Jump to content

மரங்கள் வளர்ப்பு முறை , பயன்கள்


Recommended Posts

பணம் மரத்தில்தான் காய்க்கிறது!

coconut_tree.JPG

“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”

என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மரம் வளர்ப்பு!

மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.

முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.

முதலில் அசலூர் கதை.
 

dharhara-01.jpg

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரி, இந்த சடங்கினால் வேறு என்ன பிரயோசனம்? சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்கிற உலகளாவிய பயன்பாட்டை எல்லாம் விட்டு விடுவோம்.

இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.

இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.

“என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்” என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.

‘லாஜிக்’ ஆக யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய பொருளாதார ரகசியம், இந்த மரம் நடும் சடங்கில் அடங்கியிருக்கிறது. கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் மரம் நடும் சடங்கு, நிச்சயமாக வெறும் மூடநம்பிக்கையல்ல. பெரும் பொருளாதார நிபுணர்களுக்கு கூட தோன்றாத ‘ஐடியா’வினை, இக்கிராமத்து மக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

மாமரங்களால் இவ்வளவு பெரிய பொருளாதார அனுகூலங்களை அடையமுடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது. மாந்தோப்பில் கிடைக்கும் வருமானத்தை, அப்படியே சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிக்கிறார்கள்.

மாமரங்கள் தரும் வருமானத்தால் முன்பெல்லாம் கோதுமை, நெல் விதைத்து வந்த விவசாயிகளும் கூட இப்போது தோப்புகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஊரிலேயே வயதானவர் சத்ருகன் பிரசாத் சிங். 86 வயதாகும் இவர், அந்தக் காலத்தில் கடுமையான விவசாயி. 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். தன் நிலம் முழுக்க மாமரம் மற்றும் லிச்சி மரங்களை நட்டு இன்று நிம்மதியாக இருக்கிறார்.

தர்காரா இப்போது பசுமைச்சேலை உடுத்தி, மாஞ்சோலையாக பூத்துக் குலுங்குகிறது. நம்புங்கள். தர்காரா கிராமத்தில் மாமரம் மற்றும் லிச்சி மரங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் நன்கு வளர்ந்து வருடா வருடம் நல்ல மகசூலை தந்து வருகிறது.

அடுத்தது நம்மூர் கதை.
 

maram+thangasami+courtesy+green+hands.jpg

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே!’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.

சேந்தன்குடியில் போய் ‘மரம்’ தங்கசாமி என்று விசாரித்துப் பாருங்கள். இவரது காட்டுக்கு வழி சொல்லுவார்கள். தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரகன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காடை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள் வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

இரண்டு கதைகளையும் வாசித்து, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ ஆனவைதான்.

உதாரணத்துக்கு செஞ்சந்தன மரம். அணு உலை கதிர்வீச்சினை தடுக்கும் சக்தி இம்மரவகைகளுக்கு உண்டு. ஒரு டன் மூன்றரை முதல் நாலு லட்ச ரூபாய் வரைக்கும் சந்தை மதிப்பில் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது இம்மரம்.

குறைவான ஆள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு என்பதால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. முழுநேரமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. நிறைய பேர் ‘பார்ட் டைம்’ மற்றும் ‘வீக் எண்ட்’ தொழிலாகவும் கூட இத்தொழிலை செய்து வருகிறார்கள்.

குமிழ், முள்ளில்லா மூங்கில், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள், இத்தொழிலுக்கு நன்கு தோதுப்படும் மரங்கள். குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரத்து இருநூறு மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கால்குலேட்டர் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 
 

natesan-3.jpg

“மரக்கன்றுகளின் விலை இருபதிலிருந்து நூறு ரூபாய்தான். நம் கண்ணெதிரிலேயே அவை வளர்ந்து, பலன் தர ஆரம்பிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை” என்கிறார் மர ஆர்வலரான நடேசன்.

அந்தகாலத்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளரான நடேசனுக்கு இப்போது வயது எழுபது. சொந்தமாக ஒரு தொழிற்சாலை அம்பத்தூரில் வைத்திருந்தார். தொழில் நிமித்தம் 1980ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தபோது ‘க்ரீன் எர்த்’ என்றொரு கண்காட்சியை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இவருக்கு வாய்த்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலப்பரப்பில் நாற்பது சதவிகித காடுகளை கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு முப்பதாண்டுகளிலேயே வெகுவேகமாக அந்நிலை மாறி பதினான்கு சதவிகித காடுகளையே கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தியை அங்கே அறிந்தார். நாட்டின் பசுமையை மனிதர்கள் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. ஊர் திரும்பியதும் கும்மிடிப்பூண்டியில் 18 ஏக்கர், காரனோடையில் 6 ஏக்கர் நிலம் வாங்கி மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.

இன்று தனது ஓய்வுக்காலத்தை தான் வளர்த்த மரங்களோடு மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இவர் வளர்த்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபதாயிரம். தொழிலதிபரான இவர் ‘மரம் வளர்ப்பும் நல்ல லாபகரமான தொழிலே’ என்று பொருளாதாரரீதியான பார்வையில் சுட்டிக் காட்டுகிறார்.

“மரம் வளர்ப்பினை சுற்றுச்சூழலைக் காக்கவோ, உலகவெப்பமயமாதலை குறைக்கவோ மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியில் வைப்புநிதி போட்டு வைப்பது மாதிரி கூட வளர்க்கலாம். கனியாகவோ, பூவாகவோ, விறகாகவோ, மருந்தாகவோ ஏதோ ஒரு வகையில் நீங்கள் வளர்த்த மரம் உங்களுக்கு நிறைய திருப்பித் தரும். தரிசு நிலம் கையகலம் கூட இல்லை என்கிற நிலை வரவேண்டும். சும்மா கிடக்கும் நிலங்களில் எல்லாம் சவுக்கு, மூங்கில் என்று கிடைத்த மரங்களை நட்டுவைத்தால், காலப்போக்கில் அவை நிறைய வருமானத்தை அள்ளித்தரும்” என்கிறார் நடேசன்.

மரம் வளர்ப்பு என்பது புதிய விஷயமில்லை. பாரம்பரியமாக நம் முன்னோர் செய்து வந்ததுதான். என்ன, இடையில் நகரமய சொகுசில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். மீண்டும் அதைத்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது நட்டு, நாமும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்ப்போமே?
 

DSC00440.jpg


மரம் வளர்ப்பு : சில மகிழ்ச்சித் துளிகள்!

• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.

• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.

• திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு சர்வதேச அமைப்பு - The International Small Group Tree Planting (TIST) – ஒரு லட்சம் மரங்களை நட திட்டமிட்டிருக்கிறது. இம்மரங்கள் முழுக்க அப்பகுதி சிறு விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். விவசாயிகளின் வழக்கமான பணிகளோடு, மரம் வளர்ப்பையும் சேர்த்து செய்வதின் மூலம் கூடுதல் வருவாயை அவர்கள் ஈட்ட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மரங்கள் நடப்படுகின்றன.
 

tree-planting.jpg



என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.
 

tree-sapling.jpg


எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.
 

magnolia-tree-saplings-l.jpg


மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
 

drumstick.JPG


நகரங்களில் மரம் வளர்ப்பு!

“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.

(நன்றி : புதிய தலைமுறை)

http://www.luckylookonline.com/2011/06/blog-post_2433.html

Link to comment
Share on other sites

இலுப்பை- வாசம் இழுக்கும்.

vkufrx3r

இலுப்பை மரங்களைப் பொறுத்த வரையில் இரண்டு விதமான வகைகள் காணப்படுகின்றன. இவை இரண்டும் பொதுவாக மகுவா (Mahua) என்று அழைக்கப்படுகின்றன. இம்மரம்  எண்ணெய் உற்பத்தி செய்வதில் பெரிதும் பயன்படுகின்றது.

தமிழ்நாட்டில் இம்மரம் இலுப்பை என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாக இலையுதிர் தகவமைப்பைக் கொண்ட இம்மரம் 70 அடி உயரம் வரை வளரக் கூடியது. 8 முதல் 15 வருடங்களில் இருந்து பூக்கத் துவங்கி விடுகின்றது. இம்மர விதைகளில் 70 % வரை எண்ணெயின் அளவு வேறுபடுகின்றது.

பரவல்

இந்தியாவைப் பொறுத்தவரையில் நடுத்தர மர வகையைச் சார்ந்து காணப்படக்கூடிய இம்மரம் தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத், மத்திய பிரதேசம், ஒரிசா, பீகார் மற்றும் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

பூத்தலும் காய்த்தலும்

இம்மரமானது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை பூக்கும் காலமாகும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரைகாய் காய்க்கும். 10 வருட மரங்களே நன்கு முதிர்ந்த காய்களைக் கொடுக்கும். 1 கிலோ விதையில் 450 முதல் 500 விதைகள் இருக்கும்.

இனப்பெருக்கம்

தேர்வு செய்யப்பட்ட தாய்மரத்தில் இருந்து முற்றிய காய்களைச் சேகரிக்க வேண்டும். காய்களை நன்கு வெயிலில் காய வைத்து விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். இவ்விதைகளைச் சாதாரண நீரில் 6 முதல் 12 மணிநேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்தல் வேண்டும். நேர்த்தி செய்த விதைகளைப் பாலித்தின் பைகளில் விதைக்கும் போது 5 முதல் 7 நாட்களில் முளைப்பு கிடைக்கும். இதன் முளைப்புத் திறன் 70 முதல் 90 சதவீதம் ஆகும்.

அதிக எண்ணெய் அளவினைக் கொண்டுள்ள தாய்மரத்தைத் தேர்வு செய்து அதிலிருந்து தாய்க்குச்சிகளைச் சேகரிக்க வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட தாய்க்குச்சிகளின் அடிப்பாகத்தை ‘A’ வடிவத்தில் கூர்மையாகச் சீவ வேண்டும். இதைப்போல் வேர்ச் செடியிலும் ‘A’ வடிவ பிளவினை ஏற்படுத்தித் தாய்குச்சியினை வேர்ச் செடியில் காற்று இடைவெளி இல்லாமல் நன்கு பொருந்துமாறு அமைத்துப் பாலித்தீன் கயிற்றினால் இருக்ககட்டி ஒட்டுக்கட்டுதல் மூலம் தரமான உயர் விளைச்சல் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.

நடவு மற்றும் மகசூல்

4 முதல் 6 மாதக்கன்றுகளை நடவு வயலில் 3 X 3 மீ இடைவெளிமுதல் 8 X 8 மீ இடைவெளியில் தோப்புகளாக வயலில் நடவு செய்ய வேண்டும். இம்மரம் 8 வருடத்தில் காய்த்து விதைகளைத் தரவல்லது. ஒரு முதிர்ந்த மரம் 20 முதல் 24 கிலோ விதைகளை ஒரு வருடத்தில் தரவல்லது.

பயன்கள்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யானது பயோ டீசலாகப் பயன்படுகிறது.

பொது பண்புகள்

இலுப்பை மரத்தின் பூக்களானவை மருத்துவ குணமிக்கதாகவும் உண்ணக் கூடியதாகவும் காணப்படுகின்றன. ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் இம்மரத்தின் பூக்களில் இருந்து பெறப்படக் கூடிய எண்ணெய்யை உணவுப் பொருட்களுடன் பயன்படுத்துகின்றனர். எண்ணெய்யை எடுத்து, பின்பு கழிவுப்பொருளாக உள்ள விதைகளை மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர்.

மேலும் பீல் (Bhil) பழங்குடியினர், குறிப்பாக மத்திய பிரதேசப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் எண்ணெய் எடுக்கப்பட்ட விதைக் கழிவுகளை எரித்துப் புகையை உருவாக்கி பாம்புகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றனர். மேலும்இலுப்பை எண்ணெயிலிருந்து,ஹேர் ஆயில்,சோப்புத் தொழிற்சாலைதோல் பாதுகாப்பு, எண்ணெய் தயாரிப்பு போன்ற தொழிற் சாலைகளிலும் பயன்படுகின்றது. மேலும் இம்மரப் பூக்களில் சர்க்கரையின் அளவு அதிகமாகக் காணப்படுவதால் பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை” என்ற பழமொழி இதன் சர்க்கரைத் தன்மையை விளக்குகிறது.

பூக்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஊறுகாயில் இருந்து காச நோய்க்கு மருந்துகள் பெறப்படுகின்றன. மரப்பட்டைகளை பொடி செய்து மூச்சுத் திணறலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், பல்வேறு வகையான நோய்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மருந்தாகப் பயன்படுகின்றது. அவைகள்,
    
இருமல் நீக்கியாகவும், சுவாசக் கோளாறு, வாந்தி மற்றும் மயக்கம், மூல நோய், சர்க்கரை நோய், அல்சர், புண் மற்றும் காயம் போன்றவைகளுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. மேலும் இவ்வகை நோய்களைக் குணப்படுத்துவதால் இலுப்பை மரம் ஒரு மகத்துவமான மரமாகக் கருதப்படுகின்றது.

பருவ நிலை மாற்றத்தின் முக்கியத்துவத்தை ஏனைய நாடுகள் உணர்ந்த நிலையில் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டன.

கட்டுரையாளர்கள் : கா.த.பார்த்திபன், பா.பழனிகுமரன், ரா.திருநிறைச்செல்வன்

கட்டுரையாளர்கள் தொடர்புக்கு : வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்.

மரங்களைப் பற்றிய புரிதல் மற்றும் அறிவு சரியாக இருந்தால் மரங்கள் மனிதர்களுக்கு ஓர் வரமே’. இயற்கையின் சூழ்நிலை அமைப்பை மாற்றி அதிக அளவு பாதிப்பிற்குள்ளாகும் மனிதர்களுக்கு மரங்களைத் தவிர மாற்று மருந்தேதுமில்லை.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா 700 கோடி மரங்களை நட வேண்டும் என்று திட்டம் வகுத்துள்ளது. எஞ்சியுள்ள மரங்களில் இருந்து மரம் சார்ந்த தொழிற்சாலைகளான காகித ஆலை, தீப்பெட்டித் தொழிற்சாலை, ஒட்டுப் பலகைத் தொழிற்சாலை, எரி சக்தித் தொழிற்சாலை மற்றும் தடிமரத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரக்கட்டைகள் கிடைப்பதில்லை.

மேலும் மரக்கட்டைகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில், பன்னாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் அரசு நெறிமுறைகளினாலும் குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கு மாற்று வழியாக மரம் வளர்க்கும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

மரம் வளர்க்கும் நோக்கம் கொண்ட அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் தன்னார்வக் குழுமங்கள், பொதுத்தொண்டு நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொது மக்களிடம் மரங்கள் வளர்ப்பது பற்றிய தொழில்நுட்பம் குறைந்து காணப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு வகையான மரங்களுக்கும் தனித்தனியான வளர்ப்பு முறைகளும் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களும் தேவைப்படுவதால் மரங்களைப் பற்றிய அறிவியல் நுட்பங்கள் அவசியமாகின்றது.

உதாரணமாக: சந்தன நாற்றுக்களுக்குத் தானாக மண்ணில் இருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும் தன்மையற்றது. இம்மரம் பிற மரங்களின் வேர்களில் இருந்தே ஊட்டச் சத்தினால் வளரக்கூடிய ஒரு ஒட்டுண்ணி மரம் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் எந்த வகை மரங்களுடன் சந்தனம் ஒன்றி நன்கு வளரும் என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்று வெவ்வேறு வகையான மரங்களுக்கு வெவ்வேறு விதமான தொழில்நுட்பங்களைப் பரிந்துரை செய்வதுடன் அதற்கான வழிகாட்டுதலையும் செய்கின்றது. எனவே இத்தொழில்நுட்பங்களையும் ஆராய்ச்சியின் முடிவுகளின் படியும் சற்றேரக்குறைய 40 வகையான மரங்களுக்கு வளர்ப்பு முறை, நாற்றுக்கள் உற்பத்திச் செய்யும் தொழில்நுட்பம், நாற்றுகளின் விற்பனை நிலையம், விதை நேர்த்தி, சரியான வண்ணப் புகைப்படங்களுடன் கூடிய    பணம் மற்றும் பலன் தரும் மரங்கள் என்ற புத்தகம் முனைவர் கா.த.பார்த்திபன் பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் அவரின் குழுவினால் எழுதப்பட்டுள்ளது.

    

http://kovaivanigam.com/இலுப்பை-வாசம்-இழுக்கும்/

மூங்கில்.- பச்சைத் தங்கம்.

