Jump to content

பைபிள் கதைகள்


Recommended Posts

பைபிள் கதைகள் 49: இஸ்ரவேலர்களின் கடைசித் தலைவர்!

 

 
 
bible_3160606f.jpg
 
 
 

கானான் தேசத்தில் எப்பிராயீம் என்னும் மலைகள் சூழ்ந்த நாடு இருந்தது. அதன் முக்கிய நகரமாக ராமா விளங்கிவந்தது. அதில் பரலோகத் தந்தையாகிய கடவுளுக்குப் பணிந்து வாழ்ந்துவந்த இஸ்ரவேலர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் எல்க்கானா. இஸ்ரவேல் மக்களில் எப்பிராயீம் என்னும் கோத்திரத்திலிருந்து வந்தவர். அவருக்கு அன்னாள், பெனின்னாள் என இரு மனைவியர் இருந்தனர். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தனர். ஆனால் அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை. இதனால் பெனின்னாள் மிகவும் கர்வம் கொண்டவளாக அன்னாளை “மலடி” என்று தூற்ற ஆரம்பித்தாள். இதனால் அன்னாள் மிகவும் துயருற்றுவந்தாள். கணவன் எல்க்கானா எவ்வளவோ எடுத்துக் கூறியும் அன்னாளை அவமானப்படுத்துவதையும் ஊரார் முன் தூற்றுவதையும் அவள் நிறுத்தவில்லை.

கடவுள் காட்டிய கருணை

கடவுள் மீது மிகுந்த பக்தியும் பணிவும் கொண்டிருந்த எல்க்கானா, பிள்ளையின்றி வாடி வந்த தன் மனைவி அன்னாளைக் கண்டு வருந்தினார். அவளை அழைத்துக்கொண்டு, ஆண்டுதோறும் தனது சொந்த ஊரான ராமாவிலிருந்து கிளம்பி, கடவுளைத் தொழுதுகொள்ள அமைக்கப்பட்டிருந்த ஆசாரிப்புக் கூடாரத்தை விட்டுவிட்டு சீலோவுக்குப் போக ஆரம்பித்தார். அங்கே அவர் சர்வ வல்லமையுள்ள கடவுளை வணங்கித் துதித்து அவருக்குப் பலிகளும் செலுத்தித் திரும்பினார். இம்முறை சீலோவுக்குச் சென்று பலி செலுத்திய பின் கடவுளிடம் கைகளை ஏந்தி அன்னாள் இறைஞ்சி நின்றாள்.

“உலகைப் படைத்துக் காக்கும் தந்தையே, என்னை மறந்துவிடாதீர் அப்பா! எனக்கு ஒரு ஆண் குழந்தையை அருளும். அவ்வாறு எனக்குக் கருணை காட்டினால் வாழ்நாளெல்லாம் சேவை செய்ய அவனை உமக்குக் கொடுத்து விடுவேன், இது சத்தியம்” என்று கண்ணீரோடு ஜெபம் செய்தாள். அவளது கண்ணீர் புனிதமான ஆசரிப்புக் கூடாரத்தின் தரையில் விழுந்து சிதறியது. கடவுள் அன்னாளின் ஜெபத்துக்கு மனமிறங்கினார். சீலோமிலிருந்து திரும்பியபோது அன்னாளின் மனத்துக்குள் அமைதியையும் சந்தோஷம் குடிகொள்ளும்படி செய்தார். மனைவியின் முகத்தில் முன்னெப்போதும் இல்லாத பிரகாசத்தைக் கண்ட அல்க்கானா, அவளை மேலும் அதிக அக்கறையுடன் பார்த்துக்கொண்டார். அவளோடு அதிகமாய் தன் நேரத்தைச் செலவிட்டார்.

புதுமணத் தம்பதியர்போல் அவர்கள் காதலில் களித்திருந்தனர். பல மாதங்களுக்குப் பின் அன்னாள் கர்ப்பமுற்றாள். அவள் பெற்ற அவமானங்கள் துடைத்தெறியப் பட்டன. கடவுளை இன்னும் அதிகமாகத் தொழுதுகொள்ள ஆரம்பித்தாள். தன் ஜெபம் கேட்கப்பட்டு, தனக்குத் தாய்மை அருளப்பட்டதில் மகிழ்ச்சியடைந்த அன்னாளின் வயிற்றுக்குள் அவளது குழந்தை துள்ளிக் குதித்தது. பின்னர் அவள் குழந்தையை ஈன்றபொழுது அது ஆண் மகவாக இருந்தது. அவனுக்குப் பெற்றோர் சாமுவேல் என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்கள். சாமுவேல் என்றால் கடவுளின் பரிசு, கடவுள் கேட்பார் என்பது பொருள்

மகனை ஒப்படைத்த தாய்!

அன்னாள் சாமுவேலைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அவனுக்கு விவரம் தெரியத் தொடங்கியது. முதல் கடவுளாகிய யகோவா, இஸ்ரவேல் மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்டு, செங்கடலை வற்றச்செய்து, அதன் தரைவழியே அதைக் கடக்கச்செய்து, பாலைவனத்தில் உணவளித்து, கானான் நாட்டை இஸ்ரவேலர்களுக்கு வென்று கொடுத்த வரலாற்றைக் கூறி வளர்த்துவந்தாள். சிறு வயது முதலே யகோவாவைப் பற்றி சாமுவேல் நன்கு புரிந்துகொண்டான்.

அன்னாள், தன் கணவரைப் பார்த்து, “சாமுவேல் தாய்ப் பாலை மறந்ததுமே ஆசரிப்புக் கூடாரத்தில் கடவுளுக்குச் சேவை செய்ய அவனைக் கொண்டுபோய் விட்டுவிடலாமா?” என்று கேட்டாள். அதற்கு கணவர், “கடவுளுக்கு நீ வாக்களித்தபடியே செய்” என்றார். எனவே சாமுவேலை அழைத்துக்கொண்டு, அவர்கள் சீலோமுக்குச் சென்றார்கள். அங்கே ஆசாரிப்புக் கூடாரத்தின் பிரதான ஆசாரியராக இருந்தவர் ஏலி. வயது கூடிய கிழவனாக இருந்த ஏலியைப் பெற்றோர் சந்தித்தனர். சாமுவேலை கடவுளுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பதாக அவர்கள் ஏலியைப் பார்த்துக் கூறினார்கள்

வியந்துபோன ஏலி

ஐந்து வயதே நிரம்பிருந்த சாமுவேலைக் கண்டதும் ஏலி அதிர்ச்சியடைந்தார். “பால்மணம் மாறாத இந்தப் பாலகனையா இங்கே விட்டுச் செல்லப்போகிறீர்கள்?! நன்றாக யோசித்துத்தான் சொல்கிறீர்களா” என அந்த வெண்தாடிக் கிழவர் நா தழுதழுக்கக் கேட்டார். அதற்கு சாமுவேல், “அய்யா.. என் தாய், தந்தையின் விருப்பபடி கடவுளின் பக்கத்தில் இருந்து நான் அவருக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்” என்றான். இதைக் கேட்டு ஏலி சிலிர்த்துப் போனார். அவனை அருகே அழைத்து ஸ்பரிசித்து அணைத்துக்கொண்டார். அவனையும் அவனது பெற்றோரையும் ஆசீர்வதித்த ஏலி, “கடவுளின் சித்தப்படியே ஆகட்டும்” என்று அனுமதித்தார்.

சாமுவேலை ஆசாரிப்புக் கூடாரத்தில் விட்டுவிட்டு அன்னாளும் எல்க்கானாவும் ராமாவுக்குக் கிளம்பிச் சென்றார்கள். சாமுவேல் யகோவாவின் ஆசரிப்புக் கூடாரத்தில் சேவை செய்வதில் மிகவும் மகிழ்ந்துபோனான். தொடக்கத்தில் மகனைப் பிரிந்த துன்பம் அன்னாளை வாட்டினாலும் பின்னர், அவளுக்குக் கடவுள் மேலும் பல குழந்தைகளை அருளியதால் ஆறுதல் அடைந்தாள். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் அன்னாளும் எல்க்கானாவும் கடவுளை வணங்கவும், தங்கள் மகனைக் கண்ணாறாக் காணவும் சீலோமுக்கு வரத் தொடங்கினார்கள். இப்படி வரும்போதெல்லாம் தனது அன்பு மகனுக்காகத் தான் கைப்பட நெய்த கையில்லாத வெண் அங்கியை அன்னாள் கொண்டுவருவாள்.

புனிதத்தைச் சிதைத்த வாரிசுகள்

காலம் உருண்டோடியது. சீலோமின் ஆசரிப்புக் கூடாரத்தில் சாமுவேல் கடவுள் சேவையை மிகுந்த பணிவுடனும் பக்தியுடனும் செய்துவந்தான். அவனது தூய்மையும் பனித்துளிபோல் மென்மையான அவனது மனமும் கடவுளுக்கு பிடித்திருந்தன. வளர்ந்து பெரியவனாகிவிட்ட அவனை ஜனங்களுக்கும் பிடித்துப்போய்விட்டது.

பிரதான ஆசாரியாரான ஏலிக்கு ஓப்னி பினெகாசு என இரு மகன்கள் இருந்தார்கள். ஆசரியாரின் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தி வந்தார்கள். அங்கே தொழவரும் பக்தர்களின் பலிகளை இழிவுப்படுத்தினார்கள். கடவுள் மீது அவர்களுக்குப் பயமில்லாமல் இருந்ததால் பல கெட்ட காரியங்களைச் செய்துவந்தார்கள். அவர்களது செயல்களைக் கண்ட பலர், அவர்களின் பாதையை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடக்க ஆரம்பித்தனர்.

மகன்களின் தீய நடத்தை கண்டு ஆசாரிப்புக் கூடாரப் பதவியிலிருந்து ஏலி அவர்களை நீக்கவில்லை. பாசம் அவரைத் தடுத்தது. இதனால் கடவுள் கோபம் கொண்டார். ஆசரிப்புக் கூடாரத்தின் புனிதத்தைச் சிதைத்த அவர்களைத் தண்டிக்க விரும்பினார். இத்தனைக்கு மத்தியிலும் சாமுவேல் தன் கடமைகளைப் பொறுமையாகவும் சரியாகவும் செய்துவருவதைக் கடவுள் கண்ணுற்றார். எனவே தீயவர்களை தனது இடத்திலிருந்து அற்றிவிட்டு சாமுவேலை உயர்த்தக் கடவுள் விரும்பினார்.

சாமுவேலுடன் பேசிய கடவுள்

ஆசரிப்புக் கூடாரத்தில் சாமுவேல் தூங்கிக் கொண்டிருந்தபோது “சாமுவேலே… சாமுவேலே” என்று கடவுள் அவனை அழைத்தார். தன்னை அழைத்தது கடவுள்தான் எனத் தெரிந்துகொண்டதும், “தந்தையே பேசும், உம்முடைய அடியேன் கேட்கிறேன்” என்று பணிவுடன் கூறினான். அப்போது கடவுள், “ஏலியையும் அவருடைய மகன்களையும் தண்டிக்கப் போகிறேன்” என்றார். இதை ஏலியிடம் சாமுவேல் கூற, “கடவுளின் சித்தப்படியே நடக்கட்டும்” என்றார் ஏலி. கடவுள் சொன்னபடியே ஓப்னியும் பினெகாசும், பெலிஸ்தருடன் நடந்த போரில் மாண்டுபோனார்கள். மகன்கள் இறந்ததைக் கேள்விப்பட்ட ஏலியும் இறந்துபோனார். இப்போது சாமுவேல் இஸ்ரவேலர்களின் கடை நியாயாதிபதியாக ஆனார். அவரது தலைமையில் இஸ்ரவேலர்கள் அமைதியுடன் வாழ்ந்தார்கள்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-49-இஸ்ரவேலர்களின்-கடைசித்-தலைவர்/article9678796.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • Replies 66
  • Created
  • Last Reply

பைபிள் கதைகள் 50: ஓர் அரசன் என்ன செய்வான்?

 
bibl_3165397f.jpg
 
 
 

மிகச் சிறிய வயதிலேயே பெற்றோரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர் சாமுவேல். அவர் வளர்ந்து, இஸ்ரவேல் மக்களின் கடைசி நியாயாதிபதியாக விளங்கினார். சாமுவேலின் காலத்தில் இஸ்ரவேலர் களுக்குப் பெரும் தொல்லை கொடுத்துவந்த பெலிஸ்தர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் இஸ்ரவேலுக்குள் நுழையவில்லை. பெலிஸ்தர்கள் ஏற்கெனவே கைப்பற்றி வைத்திருந்த எக்ரோன் முதல் காத் வரை பல நகரங்களை இஸ்ரவேலர்கள் சாமுவேலின் காலத்தில் மீட்டெடுத்தனர். இஸ்ரவேலர்களின் கடவுளாகிய யகோவா இருக்கும்வரை நாம் அவர்களை வெல்ல முடியாது என்று பெலிஸ்தர்களும் எமோரியர்களும் முடிவுசெய்தனர். இதனால் இஸ்ரவேலர்களுடன் அவர்கள் சமாதானம் செய்துகொண்டனர்.

ஊழலில் திளைத்த வாரிசுகள்

சாமுவேல் முதுமையடைந்ததும் தனது பணியை அவரால் செய்ய முடியவில்லை. இதனால் நியாயத்தை நிலைநாட்ட வேண்டி, வழக்குகளை விசாரிக்கத் தன் மகன்களை சாமுவேல் நியமித்தார். சாமுவேலின் மூத்த மகனின் பெயர் யோவேல். இளைய மகனின் பெயர் அபியா. அவர்கள் பெயெர்செபா

நகரத்தில் நீதிபதிகளாக இருந்து வழக்குகளை விசாரித்து வந்தார்கள். ஆனால் தங்களின் தந்தையான சாமுவேலைப் போல் அவர்கள் புடமிட்ட தங்கமாக இருக்கவில்லை. அவர்கள் ரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றிக் கூறினார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றினார்கள்.

இதனால் கோபமடைந்த இஸ்ரவேலின் மூப்பர்கள் ஒன்று கூடி, ராமா நகரத்துக்கு வந்து சாமுவேலைச் சந்தித்தார்கள். சாமுவேல், அவர்கள் எப்படிப்பட்ட கோரிக்கையுடன் தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டு அமைதி காத்தார். ‘இனி எங்களுக்கு அரசனே தேவை; நீதிபதிகள் அல்ல’ எனக் கேட்டது சாமுவேலை மனவேதனை அடைய வைத்தது. சாமுவேல் கடவுளிடம் பேசிய பின் பதில்தருவதாகக் கூறினார். சாமுவேல் தக்க பதில்தரும்வரை ராமா நகரத்திலேயே தங்க மூப்பர்கள் அனைவரும் முடிவு செய்தனர்.

கடவுளே அரசர்

இஸ்ரவேலின் மூப்பர்கள் ஒன்றுதிரண்டு வந்துஇஸ்ரவேலர்களுக்கு இதுநாள் வரை கடவுளே அரசராக இருந்து வழிநடத்திவருவதை உணராமல் இருக்கிறார்களே; தங்களுக்கு அரசனைக் கேட்பது கடவுளுக்கு எதிரான திட்டமல்லவா?” என்று பதறினார் சாமுவேல். கடவுளின் ஆசாரிப்புக் கூடாரத்தில் அவரது உடன்படிக்கைப் பெட்டியின் முன்பாக ஜெபித்தார்.

கடவுள் சாமுவேலிடம், “மக்கள் கேட்பதைப் போல் செய், அவர்கள் உன்னை நிராகரிக்கவில்லை. என்னையே நிராகரித்திருக்கிறார்கள்! என்னை அவர்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை! நான் எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தேன். ஆனால் என்னை விட்டுவிட்டுக் கற்பனை உருவங்களை வழிபட்டனர். இப்போது அவர்கள் ஒரு மனிதனை வழிபட வேண்டி, அரசனைக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டதைப்போலவே செய்; ஆனால் மனிதர் மத்தியிலிருந்து வரும் ஓர் அரசன் என்ன செய்வான் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறு! அவன் எவ்வாறு ஆட்சிசெய்வான் என்பதைக் கூற மறக்காதே” என்றார்.

அரசன் என்ன செய்வான்?

பதிலுக்காகக் காத்திருந்த மூப்பர்களை அழைத்த சாமுவேல், கடவுள் கூறிய எச்சரிக்கைகளை எடுத்துரைத்தார். “உங்களை ஆள்வதற்கு ஓர் அரசன் வந்தால், அவன் என்ன செய்வான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவனுக்கு எவையெல்லாம் தேவைப்படும் என்பதை அறிவீர்களா? அவன் உங்களின் மகன்களை எடுத்துக்கொள்வான். அவர்களைத் தனக்கு சேவை செய்யுமாறு அமர்த்திக்கொள்வான். அவர்களைப் போர் வீரர்கள் ஆகுமாறு கட்டாயப்படுத்துவான். அவன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்திப் போருக்கான ஆயுதங்களைச் செய்யச் சொல்வான்! அவன் தனது அரண்மனையை அலங்கரிங்க அவர்களை வேலை வாங்குவான்.

அரசன் உங்கள் பெண் பிள்ளைகளையும் எடுத்துக்கொள்வான். தனக்கான வாசனைப் பொருட்களைச் செய்யச் சொல்வான். அவர்களில் சிலரை அவனுக்காகச் சமைக்கவும், ஆடம்பர உணவுகளைச் செய்யவும் பணிப்பான்.

அவ்வளவு ஏன்; அரசன் உங்கள் செழிப்பான வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எடுத்துக் கொள்வான். தன் அதிகாரிகளுக்கு அவற்றைக் கொடுப்பான். உங்கள் மந்தையில் பத்தில் ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான்.

அரசன் அத்துடன் நின்றுவிடுவதில்லை; உங்களின் திறன்மிக்க பணியாட்களை எடுத்துக் கொள்வான். அவன் உங்கள் கழுதைகளையும் எடுத்து தன் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்வான். இவ்வாறு நீங்கள் படிப்படியாக உங்கள் அரசனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் அடிமையாவீர்கள். காலம் வரும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அரசனால் கதறி அழுவீர்கள்” என்று சாமுவேல் எடுத்துக் கூறினார்.

பிடிவாதம் வென்றது

ஆனால் இஸ்ரவேலின் மூப்பர்கள் சாமுவேலின் வார்த்தைகளைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவர்கள், “இல்லை! இல்லை! எங்களை ஆள ஓர் அரசனே தேவை. அவரையே நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு அரசன் கிடைத்துவிட்டால் நாங்கள் மற்ற நாடுகளைப் போன்று இருப்போம், அரசன் எங்களை வழிநடத்துவான். எங்களோடு வந்து எங்களுக்காகப் போர் செய்வான்” என்று பிடிவாதமாகக் கூறினார்கள். மூப்பர்களின் பிடிவாதத்தைக் கடவுளிடம் எடுத்துச் சென்றார் சாமுவேல். கடவுள் “அவர்கள் விரும்பியபடியே செய்” என்றார். பின்னர் சாமுவேல் இஸ்ரவேல் மூப்பர்களிடம், “நீங்கள் புதிய அரசனை அடைவீர்கள். இப்போது, நீங்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றார். இவ்வாறு இஸ்ரவேலர்களுக்கு நியாயாதிபதிகளின் ஆட்சி முடிந்து அரசர்களின் ஆட்சி தொடங்கியது.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-50-ஓர்-அரசன்-என்ன-செய்வான்/article9704702.ece

Link to comment
Share on other sites

  • 1 month later...

பைபிள் கதைகள் 51: இஸ்ரவேலின் முதல் அரசன்!

 
bible_3167815f.jpg
 
 
 

இஸ்ரவேலர்களுக்கு ஆசாரியராகவும் நியாயாதிபதியாகவும் இருந்த சாமுவேல் மிகுந்த முதுமையில் இருந்தார். அவரது மகன்கள் நீதிமன்றங்களை ஊழல் மன்றங்களாக மாற்றியிருந்தனர். இதனால் கோபம் கொண்ட மக்கள், தங்கள் தலைவர்களிடம் முறையிட்டனர். எனவே இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றுகூடி சாமுவேலைச் சென்று சந்தித்து, “இனி எங்களுக்கு அரசனே தேவை. நியாயாதிபதிகள் வேண்டாம்” என்றார்கள். சாமுவேல் இதுகுறித்து ஆசாரிப்புக் கூடாரம் சென்று கடவுளிடம் வேண்டினார்.

