Jump to content

சிவப்புக்கல் மோதிரம்


Recommended Posts

சிவப்புக்கல் மோதிரம் - சிறுகதை

பாவண்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம்

 

64p1.jpg

``இன்னிக்கு என்ன பூமழையா? இப்படி ஏராளமான பூக்கள் விழுந்து கெடக்குது!”

இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வாசற்கதவைத் திறக்கும் வரையில் தமிழுடன் பேச்சை எப்படித் தொடங்குவது என்ற குழப்பத்தில் தத்தளித்தபடி இருந்தேன். ஆனால், சுற்றுச்சுவர் கம்பிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும், சுவருக்கும் வீட்டுவாசலுக்கும் நடுவில் நின்றிருக்கும் மகிழமரத்தடியில் விழுந்துகிடக்கும் பழைய பூக்களின் குவியல் மீது உதிர்ந்திருக்கும் புதிய பூக்களைப் பார்த்ததும் உரையாடலுக்கு ஒரு தொடக்கம் கிடைத்துவிட்ட வேகத்தில்தான் அப்படிக் கேட்டேன். ஆனால், மறுகணமே அந்த வேகம் வடிந்துவிட்டது.

அதற்குள் ``எல்லாம்... `வருக வருக'னு உனக்கு வரவேற்பு கொடுக்கிறதுக்கான ஏற்பாடு கதிர்” என்றபடி கதவு ஓரமாகச் சாய்ந்து பழைய புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்த தமிழ், என்னைப் பார்த்துச் சிரித்தான். தொடர்ந்து “வருக வருக” என்று நாடகத்தனமாகச் சொன்னபடி, இன்னொரு முறையும் சிரித்தான். வாளியில் இருந்த துணிகளை எடுத்து உதறி, கொடியில் போட்டுக்கொண்டிருந்த கல்யாணியும் திரும்பி ``வாங்க வாங்க” என்றாள். மேலும் “அறுபதைத் தாண்டின ஆளுங்களுக்குத் தகுந்த மாதிரியா பேசறீங்க நீங்க? என்னமோ, இப்பதான் கூட்டாளி கிடைச்ச இளவட்டப் புள்ளைங்களாட்டம் இருக்குது உங்க பேச்சு” என்றாள்.

p64.jpgவீடே ஞாயிற்றுக்கிழமையின் களையில் திளைத்திருந்தது. எட்டு மணியைக் கடந்தும், போர்வையை இழுத்து முழுவதுமாகப் போத்திய நிலையில் செல்வம் ஒரு பக்கம் தூங்கிக்கொண்டு இருந்தான். இன்னொரு பக்கம் நிர்மலா காபிக் கோப்பையைக் கையில் பிடித்தபடி படுக்கையில் அமர்ந்த நிலையில் செய்தித்தாளில் மூழ்கியிருந்தாள். ``வாங்க பெரியப்பா” என்று நிமிர்ந்து புன்னகைத்துவிட்டு, மீண்டும் படிக்கத் தொடங்கிவிட்டாள். சமையல் அறையில் இருந்து சுவரொட்டிக்கறி கொதிக்கும் வாசனை வந்துகொண்டிருந்தது.

``என்ன... பேசாம இருக்க?” என்றபடி கதிரின் கையில் இருந்த ஒரு பூவை எடுத்து காம்பை உருட்டியபடி நடுநெற்றியில் ஒரு கணம் ஒற்றியெடுத்தான் தமிழ். அதன் இதழ் பதிவில் முகம் சிலிர்த்தவனாக, புருவம், விழிகள், கன்னம் என ஒற்றியொற்றி எடுத்தபடி என் மீது பார்வையைப் பதித்தான்.

``காலையில் வில்லினூர் ஆத்தங்கரை வரைக்கும் போகலாம்னு ஒரு பெரிய வாக்கிங் போயிருந்தேன் தமிழ்'' எனத் தொடங்கிவிட்டேனே தவிர, மேற்கொண்டு சொல்ல முடியாத அவஸ்தையில் ஒரு கணம் மகிழ மரத்தின் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். உச்சிக்காம்பில் இருந்து பிரிந்த ஒரு பூ, காற்றில் மெதுவாக அசைந்தசைந்து இறங்கி தரையில் உதிர்ந்தது.

நீண்ட பெருமூச்சுடன் தமிழின் முகத்தைப் பார்த்தேன். சாயம் ஏற்றிக் கறுப்பாக்கிய தலைமுடியுடன்கூடிய அவனுடைய தற்போதைய தோற்றத்தை ஊடுருவிக் கடந்து பழைய முகத்தை என்னால் ஒரே கணத்தில் தொட்டுவிட முடிந்தது. அருமையான பாடகன் அவன். அந்தக் காலத்தில் இந்த ஊருக்குள் எங்கள் மெல்லிசைக் குழு ஏறி நிற்காத மேடைகளும் இல்லை; பாடாத பாடல்களும் இல்லை.

``எப்படிச் சொல்றதுன்னு தெரியலை தமிழ். வாக்கிங் முடிச்சுட்டுத் திரும்பும்போது போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல ஒரு கடையில் டீ குடிச்சுட்டிருந்தேன். எதுத்தாப்புல இருந்த சுவர்ல, ஒரு கூட்டம் `கண்ணீர் அஞ்சலி' போஸ்டர் ஒட்டிட்டு இருந்துச்சு. ஆரம்பத்துல அதை நான் சரியா கவனிக்கலை. மேம்போக்காப் பார்த்துட்டுக் கிளம்பிட்டேன். நடக்க நடக்க எந்தப் பக்கம் திரும்பினாலும் அந்த போஸ்டர் கண்ல பட்டுக்கிட்டே இருந்துச்சு. ரொம்பத் தூரம் வந்த பிறகுதான் ஏதோ ஒரு பொறி தட்டி, நிறுத்தி நிதானமா படிச்சுப் பார்த்தேன். ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியாம நின்னுட்டேன் தமிழ்'' - மேற்கொண்டு சொல்ல முடியாதபடி குரல்வளையை நிறுத்தினான்.

