Jump to content

என் கைபிடித்தவன் - புதிய தொடர்கதை


ivann

Recommended Posts

என் கைபிடித்தவன் - புதிய தொடர்கதை

--------------------------------------------------------------------------------

-மோகன்

கோடம்பாக்கம் பாலத்தை கடந்து சட்டென்று ஒரு வளைவு எடுத்து சேகர் எம்போரியத்தின் முன் தனது யமாஹாவை நிறுத்தினான் ரிஷி.

பிசிஏ, எம்சிஏ முடித்த கையோடு ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கணினி துறையில் முப்பதாயிரம் சம்பளத்தோடு முதல் வேலையில் அமர்ந்தான் ரிஷி.

வண்டியை அணைத்து காலை பின் பக்கமாக தூக்கி நின்றபோது எதோ மென்மையாக படவே திரும்பி பார்த்தான்.

பத்திரகாளியாக மாறி நின்றிருந்தாள் ரம்யா. இளங்கலை கடைசி ஆண்டு. கோடம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில். அழகாக இருந்தாள். ஆத்திரத்தில் இருந்தாள். ரிஷி காலால் எட்டி உதைத்தபோது இடர்பட்டவள் தான் ரம்யா.

“என்ன மிஸ்டர் அறிவில்லையா?” என்றாள் காட்டமாக.

“சேகர் எம்போரியத்திலே பொங்கல் தள்ளுபடியில் அறிவு தர்றாங்க. அதை வாங்கத்தான் வந்தேன்” என்றான் நகைச்சுவையுடன்.

“பின்னால யாரு இருக்காங்கன்னு பாக்கறதில்லையா?” என்றாள் ரம்யா.

“என்னங்க பண்றது. சைக்கிளா இருந்தா முன்னாடிலேர்ந்து காலை எடுக்கலாம். இது பைக்காச்சே” என்றான் விடாமல்.

“படிச்சவங்க மாதிரியா பேசறீங்க? பின்னாடி பாக்காம இடிச்சிட்டேன் சாரின்னு சொல்றதை விட்டுட்டு கிண்டல் பண்றீங்களா?”

“மிஸ் எனக்கு கால் நீளம். உங்களுக்கு வாய் நீளம். நான் அட்ஜஸ்ட பண்ணிக்கலையா?”

அவள் முகம் கடுகடுப்பில் வெடித்துவிடம் போலிருந்தது.

“ஐயோ அப்படி பார்த்து சாபம் கிபம் கொடுத்துடாதீங்க. பயங்கர சூடா இருக்கறீங்க. ஒரு ஜூஸ் வாங்கி தந்து சாரி சொல்லட்டுமா?” என்றான் முகத்தில் இருந்த புன்னகை மாறாமல். “தம்பி, இரண்டு சாத்துக்குடி” என்று அருகில் இருந்த பழரச கடைக்குள் குரல் கொடுத்தான்.

காதலிக்க வேண்டிய வயது தான் ரம்யாவுக்கு. எந்த ஆண்மகனில் என் ஆள் இவன்தானோ என்று தேடும் வயது. அழகு, நல்ல வேலை, நல்ல குணம் கிடைத்தால் மனதை பறிகொடுக்கும் வயது தான். ஆனால் அவள் காதலில் விழவில்லை இதுவரையில். அதற்கு காரணம் அவளுடைய ரவீந்தர் மாமா தான். அவளுக்கு என்று பிறந்தவன் என்று வீட்டில் சொல்லி வளர்ந்திருந்தார்கள்.

“என்ன சால்ஜாப்பு பண்றீங்க. எனக்கு ஜூஸ் வேண்டாம். சாரி சொல்லுங்க” என்றாள் அவளும் விடாப்பிடியாக.

அதற்குள் ஜூஸ் வந்திருந்தது. ஆளுக்கொன்றாக கொடுத்துவிட்டு அந்த கடையின் இளைஞன் நகர்ந்தான்.

இக்கால இளைஞரின் பல விருப்பங்களில் ஒன்று பைக் ஓட்டுவது. கையில் அரை விரல் அளவுக்கு வரும் பிங்கர் க்ளவூஸ் அணிவது. கையில் இருந்த உறையை கழற்றியவாறே, “சாரிக்கு தாங்க இந்த ஜூஸ். குடிங்க ப்ளீஸ்” என்றான்.

அவனுடை பாதிவிரல்கள் மறைந்து பாதி விரல்கள் தெரியும் க்ளவூஸை பார்த்தவுடன் அவள் கை நடுங்கியது. அவளுடைய பழரச கோப்பை கைகளில் இருந்து நழுவி கீழே விழுந்து சடாரென்று உடைந்தது. அங்கிருந்து விரைந்து ஓடி மூன்று சக்கர வாகனத்தை நிறுத்தி “கோடம்பாக்கம் ஸ்டேஷனுக்கு போங்க” என்றாள்.

“அம்மா இங்கிருக்கற ஸ்டேஷனுக்கு ஆட்டோவா?” என்றார் வாகனம் ஓட்டுபவர்.

“நீங்க போங்கண்ணா” என்று பதட்டுத்துடன் சொன்னாள் ரம்யா.

உடைந்த கோப்பைக்கும் சேர்த்து காசு கொடுத்துவிட்டு அவள் சென்ற திசையை வியப்புடன் பார்த்தான் ரிஷி. “என்ன பெண் இவள். தெரியாமல் கால் பட்டதற்கா வாங்கி கொடுத்த ஜூஸ் க்ளாஸை இப்படி கீழே போட்டுவிட்டு போவாள்” என்று வியந்தான்.

2

ரிஷியின் மேல் அதிகாரி ராஜேந்திரன் அழைத்தார். வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தான் அவர் எதிரில்.

அவர் ஒரு காகிதத்தை எடுத்து அவன் முன் வைத்தார்.

ரிஷி, என்னுடைய கஸின் படிக்கற பெண்கள் கல்லூரியில் பார்ட்-டைம் கோர்ஸ் எடுக்க கேட்டிருக்காங்க. ஒரு லெக்சருக்கு 750 தருவாங்க. உங்களுக்கு பிடித்த ப்ரோகிராமிங் பாடம் தான். எடுத்துக்கறீங்களா? வாரத்திற்கு 3 க்ளாஸ். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்றார்.

அவனுக்கு பாடம் நடத்துவதும் மேடை பேச்சிலும் மிகுந்த ஆர்வம். பெண்கள் கல்லூரி வேறு. வேறு என்ன. ஆம் என்று வேகமாக மண்டை ஆட்டினான்.

சரி நீங்க வர்றீங்கன்னு சொல்லிடறேன். திங்கட்கிழமையிலிலேர்ந்து ஆரம்பிங்க என்றார்.

அவருக்கு நன்றி கூறி விடைபெற்றான்.

ரகளையான ஒரு அறிமுகத்துடன் தனது முதல் வகுப்பை ஆரம்பித்தான் ரிஷி. ப்ரொஜெக்டர் விளக்கை உசுப்பிவிட்டு கண்ணாடி தாளான டிரான்ஸ்பெரஸியை மேலே வைத்து Programming Logics & Techniques.

கண்களை சுழலவிட்டவனுக்கு அன்று பழசாறு கோப்பையை எறிந்துவிட்டு போன ரம்யா கண்ணுக்கு தென்பட்டாள். ஆச்சர்யப்பட்டான். மெல்ல புன்னகைத்தான். அவளோ சங்கடமான ஒரு புன்னகையை திருப்பி வீசினாள்.

Overloading functions பத்தி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன் என்றவாறே வகுப்பில் கண்களை சுழலவிட்டான்.

அனைவரும் அமைதியாக இருந்தனர்.

முதல் பெஞ்சில் இருந்த ஒரு பெண்ணை பார்த்து உங்களுக்கு இட்லி செய்ய வருமா என்று கேட்டான்.

சார், நான் காரியர் ஓரியண்டட் பொண்ணு என்றாள் நக்கலாக.

ஐயோ நானும் காரியர் ஓரியண்டட் தான் மா. அதுக்கும் சமைக்கறதுக்கு என்ன சம்பந்தம்.

இன்னொரு பெண்ணை பார்த்து உங்களுக்கு தோசை சுட வருமா? என்று கேட்டான்.

இது ப்ரொகிராமிங்க க்ளாஸ் தானே என்று கிண்டல் அடித்துவிட்டு நல்லா பண்ணுவேன் சார். சட்னியும் தான் என்றது அந்த பட்டாம்பூச்சி.

நாம தோசை இட்லி எல்லாத்தையும் அரிசி மாவிலேர்ந்து தானே செய்யறோம். அதுபோல ஒரு functionஐ பல்வேறு வகையாக பயன்படுத்துவது தான் overloading function என்றான். வகுப்பில் சிரிபொலி எழுந்தது.

மீண்டும் கண்ணாடி தாளில் எழுத ஆரம்பித்தான். ப்ரொஜக்டரின் அடியிலிருந்து வரும் விளக்கொளியிருந்து அவன் கை வெண்பலகையில் பூதாகரமாக தெரிந்தது.

ரம்யாவுக்கு கை நடுங்கியது. சட்டென்று எழுந்து வகுப்பை விட்டு வெளியேறினாள்.

என்னடா இந்த பொண்ணுக்கு இன்னும் நம் மேல இருக்கற கோபம் போகலையா என்று யோசித்தவாறே வகுப்பை தொடர்ந்தான்.

வகுப்பின் இடைவெளியில் ரம்யாவின் அருகில் இருந்த பெண்ணை பிடித்து உங்க பக்கத்தில் இருந்த பெண் ஏன் நடுவிலே ஓடிப்போயிட்டாங்க என்று கேட்டான்.

சார் தப்பா நினைச்சிக்காதீங்க. அவளோட மாமா ரவீந்தர் துபாயில் வேலை செஞ்சிகிட்டு இருந்தாரு. அவரை தான் அவளுக்கு கட்டி வைக்கறதா முடிவு செஞ்சிருந்தாங்க. போன பொங்கலுக்கு அவளை பைக்கிலே அழைச்சிகிட்டு ஆர்எம்கேவி போய் அவளுக்கு புடவை வாங்கிட்டு திரும்பி வரும்போது கிண்டி கிட்டே அவருடைய வண்டி ஸ்கிட் ஆயிடுத்து. இவ எதிர்பக்கமா விழுந்துட்டா. அவர் மேல லாரி ஏறி அவரு ஸ்பாட்ல இறந்துட்டாரு. அவருடைய வலைகை துண்டாகி அவள் மேல விழுந்துடுத்து. விரல்கள் துண்டிச்சிடுத்து. அதுலேர்ந்து அவளுக்கு வலது கையில் அடிக்கடி வலி எடுக்கும். கை நடுங்கும். செயல் இழந்து போயிடும். அது மட்டுமில்ல சார், அவ எப்பெல்லாம் கைவிரல்களை வித்தியாசமா பாத்தாலும் உடனே படபடன்னு ஆயிடுவா. கையும் வேலை செய்யாது. உங்களோட கையை ப்ரொஜக்டர்லேர்ந்து பெரிசா பாத்தோன்னே அவளுக்கு ஃபிட்ஸ் வந்த மாதிரி ஆயிடுச்சு. அதனால ஓடி போயிட்டா சார்.

ஓ அப்படியா. பாவம் என்று சொல்லிவிட்டு வகுப்பில் நுழைந்தான். எதனால் அவள் அன்று தன் கோப்பையை நழுவ விட்டு உடைத்தாள் என்பதும் உணர்ந்தான்.

3

அலுவலகத்தில் மும்முரமாக இருந்த அவனிடம் கீர்த்தி வந்தாள். மச்சான், இந்த வாரம் நம்ம வீட்டிலே தான் TGIF.

TGIF – Thank God It’s FridayThank God It’s Saturday என்று இந்த புது கலாச்சாரத்தில் வெள்ளி இரவு சனி, ஞாயிறு விடுமுறையை கொண்டாடும் கூத்து நடக்கும். பெண்கள் ஆண்களையும் பெண்களையும் மச்சான் என்று அழைப்பதும் இந்த மெட்ரோ பெற்றுத்தந்த தமிழ் பரிமாணங்கள்.

ஆனால் இந்த நிறுவனம் இன்னும் பல கலாச்சார பண்பாடுகளை சீரழிக்காமல் காத்து வருகிறது என்றே சொல்லலாம். இரவு பணிகள், பல ஆண் நண்பர்கள், கழிப்பறையில் ஆணுறைகள், கற்பிழந்த பெண்கள், கற்பிழந்த ஆண்களை கட்டித்திரியும் அவமானங்கள். இது தான் இந்த வெளிநாட்டு டாலர்கள் கொண்டு வந்த கலாச்சார கருமங்கள்.

