Jump to content

கதை சொல்லும் சிற்பங்கள்


Recommended Posts

கதை சொல்லும் சிற்பங்கள் 01

ஓவியர் பத்மவாசன்

 

 
baby_ganesh_3058902f.jpg
 

சிற்பங்கள் சொல்லும் அற்புதக் கதைகள் என்ற இந்தத் தொடர் வெறும் கதைகளைச் சொல்வதற்கு மட்டுமல்ல. இப்படிப்பட்ட செல்வப் புதையலைப் பெற்ற மண்ணில் வாழ்கிறோம் என்ற பெருமையை உங்களுக்கு உணர்த்துவதற்கும், உணர்ந்த பின் அந்தத் தலங்களுக்குச் செல்லவும் ரசிக்கவும் ரசித்தவற்றைப் பிறருக்கும் கூறி மகிழவும் முக்கியமாக, அடுத்த தலைமுறைக்கு, நமது பாரம்பரியத்தின் சிறப்புகளைக் கூறி வளர்த்தெடுக்கவும் செய்யப்படும் சிறிய முயற்சி இது.

குழந்தைப் பிள்ளையார்

ஆரம்பம் எப்போதும் பிள்ளையார் தானே! இங்கே நீங்கள் காணும், தவழும் நிலைப் பிள்ளையார்கள் எழில் கொஞ்சுபவை. பார்க்கும்போதே, தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சத் தூண்டும் எண்ணத்தைத் தருபவை. வேகமாகத் தவழ்ந்து, தனக்குள் சிரித்துத் திரும்பியபோது தன்னைப் பிடிக்க வந்தவர்களைக் காணாமல் ஏற்படும் அந்த உணர்வு ஒரு சிற்பத்தில். அம்மையும் அப்பனும் ‘‘என்னதான் பண்ணுகிறான் பார்ப்போம்” என்று மறைந்திருக்க, கையில் வைத்திருந்த மோதகத்தை மெதுவாய் உண்டுவிட்டு என்ன இன்னமும் யாரையும் காணோமே என்ற உணர்வை இன்னொன்றிலும் இயல்பாய் வடித்த சிற்பிக்கு ஒரு நமஸ்காரம்.

பொதுவாகக் கண்ணனையும், கந்தனையும், குழந்தைக் கோலங்களில் பார்த்திருக்கிறோமே தவிர, விநாயகரை இப்படிக் குழந்தை வடிவில், அதுவும் சிற்பங்களில் பார்க்க முடிவதில்லை. எனக்குத் தெரிந்து வேறெங்கும் இதுபோல் இல்லை. இந்த அழகிய சிற்பங்கள் நம் தமிழகத்தில் வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருக்கின்றன. கோட்டை வாயில் வழியே, கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் உள்ள சிறிய மண்டபத்தின் தூண்களில் காணப்படுகின்றன. சிலர் கூறுவதுபோல் தலை துண்டிக்கப்பட்டு யானை முகம் பொருத்தப்பட்ட பின் இப்படித் தவழ்வது பொருத்தமற்றது. - காவலுக்கு ஒரு குழந்தை நிற்பதுமில்லை, அது தகப்பனாரைத் தடுப்பதும் இல்லை.

உண்மைக் கதை இதுதான்

உமையம்மையும் சிவபெருமானும் ஒருநாள் உய்யான வனத்தில் உலவி வரும்பொழுது அங்கிருந்த சித்திர மண்டபத்தில் பிடியும், களிறுமான படங்கள் வரையப்பட்டிருந்தனவாம். அதை உற்று நோக்கிய உமைக்குத் தாம் பிடியாகவும் சிவனுக்குக் களிறாகவும் தோன்ற விநாயகப் பெருமான் அங்கே உதித்தாராம். அகரமான சிவனும் உகரமான உமையும் இப்படி காதல் மடப்பிடியாகவும், களிறாகவும் மாற, இரண்டும் சேர்ந்த ‘ஓம்’ என்ற பிரணவமான பிள்ளையார் தோன்றிட அருள் புரியலானார்.

இதில் நாம் திருஞான சம்மந்தப் பெருமான் கூறியதையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மிஞ்சி ஆதாரபூர்வமான செய்தி வேறெதுவும் இருக்கவே முடியாது. அது தெய்வ வாக்கு!

“பிடியதன் உரு - உமைகொள - மிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளினன் மிகு கொடை” என்கிறார். இதையே ‘‘பந்தத்தால்’’ எனும் கழுமலப்பதிகத்திலும் குறிப்பிடுகிறார். இதுவே சத்தியம். அப்படிப் பிறந்தால் இப்படித்தான் செல்லம் கொஞ்சி, சிங்காரித்து மோதகத்தையும் கையில் கொடுத்தால், பார்த்துப் பார்த்து குழந்தை தவழும், ஓடும். அந்தக் காட்சிகளை இங்கே வடித்த அந்தச் சிற்பி, சம்பந்தர் வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டதன் விளைவாகத்தான் இருக்கும். வேறெங்கும் காண முடியாத இந்த அரிய சிற்பங்களைப் பாருங்கள். மகிழுங்கள். நேரில் சென்று பார்த்து ஆண்டவனையும் வணங்கி வாருங்கள்.

இந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் சிற்பக் கூடத்தை அணு அணுவாய் ரசிக்கலாம். தூண்களில் உள்ள சிற்பங்கள் சிறியவையாக இருந்தாலும், அவை தரும் இன்பம் மிகப் பெரிது!

அடுத்த வாரம் இன்னும் ஒரு அரிய பிள்ளையார் சிற்பத்துடன் சந்திக்கிறேன்.

 

(தரிசிப்போம்...)

http://tamil.thehindu.com/society/spirituality/கதை-சொல்லும்-சிற்பங்கள்-01/article9271893.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 02: கணேசனும்... கஜமுகாசுரனும்!

 

 
ganesha_3065997f.jpg
 

விநாயகரது திருவிளையாடல்கள் பலப் பல இருந்தாலும் கஜமுகனை வென்று தனது வாகனமாக்கிக் கொண்டது மிக முக்கியமானது. அதாவது இதற்குமுன் ‘‘எலி’’ வாகனமாக இல்லையா? இல்லை. அதற்கு முன்னும் எலி தான் வாகனம். இப்போது இந்த கஜமுகனை வதம் பண்ணி அவர் பாதமலரின் கீழ் இருக்கும் பெரும் பாக்கியத்தை அருளுகிறார் அவ்வளவுதான்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கஜமுகாசுரன் ஒரு பெரிய புண்ணிய ஆத்மா. ஏதோ ஒரு காரணத்தால் அசுரனாகப் பிறந்து அதன் மூலம் அவன் இறைவன் திருவடிகளை அடைகின்றான். நாமெல்லோரும் அவன் பாதகமலங்களின் நிழலில் இளைப்பாறுவதென்பது போல் அல்லாமல், அவன் அவரோடு சேர்ந்து இயங்கிக்கெண்டே இருக்கிறான். அவருக்கு நடக்கும் பூசைகள் இவனுக்கும் சேர்ந்தே நடக்கிறது. அவருக்கான அலங்காரத்தின்போது இவனுக்கும் நடக்கிறது. இது பெரும் பேறு அல்லவா?

விநாயகரிடம் முறையிட்ட இந்திரன்

கஜமுகாசுரன், மாகத முனிவரின் மகன். மாகத முனிவர், விபூதி என்னும் அசுரப் பெண் மீது கொண்ட மோகத்தால் பிறந்தவனே கஜமுகன். அவன் தனது அட்டகாசங்களை ஆரம்பிக்க முனிவர்களும் தேவர்களும் நடுங்கிப் போனார்கள். இவனைச் சிவனை நோக்கித் தவம் செய்யச் சொல்லி, அவனது அழிவுக்கு வழி வகுத்தவன் சுக்கிரன். அவன் காட்டிய பாதையில் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து எந்தவொரு ஆயுதத்தாலும் எந்த ஒரு நபராலும் அழிக்க முடியாது என்ற வரம் பெற்றான்.

வரம் பெற்றபின் வதைக்க ஆரம்பித்தான். ஏற்கெனவே பயந்து போயிருந்த இந்திரனிடம் தேவர்கள் முறையிட்டனர். இந்திரன், கயிலை நோக்கிப் போனான். வரம் கொடுத்ததே சிவபெருமான் என்பதால், அவரது மகன் விநாயகரிடம் போனான். சிவந்த மேனியோடும், ஒளியோடும் மகிழ்ச்சியாக இருந்த விநாயகர் முன் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி விஷயத்தைச் சொன்னான். பூதப்படைகள் ஜெய கோஷம் போட அவர்கள் புடை சூழப் புறப்பட்டார் விநாயகர்.

சினம் கொண்ட கஜமுகன்

கஜமுகனது ராஜாங்கம் நடக்கும் மதங்கபுரத்தை வந்து அடைந்தார். போருக்குத் தயாராகவே இருந்த கஜமுகாசுரன் தன்னைப் போலவே முகம் கொண்ட ஒருவரை பார்த்து துணுக்குற்று அவரது முகத்தின் அழகையும் பிரகாசத்தையும் தனது முகத்தின் அழகையும் ஒருகணம் ஒப்பிட்டுப்பார்த்துக் கொண்டான். சினம் இன்னும் அதிகமானது; வில்லெடுத்து அம்பை எய்தான். அவன், பாணங்களை எல்லாம் தனது உலக்கையால் தடுத்துத் தள்ளினார். இவன் அவரது உலக்கையைப் பிடுங்கிக்கொண்டு சண்டை போட்டான்.

கதாயுதத்தை வரவழைத்து அதனை வைத்துச் சண்டை போட்டார் விநாயகர். ஓங்கி அடித்தார்; மயங்கி விழுந்தானேயன்றி இறக்கவில்லை. தந்தையார் கொடுத்த வரம் பற்றிய சிந்தனை தோன்ற, தனது தந்தத்தை ஒடித்து அவனை நோக்கி எறிய அது சீறிப் பாய்ந்து சென்று தாக்கியது. தாக்குப்பிடிக்க முடியாத கஜமுகன் வீழ்ந்தான். பெருச்சாளி என்ற பெரிய எலி உருவம் எடுத்து ஓடிவந்து விநாயகர் காலடியில் ஒடுங்கிக் கொண்டான். வாகனமாய் ஏற்று ஆட்கொண்டு அருள் செய்தார் பிள்ளையார்.

சிற்பத்தைப் பாருங்கள்

இது சுசீந்திரம் தாணுமாலயப் பெருமாள் கோவிலின் செம்பராண் மண்டபத்தூணில் இருக்கிறது. விநாயகர் எலி மீது அமர்ந்தபடி அவன் துதிக்கையை அழுத்திப்பிடிப்பதும் அந்தக் கையில் அவர் எப்போதும் வைத்திருக்கும் பாசக்கயிறு இருப்பதும் தெரிகிறது. உலக்கையை நீ பறித்தால் என்ன.. இப்போது பார் என்ற பாணியில் தும்பிக்கையில் கதையை ஏந்திச் சுழற்றி அடிக்கும் பாவனையும் ஆக்ரோஷமும் அவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது.

எலியைப் பார்த்தால் ஏதோ சிங்கம் கர்ஜிப்பது போன்ற உணர்வு ‘என் வேலைக்கு உலை வைக்க வந்தவனே’ என்று கோபத்தில் கொதிப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. மொத்தமாக ரசித்துப் பார்க்க வேண்டிய இந்தச் சிற்பம், வெறும் கதையை மட்டும் சொல்லவில்லை. ரசிக்கச் சொல்கிறது. லயிக்கச் சொல்கிறது மகிழச் சொல்கிறது. சரிதானே அன்பர்களே அடுத்த வாரம் இன்னுமொரு சிலிர்ப்பூட்டும் சிற்பத்துடன்...

 

(தரிசிப்போம்...)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-02-கணேசனும்-கஜமுகாசுரனும்/article9296203.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 03: கண்ணனும் வெண்ணெய்யும்!

ஓவியர் பத்மவாசன்

 

 
sirpam_3074355f.jpg
 

மஹாவிஷ்ணு அவதாரமான கண்ணனின் லீலைகள்தான் எத்தனையெத்தனை! அவன் வெண்ணெய்யைத் திருடினான். திருடினான் என்கிறோம். அதன் உண்மைப் பொருளென்ன? அவனது சகோதரி அகிலாண்டேஸ்வரி அம்பாளே ஓரிடத்தில் சொல்கிறாள். பெரிய பானையில் தயிரை நிறைத்துக் கடைந்தாலும் சிறிதளவு வெண்ணெய்யே கிடைப்பதுபோல், பலகோடி மக்களில் வெகுசிலரே பகவானை அடைய முயற்சி செய்கிறார்கள். அப்படிப்பட்ட அந்தச் சிலரே வெண்ணெய் போன்றவர்கள், அவர்களையே நான் மிகவும் விரும்புகிறேன், ஆட்கொள்கிறேன் என்பதை எடுத்துக்காட்டவே நவநீதகிருஷ்ணன் வெண்ணெய்யைத் திருடி வந்து உண்டு மகிழ்கிறான்.

நம் மனங்களை திருட நாம் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்? அதுதானே உண்மை. ஆனாலும் கோபியருக்குத் திருடன் போலவும், பிடிபட்டு, இழுக்கப்பட்டு அவன் தாயின் முன் வருவது போலவும் , அங்கே அம்மாவின் பின்னே நிற்பது போலவும், கோபிகைகள் திகைப்பதுவும் என எண்ணிலடங்காத திருவிளையாடல்களை நிகழ்த்துபவன் மாயக் கண்ணன். பகிர்ந்து உண்ணவும் பல்லுயிர் ஓம்பவும் அவன் கற்றுக்கொடுக்கிறான்.

பகிர்ந்துண்ட கண்ணன்

பாருங்கள் பூனைக்குக் கொடுக்கிறான், குரங்குகளுக்குக் கொடுக்கிறான் நண்பர்களுக்குத் கொடுக்கிறான். கொடுக்காமல் உண்டதாக ஒரு நிகழ்வு கூட இல்லையே. குழந்தைகளுக்கு இவற்றைத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம்தான் கல்மேல் எழுத்தாக அந்தச்சிற்பிகள் பொறித்துவிட்டு போயிருக்கிறார்கள். இங்கே காணப்படும் சிற்பங்களில் ஒன்று திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் உள்ள ஸ்ரீ வைகுண்டம் என்ற திருத்தலத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் உள்ளது. இன்னுமொன்று திருக்குறுங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. இரண்டுமே வெண்ணெய் திருடும் நவநீத கிருஷ்ணன்தான்.

ஸ்ரீ வைகுண்டம் சிற்பத்தில் movement எனப்படும் அடுத்தடுத்த நிலைகளைக் காட்டியிருக்கும் சிற்பியின் (Animation) கைவண்ணம் வியக்க வைக்கிறது. பானையை எடுத்து வைத்து உண்டுவிட்டு மீண்டும் எழுந்து ஒன்றில் கைவிட, சத்தம் கேட்டு மத்தை ஓங்கியபடி ஒரு கோபிகை வருகிறாள். இதில் கவனிக்கப்பட வேண்டியது. ஒரு பானை கீழே வந்தபின், அடுத்த பெரிய ஒரு பானை உறியில் இருக்கிறது. கண்ணனையும் ஒரே மாதிரியே மிகக் கவனமாக செதுக்கியிருக்கிறார் சிற்பி. நின்று நிதானித்து ரசித்துப் பார்க்கையில்தான் அதன் அழகும் எழிலும் புரியும். நமது மனமும் அந்த வெண்ணெய் போன்று உருகிவிடும்.

திருக்குறுங்குடி சிற்பத்தில் வேறுவிதமான அழகு. அங்கே நண்பர்களுக்கு ஆளுக்கு ஒரு பானை கொடுத்துவிட்டுத் தனக்காக எடுக்கிறான். ஆனாலும் மீண்டும் வேண்டும் என்று அவர்களை கை தூக்கி நிற்கின்ற பாவனையில் ஆசையும் ஏக்கமும் தெரிகிறது. இரு சிற்பங்களிலும் பூனைகள், அள்ளிப்போட்ட உருண்டைகளை தின்றுவிட்டு அவையும் மேலும் வேண்டி ஏக்கப்பார்வை பார்க்கின்றன. இது அன்றாடம் கண்ணனின் விளையாட்டு இதற்கிடையில் மாமன் கம்சன் அமைக்கும் விளையாட்டையும் ஆடி ஜெயிப்பதும், பின் எதுவும் தெரியாததுபோல் நடிப்பதும் தெய்வீகக் காட்சிகளல்லவா!

இன்னும் ஒரு சிற்பம்

மாமன் ஏவிய ஒரு அரக்கன் காளை வடிவில் வர அவனோடு விளையாடிப் போக்குக்காட்டி பின் லாவகமாகத் தாவியேறிக் கொல்கிறான். இங்கே அவன் முகத்திலோ, கையிலோ, காலிலோ, கோபமோ அழுத்தும் பாவனையோ இல்லை. ஆனால் மாடு மூச்சு முட்டித் திணறுவது போலவே இருக்கிறது. இவையெல்லாம் தான் நுணுக்கங்கள். கொட்டிக் கொடுத்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். ரசிக்கத்தானா நமக்கு நேரமும் இல்லை, மனசும் இல்லை.

ஒரு புள்ளியில் இருந்து கோலத்தை ஆரம்பிப்பதுபோல ஒரு காட்சியை அழகுற வடித்துக்கொடுத்து அங்கிருந்து நமது கற்பனையை விரித்துக்கொண்டு சிறகடிக்க வழி அமைத்துக் கொடுக் கிறார்கள் இந்தச் சிற்பிகள். குழந்தைகளை அருகில் வைத்து நுணுக்கங்களை சொல்லி, அதற்கு அடுத்தபடிகளை வரையச் சொல்லலாம். எழுத வருமாயின் எழுதச் சொல்லலாம். நடித்துக் காட்டச் சொல்லலாம். ஒரு சிற்பத்தில் இருந்தே குழந்தைகளின் திறமைகளைக் கண்டு அறிந்து அவர்களை அந்தந்த துறையில் மேதைகளாக்கலாம். இவையெல்லாம் நம் கைகளில்தான் உள்ளது.

(அடுத்த வாரமும் கண்ணனின் திருவிளையாடல்தான்…)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-03-கண்ணனும்-வெண்ணெய்யும்/article9323912.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 04: கொத்த வந்த கொக்கு அரக்கன்

 

 
sirpam_3083198f.jpg
 
 

மாயக் கண்ணன், வாசலில் இருப்பதாகவே அவனது அன்னை நினைத்துக்கொண்டிருப்பாள். பார்க்கும்போது இருக்கவும் செய்வான். அடுத்த கணம் எங்கிருப்பான் யாராலும் சொல்ல முடியாது. மரத்தில் இருப்பான், மாடுகளோடு இருப்பான், குழலூதி மயக்குவான், அனைவரையும் மயக்கி கட்டிப்போட்டு விட்டு வெண்ணெய்யை திருடி உண்டுகொண்டிருப்பான்.

கொண்டை போட்டு முத்து மணிகளால் அலங்காரம் பண்ணி இடையில் அரைஞாண் கட்டி அதிலும் ‘கிங்கிணி’ ஓசை எழுப்பும் மணிகளும் கோர்த்திருந்தாலும், இவன் ‘உஷ்’ என்றுவிட்டால் அவை ‘கப்சிப்’ என்று ஓசையற்று இருந்து விடுகின்றன. சென்ற வாரம் எழுதிய வெண்ணெய் திருடும் கண்ணன் சிற்பத்தில் இடையில் சிறிய ‘மணி’ கூட இருக்கும். கவனித்துப் பார்த்தால் தெரியும். அவையெல்லாம் அம்மா முன்னால் ஓசை எழுப்பும். அதற்கு அனுமதி உண்டு. மற்ற இடங்களில் அவை அடக்கமாக இருக்கும். அவனது போக்குவரத்தைக் கண்காணிக்கவே இவையெல்லாம்.

கம்சனும் கண்ணனும் ஆடிய விளையாட்டு

ஒவ்வொரு அரக்கனாக அனுப்புவதும் அவர்களை அழிப்பதுமாக கம்சனும், கண்ணனும் விளையாடிக் கொண்டே இருந்தனர். இங்கே நீங்கள் காண்பது கொக்கு வதம். பகாசுரன் என்ற இந்த அரக்கன் கொக்கு வடிவத்தில் வருகிறான். கூரிய அலகை வைத்துக் கொத்தப்பார்க்கிறான். இறக்கைகளை ஓங்கி அடித்துப் புழுதியைக் கிளப்பி மடக்கிப் பிடிக்க நினைக்கிறான். ஒன்றும் பலிக்கவில்லை.

போக்குக்காட்டி பின் வளைத்துப்பிடித்து, அலகைக் கிழித்துக் கொன்று முடிக்கிறான் கண்ணன். இங்கே இந்த அழகிய சிற்பத்தில் கண்ணனின் எழில் ரூபத்தில் மனது மயங்குகிறது. காலை மேலே போட்டு மடக்கிப் பிடிப்பதே ஏதோ பரத நாட்டியம் போன்று அவ்வளவு நளினமாக இருக்கிறது. சிற்பிகள் இவற்றையெல்லாம் படைக்கும்போது லட்சணங்களைத் தெளிவாகக் காட்டுவார்கள்.

ஒவ்வொரு அரக்கனாக அனுப்புவதும் அவர்களை அழிப்பதுமாக கம்சனும், கண்ணனும் விளையாடிக் கொண்டே இருந்தனர். இங்கே நீங்கள் காண்பது கொக்கு வதம். பகாசுரன் என்ற இந்த அரக்கன் கொக்கு வடிவத்தில் வருகிறான். கூரிய அலகை வைத்துக் கொத்தப்பார்க்கிறான். இறக்கைகளை ஓங்கி அடித்துப் புழுதியைக் கிளப்பி மடக்கிப் பிடிக்க நினைக்கிறான். ஒன்றும் பலிக்கவில்லை.

போக்குக்காட்டி பின் வளைத்துப்பிடித்து, அலகைக் கிழித்துக் கொன்று முடிக்கிறான் கண்ணன். இங்கே இந்த அழகிய சிற்பத்தில் கண்ணனின் எழில் ரூபத்தில் மனது மயங்குகிறது. காலை மேலே போட்டு மடக்கிப் பிடிப்பதே ஏதோ பரத நாட்டியம் போன்று அவ்வளவு நளினமாக இருக்கிறது. சிற்பிகள் இவற்றையெல்லாம் படைக்கும்போது லட்சணங்களைத் தெளிவாகக் காட்டுவார்கள்.

கண்ணனின் லட்சணம்

கண்ணனுக்கு வெண்ணெய் உண்டு கொண்டே இருப்பதால் சிறிய தொந்தி இருக்க வேண்டும். செல்லத் தொப்பை என்பது போல் அழகாக இருக்கும். போன வாரப் படங்களிலும் பார்க்கலாம். இதிலும் பார்க்கலாம். புதிய ஓவியர்கள் வளரும் சிற்பிகள் இவற்றை கவனித்துப் பார்க்க வேண்டும். தங்கள் படைப்புகளில் காட்டவேண்டும். அப்போதுதான் அந்தந்த தெய்வங்களின் லட்சணங்கள் அவர்களில் உறைந்திருக்கும். இங்கே கண்ணன் ஜெயித்ததும் நண்பர்கள் எல்லாம் கைதூக்கி ஆரவாரம் செய்கிறார்கள்.

மேலும் ஒரு நுணுக்கத்தை அந்தச் சிற்பி இங்கே காட்டியிருக்கிறார். கொக்கின் அலகைப் பாருங்கள். கடுமை மிகுந்த கூரிய அலகு, கண்ணனின் கைப்பட்டதும் நெகிழ்ந்து வளைந்து விடுகிறது. இவர்கள் வெறும் சிற்பிகளல்ல; கடவுளைக் கண்ணால் கண்டவர்கள். அவன் கருணை மழையில் நனைந்தவர்கள். உணர்ந்தவர்கள் தானே, உள்ளதைச் சொல்ல முடியும்.

இந்த அழகிய சிற்பம் திருநெல்வேலிக்கு அருகில் திருக்குறுங்குடியில் ஸ்ரீ அழகியநம்பி திருக்கோயிலில் உள்ளது. இந்தக் கோவில் ஒரு சிற்பக் களஞ்சியம். மிகச் சிறிய அற்புதமான சிற்பங்கள் நிறைந்த திருத்தலம். ஒருமுறை இயற்கை எழில் சூழ்ந்த இந்தக் கோயிலுக்குச் சென்று, ரசித்து, மகிழ்ந்து வாருங்கள். உடலும், மனமும் நலம்பெறும்...

- அடுத்த வாரம் ராமாவதாரம்...

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-04-கொத்த-வந்த-கொக்கு-அரக்கன்/article9356644.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 05: ஊனோடும் உயிரோடும் ஆத்மாவோடும்...

 

 
sirpam_3090179f.jpg
 
 

கம்சன் அனுப்பிய அசுரர்கள் ஒவ்வொருவராய் தோற்று உயிரை விட்டுக்கொண்டு இருந்தபோது, “என்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. நான் போகிறேன், கண்ணனைக் கொல்கிறேன், வெற்றியோடு வருகிறேன்” என்று சூளுரைத்துப் புறப்படுகிறாள் பூதனை என்ற அரக்கி. வீட்டிலோ கண்ணன் வயிறு நிறையப் பால் குடித்துவிட்டுத் தொட்டிலில் அறிதுயிலில் இருக்கிறான். நோட்டம் விட்டு, மெதுவாகப் பார்ப்பவர் மனம் மயங்கும் தேவதை போல் அழகிய உருவத்தோடு வருகிறாள் பூதனை.

பால் கொடுப்பதுபோல் அவனைத் தூக்கி அமுக்கிக் கொல்வதுதான் அவள் திட்டம். இங்கே நடப்பதோ வேறாகிவிடுகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. குழந்தை பிறந்த ஒரு தாய்க்குத் தானே பால் ஊறும். இவளோ அரக்கி. மாய வேலையில் பாலென ஏதோ ஒன்றை ஊற வைத்து ஊட்ட முடியும் என்றாலும் அவள் திட்டம், பாவனை பண்ணி அமுக்கி மூச்சுத் திணற வைத்துக் கொல்வதாய்த் தானிருக்கும். ஆனால் கண்ணனை, அவன் பால் வடியும் திருமுகத்தை, அழகைப் பார்த்ததும் இவளுக்குத் தாய்மை உணர்வு பொங்கி இருக்க வேண்டும்.

