Jump to content

அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாறு


Recommended Posts

1 - அதிபத்த நாயனார் 

Image may contain: 5 people, people sitting


பெயர் : அதிபத்த நாயனார்
குலம் : பரதவர்
பூசை நாள் :ஆவணி ஆயில்யம்
அவதாரத் தலம் :திருநாகை
முக்தித் தலம் :திருநாகை

வரலாறு:

சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார்.

சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார். இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார்.

மீன்விலையினாலே மிகுஞ்செல்வம் மறுத்தமையால், தம்முடைய சுற்றத்தார்கள் உணவின்றி வருந்தவும்; தாம் வருந்தாது பட்டமீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு மகிழ்ந்தார். இப்படி நெடுநாள் வர, உணவின்மையால் திருமேனி தளரவும் தம்முடைய தொழிலிலே நிலை நின்றமையைப் பரமசிவன் அறிந்து, அவரது அன்பென்னும் அமுதை உண்பாராயினார்.
இப்படி நிகழுநாளிலே, வேறு ஒருநாள் பரதவர்கள் அவ்வொரு மீனையும் அவ்வாறே விட்டு, விலைமதிப்பில்லாத மகாதிவ்யப்பிரகாசங்கொண்ட நவரத்தினங்களால் உறுப்பமைந்த அற்புதமயமாகிய ஒரு பொன்மீனை வலைப்படுத்து, கரையில் ஏறியபோது, அம்மீன் சூரியன் உதித்தாற்போல உலகமெல்லாம் வியக்கும்படி மிகப் பிரகாசிக்கக் கண்டு, அதனை எடுத்து, "ஒருமீன் படுத்தோம்" என்றார்கள்.

அதிபத்த நாயனார் அம்மீனைக்கண்டு, "இது இரத்தினங்களால் உறுப்பமைந்த பொன்மீனாதலால், என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கு ஆகும்" என்று கடலிலே விட்டார்.

அப்பொழுது பரமசிவன் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருள; அதிபத்தநாயனார் ஆனந்தவருவி சொரிய மனங்கசிந்துருகி நமஸ்கரித்து, சிரசின்மேலே அஞ்சலி செய்தார். சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி அவருக்கு அருள்செய்தார்.

 

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

2 - அப்பூதியடிகள் 
Image may contain: 15 people
பெயர் : அப்பூதியடிகள் நாயனார்
குலம் : அந்தணர்
பூசை நாள் :தை சதயம்
அவதாரத் தலம் :திங்களூர்
முக்தித் தலம் :திங்களூர்

வரலாறு:

சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகள்
எல்லாவற்றையும் தாங்கினவரும், சிவபத்தி அடியார்களில் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார்.
இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார்.

இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு பிறதலங்களையும் வணங்கும்பொருட்டு, அந்தத் திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, ஒரு தண்ணீர்ப்பந்தரை அடைந்து, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, "இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர்யாவர்" என்று வினாவினார்.
அவர்கள் "இப்பந்தரைமாத்திரமன்று, இவ்விடத்தெங்கும் உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்கள் எல்லாவற்றையும் அப்பூதியடிகணாயனார் என்பவர் இத்திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரலேயே செய்தனர்" என்றார்கள்.

அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு, "இங்ஙனஞ் செய்தற்குக் காரணம் யாதோ" என்று நினைந்து, அவர்களை நோக்கி, "அவர் எவ்விடத்தில், இருக்கின்றவர்" என்று வினாவ; "அவர் இவ்வூரவரே இப்பொழுதுதான் வீட்டுக்குப்போகின்றார், அவ்வீடும் தூரமன்று சமீபமே" என்றார்கள்.

உடனே திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகணாயனாருடைய வீட்டுத்தலைக்கடைவாயிலிற் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவரும் வணங்கினார்.

அப்பூதிநாயனார் "சுவாமீ! தேவரீர் இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்" என்று வினாவினார்.
திருநாவுக்கரசு நாயனார் 'நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும் அப்படியே நீர் செய்திருக்கின்ற பிறதருமங்களைக்கேட்டும்' உம்மைக் காண விரும்பி, இங்கே வந்தோம்" என்று சொல்லி, பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது வேறொருபெயரை எழுதியதற்குக் காரணம் யாது" என்று வினாவினார்.

அப்பூதிநாயனார் "நீர் நல்லவார்த்தை அருளிச்செய்திலீர், பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கினங்களைச் சிவபத்தி வலிமையினாலே ஜயித்த பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்" என்று கோபித்து, பின்னும், பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என்போலும் அறிவிலிகளும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசுநாயனாருடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன்னீர். கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்! நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்" என்றார்.

திருநாவுக்கரசுநாயனார் அவ்வப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, "ஆருகதசமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்" என்று அருளிச்செய்தார்.
உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார்.

திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப்படைந்து கூத்தாடினார்; பாடினார்; சந்தோஷமேலீட்டினால் செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், பிறசுற்றத்தார்களுக்கும் திருநாவுக்கரசுநாயனார் எழுந்தருளிவந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, நாயனாரை வணங்கும்படி செய்தார்.அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார்.

அங்ஙனம் செய்த தீர்த்தத்தை அவர்களெல்லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, "சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார்.
அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது, ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது.

அவர் அதை உதறிவீழ்ந்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினாலே வீழுமுன் கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடி வந்து, விஷம் முறையே ஏறித்தலைக்கொண்ட ஏழாம்வேகத்தினாலே பல்லுங் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார்கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார்.

அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் "ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை வீட்டுப் புறத்து முற்றத்தின் ஓர்பக்கத்திலே பாயினால் மறைத்து வைத்துவிட்டுனர்
அப்பமூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள் அப்பமூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி "நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்" என்றார்.

அப்பூதிநாயனார் "இப்போது அவன் இங்கே உதவான்" என்றார். அப்பமூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திருவருளினாலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றத் தோன்ற, அப்பூதிநாயனாரை நோக்கி, "அவன் என்செய்தான்? உண்மை சொல்லும்" என்றார்.

அப்பூதிநாயனார் அஞ்சி நடுங்குற்று, வணங்கி நின்று, நிகழ்ந்த சமாசாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக்கேட்டு, "நீர் செய்தது நன்றாயிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்" என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று சவத்தை அங்கே கொணர்வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன்மேலே திருப்பதிகம்பாடினார்.

உடனே அப்புத்திரர் உயிர்பெற்று எழுந்து; அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளினார். அப்பூதிநாயனாரும் மனைவியாரும் தங்கள் புத்திரா பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷியாமல், நாயனார் திருவமுதுசெய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள்.

அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினார்.

அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார். 63 நாயன்மார்களில் ஒருவராக ஈசன் அருளினார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

3 - அமர்நீதி நாயனார்
Image may contain: 4 people
பெயர்: அமர்நீதி நாயனார்
குலம்: வணிகர்
பூசை நாள்: ஆனி பூரம்
அவதாரத் தலம்: பழையாறை
முக்தித் தலம்: திருநல்லூர்

வரலாறு: சோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசியர் குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும் சிவனடியார்களைத் திருவமுது, செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கந்தை கீள்கோவணம் என்பவைகளைக் கொடுப்பவருமாகிய அமர்நீதிநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரிசனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்முடைய மடத்திலே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துகொண்டு, மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.

இருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிராமண வருணத்துப் பிரமசாரி வடிவங்கொண்டு, இரண்டு கெளபீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்தத் திருமடத்திற்கு எழுந்தருளி வந்தார். அதுகண்ட அமர்நீதிநாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளிவருவதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்தேனோ" என்று இன்சொற் சொல்ல கூறினார்.

பிரமசாரியானவர் அவரை நோக்கி, "நீர் அடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கந்தைகளும் கீள் கெளபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதைக் கேள்வியுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்" என்றார் ஈசன்.

அதுகேட்ட அமர்நீதிநாயனார் "இந்தத் திருமடத்திலே பிராமணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம் பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

பிரமசாரியானவர் அதற்கு உடன்பட்டு, நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். 'ஒருபோது மழைவரினும் தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளபீனத்தை வைத்திருந்து தாரும்" என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெளபீனங்களில் ஒன்றை அவிழ்த்து, "இந்தக் கெளபீனத்தின் மகிமையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்" என்று ஈசன் பெருமான் கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம் செய்வதர்க்கு செல்கிறார்.

அமர்நீதிநாயனார் அந்தக் கெளபீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்து வைத்தார்.
ஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியாக வேடம் கொண்ட ஈசன் அமர்நீதிநாயனார் சேமித்து வைத்த கெளபீனத்தை அது வைக்கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீக்கும்படி(மறையும்) செய்து, ஸ்நானஞ்செய்து கொண்டு, மழை பொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார்.

அமர்நீதிநாயனார் அது கண்டு எதிர்கொண்டு, "சமையலாயிற்று", என்று சொல்லி வணங்க; பிரமசாரியார், இனி அந்நாயனாருடைய அன்பாகிய ஜலத்திலே முழுக வேண்டி, அவரை நோக்கி, "ஈரம் மாற்றவேண்டும்; தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளபீனமோ ஈரமாயிருக்கின்றது. உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்" என்றார்.

அமர்நீதி நாயனார் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து. கெளபீனத்தைக் காணாதவராகி, திகைத்து மற்றையிடங்களிலுந் தேடிக் காணாமையால் மிகுந்த துக்கங்கொண்டு, வேறொரு கெளபீனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன் சென்று, "சுவாமீ! தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்" என்று பிராத்தித்தார்.

அதைக் கேட்ட பிரமசாரியார் மிகக்கோபித்து, "உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை! சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ! நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது" என்று சொல்ல...

அமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, "சுவாமீ! அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக்கோவணமன்றி வெகுபொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன்; ஏற்றுக்கொள்ளும்" என்றார்.

அதற்குப் பிரமசாரியார் கோபந்தணிந்தவர்
போலத்தோன்றி, "பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன்? நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்" என்று சொல்கிறார்.

அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, "எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்" என்று கேட்டார்.

பிரமசாரியார் "நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, "இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்" என்றார்.

அமர்நீதிநாயனார் "மிகநன்று" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார்.

அது ஒத்தநிறையிலே நில்லாமல் மேலெழுந்தது. அதைக்கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்களெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாக இட இட; பின்னும் தூக்கிகொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பலவஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டுவந்து இட இட; பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப்பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத்தட்டு மேலே எழும்ப; கெளபீனத்தட்டுக் கீழே தாழ்ந்தது.

அமர்நீதிநாயனார் அதைக் கண்டு மிக அஞ்சி பிரமசாரியாரை வணங்கி, "எண்ணிறந்த வஸ்திரப்பொதிகளையும் நூற்கட்டுகளையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத்திரவியங்களையும் இத்தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார்.

அதற்குப் பிரமசாரியார் "இனி நாம் வேறென்ன சொல்லுவோம்! மற்றத்திரவியங்களையும் இட்டுப் பாரும். எப்படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்கவேண்டும்'. என்றார்.

அமர்நீதிநாயனார் நவரத்தினங்களையும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமைசுமையாக எடுத்து வந்து இட இட; தட்டு எழுந்தபடியே மேலே நின்றது.

அமர்நீதிநாயனார் அதைக்கண்டு பிரமசாரியாரை வணங்கி, "என்னுடைய" திரவியங்களில் ஒன்றும் சேஷியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம். தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார்.

பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.

அது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து "சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார்.

ஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன.

அவ்வற்புதத்தைக் கண்டவர்களெல்லாரும் அமர்நீதிநாயனாரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகாயத்தினின்றும் கற்பகவிருக்ஷங்களின் புஷ்பங்களை மழைப்போலப் பொழிந்தார்கள். திருகைலாசபதி தாங்கொண்டு வந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி;

தம்மைத் தரிசித்து அந்தத் தராசுத் தட்டிலே தானே நின்றுகொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனார் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர் மேலும் திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக்கொண்டிருங்கள்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார்.

அமர்நீதிநாயனாரும், அவர் மனைவியாரும், புத்திரரும், அக்கடவுளுடைய திருவருளினால் அந்தத்தராசுதானே தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோகத்தை அடைந்தார்கள். அமர்நீதிநாயனாரும் 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார்...

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

4 - அரிவாட்டாய நாயனார்

Image may contain: 2 people, text

பெயர்: தாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள் :தை திருவாதிரை
அவதாரத் தலம்:கணமங்கலம்
முக்தித் தலம்:கணமங்கலம்

வரலாறு சுருக்கம்:

சோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார். இப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார்.

செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, "இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.

இப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார்.

இப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார்.

முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், பயன் இல்லை கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற் (நிலத்திற்) சிந்தின, அது கண்டு தாயனார், “இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?” என வருந்தினார்.

“அளவில்லாத தீமையுடையேன், இறைவன் அமுது செய்யும்பேறு பெற்றிலேன்” என்று உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள் கொண்டு உள்ளந்தண்டு அறும்படி கழுத்தினை அரியத்தொடங்கினார்.

அப்பொழுது கமரின்றும் அம்பலத்தாடும் ஐயரது வீசிய கையும், மாவடு அருந்தும் “விடேல் விடேல்” என்று ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை அன்பரது கழுத்தரியும் திண்ணிய கையினைப் பிடித்துக் கொள்ளவே, அவரும் அச்செயல் தவிர்த்தனர். அரிந்த ஊறும் நீங்கியது.

அன்பனார் அஞ்சலி கூப்பி நின்று “அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி” என்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி ‘நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!” என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார்.

தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் அரிவாட்டாய நாயனார் எனும் திருநாமத்தைப் பெற்றார். 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

5 - ஆனாயநாயனார்
Image may contain: 3 people, outdoor
 

பெயர் : ஆனாயர்
குலம்: இடையர்
பூசை நாள் :கார்த்திகை ஹஸ்தம்
அவதாரத் தலம் :திருமங்கலம்
முக்தித் தலம் :திருமங்கலம்

வரலாறு சுருக்கம்:

“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்”
–திருத்தொண்டத் தொகை

சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது.அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார்.
அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும்
சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேசாதவர்....

தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர்.

தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.இப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள், தமது குடுமியிற் கண்ணி செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி, வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச்சாத்தி, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில்
திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன்மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழ சென்றார்.

அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றை யிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டுபோய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.

கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்துகொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும்படி காட்டுக்குச் சென்றபொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக்கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனைப்போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலேபோய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார்.

அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. இடையர்கள் சூழப்பட்ட
பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் ஆனாயர் அடைந்து உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன.

எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக்கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்.

விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன. இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,
அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து,

"மெய்யன்பனே; நம்முடைய உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்"
-என்று திருவாய்மலர்ந்தருளி, ஈசன் அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் தேவையான ஒன்று ........
எல்லோர் பற்றியும் மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்று எண்ணினேன்.
அதட்கான வசதி கிடடவில்லை.

இணைப்பிட்கு நன்றி ...
நேரம் உள்ள போது வாசிக்க வேண்டும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைகளை எல்லாம் யார் எழுதியது ???

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தக் கதைகளை எல்லாம் யார் எழுதியது ???

நீங்கள் சிறுது காலம் முன் எழுதிய கதைபோல் இதுவும் 

Link to comment
Share on other sites

6 - இசைஞானியார் நாயனார்
Image may contain: 3 people, people standing
பெயர்: இசைஞானியார்
பால்: பெண்
குலம் : ஆதி சைவர்
பூசை நாள்: சித்திரை சித்திரை
அவதாரத் தலம்: திருவாரூர்
முக்தித் தலம்: திருநாவலூர்

அறுபத்துமூன்று நாயன்மார்களில் பெண் மொத்தம் மூவர். அவர்களில் ஒருவரே இசைஞானியார் ஆவார்.

"இசைஞானி காதலன் அடியார்க்கும் அடியேன்"
- திருத்தொண்டத் தொகை.

திருவாரூரிலே கௌதம கோத்திரத்தில் அவதரித்த ஞானசிவாச்சாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார்.சிறுவயது முதல் சிறந்த சிவபக்தையாக திகழ்ந்தார். அவர் திருவாரூர் இறைவரது திருவடி மறவாதவர்.

திருமணப் பருவம் அடைந்ததும் சடையநாயனாரது உரிமைத் திருமனைவியானார். இசைஞானியார் பக்தியில் மகிழ்ந்த ஈசன் சுந்தரமூர்த்தி நாயனார் புத்திரனாகப் பெறும் பேறுபெற்ற இசைஞானிப் பிராட்டியாரின் பெருமை எம்மால் புகழக் கூடியதோ? என்று கூறுமளவு சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.

சடையநயனார் ஈசனுக்கு தினமும் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்த போது சடையநயனாருக்கு உதவிகள் பல புரிந்தார்; வறட்சி வரும்போதும் சடையனாருக்கு மனதைரியம் கொடுத்தார். கணவன் அரிவாளால் கழுத்தை அறுக்கும் போது "பரமேஸ்வரா என் கணவரை காப்பாற்று" என இசைஞானியார் ஈசனை அழைத்தார். இருவரையும் காப்பாற்ற ஈசன் தோன்றினார்.

தனக்கு பிறக்கும் குழந்தை தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதற்காக;குழந்தை கருவில் சுமக்கும் போதே சிவமந்திரங்கள் மற்றும் சிவபோற்றிகளை கற்பித்த மிகச் சிறந்த சிவபக்தை.இவருக்கு பிறந்த சுந்தர மூர்த்தி நாயனார் சைவம் குரல்களில் ஒருவர் என்பது கூறிப்பிடத்தக்க ஒன்று.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் கடைசி நாயன்மார் இசைஞானியார் என்பது கூறிப்பிட வேண்டிய ஒன்று...

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

7 - இடங்கழி நாயனார்

Image may contain: 7 people

பெயர்: இடங்கழி நாயனார்
குலம்: வேளிர்
பூசை நாள்: ஐப்பசி கார்த்திகை
அவதாரத் தலம்: கொடும்பாளூர்
முக்தித் தலம்: கொடும்பாளூர்

வரலாறு சுருக்கம்:

அனைத்து செல்வமும் சிவனுக்கே உயிர்காக்கும்.

காணப்படும் இவ்வுலகமும் இவ்வுலகத்துப் பொருள்களும் வியத்தகு விரிவும் அளப்பரும் விசித்திர விநோதங்களும் உடையனவாயிருத்தலின் அவையாவும் முற்றறிவும் முழுத்த பேராற்றலும் உள்ள ஒருவன் படைப்பாதல் பெறப்படும்.

தேவாரத்தில் "ஓருரு வாயினை மானாங்காரத் தீருருவாயொரு விண்முதல் பூதலம் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை" - "உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம் நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில்" எனவும் திருக்கோவையாரில் "ஏழுடையான் பொழில் எட்டுடையான் புயம்" எனவும் திருமந்திரத்தில் "ஒருவனுமே யுலகேழும் படைத்தான் ஒருவனுமே யுலகேழும் அளித்தான் ஒருவனுமே யுலகேழுந் துடைத்தான் ஒருவனுமே யுலகோ டுயிர்தானே" எனவும் வருவனவற்றால் விளங்கும்.

இவற்றில், "அங்கங்கே நின்றான், பொழில் (புவனம்) ஏழுடையன் உலகோடுயிர்தானே" எனவருவன இறைவன் உலகையும் உலகப் பொருள்களையும் படைத்தது மாத்திரமன்றி அவன் அவற்றைத் தன்னுடைமை யாகவே கொண்டுள்ளான் எனவும் "தானலா துலகமில்லை" எனத் துணியப்படுமளவுக்கு உலகுயிர் அனைத்திலும் வசித்துக் கொண்டிருக்கின்றான் எனவும் தெரிவித்து நிற்றல் காணலாம்.

அது, இறைவன் உலகைப் படைத்து அதனுட் புகுந்துள்ளான் (சர்வமிதம் அஸ்ருஜத ஸ்ருஷ்ட்வா தத் அநுப்ரவிஷ்ட்:) எனத் தைத்திரீய உபநிஷத்தினும், உலகமெல்லாம் ஈசனால் வசிக்கப்பெற்றுள்ளது (ஈசாவாஸ்யம் இதம் சர்வம்) என ஈசாவாஸ்ய உபநிடதத்தினும் வருவனவற்றாலும் வலுவுறும்.

ஆகவே, பொதுவிற் கருதப்படுவது போன்று உலகம் மனித ஆதீனத்துக்குட்பட்டதாதலும் உலகப் பொருள் மனித உடைமையோ உரிமையோ ஆதலும் இல்லையாகும். எனவே, இதே உலகில் இதே பொருள்களின் அநுசரணையுடன் வாழ விதிக்கப்பட்டுள்ளாராகிய மக்கள் யதார்த்தரீதியில் அவை சிவனுடைமையும் உரிமையுமானவை என்பதுணர்ந்து அதற்கமைவாம் கௌரவ கண்ணியத்துடனும் பயபக்தியுடனும் அவற்றில் தமக்கு வேண்டுவனவற்றை இறைவனுக்கே முதலில் அர்ப்பணித்துப் பிறகே தாம் ஏற்கவேண்டும் என்ற ஒழுங்கு நியதி சைவத்தில் இடம் பெறலாயிற்று.அப்படி சர்வமும் சிவனுக்கு சிவபக்தர்களுக்கு என்று அளித்து அறுபதுமூவரில் ஒருவராக ஈசன் அருள்புரிந்த ஒரு சிற்றரசரை பற்றி பார்க்க போகிறோம்...

"மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்" 
திருத்தொண்டத் தொகை.

தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார் இடங்கழி நாயனார்; கோனாட்டின் தலைநகராகிய
கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார்.

சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார்.

இவர் அரசு புரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எதுவும் கிடைக்காமல் மனம் தளர்ந்தார். அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து
நெல்லைக் களவு செய்தார்.

அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர். 

இடங்கழியார் அவரைப் பார்த்து, "நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்" எனக் கேட்டார்.

