Jump to content

வான்கலந்த மாணிக்கவாசகம்


Recommended Posts

வான்கலந்த மாணிக்கவாசகம் 01

பேராசிரியர் ந. கிருஷ்ணன்

 

 
 
siva_3058872f.jpg
 
 
 

‘மெய்யாகவே இறைவனிடம் அன்பு செலுத்துவதும் அவனை அடைவதும் எப்படி?’ என்று மனித உடலில் வாழும்போதே இறையனுபவம் பெற்ற மாணிக்கவாசகரிடமே கேட்டுவிடுவோம் என்ற எண்ணம் தோன்றியது. மாணிக்கவாசகர் இறைவனுக்கு எழுதிய காதல் கடிதங்களை வாசித்தால் விடை கிடைக்கும் என்று தோன்றியது. நல்லவேளை, அத்தகைய கடிதங்களைத் தொகுத்துத் ‘திருவாசகம்’ என்றும், ‘திருக்கோவையார்’ என்றும் வைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு கடிதமாக வாசிக்கத் தொடங்கினேன். ஒரே புலம்பலாகத் தோன்றியது. பக்கங்கள் ஓடின. சரிப்பட்டுவராது என்று மனதில்பட்டது; மூடிவைத்துவிட்டேன். சரி, குத்துமதிப்பாக ஒரு பக்கத்தைத் திறப்போம்; ஏதாவது கிடைத்தால் சரி; இல்லன்னா மூடிவைப்போம் என்று முடிவெடுத்து, ஒரு பக்கத்தைப் புரட்டினேன். ‘கோயில் மூத்ததிருப்பதிகம்’ என்ற தலைப்பைப் பார்த்ததும் ‘சப்’பென்று போய்விட்டது. இருந்தாலும் ஒருவரி வாசிப்போம் என்று பார்த்தபோது, முதல் பாடலிலேயே நான் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதோ என்று தோன்றியது.

அந்தப் பாடலில் இறைவனிடம் அன்பு செய்வதற்கு, இறைவனிடமே ஒரு சின்ன ஒப்பந்தம் போடுகிறார் மாணிக்கவாசகர்: “அப்பனே! அம்மையோ உன் இதயத்தின் நடுவில் இருக்கிறாள்! நீயோ அம்மையின் இதயத்தினுள் இருக்கிறாய்! நீவிர் இருவரையும் என் இதயத்துள் இருத்த எனக்கு ஆசை போட்டு அடிக்கிறது. அதற்கு நீர் ஒரு சிறிய உதவி எனக்குச் செய்தால் போதும். என்னை உன் அடியார்கள் நடுவில் கொண்டு வைத்துவிடும்” என்பதுதான் அது.

உடையாள் உந்தன் நடு இருக்கும்! உடையாள் நடுவுள் நீ இருத்தி!

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால், அடியேன் உன்

அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்! பொன்னம்பலத்து எம்

முடியா முதலே! ஏன் கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே! -திருவாச:21-1

புரிந்துவிட்டது எனக்கு. திரையரங்கில் வழியும் கூட்டத்தோடு கூட்டமாக நின்றாலே போதும். அக்கூட்டத்தினரே நம்மை அரங்கினுள் சென்று சேர்த்துவிடுவதைப் போல, அடியவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தாலே போதும். அவர்களுக்கு அருளும் இறைவன் நமக்கும் அருள்வது உறுதி. அடியவர்கள் நடுவில் இருந்தால், அம்மை-அப்பனின் அருஞ்செயல்களைப் பேசுவர்; அவனின் திருவார்த்தைகளைச் சிந்திப்பர்; அவனின் திருநாமங்களைப் பாடிக் களிப்பர். அந்தச் சூழலில், சொந்த முயற்சி இல்லாமலேயே, அம்மையப்பன் நம் இதயத்தில் குடியேறிவிடுவர். என்ன அருமையான சுருக்கு வழி. நாமும் இதற்கு முயற்சி செய்து பார்த்துவிடுவது என்று ‘தீர்மானம்’ செய்துவிட்டு இறைவனைக் காணப்போகிறோம் என்ற நிறைவுடன் உறங்கினேன்.

ஏன் வானம் வசப்படவில்லை?

தமிழக சிவாலயங்களில் இப்போதெல்லாம் ‘திருவாசக முற்றோதுதல்’ அடியவர்களால் அதிகம் நிகழ்த்தப்பெறுகின்றன. ‘திருவாசகம் முற்றோதுதல்’ நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்துகொண்டபின்பு, திருவாசகம் ஓதுதலும், திருவாசகத்தில் உருகுதலும் அனுபவத்தில் கனிந்து வரும் நிகழ்வாக இல்லாமல், ‘திருவாசகம் முற்றோதுதல் நன்மை பயக்கும்’ என்ற நம்பிக்கை சார்ந்த ஒரு சமயச் சடங்காக நிகழ்வதாகவே ஒரு உணர்வு என்னுள் உண்டாயிற்று. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற பழமொழி தமிழரிடை வழங்கி வருவதென்னவோ உண்மைதான். ஆயினும், ஏன் பலருக்கும் அந்த வானம் வசப்படவில்லை என்ற எண்ணமே பெரிதும் தலைதூக்கியது.

விசாரித்துப் பார்த்ததில், ஒரு சில அடியார்கள் சரியாக வழிகாட்டினார்கள். இராமலிங்க வள்ளலார் மாணிக்கவாசகரின் அடியொற்றி, இறைவனைக் கண்டவர் என்று கூறினார் அவர். அப்படியானால் சரி, வள்ளல் பெருமானையே கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்து, திருவாசகத்தைப் பற்றி வள்ளலார் உரைத்த “வான் கலந்த மாணிக்கவாசக, உன் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்” என்ற வாக்கைப் பற்றினேன். ஆம், வெறும் திருவாசக வாசிப்பு மட்டும் போதாது; ‘திருவாசகத்தில் “நான்” கலந்து பாடினாலே இறைவனைச் சிக்கெனப் பிடிக்க இயலும் என்பதை உணர்ந்தேன். அப்படி “நான்” கலந்து பாடினால் என்ன நிகழும்?

இதோ வள்ளல் பெருமானின் வாக்குமூலத்தைக் கேளுங்கள்:

“நல்ல கரும்புச் சாற்றினில் தேன் கலந்து, பால் கலந்து, நன்கு பழுத்துக் கனிந்த பழச்சாற்றினைக் கலந்து ...”; சிறிது பொறுங்கள்; இத்தனையும் கலந்தால், திகட்டிவிடுமே? நன்றாக இருக்குமா? என்று கேட்டேன் வள்ளல் பெருமானிடம். பெருமான் கூறினார், “இத்தகைய சுவையுடன், உங்கள் ஊனையும், உயிரையும் கலந்து விடுங்கள்; திகட்டாமல் நிலைத்த இனிமை கிட்டும்” என்றார்.

“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே

தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்

ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”- வள்ளலார் பெருமான்.

இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமோ? வள்ளல் பெருமான் “வாழையடி வாழையாய் வந்த அடியார்த் திருக்கூட்ட மரபினுள்” நம்காலத்திற்கு அண்மையில் வாழ்ந்தவர். அவர்வழி அடியொற்றி, திருவாசகத்தில் “நாம் கலந்து” சுவைத்து, இறைவனைச் சிக்கெனப் பிடித்து உயர்வடைவோம்.

(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-01/article9271781.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 02: தேவரும் அறியாச் சிவனே காண்க

பேராசிரியர் ந. கிருஷ்ணன்

 

 
 
 
 
sivan_3066017f.jpg
 
 
 

வள்ளல் பெருமான் உரைத்த திருவாசகத்தில் “நான்” கலப்பது என்ற இறைவனுடன் இரண்டறக் கலக்கும் விதத்தை, பத்தாம் திருமுறை ஆசிரியரான திருமூலர் ‘திருமந்திரத்தில்' அழகாகக் கூறியுள்ளார். அதையும் இங்கு நினைவுகூர்தல் நம் பார்வையைத் தெளிவாக்கும். வள்ளலார்க்கும் திருமூல தேவ நாயனார் ஒரு குரு அல்லவா?

திருமூலர் இறைக்கலப்பில் முழுமை அடைந்த மகான். தான் பெற்ற இறையின்பத்தை இவ்வுலக மக்கள் அனைவருக்கும் தருகிறார். உலகோர் அனைவருக்கும் ‘குரு'வாக விளங்கும் அவர் சொல்வதைக் கேளுங்கள்.

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.”

இறைவன் எங்கோ விண்ணிலும், நாம் இங்கே மண்ணிலும் உறைவதாகக் கருதி, இறைவனைத் தேடும் அன்பர்களுக்கு, “இறைவன் எங்கோ உறைவதில்லை; இன்னும் சொல்லப்போனால், இறைவனுக்கென்று தனியே ஓர் உறைவிடம் இல்லை; ஏனெனில், அவன் எங்கும் நிறைந்தவன்; எப்படியென்றால், தேனுக்குள் உறைந்துள்ள இனிப்பு” என்னும் இன்பத்தை எவ்வாறு கருப்பு, சிவப்பு என்று குறிப்பாக அடையாளம் காட்ட இயலாமல் எங்கும் அவ்வின்பம் செறிவாக நிறைந்துள்ளதோ, அதைப்போலவே, எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம் ஊனுடம்புக்குள்ளும் செறிவாக மறைந்து உறைகின்றான்”. என்கிறார் திருமூலர்.

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!'' – திருமந்திரம்

ஒரு பாதிரியாரை திருவாசகம் கவரமுடியுமா?

திருவாசகத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதன் பெருமையை உலகோர் அனைவருக்கும் பறைசாற்றியவர் லண்டன் மாநகரிலிருந்து தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் என்ற ஊரில் கிறிஸ்தவத் தொண்டாற்றிய ஆங்கிலேய அருட்தந்தை ஜி. யூ. போப் அவர்கள். தமிழ்மறையாம் திருவாசகம் உலகெங்கும் பேசப்பட்டது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையான செய்தி. அதேவேளை, எல்லோருக்குமான ஓர் ஐயம், சிவனை முழுமுதற்கடவுளாகப் பாடி உருகும் திருவாசகம் ஒரு கிறிஸ்தவ அருட்தந்தையை எப்படிக் கவரமுடியும்? இது ஒரு முரண்பாடாகத் தெரிகிறதே என்பதாகும்.

இதில் ஒரு முரண்பாடும் இல்லை; இறைவன் ஒருவனே ஆதலால், திருவாசகத்தில் ‘சிவன்' ஆகக் காட்சியளிக்கும் அதே இறைவன்தான் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களுக்குப் பரமண்டலத்திலிருக்கும் பிதாவாக, இயேசு பெருமானால் அடையாளம் காட்டப்பட்டார். வெறும் நம்பிக்கை சார்ந்து வாழாமல், ஊனுக்குள் ஒளிந்திருக்கும் ‘பிதாவை' உணர்வில் கண்டுகொண்ட அருட்தந்தை போப் அவர்களுக்குத் ‘திருவாசகத்தில்' ஒளிந்திருக்கும் 'சிவனே' அவர் வழிபடும் ‘பரமண்டலப் பிதா' ஆவார் என்பதை எளிதாக அடையாளம் காண இயன்றது.

திருவாசகத்தின் உருக்கத்தில் கரைந்தார் அருட்தந்தை; அவர் லண்டன் நகரின் சர்ச்-ல் முழந்தாளிட்டுச் செபம் செய்யும்போது, தன்னருகில் மாணிக்கவாசகரும் முழந்தாளிட்டு செபம் செய்ததாகத் தான் உணர்ந்ததைத் தன்னுடைய திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் பதிவிட்டுள்ளார். இதுவே சமயம் கடந்த பக்திநிலை; பன்மைத்துவத்தைப் போற்றும் நிலை; இறைவனை உணர்ந்த அருளாளர்களுக்கு இம்மனநிலையும், இறை அருளும், அமைதியும், பேரின்பமும், வீடுபேறும் கிட்டும்.

மாணிக்கவாசகர் இறைவனை நேரிலே கண்டதாக அவர் வாக்கிலேயே கேளுங்கள்:

“பரமன் காண்க பழையோன் காண்க

பிரமன் மால் காணாப் பெரியோன் காண்க

யாவரும் பெறவுறும் ஈசன் காண்க

தேவரும் அறியாச் சிவனே காண்க

கண்ணால் யானுங் கண்டேன் காண்க - திருவாசகம்: அண்டப்பகுதி-37,38,55,56,58

குருவடிவில் தோன்றிய இறைவன்

இளமைப் பருவத்திலேயே கல்வி-கேள்விகளில் தேர்ந்த மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனின் முதலமைச்சராகப் பணியாற்றியவர். பாண்டிய நாட்டின் எல்லாவகைச் செல்வங்கள், பதவிகள், அதிகாரங்கள் அனைத்தும் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர்; அப்படிப்பட்டவர் பாண்டிய நாட்டின் குதிரைப்படைகளை வலுப்படுத்த, அரசனின் ஆணைப்படிப் புதிய குதிரைகளை வாங்க திருப்பெருந்துறைக்குச் செல்கிறார்; சென்ற இடத்தில், திருமறை பயிற்றுவிக்கும் குருவடிவில் தோன்றிய இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார். பாண்டியப் பேரரசின் முதலமைச்சராக, அதிகாரத்தின் உச்சத்தில், அனைத்துவகைச் சுகபோகங்களுடனும் வாழும் ஒரு மனிதனைத் ‘திருவாசகம்’ பாடத் தேர்ந்தெடுக்க இறைவனுக்கு ஒரு வலுவான காரணம் இருந்திருக்க வேண்டும்.

உலகில் வாழ்ந்து பெற்ற பட்டறிவினால், உலகஇன்பங்களின் நிலையாமையை உணர்ந்து, தன்னை அறிந்து, தலைவனாம் ‘இறைவனை' அடைய எத்தனையோ யோகிகளும், ஞானியரும் தவமாய்த் தவம் கிடக்க, இதைப்பற்றித் துளியும் சிந்திக்கவே வாய்ப்பும், நேரமும் இல்லாத பாண்டிய நாட்டின் முதலமைச்சர் மாணிக்கவாசகரை வலியத் தேடிவந்து, இறைக் காட்சித் திருவருள் தந்தது ஏன் என்பதே நாம் அனைவரும் அறிய விரும்புவது.

