Jump to content

அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாறு


Recommended Posts

23 - குங்கிலியக்கலய நாயனார்
Image may contain: 3 people
பெயர்: கலயனார்
குலம்: அந்தணர்
பூசை நாள்: ஆவணி மூலம்
அவதாரத் தலம்: திருக்கடவூர்
முக்தித் தலம்: திருக்கடவூர்

"கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்"
திருத்தொண்டத் தொகை

காவிரி பாயும் சோழவளநாட்டில் திருக்கடவூர் என்ற ஒரு தலம் உண்டு. அது இறைவன் வீரஞ் செய்த எட்டுத் தலங்களில் ஒன்றாதலின் கடவூர் வீரட்டானம் என்று பெயர்பெறும். காலனை உதைத்த வீரம் இங்கு நிகழ்ந்துள்ளது. இத்தலத்தில் மறையவர்கள் சிறந்து வாழ்வார்கள். அவர்களுள் கலயனார் என்ற பெரியார் ஒருவர் இருந்தார். அவர் சிவனடிபேணும் சிறந்த அன்புடையவர். நல்லொழுக்கத்திற் சிறந்தவர். 

அத்தலத்தே எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, விதிப்படி தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று அழைத்தனர்.

அந்நாளிலே திருவருளாலே அவருக்கு வறுமை வந்தது. அதன் பின்னரும் அத்திருப்பணியை வழுவாது செய்து வந்தனர். வறுமை மிகவே தமது நல்லநிலம் முழுவதையும், அடிமைகளையும் விற்றுப் பணிசெய்தனர்.

வறுமை மேலும் முடுகியதனால் தாமும், மனைவி, மக்களும் சுற்றமும் உணர்வுக்கான பொருள் ஒன்றும் இன்றி இரண்டு நாள் உணவின்றி வருந்தினார்கள். இதுகண்ட மனைவியார் கணவனார் கையிற் குற்றமற்ற மங்கல நாணில் அணிந்த தாலியை எடுத்துக் கொடுத்து "இதற் நெல்கொள்ளும்" என்றனர். 

அதனைக் கொண்டு அவர் நெல்கொள்ளச் சென்றபோது எதிரில் ஒரு வணிகன் ஒப்பில்லாத குங்கில்யப் பொதிகொண்டு வந்தான். அதனை அறிந்த கலயனார் "இறைவனுக்கேற்ற மணமுடைய குங்கிலியம் இதுவாயின் இன்று நல்ல பேறுபெற்றேன். பெறுதற்கரிய இப்பேறு கிட்ட வேறுகொள்ளத்தக்கது என்ன உள்ளது? என்று துணிந்து பொன் பெற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியினைத் தருமாறு வணிகனைக் கேட்டார். அவனும் மகிழ்ந்து அவர் தந்த தாலியைப் ஏற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியை கொடுத்துச் சென்றான். 

கலயனார் சிந்தை மகிழ்வுடன் விரைந்து சென்று கோயிற் களஞ்சியத்தில் அப்பொதியின் குங்கிலியத்தைச் சேமித்து வைத்தார். தூபத் திருப்பணி செய்துகொண்டு சிவசிந்தையுடன் அங்கேயே தங்கினார். அன்று இரவு மனைவியாரும், மக்களும் பசியால் மிகவருந்தி அயர்ந்து தூங்கினர்.

அப்போது இறைவனுடைய திருவருளினாலே குபேரன் தனது செல்வத்தைப் பூமியில் கொண்டுவந்து நிறைத்து கலயனாரது மனை முழுவதும் பொற்குவியலும் நெற்குவியலும் அரிசி முதலிய பிற எல்லா வளங்களுமாக ஆக்கி வைத்தனன்.

இதனை இறைவன் அம்மையாருக்குக் கனவில் உணர்த்த, அவர் உணர்ந்து எழுந்து செல்வங்களைப் பார்த்தனர்; அவற்றை இறைவரின் அருள் என்று கண்டு கைகூப்பித் தொழுதனர்; தனது கணவனாரிற்குக் திருவமுது சமைக்கலாயினார். 

திருக்கோயிலில் இருந்த கலயனார்க்கு "நீ பசித்தனை! உன் மனையிற் சென்று பாலின் இன் அடிசில் உண்டு துன்பம் நீங்குக" என்று இறைவர் கட்டளை இட்டு அருளினார். அத்திருவருளை மறுப்பதற்கு அஞ்சிக் கலயனார் மனையில் வந்தனர். 

செல்வமெல்லாங் கண்டனர்; திருமனையாரை நோக்கி "இவ்விளை வெல்லாம் எப்படி விளைந்தன?" என்று கேட்க, அவர் "திருநீலகண்டராகிய எம்பெருமானது அருள்" என்றார். கலயனார் கைகூப்பி வணங்கி "என்னையும் ஆட்கொள்ள எம்பெருமான் திருவருள் இருந்தபடி இதுவோ? என்று துதித்தனர். மனைவியார் பரிகலந்திருத்திக் கணவனாரைச் சிவன் அடியார்களோடு இருத்தித் தூபதீபம் ஏந்திப் பூசித்து இன்னமுதூட்டினார். அது நுகர்ந்த கலயனார் இன்பமுற்றிருந்தார். இவ்வாறு இறைவரருளால் உலகில் நிறைந்த செல்வமுடையவராகி அடியவர்களுக்கெல்லாம் நல்ல இனிய அமுதூட்டியும் உதவியும் வாழ்ந்திருந்தனர்.

இந்நாளில் திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி, தாடகை என்ற அரச மாதுக்கு அருளும் பொருட்டு சாய்ந்தது. சாய்ந்தவாறே இருந்தது. அதனைச் சாய்வுபோக்கி கண்டு கும்பிட வேண்டுமென்று ஆசை கொண்ட சோழமன்னன் யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிர செய்ய முயன்றான்.

இறைவர் நேர் நிற்கவில்லை. யானைகளும் இளைத்து வீழ்ந்தன. அரசன் மிகவும் கவலையோடிருந்தான். இதனைக் கேள்வியுற்ற கலநாயனார், நாதனைக் நேர்காணும் பணியில் நின்ற அரசனை விரும்பித் திருக்கடவூரின்றும் சென்று திருப்பனந்தாளிற் சேர்ந்தனர். 

சேனைகள் இளைத்து வீழ்ந்து எழமாட்டா நிலைகண்டு மனம் வருந்தினார். இவ்விளைப்பிலே நானும் பங்குகொண்டு இளைபுறவேண்டும் என்று துணிந்தார். இறைவரது திருமேனிப் பூங்கச்சிற்கட்டிய பெரிய வலிய கயிற்றினை தம் கழுத்திற் பூட்டி இழுத்து வருந்தலுற்றார்.

இவர் இவ்வாறு செய்து இளைத்த பின் இறைவர் சரிந்து நிற்க ஒண்ணுமோ? இவர் தமது அன்பின் ஒருமைப்பாட்டினைக் கண்டபோது அண்ணலார் நேரே நின்றார். தேவர்கள் விண்ணில் ஆரவாரித்துப் பூமழை பெய்தனர். 

வாடியசோலை தலைமழை பெய்து தழைப்பது போல யானை சேனைகள் களித்தன. சோழ மன்னன் கலயனாரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி மேருவை வில்லாக வளைத்துப் புரமெரித்த கடவுளின் செந்நிலை காணச் செய்தீர்! திருமாலுங் காணாத மலரடியிணைகளை அன்புடைய அடியாரே அல்லலால் நேர்காண வல்லார் யார்? என்று துத்திதான். 

பின்னர் அரசன் இறைவர்க்குப் பிறபணிகள் பலவும் செய்து தனது நகரத்திற்குச் சென்றான். அரசன் சென்ற பின்னரும் கலயனார் சிலநாள் இறைவனை பிரிய ஆற்றாது அங்கு தங்கி வழிபட்டுப் பின் திருக்கடவூர் சேர்ந்தனர்.

திருக்கடவூரிலே தூபத்திருப்பணிசெய்திருக்கும் நாளில் ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடைய அரசுகளும் அத்திருத்தலத்திற்கு எழுந்தருளினார்கள். மிக்கமகிழ்ச்சி பொங்கக் கலயனார் அவர்களை எதிர்கொண்டு அழைத்துவந்தார்.

தமது திருமனையில் அவர்களது பெருமைக்கேற்றவாறு இன்னமுது அளித்து வழிபட்டார். அதனால் அவர்களது அருளே அன்றி இறைவரது அருளும் பெற்றார். இவ்வாறு கலயனார் அரசனுக்கும், அடியவர்களுக்கும் ஏற்றனவாய்த் தமக்கு நேர்ந்த பணிகள் பலவும் செய்து வாழ்ந்திருந்து
சிவபெருமானது திருவடி நிழலிற் சேர்ந்தார்

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

24 - குலச்சிறை நாயனார்
Image may contain: 19 people
பெயர்: குலச்சிறை நாயனார்
குலம்: மரபறியார்
பூசை நாள்: ஆவணி அனுஷம்
அவதாரத் தலம்:.மணமேற்குடி
முக்தித் தலம்: மதுரை

வரலாறு சுருக்கம்:

“பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்”
திருத்தொண்டத் தொகை

புகழ்பெரும் சிறப்புடைய பாண்டிநாட்டின் வளம்பல பெருக்கிய ஓர் ஊர் மணமேற்குடி. இவ்வூரினது தலைவராகத் திகழ்ந்தவர் குலச்சிறையார். இவர் நம்பியாரூரரால் பெருநம்பி எனப் போற்றப்பட்ட பெருந்தகையாளர். 

திருத்தொண்டிற் சிறந்த சிவனடியாரேயெனினும் அவர்தம் குலநலம் பாராது கும்பிடுவார். நல்லவர் தீயவரென நாடாது பணிந்து வணங்குவார். ஒருவராய் வரினும் பலராய் வரினும் எதிர்கொண்டு வரவேற்று இன்னமுது ஊட்டுவார்.

திருநீறும், ருத்திராட்சம் அணிந்தவரும் அஞ்செழுத்தோதுபவருமான அடியவர் பாதத்தை அவர் வழிபடாத நாளில்லை.

இத்தகைய அடியவர்க்கு அன்பு பூண்ட அகத்தினரான குலச்சிறையார் நின்றசீர் நெடுமாறர் என்னும் பெயரையுடைய பாண்டியருக்கு முதன்மந்திரியாராயினவர். அந்தப்பாண்டியருடைய மாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் செய்கின்ற திருத்தொண்டுக்குத் துணைசெய்கின்றவர்.

பாண்டிய மன்னன் சமண சமயம் சார்ந்தவர் இருப்பினும் சைவத்தின் வழி நின்றுவளர்த்தார். இவ்வாறு சிவநெறியினராய் அரசதருமம் பார்க்கும் நாளில் சிவநெறி விளக்கும் திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு அருகே
திருமறைக்காட்டில் எழுந்தருளியிருப்பதான செய்தியைக் கேள்வியுற்றார்.

இச்செய்தியினைக் கேள்விப்பட்ட அளவிலேயே அவரை நேரிற் கண்டு அடிபணிந்தது போல் ஆனந்தமடைந்தார். பாண்டிய நாடெங்கும் சைவம் ஓங்கவேண்டுமென்ற எண்ணத்தொடிருந்த பாண்டிமாதேவியாரோடு ஆலோசித்துப் பரிசனங்களை திருஞானசம்பந்தரிடம் சென்று சேதி சொல்வதற்கென அனுப்பி வைத்தார் பாண்டிய மன்னன்; குலச்சிறை நாயனார் மனம் மகிழ்ந்து சம்பந்த பெருமானை காண புறப்பட்டார்.

செல்லும் அவர் தம் எதிரே புண்ணியத்தின் படையெழுச்சி போன்றும் அடியவர் சூழ வரும் ஆளுடைய பிள்ளையினைக் கண்டார். திருஞானசம்பந்தரை கண்வழியூடாகவும், செவிவழியூடாகவும் உள்ளம் நிறைந்த அன்பு வெள்ளத்தாலே அவ்விடத்திலே வணங்கினார் குலச்சிறை நாயனார்.

ஆளுடைய பிள்ளையாரோடு கூடிச்சென்று ஆலயம் உறையும் பிறைதரித்த எம்பிரானை வழிபடும் பாக்கியம் பெற்றார் குலச்சிறை நாயனார். சம்பந்தப்பெருமானைத் திருமடத்தில் உறையச் செய்து, அவருக்கும் பரிசனத்தார்க்கும் திருவிருந்தளிக்கும் பேறும் அவருக்கே வாய்த்தது. 

இவற்றையெல்லாம் செவ்வனே செய்தாரெனினும், தீயவை புரியும் சமணரால் தீங்கேதும் நேருமோ என அஞ்சினார். அவ்வாறு தீதேதும் நிகழின் உயிர் துறப்பதே தக்கதென்ற துணிவும் கொண்டார். அவர் அஞ்சிய வண்ணமே சமணர்
ஆளுடைய பிள்ளையார் உறைந்த மடத்திற்குத் தீவைத்த செய்தி அவரை மனம் பதைபதைக்கச் செய்தது குலச்சிறை நாயனாருக்கு.

ஆயினும் சம்பந்தப்பெருமானுக்கு தீங்கேதும் நிகழாதது குறித்து ஆறுதல் அடைந்தார். மடத்திற்கு வைத்த தீ மறைச்சிறுவன் ஆகையால் பாண்டிய நெடுமாறர் மன்னனை வெப்பு நோயாய் வருத்திய வேளையில் அதற்குரிய தீர்வு
திருஞானசம்பந்தரேயென மதியுரை கூறினார் குலச்சிறை நாயனார்.

