Jump to content

முறிவு - சிறுகதை


Recommended Posts

முறிவு - சிறுகதை

எம்.கோபாலகிருஷ்ணன் - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

 

66p1.jpg

“நான்தான் ஆஸ்பத்திரியில இருக்கும் போதே சொன்னேன்ல... `வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றதுக்கு முன்னாடியே பார்த்துக்க ஆள் ஏற்பாடு பண்ணிடலாம்’னு. இப்ப வந்து என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது? அதான் தங்கச்சிமார்க மூணுபேர் இருக்காங்கல. ஆள் மாத்தி ஆள் வந்து அவங்களே பார்த்துக்கட்டும். என்கிட்ட வந்து எதையும் கேக்காதீங்க. வேளாவேளைக்கு ஆக்கிவெக்கிறேன். வேற என்ன வேணாலும் சொல்லுங்க. செய்றேன். இதுமட்டும் என்கிட்ட கேக்காதீங்க. அவ்ளோதான்” - விஜயாவின் குரல் தணிவாக ஒலித்தது.
p66.jpg
உண்ணம்மாள் தலையைத் திருப்பி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். இளங்கோ அடங்கிய குரலில் பேசுவதும், விஜயா பதில் சொல்வதுமாக அடுத்த அறையில் இருந்து கொஞ்ச நேரமாகச் சத்தம் கேட்கிறது. கூடத்துக்கும் அந்த அறைக்கும் நடுவில் ஒற்றைக்கல் சுவர். எத்தனை மெதுவாகப் பேசினாலும் கேட்கத்தான் செய்யும். காதில் விழ வேண்டும் என்றே விஜயா சத்தமாகப் பேசுவாள். கயிற்றுக்கட்டிலைப் போட்டு வாசலில் கிடந்தவரைக்கும் காதில் எதுவும் விழாது. இப்போது எல்லாவற்றையும் கேட்டுத் தொலைக்க வேண்டிய சூழ்நிலை. எலும்பு ஒடிந்து கம்பிவைத்துக் கட்டிய இடது காலை வெறித்துப் பார்த்தாள். வீக்கம் தணியாததுபோலவே தெரிகிறது. அசைக்க முயலும்போது கனக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அடுத்தவர் தயவில் படுத்துக்கிடக்க வேண்டும்? நான்கு பேரைக் காவு வாங்கிய பாழாய்ப்போன அந்த விபத்து என்னையும் கொண்டுபோயிருக்கக் கூடாதா?

ஆஸ்பத்திரியில் கிடந்த வரைக்கும் சுற்றிலும் ஆள் கூட்டம். `எலெக்‌ஷன்ல நின்னா ஆத்தா எம்.எல்.ஏ ஆகிடலாம் போங்க’ என்று நர்ஸம்மா சொன்னபோது பெருமையாகத்தான் இருந்தது. அறுவைசிகிச்சை முடிந்து நான்காம் நாளில் வீட்டுக்குப் போகலாம் என்றார்கள். `உடற்பயிற்சி செய்தால் போதும். இங்கே இருக்கத் தேவையில்லை’ என்று சொன்னபோது பிடிவாதமாக மறுத்தாள்.

“வயசு எம்பது ஆச்சு. இத்தன நாளும் ஓடியாடி எல்லாத்தையும் பார்த்துட்டேன். ஒருநாளும் எதுக்கும் யார் கையையும் எதிர்பாத்து நிக்கலை. இனியும் நிக்கமாட்டேன். என்னை வீட்டுக்கு அனுப்புறதுன்னா சீக்கிரமா நல்லா நடக்கவைங்க. இந்த பெட்டோட அப்பிடியே தூக்கிட்டுப்போய் கெடையில போடறதுன்னா நான் வர மாட்டேன்.”

மேலும் இரண்டு நாட்கள்தான் வைத்திருந் தார்கள். கட்டாயமாக வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தபோது, அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி, இந்தக் கட்டிலில் கொண்டுவந்து படுக்கவைத்த நொடி முதலாகவே தளர்ந்துபோனாள். கட்டிலுக்கு அருகில் ஒதுங்கிநிற்கும் வாக்கரைப் பார்க்கும் போதெல்லாம் எரிச்சல் வந்தது. அதைப் பிடித்துக்கொண்டு நடக்கப் பழகியாயிற்று என்றாலும், சுத்தமாக அவளுக்குப் பிடிக்கவில்லை. காலம் முடிந்துபோய் கட்டையில் போகிற சமயத்தில், இப்படி கால் ஒடிந்துகிடக்க வேண்டுமா?

பூண்டியில் இருந்து காலையிலேயே வந்துவிடுகிறேன் என்று சொன்ன இரண்டாவது மகள் சாந்தாவை இன்னும் காணவில்லை. நேற்று முழுக்க இருந்துவிட்டு காலையில்தான் புறப்பட்டுப் போயிருக்கிறாள் மூத்தவள் சுலோச்சனா. இவள் வந்த பிறகுதான் கக்கூஸுக்குப் போக வேண்டும். இளங்கோ துணைக்கு வருகிறேன் என்றுதான் சொன்னான். உண்ணம்மாள் கோபத்துடன் அவனைத் திட்டி விரட்டினாள். அதுதான் இப்போது அறைக்குள் பஞ்சாயத்து நடக்கிறது.


கதவைத் திறந்துகொண்டு இளங்கோ வெளியே வந்தபோது உண்ணம்மாள் அதட்டினாள்.