நாட்டின் மொத்த காடுகளில் 8.96 மில்லியன் யஹக்டர் மூங்கில் வனம் ( ராய் புற்றும் செளகான் 1990 ). பொதுவாக மூங்கில் காடுகள் கீழ் தளத்தில் காணப்படும். இந்தியாவில் எல்லா விதமான காடுகளிலும் மூங்கில் வளரக்கூடியது. வெப்ப, மிதவெப்ப மற்றும் ஈரக்காடுகளிலும், சராசரி மழை அளவு 1200 மிமீ முதல் 4000 மிமீ மற்றும் வெப்பநிலை 16*c முதல் 18*c வரையுள்ள காடுகளிலும் நன்கு வளரக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 770 – 1080 மீட்டர் வரையுள்ள பகுதிகளில் செழித்து வளரும். எனினும், மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு மூங்கில் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படுகிறது. மூங்கில் காடுகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை தனியடுக்குக் காடுகளாகச் சாம்பியன் மற்றும் செத் ( 1968 ) ஆகியோரால் வகைபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, மூங்கில் காடுகளை அதிகம் கொண்ட நாடு. இந்தியாவில் 124 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூங்கில்களால் 23 பேரினங்கள் உள்ளன. கொத்துமுறை மூங்கில் சாகுபடி 67 சதவீதம், அவற்றில் கல்மூங்கில் ( டென்ட்ரோகலாமஸ் ஸட்ரிக்ட்ரஸ் ) 45 %, மூன்மூங்கில் ( பாம்பூசாபாம்பூ ) 13 %, டென்ட்ரோகலாமிஸ் ஹாமல்டோனி 7 %, பாம்பூசாடுல்டா 5 % மற்றும் பாம்பூசாபல்லிடா 4 %, மற்றவகை மூங்கில் மொத்தமாக 6 %, மெலக்கன்னாபேசிபெரா, தனி மூங்கில் சாகுபடி 20 % அவை வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காணப்படும்.

ஒவ்வொரு வகை மூங்கில்களின் பயன்பாடுகளும் கீழே அட்டவணைபடுத்தித் தரப்பட்டுள்ளது.

மூங்கில் தயாரிப்புகள்

மூங்கில் – கைவேலைப்பாட்டுப் பொருட்கள்
அதிக எண்ணிக்கையிலான குடிசைத் தொழில்கள், முறையே மேசை விரிப்புகள், மூங்கில் உறை, கட்டுகள் ( முடிச்சு ) ஆகியன மூங்கிலை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. நிறைய தினசரி பயன்பாட்டுப் பொருட்களான பாய், கூடை, பொம்மை, தட்டுகள், வலைகள், சுவர்த் தட்டுகள், சுவர் தொங்குகள் ஆகியன மூங்கில் தயாரிப்பே. மூங்கில் தயாரிப்புகள் பலவிதமான வடிவங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கின்றன. மூங்கிலைக் கொண்டு தயாரிக்கப்படும் பூக்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்கவர் வகையில் உள்ளன. காய்ந்த மற்றும் முதிர்ந்த மூங்கில்த் தாள்கள் மீன் எண்ணெய் வாசனைக்குப் பயன்படுத்தப்படுகிறது. சினருன்டினாரியாபால்கட்டா, மற்றும் ஸ்கிலோடேசியும் பெர்கிராசில் ஆகியன மீன் பிடிகுச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மூங்கில் சேர்க்கை மற்றும் லேமினேசன்கள்

மரக்கட்டைகளுக்கு இணையான மற்றும் மாற்றாக மூங்கில் கலவைப் பொருட்கள் உள்ளன. மூங்கில்களையும், ரசாயனப்பசைகளையும் கொண்டு தயாரிக்கப்படும் லேமினே­ன் பொருட்கள் சிறந்த முறையில் வீடுகட்டவும் மற்ற அலங்காரமேஜை நாற்காலிகள் செய்யவும் பயன்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், தீங்கு விளைவிக்காததாகவும் இருப்பதோடு சிறந்த வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்திற்கு வழி செய்வதாகவும் இருக்கின்றது.

மூங்கில் தளவாடங்கள்

மூங்கில் கலவைகளை கொண்டு தயாரிக்கப்படும் தளவாடங்கள் ( தேவையான கருவிகள் ) மேஜை, நாற்காலி போன்றவை மரக்கட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதற்கு இணையான பண்புகளைக் கொண்டுள்ளது. மூங்கில்கள் நாற்காலி, சோபா, புத்தக அலமாரிகள், கேபினட் மற்றும் மேசைகள் செய்வதற்கு ஏதுவானவை.

சந்தை வாய்ப்புகள்

இப்போது மூங்கில் கலவைப் பொருட்களின் சந்தை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் மட்டுமே அதிகளவில் நடுத்தரமான தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றிற்கு உலகளவில் தேவை அதிகரித்து வருவதால் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மூங்கில் கலவைச் சாமான்கள் புதுப்பிக்கதக்க, புதுவகையான, சூழலுக்கு உகந்த தயாரிப்பு மற்றும் தேவைக்கு ஏற்ற முறையில் வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதால் இதன் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

லேமினேட் மூங்கில் தளவாடங்கள் உருவாக்கம்
மூலப்பொருட்கள்

மூங்கில் கழிகள் ( கோல் ), முக்கியமாக நீள, அகலமானவை அதிக எண்ணிக்கை தரும். மொசோ மூங்கில் ( பில்லோஸ்டாசிஸ் எடுலிஸ் ) அதிக அளவில் கவரப்படுகிறது. இவற்றின் கழிகள் நேரானவை. 10 – 20 மீ நீளமானவை மற்றும் 8 – 20 செ.மீ அகலமானவை. இது போன்ற மற்ற மூங்கில்களும் உபயோகப்படுத்தலாம். சீனாவில் இவை பச்சை கந்தக மூங்கில் ( பி. சல்பியுரா ), அகலமலர் டென்ரோகலாமஸ் ( டெ.ஸட்டிபோரஸ் ) மற்றும் சீனா முள் மூங்கில் ( பாம்பூசாசினோஸ்பைனோச ) எனப்படுகின்றன.

தரமான மற்றும் நிலையான காடுகள் மற்றும் சிறந்த தளவாடப் பொருட்கள் உற்பத்திக்கு மூங்கில் அறுவடை வயது மற்றும் காலம் மிக முக்கிய காரணிகள் ஆகும். பொதுவாக முதிர்ந்த மூங்கில் கழிகள் வெட்டப்படும், மொசோ மூங்கில் 5 – 9 வயது கழிகளாக வெட்டப்படும். சேர்க்கை மூங்கில் கழிகள் / டென்ரோகலாமஸ் மற்றும் சீனா முள் முங்கில் 3 – 4 வயது பருவத்தில் அறுவடை செய்யப்படும். முதிர்ந்த மற்றும் தளிர் மூங்கில்கள் தளவாடம் செய்ய ஏதுவானவையல்ல.

மூங்கில் பாய்கள்

மூங்கில் பாய் தட்டைகள், ஒட்டுப் பலகை போன்று பல அடுக்குகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மூங்கில் பாய்த் தட்டைகள் ஒட்டுப் பலகைக்கு நிகரான பண்புகளைக் கொண்டிருக்கும். எனவே இவை வீடு கட்டுதல், கதவுகள் தளவாடங்கள் மற்றும் வீட்டுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மூங்கில் பாய்த் தட்டைகள் கவர்ச்சிகரமான, தாங்கும் சக்தி கொண்ட மற்றும் பூச்சிகள் மற்றும் பூஞ்சைகள் எதிர்பானவைகளாகவும், தீத் தடுப்பானாகவும், தாங்குவனவாகவும் உள்ளன.

தயாரிப்பு

முதிர்ந்த கழிகள் வெட்டப்பட்டு தேவையான அளவுக்கு நீள வாக்கில் 50 முதல் 250 செ.மீ நீளத்தில் வெட்டப்படுகின்றன. இணைப்புப் பகுதிகள் பொதுவாக வெட்டப்படுகின்றன. ஒக்லான்ட்ராட்ராவன் கோரிக்க அதிக தடிமன் கொண்ட மற்றும் குறைந்த இணைப்புப் பகுதி கொண்டது. எனவே இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 40 % ஒட்டுப் பசை தேவைப்படும்.

பலவகையில் மூங்கில்கள் பயன்பட்டாலும், அதன் வகையில் ஏராளமான தேவை இருக்கிறது. எனினும் மூங்கில் சாகுபடி குறைவாக உள்ளதால் அதனைத் தேவையான அளவுக்கு விநியோகம் செய்ய இயலாத நிலையில், மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் மூங்கில் வயல் ஓரங்களிலும், வரப்புகளிலும் நடப்படுகிறது.இவ்வகையில் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படுகிறது. மக்கள் தொகைப் பெருக்கம், நகர்ப்புற வளர்ச்சி, நகர் மயமாக்கம் மற்றும் வீடுகள் கட்டுதல், போன்றவற்றால் இதன் தேவை அதிகரித்து வருகிறது.

எனவே விவசாயிகள் வரப்புகளிலும், வீடுகளைச் சுற்றிலும் மண் அரிப்பை தடுக்கப் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் குழாய்கள், வாளிகள் மற்றும் பலபொருட்களுக்கு மாற்றாக இயற்கையோடு இயைந்த மூங்கில்கள் பயன்படுத்துகின்றன. வர்த்தகரீதியாகப் பார்க்கும் போதும் மூங்கில்கள் சாகுபடி லாபகரமான ஒரு தொழிலாகவும், விவசாயமாகவும் உள்ளது. இவை மட்டுமின்றி முக்கியமாக மூங்கில் சாகுபடி பல விதமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது. சிங் ( 2008 ) அவரது ஆய்வறிக்கையின் படி குறைந்தபட்சம் 5000 கோடி ரூபாய் அளவிலான மூலப்பொருட்கள் ( மூங்கில் ) உற்பத்தி செய்யப்படுகிறது. இவை பலவிதமாக மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக ரூபாய் 10,000 கோடி அளவில் மாற்றப்படுகிறது.

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு மூங்கில்கள் மூலப்பொருட்களாக பயன்படுகிறது. மேலும் மூங்கில்கள் வெகுவேகமாக அழிந்து வரும் தாவரவகையாகும். எனினும் பாம்பூசாடுல்டா வர்த்தக மற்றும் சுற்றுச்சூழல் வகையில் மிகச் சிறந்த வகையாகும்.

http://kovaivanigam.com/மூங்கில்-பச்சைத்-தங்கம்/

வெகுமதி கொடுக்கும் வேம்பு !

veembu.jpg

வெட்டவே வேண்டாம்.. கொட்டும் வருமானம்!
மழைவளம், நிலவளம், மனிதவளம் இவை அனைத்தும் செழிக்கத் தேவையானது மரவளம். இதை உணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டார்கள். ஆனால், நாகரிகம் வளர வளர.. தன் தேவைக்காக மரங்களை, மரணிக்கச் செய்து வருகிறோம், நாம். அதனால்தான் மாதாமாதம் கிடைத்து வந்த மும்மாரி.. இப்போது ஓர் ஆண்டுக்கு மூன்று முறை கிடைத்தாலே பெரிது என்கிற நிலை ஏற்பட்டு வருகிறது! அதன் விளைவு.. பூமிப் பந்து சூடாகி, வறட்சி வாட்டி எடுக்கிறது.
இதை மனதில் வைத்துதான், அரசு இயந்திரங்கள் மற்றும் பல்வேறு சமூக  அமைப்புகள் இணைந்து மரங்களின் மகிமையை மக்களுக்கு எடுத்துக்கூறி, மரம் நடுதல் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, தனி நபர்களின் தோட்டங்களில் மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களில் ஒருவராக 40 ஏக்கரில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து வேப்ப மரங்களை வளர்த்து வருகிறார், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி.
நாமக்கல், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மேற்கு நாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கிறது, சத்தியமூர்த்தியின் வேப்பந்தோப்பு. சாலையின் இருபுறங்களிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மானாவாரி மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து இருக்க, அதற்கு இடையில் பசுஞ்சோலையாக இருக்கிறது இவரது வேப்பந்தோப்பு.
குளுகுளு வேம்பவனம்!
என்னோட பூா்வீகம் ஈரோடு பக்கத்தில் இருக்கும் பஞ்சலிங்கபுரம் கிராமம். அடிப்படையில் விவசாயக் குடும்பம் தான். கூடவே, கட்டுமானப் பணிகளும் செய்து கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் தொழில் நிமித்தமாக நாமக்கல்லிற்கு வந்துவிட்டேன். இருந்தாலும், விவசாய ஆர்வம் குறையவில்லை.
இயற்கை முறையில் நாட்டு மரங்களை வளர்க்கணும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் ஓய்வு நேரங்களில் சேவை அமைப்புகளோட சேர்ந்து.. பொது இடங்களில் மரம் நடும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நம்மாழ்வார் அய்யாவோட தொடர்பு கிடைத்தது. அவரை வைத்து இயற்கை விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தினோம். அங்குதான் வேப்பமரத்தினால் மனுஷனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள், அதனுடைய மருத்துவக் குணம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன்.
நாமக்கல்லில் இருக்கும் ரத்தின சபாபதி சுற்றுச் சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனம், தனியார் நிலங்களில் காடு வளர்ப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டே இருந்தாங்க. அதைத் தொடர்ந்து, விவசாயம் செய்ய நான் வாங்கிப் போட்டிருந்த 40 ஏக்கர் பாசன நிலத்தில் முழுக்க வேப்பங்கன்றுகளை நடவு செய்து வளர்த்து கொண்டு வருகிறேன். மொத்தம்  3, 500 மரங்கள் இருக்கு. நட்டு 6 வருடமாகிறது. சொட்டுநீர்ப் பாசனம் செய்வதால் மரங்கள் தளதளவென்று இருக்கிறது.
15 அடி இடைவெளி!
மண்கண்டம் மிகவும் மோசமாக உள்ள இடங்களைத் தவிர பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் வேப்பமரம் வளரும். கோடை உழவு செய்து நிலத்தைக் காய விட்டு, பருவமழை கிடைத்ததும் மீண்டும் இரண்டு உழவு செய்தால், சிறப்பாக இருக்கும்.
கோடை உழவு செய்யாதவர்கள் பருவமழைக் காலத்தில் நன்றாக உழுது, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து 15 அடிக்கு 15 அடி இடைவெளிவிட்டு, 2  கன அடி அளவிற்க்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டமேற்றிய தொழுவுரம் மற்றும் செம்மண் இரண்டையும் குழியில் பாதி அளவு நிரப்பி, குழியின் மையத்தில் நாற்றுகளை நடவு செய்து, மண்ணைப் போட்டு குழியை மூட வேண்டும்.
அதிக பராமரிப்புத் தேவையில்லை!
வேர்கள் நோயுறாமல் இருக்கவும், செடிகள் ஊக்கமுடன் வளர்வதற்காகவும் நடவு செய்தவுடன் ஒவ்வொரு செடியைச் சுற்றியும் ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை ஊற்ற வேண்டும். பின்பு, சொட்டுநீர் மூலம் வாரம் ஒரு பாசனம் செய்தால் போதும். ஆண்டுக்கொரு முறை செடிகளின் பக்கக்கிளைகளை ஒடித்து கவாத்து செய்ய வேண்டும். இல்லையெனில், பக்கக்கிளைகள் பெருகி, சீரான  வளாச்சி பாதிக்கப்படும். இதைத் தவிர வேறு பராமரிப்பகள் தேவையில்லை.
ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் வருமானம்!
மரங்களை வளர்த்தால்.. வருமானத்திற்கு வருமானம் ஆச்சு, சமூகத்திற்கும் நன்மை செய்த திருப்தியும் கிடைக்கிறது. இன்னும் 15 வருடம் கழித்து இந்த மரங்களை வெட்டி விற்கலாம். இன்றைய நிலவரப்படி, ஒரு மரம் 5,000 ரூபாய் விலை என்று வைத்துக் கொண்டாலும் கூட ஒரு கோடியே எழுபத்தைந்து லட்ச ரூபாய் வருமானமாக கிடைக்கும்.
ஆனாலும் மரத்தை வெட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேநேரத்தில் வருமானமும் வேண்டுமே என்ன செய்வது  என்று யோசித்த போதுதான், பல நிபுணர்கள்கிட்ட ஆலோசனை செய்தேன். அதனடிப்படையில்.... வனத்தை அழிக்காமல்.... பணத்திற்கு வழி செய்யும் ஒரு திட்டத்தைத் தயார் செய்திருக்கிறேன் என்றார்.
மதிப்புக் கூட்டினால் போதும்!
அதாவது, வேப்ப மரத்திலிருந்து மதிப்புக் கூட்டியப் பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறேன். வருடத்திற்கு ஒரு முறை ஒரு மரத்திலிருந்து, குறைந்தது 3 கிலோ வேப்பமுத்து கிடைக்கிறது. அதை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். இதை வைத்து, மருத்துவ குணம் கொண்ட வேப்பெண்ணெய், அதை மூலப்பொருளாக வைத்து, இயற்கை விவசாயத்திற்கான பூச்சிவிரட்டி தயாரிக்கலாம் என்றிருக்கிறேன். மரத்திலிருந்து கிடைக்கும் கோந்தையும் சேகரித்து விற்க முடியும். இப்படி மரங்களை வெட்டாமலும் மரங்கள் மூலமாக சம்பாதிக்க முடியும். இதை, குடிசைத் தொழில் மாதிரி செய்தால் இந்தப்பகுதி மக்களுக்கும் நிரந்தர வேலைவாய்ப்பைக் கொடுக்கும் எண்ணமும் இருக்கு. 
இயற்கை சரணாலயம்!
40 ஏக்கரில் விரிந்து கிடக்கும் இந்த வேப்பஞ்சோலைக்குள் ஒருமுறை சென்று வந்தாலே .. புத்துணர்வு கிடைக்கும். தினந்தோறும் வேப்பமரக் காற்றை சுவாசித்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். மூச்சுக் குழாய், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கட்டுப்படும். சா்க்கரையின் அளவு குறையும் என்று சொல்றாங்க. அதை மனதில் வைத்து, இந்த வேப்பஞ்சோலைக்குள் இயற்கை மருத்துவமனையும், ஒரு முதியோர் இல்லத்தையும் ஆரம்பிக்கப் போகிறேன். அதோட இங்கே, கிளி, மைனா, குயில், மயில், தேன்சிட்டு, புறா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பறவைகளும், முயல், கீரி, உடும்பு, காட்டுப்பூனை மாதிரியான விலங்குகளும் வந்து போயிட்டு இருக்கு. மேலே கூறியுள்ள உயிரினங்களுக்கு குடிநீர்த் தொட்டிகளை அங்கங்கே வைத்திருக்கிறேன். அதனால் இது ஒரு சரணாலயமாகவும் மாறிவிட்டது.
வனம் இருந்தால்தான்.. இனம் இருக்கும். மரவளம் குறைந்த நாமக்கல் மவாட்டத்தை மழை வளமுள்ள மாவட்டமாக மாற்றணும் என்பதுதான் என்னோட ஆசை. அதை மனதில் வைத்துதான், நாமக்கல் மாவட்ட மரம் மற்றும் மூலிகை வளர்ப்போர் சங்கத்தை உருவாக்குவதில் முனைப்பாக இருக்கிறேன் என்றார்.
தொடர்புக்கு
சத்தியமூர்த்தி, செல்போன் : 98943 – 99944
தில்லை சிவக்குமார், செல்போன்: 94432-24921
கணேஷமூர்த்தி, செல்போன்: 90951 – 20888

ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு Date : 10.09.2012 , www.vikatan.com
 

http://www.agritech.tnau.ac.in/ta/success_stories/sucessstories_Hoticulturemainindex12_ta.html

Link to comment
Share on other sites

சவுக்கு மூங்கில் பதிமுகம் மலைவேம்பு

80 ஏக்கர்...5 ஆண்டுகள்...1 கோடியே 19 லட்சம் ரூபாய்...

மலைக்க வைக்கும் மரம் வளர்ப்பு !ஜி. பழனிச்சாமி, படங்கள்: தி. விஜய்

 

பளிச்... பளிச்...

ஐந்தாம் ஆண்டிலிருந்து பலன்.
அதிகப் பராமரிப்பு இல்லை.

 

கரும்பு, மஞ்சள், தென்னை, வாழை... என்ற பணப்பயிர்கள் பட்டியலில் தற்போது மரப்பயிர்களும் இணைந்து விட்டன. 'விவசாயத்தையே விட்டு விலகலாம்’ என்று நினைப்பவர்களுக்கு மரப்பயிர்கள்தான் வரப்பிரசாதமாக உள்ளன. அதனால்தான் விவரமறிந்த விவசாயிகள், மரப்பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 'கொங்கு’ குழந்தைசாமி, அவர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் அதிகளவில் மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒருவரும்கூட!

ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழில் செய்து வரும் குழந்தைசாமி, தனது பங்குதாரர்களுடன் சேர்ந்து வாங்கிய தரிசு நிலத்தைப் பண்படுத்தி... பல வகை மரங்கள், கரும்பு, தென்னை... என சாகுபடி செய்து பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளார்.

கொடிவேறி அணைக்கு அருகில் இருக்கிறது இவர்களுடைய 'ஸ்ரீ முருகவேல் பண்ணை’. திரும்பிய திசையெல்லாம் சிறியதும், பெரியதுமாக பலவகையான மரங்கள் பசுமை காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு புறம் கரும்பு, இன்னொரு புறம் தென்னை என செழிப்பாகக் காட்சி அளிக்கிறது, அப்பண்ணை.

pv36.jpg

சவுக்கு மர அறுவடைப் பணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த குழந்தைசாமியை சந்தித்தபோது, ''பாரம்பரியமான விவசாயக் குடும்பம் எங்களோடது. ஆனா, விவசாயம் கட்டுப்படியாகாததால, நான் ஜவுளி ஏற்றுமதித் தொழில்ல இறங்கிட்டேன். இருந்தாலும், 'பெரிய அளவுல லாபகரமா விவசாயம் செய்யணும்’கிற எண்ணம் எனக்குள்ள ஓடிட்டே இருக்கும். அதுக்கேத்த மாதிரியான இடத்தைத் தேடிக்கிட்டிருந்தப்போதான் இந்த இடம் அமைஞ்சுது. மொத்தம் 230 ஏக்கர். நாங்க வாங்கும்போது கரடுமுரடா, ஆடு, மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லாம தரிசா கிடந்துச்சு. கொஞ்சம், கொஞ்சமா திருத்தி, விவசாயம் பண்ண ஆரம்பிச்சோம்.  

ஏழு கிலோ மீட்டரிலிருந்து தண்ணீர் !

230 ஏக்கருக்கும் சேர்த்து அஞ்சு போர்வெல்லும், ஒரு கிணறும் இருந்துச்சு. அதை வெச்சு, முழு நிலத்துலயும் விவசாயம் பண்ண முடியலை. அதனால, ஆரம்பத்துல, 70 ஏக்கர்ல கரும்பும், 40 ஏக்கர்ல தென்னையும் போட்டோம். அதுக்கே தண்ணி பத்தலை.

பண்ணைக்கு ஏழு கிலோ மீட்டர் தூரத்துல கொடிவேறி அணை இருக்குது. அதுல இருந்து பிரியுற அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்ல இருந்து, 'கசிவு நீர்ப் பாசனத் திட்டம்’ மூலமா குழாய் வழியா தண்ணி எடுத்து வந்தோம். அதை சேமிச்சு வைக்கறதுக்காக 60 லட்சம் லிட்டர் பிடிக்கிற அளவுக்கு குளம் வெட்டியிருக்கோம்.

pv36a.jpg

தண்ணி கிடைச்சதும், அடுத்தக் கட்டமா யோசிச்சப்பதான் 'கோயம்புத்தூர் மரம் வளர்ப்போர் சங்கம்’ மூலமா மரம் வளர்க்கறதுக்கான ஆலோசனை கிடைச்சுது. 2006-ம் வருஷத்துல இருந்து, பழனி மலை பாதுகாப்பு சங்கத்துலயும் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியிலும் கன்னுகளை வாங்கி, கொஞ்சம் கொஞ்சமா நடவு பண்ண ஆரம்பிச்சோம்.

80 ஏக்கர் நிலத்தில் 35 ஆயிரம் மரங்கள் !

13 ஏக்கர்ல 22 ஆயிரத்து 672 சவுக்கு; ஏழரை ஏக்கர்ல 1,044 தைல மரங்கள்; 17 ஏக்கர்ல ஆயிரம் பதிமுகம்; 15 ஏக்கர்ல 6 ஆயிரத்து 900 மலைவேம்பு;

pv36b.jpg

12 ஏக்கர்ல 3 ஆயிரத்து 120 முள்ளில்லா மூங்கில்; 5 ஏக்கர்ல 1,280 நாட்டுவாகை; 6 ஏக்கர்ல 1,500 மகோகனி; 2 ஏக்கர்ல 200 செஞ்சந்தனம்; 1 ஏக்கர்ல 200 குமிழ்; ஒன்றரை எக்கர்ல 200 பென்சில் மரம்னு நடவு செஞ்சுருக்கோம். இதுபோக ஊடுபயிரா மரங்களுக்குள்ளாறவும், வரப்பு, வாய்க்காலுனு மிச்சம் இருக்குற இடங்கள்ல எல்லாம் சேர்த்து 50 சிசு, 100 ஈட்டி, 200 குமிழ், 50 பாப்புலர் (பிளைவுட் தயாரிக்க பயன்படும்), 10 சந்தனம், 5 ஒளிவேறி மரம்னு 15 வகையான மரங்கள் நட்டிருக்கோம். மொத்தத்துல 80 ஏக்கர்ல 38 ஆயிரம் மரங்களுக்கு மேல இருக்கு. எல்லாத்துக்கும் சொட்டுநீர்ப் பாசனம்தான்'' என்ற குழந்தைசாமி, மரங்களின் பராமரிப்பு பற்றிச் சொன்னார்.  

தண்ணீர் கண்டிப்பாகத் தேவை !

''மரம் சாகுபடிக்கு தண்ணி தேவையில்லைனுதான் நிறைய பேர் நினைக்கறாங்க. ஆனா, அது தப்பு. தண்ணி இல்லாம மரம் வளர்க்கவே முடியாது. எந்த மரமா இருந்தாலும், கண்டிப்பா அஞ்சு வருஷம் வரைக்கும் தண்ணி கொடுக்கணும். 'மழையை மட்டும் நம்பி வளக்கலாம்’னு நினைச்சா, எதிர்பாக்குற மகசூல் எடுக்க முடியாது. கேரளாவுல வருஷத்துக்கு ஒன்பது மாசம் மழை பெய்யும். அதனால அங்க வேணா தண்ணி பாய்ச்சாம மரம் வளக்க முடியும். தமிழ்நாட்டுல முடியவே முடியாது.

pv36c.jpg

சொட்டு நீர்ப் பாசனம் நல்லது !

நாங்க, ஆறு மாசத்துக்கு ஒரு தடவை, அதாவது பருவ மழை ஆரம்பிக்கறதுக்கு முன்ன, ஒவ்வொரு மரத்துக்கும் மூணு கிலோ ஆட்டு எரு அல்லது ஒரு கிலோ கோழி எரு கொடுத்துடுவோம். அதோட மரத்துல இருந்து உதிர்ற இலைகளும் மட்கி உரமாயிடும். வருஷத்துக்கு ஒரு தடவை மரங்களைக் கவாத்து பண்ணிடுவோம். ஓரளவுக்கு மரம் வளந்ததுக்கு அப்பறம் கவாத்து பண்றதை நிறுத்திடுவோம். வாய்க்கால் பாசனத்தைவிட சொட்டுநீர் முறையில மரங்கள் நல்லா வளருது'' என்ற குழந்தைசாமியிடம், வருமானம் பற்றிக் கேட்டதும், அதைப் பற்றி விவரித்தார்.

650 டன் சவுக்கு, 300 டன் தைல மரம் !

''இப்போ, சவுக்கு, தைல மரங்களை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கோம். சவுக்கு மரம் டன் 2 ஆயிரத்து 500 ரூபாய்னு விலை பேசி 50 டன் வரை வித்திருக்கோம். ஏக்கருக்கு சராசரியா 50 டன் மகசூல் கிடைக்குது. மொத்தம் 13 ஏக்கர்லயும் சேர்த்து 650 டன் மரம் கிடைக்கும். அதை விக்கிறப்போ, 16 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

pv36d.jpg

தைல மரத்துல ஏக்கருக்கு சராசரியா 40 டன் கிடைக்குது. ஏழரை ஏக்கர்ல 300 டன் மரத்துக்கு மேல கிடைக்கும். இப்போ ஒரு டன் 2 ஆயிரத்து 50 ரூபாய்னு பேப்பர் மில்காரங்க எடுக்கறாங்க. இது மூலமா 300 டன் மரத்துக்கு 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

மலைவேம்பில் 50 லட்சம் !

மூங்கிலும், மலைவேம்பும் அறுவடைக்குத் தயாரா இருக்கு. மூங்கில்ல ஏக்கருக்கு சராசரியா 12 டன் கணக்குல 12 ஏக்கருக்கும் சேத்து 144 டன் மரம் கிடைக்கும். 1 டன் குறைஞ்சது 3 ஆயிரம் ரூபாய்க்கு விக்கும். அந்தக் கணக்குல, 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். மலைவேம்புல, ஏக்கருக்கு சராசரியா 1,600 கன அடி மரம் கிடைக்கும். 13 ஏக்கர்ல இருந்து குறைஞ்சது 20 ஆயிரம் கன அடி மரம் கிடைக்கும். ஒரு கன அடி 250 ரூபாய்னு வெச்சுகிட்டாலே, மொத்தம் 50 லட்ச ரூபாய் கிடைச்சுடும்.  

pv36f.jpg

உத்தேசக் கணக்கல்ல... உண்மைக் கணக்கு !

அடுத்த வருஷம் பதிமுகத்தை அறுவடை செய்யலாம். எப்படியும் ஏக்கருக்கு 5 டன்னுக்குக் குறையாம கிடைக்கும். 17 ஏக்கர்ல இருந்து 85 டன் வரைக்கும் மரம் கிடைக்கும். ஒரு டன் 50 ஆயிரம் ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே, 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

மத்த மரங்கள்லாம் அறுவடைக்கு வர இன்னும் நாள் ஆகும். அதனால அந்தக் கணக்கையெல்லாம் இப்போ பாக்க வேணாம். கண்ணு முன்னால விளைஞ்சு, விற்பனையாகிட்டு இருக்கறதை மட்டும் வெச்சு கணக்குப் போட்டாலே... மொத்தம் 80 ஏக்கர்ல இருந்து, ஒரு கோடியே 19 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஆரம்பத்துல சொட்டு நீர் அமைப்பு போடுறதுக்காக 20 லட்ச ரூபாய் செலவாச்சு. அதுக்கப்பறம், உரம் வைக்கிறது, கவாத்து பண்றது, பராமரிப்பு...னு இந்த அஞ்சு வருஷத்துல மொத்தம் 36 லட்ச ரூபாய் செலவாகியிருக்கு. இதைக் கழிச்சா, 83 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் நிகர லாபம். நான் உத்தேசமா பேப்பர்ல கணக்குப் போட்டுச் சொல்லலை.

pv36g.jpg

இப்போ, நேரடியா பாக்க முடியும். இனிமே மத்த மரங்களுக்கு உரம் வைக்கிறது, பராமரிப்பு மட்டும்தான் செலவு. கவாத்து பண்ண வேண்டியிருக்காது. அதனால அதையெல்லாம் அறுவடை பண்ணுறப்போ இன்னும் அதிக லாபம் கிடைக்கும்.

'அதிக விலை கிடைக்குதே'னு நிலத்தை விக்க ஆசைப்படாம, மரங்களை வெச்சு விட்டா... அந்த நிலத்தோட மதிப்பைவிட அதிகமான வருமானத்தை மரம் கொடுத்துடும். மரம் என்னிக்கும் விவசாயிகளை ஏமாத்தவே ஏமாத்தாது'' என்று நெகிழ்ச்சியாகச் சொன்ன குழந்தைசாமி...

இனம் காக்கும் வனம் !

''நாங்க வியாபார நோக்கத்துலதான் மர சாகுபடியை ஆரம்பிச்சோம். ஆனா, அதுக்கப்பறம் 'பசுமை விகடன்’ மூலமாவும், மரங்கள் பத்தின கருத்தரங்குகள் மூலமாவும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டோம். அதுல எங்களுக்கு விழிப்பு உணர்வு கிடைச்சிருக்கு.

pv36n.jpg

வருமானம் கிடைக்கறது இல்லாம, புவி வெப்பம் குறைத்தல், மழை ஈர்ப்பு, பல்லுயிர் பெருக்கம்னு மனிதகுலத்தை வாழ வைக்கறதுக்கு நாங்களும் கொஞ்சம் பங்களிக்கிறோம்கிறது எங்களுக்குப் பெருமையான விஷயம்.

அதனால, கடம்பு, தேக்கு, வேங்கை, பூவரசன் மாதிரியான நாட்டுமரங்களை நடவு செஞ்சு 'அழியா வனம்’ உருவாக்குறத் திட்டமும் வெச்சுருக்கோம்'' என்றபடி விடை கொடுத்தார்.

சிலுசிலுக்கும் பசுமையை நுகர்ந்தபடியே புறப்பட்டோம்!

தொடர்புக்கு, 
'கொங்கு’ குழந்தைசாமி, 
செல்போன்:  98427-43535. 