மன்னனும் குலச்சிறை நாயனார் ஆலோசனைப்படி திருஞானசம்பந்தரை அழைத்து வருமாறு பாண்டிய அரசியார் மங்கையர்க்கரசியார் கூறினார் மன்னன். பணிப்பின்படி பாண்டிமாதேவியார் சிவிகையில் வர குதிரையேறி குலச்சிறையார் வர சம்பந்தப்பிள்ளையார் திருமடத்தை அடைந்தார்.

அங்கே ஞானத்தின் திருவுருவாய் நின்ற ஞானசம்பந்தரைக் கண்டார். கண்ட பொழுதே கண்ணருவி பாய கைகுவித்திறைஞ்சி திருவடியில் வீழ்ந்து அழுதார் மங்கையர்க்கரசியார். திருவடியைப் பற்றிய கைவிடாது புரண்டயரும் அவரைப் புகலிவேந்தர் 'ஒன்றுக்கும் அஞ்சாதீர்' என்று அபயமளித்தார் திருஞானசம்பந்தரை. 

அபயமளித்த திருஞானசம்பந்தரை சிவிகை ஏறிவர அவரை அரச மாளிகைக்கு அழைத்துச் சென்று அரசனது தலைமாட்டில் பொற்பீடத்தில் அமர்வித்தார் மங்கையர்க்கரசியார். திருஞானசம்பந்தர் அரசு மாளிகை வந்தவுடன் பாண்டிய மன்னன் வெப்பு நோயாய் நீங்கியது.

அரசு மாளிகை வந்த திருஞானசம்பந்தரிடம் பல சமணர்கள் வாதத்தில் இடுபட்டனர். திருஞானசம்பந்தருடன் வாதில் தோற்ற சமணரையெல்லாம் மற்றும் உடன்பட்டவாறே கழுவிலேற்றி முறை செய்யுமாறு பாண்டிய நெடுமாறர் மன்னன் பணிக்க அப்பணிப்பின்படியே எண்ணாயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார்.

திருநீறணிந்த பாண்டிய மன்னன், அரசியார், திருஞானசம்பந்தர், குலச்சிறை நாயனார் அழைத்துச் சென்று ஆலவாய் அண்ணலைப் போற்றுதல் செய்தார். சிவம் வளர்க்கும் செம்மலர் ஆலவாயில் அமர்ந்திருந்த நாளெல்லாம் நாடொறும் சென்று அவரைப் போற்றி வேண்டும் பணியெல்லாம் செய்தார் குலச்சிறை நாயனாருக்கு.

சிவபுரச் செல்வரோ "இங்கு சிவநெறி போற்றியிருங்கள்" என்று பணித்தார்.அவர் பணிவழியொழுகும் கருத்தால் பாண்டி நாட்டில் சிவநெறி விளங்குமாறு அரசுதருமம் செய்து ஆலவாய் இறைவனின் அருட்தாள் சேர்ந்தார் குலச்சிறை நாயனார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

25 - கூற்றுவ நாயனார்
Image may contain: 8 people
பெயர்: கூற்றுவ நாயனார்
குலம்: மன்னன்
பூசை நாள்: ஆடி திருவாதிரை
அவதாரத் தலம்: களப்பால்
முக்தித் தலம்: தில்லை

வரலாறு சுருக்கம்:

அரசனாம் நிலையேற்போன் ஒருவன் தனக்கது சிவன்பணித்த அறம் என்னும் நன்றிக் கடப்பாட்டுணர்வுடன் சிவன் திருவடிகளைத்தலை மேற்கொண்டு ஆட்சிபுரிய வேண்டுபவனாவான். திருவடிகளைத் தலைமேற் கொள்ளல் என்ற சைவ சம்பிரதாயத்தின் பொருளாவது ஒருவர் தமக்குளதாகக் கொள்ளும் சிற்றறிவு சிறுதொழில் அளவிலான ஞானம் கிரியை என்ற இரண்டினையும் திருவடி என்ற குறியீட்டிலடங்கும் இறைவன் முற்றறிவும் முழுத்த தொழிற்பாடுமாகிய அவனது ஞானங்கிரியை இரண்டுக்கும் அடங்கக் கொடுத்துத் தன் மதந்தோன்றாவகையில் ஒழுகுதல் என்பதாகும்.

களந்தையென்னும் பதியிலே, குறுநிலமன்னர் குலத்திலே, கூற்றுவநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை விதிப்படி உச்சரிப்பவர். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்பவர்.

அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்றார்.தம் தோள்வலிமையாலே மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் வீர வல்லாமையால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார்.

அரசர் திருவில் முடி ஒன்று தவிர மற்றவைகளெல்லாவற்றையும் உடையராயினார். உலகத்தை ஆளுதற்குத் தமக்கு முடிசூட்டும் பொருட்டுத் தில்லைவாழந்தணர்களை வேண்ட; அவர்கள் "நாங்கள் சோழகுலத்தாருக்கேயன்றி மற்றவர்களுக்கு முடிசூட்டோம்" என்று மறுத்து, தங்களுக்குள் ஒரு குடியை முடியைக் காத்துக்கொள்ளும்படி இருத்தி, இவராணைக்கு அஞ்சி சேரநாட்டிற்குச் தஞ்சம் சென்றுவிட்டனர்.

கூற்றுவநாயனார் ஐயுறவினாலேவனந் தளர்ந்து, ஆடல்வல்லவனைப் பணிந்து அற்றைநாள் இரவிலே "எம்பெருமானே! அடியேனுக்குத் திருவடியையே முடியாகத் தந்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டு நித்திரை செய்தார்.

ஆடல்வல்லவன் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி தம்முடைய திருவடிகளை முடியாகச் சூட்டியருளினார்; கூற்றுவநாயனார் அவைகளையே முடியாகச் சூடி, பூமி முழுதையும், பொதுநீக்கி ஆண்டார்.

தில்லைவாழந்தணர்கள் தவறை உணர்ந்தனர். சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற முக்கிய ஸ்தலங்களெங்குஞ் சென்று வணங்கி, திருப்பணிகள் செய்து, சிவபதம் அடைந்தார் கூற்றுவ நாயனார்.

அடுத்த பதிவில்: ஒரு நாட்டின் அரசியார் கருவுற்றிருந்தார். குழந்தை பிறக்கும் தருவாயில் "இக்குழந்தை இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்" என்று சோதிடர்கள் கூற தன் உயிரை தியாகம் செய்து அக்குழந்தை ஈன்றாள். யார் அந்த குழந்தை யார் அந்த தாய் யார் அந்த நாயன்மார் நாளைய பதிவில் விரிவாக காணலாம்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
26 - கலிக்கம்ப நாயனார்
Image may contain: 5 people, people standing
பெயர்: கலிக்கம்ப நாயனார்
குலம்: வணிகர்
பூசை நாள்: தை ரேவதி
அவதாரத் தலம்: திருப்பெண்ணாகடம்
முக்தித் தலம்: திருப்பெண்ணாகடம்

வரலாற்று சுருக்கம்:

“கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் (கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன்) அடியார்க்கும் அடியேன்”
திருத்தொண்டத் தொகை.

நல்லூழ் தலைப்பட்டு யாதானுமோருபாயத்தான் மெய்யுணர்ந்து சிவனடியாராய் விட்டவர் தமது பூர்வாசிரமமான முன்னைய வாழ்வியற் சூழ்நிலைப் பண்புகளை இழந்தோராவர். ஆகவே, பிறர் அவர் விஷயத்திற் சாதிகுலாசார நோட்டங்கொள்வதுமில்லை: அவர் பிறரைச் சாதிகுலாசார நோட்டங்கொண்டு பார்ப்பதுமில்லையாகும்.

அது திருமந்திர நூலில் "மலமில்லை மாசில்லை மானாபி மானங்குலமில்லை கொள்ளுங் குணங்களு மில்லை நலமில்லை நந்தியை ஞானத்தினாலே பல மன்னியன்பிற் பதித்துவைப் போர்க்கே" என்பதை காணலாம்...

சிவனடியார் நேசமும் சிவதொண்டு வீறும் வாய்ந்த மஹான்கள் இது காரியத்தில் மிகக் கண்டிப்பாகவேயிருப்பர். எவ்வகையிலேனும் அக்கணியம் அவமதிக்கப்படக்காணின் வன்முறையாலேனும் உண்மை சாதிக்கத் தவறமாட்டார். கலிக்கம்பநாயனார் இதற்குத் தக்க உதாரணமாவர்.

நடுநாட்டிலே, திருப்பெண்ணாகடத்திலே, வைசிய குலத்திலே, கலிக்கம்பநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத் திருப்பதியில் உள்ள திருத்தூங்கானை மாடமென்னுந் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்பவர்; சிவலிங்கத்தை வழிபடினும் சிவனடியார்களை வழிபடாதொழியின் அவ்வழிபாடு சிறிதும் என்று சிவாகமஞ் செப்புதலால் தினந்தோறும் சிவனடியார்களைப் பேராசையோடு திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந் திரவியங்களெல்லாவற்றையுங் கொடுப்பார்.

இப்படி யொழுகுநாளிலே, ஒருநாள் தமது வீட்டிலே திருவமுது செய்யவந்த சிவனடியார்களெல்லாரையும் பழைய முறைப்படி திருவமுதுசெய்யத் தொடங்குவித்தற்கு, அவர்களை முன்பு அழைத்து, தமது மனைவியார் கரகநீர் வார்க்க அவர்களுடைய திருவடிகளை விளக்கும்பொழுது, முன்பு தமக்குப் பணிவிடைக்காரராய் இருந்து பணிவிடையை வெறுத்துச் சென்ற ஒருவர் சிவவேடந் தாங்கிவர அவருடைய திருவடிகளையும் விளக்கப்புகுந்தார்.

மனைவியார் 'இவர் எங்களிடத்திலே பணிவிடைக்காரராய் இருந்து போனவர் போலும்" என்று கூறி சிந்தித்தலால் கரகநீர் வார்க்கத் தாழ்க்க செய்தார்

கலிக்கம்பநாயனார் அதுகண்டு, சினம் கொண்டு "இவள் இந்தச் சிவனடியாருடைய முந்திய நிலையைக் குறித்து வெள்கி நீர் வாரா தொழிந்தாள்" என்று துணிந்தார்

நாயனார் மனைவியாரைப் பார்த்தார்; அவரது கருத்தை அறிந்தார்; நீர்க்கரகத்தை (தண்ணிச் செம்பு) வாங்கிக்கொண்டு அம்மனைவியாரது கையை வாளினால் வெட்டினார்; அடியார் திருவடியைத் தாமே விளக்கி அமுதூட்டுவதற்கு வேண்டிய ஏனைய செயல்களை எல்லாம் தாமே செய்து சலனமில்லாத சிந்தையுடன் அவர்களுக்குத் திருவமுதூட்டினார்.

பின் சிவபெருமான் அருளால் குறைய செல்வம் பெற்றார் அவற்றை நன்முறையில் சிவனடியார்களுக்கு சேவை செய்தார். அந்நாயனார் பின்னுஞ் சிலகாலந் திருத்தொண்டின் வழிநின்று ஈசன் இருவருக்கும் முக்தி அளித்தார் இருவரும் சிவபதத்தை அடைந்தனர்.
 
Link to comment
Share on other sites

27 - கோச்செங்கட்சோழ நாயனார்
Image may contain: 2 people
பெயர்: கோச்செங்கணா சோழர்
குலம்: அரசன்
பூசை நாள்: மாசி சதயம்
அவதாரத் தலம்: திருவானைக்கா
முக்தித் தலம்: தில்லை.

வழக்கமாக இந்த தொகுப்பில் நாயன்மார்கள் வரலாற்றில் தொடக்கம் முதல் முடிவுவரை காணபோம் ஆனால் இன்று இந்த பதிவில் சற்று வித்தியாசமாக முதலில் முடிவையும் பிறகு தொடக்கத்தையும் காணலாம்...

பதிவின் முடிவில்:

முன் ஜென்மத்தில் சிலந்தியாக பிறந்து ஈசன் அருள் பெற்றதை அறிந்து, அங்கே வெண்ணாவலுடன் பரமசிவனுக்குத் திருக்கோயில் கட்டுவித்தார். சபாநாயகரைத் தரிசித்து வணங்கி தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்து, பின்னும் பல திருத்தொண்டுகளைச் செய்தார். கமலவதியார் உயிர் தியானத்தில் பிறந்த கோச்செங்கட்சோழ சபாநாயகருடைய திருவடி நீழலை அடைந்தார்.

தொடக்கம் வரலாறு சுருக்கம்:

சோழமண்டலத்திலே, சந்திரதீர்த்தத்தின் பக்கத்திலே ஒரு வனம் இருந்தது. அதிலே நின்ற ஒரு வெண்ணாவன் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் வெளிப்படலும், ஒரு வெள்ளானை அதைக்கண்டு, நாடோறும் புழைக்கையினாலே தீர்த்தம் முகந்து ஆட்டி, புஷ்பங்களைச் சாத்தி, வழிபட்டு ஒழுகுவதாயிற்று.அதனால் அந்த ஸ்தலத்துக்குத் திருவானைக்கா என்று பெயராயிற்று.