சராசரி மனிதனின் பார்வையில் மாணிக்கவாசகர் இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் நுகரும் வாய்ப்பு கொண்ட சர்வவல்லமை கொண்ட ஒரு முதலமைச்சர். இவை அனைத்தையும் விட்டுவிட்டு, “அளவற்ற இறைப்பேரின்பம் பெற்ற அவரின் அனுபவப் பிழிவான திருவாசக வரிகள்” மற்ற மனிதர்களுக்கு இறைத்தேடல் நிகழ்த்த நம்பிக்கையான வழிகாட்டியாக இருக்கும். அவ்வாறு, “மனிதன் இறைவனுக்குச் சொன்னதே திருவாசகம்” மனிதனுக்கு இறைகாட்சியை உணர்த்தும் அற்புதமான ஆற்றுப்படைத் தமிழ்மறையே திருவாசகம் என்று நாம் அறியவேண்டும்.

நம்முன் உள்ள மற்றொரு முக்கியமான ஐயம், இறைக்காட்சி கிடைத்தாலும்கூட, மனிதஉடலில் வாழும் எவருக்கும் இறையின்பத்தைச் சுவைத்து அறியமுடியாது என்றும் கூறப்படுகிறது. “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்ற விதியை மாணிக்கவாசகருக்காக மட்டும் இறைவன் தளர்த்தியது ஏன் என்பதை அடுத்த வாரம் காண்போம்.

(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-02-தேவரும்-அறியாச்-சிவனே-காண்க/article9296248.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 03: சொற்பதம் கடந்த தொல்லோன்

 

 
 
 
 
thiruvasagam_3074360f.jpg
 
 
 

திருவாசகம் என்பதற்குப் பொருள் - அழகிய, தெய்வத்தன்மை வாய்ந்த சொற்களால் ஆகிய பாடல் என்கிறார் தமிழ்க்கடல் மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார். எல்லையற்ற பெருங் கருணையாளனான சிவப் பரம்பொருளை, மனிதன் மனம், மொழி, ஐம்பொறிகள்-ஐம்புலன்கள் ஆகியன கொண்ட ‘மெய்’ எனப்படும் மனிதஉடலால் அறிய முடியாது என்பது ஞானிகள் கண்ட உண்மை. அத்தகைய இறைவனை, திருவாசகம் உணர்ந்து ஓதுவதால் உணரலாம்; அடையலாம். இறை உணர்வு பெறாத மனித உடலிலுள்ள ஊனக் கண்களைக் கொண்டு இறைவனைக் காண இயலாது என்பது திருவாசகச் சான்று.

சொற்பதம் கடந்த தொல்லோன்

கண் முதற் புலனால் காட்சியும் இல்லோன்;

உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படான் – திருவாசகம்:3:111-113.

உரை உணர்வுகளான மன, மொழி, மெய் ஆகியன கடந்தால் மட்டுமே இறைஉணர்வு என்னும் கண்ணைப் பெற முடியும். ஆதலால், அத்தகைய ‘இறைஉணர்வு’ என்னும் மாபெரும் ஆற்றலை மனித உடலில் வாழும் சாதாரண மனிதன் யாரும் பெற இயலாது.

நமக்கெல்லாம் அருளவே ‘விதி’ மாற்றப்பட்டது

“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்ற விதியை இறைவன் தளர்த்தியது, எந்த மனிதனும் இறைவுணர்வை எளிதில் பெறும் ஆற்றல் கொண்ட திருவாசகத்தை மணிவாசகரின் திருவாயால் பாடும்படிச் செய்வதற்காகத்தானே தவிர மணிவாசகர் பொருட்டு அன்று; சாமானியர்களான நமக்கு அருள் புரிவதற்காகத்தான் “இறைபேரின்பத்தைத் தம் அனுபவத்தில் பெற்ற” மணிவாசகரைப் புவியில் சிலநாட்கள் வாழ்ந்து, பின் தில்லை வருமாறு பணித்தான் இறைவன்.

எல்லையற்ற இறையின்பம் என்னும் இறையருட் கண்ணைப் பெற்றுப் பின் அக்கண்ணில்லாத வாழ்வின் ஏக்கமே திருவாசகமாகப் பொழிந்தது. இறையருட் கண்ணைப் பெறாத பிறவிக்குருடர்களான நம் போன்றோருக்கு இறையருட்கண் வழங்க மணிவாசகப் பெருமானால் அருளப்பட்டதே திருவாசகமாகும். கண், வாய், காது முதலிய உடல் கருவிகளைக் கொண்டு ‘இது’, ‘அது’ என்று பொருட்களைச் சுட்டிக்காட்டி, நாம் பெறும் அறிவே ‘உரைஉணர்வு’ கொண்டு அறியும் அறிவு; அதைக் கடந்துசென்று, ‘இறைவனின் அருள்’ என்னும் ‘கண்’ கொண்டே இறைவனைக் காணவும், உணரவும் முடியும். அத்தகைய இறைவனை மனிதவுடலில் வாழும் நம்மைப் போன்றோருக்கு உணர்த்தும் ஆற்றலைத் தமக்குத் தருமாறு மணிவாசகர் இறைவனிடம் வேண்டிப் பெற்றார் என்பதை அவர் வாக்காலேயே இதோ அறிவோம்..

“உரையுணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே!

யான் உன்னை உரைக்குமாறு உணர்த்தே!” – திருவாசகம்:22-3

மாதவம் செய்தவர்கள் தமிழர்கள்

நாம் உய்ய, இறையுணர்வை உள்ளீடாகக் கொண்டு மணிவாசகப் பெருமான் அருளிய உயிர் உருக்கும் தமிழ்மறையே திருவாசகம். மெய்யன்புடன் ஓதுவார், கேட்பார், உணர்வார் அனைவருக்கும் பேரின்பப் பரவசம் தந்து இறையனுபவம் தருபவை. எத்துணைத் மாதவம் செய்திருந்தால் நாமெல்லாம் தமிழர்களாகப் பிறந்திருப்போம் என்று எண்ணிப்பாருங்கள். அங்ஙனம் செய்த தவத்தை வீணாக்காமல் திருவாசகம் படித்து, உணர்ந்து நாமெல்லாம் உய்தியடைவோம்.

திருவாசகத்தேனை சுவைக்க மொழி ஆளுமை மட்டுமே போதாது. திருவாசகம் குறித்த பதஉரை, விளக்கஉரை, தெளிவுரை என்று பல அறிஞர்களின் நீண்ட விளக்க நூல்களைப் படித்த பின்னும் நம் இரும்பு மனங்கள் ஏன் உருக மறுக்கின்றன என்பதை நாம் சிந்திக்கவேண்டும். திருவாசகம் கற்பதற்கான நூல் அன்று; இறைவனை உணர்வதற்கான வாசகம். திருவாசகம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், மொழி ஆளுமையினால் மட்டும் அதன் ஆன்மாவைத் தொட்டுவிட முடியாது; நிபந்தனையற்ற, எதிர்பார்ப்பில்லாத, வரம்பில்லாத இறையன்பே திருவாசகத்தின் அடிநாதம்-இயல்புமொழி. அந்த அன்புமொழி புரிந்தால்தான் திருவாசகத்திற்கு உருக இயலும்.

கற்றாவின் மனம்போலக் கரைக!

மணிவாசகத்தில் சொல்வதானால், இறைவனின் திருவடி அருளைப் பெற, கற்றாவின் (கன்றை ஈன்ற பசுவின்) மனம் போலக் கசிந்துருக வேண்டும்; கன்றை ஈன்ற பசுவின் மனம், தான் ஈன்ற கன்று வளர்ந்து, தனக்கு ‘இதைச் செய்யும், அதைச் செய்யும்’ என்ற எந்த எதிர்பார்ப்பும் இன்றியே, தன் கன்றின்மேல் கொண்ட அன்பு ஒன்றாலேயே அது உருகுகின்றது; “உன் ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிமேல் அன்பு கனிந்து கசிந்து உருகும் மனத்தை எனக்கருளவே யான் உன்பால் வேண்டுகிறேன்” என்று குற்றாலத்துறையும் இறைவனிடம் மனமுருகி வேண்டுகிறார் மணிவாசகர்.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே! – திருவாசகம்:39-3

கன்றை இழந்த கறவை மாட்டிடம் நாம் எப்படிப் பால் கறப்போம் என்பதைச் சற்று சிந்திப்போம். வைக்கோல் பொம்மைக் கன்றுக்குட்டியைக் காட்டித்தானே? “மாணிக்க வாசக! சிலநாட்கள் இங்கு வாழ்ந்து, பின் தில்லைக்கு வந்து என்னைப் பார்” என்று இறைவன் மணிவாசகரைப் பிரிந்ததால்தான் மணிவாசகரின் மனம் ‘கற்றா’வின் மனம்போலக் கசிந்துருகியது; நமக்கான ‘திருவாசகம் கிடைத்தது. இதுவே இறைவன் நமக்காக நிகழ்த்திய திருவிளையாடல்.

எவரொருவர் திருவாசகச் சூழலில் தன்னைப் பொருத்தி மாணிக்கவாசராகவே உருகிக் கரைகிறாரோ, அவருக்கு இறைவனை அடைவது மிக எளிது. இதைத்தான் வள்ளலார் “ “நான்” கலந்து பாடுங்கால்” என்று நமக்குச் சொன்னார். திருமூலதேவர் “ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்” என்றார்.

மாணிக்கவாசகரைப் பலப்பல கடினமான சோதனைகளும், துயரங்களும் பெருமழைபோல் தாக்கின. அவைகளின் காரணமாக, உலகின் பலதரப்பட்ட குறைபாடுள்ள மனிதர்களின் குற்றங்களைத் தாமே செய்ததாகத் தம்பால் ஏற்றிக்கொண்டார் மணிவாசகர்; அத்துன்பச்சூழலில், அவர்களாகவே மாறிப்போய் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதால் பிறந்தன பல்வேறுவகைத் திருவாசகப் பாடல்கள்.

திருவாசகப் பாடல்களில் கரையும் குறைபாடுள்ள பலதரப்பட்ட மனிதர்கள், “இதோ இப்பாடல்கள் எமக்காகவே படைக்கப்பட்டன; “இவை நமக்கானவை” “ என்று உணர்வார்கள், கடைத்தேறுவார்கள் என்பது உறுதி. மாணிக்கவாசகர் முதன் முதலில் சுவைத்த இறையின்பம் குறித்து விரிவாக அறிய நமக்கெல்லாம் ஆசை உண்டல்லவா? தாம் பெற்ற முதல் இறைஅனுபவத்தை மணிவாசகர் நம்முடன் அணுஅணுவாகப் பகிர்ந்துகொள்வதை அடுத்த வாரம் காண்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-03-சொற்பதம்-கடந்த-தொல்லோன்/article9323979.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 04: நம்முள்ளும் அமுதே

 

 
 
thiruvasagam_3074360f.jpg
 
 
 

மாணிக்கவாசகர் இறைவனின் கட்டளைப்படியே பல சிவத்தலங்களையும் தரிசித்து, தில்லைக்கு வருகின்றார். தில்லைவாழ் சிவனடியார்கள் மாணிக்கவாசகரை வணங்கி, வரவேற்று மகிழ்ந்தனர். பின் அடிகளிடம், “நாங்கள் சிவனடியார்கள்; சிவபெருமானின் பெருமையெல்லாம் அறிந்திருக்கின்றோம்; ஆயினும் கண்ணால் காணும் பேறு பெறவில்லை; பிரம்மனும், திருமாலும் காணமுடியாத சிவபெருமானைத் திருப்பெருந்துறையில் தாங்கள் கண்டுகளித்த அனுபவத்தை எங்களுக்கு அறியத் தாருங்கள்” என்று விண்ணப்பித்தனர்.

அடியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டதும், இறைப்பேரின்ப நிகழ்வுகளின் நினைவுகள் மாணிக்கவாசகப் பெருமானை ஆட்கொண்டன; தம்மைச் சுற்றி நிற்கும் அடியாரை மறந்தார்; தம்மையே மறந்தார்; இறைப்பேரின்ப வெள்ளத்தில் திளைத்தார்; அடிகளின் மனம், மொழி, மெய் எல்லாம் கனிந்துருகத் ‘திரு’வாம் இறைவனில் கரைந்த அனுபவத்தை விளக்கும் ‘கோயில் திருப்பதிகம்’ என்னும் பத்துப் பாடல்களும், முன்னிற்கும் இறைவனுடன் பேசும் திருவார்த்தைகளாக, சிவனடியார்கள் அனைவரின் ஊனினை உருக்கி, என்புருக்கும் இறைக்காட்சியாய் விரிந்தது.

இறைவனை உள்ளவாறு காண ...

“தேனினும் தெளிவான சிவபெருமானே, திருப்பெருந்துறையில் உறையும் சிவனே! சொர்க்கப்பதவி, பிரம்மலோகப் பதவி, வைகுண்டப் பதவி போன்று முடிவில்லாத பல பதவிகள் எல்லாவற்றையும் கடந்த இன்பமே! என்னுடைய அன்பே! உன்னை எனக்கு உணர்த்தும் கடமைகளிலிருந்து மாறி நின்று, என்னை மயக்கிடும் மெய், வாய், கண், மூக்கு, செவியாம் ஐந்து வஞ்சகப் புலன்களின் வாயில்களையும் அடைத்து, அமுதமாய்ச் சுரந்து நின்று, என்னுள்ளே உதிக்கின்ற இறையொளியே! யான் உன்னை உள்ளவாறு கண்டதை அடியவர்கள் காணும்படி வந்தருள்வாயாக!” என்று அருளிய மாணிக்கவாசகப் பெருமான் பரவசத்தில் மூழ்கினார். (தேறலின் தெளிவே - தேனின் தெளிவானவனே)

மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து அமுதே

ஊறிநின்று என்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காண வந்தருளாய்

தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந் துறையுறை சிவனே

ஈறு இலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே.

திருவாசகம்:20-1

இந்திரன், பிரம்மன், திருமால், உருத்திரன் உள்ளிட்ட எண்ணற்ற தேவர்களுக்குரிய எண்ணற்ற பதவி இன்பங்களினும் மேலான இன்பவடிவினன் சிவபெருமான்-எனவே, 'ஈறு இலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே' என்றார்; ‘அன்பே சிவம்’ ஆகையால், 'என்னுடை அன்பே' என்றார்; மாறி நின்று மயக்குதல் என்பது, இறைநெறியில் சென்று பேரின்ப முழுமையறிவைப் பெற விடாமல் வழிமாறச் செய்வது; ஏனெனில், மனம் என்னும் கருவியின் கட்டுப்பாட்டில் உள்ள ஐந்துபுலன்களும் அவைகளுக்குரிய ஐந்துபொறிகள் வழியாக மனதைத் தம் வழியே திசைதிருப்பும் தன்மையுடையன.

