Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு சில ஆலோசனைகள்! #MentalHealth

 
 

பாமரர்கள் மட்டுமல்ல... பலரும் ‘மனநோய்’ என்றாலே பைத்தியம் என்றுதான் நினைக்கிறார்கள். அந்த அளவுக்குத்தான் நம் மக்களிடையே மனநோய்குறித்த விழிப்பு உணர்வு இருக்கிறது. மனிதர்களுக்கு எந்தளவு உடல்நலம் முக்கியமோ, அந்த அளவுக்கு, ஏன்... அதைவிடவும் மனநலன் முக்கியம். நம்மில் பெரும்பாலோனோர் மனநலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டால், பெரும்பாலும் அது அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால், ஒருவர் மனநோயால் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டால், அது அவரையும் அவர் சார்ந்திருக்கும் குடும்பத்தினரையும் பெருமளவு பாதிக்கும். குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் இருப்பவர்களில் பெரும்பாலோனோர் ஒருவிதமான மனஅழுத்ததில் இருந்துகொண்டே இருப்பார்கள்.

மனநலம்

 

மனநோயால் பாதிக்கப்படுவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும். அதோடு, பசியின்மை, உடல் சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளும் உண்டாகும். சிலருக்கு கவலை, குற்றஉணர்ச்சி, பயம், கோபம், குழப்பம் இவையெல்லாம் ஏற்படலாம். மனநோயால் பாதிக்கப்பட்டவரோடு சேர்ந்து அவர் குடும்பத்தில் உள்ளவர்களும் வெவ்வேறுவிதமான பாதிப்புக்கு உள்ளாவார்கள். அவர்கள் பிறரோடு நடந்துகொள்ளும் முறையில், அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படும். சமூகத்தில் இருந்து சற்று விலகியிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வார்கள். இதற்கு முக்கியக் காரணம், மனநோய்குறித்த நம் சமூகத்தின் பார்வை, கருத்து, எண்ணங்கள்.  
இந்த விஷயத்தில், திரைப்படங்களின் பங்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது.

பெரும்பாலான திரைப்படங்களில் மனநோயாளிகளை, ஒரு கொலையாளிபோலவும், கொடூரமானவர்போலவும் சித்திரிகிறார்கள். உண்மையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் அப்படிப்பட்டவர் இல்லை. நம் சமூகத்தைப் பொறுத்தவரை, ஒரு வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்  இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர்களும் பலவிதமான இன்னலுக்கு ஆளாகிறார்கள். அந்த வீட்டை, ‘பைத்திக்காரன் வீடு’, `கிறுக்கன் வீடு’, `மென்டல் வீடு’, `லூசுப் பையன் வீடு’ என்றெல்லாம் அடைமொழிவைத்து அழைப்பார்கள். இது அந்த வீட்டில் உள்ளவர்களை மனதளவில் பெருமளவில் பாதிக்கும். மனநோய்க்கு ஆளானவர்களின் பல குடும்பங்கள் பணச்சுமைக்கும் உள்ளாகின்றன. பல நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரேகூட அவர்களின் மனநலப் பிரச்னைக்குக் காரணமாகிறார்கள்.

முறையற்ற வைத்தியங்களைச் செய்வதால் இந்தப் பிரச்னை உண்டாகலாம். மனநலம் பாதிக்கப்பட்டவர் ஓரளவுக்கு சகஜ நிலைமைக்கு திரும்பியவுடன், மருத்துவரைக் கேட்காமல் மருந்து, மாத்திரைகள் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவார்கள். இதனாலும் பாதிக்கப்பட்டவருக்கு மன நோய் திரும்ப வரலாம். இதன் மூலமாக அவரின் குடும்பத்தினருக்கும் மனநலத்தில் பாதிப்பு ஏற்படலாம்.  

மனநலம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அவரைப் பாதுகாப்பவர்கள் கவனத்தில்கொள்ளவேண்டிய சில முக்கிய விஷயங்கள்...

* மனநோயும் மற்ற நோய்களைப் போன்றதுதான். கடவுளின் சாபத்தாலோ அல்லது அவர்கள் முற்பிறவில் செய்த பாவங்களாலோ மனநல பிரச்னை வருவதில்லை. அது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் பிரச்னை. அதை முதலில் மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.

மனநலம்

* இன்று குடிக்கு அடிமையானவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டால், மருத்துவரிடம் சென்று குடிப்பழக்கத்தால்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டது என்று கூறுவார்கள். தவறான பழக்கவழக்கத்தில் ஈடுபட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அதற்காக வெட்கம்கொள்ளாமல், சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், மூளையில் இயற்கையாக ஏற்படும் ரசாயன மாற்றங்களால் உண்டாகும் மனநலப் பிரச்னைக்கு ஏன் வெட்கித் குனிய வேண்டும்... சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தயங்க வேண்டும்? இப்படித் தயங்கி சிகிச்சை எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டே இருந்தால், மனநோய் முற்றிவிட அதிக வாய்ப்பிருக்கிறது. ஆரம்பகட்டத்திலேயே, மனநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடனேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், பிற்காலத்தில் ஏற்படப் போகும் பிரச்னைகளைப் பெருமளவுக்குத் தவிர்க்கலாம்.

* முறையான சிகிச்சையை, சரியான தருணத்தில் தொடங்கினாலே மனநல பிரச்னை கட்டுக்குள் வந்துவிடும். மனநலம் பாதிக்கப்பட்டவரும் மற்றவர்களைப்போல் தங்கள் வாழ்க்கையை சாதாரணமாக நடத்தலாம்.

* பல மனநோய்கள் முறையாக மாத்திரை உட்கொள்வதன் மூலமே கட்டுப்படுத்தப்பட்டுவிடும். இதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.  பெரும்பாலான மனநோய்களுக்கு, தொடர்ச்சியாக மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலோனோர் செய்யும் தவறு மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு நாம் வாழ்நாள் முழுவதும் எப்படி மருந்து, மாத்திரைகளை உட்கொள்கிறோமோ அதேபோல் மனநல பிரச்னைகளுக்கும் உரிய மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும்.

* மனநலம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அவரைப் பாதுகாப்பவர்கள், அவர் எந்தவிதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும், அதன் அறிகுறிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவற்றைத் தெரிந்து வைத்துக்கொள்ளவதன் மூலம் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

* மனநலத்தில் கவுன்சிலிங்கின் பங்கு மிக முக்கியமானது. மனநல ஆலோசகரின் அறிவுரைப்படி செயல்பட்டால், பல தேவையற்ற நிகழ்வுகளைத் தவிர்த்துவிடலாம்.

மனநல சிகிச்சைகள்

* மனநல பிரச்னைக்கு உதவும் முக்கியமான சிகிச்சை `மின்னதிர்வு சிகிச்சை’. எளிய மொழியில் சொல்ல வேண்டும் என்றால், `கரன்ட் ஷாக்’ அல்லது `எலெக்ட்ரிக் ஷாக்.’ இன்றைக்கும் பலர் இந்தச் சிகிச்சையை தவிர்க்கிறார்கள். இதற்குக் காரணம் இதுதொடர்பாக வெளிவந்த பல திரைப்படங்கள். சினிமாவில் மின்னதிர்வு சிகிச்சை கொடுக்கும்போது அந்த நபர் மிகவும் துடிப்பதுபோலவும், கதறுவதுபோலவும் சித்திரித்திருப்பார்கள். இது மக்களிடையே ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அதில் துளி அளவும் உண்மையில்லை. ஒரு சாராசரி மனிதன் கையால் தொட்டு உணரக்கூடிய அளவிலான மிகச் சிறிய மின்னூட்டம் அளவுக்கு மட்டுமே சில மில்லிசெகண்டுகள் மயக்கநிலையில் செலுத்தப்படும். இந்தச் சிகிச்சையை எடுப்பதன் மூலம் வெகு விரைவாக மீண்டும் பழைய நிலைமைக்குப் பாதிக்கப்பட்டவர் திரும்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

* கவனிக்கவேண்டிய மிக முக்கியமான ஒன்று... ஒவ்வொரு முறையும் மாத்திரை உட்கொள்வதைவிட்டவுடன் நோய் திரும்பத் தோன்றும்போது, அதன் சிகிச்சைக் காலமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதுபோல அவரின் செயலாற்றலும் குறைந்துகொண்டே போக வாய்ப்பிருக்கிறது. இதுவே மனநலப் பிரச்னையின் சீற்றம் அதிகமாக ஆவதற்குக் காரணம்.

மனநலம் பாதிக்கப்பட்டவரை அவரின்  குடும்பத்தினர், பாதுகாப்பவர்கள் முறையான சிகிச்சையை, மருத்துவரின் அறிவுரைப்படி கொடுப்பதன் மூலம் அவரின்  மனநிலையைப் பேணி காக்கலாம்.

 

நம் சமூகத்தின் பங்கும் இதில் மிக முக்கியமானது. மனநலம் பாதிக்கப்பட்டவரை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்காமல், அவரையும் சக மனிதராக நினைக்க வேண்டும், நடத்த வேண்டும். மனிதர்களை நேசிப்போம்... மனநலம் காப்போம்!

https://www.vikatan.com/news/health/108239-tips-on-communicating-with-a-mentally-ill-person.html

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

உணவுப் புரட்சியின் மாயவலை..! துரித உணவுகள் வேண்டாமே #FastFoodAlert

துரித உணவுகள்... இவற்றின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க, மேலை நாடுகளே இயற்கையான உணவுகளைத் தேடத் தொடங்கிவிட்டன. நாமோ இன்னமும் ஃப்ரைடு ரைஸ், பர்கர், பீட்ஸா... போன்ற துரித உணவுகளின் மாயவலையில் சிக்கிய மான்களாக அவதிப்படுகிறோம். விரைவில் இந்த மாயவலையைக் கிழித்துக்கொண்டு வெளிவராவிட்டால், நோய்களின் கூடாரமாக மாறிவிடும் நமது உடல்.

துரித உணவுகள்

 

வரலாற்றுப் பாதை:

துரித உணவுகளின் வரலாற்றுப் பாதையை உற்று கவனித்தால், அவற்றுக்கும் நமது வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. வேறு சூழலில் வாழும் மக்களின் உணர்வுடனும் வாழ்வுடனும் தொடர்புகொண்டிருக்குமே தவிர, நமது வாழ்வுக்கும் உணர்வுக்கும் அவற்றோடு எந்தச் சம்பந்தமும் இருக்காது. ஆனால், இப்போது இருக்கும் நிலைமையைப் பார்க்கும்போது, சீராக பயணித்துக்கொண்டிருக்கும் நமது உணவு வரலாற்றுப் பாதை, இனி திசைமாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படத்தான் செய்கிறது. நமது பாரம்பர்ய வரலாற்றுப் பாதையில் பயணித்து வரும் உணவுகள், நிச்சயமாக நோய்களை உண்டாக்காது. ஆனால், சமீபத்தில் நுழைந்து உணவுப் புரட்சி ஏற்படுத்திக்கொண்டிருக்கும் துரித உணவுகள் உண்டாக்கும் நோய்களோ எண்ணிலடங்காதவை.

வாலிபருக்கு மாரடைப்பு!

சத்துக்கள் நிறைந்த நமது பாரம்பர்ய உணவுகளை அடித்து விரட்டிவிட்டு, துரித உணவுகளைப் பெருமைப்படுத்துகிறோம். `மினி சைஸ் சீஸ் சாண்ட்விச்’, `மீடியம் சைஸ் பர்கர்’, `லார்ஜ் சைஸ் ஃபேமிலி பீட்ஸா’... என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சைஸ் வாரியாகப் பிரித்து உண்கிறோம். நோய்களோ குழந்தைகள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமெல்லாம் பார்ப்பதில்லை. எழுபது வயது முதியவர் மாரடைப்பால் மரணம் என்பதற்கும், இருபத்தைந்து வயது வாலிபர் மாரடைப்பால் மரணம் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது?! தவறான உணவுப் பழக்கத்தால், இளம் வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படும் அதிர்ச்சியான செய்திகள் நமது செவிகளில் கேட்கத் தொடங்கிவிட்டன. தவறான உணவுப் பட்டியலில், துரித உணவுகள் முக்கிய பங்கு வகிப்பவை.

உடல்பருமன்

உடல்பருமன்:

துரித உணவுகள் நமது சுவை உணர்ச்சிகளுக்கு மகிழ்ச்சியூட்ட மட்டும் தயாரிக்கப்படுபவை. உடல்நலத்தை மேம்படுத்தக்கூடிய எந்தவிதமான ஆரோக்கியக் கூறுகளும் அவற்றில் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. கலோரிகள் நிறைந்த உணவுகளாக இருப்பதால், உடலை விரைவாக பருக்கச் செய்யும் திறன் வாய்ந்தவை. உடல்பருமன் நோய் அதிகரிப்பதற்கு இவை முக்கியப் பங்காற்றுகின்றன. ஒரு முழு பீட்ஸா உட்கொண்டால், உடலில் சேரும் கலோரிகளைக் கரைக்க பல கிலோமீட்டர் தொலைவு வேகமாக ஓடவேண்டியிருக்கும். நாம் முதலில் சில மீட்டர்களாவது தினமும் நடக்கிறோமா என்பதே கேள்விக்குறி. பின் எப்படித் தேவையில்லாமல் அதிகரித்த கலோரிகளை வெளியேற்றுவது. இந்த கலோரிகள், உடலில் கொழுப்பு சேர்மானத்தை அதிகரிக்கச்செய்து, கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும்.

சர்க்கரைநோய்... ஊட்டசத்துக் குறைபாடு!

அவசரத்துக்கு ரெடிமேடாகக் கிடைக்கும் துரித உணவுகள், அவசர அவசரமாக நோய்களை உண்டாக்கும். இன்சுலின் சுரப்பதில் பாதிப்பை உண்டாக்கி, சர்க்கரைநோயை துரித உணவுகள் உண்டாக்குவதாக அமெரிக்காவின் `National Institutes of Health (NIH)’ வெளியிட்ட ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. பத்து வயது சிறுவனுக்குக்கூட இரண்டாம் வகை சர்க்கரைநோய் (Type – 2 Diabetes) வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். பிள்ளைகள் தொடர்ந்து துரித உணவுகளைச் சாப்பிடும்போது, உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல், ஊளைச்சதை மட்டுமே வளரிளம் பருவத்தில் அதிகரிக்கும். உடல் வளர்ச்சிரீதியில் பல செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

பீட்ஸா, பர்கர்

சமாதானம் செய்ய பீட்ஸா, பர்கர்!

பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த, பள்ளிக்குப் போகும் வழியில் பீட்ஸா, பர்கர்களை வாங்கிக் கொடுக்கும் சில பெற்றோர்கள், தங்கள் வழிமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. நீங்கள் குழந்தைகளைச் சமாதானப்படுத்துகிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களுக்கு நோய்களை வாங்கிக் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு எதிரி ஆகலாமா? ’இன்னைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வா, ஈவினிங் உனக்கு ஒரு பர்கர் வாங்கித் தரேன்’ என்று பர்கர்களை ஊட்டி வளர்த்தால், பர்கர் போன்ற உருண்டையான தோற்றத்தில் உங்கள் குழந்தைகளை விரைவில் பார்க்கலாம். கண்டிப்புடன் இவை போன்ற உணவுகளுக்கு தடை விதிப்பதில் எந்தப் பாரபட்சமும் பெற்றோர்கள் காட்டக் கூடாது.

உப்பு… வெள்ளை சர்க்கரை…

துரித உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்தக் குழாய்களில் கொழுப்புத் திட்டுக்கள் படிந்து, அவற்றின் சுற்றளவைக் குறுக்கி, குருதி சுற்றோட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி, இதய நோய்களை உண்டாக்கும். இதிலிருக்கும் உப்புகள் காரணமாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில் நேரடியாக உப்பின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும் நடுவயது உயர் ரத்த அழுத்த நோயாளிகள், மறைமுகமாக உப்புகள் நிறைந்த துரித உணவுகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்வது அறியாமை. அளவுக்கு அதிகமாக உப்புகளோடு வெள்ளைச் சர்க்கரையும் கலந்த சுவையூட்டும் உணவுகள், மனதுக்கு களிப்பை உண்டாக்கி, ஆரோக்கியத்துக்கு வேட்டுவைத்துவிடும்.

வெள்ளை சர்க்கரை

ஹார்மோன்கள் பாதிப்பு!

ஹார்மோன் சமநிலையைத் தகர்த்து, உடலின் செயல்பாடுகளில் பல்வேறு மாறுதல்களை துரித உணவுகள் உண்டாக்கிவிடுகின்றன. இளம் பெண்களுக்கு சினைப்பைக் கட்டிகள் அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காரணம் ’ஜங் ஃபுட்ஸ்’ எனப்படும் துரித உணவுகள்தாம். எள்ளுருண்டைகளையும், உளுத்தங்களியையும் அதிகமாகச் சாப்பிட்ட முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு சினைப்பைக் கட்டிகள் என்றால் என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை.

பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகள்...

முறையான உணவியலை கற்றுக்கொடுக்கவேண்டிய பள்ளிகள், தவறான உணவுகளை அறிமுகப்படுத்துகின்றன. சில பள்ளி கேன்டீன்களில் அதிகம் விற்பனையாகும் சிற்றுண்டி பீட்ஸாவாகத்தான் இருக்கிறது. எண்ணெயில் பொரித்த சிப்ஸ் வகையறாக்களும், பாட்டில்களில் அடைக்கப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்களும், சீஸ் தடவிய பர்கர், பீட்ஸாக்களும் சில பள்ளிகளின் உணவுப் பட்டியலில் தவறாமல் இடம்பெறுகின்றன. அதுவே மறுபுறம், அரசுப் பள்ளிகளில் இருக்கும் சத்துணவு கேன்டீன்களில் கிடைக்கும் கீரைகளும், காய்களும், முட்டைகளுமே எளிமையான சிறந்த தேர்வு.

உணவியல் கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் தேவை!

லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு கல்வி கற்றுக் கொடுக்கும் பல தனியார் பள்ளிகள், உணவு விஷயத்தில் தேர்ச்சி பெறுவதில்லை. பள்ளிப் பருவத்தில் கற்றுக்கொண்ட தவறான உணவியல் பழக்கம், வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. முறையற்ற உணவியலைக் கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் படிக்கும் நிறைய குழந்தைகளுக்கு உடல்பருமன் பிரச்னை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கல்வியோடு சேர்த்து, உணவியலையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை நாடுவது சிறந்தது. ’துரித உணவுகளை அறிமுகப்படுத்தாமல் வளர்த்தாலும், பள்ளிகளில் துரித உணவுகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர்’ என்பது பெற்றோர்களின் ஆதங்கம். இப்போது துரித உணவுகளுக்கும், பன்னாட்டுக் குளிர்பானங்களுக்கும் பல பள்ளி வளாகங்களில் தடைவிதிக்கத் தொடங்கியிருப்பது ஆறுதல் தரக்கூடிய விஷயம்.

