Jump to content

வீரயுக நாயகன் வேள் பாரி


Recommended Posts

வீரயுக நாயகன் வேள்பாரி - 79

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p83a_1524046592.jpg

ஹிப்பாலஸ் வஞ்சி நகரை அடைந்து ஒரு வாரத்துக்குப் பிறகுதான் கால்பா புகார் நகரைச் சென்றடைந்தான். இருவரும் குலசேகரபாண்டியனின் திட்டத்தை இரு பெருவேந்தர்களிடமும் விளக்கினர். பறம்பிடம் தோற்றதால் இருவருமே அவமானப்பட்டுக் குறுகிக்கிடந்தனர். செங்கணச்சோழன் கால் எலும்பு முறிந்து உயிர் பிழைத்ததே பெரும்பாடாகிப்போனது. வலதுகாலை இழுத்து இழுத்து, கோலின் துணைகொண்டே நடக்கும் நிலையில் இருந்தான். ஆனால், பறம்பை அழித்தொழிக்கும் வாய்ப்பு பாண்டியனின் மூலம் கிடைக்கிறது எனத் தெரிந்த கணமே வெகுண்டெழுந்தான். தந்தை சோழவேலன், `சற்றே நிதானித்து முடிவெடுப்போம்’ என்று சொல்வதற்கான இடமே அன்றைய அரசவையில் எழவில்லை. சோழப்படையின் அத்தனை ஆற்றல்களையும் கொண்டுவந்து குவிக்க ஆயத்தநிலையில் உள்ளதாக அறிவித்தான்.

உதியஞ்சேரல் சட்டென முடிவெடுத்துவிடவில்லை. `மலைப்பகுதியில் இவ்வளவு திறன்மிகுந்த ஏற்பாடுகளைச் செய்துமே நம்மால் தாக்குதலில் வெற்றிகொள்ள முடியவில்லை; சமவெளிப் போரில் பாரியை வீழ்த்த முடியுமா?’ என்று சிந்தித்தபடியே இருந்தான். ஹிப்பாலஸ், பொறுமையாகப் பல விளக்கங்களைக் கொடுத்தான். சேரனும் சோழனும் என்ன காரணத்துக்காகப் பறம்பின் மீது படை யெடுத்தார்களோ, அந்தச் செல்வங்களை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும்; தனக்குத் தேவை பறம்பின் வீழ்ச்சி மட்டுமே என குலசேகரபாண்டியன் தெளிவுபடுத்திவிட்டான் என்பதை மீண்டும் மீண்டும் கூறினான்.

தேவாங்கு, கொல்லிக்காட்டு விதை, பாழிநகர் மணிக்கற்கள் என அனைத்தின் மீதும் ஹிப்பாலஸின் கனவு நிலைகொண்டிருந்தது. அதனால்தான் பாண்டியனின் போர்த் திட்டத்தோடு மற்ற இரு பேரரசுகளையும் இணைக்கும் வேலையில் முனைந்து ஈடுபட்டான்.

சேரனும் சோழனும் பாரியிடம் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்நிலையில், அவனை எப்படியாவது அழிக்க வேண்டும் எனத் தீவிரத்தோடு போர்புரிவர். அதுமட்டுமன்று, தனது தலைமையில் நடக்கும் ஒரு போரில் அவர்கள் பங்கெடுப்பதே பாண்டியப் பேரரசின் முதன்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் செயல்தானே! ஒரு போர் தொடங்கும்போதே மறைமுகமாக உயர்வை வழங்குவதை எண்ணி மகிழ்ந்தார் குலசேகரபாண்டியன். அதனால்தான் ஹிப்பாலஸை இந்தச் செயலை நோக்கித் தூண்டினார்.

p83b_1524046606.jpg

மூன்று பேரரசுகளும் அவை உருவான காலம்தொட்டு தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டதில்லை. உள்ளுக்குள் எரியும் பகையெனும் நெருப்பை அவை ஒருபோதும் அழித்துக்கொண்டதில்லை. சிற்றரசுகளையும் சிறுகுடிகளையும் வீழ்த்துவதில் இன்றளவும் பேரரசுகளின் படைகளுக்கிடையான மோதல் தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கிறது. ஆனாலும் யவன வணிகத்தால், கடந்த சில தலைமுறைகளாக மூன்று பேரரசுகளும் பெருஞ்செல்வச்செழிப்பை எட்டியுள்ளன. அரசின் வலிமையை ஆளும் நிலப்பரப்பு மட்டும் தீர்மானிப்பதில்லை; அதனிடமிருக்கும் செல்வங்களும் முக்கியமானவை என்பதை உணர்ந்துள்ளன. அதனால்தான் முத்துகள் கொழிக்கும் கடல்வளத்தையும், மிளகு தொடங்கி எண்ணிலடங்காத வாசனைப் பொருள்களும் மருத்துவப்பொருள்களும் விளைந்துகிடக்கும் மலைவளத்தையும் தனதாக்கிக்கொள்ள விடாமல் முயல்கின்றனர். ஹிப்பாலஸின் இந்த முயற்சிக்கு மூன்று பேரரசுகளும் இசைவு தெரிவித்தது இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியே. இத்தனை காலங்களாக எந்த வளத்துக்காக இந்த மூவரும் தனித்தனியே போரிட்டார்களோ, அதே நோக்கத்துக்காகத்தான் இப்போது மூவரும் இணைந்து போரிட முடிவுசெய்துள்ளனர். இந்தப் போர், வெளிப்படையாக எதிரியை நோக்கியது. ஆனால், ஆழத்தில் உடன் இருப்பவரின் இழப்பைக் கண்டு மகிழக்கூடியது.

பாரி வேட்டுவன்பாறைக்கு வந்ததிலிருந்து போர்ச்சூழலைப் பற்றிய உரையாடல்கள் நாள்தோறும் நடந்தபடியே இருந்தன. ``தாக்குதலுக்கு எல்லா வகையிலும் நாம் ஆயத்தமாக வேண்டும்’’ என, தொடர்ந்து வற்புறுத்தப்பட்டது.

``நாம் இறங்கிப்போய்த் தாக்கப்போவதில்லை; எதிரி மலையேறி வந்தால் நாம் தாக்குவதற்குப் புதிதாய் எதுவும் தேவையில்லை. பிறகு ஏன் பதற்றமடைகிறீர்கள்?” என்றான் பாரி.

பாரியின் கருத்தை மறுத்து உரையாடுதல் எளிய செயலன்று. தேக்கன் மட்டுமே மிக எளிதாக அதைக் கைக்கொள்வான். சற்றே தயங்கி, ஆனால் உறுதியாகப் பேசக்கூடியவன் முடியன். வேட்டூர் பழையன் பாரியின் கூற்றுக்கு மறுப்பாகத்தான் பேசத் தொடங்குவார். ஆனால், அவன்மீதுள்ள வாஞ்சையால் எப்போது திசைமாறினோம் என்பதை அறியாமலேயே பாரியின் கருத்துக்கு உடன்பட்டுப் பேசிக்கொண்டிருப்பார். இவர்கள் எல்லோரிலும் ஒரேயொரு விதிவிலக்கு வாரிக்கையன் மட்டும்தான். அவருடன் பேசும்போது பாரியிடம் ஏற்படும் மாறுபாட்டை மற்றவர்கள் எளிதில் உணர முடியும். ஏனெனில், பாரியின் தந்தையே அவரின் சொல்கேட்டு வளர்ந்தவர்தான். வாரிக்கையன் இன்னும் எவ்வியூரில்தான் இருக்கிறார். போர்க்களம் பற்றிய தற்போதைய உரையாடலில் அவர் கருத்துகள் ஊடாடவில்லை.

மழைக்காலம் தொடங்கியது. பாண்டியர் படையின் பாடிவீட்டுக் கூடாரங்கள் தென்திசை நோக்கி இடமாறத் தொடங்கின. ஆயிரக்கணக்கான பொருள்களின் இடப்பெயர்வு நடந்தது. எண்ணற்ற யானைகள் இந்தச் செயலில் ஈடுபடுத்தப்பட்டன. இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதைப் பறம்புவீரர்கள் மலையின் மீதிருந்து கவனித் தபடியே இருந்தனர். வெள்ளடிக்குன்றிலிருந்து நெடுங்குன்று வரை கூடாரம் அமைத்திருந்த படை,  இப்போது  முழுமுற்றாக நெடுங்குன்றி லிருந்து தென்புறமாக இடமாறிக்கொண்டிருந்தது. வேட்டுவன்பாறை என்பது பறம்பின் மிக முக்கியமான இடம் என்பதால், தங்களின் இருப்பிடத்தை மிகவும் தள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மயிலா கருவுற்றிருந்ததால் அவளுக்குக் கனிகளைக் கொடுத்து உபசரிக்க ஆதினியை வரச்சொல்லியிருந்தான் பாரி. அவளும் தன் தோழிகளோடு வேட்டுவன்பாறைக்கு வந்திருந்தாள். சில நாள்கள் அங்கேயே தங்கியிருந்தான் பாரி. அடைமழை முடிவுற்ற மறுநாள் பறம்பின் வீரன் ஒருவன் பாரி இருந்த குடில்நோக்கி ஓடிவந்தான். அவன் சொன்ன செய்தி கேட்டு எல்லோரும் குன்றின் மேல் ஏறி நின்று பார்த்தனர். தென்திசையிலிருந்து பெரும்படை ஒன்று அணியணியாய் வந்துகொண்டிருந்தது. படையின் முன்னணி வீரன் ஏந்தியிருந்த பதாகையில் சேரனின் வில் பொறிக்கப்பட்டிருந்தது. அடுத்த பத்தாம் நாள் வடதிசையிலிருந்து வந்த படை அணியினர் புலிக்கொடி ஏந்திய பதாகையைச் சுமந்துவந்தனர். இதுவரை காரமலையின் அடிவாரம் இருந்த மூன்று குன்றுகளின் மேலிருந்து பறம்புவீரர்கள் கண்காணித்து க்கொண்டிருந்தனர். இப்போது ஆறு குன்றுகளின் மேலிருந்து கண்காணிக்கவேண்டியிருந்தது. வந்து குவியும் படைவீரர்களின் எண்ணிக்கை எல்லையில்லாத விரிவை எய்திக்கொண்டிருந்தது.

மூவேந்தர்களும் படையை ஒரு முனையில் குவிக்கின்றனர் என்ற செய்தி உறுதிப்பட்ட பிறகு, பறம்பின் எல்லா திசைகளிலிருந்தும் வீரர்கள் கீழ்த்திசைக்கு அழைக்கப்பட்டனர்.  வாரிக்கையனும் கூழையனும் சில நாள் இடைவெளியில் வேட்டுவன்பாறைக்கு வந்துசேர்ந்தனர்.

ருவூலப் பொறுப்பாளர் வெள்ளி கொண்டாரைத் தவிர மதுரையின் அரண்மனை நிர்வாகப் பொறுப்பிலிருந்த அனைவரும் வெங்கல்நாட்டுக்கு வந்துசேர்ந்தனர். குட்டநாட்டு அமைச்சன் நாகரையன் வந்துசேர்ந்தான். ஆயிமலையில் நடைபெற்ற தாக்குதலில் குடநாட்டுத் தளபதி எஃகல்மாடன் தலைமையிலான படை மட்டுமே முழுமுற்றாக அழிவுற்றது. குட்டநாட்டுத் தளபதி துடும்பன் தலைமையிலான படை பறம்புக்குள் நுழையாமலேயே நின்றுவிட்டது. இதன் பின்னணியில் உதியஞ்சேரலின் துரோகமும் அடங்கியுள்ளதாக நினைத்த குடநாட்டு வேந்தன் குடவர்கோ இன்னொரு கூட்டுப்போரில் பங்கெடுக்க விரும்பவில்லை. எனவே, குட்டநாட்டுப் படை மட்டுமே போர்க்களம் வந்தது. சேரநாட்டின் அமைச்சராக நாகரையனே விளங்கினான். சோழநாட்டு அமைச்சன் வளவன்காரியும் வந்து சேர்ந்தான். பாண்டியப் பேரரசின் தலைமை அமைச்சர் முசுகுந்தர் எல்லோரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

அமைச்சர்களின் சந்திப்பு நடந்த பிறகுதான் வரப்போகும் படைகளின் தன்மையும் எண்ணிக்கையும் முழுமையாகத் தெரியவந்தன. அந்தப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள், அவற்றைச் செப்பனிடுவதற்கும் புதிதாக உருவாக்குவதற்கும் தேவையான ஏற்பாடுகள், உணவு ஏற்பாடுகள், பண்டகச்சாலைகள், மருத்துவர்கள், சிகிச்சைக்கான பகுதிகள், குதிரைகளுக்கும் யானைகளுக்குமான கட்டுத்தறிகள், போர்க்களத்துக்கான தேர்கள், அவற்றுக்கான பராமரிப்பாளர்கள்,  பிற கருவிகள், போர் விலங்குகளுக்கான தானியங்கள், கூலங்கள் ஆகிய எல்லாவற்றையும் செம்மையுறக் கணக்கிட்டனர்.

பறம்பின் தரப்பில் ஆயத்தங்களைத் தொடங்கவேண்டியதைப் பற்றிய உரையாடல் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. பாரி ஒப்புதல் வழங்கிய பிறகு சிறுபாழி நகரில் ஆயுதங்களை உருவாக்கிக்கொண்டிருந்த அத்தனை பேரும் கீழ்த்திசைக்கு இடம் மாறினர். மூவேந்தர்களின் போர்ப்பாசறை, வேட்டுவன் பாறையிலிருந்து பலகாதத் தொலைவில் இருப்பதால் தங்களின் இருப்பிடத்தையும் மாற்ற முடிவுசெய்தனர்.

வேந்தர்களின் படைக்கலக் கொட்டில் செம்மையுற வடிவமைப்பதற்கான வேலைகள் தொடங்கின. மதுரையிலிருந்து தலைமை அமைச்சர் முசுகுந்தர் வரும்போதே அவருடன் அரண்மனையின் தலைமைக் கணியன் அந்துவனும் வந்திருந்தான். மூலப்படைப் பாசறை அமைக்கப்போகும் நிலப்பகுதிக்கு, மூன்று நாட்டு அமைச்சர்களும் அந்துவனும் மாணாக்கர்கள் சிலரும் புறப்பட்டுப் போயினர். அவர்கள் சென்று சேரும்போது மையூர்கிழார் வரவேற்க நின்றுகொண்டிருந்தார். உடன் பூசகர்களின் குழு ஒன்றும் இருந்தது. முசுகுந்தர் அந்தப் பெரும்நிலப்பரப்பைக் குதிரையில் இருந்தபடியே பார்த்தார். காரமலையின் அடிவாரத்தில் சற்றே திமில் முறுக்கியிருக்கும் பெரும்மேடாக அந்த இடம் இருந்தது. மேட்டின் நடுப்பகுதியில் இறங்கி நின்றனர். மழைநீரை எவ்வளவு குடித்தும் நெகிழ்ந்து கொடுக்காத இறுக்கத்தோடு மண் இருந்தது.

அவர்கள் வந்த சிறிது நேரத்தில் பாண்டியப் பேரரசின் சிறப்புமிக்க முதுயானையை அழைத்துவந்தனர். தாழம்பூ நிறத் தந்தமும் வட்டமாய் அகன்று நடுவில் குழிந்த கும்பங்களும் நீண்டுநெளியும் அழகான வாளும் நாண்பூட்டிய வில்லினையொத்த முதுகெலும்பும் உடைய `பவளவந்திகை’ எனும் பெயர்கொண்ட அந்த யானை, பாசறை நிலத்துக்கு வந்துசேர்ந்தது. உடன் மதுரையின் யானை கட்டுத்தறிப் பொறுப்பாளர் அல்லங்கீரனும் கோட்டைத் தளபதி சாகலைவனும் வந்தனர். 

வண்ணத்தட்டில் வைக்கப்பட்டிருந்த பூக்களையும் கனிகளையும்கொண்டு அந்த இடத்தில் சிறு வழிபாடு ஒன்றை பூசகர் நடத்தினர். பிறகு அந்துவன் கையசைத்து உத்தரவிட்டான். அதுவரை கீழே நின்றிருந்த பாகன், யானையின் மீதேறி அமர்ந்தான். பவளவந்திகை நடக்கத் தொடங்கியது. பாகன் தன்னுடைய கால்கள் பவளவந்திகையின் காதுகளின் பின்புறத்தைத் தொட்டுவிடாமல் மடக்கி வைத்துக்கொண்டான். எந்தத் திசைக்குப் போகவேண்டும் என்ற குறிப்பேதும் பாகனின் கால்கள் சொல்லாததால் யானை அதன் விருப்பத்துக்கு நடந்தது. அந்தப் பெருமேடு முழுவதும் குறுக்கும்நெடுக்குமாக நடந்த பவளவந்திகை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்துசேர்ந்தது.

இப்போது அந்துவன் தன் மாணாக்கர்களை அழைத்துக்கொண்டு யானையின் காலடிகளைப் பார்த்தபடியே உள்ளே போனான். யானையின் காலடி, ஆமையின் ஓடு போன்ற வடிவம் கொண்டது. வெளிவட்டம் மட்டுமல்ல, உள்ளேயும் ஆமையின் ஓட்டில் இருப்பது போன்று விண்மீன்களின் வடிவம்கொண்ட கோடுகள் இருக்கின்றன. யானையின் பாதத்தில் இருக்கும் ரேகைக்கோடுகள் அவை. யானையின் நான்கு காலடிகளும் நான்குவித ரேகைகளைக் கொண்டவை. பவளவந்திகையின் காலடிகள் அந்தப் பெருமேடெங்கும் பதிந்துகிடக்க அவற்றைக் கூர்ந்து கவனித்தபடி அந்துவனும் அவன் மாணாக்கர்களும் நடந்து கொண்டிருந்தனர்.

காலடியின் அச்சில் அசையாமல் பதிவுகொண்ட விண்மீன்களின் வடிவு எந்தத் திசைநோக்கி அமைந்திருக்கிறது என்பதைக் கணித்தபடி ஒவ்வொரு தடத்தையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மழையின் ஈரம் காயாமல் இருந்ததால் காலடித்தடத்தின் உட்கோடுகள் மண்புழுக்களைப் போல் எங்கும் நெளிந்து கிடந்தன. மாணாக்கர்கள் தேர்வுசெய்த காலடிகளை அந்துவன் போய்ப் பார்த்தபடியிருந்தான். நெடுநேரமானது. ஆனாலும் காலடியின் உள்வடிவங்களை உற்றுப்பார்த்து ஒன்றொடு ஒன்றை ஒப்பிட்டுக் கொண்டிருந்தான் அந்துவன். இறுதியாக மூன்று காலடிகளைத் தேர்வுசெய்தான். பெருமேட்டின் உச்சிப்பகுதியில் அமைந்த காலடித்தடத்தில் பாண்டியப் பெருவேந்தனுக்கான பாசறையை அமைக்க இடம் குறித்தான். அதிலிருந்து மிகத்தள்ளித் தென்புறக் காலடித்தடத்தில் சேரவேந்தனுக்கான இடத்தையும் வடகிழக்குப் பகுதியில் சோழனுக்கான இடத்தையும் அந்துவன் தேர்வுசெய்து தந்தான்.

மூன்று பேரரசர்களும் தங்கப்போகும், அவர்களைச் சுற்றிப் பல்லாயிரம் வீரர்கள் மொய்த்துக்கிடக்கப்போகும் அந்த இடத்துக்கு `மூஞ்சல்’ எனப் பெயரிட்டார் முசுகுந்தர். மூலப்படை நிலைகொள்ளப்போகும் படைக்கலக் கொட்டில் மூஞ்சலில் உருவாகத் தொடங்கியது. பேரரசர்களின் பாசறைக் கூடாரம் மிகப் பெரியதாகவும் வசதிமிக்கதாகவும் உட்பாதுகாப்பு அரண்கொண்டதாகவும் அமையத் தொடங்கியது. அவர்களைச் சுற்றி இளவரசர்களும் முக்கியமான சிற்றரசர்களும் தங்குவதற்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. 

குவிக்கப்படும் படைகளை விட்டு மிகத்தள்ளி, பெருமேடு ஒன்றில் விரிவுகொண்ட கூடாரங்கள் எண்ணற்றன அமைக்கப்படுவதை, குன்றின் மேல் நின்று பறம்புவீரர்கள் பார்த்தபடியிருந்தனர். எதிரிப்படைகள் குவிக்கப்ப ட்டிருக்கும் இடத்தை  நோக்கி அதற்கு நேரெதிர்த் திசையில் தங்களுக்கான இடத்தைத் தேக்கன் தேர்வுசெய்தான். காரமலையின் சரிவில் நாகக்கரடு இருக்கிறது சில காதத்தொலைவுக்கு நீண்டுகிடக்கும் கரட்டுமேடு இது; வேட்டுவன்பாறை யளவே உயரம்கொண்டது. பறம்பின் வீரர்கள் நிலைகொள்ள இது ஏற்ற இடம் என்று தேக்கன் முடிவுசெய்தான்.

அவற்றுக்குச் சற்று மேலே காரமலையில் இருபது பனை உயரத்தில் இரலிமேடு இருக்கிறது. எண்ணற்ற குகைப்பாறை களைக்கொண்ட இடம் அது. ஆயுதங்களை வைக்கவும் மருத்துவப் பயன்பாட்டுக்கும் ஏற்ற இடமாகவும் அது இருக்கும் எனக் கருத ப்பட்டாலும், அந்த இடத்தைத் தேர்வுசெய்யச் சற்றே தயங்கினான் தேக்கன். வாரிக்கையனோ துணிந்து தேர்வுசெய்யச் சொன்னான். காரணம், அந்தக் குகைகளின் தன்மை. வேர்க்கொடியைப்போல ஒன்றையொன்று இணைத்துச் செல்லும் எண்ணற்ற குகைகளைக்கொண்ட இடம் அது. மிக நன்கு பழக்கப்பட்டவர்களால் மட்டுமே அதற்குள் போய் வெளிவர முடியும். போரின்போது வீரர்கள் விரைவாக வந்து திரும்பும் தன்மையுடன் அமைவிடம் இருக்க வேண்டும் என்று தேக்கன் தயங்கினான். ஆனால் வாரிக்கையனோ, ``இதுதான் போருக்குப் பொருத்தமான அமைவிடம்’’ என்றான்.

இரலிமேட்டின் இடதுபுறம் இருந்த சமதளமான பகுதிகளிலும் மலைச்சரிவுகள் முழுமையும் குடில்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. பறம்புவீரர்கள் எல்லா திசைகளிலிருந்தும் இரலிமேட்டுக்கு வரத் தொடங்கினர். ``இவ்விடம்தான் நாம் முகாமிட்டுள்ள இடம் எனத் தெரிந்த கணத்திலிருந்து, எதிரிகள் நம்மைக் கண்காணிப்பார்கள். மையூர்கிழார் ஆள்கள் அவர்களுக்கு நன்கு உதவிசெய்யக்கூடும். எனவே, பறம்புவீரர்கள் இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் வந்து சேர்வதையே எதிரிகளால் கணிக்க முடியாதபடி இருக்க வேண்டும்” என்றார் வாரிக்கையன்.

``இரவு அடிக்கடி மழை பெய்வதால், சுளுந்துக் கம்பை வெட்டி, பந்தம் ஏற்றுங்கள்’’ என்றார். சுளுந்துக் கம்பைக் கூராக வெட்டி பந்தம் ஏற்றினால் அது அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். கீழே போட்டு மண் அள்ளிக்கொட்டினால்தான் அணையும். மற்றபடி மழைத்துளிக்கெல்லாம் எளிதில் அணையாது.

சமதளத்திலிருந்து பார்த்தால் குகையின் தன்மையை எளிதில் மதிப்பிட முடியாது. ஒவ்வொரு குகைக்குள்ளும் எண்ணிலடங்காத வீரர்கள் தங்கியிருக்க முடியும். குகைகளின் தன்மை, நீர்க்கசிவுகொண்ட குகைகள், நன்கு காற்றோட்டம் உள்ள குகைகள், மாட்டு மந்தைகளையே அடைக்கக்கூடிய பரப்பைக் கொண்ட குகைகள் என அத்தனையையும் வகை பிரித்து வீரர்களுக்கு விளக்கினார் வாரிக்கையன்.

குகைகளுக்குள் உரிய இடங்களில் விளக்குகளை அமைத்து, குறியீடுகளை உருவாக்கினார். பறம்புவீரர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். சிறுபாழியில் இருந்த தொழிற்கூடங்கள் அத்தனையும் இரலிமேட்டுக்கு இடம்பெயர்ந்தன. பெரும்பான்மையான குகைகள் ஆயுதக்கூடங்களுக்காக மட்டுமல்லாமல் உலைக்களங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டன. மிகவிரிந்த நிலவமைப்பும் காற்றோட்டமும் கொண்ட குகைகள் உலைக்களங்களால் நிரம்பின. அவை மட்டுமல்லாமல் வெளிப்புறத்திலும் எண்ணற்ற உலைக்களங்களை அமைத்துக் கொண்டிருந்தனர்.

p83c_1524046623.jpg

குதிரைகளுக்கான கட்டுத்தறிகள் இரலிமேட்டின் தென்புறச் சரிவில் அமைக்கப் பட்டுக்கொண்டிருந்தன. குகைகளுக்கும் கட்டுத்தறிகளுக்கும் இடையில் உணவுக் கூடங்களை அமைத்தனர். மருத்துவக்கூடங்கள் அமைப்பது பற்றிப் பேசப்பட்டது. ``இந்தப் போரில் மருத்துவர்களின் பணி மிக முக்கியமானதாக இருக்கப்போகிறது. எனவே, முறியன் ஆசானை அழைத்துவர வேண்டும்’’ என்றார் பழையன்.

நோய்க்கான மருந்தைத் தருவதில் வல்லவர்கள் எண்ணற்றோர் உள்ளனர். ஆனால், போரில் ஏற்படப்போவது காயங்களும் முறிவுகளும்தான். அவற்றுக்கு மருந்தளிப்பதில் மிக வல்லவர் முறியன் ஆசான்தான். பச்சைமலையின் வடதிசையில் ஓடும் மறையாற்றின் கரையில் அவர் இருக்கிறார். ``வயதாகி மிகத் தளர்ந்த அவரை இவ்வளவு தொலைவு வரவழைக்க வேண்டுமா?” எனத் தயங்கினான் தேக்கன்.

வாரிக்கையனோ, ``கட்டாயம் அவர் இங்கு நம்மோடு இருக்க வேண்டும்” என்றார்.

சிவிகையில் உட்காரவைத்துத் தூக்கிவரும் எண்ணத்தோடு செய்தி அனுப்பப்பட்டது. முதலில் தயங்கிய முறியன் ஆசான், பிறகு ஒரு நிபந்தனையோடு வர ஒப்புக்கொண்டார். “எனது சிவிகையைத் தூக்கிவர இருவரை மட்டுமே அனுப்ப வேண்டும். அவர்களும் என்னைக் கொண்டுவந்து சேர்க்கும் வரை உணவேதும் உண்ணக் கூடாது.”

தேக்கன் உள்ளிட்ட எல்லோரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ``பத்திலிருந்து பன்னிரண்டு நாள் பயணத் தொலைவை எப்படி உணவின்றிக் கடக்க முடியும்? அதுவும் சிவிகையைத் தூக்கிக்கொண்டு!” எனப் பலரும் தயங்கியபோது வாரிக்கையன் சொன்னார், ``மலைப்பாதையில் உணவு ஏதுமின்றி சிவிகையைத் தூக்கிவரும் வீரர்கள் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வர முடியும். அதற்குப் பிறகும் அவர்கள் ஓடிவந்தால் மயக்கமடைந்து வீழ்வார்கள். அவர்களை குணப்படுத்தி மீண்டும் சிவிகையைத் தூக்கவைப்பது மருத்துவராகிய அவருடைய வேலை. நாம் ஏன் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்?” என்றார்.

சரியென ஒப்புக்கொண்ட தேக்கன், வலிமை மிகுந்த போர்வீரர்கள் இருவரைத் தேர்வுசெய்தான். ஆனால் வாரிக்கையனோ, ``அவர்கள் வேண்டாம்” என்று சொல்லி, தோற்றத்தில் எளிமையான இருவரை அனுப்பிவைத்தார்.

பன்னிரண்டு நாளில் வந்து சேரவேண்டிய அவர்கள் எட்டாம் நாள் காலையிலே வந்துசேர்ந்தனர். இதுதான் நடக்கும் என வாரிக்கையனுக்குத் தெரியும். எனவே, அவர் வியப்பேதுமடையவில்லை. ஆனால், மற்ற அனைவரும் வியப்பால் கிறங்கிப்போனார்கள். சிவிகையைத் தூக்கிவந்த இருவரும் புறப்பட்ட இடத்திலிருந்து இப்போதுவரை உணவு ஏதும் உண்ணவில்லை; முழுவேகத்தோடு வந்துசேர்ந்துள்ளனர் என்ற செய்தி வீரர்கள் எல்லோருக்கும் பரவியது. எப்படி இது நடந்தது எனப் பலரும் பேசிக் கொண்டிருக்கையில் மருத்துவர்களிடமிருந்து உண்மை வெளிவந்தது, ``முறியன் ஆசான் செய்து வைத்துள்ள திங்கள் மூலிகையை உட்கொண்டால், பல நாள்களுக்குப் பசியெடுக்காது; ஆற்றலும் குறையாது” என்று.

மருத்துவனின் வருகை மருத்துவத்தால் அறியப்பட வேண்டும். முறியன் ஆசானின் வருகை அப்படியே அறியப்பட்டது. பறம்பின் அனைத்து வகையான மருத்துவர்களும் முன்னரே இரலிமேட்டுக்கு வந்துசேர்ந்தனர். மருத்துவப் பேராசானோடு பணிசெய்யும் வாய்ப்புக்காகப் பல காலம் காத்திருந்தவர்கள் அவர்கள்.

போர் என்பது, எதிரிகள் இருவருக்கிடையில் நடப்பது மட்டுமன்று; வீரர்களுக்கும் மருத்துவர்களுக்கு மிடையில் நடப்பதும்கூட. எதிரிகளுக்கு மருத்துவனால் குணப்படுத்த முடியாத காயங்களை உருவாக்கவே ஒவ்வொரு வீரனும் நினைக்கிறான். `எதிரிகள் எவ்வளவு காயத்தை உருவாக்கினாலும் குணப்படுத்தி மீண்டும் வீரனை வாள் ஏந்தவைப்பேன்’ என்றே ஒவ்வொரு மருத்துவனும் மூலிகைச்சாற்றைப் பிழிகிறான்.

மருத்துவனின் சிகிச்சை மீதிருக்கும் நம்பிக்கையே வீரனின் துணிச்சலைப் பல நேரங்களில் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நாளும் போர் முடியும் கணத்தில்தான் போரை அறிந்துகொள்ளுதல் தொடங்குகிறது. அன்றைய இரவின் காட்சிகள்தாம் மறுநாள் அவனது மனஉறுதியைத் தீர்மானிக்கிறது. மரணமெய்தியவர்கள் மரணத்தின் மீது அச்சமூட்டுவதில்லை. உடல் சிதைக்கப்பட்டு, மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாமல், எங்கும் கதறிய ஓசையோடு இழுபட்டுக் கிடப்பவர்கள்தாம் ஒவ்வொரு போர்வீரனையும் நிலைகுலையச் செய்கிறார்கள். அதனால்தான் போர்க்களத்தில் தாக்குண்டவர்களை மருத்துவசாலை நோக்கித் தூக்கிவரும் வேலையை வீரர்கள் செய்யக் கூடாது எனப் பேரரசுகள் விதிசெய்துள்ளன; அதைச் செய்வதற்குத் தனிப்படையை அமைத்துள்ளன. போரின் விதியை வீரனின் வாளும் மருத்துவனின் பச்சிலைகளும் இணைந்தே தீர்மானிக்கின்றன.

பறம்புவீரர்கள் இணையற்ற நம்பிக்கையோடு வாளினை ஏந்தவும் நாணினை இழுக்கவும் எதிரிப் படையைச் சிதைத்து முன்னேறவும், மருத்துவர்களும் முக்கியக் காரணம். அதுவும் முறியன் ஆசான் களம் நோக்கி வந்துள்ள செய்தி பறம்புவீரர்களுக்குக் கட்டற்ற வேகத்தைக் கொடுத்தது. மரணத்தை மிதித்து நடக்க ஒவ்வொரு வீரனும் ஆசைப்பட்டான்.

முறியன் ஆசான் இரலிமேட்டுக்கு வந்த அன்றுதான் மூஞ்சலில் வேந்தர்களுக்குக் கூடாரங்கள் அமைக்கும் பணி முடிவுக்கு வந்தது. மூஞ்சல் பகுதிக்கு மட்டும் தனித்துவமான பாதுகாப்பு அரண்கள் உருவாக்கப்பட்டன. மூவேந்தர்களுக்கு மூன்று பெருங்கூடாரங்கள். மூவரும் சந்தித்து உரையாட மாளிகை வடிவிலான பெருங்கூடாரம் ஒன்று. வேந்தர்களுக்கான பணியாளர்கள் மருத்துவர்கள், உணவுச்சாலைகள் ஆகியவற்றுக்காக மூன்று கூடாரங்கள். போரில் பங்கெடுக்கும் அரச குடும்பத்தினர் தங்குவதற்காக ஐந்து கூடாரங்கள் என்று மொத்தம் பன்னிரு கூடாரங்கள், ஆயுதப்பயிற்சிக்கான களம் என அனைத்தும்கொண்ட விரிவான அமைப்போடு மூஞ்சல் நகர் தயாரானது.

p83d_1524046637.jpg

மூஞ்சலின் பாதுகாப்புக்குத் தனித்த அரண் அமைக்கப்பட்டது. பெரும்பெரும் மரத் தூண்களாலும் ஆயுதங்களாலும் அமைக்கப்பட்ட அரண் அது. அரணுக்கு வெளியில்தான் படைகள் பலகாதத் தொலைவுக்குப் பரவியிருந்தன. இரவில் கடுங்குளிர் இருந்தாலும் பகற்பொழுதின் வெயில் இன்னும் சூடேறாமல்தான் இருந்தது. மூஞ்சலின் அரண்காவலர்கள் நான்கு முனைகளிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மேடையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர். தென்திசையில் நின்றிருந்த படை வீரர்களிடமிருந்து உற்சாகப் பேரோசை மேலேறிவந்தது.

கடல்போல் பரவிக்கிடந்த படைவீரர்களின் வாழ்த்தொலி முழங்க உதியஞ்சேரலின் தேர் தென்திசையிலிருந்து மூஞ்சல் நோக்கி வந்துகொண்டிருந்தது. தேருக்கு முன்னால் சேரநாட்டுத் தளபதி துடும்பன் குதிரையில் வந்துகொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் கவசவீரர்கள் அணிவகுத்து வந்தனர். நாணேற்றப்பட்ட வில்லைப் பதாகையில் தாங்கிய வீரன் முதலாவதாக வர, அவனைத் தொடர்ந்து அணியணியாய் சேரவீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.

மூன்று பேரரசுகளின் அமைச்சர்களாகிய முசுகுந்தரும் நாகரையரும் வளவன்காரியும் உதியஞ்சேரலை வரவேற்க மூஞ்சலின் வாயிலில் காத்துநின்றனர். முசுகுந்தர், பாண்டிய முறைப்படி அவருக்கான வரவேற்பை வழங்கினார். உதியஞ்சேரல் மூஞ்சலுக்குள் நுழைந்தான். அரசகுல முதுயானை பவளவந்திகை மாலை சூட்டி, வணங்கி, தனது முதுகின் மேலிருந்த அம்பாரியில் ஏற்றிக்கொண்டது.

மூஞ்சலின் வீதியெங்கும் நிறைந்துள்ள பாதுகாப்பு வீரர்களின் வாழ்த்தொலிகளை ஏற்றபடி தனக்கான பாசறைக் கூடாரத்துக்குள் நுழைந்தான் உதியஞ்சேரல்.

தான் நினைத்ததைவிட உதியஞ்சேரல் இளமையோடு இருக்கிறார் என்று கருதிய முசுகுந்தருக்கு, அவனுடைய தோளின் மேல் கருங்குரங்குக்குட்டி ஒன்று உட்கார்ந்திருப்பது ஏன் என்பது புரியவில்லை. 

p83e_1524046652.jpg

உதியஞ்சேரல் வந்த மறுநாள் சோழப் பேரரசனுக்கான வாழ்த்தொலிகளால் படைக்கலக்கொட்டில் குலுங்கியது. புலிக்கொடி ஏந்திய பதாகையை யானையின் மீது தாங்கிப்பி டித்த வீரன் முன்வர அவனைத் தொடர்ந்து பேரரசரின் தேர் வந்துகொண்டிருந்தது. தேருக்குள் தந்தையும் மகனும் இருந்தனர். செங்கணச்சோழனுக்குக் கால் முறிவுகொண்ட தால் அவனால் நின்று போரிட முடியாது. மற்ற இரு பேரரசர்களும் போரில் நேரடியாக ஈடுபடும்போது சோழப்பேரரசர் மட்டும் நேரடிப்போரில் ஈடுபடாமலிருந்தால் அது சோழநாட்டுக்குப் பேரவமானமாகும். எனவே, ``மகனின் சார்பில் நான் போரில் பங்கெடுப்பேன்” என்று கூறி, சோழவேலன் உடன்வந்தார்.

அன்று மாலை வீரமுண்டா வாத்தியம் இடியென முழங்கத் தொடங்கியது. பேரிகையின் ஓசையோ எல்லையில்லாத அதிர்வை உருவாக்கியது. எங்கும் போர்க்களத்துக்குரிய கருவிகள் இசைக்கப்பட்டன. அணிவகுத்து வந்த யானைகளின் மணியோசை பேரிகையை விஞ்சிக்கொண்டிருந்தது. வீரர்கள், விண்ணைப் பிளப்பதைப்போல முழக்கமிட்டனர். வெடிப்புற்ற தந்தமும் விளைந்த நகமும், முதுகினில் சங்கு வடிவப் புள்ளிகளையும்கொண்ட பாண்டியநாட்டுப் பட்டத்துயானையின் மீது அமர்ந்தபடி மூஞ்சலுக்குள் நுழைந்தார் குலசேகரபாண்டியன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply

வீரயுக நாயகன் வேள்பாரி - 80

 

 

 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p83a_1524635053.jpg

போர்க்கருவிகளின் தொகுப்பாக விளங்கும் படைக்கலப் பேரரங்கு, மூன்று இடங்களில் உருவாக்கப்பட்டது. பாண்டியனின் பேரரங்கு மூஞ்சலின் அருகில் இருந்தது. சேரனின் பேரரங்கு தென்புறமும், சோழனின் பேரரங்கு வடபுறமும் அமைக்கப்பட்டன. மூவேந்தர்களுக்கான போர்க்கருவிகள் முழுமையும் இங்குதான் சேகரித்துவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பேரரங்கும் மூஞ்சல் நகரின் பரப்பளவைக்கொண்டிருந்தது. அவற்றுள் பத்துக்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்தன.

ஒவ்வொரு கூடாரத்திலும் ஒவ்வொருவிதமான ஆயுதம் வைக்கப்பட்டிருந்தது. ஆயுதங்களை ஒழுங்குமுறைப்படி அடுக்கிவைப்பதும், தேவைக்கேற்ப நாள்தோறும் அவற்றை எடுத்து போர்க்களத்துக்கு அனுப்புவதும் தனித்ததொரு கலை. இந்தக் கலையைச் செய்பவரை `ஆயுதவாரி’ என்று அழைத்தனர்.

நான்கு வகையான வில்களும் பதின்மூன்று வகையான அம்புகளும் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொருவிதமான அம்புக்கட்டும் தனித்தனியே அடுக்கிவைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றை எடுத்துத் தர வசதியாக இருக்கும். களம் புகும் வீரன் கையில் ஏந்தியிருக்கும் வில்லுக்குத் தகுந்த அம்புகள் அவனது அம்பறாத்துணிக்கு வந்துசேர வேண்டும்.

ஆயுதங்களை படைக்கலப் பேரரங்கிலிருந்து வீரர்களின் போர்ப்பாசறைக்கு நள்ளிரவுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். பொழுது விடியும்போது அந்தப் பாசறையில் இருக்கும் வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் அவர்களின் கண்கள் முன் பளிச்சிடவேண்டும். `என்னை ஏந்திக்கொள்’ என்ற ஆயுதங்களின் அழைப்பை வீரர்கள் உணரவேண்டும்.

படைப் பிரிவுகளின் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட வகை வில்லை மட்டுமே பயன்படுத்துபவராக ஒவ்வொரு பிரிவினரும் இருப்பர். அந்த வகை வில்லுக்குப் பொருத்தமான அம்புக்கட்டுகள் அங்கு வந்துசேர வேண்டும். அதில் ஏதாவது குழப்பம் நிகழ்ந்தால், அதிகாலையிலேயே சிக்கல் உருவாகிவிடும். எனவே, ஆயுதங்களை பாசறைக்குப் பிரித்துத் தரும் பொறுப்பை வகிக்கும் `ஆயுதவாரி’ மிக முக்கியமானவராகக் கருதப்படுவார். போர்க்களத்தில் தளபதிக்கு சமமான அதிகாரம்கொண்டவராக போர்களக் கொட்டிலில் ஆயுதவாரி விளங்குவார். 

மூன்று பேரரசுகளும் அனுபவமேறியவர்களைத் தான் ஆயுதவாரிகளாக நியமித்தன. பல நேரங்களில் படைகளின் தளபதியையே சமாளிக்கவேண்டிய பொறுப்பு ஆயுதவாரிக்கு உண்டு. குறிப்பிட்டவகை ஆயுதம்தான் வேண்டும் என்று தளபதி கேட்பார். ஆனால், அந்த வகையான ஆயுதத்தின் இருப்பு மிகக் குறைவாக இருக்கும். எனவே, மற்றவகை ஆயுதத்தைக் கொடுத்து நிலைமையைச் சமாளிக்க வேண்டும். போர் நெருக்கடிகளுக்கு இடையில் அதிகம் மோதிக்கொள்பவராக தளபதியும் ஆயுதவாரியும்தான் இருப்பர். அதனால் ஆயுதவாரி பொறுப்புக்கு நியமிக்கப்படுபவர் வயதானவராக இருப்பது அவசியம். அதுவும் தளபதி மதிக்கும் மனிதராக இருக்குமாறு பார்த்துக்கொள்வர். ஏனென்றால், போர்களத்தினூடே அவர்களின் தேவைகளையும் இருப்புகளையும் பற்றிப் பேசிக்கொள்ள சில கணங்களே வாய்க்கும். அதற்குள் அனைத்தையும் புரிந்துகொள்பவராகவும் பரிமாறிக்கொள்பவராகவும் இருக்க வேண்டும்.

p83b_1524635069.jpg

இருபது வகையான வாள்கள், எட்டு வகையான வேல்கள், மூன்று வகையான குறுவாள்கள், மூன்று வகையான தண்டங்கள், மூன்று வகையான கேடயங்கள் என அனைத்தும் எந்த இடத்தில் எவ்வளவு இருக்கின்றன, எந்தெந்தப் பாசறைக்கு எந்தெந்த வகையான ஆயுதங்களை எவ்வளவு அனுப்ப வேண்டும், கடைசி வரை இருப்பு குறையாமல் எப்படிச் சமாளிப்பது, உற்பத்திக் களத்திலிருந்து தேவையான ஆயுதங்களை எப்படி விரைவுபடுத்தி வாங்குவது ஆகியவற்றில் மிகுந்த கவனத்தோடு செயல்படுபவராக ஆயுதவாரிகள் இருந்தனர்.

போர்க்களக் கொட்டில்களில் ஆயுதங்கள் பெருமரச்சாரங்களில் ஏற்றி அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இரலிமேட்டின் முதல் மூன்று குகைகள் முழுக்க ஆயுதங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. ஒவ்வொரு குகையும் பத்து பனை நீளத்துக்கு உள்ளே செல்லக்கூடியதாக இருந்தது. பறம்பின் ஆயுதப் பொறுப்பாளனாக சிறுபாழியைச் சேர்ந்த முதுவேலன் நியமிக்கப்பட்டார். குகைகளுக்குள் விளக்குகள் எந்நேரமும் எரிந்துகொண்டிருந்தன. ஆயுதங்களை எடுத்துத் தர ஏதுவாக மரச்சாரங்களை அடிக்கும் பணி இரண்டே நாளில் முடிவுற்றது. அதன் பிறகு ஆயுதங்கள் அடுக்கப்பட்டன. போர்க்களம் செல்ல முடியாத வயதானவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மூங்கிலும் குமிளங்கொம்பும் மட்டுமே வில் செய்ய பயன்படுத்தப்பட்டன. உலோகத்தால் வில் செய்யும் பழக்கம் பறம்பில் இல்லை. வேந்தர்களின் தரப்பில் முன்கள வீரர்களும் தளபதிகளும் உலோக வில்லையே பயன்படுத்துவர்.  மற்ற வீரர்கள் பயன்படுத்தும் வில்கள் பனைமட்டையாலும் மூங்கிலாலும் ஆனவையாக இருந்தன. ஐந்து, ஏழு, ஒன்பது முடிச்சுகள்கொண்ட வில்களையே வேந்தர்களின் படையினர் பயன்படுத்தினர். பெரும்பாலான முன்கள வீரர்களும் தளபதிகளும் சிறுவிரல் பருமன் அளவு முறுக்கப்பட்ட பட்டுநூலால் ஆன நாணையே பயன்படுத்தினர். ஆனால், பறம்புவீரர்கள் அத்தனை பேரும் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைக்கப்பட்ட நாண் பூட்டிய வில்லையே பயன்படுத்தினர்.

இரும்புக்கிட்டம், சிரட்டைக்கரி, புளியம் விதை மூன்றையும் கருவேலஞ்சாறு விட்டு இடித்து அதனுடன் கூழாங்கல் மாவைச் சேர்த்து ஆயுதங்களுக்கான `வடி’ உருவாக்கப்பட்டது. நான்காம், ஐந்தாம் குகைகள் ஆயுத உருவாக்கங்களுக்கான உலைகளால் நிரம்பி இருந்தன. உலைகளின் தன்மைக்கு ஏற்ப அவை குகைகளைவிட்டு வெளியே பல இடங்களில் அமைக்கப்பட்டன. சிறிய உலைக்கு காற்றடி இல்லாத ஒடுங்கிய பகுதியே ஏற்றது. அந்த வகை உலைகளில்தான் ஆயுதங்களின் நுனிப்பகுதியிலும் விளிம்பின் கூர்முனையிலும் செய்யவேண்டிய முக்கியமான வேலைகளைச் செய்ய முடியும்.

மற்ற காலங்களில் ஆயுதங்களை பெருவுலையில் அடித்தும் வடித்தும் வைத்திருப்பர். அவை எல்லாம் முதல் மூன்று குகைகளில் வந்து நிரப்பப்பட்டுவிட்டன. இப்போது அவை அனைத்தையும் போருக்குப் பயன்படுத்துவதற்கு ஏற்ப இறுதி வடிவம்கொடுக்கும் வேலையைத்தான் நான்காம், ஐந்தாம் குகைகளில் செய்தனர். 

பறம்புவீரர்கள் பயன்படுத்தும் வாள்கள் அனைத்தையும் கலவைத் தொட்டியில் பத்து நாள்கள் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகுதான் போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். பொதுவாக, பறம்புவீரர்களுக்கு போர்க்களத்தில் வாளைப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் வாய்த்ததில்லை. பறம்பின் வில்படையே எதிரிகளை முழுமுற்றாகத் தாக்கி அழித்துவிடும். எனவே, வாளின் வேலை மிகக் குறைவே. ஆனால், இந்தப் போரில் வாள்வீச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு என்பதால், எண்ணற்ற கலவைத்தொட்டிகள் உருவாக்கப்பட்டன. கொடிக்கள்ளி சாம்பல், புறாவெச்சம், எருக்கிலைப்பால், எலிச்சக்கை ஆகிவற்றால் ஆன கலவையில் உலோகங்கள் நாள்கணக்கில் ஊறவைக்கப்பட்டன. அப்படிச் செய்தால் அவை ஒருபோதும் மொட்டையாகாது. வேறு எந்த உலோகத்துடனோ கருங்கற்பாறையிலோ மோதினாலும் இந்த வாளுக்கு சிறு பாதிப்புகூட ஏற்படாது. முனை, எளிதில் மழுங்காது. வாய்ப்பு கிடைக்குமேயானால், எதிரியின் வாளைப் பிளந்து இறங்கும். 

பறம்புவீரர்கள் பயன்படுத்தும் இந்த வகை வாளுக்கு நிகரான கூர்வழுவுள்ள வாள் வேறெதுவும் இல்லை.

கலவைத் தொட்டியில் ஊறவைக்கப்பட்ட உள்ளங்கை அளவு அகலம்கொண்ட கூர்முனை p83c_1524635085.jpgஆயுதத்தைக்கொண்டே மூவிலைவேல் தயாரிக்கப்பட்டது. பறம்பின் தனித்துவமான ஆயுதம் இது. வேறெங்கும் இந்த வகை ஆயுதம் செய்யப்பட்டதில்லை. வேலின் முனையில் விரிந்திருக்கும் மூவிலையில் கல்லூசிகளையும் எஃகூசிகளையும் பன்றியின் முன்கொம்பால் செய்யப்பட்ட ஊசியையும் பொதிந்துவைப்பர். மூவிலைவேலை செய்ய அதிக காலம் தேவைப்படும். எனவே, வீரர்களின் பயன்பாட்டுக்கு இது அரிதாகவே  கொடுக்கப்படும். வலிமைகொண்ட வீரன் ஒருவன் குறி தவறாமல் எறிந்தால், எதிரியின் தேர் முறிந்து கீழே சரியும். போர் யானையை ஒரே எறியால் வீழ்த்த முடிகிற ஆயுதம், இது ஒன்றுதான்.

பேரரசுகளின் வலிமை, எண்ணில்லாத மடங்கு ஆயுதங்களை இடைவிடாது போர்க்களத்துக்கு அனுப்புவதிலே இருக்கிறது. ஒரு யானையின்மேல் ஏற்றப்படும் ஆயுதங்களைக்கொண்டு நூறு வீரர்களைக்கொண்ட படைப்பிரிவு நாள் முழுவதும் சண்டையிடலாம். அவ்வாறு ஆயுதங்களை ஏற்றிச்செல்ல மட்டும் நூறு யானைகள் ஆயுதவாரியின் உத்தரவுக்குக் காத்துநின்றன. உடல் முழுவதும் கவசங்களால் பூட்டப்பட்ட யானை, ஆயுதங்களைச் சுமந்து போர்க்களத்துக்குள் செல்லும்போது எதிரிப்படையால் அதை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது.

வாளும் வேலும் அம்பும் தாக்கும் ஆயுதங்கள் என்றால், கவசமும் கேடயமும்தான் காக்கும் ஆயுதங்கள். பேரரசுகளின் படைகளில் தளபதிகளுக்கும் முதல் நிலை வீரர்களுக்கும் தகுந்த மெய்யுறைக் கவசங்களை உருவாக்கி வைத்திருந்தனர். வாள்வீச்சாளர்கள் அத்தனை பேருக்கும் மூன்று வகையான கேடயங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. சேரனின் கேடயம் வாள்வீச்சாளன் சுழன்று தாக்க ஏதுவாக இருந்தது. சோழனின் கேடயம் அதே அளவு வலிமையுடன், ஆனால் எடை குறைவானதாக இருந்தது. அதனாலேயே அதைப் பயன்படுத்த வீரர்கள் மிகவும் விரும்பினர். பாண்டியனின் கேடயமோ, யானை ஏறி நின்றபோதும் நெளிந்துகொடுக்கவில்லை.

``பறம்புக்கு கடந்தகாலங்களில் வாள்படை பெரிதாகத் தேவைப்படாததால், கேடயத்துக்கான தேவையும் பெரிய அளவில் இல்லை. இப்போதுதான் அதன் தேவை உணரப்படுகிறது. அதை உருவாக்குவதொன்றும் கடின வேலையல்ல’’ என்றான் முதுவேலன். ஆனாலும் முறியன் ஆசான் வந்த பிறகு அவரிடம் கேட்காமல் செய்வது முறையன்று என்பதால், அவரிடம் ஆலோசனை கேட்டான். அவர் சொல்லிய குறிப்பின் அடிப்படையில் வேலைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. ஆனால், மெய்யுறை தயாரிக்க ஆசான் சொல்லும் சிவப்புச் சித்திர மூலக்கொடியும் செங்கொடி வேலியும் எளிதில் கண்ணுக்குப்படாதவை. எங்கோ ஒன்றுதான் முளைத்துக்கிடக்கும். பறம்பின் அத்தனை வீரர்களுக்கும் மெய்யுறை தயாரிக்கத் தேவையான அளவு இந்தக் கொடிகளைப் பறித்துவருதல் எளிதன்று. ஆனால், அதைத் தவிர வேறு வழியில்லை.

முடியன் உத்தரவிட்டான். நாகக்கரடுக்கு வந்து சேர்ந்த வீரர்கள் மட்டும் இங்கு இருக்கவைக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளிலிருந்து இரலிமேட்டுக்கு வந்துகொண்டிருந்த வீரர்கள் அனைவருக்கும் செய்தி அனுப்பப்பட்டது. அதேபோல பறம்புமலை முழுவதும் உள்ள மக்களுக்கும் செய்தி கொடுக்கப்பட்டது. எல்லோரும் மூலிகையைத் தேடி காடுகளுக்குள் இறங்கினர்.

கிடைக்கும் மூலிகைகளை, காலம் கடத்தாமல் இரலிமேட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பது உத்தரவு. வந்துசேர்ந்த மூலிகைக் கொடிகளைக்கொண்டு மெய்யுறை தயாரிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. கல்லில் அறைத்துத் தயாரிக்கப்படும் இவற்றை, நிழலில் உலர்த்திதான் ஈரம்போக்க வேண்டும். அதற்கு ஏற்ற இடமாக குகைத்தளங்கள் இருந்தன.

வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தபோது பாரியும் கபிலரும் வேட்டுவன்பாறையிலிருந்து இரலிமேடு நோக்கிப் புறப்பட்டனர். இத்தனை நாள்களாக பாரி வேட்டுவன்பாறையிலேயே இருந்ததற்கு போர்த்தயாரிப்பு நோக்கி மனம் ஒன்றாததுதான் காரணம். ஆனாலும் முன்னெச்சரிக்கையாக நாம் சில தயாரிப்புகளைச் செய்தாகவேண்டும் என்று அனைவரும் சொன்னதால், அதை ஏற்றான். தேக்கனும் முடியனும் அதைச் செய்து முடிக்கட்டும் என்று வேட்டுவன்பாறையிலே தங்கிவிட்ட பாரி, இன்று காலையில் கபிலருடன் இரலிமேடு நோக்கிப் புறப்பட்டான்.

நடுப்பகலின்போது அவர்கள் நெடுங்குன்றை வந்தடைந்தனர். அங்கிருந்து சமதளத்தில் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை வேந்தர்களின் படைகள் பரவிக்கிடந்தன. நெடுங்குன்றைக் கடந்ததும் நாகக்கரடு தொடங்குகிறது. கரடு முழுவதும் பறம்புவீரர்கள் நிலைபெற்றிருந்தனர். நீலனும் உதிரனும் கரட்டின் இருபக்க எல்லைகளில் நிலைகொண்டிருந்தனர். குதிரைகள் நிற்காமல் விரைந்துகொண்டிருந்தன. எங்கும் வீரர்கள் உற்சாகமாக ஒலி எழுப்பியபடி இருந்தனர். மாலை வரை பயணம் நீடித்தது. கரடு முழுவதும் பறம்பின் வீரர்களும் சமவெளி முழுவதும் வேந்தர்களின் படையுமாக நிலமெங்கும் மனிதத்தலைகள் நிரம்பி வழிந்தன.

நாகக்கரட்டைவிட்டு இறங்கி இரலிமேட்டை நோக்கி மேலேற, குதிரையைத் திருப்பினான் பாரி. அந்த இடத்தில்தான் தேர்களைச் செய்வதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.

எண்ணிலடங்கா தேர்கள் செய்யப்பட்டு வரிசை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. பாரியும் கபிலரும் அந்த இடம் வந்ததும் குதிரையை இழுத்து நிறுத்தினர். கபிலரின் கண்கள் வியப்பு நீங்காமல் பார்த்துக்கொண்டிருந்தன. ஒற்றைக் கட்டையால் நடுமரம் அமைக்கப்பட்டு எளிய முறையில் தேரை வடிவமைத்திருந்தனர். வேட்டூர் பழையனும் காலம்பனும் அந்த இடம் நின்றிருந்தனர். தேரின் உறுதியை கலைஞர்கள் பாரிக்கு விளக்கினர். நிறுத்தப்பட்டிருந்த தேர்களைவிட்டு பாரியின் கண்கள் எளிதில் அகலவில்லை.

பார்த்தபடி இரலிமேட்டை நோக்கி குதிரையைச் செலுத்தினர்.  உலைக்களங்களும் குதிரைக்கொட்டடிகளும் உணவுச்சாலைகளும் இரலிமேடு முழுவதும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. எங்கும் வீரர்கள் வேலைபார்த்துக்கொண்டிருந்தனர். கூழையன் சத்தம் இடதுபுற மூலையில் கேட்டுக்கொண்டிருந்தது.

p83d_1524635105.jpg

மூன்றாம் குகையிலிருந்து வெளிவந்தார் வாரிக்கையன். கீழிருந்து பாரியும் கபிலரும் குகை நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் மேலே வரும் வரை அந்த இடம்விட்டு நகரவில்லை. பாரியின் குதிரை, முன்னால் வந்துகொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கபிலர் வந்துகொண்டிருந்தார். குகைவாயில் வந்தடையும் வரை பார்த்துக்கொண்டிருந்தார் வாரிக்கையன்.

பாரி வந்து இறங்கினான். மகிழ்ந்த முகத்தோடு அவனை வரவேற்றார் வாரிக்கையன்.

``என்ன... நெடுநேரமாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டான் பாரி.

``உன் பின்னால் வந்துகொண்டிருந்தது கபிலனா, கூழையனா என, சற்றே ஐயமாக இருந்தது!”

``ஏன், பார்வை தெளிவில்லையா?”

``போர்வீரனைப்போல மலையேற்றத்தில்கூட குதிரையை இயல்பாக இயக்கும் தெளிவை புலவன் பெற்றுவிட்டான் அல்லவா! அதனால்” என்றார்.

கபிலர் ஒரு கணம் பூரித்து நின்றார். பாரி சொன்னான், ``உங்களையும் போருக்கு ஆயத்தப்படுத்துகிறார். எச்சரிக்கையாக இருங்கள்.”

மூவரின் சிரிப்பும் குகை முழுவதும் எதிரொலித்தது.

மூவேந்தர்களின் வருகைக்குப் பிறகு மூஞ்சல்நகர் களைகட்டத் தொடங்கியது. பேரரசர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்டனர். ரத்தினக்கல் பதித்த ஆரங்களை பாண்டியனுக்கும் சோழனுக்கும் சூட்டி மகிழ்ந்தான் உதியஞ்சேரல். செங்கனச்சோழனும் தனது சிறந்த பரிசை மற்ற இருவருக்கும் வழங்கினான். குலசேகரபாண்டியனோ இருவரையும் முத்துகளால் குளிக்கவைத்தான். மூவரும் ஹிப்பாலஸுக்கு அளவற்ற நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். இசையும் கூத்தும் இரவெல்லாம் நீண்டன.

நாள்கள் நகர, அடுத்தடுத்த கட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாகின. படைகளின் பிரிவுகள் எண்ணற்றச் சேனைகளாக வகுக்கப்பட்டன. ஒவ்வொரு சேனைக்கும் சேனைமுதலி இருந்தார். பன்னிரு சேனைகளைக்கொண்ட பெரும்பிரிவுக்கு சேனைவரையன் இருந்தார். விற்படை, வாள்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை என ஐவகைப் படைகள் ஆயத்தநிலையில் இருந்தன. ஐவகைப் படைகளுக்கும் ஐந்து தளபதிகளைத் தேர்வுசெய்யவேண்டியிருந்தது. விற்படைக்கு துடும்பனும், வாள்படைக்கு சாகலைவனும், குதிரைப்படைக்கு உறுமன்கொடியும், தேர்ப்படைக்கு நகரி வீரனும், யானைப்படைக்கு உச்சங்காரியும் தளபதிகளாக இருக்க முடிவுசெய்யப்பட்டது.

ஐந்து தளபதிகளையும் கட்டுப்படுத்தும் தலைமைத் தளபதியாக `மகாசாமந்தன்’ என்று அழைக்கப்படும் பெரும்பொறுப்புக்கு கருங்கைவாணன் தேர்வுசெய்யப்பட்டான்.

சேரனின் சார்பில் உதியஞ்சேரலும் சோழனின் சார்பில் சோழவேலனும் பாண்டியனின் சார்பில் பொதியவெற்பனும் களத்தில் ஆயுதம் ஏந்துவர். மூவேந்தர்களும் ஒற்றைப்படை அணியில் நின்று ஆயுதம் ஏந்தப்போகும் இந்தப் பெரும்போரின் தொடக்கச் சடங்குக்கு நாள் குறிக்க கணியர்களிடம் ஆலோசனை கேட்க வேந்தர்கள் முடிவுசெய்தனர்.

மூன்று நாட்டுக் கணியர்களும் மூன்றுவிதமான குறிப்புகளைச் சொல்ல வாய்ப்புண்டு. இந்தப் போரில் அடையப்போகும் வெற்றி பொதுவானது. ஆனால், இழப்பின் தன்மை பொதுவானதாக இருக்க வாய்ப்பில்லை. மூவருக்கும் வேறுபட்ட தன்மையில்தான் அது அமையும். தங்களுக்கு எந்தவித இழப்பும் நேரக் கூடாது என்றே மூவரும் நினைப்பர். அதற்குத் தகுந்த தன்மையில்தான் நாள் குறிக்க எண்ணுவர். எனவே, இதுதான் மூவருக்குள்ளும் ஆழமான விளைவை உருவாக்கும் செயல். இதை மிகவும் கவனமாகக் கையாளவேண்டும் என நினைத்தார் முசுகுந்தர்.

அன்று இரவு குலசேகரபாண்டியனிடம் இது பற்றி தனியே உரையாடினார், ``காலையில் அந்துவன் கையில் வரைபடம் ஏந்திய பட்டுத்துணியோடு என்னை வந்து சந்தித்தான். `பவளவந்திகையின் காலடி குறிப்பைக்கொண்டே வேந்தர்களின் பாடிவீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பின் அடிப்படையிலே நாள் குறிப்பதுதான் பொருத்தமானது’ என்றான். ஆனால், மற்ற இரு பேரரசர்களும் கணியர்களும் இதை ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களின் நாள்கணக்குகள் வேறு மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு” என்றார்.

p83e_1524635123.jpg

``தளபதிகளைத் தேர்வுசெய்ததைப்போல மற்றவர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளும் செயலல்ல இது. உணர்வுடனும் நம்பிக்கையுடனும் கலந்தது. எனவே, கவனமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என்று சொன்னவர், நீண்டநேரம் கழித்து ``இந்தப் பிரச்னையைத் தீர்க்க நீங்கள் சொல்லும் வழி என்ன?” எனக் கேட்டார்.

``ஒரே வழிதான் உண்டு. தமிழ் நிலத்தின் அத்தனை கணியர்களும் பேராசானாக ஏற்றுக்கொண்டது திசைவேழரைத்தான். அவரை வரவழைத்து நாள் குறிப்போம். மற்ற இரு பேரரசர்களும் அதை ஏற்பர்” என்றார்.

குலசேகரபாண்டியன், திசைவேழரை நன்கு அறிவார். அவரது கருத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத அறிவுச்செருக்கின் அடையாளம். அவரை கையாள்வது ஆபத்து நிறைந்தது. ஆனாலும் `மூவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பொதுமனிதர் தேவை. அதற்கு திசைவேழர் பொருத்தமானவர்தான்’ என நினைத்து அவரை அழைக்க சம்மதம் தெரிவித்தார்.

மற்ற இரு பேரரசர்களுக்கும் இந்த ஆலோசனை சொல்லப்பட்டது. அனைவரும் மகிழ்வோடு ஏற்றனர். திசைவேழரின் தலைமாணவன் அந்துவனையே அனுப்ப முடிவானது. அவரின் இருப்பிடமான பொதிகைமலையில் இருந்தால் வந்துசேர பல நாள் ஆகும். ஆனால், அவரோ வைகையின் ஓரத்தில் இருக்கும் குன்றில்தான் இருந்தார். நான்கு புரவி பூட்டிய பெருந்தேரில் அவரின் இருப்பிடம் நோக்கி விரைந்தான் அந்துவன்.

இரவு-பகல் நிற்காமல் பயணித்து அவரின் இருப்பிடம் அடைந்தான். ஆற்றின் வடகரையில் அவரது குடில் இருந்ததால் வைகையின் வெள்ளத்தைக் கடக்கவேண்டிய தேவை எழவில்லை. ஆற்றங்கரையிலிருந்து நாணல்கள் விலக்கி குடில் நோக்கி வந்தார் திசைவேழர். தனது ஆசானைப் பணிந்து வணங்கி மூவேந்தர்களின் அழைப்பைத் தெரிவித்தான் அந்துவன்.

``பெருவெள்ளம் ஓடும் ஆற்றங்கரையில் இருக்கிறேன். ஆனால், அள்ளிப்பருக குருதி கொண்டுவந்திருக்கிறாய் நீ.”

அந்துவன் மறுமொழியின்றி அமைதியாக நின்றான்.

``நான் போர்க்களம் புகேன் என மூவேந்தர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் என்னை ஏன் அழைத்தார்கள்?” என வினவினார். அந்துவனிடம் இதற்கும் பதில் இல்லை. திசைவேழர், குடிலுக்குள் போனார்.

அந்துவன் அன்று முழுவதும் காத்திருந்தான். மறுநாள் மாலை குடில்விட்டு வெளியே வந்தார். `மூவேந்தர்களின் அழைப்பை நிராகரிக்க வேண்டாம். போய் நமது நிலையைத் தெளிவுபடுத்திவிட்டு வருவோம்’ என்று எண்ணியபடி ``காலையில் புறப்படுவோம்” எனக் கூறினார்.

இந்தச் செய்தி இரவோடு இரவாகப் பயணித்து விடியும்போது மூஞ்சல்நகர் எட்டியது. `திசைவேழர், அழைப்பை ஏற்க மறுப்பாரோ!’ என்ற அச்சத்திலிருந்த முசுகுந்தர், செய்தி கேட்டு அளவற்ற மகிழ்வடைந்தார். மூஞ்சலில் எல்லாமே சிறப்பான தொடக்கமாக அமைகிறது. மூவேந்தர்களும் தங்களுக்குள் மிக இயல்பாகப் பேசிக்கொள்ள அதிக காலம் எடுத்துக்கொள்ளவில்லை. `தளபதிகளின் தேர்விலும் முரண்கள் எதுவும் உருவாகவில்லை. அதேபோல சடங்குக்கான நாள் குறிப்பிலும் சிக்கலான நிலையேதும் உருவாகாமல் இருந்தால் போதும், எல்லாம் வெற்றிகரமாக அமைந்துவிடும்’ என்று எண்ணியபடி பொதியவெற்பனின் கூடாரத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது உதியஞ்சேரல் தனது மாளிகையைவிட்டு வெளிவருவதை பணியாளர்கள் சிற்றோசை எழுப்பி தெரியப்படுத்தினர். அவர் உணவுக்கூடாரத்தை நோக்கி நடந்து போனார். பேசிக்கொண்டே உடன் சென்ற அமைச்சர் நாகரையன், அவர் உணவகம் நுழைந்ததும் வந்த வழியே திரும்பினார்.p83f_1524635134.jpg

சற்று தொலைவில் முசுகுந்தர் நிற்பதைப் பார்த்து அருகில் வந்தார். திசைவேழர் அழைப்பை ஏற்றுக்கொண்ட செய்தியை அவரோடு பரிமாறி மகிழ்ந்தார் முசுகுந்தர். இருவரும் நீண்டநேரம் பேசியபடி நின்றனர்.

முசுகுந்தர் கேட்டார், ``எனக்கு ஓர் ஐயம். தெளிவுபடுத்த முடியுமா?”

``எனக்கு விடை தெரிந்தால் தெளிவுபடுத்துகிறேன்” என்றார் நாகரையர்.

``உங்களின் பேரரசருடன் எந்நேரமும் கருங்குரங்குக் குட்டி ஒன்று இருக்கிறதே, ஏன்?”

நாகரையர் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. சற்றே சிந்தித்தபடி இருந்தார், ``பேரரசருக்குப் பிடித்த உயிரினம் அது என்பதால்தான்” என்று சொல்லி, வார்த்தையை முடிக்காமல் நீட்டினார். எதையோ சொல்ல தயங்குகிறார் என்பது புரிந்தது.

சற்று இடைவெளியில் அவரே சொன்னார், ``உங்களிடம் மறைக்க விரும்பவில்லை. ஆனால், நீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள். எந்நேரமும் அந்தக் குட்டி உடன் இருக்காது; உணவுக்கூடாரத்துக்குச் செல்லும்போது மட்டும்தான் உடன் இருக்கும். உணவில் நஞ்சு இருப்பின் வாசனையை நுகர்ந்த கணத்திலேயே அது சத்தமிட்டுக் குதிக்கும்; மலம்கழிக்கும். அதனால்தான் அவர் அதை வைத்துள்ளார். எங்கள் மருத்துவர்கள் கூறியுள்ள பாதுகாப்பு ஏற்பாடு அது” என்றார்.

மூவேந்தர்களுக்குள்ளும் பொதுநம்பிக்கையை உருவாக்குவது எவ்வளவு கடினமான செயல் என்பதை குரங்கின் மூலமும் உணர்ந்தார் முசுகுந்தர்.

திசைவேழரின் இருப்பிடத்திலிருந்து நான்கு புரவிகள் பூட்டிய பெருந்தேர் பயணத்தைத் தொடங்கியது. திசைவேழர், மனக்குழப்பத்தினூடே பயணப்பட்டுக்கொண்டிருந்தார். மறுநாள் போர்ப்பாசறைக்குள் தேர் நுழைந்தது. திரைச்சீலையின் வழியே வெளியில் பார்த்துக்கொண்டு வந்தவர் போர்நிலம் வந்தவுடன் வெளிப்பார்வையைத் தவிர்த்தார். தேர் மூஞ்சலில் வந்து நின்றது.

முசுகுந்தர் வணங்கி வரவேற்றார். பயணக்கலைப்பு நீங்க கூடாரத்தில் தங்கி சற்று ஓய்வெடுக்கச் சொன்னார். மாலை ஆனதும் அவர் முன் உணவு பரிமாறப்பட்டது. இரண்டு வாழைக்கனிகளை மட்டும் எடுத்துக்கொண்டார். பேரரசர்கள் கூடும் நடுக்கூடாரத்துக்கு அவரை அழைத்துச் செல்ல முசுகுந்தர் காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து புறப்பட்டார். அவரை அழைத்துக்கொண்டு முன்நடந்தார் முசுகுந்தர்.

நடுக்கூடாரத்தில் மூவேந்தர்களுடன் சோழவேலனும் பொதியவெற்பனும் இருந்தனர். அரச குடும்பமல்லாத ஒரே நபராக முசுகுந்தர் இருந்தார். திசைவேழர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் அவருக்கு மரியாதை செய்தனர். அதை ஏற்றபடி தனக்கான இருக்கையில் அமர்ந்தார் திசைவேழர்.

உதியஞ்சேரலும் செங்கனச்சோழனும் திசைவேழரைப் பார்த்து பல்லாண்டுகள் ஆகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் இருவரும் அவரின் முதுமையைக் கண்டு மனம்குவித்து வணங்கினர்.
குலசேகரபாண்டியன்தான் பேச்சைத் தொடங்கினார், ``இந்த மண் காணாத பெரும்போரை நடத்த மூவேந்தரும் இணைந்துள்ளோம். போர்ச்சடங்குக்கு நாள் குறித்துத் தரவே பேராசானை அழைத்தோம்” என்றார்.

``பலி நிலத்துக்குக் குறிசொல்லும் இழிசெயல் செய்யேன்” என வார்த்தை வெடித்து மேலே கிளம்ப எத்தனித்தது. `பேரரசர்கள் மூவரும் இருக்கும் அவையில் கடுஞ்சொற்கள் வேண்டாம்!’ என எண்ணினார் திசைவேழர்.

அமைதி நீடித்தது. அவர் சொல்லப்போகும் வார்த்தையை எதிர்பார்த்துக் காத்திருந்தது அவை. சற்று இடைவேளைக்குப் பிறகு, ``போரைத் தவிர்க்க வழியேதும் இல்லையா?” என மெல்லிய குரலில் கேட்டார்.
போர்க்களத்துச் சடங்குக்கு நாள் குறிக்க அழைக்கப்பட்டவர் போரைத் தவிர்க்க வழிகேட்டது, சேரனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. சடங்கின் தன்மை பேசப்படும் கணத்திலிருந்து தொடங்கக்கூடியது. அது சார்ந்த எல்லா நிகழ்வுகளும் சடங்கின் பகுதியே, அது சார்ந்த செயலும் சொல்லும் சடங்கினால் ஏற்படும் விளைவை தீர்மானிப்பவையே; நாள் குறிக்க நிகழ்த்தப்படும் சடங்கைப் பற்றியப் பேச்சே சட்டென தடுமாறியது நல்ல அறிகுறியாக உதியஞ்சேரலுக்குப் படவில்லை.

குலசேகரபாண்டியனோ திசைவேழரிடமிருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்ற திகைப்பு எல்லோரிடமும் இருந்தது. பேராசானுடனான உரையாடலில் மிகுந்த கவனம் தேவை என அனைவரும் அறிவர். எனவே, அமைதியே நீடித்தது.

``வலதுகாலை மடக்க முடியாமல் சிரமப்பட்டீர்களே! இப்போது ஆசனத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறீர்களே எப்படி?” என்று சூழலை இலகுவாக்க பேச்சின் போக்கை மாற்ற முயன்றார் முசுகுந்தர். ஆனால், அந்தப் பேச்சு பறம்பினைத்தான் நினைவூட்டியது. புலி முன் ஆடு போல இருந்தது அவையின் அமைதி.

``வளம்மிக்க மண்ணைப் பாழ்படுத்துதல் அறமன்று” என்றார் திசைவேழர்.

``வளத்தை, தானும் பயன்படுத்தாமல் மற்றவர்களையும் பயன்படுத்தவிடாமல் தடுப்பது இயற்கைக்குச் செய்யும் நியதியன்று” என்றார் முசுகுந்தர்.

p83g_1524635153.jpg

``பயன்பாட்டு உரிமைதான் சிக்கல் என்றால், பேசித் தீர்க்கலாமே. பேசிப்பார்க்காமலேயே போர்க்களம் புகுவது என்ன அறம்?”

மீண்டும் அமைதி நிலவியது.

இந்த இடம் சேரனோ சோழனோ மறுமொழி பேச முடியாது. வயதில் மூத்த குலசேகரபாண்டியன்தான் பேசியாக வேண்டும். எனவே, மற்றவர்கள் அவரையே பார்த்தனர்.

குலசேகரபாண்டியன் சற்றே குழப்பமடைந்தான். நாமே தேவையில்லாமல் சிக்கலை ஏற்படுத்திக்கொண்டோமோ எனத் தோன்றியது. மற்ற இரு பேரரசர்களும் ஏற்கும் பொதுமனிதர் ஒருவர் வேண்டும் என யோசித்தோம். ஆனால், `மூவரும் பேசி இணங்கவைக்க முடியாத மனிதரை அழைத்துவந்துவிட்டோமோ!’ எனத் தோன்றியது. 

சற்று இடைவெளியில் ``சரி, நீங்களே இதற்கு வழியொன்று சொல்லுங்கள்” என்றார் குலசேகரபாண்டியன்.

திசைவேழர் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அதை இறுகப் பற்றிக்கொண்டார். சற்றே கண்மூடிச் சிந்தித்தார். `என்ன சொல்லப்போகிறார்?’ என அவை காத்திருந்தது. ``மூன்று பேரரசுகளின் போற்றுதலுக்குரிய பெரும்புலவர் கபிலர்தானே பாரியின் உற்றதோழர். அவர் மூலம் பேசிப்பார்க்கலாமே!”

மூவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துத் திரும்பின. மறுமொழி எழவில்லை. திசைவேழரின் கூற்றை மறுப்பதற்கான காரணம் ஏதுமில்லை. அமைதி நீடித்தது. சம்மணமிட்ட காலை நீட்டித் தொங்கவிட்டார் திசைவேழர்.

இந்த இடத்தை அறிவுக்கூர்மையுடன் கையாள வேண்டும். இல்லையென்றால், போரின் தொடக்கமே சிக்கல் நிரம்பியதாகிவிடும் என நினைத்த குலசேகரபாண்டியன், ``சரி, பேச்சுவார்த்தைக்காக கபிலருக்கு அழைப்பு அனுப்புங்கள்” என்றார்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 81

 

 

வாள்படைத் தளபதி சாகலைவன் வந்த தேர், இரவு முழுவதும் நாகக்கரட்டின் அடிவாரத்தில் நின்றது. அவன்தான் கபிலருக்கு அழைப்பு எழுதப்பட்ட சுருள்மடலை எடுத்து வந்தவன். பறம்புவீரர்கள் அதைப் பெற்றுக்கொண்டு இரலிமேட்டுக்குச் சென்றனர். ``மறுமொழி வரும் வரை காத்திருக்கிறேன்” என்று சொல்லிக் காத்திருந்தான் சாகலைவன். மூவேந்தர்களின் படை நிலைகொண்டுள்ள இடம்விட்டு மிகத் தொலைவில் வந்து பறம்பின் நிலப்பகுதிக்குள் இரவு முழுவதும் காத்திருந்தான் சாகலைவன்.

மறுநாள் பொழுது விடிந்தது. செய்தியை எதிர்பார்த்திருந்தான் சாகலைவன்.  நீண்ட நேரத்துக்குப் பிறகு கரட்டுமேட்டிலிருந்து ஆள்களின் வருகை தெரிந்தது. உற்றுப்பார்த்தான். நடுவில் வருபவர் கபிலர். அவன் கபிலருக்கு அறிமுகமானவன். மதுரையில் தங்கி இருக்கும்போது கபிலரை பலமுறை  கண்டு பேசியிருக்கிறான். அதனால்தான் இந்தப் பணிக்காக அவன் அனுப்பப்பட்டான்.

மேலே இருந்து இறங்கி வந்த கூட்டம், குறிப்பிட்ட இடத்தோடு நின்றுகொண்டது. அதற்குப் பிறகு கபிலர் மட்டும் வந்து கொண்டிருந்தார். அவரோடு சிறுவன் ஒருவனும் வந்தான். அவன் யாரென சாகலைவனுக்குத் தெரியவில்லை. உதவிக்கு அழைத்துவருகிறார் எனப் புரிந்தது.

83p1_1525172219.jpg

கபிலர் தேரின் அருகில் வந்ததும் அவரை வணங்கி வரவேற்றான் சாகலைவன். முகம் பார்த்து மலரும் மனநிலையில் கபிலர் இல்லை. தலையை மட்டும் மெள்ள அசைத்தார். குறுக்குக்கட்டையை எடுத்து அவர் தேரில் ஏற வசதி செய்தபடி நின்றான். அவரோ உடன்வந்த அலவனின் தோளை அழுத்தி மேலேறி அமர்ந்தார். அலவனும் ஏறி அவர் அருகில் அமர்ந்துகொண்டான்.

தேர் புறப்பட்டு, சிறிது நேரத்தில் படைக்களத்துக்குள் நுழைந்தது. முதலில் இருந்தது காலாட்படைதான். கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை வீரர்கள் நிறைந்திருந்தனர். தேர் வேகம்கொண்டு சென்றது. நெடுநேரத்துக்குப் பிறகு காலாட்படையைக் கடந்து குதிரைப் படையின் எல்லையில் போய் வலதுபுறமாகத் திரும்பியது. வேகம் குறையாமல் பயணித்தாலும் படைகளைக் கடந்து நெடுந்தொலைவு போகவேண்டியிருந்தது. தேரோட்டும் வளவன், தேரை விரைவுபடுத்த முயன்றான். ஆனால், வீரர்களின் நெரிசல் அதிகமாக இருந்தது. நீட்டிப்பிடித்த வேற்கம்புகளும் ஈட்டிகளும் குதிரையின் மீது பட்டுவிடுமோ என்ற அச்சம் அவனுக்குள் இருந்தது.

ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருக்கும் படைக்கலப் பேரரங்குகள் மூன்றையும் தொட்டுப் பயணிப்பதைப்போல வழி சொல்லியிருந்தான் சாகலைவன். தேர், அந்தத் திசையிலேயே போய்க்கொண்டிருந்தது; வேகம் குறையாமல் தேர்ப்படையின் எல்லைக்குள் நுழைந்தது. இந்தப் பகுதியில் வீரர்களின் எண்ணிக்கை சற்று குறைவு. ஆனால், அங்குமிங்குமாக மரக்கட்டைகளும் குதிரைகளின் ஓட்டமுமாக இருந்தன. சற்றே கவனத்தோடு தேரைச் செலுத்தினான். அதைத் தொடர்ந்து சிற்றரசர்களும் தளபதிகளும் தங்கி இருக்கும் பகுதி இருந்தது. அதை ஓரமாகச் சென்று கடக்க முயன்றான்.

தொலைவில் யாரையோ பார்த்த கபிலர், ``தேரை நிறுத்து” என்றார். யாரைப் பார்த்துவிட்டு தேரை நிறுத்தச் சொல்கிறார் எனப் புரியாமல் விழித்தான் சாகலைவன். தேர் நின்றது. குறிப்பறிந்து அலவன் கீழே இறங்கினான். அவன் தோள் பிடித்து இறங்கினார் கபிலர்.

சற்று தொலைவில் வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இருவர், தேரைவிட்டு இறங்கும் மனிதர் யார் என உற்றுப்பார்த்தனர். அடையாளம் கண்டறிந்த ஒருவன், ``தேர்விட்டு இறங்குவது பெரும்புலவர் கபிலர்” என்று சத்தமிட்டுக் கூறியபடி வாளைவிடுத்து ஓடோடி வந்தான்.

அவன் வரும் வேகம் கண்டு அலவன் சற்றே விலகி நின்றான். விரைந்து வந்து கபிலரின் கால் தொட்டு வணங்கினான். அவன் அறுகநாட்டின் சிறுகுடி மன்னன் செம்பன். அவனைக் கண்டதும் கபிலரின் முகம் மலர்ந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இவனது மாளிகையில் தேறல் அருந்தி மான்கறி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதுதான் பாரியைப் பற்றிய பேச்சுவந்தது. அவனது வள்ளல்தன்மையைப் பற்றி செம்பன் சொன்னதை ஏற்காத கபிலர், ``நாளையே நான் புறப்பட்டு பறம்புமலைக்குப் போகிறேன்” என்று சொல்லி புறப்பட்டுப் போனார். அதன் பிறகு இன்றுதான் மலைவிட்டு இறங்கி சமவெளிக்கு வந்துள்ளார்.

83p2_1525172308.jpg

``யாரைப் பார்த்துவிட்டு பறம்பில் ஏறினேனோ, அவனைத்தான் பறம்புவிட்டு இறங்கியதும் முதலில் பார்க்கிறேன்” என்று சொல்லி அவனது தோள் தொட்டு மகிழ்ந்தார் கபிலர்.

சுற்றிலும் கூட்டம் கூடியது. அந்தப் பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் சிறுகுடி மன்னர்களும் தளபதிகளும் ஆவர். அனைவரும் கபிலரை அறிவார்கள். பேரரசர்கள் பணிந்து வணங்கும் பெரும்புலவன் நம்மோடு போர்க்களத்தில் நின்று உரையாடுகிறார் என்ற பெருமிதத்தோடு கூட்டம் கூடியது. ஆனாலும் அனைவரும் விலகியே நின்றனர்.

``நீ அன்று பாரியின் வள்ளல்தன்மை பற்றி வியந்து கூறினாய். நான் மறுத்துக் கூறி அதை சோதித்தறிய மலையேறினேன். ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. எனது வாழ்வின் மிகச்சிறந்த இந்தக் காலத்தைச் சொல்லால் வார்த்துச் சொல்கிறேன், `உனது வார்த்தையே மெய்’. அதை நான் பணிந்து ஏற்கிறேன்” என்று சொல்லி செம்பனை நோக்கிக் கைகுவித்தார் கபிலர்.

நடுங்கிப்போய் கபிலரின் கால் பற்றி வணங்கினான் செம்பன், ``தாங்கள் என்னை வணங்கக் கூடாது” என்றான்.

``நான் உன்னை வணங்கவில்லை. நீ சொன்ன உண்மையை வணங்குகிறேன்.”

``அந்த உண்மைக்கு எதிராகவே இப்போது வாள் ஏந்த வந்துள்ளேன். பேரரசின் ஆணை இது. என்னை மன்னியுங்கள்” என்றான் சற்றே கலங்கிய குரலோடு.

``உண்மையல்லாத ஒன்றை நான் எப்போதும் மன்னிப்பதில்லை” என்று சொல்லியபடி தேரில் ஏறினார் கபிலர். மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை.

குவித்த கையை விலக்காமல் அவரைப் பார்த்தபடியே நின்றான் செம்பன். 

தேர் ஏறிய கபிலர், அவனது கைகளைப் பார்த்துக்கொண்டே சொன்னார், ``இந்தக் கைகளால் அன்று கறித்துண்டங்கள் நிறைந்த குழிசிப்பானையை என்னை நோக்கித் தள்ள முடிந்திருந்தால், நாம் இந்நேரம் போர்க்களத்தில் சந்தித்திருக்க மாட்டோம் அல்லவா?”

கபிலரின் முகத்திலிருந்த மெல்லிய சிரிப்பு, செம்பனைக் கூனிக்குறுகச் செய்தது. தேர்ப்புழுதி மேலெழும் வரை அவன் அசைவற்று நின்றான்.

நேரம் அதிகமாகிக்கொண்டிருந்ததால் தேரை விரைந்து செலுத்தச் சொன்னான் சாகலைவன். அவனது சொல்லுக்கு ஏற்ப தேரின் வேகம் கூடியது. படைகளைக் கடந்து மூஞ்சல்நகர் நோக்கிச் சென்றது தேர். தனித்துவமிக்க இந்தப் பகுதியைப் பார்த்ததும் பேரரசர்களின் கூடாரப் பகுதி என்பது புரிந்தது. மூஞ்சலுக்குள் தேர் நுழைந்ததும் வரவேற்க அமைச்சர்கள் நின்றிருந்தனர்.

அவர்கள் நின்ற இடம்வந்து தேர் நின்றது. அமைச்சர்கள் மூவரும் பெரும்புலவரை வணங்கி வரவேற்றனர். முசுகுந்தரின் முகம் அளவற்ற மகிழ்வில் இருந்தது. எத்தனையோ மாலைப்பொழுதுகளை வைகைக் கரையில் கபிலரோடு உரையாடி மகிழ்ந்தவர் அவர்.

நாகரையனும் வளவன்காரியும் அவரின் கை தொட்டு வணங்கினர். அவர்கள் இருவருக்கும் கபிலரோடு உரையாடும் அளவுக்கு உறவு இல்லை. தேர்விட்டு இறங்கிய கபிலர் நடக்கத் தொடங்கினார். நினைவின் ஆழத்திலிருந்து கடந்தகாலம் மேலெழுந்து வந்துகொண்டிருந்தது. மூன்று பேரரசர்களுக்கும் தனக்குமான உறவின் வலிமை நினைவெங்கும் பரந்துவிரிந்தது. கடந்த காலத்தின் முன் மனம் கூசி நடுங்கியது. ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் கடந்த காலத்துக்குள்தான் நுழையப்போகிறார். அங்கிருந்து வந்துள்ள மனிதர்கள்தான் அவருக்காகக் காத்திருக்கின்றனர்.

`எனது புலமையைப் போற்றிக் கொண்டாடிய பேரரசர்களுக்கு எதிராக வந்து விழப்போகும் சொற்கள் என்னவாக இருக்கப்போகின்றன? அவை எனது வாழ்வின் முழுமையிலிருந்து விளைந்த சொற்களாக இருக்கப்போகின்றனவா அல்லது பறம்பிலிருந்து மட்டும் விளைந்த சொற்களாக இருக்கப்போகின்றனவா? சொல், நிலத்திலிருந்து எழுவதில்லை; மனதிலிருந்துதான் எழுகிறது. மனம் உண்மையோடு கரைகிறபோது சொல் தன்னியல்பில் முளைத்து மேலெழுகிறது. உண்மைகள் விளையவைக்கும் சொற்களைப் பற்றி நாம் ஏன் முன்கூட்டியே சிந்திக்கவேண்டும்?’ என்று கருதியபடி கூடாரத்துக்குள் நுழைந்தார் கபிலர்.

குலசேகரபாண்டியன் இருக்கைவிட்டு எழுந்து வந்து பெருமகிழ்வோடு வரவேற்றார். செங்கணச்சோழனும் உதியஞ்சேரலும் பொதியவெற்பனும் வணங்கி வரவேற்றனர். சோழவேலன் அணைத்து மகிழ்ந்தான்.

கூடாரத்தின் இடது ஓரம் இருந்த சிறு மேடையில் நால்வர் அமர்ந்து யாழ்மீட்டிப் பாடிக்கொண்டிருந்தனர். கபிலர் உள்நுழைந்ததும் பாடலை நிறுத்தி எழுந்தனர். மீட்டிய யாழையும் பிற இசைக்கருவிகளையும் வைத்துவிட்டு வெளியேறினர்.

அவர்கள் பாடிய `வேந்தே காண்...’ எனும் கபிலரின் பாடலைப் பாடியபடி அவரை இருக்கையில் அமரவைத்து தானும் இருக்கையில் அமர்ந்தான் குலசேகரபாண்டியன்.

``நீங்கள் இந்தப் பாடலை எழுதிய அன்று நமக்குள் நிகழ்ந்த உரையாடல் நினைவிருக்கிறதா?” என்று பேச்சை இயல்பாகத் தொடங்கினார் குலசேகரபாண்டியன்.

``நன்றாக நினைவிருக்கிறது” என்றார் கபிலர்.

83p3_1525172332.jpg

மனிதர்களைக் கையாள்வதில் குலசேகரபாண்டியனுக்கு இருக்கும் அனுபவம் இணையற்றது என்று எப்போதும் கருதும் முசுகுந்தர், இப்போதும் அதையே நினைத்துக்கொண்டார். எதிரிக்கு தோழனாகக் கருதப்பட்ட பெரும்புலவரை, இவ்வளவு இயல்பாக உரையாடலுக்குள்ளே இழுத்துக்கொண்ட அவரின் ஆற்றல் வியப்பையே தந்தது.

`` `வேந்தனின் செங்கோன்மையை இதைவிடச் சிறப்பாய் இன்னொரு புலவன் சொல்லிவிட முடியாது’ என்று நான் சொன்னபோது அன்று நீங்கள் மறுத்தீர்கள் அல்லவா?” என்றார் குலசேகரபாண்டியன்.

``ஆம்” என்றார் கபிலர்.

``இன்று வரை இதற்கு இணையான பாடலை வேறு யாரும் எழுதிவிடவில்லை.”

``யாரும் எழுதிவிடாததாலேயே இது சிறந்த பாடலாகிவிடுமா?” எனக் கேட்டார் கபிலர்.

``இன்றைக்கும் இதுதான் சிறந்த பாடல்.”

``இல்லை. பிழையான பாடல்.”

அதிர்ந்தான் குலசேகரபாண்டியன். ``பெரும்புலவர் கபிலர் பிழையான பாடல் எழுதினாரா?” எனக் கேட்டான்.

``நான் பாடல் எழுதினேன். காலம் அதை பிழையென ஆக்கியுள்ளது.”

``எதை பிழையெனச் சொல்கிறீர்?’’

``செங்கோன்மைக்கு நான் சொன்ன உவமை பிழையெனக் கருதுகிறேன்.”

அவையில் அமைதி நீடித்தது. மற்றவர்களுக்கு அந்தப் பாடல் எது எனத் தெரியாததால், பேச்சில் பங்கெடுக்கவில்லை. முசுகுந்தருக்கு அந்தப் பாடல் நன்கு தெரியும். இந்தப் பேச்சு எதை நோக்கிப் போகிறது என்பதை உணரத் தொடங்கினார். 

கபிலர் தொடர்ந்தார், ``அரசன் நியதியை நிலைநாட்ட தண்டத்தைப் பயன்படுத்துவது பயிருக்குள் இருக்கும் களையை அகற்றுவது போன்றது எனக் குறிப்பிட்டுள்ளேன் அல்லவா அதைத்தான் சொல்கிறேன்” என்றார்.

``அது முற்றிலும் சரியான கருத்துதானே, அதிலென்ன பிழையுள்ளது?”

``அரசு அறத்தை நிலைநாட்ட தண்டத்தினைக்கொண்டு களையைப் பறிக்கலாம். ஆனால், பயிரைப் பறிப்பது எந்த வகை அறம்? அரசநியதியின் பெயரால் நிகழ்த்தப்படும் செயல்கள் அனைத்தும் செங்கோன்மைக்குப் பெருமை சேர்ப்பதாகா.”

கபிலர் சொல்லவருவது என்னவென்று எல்லோருக்கும் புரிந்தது. பேச்சு, எழுதப்பட்ட பாடலைப் பற்றியது அன்று; தூது அனுப்பப்பட்டதன் நோக்கத்தைப் பற்றியது; போர்க்களத்தின் அரசியல் பற்றியது. உரையாடல் தொடங்கும்போதே கபிலர் அவையை அந்த இடம் கொண்டுவந்து நிறுத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தன்மையில் இந்தப் பேச்சு தொடங்கக் கூடாது; தொடரவும் கூடாது எனக் கருதிய முசுகுந்தர், ``முதலில் பயணக் களைப்பாற சுவைநீர் அருந்துங்கள். பிறகு உரையாடலாம்” என்று கை அசைத்தபடி சொன்னார். அவர் சொன்னதும் பணியாளர்கள் நீள்வாய்க்குவளையை உள்ளே கொண்டுவந்தனர். ஒவ்வொருவருக்கும் அழகிய பீங்கான் குவளையில் முந்நீர் வழங்கினர்.

முசுகுந்தர் கபிலரைப் பார்த்து, ``இது, குறும்பை நீரும் கரும்பின் சாறும் தெங்கின் இளநீரும் கலந்த முந்நீர்ச்சாறு. நீங்கள் அருந்தி நீண்டகாலம் ஆகியிருக்கும் அல்லவா?” என சற்றே எள்ளலோடு கேட்டார்.

குவளைநீரை வாங்கியபடி கபிலர் சொன்னார், ``குறும்பையும் தெங்கும் பறம்பில் நிறைய உண்டு. கரும்பை மட்டும் சமவெளி மக்களிடம் மான்தசையும் மதுவும் கொடுத்து வாங்குவர்” எனச் சொன்னவர், ``இன்னும் நீங்கள் கரும்பைப் பிழிந்து சாறெடுத்துதான் குடிக்கிறீர்களா?” எனக் கேட்டார்.

அவையோர் அதிர்ச்சியடைந்தனர். ``கரும்பைப் பிழிந்துதானே சாறெடுக்க முடியும்... வேறெப்படி எடுப்பது?” எனக் கேட்டார் சோழவேலன்.

``கரும்பின் மூன்றாவது கணு மட்டும் சிறு துளையுடையது. விளைந்த கரும்பை செம்மண்ணால் குழைத்த துணிகொண்டு அடி முதல் நுனி வரை இறுகக் கட்ட வேண்டும். மூன்றாவது கணு மட்டும் வெளியில் தெரிவதைப்போல் இருக்க வேண்டும். அதில் குவளையைக் கட்டிவைத்துவிட்டால் பனையில் கள் இறங்குவதுபோல கரும்பின் சாறு இறங்கும். பத்து கரும்புகளுக்கு ஒரு மிடறு சாறு கிடைக்கும். அதற்கு இணையான சுவைநீர் உலகில் வேறில்லை.”

கேட்டுக்கொண்டிருந்தவர்களின் நாக்கில் மூன்றாம் கணுவின் நீர் இறங்கத் தொடங்கியது.

கபிலர் தொடர்ந்தார், ``அதை மட்டுமே குடிக்க வேண்டும் என்று குவளை நிறைய நாள் தவறாமல் எனக்குத் தருவான் பாரி.”

எங்கே தொடங்கினாலும் முடிக்கவேண்டிய இடத்தில் வந்து முடிக்கிறார் கபிலர். குவளையில் முந்நீரை யாரும் அருந்தவில்லை. பேச்சின் சூழல் பொருத்தமாய் அமைவதுபோல் இல்லை. அனைவரின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது.

83p4_1525172380.jpg

குவளையைக் கையில் ஏந்திய கபிலர் அப்போதுதான் கவனம்கொண்டார். உடன்வந்த அலவன் அருகில் இல்லை. ``என்னுடன் வந்த சிறுவன் எங்கே?” எனக் கேட்டார். மற்றவர்களும் அதுவரை கவனிக்கவில்லை.

கூடாரத்துக்கு வெளியே பணியாளர்கள் அங்குமிங்குமாகத் தேடினர். மூஞ்சலின் ஒரு மூலையிலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தான் அலவன். பணியாளர்கள் அவனை அழைத்துக் கொண்டு வந்தனர். கூடாரத்துக்குள் நுழைந்து கபிலரின் அருகே அமர்ந்தான். அவனுக்கும் குவளையில் முந்நீர் தரப்பட்டது.

அதுவரை உதியஞ்சேரலின் அருகே இருந்த கருங்குரங்குக்குட்டி திடீரென பல்லை இளித்து `கீர்ர்ர்’ரென ஓசை எழுப்பத் தொடங்கியது. என்ன ஓசையெழுப்புகிறது என மற்றவர்கள் பார்க்கும்போதே அந்த இடத்தில் மலம் கழித்தது. என்ன செய்கிறது எனப் பார்த்தறியும் முன்னரே அது நிலைகுலைந்து கத்தவும் குதிக்கவும் தொடங்கியது. சேரனின் பணியாளர்கள் உடனே வந்து அதைப் பிடிக்க முயன்றனர். அதன் செயல்கண்டு பதற்றத்தோடு உதியஞ்சேரல் கத்தினான், ``குவளையில் இருக்கும் முந்நீரை அருந்தாதீர்கள். அதில் நஞ்சு கலக்கப் பட்டிருக்கிறது.”

குலசேகரபாண்டியன் மிரண்டு எழுந்தான். ஏந்திய குவளையை சட்டென விடுத்தான் சோழவேலன். செங்கணச்சோழனும் பொதியவெற்பனும் அதிர்ந்தனர். முசுகுந்தர் நடுங்கிப்போனார்.

யாருக்கு எதிரான சதியிது? யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. மூவேந்தர்களும் ஒருவருக்கு ஒருவர் வீசிய பார்வையில் எழுப்பப்பட்ட நம்பிக்கை நொறுங்கிக்கொண்டிருந்தது.

கபிலர், ஏந்திய குவளையோடு அப்படியே இருந்தார். அருகில் இருந்த அலவன் அவரின் காதோடு சொன்னான், ``அது என்னைக் கண்டுதான் மிரண்டு கத்துகிறது. குவளை நீரில் நஞ்சேதும் இல்லை.”

குலசேகரபாண்டியனின் மேலெல்லாம் வியர்த்துக்கொட்டியது. ``சுவைநீரில் நஞ்சிருக்கிறதா என்று சோதியுங்கள். சமையலாளர்களைச் சிறையிடுங்கள்” என்றார்.

மிச்சம் இருந்த குவளைநீரை பணியாளர்கள் கைநடுங்க வந்து வாங்கினர். கபிலர் சொன்னார், ``இதில் நஞ்சேதும் இருப்பதுபோல் தெரியவில்லையே!”

``வேண்டா பெரும்புலவரே” என்று சொன்ன குலசேகரபாண்டியன் அவையைப் பார்த்துச் சொன்னான், ``முந்நீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதா என்று சோதித்தறிந்த பிறகு பேச்சைத் தொடரலாம்.”

அவை அமைதிகாத்தது. கபிலரையும் அலவனையும் சற்றுநேரம் ஓய்வெடுக்க கூடாரத்துக்கு அழைத்துச்சென்றார் முசுகுந்தர்.

நீண்ட சோதனைக்குப் பிறகு மூவேந்தர்களின் தலைமை மருத்துவர்கள் உள்ளே நுழைந்தனர், ``பார்போற்றும் வேந்தர்களை வணங்குகிறோம். சுவைநீரில் நஞ்சேதும் இல்லை.”

``நன்றாகச் சோதித்தீர்களா?”

``முழுமையாகச் சோதித்துவிட்டோம்.”

``அப்படியென்றால் நீங்கள் மூவரும் முதலில் அருந்துங்கள்” என்றார் சோழவேலன்.

மூவரும் குவளைநீரை அருந்தினர்.

குவளையைக் கீழே வைக்கும் வரை வேந்தர்களின் கண்கள் அவர்களைவிட்டு விலகவில்லை. அருந்திய மருத்துவர்களின் கண்களில் சிறு அச்சம்கூட இல்லை. அவர்கள் குவளையைக் கீழே வைத்த கணத்தில் உதியஞ்சேரல் கத்தினான், ``அந்தக் குரங்கைக் கொன்றுவிடுங்கள்!”

சற்று இடைவெளிக்குப் பிறகு ஓய்வறையில் இருந்த கபிலரை அழைத்துவரச் சொன்னார்கள். நஞ்சு, அச்சம், சதி, விசாரணை, கொலை என சிறிது நேரத்துக்குள் அனைத்தும் நிகழ்ந்து முடிந்த ஓர் அவைக்குள் கபிலர் மீண்டும் நுழைந்தார். யார் முகத்திலும் இயல்பும் மகிழ்வும் இல்லை. பாரியின் தரப்பில் நின்று வேந்தர்களுக்கு எதிராக வெளிப்படையாகச் சொல்லேந்துவார் கபிலர் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதிகாரத்தின் மீதிருந்து வெளிவரும் நேரடியான அரசியல் பேச்சு தொடங்கியது. ``இப்பெரும் போரால் பாரியும் பறம்பும் அழிவதைத் தவிர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். அதற்காகத்தான் உங்களை அழைத்தோம்” என்றார் குலசேகரபாண்டியன்.

அருகில் இருந்த அலவனைப் பார்த்து, ``நீ வெளியில் போ” என்றார் கபிலர். அவன் வெளியேறினான்.

``நான் என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?” எனக் கேட்டார் கபிலர்.

``பாரியை சமாதானப்படுத்தி பேரரசர்களோடு இணங்கிப்போகச் சொல்லுங்கள்” என்றார் முசுகுந்தர்.

``போருக்கு ஆயத்தமாக இருக்கும் ஒருவனைத்தானே சமாதானமாகப் போகச்சொல்ல முடியும். பாரிதான் போருக்கே ஆயத்தமாகவில்லையே, பிறகு எப்படி அவனை சமாதானமாகப் போகச்சொல்வது?”

``பெரும்புலவர், பொய் பேசத் துணிந்துவிட்டீர்! எதிர் மலையில் நாள்தோறும் எண்ணற்ற வீரர்களைக் குவித்துக்கொண்டு இருக்கிறான். அவனையா போருக்கு ஆயத்தமாகவில்லை என்று சொல்கிறீர்கள்?”

``அவனது மண்ணைக் காக்க அவனது எல்லைக்குள் வீரர்களைச் சேர்க்கிறான். அதுவா போருக்கான ஏற்பாடு?”

``எல்லையைக் காப்பதற்கும் எல்லைக்குள் இருந்து தாக்குதலுக்கு  ஆயத்தமாகவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. நீங்கள் அதை அறியாதவரல்லர். ஆனால், அவன் எங்களையும் எமது படையையும் அறியாதவனாக இருக்கிறான். அதை அவனுக்கு உணர்த்தவே உங்களை அழைத்தோம்” என்றார் சோழவேலன்.

``நீங்கள் தேரில் ஏறிய கணமிருந்து இந்த இடம் வந்து சேர இரு பொழுதுகள்  ஆனதல்லவா! இதே வேகத்தில் தேரை ஓட்டினால் எமது படை நிற்கும் பரப்பளவு முழுவதும் பார்த்தறிய மூன்று நாள்களாகும். இந்தப் பெரும்படையோடு மோத நினைக்கும் மூடத்தனத்தை அவன் செய்ய வேண்டாம் என நீங்கள் அவனுக்கு எடுத்துரைக்க வேண்டும்” என்றார் குலசேகரபாண்டியன்.

83p5_1525172279.jpg

``நாகக்கரட்டின் மேலிருந்து பார்த்தால் படையின் சரிபாதி தெரிகிறது. அதுவே இரலிமேட்டிலிருந்து பார்த்தால் ஒரே பார்வையில் மொத்த படையின் முழுமையையும் பார்த்துவிட முடிகிறது. அவ்வளவுதான் இந்தப் படையின் அளவு. ஆனாலும் பாரி போரிட வேண்டாம் என்றுதான் முடிவுசெய்துள்ளான்” என்றார் கபிலர்.

``இந்தப் பெரும்படையைப் பார்த்தால், எந்தச் சிறுகுடி மன்னனும் போரிட வேண்டாம் என்றுதான் முடிவுசெய்வான். அதைத் தவிர அவனுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

வார்த்தைகள் உரசிக்கொள்ளத் தொடங்கின. கபிலரைக் காயப்படுத்திவிடக் கூடாது என்ற கவனம் மெள்ள மெள்ள குறைந்துகொண்டிருந்தது.

உதியஞ்சேரல் வயதால் மிகச் சிறியவன்; பலமுறை தோல்வியடைந்ததால் தீராவலியோடு இருப்பவன். அவையனைத்தும் வார்த்தைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

``மூவேந்தர்களோடு இணங்கிப் போதல்தான் பாரிக்கு நல்லது. எண்ணற்ற சிறுகுடி மன்னர்களைப்போல அவனும் தனது நிலத்தை சிறப்பாக ஆளலாம்” என்றார் முசுகுந்தர்.

``இல்லையென்றால்..?”

``போர்க்களத்தில் அவனது குடலை கழுகுகள் ஏந்திப் பறக்கும் நாள் விரைவில் வரும்” என்றார் சோழவேலன்.

கூர்முனைகொண்ட வார்த்தைகள் அடியாழம் வரை இறங்கின. கபிலர் சற்றே அமைதிகொண்டார். அவை முழுவதும் அமைதி நீடித்தது. செங்கணச்சோழன் பொதியவெற்பனைப் பார்த்து கண்களை உருட்டி ஏதோ சொல்லச் சொன்னான். தூதுவனைச் சீண்டுவதும் மிரட்டுவதும் மிக முக்கியம். எதிரியை எந்தப் பொறியை நோக்கி நகர்த்த வேண்டும் என்பதிலிருக்கும் தெளிவுதான் தூதுவனை நோக்கி எறியவேண்டிய சொற்களை தீர்மானிக்கிறது. பாரியிடம் சமாதானம் பேசவேண்டிய தேவை எதுவும் மூவேந்தர்களுக்கு இல்லை. திசைவேழரின் வாக்கை ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதால், இது நடக்கிறது.

இந்தப் படையெடுப்புக்கு வேந்தர்கள் மூவருக்கும் தனித்தனியான காரணங்கள் உண்டு. பொதுவான காரணம், பாரியின் புகழ். அது இவர்களின் ஆழ்மனதை நிம்மதி இழக்கச் செய்துள்ளது. அவனது பெயர் அவமானத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. அவனது அழிவு மட்டுமே இதற்கு முடிவு காணக்கூடியது. அதற்காக போர்க்களம் நோக்கி குறிவைத்து இழுக்க பேச்சுவார்த்தையைப் பயன்படுத்துதல் என்பதுதான் இவர்களது எண்ணம்.

பேசவேண்டியது பற்றி கண்களால் குறிப்புச் சொன்னதும் பொதியவெற்பன் கூறினான், ``பெரும்புலவரை வணங்குகிறேன். பேரரசர்கள் வீற்றிருக்கும் அவையில் இளவரசன் பேசுதல் முறையன்று. ஆனாலும் எனது கருத்தைத் தெரிவிக்க விழைகிறேன். பாரியின் முன்னால் இருப்பன இரண்டு வழிகள்தான்.”

என்னவென்று கபிலர் கேட்பார் எனக் கருதியது அவை. அவரோ அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

கேள்வி எழாததைக் கண்டுகொள்ளாததைப் போல் பேச்சைத் தொடர்ந்தான், ``மூவேந்தர்களில் யாரேனும் ஒருவருக்கு பாரி தன் மகளை மணமுடித்துக் கொடுத்து மணஉறவு காண்பது அல்லது மூவேந்தர்களோடு போரிட்டு மாய்வது. இவை இரண்டில் எது சரியான வழியென உங்கள் நண்பனுக்கு நீங்கள் அறிவுரை வழங்குங்கள்.”

கொந்தளிக்கும் தனது எண்ணங்கள் எதுவும் முகத்தில் தெரிந்துவிடக் கூடாது என பெருமுயற்சி செய்தார் கபிலர். ஆனாலும் மற்றவர்களால் கண்டறிய முடிந்தது. இதுதான் தகுந்த நேரம் என நினைத்த சோழவேலன் சொன்னான், ``போரில் அவன் அழிவான். அதன் பிறகு மூவேந்தர்களும் பறம்பைப் பங்கிட்டுக் கொள்வோம். அதைத் தடுக்க, மூவேந்தர்களோடு மண உறவுகொள்ளுதல் சிறந்ததுதானே?”

இயற்கையின் தன்னியல்பில் பற்றிப் படரும் கொடிபோல் மனிதக்காதல் செழித்துக்கிடக்கும் ஆதிநிலம் குறிஞ்சி. குறிஞ்சியின் குலச்சமூகம் நோக்கி மணவுறவை அரசியல் நடவடிக்கை என்னும் வல்லாயுதமாக மாற்றி வீசியெறிந்தபோது கபிலரின் உடல் நடுங்கியது.

மறுசொல்லின்றி அமர்ந்திருந்தார். அமைதி நீடித்தது. சற்று நேரத்துக்குப் பிறகு கொந்தளித்த உணர்வுகளை ஒருமுகப்படுத்திப் பேசத் தொடங்கினார்,

``உங்கள் மூவருக்கும் பறம்பின் மலைகள் வேண்டும். அவ்வளவுதானே?”

நேரடியாக இப்படிக் கேட்கிறாரே என்று குலசேகரபாண்டியன் எண்ணிக்கொண்டிருந்த போது, சற்றே உயர்த்திய குரலில் சோழவேலன் சொன்னான், ``ஆமாம்.”

``அதோ அந்த மேடையில் இருக்கும் இரண்டு யாழ்களையும் இருவர் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு பெண்களை அழைத்து கால் சலங்கையைக் கட்டிக்கொள்ளச் சொல்லுங்கள். அனைவரும் உடன் வாருங்கள். நான் பாடுகிறேன். பாட்டிசைத்துப் பறம்பேறிய குழுக்கள் கேட்பதை `இல்லை’ எனச் சொல்லும் வழக்கம் பாரியிடம் இல்லை. மொத்த பறம்பினையும் வழங்கிவிடுவான்.”

ஆணவத்தை அடியோடு வெட்டிச் சாய்ப்பதைப்போல சொற்களை வீசியெறிந்துவிட்டு, மறுமொழி என்ன என்பதை இறுமாப்போடு பார்த்தார் கபிலர்.

கொதிநெருப்பைக் கொட்டியதுபோல துடித்தெழுந்தான் சோழவேலன். நிலைமை வேறுவிதமாக ஆகிவிடக் கூடாது எனக் கருதிய குலசேகரபாண்டியன் சட்டெனச் சொன்னார், ``நட்பால் நா பிறழ்கிறது. உமது சொற்கள் பற்றியெறியும் பறம்பினைப் பாட அதிக நாள் இல்லை கபிலரே!” 

இருக்கையைவிட்டு எழுந்தார் கபிலர், ``நெருப்பில் எரித்தாலும் மீண்டும் முளைக்கும் ஆற்றல்கொண்டது பனம்பழம் மட்டும்தான். பனையை குலச்சின்னமாகக்கொண்டவன் வேள்பாரி. நெருப்பாலும் அழிக்க முடியாத அவனைப் பாடுதல் எந்தமிழுக்கு அழகு.”