மயக்கும் புலன்கள்

அறிவு பெறுவதில் நமக்கு வரமாகச் செயல்படும் பொறி,புலன்களே உலகச் சிற்றின்பம் துய்ப்பதற்கும் வாயில்களாக உள்ளமையால், பலவேளைகளில் மனதைத் தீய வழிகளில் திசைமாற்றும்போது சாபமாக மாறிவிடுகின்றன. எனவேதான், அவைகளை ‘மயக்கும் வஞ்சப்புலன் ஐந்தின் வழி’ என்றார் மணிவாசகர். எனவே இவைகளின் துணையுடன் இறைவனைக் காண இயலாது. சுவை, ஒளி, தொடுதல், ஓசை, மணம் என்று சொல்லப்படும் ஐம்புலன்களையும், மனதையும் தன்வயப்படுத்தி அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனுக்கே இவ்வுலகம் வசப்படும் என்கிறார் திருவள்ளுவர்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

-திருக்குறள் 27

அப்பர் சுவாமிகளும் ‘இறைவனின் அருள்’ என்னும் கண்கொண்டு கண்டாலொழிய, மற்றைப் பொருள்கள்போல இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன் , இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது என்கிறார்;

இறைவனின் அருள் என்னும் பேரின்பம் உள்ளேயிருந்து ஊறி எழும்போது, மயக்கும் ஐம்புலன்களும் செயல்மறந்து போவதால், ‘அடைத்து அமுதே ஊறி நின்று' என்றார். உலகோர் அனைவரும் இறைவனை கண்டுகளிக்குமாறு வழிகாட்டும் விருப்பத்தால், 'உள்ளவா காண வந்தருளாய்' என்றார். இறைவன் வெளிப்பட்டுத் தோன்றும்போது, புற உலகத்தையே காணும் உடலும் புலன்களும் ‘மாறி நின்று மயக்கும்’ செயல்மறந்து, இறைக்காட்சி காணும் புலன்களாக மாறும். தளைகள் அணுகவியலா இறைவன் உயிரை அணுகினால், உயிரைக் கட்டிய தளைகள் நில்லாமல் சென்று ஒழியும் என்பது திருமூலர் வாக்கு.

‘சார்ந்த வண்ணம் ஆதல்’ உயிரின் தன்மை (தத் த்வம் அசி) - நீ அதுவாக இருக்கிறாய்’ என்று வேதமும் கூறும். அதாவது, “நீ உடலைச் சார்ந்து, ‘உடலே நான்’ என்று வாழ்கிறாய்” என்கிறது வேதம். உடல்-பொறி-புலங்களால் கட்டுண்ட ‘நாம்’ உடல்-பொறி-புலன்களை நம் கட்டுக்குள் கொண்டுவருவோம்; இறைவனைக் காண்பதற்கு இதுவே முதல்படி ஆகும். இதில் வெற்றி கிட்டும்போது, நம்முள்ளும் அமுதே.

ஊறிநின்று பரஞ்சோதியாம் இறைவன் எழுந்து, உள்ளபடியே நாம் காண வந்தருள்வான் என்பது உறுதி. இறைக்காட்சிக்கான இரண்டாவது தகுதியைப் பேசும் திருவாசகத் தேனை அடுத்த வாரம் சுவைப்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-04-நம்முள்ளும்-அமுதே/article9356634.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 05: காதல் செய்து உய்ம்மின்

 

 
 
 
manikkavasagam_3090177f.jpg
 
 
 

புலனடக்கத்தை இறைவனைக் காண்பதற்கான முதல்படியாகக் கண்டோம். ‘மருந்தைக் குடிக்கும்போது குரங்கை நினையாதே’ என்றால் குரங்கு மட்டுமே நினைவில் இருப்பதுபோல், மனதால் புலன்களை அடக்கும் கடினமான கூர்நோக்குப் பயிற்சிகள் மிகவும் கடினமானவை; பலன் தருவதைப் போல் தோன்றினாலும், எப்போது வேண்டுமானாலும் புலன்களின் வழியே மனம் வழிதவறிப் போகும் ஆபத்துள்ளது. புலனடக்கத்துக்கு மிக எளிதான வழி, இறைவனிடம் அன்பில் கரைந்து போதலாகும். தன்னுள்ளே அமுதாய் ஊறி எழுந்த இறைக்காதலால், “என்னுடை அன்பே” என்றுருகிய திருவாசகத்தில் கரைந்தனர் சிவனடியார்கள்.

ஆனந்தமாய்க் கசிந்துருக

“அனைத்திற்கும் முன்னுமாய், பின்னுமாய், முழுதுமாய், எங்கும் நிறைந்த, தளைகளற்ற தூயவனே! எல்லையற்ற பரம்பொருளே! அழகிய திருப்பெருந்துறையையுடைய சிவபிரானே! சிறப்புப் பொருந்திய சிவபுரத்துக்கு அரசனே! அன்பின் மிகுதியால் அடியேனது உயிரோடு உடம்பும் இன்பவெள்ளமாய்க் கசிந்து உருகும்படி, என் நிலைக்குத் தகுதியில்லாத, உனது இனிய அருளைப் புரிந்தாய்! இந்தப் பேருதவிக்கு, யான் உனக்குத் திரும்பச் செய்யக்கூடிய உதவி இல்லாதவனாயிருக்கிறேன்.” என்று உருகினார் மணிவாசகர். (முத்தன்–தளைகள் அற்றவன், முதல்-பரம்பொருள், ஆக்கை-உடம்பு, என் பரம்அல்லா - என் நிலைக்குத் தகுதியில்லாத)

அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக

என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்! யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறு!

முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த முத்தனே! முடிவிலா முதலே!

தென்பெருந் துறையாய் சிவபெருமானே! சீருடைச் சிவபுரத்து அரைசே! – திருவாசகம்: 22-2

அன்பினால் உள்ளக் கனிவோடு உடலும் நெகிழ்வதால், 'ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக' என்றார். எதுவும் வேண்டாத, பெருங்கருணையாளனான இறைவனுக்குச் சிற்றுயிர்கள் என்ன செய்ய இயலும் என்பதை 'யான் இதற்கு இலனொர் கைம்மாறு' என்றார்.

அன்பரல்லாத பிறர் எவராலும் அறியமுடியாதவன் ‘தேவர் பிரானும், உண்மையான வீரனும், அழகிய திருப்பெருந்துறைக்குத் தலைவனும்’, ‘பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாலும் அறிய முடியாத, முதல்வனாகிய, இன்ப வடிவினனும்’, ‘அன்பரல்லாத பிறர் எவராலும் அறியமுடியாத’, மலர் போன்ற ஒளியையுடைய இறைவனது, தூய மாமலர் போன்ற சிவந்த திருவடியின்கீழே, நம்தலை நிலைபெற்று நின்று விளங்கும், என்று சென்னிப்பத்து பதிகத்தில் அருளினார் மணிவாசகர்.

தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன்,

மூவராலும் அறியொணா முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான்,

யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறியொணா மலர்ச் சோதியான்,

தூய மாமலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே!

- திருவாசகம்: 42-1

‘மூவராலும் அறியொணாத முதல்' ஆயினும், அன்பராயின் சோதியாய் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பார், மாம்பழத்தோட்டத்தில் இருந்தாலும், மாம்பழத்தைப்பற்றி அறியாதவன் பசியோடேயே இருப்பான். அறிந்தவனும், பறித்து உண்ணாவிட்டால் பசிதீரமாட்டான். இறைவனைப் பற்றிய ஞானமில்லாதார் இறைவனை அறிய மாட்டார்கள்; இறைவனைப் பற்றிய ஞானமுடையார் அவன் இருப்பையும், தன்மையையும் அறிவினால் அறிவரேயன்றி, ‘இறைவனிடம் காதல் செய்யாவிட்டால்’ அனுபவத்தில் உணர மாட்டார்கள் ஆகையால் ஞானத்தினாலும் அவன் உணரப்பட மாட்டான்.

ஞானம் இருந்தும், ஆணவத்தால், மாலுக்கும், பிரமனுக்கும் இறைவனின்அடி-முடி அறியமுடியாமல் போயிற்று. அன்பனுக்கே இறைவனின் சுவையறிய இயலுமாதலால், 'யாவராயினும் அன்பரன்றி அறியொணா மலர்ச் சோதியான்' என்று இறைவனது எளிமைத்தன்மையைக் கூறினார். இதனால், இறைவன் அன்பரல்லாதார்க்கு அறியமுடியாதவன் என்பது புலனாகும். காதல் ஒன்றே அவனை அடையும் வழி.

இளமையிலேயே காதல் செய்யுங்கள்

அடியவர்களிடம், “அன்பர்களே! காலம் நம்வசம் உள்ளபோதே, இறைவனிடத்தில் காதல் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள். நினைத்தற்குஅரிய, உலகத்தை உண்ட திருமாலோடு, பிரமன், மற்றைய தேவர்களும் எளிதில் பெறஇயலாதவன், நஞ்சத்தை அமுதாக உண்ட, எங்கள் பாண்டிப்பெருமானாம் இறைவன்,

தன் அடியவர்களுக்கு, மூலபண்டாரமாகிய தனது அருள் முதற்கருவூலத்தைத் திறந்து அள்ளிஅள்ளி வழங்குகின்றான்; அதனைப் பெறுதற்கு, விரைவாக வந்து முந்திக்கொள்ளுங்கள்” என்று கருணையோடு அறிவுறுத்தினார் மணிவாசகர். (ஞாலம் உண்டான் - உலகத்தை உண்ட திருமால், நண்அரிய – எளிதில் அடையஇயலாத, ஆலம்உண்டான் - நஞ்சை உண்ட சிவபெருமான், மூலபண்டாரம்- முதற்கருவூலமாம் அருள், உய்மின் – பிழைத்துக்கொள்ளுங்கள்)

காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய

ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய

ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு

மூல பண்டாரம் வழங்குகின்றான், வந்து, முந்துமினே. – திருவாசகம்:36-5

இறைவனிடத்து அன்பு செய்து வாழ்வதே மானிடப் பிறவியின்பயன் ஆதலின், 'காதல் செய்து உய்ம்மின்' என்றார். அதனை இளமையிலே தொடங்கினால் மட்டுமே போதிய காலம் கிடைக்குமாதலால், ‘காலம் உண்டாகவே' என்றார். இளமையில் இறைச் சிந்தனை தேவையில்லை; இளமையில் பொருள் மட்டும் தேடிக்கொள்வோம்; ஓய்வு பெற்றபின் இறைப்பேற்றைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் பலரும், முதுமையில் கண், காது முதலிய பொறி-புலன்கள் குறைவுபட்டு, பல்வகை நோயில் அவதியுற்று, பிறவிப்பயனாம் இறைச் சிந்தை எழவொட்டாமல், படுக்கையில் வருந்துவதைக் காண்கிறோம். மனிதப் பிறவிகளின் இப்போக்கைக் கண்டு வருந்திய அய்யன் திருவள்ளுவர் நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவான பிறவிக்கு மனிதனை இட்டுச்செல்லும் என்றார்.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு. – திருக்குறள்: 351

எனவேதான் காலம் உள்ளபோதே, இளமையிலேயே, பொருள் சேர்க்கும்போதே, அருளையும் சேர்க்கும் வண்ணம், இறைவனிடம் 'காதல் செய்து உய்ம்மின்' என்றார் மணிவாசகப்பெருமான். கொடியநஞ்சை உண்டு, நாம்வாழ அமுதம் வழங்கிய தியாகேசன் சிவபெருமானிடம் தாம்பெற்ற இறைஇன்பத்தை நாமும் பெற வேண்டும் என்ற அன்புள்ளத்தினால், 'மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே' என்றார் மணிவாசகர். மூலபண்டாரம்-திருவருள் கருவூலம், அதில் உள்ள நிதி, வீடுபேறுப் பேரின்பம் ஆகும். கிடைத்த காலத்தை வீணாக்காமல் பயன்படுத்தி, இப்பிறவியிலேயே நாம் இறையருளாம் வீடுபேறு இன்பத்தைப் பெற வேண்டும் என்பதே திருவாசகத்தின் நோக்கம்.

இறைவன்பால் காதல் செய்வது எங்ஙனம்? “மலரிட்டு பூசை செய்தலா?, பாலாபிஷேகம் செய்தலா?, தங்கஅணிகலன்களால் அலங்கரித்து வழிபடுதலா? நாம் செலுத்தும் அன்பை அவன் ஏற்றுக்கொள்கிறானா என்று எவ்வாறு உணர்வது? காண இயலாத இறைவனிடம் அன்பு செலுத்தும் விதத்தை எங்களுக்கு அருளுங்கள்” என்று விண்ணப்பித்தனர் அடியார்கள். அடியவர்களின் வேண்டுகோளுக்கான விடைதரும் திருவாசகத் தேனை அடுத்த வாரம் சுவைப்போம்


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-05-காதல்-செய்து-உய்ம்மின்/article9377905.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 06: உண்ணும்போது ஒரு கைப்பிடி

 

 
 
 
 
manikkavasagam_3097035f.jpg
 
 
 

இறைவனைக் காதலிப்பது எப்படி? மலரிட்டுப் பூசை செய்வதா? பாலாபிஷேகம் செய்வதா? அல்லது தங்கஅணிகலன்கள் அணிவித்து வணங்குவதா? நம் கண்களால் பார்க்கமுடியாத இறைவன், நாம் செலுத்தும் அன்பை ஏற்றுக்கொள்கிறானா என்று தெரிந்துகொள்வது எப்படி என்று கேட்கும் சிவனடியார்களிடம் மாணிக்கவாசகர், “திருக்கோயிலில் இறைவன் வீற்றிருக்கும்போது நம் கண்களால் பார்க்க முடியாத இறைவன் என்று சொல்வது ஏன்?” என்றார். அடியவர்கள் பதில் கூற முடியாமல் திகைத்தனர்.

“அசைவற்று இருக்கும் சிலையை இறைவனாகக் கற்பனை செய்து வழிபடும் உங்கள் மனத்தால், அதை இறைவனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை; எனவேதான் கண்களால் பார்க்க முடியாத இறைவன் என்றீர்கள் அல்லவா?” என்று மணிவாசகர் கேட்டதும் அடியவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். “நீங்கள் உயிர்ப்புள்ள இறைவனைக் கண்டு, காதல் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால், இறைவன் நிறைந்திருக்கும் அனைத்து உயிர்களையும், குறிப்பாக, சக மனிதர்களைக் காதலியுங்கள்” என்றார் மணிவாசகர்.

குடும்பக் காதல் இறைக் காதலாகுமா?

“ஐயனே! நான் என் குழந்தைகள், மனைவி, அன்னை-தந்தை, உடன்பிறந்தோரிடம் மிக்க அன்பைச் செலுத்துகிறேன். நான் பாடுபட்டுச் சேர்க்கும் பொருளையும், பணத்தையும் அவர்களுக்கே தருகிறேன். அவர்களிடமும் இறைவன் நிறைந்திருப்பதால், எனது இச்செயல் இறைவனைக் காதலித்ததற்குச் சமம் என்று கொள்ளலாமா?” என்றார் ஒரு அடியவர்.