“அவகிட்ட எதுக்குடா போய் கெஞ்சிட்டு நிக்கிற? என் கெட்ட நேரம் அவ கையில சோறு வாங்கித் திங்கிற மாதிரி ஆகிடுச்சு. இவளுக மூணு பேர்ல ஒருத்தியாச்சும் பக்கத்துல இருந்தா, இப்படிக் கிடந்து சாக வேண்டாம் நான்.”

இளங்கோ லுங்கியை மடித்து இடுப்பில் இறுக்கியபடி அருகில் உட்கார்ந்தான்.

“அவ போக்குத்தான் உனக்குத் தெரியுமே. விடும்மா. தங்கச்சிக இங்க வந்து உக்காந்திருந்தா அவங்க பொழப்பைப் பார்க்க வேண்டாமா?”

இளங்கோவைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அவன்தான் என்ன செய்ய முடியும்? இருபது நாட்களாக வேலைக்குப் போகாமல் சரியான அலைச்சல். ஆனாலும், விஜயா சொல்வதைத்தானே இவன் கேட்கிறான்.

“எல்லாரும் அவங்க அவங்க பொழப்பைப் பாருங்கப்பா. நான்தான் உங்க எல்லாத்துக்கும் இப்ப இடைஞ்சலா கிடக்கிறேன்.”

உண்ணம்மாளுக்கு முதுகு வலித்தது. சற்றே நிமிர்ந்தாற்போல் இருந்தால் பரவாயில்லை.

“இந்தத் தலவாணிய கொஞ்சம் சேர்த்துப் போடுறா.”

இளங்கோ இன்னொரு தலகாணியை முதுகை அணைத்தாற்போல வைத்தான்.

“சின்னவளை எங்கடா காணோம்.  ஆஸ்பத்திரிக்கு வந்துட்டுப் போனவ. அதுக்கு அப்புறம் எட்டியே பார்க்கலை. என்னன்னு கேட்டியேடா?” - மல்லிகாவைத்தான் கேட்கிறாள்.
 
பல்லடத்தை அடுத்து பெத்தாம்பாளையத்தில் இருக்கிறாள். ஒரு நாள் அவள் வரவில்லை என்றாலும் உண்ணம்மாளுக்கு விசனம்.

“சொல்லிட்டுத்தான போனாம்மா. அவங்க கொழுந்தனார் சம்சாரத்துக்குச் சோறாக்கிப் போடுறாங்க. ரெண்டு நாளைக்கு வர முடியாது.”

“ஆமாம் சாமி... அவியஅவியளுக்கு சோலி இல்லாதியாப் போகுது. என்னைமாதிரி இப்படிக் கெடையிலையா கிடக்கிறாங்க.”
 
உண்ணம்மாள் சேலைத் தலைப்பை உதறி முகத்தைத் துடைத்தாள்.

இளங்கோ தலையைக் குனிந்தபடி மெதுவாகச் சொன்னான்... “அதுக்குத்தாம்மா சொல்றேன். செலவாகுதேன்னு யோசிக்காதே. இதுக்குன்னு ஆள் இருக்காங்க. இங்கேயே பக்கத்துல இருந்து பார்த்துக்குவாங்க…”

அவன் சொல்லி முடிப்பதற்கு முன்பே உண்ணம்மாள் ஆவேசத்துடன் கத்தினாள்.

“நீ ஒரு மயித்தையும் சொல்ல வேண்டாம் எந்திரிச்சுப் போடா. இதைத்தான் உன் பொண்டாட்டி ரூமுக்குள்ள ஓதிவுட்டாளா?”

பதில் பேச முடியாது தலையைக் குனிந்தபடியே கண்ணாடியைக் கழற்றினான் இளங்கோ. உண்ணம்மாளை இனி சமாதானப்படுத்த முடியாது. கத்தித் தீர்க்கட்டும் என்று அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“எல்லாத்துக்கும் ஆள் இருந்தா அவியளுக்கு நான் எல்லாத்தையும் காட்டிட்டுப் படுத்திருக் கணுமாடா? கருமம் புடிச்சவனே. ஏன்டா உன் புத்தி இப்படி நாசமாப்போகுது. அத்தனை காசு கிடக்குதா உன்கிட்ட. அப்படின்னா எதையாச்சும் வாங்கிட்டு வந்து ஊத்துடா. அக்கடான்னு போய்ச் சேர்ந்துடுறேன். பேசறாம்பாரு பேச்சு. ஆள்வெச்சுக் கழுவுறானாம். இதுக்குத்தான் நாலு புள்ளைகளைப் பெத்துப்போட்டனாடா நானு?”

66p2.jpg

கைகளை இறுகக் கட்டியபடியே அவள் முகத்தைப் பார்த்திருந்த இளங்கோ எழுந்தான்.

“சரிம்மா... நான் ஒண்ணும் சொல்லலை. நீ சத்தம்போடாத.”

உண்ணம்மாள் ஓய மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும். கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். செல்போனைக் காதில் ஒட்டியபடி திண்ணையில் சாய்ந்திருந்த மேகலா அவசரமாக எழுந்து நின்றாள். அவளைக் கண்டுகொள்ளாமல் கடந்து தெருவில் நின்றான். கனரக வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய வீதி. சின்னத்தம்பி கடை எதிரில் குட்டியானை நின்றது. எண்ணெய் டின்களை இறக்கிக் கொண்டி ருந்தார்கள். காமாட்சியம்மன் கோயிலிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. பெட்டிக்கடை வாசலிலிருந்து கருப்பக்கா எட்டிப் பார்த்தாள்.

“என்ன இளங்கோ. ஆத்தா ரொம்பத்தான் சத்தம் போடுது. என்ன பண்டலாங்கிறா?”