‘ஐயோ! இந்தக் குழந்தைக்கு நான் தாயாக இருந்திருக்கக் கூடாதா!? ’ என்ற எண்ணம் தலை தூக்கி இருக்க வேண்டும். அதனால்தான் கொல்ல வந்ததைக்கூட மறந்து அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டு மார்பகத்தோடு கண்ணனைப் பொருத்தியிருக்க வேண்டும். பாலும் சுரந்திருக்க

வேண்டும். அடடா! போட்டுக் கொடுத்த திட்டத்தை மறந்து இவள் இப்படிப் பண்ணுகிறாளே! என்று கண்ணன் சுதாரித்துத் தான் கடமையைச் செய்து முடிக்கிறான். அவன் கடமையா? என்ன? ஏதோ ஒரு காரணத்தால் அசுரப் பிறவி எடுக்க வேண்டியவர்களை இதுபோன்ற அமைப்பில் விமோசனம் கொடுக்க, பரமாத்மா திட்டங்களைப் போட்டு அதன்படி முடித்து முக்தி கொடுக்கிறான். கண்ணனின் கரம், சிரம், பாதம் எல்லாம் பட்டால் பின் என்ன! பிறவிப் பயனே அதுதானே!

உயிரையும் ஆத்மாவையும் உறிஞ்சிய கண்ணன்

அதனால்தான் அந்தத் தகுதி பெற்றவர்களை எல்லாம் இந்த அவதாரத்தில் வரிசையாக வரவைத்து தன்னுள் சேர்த்துக்கொள்கிறான். அதுதானே சத்தியம்! அல்லாமல் போனால், அரக்கர்கள் வருவதும், அவர்களைக் கண்ணன் கொல்வதும் அர்த்தமற்றவை. புராணங்களில் வரும் அசுரர்கள் அனைவரும் புண்ணிய ஆத்மாக்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.இங்கே நீங்கள் பார்க்கும் சிற்பம் திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயிலில்தான் இருக்கிறது.

மிகப்பெரிய உருவம் கொண்ட அரக்கியை, பாலோடு ஊனை, உயிரை ஆத்மாவையும் சேர்த்து உறிஞ்சித் தன்னில் அடக்கித் தன்னோடு சேர்த்துக்கொள்கிறான். கொழுகொழுவென்ன இருந்த பூதனை இங்கே எலும்பும், தோலுமாக வற்றிப் போவதைக் காட்டிய சிற்பியை என்னவென்பது. தெய்வ அருள் பெற்றவன் என்பதன்றி வேறென்ன சொல்ல!

அனுபவித்தால் மட்டுமே புரியும்

பார்க்கும் மற்றுமொரு படம் ஒரு ஒப்புமைக்காக! இது அழிந்துபோன நூற்றாண்டு பழமையான திருவிடை மருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோயிலின் தேர் சிற்பம். இது தேரின் அமைப்பிற்குப் பொருந்தும் வண்ணமாகச் செய்யப்பட்டிருந்தாலும் இதிலும் ஒட்ட உறிஞ்சி முடிப்பதை அழகாய் காட்டியிருக்கிறார் சிற்பி. பீடத்தில் உட்கார்ந்து கண்ணனை மடியில் போட்டு அவன் காலை வலிமிகுதியால் அழுத்திப் பிடிப்பதும், வேதனைச் சிரிப்புக் காட்டினாலும் கால் கட்டை விரலை உயர்த்துவதில்கூட வலி தெரிவதெல்லாம் அனுபவித்தால் மட்டுமே புரியும். சற்றே கண்ணை மூடிக் கண்ணனை, அவன் பூதனையை முடித்து முக்தி கொடுத்த பின் சிரித்தபடி எழுந்து வருவதைக் கற்பனை செய்து பாருங்கள் தன்னாலே வந்து சேரும் நிம்மதி!

அடுத்த வாரம் இன்னும் ஒரு அழகிய சிற்பத்துடன்...

(தரிசிப்போம்)

- அடுத்த வாரம் ராமாவதாரம்...

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-05-ஊனோடும்-உயிரோடும்-ஆத்மாவோடும்/article9377907.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு சிற்பங்களும் எவ்வளவு தத்ரூபமாகவும் உயிரோட்டமாகவும் இருக்கின்றது....!  tw_blush:

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 06: ஆஞ்சநேயனும் அறத்தின் தலைவனும்...

 

 
 
 
sirpam_3097032f.jpg
 
 
 

தர்மத்தின் தலைவனாகவும், சத்தியத்தின் வடிவமாகவும் போற்றப்படுபவன் ஸ்ரீராமன். அவனது சரிதத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் இருப்பினும், அவன் அனுமனோடு கூட்டணி அமைத்த பின் நிகழ்பவை அனைத்தும் அழகும்-ஆனந்தமும், பணிவும்-பக்தியும், புத்தியும்-சக்தியுமென வாழ்க்கைப் பாடங்கள். என்ன வரம் வேண்டுமென்று கேட்டு பின்னர் மாட்டிக்கொண்டவர்களில் தசரதனும் ஒருவன்.

இவையெல்லாம் இறைவன் அமைத்துக் கொடுத்தபடி நடப்பவைதான். ஆனால் அந்த நேரத்தில் மிகப்பெரிய மனச்சுமையோடு வரத்தைக் கொடுத்து, வாக்கைக் காப்பாற்றுகிறான். ஸ்ரீராமன் மகிழ்வோடு கானகம் போகிறான்; ராவணனால் சீதை கவர்ந்து செல்லப்பட்ட பின் அன்றலர்ந்த தாமரை போலிருந்த ராமன் சிறிது வாடித்தான் போகிறான். அதன்பின்னர்தான் அனுமனைக் கண்டு புதிய பலம் பெறுகிறான்.

இங்கே நீங்கள் காணும் ஸ்ரீராமனும் ஆஞ்சநேயனுமான சிற்பம் கோவை மாநகரில் உள்ள மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் என்ற திருக்கோயிலில் இருக்கிறது. இந்தப் பேரூர் திருத்தலத்தில் உள்ள நடராஜர் இருக்கும் மண்டபம் கனகசபை, சிற்ப எழிலுக்குப் பேர்போனது. இன்றும் கோயில் கட்டும்போது போடப்படும் ஒப்பந்தங்களில் ‘பேரூர் தவிர்த்து’ என்றே போடுவார்களாம். இதுபோல் செய்ய முடியாது என்று அர்த்தம் (இத்தோடு இன்னும் இரண்டு, மூன்று கோயில்களும் சேர்த்து). இந்த நடராஜர் மண்டபத்தில் உள்ள எட்டுச் சிற்பங்கள் ஒரே கல்லினால் ஆன அற்புதங்கள்.

இந்த ராமர் சிற்பம் அவற்றின் ஒன்றின் பின் பக்கம் அமைந்துள்ளது. இங்கே ராமர் அயர்வாக உட்கார்ந்து இருக்க, ஆஞ்சநேயனோ ‘கண்டேன் சீதையை’ என்று வாய் பொத்திப் பணிவாகவும் உற்சாகமாகவும் கூறுகிறான். இரைந்து சொல்லாமல், ராமர் காதில் மட்டும் விழும்படி மெதுவாகச் சொல்ல ஏதுவாக, தனது வாலை ஒரு ஐந்து சுற்றிச் சுற்றி அதன் மேல் ஏறி நின்று சொல்வது சிற்பியின் கற்பனையின் உச்சமோ, கிடைத்த காட்சியோ?!

அடுத்த படம் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் உள்ளது. உள்ளே நுழைந்து கொடிமரத்திற்கு வலது பக்கம் சென்றால் அங்கு உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் இருக்கிறது. வேறெங்கும் காணக் கிடைக்காத ஒரு கற்பனை. சீதாதேவியைத் தேடி இலங்கை போன அனுமன் ராணவன் முன்பு, தன் ‘‘வாலாசனம்’’ அமைத்து அமர்ந்து பேசுகிறான். பேரூர் சிற்பத்தில் தன் எஜமான் காதருகே சொல்ல, பணிவோடு சின்னதாய் ஒரு ஆசனம் அமைத்த அனுமன், அதே எஜமானுக்காக இறுமாப்போடு கம்பீரமாகப் போட்டுக் கொண்ட ஆசனம் இது. பத்துக்குப் பத்து (பத்துத் தலைகளுக்கு - 37 சுற்று 3+7=10) என பதிலடி கொடுத்து அமர்ந்து கேலிச் சிரிப்போடு காட்சி கொடுப்பதை என்னவென்பது.

சுற்றிச் சுற்றிக் கோடு கோடாகக் காட்டாமல் அதை இது போன்று வளைத்து வளைத்துக் காட்டிய சிற்பியைப் பார்த்து, கூடப் பணிபுரிந்த சிற்பிகள், ‘‘என்ன? இப்படி வாலைப் போட்டிருக்கிறாயே. அதில் எப்படி ஆஞ்ச நேயர் உட்கார்வார்? சுற்றிச் சுற்றி இருப்பதுபோல் - பாம்பு போலல்லவா நீ காட்டி இருக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கக்கூடும்.

அதற்கு அந்தச் சிற்பியும் “ஆஞ்சநேயரால் முடியாததென்று ஏதாவது இருக்கிறதா? அவர் எப்படி வேண்டுமானாலும் உட்காருவார்” என்று பதில் சொல்லி இருக்கலாம். நானென்றால் அப்படித்தான் சொல்லி இருப்பேன்!

(தரிசிப்போம்)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-06-ஆஞ்சநேயனும்-அறத்தின்-தலைவனும்/article9401999.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 07: ராமன் மிரண்டால் சமுத்திரம் கொள்ளாது...

 

 
raman_3100856f.jpg
 
 
 

சீதா தேவியைத் தேடிப் போன அனுமன், நல்ல சேதியுடன் வந்த பின் இலங்கைப் பயணம் ஆரம்பமாகிறது. கடலில் பாலம் அமைத்துப் போவதென்று முடிவெடுத்தபின் சமுத்திரக் கரையில் ஸ்ரீராமன் அமர்ந்து, சமுத்திர ராஜனை பலமுறை அழைத்தான். அவன் வராத காரணத்தால் சற்றே கோபம் கொண்டு அம்பை எடுக்கிறான். அதன் பின்னரே பயந்துபோன சமுத்திர ராஜன் வந்து பணிகிறான். “எனது ஆழ, அகல ஆக்ரோஷ இயல்பை விட்டு எப்படி இருப்பதோ, என்னால் முடியுமோ? என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

என்னை நம்பியிருக்கும் உயிர்களுக்கு எதுவும் ஆகக்கூடாதே என்று நினைத்த வண்ணம் இருந்தேன்” என்று ஏதேதோ பசப்பினான். அதற்கு ராமன் பதிலடி கொடுத்தான். “ஓஹோ அவையெல்லாம் உன்னை நம்பி இருக்கின்றனவோ? பாலம் கட்டப் போவது தெரிந்திருந்ததால்தானே யோசித்தாய். அதை முதல் அழைப்பிலேயே அல்லவா வந்து நீ சொல்லி இருக்க வேண்டும். இதைச் சொல்ல உனக்கு என்ன மூன்று நாட்கள் வேண்டியிருக்கிறதோ?”

பாதம் கழுவிய சமுத்திர ராஜன்

மெல்ல ஸ்ரீராமன் பாதம் கழுவினான். தாங்கவும் பணியவும் வழி சொல்லிக் கொடுக்க அதன்படி நடந்தான் சமுத்திரராஜன். பாலம் கட்டும் வேலை ஆரம்பமானது.

இங்கே காட்டப்பட்டுள்ள இந்த மிக அழகிய சிற்பமும் திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயிலில் உள்ளது. குழந்தைகளை அடிக்காமல், பாவனை காட்டி மிரட்டுவதுபோல் இங்கே அம்பைக் கையில் எடுத்து கூர்முனை சரியாக இருக்கிறதா என்று பார்த்த ராமனின் பாவனையிலேயே சமுத்திரராஜன் பணிந்துவிட்டான் என்பது புரிந்துவிடுகிறது.

மேற்பார்வையாளராக இருக்கும் வானரம்

ஆஞ்சநேயன் ஸ்ரீராமன் தோளில் மெல்லக் கை வைத்து சமாதானம் பண்ண, சுக்ரீவன் காலை வருடி நீங்கள் கோபப்பட்டால் தாங்குமா, ஐயா என்று கெஞ்சும் தோரணையும், விபீஷணனோ மிகப் பணிவோடு அவருக்குத் தெரியாததா என்று கூப்பிய கரங்களோடு நிற்க ஆதிசேடன் அவதாரமான இலக்குவனோ, கோபம் கொப்புளிக்க அம்புடன் வில்லையும் சேர்த்துத் தூக்கிவிட்டதைக் காண்கிறோம்.

இது எல்லாமே அழகென்றால் இதற்குமேல் ஒரு அழகிருக்கிறது. இங்கே பாருங்கள்! உயரமான இடத்தில் ஏறி நின்று வேலை ஒழுங்காக நடக்கிறதா என்று ஒரு வானரம் மேற்பார்வை பார்க்கிறது. மனிதர்கள் கக்கத்தில் துண்டை வைத்து அவ்வப்போது அசைத்துச் சுற்றிச் சுற்றி வேலை வாங்குவதுபோல் உருட்டி மிரட்டி அதட்டுவதற்கென்று, இந்த வானரம் கக்கத்தில் ஒரு கிளையை ஒடித்து வைத்திருக்கிறது.

பாலம் கட்டுவதற்கு வேண்டிய மரங்களை அழகாய்ச் சுமந்தபடி வானரங்கள் அதனதன் வேலையைப் பார்ககின்றன! அங்கே வேடிக்கை இல்லை, கூடிக்கூடிப் பேசும் பேச்சும் இல்லை; அனுதாப நாடகம் இல்லை. கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது அன்பர்களே! நமது கவனக்குவிப்பு மட்டுமே தேவைப்படுகிறது. சிற்பங்கள் வெறுமே கதைகளையும் கலாச்சாரம், பண்பாடு மற்றும் காலத்தை மட்டுமே காட்டுவது இல்லை. இதுபோன்ற பாடங்களையும் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. 18-லிருந்து 20 அங்குல உயரத்துக்குள் இதுபோன்ற அற்புதத்தை நடத்திய அந்த சிற்பிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களைக் காணிக்கை ஆக்குகிறேன். நீங்களும், வணங்கலாம் படைப்பிற்கும் பாடத்துக்குமாய்....!

அடுத்த வாரம் சந்திப்போம்

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-07-ராமன்-மிரண்டால்-சமுத்திரம்-கொள்ளாது/article9417245.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 08: அண்ணன் அனுமனும் தம்பி பீமனும்

 
sirpam_3104042f.jpg
 
 
 

ஒரு நாள் இனிய பொழுதில் வீசிய காற்றில் ஆயிரம் இதழ் தாமரை ஒன்று வந்து விழுந்தது. பாஞ்சாலிக்கு அருகில் விழுந்த அந்த மலரின் அழகிலும், மணத்திலும் மனம் பறிகொடுத்த அவள், அதுபோன்ற மலர்கள் இன்னும் வேண்டுமென்றாள் பீமனிடம். காற்றின் வேகத்தோடு விரைந்தான். காட்டில் இருந்த மிருகங்களெல்லாம் தலைதெறிக்க ஓடி ஒளிந்தன. பீமனின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார் சிரஞ்சீவி ஆஞ்சநேயர். தம்பி வருவதும், அவன் எதற்காக வருகிறான் என்று எல்லாமும் தெரிந்து அவனுக்கு வழிகாட்டவும், வரவிருக்கும் ஆபத்துக்களைப் போக்கித் தனது ஆசிகளை முழுமையாக வழங்கவுமாய், வழிக்குக் குறுக்கே, பெரிய உருவமெடுத்துப் படுத்தார்.

அவசரமாய்ப் போய்க் கொண்டிருந்த பீமனுக்கு, இது பெரிய எரிச்சலைக் கிளப்பியது. ஏய், கிழக்குரங்கே வழிவிடு என்றான். மெல்லக் கண் திறந்த அனுமன், நானோ உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன் என்னை எதற்காகத் தொந்தரவு செய்கிறாய் என்றார் மெல்லிய குரலில். “ஓஹோ உடம்பு சரியில்லையென்றால் இப்படித்தான் நடுவழியில் படுத்துக்கொள்வார்களோ!” என்று எகத்தாளத்தோடு கேட்டான் பீமன்.

“நடக்க முடியாமல்தானே இப்படி நடு வழியில் விழுந்து கிடக்கிறேன். முடிந்தால் தூக்கி ஓரத்தில் போட்டு விட்டுப் போ! இல்லையெனில் தாண்டிப் போ!” என்றார் அனுமன்.

“ஆஹா! எனது அண்ணன் அனுமார், கடல் தாண்டித்தாவி இலங்கை போனது போலவா? என்னாலும் அவரைப் போலக் கடலைத் தாண்டிப் போக முடியும். நானும் அவருக்கு இணையான பலசாலிதான் புரிந்ததா? உன்னைத் தாண்டுவது என்ன பெரிய விஷயமா?” என்றான் பீமன்.

போனால் போகிறது, மெல்ல வழிவிடலாம் என்றிருந்த ஆஞ்சநேயர், இவனுக்குச் சிறிது பாடம் புகட்டித்தான் அருள் செய்ய வேண்டும் என்று முடிவுவெடுத்து, யாரது அனுமார்! கடலைத் தாண்டினாரா? என்று கேட்டபடியே, உடம்பைக் குறுக்கினார். ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு மெல்ல நகர்ந்து ஒடுங்கி உட்கார்ந்து, வாலைத் தூக்கி வழி நடுவில் போட்டார். “தம்பி! வாலைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு நீ போகலாம்” என்றார்.

இதையெல்லாம் பார்த்த பீமனுக்குக் கோபம் பொங்கியது. பலமாகச் சிரித்தான். “மாயக்காரக் குரங்கே... நீ ஏதோ திட்டத்தோடுதான் வந்திருக்கிறாய். பெருத்தும், சிறுத்தும், என்ன! வித்தை காட்டுகிறாயா? உன் மாயமெல்லாம் என்னிடம் பலிக்காது புரிகிறதா” என்றபடியே அருகே வந்து தனது கதாயுதத்தை வைத்து வாலை நகர்த்தினான். வால் நகர மறுக்கத் துணுக்குற்று மேலும் கொஞ்சம் பலம் சேர்த்துத் தள்ளினான். சுற்றிச் சுற்றி வந்தான். முடிவில் பணிந்தான். ஐயா! நீங்கள் யார்? என்றான்.

“கடல், இலங்கை, அண்ணா அது! இது! என்று ஏதோ சொன்னாயேப்பா! அந்த அண்ணா நான்தான்” என்றார் அனுமார்.

விஸ்வரூபம் காட்டிய ஆஞ்சனேயர்

அண்ணனும் தம்பியும் ஆரத்தழுவிக் கொண்டார்கள். ஆனந்தக்கண்ணீர் பெருகி வழிந்து, தோள்கள் வழியும், மார்பின் வழியும் இறங்கி ஓடியது. பீமனது வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்குச் செல்ல, கடல் தாண்டும்போது எழுந்த பெரிய உருவத்தை, விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியருளினார். பின் அவன் போகும் திசை தவறு என்று கூறிச் சரியான வழியைக் காட்டியதோடு, அவனது ஆபத்தற்ற எதிர்காலத்திற்கும் வெற்றிகளுக்கும் மட்டுமல்லாமல் மற்ற நால்வருக்குமாகவும், தான் என்றும் துணையிருப்பேன் என்று ஆசி வழங்கி வழியனுப்பி வைத்தார் ஆஞ்சநேயர்.

இந்த அழகிய சிற்பமும், அதே திருக்குறுங்குடியில்தான் உள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பீமனின் உடல் தோற்றம். இதுதான் சரியான தோற்றம். இன்று சினிமாக்களிலும், சித்திரங்களிலும் காட்டப்படுவது போல் அவனொன்றும் குண்டோதரனில்லை. பெருத்த வயிறுடன் அவன் இருக்கவே மாட்டான். அவன் மாவீரன். (இன்றைய சிக்ஸ் பேக் போன்று) ஓநாய் போன்று ஒட்டிய வயிறு உடையவன் என்ற பொருளில் அவனுக்கு சமஸ்கிருதத்தில் ‘விருகோதரன்’ என்ற பெயரே உண்டு. வருங்காலச் சிற்பிகள் இதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.

(அடுத்த வாரம்… )

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-08-அண்ணன்-அனுமனும்-தம்பி-பீமனும்/article9428217.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 09: அர்ஜுனன் தவமும் அரனின் அருளும்

 

 
sirpam_3106989f.jpg
 
 
 

சகுனியின் சதியின் முன், தாக்குப் பிடிக்க முடியாமல், சூதாட்டத்தில் தோற்று, பாண்டவர்களும், பாஞ்சாலியும் கானகம் போனார்கள். அடர்ந்த காட்டில், பாஞ்சாலி படும்பாட்டைக் கண்டு பீமன் கவலைக்கொண்டு கோபம் கொண்டான். துரியோதனன், துச்சாசதனனை துவம்சம் செய்ய வேண்டுமென அவனது உள்ளம் துடிக்கிறது. கொதித்த மனதை ஆறுதல்படுத்துகிறார் தருமன்.

தர்மத்தைக் காத்து வாழும்போது இதுபோன்று சோதனைகளெல்லாம் வரத்தான் செய்யும். பொறுமை காத்தால் பூமி ஆளலாம். தர்மம் நிலை காக்கும். தர்மமே வெல்லும் என்கிறார். இந்த நேரத்தில் அங்கு வரும், வியாச மகரிஷி, தருமனின் உயர்ந்த குணத்தை உணர்ந்து அவனுக்கு ஒரு உயர்ந்த மந்திரத்தை உபதேசித்து, உனக்கு எல்லா வெற்றிகளும் கிட்டும். அர்ஜுனன் மூலம் உனக்கு இவையெல்லாம் ஈடேறும் என்று வாழ்த்தி ஆசி வழங்கிப் புறப்படுகிறார்.

சில நாட்களுக்குப் பின் அர்ஜுனனை, அழைத்துத் தனிமையில் வியாசர் உபதேசித்த மந்திரத்தைக் கூறி, இதன் மூலம் இந்திரனின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரிடமிருந்து ஆயுதங்களைப் பெற்று வா! என்று கூறினான் தருமன். அர்ஜுனனும் விடைபெற்றுப் புறப்பட்டான்.

ஒரு முனிவரைப் போல வந்து, அர்ஜுனனை வழி மறித்த இந்திரன், அர்ஜுனனின் பக்திக்கும் உறுதிக்கும் மகிழ்ந்து அவனைச் சிவபெருமானை நோக்கி, தவம் புரியுமாறு கூறினான். அவரால்தான் துரியோதனன் உள்ளிட்டோரை வெல்வதற்கான ஆயுதங்களும் அறிவும் கிடைக்கும் என்றான்.

ஊசிமுனையில் தவம் இருந்த அர்ஜூனன்

கடும் தவம் புரிகிறான் அர்ஜுனன். இலையும் சருகும் தின்று, இறுதியில் காற்றை மட்டும் உட்கொண்டு ஊசிமுனையில் தவம் செய்தான். அப்போது காட்டுப்பன்றியொன்று பெருத்த உறுமலோடு வீறிட்டபடி ஓடி வருகிறது. கடுந்தவத்தில் இருந்த அர்ஜுனனுக்கு அருள் கிட்டும் நேரமிது. ஓரக்கண்ணால் பார்த்து அம்பொன்றை விடச் சுருண்டு விழுந்து, பன்றி உயிர்விட்டது. எங்கிருந்தோ இன்னுமொரு அம்பு வந்து பாய்கிறது. வெகுண்டு பார்த்தான் காண்டீபன். வேட்டுவன் கோலத்தில் நின்றார் சிவபெருமான்.

“ஏய்! என்ன..? அதுதான் மாண்டுவிட்டதே... அப்புறம் எதற்குப் பெரிய வீரன் போல் அம்பை எய்து, அம்பை வீணடிக்கிறாய்” என்று குதித்தான்.

“நாவை அடக்கு! அது எனது காடு. அத்துமீறி நுழைந்துவிட்டு ஆணவமாகப் பேசுகிறாயா? நான் விட்ட அம்பிலே இறந்த பன்றியை, ஏதோ நீ கொன்றதுபோல் மார்தட்டுகிறாயே! அடுத்தவர் வெற்றியில் குளிர்காயாதே.” என்கிறார் சிவபெருமான். வாய்ப்பேச்சு முற்றி, கை கலப்பாய் மாறி, பெரிய சண்டையாகி விடுகிறது. பலத்த சண்டையின் முடிவில், அர்ஜுனன் சரணடைகிறான். பரம்பொருளும் தன் உருவம் காட்டியருளி, அவனுக்குச் சக்திவாய்ந்த பாசுபதாஸ்திரத்தை பரிசளித்து, அவன் வெற்றிக்கு தன் பரிபூரண ஆசிகளையும், அருளையும் வழங்கி மறைந்தார்.

எடுத்த காரியத்தை முடிப்பதில் விடாமுயற்சியும், மன உறுதியும் இருக்குமாயின், ஆண்டவன் அருள் துணை நிற்கும் என்பது நமக்கான பாடம்.

இங்கே நீங்கள் பார்க்கும் இந்த அழகிய சிற்பம் கோவை பேரூரில் உள்ள கனக சபையில் நுழைந்தவுடன் வலதுபக்கம் உள்ள தூணில் உள்ளது. ‘ஊசி முனை’ துல்லியமாகக் காட்டப்பட்ட அழகு வியக்க வைக்கிறது.. பக்கத்தில் நீங்கள் பார்க்கும் சிற்பங்கள் மாமல்லபுரம் சிற்பங்கள். இதுவும் அர்ஜுனன் தவம்தான். கடுந்தவம் என்பது அவனது உடலில் காட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் பூதகணங்களோடு வரும் காட்சியும் அழகோ அழகு! இது சுய ரூபத்தில் வந்து, பின் வேடுவனாக வடிவெடுக்கும் முன்னரான தோற்றம். அற்புத சிற்பங்களின் அழகை ரசிப்போம்... ஆராதிப்போம்!

(அடுத்த வாரம்… )

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-09-அர்ஜுனன்-தவமும்-அரனின்-அருளும்/article9438314.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 10: அருட்பால் சுரந்த பரமனும் பன்றிக் குட்டிகளும்!

 

 
sirpam_3110146f.jpg
 
 
 

சோதனை பண்ணி அருளுவது ஒன்று, சோதனைகளைக் கொடுத்தருளுவது ஒன்று, சோதனையான காலங்களில் அருளுவதென்பது இன்னொன்று; இவை எல்லாவற்றிற்கும் சூத்திரதாரியான, இவை எல்லாவற்றிலும் கைதேர்ந்தவரான கைலாசநாதப் பெருமான், அர்ஜுனனுக்கு சோதனை கொடுத்து ஆட்கொண்டதைப் பார்த்தோம். இப்போது கர்மவினையால் (எல்லாமே கர்ம வினைதான்) பன்றிக் குட்டிகளுக்கு ஏற்பட்ட சோதனையின் போது, கருணை வெள்ளமாக வந்து அருள் செய்தைப் பார்ப்போம்.