கலக்கம் தெளிவித்த வித்தகத்தேவன்

“அன்பர்களே! பிறப்பாலும், திருமணத்தாலும் ஏற்பட்ட பாசத்தினால், உங்களுடையவை என்று கருதும் சொந்தங்களிடம் காட்டும் காதல் இயல்பானது; ஆயினும், என் குடும்பம் என்ற அளவில் அதுவும் சுயநலத்தின் ஒரு வகையே! பாரபட்சம் பார்க்காமல் எல்லா உயிர்களுக்கும் கருணைசெய்யும் இறைவனைக் காதலிக்க விரும்பினால், சொந்த பந்தங்களிடம் காட்டும் அதே காதலை, துன்பப்படும் ஏழைகளிடமும் காட்டுவதே சிறந்த வழியும், பக்தியுமாகும்.

இறைவனுக்கு நீங்கள் செலுத்த விரும்புகின்ற காணிக்கைகளைத் துன்பப்படும் ஏழைகளுக்குக் கொடுங்கள்; அவை உடனடியாக இறைவனிடம் சென்று சேரும். என் பணம், என் மனைவி, என் மக்கள், என் சாதி, என் அறிவு எனப் பித்துப்பிடித்து அலையும் இந்தஉலகத்தில், சிவபெருமான் தன் திருவடிகளை என் தலைமேல் வைத்ததுமே என்னிடமிருந்த சித்த விகாரக் கலக்கம் தெளிந்து, அனைவரிடமும் அன்புகாட்டும் தெளிவு பிறந்தது; நீங்களும் தெளிவடையுங்கள்” என்று அருளினார் மணிவாசகர்.

வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும்

பித்த உலகில், பிறப்போடு இறப்பு என்னும்

சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த

வித்தகத் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ (திருவாசகம்:10-6)

செல்வத்தின் பயன் ஏழையர்க்கும் கொடுத்தல் என்று உணராமல், அவை நிலையுடையன என்று நினைத்துப் பதுக்கி வைப்பது ‘பேதைமை’ என்பதால், இவ்வுலகைப் ‘பித்த உலகு’ என்றார். இறைவன் இதைத் தெளியவைத்ததால், ‘சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்’ என்றார்.

இறைவனே ஏழைப்பங்காளன்

இறைவனின் அருள்வடிவே அம்மை. உயிர்களிடம் கொண்ட கருணையினால், அவரவர் செய்த நன்மை தீமைப்படி பிறந்த எல்லா உயிர்களுடன், ஏழைகளுடன் அம்மையப்பனாக, இறைவனும் அவர்களின் துன்பத்தில் பங்கெடுப்பதால், ஏழைப் பங்காளனைப் பாடித் துதிக்கலாம் வா என்று திருவெம்பாவையின் ஏழாவது பாட்டில் அழைக்கின்றார் மாணிக்கவாசகர்.

ஏழைகளிடம் நாம் செலுத்தும் அன்பு, அவருள் வாழும் இறைவனாம் அம்மையப்பனைக் குளிர்விப்பதால், நம் புலன்கள் அன்பில் திளைத்து, இறைவன் அமுதாய் நமக்கு வெளிப்பட்டுத் தோன்றுவான்.

ஆனால், நாம் எல்லோரும் மனைவி, குழந்தைகள், சுற்றத்தாரிடம் கொண்ட அளவுக்கு அதிகமான பாசத்தால், பேராசை கொண்டு, ஏழு தலைமுறைக்கும் பணம் சேர்க்கப் பித்துப்பிடித்துப் பைத்தியமாக அலைகிறோம். இதை நீக்கி, துன்புறும் ஏழைகளுக்குச் செய்யும் அன்பான உதவியே இறைவனிடம் உடனடியாகச் சேருகிறது என்ற மனத்தெளிவைத் தந்த ‘வித்தகத் தேவற்கே சென்றுஊதாய் கோத்தும்பீ’ என்றார் மணிவாசகர்.

படமாடக் கோயிலும் நடமாடும் கோயிலும்

இறைவன் இருவகையான கோயில்களில் இருக்கிறான் என்கிறார் திருமூலர். ஒன்று, படமாடுகின்ற கோயில்கள். இதில் படம் அல்லது சிலை வடிவில் இருக்கின்றான்; இரண்டாவது, நடமாடும் கோயில்களான உயிர்களுடன், குறிப்பாக மனிதர்களுடன் வாழ்கிறான் இறைவன்.

ஏழைகளின் உள்ளே வாழும் இறைவன் பசித்திருக்கையில், படமாடக்கோயிலில் இருக்கும் இறைவனுக்குப் பொருளைக் காணிக்கையாக அளித்தால், அது நடமாடும் கோயில்களான ஏழைகளுடன் பசியில் வாடும் இறைவனுக்குச் சென்று சேராது. ஆனால் நடமாடும் கோயிலான ஏழைகளுக்குத் தரும் பொருள், படமாடும் கோயிலில் வாழும் இறைவனுக்கு உடனே சென்று சேர்ந்துவிடும் என்கிறார் திருமூலர்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே - திருமந்திரம்

“நான் மிகவும் ஏழை. என் வயிற்றுப்பாட்டுக்கே துன்பப்படுகிறேன். என்னைப் போன்றவர்கள் இறைவனிடம் காதல் செய்ய முடியுமா?” என்று கேட்பவர்களுக்கு, மனம் அன்பால் நிறைந்தால் எவரும் ஒருகைப்பிடி உணவாலும், பசுவுக்கு ஒருவாய்ப் புல்லாலும், இறைவனுக்கு ஒரு பச்சிலையாலும், பணம் இல்லாதவர்களும், பிற ஏழைகளுக்கு இனிய வாழ்த்துரையாலும் அன்புசெய்ய இயலும் என்கிறார் திருமூலநாயனார்.

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை

யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே. – திருமந்திரம்

உண்மையாகவே இறைவனிடம் காதல் செய்வது எப்படி என்று அறிந்துகொண்டோம். திருவடிப் பேறு கிடைத்ததும் உணர்ந்த இறைக்காட்சி குறித்து அடியவர்களுக்கு விளக்கிய மணிவாசகரின் அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனை அடுத்த வாரங்களில் சுவைப்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-06-உண்ணும்போது-ஒரு-கைப்பிடி/article9402002.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 07: துளையிடப்படாத முத்து

 

 
 
 
 
thiruvasagam_3100854f.jpg
 
 
 

ஏழைகளுக்கு உதவி செய்வதும், உண்ணும்போது ஒரு கைப்பிடியும் அனைவரும் செய்யக் கூடிய இறைக்காதல் என்று கண்டோம். அவரவர் தகுதிக்கு ஏற்பத் தொண்டுசெய்யும் இறைக்காதல் குறித்த விளக்கம் கேட்டு அன்பர்கள் பலரும் பேசியதால், இன்னும் இரு கட்டுரைகளில் அது பற்றி விளக்கிய பின், திருவடிப் பேறு கிடைத்ததும் மணிவாசகர் உணர்ந்த இறைக்காட்சி அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனைப் பருகுவோம்.

செய்தனவே தவமாகும்

மணிவாசகர் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிய ‘தவம்’ செய்யும் முறை அது. ‘நம் சிந்தனையில் சிவம் என்னும் அன்பு நிறைந்தால், நாம் செய்யும் அன்புத் தொண்டு எதுவாக இருந்தாலும், அத்தொண்டையே இறைவன் ‘தவம்’ ஆக்குவான்’ என்பதே.

சித்தம் ‘சிவம்’ ஆக்கி, செய்தனவே ‘தவம்’ ஆக்கும்

‘அத்தன் கருணை’யினால் தோள் நோக்கம் ஆடாமோ! - திருவாசகம்:15-6

திருவாசகத்தின் அடிநாதமே இந்தச் செய்திதான்.

சலவைத் தொழிலாளி நாயனார் ஆனார்

சலவைத் தொழிலாளியாக ஏழ்மையில் வாழ்ந்தாலும், தினந்தோறும் ஒரு சிவனடியாரின் உடையைச் சலவை செய்யும் தொண்டைச் செய்த பின்பே மற்றவர் உடைகளைச் சலவை செய்யும் கொள்கையுடன் வாழ்ந்துவந்த ஒரு அன்பரைத் ‘திருக்குறிப்புத் தொண்டர்’ என்னும் நாயனாராக உயர்த்திப் பெருமை தந்து அவரைச் சிவபெருமான் ஆண்டுகொண்டான்;

இறைவனிடம் அன்புடன் தொண்டு செய்வோர் வாழ்வின் கடைநிலையில் இருந்தாலும், அவர் செய்யும் தொண்டை வானுயர உயர்த்துவான் இறைவன். சிவாலயங்கள் தோறும் ‘திருக்குறிப்புத் தொண்டர்’ அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவராகச் சிவனடியார்களால் வழிபடப்படுகிறார். வானுயர அரண்மனைகளில் வாழ்ந்த மன்னர்கள் பலரும் கால ஓட்டத்தில் காணாமல் போயினர்; இறைப்பேறு அவர்களுக்குக் கிடைத்ததா என்பதும் நமக்குத் தெரியாது; ஆனால், அன்புடன் தன்னால் இயன்ற தொண்டு செய்த சலவைத் தொழிலாளி ‘திருக்குறிப்புத் தொண்ட’ராக இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, மக்கள் இதயங்களில் என்றும் குடியிருக்கிறார்.

எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,

அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி - திருவாசகம் - 2:125-126

எப்படிப்பட்ட பெருந்தன்மை யையும், எவ்வகைப்பட்டவர் திறத்தினையும், அவரவர்களின் பக்குவத்திற்கு ஏற்ற தன்மைகளால், ஆண்டுகொண்டு அருளுவான் இறைவன்.

குயவனார் நாயனார் ஆனார்

மண்பாண்டங்கள் செய்யும் தொழிலைச் செய்யும் குயவர் குலத்தில் தோன்றிய திருநீலகண்டர், சிவனடியார்களுக்குத் திருவோடு செய்து கொடுக்கும் திருத்தொண்டை செய்துவந்தார். அவரின் நடத்தையில் ஐயம் கொண்ட அவர் மனைவி, ‘எம்மைத் தீண்டுவீர் ஆயின் திருநீலகண்டம்’ என்று இறைவனின் மேல் ஆணையிட்டுக் கூறிவிட்டார்; எனவே, மனைவியை மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணையும் மனதாலும் நினைக்காமல் இளமையைத் துறந்தார்;

திருநீலகண்டர் கடினமாக முயன்று பெண் இன்பத்தைத் துறக்கவில்லை; நஞ்சைக் கண்டத்தில் கொண்ட சிவனின் தியாக வடிவான ‘திருநீலகண்டம்’, மேல் கொண்ட அளவற்ற அன்பு கூடிய பக்தியால், பெண்கள் நினைவுகூட அவரின் சிந்தையிலிருந்தே போயிற்று. முதுமையை அடைந்திருந்த திருநீலகண்டரின் அன்புத்தொண்டை உலகோருக்கு அறிவிக்கத் திருவிளையாடல் நிகழ்த்தி, கணவன், மனைவியைச் சேர்த்து வைத்து, மீண்டும் இளமையைத் தந்து, பின் ஆட்கொண்டு, திருநீலகண்ட நாயனாராக உயர்த்தினார் சிவபெருமான்.

இத்தகைய மக்கள் தொண்டினைச் சிறப்பிக்கும் பெரியபுராணத்தின் காப்பிய நாயகன் ‘தொண்டு’ என்னும் பண்பே. எனவே, இறைவனின் அன்பைப் பெற, ஒவ்வொருவரும் இறைத்தொண்டு செய்ய வேண்டும்; பலர் கூடி, கோயிலுக்குச் சென்று உழவாரப்பணி செய்யும் திருத்தொண்டு சிறப்பானதே! திருக்குறிப்புத் தொண்டரைப் போல, திருநீலகண்டரைப் போல, அவரவர் செய்யும் தொழில் அல்லது உழைப்பின் ஒரு சிறு பகுதியை, சக ஏழை மனிதர்களுக்குப் பயன்படும்படி செய்யும் தொண்டு அதனினும் மிகச் சிறப்பானது. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை ஒரு ஏழையின் படிப்பு, மருத்துவம், திருமணம், தொழில் போன்ற ஏதாவது ஒரு காரியத்துக்காகச் செலவிடலாம். அத்தகைய தொண்டு செய்ய, ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பண்பு, ‘அன்பு மனம்’ ஒன்றே!

ஞானமும் கல்வியும்

உயிர்ப் பிறவிகளிலேயே அரிதான மனிதப் பிறவியில் “கூன், குருடு, செவிடு” போன்ற குறைகள் இல்லாமல் பிறந்த ஒருவனுக்கு ஞானமும், கல்வியும் கைவரப்பெற்று, இறைச் சிந்தனையால், தானமும், தவமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்தால், இறைவனுடன் கலந்து நிலைத்த பேரின்பம் பெறுவது உறுதி என்பது அவ்வையார் வாக்கு. கல்வி உலகியல் அறிவையும், ஞானம் தொண்டோடு கூடிய இறையன்புடன் இணைந்த பேரறிவும் தரும். ஞானமில்லாத கல்வி பயனற்றது என்பதால் ஞானத்தை முதலிலும், கல்வியை அடுத்த இடத்திலும் வைத்தார் அவ்வையார்.

ஆபரணங்களை ஆண்டவன் விரும்புவதில்லை

அதேபோல, ‘தானம்’ என்னும் ‘தொண்டு’ இல்லாத இறை வழிபாடு பயனற்றது என்பதால், தானத்தை முதலிலும், தவத்தைப் பின்னும் வைத்தார். உலகில் தோன்றிய செல்வங்கள் யாவும் அனைத்து உயிர்களும் துய்ப்பதற்கானவை; உயிர்களுக்குத் தொண்டு செய்வதே நாம் இறைவனுக்குச் செலுத்தும் காதலும், நன்றியும் வணக்கமும் என்ற ஞானம் இல்லாததால், பெரும்பணம் வேண்டித் தங்க, வைர நகைகளைக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, பணம் சேர்ப்பது ஒன்றே குறியாகக் கொண்டு வாழ்நாளை வீணடிக்கிறார்கள் மனிதர்கள்; வேண்டுதல்-வேண்டாமை இல்லாத இறைவன் இத்தகைய ஆபரணங்களை ஒருபோதும் விரும்புவதில்லை.