இளங்கோ எதுவும் சொல்லாது கையை விரித்தான்.

“அவ பாட்டுக்கு வேஸ்ட் துணியைப் பிரிச்சிட்டு சிவனேன்னு கிடந்தா. பார்த்தா எம்பது வயசுக்காரியாட்டமா இருக்கா. யாராச்சும் கிட்டத்துல போக முடியுமா. இந்த வயசுலையும் நடுங்காத, கொள்ளாத நடந்துட்டிருந்தாளே. அந்தக் கோயில் விசேஷத்தைப் பேசின நாள்லேர்ந்தே ஏதாச்சும் நடந்துட்டேதான் இருந்தது. என்னத்தைச் சொல்றது போ. கடைசிக் காலத்துல இப்படி காலை உடைச்சுட்டு கெடையில கிடக் கோணுமின்னு அவ தலையில எழுதியிருக்கு.”

வெற்றிலைக் கட்டின் மேல் விரித்திருந்த வெள்ளைத் துணியின் மீது தண்ணீரைத் தெளித்தாள். தட்டுக்கூடை முழுக்க வெற்றிலை அடுக்குகள்.

இளங்கோ கசப்புடன் சிரித்தான்.

“இத்தனை வருஷமா பங்காளிகலாம் சேர்ந்து கோயிலுக்குப் போகவே இல்லைன்னுதான் ஏற்பாடு பண்ணிச்சு. இப்பிடி எல்லா குடும்பத்துக்குமே துக்கம் வந்துசேரும்னு யார் கண்டா பெரியாத்தா. அப்புறம் என்ன கோயில், என்ன சாமி, ஒண்ணுமே புரியலை.”

சங்கரம்பாளையம் அப்படி ஒன்றும் தொலைவில் இல்லை. இதோ இங்கிருக்கும் விஜயமங்கலத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் வடக்கில்தான். அங்கிருக்கும் அங்காளம்மன் கோயிலில் பல தலைமுறைக்கு முன்பாக, பங்காளிகள் வகையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையும் பூசை இருந்துள்ளது. எப்போது தடைப்பட்டதோ தெரியவில்லை. வழிபாடு விட்டுப்போனது. இப்போது அந்த ஊரிலும் உறவுகள் யாருமில்லை. அதனால் போவதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை. ஆனாலும், உண்ணம்மாள் அவ்வப்போது புலம்பிக்கொண்டே கிடப்பாள்.

“நேத்தெல்லாம் கண்ணையே மூட முடியல பார்த்துக்கோ. அத்துவானக் காட்டுல அவ அழுதுட்டே நிக்கிறா. பசிக்குதுன்னு அழுதாளா யாரும் வந்து பார்க்கலைன்னு அழுதாளா ஒண்ணும் தெரியலை எனக்கு. வவுறெல்லாம் ஒருமாதிரி பண்டுச்சு. இந்த மாசமாச்சும் கோயிலுக்குப் போய் பொங்கலைப் போட்டாத்தான் சரியாகும்.”

பங்காளிகளின் குடும்பங்களில் அக்கியானமாக அடுத்தடுத்து சம்பவங்கள் சிறிதும் பெரிதுமாக நடக்க, ஐப்பசி மாதத்தில் பொங்கல் போடுவதெனத் தீர்மானித்தார் பெரியாயி பாளையம் சண்முகம். பங்காளிகளில் வயதில் மூத்தவர் அவர்தான். உண்ணம்மாளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. வீட்டுக்கு வெள்ளையடிப்பதும், பரணில் கிடக்கும் பொங்கல் பானையை இறக்கி, புளிபோட்டு விளக்கிவைப்பதுமாக ஓடிக்கொண்டிருந்தாள். உள்ளூர் காமாட்சியம்மன் பொங்கலுக்குக்கூட அவள் இத்தனை பரபரத்ததில்லை. விஜயாவுக்கு எரிச்சல்.

“இத்தனை வருஷம் அந்தக் கோயில் எந்தத் திசையில இருக்குதுன்னே கண்டுக்காத கிழவி, இப்ப எதுக்கு இத்தனை ஆட்டம் போடுறா?”

குடும்ப சகிதமாக ஈரோடு பஸ்ஸில் ஏறி விஜயமங்கலத்துக்கு டிக்கெட் வாங்கிய பின்னும் உண்ணம்மாள் புலம்பினாள்.

“எத்தனையோ வருஷத்துக்கு அப்புறமா கோயிலுக்குப் போறோம். ஒரு வேன் வெச்சு எல்லாரையும் கூட்டிட்டுப் போகக் கூடாதா? நமக்கு எழுதிருக்கிறது அவ்ளோதான்.”

சின்னத்தம்பி குடும்பம் காரில் வருகிறது. காலனியில் இருந்து ஒத்தைத்தறிக்காரரின் சொந்தங்களும் வேன் வைத்துக்கொண்டு வருகிறார்கள். அவினாசி சித்தப்பா வகையறாவிலும் வேனில்தான் வருகிறார்கள். இளங்கோ கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடி ஆற்றாமையுடன் வெளியே பார்த்தான். விஜயா ஓரக்கண்ணால் அவனை முறைப்பதை உணர்ந்தான்.