பரமனை நோக்கிய தவம்

கடவுள் செய்யும் சோதனைதான் அருளென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மதுரையம்பதியில் வைகைக் கரை ஓரம், குருவிருந்த துறை என்ற ஒரு ஊர். அங்கே இருந்து தேவ குருவான வியாழன், பரமனை நோக்கித் தவம் புரிந்தான்.

அதே ஊரில் கருத்தொருமித்து வாழ்ந்த தம்பதிக்கு பன்னிரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். விவசாயம் மூலம் நல்ல விளைச்சல். பயிரும், பணமும். செல்வச் செழிப்பும் பிள்ளைகளைச் சீரழியவும் செய்தது. பாசம் கண்டிக்கவிடவில்லை. கவலை வாட்டவும் தவறவில்லை; தலைவிதியை நொந்தபடி இறந்தனர் பெற்றோர்.

காணி நிலம் மறந்து, தொழிலை விடுத்து வேட்டையாடுவோர் சகவாசம் கொண்டு, காடுகளில் சுற்றித் திரிந்தனர் சகோதரர்கள். கண்ணில்பட்டதையெல்லாம் வேட்டையாடிக் களித்தார்கள்! அடே! இதை உண்ண முடியாதே! இதை எதற்குக் கொன்றாய் என்று வேடுவர்கள் கேட்டால், ‘‘என் கையால் அது இறக்க வேண்டும் என்று இருக்கிறது! விடுவியா, அதைவிட்டு...! வேலையைப் பாரு!” என்பான் ஒருவன். “சரியாகச் சொன்னாய் சகோதரா!” என்பான் இன்னொருவன். மற்றவர்களோ, காடு அதிரும்படிச் சிரிப்பார்கள். இந்தக் களேபரத்தின் நடுவில், ஆழ்ந்த தவத்தில் இருந்த வியாழ பகவான், அவர்களது கண்களில் மாட்டினார்.

கிண்டல், கேலி எல்லாமும் தாண்டி, எல்லை மீறியபோது வெகுண்டார் வியாழ பகவான். “உழவுத் தொழில் மறந்த நீங்கள், நிலத்தையும், சேற்றையும் உழுது, புரளும் பன்றிக் குட்டிகளாகப் பிறப்பீர்களாக.” வியாழ பகவான், வெகுளி பகவானாய் ஆகிச் சாபமிட்டார். பயந்து நடுங்கிய சகோதரர்கள் மன்னிப்பு கேட்டனர். பிராயச்சித்தம் என்னவென்று கேட்டனர். மனமிரங்கிய வியாழ பகவானும், வழி சொன்னார். உரிய காலத்தில் சொக்க நாதன் அருள் செய்து கரை சேர்ப்பார் என்றார்.

பூர்வஜென்ம ஞாபகமற்ற பன்றிகள்

அந்த ஊரின் அருகே அமைந்திருந்த அடர் காட்டில் வாழ்ந்த ஒரு பன்றிக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த பன்றித் தம்பதிக்கு, பன்னிருவரும் குட்டிகளாய் பிறந்தார்கள். உல்லாசமாய் உருண்டு, புரண்டு களித்தன.

ஒருநாள் பாண்டிய மன்னன், ஆரவாரத்தோடு வேட்டைக்கு வந்தான். கண்ணில் பட்டதை எல்லாம் கொன்று குவித்தான். தெறிந்து விழுந்த ரத்தத் துளிபட்ட ஒரு பன்றி ஓடி வந்தது. தனது தலைவனிடம் சேதி சொன்னது. “நான் பார்த்துக் கொள்கிறேன்! விலகு!” என்று வீறாப்பாய் மன்னனிடம் சண்டைக்குப் போய், முடிந்தவரை மோதி மாண்டது. பன்றியானாலும் பதி ஆயிற்றே தலைவிப்பன்றியும் தாவி ஓடி, பால் நிறைந்த தனங்களின் பாரத்தோடு முட்டி மோதிப் பார்த்தது, குட்டிகளைத் தவிக்க விட்டு உயிரை விட்டது.

ஒரு பன்றிக் கூட்டம் என்னை எதிர்ப்பதா? என்று கோபம் கொப்பளிக்க பாண்டியன், பன்றிகளைப் பந்தாடினான். முழுக் கூட்டமும் அடியோடு அழிய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தான். தேடித் தேடி அழித்து முடித்துக் கிளம்பினார்கள்; புதருக்குள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு பதுங்கி இருந்த குட்டிகள் பிழைத்தன. பார்க்கவோ, பராமரிக்கவோ, தாய் இல்லாத நிலையில் வாழ வழி ஏது? பசி வாட்டத் தொடங்க அவை முனகத் தொடங்கின. பின்னர் அதுவே பெருங்குரலாக மாறியது.

பால் அளித்த சிவன்

இனியும் தாமதம் வேண்டாம், புறப்படுங்கள் என்று பார்வதி தேவி கோர பரமனும் அவ்விடத்திற்குப் புறப்பட்டார்.கருணை பாலாய்ச் சுரக்க, தாய்ப் பன்றி உருவில் வந்தார். பால் கொடுத்தார். பாவத்தையும் களைந்தார். தெய்வீகப் பால் அந்தியதில் ஞானம் பெற்றன பன்றிக்குட்டிகள். முகம் மட்டும் அப்படியே இருக்க உடல் மனித உடலாய் மாறியது. பின்னர் அவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கி வாழும் சமயம், பாண்டியன் கனவில் தோன்றிய பரமன், அவர்களை அழைத்து வந்து மந்திரிகளாகப் பணியமர்த்தச் சொன்னார். விடிந்ததும் அழைத்து, மற்ற மந்திரி பிரதானிகளுடன் பன்றிமலை சென்று அவர்களைத் தக்க மரியாதையுடன் அழைத்து வர உத்தரவிட்டான். வந்தவர்களுக்குப் பணியும் கொடுத்து மணமும் முடித்து அழகு பார்த்தான் பாண்டியன் என்கிறது புராணம்.

குருவருளும் திருவருளும பெற்ற சிற்பிகள்

இங்கே நீங்கள் பார்க்கும் இன்த அற்புதமான சிற்பம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகனைப் பார்த்த நிலையில் உள்ளது. பன்றியின் முகம் அவ்வளவு, அழகோடும், எழிலோடும் விளங்குவதைப் பார்க்கையில் அந்தச் சிற்பி நிச்சயம் குருவருளும், திருவருளும் நிறைந்தவரென்பது தெரிகிறது. இப்போதெல்லாம் பன்றி முகம், குதிரை முகம்போல இருப்பதை எல்லாம் பார்க்கிறோம். இங்கே இந்தப் பன்றியின் முகத்தில் பால் கொடுக்கும் தாய்க்கு ஏற்படும் அந்தச் சுகமான வலியை, கண்களில் பொதிந்து வைத்து அழகை என்னவென்பது! கடமையே என்று வந்து பால் கொடுக்காது, அந்தத் தாய்மையைத் தன்னுள் தேக்கி வைத்து, ஆண்டவன் அருள்வது கண்கொள்ளாக் காட்சி.

மிக கவனமாக வேடனையும், மீதிப் பன்றிக்குட்டிகள் காலில் துள்ளுவதையும் (இந்தப்பக்கம், அந்தப்பக்கம், கால்களின் நடுவில்) தாய்ப் பன்றி இறந்து கிடக்கும் காட்சியைக் காட்டியிருப்பதோடு அவற்றின் இயல்புகளையும் காட்டியிருப்பது நமது சிற்பிகளை எண்ணி பெருமை கொள்ள வைக்கிறது. பன்றிமேல் ஒரு அம்பு தைத்து வெளியே தெரிகிறது பாருங்கள்- பன்றித் தோலில் அவ்வளவு எளிதில் அம்பெய்து விடமுடியாது; பட்டுத் தெறிக்கும். உள்ள நுழைய முடியாத அம்பு, தோலில் உரசிப் பாய்ந்து வெளியில் தெரியும் நுணுக்கம் வியக்க வைக்கிறது. உயிர் குடித்த அம்பு அந்தப்பக்கம் இருக்கும் போலும்!

வளரும் சிற்பிகள் இவற்றை உன்னிப்பாகக் கவனித்து கதைகள் புராணங்களின் அறிவை விருத்தி பண்ணிக்கொள்வதோடு, மிருகங்கள், பறவைகள் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பக்கத்தில் காட்டப்பட்ட சிற்பம் அதே கதைதான். இவை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொற்சபையுடன் கூடிய பிரகாரத்தில், நடராஜருக்கு பின்புறம் அமைந்துள்ளது. இங்கே பன்றி உருவமே காட்டப்பட்டுள்ளது. பக்கத்தில் பாண்டியன் மந்திரியிடம் கூறுவதும், அடுத்ததில் மந்திரிப் பதவி ஏற்று, கிரீடங்களுடன் பன்னிருவரும் நிற்பதுமான அழகான சிற்பங்கள். கதை ஒன்றானாலும் கற்பனை வேறு! வேறு! திருப்பரங்குன்றம் சிற்பம், சிவபெருமானின் கம்பீரத்தையும் கருணையையும் ஒரு சேரக் காட்டியதில் நிமிர்ந்து நிற்கிறது, நம்மையும், நம் பாரம்பரியத்தையும் நிமிர்த்தி நிற்கிறது.

இந்தச் சிற்பம், சொக்கநாதருக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் முருகன் கோவிலில் அமைந்திருக்கிறது.

குறிப்பு: இந்தச் சிற்பத்தின் கீழ்- வராஹி அம்மன் என்று எழுதப்பட்டுள்ளதால், மஞ்சளும், குங்குமமுமாய் பூசி அழகு போகப் பண்ணியிருக்கிறாரர்கள். எழுத்தை அழித்து சிற்பத்தை சுத்தப்படுத்தினால், சிற்பம் பழைய பொலிவைப் பெறும்- கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

(அடுத்த வாரம்… )

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-10-அருட்பால்-சுரந்த-பரமனும்-பன்றிக்-குட்டிகளும்/article9448932.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 11: கரி உரி போர்த்த கடவுள்

ஓவியர் பத்மவாசன்

 

 
sirpam_3113000f.jpg
 
 
 

கஜாசுரன் என்பவன் பிரம்மனை நோக்கித் தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மனும் அவன் முன் தோன்றி வேண்டிய வரங்களை வழங்கிவிட்டு, சிவபெருமானிடம் மட்டும் ‘உன் வேலையைக் காட்டாதே அது எனது வரங்களின் அழிவுக்கும், பின் உனது அழிவுக்கும் வழி வகுத்துவிடும்’ என்று கூறி மறைந்தார். கை நிறைய பணம் கிடத்தவுடன் செலவு செய்ய ஆரம்பித்து விடுவதுபோல், வரங்கள் கிடைத்தவுடன் வதைக்க ஆரம்பித்தான் கஜாசுரன். தேவர்கள் அழுது புலம்பினார்கள். அவனைக் கண்டால் நடுங்கினார்கள்.

முனிவர்களோ தங்கள் தவமெல்லாம், அவன்முன் பலிக்காமல் போவதைக்கண்டு பதைபதைத்தார்கள். முடிவில் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தபோது, விரட்டிச் சென்ற கஜாசுரன் கடன் கொடுத்தவனைக் கண்டுவிட்ட கடனாளிபோல் திகைத்தான். பிரம்மன் சொன்னது பொறிதட்டியது. விலகி ஓடிவிடப் பார்த்தவனை மடக்கிப் பிடித்தார் பெம்மான். தோலை உரித்துப் போர்த்துக்கொண்டு தாண்டவமாடினார். அ-கோரமாய் நின்றார் எம்பெருமான். அழகாய் சிரித்தார். தேவர்களும் முனிவர்களும் ஆரவாரித்தனர் என ஒரு பக்கம் கூறப்பட்டாலும் இந்தக் கதை அதிகம் பொருத்தமில்லாதது. இந்த கஜசம்ஹாரத்திற்கு இன்னுமொரு விதமாகவும் விளக்கம் இருக்கிறது. அதுவே பொருத்தமாக இருக்கும் எனவும் தோன்றுகிறது.

தாருகா வனத்தில் இருந்த தவசிகள் பலர் இறைவன் என்று ஒருவருமில்லை, சிவனுமில்லை, சக்தியுமில்லை; நித்ய கர்மங்களை முறையாகச் செய்வதும், உண்பதும், உறங்குவதும் போதுமென்று இருந்தபோது இவர்களுக்கு, புத்தி புகட்ட வேண்டும் என்று பெருமான் ஆளை மயக்கும் அழகோடும், பெருமாள் கிறங்கவைக்கும் மோஹினியாகவும் வந்து அவரைக் கண்ட ரிஷிபத்தினிகள் மயங்க இவரோ, ரிஷிகளை நிலைகுலையச் செய்தார்.

நெருப்பு பாம்பு புலி

இந்த மாயவலைக்குள் விழாத சில முனிவர்கள் ஓடிச் சென்று ‘ஆபிசார ஹோமம்’’ என்று ஒன்றை ஆரம்பித்து, துர்தேவதைகளை வசப்படுத்திக் கட்டுக்குள் கொண்டுவந்து - சிவபெருமான் மீது ஏவுகிறார்கள். நெருப்பு வருகிறது, பிடித்து வைத்துக்கொள்கிறார். மான் ஒன்று கொம்பைக் காட்டியபடி துள்ளி வருகிறது; இடுக்கி வைத்துக் கொள்கிறார். முயலகன் வரக் காலின் கீழ் அமுக்கிக் கொள்கிறார். பாம்பு போதாதென புதிதாக விட, அதையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சூலம், மழு என, வர வர ஏந்திக் கொள்கிறார்.

3கொடூரப் புலி ஒன்று பாய்ந்து வர அதை ஒரே தட்டில் வீழ்த்தி, தோலை உரித்து இடையில் கட்டிக் கொள்கிறார். கடைசியாக இந்த கஜாசுரன் வருகிறான். இவனுக்கும், சிவனுக்கும் ஏதோ கணக்கிருக்கும் போல் இருக்கிறது; மற்றவற்றின் கதியைப் பார்த்த இவன் மெல்ல நழுவி மறைந்து போகிறான். இங்கே தவம் செய்யவோ, வரம் பெறவோ நேரமெல்லாம் இல்லை. அவன் இந்திரலோகத்தை ஆள நினைத்து அழிக்க ஆரம்பிக்கிறான். வரவழைத்த முனிவர்களையே வதைக்கிறான். உண்டு, உறங்கி எழுந்து, நடந்து வாழ்க்கை நடத்திய முனிவர்களுக்கு இப்போது சற்று உறைக்கிறது. சரிதான், நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது; அவரை வணங்கிச் சரணடைவோம் என்று பிக்ஷாடன மூர்த்தியை மனமுருகி வேண்டினார்கள்.

இப்போது அவர்கள் மனதில் கோபமில்லை, பொறாமையில்லை மோஹினியை எண்ணிக் காமமில்லை. அவர்கள் வேண்டியழைத்ததெல்லாம் அந்தப் பொன்னார் மேனியனைத்தான்.

மிரண்டு போன கஜாசுரன்

மறைந்த பெம்மான் மீண்டும் வெளிப்பட்டார். கஜாசுரன் மிரண்டுபோய் நின்றான். பெருமாளின் கண்களில் இருந்த கருணையே அவனைப் பெரிதும் பயமுறுத்தியது. கஜாசுரனைப் பிடித்தார், தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார். சிதம்பர ரகசியம் பார்ப்பது போன்ற அரிய காட்சியைக் காட்டியருளினார். இறைச்சியோடு ஒட்டி இருந்த சிவப்புப் பகுதி வெளியேயும், உள்ளே கரிய நிறத்தோலும், சற்றே விலக்கினால் பொன்னிற மேனியும் மின்னி மின்னி மறைந்தது. சிதம்பர ரகசியம் பார்த்தோருக்குத் தெரியும், கறுப்புத் துணியை விலக்கினால் அதன் உள்பக்கம் சிவப்பாய் இருக்கும். உள்ளே தங்க வில்வம் மினுக்கும்.

ஆஹா ஆஹா என எல்லையில்லா, புளகாங்கிதத்தோடும், களிப்போடும் குரல் எழுப்பி, முனிவர்கள், தேவர்களெல்லாம் கூத்தாட, கூத்துக்கெல்லாம் பெருங்கூத்தாய் துள்ளி ஆடி, தோலை விரித்தும், போர்த்தும், விதவிதமாய் ஆடி வியக்க வைத்தார். கடைசியில் இடது காலை மடித்து உள்ளங்கால் காட்டி முத்தாய்ப்பாய் ஒரு அபிநயம் பிடித்து, வலது காலை கஜாசுரன் தலையில் ஊன்றி நின்றார். உள்ளங்காலில் ஏகப்பட்ட விஷயம் உள்ளதாக சாத்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் மானுடராகிய எம்மையே, காலால் காலைத் தேய்த்துக் கழுவக்கூடாது என்று காலகாலமாய் கூறி வகுகிறார்கள்.

மெய்மறந்து நின்ற திருக்கூட்டம்

கருமுகில் கூட்டம் நடுவே, தெரிந்தும், மறைந்தும் விளையாடும் பொன் நிலவு போல அந்தப் பொன்னிலவைச் சூடிய பெம்மான், மின்னி மறைந்து விளையாடி முடிவில் ஒளிப்பிழம்பாய் காட்சி கொடுத்தார். அந்த பொன்னெழில் ஜோதியின் உள்ளங்கால் தரிசனம் கண்டு, மெய் மறந்துபோய் நின்றது அந்தத் திருக்கூட்டம். பூதகணங்கள், வாத்தியங்கள் முழங்க, அரஹர, சிவ, சிவ என்ற கோஷம் வான்வரை எட்டியது. தேவர்கள் பொழிந்த பூமாரி மழையெனக் கொட்டியது.

இந்த விளக்கமே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வழுவூரிலும் சிதம்பரத்திலும் உள்ள பிக்‌ஷாடனரின் தலை அலங்காரமே, அப்படியே இந்த கஜசம்ஹார மூர்த்தியின் அலங்காரமாகவும் உள்ளது. ஊன்றிக் கவனிக்கும்போது காட்சிகள் கண் முன்னே ஓடுகின்றன.

இங்கே நீங்கள் பார்க்கும் இந்த ஒரே கல்லினால் ஆன அற்புத சிற்பம் பேரூர், பட்டீஸ்வரர் கோயிலில் உள்ளது. பார்க்கப் பார்க்கப் புதுப்புதுக் கதைகளை அது கூறிக்கொண்டே இருக்கிறது. நகர்ந்து செல்லவிடாமல் இழுத்துப் பிடிக்கிறது. என்றாவது ஒருநாள் பாத்து விடுங்கள் அன்பர்களே, அது தரும் ஆனந்தம் அளவிடமுடியாத ஒன்று.

காட்டப்பட்டுள்ள இன்னுமொன்று, அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான வழுவூரில் உளள ஐம்பொன் விக்கிரகம் ஆகும். எல்லை இல்லாத அழகோடு காணப்படும் இந்த விக்கிரகம், ஈடு இணையில்லாத எழில் பொருந்தியது. உலகில் வேறெங்கும் காண முடியாத இந்த அழகு நமது மண்ணில் இருக்கிறது. இது வார்ப்புக்கலையின் உச்சம். இந்த விக்கிரகம் தினமும் ஆராதிக்கப்படும் ஒன்று.

ஆனாலும் கஜசம்ஹாரம் நடந்ததான இடத்தில் உள்ள கோவிலில் காணப்படும் திருஉருவம் இது. முகத்தின் அழகையும், பாத அழகையும் பாருங்கள். தெய்வீகமான பாதங்களெல்லாம் உள்ளங்கால் குழிந்து இருக்கும். தட்டையாக இருக்கவே இருக்காது. முழு அழகும் இன்னுமோர் படத்தில் காட்டப்பட்டு உள்ளது. பிக்ஷாடன மூர்த்தியாக வந்து, பின் கஜாசுரனை அழித்த வரலாற்றைக் காட்டும் வண்ணம், உற்சவம் கூட இன்றும் இங்கு நடப்பதாய் அறிய வருகிறது. வாழ்நாளில் ஒரு தடவையாவது பார்த்து விடுங்கள். இந்த விக்கிரகத்தை வார்த்துக் கொடுத்த அந்தச் சிற்பிகளை மனக்கண்ணில் தியானித்து பாரத நாட்டு மக்களின் சார்பாக நெடுஞ்சான் கிடையாக வீழ்ந்து வணங்கி ஆனந்தக் கண்ணீரைக் காணிக்கையாக்கி மகிழ்கிறேன்.

மீண்டும் அடுத்தவாரம்...

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-11-கரி-உரி-போர்த்த-கடவுள்/article9458962.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 12: சிவனும் விஷ்னுவும் நடத்தும் லீலை

ஓவியர் பத்மவாசன்

 

 
sirpam_3116658f.jpg
 
 
 

இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துக் காட்டும் கருவிலேயே திரு என்ற நிலையில் பிறந்தவன் பிரஹலாதன். அன்னையின் அன்பிலும் செல்வத்தின் செழிப்பிலும் வாழ்க்கை ஆரம்பமாகியது. அப்பாவும் நல்லவர்தான். நானே கடவுள் என்ற நினைப்பில் மிதப்போடு திரிபவர் அவர். பிரஹலாதன், ஹரி நினைப்போடு இருப்பதால், ஒரு இடைவெளி இருவருக்குள்ளும் விழுந்தது.

மகனைச் சட்டைபண்ணாத ஹிரண்யன், தன்னை ஈரேழு லோகமும் வணங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தான்; தூரதேசங்களில் உள்ளவர்கள் எப்படியோ..! அவன் அருகில் வசிப்பவர்களெல்லாம் அவனைக் கடவுளாகப் போற்றினார்கள். தினமும் ஆராதனை பண்ணினார்கள். கைதேர்ந்த ஓவியர்களை வைத்து சிறியதும் பெரியதுமாய் அவனது உருவத்தை வரைந்து வைத்து வழிபட்டார்கள். நிவேதனம் பண்ணிப் பின்னரே உண்டார்கள். அவனை வணங்கியே அன்றைய நாளைத் தொடங்கினார்கள்.

பெருமகிழ்வோடு இருந்தான் ஹிரண்யன். ஆனாலும் மகனை நினைத்துச் சின்ன நெருடல் அவனுக்குள் இருக்கவே செய்தது. இதுதான் கடவுளுக்கும் கடவுளாக நினைத்துக் கொள்பவனுக்கும் உள்ள வித்தியாசம். சின்ன நெருடலையே இவனால் போக்கிக்கொள்ள முடியவில்லை.

தம்பியை இழந்த அண்ணன்

ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்‌ஷனும் அண்ணன் தம்பி. அசுரகுலம் இவர்களிடம் பயத்தோடு பணியும். இதுவே அவர்களை ஆரம்பத்திலிருந்து சிறு அகம்பாவத்தோடு உலவ வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அட்டகாசம் பண்ணி, அசுர பலத்தோடு நடைபோட்டார்கள். தினவு கொண்ட காளைகளைப்போல் காணப்பட்டார்கள். இதில் ஹிரண்யாக்‌ஷன், மஹாவிஷ்ணுவின் கோபத்திற்கு ஆளாகி மாண்டான்.

இது பெரிய வெற்றிடத்தை ஹிரண்யகசிபுவிற்கு ஏற்படுத்தியது. சகோதரனை இழந்தபின் அவனுக்கு கோபம் பொங்கியது, வாழ்க்கை வெறுப்பாகிப் போனது. உணவு இறங்கவில்லை. இப்படியாக சில காலம் கழிந்தது. மலைபோன்ற உணவுப் பொருட்கள் செலவாகாமல் கிடந்தன. ஏராளமான கால்நடைகள் நிம்மதியாக இருந்தன.

திடீரென ஒருநாள்… “விடமாட்டேன் ஹரியை! அவன் யார் என் சகோதரனைக் கொல்வதற்கு! பழிக்குப்பழி!” என்று கிளம்பியவன், இதுவரை யாரும் இப்படி ஒரு தவம் பண்ணியதில்லை என்பது போல் ஒரு கடும் தவம் புரிந்தான். அதன் வீரியம் பத்மத்தை அசைக்க, பிரம்மா எழுந்தோடிவந்தார். கேட்ட வரங்கள் அனைத்தையும் கொடுத்தார். எங்கே தன் மீது கை வைத்து விடுவானோ எனப் பயந்து சட்டென ஓடி மறைந்தார். சகல லோகங்களும் அதிரும்படி சிரித்தான் ஹிரண்யன். அந்தச் சிரிப்பிலேயே பல சிற்றுயிர்கள் சுருண்டு விழுந்து செத்தன. பூனையின் ‘மியாவ்’ என்ற சத்தத்தைக் கேட்டே சின்னக் கிளிகள் இறந்து போகுமாம்.

அது போன்ற நிலையில் அடுக்கடுக்காய் அழிவுகள். மூவுலகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்போது வைகுண்டம் நோக்கிப் போனான். சல்லடை போட்டுத் தேடினான். அப்போது மஹா விஷ்ணு இவனுக்குள் நுழைந்து கொண்டாராம். பையனின் பாடப் புத்தகத்திற்குள் பணத்தை வைக்கும் தகப்பனைப் போல, தனக்குள் தேடமாட்டான், இவன் என்று உள்ளே நுழைந்தவரின் கணக்குச் சரியாகவே இருந்தது. தான் வருவது தெரிந்ததும் பயத்திலேயே மாண்டுவிட்டான் இந்த ஹரி என்ற முடிவுக்கு வந்தவன் வெற்றிக் களிப்போடு நெஞ்சை நிமிர்த்தியபடி நேரே அரண்மனை வந்தான். உள்ளே நுழைந்த ஹரி வெளியே வந்து வைகுண்டம் போய் பாம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டார். அவர் வாயில் சிறு முறுவல் தெரிந்தது.

சிம்மம், கருடன், மனிதன் என்ற மூன்றின் அம்சத்தோடு வந்தார் பரமசிவன். மஹாவிஷ்ணுவின் கோபத்தை அடக்கினார். ஒரு பெரிய தபஸ்விக்கு கோபம் வந்தால் அவரைச் சமாதானப் பண்ண இன்னுமொரு தபஸ்விதான் வரவேண்டும்.