ஆனால் இந்த நிறுவனத்தின் தலைவரோ கிராமத்தில் பிறந்து வளர்ந்து இந்த அளவுக்கு முன்னேறியவர். வெளிநாட்டுக்காரனிடம் அடிமை வேலை செய்து டாலர் சம்பாதித்தாலும் அவர்கள் எந்த விதத்திலும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தக் கூடாது என்பதில் குறியாக இருந்தார். அமெரிக்கா நம்மீது நடுத்துவது ஒரு biological warfare என்று அடிக்கடி கூறுவார்.

ஒருவர் நான்கு புகை மேல் பிடிப்பதை யாராவது கண்டுபிடித்தால் தண்டனை உண்டியலில் 10 ரூபாய் போடவேண்டும். தாமதமாக வந்தால் 10 ரூபாய். ஐந்து மணிக்கு மேல் வேலை செய்தால் 25 ரூபாய். அந்த நிறுவனத்தின் சீறுடையான வெள்ளை சட்டையை அணியாமல் வந்தால் 20 ரூபாய் என்று அபராதங்கள். இவையெல்லாம் சேர்ந்து சுமார் 10ஆயிரம் ரூபாய் சேரும் ஒரு மாதத்திற்கு. அவை முறையோடு அநாதை ஆசிரமங்களுக்கு வழங்கப்படும்.

இதுபோல TGIFக்கு ஒவ்வொரு குழுவுக்கும் 5000 ரூபாய் கிடைக்கும். நல்ல தலைவர் இருந்தால் நல்ல தொண்டர்கள் உருவாவது போல, 4500 ரூபாய் மீண்டும் அநாதை ஆசிரமத்திற்கு அளித்துவிட்டு வெறும் 500 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு வாராவாரம் உடன் பணிபுரிபவர்கள் வீட்டில் குடும்பத்துடன் ஒரு கண்ணியமான பொழுபோக்கு. எல்லா குழுக்களும் சேர்ந்து தரும் பணமே லட்சத்தை தாண்டும்.

வெள்ளி இரவு தானே என்று சொல்லி பீயருக்கும் பிராந்திக்கு செலவு செய்து, ஐந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஒரு கோழி பிரியாணிக்கு 2000 ரூபாய் கொடுத்து தண்டச் செலவு செய்யாமல் இது போன்ற நல்ல காரியங்களுக்கு செலவிடுவதாலே அந்த நிறுவனத்திற்கு சமூகத்திலும் பெரிய மதிப்பு இருந்தது. பெற்றோர்களும் தம் பிள்ளைகள் அந்த நிறுவனத்தில் சேருவதையே விரும்பினார்கள். காலையில் வேலைக்கும் செல்லும் தம் 20 வயது பெண் மாலையில் கற்பமாக வருகிறாளோ இல்லை யாரோ ஒருவனுடன் வந்து இவன் தான் என் புருஷன் என்று சொல்வாளோ என்ற பயத்தில் தான் இன்று மாநகரங்களில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அதற்கு இது போன்ற சில நிறுவனங்கள் விதிவிலக்காக இருந்தது.

ஓகே. இந்த வாரம் உங்க வீட்டிலே ஜமாய்ச்சிடலாம் என்றான் ரிஷி. கீர்த்தி சென்று அவள் குழுவில் இருந்த மற்ற நண்பர்களுக்கும் விஷயத்தை தெரிவித்தாள்.

Link to comment
Share on other sites

கதை நன்றாகப் போகிறது இவான்

நன்றி ரசிகை. தொடர்கிறேன்.

Link to comment
Share on other sites

4

ரம்யா வகுப்புக்கு வருவாளோ மாட்டாளோ என்று ஆவலாக வந்தவனுக்கு அவளை கண்டதும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

மீண்டும் அந்த சங்கடமான மன்னிப்பு கலந்த புன்முறுவல் அவளிடமிருந்து வந்தது. அதை ஏற்றுக் கொண்டு வகுப்கை துவக்கினான்.

Over head projector-ஐ தவிர்த்துவிட்டு LCD Projector எடுத்து வைத்தான். தன் மடிகணினியை அதில் இணைத்துவிட்டு அவளை பார்த்து ஒரு ஆறுதல் பார்வையை வீசினான்.

நேராக கணினியில் தட்டி கணினி பாடத்தை நடத்தினான்.

பிறகு ஏற்கனவே தயார் செய்து கேள்வித்தாளை ஒவ்வொரு மாணவிக்கு அளித்தவாறே வந்தான். ரம்யாவிடம் வந்ததும் தான் அவளுக்காக எழுதி வைத்திருந்த ஒரு காகிதத்தை தந்தான்.

இந்த கைக்கு என் கை துணையாக இருக்கும். கவலை வேண்டாம். என் கை தினம் கட்டித்தழுவும் அலைபேசியின் எண் 98410XXXXX. உங்கள் எண்?

என்று எழுதியிருந்தான் அதில்.

அனைவரிடமிருந்தும் பதில் தாட்களை பெற்றுக் கொண்டு அவளிடம் வந்தவன் அதில் நன்றி எழுதி அவள் தன் எண்ணை எழுதியிருந்ததை பார்த்து ஆனந்தகளிப்பில் ஆழந்தான்.

வகுப்பு முடிந்து வெளியில் வந்தவள் அவன் பஜாஜ் சேடக்கிற்கு மாறியிருந்ததை கவனித்தாள். அவளுள் நன்றியுணர்ச்சியை மீறி ஒரு புதிய உணர்வு உருவாகியிருந்தது.

காதலை அறிய முடியுமா? வலிகள் பல விதம் உண்டு. தலைவலி, வயிற்று வலி என்று. எங்கு வலிக்கிறது என்று நமக்கு நன்றாக தெரியும். ஆனால் காதல் ஒரு வலியோ? வலியாக இருந்தால் எங்கே வலிக்கிறது? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் தோன்றும் இந்த அற்புதமான உணர்வுக்கு காமம் ஒரு காரணமா, அல்லது பாதுகாப்பு உணர்ச்சியா அல்லது வேறென்ன. அவளால் அவளுடைய உணர்ச்சியின் பெயர் கண்டு கொள்ளமுடியவில்லை.

ரவீந்தர் மாமாவை தான் கட்டி கொள்ள வேண்டும் என்று அவள் அறிந்திருந்தாலும் அவன் மேல் அவளுக்கு காதல் ஏற்படவில்லை. அவனும் ஒரு கண்ணியமான உறவையே வைத்திருந்தான்.

தனக்கு துணையாகப் போகும் ஒரு பெண்ணை விரும்பும் ஆண்மகன் அவரசப்படுவதில்லை. தனக்கே சொந்தமாகும் ஒருவளை தூரத்திலிருந்து ரசிக்கிறான். சிறிய விளையாடல்கள், சீண்டல்கள். ஆனால் காமம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. படுக்கை தேடிய அலைவதில்லை. பக்கம் பக்கமாக கையெழுத்திட்டு பல காசோலைகளில் கையெழுத்துப் போட்டு, முன் பணம் கட்டி, வண்டி பதிவு செய்ய காத்திருந்து, நிறம் தேர்ந்தெடுத்து, புத்தம் புதிய கார் வாங்கி வீட்டின் முன் கொண்டு வந்து, எலுமிச்சையின் மேல் குங்குமம் வைத்து அதை காரின் சக்கரத்தில் விட்டு மிதித்து, ஒரு மாலையை இட்டு வண்டிக்கு குங்குமம் வைத்து, தான் இந்த வண்டிக்கு சொந்தக்காரன் என்ற சொல்லாமால் தெருவில் இருந்தவரிடம் சொல்லி ஒரு மூன்று அடி தூர நின்று அந்த காரை ரசிக்கும் காரின் சொந்தக்காரர். சட்டென்று அருகில் சென்று அந்த காரின் கண்ணாடியின் மேல் இருந்த ஒரு சிறிய தூசியை தன் கைக்குட்டை எடுத்து துடைக்கும் அந்த உணர்ச்சி. அந்த பொறுமை. அந்த அழகை ரசிக்கும் கண்கள்.

பல சமயம் வேகம் உறவுகளை பாதிக்கிறது. உறவுகளை துண்டிக்கின்றது. வேகம் எப்போதும் எதிலுமே நல்லது அல்ல. அதை ரவீந்தர் அறிந்திருந்தான்.

கல்யாணத்திற்கு முன் கடலலைகளுடன் உருண்டு புரண்டு, கை எங்கேயெல்லாம் வைக்கமுடியுமா அங்கெல்லாம் வைத்து ஆண்-பெண் உறவே காமத்தின் அடிப்படையாக கொண்டு திரியும் இந்த வளர்ந்த நாகரீக கற்கால மிருகமனிதன், இந்த நூற்றாண்டின் பார்வைகளில், இன்னும் சிலர் ரவீந்தரை போல் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்ன உணர்வு இது என்று அவளுக்கு தெரியவில்லை என்றாலும் அவள் ரவீந்தர் இறந்த பிறகு முதல் முறையாக சந்தோஷமாக இருப்பதை உணர்ந்தாள். பெண்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை பல விதமாக பார்க்கலாம். அவர்கள் முடியை கோதிக் கொள்வதும், கழுத்தில் உள்ள சங்கலியுடன் விளையாடுவதும், டிரெயினில் கூட்டம் இருந்தாலும் அதை ரசிப்பதும், டிராபிக் ஜாமானாலும் அதனால் வெறுப்படையாமல் இருப்பதும் வைத்து உணரலாம்.

அன்று ரம்யா இதையெல்லாம் செய்தாள்.

5

ராதா நகரில் இருந்த கீர்த்தியின் வீட்டுக்கு வெள்ளி மாலை 8 மணிக்கு வந்து சேர்ந்தான். .ஒரு ப்ளாட்டில் இருந்த பழைய வீட்டை இடித்து நான்கு வீடு கட்டி தனித்தனியாக விற்பது தானே இன்றைய வழக்கம். அதுபோல கட்டப்பட்ட வீடு.

முன்புறம் இருந்த வீட்டை கடந்து பின்னால் இருந்த வீடு தான் கீர்த்தியுடையது. முதல் வீட்டை கடந்தவனுக்கு ஒரு ஆச்சர்யம். ஹாலில் உட்கார்ந்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்த ரம்யா கண்ணுக்கு பட்டாள். பலே ரம்யாவின் வீடு இது தானா? நெருங்கிட்டோம் என்று நினைத்தவன், மீண்டும் பின்னால் வந்து, கதவை லேசாக தட்டிவிட்டு, இந்த கீர்த்தி வீடு எங்கிருக்கு என்று வேண்டுமென்றே அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

இவனை கண்டதும் அவள் நெளிந்தாள். படபடப்புடன் சமையலைறயை பார்த்தாள். அம்மா சமையலில் மும்முரமாக இருந்தாள். அப்பா படுக்கையறையில் எதையோ போட்டு உருட்டிக் கொண்டிருந்தார்.

அடு.... அடுத்த வீடு என்றாள் பதட்டத்துடன்.

அதை ரசித்தவாறே, அப்படியா கொஞ்சம் தண்ணி கிடைக்குமா என்றான்.

அவள் பதட்டம் குறையாமல் உள்ளே ஓடிச் சென்று ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை வாங்கும் போது அவள் வலது கையை பிடித்து நம்பி கை வை என்று சொல்லிவிட்டு நீர் அருந்தாமல் விலகினான்.

க்ளாஸ் கீழே விழுந்து உடையும் சத்தம் கேட்டது. என்னடி ஆச்சு என்று அவள் அம்மா கத்திக் கொண்டு வருவது கேட்டது. சிரித்தவாறே மொட்டை மாடி நோக்கி சென்றான்.

மொட்டை மாடியில் ஜமாக்காளம் விரிக்கப்பட்டு, தண்ணீர் குவளைகள் வைக்கப்பட்டிருந்தது. ஒரிருவர் வந்திருந்தார்கள். ஒரு புறம் தீணி பண்டங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கீர்த்தி ஓடி வந்து, என்ன மச்சான் அப்பா-அம்மாவை பாக்காம மேலே வந்திட்டே என்றாள்.

பாக்கலாம் மச்சி. முதல்ல ரம்யாவை பார்டிக்கு வர சொல்லு என்றான்.

ஏய் ரம்யாவையா? அவளை எப்படி உனக்கு தெரியும் என்றாள் ஆவலுடன்.

அப்புறம் சொல்றேன். முதல்ல அவளையும் வரச்சொல்லு என்றான்.

ஏய், அவ வரமாட்டாடா என்றாள் கீர்த்தி.

வருவா. நீ கூப்பிடு என்றான்.

அடுத்த சில நிமிடங்களில் பளீச்சென்று மஞ்சள் சுடிதாரில் அவதரித்தாள் ரம்யா.

இவனை பார்த்து சங்கடத்துடன் நெளிந்தாள். ஒரு காகித தட்டில் இருந்த பஜ்ஜிகளை எடுத்துக் கொண்டு மாடியின் விளிம்புக்கு சென்று நின்றாள் ரம்யா.

