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

எண்ணிக்கையில் மிகக் குறைந்த அவர்கள், கடுந்தாக்குதலுக்குப் பிறகு முழுமுற்றாகச் சூழப்பட்டனர். வீழ்ந்தவர்களை முழுமையாகக் கொன்றழிக்கத்தான் நினைத்தான் உறையன். ஆனால், இவர்களின் உடலமைப்பையும் வலிமையையும் கணித்து மிக நல்ல விலைக்கு விற்கலாம் என முடிவுசெய்து, விலங்கிட்டு இழுத்துச் சென்றான்.

அவன் கணித்ததுபோலவே, கடல் வணிகர்கள் மிக நல்ல விலைகொடுத்து இந்த அடிமைகளை வாங்கினர். புதிய அடிமைகளை அடிமைத் தொழிலுக்குப் பழக்குவது கொடூரமிக்கதொரு செயல். விலைக்கு வாங்கப்பட்டவர்களை ஊனமாக்காமல் அவர்களை உடலாலும் உள்ளத்தாலும் கூனிக்குறுகி உணர்ச்சியற்ற உயிரினமாக மாற்ற வேண்டும். இதைச் செய்து முடிக்க கப்பல் தலைவன் ஒவ்வொருவனும், ஒவ்வொரு வழிமுறையைப் பின்பற்றுவான்.

ஈங்கையன் கூட்டத்தை விலைக்கு வாங்கிய கப்பலின் தலைவனோ, அவர்களுக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் விலங்கு பூட்டி, கப்பலின் மேல் தளத்தில் அமரவைத்தான். கப்பல், புகாரிலிருந்து வைப்பூருக்கு வந்து சேர்ந்தது. வைப்பூரில் பொருள்கள் ஏற்ற இன்னும் இரண்டு நாள்களாகும் என்ற நிலையில் புதிதாக வாங்கியவர்களை முழு அடிமைகளாக மாற்றும் வேலையில் இறங்கினான். வாங்கப்பட்டவர்களின் தலைவனான ஈங்கையனை மீகானின் கூம்புமாடக் கம்பத்தில் கட்டினான். என்ன செய்யப்போகிறான் என்று மற்றவர்கள் மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தபோது அருகன்குடியில் வாங்கிய புதுச்சாட்டையோடு மூன்று பேர் மூன்று திசையில் நின்றனர்.

விளாசல் தொடங்கியது. விலங்கின் நரம்பிலும் மரத்தின் நரம்பிலும் செய்யப்பட்ட புதுச்சாட்டைகள் இடைவிடாமல் ஈங்கையனை வெட்டிச் சிதைத்தன. கண்கொண்டு பார்க்க முடியாத கொடுமை நடந்தேறியது. மற்ற வீரர்கள் கதறித் துடித்தனர். இழுபடும் சாட்டையின் வீச்சுக்கு ஏற்ப குருதித் துளிகள் நீண்டு சிதறின. எது செய்தும் காதுகொடுத்துக் கேட்க அங்கு யாருமில்லை. பகல் முழுவதும் அடித்தனர். உடலெங்கும் ரத்தவிளாறாக மாறிக் காலடியில் நிறைந்து நின்றது செங்குருதி. விலங்கிடப்பட்ட நிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் உள்ளம் ஒடுங்கிச் சிதைவுற்று அடிமைத்தனத்துக்குள் ஆழப்புதைய வேண்டும் என்பதற்குத்தான் இந்தக் கொடுமையைச் செய்கிறார்கள்.

மாலை மங்கியபோது ஈங்கையன் முழுமையாக நினைவிழந்தான். கப்பலில் ஏற்றப்படவேண்டிய பொருள்கள் வந்து சேர்ந்தன. அவற்றைக் கப்பலில் ஏற்றும் வரை அடிப்பதை நிறுத்தி அந்தப் பணியைச் செய்யத் தொடங்கினர். கம்பத்தில் கட்டப்பட்டிருந்த ஈங்கையன் மயங்கிய நிலையில் தலை தொங்கிக்கிடந்தான். விலங்கிடப்பட்ட அவன் தோழர்கள் செய்வதறியாது துடித்துக் கிடந்தனர். இந்த நிலையில்தான் துறைமுகத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து பெருநெருப்பு எழுந்தது. கப்பலில் இருந்தவர்கள் அதை அணைக்க ஓடினர். விலங்கிடப்பட்ட அடிமைகள் தங்களையோ, தங்கள் தலைவனையோ விடுவிக்க என்ன செய்வதென்று தெரியாமல் கதறித் துடித்தனர்.

நேரம் ஆக ஆக, நெருப்பு எங்கும் பரவியது. ஒருகட்டத்தில் அவர்கள் இருக்கும் கப்பலின் விளிம்புப் பகுதியில் நெருப்பு மேலேறிக் கொண்டிருந்தது. அவர்கள் பெருங்கூச்சல் எழுப்பினர். அப்போதுதான் திரையர் கூட்டம் நெருப்பினுள் நுழைந்து அவர்களை மீட்டது. 

பிலரும் உதிரனும் வேட்டுவன் பாறையிலிருந்து மீண்டும் எவ்வியூருக்குப் புறப்பட்டனர். வழியில்தான் ஈங்கையனின் கதையை உதிரன் கபிலருக்குச் சொல்லிக் கொண்டுவந்தான். ``இத்தனை மாதங்களாகியும் ஈங்கையனும் அவன் கூட்டத்தாரும் தாங்கள் யார் என்பதை வாய் திறந்து பேசவில்லை. `சோழப் பேரரசன்தான் தங்களின் எதிரி எனத் தெரிந்தால் யாரும் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க மாட்டார்கள்’ என்று அவர்கள் நினைத்துள்ளனர். அதுமட்டுமன்று, யாரிடமும் நம்பிக்கைகொள்ளும் சூழலும் அவர்களுக்கு இல்லை. அதனால்தான் அவர்கள் பேச்சற்று இருந்துள்ளனர்.

நம்மவர்கள் அவர்களை மீட்டதும் இங்கு வந்ததிலிருந்து நல்லதொரு மருத்துவம் செய்து அவர்கள் தலைவன் ஈங்கையனைக் காப்பாற்றியதும், அவர்களுக்கு நம் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கியுள்ளது. ஆனாலும் நாம் யார் என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் பேச மறுத்துள்ளனர். கடுவனின் கதையை அறிந்த பிறகுதான் நம்பிப் பேசத் தொடங்கினான் ஈங்கையன். அவர்களின் குடி அடைந்த துயரம் சொல்லிமாளாது” என்றான் உதிரன்.

கேட்டுக்கொண்டே நடந்த கபிலர், ``அடிக்கரும்பின் தித்திப்புக்காக மனம் எத்தனை முறை ஏங்கியுள்ளது! ஆனால், அவையெல்லாம் இந்தக் குடியின் குருதியில்தானே விளைந்துள்ளன. `பூத்த கரும்பும் காய்த்த நெல்லும் உடையது சோழனின் கழனி’ என்று புலவர்கள் பாடுகின்றனர். ஆனால், அந்தக் கழனி கரும்பாக்குடி சிந்திய குருதியால்தான் உலராமல் இருக்கிறது” என்றார்.

உதிரன், கபிலரின் சொற்களைக் கேட்டபடி அமைதிகொண்டு நடந்தான்.

p83d_1516706301.jpg

``நெருப்பிலே அழிந்துவிடாமல் இவர்களை மீட்டெடுத்ததன் மூலம் வாழ்வெல்லாம் மகிழ்ந்துண்ட கரும்பஞ்சாற்றுக்கும் வெல்லத்துக்கும் கைம்மாறு செய்துள்ளோம்” என்றார் கபிலர்.

``திரையர்கள் இருந்ததால்தான் இவர்களை மீட்டெடுக்க முடிந்தது. ஈங்கையனின் உருவ அமைப்பைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். அவ்வளவு திறன்வாய்ந்த ஒருவனைக் கம்பத்திலிருந்து பிய்த்தெடுத்துத் தோளிலே போட்டுத் தூக்கிக்கொண்டு நெருப்பிலிருந்து வெளியேறுவதெல்லாம் இயலுகிற செயலன்று” என்றான் உதிரன்.

சற்றே அமைதியுடன் நடந்த கபிலர் சொன்னார், ``வெற்றிலையும் கரும்பும் மனித குலம் இருக்கும் வரை தேவைப் பட்டுக்கொண்டே இருக்கும். தமது இலையாலும் தண்டாலும் சாற்றாலும் மனிதனுக்கு அருமருந்தைத் தந்தபடியேதான் இருக்கும். அந்த அரிய பயிரினங்களைக் கண்டறிந்த ஆதிகுடிகள் எப்படியெல்லாம் வேட்டையாடப்படுகிறார்கள்! அவர்கள் கண்டறிந்த  உயிர்ச் செல்வங்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா?” ஏக்கப்பெருமூச்சோடு பாறையைப் பிடித்து மேலேறிக் கொண்டிருந்தார் கபிலர்.

சொல்லின் வலி, உள்ளத்தின் உறுதியைத் தளர்த்தவல்லது. இதைவிடக் கடினமான செங்குத்துப்பாறையைக்கூட குனிந்து உட்காராமல் நிமிர்ந்தபடி மேலேறிய கபிலர் இந்தச் சிறு பாறையைக் கடக்க உட்கார்ந்து நகர்கிறார். அவரின் செயலை உன்னிப்பாகக் கவனித்த உதிரன், பேச்சை மாற்றி அவரின் எண்ணங்களைத் திருப்ப முயன்றான்.

``உங்களைக் காண வந்த பெரியவரோடு இரண்டு இளைஞர்கள் உதவிக்கு வந்தார்கள் அல்லவா?” என்றான்.

பாறையைக் கவனமாய்க் கடந்த பிறகு நிமிர்ந்த கபிலர், ``ஆம், திசைவேழரோடு இருவர் வந்திருந்தனர்” என்றார்.

``அவர்களில் ஒருவனாவது படைவீரனாகவோ, ஒற்றனாகவோ இருப்பான் என நானும் நீலனும் நினைத்தோம். ஆனால் அப்படியன்று; இருவருமே அவரின் மாணவர்கள்தாம்.”

``அவர் காலத்தைக் கணிக்கும் பேராசான். இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் மாமனிதர்களைப் பயன்படுத்திவிட முடியாது. இயற்கையின் பேரியக்கத்தைக் கணித்துக் கொண்டிருப்பவர்கள் மனிதர்களின் கீழ்மைக்குத் துணை போக மாட்டார்கள்.”

கபிலர் சொல்லி முடிக்கும் முன்னர் சற்றும் இடைவெளியின்றி உதிரன் கேட்டான், ``பாண்டியப் பேரரசுக்காகத்தானே அவர் இங்கு வந்தார்?”

``இல்லை. அவர் நம்பும் உண்மைக்காக வந்தார். இயற்கையின் உள்நரம்புகள் மனிதனின் கைகளுக்கு மிக அரிதாகவே அகப்படும். அப்படியொன்று தெய்வவாக்கு விலங்கின் வடிவில் அகப்பட்டுள்ளது. அதை இழந்துவிடக் கூடாது என்ற தவிப்பில்தான் வந்துள்ளார்” என்றார்.

``அவரின் கூற்றில் உண்மை இருக்கிறதா?” எனக் கேட்டான் உதிரன்.

அடுத்த பாறையில் ஏறாமல் அப்படியே நின்றார் கபிலர்.

பாறையின் மேலேறிய உதிரனுக்கு, கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை.

``நான் எங்கே நிற்கிறேன்?” என்று கேட்டார் கபிலர்.

``கீழே நிற்கிறீர்கள்” என்றான் உதிரன்.

``காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது” என்றார்.

கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை.

கபிலர் விளக்கினார். ``உண்மை என்பது, இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாக கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதேயில்லை.”

பிலரும் உதிரனும் எவ்வியூர் அடைந்தபோது தேக்கனும் காலம்பனும் ஊர் திரும்பியிருந்தனர். அனங்கனும் அவன் குழுவினரும் காட்டெருமைக் கூட்டத்தோடு எந்த மலையில் அலைகிறார்கள் என்பதைப் பற்றிப் பலரும் அவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

கபிலர் வந்து சேர்ந்ததும் விசாரிப்புகள் எல்லாம் அவர் பக்கமாகத் திரும்பின. அவரின் ஆசானைப் பற்றி அறிந்துகொள்ள எல்லோருக்கும் ஆர்வம் இருந்தது. பாட்டாப்பிறையில் பெரியவர்கள் காத்திருந்தனர். ஆனால், பாரியைப் பார்க்கப் போன கபிலர் நள்ளிரவு வரை வரவில்லை.

பாரியின் அவையில்தான் அந்த உரையாடல் நடந்தது. தனக்கும் திசைவேழருக்கும் நிகழ்ந்த சந்திப்பைப் பற்றி முழுமையாக விளக்கினார் கபிலர். உடன் தேக்கனும் முடியனும் இருந்தனர். திசைவேழர் வந்ததன் நோக்கத்தைப் பாரியால் கணிக்க முடிந்தது, ``தேவவாக்கு விலங்கு வடதிசை நோக்கித்தான் உட்காரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அதற்கு இப்படியொரு பயன்பாட்டுக் காரணம் இருக்கும் என நினைக்கவில்லை” என்றான் பாரி.

``அது வடதிசை நோக்கி மட்டுமே உட்காரும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியுமா?” எனக் கேட்டார் கபிலர்.

``இதுகூடவா தெரியாமல் இருப்போம்?” என்றான் முடியன்.

``தேவவாக்கு விலங்கை `கொற்றவையின் குழந்தை’ என்றுதானே சொல்கிறோம். கொற்றவைக்கு `வடக்குவா செல்லி’ என்றொரு பெயர் உண்டு என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா? கொற்றவைக் கூத்தின்போது அனைத்து நாள்களும் அது கீழிறங்கி வந்துதானே பழத்தை எடுத்தது. அப்போதெல்லாம் அது உட்கார்ந்ததை நீங்கள் கவனித்து அறியவில்லையா?’’ எனக் கேட்டான் பாரி.

கபிலர் திகைத்துப்போனார். ``அவை மிகவும் அஞ்சியபடி வந்து பழத்தை எடுத்துச் செல்வதைக் கூர்ந்து கவனித்தேன். ஆனால், அவற்றின் தனித்த நடவடிக்கையைக் கவனத்தில்கொள்ளவில்லை” என்றார் கபிலர்.
உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த தேக்கன், இடுப்புத் துணியில் மடித்து வைத்திருந்த வெற்றிலையை எடுத்துக்கொண்டே சொன்னார், ``திசைவேழரின் வருகையிலும் நாம் கவனிக்கத் தவறும் தனித்த விஷயங்கள் இருந்துவிடக் கூடாது.”

p83e_1516706353.jpg

தேக்கனின் சொல் சற்றே கடுமையானதாகத் தான் இருந்தது. ஆனாலும் இன்முகத்தோடுதான் கபிலர் அதை எதிர்கொண்டார். ``கவனம் தவறிவிடக் கூடாது என்பதில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தேன்.’’
``பாண்டியனின் பெருந்துறைமுகமான வைப்பூர்த் துறைமுகமே நம்மவர்களின் தாக்குதலால் அழிந்திருக்கிறது. அப்படியிருந்தும் இவ்வளவு மென்மையான முயற்சியைப் பாண்டியன் ஏன் செய்கிறான்?” எனக் கேட்டார் தேக்கன்.

கபிலரிடம் இதற்கான விடை இல்லை. சிந்தித்தபடி அமைதியானார்.

``பெருந்தாக்குதலுக்கான ஆயத்த முயற்சியில் இருப்பவர்கள், நாங்கள் அப்படியல்ல எனக் காட்டிக்கொள்ள முயல்வார்கள். இந்த முயற்சி அப்படிப்பட்ட ஒன்றுதான்” என்றார் தேக்கன்.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ``அதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்று சற்றே மெல்லிய குரலில் சொன்னார் கபிலர்.

அதைக் கவனித்த பாரி கேட்டான், ``உங்களுக்கு ஏன் அவ்வாறு தோன்றியது?”

``முதலில் மிகுந்த சினத்தோடு பறம்பைக் குற்றம்சாட்டிப் பேசிய திசைவேழர், எனது விளக்கத்துக்குப் பிறகு சற்றே அமைதியானார். அவரின் நோக்கம், திசையறியும் ஒரு விலங்கைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அதில் ஐயம் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் அவரின் முகம் மிகவும் வாடியிருந்தது. நான் அவரை நன்கு அறிவேன். எளிதில் தளராத மனிதர் அவர். அவரின் கண்கள் ஒன்றுக்கு மேற்பட்டமுறை கலங்கின. அதற்குக் காரணம் உள்ளுக்குள்ளிருந்த குற்றவுணர்வு. அங்கு நடக்கும் பல முயற்சிகளை அவர் அறிவார். அதைப் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில் உள்மனம் அவரைக் கலங்கச் செய்திருக்கும்” என்றார்.

அவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த தேக்கன், ``புலி முன் ஆடு என்பது திசைவேழருக்குச் சொல்லப்பட்ட சொல்லன்று; பாண்டியனுக்காகச் சொல்லப்பட்ட சொல். பறம்பின் முன் அவனது பெரும்படை அடங்கி ஒடுங்கும் என்பது பாண்டியனின் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்” என்றார்.

ஒரு கணம் உறைந்துபோனார் கபிலர். `அங்கு பேசிய பேச்சு அதற்குள் எப்படி இங்கு வந்து சேர்ந்தது!’ திகைத்த கண்களோடு தேக்கனைப் பார்த்தார். அவர் வெற்றிலையை மெல்வதற்கு ஏற்ப நன்றாக மடித்துக்கொண்டிருந்தார்.

``உதிரன் கரும்பாக்குடியின் கதையைச் சொன்னான். எனக்கு அவர்களைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. அவர்கள் யார் எனத் தெரிந்த பிறகும் ஈங்கையனை அழைக்காமல் ஏன் வந்தீர்கள் என உதிரனைத் கோபித்தேன்” என்றான் பாரி.

பேச்சின் போக்கை எவ்விடம் மாற்ற வேண்டும் என்பதைப் பாரி அளவுக்கு நன்கு உணர்ந்தவர் யாருமில்லை என்பது கபிலருக்குத் தெரியும். திசைவேழர், தனக்கு சிகிச்சை செய்த மருத்துவர்களிடம் நிறைய பேசினார். அந்தப் பேச்சுகள்   எல்லாம்   இங்கு  வந்து சேர்ந்தி ருக்கின்றன. அவர் என்னவெல்லாம் பேசினார் என்பது கபிலருக்குக்கூட முழுமையாகத் தெரியாது. அவரின் எண்ண ஓட்டங்களைக் கண்டறிய மருத்துவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு இருந்திருக்கும். அவர் சொன்ன சொற்களிலிருந்து தான் தேக்கன் இந்த முடிவுக்குப் போயுள்ளார் என்பதைக் கபிலர் உணர்ந்தபோது, அதுகுறித்த பேச்சை நீட்டிக்க வேண்டாம் என்றுதான் பாரி ஈங்கையனின் பேச்சை எடுத்தான்.

பாரியின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு கபிலர் சொன்னார், ``நாங்கள் மலை ஏறும்போது தான் ஈங்கையனின் கதையை உதிரன் என்னிடம் சொன்னான். அவர்களைப் பார்க்காமல் வந்துவிட்ட கவலை எனக்கும் உண்டு.”

வெற்றிலையை வாயில் மென்றபடி தேக்கன் கேட்டார், ``என்ன சொன்னார் வேட்டூர் பழையன்?”

`உங்களுக்குத் தெரியாமல் என்னிடம் எதுவும் சொல்லப்போகிறாரா அல்லது என்னிடம் சொல்லியது எதுவும் உங்களுக்குத் தெரியாமல் இருக்கப்போகிறதா?’ என நினைத்துக்கொண்டே, ``நான்கு நாள்கள் அல்லவா! நிறைய பேசினோம். குறிப்பாக, மயிலாவின் மணவிழா பற்றி கண்கள் பூக்கப் பேசினார் நீலன்” என்றார்.

மென்று சுவைத்த வாயின் அசைவு சட்டென நின்றது. காலம் தாழ்த்துவது அழகல்ல எனத் தோன்றியபடியேயிருந்த எண்ணத்தைக் கிளறிவிட்டது கபிலரின் சொல். திரும்பிப் பாரியைப் பார்க்க நினைத்தவர், அதைத் தவிர்த்து மீண்டும் கபிலரின் பக்கம் திரும்பினார்.

தேக்கனின் எண்ண ஓட்டத்தை மட்டுமன்று, பழையனின் எண்ண ஓட்டத்தையும் நன்கு அறிந்த பாரி சொன்னான், ``இந்தக் கார்காலத்தில் தான் மணவிழாவை முடிவுசெய்திருந்தோம். ஆனால், எதிர்பாராத பலவும் நடந்துவிட்டதால் மணவிழாவை நடத்த முடியாமல் போய்விட்டது. அதற்காக இனியும் காலம் கடத்த வேண்டாம். உப்பறைக்குப் போய் வந்த மூன்றாம் நாள் மணநாளாக முடிவுசெய்து செய்தி அனுப்புங்கள்” என்றான் பாரி.

நீண்டநாள் பேச்சு அந்தக் கணமே முடிவானது தேக்கனுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. உடனே சம்மதித்தான்.

கபிலரும் மகிழ்வடைந்தார். `உப்பறைக்குப் போய் வந்த உடன்’ என்று பாரி ஏன் சொன்னான் என்பது மட்டும் அவருக்குப் புரியவில்லை.

``உப்பறை எங்கே இருக்கிறது? போய் வர எவ்வளவு நாள்களாகும்?” எனக் கேட்டார்.

``போய் வர ஒரு மாதமாகும். ஆண்டுக்கு ஒருமுறை பறம்பின் தலைவன் அங்கு போய்த் திரும்புவது காலகாலப் பழக்கம். இந்த முறை சற்று தாமதமாகிவிட்டது” என்றான் தேக்கன்.

நீலன், மயிலாவின் மணவிழா ஏற்பாடு உறுதியான மகிழ்வில் வெற்றிலையை வேகவேகமாக மடித்து வாயில் திணித்துக் கொண்டே கேட்டான், ``நீங்கள் என்னோடு இருந்து மணவிழா வேலையில் பங்கெடுக்கிறீர்களா அல்லது பாரியோடு உப்பறைக்குப் போய் வருகிறீர்களா?”

கைநீட்டி வெற்றிலையைக் கேட்டார் கபிலர்.

p83f_1516706376.jpg

மறுமொழியேதும் சொல்லாமல் கை நீட்டுகிறாரே எனச் சிந்தித்தபடி வெற்றிலையைக் கொடுத்தார் தேக்கன்.

வாங்கி அதைத் தோதாக மடித்துக்கொண்டே கபிலர் சொன்னார், ``இந்தக் கேள்விக்கு நான் சொல்லித்தான் விடை தெரிய வேண்டுமா உங்களுக்கு?”

சிரித்தான் பாரி.

வெற்றிலையை வாயில் மென்றபடியே முடியன் சொன்னான், ``தேவவாக்கு விலங்கு திசை மாறியா உட்கார்ந்துவிடப்போகிறது!”

மீண்டும் சிரித்தான் பாரி.

கிடைத்த வாய்ப்பைக்கொண்டு தேக்கனை நோக்கிச் சொல்லைச் சுழற்றினார் கபிலர், ``இத்தனை நாள்களாகியும் தனித்த விஷயங்களைக் கவனிக்கவில்லையா நீங்கள்?”

அறையெங்கும் பொங்கி வெடித்தது சிரிப்பு.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 68

 

 

 

 

p83a_1517389225.jpg

கதமலையின் முகடுகளில் குதிரைகள் பாய்ந்து போய்க்கொண்டிருந்தன. பாரி, காலம்பன், கபிலர் ஆகிய மூவரைத் தொடர்ந்து வீரனொருவன் கூடுதலாக ஒரு குதிரையைக் கையிற்பிடித்தபடி பின்தொடர்ந்தான். அக்குதிரையில் உணவுப்பொருள்களின் சிறுமூடைகள் ஏற்றப்பட்டிருந்தன. இவர்கள் எவ்வியூரிலிருந்து புறப்பட்டு மூன்று நாள்களாகி விட்டன.

கபிலர் இளைஞராய் இருந்தபொழுது குதிரையேற்றப்பயிற்சி பெற்றிருக்கிறார். ஆனால் அதன்பின் நீண்டகாலம் குதிரையேற்றத்தில் ஈடுபடவில்லை. எவ்வியூர் வந்தபின் அவ்வப்பொழுது குதிரையில் ஏற்றி ஒன்றிரண்டு மலைத்தொடருக்கு உதிரன் அழைத்துச்செல்வான். அப்பழக்கம் இருந்ததால்தான் இப்பயணத்தில் அவரால் பங்கெடுக்க முடிந்தது.

இதுவரை மூன்று மலைகளையும் இரு ஆறுகளையும் கடந்துவிட்டார்கள். ஆனால் பயணம் இன்னும் நெடுந்தொலைவு. வடக்கும் தெற்குமாக நீள்கோடெனக் கிடப்பதுதான் பச்சைமலைத்தொடர். இக்கோடு சில இடங்களில் நான்கு மடிப்புகளாகவும் சில இடங்களில் ஏழெட்டு மடிப்புகளாகவும் இருக்கிறது. ஆனாலும் பெருமடிப்புகளாக உள்ள மூன்று மடிப்புகளைத்தான் காரமலை, நடுமலை, ஆதிமலை என அழைக்கின்றனர். இம்மலைத்தொடரில் உள்ள முகடுகளும் துண்டிக்கப்பட்ட தனிக்குன்றுகளும் எண்ணிலடங்காதவை. இவற்றிற்கிடையில் வழிந்தோடும் ஆறுகளைக் கணக்கிட முடியாதுதான். ஆனாலும் பேராறுகளுக்குப் பெயர் சூட்டியிருந்தனர்.

இந்நீள்மடிப்பு மலைத்தொடரின் வடவெல்லை முதல் தென்னெல்லை வரை இருப்பவர்கள்தாம் பதினான்கு வேளிர்குடியினர். இம்மலைத் தொடரின் சிறுபகுதியில்தான் பறம்புநாடு இருக்கிறது. ஏறக்குறைய அதன் நடுவில் எவ்வியூர் உள்ளது. எவ்வியூரிலிருந்து குதிரையில் புறப்பட்டால் பறம்பின் வடக்கு எல்லையைச் சென்றடைய எட்டுநாள்களாகின்றன. ஐந்துநாள் பயணத் தொலைவில் காழகமலையுள்ளது. அதன் அடிவாரத்தில் இருப்பதுதான் உப்பறை.

p83b_1517389241.jpg

அதனை நோக்கிய பயணத்தின் மூன்றாம் நாள் அகதமலையில் பயணித்துக்கொண்டி ருந்தனர். கபிலர் இதுவரை பறம்பின் காடுகளை நடந்துதான் கடந்துள்ளார். முதன்முறையாக அகலவிரிந்து கிடக்கும் பெருங்காடுகளை மலைச் சரிவின் இருபக்கமும் பார்த்தபடி விரைந்து கொண்டிருக்கிறார். பறம்பின் அரண்போன்ற அமைப்பு என்னவென்பதை, காணும் காட்சிகள் உணர்த்திக்கொண்டிருந்தன. இயற்கையின் பெருவிரிப்பிலிருந்து பார்வையை விலக்க முடியாமல் கவனமாய்க் கடிவாளத்தை இழுத்துச்செல்ல வேண்டியிருந்தது.

காடுகளின் மீதான வியப்பேதும் காலம்பனின் கண்களில் இல்லை. வனத்தின் ஆதிப்பிளவு களினூடே முளைத்து வந்தவன் அவன். பாசிபடர்ந்து குளுமையேறிய ஈரப்பாறையையும் வெக்கையை உமிழ்ந்துதள்ளும் கரும்பாறையையும் இரு தோள்களெனக்கொண்டவன். அவனது வியப்பெல்லாம் முன்னால் விரைந்து சென்று கொண்டிருக்கிற பாரி எவ்வடையாளங்களைப் பாதைகளாக்கிக் கடந்துகொண்டிருக்கிறான் என்பதுதான்.

குதிரைகள் இளைப்பாற சிற்றோடையின் அருகில் நின்றான் பாரி. ஓடையில் நீர் சிறுத்து ஓடிக்கொண்டிருந்தது. “இவ்வாண்டு கோடையின் உக்கிரம் மிகக்கடுமையாக இருக்கும்” என்று சொன்னபடி நீரினை அள்ளிப்பருகினான். அப்பொழுதுதான் குதிரையை விட்டு இறங்கிய கபிலர் இடுப்பில் கைகளைவைத்து முதுகைப் பின்புறமாக வளைத்துக்கொடுத்தபடி கேட்டார், “கோடையின் கடுமை அதிகமாக இருக்குமென்றா சொல்கிறாய்?”

“ஆம். நாம் உப்பறை சென்று திரும்புகையில் இவ்வோடை முற்றிலும் வற்றியிருக்கும்.”

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?”

“கோடை தொடங்கிய முதல் மாதத்திலேயே நீர்சுரப்பு குறைந்துவிட்டது. இம்மாதத்தில் நீர் இழுத்தோடவேண்டும். ஆனால் இதன் போக்கைப் பாருங்கள். உள்ளே நகரும் மீனின் வேகம்கூட நீருக்கு இல்லை. பாறை இடுக்குகள் இன்னும் பத்து நாளுக்குள் இவ்வோடையைக் குடித்துவிடக்கூடும்.”

பாரியின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கணிப்பினைச் சொல்லிக்கொண்டிருந்தது. சிற்றோடைகள் வற்றி முடித்த வேகத்தில் ஆறுகள் காயத்தொடங்கும் என்று சொல்லியபடி ஓடையைக் கடந்து மீண்டும் குதிரையில் ஏறினான்.

“இவ்வோடைதான் அகதமலையின் எல்லை. இதனைக் கடந்தால் தொடங்குவது வெப்புமலை. சற்றே செங்குத்தாய் மேலேற வேண்டும்” என்று சொல்லியபடி சிறிது தொலைவு மேலேறியவுடன் கைநீட்டிக் காண்பித்தான். இறங்குமலையில் மிகத்தொலைவில் பாறையின்மீது வெள்ளை விழுதென சிறுத்தநீர் செங்குத்தாய் இறங்குவது தெரிந்தது. “அதோ தெரிகிறதல்லவா! அந்த அருவியில் பெருவெள்ளம் கொட்டும். ஆனால் அதனைத்தொடர்ந்து ஓடும் ஆற்றைக் கண்ணால் பார்க்க முடியாது. இவ்வடர் காட்டில் மரங்களுக்கூடே அது முழுமுற்றாக மறைந்துவிடும். எனவே இதற்கு  மறையாறு என்று பெயர்.”

குதிரையை நிறுத்தி, காலம்பனும் கபிலரும் அவ்வடர் காட்டினைப் பார்த்தனர். பாரி சொன்னான், “இக்காட்டில்தான் வேறெங்கும் இல்லாத ஓர் உயிரினம் உள்ளது. நெடுங்காது முயல்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு மட்டும்தான் எலிகளின் காதினைப்போன்ற குறுங்காது முயல் உள்ளது. அதன் குருதியில்தான் பறம்பின் வீரர்கள் பிடித்து நிற்கும் வில்லின் நாண்கள் ஊறவைக்கப்படுகின்றன.”

அருவியைப் பார்த்துக்கொண்டிருந்த காலம்பனும் கபிலரும் வியப்பு நீங்காமல் பாரியின் பக்கம் திரும்பினர்.

பாரி சொன்னான், “சமவெளி மனிதர்கள் பயன்படுத்தும் வில்லின் ஆற்றலைவிட மலைமக்கள் p83c_1517389251.jpgபயன்படுத்தும் வில்லின் ஆற்றல் மிகவலிமையானது. மலைமக்களில் மற்றவர்கள் பயன்படுத்தும் வில்லிலிருந்து அம்பு போய்ச்சேரும் தொலைவைவிட மூன்றுமடங்குத் தொலைவிற்குப் பறம்பின் வீரன் பயன்படுத்தும் அம்பு போய்ச்சேரும். அதற்கு முக்கியமான காரணத்தில் ஒன்று வில்லில் பூட்டப்படும் நாணின் இழுவைத் திறன். நாங்கள் பயன்படுத்தும் நரம்பினைக் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைத்துவிடுவோம். இழுத்துத் தள்ளும் அதனது விசை அளவிட முடியாததாக இருக்கிறது.”

வியப்பு நீங்காமல் பார்த்துக்கொண்டிருந்த இருவரும் இப்பொழுது குதிரையை நகர்த்தியே ஆகவேண்டியிருந்தது. ஏனென்றால், பாரி பேசியபடி முன்னால் போய்க்கொண்டிருந்தான். வெப்புமலையின் வடபுற இறக்கத்தில்தான் சூளூர் இருக்கிறது. இன்று இரவு தங்கல் அங்குதான். மூன்று நாள் பயணத்தின் வழியில் ஊர்கள் இல்லை. மிகத்தள்ளி ஒன்றிரண்டு குன்றுகளைத்தாண்டித்தான் ஊர்கள் இருந்தன. அங்கு போய்த் திரும்பினால் மிகக்காலந்தாழும் என்பதால் வழியில் உள்ள குகைத்தளங்களிலேயே தங்கினர். இன்றுதான் ஊரினில் தங்கப்போகின்றனர்.

பாரி வருகை ஊர்மக்களை மகிழ்ச்சிக்கூத்தாடச் செய்யும். வந்த மறுநாள் காலையிலேயே புறப்படுவது இயலாத செயல். ஆனால், புறப்பட்டே ஆகவேண்டிய நிலையை எடுத்துச்சொல்லிப் புரியவைப்போம் என்றுதான் பாரி அதனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான்.

குதிரைகள் ஏற்றத்தில் மிகவும் மெதுவாக ஏறின. காலம்பனின் குதிரை ஒரு நாளில் இரண்டு முறை மாற்றப்பட்டது. பயணவழியில் நீண்டுகிடக்கும் படர்பாறை இருந்தது. குதிரையை விட்டு இறங்கினான் பாரி. அருகில் வந்ததும் மற்றவர்களும் இறங்கினர். சமதளப்பாறையாகத்தானே இருக்கிறது. இதற்கு ஏன் குதிரையை விட்டு இறங்கினான் பாரி என்ற எண்ணம் மற்ற இருவருக்கும் ஏற்பட்டது.
இறங்கி நடந்தபடி பாரி சொன்னான். “சூளூர்தான் முடியனின் ஊர். அங்குதான் அவன் குடும்பம் இருக்கிறது.”

முடியன் என்பது பெயரன்று, தேக்கனைப்போல அது ஒரு பட்டம். சமவெளி அரசுகளில் படைத்தளபதி என்ற பட்டம் இருப்பதுபோல பறம்பிலுள்ள பட்டமிது. ஆனால், இந்தச் செய்தி காலம்பனுக்குத் தெரியுமா என்று கபிலரின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பாரி சொன்னான், “நாம் கடந்து வந்த ஓடை எழுவனாற்றில் போய்ச் சேருகிறது. அந்த ஆற்றுக்கு நீர்ப்பிடிப்பு ஓடைகள் மிகக்குறைவு. எனவே வேகமாக வற்றிவிடும். பச்சைமலையின் உள்ளிடுக்கின் வழியாகவே நீண்டதொலைவு பயணிக்கும் இவ்வாறு குறும்பியூர்க் கணவாயின் வழியாகக் கீழ்த்திசையில் திரும்பி, சமதளத்தை நோக்கிப் பாய்கிறது. கரடுமுரடற்ற பாதையாக இதன் வழித்தடம் அமைந்திருக்கிறது.”

குதிரைகள் பாறையை மிதித்து நடக்கும் ஓசையும் பாரி பேசும் ஓசையும் மட்டுந்தான் கேட்டன. இருவரும் மிக அமைதியாக பாரி பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். “இயற்கையின் மாபெரும் அரணால் சூழப்பட்ட பறம்பினைத் தாக்க எதிரிகளுக்கு உள்ள ஒரே வாய்ப்பு எழுவனாறுதான்” என்றான் பாரி. காலம்பனும் கபிலரும் அதிர்ந்தனர்.

“கோடைக்காலத்தில் இவ்வாற்றின் வழித்தடத்தைப் பயணவழியாகப் பயன்படுத்த முடியும். அதற்கேற்ற தன்மையுடன்தான் இதன் அமைப்பிருக்கிறது. குறும்பியூர்க் கணவாயில் இவ்வாற்றின் வழித்தடம் பற்றி உள்ளே நுழைபவன் எவ்வியூரின் அருகிலுள்ள குன்றுவரை வந்துசேரலாம். ஆனால் அதில் மூன்று சிக்கல்கள் உண்டு. ஒன்று, பறம்புக்குள் இப்படியொரு வழித்தடம் இருக்கிறது என்பது வெளியாட்களுக்குத் தெரிய வாய்ப்பேதுமில்லை. இரண்டு, குறும்பியூர்க் கணவாயிலிருந்து இந்த வெப்புமலைவரை வந்து சேர்வதற்குள் இவ்வாற்றில் பல ஆறுகளும் ஓடைகளும் இணைகின்றன. அவற்றின் அகலமும் எழுவனாற்றின் அகலமும் ஒன்றுபோல்தான் இருக்கின்றன. எனவே மூல ஆறு எது என்பதனை எளிதில் கண்டறிய முடியாது. இணையும் ஆறுகளின் வழியே திரும்பினால் இயற்கையின் பெரும் பொறிக்குள் போய்ச் சிக்கி மீளமுடியாமல் அழிவார்கள்.

மிகச்சரியான வழியைத் துல்லியமாகக் கண்டறிந்து பலநாள் பயணப்பட்டு இந்த வெப்புமலை அடைந்து விட்டார்கள் என்று வைத்துக்கொண்டால் அதன் பிறகு இதனைக்கடந்து ஒருவன்கூட எவ்வியூரை நோக்கித் தென்திசையில் சென்றுவிட முடியாது” என்றான் பாரி.

குதிரைகள் படர்பாறையை நடந்து கடந்துவிட்டன. ``மேலேறிப் பயணத்தைத் தொடர்வோம்; பொழுதாகிக் கொண்டிருக்கிறது” என்று சொல்லி, குதிரையின் மேல் ஏறினான். காரணம் தெரியாமல் குதிரையின் மீது ஏற மற்ற இருவருக்கும் மனமே இல்லை.

முதன்முறையாக காலம்பன் பாரியின் சொல்லை மறுத்து நின்றான். குதிரையில் ஏறியபடி பின்னால் திரும்பிப்பார்த்த பாரி, கடிவாளத்தை இடதுபக்கமாக இழுத்தபடி அவர்களை நோக்கித் திருப்பினான். குதிரை கனைத்தபடி திருப்பியது. “ஏனென்றால் இங்குதான் சூளூர் இருக்கிறது. இவ்வுலகின் தலைசிறந்த வீரர்கள் இவ்வூரில்தான் பிறக்கிறார்கள்” சொல்லும்பொழுதே உரத்தது பாரியின் குரல். “பறம்பின் மாவீரனே இம்மலையைக்காக்கும் பெரும்பொறுப்பினை ஏற்று முடியனாகிறான். இதுவரை முடியன் பட்டத்தை ஏற்றவர்கள் அனைவரும் சூளூர்க்காரர்களே. பறம்பில் உள்ள மற்ற வீரர்கள் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைத்த நாணேற்றி எய்யும் அம்பின் தொலைவை வெறும் நரம்பில் நாணேற்றி சூளூர்க்காரர்கள் எய்துமுடிப்பர்.”

p83d_1517389268.jpg

காலம்பனும் கபிலனும் வியந்து நிற்க, பாரி கேட்டான், “இன்றைய நிலையில் பறம்பில் வில்வித்தையில் மாவீரன் யார் தெரியுமா?”

சற்றும் எதிர்பாராத கேள்வியாக இருந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நீலனின் திறன் பற்றி தேக்கன் நிறைய சொல்லியுள்ளார். உதிரனின் ஆற்றலைப்பற்றிய பேச்சுவந்தபொழுது வாரிக்கையன் சொன்ன செய்திகள் மிகுந்த வியப்பினை ஏற்படுத்தின. ஆனாலும் முடியனைப்பற்றி இதுவரை யாரும் எதுவும் பேசியதில்லை. இப்பொழுது பாரி சொல்லும் குறிப்பிலிருந்து பார்த்தால் அவனாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அவர்களிடம் விடையை எதிர்பார்க்காமல் பாரி சொன்னான், “அம்மாவீரனின் பெயர் இரவாதன். முடியனின் ஒரே மகன். இன்றிரவு நமக்கான விருந்தினை ஏற்பாடு செய்து காத்திருக்கிறான்.  காலந்தாழ்த்தாமல் குதிரையேறுங்கள்.”

செம்மாஞ்சேரலிடமிருந்து விடைபெற்று வஞ்சித்துறைக்கு வந்தான் ஹிப்பாலஸ். சோழனின் படையெடுப்பு பற்றி இருவருக்கும் தெரியவேண்டிய செய்தி இருந்தது. அதனை அறியத்தான் ஹிப்பாலஸ் புறப்படுகிறான். சூழலை சாதகமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் இருவரும் மிகுந்த துடிப்போடு இருந்தனர். சோழப்படையெடுப்பின் காரணம் தெரியாவிட்டாலும் பறம்பின் மீதுதான் படையெடுக்கிறான் என்பதை அறிந்ததிலிருந்து உதிரஞ்சேரலின் மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கியபடி இருந்தது. பறம்பின் மீது யார் படையெடுத்தாலும் அதன் இறுதி வெற்றியை அடையப்போகும் வாய்ப்பு தனக்குத்தான் என்பதில் அவன்மிக உறுதியாக இருக்கிறான்.

ஹிப்பாலஸ்ஸின் நாவாய் வஞ்சியிலிருந்து புறப்பட்டது. தன்னோடு எபிரஸ்ஸையும் கால்பாவையும் அழைத்துக் கொண்டான். திரேஷியனும் பிலிப்பும் வஞ்சியிலேயே இருந்தனர். புகாரின் பெருஞ்செல்வந்தர்களும் வணிகர்களும் கால்பாவின் நட்புக்காகப் பல்லாண்டுகளாக ஏங்கிக்கிடப்பவர்கள். அவனுடைய நாவாய்கள்தாம் புகார் வணிகர்களின் செல்வங்களுக்கான வடிகாலாக இருந்தன. ஹிப்பாலஸ் அதனால்தான் கால்பாவை உடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

உதியஞ்சேரலுக்கு நன்குதெரியும், ஹிப்பாலஸ் புகாரை அடையும்பொழுது செங்கனச்சோழனின் படை பறம்புமலையின் அடிவாரத்தைச் சென்றடைந்திருக்குமென. ‘படை புறப்பட்டுவிட்டது’ என வந்த ஒற்றுச்செய்தியை ‘படை ஆயத்தமாகிறது’ என்று மட்டும் ஹிப்பாலஸ்ஸுக்குச் சொன்னான் உதியஞ்சேரல். அப்படியிருந்தும் ஹிப்பாலஸ்ஸை அனுப்பி வைப்பதற்குக் காரணம் இருக்கிறது. யவனர்களால் மட்டுமே அரசவையின் அனைத்து உண்மைகளையும் முழுமையாகவும் எளிதாகவும் அறியமுடியும். செங்கனச்சோழன் படையெடுப்பின் முழுநோக்கம் என்ன என்பதை அறிந்துகொள்ளத் திட்டமிட்டான் உதியஞ்சேரல்.

சூளூரிலிருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டனர். ஐந்தாம் நாள் மாலைக்குள் உப்பறையை அடைய வேண்டும். எனவே, இன்றைய பயணத்தொலைவை சற்று கூடுதலாகத் திட்டமிட்டான் பாரி. மற்றவர்களுக்கும் அது புரிந்து கவனமாகவும் விரைவாகவும் செயல்பட்டனர். இன்றைய நாள் முழுவதும் கபிலருக்கு இரவாதனின் நினைவே இருந்தது. வில்லடியின் மாவீரன் என்று பாரி அவனைப்பற்றிச் சொன்ன சொல்லிலிருந்தே சிந்தனை அவனைச் சூழ ஆரம்பித்தது. நேற்றிரவு அவனைப் பார்த்தகணம் முதல் எண்ணங்கள் அவனை விட்டு விலகவில்லை. அவ்விளம் வீரனின் துடிப்பும் அவனது பேரன்பும் கபிலரைக் கிறங்கவைத்தன.

குதிரைகள் விரைந்துகொண்டிருந்தன. மலையின் பக்கவாட்டுச் சரிவிலிருந்து மறுகுன்றுக்குத் திரும்பும் இடத்தில் குதிரையை இழுத்து நிறுத்தினான் பாரி.

மற்ற இருவரும் அவன் சொல்லப்போவதைக் கேட்க ஆயத்தமாயினர். “நாம் இவ்விடம் வளையாமல் நேராகப் பயணித்தால் வடதிசை நோக்கிச் செல்வோம். இத்திசையில் குன்றுகள் தவறாமல் ஊர்கள் உண்டு. ஒவ்வோர் ஊரின் தன்மையும் ஒவ்வொரு வகையானது.  ஒருநாளைக்கு ஐந்து முதல் ஆறு ஊர்களை நம்மால் பார்க்க முடியும். தொடர்ந்து பயணித்தால் மூன்று நாள் பயணத்தொலைவில் இருப்பதுதான் தந்தமுத்தம். அவ்வூரைச் சேர்ந்தவர்கள்தாம் முதன்முதலில் யானைகளுடனான மொழியை உருவாக்கியவர்கள். இன்றளவும் யானைகளைப்பற்றி அவர்களுக்கு இருக்கும் அறிவுத்திறன் வேறு யாருக்கும் இல்லை” என்று மிகச்சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குதிரையைக் கிளப்பினான்.

பாரியின் குதிரை மலையின் பக்கவாட்டுச் சரிவில் இடப்புறமாகத் திரும்பியது. எதையோ கேட்க வாயெடுத்த காலம்பன் கேட்காமல் நிறுத்திக்கொண்டான். சரிவுப்பாதையின் தன்மை மிக ஆபத்தானதாக இருப்பதை உணர்ந்ததால் பேச்சை நிறுத்திக் கவனமாகக் கடந்தான். யானைகளைப்பற்றி பாரி சொல்லத் தொடங்கியதும் காலம்பனிடமிருந்து கேள்வி எழும் என்று கணித்தார் கபிலர். எழும் கேள்வியைக் கேட்கத்தொடங்கி நிறுத்திய காலம்பன் ஆபத்தான அவ்விடம் கடந்ததும் கேட்டான். “உனது பயணத்தின் போக்கு எனக்கு இப்போது வரை புரியவில்லை.”

என்ன கேட்கிறான் என்று கபிலர் விழித்ததைப்போலவே பாரியும் திகைத்தான். காலம்பன் சொன்னான், “எவ்வடையாளத்தை வைத்து உனது குதிரை போகிறது? எதனைப் பாதையென்று யூகித்துப் பயணிக்கிறாய்? புறப்பட்டதிலிருந்து நான் அதனைத்தான் உற்றுக் கவனித்து வருகிறேன். உனது பயணப்பாதை எனக்குப் பிடிபடவேயில்லை.  ஆனால், எவ்விடமும் தயங்கி நிற்காமல் பயணித்தபடியே இருக்கிறாய்” என்றான் காலம்பன்.

பாரி சொன்னான் “மலையின் எல்லாப் பாதைகளையும் விலங்குகளே உருவாக்குகின்றன. நாங்கள் கடமான் உருவாக்கும் பாதையையே பயன்படுத்துவோம். முகடுகளின் வழியான நெடும்பயணத்துக்கு அதுவே ஏற்றது. ஆனால் அதிலும் சிக்கல்கள் உண்டு. கடமான் பாதை, பாறை மடிப்புகளில் போய்ச் சேர்ந்தபிறகு மீண்டும் எவ்விடமிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டறிவது எளிதன்று. தொடங்கும் இடத்தை மிகக்கவனமாகக் கண்டறியாவிட்டால் எத்திசை போய்ச் சேருவோம் என்பதே தெரியாது. அடர்காட்டுக்குள் போய் மாட்டிக்கொண்டு வெளியேற வழியின்றி நிற்போம்.”

நேற்றைய பயணத்தின்பொழுது படர்பாறை வந்ததும் பாரி குதிரையை விட்டு ஏன் இறங்கினான் என்பது இப்பொழுதுதான் விளங்கியது. பாதை மீண்டும் தொடங்கும் இடத்தைக் கண்டறியவே இறங்கியுள்ளான் என்று காலம்பன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது கபிலர் கேட்டார், “மண்ணில் அழுத்தமற்ற இவ்வகைப்பாதைகள் எளிதில் மறைந்துவிடும் ஆபத்து இல்லையா?”

“கடமான் பாதை ஒருபொழுதும் அழியாது. அதன் காலடித்தடத்தையும் அதன் பற்கள் புற்களைக் கடிக்கும்வித்தையும் தெரிந்த ஒருவர் அதன் வழித்தடத்தைக் கண்டறிவது கடினமன்று. கொம்புகள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முட்களையும் புதர்களையும் விட்டு விலகியே பாதையை அது உருவாக்கி வைத்திருக்கும். ஒருவகையில் குதிரைப்பயணத்துக்கு இவ்வகைப்பாதையே ஏற்றது” என்று சொன்ன பாரி, குதிரையின் கடிவாளத்தைச் சற்றே கவனப்படுத்தியபடி சொன்னான், “இதில் முக்கியமானது கடமான் பாதையிலிருந்து விலகி மீண்டும் அதன் மற்றொரு பாதையில் போய்ச் சேருவதுதான். அவ்விடைப்பட்ட தொலைவில் பாதைக்குறிப்புகளை நாம் உருவாக்கியுள்ளோம்.”

“இவ்வளவு கடினமான அமைப்புகொண்ட பாதையை எப்படி எல்லோராலும் நினைவில் கொள்ள முடியும்?” எனக் கேட்டார் கபிலர்.

“பறம்பின் அனைத்துத் திசைகளிலிருந்தும் இவ்வகைப் பாதைகள் எவ்வியூரை நோக்கி அமைந்திருக்கின்றன. அப்பாதையில் தொடர்ந்து காவல்வீரர்கள் குதிரைகளில் பயணித்தபடிதான் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி, அத்திசையில் உள்ள ஊர் மக்களுக்கும் இவ்வகைப்பாதையைப் பற்றிய தெளிவு உண்டு. ஆனால், எவ்வியூரில் இருந்து செல்லும் அனைத்துப் பாதைகளையும் கண்டறிந்து, அனைத்துத் திசைகளின் எல்லைவரை பயணிக்கக்கூடியவர்கள் மிகச்சிலரே. வாரிக்கையன், தேக்கன், கூழையன், முடியன் உள்ளிட்ட ஏழுபேரால் மட்டுமே அது முடியும்” என்றான் பாரி.

ஹிப்பாலஸ் புறப்பட்டுப்போன அன்றைய நாளே குடநாட்டு வேந்தனுக்கு ஓலை அனுப்பினான் உதியஞ்சேரல். ஓலை கண்டதும் குடநாட்டின் அமைச்சன் கோளூர் சாத்தனும் தளபதி எஃகல்மாடனும் வஞ்சியை நோக்கிப் புறப்பட்டனர். செப்பனிடப்பட்ட பாதை அமைப்பு இருந்ததால் விரைந்து வந்தனர்.

அவர்கள் வந்த செய்தி உதியஞ்சேரலுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன் தளபதி துடும்பனுடனும் அமைச்சன் நாகரையனுடன் அவைக்குள் நுழைந்தான். உள்ளே குடநாட்டின் அமைச்சன் கோளூர் சாத்தனும் தளபதி எஃகல்மாடனும் காத்திருந்தனர். வழமையான மரியாதைகள் முடிந்தவுடன் உதியஞ்சேரல் சொன்னான், “நாம் முன்பு திட்டமிட்டதைப்போல ஆளுக்கு ஒருமுனையிலிருந்து படைநடத்தி முன்செல்ல வேண்டாம். சூழல் நமக்கு மிகவும் சாதகமாக மாறியுள்ளது. பாண்டியனின் பெரும்படையும் சோழப்படையும் பறம்பினைத் தாக்க முற்பட்டுள்ளன. அத்தாக்குதல் தொடங்கும் செய்திக்காக நாம் காத்திருப்போம். அவர்களின் தாக்குதலை எதிர்கொள்வது பாரிக்கு எளிதன்று. அவனது முழுமையான ஆற்றல் பறம்பின் கிழக்கு, வடகிழக்கு முனைகளில் குவிக்கப்படும். அந்த நேரத்தில் நம் இரண்டு படைகளும் ஒரேமுனையில் பறம்புக்குள் நுழைவோம்.

நமது பெருங்தாக்குதலை எதிர்கொள்ளும் ஆற்றல் பாரியிடம் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அவனது படைவலிமை முழுவதும் அவ்விரு எதிரிகளை நோக்கி வெகுதொலைவுக்கு அப்பால் குவிக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு அவனால் வீரர்களை நம்மை நோக்கி எளிதில் நகர்த்தி வரமுடியாது. எந்தப் பச்சைமலைத்தொடர் அவனுக்கு இதுநாள் வரை அரணாக இருந்ததோ, அதே மலைத்தொடர்தான் அவன் விரைந்து வந்துசேர முடியாத பெருந்தடையாக இருக்கப்போகிறது. கிழக்கிலும் வடகிழக்கிலும் இருக்கும் தொலைவோடு ஒப்பிட்டால் சரிபாதித் தொலைவிற்கு நாம் உள்ளே போனாலே போதும், நடுமலையில் நிலைகொண்டுவிடுவோம். அதன்பிறகு காடு நமக்கான அரணாக மாறும்.”