 

 எப்போதும் கிராக்கி இருக்கிறது!

pv36e.jpg

 

குழந்தைசாமியிடம் சவுக்கு மரங்களைக் கொள்முதல் செய்து வரும் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த மர வியாபாரி குருசாமியிடம் பேசினோம். ''ஊட்டியில் இருக்கிற டீ பேக்டரி பாய்லர்களுக்கு சவுக்கு மரம் தேவைப்படுது. அங்க கொண்டு போய்தான் விக்கிறேன். டன் 2,500 ரூபாய்க்கு நான் எடுத்துக்கிட்டிருக்கேன். இதுபோக, செங்கல் சூளைக்கும் வாங்குவாங்க. அதனால குறுகிய காலத்துல வர்ற சவுக்கு, மூங்கில், தைல மரங்களுக்கு எப்பவும் கிராக்கி இருந்துக்கிட்டே இருக்கும். இந்த மாதிரியான மரங்களை தைரியமாக விவசாயிகள் வளர்க்கலாம். குறைஞ்ச செலவுலேயே நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று சொன்னார் குருசாமி.

http://www.vikatan.com/pasumaivikatan/2012-feb-25/yield/15958.html

 

Link to comment
Share on other sites

ஆண்டு முழுவதும் வருமானம் தரும் மரத் தோட்டம்: சாதிக்கும் இரண்டலப்பாறை விவசாயி அமலதாஸ்

maram_2221450f.jpg
 
 
 

“பெத்த பிள்ளை கைவிட்டாலும், வைச்ச பிள்ளை கைவிடாது, ‘’ என வழக்குச் சொல்லாக சொல்வார்கள் நம் முன்னோர்கள். ஒருவர் மரம் வளர்த்தால், அந்த மரம் அவரது வாழ்வின் இறுதிக் காலம் வரை உயிர் மூச்சாக, வாழ்வதாரமாக இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் திண்டுக்கல் விவசாயி இரண்டலப்பாறை ஏ.அமலதாஸ் வளர்க்கும் மரங்கள்தான்.

அமலதாஸுக்குச் சொந்தமான 6½ ஏக்கர் விவசாயத் தோட்டம், இரண்டலப்பாறையில் உள்ளது. இவரது தோட்டத்தில் மற்ற விவசாயிகளைப் போல் காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட குறுகியகால பயிர்களைப் பயிரிடவில்லை. தோட்டம் முழுவதும் வெறும் தென்னை, கொய்யா, தேக்கு, சப்போட்டா, பலா, மா, எலுமிச்சை மரங்களை நட்டு வைத்துள்ளார். காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட மற்ற விவசாயப் பயிர்களுக்கு நீர்ப் பாசனம் அதிகம் தேவை. இந்த பயிர்களிடையே ஊடு பயிராக எதை நட்டாலும் பிரதான பயிருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், இவர் தன்னுடைய தோட்டத்தில் அனைத்து மரங்களையுமே ஊடு பயிராக நட்டுள்ளார்.

அதனால், ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு சீசனில் இவர் லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார். இதற்காக இவர் பராமரிப்பு செலவு பெரிதாக எதுவும் செய்யவில்லை. தண்ணீரை மட்டும் பாய்ச்சுகிறார். அவ்வப்போது செடி, கொடிகளை கூலியாட்களை வைத்து வெட்டி அப்புறப்படுத்துகிறார். தனக்கு கிடைத்த இந்த மரத் தோட்ட விவசாய அனுபவங்களை மற்ற விவசாயிகளிடம் கூறி மரங்களை நடுமாறு விழிப்புணர்வு செய்து வருகிறார்.

இது குறித்து அமலதாஸ் "தி இந்து'விடம் கூறுகையில், "ஆரம்பத்தில் மற்ற விவசாயிகளைப் போல் நானும் காய்கறிகள் சாகுபடி செய்தேன். தண்ணீர் பிரச்சினை, கூலியாட்கள் சம்பளம், பராமரிப்புச்செலவு என பல பிரச்சினைகளால் லாபம் என எதுவும் கையில் மிஞ்சவில்லை. வெறுத்துபோய், கொய்யா சாகுபடி செய்தேன். தண்ணீர் குறைவாக தேவைப்படும் `லக்னோ 47' ரக கொய்யா செடிகளை குடிமியான்மலையில் வாங்கி வந்து நட்டேன். ஒரு ஏக்கருக்கு 60 மரங்கள் மட்டுமே நட்டேன். இந்த 60 மரங்களுக்கு இடையே ஊடு மரமாக எலுமிச்சை, மா, தென்னை, சப்போட்டா, பலா ஆகிய மரங்களை நட்டேன்.

ஒரு ஏக்கரில் 60 கொய்யா, 20 தென்னை, 60 எலுமிச்சை மற்றும் தேக்கு, பலா, வேம்பு, சப்போட்டா என மரங்கள் உள்ளன. கொய்யா ஆண்டுக்கு இரண்டு சீசன் என்பதால் 9 மாதங்கள் பழம் பறிக்கலாம். ஒரு கிலோ கொய்யாவுக்கு 25 ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைக்கிறது. ஒரு மரத்தில் சாதாரணமாக 300 கிலோ கொய்யா கிடைக்கிறது.

தென்னையில் 40 நாட்களுக்கு ஒரு முறை காய் வெட்டலாம். பலாமரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பாலாப்பழம் கிடைக்கும். எலுமிச்சையில் ஆண்டு முழுவதும் எலுமிச்சை பழங்களைப் பறிக்கலாம். சந்தையில் எலுமிச்சைக்கு எப்போதுமே மவுசுதான்.

எங்களுடைய நத்தம் "மா'வுக்கு சொல்லவே வேண்டாம். சந்தையில் கிராக்கிதான். சப்டோட்டா, ஆண்டுக்கு ஒரு சீசனிலும், மா மரத்தில் ஆண்டுக்கு இரண்டு சீசனிலும் மகசூல் கிடைக்கிறது.

இவை தவிர, இந்த மரங்களைச் சுற்றி வடக்கு தெற்காக இந்த மரங்களைப் பாதுகாக்கும் வகையில் வேலி மரமாக ஒரு ஏக்கருக்கு 20 மரம் வீதம் 400 தேக்கு மரங்களை நட்டேன். இதனால், தோட்டத்துக்கு சூரிய வெளிச்சம் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. தேக்கு மரத்தை தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.

தோட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த மரங்களுக்கும் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். மாதந்தோறும் கைநிறைய வருமானம் கிடைக்கிறது.

இதற்காக தினசரி காலை ஒரு மணி நேரம்தான் செலவிடுகிறேன். மற்ற நேரங்களில் கடை வியாபாரத்தைப் பார்க்கிறேன். எனக்கு நேரமும் அதிகம் கிடைக்கிறது, இரட்டை வருமானமும் கிடைக்கிறது '' என்றார்.

மேலும் விபரங்களுக்கு 98942 41621

http://tamil.thehindu.com/business/ஆண்டு-முழுவதும்-வருமானம்-தரும்-மரத்-தோட்டம்-சாதிக்கும்-இரண்டலப்பாறை-விவசாயி-அமலதாஸ்/article6635682.ece

Link to comment
Share on other sites

On 2.4.2017 at 1:07 AM, Athavan CH said:

 

பணம் மரத்தில்தான் காய்க்கிறது!

coconut_tree.JPG

“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”

 


நல்லதொரு தொடர் ஆதவன்
தொடருங்கள்.

 

எனக்கு தெரிந்த ஒரு சிங்கள நண்பருக்கு ஹபரனை திருகோணமலை வீதியில் கல்லோயா அருகே கொஞ்சம் காணி இருந்தது. அவர் வசதியானவர்தான் - மரைன் இன்ஜினீயர். மூன்று பிள்ளைகள். ஒவ்வொரு பிள்ளைகள் பிறந்தபோதும் நூறு தேக்கு மரங்களை வாங்கி நட்டிருந்தார். அவர் மரம் நட்டதை தவிர வேறு எதையுமே செய்ததில்லை. இப்போது பிள்ளைகள் யாவரும் இருபத்தைந்து வயதை தாண்டி விட்டார்கள். ஒவ்வொரு மரத்தின் பெறுமதியும் ஒரு லட்ஷத்துக்கு மேல். அதாவது ஒரு பிள்ளைக்கு சொத்து ஒரு கோடிக்கு மேல். 

மனமும் முயற்சியும் இருந்தால் பணம் மரத்திலும் காய்க்கும்.

 

Link to comment
Share on other sites

உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள, அகர் மரம் வளர்ப்பு- ஒரு கிலோ எண்ணெய் விலை ஒரு லட்சம் ரூபாய்

 

 

Link to comment
Share on other sites

மலைக்க வைக்கும் மலைவேம்பு!

p28.jpg

‘‘மாபெரும் கதாநாயகியை அறிமுகப்படுத்தப் போகிறேன்” என்று கடந்த இதழில் ‘பொடி’ வைத்திருந்தார் தமிழக வனத்துறையின் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் டாக்டர்.குமாரவேலு ஐ.எஃப்.எஸ். ‘அது யார்… அப்படி என்ன பெரிய கதாநாயகி?’ என்றெல்லாம் மண்டையைக் குடைந்திருப்பீர்கள். இதோ… அந்தக் கதாநாயகியை உங்கள் முன் அறிமுகப்படுத்துகிறார் குமாரவேலு.

‘‘அந்தக் கதாநாயகி வேறு யாருமல்ல… மலை வேம்பு! இன்றைய தேதியில் இந்த மரத்தை அடித்துக்கொள்ள வேறு மரம் இல்லை. இதை விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு வல்லமை இந்த மரத்துக்கு உண்டு. விதையில்லா இனப்பெருக்கத்தின் மூலம் இந்தக் கன்றுகளை நாங்கள் உற்பத்தி செய்துள்ளோம். இம்மரத்தின் தேவை மிகஅதிகம். பிளைவுட் கம்பெனிகள் இவற்றை வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கின்றன.

உவர் மற்றும் களர் நிலத்தைத் தவிர, வடிகால் வசதியுள்ள எந்த நிலத்திலும் வளரக்கூடிய தன்மை படைத்தது இந்த மலைவேம்பு. இந்த மரத்துக்கும் நீர்ப்பாசனம் தேவையில்லை. எந்த வகை மரமாக இருந்தாலும் அது மாதந்தோறும் ஒரு செ.மீ. உயரம் வளர்ந்தால் சிறந்த மரம் என்று சொல்வார்கள். ஆனால், இந்த மலைவேம்புவோ… 2 செ.மீ. வரை வளர்வதால்… சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்த மரத்தை வளர்ப்பதிலும் ஒரு புதிய முறையினை புகுத்தியுள்ளேன். நமக்குக் கிடைக்கிற மழையளவு, மிகவும் குறைவு. அதுவும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வேகமாக கொட்டித் தீர்த்துவிடும். நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பதோடு, அதை வைத்தே இந்த மரத்தையும் வளர்க்கலாம் என்பதுதான் திட்டம். இதற்காக 3 மீட்டர் விட்டமும் 30 செ.மீ ஆழமும் கொண்ட டீ (கப்) சாசர் வடிவில் குழி தோண்டினேன். 6 மீட்டர் இடை வெளியில் வரிசையாக இப்படி பள்ளம் தோண்டி, அதன் இரண்டு பக்க கரைகளிலும் எதிரெதிரே இரண்டு மலைவேம்பு கன்றுகளை நடவு செய்தேன். ஒரு குழியில் 1,000 லிட்டர் மழைநீர் தேங்கும். ஏக்கருக்கு மொத்தம் 100 குழிகள் மூலம் மொத்தமாக ஒரு லட்சம் லிட்டர் நீர் சேமிக்கப்பட்டு, செடிகளுக்குக் கிடைக்கும். விதையில்லா இனப்பெ ருக்கம் மூலம் கிடைத்த மலைவேம்பு கன்றுகளை, இந்த முறையில் நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் வரைக்கும் நடமுடியும். 6-ம் ஆண்டே மரம் பெருத்து, ஒரு மரம் மூன்றாயிரம் ரூபாய் விலைபோகும். 200 மரங்களுக்கு 6 லட்ச ரூபாய் கிடைக்கும். இது உண்மை. நீங்கள் 24 மணி நேரமும் உழைத்தால் கூட வேறு எந்தப்பயிரிலும் இந்த அளவுக்கு வருமானத்தைப் பார்க்க முடியாது” என்று சொல்லி ஆச்சர்யப் படுத்திய குமாரவேலு,

”இதையெல்லாம் படித்துவிட்டு மரங்களை மட்டுமே எல்லோரும் பயிர் செய்ய ஆரம்பித் தால், உணவுக்கு என்ன செய்வது… உணவுப் பஞ்சம் வந்துவிடுமே… என்று நீங்கள் நினைக் கலாம். ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நிகழ்ந்துவிடாது. ஒரு காலத்தில் நம்முடைய முன்னோர்கள் உணவுக்காக பயிரிட்ட கம்பு, கேழ்வரகு, திணை போன்ற சிறுதானியங்கள் எல்லாமே மர நிழலில் வளரும் தன்மை கொண்டவைதான். இப்போது அவற்றைப் பயிர் செய்வது குறைந்துவிட்டது. மரப்பயிர்களுக்கு நடுவே இவற்றைப் பயிரிட்டால் உணவுப் பயிர்கள் கிடைத்துவிடப் போகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நெல்லும், கத்தரிக்காயும் கூட காடுகளில் உள்ள மரத்தின் அடியில்தான் வளர்ந்தன. அதை வெயிலுக்குக் கொண்டு வந்தது நாம்தான். மீண்டும் அவற்றை பழைய இடத்திலே வளர்த்தால் உணவுப் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காதே!

பெரும்பாலான மரங்கள் மழைநீரை மட்டுமே நம்பி வளர்க்கப்படுபவை. நீர்ப்பாசனம் செய்தால் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும். இத்தகைய மரங்கள் தான் இனி விவசாயிகளை வாழவைக்க போகிறது. அவற்றில் பத்து மரங்களை நான் பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். மலைவேம்பு, மூங்கில், பீதனக்கன், கடம்பு, குமிழ், கத்திசவுக்கு, வேங்கை, இந்தோனேஷிய சவுக்கு, ஏழிஇலைபாலை, புங்கன் ஆகியவைதான் அந்த பத்து மரங்கள். தமிழகத்துக்கு மிகவும் ஏற்ற இந்த பத்து மரங்களும் ஜெயிக்கக் கூடிய குதிரைகள் என்பதில் சந்தேகமில்லை. இவற்றைத் தமிழக விவசாயிகள் பயிரிட் டால் மரப்பயிரில் புதிய புரட்சி தொடங்கும்’’ என்று கட்டை விரலை உயர்த்திச் சொன்னவர்,

p28b.jpg

”எல்லா நிலத்திலும் மரம் வளரும் என்று சொன்னதுமே… பாறையில் கூட வளரும் என்று எண்ணிவிடக்கூடாது. மரப்பயிர்களை வளர்க்க மண்கண்டம் கண்டிப்பாக 6 அடி அளவுக்கு இருக்க வேண்டும். மண்ணே இல்லாத நிலத்தில் எப்படி மரத்தை வளர்க்க முடியும். எனவே நிலத்தையும் முக்கியமாக தேர்ந்தெடுக்கவேண்டும்.

மரக்கன்றுகள் கிடைக்குமா… எந்த மரம்போட்டால் லாபம் என்று வரிசை யாக தொலைபேசியில் விவசாயிகள் கேட்டவண்ணம் உள்ளனர். இப்படிப்பட்ட சந்தேகங்கள் கொண்ட விவசாயிகள் என்னுடைய சென்னை அலுவலகத்துக்கு (கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15. தொலைபேசி 044-24323343) கடிதம் எழுதினால் போதும், எல்லாவற் றுக்கும் தெளிவாக பதில் எழுதத் தயார்.

ஸ்ட்ராவில் சவுக்குக்கன்று தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் கடந்த இதழிலும் இந்த இதழிலும் நான் சொல்லியிருக்கிறேன். இவற்றுக்கெல்லாம் காப்புரிமை பெறுவதற்காக பதிவு செய்திருக்கிறேன். எனவே, போலியான வர்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம்.

கட்டுரையைப் படித்ததுமே மரக்கன்று களை வாங்கி நட்டுவிடவேண்டும் என்று எங்களிடமோ… தனியாரிடமோ போய் நிற்கத் தேவையில்லை. ஜூலை மாதத்தில் தான் மலைவேம்பு உள்ளிட்ட அனைத்து வகை கன்றுகளும் வனத்துறையிடம் கிடைக்கும். அது பருவமழை தொடங்கும் காலம் என்பதால், அப்போது நடவு செய்தால்தான் உரிய பலன் கிடைக்கும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. எனவே, அந்த சமயத்தில் வனத்துறையைத் தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை பெற்று பலனடைலாம்” என்று விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் சொன்ன குமாரவேலு,

”ஒவ்வொரு துளி நீரையும், ஒவ்வொரு பருக்கை மண்ணையும், ஒவ்வொரு சூரியக் கதிரையும் சரியாகப் பயன்படுத்தும் முறையை வளர்த்துக் கொண்டாலே ஒவ்வொருவரும் சாதனை படைக்கும் விவசாயிதான்!” என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார்.