கடவுள் மிகுந்த வருத்தம் கொண்டார். “ எனது மக்களுக்கு நானே அரசனாக இருந்துவருவதை மறந்துவிட்டார்களே... மனிதர்கள் மத்தியிலிருந்து தோன்றும் ஒரு அரசன் எப்படி நடந்துகொள்வான் என்பது பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறு” என்றார். சாமுவேலும் கடவுளின் வார்த்தைகளின்படி

அரசனும் அரசாட்சியும் கேடுகளையே கொண்டுவருவார்கள் என்பதை விரிவாக எடுத்துக் கூறியும் அதை அவர்கள் ஏற்க மறுத்தனர்.

“எங்களுக்கு அரசன் கிடைத்துவிட்டால் நாங்கள் மற்ற நாடுகளைப் போன்று இருப்போம், மேலும் மேலும் பலம்பெற்றுவரும் பெலிஸ்தர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழிக்க போர்தொடுத்து வரலாம். எங்களுக்கென்று ஓர் அரசன் இருந்தால் எங்களோடு வந்து எங்களுக்காகப் போர் செய்வான்” என்று பிடிவாதம் காட்டினார்கள். எனவே சாமுவேல் மீண்டும் கடவுளிடம் சென்றார். அப்போது கடவுள், “ அவர்கள் விருப்பப்படியே நான் அவர்களுக்கு ஒரு அரசனைத் தருகிறேன். நாளை இதேநேரம் உன்னிடம் ஒருவனை அனுப்புவேன். அவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவனை இஸ்ரவேல் மக்களின் அரசனாக நீ அபிஷேகம் செய்துவை” என்றார்.

தன் மக்களுக்கு ஓர் அரசனைக் கடவுள் கொடுக்கத் தீர்மானித்ததை எண்ணி நிம்மதி அடைந்தார் சாமுவேல். எனவே நாளை வரும்படி மூப்பர்களையும் தலைவர்களையும் அனுப்பிவைத்தார்.

கழுதையைத் தேடி

இஸ்ரவேலின் 12 கோத்திரங்களில் ஒன்று யென்மீன். அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த செல்வந்தர் கீஸ். கடவுளாகிய பரலோகத் தந்தையின் மீது பற்றும் விசுவாசமும் கொண்டவர். அவரது பாசத்துக்குரிய மகன் சவுல். இஸ்ரவேலர்களில் மிகவும் உயரமானவர்; எளிய ஆனால் அழகிய தோற்றம் கொண்டவர். நல்ல பலசாலி. தந்தையின் வார்த்தைகளைத் தட்டாமல் அவரது சொற்படி நடந்துவந்தார். செல்வந்தர் எனினும் எளிமையாக வாழ்ந்தார். அப்படிப்பட்ட சவுல், தனது வாழ்க்கையில் இப்படியொரு திருப்புமுனை ஏற்படும் என்று அவர் நினைத்திருக்கவே மாட்டார். ஒரு நாள் கீஸின் கழுதைகள் தொலைந்துபோய்விட்டன.

எனவே கீஸ் தனது மகன் சவுலை அழைத்து, “என் அன்பு மகனே. ஒரு வேலைக்காரனை உதவிக்குக் கூட்டிக்கொள். என் கழுதைகளைத் தேடிக் கொண்டு வா. நீ கழுதைகளைக் கண்டுபிடித்து வந்துவிடுவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார். தந்தையைப் பணிந்து கழுதைகளைத் தேடிப் புறப்பட்ட சவுல், தனது வேலைக்கார நண்பனுடன் பல்வேறு நகரங்களில் தேடி அலைந்தான். ஆனால் கழுதைகள் கிடைக்கவேயில்லை. ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை; வேறு கழுதைகளை வாங்கித் தந்தைக்குக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கவில்லை.

ஏனெனில் கீஸ் தனது கழுதைகளை எவ்வளவு நேசித்தார் என்று சவுலுக்குத் தெரிந்திருந்தது. இன்னும் பல நகரங்களுக்கும் சமவெளிகளுக்கும் அலைந்தேனும் தந்தையின் கழுதைகளைக் கண்டுபிடித்து, அவற்றை அவர் முன் நிறுத்தி மகிழ்ச்சிப்படுத்த நினைத்தான். ஆனால் தந்தையின் பாசம் பற்றியும் சவுலுக்குத் தெரியும். மூன்று நாட்களுக்கு முன் வீட்டை விட்டுக் கிளம்பிய தன் மகனையும் பணியாளையும் நினைத்து இந்நேரம் கவலைப்பட ஆரம்பித்திருப்பார் என்று கலங்க ஆரம்பித்தார்.

தனது வேலைக்கார நண்பனை நோக்கி, “நாம் திரும்பிப் போகலாம். என் தந்தை இப்பொழுது கழுதைகளை விட்டு நம்மைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்திருப்பார்” என்றார். அதற்கு வேலைக்காரன், “நாம் இப்போது வந்துசேர்ந்திருக்கும் இந்த சூப் நகரத்தில்தான்

நமது மக்களின் நியாயாதிபதியும் தலைமை ஆசாரியனுமாகிய சாமுவேல் இருக்கிறார். அவரிடம் சென்று, நாம் அடுத்துச் சென்று தேட வேண்டிய நகரம் எது எனக் கேட்டுவரலாம்” என்றான். அதை ஏற்றுக்கொண்ட சவுல், தலைமை ஆசாரியரின் வீட்டைத் தேடி அடைந்தனர். அங்கே இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களும் மக்களும் திரளாகக் கூடியிருந்தனர்.

அபிஷேகம் செய்துவைத்த சாமுவேல்

அப்போது அங்கே வந்து சேர்ந்த சவுலைக் கண்ட சாமுவேல் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். “மூன்று நாட்களுக்கு முன் தொலைந்துபோன கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இனி அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இஸ்ரவேலர்கள் அனைவருக்கும் அரசனாக்கும்படி கடவுள் உன்னைக் கண்டுபிடித்துக்கொடுத்திருக்கிறார்.” என்றபடி தலைவர்கள் மற்றும் மக்களின் முன்னிலையில் சவுலின் தலையில் அபிஷேக எண்ணெய் ஊற்றி அவரை அரசனாக அறிவித்தார் சாமுவேல்.

இஸ்ரவேல் மக்களுக்கு அரசனாக இருக்க தனக்குத் தகுதி இல்லை எனச் சவுல் நினைத்தார். “இஸ்ரவேலிலேயே மிகச் சிறிய கோத்திரம் யென்மீன். அதில் எனது குடும்பமோ மிகவும் சிறியது. அப்படியிருக்கையில் நான்தான் அரசன் என்று எப்படிச் சொல்கிறீர்கள் ஐயா?” என்று சாமுவேலிடம் கேட்டார் சவுல். தன்னை ஒரு தலைவனாகக் காட்டிக் கொள்ள விரும்பாத சவுலின் பணிவு, கடவுளுக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் அவரை அரசனாகத் தேர்ந்தெடுந்தார். சவுலை அரசனாகத் தேர்ந்தெடுத்ததை இஸ்ரவேல் மக்கள் மகிழ்ந்து கொண்டாடினார்கள். ‘இஸ்ரவேலின் ராஜா நீடூழி வாழ்க’ என்று கோஷமிட்டுத் தங்கள் ஆதரவைக் காட்டினார்கள்.

(பைபிள் கதைகள் தொடரும்

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-51-இஸ்ரவேலின்-முதல்-அரசன்/article9711588.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 52: கீழ்ப்படிதலே சிறந்த பலி!

 

 
bible_3170072f.jpg
 
 
 

இஸ்ரவேலின் முதல் அரசனாகச் சவுலை கடவுள் தேர்தெடுத்தார். நல்ல உயரம், பொலிவுமிக்க தோற்றம் ஆகியவற்றுடன் செல்வந்தராகவும் இருந்தார் என்றும் மக்களில் பலர், “இவனா நம்மைக் காப்பாற்றப் போகிறான்?” என்று கேலிபேசி அலட்சியப்படுத்தினார்கள். இதை சவுல் தன் காதுபடக் கேட்டபோதும் அலட்டிக்கொள்ளவில்லை. கிபியாவிலிருந்த தன் வீட்டுக்கு வந்து ஒரு அரசனைப்போல் அலட்டிக்கொள்ளாமல் தனது வயலில் உழைத்துக்கொண்டிருந்தார். தன்னைத் தேர்தெடுத்த கடவுளிடமிருந்து தனக்கான சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்தார். இந்தநேரத்தில் அம்மோன் (உழைத்து உண்ணாமல் போரை ஒரு தொழிலாகச் செய்த இனங்களில் அம்மோனியர்களும் அடங்குவர்) நாட்டின் அரசனாகிய நாகாஸ், இஸ்ரவேலின் நகரங்களில் ஒன்றாகிய கீலேயாத்தில் நாட்டில் உள்ள யாபேஸ் என்ற ஊருக்கு வந்து தனது படையுடன் முகாமிட்டான்.

யாபேஸ் பல வளமான ஊர்களில் ஒன்று. அங்கே கவர்ந்துசெல்ல ஏராளமான மந்தைகளும் விளைச்சலும் மக்களின் வீடுகளில் பொக்கிஷங்களும் இருந்தன. நாகாஸ் மிகக் கொடூரமான அரசன் என்பதை யாபேஸ் மக்கள் அறிவார்கள். அவர்கள் நாகாஸ் தங்களை அழித்துவிடும் முன் அவனுக்குப் பணிந்துபோய்விட நினைத்து அவனிடம் ஓடினார்கள், “யாபேஸ் வாசிகளாகிய நாங்கள் அனைவரும் உங்களுக்கு அடிமைகளாக இருப்போம், தயவுசெய்து எங்களைக் கொன்றுவிடாமல் எங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளுங்கள்”என்று கெஞ்சினார்கள்.

அதற்கு நாகாஸ், “உங்களோடு ஒப்பந்தம் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை! முதலில் உங்கள் எல்லாருடைய வலது கண்களையும் நான் தோண்டியெடுத்து, இஸ்ரவேலர்கள் அனைவரையும் அவமானப்படுத்த வேண்டும். அதற்குச் சம்மதம் என்றால் நீங்கள் அனைவரும் உயிர் பிழைப்பீர்கள்?” என்று கூறிக் கொக்கரித்தான். இதைக் கேட்டு மேலும் பயந்த யாபேஸ் ஊரின் மூப்பர்கள், “அரசே எங்களுக்கு ஏழு நாட்கள் அவகாசம் கொடுங்கள். இஸ்ரவேல் தேசமெங்கும் தூதுவர்களை அனுப்பி உதவி கேட்கிறோம். எங்களைக் காப்பாற்ற யாரும் வராவிட்டால், அப்போது உங்களிடம் சரணடைகிறோம்” என்று சொன்னார்கள். அதற்கு நாகாஸ், “நானும் பார்க்கிறேன்.. உங்களைக் காப்பாற்ற யார் வரப்போகிறார்கள் என்று” என்று ஆணவமாகக் கூறினான்.

சவுலின் முதல் வெற்றி

யாபேஸ் மக்கள் அனுப்பிய தூதுவர்கள் சவுலின் ஊராகிய கிபியாவுக்கு வந்து அங்கிருந்த மக்களிடம் நாகாஸின் முற்றுகையை எடுத்துக்கூறி எல்லாரும் சத்தமாகக் குரலெடுத்து ஒப்பாரி வைத்து அழுதார்கள். அச்சமயத்தில் சவுல், தன்னுடைய வயலிலிருந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு தன் வீட்டுக்கு அவ்வழியே போய்க்கொண்டிருந்தார். மக்களின் அழுகுரல் கேட்டு அவர்களின் அருகே வந்தார். “என்ன நடந்தது? ஏன் எல்லாரும் அழுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், யாபேஸ் ஊர் முற்றுகையிடப்பட்டது குறித்துக் கூறினார்கள். இதைக் கேட்ட சவுல் பயங்கர கோபத்தோடு, ஒரு ஜோடிக் காளைகளைப் பிடித்து துண்டு துண்டாக வெட்டி, தூதுவர்களின் மூலம் இஸ்ரவேலர்களுடைய எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தார்.

அந்தத் தூதுவர்கள் போய், “சவுலோடும் சாமுவேலோடும் வராதவர்களுடைய மாடுகளுக்கும் இந்தக் கதிதான் நேரும்!” என்று அறிவிப்பு செய்தார்கள். அப்போது, இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் பயபக்தியோடு ஒன்றுகூடி வரும்படியான உணர்ச்சியைக் கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார். அணியணியாகத் திரண்ட மக்கள் பேசேக்கு என்ற இடத்தில் ஒன்றுகூடினார்கள். அங்கே வந்த சவுல் அவர்களைக் கணக்கெடுத்தார். இஸ்ரவேலர்களில் மூன்று லட்சம் பேரும், யூதா குடும்பத்தின் வழிவந்த ஆண்களில் முப்பதாயிரம் பேரும் இருந்தார்கள்.

மறுநாள் தன்னுடைய படையை மூன்று பிரிவுகளாக சவுல் பிரித்தார். அவர்கள் நள்ளிரவு தாண்டிய மூன்றாம் சாமத்தில் (அதிகாலை மூன்றுமணி) எதிரியின் முகாமுக்குள் திடீரென்று நுழைந்து எதிர்பாராத நேரத்தில் தாக்குதலைத் தொடங்கினார்கள். அந்தத் தாக்குதல் நடுப்பகல்வரை நீடித்ததில் அம்மோனியர்களை வெட்டிச் சாய்த்தார்கள். உயிர் தப்பியவர்கள் ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடினார்கள். சவுலுக்குக் கடவுள் முதல் வெற்றியைக் கொண்டுவந்தார். சவுலை அரசனாக அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் ஏற்றுக்கொண்டனர். அம்மோனியர்களுக்கு எதிரான வெற்றியை மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடினார்கள். அப்போது சவுல், “இன்று பரலோகத் தந்தையாகிய யகோவா இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார்” என்று கூறி கடவுளுக்கே புகழ்மாலை சூட்டினார்.

கீழ்ப்படிதலை மறந்த அரசன்

சவுலின் நல்ல குணங்களும் கடவுளின் ஆசிர்வாதமும் அவரை வழிநடத்தின. கடவுளின் சக்தியே தன்னை வழிநடத்துகிறது என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். ஆண்டுகள் பல கடந்தன. இஸ்ரவேலர்களின் எதிரிகளைத் தோற்கடித்துத் தம் மக்களுக்குப் பல வெற்றிகளைத் தேடித் தந்தார் சவுல். ஆனால் சவுலுக்கு பெலிஸ்தர்கள் பெரும் சவாலாக விளங்குக்கிறார்கள். அவர்கள் பெரும்படையோடு திரண்டு வருகிறார்கள். பெரும்படை என்றால் கொஞ்சநஞ்சமல்ல, ‘கடற்கரை மணலளவு வீரர்களோடு திரண்டுவந்தனர்.’ இஸ்ரவேல் வீரர்கள் இதைக்கண்டு நடுங்கிப்போய் குகைகளிலும், புதர்களிலும், பாறைகளிலும், பள்ளங்களிலும் ஒளிந்துகொண்டனர்.

பெலிஸ்தர்களுக்கு எதிரான போரைத் தொடங்கும் முன் கடவுளுக்குப் பலி செலுத்தத் தான் வரும்வரை கில்காலில் காத்திருக்கும்படி அரசன் சவுலிடம் தலைமை ஆசாரியாரான சாமுவேல் கூறியிருந்தார். ஆனால் சாமுவேல் வருவதற்குச் சற்றுத் தாமதமாகிறது. மிச்சமிருக்கும் வீரர்களும் பயந்து ஓடிவிடும் முன் போரைத் தொடங்க வேண்டும்; அதேபோல் தனக்கு முன் பெலிஸ்தர்கள் போரைத் தொடங்கி விடக் கூடாது என்றும் சவுல் பயந்தார். தன்னுடன் கடவுள் இருக்கிறார் என்பதையும் அவருக்குக் கீழ்ப்படிவதே அரசனாகிய தனது முதல் கடமை என்பதையும் சவுல் ஒரு கணம் மறுந்துவிடுகிறார். எனவே சாமுவேல் வருமுன்பு தாமே துணிந்து அந்தப் பலியைத் செலுத்திவிடுகிறார்.

அதன்பின், சாமுவேல் வந்துசேர்ந்தபோது, ஒரு தலைமை குரு செய்யவேண்டிய இறைக் கடமையை அரசன் செய்துவிட்டதை அறிந்து கடவுளுக்கு சவுல் கீழ்ப்படியாமல் போனது குறித்துப் பெரிதும் வருத்தப்படுகிறார். சாமுவேல் அவரிடம், “மிகச் சிறந்த செம்மறியாட்டைக் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதைவிட அவருக்குக் கீழ்ப்படிவதே மேலானது. நீ கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் இனி உன்னை இஸ்ரவேலில் அரசனாக இருக்க கடவுள் உன்னை ஆசீர்வதிக்க மாட்டார்” என்று கூறினார். ஆனால் சாமுவேல் இல்லாத பட்சத்தில், தான் செய்தது சரியே என சவுல் நினைத்தார். ஆனால் கடவுள் எதிர்பார்க்கும் கீழ்ப்படிதலைத் தன் வாளால் வெட்டி வீழ்த்திவிட்டோம் என்பதை சவுல் உணரவில்லை. இதனால் சவுலுக்கு பதிலாக ஒரு சாமானியனை அரசனாகத் தேர்ந்தெடுக்கக் கடவுள் முடிவு செய்தார். அவரே தாவீது.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-52-கீழ்ப்படிதலே-சிறந்த-பலி/article9716881.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பைபிள் கதைகள் 53: கவண் கொண்டு தேசம் காத்த இளைஞன்!

08chsrsbible%202

இஸ்ரவேலின் புகழ்பெற்ற பட்டணமாக இருந்த பெத்லகேமில், பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் பணிந்து நடந்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் குடும்பத்தில் கடைக்குட்டி. தன் தந்தைக்குச் சொந்தமான ஆடுகளைப் பேணி வளர்த்து அவற்றைக் காப்பதுதான் அவனது தலையாயக் கடமை. அப்படிப்பட்ட இளம் ஆயனாக இருந்த அவன், அந்நியப் படையெடுப்பிலிருந்து இஸ்ரவேல் தேசத்தையே தனது கவண் வில்லால் காத்தான் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அவன்தான் தாவீது.

தனது ஆடுகளை ரகசியமாகக் கவர்ந்துசென்று வேட்டையாட வரும் ஓநாய்களையும் கள்வர்களையும் கவண் வில் கொண்டு தாக்கி அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கிறான். அப்படிப்பட்ட துணிச்சல்காரன். ரூத்துக்கும் போவாஸுக்கும் பிறந்த ஓபேத் என்பவர்தான் தாவீதின் தாத்தா. ஈசாய் என்பவர்தான் தாவீதின் தந்தை. தன் தந்தையின் செம்மறியாடுகளை வனாந்தரத்துக்கும் புல்வெளிகளுக்கும் ஓட்டிச்சென்று அவற்றைக் காத்து வந்தான். ஒருமுறை தனது மந்தையிலிருந்த ஆட்டுக்குட்டி ஒன்று காணாமல் போய்விட்டது. துடித்துப்போனான் தாவீது. அதைத் தூக்கிச்சென்றது ஒரு கரடி.

அதன் காலடிகளைப் பின் தொடர்ந்து விரைந்துசென்றவன், கரடி அதை உண்ணும்முன் அதன் வாயிலிருந்து அதை மீட்டான். பிறகு அவனைத் தாக்கவந்தபோது, வேறு வழியின்றிக் கரடியைக் கொன்றான். மற்றொருமுறை தாய் ஆடு ஒன்றைச் சிங்கத்திடமிருந்து காப்பாற்றினான். அப்படிப்பட்ட தாவீதைத்தான் கடவுள் சவுலுக்குப் பதிலாக அரசனாகத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.