விஜயமங்கலத்தில் இருந்து சங்கராம் பாளையத்துக்கு மினி பஸ். கோயில் விசேஷம் என்பதால், அதிலும் ஆள் நிற்க முடியாத அளவுக்குக் கூட்டம். வியர்க்க விறுவிறுக்க வெள்ளைப் புடவையின் முந்தானையால் விசிறியபடியே கோயில் வாசலில் இறங்கிய பின்புதான் உண்ணம்மாளுக்கு முகத்தில் சிரிப்பு. சொந்தங்களைக் கண்டதும் சிரமங்களை மறந்துவிட்டு ஓடினாள்.

பெரிய ஆலமரத்துக்குக் கீழே சிமென்ட் பூச்சு உதிர்ந்துபோன பழந்திண்ணை. பொங்கலுக்கு அடுப்புக் கூட்டிய கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. வேனில் இருந்து சாமான்களை இறக்கிக்கொண்டிருந்தார்கள். வேம்பும் வில்வமுமாக நிழலிட்டிருக்க சின்னஞ்சிறியதாக அங்காளம்மன் கோயில். கோபுரப் பொம்மைகள் வண்ணம் இழந்து நின்றன. திட்டிவாசல்போல சின்னஞ்சிறிய நுழைவாயில். நெருஞ்சியும் தொட்டாற்சிணுங்கியுமாக அடர்ந்த மதிலோரத்தில் ஆடுகள் மேய்ந்திருந்தன. கல்பாவிய பாதையின் இருபுறங்களிலும் பூக்கள் செறிந்த ஆவாரம்புதர்கள். முகம் கழுவிய ஈரத்துடன் கோயிலுக்குள் கால்வைத்ததும் உண்ணம்மாளுக்கு தலை சுற்றியது. சுவரைப் பிடித்தபடியே தரையில் அமர்ந்து உள்ளே பார்த்தாள். பூசைக்கான ஏற்பாடுகள் தொடங்கியிருந்தன. மெல்லிய சிவப்புத் திரைக்குப் பின்னால் மங்கலாக அம்பாளின் உருவம். கண்ணீர் பெருக அப்படியே உட்கார்ந்திருந்தாள் உண்ணம்மாள். தன்னை மறந்து அவள் உதடுகள் வேண்டுதல்களைப் பிதற்றின.

பூசை முடிந்து நெற்றி நிறைய விபூதியைப் பூசியவள், நெடுஞ்சாண்கிடையாக மண்ணில் விழுந்து வணங்கினாள். கண்ணீர் வழிய நின்றாள்.

“இருக்கிற வரைக்கும் உடம்புக்கு ஒண்ணும் வராம ஒருத்தருக்கும் உபத்திரவம் தராதபடி நீதாம்மா பார்த்துக்கணும்.”

கையேந்தி வேண்டிய பின் எதுவும் பேசாது வெளியே வந்தாள். பசிக்கவில்லை. மனம் குளிர்ந்திருந்தது. திண்ணையில் புடவையை விரித்துப் படுத்துவிட்டாள். குழந்தைகளின் உற்சாகக் கூச்சலும் பந்திப் பரிமாறும் சத்தங்களையும் கேட்டபடி கண்மூடிக் கிடந்தாள்.

இளங்கோ அருகில் வந்து தொட்டு எழுப்பியபோதுதான் தூங்கிப்போனதை உணர்ந்து கண்விழித்தாள்.

“எல்லாரும் கிளம்பியாச்சும்மா... சாப்பிடாமயே தூங்கிட்டே. ஒருவாய் சாப்பிடுறியா?”

கையசைத்து `வேண்டாம்’ என்றவள் திண்ணையில் அமர்ந்தபடி நோட்டமிட்டாள். அவிநாசிக்காரர்கள் புறப்பட்டுவிட்டார்கள். சின்னதம்பியின் வேனில் பாத்திரங்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

“மினி பஸ் இப்ப வந்துரும். கிளம்பலாம். அதை விட்டா அப்புறமா ரெண்டு மணி நேரமாகிடுமாம். அதுலயே போயிட்டா தேவலை.”

வெற்றிலையைக் கிள்ளி வாயில் அதக்கியபடியே அருகில் வந்தாள் கருப்பக்கா. கோயில் வாசல் அருகில் நின்று கும்பிடு போட்டாள்.

“ஒவ்வொரு மாசமும் வந்துட்டுப்போற யோகத்தைக் குடு ஆத்தா.”

ஆலமரத்துக்கு அருகில் கூடியிருந்தவர்களை நோக்கி நடந்தாள்.

சின்னதம்பியின் குரல் அவளை நிறுத்தியது.

“பெரீம்மா... ரெண்டு பேருக்கும் வேன்ல இடம் கிடக்குது. ஏறிக்கங்க.”

இளங்கோ மடித்துக்கட்டிய வேட்டியுடன் வேனுக்கு அருகில் வந்தான்.

“சாமானமெல்லாம் கிடக்குது. உனக்கு இடஞ்சலா இருக்கப்போகுது தம்பி.”

உண்ணம்மாவின் வாய் சும்மா இருக்காது. ஊர்ப் போய்ச் சேர்வதற்குள் எதையாவது சொல்லிவைத்துவிடுவாள். பிறகு பொல்லாப்புதான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல இளங்கோ. காத்தால வந்தவிங்க நாலுபேர் இப்படியே சோமனூருக்குப் போயிட்டாங்கல. அதான் இடம் கிடக்குது. வெயில்ல எதுக்கு அலையோணும். நான் கூட்டியாறேன். நீங்க பஸ்ல வாங்க.”

கருப்பக்கா உள்ளே போனதும் சின்னதம்பி கைத்தாங்கலாக உண்ணம்மாவை ஏற்றி உட்காரவைத்துக் கதவை அடைத்தான்.