தாக்குதலின் திட்டத்தை உதியஞ்சேரல் விளக்கியவிதம், கேட்டுக்கொண்டிருந்தவர்களை உறைய வைத்தது. உதியஞ்சேரலின் மனதுக்குள் முழுமையாகப் போர் தொடங்கியிருந்தது.

p83e_1517389283.jpg

ப்பறையை அடைந்து இருநாள்களாகிவிட்டன. ஆனாலும் கபிலர் இன்னும் வியப்பின் ஆழத்திற்குள்ளிருந்து மீளவில்லை. அவரால் எளிதில் நம்பக்கூடியதாக இது இல்லை. உப்பறையென்பது பச்சைமலைத் தொடரின் கருவறை என்றே சொல்லலாம். இங்கு பெரியகுளமொன்று இருக்கிறது. எக்காலத்திலும் நீர்வற்றாத குளமது. இக்குளத்தின் நீர் உப்பேறியிருக்கும். இம்மண்ணிலும் உப்புத்தன்மை மிக அதிகமாக இருக்கும்.

குளம் நோக்கி இருவரையும் அழைத்துக் கொண்டு நடந்தான் பாரி. “வடகோடியிலிருந்து தென்கோடிவரை நீண்டுகிடக்கும் இப்பச்சை மலைத்தொடர் முழுவதும் இருக்கும் விலங்குகள் ஆண்டு தவறாமல் இவ்விடத்துக்கு வந்துவிடுகின்றன. இவ்வுப்புநீரை அருந்துவது மட்டுமன்றி, இம்மண்ணையும் தின்கின்றன. ஏன் என்பதற்கான காரணம் இன்றுவரை புரியவில்லை. விலங்குகளின் நோய்க்கான மருந்தாக இம்மண் இருக்கிறதா அல்லது ஈனும் காலத்தில் இம்மண்ணின் ஆற்றல் அதற்குத் தேவைப்படுகிறதா என்று எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், பச்சைமலைத் தொடரிலிருக்கும் எல்லா விலங்குகளும் இக்குளத்துக்கு வராமல் இருக்காது. இக்குளம் பற்றிய அறிவு அவற்றின் குருதிக்குள்ளே இருக்கும்போல. தலைமுறை தலைமுறையாக அவை இவ்விடம் வந்து இத்தண்ணீரைக் குடித்து, இம்மண்ணைத் தின்றுவிட்டுச் செல்கின்றன.”

குருதிக்குள் உறைந்திருக்கும் நினைவிலிருந்து மேலெழுந்துகொண்டிருந்தது பாரியின் சொல். அவன் மேலும் சொன்னான், “ஒருவகையில் விலங்குகளின் தாய்நிலம் இதுதான். இவ்விடத்துக்கு வந்து செல்வதற்கான பாதை எல்லா விலங்குகளுக்கும் தெரிந்திருக்கிறது. இவ்விடமிருக்கும் ஊரின் பெயர் `அறல்.’ இவ்வூர்க்காரர்கள் விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்பது காலகாலத்துப் பழக்கம். பறம்பில் உழவுசெய்து வாழ்வது இவர்கள் மட்டுந்தான். இவர்கள்தாம் ஆதியிலே உழவைக் கண்டறிந்ததாகச் சொல்லுவார்கள்” என்றான்.

p83f_1517389297.jpg

“உழவும் வேளிர்குலம் கண்டறிந்ததுதானா?’ எனக் கேட்டார் கபிலர்.

“இதற்கான விடையை நீங்கள்தாம் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று எனக்குத் தெரியும். விலங்குகளின் தாய்நிலமான இந்த உப்பறை பறம்புக்குள் இருப்பதால்தான் பதினான்கு வேளிர்குலத்திலும் பறம்பின் வேளிர்கள் முக்கியத்துவங்கொண்டவர்களாக மாறினர்.”

“அதனால்தான் வேளிர் குலச்செல்வங்கள் அனைத்தும் பறம்பிலே கொண்டுவந்து பாதுகாக்கப்படுகின்றனவா?”

“பறம்பு அனைத்தையும் பாதுகாக்கும். இக்காட்டின் செடிகொடிகளையும், உயிரினங்களையும் காக்கும் பொறுப்பைத்தான் மனிதர்களாகிய எமக்கு இயற்கை அளித்துள்ளது” சொல்லியபடி குளக்கரையில் மண்டியிட்டான் பாரி.

என்ன செய்யப்போகிறான் எனத் தெரியாத திகைப்பில் கபிலரும் காலம்பனும் அவனைப் பார்த்திருக்க, நீரருந்தும் விலங்கினைப்போலக் குனிந்து முகத்தினை நீருக்கு அருகில் கொண்டுசென்றான்.
“இக்காட்டின் எல்லா உயிர்களைப்போல இவ்வுப்பூநீர் குடித்தே எம் வேளிர்குலமும் உயிர்வாழ்கிறது. இந்நீரையும் நிலத்தையும் விலங்கினங்களையும் செடிகொடிகளையும் காத்தல் என்பது எமது உயிரினும் மேலானது” என்று அவன் கூறிய சொற்கள் நீருள் புதைந்திருக்கும் ஆதி உப்பின் மீது படிந்துகொண்டிருந்தன. பார்த்துக்கொண்டிருந்த கபிலரும் காலம்பனும் குளத்து நீரில் வாய்வைத்துக் குடித்துக்கொண்டிருக்கிறான் பாரி என நினைத்தனர்.

முகமெங்கும் நீர் வழிய நிமிர்ந்தான் பாரி. கண்திறவாமல் வான்நோக்கி நாடியை உயர்த்தினான். அவனது தொண்டைக்குழிக்குள் இருந்த உப்புநீரின் வழியே பீறிட்டு வெளிவந்தது ஓசை.

கணநேரத்தில் காட்டை உலுக்கிய ஓசையது. ஓசை வெளிப்பட்ட கணத்தில் கபிலரும் காலம்பனும் அஞ்சி அகன்றனர். எந்த வகையான ஓசையிது என்பது இருவருக்கும் பிடிபடவில்லை. விட்டுவிட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது ஓசை. பாரி வேறொன்றாக மாறிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. திகைத்துப்போய் நின்றபொழுது காலம்பன் கணித்தான். வேட்டையைத் தொடங்கும் கணத்தில் விலங்குகளின் உள்மூக்கிலிருந்து வெளிப்படும் உறுமலோசை இது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 69

 

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p83a_1517990133.jpg

ப்பறைக்குச் சென்ற மூவரும் எவ்வியூர் வந்துசேர்ந்தனர். அவர்கள் வந்தபொழுது குலநாகினிகளைத்தவிர ஊரில் யாருமில்லை. எல்லோரும் நீலன், மயிலா மணவிழாவிற்காக வேட்டுவன் பாறைக்குச் சென்றுவிட்டனர். ஒருநாள் ஓய்விற்குப்பின் மூவரின் குதிரைகளும் எவ்வியூரிலிருந்து வேட்டுவன் பாறையை நோக்கிப் புறப்பட்டன. நீலன், மயிலா மணவிழா மகிழ்வு, பயணத்தின் வேகத்தைக் கூட்டியபடியே இருந்தது.

வேட்டுவன் பாறையில் ஆட்கள் நிரம்பி வழிந்தனர். மணவிழா உற்சாகம் களைகட்டியிருந்தது. எவ்வியூர் முழுமையாக வந்துசேர்ந்திருந்தது. பல ஊர்களிலிருந்தும் ஊர்ப்பெரியவர்கள் வந்திருந்தனர். கள்ளும் கனியுமாக மணவிருந்து தொடங்கிவிட்டது. மான்தசையைச் சுட்டுக்கருக்கும் வாசம் காடெங்கும் வீசிக்கொண்டிருந்தது. வெற்றிலைகள் வகைபிரித்து வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.

புனுகு மணமும் நாகப்பூ மணமும் மணவிழாவுக்கே உரியன. புன்னைப்பூவும் பாதிரிப்பூவும் ஆலம்பனையின் ஓலைக்கொட்டானில் குவிந்துகிடக்க வந்தவர்கள் எல்லாம் மனம்மயங்கி, கனியுண்டு கள்ளருந்தினர். மான்தசையைக் கடித்திழுத்து உண்டுவிட்டு அதனைச் செமித்து முடிக்க வெற்றிலை தின்றனர். மலைமக்களின் மணவிழா என்பது எல்லையில்லாத இன்பத்தை உணரவும் உணர்த்தவுமான விழா. உணவின் வகைகளும் ஆட்டபாட்டத்தின் வகைகளும் சொல்லிமாளாது.

மலையெங்குமிருந்து சாரிசாரியாக ஆட்கள் வந்துகொண்டிருந்தனர். வெவ்வேறு வகையான இசைக்கருவிகளின் ஓசைகள் அவர்களுடன் வந்துகொண்டிருந்தன. இசைக்கப்படும் ஓசையை வைத்தே வருவது எந்த ஊர்க்காரர்கள் எனப் பெரியவர்கள் சொன்னார்கள். சிறுவர்களின் கொண்டாட்டம் தனித்திருந்தது. காலம்பனின் மூத்த மகன் கொற்றன். அவன்தான் எவ்வியூர் சிறுவர்களின் கூட்டத்துக்குத் தலைவனாக இருந்தான். அவன் எவ்வியூர் வந்த புதிதில் மற்ற சிறுவர்கள் அவனோடு பழகத் தயங்கினர். ஏனெனில் அவனது உருவ அமைப்பு அவனைச் சிறுவனென்று ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையைக் கொண்டிருந்தது. நாளடைவில் எல்லாம் சரியானது. விளையாட்டில் அவனை யாரும் வெல்ல முடியாதது மட்டுமல்ல; எவ்வியூர் சிறுவர்களுக்குத் தெரியாத புதுவிளையாட்டுகள் நிறைய அவனுக்குத் தெரிந்திருந்தன. காட்டெருமை விளையாட்டினை அவன்தான் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தான். ஆட்டபாட்டத்திலும் இணையற்றவனாக இருந்தான். எனவே எவ்வியூர் சிறுவர்கள் எந்நேரமும் அவனுடனே இருந்தனர்.

அலவன், முடிநாகன், குறுங்கட்டி, அவுதி, மடுவன், உளியன், வண்டன் ஆகிய எல்லோரும் இப்பொழுது சிறுவர்களாவும் இல்லாமல் இளைஞர்களோடும் சேரமுடியாமல் நடுவில் நின்று விழித்துக்கொண்டிருந்தனர். இளைஞர்கள் எல்லாம் தங்களின் இணையைப்பற்றிப் பேசிச்சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தனர். இவர்கள் அருகிற்போனால் சிறுவர்களோடு விளையாடச்சொல்லி விரட்டிவிடுகிறார்கள். சிறுவர்களிடம் போனால் அவர்கள் எல்லாம் கொற்றனின் தலைமையில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். யாரும் இவர்களுடன் நின்று பேசக்கூட ஆயத்தமாக இல்லை. விளையாட்டுகள் அவ்வளவு மும்முரமாகப் போய்க்கொண்டிருந்தன.

p83b_1517990147.jpg

சங்கவை, சிறுமிகளின் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு தென்புறச்சரிவில் மூங்கிற்குச்சியில் நார்ப்பந்துகளைச்செருகி அடித்து விளையாடிக்கொண்டிருந்தாள். பெண்களும் பெரியவர்களும் மணவிழா வேலையில் மூழ்கிப்போயிருந்தனர். யார்யார் எங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

பொழுதுமங்கி இருள்கவியத் தொடங்கியது. ஊரெங்கும் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. மந்தையில் அமர்ந்திருந்த பெரியவர்கள் ஒவ்வொருவரிடமும் சிறுபிள்ளைகள் வந்து வெற்றிலை கொடுத்தனர். இருப்பதிலே மிகமூத்தவர் வாரிக்கையன்தான். ஆனால் அவருக்கு வெற்றிலை கொடுக்காமல் மற்றவர்களுக்காகப் பிள்ளைகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். கொடுத்து விடுபவர்கள் சொல்வதைத்தானே பிள்ளைகள் கேட்பர். காலையிலிருந்து இளைஞர்களை விரட்டி விரட்டி வேலைவாங்கியதால் தம்மீது கோபமாக இருக்கிறார்கள் என்று வாரிக்கையனுக்குத் தோன்றியது. ‘சரி, என்னதான் நடக்கிறது பார்ப்போம்’ என்று வாரிக்கையன் பொறுத்திருந்தார்.

எல்லோருக்கும் கொடுத்தபின் ஒரு சிறுமி வந்து வாரிக்கையனுக்குக் கொடுத்தாள். சற்றே கோபத்தோடு அதனை வாங்கினார். ஆனால் மற்றவர்களுக்குக் கொடுத்ததைவிட இருமடங்கு வெற்றிலை அதில் இருந்ததால் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. உடனடியாக வெற்றிலையை மெல்லத்தொடங்கினார்.

மேற்புறமிருந்து காற்றுவீச மந்தையை ஒட்டியிருந்த பந்தத்தீ பாம்பைப்போலச் சீறி அடங்கியது. எல்லோரும் சீற்றத்தின் ஓசையை கவனிக்க, ஒரு பெரியவர் மட்டும் காற்றோடு மிதந்து வந்த மணத்தை மோந்தபடி “இது குளவிப்பூவின் வாசமாயிற்றே இப்பக்கம் குளவிக்கொடி இருக்கிறதா என்ன?” என்று கேட்டார்.

தேக்கனுக்குத் தெரியவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த வாரிக்கையனிடம் கேட்போம் என்று சத்தம்போட்டுக் கேட்டார். எங்கும் பேச்சுக்குரல் கேட்டதால் தேக்கனின் குரல் காதில் விழவில்லை. எழுந்து மந்தையின் முன்பக்கமாக வந்தார் வாரிக்கையன். நொங்கு தின்ற குரங்குபோல அவரின் இருபக்கத் தாடைகளும் உப்பி இருந்தன. உள்ளுக்குள் வெற்றிலையை அடைத்து வைத்திருந்தார். அருகில் வந்துநிற்கும் வாரிக்கையனிடம் குளவிப்பூ பற்றி மீண்டும் கேட்டார் தேக்கன். வெற்றிலையைப் பக்குவமாய் அணைத்துக்கொடுத்துப் பேசக்கூடியவர் வாரிக்கையன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரும் பக்குவமாய் நாவால் ஒதுக்கிப் பேசத் தொடங்கும்பொழுது திடீரென ஏதோவொன்று உச்சிமண்டைக்குள் ‘கிர்’ரென ஏறியது. என்னவென்று புரிந்துகொள்ளும்முன் பெருந்தும்மலாக வெடித்து வெளியில் வந்தது. யானையின் துதிக்கைக்குள்ளிருந்து சீறிப்பாய்வதைப் போல மந்தையிலிருந்த எல்லோரின் மீதும் வெற்றிலை எச்சில் தெறித்துச் சிதறியது. உட்கார்ந்திருப்பவர்கள் விழித்துக்கொள்வதற்குள் ஒன்று, இரண்டு, மூன்று என்று விடாமல் தும்மினார் வாரிக்கையன்.

கீழ்ப்புறமிருந்து எதிர்காற்று அடுத்தடுத்து வீசியதுபோல் இருந்தது. பலத்த காற்றோடு சேர்ந்து நீரும் p83c_1517990160.jpgவந்ததால் மந்தையை ஒட்டியிருந்த தீப்பந்தம் முழுமுற்றாக அணைந்தது. மந்தையில் ஓராள்கூட மிச்சமில்லை. நடக்கமுடியாத பெருசுகள்கூட தாவிக்குதித்து வெளியேறியதாகச் சொன்னார்கள். விடாது தும்மிய வாரிக்கையனை அவருக்கு உற்ற தோழர்கள் இருவர் பக்குவமாய் வெளியில் கூட்டிப்போனார்கள்.

மணவிழாக்கொண்டாட்டம் களைகட்டியது. கையில் துடைப்பத்தோடு மந்தைக்கு வந்த பெண்கள் வசவுச் சொல்லை வாரி இறைத்தபடி மந்தையைப் பெருக்கித் தூய்மைப்படுத்தினர். மீசைமுடியிலும் தலைமுடியிலும் ஒட்டிய வெற்றிலையெச்சிலை எப்படி நீக்குவதெனத் தெரியாமல் பெருசுகள் இங்குமங்குமாக அலைந்துகொண்டிருந்தனர்.

மணவிழாவுக்காகத் தொடர்ந்து மூன்றுநாள்கள் விருந்து நடக்கும். விலங்கின் இறைச்சியை வெட்டியெடுக்கும் இடத்திலிருந்து துர்நாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக குளவிப்பூவின் கொடிகளைக் கொண்டுவந்து அப்பக்கம் போட்டிருந்தனர். அந்த மணத்தை அறிந்துதான் குளவிப்பூ வாசம் இங்கே எப்படி என்று பெரியவர் கேட்டார். அதுதான் இவ்வளவுக்கும் காரணமானது. இப்பொழுது குளவிப்பூக்கொடியை இருவர் கைநிறைய அள்ளிவந்து மந்தையில் போட்டனர். அப்படியும் துப்பிய நாற்றம் போகவில்லை.

வாரிக்கையனை அழைத்துக்கொண்டு போன அவர் தோழர்கள் தனியே ஓரிடத்தில் அவரை உட்காரவைத்தனர். தும்மல் கொஞ்சங்கொஞ்சமாக நின்று அமைதியடைந்தார். கண்ணிலும் மூக்கிலும் நீர்கொட்டி நின்றது. “எப்படி திடீரென இவ்வளவு தும்மல் வந்தது?” எனக் கேட்டார்.

உடனிருந்த பெரியவர்கள் இருவரும் “தும்மலுக்கெல்லாமா காரணம் சொல்ல முடியும்?” என்றனர்.

வாரிக்கையன் ஏற்கவில்லை. இடுப்புத்துணியால் முகத்தை முழுவதுமாகத் துடைத்தபடி “ஏதோ நடந்திருக்கிறது!” என்றார். உடனிருந்த பெரியவர்கள் இருவரும், “இதில் என்ன நடந்திருக்கும்?” என்றனர். வாரிக்கையன் இதனை அப்படியே விட விரும்பவில்லை.

எங்கும் வாரிக்கையன் பேச்சுதான் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. “மான்கறி, மிளாக்கறி என எவ்வளவு சுவையாகச் சமைத்துப்போட்டாலும் இந்த மணவிழாவின் பேச்சு வெற்றிலையைப் பற்றித்தான்” என அவரிடமே வந்து கேலி பேசிவிட்டுப் போயினர். அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை. என்ன நடந்திருக்கும் என்பதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தவர் இறுதியில் அதனைக் கண்டறிந்தார்.

இளசுகளை மிகவும் கடிந்துகொண்டு, ஓயாமல் வேலைவாங்கினார். நீலனின் உற்றதோழன் புங்கனை மந்தையில் வைத்து காலையில் திட்டினார். அதனால் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து வாரிக்கையனை அதே மந்தையில் வைத்து வாரிவிடத் திட்டந்தீட்டினர்.

தும்மி இலையைப் பறித்துவந்து இவருக்குக் கொடுக்கப்பட்ட வெற்றிலைக்குள் வைத்துக்கொடுத்துள்ளனர். தும்மி இலையையோ, தும்மிப்பூண்டையோ சாப்பிட்டால் உடனடியாகத் தும்மல் வரும். கட்டுப்படுத்த முடியாதபடி வந்துகொண்டே இருக்கும். அதனால்தான் வாரிக்கையன் இந்தப் பாடுபட்டுள்ளார். 

நடந்ததைக் கண்டுபிடித்த வாரிக்கையன் தன்னுடைய வேலையைக்காட்ட முடிவுசெய்தார். மந்தைப்பக்கமே போகாமல் ஊருக்குள் நுழைந்தார். பாவை விளையாட்டும் பந்து விளையாட்டும் விளையாண்டபடி சிறுவர், சிறுமியர் எங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். தாழ்வான மரக்கிளைதோறும் ஊஞ்சல்கட்டி பலரும் ஆடினர். வாரிக்கையனின் கண்கள் தேடின. வட்டாட்டத்தையும் கழங்காட்டத்தையும் தாய்மார்களின் துணையோடு குழந்தைகள் ஆடினர். அவ்விடத்தைக் கடந்து போகையில்தான் ஓங்கூர் மருத்துவன் கண்ணிற்பட்டான். அவனை சத்தம்போட்டுக் கூப்பிட்டார் வாரிக்கையன். அவன் அருகில் வந்தான்.

தனக்கு வேண்டியதைக் கேட்டார். மருத்துவர் அதிர்ச்சியடைந்தான். ‘இதை ஏன் இவர் கேட்கிறார்?’ என்பது அவருக்குப் புரியவில்லை. வாரிக்கையன் கேட்கும்பொழுது கொடுக்காமல் இருக்க முடியாது. “சரி ஏற்பாடு செய்துதருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

p83d_1517990178.jpg

‘இனி மந்தைப்பக்கம் போவோம்’ என நடையைக்கட்டினார்.  மந்தைவெளி இரவு நடைபெறும் ஆட்டத்துக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. வந்துள்ளதில் மணமுடித்தவர்களும் மணமுடிக்காதவர்களும் தங்கள் இணையோடு சேர்ந்து ஆடும் குரவைக்கூத்துதான் மணவிழா நிகழ்வின் உச்சம்.  இந்த ஆட்டத்தில் பங்கெடுக்கவும் இந்தக் காதற்கொண்டாட்டத்தைக் காணவுந்தான் எல்லோரும் ஆர்வமாக இருப்பர். அதற்கான தொடக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

வாரிக்கையன் கூட்டத்தின் ஓரமாகவே நடந்து மந்தையை நோக்கி வந்துகொண்டிருந்தார். இசைக்கலைஞர்கள் இரவு ஆட்டத்துக்குத் தங்களை ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர். பகலில் இசைத்தது முக்கியமல்ல; இரவில் இசைக்கப்போவதுதான் முக்கியம். ஏனென்றால், இது ஆணும் பெண்ணும் இருகூறாகப் பிரிந்து தங்கள் இணையோடு ஆடும் போட்டியாட்டம். தழுவித்துள்ளும் காதலுக்கு இசையே அடிப்படையாக அமையவேண்டும். நள்ளிரவு நெருங்க நெருங்க ஆட்டத்தின் வேகத்துக்கு இசைக்கலைஞன் ஈடுகொடுத்தாக வேண்டும். அதற்கான ஆயத்தங்களில் அவர்கள் தீவிரமாயினர். 

வாரிக்கையன் மந்தை முழுவதையும் சுற்றிப்பார்த்தார். கபிலர் மந்தையின் வடபுறமிருந்த மேட்டிலே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்பதை அவரால் கண்டறிய முடியாது. எனவே அவரால் ஆபத்து ஏதுமில்லை என முடிவுசெய்த வாரிக்கையன் மந்தையின் முன்புறத் திண்ணையில் தேக்கன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தார். தூக்கிவாரிப் போட்டது.

‘தேக்கனை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. எதையும் கண்டறிவதில் கெட்டிக்காரன். எனவே இவனை மந்தையை விட்டு வெளியேற்ற என்ன வழி?’ என்று சிந்தித்தார். அப்பொழுது அவரது கண்ணில் கட்டையர்கள் இருவர் தென்பட்டனர்.

ஆதிமலையின் வடகோடி அடிவாரத்தில் வாழ்பவர்கள் கட்டையர்கள். இருப்பதிலே மிகக்குள்ளமானவர்கள். ஆனால் மகாதிறமைசாலிகள். வீரத்தால் புகழ்பெற முடியாது என உணர்ந்த அவர்கள் வித்தைகளைக் கற்றுப் பெரும்புகழடைந்தனர். அவர்கள் ஊர்த்தலைவர்கள் இருவர் மட்டும் வந்துள்ளனர். பார்த்ததும் வாரிக்கையன் அவர்களைத் தனியே அழைத்து. “திகைப்பூச்சி இருக்கிறதா? எங்கிருந்தாவது பிடிக்கமுடியுமா?” எனக் கேட்டார்.

இருவரில் மூத்தவர் சொன்னார், “இருட்டிவிட்டதே, இனி எங்கு போய்த் தேடுவது?”

இளையவன் சொன்னான், “வருகிறபொழுது அருகிருந்த குளத்தில் அது கத்தும் ஓசையைக் கேட்டேன். தீப்பந்தத்தோடு இருவரை அனுப்புங்கள் பிடித்துவருகிறோம்” என்றான். பந்தத்தோடு இரண்டு இளைஞர்களை உடனனுப்பினார் வாரிக்கையன்.

வேட்டுவன் குன்றின் பின்புறச் சரிவில் சிறுகுட்டை ஒன்று இருந்தது. கோடைக்காலமாதலால் நீர் மிகக்குறைவாகவே இருந்தது. அதை நோக்கித்தான் அவர்கள் நால்வரும் போனார்கள். திகைப்பூச்சி நண்டுவலைக்குள்தான் இருக்கும். சிறுசிலந்தியைப்போல சிறிய உடலமைப்பும் நீண்ட கால்களையும்கொண்டது. பார்த்தால் சட்டெனத் தெரியாது. ஆனால் அது ஓசையைத் தெறித்துக்கொண்டேயிருக்கும். தொலைவிலிருந்தும் கேட்கலாம்.

கட்டையர்கள் குட்டையின் அருகிற்போய் நின்றார்கள். திகைப்பூச்சியின் ஓசை வருகிறதா என உற்றுக்கேட்டார்கள். ஓசையை அறிந்து அவ்விடம் போய்க் குத்தவைத்து உட்கார்ந்தனர். குறிப்பிட்ட நண்டுவலைக்குள்ளிருந்து அவ்வோசை வந்தது. பந்த வெளிச்சத்தை நன்றாகக் காண்பிக்கச் சொன்னார்கள். குளக்கரையோரம் சிறுநண்டு ஒன்று ஓடியது. அதனைப் பிடித்து முதுகோடு ஒரு நார்க்கயிற்றைக் கட்டினர். பந்தமேந்தியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். பிடிபட்ட நண்டினை ஓசைவந்த வலையின் அருகே விட்டனர். அது சொளவுக்குள் குடுகுடுவென ஓடியது. சிறிதுநேரத்திலே நார்க்கயிற்றை மேலே இழுத்தனர். இரண்டுமூன்று திகைப்பூச்சிகளைக் கவ்விய கால்களோடு நண்டு மேலே வந்தது. அதனைப் பக்குவமாய் எடுத்து இடுப்பிலே இருந்த பைத்துணிக்குள் போட்டு முடிச்சிட்டுக்கொண்டனர். 

நேரமாகிக்கொண்டிருந்தது. கட்டையர்களை இன்னும் காணவில்லை என்ற பதற்றத்தில் இருந்தார் வாரிக்கையன். ஓங்கூர் மருத்துவன் அவர் கேட்டதைக் கொண்டுவந்துவிட்டான். பெருமகிழ்ச்சி. உடனிருந்த இரு பெரியவர்களையும் அழைத்து அடுத்து செய்யவேண்டிய வேலையைச் சொல்லிமுடித்தார். கட்டையர்கள் இன்னும் வந்துசேரவில்லை. சற்றே பதற்றத்தோடு மந்தையில் போய் தேக்கனுக்கு அருகில் உட்கார்ந்தார் வாரிக்கையன்.

மந்தைவெளி முழுக்க ஆட்டத்தைக்காண, பெருவட்டத்தில் மக்கள் உட்கார்ந்தனர். புங்கனின் தலைமையில் இளைஞர்கள் கூட்டமாய் களத்தை நோக்கி வந்தனர். இணையர்கள் எல்லாம் களத்துக்கு வரத் தொடங்கினர். ஆட்டம் நள்ளிரவு வரை நடக்கும். நேரமாக ஆகத்தான் வேகம் கூடும். ஆண்சுற்றில் வேகங்கூடுதலாக இருக்கும், பெண்சுற்றில் குழைவு கூடுதலாக இருக்கும். இறுதிச்சுற்றில் இணையைப் பொறுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி இருக்கும். தழுவியாடும் ஆட்டமாதலால் எதையும் முன்கணிக்க முடியாது.

குரவைக்கூத்து என்பது மலைமக்களின் ஆதிநடனம். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தொற்றி ஆடுவதால் “தொற்றியாடல்” என்றும் தழுவி ஆடுவதால் “தழுவியாடல்” என்றும் இதற்குப் பெயருண்டு. இணையர்கள் எல்லாம் களத்துக்குள் நுழைந்தனர். பார்வையாளர்கள் வழக்கம்போல் ஆண், பெண் என இருகூறாகப் பிரிந்து ஆட்டத்தினை ஆதரித்து ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். முதுபெண்களும் வேறு சிலரும் மணவிழா வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தனர். மணமகள் அவளது ஊரிலிருந்து இன்னும் அழைத்துவரப் படவில்லை. எனவே மணமகன் ஆட்டத்தைக் காணக்கூடாது.

கோடை வெக்கைக்கு தாகம் கடுமையாக இருக்கும். அதுவும் ஆடுபவர்களுக்கு விடாமல் வேர்த்துக்கொட்டும். எனவே ஆட்டக் காரர்களுக்காக ஆண்கள் பக்கமும் பெண்கள் பக்கமும் தனித்தனியாகப் பழச்சாறு கலந்து வைக்கப்பட்டிருந்தது. இசைக்கலைஞர்கள் ஒருமுகப்பறையையும் இரட்டை முகமுடைய இணைமுகப்பறையையும் முழங்கத் தொடங்கினர். கூட்டத்தினரின் ஆர்ப்பரிப்பு எழுச்சிகொண்டது. இளைஞர்கள் ஒருபக்கமும் இளைஞிகள் ஒருபக்கமுமாகக் களமிறங்கினர். புங்கனின் முகத்தில் மகிழ்வின் ஒளிவீசியது.   

p83f_1517990199.jpg

மற்ற ஆட்டத்தைப்போல மெதுவாகத் தொடங்கி சீறான வேகங்கொள்ளும் ஆட்டமல்ல இது. இணையரின் வேகத்தைப் பொறுத்து சட்டென வேகங்கூடும். ஓர் இணை நெருங்கி ஆடிவிட்டால் போதும் மற்றவர்களும் நெருங்குவதற்காக ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டுவர். கால்களும் கைகளும் வேகங்கொள்ள பறையிசைப்பவனின் வேகம் அதற்கு முன்னே சென்றாக வேண்டும். முதற்சுற்று எவ்வளவு வேகமாக ஆடினாலும் அது தொடக்கம்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். வாரிக்கையன் கைகளால் உத்தரவுகொடுத்து, வேலையைத் தொடங்கச்சொன்னார். ஒரு பெரியவர் ஆண்கள் குடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த பெரும் பானைக்குள் எதையோ போட்டுவிட்டு நகர்ந்து இப்பக்கம் வந்துவிட்டார்.

எல்லோரின் கவனமும் ஆட்டக்களத்தின் மீதே இருந்தது. உள்ளே போடவேண்டியதைப் போட்டாகிவிட்டது என்பது வாரிக்கையனுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் கட்டையர்கள் வந்துசேராதது கவலையைத் தந்தது. தேக்கன் விழிப்போடிருந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்ற பதற்றத்தில் இருந்தார். முதற்சுற்று ஆட்டம் முடிந்தது. ஆடியவர்கள் பானைகளில் இருந்த பழச்சாற்றை அருந்தினர். 

ஆண்களின் பக்கமிருந்த பழச்சாற்றில் வாரிக்கையன் கலக்கச்சொன்னது காமஞ்சுருக்கியை. அது இச்சையைச் சட்டென வற்றிப்போகச்செய்யும். உடலை வேகமாகக் களைப்புறச்செய்து தூக்கத்துக்குக் கொண்டு செல்லும். காமஞ்சுருக்கி கலக்கப்பட்ட பழச்சாற்றை ஆண்கள் நான்கைந்து குவளை குடித்துவிட்டு அடுத்த சுற்றுக்கு ஆயத்தமாயினர்.

இரண்டாஞ்சுற்று ஆண் இறங்கி ஆடவேண்டும். இசைக்கலைஞர்கள் ஆயத்தமானார்கள். புங்கனை நடுவில் நிறுத்திக் கைகோத்து வட்டங்கொண்டது ஆண்களின் அணி. ‘நீங்கள் ஆடி வாருங்கள், பார்ப்போம்’ என்று எதிர்பார்த்தி ருந்தனர் பெண்கள். கூட்டம் பெருமாரவாரத்தைச் செய்துகொண்டிருந்தது. அப்போதுதான் கட்டையர்கள் உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்த பின்தான் வாரிக்கையன் முகத்திலே மகிழ்ச்சி வந்தது. அவர்களைக் கையசைத்து மந்தைப்பக்கமாக வரச் சொன்னார். அவர்களும் அப்பக்கமாக வந்து யாரும் அறியாத வகையில் திகைப்பூச்சி இருக்கும் சுருக்குப்பையை வாரிக்கையனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு நகர்ந்தனர்.

பெருமாரவாரத்தோடு தொடங்கிய இரண்டாஞ்சுற்று நேரம் செல்லச்செல்ல வேகங்கூடுவதற்கு பதில் மந்தநிலை கொள்ளத் தொடங்கியது. மந்தையில் தேக்கனுக்கு சற்று பின்னால் உட்கார்ந்திருந்த வாரிக்கையன் ஆட்டத்தைக்கண்டு அகமகிழத் தொடங்கினார். இசைக்கலைஞர்களுக்கு சற்றே குழப்பமானது. ஏன் ஆண்கள் வேகங்கொள்ள மறுக்கின்றனர் என்று சிந்தித்தபடியே இசையின் வேகத்தைக் கூட்ட முயன்றனர்.

தேக்கனுக்குப் பின்னால் இருந்த வாரிக்கையன் சுருக்குப்பையைத் தேக்கனின் முதுக்குப் பின்புறமாக p83e_1517990210.jpgவைத்து அவிழ்த்தார். உள்ளே இருந்த திகைப்பூச்சி தேக்கனின் முதுக்குப்புறமாக மேலே ஏறியது. கண்ணுக்குத்தெரியாத அளவுள்ள அதன் கால்கள் மேலேறுவதை மனிதனால் உணரமுடியாது. மேலேறிய அது கடித்துவிட்டு சிறிதுநேரத்தில் செத்துப்போகும். திகைப் பூச்சியால் கடிக்கப்பட்டவர்கள் சிறிதுநேரத்திலேயே திகைத்துப்போய்விடுவர். அவரால் வழக்கம்போல் செயலாற்ற முடியாது. எண்ணியதைப் பேசமுடியாது, மறுமொழி சொல்லமுடியாது. ஒருவித மந்தநிலையில் திகைப்பு மாறாமல் அவ்வப்பொழுது சிரித்தபடி தலையாட்டிக் கொண்டிருப்பர். வேறெதுவும் செய்யமாட்டார்கள். முதுகில் கடித்தவுடன் திகைப்பூச்சி சரிந்து விழுந்ததை உற்றுப்பார்த்த வாரிக்கையன் இனி சிக்கலேதுமில்லை என்ற முடிவுக்குப் போனார்.

கூட்டத்தின் ஆரவாரம் பலமடங்கு அதிகரித்தது. அதற்குக் காரணம் இளைஞர்களிடம் வேகம் போதாததால் சுற்றியுள்ள ஆண்கள் பெருங்குரலெடுத்துக் கத்தி அவர்களை உற்சாகப்படுத்த முயன்றனர். அப்பொழுது இன்னொரு பெரியவருக்குக் கையசைத்து உத்தரவு கொடுத்தார் வாரிக்கையன். அப்பெரியவர் நேராக பெண்களுக்கான பழச்சாறு கலக்கப்பட்டுள்ள பானையில் எதனையோ போட்டுவிட்டு ஒதுங்கி வந்தார். ஆண்களின் ஆட்டத்தைக்காணும் யாருக்கும் கோபம் வரும், அந்த அளவு மோசமாக ஆடிக்கொண்டிருந்தனர். இசைக்கலைஞர்கள் முடிந்த அளவு வேகத்தைக் கூட்டிப் பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை. வழக்கமாக ஆண்களின் சுற்றில் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெண்கள் சிலர் தள்ளாடிவிழுவதும் உட்கார்ந்துவிடுவதும் நடக்கும். இன்று அது எதுவும் நடக்கவில்லை. இவ்வளவு மெதுவாக எவ்வளவு நேரந்தான் ஆடுவது என்று சலித்துப்போய் நிறுத்தினான் இசைக்கலைஞன். வழக்கமாக இசையை எப்பொழுது நிறுத்தினாலும் “நிறுத்தாதே!” என்றுதான் குரல் வரும். ஆனால், இன்று விட்டால்போதும் என்ற நிலையில்தான் ஆடும் இளைஞர்கள் இருந்தனர்.

இளைஞர்கள் ஏன் இவ்வளவு களைப்பாக ஆடுகின்றனர் என்பது யாருக்கும் விளங்கவில்லை. இளைஞிகளுமே சற்று குழப்பத்துக்கு ஆளானார்கள். ‘என்னாச்சு இவனுகளுக்கு? வழக்கமாக இருக்கும் வேகத்தில் பாதிகூட இல்லையே!’ என்று சிந்தித்தபடியே இரண்டாஞ்சுற்றினை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

ஆடுபவர்கள் மீண்டும் பழச்சாறு குடிக்கப்போனார்கள். இளைஞர்களின் பக்கம் பெருங்கூட்டம். “நல்லா குடிச்சிட்டு தெம்பா ஆடுங்கப்பா” என ஆளாளுக்கு முகந்து கொடுத்தனர். சிலர் புங்கனை வசைபாடத் தொடங்கினர். இளைஞிகளின் பக்கமும் நிறைய முகந்து குடித்தனர். இசைக்கலைஞன் மறுசுற்றுக்கு ஆயத்தமானான். ஆனால் நடுத்தர ஆண்கள் சிலர் தலையிட்டு, “கொஞ்சம் நேரமாகட்டும்பா, ஆடுறவங்க மிகக் களைப்பாக இருக்காங்க” என்று சொல்லி ஆட்டத்தைக்  காலந்தாழ்த்தினர். வாரிக்கையன் இதனைப் பார்த்து அகமகிழ்ந்துகொண்டிருந்தார். அவரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேக்கன் அவ்வப்பொழுது சிரிக்கத் தொடங்கினார்.

``நல்லா ஆடுங்கடா! தேக்கன் உங்களப் பாத்து சிரிச்சுக்கிட்டு இருக்காரு” என்று சொல்லி மூன்றாஞ்சுற்றுக்கு இளைஞர்களை இறக்கினர் நடுத்தர ஆண்கள். இளைஞர்களைத் தொடர்ந்து இளைஞிகள் உள்ளிறங்கினர். இச்சுற்று பெண்கள் ஏறிப்பாடி ஆடும் சுற்று. களைகட்டும் கூத்து. காண்போரை ஆட்டத்தின் வழியே கிறக்கத்தை உருவாக்குவார்கள் இணையர்கள். இன்று அதே வேகத்தோடு அல்ல, வழக்கத்தைவிடப் பலமடங்கு வேகத்தோடு உள்ளிறங்கியது இளைஞிகள் கூட்டம். ஏனென்றால், அவர்கள் குடித்த பழச்சாற்றிலே வாரிக்கையன் கலக்கச்சொன்னது காமமூட்டியை. அதனை நீரில் கலந்து ஒரு குவளை குடித்தாலே காதலுணர்ச்சி உச்சத்தை அடைந்து படாத பாடுபடுத்தும். முதற்சுற்று ஆடிய களைப்பில் இளைஞிகள் ஒவ்வொருவரும் மூன்று நான்கு குவளையைக் குடித்துவிட்டு உள்ளே இறங்கியுள்ளனர். எதிர்ப்புறமோ இளைஞர்கள் முழுவதும் காமஞ்சுருக்கியை எண்ணற்ற குவளை குடித்துவிட்டு வந்து நின்றனர்.

ஆட்டம் தொடங்கியது. பறம்பு நாட்டில் எந்த ஒரு மணவிழாவிலும் நடக்காத கூத்தாக இந்தக் குரவைக்கூத்து நிகழ்ந்தது.  இளைஞிகள் தங்கள் இணைமீது தீராக்காதலோடு களமாடினர். இளைஞர்களின் பாடு பெரும்பாடானது. எவனும் எவளுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. துவளுங்கொடியாக ஆணும் நிமிரும் சுடராகப் பெண்ணும் இருந்தனர். “என்னடா ஆச்சு உனக்கு?” என்று ஒவ்வொருத்தியும் தங்கள் இணையின் காதிலே கடிந்து கேட்டனர். என்ன கேட்டும் எதுவும் நடக்கவில்லை. இசைஞன் அடுத்தடுத்து வேகத்தைக் கூட்டிக்கொண்டிருந்தான்.

கைகோத்து, நடுவிரல் பற்றி, அணிவிரல் சேர்த்து ஆடவேண்டிய ஆட்டத்தை ஆட  எவனுக்கும் தெம்பில்லை. ஆனால், எவளும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள முயலவில்லை. காதலையும் காமத்தையும் உயிர்கொல்லும் உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் தெய்வமகளாம் `அணங்கு’ இறங்கி ஆடும் கடைசிக்கட்டம் தொடங்கியது. ஆண்களில் எவனாலும் களத்தில் நின்றாட முடியவில்லை. புங்கன்தான் முதலில் சரிந்தான். பெண்களின் ஆர்ப்பரிப்பு விண்ணைத் தொட்டது. பார்த்துக்கொண்டிருந்த ஆண்கள் தலைகவிழ்ந்தனர். மந்தையில் உட்கார்ந்து விண்ணதிரச் சிரித்துக்கொண்டிருந்தார் வாரிக்கையன். தேக்கனோ அவ்வப்பொழுது சிரித்துக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் இறுதிக்கட்டம் வந்தபொழுது ஈடுகொடுக்க முடியாத தம் இணையை, தோளிலே தூக்கி ஆடினர் பெண்கள்.

p83g_1517990229.jpg

“இது மயிலாவின் மணவிழா. அப்படித்தான் இருக்கும். தூக்கிச் சுத்துங்கடி இவனுகள” என்று, பார்த்திருந்த பெண்கள் கத்த, சுற்றிய சுற்றில் சுருண்டு வதங்கினர் இளைஞர்கள்.

ஆட்டம் முடிந்ததும் விருந்து தொடங்கியது. எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தபொழுது, தொலைவில் இருளில் குதிரைகள் வந்து நின்றன. விருந்து ஏற்பாட்டிலிருந்த வேட்டூர் பழையன் குதிரையின் குளம்படி கேட்டுத் திரும்பினார்.

வந்திறங்கிய குதிரை வீரர்களை நோக்கி இருளுக்குள் நடந்து போனார் வேட்டூர் பழையன். அவர்கள் கீழ்த்திசை எல்லைக்காவலர்கள். வேட்டூர் பழையனை வணங்கிவிட்டுச் சொன்னார்கள், “நெடுங்குன்றின் அடிவாரம் பாண்டிய நாட்டு வீரர்கள் படை தங்குவதற்கான பாடிவீட்டினை அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 70

 

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p83a_1518515222.jpg

பொழுது விடிந்தது. ஆட்டத்தின் களைப்பை உதிர்த்தபடி ஊர் எழுந்தது. பாண்டியர்கள் படைவீடமைக்கும் செய்தியைச் சொன்ன வீரர்களை வேட்டூர் பழையன் தனியே அழைத்துக்கொண்டு போய்விட்டார். நீலனின் கண்களிற்பட்டால் அவன் உடனே புறப்பட்டுச்செல்ல முற்படுவான். கீழ்திசைக்காவல் அவன் பொறுப்பு. என்ன சொல்லியும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே பாரி வந்து சேரும்வரை காவல்வீரர்களை நீலனின் கண்களிற்படாமல் பழையன் பார்த்துக்கொண்டார்.

பொழுதாகிக்கொண்டிருந்தது. ஆண்களெல்லாம், ஆடிய இளைஞர்களை மிச்சம் வைக்காமல் திட்டித்தீர்த்துக்கொண்டிருந்தனர். இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. ஆனால், இவையெல்லாம் விடிந்து சிறிதுநேரம் மட்டுமே இருந்த எண்ணங்கள். இவையெல்லாம் சேர்ந்ததுதான் மணவிழாக்கொண்டாட்டம். மீண்டும் இசைக்கருவிகளின் ஓசை கேட்கத் தொடங்கியதும் மகிழ்வு மலையெங்குமிருந்து பொங்கி மேலெழுந்தது. மணவிழாவின் வேலைகளில் வேகங்கூடின. ஆனாலும் எல்லோரின் கண்களும் பாரியின் வரவை எதிர்பார்த்தே காத்திருந்தன.

மணமக்கள் குடிபுக சுடுமண் சுவரெழுப்பி புல்வேயப்பட்ட புதுக்குடிலைக் கூரைப்பூக்களைக் கொண்டு அலங்கரித்திருந்தனர். ஆதினியும் அவள் தோழிகளும் அதனைப் பார்த்துவரப் புறப்பட்டனர். அப்புதுக்குடில் நாங்கில் மரத்தை முன்நிழலாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. காரமலையின் கீழ்ப்பகுதியில் விரிந்துகிடக்கும் சமவெளி முழுவதையும் பார்ப்பதைப்போல அக்குடில் இருந்தது. குடிலுக்குள் வந்தாள் ஆதினி. தலையுயர்த்தி, வேயப்பட்ட புல்லினைப் பார்த்தாள், சற்றே ஐயங்கொண்டு வெளியில் வந்து மேற்பரப்பைப் பார்த்தாள். வியப்பு கலந்த மகிழ்வு அவளது முகத்திலே ஓடிமறைந்தது.

மற்ற பெண்களுக்கு சட்டெனப் புரியவில்லை. என்னவென்று கேட்டனர். ஆதினி சொன்னாள். ``குரம்பைப் புல்லினை அடிப்புறம் வைத்து நடுவில் மூங்கிற்புல் பரப்பி, மேலே மாந்தம்புல்லினை மேய்ந்துள்ளனர். எவ்வியூர் போல இது மலைமுகட்டு ஊரல்லவே! அடிவாரத்து ஊராதலால் வெக்கை நிறைந்த கோடைக்காலத்திலும் குளுமை நீங்காமல் இருக்க இந்த ஏற்பாடு. மாந்தம்புல் உச்சிமலையின் கரும்பாறை இடுக்குகளில் மட்டுமே வளரக்கூடியது. கடமான்கள் விரும்பி உண்ணக்கூடிய புல்வகை. அவற்றைப் போய் அறுத்து வருவது எளிய செயலல்ல, நீலன் அவனே மேலேறிச்சென்று இதனை அறுத்து வந்திருப்பான்” என்றாள்.

உடன் வந்த இன்னொரு பெண் சொன்னாள்,  ``அவசரப்பட்டு முடிவுக்குப் போகாதே ஆதினி. மயிலாவே அதனைச் செய்திருப்பாள். அவளைப்பற்றி உனக்குத் தெரியாது” என்றாள். எல்லோரும் சிரித்தனர். வெளியில் இசைக்கருவிகளின் ஓசையோடு ஆரவார ஓசையும் பெருகி வந்தது. பாரி வந்துவிட்டான் என்பதை உணர்ந்து ஊர்மந்தையை நோக்கி விரைந்தனர்.

மக்களின் கூட்டத்துக்கு நடுவே பாரியின் முகத்தைக் காண நீண்டநேரமானது. எல்லோரையும் நலங்கேட்டான் பாரி. பறம்பின் தென்னெல்லையில் உள்ள ஊரிலிருந்தெல்லாம் பெரியவர்கள் வந்து சேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் பாரியின் நலங்கேட்டல் தனித்தன்மை கொண்டதாக இருந்தது. கரியனூர் பெரியாத்தா கூட்டத்தை விலக்கிக்கொண்டு பாரியை நோக்கி வந்தாள். வாஞ்சையோடு வரும் அவளைக் கண்டதும் பாரியின் மனம் பூரித்தது. 

பாரியின் தந்தையை சிறுவனைப்போல் நடத்துவாள் அவள். ஆனால் பாரியை அவள் தந்தையைப் போல நடத்துவாள். ``என் அப்பன்னெடா நீ” என்றே எப்பொழுதும் சொல்லுவாள்.

p83b_1518515245.jpg

“தள்ளாத வயதில் இவ்வளவு தொலைவு வரவேண்டுமா?” எனப் பாரி கேட்டதற்கு. “இனி நான் மலையேறி எவ்வியூருக்கு வந்து உன்னையப் பாக்க முடியாது. மலையடிவார ஊருக்கு எப்ப நீ வருவேன்னுதான் காத்திருந்தேன். மணநாளுக்கு வருவேன்னு எனக்குத் தெரியும். அதனாலதானப்பா எப்படியாவது ஒன்னையப் பாத்திடணும்ன்னு ஓடிவந்தேன்” என்றாள்.

பாரியின் கண்கள் கலங்கின. ``சூல்மருது எப்படி இருக்கிறது?” எனக் கேட்டான். ``இந்த மழைக்காலத்துல தப்பிச்சிருச்சு. ஆனால் இன்னும் எத்தனை காலமோ?” என்றாள். அவளின் குடிலருகே உள்ள மரமது. ஒருவகையில் அவளின் குலதெய்வமும்கூட.

பாரியின் நலங்கேட்டல்கள் எல்லாம் இப்படித்தான். மரம் செடி கொடி, விலங்குகள், மனிதர்கள் என ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தான். கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்த வேட்டூர் பழையன், ``வந்தவர்களை முதலில் உணவருந்த விடுங்கள்” என எல்லோரையும் சத்தம் போட்டு விலக்கினான்.

பாரியும் கபிலரும் காலம்பனும் அருகிருந்த குடிலுக்கு உணவருந்தப் போயினர். அவர்களுக்காகப் பொங்கம்பழப் பூந்தேன்கட்டி காத்திருந்தது. தேனீ தனது கூட்டுக்குள் முதலில் தேனைக் கட்டியாகத்தான் வைத்திருக்கும். பின்னர்தான் தேனாக்கும். மலைமக்கள் தேன்கட்டியைத்தான் எடுப்பர். தேனைப் பிழிந்தெடுக்கும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. அதுவும் எந்தவகைப் பூவில் இருந்து தேனெடுத்து இந்தக் கட்டியைத் தேனீ உருவாக்கியிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் இந்தக்கட்டியை எடுக்கலாமா வேண்டாமா என்பதனை முடிவுசெய்வர்.

அந்தப்பகுதியில், அந்தப்பருவத்தில் எந்தப் பூ அதிகம் பூத்திருக்கிறதோ அந்தப் பூவின் சுவைதான் p83c_1518515256.jpgதேன்கட்டியிலும் இருக்கும். நாவற்பழப்பூந்தேன் துவர்க்கும், வேப்பம்பழப்பூந்தேன் கசக்கும், கள்ளிப்பூந்தேன் இனிக்கும், கோட்டைப்பழப்பூந்தேனையும் அத்திப்பூந்தேனையும் சுவைபிரித்து அறிவது மிகக்கடினம். இதில் மிகச்சிறந்த சுவைகொண்டது, எவ்வளவு சாப்பிட்டாலும் இன்னும் இன்னும் என்று கேட்டுக்கொண்டே இருக்கச் சொல்லுவது பொங்கப்பழப்பூந்தேன். அந்தத் தேன்கட்டியை எடுத்துவந்து அடுக்குவாழை இலையில் வைத்துக்கொடுத்தனர். கட்டிச்சாறு கணக்கின்றி உள்ளிறங்கியது.

உணவு முடிந்ததும் வேட்டூர் பழையன் பாரியிடம் கூறினான், ``எல்லாவற்றையும் தேக்கனிடம் சொல்லியுள்ளேன், பகற்பொழுதிலே நீ போய் நேரில் பார்த்துவிட்டு வந்துவிடு.”

சரியெனச் சொல்லிய பாரி தேக்கனையும் முடியனையும் உடனழைத்துக்கொண்டு புறப்பட்டான். கபிலர் கொற்றவைக்கூத்தில் பார்த்த பலரை அதன்பின் இப்பொழுதுதான் பார்க்கிறார். எனவே அவர் இங்கேயே இருந்து கொண்டார். காலம்பனை பல ஊர்க்காரர்கள் இன்னும் பார்க்கவேயில்லை. ஆனால் பறம்பு முழுவதும் அவனின் வீரக்கதை தெரியும். எல்லோரும் அவனைக் காண விருப்பப்படுவர். எனவே அவனையும் இருக்கவைத்துக்கொண்டார் வேட்டூர் பழையன். ஈங்கையன் பாரியைப் பார்க்க வேண்டுமென விருப்பத்தோடு இருந்தான் ஆனால், பாரி பொழுதுக்குள் போய்த் திரும்பவேண்டியிருந்ததால் வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார் பழையன்.

பாரியுடன் மற்ற இருவரும் புறப்படும்முன் பழையன் சொன்னான், ``பொழுது சாய்வதற்குள் மணப்பெண்ணை அவளது ஊரிலிருந்து அழைத்து வந்துவிடுவார்கள். அதற்குள் நீங்கள் வந்துவிட்டால் மயிலாவிடமிருந்து தப்பித்தீர்கள். இல்லையென்றால் அவ்வளவுதான்” என்று எச்சரித்து அனுப்பினார் வேட்டூர் பழையன்.