அத்தகைய தொண்டு வழிபாட்டை ‘வாளாத் தொழும்பு’, அதாவது அன்பில்லாத வெறும் தொண்டு என்கிறார் மணிவாசகர். முன்பு தாம் அத்தகைய வாளாத்தொண்டு செய்து கடைப்பட்டதாகவும், சிவத்தைக் கூடியபின் தம்முடைய தொண்டு அன்புகூடிய தொண்டாகியது என்னும் திருவாசகம் காண்போம்.

சுடர்பொன் குன்றை, தோளா முத்தை, ‘வாளா தொழும்பு’ உகந்து

கடைபட்டேனை, ஆண்டுகொண்ட கருணாலயனை, கருமால், பிரமன்,

தடைபட்டு, இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆரமுதை,

புடைபட்டு இருப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? - திருவாசகம்:27-1

(தோளாமுத்து - துளையிடப்படாத முத்து, பொல்லாமணி - செதுக்கப்படாத மாணிக்கம்) முத்து துளைக்கப்பட்டே பயனைத் தரும்; இறைவனோ இயல்பாகவே பயனைத் தருபவனாதலால், ‘தோளாமுத்தே’ என்றும், மணி செதுக்கினால்தான் ஒளிதரும்; இறைவன் இயல்பாகவே ஒளியுடையவன்; எனவே, ‘பொல்லா மணியை’ என்றார்..

‘விதிப்படி’ என்றால் இறைவழிபாடு எதற்கு?

ஏழ்மையில் பிறப்பதோ, செல்வச் சூழலில் பிறப்பதோ, யாருடைய கையிலும் இல்லை; அவரவர் செய்த முன்வினைப் பயனால் பிறவி வாய்க்கிறது என்கிறது சைவசித்தாந்தம். வாழ்வில் ஒருவருக்கு எது எப்போது நடைபெறும் என்பது முன்பே விதிக்கப்பட்டுவிட்டது என்றால் மனித முயற்சியும், உழைப்பும் எதற்கு, இறை வழிபாடு கூட எதற்கு என்ற கேள்வி நமக்குத் தோன்றும். இதற்கான விடை கூறும் திருவாசகத் தேனை அடுத்த வாரம் சுவைப்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-07-துளையிடப்படாத-முத்து/article9417240.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 08: மண்புகுந்து மனிதரை ஆட்கொண்டான்

 
 
 
 
sivan_3104028f.jpg
 
 
 

வாழ்வில் ஒருவருக்கு எது எப்போது நடைபெறும் என்பது முன்பே விதிக்கப்பட்டுவிட்டது என்றால் மனித முயற்சியும், உழைப்பும் எதற்கு, இறை வழிபாடுகூட எதற்கு என்ற கேள்விக்கு விடைகாணும் திருவாசகத் தேனை இப்போது காண்போம்.

விதியை வெல்ல மனிதனுக்குச் சுதந்திரம்

ஒருவருக்கு மிக மோசமான சூழலில் பிறப்பு அமைவது அவர் முன் செய்த வினைப்பயன். தன் பெற்றோரை, தன் பிறவிச் சூழலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையின்மை, மனிதருக்குச் சுதந்திரம் இல்லாததை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், பிறந்த பின் செயலாற்றுவதற்கு உயிர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்கின்றன நம் திருமுறைகள். விளையாட்டுத் துறையில் உயர்ந்த வாய்ப்புக் கிடைத்த ஒருவர் சிறப்பாக உழைத்து ‘பாரத் ரத்னா’ வாங்கும் நிலைக்கு உயர்வதோ அல்லது முறையற்ற வழியில் கிடைக்கும் பெரும்பொருளுக்கு ஆசைப்பட்டு, சூதாடி சிறை செல்வதோ அவரின் சுதந்திரம்.

மாற்றுத் திறனாளியாகப் பிறந்தாலும், உழைத்து, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்குவதோ அல்லது அவ்வாறு பிறந்துவிட்டோமே என்று வருந்தியே காலத்தை முடிப்பதோ அவரவர் சுதந்திரமே. திருநீலகண்டரைப் போன்று, திருக்குறிப்புத் தொண்டரைப் போன்று, பெற்ற பிறவியைப் பயன்படுத்தி, இறைக்காதல் தொண்டு செய்து, நாயனாராக உயரலாம்; அல்லது உலக-உடலின்பங்களில் மட்டும் ஈடுபட்டு, வினைகளைப் பெருக்கித் துன்பமடையலாம் என்பதும் உயிர்களின் சுதந்திரமே.

இறைவனின் கருணை

இத்தகைய சுதந்திரத்தை உயிர்களுக்குத் தந்த இறைவன், அறிவு தரும் ஐந்து பொறி-புலன்களுடனான உடலும், மனதும், நினைவும் தந்துவிட்டு எங்கோ வானத்தில் நம்மையெல்லாம் விட்டுவிட்டு ஆனந்தமாக இருக்கிறானா என்றால் அதுதான் இல்லை என்கிறார் மணிவாசகர். குழந்தையை விளையாட்டு மைதானத்திலே சுதந்திரமாக விளையாட விட்டுவிட்டுச் சற்றுத் தொலைவில் இருந்து தாய், தந்தையர் கவனித்துக்கொள்வார்கள்; இறைவன் அவர்களைவிடப் பன்மடங்கு கருணையானவன். நம் ஊன், உடம்புகுள்ளே புகுந்து, நாம் அறியாவண்ணம் நம்மைக் கவனித்துக்கொள்கிறான் என்று குயிலிடம் சொல்கிறார் மணிவாசகர்.

“தேன்பழச் சோலை பயிலும் சிறுகுயிலே! நீ இதைக் கேள்! நம் இறைவன் வானத்தை உதறிவிட்டு, இந்த மண்ணுலகுக்கு வந்து மனிதர்களை ஆட்கொள்ளும் வள்ளல்; மனிதர்கள் நல்லபடியாக ஞானமும் கல்வியும் பெற வேண்டுமே என்ற கருணையால் இவர்களின் ஊன்-உடம்பில் கலந்து மறைந்து வாழும் இறைவனை, நான் சற்றே தேடத் தொடங்கியதும், கருணையால் அன்பு பொங்க, என் ஊன்-உடலை உதறிவிட்டு, என் உள்ளம் புகுந்து, என் உணர்வோடு உணர்வாகக் கலந்துவிட்டான்; மானின் பார்வையிலும் இனிமையான பார்வையையுடைய உமாதேவியின் மணாளனை என்னிடம் வரச் சொல்லிக் கூவுவாயாக!” என்று குயிலைத் தூதுவிடும் அழகு தமிழ் மணிவாசகம் சுவைப்போம்:

தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ,

வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்;

ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்;

மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை நீ வரக் கூவாய்! திருவாசகம்:18-4

எளிய மனிதர்களை ஆட்கொள்ளுவதற்காக இறைவனே வான் பழித்து, மண்ணுலகிற்கு வந்தான் என்கிறார் மணிவாசகர்; நாம் பணக்காரனாக, அறிவாளியாக, தாசில்தாராக, அதிகாரியாக, கல்விமானாக, ஞானிகளாக, பேராசிரியர்களாக, அர்ச்சகர்களாக, பண்ணையாராக, வேத விற்பன்னராக இன்னும் எது எதுவாகவோ இருக்கிறோம்; மனிதராக இல்லை; இத்தகைய செருக்கில் இருக்கும் நமக்கு இறைவன் வசப்பட மாட்டான் என்று சொல்லாமல் சொல்கிறார் மணிவாசகர். நாம் எது எதுவாகவோ இருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்து இறங்கி, நம் மனங்களை அன்பினால் நிறைத்து மனிதர்களாகி, நம் எளிய சக-மனிதர்களின் துயரங்களை நீக்கத் தொண்டு செய்யும்போது, அத்தொண்டின் வடிவத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்படுவோம்.

மனிதப்பிறவியை மதிப்போம்

நாம் இறைக் காதலால் மனிதர்களுக்குச் செய்யும் திருத்தொண்டால் மனித குலம் அறிவில், ஆள்வினையில், வாய்மையில், இன்பத்தில் செழித்துக் குலுங்க வேண்டும்; “வாய்த்தது-நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடு மின்” என்ற அப்பர்பெருமானின் ஆணையை நிறைவேற்றுவோம். இன்னாததாக, துன்பம் நிறைந்ததாக இருக்கும் உலகத்தை உழைப்பால், தொண்டால் இனிமையாக்குவது மனிதனின் கடமை. “இன்னா தம்ம இவ்வுலகம் இனிய காண்க” என்கிறது புறநானூறு. நம் அன்புத்தொண்டு துன்பத்தை மாற்றும்; வாழ்க்கை செழிக்கத் தடையாயுள்ள கேடுகளைக் களையும். இதன்மூலம் இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும்.

தனக்குச் சுற்றமும் விதியும் தானே

ஒருவருக்கு வரும் நன்மை, தீமைகளுக்கு, அவர் செய்யும் செயல்களே காரணம் என்பதால் அவருக்குச் சிறந்த நண்பரும் உறவினரும், பகைவரும் அவரே. ஆதலால், “அடியவர்களே, நீங்கள் எல்லோரும், நாம் யார், எம்முடையது என்பது யாது, எம்மைப் பிடித்த அறியாமையாம் பாசம் எது, இவையெல்லாம் என்ன மயக்கங்கள் என்று உணர்ந்து, இவை நம்மை விட்டு நீங்க, இறைவனுடைய பண்டைத் தொண்டரொடும் சேர்ந்து, இறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக்கொண்டு, திருத்தொண்டு செய்வதன் மூலம் பொய் வாழ்வை நீத்து, எமையாளும் பெருமானின் பொன்திருவடியின் கீழ் போய்ச்சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்” என்று அருளினார் மணிவாசகர்.

தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்;

யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்ன மாயம்? இவை போக,

கோமான் பண்டைத் தொண்டரொடும், அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு,

போம் ஆறு அமைமின் பொய் நீக்கி, புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே. - திருவாசகம்:45-3

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’’ என்றார் கணியன் பூங்குன்றனார். நாம் நம்மை அறிவதற்காகவே இறைவனால் தரப்பட்ட உடல் உலகம் தொடர்ந்து மாற்றங்களை அடையும். அவை நிலையாமை உடையவை. அவற்றிடம் வைத்த கடும்பற்று நீங்கி, இறைவனிடம் இணைய வேண்டும் என்பதை அறிவுறுத்தவே, 'யாமார்? எமதார்? பாசமார்? என்ன மாயம்' என்று அருளினார் மணிவாசகர்.

கற்றதனால் வரும் பயன் பெறுக!

மனிதப் பிறவிக்கு வந்த உயிர்கள் அனைத்தும் வீடுபேறு எய்த வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளக் குறிப்பாகையால், ஆறாம் அறிவாம் பகுத்தறிவைத் தந்துள்ளான்; மனிதர்கள் அனைவருக்கும் 'இறைவனின் குறிப்பே குறிக்கொண்டு பொன்னடிக்கே போமாறு அமைமின்' என்று அறிவுறுத்துகிறார் பெருமான்.

சிவனடியார் கூட்டத்தில் இருப்பதே இறைவனை அடையச் சிறந்த வழி என்பதைச் சொல்லவே ‘கோமான் பண்டைத் தொண்டரொடும்’ என்றது மணிவாசகரின் அனுபவ அறிவுரை. தொண்டின் மேன்மை உணர, இறைவன் நம்முள் கலந்தது எப்போது என்பதைப் பற்றி விளக்கும் திருவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-08-மண்புகுந்து-மனிதரை-ஆட்கொண்டான்/article9428159.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வான்கலந்த மாணிக்கவாசகம் 09: இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான்

 

 
 
 
 
thiruvasagam_3106997f.jpg
 
 
 

சூரியன் மறைவதால் நம் கண்கள் காணும் ‘புறஇருள்’, எல்லாப் பொருள்களின் ‘இருப்பை’ கண்ணுக்கு மறைத்தாலும், ‘இருள் உள்ளது’ என்னும் ‘தன்னிருப்பை’ மனிதர்களுக்கு வெளிப்படுத்துவதால், நாம் செயற்கை மின்னொளியை உருவாக்கி, இருள் நீக்கி வாழ்கிறோம்.

‘அறியாமை’ என்னும் ‘அகஇருள்’ நம்மைப் பிடித்துள்ளது என்பதே நமக்குத் தெரியாததால், நாம் அறியாமையில் இருந்து விடுபட இயலாது; நம்மிடம் பெருங்கருணை கொண்ட இறைவன் நம்மைப் பிடித்த ‘அறியாமை’ என்னும் அகஇருளை நீக்க, கண் முதலிய அறிவுக்கருவிகளுடன் கூடிய உடல் பிறவிகளைத் தருவதால், நல்வினை, தீவினை செய்து அதன் பலன்களைப் பெறுவதன் மூலம், நாமே நம்மை அறிகிறோம்; நம் தலைவனாம் இறைவனையும் அறிகிறோம்.

கருணையினால் நம்முள்ளே மறைந்து வாழும் இறைவன், நாம் அறியாமலேயே நமக்கு அருள் வழங்குகிறான். அறியாமை நீங்கிய நாம், இதே இறைப்பண்புடன், வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் துன்புறும் சகமனிதர்களுக்குச் செய்யும் தொண்டினால் இறைவனின் அன்புக்கு உரியவர்களாகி ஆட்கொள்ளப்படுவோம். இச்செய்தியின் உள்ளீடே திருவாசகத்தில் பல இடங்களிலும் பேசப்படுகின்றது.

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து

இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான் என்பதை மணிவாசகர் தில்லையில் அருளிய கண்டபத்துப் பதிகத்தில் அற்புதமாக விளக்குகிறார். உடல் பிறவிக்கு வருவதற்கு முன்பே, அதாவது, உடலற்ற அருவமாக, அறியாமை இருளில் மூழ்கியிருக்கும் போதே, கருணை கொண்டு உள்புகுந்தான் இறைவன்; தன் உள்ளத்தில் நிலையாக அமர்ந்து, ‘கருத்து’ என்னும் சிந்தனையை வைத்து, பின் உடலில் புகுந்து, பெருங் கருணையினால் ஆண்டுகொண்டு, தன்னுடைய மறைப்புச் சக்தியினால் உயிர்களுக்குத் தெரியாமலேயே அவைகளுடன் இறைவன் வாழ்கிறான்; உயிர்களின் செயல் சுதந்திரங்களில் இறைவன் தலையிடுவதில்லை.