அறிவினையுடைய ஒரு சிலந்தி, அந்தச் சிவலிங்கத்தின் மேலே சருகு, இலை உதிராவண்ணம், தன் வாய்நூலினாலே மேற்கட்டி செய்தது. சிவலிங்கத்தை வணங்கவந்த வெள்ளானை அதைக்கண்டு, அது அநுசிதம் என்று நினைந்து, அதைச் சிதைக்க; சிலந்தி மீளவும் மேற் கட்டி செய்தது, வெள்ளானை மற்றநாளும் அதைச் சிதைத்தது. 

அது கண்டு சிலந்தி "எம்பெருமான் மேலே சருகு உதிராவண்ணம் நான் வருந்திச் செய்த மேற்கட்டியை இது அழிக்கலாமா" என்று கோபித்து, வெள்ளானையினது புழைக்கையினுள்ளே புகுந்து கடிக்க; வெள்ளானை கையை நிலத்திலே மோதிக்கொண்டு விழுந்து இறந்தது.

கையை நிலத்திலே மோதியபோது, அதனுள்ளே புகுந்த சிலந்தியும் இறந்தது வெள்ளானை சிவகணநாதராகித் திருக்கைலாசமலையை அடைந்து, சிவபெருமானைச் சேவித்துக் கொண்டிருந்தது.

சுபதேவனென்னுஞ் சோழமகாராஜன் தன் மனைவியாகிய கமலவதியுடன் சிதம்பரத்தை அடைந்து, சபாநாயகரை உபாசனை செய்துகொண்டிருக்கு நாளிலே; கமலவதி புத்திரபாக்கியம் இன்மையால் வரம் வேண்ட; அந்தச் சிலந்தி சபாநாயகரது திருவருளினாலே அவளுடைய வயிற்றிலே ஆண் கருவாக வந்து அடைந்தது.

கமலவதிக்குப் பிரசவகாலம் நடக்கும் பொழுது "இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர்.

கமலவதி "என் பிள்ளை இப்போது பிறவாமல் ஒருநாழிகை கழித்துப் பிறக்கும்படி என்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்குங்கள்" என்று சொல்ல; அங்குள்ளவர்கள் அங்ஙனங் கட்டித் தூக்கி, சோதிடர்கள் குறித்த காலம் அணையக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

கமலவதி பிள்ளையைப் பெற்றார், அது சோதிடர் குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது. கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’ என அருமை தோன்ற அழைத்து உடனே உயிர் நீங்கினாள்.

கமலவதி கடைசியாக பேசிய ‘என் கோச் செங்கணானனே’ என்ற வார்த்தைகளை "கோச்செங்கட்சோழர்" என பெயரிட்டுஅழைத்தார் சுபதேவன்.

சுபதேவன் அப்புதல்வரை வளர்த்து முடிசூட்டி, அரசை அவரிடத்தில் ஒப்பித்து, தான் தவஞ்செய்து சிவலோகத்தை அடைந்தார். கோச்செங்கட்சோழநாயனார் பரமசிவனது திருவருளினாலே பூர்வசன்ம உணர்வுடன் பிறந்து, சைவத்திருநெறி தழைக்க அரசியற்றுவாராகி, சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுவிக்கத் தொடங்கினார்.

பதிவின் முடிவுரை:

திருவானைக்காவிலே தாம் முன் ஜென்மத்தில் சிலந்தியாக பிறந்து ஈசன் அருள் பெற்றதை அறிந்து, அங்கே வெண்ணாவலுடன் பரமசிவனுக்குத் திருக்கோயில் கட்டுவித்தார். மந்திரிகளை ஏவி, சோழநாட்டில் வெவ்வேறிடங்களிலே சிவாலயங்கள் கட்டுவித்து, அவ்வாலயங்கடோறும் பூசை முதலியவற்றிற்கு நிபந்தங்கள்ழ அமைத்தார்.

பின்பு சிதம்பர ஸ்தலத்தை அடைந்து, சபாநாயகரைத் தரிசித்து வணங்கி தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்து, பின்னும் பல திருத்தொண்டுகளைச் செய்தார். கமலவதியார் உயிர் தியானத்தில் பிறந்த கோச்செங்கட்சோழ சபாநாயகருடைய திருவடி நீழலை அடைந்தார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

28 - கோட்புலி நாயனார்
Image may contain: 3 people
பெயர்: கோட்புலி நாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: ஆடி கேட்டை
அவதாரத் தலம்: திருநாட்டியத்தான்
முக்தித் தலம்: திருநாட்டியத்தான்

வரலாறு சுருக்கம்:

“அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்”
திருத்தொண்டத் தொகை

சோழநாட்டிலே, நாட்டியத்தான்குடியிலே, வேளாளர் குலத்திலே சிவபத்தியிற் சிறந்த கோட்புலிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் அரசனிடத்திலே சேனாதிபதித் தொழில் பூண்டு, அதனாலே தமக்குக் கிடைக்கும் வேதனத்தைக்கொண்டு சிவாலயங்களுக்குத் திருவமுதின் பொருட்டு நெல்லுவாங்கிக் கட்டுதலாகிய திருப்பணியை நெடுங்காலஞ் செய்து வந்தார்.

நம்பியாரூரைத் தம் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்டு, அவர் இசைந்துவர எதிர்கொண்டு அழைத்துத் தம் மாளிகையிற் சிறப்போடு பூசனையாற்றித் தம் மகளிர் இருவரையும் அடிமைகொள்ளுமாறு அர்பணித்தார் கோட்புலி நாயனார்.

அவர் தம் அர்பணம் நம்பியாரூரரை அம்மகளரின் ‘அப்பானா’க முறைமை கொண்டு சிங்கடியப்பன், வனப்பகைஅப்பன் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுமளவிற்கு நம்பியாரூரரை இரங்கச்செய்தது.

இப்படியொழுகுநாளிலே, அரசனது ஏவலினால் போர்முனையிற் செல்லவேண்டி, சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுத் தாந்திரும்பி வரும் வரைக்கும் வேண்டும் நெல்லைக்கட்டி, தம்முடைய சுற்றத்தார்களெல்லாருக்குந் தனித்தனியே அதில் எடுத்துச் செலவழியாதிருக்கும்படி ஆணையிட்டுக் கொண்டு போருக்குப் போயினார். 

சிலநாளிலே பஞ்சம் வந்தமையால் அந்தச்சுற்றத்தார்கள் "நாங்கள் உணவின்றி இறப்பதினுஞ் சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுக் கட்டப்பட்ட இந்நெல்லைக் கொண்டாயினும் பிழைத்து, பின் கொடுத்துவிடுவோம்" என்று நெல்லைக் கூடுகுலைத்து எடுத்துச் செலவழித்தார்கள். 

கோட்புலி நாயனார் அரசனுடைய பகைஞரைப் போர்முனையிலே வென்று அவனிடத்திலே நிதிக்குவை பெற்றுக்கொண்டு, தம்முடைய ஊரை அடைந்து, தம்முடைய சுற்றத்தார்கள் அதிபாதகஞ்செய்தமையை உணர்ந்தார்.

தம்முடைய வீட்டிலே பகுந்து, அவர்களெல்லாரையும் அழைப்பித்து, தமது கோட்புலியென்னும் பெயரையுடைய காவலாளன் கடை காக்க, சிவதிரவியத்தை எடுத்துச் செலவழித்த அதிபாதகர்களாகிய தந்தை, தாய், உடன்பிறந்தார், மனைவி முதலிய சுற்றத்தா ரெல்லாரையும் பணிவிடைக்காரரையும் வாளினாலே துணிந்தார் (வெட்டினார்). 

அப்பொழுது காவலாளன் அங்கே பிழைத்த ஒரு ஆண்பிள்ளையைப் பார்த்து, "இக்குழந்தை அவ்வன்னத்தை உண்ண வில்லை. இது இக்குடிக்கு ஒரு பிள்ளை; இதனைக் கொல்லா வேண்டாம்" என்று வேண்டினார்.

அதை செவியால் கேட்ட கோட்புலி நாயனார் "இது இந்நெல் உண்டவளுடைய தாய்பாலை உண்டது எனவே இக்குழந்தை கொல்வது உத்தமம்" என்று பதில் கூறி வாளினால் குழந்தையை வெட்ட துணிந்தார். 

உடனே சிவபெருமான் கோட்புலி நாயனாருக்குத் தோன்றி, "அன்பனே! நிறுத்து, உன் கைவாளினாலே தங்கள் பாவத்தினின்றும் நீங்கிய உன் சுற்றத்தார்கள் சுவர்க்கத்தை அடைய நீ இந்தப்படியே நம்முடன் வருவாய்" என்று கருணை செய்து எழுந்தருளினார்.

மேலும் சில காலம் சிவதொண்டு செய்த கோட்புலி நாயனார் சிவபதம் அடைந்தார். இடில்ல பக்தியால் நாயன்மார்களில் ஒருவரானார்.
 
Link to comment
Share on other sites

29 - சடைய நாயனார்
Image may contain: 2 people, people sitting
பெயர்: சடைய நாயனார்
குலம்: ஆதி சைவர்
பூசை நாள்: மார்கழி திருவாதிரை
அவதாரத் தலம்: திருநாவலூர்
முக்தித் தலம்: திருநாவலூர்

வரலாறு சுருக்கம்:

திருநாவலூருலே, "மாதொரு பாகனார்க்கு வழிவழியடிமை செய்யும்" வேதியர் குலமாகிய ஆதிசைவர் குலத்திலே தோன்றிச் சிவன் திருநாமமாகிய சடையன் என்பதே தமக்கும் நாமமாகக் கொண்டிருந்து சிவனடிமை நெறியில் வாழ்ந்து திருவருளுக்குப் பாத்திரமாய் விளங்கியவர் இந்த சடைய நாயனார்.

"அரும்பா நின்ற அணிநிலவும் பணியு மணிவா ரருள் பெற்ற சுரும்பார் தொங்கற் சடையனார்" எனுஞ் சேக்கிழார் வாக்கினால் தெளியப்படும். அவர், திருத்தொண்டத் தொகையளித்த திருவாளனும் திருத்தொண்டர் புராண காவியத்தின் தன்னிகரில்லாத் தலைவனுமாகவல்ல சமயகுரவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரையை தமக்கு மகனாகப் பெறும் புண்ணியம் பெற்றார்.

இதன் மூலம் தமது குலம் நலம் தலம் மூன்றும் ஒப்புயர்வற்ற விளக்கம் பெற வைத்ததுடன் தம்பிரானையே தோழனாகக் கொண்டு தூதனுப்பியதும் உற்ற உருவுடனே தான் கயிலாய மடைந்ததுடன் தன் தோழனாகிய சேரமானையும் அவ்வண்ணமே தன்னுடன் அங்கெய்த வைத்தது மாகிய அம்மகன் செயல்களால், மெய்த்தொண்டராவார்க்குத் திருவருள் வழங்கத்தகும் அளப்பரிய பெருமகிமை இத்தகையதென அறிந்துணர்ந்து ஞாலமெலாம் வாழவந்த பெருவாழ்வுக்கு முன்னிலைக் காரணமாயிருந்து தாமுஞ் சிவப்பே றெய்தியுள்ளார். 

அத்தகைய பெருந்தகையாகிய அவர்பெருமை போற்றத் தகுமெனல் சொல்லாமே யமையும். அந்நயம் புலப்படுமாறு அவர்புராணச் செய்யுளிலும் பெருமை போற்றுதல் சொல்லாமலே கொள்ள விடப்பட்டிருத்தல் காணலாம். 

"தம்பிரானைத் தோழமைகொண் டருளித் தமது தடம்புயஞ்சேர் கொம்பனார் பால் ஒருதூது செல்ல ஏவிக் கொண்டருளும் எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணையில் துணைவராம் நம்பியாரூ ரரைப் பயந்தார் ஞாலமெல்லாங் குடிவாழ" என பாடலை காணலாம்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

30 - சண்டேசுவர நாயனார்
Image may contain: 3 people
பெயர்: விசாரசருமர்
குலம்: அந்தணர்
பூசை நாள்: தை உத்திரம்
அவதாரத் தலம்: திருசேய்ஞலூர்
முக்தித் தலம்: ஆப்பாடி

வரலாறு சுருக்கம்:

சோழமண்டலத்திலே, திருச்சேய்ஞலூரிலே, பிராமணகுலத்திலே, காசிபகோத்திரத்திலே, எச்சதத்தன், பவித்திரை என்ற தம்பதியினர் இருந்தனர். அவர் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே, விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார்.

அவருக்கு ஐந்துவயசிலே, வேதங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினாலே கற்பிப்பார் இன்றித் தாமே அறிவுமறிவு உண்டாயிற்று, தந்தை தாயார் அவருக்கு ஏழுவயசிலே உபநயனச்சடங்கு செய்தனர்.

தகுந்த ஆசாரியர்களைக்கொண்டு வேதத்தியயனஞ் செய்விப்பிக்கத் தொடங்கினார்கள். அவ்வாசாரியர்கள் வேதங்களையும் பிறகலைகளையும் ஓதுவித்தற்கு முன்னமே அவ்விசாரசருமருக்குத் தாமே அறிந்துகொள்ளும்படி அமைந்திருக்கின்ற புத்தியின் திறத்தைக் கண்டு, ஆச்சரியம் அடைந்தார்கள்.

ஒருநாள் மறை ஓதும் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று.