அதுகேட்ட அடியவர், "நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன்" என்றார்,

இடங்கழிநாயனார் மிக இரங்கி, "எனக்கு இவரன்றோ பண்டாரம்" என்று சொல்லி, "சிவனடியார்களெல்லாரும் நெற்பண்டாரத்தை மாத்திரமின்றி மற்றை நிதிப் பண்டாரங்களையும் எடுத்துக் கொள்க" என்று எங்கும் பறை யறைவித்தார். பின்னும் நெடுங்காலம் திருநீற்றின் நெறி தழைக்கும்படி தண்ணளியோடு அரசியற்றிக்கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்.

அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம்
திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

 

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

 

On 1/16/2017 at 10:38 PM, Maruthankerny said:

மிகவும் தேவையான ஒன்று ........
எல்லோர் பற்றியும் மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்று எண்ணினேன்.
அதட்கான வசதி கிடடவில்லை.

இணைப்பிட்கு நன்றி ...
நேரம் உள்ள போது வாசிக்க வேண்டும் !

வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி  

Link to comment
Share on other sites

8 - இயற்பகை நாயனார்
Image may contain: 3 people, people smiling, people standing and outdoor
பெயர்: இயற்பகை நாயனார்
குலம்: வணிகர்
பூசை நாள்:மார்கழி உத்திரம்
அவதாரத் தலம்:பல்லவனீச்சரம்
முக்தித் தலம்:சாய்க்காடு

வரலாறு சுருக்கம்:

“இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” 
என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது இயற்பகை நாயனாரை. இவர் இயற்பகையார் நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார்.பெரும் செல்வராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு இறையடியார் தம் குறைமுடிப்பதென்பது அவர் கொள்கை. ஆதலால் சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது கொடுக்கும் இயல்பினராய் வாழ்ந்துவந்தார்.

அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் அவர் பெருமையை உலகோர்க்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளம் பற்றினார்.
சிவபெருமான் தூய
திருநீறு பொன்மேனியில் அணிந்து, தூர்த்த வேடமுடைய வேதியர் கோலத்தினராய், இயற்பகையாரது வீட்டினை அடைந்தார்.

நாயனார் அவ்வடியாரை உளம் நிறைந்த அன்புடன் எதிர்கொண்டு, முனிவர் இங்கு எழுந்தருளியது என் பெருந்தவப் பயனென்று வழிபட்டு வரவேற்றார். வேதியர் அன்பரை நோக்கி சிவனடியார்கள் வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காது உம்மிடத்திலே ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன், அதனை நீர் தருவதற்கு இணங்குவீராயின் வெளியிட்டுச் சொல்வேன் எனக் கூறினார்.

இயற்பகையார், என்னிடமிருக்கும் எப்பொருளாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. இதிற் சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக என்றார்.

வேதியர், ‘உன் மனைவியை விரும்பி வந்தேன்" என கூறினார்.

நாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து ‘எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்’ எனக் கூறி, விரைந்து வீட்டினுள் புகுந்து கற்பிற்சிறந்த மனைவியாரை நோக்கி ‘பெண்ணே! இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்துவிட்டேன்’ என்றார் இயற்பகை நாயனார்.

அதுகேட்ட மனனவியார் , மனங்கலங்கிப் பின் தெளிந்து தன் கணவரை நோக்கி “என் உயிர்த் தலைவரே! என் கணவராகிய நீர் எமக்குப் பணித்தருளிய கட்டளை இதுவாயின் நீர் கூறியதொன்றை நான் செய்வதன்றி எனக்கு வேறுரிமை உளதோ? என்று சொல்லிப் தன் பெருங் கணவராகிய இயற்பகையை வணங்கினார். இயற்பகையாரும் இறைவனடியார்க்கெனத் தம்மால் அளிக்கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை வணங்கினார்.

திருவிலும் பெரியாளாகிய அவ்வம்மையார், அங்கு எழுந்தருளிய மறைமுனிவர் சேவடிகளைப் பணிந்து திகைத்து நின்றார்...

மறை முனிவர் விரும்பிய வண்ணம், மனைவியாரைக் கொடுத்து மகிழும் மாதவராகிய இயற்பகையார், அம்மறையவரை நோக்கி, இன்னும் யான் செய்தற்குரிய பணி யாது? என இறைஞ்சி நின்றார்.

வேதியராகிய வந்த இறைவன், ‘இந்நங்கையை யான் தனியே அழைத்துச் செல்லுவதற்கு உனது அன்புடைய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடத்தற்கு நீ எனக்குத் துணையாக வருதல் வேண்டும்’ என்றார்.

அதுகேட்ட இயற்பகையார் யானே முன்னறிந்து செய்தற்குரிய இப்பணியை விரைந்து செய்யாது எம்பெருமானாகிய இவர் வெளியிட்டுச் சொல்லுமளவிற்கு காலம் தாழ்த்து நின்றது பிழையாகும் என்று எண்ணி, வேறிடத்துகுச் சென்று போர்க்கோலம் பூண்டு
வாளும் கேடமும் தாங்கி வந்தார்.

வேதியரை வணங்கி மாதினையும் அவரையும் முன்னே போகச் செய்து அவர்க்குத் துணையாக பின்னே தொடர்ந்து சென்றார்.

இச்செய்தியை அறிந்த மனைவியாராது சுற்றத்தாரும், வள்ளலாரது சுற்றத்தாரும் இயற்பகைப் பித்தனானால் அவன் மனைவியை மற்றோருவன் கொண்டுப்போவதா?” என வெகுண்டனர்”. தமக்கு நேர்ந்த பழியைப் போக்குவதற்கு போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து மறையவரை வளைத்துக் கொண்டனர்.

‘தூர்தனே போகாதே நற்குலத்திற் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு எமது பழிபோக இவ்விடத்தை விட்டுப்போ’ எனக்கூறினார் சொந்தபந்தங்கள்.

மறைமுனிவர் அதுகண்டு அஞ்சியவரைப்போன்று மாதினைப் பார்த்தார். மாதரும் ‘இறைவனே அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்’ என்றார். வீரக்கழல் அணிந்த இயற்பகையார், அடியேனேன் அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன் என வேதியருக்கு தேறுதல்கூறி,

போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, ‘ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துணிபட்டுத் துடிப்பீர்’ என்று அறிவுறுத்தினார்.

அது கேட்ட சுற்றத்தவர், ‘ஏடா நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு இவ்வாறு பேசுகிறாய்’. உன் செயலால் இந்நாடு அடையும் பழியையும், இது குறித்து நம் பகைவரானவர் கொள்ளும் இகழ்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணாது உன் மனைவியை வேதியனுக்கு கொடுத்து வீரம் பேசுவதோ! நாங்கள் போரிட்டு ஒருசேர இறந்தொழிவதன்றி உன்மனைவியை மற்றையவனுக்குக் கொடுக்க ஒருபொழுதும் சம்மதிக்கோம்’ என்று வெகுண்டு எதிர்த்தனர்.

அது கண்ட இயற்பகையார் ‘உங்கள் உயிரை விண்ணுலகுக்கு ஏற்றி இந்த நற்றவரை தடையின்றிப் போகவிடுவேன்’ என்று கூறி, உறவினரை எதிர்த்துப் போரிடுவதற்கு முந்தினார். உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துணித்து வீழ்த்தினார்.

பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர் மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர். எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித் திரிந்த இயற்பகையார், வேதியரை நோக்கி, ‘அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன்’ என்று கூறித் துணைசென்றார்.

திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், மறை முனிவர் ‘நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்.’ என்று கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார்.
மனைவியாரை உவகையுடன் அளித்து திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார். மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை மீளவும் அழைக்கத் தொடங்கி “இயற்பகை முனிவாஓலம்’ ஈண்டு நீ வருவாய் ஓலம்; அயர்பிலாதானே ஓலம்; செயற்கருஞ்செய்கை செய்த தீரனே ஓலம் ஓலம்” என அழைத்தருளினார்.

அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், ‘அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என் கைவாளுக்கு இலக்காகின்றார்’. என்றுகூறி விரைந்து வந்தார்.

மாதொருபாகனாகிய இறைவனும் தனது தொன்மைக் கோலத்தைக் கொள்ளுவதற்கு அவ்விடத்தைவிட்டு மறைந்தருளினார். சென்ற இயற்பகையார் முனிவரைக் காணாது அவருடன் சென்ற மாதினைக் கண்டார். வான்வெளியிலே இறைவன் மாதொருபாகராக எருதின்மேல் தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார்.

நிலத்திலே பலமுறை தொழுதார் இயற்பகை நாயனார்; எல்லையில்லாத இன்ப வெள்ளம் அருளிய இறைவன் உளங்கசிந்து போற்றி வாழ்த்தினார். அப்பொழுது அம்மையப்பராகிய இறைவர் ‘பழுதிலாததாய் உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம். உன் மனைவியுடன் நம்மில் வருக’ எனத் திருவருள் புரிந்து மறைந்தருளினார்.

உலகியற்கை மீறிச் செயற்கருஞ் செய்கை செய்த திருத்தொண்டராகிய இயற்பகையாரும், தெய்வக் கற்பினையுடைய அவர் தம் மனைவியரும் ஞானமாமுனிவர் போற்ற நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர். அவர் தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து உயிர் துறந்தவர்களும் வானுலகமடைந்து இன்புற்றனர்.
ஒப்புமைக் கதைகள் மனைவியைப் போலிச் சிவனடியாருக்குக் கொடுத்த கதைகள் பல உள்ளன. அவை அனைத்தும் இந்த நிகழ்வுக்குக் காலத்தால் பிற்பட்டவை...

 

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

9 - இளையான்குடி மாறநாயனார்

Image may contain: 3 people

பெயர்: மாறநாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: ஆவணி மகம்
அவதாரத் தலம்: இளையான்குடி
முக்தித் தலம்: இளையான்குடி

வரலாறு சுருக்கம்:

“இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்"
-திருத்தொண்டத் தொகை

இளையான்கடியென்னும் ஊரிலே, வேளாளர் குலத்திலே, எத்தொழிலினும் சிறந்த வேளாண்மையால் வரும் குற்றமற்ற அளவிறந்த செல்வத்தையும், சிவனடியார்கண் மேலே முழுமையும் பதிந்த அன்பு கொண்ட சிந்தையையும் உடையவராகிய மாறனார் என்பவர் ஒருவரிருந்தார்.

அவர் தம்முடைய கிருகத்துக்கு வரும் சிவபத்தர்கள் எந்த வருணத்தாராயினும், மெய்யன்போடு அவர்களை எதிர்கொண்டு, அஞ்சலிசெய்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, உள்ளும்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினாலொற்றி, ஆசனத்திலிருத்தி, சைவாகம விதிப்படி அருச்சித்து நமஸ்கரித்து, பின்பு கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடையனவாய், உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை அவரவர் பிரீதிப்படி திருவமுதுசெய்விப்பார்.

இப்படித் தினந்தோறும் மாகேசுரபூசை பண்ணுதலாகிய சிவபுண்ணியத்தினாலே செல்வம் அபிவிருத்தியாக, அவர் குபேரனை ஒத்து வாழ்ந்திருந்தார். அப்படியிருக்குங் காலத்திலே, சிவபெருமான், அவ்விளையான்குடி மாறநாயனார் இந்தச் செய்கையைச் செல்வம் வந்தகாலத்திலன்றி வறுமை வந்த காலத்தினும் தளராது செய்யவல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள்ளே புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர்செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், பிறர்க்குத் தெரிவித்து உய்விக்கும்பொருட்டுத் திருவுளங்கொண்டு, அந்நாயனாரிடத்திலே உள்ள செல்வமெல்லாம் நாடோறும் சுருங்கி வறுமை யெய்தும்படி அருள்செய்தார்.

அப்படிச் செல்வம் சுருங்கவும், நாயனார் மாகேசுரபூசையிலே பதிந்த தம்முடைய மனம் சிறிதும் சுருங்குதலின்றி, தம்மிடத்துள்ள நிலங்கள் முதலியவற்றை விற்றும், தம்மைக் கூட விற்று இறுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும், முன்போலவே தாஞ்செய்யும் திருப்பணியை விடாது செய்து வந்தார்.

அவர், மழைக்காலத்திலே மழைபெய்யும் ஒருநாள் இரவில் நெடுநேரம் எதிர்பார்த்திருந்தும், ஒருவருடைய உதவியும் இல்லாமல், பகன்முழுதும் போசனஞ்செய்யாமையால் பசி அதிகப்பட்டு; வீட்டுக்கதவைப் பூட்டிய பின்பு; திருக்கைலாசபதியானவர் சைவவேடங்கொண்டு எழுந்தருளிவந்து, கதவைத் தட்டி அழைக்க; நாயனார் கதவைத் திறந்து, அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய், மழையினால் நனைந்த அவருடைய திருமேனியை வஸ்திரம் கொண்டு துடைத்து, இருத்தற்கு இடங் கொடுத்து, அவருக்கு அமுதூட்டல் வேண்டும் என்னும் ஆசை மிகுதியால் தம்முடைய மனைவியாரை நோக்கி

"இந்தச் சைவர் மிக பசிகொண்டு வந்திருக்கின்றார். நமக்கு முன்னமே போசனத்துக்கு ஒன்றுமில்லை. ஆயினும், இவருக்கு எப்படியும் அன்னங்கொடுக்கவேண்டுமே; இதற்கு யாது செய்வோம்" என்றார் மாறநாயனார்.

அதற்கு மனைவியார் "வீட்டிலே ஒரு பதார்த்தமும் இல்லை. அயலவர்க்கும் இனி உதவமாட்டார்கள். நெடுநேரம் ஆயிற்று. அரிசிக்கடன் கேட்கபோவதற்கு வேறிடமும் இல்லை. பாவியாகிய நான் இதற்கு யாது செய்வேன்" என்று கூறினாள்.

"இன்று பகற்காலத்திலே வயலில் விதைக்கப்பட்ட ஈரத்தால் முன்னமே முளைகொண்டிருக்கின்ற நெல்லை வாரிக் கொண்டு வந்தால், இயன்றபடி அன்னஞ் சமைக்கலாம்; இதுவேயன்றி, வேறொருவழியும் அறியேன்" என்று சொல்லி ஈசனை துக்கித்தார் மாறநாயனார்.

இளையான்குடி மாறநாயனார் மிக மனமகிழ்ந்து, மிக மழைபொழிகின்ற மகா அந்தகாரமயமாகிய அத்தராத்திரியிலே ஒரு பெரிய இறைகூடையைத் தலையிலே கவிழ்த்துக்கொண்டு, காலினாலே தடவிக் குறிவழியே தம்முடைய வயலிற்சென்று, அதிலே அதிக மழையினால் நீர்மேலே மிதக்கின்ற நென் முளைகளைக் கையினாலே கோலி வாரி, இறை கூடை நிறைய இட்டு, தலையிலே வைத்துச் சுமந்துகொண்டு சீக்கிரம் திரும்பி வந்தார்.

அவரை எதிர்ப்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நெள்முளையை வாங்கி, சேறு போம்படி நீரினாலே கழுவியூற்றி, பின்பு தம்முடைய பிராணநாயகரை நோக்கி,

"அடுப்பிலே நெருப்பு மூட்டுதற்கு விறகு இல்லையே" என்று சொல்லி வருத்தம் கொண்டார் நாயனார் மனைவி.

அவர் கிலமாயிருக்கின்ற வீட்டின் மேற்கூரையிலுள்ள வரிச்சுக்களை அறுத்து விழுத்தினார். மனைவியார் அவைகளை முறித்து, அடுப்பிலே மாட்டி, நென்முளையை ஈரம் போய்ப் பதமாகும்படி வறுத்து, பின் அரிசியாக்கி, நீர் வார்த்துக் காய்ந்திருக்கின்ற உலையில் அதையிட்டு, சோறாக்கி, தம்முடைய நாயகரைப் பார்த்து,

"இனிக் கறிக்கு யாதுசெய்வோம்" என்றார் நாயனார் மனைவி.

உடனே நாயனார் புறக்கடைத் தோட்டத்திற்குச் சென்று, குழியினின்றும் மேற்படாத சிறுபயிர்களைக் கையினாலே தடவிப் பிடுங்கிக் கொண்டு வந்து, கறி சமைக்கும்படி கொடுக்க; மனைவியார் அவைகளை
வாங்கி ஆய்ந்து, நீரினாலே கழுவி, தமது சாமர்த்தியத்தினால் வெவ்வேறு கறியமுது செய்து முடித்து, நாயகருக்கு அமுதும் கறியும் பாகம் பண்ணப்பட்டமையைத் தெரிவித்து, "சைவரை அமுதுசெய்விப்போம்" என்று சொன்னார்.

நாயகர், நித்திரை செய்பவர்போலக் காட்டிய சிவபெருமானை "சுவாமீ! அமுதுசெய்ய எழுந்தருளும்" என்று சொல்லி அழைக்க...

ஈசன் ஒரு சோதிவடிவமாய் எழுந்து தோன்றினார். அதைக் கண்ட இளையான்குடி மாறநாயனாரும் மனைவியாரும் திகைத்து நின்றார்கள். பின்பு பரமசிவன் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி, இளையான்குடிமாறநாயனாரை நோக்கி...

"அன்பனே! நம்முடைய அடியார்களை அமுதுசெய்வித்த நீ உன்மனைவியோடும் நம்முடைய பதத்தை அடைந்து, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிரு" என்று திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தானமாயினார். வறுமை நீங்கி செல்வம் பெற்று பல சிவபக்தர்களுக்கு சேவை செய்து இறைபதம் அடைந்தனர் இருவரும்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

10 - உருத்திர பசுபதி நாயனார்
Image may contain: 1 person, outdoor
பெயர்: உருத்திர பசுபதி நாயனார்
குலம்: அந்தணர்
பூசை நாள்: புரட்டாசி அசுவினி
அவதாரத் தலம்: தலையூர்
முக்தித் தலம்: தலையூர்

வரலாறு சுருக்கம்:

“முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்”
-திருத்தொண்டத் தொகை

வேதம் நான்கும் வேதாங்கம் ஆறும் நியாயம் மீமாஞ்சை மிருதி புராணம் என்னும் உபாங்கம் நான்கும் ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும் வேதமே மேலானது; வேதத்துள்ளும் உருத்திரைகாதசினி மேலானது; அதினுள்ளும் ஐந்தெழுத்து மேலானது; அதினுள்ளும் சிவ என்னும் இரண்டெழுத்தே மேலானது.

எப்பொருள்களினும் சிவன் கலந்திருப்பர் என்பது தெரிந்து கொள்ளுதற் பொருட்டென்க. தமிழ் வேதமாகிய தேவாரத்துள் நின்ற திருத்தாண்டகம் முதலியவற்றினும் "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி - யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் - பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமே யாகி - நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்றவாறே" என்பது முதலாக இவ்வாறு பகுப்பின்றிக் கூறுதல் காண்க.

சிவனிடத்து இடையறாத மெய்யன்போடு இந்த ஸ்ரீ ருத்திரத்தை நியமமாக ஓதுவோர் முத்தி பெறுவர். இவ்வுருத்திரத்தை, தடாகத்திலே இரவு பகல் கழுத்தளவினதாகிய ஜலத்திலே நின்றுகொண்டு, ஐம்புலன்களை அடக்கி, சிவனை மறவாத சிந்தையோடும் ஓதினமையால், முத்திபெற்றவர் இவ்வுருத்திரபசுபதி நாயனார். ஆதலால், இவ்வுருத்திரத்துக்கு உரியவர், தமது வாணாளை வீணாளாகப் போக்காது சிவனை மறவாத சிந்தையோடும், இதனை நியமமாக ஓடியவரை பற்றி அறியலாம்...

பொன்னி நதியால் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஓரூர் திருத்தலையூர். இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் பெரியார் அவதரித்தார்.

இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் அருமறையாகியப் பயனாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியுடையவராய் இருந்தார்.

இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய சிவபெருமான் காட்சி அளித்து இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கியருளினார்.முக்தியும் அடைந்தார் உருத்திர பசுபதி நாயனார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

11 - எறிபத்த நாயனார்
Image may contain: 2 people
பெயர்: எறிபத்த நாயனார்ங
குலம்: அறியப்படவில்லை
பூசை நாள்: மாசி ஹஸ்தம்
அவதாரத் தலம்: கருவூர்
முக்தித் தலம்: கருவூர்

வரலாறு சுருக்கம்:

எறிபத்த நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே அவதரித்தார். அவ்வூரிலுள்ள ஆனிலை என்னும் திருக்கோயில் எழுந்தருளிய பெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்து வந்தார்.

இவர் சிவனடியார்களுக்கு ஒரு இடர் வந்து உற்றவிடத்து உதவும் இயல்பினை உடையவர்; அடியார்களுக்கு இடையூறு வந்த காலத்து அங்கு விரைந்து சென்று அடியார்களுக்குத் தீங்கு புரிந்தோரைப் பரசு என்னும் மழுப்படையால் எறிந்து தண்டிப்பார். அதன் பொருட்டு அவர் கையிலே எப்பொழுதும் மழுப்படை இருக்கும்.

அந்நகரிலே திருவானிலைத் திருக்கோயிலில் வீற்றிருக்கும் இறைவர்க்குப் பள்ளித்தாமப் பணி செய்துவந்த சிவமாமியாண்டர் என்னும் ஒரு முதிய அடியவர் ஒருவரும் இருந்தார். அவர் ஒருநாள் வைகறையில் துயிலெழுந்து நீராடித் தூய்மை உடையவராய் வாயைத் துணியாற் கட்டித் திருநந்தவனஞ் சென்றார். அங்கு மலர் கொய்து பூக்கூடையில் நிறைத்து பூக்கூடையைத் தண்டில் மேல் வைத்து உயரத் தாங்கிக் கொண்டு திருக்கோயிலை நோக்கி விரைந்து வந்தார்.