வாழ்வின் நெடும் பயணத்துக்குப் பின், மணிவாசகர் இறையருளால் தன் பிறவி நோக்கத்தை அறிந்துகொண்டது போல், நாமும் ஊனுக்குள் உறையும் இறைவனைக் கண்டுகொள்ள வேண்டும்; “திருத்துருத்தி என்னும் ஊரில் குடிகொண்டிருக்கும் தித்திக்கும் சிவபதத்தை, ஆசை(அருத்தி)யினால் நாயடியேன் தில்லையில் கண்டுகொண்டேன்”, என்றார் மணிவாசகர். (மன்னி-நிலைத்து)

உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து, என் உளம் மன்னி,

கருத்து இருத்தி, ஊன் புக்கு, கருணையினால் ஆண்டுகொண்ட

திருத்துருத்தி மேயானை, தித்திக்கும் சிவபதத்தை

அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே!

– திருவாசகம்: 31-3

ஒருவர் இவ்வுலக வாழ்நாளில் செய்யும் நன்மை-தீமைகளின்(வினை) பயன் அவரை மட்டுமே சேரும். குழந்தைகளுக்காகவும், வாழ்க்கைத் துணைக்காகவும் சொத்துசேர்ப்பதில் கவனமாக இருப்பவர்கள், வினைகள் சேர்வதைக் கவனிப்பதில்லை. அறமற்ற வழியில் ஒருவர் சொத்து சேர்க்கும்போது, அதனால் விளையும் தீவினைகள் அவரிடம் தானாகவே வந்துசேரும். துன்பத்திலும், மகிழ்ச்சியிலும் பங்கெடுக்கும் வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும், சுற்றமும், நட்பும் ஒருவரின் வினைப்பயனில் பங்கெடுக்க முடியாது; ஒருவர் உண்ட உணவை எப்படி வேறொருவர் செரிமானம் செய்ய முடியாதோ, அதைப் போன்றதே வினைப்பயன்.

ஒரு உயிரின் வினைப்பயனை வேறு உயிர்கள் பங்கிட இயலாது. ஆதலால், மணிவாசகர் உயிரை ‘ஆதம் இலியான்’(ஆதரவற்றவன்) என்கிறார்; கடலிற்பெருகிய நஞ்சை உண்ட என்னுடைய பரம்பரனே! வினைப்பயனால், சுற்றத்தார் யார் துணையும் இல்லாமல் ‘பிறப்பு இறப்பு’ என்னும் தப்ப முடியாத அருநரகில் அழுந்தி மூழ்கிக்கொண்டிருந்த அடியேனுக்கு, ஐயோ என்று இரங்கி, உன் திருவடி மலர் காட்டி ஆட்கொண்டது உனது திருவருள் அல்லவா என்று பரவசம் அடைகிறார் மணிவாசகர். (ஓதம் மலி - கடலிற்பெருகிய, ஆர் தமரும் இன்றியே - சுற்றத்தார் ஒருவரும் இல்லாமலே)

ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு, என்னும் அரு நரகில்,

ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு, `ஆ! ஆ!' என்று,

ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன்

பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம் பரனே!

- திருவாசகம்:38-3

இங்கு பெருமான், மிகவும் துன்பமுடைய பிறப்பு இறப்புகளையே நரகம் என்று கூறினார். அழிக்க வந்த நஞ்சைத் தான் உண்டு தேவர்களைக் காத்ததைபோல, பிறவியாகிய நரகத்தில் விழுந்து அழுந்துகின்ற என்னையும் திருவடியைக் காட்டிக் காத்தது உன் திருவருளே என்று வியக்கிறார்.

இறைவனே தனித்துணை!

இறைவன் ஒருவனே உயிருக்கு வினைப்பயன்களில் இருந்து விடுதலை தந்து பிறவித் துன்பத்தில் அழுந்தாமல் காக்க வல்லவன் என்பதால், இறைவனைத் ‘தனித்துணை’, ‘மனத்துணை’, ‘வாழ்வுக்குமுதல்’, ‘எய்ப்பில்-வைப்பு (துன்பத்தில் வாடும்போது உதவும் என் வைப்புநிதி ஆனவனே!)’ என்றழைக்கும் பெருமான், வினையையே துணையாகக் கொண்டு பிறந்த தாம், இறைவன் துணை கிடைத்தமைக்குத் தலைக்கர்வம் கொண்டு நடந்ததால், இறைவன் தன்னை விட்டுப் பிரிந்ததாகவும் நீத்தல்விண்ணப்பப் பதிகத்தில் கதறியழுகிறார்.

வாழ்க்கையில் எத்தகைய கடினமான சூழ்நிலையில் வாழ்ந்தாலும், அவரவர் தகுதிக்கு ஏற்ப, பேரன்போடு செய்த மக்கள் தொண்டையே சிறப்பித்து, நாயன்மாராக உயர்த்திய இறைவன் தரும் செய்தி ‘அன்புடன் செய்யும் மக்கள் தொண்டே என்னை அடையும் வழி’ என்பதே.

திருவடிப் பேறு கிடைத்ததும் உணர்ந்த விஸ்வரூப இறைக்காட்சி குறித்து அடியவர்களுக்கு விளக்கிய மணிவாசகரின் அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனை அடுத்த வாரங்களில் சுவைப்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-09-இறைவன்-எப்போது-உயிரில்-கலந்து-உறவானான்/article9438337.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வான்கலந்த மாணிக்கவாசகம் 10: இறைவனே குருவாக அருளிய பெரும்பேறு

 

 
 
 
 
thiru_3110137f.jpg
 
 
 

உடல், பொறி, புலன்களில் கட்டுப்பட்டு, புறஉடலையே முழுவதும் பார்க்கமுடியாத நமக்கு, முகம் பார்க்கவே ஒரு நிலைக்கண்ணாடி தேவை; நம்உயிருக்கோ, தன்னை அறிய குரு என்னும் அறிவுக்கண்ணாடி தேவை; உடல் முழுவதையும் காண, முன்னும்,பின்னுமாக இரண்டு நிலைக்கண்ணாடிகள் தேவை; மனிதன் முழுமை பெற, குருவருளும், இறையருளுமான இரண்டு அறிவுக்கண்ணாடிகள் வேண்டும். மணிவாசகரோ, இறைவனே குருவாக அருளிய பெரும்பேறு பெற்றார். கருவிலேயே இறையருள்பெற்று, சிறந்த கல்வி, கேள்வியறிவும், முதலமைச்சராக உலக அனுபவமும், கவிஞராகப் படைப்பனுபவமும் கொண்டு திகழ்ந்த மணிவாசகரைத் திருவாசகம் தேர்ந்தெடுத்தது.

இறைவனின் திருக்காட்சி

மணிவாசகரை எதிர்பார்த்துத் திருப்பெருந்துறையில் மனிதவடிவில் குருவாகக் காத்திருக்கிறான் இறைவன். படை, பரிவாரங்கள்சூழ, குதிரை வாங்குவதற்காக திருப்பெருந்துறை வந்த பாண்டியநாட்டின் முதலமைச்சர் திருவாதவூரர், நொடிப்பொழுதில் மணிவாசகரானார்.

கருணையின் பெருமை கண்டேன் காண்க

புவனியில் சேவடி தீண்டினான் காண்க

சிவன் என யானும் தேறினன் காண்க – (அண்டப்பகுதி:60-63)

தவத்தால், அன்பால், முயற்சியால் தேடிச்சென்று அடையவேண்டிய பொருளே இறைவன் என்று அதுவரைக் கருதியிருந்த கல்விமானான முதலமைச்சர் திருவாதவூரார், கருணையால் இப்பூமியில் தன் திருவடிகளைப் பதித்த பரம்பொருளை, ‘சிவபெருமான்’ என்று ஒருவாறு தெரிந்து, தான் தேறியதாகக் கூறுகிறார்.

முதலமைச்சர் மாணிக்கவாசகரானார்

குருவாகத் தோன்றிய இறைவனை மனிதரென்றே முதலில் கருதிய முதலமைச்சர் திருவாதவூரர், அக்குருவின் ஈர்ப்புச்சக்தி தம்மை முழுவதும் ஆட்கொள்வதை உடனடியாகக் கண்டுகொண்டார்; இத்தகைய ஆற்றல்மிக்க ஈர்ப்பு அதிர்வுகளை எந்த மனிதனாலும் உருவாக்க இயலாது என்பதை உள்ளுணர்வினால் உணர்ந்துகொண்டதால், ‘சிவன் என யானும் தேறினேன் காண்க’ என்றார். இறைக் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு, குருவின் தாள்பணிந்து, உபதேசம் பெற்று மாணிக்கவாசகர் ஆனார். காளைவாகனமுடைய, திருப்பெருந்துறையில் உறையும் மனவாசகம் கடந்த இறைவன், மணிவாசகருக்குத் தன்னைத் தான் என்பது அறியாது, பகல் இரவுஆவதும் அறியாது, உன்மத்தனாக்கி ஆண்டுகொண்டார்; இந்த முதல் அனுபவத்தை உயிருண்ணிப்பத்துப் பதிகத்தில் ஒரு திருவாசகம் அழகாகக் கூறுகிறது.:

எனை நான் என்பது அறியேன்; பகல் இரவாவதும் அறியேன்;

மனவாசகம் கடந்தான் எனை மத்தோன் மத்தனாக்கிச்

சினமால் விடைஉடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்

பனவன் எனைச் செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே! – திருவாசகம்: 34-3

மணிவாசகரின் திருவாசகம், பதிகத்துக்குப் பத்துப்பாடல்கள் என்றில்லாமல், ஊற்றாகப் பெருக்கெடுத்த மணிவாசகரின் இறையனுபவங்களுக்கு ஏற்ப, பத்துப்பாடல்களுக்குக் குறைவாகவோ, பத்துப்பாடல்களாகவோ, பத்துக்கும் அதிகமாகவோ அமைந்தன.

கல்வி, கேள்வி, உலக அறிவு போன்றவற்றால் உருவான ‘திருவாதவூரர்’, இறையன்பில் கரைந்து, காணும் அனைத்திலும், நீக்கமற நிறைந்த கடவுளைக் காணும் மணிவாசகரானார். இறைவனைப் பூசிக்க மலர் பறிக்க முற்பட்டால், ‘பார்க்கின்ற மலர் ஊடும் நீயே இருத்தி’ என்ற தாயுமான சுவாமிகளின் நிலையும், ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா’ என்ற பாரதியின் நிலையும் இதற்குச் சான்று.

இறைவன் பெரிதினும் பெரியவன்

குளியலறையில் இருந்தால், படுக்கையறையைப் பார்க்க முடியாத ‘நான்’ என்னும் உணர்வுடைய உடலில் வாழும் உயிருக்குப் புலனாகாதவன் இறைவன். திருவடிப்பேறு கிட்டி, இறைக்காட்சி வசப்பட்டதும் இறைவன் மட்டுமல்ல, இப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களுமே, உள்ளும் புறமுமாக, ஒரே நேரத்தில் மணிவாசகர் கண்களுக்குப் புலப்படுகின்றன. இதுவரை அவர் கண்ணால் கண்டுஅறிந்திராத, தொடர்ந்து விரிவடையும் இப்பிரபஞ்சத்தில் (Ever-Expanding Universe), எண்ணற்ற கோடிக்கணக்கான உருண்டைவடிவப் மிகப்பெரிய பெருங்கோள்களைத் காண்கிறார்; அக்கோள்கள் ஒன்றனை ஒன்று மோதிக்கொள்ளாமல், இயற்பியல் விதிகளின்படி, அவை, அவற்றின் நியமப்பாதையில் இயங்கும் அழகு, கண்ணுக்கு வளமையான காட்சி என்று வியக்கிறார் பெருமான்.

எம் இறைவனின் விஸ்வரூப தோற்றத்தை ஒப்பிட, அத்தகைய மாபெரும் பிரபஞ்சம் என்னும் அண்டப்பகுதியில் மிதக்கும் பிரம்மாண்டமான உருண்டைவடிவக் கோள்கள் மிகச் சிறிய துகள்களாகக் காட்சியளிக்கின்றன; எதைப்போல் என்றால், ஓலைவேய்ந்த வீட்டுக்கூரையின் சிறியதுளை வழியே நுழையும் சூரியஒளிக்கற்றையில் மிதக்கும் மிகநுண்ணிய தூசுகளைப்போல மிகச்சிறியனவாகத் தெரிகின்றன என்கிறார் பெருமான். பெரிதினும் பெரியவனான பரம்பொருளாம் சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய உருண்டைவடிவக் கோள்களுடன் ஒப்பிட்டு அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் மாணிக்கவாசகர்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பு அரும் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இல் நுழைக் கதிரின் துன் அணுப் புரைய

சிறியவாகப் பெரியோன் தெரியின் – (அண்டப்பகுதி:1-6)

நாம் வாழும் பூமிப்பந்து உள்ளிட்ட ஒன்பது கோள்களைக் கொண்ட சூரிய மண்டலத்தைப் போல, பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் பால்வெளியில் உள்ளன என்றும், பால்வெளியைப் போல் பல்லாயிரக்கணக்கானவை அண்டவெளியில் உள்ளன என்றும், அண்டத்தின் விளிம்பு, ஒளி அலைகளின் வேகத்தைவிட எல்லாத்திசைகளிலும் விரிவடைந்துகொண்டே செல்வதால் விரிவடையும் அண்டம் என்றும் இன்றைய வானியல் அறிவியலாளர் கூறுகின்றனர். இத்தகைய வியத்தகும் வானியல் அறிவியல் உண்மைகளை, போகிற போக்கில் மிக எளிதாகக் கூறிவிட்டார் மாணிக்கவாசகர்.

அண்டப்பகுதி இவ்வாறு விரிந்து செல்வதை மணிவாசகப் பெருமான் ‘பிறக்கம்’ என்றும் ‘விரிந்தன’ என்றும் குறிப்பிட்டார். எதை அறிந்தால் அனைத்தையும் அறிவோமோ, அதை அறிந்த மணிவாசகருக்கு, எந்த அறிவியற் கருவியின் உதவியுமில்லாமல் இம்மாபெரும் காட்சியை நுட்பமாகவும், விரிவாகவும் நான்காம் நூற்றாண்டிலேயே கூறமுடிந்தது. வாலறிவனாம் இறைவனை அறிந்த மணிவாசகருக்கு இது இயல்பாக முடியக்கூடியதே! திருவாசகத்தின் இந்தப் பதிவை வைத்துத் தமிழர்கள் நான்காம் நூற்றாண்டிலேயே வானியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைக் அறிந்து வைத்திருந்தார்கள் என்று கருதுவது தவறாகவே முடியும்.