“யாருடா கதிர்? நமக்குத் தெரிஞ்சவங்களா?” என்றபடி, நெருங்கி வந்து என் கைகளைப் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான் தமிழ். `ஆமாம்' என்பதற்கு அடையாளமாக நான் தலை அசைத்தேனே தவிர, பேச்சு வரவில்லை. அதுவரை உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த கல்யாணியும், ஈரக்கையை புடவையில் துடைத்தபடி தமிழுக்குப் பக்கத்தில் வந்து நின்றாள்.

“யாருடா?” அவன் விழிகளில் ஒரு பதற்றம் மெள்ள மெள்ள குடியேறுவதைக் கவனித்தேன். சொல் எழாத தவிப்பில், நான் அவனையும் கல்யாணியையும் ஒரு கணம் மாறி மாறிப் பார்த்தேன். ``ஏன் இப்படித் தடுமாறுறீங்க? யாருன்னு சொன்னாத்தானே புரியும்!” என்றாள் கல்யாணி.

“சொல்லு கதிர், யாரு அது?” என்று என் தோளை அசைத்தான் தமிழ்.

“கலைச்செல்வி.”

ஒரு கணம் ஒன்றும் புரியாதவனாக “கலைச்செல்வி?” என்று கேள்வியாக ஆரம்பித்த அவன் குரல், அரைக் கணத்தில் அப்படியே அடங்கி, என் கண்களை உற்றுப் பார்த்தான்.

பிறகு, “சரியா பார்த்தியா?” என்று துயர் தோய்ந்த குரலில் மெதுவாகக் கேட்டான்.

“ஞாபகம் வராம நானும் முதல்ல தடுமாறிட்டேன் தமிழ். ஆனா, அப்பா பேரு, குடும்பப் பேரு, கட்சிப் பேருன்னு படிச்சதுமே புரிஞ்சிடுச்சு. எல்லாத்துக்கும் மேல ஜாடைன்னு ஒண்ணு இருக்குதுல்ல. எத்தனை வருஷங்கள் ஆனா என்ன... அதை மறக்க முடியுமா?”

அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். ஏதோ யோசனையில் ஆழ்ந்ததுபோல, தலையை இப்படியும் அப்படியுமாக சிலமுறை அசைத்தான். மெதுவாக இரண்டு அடி வைத்து நடந்து சென்று, நாற்காலியில் உட்கார்ந்தான். குழப்பமும் கேள்வியும் அடர்ந்த முகத்துடன் அவனுக்குப் பக்கத்தில் சென்று நின்றாள் கல்யாணி.

தமிழ், அவளைத் திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் துயரம் அடர்ந்திருந்தது. ஆயினும் கண்ணீர் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கணம் மூச்சை இறுக்கித் தளர்த்தினான். நிதானமான குரலில் “அப்பா காலத்து சம்பந்தம் கல்யாணி. அந்தக் காலத்துல எல்லாமே ஒரே கட்சியில் இருந்த குடும்பங்க. போகப்போக எந்தத் தொடர்பும் இல்லாம போயிடுச்சு” என்றான்.

தொடர்ந்து என்ன கேட்பது எனப் புரியாமல், உதட்டைக் கடித்தபடி ஒரு கணம் நின்றாள் கல்யாணி. பிறகு, “இருங்க, ரெண்டு பேருக்கும் சூடா

64p2.jpg

டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்றபடி சமையலறைக்குச் சென்றாள்.

புத்தகத்தின் மீது வைத்த பூவின் பக்கம் தமிழின் பார்வை சென்றது. என்னை அறியாமல் நானும் அந்தப் பூவையே பார்க்கத் தொடங்கினேன். சட்டென ஒரு குரல் நெஞ்சில் இருந்து பொங்கி `மலரே... குறிஞ்சி மலரே...' என ஒலித்தது. தொடர்ந்து `முல்லை மலர் மேலே... மொய்க்கும் வண்டுபோலே...' என்ற பாடல் வரிகள் உருண்டன.

தமிழ், மிகச்சிறந்த பாடகன். அவன் அப்பா, புதுச்சேரி வட்டாரத்தில் பெரிய கட்சிப்பேச்சாளர். அவர் பேசும் மேடைகளில் தமிழின் பாடல்களுக்கும் இடம் உண்டு. அவனுடைய நண்பன் என்பதால், எனக்கும் சில சலுகைகள் கிடைத்தன. சிறப்புப் பேச்சாளர் வரும் வரை மேடையில் நாங்கள் மாறிமாறிப் பாடி, அரங்கத்தில் இருப்பவர்களை மகிழ்விப்போம்.

ஒதியஞ்சாலை திடலில் ஒருநாள் ஒரு பெரிய கூட்டம். அது முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். மக்கள் அமர்வதற்காக திடலில் சீராக நிரவப்பட்டிருந்த கடல்மணல், குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னியது. நாங்கள் இருவர் மட்டுமே அங்கே எஞ்சியிருந்தோம்.