 

பீட்ஸா, பர்கர்களில் இருக்கும் அசைவத் துண்டுகள் எப்போது சமைக்கப்பட்டது என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியுமா? துரித உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயனங்களால் நமது உடலில் உண்டாகும் மாறுதல்களை அறிந்துவைத்திருக்கிறோமா? ஒரு மனித உடலுக்குள், பல வகையான நோய்கள் வாடகையின்றி குடியிருப்பதற்கான காரணத்தை ஆராய்ந்தோமா? உடல் உழைப்புமில்லாமல், உணவுத் தேர்வும் சரியாக இல்லாமல், அறியாமையால் நமது உடலைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கிறோம். மாற்றம் தேவை. கொஞ்சம்கூட யோசிக்காமல், துரித உணவுகளை நம் எண்ணங்களில் இருந்து அழித்தாக வேண்டும். ஒவ்வொருவரும் துரித உணவுகளின் பாதிப்புகளைப் பிறருக்கு எடுத்துக்கூறுவது சமுதாயத்துக்கு செய்யும் நல்ல சேவையாக இருக்கும். தவறான உணவியலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு சமூக சேவை செய்வோம்!

https://www.vikatan.com/news/health/108273-which-fast-food-restaurants-are-the-most-unhealthy.html

Link to comment
Share on other sites

நடைப்பயிற்சி, சுடுநீர் ஒத்தடம், நுணா இலைக் குளியல்... முதுமைக்கால மூட்டுவலியைப் போக்க சில ஆலோசனைகள்!

 
 

முதுமைக் காலங்கள் இனிமையானவை. ஆனால், நோய் நொடியின்றி மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் இந்தக் காலங்கள் கழிய வேண்டும். `வயதாகிவிட்டதே...' என்று சோர்ந்து போகாமல் உடல் நலனில் அக்கறை செலுத்தினால் முதுமை இனிமையாகக் கழியும்.  

`எனக்கு வயதாகி விட்டது. இனிமேல் எப்படி நாள்களைக் கடத்துவது? எனது உடல்நிலை மட்டுமல்ல... மன நிலையும்கூட கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது?' - 50 வயதைக் கடந்த பலருக்கு இதுபோன்ற  எண்ணங்கள் எழுவது இயல்பு.

 

முதுமை

ஆடி ஓடிக் களைத்த கால்கள் ஓய்வு கேட்கும். கை நிறைய காசு இருந்தாலும் மனம் ஆசைப்பட்ட இடத்துக்குச் செல்ல உடல் ஒத்துழைப்பு தராமல் போகும். மனதளவில் தனிமை சூழும். வேலை செய்து ஓய்வு பெற்றோருக்கு, வேலை இல்லை' என்ற ஏக்கமும் சளி, காய்ச்சல், தலைவலி வந்தால்கூட தனக்கு ஏதோ பெரிய நோய் வந்துவிட்டதைப் போன்ற உணர்வும் உண்டாகும். 

ஓய்வுபெற்ற முதியவர் ஒருவரது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். ஓய்வுபெற்ற ஆறாவது மாதத்தில் ஒருநாள் சளி, இருமலால் மிகுந்த அவதிப்பட்டார். அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இப்போது இந்த மழைக் காலம் தொடங்கியதும் சளியின் தொடர்ச்சியாக வறட்டு இருமல் ஏற்பட்டது.  மீண்டும் நமக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டதோ? என்ற பயத்துடன் என்னிடம் வந்தார். அவரிடம், தினமும் செய்யும் வேலைகளை கேட்டறிந்தேன். 

தினமும் அதிகாலையில் கண்விழிக்கும் அவர், இரண்டு மைல் தூரம் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கூடுதலாக தினமும் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும்படி கூறினேன்.  உணவு முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னேன். இப்போது குணமடைந்து வருகிறார்.

முதுமையில் நடைப்பயிற்சி

பொதுவாக இதுபோன்ற சூழல்களில் அவர்களுக்குத் தேவை அவர்களது மனதில் இருக்கும் பயத்தை போக்குவதுதான். நிறைய குழப்பங்கள் இருக்கும். அவற்றையும் உடல் நிலை பற்றிய சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினால் முதுமைக்காலங்கள் இனிமையாகும். மன ஆரோக்கியத்துக்கு தினமும் மூச்சுப்பயிற்சி, தியானப் பயிற்சி, இசைப் பயிற்சி, யோகா பயிற்சி செய்ய வேண்டும். மேலும், மனதுக்குப் புத்துணர்ச்சி தரும் இடங்களுக்கு சுற்றுலா செல்வது, பிரார்த்தனைகளில் ஈடுபடுவதுடன் நெடுங்காலமாகச் செய்ய விரும்பிய சில நற்காரியங்களை இந்த ஓய்வுக் காலங்களில் செய்யலாம்.  

வயதானவர்கள் தங்களை அதிகமாகப் பாதிக்கும் பிரச்னைகளாகச் சொல்வது, முழங்கால் வலி, இடுப்பு வலி, தூக்கமின்மை, பசியின்மை போன்றவற்றையே. அதுவும் இந்த மழை மற்றும் குளிர் காலங்களில் ஒவ்வொரு மூட்டுகளாக வலி வந்து படுத்தி எடுக்கும். இதுபோன்ற வலிகளில் இருந்து விடுபட சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.  

· அதிகாலையில் வலி அதிகமாக இருக்கும். அதேபோல் மாலை நேரங்களில் பனிப்பொழிவு ஆரம்பிக்கும்போது வலி அதிகரிக்கும். அத்தகைய சூழலில் உடலை தளர்வுபடுத்தும் பயிற்சிகள் செய்யலாம். 
·    சுடுதண்ணீர் ஒத்தடம் நல்ல பலன் தரும். மூட்டுகளுக்கு எண்ணெய் தடவி 30 நிமிடங்கள் கழித்து ஒத்தடம் கொடுக்கலாம். 
·     இஞ்சிக் கஷாயம் வலிகளுக்கு உதவும். இவை மூட்டுகளில் சேரும் நீரை வெளியற்ற உதவுகிறது. 
·    எளிதாக செரிமானமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 
·    தினமும் குளிப்பதற்கும் சுடுதண்ணீர் பயன்படுத்தலாம். இவை உடல் வலியைக் குறைக்கும்.

யோகா

மழைக் காலங்களில் சளி, வறட்டு இருமல், தும்மல், தொண்டையில் தொற்றுவரும். சில நேரங்களில் காய்ச்சல் வரும். இவற்றிலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
·    நான்கு துளசி இலைகளை தினமும் மென்று சாப்பிடலாம்.
·     எலுமிச்சைப் பழம் அல்லது தேனை சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். 
·    அதிமதுரம் பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம். 
·    தேனை, நாவால் எடுத்துச் சாப்பிட்டால் வறட்டு இருமல் குறையும். 
·    உணவுடன் குறைந்த அளவு நெய் சேர்த்துச் சாப்பிடுவது இருமலைக் கட்டுப்படுத்தும்.
இவற்றையெல்லாம் கடந்து, வயதானவர்கள் தினமும் ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இவற்றில் சிறந்த பயிற்சியாக நான் பரிந்துரைப்பது யோகா பயிற்சிகளைத்தான். இவை எளிமையானதாக இருப்பதுடன் உடலுக்கும், மனதுக்கும் ஏற்ற பயிற்சியாக இருக்கும். 

 

இவைதவிர யூகலிப்டஸ், நொச்சி போன்ற மூலிகைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளிப்பது நல்லது. வாதநாராயணன் இலைகளுடன் நுணா இலையைச் சேர்த்தும் கொதிக்க வைத்துக் குளிக்கலாம். இவை கை-கால், மூட்டுகளில் வரும் வீக்கம், வலி போன்றவற்றில் இருந்து விடுபட உதவுவதுடன் வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் விரட்டும்.
கோதுமை மாவை வெறுமனே சட்டியில் போட்டு வறுத்து அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிடுவது மூட்டு வலி பாதிப்புகளில் இருந்து நிவாரணம் தரும். வலி உள்ள இடங்களில் வேப்பெண்ணெயை சூடுபடுத்தி தேய்த்து அதன்மீது ஒத்தடம் கொடுத்துவந்தாலும் இதம் தரும்.

https://www.vikatan.com/news/health/108667-tips-to-lead-a-healthy-older-adulthood.html

Link to comment
Share on other sites

பார்வையை மீட்டெடுக்கும் நவீன சிகிச்சை

 

குருதி அழுத்தம், விபத்து மற்றும் நீரிழிவு போன்றவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட பார்வையை மீட்டெடுக்க ஹைப்பர்சானிக் விட்ரெக்டமி சிஸ்டம் என்ற நவீன சிகிச்சை அறிமுகமாகியிருப்பதாக சென்னையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவ நிபுணர் டொக்டர் அமர் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் அவர் விவரிக்கையில், இரத்த அழுத்தம் காரணமாக அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த வனிதா என்ற பெண்மணிக்கு இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது. அவரது கண் பார்வையை மீட்டெடுப்பதற்காக நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்ணில் இரத்த அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை சீராக்க தற்போது நவீன சிகிச்சையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹைப்பர்சானிக் விட்ரெக்டமி சிஸ்டம் என்ற கருவியைக் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதன்போது அல்ட்ரா சவுண்ட் மூலம் அவரது இடது கண்ணில் இருந்த ரத்த அடைப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்தது.

அத்துடன் இரத்த அழுத்தம் மட்டுமில்லாமல் விபத்து மற்றும்  சர்க்கரை நோயின் காரணமாக பார்வை பாதிக்கப்பட்டால் இந்த நவீன சிகிச்சை மூலம் இழந்த பார்வையை மீட்டெடுக்க இயலும்‘ என்றார்.

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/27610

Link to comment
Share on other sites

எடை குறைக்கும்... உடலை உறுதியாக்கும் அதிகாலை உடற்பயிற்சிகள்! #VikatanPhotoStory

 
 

ரு நாளை உற்சாகமாகத் தொடங்குவது இனிது! தொடக்கம் சிறப்பாக இருந்தால், அன்றைய தினமே மகிழ்ச்சிகரமாக இருக்கும்.  நாள் முழுக்க உடலும் மனமும் புத்துணர்ச்சியோடும் சுறுசுறுப்போடும் இருக்க உதவுவது உடற்பயிற்சி. `உடற்பயிற்சி செய்யவேண்டுமா..’ என்கிற சலிப்போடு செய்யாமல், ஆர்வத்தோடு சில பயிற்சிகளைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நம் உடலுக்கும் மனதுக்கும் நாள் முழுவதும் எனர்ஜி தரும் காலை நேரத்தில் செய்யவேண்டிய சில உடற்பயிற்சிகள் இங்கே... 

ஜம்ப் அண்ட் ஸ்குவாட்

 

ஜம்ப் அண்ட் ஸ்குவாட் (Jump and Squat)
தரையில் நேராக நின்று, இரு கைகளையும் கோத்து மார்புக்கு முன்பாக வைக்க வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் உடலை பேலன்ஸ் செய்தபடி இருக்க வேண்டும். பிறகு, அப்படியே மேல் நோக்கிக் குதித்து, மீண்டும் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், 15 முறை செய்ய வேண்டும்.
 

பலன்கள்:  
சீரான இதயத் துடிப்புக்கு உதவும். 
உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கும்.
காலின் வடிவமைப்பை மேம்படுத்தும்.

உடற்பயிற்சி

சுமோ ஸ்டெபிலிட்டி ஹோல்டு (Sumo Stability Hold)
கால்களை நன்றாக விரித்து நேராக நிற்க வேண்டும். கைகளில், இரண்டு டம்பிள்ஸை ஏந்தியபடி, தாடைக்கு அருகே வைக்க வேண்டும். இப்போது, நாற்காலியில் உட்காருவதுபோல, உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது, சுமோ வீரரைப் போன்ற தோற்றம் கிடைக்கும். இப்படி 15 முறை செய்ய வேண்டும்.
 

பலன்கள்:
உடலை உறுதியாக்கும்.
இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைத்து, ஃபிட் ஆக்கும்.
கால்களில் ஏற்படும் நடுக்கம் குறையும்.

லஞ்சஸ்

லஞ்சஸ் (Lunges)
தரையில் நேராக நிற்க வேண்டும். பின், இரண்டு கால்களையும் முன் பின்னாக நன்கு விரித்துவைக்க வேண்டும். இப்போது, வலது காலைச் சற்று முன் நோக்கி மடக்கி, இடது காலை முட்டியிட்ட நிலையில்வைத்திருக்க வேண்டும். சில விநாடிகள் கழித்து, படிப்படியாக மீண்டும் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று, இடது காலை மடக்கி, வலது காலை முட்டி போட்ட நிலையில் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி 15 முறை செய்ய வேண்டும்.
 

பலன்கள்:
உடலில் அதிகமாக உள்ள கலோரியின் அளவைக் குறைக்கும்.
கால் மற்றும் முட்டியின் வலிமை அதிகரிக்கும்.
கால்களில் உள்ள தசைப்பகுதி வலுவடையும்.

ஏரோ பாக்ஸிங்

ஏரோ பாக்ஸிங் (Aero Boxing)
இடது காலை முன்புறம் வைத்து நேராக நிற்க வேண்டும். கைகளில் டம்பிள்ஸை எடுத்து, கழுத்துப் பகுதியின் அருகே பிடிக்க வேண்டும். ஒரு குத்துச்சண்டை வீரர் போட்டிக்குத் தயாராக நிற்பது போன்ற நிலை இது. இப்போது, இடது கையை தோள்பட்டையோடு சேர்த்து வைத்துக்கொண்டு வலது கையை எதிரே ஒருவர் நிற்பதுபோல கற்பனை செய்துகொண்டு, அவரை நோக்கி நீட்ட வேண்டும். பிறகு, வலது கையை தோள்பட்டைக்கு அருகே கொண்டு வந்து, இடது கையை வலதுபுறம் முன்னே நீட்ட வேண்டும். இது ஒரு செட். பிறகு, வலது காலை முன்புறமாக விரித்துவைத்துக்கொண்டு செய்ய வேண்டும். இப்படி, தலா 15 முறை செய்ய வேண்டும்.
 

பலன்கள்:
கைகளில் உள்ள தசைகள் உறுதியாகும்.
தோள்பட்டை உறுதியாகும்.
முழு உடலுக்கு அசைவு ஏற்படுவதால், உடலில் நிலைத்தன்மை மேம்படும்.

பிளேங்க் வித் ஒன் ஆர்ம் ரோவிங்

பிளாங்க் வித் ஒன் ஆர்ம் ரோவிங் (Plank with One Arm Rowing)
தரையில் குப்புறப் படுக்க வேண்டும். பிறகு, கைகளை நிலத்தில் ஊன்றி முழு உடலையும் கால் விரல் மற்றும் கைகளால் தாங்கும்படி உயர்த்த வேண்டும். இப்போது, இடது கையில் டம்பிள்ஸை எடுத்து, தலையை உயர்த்தி நேராகப் பார்த்தபடி, இடது கையை மடக்க வேண்டும். இப்படி 15 முறை கைகளை மடக்கி நீட்டிய பின், டம்பிள்ஸை வைத்துவிட்டு, குப்புறப் படுத்துப் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். மீண்டும் உடலை உயர்த்தி, வலது கையால் டம்பிள்ஸைப் பிடித்தபடி 15 முறை கைகளை மடக்கி, நீட்ட வேண்டும்.
 

பலன்கள்:
உடல் முழுதும் புவி ஈர்ப்பு விசை செயல்படுவதால், தேவையற்ற சதை குறையும்.
தோள்பட்டை மற்றும் முழங்கைக்கு இடையே உள்ள சதைப்பகுதி வலுவடையும்.
வயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்பு கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்.

ரோமன் ட்விஸ்ட் பயிற்சி

ரோமன் ட்விஸ்ட் பயிற்சி (Roman Twist Exercise)
தரையில் கால்களை நீட்டி அமர வேண்டும். கைகளில் மெடிசின் பந்தைத் தாங்கி, இடது பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது கால்களை உயர்த்தி, உடலைச் சற்று பின்புறம் சாய்த்து சைக்கிளிங் பெடல் மிதிப்பதுபோல, 15 முறை கால்களைச் சுற்ற வேண்டும். மீண்டும் கால்களைத் தரையில் வைத்துவிட்டு, சில விநாடிகள் கழித்துப் பந்தை வலது மார்பின் அருகே வைத்துக் கால்களை உயர்த்தி, உடலைச் சற்று பின்புறம் சாய்த்து, சைக்கிளிங் செல்வதுபோல 15 முறை சுற்ற வேண்டும்.
 

பலன்கள்:
கால்களில் சீரான ரத்த ஓட்டம் பாயும். 
இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். 
இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். உடலின் நிலைத்தன்மை மேம்படும்.

 

கவனம்... தவிர்க்க வேண்டியவர்கள்...
உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடலில் அதிகக் கொழுப்பு உள்ளவர்கள் இந்தப் பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

https://www.vikatan.com/news/health/108407-do-these-exercises-in-morning-to-lead-a-healthy-life.html

Link to comment
Share on other sites

ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் ஒலி மாசு.!

 

இன்றைய திகதியில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களாகயிருந்தாலும் சரி  அல்லது நான்கு சக்கர வாகனத்தில் சாரதியாக இருப்பவர்களும் சரி காதில் ஒலிவாங்கியை மாட்டிக்கொண்டு பேசிக் கொண்டும், பதிலளித்துக் கொண்டும், பாடல்களைக் கேட்டுக் கொண்டும் தான் பயணிக்கிறோம். இதன் காரணமாக காது கேளாமை சிக்கல் ஏற்பட வழிவகுக்கிறோம்.

அதே போல் நாம் இயங்கி வரும் சுற்றுப்புறச் சூழலில் அதிகரித்து வரும் ஒலி மாசால் எம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு வரவிருக்கிறது. இந்த ஒலிமாசினை கட்டுப்படுத்தாவிட்டால் இதன் காரணமாகவே எமக்கு மனஅழுத்தம், பதற்றம், இரத்த அழுத்தம், இதய துடிப்பு திடிரென்று அதிகரித்தல் போன்றறை ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் ஏற்பட்டவுடன் இதன் துணை விளைவாக தூக்கமின்மை, தலைவலி, சோர்வு, எரிச்சல், கவனக்குறைவு போன்றவைகளும் உருவாகும்.