திடீரென ஒருநாள்… “விடமாட்டேன் ஹரியை! அவன் யார் என் சகோதரனைக் கொல்வதற்கு! பழிக்குப்பழி!” என்று கிளம்பியவன், இதுவரை யாரும் இப்படி ஒரு தவம் பண்ணியதில்லை என்பது போல் ஒரு கடும் தவம் புரிந்தான். அதன் வீரியம் பத்மத்தை அசைக்க, பிரம்மா எழுந்தோடிவந்தார். கேட்ட வரங்கள் அனைத்தையும் கொடுத்தார். எங்கே தன் மீது கை வைத்து விடுவானோ எனப் பயந்து சட்டென ஓடி மறைந்தார். சகல லோகங்களும் அதிரும்படி சிரித்தான் ஹிரண்யன். அந்தச் சிரிப்பிலேயே பல சிற்றுயிர்கள் சுருண்டு விழுந்து செத்தன. பூனையின் ‘மியாவ்’ என்ற சத்தத்தைக் கேட்டே சின்னக் கிளிகள் இறந்து போகுமாம்.

அது போன்ற நிலையில் அடுக்கடுக்காய் அழிவுகள். மூவுலகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்போது வைகுண்டம் நோக்கிப் போனான். சல்லடை போட்டுத் தேடினான். அப்போது மஹா விஷ்ணு இவனுக்குள் நுழைந்து கொண்டாராம். பையனின் பாடப் புத்தகத்திற்குள் பணத்தை வைக்கும் தகப்பனைப் போல, தனக்குள் தேடமாட்டான், இவன் என்று உள்ளே நுழைந்தவரின் கணக்குச் சரியாகவே இருந்தது.

தான் வருவது தெரிந்ததும் பயத்திலேயே மாண்டுவிட்டான் இந்த ஹரி என்ற முடிவுக்கு வந்தவன் வெற்றிக் களிப்போடு நெஞ்சை நிமிர்த்தியபடி நேரே அரண்மனை வந்தான். உள்ளே நுழைந்த ஹரி வெளியே வந்து வைகுண்டம் போய் பாம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டார். அவர் வாயில் சிறு முறுவல் தெரிந்தது.

ஹிரண்ய கசிபு -தவம் செய்யப் போயிருந்தபோது தேவர்கள் அசுரர்களை அழித்தார்கள். ஹிரண்ய கசிபுவின் மனைவி காயாதுவைப் பிடித்துச் சென்றான் இந்திரன். அப்போது அவள் கர்ப்பமாக இருந்தாள். இந்திரன் குழந்தையைக் கருவிலேயே அழிக்க முடிவு செய்தபோது நாரதர் குறுக்கிட்டார். “இந்திரா குழந்தையை அழிக்காதே; அதுவே, அவன் தந்தையை அழிக்கும்.

அவன் முடிவுக்கு இவன்தான் மூலமாய் இருப்பான் விட்டுவிடு!” என்று கூறி காயாதுவை அழைத்துப் புறப்பட்டார். ஆசிரமத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டார். அவள் வேண்டிய பணிவிடைகளைச் செய்ய, இவர் சகலத்தையும் உபதேசம் பண்ணினார். அவையெல்லாம் வயிற்றுக்குள் இருந்து பிரஹலாதனின் வசம் சென்று தங்கிக் கொண்டன.

ஹிரண்யகசிபு அரண்மனை திரும்பிய விஷயம் அறிந்து எதுவும் நடக்காதது போல் காயாது, அரண்மனை வந்தாள். ப்ரஹலாதன் பிறந்தான்.

ஹரிநாமம் சொல்லிய ப்ரஹலாதன்

இப்போது அவன் தன்னைப் பணியாது, ஹரி நாமம் சொல்வது வேதனையையும், கோபத்தையும் கொடுக்க பிள்ளையென்றும் பாராமல் கொடுமைகள் பல செய்து பரவசப்பட்டான். ப்ரஹலாதனோ அசுர குலத்தில் பிறந்து, அசுர குணம் எதுவுமில்லாமல் இருந்தான். மற்றவர்களுக்கு இது விநோதமாக இருந்தது. ஹிரண்யனை இந்த விஷயம் நோகச் செய்தது.

இப்போது அவன் தன்னைப் பணியாது, ஹரி நாமம் சொல்வது வேதனையையும், கோபத்தையும் கொடுக்க பிள்ளையென்றும் பாராமல் கொடுமைகள் பல செய்து பரவசப்பட்டான். ப்ரஹலாதனோ அசுர குலத்தில் பிறந்து, அசுர குணம் எதுவுமில்லாமல் இருந்தான். மற்றவர்களுக்கு இது விநோதமாக இருந்தது. ஹிரண்யனை இந்த விஷயம் நோகச் செய்தது.

கடைசியில் கடவுளைக் காட்டு என்றான். வந்தார் ஹரி நரசிம்மமாக. அழிந்தான் ஹிரண்யன். அவனோடு அவன் ஆணவம் அகம்பாவம் அறியாமை எல்லாம் அழிந்தன. ஆனால் இவருக்கு மட்டும் கோபம் தணியவில்லை; ப்ரஹலாதன் வணங்கிப் பார்த்தான். அம்பாள் ப்ருத்தியங்கிரா என்ற ஒரு ரூபம் எடுத்துப் பார்த்தாளாம். இவரது கோபம் அடங்கியதாய் இல்லை. நரமும், சிம்மமுமாய் இருந்த ஹரியின் கோபத்தை அடக்க...( கவனிக்கவும் அவரை அடக்க அல்ல ) சிம்மம் கருடன் மனிதன் என்ற மூன்றின் அம்சத்தோடு வந்தார் பரமசிவன். மஹாவிஷ்ணுவின் கோபத்தை அடக்கினார்.

ஒரு பெரிய தபஸ்விக்கு கோபம் வந்தால் அவரைச் சமாதானப் பண்ண இன்னுமொரு தபஸ்விதான் வரவேண்டும். இந்த தபஸ்விக்கு அவர் நடிக்கிறார் என்பதும் தெரியும். தான் நடிப்பது அவருக்குத் தெரியும் என்பதும் இவருக்குத் தெரியும். ஆனால் உலகத்திற்கு அதன் மூலம் ஒரு பெரிய பாடமும் நன்மையும் உண்டாக வேண்டும் என்ற காரணமாக இவை எல்லாம் நடத்தப்படுகின்றன. இதுதான் நரசிம்மரும் சரபேஸ்வரரும் நமக்குத் தரும் போதனை-அறிவுரை-அறவுரை எல்லாம்!

நம்மை மீறிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன அன்பர்களே! அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது தெரியாத நாம் வீணான சர்ச்சைகளில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம். அவர்களது திருவிளையாடல்களை ரசித்துப் பாருங்கள், மனம் ரசிக்கும்போது அவன் அருள் தானாய் நமக்குள் வந்து விடுமில்லையா? அதுதானே சத்தியம்.

இரண்டு சிற்பங்கள்

இருக்கட்டும். இங்கே காட்டப்பட்டுள்ள சிறிய படம் திருவிடைமருதூர் அருகில் உள்ள திருபுவனம் என்ற திருக்கோயிலில் உள்ள சரபேஸ்வரர். இங்கு சரபேஸ்வரமூர்த்தி மிகப்பிரபலம். எதிரிகள் பயமின்றி இருக்க இங்கு தினமும் சரபேஸ்வரரை நோக்கி ஹோமம் நடந்த வண்ணமே இருக்கிறது. இதில் சிவ அம்சங்களுடன் கைகள் காட்டப்பட்டு மான், மழு, பாம்பு, நெருப்பு, ஜடாமுடி ஆகியவை காட்டப்பட்டுள்ளன. நான்கு கரங்கள், எட்டு கால்கள் என்ற வகையில் சிவ உருவை தெளிவாகக் காட்டியிருக்கும் பாங்கு ரசிக்க வைக்கிறது. இங்குள்ள ஐம்பொன் திருமேனி மிக எழிலும், அழகும் பொலிவுடன் அற்புதமான விக்கிரகமாகும்.

அடுத்துக் காட்டப்பட்டுள்ள சரபேஸ்வர மூர்த்தி தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் பிரகாரத்தின் தெற்குப் பக்கத்தில் இருக்கிறது. சிம்ம முகமும் மேலே பரமசிவனுக்கே உரிய ஜடாமுடி - அதில் பிறை, பாம்பு என்றபடி அப்படியே இருக்க மூன்று கண்களும், எட்டு கால்களும், சிம்மத்திற்கே உரிய வாலும் இரண்டு இறக்கைகளுமாக (இவை அம்பாளின் அம்சமாகக் கூறப்படுகிறது) மிக அழகிய திருக்கோலம். இங்கு சிவ அம்சமாக ஜடாமுடி மட்டும் காட்டப்பட்டு, எட்டும் சிம்மக் கால்களாகவே காட்டப்பட்டுள்ளது.

இது நேரடியான அவதாரக் கோலம். மஹாவிஷ்ணுவிடமிருந்து, ஆக்ரோஷ சக்தி எடுக்கப்பட்டதும், அவரது எட்டுக் கரங்களும், அயர்வில் துவண்டு விட, சங்கு சக்கரம் நழுவி விழுந்து கிடக்கிறது. பிரஹலாதன், இருவரையும் ஒருசேர வணங்குகிறான். மேலே தேவர்களும், முனிவர்களும் வணங்கி மகிழ ஆனந்தமும், அருளும் பொங்கிப் பாய்கிறது. அந்த வெள்ளத்தில் சிறிது முங்கி எழுந்துதான் வருவோமே!

மீண்டும் அடுத்தவாரம்...

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-12-சிவனும்-விஷ்னுவும்-நடத்தும்-லீலை/article9474499.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 13: இரணிய கசிபுவும் காக்கும் கடவுளும்

 

 
 
sirpam_3120049f.jpg
 
 
 

நாமெல்லாம் நினைப்பதுபோல் நரசிம்ம அவதாரத்துக்கு, பிரஹலாதனோ இரண்ய கசிபுவோ காரணமல்ல! இரண்யாக்ஷன்தான் காரணம். இன்னொரு வகையில் கூறுவதானால், இரண்ய கசிபு பாசவலையில் சிக்குண்டு மாண்டுபோனான். நாராயணன் வதம் பண்ண, அவனை அழிப்பேன் எனக் கசிபு புறப்பட, இந்திரன் கசிபு மனைவியைத் தூக்கிச் செல்ல, அவள் நாரதர் வசம் வந்து அவளுக்கு அவர் அத்தனை நல்லதையும் உபதேசிக்க, அதில் உருவானவன்தானே இந்த பிரஹலாதன். சித்தப்பா மூலம், பிரஹலாதனின் பெருமை காலமுள்ள அளவும் இருக்க வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம். இனி கதையைத் தொடர்ந்து பார்க்கலாம்...

நான் கடவுள் என்றவன், தன் பிள்ளை தன்னைத் துதிக்காமல், ஹரி நாமம் கூறுவதைப் பொறுக்காததால் ஏகப்பட்ட தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பிக்கிறான். மனைவி காயாதுவிடம், மகனுக்குச் சாப்பாடு போடாதே என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூச்சலிட்டான். என்ன பிள்ளை வளர்க்கிறாய் என்கிறான். அவனைத் தூங்கவிடாதே, நீயும் தூங்காதே; என் பெயரை ஜெபிக்கும்வரை விடாதே என்று கர்ஜிக்கிறான். காலையில் நன்கு தூங்கி எழுந்து உண்டுவிட்டு, உண்டது செரிக்கு முன் வந்து, “என்ன என் பெயரைக் கூறித் துதிக்க ஆரம்பித்தானா? இல்லையா?” என்று கேட்பான்.

அறிவுரை கூறிய மனைவி

இல்லை என்றவுடன், தூக்கக் கலக்கத்தில் இருந்த காயாதுவின் தலைமுடியைக் கொத்தாய்ப் பிடித்துத் தூக்கி இன்னும் இரண்டு நாள் பார், இல்லையாயின் நீ உன் மகனை இழப்பாய் என்றான். நான் என் மகனை இழந்தால் நீங்களும்தானே மகனை இழப்பீர்கள் என்று சன்னமான குரலில் மனைவி கூறியது மமதை கொண்ட அவன் மூளைக்கு ஏறவில்லை.

இரண்டு நாட்கள் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றதும், சேவகர்களை அழைக்க, நடுநடுங்கியபடி வருகிறார்கள். இவளைச் சிறையில் அடைத்து வையுங்கள். யாரும், நீரோ - உணவோ கண்ணில் காட்டக் கூடாது என்கிறான். காயாதுவோ அழுது, அழுது கண்ணீர் வற்றிப் போய் மயங்கி விழுந்துவிடுகிறாள். அடைக்கப்பட்ட பிரஹலாதனோ ஹரி நாமம் சொன்னபடி நன்றாகவே இருக்கிறான். பாற்கடலில் பள்ளி கொண்டவன் அவனுக்குள் பால் சுரக்க வைத்துவிடுகிறான் போலும். மூன்று வேளையும், கல்கண்டு சேர்த்த பால் அருந்தியவன் போல் மிகவும் தெம்பாக, ஆனந்தமாக இருக்கிறான். ஐயோ, பிள்ளை என்னவானானோ என்று பார்க்காமல் என்னவாகியிருப்பான் எனப் பார்க்கச் சிறைவாசல் வந்து நின்றான் இரண்ய கசிபு.

வதை செய்த இரண்யகசிபு

இருட்டில் ஒளிவிளக்குப் போல், மின்னியபடி பிரகாசமாய் இருந்தான் பிரஹலாதன். கண்ணைக் கசக்கிப் பார்த்தான். பக்கத்தில் நின்ற சேவகர்களை ஓங்கி அறைந்தான். என்ன? காயாது வந்து உணவூட்டிவிட்டுப் போகிறாளா? இதற்கெல்லாம் நீங்களென்ன உடந்தையா என்று ஓங்கிக் குரலெடுத்துத்தான் கேட்டான் கசிபு. விழுந்த அறையில் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மேலும் கீழுமாகத் தலையை ஆட்டி வைத்தார்கள். மீண்டும் அறை விழுந்தது. பின்னால் இதற்கெல்லாம் சேர்த்து, நரசிம்மரிடமிருந்து அறைவாங்கப் போகிறோம் என்பது தெரியாமலேயே அடித்துக்கொண்டிருந்தான் இரண்யகசிபு.

இழுத்துக்கொண்டு வெளியே வந்து வெளிச்சத்தில் பிள்ளையைப் பார்த்தான். அவனுக்குக் கண்கள் கூசின. பிள்ளை வாயிலிருந்து பால்வாடை வீசியது. அவனை மீண்டும் உள்ளே தள்ளி விஷப் பாம்பை விடும்படி கூறினான். காயாதுவைப் பார்த்தான். மயங்கியிருந்தவளைத் தண்ணீர் தெளித்து எழுப்பி, ஒரே ஒரு அறை விட்டு மீண்டும் மயக்கத்தில் தள்ளினான். என்ன செய்வது என்று புரியாமல் எதற்கென்றும் தெரியாமல் மந்திரி சபையைக் கூட்டி, அடித்துத் திட்டி நேரத்தைக் கடத்தினான்.

உள்ளே விட்ட பாம்பு, பிரஹலாதனுக்குள், பிரகாசித்த மஹாவிஷ்ணுவைக் கண்டு, படத்தைச் சுருக்கித் தரையோடு தரையாகப் படுத்து, ஊர்ந்து வெளியேற வழியில்லாத சிறையில் பல்லிபோல ஒட்டிக்கொண்டு பயந்தபடி படுத்திருந்தது. இதை எதையுமே கண்டுகொள்ளாத பிரஹலாதன் நாராயணா நாராயணா என்றபடி தியானத்தில் அமர்ந்தான். நாராயணன் அவனோடு பேசிக்கொண்டிருந்தார்.

இங்கே காட்டப்பட்டுள்ள இந்த அற்புதமான சிற்பங்கள் திருக்குறுங்குடி அழகிய நம்பி திருக்கோயிலில் உள்ளவை. என்ன அழகு, என்ன நேர்த்தி, எத்தனை உணர்வுமயம்! கதையை அப்படியே காட்டும் வகையில் அடுத்தடுத்த காட்சிகளாய்க் காட்டப்பட்டுள்ள அழகே அழகு. தூணில் இருந்து பெறப்படும் நரசிம்மரில்தான் எத்தனை உணர்வுகள்! இவற்றையெல்லாம் நன்கு உற்றுநோக்கினாலே பரதநாட்டியக் கலைஞர்கள் அற்புதமாக நாட்டிய நாடகங்களை வழங்கி ரசிகர்களைக் கட்டிப்போடலாம். தூணிலிருந்து வெளிப்பட்டுவந்து, இரண்ய கசிபுவை மடக்கிப் பிடித்து ஒரு கை தலையிலும் மறு கை கழுத்திலும் இன்னுமொரு கை கக்கத்திலும் என இருக்க, மேலே தூக்கியிருக்கும் ஒரு கையைப் பாருங்கள். ஓங்கி ஒரு குத்து விழப்போகிறது. இதில் நிலைகுலையப் போகிறான் கசிபு. மகிழ்ச்சியில் ரிஷிகள் வணங்க, பிரஹலாதன் தந்தையின் நிலையை எண்ணியும் தனக்காக வந்த இறைவனையும் ஒருசேர மனத்தில் எண்ணி வணங்கும் அந்த மயக்க நிலை. இது கல்லும் கனியான அற்புத நிலை.

இங்கே காட்டப்பட்டுள்ள இந்த அற்புதமான சிற்பங்கள் திருக்குறுங்குடி அழகிய நம்பி திருக்கோயிலில் உள்ளவை. என்ன அழகு, என்ன நேர்த்தி, எத்தனை உணர்வுமயம்! கதையை அப்படியே காட்டும் வகையில் அடுத்தடுத்த காட்சிகளாய்க் காட்டப்பட்டுள்ள அழகே அழகு. தூணில் இருந்து பெறப்படும் நரசிம்மரில்தான் எத்தனை உணர்வுகள்! இவற்றையெல்லாம் நன்கு உற்றுநோக்கினாலே பரதநாட்டியக் கலைஞர்கள் அற்புதமாக நாட்டிய நாடகங்களை வழங்கி ரசிகர்களைக் கட்டிப்போடலாம்.

தூணிலிருந்து வெளிப்பட்டுவந்து, இரண்ய கசிபுவை மடக்கிப் பிடித்து ஒரு கை தலையிலும் மறு கை கழுத்திலும் இன்னுமொரு கை கக்கத்திலும் என இருக்க, மேலே தூக்கியிருக்கும் ஒரு கையைப் பாருங்கள். ஓங்கி ஒரு குத்து விழப்போகிறது. இதில் நிலைகுலையப் போகிறான் கசிபு. மகிழ்ச்சியில் ரிஷிகள் வணங்க, பிரஹலாதன் தந்தையின் நிலையை எண்ணியும் தனக்காக வந்த இறைவனையும் ஒருசேர மனத்தில் எண்ணி வணங்கும் அந்த மயக்க நிலை. இது கல்லும் கனியான அற்புத நிலை.

இந்தச் சிற்பம் அளவில் சிறியது. ஆனாலும், வசகீகரத்திலும் வடித்த விதத்திலும் கொடுக்கும் சிலிர்ப்பிலும் மிகப் பெரியது.

நாமும் கண்ட உணர்வு

அடுத்த சிற்பம் அளவில் பெரியது. தூண் சிற்பம். இங்கே மடக்கிப் பிடித்துத் தூக்கியாயிற்று. இனி சம்ஹாரம்தான். அசைய முடியாதவாறு இரு கால்களையும் அமுக்கிப் பிடித்துக் கழுத்திலும் கை வைத்தாயிற்று. முதலில் ஒரு குத்துவிட்டு மயங்க வைத்துப் பிடித்தவர் இப்போது சற்றுத்தெரிய, அடுத்த அறை கொடுக்கக் கையை உயர்த்தி இருப்பதைப் பாருங்கள். என்ன வேகமோ, என்னவாகி இருப்பானோ! இடிபோல் விழுந்திருக்குமோ! பார்க்கும்போதே என்னவோ பண்ணுகிறது. பிரஹலாதன் நேரில் கண்டதை நாமும் கண்டது போன்ற ஒரு உணர்வு.

கடவுளின் இந்த அதிசய நாடகத்தைக் கண்முன் காட்டி, எம்மையும் புனிதராக்கிய அந்த சிற்பிக்கு... வேறென்ன! நமஸ்காரம்தான் நன்றியுடன்.

(அடுத்த வாரம் சந்திப்போம்)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-13-இரணிய-கசிபுவும்-காக்கும்-கடவுளும்/article9489152.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 14: தூண், துரும்பு, சகலமும் அவனே!

 

 
sirpam_3123218f.jpg
 
 
 

பிரஹலாதனைப் பார்த்து ஹிரண்ய கசிபுவுக்குச் சிறிது பயம் வந்தது. பாம்புதான் பயந்து ஒடுங்கிப் படுத்துவிட்டது. விஷமாகக் கொடுப்போம் என முடிவெடுத்துக் கொடிய விஷம் கொண்ட பாம்பின் விஷத்தைக் கோப்பையில் எடுத்துக் கொடுத்தனுப்பினான். சேவகர்கள் ஒடுங்கியபடி கொடுத்த விஷத்தை, மகிழ்ச்சியோடு ஒரே மூச்சில் குடித்துவிட்டுக் கோப்பையைக் கொடுத்தான். வாங்கிக்கொண்ட சேவகர்கள், பிரஹலாதன் முகம் நீலம் பாரிப்பதைக் கண்டு கலங்கினாலும் தமக்குப் பதவி உயர்வும் பொன்னும் பொருளும் நிச்சம் என்ற களிப்போடு சேதி சொல்ல ஓடினார்கள். ஆலகால விஷத்தைப் பரமசிவன் அள்ளிக் குடித்தபோது சிந்திய சில துளி விஷம் தான் இப்போது நாம் விஷ ஜந்துக்கள் என்று கூறுபவற்றில் குடிகொண்டதாம்.

பிரஹலாதன் குடித்த விஷத்தை எடுத்துக்கொண்டார் பரமசிவன். என்ன ஹரிதானே எடுக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். ஹரியும் சிவனும் ஒண்ணுதான்!

ஜொலித்தான் பிரஹலாதன்

சிறைக் கதவு திறக்கப்பட, புடம் போட்ட தங்கம் போல், மேலும் அதிக பிரகாசத்துடன் பிரஹலாதன் ஜொலிப்பதைக் கண்டான் கசிபு. அக்கினிக் குழம்பாய், கண்கள் எரியத் திரும்பினான். அவனது அடிக்குப் பயந்து சேவகர்கள், தங்களுக்குள்ளேயே மாற்றிமாற்றி அடித்துக்கொண்டார்கள். அவையும் வீணானது.

பதவி உயர்வுக்கு ஆசைப்பட்டவர்கள், உயர்ந்து பறந்து, விழுந்து கிடந்தார்கள். எல்லாவற்றிலும் ஜெயித்து வந்த பிரஹலாதனின் கையை அழுத்திப் பிடித்து இழுத்துப் போய் தர்பார் மண்டபத்தில் விட்டான். “அடேய், மரியாதையாய் என்னைப் பணிந்துவிடு! எனக்குப் பின் இந்த சிம்மாசனம் உன்னுடையது. நான் விட்ட இடத்தில் இருந்து நீதானடா, ஆள வேண்டும். இது உனக்குக் கடைசி வாய்ப்பு” என்றான் கசிபு.

புன்முறுவலோடு பதிலளித்தான் பிரஹலாதன். “அப்பா! உனக்கான இந்த வாய்ப்பே அந்த ஹரி அளித்ததுதான்; நீ இன்னமும் பல காலம் ஆள வேண்டுமாயின் அந்த ஹரியைப் பணிந்துவிடு. உன் தவறனைத்தையும் மன்னித்து மகத்தான வாழ்வு தருவான் அந்த கோவிந்தன்” என்றான்.

இரணிய கசிபு, துள்ளி ஓடிப்போய் சிம்மாசனத்துக்கருகே இருந்த கதாயுதத்தை எடுத்துப் பாய்ந்து வந்தான். “கோவிந்தனாம் கோவிந்தன்! எங்கேயடா இருக்கிறான்? முடிந்தால் என் எதிரில் வரச் சொல் பார்ப்போம். தைரியமிருந்தால் வரட்டும். அவன் வந்தால் போக முடியாது. அவனை முடித்துப் பின் உன்னை முடிப்பேனடா!” என்று காச்சு மூச்சென்று கத்தினான்.

“என்னடா! மெளனமாகிவிட்டாய் கூப்பிடு! கூப்பிடு! எங்கு இருக்கிறான் உன் ஹரி.”

“அப்பா எங்கும் நிறைந்தவனை எங்கிருக்கிறான், எங்கிருக்கிறான் என்றால் என்ன செய்வது? நீயே கூப்பிடு!” என்றான் பிரஹலாதன்.

“அடேய் நாரணா! வாடா என் எதிரில்” என்று கர்ஜித்தான் இரணிய கசிபு. “ஹரி வரவில்லை பார்த்தாயா! பயந்து ஒளிந்துவிட்டான் உன் மாதவன்” என்று இடியெனச் சிரித்தான். “தூணிலும் துரும்பிலும் இருப்பவன் எப்படியப்பா ஒளிந்துகொள்வான்?” என்று கேட்டான் பிரஹலாதன்.

“இவ்வளவு பெரிய தூண்கள் இங்கே இருக்கின்றனவே. இங்கே வா! இந்தத் தூணில் இருப்பானா?” மீண்டும் இடியெனச் சிரித்து ஓங்கி அடித்தான்.

நரசிம்ம வதம் தொடங்கியது

தூண் பிளந்து வெளிப்பட்டார் நரசிம்மர். தான் வரப் பயந்து, யாரோ ஒரு மாயாவியை அனுப்பியிருக்கிறான் போலும் என, நரசிம்மரைப் பார்த்த கணத்தில் எண்ணிக்கொண்டான் கசிபு. ஒரு நொடியில் சுதாரித்து கதாயுதத்தால் ஓங்கி ஹரியின் மார்பில் அடிக்க நெருங்கினான். நாராயணன் ஒளியில் அவன் மறைந்தே போய்விட, பிரஹலாதன் சற்றுத் திகைத்தான். அடிபட்டதா, இல்லையா எனத் தெரியாமல் தெறித்து வெளியில் ஓடிவந்தான் கசிபு. மடக்கிப் பிடித்தார் ஹரி. மாற்றி மாற்றி வலது, இடது கைகளால் அறைவிட்டார். ஒரு பெண்ணைப் போய் அடிப்பாயா, இஷ்டத்திற்கு அறைவாயாஎன்று கேட்பதுபோல், ஒவ்வொரு அறை வாங்கும்போதும் தோன்றியது கசிபுவிற்கு. அவன் பொறிகள் கலங்கின. மடக்கித் தூக்கிப்பிடித்து வாசலுக்குப் போனார், மடியில் போட்டுக், கிழித்து, குடலை உருவி மாலையாய் போட்டுக் கொண்டார்.