ஆச்சர்யமோ ஆச்சர்யம்!

”கடந்த இதழைப் படித்ததுமே ஆயிரக்கணக்கில் விவசாயிகள் என்னைத் தொடர்பு கொண்டு ஆச்சர்யப்படுத்தி விட்டனர்” என்று பெருமைபொங்கச் சொன்ன குமாரவேலு, ”கடந்த இதழில் வெளியான என்னுடைய கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்பை இதுநாள் வரை நான் சந்தித்ததே இல்லை. வனத்துறையில் இந்த அளவுக்கெல்லாம் சாதனைப் பணிகள் நடக்கின்றனவா என்று பலரும் ஆச்சர்யப்பட்டனர்.

இதைப்பற்றி சொல்லும் அதேசமயம், கடந்த இதழில் வெளியான தவறான தகவல்களையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ‘இரண்டு அடிக்கு இரண்டடி இடைவெளியில் ஏக்கருக்கு 1,000 சவுக்குக் கன்றுகள் நடலாம்’ என்று கடந்த இதழில் வெளியாகியிருந்தது. அதில் ‘இரண்டு அடி’ என்பது ‘இரண்டு மீட்டர்’ என்று வந்திருக்க வேண்டும். இது ஆராய்ச்சிக்காக நாங்கள் பயன்படுத்தும் அளவு. தவறுதலாக அக்கட்டுரையில் இடம்பெற்றுவிட்டது. ‘அப்படியே மீட்டர் என்று வைத்துக்கொண்டாலும், ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் நடவு செய்வது என்பது நஷ்டத்தைத்தானே கொடுக்கும்’ என்று ஒருசில விவசாயிகள் என்னிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டார்கள். நாங்கள் நடவு செய்வது முழுக்க முழுக்க ஆராய்ச்சிக்காக மட்டுமே. விவசாயிகளைப் பொறுத்தவரை மூன்று அடிக்கு மூன்று அடி இடைவெளியில் நடவு செய்வதுதான் நல்லது. இப்படி நடும்போது ஏக்கருக்கு 4 ஆயிரம் சவுக்குக் கன்றுகளை நடவு செய்யலாம்.

அதேபோல, மூங்கில் நடவிலும் ஐந்து அடிக்கு ஐந்து அடி என்று வெளியாகிவிட்டது. ஐந்து மீட்டருக்கு ஐந்து மீட்டர் இடைவெளியில் விவசாயிகள் நடவேண்டும் என்பதுதான் சரி” என்று சொன்னார்.

‘மலைவேம்பு இருக்கா மலைவேம்பு!’

-என்றபடி தேடித்தேடி மலைவேம்பு மரத்தை விலைக்கு வாங்கிக் கொண்டி ருக்கிறது ‘யுனிபிளை பிளைவுட்’ நிறுவனம். இந்நிறுவனத்தின் கம்பெனி செகரட்டரி தாஸ் இதைப்பற்றிச் சொல்லும்போது, ‘‘100 செ.மீ. சுற்றளவும், 5 மீட்டர் உயரமும் கொண்ட மலைவேம்பு மரம் ஒன்றுக்கு இன்றைய மதிப்பின்படி மூன்றாயிரம் ரூபாய் கொடுக்கிறோம். நாளுக்கு நாள் மலைவேம்புவின் மதிப்பு கூடிக்கொண்டேதான் இருக்கிறது’’ என்றார்.

தொடர்புக்கு, தொலைபேசி 044 -26605995, அலைபேசி 98842 -13401.

http://www.nermai-endrum.com/மலைக்க-வைக்கும்-மலைவேம்ப/

 மலை வேம்பு மரமானது மெலிசைன் தாவர இனத்தை சேர்ந்தது. இதனுடைய  இலைகள், இறகு போன்று நீளமாக இருக்கும்.

• இம்மரம் குளிர்காலத்திலும், வறட்சியான காலத்திலும் சில நேரங்களில் இலைகளை உதிர்க்கும் தன்மையுடையது.

• இம்மரமானது சீனாவிலும், ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவில் எல்லா இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது.

• வேகமாக வளரக்கூடிய மரம் ஆகும். குறைந்த அளவு தண்ணீர் போதுமானது.

• ஒரு ஏக்கருக்கு (6x6) 1200 மரங்கள் வரை நடவு செய்யலாம்.

3 - 4 ஆண்டுகளில் 600 மரங்களை அறுவடை செய்து விறகு தேவைக்கு,தீக்குச்சி தயாரிக்க,விறகு எரித்து மின்சாரம் தயாரிக்க மேலும் பேப்பர் கூல் தயாரிக்க பயன்படுத்தினால் கூட (600x1000) ரூ.6 இலட்சம் வருமானம்.
7 - 8 ஆண்டுகளில் அதில் பாதி (300) மரங்களை அறுவடை செய்து (300x6000) ரூ.18 இலட்சம் வருமானம் பெறலாம்.
12 - 14 ஆண்டுகளில் மீதி உள்ள 300 மரங்களை அறுவடை செய்து (300x10000) ரூ. 30 இலட்சம் வருமானம் பெறலாம்.
• மலைவேம்பு இலை, காய், விதை, பட்டை, கோந்து போன்ற அனைத்தும் பலவிதமான நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டவை.

• மலைவேம்பு மரமானது பாலீஷ் போட நன்றாக இருக்கும். ரீப்பர், சட்டம், பர்னீச்சர்கள், சோபா செட்டுகள், அலமாரிகள்,

ஸோகேஸ்கள் மற்றும் அனைத்து மரச்சாமான்களும் செய்யலாம். விறகு மின்சாரம், தீக்குச்சி தயாரிக்கப்படுகிறது.

• பிளைவுட் கம்பெனிகள் மலைவேம்பு மரத்தினை விரும்பி கேட்கிறார்கள். 

பிளைவுட், பிரஷ்டோர்கள் செய்ய பயன்படுகிறது.

பிளைவுட் கம்பெனியில் பிளைவுட்டின் மேல் இரு பக்கத்திலும்  போர்த்தப்பட்டிருக்கும் பார்வை பிளேட்டிற்கும் பயன்படுகிறது.

மற்றும்பேப்பர்  மில்களில் மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

• 1 டன் மலைவேம்பு மரம் ரூ.7000/- வரை விற்கப்படுகிறது.

• மலைவேம்பு மரம் வளர்ப்பிற்கு மத்திய அரசு 20% மானியம் வழங்குகிறது.

மலைவேம்பு

கேள்வி - பதில்

 

1. மலைவேம்பு மரத்தின் தாவரவியல் பெயர் என்ன?

மிலியா டுபியா என்பது தாவரவியல் பெயர்

 

2. மலைவேம்பு மரம் எதற்கு பயன்படுகிறது?

பிளைவுட் தயாரிப்பதற்கும், கனரக வாகனங்களுக்கு  பாடி பில்ட்டர் செய்யவும், விறகின் ½ அங்குலம் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுகிறது. பேப்பர் மில்களில் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. பிளைவுட் கம்பெனியில் பிளைவுட்டின் மேல்  போர்த்தப்பட்டிருக்கும் பார்வை பிளேட்டிற்கும் பயன்படுகிறது

 

3. மலைவேம்பு இந்தியாவை தாயகமாகக் கொண்டதா?

மலைவேம்பு மரத்தின் தாயகம் இந்தியா

 

4. மலைவேம்பு மரம் எத்தனை ஆண்டுகள் கழித்து பயன்தரும்?

மூன்று முதல் 14 ஆண்டுகள் வரை பயன் தரும்.

 

5. வேம்புமரம் ஒரு மூலிகை மரமா?

 மலைவேம்பு மரம் ஒரு மூலிகை மரமே. மலைவேம்பு மரத்தின் இலை, பூ, காய், பட்டை, கோந்து, வேர் அனைத்தும் மூலிகை வைத்தியத்திற்கு பயன்படுகிறது.

 

6.ஒரு ஏக்கர் நிலத்தில் எத்தனை மலைவேம்பு மரங்களை நடவு செய்யலாம்?

1 ஏக்கர் நிலத்தில் 530 மரங்களை நடவு செய்யலாம்.

5 வருடம் கழித்து ஒருமரம் விட்டு ஒரு மரத்தை வெட்டி அதில் வருமானம் பெறலாம்.

 

7. மலைவேம்பு மரம் 1 ஏக்கரில் பயிர் இடும்போது எவ்வளவு இலாபம் கிடைக்கும்?

மலைவேம்பு மரம் அடர் நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு (6x6) 1200 மரங்கள் வரை நடவு செய்யலாம்.

  • 3 - 4 ஆண்டுகளில் 600 மரங்களை அறுவடை செய்து விறகு தேவைக்கு,தீக்குச்சி தயாரிக்க,விறகு எரித்து மின்சாரம் தயாரிக்க மேலும் பேப்பர் கூல் தயாரிக்க பயன்படுத்தினால் கூட (600x1000) ரூ.6 இலட்சம் வருமானம்.
  • 7 - 8 ஆண்டுகளில் அதில் பாதி (300) மரங்களை அறுவடை செய்து (300x6000) ரூ.18 இலட்சம் வருமானம் பெறலாம்.
  • 12 - 14 ஆண்டுகளில் மீதி உள்ள 300 மரங்களை அறுவடை செய்து (300x10000) ரூ. 30 இலட்சம் வருமானம் பெறலாம்.

8. மலைவேம்பு மரம் எத்தனை அடி உயரம் வரை வளரும்?

மண்ணின் தன்மைக்கேற்ப குறைந்தபட்சம் 35 அடிமுதல் அதிகபட்சம் 60 அடி உயரம்  வளரும் தன்மை கொண்டது

 

9. மலைவேம்பு மரம் வளர்க்கும் நிலத்தின் சந்தன மரத்தை இடைவெளியில் வளர்க்கலாமா?

மலைவேம்பு மரத்தின் வளர்ச்சி விரைவாக உயரச்செல்லக்கூடிய தன்மை கொண்டது.

சந்தனம் மெதுவாக வளரும் தன்மை கொண்டதால் தாராளமாக வளர்க்கலாம்.

 

10. மலைவேம்பு மரத்திற்கு அரசு மானியம் உண்டா?

மத்திய அரசு மூலிகை மர மானியம் ½ முதல் 20% கொடுக்கிறது.

 

11. மானாவாரி நிலத்தில் மலைவேம்பு மரம் வளருமா?

மானாவாரி நிலத்தில் மலைவேம்பு மரம் வளரக்கூடிய தன்மை கொண்டது.

 

12. மலைவேம்பு நட்ட தோட்டத்தில் ஊடுபயிர்கள் மற்றும் ஊடுமரம் வளர்க்கலமா?

வாழை, செடி வகைகள், கீரை வகைகள், மூலிகை செடி வகைகள், தானிய வகைகள், காய்கறி வகைகள் போன்றவற்றை மலைவேம்பு நட்ட தோட்டத்தில் 3 - 4 வருடங்களுக்கு ஊடு பயிர் செய்து கொள்ளலாம். சந்தனம்,அகர் மரங்களை ஊடுமரமாக வளர்க்கலாம்.

 

13. மலைவேம்பு மரத்தில்(டூப்ளிக்கெட்) துலக்க வேம்பு மரம் என்ற ரகம் உள்ளதா?  

டூப்ளிகெட் மலைவேம்பு மரம் என்ற ரகம் உள்ளது. அது அதிகம் வளராது. 3 ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி நின்று போய்விடும்.

 

14. மலைவேம்பு மரத்தின் பக்க கிளைகள் வளருமா?

மலைவேம்பு மரத்தில் 6 - 8 அடிக்கு மேல் வளரும்போது பக்க கிளைகள் வளரும்.

 

15. மலைவேம்பு மரத்தில் நோய் தாக்கம் இருக்குமா?

மலைவேம்பிற்கு நோய் அதிகம் வருவதில்லை. சிறிய இருக்கும்போது வெட்டுக்கிளிகள் சேதப்படுத்துகிறது.

சில இடங்களில் வேர் அழுகல் நோய் ஏற்படுகிறது.

 

16. எவ்வளவு ஆழம் குழி எடுத்து நடவு செய்ய வேண்டும்?

மண் தன்மையானது ஆழமாக உள்ள நிலத்தில் 1.5*1.5*1.5 அடி நீளம், அகலம், ஆழ குழி எடுத்தும் மண் தன்மை குறைவாக உள்ள இடங்களில் 2*2*2 அடி நீளம், அகலம், குழி எடுத்து நடவு செய்யலாம்.

 

17.மலைவேம்பு மரத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?

மலைவேம்பு மரத்தின் ஆயுட்காலம் 40/50 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது.

http://www.richfarmer.in/index.php?route=product/category&path=62

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

4 ஏக்கர்... 7 ஆண்டு... 20 லட்சம் !

பணம் காய்க்கும் மரங்கள் !த. ஜெயகுமார் படங்கள்: தி. குமரகுருபரன்

 

 

விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்... வாழ்க்கை முறை, பணிச்சூழல் ஆகிய காரணங்களால், விவசாயத்தைத் தொடர முடியாத பலரும், நிலங்களைப் பராமரிக்க முடியாமல், விற்று விடுவது வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட நிலத்தை விற்க மனமில்லாமல், அதில் மரங்களை வளர்த்து, விவசாயத்தைத் தொடர்பவர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர்... சென்னை, மாங்காடு, விநாயகமூர்த்தி.

குன்றத்தூர் நால்ரோட்டிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் குறுகிய சாலையில் இரண்டு நிமிடம் பயணித்தால், சிமெண்ட் காம்பவுண்டுக்குள் கம்பீரமாகக் காட்சி தருகிறது விநாயகமூர்த்தியின் மரச் சோலை. உள்ளே, உயர வளர்ந்துள்ள மலைவேம்பு, குமிழ், மகோகனி மரங்களுக்கு இடையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

''எங்க பரம்பரைச் சொத்தை பாகம் பிரிச்சதுல, ஆறரை ஏக்கர் கிடைச்சது. அதுல நெல்லு மட்டும்தான் போடுவேன். பக்கத்துல செம்பரம்பாக்கம் ஏரி இருக்கறதால பாசனத்துக்குப் பஞ்சமில்ல. ஒரு கட்டத்துல விவசாயம் செய்யறதுக்கு ஆளுங்க கிடைக்காம, நிலத்த சும்மா போட வேண்டி வந்துச்சு. அப்ப, இந்தப் பகுதியில நிலம் நல்ல விலைக்குப் போயிட்டு இருந்ததால... நிறைய பேரு வித்துட்டாங்க. எனக்கு மனசு வரல. 'நாம இருக்கிறவரை நிலத்தைக் காப்பாத்தி வைக்கணும். அதுக்கு என்ன பண்றது?’னு யோசிச்சுட்டு இருந்த சமயத்தில, என்னோட மச்சான் மூலம் மரம் வளர்க்குற யோசனை கிடைச்சுது.

pv28a(1).jpg

கைகொடுத்த மரம் வளர்ப்பு!

நான் 'பசுமை விகடன்’ தொடர்ந்து படிப்பேன். அதனால, மலைவேம்பு, குமிழ், மகோகனி மரங்களைப் பத்தி தெரிஞ்சு வெச்சுருந்தேன். இருந்தாலும், மர சாகுபடி செஞ்சிருக்கற சில விவசாயிங்களோட தோட்டத்தையும் போய் பாத்துட்டுதான் மர வளப்புல இறங்கினேன். 2010-ம் வருஷம் அக்டோபர் மாசம், 4 ஏக்கர் நிலத்துல... 15 அடிக்கு 15 அடி இடைவெளியில, மூணடி ஆழத்துக்கு 'ஜே.சி.பி.’ வெச்சு குழி எடுத்தேன். வாய்க்கால் எடுத்து, 1,500 மலைவேம்பு, 500 குமிழ், 200 மகோகனி கன்னுகளை நடவு செஞ்சுருக்கேன். பொதுவா 15 அடிக்கு 15 அடி இடைவெளியில நடவு செய்யுறப்ப, ஏக்கருக்கு 225 மரம்தான் நடவு செய்ய முடியும். அதன்படி பார்த்தா நாலு ஏக்கர்லயும் 900 மரங்கள் நடலாம். ஆனா, இடைவெளி கிடைச்ச இடத்துலயெல்லாம்கூட மரங்களையும் நடவு செஞ்சுருக்கேன். அதாவது, 15 அடி இடைவெளிக்கு, இடையில் மலைவேம்பு, குமிழ், மகோகனி மரங்களை  நடவு செய்திருக்கேன். ஆக, மொத்தம் 2,200 மரங்களை இந்த முறையைப் பயன்படுத்தி நடவு செய்தேன்.