ரிஷியும் சில பஜ்ஜிகளை எடுத்துக் கொண்டு அவள் அருகில் சென்று நின்றான்.

தாங்கஸ் என்றான்.

எதுக்கு?

வந்தததுக்கு.

நான் தான் நன்றி சொல்லனும்.

எதுக்கு?

சாலையின் ஓரத்தில் நிற்க வைத்திருந்த அவனுடைய பஜாஜ் சேட்டக்கை விரல் நீட்டி காண்பித்தாள்.

ஹா ஹா. அதுவா. அதுக்கு எதுக்கு தாங்க்ஸ். இனியும் பைக்கில் போய் வேறு யார்மேலேயாவது காலை தூக்கி எட்டி உதைச்சிட்டா கொடுக்கறதுக்கு இரண்டு இதயங்கள் வேண்டுமே?

அவளுடைய கண்கள் அவன் கண்களை சந்தித்தது.

அதுமட்டுமில்லை. அந்த LCD Projector-க்கும் ஒரு தாங்கஸ்.

ப்ரொஜக்டருக்கு தான் தாங்கஸா? கொண்டு வந்த எனக்கு இல்லையா? என்றான் சிரித்துக் கொண்டே.

உங்களுக்குதான் நன்றி என்றாள். அவள் குரல் நடுங்கியது.

டாக்டர்கிட்ட காண்பிச்சிங்களா என்றான். அவன் இடது கை அவளுடைய வலது கையை தொட்டும் தொடாமலும் நின்றது. காதலில் இருக்கும் இருவருடைய அருகாமையும் தொடாமலும் உடல்கள் பேசிக் கொள்ளும் விந்தை. அவளுடைய கை அவனுடைய கைகளுக்கு ஹலோ சொன்னது.

காண்பிச்சாச்சு. நிறைய மருந்தும் சாப்பிட்டாச்சு.

உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லையே. மனசு தான்.

ஆமா. Psychiatrist கிட்டேயும் காட்டியாச்சு. ஒன்னும் தேறலை என்றாள்.

அவன் திரும்பி நின்றான்.

அவனுடைய வலது கையால் அவளுடைய வலது கையை இறுக பிடித்தான்.

இந்த கையை நான் எப்போதுமே பிடிச்சிகிட்டா? என்று அவளை பாக்காமலே கேட்டான்.

சென்னையின் மாலை. வெயில் காற்று போய் அருமையான தென்றல் வீசியது. அருகில் இருந்த மரங்கள் அவர்களுடைய பேச்சை சுவராஸ்யமாக கேட்டவாறே தலையசைத்துக் கொண்டிருந்தன.

அவள் சட்டென்று கைகளை விடுவித்தாள். திரும்பி நடக்க முயன்றாள்.

அவள் இடது கையை பிடித்து நிறுத்தினான். நான் ஒரு casual dating கோஷ்டின்னு நினைக்கறீங்களா?

இல்லை. ஆனா இதெல்லாம் ரொம்ப வேகமாக நடக்குது.

ரம்யா.... அவளை கூப்பிட்டான். ரம்யா, இரண்டு நிமிஷம் பழகனாலும் இருபது வருஷம் பழகனாலும் ஆரம்பத்திலே நமக்கு ஏற்படற நம்பிக்கை தான் கடைசி வரைக்கும் என்றான்.

அவள் பதில் சொல்லாமல் திரும்பி நடந்தாள். கூட்டத்துடன் கலந்துக் கொண்டாள்.

அனைவரும் வந்ததும் ஆட்டம், பாட்டு, சீட்டு கட்டு என்று களை கட்டியது. அவன் அருகிலே அன்று முழுவதும் அமர்ந்திருந்தாள் ரம்யா. அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. பேச்சு தேவையில்லை. அந்த உடல்கள் வாயில்லாமல் மௌனமாக காதலித்துக் கொண்டிருந்தன. அந்த இரண்டு மனங்கள் ஒன்றை ஒன்று ரசித்துக் கொண்டிருந்தன. இருவருக்கும் அந்த இரவு முடியக்கூடாது என்று தோன்றியது. இயற்கை தன் பணியை என்று நிறத்தியிருக்கிறது? அந்த ஆட்டம் பாட்டமும் முடிவுக்கு வந்தது. அந்த இரண்டு உயிர்களும் தற்காலிகமாக பிரிந்தன.

இப்போதே ரம்யாவின் வீட்டுக்குள் நுழைந்து அவள் அப்பா-அம்மாவின் கால்களில் விழுந்து அவளை தன்னுடன் ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு போகவேண்டும் போல் இருந்தது அவனுக்கு. தென்றல் அவன் உடலில் ஒரு சிலிர்பை ஏற்படுத்தி சென்றது. முகத்தில் அடித்த ஜி.எஸ்டி சாலையின் காற்றை ரசித்தவாறே வீடு சென்று அடைந்தான்.

6

இந்த வெள்ளி சந்திப்பு முடிந்து சுமார் 10 நாட்கள் இருக்கும். அவளிடமிருந்து போன் எதுவும் வரவில்லை. பொறுமை இழந்து ரிஷி அவள் எண்ணை தன் செல்பேசியில் தட்டினான்.

அவளுடைய இனிமையான குரல் மறுபுறம் ஹலோவ் என்று ஒலித்தது.

நான் ரிஷி.

எப்படி இருக்கீங்க.

நான் போன் பண்ண பிறகு எப்படி இருக்கறேன்னு கேட்கறது நியாயமே இல்லை. உங்களுக்கு என்னோட பேசறதுல்ல என்ன ஈகோ.

அப்படி இல்லை ரிஷி. நான்.....

என்ன....

வேண்டாம் ரிஷி. நம்முடைய நட்பு வளர்றது அவ்வளவு நல்லதில்லை.

ஏன்

தெரியலை.

ரம்யா, உங்களுக்கு என்னை பிடிக்கலையா.

அது இல்லை ரிஷி. வேண்டாம்.

எதுக்குன்னு தெரிஞ்சிக்கற உரிமை எனக்கு உண்டா இல்லை அதுவும் இல்லையா.

ரிஷி. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை.

சரி என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

செல்பேசியின் மின்கலத்தை எடுத்து பையில் போட்டுக் கொண்டான்.

ரம்யாவுக்கு அந்த அழைப்பு இப்படி முடிந்தது மனதை வெகுவாக பாதித்திருந்தது. அவனுடைய எண்ணை மீண்டும் முயன்றாள். வாடிக்கையாளர் கிடைக்கவில்லை என்று வந்தது.

தன்னுடைய கணினியின் முன்பு அமர்ந்த ரிஷிக்கு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. என்ன பிரச்சனை இவளுக்கு. என்னிடம் என்ன குறை. அவளிடம் இருந்த குறைக்கும் நானே ஆறதலாக இருக்கிறேன் என்றல்லவா சொன்னேன். சாதி-மத பிரச்சனையா. அவளுக்கு என்னை பிடிக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

கணினியில் உலாவியை திறந்து கூகிள் தேடுபொறியில் ரம்யா என்று அடித்து தேடு எனும் பித்தானை தட்டினான்.

கீர்த்தி அவனிடம் வந்து உங்களுக்குள்ள என்ன நடக்குது.

யாருக்குள்ளே

உனக்கும் ரம்யாவுக்கும்.

ஒன்னுமில்லை.

ஒன்னுமில்லையா. அவ உனக்காக என்னுடைய டைரெக்ட் போன் லைன்ல காத்திருக்கா என்றாள்.

சட்டென்று எழுந்து அவளுடைய மேசைக்கு சென்று தொலைபேசியை எடுத்து சொல்லுங்க என்றான்.

ரிஷி....

ம்.

கோபமா....

கோபப்பட என்ன இருக்கு. உங்களை பிடிச்சிருக்குன்னு நான் சொன்னேன். உங்களோடவே இருக்கனும் அப்படின்னு நான் தான் சொன்னேன். நீங்க எதுவும் சொல்லலை. இந்த உறவு வேண்டாம்னு சொல்லிட்டீங்க. நாம் காதலிக்கறவங்க நம்மளை காதலிக்கனுங்கற கட்டயாமில்லையே.

என்னை புரிஞ்சிக்கோங்க. என்னுடைய குறைப்பாட்டோட நான் யாருடைய வாழ்கையிலும் குளறுபாடு செய்ய விரும்பலை என்றாள். அவள் குரல் தளர்ந்திருந்தது.

ரம்யா, உங்க கிட்டே என்ன குறை இருக்கு. என்கிட்டே என்ன குறை இருக்குன்னு பேச வேண்டாம். உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா.

அவள் மௌனமாக இருந்தாள்.

இந்த முறை அழைத்தது அவள் தான். இணைப்பை துண்டிக்கும் பொறுப்பு அவளுடையது தான். அவன் காத்திருந்தான்.

ரிஷி, என் மேலே கோபம் வேண்டாம். இதோட நாம் நிறுத்திப்போம். இது வளர்றது நம்ம இரண்டு பேருக்கும் நல்லதில்லை.

இது நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.

என்னால நேரடியாக பதில் சொல்ல முடியாது ரிஷி. என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள் ரம்யா. அவள் மனம் கனத்திருந்தது. அவளுடைய முடிவு சரியா தவறா என்று உணராமல் தவித்தாள்.

என்றோ ஒரு நாள் அவன் தொலைபேசியில் அழைப்பான் என்பதை அறிந்திருந்தாள். அது என்று நடந்துவிடுமோ என்றும் பயந்திருந்தாள். சீக்கிரம் அவன் கூப்பிட்டால் இந்த விஷயத்தை சொல்லி முடித்து விடவேண்டும் என்று துடித்தாள். அப்படி அவன் கூப்பிட்டால் என்ன சொல்ல வேண்டும் என்றும் மனதுள் பேசி வைத்திருந்தாள்.

ஆனால் அவன் இன்று கூப்பிடும் போது அவள் சற்றும் ஏதிர்பாராத நேரமாக இருந்ததால் நிலைகுலைந்து போனாள். அவன் ஆரம்பித்த விதம் முற்றிலும் அவள் நினைத்ததை விட வேறாக இருந்தது. அவனுடைய தடாலடி கேள்விகள் அவளை அசைத்திருந்தன.

எனக்கு ரிஷியை பிடித்திருக்கிறது. ஆனால் என் மீது பரிதாபப்பட்டு அவன் என்னை காதலித்தால் அதை நான் ஏற்க முடியாது. அது போலவே என்னுடைய குறையோட அவனுடைய துணையை ஆறுதலாக நினைத்து அவன் காதலை ஊக்கப்படுத்துவதும் தவறு என்று நினைத்துக் கொண்டாள்.

Link to comment
Share on other sites

கதை விறுவிறுப்பாக போகிறது..

"ரம்யா.... அவளை கூப்பிட்டான். ரம்யா, இரண்டு நிமிஷம் பழகனாலும் இருபது வருஷம் பழகனாலும் ஆரம்பத்திலே நமக்கு ஏற்படற நம்பிக்கை தான் கடைசி வரைக்கும் என்றான்."

ரொம்ப உண்மையான வரிகள்

Link to comment
Share on other sites

7

அடுத்த சில நாட்களும் வகுப்பில் அவன் அவள் கண்களை சந்திக்கவே இல்லை. வந்து பாடம் நடத்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். அதுபோல கேள்வி தாட்களிலும் அவள் எதிர்பார்த்த எந்த சிறு குறிப்புகள் அவனிடமிருந்து வரவில்லை.

அவள் அவனுடன் பேச ஏங்கினாள். ஆனால் பேசக்கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். இந்த கை பிரச்சனை வந்ததிலிருந்து ஸ்கூட்டியில் வருவதை நிறுத்தியிருந்தாள். பலமுறை பேருந்தினுள் கைப்பிடியை சரியாக பிடிக்க முடியாமல் விழுந்திருக்கிறாள். அப்போது பல பேர் தூக்கி அவளை இருக்கையில் அமர்த்தியபோதெல்லாம் உடல் ஊனம் போல குறையாகவிட்டதே என்று நினைத்து வருந்தினாள். பேருந்து அதிவேகமாக சென்று பிரேக்கை அடித்து நிறுத்தும் சத்தத்தில் கூட அவள் கண்முன் அந்த விபத்து சென்று போகும். பயம் உள்ளிருந்து வந்து செல்லும்.