பாரி, தேக்கன், முடியன் மூவரும் குதிரையில் புறப்பட்டனர். உடன் கீழ்திசை எல்லைக் காவல்வீரர்கள் இருவரும் சென்றனர். எதிர்பார்த்திருந்த செய்தியைத்தான் பழையன் சொன்னார். ஆனாலும், அவர் சொல்லும் இரு இடங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தன. குதிரைகள் காரமலையின் சரிவுப் பாதையில் தென்புறம் நோக்கி விரைந்து கொண்டிருந்தன. இரண்டாம் குன்றினைத் தாண்டியபொழுது பாரிக்கு மயிலாவின் நினைவுவந்தது. அக்குன்றின் அடிவாரத்தில்தான் அவளது ஊர்.

மயிலாவின் ஊரான செம்மனூரிலிருந்து மணமகளின் தாய்மாமன் அவளைத் தனது தோளிலே தூக்கி வருவான். வேட்டுவன் பாறையின் எல்லையில் நின்று மணமகன் அவளைத் தனது தோளுக்கு மாற்றித் தூக்கிச்செல்வான். அவ்வாறு தூக்கிச்செல்லும் நிகழ்வுதான் மிகுந்த உற்சாகமும் கொண்டாட்டமும் நிறைந்தது. கேலிப் பேச்சுகளும், குறும்புவிளையாட்டுக்களுமாக ஊரே களைகட்டியிருக்கும். சற்று அமைதியான பெண்கூட மணமகனின் தோளிலே அமர்ந்து வரும்பொழுது இல்லாத குறும்பெல்லாம் செய்வாள். மயிலாவைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவள் செய்யப்போகும் குறும்புத்தனங்களைக் காண பாரிக்கும் விருப்பமாகத்தான் இருந்தது. ஆனால், சூழல் வேறுவிதமாக அமைந்துவிட்டது.

p83d_1518515277.jpgகுதிரைகள் விரைந்துகொண்டிருந்தன. உச்சிப்பொழுதுக்கு வெள்ளடிக்குன்றின் அடிவாரத்திற்கு வந்தனர். அவர்களின் எண்ணவோட்டத்துக்கு ஈடுகொடுத்து வந்து சேர்ந்தன குதிரைகள்.  குன்றினை விட்டு மிகவும் தள்ளி, படைகள் தங்குவதற்கான தாவாரங்கள் அடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. படைவீரர்கள் இங்குமங்குமாகப் புதர்களை அகற்றிக் கொண்டிருந்தனர். குதிரைகள் ஆங்காங்கு கட்டப்பெற்றிருந்தன. கொடியெதுவும் பறக்கவில்லை. ஆனால், பாசறையின் முன்புறத்தில் பாண்டியப்பேரரசின் இணைக்கயல் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. படைவீரர்களின் உடைகளும் தாவாரத்தின் தன்மையும் பார்த்தவுடனே தெரிந்துகொள்ளக் கூடியவையாகத்தான் இருந்தன.

குன்றின் மீது நின்றபடி மூவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ``இது வெங்கல்நாட்டின் பகுதியாயிற்றே. பறம்புக்கு எதிராகச் செயல்பட மாட்டோம் என்று வாக்களித்த குலமல்லவா அவருடையது!” என்று முடியன் சொன்னபொழுது, தேக்கன் குறுக்கிட்டார், ``வைப்பூரில் நடந்த மோதலில் அவர் மகனின் தலையை நம்மவர்கள் சீவியெறிந்து விட்டதாகவும் அதன் பொருட்டு மையூர்கிழார் வஞ்சினம் உரைத்துள்ளாதாகவும் வேட்டூர் பழையன் சொன்னார்.”

``இங்கிருக்கும் இவன் எதற்கு வைப்பூர் துறைமுகத்துக்குப் போனான்?” எனக் கேட்டான் பாரி.

“தெரியவில்லை. ‘இளவரசனின் திருமண ஏற்பாட்டிற்குப் போனவன் அப்படியே துறைமுகம் வரை போயிருப்பான்’ என்கிறார் பழையன்.”

நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைகளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. சற்று நேரத்துக்குப்பின் புறப்பட்டனர்.

செம்மனூர்காரர்கள் வேட்டுவன் பாறையின் எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை வரவேற்று மணப்பெண்ணைத் தூக்கிக்கொள்ள மணமகன் வீட்டார் ஆயத்தமாக இருந்தனர். நீலன் மாவீரன்தான். ஆனால், மயிலாவைத் தூக்கியபின் கீழே இறக்காமல் ஊர்மந்தைக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். அவள் செய்யப்போகும் குறும்புத்தனங்களை இவன் எப்படிச் சமாளித்துத் தூக்கிவரப்போகிறான் என்பதைக் காண எல்லோரும் ஆவலோடு இருந்தனர்.

செம்மனூர்காரர்கள் எழுப்பும் பெரும்பறையின் ஓசை காட்டையே உலுக்கியது. ஓசைகேட்டு ஆடாத காலில்லை. தாய்மாமனின் தோளில் ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்து வந்தாள் மயிலா. எதிர்கொண்டு வாங்க வேட்டுவன் பாறையின் எல்லையில் தொண்டகப்பறை முழங்க மணமகனின் ஊரார் காத்திருந்தனர்.

p83g_1518515429.jpg

வந்தாள் மணப்பெண். தாய்மாமனின் தோளிலிருந்து தனது தோளுக்கு மாற்ற நீலன் அருகில் சென்றான், அவளும் இடமாறி உட்கார வசதியாக அவனுக்குக் கைகொடுத்தாள். பறைமுழக்கம் பேரிசையாய் எழுந்தது. சுற்றத்தார்கள் பூக்கள் சொரிய, அளவற்ற ஆரவாரத்துக்கு நடுவே நீலனின் இடதுதோளுக்கு மாறினாள் மயிலா.

உரிமையோடு காதலியைத் தோளிலே தூக்கிச்செல்லும் ஆணுக்கு இருக்கும் ஒரு மிடுக்குநடையைக் கண்டு மகிழ்ந்தது கூட்டம். நீலனின் திறள்கொண்ட தோளில் வசதியாக உட்கார்ந்து அவனது இருகைகளையும் பற்றியிருந்தாள் மயிலா. என்ன செய்யப்போகிறாளோ என எல்லோரும் ஆவலோடு அவளையே பார்த்தபடி வந்துகொண்டிருந்தனர். உன்னி நழுவும் அவளை இறங்கவிடாமல் எப்படிச் சமாளிக்கிறான் பார்ப்போம் என்று எதிர்பார்ப்போடு கூட்டம் கூச்சலிட்டுக்கொண்டு வந்தது. தொண்டகப்பறையும் பெரும்பறையும் ஒன்றாக இசைக்க, கூட்டத்தில் பாதிக்கு மேல் ஆட்டத்தில் இருந்தது. 

நீலனின் இடப்புறத் தோளிலே உட்கார்ந்த மயிலா அதன்பின் அமைதியாக வந்தாள். நீலன் சிரமமேதுமின்றித் தூக்கிவந்தான். பாதித்தொலைவுக்கு மேல் கடந்துவிட்டனர். இரு ஊராருக்கும் வியப்பு ஏறிக்கொண்டேயிருந்தது. ``சாதாரண காலத்தில் இயல்பாய் இருக்கும் பெண் மணமகனின் தோளில் உட்கார்ந்ததும் பெருங்குறும்பு செய்வதும், எந்நேரமும் குறும்புக்காரியாக இருப்பவள் மணமகனின் தோளிலே உட்கார்ந்ததும் அமைதியாய் அடங்குவதும் இயற்கைதானப்பா” என்று பேசிக்கொண்டே நடந்தனர் சிலர்.

மலைப்பாதையை மறித்தபடி கிளைபரப்பியிருக்கும் மாமரத்தினூடே நுழைந்து போய்க்கொண்டிருந்தது கூட்டம். பறையோசையில் மாமரத்திலிருந்த பறவைகள் ஒலியெழுப்பியபடி கலைந்து பறந்தன. கலையும் பறவைகளின் படபடப்புக்கும் ஓசைக்கும் ஏற்ப ஆட்டத்தின் வேகமும் கூடின. தாளத்துக்கு ஏற்ப பலரும் ஆடிக்கொண்டிருந்தனர். திடீரென மொத்தக் கூட்டமும் பேரோசையை வெளிப்படுத்தி ஆரவாரத்தால் அலைமோதியது. முன்னால் ஆடிக்கொண்டிருந்தவர்களுக்கு என்ன நடந்ததெனத் தெரியவில்லை. மணமக்களை நோக்கி வேகமாக உள்ளே ஓடிவந்து பார்த்தனர்.

சற்றே தாழ்ந்திருந்த மரக்கொப்பை எவ்விப்பிடித்து சட்டென மேலேறிக்கொண்டாள் மயிலா. நீலன் திகைத்துப்போய் அப்படியே நின்றான். கூட்டத்தின் ஆரவார ஓசை காதைக் கிழித்தது. நீலன் மரத்துக்கு மேலேறி அங்கிருந்து தோளிலே தூக்கியபடி கீழிறங்க முடியாது. மயிலாவாக மனம்மாறிக் கீழிறங்கி அவனது தோளுக்கு வந்தால்தான் உண்டு. கூட்டத்தின் கொண்டாட்டம் இருமடங்கானது. மயிலா யாரெனக் காட்டிவிட்டாள் என செம்மனூர்காரர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.

நீலனுக்குத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. மயிலாவின் மனம் இறங்கிவர என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆதியிலிருந்து நடந்துவரும் போராட்டமிது. இதில் ஒருவரையொருவர் வெல்வதைவிட ஒருவரோடு ஒருவர் இணைவதே இயற்கையின் தேவை. அதுவே இறுதியில் வெற்றியும் பெறுகிறது. ஆனால், இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் நீலன் விழித்தபொழுது மயிலா சொன்னாள். ``என் கேள்விகளுக்கு நீ விடை சொல். சரியான விடை சொன்னால் உனக்கு எறிகிடையாது. தவறான விடை சொன்னால் மாங்காயால் எறிவிழும். உனது எந்த விடை எனது மனம்தொடுகிறதோ அப்பொழுது நான் உனது தோளுக்கு இறங்குவேன்.”

கூட்டத்தின் ஓசை முன்னிலும் கூடியது. இவ்வளவு நேரம் செம்மனூர்காரர்கள், வேட்டுவன் பாறையைச் சேர்ந்தவர்கள் என இருகூறாகப் பிரிந்திருந்த கூட்டம் இப்பொழுது ஆண், பெண்ணென இருகூறானது.

மயிலாவின் சொல்லினை ஏற்பதைத் தவிர நீலனுக்கு வேறு வழியில்லை. இதிலுள்ள பெருஞ்சிக்கல் அவள் பறித்து வைத்திருக்கும் மாங்கனி ஒவ்வொன்றும் உள்ளங்கை அளவு இருக்கிறது. அதில் எறிவாங்கினால் நீலனின் நிலைமை என்னவாகும் என்று ஆளாளுக்குப் பேசிச் சிரித்தனர்.

முதல் கேள்வியைக் கேட்டாள். ``என் தாய்மாமன் உன்னைவிட வலுக்குறைந்தவன். ஆனால், அவன் என்னைப் பூப்போல தூக்கிவந்தான். நீ ஏன் இவ்வளவு அழுத்திப்பிடித்துத் தூக்கிவந்தாய்?”

கேட்டு முடிக்கும்முன் நீலன் சொன்னான், ``நீ நழுவி ஓடிவிடுவாய் அல்லவா? அதற்காகத்தான்” சொல்லி முடிக்கும்முன் சடசடவென விழுந்தது மாங்காயின் எறி. கூட்டத்தின் சிரிப்பு விண்ணைத் தொட்டது. ``நான் உன்னை விட்டு எங்கேடா போகப்போகிறேன். என்மீது நம்பிக்கை இல்லாமல்தான் அவ்வளவு இறுக்கமாகப் பிடித்திருந்தாயா?” எனக் கேட்டபடி கிளையிலிருந்த மாங்காயைப் பறித்துப் பறித்து எறிந்தாள். அவன் எறிபொறுக்கமாட்டாமல் மரத்தின் அப்பக்கமும் இப்பக்கமுமாக ஓடி மறைந்தான். அவளோ கொப்புகளின் மீது இங்குமங்குமாக ஓடியோடி எறிந்தாள்.

p83e_1518515313.jpg

அவனுக்காக இரக்கப்பட்ட பெண்ணொருத்தி, ``உன்மேல இருந்த ஆசையிலதான் இறுக்கிப் பிடிச்சேன்னு சொல்லாம இப்படிச் சொல்லிட் டானே” என்று வருத்தப்பட்டுச் சொன்னபொழுது அவளுக்கும் சேர்த்துவிழுந்தது எறி.

அதன்பின் நீலன் முன்னால் வந்து நிற்கவே நீண்டநேரமானது. அவள் கடுங்கோபத்தோடு கண்ணிற்பட்டபொழுதெல்லாம் எறிந்து கொண்டேயிருந்தாள். அவன் ஓடியோடி மறைந்துகொண்டிருந்தான். பொழுதாகிக் கொண்டிருக்கிறது என்று மயிலாவை சமாதானப்படுத்தி நீலனை அழைத்துவந்து அவளின் முன்னால் நிறுத்தியது கூட்டம்.

அடுத்து என்ன கேட்கப்போகிறாளோ என்ற பதைபதைப்போடு இருந்தான் நீலன். அவளோ சற்றே கோபத்தோடு கேட்டாள், ``குழந்தை பிறந்தவுடன் எந்த மார்பில் முதலில் பால்கொடுக்க வேண்டும்?”

பெண்குழந்தையென்றால் இடதுமார்பிலும் ஆண் குழந்தையென்றால் வலதுமார்பிலும் என்று நினைவுக்கு வந்தது. வந்தவுடன் குழப்பமும் சேர்ந்துவந்தது. ‘ஆண் குழந்தைக்குத்தானே இடதுமார்பு!’என்று குழம்பியபடியே அமைதியானான்.

கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி அருகிருந்தவளிடம் சொன்னாள். ``இந்தக் கேள்விக்கு என்ன விடை சொன்னாலும் எறி உறுதி.”

``ஏன்?” என்றாள் அருகிலிருந்தவள்.

``தவறாகச் சொன்னால், ‘இதுகூடத் தெரியவில்லையா?’ எனச் சொல்லி எறிவாள். சரியாகச் சொன்னால், `உனக்குத்தான் அக்கா தங்கச்சி இல்லையே; எவகிட்ட இதக் கேட்ட?’ என்று சொல்லி விடாமல் எறிவாள்” என்று சொல்லிச் சிரித்தாள்.

நீலனின் நிலைமை படுமோசமானது. எல்லோரும் எறி எப்போது தொடங்கப்போகிறது என்று உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

நீலன் சொன்னான், ``நான் பிறந்த உடனே ஆத்தாகாரி இறந்துவிட்டாள். உடன்பிறந்தவர்களும் இல்லை. அப்படியென்றால் காதலி நீதானே இதனைச் சொல்லித்தந்திருக்க வேண்டும்?”

எதிர்பாராத பதில். மயிலா ஒரு கணம் திகைத்துப்போனாள். அவன் தன் தாயின் இடத்தில் அவளைவைத்துச் சொல்லிய சொல் மயிலாவை ஏதோ செய்தது. சற்றே அமைதியானாள்.

அவளின் வேகம் மட்டுப்பட்டதை எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அவளோ உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

``நம் குழந்தைக்குப் பாட உனக்கு எத்தனை தாலாட்டுகள் தெரியும்?”

மூணு, ஆறு, பத்து என கூட்டத்திலிருந்த பெண்களின் வாய்கள் முணுமுணுத்தன. அவளிடம் நீலன் மறுபடியும் எறிவாங்கக் கூடாது என எல்லோரின் ஆசையும் எண்ணிக்கையாய் வெளிவந்துகொண்டிருந்தது.
நீலன் சொன்னான் ``ஒரே ஒரு பாட்டு.”

முணுமுணுத்த பெண்கள் தலையில் கையைவைத்தனர். ``கூடுதலாகச் சொல்ல வேண்டியதுதானே. அவள் மீண்டும் எறியப் போறாளே” என்று பதறியபொழுது மரத்தின் மீதிருந்த மயிலா கேட்டாள், ``என்ன பாடல் அது?”

அதுவரை அண்ணாந்து மேலே பார்த்துக் கொண்டிருந்த நீலன் தலைகவிழ்ந்து மண்ணைப் பார்த்தான், கண்களை மூடினான், வைகையின் அலை கரைவந்து அடித்தது. நீரின் செந்நிறத்தை நினைவில் ஏந்தியபடி அகுதையின் பாடலைப் பாடத் தொடங்கினான்.

கூட்டத்தின் ஆரவாரம் கொஞ்சம்கொஞ்சமாக ஒடுங்கியது. எல்லோரும் அமைதியாயினர். அவன் பாடல் மட்டுமே காற்றெங்கும் ஒலித்தது. மயிலாவின் கால்கள் மரம்விட்டுக் கீழிறங்கிக் கொண்டிருந்தன. இமைமூடிய நீலனின் கண்களுக்குள் வைகையை விட்டுக் காட்டுக்குள் ஓடிய குழந்தையே தெரிந்தான். அக்குழந்தை நகரும் செம்மூதாயைத் தொட்டபொழுது தாய் அவளைத் தூக்கினாள். அவ்வரியை அவன் பாடும்பொழுது தன்னையே தூக்குவதுபோல் உணர்ந்தான். அவள் குழந்தையைத் தோளிலே ஏந்தியபடி காட்டுக்குள் நடக்கத் தொடங்கினாள். மயிலாவும் அதனையே செய்தாள். இப்பொழுது நீலனை அவளது தோளிலே தூக்கியிருந்தாள். நீலன் நினைவு மீண்டபொழுது மயிலாவின் இறுகிய கைப்பிடியிலிருந்து அவனால் தன்னை விடுவிக்க முடியவில்லை. கூட்டம் இருவரையும் வணங்கி விலகியது.

நெடுங்குன்றின் அடிவாரத்தை அடைந்தபொழுது அங்கும் அதேபோன்று தாவாரம் அடிக்கப்பட்டிருந்தது. படைவீரர்கள் புதர்களை  நீக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தனர். இணைக்கயல் சின்னம் பளிச்சிட்டது. ஆனால், வெள்ளடிக்குன்றின் எதிர்ப்புறம் இருந்தவர்களைவிட இங்கு இருப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். குன்றின் மீதிருந்தபடி பாரியும் பிறரும் அதனைப் பார்த்தனர்.

வெள்ளடிக்குன்றுக்கும் நெடுங்குன்றுக்கும் இடையில் பலகாதத் தொலைவு இடைவெளி உண்டு. “ஏன் இவ்விரு இடங்களில் படைகளை நிறுத்த எண்ணுகிறான்?” என்று கேட்டான் முடியன்.

என்ன நடக்கிறது என்பதை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த பாரி சொன்னான். “இவ்விரு இடங்களில் படைகளை நிறுத்தவில்லை. இவ்விரண்டு எல்லைக்கும் இடையில் முழுவதுமாகப் படையை நிறுத்தப்போகிறான்.”

சற்றே திகைத்த முடியன் ``இத்தனை காதத்தொலைவா?”

``ஆம். இத்தனை காதத்தொலைவிற்கு நிறுத்துமளவிற்குப் படைபலம் இருப்பதால்தான் அவன் துணிந்து வருகிறான்” என்றான் பாரி.

சிறிதுநேரம் மூவரிடம் எந்தப் பேச்சும் இல்லை. சற்றே பின்புறம் திரும்பி மலையுச்சியைப் பார்த்தான் பாரி. சித்தேறி முகட்டிலிருந்து இருகூறாகப் பிளந்து சரிந்திருந்தது மலையடிவாரம்.

அவன் சொல்லப்போவது என்னவென்று தேக்கன் கணித்தான்.

மீண்டும் சமதளத்தைப் பார்த்தபடி பாரி சொன்னான், ``இவ்வடிவாரத்தில் எத்தனை பெரியபடையைக் கொண்டுவந்து நிறுத்தினால்தான் என்ன?” என்று சொல்லியபொழுது அவனது முகத்தில் ஓடிய சிரிப்பு கணநேரத்துக்குள் இருவரின் முகத்திலும் பரவியது.

பாரி வேட்டுவன் பாறைக்குத் திரும்பும்பொழுது பந்தவெளிச்சத்தில் மலைமுழுவதும் ஒளிவீசிக்கொண்டிருந்தது. எங்கும் மனிதத்தலைகள் தெரிந்தன. மணவிழாவுக்கு வந்துசேரவேண்டிய எல்லோரும் வந்துவிட்டனர். பாரியும் தேக்கனும் முடியனும் ஊருக்குள் நுழையும்பொழுது பொழுதடைந்து விட்டதால் மயிலா கோபித்துக்கொள்வாளோ எனத் தோன்றியது. ஆனால் பெண்ணை அழைத்துக்கொண்டு வரவே பொழுதுசாய்ந்து விட்டது என்றனர். காரணம் கேட்டபொழுது மாமரத்தில் ஏறிக்கொண்ட மயிலாவின் கதையைச் சொன்னார்கள். மகிழ்ந்து சிரித்தான் பாரி.

வந்த மூவரும் உணவருந்தினர். இசையின் பெருமுழக்கம் மீண்டும் தொடங்கியது. புதுமகிழ்வில் ஊர் திளைத்தது. பாரிக்காகவே காத்திருந்த பெரியவர்கள் அடுத்தகட்ட வேலையைத் தொடங்கினர். நீலனையும் மயிலாவையும் இருதிசைகளிலிருந்து ஆட்டபாட்டத்தினூடே அழைத்துவந்தனர். மந்தையின் நடுவிலிருக்கும் செங்கடம்பு மரத்தினடிவாரத்தில் வந்துசேர்ந்தனர்.

p83f_1518515334.jpg

ஊரின் நிலைமரம் அது. அதனடிவார மேடையில் நின்று மணமக்கள் மாலை சூட வேண்டும். மயிலம் மலர் மணக்கும் மாலையை அவர்கள் சூடிய பொழுது மலையெங்குமிருந்து பறித்துவந்த பூக்களை அவர்களின் மீது பொழிந்தனர் மக்கள். இசையோசையும் ஆரவாரமும் விண்ணைத்தொட, மலர்மணத்தில் மந்தையே கிறங்கியது. வந்தவரெல்லாம் வாழ்த்துச்சொல் கூறினர்.

அடுத்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனைக்கு அவர்கள் செல்லவேண்டும். நீலன் புதுமனை நோக்கி மயிலாவை அழைத்துச்சென்றான். அவனுக்குப் பின்னால் பாரியும் வேட்டூர் பழையனும் தேக்கனும் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஊரே வந்துகொண்டிருந்தது. நாங்கில்மரத்தின் அடிவாரமிருந்த புதுக்குடிலுக்கு வந்துசேர்ந்தனர். கூட்டத்தின் ஆரவாரமும் கேலிப்பேச்சும் பன்மடங்கு கூடியது. குலவை ஒலி பெருகிவர மயிலாவை அழைத்துக்கொண்டு மனைக்குள் நுழைந்தான் நீலன்.

எங்கும் உற்சாகப் பேரொலி. சற்று தொலைவில் பெண்களின் கூட்டத்தினூடே இருந்த ஆதினியைப் பார்த்தான் பாரி. அவளின் கண்கள் அங்குமிங்குமாக தவித்து அலைந்து கொண்டிருந்தன. வழக்கத்துக்கு மாறாக இருப்பதை உணர்ந்து அருகில் சென்றான் பாரி.

கலங்கிய அவள் கண்களில் நீர்பெருகியிருந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 71

 

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

லங்கி நின்ற ஆதினி சொன்ன செய்தி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  உதிரனும் அங்கவையும் மணவிழாவுக்கு வந்துசேரவில்லை என்பதுதான் அச்செய்தி. எவ்வியூரிலிருந்து மணவிழாவுக்கு ஒருவாரத்துக்கு முன்பே தன் தோழிகளோடு புறப்பட்டாள் அங்கவை. நான்கு நாள்களுக்கு முன்புதான் புறப்பட்டாள் ஆதினி. இரண்டு இரவும் மூன்று பகலுமெனப் பயணித்து மணநாளுக்கு முதல்நாள் வந்துசேர்ந்தாள் ஆதினி.

அவள் வந்தபொழுது விருந்தினர்களின் பெருங்கூட்டம் வேட்டுவன் பாறைக்கு வந்துசேர்ந்திருந்தது. பறம்புநாடு நானூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களைக்கொண்டது. எல்லா ஊர்களிலிருந்தும் நீலன்மயிலா திருமணத்துக்கு மக்கள் வந்துசேர்ந்திருந்தனர். தொலைவில் உள்ள ஊர்களிலிருந்து ஓரிருவரும் அருகிலுள்ள ஊர்களிலிருந்து பலரும் வந்துசேர்ந்திருந்தனர்.

p85_1519219251.jpg

தன் கூட்டத்தோடு ஆதினி வந்தபொழுது வேட்டுவன் பாறை மக்கட்கூட்டத்தால் திணறிக்கிடந்தது. எல்லோரும் ஆதினியைக்கண்டு  நலங்கேட்டனர். அவளும் வந்ததிலிருந்து இங்குமங்குமாக அலைந்துகொண்டே இருந்தாள். இரண்டொருமுறை சங்கவையைப் பார்த்தாள். அங்கவையோ கண்ணிற்படவேயில்லை. இந்தப் பெருங்கூட்டத்தில் தன் தோழிகளோடு எங்காவது சுற்றிக்கொண்டிருப்பாள் என்று நினைத்தாள். ஆனால், நள்ளிரவில் தொடங்கிய குரவைக்கூத்தில் இணையர்கள் எல்லாம் களமிறங்கியபொழுது அங்கவையும் உதிரனும் ஆடும் ஆட்டத்தைப் பார்க்க மிகுந்த ஆவலோடு வந்து நின்றாள். ஆனால், அவர்கள் இருவரும் களமிறங்கவில்லை. குரவைக்கூத்தில் பங்கெடுக்காமல் எங்கே போனார்கள் என்று தேடத் தொடங்கியபொழுது எதிர்ப்பட்ட அங்கவைக்குத் தோழியிடம் கேட்டாள்.

“எவ்வியூரிலிருந்து புறப்பட்ட முதல்நாள் இரவு புலிவால்குகையில் தங்கினோம். மறுநாள் காலையில் எழுந்தபொழுது உதிரன் வந்திருந்தான். ‘நீலன்மயிலாவுக்கு அதிசிறந்த பொருளொன்றை மணவிழாவன்று தந்து மகிழ்விக்க வேண்டாமா?’ என்றான். ‘ஆமாம். என்ன தரலாம்?’ என அங்கவை கேட்டபொழுது அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். ‘நாங்கள் பரிசுப்பொருளோடு வேட்டுவன் பாறைக்கு வந்துசேருகிறோம்’ என்று சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டுப் போய்விட்டனர். இன்று வந்துவிடுவாள் என நினைத்திருந்தேன். இன்னும் வரவில்லையா?” எனக் கேட்டாள் அவள். உதிரன் தோழர்கள் யாருக்கும் இதுபற்றித் தெரியவில்லை.

நீலனும் மயிலாவும் புதுமனை புகுந்தவுடன் நிலைமையைப் பாரியிடம் விளக்கினாள் ஆதினி. அன்றிரவு வேட்டுவன் பாறையிலே அனைவரும் தங்கினர். பொழுது விடிந்தது. ஆனால் உதிரனைப்பற்றிய எந்தச்செய்தியும் யாரிடமுமில்லை.
அதற்காக யாரும் பதற்றங்கொள்ளவில்லை. உதிரனும் அங்கவையும் சிறுவர்களல்லர். காடறியும் பயிற்சியில் முதன்மைவீரனாக விளங்கியவன் உதிரன். பச்சைமலையின் எந்தக் காட்டிலும் எவ்வளவு நெருக்கடியான நிலையிலும் மீண்டுவர அவனால் முடியும். அங்கவையும் இணைசொல்ல முடியாத வீரமுடையவள்தான். ஆபத்தில் சிக்கி உதவிதேவைப்பட்டால் சென்றிப்புகையைப் போட்டிருப்பர்.

“மணவிழாவுக்கு வந்துள்ள அனைவரும் அவரவர் ஊர்களுக்குப் புறப்படுங்கள். ஏதாவது சிக்கலில் மாட்டியிருப்பது அறிந்தால் தக்க உதவியைச் செய்யுங்கள்” என்று சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டு எவ்வியூர் நோக்கிப் புறப்பட்டான் பாரி.

ணவிழாவுக்கு ஆறு நாள்களுக்கு முன்பு, அதிகாலையில், புலிவால் குகையில் தோழிகளோடு இருந்த அங்கவையைக் கண்டு பேசினான் உதிரன். சிறந்ததொரு பரிசுப்பொருளினை நீலன்மயிலாவுக்குத் தரவேண்டும் என உதிரன் சொன்னபொழுது அங்கவை பெருமகிழ்வோடு அதனைக் கண்டடைய உடனே புறப்பட்டாள். அவளும் குதிரையேற்றம் தெரிந்தவள். தன்னுடனிருந்த இன்னொரு காவல்வீரனின் குதிரையை வாங்கி அங்கவைக்குக் கொடுத்தான் உதிரன். இருவரும் குதிரைப்பாதையில் பயணிக்கத் தொடங்கினர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்ப்பதுதான் கிளிமூக்கு மாங்காய். பச்சைமலைத்தொடரின் வியப்புறு கனிகளில் அதுவும் ஒன்று. அத்தகைய கனி பறம்பின் வடதிசையில் உள்ள கொழுமலையில் உள்ள செவ்வரிக்காட்டில்  காய்த்திருப்பதாகக் காவல்வீரர்கள் சொன்ன செய்தியைக்கொண்டு அப்பக்கமாகப் பயணத்தைத் தொடங்கினான் உதிரன். கொழுமலையென்பது எவ்வியூரிலிருந்து குதிரைப்பாதையில் சென்றால் ஐந்துநாள் பயணத்தொலைவைக் கொண்டது. அவ்வளவு நெடுந்தொலைவு சென்று மணநாளுக்கு முன் திரும்ப முடியாது என நினைத்த உதிரன். மலைமுகட்டில் அமைந்துள்ள குதிரைப்பாதையிலே தொடர்ந்து செல்லாமல், சில இடங்களில் குதிரைப்பாதையையும் சில இடங்களில் குறுக்குவழியில் நடைபாதையுமாக மாறி மாறிச் சென்று குன்றுகளைக் கடந்து கொண்டிருந்தான்.

முதல் இருநாள்கள் மலைமுகட்டின் வழியிலான குதிரைப்பாதையிலே சென்றனர். அங்கவை உடனிருப்பதால் காடுகளுக்குள் தங்காமல் அருகிலுள்ள ஊர்களிலேயே தங்கினர். அவ்வூர்களிலிருந்து மணவிழாவுக்குச் செல்பவர்கள் எல்லாம் ஏற்கெனவே புறப்பட்டிருந்தனர். பின்னர் குறுக்குவழியில் மலையிடுக்குகளுக்குள் புகுந்து பயணத்தைத் தொடர்ந்தனர். மூன்றாம் நாளும் நான்காம் நாளும் நடந்தே செல்ல வேண்டியிருந்தது. உதிரன் நினைத்ததுபோலப் பயணத்தின் வேகம் இல்லை. காரணம் வழியை விட்டுத் தொலைவில் இருக்கும் ஊர்களில் இரவு தங்கவேண்டியிருந்ததால் அங்குபோய்த் திரும்ப நேரமானது.

ஆனாலும் பாதிக்கு மேற்பட்ட தொலைவு வந்தபின் திரும்ப முடியாது என்ற காரணத்தால் பயணத்தைத் தொடர்ந்தனர். கிளிமூக்கு மாங்கனியோடு நீலன்மயிலாவைக் காண்பது எவ்வளவு மகிழ்வைத்தரும் என்பதை நினைத்தபடி அவர்கள் நடந்தனர்.

தன் காதலனோடு பயணிக்கும் அங்கவையின் மனநிலை முற்றிலும் வேறாக இருந்தது. அடர்காடுகளுக்குள் உதிரனோடு நீண்ட நெடும்பயணம். அவனால் காட்டின் எந்த இண்டிடுக்குக்குள்ளும் நுழைந்து வெளியேற முடியும். அவளை எந்தவொரு ஆபத்தும் தீண்டிவிடாதபடி பாதுகாக்க முடியும். பொதினியில் மருத்துவ அறிவை ஆணுக்கு நிகராகப் பெண்களும் அறிவர். அதனால்தான் ஆதினி மூலிகைச்செடிபற்றிய பேரறிவைக்கொண்டவளாக இருந்தாள். அங்கவையையும் அவளைப்போலவே வளர்த்திருந்தாள். இப்பொழுது கபிலரின் மொழியறிவும் அவளுள் செழித்திருக்க அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் புதிதாய் மலரும் பூவினைப்போல் ஒளியும் மணமும் வீசியது.

இருவரின் வியப்புகளுக்குள் அடங்காமல் விரிவடைந்துகொண்டே இருந்தது காடு. நான்காம் நாள் இரவு எயினூரில் தங்கினர். வந்திருப்பது அங்கவை என அறிந்து ஊரே விருந்துசெய்து மகிழ்ந்தது. உதிரனுக்கு வேறொன்று நினைவுக்கு வந்தது, அதனை அங்கவையோடு பகிர்ந்துகொண்டான். “காடறியும் காலத்தில் இவ்வூரின் மேற்றிசையில்தான் இராவெரி மரத்தைப் பார்த்தேன்” என்றான்.

p85a_1519219270.jpg

அதனைச் சொன்ன கணத்தில் அங்கவையின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. “எவ்விடத்தில் இருக்கிறது என்பது உனக்கு நினைவில் உள்ளதா?”

“நன்றாக நினைவில் உள்ளது.” “சென்று பார்ப்போமா?”

“நாம் பார்த்துத் திரும்ப, இருபகல் ஓர் இரவு ஆகுமே.”

அங்கவை சற்றே சிந்தித்தாள். உதிரன் சொன்னான், “ஏற்கெனவே அதிக நாள்களாகிவிட்டன. இனியும் நாம் காலந்தாழ்த்த வேண்டாம். இன்னொருமுறை அதனைப் பார்ப்போம்” என்றான். அங்கவையின் முகம் சற்றே வாடியது. மனக்கவலை தீர இரவில் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தான் உதிரன்.

அங்கவை தங்கிய குடிலின் மூதாட்டி, “இராவெரி மரத்தைப் பார்க்காவிட்டாலென்ன! இரிக்கிச்செடியைப் பறித்துவந்து காட்டு” என்றாள்.

மூதாட்டி என்ன சொல்லுகிறாள் என்று உதிரனுக்குப் புரியவில்லை. “இரிக்கிச் செடி என்றாள் என்ன?” எனக் கேட்டான்.

``உனக்கும் தெரியாதா?” எனக் கேட்டவள், தூரத்திலிருந்த பெண்ணை சத்தம்போட்டு அழைத்து, “இவ்விருவரையும் கூட்டிப்போய் இரிக்கிச்செடியைக் காட்டு” என்றாள்.

அப்பெண், இருவரையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குள் நுழைந்தாள். தேய்பிறையின் கடைசிக் காலமாதலால் மாமலை கும்மிருட்டில் மூழ்கிக்கிடந்தது.  ஊரை விட்டு சற்றுத்தள்ளி உள்ளே போனவள், சந்தன மரத்தின் அடிவாரத்தில் பின்னிக்கிடந்த பெருங்கொடியைப் பிடித்துத்தூக்கினாள். அவர்கள் இருவரும் அக்கொடியையே பார்த்தனர். கொடியின் முனைப்பகுதியை மட்டும் ஒடித்தவள் அங்கவையையும் உதிரனையும் கைநீட்டச் சொன்னாள். இருவரும் கையை நீட்டினர்.

ஒடித்த கொடியிலிருந்து கசியும் நீரினை இருவரின் உள்ளங்கையிலும் ஒவ்வொரு துளி வைத்தாள். இதனை ஏன் கையில் வைக்கிறாள் என இருவரும் உள்ளங்கையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்களின் கண்கள் விரியத் தொடங்கின. அத்துளி வெண்மை நிறங்கொண்டதாக மாறியபடியிருந்தது. கெட்டியான பால்துளிபோல் அது இருப்பதைப் பார்த்தனர். வியப்பு அடுத்தகட்டத்தை அடைந்தது. இவ்விருட்டில் இவ்வெண்மை நிறம் எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது எனச் சிந்தித்தபொழுதுதான் புரியவந்தது, அத்துளிநீர் மெல்லியதாய் ஒளியை உமிழ்ந்துகொண்டிருக்கிறது என்று. மின்னுட்டான் பூச்சியின் உடலுக்குள் இருக்கும் வெண்பச்சைநிற நீர்போல்தான் இதுவும் பச்சையின்றி முழுவெண்மையில் ஒளியை உமிழ்கிறது. இருவரும் தங்களின் உள்ளங்கைக்குள் ஓர் அதிசயத்தை வைத்துக்கொண்டு நின்றனர். கைநடுக்கத்தில் காற்றில் அசையும் சுடர்போல் கையொளி அசைந்துகொண்டிருந்தது.
அழைத்துவந்தவள் நீண்டநேரத்துக்குப் பின், “இன்று இரவு முழுவதும் வைத்திருந்தாலும் ஒளிமங்காது. வாருங்கள் போவோம்” எனச் சொல்லி ஊருக்கு அழைத்துவந்தாள். வரும்பொழுது நீண்டு படர்ந்துகிடந்த அதன் கொடியைப் பறித்து வந்தான் உதிரன்.

ஊர்வந்ததும் அங்கவை தங்கும் குடிலின் உட்புறச்சுவரிலும் மேற்கூரையிலும் செடியை ஒடித்து, கசியும் நீரினைப் பொட்டுப்பொட்டாக வைத்துவிட்டு வெளியேறினான். எரிந்துகொண்டிருந்த சிறுவிளக்கினை அணைத்தாள் அங்கவை. விளக்கொளி நீங்கியதும் குடில் முழுவதும் பெருகி நிறைந்தது இருள். சிறிதுநேரத்திலே நீர்த்துளிகள் பால்நிறங்கொள்ளத் தொடங்கின. இங்குமங்குமாக இருளுக்குள்ளிருந்து வெண்ணிற மொட்டுக்கள் அவிழத்தொடங்கின. அவிழும்பொழுதே ஒளி கசிந்துபரவியது. வான்வெளியில் மஞ்சள் ஒளிசிந்தும் விண்மீன்கள் வெண்மைநிற ஒளியைச் சிந்தினால் எப்படி இருக்கும் என்பதை அங்கவை இரவு முழுவதும் பார்த்திருந்தாள். அவ்விரவு முழுவதும் அவளின் கைக்கெட்டும் தொலைவில் விண்மீன்கள் நிறைந்துகிடந்தன. 

பொழுது விடிந்தது. அவர்கள் விரைந்து புறப்பட்டனர். அப்பொழுது உதிரன் செவ்வரிக்காட்டினைப் பற்றி எயினூர் மக்களிடம் கேட்டான். அவர்கள் அக்காட்டினை அடையும் திசைக்குறிப்பினைச் சொன்னார்கள். கிளிமூக்கு மாங்கனி வேண்டும் என்று சொல்லியிருந்தால், அவர்களும் உடன்வந்து பறித்துத் தந்திருப்பார்கள். ஆனால், தாமாகக் கண்டறிந்து நீலன்மயிலாவுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதால் அதனைப்பற்றிக் கேட்கவில்லை.

p85d_1519219211.jpg

அவர்கள் சொன்ன குறிப்பின் அடிப்படையில் நடைவழிப்பாதையில் இருமலைகளைத் தாண்டினர். செங்குத்தான ஏற்ற இறக்கமாதலால் களைப்பு அதிகமாக இருந்தது. அன்றிரவு குகையினில் தங்கினர். அருகில் ஊரெதுவும் கிடையாது. உதிரன் கையில் இரிக்கிக்கொடியைப் பறித்து வந்திருந்தான். குகைமுழுவதும் வான்வெளியாக மாற்றி அங்கவையைத் தூங்கவைத்தான். குகைவாயிலில் இரவு முழுவதும் விழித்திருந்தான். அதிகாலை அவள் எழுந்ததும் சிறிதுநேரம் அவன் உறங்கினான்.

வெயில் ஏறத் தொடங்கியபொழுது அவர்கள் வேகவேகமாக நடந்துகொண்டிருந்தனர். செவ்வரிக்காட்டுக்குள் உச்சிப்பொழுதில் நுழைந்தனர். நீண்டுகிடக்கும் மலைமடிப்பின் இருபக்கச் சரிவிலும் பரவிக்கிடப்பதுதான் செவ்வரிக்காடு. காட்டின் நடுவில் ஊடறுத்து ஓடிக்கொண்டிருந்தது எழுவனாறு. அகலமான இவ்வாற்றில் ஒருதுளி நீரில்லை. கோடையின் வெக்கையில் மணற்துகள்கள் மின்னிக் கொண்டிருந்தன.

இருவரும் ஒவ்வொரு மரமாக உற்றுப்பார்த்தபடி நடந்துகொண்டிருந்தனர். எண்ணற்ற மாமரங்கள் இருந்தன. அவை எதிலும் கிளிமூக்கு மாங்கனி இல்லை. மரத்தைப் பார்த்தபடியே இங்குமங்குமாக நடந்தனர். கொடுங்கோடையாதலால் செடிகொடிகள் வதங்கிப்போயிருந்தன. பச்சைமலையின் அடிவாரக்குன்றுப்பகுதிகள் இவை. எனவே வெக்கையின் தாக்கம் கடுமையாகவே இருந்தது.

நன்கு படர்ந்து விரிந்திருந்த மாமரத்தின் அடிவாரத்தில் ஓய்வெடுக்கலாம் என அமர்ந்தனர். சற்றே அவன் தோள்சாய்ந்தாள் அங்கவை. சிறிது ஓய்வுக்குப்பின் உதிரன் சொன்னான், “நிழலிலே அமர்ந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.”

அங்கவை பதிலேதும் சொல்லவில்லை.

“ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறாய்?” எனக் கேட்டான் உதிரன்.

தோளிலே சாய்ந்திருந்தவள் முகம்பார்த்துப் பேசுவதற்காக எதிரே வந்து உட்கார்ந்து சொன்னாள், “இது மகிழ்வை மட்டுமே அறியும் பருவம். இதற்கு நிழலும் பொருட்டல்ல, வெயிலும் பொருட்டல்ல.”

சொல்லியபடி புன்னகைத்த அவளை மகிழ்ந்து கவனித்துக்கொண்டிருந்த உதிரனின் முகம் சட்டெனக் கடுமையானது. ``அசையாமல் இரு” என்றான்.

என்னவென்று புரியாமல் திகைத்தபடி இருந்தாள் அங்கவை. அவளது கழுத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த பெரிய ஈ ஒன்றை நோக்கி வலக்கையை மெதுவாகக்கொண்டுபோய் சட்டென அமுக்கிப்பிடித்தான்.

பிடித்த வேகத்தில் கைகளை மூடியவன் மெல்ல விரலிடுக்குகளின் வழியாக உள்ளிருப்பதைப் பார்க்க முயன்றான். இவ்வளவு கூர்மையாக எதனைப் பார்க்கிறான் என்று அவளும் உற்றுநோக்கினாள். விரல் இடுக்குகளுக்குள்ளிருந்து அது தலையை முண்டி வெளியேற முயன்றது. அதன் தலையையும் வெளிவரமுயலும் அதன் எத்தனிப்பையும் கவனித்தபடி உதிரன் சொன்னான், “இது அடவி ஈ. மூன்றுநான்கு ஈக்கள் கடித்தால் சற்றுநேரத்திலே மனிதன் மயக்கம் அடைந்துவிடுவான். எண்ணற்ற ஈக்கள் மொய்த்துக்கொண்டு கடித்தால் மரணங்கூட ஏற்படலாம்.”

கணநேரத்தில் அங்கவையின் முகம் இறுகி உறைந்தது. அதனைக் கவனித்தபடி உதிரன் சொன்னான், “இந்த ஈ உன்னைக் கடிக்கவில்லை. அமர்ந்ததும் பிடித்துவிட்டேன். அதுமட்டுமல்ல; ஓர் ஈ கடித்ததால் ஒன்றும் ஆகிவிடாது.”
தலையை மறுத்து ஆட்டியபடி அங்கவை சொன்னாள், “உனது முதுகில் மூன்றுநான்கு ஈக்கள் இருப்பதை அப்போதே பார்த்தேன்.”

சற்றே அதிர்ந்தான் உதிரன்.

சொல்லிக்கொண்டே அவனது முதுகுப்புறமாக வந்துபார்த்தாள். மூன்று ஈக்கள் முதுகோடு ஒட்டியிருந்தன. மரத்தில் சாய்ந்திருந்ததால் மரப்பட்டை அழுத்துகிறது என நினைத்திருந்தான் உதிரன். அவள் தட்டிவிட்டதும் அவை பறந்து வெளியேறின.அவ்விடத்தில் முள்தைத்ததைப்போல் குருதி இருந்தது.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஈக்கள் கடித்துள்ளன என்பதை அவளின் முகம்பார்த்து உணர்ந்த உதிரன் சொன்னான், “நீ கலங்காதே! ஒருவேளை நான் மயக்கமுற்றாலும் சிலபொழுதில் எழுந்துவிடுவேன். பதற்றமடையாமல் இரு” என்றான்.

p85c_1519219196.jpg

அங்கவை சற்றே படபடப்போடு இருந்தாள். ஏனென்றால் இதனைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே உதிரனின் கண்கள் செருகத் தொடங்கிவிட்டன. அதனைக் கவனித்தவள், அவனது தலையினைத் தனது மடியினில் மெல்லச் சாய்த்தாள். சிறிதுநேரத்திலேயே உதிரன் முழுமுற்றாக மயங்கினான். 

கலக்கத்தில் உடல் உதறுவதுபோல் இருந்தது, ஆனால், அடுத்தகணமே செய்ய வேண்டியதென்ன என்று சிந்தித்தாள். உடனடியாக சென்றிப்புகை போடுவோம். இப்பகுதியில் ஊரேதும் இல்லை. மலையின் பின்புறம் இருமடிப்புகள் தாண்டி எயினூர் இருக்கிறது. இங்கு புகைபோட்டால் அவ்வூரில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. இம்மலைப்பகுதியில் யாராவது இருந்தால்தான் உண்டு என்று எண்ணியபடி இங்குமங்குமாக சென்றிக்கொடியைத் தேடினாள்.

உதிரனின் இடுப்பிலிருந்த குறுவாளினை எடுத்து அருகிருந்த செடிகொடிகளை வெட்டியிழுத்தாள். வேகமாக அவற்றை உதிரனின் மீது போட்டு மீண்டும் ஈக்கள் மொய்க்காதபடி செய்தவள். சற்று விலகிப்போய் சென்றிக்கொடி தேடலாம் என்று முயன்றாள்.

அவளது தேடல் தொடர்ந்துகொண்டே இருந்தது. கீழ்ப்புறமாக எழுவனாற்றை நோக்கி இறங்கித் தேடினாள். அகன்று விரிந்து கிடந்தது எழுவனாறு. அதன் மணல் வெக்கையை உமிழ்ந்துகொண்டிருந்தது. ஆற்றினூடே குறும்பாறைகள் முளைத்துக்கிடந்தன. அவளின் கண்கள் எங்கும் ஓடித்திரும்பின. உதிரனைப் பார்க்கும் தொலைவைக் கடந்து போய்விடக்கூடாது என நினைத்துக்கொண்டே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி தேடிக் கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் கண்ணில் தட்டுப்படும் ஒன்று தேடும்பொழுது மட்டும் ஏன் கிடைப்பதேயில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அவளது கண்களுக்கு முன்னால் அது படர்ந்துகிடந்தது. பார்த்ததும் பெருமூச்சு விட்டாள். கையிலிருந்த குறுவாள்கொண்டு கொடியின் அடிப்புறத்தை அறுக்க எண்ணித் தரையோடு அமர்ந்தாள். ஏதோ மாறுபட்ட ஓசை ஒலிப்பதுபோல் இருந்தது. என்னவோசையிது என்று எண்ணியபடி சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால், சிறிது சிறிதாக ஓசையின் அளவு கூடிக்கொண்டேயிருப்பதுபோல் உணர்ந்தாள். 

கையிலிருந்த குறுவாளோடு கொடியினை அறுக்காமல் அப்படியே எழுந்தாள். கண்கள் திசையெங்கும் தேடித்துழாவின. பெருகுமோசை என்னவென்று புரியவில்லை. காட்டின் கீழ்ப்புறமிருந்து பறவைகள் கலைந்து பறந்தன. அத்திசையிலிருந்துதான் ஓசை வருகிறதென அறியமுடிந்தது. என்னவென்று தெரியவில்லை. மலையின் உச்சியில் ஏறிநின்று பார்ப்போமா என்று எண்ணியபொழுது, மிகத்தொலைவில் எழுவனாற்று மணல்வெளியில் உருவங்கள் தென்படத் தொடங்கின.

p85b_1519219232.jpg

வேகவேகமாக அருகிருந்த மரத்தின் மீதேறி, கொப்புகளுக்குள் தலைநுழைத்துப் பார்த்தாள். முதல்கணம் அவளால் காட்சியை உள்வாங்க முடியவில்லை. அகலவிரித்த கண்களில் தென்படும் எதுவும் அறிவிற்குப் புலப்பட மறுத்தது. எண்ணிலடங்காத யானைகள் எழுவனாற்று மணல்வெளியில் நடந்து முன்னேறிக்கொண்டிருந்தன. உயர்த்தப்பட்ட ஆயுதங்களோடு அவற்றின் மீது வீரர்கள் அமர்ந்திருந்தனர். ஆற்றின் இருகரையையும் அடைத்துக்கொண்டு அப்படை வந்துகொண்டிருந்தது.

 காணுங்காட்சியை அவளால் நம்ப முடியவில்லை. சிந்தனையைக் கூர்மையாக்கி மீண்டும் கண்திறந்து பார்த்தாள். வந்துகொண்டிருப்பது பெரும்படை என்பதை சிந்தனைக்குள் ஆழப்பதிந்தாள். கண்கள் காட்சியை அலசிக்கொண்டிருக்க எண்ணம் செய்யவேண்டியதைப் பற்றிச் சிந்தித்தது. கண்பார்வையின் கடைசி விளிம்பில்தான் அப்படை நகர்ந்து வந்துகொண்டிருந்தது. ஆனால் மூலப்படைக்கு முன்னால் தூசிப்படை வருமென அவளுக்குத் தெரியும். அப்படியென்றால் ஆற்றின் இருகரைகளிலும் எதிரிகள் முன்னேறி வந்துகொண்டிருப்பர். எண்ணிய கணத்தில் மரம்விட்டுச் சட்டெனக் குதித்து இறங்கி, உதிரனை நோக்கி ஓடினாள்.

கணநேரத்துக்குள் வாழ்வின் காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன. மேலே கிடந்த செடிகொடிகளை விலக்கி அவனது கன்னத்தில் அறைந்தும் மார்பில் குத்தியும் எழுப்ப முயன்றாள். உதிரன் உணர்வற்றுக் கிடந்தான். அங்கவை ஏதேதோ செய்துபார்த்தாள். கண்கள் கலங்கின. தலைமுடியைப் பிடித்து உலுக்கிப்பார்த்தாள். எந்தப் பயனுமில்லை. ஆவேசமும் குழப்பமும் கதறலுமாக மனம் கொந்தளிப்பில் அலைமோதியது. சட்டென அதே மரத்தின் மேலேறி, பொருத்தமான கிளையின் முனையில் போய்நின்று இலைகளை விலக்கிப்பார்த்தாள். மணல்தூசி அடுக்கடுக்காய் மேலேறிக் கொண்டிருந்தது. மிகத்தள்ளி அவர்கள் வந்துகொண்டிருந்தனர். ஆனால், ஆற்றின் எதிர்ப்புறச் சரிவிலிருந்து புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட பதாகையை ஒருவன் அசைத்துக் காண்பிப்பது அவளுக்குத் தெரிந்தது. வந்து கொண்டிருப்பது சோழனின் படை. அப்படியென்றால், அதே அளவுத் தொலைவில் இப்பக்கமும் தூசிப்படை முன்னேறியிருக்கும் என்பது புரிந்தது.

 p85e_1519219175.jpg

வெறிகொண்ட ஆவேசத்தோடு மரம் விட்டு இறங்கியவள், இங்குமங்குமாகத் தேடி, நீண்டுகிடந்த இண்டங்கொடியை இருபனை உயரத்துக்கு வெட்டியெடுத்தாள். ஒரு முனையில் உதிரனின் கால், இடுப்பு, மார்பு என அனைத்துப்பகுதியையும் மேல்நோக்கித் தூக்குவதற்கு ஏற்ப இறுகக்கட்டினாள். அவன் எவ்வித அசைவுமற்றுக் கிடந்தான்.

இண்டங்கொடியின் மறுமுனையை மரத்தின் கிளைகளுக்குள்ளே எறிந்தாள். தாழ்ந்திருந்த கிளையில் விழுந்து மறுபக்கமாகச் சரிந்தது. அதுவரை மேலே தூக்கி, பின்னர் மறுகிளை நோக்கி மேலுயர்த்துவதெல்லாம் முடியாதசெயல் எனச் சிந்தித்தவள். கொடியைக் கையில் எடுத்துக் கொண்டு சரசரவென மரத்தின் மேற்கிளையை நோக்கி ஏறினாள். பொருத்தமான இடமெனத் தென்பட்ட கவட்டைவடிவக் கிளையில் கொடியைப் போட்டு மறுபக்கமாகக் கீழே எறிந்தாள்.