அன்று மகாநவமியின் முதல் நாள்.அந்நகரில் அரசு வீற்றிருக்கும் புகழ்சோழரது பட்டத்து யானை, ஆற்றில் நீராடி, அலங்கரிக்கப் பெற்று மதச் செருக்குடன் பாகர்க்கு அடங்காது விரைந்து வந்தது.அது சிவகாமியாண்டரைப் பின்தொடர்ந்து ஓடி அவர் தம் கையிலுள்ள பூக்கூடையைப் பறித்துச் சிதறியது.

யானை மேல் உள்ள பாகர்கள் யானையை விரைந்து செலுத்திச் சென்றனர்.
சிவகாமியாண்டவராகிய அடியவர், இறைவர்க்கு சாத்தும் திருப்பள்ளித் தாமத்தைச் சிதறிய யானையின் செயல் கண்டு வெகுண்டு அதனைத் தண்டு கொண்டு அடிப்பதற்கு விரைந்து ஓடினார். ஆனால் முதுமை காரணமாக இடறிவிழுந்து நிலத்திலே கைகளை மோதி அழுதார்.

சடாமுடியில் ஏறும் மலரை யானை சிந்துவதோ எனப் புலம்பினார். ‘சிவ, சிவ’ எனும் அடியாரது ஓலத்தைக் கேட்டு விரைந்து அங்கு வந்த எறிபத்தர் யானையின் செய்கை அறிந்து வெகுண்டார். சிவகாமியாண்டாரைக் கண்டு வணங்கி

“உமக்கிந்த நிலைமையைச் செய்த யானை எங்கே போய்விட்டது” என்று கேட்டார் எறிபத்த நாயனார்.

"சாமிக்குச் சாத்தக் கொண்டு வந்த பூவைச் சிதறிவிட்டு இந்தத் தெருவழியேதான் போகிறது மதம் கொண்ட யானை"என கூறினார் சிவமாமியாண்டர்.

‘இந்த யானை பிழைப்பதெப்படி’ என யானையைப் பின்தொடர்ந்து சென்று யானையின் துதிக்கையை மழுவினால் துணித்தார்; அதற்கு முன்னும் இருமருங்கும் சென்ற குத்துக்கோற்காரர் மூவரையும் யானை மேலிருந்த பாகர் இருவரையும் மழுவினால் வெட்டி வீழ்த்தி நின்றார் எறிபத்த நாயனார்.

தமது பட்டத்து யானையும், பாகர் ஐவரும் பட்டு வீழ்ந்த செய்தியைக் கேட்ட புகழ்ச்சோழர் வெகுண்டார். ‘இது பகைவர் செயலாகும்’ என எண்ணி, நால்வகைச் சேனைகளுடன் அவ்விடத்தை அடைந்தார்; யானையும், பாகரும் வெட்டப்பட்டிருந்த அவ்விடத்தில் பகைவர் எவரையும் காணாதவராய் இருகை யானைபோல் தனித்து நிற்கும் எறிபத்தராகிய சிவனடியாரைக் கண்டார்.

தம் யானையையும் பாகர்களையும் கொன்றவர் அங்கு நிற்கும் அடியவரே என அருகிலுள்ளார்கள் கூறக் கேட்டறிந்த வேந்தர், 

சிவபெருமானுக்கு அன்பராம் பண்புடைய இச்சிவனடியார் பிழைகண்டாலல்லது இவ்வாறு கொலைத்தண்டம் செய்யமாட்டார். எனவே என்னுடைய யானையும், பாகர்களும் பிழை செய்திருக்கவேண்டும் எனத் தம்முள்ளே எண்ணியவராய், தம்முடன் வந்த சேனைகளைப் பின்னே நிறுத்தி விட்டுத் குதிரையின்று இறங்கி,

'மலைபோலும் யானையை இவ்வடியார் நெருங்கிய நிலையில், அந்த யானையால் இவர்க்கு எத்தகைய தீங்கும் நேராது விட்ட தவப்பேறுடையேன், அம்பலவானரடியார் இவ்வளவு வெகுளியை (கோபத்தை) அடைவதற்கு நேர்ந்த குற்றம் யாதோ? என்று அஞ்சி எறிபத்தரை வணங்கினார்.

எறிபத்தர், யானையின் சிவபாதகச் செயலையும், பாகர் விலகாதிருந்ததனையும் எடுத்துரைத்தார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழர், ‘சிவனடியார்க்குச் செய்த இப்பெருங் குற்றத்திற்கு இத்தண்டனை போதாது; இக் குற்றத்திற்குக் காரணமாகிய என்னையும் கொல்லுதல் வேண்டும் ஆனால் மங்கலம் பொருந்திய மழுப்படையால் கொல்வது மரபன்று.

வாட்படையாகிய இதுவே என்னைக் கொல்லுவதற்கு ஏற்ற கருவியாம் என்று தமது உடைவாளை ஏற்றுக் கொள்ளும்படி எறிபத்தரிடம் நீட்டினார்...

அதுகண்ட எறிபத்தர் ‘கெட்டேன், எல்லையற்ற புகழனாராகிய வேந்தர் பெருமான் சிவனடியார்பால் வைத்த அன்பிற்கு அளவில்லாமையை உணர்ந்தேன்’ என்று எண்ணி, மன்னார் தந்த வாட்படையை வாங்கமாட்டதவராய்த் தாம் வாங்காது விட்டால் மன்னர் அதனைக் கொண்டு தம்முயிரைத் துறந்துவிடுவார் என்று அஞ்சித் தீங்கு நேராதபடி அதனை வாங்கிக் கொண்டார்.

உடைவாள் கொடுத்த புகழ்ச்சோழர், அடியாரை வணங்கி ‘இவ்வடியார் வாளினால் என் குற்றத்தைத் தீர்க்கும் பேறு பெற்றேன்’ என உவந்து நின்றார்.

அதுகண்ட எறிபத்தர் தமது பட்டத்து யானையும், பாகரும் என் மழுப்படையால் மடிந்தொழியவும், உடைவாளும் தந்து, ‘எனது குற்றத்தைப் போக்க என்னைக் கொல்லும், என்று வேண்டும் பேரன்புடைய இவர்க்கு யான் தீங்கு இழைத்தேனே என மனம் வருந்தி, இவ்வாளினால் எனது உயிரை முடிப்பதே இனிச் செய்யத்தக்கது’ என்று எண்ணி வாட்படையினை தம் கழுத்திற்பூட்டி அரிதற்கு முற்பட்டார் எறிபத்த நாயனார்.

அந்நிலையில் புகழ்ச்சோழர், ‘பெரியோர் செய்கை இருந்தவாறு இது கெட்டேன்’ என்று எதிரே விரைந்து சென்று வாளையும் கையையும் பிடித்துக் கொண்டார்.

அப்பொழுது சிவபெருமான் திருவருளால் ‘யாவராலும் தொழத்தகும் பேரன்புடையவர்களே! உங்கள் மூவரின் திருத்தொண்டின் பெருமையினை உலகத்தார்க்குப் புலப்படுத்தும் பொருட்டு இன்று வெகுளிமிக்க யானை பூக்கூடையினை சிதறும்படி இறைவனருளால் நிகழ்ந்தது” என்று ஒரு அருள்வாக்கு எழுந்தது.

அதனுடனே பாகர்களோடு யானையும் உயிர்பெற்றெழுந்தது. எறிபத்தர் வாட்படையை நெகிழவிட்டுப் புகழ்சோழர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். வேந்தரும் வாட்படையைக் கீழே எறிந்து விட்டு எறிபத்தர் திருவடிகளைப் போற்றி நிலமிசை வீழ்ந்து இறைஞ்சினார். இருவரும் இறைவன் அருள்மொழியினை வியந்துபோற்றினர். இறைவர் திருவருளால் சிவகாமியாண்டாரது பூக்கூடையில் முன்புபோல தூய நறுமலர்கள் வந்து நிரம்பின.

பாகர்கள் யானை நடத்திக் கொண்டு மன்னரை அணுகினர். எறிபத்தர் புகழ்ச்சோழரை வணங்கி, அடியேன் உளங்களிப்ப இப்பட்டத்து யானைமேல் எழுந்தருளுதல் வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.

புகழ்ச்சோழர் எறிபத்தரை வணங்கி யானைமேலமர்ந்து சேனைகள் சூழ அரண்மனையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையைக் கொண்டு இறைவர்க்குத் திருமாலை தொடுத்தணித்தல் வேண்டித் திருக்கோயிலை அடைந்தார்.

எறிபத்த நாயனார் இவ்வாறு அடியார்களுக்கு இடர் நேரிடும்போதெல்லாம் முற்பட்டுச் சென்று தமது அன்பின் மிக்க ஆண்மைத் திறத்தால் இடையூறகற்றித் திருக்கயிலையை அடைந்து சிவகணத்தார்க்கு தலைவராக அமர்ந்தார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

12 - ஏயர்கோன் கலிக்காம நாயனார்
Image may contain: 2 people
பெயர்: கலிக்காம நாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: ஆனி ரேவதி
அவதாரத் தலம்: பெருமங்கலம்
முக்தித் தலம்: பெருமங்கலம்

வரலாறு சுருக்கம்:

"ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்"
திருத்தொண்டத் தொகை

சோழநாட்டிலே, திருப்பெருமங்கலத்திலே, வேளாளர் குலத்திலே, சோழராஜாக்களிடத்திலே பரம்பரையாகச் சேனாதிபதித் தொழில்பூண்ட ஏயர்குடியிலே, கலிக்காமநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் குருலிங்க சங்கமபத்தியிலே சிறந்தவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்திலே அளவில்லாத திருப்பணிகள் செய்தவர்.

கலிக்காமனார் மானக்கஞ்சாறனாரது மகளைத் தகுந்த வயதில் திருமணம் செய்தவர். ஏயர்கோன் கலிக்காமர் திருப்புன்கூர்ப் பெருமானிற்குப் பல திருபணிகள் புரிந்தார். "நிதியமாவன திருநீறுகந்தார் கழல்" என்று சிவபெருமானைத் துதியினாற் பரவித்தொழுது இன்புறுந்தன்மையராய் வாழ்ந்தார்.

அவர் சுந்தரமூர்த்திநாயனார் சிவபெருமானைப் பரவையாரிடத்திற்குத் தூதாக அனுப்பிய சமாசாரத்தைக் கேள்வியுற்று, வெம்பி மிகக் கோபித்து, "நாயனை அடியான் ஏவுங் காரியம் மிகநன்று. இப்படிச் செய்பவன் தொண்டனாம்! இது என்ன பாவம்! பொறுக்கவொண்ணாத இந்தப் பெரும் பாதகத்தைக் கேட்டும் உயிரோடிருக்கிறேனே" என்றார்.

"ஒருவன் பெண்ணாசை மேலீட்டினால் ஏவ ஒப்பில்லாத கடவுள் தூதராய் ஓரிரவு முழுதும் போக்கு வரவு செய்து உழன்றாராம். அரிபிரமேந்திராதி தேவர்களாலும் அறியப்படாத கடவுள் இசைந்தாராயினும், அவன் அவரை ஏவலாமா? இதற்கு மனநடுங்காத அந்தத் துரோகியை நான் காணு நாள் எந்நாளோ! பெண்பொருட்டுக் கடவுளை இரவிலே தூதனுப்பிய பாதகனைக் காண்பேனாயின் யாது சம்பவிக்குமோ" என்று சொல்லி மிகச் செற்றம் (கோபம்) கொண்டிருந்தார்.

சுந்தரமூர்த்திநாயனார் அதனைக் கேள்வியுற்று மனம் வருந்தி அடியார்க் கெளியாராகிய பரமசிவனுக்கு விண்ணப்பஞ்செய்ய; பரமசிவன் இருவரையும் கூட்டுதற்கு (நண்பர்களாக மாற்றுவதற்கு) திருவுளங்கொண்டார். தன் விளையாட்டை துவங்கினார் ஏகாம்பர நாதன்.

கலிக்காம நாயனாரிடத்திலே சூலைநோயை ஏவ; அது அக்கினியிலே காய்ச்சப்பட்ட வேல்குடைதல்போல மிக்கவேதனை செய்ய; கலிக்காமநாயனார் அதனால் மிகவருந்தி வீழ்ந்து, உயிர்த்துணையாகிய பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து நோய் நீங்க வருந்தி துதித்தார்.

அப்பொழுது சிவன் பெருமான் கலிக்காமநாயனார் முன்
எழுந்தருளி, "சுந்தரனாலன்றி இந்நோய் தீராது" என்றார்.

"எம்பெருமானே! பரம்பரையாகத் தேவரீரே மெய்க்கடவுளென்று துணிந்து தேவரீருக்குத் திருத்தொண்டுகள் செய்து வருகின்ற குடியிலுள்ளேனாகிய என்னை வருத்துகின்ற சூலைநோயை, நூதனமாக ஆண்டுகொள்ளப்பட்ட ஒருவனா வந்து தீர்ப்பான். அவனாலே தீர்க்கப்படுதலிலும் தீராதொழிந்து என்னை வருத்துதலே நன்று. தேவரீர் செய்யும் பெருமையை அறிந்தவர் யாவர்! வன்றொண்டனுக்கு ஆகும் உறுதியையே செய்யும்" என்றார் கலிக்காமநாயனார்.

சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற்சென்று, "நம்முடைய ஏவலாலே கலிக்காமனை வருத்துகின்ற சூலையை நீ போய்த் தீர்ப்பாய்" என்றார்.

சுந்தரமூர்த்திநாயனார் அதைக்கேட்டு திருவுள மகிழ்ந்து, கலிக்காமநாயனாரிடத்திற்குப் போம்படி புறப்பட்டு, சூலை தீர்க்கும்படி தாம் வருஞ் சமாசாரத்தை அவருக்குத் தெரிவித்தற்கு முன்னே ஆள் அனுப்பினார். அவ்வாளினாலே சுந்தரமூர்த்திநாயனாருடைய வரவை அறிந்த கலிக்காமநாயனார் 

"எம்பெருமானைத் தூதனுப்பியவன் சூலை நோய் தீர்த்தற்கு வந்தால் நான் செய்வது என்னாம்! அவன் இங்கே வந்து தீர்த்தற்கு முன்னே இச்சூலையை வயிற்றினோடுங் கிழிப்பேன்" என்று உடைவாளினாலே தம் வயிற்றைக் கிழித்துக்கொண்டு இறந்துபோனார் கலிக்காமநாயனார்.

அது கண்ட அவர் மனைவியாரும் அநுமரணஞ்செய்யப் புகுந்தார். அப்போது 'சுந்தரமூர்த்திநாயனார் சமீபத்தில் எழுந்தருளி வந்துவிட்டார்" என்று முன் வந்தோர் சொல்ல; மனைவியார் "ஒருவரும் அழாதொழிக" என்று சொல்லி, பின்பு தம்முடைய நாயகரது செய்கையை(உடலை) மறைத்து, சுந்தரமூர்த்தி நாயனாரை எதிர்கொள்ளும் பொருட்டுத் தங்கள் சுற்றத்தார்களை ஏவ; அவர்கள் போய் எதிர்கொண்டு வணங்கினார்கள்.

சுந்தரமூர்த்திநாயனார் அவர்களுக்கு அருள்செய்து வந்து, கலிக்காமநாயனார் வீட்டிற்புகுந்து, ஆசனத்தில் எழுந்தருளியிருந்து, தமக்குச் செய்யப்பட்ட அருச்சனைகளை ஏற்றுக் கொண்டார்.

"கலிக்காமநாயனாருடைய சூலையை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக வருந்துகின்றேன் அவருடைய நோய் நீக்க ஈசன் ஆணை பிறப்பித்தார் அதை நீக்க இங்கு வந்துள்ளேன்" என்றார்.

அப்பொழுது கலிக்காமநாயனாருடைய மனைவியார் வணங்கி, நின்று, "சுவாமீ! அவருக்குத் தீங்கு ஒன்றும் இல்லை உள்ளே பள்ளி கொள்கின்றார், தாங்கள் திரும்பி செல்லலாம்" என்று கூறினார்...

"சுந்தரமூர்த்திநாயனார் தீங்கும் ஒன்றும் இல்லை என்றீர் ஆயினும், என் மனந்தெளிந்திலது. ஆதலால் அவரை நான் காணல் வேண்டும்" என்று கட்டாயம்படுத்தி கலிக்காம நாயனாரைக் கண்டார்.

சுந்தரமூர்த்திநாயனார் கலிக்காம நாயனாரைக் கண்டு அதிர்ச்சியில் அரைந்தார். இரத்தஞ் சோரக் குடர் சொரிந்து உயிர் பொன்றிக் கிடந்தவரைக் கண்டு "புகுந்தவாறு கண்ட நானும் இவர்போல ரத்தம் சொட்ட சொட்ட இறந்து போவேன்" என்று சொல்லி உடைவாளை எடுத்தார் தன் வயிற்றில் குத்தி இறக்க முற்பட்டார். 

உடனே பரமசிவனது திருவருளினால் கலிக்காம நாயனார் உயிர்த்து எழுந்து அவர்கையில் வாளைப் பிடித்துக்கொள்ள; சுந்தரமூர்த்திநாயனார் காலில் விழுந்து நமஸ்கரித்தார்.

அதன்பின் இருவரும் அதிக நண்புள்ளவர்களாகித் திருப்புன்கூருக்குப் போய் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு, சிலநாட் சென்றபின்பு, திருவாரூரை அடைந்தார்கள். கலிக்காமநாயனார் சிலநாள் அங்கே சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்து, பின்பு சுந்தரமூர்த்திநாயனாரிடத்தில் அநுமதி பெற்றுகொண்டு, தம்முடைய ஊருக்குத் திரும்பிவந்து, திருத்தொண்டு செய்து கொண்டிருந்து, சிவபதம் அடைந்தார் கலிக்காமநாயனார்.

 

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

13 - ஏனாதி நாத நாயனார்
Image may contain: 4 people, people smiling
பெயர்: ஏனாதி நாத நாயனார்
குலம்: சான்றார்
பூசை நாள்: புரட்டாசி உத்திராடம்
அவதாரத் தலம்: ஏனநல்லூர்
முக்தித் தலம்: ஏனநல்லூர்

வரலாறு சுருக்கம்:

சோழமண்டலத்திலே, எயினனூரிலே, சான்றார்குலத்திலே விபூதியில் மகாபத்தியுடையவராகிய ஏனாதிநாதர் என்பவர் ஒருவர் இருந்தார் அதாவது விபூதி நெற்றியில் அணிந்து வந்த சிவபக்தர்களை மதித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து ஈசனை வழிபட்டு வந்தார். அவர் அரசர்களுக்கு வாள் வித்தையைப் பயிற்றி, அதனால் வந்த வளங்கள் எல்லாவற்றையும் சிவனடியார்களுக்கு நாடோறும் கொடுத்தும் வந்தார்.

இப்படி நிகழுங்காலத்தில், வாள்வித்தை பயிற்றலிலே அவரோடு தாயபாகம் பெற்ற அதிசூரன் வாள்வித்தை பயிற்றுதலினால்வரும் ஊதியம் நாடோறும் தனக்குக் குறை தலையும் ஏனாதி நாதநாயனாருக்கு வளர்தலை கண்டு, பொறாமையுற்று, அவரோடு போர்செய்யக் கருதி, தன் வீரர் கூட்டத்தோடும் போய்.

அவர் வீட்டுத் தலைக்கடையில் நின்று, போர்செய்தற்கு வரும்படி அழைக்க, ஏனாதிநாத நாயனார் யுத்தசந்நத்தராகிப் புறப்பட்டார். அப்பொழுது அவரிடத்திலே போர்த்தொழில் கற்கும் மாணாக்கர்களும் யுத்தத்திலே சமர்த்தர்களாகிய அவர்பந்துக்களும் அதைக் கேள்வியுற்று, விரைந்து வந்து, அவருக்கு இரண்டு பக்கத்திலும் சூழ்ந்தார்கள்.

போருக்கு அறைகூவிய அதிசூரன் ஏனாதிநாதநாயனாரை நோக்கி, "நாம் இருவரும் இதற்குச் சமீபமாகிய வெளியிலே சேனைகளை அணிவகுத்து யுத்தஞ் செய்வோம். யுத்தத்திலே வெற்றிகொள்பவர் எவரோ அவரே வாள்வித்தை பயிற்றும் உரிமையைப் பெறல் வேண்டும்" என்று சொல்ல; ஏனாதிநாதநாயனாரும் அதற்கு உடன்பட்டார்.

இருவரும் தங்கள் தங்கள் சேனைகளோடு அவ்வெளியிலே போய், கலந்து யுத்தம் செய்தார்கள். யுத்தத்திலே அதிசூரன் ஏனாதிநாதநாயனாருக்குத் தோற்று, எஞ்சிய சில சேனைகளோடும் புறங்காட்டியோடினான்.

அன்றிரவு முழுதும் அவன் தன்னுடைய தோழ்வியே நினைந்து, நித்திரையின்றித் துக்கித்துக்கொண்டிருந்து, ஏனாதிநாதநாயனாரை வெல்லுதற்கேற்ற உபாயத்தை ஆலோசித்து, வஞ்சனையினாலே ஐயிக்கும்படி துணிந்து ஒரு திட்டம் திட்டினான்.

விடியற்காலத்திலே "நமக்கு உதவியாக நம்முடையவூரவர்களை அழைத்துக் கொள்ளாமல் நாம் இருவரும் வேறோரிடத்திலே போர் செய்வோம், வாரும் அதாவது தனி தனியாக யாரும் அறியாத வண்ணம் இருவர் மட்டும்" என்று ஏனாதிநாதநாயனாருக்குத் தெரிவிக்கும்படி ஒற்றனை அனுப்பினான்.

ஏனாதிநாதநாயனார் அதைக் கேட்டு, அதற்கு உடன்பட்டுத் தம்முடைய சுற்றத்தவர்கள் ஒருவரும் அறியாதபடி வாளையும் பரிசையையும் எடுத்துக் கொண்டு, தனியே புறப்பட்டு; அவ்வதிசூரன், குறித்த யுத்த களத்திலே சென்று, அவனுடைய வரவை எதிர்பார்த்து நின்றார்.

