Jump to content

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்


Recommended Posts

சசிகலா ஜாதகம் - 76 - நடராசனுக்காக களமிறங்கிய ஜெயலலிதா!

 

 

‘‘யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்.
யாரும் பொய்யைச் சொன்னாலும்
நீங்கள் மெய்யைச் சொல்லுங்கள்’’


- ‘என்னைப் போல் ஒருவன்’ படத்தில் சிவாஜி பாடிய பாடல் வரிகள் இவை. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஜெயலலிதாவுக்கு ரொம்பவே பொருந்தும். நடராசன் தனக்குத் தீமை செய்தாலும் அவருக்கு நன்மையே செய்தார் ஜெயலலிதா.

p38b.jpg

நடராசன் கைதைக் கண்டித்தும், தன் மீது வழக்கு போட்டதற்கு எதிராகவும் சீற ஆரம்பித்திருந்தார் ஜெயலலிதா. ‘‘தேர்தல் செலவுக்கு முன்பணமாக பலர் அளித்த மொத்த தொகை 3 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 59 ரூபாய். அவர்களுக்கு 3 கோடியே 28 லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய் பணம், வங்கிகள் மூலம் திருப்பி தரப்பட்டுவிட்டது. மீதி ரூ.13 லட்சம் மட்டுமே தரப்பட வேண்டும். பணம் கட்டியவர்கள் வந்து கேட்ட உடன், தொடர்ந்து பணத்தைத் திருப்பி அளித்து வருகிறோம். நேரில் வந்து கேட்காதவர்களுக்குத் தந்தி கொடுத்து வரச் சொல்லியிருக்கிறோம். இந்த நிலையில்தான் சிலரை ஏற்பாடு செய்து, பொய் புகார்களைத் தயாரித்து என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். பணத்தைத் திருப்பி கொடுத்துக் கொண்டிருக்கும் போது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய் வழக்குகள் போடப்படுகின்றன.

மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகுதான், எனக்கு இப்படி தொல்லைகள் தருகிறார்கள். கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தது போல ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அதற்காக நடராசனைக் கைது செய்திருக்கிறார்கள். அவரை கொடுமைப்படுத்தி, அவரிடம் எனக்கு எதிராக வாக்குமூலம் வாங்க முயல்கிறார்கள். நடராசனின் உதவியாளர் சுந்தரமூர்த்தியை போலீஸார் அழைத்துச்சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சித்ரவதைப்படுத்தி அவரிடமும் எனக்கு எதிரான வாக்குமூலம் வாங்க நினைக்கிறார்கள். என் டிரைவர் அண்ணாதுரை, உதவியாளர் செந்தில் இருவரும் என்னுடைய வேலை தொடர்பாக, ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடராசன் வீட்டுக்குப் போனார்கள். அவர்கள் சென்ற ஸ்கூட்டர் நடுரோட்டில் கிடக்கிறது. அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று வாக்குமூலம் வாங்க போலீஸ் நினைக்கிறது. அவர்கள் அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாக அறிந்து, அங்கே என் வழக்கறிஞரை அனுப்பினேன். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. இதுபற்றி போலீஸ் கமிஷனர் துரைக்குக் கடிதம் அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை.

 என் வீட்டில் பெயின்ட் வேலை பார்த்துக் கொண்டிருந்த மணி, வெளியே சென்றபோது அவரையும் பிடித்துச் சென்று கிண்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தார்கள். என் வீட்டில் சமையல் செய்ய காய்கறிகள் வாங்கக்கூட யாரும் வெளியில் செல்ல முடியவில்லை. என் வீட்டில் உள்ளவர்களைக் கைது செய்து, மிரட்டி என்னை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு என்னைக் கொலை செய்திட திட்டமிட்டிருக்கிறார்கள். என் மீது தனிப்பட்ட முறையில் நிதி மோசடி என்ற பொய் வழக்குகள் ஜோடிக்கப்படுகின்றன’’ என மீடியாவிடம் ரொம்பவே சீறினார் ஜெயலலிதா.

p38a.jpg

தனது வீட்டில் வேலை பார்க்கிறவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பாகச் சொல்லி, கைது செய்ய பார்க்கிறார்கள்;கொல்ல திட்டமிடுகிறார்கள் என ஜெயலலிதா பேசியதற்கு என்ன காரணம்? வலம்புரி ஜான் சொன்னதுதான் இங்கே பொருத்தமாக இருக்கும். ‘‘நடராசனின் பிடியில் இருந்து தப்பிக்க ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் முயன்றார். ஆனால், ஒவ்வொரு முயற்சிக்குப் பிறகும் நடராசனின் பிடிதான் இறுகியது. செயற்கையான சிக்கலை நடராசன் ஏற்படுத்துவார். ஒவ்வொரு முறையும் ஆபத்துகளைக் காட்டி, அடிமைப் பெண் ஜெயலலிதாவை நிரந்தரக் கைதியாகவே ஆக்கிவிட்டார். இப்படி நடக்கும் போராட்டத்தில் இறுதி வெற்றி நடராசனுக்குத்தான் கிடைக்கும்” எனச் சொன்னவர் வலம்புரி ஜான். தனக்கு எதிராக நடராசன் வாக்குமூலம் கொடுத்துவிடுவாரோ, அதன் மூலம் தான் கைதாகக்கூடுமோ என்ற அச்சம் ஜெயலலிதாவுக்கு இருந்ததால்தான் பத்திரிகையாளர்களை அழைத்து நடராசனுக்கு ஆதரவாகப் பேசினார் ஜெயலலிதா. ‘‘குடும்ப நண்பர் நடராசனைக் கொடுமைப்படுத்துகிறார்கள்’’ எனக் கதறினார். 