புதிய அரசனைத் தேடி

சவுல் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் கடவுள் சாமுவேலை அழைத்தார்: “ சாமுவேலே... நீ உடனே பெத்லகேம் புறப்படு. போகும்போது, கையில் கொஞ்சம் அபிஷேக எண்ணெய்யை எடுத்துக்கொள். பெத்லெகேமில் இருக்கும் ஈசாயின் வீட்டுக்குச் செல். ஈசாயின் மகன்களில் ஒருவனையே நான் அரசனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று கூறினார்.

கடவுளின் கட்டளையை ஏற்று பெத்லகேம் சென்றடைந்த சமுவேல், அங்கே ஈசாயின் வீட்டைத் தேடிக் கண்டடைந்தார். அவரது வீட்டில் சாமுவேல் முதலில் கண்டது ஈசாயின் மூத்த மகனான எலியாவை. அவனைக் கண்ட மாத்திரத்தில், “கடவுள் நிச்சயம் இவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார். ஆனால், கடவுளாகிய யகோவா அவரிடம்: “அவனுடைய உயரத்தையும் கம்பீரமான தோற்றத்தையும் கருத்தில் கொள்ளாதே; நான் அவனைத் தேர்ந்தெடுக்கவில்லை”என்றார்.

எனவே, ஈசாய் தன் அடுத்த மகனான அபினதா என்பவனை அழைத்துவருகிறார். ஆனால், சாமுவேல்: “இல்லை, இவனையும் கடவுள் தேர்ந்தெடுக்கவில்லை” என்றதும் அடுத்துத் தன் மற்றொரு மகனான சம்மாவை அழைத்துவருகிறார். சாமுவேலோ, “இல்லை, இவனையும்கூடக் கடவுள் தேர்ந்தெடுக்கவில்லை”என்கிறார். இப்படி பெத்லகேம் பட்டணத்தில் கடவுளுக்கு உகந்த மனிதராய் வாழ்ந்துவந்த ஈசாய், தன்னுடைய மகன்களில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பு நிறுத்தியும் அவர்களில் எவரையும் கடவுள் தேர்ந்தெடுக்கவில்லை.

சாமுவேல் மனம்கொள்ளாமல், “ ஈசாய்... உனக்கு இவ்வளவு மகன்கள்தான் இருக்கிறார்களா?”என்று கேட்டார். அப்படிக் கேட்டதும் அவசரமாக மறுத்தார் ஈசாய். “இல்லை... இல்லை, இன்னும் ஒரு மகன் இருக்கிறான், அவனே கடைக்குட்டி. எல்லோரிலும் இளையவன், ஆடுகளை மேய்க்கச் சென்றிருக்கிறான்” என்றார் ஈசாய். சாமுவேல் “உடனே சென்று தாவீதை அழைத்து வா” என்றதும் விரைந்து சென்று அவனை அழைத்துக்கொண்டு வந்தார். தாவீது அழகான தோற்றமும் கண்களின் உண்மையின் ஒளியையும் ஏந்தியிருப்பதை சாமுவேல் பார்த்தார்.

அப்போது கடவுள், “ சாமுவேலே...இவனையே நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், இவன் தலையில் அபிஷேக எண்ணெய்யை ஊற்று”எனக் கடவுள் கூறினார். இதை தாவீதின் தந்தை மகிழ்ச்சியுடன் கைகளைக் கடவுளை நோக்கிக் கூப்பியபடி நன்றியுடன் பார்த்தார். அவனுடைய சகோதரர்களோ ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இடைச் சிறுவனாகிய தாவீது காலம் கனிந்து வருகையில் அவனை அரசனாக்கக் கடவுள் அவனை முன்னதாகவே தேர்ந்தெடுத்தது இவ்வாறுதான்.

வாளுக்குப் பதிலாக ரொட்டி

போர்க்களம் நோக்கிச் செல்ல வீரர்களுக்கு வாளும் கேடயமும் கவச உடைகளும் தேவை. ஆனால், தாவீது தன் அண்ணன்மார் அனைவருக்கும் ரொட்டித் துண்டுகளை எடுத்துக்கொண்டு தினசரி போய்வந்தார். ஏனெனில், பெலிஸ்தர்கள் மறுபடியும் இஸ்ரவேலரோடு போர் செய்ய வந்தார்கள். பெரும்போர் மூண்டது. தாவீதின் அண்ணன்மாரில் மூவர் இப்போது இஸ்ரவேலின் பேரரசன் சவுலின் படையில் இருக்கிறார்கள். எனவே, தாவீதின் தந்தை ஈசாய் அவனைப் பார்த்து, “அன்புமகனே, நீயே மிகவும் பொறுப்பானவன். நம் தேசத்துக்காகப் போரிட்டுவரும் உனது அண்ணன்களுக்குக் கொஞ்சம் தானியத்தையும் ரொட்டிகளையும் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, அவர்கள் எப்படி இருக்கிறார்களென்று நலம் விசாரித்து வா” என்று அனுப்பிவைத்தார்.

போர்முனைக்கு தாவீது வந்து சேர்ந்தான். தன்னுடைய அண்ணன்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்று ஒவ்வோர் இடமாகத் தேடிக்கொண்டே சென்றான். அப்போது பெலிஸ்தர்களின் படையணியில் ஓர் அரக்கனைப் போல் கோலியாத் என்பவன் நின்றுகொண்டிருந்தான். 9 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்ட உடற்கட்டுடன் கோலியாத் இருந்தான். அவனது கேடயத்தைச் சுமந்துவரத் தனியே ஒரு வீரன் இருப்பதைக் கண்டான். அவனைக் கண்டு இஸ்ரவேல் படை வீரர்கள் நடுங்கினார்கள்.

இஸ்ரவேல் வீரர்கள் இருந்த பக்கமாய் வந்த கோலியாத்: “ என்னோடு மோத உங்களில் ஒருவனை என் முன் நிறுத்துங்கள். அவன் என்னை வென்று சாகடித்தால், நாங்கள் உங்களுக்கு அடிமைகள். ஆனால், நான் அவனைக் கொன்று போட்டால், நீங்கள் எல்லோரும் எங்களுக்கு அடிமைகள். என்னோடு நேருக்கு நேர் மோத எந்த ஆண்மகனையாவது இங்கே அனுப்புங்கள் ” என்று கர்ஜித்தான். இதைக் கேட்டு தாவீதின் மனம் கொதித்தது. தன் அருகில் நின்ற இஸ்ரவேல் வீரர்களைப் பார்த்து, “இந்த பெலிஸ்தனை வென்று அவனைக் கொன்று நம் நாட்டைக் காப்பாற்றுகிறவனுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டான்.

இப்படிக் கேட்ட தாவீதைப் பார்த்துச் சிரித்த வீரர்களில் ஒருவன், “ அப்படி மட்டும் செய்துவிட்டால், அந்த மாவீரனுக்குச் சவுல் ஏராளமான செல்வங்களைக் கொட்டிக் கொடுப்பார். அதுமட்டுமல்ல, தன் மகளை அவனுக்கு மணம் முடித்து தனது ராஜ்ஜியத்தின் வாரிசாக்குவார்” என்றார்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-53-கவண்-கொண்டு-தேசம்-காத்த-இளைஞன்/article9721870.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பைபிள் கதைகள் 54: மண்ணில் சரிந்த மாவீரன்

 

 
bible

இஸ்ரவேலின் பேரரசன் சவுலின் படையில் தாவீதின் மூத்த அண்ணன்மார் மூவர் போர் வீரர்களாக இருந்தனர். அவர்களுக்கு வீட்டின் உணவைக் கொடுத்துவர, போர்க்களம் சென்றான் தாவீது. போர் தொடங்கி 40 நாட்களைக் கடந்திருந்த நிலையில் பெலிஸ்தியர்களின் முகாமை நோக்கி முன்னேறிச் செல்ல எந்த இஸ்ரவேலிய வீரனுக்கும் துணிவு இல்லை.

அதற்குக் காரணம் கோலியாத் என்னும் மாவீரன். அவனைக் கண்டு இஸ்ரவேல் வீரர்கள் பயந்துபோய் நடுங்கிக்கிடந்தார்கள். மலைகளால் சூழ்ந்த ஏலா என்ற பள்ளத்தாக்கில் இருந்தது அந்தப் போர்க்களம். ஒரு பக்கத்திலுள்ள மலையில் பெலிஸ்தியர்கள் நின்றார்கள், இன்னொரு பக்கத்திலுள்ள மலையில் இஸ்ரவேலர்கள் நின்றார்கள். பள்ளத்தாக்கின் நடுவில் திமிராக ஒருவன் இறங்கி நின்றான். இவ்வளவு பெரிய போர் வீரனைத் தாவீது இதற்கு முன் பார்த்ததே இல்லை. அவன் மகா பலசாலி என்பதும் போரில் பெரும் அனுபவசாலி என்பதும் தாவீதுக்கு சக வீரர்கள் மூலம் தெரிகிறது.

யார் இந்த கோலியாத்?

காத் என்ற நகரத்தைச் சேர்ந்தவன் கோலியாத். அவனுடைய உயரம் 9 அடி, 6 அங்குலம். செம்பால் செய்யப்பட்ட தலைக்கவசத்தையும், செதில் செதிலாக வடிவமைக்கப்பட்ட உடல் கவசத்தையும் அவன் அணிந்திருந்தான். அந்தச் செம்பு உடல் கவசத்தின் எடை 5,000 சேக்கல் (57 கிலோ). கால்களிலும் அவன் செம்புக் கவசங்களைப் போட்டிருந்தான், செம்பால் செய்யப்பட்ட சிறிய ஈட்டியை முதுகுக்குப் பின்னால் வைத்திருந்தான்.

அவன் கையில் வைத்திருந்த பெரிய ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் இருந்தது. அந்த ஈட்டியின் இரும்பு முனை 600 சேக்கல் (6.5கிலோ) எடையுள்ளதாக இருந்தது. அவன் உருவத்துக்கென்று விஷேசமாகச் செய்யப்பட்ட ஈட்டி அது. அவனது கேடயத்தைச் சுமக்கவே தனியாக ஒரு போர் வீரன் நியமிக்கப்பட்டிருந்தான். அவன் கோலியாத்துக்கு முன்னால் அதைச் சுமந்துகொண்டு நடந்து வந்தான். இப்படிப்பட்ட பிரம்மாண்ட உருவம் கொண்ட பலசாலியைக் கண்டு இஸ்ரவேல் வீரர்கள் நடுங்காமலா இருப்பார்கள்.

ஏலா போர்க்களத்துக்கு இருதரப்பு வீரர்களும் வந்து அணிவகுப்பை முடித்து 40 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், போரைத் தொடங்க துணிவற்று இஸ்ரவேலர்கள் பயந்துபோய்க் கிடந்தார்கள். தாவீதுடைய அண்ணன்களும் அந்தப் பயந்தாங்கொள்ளி வீரர்களின் கூட்டத்தில் இருந்தார்கள்.

தினசரி மலையிலிருந்து கீழே இறங்கிப் பள்ளத்தாக்கின் நடுவில் நின்று கர்ஜித்தான் கோலியாத். அவன் இஸ்ரவேல் படையைப் பார்த்து, “எதற்காகப் போருக்கு அணிவகுத்து நிற்கிறீர்கள்? நான் ஒரு பெலிஸ்திய வீரன். ஆனால், நீங்கள் சவுலின் அடிமைகள். என்னோடு மோதுவதற்கு உங்களில் சரியான ஒரு ஆளை அனுப்புங்கள். அவன் என்னோடு சண்டைபோட்டு என்னைக் கொன்றுவிட்டால், பெலிஸ்தியப் படை முழுவதும் உங்களுக்கு அடிமையாக இருக்கும். ஆனால், நான் அவனைக் கொன்றுவிட்டால், நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமைகளாக இருப்பீர்கள்” என்று கத்தினான்.

அப்படியும் இஸ்ரவேல் தரப்பில் ஈயாடவில்லை. இப்படியே ஒவ்வொரு நாளும் சவுல் அரசனையும் இஸ்ரவேலர்களையும் ஏளனத்துடன் எள்ளி நகையாடிவந்தான் கோலியாத். தாவீது உணவு கொண்டுவந்திருந்த தினத்தில் கொஞ்சம் அதிகமாகவே கத்தினான். “இஸ்ரவேல் படைக்கு மீண்டும் சவால் விடுகிறேன். என்னோடு மோதுவதற்கு ஒருவனை அனுப்புங்கள், இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம்!” என்றான். அவனது சவால் ஏலாவின் மலைகளில் எதிரொலித்தது.

கடவுளின் பெயரால் வருகிறேன்

கோலியாத்தின் ஆணவம் தாவீதை உசுப்பியது. 40 நாட்களாக பெலிஸ்தர்களில் ஒருவன் மட்டும் வந்து இப்படிச் சவால் விடுகிறான். அதை ஏற்று அவனுடன் மோதுவதற்கு ஒரு இஸ்ரவேலன்கூட இல்லையா எனக் கேட்டுக்கொண்டான். கடவுளை நம்பினால் முடியாதது இல்லை என்ற முடிவுக்கு வந்த தாவீது, கோலியாத்துடன் சண்டையிட விரும்பினான். இதை அவன் சக வீரர்களிடம் கூறியபோது அவர்கள் முதலில் சிரித்தார்கள். ஆனால், தாவீது உறுதியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர்கள், அரசன் சவுலிடம் சென்று தாவீது பற்றிச் சொன்னார்கள். சவுலுக்கு முதலில் நம்பிக்கை வரவில்லை. அதனால் தாவீதைப் பார்த்து, “இந்த பெலிஸ்தனோடு மோத உன்னால் முடியாது.

நீயோ பொடியன், அவனோ தன் வாழ்நாளில் பாதியைப் போர்க்களத்திலேயே கழித்திருக்கும் ராட்சசன்” என்கிறார். அதற்கு தாவீது: “என் தந்தையின் ஆடுகளில் ஒன்றைக் கவர்ந்துசென்ற கரடியையும் ஒரு சிங்கத்தையும் நான் கொன்று போட்டிருக்கிறேன். அப்படியிருக்க இந்த பெலிஸ்தியன் எனக்கு எம்மாத்திரம்; நம் கடவுளாகிய யகோவா எனக்கு உதவுவார்” என்று கூறினான். தாவீதின் பதிலைக் கேட்டு சவுலுக்கு நம்பிக்கை பிறந்தது. “தாவீதே, உன்னை நம்புகிறேன். கடவுள் உன்னோடு இருப்பாராக” என்றுகூறி அவனை வாழ்த்தி அனுப்பினார்.

ஒரு கவணும் ஐந்து கற்களும்

அரசனின் அனுமதி கிடைத்ததும் அருகிலிருந்த ஓடையை நோக்கி ஓடோடிச் சென்றான் தாவீது. அங்கே தண்ணீரில் உருண்டு உருண்டு திடமாகிக் கிடந்த கூழாங்கற்களிலிருந்து சிறந்த ஐந்தைத் தேர்வுசெய்து எடுத்தவன், அவற்றைத் தன் பைக்குள் போட்டுக் கொண்டான். பின்பு தன் கச்சை வாரிலிருந்து கவணைக் கையில் எடுத்துக்கொண்டு ஏலா பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் மலைபோல் நின்றுகொண்டிருந்த கோலியாத்தை நோக்கி நடந்து சென்றான்.

ஒரு சிற்றெறும்பைப் போல் துணிவுடன் கோலியாத்தை நேருக்கு நேராக தாவீது நெருங்கிச் செல்வதை இஸ்ரவேலர்களாலும், பெலிஸ்தியர்களாலும் நம்ப முடியவில்லை. தன்னை நோக்கி உருவத்தில் சிறுத்த இளவட்டப் பையன் கையில் கவணுடன் வருவதைக் கண்டபோது கோலியாத்தாலும் நம்ப முடியவில்லை. ‘வீரன் ஒருவனை அனுப்பக் கூறினால் ஒரு சின்னப் பையனை அனுப்பியிருக்கிறார்களே, இவனைக் கொல்வது எத்தனை எளிது’ என நினைத்துக்கொண்டு குறுநகை புரிந்தான்.

கோலியாத், 50 அடி தூரத்தில் தன் அருகில் வந்து நின்றதும் அவனைப் பார்த்து, “சிறுவனே என் அருகில் வா, உன்னைக் கொன்று பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாக வீசியெறிகிறேன்” என்று நக்கலாகக் கொக்கரித்தான். ஏளன வார்த்தைகளுக்கு தாவீது சிறிதும் சினம் கொள்ளாமல், “நீ உனது வாளுடனும், ஈட்டியுடனும், கேடயத்துடனும் என்னிடம் போரிட வருகிறாய். நானோ பரலோகத் தந்தையாகிய கடவுளின் பெயரால் உன்னிடம் சண்டையிட வந்தேன்.

இன்று கடவுள் உன்னை என் கையில் ஒப்படைத்து விடுவார், நான் உன்னைக் கொல்லப் போகிறேன்” என்று கூறினான். இப்படி கூறிக்கொண்டே கோலியாத்தை நோக்கி ஓடினான். தனக்கும் கோலியாத்துக்கும் மத்தியில் தாக்குவதற்கு இணக்கமான இடைவெளி என அனுமானித்ததும் சட்டென்று தன் பையிலிருந்து ஒரு கூழாங்கல்லை எடுத்த தாவீது, அதைத் தன் கவணில் வைத்தான். கண் இமைப்பதற்குள் முழு பலத்துடன் அதைச் சுழற்றி கோலியாத்தின் நெற்றியைக் குறிவைத்து வீசினான்.

அந்தக் கல் காற்றைக் கிழித்துக்கொண்டுபோய் கோலியாத்தின் நெற்றிப்பொட்டைச் சடாரென்று தாக்கிப் பதம் பார்த்தது. அந்த ஒரு கல் தாக்கியவுடனே மூளை கலங்கி உயிரைவிட்டபடியே மலைசரிவதுபோல் கீழே சரிந்தான் கோலியாத்! பல போர்களில் வெற்றிகளைத் தேடித் தந்தவன், மலைபோல் நம்பியிருந்த தங்களின் மாவீரன் விழுந்துவிட்டதை பெலிஸ்திய வீரர்கள் கண்டபோது, அதை நம்ப முடியாமல் அவர்களுக்குத் தொண்டை அடைத்தது.

கீழே விழுந்து மாண்ட கோலியாத்தை நெருங்கிய தாவீது சிதறிக்கிடந்த அவனது வாளை எடுத்து அதன் மூலமே அவனது தலையைத் தனியே கொய்தான். இதைக் கண்டு பெலிஸ்தியர் அனைவரும் தலைதெறிக்க ஓடத் தொடங்கினார்கள். அவர்களைத் தேசத்தின் எல்லைக்கு அப்பால் துரத்தியடித்த இஸ்ரவேலர்கள் போரில் வெற்றியடைந்தார்கள். தாவீதின் புகழ் நாடெங்கும் பரவியது.

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-54-மண்ணில்-சரிந்த-மாவீரன்/article9726796.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 55: தப்பித்து ஓடிய தாவீது

 

 
22chsrsbible%202

தாவீதின் வெற்றியை இஸ்ரவேல் தேசமே பேசியது. குறைவான உயரம் கொண்ட இடையச் சிறுவன், அதுவும் வாளோ, கவச உடைகளோ அணியாமல், கையில் கவணையும் மேய்ப்பனுக்குரிய சிறு தோல் பையில் ஐந்து கூழாங்கற்களையும் மட்டும் எடுத்துச் சென்று, அதில் ஒரேயொரு கல்லை மட்டும் செலவழித்து கோலியாத் எனும் மாவீரனை வீழ்த்தியதை இஸ்ரவேலிய வீரர்களாலும் படைத்தலைவனாலும் நம்பமுடியவில்லை.

கோலியாத்தின் தலை, தாவீதின் கையில் இருந்ததைக் கண்டு திகிலடைந்தார்கள். நாம் அனைவரும் காண்பது நிஜம்தானா என்று பார்த்துக்கொண்டார்கள். பின் சித்தம் தெளிந்த இஸ்ரவேலின் படைத்தலைவன், தாவீதை அழைத்து வந்து அரசன் சவுலின் முன்பாக நிறுத்தினான். அப்போது சவுல், “நீ யாருடைய மகன்?” என்று தாவீதைப் பார்த்துக் கேட்டார். அதற்கு தாவீது, “பெத்லகேம் ஊரைச் சேர்ந்த உங்கள் அடிமை ஈசாயின் பையன்” என்று பணிவுடன் பதில் கூறினான்.