சில சந்திப்புகள். சில வார்த்தைகள். ஆழமான அடிகள். காயம் இருபக்கமும். லாபில்லாத நஷ்டத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு உருவாகும் காதல். காதலில் சிறந்தது தோல்வியாகும் காதலே. காரணம் அதில் சோதனைகள் அதிகம். தான் காதலித்தவர் அழிந்து போக வேண்டும் என்று நினைப்பது ஒரு காதல். தான் காதலித்தவர் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பது இன்னொரு காதல். தான் காதலித்தவரின் துணை இறந்து மீண்டும் நம்மிடமே நம் காதல் திரும்ப வேண்டும் என்று நினைப்பது இன்னொரு காதல். தனக்கு கிடைக்காத காதலர் யாருக்குமே கிடைக்கக்கூடாது என்பது இன்னொரு வகை காதல்.

தானே முன் வந்து காதலை முறியடித்து தான் காதலித்தவரை காப்பாற்றி நினைப்பது உன்னத காதல். ரம்யா ரிஷியை எந்த வித பாதிப்புக்குள்ளும் உள்ளாவதை விரும்புவதில்லை. தன்னுடைய உடல் நிலையால் அவன் மனம் வருந்துவதை கூட அவள் விரும்பவில்லை.

சார், இந்த பிரோகிராம் சரியா என்று அவனிடம் ஒரு காகிதத்தை நீட்டினாள். தனக்கு ஏதாவது செய்தி இருக்கும் என்று ஆர்வமாக அதை வாங்கியவனுக்கு ஏமாற்றமே இருந்தது. அதில் கணினி சூத்திரங்கள் மட்டுமே இருந்தன. தன்னுடைய நிலைபாடு மாறவில்லை என்பதை அவள் உணர்த்திவிட்டாள்.

ஆனால் அவனுடன் பேச வேண்டும் என்ற ஆர்வத்தை அவளால் அடக்கமுடியவில்லை.

அதை அறிந்தவனாய், அவன் அந்த காகிதத்தில் சிறு திருத்தங்கள் செய்துவிட்டு அனுப்பிவிட்டான் ஒரு வார்த்தை கூட பேசாமல்.

அவள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்து தன்னிடத்தில் அமர்ந்தாள்.

அடுத்த சில வாரங்களும் ரணமாய் இருந்தன. பாடத்தின் முதல் பகுதி முடிந்திருந்தது. அவனும் தன்னுடைய இறுதி பாடத்தை நடத்தி முடித்தான். அடுத்த பகுதி எடுக்க நான் வந்தாலும் வருவேன், சொல்வதற்கில்லை. அப்படி எனக்கு நேரம் இல்லையென்றால் என்னுடைய நண்பர்கள் யாராவது வருவார்கள் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றான்.

கல்லூரியின் முதல்வர் ரிஷியின் பாடங்கள் வெகு சிறப்பாக சென்றதாகவும், மாணவிகளும் மிகவும் பயன் பெற்றார்கள் என்று சொல்லி அவனுக்கு நன்றி கூறி அவனுக்கு சேரவேண்டிய சம்பளத்தை காசோலையாக எடுத்து நீட்டினான். நன்றி கூறி தன்னுடைய பஜாஜில் ஏறினான்.

8

தன் பெற்றோர்களை விட்டு ரிஷி மட்டும் தனியாக சென்னையில் தங்கியிருந்தாலும் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பெரிய வீட்டை வாடகை எடுத்து தங்கியிருந்தான் ரிஷி. இந்த வாரம் அவனுடைய சுற்று – வெள்ளிக்கிழமைக்கு நன்றி கடவுளே கொண்டாட்டங்களுக்கு.

வழக்கம்போல 4500 ரூபாயை அலுவலகத்தின் அநாதை ஆசிரமத்திற்கான உண்டியலில் போட்டுவிட்டு 500 ரூபாய் எடுத்துக் கொண்டு நொறுக்த்தீணியும் குடிக்க மென்பானங்களும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் நண்பர்கள்.

ஹாலில் சோபா செட்டுகளை சீர் செய்து, தம்போலா, சீட்டுக் கட்டு இன்னும் சில விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சோனி ஸ்டீரியோவில் ஏ ஆர் ரஹ்மான் டிரெம்ஸ்களை சுளுக்கெடுத்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொருவராய் வந்து சேர, கீர்த்தியுடன் நுழைந்த ரம்யாவை பார்த்து எழுந்த ஆச்சர்யத்தை அடக்கிக் கொண்டான். வா கீர்த்தி, வாங்க ரம்யா எப்படியிருக்கீங்க.

நல்லா இருக்கேன் என்று சொல்லிவிட்டு ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்தாள்.

கீர்த்தி ரிஷியிடம் கிச்சின்ல ஏதாவது ஹெல்ப் வேண்டுமா என்று கேட்க, நான் போறேன் என்று சொல்லி உள்ளே நுழைந்தாள் ரம்யா.

என்ன பண்ணியிருக்கீங்க என்று ரம்யா ரிஷியை கேட்க, தானும் எதுவும் பேசவேண்டாம் என்று அவன் எடுத்துக் கொண்ட உறுதி சுக்கு நூறானது.

வெஜிடேபிள் பிரியாணி, முட்டை பூர்ஜி, பிரெஞ்ச் பிரைஸ் இது தான் மெனு என்றான்.

என்ன பாக்கியிருக்கு என்ற அவள் கேட்க, நான் கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் பாக்கியிருக்கு ரம்யா என்றான் ஏக்கமாக.

அவள் அவனை நேராக பார்த்தாள்.

ஏன் என்னை பிடிச்சிருக்கு உங்களுக்கு....

என்ன முட்டாள்த்தனமான கேள்வி ரம்யா

சொல்லுங்க

தெரியலை

என் மேலே பரிதாபப்படறீங்களா.

புல்ஷிட்.

பின்னே..

என்ன கேள்வி இது ரம்யா. எனக்கு உங்களை முதல் நாள் பார்த்தப்பவே பிடிச்சிடுத்து. உங்களுக்கு ஒரு மாமா இருந்ததோ, அவருக்கு உங்களை கல்யாணம் பண்ணிவைக்கறதா இருந்ததோ, அந்த விபத்து நடந்ததோ, அதனாலே உங்கள் கை இப்படி ஆச்சிங்கற விஷயமெல்லாம் அப்புறம் தான் தெரியும். ஸ்கூட்டர் கூட இனிமே யாரையும் காலால எட்டி உதைக்க கூடாதுன்னு வாங்கனது.

அப்படியாவது குறையோட ஏன் என்னை விரும்பனும்

என்ன பேசறீங்க ரம்யா, உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி, எனக்கு அந்த மாதிரி ஒரு ஆக்ஸிடெண்டல கை போயிருந்து அதை பாத்து உங்களுக்கு இது மாதிரி ஃபிட்ஸ் ஏற்பட்டிருந்தா உங்களை விட்டுட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேனா.

அது வேறு விஷயம் ரிஷி. அது தான் கல்யாணத்துக்கு முன்னமே தெரிஞ்சிப்போச்சே.

அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

கையில் இருந்த பாத்திரங்களை சமையலறை கல்மேசையின் மீது வைத்தான். டிஷ்யூ பேப்பரால் கைகளை துடைத்துக் கொண்டான்.

மெதுவாக அவளுடைய இரண்டு கைகளையும் தன் கைகளில் எடுத்துக் கொண்டான். ரம்யா, இந்த மாதிரி கேள்விகளெல்லாம் கேட்டு என்னை ரொம்ப கஷ்டப்படுத்தறீங்க. சில நேரம் நீங்க பேசாம இருக்கற கஷ்டமே மேல்னு தோணுது.

ஆண்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்கள் பெண்களை விட அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள். ஆனால், அவர்கள் அதை வெளியே காட்டிக் கொள்வதில்லை. சிலர் அழுவதை அவமானமாகவும் நினைக்கிறார்கள். பெண்கள் அழுதுவிடுவதால் அவர்களை சமுதாயத்தின் கண்களுக்கு மென்மையானவர்களாக தெரிகிறார்கள். அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவனுடைய காயங்களுக்கு காரணமாயின.

மன்னிச்சிக்கோங்க ரிஷி. இந்த கேள்விகளை கேட்காம உங்க காதலை ஏத்துகிட்டா நான் சுயநலவாதியாயிடுவேன். அவள் அவனுடைய கைகளை விடுவிக்க முயலவில்லை.

கீர்த்தி அவளை கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தாள். இருவரையும் சந்திக்க வைக்கவேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள். அதனால் சமையலைற்ககுள் நுழைந்து அவர்களுடைய தனிமைக்கு இடையூறாக்க விரும்பவில்லை. மெல்லிய குரலில் நண்பர்களையும் உள்ளே நுழைய வேண்டாம் என்று சொல்லியிருந்தாள்.

எங்கு இருக்கிறோம் என்று கூட தெரியாமல் அந்த இரண்டு இளம் நெஞ்சங்கள் எண்ணங்களை பரிமாறிக் கொண்டிருந்தன.

வேண்டாம் ரம்யா. கேள்வி கேட்டு வர்ற நம்பிக்கை வேண்டாம். எதுவும் பேச வேண்டாம்.

இல்லை ரிஷி. பேசனும். நிறைய பேசனும். என்னோட எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியனும். நீங்க நிஜமான பதில்கள் சொல்லனும். காதல் உங்கள் உண்மையான பதில்களை மறைக்கக்கூடாது.

ரிஷி கைகளை விடுவித்தான். அவன் களைத்திருந்தான். அவளுடைய குறையினால் வந்த அனுதாபம் தான் அவள் மேல் காதல் எனும் அவளுடைய எண்ணத்தை எப்படி மாற்றுவது.

மெதுவாக அவனு அருகில் வந்து தன்னுடைய வலது கரத்தால் அவனுடைய இடது கையை பிடித்தாள் ரம்யா. அவளுக்கு அவன் வேண்டும். ஆனால் அதற்கு முன் அவளுடைய சந்தேகங்களுக்கு தெளிவு வேண்டும். ஒரு வேளை தெளிவு கிடைக்காமல் போனால் அவன் வேண்டாம் என்று இல்லை. அந்த முடிவை அவளாலும் யோசித்து பார்க்கமுடியவில்லை. ஆனால், ஒன்றும் கேட்காமல் என்னை ஏற்றுக் கொள் என்று அவன் சொல்வதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஞ்ஞானம் இருதய மாற்று சிகிச்சை சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் ஒரு சிறிய குறை அவளுடைய காதலை 16ம் நூற்றாண்டு காதலாக மாற்றிவிட்டிருந்தது.

அவள் வலது கையை இறுக பிடித்தான். இதைவிட தன்னுடைய உறுதியை எப்படி சொல்வது அவளிடம். தன்னுடைய காதலை அவளுடன் இருக்கவும் இறக்கவும் அவன் எடுத்திருந்த முடிவை.

ரம்யா, நீங்க கேட்கற எந்த கேள்விக்கும் என்கிட்டே பதில் இல்லை. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். உங்களோட இருக்க விரும்பறேன். இந்த கை பிரச்சனை சரியாயிடும். கொஞ்ச நாள்ல. அதுக்கா நமுக்குள்ள எந்த விரிசலும் வராது. உங்க கையை பிடிச்சிக்கனும். விடாது பிடிச்சிக்கனும்.

எனக்கு கொஞ்சம் நேரம் தேவை ரிஷி.

எத்தனை நாள் ஆகும். வாரம் ஆகும். சினிமால வர்ற மாதிரி வாழ் நாள் முழுக்க உனக்காக காத்திருப்பேன்னு சொல்ல மாட்டேன். நான் உங்களோட வாழ விரும்பறேன். உங்களுக்காக காத்திருக்க விரும்பலை.

புரியுது ரிஷி. ஆனா....

வேண்டாம் ரம்யா. எதுவம் பேசாதீங்க. என்னிக்கி உங்களுக்கு தோணுதோ அன்னிக்கி போன் பண்ணுங்க.

அவள் ஏதும் பேசாமல் ஹாலுக்கு திரும்பினாள். அவள் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. ஒரு வெற்று உணர்வு இருந்தது. ஏன் அவன் பேச அஞ்சுகிறான். ஏன் அவனால் என்னை சமாதானப்படுத்த முடியவில்லை. அவனால் முடியவில்லையா அல்லது சமாதானப்படுத்த விரும்பவில்லை. மறுபடியும் மறுபடியும் காதலிக்கிறேன் என்று சொல்கிறானே தவிர என் கேள்விகளை ஏன் சந்திக்க பயப்படுகிறான்.

அவளால் விளையாட்டில் ஆர்வம் செலுத்த முடியவில்லை. அவனோ சகஜமாக இருப்பது போல் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான். தன்னிடம் அவள் தன்னுடைய காதலை இன்னும் சொல்லவில்லை என்பது மட்டும் அவனை உறுத்திக் கொண்டிருந்தது.

கீர்த்தியிடம் தாங்ஸ் மச்சி என்றான்.

ஏதாவது முன்னேற்றம் உண்டா நிலைமையில் என்று கேட்டாள்.