அந்த வெட்டவெளியும் தனிமையும் வழங்கிய ஆனந்தத்தில் பித்துப்பிடித்ததுபோல் நான் அவனிடம் “கொஞ்ச நேரம் பாடலாமா?” என்று கேட்டேன். அவன் உற்சாகத்தில் தலையசைக்க, ஒரு விளக்குக் கம்பத்தின் அடியில் உட்கார்ந்து நான் ``செல்லக்கிளியே... மெள்ளப் பேசு” என மெதுவாகப் பாடினேன். அதைத் தொடர்ந்து அவன் ``நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...” பாட்டைப் பாடினான். தொலைதூரத்தில் நின்றிருந்த தள்ளுவண்டிக்காரர்களும், காவலர்களும், ரிக்‌ஷாக்காரர்களும், சுண்டல் விற்பவர்களும் நெருங்கி வந்து உட்கார்ந்து கேட்டு ரசிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் அவர்கள் கைதட்டிப் பாராட்டினார்கள். எங்களால் அந்தச் சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை. அவர்கள் `போதும்... போதும்' எனச் சொல்லும் வரை பாடிவிட்டுப் புறப்பட்டோம்.

அந்த வாரத்தில்தான் எங்கள் நெஞ்சில் இன்னிசைக் குழு திட்டம் உதித்தது. பாட்டில் ஆர்வம்கொண்டிருந்த எங்கள் கல்லூரி நண்பர்கள் தங்கமுத்து, ராஜதுரை, ரங்கசாமி மூன்று பேரையும் தேடிப் பிடித்து எங்களோடு சேர்த்துக்கொண்டோம். தங்கமுத்துவும் ராஜதுரையும் ஞாபகசக்தியில் என்னைவிட கெட்டிக்காரர்கள். நான் நான்கு பாடல்கள் சொல்வதற்குள் அவர்கள் பத்து பாடல்களைச் சொல்வார்கள். பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் ரங்கசாமி கெட்டிக்காரன். அவனுக்கு, சிதம்பரம் ஜெயராமன் குரல். அவன் தொடர்பு வழியே முத்துக்குமாரின் வாத்தியக் குழு எங்களுக்காக மேடைகளில் இசையமைக்க ஒப்புதல் அளித்தது. எங்கள் குழுவுக்கு `ஐந்து நட்சத்திரங்கள்' என, அவர்கள்தான் பெயர் சூட்டினார்கள்.

ராஜதுரை மட்டுமே அப்போது வேலை கிடைக்காத ஆளாக இருந்தான். நானும் தமிழும் இந்தியன் வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்தோம். ரங்கசாமி அஞ்சல் துறையிலும், தங்கமுத்து தொலைபேசித் துறையிலும் இருந்தனர். புதுச்சேரி வட்டாரத்தில், சுமார் 10 ஆண்டுகாலம் எங்கள் குழு பாடாத திருமண மேடைகளே இல்லை. தமிழ் பாடும் `நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா...' பாட்டு, அப்போது மிகப் பிரபலம். பதவி உயர்வு கிடைத்ததால், ரங்கசாமியும் தங்கமுத்துவும் குஜராத்துக்குச் சென்றுவிட்டார்கள். போட்டித் தேர்வுக்கான வயது முடியும் நேரத்தில் ராஜதுரைக்கும் வேலை கிடைத்து மும்பை போய்விட, எங்கள் குழுவின் இயக்கம் தானாகவே ஒரு புள்ளியில் தேங்கி உறைந்துவிட்டது.

``இந்தாங்க டீ” என்றபடி ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்துக் கொடுத்தாள் கல்யாணி. “மசமசன்னு இப்படி உங்களுக்குள்ளயே பார்த்துக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? கெளம்பிப் போறதுன்னா, வெயிலுக்கு முன்னால போயிப் பார்த்துட்டு சீக்கிரம் வந்துடுங்க. ஒரேயடியா எண்ணெய் தேச்சுக் குளிக்க வசதியா இருக்கும்ல” என்றாள். தொடர்ந்து ``இந்தப் பையன் வேற, ஒரு வாரமா `பிரியாணி பிரியாணி'னு சொல்லிக்கிட்டே இருக்கான்னு கறிய அறுத்து அவிச்சு வெச்சுட்டேன். இல்லைன்னா, நானும் உங்ககூடவே வந்திடுவேன்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றாள். நடுக்கூடத்தில் சந்தனமாலைகளைத் தாங்கியபடி தமிழின் பெற்றோர் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.
அறைக்குள் சென்று சட்டை மாற்றிக்கொண்டு வந்த தமிழ், நிர்மலாவிடம் “போய்க் குளிச்சுட்டு நேரத்தோடு சாப்பிடும்மா. தம்பியை எழுப்பிவிடு. நான் சீக்கிரமா வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து “போலாமா?” என்றான். இருவரும் வெளியே வந்தோம்.