மரம் விட்டு இறங்கியவள் இழுத்து மேலே தூக்க வசதியாக உதிரனை மரத்தினையொட்டி சாய்வாக உட்காரவைத்து, பின்புறமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் கொடியை இழுக்க ஆயத்தமானாள். இரு கைகளுக்குள்ளும் அடங்காத அளவு அகலங்கொண்டிருந்த இண்டங்கொடியைப் பிடித்து வாகாக நிற்க முயன்றாள். நகரும் படையின் ஓசை பெருக்கெடுத்து முன்னகர்ந்து வந்தது.

கையிலிருந்த கொடியை விட்டுவிட்டு ஓடிப்போய் எவ்விடம் வந்துள்ளனர் என்பதைப் பார்க்க எண்ணியவள் மறுகணம் இப்பொழுது கையிலிருக்கும் இக்கொடியை விடுவது, உதிரனின் உயிரை விட்டு அகல்வதற்கு நிகர். தூசிப்படையின் கண்களுக்கு மனிதர்கள் தெரிந்தால் வெட்டி யெறிந்துவிட்டுப் போவார்கள் எனச் சிந்தித்தபடி கொடியை இறுகப்பிடித்து வலுக்கொண்டு இழுத்தாள். உதிரன் மெல்ல அசைந்துகொடுத்தான். ஆனால், அவ்வளவு வலுமிக்க வீரனின் உடலை இழுத்து மேலேற்றுவதெல்லாம் எளிய செயலல்ல. ஆவேசங்கொண்டு முயன்றாள் அங்கவை. 

அமர்ந்த நிலையிலிருக்கும் உதிரனை நின்றநிலைக்குக்கூடக் கொண்டுவர முடியவில்லை. இது தனிமனிதராகச் செய்யும் முயற்சியல்ல என்பது தெளிவாக விளங்கியது. ஆனால், இம்முயற்சியை விட்டால் உதிரனைக் காப்பாற்ற வேறு எவ்வழியுமில்லை என்பதும் உறுதியாகப் புரிந்தது. எண்ணங்களை ஒருங்கிணைத்து முழுமூச்சோடு முயன்றாள். ‘வீரமும் வலிமையும் சிந்தனையில்தான் உள்ளன. அதனால்தான் சின்னஞ்சிறியவர்களை வைத்துக்கொண்டு திரையர்களின் கூட்டத்தை நடுமலை வரை எதிர்கொண்டார் தேக்கன். அத்தனை முறை தாக்குதலுக்கு ஆளான பின்னும் தளராமல் இறுதி வரை ஓடினர் கீதானியும் அலவனும். எண்ணத்தின் உறுதி எதனையும் செய்யும் ஆற்றலைத் தரும் என்பதை உணர்ந்தபடி ஆவேசத்தோடு இண்டங்கொடியை இழுத்துப் பின்னால் நகர்த்தினாள்.

உதிரன் சற்றே மேலுயர்ந்தான். உதிரனைத் தூக்கிவிட முடியும் என்று கண்ணில் தெரிந்த நம்பிக்கை, கைகளின் வலுவை மேலும் கூட்டியது. உன்னியிழுத்துப் பின்னகர்ந்தாள். உதிரன் உயர்ந்துகொண்டிருந்தான். மூன்று, நான்கு என கைகளில் கொடியைச் சுழற்றியபடி இழுத்தாள். தாழ்ந்திருந்த கொப்பின் உயரத்தை அவன் தலை தொட்டது. கொடியை அருகிருந்த மரத்தில் இழுத்துக்கட்டிவிட்டு வேகமாக வந்து மேலேறினாள்.

p85f_1519219151.jpg

இவ்வுயரத்தில் இருந்தால், மரத்துக்குக் கீழே யார் வந்தாலும் எளிதாகப் பார்த்துவிட முடியும். எனவே, மேலே உள்ள கிளைக்குக் கொண்டு போனால்தான் அவனை மறைக்க முடியும் எனத் தோன்றியதும் மீண்டும் கீழிறங்கிவந்து இழுக்க முயன்றாள். கைகளில் வலு போதவில்லை. என்ன செய்வதென்று புலப்படவில்லை. படையின் பேரோசை மலையெங்கும் அதிர்ந்து பரவியது. கைகளைத் தளர்த்தாமல் மூச்சினை இழுத்தாள். மனம் கொற்றவையை வணங்கியது. போர்த்தெய்வத்தின் ஆவேசத்தைக் கேட்டு மன்றாடினாள். மூடிய கண்களுக்குள் செம்பாதேவியின் நினைவு வந்தது. பற்களை நறநறவெனக் கடித்தபடி புலிக்கொடியைக் கிழித்து எறியும் ஆவேசங்கொண்டாள்.

``செம்பா தேவீ” என மனம் கதற, அடக்கமுடியாத ஆற்றலோடு இண்டங்கொடியை இழுத்துத் தள்ளினாள். உதிரன் மேற்கிளையில் முட்டி நின்றான். கயிற்றை மீண்டும் கட்டிவிட்டு மரமேறி உச்சிக்குப் போனாள். கிளையின் பிளவில் பொருத்தமாக அவனை உட்காரவைத்துக் கவட்டையோடு சேர்த்து அவனைக் கட்டினாள். கீழ்ப்புறமிருந்து பார்த்தால் தெரியாத அளவு கொப்புகளை ஒடித்துச் செருகி மறைத்தாள். இண்டங்கொடியை முழுமையும் மேல்நோக்கி இழுத்துக்கொண்டாள்.

படையோசை எங்கும் கேட்டது. காடெங்கும் பறவைகள் கலைந்து பறந்தன.  அடர்கிளைகளை மெல்ல விலக்கினாள். கிளி ஒன்று முகத்தில் கொத்துவதுபோல் வந்தது. தலையைப் பின்புறமாக இழுத்துக்கொண்டு பார்த்தாள். அது கிளிமூக்கு மாங்கனி. மரத்தின் உச்சிக்கிளையில் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தது. ஆடுங்கனியை இடக்கையால் விலக்கிப்பார்த்தாள். தூசிப் படையினர் முன்னேறி வந்துகொண்டிருந்தனர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்களுக்கு நன்றி நவீனன்.......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீரயுக நாயகன் வேள்பாரி - 72

 

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p83a_1519746110.jpg

மூன்றாம் நாள் நள்ளிரவில் உதிரனும் அங்கவையும் எயினூருக்குள் நுழைந்தனர். நாய்களின் குரைப்பொலியைக் கேட்டு ஊரே விழித்துக்கொண்டது. உடலும் மனமும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருந்தன. எழுவனாற்றின் மணல்வெளியைக் கடக்க முடியவில்லை. எத்தனை காலடித் தடங்கள், யானையினுடையவை எத்தனை, வில் வீரர்களுடையவை எத்தனை, கொன்றழிக்க வேண்டிய எதிரிகளின் எண்ணிக்கைதான் எத்தனை எத்தனை!

பார்த்த காட்சியை மற்றவர்களிடம் சொல்ல, கொந்தளிக்கும் உணர்வு இடம் தரவில்லை. எயினூரிலிருந்து மிகத் தள்ளி குன்றுகள் பலவற்றைத் தாண்டி ஓடும் எழுவனாறு, எதிர்ப்புறமாகத் திரும்பிச் செல்கிறது. எனவே, எயினூர் மக்கள் யாரும் படையைப் பார்த்தறியவில்லை. வந்ததும் அங்கவையை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வீரர்கள் இருவரை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாகப் புறப்பட்டான் உதிரன்.

மலைப்பாதையில் செங்குத்தான வழித்தடத்தில் கோழியனூரை நோக்கி மேலேறினர். இரவில் இந்தப் பாதையில் செல்வது ஆபத்து என ஊரார் தடுத்தபோதும் கேட்கும் நிலையில் உதிரன் இல்லை. கோழியனூரை அடைந்துவிட்டால் அங்கு காவல் வீரர்களிடம் விட்டுவிட்டு வந்த `குதிரையில் எவ்வியூர் விரைய வேண்டும். எதிரியின் படைகள் பறம்புக்குள் நுழைந்துள்ள செய்தியை மிக விரைவாக பாரியிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எழுவனாற்றின் வழித்தடத்தை யொட்டிய மலைப்பகுதியில் ஊர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. நாளையோ, நாளை மறுநாளோ படை வந்து கொண்டிருப்பதை மக்கள் பார்த்து விடுவர். வந்துகொண்டிருப்பது, இதுவரை பார்த்திராத அளவு எண்ணிக்கைகொண்ட பெரும்படை. எனவே, ஆங்காங்கே உள்ள மக்கள் தாக்குதலைத் தொடங்கிவிடக் கூடாது. நன்கு ஒருங்கிணைந்த தாக்குதலாக இருக்க வேண்டும். செய்தியை மிக விரைவாகக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியம்.’

நன்றாக வழி தெரிந்த இருவரோடு தான் மலையேற்றத்தைத் தொடங்கினான் உதிரன். செங்குத்தான பெரும்பாறைகளில் துணிந்து முன்னேறிச் சென்றனர். காலடியில் உருளும் கற்கள் கீழே போய் விழும் ஓசையைக்கூடக் கேட்க முடியவில்லை. மலைச்சரிவு அவ்வளவு ஆழமுடையதாக இருந்தது. பல இடங்களில் வேர்களையும் கொடிகளையும் பிடித்து மேலேற வேண்டியிருந்தது. வீரர்கள் இருவரும் உதிரனை அழைத்துச் செல்வதில் மிகக் கவனமாகச் செயல்பட்டனர்.

ஆனால், உதிரன் வெறிகொண்டபடி மேலேறிக் கொண்டிருந்தான். எந்த ஆபத்தையும் பொருட்படுத்த அவன் ஆயத்தமாய் இல்லை. அங்கவையின் செயல் அவனை உலுக்கியது. `எவ்வளவு இக்கட்டான நிலையில் தனியொருத்தியாக இருந்து என்னைக் காப்பாற்றியுள்ளாள். கடைசி வரை நம்பிக்கை இழக்காமல் செயல்பட்ட அவளின் துணிவு இணையற்றது. கால்களுக்குக் கீழே எண்ணிலடங்காத எதிரிகள் நகர்ந்து போய்க்கொண்டிருக்கும்போது பகலும் இரவும் கவனமாகத் தன்னையும் காத்து என்னையும் காத்துள்ளாள். இந்த உறுதிப்பாட்டுக்கும் துணிவுக்கும் முன்னால் நம் செயல்கள் எல்லாம் பொருட்டே அல்ல’ என்று அவனுக்குத் தோன்றியது. எயினூர் வீரர்கள் சற்றே தயக்கத்தோடு கடக்கும் இடங்களைப் பாய்ந்து கடந்துகொண்டிருந்தான் உதிரன்.

p83b_1519746124.jpg

அதிகாலை கோழியனூர் வந்து சேர்ந்ததும் காவல் வீரர்களிடம் குதிரையை வாங்கிக்கொண்டு எவ்வியூர் நோக்கி விரைந்தான். பாய்ந்து செல்லும் குதிரையால் அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. `மூன்று ஊர்களில் குதிரையை மாற்றி, பயணத்தை நிற்காமல் தொடரவேண்டும்’ என்று எண்ணியபடி பகல் இரவு பாராமல் விரைந்துகொண்டிருந்தான்.    

ங்கவை சொல்லிய ஒவ்வொரு சொல்லும் அவனால் நம்பவே முடியாததாக இருந்தது. அவன் விழிப்புற்றபோது பெரும்பான்மையான படைகள் கடந்துவிட்டன. பொழுது நீங்கி நீண்டநேரத்துக்குப் பிறகுதான் அவன் மயக்கம் தெளிந்தான். மரத்தின் உச்சிக்கிளையில் உட்கார்ந்த நிலையில் கயிற்றால் கட்டப்பட்டிருப்பது ஏனென்று அவனுக்கு நீண்டநேரம் புரியவில்லை. அவன் பேசத் தொடங்கியதும் ``அதிர்ந்து பேசாதே!’’ என எச்சரித்தாள் அங்கவை. பொழுது மங்கி இருள் சூழ்ந்ததால் அவனால் நடப்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. நீண்டநேரத்துக்குப் பிறகு மிக மெதுவான குரலில் நகரும் படையைப் பற்றிக் கூறினாள். அப்போதும் அவனது கட்டை அவள் கழற்றவில்லை. நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிமேலிட அவன் எதுவும் செய்துவிடக் கூடாது என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். பறம்புக்குள் எதிரிகள் நுழைந்ததை அறிந்த பிறகும் ஒரு காவல் வீரன், கதை கேட்டுக்கொண்டிருக்க மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இப்போது நிலைமை வேறுவிதமாக இருக்கிறது.

அவன் மயக்கம் நீங்கிய பொழுதிலிருந்து அதிர்ச்சிமேல் அதிர்ச்சிகளை அவள் சொல்லிக்கொண்டே இருந்தாள். ஆற்றின் மேலே நல்ல உயரத்திலிருந்து பார்த்ததாலும், எண்ணறிவில் தேர்ந்தவளாக இருந்ததாலும் நகரும் படையைப் பற்றிய துல்லியமான கணக்கை அவளால் சொல்ல முடிந்தது.

சொல்லிக்கொண்டேயிருந்த அவளின் குரல் காதை விட்டு அகல மறுக்கிறது. ``பறம்புவீரனாக இந்தப் படையைத் தடுப்பது தான் எனது முதல் வேலை. அருகில் இருக்கும் ஊர்களைத் திரட்டி இந்த இரவிலேயே தாக்குதலைத் தொடங்க முடியும். எதிரிகளை இந்த இடம் விட்டுத் துளியும் நகரவிடாமல் என்னால் செய்ய முடியும்” என ஆத்திரம்கொண்டு உரைத்தபோது, மிகவும் அமைதியாக ஆனால் உறுதியான குரலில் அவனது எண்ணத்தை மறுத்தாள் அங்கவை.

``தந்தை, தேக்கன், முடியன் என யாரும் சிந்தித்திராத ஒரு திசை வழியில் பறம்புக்குள் பெரும்படை நுழைந்துள்ளது. அப்படியென்றால், இதற்குப் பின்னால் விரிவான திட்டமிடல் இருக்க வேண்டும். சேரனும் பாண்டியனும் படையெடுப்பார்கள் என எதிர்நோக்கி இருக்கும்போது இவ்வளவு பெரும்படையோடு சோழன் ஏன் உள்ளே நுழைகிறான்? அதுவும் எழுவனாற்றின் வழியினூடே எங்கே போகிறான்? இதெல்லாம் விரிவான தன்மையோடு எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. எனவே, செய்தியை உடனடியாக எவ்வியூருக்குக் கொண்டு செல்லும் வேலையை மட்டும் செய்.”

எதிரியைக் கண்டு குருதி கொப்புளிக்கச் சினந்தெழுந்த உதிரனை மடக்கிப் பிடித்து எவ்வியூர் நோக்கி அனுப்பினாள் அங்கவை. ``செய்தி சொல்ல மற்றவர்களைக்கூட அனுப்பலாம். நான் எதிரிகளைத் தொடர்ந்து செல்வதுதான் சரி” என உதிரன் மீண்டும் வாதிட்டபோது அங்கவை சொன்னாள், ``எதிர்பாராத திசையிலிருந்தே இவ்வளவு பெரும்படை உள்ளே நுழைந்திருக்கிறது என்றால், மற்ற திசைகளிலிருந்து எவ்வளவு படைகள் உள்ளே நுழைந்துள்ளதோ! அவற்றை எதிர்கொள்ள யார் யார் எங்கெங்கே செல்வது என்பதெல்லாம் பறம்பின் தலைவன் எடுக்க வேண்டிய முடிவு. நீ போரிடவேண்டிய இடம் எது என்பதை எவ்வியூருக்குப் போய் கேட்டுத் தெரிந்துகொள்” எனத் திடம்கொண்ட குரலில் கூறினாள் அங்கவை. ஈட்டி ஏந்திய பல்லாயிரம் எதிரிகள் கீழே போய்க்கொண்டிருப்பதை அறிந்தபோதும் நடுங்காத அவளின் கால்களைவிட உறுதிமிக்கதாக இருந்தன அவளுடைய சொற்கள்.

p83c_1519746136.jpg

பொழுது மங்கிக்கொண்டிருக்கும் மாலை வேளையில் நாகப்பச்சை வேலியைத் தாண்டிப் பாய்ந்தது உதிரனின் குதிரை. மேல்மாடத்தில் பாரி, தேக்கன், முடியன், காலம்பன் ஆகியோர், தென் திசையிலிருந்து கூழையன் அனுப்பிய செய்தியைப் பற்றித் தீவிரமாகக் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர். தொலைவிலேயே பாரியின் கண்களுக்கு உதிரனின் பாய்ச்சல் தெரிந்தது. அங்கவையின்றித் தனியே வருபவனின் வேகம் ஆபத்து ஒன்றை முன்னுணரச்செய்தது. மாடத்திலிருந்து விரைந்து கீழிறங்கினர்.

இரண்டு நாள்களாக உணவேதுமின்றி அவ்வப்போது குதிரையை மட்டும் மாற்றி விரைந்து வந்து சேர்ந்தான் உதிரன். கிறங்கியபடி வந்தவனை சற்றே இளைப்பாறவைக்க முயன்றார் தேக்கன்.  ஆனால், கொந்தளிக்கும் உணர்வோடு இருந்த உதிரனால் அவர்கள் கொடுக்கும் நீராகாரத்தை வாங்கிக் குடிக்க முடியவில்லை. பேச்சு ஒழுங்கோடு வெளிவர மறுத்தது. முன்னும் பின்னுமாகத் திணறினான். அங்கவை இல்லாமல் உதிரன் மட்டும் வந்த செய்தி ஆதினியை எட்டியபோது இதுவரை இல்லாத அச்சத்தை அடைந்தாள்.

மாளிகையை நோக்கி ஓடோடி வந்தாள். அவள் உள்ளே நுழைந்தபோது அங்கவையின் கண்களின் வழியே நகர்ந்து செல்லும் யானைப்படையின் எண்ணிக்கையைச் சொல்லிக்கொண்டிருந்தான் உதிரன். காலாட்படையின் தன்மை வேறுபாடுகளைச் சொன்னான். குதிரைப்படை ஏதுமில்லை. படைகளை ஒழுங்கமைக்கவும் தளபதிகளின் பயன்பாட்டுக்காகவும் மட்டுமே குதிரைகள் வந்துள்ளன. வீரர்களின் முகங்களில் களைப்பேதும் இல்லை. தூசிப்படையினர் காதுகளின் மேல்மடல்களில் மூன்று ஓட்டையிட்டிருந்தனர் என்பதுவரை அங்கவை சொல்லி அனுப்பியிருந்தாள்.

ஏறக்குறைய அனைவரும் திகைத்துப்போயினர். `சோழன் ஏன் படையெடுத்து வருகிறான்? எழுவனாற்றினூடே பறம்புக்குள் நுழையும் வழி எப்படி அவனுக்குத் தெரிந்தது? அவனது படையின் வலிமை யானைகளை நம்பியதாக இருக்கிறது. அது மிகச்சரியான உத்தியே. இவ்வளவு தெளிவான திட்டமிடலோடு புறப்பட்டு வரும் நோக்கம் என்ன?’ என, ஒவ்வொருவருக்குள்ளும் கேள்விகள் உருண்டுகொண்டிருந்தன.

அவை அமைதிகொண்டது. ஆதினி பெருமூச்சு விட்டாள். அங்கவைக்கு ஆபத்து ஏதும் நிகழவில்லை. அதுபோதும். பறம்புக்குள் எவ்வளவு பெரியபடை வந்தாலும் அச்சம்கொள்ள ஒன்றுமில்லை. எனவே, அவை விட்டு அகன்றாள்.

p83d_1519746150.jpg

முந்தைய நாள் நள்ளிரவு, கூழையன் செய்தி அனுப்பியிருந்தான். `குடநாடும் குட்டநாடும் படையை ஒருமுகப்படுத்தியிருக்கின்றன. ஆயிமலையின் பின்புறம் இருநாட்டுப் படைகளும் ஒன்றுசேர்ந்து பாசறை அமைத்துள்ளன. ஆயிமலையின் கணவாய் வழியாக இன்னும் சில நாள்களில் அவர்கள் பறம்புக்குள் நுழைய உள்ளனர்’ என்பதுதான் கூழையன் அனுப்பியுள்ள செய்தி. வழக்கத்துக்கு மாறான தன்மையுடன் சேரர்களின் நடவடிக்கை உள்ளது. இருவரும் தனித்தனியே போரிடுவதற்கான ஏற்பாட்டுடன் இருந்ததாகத்தான் ஏற்கெனவே கூழையன் செய்தி அனுப்பி யிருந்தான். திடீரென எப்படி இரு படைகளும் ஒருங்கிணைந்தன? ஆயிமலை கணவாய்ப் பகுதியின் வழியே பறம்புக்குள் நுழையும் துணிவு எப்படி இவனுக்கு வந்தது? கிழக்குப்புறத்தில் பாண்டியன் படை அணி திரண்டுகொண்டிருப்பதற்கும், சேரனின் நடவடிக்கைக்கும் இருக்கும் உறவுகள் என்ன என்பதைப் பற்றிதான் அவையில் ஆய்ந்துகொண்டிருந்தனர்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும்மேலாக சேரர்களின் தாக்குதல் எத்தனையோ முறை நிகழ்ந்துள்ளது. ஆனால், இந்த முறை உதியஞ்சேரலின் நடவடிக்கைகளில் நிறைய வேறுபாடு தெரிகிறது. அவன் மிகக் கவனமாகப் பல வேலைகளைச் செய்கிறான். பறம்புக்குள் வழி அமைக்க தொடர்ந்து அவன் முயன்றுள்ளான். ஆனால், அவன் முயன்ற எந்தப் பகுதியிலும் இல்லாமல் ஆயிமலையில் கொண்டுவந்து இப்போது படையை நிறுத்திவைத்துள்ளான். அவனது திட்டமிடலின் ஒரு பகுதியாக நமது எண்ணங்களைக் குழப்பும் உத்தி இடம்பெற்றுள்ளது. இதை எதிர்கொள்ள, செய்யவேண்டியது என்ன எனச் சிந்தித்துக்கொண்டிருந்தவர்களிடம்தான் சோழப்படை உள்நுழைந்ததைப் பற்றிச் சொன்னான் உதிரன்.

உதிரன் சொன்ன செய்தி, எல்லோருக்குள்ளும் குழப்பத்தையே உருவாக்கியது. இந்தப் படையெடுப்பின் நோக்கத்தையும் தன்மையையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தனை ஆயிரம் எதிரிகள் இதுவரை பறம்புக்குள் நுழைந்ததில்லை. அங்கவை சொல்லியுள்ள கணக்குப்படி காலாட்படையின் எண்ணிக்கை ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது. யானைகளின் எண்ணிக்கை ஐந்நூறு.

`எதிரியின் படையைப் பற்றி பாரி வேறென்ன கேட்கப் போகிறான்?’ என்று உதிரன் எதிர்பார்த்திருந்தபோது பாரி கேட்டான், ``நீ கண் விழித்தது எப்போது?”

``மறுநாள் மாலையில்.”

``போதிய உணவின்றிப் பல நாள்களாக இருக்கிறாய். முதலில் உணவருந்திவிட்டு வா. பின்னர் பேசுவோம்” என்றான்.

உதிரனுக்கு எழுந்து செல்ல மனமில்லை. தயங்கியபடியே வீரர்களோடு அவையை விட்டு வெளியேறினான்.

துவளாத அவனது நடையைப் பார்த்தபடியே பாரி சொன்னான், ``நாகக்குடி என்பதால் மறுநாள் கண்விழித்திருக்கிறான். ஒன்றுக்கும் மேற்பட்ட அடவி ஈ கடித்திருந்தால் மற்ற யாராக இருந்தாலும் மரணித்திருப்பர்.”
தேக்கன் `ஆம்’ எனத் தலையசைத்தான். உதிரன் வரும் வரை பேச்சு நீண்டது.

புதிய சூழலுக்கு ஏற்ப தனது கருத்தைக் கூறினான் முடியன். ``ஆயிமலையின் கணவாய்ப் பகுதி மிகக் குறுகியது. அதனுள்ளே நுழைந்து வந்தாலும் அடர் காடுகளைக் கொண்டது. எனவே, அந்தப் பகுதியில் சேரனால் படை நடத்தி உள்நுழைய முடியாது. அவன் வேறு ஏதோ திசை வழியில் இருந்தே உள்ளே வரத் திட்டமிட்டுள்ளான். நமது கவனத்தைத் திருப்பவே இந்த ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறான்.”

``அடர்காட்டை எவ்வளவு தொலைவு ஊடறுக்க முடியும்? பெரும்படைகள் நகர்வதற்கான நில அமைப்பை அவனால் எப்படி உருவாக்கிக்கொள்ள முடியும்?” எனக் கேட்டார் வாரிக்கையன்.

``எந்தவித முன்னனுபவமும் இல்லாமல் சோழன் உள்நுழைந்துள்ளான். பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட படை இருக்கும் மமதையில்தான் மூடத்தனமான முடிவை எடுத்துள்ளான். ஆனால், உதியஞ்சேரலை அப்படிச் சொல்லிவிட முடியாது. நம்மால் கணிக்க முடியாத ஓர் ஆட்டத்தை ஆடிப்பார்க்க எண்ணுகிறான்” என்றார் தேக்கன்.

உரையாடலைக் கேட்டபடி அமைதிகொண்டிருந்த பாரி இப்போது சொன்னான், ``தென்புறத்துக் காவல் வீரர்கள் பயன்படுத்தும் குதிரைப்பாதை ஒன்று ஆயிமலையின் வழியே செல்கிறதல்லவா, அதை அடிப்படையாகக்கொண்டு உதியஞ்சேரல் திட்டம் தீட்டியிருப்பான்.”

யாரும் சிந்திக்காத கருத்தாக அது இருந்தது. ``ஆனால், குதிரைப்பாதையில் பெரும்படை ஒன்று எப்படி நகர்ந்து வர முடியும்?” எனக் கேட்டான் முடியன்.

``அதுவன்று கேள்வி, அந்தக் குதிரைப்பாதையை அவன் எப்படி அறிந்தான் என்பதுதான் கேள்வி. அந்தத் திசை செல்லும் நமது காவல் வீரர்களை அவர்கள் தொடர்ந்து கவனித்ததன் மூலம் அறிந்துள்ளனர். அப்படியென்றால், அந்தப் பாதையின் வழியிலான ஒரு முயற்சிக்கு அவர்கள் ஆயத்தமாகியுள்ளனர்” என்றார் வாரிக்கையன்.

மற்றவர்களின் சிந்தனை அதை நோக்கிப்போனது. ``சாலமலை, கழுவாரிக்காடு, நரிமுகடு ஆகிய மூன்று பகுதிகளில்தான் சேரன் படைநடத்தி உள்ளே வர முடியும். ஆனால், எந்தவிதக் காரணமும் இல்லாமல் ஆயிமலையின் பின்புறம் படையை நிறுத்தியுள்ளது எதனால்?” எனக் கேட்டான் முடியன்.

அமைதி நீடித்தது. ``அவர்களின் திட்டம் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். மூவரும் நமது கைக்கு அருகே வந்துவிட்டனர். நாம் செய்ய வேண்டியதைப் பற்றி முடிவெடுப்போம்” என்றான் தேக்கன்.
சிறிது நேரம் அமைதி நீடித்தது. அச்சமோ அவசரமோ யாரிடமு மில்லை. சப்பணமிட்டு அமர்ந்திருந்த பாரி எழுந்தபடி கூறினான், ``நீராட்டுக்காகக் கொற்றவையின் கூத்துக்களத்தில் கூடுவோம்.”

கொற்றவையின் கூத்துக் களத்தைக் காவல்வீரர்கள் வேகவேகமாகத் தூய்மைப்படுத்தி பந்தங்களை ஏற்றிவைத்தனர். உதிரன்தான் முதலில் வந்தான். அவன் சொல்லித்தான் வீரர்களுக்குத் தெரியும். நீராட்டுச் சடங்கு எவ்வளவு உக்கிரமேறியது என்பதை அனைவரும் அறிவர்.

தேக்கன், வாரிக்கையன், முடியன் ஆகிய மூவரும் அடுத்ததாக வந்து சேர்ந்தனர். சற்றுநேரத்தில் பாரியும் காலம்பனும் வந்தனர். அவர்களுக்குப் பின்னே ஆதினி இரு பெண்களுடன் வர, இறுதியில் குலநாகினிகள் கூட்டமாக வந்தனர்.

p83e_1519746165.jpg

பந்தங்கள், எங்கும் ஏற்றப் பட்டிருந்தன. வெளிச்சம் கண்டு பறவைகள் படபடத்து ஓசை யெழுப்பின. குலநாகினிகளில் மூவர் உடுக்கையைக் கையில் கொண்டிருந்தனர். ஆதினியுடன் வந்த இரு பெண்களில் இளம்பெண் ஒருத்தி நீர் நிறைந்த பச்சைமண் குடத்தைத் தூக்கி வந்தாள். நீர்க்குடத்துக்குள் முன்னோர்களின் எலும்புகள் இருந்தன. இன்னொருத்தி சூல்வயிற்றுக்காரி. அவளோ பனங்கருக்கைக் கலயத்துள் செருகி, தலையில் ஏந்திவந்தாள்.

போர் என்பது கொற்றவையின் திருவிழா. ஆதிகாலம்தொட்டு அவள் மனம் குளிரும் நிலம் போர்க்களம்தான். சிதைவுண்ட உடல்களும் சரிந்து தொங்கும் குடல்களும் தாடை வெட்டுப்பட்டுப் பிளந்துகிடக்கும் முகங்களும்தான் அவளுக்கான படையல்.

குலுங்கும் முலைகளில் குருதி பெருக்கி தன் மக்களை அவள் பாலூட்டி வளர்ப்பதே, போர்க்களத்தில் இக்கைமாற்றை அவர்கள் செய்வார்கள் என்பதால்தான், செம்பாறையில் தலைகள் உருண்டு தெறிக்கும் ஓசையினையே உடுக்கையின் ஓசையாக்கிக்கொண்டவள். எதிரிகளின் குருதி, நிலமெங்கும் வழிந்தோடும். செவ்வீரமண்ணைப் பிசைந்து அவளுக்கு ஊட்டப்போகும் நற்செய்தியைச் சொல்லவே குலநாகினிகள் வந்துள்ளனர்.

பாரி, தேக்கன், முடியன், வாரிக்கையன், காலம்பன் ஆகிய ஐவரும் குலநாகினிகளுக்கு சற்றுப் பின்னே நின்று கொண்டிருந்தனர். அவர்களை விட்டு விலகி மற்ற வீரர்களோடு நின்றுகொண்டிருந்தான் உதிரன். `போரைத் தொடக்க ஆயத்தநிலையில் உள்ள சேரன், படை நடத்திப் பறம்புக்குள்ளே வந்துள்ள சோழன், பறம்பின் எல்லையில் படையை நிலைகொள்ளச் செய்யும் பாண்டியன் என மூன்று பெரும் எதிரிகள் சூழ்ந்த நிலையில் நமது தாக்குதலைத் தொடங்க பாரி சொல்லப்போகும் உத்தரவு என்ன? யார் யார் எந்தத் திசையில் களம் புகவேண்டும்? பறம்பின் தலைவன் சொல்லப்போகும் ஆணை என்ன?’ என்பதறிய உதிரனின் மனம் துடித்துக்கொண்டிருந்தது.

கூட்டத்தின் ஓசையையும் பந்தங்களின் வெளிச்சத்தையும் கண்டு தேவவாக்கு விலங்கு குரலெழுப்பி, அவர்களுக்கான உத்தரவைக் கொடுத்தது. குலநாகினிகளும் ஆதினியும் சடங்குகளை வேகப்படுத்தினர். பனை ஓலைக் கூடையில் கனிகளையும் இதர பொருள்களையும் கொண்டுவந்த குலநாகினி ஒருத்தி, அவற்றை எடுத்துக் கீழே வைக்கத் தொடங்கினாள். உடல் முழுவதும் இறகு உதிர்த்த நீர்ச்சேவல் ஒன்று கால் கட்டப்பட்ட நிலையில் அதில் இருந்தது.

யானைமுடியும் புலிமயிரும் கொண்டு பின்னப்பட்ட கயிற்றால் நூழிக்கிழங்கைக் கட்டியிருந்தனர். சாம்பற் புழுதியில் குருதி பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணற்ற உருண்டைகளை உருட்டியிருந்தனர். கூத்துக்களத்தின் இடப்புறமிருந்து தேவவாக்கு விலங்கின் வழக்கத்துக்கு மாறான குரல் கேட்டதும் உடுக்கை எடுத்து அடிக்கத் தொடங்கினாள் குலநாகினி ஒருத்தி. மற்றவர்களோ குலவையிடத் தொடங்கினர்.

உடுக்கை ஓசையும் குலவை ஓசையும் கூடின. குலநாகினிகள், நடுவில் நின்றிருந்த ஆதினியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவளோ, முடிச்சிட்ட தலைமுடி அவிழ மெள்ளச் சிரித்துத் தோள் குலுக்கி ஆடத் தொடங்கினாள். உடுக்கையின் ஓசைக்கு ஏற்ப ஆட்டத்தின் வேகம் கூடியது. மிக விரைவாக அது வெறியாட்டமாக மாறியது. நள்ளிரவில் உடலெல்லாம் கொதிப்புற்றுத் துடிக்க ஆதினியின் ஆட்டம் குலநாகினிகளையே நடுக்குறச்செய்வதாக இருந்தது.

குலவை ஓசை மேலும் கூடியது. உடுக்கையின் ஓசை வெடிப்புற்றுத் தெறித்தது. குலநாகினிகள் மூவரும் ஆதினியின் முன் மண்டியிட்டு உடுக்கை அடித்தனர். அவர்களின் கண்களில் நீர் தாரைதாரையாக இறங்கிக்கொண்டிருந்தது. ஆதினியின் ஆவேசம் மேலும் கூடத்தொடங்கியது. உடுக்கையின் ஒலி, நரம்புகளை முறுக்கிச் சுழற்றியது. மற்ற குலநாகினிகள் அவளின் தோள்களைப் பிடித்து அமுக்கி உட்காரவைக்க முயன்றனர். குலவை ஓசைக்கு ஏற்ப குலநாகினிகளின் சடங்கு தீவிரமடைந்தபடியிருந்தது. பற்களை நறநறவெனக் கடித்தபடி பிடித்திருப் போரை உலுக்கியெடுத்தாள் ஆதினி. நெருங்க முடியாப் பறம்பின் தலைவியைக் குலநாகினிகள் மொத்தமாக இணைந்து தோள்களைப் பிடித்து அழுத்தினர்.

உடுக்கையின் ஒலியும் குலவை ஓசையும் பறவைகளின் கத்தல்களும் இணைய கூத்துக்களம் உருமாறிக் கொண்டிருந்தபோது பெருங் குரலெடுத்து ஆதினி கத்தினாள். அதுவரை சாய்ந்துகிடந்த நீர்ச்சேவல், எழுந்து நின்று தலை சிலுப்பிக் கூவியது. அதைக் கண்டவுடன் பாய்ந்து சென்ற மூத்த குலநாகினி, இறகு உதிர்த்த நீர்ச்சேவலை எடுத்து ஆவேசமாகக் கத்தியபடி அதன் தலையை முறுக்கி அத்தெடுத்தாள். குலவை ஓசை உச்சிக்குச் சென்றது.

வலக்கையில் இருந்த நீர்ச்சேவலின் தலையை இடப்புறமாகவும், இடக்கையில் இருந்த நீர்ச்சேவலின் உடலை வலப்புறமாகவும் வீசி எறிந்தாள். குலவை ஓசையும் உடுக்கையின் ஓசையும் காட்டை மிரட்டின. மற்ற குலநாகினிகள் நூழிக்கிழங்கையும் குருதி உருண்டைகளையும் எல்லா திசைகளிலும் வீசியெறிந்தனர். குலவை ஒலியோடு தேவவாக்கு விலங்கின் ஒலியும் இணைந்து இருளை உலுக்கின.
இளம்பெண் சுமந்துவந்த பச்சைமண் குடத்து நீரை, அமர்ந்திருந்த ஆதினியின் தலையில் ஊற்றினர். முன்னோர் களின் எலும்புகள் மேலெங்கும் நழுவி இறங்கின. இறங்கும் எலும்பை இரு கைகளிலும் ஏந்தினாள் ஆதினி.

ஆயிரம் அணங்குகள் காடெங்கும் இருந்து இறங்கி வந்து ஆதினிக்குள் அடங்க, எண்ணிலடங்கா முன்னோர்களின் விலா எலும்பை இரு கைகளிலும் ஏந்தினாள் ஆதினி. அதைக் கண்டதும் ஆவேசம்கொண்ட பாரி, அவளை நோக்கி வந்தான். மற்றவர்களும் தொடர்ந்து வந்தனர். ஆதினியின் கையில் இருந்த எலும்பு ஒன்றை எடுத்தான் பாரி. உடுக்கை அடிப்பவர்கள் பாரியைச் சுற்றி ஒலியெழுப்பினர். குலவை ஒலி மேலிட எடுத்த எலும்பு கொண்டு மார்பிலே கீறினான் வேள்பாரி. கொப்புளித்துப் பெருகியது பாரியின் குருதி. உடுக்கை அடிப்பவர்களின் ஆவேசம் மொத்தக் காட்டையும் உலுக்கியது. மற்ற நால்வரும் அதேபோல முன்னோர்களின் எலும்பு எடுத்து மார்பிலே கிழித்தனர்.

திக்கெட்டுமிருந்து தேவவாக்கு விலங்குகளின் குரல் எதிரொலித்துக்கொண்டிருக்க, சூல்வயிற்றுக்காரி தலையில் சுமந்துவந்த கலயத்தோடு பாரியின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தாள். குடத்துக்குள் இருந்த பனங்கருக்கினை எடுத்த பாரி, கீறிய மார்பின் மீது உரக்கத் தேய்த்தெடுத்தான். மேற்சதையைப் பிய்த்துக்கொண்டு வந்தது பனங்கருக்கு. குலவை ஓசையும் உடுக்கை ஓசையும் பறவைகளின் கத்தலும் விலங்கின் கதறலும் இணைய ஐவரின் மார்புக் குருதியை பனங்கருக்குகள் வாங்கிக்கொண்டன.

குருதி தோய்ந்த பனங்கருக்கினை ஆதினியின் கைகள் ஏந்திப்பிடிக்க, சூல்வயிற்றுக்காரி மேடையின் மீது ஏறி அமர்ந்தாள். குலநாகினிகள் ஆளுக்கு ஒரு திசை பார்த்து ஆவேசமாய் ஆடினர். கொற்றவையின் பசியடக்கி, தாகம் தீர்க்க எதிரிகளை மலைமலையாய்க் கொன்றழிப்போம் என ஐவரும் மார்புக் குருதிகொண்டு உறுதி அளித்ததால் ஆதினிக்குள் இருந்த கொற்றவை அகமகிழ்ந்தாள். வாய் அகன்று காடதிரச் சிரித்தாள்.

ஆனால், மேடையில் அமர்ந்திருந்த சூல்வயிற்றுக்காரி சிரிக்கவில்லை. ஆவேசம் தணியவில்லை. விரித்த விழிகளில் இமையாடவில்லை. பெருங்குரலெடுத்து ``வா... ஏங்கிட்ட வா...” எனப் பேய்க்கூச்சலிட்டாள்.
தலையை மறுத்து மறுத்து ஆட்டி, ``விழப்போகும் எதிரிகளின் எண்ணிலடங்காத உடல்களைத் தின்று முடித்துவிட்டு வருகிறேன். உருவிய குடல்களால் குன்றுகள் மறைந்து கிடக்க, காடெங்கும் பெருகியோடும் குருதியைக் குடித்துவிட்டு வருகிறேன். அதற்குள் ஏன் அழைக்கிறாய்?” என மறுத்துக் கத்தினாள் கொற்றவை. ஆனால், சூல்வயிற்றுக்காரி விடவில்லை. அதைவிடப் பெருங்குரலெடுத்துக் கத்தினாள். ``காலம் தாழ்த்தாதே, எனக்கான வாக்கை அளித்துவிட்டு நீ பசியாறிக்கொள்.”

கொற்றவை நகரவில்லை. ``என் மக்கள் கொன்றளித்துள்ள பிணங்களைப் புசித்து முடிக்கும் வரை பொறுத்திரு” எனக் கூறி, பற்களை நறநறவெனக் கடித்து, காட்டையே இரு கூறுகளாகப் பிளந்துகொண்டிருந்தாள்.

குலநாகினிகள் ஒன்றுசேர்ந்து கொற்றவையை, சூல்வயிற்றுக்காரியை நோக்கி இழுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் யாராலும் அவளை அசைக்க முடியவில்லை. ஆயிரம் அணங்குகள் ஒன்றாய் இறங்கி ஆடிக்கொண்டிருந்தனர். குலவையின் பேரொலி பல மடங்கு அதிகரித்தது. உடுக்கை ஓசையில் இலைகள் நடுங்கின. குலநாகினிகள் எல்லோரும் சேர்ந்து பெரும் ஆவேசத்தோடு உட்கார்ந்திருந்தவளைத் தூக்கி மேடையின் மீதிருந்த சூல்வயிற்றுக்காரியை நோக்கி நகர்த்திச் சென்றனர்.

சூல்வயிற்றுக்காரியின் கண்ணில் நீர் வழிந்துகொண்டிருந்தது. ஆனால், கொற்றவை தன்னை நோக்கி வரத் தொடங்கியதும் அவளின் முகத்தில் சிரிப்பு படரத் தொடங்கியது. குலநாகினிகள் வலுக்கொண்ட மட்டும் நகர்த்தினர். அமர்ந்திருந்தவள் ஆதினியல்லள், கொற்றவை. அவ்வளவு எளிதாக நகர்த்திவிட முடியாது.

மேலும் மேலும் ஓசையெழுப்பி, உடுக்கையடித்து, பெருங்குரலில் கதறியபடி கொற்றவையை முன்னகர்த்தினர். மலையெனக் குவியும் பிணங்களின் குருதி வாடையை உள்மூக்கில் நுகர்ந்தபடி சற்றே அகமகிழ்ந்து எழுந்தாள். எழுந்த கணம் குலநாகினிகள் முழு ஆவேசத்தோடு மேடையை நோக்கி நகர்த்தினர். அருகில் சென்று, அமர்ந்திருந்தவளின் நிறைசூலில் கை வைத்தாள் கொற்றவை. காடு நடுங்கும் ஓசை இருளெங்கும் கேட்டது. `நிறைசூலுக்குள் இருக்கும் புது உயிருக்கு இந்த மண்ணைக் காத்தளிப்பேன்’ எனக் கொற்றவை அளித்த வாக்கு, காட்டுயிரின் காதுகளிலெல்லாம் எதிரொலித்தது.

எதிரிகளைக் கொன்றழிக்க நிகழும் சூளுரையும் குருதி குடிக்கத் துடித்தெழும் ஆவேசமுமே இந்தச் சடங்கின் உச்சம். ஆந்தைகளின் வட்டவிழி நடுக்குற்ற அந்தக் கணத்தில், இருளும் மலையும் ஒருசேர உணரும்படி காடதிரக் கத்தினான் வேள்பாரி. ``கொற்றவையின் பசி தீர்க்க எதிரிகளின் பிணங்களை மலையெனக் குவிப்போம்! பறம்பெங்கும் வேந்தர்படை சிந்தும் குருதி விட்டு ஈக்கள் அகலாது நிலைகொள்ளட்டும். சேரனின் படையை அழித்தொழிக்கும் வேலையைத் தேக்கனும் கூழையனும் உதிரனும் செய்யட்டும். கிழக்குத் திசையில் நிலைகொள்ளும் பாண்டியப்படையின் கருவறுக்கும் வேலையை முடியனும் காலம்பனும் நீலனும் செய்யட்டும். எழுவனாற்றின் மணலுக்குள் சோழப்படையைப் புதைத்தொழிக்க நான் புறப்படுகிறேன். கொற்றவையின் பெரும்பசிக்கு திசையெங்கும் விருந்தளிப்போம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 73

 

 

றம்பின் வலைப்பின்னல்களில் செய்திகள் பறந்துகொண்டிருந்தன. தனது கூட்டில் இரை வந்து சிக்கிய கணத்தில் தூக்கம் கலைந்தெழும் விலங்குபோல் பறம்பு எழுந்தது. சிக்கிய இரையால் இனி ஒருபோதும் தப்ப முடியாது என அதற்குத் தெரியும். தாடை கிழிவதைப்போல வாயைப் பிளந்து கொட்டாவி விட்டபடி மெள்ள இரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது பறம்பு.

p83a_1520340655.jpg

வடக்கும் தெற்குமாக நீண்டுகிடக்கும் பச்சைமலைத் தொடரில் இத்தனை நூறு ஊர்களிலும் ஒரே நேரத்தில் காரிக் கொம்பூதி யாரும் கேள்விப்பட்டதுகூட இல்லை. மலைத் தொடர் எங்கும் கொம்போசை அதிர்ந்து பரவிக்கொண்டிருந்தது.  கூவல் குடியினரின் முன்னெச்சரிக்கை ஒலிகள் எல்லை யில்லாத வேகத்தில் பாய்ந்துகொண்டிருந்தன.

`பறம்பின் மாவீரர்கள் அனைவரும் களம்நோக்கிச் சென்று விட்டால், படைகளை ஒருங்கிணைப்பது யார்?’ என்ற கேள்வி எழுந்தது. புறப்படும்போது பாரியின் உத்தரவு அதுவாகத்தான் இருந்தது. ``எவ்வியூரிலிருந்து மூன்று திசைப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வேலை வாரிக்கையனுடையது.”

பாரி தந்தையின் காலம்தொட்டு இக்காலம் வரை எண்ணற்ற தாக்குதலை நடத்தி அனுபவம் வாய்ந்த மாமனிதர் வாரிக்கையன்தான். அவர் அளவுக்கு முன்னனுபவத்தின் வழியே வழிகாட்டக்கூடிய இன்னொரு மனிதர் இல்லை. பாரி உத்தரவிட்ட  கணத்திலிருந்து வாரிக்கையன் வேலையைத் தொடங்கினார்.

கூத்துக்களத்தில் நீராட்டு முடிந்ததும் பாரி வடதிசை நோக்கிப் புறப்பட்டான். தேக்கனும் உதிரனும் தென்திசை நோக்கிப் புறப்பட்டனர். முடியனும் காலம்பனும் கீழ்த்திசை நோக்கிப் புறப்பட்டனர். மூன்று திசைகளுக்கும் தலைமை யேற்றவர்களோடு குழுவுக்கு ஆறு வீரர்களை மட்டுமே உடன் அனுப்பினார் வாரிக்கையன். எவ்வியூரில் இருக்கும் அனைத்து   வீரர்களும்   இப்போது  வாரிக்கையனுக்குத் தேவைப்பட்டனர். 

எதிரிகள் மூன்று திசைகளிலும் இருக்கின்றனர். எனவே, நிலைமைக்குத் தகுந்தபடி வழிகாட்டவும் செய்தியைப் பரிமாறவும் வாரிக்கையனுக்கு வலிமை மிகுந்த படை தேவை. அந்தப் படை, பறம்பின் அனைத்து திசைகளுக்கும் மின்னலெனப் பாய்ந்து செல்லும் படையாக இருக்க வேண்டும்; குதிரையிலும் குதிரை இல்லாமலும் விரைந்து செல்லும் படையாக இருக்க வேண்டும். அதற்கு  எவ்வியூர் வீரர்களே பொருத்தமானவர்கள். அவர்களால்தான் இந்த வேலைக்கு ஈடுகொடுக்க முடியும். போர்க்களத்தில் இணையற்ற வீரத்தை வெளிப்படுத்தக்கூடிய எவ்வியூர்க்காரர்கள் யாரையும் போர்க்களத்துக்கு அனுப்ப முன்வரவில்லை வாரிக்கையன். காட்டை ஊடறுத்து விலங்கெனப் பாயும் வேட்டைவீரர்களாக அவர்களைப் பயன்படுத்த முடிவுசெய்தார்.

களத்தில் போரிடுபவர் களுக்குத் தேவையான படைகளையும் ஆயுதங் களையும் தடையின்றி வழங்க வேண்டும். நெருக்கடியில் அவர் களுக்கான உத்தரவை வழங்க வேண்டிய பொறுப்பும் வாரிக்கையனுடையது.

உத்தரவிட்ட கணத்தில் கூத்துக்களத்திலிருந்து எல்லோரும் போர்முனை நோக்கிப் பாய்ந்து சென்ற போது, தனித்திருந்த வாரிக்கையனின் முன்னால் எண்ணிலடங்காத கேள்விகள் உருத்திரண்டு நின்றன. எதையும் செய்து முடிக்கக்கூடிய அனுபவ அறிவால் ஒவ்வொன்றுக்கும் விடைகண்டார்.

p83b_1520340671.jpg

`ஒரே நேரத்தில் பறம்பின் மூன்று முனைகளிலும் போர் நடத்திய அனுபவம் இதுவரை  யாருக்கும் இல்லை. இந்தப் பெருந் தாக்குதலை எப்படி ஒருங்கிணைப்பது? செய்திகளை விரைவாகப் பரிமாறிக்கொள்ள வழி என்ன?’ என்று சிந்தித்தபடி தனது முதல் உத்தரவை அதிகாலை பிறப்பித்தார்.

சேரன் பாடிவீடமைத்திருக்கும் போர்முனையான ஆயிமலை தொடங்கி எவ்வியூர் வரை செய்திப்பரிமாற்றப் பின்னலை உருவாக்க, கூவல்குடியினருக்கு உத்தரவிட்டார். மிகநீண்ட தொலைவைக்கொண்ட இந்தப் பரப்பில் செய்தியைப் பரிமாறுவது மிகக்கடினமான பணி. ஏனென்றால், கூவல்குடியினரின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனாலும் அவர்கள் அதற்கு ஆயத்தமாயினர்.

மற்ற இரு முனைகளும் இந்த அளவு ஆபத்துகொண்டவை அல்ல என்பது வாரிக்கையனின் கணிப்பு. அதனால்தான் கூவல்குடி முழுமையும் ஆயிமலை நோக்கி அணிவகுக்கச் செய்தார். எவ்வியூர் பாட்டப்பிறை யிலிருந்துதான் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பறம்பில் உள்ள ஊர்களில் மிக அதிக எண்ணிக்கை தென்திசையில்தான் உள்ளன. அந்தத் திசையில் இருந்த நூற்றிருபது ஊர்களிலும் காரிக்கொம்பு ஊதப்பட்டது. தேக்கனின் சொல்லுக்காக அவ்வூரினர் காத்திருப்பர்.

கீழ்த்திசை ஊர்களில் நான்கில் ஒரு பங்கு ஊர்களை மட்டும் வேட்டுவன் பாறைக்கு வர உத்தரவிட்டான் முடியன். வடதிசைதான் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஊர்கள் இருக்கும் பகுதி. மொத்தம் இருப்பதே அறுபத்தேழு ஊர்கள்தாம். அந்த ஊர்களில் இருக்கும் வீரர்களைக் கொண்டுதான் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ள சோழப்படையைப் பாரி முறியடித்தாக வேண்டியிருக்கும் என மற்றவர்கள் எண்ணிக்கொண்டிருக்கும்போது, அதிலுள்ள இருபத்துநான்கு ஊர்களை மட்டும் ஆயத்தமாகும்படி செய்தி அனுப்பினான் பாரி.

எவ்வியூர் வீரர்கள், திசைதோறும் செய்திகளைக் கொண்டுசென்றனர். குதிரைப்பாதைகள் இரவுபகலாக இயங்கிக்கொண்டிருந்தன. சோழனுக்கு எதிராகப் பாரியும், பாண்டியனுக்கு எதிராக முடியனும் தீர்மானிக்கும் போர்க்களங்களை நோக்கி, தேவையான ஆயுதங்களையும் மருத்துவக்குடிகளையும் அனுப்பிவைக்க முழுவீச்சில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. இந்த இருமுனை களிலிருந்தும் எவ்வியூருக்குச் செய்தியை ஒருங்கிணைக்கக் காரிக்கொம்பினையும் சென்றிப்பு கையையும் பயன்படுத்தலாம் என முடிவுசெய்து அதற்குத் தகுந்தபடி மலைதோறும் இடைவிடாது ஆள்கள் நிறுத்தப்பட்டனர்.

சிறுபாழி நகரிலிருந்து ஆயுதங்களைப் போர்க்களங்களை நோக்கித் தடையின்றிக் கொண்டுசெல்ல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயுதங்கள் இடம் மாறத் தொடங்கின. எவ்வியூரின் ஆண் பெண் என்று ஒருவர்கூட மீதமில்லாமல் இரவுபகலாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பறம்பின் நடுப்பகுதியில் இருந்த 114 ஊர்களும் உத்தரவின்றித் தாக்குதலுக்குச் செல்லவேண்டாம் என்று கூறப்பட்டுவிட்டது. ஊரின் வீரர்கள் எல்லோரையும் ஆயத்தநிலையில் இருக்கச் சொன்னார் வாரிக்கையன். தேவையையொட்டி எந்தக் களத்துக்கும் அவர்கள் செல்லவேண்டியிருக்கும்.

