Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டடி

 

பாகம் - 1

எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த  ஒரு சாதாரண கிராமம்.  எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது. 

ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற நகரத்து  நாகரீக விளையாட்டுக்களும் எங்கள் ஊரில் இருக்கும் வெட்டை வெளிகளில் விளையாடித் திரிவதுதான் எமது முக்கிய பொழுதுபோக்கு.

ஊரிலுள்ள பல வெட்டைகளை நாங்கள் பாவித்தாலும் பெரும் பனங்கூடல் ஒன்றுக்கு நடுவில் இருக்கும் 'குருவியன்' வெட்டைதான் நாங்கள் அதிகம் கிரிக்கெற், உதைபந்தாட்டம் விளையாடும் இடம்.  பெரும் பனங்கூடலுக்குள் இருக்கும் குருவியன் வெட்டையை அடைவதற்கு ஐந்தாறு ஒற்றையடிப்பாதைகள் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஊர் மனைகளைப் பிரிக்கும் பிற ஒழுங்கைகளிலிருந்தும்,  பிரதான தெருக்கள் இரண்டைக் குறுக்கறுக்கும் கல்லுரோட்டில் இருந்தும் பிரிந்து பாம்புகள் பிணைந்து விலகுவதுபோல வளைந்தும் நெளிந்தும் செல்லும். இந்த ஒற்றையடிப்பாதைகளில் மிக வேகமாகவும், லாகவமாகவும், ஹாண்டில் பாரில் கையை வைக்காமலும் சைக்கிள் ஓடுவதும் எமது 'திரில்' பொழுதுபோக்குகளில் ஒன்று.

பள்ளிக்கூட நாட்களில்  பின்னேர ரியூசனுக்குப் போக முதல் கிடைக்கும் ஒரு மணித்தியாலத்தில் கூட உதைபந்தாட்டம் விளையாடி, வேர்க்க விறுவிறுக்க ரியூசன் வகுப்புக்களில் போய் குந்தி இருந்து படிப்பது எல்லோருக்கும் பழகிவிட்டது. 

 ஆனாலும் வார இறுதி நாட்கள், பாடசாலை விடுமுறைக்காலம் என்றால் காலை பத்து மணிக்கெல்லாம் ஒன்றுகூடி 'கன்னை' பிரித்து கிரிக்கெற் விளையாடுவோம். கிரிக்கெற் முடிய வம்பளந்து இளைப்பாறுவோம்.  சிலவேளைகளில் கள்ள இளனி பிடுங்க அல்லது கள்ள மாங்காய் ஆய என்று ஊரிலுள்ள முள்ளுக்கம்பியாலும், அலம்பல் வேலிகளாலும் கட்டிக்காக்கப்படும் காணிகளுக்குள் போய்வருவோம். மாலை மங்கும் நேரத்தில் மீண்டும் உதைபந்தாட்டம் இருள் கவிந்து ஆளையாள் தெரியாதமட்டும் விளையாடித்தான் வீடு போய்ச்சேருவோம்.
 
குருவியன் வெட்டையில் வயதுக்கேற்றபடி மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விளையாடுவதுண்டு. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட தவ்வல்கள் ஒரு பிரிவிலும், பன்னிரண்டு வயது தொடங்கி O/L வரை அடுத்த பிரிவிலும், A/L படிப்பவர்கள் இன்னொரு பிரிவிலும் விளையாடுவது வழமை. நான் நடுப்பிரிவில் இருந்தேன். குறைந்த வயதுக்காரர்கள் எப்போதும் தங்களைவிட வயது கூடியவர்களுடன் விளையாட விரும்பினாலும்,  வயது கூடியவர்கள் விளையாட ஆட்கள் போதாமல் இருந்தால்தான் தங்களுடன் சேர்ப்பார்கள்.  மதியநேரத்தோடு பாடசாலை முடிவதால் இளம்பிராயத்து சிறுவர்கள் குருவியன் வெட்டையைச் சூழவுள்ள பனங்கூடலுக்குள் ஆமி-புலி போல ஒளித்துப் பிடித்து விளையாடுவதில்தான்  அதிகம் மினக்கெடுவார்கள். 

பல ஒற்றையடிப்பாதைகள் குருவியன் வெட்டையைக் குறுக்கறுத்துப் போவதால், அடிக்கடி சனங்களும் எமது வெட்டையை குறுக்குப்பாதையாகப் பாவிப்பதுண்டு. இதனால் சைக்கிள்களில் போகின்றவர்களாலும், பொடிநடையில் போகின்றவர்களாலும் எமது விளையாட்டுக்கள் தடைப்படுவதுண்டு.

இப்படிக் குருவியன் வெட்டைக் குறுக்குப்பாதையை தினந்தோறும் பாவிப்பவர்களில் "பெட்டைக் குயிலன்" என்று நாங்கள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடும் ஒரு நடுத்தர வயதுக்காரனும் ஒருவன். பெட்டைக் குயிலன் எப்போதும் ஒரு கருநீல நிறச் சாரமும், வெளிர்நீல நிறச் சேர்ட்டும் அணிந்திருப்பான். அவன் தினமும் காலையில் வடக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரிலிருந்து கட்டுவேலைக்காக தெற்குப் பக்கமும், மைம்மல் தாண்டிய பொழுதில் திரும்பவும் தனது ஊருக்கும் போய்வருவான். அவனது பெண்களைப் போன்ற இடுப்பை ஒடித்த ஒயிலான நெளிநடையும், கைகளை அபியம் பிடித்து ஆட்டியபடி குழைந்து பேசுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். பனங்கூடலுக்குள்ளால் போகும்போது இராகம் இழுத்தவாறு ஏதாவது பாட்டை கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டு போவான். நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், வெட்டைக்கு நடுவாகப் போகாமல் ஓரமாக விலத்தித்தான் போவான். இதனால் நாங்கள் அவனை அதிகம் பொருட்படுத்துவதில்லை. சிலவேளைகளில் எங்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இல்லாவிட்டால் அவனை வம்புக்கிழுப்பதற்காக "பெட்டைக் குயிலன்" என்று உரத்துக் கூச்சலிட்டும், மண்ணாங்கட்டிகளால் எறிந்தும் அவனை ஓட ஓட விரட்டுவதுண்டு.

ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணியளவில் கிரிக்கெற் விளையாடலாம் என்ற நினைப்போடு குருவியன் வெட்டைக்குப் போனபோது அங்கு கூட்டமாக நின்ற இளவயதுச் சிறுவர்கள்  மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கத்திக்கொண்டு நின்றார்கள். அவர்களின் சஞ்சலமான உரையாடல் காதில் விழுந்தபோது ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று உணர்ந்து என்ன நடந்தது என்று அதட்டிக் கேட்டேன்.

