Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

இந்த 10 வழிமுறைகள் உங்களை ஆக்கும் மாஸ்டர் மைண்ட்!

 
 

மூளை... மனிதனுக்குக் கிடைத்த அன்லிமிட்டெட் நினைவகம். ஒவ்வொரு வினாடியும் ஒரு லட்சம் அமில மாற்றங்கள் நடைபெறும் ஓர் இடம். புதிய சிந்தனைகளுக்கும் முயற்சிகளுக்கும் பிறப்பிடம். இப்படியான மூளையின் செயல்பாட்டை அதிகரித்திட சில செயல்களைப் பின்பற்றினால் நீங்கள்தான் மாஸ்டர் மைண்ட்... 

மைண்ட்

1. காலை உணவைத் தவிர்க்காதீர்!

காலை உணவே நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். காலை உணவைத் தவிர்ப்பதால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கவோ, குறையவோ வாய்ப்புள்ளது. இரவு உணவுக்குப்பின் நாம் எடுத்துக்கொள்ளும் நீண்டநேர உறக்கத்துக்கு அடுத்து எடுத்துக்கொள்ளக்கூடிய முதல் உணவு காலை உணவே. ஆகவே, முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் காலை உணவைத் தவிர்த்தால், மூளையின் செல்களை இழக்க நேர்வதோடு நினைவாற்றலில் குறைவு ஏற்படும்.

காலை உணவைத் தவிர்க்காதீர்

2. இரவு உறக்கம் அவசியம்!

தினமும் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அதிக நேரம் தூங்காமல் கண் விழித்திருப்பது நம்முடைய ஆரோக்கியத்தை நாமே அசைத்துப் பார்க்கக்கூடியதாகும். அதிக நேரம் விழித்திருப்பதால் மூளையில் உள்ள செல்களின் திறன் மற்றும் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படும். நாம் தூங்கும்போதுதான் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். தூங்கும்போதே மன அழுத்தம் குறையும்; மூளையின் செல்களும் புத்துயிர் பெறும். ஆக, அடுத்த நாளை எதிர்கொள்ள மூளை புத்துணர்வுடன் காத்திருக்கும்.

இறவு உறக்கம் அவசியம்

3. அதிக சர்க்கரையும் ஆபத்தே!

நாம் உண்ணும் அனைத்து உணவிலும் சர்க்கரை உள்ளது. ஆகவே, அதிகமாக இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்கள் அதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இனிப்பை உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கிறது, செல்கள் புத்துணர்வு பெறுகின்றன என்பதெல்லாம் ஒரு புறம் இருக்க... அதிக இனிப்பால் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் கணையப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  மேலும், முன்கோப சுபாவத்தை ஏற்படுத்தும். அதிக அளவு இனிப்பு உட்கொள்வதால் அதீத நியூட்ரியன்கள் மூளைக்குக் கிடைக்கும்; இதனால், கவனமின்மை உண்டாகும்.  

அதிக சர்க்கரையும் ஆபத்தே

4. அதீத உணவு வேண்டாம்!

அதிகமாக உண்ணுதல் 'உணவு வேட்கை' எனப்படும் ஈட்டிங் டிஸார்டருக்கு வழிவகுக்கும். இது உடல் பருமனை அதிகரிக்கச் செய்வதோடு, இதய நோய்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புண்டு. மேலும், மூளையில் உள்ள தண்டுகளில் பாதிப்புகளை உண்டாக்கும்; கவனச்சிதறலை உண்டாக்கும். 

அதீத உணவு வேண்டாம்

5. புகை எப்போதும் பகையே!

புகைபிடித்தல் ஒரு கெட்ட பழக்கம். புகைபிடித்தல் பல்வேறு நோய்களை உண்டாக்கும். மூளைப் பாதிப்புக்கு முக்கியக் காரணி புகைபிடித்தலே. புகையில் உள்ள நிகோடின் நுரையீரல் மற்றும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. நினைவாற்றலைக் குறைத்து மூளையில் செல் இழப்பை ஏற்படுத்தும். முதியோரைப் பாதிக்கும் `அல்சைமர்' எனப்படும் நினைவு இழப்பு நோய்க்கும் வழிவகுக்கும்.

புகை எப்போதும் பகையே

6. தலையைப் போர்த்திப் படுக்கக்கூடாது!

நாம் பகல் நேரங்களைவிட இரவிலேயே அதிகமாகச் சுவாசிக்கிறோம். ஆக, காலை நேரங்களைவிட இரவில் தூங்கும்போதுதான் நம் உடலுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதேபோல் நாம் வெளியிடும் கார்பன்-டை ஆக்சைடின் அளவும் இரவில்தான் அதிகமாக இருக்கும். இதனால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைந்து மூளையின் செயல்பாட்டில் தடை ஏற்படும். செல்கள் சீராக இயங்காமல் போகும். உடல் அசதியாக உள்ள உணர்வு உண்டாகும். மேலும், நாள் முழுவதும் சோர்வு, இடையறாத தூக்கம், வேலையில் நாட்டமின்மை போன்றவை ஏற்படும். 

மாசடைந்த காற்று

7. அசுத்தமான காற்றிடம் இருந்து தள்ளியிருங்கள்!

வெளியில் செல்லும்போது மாஸ்க் பயன்படுத்தலாம். மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கும்போது மூளையில் செல் இழப்பு ஏற்படும். மூளைக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மூச்சுத்திணறல் ஏற்படும். உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் தடைப்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். 

உடல் நிலை சரியில்லாதபோது வேலை வேண்டாம்

8. உடல்நிலை சரியில்லாதபோது வேலை வேண்டாம்!

இன்றைய அவசர யுகத்தில் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமோ, இல்லையோ வேலை நடக்க வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம். பலர் ஒரே நேரத்தில் வேலையை முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்திலும் மெனக்கெடலிலும் இருக்கிறோம். உடல்நிலை சரியில்லாதபோது உடலுக்குத் தேவையான எனர்ஜி இருக்காது. இப்படியான சூழலில் நம் உடலும் மனமும் நாடுவது ஓய்வு ஒன்றை மட்டும்தான். ஓய்வை ஒதுக்கிவைத்தால், எண்ணற்ற உடல் பாதிப்புகள் வந்து சேரும் சூழல் உண்டாகும். 

குறைவாகப் பேசுவதும் குறைபாடு

9. குறைவாகப் பேசுவதும் குறைபாடே!

பேச்சு உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு ரகசிய மந்திரம். பேசுவதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். அறிவு சார்ந்த உரையாடல்கள் மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்தும். மேலும், மூளை தடையில்லாமல் தொடர்ந்து இயங்க வழிவகுக்கும். மூளைக்கு ஒருவிதப் புத்துணர்வை ஏற்படுத்தும். மேலும், ஒரு பிரச்னையை அணுகும்முறையில் குழப்பம், சரியான வாக்கிய அமைப்பு இல்லாதிருத்தல், நினைக்கும் அல்லது தேவைப்படும்போது வார்த்தை நினைவில் வராமல் போதல் போன்ற பிரச்னைகள் குறைவாகப் பேசுவதால் உண்டாகக்கூடியவையாகும்.

நல்லதையே நினையுங்கள்

10. நல்லதையே நினையுங்கள் நன்மையே நடக்கும்!

தொடர்ந்து சிந்தித்தல் மூளைக்குச் சிறந்த பயிற்சி. இது புதிய முயற்சிகள், சிந்தனைகள் மற்றும் புத்துணர்வுக்கு வழிவகுக்கும். இப்படியான சிந்திக்கும் தன்மை மூளையின் அனைத்துப் பகுதிகளும் சீராக இயங்க உதவுகிறது. சிந்திக்கும் தன்மை இல்லையென்றால் மூளையில் சுருக்கம் ஏற்பட்டு, சேதமடையும் நிலை ஏற்படுகிறது. உங்களுக்குப் பிடித்த சிறப்பான துறைகளில் வேலை செய்யுங்கள். அது உங்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் தரும். இவை மூளைப் பக்கவாதம், `அல்சைமர்' நோய் போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கின்றன. 

 

கற்றுக்கொள்ளுங்கள், பேசுங்கள், சிந்தியுங்கள்!

http://www.vikatan.com/news/health/88952-you-too-can-become-a-mastermind-by-following-these-10-tips.html

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

சிசுவைப் பாதிக்கும் ‘ மெனிங்கோமைலோசில்

 

 

கருத்தரிக்கும் ஒரு சில பெண்களின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு மெனிங்கோமைலோசில் என்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

health_news_image_85.jpg

அது என்ன மெனிங்கோமைலோசில்? என்றால் வயிற்றில் வளரும் சிசுவின் முதுகு தண்டுவடத்தின் வளர்ச்சி இயல்பாக இல்லாமல் குறைபாடுடன் இருப்பதற்கு பெயர் தான் மெனிங்கோமைலோசில்.

இதனை வயிற்றில் இருக்கும் சிசு 6 மாதமாக இருக்கும் போது ஸ்கேன் பரிசோதனையின் போது கண்டறியப்பட்டால் ஒரு சிலர் கரு கலைப்பிற்கு ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதனால் தாயின் உயிருக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம்.

இந்நிலையில் இத்தகைய குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். கருத்தரித்த முதல் 3 மாதங்களில் தாயானவர் எடுத்துக் கொள்ளும் உணவில் போலிக் அமிலத்தின் குறைபாட்டின் காரணமாகவே இந்நிலை உருவாகிறது. மேலும் இதன் போது கருவின் நரம்புத் தொகுதி பாதிக்கப்படுகிறது. அத்துடன்  முதுகெலும்புத் தண்டில் பின்னிப் பிணைந்திருக்கம் நரம்பு தொகுதிகள் முழுமையான மூடப்படாமல் இருக்கும். இதன் காரணமாக மூளை, மண்டையோடு போன்ற பகுதிகளில் இயல்பாக நடைபெறவேண்டிய வளர்ச்சியில் குறைபாடு உண்டாகிறது. அத்துடன் வளரத் தொடங்கும் முதுகு தண்டுவட எலும்புகள் வளர்ச்சி பெறாமல் முதுகில் கட்டி போல் உருவாகி, அந்த கட்டிக்குள் நரம்புகள் சென்றுவிடும். இந்த குறைப்பாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, சிறுநீரும், மலமும் தானாகவே நிகழும். ஒரு சில குழந்தைகளுக்கு தலை பெரிதாகிக் கொண்டே செல்லும். மேலும் ஒரு சில குழந்தைகளின் ஆயுள் முழுவதும் படுக்கையிலேயே கழிக்கநேரிடும்.

இதனை தவிர்ப்பதற்காகத்தான் கரு தரித்த பெண்ணிடம் முதல் 3 மாதத்திற்கு மட்டுமல்லாமல், திருமணம் ஆகி தாம்பத்தியம் தொடங்கும் காலகட்டத்திலிருந்து போலிக் அமிலசத்துமிக்க பச்சை காய்கறிகள், மூளை கட்டிய பயறு வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். இதனை இன்றைய இணையதலைமுறை பெண்கள் ஏற்கமறுத்து துரித வகை உணவுகளையே விரும்பி சாப்பிடுகிறார்கள்.

மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு வகைகளைச் சாப்பிட்டால் ஆண்களின் உயிரணுவில் உருவாகும் குரோமோசோம்களின் குறைபாடும் களையப்படுகிறது. ஆரோக்கியமான குழந்தை பிறப்பு சாத்தியமாகிறது.

தற்போதைய மருத்துவ துறை வளர்ச்சியின் காரணமாக இப்பிரச்சனையுடன் பிறக்கும் குழந்தைகளை, உடனடியாக முதுகு தண்டுவடப்பகுதியில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, நரம்பு தொகுதிகள் சீரமைக்கப்படுகின்றன.

Dr.வெங்கடேசன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/19854

Link to comment
Share on other sites

ஆரோக்கியம், மருத்துவ குணங்கள்... அசத்தலான  8 சிறுதானிய ரெசிபிகள்!

 

சிறுதானியங்களின் அருமை தெரிந்திருந்தாலும், எப்படி அவற்றை சமையலில் பயன்படுத்துவது என்பது நம்மில் பலபேருக்குத் தெரிவதில்லை. வழக்கமாகச் செய்வதைப்போலவே சிறுதானியங்களிலும் பல உணவுகளைத் தயாரிக்கலாம். அதற்கான 8 செய்முறைகளையும், ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்களையும் விவரிக்கிறார் இயற்கை ஆர்வலர் மற்றும் உணவியலாளர் சேது சங்கர்....

சிறுதானியம்

சிறுதானிய கூழ்
குதிரைவாலி போன்ற ஏதோ ஒரு சிறுதானிய அவலை மிக்ஸியில் ரவை அளவுக்கு பொடித்துக்கொள்ளவும். 100 மி.லி தயிருக்கு 200 மி.லி தண்ணீர் என்கிற அளவில் ஊற்றி, மோராக அடிக்கவும். மோரில் 3  டீஸ்பூன் (சுமார் 30 கிராம்) அளவுக்கு சிறுதானிய (பொடித்த) அவல் மாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அத்தோடு, சிறிது உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெய்யிலுக்கு இதமான பாரம்பர்ய கூழ் தயார். ஊறுகாய் அல்லது பொரித்த வற்றலுடன் பரிமாறலாம்.

சிறுதானிய அவல் பொங்கல்
ஒரு கப் அவலுக்கு கால் கப் பாசிப் பருப்பு என்ற அளவில் எடுத்து வேகவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி, சேது சங்கர்காய்ந்தவுடன் சிறிது மிளகைப் போடவும். மிளகு வெடித்து வரும்போது, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, முந்திரி போட்டு பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். பிறகு வேகவைத்த  பாசிப்பருப்பை இதனுடன் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அவலை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சூடாகப் பறிமாறவும். 

சிறுதானிய அவல் பூரி / சப்பாத்தி
ஒன்றரை கப் சிறுதானிய அவலை எடுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கடலை எண்ணெய், சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அவல் மாவைச் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, பூரிக்குச் செய்வதுபோல் திரட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அல்லது சப்பாத்திபோல் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.

சிறுதானிய அவல் உப்புமா
 ஒரு கப் அவலுக்கு அரை கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து அவலில் தெளித்து இரண்டு நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சீரகம் போடவும். அதைத் தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பிறகு ஊறவைத்த அவலைச் சேர்க்கவும். பிறகு மஞ்சள் சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலியை கீழே இறக்கி, வறுத்த வேர்க்கடலைப் பொடி மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி போட்டுக் கிளறி, சூடாகப் பரிமாறலாம். 

சிறுதானிய அவல் இட்லி / தோசை
2 கப் அவல், 2 கப் இட்லி அரிசி, அரை கப் உளுத்தம் பருப்பு எடுத்துக்கொள்ளவும். அரிசியை சுமார் 2 மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் அரைக்கும்போது அவலையும் சேர்த்து அரைக்கவும். உளுந்தைத் தனியாக அரைக்கவும். இரண்டு மாவையும் நன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து சுமார் 6 மணிநேரம் புளிக்கவிடவும். புளித்த மாவில் தோசை (அ) இட்லி செய்யலாம்.

வாழைப்பழ சிறுதானிய ஸ்மூத்தி
இரண்டு வாழைப்பழங்களை உரித்து, பிளெண்டர் அல்லது மிக்ஸியில் போடவும். ஒரு கப் பாலை கொதிக்கவைத்து ஆறிய பின் அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு பொடித்த வெல்லம் அல்லது தேன் சேர்க்கவும். கால் கப் சிறுதானிய அவலைப் போட்டு மிக்ஸியில் மெள்ள மெள்ளக் கூழாகும் வரை அரைக்கவும். வென்னிலா அல்லது தேவையான எசென்ஸ் சிறிதளவு ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

பாயசம் 

பாயசம்
அடுப்பில் வாணலியை வைத்து 50 கிராம் அளவுக்கு சிறுதானிய அவலை வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். அதனுடன், சிறிது நெய் ஊற்றி, நன்றாகக் கிளறிவிடவும். 250 மி.லி பால் எடுத்துக் கொதிக்கவைக்கவும். அதில் சிறிது ஏலக்காயை நசுக்கிப் போடவும். நன்றாகக் கொதிக்கும்போது, நெய்யில் வறுத்த சிறுதானிய அவலைச் சேர்க்கவும். அதனுடன், தேவையான அளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளவும். நெய்யில், முந்திரி மற்றும் உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து அதனுடன் சேர்க்க, சுவையான சிறுதானிய பாயசம் தயார். 

சிறுதானிய அவல் கஞ்சி
சிறுதானிய அவலை நன்றாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஒரு கப் சிறுதானிய அவல் மாவுக்கு 5 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிது வெந்தயம், சீரகம், 4 நசுக்கிய பூண்டுப் பல் ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அவல் மாவைச் சேர்த்து, கட்டி ஏற்படாமல் நன்றாகக் கலக்கவும். கொதிக்கவைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

சிறுதானியம் 

சிறுதானியங்களின் பலன்கள்:

குதிரைவாலி
செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சர்க்கரை நோயாளிக்களுக்கான சிறந்த உணவு. இதில் நிறைந்துள்ள கால்சியம் எலும்பை வலுப்படுத்தும்.

வரகு
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வயிற்றுப் புண், முதுகுவலி, மூட்டுவலி போன்றவற்றைச் சரிசெய்யும். ரத்த சுத்திகரிப்பானாகச் செயல்படும். மேலும், ரத்த உற்பத்திக்கும் உதவும். 

சோளம்
செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். உடல்பருமன் குறைக்க உதவும். செல்களை புத்துணர்வு பெறச்செய்யும். செல்களின் வளர்ச்சிக்கு உதவும். 

சிறுதானிய ரெசிபிகள் 

கம்பு
டைப் 2 சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, நாவறட்சி போன்றவை நீங்க மோரில் கலந்து பருகலாம்.

சாமை
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். ரத்தசோகையைப் போக்கும். நார்ச்சத்து நிறைந்தது. உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

தினை
உடனடி எனர்ஜியைத் தரும். செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். கொழுப்பைக் குறைக்கும். உடல்பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதய நோய்கள் வராமல் தடுக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

 

கேழ்வரகு
உடல்பருமன் குறைய உதவும். சர்க்கரைநோயைக் குணப்படுத்த உதவும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். 

http://www.vikatan.com/news/health/89065-health-benefits-of-small-grain-recipes.html

Link to comment
Share on other sites

பாசிட்டிவ், நெகட்டிவ், நியூட்ரல் உணவுகள்... யாருக்கு எது நல்லது?

 

சமையல், அது ஒரு வேலை... இல்லையில்லை அது ஒரு கலை என்கிறார் ஒருவர். சமையல் என்பது சயின்ஸ் என்று சொல்கிறார் ஒருவர். எது எப்படியோ சமையலில் பலவகை உண்டு. ஒவ்வொரு சமையல் முறைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. சில சமையல் முறைகளால் சமைக்கப்பட்ட உணவுகளில், சத்துகள் அப்படியே இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சமையல் போன்ற சமையல் முறைகளில் சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. மாறாக, கெட்டக் கொழுப்பும் சேர்ந்துவிடும். இதன் அடிப்படையில் நாம் உண்ணும் உணவு பாசிட்டிவ், நெகட்டிவ், நியூட்ரல் என வகைப்படுத்தப்படுகிறது. இதில் எது உடலுக்கு நல்லது, எவற்றைத் தவிர்க்கவேண்டும் எனப் பார்ப்போமா? 

உணவு

 

பாசிட்டிவ் உணவு முறை
பெரும்பாலான சத்துகள் அப்படியே கிடைப்பதை பாசிட்டிவ் உணவுகள் என்கிறோம். உதாரணமாக பழங்கள், சமைக்காத காய்கறிகளைச் சாப்பிடுவது, பச்சடி, பழச்சாறு, இளநீர், தயிர், நீர்மோர், இட்லி, இடியாப்பம், நீர்க்கொழுக்கட்டை, பொங்கல், எண்ணெய் இல்லாத தோசை, சப்பாத்தி போன்றவற்றைச் சொல்லலாம். 

நெகட்டிவ் உணவு முறை
சத்துகள் நீங்கி கெட்டக் கொழுப்பும் சேர்ந்தால் அது நெகட்டிவ் உணவுகளாகும். உதாரணத்துக்கு, டீப் ஃப்ரை உணவுகள், சிப்ஸ், ஃபாஸ்ட்ஃபுட், பொரித்த மீன், தந்தூரி, ஃபிரெஞ்ச்ஃப்ரைஸ், பீட்சா போன்ற உணவுகளைச் சொல்லலாம். 

நியூட்ரல் உணவு முறை
சத்துகளும் கொழுப்பும் அளவுடன் இருந்தால் அவற்றை நியூட்ரல் உணவுகள் என்று சொல்லலாம். எண்ணெயும் கொழுப்பும் உடலுக்குத் தேவைதான். ஆனால், நல்லதாக இருக்க வேண்டும். இப்படி எண்ணெயில் பொரித்த நல்ல உணவுகளை அளவுடன் சாப்பிடலாம். செக்கில் ஆட்டிய எண்ணெயில் வடை, பஜ்ஜி போன்றவற்றைப் பொரித்துச் சாப்பிடுவது நல்லது. செக்கில் ஆட்டிய எண்ணெயில் பொரிப்பதால் எந்தவிதக் கேடும் விளையாது. ஏனெனில் இது கொதிநிலைக்கு உட்படுத்தப்பட்ட எண்ணெய் கிடையாது. இதிலும், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்குச் சேர்ப்பது நல்லதல்ல. 