அண்டசராசரமெல்லாம் நடுங்கி அடங்கின. மஹாலஷ்மி கூடப் பயந்துபோய் நின்றாளாம். பிரஹலாதன் சென்று பணிந்தபோதுதான் சிங்க முகம் மெல்லச் சிரித்தது. அவரைக் குளிர்விக்க அநேக பாடல்களைப் பாடிப் பணிந்தான் பிரஹலாதன். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். தேவர்களும், முனிவர்களும் வீழ்ந்து வணங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், உஷ்ண மூச்சும், சிறு கர்ஜனையும் மட்டும் அலையாய் பரவியபடி இருந்தன. அடங்க வெகுநேரமானது.

இங்கே நீங்கள் பார்க்கும் இந்த அற்புதமான, உணர்வுபூர்வமான சிற்பங்களில் ஒன்று திருக்குறுங்குடியில் உள்ளது. மற்றொன்று தாடிக்கொம்பு எனும் இடத்தில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் இருக்கிறது. வதம் பண்ணும் சிலைகளில், திருக்குறுங்குடி சிற்பத்தில் ஒரு நளினமும், முகத்தில் ஒரு களிப்பும் தெரிகிறது. தாடிக்கொம்பு சிற்பத்தில் உக்கிரமும், கைகளில், அந்த வேகமும் புலப்படுகிறது. ரசித்துப் பார்க்கையில் இவற்றை அந்த சிற்பங்களே உணர்த்திவிடும்.

போன வாரம் பார்த்த திருக்குறுங்குடி போன்றதே அடுத்த படம். அதிலே கசிபுவை அறை கொடுத்துப் பிடித்துத் தூக்குவது போல் இருக்கும். இதுவோ கிடுக்கிப்பிடி என்று சொல்வது போல் கையை மடக்கிப் பிடித்து இடுப்பையும், கையையும், தோளையும்கூட அமுக்கிப் பிடித்தாயிற்று. மூன்று கைகளால் அறை விழுகிறது. என்ன செய்வது. தன்வினை தன்னைச் சுடும்.

பாவம் ஹிரண்ய கசிபுவின் நிலை பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவனுக்கு ஏற்பட்ட நிலை நமக்கு வராமல் இருக்க வேண்டுமாயின், ஆணவம் இன்றி வாழ வேண்டும். நான் என்ற எண்ணத்தை விடுத்து நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு கடமைகளைச் செய்து வந்தாலே போதும் நிம்மதியான வாழ்வு அமைந்துவிடும்.

அவனருளாலே, அவன்தாள் பணிவோம்.

(மீண்டும் அடுத்த வாரம்)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-14-தூண்-துரும்பு-சகலமும்-அவனே/article9502094.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 15: கருடனின் கர்வமும் கருணைக் கடலின் அருளும்...

 

 
 
 
திருக்குறுங்குடி - ஸ்ரீ ரங்கம்
திருக்குறுங்குடி - ஸ்ரீ ரங்கம்
 
 

சிறிய திருவடியான ஆஞ்சநேயனின் பெருமையைப் பார்த்தோம். அவனது தலைவன் ராமபிரான் பெருமைகளையும் சிறிது பார்த்தோம். பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் பற்றியும் பார்ப்போம்.

முழங்கால் வரை பொன் நிறமாக இருப்பார் கருடன். அதற்கு மேலே கழுத்துவரை சூரியனின் பிரகாசம் போன்ற வண்ணம் கொண்டவர் அவர். கழுத்து, குங்கும வர்ணமாகவும் முகம் சந்திரனைப் போன்ற வெண்மை நிறத்துடனும், கறுத்த மூக்குடனும், கோரைப் பல்லுடனும் கூடியவர் அவர்.

இவரை ஏராளமான நாகங்கள், வணங்கிப் பணிவிடை செய்ய இவரோ, மஹாவிஷ்ணுவின் நினைப்பிலேயே கைகளைக் கூப்பியபடியே மண்டியிட்டபடி இருக்கிறார். இவர் மஹாவிஷ்ணுவின் வாகனமாய் ஆன கதை இதுதான். இது கருடனின் அகம்பாவத்திற்கு கிடைத்த அரிய வரம், அரிய வாய்ப்பு, பரிசு. ஆமாம். கதையைத் தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கே புரியும்.

கருடன் வாகனமான கதை

காசியப முனிவரின் மனைவிகளில் ஒருத்தி வினதை. இன்னொரு மனைவி பெயர் கத்துரு. வினதையின் புதல்வர்களில் ஒருவரே கருடன். கத்துருவின் புதல்வர்களில் ஆதிசேஷனும், கார்கோடகனும் பிரபலம். இவளுக்கோ கருடன்; அவளுக்கோ நாகங்கள். இவர்களென்னவோ ஒற்றுமையாய் இருக்க அம்மாக்களுக்குள்தான் பகை. அதுவும் கத்துருவிற்கு வினதை மீது தீராத பொறாமை, பகை. இவளை அடிமையாக்கிக் கசக்கிப் பிழிய வேண்டும் என முடிவெடுத்தவள் அதற்கான சந்தப்பத்திற்காகக் காத்திருந்தாள்.

ஒருநாள், இந்திரனின் வெள்ளை வெளேரென்ற குதிரையைப் பார்த்து மலைத்துப் போனாள் வினதை. அதைப்பற்றி கருடனிடமும், ஆதிசேஷனிடமும் வியந்து பேசிக்கொண்டிருந்தாள். வெள்ளை உள்ளத்தோடு உளமார ரசித்துப் பேசிய வினதையைப் புரட்டிபோட இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய கத்துருவின் மனம் கறுத்தது. புத்தி சிறுத்தது!

"என்ன பெரிய வெள்ளைக் குதிரை! அது அப்படி ஒன்றும் முழுவெள்ளை இல்லையே. அதன் வால் கறுப்பாக அல்லவா இருந்தது. ஒழுங்காக ஒரு பொருளைப் பார்க்கத் தெரியவில்லை. ஆனால் புகழத்தெரியும் அப்படித்தானே! ஒரு வேலையை உருப்படியாகப் பண்ணத் தெரியாதவளுக்கு, பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை."

(மீண்டும் அடுத்த வாரம்)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-15-கருடனின்-கர்வமும்-கருணைக்-கடலின்-அருளும்/article9516482.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 16: யானையைக் காப்பாற்ற வந்த பெருமாள்

ஓவியர் பத்மவாசன்

 
திருக்குறுங்குடி - சிதம்பரம்
திருக்குறுங்குடி - சிதம்பரம்
 
 

வானளாவிய மரங்களும், பூஞ்சோலைகளும், நறுமணம் சுமந்த காற்றும், ஓசை எழுப்பும் பறவைகளும், ரீங்கரிக்கும் வண்டுகளும் வாழும் எழிலார்ந்த இடம்தான் திரிகூட மலையென்று பெயர். அது பாற்கடலால் சூழப்பட்டிருந்தது. தங்கம், வெள்ளி, இரும்பு என மூன்று மலைகள் சேர்ந்ததால் இந்தப் பெயர். சித்தர்களும், முனிவர்களும் பல ஆண்டுகளாகத் தவமியற்றி வருவதால், தாடியும், ஜடையுமாய் இருக்க, சில மிருகங்கள் பயந்து விலகிச் சென்றன. மனிதர்கள் கண்டு பயப்படக்கூடிய கொடிய மிருகங்களோ, இவர்களது தவ வலிமை காரணமாக, நெருங்கிச் செல்லவே பயந்தன. தேவர்களும், கந்தவர்களும்கூட இந்தப் பூஞ்சோலைக்கு வந்து உலவி மகிழ்ந்து செல்வது வழக்கம்.

இப்படியான இந்த ரம்மியமான இடத்தில் ஒரு யானைக்கூட்டம் வாழ்ந்து வந்தது. காடே விருந்தாய் இருக்க, வயிறு நிறைந்தவுடன், கூட்டம் மொத்தமும் ஆனந்த வேகத்தில் வாலைத் தூக்கியபடி ஓடின. பெரிய யானைகளுக்கு மதநீர் வழிய, தேனீக்கள் அவற்றைக் குடித்துப் பாட்டுப் பாடி மகிழ்ந்தன. ஆயிரம் இதழ் கொண்ட பெரிய, பெரிய தாமரைகள் நிறைந்த குளத்திற்கு வந்து கும்மாளம் போட்டன. யானைகள் தாமரைப் பூக்களைப் பறித்துப் பரஸ்பரம் வீசிக்கொண்டன. என்ன இது விளையாட்டு என்பதுபோல், பூக்களைப் பிடித்து, குட்டிகள் கைகளில் கொடுத்தன. அவை அதை மீண்டும் தண்ணீரில் போட்டு ஓங்கி ஓங்கி அடித்தன, குளித்தன. தண்ணீர்த் திவலைகள் உயரே எழுந்து முத்துக்களாய் பறந்து விழுந்தன.

கோபம்கொண்ட முதலை

தாமரை இலைகளின் கருமைசூழ் நிழலின் கீழ் தண்ணீரின் அடியில் மறைந்திருந்த ஒரு பெரிய முதலைக்குக் கோபம் கிளம்பியது. விருட்டெனக் கிளம்பி வந்து, கூட்டத்தின் தலைவனான யானையின் காலைப் பிடித்துக்கொண்டது. தண்ணீரில் முதலைதான் ராஜா. தரையில்தான் யானை பலசாலி. அதன் ஜம்பம் எதுவும் தண்ணீரில் இருந்த முதலையிடம் பலிக்கவில்லை.

பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்து ஓய்ந்தது. கூட வந்த கூட்டம் ஓங்கிக் குரலெடுத்துப் பிளிறின. இந்தச் சத்தத்தில் ஓநாயும், நரியும் தமக்கும் ஏதாவது கொழுத்த உணவு கிடைக்குமா என ஒளிந்து ஒளிந்து பார்த்தன. கஜேந்திரன் என்ற அந்த யானை இப்போது யோசிக்க ஆரம்பித்தது. பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்தப் பரம்பொருள் மஹாவிஷ்ணுதான் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணம் தோன்ற, தும்பிக்கையை உயர்த்தித் தூக்கிப் பிளிறி அழைத்தது.

நாராயணா என்று முழக்கமிட்ட யானை

முதலைக்கு இன்று மட்டுமென்ன அடக்க முடியாத கோபம் வேறொன்றுமில்லை, அதற்கு விடுதலை நாள். நேரம் நெருங்கிவிட, நடவடிக்கைகள் ஆரம்பித்து விடுகின்றன அவ்வளவுதான். போராடிக் களைத்த யானைக்கு ஞானம் வந்து துதிக்கையை உயரே தூக்கி அழைத்ததும் பகவான் விரைந்து வந்தார்.

யானை, ‘நாராயணா’ என்று கத்தியது. பறந்தோடி வந்தார் பகவான். சுமந்து வந்தார் கருட பகவான். சக்கரத்தை விட்டார். முதலை கந்தர்வனாக மாறியது. பகவானை வணங்கிய கந்தர்வன், அவனது உலகம் போனான்.

யானையோ ராஜகுமாரனாக மாறியது. பரமாத்மா, அவனுக்கு அருள்புரிய, அவன் கண்ணீர் மல்க, வீழ்ந்து வணங்கி, சுவர்க்கலோகம் போனான்.

இது ஒருபுறமிருக்க - ஆணவத்தோடு இருந்த கருடனுக்கு வாகனமாகும் பாக்கியத்தைக் கொடுத்தார் பரமாத்மா. அவரைச் சுமந்தபடியும் தியானித்தபடியும் இருக்கும் கருட பகவான் மகாவிஷ்ணுவின் திட்டப்படி, அவர் கைகாட்டும் இடங்களுக்கு இன்றுவரை பறந்துகொண்டுதான் இருக்கிறார். இங்கே இந்தத் திருக்குறுங்குடி சிற்பத்தில் கற்பனை வளமும், கவனிப்பும் சேர்ந்து உருவெடுத்திருப்பது ஒரு சிறப்பு. இதிலே மகாவிஷ்ணுவின் கையில் ஒரு வாள், அது உறையில் இருந்து உருவிய நிலையில் இருப்பதைப் பாருங்கள். அவர் விடப் போவதென்னவோ சக்கரம்தான். ஆனால், “ஒரு காலத்தில் நீ ராஜா, வாளெடுத்துப் போர் புரிந்து நாடு காத்த உன்னைக் காக்க நான் வந்து விட்டேன்” என்று உணர்த்துவது போல் இருக்கிறது.

இதற்குக் கதையின் ஆழம் உள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். அது இந்தச் சிற்பியிடம் அபாரமாக இருந்திருக்கிறது. பெரிய பறவைகள் பறந்தபடியே ஒரு இடத்தில் நின்று கவனித்து இறங்க, இறக்கையை உள்பக்கமாக திருப்பிச் சுழற்றிச் சுழற்றி அடித்து நிற்கும். அப்போதுதான் அது அந்த இடத்தில் நிற்க முடியும். இந்தச் செயல் பருந்திடம் அதிகம் இருக்கும். அப்படி அந்த உள்பக்கமாய் சுழற்றி அடித்து, இங்கே கருடன் நின்றுகொண்டிருப்பதை இறக்கையின் அமைப்பில் காணலாம். கருடன் குளத்தில் இறங்கவில்லை - பறந்தபடி நிற்க அங்கிருந்துதான் மகா விஷ்ணு சக்கரம் விட வேண்டும். காற்றில் ஒரே இடத்தில் நிற்கின்ற அந்தக் கோலம் மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளது. இதுதான் கவனிப்பு, உற்று நோக்குதல்.

யானையின் கோலத்தைப் பாருங்கள், விம்மியழும் குழந்தைபோல அதன் முகம் தெரிகிறது. பசியில், அம்மாவை அண்ணாந்து பார்த்து அழும் குழந்தையின் உணர்வை, யானையில் காட்டியிருப்பதற்குப் பெயர்தான் தெய்வீகம். வடித்தவனுக்குப் பெயர் தான் தெய்வீகச் சிற்பி. மேலும் யானையின் தும்பிக்கையில் தூக்கி வைத்திருக்கும் தாமரை மொட்டை, பெரிதாகவும், இதழ்கள்போல் காட்டாமல் மொட்டையாகவும் விட்டதில், யானையில் வேண்டுதல் மிகப் பெரிது என்பதையும், அதற்கு ஜென்ம சாபல்யம் ஒன்றே குறியென்பதையும், சூசகமாகக் காட்டி உணர்த்தப்படுகிறது.

தேர்ந்த சிற்பிகளும் தெய்வீகச் சிற்பிகளும்

யானையின் வால் மிகச் சரியாகக் காட்டப்பட்டுள்ளது. எய்யும் அம்பின் பின்புறம் போன்று இருக்க வேண்டும். இன்றைய சிற்பங்களிலும் ஓவியங்களிலும் சிங்கத்தின் வால் போல, குஞ்சம் போன்று, காட்டப்படுவது வழக்கமாகிவிட்டது. இது தவறு! எது எப்படியிருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும், அப்போதுதான் பிழையின்றித் தகவலைக் கொடுக்க முடியும். எனக்கு எனது தந்தையார், எல்லா மிருகங்களது கால், வால் இரண்டையும் தனித்தனியாக வரைந்து காட்டிப் பதிய வைத்தார்.

தேர்ந்த சிற்பிகள் என்பவர்கள் வேறு; தெய்வீகச் சிற்பிகள் என்பவர்கள் வேறு. இவர்கள் தெய்வீகச் சிற்பிகள். நமக்காக பெருங்கொடைகளை அள்ளிக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். காட்டப்ட்டுள்ள மற்றைய சிற்பம் சிதம்பரத்தில், கோபுரமொன்றின் மாடத்தில் உள்ளது. மிக அழகிய சிற்பம், நுணுக்கமான வேலைப்பாடு; ஆனால் இப்போது அபய, வரத ஹஸ்தங்களின்றி பின்னமாக இருக்கிறது

(நான் அவற்றை முழுமையாக்கிக் காண்பித்திருக்கிறேன்). இதுவும் கஜேந்திரனுக்காக வந்த கோலம்தான். சக்கரத்தை கவனித்துப் பார்த்தாலே புரியும். இது பிரயோகச் சக்கரம் என்று சொல்லப்படும். அதாவது பிரயோகிப்பதற்குத் தயாரான கோலம். இல்லையென்றால் வட்டமாக திருக்குறுங்குடி சிற்பத்தில் உள்ளது போல் இருக்கும்.

இதுபோன்ற நுணுக்கங்களையெல்லாம் ரசிப்போம், ருசிப்போம். ரசித்து மகிழும் போது, தியானம் பண்ணிய பலன் நமக்குக் கிடைத்துவிடுகிறது.

(சிற்பங்கள் பேசும்…)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-16-யானையைக்-காப்பாற்ற-வந்த-பெருமாள்/article9529097.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 17: பகடி வேடன் பரமசிவன்

 

 
வேலூர் - கிருஷ்ணாபுரம்
வேலூர் - கிருஷ்ணாபுரம்
 
 

நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும், வேடனுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும். அர்ஜுனனைத் தடுத்தாட்கொள்ள எம்பெருமான் பரமசிவன் வேடன் வேடம் பூண்டு வந்திருக்கிறார். வள்ளியை மணம்புரிய வந்த முருகப் பெருமானும் வேடனாக வந்து அவளின் மனங்கவர முயன்றார். கண்ணையும் தன்னையும் கொடுத்து நாயன்மார்களில் ஒருவராய் ஆன கண்ணப்பனும் வேடுவர் குலத்தில் பிறந்தவர்தான்.

இதுபோல பற்பல வேடுவர் கதைகளும் வேடுவர் வேடமிட்ட கதைகளும் நிறைந்து கிடக்கின்றன. வேடர்கள் அவர்கள் தொழிலின்படி வேட்டையாடி, அதனை உணவாக்கி உண்டு தம்முள் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆண்டவனோ! உத்தமர்களை உயர்ந்தவர்களை உரிய நேரத்தில் வேட்டையாடித் தன்னோடு சேர்த்துக்கொள்கிறான். அத்தகைய ஒரு வேடனின் பெருமை பேசும் கதையான்றைப் பார்ப்போம்!

குருபக்திக்குக் கிடைத்த மரியாதை

ஜகத்குரு ஆதி சங்கரரின் சீடர்களில் மிக முக்கியமானவர் ‘பத்மபாதர்’. உயர்ந்த குருபக்தி காரணமாக அவருக்கு இந்தப் பெயர் கிடைத்தது. ஆமாம்! ஒரு தடவை கங்கையின் அந்தப் பக்கம் பத்மபாதர் நிற்கிறார். இந்தப் பக்கம் ஜகத்குரு குளித்து முடித்து ஈரத்துணியோடு நிற்கிறார். சீடனின் பெருமையை உலகக்குக் காட்ட நினைத்து, ‘ஏனப்பா! அந்த உலர்ந்த துணிகளை எடுத்து வா!’ என்கிறார்.

கங்கையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிஷ்யனுக்கோ, கங்கையின் நினைப்பே இல்லை. இவரின் குருபக்தியைக் கண்டு மகிழ்ந்த கங்காதேவி இவர் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு தாமரையை மலரச் செய்து தாங்குகிறாள். இவரும் இந்தப் பக்கம் வந்து துணியைக் கொடுக்கிறார். நடந்தவை எதுவும் அவருக்குத் தெரியவே இல்லை. மற்றவர்களெல்லாம் பின்னர் வியந்து சொல்லும்போதும் இவர் அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. எல்லாம் குருவருள் என்ற வார்த்தையோடு முடித்துக்கொண்டார். அன்றிலிருந்து இவர் ‘பத்மபாதர்’ ஆனார். இப்படிப்பட்ட பெருமை நிறைந்த பத்மபாதர் முன் ஜென்மத்தில் சோழ வள நாட்டில் பிறந்திருந்தார் என்று கூறப்படுகிறது. அப்போது அவருக்கு ஸநந்தனர் என்று பெயர். அவருக்கு ஒரு மஹான், நரசிம்மர் மந்திரத்தை வலிந்து உபதேசம் பண்ணினார்

இந்த மந்திரத்தைக் கொண்டு, எப்படியாவது நரசிம்மரைப் பார்த்து விட வேண்டுமென்று மனத்தில் ஆசை உண்டாயிற்று. வீட்டில் இருந்தால் எப்படி இது கைகூடும்? சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டுப் புறப்பட்டார். அடர்ந்த காட்டுக்குள் போனார். பிறர் கண்படாத இடமாய்ப் பார்த்து அமர்ந்தார். அடுத்த கணமே ஒரு வேடன் வந்தான்.

“ஐயா, அந்தணரே! இங்கே எதற்காக வந்து உட்கார்ந்து இருக்கிறீர்கள்? குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினையா?’’ என்று ஏளனமாய் சிரித்தபடி கேட்டான்.

“நீ வேட்டைக்காரனா? இல்லை, கூத்துக்காரனா? ஏகத்துக்கும் கற்பனை பண்ணுகிறாயே! சிங்கமுகமும் மனித உடலும் இருக்கும் மிருகமொன்று காட்டில் இருக்கிறதாவென்று பார்க்க வந்தேன்” என்றார்.

அப்படிப்பட்ட மிருகம் ஏதும் காட்டிலேயே இல்லை என்றான் வேடன். ஸநந்தனர் பதைத்துப் போனார். தான் பொய் சொல்லவில்லை என்றும் அப்படியான ஒரு உருவம் காட்டில் இருப்பதாக இன்னும் நம்புவதாகவும் வேடனிடம் சத்தியம் செய்தார்.

வேடன் அப்படிப்பட்ட மிருகத்தைப் பிடித்து வருவதாக உறுதிமொழியளித்தான். அடுத்த நாளும் வேடனின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

வேடனுக்குக் காட்சி

கடுந்தவம் போல் நரசிம்மர் மேலேயே வேடனது சிந்தனை இருந்ததால் பரந்தாமன் நரசிம்மமாய் காட்சி கொடுக்க முடிவு செய்தார். ஹிரண்யனை வதம் பண்ணிய அதே சந்தியாவேளை வந்தது. தன்னால் ஸநந்தனருக்குக் கொடுத்த வாக்கு கொடுக்க இயலவில்லையே என்று வேடன் வருந்தி, உயிரைவிடத் துணிந்தான்.

காட்டுக் கொடிகளை வெட்டியெடுத்தான். கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டு மரத்தின் உச்சிக்கு ஏறி அங்கே கட்டிவிட்டுக் குதித்து உயிர்விடத் துணிந்தான். கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொள்ளப் போனபோது லேசான கர்ஜனை கேட்க, ஓசைவந்த இடம் நோக்கினான். அவன் ஏறவிருந்த மரத்தின் பின்பக்கம் இருந்து ஓசை வந்தது. சற்று அருகில் போக, மஞ்சள் நிறத்தில் சடைமுடி காற்றில் அசைந்தது. மாலை நேரத்து ஒளியில் பளபளத்தது.

சிங்கம் என்று முதலில் நினைத்தான் வேடன். ஆனால் அதன் கருநீலக்கையோ மரத்தை வளைத்துப் பிடித்தது. பளபளக்கும் முடி முழுவதுமாய்த் தெரிந்து இப்போது சிங்கமுகம் மெல்ல எட்டிப்பார்த்தது. “ மனித உடல், சிங்கமுகம்! ஆஹா! ஆஹா!” என்று மனம் துள்ளிக் குதிக்க ஈட்டியை நீட்டியபடி “அப்படியே நில்! இல்லேன்னா தொலைச்சிடுவேன்!” என்றபடி நெருங்கி தான் சாவதற்காக வெட்டியெடுத்த கொடியைச் சடாரென சுற்றிப் பிடித்துக் கட்டினான். பெருமாள் கொடியினால் கட்டப்பட்டார். நிஜத்தில் அவன் மன உறுதிக்குக் கட்டுப்பட்டார். வா! வா! என்று இழுத்துக்கொண்டு போனான். ஸநந்தனரிடம் பரிசாக அளித்தான். அண்ட சராசரம் கட்டிக் காக்கும் கடவுள் ஒரு வேடன் கட்டுக்குள் அகப்பட்டுப் போன நரசிம்மம் இப்போது பலமாய் சிரித்தது.

“ஓ! உனக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா? இங்க பாரு சாமி! சிங்கம் சிரிக்குது!” என்றான். சிங்கத்தின் முன் மாட்டிக்கொண்டவனைப் போல் திகைத்து விழித்துக்கொண்டிருந்தார் ஸநந்தனர். அவர் கண்கள் கலங்கின. கண்ணீர் மெதுவாகக் கிளம்பிப் பெருகி வழிந்தது. அந்தரத்தில் கொடி இருந்ததில் அங்கே ஓர் உருவம் இருக்கிறதென்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது!

“ஆண்டவா! இது என்ன சோதனை. ஒரு வேடன் கண்ணுக்குத் தெரியும் நீ. என் கண்ணுக்குப் புலப்பட மாட்டேன் என்கிறாயே என்று உருகினார். சிரிப்பும் கர்ஜனையும் கேட்க சிலிர்த்துப் போனார். உணர்ச்சிப் பெருக்கில் இருந்த ஸநந்தனர் காதில் இப்போது நரசிம்மர் பேசுவது தெளிவாகக் கேட்டது. “ஆயிரமாயிரம் வருஷத்து தவத்தில் வாய்க்கும் தவப்பலன் வேடனுக்கோ ஒரே நாளில் வாய்த்து விட்டது. அதனால் அவனுக்கு தரிசனம் தந்தேன். அவனால் நீ என் குரலை, என் வாக்கைக் கேட்கிறாய். இதன் காரணமாக உனக்கு என் மந்திர சக்தி வாய்த்து விட்டது. உனக்கு எப்போது தேவையோ, அப்போது எனது பூரண அருள் கிட்டும்” என்று கூறி வைகுந்தம் போகத் தயாரானார்.

இப்போது வேடுவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. விரைவில் வேடனையும் அவனது குடும்பத்தவர்களையும் வைகுந்தம் அழைத்துப் போக புஷ்பக விமானம் வரும் என்று கூறிய பெருமாள் புன்னகைத்தபடி மறைந்து போனார்.

ஸநந்தனருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற ஒரு தடவை ஆதி சங்கரின் தலையை ஒரு காபாலிகன் வெட்ட வந்தபோது பத்மபாதருக்குள் நரசிம்மர் புகுந்துகொண்டு அவன் கதையை முடித்த கதையும் நாம் அறிந்ததே. இதன்மூலம் பத்மபாதர் பெருமை மேலும் சிறந்து பரந்தது, விரிந்தது.