அரசனின் மகனே நண்பன் ஆனான்

‘அடடா.. இத்தனை பெரிய வீரனை வீழ்த்தியும் கர்வம் சிறிதும் தலைக்கு ஏறாமல் தன் குடும்பமே அரசனுக்கு அடிமை என்று எத்தனைப் பணிவைக் காட்டுகிறான் இந்த இளைஞன். இவனைப் போன்றவன் அல்லவா எனக்கு நண்பனாக வாய்க்க வேண்டும்’ என்று மனதுள் சொல்லிக்கொண்டான் சவுல் அரசனின் மகனும் இளவரசனுமாகிய யோனத்தான். அந்தக் கணம் முதல் தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்து, அவனுடன் நெருங்கிப் பழகி உயிர் நண்பன் ஆனான். தனது நட்பின் அடையாளமாக, தான் போட்டிருந்த கையில்லாத அங்கியையும், தன்னுடைய விலையுயர்ந்த அரச உடை, வாள், வில், இடுப்புவார் ஆகியவற்றையும் யோனத்தான் தாவீதுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான். சவுல் அரசனுக்குக் கிடைத்த கேடயம்போல் ஆனார் தாவீது.

பாடலால் வந்த வினை

தோற்று ஓடிய பெலிஸ்தியர்கள் மீண்டும் மீண்டும் சண்டைக்கு வந்தார்கள். அவர்களை ஒடுக்க தாவீதின் தலைமையில் போர்வீரர்களை வழிநடத்தினார் சவுல். எல்லாச் சண்டைகளிலும் தாவீதுக்கே வெற்றி கிடைக்கும்படிச் செய்தார் கடவுள். தாவீதின் தொடர் வெற்றிகளைக் கண்டு இஸ்ரவேல் வீரர்களும் குடிமக்களும் சந்தோஷப்பட்டார்கள். பெலிஸ்தியர்களை வீழ்த்திவிட்டு அரண்மனைக்குத் திரும்பி வரும்போதெல்லாம், இஸ்ரவேலின் எல்லா நகரங்களிலிருந்தும் பெண்கள் கூடிவந்து, இசைக் கருவிகளோடு சந்தோஷமாக ஆடிப்பாடி சவுல் ராஜாவையும் தாவீதையும் போற்றிப் பாடி வரவேற்றார்கள்.

அப்போது “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றதோ பதினாறாயிரம்” என்று பாடினார்கள். அவர்கள் அப்படிப் பாடியது அரசன் சவுலுக்குப் பிடிக்கவில்லை. சவுல், பயங்கர எரிச்சலோடு, “தாவீதுக்குப் பதினாறாயிரமாம், எனக்கு ஆயிரமாம். இனி அரச பதவி மட்டும்தான் அவனுக்கு பாக்கி!” என்றார். அந்த நாளிலிருந்து சவுல் எப்போதும் தாவீதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார். தனது நாற்காலிக்கு அவனே கேடாக வந்துவிடுவானோ என்று எண்ணினார். அடுத்த நாள், சவுலின் மனம் அவரை ஆட்டிப்படைத்தது. அரண்மனைக்குள் அவர் வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்கினார்.

ஆனால் தாவீதின் மனமோ வெளுத்த வானம்போல் தூய்மையாக இருந்தது. அவர் வழக்கம் போல் யாழ் இசைத்துக்கொண்டிருந்தார். இந்தத் தருணம்தான் தாவீதைக் கொல்லச் சரியான தருணம் என்று நினைத்த சவுல் தன் கையில் ஈட்டியை எடுத்துக்கொண்டுபோய் சரியான தூரத்தில் நின்று தாவீதை நோக்கி ஈட்டியைக் குறிவைத்து எறிந்தார். ஆனால் காற்றைக் கிழித்துக்கொண்டு வந்த ஈட்டியின் ஓசையை தாவீது கேட்கும்படி கடவுள் செய்தார். இதனால் சட்டென்று நகர்ந்து சவுலின் கொலைவெறித் தாக்குதலிருந்து தப்பித்தார். இப்படி இரண்டுமுறை சவுல் கொல்ல முயன்றும், அதிலிருந்து தாவீது உயிர் தப்பினார்.

கடவுளாகிய யகோவா தன்னைவிட்டு விலகி தாவீதோடு இருப்பதால்தான் அவனால் உயிர் தப்ப முடிகிறது என்பதைப் புரிந்துகொண்ட சவுல், தாவீதை நினைத்துப் பயந்தார். பின்னர் ஆயிரம் வீரர்களுக்குத் தாவீதை தலைவராக்கினார். தாவீது சென்று வந்த எல்லாப் போர்களிலும் வெற்றி உறுதியாக இருந்ததால் இஸ்ரவேல் மக்கள் அவரை நேசிக்க ஆரம்பித்தார்கள். இதையறிந்த சவுல் ஒரு முடிவுக்கு வந்து தாவீதை அழைத்துப் பேசினார்.

எனக்குத் தகுதி இருக்கிறதா?

“ தாவீதே…என் மூத்த மகள் மேரபை உனக்குக் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறேன். நீ எனக்காகத் தொடர்ந்து உன் வீரத்தைக் காட்டி போர்களைத் தலைமைதாங்கி நடத்த வேண்டும்” என்று சொன்னார். அதற்கு தாவீது, “ராஜாவின் மருமகனாவதற்கு எனக்கென்ன அருகதை இருக்கிறது? இஸ்ரவேலில் எனது குடும்பம் மிகச் சாதாரணமானது” என்றார். ஆனால் வாக்கு கொடுத்தபடி அரசன் சவுல் தன் மகள் மேரபை தாவீதுக்குத் திருமணம் செய்து கொடுக்காமல் ஆதரியேல் என்பவனுக்கு மவளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இது குறித்து தாவீது கவலை அடையவில்லை. அரசனின் முடிவை தாவீது மதித்தார்.

தாவீதின் வீரத்தையும் பணிவையும் அழகையும் கண்ட சவுலின் இளைய மகள் மீகாள் தாவீதைக் காதலித்தாள். இந்த விஷயம் சவுலிடம் சொல்லப்பட்டபோது, அவர் சந்தோஷப்பட்டார். “அவன் கதையை முடிக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம்; அவளை அவனுக்குக் கல்யாணம் செய்துகொடுப்பதாகச் சொல்லி பெலிஸ்தியர்களின் கையில் சிக்க வைத்துவிடுகிறேன். எதிரிகளின் கையாலேயே அவன் சாகட்டும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். பின்பு தாவீதிடம் “ தாவீதே..நீ என் இளைய மகளைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்கிறேன்” என்றார். அரசனின் மாப்பிள்ளை ஆவதற்கு தாவீதும் ஆசைப்பட்டார். அதனால் தாவீது அடுத்தடுத்து போர்களில் புதிய வெற்றிகளைச் சவுலுக்கு பரிசளித்தார். தன்னுடைய மகள் மீகாளையும் அவருக்குக் திருமணம் செய்து வைத்தார்.

இதற்கு மேல் நம்பக் கூடாது

ஆனால் தன் மகன் யோனத்தானிடமும் தனது பாதுகாப்பு ஊழியர்களிடமும் தாவீதை எப்படியாவது கொன்று ஒழித்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டார். இது யோனத்தானைக் கவலையுறச் செய்தது. “என்னுடைய அப்பா உன்னைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறார். அதனால், நீ எச்சரிக்கையாக இரு” என்று கூறி தனது நட்புக்கு அர்த்தம் கொடுத்தான். தனது தந்தையிடமும் தாவீதைத் தன்னால் கொல்ல முடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டான். இதனால் தாவீதின் கையே ஓங்கியது.

எனவே தந்திரமாக மீண்டும் தனது அரண்மனையிலேயே தாவீதை தங்க வைத்தார் சவுல். எல்லாம் சரியாகிவிட்டது என்று தாவீது நினைத்தார். ஆனால் சவுல் இம்முறை எப்படியாவது அவனைக் கொன்றுவிடவேண்டும் என்று அவன் மீது ஈட்டியை வீசினார். ஆனால், தாவீது நழுவிக்கொண்டதில் அந்த ஈட்டி சுவரில் பாய்ந்தது. இனியும் இந்த அரசனை நம்பினால் என்னைப்போல் முட்டாள் யாரும் இருக்கமுடியாது என்று உணர்ந்த தாவீது, அந்த இரவில் அரண்மனையிலிருந்து தப்பித்து ஓடினார்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-55-தப்பித்து-ஓடிய-தாவீது/article9732040.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பைபிள் கதைகள் 56: எதிரியைக் கொல்ல மறுத்த தாவீது!

 

 
29chsrsbible11

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனாக இருந்தபோதும் அரியாசனத்தை விட்டுக் கொடுக்கச் சவுலுக்கு மனம் வரவில்லை. மக்களின் ஆதரவு தாவீதுக்குப் பெருகியதைக் கண்டு எங்கே அவன் அரசனாகிவிடுவானோ எனப் பயந்தே அவனைக் கொல்லத் துணிந்தார். இளவரசன் யோனத்தான் உயிர் நண்பனாக இருந்தபோதும், சவுலின் மருமகனாக இருந்தபோதும் தாவீதை தனது எதிரியாகவே கருதினார் சவுல். இதனால் அரசனின் கொலைமுயற்சியிலிருந்து நான்காவது முறையாகத் தப்பித்த தாவீது, இனியும் அரண்மனையில் இருப்பது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தார். உடனடியாகத் தன்னுடைய வீட்டுக்குப் போய் ஒளிந்துகொண்டார்.

சவுலோ தாவீதைக் கொல்வதற்கு ஆட்களை அனுப்பினார். தன் தந்தையின் திட்டம் மீகாளுக்குத் தெரிந்துபோனது. அதனால் அவள் தன் கணவனிடம்: “இன்றிரவு நீங்கள் தப்பி ஓடாவிட்டால், நாளை உங்களை நான் பிணமாகத்தான் பார்க்க நேரிடும்” என்று பதறினாள். அவளது எச்சரிக்கைக்குச் செவிமடுத்த தாவீது “வீட்டின் வாயிலில் உன் தந்தையின் ஆட்கள் காத்திருக்கிறார்கள், நான் எப்படித் தப்புவேன்?” என்றார்.

அன்றிரவு தாவீது ஜன்னல் வழியாகத் தப்பித்துப் போக மீகாள் உதவினாள். மீகாள் மட்டுமல்ல, இளவரசன் யோனத்தானும் தன் தந்தை தாவீதைக் கொல்லத் துடிக்கிறார் என்று தெரிந்துகொண்டபின் தாவீதைத் தப்பவைத்தார். அதன்பின் பல நகரங்களுக்கு ஓடி அங்கிருக்கும் ராஜாக்களிடம் அடைக்கலம் கேட்டு, எங்கும் நிரந்தரமாகத் தங்க முடியாமல் அலைந்தார். சவுலோ தன் ஆட்களுடன் தாவீதைக் கொல்லத் துரத்திக்கொண்டே இருந்தார்.

கண்களை மறைத்த பதவி ஆசை

அதுல்லாம் என்ற குகையில் தாவீது மறைந்து வாழ்ந்தபோது அவருடைய அண்ணன்களும் தாவீது இருக்கும் இடத்துக்கு வந்து, அவருடன் சேர்ந்துகொண்டார்கள். அதேபோல் அநீதியினால் கொதித்துப்போய் அரசனுக்கு எதிராகப் புரட்சிசெய்து பிரச்சினைகளில் சிக்கியிருந்தவர்களும் கடன்தொல்லையால் அவதிப்பட்டவர்களுமாகச் சுமார் 400 ஆண்கள் தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்த தாவீது அவர்களின் தலைவரானார். பின்னர் நோபு நகரில் கடவுளாகிய யகோவுக்கு ஊழியம் செய்துவந்த குருவாகிய அகிதூப்பின் மகன் அகிமெலேக்கைச் சென்று சந்தித்தார். தாவீது அவரிடம் உணவையும் ஆயுதங்களையும் பெற்றுக்கொண்டார். ஆனால், அகிமெலேக்குக்கு சவுல் அரசன் தாவீதை எதிரியாக நினைத்துக் கொல்லத் துரத்துவது குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதனால் அவர் தாவீதுக்கு உதவியது மட்டுமல்ல, கடவுளால் தேர்தெடுக்கப்பட்டவர் தாவீது என்பதையும் அறிந்திருந்ததால் மிகவும் அன்பு பாராட்டினார்.

அகிமெலேக்கின் இந்தச் செயலை ஒற்றர்கள் வழியே கேள்விப்பட்ட சவுல் அரசன், நோபு நகருக்கு ஆட்களை அனுப்பி தாவீதுக்கு உதவிய அகிமெலேக்கையும் 85 குருமார்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்துவரச் செய்தான். அகிமெலேக்குக் கொடுத்த நியாயமான விளக்கத்தைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாதபடி சவுலின் கண்களைப் பதவியாசை மறைத்தது. இதனால், “எனக்குத் துரோகம் செய்த அகிமெலேக்கையும் இந்தக் குருமார்களையும் கொன்றுபோடுங்கள்” என்று உத்தரவிட்டான்.

குருமார்கள் வாழ்ந்த நோபு நகரத்தையும் தாக்கி, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினான். ஆடுமாடுகளையும் கழுதைகளையும்கூட அவன் விட்டுவைக்கவில்லை. ஆனால், அகிமெலேக்கின் மகன்களில் ஒருவராகிய அபியத்தார் கொலைக்களத்திலிருந்து தப்பியோடி தாவீதிடம் தஞ்சமடைந்து சவுல் இரக்கமின்றி நடத்திய படுகொலைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். தன்பொருட்டு இத்தனை மரணங்கள் நிகழ்ந்ததை எண்ணி தாவீது மிகவும் வருந்தி அழுதார்.

ஓயாத துரத்தல்

தாவீதிடம் பலமுறை தோற்ற பெலிஸ்தியர்கள் கேகிலா என்ற நகரத்தைத் தாக்கி, அங்குள்ள தானியங்களையும் செல்வங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட தாவீது, தனது சிறு படையுடன் விரைந்து சென்று கேகிலா நகரத்தாரைக் காப்பாற்றினார். தாவீதின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பெலிஸ்தியர் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடினார்கள்.

கேகிலாவின் மக்களைத் தாவீது காப்பாற்றிய செய்தி சவுலின் காதுகளுக்குச் சென்றதும் அவரது ரத்தம் கொதித்தது. கடவுள் அவனது வெற்றிகள் அனைத்திலும் கூடவே இருக்கிறார் என்ற பொறாமையும் சவுலை வாட்டியது. பெரும் படையுடன் சவுல் புறப்பட்டு வருவதைக் கடவுள் வழியே அறிந்த தாவீது, அங்கிருந்து தப்பித்து, தன்னுடன் இருந்த 600 வீரர்களுடன் சீப் வனாந்தரத்துக்குள் சென்று அங்கே பதுங்கியிருந்தார்.

ஆனால், விடாமல் தாவீதைத் தேடிய சவுலுக்கு அந்த இடமும் தெரிந்துபோனதால், தாவீதும் அவரது படையணியும் ஓரேசில் தங்கினார்கள். சவுல் அரசன் அதையும் மோப்பம் பிடித்தார். பின்னர் அங்கிருந்தும் ஓடிய தாவீது, மாகோன் வனாந்தரத்தில் போய்ப் பதுங்கிக்கொண்டார். அங்கும் சவுல் விரைந்து வருவதை அறிந்த தாவீது அருகிலிருந்த என்கேதிக்கு என்ற செங்குத்தான மலைப் பகுதிக்குப் போய், அங்கிருந்த குகைகளில் தங்கினார்.

குகை இருட்டில் திறக்கப்பட்ட கண்கள்

இதை அறிந்துகொண்ட சவுல், 3,000 தலைசிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, வரையாடுகள் திரிகிற செங்குத்தான அந்தப் பாறைகளின் நடுவே தாவீதையும் அவருடைய ஆட்களையும் தேடிக்கொண்டு போனார். அப்போது சவுலுக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் அங்கிருந்த ஒரு குகைக்குள் போனார். அது இருளாய் இருந்தது. அப்போது, தாவீதும் அவருடைய வீரர்களும் அந்தக் குகையின் உள்ளே இருந்த மறைவுகளில் பதுங்கியிருந்தார்கள்.

தாவீதின் வீரர்கள் அவரிடம், “இன்றைக்கு நம் கடவுளாகிய யகோவா உங்கள் கைகளின் வெகு அருகில் உங்கள் எதிரியைக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். அவரை நீர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று தூண்டினார்கள். ஆனால், தாவீது எழுந்து சத்தமில்லாமல் போய், சவுல் போட்டிருந்த கையில்லாத அங்கியின் ஓரத்தை வெட்டி எடுத்தார். அவரது ஆட்களோ தாவீதின் செயலால் கோபமுற்று சவுலைக் கொல்லத் துடித்து மறைவுகளிலிருந்து வெளிப்பட்டார்கள். ஆனால், தாவீது தன்னுடைய வீரர்களைத் தடுத்து, “ சவுல் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் அரசர். அவர் மேல் உங்கள் கைகள் படக் கூடாது” என்று சொல்லித் தன் ஆட்களை எச்சரித்தார். சவுலோ இதைக் கேட்டு குகையிலிருந்து தலைதெறிக்க வெளியே ஓடினார்.

அப்போது, தாவீதும் அந்தக் குகையிலிருந்து வெளியே வந்து, “என் எஜமானே, சவுல் ராஜாவே.. நீங்கள் குகையில் இருந்தபோது கடவுள் உங்களை எப்படி என் கையில் கொடுத்தார் என்பதை இன்றைக்கு நீங்களே பார்த்தீர்கள். ஆனால், நான் உங்களைக் கொல்லவில்லை. ஏனெனில், நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உங்களுடைய கையில்லாத அங்கியின் ஓரத்தை வெட்டி எடுத்துக்கொண்டேன். நான் இதை மட்டும்தான் வெட்டி எடுத்தேன், உங்களைக் கொல்லவில்லை. இதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் உங்களுக்கு எதிராக எந்தப் பாவமும் செய்யவில்லை. ஆனால், நீங்கள் என் உயிரை வேட்டையாடத் துடிக்கிறீர்கள்.

இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடி அலைகிறார்? யாரைத் துரத்திக்கொண்டு வருகிறார்? இந்தச் செத்த நாயையா? இந்தச் சாதாரண பூச்சியையா? உங்களுக்கும் எனக்கும் நடுவில் நின்று கடவுளே தீர்ப்பு கொடுக்கட்டும். நீங்கள் எனக்குத் தீர்ப்புக் கொடுக்காதீர்கள்” என்றார். கடவுள் முன்பாக தாவீதின் பணிவைக் கண்டு சவுலின் ஆணவம் உடைந்து நொறுங்கியது.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-56-எதிரியைக்-கொல்ல-மறுத்த-தாவீது/article9740068.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பைபிள் கதைகள் 57: அமைதியைக் கொண்டுவந்த புத்திசாலிப் பெண்!

bible

சவுல் அரசன் நிலைகுலைந்துபோனார். ‘என் அங்கியின் ஓரத்தை வெட்டி எடுக்கிற அளவுக்குத் தாவீதின் கைகளில் நான் தனியாகச் சிக்கிக்கொண்டேன். அப்படியும் அவன் என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டானே..! அவனல்லவா கடவுளின் அருள் பெற்றவன்’ என்று நினைத்துக் கதறி அழுதார். பின் தாவீதைப் பார்த்து “நீயே நல்லவன். எதிரியாக இருந்தும் என்னை நீ உயிருடன் விட்டுவிட்டாய். நீ நிச்சயம் அரசனாக ஆவாய். இஸ்ரவேல் ராஜ்ஜியத்தைக் காலங்காலமாகக் கட்டிக்காப்பாய்” என்று வாழ்த்திவிட்டு சவுல் அரண்மனைக்குத் திரும்பினார்.