இது ஒரு புது அனுபவம். எனவே, எல்லோரும் மகிழ்ந்தும் விரைந்தும் செய்தனர். ஊரார்கள் எல்லோரும் ஒன்றுகூடி, போர்க்களம் நோக்கி ஆயுதங்களை எல்லை பிரித்துக் கைமாற்றினர். மருத்துவக்குடிகளும் ஆயுதங்களோடு சேர்ந்து இடம்பெயர்ந்துகொண்டிருந்தன. கோடைக்காலம் ஆதலால் நீர் ஆதாரங்களைக் குறிவைத்தே பாதைகளை வகுத்துக்கொண்டனர்.

எவ்வளவு மறுத்தும் கபிலர் கேட்கவில்லை. ``தாக்குதல் நடக்கும் இடத்துக்கு வரவில்லை. அருகில் இருக்கும் ஊரில் இருந்துகொள்கிறேன்” என்று விடாப்பிடியாகச் சொல்லியதால் அவரைத்     தன்னுடன் அழைத்துச்செல்லச்   சம்மதித்தான் பாரி.

மூன்றாம் நாள் இரவு பாரியும் கபிலரும் சூளூரை அடைந்தனர். விடைப்பேறி நின்றுகொண்டிருந்தது  ஊர்.  `எழுவனாற்றில் எதிரிகளின் படை நுழைந்ததும் தாக்கும் உத்தரவை சூளூருக்கல்லவா வழங்கியிருக்க வேண்டும்?’ என ஊர் பெரியவர்கள் கோபம்கொண்டிருந்தனர். `எதிரியின் படையை யாரும் தாக்கவேண்டாம். எல்லோரும் அவரவர் ஊரிலே நிலை கொள்ள வேண்டும்’  எனப் பாரியிடமிருந்து வந்த முதற்செய்தியைச் செரிக்க முடியாமல் திணிறிக்கிடந்தன வடதிசை ஊர்கள்.

முன்னிரவு நேரத்தில் ஆறு வீரர்களோடு பாரியும் கபிலரும் வந்திறங்கியபோது வரவேற்றவர்களின் முகத்தில் சினமே நிலைகொண்டிருந்தது. ``எழுவனாற்றின் கரையில் இருக்கும் பதினோர் ஊர்களைக்கொண்டு எதிரியை அழிக்கும் உத்தரவை சூளூருக்கு ஏன் வழங்கவில்லை?” என்று கோபத்தோடு கேட்டார் ஊர் பெரியவர் பிட்டன்.

``தாக்குதல் தொடுக்கவேண்டிய உத்தியை எவ்வியூரிலிருந்து முடிவெடுப்பது பொருத்தமாக இருக்காது. அதனால்தான் நேரில் வந்தேன்” என்றான் பாரி.

பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட படையைப் பதினோர் ஊரார்களைக்கொண்டு எதிர்க்க சூளூர்க் காரர்கள் அனுமதி கேட்பதையும் அதற்குப் பாரி சொல்லும் மறுமொழியையும் கபிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

உணவருந்த அமர்ந்தனர். உண்மையில்லாத வெற்றுச்சொற்களைப் பயன்படுத்தும் பழக்கம் அறவே இல்லாதவன் பாரி. அப்படியிருக்க, பெரியவரின் கேள்விக்கு ஏன் இப்படி பதில் சொன்னான் எனக் கபிலருக்கு விளங்கவில்லை. ‘இத்தனை  பெரும்படையை அவ்வளவு எளிதாக எதிர்கொண்டுவிட முடியுமா?’ என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் கபிலர்.

உணவு முடிந்து ஊர் மந்தையில் கூடினர். சுற்றிலும் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நடுவில் இருந்த மேடையில்தான் பாரியும் கபிலரும் உட்கார்ந்திருந்தனர். இன்று வந்து சேரவேண்டிய செய்திக்காக அவர்கள் காத்திருந்தனர். பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் கீழ்க்காட்டில் ஓசையை உணர முடிந்தது.

சிறிது நேரத்திலேயே ஆறு வீரர்களோடு இரவாதன் வந்துசேர்ந்தான். செய்தியைக் கேள்விப்பட்ட கணத்திலிருந்து சோழர்படையைப் பின்தொடர்ந்து சென்றவர்கள் இப்போது வந்துசேர்கிறார்கள்.

சாதாரண காலத்திலேயே இரவாதனைப் பார்க்கும்போது அடுத்த கணம் போரிடுவதற் கான துடிப்புடனும் தினவுடனும் நிற்பான். இப்போது அவனது வேகம் எப்படியிருக்கும் என்பதைக் காண கபிலர் காத்திருந்தார். வந்திறங்கிய அவன், நகரும் படையின் தன்மையை விளக்கத் தொடங்கினான். முன்னகரும் யானையின் எண்ணிக்கையிலிருந்து தொடங்கினான். அது ஏற்கெனவே தெரிந்த செய்தி என்பதால் கபிலருக்குப் பெரிய வியப்பேதும் இல்லை.

``முகத்தில் அடர்த்தியான மயிர்கொண்ட யானைகள். அவற்றின் தந்தங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கின்றன. எனவே, வயது இருபதுகளைத் தாண்டாது. மோதத் துடிக்கும் வயது இது” என்று அந்த யானைகளின் தன்மைகளைப் பற்றி விளக்கினான். அதன் பிறகு கபிலரால் இரவாதனை விட்டுச் சிறிதும் கண்விலக்க முடியவில்லை. அவனது கவனிப்பு சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது.

ஆற்றுமணலில் ஏழு நாள்களுக்கு மேலாக நடந்த பின்னும் காலாட்படை வீரர்கள் சோர்வடையாமல் இருக்கின்றனர். மணலில் யானைகளால் இழுத்துச்செல்லப்படும் வண்டிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். சக்கரமற்ற அந்த வண்டிகளில் போதுமான பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளன. மணலின் தன்மைக்கேற்ப வண்டிகளின் பெரும் அணிவரிசை படையின் முன்புறம் தொடங்கி இறுதிவரை நகர்ந்துகொண்டிருக்கிறது. கழுதைகளின் மீதும் இதர விலங்குகளின் மீதும் பொருள்கள் ஏற்றப்பட்டு சாரைசாரையாக நடந்துகொண்டிருக்கின்றன.

p83c_1520340687.jpg

பாரி சற்றே வியப்போடு பார்த்தான். நீர் வற்றிய ஆற்றின் வழியாகப் படையை நகர்த்த எல்லாவகையான ஆயத்தங்களோடும் வந்துள்ளான் சோழன். எவ்வியூரை அடைவதற்கு எழுவனாற்று வழியே ஏற்றது என்பது எப்படி வெளிமனிதர்களுக்குத் தெரியவந்தது என்பது புரியாத ஒன்றாக இருந்தது.

யானைகளும் காலாட்படை வீரர்களும் அணியணி யாகப் பிரிக்கப்பட்டு, முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்டு முன்னேறிக்கொண்டிருந்ததை இரவாதன் விவரித்து முடித்தான்.

இவ்வளவு சிறப்புமிக்க ஒரு வரவேற்பை ஹிப்பாலஸ் எதிர்பார்க்கவில்லை. அவனது நாவாய் புகாரின் துறைமுகத்துக்குள் நுழைந்தது முதல் அரண்மனைக்குள் அவன் காலடியெடுத்துவைப்பது வரை சோழவேந்தன் அவனைத் திகைப்புறச் செய்தான்.

கால்பாவைக் கண்டு பேச, புகார் நகரத்துப் பெருவணிகர்கள் எல்லோரும் ஆயத்தநிலையில் இருந்தனர். ஆனால், பிறர் கண்டுபேசவெல்லாம் மாமன்னர் தரும் விருந்து முடிவுற்ற பிறகுதான் என்று அமைச்சர் வளவன் காரி தெரிவித்துவிட்டான். ஆனால், விருந்து என்றைக்கு முடிவுறும் என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

இன்று வரை யவனத்துடனான வணிகத்தில் பாண்டியன், சேரன் ஆகிய இருவருக்கும் அடுத்து மூன்றாம் நிலையில்தான் சோழன் இருக்கிறான். இந்நிலையில் ஹிப்பாலஸ் போன்ற யவன தேசத்தின் மாமனிதன் புகாருக்கு வருவதைப் பெரும்வாய்ப்பாகக் கருதினர். குடகடலில் வீசும் காற்று கால்பாவின் கப்பலுக்காகவே வீசுவதாகப் பேச்சுவழக்குண்டு.

கால்பா, யவனத்தின் மாபெரும் வணிகன். அவனது வணிகச்செயற்பாட்டில் இணைந்தே பெரும்பாலான தமிழ் வணிகர்கள் இருந்தனர். ஹிப்பாலஸும் கால்பாவும் புகார்த் துறையில் வந்து இறங்கியதைப் பெரும்வாய்ப்பாகப் பலரும் கருதினர். மாமன்னன் சோழவேந்தனும் அவ்வாறே எண்ணினான்.

வந்திறங்கிய மூன்று நாள்களும் ஆட்டம் பாட்டங்கள் இடைவெளியின்றி நடந்தேறின. சோழப்பேரரசன் செங்கணச்சோழன் படை நடத்திப் போயுள்ளதால் எல்லா விருந்துகளிலும் அவன் தந்தை சோழவேலனே கலந்துகொண்டார். சுமார் 15 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்ட சோழவேலன் யவன வணிகத்தை வளப்படுத்த எண்ணிலடங்காத முயற்சிகளைச் செய்தவர். அதனால்தான் ஹிப்பாலஸும் கால்பாவும் வருகிற செய்தியை அறிந்ததிலிருந்து பெரும் உற்சாகத்தோடு விருந்துகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டார்.

p83d_1520340700.jpg

விருந்தினூடே பறம்புக்குப் படைநடத்திச் சென்றிருக்கும் செங்கணச்சோழனைப் பற்றிப் பேசப்பட்டது. தன் மகன் வெற்றிகொண்டு திரும்பும் வரை அவர்கள் இருவரும் புகாரில் தங்கியிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் சோழவேலன்.

தனது பயணம், கடற்காற்றை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. எனவே, நீண்டகாலம் தங்கியிருக்க முடியாது என்று சொன்ன ஹிப்பாலஸ், ``அரசர் எந்த மாதத்துக்குள் திரும்புவார் என எதிர்பார்க்கிறீர்கள்?” எனக் கேட்டார்.

``இந்தப் போரின் கால அளவை மிகத் துல்லியமாகவே என்னால் சொல்லிவிட இயலும். ஆனால், அதுகுறித்து விருந்து மண்டபத்தில் பேச வேண்டாம். நாளை எனது மாளிகையில் விரிவாகப் பேசுவோம்” என்றார் சோழவேலன்.

மறுநாள் அதிகாலை புறப்பட்டான் பாரி. சூளூரின் மாவீரர்கள் ஆயத்தமாயினர். அவர்களை இருகூறுகளாகப் பிரித்தான். இரவாதன் தலைமையிலான ஒரு பகுதி வீரர்களை எழுவனாற்றின் வலக்கரைக்கு அனுப்பினான். பிட்டன் தலைமையிலான வீரர்களை எழுவனாற்றின் இடக்கரையில் பயணிக்க உத்தரவிட்டான். வலக்கரைப் பகுதியில் இருக்கும் பதினோர் ஊர்களை  இரவாதன் அழைத்துக்கொள்ள வேண்டும். இடக்கரையில் இருக்கும் பதின்மூன்று ஊர்களைப் பிட்டன் அழைத்துக்கொள்ள வேண்டும். எதிரிகளின் படை நகர்வுக்கு ஏற்ப இருபுறமும் மேற்புறக் காடுகளில் மறைவாக அவர்கள் வரவேண்டும்.

மலை முகடுகளில் பயணித்தபடி எதிரிப்படையின் நகர்வுகளைக் கவனித்து வருவான் பாரி. உரியநேரத்தில் அவனது உத்தரவுக்கேற்ப இருபக்கப் படைகளும் தாக்குதலைத் தொடுக்க வேண்டும் என்று விளக்கப்பட்டது. பாரியோடு எவ்வியூரிலிருந்து வந்த அறுவரும் சூளூர் வீரர்கள் அறுவருமாகப் பன்னிருவர் பயணப்பட்டனர். கபிலர், சூளூரில் தங்கவைக்கப்பட்டார்.

குதிரைப்பாதையில் வெப்புமலையின் முகடுகளில் பயணப்பட்டான் பாரி. மலையின் அடிவாரத்தில் எழுவனாற்று மணல் காலடித் தடங்களால் முழுவதும் புரண்டுகிடந்தது. அதைப் பார்த்தவண்ணம் ஆற்றுப் போக்கினிலே போய்க்கொண்டிருந்தான். அவனது மனதில் நீங்காத கேள்வி ஒன்று துருத்திக்கொண்டே யிருந்தது. ``எழுவனாற்றின் வழித்தடத்தை எப்படி அறிந்தான் இவன்?”

ஆங்காங்கே இருக்கும் ஊரார்கள் பாரியைக் கண்டு, சோழர்படையின் தன்மைகளை விளக்கியபடியிருந்தனர். எல்லாவற்றையும் கேட்டபடி அவன் பயணித்துக் கொண்டே இருந்தான். கோடைகாலம் உச்சம் தொட்டுக்கொண்டிருந்தது. காய்ந்த புற்களால் காட்டின் மேனியெங்கும் மஞ்சள் பரவிக்கிடந்தது. ஆனால், இத்தனை ஆயிரம்  பேர் உள்ள படையை நடத்திக் கொண்டு ஒருவன் நம்பிக்கையோடு முன்னேறிக் கொண்டிருக்கிறான்.

அன்று நண்பகல் முள்ளூர் பெரியவர், பாரி வரும் குதிரைப்பாதையில் காத்திருந்தார். முள்ளூரைச் சேர்ந்த வீரர்கள் எல்லோரும் பிட்டனோடு இணையப் போய் விட்டனர். ஊர் பெரியவர் மட்டும் பாரியிடம் சொல்லவேண்டிய செய்திக்காக முகட்டின் மீது காத்திருந்தார்.

மிகவும் இடுக்கான பாதையின் வழியே குதிரைகள் வந்துகொண்டிருந்தன. பாதையோரப் பாறையின் மீது அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார். தொலைவிலிருந்து பார்த்தபோது கழுகு ஒன்று பாறையின் மீது உட்கார்ந்திருப்பதுபோலத் தெரிந்தது.

பாரியைப் பார்த்ததும் பாறையின் மீதிருந்து சரிந்து இறங்கினார் கிழவர். குதிரையை விட்டு இறங்கிய பாரி, அவரை அணைத்து மகிழ்ந்தான். எப்போதும் மகிழ்வோடு இருக்கும் அவரின் முகத்தில் சிறு கவலை இருப்பதை, பாரி பார்த்த கணமே புரிந்துகொண்டான்.

இருவரும் பாறையின் பின்புற நிழலில் பேசியபடியே அமர்ந்தனர். ``படையின் எண்ணிக்கை பொருட்டல்ல; அதன் தன்மை சற்றே வியப்பூட்டுவதாக இருக்கிறது. அதை உன்னிடம் நேரில் தெரிவிக்கவே வந்தேன்” என்றார்.

p83e_1520340715.jpg

``என்ன?” என்று கேட்டான் பாரி.

``குறும்பியூர்க் கணவாயின் வழியாக அவன் எழுவனாற்றுக்குள் நுழைந்து பத்து நாள்களுக்கும்மேல் இருக்கும். இந்தக் கொடும்கோடையிலும் இவ்வளவு பெரிய படைக்கான நீர் ஆதாரத்தை அவனால் வற்றிய இவ்வாற்றில் உருவாக்கிக்கொள்ள முடிகிறது” என்றார்.

பாரி, அவர் சொல்லவருவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். சொல்லி முடித்த வார்த்தையைத் தொடராமல் நிறுத்திக்கொண்டார் கிழவர். சற்றே இடைவெளிக்குப் பிறகு பாரி கேட்டான், ``ஆறு காய்ந்து கிடந்தாலும் அடிமணலுக்குள் இருக்கும் ஊற்றுநீரைப் பயன்படுத்த முடியும்தானே?”

கிழவர் சொன்னார், ``இல்லை பாரி. அவர்கள் ஆற்றுமணலில் இங்கும் அங்குமாக எல்லா இடங்களிலும் குழிதோண்டி நீர் எடுக்கவில்லை. நாள்தோறும் தங்கும் இடத்தை மையப்படுத்தி முன்புறம் இரண்டு கிணறுகளும் பின்புறம் இரண்டு கிணறுகளும் வெட்டுகின்றனர். அந்த நான்கு கிணறுகள்தான் இத்தனை ஆயிரம் வீரர்களுக்கும், இத்தனை நூறு யானைகளுக்கும் நீர் தருகின்றன.”

கிழவரின் சொல், வியப்பை ஏற்படுத்தியது. ``பச்சைமலையின் மற்ற ஆறுகளைவிட எழுவனாறு நீரோட்டம் குறைந்த ஆறுதான். ஆனால், அந்த ஆற்றில் வறண்ட இந்தக் கோடையில் இத்தனை ஆயிரம் பேர் அருந்துவதற்கு ஏற்ப நீரோட்டம் உள்ள கிணறுகளை எப்படி இவர்களால் தோண்ட முடிகிறது? படை நடந்து கடந்த வழியில் குறும்பியூர்க் கணவாய் வரை போய்த் திரும்பிவிட்டேன். அவர்கள் தோண்டியுள்ள எல்லாக் கிணறுகளிலும் வற்றாமல் நீர் இன்னும் இருக்கிறது. அதுகூட வியப்பில்லை. நாள்தோறும் அவர்கள் தோண்டும் நான்கு கிணறுகளில் இரண்டு `கடுத்த நீர்’ இருக்கும் கிணறுகளாக இருக்கின்றன.”

பாரியின் முகக் குறிப்பில் சிறு மாற்றம் உருவானது. ``கடுத்த நீர் அருந்திய யானைகளுக்கு எளிதில் தாகம் ஏற்படாது” என்று கிழவர் சொன்னபோது `தெரியும்’ என்பதுபோலத் தலையசைத்தான் பாரி.

``வறண்ட ஆற்றில் இவ்வளவு துல்லியமாக நீரையும் நீரின் தன்மையையும் கண்டறிந்து பயன்படுத்தியபடி அவர்கள் முன்னேறுகின்றனர். போரிடும் அரசப்படை என்று மட்டும் இதைக் கணித்துவிட வேண்டாம். பல்வேறு ஆற்றல்கொண்டவர்கள் இதற்குள் இருக்கின்றனர்” என்றார் கிழவர்.

p83f_1520340733.jpg

பாரியின் சிந்தனை மீண்டும் முதற்புள்ளிக்கே போனது. `பெரும்படைக்குத் தேவையான நீர்வளம் இருக்கும் பாதையாகத்தான் இதைத் தேர்வுசெய்தார்களா அல்லது இதுதான் சரியான பாதை எனத் தெரிந்து தேர்வுசெய்தார்களா?’ என்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது கிழவர் சொன்னார், ``எனது சிந்தனைப்படி நாளை இரவு இவர்கள் சுழிப்பள்ளத்தை அடைவார்கள். அங்கு எழுவனாற்றோடு வட்டாறு வந்து கலக்கிறது. அகலத்தில் எழுவனாற்றைவிட வட்டாறே பெரியது. புதிதாய்ப் பார்ப்பவர்கள் அதுதான் மூல ஆறு என்று நினைப்பார்கள். இவர்களும் அப்படி நினைத்து அத்திசையில் திரும்பிவிட்டால் எவ்வியூருக்குத் தொடர்பே இல்லாத திசையிலே பயணப்படுவார்கள். அதுமட்டுமன்று, வட்டாறு கடும்பாறை நிலங்களை வழித்தடமாகக்கொண்டது, எளிதில் இவர்களால் நீரைக் கண்டறிய முடியாது. தனது போக்கிலே இப்படை அழிவுக்குள் சிக்கிக்கொள்ளும்” என்று கிழவர் சொன்னார்.

ஆனால், பாரியின் உள்மனத்துக்குத்தான் தெரியும், அவன் எழுவனாற்றின் வழியே எவ்வியூர் நோக்கி முன்னகர்ந்தால்கூட ஆபத்தேதும் இல்லை. வட்டாற்றில் திரும்பினால்தான் ஆபத்தென்று.

மறுநாள் சோழவேலனின் விருந்து மண்டபத்தில் சந்தித்தனர். வழக்கம்போல் பரிமாறல்களில் பொங்கி வழிந்துகொண்டிருந்தது தேறல். சோழவேலன் தனது நாட்டின் சிறந்த கள்ளைக் கொடுத்தபடி பேச்சைத் தொடங்கினார். உடன் அமைச்சர் வளவன் காரி இருந்தார். கடலோடிகளின் குடிக்கு இணை சொல்ல முடியாது. உள்ளிறங்கும் நீர்மட்டம் உயரட்டும் எனக் காத்திருந்த ஹிப்பாலஸ் பொருத்தமான நேரத்தில் தொடங்கினான், ``திரையர்களை வெற்றிகொள்ள முடியாமல் சோழர்படை பாதியில் திரும்பியதாகக் கேள்வியுற்றேன். அப்படியிருக்க, இப்போது பறம்பின் மீது படையெடுத்துப் போய் எப்படி வெற்றிகொள்ள முடியும்?”

``திரையர்கள் பற்றி வெளியுலகுக்கு ஆதிகாலம்தொட்டே அதிகம் தெரியும். வெளியுலகுக்குத் தெரியாத, ஆனால் திரையர்களைவிட வலிமையான குடியினர் கிழக்குத் திசையில் உள்ள தாளமலையில் உள்ளனர். அவர்களின் பெயர் நெடுங்காடர்கள். `திரையர்களைக்கூட நெருங்க முடியும். ஆனால், நெடுங்காடர்களை நெருங்கவே முடியாது’ என்றுதான் செய்திகள் சொல்லப்பட்டன. ஆனாலும் செங்கணச்சோழன் துணிந்து தாளமலையை முற்றுகையிட்டான். பல மாதகால முற்றுகை. இயற்கையாக அமைந்த மழைவெள்ளத்தால் நெடுங்காடர்கள் குடியிருப்புப் பகுதியில் பெரும்பாறைச்சரிவு ஏற்பட்டது. அவர்கள் ஒருங்கிணைய முடியாத நிலை உருவானது. அதை சாதகமாகப் பயன்படுத்தி நெடுங்காடர்களை முழுமையாக வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உருவானதால்தான் திரையர்களை நோக்கி நகர்ந்த படைப்பிரிவின் தலைவன் திதியனைப் பின்வாங்கிவர உத்தரவிட்டோம். செங்கணச்சோழன் மொத்தப் படையையும் ஒருமுகப்படுத்தி நெடுங்காடர்களைச் சூழந்து தாக்கினான்” என்றார்.

நெடுங்காடர்களைப் பற்றி இதுவரை ஹிப்பாலஸ் கேள்விப்பட்டதில்லை. பேச்சு அதைச் சுற்றியே இருந்தது. சோழவேலன் சொன்னார், ``கீழ்நெடுங்காடர்கள், மேல்நெடுங்காடர்கள், குறுங்காடர்கள் என்று மூன்று பிரிவினர் உண்டு. நாங்கள் அறிந்தவரை காடு பற்றி இவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் இணை சொல்ல யாரும் இல்லை. மனிதனே புக முடியாத கொடிய காட்டுக்குள் இவர்கள் நுழைந்தால்கூட உணவு, நீர், வழித்தடம் ஆகிய மூன்றையும் கணநேரத்தில் உருவாக்கிவிடுவார்கள்.”

p83g_1520340752.jpg

ஹிப்பாலஸ் திகைத்துப்போனான். சோழவேலன் தொடர்ந்தார், ``பத்து ஆண்டுகளுக்குமேலாகப் போர் முயற்சியில் இருக்கும் சேரனால்கூட பறம்பை ஒன்றும் செய்ய முடியவில்லை.   ஆனால், வெகுதொலைவில் இருக்கும் எங்களால் பறம்பை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எளிதிலா ஏற்பட்டிருக்கும்?”

ஹிப்பாலஸுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சோழவேலன் தனது நரைத்த தலைமுடியை விரல்களால் கோதியபடியே சொன்னார், ``பறம்பின் உட்காடுகள் வரை போகக்கூடிய பாதையை நன்கு அறிந்தவர்கள் நெடுங்காடர்கள். பறம்பின் எல்லைக்குள் எமது படை நுழைந்து பதினான்கு நாள்களாகிவிட்டன. நான்கு நாள்கள் இடைவெளியில் எனக்குச் செய்தி வந்துசேர்கிறது. அப்படியென்றால், பறம்புக்குள் நுழைந்து பத்து நாள்கள் வரை பாரி தாக்குதல் தொடுக்கவில்லை. இவ்வளவு பெரும்படை உள்ளே நுழைந்ததை இரு நாள்களுக்குள்ளேயே அவன் அறிந்திருப்பான். ஆனால்,  இந்தப் படையின் தன்மையை உணர்ந்த கணமே அவன் வில்லினை உயர்த்தும் ஆற்றலை இழந்திருப்பான்.”

பறம்பின் எல்லைக்குள் பத்து நாள்களுக்குமேலாகப் படை சென்றுகொண்டிருக்கிறது என்பதை ஹிப்பாலஸ்ஸால் நம்பவே முடியவில்லை. உதியஞ்சேரலால் இத்தனை ஆண்டுகளாகியும் முடியாததைச் சோழர்கள் எளிதாகச் சாதித்துக்கொண்டிருக்கின்றனர் என்று எண்ணிய ஹிப்பாலஸ், தனது வியப்பை மேலும் வெளிக்காட்டாமல் இருக்க முயன்றான். கூர்மையாகச் சிந்திப்பதைப்போல சற்றுநேரம் அமைதியாக இருந்தான்.

தனது புகழின் மீதான பெருமிதத்தை அடுத்தவன் கண்களின் வழியே பார்ப்பது அளவிட முடியாத மகிழ்வைத் தரக்கூடியது. அதுவும் கிரேக்கத்தின் பெருவணிகனும் கடல் வழித்தடத்தின் தளகர்த்தனும் இமை மூடாமல் சோழப்பேரரசின் வலிமையைத் தனது சொல்கொண்டு பார்த்திருக்க, சோழவேலனால் வார்த்தைகளை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

``பெரும்படைகொண்டு வெற்றிகொள்ள சமதளத்தில் எண்ணற்ற நாடுகள் இருக்க, பறம்பினை நோக்கி ஏன் படையெடுத்துள்ளார் சோழப்பேரரசர்?” எனக் கேட்டான் ஹிப்பாலஸ்.

சற்றே புன்முறுவலோடு அவனது கேள்வியை எதிர்கொண்ட சோழவேலன், ஒளிவீசும் செவ்வண்ணக் கோப்பையைக் கையில் ஏந்தினார்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 74

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

ருக்கன்குன்றை அடுத்து ஆயிமலை நீண்டுகிடக்கிறது. ஆயிமலையின் மேல்முகட்டைப் பறம்பின் மக்கள் கடப்பதில்லை. அந்தத் திசையின் அடர்காடுகளில் சேர நாட்டினரே வேட்டையில் ஈடுபடுகின்றனர். எனவே, அப்போதிலிருந்து அது அவர்களின் பகுதியாகவே கருதப்படுகிறது. அந்தக் காட்டின் நடுவில்தான் குட்டநாடும் குடநாடும் இப்போது தத்தம் படைகளை ஒருங்கிணைத்துள்ளன.

p83a_1521022716.jpg

குடவர்கோ போர்க்களம் வரவில்லை. அவருக்குப் பதில் அமைச்சன் கோளூர்சாத்தனே வந்திருந்தான். குட்டநாட்டு வேந்தன் உதியஞ்சேரல் தாக்குதலின் முழுத் தன்மையையும் தீர்மானிப்பவனாக இருந்தான். இரு நாட்டுத் தளபதிகளான துடும்பனும் எஃகல்மாடனும் அவனது உத்தரவை நிறைவேற்ற ஆயத்தநிலையில் இருந்தனர். ஆயிமலையின் இடப்புற விளிம்பின் வழியாக எஃகல்மாடன் தலைமையிலும் வலப்புற விளிம்பின் வழியாக துடும்பனின் தலைமையிலும் பறம்புக்குள் படையெடுக்க முடிவுசெய்திருந்தனர்.

நேரெதிராக இருந்த இருக்கன்குன்றின் உச்சியில் நிலைகொண்டிருந்தான் கூழையன். தேக்கனும் உதிரனும் வந்துசேர்ந்தனர். அருகில் இருந்த ஊர்களைச் சேர்ந்த நூறு வீரர்கள் கூழையனோடு இருந்தனர். தேக்கனிடம் நிலைமையை விவரித்தான் கூழையன். எதிரிப்படையின் எண்ணிக்கையைத் தோராயமாகத்தான் சொல்ல முடிந்தது. ``ஆயிமலையின் மேல்முகடுகளில் இருந்துதான் நம்மால் பார்க்க முடியும். மலையின் கீழ்ப்பகுதியில் உள்ளொடுங்கிய அடர்காட்டுக்குள் அவர்கள் இருப்பதால், அவர்களின் எண்ணிக்கையைச் சரியாக மதிப்பிட முடியவில்லை” என்றான் கூழையன். ஆனால், இருவர் படைகளும் காட்டுக்குள் வந்துவிட்டதை உறுதிசெய்தான். ``அவர்களின் தாக்குதல் திட்டத்தைத்தான் கணிக்க முடியவில்லை’’ என்றான்.

தேக்கன் நிலைமையைப் புரிந்து கொள்ள நேரமெடுத்துக் கொண்டான். சேரர்கள் இருவரையும் எளிதாக நினைத்துவிடக் கூடாது என அவனுக்குத் தெரியும். `கூழையனின் கூற்றுப்படி சேரப்படை முழுமையாக வந்து இரு வாரங்களாகப்போகின்றன. ஆனால், இன்னும் அந்த இடம் விட்டு அசையாமல் ஏன் இருக்கிறான்? அவனது காத்திருப்பு எதற்காக?’ - தேக்கன், கேள்விகளை எழுப்பியபடியே இருந்தான்.

``சேரன் ஆயிமலையின் இடப்புற விளிம்பு அல்லது வலப்புற விளிம்பு என ஏதேனும் ஒன்றின் வழியாகத்தான் உள்ளே நுழைந்தாக வேண்டும்” என்று கூழையன் சொன்னபோது, ``ஏன், இரண்டு பக்கங்களிலும் ஒருசேர உள்ளே நுழைய மாட்டானா?” எனக் கேட்டான் தேக்கன்.

``வாய்ப்பிருக்கிறது” என்றான் கூழையன்.

``இந்த இரண்டு பக்கங்களிலும் அவனது படையை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாவோம் என அவனுக்குத் தெரியுமல்லவா, பிறகு ஏன் அவன் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கிறான்?”

கூழையனிடம் பதில் இல்லை.

``நம்மை இங்கு கவனம் செலுத்தவைத்து, அவன் வேறு திசையில் நுழைய மாட்டானா?” எனக் கேட்டான் உதிரன்.

``இல்லை, வேறு எங்கும் அவனது படை நிலைகொள்ளவில்லை. இங்குதான் அவன் மையமிட்டுள்ளான்” என்றான் கூழையன்.

எப்படிச் சிந்தித்தாலும் அவனது செயலின் காரணம் பிடிபடவில்லை.

அன்றிரவு தேக்கன் எந்த முடிவும் எடுக்கவில்லை. `உதியஞ்சேரல் ஏன் காத்திருக்கிறான்? அவனுக்குத் தேவையான செய்தி வந்து சேரவில்லை அல்லது அவன் நினைத்த இடத்தில் எதிரிகளாகிய நாம் வந்து சேரவில்லை. இந்த இரண்டு காரணங்கள்தாம் இருக்க முடியும். சோழனும் பாண்டியனும் படையெடுத்துள்ள செய்தி அறிந்து அவர்களின் தாக்குதலுக்காகக் காத்திருக்கலாம் அல்லது நாம் ஆயிமலையின் எந்த விளிம்பில் அவனை எதிர்கொள்ள அணிவகுக்கப்போகிறோம் என்பதை அறியக் காத்திருக்கலாம்’ என்று சிந்தித்தபடியிருந்தான். 

p83b_1521022743.jpg

பின்னிரவு தொடங்கியது. தேக்கன் சொன்னான், ``நாளை காலை இரு விளிம்புகளிலும் நமது படையை அணிவகுக்கச்செய்வோம். அதன் பிறகும் அவன் முன்னகரவில்லை என்றால், சோழ, பாண்டியப் படையெடுப்போடு ஏதோ ஒருவகையில் இவனது திட்டம் ஒருங்கிணைந்துள்ளது என்று பொருள்.”

கூழையனும் உதிரனும் தேக்கனின் சொல்லோடு முரண்பட முடியாமல் அமைதிகாத்தனர். தேக்கன் சொன்னான், ``அப்படியோர் ஒருங்கிணைப்பு இருப்பதாக நாம் முடிவுக்கு வந்தால், எதிரிகளை நோக்கி நமது படை முன்பாய்ச்சலில் சென்று தாக்கவேண்டியிருக்கும்.”

தேக்கனின் கூற்று சரியெனப்பட்டது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசினர். இடப்புற விளிம்பில் உதிரனின் தலைமையில் இருபது ஊர்களையும், வலப்புற விளிம்பில் கூழையனின் தலைமையில் இருபத்தாறு ஊர்களையும் அணிவகுக்குமாறு தேக்கன் சொன்னான். குதிரைப்படையினரோடு குன்றின் மேல்முகட்டில் அமைந்துள்ள இந்த இடத்திலிருந்து இரு பக்க நிலைமைக்கு ஏற்ப முடிவெடுத்துத் தாக்குதலை வலுவூட்டுவது தேக்கனின் வேலை என முடிவானது.

திட்டமிட்டபடி கூழையனும் உதிரனும் ஆயிமலையின் விளிம்புகளில் எதிரிகளைத் தாக்க ஆயத்தமாயினர். வலிமைமிகுந்த குதிரைப்படையோடு இருக்கன்குன்றின் மேலே நின்றபடி இரு பக்க நிலைமைகளையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் தேக்கன்.

மறுநாள் முழுவதும் எதிரிகளிடம் எந்த அசைவும் இல்லை. காத்திருந்தான் தேக்கன்.

விருந்து மண்டபம் கோடையின் வெக்கையைச் சிறிதும் உள்ளிறக்காமல் இருந்தது. ஆனால், தேறல் கணக்கின்றி உள்ளிறங்கிக்கொண்டிருந்தது. ஹிப்பாலஸ், குடியில் பேரார்வம் கொண்டவனைப்போலக் காட்டிக்கொண்டிருந்தான். ஆனால், அவன் குடிக்கும் வழக்கமான வேகம் இன்றில்லை. காரணம், அவனது தேவை வேறொன்று.

சோழவேலன் சொன்னார், ``எவ்வளவு அடர்கானகத்தில் இருந்தாலும் தேவையான அளவு வழியமைப்பதில் வல்லமை வாய்ந்தவர்கள் குறுங்காடர்கள். இருக்கையின் மீதிருக்கும் தூசியை ஊதித்தள்ளுவதைப்போல பின்னிக்கிடக்கும் செடிகொடிகளையும் புதர்களையும்  விலக்கி  எளிதில்  வழியமைப்பார்கள். கீழ்க்காடர்களோ, நீரும் வேரும் கிழங்கும் அறிந்தவர்கள். மண்ணுள் இருக்கும் அனைத்தையும் பற்றி அவர்களைப்போல் அறிந்த இன்னோர் உயிர் இல்லை என்றே சொல்லலாம். மேல் மண்ணை மோந்து அடிமண்ணைக் கண்டறியும் ஆற்றல் கொண்டவர்கள். மண்ணுள் மணிக்கற்கள் இருக்கும் இடத்தில் நன்கு வேர்விட்டு வளரக்கூடியது `கருநொச்சி’ என்று கண்டறிந்தவர்கள் அவர்களே. அதனால்தான் கருநொச்சி இருக்கும் நிலத்தில் புதையல் இருக்கும் என்று மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.

மேல்காடர்களோ நிலத்தின் மேற்புறத்தைத் தமது உடலின் மேற்புறம்போல பாவிப்பவர்கள். மரம், செடிகொடி என அனைத்தையும் இருக்கும் நிலையிலேயே ஆயுதமாக மாற்றத் தெரிந்தவர்கள். இவர்கள் மூவரும் ஆதியில் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள். `அந்த ஆதித்தாய், மண்ணுள்ளிருந்து விளைந்தவள்; மண்ணாலானவள்’ என்று சொல்கிறார்கள். அதனால்தான் இன்றும் மண் போர்த்தி உறங்கும் பழக்கம் அவர்களிடம் உண்டு.”

ஹிப்பாலஸ், இதுவரை இப்படியொரு பழக்கமிருக்கும் மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. மிரண்டு நின்றான்.

``கிழக்குப் பகுதி மலையின் ஆதிகுடிகள் இவர்கள். பச்சைமலைத்தொடர்போல் ஒற்றைக்குணம் கொண்ட நீள்மலையல்ல அது. ஒவ்வொரு குன்றுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. கிழக்கும் மேற்கும் எதிர்த்திசைகளைப்போல இந்த இரு திசைகளில் உள்ள மலைமனிதர்களும் எதிரெதிர்த் தன்மைகளைக் கொண்டவர்களே!”  

இத்தனை தலைமுறைகளாகத் தமிழ் நிலத்தோடு வணிகம் நடந்திருந்தும் இதுவரை கேள்விப்பட்டிராத செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தான் ஹிப்பாலஸ்.

சோழவேலன் தொடர்ந்தார். ``காட்டின் ஆதிக்குணங்களைத் தங்களின் குருதி நாளங்களில் உணர்ந்தவர்கள் நெடுங்காடர்கள். எனவே, அவர்களைக்கொண்டே படையெடுப்பின் முறைமையை வகுத்துள்ளான் என் மகன் செங்கணச்சோழன். சோழநாட்டு நிலைப்படையின் தேர்ந்த வீரர்கள் மட்டுமே இந்தப் படையெடுப்பில் பங்கெடுத்துள்ளனர். நெடுங்காடர்கள் கவசமென அணிவகுக்க, பறம்பை ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கிறது சோழப்படை. அது சமதளப்போரில் எவ்வளவு ஆற்றல்வாய்ந்த தாக்குதலை நடத்துமோ அதைவிட வலிமையான தாக்குதலை இப்போது காடுகளுக்குள் நடத்த வல்லது” என்றான்.

விழித்த விழி நகராமல் நின்றது. `சேரனையும் பாண்டியனையும் கடந்தவனாக இருக்கிறான் சோழன்’ எனத் தோன்றியது. இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே `தான் கேட்ட கேள்விக்கான விடையைச் சொல்லாமல், மற்ற செய்திகளைச் சொல்வதன் மூலம் பேச்சை திசைதிருப்புகிறார் சோழவேலன்’ என்றும் தோன்றியது.

p83c_1521022770.jpg

ஹிப்பாலஸ், ஆழ்ந்து சிந்தித்து `அவரின் வழியையே நாமும் பின்பற்றுவோம்’ என நினைத்துக் கேட்டான், ``இவ்வளவு வலிமைகொண்ட படை இருக்குமேயானால், நீங்கள் வெல்வதற்குப் பேரரசுகள் இருக்கின்றனவே. ஏன் பறம்பின் மீது படையெடுக்க வேண்டும்?”

உற்சாகத்தோடு பீறிட்ட சொற்கள் சட்டென நின்றன. வேகம் முறிந்ததுபோலானது. அமைதி சூழ்ந்தது.

சோழவேலன் சொல்லத் தயங்குகிறாரா அல்லது எப்படித் தொடங்குவது எனச் சிந்திக்கிறாரா என்பதை ஹிப்பாலஸால் கணிக்க முடியவில்லை. சற்று அமைதிக்குப் பிறகு ஹிப்பாலஸைப் பார்த்து சோழவேலன் கேட்டார், ``ஒரு நாட்டைச் செழிப்புமிக்க நாடு என எதை வைத்துத் தீர்மானிப்பீர்கள்?”

``அது மனிதர்கள் தீர்மானிப்பதன்று; அந்நாட்டின் சேமிப்பறைகளில் இருக்கும் பொன்னும் மணியும் முத்தும்தாம் தீர்மானிக்கின்றன.”

``சரியாகச் சொன்னீர்கள். யவனர்களாகிய நீங்கள், இந்நிலத்தில் நடக்கும் அரசாட்சிகளையும் நாடுகளையும் நன்கு அறிந்தவர்களாயிற்றே! நீங்களே சொல்லுங்கள், இந்த நிலத்தில் செழிப்புமிக்க நாடு எது?”

இதுபோன்ற பேச்சுகளில்தான் ஆழமான மனக்காயங்கள் உருவாகின்றன. அவை வணிகத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வார்த்தைகளுக்குக் கொடுக்கப்படும் விலையை நீதிமானோ, உழவனோ அறிந்ததைவிட வணிகனே அதிகம் அறிந்திருப்பான். எனவே, விடை சொல்வதைத் தவிர்த்தான் ஹிப்பாலஸ்.

``ஏன் தயங்குகிறீர்கள், நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள்?”

சொல்ல முடியாமல் தவித்தவன் தயக்கத்தை உடைத்து மெள்ளச் சொன்னான் ``பொன்னும் மணியும் முத்துக்களைவிட மதிப்பு உயர்ந்தன. ஆனால், அவை மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. முத்துக்களோ அளவிடற்கரிய முறையில் கிடைக்கின்றன. பெரும்முத்துக்குளியலை நாள்தோறும் நடத்திவரும் பாண்டியநாடே செழிப்புமிக்கது.”

தலையசைத்துச் சிரித்தான் சோழவேலன் ``இப்படித்தான் தவறுதலாக மதிப்பிடுகிறீர்கள்.”

``இதில் என்ன தவறு இருக்கிறது?”

``முத்துக்களைவிடப் பொன்னும் மணியும்தாமே மதிப்பில் உயர்ந்தன?”

``ஆமாம்.”
``அந்தச் செல்வத்தை அளவிட முடியாத அளவு வைத்துள்ளது யார்?”

சற்றே தயங்கியபடி ``தெரியவில்லை” என்றான் ஹிப்பாலஸ்.

ஹிப்பாலஸின் முகத்தைக் கூர்ந்துபார்த்து, புருவங்களை உயர்த்தியபடி சொன்னார், ``பறம்பின் பாரி.”

கண்கள் பிதுங்க விழித்தான் ஹிப்பாலஸ். `என்ன சொல்கிறான் சோழவேலன்’ என்பதைப் புரிந்துகொள்ள முடியாத குழப்பத்தை, அவனது முகம் காட்டியது.

``நான் சொல்வதை உங்களால் ஏற்க முடியவில்லை அல்லவா?”

``ஆம்’’ எனத் தலையசைத்தான்.

``பச்சைமலைத்தொடரின் நீளம் அறிவீர்களா நீங்கள்?”

``எங்களின் நாவாய்கள் குமரிமுனை திரும்பினால் கரையையொட்டி ஒரு மாதகாலம் பயணப்பட்டு, சுபாகரா இடத்தில் மேற்குத் திசையில் திரும்புகின்றன. அந்த இடம் வரை நீண்டுகிடக்கிறது என நினைக்கிறேன்.”

``ஆமாம். நீங்கள் சொல்வது மிகச்சரி. கண்காண முடியாத தொலைவு நீண்டுகிடக்கும் இந்தப் பச்சைமலைத்தொடர் முழுவதையும் தம் வாழ்விடமாகக் கொண்டவர்கள்தாம் பதினான்கு வேளிர்குடிகள்.

மலையுள் உள்ள குகைப்பாறைகளின் சுரங்கங்களிலும் ஆற்றிலும் பள்ளத்தாக்கிலும்தான் விலை உயர்ந்த மணிக்கற்கள் கிடைக்கின்றன. உங்களின் யவனப் பேரரசர் உட்பட எல்லா நாட்டு வேந்தர்களும் செல்வந்தர்களும் எண்வகைத் திருமணிகளையே வாங்கவும் அணியவும் சேமிக்கவும் விரும்புகிறோம்.”

அமைதிகொண்டு கேட்டான் ஹிப்பாலஸ்.

``வெருகின் கண்போல முழுப்பச்சை நிறத்தின் நடுவில் செங்குத்தான வெண்கோடு ஒளிருமே பூமர வைடூரியம். அதைத்தானே யவனர்களாகிய நீங்கள் மிக உயர்ந்ததாகக் கருதுவீர்கள்?”

``ஆமாம்.”
 
``அந்த வகையான வைடூரியம் மிக அதிகமாகக் கிடைப்பது உடுவன்மலையில். அந்த மலையை ஆள்பவன் வேள் அழுந்துவன்.”

`இதை எதற்குச் சொல்கிறார்?’ எனச் சிந்தித்தான் ஹிப்பாலஸ்.

``தேன்துளியின் மீது கதிரவன் ஒளிபட்டு மின்னுவதுபோல் இருக்குமே அது என்ன வகை வைடூரியம்?” எனக் கேட்டார்.

ஹிப்பாலஸுக்கு, சட்டெனப் பெயர் நினைவில் வரவில்லை. சோழவேலன் சொன்னார், ``வாலவாயம். அது கிடைப்பது தணக்கன் குன்றில். அந்த இடம் நெடுவேள் ஆதனின் மலைப்பகுதியைச் சேர்ந்தது. அவனது மலைக்கு அடுத்து இருப்பதுதான் பன்றிமலை. மயிலின் கழுத்துபோலக் கார்நீலம் இறங்கி ஓடும் வைரக்கல் கிடைக்கும் இடம் அதுதான்” என்று பட்டியலிட்டார் சோழவேலன்.

இவரது பேச்சு எதை நோக்கிப் போகிறது என்பதை ஹிப்பாலஸால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஹிப்பாலஸின் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி சோழவேலன் கேட்டார், ``எங்கள் வேந்தர்கள் மிகவும் விரும்பி அணியும் வைடூரியம் எது தெரியுமா?”

``தெரியாது” என்றான்.

``முயலின் குருதி சிற்றகலின் ஒளி பட்டுத் திகைத்துத் திகைத்து ஒளி சிந்தும். அதன் ஒவ்வொரு மினுக்கும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். அந்த வகையிலான வைடூரியத்தை `துகிர்கனகம்’ என்போம். அதுதான் இந்த நிலமெங்கும் இருக்கும் வேந்தர்கள் விரும்பி அணிவது. அது கிடைக்கும் இடம் புடவூர் வேளன்குன்றில்.

சொல்லியபடி இருக்கையை விட்டு எழுந்தார் சோழவேலன். ஹிப்பாலஸும் உடன் எழுந்தான். விருந்து மாளிகையின் எதிர்ப்புறச் சுவரை நோக்கி மெள்ள நடந்தபடி சோழவேலன் கேட்டார், ``யவன வணிகர்கள் நீலமணிக்கற்களை மிக அதிகமாக வாங்குவது எந்த நாட்டில்?”

``எங்கள் நாட்டுச் செல்வந்தர்கள் அதிகம் விரும்புவது கார்நீல மணிகளைத்தான். அந்த வகை மணிகள் அதிகம் கிடைப்பது ஈழநாட்டில்தான். எனவே, அங்கிருந்து அதிகம் வாங்குகிறோம். அரச குடும்பத்தினர் பொதுவாக கார்நீலத்தைத் தவிர்த்துவிட்டு மாநீல மணிகற்களைத்தான் பயன்படுத்துவர். அந்த வகைக் கற்கள் அதிகம் கிடைப்பது மணிபல்லவத் தீவில். எனவே, எங்களின் நாவாய்கள் ஆண்டு முழுவதும் மணிபல்லவத் தீவில் நிலைகொள்கின்றன.”

சுவரில் இருந்த ஓவியத்தில் பெண் ஒருத்தி நீர்நிறைந்த சிறு குவளையைக் கையில் வைத்துள்ளாள். அந்தக் குவளையில் உள்ள நீரிலிருந்து ஒளி படருவதுபோல் வரையப்பட்டிருந்தது. அதைக் காட்டி, ``இந்த ஓவியம் எதைக் குறிக்கிறது என்று உங்களால் அறிய முடிகிறதா?” எனக் கேட்டார்.

நீர் நிரம்பிய குவளையிலிருந்து எப்படி ஒளி வருகிறது என்பது ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை. அதைக் கேட்ட பிறகு சோழவேலன் சொன்னார், ``அதில் உள்ளது புன்னாட்டு மணிக்கல். அது உமிழும் நீலத்துக்கு இணையே இல்லை. குவளை நிறைய கறந்த பாலை நிரப்பி, அதற்குள் அந்த மணிக்கல்லைப் போட்டால் பாலுக்கு மேல் ஒளி பரவும்” என்றார்.

ஹிப்பாலஸின் முகம் முழுவதும் வியப்பு பரவியது. சோழவேலன் சொன்னார், ``அந்தப் புன்னாடு வேள்முடியனின் கையில் உள்ளது. உள்ளுக்குள் தீச்சுடர்போல் அணையாமல் ஒளி வீசும் இளஞ்சிவப்பு நிற மணிக்கற்கள்தாம் வேந்தர்கள் விரும்பி அணிவது. மகுடத்தில் சூடும் முடிமாலையில் அவ்வித மணிக்கற்கள் பதித்தால், அந்த வேந்தன் எந்தப் போரிலும் தோல்வியைத் தழுவ மாட்டான் என்பது நம்பிக்கை. அவ்வித மணிக்கற்கள் அதிகம் கிடைப்பது செருவின்குன்றில். அது அழும்பின் வேள் குன்றாய் இருக்கிறது. 

இவர்கள் உட்பட ஒன்பது வேளிர்கள் இன்றும் பச்சைமலையை ஆள்கின்றனர். எஞ்சியோர் வேற்றுநாட்டுப் படையெடுப்புகளால் வீழ்ந்துவிட்டனர். பதினான்கு குடி வேளிர்களுக்கும் ஆதியிலிருந்து ஒரு பழக்கம் இருக்கிறது. அவர்களின் நிலப்பகுதியில் கண்டெடுக்கும் மணிக்கற்களைக் குலத்தலைவனிடம் கொடுப்பர். அவன் அவற்றைப் பாதுகாத்து வைப்பான். அந்தக் குலத்தலைவன் மரணத்தைத் தழுவியவுடன் புதியவன் பொறுப்பை ஏற்கும்போது செய்யும் முதற்பணி, ஏற்கெனவே இருந்தவன் காலத்தில் சேகரிக்கப்பட்ட மணிக்கற்களைப் பறம்புநாட்டிலிருக்கும் பாழி நகரில் போய் வைத்துவிடுவதுதான்.’’

சோழவேலன் சொல்லிவந்தது என்ன என்பதை ஹிப்பாலஸ் உணரும் வேளை தேறல்களின் மயக்கத்தை கணநேரத்தில் கலைத்தது. சோழவேலன் தொடர்ந்தார், ``ஆதியில் நெருக்கடியான சுழலில் யாரோ ஒரு வேளிர்குடி பாழி நகரில் போய் மணிகற்களைப் பாதுகாத்து வைத்திருப்பான். அதன் பிறகு வேளிர் குடிகளிடம் இது ஒரு சடங்காக மாறிவிட்டது. குலத்தின் புதிய தலைவன் பழையவனின் காலத்துச் சேமிப்பைப் பாழியில் போடுவது அவனது காலத்தைச் சிறப்பாக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. இப்படி பதினான்கு வேளிர்குடியும் தலைமுறை தலைமுறையாக மணிக்கற்களைப் பாழி நகரில் போட்டுவிட்டு வருகின்றனர். பறம்பு வேளிர்கள் அதைக் காத்துவருகின்றனர்.”

செங்கணச்சோழன் படையெடுப்பின் நோக்கம் ஹிப்பாலஸுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால், இந்தச் செய்தியே தெரியாமல்தான் மற்ற வேந்தர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. சோழவேலன் சொல்வது உண்மையாக இருக்குமேயானால் பறம்பின் மாபெரும் செல்வம் கொள்ளிக்காட்டு விதையோ, சோமப்பூண்டு பானமோ, தேவாங்கு விலங்கோ அல்ல; பாழி நகர்ச் செல்வம்தான்.”

ஹிப்பாலஸ் எண்ணிக்கொண்டிருக்கும்போது சோழவேலன் சொன்னார், ``இன்று, நேற்று அல்ல... எத்தனையோ தலைமுறைகளாகப் பாழி நகரத்தில் குவிக்கப்படும் செல்வம் கதைகளாகப் பரவியபடியே இருக்கிறது. உலகின் மாபெரும் செல்வமான மணிக்கற்களை மலைமக்கள் பாழாய்ப்போடுகின்றனர் என்று எல்லோருக்கும் தெரியும். அதைக் கைப்பற்றும் கனவும் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அந்தப் பாழி நகர் எங்கு இருக்கிறது என்ற குறிப்பு, வேளிர்குடியின் மிகச்சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் எந்தச் சூழலிலும் அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். போரில் வீழ்ந்த வேளிர்களிடம்கூட அந்த உண்மையைப் பெற முடியவில்லை.”