அழுவாரைப் போல சிவந்த முழிக் கண்களுடன் நின்ற குழவியன் - கட்டையாகவும் உருண்டையான தோற்றம் உள்ளதால் வைத்த பட்டப் பெயர் - தாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, வழமையாக ஓரத்தால் போகும் பெட்டைக் குயிலன் வெட்டைக்கு நடுவாக தங்களைக் குழப்புகின்ற மாதிரி வந்ததால், அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு வெளிப்பக்கத்தால் போகும்படி ஊண்டிச் சொன்னோம் என்றான்.  அப்படிச் சொன்னது பிடிக்காமல் பெட்டைக் குயிலன் கோபம் கொண்டு அடிக்க ஓடி வந்தபோது எல்லோரும் பனங்கூடலுக்குள் தலைதெறிக்க ஓடியபோதும், குழவியனை பெட்டைக் குயிலன் பிடித்துவிட்டான்.  "பெட்டையன் எண்டு இனிக் கூப்பிடுவியளோடா பாப்பம்" என்று பிலத்துக் கத்தியவாறே பிடிபட்ட குழவியனின் அரைக்காற்சட்டையை முரட்டுத்தனமாக உருவி, தொடைகளை இறுக்கிக் கசக்கி குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப் பினைஞ்சு போட்டானென்று சொன்னார்கள். அந்தக் கதையைச் சொல்லும்போதே குழவியன் பெருத்த அவமானமும் கூச்சமும்  அசூசையும் கலந்த  உணர்வுகளை முகத்தில் அப்பிகொண்டு தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டான்.

நடந்த கதையைக் கேட்டபோதே உடம்பெல்லாம் அதிர்ந்து ஆடுமளவிற்கு ஆத்திரம் வேகமாக வந்தது. பெட்டைக் குயிலன் விடுபேயன் போல இவ்வளவு காலமும் திரிந்தவன், இப்ப ஆருமே நினைச்சுப் பார்க்காத இப்படி ஒரு கூடாத செயலை, அதுவும் எங்கள் வெட்டையில வைத்து செய்தது,  எங்கட ஊர் மானத்திற்கும் மதிப்புக்கும், பெருமைக்கும் விட்ட  பெரிய சவால் மாதிரி இருந்தது.  பெட்டைக் குயிலனுக்கு எங்கட ஊர்ப்பொடியளில கைவைக்கிற அளவுக்கு துணிவு வந்ததை சும்மா விட்டுவிடக்கூடாது.  சூட்டோட சூடாக அவனுக்கு அவன்ரை வாழ்க்கையில கேள்விப்பட்டிருக்காத ஒரு பாடம் படிப்பித்து, அவனை எங்கள் வெட்டைப் பக்கம் சீவியத்திற்கும் தலைவைக்காமல் பார்ப்பதுதான் அடுத்த வேலை என்று கறுவிக்கொண்டே மனதுக்குள் சபதம் போட்டேன்.

குழவியனை சமாதானப்படுத்துவதற்காக "பெட்டைக் குயிலன் எங்களை ஆரெண்டு தெரியாமல், எங்கட பரம்பரை கத்தி எடுத்தால் தரம் பறிக்காமல் விடுறதில்லை எண்டு தெரியாமல் உனக்கு நுள்ளிப் போட்டான்;  எங்களைத் தொட்ட அவனை இண்டைக்கே ரெண்டில ஒண்டு பாத்துவிட்டுத்தான் நித்திரைப்பாயிக்குப் போறது" என்று வீரவசனம் பேசினேன்.

பெட்டைக் குயிலன் வழமையாக ஏழு மணியளவில் இருட்டாக இருக்கும்போதுதான் திரும்பவும் பனங்கூடல் குறுக்குவழியில் தனது ஊருக்குப் போவது என்று தெரிந்திருந்ததால், உடனடியாகவே சரியான திட்டம் போட்டு நல்ல இருட்டடி கொடுத்து வாழ்க்கையில அவன் எங்கள மறக்கமுடியாத பாடம் கொடுப்பதுதான் சரி என்று எனக்குள் யோசித்தவாறே யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்தேன். கனபேரைச் சேர்த்தால் திட்டம் பிசகிவிடும். என்றாலும் குறைந்தது ஒரு நாலுபேராவது இருந்தால்தான் வேகமான அதிரடித்தாக்குதலை செய்துமுடிக்கலாம் என்று தோன்றியது. பெட்டைக் குயிலன் ஏற்கனவே சின்னப்பொடியளோட தனகினபடியால் சிலநேரம் எங்களைப் போல பதினாலு-பதினைஞ்து வயதினரையும் கண்டு பயப்படாமல் இருக்கவும்கூடும். அதனால் எப்படியும் ஒரு பெரிய பொடியனையும் சேர்த்தால்தான் எங்களுக்கும் ஒரு பலமாக இருக்கும் என்று தீர்மானித்தேன்.

- தொடரும் -

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதை விறுவிறுப்பாய் இருக்கு தொடருங்கள் கிருபன்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், எழுத்து நடை வாசிக்க மிகவும் இலகுவாக உள்ளது ! புதிதாக     எழுதுபவர் போலத் தெரியவில்லை! தொடரட்டும்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புங்கையூரன் said:

கிருபன், எழுத்து நடை வாசிக்க மிகவும் இலகுவாக உள்ளது ! புதிதாக     எழுதுபவர் போலத் தெரியவில்லை! தொடரட்டும்!

 

 

 

புதிதாகத்தான் எழுதுகின்றேன்?

ஆனால் இக்கதையை 2005 இல் எழுதத் தொடங்கியிருந்தேன்?

2011 இல் கூட யாழில் சொல்லியிருக்கின்றேன். இந்தமுறை எழுதிமுடிப்பேன் என்று நம்புகின்றேன்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புங்கையூரன் said:

கிருபன், எழுத்து நடை வாசிக்க மிகவும் இலகுவாக உள்ளது ! புதிதாக     எழுதுபவர் போலத் தெரியவில்லை! தொடரட்டும்!

 

 

கிருபனா புதிது ??? முன்னர் ஒரு விறுவிறுப்பான தொடர் எழுதி தொடர்ந்து எழுதாமல்  எம்மைத் தவிக்கவிட்டதை மறந்தாச்சோ???

ஆனால் இதில் அவரின் சிறுவயது உணர்வு வெளிப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கிருபனா புதிது ??? முன்னர் ஒரு விறுவிறுப்பான தொடர் எழுதி தொடர்ந்து எழுதாமல்  எம்மைத் தவிக்கவிட்டதை மறந்தாச்சோ???

அதையும் முடிக்கிறதுதான் அடுத்த புறஜெக்ற்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி முடியுங்க பெட்டைகுயிலன் என்னானான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்! ஊர்க்கதை சுப்பராய் இருக்கு......tw_thumbsup:
என்ரை கேள்வி என்னவெண்டால் உந்த "குருவியன் வெட்டை" எங்கையிருக்கு??

ஏனெண்டால் நான் ஊருக்கு போனால்???  
குருவியன் வெட்டையிலை ஒருக்கால் கிளித்தட்டு விளையாடோணும் போலை கிடக்கு tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

கிருபன்! ஊர்க்கதை சுப்பராய் இருக்கு......tw_thumbsup:
என்ரை கேள்வி என்னவெண்டால் உந்த "குருவியன் வெட்டை" எங்கையிருக்கு??

ஏனெண்டால் நான் ஊருக்கு போனால்???  
குருவியன் வெட்டையிலை ஒருக்கால் கிளித்தட்டு விளையாடோணும் போலை கிடக்கு tw_lol:

"குருவியன் வெட்டை" பூசலார் கட்டின கோயில் மாதிரி மனதிலதான் இருக்கு கு.சா. ஐயா.:cool:

ஆனால் நாங்கள் விளையாடின வெட்டை இப்ப ஒருத்தரும் விளையாடாமல் காடு பத்திப்போய்விட்டது என்று நினைக்கின்றேன். 