தெருவின் திருப்பத்தில், ஜே.சி.பி இயந்திரம் ஒன்று நின்றிருந்தது. அதன் நீண்ட கை சாக்கடைக்குள் மூழ்கி, அடைத்துக்கொண்டிருந்த கசடுகளை அள்ளி வெளியே போட்டது. உடைந்த பிளாஸ்டிக் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பைகளே பெரும்பாலும் இருந்தன. மேலும், பழைய துணிகள், கற்கள், மரக்கட்டைகள், ஓடுகள். அந்த வாடையின் கடுமையைத் தாங்கவே முடியவில்லை. கசடின் சரிவில் இருந்து கன்னங்கரேல் என ஒரு பந்து உருண்டு வந்து நடுத்தெருவில் நின்றது. வண்டியை ஓட்டியபடி கடக்க முடியாத நிலையில், தெருமுனை வரை தள்ளிக்கொண்டே நடந்து போனோம். சிறுவர்கள் கூட்டம், சரிவில் கிடந்த பொருட்களை எல்லாம் கிளறிக் கிளறி எடுப்பதும், பிறகு ஓவெனச் சத்தம் எழுப்பியபடி தூக்கி வீசுவதுமாக இருந்தது. ஒருவன் குனிந்து ஒதுங்கிக்கிடந்த ஒரு கம்பிக்கொத்தை கால் விரலால் புரட்டினான். `அது என்ன?' எனப் பார்க்கும் ஆர்வத்தில் அதன் மீது மணலை வாரிக் கொட்டி, பாதத்தால் அழுத்தித் தேய்த்தான். கருமை அகன்று நிறம் துலக்கம் பெறும் வரையில் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்த வேறொரு சிறுவன் “டேய், பிளாஸ்டிக் மோதிரம்டா” என்று கண்டுபிடித்த பரவசத்தில் சத்தமிட்டான். அதற்குள் இன்னொருவன் கம்பிக்கொத்தின் இணைப்பு முடிச்சை அவிழ்த்து, மோதிரங்களை உதிர்த்தான். கிடைத்த வரைக்கும் ஆளுக்கு நான்கு ஐந்து என எடுத்து, விரலில் போட்டுக்கொண்டு ``ஹே..!'' எனச் சத்தமிட்டபடி ஓடினார்கள்.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்து சாலைக்கு வந்ததும், வண்டியை ஸ்டார்ட் செய்து ஏறிக்கொண்டோம். அங்கு இருந்து ஜோதி நகர் சாலையில் இறங்கியதும் ஒரு பெரிய பாலம். பாலத்தில் ஏறி இறங்கினால் மாரியம்மன் கோயில். தினமும் பார்க்கும் கோயில்தான். என்னமோ, அன்று `அந்தக் கோயில் பக்கம் திரும்பாமலேயே கடந்துவிட வேண்டும்' எனத் தோன்றியது. அந்த மோதிரத்தைப் பார்த்த கணத்தில் இருந்து மனம் ஒரு நிலையில் இல்லை.

ரு பக்கம் வங்கி ஊழியன், இன்னொரு பக்கம் பிரபலமான பாடகன் என்று ஆனதுமே, தமிழின் அப்பா அவனுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். அவரைப்போலவே வில்லியனூர் பக்கத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தவர் இளமாறன். அவரும் சிறந்த மேடைப் பேச்சாளர். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே கட்சிக்காரர். பத்து ஆண்டுகளுக்கும் கூடுதலான பழக்கம். அவருடைய மகள் கலைச்செல்விக்கும் தமிழுக்கும் திருமணம் செய்துவைத்து, தம் நட்பை உறவாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என இருவருக்குமே ஆசை எழுந்தது. பெற்றோர் விருப்பத்துக்கு பிள்ளைகளும் கட்டுப்பட்டார்கள். பெரிய மண்டபம் ஒன்றில் ஊர் அறிய நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது. ஏராளமான கூட்டம்.

``இதுக்கே இவ்வளவு கோலாகலம்னா, கல்யாணம் இதைவிட பத்து மடங்கு பெரிய அளவுலதான் நடக்கும்” என்று ஊரே பேசியது. நிச்சயதார்த்தம் நடந்ததுக்கு அடையாளமாக, கலைச்செல்வியின் விரலில் அழகான சிவப்புக்கல் மோதிரம் ஒன்றை அணிவித்தான் தமிழ். கலைச்செல்வியும் தமிழின் விரலில் பளபளப்பான அதே நிறம்கொண்ட இன்னொரு மோதிரத்தை அணிவித்தாள். நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக கட்சித்தலைவர் வாக்களித்திருந்தும் வரவில்லை. நள்ளிரவைக் கடந்த பிறகு, ஒரு வாழ்த்துத் தந்தி மட்டும் வந்தது.

64p3.jpg

கட்சித் தலைவர் தலைமையில்தான் அந்தத் திருமணம் நடைபெற வேண்டும் என்பதில், இரு அப்பாக்களும் உறுதியாக இருந்தனர். இடைவிடாத ஐந்தாறு சென்னைப் பயணங்களுக்கும் சந்திப்புகளுக்கும் பிறகுதான் அவர்களுக்குத் தேதி கிடைத்தது. நான்கு மாதங்கள் தாண்டிய ஒரு தேதி அது. ஆயினும் `அதுவாவது கிடைத்ததே!' என மகிழ்ச்சியில் திளைத்த குடும்பங்கள், கல்யாணத்துக்கான வேலைகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் கட்சி இரண்டாக உடைந்தது.

தமிழின் அப்பா பழைய கட்சியிலேயே தொடரும் உறுதியோடு இருந்தபோது, கலைச்செல்வியின் அப்பா புதிய கட்சியில் இணைந்துவிட்டார். அது, அவர்களின் நட்பைப் பாதித்தது; திருமண ஒப்பந்தத்தையும் பாதித்தது. பரிமாறிக்கொண்ட எல்லா பொருட்களையும் இருவருமே திருப்பித் தந்துவிட்டனர். அவற்றை வாங்கிக்கொண்டாலும்கூட, அதில் ஒன்றைக்கூட வீட்டில் வைத்துக்கொள்ளக் கூடாது என நினைத்தார் தமிழின் அம்மா. அனைத்தையும் யார் யாருக்கோ எடுத்துக் கொடுத்துவிட்டார். இறுதியாக, நிச்சயதார்த்தத்துக்காகக் கொடுத்த சிவப்புக்கல் மோதிரத்தை எடுத்துச் சென்று கோயில் உண்டியலில் போட்டுவிட்டுத் திரும்பினார்.