சப்தத்தை உண்டாக்கும் வீதிகள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகள், மைதானம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட தற்போது ஒலி மாசு அதிகரித்திருப்பதாகவும், பாடசாலையில் உள்ள வகுப்பறைகள் மற்றும் வைத்தியசாலைகளிலும் ஒலி மாசு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவை விட அதிகமாகியிருப்பதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றன.

மாணவர்களின் பேச்சு பயிற்சிக்காக உலக சுகாதார நிறுவனம் அதிகபட்சமாக 15 டெசிபல் அளவு வரையிலான ஒலியளவையே நிர்ணயித்திருக்கிறது. ஆனால் இன்று பாடசாலைகளில் 15 முதல் 35 டெசிபல் அளவுகளில் ஒலி உருவாவதாக தெரிவிக்கிறார்கள். 

இதற்காக பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் விதிக்கப்பட்டுள்ள ஒலியளவை அனைவரும் பின்பற்றவேண்டும். அத்துடன் ஒலிமாசினை குறைக்க அனைவரும் மரம் வளர்ப்பில் ஈடுபடலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/27572

Link to comment
Share on other sites

நடைப்பயிற்சி நல்லது... ஏன், எதற்கு, எப்படி? #LetsWalk

`இனிமேலாவது தினமும் வாக்கிங் போகலைனா, நீங்க நிறைய உடல்ரீதியான தொந்தரவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ - இப்படி மருத்துவர் சொல்லிவிட்டாரே என்று வேறு வழியின்றி நடைப்பயிற்சியைத் தொடங்குபவர்களே இன்று அதிகம். உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, ஃபிட்டான உடல்வாகுக்கு என ஆரம்பத்திலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையோ மிக மிகக் குறைவு. உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியம். 

நடைப்பயிற்சி

 
 

அரைமணி நேர நடை:

வேலை செய்யவேண்டிய இடத்துக்கு பல கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்லவேண்டிய நிலைமை எல்லாம் இன்று இல்லை. வீட்டு வாசலுக்கும், அலுவலக வாசலுக்கும் போக்குவரத்துப் புரியும் சொகுசு வாகனங்கள், அலுங்காமல் குலுங்காமல் நம்மைக் கொண்டு சேர்க்கும் பணியை வெகு சிறப்பாகச் செய்கின்றன. இப்படி உடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.

உறுப்புகளுக்கு நம்பிக்கை துரோகம்:

மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல்... என நமது உடல் உறுப்புகள் அனைத்தும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க இடைவிடாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. அவை அனைத்தையும் தாங்கிப்பிடித்திருக்கும் நாம்தான் ஓடாமல், நடக்காமல் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நம்பிக்கை துரோகம் செய்துகொண்டிருக்கிறோம். நடைப்பயிற்சி, உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயு செறிவையும் ஏற்படுத்தி, சிறப்பாகச் செயல்படவைக்கும். 
நோய்கள் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கியச் சாதனம் நடைப்பயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்குக் கொண்டாட்டமாகப் போய்விடுகிறது. நடைப்பயிற்சியின் முக்கியத்துவம், நோயின்றி நம்மை பாதுகாக்க இது எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதையெல்லாம் பார்ப்போம்.

நடந்து பழகலாம்

பலன்கள்:

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும். சிறு வயது முதலே விளையாட்டுடன்கூடிய நடைப்பயிற்சி, முதுமையைத் தள்ளிப்போடும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும் (Increases Lung capacity). எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமையைக் கொடுக்கும். உடல் எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும். உடல் எடை குறைக்க நடைபோடுபவர்கள், நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே சென்றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை. உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சியோடு, யோகப் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய்யலாம். 

இதயத்தை வலிமையாக்கும்:

வாரத்துக்குக் குறைந்தது மூன்று மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த முதியோர்களுக்கான பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று, இளம் வயதிலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் இதயம், முதிர்ந்த வயதிலும் ஆரோக்கியமாகத் தடங்கலின்றி இயங்குவதாகத் தெரிவிக்கிறது. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையும் இயல்பாக இருக்குமாம். 

மகிழ்ச்சி தரும்

மகிழ்ச்சியை வழங்கும்:

`நடைப்பயிற்சி, மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஹார்மோன்கள் சுரக்க உதவும்’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நாடுகளில், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வியல் பயிற்சிகளில் நடைப்பழக்கமும் முக்கியமான ஒன்று. தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யும்போது, மூளையில் உள்ள ’ஹிப்போகாம்பஸ்’ (Hippocampus) பகுதி சிறப்பாகச் செயல்படுவதாக சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. பல உணர்வுபூர்வமான செயல்பாடுகளுக்குக் காரணமான ஹிப்போகாம்பஸ் பகுதி, முக்கியமாக ஞாபகசக்தியுடன் தொடர்புடையது. நடப்பதால், மூளையின் அனைத்துச் செயல்பாடுகளும் மேம்படுவதாகவும் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும், ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து நாள்கள் தவறாமல் நடைப்பயிற்சி செய்துவிட்டு, உங்கள் மனநிலையை ஆராய்ந்து பாருங்கள்... உற்சாகம் கரைப்புரண்டு ஓடும்! 

இயந்திரமா... இயற்கையா?

’ட்ரெட்மில் இருக்கிறது… வீட்டுக்குள்ளேயே அதில் நடக்கிறேன்’ என்பவர்களுக்கு ஒரு செய்தி… சூரிய ஒளி உடலில் படும்படி நடப்பவர்களுக்கு கூடுதல் பலனாக `வைட்டமின் டி’ கிடைக்கும். வெளிச்சம் உள்நுழையாத நான்கு சுவர்களுக்குள் நடப்பதற்கும் இயற்கையான ’வெளியில்’ நடப்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் வெளியில் நடக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், ட்ரெட்மில் இயந்திரத்திலாவது நடக்கவேண்டியது அவசியம். 

நடக்க சில வழிமுறைகள்

நடக்க சில வழிமுறைகள்...

நடைப்பயிற்சி செய்யும்போது, அதற்குத் தோதான காலுறைகளையும் காலணிகளையும் பயன்படுத்துவது முக்கியம். நடைப்பயிற்சிக்கு உகந்த உடைகளை அணிந்துகொள்ள வேண்டும். நாலைந்து பேர் சேர்ந்து ஒரு குழுவாக நடைப்பயிற்சி செல்வது நல்லதுதான். ஆனால் அதிகமாகப் பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல. உலக அரசியல் அனைத்தையும் `வாக்கிங்’ செல்லும்போது பேசிக்கொண்டே இருந்தால், முழுப் பலன்களும் கிடைக்காது. பேசிக்கொண்டே நடப்பதால், நடைப்பயிற்சியின் மூலம் நுரையீரலுக்கு அதிகளவில் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறையலாம். நடக்கும்போதுகூட, வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி செல்போனை தடவிக்கொண்டிருந்தால், விபத்து நடக்கலாம். மேடு, பள்ளம் இல்லாத சமதரையில் நடக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, முதியவர்கள் சமதரையில் நடப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மைதானத்திலோ அல்லது வாகனப் போக்குவரத்து இல்லாத இடங்களிலோதான் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். வாய்ப்பிருந்தால், அருகிலிருக்கும் இயற்கை சூழ்ந்த இடங்களில் நடப்பது மிகவும் நல்லது. பறவைகளின் குரல் ஒலிகளும், தாவரங்களின் வாசனையும் துணை நிற்க நடைப்பயிற்சி செய்வது கூடுதல் பலன்களைக் கொடுக்கும். 

நடை பயிற்சி

நடைப்பயிற்சி எனும் அடிக்‌ஷன் ‘Addiction’:

புதிதாக நடைபயிற்சி செய்யத் தொடங்குபவர்கள், சிறிது சிறிதாக நடக்கும் தூரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். முதல் நாளே பல கி.மீ தூரம் நடக்கிறேன் என்று ஆர்வக் கோளாறில் தொடங்கினால், இரண்டாம் நாளுக்கு நடை தாண்டாது. நடைப்பயிற்சி செய்வதற்கு முன்னர், எளிய ஸ்ரெட்சிங் பயிற்சிகள் (Stretching Exercises) செய்துகொள்வது நல்லது. பழகிவிட்டால், அதன் பலன்களை உணர்ந்து, தவறாமல் நடைப்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவீர்கள். புகை, மது போன்ற தீய பழக்கங்களைச் சார்ந்து இருக்கும் ‘Addiction’-ஐ தவிர்த்துவிட்டு, நடைப்பயிற்சிக்கு ‘Addict’ ஆகிவிட்டால் போதும். ஆரோக்கியம் உத்தரவாதம். 

காலையில் தூங்கி வழிந்து, விருப்பமில்லாமல் `நடக்கணுமே...’ என்று நடப்பது முழுமையான நடைப்பயிற்சி அல்ல! உடலை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், உற்சாகமாக தினமும் நடப்பதே உண்மையான நடைப்பயிற்சி! ஒரு கையால் செல்போனில் பேசிக்கொண்டும், மறுகையை பாக்கெட்டில் சொருகிக்கொண்டும் உல்லாசமாக நடப்பதால் எந்தப் பயனும் இல்லை. இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் வீசி, நிமிர்ந்த உடலுடன் (வி)வேகமாக நடைபோடுவதுதான் உண்மையான பயிற்சி. முன்பெல்லாம், ஒவ்வொரு செயலுடனும் ’நடை’ எனும் பயிற்சி ஒன்றிணைந்திருந்தது. ஆனால் இப்போதோ, நடைக்கு வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது. வாய்ப்புகளை உண்டாக்குவதுதான் முக்கியம். காலை பிறக்கும் இளஞ்சூரியன் மற்றும் மாலை மறையும் கதகதப்பான சூரியனின் பார்வையில் உற்சாகமாக நடந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்!

https://www.vikatan.com/news/health/109611-walking-is-for-good-health-lets-walk.html

Link to comment
Share on other sites

இயற்கை உபாதையான சிறுநீரை அதிகம் அடக்குபவரா நீங்கள்? அப்போ வரப்போகும் ஆபத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்!

 

 
hold-your-pee

 

பொது கழிவறையை பயன்படுத்தினால் ஆரோக்கிய கோளாறு ஏற்படும் என்று அதைத் தவிர்த்து சிறுநீரை அடக்குவதே மேல் என்று எண்ணுபவரா நீங்கள்? அது முற்றிலும் தவறு, இதனால் மேலும் பல உடல்நலக் கேடு ஏற்படுவதற்கான ஆபத்தே அதிகம் உள்ளது. 

நம்முடைய சிறுநீரக பையால் 400 முதல் 500 மில்லி லிட்டர் வரையிலான சிறுநீரை தேக்க முடியும். ஆனாலும் இதை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் காலி செய்து சிறுநீரை வெளியேற்ற வேண்டும். இந்தக் கால இடைவேளை ஒவ்வொருவரின் உடல் நிலை பொருத்து மாறுபடும். ஒரு சிலருக்கு இந்தப் பை வேகமாக நிரம்பும் அப்படிப் பட்டவர்கள் நமக்கு ஏதோ பிரச்னை உள்ளது என்று எண்ணி வருந்த வேண்டாம், இது உங்களின் உடல் வாகு.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளால் தங்களது சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி கழிவறையை உபயோகிப்பதற்கும் காரணம் இருக்கிறது.  சர்க்கரை நோய் உள்ளவர்களின் உடல் இந்தச் சிறுநீரை அடக்கும் திறனை இழந்துவிடுவதால் இவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது, அதே போல் கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்பப்பை இந்தச் சிறுநீரக பையை முட்டுவதால் இவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது.

இப்போது சிறுநீரை அதிக நேரம் அடக்குவதால் என்னென்ன ஆபத்துகள் வரக்கூடும் என்பதைப் பார்ப்போம். சிறுநீரக பையில் நீண்ட நேரமாகச் சிறுநீரை தேக்கி வைத்தால் நோய் தொற்று கிருமிகள் உருவாகி அது சிறுநீரக பை மற்றும் குழாய்களில் பரவுவதற்கான அபாயம் உள்ளது. சிறுநீர் குழாய்கள் மூலமாகக் கிருமிகள் கிட்னியையும் பாதிக்கக் கூடும், இதனால் சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

na-bexiga-mando-eu.jpg

சிறுநீரை அடக்குவதால் உங்களது இடுப்பு மடி தசைகள் பலவீனமாகும், இதனால் நாள் போக்கில் சிறுநீரை அடக்கும் திறனை உங்களது உடல் இழக்க நேரிடும். நீண்ட நேரம் அடக்கிய சிறுநீர் வெளியேறும் போது அதிக வலியை ஏற்படுத்தும். இது பின் நாளில் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

இனியாவது அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்து உங்கள் ஆரோக்கியத்தை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

http://www.dinamani.com/health/health-news/2017/nov/30/holding-your-pee-for-long-time-2817939.html

Link to comment
Share on other sites

உணவுக்குழாய் புற்றுநோயிற்கான சிகிச்சை

 

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. மருந்து, மாத்திரை, நவீன சிகிச்சை என்று இதற்கு நிவாரணமளிக்க ஏராளமான மருத்துவ வசதிகள் இருந்தாலும் மக்களிடம் முறையான விழிப்புணர்வு இல்லாததால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களைக் காப்பாற்ற முடிவதில்லை.

புற்றுநோயில் ஏராளமான புற்றுநோய்கள் இருக்கின்றன. அவற்றில் உணவுக்குழாய் புற்றுநோயும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவை ஏன் உருவாகிறது என்பதற்கான துல்லியமாக காரணம் கண்டறியப்படவில்லை. ஆனால் தற்போது இதற்கான காரணம் கண்டறியப்பட்டிருக்கிறது. வாயில் உற்பத்தியாகும் ஒரு வகை பாக்டீரியாக்களே இத்தகைய உணவுக்குழாய் புற்றுநோயிற்கு காரணமாகின்றன.

உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு FAC ESCC  என்ற இரண்டு வகையினதான செல்கள் தான் காரணம் என்றும்,  பெரும்பாலான உணவுக்குழாய் புற்றுநோயை அந்த பாதிப்பு ஏற்பட்டு 25 சதவீத அளவிற்கு வளர்ச்சியடைந்த பிறகு தான் கண்டறியப்படுகிறது என்றும் மருத்துவத்துறையினர் எச்சரிக்கிறார்கள்.

மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற காரணங்களினாலேயே இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் வாயில் உருவாகுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது என்றும், அதன் காரணத்தினாலேயே புகை மற்றும் மதுவை பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 4 நிலைகள் வரை கொண்ட உணவுக்குழாய் புற்றுநோயின் பாதிப்பை தொடக்க நிலை மற்றும் 2ம் நிலையில் கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரை, சத்திர சிகிச்சை, தெரபி, நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

டொக்டர் ராஜ்குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-07#page-1

Link to comment
Share on other sites

மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்க ( Ganglion)த்திற்குரிய சிகிச்சை

 

இன்றைய திகதியில் கணினி சார்ந்த பணிகளை பெரும்பான்மையானவர்கள் செய்து வருகிறார்கள். இவர்களில் சிலருக்கு மணிக்கட்டுப்பகுதியில் சிறிய வீக்கம் போன்ற கட்டி தோன்றும். இது தொடக்கத்தில் வலியை ஏற்படுத்தாது இருந்தாலும், இதனை உரிய காலத்தில் மருத்துவரிடம் காட்சி சிகிச்சைப் பெறவில்லை என்றால், கட்டைவிரலில் ஒரு பகுதியிலோ அல்லது விரல் முழுவதிலோ வலி உண்டாகும். இதன் காரணம் தெரியாததால் மனம் குழப்பமடையும். பணித்திறன் பாதிக்கும்.

இதற்கு மருத்துவத்துறையில் மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கம் (Ganglion) என்று குறிப்பிடுகிறார்கள். இது ஒரு சிலருக்கு இடது கை அல்லது வலது கையிலும், ஒரு சிலருக்கு காலின் மேல்பகுதி, கணுக்கால் பகுதி இடது மற்றும் வலது என எந்த கால்களிலும் வேண்டுமானாலும் வரக்கூடும். இந்த பாதிப்பின் காரணமாக உருவாகியிருக்கும் சிறிய கட்டியில் மெல்லிய திசுப்பை (Cyst) இருக்கும். இதனுள்ள திரவச்சுரப்பு இருக்கும். இது சிறியதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் பெரிதாக இருந்தால் மற்றவர்கள் இதைப் பற்றி கேட்பதுடன் மட்டுமல்லாமல் பயமுறுத்திவிடுவார்கள். ஒரு சிலருக்கு இதன் காரணமாக விரல், விரல்கள், விரல்கள் இருக்கும் பகுதி, மணிக்கட்டு, எந்த கையில் வீக்கம் இருக்கிறதோ அந்த கையின் ஒரு பகுதி என இதன் வலி பரவும். இரவில் இது பெரிய மன உளைச்சலையும் தூக்கமின்மையும் ஏற்படுத்தும். இதனை மருத்துவர்கள் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருந்துகள் மூலம் குணப்படுத்த முயல்வர். அதன் பிறகும் வலி தொடர்ந்தால், Ganglionectomy என்ற சத்திர சிகிச்சையை மேற்கொண்டு அந்த திசுப்பையிலுள்ள திரவ சுரப்பை அகற்றி குணப்படுத்துவர். ஒரு சிலருக்கு இந்த வீக்கம் மீண்டும் வரக்கூடும். அதன் போது மருந்துகள் மூலம் அதனை கட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்களின் கை மற்றும் விரல்களின் பயன்பாட்டை வரையறுப்பர். அதன் பின் இதன் பாதிப்பு முழுமையாக நீங்கும்.

டொக்டர் எம் கோட்டீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/27895

Link to comment
Share on other sites

கண்புரை அறுவை சிகிச்சை செய்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் – ஆய்வில் தகவல்

 

 

கண்புரை அறுவை சிகிச்சை செய்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் – ஆய்வில் தகவல்
 

கண்புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery ) செய்தால் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற தகவல் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Cataract எனப்படும் கண்புரை நோய் மனிதர்களின் பார்வையை பறித்து அவர்களின் வாழ்வை இருள்மயமாக்குகிறது.

அறுவை சிகிச்சை மூலம் கண்புரை அகற்றப்பட்டு இழந்த பார்வை திரும்ப கிடைக்கிறது.