சொல்லியபடி வணங்கி அவை நீங்கினார் கபிலர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 82

 

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

வேனிற்காலப் பள்ளியறையிலிருந்து மீண்டும் குளிர்காலப் பள்ளியறைக்கு மாறியிருந்தாள் பொற்சுவை. ஆனால், மாற்றங்கள் வேறு எதிலும் நிகழவில்லை. வேனிற்காலப் பள்ளியறையில் இருந்த காலத்திலும் பொதியவெற்பன் அங்கு வரவில்லை. அரசப் பணிக்காக வெங்கல் நாட்டுக்குப் போனவனை பேரரசர் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டார். போர்ச்சூழலை நோக்கி நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன.

மழைக்காலம் தொடங்கும் முன் பேரரசரும் புறப்பட்டுப் போனார். போருக்கான ஏற்பாடுகளுக்காக அரண்மனையின் முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் முன்னதாகப் புறப்பட்டுப் போயினர். போர்ச்சூழல், அரண்மனையை ஆண்களின் வாசனையற்றதாக மாற்றியது. கருவூலப் பொறுப்பாளர் வெள்ளிகொண்டார் மட்டுமே கோட்டையில் தங்கியிருந்தார். அரண்மனையின் நிர்வாகப் பொறுப்பு முழுமையும் அவர்வசமிருந்தது.

கோட்டையின் பாதுகாப்புக்கான வீரர்களைத் தவிர படைக்கலனில் இருந்த அனைவரும் புறப்பட்டுப் போயினர். பேரரசரும் இளவரசரும் கோட்டைக்குள் இல்லாத காலங்களில் விழாக் கொண்டாட்டங்கள் நடப்பதில்லை. தெய்வ வழிபாட்டுச் சடங்குகள் மட்டுமே வழக்கம்போல் நடந்தன. அரண்மனையின் அன்றாடம் என்பது ஆடம்பரமற்றே இருந்தது.

83p2_1525692100.jpg

இந்தப் புறச்சூழல் எதுவும் பொற்சுவையின் அகத்துக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவளது நாள்கள் வழக்கம்போலவே கழிந்தன. ஒரு பகல் பொழுதில் சுகமதியை அழைத்துக்கொண்டு அரண்மனையின் வெவ்வேறு மாளிகைகளைப் பார்த்துவந்தாள். தனித்து இருந்த அழகிய மாளிகை ஒன்று அப்போது அவளின் கண்ணில்பட்டது.

கடல் அலைகள் இடைவிடாது சுருண்டு மேலெழுவதுபோல் மாளிகையின் வெளிப்புறச் சுதைவேலைப்பாடுகள் இருந்தன. அலையை மேல்தோல் எனப் போத்தியிருக்கும் அந்த மாளிகையைப் பார்த்ததும் உள்ளே நுழையவேண்டும் என ஆசைகொண்டாள். கடல் அலையின் தளும்பல்களை காலம் முழுவதும் உணர்ந்தவள் அவள். அதைப் பார்த்ததும் கால்கள் தன்னியல்பில் அந்த மாளிகையை நோக்கி நடக்கத் தொடங்கின.

அது என்ன மாளிகை என்று உடன் இருக்கும் சுகமதிக்குத் தெரியும். எனவே, அங்கு போவதைத் தவிர்க்க முயன்றாள். ஆனால், அதற்குள் மாளிகையின் வாசல் அருகே சென்றுவிட்டாள் பொற்சுவை. இளவரசி திடீரென அங்கு வருவாள் என, பணிப்பெண்கள் எதிர்பார்க்கவில்லை. முத்துகள் பதித்த விரிவடிவத் தட்டுகளை எடுத்து வந்து அவளை வரவேற்க ஏற்பாடு செய்தனர். ஆனால், அதற்குள் பொற்சுவை மாளிகையின் உள்ளே நுழைந்துவிட்டாள்.

நிலைச்சுவரிலும் தரையிலும் பளிங்குக்கற்கள் பாவப்பட்டிருந்தன. ஓவியங்களும் மரவேலைப்பாடுகளும், மனிதக் கற்பனைக்கு எட்டாத பேரழகுகொண்டு விளங்கின. எங்கும் இசைக்கருவிகள் நிறைந்திருந்தன. வியந்து பார்த்த பொற்சுவை,”இது என்ன மாளிகை?” எனக் கேட்டாள்.

சொல்வதற்கு சற்றே தயக்கத்தோடு சுகமதி நின்றிருந்தபோது, அருகில் இருந்த தலைமைப் பணிப்பெண் சொன்னாள், “இந்த மாளிகையின் பெயர் பாண்டரங்கம்.”

பெயர் கேட்டதும், நீலவள்ளிதான் நினைவுக்குவந்தாள். ‘திருமணத்துக்காகக் கட்டப்பட்ட பாண்டரங்கில்தான் நீலவள்ளி யோடு மகிழ்ந்துகிடக்கிறான் பொதியவெற்பன்’ என்று பலமுறை கேள்விப்பட்டுள்ளாள். இந்த மாளிகையில்தான் தேவவாக்கு விலங்கின் வடக்கிருக்கும் ஆற்றல் கண்டறியப்பட்டது என்பதையும் அறிவாள். மனதுக்குள் அந்த எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, கண்கள் கலைவேலைப்பாடுகளைக் கண்டு சுழன்று கொண்டிருந்தன.  

நிமிர்ந்து மேற்கூரையைப் பார்த்தாள். அங்கும் வானியல் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. காலத்தை வசப்படுத்தும் மனித முயற்சிகள் அவளுக்குச் சிரிப்பையே வரவழைத்தன. பார்த்தபடியே இடதுபுறமாகத் திரும்பினாள். மேடை ஒன்றில் மகரயாழ் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு சற்று தள்ளி மாளிகையின் நடுவில் விளக்கு ஒன்று இருந்தது. அதன் கலை வேலைப்பாடுகள் கண்களை ஈர்த்தன. மகரயாழை நோக்கிச் செல்ல நினைத்தவள், விளக்கை நோக்கிச் சென்றாள்.

பணிப்பெண் அருகில் வந்து சொன்னாள், “மிகச்சிறந்த கலைவேலைப்பாடுகளைக்கொண்ட விளக்கு இது. ‘காமன் விளக்கு’ என்று இதைச் சொல்வார்கள் இளவரசி.”

83p1_1525692119.jpg

காதலுற்றப் பெண் ஒருத்தி வலதுகையை பக்கவாட்டில் சற்றே உயர்த்திப் பிடித்திருக்கிறாள். அவளின் உள்ளங்கையில் அகல் இருக்கிறது. இடதுகையை மார்போடு அணைத்தபடி வைத்திருக்கிறாள். அந்தக் கை ஒரு மலரைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அவளின் பேரழகில் மயங்கிய காதலன் அவளின் முகம் பார்த்தபடி அணுக்கமாய் மயங்கி நிற்கிறான். அந்தச் சிலையை உற்றுப்பார்த்தபடியே நின்றாள் பொற்சுவை.

பணிப்பெண் சொன்னாள், “இந்த விளக்கில் சுடரேற்றிப் பார்க்கும்போதுதான் இதன் முழு சிறப்பும் தெரியவரும் இளவரசி.”

‘சரி’ எனத் தலையசைத்தாள் பொற்சுவை. அரங்கின் பிற பகுதிகளிலிருந்து வரும் ஒளியை, திரைச்சீலையை இறக்கி மறைத்தார்கள். பாண்டரங்கில் இருள் நிறைந்தது. பணிப்பெண்கள் காமன் விளக்கில் சுடரேற்றினார்கள். முன்திசையெங்கும் ஒளி பரவியது. அரங்கில் இருந்த கண்ணாடிகளும் முத்துகளும் ஒளியை வாங்கி உமிழத் தொடங்கின.

பணிப்பெண், “இந்த விளக்கின் சிறப்பு, உமிழும் ஒளியல்ல; படரும் நிழல்தான்” என்று பொற்சுவையைப் பார்த்துச் சொல்லியபடி விளக்கின் பின்புறத்தை நோக்கிக் கை நீட்டினாள். பொற்சுவையும் சுகமதியும் அந்தத் திசையைப் பார்த்தனர்.

ஆணும் பெண்ணுமாக இருவர் நிற்கும் சிலையின் நிழல் ஒற்றை உருவமாக படிந்திருந்தது. சுடர் அசையும்போதெல்லாம் நிழலும் அசைந்துகொடுத்தது. அசையும் நிழலுக்குள் புரளும் உருவங்களைப் பற்றி பணிப்பெண் வியந்து சொல்லத் தொடங்கினாள்.

கையை உயர்த்தி அவளின் பேச்சை நிறுத்திய பொற்சுவை. “திரைச்சீலைகளை உயர்த்துங்கள்” என்றாள்.

சற்றே அதிர்ந்த பணிப்பெண்கள் திரைச்சீலைகளை விலக்கினர். பாண்டரங்கம் மீண்டும் ஒளிகொண்டது. 

சிலையின் அருகில் இருந்தபடி உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்த பொற்சுவை, சிறிது நேரம் கழித்துச் சொன்னாள், “இந்தச் சிலையின் சிறப்பு, வலதுகையில் ஏந்திப்பிடித்துள்ள விளக்கோ படரும் நிழலோ அல்ல.”

அனைவரும் வியந்து பார்த்தனர். 

“இடதுகையில் மார்போடு அணைத்துப் பிடித்திருக்கும் அந்த மலர்தான்.”

சுகமதி அப்போதுதான் அந்த மலரை உற்றுப்பார்த்தாள்.

“இந்தச் சிலையை வடித்த சிற்பி யார்?”

பணிப்பெண்களுக்குத் தெரியவில்லை. “கேட்டுச் சொல்கிறோம் இளவரசி.”

“விரைந்து தெரிவியுங்கள்” என்று சொல்லி, பாண்டரங்கம்விட்டு வெளியேறினாள்.

வரும் வழியில் சுகமதி கேட்டாள், “அந்த மலரின் சிறப்பு என்ன இளவரசி?”

“அந்தக் காதலர்களின் முகங்களைப் பார்த்தாயா? உள்ளுக்குள்ளிருந்து பெருகும் பேரன்பால் மலர்ந்திருக்கின்றன. விளக்கில் சுடரை ஏற்றாதபோதும் அந்த முகங்கள் மலர்ந்தே இருக்கின்றன. அப்படியென்றால், ‘அந்த மகிழ்வுக்குக் காரணம் விளக்கன்று, வேறேதோ காரணம் இருக்க வேண்டும்’ எனத் தோன்றியது. அப்போதுதான் அந்த மலரை உற்றுக்கவனித்தேன். அது தனித்துவமிக்கதொரு மலர். அதன் கீழ் இதழ்களின் அடிப்பகுதியில் சிறுசிறு வேர்கள் இருப்பதைப்போல சிற்பி வடித்துள்ளான்” என்றாள்.

“மலரின் இதழ்களில் எப்படி வேர் இருக்கும்? வேரில் காய்கள் காய்க்கும்... மலர்கள் மலருமா என்ன?”

“நானும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால், வேரில் மலரும் தன்மைகொண்ட ஏதோ ஓர் அதிசய மலர் உள்ளது. அதை ஏந்திப்பிடித்துள்ளதால்தான் இந்தக் காதலர்கள் இவ்வளவு மகிழ்வோடு இருக்கிறார்கள். அதைத்தான் சிற்பி மிக நுட்பத்தோடு வார்த்துள்ளான்” என்றாள்.

அன்றைய நாள் முழுவதும் அந்த மலரையும் காமன் விளக்கையும் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள் பொற்சுவை. அந்த விளக்கைச் செய்த சிற்பி யார்  எனத் தெரிந்துகொள்ள, விடாது முயன்றாள்.

மறுநாள் காலையில் பாண்டரங்கின் தலைமைப் பணிப்பெண் வந்து சொன்னாள், “தங்களின் திருமணத்துக்காக வெங்கல்நாட்டுச் சிறுகுடி மன்னர் கொடுத்த பரிசுப்பொருள் அது. அங்கு உள்ள சிற்பி இதை வடித்துத் தந்துள்ளார்.”

அன்று மாலையே வெள்ளிகொண்டாருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. இளவரசி வெங்கல்நாட்டுக்குச் செல்லவேண்டும்.

போர்க்களத்துக்குச் செல்ல இளவரசி ஏன் ஆசைப்படுகிறார் என்பது வெள்ளிகொண்டாருக்கு விளங்கவில்லை. இளவரசர் அரண்மனையைவிட்டு அகன்று பல மாதகாலம் ஆகிவிட்டது. “அவரைக் காணும் விருப்பத்தில் இளவரசி புறப்படுகிறார்’’ என்று உடன் இருந்தவர்கள் அவருக்குச் சொன்னார்கள். உரிய ஏற்பாட்டோடு இளவரசியை அனுப்பிவைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியேதும் தெரியவிலை.

தகுந்த பாதுகாப்போடு இளவரசியை அழைத்துச் செல்லும் பொறுப்பு செவியனுக்கு வழங்கப்பட்டது. அரண்மனையின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் செவியன்தான் வெங்கல் நாட்டுக்கு பலமுறை சென்று வந்த அனுபவம்கொண்டவன். எனவே, வெள்ளிகொண்டார் அவனைத் தேர்வுசெய்தார்.

83p3_1525692140.jpg

மூன்றாம் நாள் அதிகாலை தேர் புறப்பட்டது. தோழிகள் புடைசூழ, அன்னகர்கள் காவல்கொள்ள, அவர்களைக் கடந்து வீரர்கள் அணிவகுக்க, செவியன் தலைமையில் பயணம் தொடங்கியது.

செவியனின் குதிரையே முன்னே பாய்ந்து சென்றது. ஆனால், அவனது மனம் குழப்பத்திலிருந்தது. கடந்தமுறை வெங்கல் நாட்டிலிருந்து இளமாறனை மதுரைக்கு அழைத்து வந்தது செவியன்தான். ஆனால், அவனால் அழைத்துவரப்பட்டவன் மீண்டும் உயிரோடு வெங்கல்நாடு திரும்பவில்லை. இப்போதோ இளவரசியை வெங்கல்நாடு நோக்கி அழைத்துச்செல்கிறான். இந்தப் பயணம் எப்படி அமையப்போகிறதோ என்ற குழப்பத்தில் தவித்தது அவனது மனம்.

விரைந்து பயணித்தனர். குதிரைகள் இளைபாறுதலுக்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அப்போதெல்லாம் தேர்விட்டு இறங்கி வெளியில்வரும் இளவரசி, சற்று தொலைவு நடந்து இயற்கையின் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். மழைக்காலம் முடிவுற்ற நேரமிது. வயல்வெளியெங்கும் உழவுத்தொழில் செழிப்புற்று இருக்கவேண்டிய காலம் இது. ஆனால், காட்சிக்கு அப்படித் தெரியவில்லை. அந்த வழி சென்ற இரண்டு பெண்களை அழைத்துக் கேட்டாள் பொற்சுவை.

“ஊர்களில் ஆண்கள் இருந்தால்தானே உழவுத்தொழிலைச் செய்ய முடியும். எல்லோரையும் போர்க்களத்துக்கு அனுப்பச் சொல்லி அரச உத்தரவு. பிறகு எப்படி பயிர்செய்ய முடியும்?” எனக் கேட்டுவிட்டு நடந்தனர் பெண்கள்.

செல்லும் வழியில் எதிர்படும் ஊர்களில் தேர் நின்றது. பெண்களும் குழந்தைகளும் வயோதிகர்களும் மட்டுமே ஊர்களில் இருந்தனர். நீரும் வயலும் இருந்தும் பயிரை விளைய வைக்க முடியாத கொடுமையைப் பார்த்துக்கொண்டே கடந்தாள். கொல்லர், தச்சர், பறம்பர் என எவரும் ஊரில் இல்லை. எல்லோரும் போர்க்களம் சென்றுவிட்டனர். தானியங்களைச் சேமிக்க வழியின்றி இருக்கும் சின்னஞ்சிறு ஊர்களில் எல்லாம் கோடைக்காலத்தைப் பற்றிய கவலை இப்போதே வரத் தொடங்கிவிட்டது. ஏறக்குறைய எந்த ஊரும் இந்த ஆண்டு முழுமையான அறுவடையைச் செய்யவில்லை. வரப்போகும் காலம் எவ்வளவு கொடுமையாக இருக்கப்போகிறது என்பதை ஒவ்வொருவரின் கண்களிலும் கண்டாள் பொற்சுவை.

இரண்டாம் நாள் பயணத்துக்குப் பிறகு அவள் மனிதர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். காட்சிகள் மனதைக் கலங்கடிப்பனவாக இருந்தன. எனவே, திரைச்சீலை விலகாமல் பார்த்துக்கொண்டாள்.

தொடர்ந்து பயணித்து வெங்கல்நாட்டு மாளிகையை அடைந்தனர். பாண்டியநாட்டு இளவரசியின் திடீர் வரவு, வெங்கல்நாட்டு அரண்மனையைத் திகைப்புறச் செய்தது. புதிதாகக் கட்டப்பட்ட மாளிகை ஒன்றில் அவள் தங்கவைக்கப்பட்டாள். போர்க்களம், பலகாதத் தொலைவு தள்ளி இருக்கிறது. செவியன் அங்கு சென்று மையூர்கிழாரைக் காண முயன்றான். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்தது. மையூர்கிழாருக்கு செய்தி அனுப்பப்பட்டது. அவர் வரும் வரை காத்திருந்தனர்.

இரண்டாம் நாள்தான் செய்தி மையூர்கிழாரை எட்டியது. அவர் காலாட்படையின் வடகோடியில் இருந்தார். செய்தியை அவர் முதலில்  நம்பவில்லை. ‘உலகின் பேரழகி என வர்ணிக்கப்படும் பாண்டியநாட்டு இளவரசி, தனது அரண்மனைக்கு வந்துள்ளாரா?!’ வியப்பு நீங்காமல் குதிரையை விரைவுபடுத்தினார்.

‘பொதியவெற்பன் மதுரைக் கோட்டை யிலிருந்து நீங்கி பல மாத காலம் ஆகிவிட்டது. அதனால்தான் இளவரசியாரும் புறப்பட்டு இங்கு வந்துள்ளார்’ என்று எண்ணியபடியே அவள் தங்கியுள்ள மாளிகையை அடைந்தார். பாண்டியநாட்டு வழக்கப்படி நுன்னிழை பட்டுச் சரடுகளாலான திரைச்சீலைகள் அலையலையாய் மறைத்திருக்க அப்பால் நின்றிருந்த இளவரசி திரை விலக்கி வெளியே வந்தாள். தலை தாழ்த்தி வணங்கிய அவர், இளவரசியின் வருகையை வர்ணித்துக் கூறிய வார்த்தைகளை முடிக்க நீண்டநேரமானது. பொற்சுவை மகிழ்ந்து அவரது வரவேற்பை ஏற்றாள்.

“அமைச்சர் முசுகுந்தரிடம் நான் வந்துள்ள செய்தியைத் தெரிவியுங்கள். அவர் பொருத்தமான நேரத்தில் பேரரசரிடமும் இளவரசரிடமும் இந்தச் செய்தியைச் சேர்ப்பார்” என்றாள்.

“உத்தரவு இளவரசி. அவ்வாறே செய்கிறேன்” என்று கூறி, புறப்பட ஆயத்தமான மையூர்கிழாரை நோக்கி சுகமதி கேட்டாள், “இளவரசியாரின் திருமணத்துக்கு காமன் விளக்கைப் பரிசாகத் தந்தீர்கள் அல்லவா... அந்த விளக்கைச் செய்த சிற்பி எங்கே?”

83p4_1525692157.jpg

மையூர்கிழார் உள்ளுக்குள் மகிழ்ந்தார். இந்த மாளிகைக்கு இளவரசர் வரும் நாளன்று காமன் விளக்கு இங்கு இருக்க வேண்டும் என இளவரசி விரும்புவதாக எண்ணிக்கொண்டார்.

“உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறிய மையூர்கிழார், அரண்மனையின் தலைமைச் சித்திரக்காரர் குழல்தத்தனை அழைத்து காராளி எங்கு இருந்தாலும் அழைத்துவர உத்தரவிட்டு போர்க்களம் திரும்பினார்.

குழல்தத்தன் வயதில் மூத்தவர். இளவரசியைக் கண்டு வணங்கினார். “காராளியின் ஊர் மலைக்குன்றுகளுக்குள் இருக்கிறது. போய்த் திரும்ப மூன்று நாள்கள் ஆகும்” என்று சொல்லிச் சென்றார்.

இளவரசி பொற்சுவை, பயணக்களைப்பு நீங்க ஓய்வெடுத்தாள். மூன்று நாள்களுக்குப் பிறகு குழல்தத்தன் வந்தார். ஆனால், உடன் யாரும் வரவில்லை. இளவரசியிடம் பணிந்து சொன்னார், “காராளி வர மறுத்துவிட்டான் இளவரசி.”

யாரும் எதிர்பாராத பதிலாக இருந்தது.

“பாண்டியநாட்டு இளவரசியின் அழைப்பை ஒரு சிற்பி மறுத்துச் சொல்கிறானா?” எனச் சற்றே கோபத்தோடு கேட்டாள் சுகமதி.

குழல்தத்தன் பேச்சற்று நின்றார்.

“ஏன் மறுத்தான்?” எனக் கேட்டாள் பொற்சுவை.

குழல்தத்தன் எந்த விளக்கமும் சொல்லாமல் நின்றார்.

மீண்டும் கேட்டாள் பொற்சுவை. காரணத்தைச் சொல்வதன்றி குழல்தத்தனுக்கு வேறு வழியில்லை.

“ ‘வாக்குத் தவறியவனின் சொல்லுக்கு மதிப்பளிக்க மாட்டோம்’ எனக் காராளி கூறுகிறான்.”

பொற்சுவைக்குப் புரியவில்லை.”வாக்குத் தவறியது யார்?” எனக் கேட்டாள்.

தயக்கத்தோடு குழல்தத்தன் சொன்னார், “எங்கள் மன்னர் மையூர்கிழார்.”

சற்றே அதிர்ந்தார் பொற்சுவை.

“ ‘பறம்பின் மீது தாக்குதல் தொடுக்கவோ, தொடுப்பவருக்கு உதவியோ செய்ய மாட்டோம் என்பது எம் முன்னோர்களின் வாக்கு. மையூர்கிழார் அதை மீறிவிட்டார். இனி இந்த மண்ணை நான் மிதிக்க மாட்டேன்’ எனக் கூறி வர மறுத்துவிட்டான்” என்றார் குழல்தத்தன்.

காரணம் அறிந்ததும் அமைதிகொண்டாள் பொற்சுவை. அந்த அமைதி, அவன் மீதான கோபமாக உருமாறவில்லை. என்ன சொல்லப்போகிறாரோ என குழல்தத்தன் எதிர்பார்த்திருக்க,”அவன் இங்கு வரவேண்டாம், நான் அங்கு செல்கிறேன்” என்றாள் பொற்சுவை.

குழல்தத்தன் பதறிப்போனார். “இளவரசியார் மலைக்குன்றுகளுக்குள் இருக்கும் அவனுடைய இடத்துக்குப் போகவேண்டுமா!” என்றார்.

அதற்குள் அவளின் ஆணை அன்னகர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பல்லக்குகள் ஏற்பாடாயின. “நாளை காலை புறப்படலாம்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் பொற்சுவை.

மையூர்கிழாரைக் கண்டு இதைத் தெரிவிக்க முடியவில்லை. அவர் மூவேந்தர்களின் படைக்குள் எங்கு இருக்கிறார் என்பதை அறிவதே இயலாத செயலாகத் தோன்றியது. எனவே, அழைத்துச் செல்வதைத் தவிர குழல்தத்தனுக்கு வேறு வழியில்லை.   

பல்லக்கைச் சுமந்தபடி காரமலையின் அடிவாரக் குன்றுகளுக்குள் நுழைந்தனர் அன்னகர்கள். குழல்தத்தன் முன்னால் போய்க்கொண்டிருந்தார். காரமலையின் அடிவாரத்தில் உள்ளொடுங்கி இருக்கும் ஆறு ஊர்களும் வெங்கல்நாட்டுக்கு உட்பட்டவை. அதற்கு முன்னும் பின்னுமாக இருக்கும் ஊர்கள் பறம்புக்கு உட்பட்டவை. உடலெங்கும் வியர்த்துக்கொட்டியபடி இருந்தது. ஆனாலும் பறம்பு மக்கள் மீதிருந்த நம்பிக்கையில் அவர் துணிந்து அழைத்துச்சென்றார். எந்த ஓர் ஆபத்தும் அவர்களால் நேராது என்பது அவரின் எண்ணம்.

சரிவுப்பாறையில் வண்ணக் கலவைகொண்டு ஓவியம் வரைந்துகொண்டிருந்தான் காராளி. அவன் இருக்கும் இடமறிந்து அங்கேயே அழைத்துச் சென்றார் குழல்தத்தன். மலையேற்றப் பாதையில்கூட பல்லக்கைக் குலுங்காமல் தூக்கி வந்தனர் அன்னகர்கள். திறள்கொண்ட அவர்களின் தோள்களும் துடுப்பு போன்ற அகலமான பாதங்களும் அதற்கென பழக்கப்பட்டவை.

சற்று தொலைவில் இருந்த காராளியிடம் போய்ப் பேசினார் குழல்தத்தன். காராளி திரும்பிப் பார்த்தான். பல்லக்கைக் கீழிறக்கிக்கொண்டிருந்தார்கள். உள்ளே இருந்து பெண் ஒருத்தி இறங்கி அவனை நோக்கி வந்தாள். “வருபவர்தான் பாண்டியநாட்டு இளவரசி” என்று சொல்லி, அந்த இடம்விட்டு அகன்றார் குழல்தத்தன். சுகமதி பல்லக்கின் அருகேயே நின்றுகொண்டாள்.

இளவரசியை மகிழ்ந்து வரவேற்க, காராளி ஆயத்தமாக இல்லை. தலையைத் தாழ்த்தியபடி உயிரற்றக் குரலில் வரவேற்புச் சொல்லைக் கூறினான்.

தனது வரவை விரும்பாத ஒருவனின் முன் நிற்கிறோம் என்பதை முதல் பார்வையிலேயே உணர்ந்தாள் பொற்சுவை. ‘ஆனாலும் என்ன, அவனது கலை என்னை இங்கே வரவைத்தி ருக்கிறது. வாக்கு மீறியவன் மன்னனேயானாலும் அவன் மாளிகைக்கு வர மாட்டேன் என்று சொல்லும் துணிவு பிடித்திருக்கிறது. அதனால்தான் வந்துள்ளேன்’ என மனதுக்குள் நினைத்தபடி சொன்னாள், “நீ வடித்து தந்த காமன் விளக்கு மிகச் சிறப்பாக இருக்கிறது.”

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் செய்து தந்த விளக்கைப் பற்றிய நினைவுவந்தது. எல்லோரையும்போல அதன் சிறப்பை அறியாமலேயே சிறப்பித்துக் கூறும் இன்னொ ருவர் என நினைத்தபடி “நன்றி” என்றான் தலைநிமிராமல்.

“அந்தச் சிலையின் அழகு, சுடரில் ஒளியேற்றும்போது இணைந்துவிழும் நிழலில் இருப்பதாகக் கூறினர். ஆனால், எனக்கு அவ்வாறு தோன்றவில்லை” என்றாள்.

சற்றே விழிப்புற்றான் காராளி. தாழ்த்தியிருந்த தலையை மெள்ள உயர்த்தி இளவரசியைப் பார்த்தான். “உங்களுக்கு என்ன தோன்றியது?” எனக் கேட்டான்.

“அவள் இடதுகையில் பிடித்திருக்கும் மலரில்தான் அந்தச் சிலையின் உயிர் இருப்பதாக நினைக்கிறேன்.”

வியப்புற்று விரிந்தன கண்கள். காராளி, சொற்களின்றி அவளின் முகம் பார்த்தபடியே நின்றான்.

“நான் சொல்வது சரிதானா?” எனக் கேட்டாள்.

சற்று இடைவெளிக்குப் பிறகு “எப்படிக் கண்டறிந்தீர்கள்?”

83p5_1525692174.jpg

“நீ விளக்கில் வடித்துள்ள சிலைகள் அவ்வளவு உயிர்ப்போடு இருக்கின்றன. அவர்களின் முகங்களில் இருக்கும் மகிழ்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதற்குக் காரணம், இடதுகையில் ஏந்தியிருக்கும் மலர்தான். அவள் அதை உயிரெனக் காத்து வைத்திருக்கிறாள்.”

“ஆம், அதுதான் மலர்களிலே அதிசிறந்தது. காதலின் குறியீடாக மலைமக்கள் போற்றுவது.”

பெருவியப்போடு பொற்சுவை கேட்டாள், “என்ன மலர் அது? அதன் சிறப்பு என்ன?”

முகம் மலர்ந்து காராளி சொன்னான், “நிலத்தில் பூக்கும் பூக்கள் எல்லாம் ஒருமுறைதான் மலர்கின்றன. பிறகு காய்ந்து உதிர்ந்துவிடுகின்றன. ஆனால், நீர்ப்பூக்கள் அப்படியன்று. அவை மலர்கின்றன. பிறகு கூம்புகின்றன, மீண்டும் மலர்கின்றன. பூக்களின் அதிசயம் நீர்ப்பூக்கள் என்றுதான் பலரும் கருதுவர்.”

“ஆம், அதில் என்ன ஐயம்?” எனக் கேட்டாள் பொற்சுவை.

“நீர்ப்பூக்களைப்போல மலர்ந்து பிறகு கூம்பி, மீண்டும் மலரும் பூ ஒன்று நிலத்திலும் இருக்கிறது.”

பெருவியப்போடு,  “நீ சொல்வது உண்மையா?” எனக் கேட்டாள் பொற்சுவை.

“ஆம்” என்று சொன்ன காராளி, “அதில் வியப்புக்குரிய செய்தி இதுவன்று; இதனினும் சிறந்த ஒன்று உள்ளது” என்றான்.

சொல்லி முடிக்கும் முன்னர் “என்ன அது?” என்று கேட்டாள்.

காராளி சொன்னான், “முளைக்கும் பயிர் நிலத்தை முண்டி மேலே வருவதைப்போல, வேரிலிருந்து முளைக்கும் இந்த மலர் நிலத்தை முண்டி மேலே வந்து மண்ணோடு மலரும். இதன் வியப்புக்குரிய குணம் என்னவென்றால், மனிதர்கள் யாரேனும் அருகில் போனால் மலர்ந்த அதன் இதழ்களை மீண்டும் கூப்பி உள்ளே இழுத்துக்கொள்ளும். அதன் மேலிதழ்களில் சிறுசிறு முற்கள் இருக்கும். பார்ப்பவர்கள் ஏதோ முள்காய் மண்ணுள் கிடக்கிறது என நினைத்து கடந்து போய்விடுவார்கள்” என்றான்.

பொற்சுவை அசையாமல் கேட்டுக்கொண்டி ருந்தாள். காராளி, பேச்சை நிறுத்தி அமைதியானான்.

“அப்படியென்றால், மனிதர்கள் இதைப் பார்க்கவே முடியாதா?”

“முடியும். பேரன்பால் ஒன்றுகலந்த காதலர்கள் மண்ணுள் புதைந்திருக்கும் இதன் அருகே உட்கார்ந்து, ஈசல் புற்றை மெள்ள ஊதுவதுபோல மூச்சுக்காற்றால் ஊத வேண்டும். காதல் இணையர்களின் மூச்சுக்காற்று படப்பட கொஞ்சம் கொஞ்சமாக இந்த மலர் மலர்ந்து வெளிவரும் என்று சொல்வார்கள்.”

பொற்சுவையின் உடல் நடுங்கி அடங்கியது, “நீ சொல்வது உண்மையா?”

“ஆம்” என்றான் காராளி. “இதன் ஆதிப்பெயர் நிலமொரண்டி. ஆனால், ‘காதல் மலர்’ என்றால்தான் காட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும்.”

பொற்சுவை சொல்லின்றி நின்றாள்.

“பாரியும் ஆதினியும் தங்களின் மூச்சுக்காற்றால் மலரவைத்த காதல் மலரை ஏந்தி நின்றார்கள் என்று என் ஆசான் ஒருமுறை கூறினார். அந்தக் காட்சியை நான் கற்பனையாக வரைந்திருந்தேன். மையூர்கிழார் புதுமையாக ஏதாவது பரிசுப்பொருள் செய்ய வேண்டும் என்று சொன்னபோது அந்த ஓவியத்தையே விளக்காக வடிவமைத்தேன். எல்லோரும் சிலை அமைக்கப்பட்ட கோணத்தால் நிழல் படர்வதைத்தான் கவனித்தார்களே தவிர, கையில் ஏந்தியிருக்கும் காதல் மலரை யாரும் கவனிக்கவில்லை. நீங்கள் மட்டுமே அந்த அதிசய மலரைக் கண்டறிந்திருக்கிறீர்கள்” என்றான்.

மூர்ச்சையாவதைப்போல தாக்குண்டு நின்றாள் பொற்சுவை. “நீ வடித்துள்ள சிற்பத்தில் இருப்பது பாரியும் ஆதினியுமா?”

“அவர்களை நினைத்துதான் அந்த ஓவியத்தை வரைந்தேன். அந்த ஓவியம்கொண்டே சிற்பத்தை உருவாக்கினேன். அப்படியெனில், அதில் இருப்பது அவர்கள்தானே!”

மிரட்சியிலிருந்து மீள முடியவில்லை. “பாண்டியப் பேரரசின் பாண்டரங்கத்துக்குள் இத்தனை காலமாக இருப்பது பாரியின் சிலையா?!” கலங்கி நின்றாள் பொற்சுவை.

“மனங்களை வெல்லத் தெரிந்தவன் ஒருபோதும் தோல்வியடைய மாட்டான். நாடுகளையும் காலங்களையும் கடந்து, கலைகளால் அவன் வாழ்வான். இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கழித்தும் மனமொன்றிய காதலர்கள் நிலமொரண்டியைக் கண்டு மூச்சுக்காற்றை ஊதினால் பாரியும் ஆதினியுமே இதழ்களாய் விரிவார்கள்” என்றான் காராளி.

கலங்கிய கண்களோடு பேச்சின்றி நின்றாள் பொற்சுவை. அவளின் ஆழ்மனதுக்குள் மூச்சுக்காற்று ஊதப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், புதைந்துபோன அவளது காதல் மலர் இதழ் விரித்து மேலெழவில்லை. சற்றே அதிர்ச்சியாகி நின்றாள். காலம் கடந்துவிட்டது எனத் தோன்றியது. மூச்சுக்காற்றின் ஓசை மட்டும் கேட்டபடியிருக்க அந்த இடம்விட்டு மெள்ள நகர்ந்தாள்.

‘எதுவும் சொல்லாமல் போகிறாரே!’ என நினைத்த காராளி, பொற்சுவையைப் பார்த்துக் கூறினான், “நாங்கள் ஆறு ஊர்க்காரர்களும் வெங்கல்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், வாக்குத் தவறியவனுக்காக வில்லேந்த மாட்டோம் என்று உறுதிகொண்டுள்ளோம். எனவே, போர்க்களம் புகப்போவதில்லை. தங்களுக்கு விருப்பமானதைச் சொல்லுங்கள் இளவரசி. செய்துதருகிறேன்”.

தள்ளிப்போன பொற்சுவை கண்களைத் துடைத்தபடி திரும்பினாள். முகம் மெள்ள  மலர்ந்தது. காராளியைப் பார்த்துச் சொன்னாள், “எனக்கு வேண்டியதை நீ தந்துவிட்டாய்!”

அவளது புருவங்கள் இசைவாய் வளைந்து கீழிறங்குவதும், இமையோரத்து மயிர்கால்கள் அதை எவ்விப் பிடிக்க முயல்வதும் யாராலும் வரைய முடியாத ஓவியம்போல் இருந்தன. அந்த அழகிய விழிகளைவிட்டு காராளியின் கண்கள் விலகவில்லை. 

பேச்சின்றி நின்ற காராளியைப் பார்த்து, “என்ன?” என்றாள் பொற்சுவை.

“இந்த உலகில் வரைய முடியாத ஓவியங்கள் இருக்கும்வரை, ஓவியன் வரைந்துகொண்டே இருப்பான்” என்று சொல்லி மீண்டும் வண்ணக்கலவையைக் கையில் ஏந்தினான் காராளி.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 83

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

பிலர் திரும்பி வந்ததும் அவரிடம் கேட்கப்பட்டதைவிட அலவனிடம்தான் அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. அவன் அனுப்பப்பட்டதும் அதற்காகத்தான். வேந்தர்களின் படைக்கலக் கொட்டிலில் நஞ்சு சேகரிப்பு இருக்கிறதா, எந்த வகை நஞ்சுகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் தேவைப்பட்டன. அதனால்தான் கபிலருக்கு உதவியாளனாக அலவனை அனுப்பிவைத்தான் தேக்கன்.

அலவனின் வேலையை எதிரிகளே பாதியாகக் குறைத்தனர். கபிலரை அழைத்துச்செல்லும்போதே ஆயுதச் சேகரிப்பு இடங்களான படைக்கலக் கொட்டில்கள் மூன்றின் வழியாகத்தான் சாகலைவன் அழைத்துச் சென்றான். வேந்தர்களின் போர் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பதைக் காட்டும் உத்தியாக அவ்வாறு செய்தார்கள். ஆனால், அதுவே அலவனின் வேலையைக் குறைத்தது. படைக்கலக் கொட்டில்கள் மூன்றும் எங்கெங்கு இருக்கின்றன என்பதை முதலிலேயே பார்த்துக்கொண்டான்.

83p2_1526366998.jpg

பிறகு பேச்சுவார்த்தை நடத்தும்போது, ``நீ வெளியில் இரு’’ என கபிலர் சொன்னதும் வெளியில் வந்த அலவன் மூன்று இடங்களையும் போய்ப் பார்த்தான். அவன் பார்க்க நினைக்கும் இடங்களுக்கு வீரர்களே அழைத்துச் சென்றனர். வேந்தர்களின் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியேறிவந்து கேட்டதால், `அரச உத்தரவு’ என நினைத்து தங்குதடையின்றி அழைத்துச் சென்றனர். அலவன் சிறியவனாக இருந்ததால் அவனை ஐயம்கொள்ளவும் வழியின்றிப்போனது.

அலவன் நீண்டநேரம் சுற்றினான். நஞ்சின் வாடையை காற்றை நுகர்ந்தே கண்டறியும் உயிரினங்கள் உண்டு. நஞ்சின் குணமேறிய காற்று பட்டவுடன் வண்டுகள் குழறி ஒலிக்கும்; அன்றிற்புல் மயக்கமெய்யும்; காடை மயிர்சிலிர்க்கும்; மயிலோ நிலைபிறழ்ந்து துள்ளும். இவற்றைப்போலவே நஞ்சின் வாடையை நுகர்ந்தறியும் ஆற்றல்கொண்டவர்கள் நாகக்குடியினர். ஆனால், துள்ளுவது, சிலிர்ப்பது, மயங்குவது என எந்தவிதத்திலும் வெளிக்காட்டிக்கொள்ளாதவர்கள். சிறுவன் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்துத் திரிகிறான் என உடன் இருந்த காவல் வீரர்கள் நினைத்தனர். ஆனால் அவனோ, காற்றில் கலந்திருக்கும் நஞ்சை நிதானமாக நுகர்ந்து ஆய்ந்துகொண்டிருந்தான்.

போய் வந்ததும் முறியன் ஆசான் அவனை அழைத்துப்போய்விட்டார். ஆறாம் குகைக்குள் மருத்துவர்கள் புடைசூழ அலவன் அமர்த்தப்பட்டான். எந்த வகையான நஞ்சுகள் அவர்களின் சேமிப்பில் இருக்கின்றன என அவன் பட்டியலிட்டபோது அனைவரும் வாயடைத்துப்போயினர். இவ்வளவையும் மனிதர்கள் மீது செலுத்த அவர்கள் ஆயத்தநிலையில் வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விப்படவே பேரதிர்ச்சியாக இருந்தது. இவற்றைச் சேகரிக்கவும் உருவாக்கவும் ஆண்டுகள் பல ஆகியிருக்க வேண்டும். 

நஞ்சைச் சேகரித்தல் எளிதன்று; மருத்துவ அறிவு எங்கு செழிப்புற்று இருக்கிறதோ அங்குதான் நஞ்சைக் கையாளும் முறையும், சேகரிக்கும் முறையும் சிறப்புற்று இருக்கும். தாழைமலரின் மணம்கொண்ட நாகத்தின் நஞ்சும் புளியம் பூ மணம்கொண்ட விரியனின் நஞ்சும் மிக அதிக அளவில் இருந்தன சேரனின் படைக்கலக் கொட்டிலில். புகைநாற்றம்கொண்ட கந்தக நஞ்சு, பாண்டியனின் கொட்டிலிலும், நுகர்ந்த உடனே மார்பு எரிச்சலை உருவாக்கிய பற்பத்தாலான நஞ்சு சோழனின் கொட்டிலிலும் பாதுகாக்கப்பட்டிருப்பதை அலவன் விரிவாகச் சொன்னான்.

``இந்த வகை நஞ்சுகளை எந்த ஆயுதங்களினூடேயும் பயன்படுத்த வாய்ப்புண்டு. இதனால் நமது வீரர்கள் தாக்குண்டால் களத்துக்குள்ளேயே செய்துகொள்ளவேண்டிய மருத்துவம் என்ன... களம்விட்டு வெளியில் கொண்டுவரும் வரை தாக்கப்பட்டவருக்கு உயிர் நிலைக்குமா... அதற்கு என்ன வழி,   மருத்துவச்சாலையை இவ்வளவு உயரத்தில் இரலிமேட்டிலே அமைத்துள்ளது எந்த வகையில் பயன்படும்... நாகக்கரடின் கீழே உடனடி மருத்துவத்துக்கு வகைசெய்யும் ஏற்பாட்டைச் செய்யவேண்டுமா?’’ என்று உரையாடல் தொடர்ந்தது. அலவன் கண்டறிந்து சொன்ன செய்திக்குப் பிறகு நஞ்சு முறியைச் சேகரிக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய பணி எது என்பது, மையூர்கிழாருக்கு பெருங்குழப்பமாகவே இருந்தது. பாண்டியப் பெருவேந்தனின் மனம்கோணாமல் நடப்பதுதான் அவருக்கு இருக்கும் முன்னுரிமை. ஆனால், என்று மூஞ்சல் நகர் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அரண் உருவாக்கப்பட்டதோ, அன்றிலிருந்து இன்று வரை அவரால் மூஞ்சல் நகருக்குள் செல்ல முடியவில்லை. வேந்தர்களுக்கான எல்லா தேவைகளையும் நிறைவுசெய்யப் போதுமான நிர்வாக ஏற்பாட்டுடனேயே அவர்கள் உள்ளனர். அமைச்சர் முசுகுந்தர் மூலமே செய்தியை அவ்வப்போது பரிமாறிக்கொண்டார். இளவரசி வந்துள்ள செய்தியை முசுகுந்தரிடம் தெரிவித்தார். அதேபோல போர்க்களம்விட்டு சற்று தொலைவில் தனித்த குடில் ஒன்றில் தங்கியுள்ள திசைவேழரைப் பற்றிய செய்திகளையும் அவ்வப்போது சொல்லிவந்தார்.

83p1_1526367012.jpg

மூவேந்தர்களின் படைகள் நிலைகொள்ளும் வரை மையூர்கிழாருக்கு எண்ணற்ற வேலைகள் இருந்தன. ஆனால், படைகள் நிலைகொண்டவுடன் அவருக்குச் சொல்லப்பட்ட முக்கிய வேலை என்பது பறம்புமலைக்குள் எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து சொல்லுதல் மட்டுமே.
அவர் வாக்கு மீறிய காரணத்தால் அவருடைய வெங்கல்நாட்டைச் சேர்ந்த ஆறு ஊர்க்காரர்கள் இந்தப் போரில் பங்கெடுக்க மாட்டோம் என முடிவுசெய்துள்ளதை அவர் வேந்தனிடம் தெரிவிக்கவில்லை. அது அவர் மீதான மதிப்பைக் குறைத்துவிடும் என நினைத்தார். ஆனால், ‘இந்தச் செய்தியை என்று இவன் சொல்கிறான் பார்ப்போம்’ எனக் காத்திருந்தார் குலசேகரபாண்டியன்.

ஒற்றாடுதல் என்பது, பெருங்கலையாக வேந்தர்களால் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது. வெங்கல்நாட்டு நிர்வாகத்துக்குள் என்னென்ன நடக்கின்றன என்பதை அறிந்து சொல்ல ஒற்றர்படைத் தலைவன் ஒருவனின் கீழ் ஒரு குழு இயங்கியது. அவர்களைப் பொறுத்தவரை மையூர்கிழார், பொற்சுவை, திசைவேழர் எல்லோரும் கண்காணிக்கப்பட வேண்டியவர்களே! அவர்கள் அறிந்த செய்தியை ஒற்றர்படைத் தலைவனிடம் நாள்தோறும் கூறுகின்றனர். அவனோ தனக்கு மேலிருக்கும் பொறுப்பாளனிடம் கூறுகிறான். அவனைப்போல எத்தனை பேர் ஒற்றர்படையில் இருக்கிறார்கள் என்பதை குலசேகரபாண்டியன் மட்டுமே அறிவார். 

குலசேகரபாண்டியன் அமைத்துள்ள ஒற்றர்படை, இணையற்றச் செயல்பாட்டுத் திறனைக்கொண்டிருந்தது. அதனால்தான் சேரனையும் சோழனையும் துணிந்து தனது போர் செயல்பாட்டுக்குள் இணைத்துக் கொண்டார். அவர்கள் இருவரின் படைகளும் பாசறைகளும் குலசேகரபாண்டியனின் செவிப் பறையால் கேட்கக்கூடிய இடங்களாகத்தான் இருந்தன.

சேரனும் சோழனும் ஒற்றர்படை கொண்டிருந்தனர். ஆனால், மாபெரும் இயக்கம் ஒன்றின் ஒரு பகுதியாக இணைந்த பிறகு அதன் மொத்த இயக்கத்தைக் கண்காணிப்பது எளிய செயலன்று. ஆனாலும் அவர்களின் ஒற்றாடற்பணியும் தீவிரமாகத்தான் இருந்தது. அவர்கள் பணியின் இலக்காக இருந்தது பறம்பில் நடப்பதறிந்து வெல்லும் செயலுக்கானதன்று. மாறாக, எதிரியாலோ, மற்ற இரு பேரரசுகளாலோ தங்களுக்கு ஏதும் தீங்கு நேரிடாமல் காக்கும் செயலுக்கானதாக இருந்தது. எனவே, அவர்கள் தற்காப்பு ஆயுதமாக ஒற்றாடலைப் பயன்படுத்தினர். குலசேகரபாண்டியனோ தாக்கும் கருவியாக ஒற்றாடலை கூர்தீட்டியிருந்தான்.

``போரில் ஆயுதங்கள் மட்டுமே கருவிகள் அல்ல; எந்த ஓர் ஆயுதத்தையும்விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை, கண்டறியப்படும் செய்திகளுக்கு உண்டு. எனவே, வெங்கல்நாட்டுக்குள் பறம்புக்குடிகள் சிலரையாவது அனுப்பிவைக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை ஒற்றறிவது அவசியம்’’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

``தன்னையும் தனது வீரத்தையும் நம்பாதவனே ஒற்றனை நம்புகிறான்’’ என்றான் பாரி.

வாரிக்கையன் மறுத்தான். ``வீரமும் தந்திரமும் சம முக்கியத்துவம்கொண்டவை. போர்க்களத்தில் இரண்டிலும் திறன்மிக்கவர்களாக இருத்தல் வேண்டும்.’’

``வீரத்தின்வழி மட்டுமே போரை நடத்துவோம். அறமற்ற வழிக்கு `தந்திரம்’ எனப் பெயர் சூட்டுவது கோழைகளின் செயல்’’ என்று சொன்ன பாரி, சற்றும் இடைவெளியின்றி தொடர்ந்தான், ``நாம் விரும்பாத ஒரு வழிமுறையில் போரை நடத்தப்போவதில்லை. எதிரிகளின் அறமற்றச் செயலைப் பற்றி நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும்?’’

83p5_1526367030.jpg

இப்போது கபிலர் குறுக்கிட்டார், ``போரென்று வந்துவிட்டால், அதற்கு வெற்றி மட்டுமே நோக்கமாக இருக்க முடியும். அந்த வெற்றியை அடைய நிகழ்த்தப்படும் கொலையில் அறமும் அடக்கம். எனவே, போரில் அறம் நெடுநேரம் உயிர்வாழாது. நாம் விரும்பாவிட்டாலும் இதுதான் உண்மை.``

``அறத்தின் கொலைக்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. அதுமட்டுமன்று, அந்தக் கொலைக்குக் கைம்மாறுசெய்யும் சீற்றத்தை நாம் இழந்துவிடக் கூடாது.’’

பாரியின் சொல்லுக்குப் பிறகு அங்கு எந்தக் கருத்தும் மிஞ்சவில்லை.

இரவு நீண்ட உரையாடல் முடிந்து தூங்குகையில் பொழுது நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

மறுநாள் மிகவும் காலம் தாழ்த்தியே பாரி எழுந்தான். அவன் எழுந்தபோது எதிரில் நின்றிருந்தான் நீலன்.

அவனைக் கண்டதும்தான் பாரியின் நினைவுக்கு வந்தது, இன்று மயிலாவுக்கான நிறைசூல் விழா. வள்ளிக்கூத்து நடக்கும் நாள். பெண் முதன்முறையாகக் கருவுறும்போது ஒன்பதாம் மாதம் அவளை அவளது இல்லத்திலிருந்து அழைத்துப்போய் சந்தனவேங்கை மரத்தின் அடிவாரத்தில் இரவெல்லாம் வள்ளிக்கூத்து நடத்துவர். பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பெருங்கூத்து இது. கூத்து முடிந்ததும் மூத்த மருத்துவச்சியின் குடிலுக்கு அழைத்துச்செல்வர். குழந்தை பிறக்கும் வரை அவள் அங்குதான் இருப்பாள். பெண்களின் முதல் மகப்பேறுக்காக நடக்கும் பெருவிழா இது.

வள்ளிக்கூத்தில் ஆண்களுக்கு அனுமதியில்லை. எனவே, இன்று வரை அந்தக் கூத்து எப்படி நடக்கிறது என்று எந்த ஆணுக்கும் தெரியாது. ஆனால், அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை யாரையும் விடுவதில்லை.

கருவுற்றவளை சந்தனவேங்கை நோக்கி அனுப்பிவைக்கும் சடங்கு, இன்று நடக்க இருக்கிறது. வள்ளிக்கூத்தில் கலந்துகொள்ள ஆதினியும் அங்கவையும் வேட்டுவன் பாறையில்தான் இருந்தனர். பாரியும் வேட்டுவன்பாறைக்கு வருவதாகச் சொல்லியிருந்தான். ஆனால், நேரம் அதிகமாகிவிட்டது. ``நீ இப்போது புறப்பட்டால்தான் மாலைக்குள் போய்ச்சேருவாய். காலம் தாழ்த்தாமல் புறப்படு. நான் இரவுக்குள் வந்து சேருகிறேன்’’ என்றான் பாரி.

பாரியின் சொல்லை ஏற்று புறப்பட்டான் நீலன். உடன் அவன் தோழர்கள் புங்கன் உள்பட பத்து பேர் புறப்பட்டனர். காலம்பனின் மூத்தமகனான கொற்றனும் உடன்வந்தான். இரலிமேட்டில் இருக்கும் குகைகளை இந்தப் போருக்காகத்தான் தங்குமிடமாக மாற்றினர். எனவே, இங்கிருந்து மற்ற இடங்களுக்கு செம்மையான குதிரைப்பாதைகள் உருவாகிவிடவில்லை. இரலிமேட்டிலிருந்து கீழே வந்து நாகக்கரடின் வழியே நெடுந்தொலைவைக் கடந்து பிறகு மீண்டும் காரமலையின் மீது ஏறித்தான் குதிரைப் பாதையைப் பிடிக்க முடியும். அதன் பிறகு விரைந்து பயணித்தால் மாலைக்குள் வேட்டுவன்பாறையை அடையலாம். அதனால்தான் ``காலம் தாழ்த்தாமல் புறப்பட்டுப் போ’’ என்றான் பாரி.

நீலன் புறப்பட்டுச் சென்ற பிறகு இரலிமேட்டின் மேற்புறம் இருந்த சிற்றருவியில் குளிக்கச் சென்றான். அவனது எண்ணம் முழுக்க நேற்றிரவு நடந்த உரையாடலையே மையம்கொண்டிருந்தது. `போரில் அறம் நெடுநேரம் உயிர்வாழாது’ என்ற கபிலரின் வார்த்தை, அவனை இரவெல்லாம் தூங்கவிடவில்லை. பெரும்போரை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் எனத் தோன்றியது.

`நாம் இறங்கித் தாக்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இப்படியே பறம்புவீரர்கள் எல்லோரும் ஊர் திரும்பினால் இந்தப் போர் முடிவுக்கு வந்துவிடும். எதிரிகள், இப்போது இருக்கும் இடத்தைவிட்டு பறம்புக்குள் ஒருபோதும் நுழைய மாட்டார்கள். அப்படியே நுழைந்தாலும் அவர்களை அழிக்க நீண்ட பொழுதாகாது. அதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். அதனால்தான் கண்ணுக்கு முன்னால் பெரும்படையை நிறுத்தி கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றுகிறார்கள். எதிரி என்ன செய்கிறான் எனச் சிந்திக்கத் தொடங்குவதே அவனது நோக்கத்துக்குள் நாம் இழுபட்டதன் அடையாளம்தான். தேக்கன் அலவனை அனுப்பியிருக்கக் கூடாது. அவசரப்பட்டுவிட்டான். சேகரிக்கப்பட்டுள்ள கொடும்நஞ்சைப் பற்றிய செய்தி, வீரர்களை மேலும் முறுக்கேற்றிவிடும். நாம் அவர்களை நோக்கி இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்’ என்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது மரத்தின் மீதிருந்து சற்றே மாறுபட்ட பறவையின் ஒலி கேட்டது.

`என்ன பறவை இது... கேட்டிராத ஒலியாக இருக்கிறதே!’ என நினைத்து இங்கும் அங்குமாகப் பார்த்தான். எதுவும் தெரியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் ஒலி கேட்டது. ஒலி வந்த திசையைக் கூர்ந்து நோக்கினான். சின்னஞ்சிறிய பறவை இன்று முறுக்கித்திரும்பும் கிளையில் உட்கார்ந்திருந்தது. உற்று அதையே பார்த்துக்கொண்டிருந்தான். `அதுதான் கூவியதா... என்ன பறவை அது?’ எனப் பார்த்தபடி இருந்தான். மீண்டும் கூவியது. இப்போதுதான் அதன் முகப்பகுதியை முழுமையாகப் பார்க்க முடிந்தது.

ஒரு கணம் திகைத்துப்போனான். அது கருங்கிளி. காட்டின் வியத்தகு பறவைகளில் ஒன்று. எளிதில் யார் கண்ணுக்கும் தட்டுப்படாதது. மகிழ்ச்சி பொங்க அதையே பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. சிறிது நேரத்தில் அது பறந்து காட்டில் மறைந்தது. சிறுவயதில் தந்தையோடு பயணப்பட்டபோது பார்த்தது. ஆண்டுகள் பல ஆகிவிட்டன. நினைவு, கருங்கிளியையே சுற்றிவந்தது. குளித்து முடித்துத் திரும்பும்போதுதான் தோன்றியது, `கருங்கிளையைப் பார்ப்பது மிக நல்ல நிமித்தம். பறம்பில் உள்ள எல்லோரும் அதை அறிவர். இந்தச் செய்தியைச் சொன்னால் `தாக்குதலை இன்றே தொடங்க வேண்டும் என்று கூறுவார் வாரிக்கையன். எனவே, இதைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டாம்’ என நினைத்தபடி குகைத்தளத்துக்கு வந்தான் பாரி.

உணவு முடித்து சிறிது நேரத்தில் வேட்டுவன்பாறை நோக்கிப் புறப்பட ஆயத்தமானபோது நாகக்கரட்டிலிருந்து குதிரைவீரர்கள் இருவர் வந்தனர். ``முடியன் உடனே தங்களை அழைத்துவரச் சொன்னான்’’ என்றனர். போர் தொடர்பான முக்கியச் செய்தியாக இருக்கும். அதனால்தான் உடனே வரச்சொல்லி அழைப்பு அனுப்பியுள்ளான் முடியன் என்பதைப் புரிந்துகொண்ட பாரி, புறப்பட்டான். தேக்கனும் கபிலரும் பின்தொடர்ந்தனர்.

83p6_1526367046.jpg

மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. நீலனின் பயணம் வேட்டுவன்பாறையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. செல்லும் வழியில் குமரிவாகையைப் பார்த்தான். வாகைமரத்தில் முதன்முதலாகப் பூப்பூக்கும் வாகையை `குமரிவாகை’ என்பர். குமரிவாகையின் மலர் பேரெழில் கொண்டதாக இருக்கும். மயிலாவுக்கு சூடுவதற்காக அதைப் பறித்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான்.

வேட்டுவன்பாறைக்குள் நுழையும்போது ஊரே விழாக்கோலம்கொண்டிருந்தது.  சேவலின் நெற்றிக்கொண்டை போன்ற கவிர்மலரால் மலரணி வாயிலை உருவாக்கியிருந்தனர். தோரணங்களும் மாலைகளும் எங்கும் தொங்கவிடப்பட்டிருந்தன. சிறுமியர் எல்லாம் ஈங்கைமலரை கூந்தலில் சூடி ஆடிப்பாடிக்கொண்டிருந்தனர். சிட்டுக்குருவியின் குஞ்சு போன்ற அந்த மலர் சிறுமியரின் தலையாட்டலுக்கு ஏற்ப தாவித் தாவி பறந்துகொண்டிருந்தது. மலர் மணக்க, தண்டு மணக்க, தாது மணக்க எங்கும் நிறைந்த மனத்தினூடே மலர்ந்திருந்தது வேட்டுவன்பாறை.

மயிலாவின் தோழிகள் நீலனை வரவேற்று அவனது குடில் நோக்கி அழைத்துச்சென்றனர்.  மற்ற காலம் என்றால், ஊரே ஆட்டம்பாட்டத்தில் மூழ்கியிருக்கும். போர்ச்சூழலாதலால் அது இல்லை. நீலன், குடிலுக்குள் நுழைந்தான். நிறைசூல் மங்கை எதிரில் அமர்ந்திருந்தாள். குனிந்திருந்த மயிலாவின் முகம் சற்றே நிமிர்ந்தது. மாதம் கழித்து வந்தவனின் கைகளைப் பற்றி நிறை வயிற்றில் வைத்து மகவை உணரச்செய்ய வேண்டும் எனத் தோன்றியது. `நீ கொடுக்கும் முத்தத்தை உள்நாக்கு நழுவி உணர்வதுபோல இருக்கிறது அடிவயிற்றுக்குள் துடிக்கும் மகவின் செயல்’ என அவனது காதோடு சொல்லவேண்டும் என ஆசையாய் இருந்தது. ஆனால், அவனது முகத்தைப் பார்த்த கணம் எல்லாம் சொல்லப்பட்ட உணர்வோடு அமைதியானாள்.

அவளைப் பார்த்தபடி எதிரில் அமர்ந்த நீலன், சிறிது நேரம் கழித்து ஆதினியைத் தேடினான். சிரித்த முகத்தோடு நீலனின் அருகில் வந்து அமர்ந்தாள் ஆதினி. பெண்களின் கேலிப் பேச்சினூடே ஏதேதோ நடந்துகொண்டிருந்தது. ஒருத்தி மயிலாவின் காதோரம் போய் ஏதோ சொன்னாள். மகிழ்ந்து சிரித்தாள் மயிலா.

விரிந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை மயிலாவின் கையில் கொடுத்து நீலனுக்குச் சூட்டச் சொன்னாள் ஆதினி. அதை வாங்கிய மயிலா, மலர்ந்த முகத்தோடு விரிமலர் மாலையை நீலனுக்குச் சூடினாள். ஆணின் மலர்தல் பெண்ணின் சூலகத்திலிருந்தே விளைகிறது.

மணம்மிக்க பச்சிலைகளாலான படலை மாலையை நீலனின் கையில் கொடுத்து மயிலாவுக்கு சூட்டச்சொன்னாள் ஆதினி. இருகரம் ஏந்தி அவளுக்கு அணிவித்தான் நீலன். பச்சிலைகளின் ஆதிமணம் சூல்கருவுக்குள் இறங்கும்போது நீலனின் மணமும் இணைந்தே கலந்தது. குடிலெங்கும் நிரம்பிவழிந்தது குலவையொலி.

ஆதினி நீலனிடம் சொன்னாள், ``நீ கொண்டுவந்த பூவை இப்போது அவளுக்குச் சூட்டு.’’

நீலன் மறுமொழி சொல்லாமல் மயிலாவையே பார்த்துக்கொண்டிருந்தான். 

``என்ன பேசாமல் இருக்கிறாய்?’’ என ஆதினி மீண்டும் கேட்டதற்கு, மயிலாவைப் பார்த்துக்கொண்டே நீலன் சொன்னான், ``நிறைசூல் பெண்ணின் மலர்ந்த முகத்துக்கு இணையான மலர் இதுவரை கண்டறியப் படவில்லை. நான் எந்தப் பூவைச் சூட்டுவேன் அவளுக்கு?’’

அவன் சொல் கேட்டு ஆதினியின் கண்கள் கலங்கின. நீலனைத் தன் மகன் எனத் தழுவி நெற்றிமுகர்ந்து முத்தம் கொடுத்தாள். அப்போதுதான் கவனித்தாள், நீலன் கொண்டு வந்தது குமரிவாகை. ``வாகைப்பூவையா பறித்து வந்தாய்? வாகை, கொற்றவை குடிகொள்ளும் மரமல்லவா? இந்தப் போர்க்காலத்தில் போர் தெய்வத்தின் பூக்கள் உன்னிடமே இருக்கட்டும். அவை உனக்கானவை’’ என்றாள்.

நிறைந்திருந்த ஓசையின் நடுவே அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த  தோழி ஒருத்தி நீலனைப் பார்த்து சத்தம்போட்டுச் சொன்னாள், ``உனக்குரியது வாகைமலர்தான்; காந்தள் மலர் அல்ல. அதனால்தான் உன் வீட்டை அலங்கரிக்க காந்தள் மலரைப் பயன் படுத்தவில்லை. அதற்கான தகுதி உனக்கில்லை’’ என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு வீடு வெடிப்பதைப்போல பெண்கள் சிரித்தனர். தொடர்ந்து அவள் சொன்னாள், ``நீ குடில்விட்டு வெளியேறு. நாங்கள் மயிலாவை அழைத்துக் கொண்டு வள்ளிக்கூத்துக்குப் புறப்படுகிறோம்.”

சிரிப்பொலிக்கும் கேலிப்பேச்சுக்குமிடையே குடில்விட்டு வெளியேறி வந்தான் நீலன். காத்திருந்த தோழர்கள் அவன் அருகில் வந்தார்கள். குடிலுக்குள்ளிருந்து வெளிவந்தவனின் மீது வெளிப்படும் பூந்தாதுவின் மணம் யாரையும் மயக்கக்கூடியதாக இருந்தது. மணத்தை நுகர்ந்தபடியே புங்கன் சொன்னான், ``பெண்களின் விழாதான் இயற்கையின் திருவிழா. ஆண்களுக்கு இதுபோல எந்த விழாவும் இல்லையே!”

அந்தக் கவலை எல்லோருக்கும் இருந்தது. நீலனுக்கு, கூடுதலாக ஒரு கவலை இருந்தது. ஏன் இந்த விழாவில் காந்தள் மலர் பயன்படுத்தப் படவில்லை; தனக்கு அந்தத் தகுதி ஏன் இல்லை எனத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அங்குமிங்குமாக விசாரித்தான். 

மயிலாவின் காதோரம் கேலிபேசி சிரித்த தோழி வெளியில் வந்தபோது அவளிடமே கேட்டான் நீலன். அவள் சொன்னாள், ``காந்தள் மலர் மலரும் வரை தேனீயோ வண்டோ காத்திருக்காது. கிண்டி மலரச்செய்து தேன் பருகும். ஆனால், நீ அப்படியல்ல. பொறுமை காத்திருக்கிறாய். மணம் ஆன பிறகுதான் மகவைப் பெற்றுள்ளாய். எனவே, உனக்கு காந்தள் மலரைச் சூடும் தகுதியில்லை” எனச் சொல்லியபடி சிரித்துக்கொண்டே ஓடினாள்.

83p7_1526367060.jpg

நீலனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ``நான் அப்படியல்ல என்று சொல்வதா, அப்படித்தான் என்று சொல்வதா’’ புரியாத குழப்பத்தில் நின்றான்.

நேரமாகிக்கொண்டிருந்தது. வள்ளிக் கூத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாகின. நீலன் தலைமையில் வந்த பத்து இளைஞர்களும் ஊரில் இருந்த கிழவர்கள் பன்னிருவருமாக 22 ஆண்களும் ஏக்கத்தோடு பார்த்திருக்க, மயிலாவை அழைத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமாகினர் பெண்கள்.

டைக்களத்தின் மூன்று மூலைகளிலும் போர்ப்பலிக்கான சடங்குகள் உச்சிப்பொழுதில் தொடங்கின. ஈனாமல் இளவயதிலேயே செத்துப்போன பசுவின் தோலை மயிர்சீவல் போத்தியிருந்த போர்முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. நிணத்தைத் தின்று குதித்தாடும் பேய்மகளிரின் ஆட்டத்துக்கான கருங்கூத்துக்களம்  ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.

இணையற்ற வீரர்கள் களப்பலிக்குத் தேர்வுசெய்யப்பட்ட செய்தி படையெங்கும் பரவியது. கொப்புளிக்கும் குருதிபோல் வீரவுணர்ச்சி பெருக்கெடுக்க ஆயுதங்களை ஒன்றுடனொன்று உரசி பேரொலியை எழுப்பினர். சடங்குகள் தொடங்குவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. முரசுகளின் ஓசை சீரான வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடத்தொடங்கியது.

முரசு அதிரும் ஓசைகள் ஆங்காங்கே கேட்பதறிந்த முடியன், எதிரிப்படையில் ஏதோ நடக்கிறது என நினைத்து பாரியை அழைத்து வரச்சொல்லி வீரர்களை அனுப்பிவைத்தான். பாரியும் தேக்கனும் கபிலரும் நாகக்கரடுக்கு வந்து சேர்ந்தனர்.

படைகளின் மூன்று திசைகளிலும் மூன்று பலிச்சாலைகளில் சடங்குகள் தொடங்கின. ஆனால், முக்கியச் சடங்கு மூஞ்சலில் நடக்க விருந்தது. அது பகலின் மறைவுக்குப் பிறகுதான் தொடங்கவிருந்தது. ஆனால், மற்ற இடங்களில் பலிச்சடங்குகள் நண்பகல் இருந்தே தொடங்கின. பூசகர்கள் மலர்களையும் கனிகளையும் கொண்டுவந்து குடுவைநீரைத் தெளித்து தீ மூட்டி சடங்குகளைத் தொடங்கினர்.

சடங்குகளின் ஓசை, முரசுகளின் பேரொலி, பேய்மகளிரின் கூத்தாட்டம் எல்லாம் நேரமாக ஆக கூடியபடி இருந்தன. பொழுது மறையத் தொடங்கும்போது பலிச்சடங்கு உச்சம்கொள்ளத் தொடங்கியது. வீரனின் குருதி ஏந்தியபடி கதிரவன் களம் நீங்குவான். அவனது தாகம் நீக்கப்பட்டதன் கைம்மாறாக போர்க்களத்தில் தனது ஒளி படர்ந்துகிடக்கும் ஒரு பகல் பொழுதில் வெற்றியைத் தருவான். அதற்குத்தான் இந்தப் பலிச்சடங்கு நடக்கிறது.

கதிரவனின் தாகம் நீக்க பேரொலிகொண்ட சடங்கு நடக்கும்போது, இதற்குத் தொடர்பில்லாத இன்னொரு சடங்குக்காக மூஞ்சல் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அது யட்சினிக்கான சடங்கு. பேராற்றலைக்கொண்ட அழிவின் தேவதை யட்சினி. மலையெனக் குவிக்கப்பட்ட வீரர்களின் உடல்களைக் கண்டும் தாகம் தணியாதவள்.  மனிதப் பிணங்களையே  புணர்ந்து மகிழ்பவள். அவளை இறைஞ்சி அழைக்கும் சடங்கு தொடங்கியது மூஞ்சலில்.

நிலமெங்கும் இருள் கவிழ்ந்தது. சடங்குக்காக மலர்களாலும் குருதி பிசைந்த தினைமாவாலும் நாற்சதுரமிடப்பட்ட நிலம் நோக்கி அதை அழைத்து வந்துகொண்டிருந்தனர். பேய்முரசு முழங்கியது. வீரர்களே அஞ்சி நடுங்கும் பேரோசை இரவெங்கும் பரவியது. நிறைசூலியின் பால்கட்டிய மார்புபோல திரண்ட கும்பத்தையுடைய யானை அது. நேற்று வரை பாண்டியப் பேரரசின் சிறப்புக்குரிய முதுயானை பவளவந்திகை; இப்போதோ யட்சினியின் வாகனம்.

முரசுகளின் முழக்கத்துக்கேற்ப அதை இருளுக்குள் அழைத்துவந்தனர். சடங்கு நிலத்தில் பூசகர்களின் பெருங்கூட்டம் நின்றிருந்தது. குளித்த ஈரத்தை உலர்த்தாமல் நீர்வடிய நின்றிருந்தனர் மூவேந்தர்களும்.

பேய்முரசுகளின் ஓசை இருளை உலுக்கியது. கடல்போல் கிடந்த படையெங்கும் பேரமைதி நிலவியது. சடங்குகளின் தனித்த ஓசை இரவெங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அதிர்ந்து அதிர்ந்து பரவிய ஓசை கேட்டு பேய்மகளிர் மூன்று திசைகளிலிருந்தும் மூஞ்சலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அவர்களின் கூந்தல் முழுவதும் வீரர்களின் குருதியால் நனைந்திருந்தது. அவர்கள் ஆடிய கருங்கூத்தால் நிலம் அதிர்ந்துகொண்டிருந்தது. அவர்கள் மூஞ்சலுக்கு வந்துசேர்ந்தபோது பவளவந்திகையும் வந்துசேர்ந்தது.

நள்ளிரவைத் தொடுவதற்கு சிறிது நேரமே இருந்தது. பவளவந்திகையை, மண்ணில் அமரச்செய்தான் பாகன். அதன் முகம் முழுவதையும் தோலாடைகளால் இறுகக் கட்டினர். பேய்முரசின் மேல்தோல் விடாது புடைத்தெழுந்துகொண்டிருந்தது. மேலெழும் ஓசை இருளின் செவிப்பறையைக் கிழித்துக் கொண்டிருந்தது.

நாகக்கரடின் உச்சியில் நின்றபடி படைகள் இருக்கும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. நண்பகலில் போர்ச்சடங்குகள் மூன்று மூலைகளில் தொடங்கின. ஆனால், இரவான பிறகும் சடங்குகள் முடியவில்லை. படைகளின் நடுப்பகுதியில் சடங்கொன்று தொடங்கும் ஓசை கேட்டதும் `இது என்ன புதியதாய் இருக்கிறதே!’ என இருளின் திசையைப் பார்த்தபடியே நின்றிருந்தனர்.

நள்ளிரவைத் தொடும் நேரத்தில் யானை ஒன்றின் சாவுப்பிளிறல் இருளெங்கும் எதிரொலித்தது. வேந்தர்களின் வீரர்கள் அனைவரும் பேய்க்கூச்சல் எழுப்பி ஆயுதங்களை ஒன்றுடனொன்றை உரசி வெற்றி முழக்கமிட்டனர்.

நாகக்கரடின் மேல் இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. ஆனால், யானையின் பிளிறல் கேட்ட கணம் கபிலரின் உடல் நடுங்கி மீண்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு மெள்ளச் சொன்னார், ``அவர்கள் யட்சினிக்கான சடங்கை நடத்துகிறார்கள்!”

``அப்படியென்றால்?’’ விளக்கம் கேட்டான் முடியன்.

``காக்கும் போருக்கும் தாக்கும் போருக்கும் அந்தந்தத் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளை நடத்துவார்கள். ஆனால், பேரழிவை உருவாக்கும் போருக்கு யட்சினி வழிபாட்டை நடத்துவார்கள். அவள் அழிவின் தேவதை. எதிரியின் படை நோக்கி அவளை ஏவிவிடும் சடங்குக்கான பெரும்பலியை அவர்கள் கொடுத்துள்ளனர்.”

எல்லோரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்க, கபிலர் சொன்னார் ``அவர்கள் தாக்குதலைத் தொடங்கப்போகிறார்கள்.’’

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீரயுக நாயகன் வேள்பாரி - 84

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

வேட்டுவன்பாறையில் இருந்த பெண்கள் கூட்டம் மயிலாவை அழைத்துக் கொண்டு வள்ளிக் கானம் நோக்கிப் புறப்பட்டது. கூத்துக்களத்தில் இசைக் கருவிகளை இசைக்கக்கூட ஆண்கள் யாருக்கும் அனுமதியில்லை. எல்லாவற்றையும் பெண்களே இசைக்க வேண்டும். எனவே, ஊரில் இருந்த பறை, துடி, முழவு என ஒன்றைக்கூட விடவில்லை. மந்தையில் கட்டியிருந்த காரிக்கொம்பைக்கூட கழற்றி எடுத்துக்கொண்டார்கள். கரைபுரண்ட உற்சாகத்தினூடே கூட்டம் புறப்பட்டது. பெருங்குரைப்பொலியோடு நாய்க்கூட்டமும் மொத்தமாக உடன் சென்றது.

சந்தனவேங்கை, காட்டின் எந்தத் திசையிலும் இருக்கக்கூடியதுதான். ஆனால், கருவுற்ற பெண்ணுக்கான சடங்கைச் செய்ய எந்தச் சந்தனவேங்கையைத் தேர்வுசெய்கின்றனரோ அந்த மரம் இருக்கும் பகுதியைத்தான் `வள்ளிக்கானம்’ என்பர். அங்கு நடக்கும் சடங்கு என்னவென்று இன்று வரை ஆண்களுக்குத் தெரியாது. பறம்புப்பெண்கள் காலங்காலமாய்க் காத்துவரும் ரகசியம் இது. இரவெல்லாம் கூத்து நடத்துகிறார்கள் என்று மட்டுமே ஆண்கள் அறிவர். அங்கு என்ன வகையான கூத்து நடக்கிறது என்பதெல்லாம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இந்தச் சடங்கில் பங்கெடுத்துத் திரும்பும் பெண்கள், அதன் பிறகு நெடுநாள்கள் அந்த மகிழ்வைப் பேசிக் களிப்பர். அதுதான் ஆண்களை மேலும் சினமேற்றும். என்னதான் நடக்கிறது அங்கு எனத் தெரிந்துகொள்ள, எண்ணற்ற வழிமுறைகளைக் கையாண்டு பார்த்தனர்.  ஆனாலும் இன்று வரை அவர்களால் எதையும் கண்டறிய முடியவில்லை.

85p1_1526719951.jpg

காதல்வயப்பட்ட இளம்பெண், தன் காதலன் மீதான அளவுகடந்த அன்பால் இந்தச் சடங்கில் நிகழ்வதைப் பற்றிச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆண்கள் அதற்கான முயற்சியையும் செய்துபார்த்தார்கள். ஆனாலும் எந்தக் காதலியும் தன் காதலனிடம் இதை மட்டும் பகிர்ந்து கொள்வதேயில்லை.

காரணம், இந்தச் சடங்கில் பங்கெடுக்கும் இளம்பெண்ணிடம் முதுபெண்கள் சொல்லும் முதல் எச்சரிக்கையே அவள் காதலனைப் பற்றியதுதான். ``வள்ளிக்கூத்தில் என்ன நடக்கிறது என்பதை உன் காதலனிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாது. அவ்வாறு பகிர்ந்துகொண்டால், உனது பிள்ளைப்பேறு வலி மிகுந்ததாக மாறும். அப்போது எந்த ஆணும் உனது வலியைச் சுமக்க வர மாட்டான். நாங்கள்தான் உடன் நிற்போம். அளவுகடந்த உனது வலியைவைத்தே நீ தப்பு  செய்துவிட்டாய் எனக் கண்டறிந்துவிடுவோம்’’ என்று சொல்லிவிடுவார்கள். இது ஓர் அச்சமூட்டும் எச்சரிக்கைக்காகச் சொல்லப் படுவதுதான். ஆனால், இளம்பெண்கள் பிள்ளைப்பேறு வலியை நினைத்துப்பார்த்து யாரிடமும் வாய் திறக்க மாட்டார்கள்.
85p2_1526720058.jpg
ஆணுக்குத் தெரியாத ஓர் உலகை, இன்று வரை பறம்புப்பெண்கள் காப்பாற்றிவருகின்றனர். அதுவே அவர்களுக்குப் பெருமகிழ்வைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. அவர்களின் இந்த மகிழ்வுதான் ஆண்களை மீண்டும்  மீண்டும் கண்டறியத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. இன்றுகூட அதற்கான முயற்சிதான் நடந்தது.  இரலிமேட்டிலிருந்து வள்ளிக்கூத்துக்காக நீலன் புறப்பட்டபோது, ``காலம்பன் மூத்தமகன் கொற்றனையும் அழைத்துச் செல்’’ என்று வேட்டூர் பழையன் அனுப்பிவைத்தான். அதற்கான காரணம் இதுதான். உள்ளூர்ச் சிறுவர்களை அனுப்பினால் வள்ளிக்கானத்துக்கு அழைத்துச் செல்ல மறுப்பார்கள். அதுவே காலம்பன் மகன் என்றால், மறுத்து ஒதுக்க மாட்டார்கள் என நினைத்து அனுப்பிவைத்தான் பழையன். ஆனால், காட்டுக்குள் நுழையும்போது அவனை நீலனின் கையில் கொடுத்து, ``இங்கேயே இரு. நாங்கள் காலையில் வந்து உனக்கு விருந்துபடைக்கிறோம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் பெண்கள்.

வேட்டுவன்பாறையின் வயதான இரண்டு பெருசுகள், சோமக்கிழவனும் செம்பூந்தனும். பழையனைவிட சற்று வயது குறைவுதான். ஆனால், மலைப்பாறைகளில் உருண்டதால் நடமாட்டம் வேகமாகத் தளர்ந்துவிட்டது. அதிக தொலைவு நடக்க முடியாத கிழத்தன்மையை அடைந்திருந்தனர். அதனால்தான் இப்போது இரலிமேட்டுக்குப் போகாமல் ஊரிலேயே இருக்கின்றனர். காட்டுக்குள் நுழைந்த பெண்கள் கொற்றனை அழைத்துச் செல்லாமல் ``இங்கேயே இரு” எனக் கூறிச் சென்றவுடன், சோமக்கிழவன் தான் கொதித்தெழுந்தான்.

``சின்னப் பையன் ஆசையாகக் கேட்கிறான். அவனக்கூட கூட்டிப்போகாம விட்டுட்டுப் போறீங்களேடி!” எனப் பெரும்சத்தத்தை எழுப்பினான். ஆனால், பெண்கள் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. கிழவன் ஏன் கத்துகிறான் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். எல்லாக் காலங்களிலும் சிறுவர்களின் மூலமாகவும் காதலன்களின் மூலமாகவும்தான் ஆண்கள் முயல்கிறார்கள். இன்று வரை அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இப்போதும் கொற்றனைக் கொஞ்சிப் பேசி, நீலனுக்குப் பக்கத்தில் உட்காரவைத்துவிட்டுப் போய் விட்டார்கள்.

அங்கவை, இதுவரை வள்ளிக்கூத்தில் கலந்துகொண்டதில்லை. முதன்முறையாக இப்போதுதான் அவள் கலந்துகொள்கிறாள். பெண்கள் கூட்டம், மயிலாவை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் போய்க்கொண்டிருந்தது. தீப்பந்தங்களை ஏந்தியவர்கள் முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருந்தனர். ஆதினிக்கு அருகில் சற்றே அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் அங்கவை. கூட்டத்தின் பேச்சொலியினூடே அவளின் அமைதியைக் கவனித்த ஆதினி அருகில் சென்று கேட்டாள், ``முதன்முறையாகப் பங்கெடுப்பதால் என்னவெல்லாம் நடக்கும் என்ற சிந்தனையிலேயே வருகிறாயா?”

85p3_1526719966.jpg

தலையாட்டி `இல்லை’ என்றாள் அங்கவை.

``பிறகு என்ன சிந்தனையில் இருக்கிறாய்?” எனக் கேட்டாள்.

அப்போதும் அங்கவையிடமிருந்து பதிலில்லை.

``இன்றிரவு `என்ன நடந்தது?’ என உதிரன் கேட்டால் சொல்லிவிடுவோம் என அச்சப் படுகிறாயா?” என்று கேட்டாள் சற்றே நக்கலாக.

சின்னப் புன்முறுவலோடு ஆதினியின் காதோடு வந்து சொன்னாள், ``உதிரன் கேட்டால் சொல்ல மாட்டேன். ஆனால், தந்தை கேட்டால் மறுக்க மாட்டேன்.”

ஆதினிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை, மகளைத் தோளோடு அணைத்துக் கொண்டு யார் காதிலும் விழாதபடி மெள்ள ``நிச்சயம் உன் தந்தை கேட்க மாட்டார். கவலைப்படாதே!” என்றாள்.

அங்கவை அதிர்ச்சியோடு ஆதினியைப் பார்த்தாள். அவளோ மகளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டியபோது, முகத்திலிருந்து பொங்கி மேலெழுந்தது வெட்கம்.

அங்கவை ஒரு கணம் ஆடிப்போனாள். சற்றே கோபத்தோடு ``அப்படியென்றால் நானும் உதிரனிடம் சொல்வேன்” என்றாள்.

வெட்கம் படர தாயும் மகளும் மற்றவர்களின் காதில் படாமல் பேசிச் சிரிப்பதைப் பார்த்த பெண் ஒருத்தி ``நீங்கள் மட்டும் என்ன பேசிச் சிரிக்கிறீர்கள்?” எனக் கேட்டாள்.

கேட்டவளை அழைத்துக்கொண்டு பேச்சை மாற்றியபடி அங்கவையை விட்டு சற்றுத்தள்ளி முன்னே நடந்தாள் ஆதினி.

இன்னும் சிறிது தொலைவுதான் இருந்தது வள்ளிக்கானம். நேரம் செல்லச் செல்ல வேகம் கூடிக் கொண்டேயிருந்தது. இதற்காக மாதக்கணக்கில் காத்திருந்தவர்கள் அல்லவா அவர்கள்! கும்மிருளில் மலைப்பாதையில் அவர்களின் கால்கள் பெருமயக்கத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தன.

சந்தனவேங்கையின் அடிவாரத்தில் கருவுற்ற  பெண்ணை அமரவைத்து நடக்கும் சடங்குகள் எல்லாம் வழக்கம்போல் ஊருக்குள் நடக்கும் சடங்குகள்தான். ஆனாலும் இன்றைய இரவின் முக்கியத்துவத்துக்குக் காரணம் வள்ளிக்கானத்தின் கொண்டாட்டம்தான். அந்தக் கொண்டாட்டத்துக்கு அடிப்படை, எங்கும் கிடைக்காத அதிசிறந்த மதுவகைதான்.

ஆண்கள் அறிந்திராத அரிதினும் அரிதான மதுவகை ஒன்று உண்டு. பெண்கள் மட்டுமே அறிந்து, இன்றுவரை ஆண்களின் வாடையே படாமல் காப்பாற்றிவைத்துள்ள மது வகை அது. `வள்ளிக்கானத்தின் கொண்டாட்டத்தில் பெண்கள் மது உண்டு களிக்கின்றனர்’ என்ற செய்தி ஆண்களால் யூகிக்கக்கூடியதுதான். ஆனால், அது என்ன வகை மது என்பது இன்றுவரை ஆண்களுக்குத் தெரியவில்லை.

சோமப்பூண்டு பானத்தைக் குடித்த ஒருத்தி, ``எங்களின் மதுபோல இது இல்லை” என்று ஒருமுறை சொல்லிவிட்டாள். அன்றிலிருந்துதான் வள்ளிக்கூத்தில் குடிக்கும் மதுவின் வகை என்ன என்பதைப் பற்றிய தேடலை ஆண்கள் தீவிரப் படுத்தினர். இன்றுவரை யாருக்கும் தெரியாத ரகசியமாக அது காப்பாற்றப்படுகிறது. காரணம், அந்த மதுவை உருவாக்கும் பணியில் ஈடுபடு பவர்கள் முதுபெண்களே. அவர்களிடமிருந்து ஆண்களோ, மற்ற பெண்களோகூட இது தொடர்பான செய்தியைக் கேட்டறிய முடியாது.

ஒவ்வொரு வகை மலரின் தேனுக்கும் ஒவ்வொரு வகையான குணமுண்டு. ஆனால், இணையற்ற சுவைகொண்ட தேன் இருக்கும் மலர், `நாகசம்பங்கி’. அதில் துளிர்க்கும் தேனின் சுவையை எதனுடனும் ஒப்பிட முடியாது. துளித்தேனை நுனிநாக்கில் வைத்த கணம், மொத்த உடலும் தேனுக்குள் கரைவது போலிருக்கும். ஆனால், நாக்கில் வைக்கப்பட்ட தேன்துளி எளிதில் கரையாது; ஒட்டிக்கொள்ளும். அதன் சுவையை நாக்கு அடிக்கடி நுகரத் துடிக்கும். அப்போது அந்தச் சுவை உடல் முழுக்கத் தளும்பிக்கொண்டிருக்கும். நினைவுப் புலன்கள், சுவையுணர்வுக்குள் சிக்குண்டுவிடும். மீள முடியாத சுவையை, நினைவு மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்தபடியே இருக்கும். சுவை கரையாமல் தேன் மட்டுமே கரைந்திருக்கும். மறு துளி நோக்கி மனதை நகர்த்தாமல் நிறுத்தி வைக்கக்கூடிய மயக்கம் நாக சம்பங்கியின் தேனுக்கு மட்டுமே உண்டு.

85p4_1526719980.jpg

நாகசம்பங்கி பூத்துக்கிடக்கும் பகுதியில் இருக்கும் தேன்கூட்டிலிருந்து தேன்கட்டியை எடுப்பதுதான் முதலில் செய்யும் பணி. அதன் பிறகு அந்தத் தேன்கட்டியைத் தகுந்த சேர்மானத்தோடு சேர்த்து நிலத்துக்குள் புதைத்து வைத்துவிடுவர். பெண் முதன்முறையாகக் கருவுற்றவுடனே முதுபெண்களின் முதல் வேலை நாகசம்பங்கியின் தேனை எடுப்பதுதான். எந்தச் சந்தனவேங்கையைத் தேர்வு செய்கிறார்களோ, அந்த இடத்தில்தான் அதைப் புதைத்துவைப்பர். நான்கு முதல் ஐந்து மாதம் மண்ணுக்குள் இருக்கும் தேன்கட்டி, நுரை துளிர்த்து சுவை இறுகி உறைந்திருக்கும். ஒற்றைத் துளியிலே மனிதரைக் கரைக்கக்கூடிய தேன், இப்போது தேறலாக உருத்திரண்டிருக்கும். இதன் துளி நாக்கில் பட்ட கணம், தேள் கொட்டியதைப் போல சுர்ரென ஒரு காரமயக்கம் உச்சந்தலைக்கு ஏறும். கண நேரம் கண் கட்டி அவிழும். அதன் பிறகு நிகழ்வதை நினைவில் தங்கவைக்க யாராலும் முடியாது.

இன்றைக்குச் சந்தனவேங்கையின் அடிவாரத்தில் அமரவைக்கப்பட்ட மயிலா, முதல் மிடறு குடித்ததிலிருந்து தொடங்கியது வள்ளிக்கூத்து. ஆறு வகையான துடிகளை அடித்து, ஆண்களால் அறியவே முடியாத மதுவின் சாரமேற்றி, பெண்களின் கூட்டம் ஆடத் தொடங்கியது. நேரமாக ஆக துடியின் ஓசையும், பறையின் அதிர்வும், முழவின் சத்தமும் காட்டை உலுக்கின. பெண்கள் தங்களின் ஆதியாட்டத்தை நிலம் பிளக்க ஆடினர்.

வேட்டுவன்பாறையில் இருந்த ஆண்கள் துடியின் ஓசை கேட்டு, காரமலையின் வடபுறம் நோக்கி ஏக்கத்தோடு பார்த்திருந்தனர். பொழுது, நள்ளிரவை நெருங்கவில்லை. ஆனால், அதற்குள் ஆட்டம் தொடங்கிவிட்டதை இசைக்கருவிகளின் ஓசை சொல்லியது. செம்பூந்தன் சொன்னான், ``அது என்ன தேறல்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. எந்த ஆம்பளையினாலும் கண்டுபிடிக்க முடியலை. இவளுக மட்டும் இந்த ஆட்டம் போடுறாளுக!”

சோமக்கிழவனோ ``தொடங்கும்போதே சத்தம் இப்படி இருக்கே... இன்னும் போகப்போக எப்படி இருக்கும் பாரு!” என்றார்.

இளைஞர்கள், ஓசை கேட்ட மலை உச்சியை நோக்கி அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தனர். ஓசை கூடிக்கொண்டேயிருந்தது.

வேட்டுவன்பாறையைச் சுற்றிப் பல நூறு வீரர்கள் செடிகொடிகளினூடே நுழைந்து மேலேறிக் கொண்டிருந்தனர். கும்மிருட்டு சூழ்ந்திருந்தது. இருப்பதோ இருபத்துநான்கு பேர்தான். எல்லோரின் கவனமும் உச்சிமலை பார்த்து வள்ளிக்கூத்தில் நிலைகொண்டிருந்தது.

மூன்று சேனைகளைக்கொண்ட அறுநூறு பேரோடு மேலேறிக்கொண்டிருந்தான் கருங்கைவாணன். நிறையிருள் நாள் எல்லா வகையிலும் பொருத்தமாக இருந்தது. மிகத்தேர்ந்த வீரர்களைக்கொண்ட படையணியைத் தேர்வுசெய்திருந்தான். பறம்பின் காவல் தலைவர்கள் இருக்கும் ஊருக்குள் நுழைந்து தாக்கப்போகும் இந்தப் படைக்கு, தானே பொறுப்பேற்று வந்தான். திரையர்களைத் தாக்கிய போரில் பெரும் வீரத்தை வெளிப்படுத்திய திதியனை தென்புறத்துக்கும், சேரநாட்டுப் பெருவீரன் துடிச்சாத்தனை வடபுறத்துக்கும் தலைமைதாங்கச் செய்தான். கிழக்குப்புறத்திலிருந்து வீரர்களோடு முன்னேறினான் கருங்கைவாணன்.

வேட்டுவன்பாறையின் பாதி உயரத்தைக் கடந்துகொண்டிருந்தனர். நாய்கள் ஏதும் ஊரில் இல்லாதது அவர்களுக்கு இன்னும் வசதியாகிவிட்டது. புது ஆள்களை மலையடிவாரத்தில் கண்டாலே மேலேயிருந்து பாய்ந்து இறங்குபவை இடுப்புயர நாய்கள். சூழ்ந்துவிட்டால், யானைகளையே நகரவிடாமல் நிறுத்தக்கூடியவை. அத்துணையும் இன்று பெண்களோடு சேர்ந்து மலைமேல் ஏறிவிட்டன. குரைப்பொலி ஏதுமற்று அமைதி கொண்டிருந்த வேட்டுவன்பாறையை நோக்கி எதிரிகள் மேலேறிக்கொண்டிருந்தனர்.

ஊரின் மந்தையில் உட்கார்ந்தபடி காரமலையில் துடியோசை கேட்கும் பகுதியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தனர் ஆண்கள். துடியோசை, பெருகத் தொடங்கியது. பெண்கள் இல்லாத ஊரில் பெண்களைப் பற்றிப் பேசத்தான் எவ்வளவு கதைகள் இருக்கின்றன. அதுவும் அவர்களால் நிராகரிக்கப்பட்ட வலியை, கேலிப் பேச்சின் மூலம்தான் கடக்க முடியும். பேச்சு, களைகட்டத் தொடங்கியது. சிறுவன் கொற்றனுக்குத் தூக்கம் வந்தது. அதைக் கவனித்த நீலன், ``நள்ளிரவுக்குப் பிறகு பனி அதிகமாக இருக்கும். நீ போய் குடிலுக்குள் படுத்துக்கொள்” என்றான்.

85p5_1526719993.jpg

கொற்றன், மந்தையிலிருந்து எழுந்து நீலனின் குடில் நோக்கி நடந்தான். வேட்டுவன்பாறையின் கிழக்கு முனையில் நாங்கில்மரத்தின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட குடில் அது. அங்கிருந்து பார்த்தால், கிழக்குத்திசைக் குன்றின் சரிவும் விரிந்துகிடக்கும் சமவெளியும் முழுமையாகத் தெரியும். கொற்றன் தூக்கக்கலக்கத்திலேயே குடில் நோக்கி வந்தான். படல்கொண்டு மூடப்பட்டிருந்தது வாசல். படலை மெள்ளத் தூக்கிச் சுவர் ஓரமாகத் திரும்பினான். சரிவுப் பகுதியில் இங்கும் அங்குமாக மனிதத்தலைகள் தெரிந்தன. ஆயுதம் ஏந்திய பெருங்கூட்டம் மேலேறிக்கொண்டிருப்பது தெரிந்தது. கும்மிருட்டினூடே தலைகள் பதுங்கி மறைந்தன. எதிரிகள் வந்துகொண்டிருப்பது கண நேரத்தில் புரிந்தது. `இப்படியே சத்தம்போட்டுக்கொண்டு மந்தை நோக்கி ஓடலாமா?’ எனத் தோன்றியது. `அப்படிச் செய்தால் எதிரிகள் விழிப்படைந்து விடுவார்கள்’ எனச் சிந்தித்தபடியே குடிலுக்குள் போய் படலை மூடிக்கொண்டான் கொற்றன். 

ஒரு கணம் சிந்தித்தவன் சட்டென குடிலின் மேற்புறக் கூரையை ஆள் நுழைவதற்கு ஏற்ப பிரித்தெடுத்தான். நாங்கில்மரத்தின் கிளைகள், குடில் மேல் படர்ந்திருந்தன. கூரையினுள் நுழைந்து கிளையின் மேல் ஏறினான். மரங்கள் ஒன்றுடனொன்று நெருங்கிப் பின்னிக் கிடந்தன. கொப்புகளின் வழியே ஊர்ந்து கடந்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்றாம் மரத்தின் அடிவாரத்தில் தரையில் குதித்தான்.  

`யாரோ மரத்திலிருந்து குதிப்பதுபோல் இருக்கிறதே!’ என்று மந்தையில் இருப்பவர்கள் திரும்பிப் பார்த்தனர். பதறிப்போய் ஓடிவந்தான் கொற்றன். இப்படி ஒரு நள்ளிரவில்தான் தன்னுடைய ஊர், எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்டது; மக்கள் எல்லோரும் கொன்று குவிக்கப்பட்டனர். மந்தையில் வைத்து ஊரே வெட்டிச் சாய்க்கப்பட்ட கொடுமையை நேர்கொண்டு பார்த்தவனுக்கு, இப்போது உடலெல்லாம் நடுங்கியது; பேச வார்த்தை எழவில்லை. `ஏதோ விலங்கைப் பார்த்துதான் அஞ்சி ஓடிவந்துள்ளான்’ என முதலில் நினைத்தனர். ``அஞ்சாமல் சொல், எதைப் பார்த்தாய்?” என நீலன் கேட்டதற்கு, மேலேறிக்கொண்டிருக்கும் எதிரிகளைப் பற்றிச் சொன்னான் கொற்றன்.

மந்தையில் இருந்தவர்கள் சரிவு நோக்கிப் பாய்ந்து சென்றனர். மூன்று புறங்களிலும் எதிரிகள் மேலேறிக்கொண்டிருந்தனர். சத்தமின்றி நீலன் கையைக் காட்டி ஏதோ சொன்னான். வீரர்கள் சிலர் வீடுகளுக்குள் இருந்த ஆயுதங்களை எல்லாம் வெளியே எடுத்து வந்தனர். புங்கன், தென்புறச் சரிவில் மேலேறும் எதிரிகளைப் பார்த்தான். சோமக் கிழவன் வலதுபுறச் சரிவைப் பார்த்தான். கிழக்குத்திசை முனையிலிருந்து முப்புறமும் பார்த்தான் நீலன். வந்து கொண்டிருப்பது பெரும் எண்ணிக்கையிலான படை என்பது தெரிந்தது. `இருபத்திநான்கு பேர்தான் இருக்கிறோம். அதில் பாதிப்பேர் வயதான கிழவர்கள். அதற்குத் தகுந்த தாக்குதல் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று சிந்தித்தபடியே ஊரின் நடுப்பகுதிக்கு ஓடிவந்தான்.

மற்ற திசையில் பார்த்துக் கொண்டிருந்த வர்களும் நீலனின் மெல்லிய சீழ்க்கை ஒலி கேட்டு ஒன்றுகூடினர். ``பேசுவதற்கான நேரமில்லை. வேட்டுவன்பாறையின் மீது எதிரிகள் ஏறிவிடக் கூடாது. மூன்றாகப் பிரிவோம் எல்லா வகையான தாக்குதல் உத்திகளையும் பயன்படுத்துங்கள்” என்றான் நீலன். குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மூன்று திசைகளிலும் தாக்க ஆயத்தமானார்கள்.

கருங்கைவாணனின் படை, மிகக் கவனமாக மேலேறிக்கொண்டிருந்தது. இப்போதுவரை யாரும் நம்மைப் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில்தான் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். நீலனின் குடிலுக்குச் சற்று கீழ்முனையில் பெரும்பாறை ஒன்றை யாரோ நகர்த்துவதுபோல் தோன்றியது. `மேலே ஏதோ சத்தம் கேட்பதுபோல் இருக்கிறதே!’ என உணர்ந்த கருங்கைவாணன், அண்ணாந்து பார்த்தான். பெரும்பாறை ஒன்று மெள்ள உருளத் தொடங்கியது. மேலேறிக்கொண்டிருந்த எதிரிகள் சத்தம் கேட்டு மிரண்டு பார்க்கும்போது பாறைகள் ஒன்றுக்கு அடுத்து ஒன்றாக உருளத் தொடங்கின. உருளும் பாறைகள் நேர்க்கோட்டில் இறங்குவதில்லை. எந்தத் திசையில் நெளியும் எனக் கணிக்க முடியாததால், வீரர்கள் எங்கும் தெறித்துச் சிதறினர். இருட்டு, ஒன்றின் ஓசையை இன்னொன்றுக்கு மாற்றிக்காட்டக்கூடியது. எனவே, பாறைகள் எல்லாப் பக்கங்களும் உருளுவதுபோல் உணர்ந்தனர்.

எதிரிகள் தாக்கத் தொடங்கிவிட்டார்கள் எனத் தெரிந்ததும், எதிர்த்தாக்குதல் நடத்த உத்தரவிட்டான் கருங்கைவாணன். ஆனால், உருளும் பாறைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதே வீரர்களுக்கு முதல்நிலைப் பணியாக இருந்தது. ஆங்காங்கே பொருத்தமான இடங்களில் நிலைகொண்ட பிறகே எதிர்த்தாக்குதலைத் தொடங்கினர்.

மூன்று திசைகளிலிருந்தும் வேந்தர்களின் படைகள் தாக்குதலைத் தொடங்கின. சிறிது நேரத்திலேயே மேலிருந்தும் ஆயுதத்தாக்குதல் தொடங்கியது. அம்புகளும் ஈட்டிகளும் இணையற்ற வேகத்தோடு காற்றைக் கிழித்துக்கொண்டு இறங்கின. இருட்டில் எந்தத் திசையிலிருந்து ஆயுதங்கள் வருகின்றன எனத் தெரியாததால், வேந்தர்படை தற்காத்துக்கொள்ள மிகவும் திணறியது. மேலிருந்து தாக்குபவர்களின் வேகம் எண்ணிப்பார்க்க முடியாதபடி இருந்தது.

அம்புகளும் ஈட்டிகளும் இறங்கினாலும், பாறைகளும் ஆங்காங்கே உருண்டுகொண்டுதான் இருந்தன. பாறைகளை உருட்டுவதால் எதிரிகளை அதிக அளவில் கொன்றுவிட முடியாது. ஆனால், மேலேறிக்கொண்டிருப்பவர்களுக்குப் பெரும் அச்சத்தை உருவாக்கலாம். எப்போது எந்தப் பாறை உருளுமோ என ஒவ்வொரு பாறையையும் பார்த்துப் பார்த்து அஞ்சியஞ்சியே முன்னோக்கி நகர முடியும்.

``எரியம்புகளைப் பயன்படுத்த வேண்டாம்’’ என்று நீலன் உத்தரவிட்டான். குறைவான வீரர்களே இருக்கிறார்கள் என்பதை அது காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் அவ்வாறு சொன்னான்.

வடக்குப்புறச் சரிவில் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த சோமக்கிழவன், வீரன் ஒருவனை அந்தத் திசையின் உச்சியில் இருக்கும் மரம் ஒன்றில் ஏறச் சொன்னான். அதேபோல இன்னொருவனை மறுவிளிம்பில் இருக்கும் மரத்தில் ஏறச் சொன்னான். மற்றவர்கள் அம்புகளையும் ஈட்டிகளையும் எறிந்துகொண்டிருந்தனர். இரண்டு கிழவர்களை வைத்துக்கொண்டு பாறைகளை நகர்த்தித் தள்ளிக்கொண்டிருந்தான் கொற்றன். அவனது வெறி, கிழவர்களையும் தினவோடு இயங்கவைத்தது. சரிவுகளில் இருக்கும் பாறைகள் எல்லாம் அடப்புக் கொடுத்துச் செருகப்பட்டிருந்த சிறுகற்களால்தான் நின்றுகொண்டி ருந்தன. எந்தெந்தப் பாறைக்கு எப்படியெல்லாம் அடப்புக்கொடுக்கப்பட்டுள்ளது என்பது கிழவர்களுக்குத் தான் நன்கு தெரியும். கும்மிருட்டில்கூட சரியான முறையில் அடப்புக்கல்லை ஈட்டியால் குத்தி நகர்த்தினார்கள். அடப்பை நகர்த்துவதும் அதற்கேற்ற கோணத்தில் பாறையை அசைப்பதும் மிகத் தேர்ந்தவர்களால் மட்டுமே எளிதில் செய்ய முடியும். பெருவீரனால்கூட நகர்த்த முடியாத பாறையை இரண்டு கிழவர்கள் எளிதில் நகர்த்துவார்கள். யானைகளின் உச்சந்தலைக் கும்பம்போலப் பருத்த இரு  தோள்கள் திரையர்களுக்குத் தோன்றக் காரணம், குழந்தைப் பருவத்திலிருந்தே பாறைகளுடனான அவர்களின் பழக்கம்தான். திரையர்குடியின் இளம்வீரனான கொற்றன், பாறைகளின் குழந்தை. கிழவர்கள் சொல்லச் சொல்ல, தோளால் முட்டி எம்பினான் பாறைகளை.

85p6_1526720008.jpg

தாக்குதல் தொடங்கியவுடன் பெரும்கூச்சலிட்டபடி வேந்தனின் வீரர்கள் அங்கும் இங்குமாகச் சிதறி, தற்காப்புக்கு ஏதுவான இடங்களில் நின்றுகொண்டு, அதற்கு ஏற்பவே எதிர்த்தாக்குதலைத் தொடுத்தனர். இந்த நிலையில் நமது தாக்குதலைத் தீவிரப்படுத்தாமல் `கிழவன் ஏன் மரம் ஏறச் சொல்கிறான்?’ எனச் சிந்தித்தபடியே இருவர் வேகவேகமாக மரத்தில் ஏறினர்.

அதில் ஒன்று, தணக்குமரம். இன்னொன்று, அகில்மரம். இரண்டும் முருங்கையைப்போல வலிமையற்றவை. ``சொல்லும் இடத்தில் வேல்கம்புகளால் குத்தி, காலால் மிதித்து, கிளைகளை ஒடி” என்றான் கிழவன். அவ்வாறே வேல்கம்புகளால் குத்தியும் அமுக்கியும் பெரும்பெரும் கிளைகளை `மடார் மடார்’ என ஒடித்துச் சரித்தனர் வீரர்கள்.

மேலேறிக்கொண்டிருந்த வேந்தர்படை மிரட்சிக்குள்ளானது. `பெரும்பெரும் மரங்களையே கணப்பொழுதில் சாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்; ஏது செய்யப் போகிறார்களோ!’ என எதிரிகள் மிரண்டு நின்றனர். எதிரிகளின் வடக்குப்புறப் படைக்குத் தலைமையேற்ற துடிசாத்தன் வீரர்கள் முன்னேறுவதை நிறுத்தி ``தற்காத்து நில்லுங்கள்” என்று ஆணையிட்டான்.

இருட்டுக்குள்ளிருந்து அம்புகள் பாய்வதும் ஈட்டிகள் இறங்குவதும் பாறைகள் உருள்வதுமாக இருக்க, இப்போது மரங்களை உருட்டியோ எறிந்தோ தாக்கப்போகிறார்கள் என நினைத்துத் திகிலடைந்து நின்றது வலப்புறப்படை.

கிழக்குப்புறம் நீலனின் தாக்குதல், எதிரிகளை நிலைகுலையச்செய்தது. மேலிருந்து எறியப்படும் ஈட்டிகள் பாறைகளில் பட்டுத் தெறிக்க, தீப்பொறி விடாது பறந்துகொண்டே இருந்தது. தனது வேகத்தை எக்காரணம் கொண்டும் குறைத்துக்கொள்ளக் கூடாது என உறுதியோடு இருந்தான் கருங்கைவாணன். தாக்குதலைச் சற்று நிறுத்தச் சொன்னால் கூட வீரர்களுக்குப் பின்வாங்கும் மனநிலை உருவாகிவிடும். எனவே, என்ன இழப்பு வந்தாலும் விடாது முன்னேறச் சொல்லி, பேரோசை எழுப்பிக்கொண்டிருந்தான் கருங்கைவாணன். ஆனால், மேல்நிலையி லிருந்த நீலன் தலைமையிலான வீரர்களின் தாக்குதலை மீறி மேலேறுவது எளிய செயல் அல்ல. கருங்கைவாணன் எவ்வளவு கத்தினாலும் அவனது படை சற்றுப் பதுங்கியே நின்றிருந்தது.

அனைத்து திசைகளிலும் ஆவேசமிக்க தாக்குதலை மேலிருந்து நடத்திக் கொண்டிருந்தனர். தங்களைப் பன்மடங்கு காட்டிக்கொள்ள, ஒவ்வொரு வீரனும் இணையற்ற வேகத்தோடு இயங்கிக் கொண்டிருந்தான். ஆனால் தென்புறத்தில் வேந்தர்படைக்குத் திதியன் தலைமையேற்று வந்துகொண்டிருந்தான். அவனது வேகத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் திணறியது புங்கனின் தலைமையிலான படை.

சிறிது நேரத்தில் சீழ்க்கை அடித்தபடி ஊரின் நடுப்பகுதிக்கு ஓடிவந்தான் புங்கன். கண நேரத்தில் சோமக்கிழவனும் நீலனும் வந்து சேர்ந்தனர். ``அவர்கள் மேலேறிக்கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் மிகக் குறைவான வீரர்களே இருக்கிறார்கள். சற்றே பின்வாங்கி, காரமலையில் ஏறிவிட்டால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டுக் கோபத்தோடு கத்தினான் நீலன், ``நம்மை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், கூத்தோசை கேட்கும் வள்ளிக் கானம் நோக்கி எதிரிகளின் படை போனால், நிலைமை என்னவாகும் என நினைத்தாயா?”

அப்போதுதான் ஆபத்தை உணர்ந்தான் புங்கன். ``அப்படியென்றால் உடனடியாகக் காரிக்கொம்பு ஊதச்சொல்லி, செய்தியைத் தெரிவிக்கலாமா?” என புங்கன் கேட்டு முடிக்கும் முன் சோமக்கிழவன் சொன்னான், ``நான் அப்போதே அதற்கான முயற்சியைச் செய்துவிட்டேன்.

பெருங்காரிக்கொம்புகளை எல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். இருக்கும் சிறுகொம்பை ஊதினாலும் ஓசை பெரிதாக வெளிப்படவில்லை. மலையின் மேலேயிருந்து கேட்கும் கூத்தின் ஓசைதான் எங்கும் கேட்கிறது” என்றான்.

``என்ன செய்யலாம்?” என புங்கன் கேட்டபோது, ``செய்தியைப் பாரியிடம் சொல்ல, குதிரை எடுத்துக்கொண்டு ஒரு வீரன் மட்டும் விரைந்து செல்லட்டும். நாம் எக்காரணம் கொண்டும் வேட்டுவன்பாறையை விட்டுப் பின்னகரக் கூடாது. நாகக்கரடிலிருந்து வீரர்கள் வரும் வரை நாம் இந்த இடத்தைக் கடக்க எதிரிகளை அனுமதிக்கக் கூடாது” என்றான் நீலன்.

சொன்னவுடன் வீரன் ஒருவன் குதிரைக் கொட்டிலை நோக்கி ஓடத் தொடங்கினான், அவனிடம் சத்தம்போட்டு நீலன் சொன்னான், ``இடதுபுறமாகத் தனித்துக் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒன்று உண்டு. அதுதான் ஆலா. அதை எடுத்துச் செல். இருமடங்கு வேகத்தோடு பாயும்.”

முன்களத்தில் இருக்கும் வீரர்கள், முடிந்தளவுக்குத் தாக்குதல் தொடுத்து நிலைமையைச் சமாளித்துக்கொண்டிருந்தனர். மூவரும் மீண்டும் தாக்குதல் இடத்தை அடைந்தனர். நீலனின் அம்புகள், இருளைத் துளைத்து இறங்கத் தொடங்கின. கும்மிருட்டின் பிடியில் மேலிருந்து பேரோசையோடு நடத்தும் எதிரிகளின் தாக்குதலைச் சமாளித்துத் தற்காத்துக் கொள்ளவே முயன்றுகொண்டிருந்தது கருங்கை வாணனின் படை. வடக்குப்புறத்தில் சோமக்கிழவனின் தாக்குதலால் எதிரிகள் நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தனர். மேலேறவில்லை. ஆனால், தெற்குப்புறத்தில் புங்கனின் தலைமையிலான வீரர்களால் எதிரிகளின் வேகத்தைக் குறைக்க முடியவில்லை. எதிரிப்படையின் தளபதி திதியனின் ஆவேசம் இணையற்று இருந்தது. எத்தனை வீரர்களைப் பலிகொடுத்தாலும் முன்னேறும் வேகத்தைக் குறைத்துக்கொள்ளுதல் அவனது பழக்கத்திலேயே இல்லை. அந்தத் திசையில் மட்டும் எதிரிகள் அடுத்தடுத்த நிலைநோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். 

ஆலாவின் மீதேறி விரைந்தான் வீரன். ஊரின் பின்புறத்தில் இருக்கும் குதிரைப்பாதை, கார மலையினூடே பயணிக்கிறது. வள்ளிக்கானத்தின் கூத்தோசைக்கும் வேட்டுவன்பாறையின் தாக்குதலோசைக்கும் நடுவில் குதிரையை வெறிகொண்டு செலுத்தினான்.

மறு குன்றைத் தாண்டும்போதுதான், மயிலாவின் ஊரான செம்மனூர் இந்தத் திசையில் இருப்பது நினைவுக்கு வந்தது. அங்கு போய் செய்தியைச் சொல்லிவிட்டுப் போகலாம் எனக் குதிரையைத் திருப்பினான். சிறிது தொலைவு சென்ற பிறகுதான் தோன்றியது, `ஊரில் இளைஞர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரும் நாகக்கரட்டுக்குப் போயிருப்பார்கள். மிகவும் வயதானவர்கள்தான் இருக்கக்கூடும்’ என்று.  குதிரைகளும் அங்கு இல்லை. அவர்கள் நடந்தே வேட்டுவன்பாறைக்குப் போய்ச் சேருவதற்குள் நாமே நாகக்கரட்டிலிருந்து வீரர்களை அழைத்துவந்துவிடலாம் என முடிவுசெய்து மீண்டும் குதிரையைத் திருப்பினான். பதற்றமும் அலைக்கழிப்புணர்வும் மேலோங்க, இருளுக்குள் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது ஆலா.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 85

 

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

ன் மகன் இளமாறனின் மரணத்துக்கு பறம்புவீரர்களே காரணம் என அறிந்த பிறகுதான் மையூர்கிழார் வெஞ்சினம் உரைத்தார். ``பறம்புக்கு எதிரான போரில் நானும் பங்கெடுத்து, பகை முடிப்பேன்’’ என்று முழங்கினார். காற்றைப்போல் இணையற்ற வேகத்தில் செல்லக்கூடிய இளமாறனின் குதிரையான `ஆலா’ வேட்டுவன் பாறையில் நிற்கிறது என்று, அவர் வெஞ்சினம் உரைத்து நீண்டநாள்கள் கழித்துதான் தெரியவந்தது. ஒன்றுக்கும் மேற்பட்டமுறை ஆள்களை அனுப்பி, பார்த்துவரச் சொன்னார். எல்லோரும் அதை உறுதிப்படுத்தினர்.