அவ ரொம்ப பாதுகாப்பின்மையா இருக்கா கீர்த்தி. பயப்படறா. சந்தேகப்படறா. அவள் மேலே சிம்பதி இருக்குன்னு நினைக்கிறா. அவளுக்கு எப்படி சொல்லி புரியவைக்கறதுன்னு தெரியலை கீர்த்தி.

ஹவ் சீரியஸ் ஆர் யூ என்ற வினவினாள் கீர்த்தி.

ஐயாம் சீரியஸ் லைக் ஏ ஹெல் என்றான்.

சரி. என்கிட்டே விடு. என்கிட்டே சொல்லாம அவளை கான்டாக்ட் பண்ணாதே. அவ போன் பண்ணா என்ன பேசறான்னு சொல்லு என்கிட்டே.

சரி. தாங்க்ஸ் எனிவே.

டேக் கேர்டா என்று விட்டு கீர்த்தி வெளியேறினாள். மற்ற நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த காதல் தத்துவங்களை சொல்லி விலகினார்கள்.

காதலித்து பார். இரண்டு காதல் அனுபவங்கள் ஒரு சேர இருப்பதில்லை. காதலித்து வெற்றியடைந்த ஒருவரிடம் அறிவுரை கேட்டு இன்னொருவர் வெற்றியடைய முடியாது. காதலில் தத்துவங்கள் வேலைக்கு ஆவதில்லை. காதலுக்கு சூத்திரங்கள் இல்லை. இதற்கு யாருடைய உதவியும் தேவையிருக்காது. காதல் நீங்கள் நேராக இறங்க வேண்டிய விஷயம். இடைதரகர் இல்லை. கூடவும் கூடாது. நண்பர்கள் உதவியை நாடலாம். ஆனால் அவையெல்லாமே உதவிக்கு வரும் என்றும் நம்பக்கூடாது. காரணம் உலகில் இருக்கும் எந்த இரு மனிதரும் எண்ணங்களில் ஒற்றுமையாக இருப்பதில்லை. அவ்வாறு இருக்க இரண்டு காதல் கதைகள் ஒன்றாக எப்படி இருக்க முடியும்.

காதலுக்கு தொடக்கங்கள் பலவாக இருக்கும் போது முடிவுகளும் பலவாக இருப்பது தான் சகஜம்.

நண்பர்களின் வெற்று ஆறுதல்களும், அறிவுரைகளும் ரிஷிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. மணி காலை ஐந்தாகியிருந்தது. தன்னுடைய செல்பேசியை எடுத்து, ஐ ஐஸ்ட் கான்ட் திங்க் அபௌட் எனிதிங் அதர் தான் யூ. உன்னை தவிர வேறு ஒன்றும் என்னால் நினைக்க முடியவில்லை என்று ஒரு எஸ்எம்எஸ் குறுந்தகவல் அனுப்பினான் ரம்யாவுக்கு. சேம் ஹீயர், இங்கும் அதே நிலைதான் என்று நொடிக்குள் பதில் வந்தது.

9

இன்னும் சில நாட்கள் கழிந்தது. இரண்டு இளம் இதயங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை. பிரிவும் காதலை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பிரிவோ இருவர் மனதிலும் குழப்பத்தையும் ஒருவரை ஒருவர் இழந்துவிடுவுமோ என்ற பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

ஒரு நாள் காலை ரம்யாவின் அப்பா ரம்யாவிடம், அம்மா, நாளைக்கு எங்களோட திருமண நாள். உங்கம்மாவுக்கு ரகசியமா ஒரு பரிசு வாங்கனும். இன்னிக்கு காலேஜ் போகவேண்டாம். நானும் நீயும் போய் சென்னை சில்கஸ்ல போய் உங்க அம்மாவுக்கு புடவை வாங்கி வரலாம் என்றார்.

அவளும் சரியென்று சொல்ல, அவள் தந்தை அவளை தனது டிவிஸ் 50யில் அமர்த்தி சென்னை போக்குவரத்து நெரிசலை கடந்து வட பழனிக்கு வந்தார்.

என்னப்பா இங்கே என்றாள் ரம்யா.

முதல்ல கோவிலுக்கு போய் முருகனை தரிசனம் பண்ணுவோம் என்றார்.

இருவரும் முருகனை தரிசித்து அருகில் இருந்த சரவண பவனை வந்து அடைந்தார்கள்.

அதிக கூட்டமில்லை.

இரண்டு ப்ளேட் இட்லி என்று சொல்லிவிட்டு அவளை பார்த்தார் அவளுடைய தந்தை.

ரம்யா, ரவீந்தர் சின்ன வயசுலே நம்ம வீட்டுக்கு வந்துட்டான். உங்க அம்மாவோட அப்பா இறந்து போனதிலேர்ந்து நான் தான் எடுத்து வளர்த்தேன். சின்ன வயசுலே ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சு படிச்சு துபாயிலே நல்ல வேலைக்கும் சேர்ந்தான். உங்கம்மாவுக்கு அவனை தான் உனக்கு கட்டி வைக்கனும்னு பெரிய கனவே இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமா இந்த மாதிரி ஆயிடுத்து என்று சொல்லி நிறுத்தினார்.

ரவீந்தர் மாமாவுடைய விபத்துக்கு பிறகு யாரும் அவளிடம் இவளுடைய திருமணத்தை பற்றி பேசவில்லை. அவர்களே அதிர்ச்சியிலிருந்து மீளாததே அதற்கு காரணம். ரம்யாவுடைய கல்லூரி படிப்பு முடிந்த பிறகு இந்த பேச்சை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருந்தனர் பெற்றோர்கள்.

இப்ப ஒரு நல்ல வரன் வந்திருக்கு. பையன் நல்லா படிச்சிருக்கான். நல்ல உத்யோகத்தில் இருக்கான். அவங்க அப்பா டெலிபோன் டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்சிகிட்டு இருக்காரு. ஒரே பையன். அவன் வேலை செய்யற கம்பெனியிலும் விசாரிச்சேன். ரொம்ப நல்ல பையன்னு சொன்னாங்க.

ரம்யா சுரத்தில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

பையன் பேர் ரிஷி என்று சொல்லி அவளுடைய முகத்தை பார்த்தார் அப்பா.

சட்டென்று முகத்தை உயர்த்தியவள் தந்தையின் கண்களை சந்திக்க பயந்தாள். அவருக்கு தெரிந்திருக்குமோ என்று யோசித்தாள்.

பயப்படாதே கண்ணு. அந்த பையன் கொஞ்ச நாளுக்கு முன்னாடி வந்திருந்தான். உங்களுடைய சந்திப்புகளை பத்தி சொன்னான். அதுக்கு அப்புறம் தான் அவனை பத்தி எல்லாம் விசாரிச்சேன்.

இல்லை அப்பா................. என்று அவள் குழறினாள்.

நான் சொல்லி முடிச்சிடறேன். உன்னை பத்தி நல்லா தெரிஞ்ச உன் குறையை அறிஞ்ச பையன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல எங்களுக்கு சந்தோஷம் தான். அம்மாவுக்கும் அவனை ரொம்ப பிடிச்சிடுத்து. இனிமே நீ என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சந்தோஷம் என்று சொல்லி முடித்தார்.

சில நிமிடங்கள் மௌனம் நிலவியது.

அப்பா என்னால ஒன்னும் முடிவு செய்ய முடியலை என்றாள்.

அவர் எதுவும் பேசவில்லை.

ரம்யா உனக்கு எது சரின்னு படுதோ அதை செய்யும்மா. ஒன்னும் கட்டாயம் இல்லை என்று சொல்லி பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு டிவிஸை இயக்கினார்.

கடைத் தெருவிலும் அதிகம் பேசாமல் வீடு வந்து சேர்ந்தனர் தந்தையும் மகளும்.

Link to comment
Share on other sites

10

ட்ரெயின் கிளம்பும் நேரமாகியிருந்தது. ரம்யாவின் தந்தையும் தாயும் உடம்பை ஜாக்கிரதையா பாத்துக்கோம்மா என்று சொன்னார்கள். ரிஷியை பார்த்து அடிக்கடி போன் பண்ணுப்பா என்றார்கள்.

கேரளாவில் கோட்டக்கல் சென்று இயற்கை வைத்தியம் செய்தால் அவளுடைய கை பிரச்சனை தீரும் என்று இணையத்தில் கண்டெடுத்திருந்தான். அதை அவளுடைய பெற்றோர்களிடம் கூறவே, அவர்களும் உடனடியாக அதற்கு சம்மதித்தார்கள்.

ரிஷி எத்தனையோ சொல்லியும் அவளுடைய பெற்றோர்கள் அவர்கள் கூட கேரளா வர மறுத்துவிட்டனர். தம்பி, உன்னை நல்லா புரிஞ்சிக்க அவளுக்கு ஒரு வாய்ப்பா எடுத்துக்கோ என்றனர். தன் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை பார்த்து நெகிழ்ந்து போனான் ரிஷி.

திரும்பி வரும்போது உங்கள் பெண் கை பிரச்சனையை மறந்து போயிருப்பாள் என்று சொன்னான்.

ஒரு திருமணமாகாத பெண்ணை இன்னொரு ஆணுடன் அனுப்பும் அளவுக்கு இந்த கால பெற்றோர்களுக்கு பக்குவம் வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் முழு நம்பிக்கையுடன் அனுப்பும் பெற்றோர்களை என்னவென்று பாராட்டுவது. அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் பக்குவம் எத்தனை இளந்தலைமுறைக்கு உள்ளது. அப்படி இருந்துவிட்டால் அவர்களை பாராட்ட வார்த்தைகள் ஏது. அப்படி ஒரு சத்திய சோதனைக்கு அவள் பெற்றோர்களும், அந்த இளம் ஜோடியும் தயாராகிக் கொண்டிருந்தன. கற்பு என்பது உயிர் என்ற காலம் போய், உடல் அளவு என்ற காலம் வந்து, அதுவும் தேவையில்லை என்று பேசி, இப்போது ஆண்களுக்கு கற்பு உண்டா, எங்களுக்கு எதற்கு கற்பு என்று விதண்டாவாதம் புரியும் அளவிற்கு முன்னேறி விட்ட சமூகம், பழமையில் இருந்த இனிமை போய் புதுமையுடன் வந்த கசப்பில் புரியாத ஒரு சுவையை சுவைத்துக் கொண்டிருக்கிறது இந்த தலைமுறை.

வண்டி கிளம்பியது. மிகவும் குறைந்த விஷயங்களே அவர்களுக்குள் பேச இருந்தது. அவள் மனதில் நிறைய கேள்விகள். ஆனால் அவன் அந்த தேர்வுக்கு தயாராக இல்லை. கேள்விகளை கணித்துக் கொடுக்க எந்த செய்தித்தாளும் முன்வரவில்லை.

சற்று நேரம் அவளும் பொறுத்து பார்த்தாள். அவனிடமிருந்து பொதுவான விஷயங்களே வந்துக் கொண்டிருக்கு, எனக்கு தூக்கம் வருது என்றாள்.

அவன் தான் கொண்டு வந்திருந்த சிறிய தலைகாணியை தன் மடியில் வைத்துக் கொண்டு அவளை பார்த்து இடது கையால் தன் மடியை காட்டினான். அவளும் எதுவும் பேசாமல் அவன் மடியில் தலைவைத்து படுத்தாள். மெதுவாக தன்னுடைய இடது கையை அவள் நெற்றியில் ஆறுதலாக வைத்துவிட்டு தன் புத்தகத்தை தொடர்ந்தான்.

அபிரிதமான அமைதி நிலவியது ரம்யாவின் மனதில். ஒரு பெரிய பாதுகாப்பு வளையத்தில் தான் இருப்பதாக நினைத்து நிம்மதி அடைந்தாள். ரிஷிக்கு பெருமையாக இருந்தது. எப்போதுமே தன் பெற்றோர்களிடம் நல்ல பையன் என்ற பெயரையே வாங்கியிருந்தான். பள்ளிகளிலும் அதிக சேட்டை செய்யாத நல்ல பிள்ளை. நிறுவனத்தில் ஜாலி பேர்வழி என்று பெயர் எடுத்திருந்தாலும் எந்த வம்பு தும்புக்கும் போனதில்லை. இப்போது தான் சில நாட்களே அறிந்த ஒரு பெண்ணின் பெற்றோர், திருமணமாகாத தன் பெண்ணை தன்னை நம்பி அனுப்பியிருந்தது அவனுக்கு டாக்டர் பட்டமே கிடைத்துவிட்ட திருப்தி.