அவ்வாறு கண் பார்வை கிடைக்க பெற்றவர்கள் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற தகவல் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்களில் 74,044 பெண்கள் அடங்குவர் அவர்கள் அனைவரும் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் 20 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 41,735 பெண்கள் 60 சதவீத மரண அபாயத்தில் இருந்து மீண்டனர். அவர்களுக்கு முழுமையான கண்பார்வை கிடைத்தது.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன்பு அவர்களில் பலர் மாரடைப்பு, அல்சர், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். கண்புரை அறுவை சிகிச்சை செய்த பிறகு அவை குணமடைந்து ஆரோக்கியமான உடல் நிலையை அடைந்தனர்.

பொதுவாக கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு பார்வை தெளிவாக தெரிவதால் விபத்துகள் மூலம் ஏற்படும் மரணமும் தவிர்க்கப்படுகிறது. எனவே கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள் நீண்டநாள் வாழ முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

http://newsfirst.lk/tamil/2017/12/கண்புரை-அறுவை-சிகிச்சை-ச/

Link to comment
Share on other sites

சிறுநீரகப் பாதிப்பிற்கு என்ன காரணம்..?

 

சர்க்கரை நோயும், உணவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உப்பு மூலம் அதிகரிக்கும் உயர் குருதி அழுத்தமும் தான் சிறுநீரகப் பாதிப்பிற்கும், சிறுநீரக கோளாறுகளுக்கும் முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்நிலையில் தற்போது உலக வெப்பமயமாதல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஆகிய காரணங்களாலும் சிறுநீரக கோளாறுகள் உருவாகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எம்முடைய உடலில்உள்ள நீர்ச்சத்தில் சமச்சீரின்மை ஏற்படும் போது, உடல் சோர்வு, தலைச்சுற்றல், நாவறட்சி, மயக்கம், சுயநினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு சிறுநீரக கோளாறுகள் உண்டாகும். 

news_image_health_7_12.jpg

அதனால் வெயிலில் கடினமாக உழைக்கும் விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் தண்ணீரைப் பருகவேண்டும். அதே சமயத்தில் பெரும்பாலானவர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களில் கிடைக்கும் பாதுகாப்பற்ற அல்லது சுகாதாரமற்ற தண்ணீரைத்தான் அருந்துகிறார்கள். இதனால் சிறுநீரகங்கள் பாதிப்பிற்குள்ளாகும். அதே போல் வேலைக்கு செல்லும் பெண்கள், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் முதியவர்கள், கழிவறை வசதி இல்லாத பாடசாலைகளில் பயிலும் மாணவிகள் என பலர் இதன் காரணமாகவே போதிய அளவிற்கு தண்ணீர் அருந்துவதில்லை. இதன் காரணமாகவும் அவர்களின் சிறுநீரகங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. அதனால் சிறுநீரக பாதிப்பு வராமல் தடுப்பதற்குரிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மக்கள்  முழுமையான விழிப்புணர்வுடன் மேற்கொள்ளவேண்டும்.

சிறுநீரக பாதிப்பு எந்த நிலையில் இருந்தாலும் அதற்குரிய சிகிச்சை உண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

டொக்டர் பி சங்கர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/28000

Link to comment
Share on other sites

இளைய தலைமுறையினரை எச்சரிக்கும் மருத்துவர்கள் 

 

 
 

news_image_health_6_12_17.jpg

இன்றைய உலகம் இலத்திரனியல் உலகமயமாகிவிட்டது. பாமரர் முதல் பணக்காரர் வரை கைப்பேசி, மடிக்கணினி, சார்ஜர், பவர் பாங்க், ஹேண்ட்ஸ் ப்ரீ போன்ற உபகரணங்களுடன் தான் பயணப்படுகிறோம். இவைகள் இல்லாவிட்டால் விரக்தியடையும் அடையும் நிலையில் இன்றைய இளையத்தலைமுறையினர் இருக்கிறார்கள். இதனால் இவர்களில் யாரேனும் தங்களது தொலைபேசியைத் தொலைத்துவிட்டால் பதட்டமடைகிறார்கள். அத்துடன் அவர்கள் nomophobia என்ற பாதிப்பிற்கும் ஆளாகிறார்கள். nomophobia என்பது தங்களிடமுள்ள மொபைல் போன் தொலைந்துவிட்டால் ஏற்படும் பயத்திற்கு சூட்டப்பட்டுள்ள பெயர்.

இன்றைய இளையத்தலைமுறையினர் அதிலும் 20 முதல் 30 வயதுடையவர்களை அவர்கள் ஆண்களாகயிருந்தாலும் சரி பெண்களாகயிருந்தாலும் அவர்களுடன் இந்த இலத்திரனியல் சாதனங்கள் இருக்கும். இவைகள் இல்லாமல் அவர்களால் இயங்கவே முடியாது. ஆனால் இதனால் அவர்கள் சந்திக்கும் ஆரோக்கிய கேடுகள் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தூக்கமின்மை, கழுத்து வலி, வறண்ட கண்கள், கொம்ப்யூட்டர் விசன் சிண்ட்ரோம் எனப்படும் குறைப்பாடு ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள். தூக்கமின்மையின் காரணமாக இவர்களின் மூளையில் உறக்கத்திற்காக சுரக்கும் சுரப்பியின் செயல்பாட்டின் சமச்சீரின்மை ஏற்பட்டு உடல் ஆரோக்கிய நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இளைய தலைமுறையினர் இரவு உறங்கும் போது கூட தலையணைக்கு கீழே நீல நிறத்தில் ஒளிரும் வண்ணமுடைய விளக்குகளைக் கொண்ட மொபைல்களை வைத்திருப்பதால் இவை மூளையின் செயல்பாட்டில் தடுமாற்றத்தை தூண்டுகிறது. இதனால் உணர்வு நிலைகள் எதிர்பாராத தருணங்களில் தூண்டப்படும் நிலையும் உருவாகிறது. அத்துடன் இதற்கு அடிமையாகவும் ஆக்கிவிடுகிறது. இதிலிருந்து மீளவேண்டும் என்றால் சில வழிகளை உறுதியாக பின்பற்றவேண்டும்.

உறங்கச் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக உங்களது கைப்பேசியை அணைத்துவைக்கவேண்டும் அல்லது பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும். 3 மாதத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக 7 நாள்கள் வரை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்திற்கு விடுப்பு விடுக்கவேண்டும். வாரத்திற்கு ஒரு முறை ட்வீட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு அதனை தொடவேக்கூடாது. உங்களது மொபைல் போனில் யாராவது அழைத்தால், அதற்கு மட்டும் சுருக்கமாக பதிலளிக்கவேண்டும். அதேபோல் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேல் பேசவேக்கூடாது. ஒரு நாளைக்கு 3 மணித்தியாலத்திற்கு மேல் மடிக்கணினியையோ அல்லது கணினியையோ பயன்படுத்துவதை தவிர்த்திடவேண்டும். உங்களது மொபைல் போனை ஒரு நாளைக்கு ஒரு முறை தான் சார்ஜ் செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். இது போன்ற உறுதிமொழிகளை எடுத்து மொபைல் மற்றும் மடிக்கணினிகளின் பயன்பாட்டில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் உங்களை மீட்டெடுக்க இயலும்.

டொக்டர் சிவக்குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/27951

Link to comment
Share on other sites

புற்றுநோயை குணப்படுத்தும் புதிய நானோ மருத்துவ சிகிச்சை

 

 
 

புற்றுநோயை குணப்படுத்த நானோ மருத்துவ சிகிச்சை என்ற மருத்துவ சிகிச்சை விரைவில் அறிமுகமாகவிருப்பதாக மும்பையைச் சேர்ந்த பேராசிரியர் ரோஹித் சிறிவத்சா தெரிவித்திருக்கிறார்.

news_image_health_11_12.jpg

இதுதொடர்பாக பெங்களூரூவில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசும் போது,‘ புற்றுநோயை எதிர்கொள்ளும் விதமாக புதிய மருத்துவ சிகிச்சை முறை தற்போது ஆய்வில் இருக்கிறது. இந்த புதிய முயற்சியால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகிய மருத்துவ சிகிச்சை தவிர்க்கப்படும். மேலும் இத்தகைய சிகிச்சையால் நோயாளிகளுக்கு மருத்துவ செலவுகளும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் நாள்களும் குறையும். இதற்காக தற்போது செலவழிக்கப்படும் மருத்துவ கட்டணமும் குறைய வாய்ப்பிருக்கிறது.

இவ்வித சிகிச்சையின் போது, தங்கத்தின் நானோ பர்டிகலுடன் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தினை இணைத்து புற்று நோய் பாதித்துள்ள இடங்களுக்கு செலுத்தப்படும். பின்னர் அவை இன்ப்ரா ரெட் எனப்படும் கதிர்வீச்சால் 50 டிகிரி சென்டிகிரேட் வரைக்கு வெப்பமாக்கப்படும். இதன் காரணமாக செலுத்தப்பட்ட மருந்து நேரடியாக புற்றுநோய் பாதித்தப் பகுதிகளுக்கு செலுத்தப்படும். இந்த சிகிச்சை முறையின் முதற்கட்ட பரிசோதனை வெற்றிக்கரமாக முடிந்துள்ளது. இதன் காரணமாக புற்றுநோயை உருவாக்கும் செல்கள் எளிதில் கண்டறியப்பட்டு, அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.’ என்றார்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/28146

Link to comment
Share on other sites

கால் நரம்பை இழுக்கும் சியாட்டிக்கா பிரச்னை... ஏன், எதற்கு, எப்படி? #SciaticaAlert

 
 

சியாட்டிக்கா’ (Sciatica)... கேட்பதற்கு வேடிக்கையான, புதிதான ஒரு வார்த்தையாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்னை ஏற்படுத்தும் வலி வார்த்தையில் அடக்க முடியாதது. ‘கால் திடீர்னு மரத்துப்போகுது... தொடைப்பகுதியில இருந்து சுளீர்னு ஏதோ ஒண்ணு இழுக்குற மாதிரி வலி, பின்கால் வரைக்கும் நீளுது’ என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 40 வயதைத் தாண்டிய பெண்கள்தான் இந்த சியாட்டிக்காவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

sciatica

 

“சியாட்டிக்கா என்பது, முதுகில் ஆரம்பித்து, காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலில் உள்ள நரம்புகளிலேயே, மிக நீளமான ஒற்றை நரம்பு சியாட்டிக்காதான். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், கால் வலுவிழப்பது, டாக்டர் பாலமுருகன்சோர்வு, உணர்வின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். அண்மைக்காலமாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்தப் பிரச்னைக்கு ஆளாவது அதிகமாகியிருக்கிறது.. கால் மரத்துப்போவது இதன் மிக முக்கியமான அறிகுறி. இந்தப் பிரச்னை இருப்பதை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், எளிதாக குணப்படுத்திவிடலாம். பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து, சிகிச்சை முறைகளும் மாறும்’’ என்று எச்சரிக்கிறார் நரம்பியல் சிறப்பு மருத்துவர் பாலமுருகன். மேலும், சியாட்டிக்கா வருவதற்கான காரணங்கள், சிகிச்சைகள் குறித்தும் விளக்குகிறார் இங்கே...

சியாட்டிக்கா வருவதற்கான காரணங்கள்...

* முதுகெலும்பின் அசையும் மூட்டுகளில் வீக்கம் உண்டாவது.

* எலும்புகளுக்கு இடையே இருக்கும் ஜவ்வு விலகி பாதிப்படைவது.

* கருவுற்றிருக்கும் பெண்களின் கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது.

* வயது முதிர்வு காரணமாக ஏற்படும் டிஸ்க் ஸ்பாண்டிலோஸிஸ் (Disc spondylosis).

* எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பவர்கள்.

* தசைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்கள்

இந்தப் பிரச்னைகளில் ஏதோ ஒன்று ஒருவருக்கு ஏற்படும்போது தண்டுவடத்தை ஊடுறுவும் நரம்புகள் அழுத்தம் பெற்று சுருங்கத் தொடங்கும். ரத்த ஓட்டம் பாதிப்படையும். இதனால், நரம்பு வலுவிழந்து, தன் வேலையைச் செய்ய முடியாமல் திணறும். நாளாக ஆக, இந்த நரம்பில் வலி எடுக்கத் தொடங்கும்.

sciatica

சியாட்டிக்கா ஏற்படுத்தும் வலி...

* ஏதோவொரு காலின் பின்பகுதியில் வலி, எரிச்சல் உணர்வு ஏற்படும். சில நேரங்களில், இரண்டு கால்களிலும் வலி ஏற்படலாம்.

*எழுந்திருப்பதற்கும் அமர்வதற்கும் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். நிற்கும் நேரத்தைவிட, உட்கார்ந்திருக்கும் நேரத்தில் வலி அதிகமாக இருக்கும்.

* ஆரம்ப நாள்களில், முதுகின் கீழ்ப் பகுதியில் வலி எடுக்கும். பலரும் இதனைச் செரிமானக் கோளாறு எனவும், வாயுப் பிரச்னை எனவும் நினைத்துக் கடந்துவிடுவார்கள். இந்தப் பிரச்னை தொடர்ந்தால், காலில் வலி அதிகமாக ஆரம்பிக்கும். நரம்பை இழுப்பது போன்ற உணர்வு மேலிருந்து கீழ்வரை இருக்கும். அப்போதும் கவனிக்காமல் விட்டுவிட்டால், தொடைப்பகுதி மரத்துப்போகும். பிரச்னை மோசமான நிலையை அடைந்துவிட்டதற்கான அறிகுறிதான் இது. இவையெல்லாம் ஏதாவது ஒரு காலில்தான் ஏற்படும். சிலருக்கு, இரண்டு காலிலும் ஏற்படலாம்.

* முதுகு எலும்பு முடியும் இடத்திலும், கால்களின் பின்புறத்திலும் குத்துவது போன்ற உணர்வு இருக்கும்.

sciatica

சிகிச்சைகள்...

 

பல காரணங்களால் இந்தப் பிரச்னை ஏற்படும் என்பதால், எம்.ஆர்.ஐ மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை செய்வார்கள். அப்போதுதான் உடலில் என்ன பிரச்னையால் இது ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறியலாம். பெரும்பாலும் ஃபிஸியோதெரபிதான் இதற்கான சிகிச்சையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தீர்க்க முடியாத, குணப்படுத்த முடியாத பிரச்னையாக இது உருவெடுக்காது. உணவு, வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் செய்வது, கைவைத்தியம் சில நேரங்களில் கைகொடுக்கும். உதாரணமாக, ஒத்தடம் தருவது; தேவையான அளவுக்கு ஓய்வு எடுப்பது; தினமும் உடற்பயிற்சி செய்வது முதலியவை இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க உதவலாம். ஆனாலும், வலி குறைய வேண்டும் என்பதற்காக வெந்நீர் ஊற்றுவது, அதிகச் சூட்டில் ஒத்தடம் கொடுப்பது போன்ற சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூடாது. வெகுநேரம் நின்றுக்கொண்டே வேலை செய்பவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். அவர்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொண்டால், இந்தப் பிரச்னையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிவாரணம் பெறலாம்.

https://www.vikatan.com/news/health/110628-sciatica-causes-symptoms-and-treatment.html

Link to comment
Share on other sites

கால நிலை மாற்றத்தால் கடல் உணவுவகைகள் நஞ்சாக மாறும் ஆபத்து.!

 

 
 

கால­நிலை மாற்­றத்தின் விளை­வாக ஆக்டிக் கடலில் இருந்து,  இந்து சமுத்­திரம் வரை புதிய அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. வெறும் கடல் மட்டம் உயர்­வது மட்­டு­மல்ல,  பவன வெப்பம் அதி­க­ரித்து வருதல் மற்றும் துருவப் பனி­ம­லைகள் உரு­குதல் என்­பன பெரும் ஆபத்தை விளை­விக்க வல்­ல­ன­வாக உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. வளி மண்­டல வெப்பம் உயர்தல், தவிர மண்­ணையும் கட­லோ­ரங்­க­ளையும் வெகு­வாகப் பாதித்து பெரும்  எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருக்­கி­றது.

இவ்­வகைப் பாதிப்­பு­களில் கட­லோ­ரங்­களில் கொட்­டப்­படும் கழி­வுகள் பெரும் பங்­க­ளிப்புச் செய்­வதை சமீ­பத்­திய ஆய்­வுகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. கடலில் சேரும் நச்சு மாசு­களை மீன்கள் உண­வாக உட்­கொண்டு இறு­தியில் மனித சமூ­கத்தை வந்­த­டை­கின்­றன. வளி மண்­டல வெப்ப உயர்­வினால் துருவப் பனி­ம­லைகள் உருகி பனித் தட்­டு­க­ளி­டையே சிறைப்­பட்டுக் கிடக்க நச்சுப் பதார்த்­தங்கள் விடு­விக்­கப்­பட்டு கடல் நீரை வந்­த­டைந்து மாச­டையச் செய்­கின்­றன. சமீ­பத்­திய ஆய்­வின்­படி பனி தட்­டு­க­ளி­டையே சிறைப்­ப­டுத்­தப்­பட்டு கிடந்த மாசுகள் குறிப்­பாக கொடிய விஷ­மா­கிய பாத­ரசம் விடு­பட்டு கடலை வந்­த­டைந்து மீன்­க­ளுக்கு உண­வா­கின்­றன. மேலும் இவ்­வாறு மீனை உண்ணும் மனிதன் நஞ்­சூட்­டப்­ப­டு­கின்றான். எவ்­வா­றா­யினும் இப்­பி­ரச்­சினை சம­கா­லத்தில் மட்­டு­மல்ல, எதிர்­கா­லத்­திலும் தொடரும் சாத்­தியம் தென்­ப­டு­கின்­றது. ஒவ்­வொரு முறையும் வளி­மண்­டல வெப்பம் அதி­க­ரிக்கும் வேளை, பனித்­த­க­டுகள் உருகி மாசுகள் விடு­விக்­கப்­பட்டு, கடல் நீரை வந்­த­டையும் சாத்­தியம் காணப்­ப­டு­கி­றது.