வைப்பூர் துறைமுகத்தின் மீதான தாக்குதலில் வேட்டுவன்பாறை வீரர்களே பங்கெடுத்துள்ளனர் என்பதை எல்லாவகைகளிலும் உறுதிப்படுத்திக்கொண்டார் மையூர்கிழார். நீலனின் வீரத்தை மலைமக்கள் அனைவரும் நன்கு அறிவர். எனவே, ஆலாவைக் கைப்பற்றி தகுந்த பதிலடி கொடுக்க பொருத்தமான நேரத்துக்காகக் காத்திருந்தார். வேட்டுவன்பாறையில் என்ன நடக்கிறது என்று தொடர்ந்து கவனித்தார்.

மயிலாவுக்கான நிறைசூல் விழாவைப் பற்றி பலரும் அறிவர். இந்த விழாவுக்காக நாகக்கரட்டில் இருக்கும் நீலன் உள்ளிட்ட வீரர்கள் வேட்டுவன்பாறைக்கு வருவர். போர்ச்சூழல் இருப்பதால் எண்ணிக்கையில் குறைவான வீரர்களே இந்த விழாவில் பங்கெடுப்பர். ஆனால், நீலன் உறுதியாகப் பங்கெடுப்பான் என எல்லா செய்திகளையும் திரட்டினார் மையூர்கிழார். அதன் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் வடிவமைக்கப்பட்டது.

கருங்கைவாணனின் திட்டமிடல் மையூர்கிழாரிடம்கூட பகிர்ந்துகொள்ளாததாக இருந்தது. யட்சினி வழிபாட்டுக்கான ஏற்பாடுகள்தான் முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தன. அது தொடர்பான பணிகள்தான் மையூர்கிழாருக்கு வழங்கப் பட்டிருந்தன. போருக்கான தொடக்கச் சடங்கில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நினைத்து பெருமிதத்தோடு இயங்கிக்கொண்டிருந்தார். அன்று நண்பகல் அவரை வரவழைத்த கருங்கைவாணன், ``நீலனை நன்கு அடையாளம் தெரிந்த இரு வீரர்களை அனுப்பிவையுங்கள்’’ என்றான். `யட்சினிக்கான சடங்கு நடக்கும்போது இருவரை எதற்காகக் கேட்கிறார்?’ எனச் சிந்தித்தபடியே இரண்டு வீரர்களை அனுப்பிவைத்தார்.

83p1_1527497762.jpg

காரிருளின் நள்ளிரவில் யட்சினி வழிபாட்டின் உச்சத்தில் பவளவந்திகையின் குருதி பீறிட்டுத் தெறித்தது. போர் நிலமெங்கும் பேரிகைகள் முழங்கின. வேட்டுவன் பாறையின் அடிவாரத்தில் இந்த ஓசையை எதிர்பார்த்தே கருங்கைவாணன் காத்திருந்தான். பேரிகைகள் முழங்கியவுடன் தனது படைக்கான உத்தரவைப் பிறப்பித்தான். மூன்று திசைகளிலிருந்தும் அவர்கள் மேலேறினர்.

எதிர்பார்த்ததைவிட கடும்தாக்குதலைச் சந்திக்க நேர்ந்தது. மிகக் குறைவான வீரர்கள் மட்டுமே இருந்தும் இவ்வளவு வலிமையான தாக்குதலை எப்படி நடத்துகின்றனர் என்பது பெரும்வியப்பாகவே இருந்தது. தாக்குதலை எதிர்கொண்டபடி மிக நிதானமாகவே மேலேறிக்கொண்டிருந்தான் கருங்கைவாணன். வடதிசையில் இருந்த துடிச்சாத்தன், கருங்கை வாணன் அளவுக்குக்கூட முன்னேறவில்லை; கீழ்நிலையில் இருந்தான். ஆனால், தென்திசையில் திதியனோ கருங்கைவாணனைவிட இரு பனை உயரத்துக்கு மேலேறியிருந்தான்.

படைகள் இப்படி சமநிலையற்று முன்னேறுவது, எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். துடிச்சாத்தன் ஏன் இவ்வளவு பின்தங்கியுள்ளான் என்ற கவலைகூட பெரிதாக இல்லை; திதியனின் செயல்தான் அதிக கவலையளிப்பதாக இருந்தது. அவன் ஏறக்குறைய வேட்டுவன்பாறையின் மேல்நிலைக்குச் சென்றுவிட்டான். சற்றே பதற்றமானான் கருங்கைவாணன். அவனை பொறுத்திருக்கச் சொல்ல முயன்றான். ஆனால், நீலன் தலைமையிலான வீரர்கள் நடத்தும் தாக்குதல் மிகக் கடுமையாக இருந்தது. தாக்குதலை எதிர்கொண்டு தாக்குப்பிடிப்பதே பெரும்பாடாக இருந்தது.

எவ்வளவு தாக்கினாலும் எதிரிகள் மேலேறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தபடியே தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தினான் நீலன். சோமக்கிழவனின் திசையில் எதிரிகள் மிகவும் கீழ் நிலையில் இருக்கின்றனர். ஆனால், புங்கனின் திசையில் எதிரிகள் மிகவும் மேலேறிய நிலையை அடைந்துள்ளனர் என்பதை அறிந்தபடி என்ன செய்யலாம் எனச் சிந்தித்தான் நீலன். `சோமக்கிழவனின் பக்கம் இருக்கும் மூன்று வீரர்களை இந்தப் பக்கம் அனுப்பலாமா?’ எனச் சிந்தித்தபோதுதான் கொற்றனின் நினைவுவந்தது.

அவன் மிகச் சிறியவன். எதிரிகள் மேலேறிக்கொண்டிருக்கின்றனர். இனி தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும். காலம்பன் மகனுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என எண்ணிய நீலன், சட்டென சோமக்கிழவனின் திசை நோக்கி ஓடினான். அங்கு எதிரிகளை மேலே ஏறவிடாமல் அனைவரும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தனர். விரைந்து வந்த நீலன், கொற்றனை தனியே அழைத்தான். பாறைகளை முடிந்த அளவுக்குத் தூக்கித் தள்ளிக்கொண்டிருந்த கொற்றன், மறுதிசையில் தாக்குதல் தொடுக்க அழைக்கிறான் என நினைத்து வேகமாக மேலேறிச் சென்றான்.

வேட்டுவன்பாறையின் மேலே குடில்களுக்கு இடையே ஆங்காங்கே பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. தாக்குதலின் ஓசையும் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், இவற்றையெல்லாம் மீறி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது வள்ளிக்கானத்தில் நடைபெறும் கூத்தின் ஓசை. எல்லா வகையான இசைக் கருவிகளும் அங்கு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. காரமலையின் அமைதியை முழுமுற்றாக விரட்டிக்கொண்டிருந்தன கூத்தின் ஓசையும், வேட்டுவன்பாறை தாக்குதலின் சத்தமும்.

கொற்றனை தனியாக அழைத்துவந்த நீலன், பின்புறம் செல்லும் ஒற்றையடிப் பாதையைக் காட்டி, ``இந்த வழியில் ஒருபொழுது நடந்தால் அருவியும் அதன் அடிவாரத்தில் பெரும் பாறைகளும் இருக்கும். நீ அங்கு போய்விட்டால் யாராலும் அதற்குள் வந்து உன்னைக் கண்டறிய முடியாது. நாளை காலை வரை நீ அங்கேயே இரு. விடிந்ததும் ஊருக்கு வா” என்றான்.

எதிரிகளோடு கடும்மோதல் நடந்து கொண்டிருக்கும்போது தன்னை மட்டும் ஏன் தனியே காட்டுக்குள் போகச் சொல்கிறான் என்பது கொற்றனுக்குப் புரியவில்லை. எல்லாவற்றையும் சொல்லிப் புரியவைப்பதற்கான நேரமில்லை. கொற்றன் விழித்துக்கொண்டு நின்றதைப் பார்த்த நீலன், ``காலையில் வந்து உன்னிடம் விளக்கமாகச் சொல்கிறேன். இப்போது புறப்படு” என்றான்.

அதற்குமேல் நீலனின் குரலை மறுத்து நிற்க முடியாது. மனமேயில்லாமல் அவன் சொன்ன பாதையை நோக்கிப் புறப்பட்டான் கொற்றன். அவன் புறப்பட்ட பிறகு நீலன் மீண்டும் கிழக்குத்திசை நோக்கி ஓடத் தொடங்கினான். மூன்று திசைகளிலிருந்தும் தாக்குதலின் ஓசை அதிகமாகிக்கொண்டிருந்தது. தென்திசையின் ஓசை மிகவும் மேலேறிக் கேட்டது. புங்கனின் தலைமையிலான வீரர்கள் வேந்தர்படையின் தாக்குதலைத் தடுக்க முடியாமல் பின்னோக்கி வந்துகொண்டேயிருந்தனர்.

பெருங்குரலெழுப்பியபடி திதியன் முன்னேறிக்கொண்டிருந்தான். காரமலையை நோக்கி விரைந்துகொண்டிருந்த கொற்றன், எதிரிகளின் ஓசை இவ்வளவு அருகில் கேட்கிறதே என நினைத்து சற்றே திரும்பினான். பந்தத்தின் ஒளியில் சீறிக்கொண்டிருந்த திதியனின் முகம் நேர் எதிரே தெரிந்தது. ஓடிக்கொண்டிருந்த கொற்றன் அந்த முகத்தைப் பார்த்த கணத்தில் உறைந்து நின்றான்.

நினைவுகளால் மூச்சுமுட்டியது. தம்பிகளோடு சேர்த்து தன்னையும் கால்களைக்கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டவன். கையில் சிக்கியவர்களை எல்லாம் கொன்று குவித்தவன். கதறித் துடித்த பெண்களை எல்லாம் கழுத்தை அறுத்து வீசியவன். கண் முன்னால் ஊரையே வேட்டையாடித் தீர்த்தவன். உறைந்து நின்ற கொற்றனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆனால், நீலன் சொன்ன பாதையை நோக்கி ஓட கால்கள் மறுத்தன.

புங்கனால் திதியனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. சிறிது சிறிதாக பின்னோக்கி நகர்ந்து வந்துகொண்டேயிருந்தான். வேந்தர்படையணிக்குத் தலைமை தாங்கிய திதியனின் உறுதிப்பாடு, புங்கனை நிலைகுலையச் செய்தது. அவன் எந்தத் தாக்குதலையும் கண்டு அஞ்சாமல் முன்னோக்கி வந்துகொண்டே யிருக்கிறான். அவனைக் கட்டுப்படுத்த எந்த வழியிலும் புங்கனால் முடியவில்லை.

திதியன் ஏறக்குறைய மேல்நிலைக்கே வந்துவிட்டான். அவனது வருகையை எதிர்பார்த்தபடி தோதக்கத்திமரத்தின் கிளையின் மேல் ஏறி மறைந்து பார்த்துக்கொண்டிருந்தான் கொற்றன். மரத்தின் மீது படர்ந்திருந்த கொடியைப் பிடித்தபடி காத்திருந்தான். மேல்நிலைக்கு அருகில் வந்ததும் திதியனின் ஆவேசம் இன்னும் அதிகமானது. ஆங்காங்கே பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. ஆனால், வீரர்கள் யாரும் தென்படவில்லை. தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் புங்கன் மேலும் மேலும் பின்நோக்கி வந்துகொண்டிருந்தான்.

திதியன் சரியான இடத்துக்கு வரும்வரையில் காத்திருந்தான் கொற்றன். அன்று தலைகீழாய்க் கட்டித்தொங்கவிடப்பட்ட நிலையில் தன்னையும் தம்பிகளையும் சுட்டிக்காட்டி, `அம்பு வீசிக் கொல்’ எனக் கொக்கரித்தவனின் தலையை உச்சியில் தொங்கியவாறு எந்தக் கோணத்தில் கொற்றவன் பார்த்தானோ, அவன் தலை இப்போது அதே கோணத்தில் தனக்கு நேர்கீழே வந்து நிற்பதைப் பார்த்தான் கொற்றன். இந்தக் கணத்தை எதிர் பார்த்துதான் இவ்வளவு நேரமும் கொப்போடு கொப்பாக ஒட்டிக்கிடந்தான். எந்தவித ஓசையும் எழுப்பாமல் கொடியைப் பிடித்தபடி உச்சிக்கொப்பிலிருந்து கீழ்நோக்கிக் குதித்தான். `ஏதோ ஓசை கேட்கிறதே!’ என நினைத்த திதியன் சட்டென மேல்நோக்கி அண்ணாந்து பார்க்கும்போது கூர்வாளின் முழுமுனையும் அவனது முகத்தைக் கிழித்துக்கொண்டு நெஞ்சுக்கூட்டுக்குள் இறங்கியது.

திதியனோடு வந்தவர்கள் சற்றும் எதிர்பார்க்காத தாக்குதலாக அது இருந்தது. தங்கள் படையணித்தலைவன் மண்ணில் சாய்ந்த கணத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தபோது, விழிப்படைந்த புங்கன் வீறுகொண்டு தாக்கி முன்னோக்கி நகரத் தொடங்கினான். நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் வேந்தர்படைவீரர்கள் சற்றே பின்நோக்கி இறங்கினர். ஆனால், திதியனோடு சாய்ந்து கிடந்த கொற்றனின் உடலில் எண்ணில்லாத ஈட்டிகள் இறங்கியிருந்தன.

யட்சினி வழிபாடு பற்றி கபிலர் சொன்னதும் அடுத்து செய்யவேண்டிய வேலைகளைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்கத் தொடாங்கினான் முடியன். யட்சினி வழிபாடு என்பது தாக்குதலுக்கு முன்பு நடக்கும் சடங்கு என கபிலர் கூறிய பிறகு `தாக்குதலை விடிந்ததும் தொடங்குவார்களா... இப்போதா?’ என்று கேள்வியை எழுப்பியபடி இருந்தான்.

நாகக்கரட்டுக்குச் சென்ற பாரியும் கபிலரும் இன்னும் வரவில்லையே என நினைத்த தேக்கனும் வாரிக்கையனும் இரலிமேட்டிலிருந்து நாகக்கரட்டுக்கு வந்துசேர்ந்தனர். நள்ளிரவைக் கடந்து நீண்டநேரமாகியிருந்தது. அவர்கள் வந்ததும் மீண்டும் யட்சினிக்கான சடங்கு பற்றி கபிலர் கூறினார், ``எதிரிகளின் தாக்குதலை எதிர்பார்த்துதானே இருக்கிறோம். எப்போது தாக்கினாலும் எதிர்த்தாக்குதலால் அவர்களை வீழ்த்துவோம்” என்றான் தேக்கன்.

``பொழுது விடியும்போது எல்லா நிலைகளிலும் வீரர்களை ஆயத்தநிலையில் இருக்கச் சொல்லுங்கள். நிலைமைக்கு ஏற்ப முடிவெடுப்போம்’’ என்றான் பாரி.

இந்தப் பேச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் வேட்டுவன்பாறையிலிருந்து வந்த வீரன் நாகக்கரட்டின் இடதுமுனையை அடைந்தான். அந்தத் திசைக்குத் தலைமையேற்ற நீலன் நிறைசூல் விழாவுக்குப் போய்விட்டதால், அந்தப் பொறுப்பை வேட்டூர்பழையன் ஏற்றிருந்தார். வந்த வீரன் மூச்சிரைக்க, தாக்குதலை விவரித்தான். செய்தியைக் கேட்டுத் துடித்தெழுந்த பழையன், முதற்படைப் பிரிவை அழைத்துக்கொண்டு வேட்டுவன்பாறை நோக்கிப் பாய்ந்து சென்றான்.

இடதுமுனையிலிருந்து காரிக்கொம்பு ஊதப்பட்டது. ஏதோ பிரச்னை என்பது நாகக்கரட்டின் மேல் இருந்த ஐவருக்கும் தெரிந்தது. வீரன் ஒருவன் நாககரட்டின் மேல்நிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். ஐவரும் குதிரையில் ஏறி காரிக்கொம்பு ஊதப்பட்ட இடதுபுறத்தை நோக்கி விரைந்தனர். ஏதோ நடந்திருக்கிறது என்பது புரிந்தது. என்ன என்பதைக் கணிக்க முடியவில்லை. குதிரைகள் விரைந்தன.

வீரன் எதிர்பட்டான். நடந்துகொண்டிருக்கும் தாக்குதலை அவன் விவரித்தபோது அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். வீரன் சொல்லி முடிக்கும்போதே, நீலனைக் காக்க பாய்ந்து செல்லத் துடித்தது பாரியின் மனம். அதை உணர்ந்த வாரிக்கையன், ``பாரி இங்கே இருக்கட்டும். தேக்கனும் முடியனும் புறப்படுங்கள்’’ என்றார்.

83p2_1527497778.jpg

பாரி மறுசொல் சொல்லும் முன் பெருங்குரலில், ``எல்லோரையும் வேட்டுவன்பாறையை நோக்கித் திருப்பிவிட்டு, எதிரியின் தாக்குதல் இந்தத் திசையில் அமைய வாய்ப்பிருக்கிறது” என்று சொன்ன தேக்கன், கணநேரம்கூடக் காத்திருக்காமல் குதிரையைத் தட்டி விரட்டினான். முடியனும் வீரர்களும் பின்தொடர்ந்தனர். இமைக்கும் நேரத்துக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டன. குதிரையின் காலடிக்குளம்பிலிருந்து தெரிந்த மண்துகள் கபிலரின் நெற்றியில் பட்டபோதுதான் திகைப்பு மீண்டார்.

எதிரிகள் மூன்று திசைகளிலும் வேட்டுவன் பாறையின் மேல்நிலையை நெருங்கிவிட்டனர். பறம்பின் தரப்பில் தாக்குதல் தொடுத்த வீரர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இனியும் தாக்குதல் உத்தியை மாற்றாமல் இருக்கக் கூடாது என நினைத்த நீலன், பின்னோக்கி விரைந்தான். ``குடில்களின் மேற்கூரைகளை எல்லாம் இழுத்துக் கீழே போடுங்கள். காய்ந்த மரங்கள், கட்டைகள் எல்லாவற்றையும்கொண்டு பெரும்வட்டத்தை உருவாக்குங்கள்’’ எனச் சொல்லிவிட்டு, மீண்டும் தாக்குதல் முனைக்கு ஓடினான். மேல்நிலையில் நின்றிருந்த வீரர்கள், குடில்களின் மேற்கூரைகளை எல்லாம் கீழே சரித்தனர். திண்ணைகளிலும் முற்றத்திலும் இருக்கும் பெரும்பெரும் கட்டைகளைப் பொருத்தமான இடைவெளிகளில் போட்டு நிரப்பினர். மீண்டும் மீண்டும் வந்து என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லியபடியே தாக்குதல் தொடுக்க கிழக்குமுனைக்கு ஓடினான் நீலன்.

வேட்டுவன்பாறையின் மந்தையைச் சுற்றி பெரும்வட்டத்தில் கூரைகளையும் மரங்களையும் கட்டைகளையும் கொண்ட ஓர் அரணை உருவாக்கிய பிறகு, எல்லோரையும் உள்ளே வரச் சொன்னான் நீலன். வேட்டுவன்பாறையைச் சேர்ந்த எஞ்சிய வீரர்கள் எல்லோரும் உள்ளே வந்த பிறகு எல்லா திசைகளிலும் ஒரே நேரத்தில் தீயிட்டான். தீக்கங்குகள் வெடித்து மேலேறத் தொடங்கின. பாறைச் சரிவுகளின் வழியே மூன்று பக்கங்களிலிருந்து மேலேறிய வேந்தர்படை, வேட்டுவன்பாறை முழுக்க குடில்கள் தீப்பிடித்து எரிவதைப் பார்த்துத் திகைத்து நின்றது. `எதிரிகள் தனது கைகளில் சிக்காமல் குடில்களுக்கு தீவைத்துவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்’ என நினைத்தான் கருங்கைவாணன். எந்தத் திசையிலிருந்தும் ஊருக்குள் நெருங்க முடியவில்லை. கூரைகளில் பற்றிய நெருப்பு, பெருங்கட்டைகளைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தது.

உயிரோடு மிஞ்சிய வேட்டுவன்பாறை வீரர்கள் வளையத்துக்குள் ஒன்றுகூடினர். ஊர்தோறும் தீக்களியை தாழி நிறைய சேகரித்து வைத்திருப்பது பறம்பின் வழக்கம். இடதுதோளிலும் காலிலுமாக இரு அம்புகள் தைத்த நிலையிலும் இயங்கக்கூடிய திறனோடு இருந்தான் சோமக்கிழவன். அவன்தான் தீக்களியை நீர்விட்டு பிசைந்து எஞ்சியிருக்கும் எட்டு வீரர்களின் உடலில் பூசினான். தீ நன்றாகப் பற்றி நாலாபுறமும் சீறி எரிவது வரை அவர்கள் காத்திருந்தனர். யார் யார் எந்தத் திசையின் வழியே வெளியேறிச் சென்று தாக்க வேண்டும் என வழிகாட்டினான் நீலன்.

வேந்தர்படை அடுத்து என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் நின்றிருந்தபோது, நெருப்பைப் பிளந்துகொண்டு பறம்புவீரர்கள் வெளிப்பட்டனர். இரண்டு கைகளிலும் இரு வாள்களை ஏந்தியபடி படைக்குள் தாவிய அவர்கள், மின்னல் வேகத்தில் சிக்கியவர்களை எல்லாம் வெட்டிச் சரித்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் புகுந்து மறைந்தனர். நடுங்கிப்போனது வேந்தர்படை. நெருப்பைப் பிளந்து எதிரிகள் வெளியேறி வந்து தாக்குதல் தொடுக்கின்றனர் என்பதை யாராலும் நினைத்துகூடப் பார்க்க முடியவில்லை. இரு வாள்களோடு வெளிவந்த நீலன், கண நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டோரை சீவியெறிந்துவிட்டு மீண்டும் தீக்குள் புகுந்தான்.

வீரர்களின் பேரோலத்தைக் கேட்டு ஓடிவந்தான் கருங்கைவாணன். ``நெருப்புக்குள்ளிருந்து வெளியேறி வந்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் உள்ளே போய்விடுகின்றனர்’’ என்று மற்ற வீரர்கள் தெரிவித்தனர். மிரண்டுபோய்ப் பார்த்தான் கருங்கைவாணன். எல்லா திசைகளிலும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ``உள்ளே போனவன் எந்த வழியில் போனான்?’’ எனக் கேட்டான் கருங்கைவாணன். உடன் இருந்த வீரர்கள், அவன் தாக்குதல் நடத்தித் திரும்பிய இடத்தைக் காண்பித்தனர். மனிதன் நுழைந்து வெளியேறும் அளவுக்கு அந்த இடத்தில் நெருப்பு சிறுத்து எரிகிறதா என, சற்றே உற்றுப்பார்த்தான் கருங்கைவாணன். ஆனால், ஆள் உயரத்துக்கு மேலாக நெருப்பின் கீற்றுகள் மேலெழுந்து கொண்டிருந்தன. இதற்குள்ளிருந்து எப்படி வெளிவந்து மீண்டும் உள்ளே போக முடியும் என்பது புரியாத குழப்பத்தில் மிரண்டு நின்றான்.

தாக்குதல் நடத்திவிட்டு வீரர்கள் உள்ளே வந்ததும், அவர்கள் வந்த நெருப்பின் தடத்துக்குள் ஏற்கெனவே ஆயத்தநிலையில் இருந்த வீரர்கள் மிளகுக் குடுவையை உருட்டிவிட்டனர். குடுவையில் தீப்பொறி பட்டவுடன் சூடேறும். கண நேரத்தில் பெரும்சத்ததோடு வெடிக்கும். வெடிப்புற்ற கணம் மேலே கிடக்கும் கட்டைகளையே தூக்கிவீசும். நெருப்புக் கங்குகள் எல்லா பக்கங்களிலும் தெறிக்கும். நீலன் நெருப்புக்குள் நுழைந்த இடத்தை கருங்கைவாணன் உற்றுப்பார்த்தபோதுதான் மிளகுக்குடுவை வெடித்துச் சிதறியது. முகமெல்லாம் கங்குத்துளிகள் தெறித்துவிழ துடித்துப்போனான் கருங்கைவாணன்.

உடனடியாக கருங்கைவாணனுக்கு மற்றவர்கள் உதவிக்கொண்டிருந்தபோது, சற்று தொலைவில் நெருப்புக்குள்ளிருந்து வெளிவந்த வீரன் ஒருவன் இரு வாள்களைக்கொண்டு வெட்டிச் சரித்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் நுழைந்தான். வேந்தர்படை உறைந்து நின்றது. எதிரிகள் தாக்குதலை எந்தத் திசையிலிருந்து எப்படி நடத்துகின்றனர் என்பது புரியாதபுதிராக இருந்தது. வடக்குப் பக்கத்தில் நெருப்பைப் பிளந்து வெளியேறும் மனிதர்களைக் கண்டவுடன் துடிச்சாத்தன் செயலற்று நின்றான்.

வெளியேறியவர்களின் வாள்வீச்சில் குருதி பொங்கித் தெறித்தது. நெருப்பின் சீற்றத்தினூடே குருதியைக் குடித்தபடி வாள்கள் மீண்டும் தீப்பிழம்புக்குள் நுழைந்து மறைந்தன.

`மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட செயலை பறம்புவீரர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். இனியும் தாம் இங்கு இருப்பது எந்த வகையிலும் நல்லதன்று’ எனச் சிந்தித்த துடிச்சாத்தன், கருங்கைவாணனை நோக்கி விரைந்தான். வீரர்கள் சுற்றி நிற்க நெருப்பைவிட்டு மிகவும் தள்ளி பாறை ஒன்றின் மேல் கருங்கைவாணன் அமர்ந்திருந்தான். அவனது முகத்தை துணிகொண்டு மூடி இளைப்பாறச் செய்துகொண்டிருந்தனர்.

தாக்குதல் நடத்திவிட்டு உள்ளே வரும் வீரர்களின் உடலில் தீக்களி காய்ந்தோ, உதிர்ந்தோபோயிருந்தால், மீண்டும் தீக்களியைப் பூசி தாக்குதலுக்கு ஆயத்தம் செய்யும் வேலையைச் செய்துகொண்டிருந்தான் சோமக்கிழவன். நீலன், புங்கன், மேலும் இருவர் என நான்கு பேர்தான் தீக்களி பூசி இரு வாள்கள் ஏந்தி எதிரிகளை வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தனர். மற்ற மூவரும் மிளகுக்குடுவையை நெருப்புக்குள் இங்கும் அங்குமாக வீசியெறிந்துகொண்டிருந்தனர்.

83p3_1527497796.jpg

என்ன நடக்கிறது என எதிரிகள் அறியும் முன், பறம்புவீரர்கள் நால்வரும் ஐந்து முறைக்கும் மேலே சென்று தாக்கிவிட்டு மீண்டும் நெருப்புக்குள் திரும்பியிருந்தனர். ஒவ்வொரு வீரனும் பத்துக்கும் மேற்பட்டோரை வெட்டிச்சாய்த்திருந்தான். நீலனின் தாக்குதலில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் சரிந்திருப்பர். நெருப்பெங்கும் வடியும் குருதியோடு வாளை சூடாக்கிக் கொண்டேயிருந்தனர் பறம்புவீரர்கள்.

முகமெல்லாம் மிளகுப்பொறி பட்டு சுட்டுக்கருகியபோது துடித்துக் கத்தினான் கருங்கைவாணன். ஆனாலும் அவனது இலக்கை விட்டு திரும்பிச் செல்ல அவன் ஆயத்தமாக இல்லை. நெருப்பின் வட்டத்துக்குள்ளிருந்து எப்படி இவர்கள் வெளிவருகின்றனர்; நெருப்பின் சூட்டை இவர்கள் எப்படி தாக்குப்பிடிக்கின்றனர் என எதுவும் புரியவில்லை. வேந்தர்படை வீரர்கள், வெடித்துச் சிதறும் நெருப்பின் பொறி கண்டு அஞ்சி இருளுக்குள் பதுங்கினர். ஆனாலும் ``நெருப்பைவிட்டு அகலாமல் நில்லுங்கள்’’ என்று வீரர்களை நோக்கி மீண்டும் மீண்டும் கூறினான் கருங்கைவாணன்.

வள்ளிக்கானத்தில் நாகசம்பங்கியின் தேறல் தேள்போல் கொட்டி உள்ளிறங்கிக் கொண்டிருந்தது. துடியும் முழவும் பறையும் அடர்காட்டை உலுக்கின. பெண்கள் களிவெறிகொண்டு ஆடினர். பெருங் கூக்குரலினூடே இருளைக்கிழித்து பெண்கள் ஆடிக்கொண்டிருந்தபோது, நெருப்பைப் பிளந்து வாள் ஏந்தி ஆடிக்கொண்டிருந்தனர் ஆண்கள். இருவிதமான ஓசைகள் காரமலையின் இரு இடங்களிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தன.

கலங்கிப்போய் வந்த துடிச்சாத்தனிடம் நம்பிக்கைகொடுத்து, தாக்குதலுக்கான வழிமுறைகளைப் பற்றிப் பேசினான் கருங்கைவாணன். பறம்புவீரர்கள் நடத்தும் இந்தத் தாக்குதலால் சிலர்தான் வெட்டுப்பட்டு சாகின்றனர். ஆனால், மனித முயற்சிக்கு அப்பாற்றபட்ட அவர்களின் இந்தச் செயலால் வீரர்கள் எல்லாம் நம்பிக்கை இழந்து மிரண்டு நிற்கின்றனர். `பறம்பினரை ஒன்றும் செய்ய முடியாது. தீயின் தேவதை அவர்கள் பக்கம் நிற்கிறாள்’ என வீரர்கள் கருதுவதாகவும் ``வேந்தர்படை, விரைவில் இந்த இடம்விட்டு நகர்வது நல்லது’’ எனவும் துடிச்சாத்தன் கூறினான்.

முகத்தில் நெருப்புப்பொறி பட்டபோதுகூட இப்படிக் கத்தவில்லை. இப்போது கத்தினான் கருங்கைவாணன். ``நான் வந்த வேலையை முடிக்காமல் திரும்பினால் மூவேந்தர்களின் பெரும்படைக்குத் தலைமைதாங்கும் தகுதியை இழந்தவனாவேன். எனது உயிரே போனாலும் வெற்றிகொள்ளாமல் இந்த இடம்விட்டுத் திரும்ப மாட்டேன்” என நரம்பு புடைக்கக் கத்தினான்.

``எதிரிகளைக் கண்டு அஞ்சாதீர்கள். அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தான். நெருப்புக்குள் நீண்டநேரம் தாக்குப்பிடிக்க முடியாது. விரைவில் வெளிவந்துதான் தீரவேண்டும். அந்தக் கணத்துக்காகக் காத்திருப்போம். உரிய நேரத்தில் ஒன்றுபட்டு தாக்குதல் தொடுத்தால் அவர்களை வீழ்த்திவிட முடியும்” என்று பாறையின் மீது நின்று முழங்கினான் கருங்கைவாணன்.

கட்டைகள் வெடித்து நெருப்புப்பொறிகள் எங்கும் சிதறிக்கொண்டிருந்தன. ``வீரர்களே... நெருப்பைவிட்டு மிகவும் தள்ளி நில்லுங்கள். அவர்கள் எவ்விடம் வெளியில் வருகிறார்களோ, அவ்விடம் அம்பு எய்தித் தாக்குங்கள். வாளால் தாக்க முயலாதீர்கள்” என்று வடப்புறமாகக் கத்திவிட்டு, தென்புறம் திரும்பினான் கருங்கைவாணன். கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியில் வந்து, மூவரின் தலைகளைச் சீவியெறிந்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் நுழைந்தான் நீலன்.

நெருப்பைக் கிழித்து வெளிவரும் கணத்திலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்தான் கருங்கைவாணன். தீச்சுடரே நீண்டுவந்து தலைகளைச் சீவிச்செல்வது போல இருந்தது. நீலனை நன்கு அடையாளம் தெரிந்த இருவரும் எந்நேரமும் கருங்கைவாணனின் அருகிலே இருந்தனர்.

பெருவட்டத்தில் நிலைகொண்டு எரிந்த நெருப்பிலிருந்து எந்தத் திசையிலும் வெளியேறி தாக்கிக்கொண்டே இருந்தனர். கருங்கைவாணன் அந்த வட்டம் முழுவதும் சுற்றியபடி வீரர்களிடம் நம்பிக்கையூட்டினான். ஆனால், அவன் உருவாக்கும் நம்பிக்கைகள் நெருப்பைப் பிளக்கும் மனிதர்களால் கணநேரத்தில் எரியூட்டப்பட்டன.

83p4_1527497814.jpg

ஆனாலும் விடாது முயன்றபடி அங்கும் இங்குமாக ஓடினான் கருங்கைவாணன். நெருப்புக்குள் மூங்கில்கட்டைகள் வெடிப்புற்று தெறித்தபோது, தெறிக்கும் நெருப்புக் கொப்புளங்களுக்குள்ளிருந்து வெளிவந்தான் நீலன். அவன் எதிரில் வாளேந்திய கையை உயர்த்தினான் துடிச்சாத்தன். நீலனின் வாள்வீச்சின் வேகம் துடிச்சாத்தனின் கழுத்தில் குறுக்கிட்டு இறங்கியது.

தெறித்த குருதி மண்ணில் விழும் முன் நெருப்பைப் பிளந்து அந்தப் பக்கத்தை அடைந்தான் நீலன். உருண்டு வந்த துடிச்சாத்தனின் தலை, கருங்கைவாணனின் காலில் வந்து முட்டி நின்றது. ஒரு கணம் அப்படியே நின்றான் கருங்கைவாணன். அருகில் இருந்தவன் சொன்னான், ``தாக்கிச்சென்றது நீலன்.”

எந்தத் திசையிலிருந்தெல்லாம் பறம்பினர் வெளிவருகிறார்களோ, அந்தத் திசையில் எல்லாம் வேந்தர்படையினர் விலகியிருந்து அம்பு எய்தனர். நெருப்பைப் பிளந்து வெளியேறியவர்களின் உடல்களில் அம்புகள் தைக்கத் தொடங்கின. உள்ளிருந்து தாக்குதல் தொடுத்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீழத் தொடங்கினர். ஆனாலும் நீலனின் வேகம் குறையவேயில்லை. நெருப்புக்கு வெளியேயிருந்து தாக்குதல் தொடுப்பவர்கள் மிகவும் விலகி நிற்கிறார்கள் என அறிந்து, அதற்கு ஏற்ப தாக்குதல் திட்டத்தை மாற்றுங்கள் என நீலன் சொன்னபோது, புங்கன் ஈட்டியால் குத்தப்பட்டு நெருப்புக்குள் இருந்து வெளிவர முடியாமல் சாய்ந்தான். எது கண்டும் கலங்கும் நிலையில் நீலன் இல்லை. அவனோடு எஞ்சிய வீரர்கள் இருவர் மட்டுமே.

அவர்களுக்கும் தீக்களியைப் பூசிக்கொண்டிருந்தான் சோமக்கிழவன். நெருப்புக்கு அப்பால் எந்தத் திசையில் சென்று தாக்கலாம் என நெருப்பின் கீற்றுகளை நீலன் பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் காற்று அதிரக் கேட்டது காரிக்கொம்பின் ஓசை.

ஒரு கணம் மனதுக்குள் மின்னல்வெட்டியதைப்போல மகிழ்ச்சி பூத்தது. இரண்டாம் குன்றுக்கு அப்பால் வரும்போதே வேட்டூர்பழையன் காரிக்கொம்பை ஊதச் சொல்லிவிட்டான். `நாங்கள் அருகில் வந்துவிட்டோம்’ என்று சொல்வதற்கான ஓசை அது. காரிக்கொம்பின் ஓசை கேட்ட கணம் உற்சாகம் பீறிட வெறிகொண்டபடி நெருப்பைப் பிளந்துகொண்டு வெளிவந்தான் நீலன். நெருப்பைவிட்டு விலகி நின்றிருந்த எதிரிகளின் மீது மூன்று ஈட்டிகளை எறிந்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் நுழைந்தான்.

அவனது வருகையை எல்லா திசைகளிலும் எதிர்பார்த்திருந்த கருங்கைவாணன், கண்ணெதிரே வந்து திரும்பும் நீலனைப் பார்த்தவுடன் தனது கைநரம்பே அறுந்து கொண்டுபோவதைப்போல வீசினான் ஈட்டியை. நெருப்புக்குள் நுழைந்த நீலனின் வலது பின்னங்கால் தொடையில் இறங்கியது ஈட்டி. நெருப்போடு சாய்ந்தான் நீலன். ``அவனை வெளியே இழுங்கள்” எனக் கத்தியபடி அருகில் ஓடிவந்தான் கருங்கைவாணன்.

இரு குன்றுகளுக்கு அப்பாலிருந்து எரியும் நெருப்பைப் பார்த்தபடி என்ன நடக்கிறது எனப் புரிந்துகொள்ள முடியாமல் பதற்றத்தோடு குதிரையை விரட்டிவந்தான் வேட்டூர்பழையன். அவனோடு படையணி வீரர்கள் அனைவரும் படு ஆவேசத்தோடு வந்துகொண்டிருந்தனர். ``காரிக்கொம்பை விடாம ஊது’’ என்று சத்தம்போட்டபடி குதிரையை விரட்டினான்.

83p5_1527497833.jpg

இரண்டு குன்றுகளையும் தாண்டி வேட்டுவன்பாறைக்குள் நுழையும்போது கிழக்கின் ஒளிக்கீற்று மெள்ள மேலெழுந்துகொண்டிருந்தது. தீயின் நாக்குகள் இங்கும் அங்குமாக எரிந்துகொண்டிருந்தன. மனிதர்கள் யாரும் உயிருடன் இருப்பதுபோல் தெரியவில்லை, `நீலன்... புங்கன்...’ என ஒவ்வொரு பெயராகச் சொல்லிக் கத்தியபடி எங்கும் ஓடினான் வேட்டூர்பழையன். வீரர்கள், நான்கு திசைகளிலும் தேடித் தவித்தனர்.

நெருப்புக் கட்டைகளுக்கு நடுவே கரிக்கட்டைகளாக சிலர் கிடந்தனர். இரு பக்கங்களிலும் குருதியில் மிதந்தபடி எண்ணற்ற உடல்கள் கிடந்தன. குன்றின் சரிவு முழுக்க வேந்தர்படைவீரர்கள் மாண்டுகிடந்தனர். ஒருவன் சத்தம்போட்டு வேட்டூர்பழையனை அழைத்தான். அவன் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான் வேட்டுர்பழையன். வீட்டின் மண்சுவர் ஓரம் குற்றுயிராய்க் கிடந்தான் சோமக்கிழவன்.

பழையனைப் பார்த்ததும் கீழ்ப்புறமாகக் கையை நீட்டி, ``அவர்கள் நீலனைக் கொண்டுசெல்கின்றனர்” என்றான்.

கிழக்குத் திசையில் நீலனின் குடில் இருந்த முனைப்பகுதிக்கு வந்து பதற்றத்தோடு பார்த்தான் வேட்டுர்பழையன். காலைக்கதிரவன் மேலெழுந்துகொண்டிருந்தான். வேட்டுவன்பாறையின் அடிவாரத்திலிருந்து வேந்தர்படைவீரர்கள் குதிரைகளில் புறப்பட்டனர்.

முன்னால் போய்க்கொண்டிருந்த தேரில் கிடத்தப் பட்டிருந்த நீலன் பெருங்கயிறுகளால் கட்டப்பட்டிருந்தான். அந்தத் தேரின் முன்நிலையில் நின்றுகொண்டிருந்த கருங்கைவாணன் உடலெல்லாம் குருதிகொட்ட, முகமெல்லாம் மகிழ்வு பூக்க ஆவேசக்குரல் எழுப்பியபடி தேரைச் செலுத்தினான்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 86

 

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

“நாகரவண்டினைக் கொத்திக்கொண்டு வந்துவிட்டேன்” என்று சொல்லி மகிழ்வின் உச்சத்தை வெளிப்படுத்தினார் குலசேகரபாண்டியன். யவனத்தேறலைக் குடித்துக்கொண்டே அவர் கூறுவதை மகிழ்ந்து கேட்டனர் செங்கனச்சோழனும் உதியஞ்சேரலும். குடியில் ஒருவரை ஒருவர் விஞ்சினர். போர்ச்சூழலில் அளவின்றிக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனச் சொல்வதற்கு தொடர்ந்து முயன்றார் முசுகுந்தர். ஆனால், அதற்கான வாய்ப்பே அமையவில்லை.

இத்தனை நாள்கள் மையூர்கிழாரின் மாளிகை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த ஹிப்பாலஸ், இன்று மூஞ்சலுக்கு அழைக்கப்பட்டான். இந்த விருந்தில் அவனும் பங்கெடுத்தான். ஹிப்பாலஸிடம் குலசேகரபாண்டியன் மீண்டும் மீண்டும் சொன்னார், ``நாகரவண்டினை நமது கூட்டுக்குக் கொண்டுவந்துவிட்டோம். இனி நமக்கான இரை நம்மைத் தேடி வந்தே தீரும். மூவரும் இணைந்து வளைத்து வளைத்து வேட்டையாடுவோம்.”

83p2_1528191684.jpg

கருங்கைவாணனுக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்டதால் அவன் விருந்தில் பங்கெடுக்கவில்லை. மருத்துவர்களின் கூடாரத்தில் இருந்தான். நீண்டகாலத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் அவனது வீரத்தை அவையில் புகழ்ந்து பேசினார் குலசேகரபாண்டியன்.

பேரரசர் அவன்மீது வைத்திருந்த நம்பிக்கை, வைப்பூர் தாக்குதலால் சிதைந்துவிட்டது. அதை எப்படியாவது மீட்கவேண்டும் எனப் பேறுதியோடு செயல்பட்டு வந்தான் கருங்கைவாணன். ஆனால், இன்று அந்த உறுதி தளர்ந்தது. திட்டமிட்டபடி நீலனைச் சிறையெடுத்து வந்துவிட்டான். ஆனால், நேற்று இரவு நடந்த தாக்குதல் அவன் வாழ்வில் இதுவரை காணாத ஒன்று. சின்னஞ்சிறிய கூட்டம் ஒன்று, வேந்தர்பெரும்படையை முழுமுற்றாக அழித்தது. மாவீரர்களான திதியனும் துடிச்சாத்தனும் கொல்லப்பட்டனர். பங்கெடுத்த வீரர்களில் பத்தில் ஒரு பங்கு வீரர்கள் மட்டுமே உயிரோடு மீண்டுள்ளனர். அவர்களில் பாதிப்பேர் போர்க்களம் புக நீண்டகாலமாகும். இருமுறை மயிரிழையில் உயிர்தப்பினான் கருங்கைவாணன்.

இவையெல்லாம் பறம்புவீரர்களின் திறனை வெளிப்படுத்துவனவாக இருந்தாலும், நெருப்பைப் பிளந்துகொண்டு அவர்கள் தாக்குதல் தொடுத்தமுறை குருதியை உறைய வைப்பதாக இருக்கிறது. நினைக்கும்போதே நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தாக்குதலில் தப்பித்த ஒவ்வொருவனும் இனி இதைத்தான் பேசுவான். பறம்புவீரர்களின் கற்பனைக்கு எட்டாத வீரமும் ஆற்றலும் அடுத்து வரும் நாள்களில் வேந்தர்படை முழுவதும் பரவிவிடும்.

`எதிரிப்படையினர் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பது மாறி அவர்கள் பேராற்றல்கொண்டவர்கள் என ஆழ்மனம் நம்பிவிடும். நீரை நிலம் விழுங்குவதைப்போல, தனது வீரத்தைத் தானே விழுங்கி வற்றச்செய்யும் வேலையை மனம் நமக்குத் தெரியாமலேயே செய்துகொண்டிருக்கும். இதை எப்படி மாற்றப்போகிறோம்? அவர்களை வீழ்த்தும் வலிமை நமக்கு இருக்கிறது என்பதை படைவீரர்களின் எண்ணிக்கையால் மட்டுமே உருவாக்கிவிட முடியாது. அறுநூறு வீரர்கள் கொண்ட படைப்பிரிவை அந்தச் சின்னஞ்சிறிய கூட்டம் அழித்து முடிக்க அதிக நேரமாகவில்லை. அப்படியென்றால், குவிக்கப்பட்டுள்ள இந்தப் பெரும்படையை அவர்களால் வென்றுவிட முடியும்தானே?’ கேள்விகள், விடாது மேலெழுந்து கொண்டேயிருந்தன.

83p1_1528191703.jpg

``கண்களைச் சற்று மூடுங்கள். முகம் முழுவதும் பச்சிலை தடவ வேண்டும்” என்றார் மருத்துவர். கண்களை மூடினால் நெருப்பைப் பிளந்து கொண்டு பறம்புவீரர்கள் வெளிவந்துகொண்டே இருந்தனர். கருங்கைவாணனால் கண்களை மூட முடியவில்லை. சிந்தனையின் வெக்கை இமைகளைச் சுட்டது.

இந்தப் பெரும்போருக்குத் தலைமையேற்கும் மகாசாமந்தனாகக் கருங்கைவாணனைத் தேர்வுசெய்தது எவ்வளவு பொருத்தமானது என உதியஞ்சேரலும் செங்கனச்சோழனும் பாராட்டிப் பேசினர். `` `போர்க்களத்தில் சிறந்த தளபதியைக் கொண்டுள்ள மன்னன் நிம்மதியாகப் படுத்துறங்குவான்’ என்று சொல்வார்கள் அல்லவா!” எனக் கேட்டார் முசுகுந்தர்.

``ஆம்... ஆம்...” என வேந்தர்கள் வழிமொழிந்தனர். நிறைந்த மயக்கத்தில் குலசேகரபாண்டியன் ஹிப்பாலஸிடம் சொன்னார், ``நீங்கள் நாளை புறப்பட்டு மதுரைக்குச் சென்று ஓய்வெடுங்கள். பாரியை வீழ்த்திவிட்டு நாங்கள் வந்து சேருகிறோம்.”

ஹிப்பாலஸ், மகிழ்வோடு அதை ஏற்றுத் தலைவணங்கி நன்றி சொன்னான். மகிழ்வின் உச்சத்திலும் நிலைகொள்ளாத மயக்கத்திலும்கூட பாண்டிய வேந்தர் செயலில் கவனத்தோடு இருப்பார் என்பதைப் பலமுறை பார்த்து வியந்தவர் முசுகுந்தர். இன்றைய செயலும் அவரை எல்லையற்ற வியப்புக்கு உட்படுத்தியது.

`குலசேகரபாண்டியரை யாராலும் கணித்துவிட முடியாது. எந்தச் சொல்கொண்டு செயலின் திசையை எந்தப் பக்கம் திருப்புவார் என்பதை இத்தனை ஆண்டுகளாக உடனிருக்கும் தன்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லையே... உதியஞ்சேரலும் செங்கனச்சோழனுமா புரிந்து கொள்ளப்போகின்றனர்’ என்று எண்ணியபடி ஹிப்பாலஸ்ஸை அனுப்பிவைக்கும் வேலையில் ஈடுபட்டார் முசுகுந்தர். நள்ளிரவுக்குப் பிறகும் வெகுநேரம் விருந்து நீண்டது.

மறுநாள் பொழுது விடிந்த பிறகு நாகக் கரட்டிலிருந்து தனித்த தேர் ஒன்று கீழிறங்கியது. கருநிறத்தாலான பெரும்போர்வையை உடல் முழுவதும் சுற்றி, தேரின் வலதுபுறக் கைக்கட்டையைப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தார் கபிலர். வேந்தர்களின் படையணியை நோக்கிக் கீழிறங்கி வந்தது தேர். உடலின் அத்துணை உறுப்புகளும் செயலற்றதைப் போல உணர்ந்த நாள் இது. உயிர்த்துடிப்பற்று இருந்தன அவருடைய கண்கள். ஆனாலும் தன்னுடைய கடமையைச் செய்யவேண்டும் என்பதில், அவரது உள்ளம் தெளிவோடு இருந்தது. தேர், வேந்தர்களின் படையணிக்கு அருகில் வந்து நின்றது.

வீரன் ஒருவன் தேருக்கு அருகில் வந்து, ``செய்தி என்ன?” என்று கேட்டான்

``கபிலர் வந்திருக்கிறேன் என்று வேந்தர்களிடம் சொல்” என்றார்.

``சரி” எனக் கூறிய அவன் செய்தியைச் சொல்ல மூஞ்சலை நோக்கிக் குதிரையில் விரைந்தான்.

நள்ளிரவுக்குப் பிறகும் விருந்து நீண்டதால், வேந்தர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை. மூஞ்சலின் வாசலிலேயே அந்த வீரன் நின்றிருந்தான்.

நெடும்பொழுது கடந்தது. கபிலரின் தேர் அசைவற்று நின்றிருந்தது. அனுமதிக்காகக் காத்திருக்கும் நீண்டபொழுதை, கபிலர் முதன்முறையாகச் சந்தித்துக்கொண்டிருந்தார். மனம் கொந்தளிப்பிலேயே இருந்தது. தேரோட்டி வந்த வீரன், `இடதுபக்கக் கட்டையில் தொங்கிக் கொண்டிருக்கும் மூங்கில் குடுவையில் உள்ள நீராகாரத்தைக் கபிலருக்குத் தருவோம்’ என நினைத்துத் திரும்பினான்.

``எக்காரணங்கொண்டும் திரும்பாதே. அழைப்பு வருகிறதா என்று மட்டும் பார்” என்றார்.

கபிலரின் திடமான குரல் கேட்டு, சற்றே அதிர்ச்சியானான் வீரன்.

இரலிமேட்டிலிருந்து பாரி, கபிலரைப் பார்த்துக்கொண்டேயிருப்பான். இவ்வளவு பொழுது அவர் நிற்கவைக்கப்பட்டதை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. உடனே திரும்பி வாருங்கள் என்று சொல்லிவிடக்கூடும். எனவேதான், ``எப்பக்கமும் திரும்பாதே” என்று கபிலர் வீரனைக் கடிந்து கூறினார்.

பொழுது நண்பகலைக் கடந்தது. தேர் தனது இடம் விட்டு நகராமல் நின்றுகொண்டேயிருந்தது. அனுமதி கேட்கச் சென்றவன் வந்துசேர்ந்தான். கபிலரின் தேர் படையணிக்குள் அனுமதிக்கப் பட்டது. குதிரைவீரன் வழிகாட்டி முன் சென்றான்.

83p3_1528191720.jpg

படையணிகளுக்குள்ளும் பாசறைகளுக்கிடையேயும் வளைந்து நெளிந்து சென்ற தேர், இறுதியில் மூஞ்சலை அடைந்தது. கபிலர் இறங்கினார். வரவேற்க எவரும் இல்லை. எந்தக் கூடாரம் நோக்கிப் போவது என்பது சற்றே குழப்பமாக இருந்தது. குதிரைவீரன், மூன்றாம் கூடாரத்தைக் கைகாட்டி ``உங்களை அங்கே வரச்சொன்னார்கள்” என்றான்.

கபிலர் அதை நோக்கி நடந்தார். அருகில் செல்லச் செல்ல இசைக்கருவிகளின் ஓசை கேட்டது. மகிழ்வின் வெளிப்பாடு முகத்தில் அறைந்தது. உடல் கூசி நடுங்கியது. நீண்டநேரம் நிறுத்திவைத்ததன் மூலம் ஏற்படுத்திய உணர்வை, அருகில் அழைப்பதன் மூலமும் ஏற்படுத்த முடிந்தது. கபிலரின் கால்கள் நகராமல் நின்றன. சற்று நேரத்தில் கூடாரத்திலிருந்து வெளியே வந்த முசுகுந்தர் அவருக்கு வணக்கம் தெரிவித்து உள்ளே அழைத்துச் சென்றார்.

இசை நிகழ்வு முடிவுற்றதும் கபிலர் உள்நுழைந்தார். வேந்தர்கள் மகிழ்வோடு வீற்றிருந்தனர். பெரும்புலவரை வழக்கத்தைவிடப் பேரோசையை வெளிப்படுத்தி வரவேற்றார் குலசேகரபாண்டியன். வரவேற்க ஆள்கள் இல்லாதபோது என்ன உணர்வை ஏற்படுத்த முடிந்ததோ, அதே உணர்வை வரவேற்கும்போதும் ஏற்படுத்த முடிந்தது. அவையை வணங்கினார் கபிலர்.

``என்ன புலவரே, நண்பகலில் இவ்வளவு பெரிய போர்வையைப் போர்த்திக்கொண்டு வந்திருக்கிறீர்... உடல் நடுங்குகிறதா?” எனக் கேட்டார் சோழவேழன்.

``தோழனின் நடுக்கத்தை பெரும்புலவர் தானும் உணர்கிறாரோ?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை. கணநேரத்தில் உடல் நடுங்கியது. சூம்பிப்போயிருந்த வலதுகால் நடுவிரல் உள்ளிழுத்தது. பின்னங்கால் நரம்பு இழுக்கத் தடுமாறுவதுபோல் இருந்தது. கண்களை மூடி உடலையும் மனதையும் திடப்படுத்திக்கொண்டார். தனக்கான சொற்கள் எதுவும் தன்னிடம் வரக் கூடாது என நினைத்தார். நீலனைப் பார்க்கும் வரை சொல்லேந்தக் கூடாது என்ற முடிவோடு இருந்தார்.

``பெரும்புலவர் நம்மைப் பார்க்க வரவில்லை. நீலனைப் பார்க்கவே வந்துள்ளார். எனவே, முதலில் அவர் நீலனைப் பார்த்துவிட்டு வரட்டும். பிறகு பேசலாம்” என்றார் குலசேகரபாண்டியன்.

``சரி’’ எனச் சொல்லி எழுந்த முசுகுந்தர், கபிலரை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார். மூஞ்சலில் பெரும்பெரும் கூடாரங்கள் போதிய இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடாரங்களுக்கு நடுவே சின்னதாய் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. முசுகுந்தர் அதை நோக்கி நடந்தார்.

கபிலரின் கால்கள் முன்னகரத் தயங்கின. நீலன் எந்த நிலையில் இருக்கப்போகிறான் என்ற கவலை அவரை மேலும் நடுக்கமுறவைத்தது. முசுகுந்தர் கூடாரத்தின் திரைச்சீலையை விலக்கியபடி, கபிலர் உள்ளே செல்ல கையை நீட்டினார். உள்நுழைந்தார் கபிலர். கூடாரத்தின் நடுவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தூண் ஒன்றில் சாய்ந்துகிடந்தான் நீலன். உடலெங்கும் குருதி வழிந்த கருந்திட்டுகள் இருந்தன. இன்னும் சில இடங்களில் செங்கசிவு நிற்காமல் இருந்தது. கால்தொடையில் ஈட்டி இறங்கிய இடத்தில் துணிகளைக்கொண்டு கட்டியிருந்தான். ஆங்காங்கே தசைகள் பிய்ந்து தொங்க ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. கண்கள் உட்செருகியபடி கிடந்தவன், ஓசை கேட்டு விழித்துப் பார்க்க முயன்றான். புருவங்கள்தான் மேலேறிக்கொண்டிருந்தன. இமைகளைத் திறக்க முடியவில்லை. முயன்று இமை திறந்து பார்த்தான். எதிரில் கபிலர்.

அவனது தலையைக் கைகளால் மெள்ளத் தடவியபடி அருகில் மண்டியிட்டு அமர்ந்தார். விழிகள் ஏறிட்டு கபிலரைப் பார்த்தன. கலங்கிய கண்களோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் கபிலர். அவரின் கண்கள் அவனது காயங்களைத் தேடித் தேடி நகர்ந்தன.

எதிரியின் கூடாரத்தில் கட்டுண்டு கிடக்கும் மாவீரனிடம் நம்பிக்கையூட்டும்படி பேச கபிலரால் முடியும். ஆனால், நீலனைப் பல நேரங்களில் தன் மகனைப்போல உணர்ந்தவர் அவர். அவரது மனம் உணர்வுகளின் கொதிகலனாக இருந்தது. கண்களில் நீர் பெருகிக்கொண்டேயிருந்தது. அவனது காயங்களினூடே கைகள் நகர்ந்தபடி இருந்தன.

அவரை நீலனால் முழுமையாக உணர முடிந்தது. மெள்ள அவன் பேசத் தொடங்கினான், ``உங்களைச் சந்தித்த முதல் நாள் நான் என்ன சொன்னேன் என்பது நினைவிருக்கிறதா?”

தனது உடல்நடுக்கத்தை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது என முயன்றுகொண்டிருந்த கபிலருக்கு, நீலன் எதைக் கேட்கிறான் என்பது புரியவில்லை. சிந்தித்துப்பார்த்தார். அவன் கேட்பது நினைவுக்குப் புலனாகவில்லை.

நீலன் சொன்னான், ``வேட்டுவன்பாறைக்கு நீங்கள் வந்த அன்று சொன்னேன், ‘வீரனின் வாழ்வு மிகக் குறுகியது. பறம்புநாட்டுக்கு நாற்புறமும் எதிரிகள். எப்போது போர்மூளும் எனத் தெரியாது. போர்க் களத்தில் நான் சாயும்போது எனது ஈட்டியை இறுகப் பற்றி முன்னேற, என் மகன் வந்து நிற்க வேண்டும்’ என்று.”

கண்களை அகலத் திறந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் கபிலர். ``நான் எனது வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேன். இன்னும் சில நாள்களேயானாலும் நான் மரணிப்பதற்குள் மயிலா வீரமகவை ஈன்றெடுப்பாள்” என்றான் நீலன்.

கலங்கியபடி கூறினார் கபிலர், ``நீ மாவீரன். போரிடும் முன்பே வாகைப்பூ ஏந்தி வந்த உன்னை மரணம் எப்படி அணுகும்?”

மயிலாவுக்காகக் குமரிவாகையைப் பறித்துப்போனது நினைவுக்கு வந்தது. ஆதினி இதைச் சொல்லித்தான் மயிலாவை ஆற்றுப்படுத்தியிருப்பாள் எனத் தோன்றியது.

``கொற்றவை உனக்கு வெற்றிவாகையைத் தந்து அனுப்பியுள்ளாள். அதனால்தான் உனது வீரத்தை இன்று பறம்பே பேசுகிறது” என்றார் கபிலர்.

தொடர்ந்து பேச முயன்றான் நீலன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. முயன்று சொன்னான், ``என்னைவிடப் பெரும்வீரத்தை வெளிப்படுத்தியவர்கள் சோமக்கிழவனும் கொற்றனும்தான். கிழவனும் சிறுவனும் எண்ணிலடங்காத எதிரிகளை அழித்தொழித்தார்கள்” என்றவன் சற்றே இளைப்பாறி, ``காலம்பனிடம் மன்னிப்பு கேட்டதாகச் சொல்லுங்கள். கொற்றனை நான் காக்கத் தவறிவிட்டேன்” சொல்லும்போது உடைந்து கலங்கினான் நீலன்.

``இல்லை. உரியநேரத்தில் உதவ முடியாததற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லிப் பாரி கூறினான்.”

என்ன பேசுகிறார்கள் என அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்தார் முசுகுந்தர். நீலனின் மீது மொய்த்துக்கொண்டிருந்த ஈக்களை விரட்டியபடி, தான் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து உதறாமல் அவன்மீது இறுகச்சுற்றிப் போர்த்தினார் கபிலர். அவனது காலிலே குருதி வடியத் தொங்கிக்கொண்டிருந்த மேலாடையின் சிறு பகுதியைக் கிழித்து எடுத்தார்.

83p5_1528191745.jpg

கபிலர் என்ன செய்கிறார் என முசுகுந்தருக்கு விளங்கவில்லை. கிழித்து எடுத்த அந்தச் சிறு துணியைக் கைவிரல்களில் சுருட்டியபடியே சொன்னார், ``வரும் முழுநிலா நாளில் கொற்றவைக்குக் குருதியாட்டு விழா. கூத்துத்திடலில் திரி போட வேண்டுமல்லவா?” என்றார். நீலன் அவரை உற்றுப்பார்த்தான்.

``பாரிதான் எடுத்துவரச் சொன்னான்” என்று சொல்லியபடியே துணியைச் சுருட்டி முடித்தார்.

நீலனுக்கு விளங்கியது. போர் முடிவுற்றவுடன் நடப்பதுதான் குருதியாட்டு விழா. முழுநிலவுக்கு இன்னும் பன்னிரண்டு நாள்கள் உள்ளன. அதற்குள் எதிரிகளை வென்று முடிப்பேன் எனச் சொல்லி அனுப்பியுள்ளான். அதுமட்டுமன்று, போரிலே தமது குருதி படிந்த ஆடைகொண்டே கொற்றவைக்கு விளக்கேற்றத் திரி போடுவர். நீலனின் குருதி படிந்த மேல்துணியை எடுத்துவரச் சொன்னதற்குக் காரணம், குருதியாட்டு விழாவுக்கு நீலன் திரி போட வந்து சேருவான் என்பதே. நீலனிடம் சொல்ல வேண்டிய எல்லாச் செய்திகளையும் சொல்லி முடித்தார் கபிலர்.

`பன்னிரண்டு நாள்களில் எதிரிகளை வென்று உன்னை மீட்பேன்’ என்று பாரி சொன்னதாகக் கபிலர் சொன்ன எதுவும் முசுகுந்தருக்குப் புரியவில்லை. ``சரி, புறப்படலாம்” என முசுகுந்தரைப் பார்த்துச் சொல்லியபடி நீலனிடமிருந்து எழுந்தார் கபிலர். மகிழ்வின் ஒளியேறிய முகத்தோடு அவரைப் பார்த்தான் நீலன். அந்தப் பார்வை விளங்கிக்கொள்ள முடியாத ஆழத்தோடு இருந்தது. விடைபெற்று கூடாரத்துக்கு வெளியில் வந்தார் கபிலர்.

சிறிது தொலைவு கடந்ததும் முசுகுந்தர் கேட்டார், ``அவன்மீது அளவுகடந்த அன்புகொண்டுள்ளீர்களே!”

`ஆம்’ என்று தலையை மட்டும் ஆட்டினார் கபிலர்.

``நீங்கள் போர்த்தியிருந்த போர்வையை அவனுக்கு ஏன் போர்த்தினீர்கள்?”

``மேலெல்லாம் ஈக்கள் மொய்க்கின்றனவே. அதிலிருந்தாவது அவனைக் காப்போம் என்றுதான்.”

``நீங்கள் நினைத்தால் அவனையே காப்பாற்றலாம்!”

சற்றே நடையின் வேகத்தைக் குறைத்த கபிலர் முசுகுந்தரைப் பார்த்தார்.

``மூவேந்தர்களுக்கு உதவுவதாக வாக்களியுங்கள். உங்களின் தேரிலேயே அவனை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறேன்.”

சிரித்தார் கபிலர். ``மேகம் எப்படி காற்றுக்கு எதிராகப் பயணிக்கும்?”

``நீலனின் மீது உங்களுக்கு இருப்பது உண்மையான அன்பென்றால், வீசும் காற்று ஒரு பொருட்டன்று.”

``அன்பின் உண்மைத்தன்மையை உங்களால் கண்டறிய முடியுமா முசுகுந்தரே?”

``நிச்சயம் முடியும். கபிலரை எத்தனையோ ஆண்டுகளாக அறிந்தவன் நான். எளிய உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காத பேரறிஞர். ஆனால், இன்று அவனோடு பேசும்போது உங்களின் கண்கள் எத்தனை முறை பெருக்கெடுத்தன என்பதைக் கவனித்தேன். `கபிலர்தானா இவர்?’ என்று உங்களின் மீதே எனக்கே ஐயம் வருமளவுக்கு இருந்தது, அவன் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு. அவன் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்று புரிந்துகொண்டேன். அதனால்தான் சொல்கிறேன் உங்களால் அவனைக் காப்பாற்ற முடியும்.”

``அவனது துன்பங்கள் கண்டு என்னை அறியாமல் கண்ணீர் சிந்தினேன். ஆனால், எனது துன்பத்தை பாரி அறிய நேர்ந்தால் குருதி சிந்துவான்.”

முசுகுந்தர் சற்றே அதிர்ச்சியோடு கபிலரைப் பார்த்தார்.

கபிலர் சொன்னார், ``ஒருவேளை காற்றை எதிர்த்துக்கூட மேகம் பயணிக்கலாம். ஆனால், வானத்தை விட்டு விலகிச் செல்ல கதிரவனுக்கு வழியேதுமில்லை.”

முசுகுந்தர் பேச்சின்றி அமைதியானார். பெரும்புலவரை வசப்படுத்துதல் எளிதன்று என அவருக்குத் தெரியும். ஆனாலும் கண்கலங்கியதைப் பார்த்துக் கல்லெறியலாம் என முயன்றார். எதுவும் நடக்கவில்லை. இருவரும் வேந்தர்களின் கூடாரத்துக்குள் நுழைந்தனர்.

அவருக்கான இருக்கையில் அமரும்வரைகூடக் காத்திருக்க ஆயத்தமாயில்லை. வந்தவுடன் சோழவேழன் கேட்டார், ``என்ன கபிலரே, இதை எதிர்பார்த்திருக்க மாட்டீரே!”

இருக்கையில் அமர்ந்துகொண்டே கபிலர் சொன்னார், ``ஆம். பெருவேந்தர்கள் மூவரும் கோழையின் செயலைச் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?”

அதிர்ந்தது அவை. தனக்கான சொற்களைக் கைக்கொள்ளத் தொடங்கினார் கபிலர். பாரி என்ன நோக்கத்துக்காக அனுப்பிவைத்தானோ, அந்த வேலை முடிந்தது. நீலனுக்கான செய்தி சொல்லப்பட்டுவிட்டது. இனி கபிலர் சொல்லைச் சுழற்றத் தடையேதுமில்லை.

``எது கோழையின் செயல்? திரண்டு நிற்கும் படை கண்டு தோள்கள் புடைக்க களம் காணாமல் காடுகளுக்குள் ஒளிந்துகிடப்பது கோழையின் செயலா? அவனது எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி அவன் தளபதிகளில் ஒருவனைச் சிறைப்பிடித்து வந்தது கோழையின் செயலா?” சீறினான் உதியஞ்சேரல்.

``ஒற்றறிந்து, இருள்போர்த்தி, பம்மிப் பதுங்கி நீங்கள் நடத்திய தாக்குதலுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால், அந்தச் செயலுக்கான குணம் கோழையினுடையது.”

``ஒற்றறிவதோ, இருள்போத்தி நகர்வதோ, பதுங்கிப் பாய்வதோ போரின் பகுதியென்று நீங்கள் அறியாதவர் அல்லர். பாரியுடனான நட்பு, போர் நியதியை மறந்தவராக உங்களை மாற்றியுள்ளது.”

``நியதிகளையும் மரபுகளையும் அறியாதவர்களின் பட்டியலில் என்னைச் சேர்க்கும் அளவுக்கு, போருக்கான மனநிலையில் மூழ்கிவிட்டீர்கள். உங்களின் நோக்கம் அதுவென்றால், உங்களுக்கு உதவ நான் ஒரு வழிமுறை சொல்கிறேன், கேட்கிறீர்களா?”

``பெரும்புலவரே! உங்களால் எங்களுக்கு உதவ முடியாது. எங்களுக்கு உதவுவதாக நீங்கள் எது செய்தாலும் அதற்குப் பின்னால் இருப்பது எங்களின் எதிரியான பாரியின் நலனே” என்றார் குலசேகரபாண்டியன்.

சற்றே வாய்விட்டுச் சிரித்தபடி கபிலர் சொன்னார், ``இதைத்தானே நான் சொன்னேன். போருக்கான மனநிலைக்குள் முழுமுற்றாக மூழ்கிவிட்டீர்கள். இனி குருதி பிசையாமல் உங்களால் உணவருந்த முடியாது.”

83p8_1528191761.jpg

சொற்களின் கூர்மை நுனிமூக்கைக் குத்தி இழுத்தது. உயர்த்திய குரலோடு உதியஞ்சேரல் கேட்டான், ``சரி, சொல்லுங்கள். எங்களுக்கு உதவ என்ன சொல்லப்போகிறீர்கள்?”

``பாரி மலைவிட்டுக் கீழிறங்கிப் போரிட வேண்டும். அதனால்தானே நீலனைச் சிறைப்பிடித்து வந்துள்ளீர்கள்?”

அவையில் அமைதி நீடித்தது. கபிலர் தொடர்ந்தார், ``நீலனைத் தூக்கிவந்தால்கூட அவன் உடனடியாகப் போர்தொடுக்க மாட்டான். சற்று காலம் தாழ்த்துவான். உங்களின் அவசரம் கருதிச் சொல்கிறேன். நீலனை விடுவித்துவிடுங்கள். என்னைச் சிறையிலிடுங்கள். இந்தக் கணமே போரைத் தொடங்குவான் பாரி.”

கூடாரம் அதிர்வதைப்போலச் சிரித்தார் குலசேகரபாண்டியன். ``பெரும்புலவரே! இதைத்தானே நான் முதலிலேயே சொன்னேன். எங்களுக்கு உதவுவதாக நீங்கள் எது செய்தாலும் அதற்குப் பின்னால் இருப்பது எங்கள் எதிரியான பாரியின் நலனே!”

கபிலர் சற்று அதிர்ந்தார்.

``தமிழ் நிலத்தின் பெரும்புலவரை மூவேந்தர்கள் சிறைப்பிடித்தனர் என்ற அவப்பெயர் எங்களுக்கு நேர வேண்டும். ஆனால், அவரை மீட்கப் போரிட்டு உயிர் நீத்தான் பாரி என, புலவர்குடிகள் காலம்காலமாக அவனைப் போற்றவேண்டும். அதுதானே உங்களின் நோக்கம்?”

கபிலர் சொன்னார், ``நீங்கள் விரும்பும் போர்க்களத்துக்குப் பாரியை உடனடியாக வரவைக்கும் வழியைத்தான் நான் கூறினேன். அதில் துளியும் மிகையில்லை. ஆனால், இந்தச் செயலில் என்பால் அவனுக்கு இருக்கும் அன்பு உங்களுக்குப் புலப்படவில்லை. அவன் அடையப்போகும் புகழ் மட்டுமே உங்களின் கண்களுக்குத் தெரிகிறது. இதைப் பற்றிதான் பேச நினைக்கிறேன்.”

``இன்னும் பேச என்ன இருக்கிறது?”

``இருக்கிறது. உங்களது போர், அவன் கொண்டுள்ள பொருளுக்கானதன்று; அவன் பெற்றுள்ள புகழுக்கானது. ஒருவனின் செல்வத்தைக் கவர்ந்திட நீங்கள் போரிட்டால் அந்தப் போரில் வெற்றி-தோல்வி உண்டு. ஆனால், ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிடவே முடியாது. நீரைப் பாறைகொண்டு நசுக்க முடியாது.”

குலசேகரபாண்டியன் உயர்த்திய குரலோடு சொன்னார், ``இந்தப் போரில் நாங்கள் வெல்வதைத் தடுக்க யாராலும் முடியாது. ஆனாலும் போர் தொடங்கும் முன்பே ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம். அதுதான் எங்களுக்கு ஆறாத்துயரை ஏற்படுத்துகிறது.”

``யாரை?” எனக் கேட்டார் கபிலர்.

``உங்களைத்தான். தமிழ் நிலத்தின் பெரும்புலவர்; மூவேந்தர்களின் அவைகளையும் பாட்டால் பொலிவுறச்செய்த பேரறிஞர். இன்று எங்களின் எதிரியோடு போய் நிற்கிறீர். அவன் உங்களின் தமிழால் எங்களைச் சீண்டுகிறான். உங்களின் புலமைகொண்டு நம் நட்பைத் தகர்க்கிறான். தயவுகூர்ந்து உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அந்தக் கோழையை உங்களின் மேலாடையை விட்டு வெளியில் வந்து பேசச் சொல்லுங்கள்.”

பாரியுடனான நட்பும் வேந்தர்களுடனான நட்பும் ஒரே நேரத்தில் இகழ்ச்சிக்குள்ளானது. ``எனது புலமையும் எனது தோழமையும் எத்தனையோ முறை சீண்டப்பட்டிருக்கின்றன. ஆனால், தனிமனிதனாக நான் இப்போது சீண்டப்படுகிறேன்…” என்ற கபிலர் அடுத்த வார்த்தையை உச்சரிக்கும் முன் சட்டென இடைமறித்தார் முசுகுந்தர்.

``இதற்குமேல் பேசிக்கொண்டிருப்பது பொருளற்றது. சிறைப்பிடிக்கப்பட்டவனை மீட்க,  துணிவிருந்தால் போரிட்டு மீட்டுக்கொள்ளச் சொல்லுங்கள்” என்று நிறுத்தினார் பேச்சை.

அவையில் சட்டென அமைதி திரும்பியது. தலையசைத்தபடி `சரி’யெனச் சொன்ன கபிலர். ``போரிட்டு மீட்பான் பாரி. ஆனால், போர் முடியும் வரை சிறைப்பிடிக்கப்பட்டவனைப் பாதுகாக்கும் அறத்திலிருந்து நீங்கள் நழுவ மாட்டீர்கள் என நம்புகிறேன்.”

``அவனுக்கு உணவும் நீரும் அளிப்போம். மருந்தளிக்க மாட்டோம். தாக்குண்ட காயத்தால் அவன் மரணம் எய்துவானேயானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றார் முசுகுந்தர்.

``உணவும் நீரும் அளியுங்கள். அது போதும்” என்றார் கபிலர்.

``சரி. அப்படியென்றால், போரின் விதிகளை வரையறுத்துக்கொள்ளலாமா?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``போரின் விதிகளைப் போரிடுபவரிடம்தானே நீங்கள் பேசவேண்டும். நான் போரிடுபவன் அல்லன். போரிடப்போகிறவனுக்கு நண்பன்.”

``அப்படியென்றால் நாளைக் காலை போர் விதிகளை முடிவுசெய்வதற்கான மனிதரை அழைத்துவாருங்கள்” என்றார் குலசேகரபாண்டியன்.

``சரி” எனச் சொல்லி அவை நீங்கினார் கபிலர். அவரைப் பொறுத்தவரை வந்த வேலை எல்லா வகையிலும் சிறப்பாக முடிந்தது. நீலனுக்கு அவர் போர்த்திய போர்வை பருத்தி நூலால் நெய்யப்பட்டது மட்டுமன்று, பருத்தி நூலோடு சேர்த்து மூலிகை நார்களால் பின்னப்பட்டது. எல்லாவகையான மருத்துவப் பொடிகளும் அதன்மீது போர்த்தி மேவப்பட்டிருந்தது. அதை மேலே போர்த்தியவுடன் குருதிக்கசிவுகள் உடனே நிற்கும். காயங்கள் விரைவில் குணமாகும். புத்துணர்ச்சியும் ஆற்றலும் பிறக்கும்.

ஒருவேளை, அவனுக்கு உண்ணக் கொடுக்கும் உணவில் நஞ்சு இருந்தாலும் நஞ்சுமுறியாகவும் அது செயல்படும். முறியன் ஆசான் கொடுத்தனுப்பிய மருத்துவ ஆடை அது. அதன் கீழ் விளிம்பில் சற்றே பெரிதான சரடு போன்ற ஒன்று உண்டு. அது தராக்கொடியும் செவ்வகத்தி வேரும். ஒருவேளை இரும்புத்தூணில் அவன் கட்டப்பட்டிருந்தால் அந்தக் கொடியின் பால் பட்டு இரும்பு உருகும்.

அதைப்போலவே குறுங்காது முயலின் குருதியில் ஊறிய நரம்புகள் போர்வைக்குள் இருக்கின்றன. கையில் கிடைக்கும் சிறு தடியைக்கொண்டுகூட வில்லைச் செய்ய அது பயன்படும். மருந்து, ஆயுதம் ஆகிய அனைத்தும் கொண்டதாக இருந்தது அந்தப் போர்வை. நீலனுக்குத் தேவையான அனைத்தும் அவனுக்குத் தரப்பட்டு விட்டன.

கபிலர் நிறைவோடு படை நீங்கி வெளியேறினார். நாகக்கரட்டில் ஏறும்போதே இரவாகிவிட்டது. அவரின் வரவுக்காக ஆறாம் குகையில் பாரி, தேக்கன், முடியன், காலம்பன், கூழையன், வாரிக்கையன், முறியன் ஆசான் ஆகியோர் காத்திருந்தனர். கபிலர் வந்தவுடன் முறியன் ஆசான் எண்ணற்ற கேள்விகளைக் கேட்டார். நீலனின் ஒவ்வொரு காயத்தைப் பற்றியும் விளக்கினார் கபிலர். முறியன் ஆசான் சொன்னதுபோலத்தான் நீலனின் உடல் முழுவதும் விரல்களால் தொட்டுப்பார்த்தார். எந்தெந்த இடத்திலெல்லாம் நீலன் வலிமிகுதியை உணர்ந்தான், எந்தெந்த இடத்திலெல்லாம் உணர்வற்று இருந்தான் என்பதையெல்லாம் துல்லியமாகக் கேட்டார். அவன் எந்தெந்த வடிவில் கைகால்களை நீட்டி மடக்கி உட்கார்ந்திருந்தான் எனக் கேட்டார்.

வலதுகால் தொடையில்தான் ஈட்டி இறங்கிய பெருங்காயம் இருப்பதைச் சொன்னார் கபிலர். ``தொடைப் பகுதியில்தான் போர்வை சுருண்டும் மடங்கியும் அதிக நேரம் குவிந்துகிடக்கும். எனவே, ஓரிரு நாள்களில் அது குணமடைந்துவிடும்” என்றார் முறியன் ஆசான்.

முறியன் ஆசானின் வேலை முடியும் வரை மற்றவர்கள் காத்திருந்தனர். அவர் குகை விட்டு வெளியேறியவுடன் வேந்தர்களோடு நடந்த பேச்சு வார்த்தையைப் பற்றிச் சொன்னார் கபிலர். அனைவரும் கவனமாகக் கேட்டனர்.

போர்விதிகளைப் பற்றிப் பேச, பொருத்தமானவரை அழைத்துக்கொண்டு வருகிறேன் எனக் கூறி வந்துள்ளதாகக் கபிலர் சொன்னார்.

சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு முடியன் சொன்னான், ``அப்படியென்றால் நாளை கபிலரோடு தேக்கன் செல்லட்டும்.”

எல்லோரும் `சரி’ என்பதுபோலத் தலையசைத்தபோது, பாரி சொன்னான், ``தேக்கன் வேண்டாம்.”

சற்றே வியப்போடு பார்த்தனர்.

``கபிலரோடு வாரிக்கையன் செல்லட்டும்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீரயுக நாயகன் வேள்பாரி - 87

 

ருங்கைவாணன் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவக் கூடாரத்துக்கு வந்தனர் பொதியவெற்பனும் முசுகுந்தரும். ``முகத்திலும் கை, கால்களிலும் ஆங்காங்கே நெருப்புக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஓரிரு நாள்களில் குணமாகிவிடும்” என்றார் மருத்துவர். தீக்காயங்களின் தன்மையைப் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தான் பொதியவெற்பன். மழை பெய்யத் தொடங்கியது. நெடுநேரம் வரை மழை நிற்கவில்லை. வேட்டுவன்பாறையில் நடைபெற்ற தாக்குதலைப் பற்றி கருங்கைவாணனுடன் நீண்ட பொழுது பேசிக்கொண்டிருந்தான் பொதியவெற்பன்.

மூவேந்தர்களும் சோழவேழனும் வழக்கம்போல் இரவில் சந்தித்து உரையாடினர். பொதியவெற்பனும் முசுகுந்தரும் கருங்கைவாணனைப் பார்க்கப் போயிருந்ததால், இன்றைய உரையாடலில் அவர்கள் பங்கெடுக்கவில்லை. சோழவேழன் கேட்டார், `` `போர்விதிக்கான பேச்சுவார்த்தையை நடத்த பொருத்தமானவரை இன்றே அழைத்துவாருங்கள்’ என்று கபிலரிடம் சொல்லியிருக்கலாமே. நாளை அழைத்துவரச் சொன்னது அவர்களுக்கு நேரம் கொடுத்ததாகிவிடாதா?``

குலசேகரபாண்டியன் சொன்னார், ``நாம் திட்டமிட்டுக்கொள்ள நேரம் தேவைப்படுகிறது. அதனால்தான் நாளை அழைத்துவரச் சொன்னேன்.’’

45p2_1528793870.jpg

போருக்கான விதிகள் எல்லோரும் அறிந்ததே. பல நூறு போர்க்களங்களில் குருதி கலந்த காற்றை நுகர்ந்தபடி தளபதிகளாலும் அமைச்சர்களாலும் பேசிப் பேசி உருவாக்கப்பட்ட வார்த்தைகள்தான் அவை. போர் என்பது அழிவின் களம். அங்கு ஒருபோதும் ஒழுங்கை உருவாக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் விதிகளை உருவாக்கி, போர்புரியும் மரபு பல தலைமுறைகளாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான போர்கள் விதிகளின்படிதான் தொடங்குகின்றன. ஆனால், விதிகளின்படி முடிவதில்லை. தமக்கு வெற்றி கிடைக்கும் என்னும் நம்பிக்கை இருக்கும் வரை விதிகளைப் பின்பற்ற அனைவரும் பழகியுள்ளனர். ஆனால், அந்த நம்பிக்கை தகரும்போது விதிகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை.

போர்விதிகள், பொதுவான சில ஒழுங்குகளை முன்வைக்கின்றன. இருதரப்பினருக்கும் அந்த ஒழுங்குகள் தேவையாக இருப்பதால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றைப்போலவே வெற்றியும் இருதரப்புக்கும் தேவையாக இருப்பதால் இருவரும் விதிகளைப் பற்றிப் பேசி, உடன்பட்டு, போரைத் தொடங்கு கின்றனர். ஆனால், போர்க்களத்தில் ஒருவனின் கை வலிமைபெறும்போது இருவருக்கும் விதிகள் முக்கியத்துவமற்றுப் போய்விடுகின்றன.

வாளுக்கு வடிவமைக்கப்பட்ட உறைபோலத்தான் போருக்கு வடிவமைக்கப்படும் விதிகளும். கலை வேலைப்பாட்டுடன் மிளிர்வது உறைக்கு அழகு. ஆனால், வாளுக்கு அழகு, வெட்டிச் சரிக்கத் தேவையான கூர்முனை மட்டுமே. எல்லா வாள்களுக்கும் மேற்பூச்சுகொண்ட உறை தேவைப்படுவதைப்போலத்தான் போருக்கு விதிகள் தேவைப்படுகின்றன.

எல்லோரும் ஏற்றுக்கொண்ட போர்விதிகளை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவை, மூன்று பேரரசுகள்தான். பல காலங்களாக போர்க்களம் நீங்கா இந்தப் பேரரசுகள்தான் எதிரும் புதிருமான முறையில் எத்தனையோ விதிகளை உருவாக்கின. இன்று பொதுப் புழக்கத்தில் இருக்கும் போர்விதிகளில் பெரும் பான்மையானவை எதிரெதிரே இருக்கையில் அமர்ந்து இந்தப் பேரரசுகளால் உருவாக்கப் பட்டவைதான். வரலாற்றில் முதன்முறையாக மூன்று பேரரசுகளும் ஒன்றாய் உட்கார்ந்து பொது எதிரியோடு போர்புரிவதற்கான விதிகளைப் பற்றி இப்போது பேசுகின்றன.

``போர்விதிகளை உருவாக்குவதில் நாம் புதிதாய்த் திட்டமிட என்ன இருக்கிறது?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``போர்விதியின் அடிப்படையில் வெற்றிபெற முயல்வதைவிட, வெற்றி பெறுவதற்கான முறையில் விதிகளை வடிவமைத்துக் கொள்வதே அறிவுடைமை” என்றார் குலசேகரபாண்டியன்.

``இந்தப் போரை விதிகளால் ஒழுங்குப்படுத்த முடியாது. ஏனென்றால், எதிரிகளுக்கு என்ன ஆற்றல் இருக்கிறது என்றே நமக்குத் தெரியாது. பிறகு எப்படி நாம் பொதுவிதியை உருவாக்க முடியும்?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.

இன்று கபிலரோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையைச் சொல்லி நாளை போரின் விதிகள் பேசப்படவுள்ளதை முசுகுந்தர் பகிர்ந்துகொண்ட போது, கருங்கைவாணனின் மறுமொழியாக இது இருந்தது.

`கருங்கைவாணனா இப்படிப் பேசுவது!’ என வியப்போடு பார்த்தான் பொதியவெற்பன். முசுகுந்தருக்கும் நம்ப முடியாததாகத்தான் இருந்தது.

``மூவேந்தர்களின் கூட்டுப்படைத் தளபதியின் குரலா இது?” எனக் கேட்டார் முசுகுந்தர்.

``ஆம். நமக்கான விதிகளையும் அவர்களுக்கான விதிகளையும் ஒன்றாய்ப் பொருத்த முடியாது.”

``ஏன்? நம்மைவிட எந்த வகையில் அவர்கள் வேறுபட்டவர்கள்?”

``அது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் நம்மைப் போன்றோர் அல்லர். புதருக்குள்ளிருந்து விலங்குகள் வெளிவருவதைப்போல நெருப்புக்குள்ளிருந்து வெளிவரும் மிருகங்கள் அவர்கள். அவர்கள் மீது இரக்கமற்ற  தாக்குதலையே நடத்த வேண்டும். ஒழுங்குப்படுத்தப்பட்ட விதிகளெல்லாம் அந்தக் காட்டு மனிதர்களுக்குத் தேவையில்லை.”

கருங்கைவாணன் தீக்காயங்களிலிருந்து மீளாது துடித்துக்கொண்டிருப்பது அவனது சொற்களிலேயே தெரிந்தது.

``உனது வார்த்தைப்படியே வைத்துக் கொண்டாலும் விதி என்பது அவர்களது ஆற்றலைக் குறைக்கப் பயன்படுமேயானால், அதை நாம் ஏன் தவறவிட வேண்டும்?”

``அவர்களது ஆற்றல் என்னவென்று தெரிந்தால்தானே நம்மால் குறைக்க முடியும்?”

``அளவிட முடியாத ஆற்றல்கொண்டவர்கள் என்று சொல்கிறாயா?”

``இல்லை, எல்லாவகையான உத்திகளையும் பயன்படுத்தி அழிக்கப் படவேண்டிய ஒரு கூட்டம் என்று சொல்கிறேன். அந்தக் கூட்டத்துக்குப் பொதுவிதிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. அப்படிப் பொதுவிதிகளை உருவாக்குவது அவர்களுக்கு நாமே வாய்ப்பைத் தருவதுபோல் ஆகிவிடும்.”

``உருவாக்கப்படும் விதிகளின் படியே போர் புரியவேண்டும் என்பது முன்னோர் மரபு.”

``இதைத்தான் நான் சொல்ல வருகிறேன். சமதளத்தில் வாழ்கிற நமது முன்னோர்கள் உருவாக்கிய மரபு அது. மலைமனிதர்களுக்கு மரபு ஏது... அறம் ஏது?”

``நீ அவர்களின் திறனை மிகைப்படுத்துகிறாய் என நினைக்கிறேன். ஆத்திரப்படுவதால் அவ்வாறு தோன்றுகிறது.”

``இல்லை அமைச்சரே! யாராலும் நெருங்கவே முடியாது எனச் சொல்லப்பட்ட திரையர்களை அவர்களின் இருப்பிடத்துக்குள் நுழைந்து வீழ்த்தினோம். நானே அஞ்சி பின்வாங்க நினைத்தபோதுகூட சற்றும் இரக்கம்காட்டாமல் துணிந்து முன்னேறி அவர்களை வீழ்த்தினான் திதியன். ஆனால், சிறிய குன்றின் மேல் இருந்த சின்னஞ்சிறிய ஒரு கூட்டம், திதியனைக் கொன்றழித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. பெரும்பாறைகளை உருட்டுவதும், மரங்களைச் சாய்த்துத் தள்ளுவதும், நெருப்புக்குள் நுழைந்து வெளிவருவதுமாக அவர்கள் நடத்திய தாக்குதல் முழுவதும் நம்ப முடியாத மாயக்காட்சிகளாக இருந்தன. நாம் நடத்திய திடீர் தாக்குதலிலேயே அவர்களால் இவ்வளவு திறனை வெளிப்படுத்த முடிந்தபோது, திட்டமிட்டு முறைப்படுத்தப்பட்ட விதிகளை உருவாக்கி அதன்படி போரை நடத்த முற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் எனச் சிந்திக்கவே முடியவில்லை.”

45p1_1528793853.jpg

``அதனால்..?’’

``அவர்கள் சிந்திப்பதற்கான வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது. எல்லா வகையிலும் அழித்தொழிப்பு ஒன்றே நோக்கமாகக்கொண்ட தாக்குதல் முறையைப் பின்பற்ற வேண்டும். சூழ்ச்சிகளும் வரைமுறையற்ற தாக்குதலும் அழித்தொழிப்புமே அவர்களை வீழ்த்துவதற்கான உத்தியாக இருக்க முடியும்.”

``பறம்புநாடு, இதுவரை விதிகள் வகுத்துக்கொள்ளப்பட்ட ஒரு போர்முறைக்குள் பங்கெடுத்ததில்லை. பறம்புக்குள் நுழைந்த எதிர் நாட்டினரின் மீது தாக்குதல் நடத்தி வென்றுள்ளனர். தாக்குதல் போருக்கும், விதிகளால் வரையறுக்கப்பட்ட களப்போருக்கும் நிறைய வேறுபாடு உண்டு. விதிகளால் முறைப்படுத்தப்பட்ட போரில் தாக்கும் திறன் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானித்துவிடுவதில்லை. பறம்பினர், தாக்கும் திறனை மட்டுமே நம்பியுள்ள கூட்டத்தினர். அவர்களின் வலிமையின் வழியே அவர்களை வீழ்த்த வேண்டும்” என்றார் குலசேகர பாண்டியன்.

அவர் சொல்வதை சற்று ஆழ்ந்து சிந்தித்தனர். `என்ன செய்யலாம்?’ என்ற கேள்வியே மிச்சமிருந்தது.

``முதன்முறையாக கபிலர் பேசவந்தபோது அவரை அறியாமலேயே முக்கியமான செய்தி ஒன்றை நமக்குத் தெரிவித்தார்.”

குலசேகரபாண்டியன் எதைச் சொல்கிறார் என்று மற்ற மூவரும் சிந்தித்தனர். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. அவரே கூறினார்,

`` `நாகக்கரட்டின் மேல் நின்று பார்த்தால் நமது படையில் மூன்றில் ஒரு பகுதி தெரிகிறது. இரலிமேட்டிலிருந்து பார்த்தால் முழுப் படையும் தெரிகிறது’ என்றார் அல்லவா?”

அப்போதுதான் மற்றவர்களுக்குக் கபிலர் கூறியது நினைவுக்கு வந்தது.

``அது எவ்வளவு முக்கியமான குறிப்பு. அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. வேட்டுவன்பாறையின் மீது திடீர் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்றுதான் அந்தக் குன்றினைவிட்டு நமது படையை மிகத்தள்ளி கூடாரம் அமைக்கச் சொன்னேன். நம்மைக் கண்டு அஞ்சியே வேந்தர்படையினர் கூடாரத்தைப் பிரித்துக்கொண்டு போகிறார்கள் என்று எதிரிகள் எண்ணவேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தேன். அப்படிச் செய்ததன் மூலம்தான் வேட்டுவன் பாறையின் மீதான தாக்குதலை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. அதில் கவனம் செலுத்திய நான் மற்றொன்றைக் கவனிக்கத் தவறிவிட்டேன்” என்றார் சற்று கவலையோடு.

குலசேகரபாண்டியனின் கவலை அனைவர் முகத்திலும் பரவியது.

``நாம் படையை மலையடிவாரத்தில் நிறுத்திவிட்டோம். அவர்கள் பார்வையால் மதிப்பிட முடியாத தொலைவில் நிறுத்தியிருக்க வேண்டும். இன்னொரு முறை படையை நகர்த்தினால், அது வீரர்களிடம் குழப்பத்தையும் பயத்தையும் உருவாக்கிவிடும். எனவே, நாம் போர் உத்தியை மிகக் கவனமாகத் திட்டமிட வேண்டும்” என்றார்.

``என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``இந்தப் போருக்கான களம் மலையடி வாரத்தில் அமையக் கூடாது. கிழக்கும் மேற்குமாக நின்று நாம் போரிடக் கூடாது. ஏனென்றால், மேற்குத்திசையில் மலை இருக்கிறது. எதிரிகள் படையின் பின்புறம் மலை இருப்பது அவர்களுக்கான வலிமையைக் கூட்டும். எனவே, படையின் அணிவகுப்பு வடக்கு தெற்காக இருக்க வேண்டும். அதேபோல அவர்கள் மேலிருந்து பார்த்தால் மதிப்பிட முடியாத தொலைவில் போர்க்களம் அமைய வேண்டும்” என்றார்.

இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என அனைவரும் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினர். இதில் உள்ள பெரும்சிக்கல், போருக்கான களத்தையும் படைகள் நிற்கவேண்டிய திசையையும் தீர்மானிப்பது தளபதிகளோ அரசர்களோ அல்ல; போரின் விதி பிறழாத `நிலைமான் கோல்சொல்லி’களே!

போர் நிலத்தின் அனைத்து விதிகளையும் எழுதுபவர்கள் `நிலைமான் கோல் சொல்லி’களே. நாள்தோறும் போர் எப்போது தொடங்க வேண்டும் எப்போது முடிவுற வேண்டும் என்பதை, போர்க்களத்தில் நடப்பட்ட நாழிகைக்கோலைப் பார்த்துச் சொல்பவர்களை `கோல்சொல்லிகள்’ என்று அழைத்தனர்.

போர்க்களத்தின் ஒவ்வொரு நாளும் கோல் சொல்லியின் குரலிலேதான் தொடங்குகிறது; முடிகிறது. எனவே, இருதரப்பும் ஏற்றுக்கொண்ட கோல்சொல்லியானவர் அறம் தவறாத நிலைமானாக இருக்க வேண்டும் என்பதால், அவரை `நிலைமான் கோல்சொல்லி’ என்று அழைக்கும் பழக்கம் உருவானது. அவ்வாறு தேர்வுசெய்யப்படும் நிலைமான் கோல்சொல்லிதான், போர்புரிவதற்கான இடத்தையும் போருக்கான காலத்தையும் முடிவுசெய்கிறார்.

குலசேகரபாண்டியன் சொன்னார், ``எனது கணிப்பின்படி எதிரிகளின் தரப்பில் கோல்சொல்லியாகக் கபிலரையே கூறுவார்கள்.”

``ஆம், அவர்களின் தரப்பில் நாழிகைக்கோலைப் பார்க்கும் அறிவு வேறு யாருக்கு இருக்கப்போகிறது?” என்றார் சோழவேழன்.

``நமது தரப்பில் யாரை அறிவிக்கப் போகிறாம்?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

போர்க்களம் அமையும் இடம்தான், இந்தப் போரின் வெற்றி-தோல்வியை முடிவுசெய்வதில் முக்கியப் பங்காற்றப்போகிறது. எனவே, நாம் சொல்லும் இடத்தில் போர்க்களத்தை முடிவுசெய்பவராக நிலைமான்கோல்சொல்லி இருக்க வேண்டும். எதிரியின் தரப்பில் கோல்சொல்லியாக கபிலர் வந்தால், அவரும் நாம் சொல்லும் இடத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் திறன்கொண்டவராகவும் சூழ்ச்சி தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்” என்றார் குலசேகரபாண்டியன்.

அவர் சொல்வதை மறுப்பதற்கில்லை. நமது தரப்பில் யாரை நியமிப்பது என்று தீவிரமாகச் சிந்தித்தனர். ``கபிலர், நாழிகைக்கோல் பார்க்கத் தெரிந்தவராக இருக்கலாம். ஆனால், போரின் விதிகளை முழுமையாக அறிந்தவர் என்று சொல்லிவிட முடியாது. எனவே, பொருத்தமானவரைத் தேர்வுசெய்தால் கபிலரை நமது முடிவுக்கு இணங்கச் செய்ய முடியும்” என்றான் உதியஞ்சேரல்.

``ஆம். அதனால்தான் இந்தப் பணிக்குப் பொருத்தமானவராக பாண்டியநாட்டு அரண்மனையின் தலைமைக் கணியன் அந்துவனைக் கருதுகிறேன்” என்றார் குலசேகரபாண்டியன்.

`அவன் பொருத்தமானவனா!’ என்று மற்றவர்கள் சிந்தித்தனர். ``அந்துவன், கபிலரைவிட மிக இளையவனாக இருக்கிறானே, பெரும்புலவரை திசைமாற்றி போர்க்களத்தை நாம் நினைக்குமிடத்தில் அமைக்கும் ஆற்றல்கொண்டவனா?” எனக் கேட்டான் செங்கனச்சோழன்.

``அவன், பெருங்கணியர் திசைவேழருக்கு மாணவன். எனவே, அவன்பால் கபிலருக்கு பெரும்மரியாதை உண்டு. அவனது கணிப்பு பல நேரங்களில் ஆசானைப்போல் உள்ளது என்று என்னிடமே கூறியுள்ளார். அதுமட்டுமன்று, கபிலரைக் கையாள்வதில் அவன் மிகவல்லவன். எனவே, நமது திட்டத்தை அச்சுபிசகாமல் நடைமுறைப்படுத்திவிடுவான்” என்றார்.

``அப்படியென்றால் அவனையே நமது தரப்பின் `நிலைமான் கோல்சொல்லி’யாக அறிவித்துவிடலாம்” என்றனர்.

45p4_1528793837.jpg

சரியென்று ஏற்றுக்கொண்ட குலசேகரபாண்டியன், ``ஒரு முக்கியச் செய்தி. நாளை மட்டுமன்று, எப்போது கபிலர் பேச வந்தாலும் அவரை அதிகமாக பேசவிட வேண்டும். கோபப்பட்டு நிறுத்தக் கூடாது. அவராகவே நமக்கு வேண்டிய முக்கியக் குறிப்பைக் கொடுத்துவிட்டுச் செல்வார்” என்றார். மற்றவர்கள் மகிழ்ந்து சிரித்தனர்.

மறுநாள் போர்விதிகளை வகுக்க மூஞ்சலின் பெருங்கூடாரத்தில் எதிர்பார்ப்போடு இருந்தனர் வேந்தர்கள். கபிலரின் தேர்ப்படை எல்லைக்குள் நுழைந்ததும் மூஞ்சலுக்குச் செய்தி வந்தது, ``உடன் கிழவன் ஒருவனை அழைத்துக்கொண்டு வருகிறார் கபிலர்.”

``சென்றமுறை சிறுவனை அழைத்துவந்தார். இந்த முறை கிழவனை அழைத்துவருகிறார்” என்று பேசிச் சிரித்தனர். சிறிது நேரத்தில் மூஞ்சலுக்குள் நுழைந்தது கபிலரின் தேர்.

தேரோட்டும் வலவனின் தோள்பற்றி கபிலர் இறங்க, அவரின் தோள்பற்றி வாரிக்கையன் இறங்கினார். ஊன்றுகோலை ஊன்றி கபிலரைப் பின்தொடர்ந்தார் கிழவர். இருவரையும் வரவேற்று கூடாரத்துக்குள் அழைத்துச்சென்றார் முசுகுந்தர். பெருவேந்தர்கள் வீற்றிருந்த அவையில் இருவரும் வந்து அமர்ந்தனர். கபிலர் மூவேந்தர்களையும் உடன் இருந்த சோழவேழன், பொதியவெற்பன், முசுகுந்தர் ஆகிய அறுவரையும் பற்றி வாரிக்கையனிடம் தெரிவித்தார். வாரிக்கையனைப் பற்றி வேந்தர்களிடம் சொல்லும்போது, ``பறம்பு நாட்டுப் பெருங்கிழவன்” என்று கூறினார்.

‘பன்னெடுங்காலத்துக்கு முன் பட்டுப்போன மரம்போல் இருக்கிறான் கிழவன். கால்கள் கவட்டை விழுந்து, நகங்கள் எல்லாம் சூம்பிச்சுருண்டு கிடக்கின்றன. மேல் தோல் செம்பட்டையோடு திட்டுத் திட்டாக இருக்கிறது. பார்க்கவே சற்று அருவருப்பூட்டும் இவரை ஏன் அழைத்துவந்துள்ளார் கபிலர்?’ என்று சிந்தித்தபடி இருந்தனர் அனைவரும்.

பணியாளர்கள் சுவைநீர் கொண்டுவந்து கொடுத்தனர். வாரிக்கையன், ``எனக்குத் தேவையான எல்லா சுவைகளும் வெற்றிலையில்தான் இருக்கின்றன” எனச் சொல்லி இடுப்பின் இடதுபக்கத்தில் சுருட்டிவைத்திருந்த வெற்றிலையை எடுத்தார். கபிலர், சுவைநீர்க் குவளையை வாங்கிக் குடிக்கத் தொடங்கினார். மற்றவர்களும் சுவைநீர் பருகினர்.

வலதுபக்கம் சுருட்டி வைத்திருந்த சுருக்குப்பையை எடுத்தார் வாரிக்கையன். அவர் என்ன செய்கிறார் என்று கண்களைத் திருப்பிப் பார்த்தார் கபிலர். பாக்குக்கொட்டை ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால் அழுத்தி உடைத்தார். கொட்டை உடையும் ஓசை ‘சடக்’கெனக் கேட்டது.

வாரிக்கையனுக்கு இடதுபக்கம் கபிலரும் வலது பக்கம் சற்று தள்ளி எதிரே உதியஞ்சேரலும் அமர்ந்தி ருந்தனர். வாரிக்கையனுக்கு நேர் எதிரில் குலசேகரபாண்டியன் இருந்தார். அவருக்கு வலதும் இடதுமாக மற்றவர்கள் இருந்தனர். கிழவன் பாக்குக்கொட்டையை விரல்களால் அழுத்தி உடைக்கும் ஓசை, பக்கத்தில் இருந்த உதியஞ்சேரலுக்குக் கேட்டது. `தள்ளாடி நடந்துவரும் கிழவன் பாக்குக்கொட்டையை விரல்களால் எப்படி அழுத்தி உடைத்தான்!’ என்று வியப்போடு பார்த்தான் அவன்.

சோழவேழன் சுவைநீரைப் பருகிய படியே கபிலரிடம் கேட்டார், ``நேற்று பெரும்மழை பெய்ததல்லவா? இரவு போதுமான உறக்கம் இருந்திருக்காது; நனைந்து ஈரம்கொண்டிருப்பீர்கள். வயதான காலத்தில் உடல்நிலையைப் பேணுதல் கடினமானது. ஒருவேளை நீங்கள் வர காலந்தாழுமோ என நினைத்தோம்.”

``நான் குகையில் இருந்ததால் மழையில் நனையவில்லை. உறக்கமும் கெடவில்லை” என்றார் கபிலர்.

``மழைக்கு குகை இதமான வெப்பத்தோடு இருக்கும். தூங்கவும் சுகமாகத்தான் இருக்கும். ஆனால், வௌவால்கள் நிறைய அடைந்துகிடக்குமே. ஆழ்ந்து தூங்கவிடாதே!” என்றார் சோழவேலன். கபிலரை கூடுதலாகப் பேசவிடுதல் நேற்றெடுத்த முடிவுகளில் ஒன்றல்லவா!

``வெளவாலை அதன் இருப்பிடத்திலிருந்து விரட்டுவது எளிய செயலன்று. அதுவும் நீண்ட குகையென்றால் விரட்ட விரட்ட அது உள்ளே போய் அடைந்துகொள்ளும்” எனச் சொன்ன உதியஞ்சேரல் “அந்தக் குகை எவ்வளவு நீளமானது?” எனக் கேட்டான்.

``எவ்வளவு நீளமாக இருந்தால் என்ன? குகையைவிட்டு வெளவாலை விரட்டுவதெல்லாம் பெரிய வேலையா?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் வாரிக்கையன். 

அனைவரும் ஆர்வத்தோடு பார்த்தனர். `தங்களுக்குத் தேவை பேச்சின் மூலம் பெறும் தகவல்தான். கபிலரோடு சேர்ந்து கிழவனும் அதிகம் பேசுபவனாக இருக்கிறான்’ என்று எண்ணியபடி அவர் சொல்லப்போவதைக் கவனித்தனர்.

வெற்றிலையை மென்றபடியே வாரிக்கையன் கேட்டான், ``உங்களுக்கு பனையேறி அணிலைப் பற்றித் தெரியுமா?”

``அணிலில் அது ஒரு வகை என்று அறிவேன். அவ்வளவுதான்” என்றான் உதியஞ்சேரல்.

வெற்றிலையை ஒருபக்கமாக ஒதுக்கிக் கொண்டே வாரிக்கையன் சொன்னார். ``தெளிந்த நீர் இருக்கும் கிணற்றில் கல்லைப் போட்டால் அது ஆழத்துக்குச் செல்வது வரை எப்படிப் பார்க்க முடியுமோ, அப்படித்தான் குகைக்குள் பனையேறி அணிலைவிட்டால் அடைந்துகிடக்கும் வெளவாலை கடைசிவரை விரட்டிப்போவதை பார்க்க முடியும்”.

சுவைநீர் அருந்தியபடியே ஆர்வத்தோடு உதியஞ்சேரல் கேட்டான், ``எப்படி?”

``மற்ற அணிலைப்போல பனையேறி அணில் மரத்தில் நேராக மேலேறாது. மாறாக, மரத்தைச் சுற்றிச் சுற்றித்தான் மேலேறும். அதைக் குகைக்குள் விட்டால் நேராக உள்ளே போகாது. குகையின் ஓரப்பகுதியைச் சுற்றிச் சுற்றியே உள்நுழையும். அணில் வருவது அறிந்தவுடன் வெளவால்கள் இருப்பிடத்தைவிட்டு சற்று உள்ளே போகும். அணில் மீண்டும் விளிம்பைச் சுற்றியபடியே உள்ளே போகும். இப்படி, குகையின் கடைசி எல்லை வரை அணில் விரட்டிக்கொண்டே போகும். மூன்று பனையேறி அணில்களை அடுத்தடுத்து குகைக்குள் விட்டால் போதும் ஒரு வெளவாலைக்கூட அந்தக் குகைக்குள் அடையவிடாது” என்றார்.

ஆனால், வெற்றிலையை இருபக்கமுமாக ஒதுக்கியபடி இதைச் சொல்வதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் மிக அதிகம். கேட்பவர்கள் பொறுமையை இழக்கும்படி மென்றுமென்று பேசினார்.

`இவ்வளவு மெதுவாகப் பேசக் கூடியவரல்லரே வாரிக்கையன். ஏன் இவ்வளவு மெதுவாகப் பேசுகிறார்?’ எனக் கபிலருக்கே விளங்கவில்லை. சிந்தித்துக்கொண்டிருக்கும் போது பொதியவெற்பன் கேட்டான், ``எந்நேரமும் வெற்றிலையை மென்று கொண்டேதான் இருப்பீர்களா? பேசும்போது கூட மெல்வதை நிறுத்த மாட்டீர்களா?” 

45p5_1528793814.jpg

கன்னத்தாடை இரண்டும் அகன்று மேலேறின. மென்றுகொண்டே சிரித்தார். ``கருவுற்றப் பெண்ணுக்கு வாயூறிக்கொண்டே இருக்குமல்லவா? அதேபோலத்தான் எனக்கும் வாயூறிக்கொண்டே இருக்கும். அதனால் வெற்றிலையை மென்றுகொண்டே இருப்பேன்” என்று சொன்னவர், கேள்விகேட்ட பொதியவெற்பனைப் பார்த்து, ``உன் மனைவி கருவுற்றிருக்கிறாளா?” எனக் கேட்டார்.

சற்றும் எதிர்பாராத கேள்வி. கபிலரே அதிர்ந்துபோனார். பொதியவெற்பனுக்கு அவையில் என்ன சொல்லவது எனத் தெரியவில்லை. அந்தரங்கத்துக்குள் நெருப்புப் பட்டதுபோல் இருந்தது. அதிர்ச்சியை வெளிக்காட்ட முடியாமலும், உட்செரிக்க முடியாமலும் திணறினான். இறுகிய நிலையை யார் உடைப்பது என யாருக்கும் புரியவில்லை. நிலைமையை அறிந்து முசுகுந்தர் தலையிட்டார் ``இளவரசருக்கு இப்போதுதான் மணமாகியிருக்கிறது.”

வாரிக்கையன் விடுவதாக இல்லை. ``இப்போது மணமானவரை ஏன் போர்க்களத்துக்குக் கூட்டிவந்தீர்கள்? பனையேறி அணில்போல மனைவியை அல்லவா சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். இங்கு வந்து கிழவர்களோடு உட்கார்ந்து வெளவாலைப் பற்றி ஏன் பேசிக்கொண்டிருக்கிறார்?” எனக் கேட்டார்.

நிலைமை மிக மோசமாகிக்கொண்டிருக்கிறது என அனைவரும் உணர்ந்தனர். `இதற்குமேல் இந்தப் பேச்சை நீட்டிக்க வேண்டாம். போர்விதிகளுக்கான பேச்சைத் தொடங்கலாம்’ என எண்ணி குலசேகரபாண்டியனைப் பார்த்தார் சோழவேழன். அவரோ வாரிக்கையனைக் கூர்ந்து பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். நேரமாகிக்கொண்டிருந்தது.

`சரி, நாமே தொடங்கலாம்’ என நினைத்த சோழவேழன், “பறம்பின் தரப்பில் நாழிகைக்கோலைப் பார்த்துச் சொல்லப்போகும் நிலைமான் கோல்சொல்லி யாரென முடிவுசெய்துவிட்டீர்களா?”

கேட்டு முடிக்கும் முன் வாரிக்கையன் சொன்னார், ``கபிலர்தான்.”

குலசேகரபாண்டியன் கணித்தது துளியளவும் பிசிறவில்லை. மிகச்சரியாக இருந்தது. கபிலரைக் கைக்கொள்ளும் திட்டம் ஏற்கெனவே தீட்டப்பட்டிருந்தது.

சற்று இடைவெளிக்குப் பிறகு, ``உங்களின் தரப்பில் நிலைமான் கோல்சொல்லி யார்?” எனக் கேட்டான் வாரிக்கையன்.

குலசேகரபாண்டியன்தான். பெயரைச் சொல்ல வேண்டும்... நேற்று அப்படித்தான் பேசப்பட்டது. ஆனால் அவரோ, வாரிக்கையனைக் கூர்ந்து பார்த்தபடி பேசாமல் இருந்தார். அவையில் அமைதி நீடித்தது. மற்ற இரு வேந்தர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. நேற்றைய பேச்சில் பொதியவெற்பனும் முசுகுந்தரும் கலந்துகொள்ளாததால் அவர்கள் இயல்பான அமைதியோடு இருந்தனர்.

வாரிக்கையன், தான் வெற்றிலையை மென்றுகொண்டே கேட்டதால் சரியாகப் புரியவில்லையோ என நினைத்து, மீண்டும் ஒருமுறை கேட்டார் ``உங்களின் தரப்பில் நிலைமான் கோல்சொல்லி யார்?”

அவையில் பேச்சு ஏதும் எழவில்லை. ஏன் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள் என்று கபிலருக்குப் புரியவில்லை. செங்கனச்சோழன் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான். உதியஞ்சேரலோ சோழர்கள் இருவரையும் பார்த்தான். எதிரில் உட்கார்ந்திருப்பவர்கள் ஏன் திகைத்தபடி ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் எனக் கபிலருக்குப் புரியவில்லை.

`இனியும் பேசாமல் இருக்கக் கூடாது’ என நினைத்த சோழவேழன், ``தலைமைக் கணியன்...” என்று தொடங்கினார். ஆனால், பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை. நினைவுகூர்ந்தபடி நிறுத்தினார்.

குலசேகரபாண்டியனின் அருகில் நின்றிருந்த முசுகுந்தரோ ஒரு கணம் அதிர்ச்சியானார். `திசைவேழரையா சொல்கிறார்!’ எனத் திகைத்து குலசேகரபாண்டியனைப் பார்த்தார். அவரோ எதுவும் பேசாமல் வாரிக்கையனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவையோருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. முசுகுந்தர், குலசேகர பாண்டியனுக்கு மிக அருகில் சென்று மெல்லிய குரலில், ``திசைவேழரா பேரரசே?” எனக் கேட்டார்.