வெகுண்டெழுந்த இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை அடித்தான். பசுவை அடிப்பதைக் கண்டு பதைபதைத்த விசாரசருமர் இடையனைத்தடுத்து ஐயா! பசுக்கள் தம்முடலுறுப்புக்களில் தேவர்களையும்,
முனிவர்க்ளையும் புண்ணியதீர்த்தங்களையும் உடையனயாயுள்ளன. ஈஸ்வரனிறு பஞ்சகவ்யம் அளிக்கும் அப்பசுக்களை மேய்ப்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழிபடும்நெறி என்று இடையனிற்கு எடுத்துத்துரைத்தார்.மேலும்அந்தப்பசுக்களைத் தாமே மேய்க்க விரும்பினார்.

அவ்விடையனை நோக்கி, "இப்பசுநிரையை இனி நீ மேய்க்கவேண்டியதில்லை. நானே மேய்ப்பேன்" என்றார் இடையன் அதைக்கேட்டுப் பயந்து கும்பிட்டுக் கொண்டு போய்விட்டான்.

விசாரசருமர் பசுக்களை அவ்வற்றிற்குரிய பிராமணர்களின் சம்மதிபெற்று, தினந்தோறும் மண்ணியாற்றங்கரையில் இருக்கின்ற காடுகளிலும் வயரோரங்களிலும், புல்லு நிறைந்திருக்கும் இடத்திற் கொண்டுபோய் வேண்டுமட்டும் மேயவிட்டும்...

தண்ணீரூட்டியும், வெய்யிலெறிக்கும்பொழுது நிழலிருக்குமிடங்களிலே செலுத்தியும், நன்றாகக் காப்பாற்றி, சமித்துக்கள் ஒடித்துக்கொண்டு அஸ்தமயனத்துக்குமுன் அவ்வப்பசுக்களை அவரவர் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போய்விட்டு, தம்முடைய வீட்டுக்குப் போவார்.

இப்படிச் செய்யுங்காலத்திலே, பசுநிரைகளெல்லாம் அழகோடு மிகப்பெருகி, போசனபானங்களிலே குறைவில்லாமையால் மகிழ்ச்சியடைந்து, இராப்பகல் மடிசுரந்து பாலை மிகப் பொழிந்தன.

பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தார். சிந்தையில் உதித்ததைச் செயலிலும் செய்தார்.

மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் அத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை வெம்மண்ணில் சமைத்தார். பசுவின் பாலினால் திருமஞ்சனம் செய்தார், ஆடினார், பாடினார், அன்பினால் கசிந்து கண்ணீர் விட்டார்.
தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தார்.

இது தவறாக புரிந்துக் கொண்ட ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் எனப் பழி கூறினான்.
அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் விசாரசருமரைக் கடிந்து " உனது மகன் எங்கள் பசுக்களின் பாலை கீழே ஊற்றி வீண் செய்கிறான்" என கூறினர். அவர் தந்தையார் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.

மறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து. மலர்களை கொய்து மாலையாக் கட்டி குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினார்.பாற்குடங்களை எடுத்து சிவனிற்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யலானார்.

சற்றுத் தூரத்தில் ஓர் மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து உதைத்தார்.

கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.

இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவாபாராதமாகையால் அவரது பாசத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார் விசாரசருமர் அது உடன் ஓர் மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களைத் துணிந்தார். எச்சத்தன் உயிர்நீத்தான். முன்போல் அவர் சிவபூஜை செய்ய முனைந்தார்.

விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தார்.விசாரசர்மர் அவரைத் தொழுது, பின் வீழ்ந்து வணங்கினார். சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து "நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்" என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார்.

சிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். "தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக" என்றுரிமையாக்கி "சண்டீசன்" என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார்.
விசாரசருமர் "சண்டேஸ்வர நாயனார்" ஆனார். சண்டீச பதவியும் பெற்றார்.

எச்சத்தன் சிவபராதம் செய்ததாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கபட்ட பாசம் நீங்கப் பெற்று சுற்றத்தோடு சிவலொகம் சென்றார்.
Link to comment
Share on other sites

31 - சத்தி நாயனார்
Image may contain: 1 person, standing and outdoor
பெயர்: சத்தி நாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: ஐப்பசி பூரம்
அவதாரத் தலம்: வரிஞ்சையூர்
முக்தித் தலம்: வரிஞ்சையூர்

வரலாறு சுருக்கம்:

“கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்”
திருத்தொண்டத் தொகை

மெய்யுணர்வுற்றோ ரல்லாதோருஞ் சிவனாகிய தன்னை உணரவைக்கும் பொருட்டாகச் சிவபெருமான், விபூதி உருத்திராக்கம் சடைமுடி யாகிய தனது திருவேடத்தைச் சிவனடியார்பால் நிறுத்தி அச்சிவனடியார்கள் மேலும் தன்னில் இலயித்திருக்கும் பொருட்டாக அவர்களைத் தான் தன்னுள்ளடக்கி நிற்கும் பாங்கில் அவர்களிடத்தில் இவர், தயிரின்கண் நெய்போல் விளங்கித் தோன்றுதலுண்டாகலின் அவர்கள் தாங்கும் வேடம் மெய்ம்மையான சிவவேடமே ஆகும்.

எங்கும் சிவம் எதிலும் சிவம் என்பதற்கு இனங்க அச்சிவனடியார்களை துன்புறுத்தியும் இகழ்ந்து பேசுவதும் மாபெரும் குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் நகரத்தில் துன்புறுவர்.

சோழநாட்டிலே, வரிஞ்சியூரிலே, வேளாளர் குலத்திலே, சத்திநாயனாரென்பவரொருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடித்தாமரைகளைச் சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர். சிவனடியார்களை சிவ ரூபமாக வணங்கி திருவமுது செய்வித்து அவர்கள் தேவையான அனைத்தையும் தந்து உதவுவார்.

சத்தி நாயனார் சிவனடியார்களை இகழ்ந்து பேசும் அதிபாதகிகளுடைய நாக்கைத் தண்டாயத்தால் இடுக்கித் தமது கையிற் கத்தியினால் அரிதலாகிய அருமை பெருமைத் திருத்தொண்டை, நெடுங்காலம் அன்பினோடு செய்தார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவனடியார்களை காத்தமையால் பரமசிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.

  http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

32 - சாக்கிய நாயனார்
Image may contain: 1 person, standing
பெயர்: சாக்கிய நாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: மார்கழி பூராடம்
அவதாரத் தலம்:திருச்சங்கமங்கை
முக்தித் தலம்: திருச்சங்கமங்கை

வரலாறு சுருக்கம்:

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
திருத்தொண்டத் தொகை

சாக்கிய நாயனார் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். எவ்வுயிர்க்கும் அருளுடையாராய்ப் பிறவாநிலை பெற விரும்பிக் காஞ்சிநகரத்தை அடைந்து புத்தசமயத்தை மேற்கொண்டிருந்தார். இறைவன் திருவருள் கூடுதலாற் புத்தம் முதலியன புறச்சமயச் சார்புகள் அல்ல என்றும், ஈறில் சிவநன்நெறியே பொருளாவதென்றும் துணியும் நல்லுணர்வு கைவரப்பெற்றார். 

“செய்யப்படும் வினையும், அவ்வினையைச் செய்கின்ற உயிரும், அவ்வினையின் பயனும், அப்பயனைச் செய்த உயிர்க்கே சேர்ப்பிக்கும் இறைவனும் எனச் சைவசமயத்தில் கூறப்பட்ட பொருள் நான்காகும். இப்பொருட்பாகுபாடு சிவநெறியல்லாத பிறசமயத்தில் இல்லை” எனத்தெளிந்து கொண்டார்.

உயிர்களை உய்விக்கும் மெய்ப்பொருள் சிவமே, எந்த நிலையில் நின்றாலும் எக்கோலங்கொண்டாலும் சிவனடியினை மறவாது போற்றுதலே உறுதிப்பொருளாகும்” என்று ஆராய்ந்து துணிந்து தாம் கொண்ட புத்தசமய வேடத்துடனேயே சிவபெருமானை மறவாது போற்றுவராயினர்.

அருவமாகியும், உருவமாகியும் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் காரணமாய் இறைவனுக்குத் திருமேனியாகிய சிவலிங்கத்தின் பெருமையுணர்ந்து நாள்தோறும் அதனை வழிபட்ட பின்னரே உண்ணுதல் வேண்டும் என விரும்பினார்.

தாம் இருக்கும் இடத்திற்கு அண்மையில் வெட்ட வெளியிலே அமைந்துள்ள சிவலிங்கத்தினைச் சென்று கண்டு பெருமகிழ்ச்சி கொண்டவராய், அம்மகிழ்ச்சியின் விளைவாய் ஒன்றுந் தோன்றாது அருகிற்கிடந்த செங்கற்சல்லியை எடுத்து லிங்கத்தின் மேல் எறிந்தார். 

இளம்புதல்வர் இகழ்வனவே செய்தாலும் அச்செயல் தந்தையார்க்கு உவப்பனாற்போன்று, சாக்கியர் செய்த இதுவும் சிவபெருமானுக்கு உவப்பாயிற்று. இறைவன் அவர் அன்பினால் எறிந்த கற்களை நறுமலர்களாகவே ஏற்றுக்கொண்டார்.சாக்கியர் ஆச்சர்யம் அடைந்தார்.

சாக்கியர் அன்றுபோய் மறுநாள் அங்கு வந்தபொழுது முதல்நாள் தாம் சிவலிங்கத் திருமேனியின் மேல் செங்கல் எறிந்த குறிப்பினை எண்ணி, ‘நேற்று இந்த எண்ணம் நிகழ்ந்தது இறைவன் திருவருளே’ என்று துணிந்து அதனையே தாம்செய்யும் வழிபாடாகக் கருதி எப்பொழுதும் அப்படியே செய்து வந்தார்.

ஒருநாள் சாக்கியர் அச்செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம் பெருமானைக் கல்லால் எறிய மறந்துவிட்டேன்’ என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஆராத வேட்கையால் ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிந்தார்.

அவரது அன்பிற்கு உவந்த சிவபெருமான் விடைமீது உமையம்மையாருடன் தோன்றி அருளினார். அத்தெய்வக்காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். சிவபெருமான் சிவலோகத்தில் தம்பக்கத்தேயிருக்கும் பெருஞ்சிறப்பினை அவர்க்கு அருளினார்.

 http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

33 - சிறப்புலி நாயனார்
Image may contain: 5 people, text
பெயர்: சிறப்புலி நாயனார்
குலம்: அந்தணர்
பூசை நாள்: கார்த்திகை பூராடம்
அவதாரத் தலம்: ஆக்கூர்
முக்தித் தலம்: ஆக்கூர்

வரலாறு சுருக்கம்:

"மந்திரம் நான்மறையாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மையாள்வன (அஞ்செழுத்துமே)"
தேவாரத்தின் வரிகள்.

இதன் பொருள்:

மந்திரங்கள் பலகோடி யுண்டேனும் அனைத்து மந்திரங்கட்கும் மூலமாயிருத்தலின் மூலமந்திரம் எனப்படுவதும் மந்திரவிரிவு கூறும் யசுர்வேதத்தின் மையத் தானத்தில் இடம் பெற்றுள்ளதும் ஆனகாரணங்களால், அனைத்து மந்திரங்களும் அனைத்து வேதங்களுமாய் உயர்ந்தோருள்ளந்தோறும் நிலை பெற்றிருந்து அவரவர்க்கு முத்தி சாதனமாக உதவும் மகிமைக்குரியது அஞ்செழுத்துமே. அவ்வாறு ஐந்தெழுத்து மகிமை உணர்ந்த சிறப்புலி நாயனார் பற்றி காணலாம்.

“சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்”
திருத்தொண்டத் தொகை

பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இரந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் திருஆக்கூர். அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இப்பெருந்தகையார் “நிதி மழை மாரி போல்” ஈந்து உவக்கும் வள்ளலாய் திகழ்ந்தார்.

1.சிவசாதாக்கியம்,
2.அமுர்த்திசாதாக்கியம்,
3.மூர்த்தி சாதாக்கியம்,
4.கர்த்திருசாதாக்கியம்,
5.கர்மசாதாக்கியம்

என்னும் பஞ்சசாதாக்கியங்களுள், கர்மசாதாக்கியமாகிய சிவலிங்கத்தின் மகிமையை உணர்ந்து பரமேஸ்வரனை அனுதினமும் வழிபட்டார்

சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினார். அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பார். அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார். இவர் திருவைந்தெழுத்தொதிச் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

34 - சிறுத்தொண்ட நாயனார்
Image may contain: 5 people
பெயர்: பரஞ்சோதியார்
குலம்: மாமாத்திரர்
பூசை நாள்: சித்திரை பரணி
அவதாரத் தலம்: திருச்செங்காட்டங்குடி
முக்தித் தலம்: திருச்செங்காட்டங்குடி

வரலாறு சுருக்கம்:

செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
திருத்தொண்டத் தொகை

* பரஞ்சோதியார் அறிமுகம்:

காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர், யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர்.

* சேனாதிபதியாக பதிவி:

நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாய்ப் போர்முனையிற் பகையரசர்களை வென்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் மன்னர் பொருட்டு வட திசையில் படையெடுத்துச் சென்று, வாதாபி நகரத்தை அழித்து அங்கிருந்து பலவகை நன்மணிகளையும், செல்வங்களையும், யானை ,
குதிரை , முதலியவற்றையும் கைப்பற்றித் தம்வேந்தனிடம் கொணர்ந்தார்.