முதன் முத­லாக பாத­ரச நஞ்­சினால் ஏற்­பட்ட பேரிடர் ஜப்­பானில் 20 ஆம் நூற்­றாண்டில் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. ‘மீன்­மற்றா’ குடா நாட்­டி­லுள்ள தொழிற்­சாலை ஒன்றில் கழிவுப் பொரு­ளாக மீதைல்­மேர்க்­குரி குடா நீரில் சேர்க்­கப்­பட்­டது. அதன் விளை­வாக அந்தக் குடா­நாட்டு கிரா­மங்­க­ளி­லுள்ள மக்கள் குறிப்­பாக மீனவ சமூகம் பெரும் பாதிப்­ப­டைந்­தது. ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் பெண்கள், குழந்­தைகள் உட்­பட நரம்புத் தளர்ச்­சியால் பாதிக்­கப்­பட்­ட­துடன் பலர் மர­ணத்தை தழுவிக் கொண்­டனர். இந்தச் சம்­ப­வத்தைத் தொடர்ந்து ‘குளோப்­ரீற்றி’ என்னும் நிறு­வனம் 140 நாடு­களைச் சேர்ந்த சூழல் நிபு­ணர்­களை ஒன்று கூட்டி கடல் நீரில் பாத­ரசம் கலப்­ப­தை­யிட்டு விவா­தித்து, அதைக் கட்­டுப்­ப­டுத்தும் வழி வகை­களை வெளி­யிட்­டனர். பற்றறிக் கழி­வுகள்,  உடைந்த உஷ்­ண­மா­னிகள், வாசனைத் திர­விய வெற்றுப் போத்­தல்கள், மற்றும் பாத­ரசம் உள்ள கழி­வு­களைக் கடலில் அகற்­று­வதை தடை செய்­தனர். மேலும் புதிய பாத­ரசம் அகழ்­வது தடை செய்­யப்­பட்­டது.

தற்­போது சக்திப் பிறப்­பாக்­கத்தில் நிலக்­கரி எரிக்­கப்­ப­டு­வ­தாலும், வாகனப் புகை­க­ளாலும் சிறிய அளவில் அகழ்தல் நட­வ­டிக்­கை­க­ளாலும் மற்றும் பல்­வேறு வழி­க­ளிலும் வளி மண்­டலம் மாச­டை­கின்­றது. 1970 இல் வளி­மண்­டல மாசுகள் உச்­சத்தை அடைந்­ததைத் தொடர்ந்து வளி­மண்­டல மாசு­களை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை  எடுக்­கப்­பட்­டது. புதுப்­பிக்கத் தக்க வளங்­க­ளா­கிய நீர் வீழ்ச்சி மின் பிறப்­பாக்கம், காற்­றாலை மற்றும் சூரிய சக்தி போன்­ற­வற்றை உப­யோ­கப்­ப­டுத்­தும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டது. இருப்­பினும் கால­நிலை மாற்றம் பெரிதும் கட்­டுப்­பாட்­டினுள் வந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

நாடு­க­ளி­டையே உள்ள வெப்ப வித்­தி­யா­சத்தால் கடலில் சுழி­யோட்­டங்கள் ஏற்­பட்டு கடல் மாசுகள் பல இடங்­க­ளுக்கும் பரவிச் சென்­றதை சமீ­பத்­திய ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. இதன் விளை­வாக கரை­யோரச் சமூகம் பெரும் அனர்த்­தத்தை எதிர்க் கொண்­டி­ருக்­கி­றது.

‘ஸ்டாங்’ என்னும் சீன ஆய்­வாளர் இமா­லய உச்­சியில் பனி மாதி­ரி­களைச் சேக­ரித்து மற்றும் குவாஹி ஆற்­றி­லுள்ள மீன் மாதி­ரி­களைச் சேக­ரித்து ஆய்­விற்கு உட்­ப­டுத்திப் பார்த்­ததில், அவற்றில் பாதரச நச்சு அதி­க­ளவில் இருப்­பதைக் கண்­ட­றிந்­துள்ளார். பனிப்­ப­ட­லங்­களில் அடை­பட்­டுக்­கி­டந்த மாசுகள், பாத­ரசம் உட்­பட விடு­பட்டு இமா­லய நதி­களை வந்து சேர்­கின்­றன.

இன்­னு­மொரு ஆய்வில் கால­நிலை மாற்­றத்தின் விளை­வாக அதிக மழை­வீழ்ச்சி ஏற்­பட்டு தரை வழி­யோடி நதி­களில் சேரும் நீர் சேதன மாசுகள் சென்று பிளாங்டன் தாவா­ரங்­களில் செறி­வ­டை­கின்­றன. இத்­தா­வ­ரத்தை மீன்கள் உண்ணும் போது நச்சுப் பதார்த்தம் மீன்­களைச் சென்­ற­டை­கின்­றன. மேலும் செந்­நி­ற­மான பெரு­வெள்ளம் கடலை அடையும் போது, மேற்­ப­ரப்பு செந்­நி­ற­ம­டைந்து, சூரிய ஒளியை ஆழ்­க­ட­லுக்குள் செல்­ல­வி­டாது தடை செய்­கின்­றது. ஆழ்­க­டலில் உள்ள தாவ­ரங்கள் சூரிய ஒளி கிடைக்­காது மடிந்­து­போக,  அங்கு பக்­டீ­றியா பெருக்­க­ம­டைந்து  நச்சப் பதார்த்­தங்கள் சேர்­கின்­றன. அதை மீன்கள் உண­வாக உட்­கொண்டு நச்சுத் தன்­மை­யு­டை­ய­தாக மாறு­கின்­றன.

கடல் மேற்­ப­ரப்­பி­லுள்ள வெப்ப  ஏற்றத் தாழ்­வினால், கடல் நீரில் பெரும் சுழி­யோட்­டங்கள் ஏற்­பட்டு, அதன் விளை­வாக கடல் மாசுகள் எல்லா இடங்­க­ளுக்கும் பர­வ­லாக கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. தற்­போது நாங்கள் நான்கு வெவ்­வேறு வகை­யான ஆய்­வு­களை மேற் கொண்டு எவ்­வாறு சேத­னப்­பொ­ருட்கள் குறிப்­பிட்ட இடங்­களில் சேர்­கின்­றன என ஆராய்ந்தோம். இதன் அடிப்­ப­டையில் எதிர்­கா­லத்தில் கால­நிலை மாற்­றத்தால் ஏற்­படும் பாதிப்புகளை ஆராய முற்பட்டுள்ளோம் என்கிறார் சூழலிய நிபுணர் பயோன். மேலும் இவ் ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நீர்நிலைகளில் கழிவுப் பொருட்கள் அகற்றுவதை யிட்டு புதிய சட்ட வரைவுகளைச் சிபார்சு செய்வோம்  இவ்வகை சட்டத்திட்டங்களால் நீர் நிலைகளில் மாசுகள் கட்டுப்படுத்தப்படுவதுமட்டு மல்லாது மீன்களில் நச்சுப் பதார்த்தங்கள் செறிவடைவது தடுக்கப்படும் என்கிறார் பயோன். உலகம் பூராகவும் வறிய மக்களின் தினசரி உணவாகிய மீனில் நச்சுப் பதார்த்தங்கள் சேர விடாது தடுப்பது எம் எல்லோரினதும் கடமையல்லவா?

http://www.virakesari.lk/article/28067

Link to comment
Share on other sites

உணவுக்குழாய் புற்றுநோயை வருமுன் தடுக்கலாமே..!

 

இன்றைய திகதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அத்துடன் இந்த புற்றுநோய் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வளர்ச்சியடைந்த பிறகே அறிகுறிகளை காட்டுவதால் இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதே சமயத்தில் இந்த புற்றுநோய் வராமல் தடுக்க இயலும்.

news_image_health_14_12.jpg

மனிதர்களின் உடல் உறுப்புகளிலேயே மிக எளிதாக பாக்டீரியாக்களின் தொற்றுக்கு ஆளாகுவது பற்கள் தான். பற்களின் வழியாக உள்ளேப்புகும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமித் தொற்றுகள் உணவுக் குழாய் புற்றுநோயை உருவாக்குவதில் முதன்மையான காரணிகளாகத் திகழ்கிறது. அதனால் பற்களை சுத்தமாக பராமரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின் வாயை நன்றாக கொப்புளித்து பற்களுக்கிடையே ஏதேனும் உணவுத்துகள்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தவேண்டும். பற்குழிகள், பல் சொத்தை, ஈறு பலவீனம் போன்ற பாதிப்புகள் இருந்தால் அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு பற்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அத்துடன் திருமணமான தம்பதிகள் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிட்டாலும் கூட உடனடியாக பற்களையும், உதட்டையும் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். இதனால் கூட பாக்டீரியா தொற்று ஏற்படக்கூடும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை வலிதணிப்பு சிகிச்சை செய்து கொண்டு முழுமையான நிவாரணம் பெறலாம். இருப்பினும் பற்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் உணவுக்குழாய் புற்றுநோயை வருமுன் தடுப்பதே சிறந்தது.

டொக்டர் மணிகண்டன்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/28274

Link to comment
Share on other sites

மலச்சிக்கல், மனஅழுத்தம் இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு... கவனம்! #ConstipationRemedies

தினமும் அதிகாலை அலாரத்துக்கு பதிலாக, மலம் கழிக்கும் உணர்வு ஒருவரை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தால், அவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் என்று தாராளமாகக் கூறலாம். மலச்சிக்கல் தொந்தரவால் அவதிப்படுபவர்களைக் கேட்டால், ’மலத்தை இயல்பாக வெளியேற்றுபவர்கள் கொடுத்துவைத்தவர்கள்’ என்று சொல்லுவார்கள். கல்போல கடினமான மலம், முழுமையாக மலம் வெளியேறாமல் துன்பப்படுவது, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வாயு பிரிதல்... என மலச்சிக்கல் உண்டாக்கும் அறிகுறிகளே கடுமையான உணர்வுகளைக் கொடுப்பவை. தினமும் காலையில் வயிற்றைப் பிசைந்தும், வயிற்றுத் தசைகளுடன் குத்துச்சண்டை போட்டுப் பார்த்தும் மலத்தை வெளியேற்ற முயற்சிப்பவர்கள் பலர்!

மலச்சிக்கல்

 
 


ஆரோக்கியத்தை சுட்டிக்காட்டும் காரணி:

’மலம் வெளியேறுவதில் சிரமம் இல்லை. ஆனால் என்ன… டீ குடித்தால்தான்… சிகரெட் பிடித்தால்தான்… மாத்திரைகள் விழுங்கினால்தான் மலம் வெளியேறும்’ என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் உடனடியாக பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது. மேற்சொன்ன எந்த பொருள்களின் உதவியும் இல்லாமல், இளகிய மலமாக வெளியேறுவதுதான் உடலுக்கு நல்லது. சாப்பிட்ட உணவு முறையாகச் செரிமானம் அடைந்து, உடல் இயக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் காரணியே மலம். ’சில நாள்கள் வரும், சில நாள்கள் வராது’ என்று அலட்சியமாகவிடக்கூடிய விஷயம் அல்ல மலம். மலச்சிக்கல் உண்டாவதற்கான காரணிகளை ஆராய்ந்து, மலத்தை இளகியதாக வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 
 

காரணிகள்:

துரித உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது மலச்சிக்கல் உண்டாவது உறுதி. பெருநகரங்களின் துரித வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு, வேறுவழியின்றி தினமும் துரித உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும், மலச்சிக்கலைப் பற்றி! துரித உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் குடல் இயக்கங்களைத் தடுத்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். மைதா சேர்த்த உணவுகள், நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும். மசாலா நிறைந்த அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம். அளவுக்கு அதிகமாக உணவுகளை உண்பது, செரிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் பருகாதது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கியக் காரணிகள்.

தண்ணீர்


சில வகை மருந்துகளை உட்கொள்வதாலும், முதிர்ந்த வயதின் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம். மனஅழுத்தத்துக்கும் மலச்சிக்கலுக்கும் நெருங்கிய உறவு உண்டு. உடல் உழைப்பு இல்லாதவர்கள், அதிகமாக தேநீர், காபி அருந்துபவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மலத்தை அடக்குபவர்கள் போன்றவர்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும். இயல்பாக வெளியேறும் மலத்தை அடக்கும்போது, மலத்தில் இருக்கவேண்டிய நீர்த்துவம் மீண்டும் மீண்டும் உறிஞ்சப்பட்டு, வறண்ட மலமாக வெளியேறும். வறண்டு கடினப்பட்ட மலம், மலப்பாதையில் சிக்கல்களை உண்டாக்கி, பௌத்திரம் வரை கொண்டு செல்லும். 
 

மலம் கழிக்கும் முறை முக்கியம்:

மேலைநாட்டுப் பாணி கழிப்பறையில் (Western toilet) அமர்ந்துகொண்டு மலம்கழிக்க முயலும்போது, ஒரு சிறுகதையே படித்து முடித்திருந்தாலும், மலம் வெளியேறாமல் தவிப்பவர்கள் உண்டு. மூட்டுகளில் எந்த பிரச்னையும் இல்லையெனில், நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள குத்தவைத்து மலம் கழிக்கும் முறையைப் (Squatting position) பின்பற்றினாலே மலம் இயல்பாக வெளியேறும். மேலைநாட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவு அதிகளவில் இருக்கும். குத்தவைத்து மலம் கழிக்கச் சிரமப்பட்டு, மேலைநாட்டு பாணியில் அமர்ந்துகொண்டு மலம் கழிக்கும்போது, முழுமையாக கழிவுகளை வெளியேற்ற முடியாது. மேலும், மலப்பை தசைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, மலம் வெளியாவதில் சிரமத்தை உண்டாக்கும். அதே வேளையில் தொடைப் பகுதிகள் வயிற்றுத் தசைகளை அழுத்தும் அளவுக்கு குத்தவைத்து மலம் கழிக்க முயலும் முறை, மலத்தை முழுமையாக வெளியேற்றும்; இடுப்புப் பகுதிகளுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும்.
 

மலமிளக்கி மருந்துகள் எப்போது தேவை?

மலச்சிக்கல் ஏற்பட்டவுடன், உடனடியாக மலமிளக்கி மருந்துகளின் ஆதரவைத் தேடக் கூடாது. தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலமே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். திடீரென மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால், முந்தைய நாள் சாப்பிட்ட உணவின் தன்மையை ஆராய்ந்தால் போதும். காரணம் பெரும்பாலும் கிடைத்துவிடும். முதிர்ந்த வயதில் குடலின் செயல்பாடுகள் பெருமளவில் குறைந்திருக்கும்போது மலமிளக்கி மருந்துகளை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். ஆனால், பதினைந்து வயதிலிருந்தே மலத்தை வெளியேற்ற, மருந்துகளை நாடுவது மிகப் பெரிய தவறு. இயற்கையை இயக்க, செயற்கையைத் தேவையில்லாமல் வரவழைப்பது தவறு. 

மலச்சிக்கல்


நார்ச்சத்து நலம் தரும்!

நார்ச்சத்துள்ள உணவுகள், குடலின் அசைவுகளை துரிதப்படுத்தி, மலத்தை வெளியேற்ற உதவும். கரையக்கூடிய நார்ச்சத்து (Soluble fibre) மற்றும் கரையாத நார்ச்சத்துள்ள (Insoluble fibre) உணவுகளை கலந்து உட்கொள்ளலாம். பசலை, சிறுகீரை, மணத்தக்காளி போன்ற கீரைகள், நார்த்தன்மை நிறைந்த காய்கள், வாழை, பப்பாளி, திராட்சை போன்ற பழங்கள், பயறு வகைகள், முழுதானியங்கள், கொட்டை வகைகள்... என அனைத்தும் தேவை. மலச்சிக்கலை சரிசெய்வதில் வெந்தயம் சிறந்த பங்களிப்பைத் தரக்கூடியது. நீரில் ஊறவைத்த வெந்தயம், சிறிது நேரத்தில் கொழகொழப்புத் தன்மையை அடையும். அதைப் பயன்படுத்தும்போது, மலச்சிக்கலை நிவர்த்தி செய்யும்; உடலுக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துகளையும் கிடைக்கச் செய்யும். நூறு கிராம் வெந்தயத்தில் அறுபத்தைந்து சதவிகிதம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தண்ணீர்… விளக்கெண்ணெய்:

குடலுக்கு நன்மை செய்யக்கூடிய ’புரோபையாடிக்’ கூறுகள் நிறைந்த மோரை அவ்வப்போது குடித்து வந்தாலும், மலச்சிக்கல் குணமாகும். இள வெந்நீர் குடலின் அசைவுகளை அதிகரிக்க (Increases peristalsis) உதவும். நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கான முதல் மருந்து. பன்னாட்டு குளிர்பானங்களை எப்போதும் அருந்தக் கூடாது. விளக்கெண்ணெய் அமைதியான மலமிளக்கி. விளக்கெண்ணெயை மலமிளக்கியாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கலாம். முன்பெல்லாம் விளக்கெண்ணெயை அவ்வப்போது சிறிதளவு குடிக்கும் வழக்கம் நம்மிடையே இருந்தது. இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது. 

பேதி… பீச்சு…

செரிமானத்தை சிறப்பாக்கக்கூடிய சீரகம், சுக்கு, மிளகு, ஏலம் போன்றவற்றை உணவு வகைகளில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவரின் ஆலோசனைப்படி பேதி மருந்துகளை எடுத்துக்கொண்டு, செரிமானப் பகுதிகளை புத்துணர்வுடன் வைத்துக்கொள்வது அவசியம். பேதி மருந்துகள் மலச்சிக்கலை நீக்கும்; உடலில் தேங்கிய நச்சுப் பொருள்களை வெளியேற்றவும் உதவும். நீண்டகால மலக்கட்டினை சரிசெய்ய, ’பீச்சு’ (Enema) எனப்படும் புற மருத்துவ முறையும் அற்புதமான பலனை அளிக்கக்கூடியது.

செரிமானம் சிறப்பாக


எளிய மருந்துகள்…

சித்த மருத்துவத்தில் உள்ள நிலவாகைச் சூரணம், சிறந்த மலமிளக்கி. அதிலுள்ள கிளைக்கோசைடுகள் (Glycosides), செரிமானப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தூண்டி, மலத்தை வெளியேற்றுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. திரிபலா சூரணம், பொன்னாவரை சூரணம், கடுக்காய் லேகியம், கடுக்காய் சூரணம், மூலக்குடோரி எண்ணெய்... என உடல் அமைப்புக்குத் தகுந்த நிறைய சித்த மருந்துகள் இருக்கின்றன. தொடர்ந்து மலச்சிக்கல் தொந்தரவு நீடித்தால், மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை. சில நோய் நிலைகளிலும் மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். உணவியல் மற்றும் வாழ்வியல் மாற்றம் மூலம் சரிசெய்ய முடியாதபோது மருந்துகளுக்குச் செல்லலாம். மருந்துகளின் மூலம் இயல்பான மலம் வெளியானவுடன், மருந்துகளை நிறுத்திவிடுவது நல்லது.