நெல்லித்தோப்பு பக்கமாக வண்டியைத் திருப்பியபோது ``ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்து கதிர். வெறும் கையோடு எப்படிப் போறது? ஒரு மாலை வாங்கிட்டுப் போலாம்” என்று சொன்னான் தமிழ். ஓரமாக நடமாட்டம் இல்லாத இடமாகத் தேடி வண்டியை நிறுத்தியதும், தமிழ் மெதுவாக இறங்கி கடைப்பக்கம் சென்றான். தளர்ந்த நடையுடன் அவன் செல்வதைப் பார்க்க வருத்தமாக இருந்தது.

நின்றுபோன கல்யாணத்துக்குப் பிறகு, அவன் வீட்டில் யாருமே கல்யாணப் பேச்சை எடுக்கவில்லை. வங்கியை அடுத்து, மெல்லிசைக் குழுவின் பாடல்கள் மட்டுமே அவனுக்கு ஒரு மீட்சியாக இருந்தன. ஓய்ந்த நேரத்தில் வங்கி அதிகாரித் தேர்வுக்கான தயாரிப்பில் முழுக்க முழுக்க தன்னைக் கரைத்துக்கொண்டான். இரண்டு முறை அவனுக்கு எழுத்துத் தேர்வில் வெற்றி கிடைத்தது. ஆயினும் நேர்காணல்களைக் கடந்து அவனால் செல்ல இயலவில்லை.

அவன் சுதந்திரத்தில் ஒரு கணம்கூட தலையிடாமல் விலகியே நின்றார், தமிழின் அப்பா. அதே சமயத்தில் அவனிடம் மனம்விட்டுப் பேசவும் அவரால் முடியவில்லை. இரண்டு பேருக்கும் இடையில் ஏதோ ஒரு மெல்லிய திரை விழுந்துவிட்டது.

அவர் தலைமையில்தான் எனக்கு திருமணம் நடந்தது. மதிய விருந்தை முடித்துக்கொண்டு புறப்படும் சமயத்தில் அவர் மண்டபத்தின் பின்கட்டுக்கு கை கழுவப் போகிறவர்போலச் சென்று ஒரு மூலையில் நின்றபடி “கதிர், இங்கே ஒரு நிமிஷம் வர்றியாப்பா!” என்று அழைத்தார்.

``இதோ வர்றேன் பெரியப்பா” என்றபடி வேகமாக அவர் அருகே சென்றேன். எங்கு இருந்து தொடங்குவது எனப் புரியாதவர்போல சமையல்கட்டையும் ஓரமாக அடுக்கிவைத்த வாழைப்பழத் தார்களையும் ஓரிரு கணங்கள் பார்த்தபடி நின்றிருந்தார்.

பிறகு தண்ணீர்க் குழாயை மெதுவாகத் திருப்பித் திருப்பி மூடியபடி “ஏதோ வேகத்துல எடுத்துவெச்ச அடியில் கீழ விழுந்துட்டோம்கிறதுக்காக, எல்லாரும் அப்படியேவா ஆணியடிச்ச மாதிரி உட்காந்துடுறாங்க? சரி விடுன்னு தொடச்சுவிட்டுப் போறதில்லையா? உன் கூடவேதான் இருக்கான் அவன். நீ கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா? ஒரு நாளா... ரெண்டு நாளா, நாலைஞ்சு வருஷம் போயிட்டுதே கதிர். காலாகாலத்துல கடமையைச் செஞ்சோம்னு எங்களுக்கும் ஒரு நிம்மதி வேணும் இல்லையா!” என்றார்.

ஒரு கணம் நிறுத்தி, பெருமூச்சு வாங்கினார். பிறகு “இந்தக் கட்சியால் இப்படி ஒரு நிலைமை வரும்னு நான் என்ன கனவா கண்டேன்? எல்லாம் நான் செஞ்ச குத்தம்தான். இல்லைனு சொல்லலை” என்று தொடங்கியவர், தொடர்ந்து பேச முடியாமல் குழாயில் இருந்து வழிந்தோடும் தண்ணீரையே பார்த்தபடி நின்றார். தொண்டைக்குழி மட்டும் ஏறி ஏறி இறங்கியபடி இருந்தது.

நானாகவே அவர் கையைப் பற்றி “விடுங்க பெரியப்பா. நாங்க எல்லாருமே அவன்கிட்ட பேசறோம். சீக்கிரமாவே ஒரு நல்லதை நடத்திவைக்கலாம்” என்று சொல்லி, அவரை அனுப்பிவைத்தேன். அதன் பிறகு தமிழுடன் ஆறேழு ஆண்டுகளாக நிகழ்ந்த எங்கள் பேச்சுக்குக் கிடைத்த பலன்தான் தமிழ் என்கிற தமிழ்ச்செல்வனுக்கும் கல்யாணிக்கும் நிகழ்ந்த திருமணம்.

``இது சரியா இருக்குமா கதிர்?” என்று கேட்டபடி, ஒரு பெரிய ரோஜா மாலையோடு வந்து நின்றான் தமிழ்.

“தாராளமா போதும்” என்று நான் சொன்னதும் சோகம் தோய்ந்த புன்னகையோடு என்னைப் பார்த்தான்.