மரமெல்லாம் நல்லா வேர் பிடிக்கிற வரைக்கும் தண்ணி பாய்ச்சினேன். 100 கிலோ மாட்டுச் சாணம், 50 லிட்டர் கோமியம், 5 கிலோ வெல்லம் மூணையும் கலந்து ரெண்டு நாள் ஊற வெச்சு, பாசன தண்ணியில அடிக்கடி கலந்து விட்டுடுவேன். செடி நல்லா வேர் பிடிச்ச பிறகு, 20 நாளைக்கு ஒரு தண்ணி கொடுக்கிறேன். மரங்கள் 20 அடி உயரம் வரை வளர்ற வரைக்கும் அப்பப்போ கவாத்து பண்ணிட்டு இருந்தேன். இப்ப பண்றதில்லை'' என்று சற்றே இடைவெளி கொடுத்த விநாயகமூர்த்தி, தொடர்ந்தார்.

களை எடுக்கும் கால்நடைகள்!

pv28b.jpg''என் தோட்டத்தை சுத்தியும் ஆறடிக்கு சுவர் இருக்கு. மரங்களுக்கு இடையில புல் நிறைய வளர்ந்ததால, ஏழு மாடுகளை வாங்கி விட்டேன். அதுல ஒண்ணு மட்டும் இப்போ கறவையில இருக்கு. மத்ததெல்லாம் சினையா இருக்குது. மேய்ச்சல்னு பார்த்தா... தோட்டத்துல இருக்கிற புல் மட்டும்தான். 'மரங்களுக்கு இடையில, தீவனப்பயிர்கள வளர்க்கலாம்’னு பசுமை விகடன்ல ஒரு கட்டுரை படிச்சேன். உடனே 50 சென்ட்ல கோ-4. ரகத்தையும், 25 சென்ட்ல கோ.எஃப்.எஸ்.-29 ரக சோளத்தையும் விதைச்சேன். இப்போ வெளியில வைக்கோல் வாங்கறத நிறுத்திட்டேன்.

அதோட, 500 தேக்கு, 10 மூங்கில், 5 கிளரிசீடியா, 3 பேரீட்சை, 10 இமாம் பசந்த், 10 பங்கனப்பள்ளி, 10 மல்லிகா, 5 அல்போன்சா, 100 கற்பூரவல்லி வாழைனு ஊடுபயிரா, வேலியோரங்களிலும் நட்டுருக்கேன். கொஞ்ச இடத்துல வீட்டுத் தேவைக்காக, கத்திரிக்காய், சுரைக்காய், பூசணி, அகத்தி, இன்சுலின், சோத்துக் கத்தாழை, பிரண்டை, நித்ய கல்யாணி மாதிரியான செடிகளையும் வளர்த்துட்டு இருக்கேன்'' என்ற விநாயகமூர்த்தி, நிறைவாக,

''மூணு வருஷத்துல ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செஞ்சுருக்கேன். இப்போ, மலைவேம்பு 30 சென்டி மீட்டர் சுற்றளவுக்கு வந்துடுச்சு. குமிழ், 20 சென்டி மீட்டர் சுற்றளவுக்கு வந்துடுச்சு. இன்னும் 12 வருஷம் கழிச்சுதான் மகோகனியோட வளர்ச்சி தெரியும். ரெண்டு வருஷம் கழிச்சு, மலைவேம்பை அறுவடை செய்யலாம். குறைஞ்சபட்சம் ஒரு மலைவேம்பு மரம் சராசரியா அரை டன் எடைக்கு வந்திருக்கும். மொத்தமிருக்கற 1,500 மலைவேம்புல பாதிக்கு பாதி. அதாவது, 800 மரங்கள் மட்டுமே தேறும்னு வெச்சுக்கிட்டாலும்... 400 டன் கிடைக்கும். இன்னிக்கு மார்க்கெட்ல ஒரு டன் மலைவேம்பு 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு போயிட்டு இருக்கு. ரெண்டு வருஷம் கழிச்சு இதைவிட இன்னும் அதிகமாகுமே தவிர, குறைய வாய்ப்பில்லை. ரொம்ப மோசமா... ஒரு டன் 3 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனாகூட, 12 லட்ச ரூபாய் கிடைக்கும்.

இன்னும் 4 வருஷத்துல குமிழ் அறுவடைக்கு வரும். 500 மரங்கள், குறைந்தபட்சம் 250 டன் எடைக்கு வரும். டன் 5 ஆயிரம் ரூபாய்னு கணக்குப் போட்டா... 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதைத் தவிர மத்த மரங்கள் எல்லாம் இருக்கு. இருந்தாலும், இந்த ரெண்டு மரங்கள் மூலமாவே... இன்னும் 2 வருஷம் பண்ற செலவுகள் போக, 20 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்று விடைகொடுத்தார், இன்முகத்தோடு!


''நெருக்கி நட்டால் லாபம்!''

pv28c.jpgகாஞ்சிபுரம் மாவட்டம் மரம் வளர்ப்பு சங்கத் தலைவர் 'எழில்சோலை’ பா.ச. மாசிலாமணியிடம், நான்கு ஏக்கரில் இவ்வளவு மரங்களை சாகுபடி செய்ய முடியுமா? என்று கேட்டோம்.

''மரப் பயிர்களை நெருக்கி நடவு செய்வதுதான் நல்லது. அதைத்தான் இந்த விவசாயியும் செய்திருக்கிறார். அதிக இடைவெளிவிட்டு நடவு செய்தால், கிளைகள் பரப்பி, மரங்கள் நேராக வளராது. இதனால், அந்த மரங்களை மர வேலைக்குப் பயன்படுத்துவது சிரமம். நெருக்கமாக நடவு செய்யும்போது, சூரிய ஒளியைத் தேடி, மரங்கள் மேல் நோக்கி வளரும். இப்படி வளரும் மரங்கள் சந்தையிலும் நல்ல விலைக்கு விற்பனையாகும். தற்சமயம் நெருக்கி நடவு செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு ஏக்கரில், 15 அடிக்கு 12 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 250 மரக்கன்றுகளும்; 15 அடிக்கு 15 இடைவெளியில் 200 கன்றுகளும் நடவு செய்யலாம். ஆக, ஏக்கருக்கு 450 மரக்கன்றுகளை நடவு செய்ய முடியும். இது தவிர வரப்பைச் சுற்றிலும் கூட, செடிகளை நடவு செய்யலாம். இதன்படி பார்த்தால், ஏக்கருக்கு 500 மரக்கன்றுகள் வரை தாராளமாக சாகுபடி செய்யமுடியும். இதற்கு மேலும் காடு போல மரங்களை வளர்ப்பதும் சாத்தியம்தான்'’ என்றார்.

 

http://www.vikatan.com/pasumaivikatan/2013-oct-10/special-categories/46015.html

Link to comment
Share on other sites

அகர்வூட் அறுவடை பயிற்சிகளை பெறுவதற்காக அசாமுக்கு விஜயம் செய்த சதாஹரித குழுவினர்

சதா­ஹ­ரித பிளாண்­டேஷன் லிமிடெட் நிறு­வ­னத்தின் தலைவர் சதீஷ் நவ­ரத்ன உட்­பட பிர­தி­நி­திகள், உலகில் வர்த்­தக ரீதி­யான வன­வி­யலில் நிலை­யான முத­லீ­டாக கரு­தப்­படும் அகர்வூட் மர வளர்ப்பு மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் தொடர்பில் அனு­பவ ரீதி­யான பயிற்­சி­களை பெறும் நோக்கில் அண்­மையில் அசாம் மாநி­லத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்­தனர்.

 

Sadaharitha-Assam-team


இந்­தி­யாவில் அகர்வூட் செய்­கைக்­கான தலை­ந­க­ர­மாக அசாம் காணப்­ப­டு­வ­துடன், இந்­திய நிபு­ணர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­படும் விலை­யிடல், ஊழியர் பயிற்சி மற்றும் சந்தை வாய்ப்­பு­களை கண்­ட­றிதல் போன்ற மிகச்­சி­றந்த பயிற்­சி­க­ளி­னூ­டாக நிச்­ச­ய­மாக சதா­ஹ­ரித குழு­வினர் அனு­கூங்­களை பெற­வுள்­ளனர். அசாம் பிராந்­தி­ய­மா­னது வட­கி­ழக்கு இந்­தி­யாவின் நுழை வாயி­லா­கவும் தனது எல்­லையை பூட்டான் மற்றும் பங்­க­ளாதேஷ் நாடு­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்­தி­யுள்­ளது.


இந்த பயணம் குறித்து சதிஸ் நவ­ரத்ன தெரி­வித்­த­தா­வது, “இந்த பய­ணத்தின் மூல­மாக பய­ன­டைந்தோம். அசாமைச் சேர்ந்த அகர்வூட் வளர்ப்­பா­ளர்­க­ளுடன் பகிர்ந்துகொள்­ளப்­பட்ட சிறந்த நடை­மு­றை­களூ­டாக எமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான முத­லீட்டு வாய்ப்­பு­களை வழங்­க­வுள்ளோம்” என்றார்.


இலங்கை பிர­நி­திகள் குழுவில் ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் வன­வியல் மற்றும் சூழல் அறி­வியல் பீடத்தின் கலா­நிதி உபுல் சுப­சிங்க மற்றும் சதா­ஹ­ரித நிறு­வ­னத்தின் வன­வியல் ஆலோ­சகர் ஒரு­வரும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவ­ரது ‘கிறினோப்ஸ் வல்லா: இலங்­கையில் சமீ­பத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட அகர்வூட் உற்­பத்­தி­யாகும் மரங்கள்’ எனும் கட்­டு­ரை­யா­னது இந்­திய அனைத்து அகர்வூட் வளர்ப்பு சங்­கத்தின் பத்­தி­ரி­கையில் வெளி­யா­கி­யி­ருந்­த­துடன், மரங்­களை கடத்தல் மற்றும் பெறு­ம­தி­யான மரங்­களை அழித்தல் தொடர்­பான பிரச்­சி­னைகள் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டி­ருந்­தது.


கலா­நிதி உபுல் சுப­சிங்க இது தொடர்­பாக கூறு­கையில், ‘அகர்வூட் ரெசின் (பிசின்) உரு­வாக்கம் மற்றும் அதன் நிலைப்­பாடு தொடர்­பான சரி­யான அறி­வின்மை அதன் விஞ்­ஞான ரீதி­யான தலை­யீடு இன்­மை­யினால் அனைத்து அள­வி­லான மரங்­க­ளையும் வெட்­டு­வ­தற்கு, அத்­து­மீறி மரம் வெட்­டு­ப­வர்­க­ளுக்கு வழி­காட்­டு­கி­றது. இந்த செய­லா­னது இம்­மர இனத்தின் அழி­வுக்கு துணை போவ­தோடு இதன் நிலைப்­பாட்­டுக்கும் பெரும் சவா­லாக திகழ்­கி­றது. கடந்த காலங்­களில் அகர்வூட் மரத்தின் தேவை சர்­வ­தேச ரீதியில் அதி­க­ரித்­துள்­ளதால், அத்­து­மீ­றல்­களும் அதி­க­ரித்­துள்­ளது. இந்த அத்­து­மீ­ற­லா­னது, இந்த இனத்தின் அனைத்து வய­து­களின் நிலைப்­பாட்­டிற்கும் அச்­சு­றுத்­த­லாகி இவ்­வி­னத்தின் மறு உற்­பத்­தியை கணி­ச­மான அளவு குறைந்­துள்­ளது. தாழ்­நில காடு­களின் அழிவும் இவ்­வி­னத்தின் உற்­பத்­திக்கு சவா­லாக உள்­ளது” என்றார்.


மத்­திய கிழக்கு நாடுகள், சீனா, ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்பா நாடு­களில் பல்­வேறு வேறாக்­கப்­பட்ட சிப்ஸ், பவுடர், எண்ணெய் மற்றும் வாசணைத் திர­வி­யங்கள், ஊது­பத்­திகள், மருந்­துகள் மட்­டு­மன்றி அதிர்ஷ்­டத்தை தரு­வ­தாக நம்­பப்­படும் ஆப­ர­ணங்கள் போன்­ற­வற்­றுக்­கான அதி­க­ரித்து வரும் கேள்வி கார­ண­மாக சந்­தே­கத்­துக்­கி­ட­மின்றி மிகச்­சி­றந்த பிர­தி­ப­லனை பெறக்­கூ­டிய துறை­யாக அகர்வூட் திகழ்­கி­றது. அரு­கி­வரும் பயிர் இனங்கள் தொடர்­பான சர்­வ­தேச வர்த்­த­கத்­திற்­கான மாநாட்டில் ; (CITESA) அகர்வூட் பட்­டி­யி­லி­டப்­பட்­டுள்­ள­துடன், இந்த இனத்தின் பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான அனு­ம­தி­யின்றி சர்­வ­தே­ச­ளவில் வர்த்­த­கத்தை மேற்­கொள்ள முடி­யாது. இந்த அதி­சய மர­மா­னது எவ்­வித வாசனை எண்ணெய் சுரப்­பி­க­ளையும் கொண்­டி­ராத இயற்­கையின் கொடை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. இம்­ம­ர­மா­னது நுண் கிரு­மி­களால் துளை­யிட்டு பாதிக்­கப்­படும் போது, இம்­ம­ரத்தின் மூல­மாக நுண் கிருமி எதிர்ப்­பாக சுரக்­கப்­பட்டு உரு­வா­வதே அகர்வூட் எண்ணெய் ஆகும்.

http://metronews.lk/?p=1202

Link to comment
Share on other sites

தேக்கு மரம்

 

உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும்  ஒன்றாகும். இதன் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” ஆகும். இது “வெர்பினேசியே” தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் 'டெக்டன்' என்றால் தச்சருக்கு சம்பந்தப்பட்டது. “கிராண்டிஸ்” என்றால் பிரமாதமானது என அர்த்தமாகும். அதாவது இந்த மரம் “தச்சர்களுக்கு உகந்த பிரமாதமான மரம்” என்ற பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மரம் ஓங்கி வளர்வதுடன் மிகவும் உறுதியானதுமாகும்.
 
தேக்கு பயிரிட ஏற்ற நிலம் :
      இம்மரம் கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலுள்ள நிலப்பகுதியல் நன்கு வளரும். ஆண்டு மழையளவு 750 மி.மீ முதல் 2500 மி.மீ.வரை மழை பெறும் இடங்களில் நன்கு வளர்கிறது. இம்மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், மணல் கலந்த நிலங்கள், செம்மண் நிலங்கள், செம்புறை மண் நிலங்கள் மற்றும் மணல் கலந்த களி நிலங்களிலும் நன்கு வளரும். மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களும் கடுங்களி நிலங்களும் மற்றும் நீர்வடியா நிலங்களும் இம்மரம் வளர்ப்பதற்கு ஏற்றதல்ல. இம்மரம் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கரநாடகம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் கூட வளர்கிறது. கேரளா போன்ற அதிக மழைபெறும் மாநிலங்களில் இம்மரம் நன்கு வளர்கிறது.
 
மரத்தின் சிறப்பியல்புகள் :
           1. தேக்கு மரம் இலையுதிர்க்கும் மரவகையை சேர்ந்தது. நவம்பர் முதல் ஜனவரி வரை இலையுதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றியே காணப்படும். இம்மரம் நல்ல வலிமையுடைய, கரையான் தாக்காத தன்மையுடையது.
2. மேலும் இம்மரம் “ஒளி விரும்பி” (Light Demand-er) ஆகும். நல்ல சூரிய ஒளி கிடைத்தால் தான் மரம் நல்ல முறையில் வளரும்.
3. தேக்குமரம் வளரும் இடத்தை பொறுத்து 15 ஆண்டுகளில் சுமார் 15மீ உயரமும் 90செ.மீ வரை சுற்றளவும் 30 ஆண்டுகளில் சுமார் 25 மீட்டர் உயரமும், 175 செ.மீ சுற்றளவு வரை வளரும்.
 
பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் :
             தேக்கு நட்ட ஆறு ஆண்டுகளில் பூக்க தொடங்கினாலும் நன்கு பூக்க 15 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஜுன்-செப்டம்பர் மாதங்களில் பூக்கத்தொடங்கி மார்ச்-ஏப்ரல் மாதங்களில் விதைகள் முற்றி கீழே விழ ஆரம்பிக்கும். 20 வயதுடைய மரத்திலிருந்து சராசரியாக ஒரு மரத்திற்கு 10 கிலோ தேக்கு விதைகள் கிடைக்கும். ஒரு கிலோவிற்கு சராசரியாக 1300 விதைகள் இருக்கும்.
 