குலசேகரபாண்டியன் மெல்லிய சிரிப்போடு தலையசைத்தார். முசுகுந்தருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. `திசைவேழரைப்போன்ற அறம் தவறாத மாமனிதரை, போருக்கான கோல்சொல்லியாக நியமித்தால், அவரை நம்மால் எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. போர்க்களத்தின் பிடிமானம் நம்மிடம் இல்லாமல்போகும் வாய்ப்புண்டு’ எனச் சிந்தித்தபடி மீண்டும் அவரை உற்றுப்பார்த்தார். அதே சிரிப்போடு தலையசைத்தார் குலசேகரபாண்டியன்.

பேரரசர் என்பவர், எப்போதும் யாரும் சிந்திக்காததைச் சிந்திக்கக்கூடியவர் என்பதை வாழ்வு முழுவதும் அறிந்தவர் முசுகுந்தர். எனவே, அவரின் திட்டமிடல் மற்றவர்கள் எண்ணத்துக்கு அப்பாற்பட்டுதான் இருக்கும் என்ற பெருமிதத்தோடு ``எங்கள் தரப்பின் நிலைமான் கோல்சொல்லியாகப் பெருங்கணியர் திசைவேழர் செயல்படுவார்” என அறிவித்தார்.

வேந்தரின் தரப்பில் இருந்த மற்றவர்கள் திகைத்துப்போனார்கள். பொதிய வெற்பனுக்கோ தலையே சுற்றுவதுபோல் ஆனது. என்ன நடக்கிறது இங்கு என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

தான் பேசட்டும் என்று மற்றவர்கள் கருதுவதாக நினைத்த முசுகுந்தர், ``திசைவேழரை நாளை அழைத்துவருகிறோம். கோல்சொல்லிகள் இருவரும் போரின் விதிகளை வரையறுக்கட்டும்” என்றார்.

`சரி’யெனச் சொல்லி அவை நீங்கினர் கபிலரும் வாரிக்கையனும்.

பிற்பகலின் இறங்குவெயிலில் தேர், வேந்தர்களின் படையைவிட்டு வெளியேறியது. நீண்டநேரம் கபிலர் எதுவும் பேசவில்லை. அவருக்கு அவையில் நடந்ததைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

“ஏன் பேசாமல் வருகிறீர்கள்?” எனக் கேட்டார் வாரிக்கையன்.

“இல்லை, பேரரசர்களில் மூத்தவர் குலசேகரபாண்டியன். அவர்தான் எல்லாவற்றையும் பேசுவார். ஆனால் இன்று, அவர் பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டார். மற்றவர்கள், அவரின் முகத்தையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தனர். காரணம் எதுவும் எனக்குப் பிடிபடவில்லை” என்றார்.

சற்றே சிரிப்போடு, ``காரணம் நான்தான்” என்றார் வாரிக்கையன்.

``நீங்களா?” என அதிர்ச்சியோடு கேட்டார் கபிலர்.

45p7_1528793795.jpg

``ஆம். நான் முதலில் இடதுபக்க இடுப்புப் பையில் இருந்த வெற்றிலையை எடுத்தேன் என்பதை நீங்கள் கவனித்தீர்கள். ஆனால், வலதுபக்க சுருக்குப்பையைத் திறந்து என்ன செய்தேன் என்பதை நீங்கள் கவனிக்கவில்லை” என்றார்.

``சுருக்குப்பையில் என்ன செய்தீர்கள்?”

``அதற்குள்தான் திகைப்பூச்சியை வைத்திருந்தேன். பாக்கு எடுப்பதைப்போல அவற்றுள் மூன்றை முதலில் எடுத்து வெளியில் விட்டேன். அவை போவதை மற்றவர்கள் எளிதில் பார்த்துவிட முடியாது. ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதால்தான் பாக்கை மற்றவர்களுக்குக் கேட்பதைப்போல சத்தமாக உடைத்தேன். எல்லோரின் கவனமும் எனது கைக்கு வந்தது. திகைப்பூச்சிகள் எனக்கு நேராக உட்கார்திருப்பவனின் இருக்கை நோக்கிப்போனது. அது கடித்து சிறிதுபொழுதுக்குப் பிறகுதான் திகைப்புத்தன்மை உருவாகும். அதனால்தான் வெற்றிலையை மென்றபடி மெள்ள மெள்ளப் பேசி நேரத்தை நீட்டித்தேன்” என்றார்.

கபிலர் உறைந்துபோனார். ``நீங்கள்தான் குலசேகரபாண்டியனைப் பேசவிடாமல் செய்ததா? அப்படிச் செய்ததால் நமக்கென்ன நன்மை?”

``நம்மிடம் போர்விதிகளை எப்படிப் பேசுவது, யார் யார் பேசுவது என்பதையெல்லாம் அவர்கள் ஏற்கெனவே முடிவுசெய்திருப்பார்கள். திகைப்பூச்சி கடிப்பதன் மூலம் அவர்களில் ஓரிருவர் பேச முடியாத நிலையை எய்துவர். முடிவுசெய்தபடி ஏன் பேசவில்லை என்று மற்றவர்களுக்கு பேச முடியாதவர் மீது ஐயம் உருவாகும். அந்த ஐயம்தான் விரிசலுக்கான வழியை உருவாக்கும்” என்றார்.

கபிலர், விரித்த கண்களை இமைக்காமல் வாரிக்கையனையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மேலும் சொன்னார், “அவர்கள் மூவரும் நண்பர்கள் அல்லர்; நம்மை அழிப்பதற்காக ஒன்றுபட்டுள்ளனர். எனவே, அவர்களுக்குள் விரிசலை உருவாக்க, சிறிய காரணமே போதுமானது.”

நாகக்கரட்டின் அடிவாரத்தில் தேர் வந்து நின்றது. கபிலர் கீழிறங்கினார். அவரின் தோள்பற்றி இறங்கிய வாரிக்கையன் சொன்னார், “இந்தப் போரில் வலிமைமிகுந்த எண்ணற்ற ஆயுதங்களை நாம் பயன்படுத்தப்போகிறோம். ஆனால், நாம் பயன்படுத்தப்போகும் எந்தவோர் ஆயுதத்தையும்விட கண்களுக்குத் தெரியாத இந்தச் சிறுபூச்சி செய்துள்ள நன்மை இணையற்றதாக இருக்கும்”.

பேச்சின்றி நடந்தார் கபிலர்.

``அது சரி, யார் அந்தத் திசைவேழர்?”

வாரிக்கையனின் கேள்விக்கு அதிர்ச்சியிலிருந்து மீண்டபடி பதில் சொன்னார் கபிலர், ``அறத்தின் அடையாளம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 88

 

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

ளர்பிறை நிலவு, வானில் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. மூவேந்தர்களும் அவரவருக்கான பாசறைக் கூடாரத்தில் இருந்தனர். முசுகுந்தர், திசைவேழரைக் கண்டு வேந்தர்களின் வேண்டுகோளை ஏற்கச்செய்து அழைத்துவரப் போயுள்ளார். உதியஞ்சேரலால் அவனது கூடாரத்துக்குள் இருக்க முடியவில்லை. `நேற்று இரவு அந்துவனை நிலைமான் கோல்சொல்லியாகத் தேர்வுசெய்வோம் என்று சொன்ன குலசேகரபாண்டியன் இன்று ஏன் மாற்றினார்? இதற்கான காரணம் என்ன? அதுவும், தான் சொல்லாமல் தன் அமைச்சனின் மூலம் ஏன் சொல்லவைத்தார்?’ என்ற கேள்விகள் அவனைக் குடைந்துகொண்டிருந்தன. `இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. ஆனால், என்னவென்று புரியவில்லை’ என்று குழம்பிப்போய் இருந்தவன், `இதுபற்றி சோழனிடம் விவாதிக்கலாம்’ என்று அவனது கூடாரம் நோக்கிப் புறப்பட்டான்.

செங்கனச்சோழன் தன் தந்தை சோழவேழனிடம் இதைப் பற்றித்தான் விவாதித்துக்கொண்டிருந்தான். அந்நேரம் உதியஞ்சேரலும் உள்ளே வந்தான். ``நேற்றிரவு பேசியதும் இன்று காலையில் நடந்ததும் பேரையத்தை உருவாக்குகின்றன. பாண்டியன் நமக்குத் தெரியாமல் ஏதோ செய்யப்பார்க்கிறான்” என்றான் உதியஞ்சேரல்.

``எனக்கும் புரியவில்லை. திசைவேழர், மிகக் கடுமையானவர்; அறம் பிறழாதவர்; கபிலர் மீது மிகுந்த பற்றுகொண்டவர். அப்படியிருந்தும் ‘அவரைக் கோல்சொல்லியாக நியமிப்பது எந்த வகையில் உதவி செய்யும்? நம்மிடம் அந்துவன் எனச் சொல்லிவிட்டு அவையில் ஏன் மாற்ற வேண்டும்?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளோடுதான் நாங்களும் இருக்கிறோம்” என்றார் சோழவேழன்.

``திசைவேழரும் வேண்டாம், அந்துவனும் வேண்டாம். நம் கணியன் ஒருவனைக் கோல்சொல்லியாக நியமிப்போம். அமைச்சர்கள் நாகரையனையும் வளவன்காரியையும் அனுப்பி குலசேகரபாண்டியனுக்குத் தெரிவிப்போம்” என்று சற்று கோபத்தோடு சொன்னான் செங்கனச்சோழன்.

83p2_1529313211.jpg

``அப்படியே செய்யலாம்” என்றான் உதியஞ்சேரல்.

``அவசரப்பட வேண்டாம். சற்றுப் பொறுத்திருப்போம். ஏன் நம்மிடம் தெரிவிக்காமல் திசைவேழரின் பெயரைச் சொன்னார் குலசேகரபாண்டியன்? அந்தக் காரணம் நமக்குத் தெரிய வேண்டும். அதற்கு ஏற்பதான் நம்முடைய அடுத்தகட்டச் செயல்பாடு அமைய வேண்டும்” என்றார் சோழவேழன்.

``அதற்குள் திசைவேழர் நிலைமான் கோல்சொல்லியாகப் பொறுப்பேற்றுப் போரைத் தொடங்கிவிடுவாரே?”

மெல்லிய சிரிப்போடு சோழவேழன் சொன்னார், ``திசைவேழர் அறம் பிறழாதவர். போரின் விதிமீறலை அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. நிலைமான் கோல்சொல்லி பொறுப்பிலிருந்து அவராக வெளியேறிச் செல்ல, ஒரு வீரன் தொடுக்கும் அம்பு போதும்” என்றார்.

‘அனுபவமேறிய மனிதர்களின் சிந்தனை தனித்துவமிக்கதுதான்’ எனத் தோன்றியது உதியஞ்சேரலுக்கு. தன் தந்தையின் கருத்தைச் சரியென ஒப்புக்கொண்டான் செங்கனச்சோழன். குலசேகரபாண்டியனின் செயலுக்குக் காரணம் என்ன என்பதை அறிவதுதான் இப்போது முக்கியம் என்பதில் அனைவரும் உடன்பட்டனர்.

பெருங்குழப்பத்திலும் கட்டுப்படுத்த முடியாத கோபத்திலும் இருந்த பொதியவெற்பன், குதிரையில் ஏறி, கருங்கைவாணனைப் பார்க்க விரைந்தான். மருத்துவக் கூடாரத்தில் இருந்த அவனோடு, நேற்று நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தான். மீண்டும் இன்றிரவு அவனைக் காண வந்துவிட்டான். இளவரசன் உள்ளே வந்ததும் மருத்துவர்களும் உதவியாளர்களும் கூடாரத்தை விட்டு வெளியேறினர்.

நேற்று இரவு மூவேந்தர்களும் கூடி என்ன பேசினார்கள் என்பது பொதியவெற்பனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை திசைவேழரைக் கோல்சொல்லியாக நியமித்ததுதான் பேரதிர்ச்சியாக இருந்தது. கடுங்கோபத்தோடு வந்து செய்தியைக் கருங்கைவாணனிடம் பகிர்ந்துகொண்டான். கருங்கைவாணனுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. பொதியவெற்பன், சினமேறிய வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தான். ``தொடக்கம் முதலே தந்தையின் செயல் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. எதையும் தெரிவிக்க மறுக்கிறார். நான் தெரிவிக்கும் எல்லாவற்றையும் மறுக்கிறார். இந்தப் போரில் அவர் பின்பற்றும் உத்திகள் அனைத்தும் நமக்கே புரியாதபுதிராக இருக்கின்றன” என்று மூச்சு விடாமல் பேசினான்.

இளவரசரின் கோபத்தை, கருங்கைவாணனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ``பேரரசரின் நடவடிக்கை மிகவும் ஆழ்ந்த சிந்தனைகொண்டதாக இருக்கும். சற்றே நிதானமாக எண்ணிப்பார்க்கலாம்” என்று பொதியவெற்பனின் கோபத்தை மட்டுப்படுத்த முயன்றான் கருங்கைவாணன்.
ஆனால், பொதியவெற்பனால் எளிதில் சமாதானமாக முடியவில்லை. ``என் மனைவியை ஏன் மதுரையை விட்டு வெங்கல்நாட்டுக்கு வரவழைக்க வேண்டும்? அதுவும் அவள் வந்த பிறகுதான் எனக்குச் செய்தி தெரிவிக்கப்படுகிறது” என்றான். கருங்கைவாணன் இந்தச் செய்தியை இப்போதுதான் அறிகிறான். ``இளவரசியார் வெங்கல்நாட்டுக்கு வந்துள்ளாரா?” எனக் கேட்டான்.

``ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அவள் கபிலர் மாணவி. போர் நடவடிக்கையில் யாரும் எதிர்பார்க்காதபோது அவள் பயன்படக்கூடும் என்று சிந்தித்திருப்பார் எனத் தோன்றுகிறது. அது நல்ல சிந்தனைதான். ஆனால், என் மனைவி வந்துள்ளதையே நான் மையூர்கிழார் சொல்லித் தான் தெரிந்துகொள்கிறேன். இதையாவது பொறுத்துக்கொள்ளலாம். காலையில் வாரிக்கையன் என்ற அந்தக் கிழவன், `உன் மனைவி கருவுற்றிருக்கிறாளா?’ என்று அவையில் அவமதிக்கும் தொனியில் கேள்வி எழுப்பியபோது சினந்தெழுவார் என நினைத்து தந்தையைப் பார்த்தேன். அவரோ சிரித்துக்கொண்டிருக்கிறார். இது பாண்டியநாட்டு அரண்மனையன்று. மற்ற இருவேந்தர்களும் இருக்கும் அவையில் என்னை அவமானப்படுத்தவேண்டிய தேவையென்ன? என்னதான் நினைக்கிறார் அவர்?” என்று கோபத்தில் சீறினான் பொதியவெற்பன்.

சிறிது நேரம் பதிலின்றி அமைதியாக இருந்த கருங்கைவாணன், ``பேரரசரின் செயல் நமக்குக் கவலையைத் தந்தாலும் அதற்குள் ஆழ்ந்த பொருள் இருப்பதை நாம் பல நேரத்தில் உணர்ந்துள்ளோம். இதுவும் அப்படியொரு செயலாக இருக்கலாம் அல்லவா?” எனக் கேட்டான்.

83p1_1529313233.jpg

``எதைச் சொல்கிறாய்?”

``இளவரசியாரை உங்களுக்குத் தெரிவிக்காமல் வரவழைத்ததைப் பற்றிக் கோபப்பட்ட நீங்கள், அதற்கான காரணத்தைச் சொல்லும்போது சரியானதுதான் என்று சொல்கிறீர்கள் அல்லவா? அதேபோலத்தான் திசைவேழரைக் கோல்சொல்லியாக நியமித்ததற்கும் சரியான காரணம் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.”

``என்ன காரணம்?”

``வேட்டுவன்பாறையின் மீதான தாக்குதலின் தன்மையைப் பேரரசர் உணர்ந்திருப்பார். எதிரியின் திறன் வலிமைகொள்ளும் இடம் எது, வலிமை குன்றும் இடம் எது என்று அவரால் துல்லியமாகக் கணிக்க முடியும். களப்போர் என்பது பயிற்சியை அடிப்படையாகக்கொண்டது. பயிற்சியற்ற படைவீரர்கள், தாக்குதல் போரைப் போலவே களப்போரிலும் எல்லாத் திசைகளிலும் அளவற்ற ஆவேசத்தை வெளிப்படுத்துவர். அதனாலேயே அவர்களைச் சூழ்ச்சிகளுக்குள் சிக்கவைக்க வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்ல, பறம்பினரைப் போர் விதிகளுக்குள் அடக்குவது ஏதோ ஒருவகையில் அவர்களைக் கட்டுப் படுத்துவதுதான். காட்டாற்றின் வேகத்தைக் கரையெழுப்பிய வாய்க்காலின் வழியே பிரித்துப்  பணியவைப்பதைப்போலத்தான். அவர்களின் தரப்பில் கோல்சொல்லியாகக் கபிலர் இருக்கும்போது திசைவேழரை நமது தரப்பு கோல்சொல்லியாக நியமித்தது சிறந்த தந்திரம் என்றே நினைக்கிறேன். போர் விதிகளுக்குள் மீண்டும் மீண்டும் அவர்களை உட்படுத்தும் ஆயுதமாகக் கபிலரையும் திசைவேழரையும் ஒருசேரப் பயன்படுத்த நினைத்துள்ளார். காட்டு யானையின் இரு காதுகளிலும் இரு அங்குசங்களை மாட்ட நினைக்கிறார் பேரரசர்” என்றான் கருங்கைவாணன்.

இப்படியொரு காரணத்தைப் பொதியவெற்பன் சிந்திக்கவில்லை. கருங்கைவாணன் சொல்வதைக் கேட்கும்போது மிக நுட்பமான சூழ்ச்சியாகத் தோன்றியது. பேரரசரின் திட்டம் மிகவும் கவனமிக்கதாக இருக்கிறது என்பதும் விளங்கியது. ஆனாலும், மனதுக்குள் வலி அகலவில்லை.

சட்டென நினைவுக்குவந்து மீண்டும் கேட்டான் பொதியவெற்பன், ``நேற்று `பறம்புடனான போருக்கு விதிகளே வகுக்கக் கூடாது’ என்று சொன்னாய். இன்று இப்படிப் பேசுகிறாயே?”

``ஆம். இப்போதும் எனது நிலை அதுதான். ஆனால், விதிகள் வகுக்கப்பட்ட போர் என்று முடிவெடுத்த பிறகு சிறந்த போர் உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். இப்போது பேரரசர் அதைத்தான் செய்துள்ளார் என நினைக்கிறேன்” என்றான் கருங்கைவாணன்.

வெங்கல்நாட்டின் வடபுறத்துக் குடில் ஒன்றில் தங்கியிருந்தார் திசைவேழர். கபிலரும் வாரிக்கையனும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திசைவேழரைப் பார்க்க விரைந்தார் முசுகுந்தர்.

வைகைக்கரையில் இருந்த திசைவேழரை, போருக்கான நாள் குறித்துத்தரச் சொல்லித்தான் அழைத்தனர். ஆனால் அவரோ, ‘’போரைத் தவிர்க்க, கபிலர் மூலமாக ஏன் பேசிப்பார்க்கக் கூடாது?’’ எனக் கேள்வி எழுப்பினார். அவர் சொன்னதை ஏற்ற வேந்தர்கள், கபிலருக்குத் தூது அனுப்பிப் பேசிப்பார்த்தனர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அன்று மாலையே திசைவேழருக்கு அந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.

தனது சொல்லைக் கேட்டு வேந்தர்கள் மூவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போரைத் தவிர்க்க முடியவில்லை. எனவே, இனி அவர்கள் கேட்பதுபோல போருக்கான நாள் குறித்துக் கொடுப்பதை மறுத்துச் சொல்ல முடியாத நிலை உருவானது. சற்று குழப்பமான மனநிலையுடனே குடில் விட்டு அகலாமல் இருந்தார் திசைவேழர்.

இரவு பரவும் வேளையில் குடிலுக்கு வந்துசேர்ந்தார் முசுகுந்தர். மாணவர்கள், விளக்கை ஏற்றிக்கொண்டிருந்தனர். செய்தி திசைவேழருக்குச் சொல்லப்பட்டது. `மீண்டும் நாள் குறித்துக் கேட்பதற்காக முசுகுந்தர் வந்துள்ளார்’ என நினைத்தபடி அவரை உள்ளே வரச்சொன்னார் திசைவேழர்.

தான் வந்துள்ள பணி எவ்வளவு கடினமானது என முசுகுந்தருக்கு நன்கு தெரியும். திசைவேழர் இதற்கு ஒப்புதல் தருவது எளிய செயலன்று. ஆனாலும், பேரரசர் குலசேகரபாண்டியனின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்து விடக் கூடாது என்ற முடிவோடு வந்திருந்தார்.

திசைவேழரின் முன் பணிவு குலையாமல் அதே நேரத்தில் எந்தவிதத் தயக்கமுமின்றி, தான் மனதுக்குள் பலமுறை சொல்லிப்பார்த்த சொற்றொடரைத் தலை தாழ்த்தியபடியே கூறினார் முசுகுந்தர். ``இப்பெரும் போருக்கான வேந்தர்படையின் நிலைமான் கோல்சொல்லியாகத் தாங்கள் இருந்து வழிநடத்த வேண்டும் என்று மூவேந்தர்களும் விரும்புகின்றனர் பேராசானே!”

போர்நிலத்தையே பார்க்கக் கூடாது என நினைப்பவனை, போரின் அத்தனை கொலைகளையும் உற்றுநோக்குபவனாக மாற்ற நினைக்கும் ஆலோசனை அவரை நடுங்கச் செய்தது. ஒருகணம் திகைத்துப்போனார். அதிர்ச்சி, சினமாக உருமாறியது. ஆனாலும் கட்டுப்படுத்தினார். மெல்லிய குரலில் உதிர்ந்த இலையை ஊதித்தள்ளுவதைப்போல இந்த ஆலோசனையை அப்புறப்படுத்தினார்.

சினமேறிய வெளிப்பாடு இல்லாதது முசுகுந்தருக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது. ஆனாலும் அவரின் ஏற்பைப் பெறுவது எளிய செயலன்று. எல்லாவகையிலும் முயன்று அவரின் ஒப்புதலைப் பெற மனதை ஆயத்தப்படுத்திக் கொண்டார்.

திசைவேழர், தனது வழக்கத்துக்கு மாறான செயலைச் செய்துகொண்டிருந்தார். பொங்கி யெழும் சினம் சொல்லின்மேல் படியாமல் பார்த்துக்கொண்டார். நிராகரிக்கும் ஒன்றின் மீது உணர்ச்சியைப் படியவிடுவது பொருளற்றது என்று அவருக்குத் தோன்றியது.

83p3_1529313259.jpg

முழுமுற்றாக நிராகரிப்பதற்கும் நிராகரிக்கும் காரணத்தை விளக்குவதற்கும் நுட்பமான இடைவெளி உண்டு. கண்ணுக்குத் தெரியாமல் ஒருபடி கீழிறக்கும் செயல் அது. திசைவேழர் நிராகரிக்கும் ஒற்றைச் சொல்லை மட்டுமே இயல்பான தொனியில் சொல்லிக் கொண்டிருந்தார். எப்படியாவது அதற்கான காரணத்தை விளக்கும் இடத்துக்கு அவரை வரவழைத்துவிட வேண்டும் என முயன்றார் முசுகுந்தர்.

திசைவேழர் போன்ற பேராசானைத் துளித்துளியாகத்தான் கரைக்க முடியும். இந்தப் போரில் தனக்கு வழங்கப்பட்ட மிகக் கடினமான பணி இதுவாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தை உருத்திரட்டி எதைச் சொன்னால் திசைவேழரின் சொற்கள் கனிவு கொள்ளுமோ, அதற்கான வெக்கையை உருவாக்கும் காரணத்தைத் தேர்வுசெய்து கூறினார். ``போரின் அறத்தை, சிறந்த கோல் சொல்லிகளால் மட்டுமே நிலைநிறுத்த முடியும். எனவே, நீங்கள் மூவேந்தர்களின் கூட்டுப்படைக்கு நிலைமான் கோல்சொல்லியாக இருந்து இந்தப் போரை அறவிதிகள் மீறாமல் நடத்தித்தர வேண்டும்.”

நீண்ட அமைதிக்குப் பிறகு திசைவேழர் கூறினார், ``அறம்பேண, பொது இடமன்று போர்க்களம். அது நம்மை இரக்கமற்ற மனநிலைக்குள் முழுமுற்றாக மூழ்கவைக்கும். எனவே, இந்த ஆலோசனையை என்னால் ஏற்க முடியாது.”

இந்த இடத்துக்கு அவரை வரவழைக்கத்தான் இவ்வளவு முயன்றார் முசுகுந்தர். கரையத் தொடங்கிய ஒன்று மறுபடியும் தனக்குத்தானே உறைந்து இறுகுவது எளிதன்று. இனி வெக்கையின் அடர்த்தியை வெப்பத்தின் இளஞ்சூடாக மாற்ற முயன்றார் முசுகுந்தர், ``ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவிதிகளைத்தானே முன்னோர்கள் ‘அறம்’ என வகைப்படுத்தினர். நாற்றங்காலின் அறமும் அறுவடைக்களத்தின் அறமும் செயலின் வழியேதானே வெவ்வேறானவை. வரையறுக்கப் பட்ட கடமையின் அடிப்படையில் அவற்றுக்குள் வேறுபாடு ஏதும் இல்லையே. பயிரை நடுவதும் பயிரை அறுப்பதும் சமநிலைகொண்ட செயல்பாடுகள் என்பதே அறத்தின் குரல்.

 அப்படியிருக்க, பொது இடம் என்றோ, போர்க்களம் என்றோ வேறுபடுத்துவது பொருளற்றதுதானே பேராசானே!”

``முசுகுந்தரே, விதிகளும் அறவுணர்வும் எப்போதும் பொருந்திப்போவதில்லை. விதிகள், சமமான தோற்றத்தை உருவாக்க நினைப்பவை. அறவுணர்வு, சமமற்றவற்றின் நியாயத்தைப் பற்றி நிற்பவை. போருக்குத் தேவை போர்விதிகள்தான். அவற்றைப் ‘போரின் அறம்’ எனச் சொல்வது அறிவுடைமையாகாது.”

``சமமான அளவீடுகளை உருவாக்குவதே, சமமற்றவற்றுக்கு எதிரான அறச்சிந்தனையின் வெளிப்பாடுதான். அதனால்தானே இந்தச் செயலில் தன்னைப் பொருத்திக்கொள்வது கடமை எனப் பெரும்புலவர் கபிலர் முன்வந்துள்ளார்.”

சற்றே அதிர்ந்தார் திசைவேழர். ``கபிலர் கோல்சொல்லியாக இருக்க முன்வந்துள்ளாரா?”

``ஆம். பறம்பின் தரப்பில் நிலைமான் கோல்சொல்லியாக இருக்கப்போகிறார் பெரும்புலவர் கபிலர். அதனால்தான் மூவேந்தர்களும் ஒருமித்த குரலில் பேராசானே எங்களுக்கான நிலைமான் கோல்சொல்லியாக இருக்க வேண்டும்” என விரும்புகின்றனர்.

``விதிகள், நீரை ஒழுங்குபடுத்தும் வாய்க்காலைப் போன்றவை; ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் நீரில் கரையக்கூடியவை. அதனால்தான் உருவாக்குபவனுக்குப் பணியும்தன்மை விதிகளின் இயல்பாகிறது. ஆனால் அறன் எனப்பட்டது, அனைவரையும் கூர்தீட்டிப்பார்த்து, தன்னை நிலைநிறுத்திக்கொள்வது. உங்கள் பேரரசர்களை நன்றாகச் சிந்தித்துக்கொள்ளச் சொல்லுங்கள். நான் போரின் விதிகளை நிலைநிறுத்தும் கோல்சொல்லியாகச் செயல்படேன். போரின் அறத்தை நிலைநிறுத்தும் கோல்சொல்லியாகவே செயல்படுவேன். அது வெற்றியின் சுவைக்கு உவப்பானதன்று.”

முழுமுற்றாக மறுத்துக்கொண்டிருந்த திசைவேழர், இவ்வளவு இறங்கிவந்ததும் இறுகப் பற்றிக்கொள்ள நினைத்தார் முசுகுந்தர். `குலசேகரபாண்டியனின் உத்தரவை நிறைவேற்ற முடியாமற்போய்விடுமோ!’ என்ற பதற்றம் தணியத் தொடங்கியது. திடமான குரலில் கூறினார், ``இதற்குமுன் இந்த மண் காணாத பெரும்போர் இது. மூவேந்தர்கள் ஓரணியில் அணிவகுத்து நிற்கப்போகின்றனர். பறவைகளால் பறந்து கடக்க முடியாத நிலப்பரப்பில் வீரர்கள் வாளேந்தி நிற்பர். ‘இந்த மாபெரும் போரை அறம் பிறழாமல் நடத்த வேண்டும்’ என்று பாண்டியப் பேரரசர் கருதுகிறார். வரலாறு இருக்கும் வரை இந்தப் போர் நிலைபெறப்போகிறது. இதில் அடையப்போகும் வெற்றி எந்தவகையிலும் குறைவுடையதாகக் கூடாது என்பதில் குலசேகரபாண்டியன் மட்டுமல்ல, மற்ற இரு பேரரசர்களும் மிகுந்த விருப்பத்தோடு இருக்கின்றனர். எனவேதான் தங்களின் ஒப்புதல் தலையாயது எனக் கருதுகின்றனர்” என்றார்.

திசைவேழர் எதிர்ச்சொல்லின்றி அமைதியானார்.

``வைகையின் தென்திசையில் நீங்கள் குடில் அமைத்திருந்தால் வெள்ளத்தைக் கடந்து அந்துவனால் வந்து உங்களைக் கண்டு பேசியிருக்கவே முடியாது. நீங்கள் வடதிசையில் குடில் அமைத்ததே இங்கு வந்து சேருவதற்காகத் தான். எனவே, திசைவேழர் இதற்கு ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கையோடு என்னை அனுப்பிவைத்தார் பேரரசர்” என்றார் முசுகுந்தர்.

இதற்குப் பிறகும் பதிலின்றி இருக்க முடியவில்லை. சற்றே தலையசைத்தார் திசைவேழர்.

மகிழ்ச்சி பொங்க அவரது கால் தொட்டு வணங்கினார் முசுகுந்தர்.

83p4_1529313293.jpg

றுநாள் அவை கூடியது. கபிலரும் வாரிக்கையனும் வந்துசேர்ந்தனர். சிறிது நேரத்தில் திசைவேழர் வந்தார். அவர் நிலைமான் கோல்சொல்லியாக இருக்க எப்படி ஒப்புக்கொண்டார் என கபிலருக்குப் பெரும் வியப்பாக இருந்தது. பேரரசர்களோ அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். மருத்துவக் கூடாரத்திலிருந்து கருங்கைவாணனும் வந்து சேர்ந்துவிட்டான். ‘குலசேகரபாண்டியனின் தந்திரம்மிக்க செயல் இது’ என்று அவன் நினைத்தான். ஆனால் குலசேகரபாண்டியனோ, ஏறக்குறைய கலங்கிய நிலையில் இருந்தார். நேற்று நடுப்பகலில் பேச்சுவார்த்தை முடிந்ததும் அப்படியே போய் மயங்கித் தூங்கியவர் நள்ளிரவுதான் எழுந்தார். அதன் பிறகுதான் என்ன நடந்தது எனக் கேட்டறிந்தார். நிலைமான் கோல்சொல்லியாக திசைவேழரைத் தேர்வுசெய்ததைக் கேள்விப்பட்டு நடுங்கிப்போனார். ``எப்படி இது நடந்தது?’’ என அவைக்குள் இருந்த பணியாளர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டார். `தான் எப்படி ஒப்புதல் கொடுத்தோம்’ என்பது அவருக்குப் புரியவேயில்லை. ``முசுகுந்தர் எங்கே?” எனக் கேட்டார்.

``திசைவேழரிடம் ஒப்புதல் பெறப் போயுள்ளார்” என்று தெரிவித்தனர்.

இவ்வளவு குழப்பங்களுக்குப் பிறகும் அவருக்கு இருந்த நம்பிக்கை, ‘திசைவேழர், இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மாட்டார்’ என்பதுதான். எனவே, நாம் முன்னரே தெரிவித்தபடி நாளைக் காலை அந்துவனை நிலைமான் கோல்சொல்லியாகத் தேர்வு செய்துவிடலாம் என நினைத்து அந்துவனுக்கும் செய்தி சொல்லி ஆயத்த நிலையில் இருக்கச் சொன்னார்.

ஆனால், அதிகாலையில்தான் செய்தி வந்தது, `திசைவேழர் ஒப்புதல் வழங்கிவிட்டார்’ என்று. குலசேகரபாண்டியனுக்குச் செய்தி சொல்லப் பட்ட அதே நேரத்தில் மற்ற இரு பேரரசர்களுக்கும் செய்தி சொல்லப்பட்டுவிட்டது. குலசேகர பாண்டியனால் நம்பவே முடியாத செய்தியாக இது இருந்தது. போர் தொடங்க நாள் குறித்துக் கொடுக்கச் சொன்னதற்கே அவ்வளவு தயங்கிய அவர், கோல்சொல்லியாக இருக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பது பெரும்கேள்வியாக இருந்தது. தனக்கு என்ன நேர்ந்தது என்பதும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் புரிபடாத நிலையில் மீள முடியாத குழப்பத்தில் மூழ்கினார்.

இந்தச் சிக்கலை எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றி முடிவெடுக்க மிகக் குறைந்த நேரமே இருந்தது. `அவையில், நான் சொன்னதை நானே மறுத்தாலோ, மாற்றிக் கூறினாலோ அது பெரும்பிழையாகிவிடும். வரும் நாள்களில் மூவேந்தர்களின் கூட்டுமுடிவுகள் நம்பகத் தன்மையை இழக்க நானே காரணமாகிவிடுவேன். எனவே, அந்துவனைப் பற்றிய புதிய செய்திகள் காலையில்தான் தெரியவந்தன. அவன் ஆபத்து நிறைந்தவன். அதனால் திசைவேழரைத் தேர்வுசெய்ய எண்ணினேன். ஆனால், முன்கூட்டித் தெரிவிக்க முடியாமற்போய்விட்டது’ என்று சொல்லிச் சமாளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

`எனக்கு என்ன நேர்ந்தது? சற்றே நினைவு தவறி மீண்டதுபோல் உள்ளது. காலையில் உண்ட உணவால் அப்படியானோமா? இது தற்செயலா அல்லது யாராலாவது திட்டமிடப் பட்டதா?’ என்று அவருள் கேள்விகள் எழுந்தபடியே இருந்தன. அனைத்தையும் தீவிரமாக விசாரிப்பது என முடிவுக்கு வந்தார்.

நடந்துள்ள நிகழ்வுகள் அனைத்திலும் மிகத் துடிப்பாகச் செயல்பட்டுள்ளவர் முசுகுந்தர். அவையில் திசைவேழரின் பெயரைச் சொன்னதும் நள்ளிரவு வரை அவருடன் வாதாடி ஒப்புதல் பெற்றதும் இப்போது அவைக்கு அழைத்துவந்துள்ளதும் முசுகுந்தர்தான். இவை அனைத்திலும் மிகத் தீவிரமாக அவர் செயல்பட்டுள்ளார். குலசேகரபாண்டியனின் ஐயம் முசுகுந்தரின் மீது படரத்தொடங்கியது. ஆனாலும் இப்போது நடக்கவேண்டியதில் மட்டும் கவனமாக இருப்போம் என்ற முடிவுடன் அவையில் அமர்ந்திருந்தார்.

திசைவேழரும் கபிலரும் ஒருங்கே அமர்ந்திருக்கும் பேரவை. மூவேந்தர்களும் அவர்களின் தளபதிகளும் அமர்ந்துள்ளனர். உடன் பறம்புநாட்டுப் பெருங்கிழவர் வாரிக்கையன் இருந்தார். மாபெரும் மனிதர்களால் நிறைந்த அவை இது. வேட்டுவன்பாறைக்கு வந்து திரும்பிய திசைவேழரை இவ்வளவு விரைவாகப் போர்க்களத்தில் காண்போம் என்று கபிலர் எண்ணவில்லை. கவலை தோய்ந்த முகத்தோடு அவரை அருகில் சென்று வணங்கினார்.

அவரின் முகக்கவலையை உணர முடிந்தது. என்ன சொல்வதென்று சிந்தித்தபடி திசைவேழர், ``புலி முன் ஆடா... புலி முன் புலியா... புலி முன் யானையா என்பதை இணைந்து கண்டறியப் போகிறோமா?” எனக் கேட்டபடி இருக்கையில் அமர்ந்தார் திசைவேழர்.

முகத்தில் பரவிய சிறு சிரிப்போடு தனது இருக்கையில் அமர்ந்தார் கபிலர்.

திசைவேழர் அமர்ந்ததும் போர்விதிகளுக்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. ``இதுவரை வழக்கத்தில் உள்ள விதிமுறைகளைக் கூறுங்கள்” என்றார் திசைவேழர்.

குலசேகரபாண்டியனின் வலதுபுறமிருந்து முசுகுந்தர் எழுந்த அதே நேரத்தில் சோழவேழனின் பக்கத்தில் இருந்த வளவன்காரி கையில் ஏட்டுடன் எழுந்து முன்வந்தான்.

உள்ளே வந்து அமர்ந்ததிலிருந்து வாரிக்கையன் அவையில் உள்ள ஒவ்வொரு முகத்தையும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். குழப்பமும் பதற்றமும் மிரட்சியுமாக முகங்கள் இருந்தன. மிகுந்த தெளிவோடு இருந்த ஒரே முகம் முசுகுந்தரின் முகம் மட்டுமே. குலசேகரபாண்டியன் இட்ட கட்டளைப்படி பேராசான் திசைவேழரின் ஒப்புதல் பெற்று அவரை அழைத்துவந்துவிட்டேன் என்ற மகிழ்வில் இருந்தார். ஆனால், தனக்கு எதிர்த்திசையில் இருந்த சோழநாட்டு அமைச்சன் வளவன்காரி கையில் ஏட்டோடு முன்னகர்ந்து வந்தது அவருக்குச் சற்றே அதிர்ச்சியாக இருந்தது. திரும்பி, பேரரசரைப் பார்த்தார். குலசேகர பாண்டியன் கையைக் காட்டி முசுகுந்தரை இருக்கையில் அமரச் சொன்னார். நம்ப முடியாத அதிர்ச்சியோடு பின்னிருக்கையில் போய் அமர்ந்தார் முசுகுந்தர்.

வளவன்காரி, போர்விதிகளைப் படிக்கத் தொடங்கினான்.

83p5_1529313315.jpg

``போர்க்களம், எதிரியைக் கொன்றழிக்கும் உரிமையை ஒவ்வொரு வீரனுக்கும் வழங்குகிறது. ஆனால், அந்த உரிமைக்குச் சில கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் உண்டு. அதையே `போர்விதிகள்’ என்கிறோம்.

படை என்பது, இரு தரப்பானது. அதன் எண்ணிக்கை அவரவரின் வலுவைப் பொறுத்தது. எக்காரணம்கொண்டும் எண்ணிக்கையின் மீது இன்னொருவர் சம உரிமை கோர முடியாது.

போர்க்களம் என்பது, வெற்றி தோல்விகளைக் கண்டறியும் இடம். அதில் தீர்ப்பு சொல்ல யாரும் தேவையில்லை. வெற்றியோ தோல்வியோ, அதை அடைகிறவனுக்கு அதுவே எல்லாவற்றையும் சொல்லிவிடும். நிலைமான் கோல்சொல்லிகள், போரை விதிமீறாமல் நடத்திச்செல்வர்.

இப்போது சொல்லப்படும் விதிகள் எல்லாவற்றையும் மீறாமல் இருக்கவேண்டியது இரு தரப்பினரின் பொறுப்பு. மீறப்பட்டதாகக் கோல்சொல்லிகள் கூறினால் அதுவே முடிவு.

போர் என்பது, நாள்தோறும் கோல் சொல்லிகளின் அறிவிப்புடன் தொடங்கும். அவர்களின் அறிவிப்புடன் முடிவுறும். அறிவிப்புக்கு முன்னரோ, பிறகோ வானிலும் மண்ணிலும் போர்ச்செயல்பாடுகள் எதுவும் இருக்கக் கூடாது. அறிவிப்புக்கு முன் நாண் இழுக்கப்பட்டுவிட்டால், அந்த அம்பை மண்ணை நோக்கித்தான் எய்ய வேண்டும். முடிவுறும் ஓசைக்குப் பிறகு போர்க்களத்துக்குள் குதிரைகளைத் தாற்றுக்கோலால் அடித்து ஓட்டக் கூடாது. யானைகள் பிளிற பாகன்கள் அனுமதிக்கக் கூடாது. அந்தக் கணமே அனைத்தையும் நிறுத்துதல் வேண்டும்.

தாக்குதல் கண்டு புறமுதுகிட்டு ஓடுகிறவனையோ, கைகூப்பி வணங்குகிறவனையோ, அவிழ்ந்த தலைப்பாகையைச் சரிசெய்கிறவனையோ, ஆயுதம் இழந்தவனையோ தாக்கக் கூடாது.

காலாட்படை, காலாட்படையுடன்தான் மோத வேண்டும். அதேபோல குதிரைப்படையும் யானைப் படையும் தேர்ப்படையும் தன்மையொத்த படைகளுடன் மட்டுமே மோத வேண்டும்.

தேரை ஓட்டும் வலவனும் யானையைச் செலுத்தும் பாகனும் போர்க்களத்தில் இருந்தாலும் அவர்கள் போர்வீரர்கள் அல்லர். எனவே, அவர்கள் ஆயுதங்களைத் தொடக் கூடாது. அவர்களின்மேல் ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது.

ஆயுதங்களில் விலங்கினங்களின் நஞ்சையோ, தாதுக்களின் நஞ்சையோ பயன்படுத்துதல் கூடாது.”

அதுவரை படிக்கப்படுவதைக் கேட்டுக்கொண்டிருந்த வேந்தர்கள் மூவரும் நஞ்சினைப் பற்றிக் கூறும்போது ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்தனர். இது பொதுவாக எல்லாப் போர்களிலும் உள்ள விதிதான். ஆனால், எந்தப் போரிலும் திசைவேழர் போன்ற மாமனிதர் நிலைமான் கோல்சொல்லியாக இருந்ததில்லை. எனவே, இந்த விதி படிக்கப்படும்போது சற்றே கலக்கமாக இருந்தது. எண்ணற்ற நஞ்சின் வகைகள் மூவேந்தர்களின் படைக்கொட்டில்களிலும் பயன்படுத்த ஆயத்தமாக இருந்தன.

நஞ்சினைப் பற்றிய பேச்சு வந்ததும் குலசேகர பாண்டியனின் நினைவு நேற்றைய நிகழ்வுக்குள் போனது. `எனக்குக் கொடுத்த சுவைநீரில் நஞ்சேதும் கலக்கப்பட்டிருக்குமோ? அதனால்தான் நான் நினைவுபிறழ்ந்தவனாக மாறினேனோ?’ என்று எண்ணினார். இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே கடந்தமுறை கபிலர் வந்தபோது கருங்குரங்கின் செயலைவைத்து சுவைநீரில் நஞ்சு கலந்துள்ளது என சேரன் பதறியது நினைவுக்கு வந்தது. தொடர்ந்து ஏதோ ஒரு முயற்சி இங்கே நடந்துவருகிறது என்ற எண்ணம் உறுதியானது. அது யாராக இருக்கும் என்ற சிந்தனைக்குள் இருந்து குலசேகரபாண்டியனால் எளிதில் வெளிவர முடியவில்லை.

போர்விதிகளை முழுமையாகப் படித்து முடித்த வளவன்காரி, இறுதியாக ``விதிகளுக்கு எதிராகப் போர்தொடுத்தல் பெருங்குற்றம். எந்தத் தரப்பு விதிகளை மீறிச் செயல்பட்டது என நிலைமான் கோல்சொல்லிகள் கூறுகின்றனரோ, அந்தத் தரப்பு தண்டனையைத் தாழ்ந்து பெறவேண்டும். இனி போருக்கான களத்தையும் போருக்கான காலத்தையும் நிலைமான் கோல்சொல்லிகள் அறிவிப்பர்” என்று முடித்தான்.

வேந்தர்களின் முகங்கள் பெருங்கலக்கத்தில் இருந்தன. முதல் நாள் இரவு குலசேகரபாண்டியன் சொன்னதே அனைவருக்கும் நினைவில் ஓடியது. `இந்தப் போரின் வெற்றியைத் தீர்மானிப்பதில் போர்க்களம் அமையப்போகும் இடத்துக்கு முக்கியப் பங்குண்டு’. தாங்கள் நினைத்த இடத்தில் களத்தைத் தேர்வுசெய்ய எல்லா ஏற்பாடும் செய்திருந்தார் குலசேகரபாண்டியன். ஆனால், இப்போது நிலைமான் கோல்சொல்லியாக வந்திருப்பது திசைவேழர். அவர் முடிவுசெய்யும் இடமே போர்க்களமாகப்போகிறது.

சற்றே கலக்கத்தோடு மற்ற வேந்தர்கள் குலசேகரபாண்டியனைப் பார்க்க, அவரது முகமோ பெருங்கலக்கம் கொண்டிருந்தது.

``நானும் கபிலரும் போர்க்களத்தைத் தேர்வுசெய்ய முன்செல்கிறோம். எங்களின் அழைப்பு வந்ததும் இருதரப்புத் தளபதிகளும் வருக. அதன் பிறகு மற்றவர்கள் வரலாம்” என்று சொல்லி விட்டு வெளியில் நின்றிருந்த தேர் நோக்கி நடந்தார் திசைவேழர். பின்தொடர்ந்தார் கபிலர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 89

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

நான்கு புரவிகள் பூட்டிய தேர், அன்றைய பகல் முழுவதும் பயணித்துக்கொண்டிருந்தது. திசைவேழரின் எண்ண ஓட்டத்துக்கு இணையாகப் பாய்ந்து கொண்டிருந்தன குதிரைகள். திசையெங்கும் நிலம் விரிந்து கிடக்கிறது. ஆனால், போருக்கான களமாக அதில் எதுவும் திசைவேழருக்குத் தோன்றவில்லை. கபிலர் பேச்சேதுமின்றி அமைதியாக உடன் வந்தார். தேரில் திசைவேழரின் மாணாக்கர்கள் இருவர் இருந்தனர்.

மூஞ்சலிலிருந்து தேர் புறப்படும்போதே வலவனுக்கு மறைமுகமாக அரச உத்தரவு சொல்லப்பட்டது. அவன் அதற்கேற்ப வெங்கல்நாட்டின் உட்பகுதியை நோக்கித் தேரைச் செலுத்தினான். நெடுந்தொலைவு உள்ளே வந்ததும் திசைவேழர் கேட்டார்.

``உன் பெயர் என்ன?”

``முடத்திருக்கண்.”

``நான் உன்னை `படைகளின் எல்லையை விட்டு வெளியில் அழைத்துச்செல்’ என்றேன். நீ ஏன் இங்கு வந்தாய்?”

83p2_1529993189.jpg

முடத்திருக்கண் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ``பரந்துவிரிந்த நிலப்பகுதி. எனவே, இங்கு அழைத்துவந்தேன்” என்று தலை கவிழ்ந்தபடி சற்றே அச்சத்துடன் சொன்னான்.

``குதிரைகளுக்கு மட்டும்தான் கடிவாளம் இருக்க வேண்டும். வலவனுக்கு இருக்கக் கூடாது” என்று கூறிய திசைவேழர், ``இருக்கையை விட்டுக் கீழிறங்கு” என்றார்.

முடத்திருக்கண் கீழிறங்கினான். தன் மாணவர்களைப் பார்த்து, ``நீங்கள் யாரேனும் தேர் ஓட்டுவீர்களா?” என்று கேட்டார்.

ஒருவன் தலையசைத்தான்.

``நீ வலவன் இருக்கையில் அமர்ந்து தேரைச் செலுத்து” என்றவர் கீழிறங்கிய முடத்திருக்கண்ணைப் பார்த்துச் சொன்னார், ``பாண்டியநாட்டுக்கும் பறம்புநாட்டுக்கும் உரிமையில்லாத நிலம் நோக்கி ஓடு. உனக்குப் பின்னால் தேர் வரும்” என்றார்.

`பெருந்தண்டனை வழங்கிவிடுவாரோ!’ என்று அஞ்சியவன், சற்றே ஆறுதலுடன் ஓடத் தொடங்கினான். வெங்கல்நாடு, பாண்டியநாட்டின் பகுதி. அப்படியென்றால், வெங்கல்நாட்டின் எல்லையை விட்டு வெளியேற வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் பாண்டியநாட்டுக்கு உட்பட்ட சிறுகுடி மன்னர்களின் ஆளுகைப் பகுதி. எனவே, அங்கு செல்ல முடியாது. மேற்குத் திசையில் பறம்பின் பச்சைமலைத்தொடர். அங்கும் செல்ல முடியாது. மீதம் இருப்பது தென்திசை மட்டுமே. அந்தத் திசையில்தான் தட்டியங்காடு இருக்கிறது. மனிதனின் காலடித்தடமே படாத பெரும்நிலப்பகுதி. காற்று மட்டுமே கடந்தறியும் நிலம் அது. மனிதனோ, மன்னர்களோ உரிமைகொள்ளாத நிலம் அது. அதை நோக்கி ஓடத் தொடங்கினான் முடத்திருக்கண். தேர், அவன் பின்னே சென்றது.

அந்தத் திசையில் செல்லச் செல்ல எதிர்க்காற்று வீசியது. புற்று நிறைந்த பகுதி அது. எங்கும் கருமணலும் ஈக்கி மணலும் பரவியிருந்தன. சரலையோடிய நிலம் கண்கொண்டு பார்க்க முடியாதபடி இருந்தது. முடத்திருக்கண் ஓடிக்கொண்டே இருந்தான். காய்ந்த சருகைப்போன்ற குணம்கொண்ட இந்த மண்ணில் செடிகொடிகள் முளைக்காது. படலைப்புற்றும் குடைப்புற்றும்தான் எங்கும் முளைத்துக் கிடந்தன. உள்ளே செல்லச் செல்ல அச்சம் மேலேறிக்கொண்டிருந்தது.

``விரைந்து ஓடு” என்ற திசைவேழரின் குரல் கேட்டது. மீண்டும் வேகத்தைக் கூட்டினான். எதிர்க்காற்று அவனை முன்னேறவிடாமல் தள்ளியது. முயன்று ஓடினான். மூச்சிரைத்தது. குதிரைகள் அவன் மேல் பாய்வதைப்போல வந்துகொண்டே இருந்தன. வேகமெடுத்து ஓடினான். கூரியகற்கள் பாதங்களைக் கிழித்தன. குருதி ஒழுகியபடி ஓடிக்கொண்டே இருந்தான். திசைவேழரின் ஏவற்குரல் கேட்டுக்கொண்டே யிருந்தது.

முடிந்தளவுக்கு வேகமாக ஓடினான். கண்கள் கட்டின. மயக்கம் வருவதுபோல் இருந்தது. ஆனாலும் முயன்று ஓடினான். இன்னும் சிறிது நேரத்தில் விழுந்துவிடுவான் என்பது தெரிந்தது.

``அவன் எத்திசையை நோக்கி விழுகிறானோ, அத்திசையை நோக்கித் தேரைத் திருப்பி ஒரு பொழுதுக்கு விரைந்து ஓட்டிச் செல்” என்றார் திசைவேழர்.

83p1_1529993203.jpg

சிறிது நேரத்தில் முடத்திருக்கண் மயங்கி விழுந்தான். மேற்குத் திசை நோக்கி சாய்ந்து கிடந்தது அவனது தலை. தேரை மேற்கே திருப்பி முழு வேகத்தோடு ஓட்டினான் மாணவன்.

நான்கு குதிரைகள் பூட்டிய தேரை விரைந்து செலுத்த முயன்றான். ஆனால், குதிரைகளால் பாய்ந்து செல்ல முடியவில்லை. கனைப்பொலி எழுப்பியபடி தலையை மறுத்தாட்டித் துடித்தன. மாணவனுக்கு, தேரை ஓட்டப் போதிய பயிற்சியில்லை எனத் தோன்றியது. ஒரு பொழுதைக் கடந்ததும் தேரை நிறுத்தினான். திசைவேழரும் கபிலரும் கீழிறங்கினர்.

``தவறிழைத்தவன் தண்டனையின் வழியே காட்டிக்கொடுத்த இடம் இது” என்று சொல்லிக்கொண்டே இறங்கிய திசைவேழர், ``இந்த இடத்துக்கு ஏதோ பெயர் சொன்னானே?” எனக் கேட்டார்.

``தட்டியங்காடு” என்றான் மாணவன்.

``பெரும்புலவரே, நாம் இழைத்த தவறுகளுக்குத் தண்டனை இந்தத் தட்டியங்காடுதான். நம் தலை சாயும் வரையிலும் இந்த நிலம் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும்.’’

தலையசைத்தபடி கபிலர் சொன்னார், ``ஆனாலும் கடமையைச் செய்வோம்.”

மாணவர்களை அனுப்பி அனைவரையும் அழைத்துவரச் சொன்னார் திசைவேழர்.

மாணவர்கள் மூஞ்சல் நகருக்கு வந்து செய்தியைத் தெரிவித்தனர். தட்டியங்காடு என்கிற இடத்தை இதுவரை யாரும் கேள்விப்படக்கூட இல்லை. மையூர்கிழாரை அழைத்துக் கேட்டனர். ``மனித வாடை அறியாத மண். கறையான்கள் ஆளும் நிலம். முழுமையாகச் சென்று பார்த்தவர் யாருமில்லர்” என்றார்.

மனக்குழப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரும் புறப்பட்டனர். பொழுது மறைவதற்குள் தட்டியங்காட்டுக்கு வந்து சேர்ந்தனர். குலசேகரபாண்டியன் தேர் விட்டுக் கீழிறங்கியதும் மேற்குத் திசையைத்தான் பார்த்தார். காரமலை, மிகத் தொலைவிலும் இல்லை; அருகிலும் இல்லை. இடைப்பட்ட இடத்தில் இருந்தது. அதை எதிரிகளால் பயன்படுத்த முடியுமா என்ற சிந்தனையில் மூழ்கினார்.

அவர்கள் வந்த சிறிது நேரத்தில் சிறு தேர் ஒன்று வந்தது. அதில் வாரிக்கையனோடு புதிய மனிதன் ஒருவன் வந்தான். கருங்கைவாணனுக்கு இணையான உடல் அமைப்பைக்கொண்ட அவனை, அனைவரும் உற்றுப்பார்த்தனர். ``இவன்தான் பாரியா?” என்று கேள்வி எழுந்துகொண்டிருந்தது.
தேர் விட்டு இறங்கிய வாரிக்கையன் உரத்த  குரலில் சொன்னார், ``பறம்பின் தளபதி முடியன்.”

இங்கு நிற்கும் எந்த ஒரு தேரையும் ஒரே அடியில் நொறுக்கும் அளவுக்கு இறுகித் திருகிய உடலமைப்பைக்கொண்டவன். அனைவரின் பார்வையும் அவனை நோக்கி இருந்தபோது திசைவேழர் அறிவித்தார், ``நாற்புறமும் நிலைமாறாக் குணம்கொண்ட இடம். எவ்வளவு குருதி சிந்தினாலும் குடித்து முடிக்கக் காத்திருக்கும் நிலம். மலையெனப் பிணங்கள் குவிந்தாலும் மறுநாளில் இல்லாமலாக்கும் கோடானுகோடிக் கறையான்கள் வாழ்கின்ற மண். அழுகல், நாற்றம் மேலேறி வராது. அடைமழை பொழிந்தாலும் நீர் நிற்காது. மரங்களோ, புதர்களோ. நீர்நிலைகளோ இல்லாத போர்க்களத்துக்கே உரிய பாழும் நிலம். எனவே, இந்தத் தட்டியங்காடே போர்க்களமாகும்.”

அனைவரின் கண்களும் முன்னும் பின்னுமாகத் திரும்பி எல்லா திசைகளையும் பார்த்தன. திசைவேழர் அறிவிப்பைத் தொடர்ந்தார், ``இங்கிருந்து வடதிசையில் வேந்தர்படையும் தென்திசையில் பறம்புப்படையும் அணிவகுக்க வேண்டும்.”

வேந்தர்களுக்கு சற்றே நிம்மதியானது. படை கிழக்கு மேற்காக அணிவகுத்தால் பறம்புப்படைக்குப் பின்புற அரணாகக் காரமலை அமைந்துவிடும். எனவே, படையணியின் திசை மாறியது ஆறுதலாக இருந்தது.

வாரிக்கையன் உள்ளுக்குள் மகிழ்ந்தார். கிழக்கு மேற்குமாகப் படையணி இருந்தால் எதிர்த்திசையில் கண்ணுக்கு அப்பால் வேந்தர்படை நிற்கும். பார்த்தறிவது கடினம். இப்போது வடக்கு தெற்காகப் படையணி நிற்கப்போகிறது. வடதிசையில் வேந்தர்படை எவ்வளவு நீளத்துக்கு நின்றாலும் மலைமேல் இருந்து துல்லியமாகப் பார்த்தறிய முடியும்.

திசைவேழரின் குரல் மேலும் ஒலித்தது, ``இந்த இடம் கோபுரப் பரண் அமைக்கப்பட்டு அதன் மேல் நாழிகைத் தட்டு வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் பகல் ஐந்தாம் நாழிகை தொடங்கும்போது போர் தொடங்க முரசறைவோம். பகலின் இறுதி ஐந்தாம் நாழிகை தொடங்கும்போது போர் முடிவதற்கான முரசறைவோம். முரசறைய இருபுறங்களிலும் ஐந்தைந்து கோபுரங்கள் அமைக்கபட்டு அவற்றில் முரசறைபவரோடு என் மாணவர்களும் நிற்பர்.”

83p4_1529993222.jpg

அனைவரும் கேட்டுக்கொண்டு நின்றனர்.

``போரின் விதிகள் ஏற்கெனவே படிக்கப்பட்டுவிட்டன. இனி புதிதாய்ச் சொல்ல ஒன்றுமில்லை” என்றார்.

அனைவரும் பார்த்திருக்க, கருங்கைவாணன் முன்வந்தான். மூவேந்தர்களையும் பணிந்து வணங்கினான். மூவரும் வாழ்த்தினர். கோல்சொல்லிகளின் முன்வந்து குனிந்து தட்டியங்காட்டு மண்ணை எடுத்தான்.

``போரின் விதிகளை மீற மாட்டோம்” என்று கூறியபடி போர்க்கள மண்ணை திசைவேழரின் கைகளில் கொடுத்து வாக்களித்து வணங்கினான்.

அதேபோல முடியன் முன்வந்தான். குனிந்து மண் அள்ளி கபிலரின் கைகளில் கொடுத்து வாக்களித்து வணங்கினான்.

திசைவேழர் பறம்பின் தரப்புக்காக நின்றிருந்த கபிலர், வாரிக்கையன், முடியன் ஆகியோரைப் பார்த்துக் கூறினார், ``எமது தரப்பில் அளிக்கப்பட்ட வாக்கு மீறப்பட மாட்டாது. போர்விதிகளை வேந்தர்படை காக்கும். இது நான் அளிக்கும் உறுதி.”

நின்றிருந்த மூவேந்தர்களையும் தளபதிகளையும் பார்த்து கபிலர் கூறினார், ``திசைவேழர் நிலைமான் கோல்சொல்லியாக இருக்கும் மேடையில் அவரோடு நின்று பொழுதை அளக்கும் தகுதி வேறு யாருக்குமில்லை. எனவே, அவரின் வாக்கையே நாங்களும் ஏற்கிறோம். பறம்பின் தரப்பில் போரின் விதிகள் மீறப்பட மாட்டாது என்று நிலைமான் கோல்சொல்லியாகிய நான் உறுதியளிக்கிறேன்.”

போர் தொடங்க இரவின் நாழிகையே மிச்சமிருந்தது. தொடக்கத்துக்கு முன்பு அனைத்தையும் திட்டமிட வேண்டி யிருந்தது. தட்டியங்காட்டைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. நிலவாகு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி முழுமையான செய்தியோடு நள்ளிரவுக்கு முன் வரவேண்டும் என மையூர்கிழாருக்கு உத்தரவிட்டான் `மகாசாமந்தன்’ கருங்கைவாணன்.

அளவற்ற உற்சாகத்தோடு இருந்தது கருங்கைவாணனின் செயல். ``மலைக்காடைபோல் நாகரவண்டைத் தூக்கி வந்ததால் நமக்கான இரை நம்மைத் தேடி வரப்போகிறது. பாரி, மலையை விட்டுக் கீழிறங்கித் தாக்க ஒப்புக்கொண்டபோதே அவனது முடிவு உறுதியாகிவிட்டது. தட்டியங்காடே அவனது மரணம் நிகழப்போகும் இடம்” என்று சீறி முழங்கினான் கருங்கைவாணன்.

தன் தளபதிகளுடன் போர் உத்திகளைப் பற்றி விரிவாகத் திட்டமிட்டான். மலைமக்களின் இணையற்ற போர்க்கருவிகள் வில்லும் அம்பும்தான். அவற்றை எதிர்கொண்டு நிற்பது மட்டுமே சற்று கடினமானது. அதற்குத் தகுந்தபடி படையின் அமைப்புகளை நிலைநிறுத்தத் திட்டமிட்டனர். ``வேந்தர்களின் படையோடு ஒப்பிடும்போது பறம்பின் படையில் மிகவும் வலிமையிழந்த படைப்பிரிவு வாட்படையாகத்தான் இருக்கும். எனவே, வேந்தர்களின் வாட்படை விற்படைக்குத் துணையாக, மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் சேனைகளை அணிவகுக்கலாம்’’ என்ற ஆலோசனையைக் கூறினான் விற்படைத்தளபதி துடும்பன். ஆனால், இந்த ஆலோசனையை வாட்படைத்தளபதி சாகலைவன் ஏற்கவில்லை.

``மலைமக்கள், போதிய வாட்பயிற்சி அற்றவர்கள். நமது படைத்தொகுப்பில் வலிமைமிக்கது வாட்படைதான். இதை முழுமையாக ஒருங்கிணைத்துத் தாக்கினால்தான் எதிரியின் படையைப் பிளந்து முன்னேற முடியும். முதல் நாள் நமது தாக்குதல் எந்த அளவுக்கு வலிமை கொண்டதாகவும் பிளந்து முன்னேறக் கூடியதாகவும் இருக்கிறதோ, அந்த அளவுக்குப் போரின் போக்கைத் தீர்மானிக்கும்” என்றான்.

``குதிரையும் தேரும் நம்மிடம் இருப்பதில் பத்தில் ஒரு பங்குகூட எதிரிகளிடம் இருக்க வாய்ப்பில்லை. அதேபோல எதிரிகளிடம் பெரும் எண்ணிக்கையிலான யானைப்படை இருப்பதற்கான எந்தச் செய்தியும் இல்லை. எனவே, முதல் நாளில் நாம் வகுக்கும் உத்தி எல்லா வகையிலும் போரை முடித்து வெற்றியை அறிவிப்பதாக இருக்க வேண்டும்” என்றான் கருங்கைவாணன்.

காரிருள் சூழ்ந்தது. இரவின் இந்த அமைதி இன்று மட்டுமே இருக்கப்போகிறது. நாளைய இரவில் எத்தனை ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்து முடியவிருக்கின்றன எனக் கணக்கிட முடியாது. காற்றுவெளி முழுவதும் சிதைவுற்ற மனிதர்களின் ஈனக்குரலால் நிறைந்திருக்கப்போகிறது. பேரோலமும் பெருக்கெடுக்கும் குருதி ஆறும் தட்டியங்காடு எங்கும் நின்றாடும் மரணத்தின் ஆட்டமும் சொல்லி மாளாது. மனம் நிலை பிறழ்ந்து இருந்தது. குழப்பத்தினூடே தனது குடிலுக்கு வந்தார் திசைவேழர்.

தேரை விட்டு இறங்கும்போதே குடிலுக்குள் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. `இந்த இரவில் தனது குடில் அறிந்து வந்திருப்பது யாராக இருக்கும்?’ என்ற எண்ணத்துடனே உள்நுழைந்தார்.

83p5_1529993237.jpg

உள்ளே அமர்ந்திருந்தது பாண்டியநாட்டு இளவரசி பொற்சுவை.

பெருந்திகைப்புக்குள்ளானார் திசைவேழர். உள்நுழைந்ததும் திசைவேழரின் கால் தொட்டு வணங்கினாள் பொற்சுவை. அருகில் இருந்த சுகமதி, திசைவேழரை வணங்கி வெளியேறினாள். பாண்டிய இளவரசி இந்த இரவு வேளையில் இங்கு வந்திருப்பது ஏன் என அவருக்குப் புரியவில்லை. சிறு விளக்கு எரியும் அந்தக் குடிலில் மண் மெழுகிய திண்ணையில் அமர்ந்தாள் பொற்சுவை. மரச்சட்டகத்தால் ஆன இருக்கையில் அமர்ந்தார் திசைவேழர்.

முகம் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து விளக்கின் சுடரைப் பார்த்துக்கொண்டே பொற்சுவை கேட்டாள், ``கோள் கணிக்கும் பேராசான் கொலை நிலத்தில் பரண் ஏற எப்படி ஒப்புக்கொண்டீர்?”

முதல் கேள்வியே திசைவேழரை நேர்கொண்டு தாக்கியது. அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும்  தாக்குண்ட உணர்வை வெளிக்காட்டாமல் மெல்லிய குரலில் சொன்னார், ``மூவேந்தர்களும் கேட்டுக்கொண்டதால் என்னால் மறுக்க முடியவில்லை.’’

``காலம் கணிக்கும் பேராசானே அதிகாரத்தின் சொல்லை மறுக்கும் ஆற்றலை இழப்பதுதான் கேடுற்ற காலத்தின் அடையாளம்.”

ஈட்டிபோல் இறங்கின சொற்கள். திசைவேழரால் பொற்சுவையின் நோக்கத்தைக் கணிக்க முடியவில்லை. சற்றே அமைதியானார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு பொற்சுவை சொன்னாள், ``இந்தப் போருக்குக் காரணமானவர் இருவர்.”

``ஒருவன் குலசேகரபாண்டியன். இன்னொருவன் வேள்பாரி. அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள்?” எனக் கேட்டார் திசைவேழர்.

``இல்லை.”

``அப்படியென்றால் யார் அந்த இருவர்?”

``ஒருத்தி நான். இன்னொருவர் நீங்கள்.”

மிரட்சியுற்றார். ``நான் எப்படிக் காரணமாவேன்?!”

``வான்வெளியில் சிறுபிசகு ஏற்பட்டாலும் காலத்தின்கோலம் எப்படியெல்லாம் மாறும் என்பதைக் கண்டறிந்து கூறும் பேராசான் நீங்கள். உங்களிடம் இதைச் சொல்லவேண்டிய நிலைக்கு வருந்துகிறேன். இருந்தாலும் சொல்கிறேன். எனது திருமணத்துக்காகக் கட்டப்பட்ட பாண்டரங்கத்தின் மேற்கூரையில் வானியல் அமைப்பை வரைய நிலைப்படம் கொடுத்தீர்கள். அது என்னவென்று யாருக்கும் புரியவில்லை. பேரரசரின் பிறப்பைக் குறிக்கும் படமும் ஒன்று; அரசியாரின் பிறப்பைக் குறிக்கும் படமும் ஒன்று. என்ன வானியல் அமைப்பது என நீங்கள் தெளிவாகச் சொல்லாததால், வெள்ளியைத் தவறாக வரைந்தான் அந்துவன்.”

`இதை எதற்கு இப்போது சொல்கிறார்?’ என்று எண்ணியபடி கேட்டுக்கொண்டிருந்தார் திசைவேழர்.

``மேற்குமலை பெருமழைகொண்டால் வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்கும். `பாண்டரங்கத்தில் ஆடலும் பாடலும் செழிக்க, பாண்டியநாட்டில் உழவும் வணிகமும் தழைக்க இந்தக் கோள் நிலையே அடிப்படை!’ என்று கூறினீர்கள்.”

``அது இருக்கட்டும். இந்தப் போருக்கு நாம் இருவரும் எப்படிக் காரணம்?”

``அதைத்தான் சொல்ல வருகிறேன். எனது திருமணத்தின் பொருட்டே மையூர்கிழார் தேவவாக்கு விலங்கைப் பரிசாகத் தந்தார். பாண்டரங்கத்தில் வெள்ளியைத் தவறுதலாக வரைந்ததால் சினம்கொண்ட நீங்கள், அந்துவனைக் கண்டித்தீர்கள். உங்களின் சொல்லுக்கு அஞ்சியே அவன் புதிய படத்தை வரைந்து முடிக்கும் வரை பாண்டரங்கை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே தங்கியிருந்தான். அந்தக் காலத்தில்தான் தேவாங்கு வடதிசை நோக்கி உட்காரும் என்பதைக் கண்டறிந்தான். தேவாங்கின் ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் எல்லா சிக்கல்களும் தொடங்கின. ஒருவகையில் நீங்களும் நானும்தான் இந்தச் சிக்கலுக்கான மூல முடிச்சின் கயிற்றை இணைத்தவர்கள்” என்றாள் பொற்சுவை.

திசைவேழருக்கு இந்தக் கூற்று ஏற்புடையதாக இல்லை. ``தற்செயலுக்கு மிகையான காரணம் கற்பிக்கிறீர்கள் இளவரசி.”

83p6_1529993263.jpg

``இல்லை பேராசானே... இல்லை. எந்தத் தற்செயலும் தன்னியல்பில் நடப்பதில்லை. காரணங்கள் வழியேதான் காரியங்கள் நிகழ்கின்றன. தேவாங்கு மதுரைக்கு வந்து சேர்ந்ததற்கும் வடக்கில் இருக்கும் அதன் ஆற்றல் கண்டறியப்பட்டதற்கும் நீங்களும் நானும்தான் அடிப்படைக் காரணம்.”

``அப்படிப் பார்த்தால் அந்துவனும் பொதி யவெற்பனும் இதில் பங்கெடுப்பவர்கள்தானே?”

``நீங்கள் இல்லையென்றால் அந்துவன் படத்தை மறுமுறை வரைந்திருக்கவே மாட்டான். நான் இல்லையென்றால் இன்னொரு நாட்டு இளவரசியோடு பொதியவெற்பனுக்குத் திருமணம் நடந்திருக்கும். ஆனால், வணிகக்குலத்தின் பெருந்தலைவனின் இல்லத் திருமணமாக அது இருந்திருக்காது. அனைவரும் கவர்ச்சியான பொருள்களையே பரிசுப்பொருள்களாகத் தந்திருப்பர். தேவாங்கு போன்ற விலங்கைப் பரிசுப்பொருளாகத் தந்து பேரரசரின் கவனத்தை ஈர்க்கும் மனநிலை ஏற்பட்டிருக்காது. அந்துவனும் பொதியவெற்பனும் இதில் பங்கெடுத்தவர்கள்தான். ஆனால், பொறுப்பேற்கவேண்டியவர்கள் அல்லர்.”

காரணங்களைப் பொற்சுவை அடுக்கியவிதம், திசைவேழரை மறுக்கும் சொல்லின்றி நிற்கவைத்தது. சற்று நேரம் கழித்துக் கேட்டார், ``என்ன செய்யச் சொல்கிறீர்கள் இளவரசி?”

``நிகழவிருப்பது போரன்று; பேரழிவு. மூவேந்தர்களின் கூட்டுப்படை கடல்போல் பரந்துகிடக்கிறது. சின்னஞ்சிறிய ஒரு நாட்டின் மீது இவ்வளவு பெரும்படையெடுப்பை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. மதுரையிலிருந்து வரும் வழி எங்கும் துயருற்ற மக்களின் கண்ணீரைக் கடந்தே வந்தேன். உழவும் தொழிலும் நின்றொழிந்துபோயின. வேந்தர்களும் செல்வந்தர்களும் வாழ்வார்கள். படைக்கு வந்துசேர்ந்த வீரர்களின் குடும்பங்களை எல்லாம் மரணம் விழுங்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. காற்றெங்கும் விம்மல் ஓசை
கேட்டுக்கொண்டேயிருக்கிறது. இந்தக் கொடும் அழிவு தடுக்கப்பட வேண்டும். பறம்பின் மீது வேந்தர்கள் கோபம்கொள்ள எத்தனையோ காரணங்கள் உண்டு. ஆனால், பாரி அழியக் கூடாது. பாரியைப்போல அறவழிப்பட்ட ஒரு தலைவனை இதுகாறும் நான் கேள்விப்பட்டதில்லை. அவன் அழிக்கப்பட்டால் அறம் அழிக்கப்பட்டதாகவே பொருள். நீங்களும் நானும் அந்த அழிவுக்கான மூலமுடிச்சுகளாக இருந்தோம் என்பதை நினைக்கும்போதே உடல் நடுங்குகிறது. வாழ்வு எந்தக் கணத்திலும் முடிந்துவிடும். ஆனால், அறத்தின் அழிவுக்கான காரணம் நமது வாழ்வின் மீது படியுமேயானால் அதைவிட இழிவு வேறில்லை.”

பொற்சுவையின் குரலிலிருந்த ஆவேசம் திசைவேழரை நடுங்கவைத்தது. பாண்டரங்கின் மேற்கூரையைத் தவறாக அந்துவன் வரைந்தபோது `பாண்டியநாடு பாழ்படும்’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

`அந்துவன் முதலில் வரைந்ததே சரி. நிகழப்போகும் பேரழிவைப் பாண்டரங்கத்தின் மூலம் முன்னுணர்த்தியிருக்கிறது காலம். வைகையில் வெள்ளம் பெருகுகிற அதே நாள்களில்தான் இந்தப் பேரழிவும் அரங்கேறவிருக்கிறது. நான் அதைத் தவறென்று சொல்லி மாற்றினேன். காலத்தை மாற்ற நான் யார்? வெள்ளம் புரண்டோடும் வைகையின் கரையில் இருந்த என்னை அதே அந்துவன் அழைத்துவந்து அழிவின் நாள்களுக்குள் நிறுத்தியுள்ளான். அந்த வரைபடத்துக்குள் இப்போது நான் நிற்கிறேன். மாற்றிப்பார் என்கிறது காலம். நான் எனது சீற்றமிழந்து நிற்கிறேன். உள்ளுக்குள் புரண்டெழுந்த சொற்கள் தனக்குத்தானே உதிர்ந்து கரைந்தன. செயலற்று நின்றார் திசைவேழர். அவரைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பொற்சுவை.

சிறுவிளக்கின் சுடர் உமிழும் கரும்புகை மட்டுமே திசைவேழரின் கண்களுக்குத் தெரிந்தது.

``இந்தப் போரை நிறுத்த வழியேதும் இல்லையா? பேராசான் நீங்கள் நினைத்தால் முடியும் எனக் கருதுகிறேன்.”

பேசும் ஆற்றல் மேலெழவில்லை. ஆனாலும் முயன்று கூறினார். ``அந்த முயற்சியில் ஏற்கெனவே தோற்றுவிட்டேன். நிலைமான் கோல்சொல்லியாக இருக்க வாக்களித்த நான், இனி போரை வழிநடத்த மட்டுமே முடியும்.”

``அப்படியென்றால், வேறு என்னதான் வழி?”

அமைதி நீடித்தது. சற்று நேரத்துக்குப் பிறகு திசைவேழர் சொன்னார், ``ஒரு வழி உண்டு. அதை உங்களால் மட்டுமே செயல்படுத்த முடியும்.”

``என்னால் செயல்படுத்தக்கூடிய வழியா... என்ன அது?”

83p3_1529993278.jpg

``தேவாங்கு என்னும் விலங்குக்காக இத்தனை ஆயிரம் மனிதர்களின் மரணம் நிகழவேண்டுமா? இந்தக் கேள்வி பாரியின் முன் வைக்கப்பட வேண்டும். முல்லைக்குத் தேர் ஈந்தவன் பல்லாயிரம் மரணங்களைத் தடுக்க தேவவாக்கு விலங்கைக் கொடுத்து உதவுவான் என்றே நம்புகிறேன். அவன் அந்த விலங்கைத் தர ஒப்புக்கொண்டால் பாண்டியனை இந்தப் போரிலிருந்து என்னால் வெளியேற்றிவிட முடியும். பாண்டியன் வெளியேறிவிட்டால் சேரனும் சோழனும் ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் கணமே போர் முடியும்.”

``பாரியிடம் இதை...” என்று பொற்சுவை கேட்டு முடிக்கும் முன் திசைவேழர் சொன்னார், ``நீங்கள் முயன்றால் உங்கள் ஆசான் கபிலரின் மூலம் இதைச் செயல்படுத்த முடியும்.”

நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்தது. போர்நிலத்தைப் பற்றிய செய்தியைச் சேகரிப்பதும் அதற்கேற்ப படை நிலை கொள்வதற்கான ஆலோசனை வழங்குவதுமாக கருங்கைவாணன் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தான். இந்த நாளுக்காகவே காத்திருந்த பொதியவெற்பன் கருங்கை வாணனுடன் இணைந்து  திட்டமிட்டுக்கொண்டிருந்தான்.

அவனது உத்தரவின்பேரில் போர்க்களக் கொட்டிலில் ஆயுதவாரிகளின் செயல்பாடுகள் தொடங்கின. கொடுத்தனுப்பிய வரைபடத்தின் அடிப்படையில் ஆயுதங்களைக் கொண்டு செல்ல வாகனங்கள் ஆயத்தமாக இருந்தன. சேனை முதலிகள் தங்களின் படைப்பிரிவுக்குத் தேவையான ஆயுதங்களை விரைவில் பெற்று அடுத்தகட்டச் செயல்பாட்டில் இறங்குவதில் மும்முரமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் நேரடியாக ஆயுதவாரியை அணுக முடியாது. பன்னிரு சேனைகொண்ட பிரிவுக்குத் தலைமை தாங்கும் சேனைவரையர்களைத்தான் அவர்கள் அணுக முடியும்.

தனக்குக்கீழ் இருக்கும் சேனைகளுக்குத் தேவையான ஆயுதங்களை ஆயுதவாரியிடமிருந்து பெற்றுத்தரும் பொறுப்பு சேனைவரையரைச் சார்ந்தது. எனவே, சேனைவரையர்கள் எல்லோரும் படைக்களக் கொட்டிலில் மொய்த்துக் கிடந்தனர்.

ஆயுதமேற்றிய வண்டிகளும் யானைகளும் நெருக்கடிக்குள் திணறிக்கொண்டிருந்தன. எங்கும் கூச்சலும் பேரோசையுமாக இருந்தது. ஆயுதவாரிகள் தங்களுக்குக் கீழுள்ள பணியாளர்களுக்கு இட்ட கட்டளைப்படி படைக்கலக் கொட்டிலிலிருந்து ஆயுதங்கள் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருந்தன.

இந்தப் பேரோசை எதிரொலிக்காத அமைதி, சோழனின் கூடாரத்துக்குள் இருந்தது. அங்கு செங்கனச்சோழன், சோழவேழன், உதியஞ்சேரல் ஆகிய மூவரும் இருந்தனர். குலசேகரபாண்டியன் நிலைமான் கோல்சொல்லியாக திசைவேழரை அறிவித்ததன் காரணத்தைத் தெரிந்துகொள்ள எல்லாவகையிலும் முயன்றுகொண்டிருந்தனர். இருநாட்டு ஒற்றர்படைக்கும் அதுவே வேலையாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

திசைவேழர், கோல்சொல்லியாகி போர்க்களத்தையும் தேர்வுசெய்துவிட்டார். மூன்று நாட்டுத் தளபதிகளும் நாளைய போருக்கான ஆயத்த வேலைகளை ஒருங்கிணைந்து செய்துகொண்டிருந்தனர். ஆனால், வேந்தர்களின் மனங்களுக்குள் ஆழமான ஐயம் ஊடுருவியிருந்தது. இதைப் பற்றியே அவர்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் சேரநாட்டு ஒற்றன் செய்தியொன்று கொண்டுவந்தான். ``இன்று பிற்பகலில் முசுகுந்தர் சிறைப்பிடிக்கப்பட்டு போர்க்களத்துக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.”

ஒற்றனின் செய்தி, பேரதிர்ச்சியை உருவாக்கியது. ``இது உண்மையா... என்ன காரணம்?” என்று அவனிடம் அடுத்தடுத்த  கேள்விகள் கேட்கப்பட்டன. ஒற்றனிடம் மிகக்குறைந்த விவரங்களே இருந்தன. ``பாண்டியப் பேரரசர் அருந்திய சுவைநீரில் நஞ்சு கலந்து சதிசெய்ய முற்பட்டார் என்ற காரணத்துக்காக முசுகுந்தர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். ஆனால்,  பொதியவெற்பன் உள்ளிட்ட யாருக்கும் செய்தி தெரியாது’’ என்று கூறினான். கோல்சொல்லி யார் என முடிவெடுக்க நடந்த கூட்டத்தில்தான் இந்த முயற்சி நடந்ததாகவும் கூறினான்.

குலசேகரபாண்டியனின் செயல் மாற்றத்துக்கு இதுதான் காரணம் என அறிந்தபோது, கேட்டுக்கொண்டிருந்த மூவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான் உதியஞ்சேரலுக்கு, தனது கருங்குரங்குக்குட்டி கத்தித் துள்ளியது நினைவுக்கு வந்தது. அன்றும் சுவைநீர் பருகும் நேரத்தில்தான் குரங்குக்குட்டி அவ்வாறு செய்தது. அப்படியென்றால், முசுகுந்தர் தொடர்ந்து ஏதோ ஒரு சதியில் ஈடுபட்டவாறே இருந்துள்ளார் என எண்ணினான். கபிலரோடு அவருக்கு இருந்த நெருக்கம் பற்றிய செய்தியும் பேச்சினூடே மேலெழுந்தது.

இன்று மாலை போர்க்களத்தில் கோல்சொல்லிகளின் அழைப்பை ஏற்று அனைவரும் வந்திருந்தபோது முசுகுந்தர் மட்டும் இல்லாதது நினைவுக்குவந்தது. ``குலசேகரபாண்டி யனின் முகம் இன்று மாலை மிகவும் தெளிவுகொண்டிருந்ததற்குக் காரணம் இதுதானோ?” எனக் கேட்டார் சோழவேழன்.

மனதுக்குள் இருந்த ஐயம் நீங்கிய கணம், போர்க்கொட்டிலிலிருந்து மேலெழுந்த ஓசை கூடாரம் முழுமையும் கேட்டது. `நாளைய போருக்கான ஆயுதங்களைக் கொடுத்தனுப்பும் வேலையை ஆயுதவாரிகள் செய்துமு டித்துவிட்டனர்’ என்ற செய்தியைச் சொல்ல வீரன் ஒருவன் உள்ளே வந்தான்.

இரவு முடிந்து விடியலின் கீற்று மேலெழுந்துகொண்டிருந்தது. கதிரவனின் புத்தொளி எங்கும் படர்ந்தபோது பகலின் முதல் நாழிகை தொடங்கியது. திசைவேழர் தனது கூடாரத்தை விட்டு வெளியில் வந்து தேர் ஏறினார்.

மாணவர்கள் எல்லோரும் முன்னரே புறப்பட்டுப் போயிருந்தனர். வலவன் குதிரைகளின் கடிவாளத்தைச் சுண்டி தேரை இயக்கினான்.

வழக்கமாக காலையில் கூடாரத்தை விட்டு வெளியில் வந்ததும் கதிரவனைப் பார்க்கும் திசைவேழர், இன்று சரிந்து நீண்டுகிடக்கும் தேரின் நிழலையே பார்த்தார்.

தட்டியங்காட்டுப் போர் தொடங்க இன்னும் மூன்று நாழிகையே இருக்கிறது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 90

 

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

ட்டியங்காட்டுக்கு நேர் மேற்கே இருக்கும் குன்றின் பெயர் `குளவன்திட்டு’. குழவிக் கல்போல் மேகத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கும் கரும்பாறை அது. காரமலையின் தோள்களின் மேலே பிதுங்கி நிற்கும் பகுதி. குளவன்திட்டின் பின்புறம் காரமலையின் கணவாய்க்குள் இருப்பவர்கள் கானவர்கள். மலைமக்களில் மிகப் பழைமையான குடியினர்.

பறம்புப்படை, முதன்முறையாக சமவெளியில் இறங்கிப் போரிடப்போகிறது; போர்விதிகள் என்னும் சட்டகங்களுக்குள் ஆயுதம் ஏந்தப்போகிறது. மூன்று பெரும் பேரரசுகளையும் எதிர்த்துச் சின்னஞ்சிறு குலம் ஒன்று பிடரி  சிலிர்த்துத் தரை இறங்கப்போகிறது. அதற்கு முன் தெரியவேண்டியது தரை இறங்கப்போகும் இடத்தைப் பற்றி.

தட்டியங்காடுதான் போர்க்களம் என முடிவானவுடன் அந்த இடம் பற்றி அறிய மையூர்கிழாரைத் தேடி ஆள் அனுப்பினார் குலசேகரபாண்டியன். கானவர்குடித் தலைவனைக் கண்டுவரச் சொல்லி ஆள் அனுப்பினான் வேள்பாரி.

பச்சைமலைத் தொடரின் தென்பகுதியில் பறம்புநாட்டை அடுத்து இருப்பவர் கானவர் குடியினர். எண்ணிக்கையில் மிகக் குறைந்த கூட்டம். உச்சிமலையில் கணவாயின் அடிவாரத்துக்குள் இருப்பதால் இப்படியொரு மனிதக்கூட்டம் இருப்பது மலைமக்களுக்கே பெரிதாகத் தெரியாது.

83p2_1530528327.jpg

மலையின் செங்குத்துப் பிளவுக்குள் பல பனையாழத்தில் மரப்புதர்களிலும் பாறைக்குகைகளிலுமே தங்குபவர்கள். அதனாலேயே யார் கண்ணிலும் படாதவர்கள். இலையாடைகொண்டவர்கள். ஐந்து முதல் ஏழு வயதுக்குள் குறி தவறும் அம்புகளை எய்தி முடித்துவிடுவர். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அவர்களின் அம்புகள் குறி தவறுவதில்லை.

அந்தக் குலத்தலைவன் இகுளிக்கிழவன். அவனைக் காணத்தான் வாரிக்கையனும் தேக்கனும் வந்திருந்தனர். குளவன்திட்டின் பின்புறக்காட்டில் இறங்கிய அவர்கள், இரவில் நெருப்பினாலான குறியீட்டுமொழி மூலம் கானவர்களுக்குத் தங்களின் வரவைத் தெரிவித்தனர்.

சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த மரத்தின் மேலிருந்து ஒரு கிழவன் கீழிறங்கி வந்தான். பந்த வெளிச்சத்தில் அவனைப் பார்த்ததும் அடையாளம் கண்டார் வாரிக்கையன்.

மகிழ்ச்சியோடு அவனை அணைத்துக் கொண்டார். ``என்னைவிட வயதில் மூத்தவன் இகுளிக்கிழவன்” என்றார் வாரிக்கையன்.

``உன் தந்தையைவிட வயதில் மூத்தவன் நான்” என்றான் இகுளிக்கிழவன். இருவரும் சிறுவனிடம் விளக்குவதைப்போல தேக்கனிடம் விளக்கினர்.

`தந்தை’ என்ற சொல்லைச் சொல்லியபோது இகுளிக்கிழவனின் முகத்தில் எள்ளல் மிகுந்த சிரிப்பு ஓடியது. கானவர் குடியினர் இன்னும் தாய்வழிக் குலத்தினராகவே இருக்கின்றனர். கூட்டுவாழ்வில் `தந்தை’ என்ற உறவை அடையாளப்படுத்தும் சொல்லே கிடையாது. உயிர்களால் தாயை மட்டும்தானே அறிய முடியும். பறவைகளுக்கோ, விலங்குகளுக்கோ அல்லது வேறு எந்தவோர் உயிரினத்துக்கோ இல்லாத பழக்கத்தை வேளிர் குடியினர் கொண்டிருப்பது கானவர் குடிக்கு வியப்பாகவும் கேலிக்குரிய ஒன்றாகவும் இருந்தது. அதன்பொருட்டே வேளிர் குடியினரை வேற்றுமனிதர்களாகப் பார்ப்பர். ஆனாலும் கானவர் குடியோடு நல்லுறவோடு இருந்தனர் வேளிர் குடியினர்.

நீண்ட காலத்துக்குப் பிறகு காண்பதால் பலவற்றைப் பேசிவிட்டு, இறுதியாக போர்நிலம் பற்றிக் கேட்டார் வாரிக்கையன்.

இகுளிக்கிழவன் கேட்டான், ``தட்டியங்காடு தான் போர்க்களம் என்று முடிவெடுத்தவன் யார்?”

``எதிரிகளின் தரப்பைச் சேர்ந்த கோல்சொல்லி” என்றான் தேக்கன்.

``ஏன் இந்த நிலத்தைத் தேர்வு செய்தான்?”

``போரிடும் இருதரப்பு எல்லைக்குள்ளும் இல்லாத நிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதைத் தேர்வுசெய்ததாகச் சொன்னான்.”

``மனிதர்கள் மனிதர்களுக்குரிய இடத்தில்தானே போரிடவேண்டும். இந்த இடத்தில் எப்படிப் போரிட முடியும்?”

``ஏன்... இது மனிதர்களுக்குரிய இடமில்லையா?”

``மனிதர்களுக்கு மட்டுமன்று, விலங்குகளுக்குரிய இடமுமன்று. செங்காவி நிற ஓணானைத் தவிர வேறு எந்த உயிரினமும் அங்கு வாழாது.”

சற்றே அதிர்ச்சியோடு ``என்ன காரணம்?” எனக் கேட்டான் தேக்கன்.

``கருமணலும் ஈக்கிமணலும் நிறைந்த நிலத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது. அந்த நிலத்தில் பத்து அடி தொலைவுக்குப் பாம்பு ஊர்ந்து சென்றால், அதன் அடிவயிறு கிழிந்து செத்துப்போகும்” என்றான்.

வாரிக்கையனும் தேக்கனும் திகைப்போடு அவனைக் கவனித்துக்கொண்டிருந்தனர். ``பாம்புக்கே இதுதான் நிலையென்றால், மற்ற உயிர்களைப் பற்றிச் சொல்லவேண்டுமா என்ன? மண்ணுக்குள் வாழும் கறையான்களுக்கு மட்டுமே அது தாய்நிலம். வேறு எந்த உயிரினமும் வாழ முடியாது” என்றான் இகுளிக்கிழவன்.

``மரம், செடிகொடிகள்கூட இல்லையே... ஏன்?”

``அதற்கு அந்த நிலம் காரணமல்ல. எங்களின் தெய்வம்தான் காரணம்.”

``உங்களின் தெய்வம் அந்த நிலத்தை என்ன செய்தது?”

83p1_1530528364.jpg

இகுளிக்கிழவன் பின்புறம் திரும்பி, காரமலையின் உச்சியில் இருந்த பிளவைக் காட்டினான். ``அந்தப் பிளவை `கணவாய்’ என்போம். அந்தக் கணவாய்க்குப் பின்புறம்தான் எங்களின் தெய்வங்களான கொம்மனும் கொம்மையும் இருக்கிறார்கள். அவர்கள் கோபமடையும்போது வாய் திறந்து ஊதுகின்றனர். ஆண் தெய்வமான கொம்மன் ஊதும்போது வெளிவருவது காற்று. பெண் தெய்வமான கொம்மை ஊதும்போது வருவது காற்றி.

ஆணின் குணமேறிய காற்று, குளவன்திட்டின் வலதுபுறமாக இறங்கி, தட்டியங்காட்டு மண்ணைச் சீவியெடுத்துக்கொண்டு போகும். பெண்ணின் குணமேறிய காற்றி, குளவன்திட்டின் இடதுபுறமாக இறங்கி,  உருட்டி எடுத்துக்கொண்டு போகும். அதனால்தான் தட்டியங்காட்டில் எந்த மரமும் செடியும் நிலைப்பதில்லை. எல்லாவற்றையும் காற்றும் காற்றியும் பிய்த்துக்கொண்டு போய்விடுகின்றன. புற்று மட்டும்தான்; அதுவும் ஒரு முழம் உயரத்துக்கு மட்டுமே நிலைகொள்ள முடியும். அதற்கு மேலே உயர்ந்தால் அதையும் அழித்துவிடும்.

மலை உச்சியிலிருந்து பாய்ந்துவரும் நீரின் வேகத்தில் கற்கள் அடிபட்டுச் சிதைந்து கூழாங்கற்களாகவும் மணலாகவும் மாறுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், காற்றின் தாக்குதலால் பாறைகள் உடைந்து செதில்செதிலாகச் சீவப்பட்டு ஈக்கிமணலாகவும் கருமணலாகவும் மாறுவதை இங்கு மட்டும்தான் பார்க்க முடியும். ஈக்கிமணல் என்பது, உடைபட்டுக் கிடக்கும் அம்பு போன்றது” என்றான் இகுளிக்கிழவன்.

வாரிக்கையனும் தேக்கனும் வியப்பு நீங்காமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

``நடுப்பகலுக்குப் பிறகு அந்த நிலத்தில் வெக்கை தாள முடியாது. கருமணலில் பட்டு காற்று கருகும். கருகிய புகை மேலெழ, உடலில் இருக்கும் நீரெல்லாம் வற்றி நா வறண்டு வீழ்வான் மனிதன்” என்றான் இகுளிக்கிழவன்.

கொலை நிலம் என்பதன் பொருள் அந்த நிலத்துக்கே முழுமையாகப் பொருந்தும். ஆனாலும் அந்த நிலத்தில் போரிட்டு வெல்வது எப்படி எனச் சிந்தித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தனர். பொழுதாகிக்கொண்டிருந்தது. தட்டியங்காட்டைப் பற்றித் தெரிந்துகொண்ட செய்தியின் அடிப்படையில் ஆயத்த வேலைகளை உடனே செய்யவேண்டும். இரலிமேட்டில் அனைவரும் நமக்காகக் காத்திருப்பர் எனக் கருதி இருவரும் புறப்பட்டனர்.

அவர்களை வழியனுப்ப, கானவர்குடி எல்லை வரை இகுளிக்கிழவன் உடன் வந்தான். கும்மிருட்டில் தங்களின் நிலப்பாதையை மற்றவர்கள் அறிந்திராதபடிதான் எல்லாப் பாதைகளும் இருக்கின்றன. அவர்களின் தேவை அறிந்து குறுக்குவழியில் விரைவாக அழைத்து வந்தான் இகுளிக்கிழவன்.

வரும்வழியில் இருந்த ஆச்சைமரம் ஒன்றைக் கடக்கும்போது இகுளிக்கிழவன் நின்றுவிட்டான். `ஏன் நிற்கிறான்?’ என்று பின்னால் வந்த இருவரும் அந்த இடத்தை உற்றுப்பார்த்தபோது மரப் புதருக்குள் இரு கண்கள் மட்டும் தெரிந்தன. என்னவென உற்றுப்பார்த்தனர். பெருங்கிழவி ஒருத்தி உள்ளே உட்கார்ந்திருந்தாள்.

வந்துள்ளதன் காரணத்தைக் கேட்டாள்.

``சாமேட்டில் போரிடப்போவதற்காகக் கேட்க வந்துள்ளனர்” என்றான் இகுளிக்கிழவன்.

``சாமேட்டிலா?!” என்று வியப்போடு கேட்டாள் முதுகிழவி.

``ஆம்” என இகுளிக்கிழவன் சொல்ல, முதுகிழவி தானியங்களை உருட்டுவதைப்போல எதையோ சொன்னாள்.

விடைபெற்று வரும்வழியில் இகுளிக்கிழவன் சொன்னான், ``உங்களுக்கு வெற்றிகிட்டட்டும் என்றாள்.’’

``இது என்ன, அந்த இடத்துக்குப் புதுப்பெயரைச் சொன்னாய்?” எனக் கேட்டார் வாரிக்கையன்.

``அங்கேதான் சாவுப்பறவை முட்டையிடும். அந்தப் பறவையை அங்கு வைத்துதான் வேட்டையாடுவோம். எனவே, அந்த இடத்தை `சாமேடு’ என்றுதான் நாங்கள் கூறுவோம்” என்றான்.

``சாவுப்பறவையா... அது என்ன பறவை?” எனக் கேட்டான் தேக்கன்.

83p3_1530528380.jpg

``அதைக் கண்டால் உயிரினம் எல்லாம் அலறுமே! கணநேரத்தில் கழுத்தைவெட்டி எடுத்துக்கொண்டு காற்றில் பறக்குமே!” எனச் சொல்லி இரு கைகளையும் விரித்து, தலையை முன்தள்ளியபடி சொன்னான்.

அப்போதுதான் வாரிக்கையனுக்குத் தோன்றியது, `காக்காவிரிச்சியைச் சொல்கிறான் கிழவன்’ என்று. அதை நினைத்த கணத்தில் உடல் நடுங்கி மீண்டது. 

`எந்த உயிரினத்துக்கும் அதன் சாவைக் காட்டும் பறவை என்பதால், அதை `சாவுப்பறவை’ என்கின்றனர்’ என எண்ணிக் கொண்டிருக்கும்போதே பதறிக் கேட்டான் தேக்கன் ``அதை வேட்டையாடுவீர்களா?”

``ஆம்” எனத் தலையாட்டினான் இகுளிக்கிழவன். ``நீங்கள் சொல்லும் அந்த நிலம் முழுவதும் எந்தப் பறவையும் பறந்து கடக்காது. ஏனென்றால், சாவுப்பறவை அங்குதான் குதம் எரிய முட்டையிடும். பிறகு வெறிகொண்டு குளவன்திட்டை நோக்கித்தான் மேலேறி வரும். அதன் அப்போதைய தேவை பசியன்று; எரிச்சல் மிகுந்த கோபம். எனவே, கணவாய்க்குள் மனிதர்கள் இருப்பதால் வெட்டிச்சரிக்க உள்ளே இறங்கும். கண்ணில் சிக்குபவர்களின் தலைகளையெல்லாம் காற்றில் சரிக்கும். அதனால்தான் எங்கள் கானவர் கூட்டம் ஆதியிலே தழைக்காமல் சிறுத்துப்போனது” - கவலைதோய்ந்த குரலில் சொன்னான் கிழவன்.

கேட்டுக்கொண்டிருப்பது மனிதர்கள் சம்பந்தப்பட்ட கதையல்ல; மனிதனால் நம்பவே முடியாத கதை. எனவே, இமை மூடாமல் கவனித்தனர் இருவரும்.

இகுளிக்கிழவன் சொல்லி முடித்ததும் தேக்கன் கேட்டான், ``அதை எப்படி வேட்டையாடுவீர்கள்?”

``எங்கள் தெய்வத்தின் துணையோடு.”

இருவரும் பேச்சின்றி, கிழவனைப் பார்த்தனர்.

``சாவுப்பறவை, முட்டையிட்ட பிறகு குளவன்திட்டை நோக்கித்தான் மேலேறி வரும். நாங்கள் குளவன்திட்டின் மேலே ஆயத்தநிலையில் இருப்போம். எங்களின் தெய்வங்கள் காற்றையும் காற்றியையும் ஊதி அனுப்புவர். அவர்கள் ஊதும் நேரம் அறிந்து நாங்கள் வில்லடிப்போம். அம்புகளை நாங்கள் எய்யும் வேகத்தைவிடப் பத்து மடங்கு வேகத்தில் காற்றும் காற்றியும் எடுத்துச்செல்லும். எங்களது சுருள் அம்புகளின் தாக்குதலை எதிர்த்து சாவுப்பறவையால் மேலே பறந்து வர முடியாது” என்றான்.

காக்காவிரிச்சியை அம்புகளால் வீழ்த்த முடியும் என்பதை நம்ப முடியாமல் கேட்டுக்கொண்டிருந்தனர் இருவரும். ஆனால் தேக்கனின் எண்ணம் முழுவதும், காற்றைப் பயன்படுத்தி அம்பு எய்யும் அவர்களின் உத்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதிலேயே இருந்தது.

வாரிக்கையன் கேட்டார், ``செங்காவி நிற ஓணான் மட்டும் எப்படி அங்கே உயிர் வாழ்கிறது?”

``சாவுப்பறவையின் முட்டைகளைத் தின்றுதான். ஓணான்கள் அந்த முட்டைகளை மட்டும் அழிக்கவில்லையென்றால், இந்நேரம் பச்சைமலை முழுக்க சாவுப்பறவைதான் பறந்துகொண்டிருக்கும்.”

தேக்கன் கேட்டான், ``காற்று, நாம் எய்யும் அம்பின் வேகத்தை பத்து மடங்கு அதிகப்படுத்துமா?’’

``படுத்தும். ஆனால், நாம் எய்யும் அம்பு வீசிவரும் காற்றின் முகப்போடு இணைய வேண்டும்.”

``காற்றை நாம் உணரும்போதே, அது நம்மைக் கடந்துவிடுமே. பிறகு எப்படி அதன் முகப்போடு இணைந்து அம்பைச் செலுத்த முடியும்?”

``காற்று வருவதறிந்து நாம் ஆயத்தமாகிவிட வேண்டும்.”

``எப்படி?”

``குளவன்திட்டின் உச்சியில் குகை ஒன்று இருக்கிறது. அதில் விளக்கேற்றுவோம். கணவாயினுள் காற்று வரப்போவதற்கு முன்னர் அந்த விளக்கின் சுடர் வலதுபுறம் நோக்கிச் சாய்ந்து எரியும்; காற்றி வருவதாக இருந்தால் இடதுபுறம் நோக்கிச் சாய்ந்து படபடத்து எரியும். சுடர் சாயத் தொடங்கியவுடன் நாணை இழுத்துவிடுவித்தால் அம்பு எகிறும்போது காற்றின் முகப்போடு இணையும்” என்றான் இகுளிக்கிழவன்.

பெருங்காற்று வருவதற்கு முன்னரே அதை உணர்ந்து வீசும் வேகத்தோடு அம்பை இணைக்கும் இவர்களின் அறிவுக்கூர்மை மெய்சிலிர்ப்பை உருவாக்கியது. அப்போதுதான் அடுத்த ஐயமும் வந்தது, ``அம்பு சுருள்வடிவில் இருந்தால் எப்படி காற்றில் ஏகிச்செல்லும், திசைமாறி விழுந்துவிடுமே!”

மறுமொழியின்றி அமைதியாக வந்தான் இகுளிக்கிழவன். இருட்டில் ஒடுக்குப்பாதையில் கவனமாக வரவேண்டும். அதைக் கடந்தவுடன் சொன்னான், ``கானவர்குடியின் தனித்த அடையாளம் அது. எனவே, மற்றவர்களோடு அதைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்.”

குலச்சமூகங்களின் ஆதிஆற்றல்கள் எல்லாம் இப்படியோர் இறுதி முடிச்சுக்குள் சிக்குண்டு விடுகின்றன. மிகத்தேர்ந்த மனிதர்களால் மட்டுமே சிக்கல் நிறைந்த இந்த முடிச்சுகளைக் கழற்ற முடியும்.

பேச்சை எப்படித் தொடர்வது என்பதறியாமல் திகைத்தபடி இருந்தான் தேக்கன். இவ்வளவு நேரம் பேச்சின்றி வந்த வாரிக்கையன் கேட்டார், ``செங்காவி நிற ஓணான்கள் இல்லையென்றால், சாவுப்பறவையின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் அல்லவா?”

``அதில் என்ன ஐயம்? நம் தலைக்கு மேல் வேறு எந்தப் பறவையும் பறக்காது” என்றான் இகுளிக்கிழவன்.

கேள்வி கேட்ட பிறகு அமைதியாக வந்தார் வாரிக்கையன்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, ``ஏன் இதைக் கேட்டீர்கள்?” என்றான் இகுளிக்கிழவன்.

``தட்டியங்காட்டில் இவ்வளவு பெரிய போர் நடக்கப்போகிறது. மனிதர்கள், குதிரைகள், யானைகள் எனப் பல்லாயிரம் உயிரினங்கள் களத்தில் இறங்கப்போகின்றன. இத்தனை பேரின் கால் மிதிக்குத் தப்பி, செங்காவி நிற ஓணான்கள் எப்படி உயிர் பிழைக்கப்போகின்றன?” என்றார் கவலை தோய்ந்த குரலில்.

இப்போது இகுளிக்கிழவன் அதிர்ச்சியானான். ``மனிதர்களாலும் குதிரைகளாலும் அவற்றுக்கு ஆபத்து நேராது. ஆனால், எண்ணிலடங்காத யானைகள் மோதிச் சண்டையிட்டால் மண்ணோடு மண்ணாய் ஓணான்கள் எல்லாம் நசுங்கிச் சாகும்” என்று சொல்லும்போதே அவனது உடலில் நடுக்கம் ஏற்பட்டது.

அதைக் கவனித்தார் வாரிக்கையன்.

ஆனாலும் பேச்சேதுமின்றி மூவரும் இருளுக்குள் நடந்தபடி இருந்தனர்.

இன்னும் குடில்களை உருவாக்காமல் மரப்பொந்துக்குள் வாழ்வதே சாவுப்பறவையால் ஏற்பட்ட அச்சத்தால்தான். அந்த அச்சம் அவ்வளவு எளிதில் அகன்று விடாது. குரல் சற்றே நடுங்க இகுளிக்கிழவன் கேட்டான், ``ஓணான்கள் அழியாமல் தடுக்க நீங்கள் உதவினால், சுருளம்புகளைக் கொடுத்து நாங்கள் உதவுகிறோம்.”

83p4_1530528397.jpg

``அது அழியாமல் நாங்கள் எப்படித் தடுக்க முடியும்?”

``யானைப் போரை மட்டும் தட்டியங்காட்டில் நடத்தாதீர்கள். ஓணான்கள் தப்பித்துவிடும்” என்றான் இகுளிக்கிழவன்.

வாரிக்கையன் இதை எதிர்பார்க்கவில்லை. போர்க்களம் தொடர்புடைய முடிவைப் பாரியும் தேக்கனும் முடியனும்தான் எடுக்க முடியும். தான் எடுக்கக் கூடாது. எனவே, தேக்கனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.

எடுக்கப்போகும் முடிவின் முக்கியத்துவத்தை உணர்ந்தபடி ஆழ்ந்து சிந்தித்தான் தேக்கன். ``சரி, யானைப்போரைத் தட்டியங்காட்டில் நடத்தாமல் தவிர்க்கிறோம்” என்று வாக்களித்தான்.

இகுளிக்கிழவன் மகிழ்ந்து நன்றி சொன்னான்.

``பாறைகளுக்குள் நுழைந்துகிடக்கும் வேர், அதற்குரிய மரம் பட்டுப்போனவுடன் தானும் உயிரற்றுப்போகும். ஆனால், ஊழிப் பாறைக்குள் ஓடும் வேர், மரம் பட்டுப் போனவுடன் தானும் பட்டுப்போகாது. மாறாக, ஊழிக்கல்லின் குணமெய்யும். பனை மரத்தீக்கிபோலப் பாறையீக்கியாக அது மாறிவிடும். அதை எடுத்து வேண்டிய நீளத்துக்கு உடைத்து அம்பாகப் பயன்படுத்துவோம். அதன் பெயர்தான் `கல்லூழி வேர்’.”

இகுளிக்கிழவன் சொன்னதை வியப்போடு கேட்ட தேக்கன், ``பனையீக்கிபோல் நீண்டிருக்கும் என்றால் இரும்பை உருக்கி நீட்டியதுபோல்தானே இருக்கும். அதை எப்படிச் சுருளம்பு என்று சொல்கிறீர்கள்?”

இகுளிக்கிழவன் சொன்னான், ``கல்லூழி வேரில் துளியளவு ஈரம் பட்டதும் சுருண்டு கொள்ளும். எனவே, இந்த அம்பு மனிதனைத் தைத்து உள்ளுக்குள் போகும்போதே குருதியின் ஈரத்தில் சுருண்டுவிடும். அதன் பிறகு அதை எடுக்க முயன்றால் எலும்பும் சதையும் பிய்த்துக் கொண்டுதான் வெளிவரும். அதனால்தான் சாவுப் பறவையை எங்களால் வீழ்த்த முடிகிறது” என்றான்.

இந்தச் செய்தியே மிரட்சியை ஏற்படுத்தியது. கிழவன் சொன்னான், ``ஒரே நேரத்தில் ஆறு அம்புகளை விரல் இழுக்கும் நாண் பிடியில் பொருத்தி எய்ய முடியும். அந்த ஆறு அம்புகளின் மொத்தக் கனமும் நீங்கள் பயன்படுத்தும் அம்பின் கனத்தில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கும்” என்றான்.

தங்களின் குதிரைகள் நின்றிருந்த மேட்டின் அருகில் வந்தனர். தேக்கன் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். எங்கும் விண்மீன்கள் நிறைந்திருந்தன. குறுங்காது முயலின் குருதியில் தோய்ந்த நாணில் வைத்து கல்லூழி அம்புகளை எய்ய, காற்று அவற்றைச் சுமந்து சென்று வெளி முழுவதையும் தைக்க, கசியத் தொடங்கும் குருதித்துளிகளால் நிறைந்திருந்தது வானம்.

``உங்களுக்குத் தேவையான அம்புகள் அனைத்தும் நாளை அதிகாலை கிடைக்கும்” என்றான் இகுளிக்கிழவன்.

மிகுந்த நன்றியோடு வணங்கிவிட்டு இருவரும் குதிரையில் ஏறினர்.

புறப்படுகிறவர்களைப் பார்த்து இகுளிக்கிழவன் சொன்னான், ``அழித்தொழிக்கப்படும் உயிரினம் எதுவும் சமவெளியிலிருந்து மலைமேல் ஏறவிடக் கூடாது.”

ள்ளிரவுக்கு முன்பே இரலி மேட்டுக்கு வந்து சேர்ந்தனர் வாரிக்கையனும் தேக்கனும். அவர்களின் வரவை எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். முறியன் ஆசானிடம் வெக்கை நிறைந்த அந்த நிலத்தின் தன்மையை விளக்கினான் தேக்கன். `நடுப்பகலுக்குப் பிறகு வீரர்கள் யாராலும் நீரின்றி அந்த நிலத்தில் நிற்க முடியாது’ என்று இகுளிக்கிழவன் சொன்னதைக் கூறினான்.

போர்க்களத்தில் நீர் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. காடுகளாக இருந்தால் ஓரவத்திக்கொடி எங்கும் இருக்கும். மேலும் கீழும் ஒரே நேரத்தில் வெட்டினால் ஒரு முழக்கொடியில் மூன்று ஆள் குடிக்கும் அளவுக்கு நீர் இருக்கும். ஆனால், சமவெளி நிலத்தில் என்ன செய்வது எனச் சிந்தித்த முறியன் ஆசான், நீர்வேலி படர் கொடிகளை வெட்டி வரச் சொன்னார். வெட்டி எடுக்க இரவோடு இரவாக ஆள்கள் போயினர். 

நாகக்கரட்டிலிருந்து படைவீரர்கள் அனைவரும் குளவன்திட்டின் அடிவாரத்துக்கு இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். பாரியிடம் கல்லூழி வேரைப் பற்றி வாரிக்கையன் சொன்னார். ``இப்படியோர் அம்பு இருக்கிறதா?!” என்று வியந்தான் பாரி.

``கருமணல், ஈக்கிமணல் ஆகியவற்றின் தன்மை என்ன?” என்று கேட்டான். இகுளிக்கிழவன் சொன்னதை விளக்கிக் கூறினார் வாரிக்கையன். மணலீக்கிகளை நம்முடைய ஆயுதமாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி சிந்தித்தான் பாரி. இகுளிக்கிழவன் சொன்ன ஒவ்வொரு சொல்லிலிருந்தும் காக்கும் மருந்தை முறியன் ஆசானும், தாக்கும் ஆயுதத்தை வேள்பாரியும் உருவாக்கத் தொடங்கினர். அவர்களுக்குக் கிடைத்ததென்னவோ நள்ளிரவு கழிந்த மிச்சப்பொழுதுதான். ஆனாலும் அவர்களால் அதைச் செயல்படுத்த முடிந்தது. புதிய ஒன்று கிடைக்கிறது என்ற மகிழ்வே ஆற்றலைப் பல மடங்கு  பெருக்கும்.

பறம்பின் ஆற்றல் பல்கிப்பெருகிக் கொண்டிருந்தது. களப்போர் என்பது பறம்புக்குப் புதிது. தாக்குதல் மட்டுமன்று, ஒருங்கிணைப்பும் ஒத்திசைவும் மிக முக்கியம். அதை உருவாக்க, புதிதாகச் செய்யவேண்டியது என்ன என்பதே பாரியின் சிந்தனையாக இருந்தது.