இங்கே காணும் லக்ஷ்மி நரசிம்மர் சிற்பம், வேலூர் ஜலகண்டேஸ்வர் கோயிலின் கல்யாண மண்டபத் தூண் ஒன்றில் இருக்கிறது. கோபம் தணிந்த நிலையில் லக்ஷ்மி தேவியை அணைத்தபடி இருக்கும் கோலம் இது. பத்மபாதரை சாக்காக வைத்து இவரையும் தரிசித்து மகிழ்வோம்.

வேடுவனின் அற்புதமான சிற்பம்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் ஸ்ரீ வைகுண்டத்திற்கு முன் கிருஷ்ணாபுரம் என்ற பிரிசித்தி பெற்ற கோவிலில் இந்த அழகிய வேடுவன் சிற்பம் உள்ளது. என்ன ஒரு நுணுக்கம், என்ன ஒரு அழகு. இதை பகடி வீரன் என்பார்கள். எனக்கென்னவோ இவர் வேடன் வடிவு கொண்ட பரமசிவன் போலவே தெரிகிறார். கையில் கத்தி மற்றது கொம்பு எனும் வாத்தியம். வேடர்கள் கையில் இது அவசியம் இருக்கும். இதை வைத்து ஓசை எழுப்பி விலங்குகளை ஓடவைத்து வேட்டையாடுவது வழக்கம் (இதேபோன்ற சிற்பங்கள், ஸ்ரீ வைகுண்டம் ஆலயத்திலும் ஆவுடையார் கோயில் போன்ற இடங்களிலும் இருந்தாலும் இது தனிரகம்).

இங்கு அர்ஜுனன், பீமன், தருமன் சிலைகளும் இருக்கின்றன. அதுதொடர்பாக, அர்ஜுனனைத் தடுத்தாட்கொண்ட பரமசிவன் தான் அந்த வேடுவன் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். அந்தக் கொண்டையைப் பாருங்கள் விரித்த அந்தப் பனித்த சடையை அள்ளி எடுத்து முடிந்து கொண்ட ஒய்யாரக் கொண்டை போலவே தோன்றுகிறது. பொட்டு, நெற்றிக் கண்ணைக் குறிப்பது போல் தெரியும். இல்லையென்றாலும் பகடி வீரனுக்கெல்லாம், பகடி வீரன்தானே சிவபெருமான். அவர் அர்ஜுனனை பகடி பண்ணித்தானே தடுத்தாட்கொண்டார். இதற்கெல்லாம் மேலே இப்படி ஒரு சிரத்தையும், பொறுமையும், ஊனுறக்கம் மறந்த உழைப்பையும் கொட்டிச் செய்த அந்த தெய்வீக சிற்பிக்காகவேனும், ‘ஆமாம்! இது நான்தான்!’ என்று பரமசிவன் அந்தக் கணத்தில் வந்து உறைந்து விட மாட்டாரா என்ன!

இது எனது நம்பிக்கை. நான் இந்தச் சிற்பத்தில் பரமசிவனைக் காண்கிறேன். உற்றுப் பாருங்கள். உங்கள் கண்ணுக்கும் அந்த சிவபரம்பொருள் தெரிவார். இப்படித்தான் சிற்பங்கள் பேசும்!

(அடுத்த வாரமும் சிற்பங்கள் பேசும்…)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-17-பகடி-வேடன்-பரமசிவன்/article9544918.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 18:

 
 
 
sirpam_3136481f.jpg
 
 
 

பெரும்பேறு பெற்றவர்களில் ஒருவன் தட்சன். ஆம்! அந்த ஆதிபராசக்தியே அவனுக்கு மகளாகப் பிறந்து, வளர்ந்து இந்தப் பெருமையைக் கொடுத்திருந்தாள். தனது மகளுக்கு அந்தப் பரம்பொருளான சிவபெருமான்தான் மாப்பிள்ளை என்றதும், ஆணவம் கொண்டான். மாப்பிள்ளை, தன்னை வணங்கிப் பணிய வேண்டுமென்றான். தன்னை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்றுப் பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அதிரடி உத்தரவுகளையும், ஆணைகளையும் பிறப்பித்துக் கொண்டிருந்தான் தட்சன்.

திருமணத்தை நீங்கள் நடத்த வேண்டியதில்லை அதை அவரே பார்த்துக்கொள்வார் என்று அம்பிகை சொன்னபோது, கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டான் தட்சன். பின்னர் திருமணத்தன்று அம்பிகை கரம் பிடித்த சிவபெருமான் மறைந்து, மீண்டும் ஒருமுறை வந்து தட்சன் அறியாத வண்ணம் கயிலைக்கு அழைத்துப் போனார். இது அதிக வெறுப்பையும், எரிச்சலையும் தட்சனுக்கு ஏற்படுத்தியது. இருந்தும் பாசத்தின் காரணமாக மகளைப் பார்க்க கயிலை போனான். அங்கே இருந்த துவார பாலகர்கள் அவனைத் தடுத்துவிட, மேலும் கொதிப்படைந்தான்.

சிவனை எப்படியாவது அவமானப்படுத்திவிட வேண்டுமென்று துடித்தான். உபாயம் கிட்டியது. சிவனைத் தவிர்த்து மற்ற அனைவரையும் அழைத்து ஒரு மாபெரும் வேள்வி செய்ய முடிவெடுத்தான். மயனிடம் கூறி, அழகிய அழைப்பு ஓலை தயார் செய்து, தேவர் முனிவரையெல்லாம் அழைத்தான். மயனைக் கொண்டு அழகிய யாகசாலை நிர்மாணித்தான். விதிகளின் அளவுகளின்படி - ஆழ அகலத்தோடு மிகப் பிரமாண்டமாய் ஹோம குண்டம் அமைத்தான். பொன்னிறத்தில் காமதேனுவின் நெய், அண்டா அண்டாவாக வந்து இறங்கியது. அவிர் பாகங்களுக்கான நைவேத்தியங்கள் தங்கக் குண்டாகளின் தயாராகி வந்தன. பூர்ணாஹூதிக்கானவை தனியாக அடுக்கி வைக்கப்பட்டு ஒரு சிறுகுன்றுபோல் காணப்பட்டது.

உற்சாக மிகுதியில் இருந்த தேவர்கள்

வியாழ பகவான் வேள்வியை ஆரம்பித்தார். வழக்கமாக இது போன்ற வேள்விகளைச் செய்யும் பிரம்மாவிற்கு தட்சன் முக்கியத்துவம் கொடுத்ததில் தலை கால் புரியாமல் பூரிப்பில் இருந்தார். மஹாவிஷ்ணு மயக்கத்தில் இருந்தார். முப்பத்து முக்கோடி தேவர்களும் உற்சாக மிகுதியில் இருந்தார்கள். முனிவர்களும் ரிஷிகளும்கூட, ஏதோ ஒரு பெருமையோடும் தட்சன் நேரடியாக அழைத்த விதத்திலும் மகிழ்ந்து வந்து குழுமியிருக்க வேள்வித் தீ கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்திருந்தது.

சேதி அறிந்த உமையம்மை (தாட்சாயினி) கணவரை அழைக்காமல் தந்தை இருந்ததற்கு நியாயம் கேட்கப் புறப்பட்டார். பரமசிவன் தடுத்தும் பலனில்லை. வேள்வி நடந்த இடத்திற்கு வந்த உமையம்மையின் கண்களிலும் தீயின் வெம்மை. “எனது கணவரும் பரம் பொருளுமான பரமசிவனுக்கு அழைப்பு விடுக்காமல் வேள்வி நடத்துகிறீரோ? அவரை சகல மரியாதைகளோடும் அழைத்து அவருக்கு உரிய அவிர் பாகத்தையும் அளிக்க வேண்டும்” என்றார்.

எள்ளி நகையாடிய தட்சன், கடுஞ் சொற்களையெல்லாம் அள்ளி வீசினான். “என் கண் முன்னே நின்று என்னை மிருகமாக்காதே. இங்கிருந்து உடனே சென்றுவிடு” என்றான். இதைக் கேட்ட உமையம்மை, “இந்த வேள்வி ஒழியட்டும் தேவர்களும் நீயும் கெட்டு அழிக!” என்று பொங்கி எழுந்தவள் நேரே பரமசிவன் காலடியில் போய் விழுந்தாள்.

கண்கள் சிவக்க, புருவம் தெரிய, மூக்கு விரிய, பற்கள் உரசிய அந்தக் கணத்தில் உதித்தார் சிவ அம்சமான வீரபத்திரர். அவர் கண்கள் இரண்டிலும் தட்சன் வளர்த்த வேள்வித் தீயை மிஞ்சும் வெப்பம். சிவபெருமானை அழைக்கவும் அவிர் பாகம் தரவேண்டியும் விண்ணப்பம் வைத்தான். தட்சனோ ஆணவத்தின் உச்சியில் இருந்தே பதில் சொன்னான். அவிர் பாகம் தர மறுத்தான். ருத்ரதாண்டவம் ஆடினார் வீரபத்திரர். விஷ்ணு தண்டத்தால் அடிபட, தவழ்ந்து சென்ற பிரம்மா தலைகளில் ஓங்கி குட்டுப்பட்டார்.

பக்கத்திலிருந்த சரஸ்வதியின் மூக்கு உடைந்தது. சந்திரனைக் காலில் போட்டுத் தேய்த்தார். கூழைக் கும்பிடு போட்டுப் பல்லிளித்த சூரியனின் பற்கள் பறந்துவிழுந்தன. அக்னி பகவான் நாக்குகள் வெட்டப்பட்டான். ஓடி ஒளிந்தவர்களையெல்லாம் தேடிப் பிடித்துப் பந்தாடினார். தட்சன் மிரண்டு போனான். பயந்து பணிந்து வீரபத்திரர் முன்வந்து நின்று கதையளக்க ஆரம்பித்தவனை அழுத்திப் பிடித்தார் வீரபத்திரர்.

பறந்து போன தட்சனின் தலை

“தேவாதி தேவன் பரமசிவனை அவமதித்து வேள்வியா செய்கிறாய்? உன் வேள்விக்கு வந்தவர்கள் கதி என்னவாயிற்று என்று பார்த்தாயா? இப்போது காட்டு உன் செருக்கையும், ஆணவத்தையும்! முடியுமா?” என்றபடி வாளைச் சுழற்ற தட்சனின் தலை பறந்துபோய் அவன் ஆரம்பித்த அந்த வேள்விக் குண்டத்திலேயே வீழ்ந்தது. நாக்குகள் அற்ற நிலையிலும் பயத்தில் படாதபாடுபட்டு தட்சன் தலையை பஸ் பமாக்கிக்கொண்டான் அக்னி பகவான்.

தீராத கோபத்தோடு, மஹாவிஷ்ணுவைத் திரும்பிப் பார்த்த வீரபத்திரரை கோபம் தணியட்டும் என்ற அசரீரி தடுத்தது. சட்டென்று தணிந்தது வீரபத்திரரின் கோபம். செய்த தவறுக்காக அத்தனை பேரும் வருந்தி மன்னிப்புக் கேட்டார்கள். இடபத்தில் அம்மையும் அப்பனும் காட்சி கொடுத்து உயிரிழந்த அத்தனை பேரையும் எழ வைத்தார்கள். தட்சன் தலை பஸ்பமானதால் அவன் மட்டும் ஆட்டுத் தலையோடு உயிர்பெற வேண்டியதாயிற்று. சிவபெருமான் காலில் விழுந்து வணங்கிக் கண்ணீர் விட்டான்.

திருப்பறியலூர் ஆன தட்சபுரம்

இந்த மிகப் பெரிய புராண வரலாறு தமிழகத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. தட்சபுரம் என்ற இந்த இடம் இப்போது திருப்பறியலூர் என்று அழைக்கப்படுகிறது. நம் பாவங்களைப் பறிப்பதனால் பறியலூர் என்றும் மேலும் சில காரணங்களும் கூறப்பட்டாலும், தட்சன் தலையைப் பறித்ததனாலேயே பறியலூர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஓவியத்தில் பார்க்கும் அற்புதமான வீரபத்திரர் சிலை கிருஷ்ணாபுரத்தில் உள்ளது. அடடா! என்ன ஒரு கோபம், என்ன ஒரு பார்வை. மீசை அழகும், எந்தப் பிடிப்பும் இல்லாமல் தூக்கப்பட்ட காலும், கைகளில் அசையும் குஞ்சங்களும் மார்பில் புரளும் அணிமணியும் என்னவென்று சொல்வது! ஆண்டவா! இந்தச் சிற்பிகளையெல்லாம் என் கனவில் வந்து காட்சிதர வைக்க மாட்டாயா? அவர்களைத் தரிசித்தாலே உன்னைத் தரிசித்தது ஆகிவிடாதா?

வேறொன்றும் வேண்டாம், அவர்கள் பாதங்களை மட்டும் காட்டினால் போதும்! தொட்டு வணங்கிக் கொள்கிறேன் என்று கூவத் தோன்றுகிறது. இந்தச் சிற்பத்தை நான் வரைந்து முடிப்பதற்குள் உயிர்போய், உயிர் வருகிறது. அந்தச் சிற்பி, இதன் ஒரு விரலை வடிக்க எவ்வளவு சிரத்தையையும் நேரத்தையும் அர்ப்பணித்திருப்பான். இவற்றை ஒரு கணம் எண்ணிப் பார்த்து விட்டாலே போதும். நாமெல்லோருமே அந்தச் சிற்பிகளை நன்றியோடு நினைக்கத்தான் செய்வோம்; மனம் குளிரத்தான் செய்வோம். அப்போது ஒரு சிறு துளி கண்ணீர் விடத்தான் செய்வோம். இதனால் அவர்களுடயை ஆசிகளும் இறைவனுடைய ஆசிகளும் நம்மை நன்கு வாழவைக்கும்.

காட்டப்பட்ட இன்னொரு வீரபத்திரர் கிருஷ்ணாபுரத்துக்கு அருகில் உள்ள வைகுண்டத்தில் உள்ளவர். இங்கே காலடியில், தட்சன் இருக்கிறான். ஆனால், கிருஷ்ணாபுரத்து சிற்பத்தில் காலின் கீழே தட்சன் இல்லை. கோபத்தின் உச்சியில் இருக்கும் வீரபத்திரரின் கோபத் தீயின் வெம்மை தாங்காமல், கழுத்தறுபட்ட வாத்து கொஞ்ச தூரம் ஓடுவது போல் ஓடி, வெளியில் விழுந்து விட்டான் போலிருக்கிறது.

வேறென்ன சொல்ல? ஆனாலும் ஒன்று சொல்ல வேண்டித்தான் இருக்கிறது. இந்த வீரபத்திரரின் அற்புதக் கோலங்கள் இரண்டும் வைஷ்ணவ ஆலயங்களில் உள்ளன. கிருஷ்ணாபுரம் கோயிலாகட்டும் நம்மாழ்வாரால் பாடப்பட்டு மங்களா சாசனம் செய்யப்பட்ட இந்த வைகுண்டம் கள்ளபிரான் கோயிலாகட்டும் இவரையும் சேர்த்தே வைத்துக்கொண்டு இருக்கின்றன. நாராயணனும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நம்மாழ்வாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

சிவன் கோவில்களில் பரவலாக - நரசிம்மர் - கிருஷ்ண லீலை சிலைகள் நிறைந்தே காணப்படுகின்றன. இதுதான் பாரதப் பண்பாடு.

(சிற்பங்கள் பேசும்…)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-18/article9555272.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 19: தோல்வியென்பது அம்பாளுக்கு ஏது?

 

sirpam_3139069f.jpg
 
 

சைவர்களுக்குக் கோயில் என்றால் அது சிதம்பரம். அந்தச் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடராஜ மூர்த்தியாக நடனமாடுகிறார். இந்த தில்லைச் சிதம்பரம் உலகின் மத்திய ஸ்தானமாக விளங்குகிறது. உலகின் மையப் புள்ளி, நடராஜரின் கட்டை விரலில் வந்து முடிவதாக அன்றே சொல்லிவிட்டார்கள் ரிஷிகள். பெருமை ஆடல் வல்லானுக்கு மட்டுமா? அங்கே அடங்கி ஒடுங்கிச் சிவகாமியாக இருக்கும் அம்பாளுக்கும் தான். இங்கு வரும் அனைவரும் பெருமானுடன் அன்னையையும் தரிசித்துச் சென்றாலே பூரணமடையும் என்று திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி காட்சிகள் ஆரம்பமாகின்றன.

சாபத்தால் காளியான அம்பிகை

பரமசிவனும், பார்வதியும் சாதாரண மாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அது நீயா, நானா என்றாகி, “நானே பெரியவள். எனக்கு அடங்கியவரே நீர்!” என்று பேசும் எல்லைக்குப் போக, அம்பிகையை அடங்கச் சொல்கிறார் சிவபெருமான்.

கோபத்தை அடக்கவோ, தான் அடங்கவோ மறுத்த அம்பிகை மேலும் உக்கிரமாக வாதாட, பரமசிவன் அம்பிகையை உக்கிர காளியாக மாறும்படி சாபமிடுகிறார். உக்கிர காளியாக மாறிய அன்னை, பரமசிவன் பாதம் பணிந்து மன்னிக்க வேண்டுகிறாள். பெருமானோ, “உமையே! தேவர்களும் ரிஷிகளும், ஏன் மனிதர்களும்கூட அசுரர்களால் கூடிய சீக்கிரத்தில் இன்னல்படப் போகிறார்கள். அந்த அசுரர்களை அழிக்க இதுவே சரியான கோலம். அவர்களையெல்லாம் அழித்துவிட்டுத் தில்லை வனம் வந்து தவமியற்றிப் பின் சிவகாமியாக என்னுடன் சேர்ந்துகொள்வாயாக!” என வாழ்த்தி அனுப்புகிறார்.

மகிஷன் போன்ற அசுரர்களையெல்லாம் அழித்து வெற்றியோடு தில்லை வனம் வந்த அம்பிகை தவமியற்ற ஆரம்பிக்கிறாள். நள்ளிரவு வேளைகளில் நடராஜர் நடம் புரிவதைக் கண்டு, இன்னமும் உக்கிரம் குறையாத காளியாகவே எழுந்து, “இந்தத் தில்லைவனம் என்னுடையது. இங்கு இது போன்று நடனமாட அனுமதிக்க மாட்டேன். என் அனுமதியின்றி இங்கே நடமாடவே முடியாது. நீரோ நடனமாடுகிறீர். இங்கே, இனிமேல் நான் உம்மைப் பார்க்கக் கூடாது. முதலில் இங்கிருந்து நீர் வெளியேறும்!” என்றாள். தனது தவத்தையும், தான் சிவகாமியாக அய்யனுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் அப்போது மறந்துவிட்டாள்.

“அதுவும் அப்படியோ? அப்படியானால் நமக்குள் ஒரு நடனப் போட்டி வைத்துப் பார்க்கலாம். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் வெளியேறிவிட வேண்டும். சரிதானா?” என்றார் நடராஜர்.

நான் தயார் என்று காளி துள்ளி நடைபோட்டாள். நாடகத்தில் அடுத்த காட்சிக்காகப் படுதாவின் பின்னால் தயாராக நிற்பவர்கள் போல் வெளிப்பட்டு வந்தார்கள் பிரம்மாவும் விஷ்ணுவும், நந்தியும், சரஸ்வதியுமென வாத்திய சகிதமாய். பிரம்மா தாளம் போட மஹா விஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க, நந்தி மத்தளம் கொட்ட, சரஸ்வதி வீணை வாசித்தாள். நாரதரும், தும்புருவும்கூட கானமிசைத்தனர். போட்டி நடனம் மிக உக்கிரமாக நடந்தது. முனிவர்கள் கண்களுக்கு விருந்தாகவும் அமைந்தது. இந்த நேரத்தில் நடராஜரின் தோடு கழன்று விழ, அதைத் தனது காலால் எடுத்து மாட்டிக்கொண்டார். காலைத் தூக்க முடியாத அன்னையும் தோற்றுப் போனதாய் அறிவிக்கப்பட்டாலும், “ஊரை விட்டே வெளியேற வேண்டாம். எல்லையில் இருந்து அருள் புரிவாயாக!” என்று பணிக்கிறார் பெருமாள்.

தில்லையின் எல்லை

அப்போதும் கோபம் தணியாத அன்னையின் முன் பணிந்த பிரம்மா, வேத நாயகியான நீயே இப்படிக் கோபம் கொள்ளலாமா? என்று ஆற்றுப் படுத்தி வேதரூபிணியாக, நால் வேதங்களையும் குறிக்கும் நான்முகங்களோடு எல்லையில் பிரம்ம சாமுண்டீஸ்வரியாக வீற்றிருந்து அருள் புரியுமாறு வேண்டுகிறார். சிவபெருமானும் இதே கோலத்தோடு காளியாகவும் இருந்து இந்தத் தில்லையைக் காப்பாய் என்று கூறி எல்லையில் ஓர் இடத்தைக் காட்ட அங்கு போய் அமர்ந்து கொள்கிறாள். பிரம்ம சாமுண்டியாக தவமியற்றி, பின் சிவகாமியாக ஆனந்த நடராஜ மூர்த்தியோடு சேர்ந்துகொள்கிறாள்.

இங்கே முக்கியமாக அம்பிகை தோற்றாள் என்றே குறிப்பிடப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். தோல்வி என்பது அன்னைக்கு ஏது? வேறு சிலரோ, காலைத் தூக்க நாணித் தோல்வியை ஒப்புக்கொண்டதாய் கூறுவார்கள். இது எதுவும் சரி அல்ல. காலைத் தூக்குவதில் அந்தக் கொடியிடை நாயகிக்கு ஏது சிரமம். அவளுக்கு இடை மட்டும் கொடியில்லை. கை, கால் எல்லாமே கொடிதான். நளினமே வடிவான ஒளி ரஞ்சனிக்கு காலைக் காதருகே தூக்கி தோட்டை மாட்டிக்கொள்வதிலா சிரமம் இருக்க முடியும்?

இங்கேதான் அந்த அகிலாண்ட ஈஸ்வரி அதன் காரணத்தைக் காட்டி அருளுகிறாள். யாரும் கூறாத காரணத்தை அவளருளால் உணர்ந்ததைக் கூறக் கடமைப்பட்டவனாகிறேன். போட்டி நடனமென்றால் அவர் ஆடுவதை இவள் ஆட வேண்டும். ஆடியது ஒரு கரணம் என்றால் அதை அப்படியே செய்து விடுவாள் அன்னை. ஆனால் இங்கேயோ தோடை எடுத்து மாட்ட வேண்டும். மாங்கல்யத்தை எப்படிக் காலால் மாட்டுவாள், தொடுவாள்? என்ன வியப்பாக இருக்கிறதா? காஞ்சி மஹாபெரியவரை ஆழ்ந்து படித்தால் பல புரியாத புதிருக்கெல்லாம் விடை கிடைத்துவிடும். என்ன! அவற்றை உரிய இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும் - அதற்கு அந்த அன்னையின் அருளும் வேண்டும்.

natraj_3139070a.jpg

தாடங்கமே தாலி

விஷயத்திற்கு வருவோம். அம்பாள் அகிலாண் டேஸ்வரியின் தாடங்கமே தாலிதானாம். இதைத்தான் ஆதிசங்கரரும், மகாகவி காளிதாசனும் சொல்லி இருக்கிறார்கள். “அமிர்தம் கடையும் போது அத்தனை விஷத்தையும் சாப்பிட்ட பரமனுக்கு ஏதும் ஆகாது அழியாப் பரம்பொருளாக இருக்கிறாரே! உன் தாடங்க மஹிமையால்தானே! உன் தாலி பாக்கியத்தால்தானே!” என்கிறார் சங்கரர்.

அப்படியானால் தாடங்கம், தாலி ஆகிறது! அதனால்தான் இன்றுவரை, கணவனின் ஆயுளுக்காக வைரத்தோடு போடும் பழக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. இப்போது அந்த சௌமாங்கல்யத்தை எப்படி அன்னை காலால் தொடுவாள். எல்லாம் வல்ல அன்னையும், பிதாவும் உலகுக்கு, உதாரணமாய் இருப்பார்களா, உனக்கு, எனக்கு என்று இருப்பார்களா? ஆழ்ந்த அன்பின் அடிப்படையில் விளைவதே இவை. கணவன் மனைவி, ஒருவருக்கொருவர் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத நிலையில் பக்தியும் அன்பும் எப்படி விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதைப் புரியவைத்துவிடும்.

தில்லைக்காளி, எல்லைக் காளியாக இருக்க வேண்டும். தில்லைச் சிதம்பரத்தின் பெருமை மேலும் மேலும் உயர வேண்டும் என்பதாகவே இவையெல்லாம் இருந்தாலும் உட்கருத்து இல்லாமல் எதுவும் இல்லை என்பது புரிகிறதல்லவா! உண்மையில் அம்பாளின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நடராஜப் பெருமாள் தப்பித்துக்கொள்ளக் கையாண்ட உத்தியாகவே இது தெரிகிறது. வெறுமே காலைத் தூக்கி இருக்கலாம், தோட்டில் ‘கை’ வைத்ததில் (கால் வைத்ததில்) தான் சந்தேகம் வருகிறது. எதுவாயினும் ‘அம்பாள் தோற்றாள்’ என்று கூறுவதைத் தவிர்ப்பதே நம் எல்லோருக்கும் நல்லது. அந்த அகிலாண்ட நாயகியாம் காளி தேவி என்றும் அருளட்டும்.

இறைவனுக்கே வெளிச்சம்

காலைத் தூக்குவதெல்லாம் ஒரு விஷயமா என்று கூறுவதுபோல் சிதம்பரத்தின் கோபுரங்களில், காட்டப்பட்ட கரணச் சிற்பங்களில் சிவகாமி அன்னையும் காலைத் தூக்கி ஆடுவது போன்ற பல சிற்பங்கள் இருக்கின்றன. கிரீடத்தோடு இருந்தால், அது அந்த அம்பிகையே ஆடுவதாக அர்த்தம். வெறும் கொண்டை போட்டிருந்தால் அது நடன மணிகளைக் குறிக்கும். காலை உயரே தூக்கிய அம்பிகையின் சிற்பங்கள் கிழக்கு கோபுரத்தில் உள்ளவை. மிக அழகிய சிற்பங்களானாலும், இவை சரியாக முடிக்கப்படாமல் இருக்கின்றன. அது ஏன் என்பது அந்த நாடகமாடும் இறைவனுக்கே வெளிச்சம்.

வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள, ஊர்த்துவ தாண்டவம் - ஒரே கல்லினால் ஆன அற்புத அழகு, நேரம் போவதே தெரியாமல் பார்க்க வைக்கும் அழகு. செய்துவிட்டு நிமிர்த்தியிருப்பார்களா? இல்லை கல்லை நிற்க வைத்துப் பின் செய்திருப்பார்களா? அப்படி இல்லையென்றால் இதை எப்படி நிறுத்தி இருப்பார்கள் போன்ற கேள்விகள் மனத்திற்குள் புகுந்து குடைந்தெடுக்கின்றன. அந்த விழிகளின் எழிலும், விரல்களின் அழகும் அடடா! எண்தோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக் கண்காள் காண்மின்கேளா! புண்ணியம் செய்த கண்கள் காணும் - கூடவே கண்ணீரும் அரும்பும்.