விதை சேகரம் :
teak-seeds-818650.jpg
               நாற்றுகள் உற்பத்திக்கு தேக்கு வதைகளை 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய மரங்களிலிருந்து சேகரம் செய்வது நன்று. மேலும் பக்க கிளைகள் அதிகம் இல்லாத நேராக, உயரமாக வளர்ந்த, நோய்தாக்காத மற்றும் நல்ல பருமனமான தேக்கு மரங்களிலிருந்து விதைகள் சேகரம் செய்ய வேண்டும். இவ்வாறு விதைகள் சேகரம் செய்து தோட்டம் உற்பத்தி செய்தால் நல்ல தரமான மரங்கள் கிடைக்கும்.     

விதை நேர்த்தி :
                   தேக்கு மர விதைகளை விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். ஏனெனில் விதை உறக்க நிலை காரணமாக முளைப்புதிறன் குறைவாக இருக்கும். இந்த விதை உறக்க நிலையை நீக்க விதைகளை சாக்குப் பைகளில் நிரப்பி நன்றாக கட்டி சாணப்பாலில் இரண்டு நாட்கள் ஊர வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊர வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊர வைக்க வேண்டும். இவ்வாறு சுமார் ஒரு வாரம் விதை நேர்த்தி செய்வது மூலம் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தாய்பாத்தியில் விதைக்க வேண்டும்.

நாற்றுகள் உற்பத்தி :
Natrugal.jpg
                       தேக்கு நாற்றுகள் பாலித்தீன் பைகளில் உற்பத்தி செய்தும், தேக்கு நாற்றுக்குச்சிகள் மூலமும் தோட்டம் எழுப்பலாம். தேக்கு நாற்றுக்குச்சிகளை தயாரிக்கத் தேவையான  தாய்பாத்தி 10மீX1மீX0.3மீ அளவுள்ள மேட்டுப்பாத்தியாக அமைக்க வேண்டும். இதற்கு 50 சதவீத மணலும் 25 சதவீத செம்மண்ணும் 25 சதவீத வண்டல் மண்ணும் நன்றாக கலந்து அமைக்க வேண்டும். தாய்பாத்தியின் மேல்சுமார் ஒரு அங்குல கனத்தில் குறு மணலை பரப்ப வேண்டும். இந்த மண்ண்ல் தொழுஉரமோ, சாண எருவோ கலக்க கூடாது. அவ்வாறு கலந்தால் வேர்புழுக்கள் தோன்றி நாற்றுக்கள் சேதமாகும். பூச்சிக்கொல்லிகளை குறிப்பாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உயிர் பூச்சிக்கொல்லியான மைக்கார் (Mycar formites) அல்லது வேம்பு பாலை தாய்பாத்தியில் தெளித்து பூச்சிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
                      ஒரு பாத்தியில் 8 கிலோ என்ற அளவில் தேக்கு விதைகளை விதைக்க வேண்டும். தேக்கு விதைகளுக்கு இடையே 2 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விதைகள் விதைத்த பின்பு தேக்கு விதை கனத்திற்கு குறுமணலை விதைகள் மேல் ஒரே சீராக பரப்ப வேண்டும். அதன்மேல் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை பரப்பி மூடி விட வேண்டும். தினமும் காலை மாலை இருமுறை “பூவாளி மூலம் தாய்பாத்திக்கு 15 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும்”. பின்பு தினமும் ஒரு முறை வீதம் 30 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் சுமார் 10 நாட்களிலிருந்து 15 நாட்களில் முளைக்க தொடங்கி 30-35 நாட்கள்வரை முளைத்து கொண்டிருக்கும். இந்நிலையில் வைக்கோல் மற்றும் தென்னங்கீற்றுகளை அகற்றி விட வேண்டும். தாய்பாத்தியில் மூன்று மாதத்திற்கு பின்பு பஞ்சகாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து மாதத்திற்கு ஒரு முறை கைத்தொளிப்பான் மூலம் நாற்றங்கால் நன்கு வளர்ச்சியடையும். மேலும் நாற்றுகள் பூச்சிகளால் தாக்கப்படாமலிருக்க தகசாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லிலிட்டர் என்ற அளவில் கலந்து கை தெளிப்பான் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.

நாற்றுக்குச்சிகள் மூலம் தோட்டம் உற்பத்தி :
Natrugal+Kuchigal.jpg
            நாற்றுக்குச்சிகள் 8 முதல் 10 வரை தாய்பாத்தியில் வளர்ந்து அதே சமயத்தில் பென்சில் பருமனுள்ள தேக்கு நாற்றுக்களிலிருந்து தயார் செய்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். தேக்கு நடவு செய்யப்படும் இடத்தை நன்றாக சுத்தம் செய்து களைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். சம பகுதியாக இருப்பின் நடவு செய்ய வேண்டிய இடத்தை உழுதுவிடவேண்டும். பின்னர் தென்மேற்கு பருவமழையின் ஆரம்பத்தில் 1 ஏக்கருக்கு 2மீX2மீ இடைவெளியில் 45செ.மீX45செ.மீX45செ.மீ அளவுள்ள 1000 குழிகள் எடுக்க வேண்டும். குழிகள் நன்கு காய்ந்த பின் மக்கிய 2 கிலோ தொழு உரத்துடன் வண்டல் மண் மற்றும் செம்மண் சமமாக கலந்து குழியில் 95 சதவீதம் நிரப்ப வேண்டு்ம். மழைக்காலம் ஆரம்பித்தும் குழிகளில் உள்ள எருக்கலவை நன்கு ஈரமாகும். இந்நிலையில் கடப்பாரையால் குழியின் மையப் பகுதியில் துவாரம் இட்டு அவைகளில் தேக்கு நாற்றுக்குச்சிகளை நட்டு குச்சி சேதமடையாமல் மேல் மண்ணை கொண்டு அணைத்து காற்று புகாமல் இறுக்கமாக கைகளால் கெட்டிப்படுத்த வேண்டும். அதே சமயம் நாற்றுக்குச்சிகளின் கழுத்துப் பகுதியும் குழியின் மேல்மட்டமும் தரை மட்டத்திற்கு இருக்குமாறும் குச்சியின் மேல் பகுதி 2செ.மீ. அளவிற்கு தரை மட்டத்திற்கு மேலே இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் குச்சியின் மேல் பகுதியில் மண் மூடிவிட்டால் துளிர்வருவது தடைப்படும். நாற்றுக் குச்சிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் 15 நாட்களுக்கு போதுமான அளவு நீர் விடவேண்டும். பின்னர் வாரத்திற்கு இருமுறை வீதம் மூன்று மாதம் நீர் விடவேண்டும். மழைபெய்தால் நீர்விடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடப்பட்ட நாற்றுக்குச்சிகள் ஏழு நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் துளிர்விட ஆரம்பிக்கும். நாற்றுக்குச்சிகள் ஒன்றுக்கு மேல் துளிர்கள் வருமாயின் திடமான ஒரு துளிரை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை நடவு செய்த இரண்டு மாதம் கழித்து அகற்றிவிடவேண்டும். பின்னர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை செடியை சுற்று 15செ.மீ ஆழம்வரை கொத்தி களை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தேக்கு மரக்கன்றுகள் நன்கு வளர்ச்சியடையும்.

பை நாற்றுக்கள் உற்பத்தி செய்தல் :
                 செம்மண், வண்டல்மண், மணல் மற்றும் நன்கு மக்கிய தொழு உரத்தை தனித்தனியே சலித்து சம அளவில் கலந்து (16X30) செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிரப்ப வேண்டும். மண் கலவை நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளை (10X1) மீ அளவுள்ள நிலையான பாத்திகளில் அடுக்கி விடவேண்டும்.  பின்பு தாய்பாத்தியிலிருந்து 6 இளைகளுடன் கூடிய தேக்கு இளங்கன்றுகளை பிடுங்கி பாலித்தீன்பைகளில் ஒரு பைக்கு ஒரு செடி வீதம் நடவு செய்ய வேண்டும். மேலும் நாற்றுக்குச்சிகளை தயார் செய்து பாலித்தீன் பைகளில் நட்டும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். பைச்செடிகளுக்கு முதல் 10 நாட்களுக்கு தினம் இரு வேளையும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒன்றுவிட்டு ஒருநாள் பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும்.பின்பு வாரத்திற்கு இரண்டு நாள் நீர் ஊற்றினால் போதுமானது. நான்கு மாத காலத்தில் சுமார் 60-75 செ.மீ உயரத்திற்கு நாற்றுக்கள் வளர்ந்திருக்கும். இதுவே நடுவதற்கு தகுதியான நாற்றாகும். நாற்றுகள் நடவு செய்ய வேண்டுடிய இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். நிலம் சமமாக இருப்பின் ஏர் உழுத பின்பு ஒரு ஏக்கர் பரப்பில் 2மீX2மீ இடைவெளியில் 45செ.மீX45செ.மீX45செ.மீ அளவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் முதன் மழையில் குழிகள் எடுக்க வேண்டும். பின்பு செம்மண் மற்றும் வண்டல் மண் சமபங்கு கலந்து அத்துடன் 250 கிராம் கோழிஉரம் அல்லது 2 கிலோ தொழுஉரம் கலந்து எல்லா குழிகளிலும் பாதி அளவிற்கு நிரப்ப வேண்டும். ஜுன்-ஜுலை மாதங்களில் பருவ மழைகிடைத்தவுடன் பாலித்தீன் பைகளை அகற்றிவிட்டு குழிகளில் தாய்மண் கட்டி உடையாதவாறு செடிகளை நடவு செய்ய வேண்டும். குழிகளின் மீதிப்பகுதியை சுற்றியுள்ள மேல் மண்ணை கொண்டு மூடி செடியை சுற்றி இறுக்கமாக கால்களால் மண்ணை மிதித்து விடவேண்டும். செடியை சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாற்றங்காலில் பூச்சி தாக்குதலும், நிர்வாகத்தலும் :
Pochi.jpg
                   நாற்றங்காலிலுள்ள தேக்கு மர நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி புழுக்கள், பைப்புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள், தேக்கு தளிர்களையும் இலைகளையும் உண்ணும். மேலும் சாறு உறிஞ்சிகளான அஸ்வினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
                      மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான தசகாவ்யா அல்லது வேம்புபால் அல்லது நீம் அசால் அல்லது புகையிலை வேம்பு சோப்பு கரைசலை 1 லிட்டருக்கு 30 மி.லி. வீதம் 15 நாட்களுக்கு ஒரு முறை விசை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

தோட்ட பராமரிப்பு : (Maintenance of Plantation)
                    தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்த 45 நாட்களுக்கு பிறகு 15 செ.மீ ஆழம் வரை மண்ணை கொத்தி களை எடுக்க வுண்டும். செடிகள் நன்கு வளர மாதம் இருமுறை நீர்விடுவது அவசியமாகும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை களை கொத்தி தொழுஉரம் இடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தோட்டங்களை பராமரிப்பதன் மூலம் தேக்கு கன்றுகள் நன்கு வளர்ந்து மரமாகும்.

வரப்பு நடவு :
Pochi.jpg
                      விவசாய நிலத்தில் வரப்புபகுதியில் 2மீX2மீ இடைவெளியில் தேக்கு குச்சி நாற்றுகள் அல்லது பை நாற்றுக்களை மேற்கானும் செய்முறைப்படி வரப்பு நடவு செய்யலாம். மேலும் பராமரிப்பு பணியும் அவ்வாறே மேற்கொள்ள வேண்டும். வரப்பு நடவுமுறைப்படி நடப்பட்ட தேக்கு மரக்கன்றுகள் தோப்பு முறைப்படி நடப்பட்ட மரக்கன்றுகளை விட நன்கு வளரும். ஏனெனில் தேக்கு மரக்கன்றுகளுக்கு போதுமான அளவு சூரிய ஒளியும், நல்ல காற்றோட்டம் மற்றும் சத்துக்களும் கிடைக்கும்.



தோட்டம் எழுப்புவதற்கான செலவு  :
                      ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 1000 தேக்கு மரக்கன்றுகள் நடப்படும். இதற்கான சாகுபடி பின்வருமாறு கணக்கிடப்பட்டுள்ளது.
Theeku.jpg


பக்ககிளை களை அகற்றுதல் : (Pruning)
Paga+kilaigal.jpg
                     
           தேக்கு மரங்கள் நல்ல தரமானதாகவும், பருமனாகவும், நேராகவும், பக்ககிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும். ஆகவே பக்க கிளைகளை மரத்திற்கு சேதாரம் இல்லாமல் கழித்து விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஜீலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் பக்ககிளைகளை வெட்டி அகற்றிவிட வேண்டும்.



5ம் ஆண்டில் இடை வரிசைகளை கலைத்தல் :
                      மேலும் தேக்கு மரங்கள் அடர்ந்த வளர்ந்து வரும் நிலையில் நட்ட 5ம் ஆண்டில் இடை வரிசைகளில் உள்ள மரங்களை நீக்கி மீதி மரங்கள் நல்ல பருமனாகி வளர வழி செய்ய வேண்டும். அதாவது முதல் 5வது ஆண்டில் கலைத்தல் செய்யும் போது மூலைவிட்ட வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒருவரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். உதாரணமாக 2மீX2மீ இடைவெளியில் தேக்கு மரக்கன்றுகளை நடும்பொழுது ஏக்கருக்கு 1000 மரங்கள் இருக்கும். இதில் 500 மரங்கள் வெட்டி எடுக்க வேண்டும்.
Theeku+1.jpg

தேக்கு மரம் கலைத்தல் முதல் வருவாய் :
                      5ம் ஆண்டில் 500 மரங்களை கலைத்து அப்புறப்படுத்த வேண்டும். ஒரு தேக்கு தடிமரத்தின் விலை ரூ. 100 - வீதம் 500 தேக்கு தடிமரங்களின் சந்தை விலை ரூ. 50,000/- ஆகும்.

12 ஆம் ஆண்டில் இடைவரிசைகளை கலைத்தல் :
Theeku+2.jpg


                அடுத்த 12ம் ஆண்டில் நடவு வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்து விட வேண்டும். இப்பொழுது ஏக்கருக்கு 250 மரங்கள் மீதம் இருக்கும் . 




தேக்கு மரம் கலைத்தல் இரண்டாம் வருவாய் : 
                   12-ம் ஆண்டில் 250 மரங்களை கலைத்து அப்புறப்படுத்த வேண்டும். ஒரு தேக்கு தடிமரத்தின் விலை ரூ.1000 வீதம் 250 தேக்கு தடிமரங்களின் சந்தை விலை ரூ. 2,50,000/- ஆகும்.
                        மேற்படி மரங்களை நன்கு பராமரித்து வளர்த்தால் சுமார் 30 ஆண்டுகளில் நல்ல மகசூல் கிடைக்கும். 30ம் ஆண்டில் 1 ஏக்கரில் 250 தேக்கு மரங்கள் வளர்ந்திருக்கும்.

வேளாண்காடு வளர்ப்பு :
%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.JPG
            
      தேக்கு மரத்தோட்டத்தில் வேளாண் பயிர்களான சோளம், பருத்தி, மஞ்சள், உளுந்து, தட்டைபயிறு கொள்ளு மற்றும் காய்கறிகள் போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். தென்னை மற்றும் வாழை போன்றவைகளையும் ஊடுபயிராக பயிரிடலாம். தென்னை மற்றும் வாழை தோப்புகளின் வரப்போரமாக தேக்கு மரக்கன்றுகளை நட்டு சாகுபடி செய்யலாம்.




தேக்கு மரத்தின் பயன்பாடு :
                  தேக்கு மரம் ஒரு உயர்தர மரமாக இருப்பதால் அதன் பயன்பாடு மிகவும் அதிகம். மரச்சாமான்கள் செய்தல், சன்னல், கதவுகள் செய்தல், கட்டில்கள் செய்தல், கப்பல் கட்டுமானம் மற்றும் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தேக்கு மரம் பயன்படுகிறது.
Payapadu.jpg


இன்றைய பொருளாதார மதிப்பு :
                 10 ஆண்டுகளிலிருந்து 30 ஆண்டுகள் வரை தேக்கு மரத்தின் இன்றைய சந்தை கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்டுள்ளது.
Theeku+final.jpg
 
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0.jpg
                  தேக்கு மரத்தின் சுற்றளவு மற்றும் பருமன் சாதாரண தோட்டங்களில் வளர்ந்த மரங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. தேக்கு மரதோட்டத்தை நீர்பாய்ச்சி பக்க கிளைகளை முறையாக அப்புறப்படுத்தி மரங்களை 5 மற்றும் 12 ஆம் ஆண்டுகளில் கலைத்து நன்கு பராமரிப்பதன் மூலம் கூடுதல் வருவாய் பெறலாம்.