ஜெயலலிதா மட்டுமல்ல அ.தி.மு.க. தலைவர்களும் நடராசனுக்கு ஆதரவாக கச்சைக் கட்ட ஆரம்பித்தார்கள். அ.தி.மு.க. அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொருளாளர் மாதவன், எஸ்.டி.சோமசுந்தரம், திருநாவுக்கரசர், முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராஜாராம் ஆகியோர், ‘‘சபாநாயகருக்கு ஜெயலலிதா எழுதிய ராஜினாமா கடிதம் அடங்கிய ‘சீல்’ வைத்த கவரின் உறையைப் பிரித்துப் பார்க்க போலீஸாருக்கு அதிகாரம் கிடையாது. போலீஸார் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா எழுதிய ஆவணங்களின் போட்டோ காப்பி நடராசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸ் கமிஷனர் துரை சொல்வது பொய். ஜெயலலிதா எழுதிய ராஜினாமா கடிதத்தை யாரோ ஒருவர் தம்மிடம் கொடுத்தாக சபாநாயகர் சொல்கிறார். அப்படி கடிதம் தந்தவர் யார் என்பதை சபாநாயகர் சொல்ல வேண்டும்” என்றார்கள்.

p38.jpg

‘‘சபாநாயகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தின் நகல் கிடைத்த ஒரு மணி நேரத்திலேயே அது பத்திரிகைகளுக்குக் கிடைத்தது எப்படி? அவ்வளவு ஆத்திர அவசரம் ஏன்” எனக் கேள்வி எழுப்பினார் ராகவானந்தம். ‘‘தேர்தல் நிதி வசூலிக்கப்படுவது எம்.ஜி.ஆர் காலத்து வழக்கம். அதைத் திருப்பி தரும்போது, சம்மந்தப்பட்டவர் தேர்தல் சமயத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துள்ளாரா என ஆராய்ந்து பார்த்து திருப்பித் தரப்படும். பணத்துக்கு ரசீது தரப்பட்டுள்ளது. மோசடி என்ற குற்றச்சாட்டே எழவில்லை’’ என்றார் திருநாவுக்கரசர். இவ்வளவும் நடராசன் மீதான கறையைப் போக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள்.

இன்னொரு பக்கம் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுமா என்கிற விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. சபாநாயர் தமிழ்க்குடிமகனின் நடவடிக்கையை விமர்சித்து அப்போது அ.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம், ‘‘சபாநாயகர் தமிழ்க்குடிமகனாக நடந்து கொள்ளவில்லை. கருணாநிதி குடிமகனாக நடந்து கொள்கிறார்’’ என்றார். ஜெயலலிதா ராஜினாமா கடித விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவிடம் தமிழ்குடிமகன் விளக்கம் கேட்டிருந்தார். இதுபற்றி அப்போது பேசிய தமிழ்குடிமகன், ‘‘ ‘1989 மார்ச் 15 தேதியிட்டு நான் எழுதியதாக ஒரு கடிதம் உங்களுக்கு வரலாம். அந்தக் கடிதத்தை ஏற்க வேண்டாம்’ என ஜெயலலிதா எனக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தால் பிரச்னை இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்காது. எனக்கு அனுப்பப்பட்ட கடிதம், ஜெயலலிதா எழுதியதுதான். அது நிர்பந்தத்தால் எழுதப்பட்டதா? என அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன். ‘நான் பதவி விலகவில்லை. அதை ஏற்க வேண்டாம்’ என எதிர்க்கட்சித் தலைவர் சொன்னால் போதும், விவகாரம் முடிவுக்கு வந்துவிடும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், ‘‘ஜெயலலிதா எழுதிய விலகல் கடிதம் உங்கள் கைக்குக் கிடைத்தது பற்றி சர்சை கிளம்பியிருக்கிறது. போலீஸ் சோதனையின் போது, உங்கள் பெயருக்கு விலாசமிடப்பட்ட கடிதம் போலீஸாரால் பிரிக்கப்பட்டிருக்கிறது’’ எனக் கேட்டார். அதற்கு தமிழ்குடிமகன், ‘‘கருத்து சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.

(தொடரும்)

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

சசிகலா ஜாதகம் - 77 - உறவுகள் தொடர்கதை!

டராசன் கைதுக்கு ஜெயலலிதா காட்டிய ரியாக்‌ஷனுக்கு, கருணாநிதி பதிலடி கொடுத்தார். ‘‘அ.தி.மு.க மீது தி.மு.க புகார் கொடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது அரசியல். ஆனால் அ.தி.மு.க-வைப் பற்றி அ.தி.மு.க-வினரே புகார் சொல்லியிருக்கும்போது நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்ய முடியும்? வாங்கிய பணத்தைத் திருப்பித் தராத சீட்டுக் கம்பெனி மீது புகார் வந்தால், போலீஸார் எப்படி நடவடிக்கை எடுப்பார்களோ, அதைப் போலதான் நடராசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசியல்வாதி அல்லாத ‘குடும்ப நண்பர்’ என்று கூறப்படுபவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தாலே குறை கூறுகின்றனர்’’ என்றார். ‘நடராசன் அரசியல்வாதி அல்ல. அவர் மீது நடவடிக்கை எடுத்தால் ஏன் ஜெயலலிதா கொதிக்கிறார்?’ என்பதுதான் கருணாநிதி சொன்ன விளக்கத்துக்கு அர்த்தம். தன் கட்சியின் சீனியர்களைவிட ஜெயலலிதாவுக்கு, நடராசன் முக்கியமானவராக அப்போது மாறியிருந்தார்.

பதவி விலகல் பற்றி சபாநாயகர் தமிழ்க்குடிமகன் கேட்ட விளக்கத்துக்கு ஜெயலலிதா பதில் அனுப்பியிருந்தார். ‘‘நான் அனுப்பிய கடிதம் பற்றி நேரில் விளக்கம் அளிக்க சபாநாயகர் விரும்பினாலும், பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்’’ என ஜெயலலிதா சொன்னார். இந்த அளவுக்கு ஜெயலலிதா இறங்கி வந்ததற்குக் காரணமே, சசிகலா குடும்பம்தான். ‘ஜெயலலிதா அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடக் கூடாது’ என்பதில், அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதனால்தான், சபாநாயகர் கேட்ட விளக்கத்துக்கு உடனடியாக பதில் அனுப்பியதுடன் நேரில் செல்லவும் ஜெயலலிதா தயாராக இருந்தார். ‘‘உடல்நிலைக் காரணமாக பதவி விலகல் கடிதத்தை எழுதினேன். கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டதால் முடிவை மாற்றிக் கொண்டு கடிதத்தை அனுப்பவில்லை’’ என ஜெயலலிதா விளக்கம் சொல்லியிருந்தார். இதற்கு இன்னோர் அர்த்தமும் உண்டு. ஜெயலலிதாவின் உடல்நிலை மீது 1989-ம் ஆண்டே, சசிகலா குடும்பத்துக்கு அக்கறை இல்லை. ஜெயலலிதாவை வைத்து அரசியலில் அறுவடை செய்ய வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே அவர்களுக்குப் பிரதானமாக இருந்தது. ஜெயலலிதாவின் விளக்கத்தை ஏற்று,
“எம்.எல்.ஏ பதவியில் ஜெயலலிதா நீடிப்பார்’’ என 1989 மார்ச் 22-ம் தேதி சபாநாயகர் தமிழ்க்குடிமகன் அறிவித்த பிறகுதான் சசிகலா குடும்பம் நிம்மதி அடைந்தது.