மடியில் படுத்திருந்த அந்த குழந்தையை ரசித்தான். ஒரு வேளை ரம்யாவிற்கு இந்த குறை இல்லாவிட்டால், தன்னுடைய காதலை உடனே ஏற்றிப்போளோ? அவளுடைய பெற்றோரும் என்னை ஏற்றுக் கொண்டிருப்பார்களோ? இப்போது இந்த பயணமே ஒரு தேன் நிலவு பயணமாக இருந்திருக்குமோ? பலவாறான கேள்விகளுக்கு நடுவே அந்த மாதிரி ஒரு சுவாரஸ்யமில்லா கதை நமதாக இருந்திருந்தால் எத்தனை போராக இருந்திருக்கும் என்று நினைத்தான். நடந்துக் கொண்டிருந்த கதையை ரசித்தான். தனக்கு வந்திருக்கும் சோதனையை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றான். மகிழ்ந்தான்.

ரம்யாவிற்கோ அவனை காதலிக்கிறோமா இல்லையா என்றே சந்தேகம் இல்லை. அவனை தான் திருமணம் செய்துக் கொள்வோமா இல்லையா என்ற சந்தேகமும் இல்லை. அவன் தன்னத்தான் காதலிக்கிறான் என்று முழுவதும் நம்பினாள். ஆனால் என்ன தடை என்பதும் உணர்ந்திருந்தாள். அவளுடைய சுயகௌரவம் அவளுக்கு தடையாக இருந்தது. அவளுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் காதல் கதையின் அடுத்த அத்தியாயம் எழுத அவள் தயாராக இல்லை.

ஆனால் இன்று அவள் எதை பற்றியும் யோசிக்கவில்லை. அடுத்த 10 நாட்கள் வைத்தியத்திற்காக கேரளாவில் இருக்கும் நேரம் முழுவதும் தன்னுடைய விருப்பமானவனுடன் செலவிடுப்போகிறேன் என்று நினைப்பு அவளுக்கு ஆனந்தத்தை தந்திருந்தது.

தற்காலிக அமைதி அவள் மனதில் நிறைந்திருந்தது.

11

ட்ரெயினில் இறங்கி பிறகு ஒரு பஸ் பிடித்து கோட்டக்கல் சென்று அடைந்தனர். மாலை ஆகியிருந்தது வைத்திய சாலை அடைவதற்குள். அங்கே கொடுத்த உணவை உண்டுவிட்டு சிறிய ஓடையின் அருகே அமைத்திருந்த இரண்டு குடிசைகளை அவர்களுக்காக தந்தனர். ஒரு நாடாகட்டில் சிறிய விளக்கு ஓரத்தில் ஒரு ஆமை கொசுவத்தி சுருள்.

வந்த களைப்பில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் குட் நைட் சொல்லிவிட்டு தத்தம் குடிசைக்குள் நுழைந்தனர்.

படுத்தவுடன் தூங்கும் பழக்கம் ரிஷிக்கு. கனவுகள் என்றால் என்ன என்று அறியாதவன். பலபேருக்கு பலவகையான கனவுகள் வரும். சிலருக்கு தாம் சாதிக்காமல் போன விஷயம் சாதித்துவிட்டதாய் கனவு வரும். சிலருக்கு தாம் சாதிக்க போவதை சாதித்துவிட்டதாக கனவு வரும். பலருக்கு நாய் துரத்தும், வேர்த்து விறுவிறுத்து எழுந்த உட்காருவார்கள். சிலர் புலியுடன் சண்டை போடுவர். சிலரி நெருங்கியவர்கள் இறப்பதை பார்ப்பார்கள். சிலர் கனவில் அழுது நிஜத்தில் முகத்தை ஈரம் செய்துக் கொள்வார்கள். சிலர் இறைவனை பார்ப்பார்கள். கவிஞர்களுக்கு புதிய கவிதை வரிகளும் கதையாசிரியர்களுக்கு புதிய கதைகளின் கருவும் கனவுகளில் கிடைக்கும். பலர் ரிஷியை பார்த்து பொறாமை படுவார்கள். அதெப்படி கனவே வராது என்கிறாய் என்று. ரிஷி பகல் கனவு கண்டிருக்கிறானே ஒழிய இரவில் கனவு கண்டதில்லை.

அன்று இரவு சட்டென்று உறங்கச் சென்றான். சில நிமிடங்களில் அந்த ஓலை கதவு திறந்தது. ரம்யா, ரிஷி, ரிஷி என்று கிணற்றிலிருந்து கூவுவது போல் இருந்தது.

சட்டென்று எழுந்தான்.

என்ன ரம்யா?

ரிஷி எனக்கு தனியா படுக்க பயமா இருக்கு என்றாள்.

சரி நீங்க போங்க நான் வரேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு, அவள் விலகியதும் லுங்கியிலிருந்து கால் சட்டைக்கு மாறி, அந்த நாடா கட்டிலை எடுத்துக் கொண்டு அடுத்த குடிசைக்கு சென்று அவளுடைய கட்டிலுக்கு அருகில் தன் கட்டிலை போட்டுக் கொண்டு படுத்தான். அவனுக்கு தூக்கம் போயிருந்தது.

சில நிமிட அமைதி. காதலுக்கு முன் திருமணத்திற்கு முன் அருகருகில் படுப்பதற்கு உத்தம காதலர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் போது, அந்த பிராந்தியமே வெப்ப மண்டலமாக மாறிவிடுகிறது. இரவரும் அந்த சூட்டை உணர்ந்தனர்.

மெதுவாக அவள் பேசத்துவங்கினாள்.

என் கை சரியாக தானே இங்கே அழைச்சிகிட்டு வந்திருக்கீங்க. ஆனால் எனக்கு சரியான பிறகும் நம்ம கல்யாணம் நடக்குமான்னு எனக்கு தெரியலை என்றாள்.

ஏன் அப்படி நினைக்கறீங்க?

தெரியலை.

மீண்டும் அமைதி.

எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க. உங்க மனசுல ரவீந்தர் இன்னும் இருக்காறா?

இல்லை.

எப்படி சொல்றீங்க?

நான் அவரை காதலிக்கவில்லை.

அப்ப இது கட்டாய கல்யாணமா?

அப்படி இல்லை. நான் அவரை காதலிக்கவில்லை. யாரையும் காதலிக்கவில்லை. அவரை தான் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்னு எனக்கு நினைவு தெரிஞ்ச வயசுலே தெரிஞ்சிடுத்து. அதனால தான் காதலுக்கு மனசு தடைபோட்டுட்டுதுன்னு நினைக்கிறேன். ஆனா எனக்கு அவரை பிடிக்கும்.

ஏன் சின்ன வயசுலேர்ந்து அவரை அண்ணனா நினைச்சு பழகலை.

அது தெரியலை. எப்போதுமே மாமான்னு கூப்பிட்டுதான் பழக வைச்சாங்க.

நீங்க அவரை காதலிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்.

இல்லை. இல்லை என்று உரத்த குரலில் சொன்னாள் ரம்யா.

ஐயோ, உங்களால அவரை எப்படி காதலிக்கலைன்னு சொல்றீங்களா அப்படித்தான் நான் உங்களை காதலிக்கிறேன்னு சொல்றேன். அது ஏன் புரியலை உங்களுக்கு.

நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?

ஓ. உன்னால் முடியும் தம்பி – சீதா, உள்ளத்தை அள்ளித்தா – ரம்பா, உன்னருகே நானிருந்தால் – மீனா, ஏன் சமீபத்திலே வந்த ப்ரியசகி – சதாவைக்கூட காதலிச்சேன். அவங்க தான் என்னை திரும்பி காதலிக்கலை என்றான் சிரிப்போடு. அந்த சிறிய விளக்கோளியில் தோராயமாக இருவரும் எதிர் திசையை பார்த்து பேசிக் கொண்டிருந்தனர். வெளியில் ஓடையில் நீரின் சத்தம் ரம்யமாக இருந்தது. தென்னை மரங்கள் காற்றின் அசைவில் குடிசையை தொட்டுச் சென்ற சத்தம் எழுந்தவண்ணம் இருந்தது.

விளையாடாதீங்க ரிஷி. நிஜமா சொல்லுங்க.

நிஜமா ரம்யா. நான் காதலிச்சது ஒரே பெண்ணை. அவளும் என்னை காதலிக்கிறாளா என்று முழுசா தெரியலை என்றான் ஏக்கத்துடன்.

நான் உங்களை நம்பலை என்றாள் ரம்யா.

சரியான சந்தேகப்பிசாச நீ என்றான். நீங்கள் நீயாக மாறியிருந்ததையும் நேரடியாக அவளை திட்டியதையும் அவன் உணரும் முன் அவள் தலைகாணியில் முகத்தை புதைத்துக் கொண்டு விசும்பும் சத்தம் கேட்டது.

மெதுவாக அவளுடை கட்டிலில் சென்று அமர்ந்தான் ரிஷி. அவள் தலையை கோதிவிட்டான். அவளை எழுந்து அமரச்செய்தான். அவள் சட்டென்று அவனுடைய மார்பில் புதைந்து கொண்டு அழத் தொடங்கினாள். அவளை இறுக அணைத்துக் கொண்டான் ரிஷி. அணைத்துக் கொண்டான். மகன் தாயை அணைக்கும் போது பாசமும், தங்கையை அணைக்கும் போது ஆதரவும், அக்காவை அணைக்கும்போது தாயுக்கு பின் நீதான் என்ற கோரிக்கையும், காதலியை அணைக்கும்போது காதலும், மனைவியை அணைக்கும்போது உத்திரவாதமும் வெளிபடுத்துகிறான். இன்று அவன் காதலி அல்ல. அவள் காதலிக்கிறாளா இல்லையா என்று தெரியாதவரை அவள் மேல் சொன்ன வரையரைக்குள் விழாதவளே. ஒரு தெரியாத பெண்ணே. இன்று அவனுடைய அணைப்பில் உனக்கு நான் துணையாக தூணாக நிற்பேன் என்று உறுதி மொழியை வெளிபடுத்தினான் ரிஷி.

அவளுடைய அழுகையில் வந்த கண்ணீர்துளிகள் அவன் புஜத்தில் விழுந்து அவனை மெய்சிலிர்க்க வைத்தன.

12

கேரளா விழித்திருந்தது. 5 மணிக்கே எழுந்த தன் குடிசைக்கு செல்ல முயன்றான் ரிஷி. வைத்திய சாலையின் மரியாதை காக்க வேண்டும் அல்லவா. ஆனால் 5 மணியே தாமதம் என்பதை உணர்ந்தான்.

வைத்தியத்திற்கு வந்தவர்கள் அதிகாலையில் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தார்கள். அந்த அடர்ந்த கானகம் கொண்ட கிராமம். நிறைய தென்னை மரங்கள். சிறிய அழகிய ஓடை. மென்மையான அதிகாலை காற்று.

பல விதமான வைத்தியங்கள் நடந்துக் கொண்டிருந்தன. இருவரும் குளித்து முடித்து வைத்தியரை சென்று பார்த்தார்கள்.

அவர் பல மொழி அறிந்திருந்தார். அவளுடைய கைகளை பார்த்துவிட்டு சில சோதனைகள் செய்தார். நல்லா இருக்கும்மா என்றார். பிறகு ரிஷி அவரிடம் தனியாக மெதுவாக அவளுடைய பிரச்சனைகளை பற்றி சொன்னான். அடடா நாங்க உடம்புக்கு வைத்தியம் பாக்கறவங்க. இது மனசு பிரச்சனை. ஆனால் நான் நரம்பு தளர்ச்சிக்கான வைத்தியம் பண்றேன். இந்த அமைதியான சூழ்நிலையில் உங்களை மாதிரி நலம்விரும்பியோட அவங்க இருந்தாலே அவங்களுடைய எல்லா பிரச்சனைகளும் போய்விடும். ஒரு வாரத்திற்கான வைத்திய பாகம் தர்றேன். தினமும் சாப்பிட்ட பிறகு வாங்க, மஸாஜ் பண்ணி விடச் சொல்றேன். ஏன்னா, அந்த எண்ணை வாசம் ரொம்ப அதிகம் என்றார். அவருக்கு நன்றி கூறிவிட்டு அவளை இன்னொரு குடிசைக்கு அழைத்து சென்று அங்கிருந்தவரிடம் விவரத்தை சொன்னான்.

அவளை அமரவைத்து அவளுடைய கைகளை சுடுநீரில் கழுவி விட்ட அங்கிருந்த பெண்மணி மெதுவாக அவள் கைகளை மசாஜ் செய்துவிட்டாள். பிறகு ஒரு சிவப்பு நிற எண்ணயை தடவிவிட்டு தன் வைத்தியத்தை தொடர்ந்தார்.

அருகில் இருந்து அவளை பார்த்தவாறே இருந்தான். அவளோ அவனை பார்ப்பதும் பிறகு அவன் பார்வையை மறைப்பதுமாக இருந்தாள்.

இரவில் அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் அவளை வெட்கித்திருந்தது. ரிஷி பேச்சுக் கொடுத்தான்.