அவன் திட்டிய வஞ்சனை திட்டம்படி முன்னொருபொழுதும் விபூதி தரியாத அதிசூரன், விபூதி தரித்தவர்களுக்கு ஏனாதிநாதநாயனார் எவ்விடத்திலும் துன்பஞ் செய்யார் என்பதை அறிந்து, நெற்றியிலே விபூதியைப்பூசி, வாளையும் பரிசையையும், எடுத்துக்கொண்டு, தான் குறித்த யுத்தகளத்திற்சென்று, அங்கு நின்ற ஏனாதிநாதநாயனாரைக் கண்டு, அவர் சமீபத்திலே போம்வரைக்கும் நெற்றியைப் பரிசையினால் மறைத்துக்கொண்டு; அவருக்கு முன்னே முடுகி நடந்தான். 

ஏனாதிநாதநாயனார் அவ்வதி சூரனைக் கொல்லுதற்குச் சமயந்தெரிந்துகொண்டு அடிபெயர்த்தார். அப்பொழுது அதிசூரன் தன்முகத்தை மறைத்துக் கொண்டிருந்த பரிசையைப் புறத்திலே(திறக்க) எடுக்க; ஏனாதிநாதநாயனார் அவனுடைய நெற்றியிலே தரிக்கப்பட்ட விபூதியைக் கண்டார்.

கண்டபொழுதே "நயவஞ்சகனே! முன் ஒருபொழுதும் உன் நெற்றியிலே காணாத விபூதியை இன்றைக்குக் கண்டேன். இனி வேறென்ன ஆலோசனை! இவர் பரமசிவனுக்கு அடியவராய் விட்டார். ஆதலால் இவருடைய உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன்" என்று திருவுள்ளத்திலே நினைந்து, வாளையும் பரிசையையும் விடக் கருதி, பின்பு "நிராயுதரைக் கொன்ற தோஷம் இவரை அடையாதிருக்க வேண்டும்" என்று எண்ணி, அவைகளை விடாமல் எதிர்ப்பவர் போல நேராக நிற்க; பாதகனாகிய அதிசூரன் ஏனாதிநாதர் கொன்றான்.

தன் உயிர் பிரியும் வேலையில் கூட "ஓம் நமசிவாய நாதன் திருபாதம் வாழ்க" என்று கூறி உயிர் துறந்தார் ஏனாதிநாதர்.

அப்பொழுது பரமசிவன் மகிழ்ச்சி அடைந்து ஏனாதிநாதர் முன் தோன்றி முக்தி அளித்தார். தம்முடைய திருவடியிலே சேர்த்தருளினார். விபூதியின் மகிமை உணர்ந்த அதிசூரன் தவறை உணர்ந்து செய்த பாவத்தை தீர்க்க சிவாலயம் சென்று வணங்கி வந்தான்...

Link to comment
Share on other sites

14 - ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
Image may contain: 1 person, standing and outdoor
பெயர்: ஐயடிகள் காடவர்கோன்
குலம்: குறுநில மன்னர்
பூசை நாள்: ஐப்பசி மூலம்
அவதாரத் தலம்: காஞ்சி

ஐயடிகள் காடவர்கோன் பெறுதற்கரிதாகிய மானுட சரீரமானது முடிமன்னராய் உலகாண்டு அறபரிபாலனஞ் செய்யும் உயர்பெரு மகிமை தாங்குதற்கு முரியதாகும். ஆனால், இச்சரீரத்தோடு உயிர்க்குள்ள தொடர்பானது நாளொரு விதமாய்த் தேய்ந்து தேய்ந்து போய் ஒரு கட்டத்தில் உயிர் உடலை விட்டு அறுதியாக விலகியேவிட வேண்டிய அவலநிலையும் மேல் மேல் எடுக்க விருக்குஞ் சரீரந்தோறும் மீளமீள அப்படியே நிகழ்ந்து கொண்டிருக்கும் அநர்த்தமும், தவிர்க்கமுடியாத வகையில் உளதாகும்.

அங்ஙனம் நிலையில்லாமையாகிய இப்பொய்ம்மையோடு கூடிய இந்த உடலுயிர் வாழ்க்கைப் பற்றை, மனமே, நீ அறவிட்டொழிவாயாக. விட்டதும் பாம்பை வைத்தாட்டுந் திருக்கரத்தினரும் பரமபதியும் திருமுருகன் தந்தையுமாயுள்ளவரும் திருத்தினை நகரில் எழுந்தருளி யுள்ளவருமாகிய சிவக்கொழுந்தீசனைச் சென்றடைவாயாக என்பது அவ்வாய்மை.

அது நாயனார் வாக்கில், "வேந்த ராயுல காண்டறம் புரிந்து வீற்றிருக்குமிவ் வுடலது தன்னைத் தேய்ந்திறந்துவெந் தூயருழந்திடுமிப் பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே பாந்தளங்கையில் ஆட்டுகந்தானைப் பரமனைக் கடற் சூர்தடிந்திட்ட சேந்தன் தாதையைத் திருத்தினை நகருட் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே" என வரும்.

திருத் தொண்டராகிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாற்றுண்மை இத்தேவார வாய்மைக்கு உருவந் தீட்டியவாறாக அமைந்திருக்கும் நயங்குறிப்பிடத்தகும்.

ஐயடிகள் காடவர்கோன் நாயனர் (காலம் கி.பி. 670 இல் இருந்து கி.பி. 685).

பெயர் விளக்கம்:

காடர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.

இவர் குறுநில மன்னராகக் காஞ்சிபுரத்தில் அரசாட்சி செய்து வந்தார். துறவுள்ளம் மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டார் அவர் துறவு கொள்ள காரணம்:

1. அரச வாழ்விலும் அடியாராய் வாழ்தல் மேலானது
2. திருத்தல தரிசனம் திருவடிப் பேறு நல்கும்

சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப்பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம்.

ஐயடிகள் நாயனார் தமது தலயாத்திரையின்போது தலத்திற் கொன்றாகப் பாடியருளிய திருவெண்பாக்களின் தொகுதி க்ஷேத்திரத் திருவெண்பா என்ற பெயரால் வழங்கும். மெய்யுணர்வு, தலைப்பட்டுச் சிவனைச் சாரும் ஆன்மாவானது அதற்கு முன்னோடி நியமமாம்படி, உண்மை நிலையில் தனக்கு வேறாயிருந்தும் தன்னோடொன்றியிருக்கும் ஒன்றெனத் தோன்றி மயக்கும் தேகாதிப்பிரபஞ்சத்தின் நிலையில்லாமையும் அதன் பொல்லாப்பும் உணர்ந்து அதிலிருந்து விடுபடுதல் கடனாகும்.

அது, தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சத்தி எனும் உணர்வநுபவ நிலைகளாகச் சைவசித்தாந்தத்தில் வைத்துணர்த்தப்படுவதும் துகளறு போதம் என்ற ஞான நூலிற் பூதப்பழிப்பு, அந்தக்கரண சுத்தி முதலாக அவை விரித்து வர்ணிக்கப்படுதலும் பிரசித்தமாம். 
அப்பர் சுவாமிகள் தேவாரத்தில், "செத்தையேன் சிதம்ப நாயேன் செடிதலை யழுக்குப் பாயும் பொத்தையே பேணி நாளும் புகலிடம் அறியமாட்டேன்" என்பதாதி யாகவும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில், "ஊன்மிசை உதிரக்குப்பை ஒருபொருளிலாத மாயம் மான்மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கு மிந்த மானிடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்" என்பதாதியாகவும்.

திருவாசகத்தில், "பொத்தையூண்சுவர்ப் புழுப்பொழிந்துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை" என்பதாதியாகவும் கூறிப்பிடுகின்றனர்.

தன் பெற்ற செல்வம், அரசு பதவி, மக்கள் என அனைத்தும் துறந்த ஐயடிகள் காடவர்கோன் உரிய காலத்தில் முக்தி அடைந்தார். சிவபதம் அடைந்தார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக ஏகாம்பரநாதர் அருளினார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

 

Link to comment
Share on other sites

15 - கணநாத நாயனார்
Image may contain: 10 people
பெயர்: கணநாத நாயனார்
குலம்: அந்தணர்
பூசை நாள்: பங்குனி திருவாதிரை
அவதாரத் தலம்: காழி
முக்தித் தலம்: காழி

வரலாறு சுருக்கம்:

“கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்”
திருத்தொண்டத் தொகை.

எவரொருவர்க்கும் யதார்த்தமான சைவத்தன்மை என்பது பெற்றோர்ப்பேணல் பெரியோர்க்குக் கீழ்ப்படிதல் அறநூல்களைக் கற்றல் அறிவாசார நெறிதழுவுதல், பஞ்சமாபாதகங்களை வெறுத்தல், இயற்கையோடொத்த வாழ்வை விரும்பல், சாத்விக உணவுகொள்ளல், சைவாநுட்டானங்களைக் கடைப்பிடித்தல், தெய்வ வழிபாட்டில் விரும்பி ஈடுபடுதல் ஆகியவற்றிற் பெறும் பயிற்சியினாலேயே வந்து நிறைவுறக் கூடியதாயிருத்தல் போலச் சிவமாந்தன்மையும் உண்மையுணர்வோடு கூடிய சரியை கிரியைத் தொண்டுகளிற் பெறும் பயிற்சினாலேயே வந்து நிறைவுறுவதாகும். அப்படி வழிபட்ட ஒரு நாயனார் தான் கணநாத நாயனார்.

ஆளுடைய பிள்ளையார் அவதரித்த சீர்காழிப்பதியில் அந்தணர் குலத்தில் அவதரித்தார் கணநாத நாயனார்.
அவர் திருத்தோணியப்பருக்கு நாளும் அன்போடு தொழும்பு செய்தார். தொழும்பு செய்தலில் தேர்ச்சி பெற்றிருந்த இத்தொண்டரை நாடிப்பலரும் தொண்டு பயிலவந்தனர். 

தம்மிடம் வந்த நந்தவனப்பணி செய்வோர், மலர்பறிப்போர், மாலை புனைவோர், திருமஞ்சனம் கொணர்வோர், திருவுலகு திருமெழுக்கமைப்போர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர் என்றிவர்களையெல்லாம் அவரவர் குறையெல்லாம் முடித்தார். வேண்டும் வசதிகளைச் செய்து கொடுத்தார். இவற்றால் கைத்திருத்த தொண்டில் தேர்ந்த சரியையார்களையும் உருவாக்கினார். இல்லறத்தில் வாழ்ந்த இவர் அடியார்களை வழிபட்டார். 

கிருகதாச்சிரமத்தில் இருந்து சிவனடியார்களை வழிபடுவார். சமய குரவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைத் தினந்தோறும் முப்பொழுதினும் பேராசையோடு விதிப்படி பூசை செய்துகொண்டு வந்தார். அந்தப் பூசாபலத்தினாலே திருக்கைலாசமலையை அடைந்து சிவகணங்களுக்கு நாதராயினார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

16 - கணம்புல்ல நாயனார்
Image may contain: 4 people
பெயர்: கணம்புல்ல நாயனார்
குலம்: செங்குந்தர்
பூசை நாள்: கார்த்திகை கார்த்திகை
அவதாரத் தலம்: பேளூர்
முக்தித் தலம்: தில்லை

வரலாறு சுருக்கம்:

“கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்” 
திருத்தொண்டத் தொகை

திருக்கோயிலிற் செய்யத் தக்கன யாவை செய்யத்தகாதன யாவை என்றவரையறையும் செய்யத்தக்கனவற்றை ஆசாரம் எனத் தழுவுதலும் செய்யத்தகாதனவற்றை அநாசரம் என விலக்குதலுமாகிய கடைப்பிடிகளுஞ் சைவத்திற் பிரதானமானவைகளாம்.

சரியை கிரியை நெறிகளில் நிற்பார்க்கு அவை மிகக் கண்டிப்பான விதிகளாதல் சைவசமய நெறி முதலிய உண்மை நூல்களாற் பெறப்படும். எனினும், இறைவன்பால் தமக்குள்ள அத்தியந்த உறவுணர்வாகிய மெய்யுணர்வு தலைப்பட்டு அதில் அதீதநிலை யெய்திய மேலோர்கள் விஷயத்தில் ஒரோவழி அவை விதிவிலக்கு நிலைக்குள்ளாதலும் அவர் வரலாறுகளிற் காணப்படும். 

உச்சிட்ட நீரால் அபிஷேகித்தல் உச்சிட்ட உணவால் நைவேத்தியஞ் செய்தல் முதலிய அநாசார விதிகளாற் பூசை செய்து முத்திப் பேரின்பமுற்ற கண்ணப்ப நாயனார், மென்மலரால் அர்ச்சிக்கற் பாலதாகிய சிவலிங்கத் திருமேனியை வன்மலராகிய கன்மலரால் அர்ச்சித்து முத்தி பெற்ற சாக்கிய நாயனார், திருவிளக்குத் தகழியை உடலுதிரத்தால் நிரப்பித் திருவிளக்கேற்ற முயன்று சிவன் கருணைக்காளாகிப் பேரின்ப நிலையுற்ற முதலானோர் வரலாறுகளினால் அது புலனாகும்.

வடவெள்ளாற்றுக்குத் தென்கரையில் உள்ள இருக்கு வேளூரிலே, சிவபத்தியிற் சிறந்தவரும் பெருஞ்செல்வருமாகிய ஒருவர் இருந்தார். அவர் செல்வம் பெற்றதினால் அடையும் பயன் இதுவே என்று, சிவாலயத்தினுள்ளே திருவிளக்கேற்றித் தோத்திரம் பண்ணுவாராயினார். 

நெடுங்காலஞ்சென்றபின், வறுமைஎய்தி, சிதம்பரத்தை அடைந்து சபாநாயகரைத் தரிசனஞ் செய்துகொண்டு, தம்முடைய வீட்டில் உள்ள பொருள்களை விற்று, அங்குள்ள திருப்புலிச் சரமென்னும் ஆலயத்திலே திருவிளக்கேற்றி வந்தார்.

இப்படி யொழுகுநாளிலே, வீட்டுப்பொருள்களும் ஒழிந்து விட, கணம்புல்லுக்களை அரிந்துகொண்டுவந்து விற்று, நெய் வாங்கித் திருவிளக்கெரித்தார். அதனால் அவருக்குக் கணம்புல்லநாயனார் என்னும் பெயர் உண்டாயிற்று. 

ஒருநாள் தாம் அரிந்து கொண்டு வந்த புல்லு விலைப் படாதொழியவும், தம்முடைய பணி தவறாமல் அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார். முன்பு விளக்கெரிக்கும் யாமம் வரையும் எரித்தற்கு அப்புல்லுப் போதாமையால், அடுத்த விளக்கிலே தம்முடைய திருமுடியை மடுத்து எரித்தார். அப்பொழுது பரமசிவன் பெருங்கருணை செய்தருள, கணம்புல்லநாயனார் சிவலோகத்தை அடைந்தார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

17 - கண்ணப்ப நாயனார்
Image may contain: 1 person
பெயர்: திண்ணன்
குலம்: வேடர்
பூசை நாள்: தை மிருகசீருஷம்
அவதாரத் தலம்: உடுப்பூர்
முக்தித் தலம்: திருக்காளத்தி

வரலாறு:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் குறிப்பிடடு என்னை வெகுவாக கவர்ந்தவர் கண்ணப்ப நாயனார். அதற்கு காரணம் காளத்தி நாதன் (சிவலிங்கம்) கண்களில் ரத்தம் வடிகிறது என்று இந்த உலகத்தில் அனைத்து அற்புதமான காட்சிகளை காணும் தன் இரு கண்களையே அம்பு கொண்டு எடுத்து சிவலிங்கத்தில் வைத்து இன்று வரை தினமும் இரவு காளத்தி நாதனை வழிபடுபவர் கண்ணப்பர் நாயனார்.

கண்ணப்பரையும் அவர் வரலாற்றையும் அவர் சிவ பக்தியும் ஒரு பதிவில் விளக்கம் இயலாது இதனால் கண்ணப்பரை பற்றி இருபதிவுகளாக காணலாம்.

பொத்தப்பிநாட்டிலே, உடுப்பூரிலே, வேடர்களுக்கு அரசனாகிய நாகன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மனைவிபெயர் தத்தை. அவ்விருவரும் நெடுங்காலம் புத்திர பாக்கியம் இல்லாமையால் அதிதுக்கங்கொண்டு குறிஞ்சி நிலத்திற்குக் கடவுளாகிய சுப்பிரமணியசுவாமியுடைய சந்நிதானத்திலே சேவற்கோழிகளையும், மயில்களையும் விட்டு, அவரை வழிபட்டு வந்தார்கள்
சுப்பிரமணியசுவாமியுடைய திருவருளினாலே தத்தையானவள் கருப்பவதியாகி, ஒரு புத்திரனைப் பெற்றாள். 

அப்பிள்ளையை நாகன் தன் கையிலே எடுத்தபொழுது திண்ணெனவாயிருந்தபடியால் திண்ணன் என்று பெயரிட்டான். அத்திண்ணனார் வளர்ந்து உரிய பருவத்திலே வில்வித்தை கற்கத் தொடங்கி, அதிலே மகாசமர்த்தராயினார், நாகன் வயோதிகனானபடியால், வேட்டைமுயற்சியிலே இளைத்தவனாகி, தன்னதிகாரத்தைத் தன்புத்திரராகிய திண்ணனாருக்குக் கொடுத்தான்.

அந்தத்திண்ணனார் வேட்டைக் கோலங்கொண்டு வேடர்களோடும் வனத்திலே சென்று வேட்டையாடினார், வேட்டையாடும்பொழுது, ஒருபன்றியானது வேடராலே கட்டப்பட்ட வலையறும்படி எழுந்து, மிகுந்த விசையுடனே ஓடியது. அதைக் கண்ட திண்ணனார் அதைக்கொல்ல நினைந்து, அதைத் தொடர்ந்து பிடிக்கத்தக்க விசையுடனே அது செல்லும் அடிவழியே சென்றார். 

"நாணன்" மற்றும் "காடன்" என்கின்ற இரண்டு வேடர்கண்மாத்திரம் அவருக்குப் பின் ஓடினார்கள். அந்தப்பன்றி நெடுந்தூரம் ஓடிப்போய், இளைப்பினாலே மலைச்சாரலிலே ஒருமரத்தின் நிழலிலே நின்றது. திண்ணனார் அதைக் கண்டு அதனைச் சமீபித்து, உடைவாளை யுருவி அதனை இருதுண்டாகும்படி குத்தினார்.

நாணனும் காடனும் இறந்துகிடந்த அந்தப் பன்றியைக் கண்டு திண்ணனாரை வியந்து வணங்கி, "நெடுந்தூரம் நடந்து வந்த படியால் பசி நம்மை மிகவருத்துகின்றது. நாம் இந்தப்பன்றியை நெருப்பிலே காய்ச்சித் தின்று, தண்ணீர் குடித்துக்கொண்டு வேட்டைக்காட்டுக்கு மெல்லப்போவாம்" என்றார்கள். 

திண்ணனார் அவர்களை நோக்கி, "இவ்வனத்திலே தண்ணீர் எங்கே இருக்கின்றது" என்று கேட்டார்.

நாணன் "அந்தத் தேக்கமரத்துக்கு அப்புறம் போனால், மலைப்பக்கத்திலே பொன்முகலி யாறு ஓடுகின்றது" என்றன். 

அதைக்கேட்ட திண்ணனார் "இந்தப் பன்றியை எடுத்துக்கொண்டு வாருங்கள்; நாம் அங்கே போவோம்" என்றார்.

மலையே நோக்கி நடந்து, அரைக்காதவழி தூரத்துக்கு அப்பால் இருக்கின்ற திருக்காளத்தி மலையைக் கண்டனர்.

"நமக்குமுன்னாகத் தோன்றுகின்ற மலைக்குப் போவோம்" என்று திண்ணன் கூறினார்.

அதற்கு நாணன் "இந்தமலையிலே, குடுமித்தேவர் இருக்கிறார். நாம் போனாற் கும்பிடலாம்" என்றான்.

திண்ணம் "இந்தமலையைக் கண்டு இதை அணுக அணுக என்மேல் ஏற்றப்பட்ட பெரிய பாரம் குறைகின்றது போலும். இனி உண்டாவது யாதோ! அறியேன்" என்று சொல்லி அதிதீவிரமாகிய விருப்பத்தோடும் விரைந்து சென்றார்.

பொன்முதலியாற்றை அடைந்து, அதன் கரையிலிருக்கின்ற மரநிழலிலே, கொண்டுவந்த பன்றியை இடுவித்து, காடனைநோக்கி "தீக்கடைகோல் செய்து நெருப்பை உண்டாக்கு; நாங்கள் இம்மலையிலே ஏறி, சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு வந்து சேருவோம்" என்று
சொல்லினார் திண்ணன்.

நாணனோடும் அந்தப் பொன்முகலிநதியைக் கடந்து, மலைச்சாரலை அடைந்து, மலையிலே நாணன் முன்னே ஏற, தாமும் அளவில்லாத பேராசையோடும் ஏறிச் சென்று சிவலிங்கப் பெருமான் எழுந்தருளியிருத்தலைக் கண்டார், கண்டமாத்திரத்திலே, பரமசிவனுடைய திருவருட்பார்வையைப் பெற்று, இரும்பானது தரிசனவேதியினாலே உருவம் மாறிப் பொன்மயமானாற்போல முன்னுள்ள குணங்கள் மாறிச் சிவபெருமானிடத்தில் வைத்த அன்புருவமானார்.

நெடுங்காலம் பிரிந்திருந்த தன் குழந்தையைக் கண்ட மாதாவைப்போலத் தாழாமல் விரைந்தோடி, தோள்கள் முன்னேறி அக்கடவுளைத் தழுவி, மோந்து முத்தமிட்டார். நெடுநேரம் பெருமூச்சுவிட்டுக் கொண்டு நின்று, சரீரம் முழுதிலும் உரோமாஞ்சங்கொள்ள. இரண்டு கண்ணினின்றும் கண்ணீர் சொரிய வெயிலிடைப்பட்ட மெழுகு போல மனங்கசிந்துருகிய திண்ணன்;

"இந்தச்சுவாமி அடியேனுக்கு அகப்பட்டது என்ன ஆச்சரியம்" என்று சொல்லி ஆனந்தம் கொண்டார்.