p38a.jpg

ஜெயலலிதாவை, சசிகலா குடும்பம் அப்போதே பகடைக் காயாகப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தது. அரசியல் விலகல்... பிறகு பல்டி அடித்தது ஆகியவற்றால் ஜெயலலிதாவின் இமேஜ் சரிந்துவிடக் கூடாது என்பதற்காக களத்தில் இறங்கியது சசிகலா குடும்பம். ‘‘ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு போலீஸ் அனுப்பியது தவறு. இந்தக் குற்றத்தைச் செய்த சென்னை போலீஸ் கமிஷனர் துரை மீது வழக்குப் போடுவேன்’’ என ஜெயலலிதாவைச் சொல்ல வைத்தார்கள்.

போலீஸ் கமிஷனர் துரையைக் குறிவைத்து, ஜெயலலிதா குற்றச்சாட்டுகளைப் படித்ததால், தன் தரப்பு விளக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தார் துரை. ‘‘நடராசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கவர், சீல் வைக்கப்பட்டிருக்கவில்லை. குண்டூசியால் இணைக்கப்பட்டிருந்தது. சபாநாயகருக்கு உரிய முறையில் முகவரி இடப்படாத கவரில், கடிதத்தின் புகைப்பட நகல் மட்டுமே இருந்தது. ‘அனுப்புநர்’ என்ற இடத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்தில்லை. கடித உறையைச் சாட்சியத்தின் முன்புதான் பிரித்தோம். சோதனையில் தொடர்புடைய பொருள்களை, போலீஸார் கைப்பற்றுவது முறையானதுதான். விசாரணைக்குத் தேவையான பொருள்கள் இருக்கின்றனவா என்பது கடிதத்தின் உறையைப் பிரித்தால்தானே தெரியும்’’ என்றார் துரை. 

குடல்புண் நோயால் பாதிக்கப்பட்ட நடராசன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைப் பெற்று வந்தார். தனகோபாலை மிரட்டிய வழக்கில், நடராசனுக்கு ஜாமீன் கேட்கப்பட்டது. மனு விசாரணைக்கு வந்தபோது, நடராசனின் வழக்கறிஞர் வானமாமலை, ‘‘சபாநாயகருக்கு எழுதப்பட்ட கவரை போலீஸார் பிரித்துப் பார்த்தார்கள். அதிலிருந்த  ஜெயலலிதாவின் உண்மையான கடிதத்தைத்தான் கைப்பற்றினார்கள். அது புகைப்பட நகல் அல்ல. உண்மையான கடிதத்தைத்தான் சபாநாயகருக்கு போலீஸார் அனுப்பியிருக்கிறார்கள்’’ என்றார். உடனே, அரசு வழக்கறிஞர் சலாவுதின் பாஷா, ‘‘வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றிப் பிரித்துப் பார்க்கலாம். பிரதமர் உள்பட முக்கியப் பிரமுகர்களுக்கு எழுதப்பட்ட கடிதமாக இருந்தாலும், போலீஸார் பிரித்துப் பார்க்க முடியும். நடராசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதம், புகைப்பட நகல்தான்’’ என்றார்.
  
நடராசனின் ஜாமீன்மனு, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தள்ளுபடியானதால், முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார்கள். நீதிபதி பி.கிருஷ்ணசாமி, நடராசனுக்கும் அவருடைய உதவியாளர் சேகருக்கும் ஜாமீன் வழங்கினார். நடராசனுக்கு ஜாமீன் கிடைத்தது பெரிய விஷயமில்லை. இன்னும் நான்கு பேர் முன்ஜாமீன் கேட்டதுதான் முக்கியம். நடராசனின் மனைவி சசிகலா, நடராசனின் மைத்துனர் விநோதகன், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, ஜெயலலிதாவின் உதவியாளர் முரளி ஆகியோர்தான் அந்த நான்கு பேர். ‘நடராசன் கைதான வழக்கில் நாங்களும் கைது செய்யப்படலாம் எனக் கருதுகிறோம். அதனால், ஜாமீன் வழங்க வேண்டும்’ என அவர்கள் மனு செய்தனர். சசிகலா, நடராசன் தாண்டி, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விநோதகன், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி கேரக்டர்கள் அப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தன.

p38.jpgதனகோபாலை நடராசன் மிரட்டிய வழக்கில் தாங்களும் கைதாகலாம் என்கிற அச்சம் இந்த நான்கு பேருக்கும் ஏற்பட்டது. அவர்களுக்கு, நீதிபதி டி.எஸ்.அருணாசலம் ஜாமீன் அளித்தார். ‘‘ஜெயலலிதாவுக்கு உதவியாக பணிபுரியும் சசிகலாவை, போயஸ் கார்டன் வீட்டில் வைத்தே போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்’’ எனச் சொல்லிதான் சசிகலாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. “ஜெயலலிதா வீட்டில் வைத்து விசாரித்தால் அரசியல் நோக்கம் கற்பிக்கப்படும். அதனால், போலீஸ் ஸ்டேஷனில் சசிகலாவை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என அரசு வழக்கறிஞர் கேட்டபோது, நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. “இது நீதிமன்ற உத்தரவு. இதில் அரசியல் நோக்கம் கற்பிக்க இடமில்லை’’ என்றார் நீதிபதி.

தேனி ஸ்ரீதர் கொடுத்த வழக்கும் நடராசன் மீது போடப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, வி.தினகரன், முரளி ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். ‘தேனி ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில், எங்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 342, 307, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் கைது செய்யப்படலாம்’ எனச் சொல்லி, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டனர். அவர்களுக்கு நீதிபதி அருணாசலம் ஜாமீன் வழங்கினார்.