ஊரைவிட்டு அகலுவதை வெளிக்கிடும் நாளுக்கு முதல்நாள்தான் அந்த வெட்டையில் வைத்து நண்பர்களுக்குச் சொன்னேன். அதன் பின்னர் அந்த வெட்டையில் இன்னமும் கால் வைக்கவில்லைtw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

-----இப்படிக் குருவியன் வெட்டைக் குறுக்குப்பாதையை தினந்தோறும் பாவிப்பவர்களில் "பெட்டைக் குயிலன்" என்று நாங்கள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடும் ஒரு நடுத்தர வயதுக்காரனும் ஒருவன். பெட்டைக் குயிலன் எப்போதும் ஒரு கருநீல நிறச் சாரமும், வெளிர்நீல நிறச் சேர்ட்டும் அணிந்திருப்பான். அவன் தினமும் காலையில் வடக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரிலிருந்து கட்டுவேலைக்காக தெற்குப் பக்கமும், மைம்மல் தாண்டிய பொழுதில் திரும்பவும் தனது ஊருக்கும் போய்வருவான். அவனது பெண்களைப் போன்ற இடுப்பை ஒடித்த ஒயிலான நெளிநடையும், கைகளை அபியம் பிடித்து ஆட்டியபடி குழைந்து பேசுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். பனங்கூடலுக்குள்ளால் போகும்போது இராகம் இழுத்தவாறு ஏதாவது பாட்டை கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டு போவான். நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், வெட்டைக்கு நடுவாகப் போகாமல் ஓரமாக விலத்தித்தான் போவான். இதனால் நாங்கள் அவனை அதிகம் பொருட்படுத்துவதில்லை. சிலவேளைகளில் எங்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இல்லாவிட்டால் அவனை வம்புக்கிழுப்பதற்காக "பெட்டைக் குயிலன்" என்று உரத்துக் கூச்சலிட்டும், மண்ணாங்கட்டிகளால் எறிந்தும் அவனை ஓட ஓட விரட்டுவதுண்டு.

ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணியளவில் கிரிக்கெற் விளையாடலாம் என்ற நினைப்போடு குருவியன் வெட்டைக்குப் போனபோது அங்கு கூட்டமாக நின்ற இளவயதுச் சிறுவர்கள்  மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கத்திக்கொண்டு நின்றார்கள். அவர்களின் சஞ்சலமான உரையாடல் காதில் விழுந்தபோது ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று உணர்ந்து என்ன நடந்தது என்று அதட்டிக் கேட்டேன்.

அழுவாரைப் போல சிவந்த முழிக் கண்களுடன் நின்ற குழவியன் - கட்டையாகவும் உருண்டையான தோற்றம் உள்ளதால் வைத்த பட்டப் பெயர் - தாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, வழமையாக ஓரத்தால் போகும் பெட்டைக் குயிலன் வெட்டைக்கு நடுவாக தங்களைக் குழப்புகின்ற மாதிரி வந்ததால், அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு வெளிப்பக்கத்தால் போகும்படி ஊண்டிச் சொன்னோம் என்றான்.  அப்படிச் சொன்னது பிடிக்காமல் பெட்டைக் குயிலன் கோபம் கொண்டு அடிக்க ஓடி வந்தபோது எல்லோரும் பனங்கூடலுக்குள் தலைதெறிக்க ஓடியபோதும், குழவியனை பெட்டைக் குயிலன் பிடித்துவிட்டான்.  "பெட்டையன் எண்டு இனிக் கூப்பிடுவியளோடா பாப்பம்" என்று பிலத்துக் கத்தியவாறே பிடிபட்ட குழவியனின் அரைக்காற்சட்டையை முரட்டுத்தனமாக உருவி, தொடைகளை இறுக்கிக் கசக்கி குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப் பினைஞ்சு போட்டானென்று சொன்னார்கள். அந்தக் கதையைச் சொல்லும்போதே குழவியன் பெருத்த அவமானமும் கூச்சமும்  அசூசையும் கலந்த  உணர்வுகளை முகத்தில் அப்பிகொண்டு தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டான்.

குருவியன்  வெட்டையால்.... குறுக்காலை  போன  "பெட்டைக் குயிலனை"  
குழவியன்...  பட்டப் பெயர் சொல்லி அழைத்ததால்.....
கோபம் கொண்ட குயிலன், குழவியனின்...  குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப், பினைஞ்சு... போட்டான்.
எதுகை மோனையுடன் எழுதிய  கதை, சூப்பராக இருக்கு கிருபன் ஜீ.  :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்தின் அழகு, வாசம் உங்கள் கிராமிய வர்ணணையில் மிளிர்கிறது, கிருபன்..

வெட்டவெளியில் இருக்கும் தாழ்வான புங்கை மரத்தில், அக்காலத்தில் நாங்கள் விளையாடிய 'மர புல்லாக்குச்சி' ஆட்டம் நினைவை மீட்டிச் செல்கிறது.. bicycle.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு

யார் அவனுக்கு பட்டம் தெளித்தது எழும்புங்கோ  என்று ஆசிரியர் எங்களை கேட்ட ஞாபகம் வருகின்றது......"பட்டம் தெளித்தல்" ஊரில் இப்ப இந்த தமிழ் சொல் பாவனையில் இருக்கோ தெரியவில்லை கதை சுப்பர் தொடருங்கோ
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

கதை விறுவிறுப்பாய் இருக்கு தொடருங்கள் கிருபன்....! tw_blush:

எங்களையெல்லாம் கட்டிப் போட்டிருக்கும் துருச்சாமிக்கு முன்னால் இது வெறும் ஜுஜுபி?

9 hours ago, ஈழப்பிரியன் said:

சொல்லி முடியுங்க பெட்டைகுயிலன் என்னானான்?

மலிஞ்சால் சந்தைக்கு வரும்தானே. அப்ப தெரியும்?

2 hours ago, தமிழ் சிறி said:

குருவியன்  வெட்டையால்.... குறுக்காலை  போன  "பெட்டைக் குயிலனை"  
குழவியன்...  பட்டப் பெயர் சொல்லி அழைத்ததால்.....
கோபம் கொண்ட குயிலன், குழவியனின்...  குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப், பினைஞ்சு... போட்டான்.
எதுகை மோனையுடன் எழுதிய  கதை, சூப்பராக இருக்கு கிருபன் ஜீ.  :grin: :D:

எழுதும்போது எதுகை, மோனையாக நினைத்து எழுதவில்லை! ஆனால் நீல நிறத்தில் நீங்கள் காட்டியது உங்கள் கண்ணுக்கு எப்படியும் தப்பாது என்று எதிர்பார்த்திருந்தேன் தமிழ் சிறி அண்ணா?

1 hour ago, ராசவன்னியன் said:

கிராமத்தின் அழகு, வாசம் உங்கள் கிராமிய வர்ணணையில் மிளிர்கிறது, கிருபன்..

வெட்டவெளியில் இருக்கும் தாழ்வான புங்கை மரத்தில், அக்காலத்தில் நாங்கள் விளையாடிய 'மர புல்லாக்குச்சி' ஆட்டம் நினைவை மீட்டிச் செல்கிறது.. bicycle.gif

நன்றி. ராசவன்னியன் ஐயா!

எத்தனை வருடங்கள் போனாலும் மறந்துபோகாத வாழ்வின் பகுதி. மனதில் ஓடும் சித்திரத்தை எழுத்தில் கொண்டுவருவது கடினமாக இருந்தது. 