அரசன் இவரது வீரத்தை புகழ்ந்து பாராட்டினார். அந்நிலையில் பரஞ்சோதியாரை நன்குணர்ந்த அமைச்சர்கள், ‘அரசே! இவரிடம்
சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் இயல்பு நிரம்பியிருப்பதால் போரில் இவரை எதிர்க்கவல்லார் எவருமில்லை" என்றனர்.

பரஞ்சோதியார் சிவபக்தி கேள்வியுற்ற வேந்தன் அவருக்கு நிறைந்த பொற்காசுகள் அளித்து "நீர் உம்முடைய திருத்தொண்டின் நிலைமையினை நானறியாதபடி கொண்டு நடத்தினீர். இனி உம்முடைய மனக்கருத்துக்கு இசையத் திருத்தொண்டு செய்வீராக" என விடைகொடுத்தனுப்பினார்.

* சிவ தொண்டு:

மன்னவனிடம் விடைபெற்ற பரஞ்சோதியார், தமது பதியாகிய திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார். அங்கு கணபதீச்சரத்து இறைவரை இறைஞ்சிச் சிவத்தொண்டுகளை வழுவாது செய்திருந்தார். இவர் சந்தனத்தாதியார் நங்கையை மணம் முடித்தார்.

சந்தனத்தாதியார் மனையறத்தினை இனிதே நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ஈசன் அருளால் சீராளத்தேவர் என்னும் திருமைந்தர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயது வந்தபொழுது பள்ளியிற் கல்வி பயிலவைத்தார்.

* சிறப்பு பெயர்:

பரஞ்சோதியார் சிவனடியார்களை விரும்பி பொழுது அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் "சிறுத்தொண்டர்" என அழைக்கப்பட்டார்.அந்நாளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனை வழிபடத் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். சிறுத்தொண்டருடன் நண்பினால் மகிழ்ந்தனர். கணபதீச்சரப் பெருமானைத் தாம்பாடிய "பைங்கோட்டு மலர்புன்னை" என்னும் திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடினார்.

* இறைவனின் திருவிளையாடல்:

சிறுத்தொண்டரது உண்மை அன்பை நுகர்ந்தருள விரும்பிய சிவபெருமான் , பைரவ அடியாராக வேடந்தாங்கித் திருச்செங்காட்டங் குடியை அடைந்தார். சிறுத்தொண்டரது வீட்டு வாயிலை அடைந்து "தொண்டர்க்குச் சோறளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ?" என வினவி நின்றார்.

அம்மொழியினைக் கேட்ட சந்தனத்தாதியார் முன்வந்து வணங்கி "அவர் அடியாரைத் தேடி வெளியே சென்றுள்ளார். வீட்டினுள் எழுந்தருள்வீராக" என வேண்டினார்.

வந்த பைரவ சுவாமியார் அவரை நோக்கி "மாதர்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகமாட்டோம்" என்றார்.

அது கேட்ட திருவெண்காட்டு நங்கையார். ‘இவ்வடியவர் போய்விடுவாரோ’ என்று அஞ்சி விரைந்து உள்ளிருந்து வீட்டு வாயிலிற்கு வந்து "எம்பெருமானே! அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பதற்கு அடியார் எவரையும் காணாமல் வெளியே சென்றுள்ளார்; தேவரீர் இங்கு எழுந்தருளியதனைக் கண்டால் தாம்பெற்ற பெரும்பேறெனக் கொள்வார். இனிச் சிறிதும் தாமதிக்கமாட்டார்; இப்பொழுதுதே வந்துவிடுவார். தேவரீர் வீட்டினுள் எழுந்தருளி இருப்பீராக" என இறைஞ்சினார்.

அதுகேட்ட பைரவர் "மாதரசியே நம் உத்தரபதியாயுள்ளோம், சிறுத்தொண்டரைக் காணவந்தோம். அவரின்றி இங்கு தங்க மாட்டோம். கணபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருக்கின்றோம். அவர் வந்தால் நாம் வந்த செய்தியைச் சொல்வீராக" எனக் கூறிச் சென்று திருவாத்தி மரநிழலின் கீழ் அமர்ந்தருளினார்.

அடியார்களைத் தேடி வெளியே சென்று திரும்பிய சிறுத்தொண்டர் அடியார் ஒருவரையும் காணாமையை மனைவியாருக்குச் சொல்லி வருந்தினார். அப்பொழுது மனைவியார் பைரவ அடியார் ஒருவர் வந்த செய்தியைக் கூறினார். சிறுத்தொண்டர் விருப்புடன் விரைவாகச் சென்று ஆத்தியின் கீழமர்ந்த அடியார் திருவடிகளைப் பணிந்து நின்றார். பணிந்து நின்ற சிறுத்தொண்டரை நோக்கிய பைரவ சுவாமியார் “நீரோ பெரிய சிறுத்தொண்டர்?” என வினவினார்.

சிறுத்தொண்டர் அவரை நோக்கி வணங்கி திருநீறு , உருத்திராக்கமுடைய அடியார்களைப் பணிந்து போற்றுவதற்குரிய தகுதி இல்லாதவனாயினும் சிவனடியார்கள் கருணையினால் என்னை அவ்வாறு அழைப்பர்” என்று கூறிப் பின் “இன்று சிவனடியார்களை அமுது செய்விக்க விரும்பி எங்கு தேடியும் காணப்பெற்றிலேன்’ தவத்தால் உம்மைக் கண்டேன். அடியேன் வீட்டில் எழுந்தருளி அழுது செய்தருளல் வேண்டும்" என வேண்டிக் கொண்டார்.

* நிபந்தனைகள்:

அதுகேட்ட பைரவர், சிறுத்தொண்டரை நோக்கி, "தவச்செல்வரே! உம்மைக் காணும் விருப்புடன் இங்கு வந்தோம். நாம் உத்தராபதியோம். எம்மைப் பரிவுடன் உண்பிக்க உம்மால் முடியாது; செய்கை அரியது" என்று கூறினார்.

"தேவரீர் அமுது செய்யும் இயல்பினை அருளிச் செய்யும். விரைந்து உணவு அமைக்கச் செய்வேன்" என்று சிறுத்தொண்டர் உரைத்தார்.

அதனைக் கேட்ட பைரவப் கோலப் பெருமான் "எம் அன்புக்குரிய தொண்டரே! நாம் ஆறுமாதத்திற்கு ஒருதடவை பசுவைக் கொன்று உண்ணுவது. அதற்குரிய நாளும் இன்றேயாகும். உம்மால் எம்மை உண்பிக்க முடியாது" என்றார்.

அதுகேட்ட சிறுத்தொண்டர் "மிகவும் நன்று, மூவகைப் பசு நிரையும் என்னிடமுள்ளன. பெரியீர், உமக்கு அமுதாகும் பசு இதுவெனத் தெரிவித்தால் நான் போய் விரைந்து போய் சமைத்துக் காலம் தப்பாமல் வருவேன்" என்று கைதொழுதார்.

பைரவர் அவரை நோக்கி "நாம் உண்ணக் கொல்லும் பசு நரபசு உண்பது அஞ்சு பிராயத்துள்; அது உறுப்பில் மறு இல்லாதிருத்தல் வேண்டும்" எனக் கூறினார்.

இதை கேட்ட சிறுத்தொண்டரும் "யாதும் அரியதில்லை அருளிச்செய்யும்" என்றார். 

"ஒரு குடிக்கு ஒருமகனாக சிறுவனை மனமுவந்து தாய்பிடிக்க தந்தை அரிந்து குற்றமின்றி அமைத்த கறியினை நாம் உண்பது" என மேலும் ஒன்றை பைரவர் கூறினார்.

அதைக் கேட்ட சிறுத்தொண்டர் "எம்பெருமான் அமுது செய்யப்பெறில் அதுவும் அரிதன்று" என்றார். அடியவர் இசையப்பெற்ற களிப்பால் அவர் திருவடிகளை வணங்கி வீட்டை அடைந்தார்.

வீட்டு வாயிலில் கணவர் வருகையை எதிர்பார்த்து நின்ற மனைவியார், அவரது மலர்ந்த முகங்கண்டு வந்த அடியாரைப் பற்றி வினவினார்.

சிறுதொண்டர் சிவபக்தியே உலகிற்கு புகட்ட சிவபெருமான் பைரவர் வேடம் கொண்டு சிறுதொண்டர் இல்லம் சென்று "ஒரு குடிக்கு ஒரு மகனாயும் ஐந்து வயதுடையவனாயும் உறுப்பில் ஊனமற்றனாயுமுள்ள பிள்ளையைத் தாய்பிடிக்க தந்தை மகிழ்ச்சியுடன் அரிந்து கறிசமைத்தால் தாம் திருவமுது செய்வதாகக்" கூறினார்.

சிவனாடியார்க்கு செய்யும் தொண்டு சிவனுக்கு செய்யும் தொண்டு எனும் கருத்துடைய சிறுதொண்டர் "தங்கள் விரும்பிய படி கறிசமைத்து தருகிறோம்" என கூறி பைரவரை இல்லம் அழைத்து சென்று அமர வைத்தார்.

* சந்தனத்தாதியார் சம்மதம்:

பைரவர் கூறிய நிபந்தனைகளை தன் மனைவி சந்தனத்தாதியாரிடம் எடுத்துரைத்தார் சிறுதொண்டர். அதுகேட்ட மனைவியார் "பெரிய பைரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுதளிப்போம்" எனத் தமது சம்மதத்தை தெரிவித்தார்.

"ஆனால் தங்கள் கூறிய ஒருவனாகி ஒருகுடிக்கு வரும் அச்சிறுவனைப் பெறுவது எவ்வாறு? என வினவினார்.

சிறுத்தொண்டர் மனைவியாரின் முகத்தை நோக்கி "பிள்ளையை நினைவு நிரம்பிய நிதி கொடுத்தாலும் தருவார் இல்லை? நேர் நின்று தம்பிள்ளையைத் தாமே அரியும் தாய் தந்தையார் இருக்கமாட்டார்கள். ஆகவே நான் உய்ய நீ பெற்ற மைந்தனை இங்கு அழைப்போம் பைரவர் அடியார் அமுதுக்கு உணவாக பரிமாருவோம்" என்றார்.

* மகனை அழைத்து வருவது:

மகன் வேதம் படிக்கும் இடம் சென்று "மகனே" என அன்புடன் அழைத்தார் சிறுதொண்டர். பாதச் சலங்கை ஒலியெழுப்பச் சீராளதேவர் ஓடிவந்து தந்தையைத் தழுவிய நிலையில், சிறுத்தொண்டர் மைந்தனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார்.

மைந்தனை எதிர்ச்சென்று வாங்கிய சிறுத்தொண்டர் மனைவியார் பிள்ளையைத் தலைசீவி, முகம்துடைத்துத் திருமஞ்சனமாட்டிக் கோலஞ் செய்து கணவர் கையிற் கொடுத்தார்.நடக்க விருப்பது யாதும் அறியாத அந்த ஐந்து வயது பிள்ளை தந்தையிடம் சென்றார்.

பிள்ளையைக் கையிற்கொண்ட சிறுத்தொண்டர் அடியார்க்குக் கறியமுதாம் என்று மைந்தனை உச்சிமோவாது, மார்பிலணைத்து முத்தம் கொள்ளாது யாரும் இல்லாத தனி இடம் சென்றார்.

* மகனின் உடலை அருப்பது:

தந்தையார்(சிறுதொண்டர்) பிள்ளையின் தலையைப் பிடித்தார். தாயார் (சந்தனத்தாதியார்) பிள்ளையின் கிண்கிணிக்கால் இரண்டினையும் மடியின் புடையில் இடுக்கிக் கொண்டார். அதனைக் கண்ட மைந்தன் பெற்றோர் முகம்நோக்கி கடைசியாக நகைத்தனன்.

தன் ஒரே மகனைத் தந்தையார் கருவிகொண்டு தலையரிவாராய் இருவர் மனமும் பேருவகை எய்தி அரியசெயல் செய்தனர். அறுத்த தலையின் இறைச்சி அமுதிற்கு ஆகாதென்று சிறுதொண்டர் கழித்து அதனை மறைந்தார்.

* கறியமுது படைப்பது:

மற்ற உறுப்புக்களின் இறைச்சிகளையெல்லாம் அறுத்துப் பாகம்பண்ணி வேறு கறிகளும் சமைத்துச் சோறும் சமைத்துக் கணவருக்குத் தெரிவித்தார் சந்தனத்தாதியார். சிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று பைரவ சுவாமிகளை வணங்கி "தேவரீர் அடியேன் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்தருள வேண்டும்" என்று ஆர்வத்தோடு அழைத்தார்.

"திருவமுது படைக்கும் வகை எவ்வாறு" என வினவினார் பைரவர் அடியார்.

"இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒப்படைக்க" என்று கூறினார் சிறுதொண்டர்; கறியமுது படையலை வாழையிலையில் பரிமாறினார் சந்தனத்தாதியார்.

* ஈசனின் சோதனை:

அதனைக் கண்ட பைரவர் அவரை நோக்கி "சொன்ன முறையிற் கொன்று உறுப்பு எல்லாவற்றையும் கொண்டு சுவை நிரம்பக் கறியாக்கி வைத்தீரோ?" என்றார்.

"தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாதென்று கழித்துவிட்டோம்" என்றார் சிறுதொண்டர்.

"அதுவும் கூட நாம் உண்பது" என்றார் பைரவர்.