வேன் புறப்பட்டுப்போனதும் விஜயா பெரூமூச்சுடன் அவன் காதில் சொன்னாள்... “நல்லவேளையா மனசு வந்து போயிருக்குது. இல்லைன்னா நம்மகூட வந்து உசுரை வாங்கியிருக்கும்.”

மினி பஸ்ஸைப் பிடித்து விஜயமங்கலம் போய், அங்கிருந்து திருப்பூருக்கு பஸ் பிடித்து வீடுபோய்ச் சேர்ந்த பின்னும் வேன் வந்து சேர்ந்திருக்கவில்லை.

இளங்கோ சின்னதம்பியை செல்போனில் அழைத்தபோது, விபத்து நடந்து கொஞ்ச நேரம் ஆகியிருந்தது.

பொடாரம்பாளையத்துக்கு அருகில் வரும்போது, அசுரவேகத்தில் எதிரில் வந்த மணல் லாரியில் மோதாமல் இருப்பதற்காக வேனைத் திருப்ப, புளியமரத்தில் மோதிக் கவிழ்ந்துவிட்டது. சின்னதம்பிக்கு தலையில் அடி. கொஞ்ச நேரம் மயங்கிக் கிடந்திருக்கிறான். பக்கத்து மில்லில் இருந்து ஆட்கள் வந்து ஒவ்வொருவராக வெளியே எடுத்திருக்கிறார்கள். உண்ணம்மாளுக்கு நினைவில்லை. வலது காலில் ரத்தக் காயம். 108 சைரனுடன் வந்தபோதுதான் சின்னதம்பி விழித்திருக்கிறான். தலையில் அடிபட்டுக் கிடந்த சிவன்மலை மாமாவைத்தான் முதலில் அனுப்பியிருக்கிறான். அடுத்துவந்த இன்னொரு ஆம்புலன்ஸில் உண்ணம்மாவை ஏற்றிய சமயத்தில்தான் இளங்கோவின் அழைப்பு.

சுருக்கமாகச் சொன்னான்.

“எல்லாரையும் குமரன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடுறேன். அங்க வந்துருண்ணா.”

நான்கு ஆம்புலன்ஸுகளும் அடுத்தடுத்து வந்து ரத்தக் காயங்களுடன் ஆட்களை இறக்கின. உறவுகள் மொத்தமும் மருத்துவமனை வளாகத்துக்குள் புலம்பி அழுதபடி நின்றன. உண்ணம்மாவுக்கு எலும்பு முறிவு. மறுபடியும் அதே ஆம்புலன்ஸில் கோயமுத்தூர் கங்கா மருத்துவமனை. வெகுநேரம் கழித்து கண்விழித்தவள் வலியுடன் அனத்தினாள்.

“என்னவோ தப்பாகிடுச்சுடா இளங்கோ. தெய்வக்குத்தம். எல்லாரையும் இப்படி அமுக்கிடுச்சுப் பார்த்தியா. கால் வலி உசுரு போவுதுடா. என்னவாச்சும் பண்ணுடா.”

“அதான் டாக்டர் வந்து பாத்துட்டார்ல. காலையிலே ஆபரேஷன். வலி தெரியாம இருக்கிறதுக்கு ஊசி போடுவாங்க. சித்த பொறுத்துக்க.”

நீர்கோத்த கண்களுடன் இளங்கோவை உற்றுப் பார்த்தவள் கேட்டாள்... “எதுக்குடா அந்த வண்டியில போய் நான் ஏறுனேன்?”

அறுவைசிகிச்சை முடிந்து கண்விழித்தவள் வெகுநேரம் பேசவே இல்லை. எதையோ கேட்க நினைத்துத் தயங்கினாள். அடிக்கடி கண்களை மூடிக்கொண்டாள். கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது.

“என்னத்த நினைச்சு இப்படி வெசனப்படுறே? கெட்ட நேரம் காலோட போச்சேன்னு நினைச்சுக்கோ” - சுலோச்சனா சொன்னபோது மூச்சை உறிஞ்சியபடி முதுகைத் திருப்பினாள்.

“அவியல்லாம் எப்படி இருக்காங்க?” - பயமும் தயக்கமுமாக இளங்கோவின் முகம் பார்த்தாள். இந்தக் கேள்வியை எதிர் பார்த்திருந்த இளங்கோ, அவசரமாகச் சொன்னான், “யாருக்கும் பெருசா ஒண்ணுமில்ல. எல்லாரும் நல்லாருக்காங்க.”

உண்ணம்மாள் கேள்வியுடன் முறு வலித் தாள். இளங்கோ அவள் பார்வையைத் தவிர்ப்பதை உணர்ந்தவளாகக் கைவிரித்து, மேலே உயர்த்தியவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

66p3.jpg

வாசல் திண்ணையின் வலது மூலையிலிருந்து தாவிக் குதித்தது வெள்ளாடு. மூங்கிலில் கட்டியிருந்த மசால் தளையை எட்டிப் பிடித்தது. தலையைச் சற்றே உயர்த்தி வாய்க்குள் அதக்கியபடி தாவி ஓடியது. செருப்புகளை ஒதுக்கி ஓரமாகப் போட்டுவிட்டு இளங்கோ உட்கார்ந்ததும் மல்லிகா மெள்ளக் கேட்டாள், “ஆள் போட்டாச்சாண்ணா.”

டெட்டால் வாசனையுடன் வெள்ளைச் சேலையைக் கொடியில் உதறிப்போட்ட சுலோச்சனா திரும்பிப் பார்த்தாள். இளங்கோ ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். உண்ணம்மாள் கண் மூடிக் கிடந்தாள்.