* பெரும்பாலான நோய்களுக்குக் காரணமே நெகட்டிவ் உணவு முறைகளே. எனவே, நோய்களை விரட்ட பாசிட்டிவ் உணவுமுறைக்கு மாறுவது நல்லது. 

கொழுக்கட்டை

* ஆரோக்கியமான உடல்நலத்துக்கு 70 சதவிகிதம் பாசிட்டிவ் உணவுமுறைகளைச் சாப்பிடவேண்டும். 30 சதவிகிதம் நியூட்ரல் உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும்.

* டேபிள் சால்ட் தவிர்த்து இந்துப்பு, கல்லுப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம். 

* காய்கறிகளைக் கழுவிய பிறகே நறுக்குங்கள். மாறாக, நறுக்கிய பிறகு கழுவினால் காய்கறிகளில் உள்ள சத்துகள் நீங்கிவிடும். 

* அவித்தல், வேகவைத்தல் முறையில் பயன்படுத்தும் காய்கறிகளைப் பெரிய அளவில் நறுக்கி சமைத்தால், 80 சதவிகித சத்துகள் கிடைக்கும். 

இட்லி

* வறுத்தலும் பொரித்தலும் நம்மை நோய்க்கு கொண்டு செல்லக்கூடிய சமையல் முறைகளாகும். ஆகவே, இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடக் கூடாது. 

 * சமைக்காத உணவுகளில் என்சைம்கள் நிறைந்துள்ளதால், அவை இன்சுலின் சுரக்க உதவும். இதனால் சமைக்காத உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்பவருக்குச் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். சமைக்காத உணவுகள் என்றால் பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய பயறுகளைச் சொல்லலாம்.  

ஃப்ரூட் சாலட்

* ரீஃபைண்டு எண்ணெய்களின் பயன்பாட்டை அறவே தவிர்த்து, செக்கு எண்ணெயை பயன்படுத்தலாம். 

* அடிக்கடி பச்சடி செய்து சாப்பிடுங்கள். அதற்குக் காய்கறிகளை சிறியதாக நறுக்கி பயன்படுத்துவது நல்லது. 

* சிலர் காலையில் சீக்கிரம் எழுந்து சமைக்க வேண்டும் என்பதற்காக முதல்நாளே நறுக்கி வைத்துவிட்டு மறுநாள் அதைப் பயன்படுத்துவார்கள். இது தவறு. காய்கறிகளை நறுக்கியதும் சமைக்க வேண்டும் அல்லது உண்ண வேண்டும். 

* பழவகைகளில் எவற்றையெல்லாம் தோலை நீக்காமல் சாப்பிட முடியுமோ அவற்றை அப்படியே சாப்பிடுங்கள். 

* நோயால் அவதிப்படும்போது, பெரும்பாலும் பழங்களையும் இளநீரையும் உணவாக உட்கொள்ளுங்கள். 

* வாரம் ஒருநாள் பழங்கள் அல்லது காய்கறிகளை மட்டும் உணவாகச் சாப்பிடுங்கள். 

* தினசரி உணவில் குறைந்தது 100 கிராம் அளவுக்குக் காய்கறிகள், பச்சடி, பழங்களைச் சாப்பிடுங்கள். இது உடலை தூய்மைப்படுத்தும். 

* கீரை வகைகளைச் சுத்தப்படுத்தி, நன்றாக அலசி, சிறிது உப்பு போட்டு சரியான பதத்தில் வேகவைத்து உண்பது நல்லது. 

* தானியங்கள், பருப்புகள், பயறு வகைகளைத் தோல் நீக்காமலும் முளைகட்டியும் சாப்பிடுவது நல்லது. 

முளைவிட்ட பயறுகள்

* இரண்டுவிதமான பச்சடிகளைத் தயார் செய்து சாப்பிடலாம். ஒன்று, காய்கறிகளோடு தயிர் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து பச்சடி தயாரிப்பது. மற்றொன்று, எலுமிச்சைச் சாறு, பச்சைமிளகாய் சேர்த்துத் தயாரிப்பது. இந்த இருவகைப் பச்சடிகளும் உடலுக்கு நல்லது. 

* பொதுவாக நாம் தயிரை அதிகமாகச் சேர்த்து காய்கறிகளைக் குறைவாகக் கலந்து, உப்பை தூக்கலாகப் போட்டு சாப்பிடுவோம், இது தவறு. அதற்குப் பதிலாக காய்கறிகளை அதிகமாகவும், தயிர் குறைவாகவும் அதேசமயம் புளிக்காத தயிராகவும் இருப்பது நல்லது. 

* பச்சடிகளைத் தயாரிக்க என்னவெல்லாம் சேர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இது அடிப்படை முறைதான். வெங்காயம், கறிவேப்பிலை, கேரட், பீட்ரூட், தக்காளி, வெள்ளரிக்காய், பூசணிக்காய், நெல்லிக்காய் போன்றவற்றைப் பொடியாக நறுக்கி பச்சடிகளைத் தயாரிக்கலாம். 

* கேரட் பச்சடி, பீட்ரூட் பச்சடி, வெள்ளரி பச்சடி என எத்தனையோ பச்சடிகளைத் தயாரிக்க முடியும். 

* பச்சடிகளை உணவுக்கு முன் சாப்பிடுவது நலம். அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 

* உணவில் சிவப்பு மிளகாய்த்தூளுக்குப் பதிலாக மிளகு சேர்த்துக்கொள்வது நல்லது. 

* வடை, போண்டா போன்ற நியூட்ரல் உணவுகளில் இஞ்சியும் மிளகும் அவசியம் இருக்க வேண்டும். 

* பொரித்த அப்பளத்துக்குப் பதிலாகச் சுட்ட அப்பளத்தைச் சாப்பிடலாம். 

நெல்லி ரசம்

* தினசரி உணவில் பருப்பு சேர்க்கவேண்டாம். வாரம் இரண்டுநாள் சேர்த்தால் போதும். சாம்பாராகவே தினமும் இல்லாமல் ரசம், வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, எலுமிச்சை ரசம், நெல்லி ரசம், கீரைக் கூட்டு, துவையல் என மாற்றிச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. 

 

* தண்ணீரை எப்போதும் மிதமான சூட்டில் குடிப்பது நல்லது. சீரகத் தண்ணீர் குடிப்பது சிறந்தது.

http://www.vikatan.com/news/health/89295-positive-negative-and-neutral-foods-which-is-best.html

Link to comment
Share on other sites

சுவாசம் சீராகும், மனஅழுத்தம் குறைக்கும், முதுகுவலி விரட்டும் பலூன் பயிற்சிகள்!

 

லூன்... கேட்டாலே எந்த வயதினரையும் உற்சாகம்கொள்ள வைக்கும் ஒரு பெயர். குழந்தைகளுக்கோ சொல்லவே வேண்டாம். உடைந்து, கிழிகிற வரை கையில் பிடித்துக்கொண்டே அலைவார்கள். அதிலும் சில குழந்தைகளுக்கு எத்தனை பலூன்கள் கிடைத்தாலும் ஆசை அடங்காது; `இன்னும் வேணும்’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்ட அலங்காரங்களில் இது ஒரு தனி அடையாளமாகவே ஆகிவிட்டது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். `ஒரு பலூனை ஊதுவது என்பது சிறந்த உடற்பயிற்சி. பலூனைக்கொண்டு முறையாகச் சில பயிற்சிகளைச் செய்தால், எக்கச்சக்கமான மருத்துவப் பலன்களைப் பெறலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். சரி... எப்படி பலூன் பயிற்சி செய்வது, அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், யார் யார் செய்யலாம் என்பதையெல்லாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பலூன் பயிற்சி

பயிற்சிகள்:

* தலை, இடுப்பு, குதிகால் சுவற்றில் படும்படி  90 டிகிரி கோணத்தில் சாய்ந்து நிற்க வேண்டும். இந்தநிலையில் அகலமான பெரிய அளவிலான பலூனை கால் முட்டியின் இடையே வைத்திருக்க வேண்டும். இப்போது, மூச்சைச் சீராக இழுத்து, விட வேண்டும்.

* தலை, இடுப்பு மற்றும் குதிகால் சுவற்றில் படும்படி 90 டிகிரி கோணத்தில் சாய்ந்து பாதி அமர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இந்தநிலையில் பெரிய அளவிலான பலூனை முதுகுப்பகுதிக்கும் சுவற்றுக்கும் இடையே வைக்க வேண்டும். இப்போது மூச்சைச் சீராக இழுத்து, விட வேண்டும். 

பலன்கள்: 

கால் தசைப் பிடிப்புகள் நீங்கும். உடலின் சமநிலைத் தன்மையை மேம்படுத்தும். இடுப்புவலி, முதுகுவலி குறையும். கீழ்இடுப்புத் தசைகளில் ரத்த ஓட்டம் சீராக இயங்க உதவும்.

பலூன் பயிற்சிகள்

பயிற்சிகள்:

* ஒரு கையால் சிறிய பலூன் ஒன்றைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்போது மூச்சை மூக்கின் வழியாக சீராக இழுக்க வேண்டும். மூன்று விநாடிகள் கழித்து, மூச்சை வெளியேற்ற வேண்டும். மூச்சை இழுக்கும்போதும் விடும்போதும் பலூனில் சிறிது அழுத்தம் கொடுக்கவும். இது கிட்டத்தட்ட ஒரு யோகா பயிற்சியைப் போன்றது. 

* விரிப்பில் அமர்ந்தோ, படுத்துக்கொண்டோ பலூன்களை ஊத வேண்டும். சிறிது இடைவெளி விட்டு மூச்சை இழுத்து, மறுபடியும் ஊதலாம்.

பலன்கள்: 

* இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால் `உதரவிதானம்’ என சொல்லப்படும் நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள பகுதி சீராகச் செயல்படும். மேல் மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் உறுதியாகும். உடலுக்குள் சுவாசம் சீராகப் பரவ உதவும். மேலும், அழகான உடல் அமைப்பைத் தரும். 

* இந்த உதரவிதானம் சீராகச் செயல்படும்போது, நுரையீரல் வலுப்பெறும். மேலும், நுரையீரலுக்குள் செல்லும் காற்றை அழுத்தும் பொறுப்பை உதரவிதானம் எடுத்துக்கொள்ளும். வயிற்றுப்பகுதியின் அழுத்தத்தால், நுரையீரலுக்குள் சீரான சுவாசச் சுழற்சி நிகழும். 

* நான்கு வாரங்களுக்கு சில நிமிடங்கள் தொடர்ந்து இந்த பலூன் பயிற்சியை செய்தால், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குக்கூட, நுரையீரல் சீராகச் செயல்படும்.

* மூச்சுப்பயிற்சிகள் செய்வதால் உடலின் தசைப்பகுதிகளின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, அழகான உடல் வடிவமைப்பைப் பெறலாம். கூன் போடுவதைச் சரிசெய்து, முதுகுத்தண்டு நேராக மாறுவதற்கும் இந்தப் பயிற்சி உதவும். 

* குறைந்த அளவு மூச்சை இழுத்து விடுவதாலும், மூச்சுக் கோளாறுகளாலும் கீழ் முதுகுப் பகுதியில் வலி ஏற்படும். இந்தப் பலூன் பயிற்சிகளால் வயிறு மற்றும் முதுகுப்பகுதியில் உள்ள தசை இறுகும். இடுப்பு மற்றும் முதுகுவலியை நீக்கும். 

பலூன் ஊதலாம்

பயிற்சி:

பலூன்களைத் தலைக்குமேல் தூக்கிப் போட்டு, குழந்தைகள் விளையாடுவது போல விளையாடவும்; அதாவது கீழே விழாமல் கைகளால் தட்டித் தட்டி விளையாடவும். 

பலன்கள்: 

* மனஅழுத்தத்தைக் குறைக்கும். மனமாற்றத்துக்கு உதவும்.

* ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கு வழிவகுக்கும். 

பலூன் பயிற்சி

யார் யார் செய்யலாம்...

* அனைத்து தரப்பு வயதினரும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

* புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த பலூன் பயிற்சிகள் நல்ல பலன்களைத் தரும். 

* நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் இந்தப் பயிற்சியை மருத்துவரின் ஆலோசனை பெற்றுச் செய்யலாம்.

 

இந்தப் பயிற்சிகளை, அதனால் கிடைக்கும் பலன்களைப் பற்றித் தெரிந்துகொண்ட பின்னர் நீங்கள் பலூனை ஒரே கண்ணோட்டத்தில், வெறும் விளையாட்டுப் பொருளாக மட்டும் பார்க்க மாட்டீர்கள்தானே!

http://www.vikatan.com/news/health/89588-balloon-exercises-for-lungs-face-anger.html

Link to comment
Share on other sites

இதமான, இனிமையான குட்டித் தூக்கம்... பலன்கள், பக்கவிளைவுகள்!

 

முதல் நாள் இரவு 10 மணிக்குப் படுத்திருப்போம். அம்மா காலை 6 மணிக்கு எழுப்புவார். செல்லம் கொஞ்சி, திட்டி எழுப்பினாலும் எழுந்திரிக்க மனம் வராது. `இன்னும் அஞ்சு நிமிஷம்மா...’ என முனகலாக குரலை வெளியே அனுப்புவோம். 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கியிருந்தாலும், அந்த 5 நிமிடத் தூக்கம் பலருக்கும் சொர்க்கம்.  சிலருக்குத் தெளிவும் திருப்தியும் கிடைப்பது இந்தக் குட்டித் தூக்கத்தில்தான். குட்டித் தூக்கம் ஏன் அவ்வளவு இதமாக, மனதுக்கு இனிமையானதாக இருக்கிறது? விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி...

குட்டித் தூக்கம்


சீரான தூக்கத்தின்போது, `ரெம்’ எனப்படும் கண்கள் வேகமாக அசையும் நிலையில் (REM -Rapid Eye Movement) கனவுகள் வருகின்றன. இந்த நிலையில் நம் முழு உடலும் சுயக் கட்டுப்பாட்டை இழந்து மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும். சீரான தூக்கத்தின்போது சுழற்சி முறையில் ரெம் மாறிமாறி ஏற்படும். இந்தச் சுழற்சியில் இடையூறுகள் ஏற்படும்போது `நாப்’ (Nap) எனப்படும் குட்டித்தூக்கம் பகல் நேரங்களில் தேவைப்படுகிறது. 


இந்தக் குறைந்த நேரத் தூக்கத்தைத்தான் ஆங்கிலத்தில் `நாப் ஸ்லீப்’ (Nap sleep) என்கிறார்கள். நன்றாக உண்ட பகல் பொழுதில், வேலைக்கு நடுவே களைப்பில் எட்டிப் பார்ப்பது, மனச்சோர்வின்போது கண்களை மூடிக்கொண்டு கண் அயர்வது.... போன்ற பல தருணங்களில் இந்த குட்டித் தூக்கம் வரும்.


ஒரு குட்டித் தூக்கம்தான் போட்டிருப்பார்கள். ஆனால் பலரும் தூங்கி எழுந்ததும், `நான் அதிக நேரம் தூங்கினது மாதிரி இருக்கு’, `வேற ஒரு கிரகத்துக்குப் போயிட்டு வந்ததுபோல இருக்கு’, `ஆழ்ந்த தூக்கம்’, `நல்ல தூக்கம்’, `இந்தக் குட்டித் தூக்கத்துலயும் கனவு வந்துச்சு பாரேன்...’ என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம்..


சீரான தூக்கத்துக்கும் குட்டித் தூக்கத்துக்கும் என்ன வித்தியாசம்?

சீரான தூக்கம் 6 - 8 மணி நேரம் வரை இருக்கும். இரவில் வருவது தூக்கம் . நாப், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள், அதிக பட்சம் ஒரு மணி நேரம் இருக்கும். 10 - 20 நிமிடங்கள் வரையிலான நாப் தூக்கமே சிறந்தது.வேலைக்கு இடையே, இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் குட்டித் தூக்கம் வரும். தூக்கத்தின் நேரம், உறங்கும் கால அளவு இவையெல்லாம் ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். பல கார்ப்பரேட் நிறுவனங்களில் `நாப் தூக்கம்’ போட வசதி செய்துதருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பலன்கள்...

* மூளை புத்துணர்வுப் பெற உதவும்.

* வேலையைச் சுறுசுறுப்பாகவும் உற்சாகத்துடனும் செய்ய உதவும்.

* மனச்சோர்வைப் போக்கும்.

* மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

* சிந்தனையை ஊக்குவிக்கும்.

புத்துணர்வு தரும்

பக்கவிளைவுகள்...

* இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

* ஸ்லீப்பிங் டிஸ்ஆர்டரை (Sleeping Disorder) ஏற்படுத்தலாம்.

* இயல்பான தூங்கும் நேரம் குறையும்.

தூக்கம்

 
யாருக்கெல்லாம் நாப் (குட்டித் தூக்கம்) வரலாம்?

* இரவு குறைந்த நேரம் தூங்குபவர்களுக்கு.

* உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு.

* மனச்சோர்வு மிகுந்த வேலைப்பளு உள்ளவர்களுக்கு.

* இரவுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு.

* இரவில் கண்விழித்துப் படிப்பவர்களுக்கு.

 

குறிப்பு: நாப் ஸ்லீப் அனைவருக்கும் வரும் என்று சொல்ல முடியாது. மேலும், இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து ஏற்படுவது.

http://www.vikatan.com/news/health/89508-benefits-and-drawbacks-of-short-nap.html

Link to comment
Share on other sites

குடிப்பழக்கம் நிறுத்த உதவும் 9 இயற்கை வழிகள்!

 
 

குடிப்பழக்கம் நம் கலாசாரத்தோடு இணைந்த ஒரு செயலாகிவிட்டது. கெடாவெட்டு, கோயில் திருவிழா, கல்யாணம்... என எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும், ஏன்... மரணம் நிகழ்ந்த வீடாக இருந்தாலும்கூட குடி என்பது தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டது. சாலையோர டாஸ்மாக் கடைகளை உச்ச நீதிமன்றம் அகற்றச் சொன்னாலும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்தாலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தினாலும் முழு மதுவிலக்கு என்பது இன்றைய நிலையில் சாத்தியமில்லாததாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் அதிகமாகியிருப்பதுதான். விடுமுறை நாளில்கூட கள்ள மார்க்கெட்டில் குவார்ட்டர் பாட்டில்கள் எங்கே கிடைக்கும் என அறிந்துவைத்திருக்கிறார்கள் மதுப் பிரியர்கள். `குடிப்பழக்கம் கூடாது’ என சம்பந்தப்பட்டவரே முடிவெடுத்தால் தவிர, இந்தப் பழக்கத்திலிருந்து தப்பிக்க வேறு வழியில்லை. 

குடிப்பழக்கம்

சில ஆண்டுகளாக தொடர்ந்து குடித்துவருகிறார் ஒருவர். அவரின் குடிப்பழக்கத்தை உடனே நிறுத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. `இதை நிறுத்தியே ஆக வேண்டும்’ என்பதை ஒரு லட்சியமாகவே நினைத்துக்கொண்டு அவர் செயல்பட்டால்தான், குடிப்பழக்கத்திலிருந்து அவரால் விடுபட முடியும். `குடிக்க மாட்டேன்’ என்கிற தீர்க்கமான முடிவுக்கு அவர் வந்துவிட்டார் என்றால், இந்தப் பழக்கத்தை நிறுத்தும் போராட்டத்தில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்று அர்த்தம். இதுதான் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முதல் படி, முக்கியமான வழி. 

நீங்கள் மிக மோசமாக மதுப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கலாம்; அதிலிருந்து மீள முடியாத அளவுக்கு மன பலவீனம் உள்ளவராக இருக்கலாம். அதை விட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டீர்களா? நல்லது; அது போதும். அதற்காக நாள், நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டாம். இன்றைக்கே அந்த முடிவை அமல்படுத்த ஆரம்பித்துவிடுங்கள். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வெளியாட்கள் யாரும் உதவ மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் உங்களை நீங்களேதான் அதற்குத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்; விடுபடுவதற்கான அத்தனை வழிமுறைகளையும் கையாள வேண்டும். மறந்துவிடாதீர்கள்... இதற்கு நீங்கள்தான் பொறுப்பு. 

வாழ்க்கை முறையில் மாற்றம், வாழ்க்கையில் உங்களை முன்னேற்றிக்கொள்ள உதவும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்வதுதான் குடிப்பழக்கம் மறக்க உதவும் வழிகள். அப்படி உங்களுக்கு உதவும் 9 இயற்கை வழிகள்... 

மது வேண்டாம்

இன்றே... இப்போதே... இக்கணமே!

`நாளையிலிருந்து மதுவைத் தொடவே மாட்டேன்’ என்று முடிவெடுக்கிறீர்களா? அப்படியானால், உங்கள் மனதின் அடியாழத்தில் குடிப்பழக்கத்தை விடுவதற்குத் தயங்குகிறீர்கள்; அந்த முடிவைத் தள்ளி வைக்கிறீர்கள்; காலம் தாழ்த்துகிறீர்கள் என்று அர்த்தம். மனம் அல்லது உடலை வருத்தும் எந்தப் பிரச்னையாகவும் இருக்கலாம்... அதற்காகப் பல ஆண்டுகளாக நீங்கள் மதுவுக்கு அடிமையாகியும் இருக்கலாம். ஆனால், உங்களிடம் இருக்கும் சக்தியையெல்லாம் திரட்டி, `குடிப்பழக்கம் இல்லாமல் என் வாழ்க்கையைப் புதிதாக வடிவமைக்கப் போகிறேன்’ என முடிவு செய்துகொள்ளுங்கள். அதை இன்றே, இப்போதே, இக்கணமே நடைமுறைப்படுத்துங்கள். அதாவது, மகிழ்ச்சியோ அல்லது வேறு எந்தவிதமான உணர்வுரீதியான பிரச்னையோ வந்தாலும், மது இல்லாமல் எதிர்கொள்வது என்கிற முடிவுக்கு வாருங்கள். அதற்குத் தூண்டும் சமூகத்தில், நண்பர்களிடமிருந்து விலகியே இருங்கள். `மச்சான்... ஒரே ஒரு பெக் மட்டும் போட்டுட்டுப் போடா! அதுகூட வேண்டாம்... ஒரு கிளாஸ் பியர் மட்டும் சாப்பிடேன்’ என நண்பர் அழைக்கிறாரா? ஸ்ட்ரிக்ட்டாக `நோ’ சொல்லப் பழகுங்கள்.