அதுகேட்டுச் சிறுத்தொண்டரும் மனைவியாரும் திகைத்து நின்றனர். அப்பொழுது சந்தனத்தாதியார் "அந்தத் தலையிறைச்சி, வந்த தொண்டர் அமுது செய்யும் பொழுது நினைக்கவரும் என்று முன்னரே கறியாக்கி வைத்துள்ளேன்" என்று சொல்லி எடுத்துக்கொடுத்தார்.

* இறுதி சோதனை:

சிறுத்தொண்டரைப் பார்த்து "இங்கு நமக்கு தனியே உண்ண ஒண்ணாது, இறைவனடியார் இப்பக்கத்தே உள்ளாரை அழைத்துவாரும்" என்றார்.

அதுகேட்ட சிறுத்தொண்டர் 'அடியார் அமுது செய்ய இடையூறு இதுவோ' என்று வருந்தினார். வீட்டின் புறத்தே சென்று பார்த்தார். அடியார் ஒருவரையும் காணாது முகத்தில் வாட்டம் பெருக முதல்வரை வணங்கி "இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன். நானும் திருநீறு இடுவாரைக் கண்டு இடுவேன்" என்றார்.

அதுகேட்ட பைரவர் "உம்மைப்போல் நீறிட்டார் உளரோ? நீர் உடன் உண்பீர்" என்று கூறித் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, வேறொரு பரிகலம் இடச் செய்தார். உடனமைந்த சிறுத்தொண்டர், அடியாரை உண்பிக்கவேண்டி தாம் உண்ணப்புகுந்தார்.

அதுகண்ட பைரவர் அவரைத் தடுத்தருளி "நாம் ஆறுமாதம் கழித்து உண்போம். நாம் உண்ணுமளவும் பொறுத்திராது நாளும் சோறு உண்ணும் நீர் முன்பு உண்பது ஏன்? நம்முடன் இருந்துண்ண மகவினைப் பெற்றீராயின் அம்மைந்தனை அழையும்" என்றார்.

அதனைக் கேட்ட சிறுத்தொண்டர் "இப்போது அவன் உதவான்" என்றார்.

* கறியமுது படைத்த மகன் மீண்டும் உயிர் பெற்று வருவது:

"நாம் அவன் வந்தாலே உண்ண முடியும் புறத்தே சென்று அவனை நாடி அழையும்" என்றார் பைரவர்.

அச்சொற்கேட்டு சிறுத்தொண்டர் மனைவியாரோடும் புறத்தே போய் அழைத்தனர். அவர் மனைவியார் "செய்மணியே! சீராளா! வாராய்; சிவனடியார் நாம் உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார்" என்று ஓலமிட்டழைத்து அழுதார்.

அப்பொழுது பரமன் அருளால் பள்ளிக்கூடத்தினின்று ஓடுவருபவனைப் போன்று சீராளதேவர் வந்தார். வந்த புதல்வரைத் தாயார் தழுவியெடுத்தார் "சிவனடியார் அமுது செய்யப் பெற்றோம்" என்னும் மகிழ்ச்சியால் கணவர் கையில் கொடுத்தார்.

* பரமேஸ்வரன் திருவருள் புரிவது:

வந்த மைந்தரை அழைத்துக் கொண்டு அடியாரை அமுது செய்விப்பதற்கு உள்ளே புகுந்த சிறுத்தொண்டர் பைரவக் கோலத்தொண்டரைக் காணாதவராய்ச் சிந்தை கலங்கித் திகைத்து நின்றார்; வெந்த இறைச்சிக் கறியமுதினைக் காணாது மயங்கினார் நடப்பது புரியாமல் வெளியே சென்று பார்த்தார்.

அப்பொழுது பரமேஸ்வரன் உமையம்மையாரோடும், முருகனாகிய குழந்தையுடனும் விடை மீது அமர்ந்து எழுந்தருளித் திருவருள் புரிந்தார்.

அன்பின் வென்ற சிறுதொண்டரும் அவர் மனைவியாரும் சீராளதேவரும் தம் முன்னே தோன்றிய பெருமானை மனமும் கரைந்துருக நிலமிசை வீழ்ந்து துதித்துப் போற்றினார்கள்.

சிவபெருமான் உமாதேவியாரும் முருகவேளும், அங்குத் தம்மை வழிபட்டு நின்ற சிறுத்தொண்டர், மனைவியார், மகனார், தாதியார் நால்வரையும் தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினார்.

 

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

35 - சுந்தரமூர்த்தி நாயனார்
Image may contain: 10 people
பெயர்: சுந்தரமூர்த்தி நாயனார்
குலம்: ஆதி சைவர்
பூசை நாள்: ஆடிச் சுவாதி
அவதாரத் தலம்: திருநாவலூர்
முக்தித் தலம்: திருநாவலூர்

வரலாறு சுருக்கம்:

திருக்கயிலைமால் வரையில் சிவபிரானுடைய அடியார்களில் ஒருவர் ஆலாலசுந்தரர். இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய தொண்டினை மேற்கொண்டவர்.

அவர் ஒரு நாள் வழக்கம்போல் நறுமலர்கொய்துவரத் திருநந்தவனத்தை அடைந்தார். அங்கு அனிந்திதை, கமலினி என்னும் பெயர்களையுடைய நங்கையர் இருவர் முன்னரே மலர் கொய்து கொண்டிருந்தனர்.

ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் இவ்விருவரையும் கண்டார். அந்நங்கையர் இருவரும் ஆலாலசுந்தரர் தம் அழகில் ஈடுபட்டு ஆசை கொண்டனர்.

மகளிர்பாற் சென்ற மனத்தை மீட்டுச் சுந்தரர் இறைவனுக்குரிய நல்மலர்களைக் கொய்துகொண்டு பெருமான் திருமுன் சென்றார். அம்மகளிரும் அவ்வாறே மலர் கொய்து சென்றனர்.

எல்லா உயிர்களுக்கும் உள்நின்று அருள்சுரக்கும் பெருமான், ஆலாலசுந்தரரின் எண்ணத்தை அறிந்தார். சுந்தரரை விளித்து "நீ மாதர்மேல் மனம் வைத்தாய். ஆதலால் தென்னாட்டில் பிறந்து அம்மகளிருடன் மணந்து மகிழ்ந்து பின்னர் இங்கு வருக" என்று பணித்தார்.

சுந்தரர் அதனைக்கேட்டு மனம் கலங்கிக் கைகளைத் தலைமேல் குவித்து "எம்பெருமானே! தேவரீருடைய திருவடித்தொண்டிலிருந்து நீங்கி மானுடப்பிறப்பை அடைந்து மயங்கும்போது அடியேனைத் தடுத்தாட்கொண்டருள வேண்டும்" என வேண்டிக்கொண்டார்.

சிவ பெருமானும் சுந்தரருடைய வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் தென்தமிழ் நாட்டில் பிறந்தார்.

* பிறப்பு மற்றும் வளர்ப்பு :

திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகிய திருநாவலூரில் மாதொருபாகனாருக்கு வழிவழி அடிமை செய்யும் ஆதிசைவ வேதியருள் சிறந்தவராகிய சடையனார்க்கு அவர்தம் அருமைத் திருமனைவியார் இசைஞானியார்பால் தீதகன்றுலகம் உய்யத் திருஅவதாரம் செய்தருளினார்.

சிவபிரான் அருளால் தோன்றிய தம் குழந்தைக்கு நம்பியாரூரர் என்று திருப்பெயரிட்டனர் பெற்றோர். நம்பியாரூரர் நடைபயிலத் தொடங்கித் தெருவீதியில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்து அந்நாட்டு அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார்.

நம்பியாரூரர் அறிவொளி திகழும் திருமுகப் பொலிவினைக் கண்டு மகிழ்ந்து பெற்றோர்களிடம் சென்று நட்புரிமையால் நம்பியாரூரரை வேண்டிப் பெற்றுத் தம் அரச பதவிக்குரிய தம் அரசிளங்குமரராகக் கருதி அன்போடு வளர்த்து வருவாராயினார்.

அரசரின் அபிமானப் புதல்வராய் வளர்ந்த நம்பியாரூரர் அந்தணர்மரபுக்கேற்ப முந்நூல் அணிந்து அளவற்ற கலைகளில் வல்லவராய் விளங்கினார். இவ்வாறு இளம் பருவத்திலேயே திருவும் கல்வியும் வாய்க்கப்பெற்ற நம்பியாரூரர் இளவரசராயிருந்து பழகித் திருமணப்பருவத்தை அடைந்தார்.

சடையனார் தம் மைந்தர்க்குத் திருமணம் செய்ய எண்ணினார். திருநாவலூரை அடுத்த புத்தூரில் சைவ அந்தணர் மரபில் வந்த சடங்கவி சிவாசாரியார் என்னும் பெரியாரின் திருமகளை மணம் பேசி வரப் பெரியோர்களை அனுப்பினார். தம்முடைய திருமகளை மணம் செய்து தர இசைந்தார்.

முதியோரும் சென்று இம்மகிழ்ச்சியைச் சடையனாருக்குத் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு மகிழ்ந்த சடையனார் திருமண நன்னாளை உறுதிசெய்து நம்பியாரூரரது அரச பதவிக்கு ஏற்பச் சுற்றத்தார் நண்பர் முதலானோர்க்குத் திருமணத் திருமுகம் அனுப்பினார். புத்தூரில் சடங்கவி சிவாசாரியாரும் திருமணம் நிகழ்த்தற்கு வேண்டிய எல்லாவற்றையும் குறைவறச் செய்தார்.

* தடுத்தாட் கொள்வது:

மன்னன் நரசிங்கமுனையரையர், சடையனார் மற்றும் இசைஞானியார் ஆகியோர் நம்பியாரூரர் திருமணம் ஏற்பாடு சிறப்பாக செய்தனர். மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவம் கொண்டு வந்த சிவபெருமான். சுந்தரமூர்த்தி நாயனார் திருமணத்திற்கு வந்தார்.

முதியராய் வந்தவர் அங்குள்ளவர்களைப் பார்த்து "வேதியர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள்" என்றார்.

அதனைக் கேட்ட வேதியர் அவரை வரவேற்றுத் "தாங்கள் கூற வந்ததைக் கூறுங்கள்" என்றனர்.

அந்தணர் நாவலூர் நம்பியை நோக்கி "எனக்கும் உனக்கும் ஒரு பெருவழக்குள்ளது; அதனை முடித்தபின் திருமணத்தைச் செய்ய முயலுக" எனக் கூறினார்.

நம்பியாரூரர் அந்தணரைப் பார்த்து "உமக்கும் எமக்கும் வழக்கு இருப்பது உண்மையானால் அதனை முடிக்காமல் நான் திருமணஞ் செய்து கொள்ளேன்; உம் வழக்கினைக் கூறும்" என்றார்.

முதியவர் அவையோரை நோக்கி "நான் திருவெண்ணெய் நல்லூரிலிருந்து வருகிறேன்;
நம்பியாரூரர் எனக்கு வழி வழி அடிமையாவன். இதுவே நான் சொல்லவந்த வழக்கு" என்றார்.

சபையில் இருந்த அனைவரும் சிரித்தனர்...

"அக்காலத்தில் நம்பியாரூரர் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஓலை என்னிடம் இருக்கையில் நீ நகைப்பதன் பொருளென்ன?` எனக் கேட்டார் முதியராய் வந்த சிவபெருமான்.

"ஐயா! அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டும்; உண்மையை அறிவேன்" என்றார் நம்பியாரூரர்.

"நீ அவ்வோலையைக் காணுதற்குத் தகுதி உடையவனா? அதனை அவையோர் முன்னிலையில்காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் எனக்கு நீ அடிமைத் தொழில் செய்தற்கே உரியவன்" என்றார் அந்தணர்.

அம்மொழிகேட்டு வெகுண்ட நம்பிகள் விரைந்தெழுந்து ஓலையோ பிடுங்கி "பித்தனே
அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்ன முறை" என்று சொல்லிக் கொண்டு அவ்வோலையைக் கிழித்து எறிந்தார்.

அதை கண்ட அந்தணர் "நம்பியாரூரனாகிய இவன் என்கையிலுள்ள ஓலையை வலியப் பிடுங்கிக் கிழித்தெறிந்துவிட்டான். அதன் மூலமாக அவன் என் அடிமை என்ற உண்மையை உறுதிப்படுத்திவிட்டான்" என்றார்.

இதை கேட்ட நம்பியாரூரர் முதியவரை நோக்கி "நும்முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராய் இருக்கு மானால் உமது பிழைபட்ட வழக்கை அங்கேயே பேசித் தீர்த்துக்கொள்வோம்" என்றார்.

முதியவர் "நீ திருவெண்ணெய் நல்லூர்க்கு வந்தாலும் நான்மறை உணர்ந்த அவையத்தார் முன்னிலையில் உன் பாட்டன் எழுதிக்கொடுத்த மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்துவேன்" என்று கூறிக் கோலை ஊன்றிக் கொண்டு முன்னே சென்றார்.அவரைப் பின்தொடர்ந்து நம்பியாரூரரும் சென்றார்.

* திருவெண்ணெய்நல்லூர் அவையில்:

திருவெண்ணெய்நல்லூர் சபையில் நடந்த சம்பவத்தை நம்பியாரூரர் மற்றும் முதியவர் வேடம் தரித்த சிவபெருமான் இருவரும் கூறினார்கள். அந்தணர் நிறைந்த பெரும் சபையின் முன் மூலஓலை சுவடியே அளித்தார் முதியவர்.