 

உடல் பேசும் மொழிகளைப் புரிந்துகொள்ளாமல், அவசர உலகத்தில் மெளனிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். நோய்கள் உண்டாகவிருப்பதை, ’மலச்சிக்கல்’ எனும் மொழியின் மூலம் உடல் வெளிப்படுத்துவதைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். மலச்சிக்கல்… அநேக நோய்களுக்கு அடிநாதம்! தோல் நோய்களில் தொடங்கி இதய நோய்கள் வரை, மலச்சிக்கலால் உருவாகலாம். மலம் இளகலாக வெளியேறாமல், கடினமாக வெளியேறினால் மூலம், ஆசனவாய் வெடிப்பு (Fissure), பெளத்திரம் (Fistula) போன்ற நோய்கள் உறுதியாக உண்டாகும். மலச்சிக்கல் என்பது தீர்க்க முடியாத நோயல்ல. சில மாற்றங்களால் சரி செய்யக்கூடியது. நமது செரிமானப் உறுப்புகளை கவனிக்கச் சொல்லும் சிக்கல்தான் மலச்சிக்கல்... இனிமேல் கவனிப்போம்!

https://www.vikatan.com/news/health/110024-how-to-get-rid-of-constipation.html

Link to comment
Share on other sites

ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும் 5 வகை உணவுகள் #FoodsToSleepWell

 
 

ரபரப்பு, பதற்றம் இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை வரம். இன்றைக்குச் சிறுநகரம் தொடங்கி மெட்ரோ நகரங்கள் வரை அதற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. நம்மை வாழ்க்கை துரத்துகிறதா, வாழ்க்கையை நாம் துரத்துகிறோமா என்பதைப் பற்றி யோசிக்கக்கூட அவகாசமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்தப் பரபரப்பில் நாம் இழப்பது நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தை! கம்ப்யூட்டரில் வேலை, சதா மொபைல்போனை வெறித்தபடி இருப்பது, உடற்பயிற்சியின்மை, சத்தான உணவைச் சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, அளவுக்கு அதிகமான நொறுக்குத்தீனி... என மாறிவிட்ட வாழ்வியல் முறை முக்கியமாகப் பதம் பார்ப்பது நம் தூக்கத்தைத்தான்.

தூக்கம்

 

இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போதே விழிப்பு வந்துவிடும்; பிறகு தூக்கம் வராது. இதன் காரணமாக பகல் பொழுதுகளில் ஓய்வுக்காக நம் உடல் ஏங்கும். இன்றைக்குப் பலரையும் தூக்கமின்மைப் பிரச்னைப் பாடாகப்படுத்துகிறது. நல்ல, நிம்மதியான தூக்கம் மட்டும்தான் நித்யஶ்ரீஅடுத்த நாள் நாம் உற்சாகமாகச் செயல்படுவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும். ``சில உணவுகள்கூட ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கும்’’ என்கிறர் ஊட்டச்சத்து நிபுணர் நித்யஶ்ரீ. அது குறித்து மேலும் விரிவாக விளக்குகிறார் இங்கே...

 

``நிம்மதியான தூக்கத்துக்கு மெலட்டோனின் (Melatonin) என்ற ஹார்மோன் சீராகச் சுரக்கவேண்டியது அவசியம். அதோடு, நான்கு முக்கியமான பொருள்களும் தேவைப்படுகின்றன. அவை,  ட்ரிப்டோஃபேன் (Tryptophan), மக்னீசியம் (Magnesium), கால்சியம்; வைட்டமின் பி-6. பாதியில் நம் தூக்கம் கலைகிறது என்றால், மெலட்டோனின் சரியாகச் சுரக்கவில்லை என்று அர்த்தம். இதன் உற்பத்தியை அதிகமாக்கும் உணவுகள் சில இருக்கின்றன. நமக்குச் சீரான தூக்கத்தைத் தரும் சில உணவுகள் இங்கே...  

* பாலும், பால் உணவுகளும்: 
தூங்குவதற்கு முன்னர் சூடாகப் பால் குடித்துவிட்டு தூங்கினால், இரவு அமைதியான, நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதற்குப் பாலில் இருக்கும் கால்சியம் சத்துதான் முக்கியக் காரணம். பால் மெலட்டோனின் ஹார்மோன் மற்றும் ட்ரிப்டோஃபேன் அமினோ அமிலம் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்தும். பால் பொருள்களான சீஸ், தயிர், மோர் என அனைத்துமே உறக்கத்துக்கு மிகவும் நல்லவை. உடல்பருமனாக இருப்பவர்கள், அதிக எடையுடன் இருப்பவர்கள் லோ-ஃபேட் பால் பொருள்களைப் பயன்படுத்தலாம்.

* கடல் உணவுகள்: 
கடல் உணவுகளில் நமக்கு அதிகம் கிடைப்பது மீன்தான். மீன்களில் காலா மீன், மத்தி மீன் போன்றவை உறக்கத்துக்கு மிகவும் உதவுபவை. இதிலுள்ள வைட்டமின் டி, ஒமேகா 3 அமிலம், நல்ல கொழுப்புச்சத்து முதலியவை தூக்கத்தைத் தூண்டுபவை.

கடல் உணவுகள்

* கீரை: 
அடர் பச்சை நிறத்திலுள்ள கீரைகள் அனைத்துமே தாதுப்பொருள்கள், வைட்டமின்கள், ட்ரிப்டோஃபேன் அமினோ அமிலம் நிறைந்தவை. கீரைகளில் மக்னீசியம், கால்சியம் அதிகம் இருக்கும். இரவில் கீரையை சாலட்டில் (Salad) கலந்து சாப்பிடுவது, சாறாக உட்கொள்வது போன்றவை `லேக்டுகேரியம்’ (Lactucarium) என்ற ஒருவகை பால் திரவ (Milk Fluid) உற்பத்தியைத் தூண்டக்கூடியது. இது நல்ல தூக்கம் வரச் செய்யும். சிலர் இரவில் கீரை சாப்பிட மாட்டார்கள். அவர்கள் மதிய உணவில் கீரையைச் சேர்த்துக்கொள்ளலாம்.

* பழங்கள்: 
ஆப்பிள் அவகேடோ, வாழைப்பழம், கிவி பழம் போன்றவை உறக்கத்துக்கு உத்தரவாதம் தருபவை. இரவு வேளையில் பால் குடித்த பிறகு வாழைப்பழம் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், படுக்கையில் தூக்கம் வர சிரமப்படுபவர்கள்; தூக்கத்துக்கு இடையில் கண்விழிக்கிறவர்கள் உறங்கப்போவதற்கு முன்னர் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம். நிம்மதியான உறக்கத்தை தரும்.

* நட்ஸ்: 
பேரீச்சம் பழம், பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டுவருவது, உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டைச் சீர்செய்யும். நட்ஸின் மூலம் நல்ல கொழுப்புச்சத்து, வைட்டமின், தாதுச் சத்துகள், ஒமேகா 3 அமிலம் எனப் பல சத்துகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு 20 கிராம் என்ற விகிதத்தில் நட்ஸ் சாப்பிடலாம் எனப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.

மேலே குறிப்பிட்ட உணவுகள் மட்டுமல்லாமல், பூசணி விதை, ஓட்ஸ் கஞ்சி, புளிப்புச் சுவை கொண்ட செர்ரி பழங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ் வகைகள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உறக்கத்துக்கு உதவும். அதற்காக இரவில் மட்டுமே இவற்றைச் சாப்பிடுவது தவறு. நல்ல தூக்கத்துக்கு, சரியான நேரத்தில்; சரியான உணவைச் சாப்பிடவேண்டியது மிக அவசியம். அதேபோல மன இறுக்கமில்லாத சூழலும், ரிலாக்ஸான மூடும் உறக்கத்துக்கு மிக அவசியம்" என்கிறார் நித்யஸ்ரீ.

தூக்கமின்மை

 

உணவில் கவனம் எடுத்துக்கொள்வதுபோலவே சில வாழ்வியல் முறைகளிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மதிய நேர தூக்கத்தைத் தவிர்ப்பது, படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு குட்டி வாக் போவது, சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் இடையில் ஒரு மணி நேரம் இடைவெளிவிடுவது, படுக்கையில் போன், லேப்டாப் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் இருப்பது, சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்வது போன்றவையும் தூக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும். மது, புகை போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். ஒரு நல்ல தூக்கம் மட்டுமே அழகான, ஆரோக்கியமான விடியலை நமக்குத் தரும்; ஒரு நல்ல விடியல்தான் ஒரு நல்ல நாளுக்கான தொடக்கம். அதற்கு இன்றைக்கே அடித்தளமிடுவோம்!

https://www.vikatan.com/news/health/110185-five-foods-for-deep-sleep.html

Link to comment
Share on other sites

மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி?

 

பெண்களுக்கு ஏன் மார்பக புற்றுநோய் வருகிறது, மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

 
மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி?
 
பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். 
 
பெண்கள் மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 
மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 
201712181110203533_1_fgf12._L_styvpf.jpg
 
அறிகுறிகள் :
 
மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல்.
 
மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்.
 
மார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல். உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.
 
சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வார்.

http://www.maalaimalar.com/Health/WomenMedicine/2017/12/18111015/1135227/How-can-I-find-breast-cancer.vpf

Link to comment
Share on other sites

பட்டாம்பூச்சியா, பயமுறுத்தும் பூதமா? தைராய்டு பிரச்னை, பரிசோதனைகள், தீர்வுகள்! #ThyroidCure

 
 

ரபரப்பு, டென்ஷன்... இவற்றில் மூழ்கி முத்துகளைத் தொலைத்துவிட்டு அல்லாடும் நம்மைப் பற்றியும் கொஞ்ச நேரம் யோசிக்கலாமா..? எப்போதும் ஏதாவது ஒரு கவலையை சுமந்துகொண்டே அலைகிறோம்... அதுதான் நமக்கான வாழ்க்கை என ஆகிவிட்டது. இந்தச் சூழலில் `ஒரே அலைச்சல், ஓய்வே இல்லை’, `உடம்பெல்லாம் வலி, தூக்கம் சரியா வரலை’, `முடியெல்லாம் கொட்டுது... அடிக்கடி தொண்ட வலி வேற’... இப்படிப் புலம்ப ஆரம்பித்திருக்கிறீர்களா? குறிப்பாகத் தொண்டைப் பகுதியில் கோளாறா? அப்படியென்றால், தொண்டை அடைக்கும் அளவுக்கு பிரச்னை உங்களைச் சுற்றி வளைக்கப்போகிறது... உஷார்! மேலே குறிப்பிட்ட மற்ற உடல்நலச் சிக்கல்களோடு தொண்டையிலும் பிரச்னை என்றால், தைராய்டு பிரச்னை உங்களைச் சீண்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது என்று அர்த்தம்.

தைராய்டு

 
 

தைராய்டு சுரப்பி

தைராய்டு என்பது கழுத்தில் குரல்வளைக்குச் சற்றுக் கீழே பட்டாம் பூச்சி வடிவில் அமைந்துள்ள சிறிய சுரப்பி. இரண்டு மடல்களைக் கொண்டதும் 28 கிராமுக்கும் குறைவான எடையுள்ளதுமான தைராய்டு, மூச்சுக்குழலோடு சேர்ந்து பிணைக்கப்பட்டிருக்கிறது. இது, நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் முக்கிய பாகம். எந்தெந்த உள்ளுறுப்புகளும் திசுக்களும் ஹார்மோன்களை உற்பத்திசெய்து, சேமித்துவைக்கின்றனவோ அவற்றின் தொகுதியே நாளமில்லாச் சுரப்பி மண்டலம். இது, ரசாயனத் தூதுவர்களான ஹார்மோன்களை ரத்தத்தில் நேரடியாகக் கலக்கிறது .

தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த சுரப்பி, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றப் பணிகளுக்குத் தேவையான, முதன்மையான நாளமில்லா சுரப்பி. சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இது தெரியாது. நாம் உணவை விழுங்கும்போது, முன் கழுத்தில் குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது என்றால், தைராய்டு சுரப்பி வீங்கியிருக்கிறது என்று அர்த்தம்.

தைராய்டில் எண்ணற்ற சின்னஞ்சிறு குமிழ்கள் உள்ளன. அவை, தைராய்டு ஹார்மோன்களைக் கொண்ட அடர்த்தியான திரவத்தால் நிறைந்துள்ளன. இந்த ஹார்மோன்களில் அதிகளவு அயோடின் உள்ளது. சொல்லப்போனால், உடலிலுள்ள அயோடினில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தைராய்டில்தான் இருக்கிறது. உணவில் அயோடின் குறைவு ஏற்பட்டால், தைராய்டு விரிவடைவதற்கு, அதாவது கழலை ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இளம் பிள்ளைகளுக்கு அயோடின் குறைவு ஏற்பட்டால் ஹார்மோன் உற்பத்தித் தடைபடும்; அதனால், உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும், பாலின வளர்ச்சியும் குன்றிவிடும். இது, `உடல் வளர்ச்சிக் குறை நோய்’ (Cretinism - கிரெட்டனிஸம்) என்றழைக்கப்படுகிறது.

தைராய்டு ஹார்மோன்கள்

தைராய்டு ஹார்மோன்களில், டி3 (T3), ஆர்.டி.3 (RT3 ரிவர்ஸ் T3), டி4 (T4) என்ற வகைகள் உள்ளன. டி3, ஆர்.டி.3 வகைகள் இரண்டுமே டி4 வகையிலிருந்து உருவாகின்றன. இவை முக்கியமாக, தைராய்டில் அல்ல, உடலின் மற்ற திசுக்களில் உருவாகின்றன. ஆகவே, உடலுக்கு அதிக தைராய்டு ஹார்மோன்கள் தேவைப்படுகையில், தைராய்டு சுரப்பி டி4 ஹார்மோனை ரத்தத்தில் கலக்கிறது. அங்கிருந்து, டி4 ஹார்மோனும் அதன் கிளைப்பொருள்களும் உடலின் எல்லாச் செல்களையும் கட்டுப்படுத்தலாம்.

உடலின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை இந்த ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன; அதாவது, ஒரு வண்டியின் வேகத்தை ஆக்ஸிலேட்டர் கட்டுப்படுத்துவதுபோல, செல்களில் ஆற்றலையும் புதிய திசுக்களையும் உருவாக்குகிற ரசாயனச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன. இப்படி, தைராய்டு ஹார்மோன்கள் திசு வளர்ச்சிக்கும் அதன் சீரமைப்புக்கும் உதவுகின்றன. இதயம் இயங்கும் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன; அதோடு, தசைகளுக்கும் உடல் உஷ்ணத்துக்கும் தேவையான ஆற்றலின் உற்பத்தியைக் கவனித்துக்கொள்கின்றன.

ஹார்மோன் குறைபாடு

தைராய்டு ஹார்மோன்கள் இன்னும் சில முக்கிய வேலைகளையும் செய்கின்றன. உதாரணமாக, ரத்தத்திலுள்ள அதிகப்படியான ட்ரைகிளிசரைடுகளையும் குறைந்த அடர்த்திக் கொழுப்புப் புரதங்களையும் (கெட்ட கொலஸ்ட்ரால்) வெளியேற்ற அவை கல்லீரலுக்கு உதவுகின்றன. இந்த கொலஸ்ட்ரால் பித்தநீருக்கும் அங்கிருந்து மலக்குடலுக்கும் அனுப்பப்படுகிறது. தைராய்டு ஹார்மோன் மிகக் குறைவாக இருந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகி, உயர் அடர்த்திக் கொழுப்புப் புரதங்கள் (நல்ல கொலஸ்ட்ரால்) குறைந்துவிடும்.

தைராய்டு ஹார்மோன்கள், உணவுப் பாதையில் ஜீரண நீர்களின் உற்பத்தியைத் துரிதப்படுத்துகின்றன; அதோடு, அலை போன்ற தசைச் சுருக்க இயக்கங்களையும் (பெரிஸ்டால்சிஸ்) அதிகப்படுத்துகின்றன. ஆகவே, தைராய்டு ஹார்மோன் அளவுக்கதிகமாகிவிட்டால், அடிக்கடி மலம் கழிக்கவேண்டிய நிலை ஏற்படலாம், மலச்சிக்கல் மிக அரிதாகவே ஏற்படலாம்.

வண்டிக்கு பிரேக் உள்ளதுபோல, தைராய்டு சுரப்பிக்கும் உண்டு. அதைக் கட்டுப்படுத்துவது எது?

மூளையிலுள்ள `ஹைப்போதாலமஸ்’ என்றழைக்கப்படும் பகுதிதான் தைராய்டைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹைப்போதாலமஸ், தைராய்டு ஹார்மோன்களுக்கான தேவை இருப்பதைக் கண்டறிந்தால், அருகிலுள்ள பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்னல் கொடுக்கும். இந்தச் சுரப்பி, மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இது, ஹார்மோன்களை உற்பத்தி செய்யும்படி தைராய்டுக்கு சிக்னல் கொடுப்பதற்காக, தைராய்டு சுரப்பித் தூண்டு ஹார்மோனை (TSH) ரத்தத்தில் கலக்கிறது.

ஆகவே, ரத்தத்தில் TSH மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் அளவுகளைக் கணக்கிடுவதன் மூலம் தைராய்டின் செயல்பாட்டையும் நம்முடைய உடல்நிலையையும் பற்றி டாக்டர்களால் சொல்ல முடியும். ஹார்மோன் பிரச்னைகள் வரலாம் என்று நினைத்தால், டாக்டர்களிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

தைராய்டு சரியாக வேலை செய்யவில்லையென்றால்..?

தைராய்டு பிரச்னைக்கு, உணவில் அயோடின் சத்துக் குறைவது, உடல்ரீதியான அல்லது மனரீதியான அழுத்தம், மரபியல் குறைபாடுகள், தொற்றுகள், நோய் (பொதுவாக, சுயதடுப்பாற்றல் நோய் [Autoimmune disease]), பல்வேறு நோய்களுக்காகக் கொடுக்கப்படும் மருந்துகளின் பக்கவிளைவுகள் ஆகியவை காரணமாக இருக்கலாம். தைராய்டு வீங்கியிருப்பது நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அந்த வீக்கம் தைராய்டு சுரப்பி முழுவதும் பரவியிருக்கலாம் அல்லது கட்டிகள் வடிவில் இருக்கலாம். பொதுவாக, அது சாதாரண வீக்கமாக இருக்குமென்றாலும் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டியது முக்கியம்; ஏனென்றால், சில சமயங்களில் அது புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்க்கு அறிகுறியாகவும் இருக்கலாம்.