நள்ளிரவு கடக்கும் முன்னே கருங்கைவாணன் முழுத் திட்டமிடலையும் முடித்திருந்தான். வாள்படையின் தளபதி சாகலைவனிடம் பன்னிரு சேனைவரையர்கள் இருந்தனர். ஒவ்வொரு சேனைவரையனும் தனக்குக் கீழ் பன்னிரு சேனைமுதலிகளைக்கொண்டிருந்தான். ஒவ்வொரு சேனைமுதலியின் கீழும் இருநூறு படைவீரர்கள் இருந்தனர்.

83p5_1530528415.jpg

போர் என்பது. பயிற்சிபெற்ற வீரர்களின் களம். எந்த ஒரு தாக்குதலையும் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரும்போது இயல்பிலேயே அதன் ஆற்றல் பன்மடங்கு பெருகிநிற்கும். வேந்தர் படையின் வலிமையே போர்க்களச் செயல் பாட்டில் அது கொண்டிருக்கும் இணையற்ற அனுபவம்தான். ஒவ்வொரு சேனைமுதலியும் தனித்த முரசங்களையும் பதாகைகளையும் கொண்டிருந்தனர்.  இருநூறு பேர்கொண்ட தனது படை, தாக்குதலை எப்போது தொடங்க வேண்டும் அல்லது தாமதிக்க வேண்டும், முன்னேறுவது அல்லது நின்ற இடத்திலேயே நிலைகொள்வது, எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் அல்லது பின்வாங்க வேண்டும் என எல்லா வற்றையும் தாக்கும் களத்தின் செயல்பாடு களுடனேயே செய்து முடிக்கக்கூடிய பயிற்சியைக் கொண்டவர்கள். முரசுகள் எழுப்பும் ஓசைகளுக்கு ஏற்ப அவர்கள் தங்களின் செயல் பாடுகளை அமைத்துக்கொள்வர். போர்ப்பயிற்சி என்பதன் சாரம் அதுதான்.

போர்க்களத்தில் ஒரு படை பின்னோக்கி நகர்வது என்பது, பின்வாங்கல் ஆகாது. ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் உத்தியின் பகுதியே ஆகும். எனவேதான், பயிற்சிகொண்ட படை எளிதில் களத்தை விட்டுச் சிதைந்துவிடாது. படைப்பிரிவில்  ஒவ்வொரு வீரனும் மாவீரனாக இருக்கவேண்டிய தேவையேதும் இல்லை. உத்தரவுகளையும் ஒழுங்குகளையும் பின்பற்றும் ஒருவனாக இருந்தால் மட்டுமே போதுமானது. அவன் குறைந்தளவு ஆற்றலைக் கொண்டவனாக இருந்தாலும் போதும். அவனது திறன், படையின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது. ஏனென்றால், இந்தத் தாக்குதல் முறையே ஒன்றையொன்று இறுகப் பின்னிய சங்கிலித் தொடர்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்ணில் உரசி நகரும் சங்கிலி எதை நோக்கி நகர்கிறது என்பதை அந்த இடத்திலிருந்து பார்க்கும் ஒருவனால் தீர்மானிக்க முடியாது.  அது எங்கோ போய்க்கொண்டிருக்கிறது என்றுதான் நினைப்பான். ஆனால், இறுதியில் அது தனது காலை இறுக்கும்போதுதான் ஆபத்தை உணர்வான்.

எண்ணற்ற  கண்ணிகளால் இணைக்கப்பட்ட சங்கிலித்தொடரைப் போர்க்களம் எங்கும் வீசியெறிந்துவிட்டு விடியலுக்காகக் காத்து நின்றான் கருங்கைவாணன். ஐந்து தளபதிகளும் அறுபது சேனைவரையன்களும் எழுநூற்றி இருபது சேனைமுதலிகளும் அவர்களின் கீழ் இயங்கும் எண்ணிலடங்கா வீரர்களும் பெருஞ் சங்கிலித் தொடரின் கண்ணிகளாக இறுகப் பொருத்தப் பட்டிருந்தனர். மொத்தப் படையின் அசைவு களையும் தன் உத்தரவுகளால் துல்லியமாக இயக்கக்கூடியவனாக நிலைகொண்டிருந்தான் கருங்கை வாணன்.

பொழுது விடிந்தது. தட்டியங்காட்டுக்குள் திசைவேழரின் தேர் வந்து நின்றது. நாழிகை வட்டில் வைக்கப்பட்டிருந்த பரண்மீது ஏறினார் திசைவேழர். இரு பக்கங்களிலும் நின்றிருந்த அவரின் மாணவர்கள், அவர் மேலேறுவதற்கு உதவிசெய்தனர்.

பரண் மேலேறி நின்று பார்த்தார். நேரெதிரே கதிரவன் சுடர் வீசி மேலெழுந்தான். செந்நிறக் கீற்றுகளின் நிறம் மாறிக்கொண்டிருந்தது. கதிரவனுடைய ஒளிக்கைகளின் நிறம் பார்த்தே நாழிகையைச் சொல்ல முடியும் அவரால். கண்களை மூடி இரு கைகளைக் குவித்துக் கதிரவனை வணங்கினார்.

தலையை மெள்ளத் திருப்பி, படைகளைப் பார்த்தார். அவரின் பார்வை விளிம்புக்கு அப்பாலும் பெருகிக்கிடந்தது வேந்தர்படை.

மூஞ்சலில் தனது கூடாரத்தில் அமர்ந்திருந்தார் குலசேகரபாண்டியன். அவரது பார்வையில் விரிக்கப்பட்ட தோல் வரைபடத்தில் தட்டியங் காட்டுப் பரப்பு முழுவதும் குறியீடுகளால் நிரம்பி யிருந்தது. மூன்று மெய்க்காவலர்களும் இரண்டு சேனைவரையர்களும் உடன் நின்றுகொண்டிருந்தனர். படைப்பிரிவின் எல்லா நகர்வுகளும் முன்தீர்மானிக்கப்பட்டவையாக இருந்தன.

இந்த நிலம் இதுவரை கண்டிராத பெரும் படையின் தாக்குதலை, வரைபடத்தைப் பார்த்தபடி குலசேகரபாண்டியன் உச்சரிக்கும் சொற்களே தீர்மானித்தன. அவர் சொல்லப் போகும் சொற்கள் கருங்கைவாணனைச் சென்றடைய எத்தனை இமைப்பொழுதுகள் ஆகும் என்பதைக் கணித்திருந்தான் தலைமைக்கணியன் அந்துவன்.

புதிய அமைச்சன் ஆதிநந்தி வலதுபுறமும் அந்துவன் இடதுபுறமும் நிற்க, வரைபடத்தை உற்றுக்கவனித்தபடி இருந்தார் குலசேகர பாண்டியன். இந்தப் போருக்காகப் பாண்டிய நாட்டின் முதற்படைப் பிரிவு இங்கு வந்து ஓராண்டு ஆகப்போகிறது. இவ்வளவு நெடிய காலம் காத்திருந்து, திட்டமிட்டு, மூவேந்தர்களையும் அணி சேர்த்து, வலிமையைக் கூட்டி, மலையை விட்டுக் கீழிறங்கி வர வாய்ப்பே இல்லை என்று சொல்லப்பட்ட பாரியை சமதளத்தில் இறங்கிப் போரிடும் சூழலை உருவாக்கியதே குலசேகரபாண்டியனின் பெருவெற்றியாகச் சொல்லப்பட்டது. வெற்றிப் புகழுரைகள் அவன் செவிகளில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன. ஆனாலும் கண்ணிமைக்காமல் வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் விரிந்துகிடக்கும் முழுப் படையையும் பார்த்துக்கொண்டிருந்தான் வேள்பாரி. குளவன்திட்டின் உச்சியில் நின்றிருந்தான் அவன். அவனது வலதுபக்கம் இகுளிக்கிழவனும் இடதுபக்கம் காலம்பனும் நின்றிருந்தனர். அவனுக்குப் பின்னால் கூவல்குடியின் வீரர்கள் நின்றிருந்தனர்.

போர்க்களத்தின் இடதுபுறம் வேந்தர்படை நின்றிருந்தது. பரவிக்கிடக்கும் படையின் இறுதி எல்லையில் சிறிதாகத் தெரிந்தன கூடாரங்கள். அதுதான் மூஞ்சல். அதன் உள்ளேதான் நீலன் இருக்கிறான். பாரியின் கண்கள் அந்த இறுதி எல்லையில் நிலைகுத்தி நின்றன.

மூஞ்சலுக்கு நேர் மேற்கே நாகக்கரட்டின் உச்சியில் வாரிக்கையன் நின்றிருந்தார். குளவன்திட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் இடையில் கூவல்குடியினர் ஒலிப்பின்னலை உருவாக்கினர். பெரும் மலைத்தொடர்களையே துல்லியமான ஒலிக்குறிப்புகளால் இணைக்கக்கூடிய அவர்களுக்கு, சில காதத்தொலைவு கொண்ட இந்த இடைவெளி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. குளவன்திட்டிலிருந்து நாகக்கரடு வரை அணிவகுத்து நிற்கும் வேந்தர்படையின் தன்மையை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் வேள்பாரி.

பரண்மேல் நின்றிருந்த திசைவேழர், நாழிகை வட்டிலை உற்றுப்பார்த்தபடி இருந்தார். அவரது திசை நோக்கி நீண்டுகிடந்த நாழிகைக்கோலின் நிழல் சிறிது சிறிதாக உள்வாங்கியது. அவர், கண்களைச் சுருக்கிப் பார்த்தபடி இருந்தார். பரப்பப்பட்ட மணலில் துகள்களுக்கு இடையே ஏறி இறங்கிப் பின்வாங்கிக்கொண்டிருந்தது நிழல். ஐந்தாம் நாழிகையைக் குறிக்கும் கோட்டை நோக்கிச் சுருங்கி உள்ளிழுத்து வந்து சேர்ந்தது. மஞ்சள் பூசிய கருநிழல் சிறுகோட்டைத் தொட்டதும், இமைப்பொழுதும் இடை வெளியின்றிக் கையை உயர்த்தினார். அவரின் கை அசைந்தபோது முரசுகளின் பேரொலி எங்கும் எதிரொலித்தது. இருபுறங்களிலும் நிற்கும் எண்ணற்ற பரண்களிலிருந்து முரசொலி எழுந்தபோது நிலமெங்குமிருந்து வெடித்துக் கிளம்பியது வீரர்களின் பேரோசை.

தட்டியங்காட்டுப் போர் தொடங்கியது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீரயுக நாயகன் வேள்பாரி - 91

 

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

மூவேந்தர்களின் கூட்டுப்படையில் மிகுவலிமைகொண்டது குதிரைப்படை. அதன் ஆற்றல் அளவிடற்கரியது. திறன்கொண்ட போர்க்குதிரைகள் அலையலையாய் அணிவகுத்து நின்றன. கருங்கைவாணனின் திட்டப்படி பறம்புப்படையை நிலைகுலையச் செய்யப்போவது இந்தக் குதிரைப்படையே. அதற்குப் பெருவீரன் உறுமன்கொடி தலைமையேற்றிருந்தான்.

உறுமன்கொடியின் கணிப்புப்படி வேந்தர்படையின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், இருபதில் ஒரு பங்குக் குதிரைகள்கூடப் பறம்பில் இருக்க வாய்ப்பில்லை. எனவே, பறம்புப்படையை வாரிச்சுருட்டிவிடும் மனநிலையில்தான் முரசின் ஓசையைக் கேட்டதும் தாக்குதலுக்கு விரைந்தான். நேரடித் தாக்குதல், திசைதிருப்பித் தாக்குதல், முன்படையின் சுழற்சிக்கேற்ப பின்படை சுற்றுதல் என, குதிரைப்படைக்குரிய எண்ணற்ற போர் உத்திகள் இருந்தாலும், அவை எவற்றையும் திட்டமிட வேண்டிய தேவையில்லை எனக் கருதினான். வலிமையோடு ஏறிப்பாயும் தனது படையின் முன் பறம்புப்படையால் நிலைகொள்ளவே முடியாது. தன் குதிரைகளின் மூன்றாம் அலைப்பாய்ச்சலில் பறம்பின் குதிரைப்படை முற்றாக நிலைகுலையும் எனக் கணித்தான்.

83p2_1531136429.jpg

போர் என்பது, ஆயுதங்களின் வழியே இறுதியாகத்தான் நடக்கிறது. அதற்கு முன் மனதின் பல தளங்களில் அது நிகழ்த்திப்பார்க்கப்படுகிறது. எண்ணற்ற வாய்ப்புகளின் வழியே அந்தத் தாக்குதலை நிகழ்த்திப்பார்ப்பவனால்தான் சிறந்த தளபதியாகக் களத்தில் வினையாற்ற முடிகிறது. எண்ணங்களும் கணிப்புகளும் உத்திகளுமே போரைச் செயல்படுத்துகின்றன. உறுமன்கொடியின் கணிப்பில் ஏற்பட்ட நம்பிக்கை அவனை உத்திகளின்பால் நேரத்தைச் செலவழிக்க அனுமதிக்கவில்லை. நேர்கொண்டு தாக்கி அழிக்கும் முறையே போதுமானது எனக் கருதினான்.

வேந்தர்களின் குதிரைப்படையின் வலிமையை நன்கு அறிவான் வேள்பாரி. மூவேந்தர்களின் ஒருங்கிணைந்த படையில் குதிரைகளின் எண்ணிக்கையும் அவற்றின் ஆற்றலும் இதற்கு முன் கண்டிராத ஒன்றாக இருக்கப்போகிறது எனக் கணித்தான். அதனால்தான் பறம்பின் தரப்பில் குதிரைப்படையின் தளபதியாக இரவாதனை நியமித்தான்.

பறம்பின் தரப்பில் வலிமைமிகுந்த தாக்குதலை நடத்தப்போவது விற்படையே எனக் கணித்தான் கருங்கைவாணன். பறம்பின் தாக்குதலின்கூர்முனை, விற்படையில்தான் இருக்கிறது என எண்ணினான். அதனால்தான் மற்ற படைத்தளபதிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததைவிட அதிகமான சேனைவரையர்களை விற்படைத் தளபதி துடும்பனுக்கு வழங்கினான்.

பதினான்கு சேனைவரையர்களைக்கொண்ட துடும்பன், தனது உத்திகளின் மூலம் பறம்புப்படையை வீழ்த்த வீறுகொண்டு முன்னகர்ந்தான். உத்திகளின் தொடக்கம் மட்டுமே முன்முடிவாகிறது. அவற்றின் அடுத்தடுத்த கட்டங்களைக் களத்தின் போக்கே தீர்மானிக்கிறது.

முன்னேறிவரும் எதிரிகளின் விற்படையைச் சந்திக்கக் காத்திருந்தான் உதிரன். அவனது தலைமையில்தான் பறம்பின் விற்படை ஆயத்தநிலையில் இருந்தது. உதிரனும் நீலனும் பறம்பின் இணையற்ற தளபதிகள். தங்களது தாக்குதலின் மூலம் எதிரிகளை நிலைகுலையச் செய்பவர்கள். வாரிக்கையனும் சோமக்கிழவனும் முதல் தலைமுறையினர். தேக்கனும் கூழையனும் இரண்டாம் தலைமுறையினர். பாரியும் முடியனும் மூன்றாம் தலைமுறையினர். உதிரனும் நீலனும் நான்காம் தலைமுறையினர். இந்த நான்கு தலைமுறைப் போர் உத்திகளும் வீரமும் ஆற்றலும் இரு தோள்களிலும் இறங்கி நிற்கும் மாவீரர்களாக நீலனும் உதிரனும் இருந்தனர். ஆனால், நீலன் எதிரிகளால் சிறை யெடுக்கப்பட்டுள்ளான். அவனை மீட்கும் வரை பறம்புவீரன் எவனும் சோர்வடையப்  போவதில்லை. கைகளின் அயர்வை எவனும் உணரப்போவதில்லை.

உதிரன், அதனினும் கூடுதலான சினமேறியவனாக இருந்தான். இந்தப் போரை எதிரிகள் பாரியை வெல்ல நடத்துகின்றனர். ஆனால், பறம்புவீரர்களைப் பொறுத்தவரை இந்தப் போர் நீலனுக்காக நடக்கிறது. பறம்புக்கு அடைக்கலமாக வந்த அகுதையின் குலக்கொடியை ஒருபோதும் பறம்பு இழக்காது. எந்த நிலையிலும் நீலனை மீட்காமல் இந்தப் போர் முடிவுக்கு வராது. எதிரில் நிற்பது எண்ணிக்கையில் கணக்கிடவேண்டிய படையன்று; கொன்று முடிக்கவேண்டிய படை என்பது மட்டுமே உதிரனுக்குத் தெரிந்தது. அதற்காக மலைமக்களின் மாபெரும் ஆயுதமான வில்லை ஏந்தி நின்றது உதிரனின் படை. போர் தொடங்க முரசு முழங்கியபோது காற்றைக் கிழித்து எகிறின அம்புகள்.

83p1_1531136443.jpg

வேந்தர்படையின் பெருவீரர்கள் குவிந்துகிடப்பது வாள்படையில்தான். கவசம் பூண்டு, கேடயம் தாங்கி, வாள் ஏந்தி நிற்கும் வீரன் ஒருவன் பல்லாண்டுக்காலப் பயிற்சிக்குப் பிறகுதான் போர்க்களத்துக்கு வந்து நிற்கிறான். நிலைப்படையில் இல்லாமல் அவ்வப்போது திரட்டப்படும் வீரர்கள் யாரும் வாள்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதில்லை. வாள்போர், எளிய பயிற்சியால் கைகூடுவதில்லை.

எல்லாக் காலங்களிலும் நிலைப்படையில் நின்று செயலாற்றும் வீரர்களால் மட்டுமே போர்க்களத்தில் தன்முனைப்போடு வாள் சுழற்ற முடியும். மூவேந்தர்களின் நிலைப்படைகள் அனைத்தும் ஒன்றிணையும்போது வாள் உயர்த்தி நிற்கும் வீரர்கள் பெரும் எண்ணிக்கை கொண்டிருந்தனர். கருங்கைவாணனை மகா சாமந்தனாகக்கொண்ட இந்தப் பெரும்படையின் உயிர்நாடியான பகுதியாக வாள்படை விளங்குகிறது. எவ்வளவு கடினமான சூழலிலும் எதிரிகளின் படையைப் பிளந்து முன்னகர்வதில் வாள்படைக்கு இணைசொல்ல முடியாது. அந்தப் பெரும்படைக்குச் சாகலைவன் தலைமையேற்றான்.

பறம்பின் தரப்பில் வாள்படைக்குத் தலைமைதாங்கியவன் தேக்கன். அவன்தான் எதிரியின் வலிமைமிகுந்த பகுதியை எதிர்கொள்ளப்போகிறவன். அவனிடம்தான் களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் பற்றி நீண்டநேரம் உரையாடினான் பாரி. வாள்படை, களத்தின் நடுப்பகுதியில் நிலைகொண்டிருந்தது. அதுவே தங்களுக்கு எல்லா வகைகளிலும் வாய்ப்பானது எனக் கருதினான் கருங்கைவாணன். பறம்பின் படையை நடுவில் பிளந்து உள்நுழையும்போது மொத்தக் கட்டுக்கோப்பும் விரைவாகக் குலைந்து சரியும் என மதிப்பிட்டான். அவனது கணிப்பைச் செயல்படுத்த வாளைச் சுழற்றி முன்னேறினான் சாகலைவன்.

வேந்தர்களின் தேர்ப்படைக்கு நகரிவீரன் தலைமையேற்று நின்றிருந்தபோது அதை எதிர்கொள்ள, பறம்பின் தரப்பில் கூழையன் நின்றிருந்தான். தளபதி உச்சங்காரியின் தலைமையில் வேந்தர்களின் யானைப்படை நின்றிருந்தது. ஆனால், பறம்பின் தரப்பில் யானைகள் எவையும் இதுவரை களத்துக்கு வந்துசேரவில்லை.

திசைவேழரின் கையசைவும் போர்முரசின் அதிர்வும் வீரர்களின் பேரோசையுமாகப் போர் தொடங்கியபோது கருங்கைவாணனின் கண்கள் முன்கள நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தன. அவன் தனது பெரும்படையை மூன்றாகப் பகுத்திருந்தான்.

முதல்நிலைப் படை சீறிப்பாய்ந்து தாக்குதலைத் தொடங்கியது. தனது படையின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே முதல்நிலையில் நிறுத்தியிருந்தான். இரண்டாம்நிலைப் படை தேவைப்பட்டால் களம் இறங்க ஆயத்தமாக இருந்தது. மூன்றாம்நிலைப் படை எந்த வகையிலும் களமிறங்கும் சூழல் வராது எனக் கணித்திருந்தான். முதல்நிலைப் படையின் நடுவில் நின்றிருந்தான் அவன். இரண்டாம்நிலைப் படையின் இறுதிப்பகுதியில் சோழவேழனும் பொதியவெற்பனும் உதியஞ்சேரலும் நின்றிருந்தனர். அவர்களை அடுத்துதான் மூன்றாம்நிலைப் படை நின்றிருந்தது. அதைக் கடந்தே மூஞ்சல் இருந்தது. மூஞ்சலுக்குள்தான் குலசேகரபாண்டியன் இருந்தார். அவருக்கு அருகில் உள்ள கூடாரம் ஒன்றில் நீலன் கட்டப்பட்டுக்கிடந்தான்.

போர்க்களத்தின் தலைமைத் தளபதி தாக்குதலின் முகப்பில் நின்றால் அவனால் படையை வழிநடத்த முடியாது. ஆனால், தாக்குதலின் முகப்பில் தனது படை வெளிப்படுத்தும் ஆற்றலை உணர்ந்தவனாக இருக்க வேண்டும். அதற்குத் தகுந்தே போர்க்களத்தில் தளபதி இருக்கவேண்டிய இடம் தீர்மானமாகிறது. கருங்கைவாணன், தனது வாழ்வின் பெரும்பகுதியைப் போர்க்களத்தில் கழித்தவன். களத்தாக்குதலின் தன்மையையும் வேகத்தையும் அவனால் ஓசைகொண்டே மதிப்பிட முடியும்.

தளபதியின் வலிமை, படையைக் கொண்டுசெலுத்துவதில் இருப்பதாக ஒருகாலத்தில் நம்பப்பட்டது. ஆனால், களப்போர் என்பது வீரமும் ஏமாற்றும் கலந்த ஒரு கலவை. தாக்குவதும் திரும்புவதும் பின்வாங்குவதும் சம முக்கியத்துவம் உள்ள செயல்பாடுகளே. ஆனால், இவையெல்லாம் சரியான ஒருவனின் கணிப்பின் வழியே நடந்தால் மட்டுமே அந்தப் படை வெற்றியைக் கொய்ய முடியும். கருங்கைவாணன், வேறு எந்த ஒரு தளபதியையும்விட நீண்ட போர் அனுபவம்கொண்டவனாக இருந்தான். இதுவரை எந்த ஒரு மனிதனின் உத்தரவுக்கும் இவ்வளவு எண்ணிக்கையிலான படைவீரர்கள் கீழ்ப்பணிந்து நின்றது கிடையாது. முதன்முறையாக அந்தப் பெரும்வாய்ப்பு கருங்கைவாணனுக்குக் கிட்டியுள்ளது. முப்பெரும் பேரரசர்கள் தன்னோடு போர்க்களத்தில் வாள் ஏந்தி நிற்கின்றனர். அனைத்தையும் உணர்ந்தாலும் எதன்பொருட்டும் கவனத்தைச் சிதறவிடாமல் முன்களத்தில் நிகழும் ஆயுதங்களின் உரசல் ஓசையை மதிப்பிடுவதிலேயே கவனமாக இருந்தான்.

83p4_1531136458.jpg

குளவன்திட்டின்மீது இருந்து போரைப் பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. பள்ளத்தாக்கு ஒன்றில் வெகுதொலைவிலிருந்து மரம், செடிகொடிகளை அசைத்துவரும் காற்று செங்குத்தாய் நிற்கும் கரும்பாறையின் மீது மோதுவதுபோல, நீண்டு நகர்ந்துவரும் வேந்தர்படை பறம்புப்படையோடு மோதியது.

பாரி தனது படையை மூன்று நிலைகளாகப் பிரிக்கவில்லை; ஒரே நிலையில்தான் வைத்திருந்தான். ஆனால், தாக்குதல் உத்தியை மூன்றாகப் பிரித்திருந்தான். போர், பகலின் இருபது நாழிகையில் நடக்கிறது. முதல் பத்து நாழிகையில் கடைப்பிடிக்க வேண்டிய உத்தியை ஒன்றாகவும், அடுத்த ஐந்து நாழிகைக்கான உத்தியை வேறொன்றாகவும், இறுதி ஐந்து நாழிகைக்கான உத்தியை மற்றொன்றாகவும் தீர்மானித்திருந்தான்.

தீர்மானம் என்பது, முன்திட்டமிடல் மட்டும்தான். எந்த ஒரு முன்திட்டமிடலும் வாய்ப்புகளை மையப்படுத்தியே வடிவமைக்கப்படுகிறது. வாய்ப்பற்றவற்றின் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் அதற்கு வடிவம்கொடுக்க முடிவதில்லை. அதனால்தான் களத்தின் தேவைக்கேற்ப புதிய முடிவுகளை விரைந்து எடுக்கும் தளபதி வெற்றியை அடைகிறான். பறம்பின் தளபதிகள் அனைவருக்கும் திட்டம் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. ஆனால், நிலைமை என்பது போர்க்களத்தில்தான் தீர்மானமாகிறது. அதற்குத் தகுந்த புதிய முடிவுகளை அவர்கள் எடுப்பதில் எந்தத் தடையுமில்லை. ஆனால் வேந்தர்படையில் முடிவெடுக்கும் அதிகாரம், கருங்கைவாணனுக்கும் அவனுக்கு மேலே இருப்பவர்களுக்கும்தான் இருந்தது; முன்களத்தில் நின்று போரிடும் தளபதிகளுக்கில்லை.

கருங்கைவாணன் கணித்ததுபோலவே வேந்தரின் குதிரைப்படை எகிறி முன்னேறியது. எதிரி தாக்குப்பிடித்து நிற்பான் என அவன் கணித்ததில் பாதியளவு நேரம்கூடப் பறம்புப்படையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அலையலையாய் வந்து எகிறின குதிரைகள். பறம்புவீரர்களால் முன் நுழைந்து உள்ளே புகமுடியாத அளவுக்கு வேகமும் அடர்த்தியும்கொண்டதாக இருந்தது வேந்தர்படை. அதன் தாக்குதலின் வேகமறிந்து திசையைத் திருப்பியது பறம்புப்படை.

பறம்புப்படை திரும்பத் தொடங்கியதும் பெருங்கூச்சலிட்ட உறுமன்கொடி, கையில் இருந்த வாளை இருமுறை சுழற்றிப் பேரோசை எழுப்பினான். அவனது ஓசையைக் கேட்டதும் குதிரைப்படையின் முரசொலிப்பாளன் முரசுகளை மாற்றி ஒலித்தான். பின் திரும்பும் பறம்புவீரர்களை வேந்தர்களின் குதிரைப்படை வீரர்கள் உற்சாகத்தோடும் ஆவேசத்தோடும் விரட்டத் தொடங்கினர்.

ஆறு அணிகளாகப் பிரிந்து படைவீரர்கள் பின்னோக்கிச் செல்ல உத்தரவிட்டிருந்தான் இரவாதன். அந்த உத்தரவு, போர் தொடங்கும் முன்பே திட்டமிடப்பட்டது. வேந்தர்களின் படையை மிகச் சிறிது நேரம் மட்டுமே எதிர்கொண்டு தாக்கிவிட்டு, கலைந்து பின்செல்ல வேண்டும் என்பது முன்முடிவு. பறம்புவீரர்கள் திட்டமிட்டதுபோலவே குதிரையைத் திருப்பினர். ஆனால், திரும்பிய வேகத்தில் குதிரைகளின் ஓட்டம் பலமடங்கு பெருகியது. மலை மேடுகளிலே பாய்ந்து போகும் பழக்கம்கொண்ட பறம்பின் குதிரைகள், கணநேரத்தில் உச்சவேகத்தை அடைந்தன. அவர்களை அளவற்ற வேகத்தில் விரட்டிவந்தது வேந்தர்படை.

விரட்டிச்செல்லத் தன் படைகளை அடுத்தடுத்து அனுப்பிக்கொண்டே இருந்தான் உறுமன்கொடி. இத்துடன் பறம்பின் குதிரைப்படை முழுமுற்றாக அழியவேண்டும் என்னும் ஆவேசத்தோடு படைகளுக்கு உத்தரவிட்டான்.

இரவாதன் கணித்ததைவிட மிகக் குறுகிய தொலைவிலேயே வேந்தர்படைக் குதிரைகள் வேகத்தை இழந்தன. பாய்ந்து முன்னகரும் கால்களால் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியவில்லை. தேங்கத் தொடங்கின.

`ஈக்கிமணலும் கூர்முனைகொண்ட கருமணலும் தகித்துக்கிடக்கும் நிலம் அது’ என்று தட்டியங்காட்டு மண்ணைப் பற்றி இகுளிக்கிழவன் சொன்னதும் பாரி முடிவுசெய்தான், வேந்தர்படைக் குதிரைகளின் குளம்புகள் இவற்றைத் தாங்காது என்று. பறம்பின் குதிரைகள் மலைக்காடுகளில் காலம் முழுமையும் அலைபவை. எனவே, அவற்றுக்கு சமவெளிக் குதிரைகளுக்குப் போடுவதுபோல கால் குளம்பில் அரைவட்ட வடிவிலான குளம்புக்குறடு போடுவதில்லை. பாறைகளின் கூர்முனை, குளம்பின் இதர பகுதியைக் குத்திக் கிழித்துவிடும். தொடக்க நாளில் இதற்கு மாற்று என்ன செய்வது என, பறம்பின் மருத்துவர்கள் தீவிரமாக ஆலோசித்தார்கள். அப்போதுதான் செம்புக்களிமண்ணைப் பூசுவது என முடிவானது. செம்புக்களிமண்ணைப் பாதக்குளம்பு முழுவதும் பூசினால், அது ஆமையின் ஓட்டைத் திருப்பிப் போட்டதுபோல குளம்பின் மேல் முழுமையாக உட்கார்ந்துகொள்ளும். பாறை வெடிப்புகளிலும் கூர்முனைக் கல்லிலும் நடந்தாலும் தாவினாலும் குளம்புக்கு ஒன்றும் ஆகாது. எல்லாவகையான கவசமாகவும் அது இருக்கும். அன்றிலிருந்து பறம்பின் குதிரைகள் அனைத்துக்கும் செம்புக்களிமண்ணே குளம்புப்பூச்சாகப் பூசப்படுகிறது.
ஆனால், சமவெளிக் குதிரைகளுக்கு இரும்பால் ஆன அரைவட்ட வடிவிலான குளம்புக்குறடுதான் அடிக்கப்படும். குளம்பின் நடுப்பகுதி எதுவும் அடிக்கப்படாமல் தன்னியல்பிலேயே இருக்கும். போர்க்குதிரைகள் வீரனைச் சுமந்தபடி பாய்ந்து முன்னத்திக் கால்களை ஊன்றும்போது நிலத்தின் தன்மைக்கு ஏற்ப குளம்பின் கால் பகுதி முதல் முக்கால் பகுதி வரை மண்ணுக்குள் புதைந்து மேலெழும். இது, ஈக்கிமணலும் கருமணலும் நிரம்பியுள்ள நிலத்தில் குதிரைகளை என்ன வகையில் பாதிக்கும் என்பது எளிதாகக் கணிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருந்தது.

அதனால்தான் குதிரைப்படையின் தளபதியாக எப்போதும் செயல்படும் கூழையனைத் தேர்ப்படைக்கு நியமித்துவிட்டு, இரவாதனைக் குதிரைப்படையின் தளபதியாக அனுப்பிவைத்தான் பாரி. வேந்தர்களின் வலிமைமிகுந்த படையான குதிரைப்படையை எவ்வளவு வேகமாகக் குறைக்கிறோமோ அவ்வளவு வேகமாக வெற்றியை நெருங்க முடியும். எனவே, குதிரைப்படையைச் சூறைக்காற்றின் வேகத்தில் அழித்தொழிக்கும் உத்தியைக் கடைப்பிடிப்பது என முடிவெடுத்தான் பாரி. அதற்குப் பொருத்தமானவன் இரவாதனே. அவனது வாள்வீச்சின் வேகம் யாராலும் எதிர்கொள்ள முடியாதது. சூளுர் வீரர்களின் படைத்தொகுப்பு முழுமையும் இரவாதனின் கீழே அணிவகுக்கச்செய்து மொத்தக் குதிரைப்படையையும் அவனிடம் ஒப்படைத்தான்.

83p6_1531136475.jpg

பறம்புவீரர்களை விரட்டிவந்த வேந்தர்களின் குதிரைப்படை, பாய முடியாமல் தேங்கத் தொடங்கியது. மேலே அமர்ந்திருந்த வீரர்கள் அந்தக் குதிரைகளை அடித்து ஓட்ட முனையும்போது முன்காலைத் தூக்கி வைக்க முடியாமல் அவை திணறின.

இரவாதனும் அவன் தோழர்களும் கணித்த இடத்தைவிடச் சற்று முன்னதாகவே வேந்தர்களின் குதிரைப்படை தேங்கத் தொடங்கியதும், அவர்களை நோக்கித் தங்களின் குதிரைகளைத் திருப்பிய பறம்பு வீரர்கள், குதிரைகளின் கடிவாளங்களைச் சுண்டி இழுத்தனர். எதிரிகள், தங்களை நோக்கி வருவது அறிந்து வேந்தர்படை வீரர்கள் தங்களின் குதிரைகளை வேகவேகமாக இயக்க முற்படும்போது மின்னல் வேகத்தில் வந்த வாள்களால் தலைகள் சரிந்துகொண்டிருந்தன. இயங்க முடியாத குதிரைகளின் மேலிருந்து திணறிய வீரர்கள் அடுத்தடுத்த கணங்களில் குதிரையிலிருந்து சரிந்தனர்.

விரட்டிச் சென்ற தங்களின் குதிரைப்படை, எதிரியை முழுமுற்றாக அழித்துத் திரும்பும் எனப் பார்த்திருந்தான் உறுமன்கொடி. சிறிது நேரத்திலேயே பறம்பின் கொடி ஏந்திய குதிரைவீரன்தான் முன்னோக்கிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தான்.  உறுமன்கொடிக்கு, ஒரு கணம் எதுவும் புரியவில்லை. `பன்னிரு சேனைமுதலியைக்கொண்ட முதற்படைப்பிரிவு எங்கே போனது... ஏன் யாரும் மிஞ்சவில்லை?’ எனச் சிந்திக்கும் முன், அடுத்த சேனைவரையனின் தலைமையிலான பன்னிரு படைப்பிரிவுகளும் அடுக்கடுக்காகத் தாவிப் பாய்ந்து முன்னேறின.

இரவாதன் குழு, மோதல்போக்கைச் சற்றே வெளிப்படுத்திவிட்டு, குதிரைகளை மீண்டும் பின்னோக்கித் திருப்பியது. தங்களின் முதற்பிரிவை அழித்த எதிரிகளைப் பழிதீர்க்கும் எண்ணத்தில் வேந்தர்களின் படைவீரர்கள் குதிரைகளை விரட்டி வந்தனர். ஈக்கிமணல் குதிரைகளின் குளம்புகளைக் கிழித்து உள்ளிறங்கும்போது பறம்பின் வாள்கள் அதைவிட ஆழமாக வீரர்களின் உடல்களுக்குள் இறங்கிக்கொண்டிருந்தன. குதிரைப்படையை அடுத்தடுத்து விரைவுபடுத்த ஆயத்தமாக இருந்தான் உறுமன்கொடி.

விற்படைத் தளபதி உதிரனின் உத்தரவுப்படி முதல்நிலைத் தாக்குதலில் அளவில் சிறுத்த அம்புகளையே பயன்படுத்தினர் வீரர்கள். நாண்களின் விசை கூட்டிக்கொடுக்க, அடுத்தடுத்து வெவ்வேறுநிலை அம்புகளைப் பயன்படுத்தினர். பறம்புவீரர்கள் தொடுக்கும் அம்புகள் எதிரிகளின் மீது ஈட்டியைப்போலப் பாய்ந்தன. அவற்றின் வேகமும் வலிமையும் ஒப்பிட முடியாததாக இருந்தன.

எதிரிகளைத் தங்களின் அம்புகளால் வலிமையோடு தாக்கத் தேவையான தொலைவுக்கு முன்செல்ல வேந்தர்படையால் முடியவில்லை. ஏனென்றால், அதைவிட ஒரு பங்கு அதிகமான தொலைவிலிருந்தே பறம்புவீரர்களால் வலிமையான தாக்குதலைத் தொடுக்க முடிந்தது.

பறம்புவீரர்கள் எய்யும் அம்புகள் சீறிப்பாய்ந்தவண்ணமிருக்க, வேந்தர்படையின் அம்புகள் பலவும் பாதிப்பு ஏதுமின்றிப் பணிந்துகொண்டிருந்தன. உதிரன் தனது படைக்குக் கொடுத்த உத்தரவு, வலிமை குறைந்த அம்புகளை மட்டுமே தொடக்கநிலையில் பயன்படுத்த வேண்டும் என்பது.

துடும்பன் இதை எதிர்பார்த்துதான் இருந்தான். பறம்புவீரர்களை விற்போரில் வீழ்த்த முடியாது என அவனுக்கு நன்கு தெரியும். அவர்களின் தாக்குதல் மற்ற படைப்பிரிவின் பக்கம் போய்விடாமல், தங்களை நோக்கியே இருக்குமாறு பார்த்துக்கொள்வதுதான் துடும்பனுக்குக் கருங்கைவாணனின் உத்தரவு. எனவே, தாக்கியவாறு முன்னகரும் பறம்புப்படையைச் சமாளித்தபடி சற்றே பின்வாங்கிக்கொண்டிருந்தான் துடும்பன்.

வேந்தர்களின் வாள்படை, முன்னோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. தேக்கன் தலைமையிலான பறம்புப்படை, முன்வகுத்த திட்டத்தின்படி பின்நகர்வதற்கான உத்தியையே பின்பற்றின. சாகலைவன் உற்சாகப்பெருக்கில் தனது படையை முன்னகர்த்திக்கொண்டிருந்தான்.

தேர்ப்படையின் தளபதி நகரிவீரனுக்கு, தனக்கு முன்னால் நிற்பதை ஒரு படை எனக் கருதவே மனமில்லை. தாக்குதலுக்கான வடிவத்தில் வலிமை மிகுந்த தேர்கள் வரிசை வரிசையாக முன்னகர்ந்துகொண்டிருந்தன. ஆனால், பறம்பின் தரப்பில் நின்றவற்றை `தேர்’ என்றே வகைப்படுத்த முடியாது எனத் தோன்றியது. உழவு வண்டிகளைப் போர்த்தேர்களாக மாற்றி எடுத்துவந்துள்ளனர் எனக் கருதினான். வலிமையற்ற அவற்றின் தன்மை பார்வையிலேயே தெரிந்தது.

தேரின் மீது நிற்கும் வீரன்தான் மற்ற அனைத்துப் படைவீரர்களையும்விடத் திறன்மிக்கவனாக இருக்க வேண்டும். வில், வாள், வேல் ஆகிய மூன்று ஆயுதங்களையும் கையாளத் தெரிந்த பெருவீரன் மட்டுமே தேரின் மீது நின்று போரிட முடியும்.

அதைவிட முக்கியம், போரிடும் வீரனுக்கும் தேரை ஓட்டும் வளவனுக்கும் இருக்கவேண்டிய ஒத்திசைவு. குதிரைகளை அசையவிடாமல் நிறுத்திவைக்கவும் இசைவுக்கு ஏற்ப திருப்பிவைக்கவும் அவன் வீரனின் மனமறிந்து செயல்படுபவனாக இருக்க வேண்டும். போர்நிலம், எவ்விடமும் சமதளத்தைக் கொண்டதன்று; மேடுபள்ளங்களும் ஏற்ற இறக்கங்களும்கொண்ட பாழ்நிலமாகத்தான் இருக்கும். எனவே, தேரைச் சிறிது முன்னேற்ற வேண்டுமானாலும் குதிரைகளை விரைந்து இழுக்கச் செய்து முன்னகர்த்த வேண்டும். சுண்டி நகரும் தேரின் மீது நின்று போரிடுபவன் ஆயுதங்களைக் கையாளுதல் எளிதன்று.

சக்கரங்களை உருட்டுவதையும் உருட்டாமல் நிறுத்துவதையும் திறம்படச்செய்கிற வளவனின் கையில்தான் மேலே நின்று போராடும் வீரனின் முழு ஆற்றலும் இருக்கிறது.

நாக்குக்கு மத்தியில் கடைவாயிலில் பொருந்தியிருக்கும் கடிவாளத்தை எந்த நேரமும் இழுத்துப் பிடித்தபடியே இருக்கும் சூழல் ஏற்பட்டால், எந்தக் குதிரையும் தனது ஒழுங்கை ஒரு துள்ளலில் உதறியெறிந்துவிடும். அதை உணர்ந்தவனாக வளவன் இருந்தால் மட்டுமே முழுநாளும் போர்க்களத்தில் கட்டுப்பாடு இழக்காமல் குதிரையைச் செலுத்த முடியும். வளவன் தேரை நிறுத்தும் தன்மையைப் புரிந்துகொண்டு தாக்குதலை முன்னெடுக்கும் குணமும் புரிதலும் போரிடும் வீரனுக்கு வேண்டும்.

83p7_1531136507.jpg

குதிரையின் மனநிலை, வளவனின் திறமை, வீரனின் வலிமை ஆகிய மூன்றும் இணைந்தே தேர்ப்படையின் ஆற்றலாய் வெளிப்படுகிறது. கூழையன் தனது படையை சீரான வேகத்தில் தாக்குதலைத் தொடுக்க ஆணையிட்டி ருந்தான். ஆனால், வேந்தர்களின் படைத்தளபதி நகரிவீரன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி முன்னேறப் பாய்ந்து செல்ல உத்தரவிட்டான்.

நாழிகைப்பரணின் நேர் எதிரே கண் பார்வையின் கடைசிப் பகுதியைத்தான் யானைப்போருக்கான களமாக திசைவேழர் ஒதுக்கியிருந்தார். தட்டியங்காட்டின் கடைக்கோடிப் பகுதி அது. உச்சங்காரியின் தலைமையில் வேந்தர்களின் யானைப்படை நின்றிருந்தது. பறம்பின் தரப்பில் எந்த ஒரு யானையும் களத்துக்கு வரவில்லை.

நீண்டநேரத்துக்குப் பிறகு ஒரே ஒருவன் மட்டும் குதிரையில் போர்க்களம் நோக்கி வந்தான். வருவது யார் என உற்றுப்பார்த்திருந்தான் உச்சங்காரி.

வந்து நின்றான் வேட்டூர்பழையன். யானைப்படையை எதிர்த்துத் தன்னந்தனியாக ஒரு கிழவன் குதிரையில் வந்து நிற்பது எதனால் என யாருக்கும் புரியவில்லை.

வேட்டூர்பழையன் சொன்னான், ``பறம்பின் தரப்பில் யானைப்படை ஏதுமில்லை.”

உச்சங்காரி அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். போர்விதிகளின்படி யானைப்படை யானைப்படையோடு தான் மோத வேண்டும். அப்படியென்றால் என்ன செய்வது எனச் சிந்தித்த அடுத்த கணம் உச்சங்காரி முடிவெடுத்தான், ``அப்படியென்றால் நாங்கள் பறம்புக்குள் நுழைவோம்.”
வேட்டூர்பழையன் கைகளை விரித்துக் காட்டிச் சொன்னான், ``உங்களின் விருப்பம்.”

அதே வேகத்தோடு உச்சங்காரி தனது படைகளுக்கு ஆணை பிறப்பிக்க ஆயத்தமானான். அதற்குள் அருகில் இருந்த இரண்டாம்நிலைத் தளபதி சொன்னான், ``தளபதி, நம்மைச் சிக்கவைத்து அழிக்கும் திட்டம் இதற்குள் இருப்பதாகக் கருதுகிறேன். எனவே, அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.”

வட்டாற்றுத் தாக்குதலில் சோழனின் யானைப்படையை முழுமுற்றாக அழிந்த கதை அனைவருக்கும் தெரியும். அறிவிப்புக்கு ஆயத்தமான உச்சங்காரி, சற்றே நிதானம்கொண்டான். கருங்கைவாணனை ஆலோசித்து, பிறகு முடிவெடுக்கலாம் என நினைத்தான்.

முதல்நிலைப் படையின் இறுதிப்பகுதியில் நின்றிருந்த கருங்கைவாணனுக்கு ஒவ்வொரு திசையிலிருந்தும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அவனிடமிருந்து வேந்தருக்குச் செய்திகள் சென்றவண்ணம் இருந்தன. சம வலிமைகொண்ட இரு படைகள் மோதினால், மோதலின் தொடக்கமே மொத்த ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு நிலைமை அப்படியன்று. சின்னஞ்சிறு படை ஒன்று மாபெரும் படையின் மீது தாக்குதல் தொடுத்துக்கொண்டிருக்கிறது. எனவே, பெரும்படையின் தலைமைத் தளபதி மிக நிதானத்தோடு வந்துசேரும் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

எதிர்பார்த்ததைப்போல வாள்படையும் தேர்ப்படையும் முன்னேறிக்கொண்டிருந்தன. சாகலைவனும் நகரிவீரனும் அடுத்தடுத்த செய்தியை அனுப்பிக்கொண்டிருந்தனர். விற்படையின் தளபதி துடும்பனும் வகுக்கப்பட்ட உத்தியின் அடிப்படையில் எதிரியின் தாக்குதலைக் கையாண்டுகொண்டிருந்தான். மூன்று படைப்பிரிவுகளிலும் எத்தனை சேனைமுதலிகள் முன்களத்தில் போரிட்டுக்கொண்டிருக்கின்றனர் என்ற கணக்கை அருகில் இருந்தவர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.

கருங்கைவாணன் பெரிதும் எதிர்பார்த்திருந்த குதிரைப்படையின் முன்னேற்றம் பற்றி இன்னும் செய்திகள் வந்துசேராமல் இருந்தன. அங்கிருந்துதான் முதல்நிலை வெற்றியை அவன் எதிர்பார்த்திருந்தான். அந்த வெற்றியின் அடிப்படையில்தான் அவனது திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. பறம்பின் மொத்தப் படைவீரர்களின் எண்ணிக்கையைவிட வேந்தர்களின் குதிரைப்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, முதல்நிலையில் பறம்புப்படை பின்வாங்கிவிட்டால் உறுமன்கொடி தனது வலிமையான குதிரைப்படையைக்கொண்டு பறம்புப்படையை அரைவட்டச் சுற்றில் வளைக்கும் வியூகத்தைத் திட்டமிட்டிருந்தான்.

இடதுமுனையிலிருந்து வந்து சேர்ந்த செய்தி, யானைப்படை பற்றியதாக இருந்தது. உச்சங்காரி, பறம்புக்குள் நுழைய அனுமதி கேட்டுச் செய்தி அனுப்பினான். வட்டாற்றுத் தாக்குதலில் சோழனிடமிருந்து கைப்பற்றப்பட்ட யானைகளே பெரும் எண்ணிக்கையிலானவை. எனவே, பறம்பின் தரப்பில் வலிமையான யானைப்படை இருக்கும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தங்களிடம் யானைப்படை இல்லை என்று எதிரிகள் சொல்வது போர்த்தந்திரமன்றி வேறில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ``அவர்களின் திட்டத்தில் நாம் போய்ச் சிக்கிக்கொள்ளக் கூடாது. எனவே, பறம்புக்குள் போய்த் தாக்கும் நடவடிக்கை வேண்டாம். அடுத்து என்ன செய்வது என்பதை உத்தரவு கிடைத்த பிறகு நிறைவேற்றுக” என்று கூறினான் கருங்கைவாணன்.

இந்தச் செய்தி போய்க்கொண்டிருக்கும் போதுதான் குதிரைப்படைத் தளபதி உறுமன்கொடி அனுப்பிய செய்தி வந்துசேர்ந்தது. ``ஒரு சேனைவரையனும் பதினாறு சேனைமுதலிகளும் நமது தரப்பில் இறந்துள்ளனர்” என்றான் அவன்.

ஒரு கணம் திணறிப்போனான் கருங்கை வாணன். முற்பகலுக்குள் பறம்புப்படையை அழித்தொழிக்கும் வலிமைகொண்டது என எதிர்பார்க்கப்பட்ட குதிரைப்படையிலிருந்து வந்துள்ள முதற்செய்தி, எந்த வகையிலும் நம்பமுடியாததாக இருந்தது.

உறுமன்கொடியை நோக்கி விரையலாமா என நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் காரமலையின் மேலிருந்து காரிக்கொம்பூதும் ஓசை கேட்டது. ஓசைவந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தான் கருங்கைவாணன்.

பாரியின் திட்டப்படி முதல் பத்து நாழிகை முடிவடைந்ததைக் குறிக்கும் காரிக்கொம்பு ஓசை அது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 92

 

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

காரிக்கொம்போசை மேலெழும்போது, நடுப்பகல் கடந்திருந்தது; போர்க்களத்தின் சரிபாதி நேரம் முடிவடைந்திருந்தது. முன்களத்திலிருந்து அடுத்தடுத்து வந்த செய்திகள் கருங்கைவாணனுக்குக் குழப்பத்தையே உருவாக்கின. உறுமன்கொடி குதிரைப்படையில் நிகழ்ந்துள்ள பாதிப்பைப் பற்றி அனுப்பிய செய்தி, அதிர்ச்சியை உருவாக்கியது. அது உண்மை என நம்புவதே கடினமாக இருந்தது. ஆனால், போர்க்களத்தில் தனக்கு வந்துசேரும் செய்தி உண்மையா என ஆராய்வதில் தளபதி நேரத்தைச் செலவிடக் கூடாது. ஏனென்றால், அது அவன் படை அவனுக்கு அனுப்பும் செய்தி. அந்தச் செய்தியைக் கொண்டு அடுத்து செய்ய வேண்டியதைத்தான் சிந்திக்க வேண்டும்.

குதிரைப்படை சந்தித்த அதே சிக்கலைத்தான் தேர்ப்படையும் சந்தித்தது. ஈக்கிமணல்கள், பாய்ந்து செல்லும் குதிரையின் வேகத்தைக் கட்டுப்படுத்தின. நகரிவீரன், வெகுவிரைவில் தனது ஆவேசத்தை இழந்து குழப்பத்துக்குள் சிக்கினான். பறம்பின் தரப்பில் கூழையனின் தாக்குதல் வேகம், நேரம் ஆக ஆக அதிகரிக்கத் தொடங்கியது. வேந்தர்படையின் தேர்கள் விரைந்து செல்ல முடியாத நிலையில் பறம்பின் தேர்கள் பாய்ந்து முன்னகர்ந்துகொண்டிருந்தன.

83p2_1531733940.jpg

வாள்படை மோதும் களத்தில்தான் வேந்தர்படை வெகுதொலைவு முன்னேறியிருந்தது. வாள்படைத் தளபதி சாகலைவன், மூர்க்கத்தோடு தாக்கி முன்னேறிக்கொண்டிருந்தான். ஆனாலும், பறம்பின் தரப்பில் பேரிழப்பு எதுவும் நிகழாமலிருந்தது. நீண்டநேரத்துக்குப் பிறகுதான் அவன், பறம்புவீரர்கள் அணிந்திருக்கும் மெய்க்கவசத்தை உற்றுக்கவனித்தான்.

வேந்தர்களின் தரப்பில் தளபதிகள், சேனைவரையர்கள், சேனைமுதலிகள், மெய்க்காப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே உடலைக் காக்கும் மெய்க்கவசம் அணிந்திருந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் கைகளில் கேடயத்துடனும் வாளுடனும்தான் களத்தில் போரிட்டுக்கொண்டிருந்தனர். பறம்புவீரர்கள் அனைவரும் மெய்க்கவசம் அணிந்திருந்தனர். ஆனால், அது வேந்தர்படையினர் அணிந்திருந்ததைப் போன்று இரும்பால் ஆன மிகுந்த எடைகொண்ட கவசமல்ல; மாறாக, சிவப்புச் சித்திரமூலி, செங்கொடிவேலி ஆகியவற்றை அரைத்து முறியன் ஆசான் செய்தது. முறியன் ஆசான் இரலிமேட்டுக்கு வந்ததும் முதலில் இட்ட கட்டளையே இந்த வகைச் செடிகளைக் கொண்டுவந்து சேர்க்கச் சொல்லித்தான். பறம்பெங்கும் இருக்கும் ஆண்களும் பெண்களும் அடுத்த ஓரிரு நாளில் போதுமான அளவுக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். அவற்றைத் தகுந்த சேர்மானத்தோடு அரைத்து, பனைநாரோடு பிசைந்து, வெயில் சூடின்றி நிழலிலே உலர்த்தினர். ஆறிய கஞ்சியில் திரண்ட மேலாடையைப்போல அது உலர்ந்தது. தோலின் குணம்கொண்ட, ஆனால் பாறையின் பக்கு போன்றது அந்த ஆடை. ஒருவகையில் உடும்பின் மேற்தோல் போன்றது. அதைத் துளைத்துக் கொண்டு எந்தவோர் ஆயுதமும் எளிதில் உட்புக முடியாது.

பறம்புவீரர்கள் அந்த மெய்க்கவசத்தையே அணிந்திருந்தனர். மார்பின் மேல் போர்த்தி, பின்புறக் கயிறுகளால் இழுத்துக் கட்டியிருந்தனர். கனமில்லாத ஆடையாகவும் அதே நேரத்தில் அம்பும் வாளும் எளிதில் உட்புக முடியாததாகவும் இருந்தது அந்த மெய்க்கவசம்.

வேந்தர்களின் விற்படையின் தாக்குதிறனைப் பறம்பின் தாக்குதிறனோடு ஒப்பிட்டால், சரிபாதிக்கும் குறைவுதான். அதுவும் உலோக வில் ஏந்தியவர்கள் படையின் முன்னணியினர் மட்டுமே. அவர்களின் அம்புதான் வீரியத்துடன் சீறின. மற்ற வீரர்களின் அம்புகளோ பறம்புவீரர்கள் நிற்கும் தொலைவை வந்தடையும்போதே உயிரற்றதாகிவிடுகின்றன.

விற்படை, தேர்ப்படை, யானைப்படை ஆகிய மூன்று படைகளிலும் முதன்மையான ஆயுதம் வில்தான். ஆனால், வேந்தர்படை வீரர்கள் எதிரிகளைத் தாக்குவதற்காகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டிய இடத்துக்கு அருகில்கூட வர முடியாதபடி இருந்தது பறம்புப்படையின் தாக்குதல். அதுமட்டுமன்று, பறம்புவீரர்கள் அனைவரும் மெய்க்கவசம் அணிந்தவர்களாக இருந்தனர். எனவே, பறம்பின் தரப்பில் ஒரு வீரனைச் சாய்ப்பதே பெரும்பாடாக இருந்தது. பறம்பின் வாள்படையில் உள்ள அனைவரும் மெய்க்கவசம் அணிந்திருந்ததால், முன்னேறிச் சென்று தாக்கிய சாகலைவனால் எதிரிகளை வீழ்த்தி முன்னேற முடியவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் அவன் உணர்ந்தான், எதிரிகள் விலகிப் பின்வாங்கும் வழியில் மட்டுமே தனது படை முன்னேறுகிறது என்றும், அவர்களைச் சிதைத்தோ அழித்தோ முன்னேறவில்லை என்றும். ஆனாலும், ஒரு கிழவன் தனக்கு எதிரான படைக்குத் தலைமையேற்கிறான் என்பதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அம்பும் ஈட்டியும் போன்றதன்று வாள். அதன் ஒவ்வொரு வீச்சிலும் வீரனின் முழு ஆற்றலும் வெளிப்பட்டாக வேண்டும். கைப்பிடியின் இறுகிய விரல்களுக்குள் காற்று புகுந்தால்கூட வாளின் வீச்சு வலிமையிழக்கும்.

83p1_1531733953.jpg

போர் என்பது, உயிரைவைத்து விளையாடும் விளையாட்டு. அதை ஒவ்வொரு கணமும் உணரச்செய்வது வாள்சண்டை. ஈட்டியும் அம்பும்போல, எங்கோ இருப்பவனை நோக்கிய தாக்குதல் அன்று இது. தான் பிடித்திருக்கும் கேடயத்தில் மோதும் எதிரியின் வாள் வலிமையை, அந்த அழுத்தம்கொண்டு மதிப்பிட முடியாதவனால் ஒருபோதும் வெற்றியை ஈட்ட முடியாது.

பறம்பின் தரப்பில் வாள்படைக்குத் தலைமையேற்ற தேக்கன், எதிரிகளை முடிந்த அளவுக்குத் தனது எல்லைக்குள் உள்வாங்கும் உத்தியையே கடைப்பிடித்தான். எனவே, வேந்தர்படை மிக அதிக தொலைவுக்குப் பறம்பின் தரப்புக்குள் இழுக்கப்பட்டிருந்தது. சாகலைவன், தேக்கனுடனான நேரடித் தாக்குதலை எதிர்பார்த்து முன்னகர்ந்து கொண்டிருந்தான்; கிழவனை வெட்டிச்சரிப்பதன் மூலம் எதிரியின் தளபதியை முதலில் வீழ்த்திய பெருமையை அடைவதற்காக விரைந்து கொண்டிருந்தான்.

வேந்தர்படை இப்போது நிலைகொண்டுள்ள வரைபடம் மிகவும் ஏற்ற இறக்கத்தோடு இருக்கிறது. வாள்படையானது எதிரிகளின் தரப்புக்குள் மிகவும் முன்னேறியிருக்கிறது. ஆனால், விற்படையும் குதிரைப்படையும் தனது தரப்புக்குள் உள்வாங்கியிருக்கின்றன. தேர்ப்படையானது இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறது. இதுபோன்ற நிலைதான் தலைமையேற்கும் தளபதிக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கும். படையின் இத்தகைய நிலையால் அடுத்து உருவாகப்போகும் சூழலை எளிதில் கணிக்க முடியாது.

அதனால்தான் தனக்கு வந்துசேர்ந்த செய்தியிலிருந்து பெருங்குழப்பத்தைச் சந்தித்துக்கொண்டிருந்தான் கருங்கைவாணன். பறம்புவீரர்களை, எண்ணிக்கையைக் கொண்டு மட்டுமே மதிப்பிடக் கூடாது என்பதை அவன் நன்கு அறிவான். ஆனால், சமதளப்போர் என்பதாலும், தன்னுடைய படையில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கை அளவிடற்கரியதாக இருப்பதாலும் அவன் பெருநம்பிக்கை கொண்டிருந்தான். முதல் நாளே இந்தப் போர் முடிவுக்கு வரும் என நினைத்தான். ஆனால், போர்க்களத்தில் மேலெழும் செம்புழுதி, நம்பிக்கையை மறைக்கத் தொடங்கியது.

உதிரனின் தலைமையிலான விற்படை, ஆவேசம்கொண்டு வேந்தர்படையின் கட்டமைப்பைப் பிளந்து முன்னேறிக் கொண்டிருந்தது; பறம்புவீரர்கள் முதுகில் வைத்துள்ள அம்பறாத்தூணி, கம்பங்கதிர் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருந்தது. மையத்தண்டைச் சுற்றி அம்புகள் செருகப் பட்டிருந்தன. வெவ்வேறு வகையான அம்புகள், அதற்குத்தக்க உயரத்தில் இடம்பிடித்திருந்தன. நூறிலிருந்து நூற்றிருபது அம்புகளைக் கொண்டதாக ஒவ்வோர் அம்பறாத் தூணியும் இருந்தது. வேந்தர்படைவீரர்கள் பயன்படுத்தும் அம்பறாத்தூணி கூம்பு வடிவம்கொண்டிருந்தது. நீண்டிருக்கும் சுரைக்குடுவையைப் போன்று அதற்குள் முப்பது அம்புகளை மட்டுமே வைக்க முடிந்தது.

எதிரிகளைத் தாக்கி அழிக்க முடியாத நிலையில் வெகுவிரைவாகத் தங்களின் அம்புகளைத் தீர்த்த வேந்தர்படைவீரர்கள் அம்புக்கட்டு வரும் வரை பின்படைக்கு வழிவிட்டு ஒதுங்கவேண்டியிருந்தது. முன்வந்து தாக்கும் அடுத்தடுத்த படைப்பிரிவுகளும் அம்புகளைத் தீர்ப்பதில் மிக வேகமாகச் செயல் பட்டு ஒதுங்கின. உதிரனின் தலைமையிலான விற்படை, தடைகளற்ற வேகம்கொண்டிருந்தது.

தாகம் மேலிட வீரர்களிடம் களைப்பு உருவாகத் தொடங்கியது. கதிரவனின் வெப்பத்தால் தட்டியங்காட்டுக் கருமணலெங்கும் வெப்ப வளையங்கள் உருவாகிக்கொண்டிருந்தன. காலையிலிருந்து பேராவேசத்தோடு போரிட்டுக்கொண்டிருக்கும் வீரர்களின் உடலில் நீர்வற்றி தாகம் ஏற்பட, பெரும் அயர்வுக்குள்ளானார்கள்.

முறியன் ஆசான் நீர்வேலிப் படர்கொடியின் இலைகளை அதன் சிறு சிறு காய்களோடு சேர்த்துச் சுருட்டி, கைகளின் மணிக்கட்டுக்கு மேலும் கழுத்திலும் தாயத்துபோல ஒவ்வொரு வீரனுக்கும் கட்டியிருந்தார். `தாகம் மேலிட்டு மயக்கம் வருவதுபோல் இருந்தால், அந்தத் தாயத்தை அப்படியே கடித்துத் தின்றுவிடுங்கள்’ என்று சொல்லியிருந்தார். அந்த இலையும் காயும் உடனடியாக நீர்ச்சத்தைச் சுரக்கக்கூடியவை. பறம்புவீரர்கள் மிகச்சிலரே தாயத்தைக் கடித்தனர். அவர்கள் அதைக் கடிக்கும்போது எதிரில் வேந்தர்படைவீரர்கள் ஆயுதங்களைக் கைக்கொள்ள முடியாத கிறக்கத்தில் இருப்பது தெரிந்தது.

கருங்கைவாணனுக்குக் களத்தின் எல்லா திசைகளிலிருந்தும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால், ஒரு செய்திகூட அவன் நினைத்ததைப்போல இல்லை. வாள்படை மட்டும்தான் வெகுவாக முன்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அதைச் சொல்ல வருபவன் மட்டும்தான் உற்சாகத்தோடு சொல்லிச் செல்கிறான். ஆனால், மற்ற படைகள் இருக்கும் நிலைக்கும் வாள்படை இருக்கும் நிலைக்கும் பெருத்த வேறுபாடு இருந்தது. வேட்டுவன்பாறைத் தாக்குதலில் திதியன் முன்னேறிப்போனபோது வந்த எண்ணம் இப்போது உருவாகத் தொடங்கியது. `சாகலைவன் ஏதோ பொறியில் மாட்டப்போகிறான்!’ எனத் தோன்றியது.

83p3_1531733971.jpg

இந்த எண்ணம் தோன்றிய கணத்தில்தான் காரமலையின் மேலிருந்து அடுத்ததொரு பேரோசை கேட்டது. இந்த ஓசையின் மூலம் எதிரிகள் என்ன செய்தியைச் சொல்கின்றனர் என்பதைக் கணிக்க முடியவில்லை. ஆனால், இதன் அடிப்படையில்தான் அவர்கள் உத்தியை வகுக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

இப்போது வெளிப்பட்ட காரிக்கொம்பின் ஓசை இறுதி ஐந்து நாழிகையின் தொடக்கத்தை அறிவிப்பதாகும். பறம்புவீரர்கள், தாங்கள் வகுத்த போர் உத்தியின் இறுதிப்பகுதியை நிறைவேற்ற ஆயத்தமாகினர். தாகமும் தாங்க முடியாத மயக்கமும் வேந்தர்படை வீரர்களுக்கு உருவாகும் இந்த நேரத்தில், பறம்புவீரர்கள் தங்களின் தாக்குதல் வேகத்தை இரட்டிப்பாக்கினர். விற்படையினர் இதுவரையிலும் பயன்படுத்தாத கொடுமர அம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

கருங்கைவாணன் நிலைமையைக் கணித்து `என்ன செய்யலாம்?’ எனச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது பறம்பின் அனைத்துப் படைகளும் பல கூறுகளாகப் பிரிந்து ஆவேசம்கொண்டு தாக்கி முன்னேறினர். அவர்கள், நேரெதிர் திசையில் மட்டும் முன்னேறவில்லை. மாறாக, பல திசைகளில் பிரிந்து கலைந்தனர். அதேநேரத்தில், அவர்கள் எந்தத் திசையில் போக நினைக்கிறார்களோ அந்தத் திசையில் போகவிடாமல் மறித்து நிறுத்த முடியாத நிலையில் வேந்தர்படை இருந்தது. குறுக்கும் மறுக்குமாகப் பல இடங்களில் அவர்கள் நுழைந்துகொண்டிருந்தனர்.

வேந்தர்படை வீரர்களிடம் குழப்பம் உருவாகத் தொடங்கியது. என்ன நடக்கிறது என்பது புரிபடாததாக இருந்தது. முதல்நிலைப் படையில் இருந்த வீரர்களுக்கு உடனடியாக அம்புக்கட்டு தேவைப்பட்டது. அவர்களுக்காக ஆயுதவாரியின் உத்தரவின்பேரில் யானை ஒன்று அம்புக்கட்டை ஏந்தி முதல்நிலைப் படைக்குள் நுழைந்தது. எங்கும் கூச்சலும் மோதலின் பேரோசையுமாக இருந்தது. கருங்கைவாணன், சாகலைவனுக்கு உத்தரவு அனுப்பினான், `தொடர்ந்து முன்னோக்கிச் செல்லாதே!’ என்று. அவன் சொல்லிய செய்தியைக் கொண்டுசென்றான் வீரன் ஒருவன்.

`நீண்டநேரமாகக் குதிரைப்படையின் தளபதி உறுமன்கொடியிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லையே!’ எனச் சிந்தித்தான் கருங்கைவாணன். அந்த எண்ணம் தோன்றியபோதுதான் ஆயுதக்கட்டைக் கொண்டுவந்த யானையின் பிளிறல், போர்க்களம் முழுவதும் எதிரொலித்தது.

சட்டெனப் பின்புறம் திரும்பிப் பார்த்தான் கருங்கைவாணன். முடியன் எறிந்த மூவிலைவேல் யானையின் செவிப்புறத்தின் இறங்குகுழியில் குத்தி இறங்கியது. போர்க்களம் முழுவதும் எதிரொலித்தது யானையின் பிளிறல். தேரில் நின்றபடியே அடுத்த மூவிலைவேலைக் கையில் எடுத்தான் முடியன். அதை எறிவதற்குள் முடியனைத் தாக்கவேண்டும் என நினைத்த கருங்கைவாணன், தன்னிடம் இருந்த வில்லில் நாண் ஏற்றியபோது மத்தகத்தின் இடது முனையில் குத்தி உள்ளிறங்கியது அடுத்த மூவிலைவேல்.

கல்லூசிகளும் எஃகூசிகளும் பன்றியின் முன்கொம்பால் செய்யப்பட்ட நீள்ஊசியும் கொண்ட பறம்பின் தனித்துவமான ஆயுதம் `மூவிலைவேல்.’ மூன்று திசைகளில் விரிந்திருக்க, குத்துப்பட்ட வேகத்தில் யானை வெறிகொண்டு கழுத்தை மறுத்து அசைக்க, வேலின் கூர்முனை துளைத்து உட்சென்றுகொண்டிருந்தது. ஏதோ நடக்கப்போகிறது எனக் கருங்கைவாணன் நினைத்தபோது அம்புக்கட்டுகளைப் பிரித்துக் கொடுப்பதற்காக யானையின் மேலேயும் பக்கவாட்டிலும் நின்றிருந்த பன்னிரு வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர். யானையின் பிளிறலை விஞ்சியது வீசப்பட்ட வீரர்களின் ஓலம்.

கீழே விழுந்தெழுந்த பாகன் ஒருவன், குத்தப்பட்டிருந்த ஈட்டியைப் பிடுங்க முயன்றான். அப்போதுதான் அந்த பயங்கரம் அரங்கேறத் தொடங்கியது. மூவிலைவேலின் வடிவமைப்பே, எதிரெதிர் திசையில் உள்நுழைந்து செருகிக் கிடப்பதுதான். இப்போது அதை இழுக்க நினைத்தால், ஒரு திசையில் இருக்கும் கூர்முனை வெளிவர மற்ற இரு திசைகளில் இருக்கும் கூர்முனைகள் அழுத்தி உள்நுழையும். எஃகூசியும் கல்லூசியும் பன்றிக்கொம்பு இருக்கும் கூர்ஊசியும் மத்தகத்தின் இடது சப்பைக்குள் கிழித்திறங்க, யானை வெறிகொண்டு சுழற்றியது துதிக்கையை. வேந்தர்படைவீரர்களுக்கு நடுவே நின்றிருந்த அதன் தாக்குதல், கணநேரத்துக்குள் பன்மடங்கு ஆவேசமடைந்தது; எறும்புக்கூட்டங்களை நசுக்குவதுபோல, திறன்கொண்ட படையணியை நசுக்கத் தொடங்கியது.

யானை தனது கட்டுப்பாட்டை இழந்து தாக்குதலைத் தொடங்கிவிட்டது என்பதை அறிந்த கருங்கைவாணன், ``அதைக் குத்தி வீழ்த்துங்கள்” எனப் பெருங்குரலெடுத்துக் கத்தினான். வழக்கமான போர் ஈட்டிகளைக் கொண்டு யானையை வீழ்த்திவிட முடியாது. கூர்வாள் செருகப்பட்ட பெரிய ஈட்டியாலும் தந்த ஈட்டியாலும்தான் யானையைத் தாக்கி வீழ்த்த முடியும். அதுவும் இந்த யானைக்கு முன் நெற்றியிலும் பக்கவாட்டிலும் சங்கிலிகளால் பின்னப்பட்ட போர்க்கவசம் போர்த்தப் பட்டிருந்தது. வீரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள யானையை வீழ்த்தியே ஆகவேண்டிய நிலை உருவானது. தாக்குதல் தொடுக்கத் தொடுக்க, யானையின் ஆவேசம் பன்மடங்கு பெருகிக்கொண்டிருக்கிறது; துதிக்கையைச் சுழற்றியெறிந்து அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது. மத்தகத்தின் இடது சப்பைக்குள் இறங்கிய மூவிலைவேல் வேதனையைப் பல மடங்கு அதிகப்படுத்தியது. பிளிறலின் ஓசையில் அதன் மூர்க்கம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

83p4_1531733986.jpg

இரும்புச்சங்கிலியால் போர்க்கவசம் போர்த்தப்பட்ட யானையை இரு வேல்கம்பு வீச்சுகளால் பறம்பின் பின் வீரன் ஒருவன் தாக்க முடிந்ததை வேந்தர்படைவீரர்கள் மிரண்டுபோய்ப் பார்த்தனர். ஆனால், இந்த மிரட்சி அடுத்த சில கணங்களுக்குக்கூட நிற்கவில்லை. அதே யானை தங்களை அழித்தொழிக்கும் நிலை உருவானதால் ஆவேசத்தோடு இறங்கிப் போரிடவேண்டியதாகி விட்டது. எவ்வளவு வேகமாக இதை வீழ்த்துகிறோமோ, அவ்வளவு வேகமாகப் படையின் பாதிப்பு குறையும்.

வேந்தர்களின் விற்படையின் மையப்பகுதி, யானையுடன் போரிட்டுக்கொண்டிருந்த போதுதான் முதல்நிலைப் படையின் கட்டுக்கோப்பு குலையத் தொடங்கியதைக் கருங்கைவாணன் உணரத் தொடங்கினான். எதிரிப்படையின் தளபதியான முடியன் எங்கே இருக்கிறான் எனக் கருங்கைவாணனின் கண்கள் காலையிலேயே தேடின. அவன், கண்களிலேயே படவில்லை. அதற்குமேல் அவனைப் பொருட்படுத்தித் தேட ஒன்றுமில்லை என்ற முடிவுக்குப் போனான்.

காரிக்கொம்பின் ஓசை கேட்டதும் போர்க்களத்தின் கடைசி நாழிகை தொடங்கியது. பறம்பின் தரப்பில் படைப்பிரிவின் பின்னிலையில் நின்றிருந்த பலர், இப்போது முன்னிலைக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போதுதான் முடியனின் தேர், களத்தின் நடுவில் வந்து நின்றது. திடீரென இந்த இடத்துக்கு எப்படி இவன் முன்னேறி வந்தான் எனக் கருங்கைவாணன் நினைத்துக்கொண்டிருக்கும்போது, குறுக்கும் நெடுக்குமாக எல்லாப் பகுதிகளிலும் பறம்பு வீரர்கள் நுழைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

குளவன்திட்டின் மேல் இருந்த பாரி, இப்போதுதான் முதன்முறையாக குகைக்குள் இருக்கும் விளக்கைப் பார்த்தான். காலையிலிருந்து போர்க்களத்தை விட்டு அவன் கண்கள் விலகவில்லை. இகுளிக்கிழவனோ காலையிலிருந்தே குகைக்குள் இருக்கும் விளக்கைத்தான் பார்த்துக்கொண்டே இருந்தான். போர்க்களத்தின் பக்கம் திரும்பவேயில்லை. விளக்கின் சுடர் ஈட்டிபோல மேல் நோக்கி எரிந்துகொண்டிருந்தது. இப்போது காற்றோ, காற்றியோ வீசினால் வேந்தர்படையின் நடுப்பகுதியில் நின்றிருக்கும் எண்ணிலடங்கா வீரர்கள் கணநேரத்தில் தாக்கப்பட்டுச் சரிவார்கள். முதல்நிலைப் படையில் பெருங்குழப்பம் நிலவிக்கொண்டிருக்கும் சூழலில், இரண்டாம்நிலைப் படையின் மீது பெருந்தாக்குதல் நடந்தால் படையின் தன்மை மொத்தமும் குலையும். இறுதி நாழிகையின்போது ஏற்படும் பதற்றத்தை, பறம்புவீரர்கள் மிகத்திறமையாகக் கையாண்டு எதிரியின் படைகளை நடுங்கச்செய்வார்கள் எனப் பாரி கருதினான். ஆனால், கொம்மனும் கொம்மையும் அவனுக்கு உதவ ஆயத்தமாக இல்லை. கணவாயின் பின்புறம் இருந்த அவர்கள், வாய் திறந்து ஊத மனமின்றி இருந்தனர். இகுளிக்கிழவனின் மனம், காற்றியை அனுப்பச் சொல்லி கொம்மையிடம் மன்றாடிக் கொண்டிருந்தது.

திட்டமிடலின்போதே கல்லூழிவேர்த் தாக்குதலை எப்போது நடத்துவது என்பதைப் பற்றி முடிவு ஏதும் எடுக்கவில்லை. எப்போது காற்றும் காற்றியும் வருவதை அறிவிக்கக் காரிக்கொம்பின் உச்ச ஓசை கேட்கிறதோ, அப்போது அதைப் பயன்படுத்த வேண்டும். அதைத் தவிர மற்ற உத்திகள் எல்லாம் முன்திட்டமிடல் செய்யப்பட்டவைதாம்.

தேர்ப்படையின் கடைசி நிலையில் இருந்த ஈங்கையன், இப்போது முன்னிலைக்கு வந்தான். இதுவரை கண்ணிலேயே படாமல் இருந்த தளபதி முடியன், எதிரிப்படையின் நடுக்கூறினைப் பிளந்து முன்னேறிக்கொண்டிருந்தான். எங்கும் பேய்க்கூச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. போர்யானை எளிதில் வீழ்வதாக இல்லை. அது வேந்தர்படையின் நடுவில் இருந்ததால், எந்த நேரம் எந்தப் பக்கம் திரும்பும் என்ற பதற்றம் எல்லோருக்கும் இருந்தது. அனைவரின் கவனமும் அதை நோக்கித் திரும்பியது.

காரமலையின் மேலிருந்து இரிக்கிச்செடியின் பால்கொண்டு வரையப்பட்ட குறியீடுகள் பகல் நேர ஒளியிலும் துல்லியமாக மின்னிக் கொண்டிருந்தன. பிளந்து முன்னேறும் பறம்புப்படையின் அணித்தலைவன் யாரோ, அவன் மட்டும் அதை அண்ணாந்து பார்த்து, படையை அதற்கேற்ப வழிநடத்திக் கொண்டிருந்தான்.

குறுக்கும் நெடுக்குமாகப் பாம்புகள் ஊர்வதைப் போலப் பறம்புப்படை நுழைந்துகொண்டிருந்தது. இவர்கள் எங்கே, எதை நோக்கிப் போகிறார்கள் என்பது வேந்தர்படைக்குப் புரியாத குழப்பமாக இருந்தது. எல்லா வீரர்களும் மெய்யுறைக்கவசம் அணிந்திருப்பதால் அம்பு தாக்கி எளிதில் அவர்கள் வீழ்வதில்லை. ஆனால், அவர்களின் அம்புகளோ, ஈட்டிபோல் வேகம்கொண்டு தாக்குகின்றன; முடியனின் தேர் பெருமரத்தின் நடுவே இறங்கும் இரும்பு ஆப்புபோல வேந்தர்படையின் நடுப்பகுதியில் இறங்கிக் கொண்டிருந்தது. முன்னோக்கிச் செல்லும் முடியனின் தேரைத் தடுத்து நிறுத்த உத்தரவிட்டபடி அவனை நோக்கி விரைந்தான் கருங்கைவாணன்.

இப்போது ஈங்கையனின் தாக்குதல் தொடங்கியது. கரும்பாகுடியில் சோழப்படையின் தாக்குதலை மிகச்சில வீரர்களைக்கொண்டு அழித்து முடித்தவன் ஈங்கையன். அவனையும் அவனது கூட்டத்தையும் காப்பாற்றிய பறம்புக்காக மட்டுமன்றி, கண்ணெதிரே தனது குலத்தை அழித்த சோழர்களைப் பழிவாங்குவதற்காகவும் களத்தில் இருந்தான். சோழனின் முத்திரை தாங்கிய தேர் ஒன்றில் அதன் தளபதியரில் ஒருவனான நகரிவீரன் இருப்பதைப் பார்த்தான். அவனை நோக்கி இடியெனத் தாக்கி முன்னேறினான் ஈங்கையன்.

முன்பகுதித் தாக்குதலைச் சற்றே மாற்றி, ஈங்கையனை நோக்கித் திரும்பினான் நகரிவீரன். ஆனால், அதற்குள் அவன் படையின் பெரும்பகுதியினர் முன்திசைத் தாக்குதலிலிருந்து வெளிவர முடியாத நிலையில் இருந்தனர். கூழையனின் தாக்குதலிலிருந்து யாரையும் விலக்க முடியாத நிலையில் ஏறக்குறைய தான் சூழப்பட்டுள்ளோம் என்பதை அவன் உணரத் தொடங்கினான்.

இந்நிலையில்தான் எதிரிப்படையின் இடுப்புப் பகுதியைப் பிளந்து முன்னேறிக்கொண்டிருந்தான் முடியன். அவன் எதிர்பார்த்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. இதற்கிடையில் காற்றோ காற்றியோ வீசினால் போர்க்களத்தில் எதிரிப்படையின் கட்டுப்பாடு சீர்குலையும். அது வீசாவிட்டாலும் பாரி தீட்டிய திட்டப்படி அழித்தொழிக்கும் தாக்குதலை நடத்த வேண்டும்.

83p5_1531734004.jpg

இறுதி நாழிகையின் இறுதிப்பகுதி நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லா திசைகளிலும் கலைந்து பிரிந்த பறம்புவீரர்கள், களத்தின் நடுவில் வந்து இணையத் தொடங்கினர். பெருஞ் சங்கிலிப் பிணைப்பால் கருங்கை வாணன் அமைத்த முதல்நிலைப் படையின் மையப்பகுதியைச் சூழ்ந்தனர். கட்டற்று நகரும் அதன் வேகத்தின் முகப்பில் சென்றுகொண்டிருந்தான் பறம்புத்தளபதி முடியன்.

சங்கிலித்தொடரின் வெளிப்புறம் இருந்தான் கருங்கைவாணன். என்ன நடக்கிறது என அவனால் உணர முடியவில்லை. ஆனால், நிலைமை கைமீறிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. இந்நிலையில் `இரண்டாம் நிலையில் நிறுத்தப்பட்ட பெரும்படைக்குத் தாக்குதல் உத்தரவை வழங்கலாமா?!’ எனச் சிந்தித்தான். ஆனால், அவனது போர்க்கள அனுபவம் அந்தத் தவற்றைச் செய்வதிலிருந்து அவனைக் காப்பாற்றியது.

`இன்றைய நாளின் இறுதிப்பகுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். முதல்நிலைப் படை பெருங்குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளது. யானை, பெருஞ்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரிகள், படையின் நடுப்பகுதியில் குவிந்துள்ளனர். நம் தளபதிகள், எதிரிகளின் ஆவேசமிக்க தாக்குதலால் இழுக்கப்பட்டு, படைகளை முறையற்று இயக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இரண்டாம்நிலைப் படையை இந்தக் கடைசி நேரத்தில் தாக்குதலுக்கு இறக்க வேண்டாம். அது நமது வலிமையின் உள்ளார்ந்த ஆற்றலை வீரர்களிடம் குறைத்துவிடும். இன்னும் இருக்கும் சிறிது நேரத்தில் தாக்குதலின் வேகத்தைக் கூட்டி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சமாளிப்போம்’ என்ற முடிவுக்கு வந்தான்.

வேந்தர்படைத் தளபதி கருங்கைவாணன் குழப்பத்திலிருந்து ஒரு முடிவுக்கு வந்தபோது, பறம்புப்படைத் தளபதி முடியன் தெளிவிலிருந்து முடிவெடுக்க முடியாத குழப்பத்துக்குப் போனான். `திட்டமிட்டபடி தாக்குதல் உத்திகளை நடத்தி, பல்வேறு கூறுகளாகப் பிரிந்து எதிரிப்படையின் நடுப்பகுதியில் இணைந்து விட்டோம். ஆனால், இந்நேரம் இங்கு வந்துசேர்ந்திருக்கவேண்டிய இரவாதன் இன்னும் வந்துசேரவில்லை. குதிரைப்படையின் ஆற்றல்மிகு தாக்குதலால்தான் சூழப்பட்டுள்ள எதிரிகளை முற்றிலும் அழித்தொழிக்க முடியும். இல்லையென்றால், இந்தத் தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற முடியாது.

தேர்ப்படையும் வாள்படையும் எதிரிகளின் கவனத்தை முழுமையாகத் திசைதிருப்பி எவ்வளவு தொலைவுக்கு வெளியில் இழுத்துக்கொண்டு போக முடியுமோ அவ்வளவு தொலைவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும். உதிரனின் தலைமையிலான பறம்பின் வலிமைமிகுந்த விற்படை, இடதுமுனையிலிருந்து உத்திபிரித்துக் களத்தின் நடுப்பகுதிக்கு வந்து கூடவேண்டும். அந்த நேரத்தில் களத்தின் இடதுமுனையிலிருந்து இரவாதன் தலைமையிலான குதிரைப்படை நடுவில் நிற்கும் விற்படையோடு இணையவேண்டும். அப்போது இடையில் சிக்கியிருக்கும் எதிரிகளின் படையை முழுமுற்றாக அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் வகுக்கப்பட்ட திட்டம். இந்தத் திட்டத்தில் கணிக்க முடியாதது காற்றின் வீச்சு மட்டுமே. அது எந்தக் கணத்தில் நிகழ்கிறதோ அந்தக் கணத்தில் அதற்கேற்ப முன்னோக்கித் தாக்கும் உத்தியைச் செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

முன்முடிவின்படி பறம்புவீரர்கள் அனைத்தையும் மிகச்சிறப்பாகச் செய்து முடித்தனர். ஆனால், இரவாதனின் தலைமையிலான குதிரைப்படை மட்டும் முடியன் நிலைகொண்டுள்ள நடுப்பகுதிக்கு வந்து சேரவில்லை. தொலைவில் அவனது படைக்குறிப்புக்கான பதாகையும் கண்ணில் தெரியவில்லை. தாக்குதலுக்கான உத்தரவைப் பிறப்பிப்பதா அல்லது காலம் தாழ்த்துவதா என்ற குழப்பத்தில் சிக்கினான் முடியன்.

திட்டமிட்டபடி முடியன் நிலைகொண்டுள்ள நடுப்பகுதிக்குத் தன்னால் போய்ச்சேர முடியாது என்ற முடிவுக்கு வந்தான் இரவாதன், பறம்பின் குதிரைப்படைதான் எதிரிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கியுள்ளது. காலையிலிருந்து அதன் வேகம் உறுமன்கொடியை நிலைகுலையவைத்து, தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. ஆனால், நடுப்பகலுக்குப் பிறகு மனிதர்களால் எப்படி இந்த நிலத்தின் வெக்கையை நீரின்றிப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையோ, அதே சிக்கலைக் குதிரைகளும் சந்தித்தன. இதற்கான மாற்று ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. அதுவும் காலையிலிருந்து கணப்பொழுதுகூட நிற்காமல் ஓடிய பறம்பின் குதிரைகள் காரிக்கொம்பின் இரண்டாம் ஓசை கேட்டபோது மிகவும் களைத்துப்போயிருந்தன.

இவ்வளவு களைத்திருக்கும் `குதிரைகளைக் கொண்டு எதிரிகளின் குதிரைப்படையைப் பிளந்து உள்நுழைந்தால், நமது தரப்புக்கு இழப்பு அதிகமாகும் எனக் கணித்த இரவாதன், வேறுவழியே இன்றி, திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவைக் கைவிட்டான்.

கருங்கைவாணனோ, எதிரிகளின் உத்திகளுக்குள் நமது முதல்நிலைப்படை கடுமையாகச் சிக்கிக்கொண்டது, இருக்கும் சிறிது நேரம் வரை பாதிப்பைக் குறைக்கும் உத்தியை மட்டும் கடைப்பிடிப்போம் என்ற நிலையை எடுத்தான்.

அப்போதுதான் நீள்சங்கின் ஓசை தென்மூலையில் கேட்டது. என்ன இது என்று பறம்புத் தளபதிகளுக்குப் புரியவில்லை. ஆனால், ஓசை கேட்ட கணம் திடுக்கிட்டுத் திரும்பினான் கருங்கைவாணன்.

அது, தளபதி கொல்லப்பட்டுவிட்டால் உடனடியாகத் தலைமைத் தளபதிக்கும் அரசனுக்கும் சொல்லும் குறிப்பு. தன் தளபதி ஒருவன் கொல்லப்பட்ட செய்தி ஒரு கணம் நடுக்குறச்செய்தது. உடனடியாக அந்தத் திசை நோக்கிக் குதிரையை விரைவுபடுத்தினான். கடைசி சில நாழிகையில் தளபதி கொல்லப் பட்டால் அந்தப் படையணி முழுமுற்றாக அழிய அதிக நேரமாகாது. பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்ற வேகத்தோடு விரைந்தான் கருங்கைவாணன்.

எதிரிப்படைக்குள் ஏறி உள்நுழைந்து சென்றது, தேர்ப்படைத் தளபதி நகரிவீரனும் வாள்படைத் தளபதி சாகலைவனும்தான். நகரிவீரன் சோழநாட்டுத் தளபதிகளில் ஒருவன். அவனது வீரத்தைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது. ஆனால், சாகலைவன் பாண்டியநாட்டின் இணையற்ற வீரன். எனவே, அவன் கொல்லப் பட்டிருக்க வாய்ப்பில்லை என நினைத்தபோது கருங்கைவாணனின் கண்பார்வையின் தொலைவில் நகரிவீரன் போரிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

கருங்கைவாணனால் நம்ப முடியவில்லை. குதிரையை வேகப்படுத்தியபடி முன்னோக்கி விரைந்தான். வேந்தர்களின் வாள்படை அவனது கண்ணுக்குத் தெரிந்தது. உற்றுப்பார்த்தபடி உருவிய வாளோடு விரைந்தான். குதிரை எவ்விப் பாய்ந்தது.

பரண்மேல் இருந்த திசைவேழர் தன் கைகளை உயர்த்தினார். போர்க்களத்தின் இரு திசைகளிலும் இருந்த பரண்களின் மேலிருந்து எண்ணற்ற முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. தட்டியங்காடெங்கும் எதிரொலித்தது அந்த ஒலி. இன்றைய போருக்கான நாழிகை முடிந்தது.

பாய்ந்துசென்ற கருங்கைவாணனின் குதிரை சற்றே வேகம் குறைத்தது. வரவேண்டிய இடத்துக்கு வந்துசேர்ந்தான். எதிரில் தலை வெட்டப்பட்ட நிலையில் சரிந்துகிடந்தான் சாகலைவன்.

கொப்புளித்த குருதி மேலெல்லாம் பீச்சியடித்திருக்க, முகத்தைத் துடைத்தபடி, விரிந்துகிடந்த தலைமுடியை உச்சந்தலையில் ஏற்றிக்கட்டி, அருகில் இருந்த குதிரையின் மேல் தாவி ஏறினான் தேக்கன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 93

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

போர்க்களத்திலிருந்து முரசின் ஓசையைக் கேட்டவுடன் இகுளிக்கிழவன் விளக்கை ஊதி அணைத்தான். கொம்மனும் கொம்மையும் இன்றைக்கு உதவாமல்போனது, அவனுக்கு மிகுந்த மனவருத்தத்தை உருவாக்கியது. பறம்புவீரர்கள் கானவர்களுக்கு அளித்த வாக்குப்படி, தட்டியங்காட்டில் யானைப்போர் நடப்பதைத் தவிர்த்துவிட்டனர். சமவெளியில் உள்ளவர்கள் யானையைப் பயிற்றுவிக்கும் முறையுடனும் போரில் ஈடுபடுத்தும் முறையுடனும் ஒப்பிட்டுப்பார்த்தால் மலைமக்களின் ஆற்றல் அளவிடற்கரியது.

சமவெளி மனிதர்கள், யானையைப் பழக்குவது எப்படி என்று மட்டும் அறிந்தவர்கள். மலைமக்கள், யானையின் பழக்கங்களையெல்லாம் அறிந்தவர்கள். அதுவும் பறம்பில்தான் யானையுடனான ஆதிமொழியை உருவாக்கிய தந்தமுத்தத்துக்காரர்கள் இருக்கின்றனர். அவர்கள் யானையைக் கைக்கொள்ளும்முறையை யாராலும் நினைத்துபார்க்கக்கூட முடியாது. இன்று யானைப்போர் நடந்திருந்தால் வேந்தர்படை பேரழிவைச் சந்தித்திருக்கக்கூடும்.

எந்தவொரு படையிலும் பெருவலிமைகொண்டது யானைப்படைப் பிரிவே. அது கடுமையாகத் தாக்கப்படும்போது மொத்தப் படையின் மனநிலையும் பெரும்பாதிப்புக்குள்ளாகும். யானைப்படை வீழ்ச்சியைச் சந்தித்துவிட்டால், அதன் பிறகு மற்ற படைப்பிரிவுகளால் வலிமையான ஆற்றலை வெளிப்படுத்தி முன்னேறிவிட முடியாது. பறம்புக்கு இருந்த மிகச்சிறந்த வாய்ப்பு, எதிரியின் யானைப்படையை நிலைகுலையச்செய்வது. ஆனால், கானவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி பறம்பு இன்று யானைப்படையின் மீதான தாக்குதலை முழுமுற்றாக விலக்கிக்கொண்டது. அதற்குக் கைம்மாறு செய்யும்படி காற்றோ, காற்றியோ இன்று வீசவில்லை.

83p2_1532346456.jpg

இகுளிக்கிழவன் மிகுந்த கவலைகொண்டான். பாரியிடம் சொல்ல அவனுக்கு வார்த்தையில்லாமல் இருந்தது. கைகளை விரித்துக் காட்டி ஏதோ சொல்ல வந்தான். அதை அறிந்த பாரி, ``இயற்கை ஒருபோதும் நம்மைக் கைவிடாது. நாளை பார்ப்போம்” என்று சொல்லி, குதிரையில் ஏறினான்.

இரலிமேட்டின் குகைகளுக்குச் சற்றுக் கீழே வேங்கைமரத்தின் அடிவாரத்தில், பாட்டாப்பிறை போன்ற அமைப்புகொண்ட பெருந்திட்டுகள் இருந்தன. அங்குதான் இரவு பகலாகப் போர் பற்றிய பேச்சுகள் நடக்கின்றன. இன்றைய போர் பற்றியும், நாளைய தாக்குதல் பற்றியும் பேசுவதற்காக அனைவரும் காத்திருந்தனர்.

ஆங்காங்கே பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. மருத்துவக் கூடாரங்களில் காயம்பட்டவர்களுக்கான மருத்துவம் நடைபெற்றுவந்தது. முறியன் ஆசான், எண்ணற்ற மருத்துவர்களோடு தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். முதுவேழன், நாளைய போருக்கான ஆயுதங்களைப் பிரித்துக்கொடுக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார். குகைகளுக்குள்ளிருந்து ஆயுதங்கள் வெளியேறியபடி இருந்தன. மற்றவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

முடியனும் தேக்கனும் வேங்கைமரத்திட்டின் இடதுபுறத்தில் அமர்ந்திருந்தனர். அதற்கு நேரெதிராக வாரிக்கை யனும் கபிலரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அடுத்தபடியாக வேட்டூர் பழையனும் கூழையனும் இருந்தனர். இரவாதன், உதிரன், ஈங்கையன் ஆகியோர் வீரர்களோடு நாகக்கரட்டிலும் மருத்துவக் கூடாரங்களிலும் இருந்தனர். பாரியும் காலம்பனும் இன்னும் வந்துசேரவில்லை. அவர்களின் வரவுக்காக அனைவரும் காத்திருந்தனர்.

குலசேகரபாண்டியனின் கூடாரத்துக்கு உதியஞ்சேரல், செங்கனச்சோழன், சோழவேழன், பொதியவெற்பன் ஆகிய நால்வரும் வந்து சேர்ந்தனர். சாகலைவனின் இறுதிச்சடங்குக்காகப் போயிருந்தான் கருங்கைவாணன். அவனோடு அமைச்சர்கள் மூவரும் போயிருந்தனர். விசாரணைக்காக மையூர்கிழாரை வரச் சொல்லியிருந்தார் குலசேகரபாண்டியன்.

அரசப்படைகள் பலவகைப்படுகின்றன. பன்னெடுங்காலமாக நாள் தவறாமல் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு, எந்தக் கணமும் போர்க்களம் புகுவதற்குத் தகுதிகொண்ட படையே மூலப்படையாகும். எல்லாக் காலங்களிலும் அரசனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் படை இது ஒன்றே. அனைத்துவகை ஆயுதப் பயிற்சிகளும் இடைவிடாது வழக்கப்படுவதால் இந்தப் படையின் வீரர்களே போர்க்களத்தில் வலிமையான தாக்குதலை நடத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர். மூலப்படைக்கு அடுத்தபடியாக வலிமைவாய்ந்ததாகக் கருதப்படுவது உரிமைப் படையாகும்.

உரிமைப்படை வீரர்களுக்கு மானியமும் உண்பளமும் எல்லாக் காலங்களிலும் கொடுக்கப் படுகின்றன. அவற்றைப் பெற்றுக்கொண்டு ஆயுதப்பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுவர். அவர்கள், ஓர் இடத்திலிருந்து அந்தப் பயிற்சியை மட்டும் மேற்கொள்பவர்கள் அல்லர்; தத்தமது இடங்களில் இருந்துகொண்டு வெவ்வேறு பணியையும் செய்துகொண்டிருப்பர். போருக்கான ஆணை வந்தவுடன் அரசனுக்காகப் போர்க்களம் புகுவர். அவர்கள் `உரிமைப்படை’ என அழைக்கப்படுகின்றனர். கூலி பெற்றுக்கொண்டு அதற்காகப் போரிடுவோர் `கூலிப்படை’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தப் படைகள் தவிர, துணைப்படை, கானப்படை, வன்படை, குழுப்படை எனப் பல்வேறு படைகள் உள்ளன.

இவையெல்லாம் போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தும் படையணிகள். ஆனால், போர்க்களம் மட்டுமல்லாமல் எல்லாக் காலங்களிலும் அரசனின் பாதுகாப்புக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள படைதான் `அகப்படை.’ இந்தப் படையானது அரண்மனையில் அரசப் பாதுகாப்பின் பொருட்டுப் பல்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூடியது. அரண்மனைக்குள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமை யார் யாருக்கானது என்பதில் தொடங்கி, அரசனிடம் பேசும்போது யார் யார் எவ்வளவு இடைவெளியில் நின்று பேசவேண்டும் என்பதுவரை இந்தப் படையால் வரையறுக்கப் பட்டுள்ளது.

அரசனுக்கு அணுக்கக்காவலர்கள் இருவர் எந்நேரமும் உடன் இருப்பர். மெய்க்காவலர்கள் அறுவர், அரசருக்கும் அடுத்தவருக்கும் இடைநிலையில் குறுக்கிடாத தன்மையில் இருப்பர். ஆபத்துதவிகள் இருபதின்மர், அரசர் இருக்கும் அவைக்குள் இருப்பர். இவை எல்லாம் அரங்குக்குள் மட்டும் இருக்கும் ஏற்பாடு. இந்த வடிவங்கள் மூவேந்தர்களின் அரண்மனைகளில் ஒருசில மாறுபாடுகளைக் கொண்டிருக்கும். பாண்டியனின் மெய்க்காப்பாளர்கள் `ஆபத்துதவிகள்’ என்றும், சோழனின் மெய்க் காப்பாளர்கள் `வேளப்படையினர்’ என்றும், சேரனின் மெய்க்காப்பாளர்கள் `காக்குவீரர்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இதுபோல பெயர் மாறுபாடுகள் இருக்குமே தவிர, அகப்படையின் அடிப்படைப் பணிகளில் மாறுபாடு ஏதும் இருக்காது.

83p1_1532346470.jpg

மூஞ்சல் உருவாக்கப்பட்டவுடன் அந்த நகருக்கெனத் தனித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டன. கடல்போல் பரந்துகிடக்கும் படைவீரர்களுக்கு நடுவில் பெருவேந்தர்கள் மூவரும் தங்கியுள்ளனர். எனவே, மிகுந்த கட்டுப்பாடுகளை வகுக்கவேண்டியிருந்தது. அமைச்சர்கள் மூவரும் பேசி மூஞ்சலுக்கான அகப்படை ஒன்றை உருவாக்கினர்.

ஐந்துநிலைப் பிரிவுகளைக் கொண்ட `அகப்படை’யின் கட்டுப்பாட்டில்தான் மூஞ்சல் இப்போது இருக்கிறது. போர் தொடங்கிய பிறகு அரச விதிகள் இரும்பாலான கையுறைகளை மாட்டிக்கொள்கின்றன. எளிதில் யாருக்கும் அது இரக்கம் காட்டுவதில்லை. மூஞ்சலின் அரண்களைக் காத்து நிற்பது முதல் நிலைப்படை. மூஞ்சலின் வீதிகளைக் காப்பது இரண்டாம் நிலைப்படை. முஞ்சலுக்குள் இருக்கும் தனித்தனிக் கூடாரங்களைப் பாதுகாப்பது மூன்றாம் நிலைப்படை. அரசர்களைச் சுற்றி நிற்கும் மெய்க்காவலர்கள் நான்காம் நிலைப்படை. அணுக்கக்காவலர்கள் ஐந்தாம் நிலைப்படை.

வரவழைக்கப்பட்ட மையூர்கிழார், முதல் மூன்று நிலைகளில் உள்ள காவலர்களைக் கடந்து கூடாரத்துக்குள் நுழைவதே பெரும்பாடாகிப் போனது. பேரரசர்கள் மூவர், அரச குடும்பத்தினர் களான சோழவேழன், பொதியவெற்பன் மற்றும் மகாசாமந்தனான கருங்கைவாணன் ஆகிய அறுவர் மட்டுமே மூஞ்சலுக்குள் எந்நேரமும் நுழையக்கூடியவர்கள். இவர்களில் மூவேந்தர்கள் மட்டுமே எந்தவித ஆயுதமும் வைத்துக்கொள்ளும் உரிமை கொண்டவர்கள்.

சோழவேழன், பொதியவெற்பன் இருவரும் இடையிலக்கக் கருவிகளையோ, அணுக்கக் கருவிகளையோ வைத்துக்கொள்ளக் கூடாது. ஈர்வாளையும் உடைவாளையும் வைத்துக் கொள்ளலாம். மெய்க்கவசம் பூணலாம். ஆனால், கருங்கைவாணன் மெய்க்கவசம் பூணக் கூடாது. குறுவாள் மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

இவற்றைத் தவிர மூஞ்சலுக்குள் வர அனுமதிக்கப்பட்டவர்களுக்குத் தனித்ததோர் அடையாள வில்லை கொடுக்கப்பட்டிருந்தது. அது வைத்திருப்பவர்கள் விசாரணையின்றி உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வில்லைகளின்றி அழைக்கப்பட்டு உள்ளே வரும் யாரும் முழுமையான சோதனைக்குப் பிறகே பேரரசர்களின் கூடாரங்களுக்குள் அனுமதிக்கப் படுகின்றனர். உடல் அசைவற்ற மொழியில் பேச அனுமதிக்கப்படும் அவர்கள், ஒரு கணத்தில் மெய்க்காவலர்களால் வாள்கொண்டு தலை சீவப்படும் இடைவெளியில்தான் நிற்கவைக்க படுகின்றனர்.

இப்போது அவ்விடம் நிறுத்தப்பட்டார் மையூர்கிழார். பாண்டியப் பேரரசின் அரண்மனைக்குள் நுழையும்போதுகூட அவர் இவ்வளவு நெருக்கடியான சோதனையைச் சந்தித்ததில்லை. ஆனால், மூவேந்தர்கள் ஒன்றாக உள்ள இடம். ஆதலால், கடும் சோதனைக் குள்ளானார். இந்த இடத்தில் மூஞ்சல் அமைக்கலாம் என்று சொன்னவரே அவர்தான். ஆனால், அவரிடம் `நீதானே இந்த இடம் பற்றிச் சொன்னாய்?’ எனப் பேரரசர் கேட்டால், அவர் சட்டெனத் தலையசைத்துவிடக் கூடாது. அவர் பேசவேண்டிய முறை பற்றி அவருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஐயத்துக்கிடமான அசைவுகள் எந்த விளைவையும் ஏற்படுத்தக்கூடும். அவருக்குப் பின்னால் நிற்கும் மெய்க்காவலர்களின் வாள் நீளத்தையும் சேர்த்தே அவரிடம் சொல்லி அனுப்பியுள்ளனர்.

மூஞ்சலுக்கு வரச்சொல்லி அழைப்பு வந்தபோதே மையூர்கிழாருக்குப் பதற்றமானது. முதல் நாள் போரில் வேந்தர்கள் தரப்பில் பேரிழப்பு நேர்ந்திருக்கிறது. போர்நிலத்தைப் பற்றி முழுமையான செய்திகள் தெரியாததால்தான் இழப்புகள் அதிகமாகி யிருக்கின்றன என்று பேசிக்கொள்கிறார்கள். உள்ளுக்குள் சற்றே அச்சத்துடன் வந்தார் மையூர்கிழார். உண்மையில் தட்டியங்காட்டைப் பற்றி வெங்கல்நாட்டு மக்கள் யாருக்கும் எதுவும் தெரியாது. அந்தப் பாழ்நிலத்தில் போர்க்களத்தைத் தீர்மானித்ததே பெருந்தவறு. இதை எப்படி வேந்தரிடம் சொல்ல முடியும் என்ற குழப்பத்தோடு வந்தவருக்கு அகப்படையினரின் கெடுபிடிகள் மேலும் பதற்றத்தை உருவாக்கின. பேரரசர்கள் இருந்த அவையைப் பணிந்து வணங்கி தலை தாழ்த்தியபடி நின்றார் மையூர்கிழார்.

``இன்று பாரி போர்க்களம் புகுந்தானா?” எனக் கேட்டார் குலசேகரபாண்டியன்.

கேள்வி, மையூர்கிழாரைச் சற்றே இளைப்பாறச் செய்தது. அவர் அஞ்சியது போன்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. சிக்கல் இல்லாத கேள்வியைத்தான் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, தெளிவான குரலில் சொன்னார், ``பாரி வரவில்லை பேரரசே!”

``அவன் எங்கு இருந்தான்?”

``நாகக்கரட்டின் மேல்தான் இருந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான் கொம்போசைகள் எழுப்பப்பட்டு, தாக்குதலுக்கு வழிகாட்டப் பட்டது.”

``அவன் எப்போது போர்க்களம் புக வாய்ப்பிருக்கிறது?”

``குடி ஆசானும் குடி முடியனும் இருக்கும் வரை பறம்பின் குடித்தலைவன் தனது மண்ணை விட்டு வெளியேறி வர மாட்டான்.”

``குடி ஆசான் யார்?”

``தளபதி சாகலைவனைக் கொன்றவன்.”

83p3_1532346484.jpg

``இன்று போர்க்களத்தில் ஈட்டி எறிந்து யானையை வீழ்த்தியது குடி முடியன்தான்” என்றான் உதியஞ்சேரல்.

அப்போது கருங்கைவாணன் உள்ளே வந்தான். அவனோடு தளபதிகள் நால்வரும் வந்தனர். பேரரசர்களை வணங்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தான் கருங்கைவாணன். தளபதிகள் நால்வரும் எதிர்ப்புறமாக நின்றனர். மெய்க்கவசங்களோ, ஆயுதங்களோ அவர்களிடம் இல்லை. போர்க்களத்தில் ஏற்படும் மரணங்களை அவையில் பேசக் கூடாது. நடந்த தாக்குதலைப் பற்றியும், நடக்கவேண்டிய தாக்குதலைப் பற்றியும் தான் பேசவேண்டும். எனவே, சாகலைவனின் மரணத்தைப் பற்றிய பேச்சு அவையில் எழவில்லை.

``அவர்கள் ஏன் யானைப்போருக்கு வர மறுத்தார்கள்?” எனக் கேட்டார் குலசேகர பாண்டியன்.

``தெரியவில்லை பேரரசே. யானைப்போரில் நாம் அவர்களை வீழ்த்துவது கடினம். எனவே, அவர்கள் வர மறுத்தது நல்ல செய்திதான்” என்றார் மையூர்கிழார்.

சாகலைவனின் இறுதிச்சடங்கை நடத்திய வெறியோடு வந்து உட்கார்ந்த கருங்கைவாணனுக்கு மையூர்கிழாரின் கூற்று மேலும் வெறியூட்டியது. வீற்றிருந்த ஐவருக்கும் அவரின் பதில் அதிர்ச்சியைக் கொடுத்தது.

``நம்மிடம் இருப்பதில் பத்தில் ஒரு பங்கு யானைகள்கூட பறம்பின் தரப்பில் இருக்காது என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டான் அருகில் நின்றிருந்த யானைப்படைத் தளபதி உச்சங்காரி.

``எண்ணிக்கையில் என்ன இருக்கிறது தளபதியாரே!” என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் மையூர்கிழார்.

மேலும் சினமூட்டும் பதிலாக இருந்தது அது.

``அவர்களிடம் இருந்தாலும் நம்மிடம் இருந்தாலும் யானைகள் யானைகள்தானே?” எனக் கேட்டார் சோழவேழன்.

இதற்கு என்ன பதில் சொல்வது என மையூர்கிழாருக்குத் தெரியும். ஆனால், எப்படிச் சொல்வது என்பதுதான் விளங்கவில்லை. சற்றே அமைதியாக இருந்தார்.

``ஏன் அமைதியாக நிற்கிறீர்?”

``நம்முடைய குதிரைகள் ஏன் ஓட முடியாமல் தேங்கி நின்றன? அவர்களின் குதிரைகள் எப்படி நாள் முழுவதும் ஓடின? இருவரிடமும் இருந்தவை குதிரைகள்தானே?”

``கூர் மணல் குத்திக் கிழிக்க முடியாதபடி அவர்களின் குதிரைகளுக்குக் குளம்புக்குறடு அமைக்கப்பட்டிருக்கிறது. நம் குதிரைகளின் குளம்புக்குறடுகள் அதற்கு ஏற்ற வடிவில் இல்லை. எனவே, நம் குதிரைகள் தொடர்ந்து ஓட முடியாமல் தேங்கிவிட்டன” என்றான் குதிரைப் படைத் தளபதி உறுமன்கொடி.

``நம் குதிரைகளுக்கும் அதே போன்று குளம்புக்குறடுகள் இருந்திருந்தாலும் நாள் முழுவதும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்திருக்குமா?”

எதிர்பாராத கேள்வியாக இருந்தது. பேரரசர்களுக்கு முன்னால் நடக்கும் உரையாடல் இது. எதிரியின் தரப்பில் சொல்லிக்கொள்ளும்படி எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. ஆனால், நம் தரப்பில் வாள்படைத் தளபதியை இழந்திருக்கிறோம். இந்தப் பின்னணியில் அவையில் பேசும் ஒவ்வொரு சொல்லையும் மிகுந்த கவனத்தோடு பேசவேண்டும் என்ற விழிப்போடு இருந்தனர் தளபதிகள் அனைவரும்.

மையூர்கிழாரின் கேள்விக்கு, சட்டென விடை சொல்லிவிட முடியாத நிலை இருந்தது. அவையில் அமைதி நிலவியது. `இவன் என்ன சொல்ல வருகிறான்?’ என்று கூர்ந்து கவனித்தபடி இருந்தான் கருங்கைவாணன்.

``தரையில் இருக்கும் குதிரைகளைவிட மலையில் இருக்கும் குதிரைகளுக்கு ஆற்றல் அதிகம் எனச் சொல்லவருகிறீரா?” எனக் கேட்டான் உறுமன்கொடி.

``இல்லை. போர்க்குதிரை என்றாலும் ஆண் குதிரை சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் நின்றுவிடும். அதனால்தான் எதிரிகள் ஆண் குதிரைகளைப் போரில் பயன்படுத்துவதில்லை.”

ஒரு கணம் உறுமன்கொடி ஆடிப்போனான். இப்படியொரு காரணத்தை அவன் எதிர் பார்க்கவேயில்லை. ``ஆண் குதிரைகளின் ஆற்றல் உணர்ந்து அவற்றையே நாம் முன்களப் படைகளில் பயன்படுத்துகிறோம். அதுமட்டுமன்று, நாள் முழுவதும் குதிரைகள் களத்திலே நிற்கவேண்டிய தேவையிருப்பதால், காலையிலே நன்றாக நீர் குடிக்கவிட்டுத்தான் களத்துக்குக் கொண்டு வருகிறோம். நம்முடைய தேர்வும் முன்னேற் பாடுகளுமே போர்க்களச் செயல்பாட்டுக்கு எதிரானதா?” பேச்சற்று நின்றான் உறுமன்கொடி.

தலைகுனிந்து பேசத் தொடங்கிய மையூர் கிழாரின் குரல், தளபதிகளைத் தலைகுனிந்தே நிற்கவைத்துக்கொண்டிருந்தது. ``இதற்கு முன்பு நடைபெற்ற போர்களில் பறம்புவீரர்கள் யாரும் மெய்க்கவசம் அணிந்ததில்லை. இந்தப் போரில் வீரர்கள் அனைவரும் மெய்க்கவசம் அணிந்திருக்கின்றனர். நாம் அணியும் இரும்பாலான மெய்க்கவசத்தைவிடப் பலமடங்கு எடை குறைவானதாகவும் ஆயுதங்களால் எளிதில் உள்நுழைய முடியாததாகவும் இருக்கிறது அது.”

``முன்கூட்டியே எப்படி இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்தார்கள்?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``நான் அறிந்தவரை பறம்புவீரர்கள் போர் என்று வந்தால் எதிரிகளை ஒரு பொருட்டாக மதித்ததே கிடையாது. முதன்முறையாக அவர்கள் போருக்கான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்தச் செயலுக்கு உள்ளே இருப்பது நமது படைவலிமையைப் பற்றிய அச்சம். அந்த அச்சத்தை ஊதிப்பெருக்க வேண்டும். அவர்களின் வலிமையைப் பொருட்டாக நினைக்கக் கூடாது. அவர்களின் அச்சத்தைக் கையாள்வதைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும்.”

மையூர்கிழாரின் சொற்கள் போர்க்களத்துக்குத் தேவையான ஆயுதமாக இருப்பதாகக் கருங்கைவாணன் கருதினான். ஆனால், குலசேகர பாண்டியனின் எண்ணம் வேறாக இருந்தது. `பறம்பைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரிவிக் காமல், அவனது கூற்றின் முக்கியத்துவத்தின் வழியே நம்மை அவனது விருப்பத்தின் வடிவத்துக்குள் இழுக்கிறான்’ என அவருக்குத் தோன்றியது. ``சரி, நீ போகலாம்” என்றார்.