 
வெளியீடு :
தமிழ்நாடு அரசு வனத்துறை
வனவியல் விரிவாக்கப் பிரிவு
சென்னை - 600 048.

தேக்கு மரம் தொடர்பாக இத்தளங்களிலும் தகவல்கள் உள்ளன

https://www.muppogam.com/single-post/2017/03/14/தேக்கு-மரம்-வளர்ப்பு

http://www.velanmai.in/article/2465

http://thannambikkai.org/1990/08/01/1406/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மரங்கள் தேர்வு செய்யும் போது எமது பிரதேசங்களில் பாரம்மரியமாக  காலங் காலமாகப் பயிரடப்படும் மரங்களைத் தேர்வு செய்வது சிறந்தது.ஏனைய மரங்களை தேர்வு செய்யும் போது தகுதியான விவசாய அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கவும். யாழ்ப்பாணத்தில் வெண் சந்தன மரங்களை தெரிவு செய்த போது சில விளைவுகள் ஏற்பட்டதாக அறியவருகிறது 

"மேலும், சந்தனமரமானது தனித்து வளராத தன்மை உடையது. அவை வேறு மரத்திற்கு அருகில் வளர்ந்து மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொண்டே வளர்கிறது. இந்த தகவலை விக்கிபீடியா இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

ஆகவே இம் மரங்களை நடுவதனால் எமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பயன்தரு மரங்களான தென்னை, மா, பலா போன்ற பல தாவரங்களின் நிலை அழிவுக்குள்ளாகும் அவலநிலை காணப்படுகிறது."

மூலம்    http://www.tamilcnn.lk/archives/469361.html

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

 குமிழ் மரம் 

941218ce2c3913f0ec8a3d480afebd6.jpg

குதூகல குமிழ் மரங்கள்

குறைந்த காலத்தில், அதிக வருமானம் தரும் மர வகைகளில் முக்கிய இடத்தில் இருப்பது குமிழ். இதை சாகுபடி செய்ய ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. வரப்பு, வாய்க்கால், காலி இடம் என கைவசம் இருக்கும் எந்த இடத்திலும் நடலாம். இது, ஆணிவேர் தாவரம் என்பதால், பக்கவேர்கள் அதிகமாக வளராது. அதனால் குறைந்த இடைவெளியிலும் இந்த மரத்தை நடவு செய்யலாம். தேக்குக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரம், இழைப்பதற்கு இலகுவாகவும், அதேசமயம் உறுதியாகவும் உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக குமிழ் மரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விற்பனையில் வீறுநடை போடுகிறது இம்மரம்!

வறண்ட நிலத்திலும் குமிழ் வளரும் என பலர் தவறான எண்ணத்தில் உள்ளனர். ஆனால், போதுமான தண்ணீர் வசதி உள்ள நிலங்களில் மட்டுமே குமிழ் சாகுபடி வெற்றியைக் கொடுக்கும். சரி, குமிழ் மரத்தை வணிகரீதியாக எப்படி சாகுபடி செய்வது?

மறுதாம்பிலும் வருமானம்

குமிழ், நல்ல வடிகால் வசதியுள்ள ஆழமான மண்கண்டமுள்ள அனைத்து மண் வகை களிலும் சிறப்பாக வளரும். சாகுபடி நிலத்தை உழவு செய்து 15 அடிக்கு, 15 அடி இடைவெளியில், இரண்டு அடி நீள, அகல, ஆழமுள்ள குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் மட்கிய தொழு உரம் மற்றும் வண்டல் மண்ணைக் கலந்து முக்கால் பாகத்துக்கு நிரப்பி, மீதமுள்ள குழியை மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். மூன்று மாதம் வரை வாரம் ஒரு முறையும்; பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் என நீர்பாய்ச்சுவது நல்லது.

நடவு செய்த ஓராண்டில், 10 அடி உயரம் வரை வளர்ந்துவிடும். முதல் மூன்று ஆண்டுகள் வரை கிளைகளை அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும். முறையாக கவாத்து செய்யாவிட்டால், மரம் நேராக வளராது. நடவு செய்த 8 முதல் 10-ம் ஆண்டுக்குள் அறுவடை செய்யலாம். 10 ஆண்டுகளில் ஒரு மரம் ஒரு டன் எடையில் இருக்கும். ஒரு டன் குறைந்தபட்சம் 7,000 ரூபாய்க்கு விற்பனையாவதாக வைத்துக்கொண்டாலும், ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்கள் மூலம் 14 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.

அறுவடை செய்த இடங்களில், மறுபடியும் துளிர்க்கும். அதை முறையாகப் பராமரித்தால் அடுத்த 6 அல்லது 7-ம் ஆண்டு மறுதாம்பை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் கிடைத்ததில், 50 சதவிகித அளவு வரையில் இந்தத்தடவை மகசூல் கிடைக்கும். இதற்குப் பிறகு, மறுதாம்பு விடக்கூடாது

மேலே பார்த்தது வனத்துறை பரிந்துரை செய்யும் சாகுபடி முறை. சில விவசாயிகள் 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகளைக்கூட நடுகிறார்கள். இந்த முறையில் சாகுபடி செய்யும்போது, 5-ம் ஆண்டில் ஒரு மரம் விட்டு, ஒரு மரம் என்று அறுவடை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 200 மரங்கள் கிடைக்கும். இதை விற்பனை செய்தால் தலா 1,500 ரூபாய் வீதம் 3,00,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். மீதமுள்ள 200 மரங்களை 10-ம் ஆண்டில் அறுவடை செய்யலாம். ஒரு மரம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் வீதம் 200 மரங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.

கிரிக்கெட் மட்டைக்கு குமிழ்

குமிழ் மரத்தின் தாவரவியல் பெயர் மெலைனா ஆர்போரியா (Gmelina arborea). இதன் தாயகம் இந்தியா. தீப்பெட்டி, தீக்குச்சி, பிளைவுட், பென்சில், கிரிக்கெட் மட்டை, ஜன்னல், கதவு நிலைகள், கைவினைப் பொருட்கள், மரச்சாமன்கள் என பலவாறாக பயன்படுகிறது குமிழ்.

இதைத் தனிப்பயிராக சாகுபடி செய்ய வாய்ப்பில்லாத விவசாயிகள், வரப்பு, வாய்க்கால், வேலி ஓரங்கள், ஓடை, காலி இடங்கள் என கைவசம் இருக்கும் இடமெல்லாம் நடவு செய்யலாம். குமிழ் சாகுபடியைப் பொறுத்தவரை கவாத்தும், பாசனம் மட்டும்தான் பராமரிப்பு, இதைச் சரியாக செய்யாவிட்டால் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்காது. அவ்வப்போது கம்பளிப்புழு தாக்குதல் இருக்கும், அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. பாதிப்பு அதிகமாக இருக்கும் என தோன்றினால், மூலிகைப் பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

இதுவரை நாம் பேசிக்கொண்டு இருந்தது குறைந்தபட்ச கணக்கு. இனி, குமிழ் சாகுபடியில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அன்னவயல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சொல்வதைக் கேட்போம்.

மூணு வருஷம்தான் பராமரிப்பு

‘‘என்னைப் பொறுத்தவரைக்கும் குமிழ் மாதிரி குறைஞ்ச காலத்துல அதிக வருமானம் கொடுக்குற மரம் எதுவும் இல்லீங்க. 7 முதல் 10 வருஷத்துக்குள்ள ஒரு மரம் ஒரு டன் எடை வந்துடுது. இதை என் அனுபவத்துலயே உணர்ந்திருக்கேன். 10 வருஷத்துக்கு முன்ன 30 சென்ட் நிலத்துல 9 அடிக்கு 9 அடி இடைவெளியில குமிழை நடவு செஞ்சிருந்தேன். கவாத்து அடிச்சு, முறையா தண்ணி கொடுத்து பாத்துகிட்டதால மரங்க நல்லா வளந்திருக்கு. அதுல வேலியோரமா இருந்த நாலஞ்சு மரங்களை போன வருஷம் வெட்டி வித்தேன். ஒவ்வொரு மரமும் ஒன்றரை டன் எடை இருந்துச்சு. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதால, மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிச்ச மரங்களை இன்னும் வெட்டாம வெச்சிருக்கேன்.

இந்த மரத்துக்கு இருக்குற டிமாண்டை பாத்துட்டு ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன, செடிக்கு செடி 14 அடி, வரிசைக்கு வரிசை 13 அடி இடைவெளியில ரெண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சு இருக்கேன். இப்படி நட்டால் ஏக்கருக்கு 220 கன்றுகள் வரைக்கும் தேவைப்படும். முதல் வருஷம் வரைக்கும் ஊடுபயிரா கடலை, உளுந்துனு மாறி, மாறி ஊடுபயிர் செஞ்சுக்கலாம்.

குமிழைப் பொறுத்தவரைக்கும் 20 அடி உசரத்துக்கு மரம் போற வரைக்கும் கவாத்து எடுக்கணும். அதுக்கு மேல தேவையில்லை. அதேபோல முதல் ரெண்டு, மூணு வருஷம் வரைக்கும் முறையா தண்ணி கொடுத்து பராமரிக்கணும். இதையெல்லாம் செஞ்சுட்டால் குமிழ்ல நல்ல மகசூலை எடுத்துடலாம். நடவு செஞ்ச 7-ம் வருஷத்துல இருந்து 10-ம் வருஷத்துக்குள்ள அறுவடை செஞ்சுடலாம். ஒரு மரத்துக்கு சராசரி விலையா 10 ஆயிரம் கிடைச்சாலும், ஒரு ஏக்கர்ல 200 மரத்துக்கு, 20 லட்சம் ரூபாய் வருமானமா கிடைக்கும். விற்பனையிலயும் பிரச்னையில்ல. உங்ககிட்ட குமிழ் மரம் இருக்கறது தெரிஞ்சா, உள்ளூர் வியாபாரிகளே வந்து பணம் கொடுத்து வெட்டிக்கிட்டு போயிடுவாங்க. அந்தளவுக்கு இதுக்கு டிமாண்ட் இருக்கு.’’

என்ன, அனுபவ விவசாயி ரவிச்சந்திரன் சொன்னதை மனதில் ஏற்றிக் கொண்டீர்கள்தானே! இனி, முடிவு எடுக்க வேண்டியது நீங்களேதான்!

******************

 

இம்மரம் வெர்பனேசி என்ற தேக்கு மரக் குடும்பத்தைச் சார்ந்தது.

மெலினா ஆர்போரியா என்பது இதன் தாவரவியல் பெயராகும்.

வேகாமாக வளரும் மர வகைகளில் இதுவும் ஒன்று.

எல்லா வகை மண்ணுக்கும் ஏற்ற மரம், குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.

குமிழ் மரமானது கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் வரை இந்தியாவின் எல்லா இடங்களிலும் இயற்கையாக வளரக்கூடிய ஒரு இலையுதிர் மரம் ஆகும்.

இந்த மரம் அதிகபட்சம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். இம் மரத்தின் விட்டம் 1,2 அடிமுதல் 4 அடி வரை இருக்கும்.

மரத்தின் உட்பகுதி லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

proxy?url=http%3A%2F%2F3.bp.blogspot.comஇது இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும். மேலும் இம்மரமானது மியான்மர்,தாய்லாந்து,

லாவோ, கம்போடியா,வியட்நாம், மற்றும் சீன தெற்குமாகாணங்களில்இயற்கை காடுகளில் 

காணப்படுகிறது.சியாரா,நைஜீரியா,மலேசியா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.

களிமண் நிலத்தில் நன்றாக வளரும.; தொடர்ந்து நீர்தேங்கும் நிலத்தில் வளராது.

வரப்போரங்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் நட்டு வளர்க்கலாம். ஏராளமானஇலைகளுடன்

மரம் அழகாக இருக்கும்.

திறந்த வெளிகளில் காற்றுத்தடுப்பானாகவும் இம்மரத்தை வளர்க்கலாம்.

மரங்களிலிருந்து கீழே விழும் இலைகள் மட்கி அந்த நிலத்தை வளப்படுத்தும்.

proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com

வறட்சியை தாங்கும் இயல்புடையன.

இம்மரமானது பட்டு புழுக்களுக்கு உணவாகவும்,கால்நடைகளுக்கும், 

மனிதர்களுக்கும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.

மூன்று ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும். ஆனால், முழுமையாக 6 ம் ஆண்டில் தான் முழுமையாக பூக்கும்.

குமிழ் மர பூக்களில் அதிக தேன் உள்ளதால் இம்மரத் தோப்புகளில் தேனீக்கள் வளர்த்து வேளாண் பெருங்குடி மக்கள் உபரி வருமானம் தொடர்ந்து பெறலாம்.

proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com

7-8 ஆண்டுகளில் மரம் முதிர்ந்து பலன் தரக்கூடியது.

குமிழ் மரம் விளைந்து அறுவடை செய்ததும் அதில் வரும் போத்து மரமானது குறுகிய காலத்திலேயே

5-6 ஆண்டுகளில் விளையும் தன்மை கொண்டது. 

போத்து வளர்க்கும் முறையில் தொடர்ந்து 5 முறை வளர்க்கலாம்.

சாதாரண ஏழை எளிய மக்களும் கூட 10 குமிழ் தேக்கு மரங்களை நட்டு தங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

ஏக்கருக்கு 6x6  இடைவெளியில் 1200 மரங்கள் வரை வளர்க்கலாம். 3-4 ஆண்டுகளில் முதல் வருமானம்,

7-8 ஆண்டுகளில் 2- வருமானம் ஈட்டலாம்.

1 ஏக்கரில் அதிகப்படியான மரம் வளர்ப்பு திட்டத்தில் 1200 குமிழ் மரங்களும் 600 சந்தன மரமும்

600 அகர் மரமும் கலப்பு மரத் தோப்பாக வளர்க்கலாம்.

proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com

குமிழ் மரம் 1 டன் விலை ரூ.8500/- ஆகும். 7-8 வருடத்தில் ஒரு மரமானது சிறப்பான பராமரிப்பு செய்தால்

1.5 டன்  எடை குறையாமல் கிடைக்கும்.

குமிழ் மரத்தின் பயனானது தேக்கு மரம் எதற்கெல்லாம் பயன்படுகிறதோ, அதற்கெல்லாம் குமிழ்

மரத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம், குமிழ் மரமும் தேக்குமரத்தின் ஒரு வகைதான்.

ஒரு டன் குமிழ் மரத்தில் 18 கன சதுர அடி பலகை கிடைக்கும். மற்றவகை தேக்குமரங்களில் 

மரங்களில் 12 கன சதுர அடி பலகை மட்டுமே கிடைக்கும்.

பலகைகள் லேசாக இருக்கும் ஆனால் உறுதியானவை. நீடித்து உழைக்கும். 25 முதல்30 ஆண்டுகள் 

proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com

விளைந்த தேக்கு மரத்தின் உறுதியை போன்று

7-8 ஆண்டுகள் விளைந்த குமிழ் மரத்தில் உறுதி தன்மை இருக்கும்.

குமிழ் மரம் மர வேலைப்பாடுகளுக்கு ஏற்ற சிறந்த மரமாக விளங்குகிறது.

கைவினைப்பொருட்கள்,மரச்சாமான்கள், பர்னிச்சர்கள், தீப்பெட்டி, பிளைவுட்,

பென்சில், கிரிக்கெட் மட்டை, ஜன்னல், கதவு நிலைகள், சோபா செட்டுகள்,சோகேஸ்கள்

மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கை,கால் தயாரிக்கபயன்படுகிறது.

விறகு தேவைக்கு, குமிழ் மரத்தினை பயன்படுத்தினால்கூட மரம் 1-க்கு ரூ.4000 வீதம் ஒரு ஏக்கருக்கு (850x4000) ரூ.25 லட்சம் உறுதியான வருமானம் கிடைக்கும்.

20130712_163514.jpg

15 வயது மரத்திலிருந்து  ஒரு மாதத்தில் 10 கிலோ குமிழ் விதைகள் கிடைக்கும்.

ஒரு கிலோ எடையில் சராசரியாக 1000 குமிழ் விதைகள் இருக்கும்.

தற்போது ஒருகிலோ குமிழ் விதை ரூ.750-க்கு விற்கப்படுகிறது.

ஆர்வமுள்ள வேளாண் பெருங்குடிமக்கள் குறைந்த பட்சம் 20 மரங்களை 15 ஆண்டுகள்வளர்த்தால் 

விதைகள் 20x10=200 கிலோ விதைகள்; கிடைக்கும். 200 கிலோ விதையின்மதிப்பு 20x750=1,50,000 லட்சம் ஆகும்.

குமிழ் மரம் வளர்ப்பிற்கு மத்திய அரசு 50% மானியம் வழங்குகிறது.

 

http://www.velanmai.in/article/2489

http://www.richfarmer.in/index.php?route=product/category&path=61

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.