15 minutes ago, putthan said:

யார் அவனுக்கு பட்டம் தெளித்தது எழும்புங்கோ  என்று ஆசிரியர் எங்களை கேட்ட ஞாபகம் வருகின்றது......"பட்டம் தெளித்தல்" ஊரில் இப்ப இந்த தமிழ் சொல் பாவனையில் இருக்கோ தெரியவில்லை கதை சுப்பர் தொடருங்கோ
 

நன்றி புத்தன் ஐயா!

சாரம் கட்டுவதை மறந்துபோன மாதிரி பட்டம் தெளிப்பதையும் மறந்திருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது  உடை

நடை

இடுப்பு  என்று தொடங்கும் போதே கதையின் நளினத்தை புரிந்து கொண்டேன்..

முடியுங்கள்

பின்னர  பேசுவோம்....

மற்றும்படி இருட்டடி நானும்   போட்டிருக்கின்றேன்

அதுவும் சாக்கால் தலையில்   மூடிவிட்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாழ் களம் களைகட்டுகிறது மகிழ்ச்சி  தொடரட்டும் 

 tw_blush:tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அவரது  உடை

நடை

இடுப்பு  என்று தொடங்கும் போதே கதையின் நளினத்தை புரிந்து கொண்டேன்..

முடியுங்கள்

பின்னர  பேசுவோம்....

மற்றும்படி இருட்டடி நானும்   போட்டிருக்கின்றேன்

அதுவும் சாக்கால் தலையில்   மூடிவிட்டு...

விசுகு எனது நண்பனும் நானும் சேர்ந்து ஒருவருக்கு இருட்டடி போட்டு ஒரு கிழமையாக பேய் அடித்துப் போட்டுதென்று ஆளுக்கு காய்ச்சல்.பின் நீண்ட காலம் பேய் பயத்தில் பொழுது பட்டா வெளிக்கிடுவதே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலருடைய ஆக்கங்களை வந்து படிப்பதற்கு கடினமாக இருக்கிறது..அவர்களுக்கு இப்படி எழுதினால் தான் வாசகர்கள் படிப்பார்கள் என்ற வித்தை தெரிந்திருந்தாலும் நமக்கு அது புரிய மாட்டேன்கிறது..தயவு செய்து குறைந்த பட்ச அளவு நாகரீகத்தையாவது கடைப்பிடியுங்கள்.இது எனது அன்பு வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

விசுகு எனது நண்பனும் நானும் சேர்ந்து ஒருவருக்கு இருட்டடி போட்டு ஒரு கிழமையாக பேய் அடித்துப் போட்டுதென்று ஆளுக்கு காய்ச்சல்.பின் நீண்ட காலம் பேய் பயத்தில் பொழுது பட்டா வெளிக்கிடுவதே இல்லை.

உண்மைதான்

இது தான் இயக்கங்கள்   தோன்றுவதற்கான முதல்படியாக இருந்திருக்குமோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, யாயினி said:

சிலருடைய ஆக்கங்களை வந்து படிப்பதற்கு கடினமாக இருக்கிறது..அவர்களுக்கு இப்படி எழுதினால் தான் வாசகர்கள் படிப்பார்கள் என்ற வித்தை தெரிந்திருந்தாலும் நமக்கு அது புரிய மாட்டேன்கிறது..தயவு செய்து குறைந்த பட்ச அளவு நாகரீகத்தையாவது கடைப்பிடியுங்கள்.இது எனது அன்பு வேண்டுகோள்.

என்ன அம்மா பிரச்சனை.சுற்றி வழைக்காமல் நேரடியாகவே எழுதுங்கள்.அப்போது தான் எழுதுறவர்களுக்கு புரியும்.இதில் குறைபட ஏதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அநேகமாக ஊர்ப்பக்கங்களில் ஒருவரை அடையாளப்படுத்துவதற்கு பட்டப்பெயர்கள்தான் அதிக பாவனையில் இருந்துள்ளது. உங்கள் எழுத்துக்கள் சிறு பிராயத்தை மனதிற்குள் கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்தக்கதையில் வரும் சிறுபிராயத்துடுக்குத்தனம் எனக்கும் சிறுவயதில் ஆண்பிள்ளைகளுக்கு ஒப்பாக இருந்திருக்கிறது . பெண் பிள்ளைபோன்று என் பெற்றோர் என்னை வளர்க்க மறுத்துவிட்டார்கள்... அதன் பலனாக இப்படியான துடுக்குக்குணங்களை அண்ணன்களுடன் சேர்ந்து நானும் பழகித் தொலைத்துவிட்டேன். பக்கத்துவீட்டு அன்ரி ஆண்சிங்கி என்றே கூப்பிடுகிற அளவுக்கு இருந்தேனாக்கும்.....!!!! விடலைபபருவத்தில் பருவமாற்றம் கட்டுப்போடாவிட்டால் என்ன என்னெல்லாம் செய்திருப்பேனோ....

 

அட கிருபன் நீங்கள் எழுதும் கதை வாசிக்க சுவார்சியமாக இருக்கிறது. உங்களின் அட்டகாசத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

சிலருடைய ஆக்கங்களை வந்து படிப்பதற்கு கடினமாக இருக்கிறது..அவர்களுக்கு இப்படி எழுதினால் தான் வாசகர்கள் படிப்பார்கள் என்ற வித்தை தெரிந்திருந்தாலும் நமக்கு அது புரிய மாட்டேன்கிறது..தயவு செய்து குறைந்த பட்ச அளவு நாகரீகத்தையாவது கடைப்பிடியுங்கள்.இது எனது அன்பு வேண்டுகோள்.

யாயினி,

நான் எழுதியதை வாசித்தமையால் மனவுளைச்சல் ஏதும் வந்திருக்காது என்று நம்புகின்றேன்?. வாசகர்கள் விருப்பத்துக்குத் தக்கமாதிரி எழுதுவது ஜனரஞ்சக எழுத்து. அதிலும் சில மஞ்சள் பத்திரிகை எழுத்து? சிலது உள்ளதை உள்ளபடியே எதிவித பாசாங்கு இல்லாமலும் எழுதும் எழுத்து. ?

எனது எழுத்து எந்தவகை என்பதை வாசிப்பவர்களுக்கே விட்டுவிடுகின்றேன்?

 

 

2 hours ago, வல்வை சகாறா said:

கிருபன் அநேகமாக ஊர்ப்பக்கங்களில் ஒருவரை அடையாளப்படுத்துவதற்கு பட்டப்பெயர்கள்தான் அதிக பாவனையில் இருந்துள்ளது. உங்கள் எழுத்துக்கள் சிறு பிராயத்தை மனதிற்குள் கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்தக்கதையில் வரும் சிறுபிராயத்துடுக்குத்தனம் எனக்கும் சிறுவயதில் ஆண்பிள்ளைகளுக்கு ஒப்பாக இருந்திருக்கிறது . பெண் பிள்ளைபோன்று என் பெற்றோர் என்னை வளர்க்க மறுத்துவிட்டார்கள்... அதன் பலனாக இப்படியான துடுக்குக்குணங்களை அண்ணன்களுடன் சேர்ந்து நானும் பழகித் தொலைத்துவிட்டேன். பக்கத்துவீட்டு அன்ரி ஆண்சிங்கி என்றே கூப்பிடுகிற அளவுக்கு இருந்தேனாக்கும்.....!!!! விடலைபபருவத்தில் பருவமாற்றம் கட்டுப்போடாவிட்டால் என்ன என்னெல்லாம் செய்திருப்பேனோ....