“நாளைக்குத்தான ஒண்ணாம் தேதி. வந்துருவாங்க” - தணிந்த குரலில் சொன்னான்.

“அவிங்களும் நர்ஸ்தானே?” - புடவைத் தலைப்பில் ஈரக் கைகளைத் துடைத்தபடி அருகில் உட்கார்ந்தாள் சுலோச்சனா. முதல் பஸ்ஸைப் பிடித்து வந்திருந்தாள். அழுக்குக் கூடைக்குள் சுருட்டிக்கிடந்த உண்ணமாவின் புடவைகளையும் போர்வையையும் ஊறவைத்து அலசிப் போட்டுவிட்டாள். இரண்டு நாட்களாக மல்லிகா உடனிருந்து பார்த்துக்கொண்டதில், உண்ணம்மாளின் ஆங்காரம் சற்றே தணிந்திருந்தது.

“நர்ஸ் இல்லை. ஆனா அதுமாதிரிதான். இப்படி கெடையில விழுந்துட்டவங்களை வீட்டுல இருந்தே பார்க்கிறதுக்குன்னு இருக்காங்க. கூடவே இருப்பாங்க. நடக்கவெப்பாங்க. மருந்து குடுப்பாங்க. பாத்ரூம் போவெச்சு உடம்பு துடைச்சு, துணி மாத்திவிடுவாங்க. ஆஸ்பத்திரியில இருந்தா அங்க எப்படிப் பண்ணுவாங்களோ அதுமாரி எல்லாமே.”

மல்லிகா வளையலைப் புறங்கையில் ஏற்றியபடியே கேட்டாள்... “நம்ம வீட்டுலயேதான் இருப்பாங்களா?”

“ஆமாம் புள்ளே. இங்கதான் சாப்பாடு, படுக்கை எல்லாம். அம்மாகூடவேதான் இருப்பாங்க.”

“வர்றவங்க வயசானவிங்களா... வயசுப் புள்ளையா, எப்படிப் பொறுப்பா இருப்பாங்களா, யார் எவர்னு தெரியாம வீட்டுக்குள்ள எப்படி வெச்சுக்கிறது?”

இளங்கோ பெருமூச்சுவிட்டபடி நிமிர்ந்தான். கைகளை உயர்த்தி சடவு முறித்தான். ஆயிரம் முறை யோசித்துக் களைத்த விஷயங்கள். வெங்காயச் சருகுகள் நிறைந்த முறத்தை ஏந்திவந்து, ரோஜாத் தொட்டியில் கொட்டிய விஜயா ஒரு கணம் நின்றாள். திண்ணையில் இருந்த மூவரையும் சிரித்தபடியே பார்த்தாள்.

“மருதாணியும் கொய்யாப்பழமும் பறிச்சு வெச்சிருக்கேன். மறக்காம எடுத்துட்டுப் போங்க.”

“அதான் அப்பவே சொல்லிட்டல. எல்லாம் எடுத்துக்குவாங்க” - சலிப்புடன் சொன்னான் இளங்கோ.

“அண்ணன்கிட்ட உக்காந்தா உங்களுக்கு பொழுதுபோறதே தெரியாதே. லெமன் ஜுஸ் போட்டு எடுத்தாரேன் இருங்க.”

சிரித்தபடியே உள்ளே சென்றவளைப் பார்த்தபடியே கேட்டாள் மல்லிகா... “எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுட்டுச் செய்றாங்க அண்ணி. ஆனா, அம்மா சமாசாரத்துல மட்டும் ஒத்துவர மாட்டேங்கிறாங்க. இதுல மட்டும் அவங்களுக்கு என்ன சங்கடம்னே தெரியல. நீ பேசிப் பார்த்தியாண்ணா?”

இருவரையும் பார்த்துப் புன்னகைத்தான் இளங்கோ.

“அதெல்லாம் பேசியாச்சு. சரிவராது. அவ போக்குலதான் இருப்பா. விடுங்க” என்றவன் தொடர்ந்தான், ``மாசத்துக்குப் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு கேட்டாங்க. நான்தான் ஒம்பதாயிரம் ரூவாய்க்குப் பேசியிருக்கேன். மூணுவேளை சாப்பாடு போடணும். இதுபோக ஏற்பாடு பண்றவங்களுக்கு ஒம்பதாயிரம் தரணும்.”

“வீண் செலவுதாண்ணா. என்னதான் பணம் குடுத்தாலும் நம்ம அம்மாவை நாம பார்த்துக்கிற மாதிரி இருக்குமா? நாங்கதான் மூணுபேரு இருக்கோம். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து பார்த்துக்க மாட்டமா?” - மல்லிகா கண்களைத் துடைத்தபடியே கேட்டாள்.

“அதான்புள்ளே நானும் சொல்றேன். அண்ணன்தான் கேக்க மாட்டேங்கிறாங்க” - சாணளவு தலைமுடியைச் சுருட்டி முடிச்சிட்டாள் சுலோச்சனா.

இளங்கோ எழுந்து கைகளை உதறினான். எதிர்வீட்டு வாசலில் சைக்கிள்காரன் இளநீர் வெட்டிக்கொண்டிருந்தான். வெயில் பட்டு ஒளிர்ந்தன இளம்பச்சைக் காய்கள். கூரிய அரிவாள் ஒவ்வொரு வீச்சுக்கும் மின்னி அசைந்தது.