ஹிப்பாலஸ் தன்னை முழுமுற்றாக மறந்த நிலையில் சோழவேலனின் சொல்லைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

p83d_1521022806.jpg

``மறைக்கப்படுவதுதான் கவனிக்கப்படுவதாக மாறும். மேற்குத்திசையில் உள்ள பச்சைமலைத்தொடரில் வேளிர்களால் மறைக்கப்படுவது கிழக்குத்திசைக் குன்றுகளில் உள்ள நெடுங்காடர்களால் கவனிக்கப்படத் தொடங்கியது. தலைமுறை தலைமுறையாகப் பாழி நகரை அறிவதே நெடுங்காடர்களின் பணி. அவர்களின் முன்னோர்கள் இட்ட வாக்கும் அதுதான். மண்ணின் அடிவாரத்தை மோந்தே கண்டறியும் கீழ்க்காடர்கள்தான் பாழி நகர் நிலைகொண்டுள்ள நிலத்தைக் கண்டறிந்துள்ளனர். எண்ணிலடங்காத மணிக்கற்கள் குவிக்கப்பட்டிருக்கும் அந்த நிலத்தை அவர்கள் கண்டறிந்தபோதுதான் இன்னொன்றையும் சேர்த்தே அறிந்தனர்.

``என்ன?’’ என்று அதிர்ந்து கேட்டான் ஹிப்பாலஸ்.

``வேற்று மனிதர்களால் ஒருபோதும் அந்த இடத்தைக் கண்டறிந்து, அந்தச் செல்வத்தைக் கைப்பற்ற முடியாது என்பதுதான் அது. கீழ்க்காடர்களின் இந்தக் கூற்றை மேல்காடர்களும் குறுங்காடர்களும் ஏற்பதில்லை. அந்தச் செல்வத்தைக் கைப்பற்றக் கீழ்க்காடர்கள் ஒத்துழைப்பதில்லை என்ற காரணத்தினாலேயே காடர்களுக்குள் பல தலைமுறைகளாகப் பகை உண்டாகியது.

செங்கணச்சோழன் மூவரையும் ஒருசேரத் தாக்கியபோது, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மூவரும் ஒன்றுசேர்ந்துள்ளனர். அப்படியிருந்தும் சோழப் பேரரசின் பெரும்படையை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. சோழப்படைக்குக் கிடைத்த பெரும்வாய்ப்பு இயற்கையால் நிகழ்ந்த நிலச்சரிவு. அது நெடுங்காடர்களின் குடியிருப்புகளை அழித்தது. அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து சோழப்படையின் மீது தாக்குதல் தொடுக்க முடியாத நிலையை உருவாக்கியது. அப்படியிருந்தும் சோழர்களால் அவர்களை வெல்ல முடியவில்லை. போர் நெடுங்காலம் நீடித்தது. இறுதியில் மேல்காடர்கள் உடன்படிக்கைத் திட்டத்தைச் சொன்னார்கள். செங்கணச்சோழன் அதை ஏற்றுக்கொண்டு தாளமலையைக் கைப்பற்றும் திட்டத்தைக் கைவிட்டான்” என்றான் சோழவேலன்.

ஹிப்பாலஸ், இருக்கையின் முனைக்கே வந்துவிட்டான். மீண்டும் எழுந்தார் சோழவேலன். ``போரிட்டுக்கொண்டிருந்தவர்களை ஒன்றாக இணைத்தது நெடுங்காடர்கள் சொன்ன உடன்படிக்கைத் திட்டம். இருவரின் நீண்டநாள் கனவுகளும் ஒன்றாயின. அதுதான் பாழி நகர். அந்தப் பெருஞ்செல்வத்தை இணைந்து கண்டறிய முடிவுசெய்தனர். காட்டைப் பிளந்து முன்னேறும் ஆற்றல்கொண்ட படையோடு என் மகன் பாழி நகர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான்.”

சோழனின் திட்டத்தை முழுமையாக அறிந்தபோது ஹிப்பாலஸ் மெய்சிலிர்த்து நின்றான்.

``கிழக்குக்கும் மேற்குக்குமான பகை, வேந்தனுக்கும் வேளிருக்குமான முரணோடு இணைந்துவிட்டது. இனி பாழி நகரைக் காப்பாற்றப் பாரியால் முடியாது” என்றான் சோழவேலன்.

ருக்கன்குன்றின் மேலே காத்திருந்த தேக்கனுக்கு உதியஞ்சேரலின் திட்டத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயிமலையின் இரு பக்க விளிம்புகளிலும் தனது படையைக் கொண்டுபோய் நிறுத்திய பிறகும் எதிரிகளின் பக்கத்தில் எந்தவித அசைவும் இல்லை. `என்னதான் நினைக்கிறான் உதியஞ்சேரல்?’ என நினைத்தபடியே இருந்த தேக்கன், குதிரைவீரர்களை அழைத்தான். அறுவர் முன்வந்தனர். தன்னோடு எவ்வியூரிலிருந்து வந்த எயினியிடம் சொன்னான், ``அறுவரையும் அழைத்துக்கொண்டு எதிரில் இருக்கும் ஆயிமலையின் முகட்டுக்குப் போ. அங்கு செல்லும் வரை நமக்குக் குதிரைப்பாதை இருக்கிறது. தேவைப்பட்டால் குதிரைப்பாதையையும் கடந்து சில வீரர்களை அனுப்பிவை. ஆயிமலையின் மறுபக்கம் எதிரிகளின் நடவடிக்கையை அறிந்து வா” என்றான்.

எயினி, ஆறு வீரர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். இருக்கன்குன்றிலிருந்து இறங்கி ஆயிமலையின் மேற்புறம் ஏறி உச்சி முகட்டை அடைய வேண்டும். போரின் முதற்பணி தனக்கு வழங்கப்பட்டதை எண்ணி மகிழ்வோடு விரைந்தான் எயினி.

பறம்பில் உள்ள குதிரைகளை, வாரிக்கையன் இரு பாகங்களாகப் பிரித்திருந்தார். அதில் பெரும்பாகத்தை எவ்வியூரில் வைத்துக்கொண்டார். சிறு பாகத்தை மூன்றாகப் பிரித்து மூன்று திசைகளிலும் களம்நோக்கி அனுப்பினார். அவர் அனுப்பிய இருநூறு குதிரைகள் முந்தைய நாள் தேக்கனின் இடத்துக்கு வந்து சேர்ந்தன. அதை முழுமையாகத் தன்னுடன் வைத்துக்கொண்டான். ஆயிமலையின் இரு பக்க விளிம்புகளிலும் கூழையனும் உதிரனும் எதிரிகளைத் தாக்க ஆயத்தநிலையில் இருந்தனர். ஆனால், அவர்களுக்குக் குதிரைவீரர்களை அனுப்பவில்லை. தாக்குதலை மேலிருந்து கண்காணித்துக்கொண்டிருந்த தேக்கனிடம்தான் அனைத்துக் குதிரைவீரர்களும் இருந்தனர். யாருக்கு உதவி தேவையோ அவர்களை நோக்கிக் குதிரைப்படையை அனுப்புவதுதான் தேக்கனின் திட்டம்.

எயினியின் தலைமையிலான ஆறு வீரர்களும் இருக்கன்குன்றைத் தாண்டி ஆயிமலையில் ஏறத் தொடங்கினர். குதிரைகள் பிறந்தது முதலே பறம்பின் மலைப்பாதையில் ஓடிப்பழகியவை. எனவே, மலையேற்றத்திலும் வேகம் குறையாமல் வீரர்களைச் சுமந்து செல்லக்கூடியவை.

ஆயிமலையின் பாதி உயரத்தைக் கடந்தனர். சில இடங்களில் ஆபத்தான சரிவுப்பாறைகள் உண்டு. அந்த இடங்களில் குதிரையை விட்டு இறங்கி நடந்து செல்வர். முன்னால் சென்றுகொண்டிருந்த எயினி இறங்கி நடந்தான். வீரனாகிய தனக்கு வழங்கப்பட்ட இந்தப் பணி குறித்து எயினியின் மனதில் மகிழ்வு பீறிட்டபடி இருந்தது. சரிவுப்பாறையில்கூட குதிரையை நடக்கவிடவில்லை அவன். ஓடுகிற அதே வேகத்தில் இழுத்துக்கொண்டு நடந்தான். பாறையைக் கடந்ததும் குதிரையின் மீது ஏறிக் கடிவாளத்தைச் சுண்டினான். வரிசையாக மற்ற வீரர்களும் குதிரையின் மீது ஏறினர். வேகம் கூடியது. ஆயிமலை முகட்டின் பின்புறமிருந்து உதியஞ்சேரல் எதை எதிர்பார்த்துக் காத்திருந்தானோ அது அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது.

சோழனின் பெரும்படை சுழிப்பள்ளத்தை அடைந்தது. படையின் வால்பகுதி மறுமலையைக் கடந்து கிடந்தது.

இடப்புறக் கரையின் மேல் மறைந்தபடி வந்துகொண்டிருந்த பிட்டன் தலைமையிலான படையும் வலப்புறத்திலிருந்த இரவாதன் தலைமையிலான படையும் தங்களின் நிலையிலேயே இருந்தனர்.  இந்தப் படை சுழிப்பள்ளத்திலிருந்து இடப்புறமாக எழுவனாற்றில் நுழையப்போகிறதா அல்லது வலப்புறமாக வட்டாற்றில் நுழையப்போகிறதா என்பதைப் பொறுத்துத்தான் அவர்கள் தாக்குதல்  அமையும். தாக்குவது என்று முடிவானால் அதற்கான உத்தரவை இரவில்தான் பாரி அறிவிப்பான் என்று இருவரும் நம்பினர். ஏனென்றால், படையின் எண்ணிக்கை மிகப்பெரியது. இரவுதான் சிதறடிக்கும் தாக்குதலுக்குப் பொருத்தமானது.

ஆற்றின் இரு பக்கங்களும் மேலிருந்து படை நகர்வைக் கவனிக்கத் தொடங்கினர். ஆற்றின் போக்கிலே எவ்வியூர் நோக்கிப் போகப்போகிறார்களா அல்லது இணையும் ஆற்றுத்தடத்தில் நுழையப்போகிறார்களா என்பதை உன்னிப்பாகக் கவனித்தனர். விருகமரம் ஒன்றின் மீது ஏறி, தலையை மட்டும் வெளியே நீட்டி உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் பிட்டன். ஆற்றின் வலப்புறம் பாறையின் மேல்மடிப்பிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் இரவாதன். மலைமுகட்டின் மீதிருந்த பாரியின் இரு கண்களும் சுழிப்பள்ளத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தன.

பொழுது புலர்ந்த சிறிது நேரத்திலேயே, கதிரவன் ஒளியில் மின்னத் தொடங்கிய வட்டாற்று மணலில் தம்முடைய கால்களைப் பதித்தன சோழப்படையின் முதல் வரிசை யானைகள்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 75

 

 

 

யிமலையின் முகட்டுக்கு எயினி தலைமையில் அறுவரும் வந்து சேர்ந்தனர். குதிரையை விட்டு எயினி இறங்கினான். வீரர்கள் ஒவ்வொருவராக வந்து இறங்கிக்கொண்டிருந்தனர். `முதலில் மூவரை முகட்டின் பின்புறம் அனுப்பிவைப்போம்’ என்று அவன் நினைத்தபோது முகட்டுக்கு அப்பாலிருந்து ஏதோ ஓர் ஓசை கேட்டது. எதிரிகள் மிக அருகில்தான் இருக்கிறார்கள் என்பதைக் கணித்த எயினி, சட்டென இடுப்பில் இருந்த குறுவாளை உருவினான். 

p83a_1521625550.jpg

மற்றவர்களும் ஆயுதங்களை ஏந்திப்பிடிக்க ஆயத்தமாகும்போது, முகட்டின் பின்புறமிருந்த ஓசை மிக வேகமாக நகர்ந்து வருவதுபோலிருந்தது. ‘கண நேரத்துக்குள் எப்படி இங்கே?’ என்று எயினி எண்ணிக்கொண்டிருக்கும்போதே மரத்தின் உச்சிக்கிளையில் இருந்த ஒன்று பெரும் ஊளைச் சத்தத்தோடு பாய்ந்து இறங்கியது. மனிதர்கள் வருவார்கள் என்று புதர்களுக்குள் பார்த்துக்கொண்டிருந்தவன், மரத்தின் மேலிருந்து பாய்ச்சலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பாய்ந்த தோகைநாய், குதிரையின் பிடரியைக் கவ்வி ஓர் இழு இழுத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எயினியின் குதிரை தடுமாறிக் கீழே சாய்ந்தது. எயினி உருவிய வாளோடு அந்த விலங்கை நோக்கிப் பாய்ந்தபோது பீறிட்ட குதிரையின் குருதி அவனது முகத்திலே பீய்ச்சியடித்தது. திகைத்துப்போனவனுக்கு என்ன நடக்கிறது எனப் புரிவதற்கு முன் அடுத்தடுத்து தோகைநாய்கள் மரத்திலிருந்து குதிரைகளை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தன.

வீரர்களால் வில்லில் அம்பைத் தொடுக்கவே முடியவில்லை. இதுவரை கேட்டிராத ஊளைச் சத்தத்தோடு இறங்கிக்கொண்டிருக்கும் விலங்குகளை எப்படி எதிர்கொள்வது எனச் சிந்திக்கும் முன், தாக்குதல் முடிவுறும் கட்டத்தை நெருங்கியது. இடுப்பில் இருந்த குறுவாள்கொண்டு, பாயும் விலங்கின் மீது பாய எத்தனித்தனர். அப்போது குதிரைகளைச் சரிவில் இழுத்துத் தள்ளிக்கொண்டிருந்தன தோகைநாய்கள். முன்னும் பின்னுமாக வீரர்கள் அலைமோதியபோது பாய்ந்து இறங்கும் தோகைநாய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது.

கணநேரத்துக்குள் ஏழு குதிரைகளும் குருதி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தன. எயினிக்கு, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பறம்புவீரன், தான் சாக நேர்ந்தாலும் குதிரையைப் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்பது பறம்பின் பழக்கம். ஆனால், ஏழு குதிரைகளின் உயிரும் கண்களுக்கு முன்னால் துடித்துக்கொண்டிருக்க எயினி முடிவெடுக்க ஓரிரு கணங்களே இருந்தன.

இருக்கன்குன்றில் இருந்தபடி எதிரில் இருந்த ஆயிமலையின் உச்சியைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் தேக்கன். திடீரென அங்கே ஓசை கேட்பதை அறிய முடிந்தது. `எதிரிகள் ஏதோ சூழ்ச்சி செய்துவிட்டனர்’ என்று அவன் எண்ணிக்கொண்டிருந்தபோது சரிவுப்பாறை ஒன்றில் குதிரை ஒன்று சரிந்து கீழே விழுவது தெரிந்தது. அதிர்ந்தான் தேக்கன். `பறம்பின் மலையில் குதிரையைச் சரித்து வீழ்த்தும் அளவுக்கு எதிரிகளுக்கு எங்கிருந்து வந்தது வீரம்? ஏதோ சூழ்ச்சியில் நம்மவர்கள் மாட்டிக்கொண்டு விட்டார்கள்’ என்று கணித்து, அருகில் இருந்த நெடுமனை அழைத்தான். ``பதினைந்து குதிரைவீரர்களை அழைத்துக் கொண்டு உடனடியாகப் போ” என்று ஆணையிட்டான்.

p83b_1521625565.jpg

நெடுமன், மிகத் திறமையான வீரன். ஆபத்தான கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வீரர்களில் அவனும் ஒருவன். நெடுமனின் குதிரை கனைத்தபடி பாதை நோக்கிப் பாய்ந்தது.

ட்டாற்றில் யானைப்படையை வழிநடத்திச் சென்றுகொண்டிருந்தான் அரிஞ்சயன். அவன்தான் யானைப்படையின் தளபதி. இந்தப் படையெடுப்பே யானைப்படையை மையப்படுத்தியதுதான். பல்லாயிரம் வீரர்கள் உடன்வந்தாலும் அவர்களை யானைகளுக்கு இணை சொல்ல முடியாது. காடு, யானைகளின் களம். அடர்காட்டில் பழக்கப்படுத்தப்பட்ட போர் யானைகள் ஒவ்வொன்றும் ஒரு பெரும்படைக்குச் சமம். 

பத்து யானைகளை இணைத்து ஒரு வகைமையாகவும் பத்து வகைமைகளை இணைத்து ஒரு தொகையாகவும் பிரித்திருந்தனர். யானையின் மீது இருப்பவன் பாகன், வகைமையின் பொறுப்பாளன் வாகையன். தொகைகளின் பொறுப்பாளன் தளகர்த்தன். இந்த ஐந்து தளகர்த்தர்களும் யானைப்படைத் தளபதி அரிஞ்சயனுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஐந்து தொகைகளைப் போதிய இடைவெளியில் தனித்தனியாக வருவதுபோல முன்நடத்திக்கொண்டிருந்தான் அரிஞ்சயன்.

இதேபோன்று காலாட்படையும் எண்ணிக்கை வாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. காலாட்படையின் தளபதி கிழானடி வானவன். ``படையின் வலிமை, எண்ணிக்கையில் அன்று; அதன் கட்டுக்கோப்பான செயல்பாட்டில்தான் இருக்கிறது. வலிமையான தாக்குதலை முறையற்று நடத்துவதைவிட, எளிய தாக்குதலை முறையான ஒழுங்கோடு நடத்துவதே எதிரிகளை வீழ்த்தும்” என்பதை ஒவ்வொரு வீரனையும் உணரச்செய்தவன்.

நெடுங்காடர்கள், தம்முடைய மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனித் தலைமையைக் கொண்டிருந்தனர். மூவருக்கும் பொதுத்தலைவனாகத் துணங்கன் இருந்தான். இந்தப் பெரும்படையெடுப்புக்குச் சோழநாட்டின் தலைமைத் தளபதி உரையன்தான் தலைமையேற்பதாக இருந்தது. ஆனால், பெருஞ்செல்வத்தை நோக்கிய படையெடுப்பால் தானே தலைமையேற்றான் செங்கணச்சோழன்.

நெடுங்காடர்களின் திறமை கண்டு வியக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. காட்டில் அவர்களை வீழ்த்தவோ, வெல்லவோ முடியாது என்பதை உறுதியாக நம்பிய பிறகே செங்கணச்சோழன் போரில் பங்கெடுக்க முடிவுசெய்தான். பேரரசரே நேரில் ஈடுபடும் போரில் படைவீரர்கள் பல மடங்கு ஆற்றலுடன் செயல்படுவார்கள். வெற்றி பற்றிய எண்ணம் உச்சம்கொண்டிருக்கும். வீரர்களின் மனோபலத்தைப் பல மடங்கு அது உயர்த்தியிருக்கும். அதுமட்டுமன்று, பெருஞ்செல்வத்தைக் கைப்பற்ற நடக்கும் போர் என்பதால், வீரர்களுக்கும் அதில் பங்குண்டு. எனவே களைப்பின்றி முன்னேறுவர்.

வட்டாற்றில் திரும்பிய சிறிது நேரத்திலேயே வேந்தனின் அருகில் வந்த தளபதி உரையன் சொன்னான், ``வேற்றுநாட்டு எல்லைக்குள் நுழைந்து இத்தனை நாள்களாகியும் எந்தவிதத் தாக்குதலும் நடக்கவில்லை என்பது பலருக்கும் வியப்பாகவே இருக்கிறது. பறம்பின் வீரர்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பேதுமில்லை. நமது படையின் வலிமைகண்டு மிரண்டுபோயிருப்பர் என்று வீரர்கள் பேசிக்கொள்கிறார்கள்.”

குதிரையில் பயணித்தபடியே உரையனின் சொல் கேட்டு மகிழ்ந்தான் வேந்தன். சிறிது நேரத்துக்குப் பிறகு நெடுங்காடர்களின் தலைவன் துணங்கனை அழைத்துவரச் சொன்னான்.

துணங்கன் விரைந்து வந்துசேர்ந்தான். குதிரையை விட்டுக் கீழிறங்கி வேந்தனை வணங்கினான். ``எதிரிகளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என, பேச்சைத் தொடங்கினான் செங்கணச்சோழன்.

குதிரையைப் பிடித்துக்கொண்டு நடந்தபடியே சொன்னான், ``அவர்கள் நம்மைப் பல நாள்களாகப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.”

இயல்பான குரலில் துணங்கன் சொன்னது, பெரும் அதிர்ச்சியாய் இருந்தது.

``எந்தத் திசையில்?” என வேகமாகக் கேட்டான் உரையன்.

``ஆற்றின் இரு கரைகளிலும் பத்துப்பனை உயரத்துக்குமேல்.”

``எவ்வளவு உயரத்தில் வந்தால் என்ன? மேலேயிருந்து தாக்குபவர்களின் ஆயுதங்கள் இருமடங்கு வேகம்கொள்ளும் என்றுதான் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதைவிட வேகமாக நம் எறிபொறிகள், ஆயுதங்களை மேல்நோக்கி வீசக்கூடியவை என்பது அவர்களுக்குத் தெரியாதே” என்றான்.

செங்கணச்சோழன் துணங்கனைப் பார்த்தபடி கேட்டான், ``எத்தனை பேர் இருக்கிறார்கள்?”

``களையும் பறவைகள் வெகுதொலைவு செல்வதில்லை. அருகில் இருக்கும் மரங்களிலேயே உட்கார்ந்துவிடுகின்றன. எனவே, எண்ணிக்கை சில நூறுகளாகத்தான் இருக்கும்.”

எதிரிகளின் படைநகர்வைப் பறவைகளை வைத்தே கணிக்கிறான் என அறிந்தபடி ``அவர்களின் திட்டம் என்னவாக இருக்கும் எனக் கருதுகிறாய்?” எனக் கேட்டான்.

``முடிவெடுக்க முடியாத குழப்பமாக இருக்கும்?”

``ஏன்?”

`` `இந்தப் பாதையை எப்படித் தெரிவுசெய்தார்கள்? எதை நோக்கிப் போகிறார்கள்? இந்தக் கொடுங்கோடையிலும் இவ்வளவு பெரும்படைக்கு எப்படி நீராதாரத்தை உருவாக்குகிறார்கள்?’ என எல்லாமே அவர்களுக்கு விடையில்லாத கேள்விகள்தான். விடையில்லாத கேள்விகளோடு போரிடுபவனுக்கு உள்வலிமை இருக்காது. பாரி மிகச்சிறந்த வீரன். எனவே, இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டறியாமல் தாக்குதலைத் தொடங்க மாட்டான்.”

ஒரு கணம் திகைத்துப்போனான் செங்கணச்சோழன். பல்லாயிரம் படை வீரர்களோடு பறம்புக்குள் இத்தனை நாள்களாக ஊடுருவி வந்துவிட்ட நிலையிலும் தன் தளபதி ஒருவன் பாரியின் வீரத்தை வியந்து பேசுவது அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், நெடுங்காடனைத் தன் சொந்தத் தளபதியைப் போல அணுகிவிட முடியாது. எனவே, உணர்வை வெளிக்காட்டாமல் கேட்டான், ``நீ பாரியைப் பார்த்திருக்கிறாயா?’’
``அருகில் பார்த்ததில்லை. மிகத் தொலைவில் பார்த்திருக்கிறேன்.”

``எப்போது?”

``இன்று.”

செங்கணச்சோழன் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். குதிரை கனைத்து நின்றது. ``காலையிலிருந்து இங்கேதானே இருந்தாய்! அவனை எங்கே பார்த்தாய்?”

சற்றே சிரித்தான் துணங்கன். ``நான் மேல்காடன் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.”

உரையன் விரைந்து கேட்டான், ``பத்துப்பனை உயரத்தை நம் எறிபொறிகளால் துல்லியமாகத் தாக்க முடியும். அவன் எந்தத் திசையில் வருகிறான். உடனடியாகச் சொல்.”

துணங்கன் சொன்னான், ``பத்துப்பனை உயரத்தில் வருவது அவன் படைகள் மட்டும்தான். அவன் வருவதோ மலையின் உச்சிமுகட்டில்.”

செங்கணச்சோழனும் உரையனும் சட்டென மலைமுகட்டை அண்ணாந்து பார்த்தனர். கதிரவன் ஒளி, மேல்விளிம்பில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது. கூசிய கண்களைச் சிமிட்டியபடி கேட்டனர், ``அங்கு வருவதை இங்கிருந்து பார்த்தாயா?”

`ஆம்’ எனத் தலையசைத்தான் துணங்கன்.

``அவன் பாரி என்று எப்படி முடிவுசெய்தாய்?”

இவ்வளவு பெரும்படையை முழுமையாகப் பார்க்கவும் கணிக்கவும் ஒருவன் எந்த உயரத்தைத் தேர்வு செய்கிறான் என்பதைவைத்தே சொல்லிவிடலாம், அவன் யாராக இருக்கும் என. நான்கு நாள்களாக அவன் மேலும் செல்லாமல் கீழும் இறங்காமல் ஒரே மட்டத்தில் வந்து கொண்டிருக்கிறான்.”

``நான்கு நாள்களாகப் பார்க்கிறாயா?”

``ஆம். அதனால்தான் இன்று முடிவுக்கு வந்தேன், அவன் பாரியாகத்தான் இருக்குமென்று.”

சோழப்படை காலையில் வட்டாற்றில் திரும்பியவுடன் இடப்புறமிருந்த பிட்டனும் வலபுறமிருந்த இரவாதனும் மிகவும் மகிழ்ந்தனர். எவ்வியூர் நோக்கி வந்தவர்கள் திசையறியாமல் மாறிவிட்டனர் என்ற முடிவுக்குப் போயினர். அதுமட்டுமன்று, வட்டாறு பெரும்பாறை அடுக்குகளை அடிநிலமாகக்கொண்டது. எனவே, இவர்களால் அதிகத் தொலைவு செல்ல முடியாது. நீராதாரம் இல்லாமல் படை தவித்து அலையும் நிலை ஏற்படும். அதுவே நமது தாக்குதலுக்கான சரியான நேரமாக இருக்கும். அதற்காகவே பாரி காத்திருக்கிறான் என நினைத்தனர்.

ஆனால், எதிரிகளின் படை வட்டாற்றில் திரும்பியதும் பாரியின் குழப்பம் மேலும் அதிகமானது. `எதிரிகள் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக் கின்றனர்?’ இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் விடை, பாரியை உள்ளுக்குள் உலுக்குவதாக இருந்தது.

p83c_1521625593.jpg

நெடுமனின் தலைமையிலான படை இருக்கன்குன்றினைக் கடந்து ஆயிமலையின் பாதித்தொலைவுக்குப் போயிருக்கும்போது எதிர்ப்புற மரக்கிளைகளிலிருந்து தோகைநாய்கள் பாய்ந்து இறங்கின. நீள்வாய் நாய்களின் கோரப்பற்களும் பாயும் வேகமும் யாரையும் கணநேரத்தில் நிலைகுலையச் செய்பவை. உச்சிக்கிளையிலிருந்து பாய்ந்து இறங்கிய அவற்றை நோக்கி வாளை உருவியபோது நெடுமன் சரிந்து கீழே கிடந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் மரங்களின் மேலிருந்து இடைவிடாமல் அவை பாய்ந்து கொண்டிருந்தன. அவையிடும் ஊளையின் ஆவேசம் குதிரைகளை மிரளச்செய்தது. குதிரைகளின் கனைப்பொலி பாதியில் அறுபட, எழும் ஊளையின் ஓசை தேக்கன் இருக்குமிடம் வரை எதிரொலித்தது.

பொழுது மங்கிக்கொண்டிருந்தது. ஆயிமலையின் கிழக்குப்புறச் சரிவு பறம்பின் பகுதி. அதில் பாதித் தொலைவுக்கு எதிரிகள் வந்து விட்டார்கள் என்பதைத் தேக்கனால் நம்பவே முடியவில்லை. உடனடியாக முழுக் குதிரைப்படையுடன் அந்த இடம் போக ஆயத்தமானான். வீரர்கள் வேகவேகமாகக் குதிரையில் ஏறிப் புறப்படும்போது உடலெங்கும் குருதிகொட்ட அடர்காட்டுக்குள்ளிருந்து மேலேறி வந்தான் எயினி.

குதிரை புறப்படப்போகும் கணத்தில் காட்டின் அசைவுகளைக் கண்டு நிறுத்தினான் தேக்கன். உள்ளிருந்து எயினி வெளியேறி வந்த காட்சி தேக்கனை உலுக்கியது. ஓடிப்போய் அவன் சரிந்துவிடாமல் பிடித்தான். குற்றுயிராக வந்த எயினி சொன்னான், ``உடனடியாக இங்கு இருக்கும் குதிரைகளைக் காப்பாற்றுங்கள். இங்கு நிறுத்த வேண்டாம். இடப்புறச் சரிவில் இருக்கும் குகைகளில் அவற்றை அடைத்து வீரர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்துங்கள்.”

தேக்கனோடு இருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. ``போரில் ஈடுபடத்தானே குதிரைகள். அவற்றை ஏன் குகைகளில் அடைத்துக் காக்க வேண்டும்?” எனக் கேட்டான் ஒருவன்.
``பேச நேரமில்லை. புது வகையான விலங்கு ஒன்றை ஏவிவிட்டுள்ளான் சேரன். அவை கணநேரத்தில் குதிரையின் கழுத்தைக் கடித்து இழுத்துவிடுகிறது. நாம் எது செய்தும் அதைத் தடுக்க முடியாது. அது பறக்கும் ஓநாய்போல் இருக்கிறது” என்றான்.

``நீ பயங்கொள்ளாதே! நெடுமன் பதினைந்து குதிரைவீரர்களோடு போயுள்ளான். அவற்றை வெட்டிச் சாய்த்துவிடுவான்” என்று வீரன் ஒருவன் சொல்லி முடிக்கும் முன் எயினி சொன்னான், ``அவற்றில் ஒரு குதிரைகூடத் தப்பிப்பிழைக்காது. உடனடியாக மீதி இருக்கும் குதிரைகளைக் கொண்டு செல்லுங்கள்.”

எயினி சொன்னவுடன் வேறொரு வீரன் ஏதோ மறுசொல் சொல்ல முனைந்தான். ஆனால், தேக்கன் தடுத்துவிட்டான். ``எயினி இவ்வளவு அழுத்தமாகச் சொல்கிறான் என்றால், அதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அனைத்துக் குதிரைகளையும் கீழ்ப்புறமிருக்கும் குகைப்புடைவுகளில் அடைத்துக் காவல் இருங்கள். காலாட்படை வீரர்கள் பாதிப் பேர் என்னோடு வாருங்கள். மீதிப் பேர் குதிரைவீரர்களோடு இணைந்து காவல் இருங்கள்” என்று சொல்லிவிட்டு நெடுமன் போன திசையை நோக்கி ஓடத் தொடங்கினான் தேக்கன். மற்ற வீரர்கள் அவனுடன் சேர்ந்து ஓடினர். சிலர் எயினியைத் தூக்கிக்கொண்டு மருத்துவரை நோக்கி ஓடினர். மற்றவர்கள் குதிரையைக் காக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கதிரவன் ஒளி முழுமுற்றாக மங்கியபோது குதிரைப்பாதையில் ஓடிக்கொண்டிருந்தான் தேக்கன். உருவிய வாளோடு வெறிகொண்டு ஓடினர் வீரர்கள். இருக்கன்குன்றின் அடிவாரத்தைக் கடந்து ஆயிமலையில் கால் வைக்கும்போது நெடுமன் தலைமையில் சென்ற வீரர்கள் எதிர்த்திசையில் ஓடிவந்துகொண்டிருந்தனர். பெரும்ஓசையை எழுப்பியபடி நெடுமன் வந்துகொண்டிருந்தான். அவனை நிறுத்தி என்னவென்று கேட்கவேண்டிய தேவை ஏதும் தேக்கனுக்கு இல்லை.

p83d_1521625609.jpg

இப்போது அவர்களின் முன்னுரிமை குதிரைகளைக் காப்பாற்றுவது. எயினி சொன்ன ஒவ்வொரு சொல்லும் நினைவில் எதிரொலித்தபடி இருக்க, வந்த வழியிலேயே திரும்பி குகைப்புடைவை நோக்கி ஓடத்தொடங்கினான் தேக்கன். வீரர்களில் சிலர் தாக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யச் சென்றனர். மற்றவர்கள் தேக்கனோடு இணைந்து வேகம்கொண்டனர்.

ஓடிக்கொண்டிருந்த தேக்கனை எட்டிப்பிடித்து நிறுத்தினான் நெடுமன். ஏன் நிறுத்துகிறான் எனப் புரியாமல் தேக்கன் நின்றபோது கையை உயர்த்தி மரத்தின் மேலே காட்டினான் நெடுமன். தேக்கன் அண்ணாந்து பார்த்தபோது இருளுக்குள் கிளைகள் அசைவது மட்டுமே தெரிந்தது. என்னவென்று அவன் கேட்கும்முன் நெடுமன் சொன்னான், ``அவை முன்னோக்கிப் போய்விட்டன.”

அதிர்ந்து நின்றான் தேக்கன். ``என்ன சொல்கிறாய்?”

``ஆம். எயினியைத் தொடர்ந்தே பாதி போயிருக்கின்றன. இவை மறுபாதி.”

``அவற்றை வீழ்த்த என்ன வழி?”

``தெரியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கொப்புகளின் வழியே தாவிவிடுகின்றன.”

திமிறி ஓடும் வீரர்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி, தானும் நின்றான் தேக்கன். எல்லோரும் திகைத்து நின்றனர்.

வெகுதொலைவு உள்செல்லக்கூடிய குகைகள் மூன்று இருக்கின்றன. மூன்றிற்குள்ளேயும் குதிரைகளை அடைத்து ஆயுதங்களோடு வீரர்கள் காத்திருந்தனர். முன்வரிசையில் உருவிய வாளோடு நின்றனர் எவ்வியூர் வீரர்கள். குதிரைகளின் குருதி வாடையை உணர்ந்தபடி பெரும் ஊளையோடு மரங்களின் மேலிருந்து குகைகளை நோக்கிப் பாயத் தொடங்கின தோகைநாய்கள். வீரர்கள் எய்யும் அம்புகளும் வாள்வீச்சும் அவற்றை குகைகளுக்கு அருகில் நெருங்க முடியாமல் செய்தன. வீரர்களின் ஆவேசக் கூக்குரல் இருளை உலுக்கியது. தோகைநாய்களின் ஊளை ஓசை காடெங்கும் இருந்த பறவைகளை நடுக்குறச்செய்தது. மூன்று குகைகளையும் சுற்றிச் சுற்றி வந்து ஊளையிட்டபடி இருந்தன. குகைவாயில் களில் பந்தங்கள் எரிந்துகொண்டிருக்க, இரவில் குகைகளின் மேற்பாறைகளில் உள்நுழையக்கூடிய பிளவு ஏதாவது இருக்கிறதா என்று இங்கும் அங்குமாகத் தேடிக்கொண்டிருந்தன. நீள்வாய் கொண்டு அவை கடித்திழுக்கும் ஓசை அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

வீரர்களோடு அந்த இடமே நின்ற தேக்கன் ``என்ன செய்யலாம் என்ற தெளிவில்லாமல் குகை நோக்கி நகரவேண்டாம்’’ என்று கூறிவிட்டான். அதை எதிர் கொண்டு தாக்கியவன் நெடுமன்தான். அவனோடு சென்ற பலரும் இன்னும் வந்து சேரவில்லை. என்ன நிலையில் இருக்கின்றனர் என்றுகூடத் தெரியவில்லை. நெடுமனின் கைத்தசைகள் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தன. உடன் இருந்த வீரன் ஒருவன் இடுப்புத்துணியால் அதைக் கட்டி, குருதி சிந்துவதை நிறுத்த முயன்றுகொண்டிருந்தான். குருதிப்போக்கு அதிகமிருந்ததால் அவனுக்குக் கண் செருகுவதுபோல் இருந்தது.

``அவை கூட்டுணர்வுள்ள விலங்குகள். முழுமுற்றாக அழிக்கும் வரை ஒரு குதிரையைக்கூட குகை விட்டு வெளியேற்ற வேண்டாம்” என்றான் நெடுமன். “சரி” எனச் சொல்லி நெடுமனை மருத்துவர்கள் இருக்குமிடம் நோக்கிக் கூட்டிச்செல்ல உத்தரவிட்டான் தேக்கன்.

நெடுமனை அனுப்பிய பிறகு சிறிது நேரம் சிந்தித்தபடி இருந்தான். எயினியும் நெடுமனும் அவற்றின் தாக்குதலை கணநேரம்கூட எதிர்கொள்ள முடியவில்லை. கூட்டுணர்வுள்ள விலங்குகள் முன்புறம் தாக்கும்போதே பின்புறக் கால்களைக் கவ்வியிழுக்கும் பழக்கம்கொண்டவை; அறிவுக்கூர்மைமிக்கவை. இந்தக் காட்டில் இல்லாத விலங்கினம் இது. இதை இருக்கன்குன்றினைத் தாண்டிப் பறம்புக்குள் செல்ல விட்டுவிடக் கூடாது. இதை முழுமுற்றாக அழித்தல் மட்டுமே முதற்பணி என்னும் முடிவுக்கு வந்தான் தேக்கன்.

அவன் ஆணையிட்டதும் கூவல்குடி வீரன் ஒருவன் மூன்றுமுறை உட்சுழித்து ஓசையை வெளியிட்டான். ஆயிமலையின் வலப்புறக் கணவாயில் நின்றிருந்த உதிரன் படையோடு திரும்பிவர வேண்டும் என்று அதற்குப் பொருள். மூன்று உட்சுழி ஓசை நான்கு பேரின் தொடர் வெளிப்பாட்டின் வழியே உதிரனை எட்டியது. ஓசையின் வழியே வந்த உத்தரவு அவனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த இரவில் படையோடு திரும்பி வரச்சொல்ல வேண்டிய தேவை என்ன என்று உதிரனுக்கு விளங்கவில்லை.

எதுவானாலும் ஆணையைச் செயல்படுத்துவதே அவனது வேலை என்பதால் மொத்தப் படையுடன் இருக்கன்குன்றின் முகடு நோக்கிப் புறப்பட்டான். இந்த இரவில் இப்படியோர் ஆணை வந்துள்ளது என்றால், ஏதோ ஓர் ஆபத்து அல்லது அவசரமான தாக்குதலாக இருக்க வேண்டும் எனக் கருதி வீரர்களை விரைவுபடுத்தி முன்னேறினான்.

நெடுமனுடன் சென்றவர்களில் இரண்டு வீரர்கள்தாம் சிறிய காயங்களோடு களத்திலே நிற்பவர்களாக இருந்தனர். அவர்களின் வாயிலாக அந்த விலங்கின் தன்மையைப் புரிந்துகொள்ள தேக்கன் முயன்றான். எவ்வளவு குறிவைத்து அம்பு எய்தாலும் கணநேரத்தில் கிளைகளினூடே தாவிச் செல்லும் ஒன்றை வீழ்த்துவதிலிருக்கும் சிக்கலைப் பற்றிப் பேசினர். ஆனாலும் அதற்கு ஒரு வழி இல்லாமலாபோகும் என்று சிந்தித்த தேக்கன், நாகர்குடியினர் இருக்கும் ஊர்களுக்கு வீரர்களை உடனே அனுப்பினான். ``எவ்வளவு விரைவாகப் பறவைநாகங்களைப் பிடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாகப் பிடிக்கச் சொல்லுங்கள். கிடைக்கக் கிடைக்க வீரர்களிடம் கொடுத்து அனுப்புங்கள்” என்றான்.

பறவைநாகங்கள் மரக்கொப்புகளில் வசிப்பவை. எதுவொன்று மரத்தின் மீது அசைகிறதோ அதை நோக்கிக் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து கவ்வும் ஆற்றல்கொண்டவை. எனவே, அவற்றைப் பிடித்துவர ஏற்பாடு செய்தான். ஆனால், பறவைநாகங் களைத் தேடிக் கண்டறிவதெல்லாம் எளிய செயலன்று. அப்படியே கிடைத்தாலும் ஒன்றிரண்டுதான் கிடைக்கக்கூடும். ஆனால், இங்கு வந்துள்ள நீள்வாய்நாய்களோ எண்ணற்றவை. வேறென்ன வழிகள் இருக்கின்றன எனச் சிந்தித்தனர். பொழுது விடியச் சிறிது நேரம் இருக்கும்போது உதிரனின் படையணி வந்துசேர்ந்தது. நிலைமையை அவனுக்கு விளக்கினர்.

தாக்கும் திட்டம் ஒன்று உருவானது. பொழுது விடிந்ததும் குகைகளைக் காத்து நிற்கும் வீரர்களும் அவற்றுக்கு எதிர்ப்புறமாகக் காட்டுக்குள் நிற்கும் தேக்கன் தலைமையிலான வீரர்களும் ஒரே நேரத்தில் குகைகளைச் சுற்றி மரங்களின் மீதும் பாறைகளின் மீதும் அம்பு எய்தித் தாக்குவோம். ஐந்து வரிசையாகக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வீரர்களின் அம்புகள் காற்றைக் கிழிக்கையில், நீள்வாய்நாய்கள் ஒரு கொப்பிலிருந்து மறுகொப்புக்குத் தாவினால்கூட அவற்றால் எளிதில் தப்ப முடியாது” என்றான் தேக்கன்.

திட்டம்  உருவானது. குகைகளின் வாசல்களிலும் காட்டுக்குள்ளும் வீரர்கள் ஆயத்த நிலையில் இருந்தனர். பொழுது விடிந்தது. காடெங்கும் இருக்கும் பறவைகள் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. மரத்தின் மீதிருந்த அவை குகைக்குள் நுழைய முடியாமல் வெறிகொண்டு இங்கும் அங்கும் கொப்புகளின் மீது தாவிக் கொண்டிருந்தன.

மரக்கொப்புகளை நோக்கி அண்ணாந்து பார்த்தபடி நாணேற்றிக் காத்திருந்தனர் வீரர்கள். பாம்பின் சீற்றம் போன்ற ஓசை தேக்கனின் குரல்வளையிலிருந்து வெளிவந்தபோது காற்றெங்கும் அம்புகள் சீறிப்பாய்ந்தன. குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து எகிறிக் கொண்டிருந்தன அம்புகள். ஊளையின் ஓசை காதைத் துளைத்துக்கொண்டிருந்தது. அம்புகளை எய்து முடித்த பிறகு பார்த்தனர். எந்த நீள்வாய்நாயும் கீழே விழவில்லை. அம்பு தைக்கப்பட்டவைகூட ஓசை எழுப்பியபடியே கொப்புகளில் தாவி வெளியேறித்தான் ஓடின.

இத்தனை நூறு அம்புகளுக்கும் தப்பி அவற்றின் பாய்ச்சல் இருப்பது பேரதிர்ச்சியைக் கொடுத்தது. ஒன்றிரண்டு புதர்களில் விழுந்துகிடக்கலாம் என வீரர்கள் தேடிக்கொண்டிருக்கும்போது தேக்கனும் உதிரனும் மரக்கொப்புகளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். தாக்குதலின்போது எழுந்த பேரூளையினூடே காடு நடுங்கியது. பறவை நாகங்கள் வந்தாலும் பெரிதாகப் பயன்கிடைக்காது போலத் தோன்றியது.

தாக்குதலின் முதல் நாளே தேக்கன் தலைமையிலான படை இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகளை இழந்துவிட்டது. மாபெரும் வீரர்கள் நிறைந்த படையணி இது. அப்படியிருந்தும் இந்தப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பைப் பற்றிச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். தங்களாலே நம்ப முடியாத இந்த உண்மையின் மீது நின்றுதான் அவர்கள் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது உதிரன் சொன்னான், ``கரும்பாக் குடியின் வீரர்கள் எண்ணற்ற நாய்களைத் தங்களின் குடிலில் வைத்திருந்தனர். அவற்றுள் எதுவும் அவர்கள் கொண்டுவந்ததில்லை. எல்லாம் வந்த இடத்தில் பழக்கியவை. நாயினங்களைப் பற்றிய பல நுட்பங்கள் அவர்களுக்குத் தெரிவதாக நமது மருத்துவர்களும் சொன்னார்கள். நான் உடனடியாகப் போய் ஈங்கையனிடம் பேசிப் பார்க்கிறேன். இந்த வகை நாய்களை எப்படி வீழ்த்துவது என அவன் ஏதேனும் ஆலோசனை சொல்லக்கூடும்” என்றான்.

இப்போதைய நிலையில் இது சிறந்த ஆலோசனை யாகத் தெரிந்தது. உடனடியாக உதிரனை அனுப்பிவைத்தான் தேக்கன். போய்த் திரும்ப ஒரு வாரம்கூட ஆகலாம். ஏனென்றால், நடைபாதையின் வழியாகத்தான் அவன் சென்றாக வேண்டும். அதைத் தவிர வேறு வழியேதுமில்லை. நீள்வாய்நாய்களை அழிக்காமல் ஒரு குதிரையைக்கூட குகை விட்டு வெளியேற்ற முடியாது.

p83e_1521625624.jpg

உதிரன் மூன்று வீரர்களோடு அடர்காட்டை ஊடறுத்து ஓடத் தொடங்கினான். நாகர்குடியைப் பார்க்கப்போனவர்களில் ஓரிருவராவது இன்று பறவைநாகங்களோடு வருவார்களா என்று தேக்கன் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, குகைப்பாறையின் மேல்நிலையில் நின்றிருந்த வீரர்கள் தேக்கனை நோக்கிக் கையசைத்து அழைத்தார்கள். தேக்கன் பாறையின் மீது ஏறி நின்று அவர்கள் கைகாட்டிய திசையில் பார்த்தான்.

உதிரனின் தலைமையிலான படையைத் திருப்பி அழைத்துக்கொண்டதால் பாதுகாப்பற்றி ருந்தது ஆயிமலையின் வலப்புறக் கணவாய்ப்பகுதி. அதன் விளிம்பில் பெரும்படை ஒன்று பறம்பின் காட்டுக்குள் போய்க்கொண்டிருந்தது.

இத்தனை ஆண்டுக்காலப் போர் அனுபவத்துக்குப் பிறகு சிறு எதிர்ப்புகூட இல்லாமல் பறம்புக்குள் நுழைந்தது சேரனின் படை. இரு கைகளிலும் ஏந்திய ஆயுதங்களோடு பேரோசை முழங்க முன் சென்றான் எஃகல்மாடன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 76

 

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p83a_1522148179.jpg

சோழப்படை வட்டாற்றில் திரும்பிய கணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி பாரியின் மனதிலிருந்து இன்னும் உதிரவில்லை. இதுவரை உருவாகாத புதிய கேள்விகள் மேலெழும்பியபடியே இருந்தன. முடிவெடுக்க முடியாமல், குழப்பம் திணறடித்தது. சோழன், எவ்வியூரை நோக்கி வரும் பாதை தெரியாமல்தான் எழுவனாற்றிலிருந்து வட்டாற்றில் திரும்பிப் பயணிக்கிறான் என பிட்டன் உறுதியாகச் சொல்லுகிறான். ஆனால் பாரி அக்கூற்றினை ஏற்கவில்லை. மூலப்படை வருவதற்கு முன்னர் தூசிப்படையினர் தெளிவான அறிதலோடு அப்பக்கம் திரும்பிச்சென்றதை வீரர்கள் உறுதிப்படுத்தினர்.

வட்டாற்றின் வழித்தடத்தை அறிந்துபோகிற ஒருவனை எளிதாக நினைத்துவிட முடியாது. எழுவனாற்றிலிருந்து வட்டாற்றின் கரையில் எட்டுநாள் பயணத்தொலைவில் சிறுகானம் இருக்கிறது. அதன் மறுபுறத்தில்தான் உப்பறை அமைந்துள்ளது. பாழி நகருக்கான அடையாளம் உப்பறையிலிருந்து தொடங்குகிறது. ஆனால் இவையெல்லாம் வெளியுலகத்தைச் சேர்ந்த யாரும் எவ்வகையிலும் அறிந்திடமுடியாத ஒன்று. எனவே இவற்றை அறிந்துதான் சோழன் படைநடத்திக்கொண்டிருக்கிறான் என்று நம்பமுடியவில்லை. அதேநேரத்தில் அவன் மிகத்தெளிவாக எழுவனாற்றிலிருந்து வட்டாற்றில் திரும்பியதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

படை வட்டாற்றில் திரும்பிய முதல்நாள் இரவு பாரியின் மனதில் எண்ணிலடங்காத கேள்விகள் உதித்தவண்ணமிருந்தன. கோடையின் வெக்கையைப் பாறைகள் இரவெல்லாம் உமிழ்ந்தன. அவனது உடலில் வியர்வை அடங்கவேயில்லை. உள்ளுக்குள் எண்ணங்கள் கொப்பளித்தபடியே இருந்தன.

பின்னிரவில் பிட்டன் இருந்த இடம்நோக்கிக் கீழிறங்கினான் பாரி. மற்ற குதிரைவீரர்களை முகட்டின் மீதே பயணிக்கச் சொல்லிவிட்டு இருவீரர்களோடு கீழிறங்கினான். அதிகாலைப் பொழுது விடிகையில் பிட்டனின் படையணிக்குள் வந்து நின்றான் பாரி. எதிர்பாராமல் பாரி வந்து நிற்பது தாக்குதலைத் தொடங்குவதற்காகத்தான் என நினைத்த பிட்டன், அதற்கான வேலையைத் தொடங்க ஆயத்தமானான். ஆனால் பாரியோ, “நான் அதற்காக வரவில்லை. எதிரியை அருகிலிருந்து பார்த்தறியவே வந்தேன்” என்றான்.

“நாம்  தாக்குவதற்குக் காலந்தாழ்த்தக் கூடாது” என வாதிட்டான் பிட்டன். அவனது எண்ணங்களைத் தெரிந்துகொண்ட பாரி உத்தர வேதும் கொடுக்கவில்லை. நகர்ந்து கொண்டிருக்கும் எதிரிகளின் படையணி நோக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்தான்.

P83B_1522148198.jpg

அன்றைய நாள் முழுவதும் எவ்வளவு நெருக்கமாகப் போகமுடியுமோ, அவ்வளவு நெருக்கமாக நின்று ஆற்றில் நகரும் படையின் தன்மையைக் கவனித்தான். ஆற்றின் நடுப்பகுதி முழுவதும் வேந்தனின் ஒழுங்கமைக்கப்பட்ட படையணி வந்தது. ஆனால், ஆற்றோரத்தில் வந்துகொண்டிருப் பவர்கள் வேந்தர்களின் படையணியைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் மலைமக்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் யார் இவர்கள் என்பதுதான் விளங்கவில்லை.

ஆழ்ந்த சிந்தனையின் வழியே அன்றைய நாள் முழுவதும் நடந்துகொண்டிருந்தான். பொழுது மங்கியவுடன் மீண்டும் முகடுநோக்கி மேலேறத் தொடங்கினான். அப்பொழுதும் பிட்டன் வாதிட்டான். வட்டாற்றில் ஊற்றுநீர் மிகக்குறைவு. அவர்கள் நேற்று தங்கியிருந்த இடத்தில் தோண்டப்பட்ட கிணறுகளில் போதுமான நீரில்லாததால் கிணறுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளனர். எழுவனாற்றில் நாளொன்றுக்கு நான்கு கிணறுகளை வெட்டியவர்கள், நேற்று பத்துக்கும் மேற்பட்ட கிணறுகளை வெட்டியுள்ளனர். தோண்டப்படும் கிணறுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அவ்வளவு எண்ணிக்கையில் தோண்டினாலும் இப்பெரும்படைக்குத் தேவையான நீரினை இவர்களால் கண்டறிய முடியாது. யானைகளுக்கும் போதுமான நீர் கிடைத்திருக்காது. இன்றிரவு நிலைமை இன்னும் மோசமாகும். நாளை அனைவரிடமும் முழுமையான சோர்விருக்கும் நாம் தாக்குதலைத் தொடுக்க நாளை இரவு மிகப்பொருத்தமானது” என்றான்.

பாரி மறுமொழியேதும் சொல்லவில்லை. அமைதியின் மூலமே மறுப்பினைச் சொல்லிவிட்டு மேல்நோக்கி நடக்கத் தொடங்கினான். எதிரிப்படையின் ஓரப்பகுதியில் வரும் மலையின மக்களின் உடலமைப்பினைப் பற்றியே மீண்டும் மீண்டும் சிந்தித்தபடியே வந்தான். ‘அவர்கள் பச்சைமலைத்தொடர்ப் பகுதியைச் சார்ந்தவர்கள் அல்லர். அப்படியென்றால் யாரவர்கள்?’ என்று எண்ணியபடியே இருந்தான்.

முள்ளூர்ப் பெரியவர் சொன்ன குறிப்புகள் நினைவுக்கு வந்தன. இரவாதன் சொன்ன அத்தனை செய்திகளையும் சிந்தித்துப்பார்த்தான். உதிரன் பதற்றத்தோடு எவ்வியூர் வந்ததை யோசித்தான். சட்டென அங்கவை சொன்னதாக உதிரன் சொன்ன சொல் நினைவுக்கு வந்தது, “அவர்கள் காதின் மேல்மடல்களில் மூன்று துளையிட்டிருந்தனர்.”