துடைத்து விட்டுத்தான் பார்க்க வேண்டும். இங்கே ஐந்து தலைகளோடு பிரம்மா தாளம் போடுகிறார். நந்திக்கு பதில் மஹாவிஷ்ணுவே மத்தளம் கொட்டுகிறார். பரம பக்தையான காரைக்கால் அம்மையாரும் நெக்குருகி நிற்கிறார். அவர் நேரில் கண்டு உருகியதை இந்த தெய்வீகச் சிற்பி படைத்துக்கொடுத்துள்ள பேசும் சிற்பத்தைப் பார்த்து நாமும்தான் உருகுவோமே.

(சிற்பங்கள் பேசும்…)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-19-தோல்வியென்பது-அம்பாளுக்கு-ஏது/article9565277.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 20: முழுமுதலான கடவுள்

 

 
 
sirpam_3141342f.jpg
 
 
 

முழுமுதற் கடவுளாம், விநாயகப் பெருமானுக்கு முப்பத்தியிரண்டு பெயர்களைச் சூட்டி அழகு பார்க்கிறது ஆன்மிக உலகம். அதில் ஒரு திருநாமம் நர்த்தன விநாயகர். அவர் கற்பக மரத்தின் கீழ், ஆனந்த நர்த்தன விநாயகராகக் காட்சி தந்து, ஆனந்தமாய் வரங்களை அள்ளி வழங்கி அருள்வதாக கூறப்படுகிறது. எதைக் கேட்டாலும் தரும் கற்பக மரம், தனக்காக எதையாவது கேட்டுப் பெற்றிருக்குமானால் அது, இந்த நர்த்தன விநாயகரின் ஆனந்த நடனத்தை நித்தம் காணும் பாக்கியமாகத்தான் இருக்கக்கூடும்.

இங்கே விநாயகருக்கு மட்டும்தான் முழுமுதற் கடவுள் என்று பெயர். முழுமுதல் - மூலம் என்பதே விநாயகப் பெருமான்தானாம். ப்ரணவ மந்திரமே அனைத்திற்கும் மூலம். இந்தப் ப்ரணவ மந்திரத்தில் இருந்துதான் பிரபஞ்ச உருவாக்கம் நிகழ்கிறது. அதனால்தான் அந்த ஓம்காரத்திற்கு உருவமும், கணங்களுக்கெல்லாம் அதிபதி என்ற வகையில் கணபதி என்ற பெயரும் கொடுத்து, எல்லோருக்கும் மூத்தவர் என்பதால் ‘ஜ்யேஷ்டராஜர்’ என்றும் ரிஷிகள் போற்றுகிறார்கள். இந்த மூலமே சிவமாகவும், சக்தியாகவும் இன்ன பிறவாகவும் தோற்றம்கொண்டு இந்தப் பிரபஞ்சத்தைப் பரிபாலனம் பண்ணுகிறது. அதாவது ஒரே நடிகரே, அப்பாவாக, அம்மாவாக, பிள்ளையாக, பேரனாக நடிப்பது போன்றதே இது. அப்படியாயின் ஆட்டத்திற்கு மூலமே இந்த கணபதிதானே. அவர் ஆடாமல், பின் யார் ஆடுவார்? இதுதான் அத்வைதம் சொல்லும் ஒன்றிலிருந்தே எல்லாம், ஒன்றே எல்லாம்.

யானையைப் பாருங்கள்

உலகத்தில் பார்க்கப் பார்க்க அலுக்காத விஷயங்கள் என்று கூறப்படுபவை மூன்று - நிலவு, கடல், யானை. அந்த யானையை நன்கு உற்று நோக்கிப் பாருங்கள். நடனமே உருவான வடிவம் அது. தும்பிக்கையை மேலும் கீழும் பக்கங்களிலுமாக அசைத்தபடியே இருக்கும். முன்னங்காலையும், பின்னங்காலையும் தூக்கி ஆட்டியபடியே இருக்கும். முறம் போன்ற காதுகளை விசிறியபடியே இருக்கும். இவை போதாதென்று உடம்பை வேறு மெல்ல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் அசைத்தபடியே நிற்கும். அந்த அழகே அழகுதான். அதனால்தான் முழு முதல், தன் படைப்பில் பெரியதும், அழகியதும் ஆடுவதுமான படைப்பையே தன் உருவத்தில் சேர்த்துக்கொண்டது போலும்.

தந்தையாக ஆடும்போது பிரபஞ்ச இயக்கம். தனயனாக ஆடும்போது மகிழ்வான உலகம். இதுதான் அந்த முழுமுதலின் விளையாட்டு.

பூவுலகைச் செழிக்கச் செய்யும் ஓங்காரம்

தந்தையாக நடராஜர் ஆடும்போது, உடுக்கையில் இருந்து ஓம்கார ஒலி எழுப்பி அது பிரபஞ்சத்தை இயக்குகிறது. பிள்ளையான, பிள்ளையார் ஆடும்போதோ, காது அசைவிலேயே, ஓங்கார ஒலி எழுந்து பலப்பல நல்ல அதிர்வுகளை அலையலையாய் பரவச் செய்து பூவுலகைச் செழிக்கச்

செய்கிறது. பிரணவ வடிவமே ஆடும்போது கேட்கவா வேண்டும்! பிள்ளையார் நடனமாடுவதைப் பார்ப்பதற்கே கோடிப்புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனந்த நடராஜமூர்த்தி பதஞ்சலி, வியாக்ரபாதர் உள்ளிட்ட ரிஷிகளுக்கு தில்லைவனத்தில் நடனக்காட்சி கொடுத்தபோது மற்றவர்களெல்லாம் வாத்தியங்கள் வாசிக்கவும் - கானமிசைக்கவும் என இருந்தபோது பிள்ளையார் மட்டும் தானும் துள்ளிக்குதித்து ஆடியது தெளிவாகிறது. நன்கு கவனித்தோமாயின், நடராஜருக்கும், விநாயகருக்கும் மட்டுமே உரியது இந்த நடனத்தோற்றம். மற்றவையெல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் உருவானவை (காளிங்கன்-கிருஷ்ணர்-நர்த்தனம், ஆஞ்சநேயர்-பரவசம் இதுபோன்று அமையும்)

இந்த ஒன்றே எல்லாச் செய்தியையும் நமக்குக் கூறிவிடும். ஆனந்த நடராஜ மூர்த்தியாக ஆடும்போது, நடனத்தில், நாம் நம்மையே மறந்து, பரவச நிலையில் நிற்போம். ஆனால் இன்னும் எத்தனையோ ஜென்மங்களை எடுக்க வேண்டிய நிலையில் உள்ள நாம், விநாயகர் ஆடுவதை, மெய்மறந்து பார்க்கவே முடியாது. அவரது நர்த்தன தரிசனம் நம்மை இந்த உலகத்தில், வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்கவும், புண்ணியங்களைப் பெருக்கிப் பாவங்களைக் குறைக்கவும் வைத்துவிடும்.

ஆனந்தம் கொடுக்கும் விநாயக உருவம்

அவரது சின்னக் கண்களை உருட்டும்போதும், பெரிய காதுகளை அசைக்கும்போதும் தும்பிக்கையைத் தூக்கிச் சுழற்றும் போதும் வயிறு குலுங்கும்போதும் மனம் களிப்படைந்து, மகிழ்ச்சியில் திளைத்து எழுகிறது.

அவர் நினைவு ஆனந்தத்தைக் கொடுத்தபடியே இருக்கிறது. பொறாமை, கோபம், கள்ளம் விலகியோட, காரியங்களை நன்றே செய்கிறோம். பாவங்கள் குறைய, பிறவித் துயரும் குறைகிறது. முக்தியும் சீக்கிரம் வாய்க்க வழி கிடைக்கிறது. அதுதானே நமக்கும் வேண்டியது. பக்தியும், அன்பும் கொண்டு, நர்த்தன கணபதியின் திருவுருவைப் பார்க்கும்போது நம் மனக்கண்ணில் இவை அத்தனையையும் கண்டுவிட முடியும். உணர்ந்து கொள்ள முடியும்!

கறுப்பு, வெள்ளையில் காட்டப்பட்டுள்ள நர்த்தன கணபதியின் திருவுருவம், ஆடல் அரசனின் கோயிலான சிதம்பரத்தில் உள்ளது. நடராஜரைத் தரிசனம் பண்ணிவிட்டு, இடப்பக்கமாக இறங்கினால் அந்த உள் பிரகாரத்திலேயே நேரே தரிசனம் தருபவர் இவரே! பூஜையுடன் கூடியவர். இவர் ஆடும் அழகே அழகுதான். இங்கு, நடராஜர் ஆடுவதைக் கண்டு பரவசமடையும் முனிவர்களும் தேவர்களும் இவரின் நடனத்தையும் கண்டு குதூகலிப்பதை மேலே முகிற் கூட்டங்கள் நடுவில் காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது. பூத கணங்கள் சூழ இவர் ஆறு கரங்களோடும் (தும்பிக்கையோடு ஏழு) ஆடுவதைப் பார்க்கையில் ஒன்றை உற்றுநோக்க வேண்டும். பாச, அங்குசத்தோடு சிவனுக்கே உரிய மழுவும் கையில் இருக்கிறது. இது குறிப்பால் உணர்த்துவது வேறென்ன நானே முழு முதல் என்பதுதான்.

மற்றைய வண்ணப்படம் மேலைச் சிதம்பரம். அதுதான்! கோவைக்குப் பெருமை சேர்க்கும் பேரூரில் உள்ள ஒரே கல்லினால் ஆன எட்டு அற்புதங்களில் முதலாவதாக இருக்கும் நர்த்தன விநாயகர். இதுவும் கனகசபை. இங்கும் சபைக்குள், நடராஜரும், சிவகாமியும் அங்கிருந்தபடியே இவரைப் பார்க்க, இவர் இங்கிருந்தபடி அங்கும் எங்கும் பார்த்தபடி ஆடுகிறார்.

இங்கும் கையில் மழு இருக்கிறது. சாதாரணமாக எலி மீதமர்ந்தோ தாமரையிலோ இருந்தபடி, விநாயகரைக் காட்டாமல், நடனக் கோலத்தில் காண்பித்ததில் இந்தச் சிற்பிகள் தாங்கள் இறையருள், பெற்றவர்கள் என்பதை நிரூபித்து விடுகிறார்கள். எங்கு யாரை எப்படிக் காண்பிக்க வேண்டும் என்ற குறிப்புகளையெல்லாம், அந்த முழுமுதற் கடவுளிடமிருந்து பெற்ற சிற்பிகளால் மட்டுமே இப்படிப்பட்ட பரம ரகசியங்களைக்கூட சூசகமாகச் சொல்லும் அற்புத சிற்பங்களை வடிக்க முடியும்.

(சிற்பங்கள் பேசும்…)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-20-முழுமுதலான-கடவுள்/article9575781.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 21: பிச்சை எடுப்பதுபோல் வந்து பிச்சை இட்ட பெருமான்

ஓவியர் பத்மவாசன்

 

 
 
 
sirpi_3143841f.jpg
 
 
 

பிட்சாடன மூர்த்தி என்ற பெருமானின் எழில் தோற்றம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்று! இவரது கதையை, ஏற்கெனவே கஜசம்ஹார மூர்த்தி கதையோடு சேர்த்துப் பார்த்தோம். ஆபிசார ஹோமம் செய்த ரிஷிகளை நல்வழிப்படுத்த, மஹாவிஷ்ணுவோடு சேர்ந்து எடுத்த கோலம். அவர் மோகினியாக ரிஷிகளை மயக்க, இவரோ, ரிஷிபத்தினிகளைக் கிறங்கடித்தார். இது ஞானத் திருக்கோலம் . நாமெல்லாம் நினைப்பதுபோல் இது பிச்சை எடுக்கும் கோலமல்ல! பிச்சை போடும் கோலம்.

நன்கு யோசித்துப் பாருங்கள், பிச்சை எப்படி எடுக்க முடியும். பிச்சை என்பது கை ஏந்துவது, இரப்பது, - பிச்சை ஏற்பது -என்பதுதானே பொருத்தமாக இருக்க முடியும்? நீங்களாக எடுப்பது என்றால் அதில் உங்களுக்கு உரிமை இருக்க வேண்டும். அப்போதுதானே எடுக்க முடியும். ஆனாலும் பரமசிவனுக்கு இது பொருந்தவே செய்யும். அவரிடமிருந்தே இந்த ‘பிச்சை எடுப்பது’ என்ற வார்த்தை வழக்கத்திற்கு வந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேல் பரமசிவன் பிச்சை எடுப்பதுபோல் வந்து பிச்சை இட்ட பெருமான். ஆமாம், பிச்சை எடுத்தார். எப்படி? ரிஷிகளிடமிருந்த ஆணவம், அகந்தை, காமம், அறியாமையை எடுத்தார்.

ரிஷிபத்தினிகளிடமிருந்த ஆசையை, காமத்தை, கவனச்சிதறலை அவர்களிடமிருந்து பிய்த்து எடுத்தார்- பிச்சை எடுத்தார். மாறாக அறிவை, தெளிவை, பக்தியை, அன்பை, பண்பை, கற்பெனும் நிலையை ஞானத்தை இட்டுப்போனார். அதனால்தான் அவர் ஞான வடிவம். நீங்கள் இந்தத் திருக்கோலத்தைக் கூர்ந்து கவனிப்பீர்களாயின் மிக மிக அழகாக வடிக்கப்பட்டிருக்கும். முழு நிர்வாணமாக இருக்கும். அது ஏன் மற்றைய திருவடிவங்களுக்கு இல்லாத அழகை இங்கு காட்ட வேண்டிய அவசியம் என்ன? அழகைக் கண்டு மயங்கிப் பாதை மாறிவிடாதே என்ற பாடம் புகட்டப்படுகிறது.

ஆணுக்கும், பெண்ணுக்குமாய் அழகு ரசிக்கப்படுவதற்கே தவிர மயங்கி மருகுவதற்காக அல்ல. சரி, ஏன் நிர்வாணம்? வேறொன்றுமில்லை. மனசில் உள்ள அத்தனை கபடுகளையும், களைத்தெறிந்தால் நிர்வாணம்தானே? அன்பர்களே!

பிட்சாடன மூர்த்தியின் நிர்வாணம்

அதனால்தான் நிர்வாண நிலை என்ற வார்த்தை நம் வழக்கத்திலேயே உள்ளது. இந்த பிட்சாடன மூர்த்தியின் திருவுருவம் முழு நிர்வாணமாகவே காண்பிக்கப்பட வேண்டும். இந்த சொரூபத்தின் லட்சணமே அதுதான். தற்காலங்களில் வரையும்போதும், சிற்பமாக வடிக்கும்போதும் பாம்பினால் மறைப்பது அல்லது சிறுதுணி போல் போட்டு மறைப்பது எல்லாம் நடக்கிறது. அது தேவையே இல்லை. அப்படி அது மறைக்கப்பட வேண்டியது என்றால், அந்த தெய்வீகச் சிற்பிகளுக்கு அதை மறைத்துக் காட்டத் தெரியாதா? நிர்வாணத்தை நிர்வாணமாகத்தான் காட்ட வேண்டும்.

அனைத்தையும் களைய வேண்டும் என்ற செய்தியைச் சொல்லும், தத்துவத்தை உணர்த்தும் நிலை. இங்கு ஆபாசமென்பது துளியுமில்லை. நீங்கள் நன்கு கவனித்துப் பார்ப்பீர்களாயின், அவரது பிறப்புறுப்பு, ஒரு குழந்தையினது போன்றே காட்டப்பட்டிருக்கும். பரமசிவன் எல்லா உணர்ச்சிகளையும் கடந்தவன், பரம் பொருள். ஆடைகள் நெகிழ்ந்து சரிந்த ரிஷி பத்தினிகளைப் (பத்தினிகள் தான்) பார்த்து பரமனுக்கு ஏதும் ஆகவில்லை என்பது ஒன்று. அந்த ரிஷிபத்தினிகள் இவரது அழகில் மட்டுமே மயங்கினார்கள் என்பது இன்னொன்று. இதுபோன்ற ஒரு தருணத்தில் நமது நிலைமை நாம் எண்ணிப் பார்த்தாலே எவ்வளவு உயர்ந்த ஞானத்தைக் கொடுக்கும் சொரூபம் இது என்று புரிந்துவிடும். ஞானம் பிறந்து விடும், கேலி பேசத் தோன்றாது.

கேலி பேசியதற்காக வெட்கப்படத் தோன்றும். அந்த தெய்வீக அழகிய பரமன் தெளிந்த ஞானத்தை நமக்குத் தந்தருளட்டும். இங்கே காட்டப்பட்டுள்ள பிட்சாடன மூர்த்திகளில் ஒருவர் கோவை பேரூரில் உள்ளவர். இவரது திருத்தமாக வடிக்கப்பட்ட புருவ அழகும், விழிகளின் ஒளியும், குழந்தையின் சொப்பு வாய் போன்ற உதடுகளின் எழிலும், மெல்லிய முறுவலும் மோனாலிசாவையெல்லாம் தூக்கிச் சாப்பிடும். அடடா! என்ன ஒரு புன்னகை! கல்லு என்ன களிமண் போல் இருந்து, வேண்டிய உணர்வுகளையெல்லாம் காட்ட வைத்து இறுகியிருக்குமா, இல்லை இந்த தெய்வீகச் சிற்பிகள்தான் அத்தனை லாவகமாக வடித்தெடுத்தார்களா என்று பார்ப்போரின் மனத்தில் நிச்சயம் கேள்விகள் எழத்தான் செய்யும்.

கல்லும் நெகிழ்ந்ததோ யார் அறிவார்?

இறையருள் பெற்ற இந்தச் சிற்பிகளின் கைகளுக்கு, கல்லும் தன் பங்குக்கு நெகிழ்ந்துதான் கொடுத்ததோ? யார் அறிவார். இந்த மூர்த்தியை நன்கு நெருங்கி, கூர்ந்து அந்தப் புன்னகையை கவனித்துப் பாருங்கள், கவனித்து விட்டோமாயின் வேறெதைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க மாட்டோம். நடராஜரைத் தரிசனம் பண்ணும்போது, வலது பக்கத்தில் உள்ளவர் இவர். இந்த அற்புதச் சிலைகள் கோவைக்குப் பெருமை சேர்ப்பது ஒரு புறமிருக்கட்டும். இவை தமிழகத்திற்கு மட்டுமல்ல, நம் பாரதத் திருநாட்டிற்கே பெருமை சேர்ப்பவை. பெருமை புரிந்து, உணர்ந்து, உரிய மரியாதை கொடுத்து இவற்றை நாம் தரிசிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும் அது ரொம்பவும் முக்கியம்.

மற்றைய மூர்த்தி, தில்லைச் சிதம்பரத்துக் கிழக்குக் கோபுரத்தில் இருப்பவர், இவரது அழகும் அதி அற்புதமானது, வழுவூர் கஜசம்ஹார மூர்த்தியின் தலையலங்காரத்துக்கு இணையானது என நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். இப்போது அதை நீங்கள் அனுபவித்து ரசித்துப் பார்க்கலாம். இவரது முகம், பாதத்தின் எழிலும் பாதக் குறடுகளின் அமைப்பும், தாங்கிய சூலத்தில் தொங்கும் மயில் பீலிச் சாமரமும், பார்த்துப் பார்த்து அனுபவிக்க வேண்டியவை. வியப்பில் அண்ணாந்து பார்ப்பதுபோல், இவரை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். கோபுரத்தின் முதல் மாடத்தில் வலது பக்கம் இருக்கிறார்.

இரண்டிலுமே பூத கணங்கள் தாங்கும் திருவோட்டில் இருப்பது இடப்பட்ட பிச்சை அல்ல, எடுக்கப்பட்ட பிச்சை, அவனாக, கருணையின் பேரில் எடுக்கப்பட்ட பிச்சை. பொதுவாக, கருணை உள்ளவர்கள் பிச்சை போட, இரப்பவன் பெறுவான், இங்கே இரக்கமுள்ள இரப்பவன் கருணை கொண்டு, பிச்சையை அவனாகவே எடுத்துக்கொள்கிறான். அடடா! என்னவென்று சொல்வது. பரமன் கையில் இருக்கும் புல்லைப் பாய்ந்து உண்ணும் மான்- மானல்ல அது நாம்! நமக்குப் பிச்சை போடுகிறார். ஓரிடத்தில் நிற்காது துள்ளித் திரியும் மான் போன்ற மனது கொண்ட நமக்கு ஞானத்தை ஊட்டுகிறார்.

பெற்றுத்தான் கொள்வோமே! தவிரவும், மான் போல இல்லாமல் சில மணித்துளிகளாவது, ஓரிடத்தில் நின்று தியானம் போல் இந்தச் சிற்பங்களைப் பார்க்கச் செய்த அந்த சிற்பிகளாகிய மாகானுபாவர்களையும் நன்றியோடு நினைத்துத்தான் பார்ப்போமே!

(சிற்பங்கள் பேசும்…)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-21-பிச்சை-எடுப்பதுபோல்-வந்து-பிச்சை-இட்ட-பெருமான்/article9585220.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 22: மீனாகவும் கொக்காகவும் வந்தவர்கள்

 

 
 
sirpam_3146159f.jpg
 
 
 

திருஞான சம்மந்தப் பெருமான் பாடிய கோளறு பதிகத்தில் இரண்டாவது பாடலில் ‘‘என்பொடு, கொம்பொடு, ஆமை இவை மார்பிலங்க எருதேறி’’ என்பார். நானும் இதுவரை பலரிடம், கேட்டு அலுத்துப் போன நிலையில், அதற்கான விடையை ஏகாம்பர நாதனும், அப்பர் பெருமானும் அளித்து அருளினார்கள். நமக்கெல்லாம் நரசிம்மப் பெருமாளின் கோபத்தை, சிவபெருமானார், சரபேஸ்வரராக வந்து அடக்கினார் என்று மட்டுமே தெரியும். ஆனால் அதேபோல் மச்ச, கூர்ம, வராக அவதாரத்திலும் சிவபெருமானே மகாவிஷ்ணுவின் அவதார நோக்கம் நிறைவேறியவுடன் இவரது வேகத்தையும், கோபத்தையும் தனித்தருளியிருக்கிறார் என்பது புரிகிறது.

அதனால்தான் மார்பில் ஆமை ஓடும், பன்றிக் கொம்பும் அலங்கரிக்கின்றன. சாதாரணமாக ஒரு மல்யுத்தப் போட்டி என்றாலே, முடித்து வைக்க ஒரு நடுவர் தேவைதானே! இங்கோ அநியாயத்தை அழிக்க வந்தவர், ஆவேசம் குறையாமல் இருந்தால், அவரது கோபத்தை அடக்க ஒருவர் வர வேண்டி இருக்கிறது. அதுவும் அவரது வேண்டுகோளுக்கு இணங்கவே!

‘ஒவ்வொரு வித மிருகங்களின் உருவத்தோடு வரும்போது அவற்றை மாய்க்கும் உருவெடுத்து வந்து, அதன் ஞாபகமாக அதன் பாகங்களின் ஒன்றை அணிந்துகொண்டு இவர் காட்சி கொடுக்க, அவரோ பள்ளிகொண்டபடியே பார்த்து ரசிக்கிறார். காக்கும் கடவுளல்லவா! தான் ரட்சித்த தருணங்களை இதன் மூலம் கண்டு ரசிக்கின்றார்.

உறக்கத்திலாழ்ந்த பிரம்மன்

ஒரு யுகம் அழிந்து அடுத்த யுகம் ஆரம்பிக்கும் நேரம், ‘மனு’ மகாவிஷ்ணுவைத் தனது கண்ணாரக் கண்டு தரிசனம் செய்ய வேண்டுமென்று, தவம் பண்ணினான். இந்த நேரத்தில் பிரம்மன் களைப்பினால் தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார். ஹயக்ரீவன் என்ற அசுரன், பிரம்மனின் மூக்கிலிருந்து வெளிப்பட்டு வருகிறான். நால்வேதங்களையும், கற்றுணர இதுவே சரியான தருணம் என்று வேதங்களோடு மறைந்துவிடுகிறான். நேரே கடலுக்கடியில் போனவன், கற்றுக் கொண்டதோடு, அவற்றை மறைத்தும் வைத்து விடுகிறான். வேதங்கள் அடுத்த யுகத்திற்குச் செல்ல முடியாத நிலை. பார்த்தார் மஹாவிஷ்ணு, இனி இவனை அழிக்கும் வேலை மட்டுமல்ல, இன்னும் பல வேலைகளையும் சேர்த்தே செய்ய வேண்டியிருக்கிறது என எண்ணினார். முறுவல் செய்தார்.

மறுநாள் காலையில் ‘மனு’ தன் தவத்தை ஆரம்பிக்க நதியில் நீராடுகிறான். தனது பிரார்த்தனையை மனத்தில் இருத்தி இரு கை நிறையத் தண்ணீரை எடுத்துத் தலைக்கு மேலே தூக்கி மந்திரங்களைச் சொன்னபடியே விடுவதற்குத் தயாரானபோது அவனது கைகளில் இருந்து ஒரு குரல் ஒலித்தது. தன் தலைக்கு மேலிருந்து குரல் வருவதை உணர்ந்த மனு, கைகளை இறக்கிப் பார்க்கிறான். ஒரு சின்ன மீன் குஞ்சு, ஜொலி ஜொலித்தபடி இருந்தது. அது நீந்தியபடி இவனைப் பார்க்கிறது. மன்னா! மீண்டும் என்னைத் தண்ணீரில் விட்டு விடாதே! என்னைச் சாப்பிட பெரிய மீன்களெல்லாம் காத்திருக்கின்றன. நல்ல வேளையாக உன் கையில் நான் வந்தேன். என்னை நீயே, வைத்துக்கொள்! என்றது. மனுவும் தனது கமண்டலத்தில் அதைப் பாதுகாப்பாய் விட்டு விட்டு மீண்டும் பிரார்த்தனையில் ஈடுபடுகிறான். என்னை வேறு பாத்திரத்திற்கு மாற்று! என்னால் மூச்சுவிட முடியவில்லை என்ற குரல் கேட்கத் திரும்பிப் பார்க்கிறான். மீன் விழி பிதுங்கியபடி கமண்டலத்தில் இருந்து வெளியே வருகிறது. ஓடுகிறான் மனு. தனது ஆசிரமம் நுழைந்தவன், அங்கிருந்து ஒரு பெரிய பாத்திரம் எடுத்து மீனை விடுகிறான். கதை தொடர்கிறது.