“அதெல்லாம் சரியா வராது புள்ளைங்களா. ஒரு நாள் மாதிரி இருக்காது. ஒவ்வொருத்தருக்கும் ஏதாச்சும் வேலை வந்து நிக்கும். வர முடியாத சூழ்நிலை அமையும். அவளும் அவசர ஆத்தரத்துக்குக்கூட கிட்ட வர மாட்டா. எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஆத்தா விசனப்படுவா. சத்தம் போடுவா. எதுக்கு வீணா பிரச்னை? கடனோட கடனா இதையும் பார்த்துக்கலாம்.”

செருப்பைப் போட்டபடி பந்தலுக்கு வெளியே வந்தான். பந்தற்காலில் படர்ந்திருந்த மயில்மாணிக்கத்தின் சிவந்த பூக்களைச் சுண்டினான்.

“நாள் கிழமைன்னு வந்தா முடிஞ்சதைச் செய்யுங்க. அது போதும். அவ மனசு மாறி எதுனாச்சும் செஞ்சா பார்த்துக்கலாம்.”

ஆனால், விஜயா செய்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கவில்லை.

66p4.jpg

காம்புகள் ஒடிந்து கோக்கமுடியாத மொக்குகளை ஓரமாகக் குவித்தாள் விஜயா. மொக்குகளை நெருக்கிக் கோத்திருந்த மல்லிகைச் சரம் அவள் மடியில் கிடந்தது. கைகளில் ஏந்தி அழகு பார்த்தவள் நிறைவுடன் எழுந்தாள். முகம் துடைத்தபடி உள்ளே வந்த மேகலாவிடம் உற்சாகத்துடன் சொன்னாள்... “தல சீவிட்டல. இந்தா பூ வெச்சுக்க. ஊர்லேருந்து ஆயா கொண்டு வந்தது. நம்ம வீட்டுக் கொடியில பூத்தது.”

கட்டிலில் சாய்ந்திருந்த உண்ணம்மாள் தாளித்த பொரிகளுக்கிடையில் எண்ணெய் மினுக்கத்துடன் கிடந்த பூண்டை எடுத்து வாயில் போட்டாள். கட்டிலுக்கு அடுத்து நாற்காலியில் அமர்ந்திருந்த விஜயாவின் அப்பா மெதுவாகச் சொன்னார், “கெட்ட நேரத்துலேயும் நல்லநேரம் தான். கூட வந்த நாலு பேருக்கு ஆயுசு அவ்ளோதான். என்ன பண்றது? நீங்க அதையவே நெனச்சு விசனப்படாம தெகிரியமா இருந்தா போதும்.”

கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்த விஜயாவின் அம்மா அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினாள்.

உண்ணம்மாள் தம்ளரை சேலைத் தலைப்பால் பற்றியபடி காபி தண்ணியை உறிஞ்சினாள். நாக்கைச் சுட்டிருக்க வேண்டும். உதடுகளைக் குவித்து ஊதிக்கொண்டாள்.

“அங்கலாப்புல சொல்றோம். `இப்படிக் கெடையில கிடக்கிறதுக்குப் பதிலா ஒரேயடியா போயிடுறது நல்லது’ன்னு.  ஆனா, அவ்ளோ சீக்கிரமா போறதுக்கு யாருக்குத்தான் மனசு வருது?”

டம்ளர்களைச் சேர்த்தெடுத்து சமையலறைக்குள் வந்த விஜயாவின் அம்மா குழாய் தண்ணீரைத் திருப்பினாள். தண்ணீர் சீறிக் கொட்டும் சத்தத்துக்கு நடுவே விஜயாவிடம் கிசுகிசுத்தாள்... “என்ன புள்ளே நீ. ஆள்வெச்சுத்தான் பார்த்துக் கணும்னு இப்படி அளும்புபண்றே? எனக்கு இப்படி ஆகிருந்தா நீ பார்க்க மாட்டியா?”

அரைபட்டிருந்த மாவை அள்ளி போசியில் போட்டவள் திரும்பிப் பார்த்தாள். முழங்கை வரைக்கும் அரிசிமாவு சாந்துபோல வழிந்தது.

“யார்னாலும் பார்ப்பேன். எல்லாத்தையும் செய்வேன். ஆனா அவங்களுக்கு என்னால செய்ய முடியாது.”

திடமாக ஒலித்த அவளது குரலைக் கேட்டுப் பதறினாள் விஜயாவின் அம்மா.

“சரி... சத்தம்போடாதடீ. செய்யாட்டியும் பரவாயில்லை. அவங்க காதுபட இப்படிப் பேசாத. பாவம் செத்துப் பிழைச்சுருக்காங்க.”

மாவின் அளவு குறைந்ததும், குழவி சுற்றும் ஓசை கடகடத்தது. எவர்சில்வர் பாத்திரத்தின் விளிம்பில் விரலைவைத்து மாவை ஒன்றுசேர்த்து அள்ளி போசியில் வழித்தாள்.

“இல்லைன்னு சொன்னேனா? என்னால செய்ய முடியாதுன்னுதான் சொல்றேன்.”

ஆட்டாங்கல்லை நிறுத்தியதும் ஓசை நின்றது.

“நீ என்னவோ கடுசா சொல்ற. எல்லாரும் என்னையத்தான் திட்டுவாங்க... `பொண்ணை எப்பிடி வளர்த்துருக்கா பார்’னு?” - குரலைத் தணித்து அங்கலாய்ப்புடன் சொன்னாள். விஜயா சன்னமாகச் சிரித்தாள்.

“உன்னைய ஒருத்தரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்கம்மா. அப்படிச் சொன்னா நான் பதில் சொல்லிக்குவேன்.”