பொதுவாக, சரிவர செயல்படாத தைராய்டு மிகக் குறைவாகவோ மிக அதிகமாகவோ ஹார்மோன்களை உற்பத்தி செய்யலாம். அதிகமாக உற்பத்தி செய்வது, `தைராய்டு மிகுதிநிலை’ என்றும் குறைவாக உற்பத்தி செய்வது, `தைராய்டு குறைநிலை’ என்றும் அழைக்கப்படுகின்றன.

குறை தைராய்டு

தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் 'குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம். இதன் ஆரம்பநிலையில் உடல் சோர்வாக இருக்கும்; செயல்கள் மந்தமாகும்; சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது; முகம் வீங்கும்; முடி கொட்டும்; இளநரை தோன்றும்; தோல் வறட்சி உண்டாகும்; பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் சிக்கல், மூட்டுவலி இப்படிப் பல பிரச்னைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும்.

தைராய்டு வீக்கம்

உண்ணும் உணவில் உடலின் தேவைக்கேற்ப அயோடின் சத்து கிடைக்காவிட்டால், தைராய்டு சுரப்பியால் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேலும் மேலும் சுரக்கத் தூண்டும். ஆனாலும், அதனால் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று வீங்கிவிடும். அதற்கு 'முன்கழுத்துக் கழலை' (Goitre) என்று பெயர். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாகத் தைராய்டு சுரப்பியில் அழற்சி (Thyroiditis) ஏற்பட்டு வீக்கமடைவதும் உண்டு. இது ஒரு தன் தடுப்பாற்றல் நோயாகவும் (Auto immune disease), கட்டியாகவும் (Thyroid adenoma) ஏற்படலாம்.

மிகைத் தைராய்டு

தைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக வீக்கமடைந்து அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் சுரப்பு பல மடங்கு அதிகரித்துவிடும். இந்த நிலைமையை ‘மிகை தைராய்டு' (Hyperthyroidism) என்கிறோம். இந்த நோய் உள்ளவர்களுக்கு அதிகமாகப் பசிக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும்; நாடித்துடிப்பு அதிகரிக்கும்; விரல்கள் நடுங்கும்; உள்ளங்கை வியர்க்கும்; அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழியும்; சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும்.

தைராய்டு நோய் படிப்படியாகவும் புலப்படாதவிதத்திலும் ஏற்படலாம்; ஆகவே, பல வருடங்களாக அந்த நோய் இருப்பது ஒருவருக்குத் தெரியாமல் போகலாம். பெரும்பாலான மற்ற நோய்களைப்போல, இதற்கும் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தால் குணம் பெறலாம்.

தைராய்டு பரிசோதனை!

பரிசோதனை வெறும் வயிற்றில் செய்யப்படும்.

பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தியிருக்கக் கூடாது; புகைபிடித்திருக்கக் கூடாது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும்.

இப்போது ஐசோடோப் ஸ்கேன் (Isotope Scan) பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிவிக்கிறது.

வீக்கம் காணும் தைராய்டு சுரப்பியிலிருந்து ஊசி மூலமாகச் சிறிய அளவில் திசுவை அகற்றி, செல்களைப் பரிசோதிப்பதன் (FNAC) மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முடியும்.

மருந்து, மாத்திரைகள்

யாருக்கெல்லாம் பரிசோதனை அவசியம்..?

குறை தைராய்டு, மிகை தைராய்டு பிரச்னை உள்ளதாகச் சந்தேகப்படுபவர்கள் முதலில் நோயைக் கணிப்பதற்குப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் சிகிச்சை பெற்றுவருபவர்கள் நோயின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்குப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தைராய்டு சுரப்பியில் வேறு பிரச்னை உள்ளவர்கள், தைராய்டு சுரப்பிக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்னை உள்ளவர்கள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், இதயநோய்க்காக அமியோடாரோன் (Amiodarone) மாத்திரையை உட்கொள்பவர்கள் ஆகியோர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் T3, T4, TSH, FT3, FT4, Anti TPO ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். பொதுவாக T3 0.7 2.04 ng/dL என்ற அளவிலும், T4 4.4 11.6 ng/dL என்ற அளவிலும் TSH 0.28 6.82 IU/dL என்ற அளவிலும் FT3 1.4 - 4.2 pg/dL, FT4 0.8 2 ng/dL இருக்க வேண்டும்.

இந்த இயல்பு அளவுகள் ஆய்வகத்தைப் பொறுத்தும், நோயாளியின் நோய்நிலை, அவர் உட்கொள்ளும் மருந்துகள், கர்ப்பம், வயது ஆகியவற்றைப் பொறுத்தும் சிறிதளவு மாறலாம். எனவே, நோயாளியானவர் தான் உட்கொள்ளும் மருந்து விவரத்தையும், கர்ப்பமாக இருந்தாலும் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.

நமது பாரம்பர்ய சித்த மருத்துவ முறையிலும் தைராய்டு பிரச்னைக்கு தீர்வு உண்டு. தைராய்டு பிரச்னையைச் சரிசெய்ய முதலில் மனஅழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய முதலில் மன அழுத்தத்துக்குத் தகுந்த சிகிச்சை மேற்கொண்டே தைராய்டு பிரச்னையை சரிசெய்ய வேண்டும். பிராணயாமம், யோகாசனம் அதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.

தைராய்டை கட்டுக்குள் கொண்டு வர உதவும் உணவுகள்...

பசலைக் கீரை

முட்டை மற்றும் பால் பொருள்கள்

பழுப்பு நிற அரிசி

பார்லி

தக்காளி

உருளைக்கிழங்கு

பூண்டு

காளான்

நாட்டுக்கோழி

ஆட்டுக்கால் சூப்.

பால்

ஆரம்பகட்ட தைராய்டு பிரச்னைக்கு...

சீதாமர இலைகளில் நான்கைந்தை எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அதில் இலைகளைப் போட்டு, அது அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிட்டு, காலை, மாலை இரண்டு வேளையும் வெறும் வயிற்றில் அருந்தலாம். தைராய்டு அளவைச் சீராக்கும் அற்புத மருந்து இது.

மேலும் தைராய்டின் தன்மைக்கேற்ப, மருத்துவரின் அறிவுரைப்படி சில சூரணங்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, தைராய்டு மிகப்பெரிய பிரச்னை அல்ல. நம் மனதை அமைதியாகவும் தெளிவாகவும் வைத்துக்கொண்டாலே தைராய்டு பிரச்னைக்கு ``டாட்டா... பை... பை...’ சொல்லிவிடலாம்.

https://www.vikatan.com/news/health/110238-if-you-reduce-your-stress-you-can-avoid-thyroid.html

Link to comment
Share on other sites

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா... உங்கள் நகம் சொல்லும்!

 
 

ம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். ' ஆல்ஃபா கெரட்டின்' (Alpha-keratin) என்னும் புரதப் பொருளால் ஆனது. டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது நகப்பூச்சுக்களை பூசுவதும் என அனைத்து மனநிலைக்கும் பலிகடா ஆவது நகங்கள்தான். அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் சொல்லும் நகத்தைப் பராமரிப்பது எப்படி, எந்த நகத்தில் எந்த அடையாளம் இருந்தால், அது எந்த நோயின் அறிகுறி என்பது பற்றியெல்லாம் விளக்குகிறார் பொதுநல மருத்துவர் தினகரன்...

நகம்

 
 

நகம்

நகம், விரலுக்கு ஒரு கவசம் போன்றது. நகத்தின் மிகப்பெரிய வேலையே விரலின் முனைகளைப் பாதுகாப்பதுதான். நகத்தில் பல பாகங்கள் இருக்கின்றன. இந்த அமைப்புகள் கை மற்றும் கால்விரல் நகங்களுக்குப் பொதுவானவை.

* மேற்புறத்தில் பளிச்சென்றும் வழுவழுப்பாகவும் இருக்கும் பாகமே நகத்தின் உறுதியான பாகம். இதில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இல்லை.

* வெளிநகத்துக்கு அடியில் உள்ள நகத் தளத்திலேயே திசுக்களால் ஆன ரத்த ஓட்டப் படுக்கை இருக்கிறது. நகத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதே இந்த படுக்கையின் பிரதானமான பணி. இந்த நகத்தளத்தைத் தாண்டி வளரும் நகப்பகுதியைத்தான் நாம், `வேண்டாம்’ என்று வெட்டிவிடுகிறோம். இது இறந்த நகப்பகுதியாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தப் பகுதியை வெட்டும்போது எந்த வலியும் ஏற்படாததுதான்.

* நகமும் சதையும் சேரும் இடத்தில், சதைக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர். இந்தப் பகுதியில்தான் நகம் முளைக்கும். இந்தப் பகுதியை அழுத்தினால் வலி உண்டாகும். அதற்குக் காரணம், நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இருப்பது.

* நகத்தைச் சுற்றியிருப்பது, `U’ வடிவத் தோல் அமைப்பு (Nail fold).

* நகத்தின் அடியின் காணப்படும் பிறை போன்ற அமைப்பு `லுனுலா’ (Lunula) என்றும், நகத்துடன் இணைந்த தோல் பகுதி `எபோனைச்சியம்’ (Eponychium) என்றும், நகத்தைச் சுற்றியுள்ள உள்தோல் `பெரியோனைசியம்’ (Perionychium) என்றும், நகத்தைச் சுற்றியுள்ள மேல்தோலுக்கு `க்யூட்டிக்கிள்’ (Cuticle) என்றும் பெயர்.

 

நகம் வளரும் காலம்

நான்கு முதல் எட்டு மாதங்களில் ஒரு நகம் முழுவதுமாக வளர்ச்சியடைந்துவிடும். கோடை காலத்தில் வேகமாக வளரும். ஒரு மாதத்துக்கு, கை விரலில் மூன்று மில்லி மீட்டரும், கால் விரலில் ஒரு மில்லி மீட்டரும் நகம் வளரும்.

 

நக வளர்ச்சி குறைவுக்குக் காரணம்...

* ஊட்டச்சத்து குறைபாடு

* தொடர்ந்து நோய்வாய்ப்படுதல்

* சில வகையான மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுதல்

* வயது முதிர்ச்சி.

 

நகத்தை வைத்து நோயைச் சொல்லலாம்!

50-க்கும் அதிகமான நோய்களுக்கு முக்கியமான அறிகுறி நகத்தில் ஏற்படும் மாற்றங்கள்தான். அவற்றில் சில...

* கைவிரல் நகங்கள் மிகவும் வெண்மையாகவும், ஸ்பூன் போன்று குழி விழுந்தும் இருந்தால் இரும்புச்சத்து குறைபாடு.

* கைவிரல் நகங்கள் வீங்கியிருத்தல். இதை `கிளப்பிங் நெய்ல்ஸ்’ (Clubbing Nails) என்பார்கள். இதயக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், குடல் நோய், கல்லீரல் நோய், பிறவிக் கோளாறு, இதய உறை அழற்சி நோய், புற்றுநோய், செரிமானக் கோளாறு போன்ற நோய்களின் பிரதான அறிகுறி இது.

* நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் இருந்தால் `சிரோசிஸ்’ (Cirrhosis) என்னும் கல்லீரல் நோய் மற்றும் இதயச் செயலிழப்பு நோய்.

* லுனுலாவில் சிவப்புப் புள்ளிகள் இருந்தால் `சொரியாசிஸ்’ என்னும் சரும நோய்.

* நகத்தின் மேல் பகுதியின் நிறம் மாறாமல் கீழ்ப்பகுதியில் மாறியிருந்தால், அது சிறுநீரக நோய்.

* நகம் நீல நிறமாக இருந்தால், சீரற்ற ரத்த ஓட்டம்.

* நகம் மஞ்சள் நிறமாக இருந்தால், மஞ்சள் காமாலை, நுரையீரல் நோய், நிணநீர்த்தேக்க நோய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம்.

* நகத்தில் கறுப்புக்கோடுகள் இருந்தால் புற்றுநோயின் அறிகுறி.

கால்சியம், வைட்டமின், புரதம், இரும்புச்சத்து போன்ற வைட்டமின் குறைபாடுகளாலும் நகத்தின் குறுக்கே வெள்ளைக்கோடுகள், வெள்ளைப் புள்ளிகள் தோன்றும்.

நகம்

ஆரோக்கியமான நகங்களுக்கு...

* அடிக்கடி விரல்களைச் சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கழுவிய பின்னர் ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும்.

* நகம் கடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். இதனால், நகத்தில் உள்ள கிருமிகள் வாய்க்கும், வாயில் உள்ள கிருமிகள் நகத்துக்கும் செல்லும்.

* கெமிக்கலைப் பயன்படுத்தும்போது தகுந்த கையுறைகளை அணியவேண்டும்.

* நகப்பூச்சு பயன்படுத்துபவர்கள், அடிக்கடி பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

* வறண்ட நகம் கொண்டவர்கள் பாலிஷுக்குப் பதிலாக மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தலாம்.

* பாட்டில் மூடி, டப்பாக்களைத் திறப்பதற்கு நகங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

* நீளமாக நகம் வளர்ப்பதைத் தவிர்க்கலாம். இது பல காயங்களுக்கு வழிவகுக்கும்.

* சரியான அளவு ஷூ, செருப்பைப் பயனபடுத்த வேண்டும்.

* நகவெட்டியைக் கொண்டு நகங்களை வெட்டலாம். பிளேடு, கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றைக் கொண்டு நகம் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

* நகங்களின் நிறத்திலும் வளர்ச்சியிலும் திடீரென மாற்றம் இருந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

Link to comment
Share on other sites

வாக்கிங் கிளம்புவதற்கு முன்னால் இது அவசியம் பாஸ்!

 
 

ரொம்ப வெயிட் போட்டுட்டேன்னு எல்லோரும் சொன்னாங்க. தினமும் ஓடி உடம்பைக் குறைக்கலாம்னு, ரெண்டு கிலோமீட்டர் தான் ஓடினேன். அதுக்கே காலைப் பிடிச்சுக்கிச்சு. ரெண்டு நாளா நடக்க முடியாம தவிக்கிறேன்..." - இப்படிப்பட்ட புலம்பல்களை நீங்கள் அடிக்கடிக் கேட்கலாம். அல்லது நீங்களே கூட உங்கள் நண்பர்களிடம் புலம்பியிருக்கலாம். ‘உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்முக்குப் போகிறேன்'  என்று வீராப்பாகச் சொல்லிட்டு அடுத்த நாள் கையையும், காலையும் தூக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டவர்களையும் பார்த்திருப்பீர்கள்.

வாக்கிங்

 

இந்த அவஸ்தைகளுக்குக் காரணம் என்ன? 

தசைப்பிடிப்பு. 

உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற செயல்பாடுகளுக்கு மனரீதியாக நாம் தயாராகிவிட்டாலும், நம் உடல் தயாராக வேண்டியது மிக அவசியம். கிரிக்கெட், ஃபுட்பால், பளுதூக்குதல் என எந்த விளையாட்டும் துவங்குவதற்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் மைதானத்தில்  மித வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பார்கள். கையைக் காலை தூக்கி 'ஸ்ட்ரெச்' செய்து தயார் ஆகிக் கொண்டிருப்பார்கள். உடற்பயிற்சி, விளையாட்டு இப்படி உடலின் எந்த ஒரு தீவிர செயல்பாட்டுக்கும் முன்பாக நம் உடலை அதற்குத் தயார் செய்ய 'வார்ம் - அப்' செய்யவேண்டியது அவசியம்.

வார்ம் - அப் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும், அதனால் உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்பிசியோதெரபிஸ்ட் ஃபாமிதா  பிசியோதெரபிஸ்ட் ஃபாமிதா 

“வார்ம் - அப், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்காக செய்யப்படுவது. இதில் ஸ்ட்ரெச்சிங் முக்கியமான ஒன்று. ஸ்ட்ரெச்சிங் செய்யும்போது உடலின் ஒவ்வொரு பகுதிகளிலும் ரத்த ஓட்டம் வேகமாகும். அதனால், தசைகளில் உள்ள அடுக்குகள் (Layers) திறக்கும். தேவையான அளவுக்கு ஆக்சிஜனும் கிடைக்கும். இதனை உடலைத் தூண்டும் பயிற்சிகள் என்று சொல்லலாம் (Golgi tendon  stimulation).

அதிக எடையான ஒரு பொருளைத் தூக்குவதற்கு முன்போ, அல்லது அதிக வேகத்தில் ஓடுவதற்கு முன்போ இதுபோன்ற ஸ்ட்ரெச்சிங் மிக அவசியம். இதனால் தசைக்கும், மூளைக்கும் இடையே ஒருங்கிணைவு ஏற்படும். தசைகளுக்கு அதிகமாக ரத்தம் செல்லும்போது எந்த ஒரு வேலையையும் அதிக நேரம் செய்யமுடியும். திசுக்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்போது காயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். 

தசைகளுக்கு, தசை நார்களுக்கு (ligament) அதிகமாக ரத்தம் செல்லும்போது உடலின் நெகிழ்வுத்தன்மையும் (Flexibility ), மூட்டுக்களின் இயக்கமும் (Range of motion ) நன்றாக இருக்கும்.

ஸ்ட்ரெட்சிங்

15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை கண்டிப்பாக வார்ம் - அப் செய்யவேண்டும். அப்போதுதான் தசைகள் தயாரான நிலைக்கு வரும் (Muscle accommodation). அதற்குப் பிறகுதான் மற்ற தீவிரமான உடற்பயிற்சிகளில், விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். வாக்கிங் போவதாக இருந்தால் கூட ஸ்ட்ரெச்சிங் மிக அவசியம்.  

ஸ்ட்ரெட்ச்சிங் வகைகள் : 

கை, கால், கழுத்து, தொடை,  எழும்பு மூட்டு, தோள்பட்டை  என்று உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனித்தனி வார்ம் - அப்கள் உள்ளன. ஒரே இடத்தில் நின்று கொண்டு செய்யக்கூடியவை ஸ்டாடிக் ஸ்ட்ரெச்சிங் (Static stretching ). நகர்ந்துகொண்டு, ஓடிக்கொண்டு செய்வது  டைனமிக் ஸ்ட்ரெச்சிங் (Dynamic Stretching). இதில் ஸ்டாடிக் ஸ்ட்ரெச்சிங் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே கூட ஸ்ட்ரெச்சிங் செய்யமுடியும்.