 

அட கிருபன் நீங்கள் எழுதும் கதை வாசிக்க சுவார்சியமாக இருக்கிறது. உங்களின் அட்டகாசத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் ஆண்சிங்கி என்று நீங்களே சொல்லித்தான் நாங்கள் தெரியவேண்டுமே!? அது உலகத்துக்கே தெரியுமே?

அடுத்த பாகத்தை எழுதிவிட்டேன். ஆனால் கொஞ்சம் திருத்தம் செய்யவேண்டும்!!

முடிவுப் பகுதி இன்னும் முடிக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் மிகச் சுவாரசியமாக கிராமியச் சூழலையும் அங்கு நடைபெறும் சிறுபராய சம்பவங்களையும் எம் கண்முன் நிகழ்ச்சிப் படுத்தியுள்ளார். பாவம் பெட்டைக்குயிலன் இருட்டடி  வாங்குவது தெரியாமல் இரண்டாம் பாகத்தில் வரப் போகிறான். யாராவது காப்பாத்துங்கள். நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 இல இருட்டடி பற்றி ஒரு நகைச்சுவைக் கதை எழுதி இருந்தேன்... அதில் கிருபன் அண்ணா இப்படி எழுதி இருந்தார்..

"நானும் ஒரு இருட்டடி பற்றிய கதை ஒன்றைக் எழுதிக் குறையில் வைத்திருக்கின்றேன்.. ஆனால் அது அடிவாங்கியதைப் பற்றியதல்ல!"

இப்பொழுது 2017... கிட்டத்தட்ட ஆறுவருசம் ஆகி இருக்கு எழுதி முடிக்க... தும்பளையான் பழையகதைக்கு இன்று லைக் போட்டிருந்ததால் என்ன ஏது என்று பார்க்க போன இடத்தில் சிக்கியது..

இணைப்பு இது... https://www.yarl.com/forum3/topic/95751-நான்-அவனில்லை/


பெட்டைக்குயிலனுக்கு செவிட்டப்பொத்தி அடிச்சதில அநேகமா அவனுக்கு காதுகேக்காமா போயிருக்குமோ தெரியல அடுத்த தொடரில...

அப்பிடி நடந்திருந்தா அடுத்தமுறை வெட்டையால போகேக்க பொடியளின்ர வாய் அசையுறத வச்சுத்தான் என்ன கத்துறாங்கள் எண்டு மட்டுப்பிடிச்சு இந்தவாட்டி நலமெடுத்திருப்பான்...

இல்லை எண்டா ஒண்டில் வெட்டைக்கு மறுக கிறுகி இருக்கமாட்டான்.. tw_bawling:

Link to comment
Share on other sites

நேற்று இரவு கைபேசியில் உங்கள் கதையை பயணத்தின் போது படித்தேன். மிகவும் சுவார்ஸயமாக இருந்தது. சிறு வயதில் மாயாவி காமிக்ஸ்சில் ஆரம்பித்து ராஜேஸ்குமார் பட்டுக்கோட்டை பிரபாகர் என பல நுற்றுக்கணக்கான கிரைம் நாவல்கள் திரிலர்கள் என படித்தது ஞாபகம் வந்தது. அதன் ஆர்வாம் அடுத்து என்ன என்பதிலேயே இருக்கும். இதிலும் அவ்வாறு ஒரு ஆர்வரம் அடுத்து பெட்டைக் குயிலன் என்ன ஆனான்? மண்மணத்தோடு சேர்ந்த உங்கள் கதை ஏதோ பரிட்சயமான எழுத்தாளரின் கதையை படிப்பது போல் இயல்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் - 2

அநேகமான பெரிய பொடியங்கள் படிப்பிலும் அல்லது பெட்டை பாக்கிறதிலையும் மினக்கெடுவாங்கள் என்பதால் இதில் இரண்டிலும் அதிகம் ஈடுபாடு காட்டாத, நேர்மை, நியாயம், புரட்சி, தத்துவம் என்று எந்த நேரமும் பெரிய தடிமனான புத்தகங்களைப் படித்து, விளங்காத தமிழில் அகிலம், பிரபஞ்சம்  என்ற வாயோயாமல் தத்துவம் கதைக்கும் சொக்கியை கேட்டால் உடனடியாகச் சம்மதிப்பான் என்று நினைத்தேன். 

சொக்கிக்கு பதினேழு வயதுதான் என்றாலும் ஆள் வாதநாராயணி மரம் மாதிரி நல்ல வளர்த்தி. மெலிஞ்ச தேகம்.  முள்ளுப் பண்டி மாதிரி தலையும் தாடி, மீசையும் வளர்ந்திருக்கும். அவன் உலக சோசலிச இயக்கத்தினது நான்காம் அகிலத்தின் லியோன் ட்ரொட்ஸ்கியின் தீவிர பக்தனாக இருந்தபடியால் அவனுக்கு ட்ரொட்ஸ்கி என்று பட்டப்பெயர் வைத்தோம். அது எங்கள்  பல்லுக்கையே கொழுவிக்கொண்டு நிண்டு, வாய்க்குள்ள பூராததால் சொக்கி என்று மருவி விட்டது. அடிதடியில பெரிதாக ஈடுபாடு காட்டாவிட்டாலும், சமூக சிந்தனை கூடினவன். பெட்டைக் குயிலனுக்கு இருட்டடி போட அவன் போதுமென்று நினைத்தேன்.  

அடுத்ததாக பெட்டைக் குயிலனை திகைக்க வைக்கக் கூடியமாதிரி அதிவேகமாக இயங்கி, இடக்கு முடக்கான இடத்தில மோட்டு அடிபோடக்கூடியவனும், அதிகம் விளக்கம் கேளாமல் சொன்னதைச் செய்யத் தோதாய் இருக்கக் கூடியவனுமான உசார் மடையன் கட்டையனைத் தேர்ந்தெடுத்தேன். கட்டையன் கருங்காலி நிறமும் வலிமையுமானவன். எங்களுடன் எப்பவும் கூடித் திரிய விரும்புகிறவன். என்னைவிட ஒரு வயதுதான் மூத்தவன். இருந்துவிட்டு எப்போதாவது ஞாபகம் வந்தால் மாத்திரமே பள்ளிக்கூடப் பக்கம் எட்டிப் பார்ப்பான். அநேகமான நேரம் தோட்டம், துரவு என்று உழுவான் மாதிரி உழுதுகொண்டு திரிவதும், விளையாடுவதும்தான் அவனது தினப்படி உத்தியோகம்.