``நீ வந்து சொன்னதும் ஒரு வேகத்துல கிளம்பிட்டேனே தவிர, இதுக்கு எல்லாம் நாம போறது சரியா... தப்பான்னே தெரியலை. பேசாம இப்படியே திரும்பிடலாமா?” என்றான். அவன் குரல் முற்றிலும் உடைந்திருந்தது.
``இதுல என்ன தப்பும் சரியும்? ஊர்க்காரங்க மாதிரி நாமும் மாலை போட்டுட்டு வரப்போறோம். அவ்ளோதான். பேசாம வண்டியில் ஏறி உக்காரு.”

``அப்படியா சொல்றே?” குழப்பம் நீங்காத முகத்துடன் பின் இருக்கையில் உட்கார்ந்தான்.

40-45 ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழின் திருமணம் நின்றுபோன சமயத்தில் ஒருநாள், கடற்கரையில் டியூப்ளே சிலையின் பக்கம் இருந்த பாறையில் உட்கார்ந்தபடி பொங்கிப் பொங்கி வரும் அலைகளையும் அமிழ்ந்து கரையும் நுரைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். ``தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா...'' என யாரோ பாடும் குரலைக் கேட்ட பிறகுதான், ஒரு கணம் திரும்பிப் பார்த்தேன். பார்வை இல்லாத ஒரு சிறுமி பாடிக்கொண்டிருக்க, பார்வை உள்ள மற்றொரு சிறுமி அவள் தோள் பற்றி மெதுவாக அழைத்துவந்தாள். மிகவும் உருக்கமான குரல். வேகமாக எழுந்து சென்று, அந்தச் சிறுமிக்குச் சில்லறைகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பியபோதுதான் என்னை நோக்கி “ஒரு நிமிஷம்” என்றபடி சாலையின் மறுபக்கத்தில் இருந்து ஒரு பெண் வருவதைக் கவனித்தேன். சில கணங்களுக்குப் பிறகுதான் அவள் கலைச்செல்வி என்பதைப் புரிந்துகொண்டேன்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் அவள். பட்டுரோஜா நிறத்தில் புடவை  அணிந்திருந்தாள். அதற்குப் பொருத்தமாக அதே நிற  ரவிக்கை.  எழுந்து அடங்கும் அலைகளைப்போல கை விளிம்புகளில் எம்ராய்டரி வேலை செய்திருந்தது மிகவும் பிடித்திருந்தது. மெல்லிதான ஒரு தங்கச்சங்கிலி மட்டும் அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. “கரும்பு ஜூஸ் குடிக்கிறதுக்காக, எல்லாரும் ரேடியோ ஸ்டேஷன் பக்கம் போயிருக்காங்க” என்றாள்.
“உங்களை அப்பவே பார்த்துட்டேன். கொஞ்சம் பேசணும்னுதான் நான் இங்கேயே நின்னுட்டேன்.”

பதற்றத்தில் என்ன பேசுவது என்றே புரியாமல், அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான். அவள் “எப்படி இருக்கார் உங்க தமிழ்?” என்று கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தேனே ஒழிய, அப்போதும் அவளுக்கு நான் பதில் சொல்லவில்லை.

64p4.jpg

“அப்பா-அம்மாதான் பார்த்து மோதிரம் மாத்திவெச்சாங்க. இல்லைன்னு சொல்லலை. ஆனா, அதே அப்பா-அம்மா வேணாம்னு சொன்னா, அப்படியே விட்டுட்டுப் போயிடுறதா? இது என்ன ஆடு வியாபாரமா... கோழி வியாபாரமா? நமக்கு எல்லாம் மனசுன்னு ஒண்ணு இருக்குதா இல்லையா?” என்று கேட்டுவிட்டு, ஒரு கணம் அமைதியாக இருந்தாள்.

“கட்சி, கூட்டம், கடலைப்புண்ணாக்குன்னு பெரியவங்களுக்கு ஆயிரம் இருக்கும். அதெல்லாம் வேற விஷயம். என்னை நேருக்கு நேரா பார்த்து `பெருசுங்க எல்லாம் இப்படிக் கிறுக்குப்பிடிச்ச மாதிரி அலையுது. நீ என்னம்மா சொல்றே?'னு என்கிட்டதானே அவர் முதல்ல கேட்டிருக்கணும்? அப்படிக் கேட்டிருந்தா, அந்த நிமிஷமே நான் வீட்டைவிட்டு வரத் தயாரா இருந்தேன் தெரியுமா? அந்த அளவுக்கு அவர் மேல ஆசை வெச்சிருந்தேன். வாழ்ந்தா இவர்கூடத்தான்னு ராத்திரியும் பகலுமா கனவு கண்டுட்டு, மானம் கெட்ட ஒரு கட்சிக்காக நம்ம வாழ்க்கையை நாம ஏன் அழிச்சிக்கணும்?”

கலைச்செல்வியின் கண்கள் கலங்குவதை என்னால் பார்க்க முடியவில்லை. பார்வையைத் தாழ்த்தி அவள் கால் விரல்களையே பார்த்தபடி இருந்தேன்.

“அப்பா-அம்மா `போ'னா போவாரு, `வா'னா வருவாரு. அவ்ளோதானா? அதுதான் படிச்சவங்க செய்ற வேலையா? அவரு என்ன சாவி குடுத்த பொம்மையா? சொந்த புத்தின்னு ஒண்ணுமே இல்லையா? நிச்சயதார்த்தம் முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சு, இதே கடற்கரையில் இந்த இடத்துலதான் தற்செயலா என்னைப் பார்த்துட்டு அரை மணி நேரம் பேசிட்டிருந்தார். தெரியுமா உங்களுக்கு?”