ஜெயலலிதா அலுவலகத்தில் உதவியாளர்களாக பணிபுரியும் கே.சங்கர் குமார், எஸ்.வீரேந்திரன், எஸ்.மோகன், வி.ஜெயராமன், வி.தினகரன்,    எஸ்.நடராஜன், வி.மாறன் ஆகிய ஏழு பேரும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்தனர். ‘இந்திய குற்றவியல் சட்டம் 420, 307, 506 ஆகிய பிரிவுகளின் கீழும், ஆயுதச் சட்டம் 25-வது பிரிவின் கீழும் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், முதல் தகவல் அறிக்கையில் எங்கள் பெயர்கள் இல்லாவிட்டாலும் நாங்கள் கைது செய்யப்படுவோம் என அஞ்சுகிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். இவர்களுக்கும் நீதிபதி அருணாசலம் ஜாமீன் அளித்தார்.

வி.ஜெயராமன், வி.தினகரன் ஆகியோரும் சசிகலா குடும்பத்தின் உறவுகள்தான்.

உறவுகள் தொடர்கதை ஆனது!

(தொடரும்)

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 78 - “என்னிடமிருந்து ஜெயலலிதாவை பிரிக்கமுடியாது” - நடராசன் வாய்ஸ்!

 

 

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் நான்காவது மாடியில் உள்ள தனி வார்டில்தான், நடராசனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒருவழியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட  பிறகுதான் கொஞ்சம் நிம்மதியடைந்தார் நடராசன். அ.தி.மு.க அரசியலோடு நடராசனை முடிச்சுப் போடப்பட்ட பிறகு, முதல்முறையாக பத்திரிகையாளர்களின் முன்தோன்றி அவர் பேசினார்.

“மார்ச் 18-ம் தேதி, என் வீட்டில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது உள்ளே நுழைந்த போலீஸார், என்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள அறை ஒன்றில் அமரவைத்தார்கள். ‘ஜெயலலிதாவின் அறிக்கையையும், கடிதத்தையும் வெளியிட வேண்டும்’ எனச் சில போலீஸ் அதிகாரிகள் என்னை வற்புறுத்தினார்கள். ‘அந்த ஆவணங்களை வெளியிட்டால், அரசின் வெகுமதிகள் கிடைக்கும். உங்களை மீண்டும் அரசுப் பணியில் அமர்த்துவார்கள்’ என அவர்கள் ஆசை வார்த்தை கூறினார்கள்.

p26.jpgதமிழக அரசின் செய்தித் துறையில் துணை இயக்குநராகப் பணிபுரிந்து வந்த நான், சென்ற ஆண்டே (1988) எனது பதவி விலகல் கடிதத்தை அளித்துவிட்டேன். ஆனாலும் அரசு, என் ராஜினாமாவை ஏற்கவில்லை. அதனால்தான் எனக்கு, ‘பதவி தருவோம்’ என்றார்கள். அரசியலிலிருந்து விலகுவதாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையையும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு அவர் எழுதிய கடிதத்தையும் வெளியிடுமாறு போலீஸார் என்னைத் திரும்பத் திரும்பக் கேட்டனர். அதை நான் ஏற்க மறுத்ததால்தான், என்னைக் கைது செய்தார்கள்.

அரசியலிலிருந்து விலகும் அறிக்கையையும், ராஜினாமா கடிதத்தையும் அழித்துவிடும்படி, ஜெயலலிதா என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். ஆனால், அதை நான் அழிக்கவில்லை. இதனை ஜெயலலிதா மற்றும் என் மனைவியும் ஜெயலலிதாவின் உதவியாளருமான சசிகலா முன்னிலையில் அழிக்க விரும்பினேன். என் டெலிபோனையும், ஜெயலலிதா போனையும் போலீஸ் ஒட்டுக்கேட்கிறார்கள். என்னிடம் ஜெயலலிதாவின் அறிக்கையும், கடிதமும் இருந்ததை அவர்கள் தெரிந்துகொண்டார்கள்.

சீலிடப்பட்ட உறையில் அறிக்கையையும், கடிதத்தையும் ஜெயலலிதா என்னிடம் கொடுத்திருந்தார். ‘எங்கள் கோரிக்கைக்கு இணங்க மறுத்தால், உங்கள் மீது இன்னும் பல வழக்குகள் தொடரப்படும்’ என போலீஸார் மிரட்டினார்கள். ‘கொலைக் குற்றம் சாட்டிக்கூட என்னைக் கைது செய்துகொள்ளுங்கள். நான் கவலைப்பட மாட்டேன். ஆனால், ஜெயலலிதாவின் பதவி விலகல் கடிதத்தை வெளியிட மாட்டேன்’ என போலீஸாரிடம் உறுதியாகத் தெரிவித்தேன். ஆனாலும், ஜெயலலிதாவின் கடிதம் மற்றும் அறிக்கையின் மூலப் பிரதிகளை போலீஸார் என்னிடமிருந்து கைப்பற்றினார்கள்.

சபாநாயகருக்கு தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா எழுதிய, சீலிடப்பட்ட கடிதத்தை போலீஸார் பிரித்துப் பார்த்தது சட்டவிரோதம். என் மீதான வழக்குக்கும், அந்தக் கடிதத்துக்கும் எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. அப்படி சம்பந்தமில்லாத விஷயத்தை, என் மூலம் வெளிக் கொண்டுவர வேண்டும் என போலீஸார் முயன்றார்கள். என்னுடன் கைதுசெய்யப்பட்ட என் உதவியாளர் சுந்தரமூர்த்தியின் பெயரை, கைது செய்ததாக போலீஸ் ஆவணங்களில் காட்டவில்லை. ஆனால், சபாநாயகருக்கும், பத்திரிகை அலுவலகங்களுக்கும் சுந்தரமூர்த்தியே ஜெயலலிதாவின் கடிதத்தையும் ராஜினாமா அறிக்கையையும் கொண்டு சென்று கொடுத்தாகச் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும், என்னால் பேசவும் எழுதவும் முடியும். ஆனால், என் கைப்பட எழுத போலீஸ் அனுமதிக்காமல், அவர்களே ஒரு வாக்குமூலத்தை டைப் செய்து கொண்டுவந்தனர். அதற்கு முன்பு, ‘ஸ்பெசிமன் சிக்னேச்சர்’ (மாதிரிக் கையெழுத்து) எனச் சொல்லி சுமார் பத்து காகிதங்களில் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். அந்தக் கையெழுத்தை வெட்டி, போலீஸாரே டைப் செய்த காகிதத்தில் ஒட்டி, நான் வாக்குமூலம் கொடுத்ததாக, ஜோடனை செய்திருக்கிறார்கள். ‘ஸ்பெசிமன் சிக்னேச்சர்’ என்ற பெயரில் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கியது மோசமான நடவடிக்கை.