"ஐயையோ! சிங்கம் யானை புலி கரடி துஷட மிருகங்கள் சஞ்சரிக்கின்ற காட்டிலே நீர் யாதொரு துணையுமின்றி வேடர்போலத் தனியே இருப்பது ஏது" என்று சொல்லித் துக்கித்து, தம்முடையகையில் இருந்த வில்லுக் கீழே விழுந்ததையும் அறிந்தவரகிப் பரவசமடைந்தார். 

பின் ஒருவாறு தெளிந்து "இவருடைய முடியிலே நீரை வார்த்துப் பச்சிலையையும் பூவையும் இட்டவர் யாரோ" என்றார் திண்ணன்.

அப்பொழுது சமீபத்திலே நின்ற நாணன் "நான் முற்காலத்திலே உம்முடைய பிதாவுடனே வேட்டையாடிக் கொண்டு இம்மலையிலே வந்தபொழுது, ஒரு பிராமணன் இவர்முடியிலே நீரைவார்த்து, இலையையும் பூவையும் சூட்டி உணவை ஊட்டி, சிலவார்த்தைகள் பேசினதைக் கண்டிருக்கின்றேன், இன்றைக்கும் அவனே இப்படிச் செய்தான் போலும்" என்றான்.

அதைக்கேட்ட திண்ணனார் அந்தச் செய்கைகளே திருக்காளத்தியப்பருக்குப் பிரீதியாகிய செய்கைகளென்று கடைப்பிடித்தார். பின்பு, "ஐயோ! இவருக்கு அமுது செய்தற்கு இறைச்சிகொடுப்பார் ஒருவரும் இல்லை. இவர் அங்கே தனியே இருக்கின்றார். இறைச்சி கொண்டு வரும் பொருட்டு இவரைப் பிரியவோ மனமில்லை. இதற்கு யாதுசெய்வேன்? எப்படியும் இறைச்சிகொண்டு வரவேண்டும்" என்று சொல்லிக்கொண்டு...

சுவாமியைப் பிரிந்து சிறிது தூரம் சொன்றார் கன்றைவிட்டுப் பிரிகின்ற தலையீற்றுப் பசுப்போல அவரிடத்திற்குத் திரும்பி வருவார் கட்டி அணைத்துக் கொள்வார்; மீளப்போவார்; சிறிதுதூரம் போய் அத்தியந்த ஆசையோடு சுவாமியைத் திரும்பிப் பார்த்து நிற்பார். "சுவாமீ! நீர் உண்பதற்கு மிருதுவாகிய நல்ல இறைச்சியை நானே குற்றமறத் தெரிந்து கொண்டு வருவேன்" என்றார்.

"நீர் யாதொரு துணையுமின்றி இங்கே தனியே இருக்கிறபடியால் நான் உம்மைப் பிரியமாட்டேன். உமக்குப் பசி மிகுந்தபடியால் இங்கே நிற்கவுமாட்டேன். ஐயையோ! நான் யாது செய்வேன்" என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் இடைவிடாது பொழிய நின்றார்.

பின்பு ஒரு பிரகாரம் போய் வரத்துணிந்து, விலை எடுத்துக்கொண்டு, கையினாலே கும்பிட்டு, சுவாமி சந்நிதானத்தை அருமையாக நீங்கி, மலையினின்றும் இறங்கி நாணன்பின்னே வர, பிறவிஷயங்களிலே உண்டாகும் ஆசை பரமாணுப் பிரமாணமாயினும் இன்றி, அன்புமயமாகி, பொன் முதலியாற்றைக் கடந்து கரை ஏறி, அங்குள்ள சோலையிலே புக; அதுகண்டு காடன் எதிரேபோய்க் கும்பிட்டு,

"நெருப்புக் கடைந்து வைத்திருக்கின்றேன். பன்றியின் அவயவங்களெல்லாவற்றையும் உம்முடைய அடையாளப்படி பார்த்துக்கொள்ளும். திரும்பிப் போதற்கு வெகுநேரம் சென்று போயிற்று. நீர் இவ்வளவு நேரமும் தாழ்த்தது ஏன்" என்றான். 

நாணன் அதைக் கேட்டு "இவர் மலையிலே சுவாமியைக் கண்டு அவரைத் தழுவிக்கொண்டு மரப்பொந்தைப் பற்றிவிடாத உடும்பைப்போல அவரை நீங்கமாட்டாதவராய் நின்றார். இங்கேயும் அந்தச் சுவாமி உண்ணுதற்கு இறைச்சி கொண்டுபோம்பொருட்டு வந்திருக்கிறார். எங்கள் குலசாமியை விட்டுவிட்டார். அந்தச் சுவாமி வசமாய்விட்டார்' என்றான்.

உடனே காடன் "திண்ணரே! நீர் என்ன செய்தீர்? என்ன பைத்தியங்கொண்டீர்" என்று கேட்டார்.

திண்ணனார் அவன் முகத்தைப் பாராமல், பன்றியை நெருப்பிலே வதக்கி; அதினுடைய இனிய தசைகளை அம்பினாலே வெவ்வேறாகக் கிழித்து அம்பிலே கோத்து நெருப்பிலே காய்ச்சி, பதமாக வெந்தவுடனே, சுவைபார்க்கும்படி அவைகளைத் தம்முடைய வாயிலே இட்டுப் பல்லினாலே மெல்ல மெல்லப் பலமுறை அதுக்கிப் பார்த்து, மிக இனியனவாகிய இறைச்சிகளெல்லாவற்றையும் தேக்கிலையினாலே தைக்கப்பட்ட கல்லையிலே வைத்து, இனியனவல்லாத இறைச்சிகள் எல்லாவற்றையும் புறத்திலே உமிழ்ந்தார்.

அதைக் கண்ட நாணன் காடன் இருவரும், "இவர் மிகப் பைத்தியங் கொண்டிருக்கின்றார். பெறுதற்கரிய இறைச்சியைக் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி வீணாக உமிழுகின்றார். மற்றையிறைச்சியைப் புறத்திலே எறிந்து விடுகின்றார். தாம் மிகப் பசியுடையராயிருந்தும், தனை உண்கின்றாரில்லை. எங்களுக்குத் தருகின்றாருமில்லை. இவர் தெய்வப் பைத்தியங்கொண்டுக்கின்றார். இதனைத் தீர்க்கத்தக்க வழி ஒன்றையும் அறியோம். தேவராட்டியையும் நாகனையும் அழைத்துக் கொண்டுவந்து இதைத் தீர்க்கவேண்டும். வேட்டைக்காட்டிலே நிற்கின்ற ஏவலாளரையும் கொண்டு நாங்கள் போவோம்" என்று சொல்லிக் கொண்டு போனார்கள்.

திண்ணனார் அவ்விருவரும் போனதை அறியாதவராகி, சீக்கிரம் கல்லையிலே மாமிசத்தை வைத்துகொண்டு, திருமஞ்சனமாட்டும்பொருட்டு ஆற்றில் நீரை வாயினால்முகந்து, பூக்களைக்கொய்து தலைமயிரிலே செருகி, ஒருகையிலே வில்லையும் அம்பையும் மற்றக்கையிலே இறைச்சி வைத்த தேக்கிலைக்கல்லையையும் எடுத்துக்கொண்டு,

"ஐயோ! என்னுயிர்த் துணையாகிய சுவாமி மிகுந்த பசியினால் இளைத்தாரோ" என்று நினைந்து இரங்கிப் பதைபதைத்து ஏங்கி, தன் குஞ்சுக்கு இரை அருந்துதற்குத் தாழாதோடுகின்ற பறவைபோல மனோகதியும் பின்னிட ஓடிப்போய்க் கடவுளை அடைந்தார்.

அடைந்து, அவருடைய திருமுடிமேல் இருந்த பூக்களைத் தம்முடைய காற்செருப்பால் மாற்றி, தம்முடைய வாயில் இருக்கின்ற திருமஞ்சனநீரைத் தம்முடைய மனசில் உள்ள அன்பை உமிழ்பவர்போலத் திருமுடியின் மேல் உமிழ்ந்து, தம்முடைய தலையில் இருந்த பூக்களை எடுத்துத் திருமுடியின் மேல் சாத்தி, தேக்கிலையிலே படைத்த இறைச்சியைத் திருமுன்னே வைத்தார். 

"சுவாமீ! கொழுமையாகிய இறைச்சிகள் எலாவற்றையும் தெரிந்து, அம்பினாலே கோத்து நெருப்பிலே பதத்தோடு காய்ச்சிப் பல்லினால் அதுக்கி, நாவினாலே சுவைபார்த்துப் படைத்தேன். இவ்விறைச்சி மிக நன்றாயிருக்கின்றது. எம்பெருமானே! இதை அமுதுசெய்தருளும்" என்று சொல்லி, உண்பித்தார்.

பின்பு சூரியன் அஸ்தமயமாயிற்று, திண்ணனார் அவ்விரவிலே துஷ்டமிருகங்கள் சுவாமிக்குத் துன்பஞ்செய்தல் கூடுமென்று அஞ்சி, அம்பு தொடுக்கப்பட்ட வில்லைக் கையிலே பிடித்துக்கொண்டும், மறந்தும் கண்ணிமையாமல் சுவாமிக்குப் பக்கத்திலே விழித்துக்கொண்டு நின்றார். 

அப்படி நின்ற திண்ணனார் வைகறையிலே சுவாமிக்கு இறைச்சி கொண்டுவரும் பொருட்டு, வேட்டையாடுதற்கு மலைச்சாரலுக்குப் போனார். இவை ஒருபுறம் நிகழ்கிறது.

******* சிவகோசரியார் ********

அறிவு அருள் அடக்கம் தவம் சிவபத்தி முதலியவைகளெல்லாம் திரண்டொருவடிவம் எடுத்தாற்போன்றவரும், நல்வினை தீவினைகளால் வரும் ஆக்கக்கேடுகளிலே சமபுத்தி பண்ணுகின்றவரும், யாவரையும் கோகிப்பிக்க வல்லமகா செளந்திரியமுள்ள பெண்கள் வலிய வந்து தம்மைத் தழுவினும் பரமாணுப்பரிமாணமாயினும் சிந்தந்திரியாமல் அவர்களைத் தாயென மதிக்கும் மகாமுனிவரும், திருக்காளத்தியப்பரைத் தினந்தோறும் சைவாகமவிதிப்படி அருச்சிப்பவருமாகிய சிவகோசரியார் என்பவர் இருந்தார்.

பிரமமுகூர்த்தத்திலே எழுந்து, பொன்முகலியாற்றிலே ஸ்நானம் பண்ணி, சுவாமியை அருச்சிக்கும் பொருட்டுத் திருமஞ்சனமும் பத்திர புஷ்பமும் எடுத்து, சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டு, சுவாமி சந்நிதனத்திலே போனார். போகும் பொழுது அங்கே வெந்த இறைச்சியும் எலும்பும் கிடக்கக் கண்டு நடுநடுங்கி, குதித்துப் பக்கத்திலே ஓடினார். 

ஓடி நின்று, "தேவாதிதேவரே! தேவரீருடைய சந்நிதானத்தை அடைதற்கு அஞ்சாத துஷ்டராகிய வேட்டுவப்புலையர்களே இந்த அநுசிதத்தைச் செய்தார்கள் போலும், அவர்கள் இப்படிச் செய்து போதற்குத் தேவரீர் திருவுளம் இசைந்தீரோ" என்று சொல்லி, பதறி அழுது விழுந்து புரண்டார்.

பின்பு 'சுவாமிக்கு அருச்சனை செய்யாமல் தாழ்த்தலால் பயன்யாது' என்று நினைந்து, அங்கே கிடந்த இறைச்சியையும் எலும்பையும் கல்லையையும் திருவலகினால் மாற்றி, சம்புரோக்ஷணஞ்செய்து, மீளப் பொன் முதலியாற்றிலே ஸ்நானஞ் செய்து, திரும்பிவந்து, வேத மந்திரத்தினாலே சுத்திசெய்து, உருத்திரசமா நமகத்தினால் சுவாமிக்கு அபிஷேகம் பண்ணி பத்திரபுஷபங்களால், அருச்சனை செய்தார்,

திருமுன்னே நின்று, இரண்டு கைகளையும் சிரசின்மேலே குவித்து, இரண்டு கண்களினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய திருமேனியெங்கும் மயிர்பொடிப்ப, அக்கினியில் அகப்பட்ட மெழுகுபோல மனம் மிக உருகி இளசு, நாத்தழும்ப, கீத நடையுள்ளதாகிய சாமவேதம் பாடினார்.

பாடியபின் பலமுறை பிரதக்ஷிணஞ்செய்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, அருமையாக நீங்கிப் போய், தபோவனத்தை அடைந்தார். இவை ஒருபுறம் நிகழ்கிறது.

முன்னே வேட்டையாடுதற்கு மலைச்சாரலிலே சென்ற திண்ணனார் பன்றி மான் கலை மரை கடமை என்னு மிருகங்களைக்கொன்று, அவைகளினிறைச்சியை முன்போலப் பக்குவப்படுத்தி, தேக்கிலையில் வைத்து, கோற்றேனைப் பிழிந்து, அதனோடு கலந்து, முன்போலத் திருமஞ்சனமும் புஷ்பமுங்கொண்டு, மலையிலே ஏறி, சுவாமிசந்நிதானத்தை அடைந்து, முன்போலப் பூசைசெய்து, இறைச்சிக் கல்லையைத் திருமுன்னே வைத்து,

"இந்த இறைச்சி முன்கொண்டுவந்தது போலன்று, இவை பன்றி மான் கலை மரை கடமை என்கின்ற மிருகங்களின் இறைச்சி, இவைகளை அடியேனும் சுவைத்துப் பார்த்திருக்கின்றேன். தேனும் கலந்திருகிறது. தித்திக்கும்" என்று சொல்லி, உண்பித்து, அவருக்குப் பக்கத்திலே பிரியாமல் நின்றார். 

அப்பொழுது முதனாட்போன நாணனும் காடனும் ஆகிய இருவராலும் தன்புத்திரராகிய திண்ணனாருடைய செய்கைகளை அறிந்த நாகன் ஊணும் உறக்கமுமின்றித் தேவராட்டியையுங் கொண்டுவந்து, திண்ணனாரைப் பற்பல திறத்தினாலே வசிக்கவும், அவர் வசமாகாமையைக் கண்டு, சிந்தை நொந்து, 

"இனியாதுசெய்வோம்" என்று சொல்லிக்கொண்டு; அவரை விட்டுத் திரும்பிப் போய்விட்டனர்.

சிவபெருமானோடு ஒற்றுமைப்பட்டு அவ்விறைப்பணியின் வழுவாது நிற்குந் திண்ணனார் பகற்காலத்திலே மிருகங்களைக் கொன்று சுவாமிக்கு இறைச்சியை ஊட்டியும், இராக்காலத்திலே நித்திரை செய்யாமல் சுவாமிக்கு அருகே நின்றும், இப்படித் தொண்டுசெய்து வந்தார். 

சிவகோசரியாரும் தினந்தோறும் வந்து, சந்நிதானத்திலே இறைச்சி கிடத்தலைக் கண்டு, இரங்கிச் சுத்திசெய்து, சைவாகமவீதிப்படி அருச்சித்துக்கொண்டு, "இந்த அநுசிதம் நிகழாமல் அருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்து வந்தார்.

திருக்காளத்தியப்பர் அந்தச் சிவகோசரியாருடைய மனத்துயரத்தை நீக்கும்பொருட்டு ஐந்தாநாள் இராத்திரியில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி,

"அன்பனே! அவனை வேடுவன் என்று நீ நினையாதே. அவனுடைய செய்கைகளைச் சொல்வோம்.; கேள். அவனுடைய உருவமுழுவதும் நம்மேல் வைக்கப்பட்ட அன்புருவமே. அவனுடைய அறிவுமுழுதும் நம்மை அறியும் அறிவே, அவனுடைய செய்கைகள் எல்லாம் நமக்கு இதமாகிய செய்கைகளே. நம்முடைய முடியின்மேல் உன்னாலே சாத்தப்பட்ட பூக்களை நீக்கும்படி அவன் வைக்கின்ற செருப்படி நம்முடைய குமாரனாகிய சுப்பிரமணியனுடைய காலினும் பார்க்க நமக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தருகின்றது. அவன் தன் வாயினால் நம்மேல் உமிழுகின்ற ஜலமானது, அன்புமயமாகிய அவனுடைய தேகமென்னும் கொள்கலத்தினின்றும் ஒழுகுகின்ற படியால்; கங்கை முதலாகிய புண்ணிய தீர்த்தங்களைப் பார்க்கினும் நமக்குப் பரிசுத்தமுள்ளதாய் இருக்கின்றது. அவன் தன்னுடைய தலைமயிரிலே செருகிக்கொண்டு வந்து நமக்குச் சாத்துகின்ற புஷ்பங்கள், அவனுடைய மெய்யன்பானது விரிந்து விழுதல்போல விழுதலால், பிரம விஷ்ணு முதலாகிய தேவர்கள் நமக்குச் சாத்தும் புஷ்பங்களும் அவைகளுக்குச் சற்றேனும் சமானமாகாவாம். அவன் நமக்குப் படைக்கின்ற மாமிசம், பதமாக வெந்திருக்கின்றதோ என்று அன்பினால் உருகி இளகிய மனசினோடும் மென்று, சுவைபார்த்துப் படைக்கப் பட்டபடியால், வேதவிதிப்படி யாகம் செய்கின்றவர்கள் தரும் அவியிலும் பார்க்க நமக்கு அதிக மதுரமாயிருக்கின்றது. அவன் நம்முடைய சந்நிதனத்தில் நின்று சொல்லும் சொற்கள், நிஷ்களங்கமாகிய அன்பினோடும் நம்மையன்றி மற்றொருவரையும் அறியாது வெளிப்படுதலால், வேதங்களும் மகாமுனிவர்கள் மகிழ்ந்து செய்கின்ற ஸ்தோத்திரங்களும் ஆகிய எல்லாவற்றிலும் பார்க்க நமக்கு மிக இனியனவாயிருக்கின்றன. அவனுடைய அன்பினால் ஆகிய செய்கைகளை உனக்குக் காட்டுவோம். நீ நாளைக்கு நமக்குப் பிற்பக்கத்திலே ஒளிந்திருந்து பார்" என்று சொல்லி மறைந்தருளினார். 

சிவகோசரியார் சொப்பனாவத்தையை நீங்கிச் சாக்கிராவத்தையை யடைந்து, பரமசிவன் தமக்கு அருளிச்செய்த திருவார்த்தகளை நினைந்து நினைந்து, "அறியாமையே நிறைந்துள்ள இழிவாகிய வேடுவர் குலத்திலே பிறந்த அவருக்கு வேதாகமாதி சாஸ்திரங்களிலே மகாபாண்டித்தியமுடைய மகாமுனிவர்கள் தேவர்களிடத்திலும் காணப்படாத உயர்வொப்பில்லாத இவ்வளவு பேரன்பு வந்தது, ஐயையோ! எவ்வளவு அருமை அருமை" என்று ஆச்சரியமும், 

"இப்படிப்பட்ட பேரன்பர் செய்த அன்பின் செய்கைகளைப் புழுத்தநாயினும் கடையனாகிய பாவியேன் அநுசிதம் என்று நினைந்தேனே! ஐயையோ? இது என்ன கொடுமை" என்று அச்சமும் அடைந்து, வைகறையிலே போய்ப் பொன்முகலியாற்றிலே ஸ்நானம் பண்ணி மலையில் ஏறி, முன்போலச் சுவாமியை அருச்சித்து, அவருக்குப் பிற்பக்கத்திலே ஒளித்திருந்தார்.

சிவகோசரியார் வருதற்கு முன்னே வேட்டையாடுதற்குச் சென்ற திண்ணனார் வேட்டையாடி, இறைச்சியும் திருமஞ்சனமும் புஷ்பமும் முன்போல அமைத்துக்கொண்டு அதிசீக்கிரந் திரும்பினார்.

திண்ணன் மற்றும் சிவகோசரையும் ஒன்று சேர்த்தாயிற்று;

திண்ணன் ஆகிய கண்ணப்பர் ஈசன் காளத்திநாதனை அடைந்தது மாமிசம் வைத்து பூஜைகள் செய்தார் இதை தினமும் பூஜைகள் செய்யும் சிவகோசரியாருடைய மனதை துயரம்படுத்தியது. 

திருக்காளத்தியப்பர் அந்தச் சிவகோசரியாருடைய மனத்துயரத்தை நீக்கும்பொருட்டு ஐந்தாநாள் இராத்திரியில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, பிற்பக்கத்திலே ஒளித்திருந்து நடப்பதை பார்க்க கட்டளை பிறப்பித்தார். சிவகோசரும் நடப்பவைகளை மரத்தின் பின்புறம் ஒளிந்திருந்து கவனித்தார்.

திண்ணன் திரும்பி வரும்பொழுது, பலபல துர்ச்சகுனங்களைக்கண்டு, "இந்தச் சகுனங்களெல்லாம் உதிரங் காட்டுகின்றன. ஆ கெட்டேன்! என்கண்மணிபோன்ற சுவாமிக்கு என்ன அபாயம் சம்பவித்ததோ! அறியேனே" என்று மனங்கலங்கி, அதிசீக்கிரம் நடந்தார்.

அடியார்களுடைய பத்தி வலையில் அகப்படுகின்ற அருட்கடலாகிய பரமசிவன் திண்ணனாருடைய அன்பு முழுதையும் சிவகோசரியாருக்குக் காட்டும் பொருட்டுத் திருவுளங்கொண்டு, தம்முடைய வலக்கண்ணினின்றும் இரத்தம் சொரியப்பண்ணினார். 

திண்ணனார் தூரத்திலே கண்டு விரைந்தோடி வந்தார் வந்தவுடனே, இரத்தஞ் சொரிதலைக் கண்டார். காண்டலும், வாயிலுள்ள திருமஞ்சனம் சிந்த, கையில் இருந்த இறைச்சி சிதற, அம்பும் வில்லும் விழ, தலைமயிரிலே செருகப்பட்ட புஷ்பங்கள் அலைந்து சோர, ஆட்டுகின்ற கயிறு அற்றபொழுது வீழ்கின்ற நாடகப் பாவைபோலச் சீக்கிரம் பதைபதைத்து நிலத்திலே விழுந்தார்.