முடிந்தவரை, சிறிது காலத்துக்கு அந்த நட்பு வட்டத்துக்கு விடை கொடுத்து, தள்ளியே இருங்கள். இப்படிச் சொல்வதும் அதை நடைமுறைப்படுத்துவதும் எளிமையான காரியம் இல்லைதான். குண்டும் குழியுமான சாலையில் நீண்ட தூரம் போய்விட்டீர்கள். அதிலிருந்து மீண்டு, திரும்பி வருவது ஒரே நாளில் நடைபெறும் காரியம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு முக்கியமான நாள். அதில் ஒவ்வொரு செயலும் மதுவுக்கு `நோ’ சொல்வதற்கான செயலாகவே இருக்க வேண்டும். அதில் கறார் தன்மையோடு இருப்பது விரைவாக இந்தப் பழக்கத்திலிருந்து மீள உங்களுக்கு உதவும். 

உடலினை உறுதி செய்!

மதுப்பழக்கமும் ஆரோக்கியமும் ஒன்றுக்கு ஒன்று இணக்கமில்லாதவை. குடிப்பழக்கம் மிக மோசமாக உங்கள் உடல்நிலையைப் பாதித்திருக்கும். அதை பழைய வடிவத்துக்குக் கொண்டுவரவேண்டியது உங்கள் பொறுப்பு, கடமை. உங்கள் உடலை உறுதி செய்ய முடிவெடுங்கள். அதற்கான வேலையில் இறங்குங்கள். புகைபிடிப்பது, பாக்குப் போடுவது மாதிரி ஏதாவது பழக்கம் இருந்தால் அது உங்கள் உடல்நிலையை இன்னும் மோசமாக்கும். அதை உடனே நிறுத்துங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் உடல் உழைப்புகளில் ஈடுபடுங்கள். ஊட்டச்சத்து தரும் உணவுகள் பற்றி நிபுணர் யாரிடமாவது ஆலோசனை பெறுங்கள். முறையான, சமச்சீரான உணவு முறையைப் பின்பற்றுங்கள். உடற்பயிற்சி என்பது மிக மிக சக்திவாய்ந்த ஒரு கருவி. நம் சக்தியையும் கவனத்தையும் உடற்பயிற்சியின் பக்கம் திருப்புவதன் மூலமாக குடிப்பழக்கம் தொடங்கி பல தீய பழக்கங்களிலிருந்து விடுபட முடியும். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது என்கிற முடிவின் மூலமாக உங்கள் வாழ்க்கைக்குப் புது அர்த்தம் கொடுங்கள். இப்படி வாழ்க்கை முறையைத் திசை திருப்புவதால், பல பாடங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் உடல் உறுதியாக ஆக, உங்கள் மேலேயே உங்களுக்கு ஒரு மதிப்பு வரும். இந்த உணர்வு கோபம், பதற்றம், மன உளைச்சல் இவற்றையெல்லாம் தடுக்க உதவும். அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்தும். 

டாஸ்மாக்

உங்கள் பலம்... உங்கள் மரியாதை!

சுய வெறுப்பு, கழிவிரக்கம் இவையெல்லாம் குடிப்பழக்கம் உள்ளவர்களிடம் கட்டாயம் இருக்கும். மதுப்பழக்கத்தை விடுவதற்கு பதற்றம், சுயபச்சாதாபம், சுய வெறுப்பு போன்ற இயல்புகள் தடையாக இருப்பது இயல்பே. பலரும் இவையெல்லாம் இருப்பதால்தான் மதுவை நாடுகிறார்கள். ஆனால், குடிப்பழக்கம் மேலும் மேலும் அவர்களின் மரியாதையை சமூகத்தில் குறைக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. `சுயமரியாதைதான் நம் பலம்’ என்பதை அழுத்தமாக உணந்துவிட்டால், எளிதாக விடுபட்டுவிடலாம். ஆனால், உங்கள் மேலான மரியாதையையும் ஒரே நாளில் கொண்டு வந்துவிட முடியாது. அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றலாம். அவை... 

* ஆரோக்கியமான இலக்குகளை அடைவதை லட்சியமாகக்கொண்ட, அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிற புதிய நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்கள், நீங்கள் யார், உங்கள் அருமை என்ன என்பது புரிந்தவர்களாக இருப்பது நல்லது.

* பழைய, இயல்பான, ஆரோக்கியமான தோற்றத்தைத் திரும்பக் கொண்டு வாருங்கள். அது, உங்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும்; உங்கள் தோற்றமே மற்றவர்களிடம் உங்களுக்கான மரியாதையை ஏற்படுத்தும்; அவர்களின் செயல்களிலும் அது பிரதிபலிக்கும்.

* சவால்விடுகிற மாதிரியான பொழுதுபோக்குகள், செயல்களில் ஈடுபடுங்கள். அது, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதாக இருக்கலாம்; இது வரை சென்றிருக்காத புதிய இடங்களுக்குப் பயணம் செல்வதாகவும் இருக்கலாம். 

* உங்களை நீங்களே முழுமையாக உணர்ந்துகொள்ள, உங்கள் எண்ணங்களை அறிந்துகொள்வதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். 

* உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுங்கள். வார இறுதி நாள்களை சமூக சேவையில் ஈடுபடுவது, பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வது எனச் செலவிடுங்கள். யாரோ ஒருவரின் வாழ்க்கைக்கு உதவுவதற்கு உங்களால் ஆன அத்தனை உதவிகளையும் செய்யுங்கள். 

விஷத்தை விலக்கி, பாலோடு இணைந்திருங்கள்! 

குடிப்பழக்கம் உள்ள நண்பர்களிடமிருந்து விலகி இருங்கள்! இதற்கு, `உங்கள் வாழ்க்கையில் எதிர்மறைப் பார்வையை ஏற்படுத்தும் மனிதர்களிடமிருந்து விலகி இருங்கள்’ என்றும் அர்த்தம் கொள்ளலாம். அதற்காகச் சண்டைபோட்டுக்கொண்டு அவர்களைப் பிரிய வேண்டும் என்பதல்ல. நாகரிகமாக அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.  `மச்சான்... நம்ம பாலாஜி ஃபாரின் போறான்டா. அதுக்காக சோழாவுல ஒரு பார்ட்டி. கண்டிப்பா வரணும்டா...” என நண்பர் அழைக்கிறாரா? `அடடா... அன்னிக்கி எங்க கம்பெனியில ஆடிட்டிங்டா... முடியறதுக்கே ராத்திரி 11 மணி ஆகிடும்’ என்றோ, வேறு சொந்தக் காரணங்களைச் சொல்லியோ தவிர்த்துப் பழகலாம். இது ஒரு கட்டத்தில், குடிக்க அழைத்தால் நீங்கள் வர மாட்டீர்கள் என்கிற எண்ணத்தை ஆழமாக அவர்களுக்கு ஏற்படுத்திவிடும். அது போன்ற நண்பர்களுக்குப் பதிலாக தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும், தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் முயற்சிப்பவர்களோடு நட்புகொள்ளுங்கள். உங்களை நேசிக்கிறவர்கள், நீங்கள் ஆரோக்கிய வாழ்க்கையை வாழ உங்களை உற்சாகப்படுத்திகிறவர்கள் சுற்றிலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.   

குடிப்பழக்கம்

மனநிறைவைக் குறைக்காதீர்கள்!

குடிப்பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் பயணத்தில், கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த இடத்துக்கு வந்ததற்காக கைதட்டி, உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். `பரவாயில்லையே.... ஒரு மாசமா கடைப் பக்கம் போகாம இருந்துட்டோம்’ என்று ஒரு ஷொட்டு கொடுத்துக்கொள்ளுங்கள். இது பெருமைப்பட்டுக்கொள்ளும் தருணம்தான். என்றாலும், தேங்கி நிற்காமல், வெற்றியை அடையும் வரை பயணம் செய்யுங்கள். வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் இலக்கை நோக்கிய அடிகளை அழுத்தமாக எடுத்து வைத்து, அதில் உங்கள் செயல்களைத் தீவிரப்படுத்துங்கள். 

நன்றி சொல்ல மறக்காதீர்கள்!

குடிப்பழக்கத்திலிருந்து மீள, நன்றி சொல்லுதல்கூட உதவும்! மாலையில் நண்பர்களோடு சேர்ந்தோ, தனியாகவோ குடிப்பதற்காக நீங்கள் போகப் போவதில்லை. ஆக, அந்த நேரம் லட்டு மாதிரி உங்களிடம் இருக்கிறது. அந்த நேரத்தை என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு நாளில் உங்களுக்கு நடந்த நல்ல சம்பவங்களுக்கு, அதற்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்லும்விதமாக அதைப் பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் ஒரு கோளாறு. அதனால், உங்கள் அலுவலகப் பணி தாமதமாகியிருக்கலாம். உங்கள் நண்பர் உதவியால், அது சீராகியிருக்கலாம். வீட்டுக்கு வந்ததும் போனை எடுங்கள். அந்த நண்பரிடம் பேசுங்கள். `நல்ல உதவி செஞ்சே கோபால்! ஆபிஸ்ல சொல்ல மறந்துட்டேன். தேங்க்ஸ்பா’ என ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்களேன். அந்த நண்பரோடு உறவு வலுப்பெறும். உங்களுக்கு ஒரு மனநிறைவு கிடைக்கும். `ஏம்ப்பா... பாவக்கா குழம்புன்னாலே எனக்குப் பிடிக்காது. இன்னிக்கி கசப்பே தெரியலைப்பா. குழம்பு அவ்வளவு சூப்பர்!’ உங்கள் மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்களேன். குடும்ப உறவு இனிக்கும். அது இதுவரை அனுபவிக்காத புது போதையை உங்களுக்குத் தரும். 

ஊன்றுகோல் வேண்டாமே!

குடிப்பழக்கம் வேண்டாம் என முடிவெடுத்து, அதை நடைமுறைப்படுத்தும்போதுதான் சில புதிய சிக்கல்கள் உருவாகும். `நல்ல விஷயம்... நீ என்ன பண்றேன்னா, செங்கல்பட்டுல ஒரு ரீஹேபிட்டலைசேஷன் சென்டர் இருக்கு... அங்கே போய் பாரு!’ என்று உங்கள் நண்பரோ, உறவினரோ ஒரு அட்ரஸை நீட்டலாம். பாண்டிச்சேரிக்குப் போகும் வழியில் உள்ள அய்யனார் கோயில் ஒன்றில் கயிறு கட்டிக்கொண்டால், குடிக்கும் எண்ணமே வராது என்று யாராவது சொல்லலாம். இதையெல்லாம் உங்களின் மேல் இருக்கும் அக்கறையின் காரணமாக அவர்கள் சொல்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். அது போதும். அதே நேரத்தில், குடிப்பழக்கத்தை விடும் முயற்சியில் சொந்தக் காலில் நில்லுங்கள்; நீங்கள்தான் அதை செய்யப் போகிறீர்கள் என்பதை அழுத்தமாக நம்புங்கள். 

மது

வாழ்க்கையின் அர்த்தம் எதில் என்பதைக் கண்டுபிடியுங்கள்! 

குடிப்பதை நிறுத்திய சில நாள்களிலேயே எதையோ பறிகொடுத்தது போல உணர ஆரம்பிப்பீர்கள். `எதற்காக வாழ்கிறோம்?’ என்பது ஒட்டுமொத்த மனிதர்களுக்குமான பொதுவான கேள்வி. பலருக்கும் இலக்குகள் இல்லை; வாழ்க்கையில் எதையாவது அடைய வேண்டும் என்கிற லட்சியம் இல்லை. குறைந்தபட்சம் குடும்பப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணம்கூட இருப்பதில்லை. இது, அதைப் பற்றி நீங்கள் தீவிரமாக யோசிக்கவேண்டிய நேரம். யாருக்காக, எதற்காக வாழ்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். அதை நோக்கிப் பயணப்படுங்கள். 

மருத்துவ உதவியை நாடுவது தவறில்லை!

ஒரு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறாமலோ, நிபுணர் யாரிடமாவது கவுன்சலிங் பெறாமலோ சுயமாக, நீங்களாகவே குடிப்பழக்கத்தை நிறுத்தலாமா? நிச்சயம் நிறுத்தலாம். இருந்தாலும், அவையும் உதவும். திடீரென குடிப்பழக்கத்தை நிறுத்தும்போது அது உடலுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக குடித்துவிட்டு, திடீரென நிறுத்துபவராக இருந்தால் அவருக்கு உடல் நடுக்கம் (Convulsion), மனப்பிரமை (Hallucination), இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் வலிகூட ஏற்படலாம். அதனால், மருத்துவ உதவி தேவைப்படும்பட்சத்தில் அதை தேடிப் போவதில் தவறே இல்லை. மருத்துவ உதவி பெறுங்கள். 

 

எதிர்கால வாழ்க்கை இனிதாக அமையட்டும்! ஆல் தி பெஸ்ட்! 

http://www.vikatan.com/news/health/89614-9-natural-ways-to-stop-drinking-alcohol.html

Link to comment
Share on other sites

இதயம், எலும்புகள், கண்நலம் காக்கும், புற்றுநோயைத் தடுக்கும் புரோக்கோலி!

 

 

 

முட்டைக்கோஸும் காளானும் கலந்து செய்த மாதிரி ஒரு வடிவம்... பளிச்சிடும் பச்சை நிறம்... அது புரோக்கோலி. மார்க்கெட்டிலும், கடைகளில் இதைப் பார்த்திருந்தாலும், நம்மில் பலர் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து வந்திருப்போம். புரோக்கோலி, அதன் அழகான நிறம் வடிவத்தைப் போலவே பல அற்புதமான மருத்துவக் குணங்களையும் கொண்டது. இதில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) ஆகியவையும் இருக்கின்றன. புரோக்கோலியின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் இதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதனால் இப்போது பலரும் புரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். 

புரோக்கோலி

புரோக்கோலி அள்ளித்தரும் மருத்துவப் பயன்கள்...

புற்றுநோய்க்கு மருந்து
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது புரோக்கோலி. இதில் அதிகளவில் இருக்கும் சல்ஃபோரபேன் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் படைத்தது. சிறிய அளவில் இருக்கும் புரோக்கோலி பெரிய காய்களைவிடச் சிறந்தது. இளசான புரோக்கோலி புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிடம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கிறது என சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி புரோக்கோலிக்கு உண்டு.

இதய ஆரோக்கியம்
புரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

வீக்கம் குறைக்கும்
இதன் இலைகள் நைட்ரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதால், வீக்கங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். சல்ஃபோரபேனும் இதற்கு உதவும். இதில் வைட்டமின் கே இருப்பதால், ஆர்த்ரைட்டிஸ் வீக்கத்தையும் குறைக்கும்.

சர்க்கரை அளவைச் சீராக்கும்

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைச் சீராக்கும்
கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். புரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும்.

ஜுரத்துக்கு நல்லது
இதிலிருக்கும் நார்ச்சத்து உடலின் செரிமான சக்திக்கு உதவும். இதைச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியம் மேம்படும்; செரிமானம் சீராகும்.

கண்நலம் காக்கும்
வயது அதிகரிக்கும்போது கண் புரை போன்ற கண் நோய்கள் ஏற்படும். புரோக்கோலி இவற்றைத் தடுப்பதற்கு உதவும். இதிலிருக்கும் லூடின் (Lutein), சியாங்தின் போன்ற வேதிப்பொருள்கள் கண் ஆரோக்கியத்துக்குப் பயன்படக்கூடியவை. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், வயது சார்ந்த நோய்களை எல்லாம் கட்டுப்படுத்திவிடும். புரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 2 ஆகியவையும் பார்வைத்திறன் மேம்பட உதவுபவை.

கொழுப்பைக் குறைக்கும்
`புரோக்கோலி, நம் உடலில் ஆறு சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது’ என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். 

மனஅழுத்தம் தவிர்க்கும்

மனஅழுத்தம் தவிர்க்கும்
மனஅழுத்தத்தைக் குறைக்க, இதிலிருக்கும் சல்ஃபோரபேன் பயன்படுகிறது. மனஅழுத்தத்தின் அறிகுறிகள் தென்பட்டால், சல்ஃபோரபேன் நிறைந்த இளசான புரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

எலும்புகளை வலுவாக்கும்
எலும்புகளின் உறுதிக்குக் கால்சியம் அவசியம் தேவை. கால்சியம் சத்து நிறைந்தது புரோக்கோலி. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகள் வலுப்படும். இதிலிருக்கும் வைட்டமின் கே எலும்பு உறுதிக்கு உதவும்.

சருமப் பாதுகாப்பு
புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதால், சருமத்துக்குப் பாதுகாப்பைத் தரும். இளசான புரோக்கோலியின் சாற்றைச் சருமத்தில் தடவிவந்தால், சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இந்தக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புக்கும் இது மருந்தாக அமையும். இதனால் தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

உடல் எடையைக் குறைக்கும்!
கொழுப்புச்சத்துகள் இல்லாத உணவுப் பழக்கத்துக்கு வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளே சிறந்தவை. அந்த வகையில், கலோரிகள் குறைந்த உணவான புரோக்கோலியை நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அரை கப் புரோக்கோலியில் 25 கலோரிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் மற்ற சத்துகள் நிறைவாக இருக்கின்றன.

ரத்தச்சோகையைத் தடுக்கும்

ரத்தச்சோகையைத் தடுக்கும்
நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம்.

உடலின் நச்சுத் தன்மையைக் குறைக்கும்
இதிலிருக்கும் சல்ஃபோரபேன் உடலிலுள்ள நச்சுத் தன்மைக்கு எதிராகச் செயல்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

பிரசவகால ஆரோக்கியம் காக்கும்!
பிரசவகாலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவை கால்சியம் நிறைந்த உணவுகள். புரோக்கோலி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கக்கூடியது. இதை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கு உதவும்.

 

குறிப்பு: 
புரோக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்துகள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும். இதை ஆவியில் வேகவைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். சமைத்த புரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் குறைந்துவிடும். அதனால் பச்சைக் காய்கறியாக, அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும். சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் மட்டும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும். 

http://www.vikatan.com/news/health/89781-amazing-health-benefits-of-broccoli-you-should-know.html

Link to comment
Share on other sites

இந்தப் பத்துப் பழக்கங்களால் தேவையில்லாத கொழுப்பைக் கரைக்கலாம்!

 
 

டலை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுவது உடற்பயிற்சிகள். `வெயிட் லாஸ் செய்ய வேண்டும்’ என்று முடிவெடுத்தவர்களுக்கு, இந்தப் பழக்கங்கள் நிச்சயம் பலன்களைத் தரும். அன்றாடம் அளவே இல்லாமல் உண்பதால், உடலுக்குக் கலோரிகள் நிறைய சேரும். உடலில் கொழுப்பு சேரும்; உடல் எடை அதிகரிக்கும். ஆனால், அவற்றை எரிக்கும் அளவுக்கு நமக்கு உடலுழைப்பு இருந்ததா என்பது தெரியாது. ஒவ்வொரு முறையும் நீங்கள் சாப்பிடும்போது சேரும் கலோரிகளை, எளிதாக எரிக்கச் சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம். 

கொழுப்பு குறைக்கலாம் சைக்கிளிங் மூலமாக.

1. சைக்கிளிங் 

ஏராளமான கலோரிகளைச் சில மணி நேரத்தில் எரிக்கும் பயிற்சி இது. தொடர்ந்து 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால், 210 - 466 கலோரிகளை எரிக்க முடியும். அதாவது, உடலில் சேர்ந்த கொழுப்பும் கரையும். சைக்கிள் ஓட்டுவது இப்போது டிரெண்ட் ஆகியிருக்கிறது. எனவே, தினமும் காலையில் சைக்கிள் ஓட்டுங்கள். ஃபிட்டாக இருங்கள். சில்லென்ற வானிலையோ, கொளுத்தும் வெயிலோ, சைக்கிள் ஓட்டுவதை நிறுத்தாதீர்கள். சம்மரில் அதிகாலையில் சைக்கிள் ஓட்டலாம். குளிர்காலத்தில் மாலையில் ஓட்டலாம். நேரத்தை வேண்டுமென்றால் மாற்றுங்கள்... சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை மட்டும் நிறுத்த வேண்டாம். 

ஏரோபிக்

2. ஏரோபிக் 

`நடனமாடப் பிடிக்கும். ஆனால் அதை இந்த வயதில் கற்றுகொள்வதா?’ எனத் தயங்குபவரா நீங்கள். உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்தான் ஏரோபிக்... நடனமும் பயிற்சியும் சேர்ந்த கலவை! அதிகமான எனர்ஜியை செலவிட்டுச் செய்யும் ஸ்ட்ரெச்சிங், லிஃப்டிங், கார்டியோ வொர்க்அவுட் என அனைத்தும் கலந்த கலவை என்பதால், உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் சிறந்த பயிற்சி இது. அரை மணி நேரம் செய்தாலே 210 - 444 கலோரிகள் வரை குறைக்கலாம். இதையே ஒரு மணி நேரம் செய்தால், பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும். 