ஆழமானதோர் உரையாடலை சட்டென வெட்டித்தள்ளுவதுபோல் இருந்தது குலசேகரபாண்டியனின் உத்தரவு.

மையூர்கிழார், அவையை வணங்கி வெளியேறினார்.

பாரி வேங்கைமரத்திட்டுக்கு வந்ததும் பேச்சு தொடங்கியது.

83p4_1532346501.jpg

சற்றே சினத்தோடு இருந்தான் வேட்டூர் பழையன். ``யானைப்போரைத் தவிர்க்கும் வாக்கை நாம் கானவர்களுக்கு வழங்கியிருக்கக் கூடாது. எதிரிகள் ஆடுகளைப்போல யானை களைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்கள். நமது தாக்குதல் இன்று யானைப்படையில் இருந்திருக்குமேயானால் எதிரிகள் நிலை குலைந்திருப்பார்கள். நாம் மிகச்சிறந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம்” என்றார்.

வேட்டூர் பழையனின் கவலை எல்லோருக்கும் புரிந்தது. இன்று எதிரிகளின் யானைப்படை தாக்கப்பட்டிருந்தால் அவர்களது படையின் கட்டுக்கோப்புகள் மொத்தமாகச் சீர்குலைந்திருக்கும். ஆனால், எதுவும் இன்று நடக்கவில்லை. காலை முதல் மாலை வரை பறம்புவீரர்கள் கடுமையாகப் போரிட்டாலும் முன்புறப் படையணியின் ஒரு பகுதியை மட்டும்தான் அழித்தொழிக்க முடிந்தது. இந்த எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் வேட்டூர் பழையனின் சொல் இருந்தது.

``வாக்களிக்கப்பட்ட பிறகு நமக்குக் கிடைக்கும் நன்மையைக் கருதி, அளிக்கப்பட்ட வாக்குக்காக வருத்தப்படுதல் கோழைத்தனமல்லவா?” எனக் கேட்டான் பாரி.

``எனக்குப் புரிகிறது. ஆனால், மூவேந்தர்களின் பெரும்படைக்கு எதிராகப் போர்க்களத்தில் நின்றுகொண்டிருக்கும் நமக்கு, நாமே சிக்கல்களை உருவாக்கிக்கொள்வது எந்த வகையில் அறிவார்ந்த செயல்?”

``அறிவு என்பது, ஆசைகொண்டு அளக்கப் படுவதல்ல. வெற்றியின் மீது ஆசைகொண்டு, அளிக்கப்பட்ட வாக்கை அளக்க முயல்கிறீர்.”

``இல்லை பாரி! நான் வெறும் ஆசையின் பொருட்டு இதைக் கூறவில்லை. போர் எவ்வளவு விரைவாக முடிக்கப்பட வேண்டுமோ, அவ்வளவு விரைவாக முடிக்கப்பட வேண்டும். நாம் யார் என்பதை எதிரி அறிந்துகொள்ளும்முன் அவர்கள் அழிக்கப்பட்டாக வேண்டும். அவர்களிடம் எண்ணிலடங்கா வீரர்களைக்கொண்ட படை இருக்கிறது என்பது ஒரு பொருட்டே அல்ல. ஆனால், மையூர்கிழார் என்ற ஒருவன் இருக்கிறான். அவனை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அவன் சொன்ன குறிப்பைவைத்தே மயிலாவுக்கான நிறைசூல் விழாவை அறிந்து எதிரிகள் தாக்குதல் தொடுத்துள்ளனர். நம் மீது எப்போதெல்லாம் எதிரிக்கு அச்சம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்த அச்சத்தை அவனால் கலைக்க முடியும். எனது கவலை அவன் பொருட்டுதான்.”

அவை சற்றே அமைதி கொண்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு பாரி கேட்டான், ``அவனுக்கு, தட்டியங்காட்டு நிலம் பற்றித் தெரியுமா?”

``எனக்கே தெரியாதே. அவனுக்கு எப்படித் தெரியும்?”

``அவன் கானவர்களை அறிவானா?”

``வாய்ப்பில்லை.”

``காற்றையும் காற்றியையும் பற்றித் தெரியுமா?”

``தெரிந்திருக்காது.”

``மெய்க்கவசத்தையும் மூவிலை வேலினையும் அறிவானா?”

``அறிய மாட்டான்.”

``பிறகு, ஏன் அவன்குறித்து இவ்வளவு கவலை கொள்கிறீர்கள்?”

``இவை எல்லாவற்றையும் அவன் அறியவில்லை என்பது பெரிதன்று. ஆனால், அவன் அறிந்துவைத்திருப்பது இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது.”

``அப்படி எதை அவன் அறிந்திருக்கிறான்?” என வேகமாகக் கேட்டான் தேக்கன்.

``அவன் பாரியை அறிவான்.”

யாரும் எதிர்பாராததாக இருந்தது.

83p5_1532346517.jpg

``பறம்பின் மரபுகளை அறிவான். இங்கு உள்ள குடிகளின் வீரத்தை அறிவான். ஆனால், இவை எல்லா வற்றையும்விட முக்கிய மானது, எதிரியின் கூடாரத்தில் பாரியை அறிந்தவன் அவன் ஒருவனே.”

``அவன் பொருட்டு நாம் பதற்றப்பட வேண்டாம். அவன் போர்க்களம் புகும் நாளுக்காகக் காத்திருப்போம்” என்றான் முடியன்.

அப்போதுதான் இரவாதனும் உதிரனும் ஈங்கையனும் வந்து சேர்ந்தனர்.

மையூர்கிழாரோடு தளபதிகள் நால்வரும் அவை விட்டு வெளியேறினர். பேரரசர்களோடு தலைமைத் தளபதி கருங்கை வாணன் மட்டுமே அவையில் இருந்தான்.

சோழவேழன் சொன்னார், ``மையூர்கிழார், பறம்பினைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் துல்லியமாகக் கூறுகிறார்.”

``இல்லை. வெங்கல்நாட்டுக்குக் கொடுத்திருக்கும் ஒரே வேலை எதிரிகளைப் பற்றிச் செய்தி சேகரிப்பதுதான். ஆனால், இவனுக்கு ஒத்துழைக்காத ஆறு ஊர்கள் வெங்கல்நாட்டில் உண்டு. உண்மையில் அந்த இடத்தில்தான் இவனால் அதிக செய்தியைச் சேகரிக்க முடியும். அது இவனுக்குத் தெரியவில்லை” என்றார் குலசேகரபாண்டியன்.

``இவன், போர்க்களத்துக்குள்ளே வைத்துப் பயன்படுத்தப்படவேண்டிய ஆள். இவனை வெளியில் வைப்பதால் நமக்குத்தான் இழப்பு எனக் கருதுகிறேன்” என்றான் பொதியவெற்பன்.

``அவன்தான் நமக்கான தூண்டில் புழு. அந்தப் புழுவைக் கடிக்க பறம்புத் தளபதிகள் காத்திருப்பர். பொருத்தமான நேரத்தில் போர்க்களத்துக்குள் இவனை இறக்கலாம்” என்றார் குலசேகர பாண்டியன்.

பேரரசர்களுக்கிடையேயான உரையாடலைக் கவனித்தபடியிருந்தான் கருங்கைவாணன். ஒரு தளபதி, இரண்டு சேனைவரையர்கள், முப்பத்தைந்து சேனைமுதலிகள் இன்று கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், இந்த மரணங்கள் எவையும் இந்த அவைக்கு ஒரு பொருட்டே அல்ல. அதுதான் பேரரசர்களின் படைபலம். அந்த மாபெரும் படைப் பிரிவுகளுக்கான அடுத்த நாள் திட்டமிடல் என்ன என்பதைப் பற்றி விளக்கினான் கருங்கைவாணன்.

அவையில் உள்ளோர் திட்டத்தை முழுமையாகக் கேட்டனர். யாருக்கும் மறுப்புச் சொல் இல்லை. கேட்கப்பட்டவை ஏற்கப்பட்டவையாகின. அவை கலையும் முன் குலசேகரபாண்டியன் சொன்னார், ``நாளைய போரில் வாள்படைத் தளபதியாக சூலக்கையன் செயல்படுவான்.’’

சரியென அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கொல்லப்பட்ட சாகலைவன், பாண்டியநாட்டைச் சேர்ந்தவன். அவனுக்குப் பதில் வேறொரு தளபதியை பாண்டிய வேந்தர் சொல்லுதலே முறை. அவ்வாறே செய்தார்.

முடியன் சொன்னான், ``நாளை அவர்கள் குதிரைகளை முன்பாய்ச்சலில் ஈடுபடுத்த மாட்டார்கள். நின்ற இடத்திலே குதிரைப்படை நின்றுகொள்ளும்.”

``அவர்கள் அப்படிச் செய்தால் நம்மால் நெடுந்தொலைவு உட்புகுந்து செல்ல முடியாது. நமது தரப்பில் இழப்பு அதிகமாகும். பயனும் இருக்காது” என்றான் வேட்டூர் பழையன்.

``அதுமட்டுமன்று. காற்றும் காற்றியும் வீசினாலும் குதிரைப்படையின் வலிமையைக் குறைக்காமல் நம்மால் மூஞ்சலை நெருங்க முடியாது” என்றான் தேக்கன்.

`வேறு என்னதான் வழி?’ என்ற சிந்தனையில் அவை மூழ்கியது.

எதிரிகள் தங்களின் படையை மூன்று நிலைகளில் வைத்துள்ளனர். அவற்றில் முதல் நிலையில் நிற்கும் படையில் பாதி குதிரைகளைத் தான் இன்று வீழ்த்த முடிந்தது. ஈக்கிமணலால் குளம்பு கிழிபட்ட குதிரைகள் மீண்டும் போர்க்களம் புக, ஒரு மாதம் ஆகும். அப்போதும் அவை துணிந்து தாவிவிடாது. ஆனால், மீதம் உள்ள குதிரைகளை விலக்கி உட்புகுந்து செல்வது எளிய செயலன்று. சரியான உத்தியால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

நீண்டநேர சிந்தனைக்குப் பிறகு தேக்கன் சொன்னான், ``ஓங்கலத்தைப் பயன்படுத்துதல் ஒன்றே வழி.’’

சட்டென முடியனைப் பார்த்தான் இரவாதன். அவனது பார்வையில் மகிழ்ச்சி மின்னியது.

``அது முறையா... போர்விதி அதை அனுமதிக்குமா?” எனக் கேட்டான் முடியன்.

``கபிலர் நிலைமான் கோல்சொல்லியாக இருக்கும்போது நாம் எப்படி போர்விதியை மீறுவோம். ஓங்கலத்தைப் பயன்படுத்துதலில் தவறேதும் இல்லை” என்றார் வாரிக்கையன்.

பேச்சினூடே தான் ஏன் உள்ளிழுக்கப்பட்டோம் என்பது கபிலருக்கு விளங்கவில்லை. ஆனால், வாரிக்கையனின் பேச்சில் ஏதோ ஒரு முடிச்சு இருப்பது மட்டும் புரிந்தது.

``இன்றைய தாக்குதலில் எதிரியின் எல்லாத் தந்திரங்களையும் அறிந்துவிட்டோம். ஆனால், அறிய முடியாததாக ஒன்று இருக்கிறதே?” எனக் கேட்டார் உதியஞ்சேரல்.

``என்ன?” என்றார் குலசேகரபாண்டியன்.

``எதிரிகள் யானைப்போரில் மிகவல்லவர்கள் என்றால், அதை ஏன் அவர்கள் தவிர்த்தார்கள்?”

``தெரியவில்லை. ஆனால், அதை நாம் சாதகமாக்கிக்கொள்வோம். இனி போர்க்களத்தில் யானைகளுக்கு வேலையில்லை. எக்கணமும் நமது யானைப்படை பறம்புக்குள் நுழையலாம். அது எக்கணம் என்பதைப் பொருத்தமான நேரத்தில் முடிவுசெய்வோம். அவர்கள் நமக்காக ஏற்படுத்திக்கொடுத்துள்ள வாய்ப்பு இது” என்றார் குலசேகரபாண்டியன்.

மிகச்சரியான சிந்தனை என அனைவருக்கும் தோன்றியது. பேச்சு முடிந்த சிறிது நேரத்தில் அவை கலைந்தது. வேந்தர்கள் தத்தமது கூடாரங்களை நோக்கிப் போனார்கள். பாண்டியப் பேரரசரைச் சுற்றி ஆபத்துதவிகள் நடந்தார்கள். சோழனைச் சுற்றி வேளப்படையினர் சென்றனர். சேரனைக் காக்குவீரர்கள் அழைத்துச்சென்றனர். மேற்குமலையின் சரிவில் மின்னல் வெட்டி இறங்கியது. செங்கனச்சோழன் ஊன்றுகோலை ஊன்றியபடி மெள்ள நடந்து கூடாரத்துக்குப் போனான்.

அவன் வருகைக்காகக் கூடாரத்துக்குள் காத்திருந்தான் சோழர்களின் ஒற்றர்படைத்தளபதி. மூஞ்சலுக்குள் நுழைய சிறப்பு வில்லைகள் கொடுக்கப்பட்டது ஒற்றர்படைத் தளபதிகளுக்கு மட்டும்தான். அவர்கள் எந்த நேரமும் வரலாம். இந்த இரவு வேளையில் தனது வரவுக்காகக் காத்திருப்பதில் இருந்தே அதன் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. ``என்ன செய்தி?” எனக் கேட்டான் செங்கனச்சோழன்.

பேரரசனை வணங்கிவிட்டுச் சொன்னான், ``கரும்பாக்குடித் தலைவன் ஈங்கையன், பாரியின் படையில் பங்கேற்றுப் போர்புரிகிறான்” என்றான் ஒற்றர்படைத்தளபதி.

செங்கனச்சோழனுக்கு அவன் சொல்ல வருவது புரியவில்லை, ``என்ன சொல்கிறாய்... விளங்கும்படி சொல்.”

``தங்களுக்குப் பேரரசர் பட்டம் சூட்டும் வேளையில் கரும்பாக்குடியினரின் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. கரும்பாக்குடியினர் ஈங்கையனின் தலைமையில் மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தினர். இறுதியில் அவர்களை வீழ்த்தினார் நம் தளபதி உறையன். வீழ்த்தப்பட்ட ஈங்கையன் உள்ளிட்ட அவன் தோழர்களைக் கப்பல் அடிமைகளாக விற்றார். ஆனால், அந்த ஈங்கையன் இன்று பறம்பின் படையில் தளபதிகளில் ஒருவனாய் நின்று போர்புரிகிறான்.”

வியப்பு நீங்காமல் ஒற்றர்படைத் தளபதியைப் பார்த்தான் செங்கனச்சோழன், ``நீ சொல்வது உறுதியான செய்திதானா?”

``உறுதியான செய்திதான் பேரரசே! நம்மவர்கள் நேரில் பார்த்துள்ளனர்.”

``சரி. மற்றவர்களுக்குத் தெரியவேண்டாம்” என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தான்.

குலசேகரபாண்டியன் கூடாரத்துக்குள் நுழைந்தபோது அங்கேயும் ஒருவன் இருந்தான். பேரரசரை வணங்கிவிட்டுச் சொன்னான், ``எதிரிகள் தரப்பில் இன்றைய போரில் பங்கெடுத்தவர்களை மதிப்பிட்டோம். நமது படையோடு ஒப்பிட்டால் அவர்களின் படை இருபதில் ஒரு பங்குதான் இருக்கும். இன்றைய போரில் இறந்தவர்களை மதிப்பிட்டோம். நமது தரப்பில் இறந்தவர்களோடு ஒப்பிட்டால் எதிரிகள் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதில் ஒரு பங்குகூட இருக்காது. அதற்கும் குறைவுதான்.”

வேங்கைமரத்திட்டில் கூடி இருந்தவர்கள் பேச்சு முடிந்து கலைந்தனர். உறங்குவதற்காக ஆறாவது குகையை நோக்கிப் போனான் பாரி. அவன் சென்ற சிறிது நேரத்தில் அந்தக் குகையை நோக்கி உதிரன் போனான். பாரி தங்கும் குகையை நாள்தோறும் தளபதி ஒருவன் காத்து நிற்க வேண்டும் என்பது முடியனின் உத்தரவு.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 94

 

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

திசைவேழரின் கையுயர்வின் வழியே மேலெழுந்தது பேரோசை. தட்டியங்காட்டுப் போரின் இரண்டாம் நாள் தொடங்கியது. இனி ஒவ்வொரு நாளும் போர் முடிவுறும் நாழிகையின்போது போர்க்கள நிகழ்வுகளை உற்றுநோக்க வேண்டும். முதல் நாள் இழப்புக்கு வஞ்சினம் உரைத்தவர்கள், மறுநாள் பழிவாங்க அனைத்து வழிகளிலும் முயல்வார்கள். அவர்களுக்கான கடைசி வாய்ப்பாக, போரின் இறுதி நாழிகை இருக்கும். போர் முடிவுற்றதாக முரசுகள் ஒலி எழுப்பினாலும் அந்தக் கணத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவே முயல்வார்கள். எவன் ஒருவன் முரசோசைக்கு மதிப்புகொடுத்து ஆயுதத்தைத் தாழ்த்துகிறானோ, அவனே பாதிக்கப்படுகிறான். நேற்றைய போரில் தளபதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். அப்படியென்றால், இன்றைய போரில் அதற்குப் பலியெடுக்கப்படும். ஒருவேளை பகற்பொழுதில் அந்த வாய்ப்பு அமையாவிடின் கடைசி நாழிகையில் சதிகள் அரங்கேறத் தொடங்கும்.

நிலைமான் கோல்சொல்லிகளின் வேலை இனிமேல்தான் கடினமானதாக மாற இருக்கிறது. வேட்டை விலங்குகளை விதிமுறைகளைச் பேணச்செய்வது எளிதன்று. போர்க்களத்தில் எல்லோரும் வேட்டை விலங்குகள்தான். தனக்கான இரையைப் பற்றியிழுக்கக் கடைசிவரை முயல்வார்கள். அதுவும் கடைசிக்கணத்தில் மூர்க்கமேறிய பாய்ச்சல் இருக்கும். அப்போது ஒலிக்கும் முரசோசை செவிப்புலனுக்குள் நுழையாது. கொலைவெறி ஊறிய அவர்களின் கண்களுக்கு வேறெதுவும் தெரியாது.

85p2_1533108249.jpg

போர்க்களம் முழுவதும் விதிகளின் வழியே காத்து நிற்பதுதான் நிலைமான் கோல்சொல்லிகளின் கடமை. முடிவுறும் நாழிகையில் கொலைவெறியை மறித்து நிறுத்தும் செயலில்தான் அவர்களின் திறன் இருக்கிறது. காற்றில் அங்குமிங்குமாக அம்புகளும் ஈட்டிகளும் பறப்பதன்று பிரச்னை. முரசோசையையே தனது திட்டத்தின் பகுதியாகத் தீர்மானித்துச் செயல்படுபவர்கள்தான் விதிமுறைகளைத் தகர்த்தெறிகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நிலைமான் கோல்சொல்லியின் பார்வையெல்லைக்கு அப்பால்தான் தங்களின் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். திசைவேழர் முடிவுசெய்தார், `இனிமேல் நடுவில் இருக்கும் இந்தப் பரணில் மட்டும் இருப்பதில்லை. போரின் போக்கிற்கேற்ப முடிவுறும் நாழிகையின்போது வெவ்வேறு பரண்களின்மேல் ஏறி நின்று களத்தைத் துல்லியமாகக் கண்காணிக்க வேண்டும்.’

எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் தட்டியங்காடெங்கும் வீரர்கள் போரிட்டுக்கொண்டிருந்தனர். ஒரு கணம் திகைப்புற்றார் திசைவேழர். `இத்தனை ஆயிரம் வீரர்கள் போரிடுவதைக் கண்கள் பார்த்தபடியிருக்க, எண்ணங்கள் தாம் செய்யவேண்டிய வேலையில் மட்டுமே கவனம்கொண்டிருக்கின்றன. போர்க்களத்துக்குரிய மனிதராக அவர் மாறிக்கொண்டிருந்தார். சரிந்துவிழும் எண்ணற்ற உடல்களைப் பார்க்காது கடப்பதைப்போலவே பார்த்துக் கடக்கும் மனநிலை உருவாகிறது. வீரர்கள் அனைவரும் இந்த மனநிலையில்தான் இருப்பார்கள். மரணத்தை மதிப்பற்ற ஒன்றாகக் கைக்கொண்டால் மட்டுமே போர்க்களத்துக்குரியவராக மாற முடியும். திசைவேழர் போர்க்களத்துக்கானவராக மாறியிருந்தார்.  

நேற்றைய இழப்பின் தாக்கம் ஏதும் வேந்தர்படையில் இல்லை. தளபதிகள் பலருக்கும் இப்போது தெளிவு கூடியிருந்தது. சமதளப் போர்க்களத்தில் பறம்புவீரர்கள் வெளிப்படுத்தும் ஆற்றலைப் பற்றிய குறை மதிப்பீட்டிலிருந்து அவர்கள் மீண்டனர். நேற்றைய போரில் எதிரியைச் சரியான உத்திகளின் மூலம் சந்திக்கவில்லை. எளிதாக வெற்றியை எட்டும் மனநிலையிலேயே அவர்கள் போரைத் தொடங்கினர். ஆனால், இன்று அப்படியல்ல. எதிரியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதைச் சாகலைவனின் மரணம் உணர்த்தியிருந்தது.

கருங்கைவாணனைப் பொறுத்தவரையில் தளபதிகளுக்கான தனித்த ஆணை எதையும் இன்று அவன் பிறப்பிக்கவில்லை. பொதுவான தன்மையிலான தாக்குதலுக்கே அவன் அனுமதி கொடுத்திருந்தான். அவனுக்கு நேற்றைய போர் ஒரு மதிப்பீட்டுக்களம்தான். எதிரிகள் செயல்படும் வேகத்தையும் அவர்களின் ஆற்றலையும் மதிப்பிட்டான். இன்றோ அவர்கள் சோர்வடையும் வரை தமது படைத் தாக்குதலை நிறுத்தாமல் தொடரவேண்டும் என்று கூறியிருந்தான். பறம்புவீரர்கள் முழு ஆற்றலோடு போரிடும் வரை அவர்களோடு தீவிரமாக மோதுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் சோர்வுறும் வரை நமது முன்னணிப் படையினர் விடாது மோதிக்கொண்டிருக்க வேண்டும். அதனால் ஏற்படும் இழப்புகள் ஒரு பொருட்டல்ல. எண்ணற்ற வீரர்களின் இழப்பின் வழியேதான் பறம்புவீரர்களைச் சோர்வடையச் செய்ய முடியும். அதன்பிறகே தாக்குதல் போரை முழு வேகத்தோடு தொடங்க வேண்டும் என்று முடிவுசெய்திருந்தான்.

வழக்கம்போல் முதல்நிலைப் படையின் நடுப்பகுதியில் கருங்கைவாணன் நின்றிருந்தான். நேற்றைய போரில் முதல்நிலைப் படை மூன்றில் ஒரு பகுதி வீரர்களை இழந்திருந்தது. அதே அளவுக்குப் புதிய வீரர்கள் இப்போது படையில் நின்றிருந்தனர். இரண்டாம் நிலையிலும் மூன்றாம் நிலையிலும் இருந்த வீரர்களை இதில் இணைத்திருந்தான். ஆனால், அங்கு இருந்த நிலைப்படை வீரர்கள் யாரையும் இங்கு வந்து சேர்க்கவில்லை. எதிரிகளைச் சோர்வடையச்செய்யும் உத்தியே பின்பற்றப்பட்டது. இழப்பதையே உத்தியின் பகுதியாக மாற்றியிருந்தான். அதற்கேற்ப கூலிப்படை வீரர்களைத்தான் முன்களத்தில் நிறுத்தியிருந்தான்.

முரசோசை கேட்டதும் உதிரனின் தலைமையிலான விற்படை தங்களது தாக்குதலைத் தொடங்கியது. கூழையனின் தேர்ப்படையும் தேக்கனின் வாள்படையும் முன்னேறத் தொடங்கின. வேந்தரின் குதிரைப்படைத் தளபதி உறுமன்கொடி பாய்ந்து தாக்கவில்லை. நின்ற இடத்திலேயே அணிவகுத்து நின்றுகொண்டான். இது எதிர்பார்க்கப்பட்டது தான். பறம்பின் குதிரைப்படைத் தளபதி இரவாதன் சிறிது நேரம் போக்குக்காட்டிக்கொண்டிருந்தான்.

தொடக்க நாழிகையில் போரின் குணத்தைக் கருங்கைவாணன் நிதானமாக மதிப்பிட்டுக்கொண்டிருந்தபோது, குளவன்திட்டிலிருந்து பாரியும் அதைத்தான் செய்துகொண்டிருந்தான். காலையில் பாரி இந்த இடம் வந்துசேரும்போதே இகுளிக்கிழவனின் முகம் சோர்வுற்று இருந்தது. ``நேற்று இரவெல்லாம் உள்காடுகளில் நல்ல மழை. இப்போதும் கணவாய்ப் பகுதியில் தூறல் விழுந்துகொண்டுதான் இருக்கிறது” என்றான்.

85p1_1533108233.jpg

அவன் என்ன சொல்லவருகிறான் என்பது பாரிக்குப் புரிந்தது.

மெல்லிய குரலில் தயக்கத்தோடு சொன்னான், ``இன்றும் காற்றும் காற்றியும் வருவதற்கு வாய்ப்பில்லை.”

பாரியின் முகத்தில் கவலைதோய்ந்த மாற்றங்கள் எதுவுமில்லை. அதைப் பார்த்தபடி இகுளிக்கிழவன் மேலும் சொன்னான், ``தட்டியங்காட்டு நிலத்தில்கூட அதிகளவுக்கு வெக்கை இருக்காது” என்றான்.

அப்படியென்றால், வேந்தர்படை வீரர்கள் நடுப்பகலுக்குப் பிறகு சோர்வடைய மாட்டார்கள் என்பதை எண்ணியபடியே போர்க்களத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. பறம்பைப் பொறுத்தவரை இன்றைய போர் உத்தி என்பது, தாக்கி முன்னேறுவதன்று; முழுவதும் இரவாதனைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள உத்தியே. அவனது தாக்குதலுக்குக் குறுக்கே யாரும் வந்துவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மரத்திலிருந்து கலைந்து வானத்தில் பறக்கும் பறவைகள் சிறிது தொலைவு பறந்த பிறகு ஓர் ஒழுங்கை அடைவதைப்போல, போர் தொடங்கிய கணத்தில் தாக்கி முன்னேறிய பறம்புவீரர்கள் திட்டமிடலுக்கேற்ற ஒழுங்கை அடைந்துகொண்டிருந்தார்கள். பாரியின் கண்கள், அவர்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தன.

வேந்தர்களின் வாள்படைக்குப் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட சூலக்கையன் திட்டமிடப்பட்டபடி படையை நகர்த்திக்கொண்டிருந்தான். எதிரில் நின்றிருந்த பறம்புத்தளபதி தேக்கன் முன்னகர்ந்து செல்வதற்கான வாய்ப்புகளைக்கூடப் பயன்படுத்தவில்லை. இன்றைய போரில் பறம்புத்தளபதிகள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பணி இரவாதனுக்குத் துணைசெய்வதே.

இரவாதன், தனது குதிரைப்படையைக் கொண்டு பெயரளவிலான தாக்குதலையே நடத்திக்கொண்டிருந்தான். அவனது திட்டத்தை நடைமுறைப்படுத்த இருபுறமும் இருந்த பறம்புத்தளபதிகளான உதிரனும் கூழையனும் குறிப்பிட்ட தொலைவு வரை முன்னேறிப் போகவேண்டியிருந்தது. அதைக் கணித்தபடியே இரவாதன் அங்குமிங்குமாக அலைமோதிக்கொண்டிருந்தான். உறுமன்கொடியோ, தங்களின் குதிரைப்படை நிலைகொண்ட தாக்குதலை நடத்துவதால் என்ன செய்வதென்று புரியாமல் எதிரி திணறுகிறான் என நினைத்தான்.

இரவாதன் உள்ளிட்ட பறம்பின் குதிரைப்படை வீரர்கள் அனைவரின் அம்பறாத்தூணிகளிலும் ஓங்கல அம்புகள் இருந்தன. இன்றைய போரில் பறம்பு நம்பியிருக்கும் பேராயுதம் ஓங்கலம்தான். `ஓங்கலம்’ என்பது மூங்கிலின் குறிப்பிட்டதொரு வகை. இந்த வகை மூங்கிலைப் பறவைகளோ, விலங்குகளோ நெருங்காது.

ஓங்கலத்தின் தோகை அறுத்தாலோ, கணு குத்தினாலோ விலங்குகளுக்கு மயக்கம் ஏற்படும். அதன் ஈக்கியில் கசியும் நீர் கணநேரத்தில் உயிரினங்களைக் கண்பார்வை மங்கச்செய்யும். கருவுற்ற யானை ஓங்கலத்தின் தோகையைத் தின்றால், தின்றவுடன் கருக்கலையும். நாகத்தின் நஞ்சால் தாக்குண்ட விலங்கு மட்டும் ஓங்கலத்தைத் தேடிவந்து அதன் தோகைகளை வேகவேகமாக மென்று தின்னும். எதிர்குணம்கொண்ட நஞ்சு, நாகத்தின் நஞ்சைச் செயலிழக்கச்செய்யும் என்பதால், விலங்குகள் இந்த மருந்தைக் கண்டறிந்துள்ளன. ஓங்கலத்துக்குள் நாகங்கள் நுழைவதில்லை. நாகங்கள் அஞ்சும் நஞ்சு, ஓங்கலத்தின் தோகைச் சுணைகள்தான். ஊர்ந்து செல்லும் பாம்பின் மீது தோகையின் விளிம்பில் உள்ள கூர்முனைகொண்ட சுணை பட்டால்போதும், பாம்பின் செதில்களுக்குள் சிக்கிக்கொள்ளும். பாம்பு அசைய அசைய அதன் செதில்களே சுணையை உடலுக்குள் செலுத்திவிடும். நாகம் நஞ்சால் செயலிழக்கும்.

`வேந்தர்களின் குதிரைப்படை பாய்ந்து தாக்காமல் நிலைகொண்டு தாக்கும் உத்தியைத்தான் பின்பற்றும்’ என்று நேற்றிரவு வேங்கைமரத்திட்டில் பேசும்போதே முடியன் கணித்தான். அவர்கள் முன்னேறிவந்து தாக்காமல் நிலைகொண்டு தாக்கும் உத்தியைப் பின்பற்றினால் வேந்தர்களின் குதிரைப்படையை எளிதில் வீழ்த்த முடியாது. அவர்கள் படையில் பெரும் எண்ணிக்கையில் குதிரைகள் இருக்கின்றன. அவற்றை வெகுவாகக் குறைத்தால் மட்டுமே மூஞ்சல்நகரை நெருங்க முடியும். மூஞ்சலின் பாதுகாப்பை நொறுக்கி நீலனை மீட்கச் செய்யவேண்டுமென்றால், முதலில் எதிரிகளின் குதிரைப்படையைக் குறைத்தாக வேண்டும். அதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஓங்கலத்தைப் பயன்படுத்துதல் மட்டுமே.

நேற்றிரவு வேங்கைமரத்திட்டில் ஓங்கலத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவை எடுத்தவுடன் செய்திகள் எல்லா இடங்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. இரவோடு இரவாக ஓங்கல மூங்கிலின் கட்டுகள் தலைச்சுமையாக இரலிமேட்டுக்கு வந்துசேரத் தொடங்கின. உடனடியாக அவை அம்புகளாகச் சீவப்பட்டு குதிரைப்படை வீரர்களின் அம்பறாத்தூணிகளில் செருகப்பட்டன.

இரவாதன் தலைமையிலான குதிரைப்படை வீரர்கள் அனைவரின் அம்பறாத்தூணிகளிலும் இப்போது ஓங்கல அம்புகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை யாரும் இன்னும் பயன்படுத்தவில்லை. மற்ற அம்புகளைப் பயன்படுத்தியபடியே இங்குமங்குமாக அலைந்துகொண்டிருந்தனர். வேந்தர்களின் குதிரைப்படையின் இரு ஓரங்களிலும் இரவாதனின் குதிரைப்படை கடைசி வரை பாய்ந்து செல்வதற்கு வழியமைத்துக்கொடுக்க உதிரனும் கூழையனும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பறம்புப்படை முன்னோக்கி வந்துகொண்டிருப்பதைக் கருங்கைவாணன் கவனித்துக்கொண்டிருந்தான். தங்கள் படையின் முன்கள வீரர்கள் பெரும்வலிமைகொண்டவர்கள் அல்லர்; தனது திட்டபடி அவர்கள் பலியாடுகளே. ஆனால், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பறம்புப்படை இவ்வளவு உள்நுழைந்துள்ளதே எனச் சிந்தித்தபடி நின்றுகொண்டிருந்தான். பறம்புத் தலைமைத் தளபதி முடியனை அவனது கண்கள் தேடின. வழக்கம்போல முடியன் முன்களத்துக்கு வரவில்லை. நேற்றைக்குப்போல நடுப்பகல் கடந்த பிறகுதான் அவன் முன்னே வருவான். அப்படியென்றால், இன்றும் பிற்பகலில் அவர்களின் தாக்குதல் திட்டம் தீவிரமடையும் என நினைத்துக்கொண்டிருந்தான். 

எவ்வளவு துல்லியமாகத் திட்டமிட்டாலும் நாம் சிந்தித்திராத வாய்ப்புகளைப் போர்க்களம் நமக்கு உருவாக்கித்தரும். மிகக் குறைந்த நேரம் மட்டுமே நீடிக்கும் அந்த வாய்ப்பைச் சரியாகக் கண்டறிந்து செயல்படுத்தும் தளபதியே வெற்றியைப் பறிக்கிறான். கருங்கைவாணனின் திறமையே, களத்தில் உருவாகும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில் இணையற்றவனாக இருப்பதுதான். இன்றைய நாளுக்காக வகுக்கப்பட்ட உத்தியை, படையணிகள் சரியாகச் செயல்படுத்துகின்றனவா என்பதைத் தளபதி உற்றுகவனிக்க வேண்டும். அதே நேரத்தில் எதிரிகள் வகுத்துள்ள உத்தி என்ன என்பதையும் விரைவில் கண்டறிய வேண்டும். எல்லாத் தளபதிகளும் இந்த இரண்டு எண்ணங்களுடன்தான் போர்க்களத்தில் நிற்பர். ஆனால், இவை இரண்டையும் கடந்து மூன்றாவதான வாய்ப்பு ஒன்று போர்க்களத்துக்குள் உருவாகிக்கொண்டிருக்கும். அதை விரைந்து மதிப்பிடத் தெரிந்தவனே போர்க்கலையின் வல்லுநன் ஆகிறான்.

`எதிரிகள் ஏன் குறிப்பிட்ட சில பகுதியில் மட்டும் இவ்வளவு தொலைவு முன்னகர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர்’ என்று கருங்கைவாணன் எண்ணிக்கொண்டி ருக்கும்போதுதான் சட்டென இன்னொன்றும் தோன்றியது. இந்தப் புதிய சூழல் உருவாக்கும் வாய்ப்பு என்ன எனக் கண்கள் இங்குமங்குமாகத் தேடத் தொடங்கின. எதிரிகள் எவ்வளவு முன்னகர்ந்து போய்க்கொண்டிருந்தாலும் கருங்கைவாணனுக்கு அச்சம் ஏதுமில்லை. ஏனெனில், முதல்நிலைப் படையைக் கடந்து இரண்டாம்நிலைப் படை நின்று கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்து மூன்றாம்நிலைப் படை இருக்கிறது. எதிரிகள் எவ்வளவு முயன்றாலும் ஒன்றும் செய்துவிட முடியாது. எனவே, இந்தப் புதிய சூழல் வாய்ப்பை உருவாக்கித் தந்தால் அதைப் பயன்படுத்தலாம் என்று அவனுடைய கண்கள் இங்குமங்குமாக அலைமோதிக்கொண்டிருந்தன.

அப்போதுதான் அவனது கண்ணில் பட்டான் தேக்கன். சாகலைவனின் மரணத்துக்கு மறுநாளே பலியெடுக்கும் வாய்ப்பாக அந்தக் கணம் அவனுக்குத் தோன்றியது. கருங்கைவாணன் அவனை நோக்கிக் குதிரையைச் செலுத்தத் தொடங்கினான். வேந்தர்களின் வாள்படைத் தளபதி சூலக்கையன் சற்றே துடிப்பு நிறைந்தவனாக இருந்தான். தேக்கனோடு நேர்கொண்டு மோதும் வாய்ப்புக்காகக் காத்திருந்த அவனின் நகர்வும் தேக்கனை நோக்கியே இருந்தது.

தேக்கனோ தனது வாள்படையின் நடுப்பகுதியில் இருந்தான். வீரர்களின் கால்கள் மூன்றாம் முன்னெட்டைக் கடக்காமல் இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தான். ஓசைகளின் வழியேயும் கால்கள் கிளப்பும் புழுதியின் வழியேயும் பார்ப்பவர்களின் கண்கள் வேகத்தை உணர்கின்றன. ஆனால், இருக்கும் இடம் விட்டு முன்னோக்கி நகராமல் அவர்கள் போரிட்டுக்கொண்டிருப்பார்கள். ஏறிவரும் எதிரியை மட்டும் வெட்டிச்சரித்தபடி இருப்பார்கள். தேக்கனின் தலைமையிலான வாள்படை அதைத்தான் செய்துகொண்டிருந்தது.

85p3_1533108263.jpg

இரவாதன் தனக்கான வாய்ப்புக்காகத் துடித்துக்கொண்டிருந்தான். எதிரிகளது குதிரைப்படையின் இருபக்கவாட்டிலும் முன்னகர்ந்த பறம்புவீரர்கள் குறிப்பிட்ட தொலைவு சென்றவுடன் ஓசையை எழுப்பினர். வேந்தர்படையின் ஒவ்வொரு பிரிவிலும் ஓசை எழுப்பும் கருவியோடு வீரன் நின்றிருந்தான். ஆனால், பறம்புக்கு அப்படியன்று, போரிட்டிக்கொண்டிருக்கும் வீரர்களிலே கூவல்குடியினரும் இருந்தனர். எல்லையைத் தொட்ட குறிப்பை அவர்கள் சீழ்க்கை ஓசையின் வழியே கணநேரத்தில் கடத்தினர். அந்த ஓசைக்காகத்தான் இரவாதன் காத்திருந்தான். ஓசை கேட்ட மறுகணம் தனது உத்தரவைப் படை முழுமைக்கும் வழங்கினான்.

இரவாதனின் குதிரைப்படை, கண்ணிமைக்கும் நேரத்தில் பல கூறுகளாகப் பிரிந்தது; எதிரியின் குதிரைப்படையில் நிற்கும் குதிரைகளை முதலிலிருந்து கடைசி வரை இடைவெளிவிடாமல் துல்லியமாகத் தாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது. திடீரென இவர்கள் ஏன் இவ்வளவு வேகம்கொள்கின்றனர் என்று உறுமன்கொடிக்குப் புரியவில்லை. `ஒருவேளை அப்படிச் செய்தால்தான் நாம் விரட்டித்தாக்குவோம் என நினைத்துச் செய்கின்றனரா?’ என்று சிந்தித்தான். தம்மைக் கோபமூட்டி விரட்டிச்செல்லவைக்கும் உத்தியாக உறுமன்கொடி நினைத்தான். எதிரிகள் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டுக் குதிரையை விரட்டினாலும், தான் நிலைகொண்ட தாக்குதலை மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

தொடக்க நிலை அம்புகள் சீறிப்பாய்ந்த பிறகு ஓங்கல அம்புகள் வில்லிலிருந்து விடுபடத் தொடங்கின. அவை மற்ற அம்புகளைப்போல வேகம்கொண்டு தாக்குவதில்லை. அதற்கான தேவையும் இல்லை. குதிரையின் முன்பக்கமோ, பின்பக்கமோ அல்லது உடலின் ஏதாவதொரு பாகத்திலோ மெள்ள உரசிச்சென்றால் போதும். அம்பின் ஈக்கியொன்று உள்நுழையும் அளவுக்குச் சிறுசிராய்ப்பை உருவாக்கினாலே போதும். எனவே, பறம்பு வீரர்கள் முதலிலிருந்து கடைசி வரை நிற்கும் குதிரைகள் அனைத்தின் மீதும் ஏதாவது ஓர் அம்பு தைக்கும்படியான உத்தியைப் பயன்படுத்தினர்.
வேகம், வேகம், அதிவேகம் என்பதே இரவாதனின் செயல்பாடாக இருந்தது. இரண்டு மூன்று அம்புகளுக்கு ஒருமுறைதான் ஓங்கலத்தைப் பயன்படுத்த வேண்டும். எதிரிக்கு எந்த வகையிலும் ஐயம் வந்துவிடக் கூடாது. தாக்கும் போரைப் படுவேகமாகச் செய்கிறார்கள் என்று மட்டும்தான் அவர்கள் நினைக்க வேண்டும். ஆனால், முதலிலிருந்து கடைசி வரை குதிரைப்படை முழுமையும் அம்புகளைப் பொழிந்துதள்ள வேண்டும். இரவாதன், கண்ணிமைக்கும் நேரத்தைக்கூட வீணாக்காமல் செயல்பட்டுக்கொண்டிருந்தான்.

இந்தத் தாக்குதலில் மிகக் கடினமானது எதிரியின் குதிரைப்படையின் நடுப்பகுதியில் இருக்கும் குதிரைகளைத் தாக்குவதுதான். ஏனெனில், ஓங்கல அம்பை மற்ற அம்புகளைப்போல வேகம்கொள்ளச்செய்ய முடியாது. அதன் எடையும் தன்மையும் பாய்ந்து செல்வதற்கான வாகினைக்கொண்டதன்று. எனவே, இழுபடும் நாணின் விசையால் மட்டுமே அதை எதிரிப்படையின் நடுப்பகுதிக்குச் செலுத்த வேண்டும். சூளூர் வீரர்களுக்கு இரவாதன் வரையறுத்தது நடுப்பகுதிக் குதிரைகளைத் தாக்க வேண்டும் என்பதுதான். மற்ற வீரர்கள்தாம் ஓரப்பகுதியைத் தாக்கினார்கள்.

பறம்பின் குதிரைப்படையின் வேகமும் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைக்கப்பட்ட நாணின் இழுத்துத்தள்ளும் வேகமும் ஒன்றாய் இணைய, ஓங்கல அம்புகள் இடைவெளியின்றிப் பொழிந்தன.

போர்க்களம் தனது போக்கில் உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துதலே அறிவார்ந்த தளபதியின் வேலை. நேற்றைய போரில் சாகலைவனின் தலையைச் சரித்தவனை நோக்கி முன்னகர்ந்துகொண்டிருந்தான் கருங்கைவாணன். ஏற்கெனவே அவனை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தான் சூலக்கையன். தேக்கன், முன்திட்டமிட்டபடியான உத்தியின்படி பறம்புப்படைகளின் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தான்.

தேக்கனின் அருகில் வந்து சேர்ந்த சூலக்கையன் நேரடித் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினான். தேக்கன் அதை வழக்கம்போல் எதிர்கொண்டபடியிருந்தான். சூலக்கையன், வயதால் இளையவன்; துடிப்பு நிறைந்தவன். கிழவனைச் சாய்க்கும் வெறியோடு அவன் மோதுவதைத் தேக்கன் உணர அதிக நேரமாகவில்லை. ஆனாலும் தேக்கனின் கவனம் இரவாதன் செயலின் போக்கை அறிவதிலேயே இருந்தது.

கிழவன் பெரிதாகக் கவனம்கொள்ளாமலேயே போரிடுகிறான் என்பதைப் புரிந்துகொண்ட சூலக்கையன் சீற்றம்கொண்டு தாக்கினான். முனையால் சீவிச்சரிக்கும் உத்தியைப் பயன்படுத்தி வாளின் மூக்குப் பகுதியைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கேடயத்தின் உள்விளிம்பை நோக்கிப் பாய்ச்சினான். பாய்ச்சிய வேகத்தில் கிழவனின் மேலிருந்து கொப்புளிக்கும் குருதியை அவன் கண்கள் தேடின. கேடயத்தின் உள்விளிம்பு ஆயுதத்தின் வேகத்தை உணர்ந்து வெளிப்புறம் நோக்கித் தள்ளியபோது, உடல் உள்வளைந்து எழுந்தது. தேக்கன் எளிதாகச் சுழன்றுகொடுத்து நின்றான். சூலக்கையன் அதிர்ச்சியோடு தேக்கனைப் பார்த்தபோது கருங்கைவாணன் வந்து இறங்கினான்.

மூவேந்தர்படைத் தலைமைத் தளபதி மகாசாமந்தன் போர்க்களம் தனது போக்கில் தந்த வாய்ப்பை வணங்கி வாளேந்தி நின்றான். சூலக்கையனுக்கு ஒதுங்கிக்கொள்வதா இணைந்துகொள்வதா எனத் தெரியவில்லை. சற்றே தயக்கத்தோடு விலகினான். அவன் விலகத் தயங்கிய நேரத்தில் கருங்கைவாணனின் கால்கள் தாக்கப்போகும் தன்மைக்கு ஏற்ப அடியெடுத்து நின்றன. சூலக்கையன் அவனுடைய கால்களைப் பார்த்தான். சட்டென நிமிர்ந்து அவனுடைய கைகளைப் பார்த்தான். இடதுகையில் இருந்த கேடயம் மட்டுமே துருத்தித் துருத்தி முன்னால் நகர்ந்துகொண்டிருந்தது. வலதுகையில் இருந்த வாள் சரியான கணத்துக்காகக் காத்திருந்தது. 

85p4_1533108283.jpg

தேக்கன், கருங்கைவாணனின் கண்களையே பார்த்தான். இருவரின் கால்களும் பின்னல் வட்டத்தில் நகர்ந்துகொண்டிருந்தன. கிழவனின் கண்களில் அச்சமேதும் தெரியவில்லை. தன்னைத் தாக்கி வீழ்த்த அவன் ஆயத்தமாக இல்லை; தற்காப்பு மட்டுமே அவனது நோக்கமாக இருக்கிறது என்று கணித்தான் கருங்கைவாணன். போர்க்களத்தின் சூழல் கணத்துக்குக் கணம் மாறக்கூடியது. இப்போதைய வாய்ப்பை அடுத்த கணம் வழங்குமா எனத் தெரியாது. எனவே, காலம் தாழ்த்த வேண்டாம் என எண்ணிய கருங்கைவாணன், தனது வலிமைமிகுந்த தாக்குதல் முறையால் மின்னல் வேகத்தில் பாய்ந்தான். வாள்கள் ஒன்றோடொன்று மோதித் திரும்பின. இவன் ஒவ்வொரு தாக்குதலிலும் உயிர் குடிக்க எண்ணுகிறான் என்பதைத் தேக்கன் உணர வெகுநேரம் ஆகவில்லை. கால்கள் முன்பாயும் வேகத்தில் மூன்று மடங்கு ஆற்றலை வெளிப்படுத்திப் படபடக்கும் சிறகுபோல வாளால் இடைவிடாது தாக்கி எதிரியை நிலைகுலையச் செய்வதே கருங்கைவாணனின் உத்தி.

தேக்கன், அவனது வேகத்தை மதிப்பிடும் முன்பே அடுத்தடுத்து வேகத்தைக் கூட்டிக்கொண்டிருந்தான். முன்னும் பின்னுமாகக் கேடயத்தைச் சுழற்றியபடி வாள்வீச்சை வாங்கிக்கொண்டிருந்தான் தேக்கன். கிழவன் எதிர்கொள்ளத் திணறுகிறான் என்பதை உணர்ந்த கருங்கைவாணன், சரியான நேரத்தில் தேக்கனின் கேடயத்தை ஏமாற்றி நடுமார்பைக் கிழித்தபடி சீவி முன்னகரும் தாக்குதலைத் தொடுத்தான். மின்னல் வேகத்தில் குறுக்கிட்டு வெளிவந்தது கருங்கைவாணன் வீசிய வாள். காற்று அறுபடும் ஓசை காதில் கேட்டது. கிழவன் மண்ணில் சரிந்திருப்பான் என எண்ணியபடியே திரும்பினான். இந்தக் கணத்தைத்தான் தேக்கன் எதிர்பார்த்திருந்தான். கொலை முடிந்த மறுகணத்தில் ஆற்றலேதும் இன்றி அகமகிழ்ந்து திரும்பும் வீரனின் தலையைக் கொய்து முடிப்பதில்தான் சுகம் உண்டு. தனது உயிரைப் பணயம்வைத்து நடக்கும் இந்த விளையாட்டில் வீரர்கள் இந்த உணர்வைச் சுவைக்கவே மீண்டும் மீண்டும் வாள் சுழற்றுகின்றனர். தேக்கன் சுழற்றிய வாள் கருங்கைவாணனின் கழுத்தை நோக்கி வந்தபோது கண நேரத் தாமதமின்றிக் குறுக்கிட்டுப் பாய்ந்தான் சூலக்கையன்.

அதிர்ந்து மீண்டான் கருங்கைவாணன். இமைப்பொழுதில் எல்லாம் மாறத் தெரிந்தன. பின்பக்கமாகத் திரும்பிய கருங்கைவாணனின் முகத்தில் மரணத்தின் ஒளிபட்டுத் தெறித்தது. `கிழவனைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டோமே!’ எனத் தோன்றியபோது அவனது மெய்க்கவசத்தைப் பார்த்தான். சரிபாதியாகப் பிளந்து வெளிவந்திருந்தது அவன் வீசிய வாள். இரும்பாலான கேடயமேயானாலும் இந்தத் தாக்குதலால் உள்ளெலும்பு உடைத்திருக்கும். `இவன் எப்படி சாயாமல் நிற்கிறான்?’ என நினைத்தபடி கால்களை முன்னகர்த்தினான். `கிழவனின் நெஞ்செலும்பு நடுங்கியபடிதான் இருக்கும். இப்போது இளைப்பாற இடம்தரக் கூடாது’ என்ற முடிவோடு வாளைச் சுழற்றி முன்னகர்ந்தான்.

சூலக்கையன், கருங்கைவாணனைப் பார்த்து மிரண்டு நின்றான். கழுத்தின் முனை நோக்கி வாள் பாய்ந்து திரும்பிய மறுகணமே, சீறி முன்னகரும் அவனது சீற்றம் யாரையும் மிரளச்செய்யும்.

இருவரும் கால்களைப் பின்வளைவு போட்டு நகர்த்தி, தேவையான இடைவெளியை உருவாக்கிக்கொண்டனர். இருவருக்கும் மிக அருகில் மரணம் வந்துபோயுள்ளது. ஆனாலும் இருவரும் அதைப் பொருட்படுத்தவேயில்லை. சூலக்கையன், மிரட்சி குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
கிழவன் வலியை உணர்ந்து நிற்கிறானா, இல்லை வாய்ப்பைக் கணித்து நிற்கிறானா என்பதைக் கருங்கைவாணனால் கணிக்க முடியவில்லை. ஆனால், நேற்றைய போரில் சாகலைவன் எப்படி வெட்டிச்சரிக்கப்பட்டான் என்பதை உணர முடிந்தது. கிழவனைப் பலியெடுக்காமல் இந்த இடம்விட்டு நகரக் கூடாது என மனம் உறுதிகொண்டது. வாளின் பிடியை விரல்கள் இறுக்கிக்கொண்டிருந்தன. கால்கள் வீசி முன்னகர ஆயத்தமாயின. வெறிகொண்டு தாக்கப்போகும் அந்தக் கணத்தைக் கணித்தபடி சிற்றலையென அசைந்துகொண்டிருந்தான். அப்போதுதான் போர்க்களத்தின் இடதுபுறமிருந்து நீள்சங்கின் ஓசை கேட்டது.

அதிர்ந்து திரும்பினான் கருங்கைவாணன். உறுமன்கொடியின் குதிரைப்படை வெளிப்படுத்தும் ஓசையிது. `என்ன ஆனது அங்கு?’ எனச் சிந்தனை மோதிப்புரண்டது. தடுமாறித் திரும்பின கருங்கைவாணனின் கண்கள். நிலைமையை உணர்ந்து சூலக்கையன் உள்ளிறங்கினான். வழியின்றிக் கருங்கைவாணன் வெளியேறினான். கிழவன், அடுத்தவனை எதிர்கொள்ள ஆயத்தமானான்.

உறுமன்கொடி இன்று காலையிலிருந்து நிலைகொண்ட தாக்குதலையே நடத்திவந்தான். கருமணலும் ஈக்கிமணலும் இருக்கும் போர்க்களத்தில் குதிரைகளைப் பாயவிட வேண்டாம் என்று முடிவெடுத்ததால் படையை நிலைகொள்ள மட்டுமே செய்திருந்தான். எதிரிகள் தங்களின் நிலையைக் குலைத்து, பாய்ந்துதாக்கும் போர்முறைக்கு இழுக்க முயல்கின்றனர் என்பதைக் கணித்தவாறே நின்று தாக்கிக்கொண்டிருந்தான். நெடுநேரத்துக்குப் பிறகு அவர்கள் வேகம்கொண்டு பக்கவாட்டிலிருந்து தாக்கியபடி விரைந்து கொண்டிருந்தனர். ஆனால், அந்தத் தாக்குதல் வீறுகொண்டதன்று; போக்குகாட்டித் திசைதிருப்பும் தாக்குதலே. உறுமன்கொடி எதிரிகளின் எந்தவொரு முயற்சிக்கும் இரையாவதில்லை என்ற விழிப்போடு இருந்தான். எதிரிகளின் செயலைக் கவனித்தபடி குதிரையை மெள்ள நகர்த்திக்கொண்டிருந்தான். அப்போது அவனது குதிரை போய் வலதுபுறம் இருந்த குதிரையின் மீது மோதியது. `என்ன இப்படிச் செய்கிறது!’ என நினைத்தபடி கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான்.

85p5_1533108296.jpg

சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் குதிரையைக் கிளப்பியபோது அருகில் சென்ற இன்னொரு குதிரையின் மீது அதேபோல முட்டி விலகியது. ஏன் இப்படி நடந்துகொள்கிறது என்பது புரியாமல் குதிரையை விட்டுக் கீழிறங்கினான். கண்பட்டையில் ஏதாவது தூசியோ, கல்லோ சிக்கியிருந்தால் அது குதிரையின் கண்ணை உறுத்திக்கொண்டிருக்கும். அதனால் குதிரை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகத் தள்ளாடும் என நினைத்து, கண்பட்டையில் கைகளை விட்டுத் துடைத்தான். உள்ளே வேறெந்தத் தூசியும் இல்லை. பிறகு ஏன் இப்படிச் செய்கிறது எனச் சிந்தித்தபடியே வந்து மேலேறி உட்கார்ந்தான். அந்தக் கணம் அவனது பருத்த தொடைகள் முதுகை அழுத்தியபோது நடுமுதுகு திடுக்கிட்டுக் குலுங்கியது. குதிரைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அவன் உணரத் தொடங்கினான். அவனது கால் குறிப்புகளை உணர்ந்து செயல்பட அது ஆயத்தமாக இல்லை. உணர்வுகளை இழந்ததைப்போலாகிவிட்டது எனத் தெரிந்ததும் சட்டென மேலிருந்து கீழிறங்கினான்.

கட்டுப்பாடுகளை இழந்த குதிரையின் மீது உட்காருவது மரணத்தை அழைத்துக்கொள்வதற்குச் சமம். இனி அது எப்படி நடந்துகொள்ளும் எனத் தெரியாது. கீழிறங்கியவன் அதற்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கிறதா எனச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். எந்த அம்பும் தைக்கவில்லை. `பின்தொடைப் பகுதியில் சின்னதாய் ஒரு கீறல் விழுந்திருக்கிறது. துளி அளவுதான் குருதி தெரிகிறது. வேறேதும் ஆகவில்லையே’ எனக் குழம்பிக்கொண்டிருக்கையில் படையின் நடுப்பகுதியில் கூச்சல்கள் அதிகமாகின. என்னவென்று விசாரிக்கத் தொடங்கியபோது ஏறக்குறைய பல வீரர்கள் குதிரையை விட்டு இறங்கி ஏதுசெய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தனர். நிலைமை கட்டுமீறுவதற்குள் எதிரிகளின் தாக்குதலிலிருந்து குதிரைப்படையைக் காக்கவேண்டும் என்பதால்தான் தலைமைத் தளபதியை வரவழைக்க நீள்சங்கை ஊதச்சொன்னான் உறுமன்கொடி.   

சங்கொலியைக் கேட்டு விரைந்து வந்தான் கருங்கைவாணன். அவன் வந்து நின்றபோது இரவாதனின் தலைமையிலான வீரர்கள், எதிரியின் குதிரைப்படை எல்லையைத் தொட்டுக்கொண்டிருந்தனர். ஓங்கலத்தின் வேலை, முடியும் தறுவாயில் இருந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீரயுக நாயகன் வேள்பாரி - 95

 

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

ரண்டாம் நாளின் பிற்பகல் போரில், வேந்தர்களின் குதிரைப்படையை நிலைகுலையச்செய்தது பறம்புப்படை. நேரம் ஆக ஆக குதிரைகள் முற்றிலுமாகச் செயலிழந்தன. ஒருகட்டத்துக்குப் பிறகு உறுமன்கொடி முழுப் பாதுகாப்பை வேண்டி நின்றான். இன்றைய போரில் வேந்தர்படையின் முன்கள வீரர்களில் பெரும்பான்மையோர் நன்கு பயிற்சிபெற்ற நிலைப்படை வீரர்கள் அல்லர். எனவே, அவர்களைக்கொண்டு குதிரைப்படையைக் காக்கும் முயற்சி ஆபத்தில் முடிந்துவிடும் என நினைத்தான் கருங்கைவாணன். 

p83a_1533638096.jpg

செயலிழந்து நிற்கும் குதிரைப்படைக்கு முழுமையான பாதுகாப்பைக் கொடுத்தால் மட்டுமே அதைக் காக்க முடியும். எனவே, இரண்டாம் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த படைப்பிரிவை உள்ளிறங்க உத்தரவிட்டான். பெரும் எண்ணிக்கையில் இரண்டாம் நிலைப்படை வீரர்கள் உள்ளிறங்கினர். குதிரைப்படையைக் காக்க, அவனுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.

போர்க்களத்தில் உரிய காரணத்துக்காகப் படைகளை முன்னும் பின்னுமாக நகர்த்துவதில்தான் தலைமைத் தளபதியின் மதிநுட்பம் இருக்கிறது. ஆனால், அது தாக்குதல் வியூகமாக அமையும்போது பேராற்றலை வீரர்களுக்குத் தன்னியல்பிலே உருவாக்கும். தற்காப்புக்கு அவ்வாறு செய்யும் போது எதிர் மனநிலையை உருவாக்கும் ஆபத்தும் உண்டு.p83b_1533638115.jpg

முதல்நிலைப்படையைக் காக்க, இரண்டாம் நிலைப்படையை இறக்கவேண்டிய நிலை வந்துள்ளதை ஒவ்வொரு வீரனும் அறிவான். போர் தொடங்கிய இரண்டாம் நாளே வேந்தர் படை சற்றே திணறுவது வெளிப்படையாகத் தெரிந்தது. இரண்டாம்நிலைப்படை இறங்கியதும் பறம்புவீரர்கள் பின்னகர்ந்து தற்காப்பு நிலைக்கு வந்தனர். அவர்களைப் பொறுத்தவரை ஓங்கலத்தைப் பயன்படுத்திக் குதிரைப்படையில் பேரிழப்பை உருவாக்குவதுதான் அன்றைய தாக்குதலின் இலக்கு. அது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டது.

திசைவேழரின் கை உயர்வு தட்டியங் காடெங்கும் முரசை ஒலிக்கச்செய்தது. இரண்டாம் நாள் போர் முடிவுக்கு வந்தது. வீரர்கள் பாசறைக்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்திலேயே நாகக்கரட்டில் இருந்த கபிலரை அழைத்துவரச் சொல்லி திசைவேழரின் மாணவன் வந்தான். தன்னை ஏன் அழைத்துள்ளார் திசைவேழர் என்பது கபிலருக்கு விளங்கவில்லை. வழக்கம்போல் வாரிக்கையனும் கபிலருடன் புறப்பட்டார்.

நாழிகை வட்டில் வைக்கப்பட்டிருந்த பரணின் அடிவாரத்தில் பந்தங்கள் ஏற்றப்பட்டிருக்க, அங்கேயே திசைவேழர் இருந்தார். போர்விதிகள் மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டால், அவற்றை விசாரித்து முடிவெடுக்காமல் நிலைமான் கோல்சொல்லி போர்க்களம் விட்டு அகலக் கூடாது என்பது மரபு.

கபிலர் வாரிக்கையனோடு அவ்விடம் வந்தபோது கருங்கைவாணனுடன் பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது. குதிரைப்படைத் தளபதி உறுமன்கொடியும் அமைச்சர்கள் ஆதிநந்தி, நாகரையர் ஆகியோரும் உடன் இருந்தனர். பறம்புவீரர்கள், தங்களின் ஆயுதத்தில் நஞ்சு கலந்து குதிரைகளைச் செயலிழக்கச் செய்து விட்டனர் என்பதுதான் குற்றச்சாட்டு.

p83c_1533638160.jpg

குற்றச்சாட்டைக் கேட்டபோது அதிர்ச்சிக்குள்ளானார் கபிலர். நேற்றிரவு முடியனும் வாரிக்கையனும் தன்னைக் குறிப்பிட்டுப் பேசியது இதைப் பற்றித்தானா என நினைத்தார். வாரிக்கையன் இதை எதிர் பார்த்துதான் வந்துள்ளார்.

``எந்த ஓர் ஆயுதம், காயங்களின் தன்மையையும் அளவையும் மீறிப் பல மடங்கு அதிகமான பாதிப்பை உருவாக்குகிறதோ, அந்த ஆயுதம் ஐயத்துக்குரியது. இன்றைய பொழுதில் பறம்புவீரர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், குதிரைகளுக்கு மிகச்சிறிய காயங்களையே உருவாக்கியுள்ளன. ஆனால், குதிரைகளை முழுமையாகச் செயலிழக்கச் செய்துள்ளன. எனவே, இந்த ஆயுதங்கள் நஞ்சு பூசப்பட்டவை” என்று வாதிட்டான் உறுமன்கொடி.

வாரிக்கையன் வெற்றிலையை மென்று கொண்டே சொன்னார், ``பறம்பு அளித்த வாக்கை மீறாது. விலங்குகளின் நஞ்சோ, தாதுக்களின் நஞ்சோ பயன்படுத்தக் கூடாது என்று ஏற்றுக்கொண்ட போர்விதிகளை நாங்கள் மீறவில்லை.”

``அம்புகளால் தாக்கப்பட்ட குதிரைகளுக்கு, சிறுகாயங்கள்தான் உருவாகியுள்ளன. சிறு காயங்களால் எப்படி குதிரையைச் செயலிழக்கச் செய்ய முடியும்?”

``அம்புகளின்தன்மை அதற்குக் காரணம்” என்றார் வாரிக்கையன்.

``அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நஞ்சூறிய அம்பை நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள்” என்றான் ஆதிநந்தி.

தலையை மறுத்து ஆட்டியபடியே வாரிக்கையன் கேட்டார், ``நஞ்சென்றால் என்ன?”

ஆதிநந்தி ஒரு கணம் திகைத்தான். அவன் என்ன விளக்கம் சொன்னாலும் வாரிக்கையன் அதிலிருந்து தப்பித்து வெளியே வருவார் என அவனுக்குத் தெரியும். எனவே, சற்று சிந்தித்தான்.

அதுவரை அமைதியாக இருந்த திசைவேழர் இப்போது கூறினார், ``எண்ணிலடங்கா குதிரைகள் செயலிழந்து கிடக்கின்றன. நீங்களோ சொற்களைக்கொண்டு விதிகளைக் கடக்க நினைக்கிறீர்கள்.”

திசைவேழரின் கூற்று கபிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், வாரிக்கையன் அதைப் பொருட்படுத்தவில்லை. வெற்றிலையை மென்று கொண்டே அவரைப் பார்த்துக் கேட்டார், ``நீங்களே சொல்லுங்கள். நஞ்சென்றால் என்ன?”

p83d_1533638203.jpg

``கேள்வியின் வழியே எதிர்நிலையில் பயணிக்க நினைக்கிறீர்கள். அது நஞ்சுதான் என்பதற்கு, செயலற்றுக் கிடக்கும் குதிரைகளே சான்று. அது நஞ்சல்ல என்பதற்கு நீங்கள் அளிக்கும் சான்றென்ன?”

வாரிக்கையன் திசைவேழரைச் சொற்களால் மடக்க நினைக்கவில்லை. சொல்லிப் புரிய வைக்கவே நினைத்தார். ``எந்த அம்பு தைத்து குதிரைகள் செயலிழந்து கிடப்பதாகச் சொல்கிறார்களோ, அதே அம்பால் ஒரு மனிதனை தாக்குவோம். அவன் செயலிழந்தால் அது நஞ்சென்று ஏற்கிறேன்.”

யாரும் எதிர்பாராத பதிலாக இருந்தது. எதிர்த் திசையில் நிற்பவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

வாரிக்கையன், திசைவேழரைப் பார்த்து மீண்டும் சொன்னார், ``நஞ்சென்பது உயிர்களுக்குப் பொதுவானது; பாகுபாடற்றது. குதிரைகள் செயலிழந்து கிடப்பதன் காரணம் அம்புகள் செய்யப்பட்ட மரமாக இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட மரம் அந்த விலங்குக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம். சில உணவு சில உயிரினங்களுக்குச் செரிமானம் ஆகாததைப்போலத்தான் இதுவும். இதற்கெல்லாம் மேலாக ஒன்று சொல்கிறேன், அது நஞ்சன்று என்பதற்குச் சான்று எந்தக் குதிரையும் சாகவில்லை என்பதுதான்.”

ரவு குலசேகரபாண்டியனின் கூடாரத்தில் அதிக பேச்சில்லை. பறம்புவீரர்கள் நஞ்சைப் பயன்படுத்தித்தான் குதிரைகளைச் செயலிழக்கச் செய்தனர் என்பதை  மெய்ப்பிக்க முடியவில்லை. வாரிக்கையன் முன்வைத்த கூற்றை, திசைவேழர் ஏற்றுக்கொண்டுவிட்டார். தட்டியங்காட்டு நிலமெங்கும் வீழ்ந்து கிடக்கும் எண்ணிலடங்கா குதிரைகளை அவற்றுக்கான கொட்டிலுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க, பெருமுயற்சி நடந்து கொண்டிருந்தது. இரவுக்குள் அனைத்தையும் செய்துவிட முடியுமா எனத் தெரியவில்லை. ஆனாலும் கடும்முயற்சி நடந்துகொண்டிருந்தது.

பேரரசர்களின் கூடாரத்திலிருந்து கருங்கை வாணன் வெளியே வந்தான். மறுநாளைய போருக்கான திட்டமிடல் மிக விரைவிலேயே முடிந்தது.

வேங்கைமரத்தின் அடிவாரத்திட்டில் கூடியவர்களும், திட்டமிடலை முடித்துக்கொண்டு எழுந்தனர். பாரி, ஏழாவது குகை நோக்கி நடந்தான். இன்றிரவு குகைக்காவல் கூழையன். அவனும் சிறிது நேரம் கழித்து அந்தக் குகை நோக்கி நடந்தான்.

மற்றவர்கள் அவரவர்களின் தங்கும் இடம் நோக்கிச் செல்லத் தொடங்கினர். முடியன் மட்டும் வேங்கைமரத் திட்டிலேயே உட்கார்ந் திருந்தான். பறம்புப்படை முழுமையையும் கொண்டுசெலுத்தும் ஆற்றல்கொண்டவனின் முகத்தில் சற்றே கவலையின் கீற்று ஓடிக் கொண்டிருந்தது. உணவு அருந்திய பிறகு மீண்டும் அவன் அருகில் வந்து உட்கார்ந்தார் வாரிக்கையன்.

p83f_1533638243.jpg

``உனது கவலைக்கான காரணம் என்ன?” என்று கேட்டார் வாரிக்கையன்.

சற்றே தயங்கினான் முடியன். ஆனாலும் வாரிக்கையனிடம் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை என்ற முடிவுக்குவந்து சொன்னான், ``மூன்று காரணங்கள் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.”

னது கூடாரத்துக்கு வந்துசேர்ந்த கருங்கை வாணனால் உறங்க முடியவில்லை. நீண்டநேரம் விழித்தே இருந்தான். அவனுக்கு முன்னால் இருந்த வட்டப்பலகையை விட்டு அவனுடைய கண்கள் அகலவில்லை. அப்போது வெளியே ஏதோ ஓசை கேட்பதுபோல் இருந்தது. என்னவென்று திரும்புவதற்குள் உள்நுழைந்த வீரன் ஒருவன் சொன்னான், ``பேரரசர் வருகிறார்.”

குலசேகரபாண்டியன் உள்ளே நுழைந்தார்.

நள்ளிரவில் தனது கூடாரத்துக்கு வந்துள்ள பேரரசரை வணங்கி வரவேற்றான் கருங்கை வாணன். அவனுக்கு முன்னால் இருந்த வட்டப்பலகையில் பறம்புவீரர்கள் பயன்படுத்தும் மெய்க்கவசம் ஒன்றும், வாள் ஒன்றும், ஓங்கல அம்பு ஒன்றும் வைக்கப்பட்டிருந்தன. இந்த மூன்றையும்தான் அவன் உற்றுப்பார்த்தபடி இருந்தான்.

``மூன்று காரணங்கள் என்னென்ன?” என்று கேட்டார் வாரிக்கையன்.

முடியன் சொன்னான், ``நாம் எடுக்கவேண்டிய முடிவை, எடுக்க முடியாதவாறு சிக்கலை நாமே உருவாக்கிக்கொண்டுவிட்டோம்.”

p83g_1533638280.jpg

``எதைச் சொல்கிறாய்?”

``காற்றும் காற்றியும் வீசுவதற்கு ஏற்பவே நாம் திட்டமிடவேண்டியுள்ளது.”

``ஒருவேளை காற்றும் காற்றியும் நமக்கு ஒத்துழைக்கவில்லையென்றால், மாற்றுத் திட்டமும் நம்மிடம் இருக்கத்தானே செய்கிறது?”

``இருக்கிறது. ஆனால், எதை, எப்போது செய்யப்போகிறோம் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்தக் குழப்பத்துடனே போர்க்களத்தில் தொடர்ந்து நின்றுகொண்டிருக்க முடியாது. எதிர்பாராத நேரத்தில் பாதிப்புகள் அதிகமாகிவிடக்கூடும்.”

முடியன் சொல்வது சரியான காரணமாகத்தான் இருக்கிறது என நினைத்த வாரிக்கையன், ``இரண்டாவது காரணம் என்ன?” என்று கேட்டார்.

``என் மகன் இரவாதன்” என்றான்.

``போர்க்களத்தில் மிகச்சிறந்த வீரத்தை வெளிப்படுத்திவருகிறான். அவன் குறித்துக் கவலைப்பட என்ன இருக்கிறது?”

``அவன் வெளிப்படுத்தும் வீரம்தான் எனக்குக் கவலையளிக்கிறது.”

``புரியும்படி சொல்.”

``அவன் தாக்குதல் போரை நிகழ்த்துவதில் நிகரற்றவனாக இருக்கிறான். அந்த அவசரத்தில் மற்றவற்றின் மீதான கவனத்தைத் தவறவிடுகிறான். உதிரன், எதிரிகளின் படையை நடுவில் பிளந்து உள்ளிறங்குகிறான். தாக்கும் வேகத்திலும் தற்காக்கும் உத்தியிலும் சிறந்தவனாக விளங்குவதால், அவனால் அதைச் செய்ய முடிகிறது. ஆனால் இரவாதன், சூழலைக் கவனிப்பதில் தவறிழைக்கிறான்.”

``அது இளைஞர்களுக்கே உரிய சிக்கல்.”

``புரிந்துதான் அவனை தாக்கும் உத்திக்கு மட்டும் பயன்படுத்துகிறேன். ஆனால், எதிரிகள் வேறு மாதிரி சூழ்ச்சி செய்துவிட்டால் ஆபத்தில் மாட்டிக்கொள்வான்.”

``நீ இன்னொன்றைக் கவனிக்கத் தவறுகிறாய். இளைஞர்கள் தங்களின் அவசரத்தால் ஏற்படுத்தும் இழப்பை, ஆவேசமிக்க தாக்குதலால் பல மடங்கு சரிகட்டிவிடுவார்கள். எனவே, நீ அதைப் பற்றிக் கவலைகொள்ளாதே. மூன்றாவது என்னவென்று சொல்.”

வாரிக்கையன் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத தயக்கத்துடனே மூன்றாவது காரணத்தைச் சொன்னான், ``தேக்கன், இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். எதிரிப்படைத் தளபதி வீசிய வாள் ஒன்று அவரது நெஞ்செலும்பைக் கடுமையாக பாதித்துள்ளது. ஆனாலும் `நாளைக்கும் போர்க்களம் புகுவேன்’ என்று சொல்கிறார். `சற்று ஓய்வெடுத்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொன்னால் கேட்க மறுக்கிறார்” என்றான்.

``நான் அவனிடம் பேசி, சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொல்கிறேன்.”

``நீங்கள் சொன்னாலும் தேக்கன் ஏற்க மாட்டார்.”

``ஏன்?”

``குடி ஆசானோ, குடி முடியனோ போர்க்களத்தில் இல்லையென்றால், பாரி போர்க்களம் புகுந்துவிடுவான். எக்காரணம் கொண்டும் பாரி பறம்பின் எல்லை தாண்டி, போர்க்களம் நோக்கிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்பதால், அவர் ஓய்வெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்” என்றான்.

மூன்றைப் பற்றியும் விளக்கினான் கருங்கைவாணன். ``நான் இன்று எனது வாளால் அந்தக் கிழவனைத் தாக்கினேன். இரும்பால் ஆன கேடயமே என்றாலும் அந்தத் தாக்குதலின் வேகத்தில் நெளிந்து அவனது எலும்புகளை நொறுக்கியிருக்க வேண்டும். ஆனால், அவனது மெய்க்கவசம் எனது வாளின் முழுவீச்சையும் உள்வாங்கி, அவனைக் காத்துள்ளது. எடை குறைவான, ஆனால் இரும்பைவிட வலிமையான கவசத்தைப் பூண்டு ஒவ்வொரு வீரனும் நிற்கிறான். இதோ, இந்தச் சாதாரண மரக்குச்சியினால் ஆன அம்பு, நிகரற்ற ஆற்றல்கொண்ட நமது குதிரைப்படையைச் செயலிழக்கச் செய்யும் என்பதை நம்மால் கற்பனைசெய்ய முடியுமா?” என்று கேட்டுக்கொண்டே வட்டப்பலகையில் இருந்த வாளைக் கையில் எடுத்தான் கருங்கை வாணன்.

``இது அவர்கள் பயன்படுத்தும் வாளா?” எனக் கேட்டார் குலசேகரபாண்டியன்.

``இல்லை பேரரசே! சாகலைவன் பயன்படுத்திய வாள். போர்க்களத்தில் எதிரியோடு போரிடும்போது இரு வாள்களின் மோதலில் சில இடங்களில் முனை மழுங்கும். ஆனால், இந்த வாளின் முனையைப் பாருங்கள். ஆங்காங்கே வெட்டுப்பட்டுள்ளது. ஒரு வாள் இன்னொரு வாளின் முனையை வெட்டி இறங்குமா என்ன? அவர்களது வாளின் முனை இரும்பின் தன்மையை மட்டும் கொண்டதன்று, அதைவிடக் கூர்மையான ஏதோ ஒன்றை அவர்கள் தமது வாளின் முனைக்குப் பயன்படுத்துகின்றனர் பேரரசே” என்றான். 

கேட்டுக்கொண்டிருந்த குலசேகரபாண்டியன், ``என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?”

``நான் முதலிலே குறிப்பிட்டதைப்போல, வழக்கமான போர் முறைகளால் இவர்களை வீழ்த்த நினைப்பது நமக்குப் பெருஞ்சேதத்தை உருவாக்கும். எனவே, வரைமுறையற்ற தாக்குதலால் அவர்களை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும்” என்றான்.

``விதிகளைக் கைவிடுவது பற்றியே நீ சிந்திக்கிறாய். விதிகளைப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி நீ சிந்திக்க மறுக்கிறாய்.”

பேரரசரின் குற்றச்சாட்டு, கருங்கைவாணனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

``நான் முடிவெடுத்துவிட்டேன். நாளை மிக முக்கியமான நாள். எதிரிகளின் குதிரைப்படை பேரழிவைச் சந்தித்துள்ளது. எனவே, தற்காப்புப் போருக்கான உத்தியைத்தான் அவர்கள் பயன்படுத்துவார்கள். இந்நிலையில் நான் முன்னேறித் தாக்கப்போகிறேன். பறம்பின் மொத்தப் படையும் முன்னேறித் தாக்குவதை நாளைதான் அவர்கள் முதன்முறையாக எதிர்கொள்ளப்போகின்றனர். ஏறக்குறைய அவர்களின் அனைத்துப் படைகளையும் முற்பகலிலேயே நிலைதடுமாறச் செய்துவிடலாம். எதிரிகளின் முழு கவனமும் என்மீதுதான் இருக்கும். நான் இடது ஓரத்திலிருந்து தாக்கி முன்னேறுவேன். உதிரனோ, தனது வலிமை மிகுந்த விற்படை கொண்டு நடுவில் தாக்கி முன்னகர்வான். இந்த நேரத்தில் இரவாதனின் தலைமையிலான சூளூர் வீரர்களின் படை, ஓங்கலத்தையும் பகழி அம்பையும் பயன்படுத்தி எதிரிகளின் அணிவகுப்பைப் பிளந்துகொண்டு மூஞ்சல் நோக்கி நகர்வார்கள்.

மூஞ்சலைக் கண்ணில் பார்க்கும் தொலைவை அடைந்துவிட்டால் போதும். அதன்பிறகு, நம் வீரர்கள் பல மடங்கு ஆற்றலை அதிகப்படுத்தித் தாக்குவார்கள். உள்ளுக்குள் இருக்கும் நீலனை மீட்கும் எண்ணம் ஒவ்வொரு வீரனையும் மாவீரனாக மாற்றிவிடும். இந்தத் தாக்குதல் நடக்கும்போது இறுதி வரிசையில் தேக்கன் நிற்பான். அவனை இனி வாள் ஏந்த விட மாட்டேன். அதே நேரம் போர்க்களம் விட்டு வெளியேறவும் விட மாட்டேன்” என்றான் முடியன்.

நீண்ட சிந்தனைக்குப் பிறகு தனது புதிய திட்டத்தை விளக்கினான் கருங்கைவாணன். வகுத்துக்கொண்ட விதிகளின் வழியே எதிரியைச் சிக்கவைக்கும் புதிய திட்டம் இது. இதற்குக் குலசேகரபாண்டியன் ஒப்புதல் தந்தார். ``பாரி இல்லாத போர்க்களத்தின் கடைசி நாள் நாளைதான். நாளை மறுநாள் அவன் போர்க்களம் வந்தே ஆகவேண்டும். ஏனென்றால், குடி ஆசானையும் குடி முடியனையும் ஒரே நாளில் வீழ்த்தும் திட்டமிது” என்று முழங்கினான் கருங்கைவாணன்.

பொழுது விடிந்தது. கதிரவன் மேலெழுந்த ஐந்தாம் நாழிகையில் திசைவேழர் கைகளை உயர்த்தினார். மூன்றாம் நாள் போர் தொடங்கியது. போர்க்களத்தின் தன்மை இப்போது இருபக்கப் படைகளுக்கும் சற்றே பழகியிருந்தது. வேந்தர்படை வழக்கம்போல் அலையலையாய் முன்னகர்ந்து வந்து தாக்குதலைத் தொடங்கியது. வழக்கத்துக்கு மாறாக தொடக்கம் முதலே பறம்புவீரர்கள் ஆவேசம்கொண்டு தாக்கத் தொடங்கினர்.

போர் தொடங்கும் கணத்திலேயே எதிரிகளின் தாக்குதலில் இருந்த ஆவேசத்தைக் கருங்கை வாணனால் உணர முடிந்தது. வேந்தர்படை இன்று வகுத்திருந்த திட்டத்துக்கு எதிரிகள் ஆவேசம்கொண்டு முன்னேறுவது உதவியாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது. வழக்கம்போல் நடுப்பகல் வரை சற்றே நிதானம்கொண்டு தாக்குபவர்கள், நடுப்பகலில் நாகக்கரட்டிலிருந்து ஊதப்படும் காரிக்கொம்பின் ஓசையைக் கேட்டவுடன் தாக்குதலை வேகப் படுத்துவார்கள். உத்திகளையும் மாற்றுவார்கள். அடுத்த ஓசை கேட்கும்போது முழுமைகொண்ட வேகத்தோடு தாக்குவார்கள். இதைக் கணித்துதான் கருங்கைவாணன் இன்றைய உத்தியைத் தீர்மானித்திருந்தான். ஆனால், பறம்புவீரர்கள் தொடக்கத்திலேயே ஆவேசத்தோடு முன்னகர்வது தெரிந்தது.

மையூர்கிழாரின்மேல் பறம்புத் தளபதிகள் எவ்வளவு சினத்தோடு இருக்கிறார்கள் என்று கருங்கைவாணன் முழுமையாக அறிந்தே அன்றைய திட்டத்தை வகுத்திருந்தான். நடுப்பகல் வரை வழக்கமான தாக்குதல் போரை நடத்த வேண்டும். நடுப்பகலில் மலைமேலிருந்து காரிக்கொம்பு ஓசை கேட்கும்போது பின் களத்திலிருந்து முடியன் முன்பகுதிக்கு வருவான். அந்த நேரத்தில் மையூர்கிழாரின் தேர் அவன் கண்ணில்பட வேண்டும். முடியன், மையூர் கிழாரைத் தாக்க அவரை நோக்கி விரைவான். மையூர்கிழார் படையின் வலதுபுற ஓரத்தின் வழியாக முடியனைப் பின்னோக்கி இழுத்துச் செல்லவேண்டும்.

படையணியின் ஓரப்பகுதி வழியாக முடியனை எவ்வளவு தொலைவு பின்னோக்கி இழுக்க முடியுமோ, அவ்வளவு தொலைவு இழுத்துச் செல்ல வேண்டும். மையூர்கிழாரை வீழ்த்தும் வெறிகொண்டு முன்னகரும் முடியனை, வேந்தர்படைத் தளபதிகளான சூலக்கையனும் நகரிவீரனும் பின்தொடர வேண்டும். பொருத்தமான இடத்தில் படையணியின் சுழலுக்குள் சிக்கவைத்து அவனை வீழ்த்த வேண்டும்.

முடியன் தங்களது படையணிக்குள் இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது கருங்கை வாணன், தேக்கனை நோக்கி முன்னகர்வான். பறம்புப்படைக்குள் எந்த இடத்தில் தேக்கன் இருந்தாலும் அந்த இடம் நோக்கி எதிரிகளைக் கிழித்துக்கொண்டு உட்புகும் ஆற்றல் கருங்கைவாணனின் படைக்கு உண்டு. மற்ற தளபதிகள், எதிரிகளை வேறு திசையில் முன்னேறவிடாமல் தடுக்கும் பணியைச் செய்வர். இதுதான் வேந்தர்படையின் இன்றைய திட்டமாக இருந்தது.

நேற்றைய போரில் வேந்தர்களின் குதிரைப்படை பேரழிவுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இன்று மூஞ்சலை நோக்கி நகர்வதற்கான திட்டமிடலோடு பறம்புப்படை இருந்தது. போர் தொடங்கியதிலிருந்து அதற்கான தன்மையில் அவர்கள் முன்னகர்ந்தனர். இன்று அவர்களுக்குக் கூவல்குடியினரின் மூலம் வழங்கப்படும் உத்தரவு வழக்கம்போல இருக்காது. காரிக்கொம்பின் ஓசை வெவ்வேறு பொழுதுகளில் தேவையறிந்து ஊதப்படும். போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடியனின் தேர் பின்புறமிருந்து படையின் நடுப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது.
 
வழக்கம்போல் குளவன்திட்டின் மேல் நின்றிருந்த பாரி, போர்க்களத்தின் தன்மையை உற்றுகவனித்துக்கொண்டிருந்தான். மூன்றாம் நாள் போரில்கூட, தான் களம் புகுவதைப் பாரி ஏன் மறுக்கிறான் என்பது காலம்பனுக்குப் புரியவில்லை. திரையர்குலம் இனி சிறிய இழப்பைக்கூடச் சந்திக்கக் கூடாது என்பதைப் பாரி மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறான். அப்படியிருந்தும் கொற்றனைப் பலிகொடுக்க நேர்ந்ததைப் பாரியால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தான் போர்க்களம் புக நேர்ந்தாலும்கூட காலம்பன் போர்க்களம் புகக் கூடாது என்றே பாரி நினைத்தான். தட்டியங்காட்டில் திரையர்குலத்தினரின் குருதி வீழக் கூடாது என்ற பாரியின் எண்ணத்துக்கு, திரையர்குலம் கடந்தகாலத்தில் அடைந்துள்ள இழப்புகளே காரணம். பாரியும் காலம்பனும் போர்க்களத்தை உற்றுகவனித்துக்கொண்டிருக்கையில், சிறியதாய் ஏதோ ஓசை கேட்டுத் திரும்பினான் பாரி. அது இகுளிக்கிழவனின் ஓசை. விளக்கின் சுடர் மெள்ள அசையத் தொடங்கியது.

பாரி, வியப்போடு இகுளிக்கிழவனைப் பார்த்தான். அவனோ கைகளைத் தூக்கிக் கூவல் குடியினருக்கு உத்தரவு கொடுக்கக் காத்திருந்தான். இரண்டு நாள்களாக எதிர்பார்த்தபோது எதுவும் நடக்காமல், சற்றும் எதிர்பாராத நேரத்தில் கொம்மனும் கொம்மியும் உதவப்போவது வியப்பைத் தந்தது. பாரியின் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, விளக்கின் சுடர் சட்டெனச் சாய்ந்தது. இகுளிக்கிழவன் கையை அசைக்க மலையெங்குமிருந்து கூவல்குடியினரின் பீறிட்ட ஓசை கணநேர இடைவெளியின்றி வெளிவந்தது. 

பறம்பின் குதிரைப்படை வீரர்களோ, வாள்படை வீரர்களோ இந்தக் கணத்தைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கல்லூழி அம்புகளை எடுத்து எய்வதற்குள் காற்று அவர்களைக் கடந்தது. ஆனால், உதிரனின் தலைமையிலான விற்படை வீரர்களோ, ஓசையைக் கேட்ட கணத்தில் காற்றின் முகப்போடு அம்பை இணைத்தனர். 

p83h_1533638321.jpg

ஆறு அம்புகளைக் கொண்டது ஒரு கொத்து. ஒவ்வொரு வீரனுக்கும் மூன்று கொத்துகள் கொடுக்கப்பட்டிருந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் முதல் கொத்தை எடுத்து நாணில் பொருத்தி முழு விசையோடு எய்தது விற்படை. மேற்கு மலைக் கணவாயின் பின்புறத்திலிருந்து கொம்மன் ஊத, வீறுகொண்ட காற்று தட்டியங்காட்டு நிலத்தை நோக்கி வலதுபுறமாகச் சீவிக்கொண்டு இறங்கியது. எண்ணிலடங்காத அம்புகள் காற்றின் முன்முகப்போடு இணைய, கண்பார்வைக்கு அப்பால் சீறிச்சென்றன அம்புகள்.

மலைமேலிருந்து கொம்போசை கேட்ட கணத்திலேயே சற்றே அதிர்ச்சிக்குள்ளானான் கருங்கைவாணன். வழக்கமான ஓசையாக அது இல்லை. வழக்கமான நேரத்திலும் ஊதப் படவில்லை. `இது என்ன புதுவகையாக இருக்கிறதே!’ எனச் சிந்தித்துக்கொண்டிருக்கும் போதுதான், சிறுபுல்லின் கனம்கொண்ட எண்ணிலடங்காத அம்புகள் அவன் தலைக்கு மேலே எங்கோ பறந்து சென்றுகொண்டிருந்தன. `என்ன இது?’ எனக் கருங்கைவாணனுக்கு ஒன்றும் புரியவில்லை. தேக்கனை நோக்கி முன்னேறிச் சென்றுகொண்டிருந்தவன் சற்றே குழப்பத்துக்குள்ளாகி அப்படியே நின்றான். பாய்ந்து செல்லும் எண்ணிலடங்காத அம்புகள் எங்கே செல்கின்றன என்று தலையைப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான். வெகு தொலைவுக்கு அப்பால் சென்றன.

வீசிய காற்றின் எதிர்ப்புறமாக வேந்தர்படை நின்றுகொண்டிருந்தது. குறுமணல் தூசிகளை அள்ளி எறிந்தபடி காற்று போய்க்கொண்டிருந்தது. வேந்தர்படை வீரர்கள், கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தனர். பறம்புவீரர்களைப் பொறுத்த வரை காற்று முதுகுப்புறத்தைத் தாக்கி முன்னகர்ந்தது. இவ்வளவு தொலைவு பறக்கும் அம்புகளை வாழ்வில் முதன்முறையாகப் பார்த்த கருங்கைவாணனுக்கு, ஒன்றும் புரியவில்லை. கண்களைக் கசக்கியபடியே திரும்பினான். எதிர்த்திசையில் பறம்புவீரர்கள் தங்களின் ஆவேசத் தாக்குதலைத் தொடங்கினர்.

கருங்கைவாணன் சட்டென விழிப்படைந்து பேரிகையை முழக்கச் சொல்லி, தன் வீரர்களை எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தப் படுத்தினான். பறம்புவீரர்களோ, அவ்வளவு தொலைவு செல்லும் அம்பை எய்த மறுகணமே வழக்கம்போலான தாக்குதலைத் தொடங்கினர். எய்யப்பட்ட கல்லூழி அம்பினால் ஏற்பட்ட விளைவு என்ன என்பது எய்த யாருக்கும் தெரியாது. அது கண்ணுக்கு அப்பால் எங்கோ நிகழ்ந்துகொண்டிருந்தது.

குளவன்திட்டில் இருந்தபடி பாரி பார்த்துக் கொண்டிருந்தான். எய்யப்பட்ட அம்புகள் மூன்றாம் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த வேந்தர்படையின் பிற்பாதியில் போய் இறங்கின. மூன்றாம்நிலைப் படையின் சரிபாதி வீரர்களின் மீது சுருள் அம்புகள் இறங்கின.
 
போர் நடந்துகொண்டிருந்த முற்பகுதியை மூன்றாம்நிலைப் படையினர் கண்கொண்டே பார்க்க முடியாது. அது எங்கோ நடந்து கொண்டிருந்தது. அவர்களைப் பொறுத்தவரை ஆயத்தநிலையில் நிற்க வேண்டும். அவ்வளவுதான். எந்தத் தொடர்பும் இல்லாமல் காற்றின் வழியே வானெங்குமிருந்து பறந்துவந்த வைக்கோல் அளவே கனம்கொண்ட அம்புகள் வீரர்களை நோக்கிச் சரசரவென இறங்கின.

பறந்து போன அம்புகள் எங்கே இறங்கின என்பது, முன்களத்தில் நின்றிருந்த கருங்கை வாணனுக்குத் தெரியவில்லை. இந்தத் தாக்குதல் என்ன என்பதும் அவனுக்குப் புரியவில்லை. ஏதோ நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. இந்நிலையில்தான் முடியனின் தேர் நடுக்களம் நோக்கிச் சென்றது. முன்வகுத்த திட்டப்படி அந்தத் தேரின் பார்வையில் படும்படி மையூர்கிழாரைக் களத்துக்குள் வரச்சொல்லும் மறைக்குறிப்பு அனுப்பப்பட்டது.

தேரில் முன்னகர்ந்துகொண்டிருந்த முடியனின் எண்ணமெல்லாம், கல்லூழி வேர் எவ்விடம் கீழிறங்கியிருக்கக்கூடும் என்பதைக் கணிப்பதிலேயே இருந்தது. தேரின் மீது நின்றாலும் அவனது பார்வைக்கு அப்பால்தான் அந்தத் தாக்குதல் நிகழ்ந்திருந்தது. எப்படியிருந்தாலும் கல்லூழி அம்புகள் தைத்தவுடன் அவற்றின் பாதிப்பு தெரியாது. பிடுங்க முடியாமல் தவிக்கும்போதும் தசையோடு பிய்த்துக்கொண்டே அம்புகள் வெளிவரும்போதும்தான் பாதிப்பை உணரத் தொடங்குவார்கள். அப்போது அங்கிருந்து கொடுக்கப்படும் மறைக்குறிப்பு, முன்களத்தில் நிற்கும் வேந்தர்படையைப் பெருங்குழப்பத்துக்குள்ளாக்கும். அவர்களின் மொத்தக் கட்டுக்கோப்பும் அடுத்த சில பொழுதுகளுக்குள் முழுமுற்றாகக் கலையும் என எண்ணிக்கொண்டிருந்த போது ஏந்திய வில்லோடு மையூர்கிழார் சென்றுகொண்டிருந்த தேர் தெரிந்தது.

இத்தனை நாள்களாகப் போர்க்களத்தில் முடியன் எவனைத் தேடினானோ, அவன் இப்போது கண்ணில்பட்டான். தேரோட்டும் வலவனைப் பார்த்து, ``அந்தத் தேரைப் பின் தொடர்” என்று கூறினான். ஆனால், மறுகணமே அவனது எண்ணம் வேறானது. களத்தின் சூழல் இவ்வளவு அருமையான வாய்ப்பை உருவாக்கியுள்ளபோது நாம் மூஞ்சலை நோக்கிச் செல்வதே சரியான முடிவு எனத் தோன்றியது. ஆனாலும் மையூர்கிழாரை விட்டுவைப்பது சரியன்று என்றும் தோன்றியது. தேரோ, மையூர்கிழாரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. முடியனின் சிந்தனை, முடிவெடுக்க முடியாமல் தடுமாறியது.

ஏறக்குறைய இதே குழப்பத்தைச் சந்தித்தான் கருங்கைவாணன். `இத்தனை ஆயிரம் அம்புகள் காற்றில் எப்படி இவ்வளவு தொலைவு பறந்தன. அவையெல்லாம் எங்கே போய் இறங்கின. எங்கே இறங்கியிருந்தாலும் பல காதத் தொலைவுக்கு நிற்கும் நம் படைவீரர்களின் மீதுதானே இறங்கியிருக்கக் கூடும். பார்ப்பதற்கு மிகவும் சிறுத்த இந்த அம்புகளால் பெரிய பாதிப்பு எதுவும் நிகழ்ந்திருக்காது. ஆனாலும் படைத் தலைமைத் தளபதி என்ற முறையில் பின்களப்படையின் பாதிப்பை அறிந்த பிறகு முன்னேறிச் செல்வதுதான் சரியெனத் தோன்றியது. ஆனாலும் நாம் திட்டமிட்டபடி மையூர்கிழாரை நோக்கி முடியனின் தேர் செல்லத் தொடங்கிவிட்டது. இனி நாம் பொறுத்திருக்க வேண்டாம்’ என்று முடிவுசெய்து தேக்கனை நோக்கிப் பறம்புப்படைக்குள் புகுந்து உள்நுழையத் தொடங்கினான் கருங்கைவாணன்.

போர்க்களத்தில் தளபதிகளால் முழுமுற்றான தெளிவோடு இயங்க முடியாது. பல்லாயிரம் வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிச்சரித்து முன்னகரும் போரியக்கத்தைத் துல்லியமாகக் கணிப்பது எளிதன்று. தளபதிகள், குழப்பத்துக்குள் சிக்கிச் சிக்கி மீள்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

கருங்கைவாணன் குழப்பத்துக்குள்ளிருந்து முடிவுக்கு வந்து தேக்கனை நோக்கிப் புறப்பட்டபோது, மையூர்கிழாரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முடியன், தேரைச் சற்றே நிறுத்தினான். தொலைவில் குதிரையில் இருந்தபடி போரிட்டுக்கொண்டிருந்த வேட்டூர் பழையனைத் தனது தேரில் ஏறச் சொல்லி மையூர்கிழாரைக் கொன்றழிக்க உத்தரவிட்டு, அவனது குதிரையில் ஏறி இரவாதனை நோக்கிப் புறப்பட்டான் முடியன்.

பொழுதாகிக்கொண்டிருந்தது. வேந்தர்படையின் மூன்றாம் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணிலடங்காத வீரர்கள் கல்லூழி அம்பை உருவி எடுக்க முடியாமல் திணறியபோதுதான் ஆபத்தின் அளவு புரியத் தொடங்கியது. கூச்சலும் குழப்பமும் மேலேறி வரத் தொடங்கியபோது முடியன் குதிரைப்படையோடு இணைந்து மூஞ்சலை நோக்கி முன்னகரத் தொடங்கினான்.

முன்திட்டப்படி தன்னைத் தொடர்ந்துவரும் தேரை, படையின் வலதுபுற ஓரமாகவே உள்ளிழுத்துச் சென்றுகொண்டிருந்தார் மையூர்கிழார். தளபதிகள் துடும்பனும் நகரிவீரனும் அவரைக் குறிவைத்துத் தங்களின் தேரை விரைவுபடுத்தினர்.

திட்டமிட்டபடி பறம்புப்படையின் பின்பகுதியை நோக்கி விரைந்து வந்தான் கருங்கைவாணன். எதிரிகளின் படையை விலக்கி முன்னகரும் உத்தியில் அவனது படை இணையற்ற அனுபவம்கொண்டது. விரைந்து முன்னகர்ந்து வந்த கருங்கைவாணனின் கண்களுக்கு வெகுதொலைவில் வாளூன்றி நிற்கும் தேக்கன் தனித்துத் தெரிந்தான்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்... 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 96

 

 

ட்டியங்காட்டுப் போர்க்களம் இன்று யாரும் கணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. காலையில் போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே காற்று வீசியது. மற்ற நிலத்தில் வீசும் காற்றைப் போன்றதன்று... சீவிச்செல்லும் இந்தக் காற்றின் வேகம் இணையற்றது. குளவன்திட்டின் பின்புறம் உள்ள கணவாயிலிருந்து சீற்றத்தோடு வெளிவந்து தட்டியங்காடெங்கும் இருக்கும் ஈக்கிமணலையும் கருமணலையும் உருட்டி எடுத்துக்கொண்டு போனது. பரண்மேல் நின்றிருந்த திசைவேழர், ஒரு கணம் நடுங்கிப்போனார். காற்றின் வேகம், பரணை இழுத்து ஆட்டியது. கம்பங்களை இறுகப்பிடித்து நின்றார். அவரின் கண்களின் முன்னால் நாழிகை வட்டிலைத் தூக்கி எறிந்தது. நாழிகைக்கோல் எங்கோ பறந்தது. மாணவன் ஒருவன் அவற்றைப் பிடிக்க முயன்றான். ஆனால், கணநேரத்தில் அவை மறைந்துவிட்டன.

p83b_1534316216.jpg

காற்றின் வேகம் அளவிடற்கரியதாக இருந்தது. செம்புழுதி மேலேறி வந்து கொண்டிருக்கும்போதுதான் எண்ணிலடங்காத அம்புகள் காற்றோடு பறந்து சென்றதைப் பார்த்தார். அவருடைய கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. இங்கு நிகழ்வது எதிர்பாராத ஒன்றா அல்லது எதிர்பார்த்த ஒன்றா என்று அவருக்குப் புரியவில்லை. பரண்கட்டிய கம்பங்கள் வில்லென வளைந்து மீண்டன. இந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்ப மரக்கட்டுமானம் இருந்ததால் அவர் தப்பித்தார்.

ஆனாலும் ஆழ்மனம் நடுங்கியபடியே இருந்தது. அதற்குக் காரணம், அவரின் கண் முன்னால் நாழிகைவட்டிலை, காற்று தூக்கியெறிந்ததுதான். நிலைமான் கோல்சொல்லியின் முன்னால் வைக்கப்பட்ட நாழிகைவட்டிலும் அதில் பரப்பப்பட்ட குறுமணலும் நாழிகைக்கோலும் போரின் உயிர்நாடி போன்றவை. ஆனால், காற்று அவருடைய கண்களின் முன்னால் அவற்றைத் தூக்கியெறிந்தது. திசைவேழர் நிலைகுலைந்து நின்றார்.

பறம்புவீரர்கள் எந்தவிதத் திகைப்புக்கும் ஆட்படாமல் தாக்குதலை முன்னெடுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் காற்றைக் கையாண்டவிதம் யாரும் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்தது. காரமலையிலிருந்து ஓசை கேட்ட கணத்தில்தான் பெருங்காற்று வீசியது. அந்தக் கணத்தில் அம்புகள் அலையலையாய் மேலேறிப் பறக்கின்றன. திசைவேழருக்கு இந்தச் செயல்பாட்டுக்குள் இருந்த இணைப்புப் பிடிபடவில்லை. `காற்றை வருமுன் உணரும் ஆற்றல்கொண்டவர்களாகப் பறம்பு மக்கள் இருக்கின்றனரா? விண்மீன்களின் நகர்வைக்கொண்டு காலத்தைக் கணிக்கிறோம். ஆனால் இவர்களோ காற்றையே கணிக்கிறார்கள். இது எளிய செயலன்று.’ திசைவேழரின் எண்ணங்கள் நடுக்கத்தை அதிகப்படுத்தியபடியே இருந்தன.
தட்டியங்காட்டின் முழு ஆற்றலும், இன்று வெளிப்பட்டுக்கொண்டிருந்தது; அந்த நிலத்தில் நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் இருதரப்புக்கும் யாராலும் கணிக்க முடியாத புதுப்புதுச் சவால்களை உருவாக்கியபடியே இருந்தது. நடுப்பகலுக்குப் பிறகு வழக்கம்போல் வெக்கையின் தாக்கம் அதிகமாகியது. போர்க்களம், இதுவரை இல்லாத குழப்பத்துடனும் ஆவேசத்துடனும் இருந்தது. வீரர்கள் வழக்கத்தைவிட பேரோசையை எழுப்பிக்கொண்டி ருந்தனர். 

p83a_1534316248.jpg

உள்ளும் புறமும் நடுக்கத்தை உணர்ந்தபடி இருந்த திசைவேழர், மாணவன் ஒருவனைக் கீழே அனுப்பி இன்னொரு வட்டிலில் மணலையும் நாழிகைக்கோலையும் எடுத்துவரச் சொன்னார். மாணவன் கீழே இறங்கினான். வீரர்கள் ஒருவரை யொருவர் வெட்டிச்சரித்துக்கொண்டிருந்தனர். குதிரைகளும் தேர்களும் குறுக்கிட்டு ஓடிக்கொண்டிருந்தன. நிலமெங்கும் அம்புகளும் ஈட்டிகளும் காற்றைக் கிழித்தன. தேரில் ஏறி, போர்க்களத்தினூடே புகுந்து, குடிலுக்குச் சென்று திரும்ப முடியும் என அவனுக்குத் தோன்றவில்லை. என்ன செய்வதெனத் தெரியாமல் மிரட்சியோடு நின்றான்.

மையூர்கிழாரை விரட்டிச் சென்ற வேட்டூர்பழையன், எதிரியின் படையைச் சரிபாதிக்குமேல் கடந்தார். இவ்வளவு தொலைவு உள்ளே வருவது சரியன்று எனத் தோன்றியது. ஆனால், முடியன் ``இவனைக் கொன்றழித்துவிடு” என்று சொல்லியே அவனது தேரை ஒப்படைத்துள்ளான். போர்க்களத்தில் முடியனின் வாக்கைப் பறம்புத்தளபதிகள் மீறுவதில்லை. அதுமட்டுமன்று, மையூர்கிழாரைக் கொல்வதைவிட முக்கிய வேலை இந்தப் போர்க்களத்தில் வேறில்லை. எனவே, பழையன் விடாது விரட்டிச் சென்றார்.

முன்திட்டப்படி படையின் ஓரப் பகுதியாகவே சென்றுகொண்டிருந்தார் மையூர்கிழார். அதனால்தான் இவ்வளவு தொலைவு முடியனின் தேரை இழுத்துவர முடிந்தது. குறிப்பிட்ட அளவு கடந்ததும் பின்தொடர்ந்து வருவது முடியன் அல்ல; வேட்டுர்பழையன் என்பதை மையூர்கிழார் அறிந்துவிட்டார். ஏற்கெனவே வகுக்கப்பட்ட திட்டப்படி உள்ளிழுத்துச் செல்லவேண்டியது முடியனைத்தான். அவன்தான் முதலில் பின்தொடர்ந்து தாக்குதல் தொடுத்தபடி வந்தான். இடையில் பழையன் எப்போது மாறினார் என்பது மையூர்கிழாருக்கு விளங்கவில்லை. 

p83d_1534316277.jpg

மையூர்கிழாருக்கு நீலன் மீதும் வேட்டூர்பழையன் மீதும்தான் அதிக கோபம் இருந்தது. தன் மகன் இளமாறனின் மரணத்துக்கு வேட்டுவன் பாறையைச் சேர்ந்தவர்களே காரணம் என்று அவர் நம்பினார். எனவே, பின்தொடர்வது முடியனல்ல, வேட்டுர்பழையன்தான் என்பது தெரிந்த பிறகும் அவர் எதையும் காட்டிக்கொள்ளாமல் அதே வேகத்தில் போய்க்கொண்டிருந்தார். பழையனின் மரணம் நிகழப்போவதைக் காணும் வெறி அவரது செயலிலே இருந்தது. மற்ற இரு தளபதிகளான நகரிவீரனும் சூலக்கையனும் வளைத்துத் தாக்குவதற்கு ஏதுவான இடைவெளியில் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர்.

முடியன், இரவாதனோடு வந்து இணைந்தான். இது குதிரைப்படை வீரர்கள் யாரும் எதிர்பாராத ஒன்று. பறம்புவீரர்களின் ஆவேச உணர்வு, வெள்ளம்போல் சீறிப்பாயத் தொடங்கியது. எதிரிகளின் தற்காப்புநிலைகளை நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் தகர்த்து முன்னேறியது பறம்பின் குதிரைப்படை. அந்தத் திசையில் நின்றிருந்த வேந்தர்படைத் தளபதி உறுமன்கொடி, `இவர்களால் அதிக தொலைவு முன்னேறி வந்துவிட முடியாது’ என்றுதான் நினைத்தான். ஆனால் பறம்புப்படை, எதிரிப்படையைக் கிழித்துக்கொண்டு இறங்கியது. வாள்வீச்சும் அம்புகளின் தாக்குதலும் எதிர்கொள்ள முடியாத வேகத்தில் இருந்தன.

நேற்றைய தாக்குதலில் தனது படையில் இருந்த பெரும்பான்மையான குதிரைகளை இழந்தான் உறுமன்கொடி. அப்படியிருந்தும் இன்று வாள்வீரர்களைப் பெரும்பகுதியாகத் தனது அணிகளில் நிறுத்தி, மிகக்குறைவான குதிரைகளைப் பின்னிலையில் நிறுத்தியிருந்தான். ஆனால், எதிரிகளின் தாக்குதல் ஈடுகொடுக்க முடியாததாக இருந்தது. பாய்ந்து முன்னேறும் எதிரிகளைத் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை வந்துவிடுமோ என்று உறுமன்கொடியின் மனதுக்குள் அச்சம்படரத் தொடங்கியது.

அப்போது உதிரனின் தலைமையிலான பறம்பின் விற்படையானது, வேந்தர் படையின் இரண்டாம் நிலையின் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்தி உள்நுழைந்துகொண்டிருந்தது. களத்தின் மையப்பகுதியை வழக்கம்போல் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் உதிரன். உண்மையில் பறம்புப்படையின் அச்சு உதிரனின் கையில்தான் இருந்தது. வேந்தர்படை பறம்புப்படைக்குள் எளிதில் நுழைய முடியாத தன்மையை உருவாக்குவது மட்டுமன்று, தேவைப்படும் நேரத்தில் வேந்தர்படையைத் தாக்குதலின் மூலம் திசைதிருப்பவும் உதிரனால் முடிந்தது.

p83e_1534316308.jpg

வேந்தர்படையின் வில் வீரர்கள் எய்யும் அம்பைவிட இரு மடங்குத் தொலைவுக்கு பறம்புப்படை அம்பெய்வதால், எதிரிகளால் அருகில் நெருங்கவே முடிவதில்லை. எனவே, இரண்டு நாள் போரிலும் சிறு பாதிப்புகூட விற்படைக்கு ஏற்படவில்லை. உதிரனுக்கு இன்றைய போரில்தான் முழு வேகத்தில் தாக்கி முன்னேற அனுமதி கொடுக்கப்பட்டது. இதற்காகத்தான் அவன் காத்திருந்தான். உதிரனின் வேகம் காலையிலிருந்தே எதிரிகளால் ஈடுகொடுக்க முடியாததாகத்தான் இருந்தது. நடுப்பகலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமானது. பறம்பின் விற்படை வேந்தர்படையின் இரண்டாம்நிலையைப் பிளந்து உள்நுழைந்தபோதுதான் முடியன், இரவாதன் ஆகிய இருவரின் தாக்குதலையும் எதிர்கொள்ள முடியாமல் உறுமன்கொடி திணறி நின்றான். உடனடியாக இரண்டாம்நிலைப் படையை உதவிக்கு அழைக்கலாம் என்று அவன் நினைத்தபோது அங்கு நிலைமை மோசமடைந்துகொண்டிருந்தது. உதிரனின் தாக்குதல், இரண்டாம்நிலைப் படையின் வீரர்களைக் கணக்கின்றி வீழ்த்திக்கொண்டிருந்தது.

தலைமைத் தளபதி கருங்கைவாணன், பறம்புப்படையின் இறுதிப் பகுதியில் நின்றிருந்த தேக்கனை வந்தடைந்தான். அவன் இங்கு வருவான் என்று தேக்கன் உள்ளிட்ட யாரும் எதிர்பார்க்கவில்லை. அவன் வருவது அறிந்ததும் சீழ்க்கை ஒலியெழுப்பினான் தேக்கன்.
 
அவன் எழுப்பிய ஓசை எதற்கானதென்று கருங்கைவாணனுக்குத் தெரியவில்லை. அவன் குதிரையிலிருந்து கீழே இறங்கினான். கடுமையான வாள்வீச்சுக்குப் பிறகும் கிழவன் மீண்டும் போர்க்களம் வந்து நிற்பதே கருங்கைவாணனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அவனது வாழ்வு அடுத்த சில கணங்களில் முடியப்போகிறது என எண்ணியபடியே உறையிலிருந்து வாளை உருவினான்.

தேக்கனோ, வாளை ஏந்த ஆயத்தமாக இல்லை; கருங்கைவாணனைப் பார்த்தபடியே நின்றிருந்தான். வீரர்கள் வாள்வீச்சுக்கு இடம்விட்டு விலகினர். அப்போது அங்கு வந்த குதிரையிலிருந்து கூழையன் இறங்கினான். தேக்கனின் சீழ்க்கை ஓசை கூழையனுக்கானது. கருங்கைவாணன், கூழையனைப் பார்த்ததும் அறிந்துகொண்டான், இவன் பறம்பின் தேர்ப்படைத் தளபதியென்று.

கூழையன் குதிரையிலிருந்து இறங்கினான். தேக்கன் போரிட ஆயத்தமாக இல்லாதது ஏன் என்று கருங்கைவாணனால் புரிந்துகொள்ள முடிந்தது. கிழவன் கடுமையான வலியோடு நின்றுகொண்டிருக்கிறான். ஆனாலும் போர்க்களம் நீங்கக் கூடாது என்பதற்காக வாளேந்தி நிற்கிறான் என எண்ணியபடி கூழையனை நோக்கி முன்னகர்ந்தான்.

தேக்கன், கூழையனை நோக்கி சத்தமாகச் சொன்னான், ``இவன் அதிக நேரம் நிற்க மாட்டான், ஓசை கேட்டதும் பின்னால் ஓடிவிடுவான். எனவே, ஏறித் தாக்காதே; வாங்கித் தாக்கு.”