விழுந்தவர் எழுந்து போய், இரத்தத்தைப் பலமுறை கையினாலே துடைக்க; அது காலுதல் தவிராமையைக் கண்டு, அதற்கு இன்னது செய்வோம் என்று அறியாதவராகி, பெருமூச்செறிந்து, திரும்பிப்போய் விழுந்தார்.

நெடும்பொழுது உள்ளுயிர்த்தமின்றி இறந்தவர்கள் போலக்கிடந்தார், பின் ஒருவாறு தெளிந்து, "இப்படிச் செய்தவர்கள் யாவர்" என்று சொல்லிக்கொண்டு எழுந்தார். 

எங்கும் பார்த்தார், வில்லையெடுத்து அம்புகளைத் தெரிந்துகொண்டு "என்னுடைய சுவாமிக்கு இத்தீங்கு வந்தது எனக்குப் பகைவர்களாகிய வேடுவர்களாலோ இந்தவனத்திற் சஞ்சரிக்கின்ற துஷ்ட மிருகங்களாலோ! யாதென்று தெரியவில்லையே" என்று சொல்லி, மலைப்பக்கங்களிலே நெடுந்தூரமட்டும் தேடிப் போனார். 
வேடர்களையேனும் விலங்குகளையேனும் காணாதவராகி, திரும்பிவந்து, குறைவில்லாத துன்பத்தினாலே மனம் விழுங்கப்பட்டு, சுவாமியைக் கட்டிக்கொண்டு, இடியேறுண்ட சிங்கேறுபோல வாய்விட்டுக் கண்ணீர்சொரிய அழுதார்.
"என்னுயிரினும் சிறந்தவரும் அடைந்தவர்கள் அன்பினாலே ப்ரியமாட்டாதவரும் ஆகிய சுவாமிக்கு எப்படி இந்தத் துன்பம் சம்பவித்ததோ! இதைத் தீர்ப்பதற்கு மருந்தொன்றை அறியேனே! ஐயையோ! இதற்கு என்ன செய்வேன்" என்றார்.

இந்த உதிரம் என்னசெய்தால் நிற்குமோ? இந்தத் தீங்கைச் செய்தவர்களைக் காணேன். வேடர்கள் அம்பினாலாகிய புண்ணைத் தீர்க்கின்ற பச்சிலைமருந்துகளை மலையடிவாரத்திலே பிடுங்கிக்கொண்டு வருவேன்" என்று சொல்லிக்கொண்டு போனார்.

தன்னினத்தைப் பிரிந்துவந்த இடபம்போலச் சுவாமியைப் பிரிந்து வந்ததினால் வெருட் கொண்டு வனங்களெங்குந் திரிந்து, பல்வகையாகிய பச்சிலைகளைப் பிடுங்கிக் கொண்டு, சுவாமிமேல் வைத்த மனசிலும் பார்க்க விரைந்து வந்து, அம்மருந்துகளைப் பிழிந்து அவர் கண்ணிலே வார்த்தார்.

அதினால், அக்கண்ணிவிரத்தம் தடைப்படாமையைக் கண்டு, ஆவிசோர்ந்து, "இனி நானிதற்கு என்ன செய்வேன்" என்று ஆலோசித்துக் கொண்டு நின்றார். 

"ஊனுக்கு ஊனிடம் வேண்டும்" என்னும் பழமொழி அவருடைய ஆத்தியானத்திலே வந்தது. உடனே, "இனி என்னுடைய கண்ணை அம்பினாலே இடந்து அப்பினால் சுவாமியுடைய கண்ணினின்றும் பாயும் இரத்தம் தடைப்படும்" என்று நிச்சயித்துக்கொண்டு, மன மகிழ்ச்சியோடும் திருமுன்னே இருந்து, அம்பையெடுத்துத் தம்முடைய கண்ணணத்தோண்டிச் சுவாமியுடைய கண்ணிலே அப்பினார்.

அப்பினமாத்திரத்திலே இரத்தம் தடைப்பட்டதைக் கண்டார். உடனே அடங்குதற்கரிய சந்தோஷமாகிய கடலிலே அமிழ்ந்திக் குதித்துப் பாய்ந்தார். மலைபோலப் பருத்த புயங்களிலே கைகளினாலே கொட்டி ஆரவாரித்தார் கூத்தாடினார்.

"நான் செய்த செய்கை நன்று நன்று" என்று சொல்லி வியந்து, அத்தியந்த ஆனந்தத்தினாலே உன்மத்தர் போலாயினார். இப்படிச் சந்தோஷசாகரத்திலே உலாவும் பொழுது, திருக்காளத்தியீசுரர் அந்தத் திண்ணனாருடைய பேரன்பைச் சிவகோசரியாருக்குப் பின்னுங் காட்டுதற்குத் திருவுளங்கொண்டு, தம்முடைய மற்றோறு கண்ணிலும் இரத்தஞ்சொரியப்பண்ணினார் முக்கண்ணன்.

அது திண்ணனாருடைய அளவில்லாத சந்தோஷசாகரத்தை உறிஞ்சியது. அக்கினி நிரயத்துள்ளே விழுந்து நெடுங்காலம் துன்பமுற்று அதனை நீங்கிச் சுவர்க்கத்தை அடைந்து இன்பமுற்றோனொருவன் பின்னும் அந்நிரயத்திலே வீழ்ந்தாற் போல, திண்ணவார் உவகைமாறி, கரையில்லாத துன்பக் கடலிலே அழுந்தி ஏங்கி, பின்னர் ஒருவாறு தெளிந்து,

"இதற்கு நான் அஞ்சேன், மருந்து கைகண்டு கொண்டேன் இன்னும் ஒருகண்ணிருக்கின்றதே! அதைத்தோண்டி அப்பி இந்நோயைத் தீர்ப்பேன்" என்று துணிந்து.

தம்முடைய கண்ணைத் தோண்டியபொழுது சுவாமியுடைய கண் இவ்விடத்திலிருக்கின்றது என்று தெரியும் பொருட்டு, ஒரு செருப்புக்காலை அவர் கண்ணின் அருகிலே ஊன்றிக் கொண்டு, பின்னே மனசிலே பூர்த்தியாகிய விருப்பத்தோடும் தம்முடைய கண்ணைத்தோண்டும்படி அம்பைவைத்தார்.

தயாநிதியாகிய கடவுள் அதைச் சகிக்கலாற்றாதவராகி, வேதாகமங்கள் தோன்றிய தம்முடைய அருமைத் திருவாய் மலரைத் திறந்து,

"நில்லு கண்ணப்ப நில்லு! கண்ணப்ப! என்னன் புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப! என்று அருளிச் செய்து, அவருடைய கண்ணைத் தோண்டும் கையைத் தமது வியத்திஸ்தானமாகிய இலிங்கத்திற்றோன்றிய திருக்கரத்தினாலே பிடித்துக்கொண்டார். உடனே பிரமாதி தேவர்கள் சமஸ்தரும் வேதகோஷத்தோடும் நிலம் புதையக் கற்பகப் பூமாரி பெய்தார்கள்.

மகாஞானியாகிய சிவகோசரியார் இந்தச் சமாசாரம் முழுதையும் கண்டு, அத்தியந்த ஆச்சரியமடைந்து, சுவாமியை வணங்கினார். அற்றைநாள் முதலாகப் பெரியோர்கள் சுவாமி சொல்லிய படியே அவருக்குக் கண்ணப்பர் என்னும் பெயரையே வழங்குகிறார்கள். 

நெடுங்காலமாக உஷ்ணமாகிய அக்கினி மத்தியில் நின்று ஐம்புலன் வழியே செல்லாதபடி மனசை ஒடுக்கி அருந்தவஞ் செய்கின்றவர்களுக்கும் கிட்டாத பரம்பொருளாகிய கடவுள் ஆறுநாளுக்குள்ளே பெருகிய அன்பு மேலீட்டினாலே, தம்முடைய திருநயனத்தில் இரத்தத்தைக் கண்டு அஞ்சித் தம்முடைய கண்ணை இடந்து அத்திருநயனத்தில் அப்புந் திண்ணனாருடைய கையைத் தமது அருமைத் திருக்கரத்தினாலே பிடித்துக்கொண்டு "கண்ணப்பா" என்று ஈசன் அழைத்தார் இதற்கு மேல் என்ன வேண்டும்.

இன்றும் தினமும் சூரியன் மறையும் மாலை நேரத்தில் கண்ணப்பர் காளத்திநாதனை வணங்குவதாக நம்பப்படுகிறது, காளஹஸ்தி சென்று ஆலயத்தின் மூலவர் மண்டபம் வழியாக பார்த்தால் கண்ணப்பரை நாயனாரை காணலாம். பஞ்ச பூத ஸ்தலங்களில்(காற்று) ஒன்று, ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலம். அகத்தியர், வழிபட்ட பாதாள விநாயகர் (இந்த விநாயகர் பூமியின் அடியில் இருக்கிறார் இவரை தரிசனம் செய்வது சுலபமல்ல) அருள் புரிகிறார். ஈசனும் உமைஅன்னையும் ஏதிர் ஏதிரே நின்று அருள் புரிகின்றனர் தலம்.

வாழ்வில் ஒருமுறையாவது கண்ணப்பர், சிவகோசரியார், அகத்தியர், பட்டினத்தார் மற்றும் பலர் வழிபட்ட காலத்தை மாற்றும் சக்தி பெற்ற காளத்தி நாதனையும் வழிபட்டு துன்பங்களை நீங்கி இன்பங்களை பெறுவோம்...

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

18 - கலிய நாயனார்

Image may contain: 3 people

பெயர் : கலிய நாயனார்
குலம்: செக்கார்
பூசை நாள் : ஆடி கேட்டை
அவதாரத் தலம்: திருவொற்றியூர்
முக்தித் தலம் : திருவொற்றியூர்

வரலாற்று சுறுக்கம்:

சிவந்தாள் சேர்தலே வாழ்விலட்சிய முடிநிலை யாதலாலும் அதற்கு நேர்வாயில் சிவதொண்டே யாதலாலும் அதன்பொருட்டு ஒருவரின் இடம்பொருள் ஏவலுக்கமைந்த எல்லாம் ஈடாக்கப்படலாம்; சுயகௌரவமும் அதற்குப் பலியாக்கப்படலாம் என்பதற்குக் கலிய நாயனார் வரலாறு கண்கண்ட சாட்சியாகும்.

தொண்டைமண்டலத்திலே, திருவொற்றியூரிலேயுள்ள சக்கரப்பாடியிலே, செக்கார் குலத்திலே, கலியநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பெருஞ்செல்வராகி செல்வநிலையாமையையும் யாக்கை நிலைமையையும் உணர்ந்து, சிவபுண்ணியஞ் செய்தல்வேண்டும் எனத் தெளிந்து, அந்தத் திருப்பதியில் உள்ள சிவாலயத்தின் உள்ளும் புறம்பும் அல்லும் பகலும் எண்ணிறந்த திருவிளக்கு ஏற்றுவாராயினார்.

பரமசிவன் நெடுங்காலம் இத்திருத்தொண்டைச் செய்துவரும் அவ்வடியாருடைய பத்திவலிமையைப் பிறர்க்குப் புலப்படுத்தும் பொருட்டு, அவரிடத்து உள்ள செல்வமெல்லாங் குன்றும்படி அருள்செய்தார்.

அவர் தாம் வறுமையெய்தியும் தமது மரபில் உள்ளோர் தரும் எண்ணெயை வாங்கிக் கூறிவிற்றுக் கொணர்ந்து, கூலி பெற்று, தாஞ்செய்யுந் திருத்தொண்டை வழுவாது செய்தார். சில நாளாயினபின் அவர்கள் கொடாதொழிய; அவர் மனந்தளர்ந்து, எண்ணெயாட்டும் இடத்திற்சென்று, தொழில் செய்து கூலி வாங்கி, திருவிளக்கிட்டார். 

பின்பு அத்தொழில் செய்வோர்கள் பலராய்ப் பெருகினமையால், அத்தொழிலால் வரும் பேறுங் கிடையாதுமுட்ட; ஒருநாள் கவலைகொண்டு, தம்முடைய மனைவியாரை விற்பதற்கு முடிவு செய்தார்.

வாங்குவார் இன்மையால் மனந்தளர்ந்து, ஆலயத்தை அடைந்து, திருவிளக்கேற்றுஞ் சமயத்திலே, "திருவிளக்குப்பணி மாறில் நான் இறந்துவிடுவேன்" என்று துணிவுகொண்டு, திரியிட்ட அகல்களைப் பரப்பி, எண்ணெய்க்குப் பிரதியாகத் தமது இரத்தத்தை நிறைக்கும் பொருட்டு ஆயுதத்தினாலே கழுத்தை அரிந்தார்.

அப்பொழுது கிருபாசமுத்திரமாகிய பரமசிவன் நேர்வந்து அவருடைய கையைப் பிடித்து, அவருக்குமுன் இடபாரூடராய்த் தோன்றியருள; அவர் தாம் உற்ற ஊறுநீங்கி, சிரசின்மேல் அஞ்சலி செய்துகொண்டு நின்றார். சிவபெருமான் அவரைத் தமது திருவடியிலே சேர்த்தருளினார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

19 - கழறிற்றறிவார் நாயனார்
Image may contain: 4 people
பெயர்: கழறிற்றறிவார் நாயனார்
குலம்: அரசர்
பூசை நாள்: ஆடி சுவாதி
அவதாரத் தலம்: கொடுங்கோளூர்
முக்தித் தலம்: திருவஞ்சைக்

வரலாற்று சுருக்கம்:

“கார்கொண்ட கொடைக்
கழறிற்றறிவார்க்கும் அடியேன்”
திருத்தொண்டத் தொகை.

கழறிற்றறிவார் நாயனார் சிவ பக்தி பற்றி ஒருபதிவில் விளக்கம் தர இயலாது ஆகையால் இருதனி தனி பதிவுகளாக அறினலாம்

சோழ நாட்டிலே சேரமன்னர் குலமும் உலகும் செய்த பெரும் தவப்பயனாகப் பெருமாக்கோதையார் அவதரித்தார். அரச குமாரராகிய அவர், மண் மேற் சைவநெறி வாழ வளர்ந்து, முன்னைப் பல பிறவிகளிலும் பெற்ற பேரன்பினாற் கண்ணுதற் பெருமானாகிய சிவபெருமானுடைய திருவடிகளையே பரவும் கருத்துடையராயினார் தமக்குரிய அரசியற் தொழிலை விரும்பாமல் திருவஞ்சைக்களமென்னுந் திருக்கோயிலையடைந்து சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்துறைதலை விரும்பினார்.

உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல எனவுணர்ந்த அப்பெருந்தகையார், நாடோறும் விடியற்காலத்தே நித்திரை விட்டெழுந்து நீராடித் திருவெண்ணீறணிந்து மலர் கொய்து மாலை தொடுத்தமைத்துத் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் செல்வார். அங்கு திருவலகும் திருமெழுகுமிட்டுத் திருமஞ்சனம் கொணர்ந்து இறைவனுக்கு நீராட்டி, முன்னைய அருளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒருமை மனத்துடன் ஓதி அருச்சித்து வழிபாடு புரிந்து வருவார்.

இங்கனம் நிகழும் நாளில் மலைநாட்டையாட்சி புரிந்த செங்கொற்பொறையான் என்ற சேரவேந்தன் தனது அரச பதிவினைத் துறந்து தவஞ்செய்தற் பொருட்டுக் கானகஞ் சென்றான். இந்நிலையில் அரசியல் நூல் நெறியில் வல்ல அமைச்சர்கள் சேர நாட்டின் அரசியல் நலங்குறித்துச் சிலநாள் ஆராய்ந்தனர்.

பண்டைச் சேர மன்னர் மேற்கொண்டொழுகிய பழைய முறைமைப்படி அந்நாட்டின் ஆட்சியுரிமை திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டு புரிந்துவரும் சேரர்குலத் தோன்றலாகிய பெருமாக்கோதையாருக்கே உரியதெனக் கண்டனர். திருவஞ்சைக்களத்தை அடைந்து பெருமாக்கோதையாரை வணங்கி இச்சேரநாட்டின் ஆட்சியுரிமை தங்களுக்குரியதாதலால் தாங்களே இந்நாட்டினைக் காக்கும் ஆட்சி புரிந்தருளுதல் வேண்டும்’ என வேண்டினர். 

பெருமாக்கோதையார் ‘மென்மேலும் பெருகும் இன்ப மயமாகிய சிவதொண்டுக்கு இடையூறான ஆட்சியுரிமையை ஏற்றுக்கொள்ளும்படி இவ்வமைச்சர்கள் என்னை வற்புறுத்துகின்றார்கள். இச்சிவதொண்டிற்குச் சிறிதும் தடை நேராதபடி அடியேன் இந்நாட்டை ஆட்சிபுரிய இறைவனது திருவருள் துணைபுரிவதானால் அப்பெருமானது திருவுள்ளக் கருத்தையுணர்ந்து நடப்பேன்’ எனத் தமதுள்ளத்தில் எண்ணிக்கொண்டு திருவஞ்சைக்களத் திருக்கோயிலிற் புகுந்து இறைவன் திருமுன்னர் பணிந்து நின்றார்.

இறைவனது திருவருளால் தமக்குரிய அரசுரிமையில் வழுவாது ஆட்சிபுரிந்த இறைவனைப் பேரன்பினால் விரும்பி வழிபடுமியல்பும், புல் முதல் யானை ஈறாக உள்ள எல்லா உயிர்களும் மக்கள் யாவரும் தம்நாட்டு அரசியலின் நன்மை குறித்துத் கூறுவனவற்றை மனத்தினால் உய்த்துணர்ந்து கொள்ளும் நுண்ணுர்வும், கெடாத வலிமையும், கைம்மாறு கருதாது இரவர்க்கு ஈயவல்ல (கொடுக்கவல்ல) கொடை கெடாத வண்மையும், நாடாள் வேந்தர்க்கு இன்றியமையாத படை ஊர்தி முதலிய அரசுறுப்புக்களும் ஆகிய எல்லா நலங்களும் உயர் திணை மக்களும் கழறிய (மிருகங்களின்) சொற்பொருளை உய்த்துணரும் நுண்ணறிவினைப் பெற்றவர் பெருமாக்கோதையாராதலின் அவர்க்கு கழறிற்றறிவார் என்பது காரணப்பெயராயிற்று.

உலகுயிர்கள் கழறுச் சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையார், தாம் முடிசூடிச் சேரநாட்டினை ஆட்சி புரிதல் வேண்டும் என்பது சிவபெருமான் திருவுள்ளக் கருத்தாதலை உணர்ந்து வணங்கி அமைச்சர் வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். அவரது இசைவுபெற்று மகிழ்ந்த அமைச்சர்கள் வெண்டுவன செய்ய உரிய நன்னாளில் திருமுடிசூடி இவ்வுலகத்தை ஆட்சிபுரியும் பெருவேந்தராயினார். 

மலைநாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் பெருமாள் நாயனார். திருவஞ்சைக்களத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கிப் பட்டத்து யானை மீது அமர்ந்து வெற்றிக்குடையும் வெண்சாமைரையும் பரிசனங்கள் தாங்கிவர, நகரில் நகரில் திருவுலா வந்தனர்.

அப்பொழுது உவர்மண் பொதியைத் தோளிலே சுமந்து வரும் ஒருவன் கண்ணெதிர்பட்டான். மழையில் நனைந்து வந்த அவனது சரீரம் உவர்மண் படிந்து வெளுத்திருந்தமையால் உடல் முழுவதும் படிந்து வெளுத்திருந்தமையால் உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேடம் எனக்கொண்ட சேரமான் பெருமாள் விரைந்து யானையினின்றும் இறங்கிச் சென்று வணங்கினார்.

அரசர் பெருமான் தன்னை வணங்கக் கண்டு சிந்தை கலங்கி அச்சமுற்ற அவன், அரசரைப் பணிந்து ‘அடியேன் தங்கள் அடிமைத் தொழில் புரியும் வண்ணான்’ என்றான்.

அதுகேட்ட சேரர்பிரான் ‘அடியேன் அடிச்சேரன் காதலாற் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை அடியேன் நினைக்கும்படி செய்தீர். இதுபற்றி மனம் வருந்தாது செல்வீராக’ என அவனிற்குத் தேறுதல் கூறி அனுப்புவாராயினர். அன்பு நிறைந்த சேரமான் பெருமாளது அடியார் பத்தியைக் கண்டு வியந்த அமைச்சரனைவரும் அப்பெருந்தகையை வணங்கிப் போற்றினர்.

சேரமான் பெருமாள் யானை மீதமர்ந்து நகர்வலஞ் செய்து அரண்மனை அடைந்துள அரியணையில் வீற்றிருந்து அரசுபுரிந்தருளினார். மேற்றிசை வேந்தராகிய இப்பெருந்தகையார் கீழ்த்திசை வேந்தராகிய சோழ மன்னரோடும் தென்திசை வேந்தராகிய பாண்டிய மன்னரோடும் நண்பராக விளங்கினார். மூவேந்தரும் தமிழகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள பகைகளைக் களைந்து திருநீற்றொளியாகிய சிவநெறி வளரவும், வேதநெறி வளரவும் அறநூல் முறையே ஆட்சிபுரிந்தனர்.

பெருமாதைக் கோதையார் தாம் பெற்ற அரசபதவியின் பயனும் நிறைந்த தவமும், தேடும் பொருளும், பெருந்துணையும் ஆகிய இவையெல்லாமாக விளங்குவது தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் திருவடித்தாமரையெனத் தெளிந்தார். ஆதலால் நாள்தோறும் சிவபூசை செய்வதை, தமக்குரிய கடைமையாக மேற்கொண்டார். திருமஞ்சனம், பூ, புகை, ஒளி ஆகியவற்றுடன் செய்யும் அன்பு நிறைந்த சிவபூசை ஏற்றுக்கொண்ட இறைவர், தமது திருவடிச் சிலம்பின் ஒலியினைச் சேரமான் செவிகுளிரக் கேட்டின்புறும் வண்ணம் ஒலிப்பித்தலை வழக்கமாகக் கொண்டருளினார்.