3. ரோவிங் (Rowing) 

சிலருக்குக் கை, இடுப்பு, வயிறு போன்ற இடங்களில் கொழுப்பு சேர்ந்திருக்காது. ஆனால், தொடையில் சேர்ந்திருக்கும். இதனால் பிடித்த ஆடைகளைப் போட வேண்டும் என்ற ஆசையைக்கூடத் துறந்திருப்பார்கள். அவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ், இந்தப் பயிற்சி. ஜிம்மில் சென்று ரோவிங் செய்யலாம். கால்கள் தசைகள் சீராகி அழகான, எதிர்பார்த்த வடிவமைப்பில் மாறும். ஃபிட் தொடைகளைப் பெறும் வாய்ப்புகளும் அதிகம். தொடர்ந்து 30 நிமிடங்கள் செய்தால், 311 - 377 கலோரிகள் வரை எரிக்க முடியும். 


ஸ்கிப்பிங்

4. ஜம்ப் ரோப் (ஸ்கிப்பிங்) 

சிறு வயதில் நேரம் காலம் தெரியாமல் விளையாடிய அதே விளையாட்டுதான். இன்று `பயிற்சி’ என்ற பெயரில் நமக்கு அறிமுகமாகிறது. கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கான பயிற்சி என்பதால், அனைவருக்கும் பொருந்தக்கூடியது. ஆனால், அதீத உடல் எடை கொண்டவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு முன்னர், மருத்துவர் அல்லது ஃபிட்னெஸ் ட்ரெயினரைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. ஸ்கிப்பிங் கயிறு ஒன்றும் அதிக விலை கிடையாது. நூறு ரூபாய் அல்லது நூற்றுக்கும் குறைவாகவே இருக்கும் அதை நீங்கள் வாங்கிவிடலாம். உடல் எடையைக் குறைக்க மட்டுமல்ல, இதயத்துக்கும் ஸ்கிப்பிங் நல்ல பயிற்சிதான். இதயம் சீராகப் பம்ப்பாக உதவும். சில ஆய்வுகளில்கூட, ஸ்கிப்பிங் செய்வதால் பசியின்மைப் பிரச்னை நீங்குவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஹார்மோன்களின் இயக்கங்களும் சீராகுமாம். 

5. ஜாகிங் 

மிகவும் ஈஸியான பயிற்சி இது. யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். மெதுவாக ஓடவேண்டும் அதுமட்டும்தான் இதற்கான கட்டளை. தொடக்கத்தில் மெதுவாக, மிதமான வேகத்தில் ஓடுவது நல்லது. தசைகளின் வளர்ச்சிக்கு இந்தப் பயிற்சி பெரிதும் உதவும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் இது சிறந்த பயிற்சி. வாரத்தில் ஐந்து நாள்கள் ஓடினால் போதும், அதிலும் தொடர்ந்து ஓடாமல் 10-15 நிமிடங்கள் ஓடிய பிறகு, சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் ஓடலாம். 30 நிமிடங்களுக்கு ஓடினால், 400 கலோரிகளுக்கு மேல் குறைக்கலாம். 

ஜாகிங்

6. கிளைம்பிங் 

இந்தப் பயிற்சியை மற்ற பயிற்சிகளைப் போலத் தொடர்ந்து செய்ய முடியாது. ஆனால், மாதந்தோறும் ஒருமுறையாவது செய்வது நல்லது. 'ராக் கிளைம்பிங்' எனச் சில ஜிம்களில் வைத்திருப்பார்கள். அதை முயன்று பார்க்கலாம். தசைகள் வலுவடையப் பெரிதும் உதவும். முழு உடலுக்கு வொர்க்அவுட்டாக அமையும். கழுத்திலிருந்து கால்கள் வரை வலிமையாக மாறும். கிளைம்பிங் செய்ய முடியாது என்பவர்கள் மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை ட்ரெக்கிங் போய்விட்டு வரலாம். இதனால் மனநிலையும் மேம்படும். அருகிலுள்ள சின்ன மலைகளுக்குகூடச் சென்றுவிட்டு வரலாம். உடல்நலமும் மனநலமும் மேம்படுவது கண்கூடு. 

7. நீச்சல் 

தண்ணீரில் செய்யும் பயிற்சி இது. உடலுக்கு மிகுந்த பலன்களை அளிக்கக் கூடியது. தரையில், நிலத்தில் செய்யும் பயிற்சிகளைவிட 10 சதவிகிதம் அதிகப் பலன்களைத் தரவல்லது. தசைகள் வலுவடையும். கொழுப்பு கரையும். உடலில் செயல்படும் மெட்டாபாலிக் ஆக்டிவிட்டி சீராகும். வியர்வை வெளியே தெரியாமல் செய்யும் பயிற்சி இது. கார்டியோ வொர்க்அவுட்களில் சிறந்த பயிற்சி என டாக்டர்கள் சொல்வார்கள். அரை மணி நேரத்தில் 180 - 266 கலோரிகளுக்கு மேல் இழக்க முடியும். பிரெஸ்ட் ஸ்ட்ரோக் முறையில் நீந்துவதால், அதிகப் பலன்களைப் பெற முடியும். 

நீச்சல்

8. மிராக்கிள் பானத்தைக் குடிப்பது 

இத்தனை பயிற்சிகளால் மட்டுமன்றி, சில உணவுகளாலும் கொழுப்பு எளிதில் கரையும். அதுவும் 'ஃபேட் மெல்ட்டிங் டிரிங்க்கை' தொடர்ந்து இரண்டு மாதங்கள் குடித்து வந்தால் பலன்கள் கிடைப்பது உறுதி. 

வெள்ளரியும் எலுமிச்சையும் குறைந்த கலோரிகள் கொண்டவை. இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இவற்றைக்கொண்டு தயாரிக்கும் பானம் வெயிட் லாஸுக்கு பெரிதும் உதவி புரியும் எனலாம். இதில் சேர்க்கப்படும் இஞ்சியும் கற்றாழையும் மெட்டபாலிக் செயல்முறையைச் சீராக்கும். 

இந்த பானத்தை எப்படிச் செய்வது எனப் பார்ப்போமா? 

வெள்ளரி - 1 
எலுமிச்சை - 1 
புதினா - 4 
இஞ்சி - ஒரு டீஸ்பூன் 
கற்றாழைத் துண்டுகள் - 3 
தண்ணீர் - அரை டம்ளர் 
இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து ஜூஸாக இரவு படுக்கப் போவதற்கு முன்னர் குடித்துவிட்டு, இருபது நிமிடங்கள் கழித்துத் தூங்கச் செல்லலாம். தொடர்ந்து இரு மாதங்களுக்குக் குடித்து வருவது நல்லது. கட்டுடல் கிடைக்க வாழ்த்துகள். 

பழச்சாறுகள்

9. வெயிட் லாஸ் ட்ரிக்ஸ் 

எப்போது, எங்கு, என்ன சாப்பிட்டாலும் அது ஹெல்த்தியான உணவா என்பதை உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். அதன் பிறகு அதைச் சாப்பிடலாமா வேண்டாமா என்பது உங்கள் முடிவு. 

மீதமான உணவை உண்பது உங்களின் வேலையல்ல. தேவைக்கு ஏற்ப அளவுடன் சாப்பிடுவதே மனித இயல்பு. 'போரடிக்குதே, ஏதாவது சாப்பிடலாம்' என்ற மனநிலையும் தவறுதான். 

எப்போதும் பெரிய தட்டில் இல்லாமல் சிறிய தட்டில் சாப்பிடப் பழகுங்கள். இதனால் அளவுடன் சாப்பிட முடியும். 
மனதில் ‘நல்ல உணவைச் சாப்பிடுகிறோம், வயிறு நிறைந்துவிட்டது' என்ற எண்ணத்தை விதைக்கலாம். இதனால் அதிகமாகச் சாப்பிடும் வாய்ப்பும் குறையும். 

நீல நிறத் துணி அல்லது கைகுட்டையை அருகில் வைத்திருங்கள். இதனால் அதிகப் பசி எடுப்பது குறையும். ஆரஞ்சு, மஞ்சள் நிறத்தைப் பார்த்தால் அதிகப் பசி ஏற்படலாம். 

சத்தான உணவு

 

10. பெரிய டம்ளரில் சத்தான உணவுகள்! 
பெரிய டம்ளரில் கம்பங்கூழ், சத்துமாவுக் கஞ்சி, கேப்பை, பதநீர், பழக்கலவை, அவகேடோ - வாழைப்பழம் ஸ்மூத்தி போன்றவற்றைக் குடிக்கலாம். இதனால் அதிக உணவு சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும். கலோரிகளும் அதிகமாகச் சேராது. எந்த உணவைச் சாப்பிட்டாலும் நன்கு மென்று விழுங்குவது நல்லது. இதனால், விரைவில் வயிறு நிரம்பிய உணர்வு வந்துவிடும். அதிகமாகச் சாப்பிடுவது தடுக்கப்படும். 

http://www.vikatan.com/news/health/89773-10-ways-to-burn-calories-and-fight-fat.html

Link to comment
Share on other sites

இயற்கை வழி வைத்தியம்... மலச்சிக்கல் போக்கும் உணவுப் பழக்கங்கள்!

 
 

ணவு தன்னிடம் உள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு வெறும் சக்கையாகப் பெருங்குடலை வந்து சேரும். அந்தச் சக்கையில் 80 சதவிகிதம் தண்ணீர் நிறைந்திருக்கும். அந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சிவிட்டு, மலத்தை வெளியேற்ற வேண்டிய பணி பெருங்குடலின் தலையாயப் பணியாகும். ஆனால், சில நேரங்களில் பெருங்குடலில் உள்ள தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்வதால் மலம் இறுகி கெட்டியாகி சிக்கலை ஏற்படுத்திவிடும். இத்தகைய சிக்கல் ஏற்படுவதற்குப் பெருங்குடலை காரணம் சொல்லிவிட்டு நாம் ஒதுங்கிவிட முடியாது. நாம் உண்ணும் உணவுகள் மிக முக்கியக் காரணமாக அமைகிறது. அதாவது கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பீட்சா, பர்கர், நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், பரோட்டோ போன்ற உணவுகளை உண்பதால் வரும் பிரச்னை. அதுமட்டுமல்லாமல் தண்ணீர் குறைவாகக் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைவாக உண்பது, பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகளை உண்ணாமலிருப்பது போன்றவையும் முக்கியக் காரணங்களாகும். ஆக, மலச்சிக்கல் ஏற்பட மாறிவரும் உணவுப்பழக்கம் மிக முக்கியக் காரணமாக இருக்கும். சூழலில் அன்றாட உணவில் நாம் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அடிப்படையில் நிறையத் தண்ணீர் அருந்த வேண்டியது மிகவும் அவசியம். மூன்றுவேளை உணவில் ஒருவேளை பழ உணவுகளாக அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இரவு உணவு அப்படி இருந்தால் மிகவும் சிறப்பு. 

மலச்சிக்கல்

இந்த உணவுப்பட்டியலில் பப்பாளி, கொய்யாப்பழம், மாதுளை, வாழைப்பழம் போன்றவை இடம்பெற்றால் மிகவும் சிறப்பு. நார்ச்சத்து நிறைந்த பேரிக்காய், ஆப்பிள், பிளம்ஸ் போன்றவை மிகவும் நல்லது. பலாப்பழத்திலும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாப்பதுடன் பெருங்குடலை சுத்தம் செய்யும் பெரும்பணியைச் செய்துவிடும். 

வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் போன்றவையும் மலச்சிக்கல் பிரச்னை வராமல் காத்துக்கொள்ளும். அத்திப்பழம், பேரீச்சம்பழம் போன்றவையும் மலச்சிக்கல் ஏற்படாமலிருக்கச் செய்யும். 

இரவு முழுக்க நீரில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாப்பிடுவதன்மூலம் பேரீச்சம்பழத்தின் முழுப் பலனையும் பெற முடியும். 

தினசரி உணவில் முளைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரை, முருங்கைக்கீரை போன்றவற்றை தினம் ஒரு கீரை எனச் சேர்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாது. அவ்வப்போது அகத்திக்கீரையும் சாப்பிடுவது நல்லது. 

சிறுதானியங்கள்

வடை, போண்டா, பஜ்ஜி, பூரி போன்ற எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்பதை தவிர்த்து முளைகட்டிய தானியங்கள், கேழ்வரகு - கம்பு போன்ற சிறுதானிய உணவுகளை உண்பதன்மூலம் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கலாம். இதேபோல் கடலை, பருப்பு போன்றவற்றைத் தவிர்ப்பதும் கைகொடுக்கும். 

காலையில் கண் விழித்தது முதல் இரவு தூங்கும் வரை நாம் அருந்தக்கூடிய காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்து நீராகாரம், நீர் மோர், இளநீர், பழச்சாறுகளை அதிகமாகக் குடிப்பது மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும். இஞ்சி - எலுமிச்சைச் சாறு கலந்த பானமும், புளி - கருப்பட்டியால் ஆன பானகமும் நல்லது. 

இரவில் கடுக்காய் கஷாயம் அல்லது திரிபலா சூரணம் சாப்பிட்டு வருவதன்மூலம் மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

திரிபலா சூரணம்

மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலோ, வராமல் முன்கூட்டியே தடுக்கத் திராட்சை நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது. திராட்சைப் பழங்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவதன்மூலம் பலன் கிடைக்கும். மேலும் காய்ந்த திராட்சை ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரவில் சாப்பிட்டு வந்தால் மறுநாள் காலை தாராளமாக மலம் இறங்கும். சிறுகுழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் காய்ந்த திராட்சையை நீரில் ஊற வைத்து அதை நசுக்கி அதன் சாற்றைக் குடிக்கக் கொடுத்து வந்தாலே பலன் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்னைக்குப் பெரிய செலவு வைக்காத எளிய மருந்து திராட்சை என்றால் அது மிகையாகாது. 

 

சப்போட்டாவும்கூட நார்ச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். இரவு கண்ணுறங்குவதற்குமுன் ஒரு சப்போட்டாப் பழத்தைச் சாப்பிட்டு விட்டுப் படுத்தால் நிம்மதியான தூக்கம் வருவதோடு, காலையில் கண் விழித்ததும் தாராளமாக மலம் இறங்கும். 

http://www.vikatan.com/news/health/90155-natural-ways-to-cure-constipation.html

Link to comment
Share on other sites

முகப் பொலிவுக்கு உதவும், பருக்கள் நீக்கும்... மாம்பழ ஃபேஸ் மாஸ்க்!

 

இந்தக் கோடை காலம் நமக்குத் தந்திருக்கும் ஒரே நல்ல விஷயம், மாம்பழ சீசன்! மாம்பழப் பிரியர்கள் ரசித்து, ருசிக்க விதவிதமான வகைகள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. தமிழர்களின் முக்கனிகளில் முக்கியமான பழம்! இதன் சுவைக்கு ஈடு, இணை ஏதும் இல்லை. மாம்பழத்தின் சுவை இருக்கட்டும்... இது நம் உடல்நலத்துக்குத் தரும் நன்மைகளும் அநேகம்! அதிலும் ஆரோக்கியத்தோடு நம் அழகுக்கு இது தரும் பங்களிப்பு அபாரமானது. முகப்பொலிவு, முகப்பருவைத் தடுப்பது, மிருதுவான தோல் பராமரிப்பு... என பல பலன்களை மாம்பழ ஃபேஸ் மாஸ்க் தரும். அவற்றுக்கான சில வழிமுறைகள் இங்கே...

மாம்பழத்தைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...

மாம்பழத்தில் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலம் (Alpha hydroxy acid) உள்ளது. இது தோலில் இருக்கும் பழுதடைந்த (அ) இறந்த செல்களுக்கு இடையில் இருக்கும் இணைப்புகளைத் துண்டிக்கும். அவை எளிதாக உடைந்துவிடுவதற்கான வேலைகளை செய்வதற்கும் மிகவும் உதவும்.

மாம்பழம்

மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை, தோல்களை சீர்ப்படுத்தும் பணிகளைச் செய்கின்றன. உடல்வறட்சியால் நம் தோல் உலர்ந்து போவதில் இருந்து காப்பதுதான் வைட்டமின் ஏ-யின் முக்கியமான வேலை. தோல் பகுதி எப்போதும் குளிர்ச்சியோடு இருப்பதற்கும் இது உதவிபுரியும். வைட்டமின் பி, வயது முதிர்வின்போது ஏற்படும் தோல் தளர்ச்சியை முற்றிலுமாகத் தடுத்து, தோல் இயல்பான தன்மையோடு இருக்க உதவும். வைட்டமின் சி, தோலுக்கு மிகவும் அவசியமான புரதமான கொலாஜெனை (Collagen) அதிகப்படுத்துகிறது. இதன்மூலம், தோலின் இளமைத் தன்மையைப் பராமரிக்கிறது. மாம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், தோல் காய்ந்துவிடாமல் மிருதுவாக இருப்பதற்கு உதவுகிறது.

இப்படி நம் தோலுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் மாம்பழத்தைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் செய்யலாம். அதன்மூலம், முகப்பொலிவு அதிகரிக்கும். இதைச் செய்வதற்கான வழிமுறைகள் சில...

மாம்பழ ஃபேஸ் மாஸ்க்

முகப்பொலிவுக்கான  மாஸ்க் 

தேவையானவை: 
மாம்பழப் பசை - 1 டேபிள்ஸ்பூன் 
பாலேடு (Milk Cream) - தேவையான அளவு.

செய்முறை:
மாம்பழப் பசையை பாலேட்டோடு கலந்துகொள்ளவும். முகத்தில் இந்தக் கலவையைத் தடவி, 30 நிமிடங்களுக்கு உலரவைக்கவும். பின்னர் கழுவிவிடவும். இந்த மாஸ்க் முகம் அதிகப் பொலிவு பெற உதவிபுரியும்.

முகப்பருக்கள் போக்குவதற்கான  மாஸ்க்

தேவையானவை: 
மாங்காய் - 1
தண்ணீர் - தேவையான அளவு. 

செய்முறை:
தோலை உரிக்காமல் மாங்காயைத் தண்ணீரில் கொதிக்கவைக்கவும். கொதித்ததும், சூடு ஆறும் வரை அதை அப்படியே உலரவைக்கவும். உலர்ந்ததும் மாங்காயோடு சேர்ந்திருக்கும் நீரை முகத்தில் அப்ளை செய்யவும். இந்த மாஸ்க், முகப்பருவை விரட்ட சிறந்த தீர்வாக இருக்கும்.

ஃபேஸ் மாஸ்க்

முகப் பளபளப்புக்கான  மாஸ்க்

தேவையானவை:  
அரைத்த ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன் 
மாம்பழப் பசை - 1 டேபிள்ஸ்பூன் 

செய்முறை:

பொதுவாகவே, ஓட்ஸுக்கு தோலை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றும் தன்மை உள்ளது. இது, தோலின் எண்ணெய் தன்மையை குறைக்க வழிவகுக்கும். மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்கி ஆரோக்கியமான புதிய செல்கள் உருவாகவும் துணை நிற்கும்.

 

அரைத்த ஓட்ஸ், மாம்பழப் பசை இரண்டையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். இதை மிருதுவாக முகத்தில் அப்ளை செய்யவும். முகம் முழுக்க மாம்பழத்தின் சாறு பரவவேண்டியது மிகவும் அவசியம். முகத்தில் இந்தக் கலவை முழுவதுமாக பரவும் வரை பொறுத்திருக்கவும். சில நிமிடங்களுக்குப் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். பிறகு, குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவவும். குளிர்ந்த நீரில் கழுவும்போது, முகத்தில் உள்ள சிறுசிறு துளைகளும்கூட சுத்தப்படுத்தப்படும். முகம் பட்டுப்போல் பளபளக்கும்.

http://www.vikatan.com/news/health/90152-mango-face-packs-for-beautiful-skin.html

Link to comment
Share on other sites

வெர்டிகோ தலைசுற்றல்... தடுக்கும் 5 எளிய யோகா பயிற்சிகள்!

 
 

சிலருக்கு காரணமே இல்லாமல் தலைசுற்றும்; சில சத்தங்கள் ஒத்துக்கொள்ளாது அப்படியே மயக்கம் வருவது மாதிரி தலை கிறுகிறுக்கும். சுற்றியிருக்கும் மனிதர்களும் பொருள்களும் சுழல்வதுபோலத் தெரியும். எந்தவித நோய்த்தாக்குதலும் இல்லாதபோது எதற்காக இப்படித் தலைச்சுற்றுகிறது என்று குழப்பமாக இருக்கும். இந்தப் பிரச்னையை `வெர்டிகோ’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

வெர்டிகோ


வெர்டிகோ 

வெர்டிகோ தலைச்சுற்றல் சில சமயங்களில் அச்சத்தினால் ஏற்படும். இதில் நம்முடைய தலை மட்டும் சுற்றுவது, நம்மைச் சுற்றி உள்ள பொருள்கள் மட்டும் சுற்றுவது அல்லது நாம் இருக்கும் இடம் மட்டும் சுற்றுவதுபோலத் தலைசுற்றல் ஏற்படும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீர்வறட்சி ஏற்படும்போது, இதுபோன்று தலைசுற்றல் ஏற்படலாம். இதனால் காது கேளாமை, உடல் சோர்வு போன்றவை உண்டாகும்.

அறிகுறிகள்...

* குமட்டல்

* வாந்தி

* நடப்பதில் சிரமம் (தள்ளாடுவது)

* அதிக வியர்வை

* பார்க்கும் பொருள்கள் மங்கலாக அல்லது இரண்டாகத் தெரிவது

* பேசுவதில் உளறல்

தடுக்க... தவிர்க்க..!