ஆனால், தாவீதை அரண்மனைக்கு வந்துவிடும்படி சவுல் அழைக்கவில்லை. தற்காலிகமாகத் தாவீதிடமிருந்து தப்பிப் பிழைக்கவே திருந்திவிட்ட அரசனைப் போல் சவுல் நாடகமாடினார் என்ற உண்மையை, தாவீதுக்கு கடவுள் உணர்த்தினார். இதனால் தாவீது எச்சரிக்கையாகவே நடந்துகொண்டார். தாவீதும் அவருடைய வீரர்களும் தாங்கள் தங்கியிருந்த பாதுகாப்பான இடங்களுக்கே மீண்டும் திரும்பிப்போய்த் தங்கினார்கள். தாவீதின் மனைவியும் தன் மகளுமாகிய மீகாளை காலீமைச் சேர்ந்த பல்த்தி என்பவனுக்கு சவுல் அரசன் மறுமணம் செய்துகொடுத்துவிட்டார்.

மீண்டும் வனாந்தர வாழ்க்கை

சவுல், தாவீது ஆகிய இருவரையும் கடவுளின் ஆணைப்படி அபிஷேகம் செய்த தலைமைக் குருவாகிய சாமுவேல் இறந்துபோனார். இஸ்ரவேலர்கள் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காகத் துக்கம் அனுசரித்தார்கள். அதில் தாவீதும் கலந்துகொண்டார். சாமுவேலுக்கு அஞ்சலி செலுத்தியபின், தாவீது பாரான் வனாந்தரப் பகுதிக்குப் போய் தன் படையணியுடன் தங்கினார். அது மாகோன் என்ற யூதா நகரத்தின் அருகில் இருந்தது. அங்கே செழுமையான மேய்ச்சல் நிலங்களும் வயல்களும் இருந்தன. அந்த நகரத்தில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவன் பெயர் நாபால். அவனுடைய மனைவி பெயர் அபிகாயில். நாபால் வேளாண்மையும் கால்நடைத் தொழிலும் செய்துவந்தான்.

அவனுக்கு 3,000 செம்மறியாடுகளும் 1,000 வெள்ளாடுகளும் இருந்தன. அபிகாயில் அதிபுத்திசாலி. மிகவும் அழகானவள். நாபாலோ ஒரு முரடன், அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேசுபவன்; அவமானப்படுத்துபவன். அது அறுவடைக் காலம். செம்மறி ஆடுகளின் உடலில் முடிகள் ‘புசுபுசு’வென்று வளர்ந்துவிட்டன. எனவே, கம்பளி ஆடைகளுக்காக அவற்றின் முடிகளைத் தன் பணியாட்களை வைத்துக் கத்தரித்துக்கொண்டிருந்தான் நாபால். அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும். அறுவடைக் காலத்திலும் செம்மறி ஆடுகளுக்கு முடி கத்தரிக்கும்போதும் செல்வம் கொழிக்கும். இந்தச் சமயத்தில் யார் வந்து உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்வது இஸ்ரவேலர்களின் வழக்கமாக இருந்தது.

நாபால் தனது ஆடுகளுக்கு முடியைக் கத்தரித்துக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட தாவீது, தன் வீரர்களில் பத்துப் பேரை அழைத்து, “நாபாலிடம் சென்று நான் சொல்கிறபடி அவரிடம் எடுத்துக் கூறி உதவிபெற்று வருங்கள்” என்று அனுப்பினார். அவர்கள் நாபாலிடம் சென்று, “ நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷமாக நீடூழி வாழ வேண்டும்! வனாந்தரத்தில் உங்களுடைய மேய்ப்பர்கள் எங்களோடு இருந்தபோது, நாங்கள் அவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. உங்கள் ஆடுகளை விலங்குகளிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் பாதுகாத்திருக்கிறோம்.

இதை உங்கள் ஆட்களிடமே கேட்டுப் பாருங்கள், அவர்கள் சொல்வார்கள். நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கும் இந்தத் தருணத்தில் என்னுடைய ஆட்களை உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். அதனால் கொஞ்சம் கருணை காட்டுங்கள். உங்கள் ஊழியர்களாகிய இவர்களுக்கும் உங்கள் மகன் தாவீதுக்கும் உங்களால் முடிந்த உணவையும் பொருளையும் தயவுசெய்து கொடுத்தனுப்புங்கள்” என்று எங்கள் தலைவராகிய தாவீது உங்களை வாழ்த்தி உதவிபெற்று வரும்படி எங்களை அனுப்பினார்” என்றார்கள்.

தடுத்து நிறுத்திய அபிகாயில்

ஆனால், நாபாலோ தாவீதின் ஆட்களை அவமானப்படுத்தி, கடுஞ்சொற்களால் திட்டி அனுப்பிவைத்தார். ஏமாற்றத்துடன் திரும்பிய தாவீதின் ஆட்கள் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதை எடுத்துக் கூறினார்கள். அதைக் கேட்டுக் கொதித்துப் போனார் தாவீது. 600 பேர் கொண்ட தனது அணியில் 400 பேரை ஆயுதங்களுடன் அழைத்துக்கொண்டு நாபாலுக்குப் பாடம் புகட்டி, அவனை அழித்தொழிக்கக் கிளம்பினார். இதற்கிடையில், நாபாலின் வேலைக்காரர்களில் ஒருவன், அவருடைய மனைவி அபிகாயிலிடம் போய், நடந்ததை விரிவாக எடுத்துக்கூறி, வரவிருக்கும் ஆபத்தை எடுத்துக்காட்டியதும் பதறிப்போனாள்.

தாவீது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதும், இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் பல போர்களிலிருந்து கடவுளின் அருளால் காத்து வருபவர் என்பதும் அபிகாயிலுக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆபத்து நடக்கும் முன் அதைத் தடுத்து நிறுத்த விரும்பிய அபிகாயில் 200 ரொட்டிகளையும் 2 பெரிய ஜாடி நிறைய திராட்சை ரசத்தையும் ஐந்து ஆடுகளின் இறைச்சியையும் ஐந்து படி வறுத்த தானியங்களையும் 100 திராட்சை அடைகளையும் 200 அத்திப்பழ அடைகளையும் அவசர அவசரமாக எடுத்துக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு தாவீது தங்கியிருந்த வனாந்தரப் பகுதியை நோக்கித் தனது பணியாட்கள் சிலருடன் விரைந்தாள்.

சில மணி நேரப் பயணத்துக்குப் பின் தாவீதையும் அவரது படையணியையும் எதிர்கொண்டு சந்தித்தாள். தாவீதைப் பார்த்தவுடன் கழுதையைவிட்டு அவசர அவசரமாக இறங்கிய அபிகாயில், அவருக்கு முன்னால் போய் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து வணங்கினாள். பின்பு அவரைப் பார்த்து, “உங்களிடம் பேச இந்த அடிமைப் பெண்ணை அனுமதியுங்கள், என் கணவர் நாபால் பேசியதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். நாபால் என்றாள் முட்டாள் என்று பொருள்.

அவர் தனது பெயருக்கு ஏற்ற மாதிரிதான் அனைவரிடமும் நடந்துகொள்கிறார். இந்த அடிமைப் பெண் கொண்டுவந்த உணவுப்பொருட்களைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். என் கணவனை மன்னித்துவிடுங்கள். நீங்கள் கடவுளின் போர்களைத் தலைமை தாங்கி நடத்துபவர். இந்த நாள்வரை நீங்கள் எந்தக் கெட்ட காரியத்தையும் செய்தது இல்லை. இனியும் செய்ய வேண்டாம்” என்று வேண்டுகோள் வைத்தாள்.

நன்றி சொன்ன தாவீது

அப்போது தாவீது அபிகாயிலிடம், “இன்றைக்கு உன்னை என்னிடம் அனுப்பிய நம் கடவுளாகிய யகோவாவுக்குப் புகழ் சேரட்டும்! புத்திசாலியாக நடந்துகொண்டு அமைதியைக் கொண்டுவந்த உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! கொலைப்பழிக்கு ஆளாகாதபடிக்கும் பழிக்குப் பழி வாங்காதபடிக்கும் இன்று என்னைத் தடுத்த உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! நீ புறப்பட்டு வந்து என்னைத் தடுக்காமல் இருந்திருந்தால், நாபாலின் ஆட்கள் அத்தனை பேரையும் வெட்டிச் சாய்த்திருப்பேன். இப்போது நான் நிம்மதி அடைந்தேன். அதற்காக உனக்கு நன்றி. நீயும் நிம்மதியாக உன் வீட்டுக்குப் போ” என்று கூறிவிட்டுத் தன் ஆட்களுடன் தாவீது திரும்பிச் சென்றார்.

அதன் பின், அபிகாயில் தன் கணவன் நாபாலிடம் திரும்பிப்போனாள். அவனோ தன்னுடைய வீட்டில் தொண்டைவரை மது அருந்திவிட்டு, குஷியாக ராஜபோக விருந்து உண்டபடி இருந்தான். காலையில், அவனுக்குப் போதை தெளிந்த பிறகு அபிகாயில் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னாள். அப்போது, அவன் பயத்தால் வாடி பத்து நாட்களுக்குப் பின் செத்துப்போனான். நாபால் இறந்த செய்தியைத் தாவீது கேள்விப்பட்டதும், “கடவுளுக்கு நன்றி. கடவுள் எனக்கு நீதி வழங்கியிருக்கிறார். அபிகாயிலை அபலைப்பெண்ணாகவிட மனமில்லை. எனவே, அவளை மணந்துகொள்ள விரும்புகிறேன்.

அவளது சம்மதத்தைக் கேட்டு வாருங்கள்” என்று கூறித் தன் ஆட்களை அனுப்பினார். அபிகாயில் இதைக் கேட்டு, “அவருக்குச் சேவை செய்யக்கூட நான் தகுதியற்றவள். இருந்தும் என்னை உயர்த்த நினைத்த என் எஜமானுக்கு நான் எவ்வாறு நன்றிசொல்வேன்.” என்றபடி எழுந்து கழுதை மேல் தன் பணிப்பெண்களுடன் தாவீதை அடைந்தாள். தாவீது அபிகாயிலை மணந்துகொண்டார். மீகாளைப் பிரிந்த பிறகு தாவீது அகினோவாமைத் மணந்திருந்தார். அகியும் அபிகாயிலும் தாவீதுக்கு அன்பான மனைவிகளாக இருந்தார்கள்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-57-அமைதியைக்-கொண்டுவந்த-புத்திசாலிப்-பெண்/article9750237.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பைபிள் கதைகள் 58: ஓர் ஆயன் அரசனாய் ஆனார்!

 

 
13chsrsdavid

ஆடு மேய்ப்பவன் அரசனாக முடியாது என்ற பழமொழி இன்னும் நம் மத்தியில் இருக்கிறது. கடவுள் முடிவு செய்துவிட்டால் எதுவும் சாத்தியம் என்பதற்கு தாவீதே உதாரணம். ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் கடைக்குட்டியாக பல சகோதரர்களுடன் பிறந்து தனது தந்தையின் ஆடுகளைப் பொறுப்புடன் வளர்த்து வந்தவர். விலங்குகளும் கள்வர்களும் ஆடுகளை வேட்டையாட வந்தபோது உயிரைத் துச்சமாய் மதித்துப் போரிட்டு அவற்றைக் காப்பாற்றுவதில் பெயர்பெற்றவராக இருந்தார்.

மேய்ந்து வயிறு நிறைந்த ஆடுகள் களைப்புடன் மரநிழலில் ஓய்ந்து படுத்திருக்கும்போது, சற்று இளைப்பாறுவதற்காக தன் யாழிலிருந்து இனிய இசையை மீட்டுவதில் தேர்ந்த இசைக்கலைஞராகவும் விளங்கினார். அப்படிப்பட்ட தாவீது, இஸ்ரவேல் பெரும்படைக்குச் சவாலாக விளங்கிய பெலிஸ்திய மாவீரன் கோலியாத்தை ஒரேயொரு சிறு கூழாங்கல் கொண்டு வீழ்த்தினார். அதன்பிறகு பேரரசன் சவுலுக்காகப் பல போர்களை வென்று தந்து, மக்கள் போற்றும் வீரனாக மாறினார்.

ஆனால் அவர் கொண்டு வந்த வெற்றிகளையும் மக்கள் மத்தியில் அவருக்கு உருவான செல்வாக்கையும் கண்டு தாவீதைக் கொல்லத் துரத்தினார் அரசன். இதனால் நாடோடியாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய நிலை தாவீதுக்கு உருவானது.

பூனைபோல் பதுங்கிவந்த இருவர்

தாவீதை எப்படியாவது கொன்று போட்டுவிடவேண்டும் என்று சவுல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார். அதனால் தனது போர் வீரர்களில் மிகத்திறமை வாய்ந்த மூவாயிரம் பேரை அழைத்துக்கொண்டு தாவீதைத் தேடி ரகசியமாகப் புறப்பட்டார். இது தாவீதின் காதுகளுக்கு வந்தபோது, சவுலும் அவருடைய ஆட்களும் முகாமிட்டிருக்கும் இடத்தைக் கண்டறிய தன் உளவாளிகளை அனுப்பினார்.

அவர்கள் திரும்பி வந்து சவுல் முகாமிட்டிருக்கும் இடத்தைக் கூறினார்கள். தாவீது தன்னுடைய தலைசிறந்த வீரர்களில் இருவரைப் பார்த்து, “உங்களில் யார் என்னுடன் சவுலின் முகாமிற்கு வர விருப்பமாய் இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அபிசாய், “நான் வருகிறேன் மாமா” என்றான். தாவீதின் சகோதரி செருயாவின் இளைய மகன்தான் இந்த அபிசாய். அன்றைய இரவில் சவுலும் அவருடைய வீரர்களும் ஒரு மலைகுன்றின் அடிவாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

தாவீதும் அபிசாயும் சத்தமில்லாமல் பூனையைப் போல் அடிமேல் அடி வைத்து மெதுவாக சவுலின் முகாமிற்குள் ஊடுருவி, அவரது கூடாரத்துக்குள் நுழைந்தார்கள். சவுல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அவரது தலைமாட்டில் பாதுகாப்புக்காக அவர் வைத்திருந்த ஈட்டியையும் அவருடைய தண்ணீர் ஜாடியையும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் வெளியே வந்து அந்தக் குன்றின் மீது ஏறிக்கொண்டார்கள். சவுலோ அவருடைய பாதுகாவலர்களோ மற்ற மூவாயிரம் வீரர்களோ தாவீதையும் அபிசாயியையும் பார்க்கவுமில்லை; அவர்களது அரவத்தை உணரவும் இல்லை.

மீண்டும் வாய்ப்புக் கொடுத்த தாவீது

பொழுது விடிய இன்னும் சிறிது நேரமே இருந்தது. அடிவாரத்தில் எல்லோருக்கும் முன்பாக சவுலின் படைத் தளபதி அப்னேர் விழித்தெழுந்தான். படைத் தளபதியை நோக்கி அவனுக்குக் கேட்கும் விதமாக தாவீது உரக்கப் பேசினார். “இஸ்ரவேலின் தளபதி அப்னேரே, நீ ஏன் உன்னுடைய எஜமானரும் ராஜாவுமாகிய சவுலுக்கு உரியப் பாதுகாப்பு கொடுக்கவில்லை? அவருடைய ஈட்டியும் தண்ணீர் ஜாடியும் எங்கே இருக்கிறதென்று போய் பார்!” என்றார்.

தாவீதின் கணீர் குரல் மூளைவரை சென்று ஒலித்ததில் அரசன் சவுல் திடுக்கிட்டு விழித்துக்கொண்டார். தாவீதின் குரலை அடையாளம் கண்டுவிட்ட சவுல், “ தாவீதே, குரல் கொடுத்தது நீ தானா?” என்று கேட்டார். அதற்கு தாவீது, “ஆம், என் ராஜாவாகிய எஜமானே. உங்கள் தாவீதுதான். ஏன் என்னைக் கொல்வதற்குக் கிடையாய் கிடந்து இப்படி அலைகிறீர்கள்? நான் உங்களுக்கு எதிராக என்ன குற்றம் செய்தேன்?” என்று கேட்டார். அதற்கு அரசனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அங்கே கள்ள மவுனம் நிலவியது.

பிறகு தாவீது மீண்டும் சத்தமாக, “ ராஜாவே, உம்முடைய உயிரைக் காக்கும் என நீர் நம்பி உம் தலைமாட்டில் வைத்திருந்த ஈட்டி, இதோ இங்கே என்னிடம் இருக்கிறது. உமது தண்ணீர் ஜாடியும்தான். உம்முடைய வீரர்களில் ஒருவனை அனுப்பும். அவன் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போகட்டும்” என்றார். இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த சவுல், “ மீண்டும் நான் தவறு செய்துவிட்டேன், முட்டாள்தனமாய் நடந்து கொண்டுவிட்டேன்” என ஒப்புக்கொண்டு மீண்டும் நாடகமாடினார். அரசனின் குரலில் பொய்மை தேன்போலத் தோய்ந்திருந்தது.

எதிரிகளிடம் தஞ்சம்

அதன்பின் சவுலை நம்பாத தாவீது அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். சவுல் அரண்மனைக்குத் திரும்பினார். ஆனால் என்றாவது ஒரு நாள் சவுல், அரசன் என்னைக் கொன்றுபோட சமயம் பார்த்துக்கொண்டிருப்பார். அதனால் இனியும் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டாம் என்று முடிவுசெய்த தாவீது, பெலிஸ்தரின் நாட்டுக்குச் சென்றார். தங்களின் தன்னிகரற்ற மாவீரன் கோலியாத்தை வீழ்த்திய தாவீது தங்களிடம் வந்து அடைக்கலம் கேட்டதும் பெலிஸ்தர்கள் மறுக்காமல் கொடுத்தார்கள்.

தாவீது பெலிஸ்தர்களின் வெற்றிகளுக்காக உழைப்பேன் என்று கூறியதை அவர்கள் நம்பினார்கள். சில காலத்துக்குப் பின் பெலிஸ்தர்கள் இஸ்ரவேல் மீது மீண்டும் படையெடுத்து வந்தார்கள். தாவீது தங்கள் பக்கம் இருக்கும் தைரியத்தில் பெலிஸ்தர்கள் ஆக்ரோஷமாய் போர் புரிந்தார்கள். அந்தப் போரில், சவுலும் அவரது மகனும் தாவீதின் ஆருயிர் நண்பனுமாகிய யோனத்தானும் கொல்லப்பட்டார்கள். இதனால் தாவீது மனம் உடைந்து அழுதார்.

நண்பனை இழந்த சோகம் அவரைக் கவிஞனாக மாற்றியது ‘உனக்காகப் பெரிதும் வருந்துகிறேன், என் நண்பனே, சகோதரனே, யோனத்தானே… நீ எனக்கு எவ்வளவு அன்பானவன்! உன்னை இழந்ததை எப்படி நான் நம்புவேன்’ என்று தொடங்கும் பாடலை எழுதி இசைத்துப் பாடினார். இறந்த அரசனுக்காகவும் இளவரசனுக்காகவும் இஸ்ரவேல் மக்கள் துக்கம் கொண்டாடி முடித்தார்கள்.

அரியணைக்கான போர்

சவுலின் மறைவுக்குப் பின், தாவீது இஸ்ரவேல் நாட்டுக்குத் திருப்பி, எப்ரோன் நகருக்குச் சென்றார். சவுலின் மகன் இஸ்போசேத்தை அரசனாக்கச் சவுலுக்கு விசுவாசமாய் இருந்த அமைச்சர்கள் முயற்சித்தார்கள். ஆனால் தாவீதை அரசனாக்க மக்களும் மற்றவர்களும் விரும்பினார்கள். இதனால் இஸ்ரவேலின் அரியணைக்காகச் சகோதரர்களுக்கிடையில் ஒரு போர் நடந்தது.

அதில் தாவீதின் 600 வீரர்கள் வெற்றி பெற்றார்கள். இதன்பிறகு எதிர்ப்பின்றி தாவீது அரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு முப்பது வயது. அமைதியாக ஆண்டுகள் பல எப்ரோனில் கடந்துசென்றன. இஸ்ரவேல் மக்கள் அச்சமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். எப்ரோனில் தாவீதுக்கு பல மகன்கள் பிறந்தார்கள். அம்னோன், அப்சலோம், அதோனியா ஆகியோர் அவர்களில் சிலர்.