மனதுக்குள் மின்னலின் ஒளி பாய்ச்சுவதுபோல இருந்தது அந்தச் செய்தி. `எவ்வளவு முக்கியமான குறிப்பினை அங்கவை சொல்லியுள்ளாள்! மரத்தின் மீதிருந்து பார்த்ததால் கீழே செல்பவர்களின் காதுமடல்களைத் துல்லியமாகப் பார்க்க முடிந்துள்ளது. நாம் மிகவும் தொலைவிலிருந்து பார்த்ததால் அதனைப் பார்க்கமுடியவில்லை’ என்று நினைத்துக்கொண்டிருந்த பாரியின் மனதில் எதிரிப்படையில் வந்துகொண்டிருப்பது யாரெனப் பிடிபடத் தொடங்கியது. காதுமடல்களில் மேல்நிலையில் மூன்று துளைகளை இடுபவர்கள் மேல்காடர்கள் என்றும் கீழ்ச்சதையில் இரு துளைகளை இடுபவர்கள் கீழ்க்காடர்கள் என்றும், காதின் நடுநரம்பினை ஒட்டிப் பெரிய துளையினை இடுபவர்கள் குறுங்காடர்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளான். நெடுங்காடர்களை இதுவரை பாரி நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர்களைப்பற்றிய எண்ணற்ற கதைகளை வேளிர்குலம் அறியும். அவை அனைத்தும் கடகடவென நினைவுக்கு வந்தன.

வேளிர்குலம் நெருப்பினை அறியவும், வளர்த்தெடுக்கவும், கட்டுப்படுத்தவும் ஆற்றல் கொண்டதைப்போல நீரினைப்பற்றிய பேரரறிவு கொண்டவர்கள் காடர்கள் என்பது நினைவுக்கு வந்தது. `மண்ணுக்குள் இருக்கும் கடுநீரை எப்படித் துல்லியமாக அவர்கள் கண்டறிந்தார்கள்?’ என முள்ளூர்ப் பெரியவர் அன்று எழுப்பிய கேள்விக்கு இன்று விடை கிடைத்தது.

நீரும் நெருப்பும் போல, கிழக்கும் மேற்கும்போல இயற்கையின் அதிஆற்றலை வெளிப்படுத்தும் இரு குடிகள்தாம் வேளிர்களும் காடர்களும். இவர்களுக்குள் எதிரெதிர் நிலை கொண்ட முரண்கள் ஆதியிலிருந்தே உருவாகிவிட்டன. வேளிரோடு பகைமைகொண்டு பழிதீர்க்க எண்ணற்ற சடங்குகளைக் காடர்கள் நடத்துவார்கள் என்பதும் பாரி அறிந்ததே. காடர்களின் கண்ணிற்படாமல் எப்படி அங்கவை தப்பினாள் என்பது இப்பொழுது தான் பெருவியப்பாக இருந்தது. அவர்களின் கண்ணிற்பட்டிருந்தால் எவ்வளவு பெரிய கொடூரம் நிகழ்ந்திருக்கும் என நினைத்தபடி விரைவாக நடந்தான்.

சிறுவயதில் காடறியும் பயணத்தின்போது வடதிசை ஊரொன்றின் கிழவன் சொன்ன சொல் நினைவுக்கு வந்தது, “காடர்களும் கருநொச்சியும் இருக்கும் வரை எந்தப் புதையலையும் மறைக்க முடியாது.”
அது நினைவுக்கு வந்த மறுகணம் குலநாகினியின் வாக்கும் நினைவுக்கு வந்தது. “பறம்பு மக்கள் இருக்கும் வரை பாழி நகரை எவனும் நெருங்க முடியாது.”

சொற்களின் நினைவுகளுக் குள்ளிருந்து மீண்டு வெளிவந்தான் பாரி. அவனது மனதிலிருந்த கேள்விகள் அத்தனைக்கும் விடை கிடைத்தது.

‘சோழன், காடர்கள்மூலம் பாழிநகர் பற்றிய குறிப்பினை அறிந்துள்ளான். இப்பொழுது அதனை நோக்கியே அவன் போய்க் கொண்டிருக்கிறான். கீழ்க்காடர்களே நீர்ச்சுரப்பைக் கண்டறிந்து கிணற்றினை உருவாக்கியுள்ளனர். படையின் இருபுறங்களிலும் நெடுங்காடர்கள் அணிவகுத்து வருகின்றனர். குறுங்காடர்கள் கொடும் நச்சுப் பூச்சிகளைக் கையாளத் தெரிந்த வர்கள். நகர்ந்துகொண்டிருக்கும் இப்பெரும் படையை எளிதில் அழிக்க முடியாது. ஏனென்றால், நெடுங்காடர்கள் அடர்மரக் கொப்புகளை ஒன்றுடனொன்றாகப் பின்னித் தடுப்பரண்களை எளிதாக அமைத்துவிடுவர். நாம் வீசும் அம்பும் ஈட்டியும் அத்தடுப்பரணைத் துளைத்துக்கொண்டு உள்ளே போவது மிகக்கடினம். நெடுங்காடர்கள் இருக்கும் வரை இப்படையைப் பக்கவாட்டிலிருந்து தாக்கி அழிக்க முடியாது. பிட்டன் மிகவும் அவசரப்படுகிறான். இரவாதனோ நாள்தோறும் உத்தரவு கேட்டுக்  குறிப்புகள் அனுப்புகிறான். நீராதாரம் உருவாக்கப்போகும்  சிக்கல் என்னவென்பதை நம்மால் எளிதில் முடிவுசெய்ய முடியாது. சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்று எண்ணியபடி உச்சிமுகட்டினை அடைந்தான் பாரி.

சோழப்படை வட்டாற்றில் திரும்பிய ஆறாம்நாள். பொழுது நண்பகலைக் கடந்தது. கதிரவனின் சூடு உச்சங்கொண்டிருந்தது. நெடுங்காடர்களின் தளபதி துணங்கன் யானைப்படையின் நடுப்பகுதியிலிருக்கும் வேந்தரைக் காண வந்திருந்தான். யானையின் மீதிருந்த அம்பாரியில் அமர்ந்து வந்தான் செங்கனச்சோழன். அருகில் குதிரையின் மீது வந்துகொண்டிருந்தான் உறையன். துணங்கன் வந்துள்ள செய்தியை வேந்தனுக்குத் திரை விலக்காமல் மெய்க்காப்பாளன் சொன்னான். சிறிதுநேரத்தில் திரையை விலக்கினான் செங்கனச்சோழன்.

துணங்கன் முறைப்படியான மரியாதையைத் தெரிவிக்கக் குதிரையிலிருந்து கீழிறங்கி நின்றிருந்தான். அம்பாரியிலிருந்து எட்டிப்பார்த்தபடி அதனை ஏற்ற வேந்தன். ``என்ன செய்தி?” எனக் கேட்டான்.

துணங்கன் பதில் சொல்லும்முன் அவனைக் குதிரையின் மீது ஏறும்படி கையசைத்தான் வேந்தன். துணங்கன் குதிரையின் மீதேறிப் பேசும்பொழுது அதனை யானையின் மீதிருந்து கேட்க வசதியாக இருந்தது. ஆனால் இந்தச் செயல், வேந்தன் களைத்துப்போய் உள்ளான் என்பதன் அடையாளமாகவே துணங்கனுக்குத் தோன்றியது. அவன் சொன்னான், “இவ்வாற்றில் நீராதாரம் நாம் எதிர்பார்த்ததைவிட மிகக்குறைவாக இருக்கிறது.”

“என்ன செய்யலாம்?”

பறம்பில் மிகக்கடுமையான பகுதியை நாம் கடந்துவிட்டோம். அவர்களின் மிகப்பெரிய ஊர்கள் இருப்பதெல்லாம் எழுவனாற்றின் பகுதியில்தான். இனி பேராபத்தேதுமில்லை. எனவே நாம் படையைக் கையாள்வதில் சில முடிவுகள் எடுக்க வேண்டும்.”

“என்ன முடிவெடுக்க வேண்டும்?”

யானைப்படையின் ஒரு பகுதியையும் காலாட்படையின் ஒரு பகுதியையும் ஒருநாள் இடைவெளியில் பின்தொடர்வதைப்போல ஏற்பாடுகள் செய்யலாம். அதன்மூலம் நீராதாரத்தைப் பகிர்ந்து கொடுக்க முடியும். படையும் தெளிச்சிகொண்டு முன்னேறும். நம்முடைய தாக்குதல்திறன் எந்தக் கட்டத்திலும் குறையாது” என்றான்.

சற்றே பதறிய உறையன், “இல்லை, அப்படிச் செய்வதன் மூலம் நமது ஆற்றலை நாமே பிரித்தவர்களாகிவிடுவோம். எதிரி தாக்குதல்தொடுக்க வசதியாகிவிடும்” என்றான்.

துணங்கன் சொன்னான், “அப்படிச் செய்யவில்லையென்றால், நாளையே வீரர்கள் சிலர் மயங்கிவிழ நேரிடலாம். போதிய நீரின்றித் தொடர்ந்து வேலைவாங்கப்படும் யானைகளின் நடத்தை எப்படியிருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. வீரர்கள் மயங்கிவிழத் தொடங்கினால் அது போருக்கான மனநிலையை முற்றாகச் சிதைக்கும்” என்றான்.

“பின்னால் வரும் இரண்டாம் நிலைப்படை வலிமைகுன்றி இருக்குமேயானால் எதிரிகள் அதனைச் சூழ்ந்து தாக்கி அழிப்பர்” என்றான் உறையன்.

நெடுங்காடர்கள் இருக்கும் வரை மலைமேலிருந்து அவர்கள் எறியும் ஈட்டியும் அம்பும் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது. இப்பகுதியெல்லாம் அடர்காடுகள். ஆற்றங்கரை யோரத்திலிருக்கும் மரத்தொகுதிகளை ஒருபொழுதுக்குள் பின்னல்வலையாக மாற்றிவிட முடியும். எண்ணிலடங்காத மூங்கில் மரங்கள் ஆற்றோரம் இருக்கின்றன. எந்தக் கவலையும் நமக்கில்லை” என்றான்.

P83C_1522148215.jpg

சிறிதுநேரம் சிந்தித்த செங்கனச்சோழன், “இருதொகுதி யானைகளையும் ஈராயிரம் வீரர்களையும் இன்றிரவு இங்கேயே தங்கவையுங்கள். முன்னணிப்படை வழக்கம்போல் காலையில் புறப்படட்டும். இரண்டாம் நிலைப்படை ஒருநாள் இடைவெளியில் நம்மைப் பின்தொடரட்டும். அவசரத்தேவை யென்றால்கூட ஒருநாள் நடைத்தொலைவை எளிதில் வந்தடைந்துவிடலாம்” என்றான்.

இருவரும் ஏற்றுக்கொள்ளும் பதிலாக இருந்தது அது. ஆனாலும் துணங்கனுக்கு ஐயம் இருக்கத்தான் செய்தது. இருதொகுதி என்றால் இருநூறு யானைகள்தாம். மீதமுள்ள முந்நூறு யானைகளுக்கு நீர் கிடைப்பது கடினம். எனவே, சமமாகப் பிரிப்பதே சிறந்தது எனத் தோன்றியது. ஆனால், இதற்குமேல் வேந்தனிடம் பேசுவது முறையல்ல என்று தோன்றியதால் துணங்கன் அமைதிகாத்தான். ஆனால், உறையன் சொன்னான் “பின்னணிப்படையின் பாதுகாப்புக்கு நாம் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.”

“மிகச்சிறந்த தளபதிகளை அங்கே நியமிப்போம்” என்றான் வேந்தன். சரியெனத் தலையாட்டினான் உறையன்.

இரண்டாம் நிலைப்படையில் யானைப்படைக்குக் கச்சனையும் காலாட்படைக்கு ஆழிமார்பனையும் தளபதியாக்கி உத்தரவிட்டான். நெடுங்காடர்களுக்கு யாரைத் தளபதியாக்கலாம் என்று துணங்கனைப் பார்த்துக் கேட்டான் செங்கனச்சோழன்.

துணங்கன் சொன்னான், “முன்னால் செல்கிறவர்களுக்குப் பின்னால் வரும் படையின் மீது ஐயமோ, கவனமோ சிறிதும் இருக்கக்கூடாது. அந்த அளவு அது வலுமிக்க படையாக அறியப்பட வேண்டும். எனவே இரண்டாம் நிலைப்படைக்கு நானே தளபதியாக நிற்கிறேன். முன்னணிப்படையின் நெடுங்காடர்களுக்கு சிவியன் தளபதியாக இருக்கட்டும்” என்றான்.

நெடுங்காடர்கள் சோழர்களுக்காக இப்போரில் பங்கெடுக்கவில்லை. வேளிர்கள்மீது தங்களுக்குள்ள பகையின் காரணமாகவே பங்கெடுக்கின்றனர் என்பதை எத்தனையோ முறை உணர்ந்த செங்கனச்சோழன் இப்பொழுதும் அதனையே உணர்ந்தான்.

திரன் ஈங்கையனை அழைத்துக்கொண்டு ஆறாம்நாள் இருக்கன்குன்றுக்கு வந்து சேர்ந்தான். அவன் வரும்வரை குதிரைகளைப் பாதுகாப்பது பெரும்போராட்டமாக இருந்தது. பகலிரவென ஒவ்வொரு கணமும் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டியிருந்தது. சிறு கவனக்குறைவு ஏற்பட்டால்கூடத் தோகைநாய்கள் குகைநோக்கிப் பாயத் தயாராகிவிடுகின்றன. நாள்கள் செல்லச்செல்ல, பசி அவற்றை வெறிகொள்ளச் செய்தது. குதிரைகளின் சுவை வேறு வேட்டையை நோக்கி அவற்றைத் திரும்ப விடவில்லை. குகைக்குள்ளிருக்கும் குதிரைகளை வேட்டையாட ஒவ்வொரு கணமும் முயற்சி செய்துகொண்டிருந்தன.

குகையைக் காத்துநிற்கும் வீரர்களின் எண்ணிக்கையை இருமடங்கு அதிகப்படுத்தினான் தேக்கன். பறவைநாகங்கள் வந்தும் எவ்விதப் பயனும் இல்லை. தோகைநாய்கள் ஒரே கடியில் அவற்றை இருதுண்டுகளாக்கிவிடுகின்றன. வழிதெரியாமல் திகைத்தபடி குகையைக் காத்துநின்றனர் வீரர்கள்.

ஆறாம்நாள் உதிரனும் ஈங்கையனும் வந்து சேர்ந்தனர். பறம்பில் இல்லாத புதுவகையான விலங்கு என்று அதன் தன்மையைச் சொன்னவுடன் ஈங்கையன் சொல்லிவிட்டான், அதன் பெயர் “தோகைநாய்” என்று. “எவ்விதத் தாக்குதலாலும் அதனை வீழ்த்த முடியாது” என்று சொன்ன ஈங்கையன், “தந்திரத்தால் மட்டுமே அதனைக் கொல்ல முடியும்” என்றான். ஈங்கையனை அழைத்துக்கொண்டு புறப்படும்பொழுதே எல்லாவற்றையும் பேசி அவற்றுக்கான ஏற்பாடுகளையும் செய்தபடியே வந்தான் உதிரன்.

“கரும்புப்பாகு கிடைக்குமா?” எனக் கேட்டான் ஈங்கையன்.

“பறம்பில் கரும்பு இல்லை” என்றான் உதிரன்.

“இனிப்புச்சுவை கொண்ட பாகு வேறென்ன கிடைக்கும்?”

“பனம்பாகும் ஈச்சம்பாகும் கிடைக்கும்” என்றான் உதிரன்.

“எத்தனை பெருங்குடங்களில் பாகு கொண்டுவர முடியுமோ, அத்தனை குடங்களில் பாகினை அவ்விடம் கொண்டுவரச் சொல்லுங்கள்” என்றான் ஈங்கையன்.

வரும் வழியிலேயே எந்தெந்த ஊருக்கு ஆள் அனுப்ப வேண்டுமோ அங்கெல்லாம் ஆட்களை அனுப்பி ஏற்பாடுகளைக் காலம்தாழ்த்தாமல் செய்தான் உதிரன்.

“பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும் பசை என்ன இருக்கிறது?” எனக் கேட்டான்.

“பலவகையான பசைகள் இருக்கின்றன” என்றான் உதிரன்.

“துளிபட்டாலும் பிரிக்கமுடியாதபடி ஒட்டக்கூடிய பசையை ஏற்பாடு செய்யுங்கள்” என்றான். அதற்கும் பொருத்தமான ஆட்களை அனுப்பி இருக்கன்குன்றுக்குக் கொண்டுவந்து சேர்க்கச் சொன்னான்.

“பசை வாடை அடிக்காமலிருக்க சுவைகூட்டிகளை அதனுடன் சேர்க்க வேண்டும்” என்றான். அதற்கும் ஏற்பாடானது.

ஈங்கையன் அவனோடு மூன்றுவீரர்களை அழைத்து வந்தான். அவர்களால் உதிரனைப் போலவோ, பறம்பின் வீரர்களைப் போலவோ வேகங்கொண்டு ஓடமுடியவில்லை. எனவே உதிரனும் சற்று மெதுவாகவே அவர்களுடன் நடக்க வேண்டியதானது.

அவர்கள் ஆறாம்நாள் இருக்கன் குன்றினை வந்தடைந்தார்கள். ஈங்கையன் கேட்டவையெல்லாம் அவன் வரும் முன்னரே வந்துசேர்ந்திருந்தன. அவன் வியந்துபோனான். குகைகாத்து நிற்கும் தேக்கனைக் கண்டு வணங்கினான். நீலனின் மணவிழாவின்பொழுது அவனிடம் நிறைய பேசவேண்டும் என்று தேக்கன் விரும்பியிருந்தான். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமற்போனது.

தேக்கனைக் கண்டதும், “தோகைநாய்களைப்பற்றிச் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், அவற்றை வீழ்த்தும் வழியைப்பற்றி மட்டும் இப்பொழுது பேசுவோம்” என்றான்.

தேக்கனும் மற்றவர்களும் அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதை ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தனர்.

“மூன்று குதிரைகளை நாம் இழக்கவேண்டியிருக்கும்” என்றான்.

“இன்னும் மூன்றா?” எனக் கேட்டான் வீரனொருவன்.

“ஆம். மூன்று குகைகளில் குதிரைகளிருப்பது அவற்றுக்குத் தெரியும். எனவே மூன்று குதிரைகள் கட்டாயம் தேவை. காயம்பட்ட அல்லது வயதான குதிரைகளைக் கொடுங்கள்” என்றான்.

சரியெனச் சம்மதித்தனர்.

“தோகைநாயினை வீழ்த்துவதற்கான ஒரே வழி அதனுடைய தோகைதான்” என்றான்.

வீரர்கள் அவன் சொல்வதைப் பெருவியப்போடு கேட்டனர்.

பெருவட்டவடிவில் செடிகொடிகளை நன்றாக விலக்கிக் களம் அமையுங்கள். அவ்விடம் முழுவதும் ஈச்சம்பாகும் இறுக்கிப்பிடிக்கும் பசையும் அவற்றின் வாடை தெரியாது மறைக்கும் அளவுக்குச் சுவையூட்டிகளும் கலந்த கலவையை நன்றாக ஊற்ற வேண்டும். அவ்விடம் முழுவதும் ஊற்றியபின் ஒருகுதிரையை மட்டும் வீரர்கள் சிலர்  அக்களத்தின் நடுப்பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும். குகை விட்டு வெளிவரும் குதிரையைக் கண்டு தோகைநாய் மின்னல்வேகத்தில் பாய்ந்து வரும். பாகு ஊற்றப்பட்ட வட்டத்தின் நடுவிற்கொண்டுபோய் குதிரையை விட வேண்டும். தோகைநாய்கள் அதன்மீது பாயத் தொடங்கியதும் குதிரையை விட்டுவிட்டு வந்துவிட வேண்டும். எண்ணற்ற தோகைநாய்கள் பாய்ந்துவந்து அவற்றைக் கடித்துக் குதறும். இத்தனை நாள் பசிக்கு ஒரு எலும்பினைக்கூட அவை மிச்சம் வைக்காது.

தோகைநாய்கள் இப்புறமும் அப்புறமும் குதிரைக்கறியை இழுத்து, முன்காலை மடக்கி உட்கார்ந்து, கடித்து உண்ணும்பொழுதெல்லாம் அதனது தோகை பாகுக்கலவையில் முழுமையாகப் புரளும். குதிரையைத் தின்றுமுடிக்கும் வரை அது வேறெதிலும் கவனங்கொள்ளாது. அதன்பிறகு எழுந்து ஓடத் தொடங்கும் பொழுதுதான் தெரியும், வால்பகுதியிலுள்ள தோகையும் அடிவயிற்றுமுடியும் முழுவதுமாக ஒன்றுடனொன்று ஒட்டிக்கிடப்பது. அது எவ்வித் தவ்வும்பொழுது தோகைமுடிகள் சிலிர்த்து விரியாது. வாலின் எடையும் தூக்கித் தாவ முடியாத அளவுக்குக் கனமாக மாறும்.

முதல் தாவலிலே இதனைத் தோகைநாய் உணர்ந்துவிடும். முன்னும் பின்னுமாகத் திரும்பி ஏதேதோ செய்துபார்க்கும். பாகுக்சுவையால் மரக்கிளையில் எவ்விடத்தில் உட்கார்ந்தாலும் எறும்புகளும் பூச்சிகளும் அதனை மொய்க்கத் தொடங்கும். அப்பொழுதுதான் நீள்வாயின் வேட்டை தொடங்கும். தனது கூரிய பற்களைக்கொண்டு திரும்பித்திரும்பி அரிக்குமிடத்தில் கடிக்கத் தொடங்கும். இடப்புறமும் வலப்புறமுமாக வண்டு ரீங்காரமிடுதல்போலச் சுற்றிச்சுற்றி முன்பற்களால் கடித்திழுக்கும். அதன் நீள்வாயின் முன்பற்கள் பின்னுடலை மாறிமாறிக் கீறும். பின்புறப் பிட்டங்களிலும் வாலிலுமிருந்து குருதி கசியத் தொடங்கும். எந்நேரமும் பூச்சிகள் மொய்த்துக்கிடக்க எந்த இடத்தில் நின்றாலும் செவ்வெறும்பும் பாறையெறும்பும் மலையெறும்பும் அதன்மேல் ஏற, பேரலறலோடு அது ஓடத் தொடங்கும். உட்கார முடியாமல் ஓடிக்கொண்டேயி ருக்கும் அது வெகுவிரைவிலேயே ஓட முடியாத்  தன்மை எய்தும்.  மலைமுழுவதும் எதிரொலிக்கும் அதன் ஊளைச்சத்தம் சிறிது சிறிதாகக் குறைந்து இளைப்பின் வழியிலான முனகலோடு அதன் வாழ்வு முடியும்” என்றான் ஈங்கையன்.

p83d_1522148230.jpg

இரவு நெருங்கியதும் வேலையைத் தொடங்கினர். குகைக்கு முன்னாலிருந்த செடிகொடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர். கலவைகள் நன்கு தயாராயின. ஈங்கையன் சொன்னபிறகு  அதில் தேவையை உணர்ந்து எங்கும் கிடைக்காத எழுமுட்பசையையும் தெல்லுக்கொடிப்பசையையும் சேர்த்தனர். இனி அதன் ஒட்டுந்தன்மைக்கு இணையேதும் இல்லை என்றான் தேக்கன்.

இரவானதும் வெளிச்சம் விழாதபடி பந்தங்களைத் திருப்பி வைத்து, கலவைகளைக் கொண்டு வந்து ஊற்றினர். போதும்போதும் என்று சொல்லுமளவுக்கு ஊற்றி முடித்ததும் மூன்றுவீரர்கள் குதிரையைப் பிடித்துக்கொண்டு கலவையை நோக்கி நடந்தனர். குதிரைகள் குகை விட்டு வெளி வருவதறிந்த கணமே தோகைநாய்கள் தமது தோகைசிலிர்க்க, கிளைகளை விட்டு எழுந்தன. நீள்வாய்கள் மெள்ளத்திறந்த பொழுது கால்கள் குதிரையை நோக்கிப் பாய்ச்சலுக்கு ஆயத்தமாயின.

பொழுது நடுப்பகலைக் கடந்தது. பாரியை நோக்கி பிட்டன் மலையேறி மேலே வந்தான். தொலைவிலேயே அவன் வருவதை அறிந்தான் பாரி. பிட்டனின் பதற்றம் நாளுக்கு நாள் கூட்டிக்கொண்டே இருந்தது. நெடுங்காடர்களைப் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தி அடர்காட்டுக்குள் நகரும் ஒரு படையை எளிதில் தாக்கி வீழ்த்திவிட முடியாது என்பதைப் பாரி நன்கு உணர்ந்திருந்தான். ஆனால் பிட்டனோ, எதிரியின் படையில் நெடுங்காடர்கள் இருக்கிறார்கள் என்பதையே அறியவில்லை. எனவே, காலந்தாழ்த்தாமல் உடனே தாக்குதலைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியபடியே இருந்தான். வழக்கமான தாக்குதலால் இவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது, வேறுவழியைக் கண்டறிந்தால் மட்டுமே தாக்குதலுக்குப் பலன் கிடைக்கும் என்ற சிந்தனையிலேயே தாக்குதலைத் தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தான் பாரி.

மேலேறிவந்த பிட்டன் சொன்னான், “எதிரி குடிநீர்ப் பற்றாக்குறையின் காரணமாகப் படையை இருகூறாகப் பிரித்துள்ளான். நேற்றிரவு தங்கிய இடத்தை விட்டு இன்னும் ஒரு பகுதிப்படை புறப்படவில்லை. இதுதான் பொருத்தமான நேரம். இன்றிரவு பின்புறப்படையைத் தாக்கலாம்” என்றான்.

“சற்று பொறுத்திருப்போம்” என்றான் பாரி.

பிட்டனால் பாரியின் வார்த்தைகளை ஏற்க முடியவில்லை. ``இதுபோன்ற சிறந்த வாய்ப்பு இனி கிடைக்காமற்போகலாம்.”

“எதனை வைத்துச் சொல்லுகிறாய்?” எனக் கேட்டான் பாரி.

“எதிரிகள் நீர்ப்பற்றாக்குறையைச் சமாளிக்க சரியான உத்தியை வகுத்துவிட்டார்கள். இன்னும் இரண்டு நாள்கள் இதே தன்மையில் அவர்கள் படையை நகர்த்திச் சென்றுவிட்டால், அதன்பின் அவர்கள் வலிமையடைந்துவிடுவார்கள்.”

“எப்படி?”

“இரண்டு நாள் நடைத்தொலைவில் வட்டாற்றின் ஓரமாகச் சிறுகானத்துக்குச் சற்றே முன்னால் குளமொன்று இருக்கிறது. எக்கோடையிலும் நீர்வற்றாத குளமது. துவண்டுபோயிருக்கும் எதிரிகளின் யானைப்படையை அது முழுமையாகத் தெளிச்சிகொள்ளச் செய்துவிடும். நாம் அதற்குள் முந்தியாக வேண்டும்” என்றான்.

பிட்டனின் கூற்று பாரிக்கு வேறொன்றைச் சொல்லியது. சற்றே வியப்போடு, “இக்கோடையிலும் அதில் நீர் இருக்கிறதா?” எனக் கேட்டான்.

“ஆம். வீரர்கள் பார்த்துவந்த பின்னர்தான் உடனடியாக உன்னிடம் சொல்ல மேலேறி வந்தேன்.”

“அப்படியென்றால் அவர்கள் குளம்நோக்கி நகரட்டும். அதுதான் நமக்கான இடம்.”

பிட்டனுக்குப் புரியவில்லை. அவ்விடத்தில் வைத்துத் தாக்கலாம் எனப் பாரி நினைக்கிறானோ என்று தோன்றிய கணத்தில் பிட்டன் சொன்னான், “அது மேலிருந்து தாக்குவதற்கான நிலவமைப்பு கொண்ட இடமல்ல. அவ்விடத்தில் தாக்குதலைத் தொடுத்தால் எதிரியை வீழ்த்த முடியாது.”

“அவ்விடத்தில் மட்டுமல்ல, மேலிருந்து தாக்கும் போர்முறையால் எவ்விடத்திலிருந்து தாக்கினாலும் எதிரியை வீழ்த்த முடியாது.”

‘பாரியா இப்படிச் சொல்வது?’ என்று அதிர்ந்த பிட்டன், “ஏன் அப்படிச் சொல்கிறாய்?’’ என்றான்.

சோழனின் படையை இருபுறமும் அரணெனக் காத்து வந்துகொண்டிருப்பவர்கள் நெடுங்காடர்கள்.

“நெடுங்காடர்களா..?” பிட்டன் ஒரு கணம் உறைந்து மீண்டான்.

p83e_1522148244.jpg

“ஆம். அந்த வலிமை இருப்பதால்தான் பறம்புக்குள் துணிந்து இவ்வளவு தொலைவு முன்னேறியுள்ளான் சோழன்.”

பிட்டனுக்கு அடுத்து என்ன கேட்பதெனத் தெரியவில்லை. அவன் அதிர்ச்சிக்குள் மூழ்கிக்கொண்டிருந்தபொழுது பாரி தெளிவுநோக்கி மேலேறிக்கொண்டிருந்தான்.

“குளக்கரைதான் நமது தாக்குதலைத் தொடங்கப்போகும் இடம். வீரர்களின் எண்ணிக்கையைப் பலமடங்கு அதிகப்படுத்த வேண்டும். மீதமிருக்கும் வடதிசை ஊர்கள் நாற்பத்தி மூன்றுக்கும் செய்தியனுப்புங்கள். இருகரைகளிலும் வீரர்கள் குவியட்டும். நாளை மறுநாள் நள்ளிரவில் தொடங்குகிறது நமது தாக்குதல்” என்றான் பாரி.

தாக்குதல் எப்பொழுது என்று கேட்டுக்கொண்டேயிருந்த பிட்டனின் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. ஆனால், இதுவரை இருந்த வேகமும் தெளிவும் இப்போது குழப்பமாக மாறின.

மலைமுகட்டிலிருந்து கீழே தனது படைநோக்கி வந்தான் பிட்டன். எல்லா ஊர்களுக்கும் செய்திகளைக் கொண்டு சேர்க்க வீரர்கள் புறப்பட்டனர். வலக்கரையில் இருக்கும் இரவாதனுக்கு  மறைகுறிப்புகள்மூலம் செய்தி சென்றுசேர்ந்தது. வீரர்கள் தாக்குதலைத் தொடங்க எல்லா வகைகளிலும் ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். பிட்டன் விடையில்லாத கேள்வியோடு இருந்தான். ‘குளக்கரையில் வைத்து என்ன செய்துவிட முடியும்? குளத்துநீரில் நஞ்சுகலந்து யானைகளைக் கொல்லும் உத்தியை, பாரி ஒருபொழுதும் கைக்கொள்ள மாட்டான். வேறு என்னதான் செய்யப்போகிறான்?’

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

வீரயுக நாயகன் வேள்பாரி - 77

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

றுநாள் பொழுது விடிந்தது. நக்கவாரத் தீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் ஆயிமலையின் உச்சியிலிருந்து இருக்கன்குன்றையே பார்த்தபடி இருந்தனர். கடந்த சில நாள்களாக, குன்றின் மேற்குகையைச் சுற்றியே தோகைநாய்கள் ஊளையிட்டுக்கொண்டிருந்தன. நேற்று நள்ளிரவுக்குப் பிறகு ஊளைச்சத்தம் சற்றே அதிகமாகியது. ஆனால், அதிகாலை தொடங்கி இப்போது வரை அந்தச் சத்தம் பிரிந்து காடெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. தீவுமனிதர்கள் குழம்பிப்போய் இருந்தனர்.

p85b_1522841797.jpg

செய்தி உதியஞ்சேரலுக்குச் சொல்லப்பட்டவுடன் அவனும், அமைச்சன் நாகரையரும் ஆயிமலைக்கு மேலேறி வந்தனர். குழப்பத்தில் நின்றிருந்த தீவுமனிதர்களிடம், ``என்ன நிலைமை?” என்று கேட்டான் அமைச்சன். 

``எதிரிகள் தோகைநாய்களை ஏதோ செய்துவிட்டார்கள். அவை அனைத்தும் காடுகளுக்குள் சிதறி ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றைவிடக் கொடிய வேட்டை விலங்கு ஒன்றை ஏவி விட்டுள்ளனர். அதனால்தான் அவை இப்படிச் சிதறி ஓடுகின்றன. இனி அவற்றால் பலன் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.”

பதில் கேட்டு உதியஞ்சேரல் உறைந்து நின்றான். ``அப்படியென்றால், எதிரிகள் குகைகளுக்குள் இருக்கும் குதிரைகளை வெளியில் கொண்டுவந்துவிடுவார்களா? முழு வேகத்தோடு அவர்களின் தாக்குதல் தொடங்கிவிடுமா?”

தீவுமனிதர்கள் மறுமொழியின்றி நின்றனர்.

``எஃகல்மாடன் பறம்புக்குள் நுழைந்து ஐந்து நாள்கள் ஆகிவிட்டன. நமது திட்டப்படி வலதுபுறக் கணவாயின் வழியாகத் துடும்பனின் தலைமையிலான படை வந்து சேரும் என்ற நம்பிக்கையில் போய்க்கொண்டிருக்கிறான்.”

நாகரையரின் வார்த்தை காதில் விழுந்துகொண்டிருந்தது. ஆனால், அதைக் கவனிக்கும் நிலையில் உதியஞ்சேரல் இல்லை. பறம்பின் உட்காடுகளுக்குள் தனித்துவிடப்பட்ட எஃகல்மாடனின் படை என்னவாகப்போகிறது என்பது அவனது மனக்கண்ணில் தெரிந்துகொண்டிருந்தது. 
 
இரண்டாம் நாள் மாலை நேரம் நெருங்கியபோது குளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது சோழனின் யானைப்படை. அதன் தளபதி அரிஞ்சயன் அளவற்ற மகிழ்வில் இருந்தான். வட்டாற்றில் திரும்பியதிலிருந்து யானைகளுக்குப் போதுமான நீர் கிடைக்கவில்லை. நிலைமையை எப்படிச்  சமாளிக்கப்போகிறோம் எனத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்தபோதுதான் குளம் இருப்பது பற்றிய செய்தி வந்தது. அதன் பிறகு நெடுங்காடர்கள் தளபதி சிவியன் நேரில் போய்ப் பார்த்தான். குளத்துநீரில் நஞ்சேதும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகுதான், அதை நோக்கி யானைகளைச் செலுத்த அரிஞ்சயன் அனுமதியளித்தான்.

இந்தப் படையெடுப்பே யானைப்படையை மையப்படுத்தியதுதான். அடர்காடுகளில் காட்டுமனிதர்களை எதிர்கொள்ள, யானைப்படையை மையப்படுத்திய போர் உத்திதான் வெற்றியைத் தேடித்தரும். அதுவும் அரிஞ்சயன் போன்ற அனுபவமேறியவர்களின்கீழ் இயங்கும் யானைப்படை, வெற்றியை எளிதில் ஈட்டும்.

சோழர்களின் படைத்தொகுப்பில் இருந்த மொத்த யானைகளில் சரிபாதிக்கும் குறைவான யானைகளைத்தான் இந்தப் படையெடுப்புக்குத் தேர்வுசெய்தான் அரிஞ்சயன். சிறந்ததொரு போர்யானை, தந்தங்களைக்கொண்டு பதினான்கு முறைகளில் தாக்கும் பயிற்சியைப் பெற்றிருக்கும்.

முகத்துக்கு நேராகத் தந்தத்தைக் குத்திச் செருகுவது, குறுக்காகக் கொடுத்துக் குத்தித் தூக்குவது, இரு பக்கங்களிலும் இரு தந்தங்களால் குத்துவது, எதிர் யானையின் தந்தவட்ட உதடு நோக்கிக் குத்துவது, பக்கவாட்டில் சாய்த்துக் குத்துவது, பக்கங்களில் நேராகக் குத்துவது, கண்ணிமைக்கும் நேரத்தில் துதிக்கையின் நடுவில் குத்தித் தூக்குவது, எதிர் யானையின் தலையைக் குறுக்கே பிடித்து ஒரு தந்தத்தால் குத்துவது, கோபத்தோடு எதிர் யானையின் திட்டாணியில் அடித்திழுத்து தந்தத்தைச் செருகுவது, உடலைப் பின்சுற்றிப் பின்பாய்ந்து குத்துவது ஆகியன உள்ளிட்ட பதினான்கு வகையான தந்தத் தாக்குதலில் தேர்ந்த யானைகளை மட்டுமே இந்தப் படையெடுப்பில் பங்கேற்கச் செய்தான் அரிஞ்சயன்.

vel_1522908612.jpg

`அவ்வளவு சிறந்த போர்ப் பயிற்சியுடைய யானைகளை, கொடும்வெக்கையில் போதிய நீரின்றித் தொடர்ந்து நடக்கவைத்துக்கொண்டிருக்கிறோமே!’ என்று கவலைகொண்டிருந்தவன், குளம் கண்டு கவலை நீங்கினான். முதலில், ஐந்து வகைமையர்களின் தலைமையிலுள்ள ஐம்பது யானைகளை நீர் அருந்த அனுப்பினான். நீர் உறிஞ்சும் ஓசையிலே அவற்றின் தாகத்தை அறிய முடிந்தது. அதேபோன்று ஐந்து ஐந்து வகைமையரின் தலைமையில் குளம் நோக்கி ஐம்பது ஐம்பது யானைகளாக அனுப்பினான் அரிஞ்சயன்.

பொழுது மங்கி இருள் கூடும் வரை யானைகள் அணிவகுத்துப் போய் நீர் அருந்தித் திரும்பிக்கொண்டிருந்தன. ஏற்கெனவே வகுக்கப்பட்ட ஒழுங்கின் அடிப்படையில் அவை வட்டாற்றில் நிலைகொண்டன.

நான்கு காதத்தொலைவுக்கு நீண்டு கிடக்கும் இந்தப் பெரும்படையின் இரு பக்கங்களும் மலைக்குமேல் பறம்புவீரர்கள் தாக்குதலுக்கு ஆயத்தநிலையில் இருந்தனர். பறம்பின் வடதிசை ஊர்கள் அறுபத்தேழிலிருந்தும் வீரர்கள் திரட்டப்பட்டுவிட்டனர். அவர்களுக்கான ஆயுதங்களும் வந்துசேர்ந்துவிட்டன. ஆற்றின் இருபுறங்களும் சரியான இடைவெளியில் தாக்குதலுக்கான துல்லியமான உத்தி வகுக்கப்பட்டிருந்தது. இவ்வளவு பெருந்தாக்குதலை இதுவரை பறம்புமக்கள் நடத்தியதில்லை.  இரவாதன், இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான்; பாரியின் உத்தரவு கிடைத்த கணம் வட்டாற்றில் பெருக்கெடுக்கப்போகும் குருதி வெள்ளத்தைக் காணத் துடித்துக்கொண்டிருந்தான்.

பிட்டனின் குழப்பம், இந்தக் கணம் வரை நீங்கவில்லை. `சோழப்படையின் கரையோரப் பகுதிகளில் நிற்பவர்கள் நெடுங்காடர்கள் என்பது பாரிக்கும் பிட்டனுக்கும் மட்டுமே தெரியும். நாம் எறியும் அம்பும் ஈட்டியும் சரிபாதிதான் அவர்களைக் கடந்துபோய்த் தாக்கக்கூடியதாக இருக்கும். அப்படியிருந்தும் தாக்குதலுக்குப் பாரி ஆயத்தமாகியுள்ளான் என்றால், தெளிவான உத்தியை வகுத்துவிட்டான் எனப் பொருள். அந்த உத்தி, குளத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. என்ன அது?’ என்று விடை தெரியாத கேள்வியோடு உத்தரவுக்காகக் காத்து நின்றான் பிட்டன். ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மரங்கள் தம்முடைய கிளைகளில் எண்ணிலடங்கா வீரர்களைச் சுமந்தபடி சிலிர்த்து நின்றன. 

ஆறாவது முறை ஐந்து வகைமையரின் தலைமையில் ஐம்பது யானைகளை அனுப்பியபோது, குளத்துநீர் ஏறக்குறைய வற்றி, தரை தொட்டுக்கிடந்தது. ஆனாலும் யானைகளின் துதிக்கைகள் உறிஞ்சியெடுத்தன. எல்லா யானைகளும் நீர் அருந்தி முடிக்கும் வரை அரிஞ்சயன் குளக்கரையிலே நின்றிருந்தான். கடைசி வரிசையில் வந்த யானைகளும் குளம் விட்டு அகன்றன. அரிஞ்சயன், அளவற்ற மகிழ்வடைந்தான். இனி பிரச்னையேதும் இருக்காது. சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கை உறுதியானவுடன் அதை வேந்தனிடம் தெரிவிக்க, குதிரையில் விரைந்தான்.

படை அணிவகுப்பில் யானைப்படையைக் கடந்து காலாட்படை தொடங்கும் இடத்தில் செங்கனச்சோழனுக்கான கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கூடாரத்தைக் கவசவீரர்கள் காத்து நின்றனர். உள்ளே வேந்தனுக்கு உணவு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது. கூடாரம் வந்த அரிஞ்சயன், உணவு முடியட்டும் எனக் காத்து நின்றான். 

அணிவரிசையின் முன்புறம் நின்றிருந்த யானைகளிடமிருந்து சற்றே வேறுபட்ட ஒலி எழுவதைக் கேட்க முடிந்தது. `போதுமான அளவு நீர் குடித்த தெளிச்சியில் எழுப்பப்படும் ஒலியிது’ என எண்ணியபடி வேந்தனுக்காகக் காத்திருந்தான் அரிஞ்சயன். இதைவிடப் பேரொலிகொண்ட யானைப் பிளிறலை எதிர்பார்த்து மலையின் மேல் காத்திருந்தான் பாரி. அவனைச் சுற்றி நின்றிருந்த பன்னிரு வீரர்களும் அவன் சொல்லப்போகும் உத்தரவை, பிட்டனின் தலைமையிலான இடதுபுறப் படைக்கும் இரவாதனின் தலைமையிலான வலதுபுறப் படைக்கும் தெரிவிக்கக் காத்துக்கொண்டிருந்தனர்.

நிலவற்ற வானில் இருள் அப்பிக்கிடக்கும் இந்தப் பொழுதில், ஒலியின் மூலம் மட்டுமே ஆற்றின் எதிர்த்திசையில் இருக்கும் இரவாதனுக்கு மறைகுறிப்பைக் கடத்த முடியும். பிட்டனும் பாரியும் ஒரே திசையில்தான் மேலும் கீழும் நிற்கின்றனர். எனவே, இவர்களுக்கு ஓசையின் மூலம் மறை குறிப்பைக் கடத்திவிடலாம். எல்லா ஏற்பாடுகளும் ஆயத்தநிலையில் இருந்தன. பாரியோ, வட்டாற்றில் நிறுத்தப்பட்டிருக்கும் யானைப்படையின் பிளிறல் ஓசையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

இவ்வளவு சிறந்ததொரு வாய்ப்பு கிடைக்கும் எனப் பாரி எதிர்பார்க்கவில்லை. இன்னும் சில நாள் பயணத்துக்குப் பிறகுதான் அவன் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தான். சிறுகானத்தைக் கடந்து உப்பறைக்குப் போகும்வழி மிகக் குறுகிய கணவாய் அமைப்பைக்கொண்டது. அந்த இடம், நெடுங்காடர்களால் தடுப்பரணையோ, வலைப்பின்னலையோ உருவாக்க முடியாது. முழுமையான பாறைப் பிளவு அது. பிளவின் மேலிருந்து தாக்குதல் தொடுத்தால் படையின் முன்புற அணியை மிகக் குறுகிய நேரத்தில் முழுமுற்றாக அழிக்க முடியும். எதிர்பாராத அந்தத் தாக்குதல் அவர்களின் கட்டுக்கோப்பை எளிதில் சிதறடிக்கலாம்.

நெடுங்காடர்களுக்குத்தான் காடு பற்றிய அச்சமிருக்காது. ஆனால், சோழப்படையினர் அனைவருக்கும் காட்டில் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும் அச்சத்தை உருவாக்கும். `எங்கெங்குமிருந்து மேலெழும் அம்புகளாலும் ஓசைகளாலும் முழக்கங்களாலும் அவர்களின் உறுதியை முற்றிலுமாகச் சிதைக்கலாம். அதன் பிறகு பறம்புவீரர்கள் சூறையாடலைத் தொடங்கலாம்’ என்றுதான் திட்டமிட்டிருந்தான் பாரி. ஆனால், பிட்டன் நீர்வற்றாக் குளம் ஒன்று இருப்பதைப் பற்றிய செய்தியைச் சொன்னவுடன் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டான்.

p85c_1522841832.jpg

நீர்ப்பசை இருக்கும் பாறைப் பிளவுகளிலும் மரச் செதில்களிலும் சங்கு அட்டைகள் இருக்கும். மற்ற அட்டைப்பூச்சிகளுக்கு, குருதியை உறிஞ்சும் வாய்ப்பகுதி ஒன்றுதான் உண்டு. ஆனால், சங்கு அட்டைப்பூசியானது விரிசங்கு வடிவிலானது. அதன் எல்லா முனைகளிலும் குருதி உறிஞ்சும் வாய்கள் உண்டு. மிக அரிதான உயிரினமான இது, மறையாற்றின் பகுதிகளில் உள்ள மர இடுக்குகளிலும் பாறை இடுக்குகளிலும் அதிகம் இருக்கும். அதனாலேயே மக்கள் அந்தக் காட்டுக்குள் போக மாட்டார்கள். ஆனால், இப்போது சங்கு அட்டைகள்தான் மிக அதிகமாகத் தேவைப்பட்டன.

குளம் பற்றிய செய்தியை அறிந்தவுடன் மறையாற்றின் பகுதியில் இருக்கும் சங்கு அட்டையைச் சேகரிக்க, கட்டையர்களுக்குக் கமுக்கமாக உத்தரவிட்டான் பாரி. ஆறு ஊர்க் கட்டையர்களும் மறையாற்றின் அடர்காட்டுக்குள் இறங்கினர். எண்ணற்ற சுரைக்குடுக்கையில் சங்கு அட்டையை நாள் முழுவதும் சேகரித்தனர். மருத்துவர்கள் தந்த செவ்வெண்ணெயைக் கைகளில் தேய்த்துக்கொண்டுதான் அவற்றைப் பிடித்தனர். அப்படியும் பிடித்தவர்களின் கைகள் எங்கும் குருதி கொட்டியபடியே இருந்தது.

அன்று இரவே குடுவையில் இருந்த சங்கு அட்டைகள் முழுவதையும் அந்தக் குளத்துக்குப் போய்ச் சேர்த்தனர். குளம் முழுக்க, எல்லாப் பகுதிகளிலும் பரவுமாறு சங்கு அட்டைகளைக் கொட்டிவிட்டுச் சுரக்குடுக்கையை எடுத்துவந்துவிட்டனர். சங்கு அட்டைகள் நீரின் அடிவாரப் பாறைகளிலும் மண்ணோடும் நீர்மீது மிதக்கும் செத்தைகளிலும் அப்பிக்கிடந்தன. சோழர்களின் தூசிப்படை மருத்துவர்களும் குறுங்காடர்களும் குளத்துநீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதா எனச் சோதித்துப் பார்த்துவிட்டு, ``நஞ்சு ஏதும் கலக்கவில்லை. யானைகள் நீர் அருந்தலாம்’’ என்று கூறினர்.

அதைத் தொடர்ந்து யானைகள் குளத்தடிக்கு வந்து நீள்துதிக்கையால் நீரை உறிஞ்சின. நீரின் மேற்புறமும் அடிவாரத்திலும் இருந்த சங்கு அட்டைகள், உறிஞ்சப்படும் நீரினூடே துதிக்கைக்குள் போய்விட்டன. முதலில் வந்து நீர் குடித்த யானைகளின் துதிக்கைக்குள் ஓரிரு அட்டைகள் உள்ளே போயின. அடுத்தடுத்து யானைகள் வந்து நீரை உறிஞ்சியதும் அடிவாரத்தில் ஒட்டிக்கிடந்த அட்டைகள் கணக்கில்லாத எண்ணிக்கையில் துதிக்கைகளுக்குள் போயின.

உள்ளே போய்த் துதிக்கையின் சதைக்குள் ஒட்டிய சங்கு அட்டைகள், குருதியை உறிஞ்சத் தொடங்கியபோதுதான் விளைவு வெளிப்படத் தொடங்கியது. கூடாரத்துக்குள் உணவு உண்டு முடித்த செங்கனச்சோழனிடம் ``யானைகள் அனைத்தும் நன்றாக நீர் அருந்திவிட்டன. இனி நமக்குக் கவலைவேண்டாம்’’ என்று அரிஞ்சயன் சொல்லிக் கொண்டிருந்தபோது யானைகளின் பிளிறல் தொடங்கியது. ஒன்று மாற்றி ஒன்றாக இருளின் திசைக்குள்ளிருந்து பிளிறல் ஓசை மேலேறி வந்தது. அரிஞ்சயன் கூடாரத்துக்குள்ளிருந்து வேகமாக வெளியில் வந்தான். ஒவ்வொரு சங்கு அட்டைக்கும் ஆறு முனைகளில் ஆறு வாய்ப்பகுதிகள் உண்டு. ஆறும் ஒருசேரக் குருதியை உறிஞ்சும்போது அந்த இடத்தில் சதையே பிய்த்துக்கொண்டு வருவதுபோல இருந்தது. அதுவும் துதிக்கைக்குள் இந்தக் குடைச்சல் தொடங்கியதும் யானைகள் தலையை மறுத்து மறுத்து ஆட்டி, துதிக்கையை இங்குமங்குமாக வீசிச் சுழற்றின.

சிறுசிறு சலசலப்புகள் யானைப்படைக்குள் உருவாகத் தொடங்கியபோது பாகன்கள் எல்லோரும் யானைகளை அமைதிப் படுத்தி, நின்ற நிலையிலிருந்து உட்காரும் நிலைக்கு அமர்த்திவைக்க முயன்றனர். அப்போதுதான் இடது மூலையில் இருந்த யானை ஒன்று பெரும்பிளிறலோடு துதிக்கையைத் தூக்கி இரு பக்கங்களும் அடித்தது. பக்கத்தில் இருந்த யானைகள் மிரண்டு விலகின. உடனே அதன் பாகன் அதன் அருகே சென்று அதை அடக்க முற்பட்டபோது சற்றும் எதிர்பாராமல் சுழற்றி வீசப்பட்டான். 

யானைகளுக்கு என்ன நடக்கிறது என்ற கவனம் சில கணம்தான் இருந்தது. அதற்குள் பிளிறலின் ஓசை அங்குமிங்குமாகப் பல இடங் களிலிருந்து மேலெழுந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. பாகன்கள் எல்லோரும் யானைகளின் மீதேறி அவற்றைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். அங்குசத்தால் அடித்தும் தலையில் ஊன்றிக் குத்தியும் மத்தகத்தில் வைத்து இழுத்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால், அவையெல்லாம் சிறிது நேரம்தான் நடந்தன.

வேந்தனின் கூடாரத்திலிருந்து படையின் முன்வரிசை நோக்கிக் குதிரையில் விரைந்து கொண்டி ருந்தான் அரிஞ்சயன். ஏதோ ஒரு யானைக்கு மதம்பிடித்துவிட்டது என்றுதான் அவன் நினைத்தான். ``அந்த மதயானையை அப்புறப் படுத்துங்கள். முடியவில்லை என்றால், போர்வாள் கொண்டும் தந்த ஈட்டிகொண்டும் குத்திச் சரியுங்கள்” என்று ஓசையெழுப்பிய படி விரைந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் இருளுக்குள்ளிருந்து வீசப்பட்ட பாகன் ஒருவன் அரிஞ்சயனின் குதிரைமீது வந்து விழுந்த வேகத்தில் அடியோடு சரிந்தான் அரிஞ்சயன்.

யானைகள் உள்மூக்கில் ஏற்படும் அரிப்பும் எரிச்சலும் தாள முடியாமல் துதிக்கையை முன்னும் பின்னுமாக வெறிகொண்டு வீசித் தாக்கத் தொடங்கிய கணத்தில் கட்டுக்கோப்புகள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. நிலைமையின் விபரீதத்தை உணரும் முன்பே நூற்றுக்கணக்கான யானைப்பாகன்கள் அடித்து, மிதித்து, நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். வீரமுண்ட வாத்தியமும் பேரிகையும் முழங்கி நிலைமையைக் கட்டுப்படுத்த, படைக்காவல்வீரர்கள் சிலர் முயன்றனர். ஆனால், யானைகளின் பிளிறலுக்கு நடுவே இந்தக் கருவிகளின் ஓசையேதும் மேலேறவில்லை. கீழே விழுந்த அரிஞ்சயன் எழுந்தபோது முன்புறப் படையின் கட்டுக்கோப்பு மொத்தமும் சிதைந்திருந்தது.

என்ன நடந்தது என்பதைச் சிந்திக்க கணநேரம்கூட யாருக்கும் இல்லை. மூன்று தளகர்த்தர்தர்களின்  உத்தரவின் கீழிருக்கும் முந்நூறு யானை களைக்கொண்ட இந்தப் படையில், ஒரே நேரத்தில் முப்பது யானைகள் கட்டுப்பாட்டை இழந்தாலே மொத்தப் படையும் சிதறிப்போய்விடும். ஆனால், இப்போதோ எல்லா யானைகளும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன. துதிக்கையைத் தூக்கி வீசி அடித்துத் தாக்கும் அதன் வேகத்தில்தான் வேறுபாடு இருந்தது. சங்கு அட்டைகள் ஒன்றோ இரண்டோ யானைகள் சிலவற்றின் துதிக்கைக்குள் ஏறி அடிப்பகுதிக்குப் போகாமல் முன்பகுதியிலேயே இருந்தன. அந்த யானைகள் மட்டுமே சற்று கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள முயன்றன. மற்ற யானைகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பது யாருக்கும் புரியவில்லை. காடே அதிர்வதுபோலிருந்த பிளிறல் ஓசையால் பின்புறம் நின்றிருந்த காலாட்படை வீரர்கள் நடுங்கினர். கூடாரத்தில் இருந்த வேந்தனைப் பாதுகாக்க, தக்க ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். நெடுங்காடர்களுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. அவர்கள் தலைவன் சிவியன் காலாட்படையின் பின்பகுதியில் நின்றுகொண்டிருந்தான். நிலைமையை அறிந்துவர முன்னோக்கிச் செல்ல முயலும்போது பெரும்கூச்சலோடு படையெங்கும் குழப்பம் பரவியிருந்தது.