இந்நிலையில் பாண்டியனது தலைநகராகிய மதுரையம்பதியிலே திருவாலவாயென்னுந் திருக்கோயிலிலே எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் தம்மை இன்னிசையாற் பரவிப்போற்றும் பாணபத்திரனென்னும் இசைப் பாணரது வறுமையை நீக்கத் திருவுளங் கொண்டு அவரது கனவில் தோன்றி ‘அன்பனே, என்பாற் பேரன்புடைய சேரமான் பெருமாளென்னும் வேந்தன் உனக்குப் பொன், பட்டாடைகள், நவமணிகலன்கள் முதலாக நீ வேண்டியதெல்லாங் குறைவறக் கொடுப்பான். அவனுக்கு ஒரு திருமுகம் எழுதிக் கொடுத்திருக்கிறோம் நீ அதனைப் பெற்றுக்கொண்டு மலைநாடு சென்று பொருள் பெற்று வருவாயாக’ எனக் கூறினார் சிவபெருமான்; ‘மதிமலிபுரிசை’ எனத் தொடங்கும் திருப்பாடல் வரையப் பெற்ற திருமுகத்தைக் கொடுத்தருளினார்.

திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரத்தைப் பெற்ற பாணபத்திரர், சேர நாட்டையடைந்து சேரமான் பெருமாளைக் கண்டார். பாணர் தந்த திருமுகத்தை வாங்கி முடிமேற் கொண்ட சேரர் பெருமான் அப்பாசுரத்தைப் பலமுறை படித்து உளமுருகினார். அமைச்சர் முதலியோரை அழைத்து தமது நிதியறையில் உள்ள பலவகைப் பொருள்களையும் பொதி செய்து கொணரச் செய்து ‘இப்பெரும்பொருள்களையும்,
யானை , குதிரை முதலிய சேனைகளையும், இம்மலைநாட்டு ஆட்சியுரிமையினையும் தாங்களே ஏற்றருள வேண்டும்’ எனப் பாணபத்திரரை வேண்டி நின்றார்.

அவரது கொடைத் திறத்தைக் கண்டுவியந்த பாணபத்திரர் ‘என் குடும்ப வாழ்விற்குப் போதுமான பொருள்களை மட்டும் அடியேன் தங்கள்பால் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இறைவனது ஆணை. ஆதலின், அரசாட்சியும் அதற்கு இன்றியமையாத அரசுறுப்புக்களுமாகிய இவற்றைத் தாங்களே கைக்கொண்டருளதல் வேண்டும்’ என்று கூறினார். இறைவரது ஆணையைக் கேட்ட சேரபெருமாள். அவ்வாணையை மறுத்தற்கு அஞ்சிப் பாணபத்திரது வேண்டுகோளிற்கு இசைந்தார். பாணரும் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் பெற்றுக்கொண்டு அன்பினால் தம்மைப் பின் தொடர்ந்து வந்து வழியனுப்பிய சேரமானிடம் விடைபெற்று மதுரை நகரத்தையடைந்தார்.

கழறிற்றழிவாகியாராகிய சேராமான்பெருமாள், என்றும் போல ஒருநாள் சிவபூசை செய்துகொண்டிருந்த பொழுது, வழிபாட்டில் நாடோறுங்கேட்டின்புறுவதாகிய திருச்சிலம்பொலியை அன்று கேட்கப் பெறாது பெரிதும் மனங்கலங்கினார். அடியேன் என்ன பிழை செய்தேனோ எனப் பொருமினார். இறைவனை வழிபடும் ஆசை காரணமாக யான் சுமந்துள்ள இவ்வுடம்பினால் அடியேன் பெறுதற்குரிய இன்பம் வேறென்ன இருக்கிறது எனக் கலங்கித் தம் உயிரைப் போக்கிக்கொள்ளும் எண்ணத்துடன் உடைவாளை உருவித் தம் மார்பில் நாட்டப் புகுந்தார். 

அந்நிலையில் அருட்கடலாகிய கூத்தப் பெருமான் விரைந்து தனது திருவடிச் சிலம்பொலியைச் சேராமன் பெருமாள் செவிகுளிரக் கேட்டு மகிழும் வண்ணம் ஒலிக்கச் செய்தார். சிலம்பொலியைக் கேட்டு மகிழ்ந்த சேரவேந்தர் தமது உடைவாளைக் கீழே எறிந்துவிட்டுத் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். 

‘தேவர்களும் தேடிக் காணுதற்கரிய பெருமானே! இத்திருவருளை முன்பு செய்யாது தவிர்த்தது எது கருதி? என வினவினார் கழறிற்றழிவாகியாராகிய சேராமான்பெருமாள்.

அந்நிலையில் தோன்றாத் துணையாக மறைந்து நின்றருளிய இறைவர் “சேரனே! வன்றொண்டனாகிய சுந்தரன் தில்லையம்பலத்திலே நாம் புரியும் திருக்கூத்தினைக் கண்டு ஐம்புலன்களும் ஒன்றிய உணர்வுடன் நின்று புகழமைந்த திருபதிகங்களால் நம்மைப் பரவிப் பாடினான். அவன் பாடிய தீஞ்சுவைப் பாடலில் நாம் திளைத்திருந்தமையால் இங்கு நீ புரியும் வழிபாட்டிற்கு உரிய நேரத்தில் வரத் தாழ்ந்தோம்’ எனத் திருவாய் மலர்ந்தருளினார். அவ்வருள் மொழியைச் செவிமடுத்த சேரமான் பெருமாள் ‘அடியார்களுக்கு அருள் புரியும் இறைவனது கருணைத்திறம் என்னே’ என வியந்து உளமுருகினார்.

இறைவன் திருநடம்புரிந்தருளும் பெரும்பற்றப் புலியூரிலமைந்த பொன்னம்பலத்தையும் அங்கே இறைவனது ஆடல் கண்டு மகிழ்ந்த தன்னேரில்லாப் பெரியோராகிய வன்றொண்டரையும் கண்டு வழிபடுதல் வேண்டும் எனக் கருதிச் சோழ நாட்டிற்குச் செல்ல விரும்பினார். திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டுச் சேனைகளுடன் புறப்பட்டுச் கொங்கு நாட்டைக் கடந்து சிவனடியார்கள் எதிர்கொண்டு போற்றச் சோழநாட்டை அடைந்தார்.

காவிரியில் நீராடி அதனைக் கடந்து தில்லைமூதுரின் எல்லையை அடைந்தார். அந்நிலையில் தில்லை வாழந்தணர்களும் சிவனடியார்களும் எதிர்கொண்டு போற்றச் சோழநாட்டை அடைந்தார். காவிரியில் நீராடி அதனைக் கடந்து தில்லைமூதூரின் எல்லையையணுகினார். அந்நிலையில் தில்லைவாழ் அந்தணர்களும் சிவனடியார்களும் எதிர்கொண்டு வரவேற்றனர். 

அடியர்களோடு தில்லைத் திருவீதியை வலம்வந்து எழுநிலைக் கோபுரத்தை வணங்கி உட்புகுந்த சேரமான்பெருமாள் நாயனார் திருப்பேரம்பலத்தை இறைஞ்சி உள்ளே புகுந்து இறைவன் ஆடல் புரியும் திருச்சிற்றம்பலத்தின் முன் அணைந்தார். அளவில்லாப் பெருங்கூத்தராகிய இறைவரது திருக்கூத்தினை ஐம்புலன்களும் ஒன்றிய ஒருமையுணர்வாற் கண்டு உருகிப் போற்றித் திருவருளின்பக்கடலில் திளைத்து இன்புற்றார்.

தாம் பெற்ற பேரின்பத்தை வையத்தார் அனைவரும் பெற்று மகிழும் வண்ணம் கூத்தப்பெருமானது கீர்த்தியை விரித்துரைக்கும் செந்தமிழ்ப் பனுவலாகிய பொன்வண்ணத் திருவந்தாதியினைப் பாடியருளினார். சேரர் பாடிய திருவந்தாதியினைக் கேட்டு மகிழ்ந்த தில்லையம்பலவர் அதற்குப் பரிசிலாகத் தூக்கிய திருவடியிலணியப் பெற்ற திருச்சிலப்பொலியை நிகழ்த்தியருளினார். 

ஆடற்சிலம்பொலியினைச் செவிமடுத்து அளவிலாப் பேருவகையுற்ற சேரமான்பெருமாள் காலந்தோறும் கூத்தப்பெருமானைக் கும்பிட்டுத் திருல்லைப்பதியிற் சில நாள் தங்கியிருந்தார்.

பின்னர் நம்பியாரூரரைக் கண்டு வணங்குவதற்கு விரும்பித் தில்லையினின்றும் புறப்பட்டுப் பல தலங்களை வணங்கி திருவாரூரை அடைந்தார் சேரமான்பெருமானாகிய கழறிற்றறிவார் நாயனார். நம்பியாரூரர், சிவனடியார்களுடன் அவரை எதிர்கொண்டழைத்தார். நம்பியாரூரைக் கண்ட சேரவேந்தர் நிலமிசை விழுந்திறைஞ்சினார். தம்மை வணங்கிய சேரமான்பெருமாளைத் தாமும் வணங்கித் தம் இரு கைகளாலும் தூக்கியெடுத்துத் தம் இரு கைகளாலும் ஒருவரொவரிற் கலந்த பெரும் நட்பினராய்ப் பெருமகிழ்ச்சியுற்றார்கள். 

இங்கனம் இருவரும் உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என அன்பினால் அளவளாவி மகிழும் தோழமைத் திறத்தைக் கண்ணுற்ற சிவனடியார்கள், நம்பியாரூரரைச் ‘சேரமான் தோழர்’ என்ற பெயரால் அழைத்து மகிழ்ந்தனர். சேரமான் தோழராகிய சுந்தரர் சேரமான் பெருமானது கையினை பற்றி அழைத்துச் சென்றார். இருவரும் திருவாரூர்க் திருக்கோயிலை அடைந்து அடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைப் பணிந்து திருக்கோயிலை வலம் வந்தனர். 

சேரமான் பெருமாள் உடைய நம்பியாராகிய சுந்தரைத் தொடர்ந்து சென்று பூங்கோயிலமர்ந்த பெருமானை நிலமிசைப் பல முறை விழுந்திறைஞ்சினார். புற்றிடங்கொண்ட பெருமானைப் போற்றிக் கண்களில் அன்பு நீர் பொழியத் திருமும்மணிக் கோவையென்னுஞ் செஞ்நூல் மாலை புனைந்தேத்தினார்.

தாம் பாடிய செந்தமிழ் நூலைத் தம் தோழராகிய சுந்தரர் திருமுன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார். ஆரூரிடங்கொண்ட இறைவரும் சேரவேந்தர் பாடிய தெய்வப் பாமலையை விரும்பி ஏற்றுக்கொண்டருளினார். பின்பு சுந்தரர் சேரமான் பெருமாளை அழைத்துக்கொண்டு நங்கை பரவையார் திருமாளிகைக்குச் சென்றார்.

பரவையார், திருவிளக்கு நிறைகுடம் முதலிய மங்கலப் பொருட்களுடன் சேரமான் பெருமானை வரவேற்று வணங்கிச் சேரர் பெருமானிற்கும் சிவனடியார்களுக்கும் உடன் வந்த பரிசனங்களிற்கும் தக்கவகையால் திருவமுது அமைத்து அன்புடன் உபசரித்தார். ஆண்டநம்பியும் சேரமான் பெருமாளும் உடனிருந்து திருவமுது செய்தருளினார்.

இவ்வாறு சேரமான்பெருமாளும் நம்பியாரூரரும் திருவாரூரில் தங்கியிருக்கும் பொழுது பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய திருத்தலங்களை வழிபடவேண்டும் என்ற எண்ணம் சுந்தரர்க்கு உண்டாயிற்று. அவர்தம் விருப்பத்தினைச் சேரமான்பெருமாளுக்குத் தெரிவித்தார்.

வன்றொண்டரைப் பிரியாத பெருமானாகிய சேரமான் பெருமாள் தமக்குத் திருமுகப் பாசுரம் அனுப்பியருளிய திருவாலவாய்ப் பெருமானைப் போற்றவேண்டுமெனும் பேரார்வத்தால் தாமும் அவருடன் செல்லத் துணிந்தார். ஒத்த உள்ள உடையார் இருவர் அடியர் புடைசூழத் திருமறைக்காடு முதலிய தலங்களை வணங்கித் தென்தமிழ்ப் பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையை அடைந்தார்கள்.

அப்போது நாடாள் வேந்தனாகிய பாண்டியனும், பாண்டிய மகளை மணந்து மதுரையில் தங்கியிருந்த சோழ மன்னனும் எதிர் சென்று இவ்விருபெருமக்களையும் வரவேற்றுத் திருவாலவாய்த் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். நம்பியாரூரருடன் திருவாலவாய்ப் பெருமானைக் கண்டு மகிழ்ந்த சேரமான் பெருமாள், ‘அடியேனையும் ஒரு பொருளாக எண்ணித் திருமுகம் அருளிய பேரருளின் எல்லையை அறிந்திலேன்’ என எண்ணி உரை தடுமாறிக் கண்ணீரரும்ப ஆலவாய் கடவுளைப் பரவிப்போற்றினார்.

பாண்டியன் இவ்விரு பெருமக்களையும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்துப் போற்றினான். இங்கனம் சேர சோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர் மூவரும் நம்பியாரூராகிய சுந்தரரும் ஒருவரோடொருவர் அன்பினால் அளவளாவிப் பாண்டி நாட்டுத் தலங்களைப் பணிந்து இன்புற்றனர்.

சேரமான் பெருமாளும், சுந்தரரும், பாண்டியர் சோழராகிய இருபெருவேந்தர்களிடத்தும் விடைபெற்றுத் திருவாரூரரை அடைந்தனர். சேரமான் பெருமாள் அங்குச் சில நாள் தங்கியிருந்து தம் தோழராகிய நம்பியாரூரைத் தங்கள் நாட்டில் எழுந்தருளவேண்டுமென்று பலமுறையும் வேண்டிக்கொண்டனர். அவ்வேண்டுகோளுக்கிணங்கிய சுந்தரர், பரவையாரது இசைவு பெற்றுச் சேரவேந்தருடன் புறப்பட்டார்.

இருவரும் வழியிலுள்ள தலங்களை வணங்கிப் போற்றி மலைநாட்டவர் எதிர்கொள்ளக் கொடுங்கோளூரை அடைந்தார். சேரமான் பெருமாள் தம் ஆருயிர்த் தோழராகிய நம்பியாரூரரை அரியணையில் அமரச் செய்து, தம் தேவிமார்கள் பொற்குடத்தில் நன்னீர் ஏந்தி நிற்க நம்பியாரூரருடைய திருவடிகளை விளக்கி மலர்தூவி வழிபட்டார். அவருடன் உடனிருந்து அமுதருந்தி உபசரித்தார்.

செண்டாடுந் தொழில் மகிழ்வும் சிறுசோற்றுப் பெருவிழாவும் பாடல் ஆடல் இன்னியங்கள் முதலாக பலவகை வாத்தியங்கள் விளையாடல்களும் நிகழ்ச்செய்து தம் தோழரை மகிழ்வித்து அளவளாவி மகிழ்வாராயினர்.

நண்பர் இருவரும் அளவளாவி மகிழும் நாட்களில் நம்பியாரூரர்க்குத் திருவாரூர்ப் பெருமானைக் கண்டு வணங்க வேண்டுமென்ற நினைவு தோன்றியது. அந்நினைவு மீதூரப் பெற்ற சுந்தரர், 'பொன்னும் மெய்ப்பொருளுந் தந்து போகமும் திருவும் புணர்த்தருளும் ஆரூர்ப் பெருமானை மறத்தலும் ஆமே' எனப் பாடித் தமது ஆற்றாமையை தம் தோழராகிய சேரமானுக்கு உணர்த்தி விடைபெற முயன்றார். 

சுந்தரரின் உளக்குறிப்பறிந்த சேரமான் பெருமாள், ‘இன்று உமது பிரிவாற்றேன் என்செய்வேன்’ என்றுரைத்து மிகவும் வருந்தினார். நம்பியாரூரர் தம் தோழரை நோக்கி ‘இந்நாட்டில் உளவாம் இடர்நீங்கப் பகைநீக்கி அரசாளுதல் உமது கடன்’ என அறிவுத்தினார்.

அதனைக் கேட்ட வேந்தர் பெருமான் ‘இவ்வுலக ஆட்சியும் வானுலக ஆட்சியுமாக அமைந்து எனக்கு இன்பஞ் செய்வன உம்முடைய திருவடித் தாரைகளே. திருவாரூர்க்கு எழுந்தருள வெண்ணிய உமது மனவிருப்பத்தை நீக்கவும் அஞ்சுகின்றேன்’ என்றார். 

‘என்னுயிர்க்கு இன்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானை வன்னெஞ்சக் கள்வனேன் மறந்திரேன். நீவிர் வணங்கினார் வன்றொண்டரை வணங்கி தம்முடைய திருமாளிகையிலுள்ள பெரும் பொருள்களைப் பொதிசெய்து ஆட்களின் மேல் ஏற்றுவித்து நெடுந்தூரஞ்சென்று வழியனுப்பினார். 

சுந்தரரும் தம்தோழரைத் தழுவி விடைபெற்றுத் திருவாரூரை அடைந்தார். சேரமான்பெருமாள் தம் தோழராகிய நம்பியாரூரரை மறவாத சிந்தையுடன் கொடுங்களூரிலிருந்து மலைநாட்டை ஆட்சிபுரிந்திருந்தார்.
நெடுநாட்களின் பின் சுந்தரர் மீண்டும் கொடுங்களூருக்கு வந்து தம் தோழராகிய சேரமான் பெருமாளுடன் பல நாட்கள் அளவளாவி மகிழ்ந்திருந்தார். 

ஒருநாள் சேரமான் பெருமாள் திருமஞ்சனச்சாலையில் நீராடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலையடைந்து அஞ்சைக்களத்து இறைவனை வழிபட்டுத் ‘தலைக்குத் தலைமாலை’ என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி நின்றார். 

அந்நிலையில் அவரது பாசத்தளையை அகற்றிப் பேரருள் புரிய விரும்பிய சிவபெருமான், சுந்தரரை அழைத்துவருமாறு திருக்கயிலாயத்தில் இருந்து வெள்ளையானையுடன் தேவர்களை அனுப்பி அருளினார். வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களத் திருக்கோயில் வாயிலையடைந்த தேவர்கள் நம்பியாரூரரைப் பணிந்து நின்று ‘தாங்கள் இவ் வெள்ளையானையின் மீது அமர்ந்து திருக்கயிலைக்கு உடன் புறப்பட்டு வருதல் வேண்டுமென்பது இறைவரது அருளிப்பாடு’ என விண்ணப்பஞ் செய்தார்கள்.

இந்நிலையில் நம்பியாரூரர் செய்வதொன்றும் அறியாது தம் உயிர்த்தோழராகிய சேரமான்பெருமாளைத் தம் மனதிற் சிந்தித்துக் கொண்டு வெள்ளையானையின் மீது ஏறிச் செல்வாராயினார்.
இவ்வாறு தம் உயிர்த்தோழராகிய சுந்தரர் தம்மை நினைத்துச் செல்லும் பேரன்பின் திறத்தைத் திருவாற்றலால் விரைந்துணர்ந்த கழற்றறிவாராகிய சேர வேந்தர், பக்கத்தில் நின்ற குதிரையின் மீது ஏறித் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்கு விரைந்து சென்றார்.

வெள்ளை யானையின் மீதமர்ந்து விண்ணிற் செல்லும் தம் தோழரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே மந்திரவைந்தெழுத்தினை உபதேசித்தார். அவ்வளவில் குதிரை வானமீதெழுந்து வன்றோண்டர் ஏறிச்செல்லும் வெள்ளையானையை வலம்வந்து அதற்கு முன்னே சென்றது. அப்பொழுது சேரமான் பெருமாளைப் பின்தொடர்ந்து சென்ற படைவீரர்கள், குதிரை மீது செல்லும் தம் வேந்தர் பெருமானைக் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரையிற் கண்டு பின் காணப்பெறாது வருத்தமுற்றார்கள்.

தம் வேந்தர் பெருமானைத் தொடர்ந்து செல்ல வேண்டுமென்ற மனத்திட்பமுடையராய் உடைவாளினால் தம் உடம்பை வெட்டிவீழ்த்தி வீர யாக்கையைப் பெற்று விசும்பின் மீதெழுந்து தம் அரசர் பெருமானைச் சேவித்து சென்றனர். சேரமான்பெருமாளும் சுந்தரரும் திருக்கையிலாயத்தின் தெற்கு வாயிலை அணுகிக் குதிரையிலிருந்தும் யானையிலிருந்தும் இறங்கி வாயில்கள் பலவற்றையுங் கடந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். 

சேரமான் பெருமாள் நந்தி தேவரால் உள்ளே புக அனுமதியின்றி வாயிலில் தடைப்பட்டு நின்றார். அவருடைய தோழராகிய சுந்தரர் உள்ளே போய்ச் சிவபெருமான் திருவடிமுன்னர் பணிந்தெழுந்தார். ‘கங்கை முடிக்கணிந்த கடவுளே! தங்கள் திருவடிகளை இறைஞ்சுதற் பொருட்டுச் சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிலின் புறத்திலே வந்த நிற்கின்றார்’ என விண்ணப்பஞ் செய்தார். 

சிவபெருமான், பெரிய தேவராகிய நந்தியை அழைத்துச் ‘சேரமானைக் கொணர்க’ எனத் திருவாய்மலர்ந்தருளினார். அவரும் அவ்வாறே சென்று அழைத்து வந்தார் நந்தி தேவர்.