நான் திகைப்புடன் உதட்டைப் பிதுக்கி தலையாட்டியபடி நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அவள் அடிக்குரலில் `` `எனக்காக ஒரு பாட்டு பாடுறீங்களா?'னு கேட்டதும் `நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்...'னு பாடினது எல்லாம், அப்படியே என் நெஞ்சில் இன்னும் இருக்கு. அந்தக் குரல், அந்த ஈரம், ஒவ்வொரு நிமிஷமும் அது பொங்கிப் பொங்கி வருது. அந்தப் பேச்சுக்கும் பாட்டுக்கும் ஒரு அர்த்தமும் இல்லையா?” என்றபடி எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.

``என் ஞாபகமா கொஞ்ச காலமாவது அவர் விரல்ல போட்டிருந்த மோதிரம்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இதோ இந்த மோதிரத்தை இன்னும் நான் போட்டுட்டு இருக்கேன். இதனால வீட்டுல எத்தனை சண்டை, எத்தனை பேச்சு, எத்தனை அடிதடி தெரியுமா? அவருக்கு என் மனசுல கொடுத்த இடத்தை வேற யாருக்கும் தர முடியாதுங்கிறதை எல்லாரும் புரிஞ்சுக்கணும்னுதான் பிடிவாதமா இந்த மோதிரத்தை இன்னும் போட்டுட்டிருக்கிறேன்.”

குரலை அடக்கிப் பேசினாலும் அவளுக்கு மூச்சு வாங்கியது. “ஒரு பொண்ணுக்கு இருக்கும் பிடிவாதம், ஒரு ஆம்பளைக்கு ஏன் இல்லாமப்போச்சு? போய், இப்ப வரச் சொல்லுங்க அவரை. எந்தக் கோயில்ல வேணும்னாலும் எனக்கு தாலி கட்டட்டும். நான் தயார்.”

சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லி முடித்தவள்போல, வேகமாக எழுந்து பாதையைக் கடந்து போய்விட்டாள். அந்த ஆவேசத்தை நம்ப முடியாமல் அவள் நடந்து போகும் திசையையே வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். என் உடல்ரத்தம் குளிர்ந்துபோனதுபோல இருந்தது. அவள் விருப்பத்தையும் கோரிக்கையையும் நான் தமிழிடம் சொல்லவில்லை.

அதற்குப் பிறகு  சில ஆண்டுகள் கழித்து என் மகளை க்ளுனி ஸ்கூலில் சேர்க்கும் பொருட்டு ஒரு பாதிரியாரின் பரிந்துரைக்காக அவர் அலுவலக வாசலில் நின்று இருந்தபோது, அதே கலைச்செல்வியை இரண்டாவது முறையாகப் பார்த்ததையும் நான் சொல்லவில்லை.

அப்போது ஒரு காரில் வந்து இறங்கினாள் அவள். அவளோடு என் மகள் மாதிரியான  ஒரு சிறுமியும் இறங்கினாள். கொஞ்சம்கூட மாறாத அதே உடல்வாகுடன் அவள் நடந்து வந்தாள். என்னை அறியாத ஒரு படபடப்பில் சட்டென எழுந்து நின்றதே, அவள் கவனம் என் மீது படிவதற்குக் காரணமாகிவிட்டது.

``எப்படி இருக்கீங்க சார்?” என்று புன்னகையோடு கேட்டபடி, காற்று வேகத்தில் காதோரமாக வந்து விழுந்த தலைமுடியை, கையை உயர்த்தி ஒதுக்கினாள் கலைச்செல்வி. மருதாணியிட்ட அவள் விரலில், சிவப்புக்கல் மோதிரம் மின்னிக்கொண்டிருந்தது.

நான் புன்னகையோடு தலை அசைத்தேன். என் மகளை அவள் முன்னால் நிறுத்தி “ஸ்கூல் அட்மிஷனுக்காகத்தான் அலைஞ்சுட்டிருக்கேன். `இந்த ஃபாதர் சொன்னா கிடைக்கும்'னு முதலியார்பேட்டையில் ஒரு ஃபாதர் சொன்னார். அதான் பார்க்கலாம்னு…” என்றேன்.

“இங்கேயும் அதே கேஸ்தான்” என்று சிரித்தாள் அவள். தொடர்ந்து “எத்தனை குழந்தைங்க?” என்று கேட்டாள்.

“இவதான் மூத்தவள். இளவரசி. மூணு மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு பையன் பொறந்தான்” என்றேன்.

``வெரி நைஸ்” என்றபடி குனிந்து இளவரசியின் கன்னத்தில் தட்டி முத்தமிட்டாள். முன்பக்கம் விழுந்த தலைப்பின்னலை எடுத்து பின்பக்கம் போட்டபடி நிமிர்ந்த கலைச்செல்வி, “உங்க நண்பருக்கு எத்தனை குழந்தைகள்?” என்று நேருக்குநேராக என்னைப் பார்த்துக் கேட்டாள்.

நிலைகுலைந்த ஒரு மனநிலையில், நான் அவளிடம் மெதுவாக “அவன் இன்னும் கல்யாணமே பண்ணிக்கலை” என்றேன்.

அவள் ஒரு கணம் திகைத்ததை, என்னால் உணர முடிந்தது. அடங்கிய குரலில் “அவர் வேணாம்னு சொன்னதும் நீங்களும் அப்படியே விட்டுட்டீங்களா? இதான் நட்புக்கு அழகா?” என்றாள்.
ஒரு பெருமூச்சுக்குப் பிறகு கலைச்செல்வியை மெதுவாகப் பார்த்தேன்.