அதை படித்த திருவெண்ணெய் நல்லூர் சபையின் அந்தணர்கள் ஓலை சுவடியில் இருக்கும் கையொழுத்தை ஒப்பிட்டு பார்த்து நம்பியாரூரர் அந்தணருக்கு அடிமை என தீர்ப்பளித்தனர். நம்பியாரூரரும் அந்த தீர்ப்புக்கு கட்டுப்பட்டார்.

அதன்பின் அவையினர் அந்தணரை நோக்கி "நும் முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராக ஓலையில் குறிப்பிடப் பெற்றுள்ளதே, இவ்வூரில் உமது வீட்டையும், வாழ்க்கைச் செல்வத்தையும் எங்களுக்குக் காட்டுக" என்றனர்.

அதை கேட்ட அந்தணர் வேடம் தரித்த சிவபெருமான் "உங்களில் ஒருவரும் என்னை அறியீராயின் என்னுடன் வருக" என்று சொல்லி நம்பியாரூரரும் அவையத்தாரும் தம்மைப் பின் தொடர்ந்து வரத் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள திருவருட்டுறை என்னும் திருக்கோயிலுட் புகுந்து மறைந்தார்.

பின் சென்றார் யாவரும் அவரைக்காணாது திகைத்து நின்றனர். உடன் சென்ற நம்பியாரூரர் "என்னை அடிமைகொண்ட மறையவர் கோயிலுள் புகுந்து மறைந்தது என்கொலோ" என்று வியப்புற்று அவரைத் தொடர்ந்து சென்று கதறி அழைத்தார்.

* சிவபெருமான் காட்சியளித்தல்:

மறையவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெருமான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து "நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். அப்போது மாதர்பால் மனம் வைத்தாய்; ஆதலால் நம் ஏவலால் மண்ணுலகில் பிறந்தாய். இவ்வுலகியல் வாழ்வு உன்னைத் தொடர்ந்து வருத்தாவண்ணம் நாமே உன்னைத் தடுத்தாட் கொண்டோம்" என்று உண்மை உணர்த்தியருளினார்.

நம்பியாரூரர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார் மெய்சிலிர்க்க சிவபெருமானை வணங்கினார். "நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக" எனப் பணித்தருளினார் பரமேஸ்வரன்.

அவ்அருளுரையைச் செவிமடுத்த நம்பியாரூரர் "என்னை வழக்கினால் வெல்ல வேதியனாய் வந்த கோதிலா அமுதே! நாயேன் நினது திருவருட் பண்பாகிய பெருங்கடலுள் எதனைத் தெரிந்து எத்தகைய சொற்களால் பாடுவேன்" என்று கூறி உளங்கசிந்து நின்றார்.

அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால் என்பெயர் "பித்தன் என்றே பாடுக" என்று இறைவன் அருளிச்செய்தார்.

நம்பியாரூரர் தம்மை ஆண்டருளிய வள்ளலாரின் பெருங்கருணைத் திறத்தைப் "பித்தா பிறைசூடீ" என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடியருளினார்.

இத்திருப்பதிகத்தைச் செவிமடுத்து மகிழ்ந்த "இறைவன் இவ்வுலகில் இன்னும் இவ்வாறே நம் பொருள் சேர் புகழைப் பாடிப் பரவுக" என்று கூறி மறைந்தருளினார். 

 திருவதிகையில் திருவடி சூட்டப் பெறுதல்:

ஒரு முறை சித்தவடம் என்னும் மடத்தில் தங்கினார்.உடன் வந்த அடியார்களோடு அதிகை
வீரட்டானேஸ்வரரை இடைவிடாது எண்ணிய வண்ணம் துயின்றார். இறைவன் முதிய அந்தணர் வடிவம் பூண்டு யாரும் அறியாதபடி புகுந்து சுந்தரர் தலையின் மேலே தமது திருவடி படும்படியாக வைத்துத் துயில் கொள்வாரைப் போன்று இருந்தார்.

உடனே நம்பியாரூரர் விழித்து எழுந்து "அருமறை யோனே! உன் அடிகளை என் தலைமேல் ஏன் வைத்தனையே" என்று கேட்டார்.

"நீர் துயிலும் திசையை அறியாவகை செய்தது என் முதுமை" என்றார் அந்தணர்.

நம்பிகள் வேறொரு திசையில் தலையினை வைத்துத் துயில்கொள்ளத் தொடங்கினார். மீண்டும் அந்தணர் நம்பியாரூரர் தலைமேல் தம் திருவடிகளை நீட்டிப் பள்ளி கொண்டார். 

நம்பியாரூரர் எழுந்து "இவ்வாறு பலதடவை மிதிக்கும் நீர் யார்?" என்று சினந்து கேட்டார்.

உடனே அந்தணர் "என்னை நீ இன்னும் அறிந்திலையோ" என்று கூறியவாறு மறைந்தருளினார்.

அம்மொழி கேட்ட ஆரூரர் தம் முடியில் திருவடி வைத்தருளியவர் சிவபிரானே என்று தெளிந்து தம் பொருட்டு எளிவந்தருளிய எம்பெருமானைக் காணப்பெற்றும் "அறியாமையால் இறுமாந்து இகழ்ந்துரைத்தேனே" என்று வருந்தித் 'தம்மானை அறியாத சாதியார் உளரே' என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார்.தில்லைப் பதியின் எல்லையை அடைந்தார்.

* தம்பிரான் தோழராதல்:

திருவாரூரில் கோயில்கொண்டருளிய இறைவர் அடியார்கள் கனவில் தோன்றி "நம் ஆரூரனாகிய வன்றொண்டன் நாம் அழைக்க இங்கு வருகின்றான். நீங்கள் மகிழ்ந்து அவனை எதிர்கொண்டழைத்து வருக" எனக் கட்டளையிட்டார்.

தொண்டர்கள் பெருமான் கட்டளையை யாவர்க்கும் அறிவித்தார்கள். திருவாரூரை அலங்கரித்து எல்லோரும் கூடி மங்கல வாத்தியங்களுடன் சென்று வன்றொண்டரை எதிர் கொண்டழைத்தார்கள்.

நம்பியாரூரரும் தம்மை எதிர்கொண்டழைத்த அடியார்களைத் தொழுது, "எந்தையிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்ற கருத்துக்கொண்ட :கரையும் கடலும்" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக் கொண்டு திருக்கோயில் வாயில் அணுகினார்.

அப்பொழுது யாவரும் கேட்க வானில் "நம்பி யாருரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத் தாட்கொள்ளப்பெற்ற அந்நாளில் கொண்ட திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந்நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக" என்ற அருள்வாக்குத் தோன்றிற்று.

அசரீரி கேட்ட சுந்தரர் பெருமானது கருணையை வியந்து போற்றி வாழ்த்தினார். அன்று முதல் அடியார்களெல்லாம் அவரைத் "தம்பிரான் தோழர்" என்று அழைத்தனர்.

இறைவன் கட்டளைப்படி திருமணக் கோலத்தோடு தூய தவ வேந்தராய்ப் பூங்கோயிலமர்ந்த பிரானை நாடோறும் வழிபட்டு இன்னிசைத் தமிழ்மாலை பாடியிருந்தார் சுந்தரர்.

* பரவையார் திருமணம்:

திருக்கயிலாய மலையில் ஆலாலசுந்தரரால் காதலிக்கப்பெற்ற மகளிர் இருவருள் ஒருவராகிய கமலினி என்பார் திருவாரூரில் உருத்திர கணிகையர் குலத்துட் பிறந்து பரவையார் என்னும் பெயரைப் பெற்றுத் திருமகளே இவள் என்று சொல்லுமாறு பேரழகோடு வளர்ந்து திருமணபருவம் எய்தினார்.

பரவையார் தம் தோழியர்களுடன் வழக்கம் போல் திருவாரூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வரும் நாட்களில் ஒருநாள் சுந்தரர் சிவபிரானை வணங்கிக்கொண்டு அடியார்கள் சூழத் திரும்பி வரும் போது ஊழ்வினை பரவையாரைக் கண்டார்.இருவரும் அன்பு கொண்டனர்.

இருவரும் வன்மீகநாதரிடம் தங்கள் விருப்பத்தை வேண்டினார்கள்.நடப்பவை ஈசன் செயல் அல்லவா! சிவபெருமான் அன்றிரவே அடியார்கள் கனவில் தோன்றிப் பரவையாரைச் சுந்தரர்க்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு பணித்தருளினார்.

பொழுது புலர்ந்தது, அடியார்கள் திரண்டு வந்து சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் பரவையார்க்கும் வேத நியமனபடித் திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தனர்.சுந்தரர் பரவையாருடன் சிவாலயம் சென்று செந்தமிழ்ப் பதிகங்கள் பாடிச் சிவபிரானைப் போற்றி மகிழ்ந்திருந்தார்.

* திருத்தொண்டத்தொகை பாடியருளியது:

ஒருமுறை தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். "இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ?" என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார்.

தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து அவர் முன் காட்சி வழங்கி அடியார்களின் பெருமையை அவர்க்கு உணர்த்த விரும்பிச் சுந்தரரை நோக்கி "அடியார் பெருமையை எடுத்துக்கூறி பாடல் பாடி இத்தகைய அடியார்கள் கூட்டத்தை நீ அடைவாயாக" என்றருளிச் செய்தார்.

நம்பியாரூரர் "அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்" என்று வேண்டினார்.

சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார்.

நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.

* குண்டையூரில் நெல்மலை அளிக்கப் பெற்றது:

குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார். 

இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத்தில் ஒருசமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய படித்தரங்களில்லாமைக்கு மனம் வருந்தி உணவுகொள்ளாது அன்றிரவு துயின்றார்.

சிவபெருமான் அவர் கனவில் தோன்றி "ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம்" என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது.

குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் "இறைவன் கருணையை கூறி; அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும்" என்று வேண்டினார்.

அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக் கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து "நீளநினைந் தடியேன்" என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச் செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார்.

"இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக்கொண்டுவந்து குவிக்கும்" என்று அசரீரி சிவபெருமானருளால் எழுந்தது.

அன்றிரவு பூதகணங்கள் குண்டையூரிலிருந்து நெல்லை வாரிக்கொண்டுவந்து திருவாரூரில் பரவையார் மாளிகையிலும், திருவீதிகளிலும் நிரப்பின, காலையில் நெற்குவியலைக் கண்டு வியந்து மகிழ்ந்த மக்களனைவரும் சுந்தரர் புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்தார்.

* மன்னன் அளித்த பரிசுகளை பறித்துக் கொள்வது:

இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார்.

திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் "கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்" எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சுந்தரமூர்த்தி நாயனார் அற்புதங்கள் :

* செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.

* பரவையார் சினம் தீர சிவபெருமான் தூது சென்று சினம் தீர்த்தது.

* சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை
விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.

* காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.

* அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.

* வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.என பலவற்றை கூறிக்கொண்டே செல்லலாம்.

* திருப்பாட்டு :

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.
சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார்.

சிவபெருமான் மேல் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக் கொண்டு கயிலை அடைந்தார். 

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

36 - செருத்துணை நாயனார்
Image may contain: 2 people, people standing
குலம்: வேளாளர்
பூசை நாள் : ஆவணி பூசம்
அவதாரத் தலம் : கீழ்த்தஞ்சை
முக்தித் தலம் : ஆரூர்

வரலாற்று சுருக்கம்:

நின்மலராகிய சுவாமிக்குப் பூசையில் அர்ப்பணிக்கப்படுவன அனைத்தும் சகலவிதத்திலும் நிர்மலமாயிருக்க வேண்டுமென்பது; அவையொவ்வொன்றும் அசுத்தமற்ற சூழ்நிலையிலிருந்து சமயாசார ரீதியான அகப்புறச் சுத்தி உடையோரால் எடுக்கப்பட்டுச் சிவ சிந்தனையோடு கையாளப்படவேண்டும் என்பது பூசைநியம விதிகளில் ஒன்று.

அவற்றின் மணங் குணங்களில் ஈடுபட்டு வாயூறுதலும் மூக்குளைந்து முகரவிழைதலும் கண்டிப்பாக விலக்கப்பட்டொழிந்தனவாம். அது, பூசைத் திரவியங்களை நாக்கு மூக்குத் தள்ளியெடுத்துக் கொள்ளவேண்டும் என நடைமுறை வழக்கிலிருந்து வரும் விதியால் சூசகமாக அறிவிக்கப்பட்டிருத்தல் காணத்தகும்.

இனி, அவ்வகையிற் பூசைக்கெனச் சங்கற்பித்தெடுக்கப்பட்டவை தற்செயலாக வழுவி விழுந்து கிடக்கும் நிலையிலும் பூசைப்பொருள்களே எனக் கொள்ளுதல் பூசைத் திரவிய மகிமையைப் பேணும் நெறியாம். 

அது, பூசை செய்து கழித்த பத்திர புஷ்பங்களாகிய நின்மாலியங்களை மிதித்தலாகாது என்ற வரையறை போல்வதோர் நெறியாகும். ஆதலின், தற்செயலாக நழுவிக்கிடக்கும் அவற்றைத் தானும் இரசனையுணர்வு முகர்வுணர்வுகளுக்கு விஷயமாக்குதலும் பழுதேயாம்.