சேரமான் பெருமாள் இறைவன் திருமுன்பு பணிந்து போற்றி நின்றார். இறைவன் புன்முறுவல் செய்து சேரமானை நோக்கி, ‘இங்கு நாம் அழையாதிருக்க நீ வந்தது எது கருதி’ என வினவியருளினார்.

அதுகேட்ட சேரவேந்தர் இறைவனைப் பணிந்து “செஞ்சடைக் கடவுளே! அடியேன் இங்கு தெரிவித்தருளும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. எனது பாசத்தளையை அகற்றுதற் பொருட்டு வன்றொண்டரது தோழமையை அருளிய பெருமானே!. மறைகளாலும் முனிவர்களாலும் அளவிடுதற்கரிய பெரியோனாகிய உன்னைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு திருவுலாப்புறம் என்ற செந்தமிழ் நூல் ஒன்றைப் பாடி வந்துள்ளேன். இத்தமிழ் நூலைத் தேவரீர் திருச்செவி சாத்தியருளல் வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்’ என்று விண்ணப்பஞ் செய்தார். 

அப்பொழுது சிவபெருமான், ‘சேரனே அவ்வுலாவைச் சொல்லுக’ எனப் பணித்தருளினார். 

சேரமான்பெருமாள் நாயனாரும் தாம் பாடிய திருக்கைலாய ஞான உலாவைக் கயிலைப் பெருமான் திருமுன்னர் எடுத்துரைத்து அரங்கேற்றினார். சேரர்காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப்புறத்தை ஏற்றுக்கொண்ட இறைவன், அவரை நோக்கி சேரனே நம்பியாரூரனாகிய ஆலாலசுந்தரனுடன் கூடி நீவிர் இருவீரும் நம் சிவகணத்தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக’ எனத் திருவருள் செய்ய, சேரமான்பெருமாள் சிவகணத் தலைவராகவும் கயிலையில் திருத்தொண்டு புரிந்திருப்பாராயினர்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

20 - கழற்சிங்க நாயனார்
Image may contain: 2 people
பெயர்: கழற்சிங்க நாயனார்
குலம்: குறுநில மன்னர்
பூசை நாள்: வைகாசி பரணி
அவதாரத் தலம்: திருக்கச்சி
முக்தித் தலம்: திருக்கச்சி

வரலாற்று சுருக்கம்:

"கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"
திருத்தொண்டத்தொகை.

காடவர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி மற்றொன்றையும் அறியாத கழற்சிங்கநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனது திருவருள் வலிமையினால் வடபுலத்தரசர்களைப் போரிலே வென்று, அவர்கள் நாடுகளைக் கவர்ந்து எங்குஞ் சைவசமயந் தழைத்தோங்கும்படி அரசாண்டார்.

இப்படி யொழுகுநாளிலே மாதேவியோடு சிவஸ்தலங்கடோறுஞ்சென்று, சுவாமிதரிசனம் பண்ணித் திருத்தொண்டு செய்வாராகி, திருவாரூரை அடைந்து திருக்கோயிலிலே பிரவேசித்துச் சுவாமியை வணங்கினார். அப்பொழுது அவருடைய மாதேவி திருக்கோயிலை வலஞ்செய்து, அங்குள்ள சிறப்புக்களெல்லாவற்றையுந் தனித்தனியே பார்த்துக்கொண்டு வந்து, திருமாலைகட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப்பூவை எடுத்து மோந்தாள்.அங்கே வந்த செருத்துணைநாயனார் அதை கண்டார்.

உடனே செருத்துணைநாயனார் இதனைப் புஷ்பமண்டபத்துள் எடுத்து மோந்தாள் என்று நினைத்து, விரைந்து ஓடி வந்து, அவளைக் கூந்தலிலே பிடித்து இழுத்து வீழ்த்தி, அவளுடைய மூக்கைப் பிடித்துக் கத்தியினாலே அரிந்தார்.அவள் சோர்ந்து புலம்பினாள்.

அப்பொழுது கழற்சிங்கநாயனாரும் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு, அவளுக்குச் சமீபத்தில் வந்து, அவளைப் பார்த்து, மிகக்கோபித்து, 'சிறிதும் அஞ்சாமல் இந்தக் கொடுஞ்செய்கையைச் செய்தவர்யாவர்" என்று வினாவினார்.

செருத்துணை நாயனார் "இவள் சுவாமிக்குச் சாத்தற்பாலதாகிய புஷ்பத்தை எடுத்து மோந்தமையால் நானே இப்படிச் செய்தேன்" என்றார்.

அப்பொழுது கழற்சிங்கநாயனார் அவரை நோக்கி, "புஷ்பத்தை எடுத்த கையை முதலில துணிக்கவேண்டும்" என்று சொல்லி, கட்டிய உடைவாளை உருவித் தம்முடைய மனைவி புஷ்பமெடுத்த கையைத் துணிந்தார்.

அது கண்டு, தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள்.ஈசன் மூவருக்கும் காட்சி கொடுத்தார். கழற்சிங்கநாயனார் மனைவிக்கு மீண்டும் இருகரங்களையும் மூக்கையும் அளித்தார். இருவரின் பக்தியையும் கண்டு மனம் மகிழ்ந்து ஈசன் முக்தி அளித்தார்.

பின் செருத்துணை நாயனார் சில காலம் பல சிவாலயம் சென்று இறைபணி செய்து முக்தி அடைந்தார். கழற்சிங்கநாயனார் நெடுங்காலம் சைவநெறி தழைத்தோங்க அரசியற்றிக் கொண்டிருந்து பரமசிவனுடைய திருவடிநீழலை அடைந்தார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

21 - காரி நாயனார்
Image may contain: 4 people, indoor
பெயர்: காரி நாயனார்
குலம்: அந்தணர்
பூசை நாள்: மாசி பூராடம்
அவதாரத் தலம்: திருக்கடவூர்
முக்தித் தலம்: திருக்கடவூர்

வரலாறு சுருக்கம்:

“கணம்புல்ல நம்பிக்குங்
காரிக்கும் அடியேன்”
திருத்தொண்டத் தொகை.

தமிழ்த்துறைப் பயன் தெரிந்து அகத்திணை தழுவிய கோவைப் பிரபந்தமியற்றி அதன் முக்கியப் பொருளான வீட்டின்ப விளக்கம் இனிது புலப்பட மூவேந்தர் முன்னிலையில் அரங்கேற்றி அவர்களால் மகிழ்ந்துதவப் பெற்ற பெரும் பரிசுத்தொகை முழுவதும் சிவதலங்கள் நிருமாணித்தலினும் சிவனடியார்க்கு வெகுமதி செய்தலினும் விரயமாக்குஞ் சிவ தொண்டு நெறிநின்ற காரி நாயனார்...

மறையார் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார் . அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற்
காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர்.

அவர்கல் மகிழும் படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.
அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு
சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். 

சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார்.

நாளைய பதிவில் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரானவரும், உலகுக்கே அம்மைஅப்பனான சிவபெருமானே கயிலையில் வரும் போது "அம்மையே வருக" என்று அன்போடு அழைத்த காரைக்கால் அம்மையார் பற்றிய வரலாற்றை காணலாம்...

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

Link to comment
Share on other sites

22 - காரைக்கால் அம்மையார்
Image may contain: 1 person
பெயர்: காரைக்கால் அம்மையார்
குலம்: வணிகர்
காலம்: கி.பி. 300-500
பூசை நாள்: பங்குனி சுவாதி
அவதாரத் தலம்: காரைக்கால்
முக்தித் தலம்: திருவாலங்காடு

வரலாறு சுருக்கம்:

எவ்வாறு கண்ணப்ப நாயனார் மற்றும் கழறிற்றறிவார் நாயனார் சிவபக்தியே ஒரு பதிவில் விளக்கம் தர இயலாதோ அதே போல் காரைக்கால் அம்மையாரின் சிவபக்தியே ஒரு பதிவில் விளக்கம் தர இயலாது இரு தனித் தனிப் பதிவாக அறியலாம் முதல் பகுதியில் காரைக்கால் அம்மையார் மாங்கனி பெற்றதை காணலாம்.

இளமைக் காலம்:

காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார்.இவரின் இயற்பெயர் புனிதவதி. சோழமண்டலத்திலே, காரைக்காலிலே வைசியர்குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் புனிதவதியார் என்கின்ற ஒரு புத்திரியார் பிறந்தார். ஓவியம் போல அழகுடைய புனிதவதியார் சிறுவயது முதல் சிவபக்தியில் திளைத்தார்.

சிவஆலயத்தை சுத்தம் செய்வது, கோலமிடுவது, அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவந்து தருவது, விளக்கேற்றுவது மட்டுமே இன்றி தன் இல்லம் தேடிவரும் சிவ பக்தர்களை வணங்கி உணவிட்டு வந்தார்.வளர்ந்த தன் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார் புனிதவதியின் தந்தை தனதத்தன்.

இல்லறம்:

அத்தனதத்தன் அப்புத்திரியாரை நாகப்பட்டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திரனாகிய பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துத் தனக்கு வேறு பிள்ளையின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போகவிடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே ஒருவீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கணவனோடும் அதிலிருத்தினான். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். 

அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள்வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார்.
இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனிடத்திற் காரியமூலமாக வந்தவர்கள் சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கொடுக்க; அவன் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கருத்தை முடித்து, அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான்.புனிதவதியார் அவைகளை வாங்கி வைத்தார்.

பின்பு, சிவனடியார் ஒருவர் பசியினால் வருந்தி, அவர் வீட்டிற்சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்து, அந்நேரத்திலே கறியமுது பாகம் பண்ணப்படாமையால், "சிவனடியவரே பெறுதற்கு அரிய விருந்தினராய் வந்தபொழுதே, இதைப் பார்க்கிலும் பெறவேண்டிய பேறு நமக்கு ஒன்றும் இல்லை" என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் திருவமுது செய்வித்தார்.

அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய செய்கையை உவந்து போயினார். பின், பரமதத்தன் பகலிலே வீட்டுக்கு வந்து உணவு உண்ணும் பொழுது, மனைவியார் எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருத்தியடையாமல் மனைவியாரை நோக்கி, "மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை" என்றான்.

மாங்கனி பெறுதல்

புனிதவதியார் கொண்டு வரச் செல்பவர் போலப் போய் நின்று, கொண்டு, சோகித்து, தம்மை விசுவசிக்கின்ற மெய்யன்பர்களுக்கு உற்றவிடத்து உதவும் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், அதிமதுரமாகிய ஒருமாங்கனி அவர் கையில் வந்திருந்து விழுந்து. அதைக் கொண்டுவந்து, கணவனுடைய காலத்திலே படைக்க; அவன் அதை உண்டு, அதன் சுவை தேவாமிர்தத்தைப்பார்க்கிலுஞ் சிறந்தமையால் "இது முன் நான் தந்த மாங்கனியன்று இது மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியது, இதனை நீ எங்கே பெற்றாய்" என்றான்.

புனிதவதியார் அதைக்கேட்டு, கணவனுக்கு உண்மையை மறைத்துக் கூறுதலும் தகுதியன்று என்று நினைந்தமையால் தமக்குத் திருவருள் உதவிய திறத்தை நிகழ்ந்தபடி சொல்வதே கடன் என்று துணீந்து, "நீர் தந்த கனிகளில் ஒன்றை ஓரடியாருக்குக் கொடுத்து விட்டமையால், அதற்கு நான் யாது செய்வேன் என்று கவன்று, பரமசிவனைத் தியானித்துக் கொண்டு நின்றேன். அவருடைய திருவருளினால் இந்தக் கனி கிடைத்தது" என்றான் புனிதவதியார்.

இதை நம்பாத புனிதவதியார் கணவன் "என்ன பகல் கனவு காண்கிறாய்" என்றார்.

இதை கேட்ட புனிதவதியார் மனம் கலங்கி "நான் கூறுவது அனைத்தும் உண்மை" என்றார்.

"நீ கூறுவது உண்மை என்றால் மற்றோறு கனி கொண்டு வா" என்றார் புனிதவதியார் கணவன் பரமதத்தன்.

புனிதவதியார் அவ்விடத்தைவிட்டுப் போய், பரமசிவனைத் துதித்து, "இன்னும் ஒரு கனி தந்த தருளீராகில், அடியேனுடைய வார்த்தை பொய்யாய்விடும்" என்று விண்ணப்பஞ்செய்ய; சுவாமியுடைய திருவருளினாலே ஒரு மாங்கனி அவர்கையில் வந்து விழுந்தது.

மகிழ்ச்சி அடைந்த புனிதவதியார் அதைக் கொண்டு வந்து, கணவன்கையிற் கொடுக்க; அதன் ஆச்சரியமடைந்து வாங்கினான். வாங்கிய பழத்தைப் பின் காணாதவனாகி, மிகுந்த பயங்கொண்டு, மனந்தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று துணிந்து, தன்கருத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், அவரோடு தொடர்பின்றி ஒழுகினான்.

ஒழுகு நாளிலே, ஒரு மரக்கலஞ் செய்வித்து, தான் செல்ல விரும்பிய தேசத்திலே விரும்பப்படுகின்ற அரும்பண்டங்களை அதனிடத்து நிறைய ஏற்றி, சுபதினத்திலே சமுத்திரராஜனாகிய வருணனைத் தொழுதுகொண்டு, மாலுமி முதலியோரோடும் ஏறி, அத்தேசத்தை அடைந்து, வாணிகஞ்செய்து, சிலநாளாயின்பின், மீண்டும் அம்மரக்கலத்தில் ஏறி, பாண்டியநாட்டிலுள்ள ஓர் நகரத்தை அடைந்து, அங்குள்ள ஒருவைசியனுடைய மகளை விவாகஞ்செய்து கொண்டு, பெருஞ்செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான்.

அவனுக்கு அம்மனைவி வயிற்றிலே ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் தான்கூடி வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக்கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான்.

பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க, புனிதவதியார் காரைக்காலிலே கற்பினோடு இல்லறத்தை வழுவாது நடத்திக் கொண்டு வந்தார். தன் கணவன் மீண்டும் வருவார் என காத்திருந்த புனிதவதியாருக்கு உறவினர்கள் அதிச்சி தகவல் அழித்தனர் இதை பகுதி இரண்டில் காணலாம்...

**********
குறிப்பு: மாங்கனித் திருவிழா:

மாங்கனித் திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனிடமிருந்து பெற்ற மாங்கனி நிகழ்வை நினைவு கூறுமுகத்தான், காரைக்கால் கோயிலில் மாங்கனி திருவிழா இன்றளவும் ஆனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

**********
புனிதவதியாரின் கணவன் ஆகிய பரமதத்தன் புனிதவதியார் தெய்வ பிறவி என்பதை உணர்ந்து அவர்களை விட்டு பிரித்து மற்றோறு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.அவனுக்கு அம்மனைவிக்கும் பெண்குழந்தை பிறந்தது. அவன் வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக்கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான்.

பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க, புனிதவதியார் காரைக்காலிலே கற்பினோடு இல்லறத்தை வழுவாது நடத்திக் கொண்டு வந்தார். தன் கணவன் மீண்டும் வருவார் என காத்திருந்த புனிதவதியாருக்கு. சுற்றத்தார்கள், வாணிகத்தின் பொருட்டுச் சென்ற பரமதத்தன் பாண்டிநாட்டிலே ஓர் நகரத்திலே செல்வத்தை விருத்திசெய்துகொண்டு வாசகஞ்செய்கின்றான் என்று கேள்வியுற்று, பரமதத்தனிடம் சிலரை அனுப்பி, அவனுடைய நிலையை உணர்ந்து, புனிதவதியாரிடம் நடந்தது சுற்றத்தார் கூறினார்கள்.

அதை கேட்ட புனிதவதியார் தன் கணவன் பரமதத்தன் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்லுமாறு வேண்டினார். சுற்றத்தாரும் புனிதவதியாரை அழைத்துக் கொண்டு பரமதத்தனிடம் சென்றார்கள்.

பரமதத்தன் அதனை அறிந்து அச்சங்கொண்டு, தன்னுடைய இரண்டாம் மனைவியோடும் மகளோடும் புனிதவதியாரிடத்திற்கு வந்து, "அடியேன் உம்முடைய கருணையினாலே வாழ்கின்றேன். இந்தப் பெண்ணுக்கு உம்முடைய பெயரையே இட்டேன்" என்று சொல்லிக்கொண்டு, அவருடைய பாதங்களிலே விழுந்து சாஷ்டங்கமாக நமஸ்கரித்தான்.

உடனே புனிதவதியார் தம்முடைய சுற்றத்தார்களிடத்திலே அச்சத்தோடும் ஒதுங்கி நிற்க; அவர்கள் வெள்கி, பரமதத்தனை நோக்கி, "நீ உன்னுடைய மனைவியை வணங்குவதென்னை காரியம்" என்றார்கள். 

அதற்குப் பரமதத்தன் "இவரிடத்திலே ஒரு பெரிய அற்புதத்தைக் கண்டபடியால், இவர் தெய்வப் பெண்ணேயன்றி மானுடப் பெண்ணல்லர் என்று துணிந்து, இவரைப் பிரிந்தேன்; இவரை நான் தொழுந்தெய்வம் என்று கொண்டமையால், திருவடியையும் வணங்கினேன். நீங்களும் இவரை வணங்குங்கள்' என்றான்.அதுகேட்ட சுற்றத்தார்கள் 'இது என்ன ஆச்சரியம்" என்று திகைத்து நின்றார்கள்.

பெறுதற்கரிய பேய் வடிவு பெறுதல்:

புனிதவதியார் பரமதத்தன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, "சுவாமி! இவனுடைய கொள்கை இது, இனி இவன்பொருட்டுத் தாங்கிய அழகு தங்கிய தசைப் பொதியை நீக்கி, தேவரீரைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை அடியேனுக்குத் தந்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினாலே, மாமிசம் முழுதையும் உதறி, ஏற்புடம்பாக, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.
தேவதுந்துபிகள் ஒலித்தன. அதுகண்ட சுற்றத்தார்களெல்லாம் அஞ்சி, அவரை நமஸ்கரித்துக் கொண்டு போய் விட்டார்கள்.

ஈசன் அருளால் பேய் வடிவை பெற்ற புனிதவதியார், ஈசனை நினைத்து ஆலயம் பல சென்று பாடல் பாடி துதித்தார். புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவருளினாலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக்கைலாச கிரிக்குப் போகவிரும்பி, மனசிலும் பார்க்க மிகுந்த வேகத்தோடு சென்றார்.

கயிலாயம் செல்லல்:

அந்தத்திருக்கைலாசகிரியின் பக்கத்தை அடைந்து, அங்கே காலினால் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினாலே கைகள் கொண்டு நடந்துபோய், மலையிலேறினார், ஏறும்பொழுது, உமாதேவியார் அதைக் கண்டு, புனிதவதியாருடைய பக்தியைக் குறித்து உலகமாதாவாகிய உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தார்.

பரமேஸ்வரனை நோக்கி "சுவாமி இந்த கயிலையில் காலினால் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினாலே கைகள் கொண்டு நடந்து வரும் இந்த பக்தையின் பக்தியே என்ன என்று சொல்லி அழைப்பது" என்றார் பரமேஸ்வரி அன்னை.

அதை கேட்ட பரமேஸ்வரன் "இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற புனிதவதியார்.இந்தப் பெருமை பொருந்திய பேய் வடிவத்தையும் இவள் வேண்டிப் பெற்றாள்' என்றார்.

பின் புனிதவதியார் சமீபத்தில் கயிலைமலையினை தலையினாலே கைகள் கொண்டு நடந்து வந்து அடைந்தவுடன் நந்தி தேவர் புனிதவதியாரின் சிவ பக்தி கண்டு வியந்து வணங்கி வரவேற்றார்.

புனிதவதியார் கண்ட பரமேஸ்வரன் உலகமெல்லாம் உய்யும் பொருட்டு, புனிதவதியார் பக்தியில் மனம் மகிழ்ந்து உலகிற்கு அம்மையும் அப்பனும் ஆன பரமேஸ்வரன் ஓடிவந்து அவரை நோக்கி, "அம்மையே வருக" என்று அழைத்தார்.

அது கேட்ட புனிதவதியார் "அப்பா" என்று சொல்லிக்கொண்டு பரமேஸ்வரன் திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். சுவாமி அவரை நோக்கி, "உனக்கு வேண்டும் வரம் யாது" என்று வினாவினார்.

புனிதவதியார் வணங்கி நின்று, "சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; இன்னும் தேவரீர் திருநிருத்தஞ் செய்யும்பொழுது, தேவரீருடைய திருவடியின் கீழே சிவானந்தத்தை உடையேனாகி, தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்." என்று விண்ணப்பஞ்செய்தார்.

சுவாமி அவரை நோக்கித் "தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு" என்று அருளிச்செய்தார். அதுகேட்ட காரைக்காலம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்றுக்கொண்டு, திருவாலங்காட்டுக்குத் தலையினால் நடந்து சென்றார். 

சுவாமியுடைய திருநடனத்தைத் தரிசித்து, "கொங்கை திரங்கி" என்னும் மூத்த திருப்பதிகத்தையும், "எட்டியிலவமீகை" என்னுந் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்.

அம்மையார் எழுதியுள்ள நூல்கள்:

காரைக்காலம்மையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும் இறைவனை இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே முதலாமவர். ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. 

தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயருடனேயே பரமேஸ்வரன் "அம்மையே" என்று அழைத்ததை இணைந்து "காரைக்கால் அம்மையார்" என்று அறியப்படும் இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம்,தேவாரப் பதிகங்கள் அமைந்தன.

இறைவனின் பெயர்கள்:

தனது பாடல்களில் இறைவனுக்கு பல பெயரிட்டு வழங்குகிறார் காரைக்கால் அம்மையார். அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், என் நெஞ்சத்தான், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், பரமேஸ்வரன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான், விமலன், வேதியன், ஏகாம்பரநாதர், சதாசிவம், அப்பா என்று பல. ஆனால் சைவ சமயம் என்ற சொல்லுக்கு ஆதாரமான சிவன் என்ற சொல்லே அம்மையாரது பாடல்களில் காணப்படுகிறது.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.