மூன்றாவதாகப் பனங்கூடலுக்குக் கிட்டடியில் உள்ள புக்கையரை பிடிக்கலாம் என்று தோன்றியது. புக்கையருக்கு என்னைவிட ஒருவயது குறைவு என்றாலும் நல்ல தோற்றம். விளையாடும்போது அடிக்கடி அளாப்பல் வேலைகள் செய்து சண்டையில் ஈடுபடுபவன் என்பதால் பிரயோசனப்படுவான் என்று நினைத்தேன். புக்கையரின் தகப்பனார் 'அன்' விகுதியில் பேர் வந்தால் 'அவன்/இவன்' என்று மற்றவர்கள் சொல்லக்கூடும் என்பதால் கவனமாகப் பிள்ளைக்கு பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்தவர். செல்லப் பெயரிலும் 'அன்' விகுதி வரக்கூடாது என்று தானே நல்ல மரியாதையான வீட்டுப் பெயரையும் வைத்திருந்தார். நாங்களும் புக்கையரின் தகப்பனாருக்கு மதிப்புக்கொடுக்கவேண்டும் என்பதற்காக பட்டப்பெயரிலும் 'அன்' வராமல் பார்த்து வைத்த பெயர்தான் புக்கையர்.  அளாப்பிக் குழப்பும்போதுகூட கோபம் வந்தால் நாங்கள் "டேய் புக்கை" என்றுதான் கூப்பிடுவோம்.

உடனடியாகவே  தெரிவுசெய்த ஓவ்வொருவரினதும் வீடுகளுக்கும் போய் அவர்களைத் தனித்தனியே ரகசியமாக அழைத்து வெட்டையில் நடந்த விடயத்தை சுருக்கமாகச் சொல்லி, பெட்டைக் குயிலனுக்கு இருட்டடி கொடுப்பதற்கு விடாப்பிடியாகச் சம்மதம் வாங்கிவிட்டேன். சொக்கி பல குறுக்குக்கேள்விகள் கேட்டாலும் நடந்தது  மிகவும் பாரதூரமான விடயம் என்பதை உணர்ந்ததும் ஒரு சமூகக் குற்றத்தை ஒழிக்கவேண்டும், ஒரு மோசமான சமூகவிரோதியைத் தண்டிக்கவேண்டும் என்பதற்காக என்னைவிட ஆவேசமாக இருட்டடி கொடுப்பதுதான் சரி என்ற முனைப்பில் நின்றான். அவன் படிக்கும் தடிமனான புத்தகங்களில் இப்படியான விடயங்களை எப்படிக் கையாளாலாம்  என்று அகிலக்காரர்களின் மத்திய குழுவினர் முன்னரே தீர்மானம் போட்டிருந்தார்களா என்று கேட்க நினைத்தாலும் அது அன்றையநாளின் முக்கிய நோக்கத்தை திசை திருப்பிவிடும் என்பதால் விட்டுவிட்டேன்.

இருட்டடித் தாக்குதல் பற்றிய விரிவான  விளக்கத்திற்கு மூவரையும் பிற்பகல் மூன்று மணியளவில் குருவியன் வெட்டைக்கு   வரச்சொல்லிவிட்டு, மத்தியானச் சாப்பாட்டுக்கு அம்மா தேடத் தொடங்க முதலே வீட்டுக்குப் போனேன். சாப்பிடும்போதே ஏதோ பெரிய காரியம் ஒன்றைச் சாதிக்கப்போவதாக மனம் மிகவும் சந்தோஷப்பட்டது. மயிர்க்கூச்செறியும் மின்னல்வேகத் தாக்குதலை சிறு பிசகும் இல்லாமல் காரியமாற்ற ஒழுங்கான திட்டம் தேவை என்பதால் நண்பர்களைச் சந்திக்கும் தருணம் மட்டும் பொறுமைகாக்க முடியவில்லை. முற்றத்திற்குப் போவதும், வீட்டுக்குள் வருவதுமாக மனதுக்குள் பல கோணங்களில் இருட்டடித் தாக்குதலை ஒத்திகை பார்த்தேன். எதுவும் திருப்தியானதாக இருக்கவில்லை. ஆனால் நல்லா செவிள் பறக்க சப்பல் அடி கொடுக்கவேண்டும் என்ற உந்துதல் கூடிக்கொண்டுவந்தது.

முன்னைய வீரதீரச் செயல்களை நினைவுபடுத்த முயன்றேன். பெரிதாகத் தன்னும் சொல்லிக்கொள்ளுமளவில் ஒன்றும் இருக்கவில்லை. வீட்டில் எந்நேரமும் அண்ணன், தம்பியோடு அடிபாடுகள் இருந்தாலும், வெளியில் நல்லபிள்ளையாகவே அநேகமாக இருந்திருக்கின்றேன்.  விளையாடும்போது இடையிடையே எதிர்க் 'கன்னை'யாருடனும் விளையாட்டு ருசியில் சில்லறைச் சண்டைகள் பிடித்திருந்தாலும், அவை ஒருநாளும் மோசமான சண்டைகளாக மாறியதில்லை.

இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது பருப்பனுடன் அங்கிரி போட்டதால் வகுப்பில் நாங்கள் இரு கோஸ்டிகளாக இருந்தோம். ஒரு கோஸ்டிக்கு நானும், மற்றக் கோஸ்டிக்கு பருப்பனும் தலைவர்கள். வகுப்பிலும் மைதானத்திலும் வாய்த் தர்க்கங்களிலும், பட்டம் தெளித்தலிலும்தான் எங்கள் கோஸ்டிகள் முறுகுப்பட்டுத் திரிந்தன. ஆளுக்காள் கை வைத்தால் தலைமை வாத்தி செகிடு கிழிய அறைந்துவிடுவார் என்ற பயத்தில் முட்டுப்பட்டதில்லை. 

எங்கள் கோஸ்டிகளின் முறுகல் முற்றிய நேரத்தில்தான் ஊர்த்திருவிழா வந்தது. சப்பறத் திருவிழா இரவில் கோயில் பின்வீதியில்  சப்பறம் போனதன் பிற்பாடு போட்டுப் பிடிப்பதென்று பருப்பனும் நானும் சம்மதித்திருந்தோம். பருப்பன் என்னைவிடப் பலசாலி மாதிரி எனக்குத்தோன்றியது. அதனால் அவன் எதிர்பார்க்காதமாதிரி ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்தபோது, அப்போதுதான் வீட்டில் 'வயறிங்' வேலை செய்து மிஞ்சியிருந்த வயர் துண்டுகளில் இரண்டைச் சுத்திக் காற்சட்டைப் பொக்கற்றுக்குள் திணித்துக்கொண்டு கோயிலடிக்குப் போனேன்.

சப்பறத்திற்குப் பின்னால் பொருமிப் புடைத்த காற்சட்டைப் பொக்கற்றுகளுடன் போய்க்கொண்டிருந்தபோது பருப்பனும் அவன் கோஸ்டியினரும் சில அடிகள் பின்னாலேயே வந்துகொண்டிருந்தனர். சப்பறம் மேற்கு வீதியிலிருந்து வடக்கு வீதிக்குத் திரும்ப நாங்கள் இருதரப்பினரும் பின்தங்கிவிட்டோம்.  போட்டுப் பிடிப்பதில் முந்துபவன்தான் வெல்வான் என்பதால் பருப்பன் எதிர்பாராத வேளையில் பொக்கற்றுக்குளிருந்த வயரை சடாரென்று எடுத்துச் சுழற்றியபோது, திடீரென எங்கிருந்தோ வந்த பெரிய பொடியன் ஒருவன் எங்கள் இருவரையும் காதில பிடித்து "சின்ன முளையான்களாக இருக்கிற நீங்கள் கோயில் திருவிழாவில் சண்டைபிடிக்கப் போறியளோ?" என்று கேட்டு புறங்கையால் பளீரென கன்னத்தில் இருவருக்கும் மாறி மாறி அறைந்தான். வயர் வைத்திருந்த காரணத்தால் எனக்குப் பல அடிகள் விழுந்து கன்னம் விண்விண் என்று வலித்தது.  பருப்பனும் நானும் "ஐயோ அம்மா" என்று அலறிக் கத்தியவாறே எங்களை விட்டுவிடுமாறு மன்றாடினோம். "இனி எங்கையாவது சண்டை பிடிக்கிறது கண்டனெண்டால் அந்த இடத்தில கை காலை ஒடிச்சு கரண்ட் கம்பியில தோரணம் கட்டிவிடுவன் " என்று வெருட்டி எங்களை ஓடித்தப்புமாறு சொன்னதும், நாங்கள் குதிகால் குண்டியில்பட கன்னத்தைப் பிடித்தவாறே ஓடி வீட்டுக்குப் போனதும் இப்பத்தான் நடந்தமாதிரி இன்னமும் உணர்வில் உள்ளது.