* இரவு நேரங்களில் 6 - 8 மணி நேரம் சீரான தூக்கம் அவசியம்.

* பாதாம் மற்றும் தர்பூசணியைச் சாறாகப் பருகலாம்.

* தேன் கலந்த இஞ்சி டீயைத் தினசரி குடிக்கலாம். இது குமட்டல் மற்றும் வாந்தியைக் கட்டுப்படுத்தும். 

இந்தப் பிரச்னைக்கு மருந்து, மாத்திரைகள் மட்டும் தீர்வு அல்ல. யோகா செய்வதன் மூலம் வெர்டிகோ தலைச்சுற்றலைச் சரிசெய்யலாம். தலைச்சுற்றலைத் தடுக்கும் 5 யோகா பயிற்சிகள் இங்கே...

தடாசனா (Tadasana)

நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பாதம் முழுவதும் தரையில் பதியுமாறு நிற்க வேண்டும். இப்போது, உடலின் எடை முழுவதும் தரையில் உள்ளது என்பதை உணர முடியும். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி நிற்க வேண்டும். சுவற்றில் சாய்ந்தும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். தலை, தோள்பட்டை, இடுப்பு மற்றும் பாதங்கள் சுவற்றை ஒட்டி இருக்குமாறு இருக்க வேண்டும். தோள்பட்டைகளைத் தளர்வாக வைத்துக்கொள்ளவும். இரண்டு கைகளின் உள்ளங்கையையும் பக்கவாட்டில் உடலை ஒட்டியிருக்கும்படி வைத்திருக்க வேண்டும். சீராக மூச்சை இழுத்து, விட வேண்டும்.

தடாசனா

இந்தநிலையில் சில நிமிடங்கள் அப்படியே நிற்க வேண்டும். இப்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒரு நேர்கோட்டில் சுவாசம் செல்வதை உங்களால் உணர முடியும்.

யோகா பயிற்சிகளைப் புதிதாகச் செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பயிற்சி. தலைசுற்றல் உள்ளவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஸ்வஸ்திகாசனா (Svastikasana)

விரிப்பில் கால்களை நீட்டியபடி அமர வேண்டும். வலது கால் மேல் இடது கால் இருக்கும்படி பத்மாசனநிலையில் உட்கார வேண்டும். முழங்கால்கள் தரையைத் தொட்டபடி இருக்க முயற்சி செய்யலாம். இப்போது, முதுகுத்தண்டு மற்றும் தலை நேராக இருக்க வேண்டும். கைகளைக் கால் முட்டியின் மீது வைக்க வேண்டும். சின் முத்திரை அல்லது உள்ளங்கையை வானத்தைப் பார்த்தபடி வைக்க வேண்டும். இப்போது, கவனம் முழுவதையும் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டு இணையும் இடத்தில் வைக்க வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருக்கலாம். 

ஸ்வஸ்திகாசனா

இது, உடலின் நடுமையத்தை உணர உதவும். இடுப்பு மற்றும் முதுகுத்தண்டை வலுப்படுத்தும். தலைசுற்றலால் ஏற்படும் உடல் மாற்றத்தைச் சரிசெய்யும். தலையும் முதுகுத்தண்டும் இணையும் பகுதி வலுப்பெறும். முதுகுவலியைக் குறைக்கும்

பிரிட்ஜ் போஸ் (Bridge Pose) (அ) சேது பந்த சர்வாங்காசனா (Setu Bandha Sarvangasana)

விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும். கைகளைப் பக்கவாட்டில் வைக்க வேண்டும். கால்களை உட்புறமாக மடக்க வேண்டும். தோள்பட்டை மற்றும் தலையில் சிறிய அழுத்தத்தைக் கொடுத்து, கீழ் உடலை உயர்த்த வேண்டும். தலை நேராக வானத்தைப் பார்த்தபடி இருக்கட்டும். இதேநிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். 

சேது பந்த சர்வாங்காசனா

சரியான உடலமைப்பைப் பெற உதவும். முதுகுத்தண்டை வலுப்படுத்தும். மார்புப்பகுதியை விரிவடையச்செய்யும். கூன் போடுவதைச் சரிசெய்யும். இந்தப் பயிற்சியின்போது உடனடியாக உடல் இருக்கும்நிலையை மாற்ற முயற்சிப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

சுப்த பாதாங்குஸ்தாசனா (Supta Padangusthasana) (அ) ஹேண்டு டு பிக் டோ போஸ் (Hand to big toe pose)

விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும். தலை, தோள்பட்டை, முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் குதிகால் தரையில் படும்படி இருக்கட்டும். இப்போது வலது காலை உயர்த்தி முடிந்த வரை மார்புப் பகுதியைத் தொடுமாறு செய்ய வேண்டும். காலைத் தூக்கும்போது, இடுப்பு மற்றும் இடது முழங்கால் தரையில் இருக்கும்படி முயற்சிக்க வேண்டும். பின்பு, பழையநிலைக்கு வர வேண்டும். இப்போது இதேபோன்று இடது காலுக்கும் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யலாம். 

சுப்த பாதாங்குஸ்தாசனா

தொடை, முழங்கால் பகுதியைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தும். உடலின் சமநிலைத்தன்மையை மேம்படுத்தும்.

தண்டாசனா (Dandasana) (அ) ஸ்டஃப் போஸ் (Stuff pose)

விரிப்பில் நேராக நிமிர்ந்து அமர வேண்டும். கால்களை நீட்ட வேண்டும். உள்ளங்கைகளைப் பக்கவாட்டில் பதிக்க வேண்டும். பாதங்கள் நேராக இருக்க வேண்டும். இதேநிலையில் சில நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். சீராக மூச்சை இழுத்துவிட வேண்டும். 

தண்டாசனா

உடலின் சமநிலைத்தன்மையை மேம்படுத்தும். கை மற்றும் கால் தசைகள், தொடைப்பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். கால் தசைப் பிடிப்புகளை நீக்கும். முதுகுத்தண்டு மற்றும் பாதம் வலுப்பெற உதவும்.

முதல்முறை செய்பவர்களின் கவனத்துக்கு...

* முதல்முறையாக இந்தப் பயிற்சிகளைச் செய்பவர்கள், ஒவ்வோர் அசைவையும் மெதுவாகச் செய்ய வேண்டும். 

* திடீரென ஏற்படும் உடல் அசைவாலும் தலைசுற்றல் ஏற்படலாம். 

* யோகா பயிற்சியாளர்கள் அல்லது இயற்கை மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

 

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதால், உடல் மற்றும் மனம் அமைதி அடைவதை உணர முடியும். 

http://www.vikatan.com/news/health/90247-5-effective-yoga-poses-to-treat-vertigo.html

Link to comment
Share on other sites

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!

 
 

நோய்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்... தவறான வாழ்க்கை முறை. அதற்கு ஒரே ஒரு சிகிச்சைதான் இருக்க முடியும், அது சீரான, ஒழுங்கான உணவு முறை. உண்ணும் உணவில் கவனமில்லாமல் இருப்பதுதான் பல நோய்களுக்கு அடிப்படை. நாம் பல்பொருள் அங்காடியில் வாங்கும் பல பொருள்களை நாள்பட உபயோகிக்க என்று ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். ஆனால், எந்தப் பொருள்களை வைக்க வேண்டும், எத்தனை நாள்கள் வரை வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, அதன் மூலம் நம் உடல்நலனையும் கெடுத்துக்கொள்கிறோம். நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கவே வைக்கக் கூடாத பழங்கள், காய்கறிகள், உணவுகள் பட்டியல் இங்கே...

ஃபிரிட்ஜ்

வாழைப்பழம் 

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாதது வாழைப்பழம். ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுப்பதோடு, அழுகவும் செய்துவிடும். திறந்த, உலர்ந்த இடங்களில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.

ஃபிரிட்ஜ் - வாழைப்பழம்

தேன்

இயற்கையிலேயே கெட்டுப்போகாத தன்மை கொண்ட தேனும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத ஒரு பொருள்தான். சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே தேன் அதன் சத்துக்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடியது. ஆனால், ஃபிரிட்ஜில் குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும்போது அது தனது நிலையை மாற்றிக்கொண்டு, மணல்போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும். ஏறக்குறைய உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் மாறிவிடும். 

ஃபிரிட்ஜ் - தேன்

அவகேடோ 

அவகேடோ பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. கடைகளில் வாங்கும்போது பழுக்காத நிலையில் இருக்கும் இந்தப் பழம், ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்.

ஃபிரிட்ஜ் - சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் 

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களும் ஃபிரிட்ஜில் வைக்கத் தோதானவை அல்ல. சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். அதிகக் குளிரான சூழல், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும். மேலும், அதன் தோலை பாதித்து பளபளப்பையும் மங்கச் செய்துவிடும். 

ஸ்டோன் வகை பழங்கள் 

ப்ளம், பீச், ஆஃப்ரிகாட், நெக்டாரின் போன்ற மேல்நாட்டு ஸ்டோன் வகைப் பழங்களுக்கும் ஃபிரிட்ஜ் ஒத்து வராது. வாங்கும்போது அதிகம் பழுக்காதநிலையில் இருக்கும் இவற்றுக்கு சாதாரணச் சூழல்தான் ஏற்றது. குளிரில் வைத்திருந்தால் அதிகம் பழுக்காது; சுவை கூடாமல் போய்விடும். 

ஃபிரிட்ஜ் - மூலிகைகள்

மூலிகைகள் 

மூலிகைகளையும் கீரைகளையும் ஃபிரிட்ஜில் வைத்து வீணடிக்கக் கூடாது, ஏனென்றால், அவற்றின் சத்துகள் குறைந்துபோய்விடும். சாதாரணச் சூழலில், நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப் பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும், தளதளவென்று உலர்ந்து போகாமல் இருக்கும். 

பெர்ரி வகைப் பழங்கள்

சாதாரண தட்பவெப்பத்திலேயே நல்லநிலையில் இருக்கும் இந்தப் பழங்கள் நல்ல சுவையைத் தரக்கூடியவை. அதிக நேரம் குளிரில் வைக்கப்பட்டால், இதன் சுவையும் கெட்டு வடிவமும் மாறிவிடும். 

ஃப்ரிட்ஜ் - வெங்காயம்

வெங்காயம் 

ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதது வெங்காயம். குளிரில் தானும் கெட்டு ஃபிரிட்ஜையும் கெட்ட நாற்றம் உள்ளதாக மாற்றிவிடும். மேலும், ஃபிரிட்ஜில் இருக்கும் எல்லா உணவுகளையும் வெங்காய மணம் மணக்கும்படி மாற்றிவிடும். உலர்ந்த சூழலே வெங்காயத்துக்கு ஏற்றது. பேப்பர் பைகளில் வெங்காயத்தைப் போட்டு வைத்திருப்பதே போதுமானது. அதிக வெப்பமில்லாத இருண்ட சூழலில், வெங்காயத்தை வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உருளைக்கிழங்குக்கு அருகே வைக்கக்கூடாது. உருளைக்கிழங்கில் இருந்து வெளியாகும் வாயுவும் ஈரப்பதமும் வெங்காயத்தை அழுகச் செய்துவிடும். கவனம்!

பிரெட் 

பிரெட் போன்ற பேக்கரி பொருள்களும் ஃபிரிட்ஜுக்கு ஆகவே ஆகாதவை. சாதாரண தட்பவெப்பத்தில் சுவையும் மெதுவான தன்மையும் அதிகம் கொண்ட பிரெட், அதிகமான குளிரில் விறைத்துப் போய்விடும். இதனால் சுவையும் கெட்டு, கெட்டித்துவிடும். ஆகவே இருளான, அதிக வெப்பமில்லாத சமையலறை அலமாரிகளிலேயே டிபன் பாக்ஸ்களில் மூடிவைத்தே பிரெட்டைப் பாதுகாத்துவைக்கலாம். 

ஃபிரிட்ஜ் - மிளகாய்

மிளகாய்

சிவப்பு, பச்சை, மஞ்சள் என எந்த மிளகாயையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃபிரிட்ஜின் அதிகக் குளிர் இவற்றை அழுகச் செய்துவிடும். சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் வைப்பதே போதுமானது. 

குளிர்ச்சி தரக்கூடிய காய்கள் 

பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற குளிர்ச்சியை தரக்கூடிய காய் வகைகளையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். அவற்றின் இயற்கையான நீர்ச்சத்து மாறி, சுவை மாறிவிடக்கூடும். 

ஃபிரிட்ஜ் - எண்ணெய்

எண்ணெய்

எந்த எண்ணெயும் ஃபிரிட்ஜில் வைக்க கூடியவை அல்ல. குளிரில் எல்லா வகை எண்ணெயும் உறைந்து போய், கடினமாகி கலங்கிவிடும். இதனால் எண்ணெயின் சுவையும் சத்தும் கெட்டுவிடும். சாதாரணச் சூழலே எண்ணெய்க்கு உகந்தது. உதாரணமாக, ஃபிளாக்ஸ் விதை எண்ணெய் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், உறைந்துவிடு; சீக்கிரமே கெட்டும் போய்விடும். 

நீர்ச்சத்து மிகுந்த காய்கனிகள் 

பூசணி, தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்து மிக்க காய்கறிகளையும் பழங்களையும்கூட ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் இந்த வகை காய்கனிகள் குளிரால் உடைந்து குழைந்துவிடும். ஆனால், இவ்வகை காய்கனிகளை நறுக்கி, நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம். 

ஃபிரிட்ஜ் - ஊறுகாய்

ஊறுகாய் 

மசாலா சேர்க்கப்படாத, காயவைக்கப்பட்ட ஊறுகாய் எதையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. உலர்ந்த, காற்றோட்டமான இடத்திலேயே ஊறுகாய் கெடாமலும், சுவை பாதிக்காமலும் இருக்கும். 

பூண்டு 

`காயக் காயத்தான் பூண்டின் சுவை கூடும்’ என்பார்கள். அதனால் திறந்தவெளியில் பூண்டை வைத்திருப்பதே நல்லது. ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், பூண்டின் சுவை கெட்டு, அதன் நீண்டகால பலனும் பாதிக்கப்படும். 

ஃபிரிஜ் - பூண்டு

சில்லி சாஸ்  

வினிகர், மிளகாய் சாஸ் போன்ற உணவுக்கு சுவையூட்டும் பொருள்களைச் சாதாரண சூழலில் அடுப்படியில் பாட்டில்களில் பாதுகாத்து வைப்பதே சிறந்தது. தரமான சாஸ்கள் பல நாள்கள் வரை கெடாமல் இருக்கக்கூடியவை. இதனால் இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளால் கெடாமல் சாஸ்களைப் பாதுகாக்க, அடிக்கடி பாட்டில்களைச் சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் சில்லி சாஸின் சுவையும் காரமும் குறைந்துவிடும் என்பதே உண்மை. 

மசாலா பொருட்கள் 

மிளகாய், மிளகு, மல்லி போன்ற மசாலா தூள்கள் எதையும் ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. 

ஃபிரிட்ஜ் - காபி

காபி 

காபி தூள் அல்லது காபி கொட்டை இவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. காற்று புகாத பாட்டிலில் வைத்திருந்தாலே போதுமானது. ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் ஈரப்பதம் காபித் தூளை பாதித்து, கெட்டுப்போகச் செய்துவிடும்.

சாலட் அலங்கரிக்கும் க்ரீம்கள் 

காய் மற்றும் கனிகளை கொண்டு செய்யப்படும் சாலடுகளுக்கு அலங்கரிக்கவும், சுவையூட்டவும் பயன்படும் எந்த வித க்ரீம்களையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். `இனிப்புத் தயிர்’ எனப்படும் யோகர்ட் உள்ளிட்ட க்ரீம்கள், ஃபிரிட்ஜில் நீர்த்துப்போய் கெட்டுவிடும். 

நட்ஸ் 

முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற எந்த உலர்க்கொட்டைகளும் ஃபிரிட்ஜில் வைக்கத் தேவையில்லாத பொருட்கள். குளிர்ந்த ஈரப்பதம் இந்த வகை நட்ஸ்களின் உள்ளிருக்கும் எண்ணெய்ப் பொருள்களைப் பாதித்து, கெட்டுவிடச் செய்துவிடும். மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் வேறு பொருள்களின் வாசத்தால் மாறிவிடும். காற்றுப்புகாத பாத்திரங்களில் மூடி வைத்தாலே இவை கெடாமல் இருக்கும். ஒருவேளை அதிகமான அளவில் நட்ஸ்களைப் பாதுகாக்க ஃபிரிட்ஜில் வைக்க வேண்டி வந்தால், அவற்றை உபயோகிக்கும் முன்னர் பாத்திரத்தில் வைத்து வறுத்த பிறகே உபயோகிக்க வேண்டும். 

உலர்பழங்கள் 

திராட்சை, அத்தி, பேரீச்சை போன்ற உலர்பழங்களுக்கும் ஃபிரிட்ஜில் இடமில்லைதான். உலர்ந்த பழங்கள் அதன் உலர்ந்த தன்மைக்காகவே விரும்பப்படுகின்றன. அந்தத் தன்மையை ஃபிரிட்ஜின் குளிர் காற்று பாதித்துவிடும்.

தானிய வகைகள் 

தானிய வகைகள் சாதாரணச் சூழலில் வைக்கப்படவேண்டியவை. ஈரப்பதமான சூழல் அவற்றைக் கெட்டுப்போகச் செய்துவிடும்.

ஜாம்கள் 

பழங்களால் செய்யப்பட்ட ஜாம்களை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டியது இல்லை. ஜாம்களைப் பாதுகாக்க அதனுள் சேர்க்கப்படும் பொருள்கள் அதிகக் குளிரால் உறைந்து, சுவை மாறிவிடுகின்றன. 

ஃபிரிட்ஜ் - உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு 

மண்ணில் விளைந்து, ஈரம் போகக் காய்ந்து நம்மிடையே வரும் உருளைக்கிழங்கு காய்ந்து இருப்பதே நல்லது. இது, ஈரத்தில் முளைத்துவிடும் தன்மை கொண்டது. சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் சுற்றிவைப்பதே உருளைக்கு நல்லது. பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைத்தால், உருளைக்கிழங்கின் ஈரப்பதத்தால் சீக்கிரமே கெட்டுவிடும் ஆபத்து உண்டு.

கெட்ச்சப் 

கெட்ச்சப் எனும் சுவையூட்டும் கூழ்கள் தற்போது எல்லா வீட்டிலும் காணப்படுகின்றன. இனிப்பு, புளிப்பு மற்றும் காரச் சுவைகளில் வரும் இந்த வகை கெட்ச்சப்-ஐ ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஒரு மாதம் வரை சாதாரணச் சூழலிலேயே கெடாமல் இருக்கக் கூடியது கெட்ச்சப். ஃபிரிட்ஜில் வைத்தால், இறுகிவிடும்.  

ஃபிரிட்ஜ் - தக்காளி

தக்காளி

அதிகக் குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக்கூடியது. காற்றுப்புகக்கூடிய சாதாரணச் சூழலிலேயே தக்காளி சில நாள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைக்கும் தக்காளி பழுப்பதே இல்லை. எனவே, தக்காளியின் சுவையை அதிகம் பெற ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். 

நிலக்கடலை வெண்ணெய்

நிலக்கடைலையால் செய்யப்பட்ட வெண்ணெய் தற்போது சுவையூட்டியாகப் பயன்பட்டு வருகிறது. இதுவும் ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியமில்லாத பொருளே.

ஃபிரிட்ஜ் - மீன்

மீன்

மீனையோ, பேக் செய்யப்பட்ட மீன்களின் இறைச்சியையும் ஃபிரிட்ஜில் பொதுவான இடத்தில் வைக்க வேண்டாம். மீன் நாற்றம் மற்ற பொருள்களுக்கும் பரவி அவற்றின் தன்மையைப் பாழடித்துவிடும். ஃபிரிட்ஜில் மீனை வைப்பதற்கென்றே ஓர் இடம் இருக்கும். அதில் வைக்கலாம். 

http://www.vikatan.com/news/health/90333-28-foods-you-should-not-put-in-the-fridge.html

Link to comment
Share on other sites

முகம், சருமப் பளபளப்புக்கு ஜப்பானியர்கள் சுட்டிக்காட்டும் 7 எளிய வழிமுறைகள்!

 

`எல்லாவற்றிலும் நம்பர் ஒன்’ இதுதான் ஜப்பானியர்களின் முக்கியமான தாரக மந்திரம். இவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து வியக்காத உலக நாடுகளே இருக்க முடியாது. சுறுசுறுப்பு, ஆரோக்கியம் இரண்டுக்கும் அடுத்தபடியாக நம்மை ஆச்சர்யப்படுத்துவது ஜப்பானியர்களின் பளிச் முகமும், பளபளக்கும் தேகமும். இவர்களின் முகம் மற்றும் சருமப் பொலிவுக்கு முக்கியக் காரணம், பல நூற்றாண்டுகளாக நேர்த்தியான சில வழிமுறைகளை இவர்கள் பின்பற்றி வருவதுதான். அவை, வெகு எளிதாக நாம் எல்லோருமே செய்யக்கூடிய வழிமுறைகள். அவற்றை நாமும் பின்பற்றினால் ஆரோக்யமான, அழகான சருமத்தைப் பெறலாம்; முகமும் பொலிவாகும். ஜப்பானியர்களைப்போல முகம், சருமம் பளபளப்புக்கு உதவும் 7 எளிய வழிமுறைகள்...