என் வீட்டுக்குப் போகிறவர்களையெல்லாம் மறித்துக் கைதுசெய்கிறார்கள். என்னைப் பார்க்க ஊரிலிருந்து வந்த என் உறவினர்களெல்லாம் பயந்து ஓட்டலில் தங்கினார்கள். என்னைக் கைது செய்தபோது, நான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், தங்கச் செயின் போட்ட கடிகாரம் ஆகியவற்றை போலீஸ் எடுத்துக்கொண்டது. என் வீட்டில் இருந்த மனைவியின் நகைகள்கூட காணவில்லை.

p26a.jpg

எனக்கு ஜாமீன் கிடைத்த பிறகும்கூட, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை விட்டு வெளியேற முடியவில்லை. எனக்குக் குடல்புண் நோயும் மூல நோயும் உள்ளது. ‘சிகிச்சை முடிந்த பிறகுதான் செல்ல வேண்டும்’ என டாக்டர்கள் சொன்னார்கள். ‘அப்படியே நீங்கள் மருத்துவமனையை விட்டுச் செல்லவேண்டுமானால், உங்கள் சொந்தப் பொறுப்பில் விளைவுகள் பற்றிக் கவலையில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுங்கள்’ எனக் கூறி, டிஸ்சார்ஜ் செய்ய மறுத்தார்கள்.

என் மீதான குற்றங்கள் அனைத்தும் பொய்யானவை; அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை பொய்யானவை என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் அபரிமிதமாகவே என்னிடம் இருக்கின்றன. அதனை உரிய நேரத்தில் வெளியிடுவேன். இந்த நாடகத்தை அரங்கேற்றிய பெரியவர்களுக்குத் தெரியும் இது பொய் என்பது. பொய் வழக்குகளை ஜோடித்து, அதைக் காட்டி மிரட்டி ஜெயலலிதாவிடமிருந்து என்னையோ, என்னிடமிருந்து ஜெயலலிதாவையோ பிரிக்க முடியாது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னது போல, ‘விநாசகாலே விபரீதப் புத்தி’தான் இது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், என்னை தி.மு.க என முத்திரை குத்தினார்கள். நான் தி.மு.க-காரன் அல்ல. இப்போது அ.தி.மு.க-காரன் எனச் சொல்கிறார்கள். நான் அ.தி.மு.க-விலும் இல்லை. ஜெயலலிதாவின் உண்மையான குடும்ப நண்பன். அதனால் எத்தனை சோதனை வந்தாலும் என் பணிகள் தொடரும்’’ என நடராசன் நீண்ட விளக்கத்தைக் கொடுத்தார்.

இந்தப் பேட்டியின் மூலம் நடராசன் சொல்ல வருவது என்ன? “எந்த நிலையிலும் எவ்வளவு பிரஷரிலும் ஜெயலலிதாவை நான் காட்டிக் கொடுக்கவில்லை’’ என்பதை ஜெயலலிதாவுக்கு உணர்த்தினார் நடராசன். “பதவிகள் கொடுத்து என்னை இழுக்க நினைத்தது தி.மு.க அரசு. ஆனால் நான் விலை போகவில்லை” என்பதையும் ஜெயலலிதாவுக்கு மறைமுகமாகச் சொன்னார். அதாவது, ‘ஜெயலலிதாவின் பிடி நடராசனிடம் இருக்கிறது’ என்பதுதான் அவர் சொல்லவந்த செய்தி. ‘‘என்னிடமிருந்து ஜெயலலிதாவைப் பிரிக்க முடியாது’’ எனச் சொல்லி ஜெயலலிதாவின் குட் புக்கில் நான் இருக்கிறேன் என்பதையும் சொன்னார். ‘‘ஜெயலலிதாவின் உதவியாளராக என் மனைவிதான் இருக்கிறார்’’ என்பதையும் இதன்மூலம் உலகுக்கு அறிவித்தார்.

- தொடரும்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 79 - “சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும்தான் வெளிச்சம்!”

 

 

‘‘ஜெயலலிதாவை என்னிடமிருந்து பிரிக்க முடியாது’’ என நடராசன் அளித்த பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காக்கிகளும் ஆளும்கட்சியான தி.மு.க-வும் கொதித்தன. ‘‘நடராசன் சொன்ன விஷயங்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை’’ என்றது போலீஸ். ‘‘நடராசன் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது எந்தப் புகாரையும்,குற்றச்சாட்டையும் மாஜிஸ்திரேட்டிடம் சொல்லவில்லை. அவருடைய வழக்கறிஞர்களும் நடராசன் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறவில்லை. ஆனால், ஜாமீனில் விடுதலையான பிறகு போலீஸ்மீதும் அரசின்மீதும் களங்கத்தைச் சுமத்த, கற்பனையான புகார்களைச் சொல்கிறார். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அரசியல் உள்நோக்கத்துடன் சொல்லும் புகார்கள் கிஞ்சிற்றும் ஆதாரமில்லாதவை’’ எனச் சொன்னது போலீஸ்.

p38a.jpg

நடராசன் Vs போலீஸ் மோதல் ஒரு செய்தியை விளக்கியது. நடராசன் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசின் மீதும் போலீஸின்மீதும் புகார்கள் வாசித்தாலும்கூட, ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க-வினருக்கும் நான் நெருக்கமானவன் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார். அதன்மூலமாக ஜெயலலிதாவுடனான தன் பிடியை இன்னும் இறுக்கமாக்கிக்கொண்டார்.