மேலும் பல ஆண்டுகள் கடந்துசென்றன. தாவீதின் படை விரிவடைந்திருந்தது. அவரது படை எருசலேம் எனும் அழகிய நகரத்தைக் கைப்பற்றியது. அந்தப் போரை, தாவீதின் சகோதரியாகிய செருயாவின் மற்றொரு மகன் யோவாப் தலைமை தாங்கி நடத்திச்சென்று வென்றுவந்தான். அவன் கொண்டுவந்த வெற்றிக்குப் பரிசாக, தாவீது யோவாப்பை இஸ்ரவேலின் படைத் தளபதியாக்கி கவுரவித்தார். இப்போது இஸ்ரவேலின் தலைநகராக எருசலேம் புகழ்பெறத் தொடங்கியது.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/பைபிள்-கதைகள்-58-ஓர்-ஆயன்-அரசனாய்-ஆனார்/article9762230.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பைபிள் கதைகள் 59: பிறன்மனை நாடிய மன்னன்!

 

 
27chsrsbible%202

லக வாழ்வில் ஐந்து பேருடைய உறவிலிருந்தும் நட்பிலிருந்தும் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது விவிலியம் சொல்லிச் சென்ற பாடம். அந்த ஐவரில் பொய்யனுக்கு ஐந்தாவது இடம். பொய்யன் நிச்சயம் திருடனாகவும் இருப்பான். எனவே, அவனது கயமை, களவு ஆகியவற்றில் நமக்கும் பங்கு கொடுத்துவிடுவான். நான்காவது இடத்தில் கோழை. ஆபத்தான நேரத்தில் நம்மை விட்டுவிட்டு ஓடிவிடுவான். மூன்றாவது இடத்தில் இருப்பவன் முட்டாள்.

இவனால் நஷ்டம் மட்டுமல்ல, உங்கள் திறமையும் மங்கிவிடுவதோடு, அதற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும். இரண்டாவது இடத்தில் வைத்துப் பார்க்கப்படுவன் கஞ்சன். இவனது உறவால் உங்கள் நேரமும் நியாயமான கோரிக்கையும் வீணாகிவிடும். முதலிடம் பிறன்மனை நாடி, அதைத் தனதாக்கிக்கொள்பவன்.

பிறன்மனை நாடுபவன் அழகும் வீரமும் திறமையும் மிக்கவனாக இருந்தாலும், அவற்றால் எந்தப் பயனும் இல்லை. முகத்துக்கு முன்னால் சிரித்து முதுகில் குத்தும் வஞ்சகமும் துரோகமும் இவனிடம் குடிகொண்டிருக்கும். இவனிடம் முகம் கொடுத்தும் பேசத் தேவை இல்லை என்பது முன்னோர் வகுத்துத் தந்த பாதை. இஸ்ரவேல் மக்களை மட்டுமல்ல; பிறவின மக்களையும் கம்பீரமாகத் திரும்பிப் பார்க்க வைத்த வீரர், கடவுளுக்கே தனது வெற்றிகள் அனைத்தையும் அர்ப்பணித்து வந்த தாவீது இஸ்ரவேலின் பேரரசனாக ஆனார். ஆனால், பிறன்மனை நாடியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அடுக்கடுக்கான பிரச்சினைகளைச் சந்தித்துத் தன் ஆயுளை அற்பமாக்கிக்கொண்டார்.

 

ஒரு நல்ல அரசனின் பலகீனம்

எருசலேம் எனும் எழில்மிகுந்த நகரத்தைக் கைப்பற்றி, இஸ்ரவேலின் தலைநகராக அதை அறிவித்து, அங்கே தன் ஆட்சியைத் தொடங்கினார் தாவீது. கடவுள் கொடுத்த கட்டளைகளின்படி வாழ்ந்துவந்த அவர், ஒரு நல்ல அரசனாகவும் மக்களிடம் புகழை ஈட்டினார். கடவுளே அரசனைவிட உயர்ந்தவர் என்பதை உணர்ந்திருந்த தாவீதின் மீது கடவுளாகிய யகோவா தன் அருளைப் பொழிந்தார். முன்பு வாக்களித்தபடியே கானான் தேசத்தை தாவீதின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்.

கடவுளின் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வந்து, அதைப் புனிதமாக வைத்துக் காப்பதற்கான ஒரு மாபெரும் தேவாலயத்தைக் கட்ட விரும்பினார். கடவுளின் நேசத்துக்குரியவராக இருந்த தாவீதை ‘சபலம்’ என்ற பலவீனம் பாதாளத்தில் தள்ளியது.

ஒரு மாலை நேரத்தில், அரண்மனையின் உப்பரிகையில் உலாவிக்கொண்டிருந்த தாவீது, அங்கிருந்து கீழே பார்த்தார். அந்தச் சமயத்தில் தற்செயலாக அங்கே ஒரு பெண் அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தாள். அழகின் மொத்த உருவமாக இருந்த அவளைத் தன் கண்கள் கொள்ளாமல் நோக்கினார். அவள் கடந்துசென்ற பிறகு தாவீதின் மனது அமைதி அடையவில்லை. அந்தப் பெண்ணின் பெயர் பத்சேபாள். மணமானவள்.

அவளுடைய கணவரின் பெயர் உரியா. அவர் தாவீதின் தலைசிறந்த போர் வீரர்களில் ஒருவர். பிறன்மனை நாடுதல் மிகத் தீங்கான பாவம் என்று தெரிந்திருக்க, தாவீதோ தனக்கு விசுவாசமான ஊழியம் புரியும் தன் போர் வீரனின் மனைவி என்று தெரிந்தும் அவள்மேல் ஆசை கொண்டார். அப்போது போர் நடந்துகொண்டிருக்கிறது. பத்சேபாளின் கணவன் போர்க்களத்தில் இஸ்ரவேலின் எதிரிகளோடு நாட்டுக்காகச் சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்தச் சமயத்தில் தன் அதிகாரத்தின் கொடுக்கைப் பயன்படுத்தி பத்சேபாளை அரண்மனைக்கு அழைத்து வரும்படி உத்தரவிடுகிறார். அரசனுக்குப் பணியாதுபோனால் தலை மிஞ்சாது அல்லவா?

 

மனக்குழப்பத்துக்குள்ளான தாவீது

பத்சேபாள் தாவீதின் அந்தரப்புரத்தை அலங்கரித்தாள். பின் கர்ப்பமாகி, அவரது கருவை வயிற்றில் சுமந்தாள். இதை அறிந்த தாவீது மிகுந்த மனக்குழப்பத்துக்கு ஆளானார். தனது தளபதியான யோவாபுக்கு ஆள் அனுப்பி, பத்சேபாளின் கணவன் உரியாவைப் போர்க் களத்தின் முன்னணியில் கேடயமாக நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

இதன்மூலம் போரில் உரியா கொல்லப்பட்டுவிடுவார், பின்னர் பத்சேபாளை நிரந்தமாகத் தனக்குரியவளாக மாற்றிக்கொண்டுவிடலாம் என்பது தாவீதின் எண்ணம். அவர் நினைத்தபடியே உரியா கொல்லப்பட்டார். இப்போது நிம்மதி அடைந்தவரைப் போல பத்சேபாளை தாவீது மணந்துகொண்டார்.

 

பறிபோன நிம்மதி

ஆனால், அந்த நிம்மதி நிலைக்கவில்லை. தாவீது இப்படி நடந்துகொண்டது கடவுளை மிகவும் கோபப்படுத்திவிட்டது. மோசே வழியே கடவுள் கொடுத்த திருச்சட்டங்களில் செய்யக் கூடாத தீய பாவத்தை தாவீது செய்துவிட்டார். இதை தாவீதுக்கு உணர்த்துவதற்காகத் தன் ஊழியக்காரனாகிய நாத்தானை அவரிடம் கடவுள் அனுப்பினார்.

தாவீதைச் சந்தித்த நாத்தான், “ கடவுள் உனக்கு மரண தண்டனை கொடுக்கவில்லை என்று இறுமாந்து இருக்காதே, நீ செய்யக் கூடாத தீய செயலைச் செய்ததால் உன் உறவுகளால் நிறைய பிரச்சினைகளைச் சந்திப்பாய்” என்று கூறிச் சென்றார். இதைக் கேட்டு மிகவும் வருத்திய தாவீது தனது மோசமான நாட்களுக்காகக் காத்திருந்தார். நாத்தான் கூறியபடியே தாவீதுக்கு அடுக்கடுக்காகப் பிரச்சினைகள் வந்தன.

 

இழப்புகளும் முதுமையும்

தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த மகன் மரணமானான். அதன்பின் தாவீதின் முதல் மகனாகிய அம்னோன் தன் சகோதரி தாமாரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினான். இதையறிந்து கொதித்துப்போன தாவீதின் மற்றொரு மகன் அப்சலோம் அம்னோனைத் தனது வாளுக்கு இரையாக்கினான். இதனால் அப்சலோமுக்கு மக்களின் ஆதரவு பெருகியது. இதைப் பயன்படுத்தி அப்சலோம் எருசலேமின் ராஜாவாகத் தன்னை அறிவித்துக்கொண்டான்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தாவீது, தன் மகனுக்கு எதிராகப் போரை அறிவித்தார். அந்தப் போரில் அப்சலோம் கொல்லப்பட்டு தாவீது வெற்றியடைந்தார். தாவீது மீண்டும் அரியணையில் அமர்ந்தாலும் சொந்த உறவுகளால் விளைந்த குழப்பங்களாலும் மரணங்களாலும் தளர்ந்துபோனார். இதற்கிடையில் தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் இரண்டாவதாக சாலொமோன் என்ற மகன் பிறக்கிறான். தாவீது தன் முன்னோர்களைப் போல் அல்லாமல் 70 வயதிலேயே முதுமையை எட்டி நோய்வாய்ப்பட்டார்.

அந்தச் சமயத்தில் அவருடைய மற்றொரு மகன் அதோனியா தன்னை அரசனாக ஆக்கிக்கொண்டான். ஆனால், தாவீது இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சாலொமோனே தனக்குப் பிறகு அரசனாக இருப்பான் என்பதை இஸ்ரவேல் மக்களுக்கு உணர்த்தும்விதமாக அவனது தலையில் அபிஷேக எண்ணெயை ஊற்றும்படி தலைமை ஆசாரியர் சாதோக்கிடம் தாவீது கட்டளையிட்டார்.

 

மரணத்துக்கு முன்

தாவீது மரணப்படுக்கையில் இருந்தபோது தன் மகன் சாலொமோனை அழைத்து “ நான் மரிக்க இருக்கிறேன். ஆனால், நீ என்னைப் போல் இல்லாமல் இரு. கடவுளின் கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்து நட. மோசேயின் சட்டங்களில் எழுதப்பட்ட அனைத்துக்கும் கீழ்ப்படிந்திரு. நீ இவற்றைச் செய்தால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் வெற்றிபெற்றவன் ஆவாய். கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால், அவர் தன் வாக்குறுதியைக் காப்பாற்றுவார்.

கடவுள் என்னிடம், ‘நான் சொல்லிய வழிகளில் உன் பிள்ளைகள் கவனமாகவும் மனதுக்கு உண்மையாகவும் நடந்தால், இஸ்ரவேலரின் அரசன் உன் குடும்பத்தில் உள்ள ஒருவனாகவே இருப்பான்’ என்றார். எனவே, இதை மனதில் வைத்துக்கொள் என்று கூறி கண்களை மூடினான். அப்போது தாவீதுக்கு 70 வயது.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19363595.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 60: ஒரு சேய் இரு தாய்

 

 
03chsrsbible%202

ளிய ஆயனாக இருந்த தாவீதை மாவீரனாக்கி இஸ்ரவேல் தேசத்தின் பேரரசன் ஆக்கினார் கடவுளாகிய யகோவா. சவுல் தாவீதைக் கொல்லத் துடித்தபோது, கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவரைப் பதிலுக்குப் பழிவாங்கக் கூடாது என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். சவுலைக் கொல்ல நினைக்காமல் அவருக்குப் புத்திசாலித்தனமான வழிகளில் பாடம் கற்றுக்கொடுத்து, இஸ்ரவேல் மக்கள் தன் மீது வைத்திருந்த மதிப்பைத் தக்கவைத்துக்கொண்டார்.

சவுலுக்குப் பிறகு அரியணை ஏறிய தாவீது, 40 ஆண்டுகள் அரசாண்டார். கோட்டை நகராக இருந்த சியோயனைக் கைப்பற்றினார். அது பின்னர் ‘தாவீதின் நகரம்’என்று அழைக்கப்பட்டது. அங்கே பிறந்தவர்தான் தாவீதுக்குப் பின் இஸ்ரவேலின் அரசனாய் ஆன அவருடைய மகன் சாலமோன். 70 வயதில் தாவீது மறைந்தபோது, சாலமோன் இருபது வயதைக்கூட எட்டாதவராக இருந்தார்.

 

ஞானம் மிக்க சாலமோன்

வயதுக்குரிய துடிப்பு இருந்தாலும் பரந்த ராஜ்ஜியத்தையும் திரளான மக்கள் கூட்டத்தையும் நிர்வகிக்கும் ஆற்றல் தன்னிடம் இல்லை என்பதை சாலமோன் உணர்ந்தார். அதேநேரம் தனது அனுபவங்களிலிருந்து தந்தை தாவீது கூறிய அறிவுரைகளை மனதில் கொண்டு நல்ல வழியில் ஆட்சி செய்யத் தொடங்கினார். கடவுள் அளித்த புனிதச் சட்டங்களைப் போற்றி நடந்தார். கடவுள் மீது நேசத்தை வைத்தார். அரசனைவிடக் கடவுளே உயர்ந்தவர் எனப் பிரகடனம் செய்தார்.

சாலமோனின் அன்பைக் கண்ட கடவுள் மிகவும் மகிழ்ந்தார். சாலமோனின் கனவில் தோன்றிய கடவுள், “சாலமோனே, என்ன வேண்டும் கேள், அதை உனக்குத் தருகிறேன்” என்றார். அதற்கு சாலமோன், “பரலோகத் தந்தையே… நான் இளைஞனாக இருக்கிறேன். இந்தத் தேசத்தையும் பெருந்திரளான உமது மக்களையும் சரியான பாதையில் நடத்திச் செல்ல, நீதி வழுவாத ஆட்சியை நான் செய்தாக வேண்டும். ஆனால், அதற்குரிய அறிவும் ஞானமும் என்னிடம் இல்லை. எனவே, போதிய ஞானத்தை எனக்குத் தாரும்” என்று கேட்டார். இதைக் கேட்டு கடவுள் மிகவும் சந்தோஷப்பட்டார்.

கடவுள் சாலமோனைப் பார்த்து, “நீண்ட காலம் வாழ வேண்டும் என்றோ பெரும் செல்வம் வேண்டும் என்றோ நீ கேட்கவில்லை, மாறாக மக்களைக் காக்க ஞானம் வேண்டும் எனக் கேட்டாய், எனவே இதுவரை யாருக்கும் அருளப்படாத அளவு ஞானத்தை உனக்கு நான் கொடுக்கிறேன். நீ விரும்பிக் கேட்காத செல்வங்களையும் உனக்குக் கொடுப்பேன்” என்று கடவுள் கூறினார்.

 

விநோத வழக்கு

கடவுள் அருளியபடியே தனக்குத் தலைசிறந்த ஞானம் வந்துவிட்டத்தை சாலமோன் உணர்ந்தார். அவர் நன்கு வளர்ந்து ஒரு அரசனுக்குரிய கம்பீரத் தோற்றம் பெற்றார். சாலமோனின் ஆட்சியில் இஸ்ரவேல் மக்கள் மகிழ்ச்சியும் அமைதியும் வசதிகளும் நிரம்பப் பெற்றவர்களாக வாழ்ந்துவந்தனர்.

அப்போது அவரது அரசவைக்கு ஒரு விநோத வழக்கை இரு தாய்மார்கள் கொண்டு வந்தனர். கையில் ஒரு ஆண் குழந்தையைத் தூக்கி வந்திருந்த ஒரு தாய், அரசனைப் பார்த்து கூறினாள். “அரசே... இவளும் நானும் ஒரே வீட்டில் வாழ்கிறோம், எனக்கு ஒரு மகன் பிறந்தான், இரண்டு தினங்களுக்குப் பிறகு அவளுக்கும் ஒரு மகன் பிறந்தான்.

ஆனால், ஒருநாள் இரவு அவளுடைய மகன் இறந்துவிட்டான். அதனால், நான் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் இறந்த அவளுடைய மகனை என் பக்கத்தில் படுக்கவைத்து விட்டு என்னுடைய மகனை அவள் எடுத்துக்கொண்டு போய்விட்டாள். நான் தூங்கிக் கண்விழித்தபோது என் பக்கத்தில் இறந்த நிலையில் இருந்த அவளுடைய மகனைக் கண்டேன். கண்டதுமே, அவன் என் குழந்தை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்.” என்றாள்.

மற்றொரு தாய், “இல்லை அரசே… அவள் கூறுவது பொய்! உயிரோடிருக்கும் இந்தக் குழந்தை என்னுடைய மகன். நம்புங்கள்” என்றாள். முதலில் பேசிய தாயோ, இரண்டாமளைப் பார்த்து, “இல்லை இல்லை.. இறந்த குழந்தை உன்னுடையது, உயிரோடிக்கும் குழந்தை என் மகன்.. உன் வாயை மூடு” என்றாள். இப்படியே இரு தாய்மார்களும் அரசனின் முன்பாக வாக்குவாதம் செய்து வாய்ச் சண்டை இட்டார்கள்.

 

சாலமோனின் தீர்ப்பு

தனது மெய்க்காப்பாளனை அழைத்த சாலமோன். “வாளை எடுத்து உயிரோடுள்ள இந்தக் குழந்தையை இரண்டாக வெட்டி, ஆளுக்குப் பாதியாக இந்தப் பெண்களிடம் கொடுத்துவிடு” என்றார். அரசனின் ஆணையைக் கேட்டு அலறினாள் அந்தக் குழந்தையின் உண்மையான தாய்.

“ஐயோ வேண்டாம்! என் குழந்தையைக் கொன்றுவிடாதீர்கள். அவளுக்கே அவனைக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறி மண்டியிட்டுக் கதறி அழுதாள். ஆனால், மற்றொரு தாயோ “எங்கள் இருவருக்குமே அந்தக் குழந்தை வேண்டாம்; அதை இரண்டாக வெட்டிப் போடுங்கள்” என்றாள். இதைக் கேட்ட சாலமோன் காவலனைத் தடுத்தார்.

“குழந்தையைக் கொல்ல வேண்டாம் எனக் கதறித் துடித்தவளே இந்தக் குழந்தையின் உண்மையான தாய். அவளிடமே அதைக் கொடு” என்றார். பொய்யுரைத்த தாய் வெட்கித் தலைகுனிந்து அவமானத்தால் கூனிக்குறுகிப் போனாள்.

பெரும் சலசலப்புடன் அரசவை ஆச்சரியத்தில் மூழ்கியது. ஒரு சேயுடன் வந்த இரு தாய்மாரின் வழக்கை சாலமோன், பிரச்சினையைத் தீர்த்து வைத்த விதத்தைப் பற்றி இஸ்ரவேல் மக்கள் கேள்விப்பட்டனர். ஒரு ஞானமுள்ள அரசன் கடவுளால் அருளப்பட்டிருக்கிறார் என்று கூறி மகிழ்ந்தனர்.

- பைபிள் கதைகள் தொடரும்

http://tamil.thehindu.com/society/spirituality/article19408911.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 61: சாலமோன் கட்டிய முதல் ஆலயம்

 

 
shutterstock464158283

தா

வீதின் மறைவுக்குப் பிறகு முடிசூட்டிக்கொண்ட சாலமோனிடம் மிகப் பெரிய குதிரைப் படையும் மிகப் பெரிய ரதப் படையும் இருந்தன. படை பலத்தில் மட்டும் சாலமோன் சிறந்து விளங்கவில்லை. கடவுள் அருளிய அறிவிலும் பெரும் பலசாலியாக அவர் விளங்கினார். பூமிப்பந்தின் நீர்ப்பரப்பைப்போல் பரந்த இதயத்தை கடவுள் கொடுத்தார். கிழக்கத்திய மக்களையும் எகிப்தியர்களையும்விட சாலமோன் ஞானத்தில் சிறந்து விளங்கினார்.