மூன்று மணிக்கு முந்தியே சைக்கிளை எடுத்துக்கொண்டு குருவியன் வெட்டைக்கு வேகமாகப் பறந்தேன். சொல்லி வைத்த மாதிரி நண்பர்கள் மூவரும் வந்து சேர்ந்திருந்தார்கள். வெட்டையின் ஒரத்தில் பனைமர நிழலின் கீழ் வழமையாக இருந்து கதைக்கும் பனங்குத்தியில் குந்தியவாறே  இருட்டடி கொடுக்கும் திட்டத்தை விபரிக்கத் தொடங்கினேன்.  பின்னேரம் விளையாட்டு முடிந்தபின்னர், வீட்டுக்குப் போவது மாதிரிப் போய் இருள் கூடியதும் திரும்பவும் குருவியன் வெட்டையில் சந்திக்கவேண்டும் என்றேன். கல்லுரோட்டில் இருந்து பனங்கூடலுக்குள்ளால் பிரியும் ஒற்றையடிப்பாதை வெட்டைக்கு வர சுமார் நூறு யாருக்கு முன்னால் வில்லு மாதிரி வளையும் இடம்தான் தோதான இடம் என்று அந்த இடத்தை நோக்கிக் கையைக் காட்டிச் சொன்னேன். அந்த வளைவான பாதைக்கு கிட்டவாக பல பனைமரங்கள் நெருங்கி நிற்பதால், கரிய இருளில் பனைமரத்தோடு இருட்டாக இருட்டாக நின்று தாக்குதலைச் செய்யலாம் என்று சொன்னதை மற்றவர்களும் ஆமோதித்தார்கள். கட்டையன் தன்னிடம் இருக்கின்ற மம்பட்டிப் பிடிக் கொட்டனைக் கொண்டுவரவா என்று கேட்டபோது, கொட்டன், பொல்லுகளால் அடித்தால் பெட்டைக் குயிலன் சிலநேரம் பொட்டென்று போனாலும் போய்விடுவான் என்ற பயத்தில் வேண்டாம் என்று சொன்னேன். நாங்கள் நாலு ஆம்பிளையள் அவனைக் கையாலையும் காலாலையும் உழக்கினாலே சவிள் அடி சம்பல் இடியாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் பெட்டைக் குயிலன் விட்ட சேட்டைக்கு அவனுக்கு நல்ல பூசை கொடுக்கவேண்டும் என்பதால், கட்டையனை பெட்டைக் குயிலனின் கவிட்டைக் குறி தப்பாமல் நாலு எத்து எத்தி அடிபட்ட ட்றக் மாதிரிச் சப்பிளிக்கிறதுதான் முக்கியம் என்று சொன்னேன்.   பெட்டைக் குயிலனுக்கு தான் கொழுப்பு முத்திச் செய்த வேலையாலதான் அடிவிழுகுது என்று தெரிந்தாலும் ஆர் அடிக்கிறது என்று தெரியக்கூடாது. எங்களில ஒருத்தனையும் அவன் மட்டுக்கட்டக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும். அதாலை அடிபோடும்போது ஒரு சொல்லுத்தன்னும் கதைக்காமல் நாங்கள் உசாராக இருக்கவேண்டும் என்று சொன்னேன்.

அரை மணித்தியாலமாக பல்வேறு உத்திகளையும் அலசிய பின்னர் திட்டத்தை இவ்வாறாகச் செய்யலாம் என்று நாலுபேரும் உடன்பட்டோம்.  கல்லுரோட்டுப் பக்கத்தால் வரும் பாதை வளைவதற்கு முன்னால் சொக்கியும், புக்கையரும் பாதையின் இருபக்கமும் உள்ள பனை மரங்களின் பின்னால் சத்தம் சலாரில்லாமல் ஒளித்திருக்கவேண்டும். வளைவில் இருந்து வெட்டைப் பக்கமாக வரும் பாதையின் இரு பக்கத்தில் கட்டையனும் நானும் பனைகளுக்கு பின்னால்  பதுங்கியிருக்கவேண்டும். பெட்டைக் குயிலன் வளைவில் வர அவனுக்கு பின் பக்கமாக நிற்கும் புக்கையர் முதலில் ஓடிவந்து பெட்டைக் குயிலனின் கும்பத்தில் பாய்ந்து அவனை நிலத்தில் தடாலடியாக விழுத்தவேண்டும்.  பெட்டைக் குயிலன் நிலைகுலைந்த கணத்தில் சொக்கி ஓடிவந்து அவனின் கைகளைப் பின்பக்கமாக வளைத்து இறுக்கி பூட்டுப்போட்டு, அவனைத் திமிறாமல் பார்க்கவேண்டும்.  நிலத்தில பெட்டைக் குயிலன் விழுந்து கிடக்கிற நேரத்தில கட்டையன் ஓடிவந்து பெட்டைக் குயிலனின் கவிட்டைக் காலால் பதம் பார்க்கவேண்டும். நான் பெட்டைக் குயிலனின் நெஞ்சிலையும் முகத்திலையும் ஓங்கிக் குத்தி அவனின் சொண்டை உடைத்து, பல்லை நொருக்கி, சொத்தையையும் வீங்கச் செய்யவேண்டும். இதெல்லாம் இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்கவேண்டும். அதிரடியான இருட்டடியை முடித்துக்கொண்டு, வேறு ஆட்கள் வரமுன்னர் நாங்கள் நாலுபேரும் பிரிந்து ஓடி முங்கியன் தோட்டத்து தண்ணித்தொட்டியடியில சந்திக்கவேண்டும். சிக்கல்கள், குழறுபடிகள் எதுவும் வராத மிகவும் தெளிவான திட்டத்தை போட்டதில் மனதில் பெருமிதம் குடிகொண்டது.