ஜெயலலிதா ராஜினாமா, நடராசன் அரெஸ்ட் போன்றவை அரங்கேறிய நேரத்தில் தமிழகத்தின் உள்துறைச் செயலாளராக இருந்தவர் ஆர்.நாகராஜன். இந்தச் சம்பவம் பற்றி என்ன சொல்கிறார்? ‘தூசியும் தூறலும்’ என்ற தலைப்பில் நாகராஜன், ஜூ.வி-யில் எழுதிய தொடரில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘‘ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம், எதிர்பாராத ஒரு விபத்து! அதில் முதலில் சிக்கியது நான்தான். 1989 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட அதிகம் பேர் முன்பணம் கட்டினார்கள். இவர்களில் பலருக்குத் தேர்தலில் டிக்கெட் கிடைக்கவில்லை. செலுத்திய முன்பணத்தைத் தலைமையிடமிருந்து திருப்பிக் கேட்டார்கள். இதில் தேனி ஸ்ரீதரனும் ஒருவர். பணம் கொடுத்ததற்குச் சான்றாக பத்திரிகைச் செய்தியையும் படத்தையும் வைத்துக்கொண்டு அலைந்தார். பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, நடராசன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக போலீஸ் கமிஷனர் துரையிடம் புகார் கொடுத்தார் ஸ்ரீதர். கமிஷனர் நடவடிக்கை எடுக்காததால் கோட்டையில் என்னைச் சந்தித்தார். அப்போது அவருடன் ஒரு முன்னாள் அ.தி.மு.க எம்.பி-யும் இருந்தார். ‘என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்டேன். ‘என் பணத்தைத் திருப்பி வாங்கித் தாருங்கள் என்று உங்களைக் கேட்கவில்லை. கொடுத்த பணத்தைக் கேட்க போயஸ் கார்டன் சென்றபோது, நடராசன் என்னைச் சுடப்போவதாகத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதற்கு நடவடிக்கை தேவை’ என்றார். ‘இதுபற்றி கமிஷனரிடம் விவாதித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்’ என்றேன்.

p38b.jpg

கமிஷனர் துரையை அழைத்து ஸ்ரீதரன் கோரிக்கையைப் பற்றி விவாதித்தேன். நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, நடராசனிடம் துப்பாக்கி இருப்பது உண்மையா... அதற்குரிய ‘லைசென்ஸ்’ இருக்கிறதா என்பதைக் கண்டறிவதாக கமிஷனர் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். சில நாள்கள் கழித்து, தன்னுடையப் புகார் மனுவின் மீது கமிஷனர் பதினைந்து நாட்களுக்குள் மேல் நடவடிக்கை எடுக்காவிடில், நீதிமன்றத்தின் உதவியை நாடி கமிஷனரின் மவுனத்துக்குக் காரணம் கேட்கப்போவதாக ஸ்ரீதரன் கூறியதாக கமிஷனர் தெரிவித்தார். அதன் பின்புதான் நடராசனிடம் துப்பாக்கி இருக்கிறதா என்பதைச் சோதனைசெய்ய முடிவு செய்யப்பட்டது. முதல்வரின் ஒப்புதலைப் பெற்று, நடராசன் வீட்டை, போலீஸ் சோதனை போட அனுமதி அளித்தேன். துப்பாக்கியே இல்லாமல் இருந்தால், துப்பாக்கியைக் காட்டி நடராசன் மிரட்டியதாக ஸ்ரீதரன் கூறியது எப்படி உண்மையாக முடியும்? அப்படி ஒரு துப்பாக்கி இருந்துவிட்டால், ஸ்ரீதரன் வாக்குமூலத்தை ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாதே! துப்பாக்கி இருந்தால் அதற்கான ‘லைசென்ஸ்’ இருக்க வேண்டும். அப்படி ‘லைசென்ஸ்’ இல்லையென்றால் நடராசன் ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவராகிவிடுகிறார். இந்த விவரங்களைக் கண்டறியத்தான் சோதனைக்கு அனுமதி தரப்பட்டது.

போலீஸ் கமிஷனரை முதல்வர் வீட்டில் பார்த்ததும் ஏதோ ஒரு விவகாரம் காத்திருப்பதுபோலத் தோன்றியது. சோதனையின்போது அதிகாரிகளிடம் நடராசன் மிகவும் தடாலடியாக நடந்துகொண்டதாக கமிஷனர் தெரிவித்தார். ‘துப்பாக்கி என்ன ஆயிற்று?’ என்பதுதான் என் கேள்வி. ‘துப்பாக்கி கிடைக்கவில்லை. ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம் கிடைத்தது’ என்றார் கமிஷனர். முயல் வேட்டைக்குப் போனவர்கள், காட்டுக்குள்ளே கிடந்த மூட்டை ஒன்றைத் தலையிலே தூக்கிவந்த கதையாக இருந்தது அந்த ராஜினாமா கடித விவகாரம்!

நடராசன் வீட்டைச் சோதனை போட்டதில் எள்ளளவும் அரசியல் இல்லை. குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் சோதனை நடந்தது. நடராசன் சட்டங்களை மதித்து நடக்கக்கூடியவரா அல்லது அடாவடிப் பேர்வழிதானா என்பது வேறு விஷயம். ஆனால், அங்கே ஜெயலலிதா கடிதத்தின் உண்மை நகல் இருந்தது என்பது போலீஸ் சோதனையின் கண்டுபிடிப்பு. இந்தக் கடிதம் நடராசன் கைக்கு எப்படி வந்தது என்பது சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும்தான் வெளிச்சம். இந்தக் கடிதம் நடராசன் பொறுப்பில் இருப்பது தெரிந்துதான் போலீஸ் சோதனை போட்டது என்பது ஒரு வளமான கற்பனை. ஆனால், நடராசன் வீட்டில் எடுக்கப்பட்ட கடித நகலின் பிரதிகள் பத்திரிகை அலுவலகங்களை நாடி ஓடியதுதான் அரசியல்!

p38.jpgஎதிர்பாராதவிதமாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கடிதத்தைக் கையாண்டதில் அரசியல் இருந்தது! அப்படி ஒரு ராஜினாமா கடிதம் மறுநாளே சபாநாயகர் கைக்கு எப்படி வந்தது என்பதும் அதிகாரிகளுக்குத் தெரியாது. ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம் உண்மையிலேயே அரசியலுக்கு முழுக்குப்போட நடந்த முயற்சியா அல்லது ஜெயலலிதா - சசிகலா உறவில் ஏற்பட்ட நெருக்கடிக்குத் தீர்வுகாண ஒரு கருவியா என்பதையும் உறுதியாகச் சொல்லமுடியாது. இந்தக் கடிதத்தை போலீஸ் அலட்சியப்படுத்த முடியாமல் போனதற்குக் காரணம், கடிதம் ஒரு சுவையான அரசியல் பிரச்னையைக் கொண்டது. அதை போலீஸ்தான் முதலில் கண்டது என்பதை நிலைநிறுத்த போலீஸ் வழக்கம்போல முனைந்தது. அந்தக் கடிதத்தைச் சாதகமாக்க பின்பு அரசியல் புகுந்துகொண்டது. இதனால் ஏற்பட்ட குழப்பங்களும் விளைவுகளும் வீட்டைச் சோதனையிட அனுமதி தந்த என்னைப் பாதித்தது.