சிறந்த எழுத்தாளராகவும் கவிஞராகவும் விளங்கினார். ஞானத்தில் அவருக்குச் சமமாக யாருமே இருக்கவில்லை. எஸ்ராகியனான ஏத்தான், மாகோலின் மகன்களான ஏமான், கல்கோல், தர்தா ஆகியோரைவிட அவர் ஞானமுள்ளவராக இருந்தார். சுற்றியிருந்த எல்லா நாடுகளிலும் அவருடைய பெயரும் புகழும் பரவின. அவர் சொன்ன நீதிமொழிகளின் எண்ணிக்கை மூன்றாயிரம். அவருடைய பாடல்களின் எண்ணிக்கை 1,005.

 

பேசாத பொருள் இல்லை

அவர் மரங்களைப் பற்றிப் பேசினார். அதாவது, லீபனோனில் இருக்கும் தேவதாரு மரத்திலிருந்து சுவரில் பற்றி வளரும் ஒட்டுண்ணிச் செடிகள், கொடிகள்வரை எல்லாவற்றையும் பற்றிப் பேசினார். விலங்குகள், பறவைகள், ஊர்வன, மண்ணுக்குள் வாழ்வன, மீன்கள் என எல்லா ஜீவராசிகளையும் பற்றிப் பேசினார். அவர் பேசாத பொருளில்லை. எல்லாவற்றையும்விட இந்தப் படைப்புகளின் ஆசானாகி கடவுளைக் குறித்து எளிமையாக எடுத்துரைத்தார்.

கடவுளைப் புகழ்ந்து புகழ்பெற்ற கவிதைகள் எழுதினார். அவற்றுக்கு இசையமைத்து அவற்றை சங்கீதப் பாடல்களாகவும் மாற்றினார். சாலமோனின் ஞானமான சொற்களைக் கேட்பதற்காக எல்லா தேசங்களிலும் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக சாலமோனின் தர்பார் மண்டபத்தில் குவிந்தார்கள். அதோடு, உலகெங்கிலும் இருந்து பல அரசர்கள் அவருடைய ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வந்தார்கள்.

 

சாலமோனின் தேசம்

இஸ்ரவேலின் யூப்ரடீஸ் ஆறு தொடங்கி, பெலிஸ்தியர்களின் தேசத்தைக் கடந்து எகிப்தின் எல்லைவரையிலும் இருந்த எல்லா நாடுகளையும் சாலமோன் ஆட்சி செய்தார். அது யூதேயா, இஸ்ரவேல் உள்ளிட்ட பெரும் நிலப்பரப்பாக இருந்தது. அந்தத் தேசங்களில் கடற்கரை மணலைப் போல ஏராளமான மக்கள் குடியிருந்தனர்.

வயிறுமுட்டச் சாப்பிட்டும் குடித்தும் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். சாலமோனின் வாழ்நாள் முழுவதும் அவருக்குக் கப்பம் கட்டி சேவை செய்தார்கள். எகிப்தியர்கள் ஏக இறைவனாகிய பரலோகத் தந்தை மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு கற்பனைத் தெய்வங்களை வழிபட்டு வந்தனர். ஆனால், எகிப்தின் அரசனாகிய பாரோ மன்னனின் மகளை சாலமோன் மணந்துகொண்டார்.

 

முதல் ஆலயம்

சாலமோன் தன்னுடைய தந்தை தாவீது சொல்லிக்கொடுத்தபடியே கடவுளாகிய யகோவா அருளிய சட்டங்களைக் கடைப்பிடித்து, கடவுள்மீது மாறா அன்பு காட்டிவந்தார். கடவுளுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காக அவரிடமிருந்து பெற்றிருந்த திட்டத்தை தாவீது, தான் இறப்பதற்கு முன் சாலமோனிடம் கொடுத்திருந்தார். அரியணை ஏறிய பிறகு தனது ஆட்சியின் நான்காவது ஆண்டில், சாலமோன் அந்த ஆலயத்தைக் கட்டத் தொடங்கினார். 50 ஆயிரம் எண்ணிக்கையில் கட்டிட வல்லுநர்களும் சிற்பிகளும் வேலை செய்தார்கள். தனது கருவூலத்தில் இருந்த அனைத்துப் பணத்தையும் செலவழித்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயத்தைக் கட்டிமுடித்தார். கடவுளுக்கான முதல் பேராலயம் எருசலேமில் எழுந்து நின்றது.

ஆசாரிப்புக் கூடாரத்தில் இருந்ததைப் போன்றே இந்த ஆலயத்திலும் இரண்டு முக்கிய அறைகள் இருந்தன. அவற்றில் ஆலயத்தின் நடுவில் உள்ளறையாக இருந்ததில் உடன்படிக்கைப் பெட்டியை வைக்க சாலமோன் உத்தரவிட்டார். ஆசாரிப்புக் கூடாரத்திலிருந்த மற்ற புனிதப் பொருட்கள் அனைத்தையும் மற்றொரு அறையில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

அவ்வாறு செய்ததும் ஆலயத்தைக் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்ய ஒரு மாபெரும் விழாவை முன்னெடுத்தார். அந்த விழாவுக்கு உலகைப் படைத்துக் காக்கும் கடவுளாகிய யகோவா மீது நம்பிக்கை வைத்து அவர் தந்த கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கிற லட்சக்கணக்கான மக்கள் தேவாலயத்தின் முன் குடும்பம் குடும்பமாகக் குவிந்தார்கள்.

அனைவருக்கும் கூடாரமும் உணவும் நீரும் வழங்கிய சாலமோன், ஆலயத்துக்கு முன் முழங்கால் இட்டு கைகள் இரண்டையும் வானை நோக்கி உயர்த்தி ஜெபித்தார். “பரலோகத் தந்தையே, நீர் தங்குவதற்கு வானுலகம் முழுவதும்கூடப் போதாதே, அப்படியானால் நீர் தங்குவதற்கு இந்த ஆலயம் எப்படிப் போதுமானதாக இருக்கும். என்றாலும், என் தேவனே, உம்முடைய மக்கள் இந்த இடத்தை நோக்கி ஜெபிக்கும்போது தயவுசெய்து அவர்களுக்குக் காதுகொடுத்து உன் கருணையை அருளும்” என்று கடவுளிடம் உருக்கமாகக் கேட்டார்.

 

வானிலிருந்து வந்த நெருப்பு

சாலமோனின் ஜெபத்தைக் கேட்டு மக்கள் ஆச்சரிப்பட்டார்கள். கடவுளிடம் எவ்வாறு பணிவு காட்ட வேண்டும் என்பதைக் குறித்துக் கற்றுக்கொண்டார்கள். சாலமோன் ஜெபம் செய்து முடித்ததும் வானத்திலிருந்து நெருப்பு வருகிறது. ஆலயத்தின் பலிபீடத்தில் வைக்கப்பட்டிருந்த எல்லாப் பலிகளையும் எரித்துப்போடுகிறது. வானிலிருந்து வந்த பிரகாசமான ஒளி ஆலயத்தை நிரப்பியது. கடலைப் போல் திரண்டிருந்த மக்கள் ஆராவாரத்துடன் கடவுள் காட்டிய அடையாளம் முன்பாக மண்டியிட்டு ஆலயத்தை வணங்கினார்கள். கடவுள் நம் வார்த்தைகளுக்குக் காதுகொடுப்பார் என்பதை அவ்வளவு பேரும் புரிந்துகொண்டார்கள்.

 

சாலமோன் செய்த தவறு

ஞானத்திலும் பக்தியிலும் சிறந்து விளங்கிய சாலமோன் வெகுகாலம் ஆட்சி செய்தார். அவருடைய குடிமக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். ஆனால், யகோவாவைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளாத பல அந்நிய நாட்டுப் பெண்களை சாலமோன் மணந்துகொண்டார். இப்படி மணந்துகொண்ட அவருடைய ராணிகளில் ஒருத்தி சிலை ஒன்றை வழிபட்டார். பின்னர் மற்ற ராணிகளும் அவள் வழியில் சிலை வழிபாட்டை ஏற்கிறார்கள். இதைத் தடுக்காத சாலமோனும் ஒரு கட்டத்தில் தன் ராணிகளின் வற்புறுத்தலுக்கு ஆளாகி சிலைகளை வணங்கத் தொடங்கிவிடுகிறார்.

தனது மக்களை அன்பாக நடத்திவந்த சாலமோன் அதிகாரத்தைக் காட்டத் தொடங்கினார். மக்களும் அவரை வெறுத்தார்கள். சாலமோன் மீது கோபம் கொண்ட கடவுள், அவருடன் பேசினார். “சாலமோனே உன்னிடம் பேசும் கடவுளாக நான் இருக்கிறேன் என்பதை மறந்துபோனாய். அதற்குத் தண்டனையாக இந்த ராஜ்யத்தை உன்னிடமிருந்து எடுத்து வேறொருவனுக்குக் கொடுக்கப் போகிறேன். இதை உன் வாழ்நாட்களில் செய்ய மாட்டேன், உன் மகனின் ஆட்சிக் காலத்தில் செய்வேன்.” என்றார்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19502773.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 62: பிளவுபட்ட தேசம்!

 

 
24chsrsbible%202

கடவுளிடம் ஞானத்தை இறைஞ்சிப்பெற்றுப் பகுத்தறிவிலும் எழுத்தறிவிலும் தலைசிறந்து விளங்கிய சாலமோன் தன் மனைவியரால் தடம் மாறினார். எந்தக் கடவுள் அவருக்கு ஞானத்தைக் கொடுத்தாரோ அந்தக் கடவுள் எச்சரிக்கை செய்திருந்தும் அதை மறந்து, தன் முதுமையில் மனைவியரின் பேச்சைக் கேட்டுச் சிலைகளை வழிபடத் தொடங்கினார். தனது பொய்யான மத வழிபாட்டை மக்கள் மீதும் திணிக்கத் தொடங்கினார். இவ்வாறு அவர் மாறியபின் மக்களையும் வரி, போர், சடங்கு என வாட்டியெடுத்தார்.

இதனால் கோபம் கொண்ட கடவுள் சாலமோனுக்குத் தோன்றி, “ சாலமோனே நீ என்னைவிட்டு விலகிப் போய்விட்டாய், நான் கொடுத்த சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டாய். எனவே, ஆட்சியை உன் கையிலிருந்து பிடுங்கி, உன்னுடைய ஊழியர்களில் ஒருவரிடம் கொடுப்பேன். உன் அப்பாவாகிய தாவீதுக்காக இதை உன் காலத்தில் செய்ய மாட்டேன். உன் மகனின் கையிலிருந்து ஆட்சியைப் பிடுங்கிவிடுவேன். ஆனால், ஆட்சியை முழுவதுமாகப் பிடுங்கிவிட மாட்டேன்” என்று சொன்னார்.

அவ்வாறே சாலமோனின் முதுமையில் இஸ்ரவேல் மக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி, அரசனுக்கு எதிராகக் கலகம் செய்யத் தொடங்கினர். அதற்குப் பல மக்கள் தலைவர்கள் உந்துதலாகவும் இருந்தனர்.

 

ஒரு கலகக்காரனும் தீர்க்கதரிசியும்

சேரேதா என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட நேபாத் என்பவருடைய மகன் யெரொபெயாம். இவர் சாலமோனிடம் அரச ஊழியராகப் பணியாற்றிவந்தார். என்றாலும் அரசனை எதிர்த்து இவர் கலகம் செய்துவந்தார். ஒருநாள் எருசலேம் நகரத்திலிருந்து வெளியே போய்க்கொண்டிருந்தார். அப்போது யெரொபெயாமை எதிரே சந்தித்தார் வயது முதிர்ந்த தீர்க்கதரிசி ஒருவர். அவர் சீலோனியரான அகியா. அவர் ஒரு புது அங்கியை அணிந்திருந்தார். யெரொபெயாமைப் பார்த்ததும் அகியா தான் அணிந்திருந்த புதிய அங்கியைப் பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்தார். அகியாவின் இந்தச் செயலைக் கண்டு யெரொபெயாம் திகைத்தார்.

பின்பு அகியா, யெரொபெயாமிடம் “நீ பத்து துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலர்களின் கடவுளான யகோவா, ‘சாலமோன் இறந்த பிறகு அவனுடைய மகனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி அதில் பத்துக் கோத்திரங்களைச் சேர்ந்த மக்களை ஆளும் உரிமையை யெரொபெயாமுக்குத் தருவேன்’ என்று என்னிடம் கூறினார். மேலும் கடவுள், ‘என்னுடைய ஊழியன் தாவீதுக்காகவும் இஸ்ரவேலில் உள்ள எல்லாக் கோத்திரத்திலிருந்தும் நான் தேர்ந்தெடுத்த எருசலேம் நகரத்துக்காகவும் ஒரு கோத்திரத்தை ஆளும் உரிமையை மட்டும் சாலமோனின் மகனிடம் விட்டு வைப்பேன்.” என்றார்.

மேலும் கடவுள் கோபத்துடன், ‘என்னுடைய மக்கள் என்னை விட்டுவிட்டு சீதோனியர்கள், மோவாபியர்கள், அம்மோனியர்கள் உருவாக்கிய சிலைகளை வணங்குகிறார்கள். அவர்கள் என் வழியில் நடக்கவில்லை, எனக்குப் பிடித்த செயல்களைச் செய்யவில்லை. சாலமோனுடைய அப்பா தாவீதைப் போல் என்னுடைய சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை. அதனால்தான் இப்படிச் செய்யப்போகிறேன்’ என்று என்னிடம் கூறினார். அதை அப்படியே நான் உனக்குத் தெரிவித்துவிட்டேன். நீ கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய்” என்று அகியா தன் அங்கியைக் கிழித்ததன் அடையாளத்தை யெரொபெயாமுக்கு உணர்த்திவிட்டு அங்கிருந்து சென்றார். இதையறிந்த சாலமோன் யெரோபெயாமைக் கொல்ல வகை தேடினார். ஆனால், யெரொபெயாம் எகிப்துக்குத் தப்பியோடிவிட்டான்.

 

சாலமோனின் முடிவும் தேசப் பிரிவும்

தன் முதுமையில் கடவுளுக்கு உண்மையற்றவராய் மாறிப்போன சாலமோன் நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்த பிறகு இறந்துபோனார். அவரை தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்தார்கள். பின்னர் ஆட்சிக்கு வந்தார் சாலமோனின் மகனாகிய ரெகொபெயாம். அவரிடம் மறைந்த அரசன் சாலமோன் கொண்டுவந்த கெடுபிடிகளைத் தளர்த்துமாறு இஸ்ரவேல் கோத்திரத்தைச் சேர்ந்த பத்து பிரிவு மக்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், ரெகொபெயாம் மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. சாலமோன் இறந்த தகவல் கிடைத்ததும் யெரொபெயாம் எகிப்திலிருந்து நாடு திரும்பினான். இப்போது தங்கள் கோரிக்கையை வென்றெடுக்கப் பத்துக் கோத்திரங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி யெரொபெயாமைத் தங்களுக்குத் தலைவர் ஆக்கினார்கள். தங்கள் தலைவரோடு சென்று கேட்டும் சாலமோனின் மகன் செவி சாய்க்கவில்லை.

இதனால் கோபம் கொண்ட மக்கள், “எங்களுக்கும் தாவீதுக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரிடமிருந்து எங்களுக்குப் பலன் எதுவும் கிடைக்கப்போவதில்லை. இஸ்ரவேலர்களே, நீங்கள் போய் உங்கள் தெய்வங்களை வழிபடுங்கள். தாவீதே, உன்னுடைய வம்சத்தை மட்டும் நீ பார்த்துக்கொள்” என்று சொல்லிவிட்டு ரெகொபெயாமுடன் மற்ற பத்து கோத்திரங்களைச் சேர்ந்த இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். விரைவில் யெரொபெயாமை அழைத்து இஸ்ரவேல் முழுவதுக்கும் அவரை அரசன் ஆக்கினார்கள். யூதா கோத்திரத்தாரைத் தவிர வேறு யாரும் தாவீதின் வம்சத்தாருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இவ்வாறு தேசம் இரண்டாக உடைந்தது.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாலமோனின் மகன் ரெகொபெயாம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வீரர்களை யூதா வம்சத்திலிருந்தும் பென்யமீன் கோத்திரத்திலிருந்தும் ஒன்றுதிரட்டினார். பிரிந்துபோன இஸ்ரவேல் மக்களுடன் போர் செய்து அதை மறுபடியும் தன்னுடைய ஆட்சியின்கீழ் கொண்டுவருவதற்காகப் போரை அறிவித்தார். அப்போது கடவுளாகிய யகோவா, தீர்க்கதரிசியாகிய செமாயாவிடம் பேசினார். யூதாவின் அரசனாகிய சாலமோனின் மகன் ரெகொபெயாமிடமும் அவனை ஆதரிக்கும் யூதா, பென்யமீன் கோத்திரத்தாரிடமும் உடனே செல். ‘உங்கள் சகோதரர்களான இஸ்ரவேலர்களை எதிர்த்து நீங்கள் போர் செய்யக் கூடாது. ஏனென்றால், நானே தேசத்தைப் பிரித்துக் கொடுத்தேன் எனக் கூறு’ என்றார். சகோதர மக்களுக்கு மத்தியில் போர் தொடங்கவிருந்த சூழ்நிலையில் விரைந்து சென்ற செமாயா தீர்க்கதரிசி கடவுளின் வார்த்தைகளை அவர்களிடம் அறிவித்தார். போருக்குத் தயாராக வந்திருந்த வீரர்கள் யகோவாவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஆயுதங்களை உறையிலிட்டுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். இதைக் கேள்விப்பட்ட இஸ்ரவேல் மக்கள், தங்கள் கடவுளின் கருணை குறித்து நெகிழ்ந்துபோனார்கள்.

 

பாதையை மாற்றிய பதவி ஆசை

பெரும் போர் ஆபத்து கடவுளால் நீங்கியது குறித்து மகிழ்ச்சியடைந்தாலும் வெகுவிரைவிலேயே யெரொபெயாமின் பாதையைப் பதவி ஆசை மாற்றியது. எப்பிராயீம் மலைப்பகுதியில் சீகேம் நகரத்தைக் கட்டி அங்கே குடியேறிய யெரொபெயாம், பின்னர் பெனூவேல் நகரத்தைக் கட்டினார். அப்படியும் யெரொபெயாமின் மனம் ஆறுதல் அடையவில்லை. ‘நடக்கவிருந்த பெரும் போரில் சகோதரர்களுடன் மோதி மடிந்துவிடாமல் காப்பாற்றிய யகோவாவின்மேல் பிரியமாக இருக்கும் இந்த இஸ்ரவேலர்களின் மனதை எப்படி மாற்றுவது? மீண்டும் எருசலேம் நகரத்திலிருக்கும் சாலமோன் கட்டிய தேவாலயத்துக்குக் கடவுளை வணங்கச் சென்றால் காலப்போக்கில் இவர்களுடைய இதயம் தங்கள் எஜமானாகிய ரெகொபெயாம் பக்கம் சாய்ந்துவிடும். பின்பு, அவர்கள் என்னைக் கொன்றுவிட்டு யூதாவின் ராஜாவான ரெகொபெயாமுடன் சேர்ந்துவிடுவார்கள்’ என்று நினைத்தார்.

இதனால் தன்னுடைய ஆலோசகர்களுடன் கலந்துபேசி, இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தார். பின்பு மக்களிடம், “இஸ்ரவேலர்களே, எருசலேமுக்குப் போய் வருவது உங்களுக்கு நிறையக் கஷ்டமாக இருக்கும். இதோ! எகிப்தில் அடிமைகளாய் இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டுவந்த உங்கள் கடவுள்” என்று அறிவித்து, அவற்றில் ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றை தாணிலும் பிரதிஷ்டை செய்தார். மக்கள் மீண்டும் பாவக்குழியில் விழுவதற்கு அரசன் உருவாக்கிய புதிய வழிபாடு காரணமானது. யூதாவில் கொண்டாடப்படும் பாஸ்கா பண்டிகையைப் போலவே ஒரு பண்டிகையை எட்டாம் மாதத்தில் தொடங்கிவைத்தார். போலிச் சடங்கிலும் கொண்டாட்டங்களிலும் மக்கள் மந்தைகளைப் போல் மதிமயங்கிக் கிடந்தார்கள். யெரொபெயாமைக் கடவுள் தண்டிக்க முடிவு செய்தார்.