முகம் கழுவுதல்

தினமும் இருமுறை முகம் கழுவுதல் 

ஜப்பானியர்கள், தங்கள் சருமத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நம்மைப்போலப் பணம் செலவு செய்து அழகுசாதனப் பொருள்களை வாங்குவதில்லை. சருமத்தையும் முகத்தையும் சுத்தப்படுத்த எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதில்தான் கவனமாக இருக்கிறார்கள். சிலருக்கு இருமுறை முகம் கழுவுவது சற்று அதிகமாகத் தோன்றலாம். முகத்தில் ஒட்டியிருக்கும் அழுக்குகள், இப்படி இருமுறை கழுவினால்தான் முழுமையாக நீங்கும். முகம் கழுவவும் ஒரு வழிமுறை உண்டு. முதலில் முகத்தில் எண்ணெயைத் தடவ வேண்டும். ரைஸ் பிரான் எண்ணெய் (Rice Bran Oil) அல்லது கேமெலியா எண்ணெய் (Camellia Oil) சிறந்தது. எண்ணெயைத் தடவுவதால், முகத்தின் மேக்கப் எல்லாம் கலைந்துவிடும். பிறகு வழக்கம்போல் முகம் கழுவப் பயன்படுத்தும் சோப்பைப் பயன்படுத்திக் கழுவலாம். இப்படிச் செய்வதால் அழுக்குகள் சுத்தமாக நீங்கும்; கறைபடிந்த முகம் பொலிவு பெறும்.

மசாஜ் என்னும் மந்திரம்! 

பொதுவாகவே முகப்பூச்சுக்குப் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்கள் முகத்துக்குத் தீங்குவிளைவிப்பவை. அது முகத்தின் ரத்த ஓட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஜப்பான் பெண்களோ தினமும் முகத்தை நன்கு மசாஜ் செய்வார்கள். அதனால் அவர்களின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தொடர்ந்து முகத்துக்கு மசாஜ் செய்தால், முகப்பூச்சுப் பொருள்களால் நமக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. காலையில் எழுந்தவுடன் முகம் வீங்கி இருப்பதுபோலத் தெரிந்தாலும் மசாஜ் செய்யலாம். முகம் இயல்புநிலைக்குத் திரும்பும். மாதத்துக்கு ஒருமுறையாவது முழு உடல் மற்றும் தலைக்கு மசாஜ் செய்துகொள்வது சருமத்தைப் பொலிவாகச் செய்யும்.

நிச்சயம் தேவை... நீண்ட குளியல்!

நாம் அனைவருமே ஆற, அமர குளிப்பதில்லை. `காக்காய் குளியல்’ என்று சொல்வார்களே... அந்த மாதிரி இரண்டு நிமிடத்தில் அவசர அவசரமாக குளித்துவிட்டு வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவோம். ஜப்பானியர்கள் இப்படிக் குளிப்பதில்லை. நிறுத்தி, நிதானமாக, அனுபவித்துக் குளிப்பார்கள். அவர்களின் குளியல் முறையே தனி அழகு. உச்சி முதல் பாதம் வரை நன்கு அத்தியாவசியமான எண்ணெய், குளியல் உப்பு எல்லாவற்றையும் தேய்த்துக் குளிப்பார்கள். கூடவே மென்மையான இசையையும் கேட்பார்கள். இந்த முறையை நாமும் பின்பற்றலாம். மனஅழுத்தம் குறையும்; மனம் அமைதி பெறும்; முகமும் சருமமும் பட்டுப்போல் மென்மையாகும். 

சருமப் பளபளப்பு

மலர்ச்சி தருமே முகத்திரை! 

ஜப்பானியர்களின் சருமத்தைப் பாதுகாப்பதற்குக் கடைப்பிடிக்கும் முக்கியமான வேலை அதன் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வது. முகப்பூச்சுப் பொருள்களால் முகத்தில் எண்ணெய் வழியத் தொடங்கும். இதைத் தடுக்க ஒரு சிறிய மென்மையான துணியை வெள்ளரிக்காய் சாற்றில் நனைத்து முகத்தில் பதினைந்து நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய்ப் பிசுக்கு நீங்கி, மென்மையாகும். இதைப்போல கேரட் சாறு, பப்பாளி கூழ், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி ஆகிய பழங்களின் கலவையை முகத்தில் பூசிக்கொள்ளலாம். 

நிறம் காக்க..!

நம் சருமத்தின் நிறத்தைப் பாதுகாக்க அதிகம் வெயிலில் செல்லாமல் இருப்பதுதான் நல்ல வழி. அப்படியும் வெயிலில் சென்றுதான் ஆக வேண்டுமென்றால், முகத்துக்கு நல்ல சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், உடலை நன்கு மூடும்படி துணிகளை அணிந்து செல்லலாம். அதிகம் சூரிய வெப்பம் சருமத்தைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஆனால், இதையும் அளவுக்கு அதிகமாகக் கடைப்பிடிக்கக் கூடாது. சூரிய ஒளி கொஞ்சமாவது நம் உடலில்படுவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. 

இளமையைத் தக்கவைக்கும் கிரீன் டீ

கிரீன் டீயின் பயன்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை... நம் உடல்நலத்துக்கு உதவும் அநேகக் காரணிகள் நிறைந்தது. கிரீன் டீயைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, ஜப்பானியப் பெண்கள். கிரீன் டீயில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட், முதுமைத் தோற்றத்தைக் குறைத்துக் காட்டச் செய்யும். ஜப்பானியர்களோ, ஒருபடி மேலே சென்று `மட்சா கிரீன் டீ’ என்ற ஸ்பெஷல் கிரீன் டீயை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சாதாரண டீயைவிட மட்சா கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட் பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது.

கிரீன் டீ

உள் அழகு முக்கியம்! 

 

ஜப்பானியர்கள் உடல் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதே நேரத்தில், தாங்கள் உண்ணும் உணவிலிருந்துதான் முழு ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள். இவர்கள் பால் மற்றும் பதப்படுத்திய உணவுகளை அதிகம் விரும்புவதில்லை. அவர்கள் உணவுப் பட்டியலில் எப்போதும் முதலிடம் காய்கறிகளுக்கும் மீனுக்கும்தான். மீன் உணவுதான் தங்களை இளமையாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்கிறது என்று நம்புகிறார்கள். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள வஞ்சிரம், நெத்திலி போன்ற மீன்கள் முதுமைத் தோற்றத்தைப் போக்கும்; ஆரோக்கியமும் தரும். சருமப் பொலிவுக்கு ஆரோக்கியமும் அவசியமே!
 
இந்த வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் பளிச் முகத்தையும் மின்னும் சருமத்தையும் பெற்று அழகு மிளிர வலம்வரலாம்.

http://www.vikatan.com/news/health/90468-these-ancient-japanese-secrets-will-help-you-look-younger.html

Link to comment
Share on other sites

அசிடிட்டி ஏன், எதற்கு, எப்படி? தீர்வுகள்!

 
 

அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் தீவிரமான பிரச்னை. இது ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பாலமுருகன். ``வயிற்றுப் பகுதியில் இருக்கும் இரைப்பையில், சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால் அசிடிட்டி ஏற்படும். இது ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்.

அசிடிட்டி

காரணிகள்

செரிமானத்தில் பிரச்னைகள் இருப்பது, ஹைட்ரோ-குளோரிக் ஆசிட் அதிகம் சுரப்பது, காரம், உப்பு, புளிப்பு - இவை மூன்றும் உள்ள உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வது, மனஉளைச்சல், கவனச்சிதறல் முதலியவற்றால் பாதிக்கப்படுவது, புகை, மதுப்பழக்கங்களுக்கு அடிமையாவது,  உடல் எடை அதிகம் இருப்பது, அதிகம் கோபப்படுவது, அதிகம் கவலை மற்றும் பயம் கொள்வது, எதிர்மறை எண்ணங்களை அதிகம் கொண்டிருப்பது, வயது முதிர்தல், வெப்பமான சூழலில் அதிகம் இருப்பது போன்றவையே அமிலத்தன்மை பெருகுவதற்கான முக்கிய காரணிகளாகும்.

என்னென்ன பிரச்னைகள்?

தொடர்ந்து ஏற்படும் அமிலத்தன்மை நீட்டிப்பால், நிறைய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது குரல்வளை வீக்கம், நாள்பட்ட வறண்ட இருமல், உணவு விழுங்குவதில் சிரமம், நுரையீரல் மற்றும் இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண் (மிகுந்த வயிற்று எரிச்சலோடு), அல்சர் போன்றவை ஏற்படக்கூடும்.

அசிடிட்டி

அறிகுறிகள்

புளித்த ஏப்பம் ஏற்படும். அப்போது நாம் உட்கொண்ட உணவின் மணமும் தெரியவரும். இதுதவிர நெஞ்செரிச்சல், வாந்தி, மூச்சுத்திணறல், காதில் வலி ஏற்படுதல் போன்றவை உணவு ஒவ்வாமையால் ஏற்படக்கூடும் அமிலத்தன்மைக் குறைபாட்டில் மிகவும் பொதுவான அறிகுறிகளாக இருக்கும்.

நாளுக்குநாள் அமிலத்தன்மை பிரச்னை அதிகரித்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு போகுமேயானால், கீழ்க்கண்டவை அவற்றின் அறிகுறிகளாக இருக்கும்.
    
தொடர் வயிற்றுப்போக்கு, அடிக்கடி தொண்டை வறண்டு போகுதல், அதிகம் முடி உதிர்தல், உடல் எடை குறைதல், மூச்சு விடுவதில் சிரமம் நீடிப்பது முதலியவை ஏற்படும். இவை ஏற்படுபவர்களுக்கு அமிலத்தன்மை பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். அவர்கள், ரத்தப் பரிசோதனை, எண்டோஸ்கோபி போன்ற பரிசோதனைகளின் மூலம் என்ன பாதிப்பு என்பதைக் கண்டறிவார்கள்.

தீர்வுகள்

இந்தப் பிரச்னைகளைப் பொறுத்தவரை உணவு முறை மாற்றம் மற்றும் நடவடிக்கை மாற்றம் என இரண்டு வழிகளில் தீர்வுகள் காணலாம். உணவு முறை மாற்றம் என்பது, உடலளவில் அமில சுரப்பிகளை சீர்படுத்துவது போன்று, மன அமைதி தரும் யோகா போன்ற நடவடிக்கைகள் கோபதாபங்களை கட்டுப்படுத்தி பிரச்னைகளில் இருந்து நம்மைக் காக்கும்.

தவிர்க்கவேண்டியவை 

அசிடிட்டி காரணமாகும் உப்பு

பெரும்பாலும் பித்த பாதிப்பு இருப்பவர்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் இருக்கக்கூடும். உணவில் காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை எடுத்துக்கொள்வது பாதிப்பை அதிகப்படுத்தும். எனவே அத்தகைய உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஊறுகாய், தக்காளி கலந்த உணவுகள், தயிர், மிளகாய், பூண்டு, சாக்லேட் வகைகள், வறுத்த உணவுகள் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மது அருந்துவதும் தவிர்க்கப்பட வேண்டும். மனஅழுத்தத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இரவு நீண்ட நேரம் கண்விழிக்காமல், கண்களுக்கும் மனதுக்கும் ஓய்வு தரவேண்டும். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

செய்யவேண்டியவை 

அமிலத்தன்மை பாதிப்பின்போது, உணவு உண்பதை தவிர்க்கக் கூடாது. பசி ஏற்படவில்லை என்றாலும், தேவையான அளவு ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். ருசிக்கு சாப்பிடுவது மட்டுமன்றி, பசிக்கு சாப்பிட வேண்டும். உணவு ருசிகளில், இனிப்பு கசப்பு துவர்ப்பு முதலியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி போன்ற உள்ள அமைதிக்கு வழி செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அன்றாட உணவில், இளநீர், தர்பூசணி, வெல்லம், வாழைப்பழம், வெள்ளரிக்காய், இஞ்சி, துளசி, காய்கறி வகைகள் போன்ற உடல் பித்தத்துக்கு ஏதுவாக இருக்கக்கூடிய ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். திடீரென வயிற்றுவலியோ, எரிச்சலோ ஏற்பட்டால் 
குளிர்ந்த பால், மாதுளைச்சாறு, ஓமவல்லி இலை, பெருஞ்சீரகம், மோர், வெல்லம், வாழைப்பழம் போன்றவற்றில் ஒன்றை உடனடி தீர்வுக்கு எடுத்துக்கொள்ளலாம்.’’

http://www.vikatan.com/news/health/90676-acidity-causes-symptoms-and-treatment.html

Link to comment
Share on other sites

கொழுப்பைக் குறைக்க தேங்காய்; இளமை நீட்டிக்க கொப்பரை; உடலுக்கு ஊட்டமளிக்க நீராபானம்!


‘தேங்காய் தின்னது ஒருத்தன், தெண்டங்கட்டுனது ஒருத்தன்', `தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமாம்' - தென்னை பற்றிய பழமொழிகள் இவை.

`தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி...' - 1984-ல் வெளிவந்த முடிவல்ல ஆரம்பம் படத்தின் பாடல் வரி இது. மனதுக்கு இதம் தரும் இந்தப் பாடல் வரி இன்றும் நெஞ்சில் நிழலாடுகிறது.

தென்னை

தென்னை... இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெறா (Cocos nucifera L.). இந்தியா மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்பில் வளரக்கூடிய தென்னையில் அனைத்து உறுப்புகளும் பயன்தரக்கூடியவை. சங்க நூல்களில் தென்னை மரத்தை தெங்கு என்றும், தாழை என்றும் அழைத்திருக்கிறார்கள். தென்னிந்தியா குறிப்பாக தென் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்களின் சமையலில் தேங்காய் முக்கிய இடம்பிடிக்கிறது.

இளநீர்

தென்னை மரத்தில் பூ பூத்து வளர்ந்த நிலையில் கிடைப்பது இளநீர். செவ்விளநீர், பச்சை இளநீர், சிவப்புநிற இளநீர் என வேறுபாடுகள் இருந்தாலும் இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, ஜமைக்கா, பிரேசில் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கும் இளநீரே சிறந்தவை. பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள புரதம் தாய்ப்பாலில் உள்ள புரதத்துக்கு இணையானது.

இளநீர்

இன்றைக்கு நம்மில் பெரும்பாலோரின் காலை உணவாக இளநீர் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் காலையில் வெறும் வயிற்றில் உண்பது ஏற்புடையதல்ல; உண்டால் வயிற்றில் புண்ணை உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், இளநீருக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. குறிப்பாக வாதம், பித்தம், கபம் போன்றவற்றை போக்கக்கூடியது; வெப்பத்தைத் தணிக்கக்கூடியது.  வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு, இளநீர் சிறந்ததொரு டானிக்காகச் செயல்படுகிறது.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது, இளநீரை உட்கொள்வதன்மூலம் நிவாரணம் கிடைக்கிறது. குறிப்பாக அவசர நிலையில் நரம்புகளின்மூலம் இளநீர் செலுத்தப்படுவதுண்டு. காலரா நோயாளிகளுக்கு, இளநீரின் வழுவழுப்புத்தன்மையும் உப்புத்தன்மையும் மிகவும் நல்லது. அம்மைநோய், வயிற்றுப்போக்கு காலங்களில் இளநீர் நல்ல மருந்தாகச் செயல்படும். மேலும், சிறுநீரகத்தை சுத்திகரிப்பதோடு விந்து எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும் இது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாகும். ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருள்களை அகற்றும் திறன் படைத்தது இளநீர்.  

தேங்காய்

தென்னையின் பழமே தேங்காய். இதைத் தெங்கம்பழம் என்றும் சொல்வார்கள். கெட்டியாக இருப்பதால் தேங்காய் என்றே அழைக்கிறார்கள். தேங்காயில் உள்ள ஃபேட்டி ஆசிட் (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக்கூடியது. உடல் எடையையும் குறைக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக Medium Chain Fatty Acid தேங்காயில் அதிகம் இருப்பதால் அது உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கிறது.

தேங்காய்

புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி' காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தேங்காய்ப்பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப்புண்ணுக்கு தேங்காய்ப்பால் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. தேங்காயை அரைத்து அதனுடன் நாட்டுச்சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்கும்.

கொப்பரை

தேங்காய் அளவுக்கு மீறி முற்றியிருந்தால் அதன் உள்ளே இருக்கும் நீர் முற்றிலும் வற்றிவிடும். இத்தகைய முற்றிய தேங்காயே கொப்பரை எனப்படும். நீர் முழுவதும் வற்றாத தேங்காயை வெயிலில் உலர்த்தி கொப்பரை ஆக்குவதும் உண்டு. அதிலிருந்தே எண்ணெய் எடுக்கப்படுகிறது. முற்றிய தேங்காய் ஆண்மையை பெருக்குவதோடு அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தாமதப்படுத்த உதவும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், வாரம் ஒருநாள் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து, ஊற வைத்து குளித்து வந்தால் பெண்களின் கூந்தல் வேர்க்கால்கள் பலமடைவதோடு, பொடுகுத்தொல்லை நீங்கும். முகம் பொலிவுப் பெற உதவும். கேரளத்துப்பெண்கள் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதோடு அன்றாட சமையலிலும் தேங்காய் எண்ணெயையே பயன்படுத்துகின்றனர்.

நீரா பானம்

நீரா பானம்

இவைதவிர நீரா என்ற பானம் தயாரிக்கப்படுகிறது. நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட ஒரு பானம். இது மலராத தென்னம்பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானம். ஆல்கஹால் இல்லாததால் உடல்நலனுக்கு ஊட்டமளிக்கும் நல்லதொரு பானமாகும்.

 

தென்னையில் இருந்து இன்னும் ஏராளமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. தென்னை விசிறி, குடிசை போட பயன்படும் தென்னை ஓலையால் பின்னப்படும் கிடுகு, தென்னை மட்டை, தேங்காய் ஓடு, தேங்காய் நார்க்கழிவு என தென்னையின் பல பாகங்களும் பல வழிகளில் மனிதனுக்குப் பயன்பட்டு வருகின்றன.

http://www.vikatan.com/news/health/90471-health-benefits-of-coconut-and-its-products.html

Link to comment
Share on other sites

ப்ரீ டயாபடீஸ்... அறிகுறிகள், பாதிப்புகள், தடுக்கும் வழிகள்..!

 
 

தும்மல், இருமல் எல்லோருக்கும் அவ்வப்போது வரும். ஆனால் டயாபடீஸ் எனும் சர்க்கரை நோயும் இன்றைக்குப் பெரும்பாலானோர் மத்தியில் பல்கிப்பெருகிக் கிடக்கிறது. முன்னொரு காலத்தில் அது வசதி படைத்தவர்களின் நோய் என்று சொல்லப்பட்ட காலம் மலையேறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக யாருக்கு வேண்டுமானாலும் வருகிறது. "மருத்துவத்துறையில் நவீன கண்டுபிடிப்புகள் வந்தபோதிலும் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு இந்நாள் வரை பதில் தேட வேண்டியிருக்கிறது. ஆகவே, 'வரும் முன் காப்பது சிறப்பு' என்பதே சர்க்கரை நோயைப் பொருத்தமட்டில் சாலச் சிறந்தது" என்கிறார் பொது நல மருத்துவர் மற்றும் சர்க்கரை நோய் நிபுணரான பாஸ்கர்.

ப்ரீ டயாபடீஸ்

டயாபடீஸ்

நமது வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின்மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.Dr. பாஸ்கர்

அதென்ன ப்ரீ டயாபடீஸ்?

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை ப்ரீ டயாபடீஸ் என்பார்கள். அதாவது ரத்த சர்க்கரையின் அளவு சாதாரண அளவைவிட சற்று அதிகமாக இருக்கும் நிலையை ப்ரீ டயாபடீஸ் என்பர். சரியான நேரத்தில் இதனைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை முறைகளும் பயிற்சியும் மேற்கொண்டால் ப்ரீடயாபடீஸிலிருந்து டைப்-2 சர்க்கரை (தேவைக்கும் குறைவாக இன்சுலின் சுரத்தல்) எனும் நிலைக்குச் செல்வதைத் தடுக்கலாம்.

அறிகுறிகள் என்னென்ன?

40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்வது நல்லது.

முடி உதிர்தல்

பாதிப்புகள் என்னென்ன?

முடி உதிர்தல், உடல் எடை குறைதல், கால் கை மரத்துப்போனதுபோன்ற உணர்வு, நரம்பு பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்படைதல், கண்கள் (குறிப்பாக ரெட்டினா பகுதி) பாதிப்படைதல், உடம்பில் எங்கேனும் அடிபட்டால் விரைவில் ஆறாத புண் போன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

காய்கறிகள்

எந்த மாதிரியான உணவு உட்கொள்ளலாம்?

கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் காய்கறிகள், நல்ல கொழுப்புள்ள அல்லது கொழுப்பு குறைவாக உள்ள உணவு வகைகள், பழங்கள் (குறிப்பாக கேரட், ஆரஞ்சு, மாதுளை முதலியவற்றை பழச்சாறாக அருந்தாமல் அப்படியே எடுத்துக் கொள்வதால் முழுமையான சத்துகளைப் பெற முடியும்). மருத்துவர் பரிந்துரைத்த பிரத்யேகமான ஃபுட் சார்ட் எனப்படும் உணவு அட்டவணையைப் பின்பற்றுதல் என்பது ப்ரீடயாபடீஸ் மற்றும் டயாபடீஸ் உள்ளவர்களுக்கு சிறந்தது.

பழங்கள்

எவற்றை தவிர்க்க வேண்டும்?