 ராஜினாமா கடிதம் சபாநாயகரால் நிராகரிக்கப்படுகிற வரைக்கும் பிரச்னையைப் பெரிதாக்காத அ.தி.மு.க பின்பு, பிரச்னையை முழுக்க முழுக்க அரசியலாக்கியது. இதில் ஏமாற்றப்பட்டவர்கள் அன்றைய ஆளுங்கட்சியினர்தான். ஏமாற்றியவர்கள் அ.தி.மு.க-வினர். சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பலியானவர்கள் காவல்துறையினர். காரியம் கைகூடாமல் போனபின்பு வழக்கம்போல பழி விழுந்தது என் தலையில்.

ஜெயலலிதா ராஜினாமா கடித விவகாரம் முரசொலி மாறனைக் கோபமடைய வைத்தது. ‘சோதனை போடச் சென்ற காவல்துறையினர், துப்பாக்கி இல்லையென்றால் சும்மா திரும்பி வரவேண்டியதுதானே. ராஜினாமா கடிதத்தை ஏன் தொடவேண்டும்?’ என்பதுதான் மாறனின் கேள்வி!’’ என எழுதியிருந்தார் நாகராஜன்.

(தொடரும்)

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 80 - சத்தசபை ஆன சட்டசபை! - ஆட்சிக் கவிழ்ப்பு சதி...

 

 

ராஜினாமாக் கடிதத்தையும் அரசியல் விலகல் அறிக்கையையும் வெளியிட்ட தி.மு.க ஆட்சியைக் கண்டித்துக் கண்டனப் பேரணியை, மார்ச் 24-ம் தேதி சென்னையில் நடத்தினார் ஜெயலலிதா. இந்தப் போராட்டம் தி.மு.க-வுக்கு எதிரானது என்றபோதும், ‘அரசியலிலிருந்து நான் விலகவில்லை; லைம்லைட்டில்தான் இருக்கிறேன்’ என்பதைச் சமூகத்துக்குச் சொல்லவே அதைக் கையிலெடுத்தார் ஜெயலலிதா. அதற்கு அடுத்த நாள், தமிழக சட்டசபையில் பிரளயம் நடக்கப்போவதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

ஜெயலலிதா அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், சசிகலா குடும்பமும் ஓய்வெடுக்க வேண்டியதுதான். ஆனால், அதை நடராசன் விரும்பவில்லை. ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர், மீண்டும் ‘ஆலோசகர்’ ஆனார். ஆலோசனையின் அடுத்த நகர்வு சட்டமன்றத்தை நோக்கி இருந்தது. 1988 ஜனவரியில் ஜானகி ஆட்சிக் கவிழ, முக்கியக் காரணமாக இருந்தது சட்டசபையில் நடைபெற்றக் கலவரம். ஜானகி ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க நடந்த தகராறு, அடிதடி, சோடா பாட்டில்கள் வீச்சு, போலீஸ் தடியடி எனச் சட்டசபை, சத்தசபை ஆனது. இதனால் ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி வந்தது. இந்தச் சம்பவம் நடந்து ஓர் ஆண்டுதான் ஆகியிருந்தது. தி.மு.க-வும் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின. சட்டமன்றத்தில் மீண்டும் அப்படியான சம்பவம் நடந்தால், தி.மு.க ஆட்சிக் கவிழும் என்பதுதான் நடராசன் போட்ட கணக்கு! 

p8.jpg

1989, மார்ச் 25-ம் தேதி சனிக்கிழமை. பட்ஜெட் கூட்டத் தொடருக்காகக் கூடியது சட்டசபை. கருணாநிதி பட்ஜெட்டைப்  படிக்க ஆரம்பித்தபோது ஜெயலலிதா எழுந்து, ‘‘முதல்வர்மீது உரிமை மீறல் பிரச்னை கொடுத்திருக்கிறேன். அதை முதலில் எடுக்க வேண்டும்’’ என்றார். முதல்வர் கருணாநிதி, சென்னை போலீஸ் கமிஷனர் துரை ஆகியோரைக் கடுமையாகப் பேசினார் ஜெயலலிதா. அவர் பேசிய எதுவும் அவைக்குறிப்பில் ஏறவில்லை. ஜெயலலிதா பேச ஆரம்பித்ததும் அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும் தகராறு செய்தார்கள். ஜானகி அணி எம்.எல்.ஏ  பி.ஹெச்.பாண்டியன் பேசியபோது, அ.தி.மு.க-வினர் அவரைக் கடுமையாக திட்டினார்கள். அவையில் அமளி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன.

உடனே ஜெயலலிதா, குமரி அனந்தன் கொடுத்த தீர்மானங்களைத் திங்கட்கிழமை எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் தமிழ்க்குடிமகன் சொன்னார். ஆனால், ஜெயலலிதா, கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசர், உகம்சந்த், எஸ்.ஆர்.ராதா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆக்ரோஷமாகப் பேசினார்கள். அ.தி.மு.க உறுப்பினர்களின் கூச்சலுக்கிடையே கருணாநிதி, பட்ஜெட் உரையைச் சத்தமாகப் படிக்க ஆரம்பித்தார். இரண்டு வரிகள்கூட படித்திருக்கமாட்டார். எதிர்க்கட்சிகள் வரிசையிலிருந்து, ‘‘குத்துங்கடா’’ எனக் குரல்கள் வந்தன. பட்ஜெட் படிப்பதற்கு வசதியாக, டேபிளின்மீது இன்னொரு சிறிய டேபிள் போடப்பட்டிருந்தது. அதில் பட்ஜெட் புத்தகத்தை வைத்துப் படித்துக்கொண்டிருந்தார் கருணாநிதி. அ.தி.மு.க உறுப்பினர்கள் கருணாநிதியை நோக்கிப்பாய்ந்தனர். செங்கோட்டையனும் மற்றவர்களும் சிறிய மேஜையைத் தட்டிவிட்டு, கருணாநிதியிடமிருந்து பட்ஜெட் புத்தகத்தைப் பிடுங்கிக் கிழித்து வீசினார்கள். கருணாநிதியின் முகத்தை நோக்கி குத்துவிழ, அவர் நிலை தடுமாறினார். கண்ணாடி உடைந்தது. மேஜை அவர் கையில் விழுந்து காயத்தை ஏற்படுத்தியது. பதிலுக்கு தி.மு.க உறுப்பினர்களும் அமைச்சர்களும் பாய்ந்து வந்து, அ.தி.மு.க-வினரைத் தாக்கினார்கள். அரண் அமைத்து, கருணாநிதியைப் பாதுகாப்பாக சபாநாயகர் அறைக்கு அழைத்துப் போனார்கள்.