செங்கனச்சோழனைக் கூடாரத்திலிருந்து வெளியேற்றி, வேந்தனுக்குரிய யானையின் மீதேற்ற முயன்றுகொண்டிருந்தான் உறையன். அப்போது அந்த இடத்துக்கு வந்த காலாட்படைத் தளபதி கிழானடிவானவன், வேந்தனை யானையின் மீதேற்றிப் பின்புறம் கொண்டுசெல்வதை ஏற்கவில்லை. ``இதைப் பார்க்கும் காலாட்படையின் அனைத்து வீரர்களும் நம்பிக்கை இழப்பர். கணப்பொழுதுக்குள் எல்லோருக்குள்ளும் அச்சம் பரவிவிடும். எனவே, குதிரையின் மீதேற்றிப் பின்புறம் விரைவோம்” என்றான்.

ஆனால் உறையனோ, ``யானைப்படையின் முன்பகுதியில் ஏதோ கடினமான பிரச்னை உருவாகியுள்ளது. சில யானைகளைப் பாகன்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என நினைக்கிறேன். இந்நிலையில், வேந்தன் குதிரையில் பயணிப்பது நல்லதன்று. வெகுண்டெழும் ஒற்றை யானையின் பிளிறல்கூடக் குதிரையை நிலைகுலையச் செய்துவிடும். எனவே, வேந்தனுக்குரிய யானையின் மீது ஏற்றுங்கள்” என்று வாதிட்டான்.

வேந்தனின் யானை வீரர்களுக்குத் தோண்டப்படும் கிணற்றில் நீர் அருந்தியிருந்தது. எனவே, இதற்குப் பிரச்னை ஏதுமில்லை. பாகன் அதைக் கொண்டுவந்து கூடாரத்தின் ஓரம் நிறுத்தியிருந்தான். ஆனால், உள்ளே உறையனும் கிழானடிவானவனும் கடுமையாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த உரையாடல்களை அருகில் இருந்தவர்கூடக் கேட்க முடியாத நிலையில் பிளிறலின் ஓசை பன்மடங்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. படையின் முன்வரிசையில் இருந்த யானைகள் பாகன்களைச் சுழற்றி எறிந்தபடி வட்டாற்றின் முன்புறம் நோக்கி ஓடத் தொடங்கின.

இந்தக் கணத்துக்காகவே காத்திருந்த பாரி, தனது உத்தரவைப் பிறப்பித்தான். குளக்கரையெங்கும் பதுங்கி இருந்த பறம்புவீரர்கள் ஆற்றின் முன்பகுதியை நோக்கி எரியம்புகளை வீசத் தொடங்கினர். இருளைக் கிழித்தபடி ஆற்றின் இரு திசைகளிலிருந்தும் மணலுக்குள் எரியம்புகள் வந்து செருகின. முன்புறமாக ஓடத் தொடங்கிய யானைகள் நெருப்புமழைபோல் விடாதுபொழியும் எரியம்புகளைக் கண்டு, வந்த திசை நோக்கிப் பின்புறமாகத் திரும்பின.

பிளிறலும் அலறலும் இருளை உலுக்கின. வெறிகொண்ட யானைகள் வட்டாற்றில் வந்த திசை நோக்கித்  திரும்பி முறுக்கியபடி மணல் நெளிய ஓடிவந்தன. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. வெறி கொண்டு முன்னேறும் யானைகளால் மொத்த யானைப் படையும் சிதறத் தொடங்கியது. ஆவேசம்கொண்ட யானைகள், பின்னிலையில் நின்ற காலாட் படைக்குள் புகுந்தன. அதகளம் தொடங்கியது. சங்கு அட்டைகள் உச்சி மூக்கில் குருதியை உறிஞ்சிய ஒவ்வொரு முறையும் துதிக்கையை ஓராயிரம் முறை சுழற்றியடித்தன யானைகள். தந்தங்களின் கூர்முனை இரு பக்கங்களிலும் குத்திக் கிழித்தன.

இருளெங்கும் பேரோலம் மேலெழுந்தபோது வட்டாற்றின் மணலெங்கும் குருதி ஊற்றெனப் பீச்சியடிக்கத் தொடங்கியது. படைவீரர்கள் செய்வதறியாது எங்கும் சிதறினர். குடிநீருக்காகத் தோண்டப்பட்ட எண்ணற்ற கிணறுகளில் நூற்றுக்கணக் கானவர்களை மிதித்துப் புதைத்தபடி யானைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. படையின் கட்டுக்கோப்பு குலையும் கணத்தில் பேரழிவு தொடங்கும். ஆனால், இங்கு தொடங்கிய கணத்திலேயே பேரழிவு முடிவுறும் நிலையை நெருங்கியது.

யானைப்படைத் தளபதி அரிஞ்சயன் ஆற்றுமணலுக்குள் ஆழப் புதைந்து கொண்டிருந்தான். மணற்துகள்களைப்போல எலும்புகள் நொறுங்கிக்கொண்டிருந்தன. இடைவெளியின்றி மிதித்து நகர்ந்தன எண்ணிலா யானைகள்.

தலைமைத் தளபதி உறையன் எது செய்தாவது காலாட்படையின் ஒரு பகுதி வீரர்களையாவது காக்க முடியுமா எனச் சிந்திக்கும்போது, எல்லாம் கைமீறிப்போயிருந்தன. படைவீரர்களோ யானைகளோ ஆற்றின் கரைகளில் எங்கெல்லாம் மேலேறுகிறார்களோ, அங்கெல்லாம் எரியம்புகள் பாய்ந்து கீழிறங்கின. நெருப்பின் பொறிபட்ட கணத்தில் கரையோரச் செடிகொடிகள் பற்றி எரிந்தன. மேலேறிய யானைகள் வெக்கை தாக்கிய வேகத்தில் பிளிறியபடி, சிக்கியவர்களை எல்லாம் அடித்து நசுக்கிக்கொண்டு மீண்டும் ஆற்றுக்குள் ஓடின.

p85d_1522841853.jpg

பற்றிய நெருப்பு காட்டுக்குள் பரவாமல், தகுந்த முன்னெச்சரிக்கையோடு பறம்புவீரர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒற்றை அம்பைக்கூட சோழப்படையின் வீரர்களை நோக்கி எய்யவில்லை. பிளிறியபடி மேலேறும் யானைப்படையை ஆற்றை நோக்கிக் கீழிறக்கும் வேலையை மட்டுமே அவர்கள் செய்தனர். எந்த ஆற்றைப் பாழிநகருக்கான வழியாக செங்கனச்சோழன் தீர்மானித்து முன்னகர்ந்தானோ, அதே ஆற்றை மரணத்தின் பெரும்பாதையாக மாற்றினான் பாரி. எதிரிகள் நிலைகொண்டிருந்த நான்கு காதத்தொலைவுக்கும் மலைக்குமேல் தகுந்த இடைவெளியில் பறம்புவீரர்கள் நிலைகொண்டிருந்ததால் எல்லாவற்றையும் துல்லியமாகச் செயல்படுத்தினர். இருளை நகர்த்திச் செல்வதைப்போல வெறிகொண்ட யானைக் கூட்டத்தைக் கரையோடு கரையாக நகர்த்திக்கொண்டிருந்தனர்.

வட்டாறெங்கும் பல்லாயிரக்கணக்கான வீரர்களை நசுக்கியபடி யானைகள் ஓடிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவின் பிற்பகுதியில், அழிவின் உச்சகட்டம் தொடங்கியது. `முதல்நிலைப் படையினர் தாக்குதலுக்கு ஆளாகிவிட்டனர்’ என்ற செய்தி, ஒருநாள் இடைவெளியில் வந்துகொண்டிருந்த இரண்டாம் நிலைப் படையின் தளபதிகளுக்கு எட்டியது. நெடுங்காடர்களின் தளபதி துணங்கன் துடித்தெழுந்தான். யானைப்படையின் தளபதி கச்சனும் காலாட்படையின் தளபதி ஆழிமார் பனும் வெகுண்டனர். தாக்கப்பட்டவர்களுக்கு உதவ உடனடியாகப் புறப்பட்டனர். இரவோடு இரவாக யானைகளை எவ்வளவு வேகமாக விரட்ட முடியுமோ, அவ்வளவு வேகமாக விரட்டிச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து காலாட்படையினரும் விரைந்து வந்தனர்.

போர் என்பது, கட்டுக்கோப்பான தாக்குதல். அதன் வெற்றி, தாக்கும் திறனில் மட்டுமன்று, அதன் ஒழுங்கமைப்பின் வடிவிலும் இருக்கிறது. வேந்தனின் படைகள், இந்தக் கருத்துக்கு நன்கு பழக்கப்படுத்தப்பட்டவை. ஆனால், அடர்காட்டுக்குள் முன்னிலைப்படை தாக்கப்பட்ட செய்தி தெரிந்த பிறகு விரைந்து சென்று சேர்வதுதான் முதல் வேலை. அதில் எவ்வளவு வேகத்தில் விரைய வேண்டுமோ அவ்வளவு வேகத்தில் விரைவதே முக்கியம் என உணர்ந்து ஆழிமார்பனும் கச்சனும் விரைந்துகொண்டிருந்தனர். துணங்கனோ நெடுங்காடர்களைத் திரட்டி யானைகளை முந்திக்கொண்டு ஓடினான்.

பின்னிரவு சரிந்து கீழ்வானில் மெல்லிய ஒளிக்கீற்றுகள் மேலெழத் தொடங்கியபோது வட்டாறு இதுவரை சந்தித்திராத பேரழிவைச் சந்திக்க ஆயத்தமானது. இரண்டாம் நிலையில் இருந்த யானைப்படை கச்சனின் தலைமையில் விரைந்து முன்னேறிக்கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்த் திசையிலிருந்து பிளிறிக்கொண்டு வந்தது முதல்நிலை யானைப்படை. எந்த யானையின் மீதும் பாகன்கள் யாரும் இல்லை. வந்து கொண்டிருப்பது நமது படைதானா என்பதைக்கூட இருளுக்குள் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

தந்தத்தின் உள்மூக்குக்குள் துருவிக் கொண்டிருக்கும் குடைச்சல் தாங்க முடியாமல் துதிக்கையைச் சுருட்டி, திருகி, முறுக்கி வீசியபடி பிளிறிக்கொண்டு வந்த யானைகளை, எதிர் நிலையில் சந்தித்தது கச்சனின் யானைப்படை.

ஒரு யானையின் குருதி, பல நூறு வீரர்களின் குருதிக்குச் சமம். தந்தங்களைக்கொண்டு பதினான்கு விதங்களில் தாக்குவதற்குப் பயின்ற யானைகள், இருள் முடியும் கணத்தில் ஒன்றுடனொன்று நேர்கொண்டு மோதின. இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத பேரழிவு நிகழத் தொடங்கியது. உச்சிமண்டைக்குள் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் சங்கு அட்டைகளால் ஏற்படும் வேதனை தாங்காமல் துதிக்கைகொண்டு தமது தலையின் கும்பங்களையே நொறுக்குவதுபோல் அடிக்கும் யானைகள் எதிரில் சிக்கும் யானைகளை விட்டுவிடவா செய்யும்! சுழற்றியடித்துத் தந்தத்தால் குத்தித் தூக்கின.

மணிக்கட்டிலும் மார்பிலும் கமுக்கட்டையிலும் விலாப்புற மடிப்பிலும் வயிற்றிலும் குத்தித் தள்ளப்பட்ட எண்ணிலடங்கா யானைகள் எழுப்பிய ஓலம் காட்டை உறையச்செய்தது. வட்டாற்றுக் கொதிமணல் குடித்து முடியாத கருங்குருதி, விழுந்து கிடந்த யானைகளுக்கு நடுவில் வீரர்களின் உடலை இழுத்து நகர்த்தியது. குருதி குடித்த வட்டாற்று மணற்பரப்பு மணிக்கற்களைப்போல ஒளி வீசியது.

p85e_1522841875.jpg

தோகைநாய்களை அழித்த பறம்புவீரர்கள் காட்டை ஊடறுத்துக் குறுக்குவழியில் குதிரைகளில் பறந்தனர். எஃகல்மாடன் தலைமையில் நடுக்காட்டுக்குள் ஊர்ந்துகொண்டிருந்த சேரப்படையை இரவில் நாற்புறமும் சூழ்ந்தனர். உள்ளங்கைக்குள் சிக்கிய இரையை அவர்களின் ஆசைக்கேற்ப அடித்திழுக்கும் வேட்டை தொடங்கியது. பறம்புவீரன் ஒவ்வொருவனும் எண்ணற்ற தோகைநாய்களாக உருமாறியிருந்தான். எந்தவொரு தாக்குதலையும் இவ்வளவு கொடும் ஆவேசத்தோடு பறம்புவீரர்கள் தொடங்கிய தில்லை. இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகளை இழந்தவர்களின் வெறி, வீசப்பட்ட ஒவ்வோர் அம்பிலும் இருந்தது. உள்ளங்கைக்குள் வைத்துக் கழுத்தைத் திருகி எடுப்பதைப்போல எதிரிகளின் படையை உயிரோடு திருகி எடுத்தனர். தாக்குதல் நடந்த செவ்வரிக்காட்டில் குருதி படியாத இலையென்று எதுவும் இல்லை.

முகத்தில் மூன்று அம்புகள் ஒருசேரத் துளைத்தபோது அவன் மண்ணில் வீழ்ந்தான். ஆனாலும் அவன் செய்வதைப்போலவே தலையை வெட்டியெடுத்தான் தேக்கன். குருதி நாளங்கள் வெடிப்பதைப்போலக் கத்திக்கொண்டு துண்டித்த அவனது தலையைத் தூக்கி வீசினான் தேக்கன். நீள்வாய் நாய்களை நம்பி உள்ளே வந்த எஃகல்மாடனின் தலையைக் கவ்விச் செல்ல ஒரு தோகைநாய்கூட உயிருடன் இல்லை.

- மூன்றாம் பாகம் முற்றிற்று.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 78

 

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

றம்பு வீரர்கள், வடக்கு-தெற்குப் போர்க்களங்களிலிருந்து ஊர் திரும்பினர். பாரி எவ்வியூரை அடைந்தபோது தேக்கனும் உதிரனும் வந்து சேர்ந்திருந்தனர். இவ்வளவு பெருந்தாக்குதல்களை இதுவரை பறம்பு நடத்தியதில்லை. எனவே, இதுவரை இல்லாத அளவுக்கு, போர் பற்றிய கதைகள் பறம்பு முழுவதும் நிறைந்திருந்தன.

p83a_1523353748.jpg

போர் மனநிலையிலிருந்து விடுபடுதல் எளிதன்று. வெறிபிடித்த வேட்டை விலங்குக்கு ஒப்ப எண்ணிலடங்கா நாள்கள் செயல்பட்டுவிட்டு, அதனிலிருந்து இயல்புவாழ்வுக்கு மாறுதல் மனப்பிறழ்விலிருந்து மீள்வதைப் போன்றது. இந்தக் கொடும் துன்பத்திலிருந்து விரைவில் வெளிவர வேண்டும் என்பதால்தான் போர் முடிந்தவுடன் கொற்றவைக்குக் ‘குருதியாட்டுவிழா’ எடுப்பர். வாரக்கணக்கில் நடைபெறும் இந்தப் பெருவிழாவில், அத்தனை வகைக் கள்ளும் ஆற்றுப்பெருக்கென ஓடும். குடித்துக் களித்து, ஆடிப்பாடி, பேருணவு உண்டு முடிப்பர். இந்தப் பெரும்விழா, வீரர்கள் அனைவரையும் குணமாற்றம் அடையச் செய்யும். இழப்பின் வலியிலிருந்து மகிழ்வின் கொண்டாட்டத்துக்கு ஒவ்வொருவரையும் தள்ளும். கண்ணுக்குள் ஊறிக்கிடந்த கொலைவெறி வற்றி இறங்கும். வாழ்வு மீண்டும் வீசிச்செல்லும் இளங்காற்றுக்குத் தலையசைக்கிற சிறுபுல்லின் குணமெய்யும்.

ஆனால், இம்முறை குருதியாட்டு விழாவை நடத்த முடியவில்லை. பாண்டியனின் படை கீழ்த்திசையில் நிலைகொண்டுள்ளது. அவனுடனான போர் இன்னும் தொடங்கவே இல்லை. கொற்றவையின் கூத்துக்களத்தில் நீராட்டு விழாவின்போது வஞ்சினம் உரைத்த பாரியின் கூற்றில் இரண்டை முடித்தாகிவிட்டது. மூன்றாம் கூற்று தொடங்கப்படவேயில்லை. பறம்பைப் பொறுத்தவரை போர் இன்னும் முடியவில்லை. எனவே, போர் மனநிலையை உதற முடியாத நிலையிலேயே அனைவரும் இருந்தனர்.

வட்டாற்றில் சோழப்படையின் மீதான தாக்குதல் முடிந்த மறுநாள் இரவு, பாரி அங்கிருந்து புறப்பட்டுவிட்டான். ``இனி சோழப்படை மீள வாய்ப்பேதும் இல்லை. எனவே, தொடர்ந்து வீறுகொண்ட தாக்குதல் தேவையில்லை. பறம்பு மண்ணைவிட்டு அவர்களை அப்புறப்படுத்தினால் போதும். மிஞ்சியவர்கள் குறும்பியூர்க் கணவாயில் வெளியேறும் வரை, அவர்களை பிட்டன் பின்தொடரட்டும்’’ என்றான் பாரி.

இரவாதனைத் தாக்குதல் களத்திலிருந்து வெளியேற்றி, வேறு வேலைகளைக் கொடுத்தான். எதிரிப்படை வீறுகொண்டு நிற்கும்போதே அவனது தாக்குதலை அவர்களால் எதிர்கொள்ள முடியாது; இப்போதோ அவர்கள் உயிர்பிழைக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இரவாதனைக் களம் விட்டு வெளியேற்றுவது அவசியம் எனக் கருதினான் பாரி.

``யானையின் துதிக்கைக்குள் சென்ற சங்கு அட்டைகள் ஒருசில நாள்களில் தாமே செத்து உதிரும் வரை யானைக்கு வேதனை இருக்கத்தான் செய்யும். யாரையும் நெருங்க விடாது. தாக்குதலுக்குள்ளாகி இறந்த யானைகளைத் தவிர  குற்றுயிராய் இருக்கும் யானைகளுக்கும் சிகிச்சை தேவைப்படும் யானைகளுக்கும் உதவ வேண்டியது நமது கடமை. நமது மலைகளுக்குள் பிளிறிக் கதறும் யானைகளுக்கு நாம் உதவியே ஆகவேண்டும். யானைகளுடனான ஆதிமொழியை உருவாக்கிய தந்தமுத்தத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்” என்று இரவாதனுக்கு உத்தரவிட்டான் பாரி.

யானைப்படையை வீழ்த்துவதற்காக உயர்த்திய வில்லோடு அலைந்துகொண்டிருந்த இரவாதனை, தந்தமுத்தத்துக்காரர்கள் கேட்கும் பச்சிலைகளைப் பறித்துத் தருபவனாக மாற்றினான் பாரி. எண்ணிலடங்காத காயங்களுடனும் வேதனையுடனும் அலைந்துதிரியும் யானைகளை, தந்தமுத்தத்துக்காரர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை அவன் கூர்ந்து கவனிக்க வேண்டியது முக்கியம். வீரன், மருத்துவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு. அதுவும் வேதனைகொண்ட போர்யானைகளை நெருங்கவும், தேவைப்பட்டால் எளிய முறையில் அவற்றை வீழ்த்தவும், பிறகு சிகிச்சையளிக்கவும் எண்ணற்ற நுணுக்கங்களைத் தந்தமுத்தத்துக்காரர்கள் செய்தனர். இவையெல்லாம் பெரும்படைக்குத் தலைமையேற்பவர்களுக்குத் தேவையான பயிற்சி. இவ்வளவு யானைகளுக்கிடையே இப்படியொரு பயிற்சியைப் பெறும் வாய்ப்பு இரவாதனைத் தவிர பறம்பில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. அவசியம் எனக் கருதியே பாரி இந்தப் பயிற்சியில் அவனை ஈடுபடுத்தினான்.

எழுவனாற்றை விட்டு பாரி புறப்பட்ட பிறகு வலக்கரையில் இருந்த இரவாதன் தந்தமுத்தத்துக்குச் சென்றான். இடதுகரையில் இருந்த பிட்டன், சிறு படையை உடன் வைத்துக்கொண்டு எதிரிகளைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தான். பெரும் எண்ணிக்கையிலான பறம்பு வீரர்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.

யானைகளின் கொடூர அழித்தொழிப்பிலிருந்து செங்கணச்சோழனைக் காப்பதில், சோழர்படையின் முன்னணித் தளபதிகளும் நெடுங்காடர்களும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டனர். தேர்ந்த வீரர்களின் வலிமைமிகுந்த பாதுகாப்பு வளையத்தினூடே செங்கணச்சோழனை முன்னகர்த்தி வந்துகொண்டிருந்தனர். தாக்குதல் நடந்த முதல் நாள் இரவு `வேந்தனைக் காக்க முடியாத நிலை வந்துவிடுமோ!’ எனக் கவலைப்பட்டனர். நெடுங்காடர்கள், பாறைக்குகை ஒன்றுக்குள் வேந்தனை அனுப்பி, யானைகள் உள்நுழையாதபடி நெருப்பு வளையத்தை உருவாக்கிக் காத்தனர். அடுத்தடுத்த நாள்களில் யானைகளுடனான ஆபத்து குறையத் தொடங்கியதும் தகுந்த ஏற்பாட்டோடு பறம்பை விட்டு வெளியேறும் பயணத்தைத் தொடங்கினர்.

சிறிய படைப்பிரிவு ஒன்று மிகுந்த பாதுகாப்புத் தன்மையோடு ஆற்றின் ஓரப்பகுதியின் வழியே தப்பிச்சென்று கொண்டிருப்பதை அறிந்த பிட்டன், அவர்களை இறங்கித் தாக்க முடிவெடுத்தான். `பெரும்படை முழுமுற்றாக அழிந்த பிறகும், இவர்கள் இவ்வளவு வேகமாகத் தப்பிச்செல்கின்றனரே!’ என்று சற்றே அவசரப்பட்டான்.

வேந்தனைக் காத்து நின்றது, மிகத் தேர்ந்த வீரர்களைக்கொண்ட படைப்பிரிவு. உடன் நெடுங்காடர் தளபதி துணங்கன் இருந்தான். தளபதிகளில் தப்பிப்பிழைத்தது அவன் மட்டும்தான். `பறம்புநாட்டை ஊடறுத்துச் செல்லும் தாக்குதலுக்கு எங்களை நம்பி நீங்கள் வரலாம்’ என்று நெடுங்காடர்கள் அளித்த வாக்கின் அடிப்படையில்தான் செங்கணச்சோழன் வந்தான். அந்த வாக்கைக் காப்பாற்ற இறுதி வரை முயன்றுகொண்டிருந்தான் துணங்கன்.

p83b_1523353769.jpg

பொழுது மங்கிக்கொண்டிருந்த மாலை நேரத்தில் ஆற்றின் வளைவு ஒன்றில் பொருத்தமான இடத்தில் வேந்தனுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டது. அருகில் இருந்த மூங்கில் மரங்களை ஆற்றுக்குள் சாய்த்துப்பிடித்து வலைப்பின்னல்களை நெடுங்காடர்கள் உருவாக்கினர். எந்தவித பாதிப்பும் அடையாத பன்னிரண்டு யானைகளைப் பாதுகாப்புக்கு நிறுத்தினர். கவசவீரர்கள், கூடாரத்தைச் சுற்றி நின்றிருந்தனர்.

`இவன்தான் இந்தப் படையெடுப்புக்குத் தலைமை தாங்கியவன்!’ என்று இந்த ஏற்பாடுகளைக் கண்டதும் பிட்டனுக்குத் தோன்றியது. அமைக்கப்பட்ட கூடாரத்தின் பின்பகுதியில் ஆற்றுவழியே தாக்குதல் எதுவும் நடந்துவிடக் கூடாது எனப் பன்னிரு யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. கூடாரத்தைச் சுற்றிக் கவசவீரர்கள் விழிப்புடன் காத்து நின்றனர். காரிருள் சூழ்ந்திருந்தபோது கூடாரத்தின் இடதுபுறமிருந்து பிட்டனின் தலைமையிலான சிறுபடை ஆற்றுமணலுக்குள் இறங்கியது.

பிட்டனின் பார்வை முழுவதும், கூடாரத்தைச் சுற்றி நின்றிருந்த கவசவீரர்களை நோக்கியே இருந்தது. ஆனால், மண் போத்தி உறங்கும் பழக்கம்கொண்ட நெடுங்காடர்கள், ஆற்றுமணலுக்குள் தலை மட்டும் மேலே தெரிவதைப்போல மறைந்து கிடப்பதை அவன் கவனிக்கவில்லை. கூடாரத்தை நோக்கித் தாக்குமாறு பிட்டன் ஆணையிட்டதும் உடன்வந்தவர்கள் வில்லை உயர்த்த எத்தனித்தபோது மணலுக்குள்ளிருந்து தெறித்து மேலெழும்பினர் நெடுங்காடர்கள். இரு கைகளிலும் உருவிய வாள்களோடு எழுந்தவர்கள் தங்களின் கை அருகில் இருக்கும் பறம்பின் வீரர்களை கணப்பொழுதில் வெட்டிச் சரித்தனர்.

பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட படையை உருத்தெரியாமல் அழித்த எதிரிகள் கை அருகில் சிக்கியுள்ளனர் என்ற வெறியோடு நெடுங்காடர்கள் வெட்டியபோது, வில்லிலிருந்து விடுபட்ட அம்புகள் கவசவீரர்களைத் துளைக்கவும் செய்தன. ஓசை கேட்டு கூடாரத்துக்குள் இருந்த செங்கணச்சோழன் சட்டெனத் திரை விலக்கி வெளியே வந்தான். மேலே தெறித்த மணற்துகள்களுக்கு நடுவே அவனது உருவத்தைத் துல்லியமாகக் கண்டான் பிட்டன். கையில் இருந்த ஈட்டியை அவனை நோக்கி எறிந்தபோது, நெடுங்காடர்களின் எண்ணிலடங்கா வாள்கள் பிட்டனை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தன.

வலதுகால் தொடையில் ஈட்டி இறங்கிய கணம், பேரலறலோடு செங்கணச்சோழன் மண்ணில் சரிந்தான். அதே வேளையில் பிட்டன் எண்ணற்ற துண்டுகளாக மணலெங்கும் சிதறிக்கிடந்தான்.

குலசேகரபாண்டியனின் வயதும் அனுபவமும், யாராலும் கணிக்க முடியாத முடிவுகளை எப்போதும் எடுப்பவராக அவரை மாற்றியிருந்தன. முதல்நிலைப் படை வெங்கல்நாட்டுக்கு வந்ததும் போருக்கான ஆயத்த வேலைப்பாடு தொடங்கிவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மிக விரிந்த அளவில் பாடிவீடுகளை ஏற்படுத்தி, படைகளைப் பகுதி பகுதியாகக் கொண்டுவந்து இறக்கும் உத்தரவை மட்டும் கருங்கைவாணனுக்கு வழங்கியிருந்தார்.

பாண்டியநாட்டின் வெவ்வேறு திசைகளிலிருந்து படைகள் வெங்கல்நாடு நோக்கி நகர்ந்தன. ஆனால், படை முழுமையும் அங்கு வந்து குவிந்துவிடவில்லை. குறிப்பிட்ட இடைவெளிகளில் படைகளை ஆங்காங்கு தங்கவைத்து, பேரரசரின் உத்தரவுக்கு ஏற்ப வெங்கல்நாட்டை நோக்கி நகர்த்தினர்.  
    
இளவரசர் பொதியவெற்பனும் தளபதி கருங்கைவாணனும் பாடிவீட்டிலேயே முகாமிட்டிருந்தனர். ஆனாலும் பேரரசரின் எண்ண ஓட்டங்களையோ போர் உத்திகளையோ அவர்களால் யூகிக்க முடியவில்லை. மையூர்கிழார் மிக மும்முரமாக இருந்தார். எண்ணிலடங்காத படைப்பிரிவுகள் நாள்தோறும் வந்தவண்ணம் இருந்தன. அவரது நிலப்பரப்பு எங்கும் குதிரைகளும் யானைகளும் குறுக்கும் நெடுக்குமாகப் போய்வந்தபடி இருந்தன. எல்லா ஏற்பாடுகளிலும் அவரது ஆலோசனை அடிப்படையாக இருந்தது. பேரரசின் அதிகாரமிக்க பிரதிநிதியாக எல்லோராலும் அவர் பார்க்கப்பட்டார். பாண்டிய நாட்டின் எண்ணற்ற படைப்பிரிவின் தளபதிகளும் சிற்றரசர்களும் வந்து சேர்ந்துகொண்டே இருந்தனர். ஆனால், பேரரசர் மட்டும் இன்னும் வெங்கல்நாட்டுக்கு வந்து சேரவில்லை. அவர் மதுரையிலும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் தும்பாற்று அரண்மனையில் இருந்தார்.

சேரனின் தாக்குதலைப் பற்றியும் சோழனின் படையெடுப்பைப் பற்றியும் ஒற்றர்கள் மூலம் செய்திகளை நாள் தவறாமல் சேகரித்தபடி இருந்தார். அந்தத் தாக்குதலில் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தே தன்னுடைய உத்திகளை வகுப்பது என முடிவெடுத்திருந்தார். முதலில் சேரனின் தோல்வி பற்றிய செய்தி வந்துசேர்ந்தது. நீண்டநாள்களுக்குப் பிறகு, சோழப்படையின் அழித்தொழிப்பு பற்றிய செய்தி அவரை எட்டியது. எல்லாவற்றையும் பொறுமையோடு சிந்தித்துக்கொண்டிருந்தார். தனக்கான உத்திகளைத் தனித்துவத்தோடு வகுத்துக்கொண்டிருந்தார்.

போர் என்பது உத்தியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதன்று; கடைசிகணம் வரை அந்த உத்தியைச் செயல்படுத்தும் புறச்சூழல் நம்முடைய ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது அதனுடைய ஆதிக்கத்தால் பாதிப்படையாத உத்திகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். சேரனும் சோழனும் தவறிய இடங்களைப் பற்றி நேரில் பார்த்தவரைப்போலச் சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டிருந்தார். இருநாட்டுத் தாக்குதல்களும் தோல்வியடைந்த பிறகு, வெங்கல்நாடு நோக்கி முன்னகர்ந்தார் குலசேகரபாண்டியன்.

காற்றடிகாலம் உச்சம்கொண்டிருந்தது. குளம், குட்டைகளில் நீரின் இருப்பு மேலும் குறைந்தது. ஆனாலும் மேற்குமலையில் மேகங்கள் கூடும்காலம் நெருங்கிவிட்டது. அதைக் கணித்தே அவரின் நகர்வு இருந்தது. பாண்டியப் பெருவேந்தன் வெங்கல் நாடு நோக்கி வரும் செய்தி எட்டியவுடன் படையெங்கும் உற்சாகக் கொண்டாட்டம் தொடங்கியது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு குலசேகரபாண்டியன் நேரடியாகப் போர்க்களம் ஒன்றுக்கு இப்போதுதான் வருகிறார்.

முடியனும் காலம்பனும், கீழ்த்திசைப் போர்க்களத்துக்கு வந்து மாதக்கணக்காகிறது; பாண்டியப்படை பாடிவீடு அமைத்து எங்கெல்லாம் தங்குகிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைக் கவனித்தபடி இருந்தனர்.

வேட்டூர்பழையன், மலையடிவாரம் எங்கும் தன் வீரர்களை நிறுத்தி எதிரிகளின் ஒவ்வோர் அசைவையும் கண்காணித்தபடி இருந்தான். மாதக்கணக்கில் பாண்டியர் படை வந்து குவிந்துகொண்டே இருந்தது. கண்களுக்கு எட்டும் தொலைவு வரை ஈட்டி ஏந்திய வீரர்கள் தென்பட்டனர்.

நீலனால் அமைதிகொள்ள முடியவில்லை. இறங்கித் தாக்கவேண்டும் என்ற அவனது எண்ணத்தை மற்றவர்கள் ஏற்கவில்லை. பறம்பினுள் நுழையாத யாரின் மீதும் தாக்குதல் தொடுக்க நமக்கு உரிமையில்லை என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. மற்ற இரு திசைகளிலும் ஈட்டிய வெற்றிச் செய்தி இங்கு வந்து சேர்ந்ததும் நீலனின் வேகம் இன்னும் கூடியது. அவனைக் கட்டுப்படுத்துதல் வேட்டூர் பழையனால் முடியாதது. எனவே, நீலனை முடியனோடு இருக்கச்செய்தான் பழையன். முடியனின் சொல்லைப் பறம்புவீரன் யாரும் மீற முடியாது. வேறு வழியில்லாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான் நீலன். காலம்பனின் மனநிலையும் ஏறக்குறைய அதேபோல்தான் இருந்தது. கீழ்த்திசை ஊர்களின் வீரர்கள் மலையெங்கும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

காற்றடிகாலம் தொடங்கும் முன்பே தேக்கனும் உதிரனும் வந்திறங்கினர். கூழையன் மட்டும் தென்திசையில் சேரநாட்டு எல்லையில் இன்னும் இருந்தான். தேக்கன் வந்த பிறகு உத்திகள் மாற்றப்படும் என்று அவர்களுக்குத் தெரியும். இருபெரும் வெற்றிச் செய்திகளோடு எவ்வியூரில் இருந்த வீரர்களின் கூட்டம் தேக்கனின் தலைமையில் கீழ்த்திசைக்கு இறங்கியது. `அடுத்த சில நாள்களில் பாரி வரவுள்ளான்’ என்ற செய்தியையும் தேக்கன் சொன்னான். எல்லோரும் அளவற்ற மகிழ்வடைந்தபோது நீலன் மட்டும் சற்றே வருத்தம்கொண்டான். தனது பொறுப்பில் இருக்கும் காவல்திசை ஒன்றுக்குப் பாரி வரும்போது அவனுக்கு வெற்றியைத் தந்து வரவேற்கும் வாய்ப்பற்றுப்போனதே என்ற கவலை, அவனது முகத்தில் இருந்தது. ஆனாலும் பறம்பின் ஆசான் தேக்கனும் உற்றதோழன் உதிரனும் எண்ணிலடங்காத எவ்வியூர் வீரர்களும் வந்து இறங்கிய மகிழ்வு, அவனை விரைவில் ஆற்றுப்படுத்தியது.

எழுவனாற்றிலும் செவ்வரிக்காட்டிலும் கொட்டித்தீர்த்த எதிரிகளின் குருதியேந்தி இரு திசைப் படையின் பொறுப்பாளர்களும் வேட்டுவன் பாறைக்கு வந்து சேர்ந்தனர். பறம்பின் மாவீரர்கள் எல்லோரும் ஒன்றாய்க் குவிந்திருக்க, நாண்முழவைக் குறுந்தடிகொண்டு எழுப்பும் ஓசை காரமலையின் உச்சியிலிருந்து எதிரொலித்தது. பாரியின் வருகையைக் கீழ்த்திசை முழுவதும் அறிவிக்கும் ஓசை அது. வழக்கமான நாள்களில் இதுபோன்ற ஏற்பாடுகள் இல்லை. போர்க்காலத்தில் எல்லாம் ஒழுங்கமைக்கப்ப ட்டிருந்தது. தான் இருந்த இடத்திலிருந்து பறம்பு முழுவதும் குறிப்பறிந்து வழி நடத்திக்கொண்டிருந்தான் வாரிக்கையன்.

p83c_1523353787.jpg

கபிலரோடு நடந்து வந்த பாரி காரமலையின் முகட்டின் மீது கால் வைத்ததும் நாண்முழவின் ஓசை கேட்டது. எல்லோரும் ஓசை கேட்ட திசை நோக்கி வியப்புற்றுத் திரும்பினர். பாரியோ, கபிலரைப் பார்த்து ``இது வழுக்குப்பாறை. கவனமாகக் காலெடுத்து வையுங்கள்” என்றான்.

``பலமுறை இந்த வழியில் காரமலையைக் கடந்து இரு பக்கங்களும் போய்வந்துள்ளேன், அப்போதெல்லாம் முழவின் ஓசை கேட்டதில்லையே” என்றார் கபிலர்.

``இவையெல்லாம் வாரிக்கையனின் ஏற்பாடு. செய்தித்தொடர்புகளின் வலைப்பின்னல்களை இருந்த இடத்திலிருந்தே உருவாக்கும் நுட்பம் அவர் அளவுக்குப் பறம்பில் வேறு யாருக்கும் இல்லை” என்றான் பாரி. கபிலர் வியந்து கேட்டுக்கொண்டிருந்தார்.

``நான் வருவதை முன்னோக்கி அறிவிக்கும் ஓசை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். பின்னோக்கி அவருக்குச் சென்று சேரவேண்டிய செய்தி ஒன்று வேறு ஒலிக்குறிப்பில் போய்க்கொண்டிருக்கும்” என்றார்.

``எவ்வளவு ஆற்றல்கொண்ட மாமனிதனாக அவர் இருக்கிறார்!” என்று கபிலர் வியந்து கூறியபடி பாரியின் தோள்பற்றி நடந்து கொண்டிருந்தார். பாரி சொன்னான், ``பறவைகளைக் கூடுகளில் பார்த்து மகிழ்வது ஓர் அனுபவம். வானமெங்கும் பறந்து திரிவதைப் பார்த்தறிவது இன்னொரு வகை அனுபவம். அதுவே வேட்டைக்காகச் சிலிர்த்தபடி ஈட்டிபோல இறங்கித் தாக்குவதைப் பார்த்தல் முற்றிலும் வேறுவகை அனுபவமாயிற்றே! இது வேட்டைக்காலம் அல்லவா, தங்களின் ஆற்றல் முழுமையும் பயன்படுத்தும் வாய்ப்பாக ஒவ்வொரு பறம்பு மனிதனும் கருதுவான்” என்றான் பாரி.

``ஆற்றல் அளவிடற்கரியது. அது பயிற்சியோடும் திறமையோடும் மட்டும் தொடர்புடையதன்று; சூழலுடனும் உணர்வுடனும் தொடர்பு டையதாயிற்றே” என்றார் கபிலர்.

``ஆம், அதனால்தான் தளர்ந்த வயதில் வாரிக்கையனும், மிக இளம்வயதில் இரவாதனும் எண்ணிப்பார்க்க முடியாத நுட்பத்துடனும் வலிமையுடனும் ஆற்றலை வெளிப்படுத்து கின்றனர்.”

ஒரு கணம் அதிர்ந்தார் கபிலர். மகா திறமைகொண்ட வாரிக்கையனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அந்த வரிசையில் இரவாதனை ஒப்பிட்டுப் பாரி சொன்னது வியப்பைத் தந்தது. சற்றே அமைதிகொண்ட கபிலர் ``இரவாதனை...” என்று மெள்ளத் தொடங்கினார்.

கபிலர் என்ன கேட்க வருகிறார் என்பதைப் புரிந்துகொண்ட பாரி சொன்னான், ``எழுவனாற்றுப் போர்க்களத்தில் ஒரு காட்சியைப் பார்த்தேன். இரவாதன் எய்த அம்பொன்று யானையின் கழுத்தில் ஒருபக்கம் தைத்து மறுபக்கம் எட்டிப்பார்த்தது. அவனது வில்லடியின் ஆற்றல் அளவிட முடியாததாக இருக்கிறது.”

வியப்பு மீறாமல் கபிலர் சொன்னார் ``இதேபோன்ற வியப்போடு நீலனின் ஆற்றலைப் பற்றி தேக்கன் சொல்லிக் கேட்டுள்ளேன்.”

``ஆம், இருவரும் இணையற்ற ஆற்றல்கொண்ட வீரர்கள்தாம். ஆனால், வீரர்களை மாவீரர்களாக மாற்றுவது போர்க்களம்தான்” சொல்லியபடி நடையை நிறுத்தினான் பாரி.

குனிந்தபடி கவனமாக நடந்துவந்த கபிலர், பாரி நின்றதும் தானும் நடையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தார். மலையடிவாரச் சமவெளிப் பரப்பில் விரிந்துகிடந்தது பாண்டியர் படை. கண்ணிமைக்காமல் அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் பாரி சொன்னான் ``பெரும்புகழை அணைத்துக்கொள்ளும் மாவீரர்களுக்காக, களம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.”

வேந்தனுக்கு இதுவரை யாரும் தந்திராத வரவேற்பைத் தர வேண்டும் என்று இரவு பகலாகப் பணியாற்றிக்கொண்டிருந்தது வெங்கல்நாடு. குலசேகரபாண்டியனின் காலடி வெங்கல்நாட்டு அரண்மனையில் பதிந்தபோது, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தொட்டு வணங்கி வரவேற்றார் மையூர்கிழார். பறம்பின் மீதான போர் பற்றிய முடிவெடுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டவுடன் தனது அரண்மனையில் புதிய மாளிகை ஒன்றைக் கட்டத் தொடங்கினார் மையூர்கிழார். இந்தப் போரில் குலசேகரபாண்டியன் நேரடியாகக் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி அவர் வந்தால் தங்குவதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்தார்.

பாண்டியப் பெருவேந்தனின் தங்கல்மாளிகை பேரழகோடு வடிவமைக்கப்பட்டிருந்தது. `கொற்றர்களின் தாய்நிலம்’ என்று வர்ணிக்கப்படும் வெங்கல்நாடு, அதிசிறந்த மாளிகையை வடிவமைத்திருந்தது. பேரரசர் உள்நுழைந்ததும் அதன் சுதை வேலைப்பாட்டிலும் வண்ண ஓவியத்திலும் வியந்து நிற்பார் என மையூர்கிழார் எதிர்பார்த்தார். குலசேகரபாண்டியனின் கண்களுக்கு அவை எவையும் தெரியவில்லை. அவர் பார்க்க நினைப்பது மாளிகையை அன்று, வெங்கல்நாட்டின் நிலவியல் அமைப்பை; பறம்பு மலையின் வாகினை; தாக்கி முன்னேறவும் தற்காத்து நிற்கவுமான நிலப்பரப்பை.

p83d_1523353803.jpg

மறுநாள் அதிகாலை, கவசவீரர்களின் அணிவகுப்பினூடே நிலப்பரப்பைப் பார்வையிடப் புறப்பட்டார் குலசேகரபாண்டியன். வேட்டுவன் பாறைக்கு மூன்று காத தொலைவிலிருந்து வெங்கல்நாடு தொடங்குகிறது. மையூர்கிழார் முதலில் அங்குதான் வேந்தரை அழைத்து வந்தார். அங்கிருந்து எதிரில் தெரியும் காரமலையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். பின்னர் தென்மேற்குத் திசை நோக்கி வேந்தரின் தேர் நகர்ந்தது. தேருக்கு முன்னால் கருங்கைவாணனும் பொதியவெற்பனும் குதிரையில் அணிவகுத்தனர். அவர்களுக்கு முன்னால் காவல்வீரர்கள் சென்றனர். இதேபோல, தளபதிகளும் வீரர்களும் பின்புறமும் அணிவகுக்க, வேந்தரின் தேர் நகர்ந்துகொண்டிருந்தது.

தேரின் இடதுபுறமாகக் குதிரையில் வந்தபடி மலையையும் அதற்கு மேலே இருக்கும் ஊர்களையும் விளக்கினார் மையூர்கிழார். மழைக்காலம் தொடங்கிவிட்டதால், நிலத்தின் தன்மையை மதிப்பிடுவது சற்று எளிதாக இருந்தது. பதியும் குதிரைகளின் குளம்படிகளையும் தேர்ச்சக்கரத்தின் தடங்களையும் கூர்ந்து பார்த்தபடியே பயணித்தார் வேந்தர்.

வெள்ளடிக்குன்றின் அடிவாரத்தை அடைந்தனர். அங்கிருந்துதான் பாண்டியர் படை தங்கியுள்ள கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேரரசரின் வருகையைக் கண்டு வீரர்கள் ஆயுதங்கள் ஏந்தி, பெருமுழக்கம் செய்தனர். மிகத் தள்ளி பேரரசரின் தேர் பயணப்பட்டுக்கொண்டிருந்தது. வீரர்களின் ஆவேச ஒலி மலையெங்கும் எதிரொலித்தது. பேரரசரின் கவனம் வெள்ளடிக்குன்றின் உயரத்தின் மீதே இருந்தது.
 
``அந்த ஊரின் பெயரென்ன சொன்னாய்?” எனக் கேட்டார்.

`எந்த ஊரைக் கேட்கிறார்?’ என்று சற்றே குழப்பமானார் மையூர்கிழார்.

``முதலில் சொன்ன ஊரின் பெயர்?”

``வேட்டுவன் பாறை பேரரசே” என்று பணிந்து சொன்னார்.

``அது அவர்களின் காவல் தலைவர்கள் இருக்கும் ஊர் என்று சொல்கிறாய். பின்னர் ஏன் படையை இவ்வளவு அருகில் தங்கவைத்துள்ளாய்?” எனக் கேட்டார்.

யாரிடமும் பதிலில்லை.

குதிரைகள் மீண்டும் புறப்பட்டுப் போயின. வரிசையாகக் குன்றுகளின் பெயரையும் தன்மையையும் அப்பால் உள்ள ஊர்களின் பெயர்களையும் சொல்லியபடி வந்தார் மையூர்கிழார். இடதுபுறம் பாண்டியப்படையின் வீரர்கள் வெற்றிக்கூச்சல் எழுப்பியபடி இருந்தனர். பேரரசரின் வருகையால் வீரர்களின் உணர்வு எல்லைகடந்ததாக இருந்தது. படைவீட்டின் இறுதி எல்லை இருக்கும் நெடுங்குன்றம் வரை நிற்காமல் வந்தடைந்தனர். காரமலையின் தன்மைகளை அண்ணாந்து பார்த்தபடி நின்றார்.

வெள்ளடிக்குன்று தொடங்கி நெடுங்குன்று வரை தெற்கு வடக்காகப் பாடிவீடுகள் அமைக்கப்பட்டதன் காரணத்தைக் கருங்கைவாணன் சொல்ல முற்பட்டான்.

பேரரசரோ ``படை தங்குவதற்கான பாடிவீடுகள் இங்கிருந்து தொடங்கி, தென்திசையில் அமையட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

`இவ்வளவு ஏற்பாடுகளையும் இனி மாற்ற வேண்டுமா?!’ என்ற அதிர்ச்சி எல்லோர் முகங்களிலும் தெரிந்தது. அவர் சொன்னதற்கான காரணம் எவ்வளவு சரியானது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

மழைக்காலம் தீவிரமடையத் தொடங்கியது. நெடுங்குன்றத்திலிருந்து வெள்ளடிக்குன்று வரை அமைக்கப்பட்ட பாடிவீடுகளையும் படை அமைப்புகளையும் வேந்தர் சொன்னபடி மாற்றும் பணியைத் தொடங்கினர். வெள்ளடிக்குன்றிலிருந்து தொடங்கி, தென்திசையில் நீண்டது படையமைப்பு.

வெங்கல்நாட்டு மாளிகை முழுவதும் போர்ப்பாசறையானது. உணவு தானியங்களுக்கான சேமிப்புக்கலன்களாக அவற்றில் பல உருமாறின.  பாண்டியநாட்டுப் படை பல்வேறு சிற்றரசர்களின் பகுதிகளில் பரவலாக முகாமிட்டிருந்தது. மழைக்காலம் முடிவடைவதற்காக அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மழை தீவிரமடைவதற்கு முன், புது விருந்தினர் வெங்கல்நாட்டுக்கு வந்தனர். அவரது வருகை, பேரரசருக்குத் தெரிவிக்கப்பட்டது.

குலசேகரபாண்டியன் அவரின் வருகையை எதிர்பார்த்திருந்ததால் வியப்பேதும் அடையவில்லை. ``உள்ளே அழைத்துவரச் சொல்” என்றார்.

சிறியதேயானாலும் எழில்மிகு மாளிகைக்குள் நுழைந்தான் ஹிப்பாலஸ். வஞ்சிமாநகரில் சேரனின் போர் உத்திகளைக் கண்டு வியந்தவன், அங்கிருந்து புறப்பட்டுப் புகாரை அடைந்தபோது செங்கணச்சோழனின் படையெடுப்பையும் அதற்கான காரணத்தையும் கேட்டுத் திகைப்புற்றவன், பாரியை வீழ்த்தும் வல்லமைகொண்டவர்களாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் காட்சியளிப்பதாக நம்பியவன், இறுதியில் தாக்குதலின் முடிவுகளால் நம்பிக்கையற்றவனாக மாறி நின்றான்.

இரு வேந்தர்களும் முழுமுற்றாகத் தோல்வியடைந்த பிறகும் பெருவேந்தனான குலசேகரபாண்டியன் மிக நிதானமாகத் தனது படையெடுப்புப் பணிகளை நடத்தி வருவதறிந்து இந்த இடம் வந்துசேர்ந்துள்ளான். உடன்வந்த கால்பாவும் எபிரஸ்ஸும் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர்.

ஹிப்பாலஸ், பேரரசரை வணங்கி நின்றான். அவரோ அவனை அணைத்து வரவேற்றார். ``சேரனின் மீதும் சோழனின் மீதும் பாரி நடத்திய தாக்குதலின் முழுவிவரங்களும் நீங்கள் அறிவீர்கள்தானே” என்று பேச்சைத் தொடங்கினான்.

p83e_1523353816.jpg

அந்தப் படையெடுப்புகள் பற்றியும் அங்கு நிகழ்ந்த பேரழிவுகள் பற்றியும் பரிமாறிக்கொள்ள இருவரிடமும் எண்ணிலடங்காத செய்திகள் இருந்தன. அன்றிரவு முழுவதும் அவை பற்றியே பேசினர். போர்க்களத் தாக்குதல்களைப் பற்றி தான் அறிந்துள்ளவை எவ்வளவு குறைவானவை என்பதை ஹிப்பாலஸ் உணருவதற்கு வெகுநேரமாகவில்லை. குலசேகரபாண்டியன் சொன்ன செய்திகள் ஹிப்பாலஸ்ஸை உறையவைத்தன. ``மற்ற இருவரும் இழைத்த தவறுகளை நாங்கள் இழைக்க மாட்டோம்” என்று குலசேகரபாண்டியன் சொன்ன கூற்று நம்பிக்கையின் அடிப்படையிலானது மட்டுமன்று, நுட்பமான திட்டமிடலுடன்கூடியது என்பதை ஹிப்பாலஸ்ஸால் உணர முடிந்தது. ஆனாலும் அவன் கேட்டான் ``அவர்களைப்போல் அல்லாமல் உங்களின் தாக்குதல் எந்த விதத்தில் வேறுபடப்போகிறது?”

``கழுகுக்கும் மலைக்காடைக்கும் வேறுபாட்டை அறிவீர்களா?”

பேரரசர் என்ன சொல்ல வருகிறார் என்பது ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை.

``நானே சொல்கிறேன். கழுகு, தனது இரையை நிலமெங்கும் தேடிப்போய் வேட்டையாடும். மலைக்காடை, நிலமெங்கும் இருக்கும் இரையைத் தனது கூட்டுக்கு வரவழைத்து வேட்டையாடும்” என்றார்.

வியப்புற்றபடி, ``எப்படி?!” எனக் கேட்டான்.

பேரரசர் சொன்னார், ``மலைக்காடை, பாறை இடுக்குகளில் இருக்கும் நாகர வண்டின் இறகுகளைக் கொத்திக் கொண்டுவந்து தனது இருப்பிடத்தில் வைத்துக்கொள்ளும். நாகர வண்டின் மணம் காற்றில் கண நேரத்தில் பரவக்கூடியது. அந்த மணத்தை நுகர்ந்தவுடனே காட்டில் உள்ள வண்டினங்கள் எல்லாம் அதை நோக்கிப் பறந்துவரும். சில்வண்டு தொடங்கி எரிவண்டுகள்  வரை அதை நோக்கி வந்தவண்ணமேயிருக்கும். தனது கூட்டில் இருந்தபடியே வந்துசேரும் வண்டினங்களை வளைத்து வளைத்து வேட்டையாடும் மலைக்காடை” என்றார்.

ஹிப்பாலஸ் தனது மனக்கண்ணில் மலைக்காடையை உருவகப்படுத்த முயன்றபோது குலசேகரபாண்டியனின் முகமே தெரிந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

On 27.2.2018 at 6:57 AM, suvy said:

தொடர்களுக்கு நன்றி நவீனன்.......!  tw_blush:

தொடர்ந்து கருத்துக்கள் எழுதி நீங்கள் தரும் ஊக்கதுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.