நேரம் நிறைய இருந்ததால் தாக்குதல் ஒத்திகை பார்க்க முங்கியன் தோட்டத்திற்கு கல்லுரோட்டில் ஏறி, கிழக்குப் பக்கமாகத் திரும்பும் எருக்கலை, பாவட்டை, ஆமணக்குகளால் நிறைந்த பத்தைகளைக் கூறுபோடும் ஒற்றையடிப் பாதையூடாகப் போனோம்.  முங்கியன் தோட்டம் குத்தினால் ஏற்பேத்தும் கறள்பிடித்த முள்ளுக்கம்பிகளாலும், பட்ட இடத்தைக் குத்திக் கிழிக்கும் முள்ளுகளைக் கொண்ட கிளுவைகளாலும், மூரி மட்டைகளால்  அடைக்கப்பட்ட வேலியாலும் திறமாக அறுக்கை செய்யப்பட்ட பெரியதோட்டமாக இருந்தாலும், நாங்கள் களவாகப் போய்ப் புழங்க இடையிடையே பொட்டுக்களை பிரிச்சு வைத்திருந்தோம்.  பிரிச்ச பொட்டு ஒன்றுக்குள்ளால் உள்ளே புகுந்து, தோட்டவேலியோடு  பத்தையாக வளர்ந்திருந்த நாயுருவி, கூப்பிட்டுகுத்தி, காவிளாய்ச் செடிகளை விலத்தி பெரிய வாய்க்கால் பாதையூடாக தண்ணித்தொட்டியடிக்குப் போனோம். 

முங்கியன் தோட்டத்தில் அழுக்கணவன் பூச்சிகள் பிடிச்சு கீழ்ப்பக்கமாக இலை சுருட்டிக் கிடந்த மிளகாய்க் கண்டுகளுக்கு கள்ளுமுட்டித் தலையோடு காவல் செய்யும் வெருளியைக் கண்டதும், அதை பெட்டைக் குயிலனாகப் பாவித்து அடிபோடுகின்ற ஒத்திகையைச் செய்யலாம் என்ற யோசனை வந்தது.  வெருளிக்கு முதுகு கிடையாததால் வாய்க்கால் மணலில் நான் நிற்க புக்கையர் எனக்குப் பின்பக்கமாக ஓடிவந்து என்னைக் கீழே விழுத்துவது முதலாவது ஒத்திகையாக இருந்தது. நான் கீழே விழாமல் இருக்க அகட்டிய கால்களை இறுக்கமாக நிலத்தில் ஊண்டியபடி நின்றேன். புக்கையர் வேகமாக ஓடிவந்து ஒரு பண்டிக்குட்டி மாதிரி எனது முதுகில் ஏறியபோது, அவனது பாரம் தாங்கமுடியாமல் முகம் குப்புற வாய்க்கால் மணலில் விழுந்தேன். வாயெல்லாம் வாய்க்கால் மண் போய்விட்டது. ஏதோ பழைய கறளை வைத்து புக்கையர் என்னை வேண்டுமென்றே விழுத்திவிட்டான் என்று சரியான கோபம் வந்தாலும், ஒத்திகை ஒழுங்காக இருந்ததால் பொறுத்துக்கொண்டேன். 

அடுத்ததாக கட்டையனை கவிட்டைப் பொத்தி அடிக்க தயாராகச் சொன்னேன். அவனும் அதிவேகமாக எனது இடுப்புப் பிரதேசத்தை நோக்கிக் காலை வளைத்து சுழற்றமுனைந்தான். அவனைச் சரமாரியாக வாய்க்குவந்தபடி தூஷணத்தால் அர்ச்சித்து திட்டியபடி வெருளியின் கவிட்டுக்கு உதைக்கச் சொன்னேன். கட்டையன் வலுவேகமாக ஓடிப்போய் வெருளிக்கு ஒரு உதைவிட்டான். அந்த உதையில் வெருளியின் தலையாக இருந்து கள்ளுமுட்டி நிலத்தில் விழுந்து சிதிலமாக உடைந்து சிதறியது.  விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் கதை சொல்லிய பின்னர் கேட்கின்ற கேள்விக்கு விக்கிரமாதித்தன் விடை தெரிந்தும் சொல்லாமல்  மெளனம் சாதித்தால் அவன் தலையும் வெருளியின் முட்டித்தலை மாதிரி சுக்குநூறாக இப்படித்தான் வெடித்திருக்கும் என்று பட்டது.

கைகளை முறுக்கிப் பூட்டுப் போடுவது தனக்கு வடிவாகச் செய்யத் தெரியும் என்றும், தான் வீட்டில் தமையன்மாரை அடிக்கடி பூட்டுப்போட்டு மடக்கிறானென்று சொக்கி சொன்னதால் பூட்டுப்போடும் ஒத்திகை தேவையில்லை என்று விட்டுவிட்டோம்.  நானும் என் பங்குக்கு எனக்கு இடக்கைக் பழக்கம் என்பதால், என்ரை கை ஓங்குவதை எதிராளி பார்க்கமுன்னரே கன்னத்திலும், தோள்மூட்டிலும் உரமான குத்துவிட்டு கொழுக்கட்டை மாதிரி வீங்கச் செய்யமுடியும் என்று சொன்னேன். ஏற்கனவே முன்னர் ஒருக்கால் த்றீ, நோட், ஃபோர் காட்ஸ் விளையாடும்போது அளாப்பியதால் புக்கையருக்குக் குடுத்த குடுவையை ஞாபகப்படுத்த, புக்கையரும் நான் கள்ள இடிகள் நல்லாப் போடுவதில் மன்னன் என்று ஒத்துக்கொண்டான். 

நாலு பேரும் சேர்ந்து பெட்டைக் குயிலனுக்கு கும்முற கும்மலில அவன் பிழியப்பட்ட சக்கையாகத்தான் போகிறான் என்ற திருப்தி எல்லோர் முகத்திலும் இழையோடியது.

ஒத்திகை வேகமாக முடிந்ததால் திரும்பவும் குருவியன் வெட்டைக்குப் போய் உதைபந்து விளையாடிவிட்டு வெய்யில் தாண்டு இருட்டுப்படும் கருக்கல் நேரத்தில் எல்லோரும் கலைந்து வீட்டுக்குப் போனோம்.  அம்மா மேச்சலுக்குப் போட்டு வந்த பசுமாட்டில் பாலைக் கறந்து காய்ச்சி ஈயப்பேணியில் விட்டு ஆத்தியபடி இருந்தா.  உலகத்தில என்னதான் நடந்தாலும், ஆறு மணிக்கு அம்மா பால் காய்ச்சுவதும், அதை நானும் அண்ணன், தம்பியும் குடிப்பதும் நடந்துதான் ஆகவேண்டும். தப்பித் தவறி பிந்திப் போனால் அம்மாவின் ஏச்சுப் பேச்சுக்குத் தப்பமுடியாது. எனவே, நல்ல பிள்ளைமாதிரி மேலைக் காலைக் கழுவி, ஆத்தி மிதமான சூட்டிலிருக்கும் பாலை மடக் மடக்கென்று குடித்துவிட்டு, காற்சட்டைக்கு மேல் சாரத்தையும் கட்டிகொண்டு சேர்ட்டும் இல்லாமல் பட்டிக்கு வந்த ஆடு மாதிரி பவ்வியமாக இருந்தேன்.  அம்மா இரவுச்சாப்பாடு செய்வதற்கு தட்டுமூடல், நீத்துப் பெட்டிகளை தேடுவதில் பிராக்காக இருந்தநேரம்,  டக்கென்று சைக்கிளை எடுத்து வேகமாக உருட்டிக் கேற்றைத் தாண்டியதும் பாய்ந்தேறி பெடலை உழக்கிக் கொண்டு குருவியன் வெட்டைக்குப் பறந்தேன். தப்பித் தவறிச் சுணங்கிப் போனால் மற்றவர்கள் திட்டத்தை மாற்றிக் குழப்பக்கூடும் என்பதால் முதலில் நானே போகவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

- தொடரும் -

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.