எல்லைகாண முடியாததாய் விரிந்துகொண்டே இருக்கும் பேரண்டப்பகுதியின் பருண்மை வடிவத்தை உலகோருக்குக் காட்சிப்படுத்திய மணிவாசகப்பெருமான், அத்துணைப்பெரிய பேரண்டக் கோள்களும் நுண்ணிய தூசுகளைப் போல சிறியது (‘இல்நுழை கதிரின் துன் அணுப் புரைய’) என்று சொல்லுமளவு ஒப்பீட்டில் இறைவன் பெரியவனாக இருக்கிறான் என்று பிரபஞ்சத்தினும் பெரிதான இறைவனின் வடிவத்தை நமக்கெல்லாம் அற்புதமாகக் காட்சிப்படுத்துகின்றார். சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியின் பல்வேறு பரிமாணங்களையும் இன்னும் சில வாரங்கள் தொடர்ந்து தரிசிப்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-10-இறைவனே-குருவாக-அருளிய-பெரும்பேறு/article9448945.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 11: நுண்மையிலும் நுண்ணியன்

 

siva_3112999f.jpg
 
 
 

எல்லாம் வல்ல இறைவன் இப்பிரபஞ்சத்தில் மிகப்பெரிதினும் மிகப்பெரியவனாகியும், மிகமிகச் சிறியதைக் காட்டிலும் நுண்ணியனாகவும் உள்ளதையும் ஒரு நொடியில் உணர்ந்து கொண்ட மணிவாசகர், தம்முடைய அனுபவக் காட்சியை அற்புதமான அறிவியல் சொல் வளமையால் நமக்கு விளக்குகின்றார். இறையருளால் இறைக்காட்சி வசப்பட்டதன் விளைவாக, இறைவனும், தொடர்ந்து விரிவடையும் இப்பிரபஞ்சத்திலுள்ள (Ever-Expanding Universe with innumerable Galaxies), எண்ணற்ற கோடிக்கணக்கான உருண்டைவடிவ மிகப்பெரிய பெருங்கோள்களும், உள்ளும் புறமுமாக ஒரே நேரத்தில் அவர் கண்களுக்குப் புலப்பட்டதால், இரண்டையும் ஒப்பிட்டுக் காட்சிப்படுத்தும் மணிவாசகரின் அறிவியல் சொல்லாடல்கள் நம்மை மீளமுடியாத வியப்பில் ஆழ்த்துகின்றன.

இயற்பியலைக் கடந்த விண்பகுதியும் மாயையும்

நாம் காணும் மாபெரும் கோள்கள், அண்டப்பேரொலியின் விளைவாகக் காணும் பருப்பொருளாக உருவாகும் முன்பு, எல்லையற்ற அடர்த்தியும் வெப்பமும் உடைய காணஇயலாத நுண்ணிய(சூக்கும) நிலையில், இயற்பியல் விதிகளுக்கு உட்படாத பகுதியாக இருந்தது. இத்தகைய காணஇயலாத அனைத்திற்கும் தோற்றுவாயான நுண்ணிய(சூக்கும)ப் பகுதியை ‘மாயை’ என்று சைவசித்தாந்தம் கூறும். மாயை என்னும் மூலப்பொருளில், அணு நிலைக்கு முற்பட்ட, இயற்பியல் விதிகளுக்கு உட்படாத, காணவியலாத, இத்தகைய பகுதிகளும் கருந்துளைகளும் எப்போதும் உள்ளன.

கோள்கள் ஒன்றினையொன்று மோதிக்கொள்ளாமல், அவையவற்றின் நியமப்பாதையில் இயற்பியல் விதிகளின்படி இயங்கும் பிரபஞ்சப்பகுதியை ‘அண்டம்’ என்று சொல்லாமல் ‘அண்டப்பகுதி’ என்று மிகச் சரியாகப் பெயரிட்டு அழைக்கும் மணிவாசகரின் நுண்ணறிவு அபாரம். அவர் இறைவனிடம் பெற்ற ‘வாலறிவு’ என்னும் முற்றறிவைக் கண்டு வியந்தல்லவா போகிறோம் நாம்! காணும் நிலையில் உள்ள பொருட்கள் அனைத்திற்கும் பெரிய மாபெரும் கோள்கள், இறைவனை ஒப்பிடும்போது, சிறிய அணுக்கள் போன்று காட்சியளிப்பதால், இறைவன் மிகப்பெரியவன் என்று நிறுவுகிறார் மணிவாசகர்.

நுண்மையிலும் நுண்ணியனான இறைவனின் தரிசனம்

இனி, பெரிதினும் பெரிதான இறைவனைத் தரிசித்த நாம், நுண்மையிலும் நுண்ணியனாக (nano of all other nanos) உள்ள இறைவனின் தரிசனத்தைக் காண்போம்.

வேதியன் தொகையுடன் மாலவன் மிகுதியும்

தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய

மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து

எறியது வளியில்

கொட்கப் பெயர்க்கும் குழகன்; – திருவாசகம்:அண்டப்பகுதி-7-12

1968 முதல் 1995 வரை ஹுபலே, ஸ்டீவன் ஹாக்கின்ஸ், ரோகர் பென்ரோஸ், எல்லிஸ், டேவிட் சிரம் போன்ற அறிவியலாளர் கண்டுபிடிப்புகளால் அனைத்துக் கோள்களும், விண்மீன்களும் அவைகளின் காலமுடிவில் காணஇயலாத பழைய நுண்ணிய நிலையை மீண்டும் அடையும் என்பதும் அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டது. பரமாணு என்னும் கடவுள்துகள்(God Particle) குறித்த கோட்பாடும் பெறப்பட்டுவிட்டது.

கோள்களும், விண்மீன்களும் தோற்றத்திற்கு வருவதும், இயற்பியல் விதிகளின்படி அவை இயங்குவதும், அவைகளில் உயிர்கள் உடல்வாழ்வுக்குத் தோன்றுவதும், வாழ்வதும், பின் மடிவதும், ஊழிக்காலமுடிவில் அக்கோள்களும், விண்மீன்களும் மீண்டும் அழிவதுமான பிரபஞ்சச் சுழற்சியை (தோற்றநிலையிலிருந்து காணஇயலாத நுண்ணியநிலை அடைதல்), இறைக்காட்சி கிட்டிய மாணிக்கவாசகர் அருமையாக விவரித்துள்ளார். நான்முகன், படைத்தலையும், திருமால் காத்தலையும் செய்கின்றனர். கணக்கிலடங்காத உலகங்கள் இப்பிரபஞ்சத்தில் உள்ளமையால், நான்முகர்கள் பலரும், திருமால்கள் பலரும் உள்ளனர் என்கின்றார் மணிவாசகர்.

நூறு கோடி பிரமர்கள் நுங்கினர்

ஆறு கோடி நாராயணர் அங்ஙனே

ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்

ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே! – திருமுறை:5:100-3

என்று தேவாரத்தில் இச்செய்தியை அப்பர் பெருமான் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஊழிக்காலத்தில் அனைத்தும் இறைவனிடத்தில் ஒடுங்குதல்

பெரும் எண்ணிக்கையிலான பிரமர்களும், அவர்கள் கூட்டத்திற்குத் தலைவரான திருமாலும், அவர்கள் செய்யும் படைத்தலும், காத்தலும் ஒருசேர முடிவுக்கு வரும் மகாப் பேரூழிக் காலமும், பேரூழிக்கால நீக்கமும், மீண்டும் பிரமர்களையும், திருமால்களையும் தானே படைத்து, அவர்கள் மூலம் படைத்தலும், காத்தலும் செய்தல் என மாறி,மாறிச் சுழலச் சுழற்றும் குழகன்(இளையோன்) என்று இறைவனின் நிலைத்த, நுண்ணிய, எல்லையற்ற ஆற்றலை விவரிக்கிறார் மணிவாசகர். இரவு, பகல் போன்ற கால தத்துவத்துக்கு உட்படாத இறைவன் என்றும் மாறாத இளமை நிலை உடையவன் என்பதால், ஊழிக்காலத்தில் பிரமர்களையும், கூட்டத் தலைவரான திருமால்களையும் அழிக்கும்(நீக்கும்) சிவபெருமானே, மீண்டும் அவர்களைப் படைப்பவராகவும் உள்ளார்; இதையே, ‘மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்’ என்று கூறுகின்றார் பெருமான்.

ஊழிக்காலச் சூறைக்காற்றை சிவபெருமானுக்கும், அண்டப்பகுதியில் உள்ள ‘பிரமர்கள், திருமால்கள், உயிர்கள், உலகங்கள் அனைத்தையும் வளி என்னும் சிறுகாற்றுக்கும் உதாரணமாகச் சொல்லி, நீக்கமும், படைப்பும் இவ்வாறே மாறிமாறிச் சுழன்று வருகிறது என அற்புதமாக விளக்குகிறார் பெருமான். இங்கு, சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து எறியது வளி என்பதில் சூறைக்காற்று நுண்பொருள்,(சூக்கம்), வளி என்னும் சிறுகாற்று பருப்பொருள்(தூலம்).

நுண்பொருளாகிய காற்றே பருப்பொருளாகிய காற்றாலையை இயக்கி மின்சக்தியை உற்பத்தி செய்கின்றது; எனவே, காற்று, மின்சக்தி போன்ற நுண்பொருட்களே பெரிய இயந்திரங்களை இயக்குகின்றன என்பது விளங்கும்.

கோள்களும், அண்டங்களும் தூலம் என்னும் பருமை பொருட்களாதலால், அவைகளைப் படைத்தும், காத்தும் வரும் தலைவர்களான பிரமர்களும், திருமால்களும் நுண்ணிய உயிர்களாக உள்ளனர் என்பது தெளிவு. நுண்ணிய உயிர்களான பிரமர்களையும், திருமால்களையும் தன்னுள் ஒடுக்கும் சங்கார இறைவன், அவர்களிலும் நுண்ணியன்; எனவே, இறைவனே நுண்மைக்கெல்லாம் நுண்ணியன் (nano of all nanos) என்கிறார் பெருமான். (புரைய – போல, கொட்கல்-சுழலல், குழகன்-இளையோன், சூறை மாருதம்-சூறைக்காற்று, வளி-சிறுகாற்று)

சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியையும், எங்கும் நிறைந்த நுண்மைக்காட்சியையும் நமக்குத் தந்த மணிவாசகர் இறைவனைக் காண மனிதர்கள் செய்யும் பல்வகைத் தவமுயற்சிகளையும் விவரித்து, அவற்றால் இறைவனைக் காண முடிந்ததா என்பதற்கான விடையையும் கூறும் திருவாசகத்தை அடுத்த வாரம் காண்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-11-நுண்மையிலும்-நுண்ணியன்/article9458961.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வான்கலந்த மாணிக்கவாசகம் 12: அற்புதன் காண்க, அநேகன் காண்க

 
sivan_3116657f.jpg
 
 
 

சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியையும், எங்கும் நிறைந்த நுண்மைக்காட்சியையும் ஒரே சமயத்தில் காணமுடிந்த மணிவாசகர், இறைவனை அடைவதே பிறவியின் பயன் என்ற இறையுணர்வு பெற்ற மனிதர்கள் செய்யும் பல்வகைத் தவமுயற்சிகளையும் காண்கிறார்; இறைவனைக் காண இயலாத நிலையும், அதற்கான விடையும் மனிதகுலத்திற்குப் பயன்பெறும் அற்புதமான திருவாசகமாகப் பூத்தன. நேர்முக வர்ணனையாக இறைவனின் திருக்காட்சியை நமக்கெல்லாம் திருவாசகங்களால் காட்சிப்படுத்தும் அழகைக் காண்போம்.

அற்புதன் காண்க அநேகன் காண்க

சித்தமும் செல்லா சேட்சியன் காண்க

பத்தி வலையில் படுவோன் காண்க

(திருவாசகம்:அண்டப்பகுதி:39, 41-42)

பிரமனும், மாலும் காண இயலாத பெரியோன் பரமன்; சொல்லும், சொல்லின் பொருளுமான நிலையைக் கடந்து நிற்கும் அற்புதன் காண்க; அநேக வடிவங்களில் தோன்றும் ஒருவனேயான இறைவன் காண்க; புறமனம், உள்மனம், மேல்நிலைச் சித்தம் ஆகியன கடந்த ஆழ்நிலைச் சித்தத்தாலும் எட்ட முடியாத பரமன், அன்பர்களின் பக்தி என்னும் அன்பு வலையில் தானே வந்து சிக்கிக்கொள்வதைக் காணுங்கள் என்கிறார் பெருமான்.

தன் முனைப்பு இல்லாத முயற்சி

ஆழ்நிலைச் சித்தம் கொண்டு இறைவனைக் காணச் செல்வது ‘நான் முயற்சிக்கிறேன்’ என்னும் ‘தன் முனைப்பு’ காரணம் என்பதால் இறைவன் எட்டமுடியாதவனாகிறான். ஆனால், பக்தியால் உள்ளம் குழைந்து அன்பில் உருகுபவனிடம் ‘தன் முனைப்பு’ அறவே இல்லையாதலால், அருள் சுரந்து, தானே வந்து, பக்தனின் அன்புவலையில் அகப்படுகின்றான் இறைவன். இந்த நுட்பம் உணராமல், மனிதர்கள் இறைவனை அடையச் செய்யும் பல்வேறு முயற்சிகளையும், அவற்றால் இறைவனைக் காணமுடியாமல் அவர்கள் தவிப்பதையும் நமக்கு அறிவிக்கிறார் பெருமான்.

மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்

மின்ஒளி கொண்ட பொன்ஒளி திகழத்

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்.

( திருவாசகம்:அண்டப்பகுதி:125-126)

தீப்பிழம்பாய் அம்மையப்பனிடம் தோன்றிய பச்சைமரகத மணியின் ஒளியும், மாணிக்கச் செம்மணியின் ஒளியும் அருளும் அறிவுமாய்ப் பெருகி, மின்னல் போன்ற பொன்ஒளி எங்கும் பரந்து விரிய, நான்கு முகங்களையுடைய திசைமுகனாம் பிரமன், எங்கும் சென்று தேடியும் காணக் கிடைக்காமல் தன்னை ஒளித்துக் கொண்டான் இறைவன் என்கிறார். உண்மையில், இறைவன் எங்கேயும் ஒளிந்து கொள்ளவில்லை; ‘நான் இறைவனது முடியைக் காண்பேன்’ என்னும் அகங்காரமே பிரமனின் கண்ணை மறைத்தது. பிரமனைப்போல் ‘நான்’ என்னும் 'தன்முனைப்பு' கொண்ட மனிதர்கள் அனைவரையும் குறிப்பதற்காகவே, ‘தேடினர்க்கு’ என்று பன்மையில் கூறினார் மணிவாசகர். (குவால்-மேடு, பிறக்கம்-பெருக்கம்)

கைகாட்டி மரமும் பயணமும்

ஆகமநூல்கள் கூறும் திருக்கோவில் திருத்தொண்டு, இறைவனுக்கு வீட்டில் செய்யும் பூசைகள், உள்ளத்தையும், உடலையும் ஒருநிலைப்படுத்தும் ‘யோகம் அல்லது யோகா’ ஆகிய ‘சரியை, கிரியை, யோகம்’ போன்ற படிநிலைகளை ‘முறையுளி’ என்பார்கள். இப் படிநிலைகளில் முயற்சிப்பாருக்கும் இறைவன் அகப்படவில்லை என்கிறார் மணிவாசகர். இப்படிநிலைகள், ‘மதுரைக்குச் செல்லும் சாலை’ என்பதுபோல, இறைவனை அடைவதற்கான வழிசொல்லும் கைகாட்டி மரமாகும்;

சாலையில் பயணிக்காமல், கைகாட்டிக் கம்பத்தின் அடியில் நின்றுகொண்டு மதுரையை அடைந்துவிட்டதாக நினைப்பவரைப்போல், படிநிலைச் சடங்குகளை மட்டுமே செய்துவிட்டு, ‘அன்புத்தொண்டு’ என்னும் உணர்வுபூர்வமான சாலையில் பயணம் செய்யாதவர்கள் இறைவனைச் சென்று அடையமுடியாது என்பதை ‘முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்’ என்றார் மணிவாசகர்.