இந்த கிராமம் அருமையா இருக்கு இல்லை?

ஆமாம். இங்கேயே இருந்திடலாம் போல் இருக்கு.

ஆனால் பகல்ல வெயில் அதிகமாம்.

பரவாயில்லை. காலையில் ஓடையை பாக்குற பாக்கியமும் இந்த பச்சை பசேலும் கிடைச்சா வெயிலை தாங்கிக்கலாம். மெட்ராசுல மட்டும் என்னவாம் என்றாள்.

ஆமாம். ஆனா சோத்துக்கு வழி?

சோத்துக்காக மட்டும் தான் வாழறோமா?

அப்படி இல்லை. ஆனா சாப்பாடும் வேணும் இல்லை?

ஆமா. ஆனால் அதுக்கும் மேல நமக்கு பிடிச்சவங்களோட இருக்கனும்.

நான் எனக்கு பிடிச்சவங்களோட தான் இருக்கேன். ஆனா அவங்க தான் அவங்களுக்கு பிடிச்சவங்களோட இருக்காங்களான்னு தெரியலை.

அவள் நேராக அவன் கண்களை பார்த்தாள். எனக்கு பிடிக்காதவங்கன்னு யாரும் இல்லை.

ஆனா பிடிச்சவங்கன்னு யாராவது இருக்கனும்ல என்றான் அவனுடைய வசீகர புன்னகையுடன்.

ஓ இருக்காங்களே.

யாரு?

உன்னால் முடியும் தம்பி – கமலஹாசன், உள்ளத்தை அள்ளித்தா – கார்த்திக், உன்னருகே நான் இருந்தால் – பார்த்திபன், ஏன், ப்ரியசகி – மாதவன் இவங்களயெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

என்ன நக்கலா?

ஹாஹா என்று மென்மையாக சிரித்தாள். நேற்று அவள் அழுததை கண்டு பயந்தவன், இன்று அவளுடைய சிரிப்பில் வானத்தை தொட்டான்.

நாம கல்யாணம் பண்ணிக்கனும்னு அவசியம் இல்லை ரம்யா என்றான்.

ஓ மனசு மாத்திகிட்டீங்களா?

ஆமாம். அப்படியே சேர்ந்து வாழலாம் என்றான்.

என்ன விளையாடறீங்களா?

இல்லை ரம்யா. லிவ்-இன் சொல்றாங்க இல்லையா. மேலை நாட்டுல. அதுமாதிரி கல்யாணம் வேண்டாம். சேர்ந்து வாழலாம். எப்போ பிடிக்கலையோ அப்ப போயிடலாம்.

நல்லா இருக்கு யோசனை. பிரிஞ்ச பிறகு இன்னொரு பொண்ணாட வாழலாமா?

அது....... அது முடியாத காரியம். என்னால முடியாது என்றான் ரிஷி. மாட்டிக் கொண்டு முழித்தான்.

அது தான். எப்போ மேலை நாட்டவர் மாதிரி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் அப்படிங்கற பக்குவம் வர்லையோ அதுவரை கல்யாணம் அப்படிங்கற வழக்கம் நம் நாட்டை விட்டு போகாது ரிஷி. ஏன்னா நாம் கல்யாணம் பண்ணிக்கறது நம்முடைய பயத்துனாலேயோ, பாதுகாப்பின்மையாலோ இல்லை ரிஷி. எனக்கும் உனக்கும் மட்டும்தான் உறவுன்னு எடுக்கற உறுதிமொழி தான் திருமணம்.

அப்பா இத்தனை விஷயம் பேசறியே உன்னோட பிரச்சனைக்கும் உனக்கு விடை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கும் இல்லையா?

என் பிரச்சனைக்கு தீர்வு இருக்கு.

என்ன தீர்வு?

நீங்க பேசனும். நிறைய பேசனும். ஆனா நீங்க பேச பயந்து ஓடறீங்க என்றாள்.

ரிஷிக்கு பள்ளி-கல்லூரி-கணினி புத்தகங்கள் மட்டும் தான் படிப்பு என்பதே. கதை, கவிதை கட்டுரைகள் படிப்பது என்றால் காத தூரம். திரைப்படங்கள் பார்ப்பான். ஆனால், கதைகள் படிப்பதை குற்றமாக நினைத்தான். இருக்கற பொழுதை கதை படித்து ஏன் வீணடிக்கனும் என்பான். எப்போதாவது பிரயாணத்தின் போது நேரம் கழிக்க புத்தகங்கள் படிப்பதோடு சரி.

கவிதை நடையுடன் பேசவோ புத்தகங்களில் இருந்த மேற்கோள் காட்டவோ மாட்டான்.

மீண்டும் அமைதியானான் ரிஷி.

எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கனும். அவ்வளவுதான் தெரியும். பரீட்சை மாதிரி கேள்விக்கெல்லாம் பதில் சொல்லத் தெரியாது என்றான்.

வைத்தியம் முடிந்திருந்தது. அந்த பெண்மணி ரம்யாவின் கைகளை துடைத்துவிட்டு நீங்கள் இருவரும் நல்லவர்கள். உங்கள் வாழ்கையில் மகிழ்ச்சி நிலவும் என்று புன்னகையுடன் மலையாளத்தில் சொல்லிவிட்டு விலகினாள்.

உன்னைத்தவிர உலகத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது இந்த விஷயம் என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்ட வெளியே அழைத்து வந்தான் ரிஷி.

Link to comment
Share on other sites

13

9 நாட்கள் வைத்தியம் முடிவுக்கு வந்திருந்தது. காமமில்லா தேன் நிலவும் நிறைவுக்கு வந்திருந்தது. இயற்கை சூழலில் பல மணி நேரம் நடப்பதும், உலகத்தில் எல்லா விஷயங்களையும் பேசுவதும், ஓடையின் அருகில் அமர்ந்திருப்பதுமாக பொழுதை கழித்தனர். காதல் தலைப்பு மட்டும் தவிர்க்கபட்டது.

கடைசி பாக வைத்தியத்திற்கு அவள் சென்றிருக்க ரிஷி தன் குடிசைக்கு சென்று குளித்து தயாராக சென்றான். லேசாக குளிர் இருந்ததால் ஹீட்டர் ராடை எடுத்து வாளியில் தண்ணீர் பிடித்து சுட நீர் வைக்க தயாரானான்.

ஒரு புறம் ராடை எடுத்து தண்ணீருக்குள் வைத்து மறுபுறம் மின்பெட்டியில் சொருக முயன்றான். ப்ளக் இல்லாததால் வெறும் வொயரை மட்டும் துவாரத்தில் சொருக முயன்றான். சட்டென்று மின்சாரம் தாக்கவே, தடாலென்று கீழே விழுந்தான். விழுந்தவன் கையில் ராடினி மறுபுறம் வந்துவிட தட்தட் என்று துடிதுடித்து போனான். வாயிலிருந்து நுரை தப்ப கை கால் செயழிழந்து கீழே விழுந்து துடித்தான்.

வைத்தியம் முடிந்த இவனுடைய குடிலுக்குள் நுழைந்த ரம்யாவுக்கு இந்த காட்சியை பார்த்ததும் திக் கென்றது. சட்டென்று சுவிட்சை அணைத்து அவனை இழுத்து நடுவில் படுக்க வைத்தாள். தண்ணீர் எடுத்து அவன் முகத்தை தெளித்தாள். ஓடிச் சென்று வைத்தியரை அழைத்து வந்தாள். அவர் அவனுக்கு அவசரமாக ஒரு மருந்தை கலந்து அவனுடைய வாயில் ஊற்றினார். பிறகு இன்னும் இருவர் சேர்ந்துக் கொள்ள அவன் உடலில் எண்ணெய் ஊற்றி அவன் கை கால்களை தடவிக் கொடுத்தனர்.

அடுத்த நான்கு மணிநேரம் ரம்யாவுக்கு நரக வேதனையாக இருந்தது. அவன் கண்விழி்த்ததும் அவனிடம் சென்று அமர்ந்த அவளுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவனுடைய ஒரு பாகம் பக்க வாதம் வந்தது போல் ஆகியிருந்தது. அவனால் இடது கையையும் இடது காலையும் அவனால் அசைக்க முடியவில்லை. அவன் பேச முயன்றபோது அவன் வாய் கோணிப்போயிருந்ததையும் வாய் குழறுவதையும் உணர்ந்தாள். அவளால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை.

நல்ல வேளை அம்மா சரியான நேரத்தில் வந்ததால் இந்த பக்கவாத அதிர்ச்சி மூளையை பாதிக்கவில்லை. கை காலை எப்படியோ சரிசெய்ய முயற்சிக்கிறோம். ஆனால் வாய் சரியாக பேச நேரம் ஆகலாம். ஒன்னும் பயப்பட வேண்டாம். ஊருக்கு தகவல் சொல்லிவிடுங்கள் என்றார்.

வைத்திய சாலையின் அலுவலகத்திற்கு சென்று தொலைபேசி எடுத்து முதலில் தன் வீட்டிற்கு போன் செய்தாள். அப்பா, ரிஷிக்கு இப்படி ஆயிடுத்து என்றார். அடப்பாவமே, உன்னை சரி பண்ண அழைச்சிகிட்டு போன் அவனுக்கு இந்த மாதிரி ஆயிடுத்தே. எத்தனை நாள் ஆனாலும் அவன் கூட இருந்த அவனை கவனிச்சிக்கோ என்றார்.

அடுத்து தயக்கத்துடன் ரிஷியன் வீட்டிற்கு போன் செய்தாள். அவன் அம்மா தான் தொலைபேசியை எடுத்தார்.

நான் ரம்யா. நான் ................ என்று என்ன சொல்லலாம் என்று யோசித்தாள்.

சொல்லு மருமகளே என்றார் ரிஷியின் தாய் தடாலடியாக.

ஆன்ட்டி, ரிஷிக்கு சின்ன ஆக்ஸிடென்ட் என்றால் இன்ப அதிர்ச்சியிலிருந்து மீண்டு சகஜநிலைக்கு வந்தவாறே.

என்ன? என்னாச்சு?

பயப்படாதீங்க ஆன்ட்டி, சின்ன எலெக்டிரிக் ஷாக். கை கால் கொஞ்சம் பாதிச்சிடுச்சு. அவனால் பேசக்கூட முடியவில்லை என்ற விஷயத்தை மறைத்தாள்.

ஐயோ என்னங்க என்று ரிஷியின் தாயார் தன்னுடைய கணவனை அழைக்க அவர் ஓடி வந்தார்.

நாங்க கிளம்பி வரட்டுமா ரம்யா என்றார் பல நாள் பழகியவரை போல்.

வேண்டாம் அங்கிள். இன்னும் ஒரு வாரம் கழிச்சி நானே மெட்ராஸூக்கு அழைச்சிகிட்டு வரேன் என்றாள்.

சரி. தினமும் போன் பண்ணுமா என்றார்.

போன் வைத்ததும் அவன் அம்மா, எப்போ கிளம்பி போறோம்.

போலாம். முதல்ல அவகிட்டேர்ந்து போன் வரட்டும் என்றார் ரிஷியின் தந்தை யோசனையுடன்.

போன் வைத்துவிட்டு குடிசைக்கு திரும்பும் வழியில் ரம்யா ரிஷியின் பெற்றோர்களின் மனப்பக்குவத்தையும் இந்த அதிர்ச்சியான செய்தியை இலகுவாக எடுத்துக் கொண்ட விஷயத்தை பற்றியும் நினைத்து வியந்தாள். ரிஷி மாதிரியே அவங்க அப்பா-அம்மாவும் ஈஸி கோயிங்காக இருக்காங்களே. நல்ல குடும்பம் தான். எதற்கும் சீரியஸாக இல்லை. ஒருவேளை அவன் வாய் பேசமுடியாம போனதை சொல்லியிருந்தா பயந்திருப்பாங்களோ என்று யோசித்தவாறே அவனை சென்று அடைந்தாள்.

14

அடுத்த ஒரு வாரமும் ரம்யாவின் சேவையில் வாழ்ந்தான் ரிஷி. அவனை குளிப்பாட்டுவதிலிருந்து உடை அணிவித்து அவன் சிறுநீர் நிரம்பிய பானையை மாற்றுவது வரை அனைத்தும் செய்தாள்.

அங்கிருந்த வைத்தியரம்மா அவனிடம், இவளை திருமணம் செய்துக் கொள்ள நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். கண்களில் நீர் வழி கண்களால் நன்று சொன்னான் ரிஷி.

வாரக்கடைசியில் ஒரு வீழ்க்கு போகழாம் என்று அவன் வாய் குழறி சொன்னதை புரியாமல் ரம்யா திணற, அருகிலிருந்து காகிதத்தில் வீட்டுக்கு போகலாம் என்று எழுதினான் ரிஷி.