ஃபாஸ்ட் ஃபுட், அதிக கெட்ட கொழுப்புள்ள உணவு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பாஸ்ட் புட் உணவுகள்

என்ன மாதிரியான பயிற்சிகள் மேற்கொள்ளலாம்?

எளிய உடற்பயிற்சிகளே போதுமானது. வாக்கிங், யோகா போன்ற எளிய பயிற்சிகளே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இது மட்டுமல்லாமல் இவர்களுக்கு குடும்பத்தினரின் அன்பான ஆதரவும் தேவைப்படுகிறது.

யோகா

முறையான உணவு முறைகளும், சரியான பயிற்சியும் இருந்தாலே இந்தச் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். அப்படி வந்தாலும் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

http://www.vikatan.com/news/health/90542-how-to-prevent-prediabetes-and-its-symptoms.html

Link to comment
Share on other sites

மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

 

நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

மூளை

மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

மூளை

 

கண்கள்

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும். 

கண்கள்

பற்கள்

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

பற்கள்

நரம்புகள்

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம். 

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

ரத்தம்

ரத்தம்

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

நாவல் பழம், இலந்தைப் பழம் ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.

சருமம்

சருமம்

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.

இதயம்

நுரையீரல் - இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்சிச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

வயிறு

வயிறு

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.

வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

கணையம்

கணையம்

பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.

கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.

கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

 

கல்லீரல் - மண்ணீரல்

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

 

மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

பாதம்

பாதம்

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

 

பாதம், விரல் வலி சரியாகும்.

http://www.vikatan.com/news/health/90612-try-these-foods-to-strengthen-your-body-organs.html

Link to comment
Share on other sites

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!

 

இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து,  ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படிச் சாப்பிட்டால்தான் ஆரோக்யம் என்ற தவறான எண்ணமும்தான் இதற்குக் காரணம். `உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்’ என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம். 

உணவுகள் 

சிக்கன் 

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.

கீரை 

கீரை  

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ்  (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக   (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டை 

முட்டை

முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான் 

காளான் 

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை,  இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாப்பாடு 

சாப்பாடு

அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து,  ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு 

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.

எண்ணெய் 

சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும். 

பீட்ரூட் 

பீட்ரூட்

 

பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது. 

http://www.vikatan.com/news/health/91139-8-common-foods-you-should-never-reheat.html

Link to comment
Share on other sites

ஆசை ஆசையாய் தோசை சாப்பிடலாமா? - சில மருத்துவக் குறிப்புகள்!

மிகுந்த ரசனையும் உணவின்பால் பெரும் ஈர்ப்பும் கொண்ட ஒரு மனிதன்தான் தோசை என்கிற அற்புத உணவை வடிவமைத்திருக்க வேண்டும். `பலே’ போடவைக்கும் இதன் அபாரச் சுவை அப்படி! `தோசயம்மா... தோசய்...’ எனச் சிறு வயதில் மழலை மாறாமல் பாடிய பாடல், அந்திமக் காலம் வரை நினைவிலிருக்கும். அதற்கு, இதன் சுவை, வடிவம், அம்மாவின் கைப்பக்குவம், பால்யகால நினைவுகள், `எனக்குத்தான் முதல்ல’ என அக்காவுடன் மல்லுக்கு நின்றது... என எத்தனையோ காரணங்கள். பல குழந்தைகளுக்கு இட்லியைவிட இதன் மேல்தான் கொள்ளைப் பிரியம்.  

தோசை

இன்றைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் பல கையேந்தி பவன் கடைகளைப் பார்க்கலாம். மல்லிகைப்பூ இட்லிக்கு ஒருவகை ரசிகர்கள் என்றால், சின்ன இரும்புக்கல்லில் சுடச்சுடச் சுட்டுத்தரும் தோசைக்கு அதைவிட அதிக ரசிகர்கள். மிளகாய்ப் பொடி; கார, வெங்காய, புதினா, தேங்காய் சட்னிகள்; சாம்பார்... எனத் தோசைக்கேற்ற பக்குவமான பக்கவாத்தியங்கள். `இரண்டு சாப்பிடலாம் என முன்கூட்டியே தீர்மானத்துடன் போகிற ஒருவர், நான்கு, ஐந்து எனச் சாப்பிட்டிருப்பார். மதுரை மட்டுமல்ல... தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், சிறு நகரங்களில், கிராமங்களில் தோசைக்கான பிரத்தியேக அடையாளங்களுடன் பல கடைகள், ஹோட்டல்கள் இருக்கின்றன. நல்ல கடையாக, விசாரித்து, தேடிப்போய் சாப்பிடுகிற ரசிகர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள். கும்பகோணத்திலுள்ள ஒரு ஹோட்டலில் பெரிய வாழை இலையில் கொண்டு வந்து வைக்கும் இதன் அழகில் சொக்கிப் போய் படையெடுப்பவர்கள் ஏராளம். இதை `சாதா மாவு’, `ஸ்பெஷல் மாவு’... என்றெல்லாம் அழைப்பார்கள். சில ஊர்களில் ஊத்தப்பம் தாண்டிய தோசை வகையறாக்களை `ரோஸ்ட்’ என்று அழைப்பதும் உண்டு. சென்னையிலுள்ள விஜிபியின் பெயரைச் சொன்னாலே, அங்கே பரிமாறப்படும் மெகா தோசைதான் பலரின் நினைவுக்கு வரும். `முருகன் இட்லி’ கடையில் தோசையைச் சாப்பிடுகிறவர்களே அதிகம். ஈரோட்டில் ஒரு வகை, சிவகாசியில் வேறு தரம், திருச்சியில் ஒரு வகை, சென்னையில் புது தினுசு... எந்த ஊர், எந்த மண், எந்தத் தானியம் என்றாலும் இதன் மேல் மனிதர்கள்கொள்ளும் ஆசை கட்டுக்கடங்காததே! 

வீட்டு-தோசை

மசாலா, ஆனியன், ரவா, நெய் ரோஸ்ட், முட்டை, பொடி, கல், தக்காளி, வெந்தயம்... என எத்தனையோ வகைகள். சமீபத்தில் ஒரு நண்பர் ஏக்கமாகக் கேட்டார்... ``சென்னையில நல்ல செட் தோசை எங்கே கிடைக்கும்... உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?’’ நகரத்தின் அசுர வளர்ச்சியில், சென்னைவாசிகள் இழந்த எத்தனையோ அதிருசி அயிட்டங்களில் செட் தோசையும் அடக்கம். லேசாக மஞ்சள் கலந்த நிறம், அதன் உடம்பெங்கும் சிறு சிறு அழகான துளைகள்... ஒன்று வைக்கவேண்டிய இடத்தில் இரு தோசைகள்! `செட்’ என்றால், `இரண்டு’ என அர்த்தமாம். தொட்டுக்கொள்ள `வடகறி’ என்கிற அதிசயம். இன்றைக்கு வடகறி சென்னையில் பல இடங்களில் கிடைத்தாலும், செட் தோசையைக் காண முடியவில்லை. ஹோட்டல்களில் கேட்டால், இரண்டு ஊத்தப்பம் அல்லது கல் தோசையைக் கொடுத்து தொட்டுக்கொள்ள குருமாவைக் கொண்டு வந்து வைக்கிறார்கள். ஒரு காலத்தில் செட் தோசைக்கு குருமா கொடுத்தால், கொந்தளித்துவிடுவார்கள் நம் மக்கள். செட் தோசை-வடகறி காம்பினேஷன் எதனாலும் ஈடு செய்ய முடியாத அதிருசி. 

ஹோட்டலில் கிடைப்பது

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்து நடிகர் தங்கவேல் தொடங்கி, இன்றைய வடிவேலு வரை தோசையின் ருசியை, அருமையை, முக்கியத்துவத்தைப் பல காட்சிகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தென்னிந்தியா தொடங்கி, இலங்கை வரை புகழ்பெற்ற இந்த அற்புத உணவின் பூர்வீகம் எது என்பது வரலாற்று ஆய்வாளர்களுக்கே சிக்கலான ஒன்றாக இருக்கிறது; அனுமானத்தில்தான் சொல்லப்படுகிறது. உணவு வரலாற்றாளர் கே.டி.அச்சயா `இது தமிழ் மக்களுக்குத்தான் சொந்தம்; கி.பி. ஒன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் புழக்கத்தில் இருந்திருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு வரலாற்றாசிரியர் பி.தங்கப்பன் நாயரோ, `கர்நாடகாவில் இருக்கும் உடுப்பிதான் இதன் பிறப்பிடம்’ எனக் குறித்து வைத்திருக்கிறார். அனுமானம் எதுவாயினும், தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக இது பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதே நாம் பெருமைகொள்ளக்கூடிய சங்கதிதான். இலங்கையில் சமைக்கப்படும் பருத்தித்துறை தோசையை ருசிபார்த்தவர்கள், அதை மறக்கவே மாட்டார்கள். வழக்கமான சேர்மானங்களுடன் சிறிது பனங்கள்ளையோ, தென்னங்கள்ளையோ சேர்ப்பார்கள். பிறகென்ன.. தோசையின் மிருதுத்தன்மையும் சுவையும் `அடடா!’ போடவைக்கும். இன்னும் மங்களூர் மசாலாவில் ஆரம்பித்து இதன் அழகான வரலாற்றுப் பக்கங்களை அத்தியாயம் அத்தியாயமாக எழுதிக்கொண்டே போகலாம். 

ரவா

ராகி, கம்பு, சோளம், வரகரிசி... என அனைத்து ஆரோக்கிய தானியங்களிலும் தயாரித்து தோசையைக் கடைபரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் பல ஹோட்டல்காரர்கள். பல தானியங்களில் செய்யப்பட்டாலும், அரிசி, உளுந்து, சிறிந்து வெந்தயம் கலந்த மாவுதான் நம் தோசைக்கான ஸ்பெஷல் அடையாளம். தோசைக்கான சிறப்பு உணவுத் திருவிழாக்களைப் பல முன்னணி நட்சத்திர ஹோட்டல்கள் அவ்வப்போது நடத்துகின்றன. `என்ன சுட்டாலும் ஹோட்டல் தோசை பதம் நமக்குக் கைவர்றதில்லை’ என சில அலுத்துக்கொள்வதுண்டு. உண்மையில் ஹோட்டல் தோசையை ஒன்று, இரண்டுக்கு மேல் சாப்பிட முடியாது. வீட்டு தோசைக்குத் தொட்டுக்கொள்ள பொருத்தமான பதார்த்தங்கள் இருந்தால், வயிறு நிறையச் சாப்பிட முடியும். சரி... தோசையின் மேல் ஆசைப்படலாமா? பதில் சொல்கிறார் டயட்டீஷியன் அனிதா பாலமுரளி... அனிதா பாலமுரளி

“சுட்டிகளுக்குப் பிடித்த டிபன் வகைகளில் முதன்மையானது தோசை. சற்று முருகலாக, எண்ணெய் அல்லது நெய்விட்டு, தொட்டுக்கொள்ள தக்காளி, தேங்காய் சட்னி, சாம்பார் இருந்தால் ஒரு கை பார்ப்பார்கள். கோதுமை, கம்பு, ராகி, தினை... விதவிதமாக சுடப்படும் தோசைகள் ஒருபக்கம் இருக்கட்டும். பெரும்பாலும் அரிசியும் உளுந்தும் சேர்த்த மாவில் செய்து சாப்பிடுவதே அதிகம். அதிலும், நம் வீடுகளில் செய்பவற்றில் கல் தோசை போன்ற வடிவமே முக்கியமானதாக இருக்கிறது. 80 - 120 கலோரிகள், புரோட்டின் 1-3 கிராம், கொழுப்பு 3 கிராம், நார்ச்சத்து 1 கிராம், கார்போஹைட்ரேட் 17 - 30 கிராம் மற்றும் கால்சியம் 11 சதவிகிதம் உள்ளன. 

காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிட ஏற்றது தோசை. எளிதாக செரிமானமாகும். வயிறு நிறைந்த திருப்தியைத் தரும். இதிலுள்ள கார்போஹைட்ரேட் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரக்கூடியது. சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்களுக்குத் தேவையான புரோட்டீனை இது கொடுக்கும். இதில் அதிக புரோட்டீன் இல்லையென்றாலும், சைவப் பிரியர்களுக்கு இதிலிருக்கும் புரோட்டீனே போதுமானது. தோசை மாவில் சேர்க்கப்படும் சிறிதளவு உளுந்தே நம் எலும்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. 

செட் அல்ல

தோசையைப் பொறுத்தவரை இது நம் ஆரோக்கியத்துக்கு பங்கம் விளைவிப்பதில்லை. அதை நாம் சாப்பிடும் அளவில்தான் பிரச்னை. பக்க வாத்தியம்போல நல்ல சைடுடிஷ் அமைந்துவிட்டால், வீட்டு தோசையை எட்டுக்கு மேல் உள்ளே தள்ளுபவர்கள் இருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக இதைச் சாப்பிடுவதும் உடல்நலத்துக்கு நல்லதல்ல. அதேபோல மசாலா தோசை, நெய் தோசை போன்ற அதிக எண்ணெய், நெய், கலோரிகள் கொண்டவை உடலுக்கு ஏற்றதல்ல. சர்க்கரைநோயாளிகள் மசாலா தோசைப் பக்கம் போகவே கூடாது. அதிலும் ஓட்டலில் செய்ததென்றால் விலகி இருப்பதே உடம்புக்கு நல்லது. தோசைக்குத் தொட்டுக்கொள்ளப் பயன்படுத்தப்படும் தேங்காய் சட்னியும் அதிக கலோரி கொண்டது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் உள்ளவர்கள் தேங்காய் சட்னிக்கு `நோ’ சொல்லிப் பழகலாம். 

 

ஓட்ஸ், ராகி என ஆரோக்கியமான வகைகளில் தோசைகள் செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்குச் செய்யும்போது சத்தான காய்கறிகளை ஸ்டஃபிங் செய்து, தயாரித்துக் கொடுப்பது அவர்களின் ஊட்டச்சத்து அதிகரிக்க உதவும். முடிந்தவரை ஹோட்டல்களில் வாங்கிச் சாப்பிடாமல் வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு ஏற்றது. ரோட்டோரக் கடைகளில் விற்கப்படும் மாவை வாங்கி, வீட்டில் சுடுவதும் வேண்டாம். அவை தயாரிக்கப்படும் விதம், அவற்றின் தரம் ஆகியவற்றுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.’’ - அக்கறையோடு சொல்கிறார் அனிதா பாலமுரளி.

http://www.vikatan.com/news/health/90716-is-dosa-healthy-for-us.html

Link to comment
Share on other sites

வெந்நீர்... உடலுக்கு உரம்..! #HealthyDrink

 
 

‘அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு கூல்டிரிங்ஸோ, ஐஸ் வாட்டரோ குடிச்சாத்தான் தாகம் அடங்கும்...' இது பலரின் ஆர்வமாக மட்டுமல்ல, செயல்பாடுகளிலும் ஒன்றாகிவிட்டது. `அப்பப்பா என்னா வெயிலு... பேசாம ஃப்ரிட்ஜைத் திறந்து அதுக்குள்ள போய் உட்கார்ந்திரலாம்னு தோணுது' என்றும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இன்றைய இளைய தலைமுறையின் மத்தியில் இந்த கூல்வாட்டர் ஒரு ஃபேஷனாகிவிட்டது.

தண்ணீர் குடித்தல் 

ஜில் வாட்டர்... குளிர்ந்த நீரைக் குடித்தால் தொண்டைக்கு இதமாக இருப்பதால் அதையே மனம் விரும்புகிறது. பகல் நேரம் மட்டுமல்ல... ராத்திரி நேரத்தில்கூட ஐஸ் வாட்டரை `மடக் மடக்...' என்று குடிக்கும் சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், குளிர்ந்த நீரை அடிக்கடி அருந்துவது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடியது என்கின்றன ஆய்வு முடிவுகள். குளிர்ந்த நீர்தான் என்றில்லை... பச்சைத் தண்ணீர் என்பார்களே... அதாவது சாதாரண நீர், அதையும்கூட குடிப்பது நல்லதல்ல; `காய்ச்சிக் குடிப்பதே நல்லது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

வெந்நீர் 

நீரைக் காய்ச்சிக் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக நம் பாரம்பர்ய மருத்துவம் கூறுகிறது. வெந்நீரை எப்படியெல்லாம் குடிக்கலாம். அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் ரமேஷ்.சித்த மருத்துவர் ரமேஷ்

நீரைக் காய்ச்சிக் குடிப்பதுதான் சிறந்தது என்கிறது சித்த மருத்துவம். அதைத்தான், மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்று தேரையர் தனது 'பிணி அணுகா விதி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நீரைக் காய்ச்சியும் மோரை நீர் சேர்த்துக் கலந்தும் நெய்யை உருக்கியும் சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருள். மேலும், இயற்கை மருத்துவத்தில் வெந்நீரின் மகிமை பற்றி பேசும் ஏராளமான பாடல்கள் காணக்கிடக்கின்றன.

அப்படி பதார்த்த குண சிந்தாமணியின் ஒரு பாடலில்,

`நெஞ்செரிப்பு நெற்றிவலி நீங்காப் புளியேப்பம்

வஞ்சமுற வந்த வயிற்றுநோய் - விஞ்சியே

வீழாமக் கட்டோடு வெப்பிருமற் சுட்டநீர்

ஆழாக்குட் கொள்ள அறும்' என்று குறிப்பிட்டுள்ளது.

`வெந்நீர் அருந்துவதால் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் மறைந்து உணவு செரிமானமாகும். எந்த வகையான தலைவலியாக இருந்தாலும், மிதமானச் சூடுள்ள வெந்நீரைக் குடித்தால், நரம்புகளுக்கு இளக்கம் கொடுத்து, தலைவலியைக் குறைக்கும். அடிக்கடி வெந்நீர் குடித்துவருவதால் பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். வாய்வுப் பிரச்னைகள் குறையும். உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும்’ என்று கூறுகிறது இந்தப் பாடல். 

இது தவிர, வெந்நீர் குடிப்பதால், மலச்சிக்கல் தீரும்; உடல் எடை குறைக்க உதவும்; உண்ட உணவு எளிதில் செரிமானமாகும்; சளி, இருமல், தொண்டைப்புண் நீங்கும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும்; நரம்பு மண்டலத்தைச் சுத்திகரிக்கும்; பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய்க் கால வயிற்றுவலி நீங்கும்; முதுமையைத் தள்ளிப்போடும்; தோல் நலத்தைப் பாதுகாக்கும்; தொற்றுநோய்க் கிருமிகளை வெளியேற்றும்; முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்; பொடுகுத் தொல்லை நீங்கும்; முடியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும். 

சுடுநீர் 

இவை மட்டுமல்லாமல், `வெந்நீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றிக் குடிக்கிறோமோ அதற்கேற்ப பலன்கள் மாறுபடும்’ என்றும் சித்த மருத்துவம் கூறுகிறது. அதன்படி, தங்கப் பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றிவைத்துக் குடித்தால் வாத நோய், சுவையின்மை, உடல் உஷ்ணம், வெப்புநோய் போன்றவை நீங்கும்.

வெள்ளிப் பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி வைத்துக் குடித்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும். இரும்புப் பாத்திரம் ரத்தச்சோகை நீங்கச் செய்யும். நரம்புகள் உறுதியாகும். உடலின் வெப்பநிலையை சீராக்கும். காய்ச்சி ஆறவைத்த நீரைக் குடிப்பதால் விக்கல், பித்தநோய், காதுவலி, வாந்தி, மயக்கம், உடற்சூடு, வயிற்றுப்புண் போன்றவற்றைத் தீர்க்கும். உதாரணமாக ஒரு லிட்டர் நீர் எடுத்துக்கொண்டால் அதை கால் லிட்டராகும் வரை காய்ச்சிக் குடித்தால் உடற்சூடு நீங்கும். அரை பங்காகும் வரை காய்ச்சிய நீரை குடித்தால் வாதம், பித்தம் விலகும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் குடித்தால் வாதம், பித்தம், கபம் பிரச்னைகள் நீங்கும். மூன்றில் ஒரு பங்காகும் வரை காய்ச்சிய நீரைக் குடித்தால், உடல்சூட்டைக் குறைக்கும்; கடுமையான ஜுரம், வயிற்றுப்போக்கு, வாதம், பித்தம், கபம் பிரச்னைகளைப் போக்கும்.

சுடுநீர்

 

எட்டில் ஒரு பங்காகும்வரை காய்ச்சிய நீரை வெள்ளிப் பாத்திரத்தில் வைத்துக் குடித்து வந்தால், உடல் சூட்டைக் குறைக்கும்; நாவறட்சி, அல்சர், பித்தவெடிப்பு பாதிப்புகளை நீக்கும். அதேபோல, சாப்பிடுவதற்கு முன்னர் வெந்நீர் குடித்தால் உடல் இளைக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் பசியை மட்டுப்படுத்தும். சாப்பிட்ட பின்னர் வெந்நீர் குடிப்பது ஜீரண உறுப்புகளைத் தூண்டி, செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.

http://www.vikatan.com/news/health/91007-why-is-it-healthy-to-drink-hot-water.html

Link to comment
Share on other sites

தசை நார் பாதிப்பிற்குரிய சிகிச்சை

எம்மில் பல இளம்பெண்கள் தற்போது பெசன் என்று சொல்லிக்கொண்டு உயர்குதிகால் காலணியை அணிந்துகொள்கிறார்கள். முன்பெல்லாம் ஏதாவது விருந்து என்றால் மட்டுமே இதனை அணிந்தார்கள். தற்போது இதனை அடிக்கடி அணிந்து கொள்கிறார்கள். இதனால் இவர்களின் நடைமாறிவிடுகிறது. அதை விட பெரிய ஆபத்தைச் சந்திக்கிறார்கள். 

knee_pain.jpg

நடக்கும் போதோ அல்லது மாடிப்படிகளிலிருந்து இறங்கும் போதோ எதிர்பாராமல் நிலைதடுமாறி விழுந்துவிடுகிறார்கள்.இதனால் மூட்டுகளில் இருக்கும் தசை நார் கிழிந்துவிடுகிறது அல்லது விலகிவிடுகிறது அல்லது ஏதேனும் பாதிப்பிற்குள்ளாகிவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் லிகமெண்ட் டர் (Ligament Tear) என்று குறிப்பிடுகிறார்கள்.