வளர்ந்துகொண்டே போன மீன்

ஆமாம் மீன் வளர்ந்தபடியே போக- பாத்திரங்களை மாற்றி, மாற்றி இனிமேல் மாற்றப் பாத்திரமில்லை என்ற நிலையில் வளர்ந்துவிட்ட பெரிய மீனைத் தூக்கிக்கொண்டு மீண்டும் ஒடுகிறான். நேரே நதியில் விடுகிறான். அது நதியின் அளவிற்கு வளர்ந்து தலையைத் தூக்க, இறைவா என்ற பிரார்த்தனையோடு, அந்தப் பிரம்மாண்டமான மீனைத் தூக்கிப் போய் கடலில் விடுகிறான். அது அங்கும் வளர்ந்தபடியே போக, அப்போதுதான் அவனுக்குப் புரிகிறது! ஆண்டவனே! மகாவிஷ்ணுவல்லவா வந்திருக்கிறார் என வீழ்ந்து வணங்க, பெருமாளும் காட்சி கொடுத்து, “மனுவே நான் சொல்வதை கவனமாகக் கேள்! உலகம் அழிய இன்னும் ஏழு நாட்கள்தான் இருக்கின்றன.

நீ சமுத்திரத்தின் அந்தப் பக்கம் போய் படகு ஒன்று தயார் பண்ணி அதில் தாவர விதைகள், ஆண், பெண், மிருகங்கள், சப்தரிஷிகள் அவர்களது குடும்பம் மற்றும் மறக்காமல் வாசுகிப் பாம்பையும் ஏற்றிக்கொள்” என்கிறார். அவனும் அதன்படி சமுத்திரத்தின் அந்தப் பக்கம் போக, மகாவிஷ்ணு தனது வேலையை முடித்து வேதங்களை மீட்கிறார். ஆழிப் பேரலைகள் அலைக்களிக்க மனுவோ படகு கட்ட முடியாமல் தவிக்க, கருணைக்கடல் மகாவிஷ்ணு வாசுகி பாம்பை வைத்துக் கட்டு என வழிசொல்கிறார்.

கட்டப்பட்ட படகை, தனது கொம்பு போன்ற முள்ளில் கட்டி இழுத்துப் போய் கரை சேர்கிறார். ஊழிப் பெருங்காலத்தின் உக்கிரத்தை விட, உக்கிரமாகிறார் பெருமாள். எங்கே இன்னமும் இவரைக் காணோம் என அலை பாய்கிறார். பெரிய மீனை விழுங்க மிகப் பெரிய கொக்கு வடிவம் கொண்டு வருகிறார் சிவபெருமான். இருவரும் கண்ணால் பேசிக்கொள்கிறார்கள். தூக்கிப் பிடித்ததும் மகாவிஷ்ணு வைகுந்தம் போய் பள்ளிகொண்டுவிட, பரமன் தனது கூரிய நகத்தால் மீனின் கண்ணை அலேக்காக எடுத்துத் தன் கைவிரல் மோதிரமாகப் போட்டுக்கொள்கிறார். இதனை அப்பர் பெருமான் தனது திருநெய்த்தான பதிகத்தில்

சேலொடும் செருச்செய்யும்

நெய்த்தானனார் என்பதாகப் பாடுகிறார்.

இரட்டைப் புலவர்களோ ஏகாம்பரநாதர் உலாவில், இப்படி பாடுகிறார்கள். ‘வேதமுடன் துண்ணெனவே ஆழிபுகுமம் கோமுகனை செற்றிடு மீன் கண்ணை உகிரால் கழைத்தவர்’ (508வது கண்ணி)

இதில் ஒரு பொருத்தம் உள்ளது. இங்கே காட்டப்பட்ட கொக்குச் சிற்பம் ஏகாம்பரநாதர் கோயில் பதினாறு கால் மண்டபத்தில் தான் இருக்கிறது. மிக அழகிய, அபூர்வ சிற்பம். தேடிப்பார்த்தால், இவர்கள் நாடகத்தின் அடுத்த வேடங்களான கூர்ம, வராக அவதாரத்தில் சிவனார் வந்து முடித்து வைக்கும் காட்சிகளும் கண்ணில் படவே செய்யும்.

நரசிம்ம அவதாரத்தின் அடையாளம்

சம்மந்தப் பெருமானின் பாடலில் உள்ள அந்த ‘என்பு’ அதாவது எலும்பு எது என்று எண்ணியபோது அது நரசிம்மரின் எலும்பாக இருக்க முடியாது. ஆனாலும் அந்த அவதாரத்தின் ஞாபகமாக அவர் ஹிரண்ய கசிபுவின் எலும்பை அணிந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பின்னர் இவனே இராவணனாகப் பிறந்து, பரம சிவபக்தனாக வாழப் போகிறான். அவனுக்கும் ஒரு அருளை வழங்குவதாகிறது. நரசிம்ம அவதாரத்தின் அடையாளமும் ஆகிறது.

எல்லாவற்றிற்கும் மேல், பிரஹலாதன் என்ற அற்புதப் பிறவி அவதரிக்கக் காரணமானவன். மகாவிஷ்ணுவின் நரசிம்மர் என்ற அபூர்வ அவதாரம் நிகழக் காரணமாவன். எல்லாவற்றிக்குமாகச் சேர்த்து இந்த அங்கீகாரமாக இருக்கலாம். இதுவும் அந்த ஏகாம்பரநாதன் அருளில் தோன்றிய எண்ணமே. இவர் அவரின் கோபத்தை, வேகத்தை அடக்குவதும், அவர், இவர் வரம் கொடுத்து மாட்டிக்கொள்ளும்போது காப்பதும் வெகு சகஜம். பஸ்மாசுரனிடமிருந்து சிவபெருமானைப் பெருமாள் காத்தது நமக்குத் தெரிந்ததுதானே! இது உண்மையாயின் அதுவும் உண்மையே. எல்லாமுமான பரம்பொருளின் திருவிளையாடலை பேதமின்றிப் பார்த்துப் பரவசப்படுவது மட்டுமே நமது வேலையாக இருக்க வேண்டும்.

இந்தச் சிற்பத்தில்கூட நன்கு உற்றுப் பாருங்கள். தனது மச்சினனுக்கு ஏதும் ஆகக் கூடாது என்பதற்காக மழுங்க மொட்டை போட்டது போன்ற அலகு; அசுரர்களை அழிக்கவென்றால் கூரான அலகு. இங்கேயோ எவ்வளவு கவனம்; அந்த மொட்டை அலகில் உள்ள மகாவிஷ்ணு கையைப் பாருங்கள்! என்ன நலம்தானா என்பதுபோல் அபய ஹஸ்தம். இவர் கண்ணும் நலம் என்று பதில் கூறுவது போலவே இருக்கிறது. மற்றைய கை மோதிரமாகப் போட்டுக்கொண்டதை உமையிடம் காண்பிப்பது போலவும் இருக்கிறது.

அடுத்து உள்ளது மச்சாவதராச் சிற்பம் - ஸ்ரீரங்கத்தில் உள்ளது. கண்ணாரக் கண்டு ரசிப்போம். லீலைகளை எண்ணி எண்ணி மகிழ்வோம்.

(சிற்பங்கள் பேசும்…)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-22-மீனாகவும்-கொக்காகவும்-வந்தவர்கள்/article9595811.ece

Link to comment
Share on other sites

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 23: முப்புரம் எரித்த முக்கண்ணன்!

 

 
 
sirpam_3148728f.jpg
 
 
 

தாரகாஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி என்றும் மூன்று அசுரர்கள் தேவலோகத்தைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தலைப்பட்டு, அதன் காரணமாக யுத்தம் செய்து, மூக்குடைபட்டுத் தோற்று ஓடினர். அதனால் ஏற்பட்ட அவமானத்தால், எப்படியாவது தேவர்களை அடிமையாக்கி, ஆண்டே தீருவது என்ற வைராக்கியம் பூண்டு அதற்கான வழிகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். அவர்கள் குலகுருவான சுக்கிர பகவானைப் பணிந்து வழிகேட்க, அவரும் சிவ பெருமானை பணிதல் ஒன்றே வழி. நீங்கள் மூவரும் பூலோகம் சென்று கெடிலநதி பாயும் வடகரையில் ‘திருவதிகை’ என்ற தலம் உள்ளது. அங்கு சென்று, மனமொத்து, சித்தசுத்தியோடு, சிவனார் மனம் மகிழ, தவமும் பூஜையும் செய்து நினைத்ததை அடைவீர்களாக என்றார்.

பறந்து வந்த மூவரும் கெடில நதியில் நீராடி எழுந்து, சிவசின்னங்களைத் தரித்து பஞ்ச இந்திரியங்களையும் அடக்கி, பஞ்ச அக்னி மத்தியில் தவம் இருந்தார்கள். பூஜையென்றால் இதுதான் பூஜை; தவம் என்றால் இதுதான் தவம் என்று சொல்லுமளவுக்கு மிகச் சிறப்பான சிவ வழிபாட்டை செய்தனர். அவர்களின் தவ வலிமையால் இந்திரலோகமே அசைந்தது கண்டு திடுக்கிட்டான் இந்திரன். ரம்பை, ஊர்வசி, மேனகையை அழைத்து அவர்களின் தவத்தைக் கலைத்து வரும்படி அனுப்பினான்.

ஆனால் அவர்கள், முடிந்தவரை முயற்சித்துக் களைத்து போய் வந்தனர். இந்திரனுக்கு அவர்கள் மீது கோபம் வரவில்லை. மாறாக பயம் பற்றிக் கொண்டது. தோற்றவர்கள், ஜெயித்தால் அதிகப் பாதிப்பு ஏற்படும் என்பது அவனுக்குத் தெரியும். தேவர்களையெல்லாம் திரட்டிக் கொண்டு பிரம்மதேவரிடம் சென்று மண்டியிட்டான். தவம் செய்யும் மூவரைப் பற்றி கூறி, “அவர்கள் முன் சிவனார் தோன்றி வரமளிக்கும்முன், நீங்கள் போய் அவர்களுக்கு வரம் கொடுத்து வரவேண்டும். சிவபெருமான் போனால் அள்ளி வழங்கிவிடுவார். என்னென்ன வரமெல்லாம் கொடுப்பாரோ...?! ஏதாவது உபாயம் செய்யுங்கள் சுவாமி!” என்று மன்றாடினார்கள்.

சாகாவரம் கேட்ட அசுரர்கள்

பிரம்மதேவரும் இதனால் தமக்கும் பாதிப்பு வரும் என்பதை உணர்ந்து திருவதிகை நோக்கி வந்தார். என்ன வரம் வேண்டுமென்றார்! சாகாவரம் கேட்டார்கள். “அது என்னால் ஆகாதப்பா! வேறு வரம் கேளுங்கள்! இது சிவனால் மட்டுமே அருள முடியும்” என்றார். கோபம் கொண்ட அசுரர்களோ, “பின் எதற்கு நீர் வந்தீர். நாங்கள் சிவபெருமானை நோக்கித்தானே தவம் பண்ணினோம்” என்றார்கள். “பறக்கும் மூன்று கோட்டைகள் வேண்டும், தேவர்களெல்லாம் எமது அடிமைகளாக வேண்டும்” என்றார்கள்.

தந்தோம் என்று அவசரமாய் கூறி வேகமாக மறைந்துகொண்டார். விஸ்வகர்மா வடித்துக் கொடுத்த கோட்டைகள் பறந்து வந்தன. கிங்கரர்கள் வாத்தியம் முழங்க ரம்பை, ஊர்வசி, மேனகையின் ஆட்டம் தொடங்கியது. சகல வசதிகளும் கொண்ட கோட்டையைக் கண்டு பூரித்துப் போனார்கள். காமதேனுவைக் கொண்டுவந்து கட்டி வைத்தார்கள். கற்பக மரத்தைப் எடுத்துவந்து நட்டு வைத்தார்கள். சங்கநிதி, பதுமநிதியை வாசலில் இட்டு வைத்தார்கள். பறந்தபடி மற்றைய லோகங்களையும் அடிமைப்படுத்திக்கொண்டார்கள். கூடவே சிவ பூஜையையும் விடாது பண்ணினார்கள்.

அசுரர்களின் அட்டகாசம் தொடங்கியது

தொடர்ந்த நாட்களில் அவர்களது அட்டகாசம் அதிகமானது. இப்போது முனிவர்கள், ரிஷிகளை எல்லாம் கைவைக்க ஆரம்பித்தார்கள். அதி பயங்கர சிவ பக்தர்களாயிருந்த காரணத்தினால் முனிவர்கள் கூட மவுனம் காத்தனர். ஏவல் புரிந்தனர். இந்திரன் மீண்டும் தேவர்களையெல்லாம் அணி சேர்த்து வைகுந்தம் போனான். மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டான்; அவரும் எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்டு, “இந்திரா! இவர்களை அடக்குவதோ அழிப்பதோ அந்த பரமேஸ்வரனால்தான் முடியும். அனாலும் இவர்களோ தீவிர சிவ பக்தர்களாகவும், மனமொன்றிப் பூஜை பண்ணுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

பரமேஸ்வரன் வந்தாலும் இவர்களை அழிப்பாரோ இல்லை மேலதிக வரங்களை அளிப்பாரோ! யாரறிவார். தற்போதைக்கு! நான் சென்று அவர்களிடமிருந்து சில இன்னல்களை நீக்கி, பூஜைகளையும் நிறுத்தி அதன்பின் சிவனாரை வைத்தே அழிக்க வைக்கிறேன்!” என்றார். செயலில் இறங்கினார். மாயம் புரிந்தார். ஏதோ ஒரு மத குருபோல் வந்து, நாரதரையும் மாணவனாக்கித் துணைக்கு வைத்துக் கொண்டார். சில பல அற்புதங்களைப் புரிந்து மயக்கினார். எல்லோரையும் சிவ பூஜையை மறக்கும்படி செய்தார். ஆனாலும் அந்த மூன்று பேரும் இதற்கு மயங்கினாரில்லை.

தன் வேடம் கலைத்து அனைவரையும் அழைத்துக் கொண்டு கைலாசநாதரிடம் போனார் மஹாவிஷ்ணு. நடப்பவற்றை எடுத்துக்கூறி அவர்களால் கடைசியில் நமக்கே ஆபத்து வரும் என்று எச்சரித்தார். புன்னகை பூத்தார் பெருமான். விஸ்வகர்மாவை அழைத்தார். அழகிய தேர் ஒன்று பண்ணு என்றார்.

பணியைத் தொடங்கிய விஸ்வகர்மா, தேவாதி தேவன் பயணப்படுவது எப்படியிருக்க வேண்டுமோ, அப்படிச் செய்ய ஆரம்பித்தார். சூரிய, சந்திரர் சக்கரங்களாயினர். பிரம்மன் சாரதியானார். நான்கு வேதங்களும் குதிரைகளாயின. ப்ரணவம், குதிரை செலுத்தும் கோல் ஆயிற்று. மலை வில்லாக, வாசுகி நாணாயிற்று. மஹாவிஷ்ணுவோ அக்கி பகவானைக் கூராகவும் வாயு தேவனை முடிவாகவும் கொண்டு அம்பானார்.

அனைத்தும் தாயார் என்று பிரம்மா அழைக்கப் பரமசிவன் புறப்பட்டார். ஹர, ஹர கோஷம் வானைப் பிளக்க கம்பீரமாக வந்து ஏறிக் கொண்டார். ரதம் திருவதிகை வந்து அடைந்தது. கோட்டைகள் சுற்றிச் சுற்றி வந்து முன்னாலே நின்று கொண்டன. தன் பரம பக்தர்களான அசுரர்களைக் கண்டு சிறிது தயங்கினார். தயங்கிய சிவனாரைப் பார்த்து தேவர்கள் ஏளனப் புன்னகை சிந்தினார்கள். நாங்களெல்லாம் துணைக்கு வந்ததுமே தயங்கும் இவர் நாங்கள் இல்லை என்றால் என்னத்தைச் செய்வாரோ என்று சன்னமான குரலில் பேசிக் கொண்டார்கள்.

அனைத்தும் அறிந்த பரமசிவன் வில்லை எடுக்கவில்லை, நாணையேற்றவில்லை. சிறுமுறுவல் செய்தார் - சாம்பலானது முப்புரம்! தங்கம், வெள்ளி, இரும்பு உருகியோடி, பூமியோடு கலந்துகொண்டன. லேசாகக் கட்டை விரலை அழுத்தத் தேரின் அச்சு முறிந்தது. தேர் சாய்வதைக் கண்ட மஹாவிஷ்ணு அவர்களைத் தாங்கிக்கொண்டதாய் புராணம் கூறுகிறது.

தேரையும் முறித்துவிட்டு, பிள்ளைகளுக்குப் பூஜையும் பண்ணிக் களித்தார் பெருமான். தனது பரம பக்தர்களான மூவரையும் அழிக்காது இருவரைத் தனது வாயில் காப்போர்களாகவும் ஒருவனைத் தன்னடியில் வாத்தியம் வாசிப்பவனாகவும் வைத்துக் கொண்டார்.

இந்தச் சம்பவத்ததை திருமூலர் கூறும் போது, ஆணவத்தை இரும்பு என்றும், மாயையை வெள்ளி என்றும் கன்மத்தை பொன்னென்றும் கூறி, அன்பு-அறிவு-ஆற்றல் இவை மூன்றும் அசுரர்கள் என்றும் கூறுகிறார். இவை மூன்றும் அதிகமானால் அசுர சக்தி, அசுரத்தன்மையாக மாறிவிடும். மற்றைய தீய சக்திகள் எல்லாம் அழிக்கப்பட இவை மூன்றும் இறை சிந்தனையோடு இருந்ததால் தப்பித்துக்கொண்டு இறைவனோடு சேர்த்துக் கொண்டன. ஆணவம், கன்மம், மாயை இவற்றைத் தன் திருவருளால் சுட்டு எரித்து மற்றவற்றைத் தன்னோடு சேர்த்துக்கொண்டதுவே இது என்கிறார். அப்பு அணி செஞ்சடை ஆதிபுராதணன் என்று திருமந்திரம் கூறுகிறது.

எது எப்படியோ! திருவதிகை வீரட்டானம், இந்த முப்புரம் எரித்த இடமாகவே இன்றளவும் போற்றப்படுகிறது. தேவாரங்களிலும் பாடப்பட்டுள்ளது.

மேலும் பல காலமாக எனக்குள் குடைந்து கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இந்திருத்தலத்துள் உறையும் பெருமாள் பதில்கூறியுள்ளார். அர்த்தநாரீஸ்வரருக்கு கதை உண்டு. சங்கர நாராயணருக்கு? வரும் வாரத்தில் அதை சொல்கிறேன் எல்லாம் அவன் செயல்.

இங்கே காட்டப்பட்டுள்ள திரிபுராந்தக மூர்த்தி கோனேரிராஜபுரம் என்ற அற்புதமான தலத்தில் இருக்கிறார். இந்த வார்ப்பு சிற்பமும், பெருமை கொள்ள வைக்கும் என்ன ஒரு அற்புதமான அழகு. போர் செய்யப் போனாலும் நான் அழகாகவே போவேன் என்பது போல், தலையலங்காரத்தைப் பாருங்கள் அழகு கண்ணைப் பறிக்கிறது. அந்த முக அழகும் துல்லியமாகத் தெரியும் நெற்றிக் கண்ணும் அழகிய செவிகளும் என்ன சொல்ல..?! ஆனாலும் பலமூர்த்திகளோடு, மூர்த்திகளாக, கூண்டில் அடைக்கப்பட்டவர்கள் போல் அங்கே இருப்பதுதான் பெரும் வேதனை. கோயில் பூனை, தேவனை மதிக்காது என்பார்கள். நமது மூதாதையர் பெருமை நமக்குப் புரிந்தால்தானே!

காட்டப்பட்ட மற்றொரு அற்புதமான சிற்பம், தஞ்சையில் பெரிய கோவிலின் மாடங்களில் காட்டப்பட்டுள்ள சிவ ரூபங்களில் ஒன்று, மேலே மூலிகை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அழிந்தும் அழியாமலும் இருக்கும் வண்ணத்தோடு இருந்தாலும் அழகு பொங்குகிறது. இவற்றையெல்லாம் நேரில் சென்று தரிசித்து அனுபவியுங்கள் அன்பர்களே! அந்த சுகத்தை உங்கள் சந்ததியருக்கும் கொடுத்து மகிழுங்கள்... பெருமையோடு..!

(சிற்பங்கள் பேசும்…)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-23-முப்புரம்-எரித்த-முக்கண்ணன்/article9606306.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 24: புலியாக வந்த புண்ணியன்

 

 
 
 
 
sirpam_3151177f.jpg
 
 
 

பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதிய திருவிளையாடற் புராணத்தில் இருக்கும் லீலை இது. திருவிளையாடல்களை நிகழ்த்திய சொக்கநாதப் பெருமான் உறையும் இடம் மதுரை. அந்த மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தில் இந்த லீலையை விளக்கும் சிற்பம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பன்றியாய் வந்த பரமன் பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்த சிற்பத்தைப் பார்த்தோம். அதற்கு அருகில் இந்த அற்புதமான சிலை இருக்கிறது.

இதில் சிவபெருமானைப் புலியாகக் காட்டாமல், சிவபெருமான் புலியைத் தூக்கிவைத்து, வலது கையில் மான்குட்டியை ஏந்தி, புலியின் முலையில் பால் அருந்த வைப்பது போன்று இருக்கிறது. இது அந்தச் சிற்பிக்குக் கிடைத்த காட்சியோ, உத்தரவோ என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் பார்ப்போர் மனதிலும் எனக்குமே கூடச் சிறுசந்தேகம் எழுந்தது. பாலுக்குத் தவித்த மான்குட்டியை எடுத்து, குட்டி ஈன்றிருந்த புலியிடம் சிவபெருமான் பால்குடிக்க வைத்திருப்பாரோ என்பதே அந்த சந்தேகம். ஆனாலும் சிவபெருமானுக்கு இதில் பெரிய பெருமை ஒன்றும் இல்லையே.

narasimhan_3151178a.jpg

காஞ்சிக்கு வாருங்கள்

பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணமும் எங்கும் கிடைக்காத நிலையில், கதையும் சரியாகத் தெரியாத நிலையில் அந்த சொக்கநாதரை வேண்டிக்கொண்டேன். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் போனபோது, அதே பதினாறு கால் மண்டபத் தூணில் பன்றிபோல், நான் புலியாகவேதான் வந்தேன் என்பதைக் காட்டி அருளினார். இதுதான் சரி. காரணம் திருவிளையாடல் என்பது களத்திற்குத் தானே வந்திருந்து ஆடுவதுதானே. இருந்த இடத்தில் இருந்து புலியை மானுக்கும், மானை முயலுக்கும் பால் கொடுக்க வைப்பது எப்படி திருவிளையாடலாகும்.

பல இடங்களிலும் மானொன்று குட்டி போட்டதாம். பின் நீரருந்தப் போன இடத்தில் வேடன், அம்பு பட்டு இறக்க குட்டி பாலின்றி அழுததாம். இதைக் கண்ட சிவபெருமான், பக்கத்தில் இருந்த ஒரு பெண் புலியிடம் பால் கொடுக்கும்படி கூற அது மனமிரங்கிப் பால் கொடுத்ததாம். இப்படி எழுதவும், பேசவும் செய்கிறார்கள். இது பெரிய அபத்தமும் இழுக்கும் கூட.

சந்தேகங்களுக்கு விடை

அந்த மான் யார்? அந்தக் குட்டி(கள்) யார்? அவர்கள் செய்த கர்மவினை என்ன? அதைத் தீர்க்க பரமசிவனே புலி உருவில் வருகிறார் என்றால் அதன் காரணமென்ன? மான்குட்டிக்கு மான் வடிவிலேயே வந்து பால்கொடுத்து முக்தியளித்திருக்கலாமே. புலி வடிவில் வரவேண்டிய அவசியமென்ன? இந்த சந்தேகங்களுக்கு விடை இதுவரை கிடைக்கவில்லை. திருப்பரங்குன்றத்து சிற்பம் தரும் சந்தேகத்தை ஏகாரம்பர நாதர் தீர்த்துவிட்டார். அந்தச் சிற்பத்தில் கீழே புலிக்குட்டி பால் குடிப்பதாய்க் காட்டப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்துச் சிற்பத்திலும் இரண்டு புலிக்குட்டிகள் தாவுவது தெரிகிறது. விநாயகப் பெருமானும், முருகப் பெருமானும் குட்டியாக வந்து, தந்தைக்குத் துணை புரிகிறார்களோ என்னவோ? இன்னுமொரு விஷயம் இந்த திருப்பரங்குன்றத்துச் சிலையில் இன்னுமொரு மான் குட்டி துள்ளுவதைக் கூடக் காட்டியிருக்கிறார் சிற்பி. அப்படியானால் தாய் மானோடு சேர்த்து மூவருக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்திருக்கிறது சரிதானே. இதேபோன்று இந்தச் சம்பவத்தை மதுரையின் புதுமண்டபத்தின் கிழக்குப் பக்க முடிவில் வடித்து வைத்திருப்பதாகவும் கூறுவார்கள். நான் இன்னமும் பார்க்கவில்லை. எனது குருநாதர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரைந்தபோது முழுமையாக

இருந்த புலி இப்போது ஒரு காலும் வாலும் உடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் இந்தச் சிற்பத்தில் பசியால் வாடிய மான்குட்டி, எப்படி வேகமாக பால் அருந்துகிறது என்பதை, அதன் கழுத்தின் பகுதியில் மிக அழகாகக் காட்டிய சிற்பி, பால் கொடுக்கும் சுகத்தைப் பன்றியின் கண்களில் வைத்ததுபோல் இங்கே சிவனாரின் உதடுகளில் காட்டியிருக்கிறார்.

புலியாக வந்தது சிவபெருமானே என்று அறிவதற்கு இது ஒன்றே போதும். பெருமானின் பெருமையைப் புரிந்த தெய்விகச் சிற்பி இப்படித்தான் காட்டுவான். வேறெப்படி இருக்க முடியும்? நாமும் கண்டு களிப்போம். உயிரினங்கள் மேல் கருணையோடு இருப்போம். எனக்கென்னவோ இந்த வாரம்தான் சிற்பங்கள் நிஜமாகப் பேசப்போகிறது என்றுத் தோன்றுகிறது. கதை தெரியாத இந்த வேளையில் அவற்றிடம் கேட்டுத்தான் பாருங்களேன். என்னதான் சொல்கிறார்கள் என்று பார்ப்போமே.!

(சிற்பங்கள் பேசும்…)

http://tamil.thehindu.com/society/spirituality/அற்புதக்-கதை-சொல்லும்-அழகான-சிற்பங்கள்-24-புலியாக-வந்த-புண்ணியன்/article9617441.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.