``குழந்தைக்குட்டிகளோடு அவ நல்லாதான் இருக்கா. உன்னை சீக்கிரமா ஒரு கல்யாணம் செஞ்சுக்கச் சொன்னானு சொல்லுங்க. நிச்சயமா சொல்லணும். சொல்வீங்களா?” என்றாள்.

நான் தலையசைத்தேன். அதுவரைக்கும் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த கலைச்செல்வியின் மகளை, நான் அப்போதுதான் பார்த்தேன். “என்னம்மா உன் பேரு?” என்று கன்னத்தைத் தட்டியபடி கேட்டேன்.
அவள் மெதுவாக “தமிழ்... தமிழ்ச்செல்வி” என்று சிரித்தாள். மேல்வரிசையில் தெரிந்த ஒரு தெத்துப்பல் அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது.

அதற்குப் பிறகு ஆறேழு ஆண்டுகள் கழித்து, அதே பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றில் கசகசவென இருந்த கூட்டத்துக்கு நடுவிலும் ஒருமுறை அவளைப் பார்க்க நேர்ந்தது. அதே குரல். அதே புன்னகை. “ரெண்டாவது பொண்ணும் இங்கேதான் படிக்கிறா. இன்னிக்கு ரெண்டும் என்னமோ பாட்டு பாடுறாங்களாம். அவசியம் வரணும்னு நேத்து ராத்திரி முழுக்க ஒரே பிடிவாதம்” என்று சிரித்தாள். இளவரசியின் பெயரை நினைவுவைத்துக்கொண்டு கேட்டாள்.

``அவளும் இன்னிக்குப் பாடுறா” என்று பதில் சொன்னேன். என்னமோ தெரியவில்லை, ஒரு வார்த்தைகூட தமிழைப் பற்றி அவள் அன்று எதுவுமே கேட்காததை மிகவும் தாமதமாகவே உணர்ந்தேன். அதையும்கூட நான் தமிழிடம் தெரிவிக்கவில்லை.

வில்லியனூரை நெருங்கும் வரை தமிழ் எதுவுமே பேசவில்லை. எல்லையின் தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் தென்னை ஓலைகளை நட்டிருந்தார்கள். அவற்றுக்கு இடையே கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியைத் தாங்கிய தட்டிகள் நின்று இருந்தன. தமிழ் என் தோளைத் தொட்டு, ஒரு சுவரொட்டியின் பக்கம் நிறுத்தச் சொன்னான். கண்ணாடியைக் கழற்றிவிட்டு கலைச்செல்வியின் முகத்தையே சில கணங்கள் உற்றுப் பார்த்தான். பிறகு, படத்துக்குக் கீழே அச்சிடப்பட்டிருந்த வாக்கியங்கள் மீது அவன் பார்வை படர்ந்தது. பிறகு `போலாம்' என்பதுபோல என் தோளைத் தொட்டு அழுத்தினான்.

வெற்றிலைத்தோட்டம் தாண்டி, ரயில்வே ஸ்டேஷன் தாண்டி, பெரம்பைச் சாலைத் திருப்பத்தில் நின்று இருக்கும் எம்.ஜி.ஆர் சிலையைத் தாண்டி, அல்லிக்குளத்தைத் தொட்டபோது மேளச்சத்தத்தைக் கேட்க முடிந்தது. யாரோ ஒரு நெருக்கமான உறவுக்கூட்டம் மேளச்சத்தத்தின் பின்னணியோடு தெருத்திருப்பத்தில் இருந்து வீட்டை நோக்கி ஊர்வலமாகப் போய்க்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்துக்கு நடுவில் பெரிய ரோஜா மாலைகள் வைக்கப்பட்ட ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவை ஒருவர் இழுத்துக்கொண்டு சென்றார்.

“அந்த ஊர்வலத்துக்குப் பின்னாலேயே கூட்டத்தோடு கூட்டமாப் போய்ப் பார்த்துட்டு வந்துடலாம் தமிழ்.”

அவன்  `சரி' என்பதுபோல தலையசைத்ததற்குப் பிறகுதான், நான் வண்டியை ஓரமாக நிறுத்திப் பூட்டிவிட்டு இறங்கினேன். “மாலையை நான் வேணும்னா வெச்சுக்கவா?” என்று கேட்டேன். “இல்லை, நானே வெச்சுக்கிறேன்” என்றபடி மாலையோடு நடக்கத் தொடங்கினான் தமிழ். அவனைப் பார்க்கும்போது ஏதேதோ பழைய ஞாபகங்கள் பொங்கிப் பொங்கி வந்தன.

அந்த ஊர்வலத்தை நெருங்கும் தருணத்தில் சட்டென நின்றுவிட்டான் தமிழ். என்னைப் பார்த்து தலையை அசைத்தபடி ``எதுவும் வேணாம் கதிர். திரும்பிப் போயிடலாம்” என்றான். எனக்குக் குழப்பமாகவும் திகைப்பாகவும் இருந்தது. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ``தமிழ்…” என்று எதையோ சொல்ல நான் வாயெடுத்தேன். அவன் தன் பார்வையாலேயே என்னை நிறுத்திவிட்டான். ஒரு கணம் திரும்பி கையில் இருந்த மாலையை சாலையோரத்தில் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த தட்டிக்கம்பியில் வைத்துவிட்டு திரும்பி வந்தான். பிறகு மெதுவாக, ``வண்டியை எடு கதிர், போகலாம்” என்றான்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளர்ந்த இளந் தென்றலே" பாட்டுபோல கதையும் நகருது....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.