எம்முடைய உடலில் உள்ள மூட்டுகளின் இணைப்புப் பகுதியில் இரண்டு எலும்புகளை ஒன்றிணைக்கும் தசை நார்கள் உள்ளன. இந்த தசை நார்கள் தான் நாம் நடக்கும் போதும், ஓடும் போதும், வேகமாக மாடிப்படி ஏறி இறங்கும் போதும் இரண்டு மூட்டு எலும்புகளையும் தாங்கிப் பிடித்து நகர்ந்துவிடாமல் பாதுகாக்கிறது.

விளையாட்டுவீரர்கள், நாட்டியத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் பயிற்சியின் தன்மையைப் பொறுத்து தசை நார்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தசை நார் பாதிக்கப்பட்டால் அங்கு உடனடியாக மூட்டுகள் இணையாமல் இருக்கும். இதனால் அப்பகுதியில் வீக்கம், வலி, அசைக்கமுடியாதிருத்தல் போன்றவை ஏற்படும்.

இதனிடையே எம்முடைய உடலில் உள்ள தசைநார்கள் இயல்பிலேயே நெகிழ்வு தன்மை கொண்டது. இருந்தாலும் அந்த நெகிழ்வு தன்மை முதுமை மற்றும் அதிகப்படியான பிரயோகத்தின் காரணமாக பாதிக்கப்படலாம். இவை பாதிக்கப்பட்டால் அவற்றின் நெகிழ்வு தன்மை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பாது. இந்நிலையில் உடனடியாக இதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அலட்சியப்படுத்தினாலோ அல்லது உடனடி நிவாரணத்தை எடுத்துக் கொண்டாலோ பாதிப்பின் வீரியம் அதிகமாக மூட்டு தேய்மான பிரச்சினை உருவாகக்கூடும். இன்றைய திகதியில் இதற்காகவே ஓர்த்றோஸ்கோப்பி சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இந்த சிகிச்சையின் மூலம் தசை நார்களின் பாதிப்பினை முழுமையாக சீராக்கலாம். அதே சமயத்தில் இவ்வாறான சிகிச்சையின் போது ஒரு மாத கால அளவிற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதனை புறகணிக்காமல் முழுமையாக பின்பற்றினால் இந்த பாதிப்பிலிருந்து குணமடையலாம்.

Dr.விஜய்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/20659

Link to comment
Share on other sites

உங்களை எழிலாக்கும் உறுதியாக்கும்... 8 எளிய வழிமுறைகள்!

 
 

எத்தனையோ

கவிதை எழுதினேன்...

என் கைகள்

அலுத்துப்போனது!

ஆனால், கவிதை

அசரவில்லை

உன் அழகை

வர்ணிக்க!

வார்த்தைகள்

ஒன்றன்பின்

ஒன்றாக வந்து

நிற்கின்றன!

- பெண்ணின் அழகை இப்படியொரு கவிஞன் எழுதி வைத்திருக்கிறான்.

ஆரோக்கியமான பெண்

பெண்களைப் பொறுத்தவரை நெட்டையோ, குட்டையோ, கறுப்போ, சிவப்போ, குண்டோ, ஒல்லியோ... எல்லாமே அழகுதான்! ஒவ்வொரு பெண்ணும் தனிப்பட்டமுறையில் அழகுதான் என்பதை மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும். `எந்த வகையிலும் நான் யாருக்கும் சளைத்தவள் அல்ல’ என்ற எண்ணம் இருக்க வேண்டும். அழகாக இருப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அழகைப் பின்னேவைத்து ஆரோக்கியத்தை முன்னேவைத்து வாழ்வோம்! ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெற சில மெனக்கெடல்கள் தேவைப்படுகின்றன. அவை பற்றிப் பார்ப்போம்.

தூக்கம் 

தூக்கம் அவசியம்!

ஆரோக்கியமான உடலுக்கு, சராசரியாக எட்டு மணி நேர தூக்கம் என்பது அத்தியாவசியமானது. அதிலும் பெண்களுக்கு 8-10 மணிநேரம் வரை தூக்கம் கண்டிப்பாகத் தேவை. முந்தைய நாள் இரவில் அமைதியான தூக்கம் இல்லையென்றால் கண்கள், முகம் என அனைத்திலும் சோர்வு தென்படும். இது அடுத்த நாள் வேலைகளில் சரியாகக் கவனம் செலுத்த முடியாமல் போவதற்குக் காரணமாகிவிடும். சிறந்த உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணி தூக்கம். ஆகவே, தூக்க நேரத்தை குறைத்துக்கொண்டு எந்த வேலையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

டானிங்-ஐ தவிர்க்க வேண்டும்!

பெரும்பாலானோர் வெயிலில் செல்லும்போது சன் ஸ்க்ரீன் லோஷன் அல்லது முகத்தைத் துணியால் மூடியபடி செல்வதே இல்லை. தோலானது வெயிலில் நேரடியாக படும்போது பர்ன் ஆகும். இதனால் இயல்பாக இருக்கும் நிறத்தில் இருந்து தோல் கறுத்துவிடும். மேலும், தொடர்ந்து வெகு நேரம் அல்லது நீண்ட நாள் சூரிய ஒளியில் தோல் பகுதியை வெளிக்காட்டுவதால், தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளதென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, முடிந்த வரை சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

வொர்க் அவுட் 

வொர்க்அவுட் செய்யுங்கள்!

உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது உடலைக் குறைப்பதற்காக அல்ல; ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் 20 நிமிடங்கள் வரை யோகா பயிற்சி அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான தேகத்துக்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியம் அவசியம்!

ஒல்லியாக இருப்பதும் ஆரோக்கியமாக இருப்பதும் வேறு வேறு! ஒல்லியாக இருப்பதைவிட எனர்ஜெடிக் ஆக, வலிமையாக, ஆரோக்கியமாக இருப்பதுதான் மிகவும் அவசியம். பருமனாக இருப்பவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைத்து, இருக்கும் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது.

தண்ணீர் 

தண்ணீர் அவசியம்!

உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதே. எனவே தினமும் எட்டு டம்ளர் அல்லது 2 - 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவும். இதன் மூலம் உடலை டீஹைட்ரேட் ஆகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

இன்ஸ்டன்ட் டயட் தவிருங்கள்!

பேலியோ, வேகன், லோ-கார்ப் போன்ற டயட்களை கடைப்பிடித்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உடல் எடையைக் குறைத்துவிட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் தவறான ஒன்று. உடல் எடையைக் குறைக்க, இத்தகைய இன்ஸ்டன்ட் டயட்களை மேற்கொள்வதால் உடலின் வழக்கமான செயல்முறை தடைப்படுவதோடு உடல் ஆரோக்கியம் இழந்து, மெலிந்து போகும்.

காலை உணவு 

காலை உணவு கட்டாயம்!

இன்றைக்கு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களிடம் இருக்கும் பொதுவான பழக்கம், காலை உணவைத் தவிர்ப்பது. நேரமின்மை, அசதி, பசியின்மை எனப் பல காரணங்களால் பலரும் காலையில் உணவு உண்பதில்லை. உண்மையில், இது மிகவும் ஆபத்தான பழக்கம். இதனால் உடலின் மெட்டபாலிசம் கெட்டுப்போய்விடும். ஆகவே, முடிந்த வரை காலை உணவைத் தவிர்க்காமல், ஏதேனும் ஒரு பழம் அல்லது பழச்சாறு அருந்த வேண்டும்.

உடலுக்கு வேலை கொடுங்கள்!

வேலைக்குச் செல்லும் பெண்களும், வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளும் சமையல் வேலை மற்றும் வீட்டு வேலைகள் முடிந்ததும் பல மணி நேரம் தூங்கிவிடுகிறார்கள். இதனால், உடல் அசைவற்று இருப்பதோடு கலோரியும் கரையாமல் தங்கிவிடுகிறது. இதுவே உடல் பருமனாவதற்குக் காரணம். எனவே, ஏதேனும் ஒரு வேலையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

 

இவற்றை ஒழுங்காகப் பின்பற்றினால், பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

http://www.vikatan.com/news/health/91437-natural-health-and-beauty-tips.html

Link to comment
Share on other sites

ஷிஃப்ட் முறை வேலை... உடல்நலம் பராமரிக்க செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை!

 
 

அண்ணாந்து பார்க்கவைக்கும் பிரமாண்ட கட்டடம்...  குளு குளு ஏசி வசதி... கைநிறையச் சம்பளம்... வீட்டு வாசலுக்கே வந்து ஏற்றிச்செல்லும் அலுவலக வாகனம்... `செமயா வாழ்றாங்கடா’ என்று ஐடி துறை பணியாளர்களைப் பற்றி பலர் கூறுவதைக் காதுபடக் கேட்டிருப்போம். அவர்களைப்போலவே வாழ்ந்து பார்க்க வேண்டும் எனப் பலரையும் ஏங்கவைக்கும் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறை. இப்படி, அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்க்கச் செய்வது 'ஒயிட் காலர் ஜாப்' எனப்படும் ஐடி துறையினரின் வேலை... ஷிஃப்ட் முறையில் பணிபுரியவேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு உண்டு.  

அசதி 

``பொருளாதாரரீதியாக, எங்கள் வாழ்க்கை முறையை அறிந்துவைத்திருப்பவர்கள், நாங்கள் சந்திக்கும் உடல்நல பிரச்னைகள், மனநலச் சிக்கல்கள் குறித்து பெரிதாகத் தெரிந்துவைத்திருப்பதில்லை’’ என்கிறார்கள் அந்தத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள். டார்க்கெட், டெட்லைன், ஷிஃப்ட், எப்போது தொடங்கும்-எப்போது முடியும் எனச் சொல்ல முடியாத நிர்ணயிக்கப்படாத வேலை நேரம்... என அவர்களின் புகார் பட்டியல் ரொம்பவே நீளம்.

இதில், நேரடியாக அவர்களின் உடல்நலத்தைப் பாதிப்பது 'ஷிஃப்ட்' எனப்படும் பணி நடைமுறை. ஷிஃப்ட் வேலையில் இருப்பவர்கள் செய்யும் முக்கியமான தவறுகள்... சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, போதிய அளவு நீர்அருந்தாதது, முறையற்ற தூக்கம் போன்றவைதான். இந்தத் தவறுகளால், செரிமானப் பிரச்னைகள் தொடங்கி உடற்பருமன், இதய நோய்கள் வரை ஏராளமான உடல்நலக் கோளாறுகளை இவர்கள் எதிர்கொள்ளவேண்டியதாகிவிடுகிறது. இந்தத் துறை மட்டுமல்ல... 24x7 என்னும் நடைமுறையைப் பின்பற்றும் பல அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நிலைமை இதுதான். இதில் கடுமையான, உடல் உழைப்பு செலுத்தவேண்டிய பணியில் இருப்பவர்களுக்குப் பசியிருக்கும்; களைப்பில் தூக்கமும் வரும். ஆனால், உட்கார்ந்தநிலையில் பெரிதும் உடல் உழைப்பு தேவைப்படாத வேலை செய்பவர்களுக்கு இதெல்லாம் ஏற்படாது. சாப்பாடு முதல் தூக்கம் வரை எதையும் முறையாகக் கடைப்பிடிக்க முடியாது. 

ஷிஃப்ட் வேலை

``நவீன வாழ்க்கை முறையில் ஷிஃப்ட் வேலை தவிர்க்க முடியாதாகிவிட்டதால், குறைந்தபட்சம் அதற்கேற்றாற்போல சில வாழ்க்கை டாக்டர் அருணாச்சலம்முறைகளை மாற்றிக்கொள்ளவேண்டியதும், சில நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதும் அவசியம். அப்போதுதான், உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்’’ என்கிறார் பொதுநல மருத்துவர் அருணாச்சலம். மேலும், அவற்றைப் பற்றி விளக்குகிறார்...  
 

உடலைப் புரிந்துகொள்வோம்!

நாம் எப்படி கடிகாரத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படுகிறோமோ அதுபோல, நமது உடல் உறுப்புகளும் உயிரியல் கடிகாரத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்குகிறது. அதாவது, இரவு, பகல் எனச் சுழற்சியை ஏற்படுத்தும் சூரிய வெளிச்சத்தை மையமாகக்கொண்டு இயங்கும் உடல் கடிகாரம். ஒவ்வோர் உறுப்பும் அதன் பணிகளைச் செய்துகொள்ள, உடல் செயல்பாடுகளைத் தூண்டும் ஹார்மோன்கள் அந்தந்தக் குறிப்பிட்ட நேரத்தில் சுரந்து உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.

தூக்கம் 

இதனால், நாம் உணவு உட்கொள்ளுதல், உழைத்தல், பின் ஆற்றல் குறைந்து களைப்பில் உறங்குதல் போன்ற உடல் செயல்பாடுகள் அனைத்தும் சரியாக நடக்கும். அப்போது, உடல் ஆரோக்கியம் காக்கப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளும் நல்ல வாழ்க்கையும் அமையும். ஆனால், பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட நவீன வாழ்க்கை முறையில் இயற்கைக்கு மாறாக வாழவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இருந்தாலும், பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி ஓரளவுக்கு உடல் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளலாம். முக்கியமாக, கண்டநேரத்தில் சாப்பிடுவது, தூங்குவது என மூளையையும் உடலையும் குழப்பக் கூடாது. 

தூக்கம்

தூக்கம், உணவு, பழக்கம்...

உடல் தன் ஆற்றலைப் புதுப்பித்துக்கொள்ள பெரியவர்களுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். அதில் 6 மணி நேரம் ஆழ்ந்த தூக்கமாக இருக்க வேண்டும். ஆனால், இரவு நேரப் பணி முடித்து வீடு திரும்பும் பணியாளர்கள், பகலில் நேரம் உள்ளது என்று ஒரே நேரத்தில் முழுமையாகத் தூங்காமல், இடையில் எழுந்து மதிய உணவு உண்பது வழக்கமாக இருக்கிறது. தூங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் அந்த நேரத்தில் உணவுக்குழல் ஓய்வெடுக்க வேண்டும். அந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது.

அதேபோல, இரவு நேரப் பணியின்போது, நள்ளிரவில் உணவு உண்ணவேண்டியதும், உணவு இடைவேளைகளில் டீ, காபி, மோர், ஜூஸ்... என ஏதாவது நீராகாரம் உட்கொள்ளவேண்டியதும் அவசியம். குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

வேலை 

பணியில் சிறிது ஓய்வு கிடைக்கும்போது சிறிது தூரம் நடந்துவிட்டு வருவது நல்லது.

பகலில் நேரம் கிடைக்கிறது என்று தூக்கத்தின் இடைப்பட்ட நேரங்களில் திரைப்படங்கள் பார்ப்பது, நண்பர்களைப் பார்க்கச் செல்வது எனச் சிலர் நேரத்தைச் செலவிடுவார்கள். இதனால், முழுமையான தூக்கம் பாதிக்கப்பட்டு, பணியில் கவனமின்மை, வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

தூங்கக்கூடிய அறையைக் கவனத்தில்கொள்ளவேண்டியது அவசியம். இரைச்சல் ஏதும் இல்லாத இருளான சூழலே ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். இருளாக இருந்தால்தான் உடலில் தூக்கத்தைத் தூண்டும் `மெலட்டோனின்’ (Melatonin) என்ற ஹார்மோன் சுரக்கும். 

இரவில் லேப்டாப் பார்த்தல் 

கணினி, செல்போன், தொலைக்காட்சி போன்ற அதிகம் ஒளிவீசும் பொருள்களைப் பார்த்துக்கொண்டிருந்தால், கண்களும் மூளையும் உடனே ஓய்வுநிலைக்குத் திரும்பாது. இது தெரியாமால், தூக்கம் வரவில்லை என்று மீண்டும் தொலைக்காட்சிப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். எனவே, தூங்குவதற்குத் தயாராவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர், இவற்றைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 

 

24 மணி நேரத்தை, மூன்று எட்டு மணி நேரங்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இதில் 8 மணி நேரத்தை வேலைக்கும், 8 மணி நேரத்தைத் தூக்கத்துக்கும் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். மீதமுள்ள 8 மணி நேரத்தை ஓய்வுக்காக, உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும். இரவு நேரப் பணி உள்ளிட்ட எந்த ஷிஃப்ட்டில் பணிபுரிந்தாலும், இதை இப்படியே பின்பற்ற வேண்டும்.

http://www.vikatan.com/news/health/91400-healthy-tips-for-shift-workers.html

Link to comment
Share on other sites

சூடு தணிக்கும், புண்களை ஆற்றும், மனக்கோளாறு நீக்கும் அகத்திக்கீரை!

 
 

அகத்தி... ‘செஸ்பேனியா கிராண்டி ஃப்ளோரா’ (Sesbania grandiflora) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட சிறுமரம். 63 வகை சத்துகள் அகத்திக்கீரையில் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் 8.4 சதவிகிதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம் கொழுப்புச்சத்து, 3.1 சதவிகிதம் தாதுஉப்புகள் மட்டுமல்லாமல் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துகளும் உள்ளன.

அகத்திக்கீரை

அகத்தி என்றால், `அகம் தீ’ என்பது பொருள். உள் உறுப்புகள் அனைத்திலும் தீயை உண்டாக்குவதுடன் அகத்தில் (இதயத்தில்) தீயை உண்டாக்கி, ரத்த ஓட்டத்தைச் சமப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்தைக் கொடுப்பதாலேயே `அகத்தி’ எனப்படுகிறது. மேலும், குறிப்பாக உடலின் உள் உறுப்புகளைச் சுத்தப்படுத்தும் பணியைச்செய்கிறது.

இது, பெரும்பாலும் கொடிக்கால்களில் வெற்றிலைக்கொடி படர்வதற்கும் மிளகுத் தோட்டத்தில் மிளகுக்கொடி படர்வதற்கும் வளர்க்கப்படுகிறது. அகத்தி, சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி, பேய் அகத்தி ஆகியவை இதன் குடும்பமாகும். பொதுவாக இதில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று, சிவப்பு நிற பூக்களைக்கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின் இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன.

செவ்வகத்தி

அகத்திக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால், உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். சிறுநீர், மலம் தாராளமாக வெளியேறும். மனக்கோளாறுகள் நீங்கும். அல்சர் என்னும் வயிற்றுப்புண் குணமாகும். சுத்தம் செய்யப்பட்ட கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்புண் சரியாகும்.

இந்தக் கீரையின் சாற்றை சேற்றுப்புண்களில் பூசிவந்தால், விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது கீரையை மட்டும் அரைத்துத் தடவிவந்தால், விரைவில் ஆறும். தேமல் வந்த இடங்களில் இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு வதக்கி, விழுதாக அரைத்துப் பூசி வந்தால் குணமாகும். இந்த கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.

அகத்திக்கீரையைப்போல பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்னைகள் சரியாகும். பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்தப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால், அவர்கள் உடம்பில் உள்ள விஷம் மலத்துடன் வெளியேறும். அதுமட்டுமல்ல புகைப்பிடிப்பதில் உள்ள ஆர்வமும் குறையும். அகத்திப்பூவுடன் மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும்.

அகத்திப்பட்டையை 50 கிராம் எடுத்து இடித்து, 8 டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி இரண்டு அவுன்ஸ் குடித்தால் அம்மை நோய் இறங்கிவிடும். விஷம் குடித்தவர்கள் இந்தக் கஷாயத்தைக் குடித்தால் விஷம் இறங்கிவிடும். இதேபோல் ஆண் - பெண் உறுப்புகளில் ஏற்படும் எரிச்சலையும் நீக்கக்கூடியது இது.

அகத்தி

வைகுண்ட ஏகாதசியின்போது இரவு முழுவதும் கண்விழித்திருப்பதால், உடல் சூடாகிவிடும். அதைத் தணிக்க, அதற்கு அடுத்த நாள் அகத்திக்கீரையைக் குழம்பாகச் செய்து சாப்பிட்டால் சூட்டைத் தணிப்பதுடன் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும். இதேபோல் இறந்தவர்கள் வீடுகளில் உடல் அடக்கம் நடக்கும் வரை பட்டினிகிடப்பார்கள். இதனால் உடல் சூடாவதோடு வருத்தத்துடன் இருப்பதால், ரத்த அழுத்தம் காணப்படும். இதற்கு நிவாரணம் பெற மறுநாள் கீரைச் சாம்பார் செய்து உண்பது வழக்கத்தில் உள்ளது.

 

அகத்தி, மருந்துகளை முறிக்கும் தன்மைகொண்டது. ஆகவே, சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக் கூடாது. பொதுவாக  இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மருந்தாகச் செயல்படவேண்டியது அதற்கு எதிராகச் செயல்பட்டு சொறி, சிரங்கை ஏற்படுத்திவிடும். அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது; மது அருந்திவிட்டும்  இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

http://www.vikatan.com/news/health/91526-agathi-cured-in-warmth-ulcer-and-depression.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.