இரண்டு தரப்பும் இருக்கைகள், மேஜைகள் மீது ஏறி நின்றுகொண்டு மல்லுக்கட்டினார்கள். பட்ஜெட் புத்தகக்கட்டுகள் தூக்கிவீசப்பட்டன. மைக்குள் ஆயுதங்களாகின. அவற்றைப் பிடுங்கி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்கள். செருப்புகள் இரண்டு பக்கமும் மாறிமாறிப் பறந்தன. தூக்கி வீசப்பட்ட கட்டைகள், புத்தகங்கள் ஜெயலலிதா தலையிலும் தோள் பட்டையிலும் விழுந்தன. பறந்துவந்த மைக், வீரபாண்டி ஆறுமுகத்தின் நெற்றியைப் பதம்பார்த்தது. காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும் தப்பவில்லை. செருப்புகள், அட்டைகள், புத்தகங்கள் அவர்மீது வீசப்பட்டன. இதுபற்றி பிறகு சொன்ன மூப்பனார், ‘‘விழுந்த செருப்புகளைச் சேகரித்து வைத்தால் ஒரு செருப்புக் கடையே வைக்கலாம்’’ என்றார். பரணி பாடிக் கொண்டிருந்த சட்டசபை, கலிங்கத்துப் போர்ப்பரணி ஆனது. வேறுவழியில்லாமல் போலீஸை உள்ளே அழைத்தார் சபாநாயகர். ஆனாலும், கலாட்டா அடங்கவில்லை. சபை ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா தள்ளாடியபடியே, கட்சியினர் பாதுகாப்போடு காரில் ஏறிச் சென்றார்.

பட்ஜெட் தாக்கல் என்பதால், கருணாநிதி பட்ஜெட் படிக்கும் காட்சியைப் படமெடுக்க பத்திரிகை போட்டோகிராபர்கள் சட்டசபைக்கு வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் கலவரம் ஏற்பட்டுவிட, அதையும் சிலர் பதிவு செய்தார்கள். ஆனால், ‘‘சட்டசபையில் எடுக்கப்பட்ட எந்தப் படத்தையும் என் அனுமதியின்றி பத்திரிகைகள் வெளியிடக் கூடாது’’ என சபாநாயகர் தமிழ்க்குடிமகன் உத்தரவிட்டார். ஜெயலலிதாவும் அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் 27 பேரும் மார்ச் 31-ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.

சட்டசபையில் என்ன நடந்தது என்பதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் பத்திரிகையாளர்களை அழைத்துச் சொன்னார்கள். ‘‘என்னை, ‘கிரிமினல் குற்றவாளி’ என ஜெயலலிதா சொன்னபோதுகூட தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். செங்கோட்டையன் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தபோது, ஜெயலலிதா, அவரைப் பார்த்து, ‘குத்துடா அவனை’ என ஆக்ரோஷமாகச் சொன்னார். செங்கோட்டையன் என்னைக் குத்தியதும் மூக்குக் கண்ணாடி உடைந்தது. பட்ஜெட் புத்தகத்தைக் கிழித்து என் முகத்தில் அடித்தார்’’ என்றார் கருணாநிதி.

கவர்னர் அலெக்ஸாண்டரிடம் புகார் கொடுத்துவிட்டு, போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, ‘‘தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் என்னைக் குறிவைத்துத் தாக்கி, கொல்ல முயன்றார்கள். மைக்குகளைப் பிடுங்கி அடித்தார்கள். பார்வையாளர்கள் மாடத்திலிருந்து செருப்புகள் வீசப்பட்டன. அமைச்சர்கள் மோசமான வார்த்தைகளில் திட்டியதுடன், கிடைத்த பொருள்களையெல்லாம் என் மீது வீசினார்கள். இதில் நான் மயக்கமடைந்தேன். துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் தாக்கினார்கள். மைக்கை ஆப் செய்துவிட்டு என்னைப் பார்த்து, கேவலமான வார்த்தையில் கருணாநிதி திட்டினார். என் நடத்தையையும் மோசமாக விமர்சித்தார். அமைச்சர் துரைமுருகன், என் சேலையைப் பிடித்து இழுத்து உருவியதில் சேலை கிழிந்ததோடு நான் கீழே விழுந்தேன். தலையில் உள்காயம் ஏற்பட்டது. முதுகு, கால், முட்டிகளில் கடுமையான வலி’’ என்றார்.

வீரபாண்டி ஆறுமுகம் அரசு மருத்துவமனையிலும் ஜெயலலிதா மயிலாப்பூர் தேவகி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். சட்டசபைக் கலவரத்தால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. ஆனாலும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வேலைகளைச் சளைக்காமல் நடராசன் செய்தார். பிரதமர் சந்திரசேகருடன் நடந்த சந்திப்புகள், ராஜீவ் காந்திக்குத் தரப்பட்ட பிரஷர்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பின. ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்த நடந்த சதிகள், சதிராட்டங்கள் தனி எபிசோடு. ஜெயலலிதா அரியணையில் அமர்ந்தால்தான் ‘அறுவடை’ செழிக்கும் என சசிகலா குடும்பம் நினைத்தது. அதுவும் நடந்தது. சசிகலா ஜாதகத்தின் சாம்ராஜ்ஜியம் இன்னும் விரிய ஆரம்பித்தது. அது இன்னும் விரியும்.

ஜூவி-யில் முடிந்தது. விகடன் இணையதளத்தில் சந்திப்போம்!

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.