“எதை மனசுல வெச்சுட்டு நீ இப்படிப் பண்றேன்னு புரியுது புள்ளே.”

விஜயா பதில் சொல்லவில்லை. குழவியை வெளியில் எடுத்துவைத்துக் கழுவினாள்.

“மேகலா பிறக்கிறதுக்கு முன்னாடி என்னவோ வாய்க்குவந்தபடி பேசுனாங்கதான். கல்யாணமாகி நாலஞ்சு வருஷமா குழந்தை பிறக்கலைங்கிற விசனத்துல திட்டினாங்கதான். அதையெல்லாம் இன்னுமா மனசுல வெச்சுக்கிறது? பெரியவங்க தானே...” - ஆற்றாமையுடன் அருகில் நின்று கேட்டபோது, நிமிர்ந்து கண்களை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டு நகர்ந்தாள் விஜயா.

இதற்கு மேல் அவளிடம் பேச முடியாது என்று எண்ணியவளாக விஜயாவின் அம்மா வெளியே வந்தாள். உண்ணம்மாள் அவள் முகத்தையே கூர்ந்துபார்த்தாள். தொலைக்காட்சி சத்தத்தில் உள்ளே பேசியது கேட்டிருக்காது என்று நினைத்தவளாகக் கைகளைத் துடைத்தபடியே மறுபடியும் கட்டிலில் உட்கார்ந்தாள். உண்ணம் மாளின் பார்வை இப்போதும் அவளிடமே நிலைத்திருந்தது.

எங்கேயாவது நட்சத்திரம் தென்படுகிறதா என்று அண்ணாந்து பார்த்திருந்த இளங்கோ கண்ணாடியைக் கழற்றினான். தண்ணீர் சொம்புடன் திண்ணைக்கு வந்த விஜயா நைட்டி அணிந்திருந்தாள். இளங்கோவின் யோசனை கூடிய முகத்தைக் கூர்ந்து பார்த்தவள் மெதுவாகக் கேட்டாள்... “நாளைக்கு வந்துருவாங்களா?”

இளங்கோ பதில் சொல்லவில்லை. தென்னை யோலைகள் அசையாதிருந்தன. கருப்பக்கா வீட்டுக்குள் தொலைக்காட்சியின் சலனங்கள் தென்பட்டன. இந்தப் புழுக்கத்தில் உண்ணம்மாவால் தூங்கியிருக்க முடியாது என்று எண்ணியவன், அருகில் உட்கார்ந்த விஜயாவை நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன பதிலே வரலை?”
“எல்லாரும் உன்னையைத்தான் தப்பா பேசறாங்க புள்ளே.”

“அப்படியா?”

“கேட்கிறதுக்கு சங்கடமா இருக்கு. எல்லாத்தையும் இழுத்துப் போட்டுட்டுச் செய்யறவ இதுல மட்டும் ஏன் இவ்ளோ பிடிவாதமா இருக்கேன்னு திட்டுறாங்க.”

“ம்... திட்டுறாங்கதான். தெரியும்.”

“எனக்குப் புரியது. ஆனா, மத்தவியளுக்குத் தெரியாதுல.”

“மத்தவியளுக்கு எதுக்குத் தெரியணும்?”

காடாவிளக்குடன் பழவண்டி தெருமுனையில் திரும்பியது. வண்டி முழுக்கப் பழச் சீப்புகள். இத்தனை பழத்தை வைத்துக்கொண்டு இவன் என்ன செய்வான் என்று நினைத்தவனின் தோளைத் தட்டினாள் விஜயா.
 
“நாளைக்கு அவங்க யாராச்சும் வந்தா திருப்பி அனுப்பிருங்க. நானே பார்த்துக்கிறேன்.”

இளங்கோ பதில் சொல்லாது தலை குனிந்தான். முகத்தைத் துடைத்துவிட்டுக் கண்ணாடியை அணிந்தவன் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். உண்ணம்மாள் தூங்கிவிட்டாளா?

கோலப்பொடியுடன் விஜயா கதவைத் திறந்தபோது விடிந்திருந்தது. காக்கைகள் தொடர்ந்து கரையும் ஓசை. சின்னதம்பி கடை வாசலில் பால் வண்டி நின்றது. நீலப்பெட்டிகளை அடுக்கும் சத்தம் கேட்கிறது.

அறைக்கதவைத் திறந்துகொண்டு கையில் செல்போனுடன் வெளியே வந்தான் இளங்கோ.

“இந்நேரத்துல யாருக்குடா போன் போடுற?” உண்ணம்மாள் தலையை உயர்த்திக் கேட்டாள்.

திண்ணைப் பேச்சு இவள் காதில் விழுந்திருக்குமோ? ஒரு கணம் தயங்கினான்.

“ `நர்ஸம்மாவை அனுப்புறேன்’னு சொன்னாங்க. அங்கதான் பேசலாம்னு…”

உண்ணம்மாள் முதுகை நிமிர்த்தினாள்.

“சித்த நிமித்தி உக்கார வைடா.”

தலையணைகளைச் சரித்து உட்கார வைத்ததும் புடவைத் தலைப்பை விசிறிப்போட்டாள். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடியே உரக்கச் சொன்னாள்.

“யார்னாலும் சீக்கிரமா புறப்பட்டு வரச் சொல்லு. ஒருத்தர் தயவும் எனக்குத் தேவையில்லை. அப்படி ஒண்ணும் நான் ரோஷம் கெட்டுப் போகலை.”

வாசற்கோலம் கச்சிதமாக விழுந்த திருப்தியுடன் தலைநிமிர்த்தினாள் விஜயா!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.