சோழமண்டலத்திலே, மருகனாட்டிலே, தஞ்சாவூரிலே வேளாளர் குலத்திலே, சைவசிரோமணியாகிய செருத்துணை நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருவாரூரை அடைந்து, காலந்தோறும் வன்மீகநாதரை வணங்கித் திருத்தொண்டுகள் செய்துகொண்டிருந்தார்.

இருக்கு நாளிலே. அங்கே சுவாமி தரிசனஞ் செய்யவந்த கழற்சிங்கநாயனாருடைய மாதேவி பூமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தாள் என்று நினைத்து, கத்தியினாலே அவளுடைய மூக்கை அரித்தார்.

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2017 at 9:45 PM, Surveyor said:

6 - இசைஞானியார் நாயனார்
Image may contain: 3 people, people standing
பெயர்: இசைஞானியார்
பால்: பெண்
குலம் : ஆதி சைவர்
பூசை நாள்: சித்திரை சித்திரை
அவதாரத் தலம்: திருவாரூர்
முக்தித் தலம்: திருநாவலூர்

அறுபத்துமூன்று நாயன்மார்களில் பெண் மொத்தம் மூவர். அவர்களில் ஒருவரே இசைஞானியார் ஆவார்.

"இசைஞானி காதலன் அடியார்க்கும் அடியேன்"
- திருத்தொண்டத் தொகை.

திருவாரூரிலே கௌதம கோத்திரத்தில் அவதரித்த ஞானசிவாச்சாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார்.சிறுவயது முதல் சிறந்த சிவபக்தையாக திகழ்ந்தார். அவர் திருவாரூர் இறைவரது திருவடி மறவாதவர்.

திருமணப் பருவம் அடைந்ததும் சடையநாயனாரது உரிமைத் திருமனைவியானார். இசைஞானியார் பக்தியில் மகிழ்ந்த ஈசன் சுந்தரமூர்த்தி நாயனார் புத்திரனாகப் பெறும் பேறுபெற்ற இசைஞானிப் பிராட்டியாரின் பெருமை எம்மால் புகழக் கூடியதோ? என்று கூறுமளவு சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.

சடையநயனார் ஈசனுக்கு தினமும் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்த போது சடையநயனாருக்கு உதவிகள் பல புரிந்தார்; வறட்சி வரும்போதும் சடையனாருக்கு மனதைரியம் கொடுத்தார். கணவன் அரிவாளால் கழுத்தை அறுக்கும் போது "பரமேஸ்வரா என் கணவரை காப்பாற்று" என இசைஞானியார் ஈசனை அழைத்தார். இருவரையும் காப்பாற்ற ஈசன் தோன்றினார்.

தனக்கு பிறக்கும் குழந்தை தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதற்காக;குழந்தை கருவில் சுமக்கும் போதே சிவமந்திரங்கள் மற்றும் சிவபோற்றிகளை கற்பித்த மிகச் சிறந்த சிவபக்தை.
இவருக்கு பிறந்த சுந்தர மூர்த்தி நாயனார் சைவம் குரல்களில் ஒருவர் என்பது கூறிப்பிடத்தக்க ஒன்று.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் கடைசி நாயன்மார் இசைஞானியார் என்பது கூறிப்பிட வேண்டிய ஒன்று...

http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html

இவர்கள் எழுதிய பின்பு வாசிப்பதில்லையா?
அல்லது என்ன காரணத்தால் இவ்வாறான தவறுகள் வருகிறது?

Link to comment
Share on other sites

இந்த நாயன்மார்கள் எந்த காலத்தில் வாழ்ந்தார்கள். ஆகக்குறைந்தது  பிறந்த வருடம், இறந்த வருடம் என்பன குறிப்பிடப் பட வில்லை. அது ஏன் ? 

Link to comment
Share on other sites

47 minutes ago, tulpen said:

இந்த நாயன்மார்கள் எந்த காலத்தில் வாழ்ந்தார்கள். ஆகக்குறைந்தது  பிறந்த வருடம், இறந்த வருடம் என்பன குறிப்பிடப் பட வில்லை. அது ஏன் ? 

சில விடயங்களுக்கு அறிவியியலால் விடை கூற முடியாது. 

 

Link to comment
Share on other sites

12 minutes ago, ampanai said:

சில விடயங்களுக்கு அறிவியியலால் விடை கூற முடியாது. 

 

நான் கேட்டது பெருவெடிப்பு எப்போது உருவானது என்பது பற்றி அல்ல. வாழ்ந்து செத்து போன சில மனிதர்களின் பிறந்த திகதி கூட அல்ல அல்ல பிறந்த வருடம் பற்றி இறந்த வருடம் பற்றி.  காலத்தை துல்லியமாக  சுட்டிக்காட்டும் கலண்டர் முறை அந்த காலத்தில் இல்லை என்பதை கூறுவது ஒன்றும்  எம‍க்கு ஈகோ பிரச்சனை இல்லை.  

Link to comment
Share on other sites

Just now, tulpen said:

நான் கேட்டது பெருவெடிப்பு எப்போது உருவானது என்பது பற்றி அல்ல. வாழ்ந்து செத்து போன சில மனிதர்களின் பிறந்த திகதி கூட அல்ல அல்ல பிறந்த வருடம் பற்றி இறந்த வருடம் பற்றி.  காலத்தை துல்லியமாக  சுட்டிக்காட்டும் கலண்டர் முறை அந்த காலத்தில் இல்லை என்பதை கூறுவது ஒன்றும்  எம‍க்கு ஈகோ பிரச்சனை இல்லை.  

எமது பாட்டனார் பிறந்தார் என்று தெரியும். ஆனால், எப்பொழுது பிறந்தார் என தெரியாது.  

Link to comment
Share on other sites

56 minutes ago, ampanai said:

எமது பாட்டனார் பிறந்தார் என்று தெரியும். ஆனால், எப்பொழுது பிறந்தார் என தெரியாது.  

காலனித்துவத்தை எதிர்த்து போரிட்ட பண்டார வன்னியனியனின் பிறந்த திகதி தெரியாது. இறந்த திகதி 31 அக்ரோபர் 1803 என்பது தெரியும். ஏனென்றால் அவன் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டதால். இதே பண்டாரவன்னியன் உள்ளூர் அரசனுடன் நடந்த போரில் இறந்திருந்தால் அந்த  இறந்த திகதியும்  தெரியாமல் போயிருக்கும்.  சிலவேளை 65 வது நாயன்மாராகவும் காட்டபட்டிருக்கலாம்.  இறந்த அல்லது  பிறந்த திகதிகள் ''ஆவணி பூசம்'', ''சித்திரை சித்திரை'' என்று தலையும் புரியாமல் காலும் புரியாமல்   குறித்து வைக்கப்பட்டும் இருந்திருக்கலாம். 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

வாழ்ந்து செத்து போன சில மனிதர்களின் பிறந்த திகதி கூட அல்ல அல்ல பிறந்த வருடம் பற்றி இறந்த வருடம் பற்றி.  காலத்தை துல்லியமாக  சுட்டிக்காட்டும் கலண்டர் முறை அந்த காலத்தில் இல்லை என்பதை கூறுவது ஒன்றும்  எம‍க்கு ஈகோ பிரச்சனை இல்லை.  

வரலாறு முழுமையாக எழுதப்படாவிட்டாலும் நாயன்மார்கள் தமிழர் மரபில் முக்கியமானவர்கள். அவர்களின் பிறந்த வருடம், இறந்த வருடம் தெரியாவிட்டாலும் நட்டத்திரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. பக்தி இலக்கியம் தமிழில் முக்கியமான காலகட்டம்.

எமது வேர்களை நாம் எப்போதும் பெருமைப்படுத்தப்படவேண்டும்.

 

இது முதற்பக்திகாலகட்டம் என்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. இதில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதல்காலகட்டம் குரவர் கட்டம். இக்காலகட்டத்தில் ஆழ்வார்கள் நாயன்மார்கள் முதலியோர் உருவாகி ஊர்தோறும் சென்றார்கள். அடுத்து, தொகுப்புக்காலகட்டம். இக்காலகட்டத்தில் சைவ வணைவ பக்தி நூல்கள் தொகுக்கப்பட்டு எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த ஆழ்வார்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. புதிதாகக் கிளம்பிய நாயன்மார்கள் சிதையில் ஏறி எரிந்து சொர்க்கத்துக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் பின்வாங்கினாலும் நந்தன்சாம்பான் என்ற தீண்டப்படாத சாதி மனிதர் மட்டும் நம்பி மோசம்போனதாகத் தெரிகிறது.

அடுத்த காலகட்டம் புராணக் காலகட்டம். இக்காலகட்டத்தில் பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றிய அரியசெயல்களைப்பற்றி புராணங்கள் வனையப்பட்டன. ஒரு நாயனார் நெய்விட்ட அக்கார அடிசிலை தினம் நானாழி கொடுக்கவே எலும்பும்தோலுமாக மெலிந்திருந்த ஒரு பெண் பட்டினி நீங்கிப் பருத்ததை வெள்ளெலும்பைப் பெண்ணாக்கிய படலம் என்று பௌராணிகர் எழுதியதே தொடக்கம். பின்னர் படலம் படலமாகப் புராணங்கள். வேறு ஜோலியாகப் போன பார்வதியின் முலை உண்டு பாடல் பாடியது, கோயில் கதவு எளிதே திறக்க உயவுக்கு துளி ஆமணக்கெண்ணை போடலாகாதா என்று பாடிய பாடல் எனப் பல.

கடலைக் கடக்க கட்டுமரத்தில் ஏறுகையில் அலைபாயாமலிருக்க கட்டுமரத்தில் கனத்தகல் ஒன்றைக் கட்டிய மீனவன் செயல்கண்டு குலைபதறிய குரவரொருவர் ‘நமச்சிவாயம்’ என்று கதறி, பின்னர் அதையே ‘கற்றுணை பூட்டி கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே’ என்று பாடி அழியாப்புராணமானார். திருமண முகூர்த்த்தில் வந்து பற்று ஓலையைக் காட்டி கலாட்டா செய்த கடன்கொடுத்த செட்டியைப்பற்றி பெண்வீட்டார் விசாரிக்கையில் அது செம்பொன்மேனி சோதியனே என்று சமாளித்த நாயனும் நயத்தக்கவரானார் என்பது வரலாறு.—

https://www.jeyamohan.in/316#.XoCFMS_TVR4

Link to comment
Share on other sites

57 minutes ago, கிருபன் said:

வரலாறு முழுமையாக எழுதப்படாவிட்டாலும் நாயன்மார்கள் தமிழர் மரபில் முக்கியமானவர்கள். அவர்களின் பிறந்த வருடம், இறந்த வருடம் தெரியாவிட்டாலும் நட்டத்திரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. பக்தி இலக்கியம் தமிழில் முக்கியமான காலகட்டம்.

எமது வேர்களை நாம் எப்போதும் பெருமைப்படுத்தப்படவேண்டும்.

 

 

கிருபன்  தங்கள் பதிலுக்கு நன்றி. எமது வேர்களை நாம் பெருமை படுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து எனக்கும் இல்லை. ஆனால் அறிவுக்கு சற்றும் பொருந்தாத அல்லது காலாவதியான இந்த காலத்துக்கு எள்ளவும் பொருந்தாதவற்றை நடைமுறையில் செய்வது மற்றும் முன்னோர்கள் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதை ஏன் என்று கேட்காமல் ஏற்றுக்கொள்வது எமது நீங்கள் கூறிய எமது வேர்களை அவமதிப்பதாகவே அமையும் என்பது எனது அபிப்பிராயம். 

மேலும் மேற்படி பதிவில் நான் சொன்ன முக்கியமான விடயம் காலத்தை துல்லியமாக காட்டும் கலண்டர் முறை நமது முன்னோர்களால் உருவாக்கபட வில்லை  என்பதையே. அல்லது வேண்டுமென்றே பாப்பனர்களால் மூடத்தனமான கலண்டர் முறை அறிமுகபடுத்த பட்டதாக.  முன்னோரை சிலாகிக்கும் போது அவர்களின் பலவீனங்களையும் எண்ணி பார்த்தாலே அடுத்த தலைமுறை அவர்களை விட சிறப்பானவர்களாக மாற முடியும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்தம், சமணம் என வேறு மதங்கள் வேகமாக பரவியபோது, உருவாகியதே பக்திமார்க்கம்.

சைவத்தை போற்றிய அறுபத்து நாயன்மார்கள் போலவே, வைணவத்தைபோற்றிய பன்னிரு ஆழ்வார்கள்.

நாயன்மார்கள் குறித்து சேக்கிழார் பதிவு செய்தது போல, ஆழ்வார்கள் குறித்து பதிவு செய்தவர் நாதமுனி.

நாயன்மார்கள், ஆழ்வார்கள் சேர்ந்து உருவாக்கியதே பக்திமார்க்கம்.

சேர்ந்தே உருவாக்கியவர்கள், பிறமதங்களை விரட்டியபின்னர் பின்னர் தமக்குள் அடிபட்டுக் கொண்டது வேறு கதை.

நாயகர்கள் காலத்தில், மதுரை திருமலை நாயக்கர், கள்ளழகர், தனது தங்கை மீனாடசியினை, சிவனுக்கு கொடுத்து, திருமணத்தினை நடத்தி வைத்ததாக விழா எடுத்ததன் மூலம் சைவ, வைஷ்ண ஒற்றுமை உண்டாக்கியது என கூறப்பட்டாலும், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து போன்ற பிற மதங்களின் வருகையும் இந்த ஒற்றுமைக்கு ஒரு காரணியாக உள்ளது என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.