(பைபிள் கதைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19544406.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 63: கடவுள் அளித்த தண்டனை

 

 
07chsrsbible11

ஸ்ரவேலின் பேரரசன் சாலமோனின் மரணத்திற்குப் பின், தேசம் இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று வட ராஜ்ஜியம், மற்றொன்று தென் ராஜ்ஜியம். சாலமோனின் ஊழியரும் சாமானிய குடிமக்களில் ஒருவராகவும் இருந்த யெரொபெயாமை மக்களின் மத்தியிலிருந்து கடவுள் அரசனாகத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு பத்து கோத்திரங்கள் அடங்கிய மிகப்பெரிய ராஜ்ஜியத்தைக் கொடுத்தார். அதுவே பத்து கோத்திர வடராஜ்ஜியம். சாலமோனின் மகனாகிய ரெகொபெயாமிடம் கடவுள் இரண்டு கோத்திரங்களை மட்டுமே விட்டுவைத்தார். எருசலேமை தலைநகராகக் கொண்ட அதுவே தென் ராஜ்ஜியம். இரண்டு ராஜ்ஜியங்களிலுமே பிரச்சினைகள் தலைக்குமேல் வெள்ளம்போல் சென்று விடுகின்றன.

 

மதம் படைத்தவனின் மதம்

‘சாமானியக் குடிமகனாக இருந்த நம்மை, கடவுள் அரசனாக்கினார்’ என்பதை அறிந்திருந்தும் யெரொபெயாம் தனது பதவி ஆசையால், வடக்குக் குடிமக்கள் எருசலேம் அரசனின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதற்காகக் கற்பனையான ஒரு வழிபாட்டையும் அதற்கான மதத்தையும் சடங்குகளையும் உருவாக்கி மக்களை மதிமயங்கச் செய்தார். இதனால் கோபம் கொண்ட கடவுள், யெரொபெயாம் முதலில் உருவாக்கிய பெத்தேல் ஆராதனை பலி பீடத்துக்குத் தன் ஊழியர் ஒருவரை அனுப்பினார். அங்கே அரசன் யெரொபெயாம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்த இறை ஊழியர் “இதோ! இந்தப் பலிபீடம் வெடித்து, அதிலிருக்கிற சாம்பல் சிதறிவிடும். உன்னை அரசனாக்கிய கடவுளே இந்தச் செய்தியை என் வழியே சொல்லி அனுப்பினார் என்பதற்கு இதுவே அடையாளம்” என்று சொன்னார். உடனே கோபம் கொண்ட அரசன் பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, “அவனைப் பிடியுங்கள்!” என்று கட்டளையிட்டார். உடனே அவருடைய கை விறைத்துப்போனது. அவரால் மறுபடியும் கையை மடக்க முடியவில்லை. அப்போது அந்தப் பலிபீடம் வெடித்து அதிலிருந்த சாம்பல் சிதறியது. தன் ஊழியர் மூலம் கடவுள் அனுப்பிய எச்சரிக்கை அப்படியே நிறைவேறியது.

அப்போது அரசன் உண்மைக் கடவுளின் ஊழியரிடம், “உங்களுடைய கடவுளான யகோவாவிடம் தயவுசெய்து எனக்குக் கருணை காட்டச் சொல்லுங்கள். என்னுடைய கையை பழைய நிலைக்கு வரும்படி குணமாக வேண்டுமென்று கேளுங்கள்” என்று கதறினான். அவ்வாறே ஊழியரும் கடவுளிடம் இறைஞ்ச அரசனின் கை உடனே குணமானது. அப்படியும் புதிய மதத்தைப் படைத்த அரசனின் மதம் அடங்கவில்லை. திருந்தாத அந்த அரசன், கடவுளின் ஊழியராக இல்லாதவர்களை ஆராதனை பலி பீடங்களில் குருமார்களாக நியமித்தார். குருவாக வேண்டுமென்று யாராவது ஆசைப்பட்டால், “இவனும் குருவாக இருக்கட்டும்” என்று சொல்லி நியமித்தார். யெரொபெயாமின் கடவுளுக்கு எதிரான இந்தச் செயல்களே அவரது வம்சம் அழிய காரணமாக அமைந்தது.

 

மனக்கண்ணால் பார்த்த தீர்க்கதரிசி

அரசன் என்கிற ஆணவம் காரணமாக கடவுளை எதிர்த்துவந்த யெரொபெயாமின் வம்சத்தை அழித்துவிடக் கடவுள் முடிவு செய்தார். யெரொபெயாமின் மகன் அபியா, எந்த நோய் என்று கண்டறியமுடியாதபடி படுக்கையில் வீழ்ந்தான். அப்போது யெரொபெயாம் தன்னுடைய மனைவியிடம், “நீ உடனே சீலோ நகரத்துக்குப் போ. அங்கே வசித்துவரும் அகியா தீர்க்கதரிசியைப் பார்த்துவிட்டு வா. இஸ்ரவேல் மக்களுக்கு நானே அரசனாக ஆக்கப்படுவேன் என்று சொன்னவர் அவர்தான். அவரே நம் மகன் உயிர் பிழைப்பான் என்பதைக் கூறமுடியும். நீ அரசனின் மனைவி என்று தெரியாமல் இருப்பதற்காக மாறுவேடத்தில் போய் வா” என்று அனுப்பினார். அரசன் கூறியபடியே தீர்க்கதரிசி அகியாவின் வீட்டுக்குப் புறப்பட்டுப் போனாள். அகியா நூறு வயதைக் கடந்த பழுத்த கிழமாக இருந்தார். முதுமை காரணமாக அவருக்குக் கண் தெரியவில்லை. ஆனால் கடவுள் அவரை மனக்கண்ணால் காண வைத்தார்.

தன் வீட்டு வாசலில் அரசனின் மனைவி நுழைந்தபோதே அவளுடைய காலடி சத்தத்தை அகியா கேட்டார். உடனே, “யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா. ஏன் மாறுவேடத்தில் வந்திருக்கிறாய்? கடவுள் உன்னிடம் கெட்ட செய்தியைச் சொல்லச் சொல்லியிருக்கிறார். நீ போய் யெரொபெயாமிடம் இந்தச் செய்தியைச் சொல். ‘இஸ்ரவேலின் கடவுளான யகோவா சொல்வது என்னவென்றால், ‘நான் உன்னைச் சாதாரண மக்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுத்து, உன்னை அரசன் ஆக்கினேன். தாவீது வம்சத்தின் கையிலிருந்த ஆட்சியைப் பிடுங்கி உனக்குக் கொடுத்தேன். ஆனால், நீ என் ஊழியனான தாவீதைப் போல் நடந்துகொள்ளவில்லை. தாவீது என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தான். முழு இதயத்தோடு என் வழியில் நடந்தான். நீயோ, உனக்கு முன்பிருந்த எல்லாரையும்விட மோசமாக நடந்துகொண்டாய். அதனால், உன்னுடைய வம்சத்துக்கு முடிவுகட்டுவேன். உன் வம்சத்தின் ஆண்கள் அனைவரையும் அடியோடு அழிப்பேன். யெரொபெயாமின் வம்சத்தைச் சேர்ந்த ஆண் எவனாவது நகரத்துக்குள்ளே செத்துப்போனால் அவனை நாய்கள் தின்னும். நகரத்துக்கு வெளியே செத்துப்போனால் வானத்துப் பறவைகள் தின்னும். உன் கணவன் செய்த பாவத்தை கண்மூடித்தனமாக ஆதரித்ததால் இஸ்ரவேலர்களை கடவுள் கைவிட்டுவிடப்போகிறேன் ’. இவ்வாறு கடவுள் என்னிடம் கூறினார். இப்போது புறப்பட்டு உன் வீட்டுக்குப் போ. நகரத்துக்குள்ளே நீ காலெடுத்து வைக்கும்போது உன் மகன் இறந்துவிடுவான் ” என்று உரைத்தார்.

இதைக் கேட்டு வருந்திய யெரொபெயாமின் மனைவி, திர்சாவுக்குப் புறப்பட்டுப் போனாள். வீட்டு வாசலில் அவள் நுழைந்தபோது அவளுடைய மகன் இறந்துபோனான். இவ்வாறு அகியா கூறிய கடவுளின் வார்த்தைகள் உடனே நிறைவேறின. மகன் இறந்த பிறகும் திருந்தாத யெரொபெயாம் ரெகொபெயாமின் தென் ராஜ்ஜியம் மீது தொடர்ந்து போர் செய்துவந்தான். இப்படி தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து போர்செய்து 22 ஆண்டுகள் ஆட்சி செய்தார், அதன் பிறகு அவர் இறந்துபோனார். இஸ்ரவேலின் மிக மோசமான ராஜாக்களில் ஒருவராக யெரொபெயாம் இருந்தார்.

 

கொள்ளையடிக்கப்பட்ட தேவாலயம்

சாலமோனின் மகன் ரெகொபெயாம் தனது 41 வயதில் அரசனாக முடிசூட்டிக்கொண்டு அரசனாக இரண்டு கோத்திரங்களை ஆண்டுவந்தார். அவரது 17 ஆண்டு கால ஆட்சி யெரொபெயாமுடன் மோதி பிரிக்கப்பட்ட தேசத்தை மீட்டுவிட வேண்டும் என்ற போரிலேயே முடிந்துபோனது. தென் ராஜ்ஜியத்திலும் கடவுள் வெறுக்கிற செயல்களையே யூதா மக்கள் செய்தார்கள். ரெகொபெயாமின் ஆட்சியில் ஆண் பாலியல் தொழிலாளர்கள்கூட இருந்தார்கள். எல்லா மலைகளின் பலி பீடங்களையும் மேடுகளைக் கட்டினார்கள். கடவுள் விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான செயல்கள் எல்லாவற்றையும் யூதா மக்களும் செய்தார்கள்.

ரெகொபெயாம் ராஜா ஆட்சி நடத்திக்கொண்இருந்த ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் ராஜாவாகி சீஷாக் எருசலேம்மீது படையெடுத்து வந்தான். சாலமோன் கட்டிய கடவுளின் தேவாலயத்தில் இருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையில் இருந்த பொக்கிஷங்களையும் கொள்ளையடித்துக் கொண்டுபோனான். சில காலத்துக்கு மட்டுமே கடவுளால் அடையாளப்படுத்தப்பட்ட அந்த கம்பீர தேவாலயம் புனிதம் கெடாமல் இருந்தது.

http://tamil.thehindu.com/society/spirituality/article19629146.ece

Link to comment
Share on other sites

பைபிள் கதைகள் 64: கடவுள் அனுப்பிய கடைசி அரசர்

14chsrsbible%202

ஸ்ரவேலின் முதல் அரசனாகக் கடவுளால் தேர்ந்தடுக்கப்பட்டவர் சவுல். ஆனால், கடவுள் அவரைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, சாமானிய ஆயனாக இருந்த தாவீதைத் தேர்ந்தெடுத்தார். தாவீது, கோலியாத் என்ற மாவீரனை எதிர்த்துச் சண்டையிட்டு வீழ்த்தி இஸ்ரவேலர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். அடுத்து தாவீதின் மகன் சாலமோன் அரசனாக ஆனார். கடவுளிடமிருந்து ஞானத்தையும் அறிவையும் பெற்றுக்கொண்டு மிகச் சிறந்த கவிஞராக விளங்கிய அவரும் தன் தனிமனித பலவீனத்தால் வீழ்ச்சி கண்டார்.

 

எரிக்கப்பட்ட எருசலேமும்

பாபிலோன் சிறையும்

சாலமோனின் மறைவுக்குப் பின், இஸ்ரவேல் இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டது, ஒன்று வடக்கு ராஜ்ஜியம், மற்றொன்று தெற்கு ராஜ்ஜியம். சாலமோனின் வாரிசுகளால் ஆளப்பட்ட தெற்கு ராஜ்ஜியத்தில் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரமக்கள் வாழ்ந்துவந்தார்கள். இது சுமார் 150 ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தது. இஸ்ரவேலின் பத்து கோத்திர மக்கள் வாழ்ந்துவந்த வடக்கு ராஜ்ஜியம் சுமார் 250 ஆண்டுகள் நிலைத்திருந்தது. ஆனால், பெரும்பான்மையான இஸ்ரவேலர்கள் கற்பனைக் கடவுளர்களை வழிபட்டனர். எருசலேம் தேவாலயத்தை எல்லாவிதத்திலும் களங்கப்படுத்தினர். தீர்க்கதரிசிகளை அனுப்பி கடவுள் இஸ்ரவேலர்களை எச்சரித்துத் திருத்த முயன்றார். ஆனால், கடவுளின் தூதுவர்களாகிய அவர்களது வார்த்தைகளைக் கேட்க இஸ்ரவேலர்கள் தயாராக இல்லை. கண்மூடித்தனமாகக் கற்பனை உலகில் வாழ்ந்தார்கள். கோபம் கொண்ட கடவுள் அசீரியரின் படையெடுப்பை அனுமதித்தார்.

இதனால் போரில் சரணடைந்த இஸ்ரவேலர்களை பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாரின் படையினர் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் அடுத்துவந்த சில ஆண்டுகளில் நேபுகாத்நேசாரால் எருசலேம் நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. எருசலேம் நகரின் கோட்டைச்சுவர்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. அதன் வாசல் கதவுகள் எரிக்கப்பட்டு சாம்பலாய்ப் போயின. பாதுகாப்பு அரண் ஏதுமில்லாத நிலையில் அதன் பின்னர் இஸ்ரவேல் தேசமே யாருமின்றி வெறிச்சோடிக்கிடந்தது.

பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர்களில் பலர், உலகைப் படைத்த கடவுளாகிய யகோவாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களைக் கடவுள் கைவிடவில்லை. சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் முன்பு இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த அந்தத் தேசத்துக்கு அவர்களை மீண்டும் கொண்டுவரப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்தார்.

 

சோதனைகளைக் கடந்து விடுதலை

பாபிலோன் சிறையில் இருந்தபோது கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்த இஸ்ரவேலர்கள் பல சோதனைகளை எதிர்கொண்டார்கள். பாபிலோன் அரசன் நேபுகாத்நேசார் உத்தரவின்படி சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூவர் நெருப்புச் சூளைக்குள் வீசப்பட்டார்கள், ஆனால் கடவுள் அவர்களை உயிருடன் வெளியே அழைத்து வந்தார். அதன் பின்னர் பெர்சியர்கள் பாபிலோனைக் கைப்பற்றினார்கள். அப்போது மற்றொரு விசுவாசியான தானியேல் சிங்கங்களின் கூண்டுக்குள் வீசப்பட்டார். ஆனால், சிங்கங்கள் அவரை உண்ணவரும் முன் கடவுள் அவற்றின் வாயைக் கட்டிப்போட்டு அவரையும் பாதுகாத்தார்.

இறுதியில் இஸ்ரவேலர்களின் கடவுள் சக்தி வாய்ந்தவராக இருப்பதை அறிந்து பெர்சிய அரசனாகிய கோரேஸு இஸ்ரவேலர்களை விடுதலை செய்தார். பாபிலோனுக்குக் கைதிகளாக இழுத்துச்செல்லப்பட்டுப் பெரும் துன்பங்களை அனுபவித்தாலும் கடவுள் தங்களைக் கைவிட மாட்டார் என்று நம்பிய இஸ்ரவேலர்கள் சுமார் 70 ஆண்டுகள் பாபிலோன் சிறையிலிருந்து விடுதலை கிடைத்த பின் தங்கள் சொந்த தேசமாகிய இஸ்ரவேலுக்கு நெகேமியாவின் தலைமையில் திரும்பி வந்தார்கள். எருசலேமுக்குத் திரும்பிவந்த கையோடு, அழிந்து கிடந்த தங்களின் நகரின் நிலைகண்டு வருந்தி அழுதனர். முதல்வேலையாகத் தங்களைக் காத்து ரட்சித்த பரலோகத் தந்தையாகிய யகோவாவின் ஆலயத்தை மீண்டும் கட்டத் தொடங்கினார்கள். ஆலயம் எழுப்புவதை எதிரிகள் பலமுறை தடை செய்தபோதும் சுமார் 22 ஆண்டுகள் முயன்று அந்தப் பேராலயத்தைக் கட்டி முடித்தார்கள்.

 

இறுதி அரசர்

பேராலயத்தைக் கட்டி முடித்த பின் தங்கள் நகரத்தின் மதில்களைக் கட்டத் தொடங்கினார்கள். இதைக் கண்ட இஸ்ரவேலர்களின் எதிரிகள், “விரைந்துசென்று இஸ்ரவேலர்களைக் கொன்றொழித்து அவர்கள் தங்கள் நகரத்தின் மதில்களைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்துவோம்” என்று புறப்பட்டார்கள். இதை உளவறிந்த நெகேமியா, நகரத்தைப் புனரமைக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு ஈட்டிகளையும் கொடுத்து, “எதிரிகளைக் கண்டு பயப்படாதீர்கள். உங்கள் சகோதரர்களுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும், உங்கள் மனைவியரின் பொருட்டும், உங்கள் வீடுகளைக் காக்கவும் போர் புரியுங்கள்” என்று நம்பிக்கை தந்தார்.

இதனால் இஸ்ரவேல் மக்கள் துணிவுடன் எதிரிகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்தார்கள். அல்லும் பகலும் ஆயுதங்களைத் தயாராக வைத்துக்கொண்டு, நகரின் மதில்களைக் கட்டியெழுப்புவதில் முழு மூச்சாக ஈடுபட்டனர். அதனால் 52 நாட்களுக்குள் எருசலேமின் மதில்கள் கட்டி முடிக்கப்பட்டன. இப்போது கடவுளுக்கு நன்றி சொல்லி மக்கள் அனைவரும் கோட்டைக் கொத்தளம் அமையப்பெற்ற பாதுகாப்பான நகரத்துக்குள் பயமின்றி வாழத் தொடங்கினர். நெகேமியாவும் குருவாகிய எஸ்றாவும் கடவுளுடைய திருச்சட்டத்தை இஸ்ரவேல் மக்களுக்குக் கற்பித்தார்கள்.

மக்களும் பாவத்தை அறிக்கையிட்டு திருச்சட்டத்தின்படி வாழ உறுதி பூண்டார்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல, திருச்சட்டத்தைக் கற்பித்துவந்த குருக்கள், மக்களை ஒடுக்கும் அதிகார பீடமாக மாறினார்கள். அந்நியர்களை அவர்கள் அனுமதித்தார்கள். அந்நியனாகிய பெர்சிய அரசன் மீண்டும் இஸ்ரவேலை ஆளத் தொடங்கினான். இஸ்ரவேலர்கள் அவனுக்குச் சேவை செய்து வாழ வேண்டிய நிலை உருவானது. அந்தத் தருணத்தில் “ஒரு புதிய அரசரை அனுப்புவேன், அவர் உங்களுக்குச் சமாதானத்தையும் மீட்பையும் கொண்டுவருவார்” என்று தீர்க்கதரிசியின் வழியாக வாக்குக்கொடுத்தார் கடவுள். அவருக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். அவரே ரட்சகரான இயேசு.

(நிறைவடைந்தது)

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆதியாகமத்தில் தொடங்கி பழைய ஏற்பாட்டிலுள்ள அத்தனை சம்பவங்களையும் அழகான படங்களுடன் கதையாக தந்துள்ளீர்கள். நான் தினமும் பைபிள் படிப்பவள். அண்மையில் இஸரவேல் நாட்டுக்கு புனிதப் பயணம் சென்று வந்தேன். இக் கதைகளைப் படிக்கும்போது மீண்டும் புனித நாட்டுக்குள் வலம் வருவதுபோல் உணர்வே ஏற்படுகிறது.பகிர்வுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.