ஸ்ட்ரெட்ச்சிங் வகைகள்

 ஹேம்ஸ்டிரிங் ஸ்ட்ரெச்சிங் (Hamstring stretching), குவாட்ரிசெப்ஸ் ஸ்ட்ரெச்சிங் (quadriceps stretch) போன்றவை மிகவும் எளிமையானவை, அதிக பயன் தரக்கூடியவவை.

அதிலும் கண்டஞ்சதைக்கான ஸ்ட்ரெச்சிங் (calf muscles stretching) மிகவும் முக்கியமானது. காலுக்குக் கீழே உடலின் உறுப்புக்கள் அனைத்துக்கும் ரத்தத்தை கொண்டு செல்வதற்கான நரம்புகள் கண்டஞ்சதையில்தான் உள்ளன. இதனால், கண்டஞ்சதை, 'உடலின் இரண்டாவது இதயம்' என்று அழைக்கப்படுகிறது. 

எந்த ஒரு செயலைச் செய்தாலும் முதலில் சோர்வடைவது கண்டஞ்சதைதான். இந்த ஸ்ட்ரெச்சிங் செய்துவிட்டால் உடல் எளிதாகச் சோர்வடைவதை தவிர்க்க முடியும். 

தொடைக்கான  ஸ்ட்ரெச்சிங்

ஸ்ட்ரெட்ச்சிங் எப்படி இருக்கக் கூடாது?

கைக்கு ஒருநாள், காலுக்கு ஒருநாள் என்று தனித்தனியாகச் செய்யக் கூடாது. ஒட்டுமொத்த உடலுக்கானதாக ஸ்ட்ரெச்சிங் இருக்கவேண்டும். 

பொறுமையாக ஸ்ட்ரெச்சிங் செய்யவேண்டும். செய்யும்போது சுவாசம் ஆழ்ந்த நிலையிலும்  ( Deep Breathing ) நிதானமாகவும் இருக்கவேண்டும்.  

கடமைக்கு  ஐந்து நிமிடங்கள் செய்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடக் கூடாது. தசைகளின் வெப்பநிலை அதிகரிக்கும் அளவுக்கு வார்ம் - அப் செய்யவேண்டும். 

கழுத்துக்கான ஸ்ட்ரெட்ச்சிங்

வார்ம் - அப் பால் உடலுக்கு என்ன நன்மை :

வார்ம் - அப் செய்யும்போதே நம் உடல் வெப்பமாவதை நம்மால் உணரமுடியும். அந்த நிலை வரும்வரை நாம் தொடர வேண்டும்.உடற்பயிற்சி அப்போதுதான் அட்ரினலின் போன்ற பல ஹார்மோன்கள் சுரக்கும். 'அட்ரினலின்'  மகிழ்ச்சிக்கான ஹார்மோன் ஆகும். 

'ஹேப்பி ஹார்மோன்ஸ்' சுரப்பதால் மைண்ட்  ரிலாக்ஸ் ஆகும். 

உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கரைந்து உடலுக்குத் தேவையான ஹார்போஹைட்ரேட் கிடைக்கும்.  எந்த ஒரு செயலைச் செய்தாலும் நேர்த்தியாக செய்யும் பழக்கம் உருவாகும். 

விரக்தி மனநிலை குறையும். 

நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். 

தேவையற்ற கவலைகள், பயம், கெட்ட எண்ணங்கள், தேவையற்ற பதற்றம் குறையும். 

விழிப்புஉணர்வு, தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

வார்ம் - அப் செய்து முடிக்கும்போது மனதுக்கு திருப்தியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். " என்கிறார் ஃபாமிதா.

ஸ்ட்ரெட்ச்சிங்

 

வார்ம் - அப் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு முடிந்ததும் கூல் -டவுன் அவசியம். வார்ம் அப்பில் செய்த அதே ஸ்ட்ரெட்ச்சிங் தான் கூல் - டவுனிலும் செய்யவேண்டும்.

https://www.vikatan.com/news/health/111350-importance-of-warming-up-before-sport.html

Link to comment
Share on other sites

மயோசிடீஸ் எனப்படும் தசை அழற்சி பாதிப்பிற்குரிய சிகிச்சை

உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்திருக்கும் போது வலி ஏற்படுவது, சிறிது நேரம் நின்றாலோ அல்லது நடந்தாலோ உடனடியான சோர்வு ஏற்படுவது போல் உணர்வது, மாடிப்படி ஏறுவது, இரண்டு கைகளையோ அல்லது ஒரு கையையோ தோளுக்கு மேல் உயர்த்தும் போது வலி ஏற்படுவது, மூச்சு விடும் போதும், உணவு மற்றும் திரவப் பொருளை விழுங்கும் போதும் ஒருவகையினதான அசௌகரியத்தை உணர்வது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அது மயோசிடீஸ் எனப்படும் தசை அழற்சியின் பாதிப்பாக இருக்க வாய்ப்பு உண்டு.

news_image_health_20_12.jpg

இந்த அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறவேண்டும் இதனை புறகணித்தால் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியின் வீரியம் குறையத்தொடங்கும். அது கால் மூட்டு வலியையோ அல்லது வேறு மூட்டுகளில் வலியையோ உருவாக்கும். இந்த நிலையில் கிருமிகள் உட்புகுந்து நோய் தொற்றை ஏற்படுத்தும். அதே போல் ஒரு சிலருக்கு இவை தோல் பகுதி, கழுத்து பகுதியிலும் ஏற்படக்கூடும்.  இவை 18 வயதுடைய பெண்களுக்கும் வரக்கூடும். முறையாக சிகிச்சைப் பெற்றால் இந்த பாதிப்பிலிருந்து குணமடையலாம்.

டொக்டர் சிவக்குமார்

தொகுப்பு அனுஷா.

 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/28471

Link to comment
Share on other sites

சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத 7 விஷயங்கள்! #HealthAlert

 
 

`சாப்பிட்டவுடனே குளிக்கக் கூடாது’, `அது என்ன சாப்பிட்டவுடனே படுக்கிற பழக்கம்?', 'சாப்பிடும்போது தண்ணி குடிக்கக் கூடாது' - இதுபோன்ற உரையாடல்களை கேட்காதவர்களே இருக்க முடியாது. இந்தக் கருத்துகளெல்லாம் உண்மைதானா என்கிற சந்தேகமும் நமக்கு எழக்கூடும். 'வயிறார சாப்பிட்டதுக்கு அப்புறம் ஒரு குட்டி தூக்கம்... என்ன ஒரு சுகம் தெரியுமா’ என்று லயித்துப்போய்ச் சொல்பவர்களும் உண்டு. ஆனால், `அப்படியான தூக்கம் மிகவும் தவறான பழக்கம்’ என்கிறது மருத்துவம். "உணவின் தன்மையைப் பொறுத்து செரிமானத்துக்கான நேரமும் மாறுபடும். சாப்பிட்ட உணவு முழுமையாகச் செரிமானமாவதற்கு முன்னர், சில விஷயங்களைச் செய்யக் கூடாது. அப்படிச் செய்வது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என்கிற ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளி, சாப்பிட்டவுடனே என்னவெல்லாம் செய்யக் கூடாது என்கிற பட்டியலையே தருகிறார்...

உணவு

 

* சாப்பிட்டவுடன் தூங்குவது, மிக மோசமான பழக்கம். செரிமானப் பணியின்போது, சாப்பாடு குடல் பகுதிக்குச் செல்லும். தூங்கும்போது, குடல்வரை செல்லாமல், மீண்டும் தொண்டையை நோக்கி உணவு மேலெழும்பும். இது, நெஞ்செரிச்சல், மூச்சுக்குழாய் பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்தப் பழக்கம் தொடர்ந்தால் மூச்சுக்குழாயில் பிரச்னை, ஸ்லீப் ஆப்னியா, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படலாம்.

* குளிக்கக் கூடாது. நம் உடலைப் பொறுத்தவரையில், சாப்பிட்டவுடனேயே செரிமானப் பணிகள் தொடங்கிவிடும். பொதுவாகவே குளியலின்போது, உடல் உஷ்ணமும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். குறிப்பாக, உடலின் மேற்புறத்தில் (தோலுக்கு அருகிலுள்ள பகுதிகளில்) சுறுசுறுப்பான ரத்த ஓட்டம் இருக்கும். அந்த வகையில், வயிற்றுப் பகுதியிலுள்ள ரத்தம் மற்ற பகுதிகளை நோக்கி வேகமாகச் செல்லும்போது, செரிமானப் பணிகள் பாதிக்கப்படும். வயிற்றுப் பகுதியில் எப்போதும் சீரான ரத்த ஓட்டம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். இல்லாத பட்சத்தில், செரிமானப் பணியின் வேகம் குறைந்துவிடும்..

சாப்பிட்ட பின் தூக்கம்

* பழங்கள் சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு பழ வகைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. உணவில் இருக்கும் புரதம், கொழுப்பு போன்றவற்றோடு பழங்களில் இருக்கும் வேறு சத்துகளும் சேரும்போது, செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். உணவுக்குப் பின், பழங்கள் சாப்பிட்டால், உணவின் மேல் அது அமர்ந்துக்கொள்வது மாதிரியான நிலை ஏற்பட்டுவிடும். இது, செரிமானத்தை தாமதப்படுத்தத் தொடங்கும். பழங்களை விரும்பிச் சாப்பிடுவோர், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரோ, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தோ அதைச் சாப்பிடலாம்.

* சிகரெட் பிடிக்கக் கூடாது. புகைப்பழக்கம் இருப்பவர்களுக்குச் சாப்பிட்டவுடன் புகைபிடிக்க வேண்டும் என்கிற வேட்கை தோன்றும். புகைபிடிப்பதே கேடு... அதிலும் சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது இன்னும் அதிகத் தீங்கை விளைவிக்கும். சாப்பிட்டவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட்டுக்குச் சமம் என்கிறது ஓர் ஆய்வு.

சிகரெட் பிடிப்பது தவறு

* கடுமையான வேலைகள் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், செரிமானத்துக்குத் தேவையான சக்தி கிடைக்காது, செரிமானமாகும் சிறு உணவும் உடல் முழுக்கப் போய் சேராமல் தடுக்கப்பட்டுவிடும். உணவிலிருந்து கிடைக்கும் அனைத்துச் சக்தியும் வெகு எளிதாகக் குறைந்துவிடக்கூடும் என்பதால், கடுமையாக உடற்பயிற்சி செய்வது, வெகுதூரம் நடப்பது, வியர்வை வரும் அளவுக்கு வீட்டு வேலை செய்வது போன்றவற்றைச் செய்யக் கூடாது.

* டீ குடிக்கக் கூடாது. தேநீரில் உள்ள அமிலங்கள், செரிமானத்தைக் குறைத்துவிடும். அதிலும், புரதச்சத்து அதிகமுள்ள சாப்பாடாக இருந்தால், டீயில் உள்ள அமிலமும் அதோடு சேர்ந்துவிடும். அதனால், இரண்டும் சேர்ந்து செரிமானமாக வெகுநேரம் எடுத்துக்கொள்ளும். டீயில் உள்ள பாலிஃபினால் (Polyphenols) மற்றும் டானின்ஸ் (Tannins) போன்றவை, உணவில் உள்ள இரும்புச்சத்துகளை உறிஞ்சிக்கொள்ளும். இதனால், உணவு செரிமானமாவதில் சிக்கல் ஏற்படும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரும் பின்னரும் டீ குடிக்கக் கூடாது.


டீ குடிக்கலாமா

* சாப்பிட்டவுடன் மனஅழுத்ததுக்கு ஆளாகக் கூடாது. அப்படியொரு சூழல் எல்லோருக்குமே அவசியம் தேவை. மனமோ, உடலோ அதிக அழுத்தத்துக்கு உள்ளானால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். மனஅழுத்தம், நரம்புகளுக்கு அதிக அழுத்தம் தந்து, செரிமானத்துக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், அதற்கு உதவியாக இருக்கும் சில சுரப்பிகளையும் பாதிக்கும்.

 

'எந்த வகை உணவைச் சாப்பிட வேண்டும்', 'எந்த உணவு, எந்தப் பிரச்னைக்கு மருந்தாக அமையும்', 'சுவையான, சத்தான உணவு எது' என உணவு சார்ந்த பல விஷயங்களில் அக்கறை எடுத்துக்கொள்வதுபோல, 'சாப்பாட்டுக்குப் பின்னர் என்னவெல்லாம் செய்யக் கூடாது' என்பதையும் அறிந்துகொண்டு, அதன்படி நடக்கவேண்டியது எல்லோருக்குமே அவசியம்.

https://www.vikatan.com/news/health/111611-seven-things-you-should-not-do-after-meals.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்), ( தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன்.      யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை  அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை.  ) (கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. ) உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது.    இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ  சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு   மிகவும் குறைவு). (உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன்  உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்).      (US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). )   https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund.   Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land   ... Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance. “Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report. The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund. Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank. Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses. The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture. .....
    • ஆனல், இவை பெரிய தொகையில் கொடுக்க முடியுமா என்பது கேள்வி? இவை ஒவ்வொன்றும் ஆக குறைந்தது $1.5 மில்லியன். மற்றது, ரஷ்யாஇவற்றை தேடி அழிக்கும், தடுக்கும்  முயற்சி. அத்துடன், ரஷ்யா இப்பொது retooling செய்து வருகிறது, அதுக்கு சீன பல்உபயோக பொருட்களை விற்பதாக US   அனுப்பி இருக்கிறது Blinken ஐ  சீனவை எச்சரிப்பதற்கு, சீன (நமுட்டுச்) சிரித்துக் கொண்டே வரவேற்றது.           
    • பாராளுமன்ற பகிஸ்கரிப்பு என்றால் தாங்கள் ஏதோ வெற்றி மந்திரம் என்று நினைத்து காலமும் இருந்தது இன்று கழுதை தேய்ந்து கடடேறும்பு ஆனது தான் உண்மைநிலை என்று பல அய்யாமார்கள் அண்ணைமார்கள் சொல்ல அறிந்துள்ளேன்..
    • ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள்.  குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார். அத்தோடு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளமையால் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் உட்பட இருதரப்பு உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உமா ஓயாத் திட்டத்திற்கான  ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஒரு அணையை அமைத்து சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.   உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இலக்காக இருந்தது. எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் அங்குராட்பணம் செய்யப்பட்டன.  மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதில் 85சதவீதம் ஈரான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே அவருக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயமானது ஏலவே திட்டமிடப்பட்டதொன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.  அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்தார். இவ்வாறு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடியான மோதல் நிலைமைக்கு வந்துள்ளது.  கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லையென ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளதோடு அந்தக் கட்டமைப்பு அவசரமான கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அவருடைய வருகையானது உண்மையில் இலங்கைக்கு இரண்டு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதாக உள்ளது. முதலாவதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் முக்கியமானதாகின்றது. இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து வேறெந்த நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் உட்புகுந்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்களைச் செய்வதில் தயக்கம் காண்பிப்பதில்லை ஏற்பதற்கு கடந்த காலச் சம்பவங்கள் சான்றுபகிர்கின்றன. அவ்விதமானதொரு சூழலில் இலங்கைக்கு ஈரானிய ஜனாதிபதியின் வருகையின் போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணிசமான பொறுப்பு இலங்கைக்கும் உள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்ற நவீன ஆயுத தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பால் அவற்றை அடையாளம் காண்பதற்கான வல்லமைகள் இலங்கையிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் இருக்கின்றன. ஆகவே, ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வந்து திரும்பும் வரையில் தேசிய பாதுகாப்பையும், நட்புநாட்டின் தலைமையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கைக்கு மிகக்பெரும் நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன. இரண்டாவதாக, சமகால நிலைமைகளை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கொள்வதையோ, இருதரப்பு உடன்பாடுகளை மேலும் மேம்படுத்துவதையோ இஸ்ரேல் விரும்பவில்லை.  குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளின் நிலைப்பாடுகளின் பிரகாரம், இலங்கை தவறானதொரு தெரிவினை நோக்கிச் செல்கின்றது. இதனால் பாரிய தவறை இழைக்கப்போகின்றது என்ற அடிப்படையில் தான் காணப்படுகின்றது. இதன் காரணத்தினால் இஸ்ரேல் இலங்கைப் பணியாளர்களை மையப்படுத்தி வழங்கிவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற்சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், குறித்த உடன்பாடு 2023ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இதுவரையில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 602பேர் நாட்டிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துள்ளனர். அத்துடன் பத்தாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இலங்கையர்கள் மேலும் இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும், முதியோர் பராமரிப்பு, பொதுஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும். இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகே இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான சேவைகளை அதிகரித்தல், விமான, கப்பல்துறை பிரிவுகளில் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பொருத்தமற்ற தருணத்தில் இலங்கை அரசாங்கம் அளவுக்கதிகமாக ஈரானுடன் ஆதரவுக்கரத்தினை நீண்டுவது இஸ்ரேலுக்கு எதிர்மறையான மனோநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்;லை. இலங்கை அரசாங்கம், ஈரானுடன் கிட்டிய உறவுகளைப் பேணுவதன் ஊடாக எரிபொருட்கள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கடியற்றதொரு சூழலை ஏற்படுத்தலாம் என்றொரு இராஜதந்திரக் கணக்கினை போடலாம். ஆனால், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள ஓரிரு நாட்களிலேயே மசகு எண்ணெயின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தாது இருக்கப்போவதில்லை.  அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஈரானுடனான நெருக்கமான உறவுகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான நப்பாசையாகவே இருக்கும்.  இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றபோதும், கடந்த காலங்களில் சீன சார்பு நிலையால், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பூகோளப் போட்டித்தளமாக தன்னை மாற்றிக்கொண்டது. அது தற்போது வரையில் நீடிக்கின்றது. அதன்பின்னர் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தி பலஸ்தீனத்தின் அதிருப்திக்கு ஆளானது. எனினும், பலஸ்தீன் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதால் நெருக்கடிகள் உருவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானுடன் நேசக்கரம் நீட்டி இஸ்ரேலின் அதிருப்தியைச் சம்பாதிக்கிறது. இஸ்ரேலின் அதிருப்தி என்பது அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு நிகரானது என்பதை இலங்கை புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் நீடிக்காது.  https://www.virakesari.lk/article/181712
    • இப்போது சுற்றுலா பிரயாணம் செய்யும் போது தெரிந்த ஈழ தமிழர்கள் சிலர் bon voyage  என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கின்றனர். அது பிரெஞ்சு என்று அவர்களுக்கே தெரியாது 🤣   ஒருவர் bon voyage சொல்ல வழக்கம் போல மற்றவர்களும் அதை சொல்கின்றனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.