உடனே ரம்யாவும் வைத்தியர்களிடம் பேசிவிட்டு அவனுக்கு தேவையான இயற்கை வைத்தியங்களையும் உடல் நீவும் எண்ணையும் வாங்கிக் கொண்டு ஒரு ஆம்புலென்ஸ் வைத்துக் கொண்டு சென்னை வந்து அடைந்தாள்.

அவனுடைய தந்தையும் தாயும் ஊரிலிருந்து வந்திருந்தனர். அவனருகில் உட்கார்ந்துக் கொண்டு அவனை பார்த்த அவர்களது கண்களிலும் நீர் தாரையாக ஓடியது.

ரம்யா அவனுடைய தாயின் கைகளை பிடித்துக் கொண்டு, கவலைபடாதீங்க ஆன்ட்டி, தினமும் நான் வந்து இருந்து பாத்துக்கறேன் என்றாள் ஆறுதலாக.

நீ அவனோட இருக்கனும்தாம்மா எங்களுக்கு ஆசை என்றார் அவன் தாய்.

அவனுடைய பெற்றோர்கள் அங்கேயே தங்க வற்புறுத்தியும் அவன் பெற்றோர்களை ஊருக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டான். ஒரு காகிதத்தில் அவளுடன் இருக்கும் சந்தர்ப்பத்தை வீணாக்க விரும்பவில்லை அம்மா என்று எழுதினான். அவர்களுக்கும் அதுவே சரியென்று பட அவர்களும் ஒரிரு நாட்களில் ஊருக்கு திரும்பினார்கள்.

கல்லூரிக்கு செல்வதற்கு முன் ஒரு மணி நேரமும் கல்லூரியிலிருந்து திரும்பிய பிறகும் ஒரு மணி நேரமும் அவனுடன் செலவழித்தாள் ரம்யா.

அவன் அலுவலகத்திலிருந்து அவனுடைய நண்பர்களும் அவன் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவரும் அவனை பார்த்து சென்றார்கள்.

வாரங்கள் இப்படியே கடக்க அவனுடைய பேச்சு சற்று தெளிவாகியது. ஒரு நாள் மாலை ரம்யாவிடம் அவன் தீர்க்கமாக பேசினான்.

ரம்யா, இந்த வாரங்கள்ல நீ செஞ்ச உதவிக்கு என்னால் எப்படி நன்றி சொல்ல முடியும்னு தெரியலை. நான் உன்னை வைத்தியம் பண்ண அழைச்சிகிட்டு போய் அதுக்கு மாறா நீ எனக்கு வைத்தியம் பண்ணவேண்டிய நிலைமை ஆயிடுச்சே என்று வருத்தப்பட்டான்.

நீங்க எதுவும் பேசாதீங்க ரிஷி. இது என்னோட கடமை.

என்ன உன்னோட கடமை? நீ என்னோட மனைவியும் இல்லை. எதுக்காக உனக்கு இந்த தலையெழுத்து என்றான்.

ஏன் பெண்டாட்டியா இருந்தா தான் இதையெல்லாம் செய்யனுமா? நான் உங்களோட நண்பனா இருந்து செய்யக்கூடாதா?

இல்லை ரம்யா. நீ கல்யாணம் ஆகவேண்டிய பொண்ணு. இது மாதிரி தினமும் என் வீட்டுக்கு வந்துட்டு போறது நல்லாயில்லை.

எனக்கு யாரை பத்தியும் கவலை இல்லை என்றாள் ரம்யா.

அது தான் உங்கிட்ட பிரச்சனையே உனக்கு யாரை பத்தியும் கவலை இல்லை. நீ என்ன நினைக்கிறியோ அது தான் சரி. எனக்கு உனக்கும் கல்யாணம் ஆகப்போறதில்லை. ஏன் வீணா நம் உறவை வளர்த்துக்கனும்?

யார் சொன்ன நமக்கு கல்யாணம் ஆகப்போறதில்லைன்னு?

என்ன உளர்ற. எனக்கு இப்படி ஆன பிறகு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன பிரயோசனம்?

ரிஷி நான் உங்களை காதலிக்கிறேன். மனம்பூர்வமா நேசிக்கிறேன். உங்கள் உடல் நிலை என்னோட முடிவை மாத்தாது.

அட முட்டாளே இதை தான் இத்தனை நாளா நான் சொல்லிகிட்டு இருந்தேன். ரம்யா, உன்னோட கையாவது சரியாயிடும்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் என்னோட பக்கவாதம் சரியாகுமான்னு தெரியலை. அப்படியே சரியானாலும் எத்தனை நாள், வருஷம் ஆகும்னு தெரியாது. மேலும் என்னுடைய உடல் நிலையில் உனக்கு ஒரு வாரிசு கொடுக்க முடியுமான்னு சந்தேகமா இருக்கு.

ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க ரிஷி. எல்லாம் சரியாயிடும்.

சரியாகாது.

ஏன் அப்படி சொல்றீங்க?

உன்னோட எல்லா கேள்விகளுக்கும் என்னால பதில் சொல்ல முடியாது ரம்யா. நான் சொன்ன பாயிண்டை தான் நீ எனக்கு திருப்பி சொல்றே. எப்படி நான் உன்னை கன்வின்ஸ் பண்ண முடியலையோ அது போல நானும் கன்வின்ஸ் ஆகலை. வீணா உன்னுடைய வாழ்கையை எனக்காக வீணடிக்காதே. இதுவே நீ இங்க வர்றது கடைசி முறையாக இருக்கட்டும் என்றான் சற்றே குரலை உயர்த்தி.

ரிஷி, ப்ளீஸ் அந்த மாதிரியெல்லாம் சொல்லாதீங்க...........

இல்லை ரம்யா. நான் முடிவு பண்ணிட்டேன். நீ எனக்கு செஞ்ச உதவிக்கு கோடி நன்றிகள். நான் உன்னை காதலிச்சது உண்மை. ஆனால் அது திருமணத்தில் முடியப்போவதில்லை. நீ உங்க அப்பா அம்மா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இரு.

ரிஷி, நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க............

ரவி, ரம்யாவை ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணிடு என்றான் தன்னுடைய ரூம்மேட்டை பார்த்து.

கோபமாக பைகளை எடுத்துக் கொண்டு பை என்று சொல்லி கிளம்பினாள் ரம்யா.

15

அவள் போன திசையை சில நிமிடங்கள் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்து குளியலறைக்கு சென்று குளித்து முடித்து கருமை நிற ஜீன்ஸ் எடுத்து அணிந்து, கருநீல சட்டை எடுத்து கால்சட்டையின் உள் சீராக இறக்கி பெல்ட் அணிந்து பர்ஃம்யூம் இட்டு கிச்சனுக்கு சென்று 2-நிமிட மாக்கி நூடுல்ஸை சுடவைத்து விட்டு ஷீக்கள் தேடி சாக்ஸ் போட்டு ஷீ அணிந்து கிச்சனுக்கு சென்று தயாரான நூடுல்ஸை அவசராமக உள்ளே நுழைத்தான்.

ரம்யாவை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வந்த ரவி, ஏன்டா இந்த டிராமாவெல்லாம் பண்றே என்று சொல்லியவாறே சோபாவில் வந்து அமர்ந்தான்.

ரவி, எத்தனையோ முறையில நான் அவமேல வைச்சிருக்கற காதல் உண்மைன்னு சொல்லிப்பார்த்துட்டேன். அவளுக்கு புரியலை. அதனால் இந்த பொய், நாடகம் தேவைபட்டது. இது ஒரு போர் தான்டா. காதல் போர்.

நீதிக்கும் அநீதிக்கும் நடக்கற போர் மாதிரி தான். காதலை நேர் வழியில் ஜெயிக்கனுமா இல்லை தவறான வழியில் போய் ஜெயிக்கனுமான்னு ஒரு பட்டி மன்றமே வைக்கலாம்.

நேர்வழியில் போய் பார்த்துட்டேன். இப்ப இந்த வழி. ஆனால் இரண்டு வழியிலும் குறிக்கோள் ஒன்னுதான். அது காதலில் வெற்றி.

டேய், நான் சொன்னதை வைச்சிகிட்டு ஒரு புதிய காதல் கீதை எழுது, எனக்கு ஆஃபீஸூக்கு நேரமாயிடுத்து என்று கூறி ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு ஃபிங்கர் க்ளவுஸை எடுத்துக் கொண்டு தன்னுடைய யமஹாவை எடுத்தான்.

ரவி புன்னகையுடன் ஆல் த பெஸ்ட் என்றான்.

இந்த காதல் யுத்தத்திற்காக ஒரு மாதம் இரவில் வந்த பணிபுரிய விசேட அனுமதி பெற்றிருந்தான் ரிஷி. அவனுடைய தலைவரும் காதலுக்கு மரியாதை செய்ய அனுமதி அளித்திருந்தார்.

16

காலையில் எட்டு மணிக்கு வீடு திரும்பிய அவனுக்கு ரம்யா வெளியில் நின்றிருந்தது கண்ணுக்கு பட்டது.

கடுகுவெடித்தது போல் முகத்தை வைத்திருந்தாள். மூக்கு சிவந்து கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது ரம்யாவுக்கு.

நேராக வண்டியை அவளருகில் எடுத்து சென்று நிறுத்தினான். வேண்டுமென்றே அவன் கால்களை அவள் மீது இடித்தவாறே எடுத்து நின்றான். அவள் கண்ணெதிரில் சினிமா வில்லனை போல் தன் க்ளவுசை மெதுவாக கழற்றினான். அவள் கைகள் நடுங்கவில்லை.

கோபமாக, என்ன நடக்குது இங்கே? ராத்திரி ஃபுல்லா தூங்காம பைத்தியமாதிரி காலையிலே ஓடி வந்திருக்கேன். என்ன நடக்குது இங்கே? என்று கூச்சலிட்டாள்.

அவளை தரதரவென்று உள்ளே இழுத்து சென்று சோபாவில் அமர வைத்தான். தன்னுடைய காலணிகளை அகற்றிவிட்டு மெதுவாக அவள் அருகில் தரையில் அமர்ந்தான்.

அவள் வலது கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டான்.

எனக்கு ஷாக் அடிக்கலை. பக்கவாதம் இல்லை. வாய் குழறலை. அது மாதிரி உன் மேல இருந்த காதலும் கொஞ்சம் கூட மாறலை. ஆனா உன்னோட கேள்விகளுகெல்லாம் என் கிட்டே பதில் இல்லை. உன்னோட மனசுல இருக்கற சந்தேகங்களை மாத்தவும் முடியலை.

அவள் சற்றும் கோபம் குறையாமல் அவனை முறைத்து பார்த்தாள்.

கண்ணா, நான் பக்கவாதம் வந்து படுத்தாலும், எனக்கு குழந்தையை கொடுக்கற சக்தி இல்லாம போனாலும், வாய் குழறினாலும் என்னையே கல்யாணம் பண்ணிக்கனும்னு ஏன் நினைச்சே? இப்படி உன் கிட்டே கேட்டா நான் உன்னை காதலிக்கிறேன்னு மட்டும் பதில் வரும். வேற எந்த விளக்கமும் உன்னால கொடுக்க முடியாது. இல்லையா? உன் கிட்டே இருந்தது சின்ன குறை. அந்த குறையை உதாசீனப்படுத்திட்டு எனக்கு ரம்யாதான் வேணும்னு நான் சொன்னா உன்னால அதை ஏத்துக்க முடியலை.

ஏதாவது இந்த மரமண்டைக்கு புரியுதா என்று அவள் தலையில் தட்டினான்.

அவள் அவனை இன்னும் முறைத்து பார்த்தவண்ணம் இருந்தாள்.

மண்டு, க்ளைமாக்ஸ் வந்துடுத்து. ஒழுங்கா என்னை கட்டிபுடிச்சிக்கிட்டா படிக்கறவங்க சந்தோஷமா வீட்டுக்கு போவாங்க என்றான் ரிஷி புன்னகையுடன்.

அவள் கைகளை மாலையாக மாற்றி அவன் கழுத்தை சுற்ற அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அன்பு பிரவாகமாக ஓடியது அங்கு. அவன் அவளுடைய அன்பு பிரவாகத்தை தன்னுடைய அணைப்பின் மூலம் அங்கீகரித்தான்.

காதலில் பல கேள்விகள் எழுலாம். காதலர்களுக்கு அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்கலாம். அதை சொல்லமுடியாமலும் இருக்கலாம். சொல்ல முடியாததால் விடை இல்லை என்று ஆகிவிடாது. காதலர்கள் கேட்க வேண்டிய ஒரு கேள்வி, நீ என்னை மனமாற நேசிக்கிறாயா? அவர்கள் அறிய வேண்டிய ஒரே பதில், நான் உன்னை மனமாற நேசிக்கிறேன்.

ஆம். ஆம்.

முற்றும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.