தேக்கன் சொன்னது கருங்கைவாணனுக்குத் தெளிவாகக் கேட்டது. சுழற்றிய வாளோடு உள்ளிறங்கியவனை அந்தச் சொல் ஒரு கணம் தாக்கி நிறுத்தியது. கிழவன் ஏன் இதைச் சொல்கிறான் என்று கருங்கைவாணன் எண்ணத் தொடங்கியபோது, இயற்கையாகவே அவனது கவனம் படையின் பின்பக்கமிருந்து எழும் ஓசையை அனுமானித்தது. கிழவன் வீசிய முதல் சொல், கருங்கைவாணனின் கவனத்தைச் சிதறச்செய்தது.

p83g_1534316398.jpg

கூழையன், விற்போரில் நிகரற்ற வீரத்தை வெளிப்படுத்தக்கூடியவன். ஆனால், வாள்வீச்சில் பெருவீரன் எனச் சொல்லிவிட முடியாது. அதுவும் வேந்தர்படையின் தலைமைத் தளபதியான கருங்கை வாணனின் வாள்வீச்சைக் கூழையனால் எதிர்கொள்ள முடியாது. எனவேதான் எதிரியின் கவனத்தைத் திருப்பும் உத்தியாகவும் இதைக் கையாண்டான் தேக்கன்.

கருங்கைவாணனால் படையின் பின்புறத்திலிருந்து எழும் ஓசையை மதிப்பிட முடியவில்லை. ஆனால், பறம்புத்தளபதி முடியன் வழக்கத்துக்கு மாறாக முற்பகலிலேயே முன்னேறிவந்ததும் காற்றில் பறந்த கணக்கற்ற அம்புகளும் அவனது எண்ணத்தைக் குறுக்கிட்டபடியே இருந்தன. ஆனால் கூழையன், கண்ணுக்கு முன்னால் வாளைச் சுழற்றி இறங்கிவிட்டான். கருங்கைவாணனின் கண்களிலிருந்த குழப்பத்தைத் தேக்கனால் அறிய முடிந்தது.

முழு வேகத்தில் வாள்வீச்சைத் தொடங்க முடியாத சிறு குழப்பத்தைத் தன்னுள் உணர்ந்தான் கருங்கைவாணன். பறம்புப்படையின் கடைசிப் பகுதியில் அவன் இருக்கிறான் என்பதும், பறம்புவீரர்கள் காற்றில் எய்த அம்புகள் அவனது படையின் பின்பகுதியை ஒருவேளை தாக்கியிருக்கக்கூடும் என்பதும் அவனது கவனத்தை முழுமையாகக் கவ்விக்கொண்டன. இவையெல்லாம் எதிரிகளின் தெளிவான திட்டமிடல் என்பதை அவன் உணரும் வேளையில் கூழையனின் வாள் முன்சுழன்று வந்தது.

கருங்கைவாணனைப்போல தேக்கனுமே அந்தக் கணம் அதிர்ச்சியடைந்தான். `வாங்கித் தாக்கத்தானே சொன்னோம். இவன் ஏன் ஏறிப் பாய்கிறான்!’ என்று தேக்கன் சற்றே அதிர்ச்சிக்குள்ளானான். கருங்கைவாணனோ கவனத்தைச் சிதறவிடக் கூடாது என எண்ணியபடி வாளை ஏந்தி முன்னகர்ந்தான்.

பரண் விட்டுக் கீழிறங்கிய திசைவேழரின் மாணவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பொழுதாகிக்கொண்டிருந்தது. இன்றைய போர் முடிய இன்னும் இரண்டொரு நாழிகைகள்தான் இருந்தன. எனவே, வேகமாக ஆசான் கேட்டதைக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும் என்று பதற்றம்கொண்டான். சற்றுத் தொலைவில், வேந்தர்படை வீரன் பயன்படுத்திய கேடயம் ஒன்று கிடந்தது. வேகமாகப் போய் அதை எடுத்தான். கேடயத்தைத் திருப்பி அதில் மண்ணை அள்ளி நிரப்பினான். குருதி தோய்ந்த அம்பு ஒன்று கிடந்தது. அதை எடுத்து எட்டு விரல்கட்டை அளவு நீளத்துக்கு ஒடித்தான். என்றும் இல்லாத அளவுக்குப் போர்க்களத்தின் ஓசை இன்று பலமடங்கு அதிகமாக இருந்தது. என்ன நடக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி பரண் மேல் ஏறத் தொடங்கினான்.

மையூர்கிழாரின் தேர், முன்திட்ட மிட்டபடி மூன்றாம்நிலைப் படையின் இறுதிப் பகுதிக்குச் சென்றது. ஆனால், அங்கு பெருங்குழப்பம் நிலவியது. கல்லூழி வேரால் ஆன அம்பைப் பிடுங்க முயலும்போது அதன் வலி நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. அம்பின் உள்நுழைந்த பகுதி சுருண்டுவிட்டதால், தசையோடு பிய்த்துக்கொண்டுதான் வந்தது. எனவே, வீரர்களின் உடலில் தைத்த எந்த அம்பையும் பிடுங்க முடியவில்லை. `வைக்கோல் அளவுகொண்ட சிறு அம்புதானே, இது என்ன செய்துவிடும்’ என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால், பிடுங்க முடியாமல் ஒவ்வொரு வீரனும் துடிக்கத் தொடங்கிய பிறகுதான் நிலைமையின் விபரீதம் புரியத் தொடங்கியது.

மூன்றாம்நிலைப் படையில் பெருங் குழப்பம் நிலவியதால், மையூர்கிழார் தேரை, படையின் நடுப்பகுதிக்குக் கொண்டுசெல்லவில்லை. மாறாக, ஓரப்பகுதியின் வழியே படை நின்றிருக்கும் பகுதிக்கு வெளிப்புறம் நோக்கி இழுத்துச்செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தார். தேரை ஓட்டும் வலவனிடம், ``வெளிப்புறமாக விரைந்து ஓட்டு” என்றார்.

அவரின் தேரைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார் வேட்டூர்பழையன். `இந்தப் போருக்கான முக்கியக் காரணமாக இருப்பவன் மையூர்கிழார். இவன்தான் பறம்பைப் பற்றிய பல குறிப்புகளை வேந்தர்களுக்கு வழங்குபவன். அவன் இருக்கும் துணிவில்தான் காரமலையின் அடிவாரத்தில் இவ்வளவு பெரிய படையைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றனர்’ என்று அவனைப் பற்றிய எண்ணங்கள் மேலேறியபடியே இருந்தன. `எதிரிப்படையின் கடைசிப் பகுதிக்கு வந்துவிட்டோம். இவ்வளவு தொலைவு ஏறி வருதல் நல்லதன்று. ஆனால், இத்தனை நாள் களத்துக்கு வராத இந்தத் துரோகி, இன்று போர்க்களத்துக்குள் வந்துள்ளான். இவனை இன்றோடு கொன்றழிக்காமல் விட்டால் பறம்புக்குக் கடும்பாதிப்பைத் தொடர்ந்து உருவாக்குவான். எனவே, இன்றைய போரில் தனக்கு என்ன நேர்ந்தாலும் மையூர்கிழாரைக் கொன்றழிக்காமல் விடக் கூடாது’ என்ற உறுதியோடு அவனை விரட்டிச் சென்றார் வேட்டூர்பழையன்.

முடியனும் இரவாதனும், வேந்தர்படையின் இரண்டாம்நிலையைக் கடந்து மூன்றாம்நிலையை அடைந்தனர். உறுமன்கொடியின் தடுப்பரண்கள் சிதறிப்பறந்தன. எதிர்கொள்ளவே முடியாத தாக்குதலால் நிலைகுலைந்துகொண்டிருந்தான் உறுமன்கொடி. முடியனும் இரவாதனும் ஒரே களத்தில் ஒன்றாய் நின்று இதுவரை போரிட்டதில்லை. தன் மகன் எப்படிப் போர்புரிவான் என்பதை மற்றவர்கள் சொல்லித்தான் முடியன் கேட்டுள்ளான். தட்டியங்காட்டில்தான் அவனது தாக்குதலை முடியனால் பார்க்க முடிந்தது. 

இன்று இருவரும் ஒரே படைப்பிரிவில் முன்னேறிப் பாய்க்கின்றனர். உள்ளுக்குள் பெருமிதம் இருந்தாலும் கண்களில் அதைக் காட்டிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு தாக்குதலை முன்னெடுத்தான் முடியன். தந்தையோடு இணைந்து களத்தில் நின்று போராடும் இந்நாளில், வழக்கத்தைவிட வீரியமாக இருந்தது இரவாதனின் தாக்குதல். சூளூர் வீரர்கள் முன்புற அணியில் தாக்கி முன்னேற, பறம்பின் குதிரைப்படை வேந்தர்படையின் மூன்றாம் நிலைக்குள் வகுடுபிளந்து போய்க்கொண்டிருந்தது.
 
குளவன்திட்டிலிருந்து போர்க்களத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. `பறம்பின் குதிரைப்படை இதே வேகத்தில் முன்னேறினால் இன்னும் சிறிது நேரத்தில் மூஞ்சலை நெருங்கிவிட முடியும்’ எனக் கணித்தான். குகைக்குள்ளிருந்து மீண்டும் ஓசை எழுப்பினான் இகுளிக்கிழவன். சற்று நேரத்துக்குப் பிறகுதான் அவனது ஓசையைக் கவனித்தான் பாரி. இகுளிக்கிழவன் கூறினான், சுடர் இடதுபுறம் அசையப்போகிறது. இப்போது வரப்போவது காற்றி. அது தட்டியங்காட்டை இடதுபுறமாக உருட்டிச்செல்லும் என்று சொல்லி, கையை உயர்த்தினான். ஆனால் பாரியோ, கூவல்குடியினரை நோக்கிக் கை அசைக்கவில்லை.

சற்றே அதிர்ச்சிக்குள்ளானான் இகுளிக்கிழவன். ``ஏன் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த மறுக்கிறாய்?” என்று இகுளிக்கிழவன் கேட்டதற்குப் பாரி சொன்னான், ``பறம்பின் குதிரைப்படை வீரர்கள் எதிரிகளின் மூன்றாம்நிலைக்குள் நுழைந்துவிட்டனர். இந்தச் சூழலில் முதல்நிலையில் இருந்து எய்யப்படும் அம்பு மூன்றாம்நிலையில் இருக்கும் நம் வீரர்களையே தாக்க வாய்ப்புண்டு. எனவேதான் உத்தரவிடவில்லை.”

இகுளிக்கிழவன் மீண்டும் விளக்கைப் பார்த்தான். சாய்ந்த சுடர் மீண்டும் நிமிர நேரமானது.

தேக்கன் கூறியபடி வாங்கித் தாக்காமல், ஏறித் தாக்கிய கூழையன் ஒருகட்டத்துக்குப் பிறகு களைப்படையத் தொடங்கினான். சிறிது நேரம் பின்புறப் படையில் எதுவும் நிகழ்ந்துவிடுமோ என்று கவனத்தைச் செலுத்திய கருங்கைவாணன், நேரம் கடந்த பிறகு தாக்குதலைத் தீவிரப்படுத்தினான். தனது கவனத்தைத் திருப்பவே கிழவன் இப்படிச் சொல்லியுள்ளான் என நினைத்தான் கருங்கைவாணன். இப்போதும் கூழையன் தற்காப்பு நிலையில் நிற்காமல் முன்களம் நோக்கியே பாய்ந்துகொண்டிருந்தான்.

அவனது செயல் பொருத்தமானதில்லை. எதிரிப்படைத் தளபதியை மிகவும் குறைத்து மதிப்பிடுவதால் இவ்வாறு செய்கிறான் எனத் தேக்கனுக்குத் தோன்றியது. ஆனால், போரிட்டுக் கொண்டிருப்பவனை நோக்கிச் சத்தம்போட்டுச் சொல்வது குழப்பதையோ, தவறான புரிதலையோ உருவாக்கிவிடும் என்பதால் அமைதி காத்தான். கூழையன் அணிந்திருக்கும் மெய்க்கவசம் எவ்வளவு வேகமான தாக்குதலையும் வாங்கி நிற்கும். எனவே, கவனமாகத் தாக்கினால்தான் இவனை வீழ்த்த முடியும் என நினைத்தபடியே வாளைச் சுழற்றினான் கருங்கைவாணன். இருவரின் கால்களும் பின்னல் வடிவில் வட்டக்களத்தில் நகர்ந்துகொண்டிருந்தன.

சற்றும் எதிர்பாராமல் காற்று பெருவேகத்தோடு வீசியது. அப்போது எதிர்த்திசையில் கூழையனும் பறம்பின் திசையில் கருங்கைவாணனும் நின்றுகொண்டிருந்தனர். `இப்பெருங்காற்று வீசும்போது காரமலையிலிருந்து ஏன் ஓசை எழுப்பப்படவில்லை; பாரி என்ன செய்துகொண்டிருக்கிறான்?’ என்று கண நேரத்தில் கூழையனின் சிந்தனை காற்றின் வழியே குளவன்திட்டை அடைந்தபோது கருங்கைவாணனின் வாள் கூழையனின் கழுத்துப் பகுதியில் இறங்கி வெளியேறியது.

மூன்றாம்நிலைப் படையைப் பறம்பின் குதிரைப்படை பிளந்து முன்னேறிக்கொண்டி ருந்தபோது ஆபத்து அதன் உச்சத்தை அடைந்தது. உறுமன்கொடியின் கைகளில் இருந்து படையின் கட்டுப்பாடு வழுவத் தொடங்கியது. ஒரு தளபதி வேறு வழியே இன்றிச் செய்யும் கடைசிச் செயலுக்கான உத்தரவை இட்டான். முச்சங்கு ஊதப்பட்டது. அது பேராபத்தைத் தெரிவிக்கும் குறியீடு. மற்ற சங்குகள் ஊதப்பட்டால் அது ஆபத்து பற்றித் தலைமைத் தளபதிக்குத் தெரிவிக்கும் செயல். அவர் உடனடியாக உரிய ஏற்பாட்டைச் செய்வார். ஆனால், முச்சங்கு ஊதப்பட்டால் தலைமைத் தளபதி உட்பட அதைக் கேட்கும் ஒவ்வொரு தளபதியும் உடனடியாக அந்த இடத்துக்கு வந்துசேர வேண்டும்.

ஆனால், உடனடியாக வரும் நிலையில் வேந்தர்படைத் தளபதிகள் எவரும் இல்லை. நகரிவீரனும் சூலக்கையனும் முன்வகுக்கப்பட்ட திட்டப்படி படையின் பின்புறத்தைக் கடந்து மையூர்கிழாரால் கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். கருங்கைவாணனோ பறம்புப்படையின் முன்களத்தில் ஏறிப்போய்ப் போரிட்டுக்கொண்டிருந்தான். விற்படைத் தளபதி துடும்பனோ, உதிரனின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மிகவும் பின்னகர்ந்துகொண்டிருந்தான். உறுமன்கொடி எதிர்பார்த்த எந்த ஒரு தளபதியும் உதவிக்கு வரவில்லை. பறம்பின் குதிரைப்படைத் தாக்குதல் இணையற்ற வேகத்தில் இருந்தது.

முடியனும் இரவாதனும் கணக்கின்றிக் கொன்றழித்து முன்னேறினர். எங்கும் குருதி பீறிட்டது. சூளூர் வீரர்களின் பாய்ச்சலுக்கு முன் வேந்தர்படையால் நிலைகொள்ள முடியவில்லை. உறுமன்கொடி முச்சங்கை மீண்டும் மீண்டும் ஊதச் சொன்னான். களத்தில் ஓசையெழுப்ப நிறுத்தப்பட்டிருந்த அனைவரும் இனி இந்த ஓசையையே எதிரொலிக்க வேண்டும். நிலைமை மிக மோசமாகிறது என்பதன் அறிகுறி இது.

மூன்றாம் நிலையில் மூஞ்சலுக்குப் பக்கத்தில் முழுப் பாதுகாப்போடு நின்றிருந்த வேந்தர்களுக்கு இப்போதுதான் ஆபத்தின் அளவு புரிந்தது. தங்கள் தளபதிகள் ஒன்றுகூட முடியாதபடி சிதறிக்கிடக்கின்றனர்; எதிரிகளின் குதிரைப்படையோ மூஞ்சலை நெருங்கிக்கொண்டிருக்கிறது எனத் தெரிந்ததும் பொதியவெற்பனும் உதியஞ்சேரலும் உறுமன்கொடிக்கு உதவ, தங்களின் படைப்பிரிவினரோடு விரைந்தனர். சோழவேழன், விற்படைத் தளபதி துடும்பனுக்கு உதவ விரைந்தான்.

கூழையன் மண்ணில் சரிந்த பிறகு, தேக்கன் களத்தில் இறங்கினான். கருங்கைவாணன் எதிர்பார்த்த வேட்டை இப்போது அவன் முன்னால் வாளேந்தி நின்றது. ஆனால், படையின் முன்வரிசையிலிருந்து மாறி மாறி ஓசை எழுப்புவதைப் போன்ற உணர்வு தொடர்ந்து இருந்தது. அவனால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. தேக்கன் வாளை ஏந்திப்பிடித்தான். விலா எலும்பு குத்தி உள்ளிறங்குவதுபோல வலியெடுத்தது. ஆனாலும் நிலைமையைச் சமாளித்தாக வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் கருங்கைவாணனைக் கொன்றழிக்க வேண்டும் என்ற முடிவோடு மீண்டும் முன்னகர்ந்தான். 

இருவரும் சுழற்கட்டுக்கட்டி கேடயத்தை முன்னகர்த்தியபடி வட்டக்களத்தில் கால்களை நகர்த்தினர். நேற்றைய போரில் கிழவன் வீசிய வாளை சூலக்கையன் தடுத்திருக்காவிட்டால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று நினைத்த கணத்தில், அவனுக்கு வெறி உச்சத்தில் ஏறியது. இன்றோடு இவனைக் கொன்றழிக்க வேண்டும் என்று வாளின் கைப்பிடி நொறுங்குவதுபோல இறுகப்பிடித்தான். கால்கள் தாவி முன்செல்ல ஆயத்தமானபோதுதான், முச்சங்கின் பேரோசை இடைவிடாது எதிரொலித்தது.

ஒரு கணம் நடுங்கி நின்றான். `அப்படியென்றால், அப்போதிருந்து சங்கோசை கேட்டுக்கொண்டே இருந்ததா? நிலைமை கைமீறியதால்தான் முச்சங்கை விடாது ஊதவேண்டிய நிலை வந்துள்ளது. கிழவன் சொன்னது உண்மைதானா?’ எனத் திணறி நின்றான் கருங்கைவாணன். தேக்கன் வலிமையோடு இருந்திருந்தால் இந்தக் கணத்தில் கருங்கைவாணனை வெட்டிச்சரித்திருப்பான். வாளை உயர்த்தியபடி செயலற்று நின்ற கருங்கைவாணனை நோக்கிப் பாய்ந்து வாள் வீச முடியாத நிலையில் தேக்கன் இருந்ததால், அவன் தப்பித்துப்போய் குதிரையில் ஏறினான்.

கண்பார்வையின் எல்லையில் மூஞ்சல் கூடாரத்தின் மேல்முனைகள் தெரியத் தொடங்கியபோது பறம்புவீரர்கள் உச்ச அளவுத் தாக்குதலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். முடியனின் மனதுக்குள் பற்றியெறிந்த தீ சுழற்காற்றைப்போல வேகம்கொண்டது. எதிரிகளின் படைவீரர்களால் மறித்து நின்று போரிட முடியவில்லை. இந்நிலையில்தான் பொதியவெற்பனும் உதியஞ்சேரலும் தங்களின் வலிமைமிகுந்த படையோடு வந்துசேர்ந்தனர்.

உடல் முழுவதும் கவசம் அணிந்த சிறப்புப்படை வீரர்கள் எதிரிகளின் தாக்குதலை வலிமையோடு சந்தித்தனர். மூஞ்சலைக் கண்கொண்டு பார்த்த கணத்தில், பறம்புவீரர்களின் தாக்குதல் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. வேந்தர்களின் சிறப்புப்படைப் பிரிவு அவர்களின் வேகத்தை நிறுத்த, பேராற்றலை வெளிப்படுத்தியது.

கைகள் மட்டுமல்ல, முழு உடலும் நடுங்கியது. மணலின் மீது நீண்டுபடர்ந்தது நாழிகைக் கோலின் நிழல். அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த போது திசைவேழரின் கண்களில் நீர் பெருகியது; மனம் துடித்தது. பதற்றத்தில் அவரின் உடல் முழுவதும் ஆடத் தொடங்கியது. எதையும்வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது என நினைத்தார். ஆனால், அவரது வயது அனைத்தையும் வெளிக்காட்டியது. கைகளை மெள்ள மேலே உயர்த்தினார். தட்டியங்காடெங்கும் முரசின் ஓசை மேலெழுந்தது. மூன்றாம் நாள் போர் முடிவுக்கு வந்தது.

அதிர்ந்து நின்றான் முடியன். முரசின் ஓசையை அவனால் நம்பவே முடிய வில்லை. இன்னும் சிறுபொழுது இருந்தால்கூட நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். பறம்பின் குதிரைப்படை வீரர்கள் அனைவரும் அளவுகடந்த ஆவேசத்தோடு போரிட்டனர். `இலக்கை இவ்வளவு நெருங்கியும் பயனின்றிப் போய்விட்டதே!’ என வேதனைப்பட்டான் இரவாதன். முடியனோ, முதற்கணத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறுகணத்தில் சரிசெய்துகொண்டான். `மூஞ்சலைக் கண்கொண்டு பார்த்துவிட்டோம். இனி, பறம்பின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது!’ எனத் தோன்றியது.

போர்க்களத்தை விட்டு வெகுதொலைவுக்கு அப்பால் போயிருந்தனர் மையூர்கிழாரும் வேட்டூர்பழையனும். ஒருவரை ஒருவர் வீழ்த்தியே தீருவது என்ற உறுதியோடு விரைந்துகொண்டிருந்தனர். காரமலைக் குன்றுகளின் அடிவாரத்தில் முன்சென்ற மையூர்கிழாரின் தேர், பார்வையிலிருந்து சட்டென மறைந்தது. `எந்தப் பக்கம் போனான்?’ என நினைத்தபடி சற்றே திரும்பினார் வேட்டூர்பழையன். எதிரில் இரு தளபதிகளான நகரிவீரனும் சூலக்கையனும் இருநூறு குதிரைவீரர்கள் சூழ வந்து நின்றனர்.

பழையன் விரைந்து வில்லுயர்த்திய போது, தளபதிகள் இருவரும் அம்பை நாணிற்பூட்டி இழுத்தனர். வெகு தொலைவுக்கு அப்பால் மெல்லியதாகக் கேட்டது முரசின் ஓசை.

பழையன் நாண் இழுத்த அம்பைக் கீழிறக்கி மண் நோக்கி விடுவித்தான். விடுபட்ட அம்பு மண்ணைக் குத்தி நின்றது. அதைப் பார்த்தபடி நிமிர்ந்து எதிரியைப் பார்த்தான். ஆனால், அவர்கள் இருவரும் தத்தம் வில்களைத் தாழ்த்தவில்லை.
நகரிவீரன் சொன்னான், ``போரின் விதிகள் போர்க்களத்துக்கு மட்டும்தான். நாமோ களம் நீங்கி நெடுநேரமாகிவிட்டது” - சொல்லும்போதே விடுபட்டுச் சீறின அம்புகள்.

சட்டெனத் தடுப்புக்கேடயத்தைத் தூக்கும் முன்பு, எண்ணற்ற அம்புகள் வந்து எகிறின. நெஞ்சில் தைத்த அம்புகள் எல்லாம் மெய்க்கவசத்தில் குத்தி முறிந்தன. ஆனால், வலது தோளிலும் இடது காலிலும் குத்திய இரு அம்புகள் குருதியைப் பீய்ச்சின.

கண்ணிமைக்கும் நேரத்தில் அம்புகளால் தாக்கப்பட்டு வலவன் மண்ணில் சரிந்தான். உருவிய வாளோடு தேரிலிருந்து குதித்து இறங்கிய பழையன், ஓடி மரங்களுக்குள் நுழைந்தான்.

தேரையும் குதிரையையும் விட்டு இறங்கிய வீரர்கள், அவனை விரட்டியபடி மலை ஏறினர். அப்போது ஓசை எழுப்பியபடி இன்னொரு புறத்திலிருந்து வந்தார் மையூர்கிழார். ``இனி அவனைத் தொடர முயலாதீர்கள். அது ஆபத்தில் முடிந்துவிடும்.”
சூலக்கையன் கத்திச் சொன்னான், ``கைகால்களில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளான். அவனால், அதிக தொலைவு செல்ல முடியாது. ஆயுதத்தையும் கைக்கொள்ள முடியாது. எனவே, அவனை எளிதில் கொன்றழித்துவிடலாம்” என்று விரட்டிக்கொண்டு மலையேறினர்.

இங்கும் அங்குமாக வேட்டூர் பழையனது உருவம் மறைந்து மேலேறிக்கொண்டிருந்தது. வீரர்கள் சுற்றிவளைத்துக் குன்றின்மேல் ஏறினர். பொழுது மறைந்துகொண்டிருந்தது. ``அதிக தொலைவு செல்ல முடியாது விரட்டிப்பிடியுங்கள்” என்று கத்திக்கொண்டே முன்னேறினர் தளபதிகள் இருவரும்.

சிறுகுன்றின் உச்சிக்குச் சென்று மறுபுறம் இறங்கத் தொடங்கினர். வானத்தில் கருமையேறியது. தொலைவிலிருந்து வீரன் ஒருவன், ``அதோ, அங்கே போகிறான்” எனச் சத்தமிட்டான்.

எல்லோரும் அந்த இடம் நோக்கி ஓடினர். வேட்டூர்பழையன், தனித்திருந்த மரம் ஒன்றை நோக்கித் தடுமாறித் தடுமாறி நடந்தார். தளபதிகளும் வீரர்களும் அவரை நோக்கி ஓடினர்.

மரத்தின் அடிவாரத்துக்கு வந்த பழையன், மரத்தோடு சாய்ந்து நின்றார். ஓடிவந்த தளபதிகள் உருவிய வாளோடு அவன் அருகே வந்தனர். வீரர்கள் அனைவரும் மரத்தைச் சூழ்ந்து நெருங்கினர்.

நகரிவீரன் ஏந்திய வாளோடு பழையனை நெருங்கியபடி சொன்னான், ``பறம்புத் தளபதி கோழைபோல் ஓடி ஒளிந்தான் என்று உன்னைப் பற்றி மக்கள் கூறுவர்.”

அதிக அளவு குருதி கொட்டிவிட்டதால் மிகவும் களைத்துப்போன வேட்டூர்பழையன் சொன்னான், ``இல்லை, இரண்டு தளபதிகளையும் நூற்றுக்கணக்கான வீரர்களையும் கொன்றுவிட்டே செத்தான் பழையன் என்றுதான் மக்கள் பேசுவர்.”

வாய்விட்டுச் சிரித்தான் நகரிவீரன், ``நீ, எங்கள் அனைவரையும் கொல்லப்போகிறாயா?” என்று சொன்னபோது அருகில் இருந்தவன் ஏதோ மாற்றத்தை உணரத் தொடங்கினான். மூச்சுக்குழல் எரிச்சலடையத் தொடங்கியபோது, மரத்தில் சாய்ந்திருந்த பழையன் சொன்னான், ``இனி நீங்கள் யாரும் உயிர் பிழைக்க முடியாது. உங்களின் மூச்சுக்காற்றுக்குள் சொனைகள் இறங்கிவிட்டன” என்று கூறியவர், மரத்தோடு சரிந்தபடியே சொன்னார் ``இது ஆட்கொல்லிமரம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீரயுக நாயகன் வேள்பாரி - 97

 

 

மூன்றாம் நாள் போர் முடிவுறுவதைக் குறிக்கும் முரசின் ஓசை, எங்கும் கேட்டது. ஓசை கேட்டதும் காயம்பட்டவர்களைத் தூக்கிச் செல்லும் பணியாளர்கள் களம் நோக்கி ஓடினர். வீழ்ந்து கிடப்பவர்களை எடுத்துச்செல்ல கயிற்றுத்தொட்டிலைத் தூக்கியபடி இரலிமேட்டிலிருந்து பெருங்கூட்டம் தட்டியங்காட்டுக்குள் இறங்கியபோது, திசைவேழரின் மாணவன் ஒருவன் இரலிமேடு நோக்கி மேலேறிக்கொண்டிருந்தான். 

p83b_1534847883.jpg

நேற்றைக்கு இதே பொழுதில் கபிலரை அழைக்க வந்த மாணவனே இன்றும் வந்தான். வாரிக்கையனும் கபிலரும் ஒரே இடத்தில்தான் இருந்தனர். போர் முடிவுற்ற நேரத்தின் பதற்றம் எல்லோருக்குள்ளிருந்தும் மேலேறிவந்தது. அப்போது அங்கு வந்த அவன், கபிலரை வணங்கிச் சொன்னான், ``ஆசான் உங்களை அழைத்து வரச் சொன்னார்.”

கபிலர் அதிர்ச்சியோடு வாரிக்கையனைப் பார்த்தார். `நேற்று ஓங்கலத்தால் சிக்கல் ஏற்பட்டதைப்போல, இன்றும் ஏதோ பிரச்னையில் மாட்டிவிட்டீர்களா?’ என்று கேட்பதுபோல் இருந்தது அவரது பார்வை. அதைப் புரிந்துகொண்டு வாரிக்கையன் சொன்னார், ``அப்படி எதுவும் நாம் செய்யவில்லை.”

``பிறகு ஏன் அழைத்து வரச் சொல்லியுள்ளார்?”

``என்னிடம் கேட்டால், எனக்கென்ன தெரியும்?” என்று கேட்டவர் சற்று இடைவெளி விட்டு, ``நீங்கள்தான் முன்கூட்டியே சொல்லிவிட்டீர்களே” என்றார்.

``நான் என்ன சொன்னேன்?”

``திசைவேழர் யார் என நான் கேட்டதற்கு, `அறத்தின் அடையாளம்’ என்றீர்கள். பாரியிடம் பேசியபோது `போர்க்களத்தில் அறம் நெடுநேரம் உயிர்வாழாது’ என்றீர்கள்.”

வாரிக்கையனின் ஒப்பீட்டால் நடுங்கிப்போனார் கபிலர். ``ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?” எனப் பதறிக் கேட்டார்.

வாரிக்கையன் சொன்னார், ``நாள்கள் செல்லச் செல்ல, போர்க்களத்தில் நிற்கும் மனிதன் தனது வலிமையை இழந்துவிடுவான். முடிவுறாத வேட்டையை எந்த உயிரினமும் நடத்தாது. மனிதன்தான் `போர்’ என்ற பெயரில் அதை நடத்திக்கொண்டிருக்கிறான். இரக்கமற்ற அந்தக் காட்சிகளைப் பொழுதெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதைப்போலக் கொடுமையானது வேறில்லை. கண்களைத் திறப்பதைவிடக் கடினமானது மூடுவது. மனத்துக்குள் விழுந்துகிடக்கும் கொடூரங்களை எதைக்கொண்டு அப்புறப்படுத்த முடியும்? புறமும் அகமும் வெட்டுண்ட மனிதச்சதைகள் துடித்துக்கொண்டிருக்க, எதிலிருந்து தப்பித்து எங்கே ஓடுவார் அவர்? யாரிடமாவது பேசினால் இந்தத் துயரிலிருந்து மீண்டெழ முடியுமா என்ற தவிப்பு அவரை அலைக்கழிக்கும். அந்தத் தவிப்பிலிருந்து மீள்வதற்கு உங்களை அழைத்திருப்பார்.” 

p83a_1534847969.jpg

வாரிக்கையனின் விளக்கம், கபிலரைப் பொறிகலங்கச்செய்தது. போர்க்களம் நோக்கிப் பெருங்கலக்கத்தோடு நடக்கத் தொடங்கினார். அவலத்தின் துயரத்தை நெருங்க, கால்கள் அஞ்சின. காட்சிகளை, கண்கொண்டு பார்க்க முடியவில்லை. போர் முடிவுற்ற கணத்தில் களம் நோக்கிப் பயணிப்பதைப்போல் கொடுந்துன்பம் வேறில்லை. ஆயுதங்கள் துளைத்துக்கிடக்கும் மனிதர்களின் ஓலம், எங்கும் கேட்டது. உடல்கள் கிடத்தப்பட்ட கயிற்றுத்தொட்டில்களை சாரிசாரியாகத் தூக்கிச்சென்றனர். எல்லாவற்றையும் கடந்து நாழிகைவட்டில் இருக்கும் பரண் நோக்கி நடந்தார் கபிலர்.p83c_1534847993.jpg

அவரது வருகைக்காகக் காத்திருந்தார் திசைவேழர். திசைவேழரின் முகத்தில் இருளேறியிருந்தது. என்ன நடந்திருக்கும் என, கபிலரால் சிந்திக்க முடியவில்லை. வணங்கியபடி அவர் அருகில் அமர்ந்தார்.

`நிலைமான் கோல்சொல்லியின் உயிர் எனக் கருதப்படும் நாழிகைவட்டிலையும் நாழிகைக்கோலினையும் என்னிடமிருந்து பிடுங்கியெறிந்தது காற்று’ என்றுதான் சொல்ல நினைத்தார் திசைவேழர். ஆனால், அவரை அறியாமலேயே, முடத்திருக்கண்ணைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார்.

``தவறிழைத்தவன் தண்டனையின் வழியே காட்டிக்கொடுத்த நிலத்தை நாம் தேர்வுசெய்திருக்கக் கூடாதோ?” எனக் கேட்டார்.

இப்போது ஏன் இதைக் கேட்கிறார் எனக் கபிலருக்குப் புரியவில்லை. ``தவறேதும் நடந்ததா?” எனக் கேட்டார் கபிலர்.

``எல்லாம் தவறுதலாக நடக்கின்றன” என்றார் திசைவேழர்.

எதைச் சொல்கிறார் என்பது புரியாமல் விழித்தார் கபிலர்.

``நிலைமான் கோல்சொல்லியின் உயிர்நாடி நாழிகைவட்டிலும் கோலும்தானே. அவை இரண்டையும் இன்று என்னிடமிருந்து காற்று பறித்துக்கொண்டது” என்று சொன்னவர், ``இன்று எதைக்கொண்டு பொழுதளந்தேன் தெரியுமா?”

p83d_1534848028.jpg

கலங்கிய அவருடைய கண்களையே கூர்ந்துபார்த்தார் கபிலர்.

``கொல்லப்பட்ட போர்வீரனின் தசைகள் ஒட்டியிருந்த ஒரு கேடயத்தில், குருதியால் ஊறிப்போன மண் எடுத்து, முறிந்த அம்பை நட்டுப் பொழுதளந்தேன்.”

அவரது சொல்லிலிருந்த நடுக்கம் கபிலரின் மீதும் பரவியது.

``போர்க்களத்தில் மரணத்தின் கருவிகொண்டு பொழுதளந்துள்ளேன். இனி இந்த நிலம் எண்ணிப்பார்க்க முடியாத மரணத்தைக் காணும். கவசங்கள் வீரர்களைக் காத்து நிற்காது. முறிந்த அம்புகளால் நீளும் பொழுது வீரர்களின் குருதியைக் குடித்துக் கொண்டேயிருக்கும். மரணத்தின் அடையாளமே பொழுதென ஆகிவிட்டது. இனி போர்க்களத்தின் பொழுதை மரணமே ஆட்சிசெய்யும்.”

திசைவேழரின் சொற்கள் கபிலரை உறையச்செய்தன.p83e_1534848052.jpg

``இந்த நிலத்தைத் தேர்வுசெய்யும்போது நான் சொன்னது நினைவிருக்கிறதா உங்களுக்கு? `நாம் இழைத்த தவறுகளுக்கும் தண்டனை இந்தத் தட்டியங்காடுதான். நமது தலை சாயும் வரையிலும் இந்த நிலம் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும்’ என்றேனே!”

`ஆம்’ எனத் தலையசைத்தார் கபிலர்.

``துரத்திச் செல்லும் இடைவெளியைக் கூட இந்த நிலம் வழங்காது என நினைக்கிறேன். இந்த நிலத்திலேயே நானும் சாய்ந்துவிடுவேன். முடத் திருக்கண்ணின் உயிர் பிரியும்போது அவன் இழைத்த தவற்றுக்கான தண்டனை என நினைத்தேன். எனது உயிர் பிரியும்போதும் அதையே நினைப்பேன்” என்றவர், நின்றுகொண்டிருக்கும் பரண்கம்பங்களைக் கைகளால் தொட்டபடி, ``எனது வாழ்வின் பொழுதை இந்தப் பரண் அளந்து கொண்டிருக்கிறது கபிலரே. எந்தக் கணமும் அளவை முடியலாம்.”

கலங்கிப்போயிருக்கும் திசைவேழரை எந்தச் சொல்கொண்டு மீட்பது எனத் தெரியாமல் திணறிய கபிலர் சொன்னார், ``நீங்கள் இன்னும் நெடுநாள் வாழவேண்டியவர். மரணம் பற்றி அதற்குள் ஏன் பேசுகிறீர்கள்?”

``வாழ்வை எளிய கணக்குகளால் அளவிட முடிவதில்லை புலவரே. பொங்கும் புதுப்புனலைப் பார்த்து மகிழவே வைகையின் கரையில் குடில் அமைத்துத் தங்கினேன். ஆனால் இப்போதோ, வீழ்ந்துகிடக்கும் மனித உடலுக்குள்ளிருந்து பல்லாயிரம் கறையான்கள் பொங்கி மேலெழும் காட்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் என் கால்களாலேயே இங்கு இழுத்து வரப்பட்டேன். எத்தனையோ முறை இதைத் தவிர்க்க நினைத்தேன். ஆனால், எனது சொல்லின் வழியே நான் வரவழைக்கப்பட்டேன். நான் நன்கு அறிவேன், வேந்தர்கள் அறவழிப்பட்டு வாழ விரும்புவார்கள். ஆனால், அறம் எனப்படுவது விருப்பத்தின்பாற்பட்ட செயலன்று; அது இயல்பின்பாற்பட்டது; அன்பின்பாற்பட்டது. எனவேதான் வேந்தர்களால் அறவழியில் வாழ முடிவதில்லை. அதிகாரமும் அறமும் இரண்டு எல்லைகள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறம் பேணவே முடியாது. அப்படியிருக்க, என்னை அழைத்து ‘அறம் பிறழாமல் இந்தப் போரை நடத்துங்கள்’ எனச் சொல்கிறார்கள் என்றால், நான் ஏதோ ஒருவகையில் அவர்களுக் கானவனாக இருந்திருக்கிறேன். அதிகாரத்தின் மறுப்பையோ நிராகரிப்பையோ நான் பெறவில்லை. நான் பேணிய அறம் அவர்களின் அதிகாரத்தை உறுத்தாமல் இசைவாய் இருந்திருக்கிறது. அதற்கான தண்டனைதான் இது.”

p83f_1534848076.jpgகபிலருக்கு என்ன மறுமொழி சொல்வதெனத் தெரியவில்லை. ஆனால், துயரத்தில் மூழ்கும் அவரது மனத்தை மீண்டெழச்செய்ய வேண்டும் என்று மட்டும் தோன்றியது, ``இந்தக் கொடும் தண்டனையை அறத்தின் பொருட்டே நாம் ஏற்றிருக்கிறோம். ஒருவகையில் இதுவும் நமது கடமைதானே!” என்றார்.

``வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும்தாம் போரை விரும்புகிறார்கள். வாழ நினைப்பவர்கள் வேறு வழியின்றி அந்தப் போரை எதிர்கொள்கின்றனர். நான் முதல்தரப்புக்காகப் பரணேறியிருக்கிறேன். எனவே, எனது உள்ளொளி அணைந்து கொண்டிருக்கிறது. நீங்களோ இரண்டாம் தரப்புக்காக நிற்கிறீர். எனவேதான் அணையவிடாமல் தடுக்கும் துணிவை இழக்காமல் இருக்கிறீர்” என்று சொன்னவரின் கண்களில் நீர் பெருகியது.

சற்றே தலை கவிழ்ந்த திசைவேழர் குரல் தாழ்த்திச் சொன்னார், ``என்னை ஆற்றுப்படுத்த முயலாதீர்கள். நேற்றிரவுதான் நான் நீலனைப் பற்றி அறிந்தேன். எவ்வளவு பெரிய சூழ்ச்சியில் நான் சிக்கவைக்கப்பட்டுள்ளேன். நீங்களாவது எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?”

சற்றே தயங்கிய குரலில், ``தாங்கள் நிலைமான் கோல்சொல்லியாக இருக்க ஒப்புக்கொண்ட பிறகு, பேரரசர்கள் வீற்றிருக்கும் அவையில்தானே நான் உங்களைச் சந்தித்தேன். எனவே, இதைப் பற்றிப் பேசும் சூழல் இல்லாமல்போனது” என்றார் கபிலர்.

``இந்தப் போருக்குப் பின்னணியில் இப்படியொரு செயல் நடந்திருக்கிறது எனத் தெரிந்திருந்தால், நான் நிலைமானாக இருக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன் என்பதை நீங்கள் நம்பத் தவறிவிட்டீர்கள். எனவே, இதைப் பற்றிப் பேச வேண்டும் என உங்களுக்குத் தோன்றவில்லை.”

திசைவேழரின் சொற்களைக் கபிலரால் எதிர்கொள்ள முடியவில்லை. நடுங்கிய தன் கைகளைக் குவித்தபடி எதையோ சொல்லவந்தார் கபிலர். p83g_1534848102.jpg

சட்டென அவரின் கைகளைப் பற்றிய திசைவேழர் சொன்னார், ``என் தோழனாய் என்னை நீங்கள் கவனப்படுத்தத் தவறிவிட்டீர்கள். அதை எனது மனம் ஏற்றுக்கொள்ளாது. ஆனால், நீங்கள் பாரியின் தரப்புக்காக நிற்கிறீர். எனவே, உம் கைகள் நடுங்கக் கூடாது.”

பேரரசர்கள் கூடியுள்ள கூடாரத்தில் பேரமைதி நீடித்தது. மையூர்கிழார் தனது வாக்குமூலத்தைச் சொல்லி முடித்துவிட்டு வெளியேறினார். ``மலைமீது ஏறிச் செல்ல வேண்டாம் என்று நான் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை” என்பதுதான் அவர் வலியுறுத்திச் சொன்னது.

ஆள்கொல்லி மரத்தின் அருகில் போகாமல் மிகத் தள்ளியிருந்த ஓரிரு வீரர்கள் தப்பிவந்து நடந்ததை விளக்கியுள்ளனர். வேந்தர்படையின் இரண்டு தளபதிகள் இன்றைய போரில் இறந்துள்ளனர். அதேநேரம் பறம்பின் தரப்புத் தளபதிகளான கூழையனும் வேட்டூர் பழையனும் கொல்லப் பட்டுள்ளனர்.

சம அளவில்தான் மரணங்கள் நிகழ்ந்துள்ளன எனத் திருப்திப்பட்டுக் கொள்ளும் நிலையில் இங்கு யாரும் இல்லை. ஏனெனில், இன்றைய போரில் பறம்பின் தாக்குதல் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. இதுவரை வாள் ஏந்தாமல் நின்றிருந்த அரசர்கள் இன்று தாக்குதல் முனைக்குப் போகவேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். மையூர்கிழார் அவை நீங்கி நீண்ட நேரமாயினும் யாரும் பேச்சைத் தொடங்கவில்லை.

முதன்முறையாக, போர்க்களம் பற்றிய அச்சம் அவையில் அமைதியின் வடிவில் பரவியிருந்தது. இரு தளபதிகளின் மரணம்கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, பறம்பின் போர்முறைகள் விடை அறிய முடியாத கேள்விகளாக இருந்தன.

``காற்றின் வீச்சும் போக்கும் அம்பை இழுத்துச் செல்லும் அல்லது மறித்துச் சாய்க்கும்; வலுவிழக்கச் செய்யும். ஆனால், காற்றின் துணைகொண்டு எப்படி அம்பெய்ய முடியும்? காற்றின் வருகையை எப்படிக் கணித்தனர்? அது வருவதற்கு முன் எப்படி அம்பை விடுத்தனர்? கண்பார்வைக்கு அப்பால் அம்புகள் பறவைகளைப்போலப் பாய்ந்து செல்கின்றன. மனிதர்களால் இதுபோன்ற முயற்சியைச் செய்ய முடியுமா? நாம் மனிதர்களோடுதான் போரிட்டுக் கொண்டிருக்கிறோமா?” கேள்விகள் அடுக்கடுக்காய் மேலெழுந்தன. ஆனால், யாரிடமும் விடையில்லை.

p83i_1534848139.jpg

உதியஞ்சேரல் சொன்னான், ``வீரர்களைத் தைத்த அம்புகளில் ஒன்றைக்கூட எளிதில் பிடுங்க முடியவில்லை. காற்றின் வேகத்தோடு உள்ளேறிய அம்புகள் சதைகளையும் நரம்புகளையும் பிய்த்துக்கொண்டுதான் வருகின்றன. இதுவரை யாரும் கேள்விப் பட்டிராத அம்புகளாக இருக்கின்றன. போர்முனைக்குத் தொடர்பே இல்லாமல் மூன்றாம் நிலையில் நின்றிருந்த வீரர்களில் எண்ணற்றோரை நாம் இழந்துள்ளோம்.”

``நம் தலைமைத் தளபதி எதிரிப்படையின் கடைசிப் பகுதியில் நின்றிருக்கும்போது, அவர்கள் நமது படையின் இறுதி அணியை வீழ்த்தியுள்ளனர். யாராலும் நெருங்கவே முடியாத அளவுக்கு நிறுத்தப்பட்டிருந்த படையணிகளைப் பிளந்துகொண்டு எதிரிகள் மூஞ்சல் வரை வந்துள்ளனர். முப்பெரும் பேரரசுகளின் தாக்குதல் திட்டங்களை ஒரு சிறுகுடி மன்னனின் படை அசைத்துப்பார்க்கிறது. இது எப்படி நிகழ்கிறது?” எனக் கேட்டார் சோழவேழன்.

கேள்வி, நேரடியாகக் கருங்கைவாணனை நோக்கியதாக இருந்தது. நேற்று அவன் வகுத்த திட்டப்படி பறம்பின் குடி முடியனும் குடி ஆசானும் கொல்லப்பட்டிருக்க வேண்டும். பறம்புப்படை இன்று பெரும்நெருக்கடியைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது, இதற்கு நேரெதிராக இருக்கிறது. போர்க்களத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது தலைமைத் தளபதியான கருங்கைவாணனே!

அவையில் நடந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த குலசேகர பாண்டியன் இதுவரை கருத்தேதும் சொல்லவில்லை. போர்க்களத்தில் நிகழும் உரையாடலில் சொற்களின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர், இன்று எந்த ஒரு சொல்லையும் உச்சரிக்காமல் அமைதியாக இருந்தார். ஆனால், முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குக் கருங்கைவாணன் மறுமொழி சொல்லியே ஆகவேண்டிய நிலை இருந்தது.

அவன் பேரரசர்களை வணங்கிவிட்டுச் சொன்னான், ``நான் போர் தொடங்கும் முன்னரே தெரிவித்தேன். இவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் அல்லர்; நெருப்பைப் பிளந்து வெளிவரக்கூடியவர்கள். பாறைகளை உருட்டியும் மரங்களைப் பிடுங்கியெறிந்தும் தாக்கக்கூடியவர்கள். எந்தவொரு விலங்குடனும் மனிதன் விதிகளை உருவாக்கிப் போரிட முடியாது. இந்த விலங்குகளை அழிக்க வேண்டுமென்றால், நாமாக உருவாக்கிக்கொண்ட விதிகளைத் தூக்கியெறிய வேண்டும்.”p83h_1534848189.jpg

கருங்கைவாணனின் சீற்றத்தை மறித்து நிறுத்தினார் சோழவேழன். ``மூன்று பேரரசுகள் ஒன்றிணைந்து ஒரு சிறுகுடி மன்னனை வீழ்த்தும் போரில், மரபுகளையும் விதிகளையும் விட்டொழிக்கச் சொல்வது இழிவென்று தோன்றவில்லையா?”

``நான் எதிரிகளை வீழ்த்த முடியாதவனல்ல. நம்முடைய எதிரிகள் யாரென்றே தெரியாமல் இந்தப் போர்க்களத்தின் விதிகள் வகுக்கப்பட்டுவிட்டன. இத்தனை ஆயிரம் குதிரைகள் போர்க்கொட்டிலில் செயலற்றுக் கிடப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? இவ்வளவு தொலைவு பறக்கும் அம்புகளை மனிதனால் எய்துவிட முடியும் என்றால், யார் நம்புவார்கள்? நாம் நம்மைப்போன்ற மனிதர்களிடம் போரிடவில்லை. விலங்குக் குணமேறிய காட்டுமனிதர்கள். தீயகுணமும் அதீத ஆற்றலும்கொண்ட கூட்டம் அது. அவர்களால் நமது அறிவுப்புலனுக்கு எட்டாத பலவற்றைச் செய்ய முடியும். எனவேதான் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன், இந்தப் போரை வழக்கப்படி நடத்தக் கூடாது. ஒரே நாளில் முழுமுற்றாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.”

``ஒரே நாளிலா... எப்படி?” எனக் கேட்டார் சோழவேழன்.

``நம்மிடம் இருக்கும் அனைத்துவிதமான ஆயுதங்களையும் நஞ்சேற்றி எதிரிகளின் மொத்தப் படையையும் தாக்க வேண்டும். சிறிய வாய்ப்புகூடத் தரக் கூடாது. தாக்கப்பட்ட ஒருவன்கூட குற்றுயிராகவேனும் போர்க்களம் நீங்கி இரலிமேட்டில் கால்பதிக்கக் கூடாது. ஒரு பகலில் முழுமுற்றாகப் பறம்புப்படை அழித்தொழிக்கப்பட வேண்டும். மிச்சம் வைக்காமல் அழித்தால் மட்டுமே நாம் தட்டியங்காட்டை விட்டு வெற்றியோடு வெளியேற முடியும்.”

கருங்கைவாணன் முடிக்கும் முன் சோழவேழன் சொன்னார், ``எதிரி குறித்து, தலைமைத் தளபதிக்கு இவ்வளவு பதற்றமா?”
 
``சோழப்பேரரசருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதற்றம், அவர்கள் வெல்ல முடியாதவர்கள் என்பதால் அல்ல; நாம் எண்ணிலடங்காத வீரர்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான்.”

இவ்வளவு நேரமும் அமைதிகாத்த குலசேகரபாண்டியன் இப்போது சொன்னார், ``நீ விதிகளில் நம்பிக்கையின்றி இருப்பதால்தான் எதிரிகளின் மீதான தாக்குதல் உத்தியை உன்னால் நம்பிக்கையோடு வகுக்க முடியவில்லை.”

அவை, அமைதியோடு அவரின் குரலைக் கேட்டது.

``அடுத்த கூடாரத்தில் நீலன் இருக்கிறான். அவனைப் போய்ப் பார். விதிகள் வகுக்கப்பட்ட இந்தப் போரில் பாரி வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையை அவனது ஒவ்வோர் அசைவிலும் உன்னால் உணர முடியும். எதிரிகளிடம் சிறைப்பட்ட ஒருவனுக்கு, அவனது படையின் மீதும் தாக்குதலின் மீதும் முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், சிறைப்பிடித்து வந்த உனக்கு அந்த நம்பிக்கை இல்லை.”

வாழ்வில் முதன்முறையாக, போர்க்களக் கூடாரத்தில் அவமானப்பட்டு நின்றான் கருங்கைவாணன்.

சினமேறிய அவனுடைய கண்கள் வெளித்தெரியாமல் இருக்க, தலை கவிழ்ந்தான்.

அவனுக்கான சொற்களுக்கு இடம் தராமல் குலசேகரபாண்டியன் சொல்லி முடித்தார். ``இரவு உணவை அருந்திய பிறகு கூடுவோம். நாளைய தாக்குதலுக்கான புதிய திட்டத்தோடு வா.”

கருங்கைவாணன் வெளியேறிய பிறகு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மட்டும் கூடாரத்தில் இருந்தனர். வெளிப்படையாக எல்லாவற்றையும் பேச முடியாத நிலை மூவேந்தருக்கும் இருந்தது.

`தந்தை சோழவேழன், கருங்கைவாணனைக் கடுஞ்சொற்கள்கொண்டு பேசியது சரியன்று’ என, செங்கனச்சோழனுக்குத் தோன்றியது. ஆனால், பொதியவெற்பனின் எண்ணம் வேறு மாதிரி இருந்தது. தந்தை குலசேகரபாண்டியன் இப்படிப் பேசியதுதான் சரி. தளபதியை அவமானப்படுத்தும் சொற்களை உரிய முறையில் பயன்படுத்தவேண்டியது போர்க்களச் செயல்பாட்டில் முக்கியமான ஒன்று.

தளபதியானவன் வேட்டை விலங்கின் சீற்றம் குறையாமல் போரை வழிநடத்திச் செல்ல வேண்டும். எதிரிகளை வீழ்த்த முடியாததற்கு அவனிடம் தெளிவான காரணங்கள் இருக்கக் கூடாது. போரின் போக்கை மீண்டும் மீண்டும் தனதாக்கிக்கொள்ளும் வெறி மட்டுமே அவனுக்கு வேண்டும். ஆனால் கருங்கைவாணனோ, எதிரிகளின் வலிமைக்கான காரணங்களைத் தன்னுடைய இரண்டு தோள்களிலும் சுமந்துகொண்டு திரிகிறான். அவற்றை வெட்டி வீழ்த்தவேண்டியதே இப்போதைய தேவை. குலசேகர பாண்டியன் அதைத்தான் செய்துள்ளார் எனப் பொதியவெற்பன் நினைத்தான்.

p83j_1534848229.jpgஅவை, பேச்சின்றி நீடித்தது. அமைதியை முடிவுக்குக் கொண்டுவந்தது சோழவேழனின் குரல். ``போரில்லாத வழிமுறைகளைப் பற்றியும் நாம் தீவிரமாகச் சிந்திக்கவேண்டிய நேரம் இது.”

``உண்மைதான். ஆனால், மலைமக்களின் கனவுகள் மிகக் குறுகியவை. சமவெளி மனிதர்களைப்போல ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் அவர்கள் விலைபோய் விடுவதில்லை. குலச்சமூகத்தில் உடைப்பை ஏற்படுத்துவதும் எளிதன்று” என்றான் பொதியவெற்பன்.

``பறம்பில் வேளிர்குலம் மட்டும் இல்லையே. பல குலங்கள் இருக்கின்றனவல்லவா? அவற்றை நமக்கான முறையில் நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது?” எனக் கேட்டார் சோழவேழன்.

``நிறைய குலங்கள் இருக்கின்றன. ஆனால், எல்லோரும் தங்களின் குடிகளோடு பறம்பில் வசிக்கின்றனர். எனவே, எளிதில் பாரிக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள்” என்று சொன்ன குலசேகரபாண்டியன் சற்று இடைவெளிக்குப் பிறகு சொன்னார், ``அதுபோன்ற செயல்களுக்கு நீண்டகாலம் தேவை. போர்க்களத்தில் தாக்குதல் உச்சம்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவற்றைப் பற்றிச் சிந்திப்பது நம்மை வலிமை குன்றச் செய்துவிடும். இப்போதைய தேவை எதிரியை உருக்குலைக்கச் செய்யும் தாக்குதல் உத்திதான். கருங்கைவாணன் என்ன திட்டத்தோடு வருகிறான் என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

அவரின் கருத்தை ஏற்று உணவு அருந்தக் கலைந்தனர்.

அணுக்கக்காவலர்களும் மெய்க்காப்பாளர்களும் சூழ, பேரரசர்கள் தத்தமது கூடாரம் நோக்கிப் போயினர். காக்குவீரர்கள் அணிவகுக்க உதியஞ்சேரல் அவனது கூடாரத்துக்குள் நுழைந்தான். மூஞ்சல் நோக்கிப் பாய்ந்துவந்த எதிரிகளின் தாக்குதல் வேகம் அவனது மனக்கண்ணை விட்டு எளிதில் அகலவில்லை. பறம்போடு அதிகமான போர்களை நடத்தியது சேரர்குடிதான். எனவே, அவனால் முன்னர் நடந்த போர்களின் தன்மைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. பறம்புவீரர்களின் தாக்குதல் இந்தப் போரில் பல மடங்கு வலிமைகொண்டுள்ளதாகத் தோன்றியது. மூவேந்தர்களின் கூட்டுப்படையின் எண்ணிக்கை யாரும் நினைத்துப்பார்க்க முடியாதது. ஆனால், அவற்றையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. போரின் மூன்றாம் நாளிலேயே அவர்கள் மூஞ்சலை நெருங்கிவிட்டார்கள். இனி அவர்களின் வேகம் மேலும் அதிகமாகும். நமது தரப்பில் வலிமையான படையைக்கொண்டுள்ளோம். ஆனால், நம்மிடம் சரியான திட்டங்கள் இல்லை என்ற எண்ணத்தோடு உணவு அருந்த அமர்ந்தான் உதியஞ்சேரல்.

அப்போது காவல்வீரன் உள்ளே வந்து வணங்கிச் சொன்னான், ``சோழப்பேரரசர் தங்களைக் காண வந்துள்ளார்.”

உதியஞ்சேரல் எழுந்து வாயில் நோக்கி வருவதற்குள் ஊன்றுகோலை நகர்த்தி உள்நுழைந்தான் செங்கனச்சோழன்.

இருவரும் உணவு அருந்தியபடியே பேசத் தொடங்கினர்.

பொதியவெற்பனைத் தனது கூடாரத்துக்கு உணவு அருந்த அழைத்து வரச் சொன்னார் குலசேகரபாண்டியன்.

தந்தையின் திடீர் அழைப்பு வியப்பை ஏற்படுத்தியது. ‘எதற்காக அழைத்திருப்பார்?’ என்ற சிந்தனை யுடனேயே கூடாரத்துக்குள் வந்தான் பொதிய வெற்பன்.

உணவு அருந்திக் கொண்டிருந்த குலசேகரபாண்டியன், எதிரில் வந்து நிற்கும் பொதிய வெற்பனிடம் கேட்டார், ``நான் கருங்கைவாணனைக் கடுஞ்சொற்களால் பேசியது ஏன் என உன்னால் புரிந்து கொள்ள முடிந்ததா?”

``புரிந்தது தந்தையே. தாக்குதல் உத்தியில் இன்னும் நமது ஆற்றல் முழுமையாக வெளிப்படவில்லை என்பதால்.”

பொதியவெற்பன் சொல்லி முடிக்கும் முன் குலசேகரபாண்டியன் கூறினார், ``இல்லை. அவன் இதுவரை சரியான உத்திகளைத்தான் வகுத்துள்ளான். ஆனால், அவற்றையெல்லாம் எதிரிகள் எளிதில் தகர்க்கிறார்கள்.”
தந்தையின் பேச்சு பொதிய வெற்பனுக்குச் சற்றே அதிர்ச்சியைக் கொடுத்தது.

``ஆனால், அதை நாம் அவையில் ஏற்றுக்கொண்டால் போரை வழிநடத்தும் நமது தலைமைத்திறன்மீது மற்ற இரு பேரரசுகளுக்கும் நம்பிக்கை பொய்க்கத் தொடங்கும். அதனால்தான் கருங்கைவாணன் பின்பற்றும் உத்தியைக் குறைசொல்லாமல் அவன் கொண்டிருக்கும் கருத்தின்மீது தாக்குதல் தொடுத்தேன்.”

பொதியவெற்பன் வாயடைத்து நின்றான்.

``மற்ற இரு பேரரசர்களுக்கும் பறம்பை வெல்ல வேண்டும் என்ற ஒற்றை நோக்கம்தான் இருக்கிறது. ஆனால், நமக்கு இருப்பதோ அந்த ஒற்றை நோக்கம் மட்டுமன்று.”

குலசேகரபாண்டியன் குரலின் வழியே போரின் ஆழம் வெளிப்படத் தொடங்கியது.

குலசேகரபாண்டியன் தொடர்ந்தார், ``மற்ற இரு பேரரசர்களும் முதன்முறையாக நமது தலைமையை ஏற்று வந்துள்ளனர். இந்த நிலையைப் பாதுகாக்க வேண்டும். அது, பறம்பை வெல்வதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. அதே நேரத்தில் பறம்பை வெற்றிகொள்ளும் உத்தியின் வழியேதான் நம்மீதான அவர்களின் நம்பிக்கையை இறுகக் கட்ட முடியும்.”

போரின் முழுப்பரிமாணமும் குலசேகரபாண்டியனின் வார்த்தையில் விரிந்தது.

போர்க்களம் உருவாக்கும் நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மையைத் தனது பேச்சு மற்றும் கண்ணோட்டத்தின் வழியே தலைகீழாக மாற்றவேண்டிய ஆற்றல் முக்கியமானது. உண்மையில் போர் தலைமையேற்பவர்களின் மனநிலையை வழிநடத்துவதில்தான் நிலைகொள்கிறது. குலசேகரபாண்டியன் தனித்து நடத்திக்கொண்டிருக்கும் பெரும்போரை விரிந்த கண்களின் வழியே பார்த்துக் கொண்டிருந்தான் பொதியவெற்பன்.

``போரின் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

செங்கனச்சோழனின் கேள்விக்கு உடனடியாக பதில்சொன்னான் உதியஞ்சேரல், ``நம்மால் நினைத்துப்பார்க்க முடியாதபடி போரின் போக்குகளை அவர்கள் உருவாக்குவார்கள். என் தந்தையின் காலம்தொட்டு எத்தனையோ தாக்குதல்களைப் பறம்பின்மீது நடத்தியிருக்கிறோம். ஆனால், அப்போதெல்லாம் இல்லாத பேராற்றல் இப்போது பறம்புவீரர்களிடம் வெளிப்படுவதைக் காண்கிறேன்.”

``காரணம்?”

``பாரி இறங்கி வந்து போரிட வேண்டும் என்பதற்காக நாம் கடைப்பிடித்த உத்தி தவறானது என நினைக்கிறேன். அளவுக்கு அதிகமாகச் சினம்கொள்ளும்படி அவர்களை நாம் சீண்டிவிட்டோம் எனத் தோன்றுகிறது.”

``அப்படியா நினைக்கிறீர்கள்?”

``ஆம். குகைக்குள் இருக்கும் விலங்கை வெளியேற்ற அதன் குட்டியைத் தூக்கிவரக் கூடாது. அது வெளியேற்றும் செயலன்று; வெறியேற்றும் செயல். நாம் அதைச் செய்துவிட்டோம்.”

``இதை எதிர்கொள்ள என்ன வழி?”

``கருங்கைவாணன் சொல்வதுபோல ஒரே நாளில் நஞ்சாயுதங்களைக்கொண்டு பெருந்தாக்குதல் நடத்துவதுதான் பயன்கொடுக்கும் என நினைக்கிறேன்.”

``வேறு வழியே இல்லையா?”

``எனக்குத் தெரிந்து வேறு வழியேதும் இல்லை. உங்கள் தந்தை கூறியதைப்போல போர் அல்லாத வழிமுறையைப் பற்றிப் பேச இது நேரமல்ல. குலசேகரபாண்டியன் கூறியதைப்போல எண்ணற்ற குலங்கள் பறம்பில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தங்கள் குடிகளுடன்தாம் இருக்கின்றனர். எனவே, அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பேதும் இல்லை.”

``இதைப் பற்றிப் பேசுவதற்காகத்தான் நான் வந்தேன்” என்றான் செங்கனச்சோழன்.

``இதைப் பற்றிப் பேச வேறென்ன இருக்கிறது?” என்று சற்றே வியப்போடு உதியஞ்சேரல் பார்த்தான்.

செங்கனச்சோழன் சொன்னான், ``குடிகள் அல்லாத குலத்தலைவர்களும் அங்கு உள்ளனர்.”

``வாய்ப்பேயில்லை. பறம்பைத் தொடர்ந்து கவனித்தும் அறிந்தும் வருபவர்கள் நாங்கள். குடிகளின்றிக் குலத்தலைவர்கள் மட்டும் அங்கு இருக்க வாய்ப்பேதும் இல்லை.”

செங்கனச்சோழன் வலதுகையில் பிடித்திருந்த ஊன்றுகோலை மெள்ளத் திருகியபடி கரும்பாக்குடியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்.

``இந்தப் போரில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி வெற்றிகொள்ளும் வாய்ப்பைக் கருங்கைவாணனுக்கு வழங்குவேன்” என்றார் குலசேகரபாண்டியன்.

``விதிகளின்படி போரிட்டு வெற்றிகொள்வது மிகக்கடினம் எனத் தெரிந்தும் அந்த வழியே தொடர்ந்து முயல்வது நமக்குத்தானே இழப்புகளை அதிகமாக்கும். ஏன் மாற்றுவழிக்கு நீங்கள் அனுமதி தர மறுக்கிறீர்கள்?”

``எது சிறந்த மாற்றுவழி என்பதை நான் அறிவேன். எனவே, அதற்கான முயற்சியை நான் செய்துள்ளேன். ஒருவேளை நான் பின்பற்றும் வழியும் தோல்வியடைந்தால் மூன்றாவதாக, கருங்கைவாணன் சொல்லும் நஞ்சுத்தாக்குதலுக்கு அனுமதி வழங்குவேன்.”

குலசேகரபாண்டியனின் சொற்கேட்டு அசைவற்று நின்றான் பொதியவெற்பன். சற்றும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது அவர் சொன்னது. அந்த மாற்றுவழியில் அவருக்குப் பெரும்நம்பிக்கை இருப்பதால்தான் விதிமுறைப்படி போரிடத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது புரிந்தது. அதுமட்டுமன்று, மற்ற இரு பேரரசுகளும் போர்முனை நோக்கியே கவனம்கொண்டிருக்க வேண்டும், அப்போதுதான் மாற்று வழிமுறையானது பாண்டியரின் தனிப்பெரும் முயற்சியாகத் துலங்கிநிற்கும் என்பதும் விளங்கியது.

``போர்க்களம் நம்பிக்கையை மெய்யாக்கினால் தொடர்ந்து வாள் ஏந்தலாம். நம்பிக்கையைப் பொய்யாக்கினால் தொடர்ந்து வாள் ஏந்தக் கூடாது. ஏனெனில், வெற்றி என்பது வாளோடு மட்டும் தொடர்புடையதன்று” என்றார் குலசேகரபாண்டியன்.

`ஆம்’ எனத் தலையசைத்தான் பொதியவெற்பன்.

``எவ்வளவு பெரும்படையும் துரோகத்துக்கு ஈடில்லை என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும் மகனே.”

போர்க்களம் கடந்து வெற்றி நோக்கிய மாற்றுப்பாதை ஒன்றைக் கண்டறிந்த தந்தையின் சொற்கள், அளவற்ற மகிழ்வைக் கொடுத்தன. பெரும் தயக்கத்தோடு மெள்ளக் கேட்டான், ``அந்தப் பாதை என்ன தந்தையே?”

``அந்தப் பாதை என்ன என்பதையும் அதில் பயணிக்கப்போகிறவர் யார் என்பதையும் நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை வரச் சொன்னேன்.”

கரும்பாக்குடியின் மொத்தக் கதையையும் சொல்லி முடித்தான் செங்கனச்சோழன். ஏறக்குறைய உறைந்த நிலையில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான் உதியஞ்சேரல்.

``பொருத்தமான மனிதர்கள் மூலம் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். விரைவில் நல்ல செய்தி வரும்.”

``அடைக்களம் தந்த பாரிக்கு எதிராக அவர்கள் எப்படி...” என்று உதியஞ்சேரல் சொல்லி முடிக்கும் முன் செங்கனச்சோழன் சொன்னான், ``கரும்பாக்குடியின் குலத்தலைவர்கள்தாம் அங்கு இருக்கின்றனர். அந்தக் குடிகள் அனைவரும் எம்முடைய நாட்டில்தான் இருக்கின்றனர். நமக்காக இல்லாவிடினும், அவர்கள் குலம் காக்கவாவது நாம் சொல்வதைச் செய்வார்கள். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியேதும் இல்லை.”

``உங்களுக்கு நம்பிக்கை உள்ள அந்தப் பாதை என்ன? அதில் பயணிக்கப்போகிறவர் யார் தந்தையே?”

பொதியவெற்பனின் கேள்விக்கு அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்து பதில் சொன்னார் குலசேகரபாண்டியன், ``அந்தப் பாதையில் பயணிக்கப்போவது பொற்சுவை.”

தடுமாறி நின்றான் பொதியவெற்பன். போர்க்களம் வந்து இத்தனை மாதங்கள் கழித்து, தந்தை தன்னைத் தனியே அழைத்துப் பேசுவதன் காரணம் இப்போதுதான் புரியத் தொடங்கியது.

குலசேகரபாண்டியன் சொன்னார், ``அவள் அமைதிவேண்டிப் பாரியைக் காணத் திட்டம் வகுத்திருக்கிறாள். போரில் பங்கெடுக்காத வெங்கல்நாட்டின் ஆறு ஊர்க்காரர்களைக் கொண்டு அந்தச் செயலைச் செய்ய முயல்கிறாள். எனது கணிப்புப்படி விரைவில் அவள் பாரியைக் காண்பாள். அந்த நாளில் நாம் நினைத்தது நடக்கும்.”

தந்தையை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பொதியவெற்பன். பாண்டியனின் தனித்த முயற்சியால் பாரி கொல்லப்படுவான். அதுவரை மூவேந்தர்களின் கூட்டுப்படையை வகுக்கப்பட்ட விதிகளின்படி கருங்கைவாணன் வழிநடத்துவான். அறம் பிறழாத போரின் சான்றெனப் பரண்மேல் நின்றிருப்பார் திசைவேழர். தட்டியங்காட்டின் வெற்றி பாண்டியப் பேரரசின் தனிப்பெரும் வெற்றியாக நிலைகொள்ளும்.

பெருவேந்தன் குலசேகரபாண்டியனின் திட்டம் இப்போதுதான் பொதிய வெற்பனுக்குப் புரியத் தொடங்கியது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 98

 

 

பிறைநிலவு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. விளாமரத்தின் அடிவாரத்தில் கூழையனைப் புதைத்தனர். தன் கண்களுக்கு முன்னால் கூழையன் வெட்டிச்சாய்க்கப்பட்டதை, தேக்கனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிறுவயது முதல் உற்ற தோழனாய் இருந்தவனைப் பறிகொடுத்த பதற்றம் அவனது உடல் முழுவதும் இருந்தது. மறுகணமே கருங்கைவாணனை வீழ்த்தக் கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்த முடியாமல்போய்விட்டது. ஒருவேளை அது நடந்திருந்தால்கூட மனம் சற்றே ஆறுதலடைந்திருக்கும். தேக்கனின் முகம் மிகவும் இறுகியிருந்தது. 

p35b_1535534426.jpg

புதைத்து முடித்தவுடன் எல்லோரும் இரலிமேட்டில் இருக்கும் பாட்டாப்பிறை நோக்கி வலதுபுறமாகத் திரும்பி நடந்தனர். தேக்கன் மட்டும் இடதுபுறமாக நாகக்கரட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். இறுதியாகச் சென்றுகொண்டிருந்த முடியன் அவனைப் பார்த்தபோது, ``முறியன் ஆசானைப் பார்த்துவிட்டு வருகிறேன். நீ போ’’ என்றான்.

முடியனுக்குப் புரிந்தது. `உடல்வலியோடு மனவலியும் சேர்ந்திருக்கிறது. கிழவன் எதையும் வாய் திறந்து சொல்ல மாட்டான்’ என எண்ணியபடி நடந்தான். எங்கும் வீரர்களின் ஓசை கேட்டபடி இருந்தது. நாகக்கரட்டுக்கும் இரலிமேட்டுக்கும் இடைப்பட்ட சமவெளிப் பள்ளத்தாக்கு எங்கும் ஓலை வேய்ந்த சிறு குடில்கள் எண்ணற்றவை அமைக்கப்பட்டிருந்தன. வீரர்களுக்கு உணவு, தங்கல் எல்லாம் அந்தக் குடில்களில்தான்.

தேக்கன் அக்கம்பக்கம் யாரையும் பார்க்கவில்லை. நேராக முறியன் ஆசானின் குடிலை நோக்கி வேகமாக நடந்தான். வளர்பிறையாதலால், வானில் ஒளிப்பரவல் விரைவாக இருந்தது. ``ஆசானின் குடில் சற்றுத் தொலைவில் இருக்கிறது. குதிரையில் போகலாம்’’ என்று வீரர்கள் சொன்னதற்கு தேக்கன் மறுத்துவிட்டான்.

குதிரை பாய்ந்து செல்லும்போது விலாவெலும்பு உள்குத்தி ஏறுகிறது. வலி தாங்க முடியவில்லை. அதனால்தான் குதிரையைத் தவிர்த்து வேக வேகமாக நடந்தான். எங்கும் பந்தங்கள் ஏற்றப்பட்டிருந்தன. உலைக்களங்களில் தீப்பொறிகள் பறந்துகொண்டிருந்தன. சாணைக்கல்லில் கருவிகள் கூர்தீட்டப்பட்டுக்கொண்டிருந்தன. பொதினிமலை சாணைக்கற்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. மற்ற சாணைக்கற்களைவிட இருமடங்கு வேகத்தில் ஆயுதங்களைக் கூர்தீட்டக்கூடியவை. அவை கருவிகளோடு உரசும்போது தெறிக்கும் பொறியில் நீலமேறியிருக்கும். வேல், ஈட்டி, எஃகல், ஆலம், சகடம், குந்தம், கயலி, ஈர்வாள் என நாள்தோறும் ஆயுதங்களைக் கூர்தீட்டி வாங்கிக்கொள்வது போர்வீரர்களுக்கு வழக்கம்.

காட்சிகளைப் பார்க்கப் பார்க்க தேக்கனின் மனவேதனை அதிகமாகிக்கொண்டே இருந்தது. வாழ்வில் இனி தனக்கான ஆயுதங்களைக் கூர்தீட்டவே முடியாதோ எனத் தோன்றியது. போர் முடிந்த இரவில் நீலநிறப் பொறிகள் உதிர்க்கும் தீக்கங்குகளை ஒவ்வொரு வீரனும் ஆசையோடு பார்த்துக்கொண்டிருப்பான். இன்றைய போரில் எதிரியோடு தான் நிகழ்த்திய தாக்குதலால் தனது ஆயுதங்கள் முனை மழுங்கிப்போயுள்ளன என்பதை உலைக்களத்தில் உள்ளவர்களிடம் சொல்வதில்தான் அவனது பெருமை இருக்கிறது.

``ஒருவேளை, இன்று நான் எனது ஆயுதத்தைக் கூர்தீட்ட உலைக்களம் சென்றிருந்தால் என்ன பேசியிருப்பேன்? `எனது கைக்கெட்டும் தொலைவில் எதிரிப்படைப் தளபதி இருந்தும் அவனது தலையை வெட்டிச்சரிக்காமல் விட்டுவிட்டேன்’ எனச் சொல்லி யிருப்பேனா? பறம்பின் எந்த ஒரு வீரனுக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை இழந்து நிற்கிறேன். இனி நான் போர்க்களம் புகவேண்டுமா?’’ என்று அடுக்கடுகாய்க் கேள்விகள் மேலேறியபடி இருந்தன. ஆனாலும் மனவோட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டான்.

கயிறுகள் இறுக முடைந்திருந்த கட்டில் ஒன்றில் குடிலின் முன் உட்கார்ந்திருந்தார் முறியன் ஆசான். சுற்றிலும் இளம் மருத்துவர்கள் தங்களின் வேலைகளைப் பார்த்தபடி இருந்தனர். தேக்கன் வந்தவுடன் அவர்கள் சற்று விலகிப் போயினர்.

தேக்கனின் முகத்தைப் பார்த்ததும் வலியின் கூறுகளை முறியன் ஆசானால் உணர முடிந்தது. எதிரில் இருந்த மரப்படுக்கையில் படுக்கச் சொன்னார். ஒருபக்கமாகச் சாய்ந்து கையூன்றி உடலைக் கிடத்தினான் தேக்கன். அவன் படுக்கும்விதமே காயத்தின் தன்மையைச் சொன்னது. நெஞ்செலும்பின் அடிப்பகுதி சற்றே வீக்கம்கொண்டிருந்தது. அதை ஆசான் தொட்டபோது வலி பொறுக்க முடியவில்லை. ஆனால், அதை வெளிக்காட்டாமல் இருந்தான் தேக்கன்.

அந்த இடத்தை விரலால் அழுத்தியபடி தேக்கனின் முகத்தை ஆசான் பார்த்தபோது தேக்கன் சொன்னான், ``என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். போர் முடியும் வரை நான் களத்தில் நிற்க வேண்டும்.’’

``மருத்துவனிடம் முன்நிபந்தனை கூடாது.’’

``சிகிச்சை பெறுவதற்கான காரணத்தை மருத்துவனிடம் மறைக்கக் கூடாதல்லவா!’’

``போர்க்களத்தில் நின்றால் மட்டும் போதுமா... போரிட வேண்டாமா?’’

``வேண்டாம். இந்தப் போரை வெற்றியாக்குவது முடியனின் கடமை. அவன் அதைச் செய்து முடிப்பான். நான் களம் விட்டு அகன்றால் பாரி களம் இறங்கும் சூழல் உருவாகிவிடும். அதைத் தவிர்ப்பதுதான் எனது வேலை. அதே நேரம் எனது செயல் மற்றவர்கள் ஐயம்கொள்ளாதபடி இருக்க வேண்டும்.’’

p35c_1535534468.jpg

உடலெங்கும் அழுத்திப்பார்த்து உள்காயங்களைக் கணித்தபடியே ஆசான் சொன்னார், ``வாளும் வில்லும் ஏந்தக் கூடாது. ஈட்டியை வைத்துக்கொள்ளுங்கள். ஆயுதம் கைக்கொண்டதாகவும் இருக்கும்; ஊன்றி நிற்க உதவியாகவும் இருக்கும்.’’

தேக்கன் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவன் கண்கள் வார்த்தைகளின் கசப்பை விழுங்க முடியாமல் துடித்தன.

அப்போது தேக்கனைச் சந்திக்க வீரன் ஒருவன் வந்தான். ஆனால், மாணவர்களோ தேக்கனுக்குச் சிகிச்சை தொடங்கிவிட்டதால் வீரனைச் சற்றுத் தொலைவிலேயே நிறுத்தினர். வடகோடியில் காட்டுக்குள் நுழைந்த வேட்டூர் பழையன் ஆட்கொல்லி மரத்தை அண்டி எண்ணற்றோரைக் கொன்று தானும் இறந்துள்ளார் என்ற செய்தியைச் சொல்வதற்காக அந்த வீரன் காத்திருந்தான்.

லைக்களங்களில் எண்ணிலடங்காத ஆயுதங்களை உருவாக்கும் வேலை இரவு பகலாக நடந்தது. ஆனால், அவற்றின் ஓசை எதுவும் மூஞ்சலுக்குள் கேட்காது. ஏனென்றால், உலைக்களம் இருக்கும் பகுதி, படைக்கலப் பேரரங்கு இருக்கும் பகுதி, மருத்துவக்கூடாரம், மூஞ்சல் என எல்லாம் தனித்தனியே வெகுதொலைவில் இருந்தன.

பொழுது, நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. குலசேகர பாண்டியன் சொல்லியதைப்போல புதிய தாக்குதல் திட்டத்தோடு கூடாரத்துக்குள் நுழைந்தான் கருங்கைவாணன். உள்ளே அனைவரும் காத்திருந்தனர். செங்கனச்சோழன் கரும்பாக்குடியினரைப் பற்றிச் சொன்ன செய்தியைக் கேட்டு மகிழ்ந்துபோயிருந்தான் உதியஞ்சேரல். தந்தை குலசேகரபாண்டியனின் திட்டத்தைக் கேட்டு ஆச்சர்யம்கொண்டி ருந்தான் பொதியவெற்பன். அனைவரும் மிக இறுக்கமான சூழலில் இருப்பார்கள் என நினைத்து உள்ளே வந்த கருங்கை வாணன், வேந்தர்களின் முகங்களைப் பார்த்து சற்றே குழப்பமானான். ஆனாலும் அவன் வகுத்த திட்டத்தைப் பற்றிக் கூறலானான். நிறைந்த அவையில் அவமானப்பட்ட ஒரு தளபதியின் சினம், அவன் வகுத்த திட்டத்தின் வழியே வெளிப்படத் தொடங்கியது.

``மூன்று நாள் போர்களின் அனுபவத்திலிருந்து நான் சில முடிவுகளுக்கு வந்துள்ளேன். எதிரிகளின் போர் உத்தி, நம்மால் முன் உணர முடியாததாக இருக்கிறது. இனிமேலும் அப்படித்தான் இருக்கும். ஆனால், அவர்கள் படையின் வலிமை எதில் இருக்கிறது என்பதை என்னால் கணிக்க முடிந்திருக்கிறது’’ என்றான்.

இதுவரை தாக்குதல் உத்தியைப் பற்றி மட்டுமே பேசிய கருங்கைவாணன் முதன்முறையாக எதிரிப்படையின் நுணுக்கங்களைப் பற்றிப் பேசத் தொடங்கியதை அவை உன்னிப்பாகக் கேட்டது.

``நம்மோடு ஒப்பிட்டால் பறம்பின் படை அளவில் மிக மிகச் சிறியது. ஆனாலும் அவர்கள் மூன்று நாள் போர்களிலும் முன்னேறித் தாக்கியுள்ளனர். அதற்குக் காரணம், அவர்களது படையின் மைய அச்சாக இருக்கும் விற்படைதான். அவர்கள் அம்பெய்யும் தொலைவில் சரிபாதிதான் நம் வீரர்களால் அம்பெய்ய முடிகிறது. எனவே, விற்படையினரை நம்மால் நெருங்கவே முடியவில்லை. அந்தப் படையினர் போர்க்களத்தின் நடுவில் இருக்கின்றனர். அதனால், எதிரிப்படையின் மீது நம் படையினர் தாக்குதலைக் குவித்து முன்னேற முடியவில்லை. எனவே, நமது தாக்குதலின் மூலம் எதிரிகளைத் தற்காப்புநிலைக்குத் தள்ள முடியவில்லை. மாறாக, எதிரிப்படையின் ஏதாவது ஒரு பிரிவு மூஞ்சலை நோக்கித் தொடர்ந்து முன்னேறித் தாக்குகிறது’’ என்றான்.

கருங்கைவாணனின் கணிப்பு மிகச் சரியானது எனத் தோன்றியது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தார் குலசேகரபாண்டியன்.

நாளைய போரில் பறம்பின் விற்படையை முழுமுற்றாகச் செயலிழக்கவைப்பதற்கான திட்டத்தை விளக்கினான். போர் உத்திகளை வகுப்பதில் அவன் கொண்டிருந்த அனுபவம், அவன் உச்சரித்த ஒவ்வொரு சொல்லிலும் மிளிர்ந்தது. சோழவேழன், மிரட்சியோடு அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். கருங்கைவாணன் திட்டத்தைக் கூறி முடிக்கும்போது யாரும் மறுசொல்லின்றி அதை நிறைவேற்ற ஆயத்தமாயினர். நாளைய போர், வேந்தர்கள் கொண்டாடும் செய்தியைத் தரும் என்பதில் ஐயமேதுமில்லை.

டலும் மனமும் தளர்ந்தபடி பரண்மீது நின்றுகொண்டு, எழும் கதிரவனைப் பார்த்தார் திசைவேழர். செம்பிழம்பின் வட்டவடிவை மேகத்துண்டுகள் தழுவிக் கடந்தன. வானில் பறவை ஏதும் தென்படவில்லை. கண்கள், வெளியெங்கும் பார்த்துத் திரும்பின. வழக்கத்துக்கு மாறாக வேந்தர்படைகள் நிலைகொண்ட பகுதியில் தூசியும் புழுதியும் சூழ்ந்திருந்தன. `போர் தொடங்கி நீண்டபொழுதுக்குப் பிறகுதானே இவ்வளவு புழுதி மேலெழும். இன்று என்ன நடந்துள்ளது... போர் தொடங்கும் முன்பே புழுதி இவ்வளவு உயரத்துக்குச் சூழ்ந்துள்ளதே!’ என நினைத்தபடியே நாழிகைவட்டிலைப் பார்த்தார். கோலின் நிழல் உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. சரியான இடத்தைத் தொட்டதும் வலதுகையை உயர்த்தினார். பரணெங்குமிருந்து ஓசை எழுப்பப்பட்டது. தட்டியங்காட்டுப் போரின் நான்காம் நாள் தொடங்கியது.

கை உயர்த்தி இமைப்பொழுது கடப்பதற்குள் நிலம் எங்குமிருந்து வீரர்களின் பெருமுழக்கமும் முரசுகளின் பேரோசையும் வெளியை அதிரச்செய்தன. வழக்கத்தைவிடப் பல மடங்கு ஓசை கணப்பொழுதில் மேலெழும்பியது. களத்தில் என்ன நடக்கிறது என்று திசைவேழர் கூர்ந்துபார்த்தார். பறம்புப்படை வழக்கம்போல் தாக்குதலுக்கு ஆயத்தமானது. ஆனால், வேந்தர்படையோ வழக்கத்துக்கு மாறாக வெள்ளம்போல் பரவி விரியத் தொடங்கியது.

எல்லா திசைகளிலும் ஓசையுடன் புழுதி மேலெழுந்துகொண்டிருந்தது. இதுவரை வேந்தர்படை வடக்கு தெற்காக வரிசைகளை ஏற்படுத்தி, கண்ணுக்கெட்டும் தொலைவு வரை அணிவகுத்து நிற்கும். முதல்நிலைப் படை, இரண்டாம்நிலைப் படை, மூன்றாம்நிலைப் படை என மூன்று பெருந்தொகுப்புகளாகப் படை நின்றிருக்கும். முதல்நிலைப் படை பறம்புப்படையோடு மோதிக்கொண்டிருக்கும். இழப்புகள் அதிகமாகும்போது அடுத்தடுத்த நிலையில் இருக்கும் வீரர்கள் முதல்நிலைப் படையோடு வந்து இணைவர். ஆனால், இன்றைய போரில் வேந்தர்படை வழக்கம்போல் அணிவகுக்கவில்லை. பெரும்மாற்றம் நடந்துள்ளது. ஆனால், என்னவென்று புரிபடவில்லை.

p35a_1535534507.jpg

முரசின் ஓசை கேட்டதும் தாக்குதலுக்குத் தயாரானது பறம்புப்படை. நேற்றைய போரில் மூஞ்சலின் அருகே பறம்பின் குதிரைப்படை சென்றது. இன்றைய போரில் மூஞ்சலுக்குள் நுழையும் திட்டத்தோடு முடியன் வந்திருந்தான். குதிரைப்படையை ஆறு கூறுகளாகப் பிரிப்பது என முடிவெடுத்திருந்தான். மூஞ்சலின் வடிவம் அவன் கண்களுக்குள்ளேயே இருந்தது. குதிரைப்படையின் இரண்டு பிரிவுகள் மூஞ்சலை அடையும் வரை போரிடக் கூடாது. அந்த இரண்டு பிரிவுகளையும் மூஞ்சலின் அருகில் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது மற்ற நான்கு பிரிவுகளின் வேலை. அந்த நான்கு பிரிவுகளுக்கும் முடியன் பொறுப்பாவான். மூஞ்சலின் அருகில் சென்றதும் எதிரிகளின் தாக்குதல் பல மடங்கு வலிமைகொண்டதாக இருக்கும். ஏறக்குறைய அனைவரும் கவச வீரர்களாக இருப்பர். எனவே, மிக வலிமையான தாக்குதலின்றி மூஞ்சலைச் சுற்றியுள்ள அரணை உடைத்து உட்செல்ல முடியாது. எனவே, மிகத் தேர்ந்த வீரர்களைக்கொண்டு அந்தப் பிரிவினரை உருவாக்கியிருந்தான். அதற்கு இரவாதனைப் பொறுப்பாக்கியிருந்தான்.

போர் தொடங்கிய கணத்தில் வேந்தர்படையின் மின்னல் வேகச் செயல்பாடு யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. எல்லா திசைகளிலும் வேந்தர்படையினர் பிரிந்தும் கலைந்தும் விரைந்துகொண்டிருந்தனர். பறம்புப்படையின் மீது அவர்கள் தாக்குதல் தொடுக்கவில்லை. ஆனால், களமெங்கும் விரைந்துகொண்டிருந்தனர். என்ன செய்கிறார்கள் என்று யாருக்கும் பிடிபடவில்லை. முன்னணியில் விரைந்துகொண்டிருந்தவை தேர்கள்தாம். திகிரியையும் ஆழியையும் உருளியாகக்கொண்ட வலிமைமிகுந்த கூவிரம் வகைத் தேர்கள் விடுபட்ட அம்புகளைப்போல விரைந்துகொண்டிருந்தன.
 
பரண் மேல் நின்றபடி திசைவேழர் இமைக்காமல் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். பறம்புப்படையை விட்டு மிக விலகி எங்கே அவர்கள் போகின்றனர் எனப் பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் அதற்கும் அப்பால் தேர்ப்படையின் இன்னோர் அணி போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. சற்றே அதிர்ச்சியோடு, முன்னேறிச் செல்லும் அந்த அணியைக் கூர்ந்து பார்த்தார். விரையும் தேர்களின் மீது காலைக்கதிரவனின் ஒளி பட்டுச் சிதறியபடி இருந்தது. உற்றுக் கவனித்தார், அவையெல்லாம் நிறைந்த பூண்களைக்கொண்ட கொடிஞ்சிவகைத் தேர்கள். இந்த வகைத் தேர்களை எந்தக் கருவிகொண்டும் சேதப்படுத்த முடியாது. திசைவேழர் தலையை எக்கிப் பார்த்தார். தேர்களின் உச்சியில் இருந்த கூம்புமொட்டுகள் கதிரவனின் ஒளிபட்டுத் தகதகத்தன. உராய்வில் பறக்கும் தீப்பொறிபோல விரையும் அவற்றின் வேகத்தில் மின்னி நகர்ந்தது வெய்யோன் பொன்னொளி. கண்கள் பார்க்கும் நில விளிம்பில் தேர்கள் எழுப்பும் மண்புழுதி அலையலையாய் மேலெழுந்து  கொண்டிருந்தது. என்ன நடக்கிறது என்று திசைவேழருக்குப் புரியத் தொடங்கியது.

மூன்று நிலைகளில் நின்றிருந்த வேந்தர்படையின் ஒழுங்கை, கருங்கைவாணன் இன்று மாற்றிவிட்டான். முதல்நிலைப் படை வழக்கம்போல் பறம்புப்படையை எதிர்கொள்ள முன்னால் நகர்ந்து போய்க்கொண்டிருக்கும்போது, இரண்டாம்நிலைப் படை பறம்புப் பகுதியின் இடுப்புப்பகுதியைச் சூழவேண்டும். அதேநேரம் மூன்றாம்நிலைப் படை அதைவிடத் தொலைவில் அரைவட்டவடிவில் பயணித்துப் பறம்புப்படையின் பின்புறத்தை அடையவேண்டும். அதாவது, பறம்புப்படை முழுமுற்றாக வேந்தர்படையால் சூழப்பட வேண்டும். அவ்வளவு தொலைவு பயணித்து, பறம்பின் மொத்தப் படையையும் முற்றுகையிடுவதற்குத் தேவையான அளவுக்கு வீரர்கள் வேந்தர்படையில் இருந்தனர். அதனால்தான் கருங்கைவாணன் இந்தத் திட்டத்தைத் தீட்டினான்.

அவன் வகுத்த திட்டப்படி வேந்தர்களின் தேர்ப்படை மின்னல் வேகத்தில் பறம்புப்படையின் பின்பகுதியை நோக்கி மிகத்தொலைவில் அரைவட்டமடித்து விரைந்துகொண்டிருந்தது. அந்தத் தேர்கள் எல்லாவற்றிலும் மணிகள் கட்டப்பட்டிருந்தன. எனவே, மணிகளின் பேரோசை எங்கும் எதிரொலித்தது. எழும் புழுதியும் வீரர்களின் பேரோசையும் தெறிக்கும் மணியோசையுமாகப் போர்க்கள வெளியெங்கும் வேந்தர்படையின் ஆதிக்கம் மேலெழுந்தது.

தனது திட்டப்படி விரைந்து தாக்குதலைத் தொடுக்கவேண்டிய முடியன், போர் தொடங்கிய கணமே நிதானம்கொள்ளத் தொடங்கினான். எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்பது சற்றே குழப்பமாக இருந்தது. அவர்கள் யாரும் பறம்புப்படை நோக்கி ஒற்றை அம்பைக்கூட எய்யவில்லை. ஆனால், எல்லோரும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர். எதிரிகளின் திட்டம் என்ன என்பதை அறிய அவர்களின் செயலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் முடியன். ஆனால், கடைசி வரிசையில் ஈட்டியை ஊன்றுகோலாகப் பிடித்தபடி சாய்ந்து நின்றுகொண்டிருந்த தேக்கனுக்குப் பிடிபடத் தொடங்கியது. ஏனென்றால், பறம்புப்படையை விட்டு மிக விலகி அரைவட்ட வடிவில் புழுதி மேலெழுந்துகொண்டிருந்தது. மேலெழும் புழுதியின் முன்முகம் அவன் இருக்கும் பின்புறத்தை நோக்கி வளைந்து வந்துகொண்டிருந்தது.

கருங்கைவாணன் தாக்குதலுக்கான திட்டத்தை உருவாக்கிய கணத்திலிருந்து மிகத் தீவிரமாய்ச் செயல்பட்டுக்கொண்டி ருக்கிறான். நேற்று நள்ளிரவு மூவேந்தர்களும் இந்தத் திடத்தை ஏற்றனர். கொல்லப்பட்ட தேர்ப்படைத் தளபதி நகரிவீரனுக்குப் பதில் வெறுகாளனைப் புதிய தளபதியாக நியமித்தான் செங்கணச்சோழன். சூலக்கையனுக்குப் பதில் மாகனகனைத் தளபதியாக நியமித்தான் குலசேகர பாண்டியன். உடனடியாகத் தாக்குதல் திட்டத்துக்கான வேலைகள் தொடங்கின. படைக்களக் கொட்டிலில் இருக்கும் ஆயுதவாரியை நோக்கி முதல் ஆணை பிறப்பிக்கும் பொழுது நள்ளிரவைத் தொட்டு நின்றது.

வழக்கம்போலவே நாளைய தாக்குதல் நடக்கும் என நினைத்த ஆயுதவாரி, வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களை எல்லாம் படைப்பிரிவுகளுக்கு வழங்கிவிட்டு, தனது கூடாரத்துக்குச் சென்றார். உள்ளே சென்று அமர்ந்ததும் தலைமைத்தளபதியின் ஆணையோடு வீரன் ஒருவன் வந்து நின்றான்.

ஆணையைக் கண்டதும் அவர் அதிர்ச்சிக்குள்ளானார். நாளைய போரில் வேந்தர்படையில் இருக்கும் அத்தனை வீரர்களும் களம்புகுந்து எதிரிகளின் மீது தாக்குதல் நடத்தப்போகிறார்கள். எனவே, அனைவருக்கும் தேவையான ஆயுதங்களை உடனடியாகக் கொண்டுசேர்க்கும் ஏற்பாடுகளைச் செய்யும்படி அதில் கருங்கைவாணனின் உத்தரவு இருந்தது.

``இதுவரை முதல்நிலைப் படைவீரர்கள் மட்டுமே தாக்குதல் தொடுத்தனர். மற்ற இரு நிலைகளிலும் இருந்த வீரர்கள் தாக்குதல் களத்துக்குத் தேவைப்பட்டால் மட்டுமே சென்றனர். தாக்குதல் களத்துக்குள் வீரர்கள் அனைவரும் புகுந்தால் அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களைப்போல குறைந்தது ஆறு மடங்கு ஆயுதங்களை அவர்களுக்குக் கொண்டுசேர்க்க ஆயுதவாரி ஆயத்தநிலையில் இருக்க வேண்டும். தாக்கும் அணியின் பின்புறம் ஆயுதவண்டிகள் எந்நேரமும் அணிவகுத்து நிற்க வேண்டும். இப்போது படை முழுவதும் இருக்கும் அனைத்து வீரர்களும் தாக்குதலுக்குக் களம்புகப் போகிறார்கள் என்றால், அனைவரின் கைகளிலும் தேவையான அனைத்துவிதமான ஆயுதங்களும் இருக்க வேண்டும். அனைத்துப் படையினருக்கும் களத்துக்குத் தேவையான ஆயுதங்களை வண்டியில் ஏற்றி ஆயத்தப்படுத்த வேண்டும். இவையெல்லாம் இந்த நள்ளிரவுக்குப்பின் எப்படிச் சாத்தியமாகும்? ஒருபோதும் முடியாது’’ என்று புலம்பியபடி, ``தலைமைத்தளபதி எங்கே இருக்கிறார்?’’ எனக் கேட்டான் ஆயுதவாரி.

செய்தியைக் கொண்டுவந்த வீரன், ``மூஞ்சலுக்குள் இருந்துதான் இதைக் கொடுத்து விட்டார்’’ என்றான்.

``மூஞ்சலுக்குள் இருந்தால் எந்த உத்தரவையும் பிறப்பிப்பாரா? நள்ளிரவுக்குப்பின் எப்படி இவ்வளவு ஆயுதங்களையும் கொண்டுசேர்க்க முடியும்? நாளைய போரில் சரிபாதி வீரர்களைக் களத்தில் இறக்குவோம். நாளை மறுநாள் முழுமையாக அனைவரையும் களத்தில் இறக்க ஏற்பாடு செய்வோம் என்று நான் சொன்னதாகப் போய்ச்சொல்’’ என்று கூறி அந்த வீரனைத் திருப்பி அனுப்ப முற்பட்டார்.

ஆனால், வீரனிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே வெளியில் பெருங்கூச்சலோசை கேட்டது. `இந்த நள்ளிரவில் என்ன இவ்வளவு சத்தம்?’ என எண்ணியபடி கூடாரத்தை விட்டு வெளியில் வந்து பார்த்தார். படைக்கலப் பேரரங்கை நோக்கி ஆயுதங்களை ஏற்றிச் செல்ல யானைகளும் குதிரைவண்டிகளும் மாடுகள் பூட்டிய நீள்வண்டிகளும் அணியணியாய் வந்துகொண்டிருந்தன. படைக்கலப் பேரரங்கின் முன்னால் பெருங்கூட்டம் கூடிக்கொண்டிருந்தது.

தொலைவில் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்த ஆயுதவாரிக்கு, என்ன செய்வதெனப் புரியவில்லை. மூன்று நாள் போரிலும் கொல்லப்பட்டதுபோக மீதம் இருக்கும் நாற்பத்தைந்து சேனைமுதலிகளும் அவர்களுக்குக் கீழே இருக்கும் நானூற்றைம்பது சேனைவரையர்களும் நாளை தங்களின் படைகளைக் களம் நோக்கித் தாக்குதலுக்கு நகர்த்துகின்றனர். அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் தேவையான ஆயுதங்களைப் பெற்றுச்செல்ல சேனைமுதலிகளின் உத்தரவோடு படைப்பணியாளர்கள் போர்க்களப் பேரரங்குக்கு முன்னால் வந்து குவியத் தொடங்கிவிட்டனர்.

மிரண்டுபோனார் ஆயுதவாரி. தன்னிடம் கேட்காமல் இந்த நள்ளிரவுக்குப்பின் இப்படியோர் உத்தரவை சேனைமுதலிகளுக்கு எப்படி வழங்கலாம் என்று கடுங்கோபத்தோடு பேரரங்கு நோக்கி விரைந்தார்.

பாண்டியனின் படைக்கலப் பேரரங்குதான் மூஞ்சலுக்கு அருகில் இருக்கிறது. சேரனின் பேரரங்கு தென்புறத்திலும், சோழனின் பேரரங்கு வடபுறத்திலும் சற்றுத் தொலைவில் இருக்கின்றன. ஒவ்வொரு பேரரங்கும் மூஞ்சல் நகரைவிடப் பெரியது; எண்ணற்ற கூடாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு கூடாரத்திலும் ஒவ்வொரு வகையான ஆயுதங்களை வரிசைப்படுத்தி வைத்திருந்தனர். நான்கு வகையான வில்கள், பதின்மூன்று வகையான அம்புகள், இருபது வகையான வாள்கள், எட்டு வகையான வேல்கள், மூன்று வகையான குறுவாள்கள், மூன்று வகையான தண்டங்கள், மூன்று வகையான கேடயங்கள். இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனித்துவமான ஆயுதங்கள் என அனைத்தும் வகை பிரித்து வைக்கப்பட்டுள்ளன. 

p35d_1535534559.jpg

இவற்றை எடுத்துத் தருவதிலும், களத்தில் வீரர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும் சிறுகுழப்பம் நடந்தாலும், அது களத்தின் போக்கை வெகுவாக பாதிக்கும். முன்களத்தில் நின்று போரிடும் உலோக வில் ஏந்திய பெருவீரர்களுக்கு, கணை, வாளி, கதிர் ஆகிய மூன்று வகை அம்புகள்தான் கொடுக்கப்பட வேண்டும். மற்றவகை அம்புகள் உலோக வில்லுக்கு ஏற்றவை அல்ல. அதேபோல ஐந்து முடிச்சுகள்கொண்ட மூங்கில் வில்களை ஏந்தி நிற்கும் வீரனிடம் கோலம்பினையோ கதிரம் அம்பினையோ கொடுத்தால் ஒரு பனை தொலைவுகூடப் பாயாது. ஏழு அல்லது ஒன்பது முடிச்சுகளைக்கொண்ட பட்டுநூலால் ஆன நாணைப் பயன்படுத்தும் வில்லாளிதான் விற்படையின் நடுவில் வலிமையோடு நின்று போரிடுபவன். அவனுக்குத் தேவை சரவகை அம்புகள் மட்டுமே. இவை அனைத்தும் துல்லியமான கணக்குகளின் அடிப்படையில் வகை பிரித்து அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. எந்தவிதமான குழப்பமுமின்றி மிகக்கவனமாகச் செய்யப்படவேண்டிய பணியிது.

ஒருமுறை இதில் குழப்பம் ஏற்பட்டு, வரிசையாக அடுக்கப்பட்டுள்ள அம்புக்கட்டுகள் மாறி இன்னோர் அறையில் வைக்கப்பட்டுவிட்டால், அதன்பொருட்டு களத்தில் எத்தனையோ வீரர்கள் உயிரிழக்க நேரிடும். எனவே, பேரரங்கில் ஆயுதம் கையாள்வதை எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் செயல்படுத்த வேண்டும். ஆனால், `கருங்கைவாணனின் செயல் எதையும் புரிந்துகொள்ளாத ஒரு மூடனின் முடிவையொத்தது’ என மனதுக்குள் வசைபாடியபடியே படைக்களப் பேரரங்குக்கு வந்தார் ஆயுதவாரி.

அங்கோ, எண்ணற்ற போர்க்களப் பணியாளர்கள் தங்களுக்கான ஆயுதங்களை வண்டிகளில் வேகவேகமாக ஏற்றிக்கொண்டிருந்தனர். தான் வரும் முன்பு எப்படி இந்த வேலையைத் தொடங்கினார்கள் என்ற கோபத்தோடு ஆயுதவாரி உள்ளே நுழைந்தபோது, அங்கு கருங்கைவாணன் நின்றுகொண்டு பணிகளை ஒருங்கிணைத்துக்கொண்டி ருந்தான். ``எண்ணற்ற வண்டிகளும் யானைகளும் ஆயுதங்களை ஏற்றிச் செல்லக் காத்திருக்கின்றன. வேகமாக வந்து பணியை ஒருங்கிணையுங்கள்’’ என்று ஆயுதவாரியைப் பார்த்து சத்தம்போட்டுக் கூறினான் கருங்கைவாணன்.

மிகுந்த கோபத்தோடு வந்த ஆயுதவாரிக்கு, வீரர்களும் பணியாளர்களும் நிறைந்த இந்த இடத்தில் தலைமைத்தளபதியிடம் எப்படி சினத்தை வெளிப்படுத்துவதெனத் தெரியவில்லை. ஆனால், வேலை வேகவேகமாக நடைபெற்றுக்கொண்டி ருந்தது. ``விரைவாகப் பிரித்தனுப்புங்கள். சேரனின் பேரரங்கிலிருந்து ஆயுதமேற்றப்பட்ட வண்டிகள் அப்போதே வெளியேறிவிட்டன’’ என்றான்.

பாண்டியனின் ஆயுதவாரி சற்றே அதிர்ச்சிக்குள்ளானார். ``அதற்குள் எப்படி அவர்கள் பிரித்தனுப்பினார்கள்?’’ என்றார்.

``அவர்கள் ஆயுதவாரி இரவில் கூடாரத்துக்குச் சென்று ஓய்வெடுப்பதில்லையாம். ஆயுதப்பேர ரங்கில்தான் இருப்பாராம். எனவே, செய்தி கிடைத்ததும் வேலையைத் தொடங்கிவிட்டார்’’ என்றான் கருங்கைவாணன். அதன் பிறகு அவர் பேச்சு ஏதுமின்றி ஆயுதங்களைப் பிரித்தனுப்பும் வேலையில் ஈடுபட்டார்.

உண்மையில் கருங்கைவாணன், மற்ற இரு ஆயுதவாரிகளுக்கும் இன்னும் செய்தியையே அனுப்பவில்லை. நள்ளிரவுக்குப்பின் இவ்வளவு பெரிய வேலையைச் சொன்னால், எந்த ஆயுதவாரியும் ஒப்புக்கொள்ள மாட்டார். அதுமட்டுமன்று, வலுக்கட்டாயமாகச் செய்யும் சூழலை ஏற்படுத்தினால் அது போர்க்களத்தில் குழப்பத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது. எனவேதான், மிகக் கவனமாக இந்த வேலையைச் செய்தான் கருங்கைவாணன்.

பாண்டியனின் பேரரங்கிலிருந்து ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு வண்டிகள் வெளியான பிறகுதான் மற்ற இரு ஆயுதவாரிகளுக்கும் செய்தி சென்று சேர்வதைப்போலப் பார்த்துக்கொண்டான். சிறு முணுமுணுப்புகளும் கோபமும் வெளிப்பட்டனவே தவிர, வேலையை மறுக்கும்நிலை எங்கும் ஏற்படவில்லை. ஏனென்றால், ஒரு பேரரசு இன்னொரு பேரரசைவிடப் பின்தங்கும் நிலை ஏற்படக் கூடாது என்பதில் மூன்று பேரரசுகளின் பொறுப்பாளர்களும் ஆயுதவாரிகளும் மிகக்கவனமாக இருந்தனர்.

பல்லாயிரம் வீரர்களுக்கு எண்ணற்ற வகையான ஆயுதங்களைக் கணக்குகளின்படி துல்லியமாக வகை பிரித்து அனுப்பும் பணியை ஆயுதவாரிகள் மூவரும் அவர்களுக்குக் கீழே பணியாற்றும் எண்ணிலடங்காத போர்ப்பணியாளர்களும் இரவு முழுவதும் செய்தனர். விடியும்போதுகூட ஆயுதமேற்ற யானைகளும் வண்டிகளும் பேரரங்கின் முன்னால் காத்திருந்தன. அப்போதுதான் திசைவேழரின் சங்கொலி கேட்டது.

காற்றெங்கும் செம்புழுதியேறி மிதக்க திசைவேழரின் முரசோசை கேட்டதும் தேர்கள் தங்களுக்கான இலக்கு நோக்கி வேகம்கொள்ளத் தொடங்கின. கருங்கைவாணன் மிகக் கவனமாகத் திட்டங்களை வகுத்து அவற்றை சேனைமுதலிகளுக்கும் தளபதிகளுக்கும் விளக்கியிருந்தான்.

``அனைத்துப் படைப்பிரிவுகளையும் எதிரியின் படையைத் தாக்கப் பயன்படுத்தினால் மூஞ்சலின் பாதுகாப்புக்கு என்ன ஏற்பாடு?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. ``மூஞ்சலை வேந்தர்களின் கவசப்படையும் அகப்படையும் காத்தால் போதும். எதிரிகள் யாரும் இன்று மூஞ்சலை நெருங்க எந்தவித வாய்ப்பும் இல்லை. ஒருவேளை சிறு குழு ஏதாவது நெருங்கினால் இந்தப் படையால் அவர்களை எளிதில் வீழ்த்த முடியும்’’ என்றான்.

``காற்றின் துணைகொண்டு தாக்கும் அம்பை எதிரிகள் பயன்படுத்தினாலும் நமக்கு எந்த பாதிப்பும் நிகழப்போவதில்லை. ஏனென்றால், நமது படை எதுவும் தொலைவில் நிற்கப்போவதில்லை. மொத்தப்படையும் எதிரிகளைச் சூழ்ந்துதான் நிற்கப்போகிறது’’ என்றான்.

கருங்கைவாணனின் திட்டம், வேந்தர்களைப்போல தளபதிகளுக்கும் சேனைமுதலிகளுக்கும் பெரும்நம்பிக்கையை உருவாக்கியது. போர்க்களத்தில் தாக்குதலுக்கும் இழப்புக்கும் பின் நம்பிக்கையளிக்கும் திட்டம் தீட்டப்படுமேயானால் அது பல மடங்கு ஆற்றலோடு செயல்பாட்டுக்கு வரும். வேந்தர்படையின் செயல்பாடு இன்று அப்படித்தான் இருந்தது.

பறம்புப்படை நிலைகொண்டுள்ள இடத்துக்கு மேற்குப் பகுதியில் காரமலை உள்ளது. அந்த திசை தவிர, பிற மூன்று திசைகளிலும் முழுமையாக வேந்தர்படை, பறம்புப்படையைச் சுற்றிவளைத்தது.

`ஈக்கிமணலும் கருமணலும் உள்ள தட்டியங்காட்டு நிலத்தில் குதிரைகளால் வெகுதொலைவுக்கு விரைந்து ஓட இயலாது. அதைக் கணித்து ஒரே மூச்சில் குதிரைகளையோட்டி, பறம்புப்படையின் பின்புறம் சென்று சேர்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் அணியணியாய்ப் பின்தொடர்ந்து தங்களுக்குரிய இடத்தில் நிலைகொள்ள வேண்டும். இடைப்பகுதிக்கும் பின்பகுதிக்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகப் போய்ச்சேர வேண்டும். அந்த விரைவே, இன்றைய தாக்குதல் உத்திக்கான அடிப்படையை உருவாக்கும்’ என்று கூறியிருந்தான் கருங்கைவாணன். அவனது திட்டம் அப்படியே செயல்படுத்தப்பட்டது.

தாக்கி முன்னேறும் தனது திட்டத்தைத் தொடங்காமல் நிறுத்திக்கொண்டான் முடியன். எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்றுக் கவனித்தான். வேந்தர்படை, பறம்புப்படையை நெருங்கவோ ஆயுதங்களால் தாக்கவோ முற்படவில்லை. ஆனால், முழுமையாகச் சூழ்ந்து அணிவகுத்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குதிரையில் ஏறி பறம்புப்படை முழுமையும் சுற்றிவந்தான் முடியன். எதிரிகளின் தளபதிகள் பலரும் அவன் கண்ணில் பட்டனர். ஆனால், கருங்கைவாணன் மட்டும் அவன் கண்ணில் படவே இல்லை. `இவ்வளவு விரிவாகத் திட்டமிட்டிருப்பதால் அவன் முன்னணியில்தானே நிற்க வேண்டும். எங்கே போனான்?’ என்று சிந்தித்தவண்ணம் பறம்புப்படையின் பின்பகுதியை வந்து அடைந்தான் முடியன்.

அங்கே தேக்கன் நின்றுகொண்டிருந்தான். தேக்கனின் பாதுகாப்புக்காகத்தான், அவனைப் பின்புற வரிசையில் நிற்குமாறு முடியன் சொல்லியிருந்தான். ஆனால், இப்போது அவன் இருக்கும் திசையிலும் எதிரிகள் சூழ்ந்து நிற்பதால் அவனும் முன்வரிசையில் நிற்பவனாக மாறினான்.

தேக்கனின் அருகில் வந்ததும் குதிரையை விட்டு இறங்கினான் முடியன். அப்போது நாகக்கரட்டிலிருந்து நீள்கொம்பின் சுழியோசை கேட்டது. அதிர்ச்சியோடு நாகக்கரட்டைத் திரும்பிப் பார்த்தான். வெளிப்படுத்தப்படுவது சுழியோசைதானா என்பதை மறுபடியும் கூர்ந்து கவனித்தான். ஆபத்தை முன்னுணர்த்தும் நீள்கொம்பின் சுழியோசைதான் அது.

சற்றே கோபத்தோடு, ``எதிரிகள் நமது படையைச் சூழ்ந்துவிட்டால் ஆபத்து என்று பொருள்கொண்டுவிடுவதா?’’ என்று தேக்கனைப் பார்த்துக் கேட்டான்.

ஓசை கேட்ட திசையையே பார்த்துக்கொண்டிருந்த தேக்கன் சொன்னான், ``ஆபத்து இங்கில்லை, அங்கு.’’

முடியன் சற்றே மிரட்சியோடு மீண்டும் நாகக்கரட்டைப் பார்த்தான். இருக்கிக்கொடியின் பால்கொண்டு காட்டப்படும் குறிப்பு குளவன்திட்டை நோக்கிக் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏற்பட்டுள்ள ஆபத்தைப் பாரிக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர் நாக்கரட்டின் மீதிருந்த கூவல்குடியினர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

வீரயுக நாயகன் வேள்பாரி - 99

 

ஓவியங்கள்: ம.செ.,

 

திரிப்படையைச் சூழ்ந்து முற்றுகையிடுவது என்பது, தாக்குதல் போரில் உச்சமானதோர் உத்தி. ஏறக்குறைய முழுமுற்றாக எதிரியை அழித்துவிட முடியும் என்ற நிலையில்தான் இப்படியோர் உத்தியைக் கையாள முடியும். `பறம்புப்படை வலுவிழந்த நிலையில் இல்லை; வேந்தர்படை மிகுவலிமையோடும் இல்லை. அப்படியிருந்தும் கருங்கைவாணன் இப்படியோர் உத்தியை ஏன் தேர்வுசெய்தான்? வேந்தர்கள் எப்படி இதற்கு ஒப்புதல் வழங்கினர்?’ என்ற ஐயத்தின் பிடியிலிருந்து ஆயுதவாரியால் மீளவே முடியவில்லை. கேட்டு அறிந்துகொள்ளும் சூழலும் இல்லை. போர் தொடங்கும் முரசின் ஓசை கேட்டும்கூடப் படைக்கலப் பேரரங்கின் முன்னால் ஆயுதங்களைப் பெற்றுச் செல்லும் வண்டிகள் வருவது குறையவில்லை.

p83b_1535966521.jpg

கருங்கைவாணன் வகுத்த உத்தியில் ஒரு பகுதிதான் எதிரிப்படையை முற்றுகையிடுவது. இன்னொரு பகுதி எதிரியின் எல்லைக்குள் துணிந்து நுழைவது. இரண்டையும் ஒருசேர வகுத்திருந்தான். இன்றைய தாக்குதலின் கூர்முனையாக பறம்பின் விற்படையைத்தான் இலக்கிட்டான். பறம்புப்படையின் மைய அச்சாக விற்படையினரே செயல்படுகின்றனர். விற்படையினரின் ஆற்றலைக் குறைத்து அவர்களை வீழ்த்துவது மட்டுமே பறம்பின் பிற படைகளை வெற்றிகொள்ள வழிவகுக்கும் என முடிவுசெய்து அதற்கான திட்டத்தைத் தீட்டினான்.

வேந்தர்களின் யானைப்படை, எந்த நேரத்திலும் பறம்புக்குள் நுழைய ஆயத்தநிலையில் இருந்தது. பறம்பினர் யானைப்போர் நிகழ்த்த விரும்பாத நிலையில், வேந்தர்களின் யானைகள் பறம்பின் எல்லைக்குள் நுழையும் உரிமை பெற்றவையாயின. அந்த வாய்ப்பைப் பொருத்தமாகப் பயன்படுத்தலாம் என்று வேந்தர்படை காத்திருந்தது. இன்றைய தாக்குதல் திட்டத்தின் மிகமுக்கியப் பணியை யானைப்படைக்கு வழங்கினான் கருங்கைவாணன்.

போருக்கான சங்கொலி கேட்டதும் வேந்தர் படை பறம்பின் படையைச் சூழ்ந்து முற்றுகையிடத் தொடங்கியது. அதே பொழுதில் வேந்தர்களின் யானைப்படை வடகோடியில் நாகக்கரட்டுக்கும் காரமலைக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்குக்குள் நுழைந்தது. சில காதத்தொலைவே கொண்ட இந்தப் பள்ளத்தாக்கில், மிக வேகமாக யானைப் படையை விரட்டி வந்தான் அதன் தளபதி உச்சங்காரி. இந்தப் பள்ளத்தாக்கின் தென்பகுதி எல்லையை இரண்டு பொழுதுக்குள் அடையவேண்டும் என்பதுதான் உச்சங்காரிக்கு இடப்பட்ட கட்டளை. அதாவது பறம்புப்படையை முற்றுகையிட வேந்தர்படை சுற்றிவளைத்து முடிக்கும்போது, யானைப்படை பள்ளத்தாக்கின் தென் எல்லையைத் தொட்டிருக்க வேண்டும்.

நாகக்கரட்டின் பின்னால் உள்ள காரமலையில் தான் இரலிமேடு இருக்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கில்தான் பறம்புப் படையினர் தங்கும் குடில்களும், உணவும், இதர தேவைகளுக்கான ஏற்பாடுகளும் இருந்தன. இன்றைய போர் தொடங்கிய கணமே மிக வேகமாக இந்தப் பகுதிக்குள் நுழைந்தது வேந்தர்களின் யானைப்படை. அவர்களின் நோக்கம், இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்குமான தொடர்பைத் துண்டித்தல்தான். இரலிமேட்டில் உள்ள குகைகளில்தான் பறம்பு வீரர்களுக்கான ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து தான் போர்க்களத்துக்கு ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன.

p83a_1535967148.jpg

பறம்புப்படையை முற்றுகையிட்டுப் போர்புரியும் இன்றைய நாளில், வேந்தர்களின் முழுப்படையோடு பறம்புப்படை மோத உள்ளது. தன்னைவிடப் பல மடங்கு அதிகமான வீரர்களை எதிர்த்துப் போரிடும்போது பறம்புப்படைக்குப் பல மடங்கு ஆயுதங்கள் தேவை. ஆனால், ஆயுதங்கள் இரலிமேட்டிலிருந்து வந்துசேரும் வழி இப்போது அடைக்கப்பட்டாகிவிட்டது. இதனால், நண்பகலுக்குமேல் பறம்புவீரர்களின் அம்பறாத்தூணியில் அம்பு எதுவும் மிஞ்சாது. பிற வகை ஆயுதங்களும் போதிய அளவு இருக்காது. சூழப்பட்ட பறம்புப்படை ஆயுதங்களின் போதாமையால், முழு வேகத்தோடு தாக்குதலைத் தொடுக்க முடியாது. இதுவே அவர்களை நசுக்கி அழிக்கச் சிறந்த வழி என உத்தியை வகுத்திருந்தான் கருங்கைவாணன்.

போர் தொடங்கிய வேகத்தில் உச்சங்காரியின் யானைப்படை பள்ளத்தாக்கில் விரைந்து முன்னேறியது. அங்கு வீரர்களோ, தடுப்புகளோ, எதிரிகளின் யானைப்படையோ இல்லாத நிலையில் உச்சங்காரியின் வேலை மிக எளிதாக மாறியது. கருங்கைவாணன் கூறிய நேரத்தைவிட விரைவாகத் தென்கோடிக்கு வந்து சேர்ந்தான் உச்சங்காரி.

இப்போது நாகக்கரடும் இரலிமேடும் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. பறம்பின் ஆயுதங்களும் ஆயுதப் பொறுப்பாளரான முதுவேலரும் கபிலரும் இரலிமேட்டில் இருக்கும் குகைகளில் இருந்தனர். முறியன் ஆசானும் வாரிக்கையனும் கூவல்குடியினரும் நாகக்கரட்டின் மேல் இருந்தனர். படைக்குத் தேவையான பணியைச் செய்பவர்கள், காயம்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் என எண்ணற்ற வீரர்கள் இருபக்கமாகப் பிரிந்து இருந்தனர்.

நாகக்கரட்டின் மீதிருந்த வாரிக்கையன்தான் எதிரிகளின் யானைப்படையை என்ன செய்வது என முடிவெடுக்க வேண்டியவன். பறம்பின் யானைப்படைத் தளபதி வேட்டூர்பழையன் நேற்றைய போரில் இறந்துவிட்டான். பறம்பின் யானைகளும் அதன் வழிகாட்டிகளுமான தந்தமுத்தக்காரர்களும் இரண்டு குன்றுகளுக்கு அப்பால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வந்து தாக்குதலைத் தொடுக்க வேண்டுமென்றால், நீண்டபொழுதாகிவிடும் என்று சிந்தித்த வாரிக்கையன், ``செய்தியை முதலில் பாரிக்குத் தெரியப்படுத்துங்கள்’’ என்றான்.

p83c_1535966671.jpg

பாரி நிற்கும் குளவன்திட்டின் மேலிருந்து பார்த்தால் எதிரில் இருக்கும் தட்டியங்காட்டுப் பரப்பு முழுமையாகத் தெரியும். இடதுபுறமாக நாகக்கரடும் அதன் பின்னணியில் இருக்கும் இரலிமேடும் தெரியும். ஆனால், நாகக்கரட்டுக்கும் இரலிமேட்டுக்கும் நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கு தெரியாது. எனவே, யானைப்படைகள் பள்ளத் தாக்குக்குள் நுழைந்ததை, பாரியால் குளவன் திட்டிலிருந்து பார்க்க முடியாது. அதனால்தான் பாரிக்குச் செய்தியைத் தெரிவிக்க, கூவல் குடியினருக்கு உத்தரவிட்டான் வாரிக்கையன்.

இரிக்கிச்செடியின் பால்கொண்ட குறியீட்டைக் காட்டியபடி கூவல்குடியினரின் நீள்கொம்பு சுழியோசை குளவன்திட்டில் பட்டு எதிரொலித்தது. அதுவரை தட்டியங்காட்டில் சுற்றிவளைக்கும் எதிரிகளின் படையைப் பார்த்துக்கொண்டிருந்த பாரி, ஓசை கேட்டவுடன் நாகக்கரட்டுப் பக்கம் திரும்பிப் பார்த்தான். பள்ளத்தாக்குக்குள் ஏற்பட்டுள்ள ஆபத்து என்னவென்று தெரியவில்லை.

இகுளிக்கிழவன் பின்புறம் சற்றுத் தள்ளியிருக்கும் பாறை ஒன்றைக் கைகாட்டியபடி சொன்னான், ``அவ்விடம் போய்ப் பாருங்கள்; பள்ளத்தாக்கு தெளிவாகத் தெரியும்.’’

பாரியும் காலம்பனும் உடன் நின்றிருந்த கூவல்குடியினரும் அந்தப் பாறையை நோக்கி விரைந்தனர்.

ங்கே என்ன வகையான ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை அறிய, நாகக்கரட்டை நோக்கி வீரர்களை அனுப்பினான் முடியன். எதிரிகளின் தேர் பறம்புப்படையை முழுமையாகச் சுற்றிவளைத்து நின்றது.

``ஈக்கிமணலில் இவனது குதிரைகளால் அதிக தொலைவு பாய்ந்தோட முடியாது எனத் தெரிந்தும் படையைச் சுற்றிவளைத்து நிற்கிறான் என்றால், இவனுக்கு உரிய பாடத்தை நாம் புகட்டியே ஆகவேண்டும்’’ என்று சொல்லியபடி குதிரையில் வேகமாக ஏறினான் முடியன்.

``கொஞ்சம் பொறு. ஆபத்தை அறியச் சென்ற வீரர்கள் வரும் வரை தற்காப்புப் போரை நடத்துவோம். அது என்ன வகை ஆபத்து என அறிந்த பிறகு தாக்குதல் போரைத் தொடங்குவோம்’’ என்றான் தேக்கன்.

``பறம்புப்படையை முற்றுகையிடும் துணிவு இவனுக்கு எங்கிருந்து வந்தது? எண்ணிக்கையில் பெருங்கூட்டம் என்பதால்தானே ஏறிவந்து நிற்கிறான். பாறைகளை உருட்டும் பேய்க்காற்றைப்போல இவனின் படைவீரர்களின் தலைகளை உருட்டித் தள்ளுவோம்’’ என்று கத்தியபடி புறப்பட ஆயத்தமானான் முடியன்.

``அவசரப்படாதே... நில்’’ என்று கத்தினான் தேக்கன்.

``இல்லை. இப்போது பொறுமையுடன் தற்காப்புப் போரை நடத்தினால், நாம் அஞ்சிவிட்டோம் என எதிரி புரிந்துகொள்வான். நம்மீதான தாக்குதல் மிகக் கடுமையானதாக இருக்கும். நாம் இப்போது ஏறித் தாக்கினால் மட்டுமே அவனது வேகத்தையும் சீற்றத்தையும் முறித்துத்தள்ள முடியும். நாம் அஞ்சாதவர்களாக இருப்பது முக்கியமல்ல, அஞ்சாதவர்களாக இருக்கிறோம் எனக் காட்டிக்கொள்வது போர்க்களத்தில் மிக முக்கியம்’’ என்றான் முடியன்.

``உனது வேகத்தையும் தாக்குதலையும் நீ தீர்மானி. அவன் தீர்மானித்த ஒன்றை நோக்கி நகராதே’’ என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு, தனது கையில் இருக்கும் ஈட்டியை மண்ணில் அழுத்திக் குத்தியபடி முடியனின் கண்களை உற்றுப்பார்த்தான் தேக்கன்.

பறம்பு ஆசானின் பார்வையை அவ்வளவு எளிதில் யாரும் கடந்துவிட முடிவதில்லை. முடியனாக இருந்தாலும் மடங்கவேண்டியதோர் இடமுண்டு. இழுத்துப் பிடித்த குதிரையின் கடிவாளத்தை விரல்கள் விடுவித்தன. தேக்கனை இமைக்காமல் பார்த்துவிட்டுச் சொன்னான், ``சரி, நாகக்கரட்டிலிருந்து செய்தி வந்துசேரும் வரை தற்காப்புப் போரையே நடத்துகிறேன். நீங்கள் படையின் நடுப்பகுதிக்குச் செல்லுங்கள்.’’

முடியனின் சொல் கேட்டுப் பணிந்து நடந்தான் தேக்கன்.

தேக்கனின் சொல் கேட்டு விரைந்து சென்றான் முடியன்.

குளிக்கிழவன் சொன்ன பாறையின் உச்சியில் ஏறி நின்று பார்த்தான் பாரி. இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் நடுவில் யானைப்படை நிரம்பி நின்றது. தட்டியங்காட்டில் முழுப்படையையும் சூழ்ந்து தாக்கத் திட்டம் தீட்டியுள்ளனர். இன்னொருபுறம் ஆயுதங்களைப் போர்க் களத்துக்குக் கொண்டுசெல்ல விடாமல் தடுக்கும் உத்தியைச் செயல்படுத்துகின்றனர் என்று பாரி எண்ணிக்கொண்டிருக்கையில், காலம்பன் இறைஞ்சிக் கேட்கும் குரல் ஒலித்தது, ``நாங்கள் களமிறங்க இப்போதாவது அனுமதி வழங்கு பாரி.’’

``அனுமதிக்கிறேன். ஆனால், தட்டியங் காட்டுக்கல்ல, பள்ளத்தாக்குக்கு.’’

பெருமகிழ்வடைந்தான் காலம்பன். ``திரையர்குலம் எதிரிகளின் யானைப்படையை முழுமுற்றாக அழித்தொழிக்கும்’’ என்று சொல்லிய படி புறப்படப்போகிறவனைப் பார்த்துப் பாரி சொன்னான், ``நான் யானைப்படையை அழிக்கச் சொல்லவில்லையே.’’

அதிர்ந்து நின்றான் காலம்பன்.

``இப்போது அந்தப் படையை அழிக்கவேண்டிய தேவையேதும் நமக்கில்லை. இரலிமேட்டிலிருந்து தட்டியங்காட்டுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்ல வழிவகுத்தால் போதும். எனவே, யானைப் படையோடு நாம் போரிட வேண்டாம்.’’

``வேறென்ன செய்வது?’’ எனக் காலம்பன் கேட்க.

``அணங்கன் எங்கே?’’ என்றான் பாரி.

காலம்பனுக்குப் புரிந்தது. பின்புறம் இருந்த மலைக்குன்றைக் கைகாட்டி, ``பெருங்காட்டெருமை மந்தையோடு அந்தக் குன்றில் நிற்கிறான் அணங்கன்.’’ மேலே இருக்கும் காரமலை முகட்டைக் கைகாட்டி, ``இன்னொரு காட்டெருமை மந்தையோடு செதிலன் அந்த முகட்டில் நிற்கிறான். எதிரி வேறு திசையில் மேலேறிவிடக் கூடாது என்பதால் அங்கு நிற்கச் சொன்னேன்’’ என்றான்.

p83d_1535966771.jpg

``சரி. அணங்கனுக்கு உத்தரவிடு. காட்டெருமை மந்தையை இரலிமேட்டுக்கு நேராகக் கீழே இறக்கி, யானைப்படையை இருகூறாக்கு. இரலிமேட்டில் இருக்கும் ஆயுதங்களை நடுப்பகலுக்குள் தட்டியங்காட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்’’ என்றான்.

சொல்லிக்கொண்டிருக்கும்போதே காலம்பன் வெளிப்படுத்திய சீழ்க்கை ஓசை அணங்கன் இருக்கும் குன்றில் எதிரொலித்தது. கண நேரத்துக்குள் மறு ஓசை மேலே இருந்து கீழே வந்தது.

``மந்தை நகரத் தொடங்கிவிட்டது. நான் உடனடியாக எதிர்த்திசைக்குப் போகிறேன். அப்போதுதான் எந்த இடத்தில் மந்தையைக் கீழே இறக்குவது என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியும்’’ என்று சொன்ன காலம்பன், ``திமிறிப் பாயும் காட்டெருமை மந்தையைக் கண்டால் யானை தெறித்து ஓடும். எனவே, பள்ளத்தாக்கில் இறங்கிய வேகத்தில் படையைப் பிளந்து பாதையை உருவாக்கிவிடலாம். ஆனால், அதைவிட முக்கியம், காட்டெருமை மந்தையைக் கொண்டே நூற்றுக்கணக்கான யானைகளை மடக்கி நிறுத்திவிடலாம். பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் மிகவும் கோழைகள். காட்டெருமையின் கனைப்பொலியைக் கேட்டு அவை தேங்கி நின்றுவிடும். எந்தப் பாகனாலும் நகர்த்திச் செல்ல முடியாது. எண்ணற்ற யானைகளை நாம் வசப்படுத்திப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றான்.

``நம்மிடம்தான் போதுமான யானைகள் இருக்கின்றனவே. பிறகு நமக்கு எதற்கு யானைகள்?’’ என்றான் பாரி.

``தந்தமுத்தக்காரர்களிடம் நாற்பது, ஐம்பது யானைகள்தான் இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அவை போதுமா?’’

சின்னச் சிரிப்போடு பாரி சொன்னான், ``நீதான் பழக்கப்படுத்தப்பட்ட யானைகளை `கோழைகள்’ என்று சொல்லிவிட்டாயே! பிறகு எப்படி நம் படையில் அவற்றைச் சேர்க்க முடியும்?’’

என்ன சொல்வதென்று தெரியவில்லை, `சரி’ எனத் தலையாட்டியபடி எதிர்த்திசையில் உள்ள மலை நோக்கி ஓடத் தொடங்கினான் காலம்பன்.

ற்காப்புப் போரைத் தொடங்கினான் முடியன். வேந்தர்களின் படையோ முழுவேகத்தோடு தாக்குதலைத் தொடங்கியது. காலையில் பள்ளத்தாக்குக்குள் யானைப்படை முழுமையும் சென்றதை உறுதிப்படுத்திய பிறகுதான் தட்டியங்காட்டுப் போர்முனைக்கு வந்தான் கருங்கைவாணன். தனது படையின் தாக்கும் உத்தியை மூன்றாகப் பிரித்தான். நெற்றிப் பகுதியே வலிமையான தாக்குதலை முன்னெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதற்கு அவனே தலைமை ஏற்றான். வலக்கைப் பகுதியில் இருந்த படைப்பிரிவுக்குத் துடும்பனையும், இடக்கைப் பகுதியில் இருந்த படைப்பிரிவுக்கு உறுமன்கொடியையும் தலைமை ஏற்கச் செய்தான்.

கருங்கைவாணன் நெற்றிப்பகுதியின் முன்படையில் வந்து நின்றதும் முடியனும் அந்தத் திசையையே தேர்வுசெய்தான். வலக்கைப் பக்கம் இரவாதனையும், இடக்கைப் பக்கம் உதிரனையும் தலைமை ஏற்கச் செய்தான். தாக்குதல் தொடங்கிய கணமே வேந்தர்களின் படை ஆற்றலின் உச்சத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. `தட்டியங்காட்டுப் போரில் எதிரியை வீழ்த்த இன்றைய நாளே சிறந்தது!’ என உறுதியாக நினைத்தான் கருங்கைவாணன். நிறைந்த அவையில் தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு, தான் யார் என்பதை மெய்ப்பிக்கும் நாளாக இந்த நாளைக் கருதினான்.

கூட்டுப்படைத் தளபதி முன்களப்போருக்கு வருவது எந்தவிதத்திலும் அறிவுடைமையாகாது. ஆனால், தெரிந்தே இன்று முன்களத்துக்குக் கருங்கைவாணன் வந்துள்ளான். அவனது முக்கியமான இலக்கே விற்படைதான். பறம்பின் விற்படை இடக்கைப் பக்கம் நிற்கிறது. அந்தத் திசையில் வேந்தர்படைக்கு உறுமன்கொடியைத் தலைமையேற்கச் செய்தான். வேந்தர்படையின் மிக வலிமையான கவச அணிவீரர்களின் பத்துக்கும் மேற்பட்ட சேனைமுதலிகளை உறுமன்கொடிக்குக் கீழே நிறுத்தினான். பறம்பின் விற்படையினர் என்ன தாக்குதல் நடத்தினாலும் கவச அணிவீரர்களை ஒன்றும் செய்ய முடியாது. வேந்தர்படையைத் தடுக்க அம்புகளைப் பொழிந்து தள்ளுவர். நண்பகலுக்குள் அம்புக்கட்டுகள் தீர்ந்துபோக பறம்புப்படை கையறுநிலையில் நிற்கும். அதேநேரம் பறம்பின் விற்படையை எதிர்த்து வலிமையான தாக்குதல் நடக்கிறது என்பதை மற்றவர்கள் அறியாமல் இருக்க, கருங்கைவாணன் தானே நெற்றிப்பக்கம் உள்ள படைக்குத் தலைமையேற்றான். இயல்பாகவே கருங்கைவாணன் எந்தத் திசையில் வந்து நிற்கிறானோ அந்தத் திசையே கவனத்தை ஈர்க்கும்.

மூவேந்தர்களின் தலைமைத் தளபதிக்கு எதிராக முழு ஆற்றலையும் குவித்துப் பறம்புமக்கள் போர்புரிவர். ஆனால், பறம்பின் விற்படையினரின் மீது வேந்தர்படை நடத்திக்கொண்டிருக்கும் வலிமைமிகுந்த தாக்குதல் உடனடி கவனத்தைப் பெறாமல்போகும். போர்க்களத்தில் தாக்குதலின் போக்கு திசைமாற சில கணங்களே போதுமானவை. ஒருமுறை திசைமாறிவிட்டால் அதன்பிறகு பழைய நிலைமைக்குக் கொண்டுவர, பேரிழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

இவ்வளவு திட்டமிட்ட கருங்கைவாணன், பறம்பின் விற்படைத்தளபதி உதிரனைப் பற்றி அறிந்திருக்கவில்லை. வேந்தர்படையின் தாக்கும் ஆற்றலைப் பன்னிருவகையான வில்கொண்டு முறித்துத்தள்ளும் மாவீரன் அவன். இழுபடு நாண்கள், விடுபடு விசை, அலையலையாய் மேலெழும் அம்புகளால் காற்றையே கட்டுப்படுத்த முயல்பவன். போர் தொடங்கிய பிறகு வேந்தர்படையின் குதிரைகள் குடித்த நீரைவிட உதிரனின் விற்படையினருடைய அம்புகள் குடித்த குருதி அதிகம்.

வில்லே மலைமனிதர்களின் தலையாய ஆயுதம். காட்சியைப் பார்த்தலின் மூலமும், ஓசையைக் கேட்டலின் மூலமும் இலக்கை வீழ்த்தும் ஆற்றல்கொண்டவன் வில்லாளி மட்டுமே. பகழி அம்பும் விரி அம்பும் செலுத்தத் தெரிந்த விற்படையினரை எதிர்கொண்டு நிற்கும் படை இதுவரை இந்த மண்ணில் இல்லை. மூங்கிலம்பு பறவையைத் துளைக்கும். விரி அம்பு பனையைத் துளைக்கும். பகழி அம்பு பாறையைத் துளைக்கும். குறுங்காது முயலின் குருதி தோய்ந்த நாணிலிருந்து பறம்புவீரர்கள் விடுவிக்கும் பகழி அம்பை எதிர்கொள்ளும் கவசம் எவனிடமும் இல்லை.

ஆனாலும் பறம்பின் விற்படைக்கு முழு விசையோடு ஏறித்தாக்கும் அனுமதியை இன்றுவரை முடியன் வழங்கவில்லை. மூஞ்சலின் இருப்பிடம் மிகத்தொலைவில் உள்ளது. குதிரைப்படையால்தான் அவ்வளவு தொலைவுக்குச் சென்று மூஞ்சலைத் தாக்க முடியும். எனவே, இரவாதனுக்கே மூஞ்சலை நோக்கி முன்னேற அனுமதி கொடுக்கப்பட்டது. முன்னகர்ந்து வரும் எதிரிப்படையைத் தடுத்துப் பின்னுக்குத் தள்ளும் வேலை மட்டுமே உதிரனுக்கு வழங்கப்பட்டது. அப்படியிருந்தும் இதுவரையிலான போரில் அவன் நிகழ்த்திய அழிவை பறம்பின் வேறெந்தப் படைப்பிரிவும் நிகழ்த்தவில்லை.

வேந்தர்களின் இன்றைய போர் தனது விற்படைக்கு எதிரான உத்தியைக் கொண்டது என்பது உதிரனுக்குத் தெரியாது. ஆனால், எதிரிகள் பறம்புப்படையை முற்றுகையிட்டுத் தாக்கும் முயற்சி கடுஞ்சினத்தை உருவாக்கியிருந்தது. அவன் கண்ணெதிரே கவசம்பூண்ட பெரும்படையோடு உறுமன்கொடி வந்து கொண்டிருந்தான். தற்காப்புப் போரை மட்டுமே நடத்த வேண்டும் என்று முடியன் உத்தரவிட்டிருந்ததால், வேறு வழியில்லாமல் இடையிலக்கு ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினான் உதிரன்.

உதிரன் மட்டுமல்ல, பறம்பின் மற்ற இரு தளபதிகளும் இடையிலக்கு ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினர். கருவிகள் விடும் ஆயுதம், கைகள் விடும் ஆயுதம், கைகள் விடாத ஆயுதம் என்று போர் ஆயுதங்களை மூன்று வகையாகத்தான் எல்லோரும் பகுத்துள்ளனர். அம்பு, சிலை, ராயம், கொடிமரம், வல்வில், கவண், சக்கரம் ஆகியவை கருவிகள் விடும் ஆயுதங்கள். வேல், எஃகம், அயில், ஆலம், ஈட்டி உள்ளிட்டவை கைகள் விடும் ஆயுதங்கள். வாள், ஈர்வாள், கொடுவாள், மழு, நவியம், குறுந்தடி உள்ளிட்டவை கைகள் விடாத ஆயுதங்கள். ஒரு படை எந்தவிதமான ஆயுதத்தைப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே எதிரில் உள்ள படை தனது ஆயுதத்தைத் தேர்வுசெய்கிறது.

தட்டியங்காட்டுப் போரில் வேந்தர்படைக்குக் குழப்பம் ஏற்படும் இடமே இதுதான். கருவிகள் விடும் ஆயுதத்தைப் பொறுத்தவரை, அது மூன்று தன்மைகளால் அறியப்படுகிறது. தொலையிலக்கு ஆயுதங்கள், இடையிலக்கு ஆயுதங்கள், அண்மையிலக்கு ஆயுதங்கள். விற்படையைப் பொறுத்தவரை எந்த வகையான வில்லில் எந்த வகையான அம்பைப் பொருத்தி எய்தால், அந்த அம்பு எவ்வளவு தொலைவில் உள்ள இலக்கை அடையும் என்பதை, வீரக்கலையைப் பயிற்றுவிக்கும் ஆசான்கள் தங்களின் பயிற்சிக்கூடத்தில் மாணவர்களுக்குச் சொல்லித்தருவர். மூவேந்தர்களின் படையணியில் வந்து நிற்கும் வீரர்கள் எல்லோரும் வீரக்கலை ஆசான்களிடம் பயிற்சிபெற்ற மாணவர்களே.

பறம்பின் வில்லும், பூட்டப்பட்ட நாணும், அம்பின் தன்மையும் முற்றும் மாறுபட்டவை. அதாவது பறம்பினர் பயன்படுத்தும் இடையிலக்கு ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்கு வேந்தர்படையின் தொலையிலக்கு ஆயுதங்கள் செல்வதில்லை. எனவேதான், `தற்காத்துப் போர்புரி’ என்று முடியன் சொன்னதும் உதிரன் இடையிலக்கு அம்புகளை மட்டுமே பயன்படுத்தத் தனது அணிக்கு உத்தரவிட்டான். ஆனால், அந்தத் தொலைவே வேந்தர்களின் விற்படையால் அம்பெய்ய முடியாத தொலைவாக இருந்தது. அதனால் பறம்புப்படையினர் தொலையிலக்கு அம்புகளைப் பயன்படுத்துகின்றனர் என்று நினைத்த உறுமன்கொடி, எவ்வளவு தொலைவு முன்னேற முடியுமோ அவ்வளவு தொலைவுக்கு முன்னேறித் தாக்கச் சொல்லி உத்தரவிட்டான். இதனால், பறம்புப்படை தாக்கி அழிக்கும் பொறிக்குள் வந்து நின்று போரிட்டுக்கொண்டிருந்தது வேந்தர்படை.

p83f_1535966828.jpg

தற்காப்பை விடுத்து, தொலையிலக்கு அம்புகளைப் பயன்படுத்த முடியன் எப்போது உத்தரவிடுவான் என்று ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்திருந்தான் உதிரன். அதே தவிப்போடு இருந்தான் இரவாதன்.

நாகக்கரட்டுக்குச் செய்தி கேட்கப் போன வீரன் திரும்பி வந்து முடியனிடம் நிலைமையைச் சொன்னான். ``காட்டெருமைகள் பாதை வகுத்த பிறகுதான் ஆயுதங்களைத் தட்டியங்காட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்க முடியும். அதற்கு நண்பகலைக் கடந்து இருபொழுதாகலாம். அதுவரை இருப்பதைக் கொண்டு எதிரிகளைச் சமாளியுங்கள்’’ என்று வாரிக்கையன் சொல்லியதைக் கூறினான்.

``நிலைமையைத் தெரிந்த பிறகு முடிவெடுப்போம்’’ என்று தேக்கன் சொன்னது எவ்வளவு சரியானது என்று உணரும்போதே, முடியனுக்கு அடுத்த கவலை தொடங்கியது. நண்பகல் கடந்து இரண்டு பொழுது வரை தற்காப்புப் போரில் இழப்புகள் இல்லாமல் நீடிப்பது மிகவும் கடினமான ஒன்று. எனவே, வேறு வழியென்ன எனச் சிந்தித்தான்.

உதிரனையும் இரவாதனையும் தேக்கன் இருக்கும் நடுப்பகுதிக்கு வரச்சொல்லிச் செய்தி அனுப்பிவிட்டு, தானும் பின்னகர்ந்தான். பறம்பின் முன்கள வீரர்கள் ஆவேசத்தோடு போரிட்டு வேந்தர்படையைச் சமாளித்துக் கொண்டிருந்தனர்.

``போர் தொடங்கிப் பத்து நாழிகைகூட ஆகவில்லை. ஆனால், இன்னும் பத்து நாழிகைக்குமேல் நிலைமையைச் சமாளித்தாக வேண்டிய நிலை. அது முடியுமா என்பது பெரும் கேள்வியாக எழுந்தது. வேந்தர்படையின் ஒட்டுமொத்த வீரர்களும் இன்றைய போரில் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றனர். காற்றில் இடைவெளியின்றி அம்புகள் பறந்துகொண்டிருக்கின்றன. பறம்புப்படை, முடிந்தளவுக்குச் சமாளித்துப் போரிட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், புதிதாக ஆயுதங்கள் வந்துசேராத நிலையில், இருப்பதைக் குறைத்துப் பயன்படுத்தும் சூழல் உருவானால் வேந்தர்படையின் கை ஓங்கும் நிலை உடனடியாக உருவாகும். அது இழப்புகளை அதிகப்படுத்தும் வாய்ப்புண்டு. இன்னும் பத்து நாழிகைக்கு இதே வேகத்தோடு போரிட நம்மிடம் ஆயுதங்கள் இல்லை. வேறென்ன செய்வது?’’ என்று ஆலோசனை கேட்டான் முடியன்.

கட்டளைகளைக் கணநேரத்துக்குள் நிறைவேற்றும் பயிற்சிகொண்ட உதிரனும் இரவாதனும் களத்தில் மேலெழும் கேள்விக்குமுன் திகைத்து நின்றனர். குருதி குடிக்கும் வெறி மட்டுமே அவர்களின் கண்களில் கனன்றுகொண்டிருந்தது. எல்லாவற்றுக்குமான விடையைச் சிந்தித்துவைத்திருந்தான் தேக்கன். படையின் நடுப்பகுதியில் நின்று போர்க்களத்தின் மொத்தச் செயல்பாட்டையும் கவனித்த அவன் சொன்னான், ``நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் இன்னும் ஐந்துபொழுதுக்குமேல் தாங்காது. எனவே, வேந்தர்படையை எதிர்த்தாக்குதல் நடத்தி நீண்டநேரம் சமாளிக்க முடியாது.’’

``வேறென்ன செய்வது?’’ என விரைந்து கேட்டான் இரவாதன்.

``அவர்கள் தாக்குதல் வேகத்தைக் குறைத்தால் மட்டுமே நம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும்.’’

``அவர்களின் மீது வலிமையான எதிர்த்தாக்குதல் செய்ய, போதிய ஆயுதங்கள் இல்லை. பிறகு எப்படி அதைச் செய்வது?’’ எனக் கேட்டான் உதிரன்.

``அவர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதன் மூலமும், குழப்பத்தை உருவாக்குவதன் மூலமும் அவர்களின் வேகத்தை மட்டுப்படுத்த முடியும்.’’

``என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டான் முடியன்.

``காலையில் நீ சொன்னதை இப்போது செய்ய வேண்டும்.’’

மூவரும் கூர்ந்து கவனிக்க, தேக்கன் சொன்னான், ``இரவாதனின் குதிரைப்படைக்கு, முன்னேறித் தாக்கும் அனுமதியைக் கொடு. சூழ்ந்திருக்கும் வேந்தர்படையின் எந்தவோர் இடத்தையும் பிளந்துகொண்டு அவனால் வெளியேற முடியும். நமது குதிரைப்படையின் வேகமும் வீச்சும் எதிரிகளின் கனவிலும் நடுக்கத்தை உருவாக்கக்கூடியவை. உதிரனின் விற்படை தற்காத்துப் போரிடட்டும். நெற்றியில் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நீ, படையைப் பின்வாங்கச்செய்து நான் இருக்கும் இந்த இடம் வரை வந்துவிடு. உன்னை எதிர்த்துப் போரிடும் கருங்கைவாணனின் அணி வேகமாக முன்னேறி வரும். அப்போது நீ இந்த இடம் விட்டு அகன்றுவிடு. நானும் ஈங்கையனும் இங்கு தலைமையேற்று நின்றுகொள்கிறோம். அவன் இங்கு வந்துசேரும் நேரம், இரவாதனின் குதிரைப்படை எதிரிகளின் முற்றுகையை உடைத்து மூஞ்சலில் போய் தாக்குதலைத் தொடக்கியிருக்கும். இங்கு வந்துசேரும் கருங்கைவாணன் என்னைப் பார்க்கும்போதே `பின்னணியில் மூஞ்சலைத் தாக்கப் பெருந்திட்டம் நடந்துகொண்டிருக்கிறது’ என நினைப்பான். நான் கொடுக்கும் ஓசையின் மூலம் அவன் அதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வான். அவனது கவனம் முழுவதும் மூஞ்சலை நோக்கித் திரும்பும். அந்நிலையில் நம் படைகள் எல்லா திசைகளிலிருந்தும் கூவல் ஒலிகளை எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அவனது குழப்பம் பலமடங்கு அதிகமாகும். அந்நிலையில் தொடர்ந்து தாக்கி முன்னேற படைகளை அனுமதிக்க மாட்டான். தற்காப்புப் போருக்கு மாறுவான் அல்லது சற்றே பின்னேறி நிற்பான். அவனுக்குள் ஏற்படும் குழப்பம் மூஞ்சலில் நடக்கும் தாக்குதலின் தன்மையை முழுமையாக அறிந்த பிறகுதான் நீங்கும். அந்தக் கால அளவு போதும், நாம் நிலைமையைச் சமாளிக்கவும் ஆயுதங்கள் வந்துசேரவும்’’ என்றான் தேக்கன்.

தேக்கன் சொல்வதைப் பணிந்துகேட்டான் முடியன்.

தேக்கன் சொல்லியதும் பாய்ந்து விரைந்தனர் இரவாதனும் உதிரனும்.

ற்களும் பாறைகளும் உருண்டன. சிறு மரங்களும் கொப்புகளும் உடைந்தன. கனைப்பின் பேரொலியால் காடே நடுங்குவதுபோல் இருந்தது. இரலிமேட்டில் இருந்தவர்கள் இடதுபக்கமாகத் திரும்பிப் பார்த்தனர். மூக்கு விடைத்துக் கனைத்தபடி பள்ளத்தாக்குக்குள் பாய்ந்து இறங்கின காட்டெருமைகள். இரும்பினும் கடுமைகொண்ட அவற்றின் நெற்றி யானைகளின் ஆழ்நினைவுகளுக்குள் பதிந்தவை. தலையில் திருகி நீண்டிருக்கும் பெருங்கொம்புகளை ஆட்டியபடி மந்தையை வழிநடத்தும் காட்டெருமை சீறிப்பாய்ந்தது. அணங்கன், அதனருகே ஒலிக்குறிப்புகளைக் கொடுத்தபடி ஓடிக்கொண்டிருந்தான்.

உள்காட்டிலிருந்து ஒற்றைக் காட்டெருமை வருவதுதான் முதலில் தெரிந்தது. பின்னால் அணங்கன் ஓடிக்கொண்டிருப்பதைக் கபிலர் மட்டும் கவனித்தார். சிறிது நேரத்தில் பெருமந்தை ஒன்று கீழ்நோக்கி இறங்கியது. காட்டையே சரித்து இறங்கும் அதன் வேகத்தைப் பார்த்தபடி இருந்த முதுவேலர், சட்டெனத் திரும்பிப் பள்ளத்தாக்கைப் பார்த்தார். அடர்த்தியாக அணிவகுத்து நின்றுகொண்டிருந்த யானைகள், முன்னும் பின்னுமாக மிரண்டு ஓடத்தொடங்கின.

யானைப்பாகர்களும் மேலே இருக்கும் போர்வீரர்களும் ஏதேதோ செய்தனர். ஆனால், கண நேரத்துக்குள் யானைகளைக் காட்டின் நினைவுகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. இறுகிய பாறை போன்ற உடலும், இரும்பென முன் நெற்றியும், இணையில்லாத கொம்புகளும் கொண்ட காட்டெருமைகள் தாவிக்குதித்து வரும்போது, தளர்ந்த சதையும் தொங்கும் தோலும் கொண்ட யானைகள் தம் தந்தங்களை மட்டும் நம்பி நின்றுவிட முடியாது. கனைப்பொலியைக் காதில் கேட்ட கணத்திலேயே பிளிறல் தொடங்கியது. பிளிறல் ஓசையால் காடே கலங்கியது. நாலாபுறமும் பாகன்களும் வீரர்களும் தூக்கிவீசப்பட அணங்கன் பள்ளத்தாக்கின் பாதித்தொலைவில் போய்க்கொண்டிருந்தான்.

இரலிமேட்டிலிருந்து முதுவேலரும் கபிலரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

எறும்புக்கூட்டத்துக்கு இடையே இழுத்துக் கோடுபோடுவதுபோல, எதிர்கொண்டு நிற்க எதுவும் இல்லாமல் பிளந்து உள்நுழைந்துகொண்டிருந்தன காட்டெருமைகள். குகைக்குள் இருக்கும் ஆயுதங்களைத் திரையர்கள் தூக்கிச் செல்லத் தொடங்கினர். பெருவண்டிகளில் ஏற்றும் ஆயுதங்களை ஒவ்வொரு வீரனும் தனித்தனியே சுமந்து சென்றான். காட்டெருமை மந்தை பாதித்தொலைவு உள்ளே போனபோது, காலம்பனும் அவன் தோழர்களும் மந்தைக்குப் பின்னே வேகமாக ஓடினர். இவர்கள் அங்கு எதற்கு ஓடுகின்றனர் என்று கபிலரும் முதுவேலரும் உற்றுப்பார்த்தனர்.

முன்னோடிய காலம்பன் காட்டெருமை ஒன்றின் பின்கால்நரம்பை நோக்கி ஓங்கி அடித்தான். அந்தக் காட்டெருமை பெருங்கனைப்பொலியோடு அவ்விடமே நின்று முன்னும் பின்னுமாகச் சுற்றியது. இதேபோல அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காட்டெருமைகளின் கால்நரம்பை அடித்து, பத்துக்கும் மேற்பட்டவற்றை வழியெங்கும் நிறுத்தினர். இருபக்கமும் தெறித்து ஓடிய யானைகளுள் எதுவும் இனி இந்தப் பக்கம் தலை திருப்பாது. திரையர்கள், ஆயுதங்களின் பெருஞ்சுமையைத் தூக்கிக்கொண்டு நின்று விளையாடும் காட்டெருமைகளுக்கு நடுவில் ஓடிக்கொண்டிருந்தனர்.

தேக்கனின் திட்டம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இரவாதன், எதிரிகளைப் பிளந்து மூஞ்சலை அடைந்தான். கருங்கைவாணன் முன்னேறி வந்து தேக்கனை அடைந்தான். களமெங்கும் கூவல்குடியினரின் குறிப்போசை மேலெழுந்தது. பெருங்குழப்பத்தோடு கருங்கைவாணன் நிற்க, அவன் கண்களுக்குத் தெரியாத திசையில் நின்றுகொண்டிருந்த முடியன் தற்செயலாக நாகக்கரட்டுப் பக்கம் திரும்பினான். கரட்டின் உச்சிவிளிம்பில் காட்டெருமை ஒன்று குதித்து ஓடியது.

பார்த்த கணத்தில் முன்னேறித் தாக்கும் பேரோசையை வெளிப்படுத்தினான் முடியன். அதற்காகவே காத்திருந்த உதிரனின் உத்தரவு இமைப்பொழுது இடைவெளியின்றி வெளிவந்தது.

பாறைகளைத் துளைக்கும் பகழி அம்புகள் காற்றெங்கும் சீறத் தொடங்கின.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,


p83g_1535966865.jpg

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வேள்பாரி: 50 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்த புனைகதைத் தொடர்

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்

ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் சரித்திர புனைகதைத் தொடரான வேள்பாரி, 100வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் புனைகதைத் தொடரொன்று இத்தனை வாரங்கள் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

வேள்பாரி

வேள்பாரி தொடரின் முதல் அத்தியாயம் ஆனந்த விகடனின் 2016ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழில் வெளியானது. வியாழக்கிழமையன்று வெளியாகியுள்ள இதழில் இதன் நூறாவது அத்தியாயம் வந்துள்ளது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் வாசகர்களை இணைக்கும் விழா ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"இந்தத் தொடரை முதலில் எழுத ஆரம்பித்தபோது 50-55 வாரங்கள் வரைதான் வருமென நினைத்தேன். ஆனால், 50 வாரங்களைத் தாண்டியபோது பாதிக் கதைகூட முடியவில்லை. வாசகர்களின் வரவேற்பும் இருந்ததால், விகடனிலும் தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தினார்கள். இப்போது 100வது வாரத்தை எட்டியுள்ளது" என்கிறார் வேள்பாரி தொடரின் ஆசிரியரும் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன்.

இந்தத் தொடர் ஒரு வருடத்தை எட்டிய நிலையில், இதற்கென மிகப் பெரிய வாசகர் வட்டம் உருவாகியிருக்கிறது. வாராவாரம் வியாழக்கிழமையன்று இந்தத் தொடரைப் படித்துவிட்டு சமூகவலைதளங்களில் எழுதவும் ஆரம்பித்தார்கள்.

"ஒவ்வொரு வாரமும் விகடன் இதழை வாங்கியதும் வேள்பாரி தொடரைத்தான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் இந்தத் தொடர் எனக்கு ஈழப்போரை நினைவூட்டியது. தற்போது சூழலுக்கான போராட்டங்களை இந்தத் தொடர் எனக்கு நினைவுபடுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், எத்தனை தமிழ்ப் பெயர்களை இந்தத் தொடர் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. தவிர, சங்க காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களையும் இந்தத் தொடர் மிகச் சுவையான முறையில் சொல்லிவருகிறது. யார் வீட்டில் ஆனந்த விகடன் இதழைப் பார்த்தாலும் அவர்கள் வேள்பாரி படிக்கிறார்களா என்றுதான் முதலில் கேட்பேன்" என்கிறார் இந்தத் தொடரின் தீவிர வாசக்களில் ஒருவரான இலங்கை வேந்தன்.

வேள்பாரி

வேள்பாரியின் கதை இதுதான்: மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்துவரும் 14 இனக் குழுக்களுக்கு தலைமையாக வேளிர் குலம். அதன் தலைவன் பாரி. இவனது ராஜ்ஜியம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பறம்பு மலையில் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் மூவேந்தர்கள் சமவெளியில் ஆட்சி செய்கிறார்கள். வேளிர் குலத்தின் வசம் உள்ள தேவவாக்கு விலங்கை மூவேந்தர்களில் ஒருவனான குலசேகர பாண்டியன் அடைய நினைக்கிறான்.

அதில் அவனது துறைமுகம் தீக்கிரையாகிறது. இதனால், சேர, சோழ மன்னர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு, பறம்பு மலையை முற்றுகையிடுகிறான் பாண்டியன். பாரியை மலையைவிட்டு கீழே வரச்செய்ய பாரியின் நண்பனான நீலனையும் பிடித்துவைக்கிறான். பாரிக்கு எதிராக மூவேந்தர்களும் நடத்தும் இந்தப் போரில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதுதான் இறுதி அத்தியாயங்களில் சொல்லப்படுகிறது.

சு. வெங்கடேசன் Image captionசு. வெங்கடேசன்

"தமிழ்நாட்டின் வாழ்வாதாரச் சிக்கல்களை அந்த காலகட்ட மனிதர்களும் மன்னர்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை வேள்பாரியிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். மூவேந்தர்கள் வணிகர்களுக்கு ஆதாரவாக இயற்கை வளங்களைப் பற்றிக் கவலைப் படாமல் இருந்த நிலையில், ஓர் இனக் குழுத் தலைவனான பாரி எப்படி இயற்கையைக் காப்பாற்ற எப்படி போராடினான் என்பதுதான் மையப்புள்ளி. அதற்காகவே இந்தத் தொடரை வாராவாரம் படித்துவந்தேன்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையின் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை என கதையின் துவக்கத்தில் ஆசிரியர் வெங்கடேசன் கூறியதைச் சுட்டிக்காட்டும் சுந்தர்ராஜன் அதை அற்புதமாக விவரித்துச் சென்றதுதான் கதையின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

இந்தத் தொடரில் வரும் போர்க் காட்சிகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. "போர்க்காட்சிகள் என்றால் புராணங்களில் வரும் மந்திர - தந்திரக் காட்சி பற்றிய பதிவுகள் மட்டுமே இங்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது. நமது வீரக்கலைகள் பற்றி இங்கு முறையாக தொகுக்கப்படவில்லை."

வேள்பாரி

"கோட்டைகளிலும் அரண்மனைகளிலும் எத்தனை விதமான பொறிகள் இருந்தன என்பதை சிலப்பதிகாரம் பட்டியலிடுகிறது. எதிரிகளை தாக்குவதற்க்கு இத்தனை வகையான பொறிகள் இருந்திருக்குமேயானால் மற்ற ஆயுதங்கள் எவ்வளவு இருந்திருக்கும்? நமது பழந்தமிழ் இலக்கியங்களிலும் வாய்மொழி மரபுகளிலும் ஆயுதங்களைப் பற்றியும், போர்க்கருவிகள் பற்றியும், போருக்கான வேலைப்பாடுகள் பற்றியும் வீரக்கலைகள் பயிற்றுவிக்கும் முறைபற்றியும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டேன். அதனடிப்படையில்தான் இப்போர்க்களக் காட்சியை உருவாக்கினேன்" என்கிறார் சு. வெங்கடேசன்.

"ஆனந்த விகடனின் பாரம்பரியத்தில் தொடர்கதைகள் என்பது ஒரு முக்கியமான அம்சம். அதை மிகப் புதுமையான அம்சங்களோடும் வெளியிடுவோம். 30களிலேயே தியாக பூமி, அதன் திரைவடிவத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களோடு வெளியிட்டோம். இந்த காலகட்டத்தில் தொடர்கள் என்பது முழுமையாக தொலைக்காட்சிக்கு சென்றுவிட்டது. ஆகவே இந்த காலகட்டத்தில் சமூக தொடர்களைவிட சரித்திரத் தொடருக்குத்தான் புத்தகத்தில் வாய்ப்பிருக்கிறது."

"இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சு. வெங்கடேசனிடம் பேசினோம். அப்படித்தான் இந்தத் தொடருக்கான ஆரம்பம் உருவானது" என பிபிசியிடம் தெரிவித்தார் விகடன் குழுமத்தின் தலைவரான பா.ஸ்ரீநிவாசன்.

வேள்பாரி தொடர் துவங்கியதும் வாசகர்கள் அதில் மூழ்கிப்போய்விட்டனர். இப்போது மூவேந்தர்களும் பாரியை முற்றுகையிட்டிருக்கும் நிலையில், பாரிக்கு மட்டும் ஏதாவது ஆனால், நடப்பதே வேறு என ஒரு வாசகர் மிரட்டியிருக்கிறார். #savevelpari என பிரசாரம் செய்யப்போவதாகவும் சிலர் கூறுகிறார்கள். இதெல்லாம் அந்தத் தொடரின் அமோகமான வெற்றியைக் காட்டுகிறது என்கிறார் ஸ்ரீநிவாசன்.

பா. ஸ்ரீநிவாசன்

வேள்பாரி தொடருக்கு மணியம் செல்வன் வரைந்துவரும் ஓவியங்களும் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. "நான் வரைய ஆரம்பித்து 50 ஆண்டுகளாகின்றன. பொதுவாக நான் சமூக நாவல்களைவிட வரலாற்றுப் புனைவுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பேன். ஏனென்றால் அவை சித்திரங்களுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கக்கூடியவை. வேள்பாரியைப் பொறுத்தவரை, கதை நடக்கும் நிலப்பகுதி மலையும் மலைசார்ந்த இடமுமாக இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எழுத்தில் மிகச் சிறப்பாக அந்தப் பகுதியைச் சொன்னதன் மூலம் சு. வெங்கடேசன் ஒரு சவாலை எனக்கு ஏற்படுத்தினார். அந்த சவாலை நான் எதிர்கொண்டேன். அதுதான் இந்த வரவேற்பிற்குக் காரணம்" என பிபிசியிடம் கூறினார் மணியம் செல்வன்.

ஆனந்த விகடன் இதழில் இதற்கு முன்பாக தில்லானா மோகனாம்பாள் தொடர் 100 வாரங்களுக்கு மேல் வெளியானது. இதற்குப் பிறகு சாண்டில்யனின் சில கதைகள் நூறு வாரங்களுக்கு மேலாக வெளியாகியுள்ளன. ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் வார இதழ் ஒன்றில் தொடர்கதை ஒன்று 100 வாரங்களுக்கு நீள்வது இதுவே முதல் முறையாகும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-45517724

Link to comment
Share on other sites

``வேள்பாரிக்காக வரலாற்றை மீறுவேன்!" - வாசகர்களை நெகிழவைத்த சு.வெங்கடேசன்

1065_thumb.jpg

 

 

``இதுதான் இலக்கியத்தின் வெற்றி. பாரி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இறந்து விட்டார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அறவழிப்பட்ட ஒரு சிந்தனையின் அடையாளமாக ஒரு கதாபாத்திரம் மனதில் நின்றுவிட்டால், அதைச் சாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.’’

``வேள்பாரிக்காக வரலாற்றை மீறுவேன்!
 

ஆனந்த விகடனில் வெளிவரும் `வீரயுக நாயகன் வேள்பாரி’ நூறு அத்தியாயங்களைக் கடந்திருக்கிறது. இரண்டு ஸ்க்ரோல்களுக்கு மேல் நீளும் எந்த எழுத்தையும் வாசிக்கத் தயங்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பத்துப் பக்கங்களுக்கு மேல் விரியும் ஒரு தொடருக்கு,  உரிய மரியாதை கொடுத்து கெளரவித்திருக்கிறது தமிழ்ச் சமூகம். இதைக் கொண்டாடும் விதமாக நடந்த விழாவில் `வேள்பாரியின் நாயகன்’ எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசியது…

வேள்பாரி

ஏன் வேள்பாரியை எழுதினேன். இந்தக் கதாபாத்திரத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன். பலரும் எழுப்பும் கேள்வி இது. தமிழின் முதல் மகாகவி கபிலர். சங்க இலக்கியத்தில் 235 பாடல்களைப் பாடியவர், அவர். இந்தியாவின் முதல் பெரும் வள்ளல், வேள்பாரி. முதல் ஏழு வள்ளல்கள், இடையேழு வள்ளல்கள், கடையேழு வள்ளல்கள் என்றுதான் நம் இலக்கியங்களில் இருக்கிறது. கடையேழு வள்ளல்களில்தான் பாரி, ஓரி, அதியமான் என ஏழு தமிழ் வள்ளல்கள் வருகிறார்கள். இதெல்லாம் பின்னாள் எழுதப்பட்ட புரட்டுகளில் ஒன்று. முதல் ஏழு வள்ளல்கள் யார் என்று பார்த்தால், அதுவெல்லாம் இதிகாசங்கள், புராணங்களில் வருகின்ற கதாபாத்திரங்கள். வரலாற்று மாந்தர்கள் அல்ல. தமிழ் இலக்கியத்தில் இருக்கிற வள்ளல்கள் மட்டுமே வரலாற்று மாந்தர்கள்.

 

 

பாரி வரலாற்று நாயகன். அவர் வாழ்ந்ததற்கான சுவடு, தடயம் தமிழர்களின் தொல் மரபுகளில் இருக்கிறது; நாட்டார் வழக்காற்றுகளில் இருக்கிறது; கல்வெட்டுகளில் இருக்கிறது. கபிலர் உயிர்நீத்த `கபிலக்கல்‛ பெண்ணையாற்றின் ஆற்றுக்கு நடுவே இன்றும் இருக்கிறது. தமிழின் முதல் மகா கவியையும், தமிழ்ப் பெரு நிலத்தின் முதல் வள்ளலையும் பாடாமல், ஒரு பாட்டாளானக, ஒரு எழுத்தாளனாக இருந்து என்ன பயன் என்ற பெரும் கேள்வி எழுந்தது.

வேள்பாரி

தமிழ் இலக்கியத்தில் அழிந்துபோன பட்டியல் நிறைய இருக்கிறது. அதில் ஒரு நூல் கபிலம். கபிலர் எழுதிய நூல். அது நமக்குக் கிடைக்கவில்லை. கபிலர் எதை எழுதியிருப்பார். கபிலர் எழுதிய 234 பாடல்களும் இருக்கிறபோது, கபிலம் மட்டும் ஏன் அழிந்துபோனது. ஒருவேளை இது பாரி என்ற மாமனிதரைப் பற்றிய காவியமாக இருக்கலாம். ஏனென்றால், அதற்குப் பின் ஆயிரம் ஆண்டுகள் மூவேந்தர்கள்தாம் தமிழ் நிலத்தை ஆண்டார்கள். எனவே, பாரியின் நினைவு வந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்திருப்பார்கள். எனேவே கபிலம் அழிந்துபோனதில் ஆச்சர்யமில்லை. ஒருவேளை கபிலர் எழுதிய கபிலம் என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்ததன் விளைவே இன்று, `வேள்பாரி’யாக வந்திருக்கிறது.

இன்றைக்கு உலகின் மிகப்பெரிய தொன்மங்கள், மிகப்பெரிய நாயகர்கள் என்று ஐரோப்பிய உலகம் கொண்டாடும் பல கதாபாத்திரங்கள், வீரயுக காலத்தில் எழுதப்பட்ட கிரேக்க காப்பியங்களில் உருவான கதாபாத்திரங்கள். அதே வீரயுக காலத்தில் தமிழகத்திலே எழுதப்பட்ட கதாபாத்திரம்தான் வேள்பாரி.

வேள்பாரி - ம.செ ஓவியங்கள்

இதை எடுத்ததில் எந்தச் சவாலும் இல்லை. எழுதத் தொடங்கியதும்தான் பெரும் சவால் காத்திருந்தது. வேள்பாரியை எழுத வேண்டும் என்ற எண்ணம் ஐந்து ஆண்டுகளாக இருந்தது. ஆனால், ஆனந்த விகடனில் முதல் அத்தியாயம் வந்தபோது என் கையில் இருந்தது நான்கு அத்தியாயங்கள்தாம்.

செவ்வியல் இலக்கியங்களைத் தங்கள் தாய்மொழியில் படிக்கின்ற பாக்கியம் இந்த உலகத்தில் மூன்றே மூன்று சமூகத்துக்குத்தான் கிடைத்திருக்கிறது. அது கிரேக்கச் சமூகம், சீனச் சமூகம், தமிழ்ச் மூகம். இவ்வளவு பெரிய செவ்வியல் இலக்கியத்தை, சங்க இலக்கியத்தைப் பற்றிய நவீன ஆய்வுகள் இன்னும் விரிவாகப் பேசுகின்றன. 10 ஆயிரம் ஆண்டு நினைவுகளின் தொகுப்பு, நம் சங்க இலக்கியங்கள். அவ்வளவு பெரிய சங்க இலக்கியத்தை நவீன நாவலில் கொண்டு வருகிறபோது, மிகப்பெரும் உழைப்பும், ஆய்வும் தேவைப்படுகிறது.  மற்ற உலக இலக்கியங்கள் எல்லாம், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலைத்தான் பிரதானமாகப் பாடியிருக்கிறது. சங்க இலக்கியங்கள் மட்டுமே இயற்கையை மையப்படுத்தி பிரதானமாகப் பாடியிருக்கிறது.

நான் யார் என்பதை ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. ஆனால், `மோப்பக் குழையும் அனிச்சம்’, `சிறுகன் யானை’, `பெருங்காது முயல்…’ என ஒவ்வோர் உயிரினத்தைப் பற்றியும் ஒரு சொல், இரண்டு சொல்லில் கடத்தியிருப்பது ஆச்சர்யம். வெற்றிலை என்ற தாவரத்தைக் கண்டுபிடித்த குடி, கண்டுபிடித்த கூட்டம் யார் என்ற குறிப்பு சங்க இலக்கியத்தில் வருகிறது. உலகின் வேறு எந்த இலக்கியத்திலும் ஒரு தாவரத்தைக் கண்டுபிடித்தவர்கள் இவர்கள் என்ற குறிப்பு இல்லை. அவ்வளவு நுட்பமானது. நூறு பூக்களின் பட்டியலைப் போடுகிறார் கபிலர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வேறு எந்த இலக்கியத்தில் இவ்வளவு பெரிய தாவரப் பட்டியல் இருக்கிறது?

வேள்பாரி - ம.செ ஓவியங்கள்

இலக்கியத்தைப் பற்றி, இயற்கையைப் பற்றி இவ்வளவு அறிவுகொண்ட, இவ்வளவு நுட்பமான காலத்தை எழுதுகிறபோது அதற்கு குறைந்தபட்ச நியாயமாவது செய்ய வேண்டும் என்ற, அந்த அழுத்தம் என்னை விடாது ஓடவைத்தது; விழிக்க விழிக்க எழுத வைத்தது. அதுதான் உண்மை. இது வரலாற்றுக்குச் செய்கிற மிக முக்கியமான நியாயம்.

வேள்பாரி நூறு அத்தியாயங்கள் கடந்ததை இன்று `விகடன்’ கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நாவல் மூலம் இரண்டு முக்கியமான விஷயம் தமிழில் நடந்திருக்கிறது. தமிழ் இலக்கியத்தில்தான், தமிழ்ப் பத்திரிகைகளில்தான் எங்கும் இல்லாத ஒரு நிலை இருக்கிறது. அது, தீவிர இலக்கியம் வெகுஜன ரசனைக்குள் வராது; அல்லது பல லட்சம் பேர் படிக்கிற ஒன்று இலக்கியமாக இருக்காது என்று… இந்தப் பிரிவு சுமார் 30 ஆண்டுகளாக இருக்கிறது. கேரளாவில் அது இல்லை. மலையாளத்தில் இன்றைக்கும் மிகச்சிறந்த நாவல் எது என்னவென்று பார்த்தால், அது பத்திரிகைகளில் தொடராக வந்த நாவலாகத்தான் இருக்கும். தமிழில்தான் நவீன, வெகுஜன இலக்கியம் என்பது தனி, தீவிர இலக்கியம் என்பது தனி என்றிருக்கிறது. இந்தச் சூழலில், நவீன இலக்கியத்தின் அனைத்து வடிவங்களையும் வெகுஜன பரப்பில் கொடுக்கும்போது வாசகர்கள் அதைத் தோளில் வைத்துக் கொண்டாடுவார்கள் என்பதற்கு இந்த வேள்பாரி சாட்சி. இதை விட சிறந்த அடையாளம் வேறு என்ன வேண்டும். இந்தப் பிரிவு போலியானது; அல்லது பதற்றமானது; அல்லது தகுதியற்றது. அடக்க முடியாத குதிரை ஒரு வீரனுக்கு இருக்க வாய்ப்பே கிடையாது. எனவே, மிக முக்கியமான மாற்றம் இங்கு நிகழ்ந்திருக்கிறது.

ஏன் இலக்கியம் படிக்க வேண்டும். இலக்கியம் என்ன செய்யும். அதை இந்த வேள்பாரியின் வழியாக நம் முன் கண் முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, மறைந்துபோன ஒரு மனிதனைப் பற்றிய கதை இது. ஆனால், `பாரியைக் கொன்றாதிங்க சார்…’ என்ற குரல் எல்லா இடத்திலும் கேட்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது.

வேள்பாரி

இருபது நாள்களுக்கு முன்னால் ஒரு சம்பவம். என் குடும்பத்தினருடன் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எங்களுக்கு அருகில் இருந்த ஒரு 70 வயது மதிக்கத்தக்க முதியவர், காபி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். என்னைக் குறுகுறுவெனப் பார்த்தார். காபி வந்து விட்டது. சூடாறி விடும். இருந்தாலும் பரவாயில்லை என என் அருகில் வந்தார். அவர் வருவதைப் பார்த்ததும் எழுந்து நின்றேன். அவர் என்னிடம் `நீங்க எழுத்தாளர் வெங்கடேசன்தானே?’ எனக் கேட்டார். `ஆமாங்க ஐயா’ என்றேன். அவர் அடுத்த வார்த்தை என்ன சொல்ல வேண்டும்? `நான் உங்களைப் பார்த்திருக்கிறேன். காவல் கோட்டம் படித்திருக்கிறேன். அல்லது த.மு.எ.ச கூட்டத்துல கேட்டிருக்கிறேன்’ என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால், அவர் சொன்ன அடுத்த வார்த்தை… `பாரியைக் கொன்றாதீங்க…!’ - சொல்லிவிட்டு, என் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் சென்று விட்டார். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். அவர் ஒரு முதியவர். கையெடுத்தும் கும்பிடுகிறார். எல்லா இடங்களிலும் இதேதான். வீட்டில் கூட டைப் பண்ண முடியவில்லை. இந்தப் பக்கம் என் மனைவி, அந்தப் பக்கம் என் மகள். `தேக்கனுக்கு மட்டும் ஏதாவது நடந்துச்சு…’ என எச்சரிக்கிறார்கள்… `நான் மூவேந்தர் ஆள்’ என்று சொல்லும் ஒரு கூட்டமும் இருக்கிறது.

இதுதான் இலக்கியத்தின் வெற்றி. பாரி, இரண்டாயிரம் வருடத்துக்கு முன் வாழ்ந்து இறந்து விட்டார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அறவழிப்பட்ட ஒரு சிந்தனையின் அடையாளமாக ஒரு கதாபாத்திரம் மனதில் நின்றுவிட்டால், அதைச் சாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். `அது பாரி அல்ல, நான்…’ என்று ஒவ்வொரு வாசகனும் நினைக்கிறான். அறம் வீழக் கூடாது என்று நினைப்பதுதான் மனிதத் தடம். அதைத்தான் இலக்கியங்கள் செய்யவேண்டும். ஒரு பொருளாதார நிபுணன் காலாவதியாவான்; ஒரு வரலாற்று அறிஞன் காலாவதியாவான்; இலக்கியவாதி ஒருபோதும் காலாவதியாக மாட்டான். ஏனெனில், மீண்டும் மீண்டும் அறத்தை நிலைநிறுத்துவது இலக்கியங்கள் மட்டுமே.

இந்த இடத்தில் (பாரியின் முடிவு) நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். வரலாற்றை மாற்ற முடியாது. வரலாற்றை மீறுகின்ற ஆற்றல் இந்தப் புனைவு எழுத்தாளனுக்கு உண்டு. அது நடக்கும். (பலத்த கைதட்டல்)

இந்தத் தொடருக்கு நிறைய சவால். இது டிஜிட்டல் யுகம். மூன்று பத்திகளுக்கு மேல் படிக்க மாட்டர்கள் என்ற கருத்து இருக்கிறது. அப்படியிருக்கும் சூழலில் பத்துப் பக்கங்களுக்கு மேல் 100 அத்தியாயங்கள் வந்திருக்கின்றன. அதைவிட முக்கியமான சவாலாக நான் நினைப்பது இதுவே. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு நாள் தவறாமல் கொந்தளிப்பில் இருந்தது. இரண்டு பெரிய தலைவர்கள் பெரிய மரணம்; அது ஏற்படுத்திய தாக்கம்; மிகப்பெரிய போராட்டங்கள்; துப்பாக்கிச் சூடு... 24 மணி நேரம் தாங்கிய தலைப்புச் செய்தி இந்த இரண்டு ஆண்டுகளில் வேறு எதுவும் கிடையாது. இவ்வளவு கொந்தளிப்பான சூழலில் வேள்பாரி என்ற காவியத்தைத் தமிழர்கள் கொண்டாடியிருக்கிறார்கள்.

வேள்பாரி - ம.செ ஓவியங்கள்

இந்தத் தொடரில் எல்லோரும் கொண்டாடும் ஒரு பகுதி முருகனுக்கும் வள்ளிக்கும் இடையிலான காதல். அந்த அத்தியாயம் வருகிற இதழ் வெளிவரும் மறுநாள், தமிழ்நாட்டில் ஒரு பெரிய மரணம் நிகழ்ந்தது; ஊரே பதற்றமாக இருந்தது. பொதுச் சூழல் அலையடிக்கிறது; ஒருநாள் கூட நிம்மதியான மனநிலை இருந்ததில்லை. இந்தச் சூழலையும் இலக்கியத்தால் கடக்க முடியும் என்பதை இந்தத் தொடர் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது.

இந்தச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்த ஆனந்த விகடனுக்கு நன்றி. ஒரு இதழ் 10 பக்கம் ஒதுக்குவது சாதாரண விஷயம் இல்லை. ஒவ்வொரு வாரமும் பத்துப் பக்கம் எழுதுவது என்பது சவால். ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில் நான் ஒருபோதும் இதைச் சுமையாகக் கருதவில்லை. அது ஒரு சுகம். பாரியோடு வாழ்வது மகத்தான சுகம். பாரி என்ற வார்த்தை பல இடங்களில் வரும். அந்த வார்த்தையை டைப் செய்யும்போது Cut and Paste செய்யலாம். நான் அதைச் செய்ததில்லை. பாரி என டைப் செய்வது ஒரு மாதிரியான…. என்ன சொல்ல… அது வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய வாசகர்களைக் கொண்ட ஒரு வெகுஜனப் பத்திரிகை இவ்வளவு பக்கங்களைக் கொடுத்து `நீ விளையாடு’ எனச் சொல்லும்போது `நம்ம இந்தக் களத்துல விளையாடாம வேற என்னிக்கி விளையாடப் போறோம்…’ அதுதான் இந்த விளையாட்டு.

வேள்பாரி - ம.செ ஓவியங்கள்

என் சக பயணியாக வந்துகொண்டிருக்கும் ஓவியர் மா.செ ஐயாவுக்கு நன்றி. ஒருநாள் அவர் எனக்கு போன் செய்து ``நான் இதைக் கேட்கக் கூடாது. இருந்தாலும் கேட்கிறேன். `நூறு நரம்புகளைக் கொண்ட யாழை அவள் மீட்டிக்கொண்டிருந்தாள்’னு எழுதியிருக்கிங்க. என்னால நூறு கோடு போட முடியாது. அதனால, எண்ணற்ற நரம்புகளைக் கொண்ட யாழைனு மாத்தலாமா?’’ னு கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. யாரும் அதை எண்ணிப் பார்க்கப் போவதில்லை. இருந்தாலும் இது கலை. அதற்கு நான் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறாரே… அது பெரிய விஷயம். அவர் எவ்வளவு பெரிய மனுஷன்… இப்படி மெனக்கிடுகிறாரே… அவரோடு இணைந்த இந்தப் பயணம் எனக்குப் பெரிய படிப்பினையைக் கொடுத்திருக்கிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/136950-velpari-100th-episode-writer-svenkatesan-praises-readers.html

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

 

ஓவியங்கள்: ம.செ.,

 

முதன்முறையாக இன்றைய போரின் பிற்பகுதியில்தான் பறம்பின் விற்படையினருக்கு முழுமையாக ஏறித்தாக்கி முன்னேறும் அனுமதியைக் கொடுத்தான் முடியன். இந்த உத்தரவுக்காகத்தான் போர் தொடங்கிய நாளிலிருந்து உதிரன் காத்திருந்தான். விற்படையின் முழு ஆற்றலும் பீறிட்டுக் கிளம்பியது. விரி அம்புகளும் பகழி அம்புகளும் இடைவெளியின்றிச் செலுத்தப்பட்டன. பறம்புப்படையை முற்றுகையிடத் துணிந்தவனுக்கு தாங்கள் யார் என்பதை உணர்த்த, ஒவ்வொரு வீரனும் துடித்தான். போர்க்களம், இதுவரை காணாத அளவுக்கு மரணத்தைக் கண்டது.  எதிரிகளின் படையை முழுமையாகச் சுற்றிவளைத்த கருங்கைவாணன், நிலைமை இப்படித் தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கவில்லை. எதிரிகளால் யானைப்படையைப் பிளந்துகொண்டு நண்பகலுக்குள் போர்க்களத்துக்கு ஆயுதங்களைக் கொண்டுவர முடியும் என்பதை அவனால் நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை.

p86a_1536562975.jpg

பறம்புப்படையின் தாக்குதல் எல்லைக்குள் வேந்தர்படையின் முன்கள வீரர்கள் பெரும்பான்மையோர் சிக்கிக்கொண்டனர். பேரழிவுக்குப் பின்னரே நிலைமையை உணர முடிந்தது. ஆனால், உடனடியாகப் படையைப் பின்வாங்க முடியவில்லை. ஒரே பகுதியில் ஏறி நின்று தாக்கினால் பின்வாங்குதல் எளிது. ஆனால், வேந்தர்படையோ அரைச்சுற்று வட்டத்தில் பறம்புப்படையைச் சூழ்ந்து நின்றது. இத்தகைய உத்தியில் பின்வாங்குதல் எளிதல்ல.

எதிரிப்படையை முற்றுகையிட்டுத் தாக்கும் முடிவை எந்தத் தளபதியும் எளிதில் எடுக்க மாட்டான். முற்றுகை என்பது, எதிரிப்படையின் மீது முழுமையான அடைப்பை உருவாக்குவது. அந்த உத்தியை வகுத்துவிட்டால் பின்வாங்கல் என்பதற்கு இடமேயில்லை. எனவேதான் பின்வாங்கும் சூழல் ஒருபோதும் உருவாகாது என்ற முழு நம்பிக்கை இருக்கும்போது மட்டுமே முற்றுகைப்போரை நடத்துவர்.

கருங்கைவாணன், முழு நம்பிக்கையோடுதான் இந்த உத்தியை முன்னெடுத்தான். எதிரிகளின் கைகளில் ஆயுதங்கள் வந்து சேராமல் இருக்க யானைப்படையையும் கொண்டுபோய் அடைத்து நிறுத்தினான். அவன் திட்டமிட்டதைப்போலவே முற்பகலுக்குள் பறம்புவீரர்களின் கைகளில் இருந்த பெரும்பான்மையான ஆயுதங்கள் தீர்ந்தன. நிலைமை பறம்புப்படைக்கான பேரழிவை நோக்கி நகர்ந்தது. ஆனால், தேக்கன் வகுத்த உத்தியால் வேந்தர்படையின் வேகம் குறைந்தது. குழப்பத்தை உருவாக்கி கருங்கைவாணனைத் திசைதிருப்பினான். மூஞ்சலுக்கு ஆபத்து ஏதுமில்லை என உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை கருங்கைவாணன் முழு வேகத்தோடு தாக்குதலை முன்னெடுக்கவில்லை. அதற்குள் நிலைமை தலைகீழாக மாறியது.

பறம்பின் ஆற்றல் பீறிடத் தொடங்கியது. கடைசி ஐந்து நாழிகையில் விற்படையினர் நிகழ்த்திய தாக்குதல், இதுவரை நடந்த மொத்தத் தாக்குதல்களுக்கும் நிகரானது. அழிவு... அழிவு... வேந்தர்படையில் பேரழிவு. களத்தில் கருங்கைவாணன் கையறுநிலையில் நின்றான். யானைப்படையை அழித்து நண்பகலுக்குள் ஆயுதங்களை எப்படிக் கொண்டுவந்தனர் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனம் மிரட்சியில் இருக்கும்போது ஆற்றலைக் கைக்கொள்ள முடியாது. படையினர் மீள வழிகாட்ட முடியவில்லை. நெருக்கடி நிலையில் ஒருவன் சிறந்த முடிவை எடுக்க, அவனது போர் அனுபவமே கைகொடுக்கும். ஆனால், கருங்கைவாணன் சந்தித்த எந்தப் போரும் இந்தப் போருடன் ஒப்பிடக்கூடியதன்று. அவன் அதிகமான போர்களில் வெற்றிபெற்றுள்ளான். ஒருசில போர்க்களங்களை விட்டுப் பின்வாங்கி வெளியேறியுள்ளான். ஆனால், இன்று அவனுக்கு ஏற்பட்ட அனுபவம் முற்றிலும் வேறொன்று. பறம்போடு போரிட, தனது படைக்கு எந்தத் தகுதியும் இல்லையா என்ற கேள்வியை அடிமனதில் உருவாக்கியது அது.

p86b_1536563011.jpg

அதன் பிறகு அந்தக் கேள்வியே அவனை ஆக்கிரமித்தது. அதிலிருந்து அவன் மீண்டுவர நெடுநேரமானது. அதற்குள் நிலைமை கைமீறியது. முன்களத்தில் எண்ணற்ற வீரர்கள் பகழி அம்புக்குப் பலியாகி மடிந்தனர். கவசவீரர்களின் படைக்கே இந்நிலையானதும் மற்ற வீரர்கள் பறம்பினரை நெருங்கவே அஞ்சினர். கைவிடப்பட்ட படைவீரர்கள் மலையெனக் கொன்றுகுவிக்கப்பட்டனர். தட்டியங்காடெங்கும் குருதி பெருகி ஓடியது.

எல்லாவற்றையும் பரண் மீதிருந்து பார்த்துக்கொண்டு நின்றார் திசைவேழர். நேற்றிரவுதான் அவர் கபிலரிடம் சொன்னார், ``இனி, மரணமே இந்நிலத்தை ஆட்சிசெய்யும்.” அந்தக் காட்சியைத்தான் அவர் இப்போது பார்த்துக்கொண்டிருந்தார். உடல் முழுவதும் செயலிழந்ததுபோல் இருந்தது. கண்விழி உயிரற்று அசைந்துகொண்டிருந்தது. ஆனாலும் நாழிகைக்கோலினைப் பார்த்தபடி தன் கைகளை மெள்ள உயர்த்தினார். முரசின் ஓசை எங்கும் எதிரொலித்தது. தட்டியங்காட்டின் நான்காம் நாள்
போர் முடிவுக்கு வந்தது.

லையடிவாரமெங்கும், விரட்டப்பட்ட யானைகள் சிதறித் திரிந்தன. நண்பகலுக்குப் பிறகு யானைப்படை முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்தது. தளபதி உச்சங்காரிக்கு என்ன நடந்தது என்பதே புரியவில்லை. திடீரென யானைகள் மிரளத் தொடங்கின. நடுப்பகுதி யானைகள் பாகன்களின் கட்டுப்பாட்டை மீறி மிரண்டு திமிறின. பயம்கொள்ளும் யானையின் பிளிறல் தனித்துவமாகத் தெரியக்கூடியது. ஒன்றுக்கும் மேற்பட்ட யானைகள் அதேபோலப் பிளிறியவுடன் படையின்தன்மை உருமாறியது. பெரும் எண்ணிக்கையில் காட்டெருமைகள் மொத்தமாக உள்ளே நுழைந்தபோது படை தனது கட்டுப்பாட்டை இழந்தது. மேலே இருந்த வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர். நாலாபக்கமும் யானைகள் சிதறி ஓடின. காட்டுக்குள் ஓடத்தொடங்கிய யானையின் மீது பாகனோ, வீரனோ உட்கார முடியாது. எல்லோரும் உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலையை அடைந்தனர். காரமலையின் கீழ்ப்பகுதி முழுக்க வேந்தர்படையின் யானைகளும் வீரர்களும் தவித்து அலைந்தனர்.p86c_1536563036.jpg

எதிரிநாட்டுக்குள் போரிட நுழைந்த வர்களில் பிடிபட்டவர்களை முழுமையாக அழித்தொழிப்பதே மரபு. ஆனால், பறம்பின் தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது, `உயிர்பிழைக்க ஓடும் பாகன்களையோ வீரர்களையோ கொல்லவேண்டாம்’ என்று. போரிடுபவர்களை மட்டுமே எதிர்கொள்வோம். அஞ்சி ஓடுபவர்களை அழிப்பது வீரமாகாது.

நடுப்பகலிலிருந்து வேந்தர்களின் வீரர்கள் நாலாபக்கமும் ஓடிக்கொண்டி ருந்தனர். மாலையில் போர் முடிவுற்றதன் அடையாளமாக முரசின் ஓசை பரண் மேலிருந்து வெளிப்பட்டது. இன்றைய போர், வேந்தர்களுக்கானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்கி பறம்புக்கானதாக முடிவுற்றது. பறம்புவீரர்கள் பெருமகிழ்வோடு போர்க்களத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். கபிலர் இரலிமேட்டில் பாட்டாப்பிறையில் அமர்ந்திருந்தார். வழக்கமாக போர் முடிவுறும்போது நாகக்கரட்டின் மீதிருந்து நிலைமையைப் பார்ப்பது வழக்கம். ஆனால், இன்று இரலிமேட்டிலே இருந்துவிட்டார். சிதறுண்ட யானைகள் எங்கும் அலைவது ஒரு காரணம்.  இன்னொரு காரணம், நேற்று திசைவேழர் கூறிய சொற்கள். போர்க்களத்தின் பேரழிவைக் கண்கொண்டு பார்க்க முடியாத நிலையில், `இங்கேயே இருப்போம்... எல்லோரும் வந்து சேரட்டும்’ என்று அமர்ந்திருந்தார்.

p86d_1536563072.jpg

பொழுது மறையத் தொடங்கியது. வீரர்களின் ஓசை, மலையெங்கும் கேட்டுக்கொண்டிருந்தது. கபிலரின் மனக்கண்ணில் அணங்கனே நிலைகொண்டிருந்தான். `எவ்வியூரின் வடதிசையில் ஏதோ ஒரு காட்டுக்குள் நுழைந்தவன் இத்தனை காட்டெருமைகளோடு எப்படி இங்கு வந்துசேர்ந்தான்? மனிதனின் பேராற்றலை எப்படிப் புரிந்துகொள்வது? மீண்டும் அவன் காரமலையில் ஏறிவிட்டதாகச் சொல்கிறார்கள். அவனைக் கண்டு பேசவேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை’ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் கபிலரின் முன்னால் வந்து வணங்கி நின்றான் ஒருவன்.

எண்ணங்களிலிருந்து விடுபட்டு அவனைப் பார்த்தார் கபிலர். முதலில் வேந்தர்படையைச் சேர்ந்தவன் எனத் தோன்றியது. ஆனால், போர்வீரனுக்குரிய அடையாளங்கள் எவையும் அவனிடம் இல்லை. `யாராக இருக்கும்?’ என்ற சிந்தனையிலேயே, வணங்கிய அவனுக்கு வாழ்த்து சொன்னார்.

மறுகணமே அவன் தனது கையில் இருந்த சுருட்டப்பட்ட துணி ஓலை ஒன்றைக் கொடுத்தான்.

தான் யார் என்று சொல்லாமலேயே ஏன் இதைக் கொடுக்கிறான் என்று நினைத்தபடியே வாங்கி அதை விரித்துப் பார்த்தார்.

p86e_1536563123.jpg

பார்த்த கணத்தில் பேரதிர்ச்சிக்குள்ளானார் கபிலர். சிறிது நேரத்தில் அவரின் கண்களில் நீர் பெருகியது. ``என் தலைமாணவி பொற்சுவை” என்று உதடுகள் துடித்தபடியே உச்சரித்தன.

``என் பெயர் காராளி” என்று வந்தவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். தான் வெங்கல்நாட்டைச் சேர்ந்தவன் என்றும், போரில் ஈடுபடாத ஆறு ஊர்களில் ஒன்றைச் சேர்ந்தவன் என்றும் தன்னைப் பற்றிக் கூறினான்.

அவன் வரைந்த ஓவியம்தான் அது. அவளே திரைச்சீலைக்குப் பின்னால் நின்று பார்ப்பதுபோல் இருந்தது. ஓவியத்தை விட்டு கபிலரின் பார்வை நகரவில்லை. உள்ளுக்குள் எண்ணங்கள் பீறிட்டுக்கொண்டி ருந்தன. காராளியின் சொற்களை மனம் பெரிதாகக் கவனம்கொள்ளவில்லை.

சற்றே அவசரத்தோடு காராளி தொடங்கினான், ``இளவரசி உங்களைக் காண வேண்டும் எனக் காத்திருக்கிறார். அதற்கு உங்களின் அனுமதி வேண்டி வந்தேன்.”

காராளியின் சொல் கேட்டுத் திடுக்கிட்டார் கபிலர், ``இந்தப் போர்ச் சூழலில் அவர் ஏன் என்னைக் காண வேண்டும்?”

காராளியிடம் பதில் இல்லை.

சற்று நேரம் கழித்து, ``போர் முடிவுற்றவுடன் காணலாம் என்று சொல்.”

``இல்லை ஐயா, அவர் உங்களைக் காண விரும்புவதே போர்குறித்துப் பேசத்தானாம். போர் தொடங்கும் முன்பே உங்களிடம் அழைத்துப்போகச் சொன்னார். நானும் கடந்த ஐந்து நாள்களாகப் பெருமுயற்சி செய்துவருகிறேன். அதற்கான வாய்ப்பே கிட்டவில்லை. இன்று நடுப்பகலுக்குப் பிறகுதான் வாய்ப்பு கிட்டியது.”

`எப்படி?’ என்று கேட்பதைப்போல இருந்தது கபிலரின் பார்வை.

``நடுப்பகலுக்குப் பிறகு, வேந்தர்களின் யானைப்படை சிதறி ஓடியது. காடெங்கும் வேந்தர்படையின் வீரர்கள் உயிர்பிழைக்க இங்குமங்குமாக ஓடிக்கொண்டி ருக்கிறார்கள். இதுதான் பொருத்தமான நேரம். இதைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தால் யாரும் ஐயம்கொள்ள மாட்டார்கள் என்றுதான் இன்று வந்துசேர்ந்தேன்” என்றான்.

அவனது அக்கறையும் அறிவுக்கூர்மையும் கபிலரை ஈர்த்தன. ஆனாலும் தயக்கத்துடனே, ``இந்தச் சூழலில் இங்கு வருவது அவருக்கு ஆபத்தாக அமைந்துவிடாதா?”

``ஓர் ஆபத்தும் வராது. நிலைமை குழப்பத்தில் இருக்கும்போதே அவரை அழைத்துவருதல் சிறந்தது. யாருக்கும் எந்தவித ஐயமும் வராது” என்றான்.

p86f_1536563154.jpg

தேக்கனிடமோ முடியனிடமோ கலந்து பேசிவிட்டுச் சொல்லலாம் என்று முடிவுசெய்தார். வழக்கமாக அவர்கள் வந்து சேரும் நேரம் கடந்துவிட்டது. ஆனாலும் இருவரும் வந்துசேரவில்லை.

காராளியோ, பொழுதாகிக்கொண்டி ருப்பதால் சற்று பதற்றத்தோடு இருந்தான். அப்போது இரலிமேட்டின் குகைப்பகுதியிலிருந்து வேகமாகக் கீழிறங்கிக்கொண்டிருந்தான் இரவாதன். அவனைப் பார்த்து ``தேக்கனும் முடியனும் ஏன் இன்னும் வந்துசேரவில்லை?” என்று சத்தம்போட்டுக் கேட்டார் கபிலர்.

``தேக்கனுக்கு சற்று ஓய்வு தேவைப்படுவதால் இங்கு வரவில்லை. அவருக்கான குடிலிலேயே தங்கிவிட்டார். அவரைக் கண்டு பேசுவதற்காக முடியன் அங்கு போயுள்ளார். அவர்கள் இருவரையும் பார்க்கத்தான் நான் போகிறேன். எதுவும் சொல்ல வேண்டுமா?” என்று கேட்டுக்கொண்டே நடந்தான் இரவாதன்.

அவசர வேலையாகப் போய்க்கொண்டி ருக்கிறான் என்று சிந்தித்த கபிலர், ``இல்லை, வந்தவுடன் நேரில் பேசிக்கொள்கிறேன்” என்றார்.

என்ன முடிவெடுப்பது எனத் தெரியவில்லை. குழப்பம் சற்று அதிகமானது. காராளியின் பதற்றமும் அதிகமானது. ``நான் விரைந்து போய்ச் சேரவேண்டும். அப்போதுதான் இரவுக்குள் இளவரசிக்குச் செய்தி சொல்ல முடியும்” என்று வற்புறுத்திக் கேட்டான்.

மீண்டும் அவனைக் கூர்ந்து பார்த்தார் கபிலர்.

``நாளையோ, நாளை மறுநாளோ இதே பொழுதில் அழைத்துவருகிறேன். அனுமதி கொடுங்கள் ஐயா” என்றான்.

மனம் முடிவெடுக்க முடியாமல் குழம்பிய நிலையில் தலை மட்டும் சம்மதித்து அசைந்தது.

கால் தொட்டு வணங்கி விடைபெற்றான் காராளி.

ட்டியங்காட்டின் பேரழிவுக்குமுன் செய்வதறியாது நின்றிருந்தான் கருங்கைவாணன். பொழுதும் மங்கி இருள் சூழ்ந்தது. தீப்பந்தங்களோடு உடல்களை அப்புறப்படுத்தும் வேலையில் கணக்கற்றோர் ஈடுபட்டனர். எங்கும் மரணத்தின் பேரோலம். இழுபடும் குரல்கள் உயிரை உதற முடியாமல் துடித்துத் தவித்தன. கருங்கைவாணனால் கூடாரத்துக்குள் இருக்கவும் முடியவில்லை; வெளியில் வந்து நிற்கவும் முடியவில்லை.

p86g_1536563201.jpg

தலைமைத் தளபதியின் போர் உத்தி தோல்வியடைந்தால் ஏற்படும் இழப்புகள் எவ்வளவு கொடியவை என்பதை இன்றைய போர்க்களம் உணர்த்திக்கொண்டிருந்தது. யானைப்படைத் தளபதி உச்சங்காரி என்ன ஆனான் என்ற செய்தி ஏதும் இதுவரை கிட்டவில்லை. யானைப்படையை எப்படி நடுப்பொழுதுக்குள் கலைத்தனர் என்பது புரியவில்லை. காட்டெருமைகள் யானைப்படைக்குள் நுழைந்த இடத்தைப் பார்த்த வீரர்கள் யாரும் உயிரோடு இல்லை. முன்னும் பின்னுமாக இருந்த யாருக்கும் என்ன நடந்தது என்பது விளங்கவில்லை. பெருந்தாக்குதலால் படையைச் சிதறச்செய்துவிட்டார்கள் என்பதுதான் புரிந்தது. கருங்கைவாணன் குழம்பித் தவித்து வேதனையில் மூழ்கிக்கொண்டிருந்தான்.

வழக்கமாக வேந்தர்கள் கூடிப்பேசும் நேரம் நெருங்கிவிட்டது. ஆனால், யாரும் இன்னும் மையக்கூடாரத்துக்கு வந்துசேரவில்லை. வேந்தர்களைக் கண்டு என்ன சொல்லப்போகிறோம் என்பது புரியவில்லை. கருங்கைவாணன் வாழ்வில் இவ்வளவு மோசமான இழப்பு எந்த ஒரு போர்க்களத்திலும் அவனுக்கு ஏற்பட்ட தில்லை. ஏறக்குறைய கையறுநிலையில் அவன் நின்றான். வேந்தர்கள் ஏன் இன்னும் தங்களின் கூடாரங்களை விட்டு மையக்கூடாரத்துக்கு வராமல் இருக்கின்றனர் என்பதும் அவனுக்குப் புரியவில்லை. குழப்பத்தோடேயே உட்கார்ந்திருந்தான்.

மூவேந்தர்களும் தங்களின் படைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றிய முழுமையான செய்தியை அறிந்துகொண்ட பிறகு கூடாரத்துக்கு வரலாம் எனக் காத்திருந்தனர். ஏற்பட்டுள்ளது பேரிழப்பு. போர்க்களத்திலிருந்து எண்ணிலடங்காத பிணங்களை வெளியேற்றவேண்டியிருந்தது. எண்ணிக்கையைக் கண்டறிவது இரவுக்குள் இயலாது என்று அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

p86h_1536563271.jpg

போரின் போக்கு பற்றி உதியஞ்சேரலுக்கு மறுசிந்தனை உருவாகத் தொடங்கியது. `பாண்டியனை நம்பிப் பெரும்படையோடு களம்புகுந்தது சரியா?’ என்ற கேள்வி மேலெழுந்தது. இந்தக் கேள்விக்கு அடிப்படைக் காரணம் பறம்புவீரர்கள் ஒரே நேரத்தில் முற்றுகையைத் தகர்த்து அளவில்லாத இழப்பை உருவாக்கியதும், யானைப்படையைச் சிதறடித்ததும்தான். பறம்புப்படைக்கு இதைவிடப் பெரிய நெருக்கடியை இனி கொடுத்துவிட முடியாது. எனவே, இந்தப் போரின் போக்கு தனக்கான வெற்றிவாய்ப்பை இழக்கத் தொடங்கிவிட்டது என அவன் எண்ணினான். அப்போது கூடாரத்துக்குள் வந்த பணியாள் சொன்னான், ``சோழப்பேரரசர் தங்களைக் காணக் காத்திருக்கிறார்” என்று.

தன்னைப்போல நம்பிக்கை இழந்த நிலையில், அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றிப் பேச செங்கனச்சோழன் வந்திருப்பான் என நினைத்தான் உதியஞ்சேரல். ஆனால், உள்ளே வந்தவனின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. உதியஞ்சேரலுக்குப் புரியவில்லை.

வந்ததும் ஊன்றுகோலைச் சாய்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்தபடி செங்கனச்சோழன் சொன்னான், ``எல்லாம் நல்லபடியாக முடிந்தது.”

உதியஞ்சேரலுக்குப் புரியவில்லை. முகத்தில் குழப்பமே மிஞ்சியது.

அதை உணர்ந்தவாறு செங்கனச்சோழன் கூறினான், ``ஈங்கையனிடம் பேசிக்கொண்டி ருக்கிறோம் என்று சொன்னேன் அல்லவா; அது நல்லபடியாக முடிந்தது.”

உதியஞ்சேரலுக்கு உயிர்வந்தது போலிருந்தது. ``உண்மையாகவா? நீங்கள் சொல்வதைச் செய்ய ஒப்புக்கொண்டு விட்டானா?” என்று வேகமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் கேட்டான்.

``ஆம்” என்று தலையசைத்தான் செங்கனச்சோழன்.

அதன் பிறகு உரையாடல் தொடரவில்லை. அமைதி நீடித்தது. என்ன நடந்தது என்று அவன் சொல்வான் எனக் காத்திருந்தான் உதியஞ்சேரல்.

p86i_1536563313.jpg

சற்று நேரத்துக்குப் பிறகு செங்கனச்சோழன் சொன்னான், ``நாளை இரவு பாரி பத்தாம் குகையில் தங்குகிறான். அங்கே ஈங்கையனின் காவல்.”

உதியஞ்சேரலுக்குப் புரியவேண்டியது புரிந்தது.

எழுந்துபோய் அவனைக் கட்டியணைத்துக்கொண்டான்.

மையக்கூடாரத்தில் வேந்தர்கள் கூடினர். கருங்கைவாணனோடு சேர்த்து மையூர்கிழாரையும் அழைத்திருந்தனர். இருவரும் வந்து வேந்தர்களுக்கு முன் நின்றனர். அவர்களுக்குச் சற்றுப் பின்னால் தளபதிகளான உறுமன்கொடி, துடும்பன், வெறுகாளன், மாகனகன் ஆகிய நால்வரும் நின்றனர்.

இரலிமேட்டின் குகையிலிருந்துதான் ஆயுதங்கள் தட்டியங்காட்டுக்கு வந்து சேர்கின்றன. இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கு மிகக்குறுகியது. யானைப்படையைக் கொண்டுபோய் அடைத்து நிறுத்திவிடலாம். எதிரிகள் தங்களின் யானைப்படை மூலம் தாக்குதல் தொடுத்தாலும் பகற்பொழுதுக்குள் ஆயுதங்களைக் குகைகளிலிருந்து போர்க்களத்துக்கு எடுத்துவந்துவிட முடியாது. ஏனென்றால், பள்ளத்தாக்கு முழுவதும் இருதரப்பு யானைகளுமே ஆவேசம்கொண்டிருக்கும் என்று ஆலோசனையைச் சொன்னது மையூர்கிழார்தான். எனவே, இன்று விளக்கம் சொல்லவேண்டிய முதல் இடத்தில் அவரும் இருந்தார்.

கருங்கைவாணனால் வேந்தர்கள் யாருடைய முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. மையூர்கிழாரின் முகமும் மிகுந்த கலக்கத்தில்தான் இருந்தது. ஆனால், நிமிர்ந்தே இருந்தார்.

``ஏன் இவ்வாறு நடந்தது?”

சோழவேழனின் கேள்வி யாரை நோக்கி எனத் தெரியாததால், இருவரும் சற்று அமைதியாக நின்றனர். கருங்கைவாணனால் உடனடியாக பதில் சொல்லிவிட முடியாது என்பதால், மையூர்கிழார் பேசத் தொடங்கினார்.

p86k_1536563358.jpg

``இவ்வாறு நடக்காது என்பதை நம்மில் யாராலும் ஏன் முன்னாலேயே சிந்திக்க முடியவில்லை?”

சோழவேழன் கேட்ட கேள்வியை அவையில் இருக்கும் எல்லோரையும் நோக்கிய கேள்வியாகத் திருப்பினார் மையூர்கிழார்.

முற்றுகைத் திட்டத்தைக் கருங்கைவாணன் முன்வைத்தான். ஆனால், இப்படித் தலைகீழாக மாறும் வாய்ப்பிருக்கிறது என யாரும் சிந்திக்க வில்லை. அதனால்தான் மையூர்கிழாரின் கேள்விக்கு யாரும் மறுமொழி சொல்லவில்லை.

சிறிது நேரத்துக்குப் பிறகு சோழவேழன் கேட்டார், ``நீ என்ன சொல்ல நினைக்கிறாய்?”

``நடந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் நம் வீரர்கள் போரிடும் முடிவையே கைவிட்டுவிடுவார்களோ என அஞ்சுகிறேன்.”

அதிர்ந்தது அவை.

``அப்படி என்ன நடந்தது?” எனக் கேட்டார் சோழவேழன்.

``அவர்கள் காட்டெருமைப் படையை நமது யானைப்படையின் மீது ஏவியுள்ளனர். அதனால்தான் நம் யானைகள் போரிடாமலே சிதறி ஓடியிருக்கின்றன.”

``காட்டெருமைப் படையா?”

அவையில் இருந்த தளபதிகள் பலரும் நடுக்குற்று மீண்டனர்.

நேரம் கடந்து சற்றே குறைந்த குரலில் பொதியவெற்பன் சொன்னான், ``நம்பும்படியாக இல்லையே!”

``நம்மால் நம்பவே முடியாத ஆற்றல் எதிரிகளிடம் உள்ளது என்றுதானே தலைமைத் தளபதி முதலிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.”

கருங்கைவாணனுக்கு மூச்சு வந்தது. தான் தொடர்ச்சியாகச் சொல்லிவந்ததை இன்னொருவர் வலியுறுத்திப் பேசுவது, அதுவும் இப்படியொரு நெருக்கடியான நேரத்தில் பேசுவது, சற்று ஆறுதலைத் தந்தது.

``நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``இப்போரை இப்படி நடத்தினால் வெல்ல முடியாது.”

``ஏன்?”

``ஏனென்றால், இப்போர் பாரிக்கு எதிராக நடைபெறுகிறது.”

``பாரிக்கு எதிராகத்தான் நடைபெறுகிறது. அதை யாரும் மறுக்கவில்லையே!”

``மறுக்கவில்லை. ஆனால், உங்களுக்கு அது புரியவில்லை.”

வேந்தர்களின் முன்னால் மையூர்கிழாரின் பேச்சு மிகத்துணிச்சலாக இருந்தது. ஏற்பட்டுள்ள பேரிழப்பு இதுபோன்ற பேச்சுக்கான இடத்தை இயல்பாக உருவாக்கியது.

``என்ன புரியவில்லை என நினைக்கிறாய்?” எனக் கேட்டார் சோழவேழன்.

``நேற்று எதிரிகள் காற்றைக்கொண்டு அம்பெய்திப் பெரும்பாதிப்பை உருவாக்கினர். அது எப்படியென்று இன்னும் புரியவில்லை. இன்றோ காட்டெருமைப்படையைக்கொண்டு தாக்கியுள்ளனர். இதுவும் எப்படியென்று புரியவில்லை. நாளை அவர்கள் நடத்தப்போகும் தாக்குதலும் புரியப்போவதில்லை.”

``நீ என்னதான் சொல்ல வருகிறாய் என்பதைத் தெளிவாகச் சொல்.”

``நான் முதல் நாளிலிருந்து தெளிவாகத்தான் சொல்லிவருகிறேன். ஆனால், இந்த அவை எனது சொல்லை ஏற்க மறுக்கிறதே” என்று குற்றம்சாட்டினான் மையூர்கிழார்.

p86j_1536563405.jpg

பாண்டியப் பேரரசுக்கு உட்பட்ட ஒரு குறுநில மன்னன், பேரரசரும் பிற வேந்தர்களும் இருக்கும் அவையில் இவ்வளவு துணிந்து பேசுவது வியப்பைத் தந்தது. ஆனாலும் அவனிடம்தான் பாரியைப் பற்றியும் பறம்பைப் பற்றியும் அறிந்துகொள்ளவேண்டிய செய்திகள் இருக்கின்றன என்பதால், மற்ற இரு வேந்தர்களும் சற்றே ஆர்வத்துடன் கேட்டனர்.

ஆனால், மையூர்கிழாரின் பேச்சால் கடும்சினம்கொண்டான் பொதியவெற்பன். சற்றே உரத்தகுரலில் சொன்னான், ``புதிய தாக்குதல் திட்டத்தை நீ வைத்திருந்தால் அதை நேரடியாகச் சொல். சுற்றிவளைத்துப் பேசாதே!”

``இளவரசர் என்னை மன்னிக்க வேண்டும். நான்கு நாள் போரையும் முழுமையாகக் கவனித்ததால் சொல்கிறேன். தலைமைத் தளபதி உள்ளிட்ட நம் தளபதிகள் யாருக்கும் இந்தப் போரை எப்படி நடத்துவதென்றே தெரியவில்லை.”

அவை அதிர்ந்தது. கருங்கைவாணன் அதனினும் அதிர்ந்தான். இப்போதுதான் தனக்கு ஆறுதலாக அவனது பேச்சு இருக்கிறது என நினைத்தான். ஆனால், அடுத்த கணமே அவனைத் தகுதியற்றவனாக்கினான்.

``கருங்கைவாணன் வகுத்த திட்டத்தில் நீ கண்ட குறை என்ன?”

சோழவேழனின் கேள்விக்கு மையூர்கிழார் சொன்னார், ``ஒவ்வொரு நாளும் எதிரியின் படையை வெல்வதற்கான உத்தியையே அவர் உருவாக்கினார். அது முற்றிலும் தவறு.”

``என்ன உளறுகிறாய்... எதிரியின் படையை வெல்வதற்குத்தானே போர் நடக்கிறது. அதைச் செய்வதற்கு உத்தியை உருவாக்குவதில் தவறென்ன இருக்க முடியும்?”

``எதிரிப்படையை வெல்வது நமது இறுதி இலக்கு. ஆனால், ஒவ்வொரு நாள் போரிலும் இறுதி இலக்குக்கான உத்தியையே உருவாக்கக் கூடாது.”

அவையின் ஆழ்ந்த கவனிப்பு மையூர்கிழாரின் சொல்லின்மேல் குவியத் தொடங்கியது.

மையூர்கிழார் தொடர்ந்து சொன்னார், ``இந்தப் போர் பாரிக்கு எதிரானது. ஆனால், இன்று வரை அவன் போர்க்களத்துக்கே வரவில்லை. அவன் எங்கே இருக்கிறான் என்றே தெரியாது. பிறகு எப்படி இந்தப் போர்க்களத்தை நம்மால் வெற்றிகொள்ள முடியும்?”

அவையின் அமைதி மேலும் அடர்த்திகொண்டது.

``அவன் மிக உயரமான இடத்திலிருந்து இந்தப் போரை வழிநடத்துகிறான். நமது படையின் ஒவ்வொரு நகர்வையும் அவனால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அடுத்த நகர்வை அவனால் உணர முடிகிறது. நாம் செய்வதையும் செய்யப்போவதையும் அவன் எளிதில் கணிக்கிறான். நாம் அவனது கால்களுக்கு அடியிலிருந்து சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறோம். அவனோ நமது தலைக்கு மேலே இருந்து தாக்குதலை வழிநடத்துகிறான். காற்றையும் காட்டெருமையையும் பயன்படுத்தியது, போரிட்டுக்கொண்டிருக்கும் அவர்களின் தளபதிகள் எடுத்த முடிவுகளல்ல. இன்னும் சொல்லப்போனால், இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்படக்கூடும் என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாரி, மலையின் மாமனிதன்; உருளும் கற்களையும் வீசும் காற்றையும் பயன்படுத்தத் தெரிந்த பேரறிவாளன். அவனோடு போரிட்டுக்கொண்டிருக்கும் நம் தளபதிகளோ வாளையும் வேலையும் நம்பிப் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

அவை, அதிர்ச்சிமேல் அதிர்ச்சிகண்டு உறைநிலை அடையத் தொடங்கியது. குலசேகரபாண்டியன், எதுவும் சொல்லாமல் மையூர்கிழாரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். மற்றவர்களோ ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் அமைதிகொண்டிருந்தனர். மையூர்கிழாரோ வேகம் குறையாமல் தொடர்ந்தார்.

``இரண்டாம் நாள் போரிலேயே தேக்கனை வெட்டி எறியும் வாய்ப்பு கிட்டியது. அதைத் தலைமைத் தளபதி தவறவிட்டார். அன்று அது நடந்திருந்தால் போரின் போக்கே மாறியிருக்கும். அதனால்தான் நான் முதலிலேயே சொன்னேன், நமது உத்தி தேக்கனுக்கும் முடியனுக்குமானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அது தளபதிகளுக்குப் புரியவேயில்லை. `வேட்டூர்பழையனை விரட்டிக்கொண்டு காட்டுக்குள் போகாதீர்கள்!’ என்று கத்தினேன். அதைப் பொருட்டாகவே அவர்கள் நினைக்கவில்லை. இப்படித்தான் இந்தப் போர்க்களத்தில் ஒவ்வொரு நாளும் நடக்கிறது.”

கருங்கைவாணனையும் மற்ற தளபதிகளையும் நேரடியாகத் தாக்கி, குற்றம்சாட்டின மையூர்கிழாரின் சொற்கள். ஆனால், அவற்றில் எதையும் அவர்களால் மறுக்க முடியாது. நேற்று இதே அவையில் சோழவேழன் பேசியதுக்குச் சினம்கொண்டு மறுத்துரைத்தான் கருங்கைவாணன். ஆனால், இன்று அதன் தலைகீழ் நிலை நடந்துகொண்டிருந்தது. வேந்தர்களுக்கு முன்னால் தளபதிகளின் தவறுகளையும் செயலின்மையையும் வெளிப்படையாக எடுத்துக் கூறினார் மையூர்கிழார்.

``நான் இக்கணத்தில் என் மகன் இளமாறன் உயிரோடு இல்லையே என வேதனைப்படுகிறேன். தட்டியங்காட்டையும் நாகக்கரட்டையும் இரலிமேட்டையும் அவன் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வளவு பெரும்படையோடு மூவேந்தர்களும் அணிவகுத்து நிற்கும் இந்தப் போர்க்களத்தில் அவன் நின்றிருப்பானேயானால், பறம்பின் கதறலை இந்நேரம் நாம் கேட்டுக்கொண்டிருப்போம். இப்போதோ நமது கதறலை அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

இவன் கூறுவதை எதிர்கொள்வதற்கான சொல்லே யாருக்கும் சிக்கவில்லை. பாரி ஏற்படுத்திய பேரழிவை தனக்கான முழுவாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கி றான். அதேநேரம் தனது விசுவாசத்தை வலிமையாக நிலைநிறுத்துகிறான். இவன் நோக்கம்தான் என்ன என்பது கருங்கைவாணனுக்குப் பிடிபடவில்லை.

``சரி, இப்போது என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்?” கேள்வி சோழவேழனிடம் இருந்து வந்தது.

``பாரியை உடனடியாகப் போர்க்களத்துக்கு வரவழைக்க வேண்டும்.”

நீண்டநேர அமைதியை உடைத்து வெளிவந்தது பொதியவெற்பனின் குரல், ``நாளைய போர்க்களத்தில் தேக்கனையோ முடியனையோ வெட்டிச்சாய்க்கும் உறுதியை தலைமைத் தளபதி இந்த அவைக்குத் தரவேண்டும்.”

உண்மையில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கருங்கைவாணனால் புரிந்துகொள்ள முடியவில்லை. இளவரசர் சொல்லை இந்த அவையில் ஏற்பதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்வது சரியான ஒன்றாக இருக்குமா என நினைத்துக்கொண்டிருக்கும்போதே, மையூர்கிழாரின் குரல் கேட்டது.

``இனி அந்த உத்தியின் மூலம் பலன் கிடைக்காது. அதற்குரிய காலம் கடந்துவிட்டது.”

``ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

``தேக்கனையோ முடியனையோ ஒரே நாள் போரில் வீழ்த்திவிட முடியாது. வேந்தர்படை முழு ஆற்றலோடு இருக்கும்போது அது நடந்திருக்கலாம். இன்றுள்ள நிலையில் அதைச் செய்ய முடியும் என நான் நம்பவில்லை. ஒருவேளை, கருங்கைவாணன் தேக்கனின் தலையை வெட்டினால்கூட, அவன் கரப்பான்பூச்சியைப்போல அதன் பிறகும் பத்து நாள் உயிர் வாழ்வான். பறம்பு மருத்துவர்களால் எதையும் செய்ய முடியும்.”

``வேறு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்?”

சட்டென மறுமொழி சொல்லி விடவில்லை. கேள்வி எழுப்பிய உதியஞ்சேரலை மட்டுமல்ல, எல்லோரையும் நோக்கி பார்வையைச் செலுத்தியபடி சொன்னார், ``என்னிடம் இருக்கும் ஆலோசனையை நான் சொல்ல ஆயத்தமாய் இருக்கிறேன். அதை நீங்கள் ஏற்பீர்களா என்பது ஐயமே!”

``ஏன் ஐயம்கொள்கிறாய்? துணிந்து சொல். பொருத்தமுடையதென்றால் ஏற்போம்.”

சோழவேழனின் சொல்லில் நின்றுகொண்டு மையூர்கிழார் சொன்னார், ``காலையில் போர் தொடங்கும்போது, பறம்பின் திசைநோக்கி நீலனின் தலையை வெட்டி வீச வேண்டும். அடுத்த பொழுதுக்குள் களம் வந்து நிற்பான் பாரி.”

பதறியது அவை. துடித்தெழுந்தான் உதியஞ்சேரல், ``உனது ஆலோசனை பைத்தியக்காரத்தனமானது. எதிரியை வீழ்த்த அவனது வலிமையைக் குறைக்கவேண்டுமேயொழிய, ஆவேசத்தைப் பெருக்கக் கூடாது.”

செங்கனச்சோழனும் அதே சீற்றத்தை வெளிப்படுத்தினான். ``பாரியை வரவழைப்பதைவிட முக்கியமானது அவனை வெற்றிகொள்வது. அதற்கான தெளிவான திட்டம் இல்லாமல் அதைச் செய்வது அறிவுடைமையாகாது.’’

``தூண்டில் முள்ளை வீசுவதற்கும் கொலைவாளை வீசுவதற்கும் வேறுபாடு தெரியாதவனை முட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றான் சோழவேழன்.

சற்றும் பின்வாங்கவில்லை மையூர்கிழார், ``எனக்குத் தெரியும், நீங்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்று. தீராப்பகையும் வஞ்சினமும் இருக்கும் ஒருவனால் மட்டுமே இந்தச் செயலைச் செய்ய முடியும். எதிரியை வெட்டி வீழ்த்த நினைக்கும் தளபதிகளை வைத்துக்கொண்டு போரிடத்தான் முடியும். போர்க்களத்தில் எல்லோரும்தான் போரிடுவார்கள். அவர்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. மரத்தின் கிளையை வெட்டுபவனுக்கும் மரத்தையே பிடுங்கி எறிபவனுக்கும் வேறுபாடு இருக்கிறது. குருதியைக் குடிக்கும் வெறியிருப்பவனால் மட்டுமே தட்டியங்காட்டைத் தனதாக்க முடியும்.”

ஏறி மிதித்தாலும் திமிறி எழும் மையூர்கிழாரின் உறுதியும் ஆவேசமும் சோழவேழனை உலுக்கின. சட்டெனச் சொன்னான், ``இனிவரும் நாள்களுக்கு மையூர்கிழாரை ஏன் தலைமைத் தளபதியாக ஆக்கக் கூடாது?”

கொந்தளிப்பு ஏறி நிற்கும் இந்த அவையை யார் எப்படிக் கைக்கொள்வார்கள் என யாராலும் கணிக்க முடியவில்லை. சோழவேழனின் சொல், அவையைக் கூர்முனையில் நிறுத்தியது. அவையின் நடுவில் தலைகவிழ்ந்து இருந்த கருங்கைவாணன், மெள்ளத் தலைநிமிர்ந்து குலசேகரபாண்டியனைப் பார்த்தான்.

பாண்டியப் பேரரசர் பதற்றம் ஏதுமின்றிச் சொன்னார், ``இன்றைய நாள் நமக்கானதாக இல்லை. எனவே, எந்த முடிவையும் இன்று எடுக்க வேண்டாம். வழக்கம்போல் நாளைய போரை கருங்கைவாணன் முன்னெடுக்கட்டும். மற்றவற்றை நாளை இரவு பேசிக்கொள்வோம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

வேள்பாரி 100

 

 

p10d_1536751268.jpg

p10e_1536751283.jpg

p20c_1536751330.jpg

p26d_1536751370.jpg

p48d_1536751410.jpg

p60b_1536751450.jpg

p60e_1536751481.jpg

p74c_1536751517.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.