மனம், சித்தம் போன்றவைகளை ஒருமைப்படுத்தி, உற்றார், உறவினர் கண்டு வருந்துமளவிற்கு உறைபனி நீரினில் நின்றும், தீயிடை நின்றும், உடலை வருத்திக் கடுந்தவம் புரிவோருக்கும் இறைவன் அகப்படுவதில்லை என்கிறார் பெருமான். இத்தகைய கடுந்தவத்தின் பயனாக, நீர்மேல் நடக்கும் ஆற்றலைப் பெற்ற சாதகன் ஒருவன் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று, கங்கைநதி நீரின்மேல் நடந்து காட்டினான். அத்தகைய ஆற்றல் எப்படிக் கிடைத்தது என்று ராமகிருஷ்ணர் வினவ, ஐம்பது ஆண்டுகள் அவன் செய்த பல்வேறு கடுந்தவங்களைப் பற்றி மூச்சுவிடாமல் கூறினான்.

ராமகிருஷ்ணர் பெருவியப்பு அடைந்து பாராட்டுவார் என்று எதிர்பார்த்தவனுக்குப் பெரும் ஏமாற்றம். ‘என் சாதனை தங்களை வியப்படையச் செய்யவில்லையா சுவாமி?” என்று பணிவாக வினவினான். ‘ஓட்டைக் காலணாவைக் கொடுத்தால் ஓடக்காரன் அக்கரைக்குக் கொண்டு சேர்த்துவிடுவான்; இத்தகைய அற்பமான காரியத்துக்காக விலைமதிப்பில்லாத வாழ்நாளின் ஐம்பது ஆண்டுகளை வீணடித்து விட்டாயே! இனி, எஞ்சிய வாழ்நாளையாவது பயனுற வாழ்வாயாக!” என்றார் பரமஹம்சர்.

கடும்தவம் செய்து இறைவனைக் காண முயற்சிப்பதைக் காட்டிலும் எளிதானதும் பயன் தருவதும் ‘அன்பு வழியிலான தொண்டு’ என்று உணர்வோம்.

வேதம், ஆகம நூல்களில் கூறப்பட்ட சாத்திர சடங்குகளின் அடிப்படையில் இறைவனைக் காண முயல்பவர்கள், அச்சடங்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதால், அன்பும், தொண்டும் வெளியேற்றப்படுகின்றன; அவற்றுடன் இறைவனும் வெளியேறிவிடுகிறான்.

இறைக்காட்சியினால் அனைத்து நிகழ்வுகளையும் காண இயன்ற மணிவாசகரின் திருவாசகத்தில் இன்னும் சில நிகழ்வுகளை அடுத்தவாரம் காண்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-12-அற்புதன்-காண்க-அநேகன்-காண்க/article9474493.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 13: அறிய முயன்றால் அடங்கும்

 

 
eesann_3120056f.jpg
 
 
 

பக்தியால் உள்ளம் குழைந்து அன்பில் உருகி, தொண்டாற்றுபவர்களிடம், தானே வந்து, அருள் சுரந்து, ஆட்கொள்ளும் இறைவனின் தன்மை உணராமல், இறைவனை அடைய, தன் முனைப்புடன் மனிதர்கள் செய்யும் மேலும் சில முயற்சிகளையும், அவைகளால் இறைவனைக் காணமுடியாமல் அவர்கள் தவிப்பதையும் மணிவாசகரின் திருவாசகத்தால் இப்போது காண்போம்.

அன்பாலயமும் ஆகம ஆலயமும்

ஆகமவிதிப்படி மாபெரும் சிவாலயம் கட்டி, குடமுழுக்குச் செய்ய நாளும் நேரமும் குறித்த பல்லவ மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், மன்னன் குறித்த சமயத்தில் பூசலார் என்னும் அன்பர் கட்டிய சிவாலயக் குடமுழுக்கு விழாவிற்குச் செல்லவிருப்பதால், வேறு நேரம் குறிக்குமாறு கூறிமறைந்தான். கனவு கலைந்த பல்லவ மன்னன் பூசலார் கட்டிய சிவாலயக் குடமுழுக்கு விழாவுக்குப் போக, பூசலாரை அழைத்து விசாரித்தான். தன் மனத்தில் தான் அன்பால் கட்டிய சிவாலயத்தை மன்னனிடம் பெருமைப்படுத்திய இறைவனின் கருணையைப் பூசலார் விளக்க, ஆகமவழியினும் மேலான அன்பு வழியின் பெருமை உணர்ந்து, தன்முனைப்பு நீங்கி, இறையருள் பெற்றான் பல்லவ மன்னன்.

இறைவன் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; இருந்தும், அன்பினால் இறைவனை வழிபடுபவர்கள், அவரவர் சமயங்கள் காட்டிய வழிப்படி, இறைவனை ஆண் உருவிலோ, பெண் உருவிலோ, ஆணும்-பெண்ணுமான அம்மையப்பனாகவோ, ஆணும்பெண்ணும் கலந்த அர்த்தநாரி உருவிலோ வழிபடுவார்கள். இவர்கள் அனைவரையும் எந்தவித வெறுப்பும் இல்லாமல் ஒரேவிதமாக நோக்கி அருளும் இறைவன், பெண் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு ஆண் உருவில் தோன்றியும், ஆண் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு பெண் உருவில் தோன்றியும், அம்மையப்பன் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு அவ்விரண்டும் அல்லாத அர்த்தநாரி உருவில் தோன்றியும் காட்சி தந்து, அவரவர் அறிவின் சிறிய எல்லையையும், அவைகளுக்கு அப்பாற்பட்ட தன்னியல்பின் பேரளவினையும் அவர்களுக்கு உணர்த்தி, ஆட்கொள்கிறான்.

சிறிதளவு இறைவனின் தன்மையை உணர்ந்தவுடன், இறைவனைத் தானே முற்றிலும் உணர்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் இயல்புடைய மனிதர்களையும் வெறுக்காமல் ஆட்கொள்ளும் இறைவன், அவர்களின் ஆணவத்தை நீக்கிய பின்பே ஆட்கொள்கிறான் என்கிறார் மணிவாசகர்.

பிறவியின் நோக்கம்

அகஇன்பங்கள், புறஇன்பங்கள் அனைத்தையும் வெறுத்து, ஐம்புலன்களையும் அடக்கி, பெரிய மலையில் ஏறிச் சென்று, உணவு முதலிய அனைத்தையும் துறந்து, எலும்பும் தோலுமாகிய உடலுடன் கடும்தவம் செய்யும் முனிவர்களின் அறிவுக்கும் எட்டாதவன் இறைவன் என்கிறார் பெருமான்.

இவ்வுலகு, உலகின் நுகர்பொருட்கள், உடம்பு, உடம்பில் உள்ள ஐம்பொறிகளான புறக்கருவிகள், அகக்கருவிகளான ஐம்புலன்கள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகியவை அனைத்தையும் உயிர்களுக்கு இறைவன் படைத்துத் தந்ததன் நோக்கம், இவைகள் மூலம் உயிர்கள் அறிவு பெற்று, இறைவனின் கருணையையும், அருளையும் உணர்ந்து, சக உயிர்களிடம் அன்பு செலுத்தி, தொண்டு செய்து, இறைவனின் அருளைப்பெற்று, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, முழுமைப் பேரின்பம் பெறுவதற்கே. இதை உணராது, இறைவன் தந்த உடம்பையும், கருவிகளையும், ‘யான், எனது’ என்னும் ‘தன் முனைப்பு’ அறிவால் வாட்டி, வதைத்துத் தவம் செய்வது, இறைவனின் கருத்துக்கு மாறானது என்பது மணிவாசகர் கருத்து.

அடக்குதலும் அறிதலும்

ஐம்புலன்களையும் அடக்கும் தேவர்களும் இல்லை என்பதால் அவைகளை அடக்குக என்பவர்கள் அறிவிலாதவர்கள்; ஐம்புலன்களும் அடங்கிவிட்டால், அறிவற்ற சடப்பொருளாகிவிடும் இவ்வுடல் என்பதால், ஐம்புலன்களையும் அடக்காத அறிவை அறிந்தேன் என்கிறார் திருமூலநாயனார். (அசேதனம்- சடப்பொருள்) இதன் பொருள், அடக்க நினைத்தால் அடங்காமல் அலையும் ஐம்புலன்களும், மனமும், அவைகளை அன்பே சிவமாம் இறையருள் அறிவைக்கொண்டு அறிய முயன்றால், அவ்வறிவுக்கு, ஐம்புலன்களும் மனமும் அடங்கிப் பணிசெய்யும் என்பதாகும். ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பார் மணிவாசகர்.

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇல்லை;

அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம்என்றிட்டு

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே - திருமந்திரம் :2௦33

“மனம்: அடக்க நினைத்தால் அலையும், அறிய முயன்றால் அடங்கும்” என்பது தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் அருள்வாக்கு.

இவ்வாறு பல்வேறு வகைப்பட்ட முயற்சிகளுக்கும் அகப்படாமல் ஒளித்து நின்ற கள்வனாகிய இறைவனை இன்று தம் கண்ணெதிரே கண்டோம் என்கிறார் மணிவாசகர். இங்கு கண்டேன் என்று தன்னை மட்டும் ஒருமையில் கூறாமல், ‘கண்டனம்’ என்று பன்மையில் கூறியது கவனிக்க வேண்டிய செய்தி. முதலமைச்சர் திருவாதவூரருடன் சென்ற அனைவரும் மறை-பயில் அந்தணன் வடிவில் குருவாக நின்ற இறைவனைக் கண்டிருக்கவேண்டும். மனிதவடிவில் இருந்த குருவை இறைவன் என்று மற்றவர்கள் கருதவில்லை. இறைவன் என்று உணர்ந்துகொண்டதால் மட்டுமே, முதலமைச்சர் திருவாதவூரர் மாணிக்கவாசகரானார்.

பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்

ஒளிக்கும் சோரனைக் கண்டனம்

ஆர்மின் ஆர்மின் நாள்மலர்ப் பிணையலில்

தாள்தளை இடுமின்

சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்

பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் - திருவாசகம்:அண்டப்பகுதி:140-145

ஒருவருடைய பொருளை, அவர் அறியாமல் திருடிக்கொள்பவனையே ‘சோரன்’(கள்வன்) என்று கூறுவோம். அனைத்து உடல்வாழ் உயிர்களின் ஆழ்மனத்தின் உள்ளே அவைகள் அறியாமல் கலந்து வாழ்வதால் ‘ஒளிக்கும் சோரன்’ என்றார் பெருமான். இவ்வாறு நமக்குள் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் சோரனாம் இறைவனை இங்கே, அங்கே என்று வெளியே தேடி அலையும் நாம், நமக்குள் தேட முயற்சி செய்யாததால்தான் அவன் அகப்படவில்லை.

இறைவனைக் கண்ட இறையனுபவ ஆனந்தத்தால் தன்னை மறந்து, “விரைந்து வாருங்கள்! புதிய நறுமண மலர்மாலைகளால் இறைவனின் திருப்பாதங்களைக் கட்டுங்கள்; அவனைச் சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள்; தொடருங்கள்; விடாமல் பிடியுங்கள்” என்ற முதலமைச்சர் வாதவூரரின் ஆணையை மீறி இறைவன் தன்னைப் பிறர் கண்களுக்கு ஒளித்துக் கொண்டான்.

இதன்பின், மணிவாசகராக மாறிவிட்ட திருவாதவூரரின் முழுமையான இறையனுபவப் பிழிவை, தேனை, பாலை, தெளிந்த கருப்பஞ்சாற்றின் இனிமையை, கனிந்த திருவாசகத் தேனால் சுவைக்க அடுத்தவாரம் வரைக் காத்திருப்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-13-அறிய-முயன்றால்-அடங்கும்/article9489183.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 14: கல்வியும் செல்வமும் கடந்த இறைவன்

 

 
manikkavasagam_3123217f.jpg
 
 
 

தன்முனைப்புடன் முயன்ற பிரம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், கடுமையான தவம் புரிந்த முனிவர்களுக்கும், தன்னைக் காட்டாது ஒளித்துக்கொண்டான் சிவபெருமான். “தனக்கு ஒப்புமை இல்லாதவனாகிய தனித்தலைமைக் கடவுளாம் சிவபெருமான், என்னைப் போன்ற ஒன்றுக்கும் அற்றவர்கள் பலரும் கேட்குமாறு, ஓர் அந்தணன் வடிவில் தோன்றி, தனது முழுமுதல் தன்மையைத் தானே எடுத்துச் சொல்லி, என்னை வலிந்து அழைத்து, ஆட்கொண்டு அருளிய பேரருள் தன்மைதான் என்னே?” என்று இறைவனின் அடியவர்க்கு அருளும் எளிய தன்மையை வியந்து உருகுகின்றார் மணிவாசகப் பெருமான்.

தன்நேர் இல்லோன் தானேஆன தன்மை

என்நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி

அறைகூவி ஆட்கொண்டு அருளி

மறையோர் கோலம் காட்டி அருளலும்

(திருஅண்டப்பகுதி:146-149)

இறைவன் தானே நேரில் வந்து தம்மை ஆட்கொண்டார் என்று மணிவாசகரே கூறும் வாக்குமூலம் இதுவாகும். “கடுமையான தவங்கள் தேவையில்லை; அன்பான எளியவர்களுக்கு நானே வலிய வந்து அருள் செய்கிறேன்” என்று நம்மைப் போன்ற சாமானியர்களுக்காக இறைவன் அருளிய உறுதிமொழிப் பத்திரமாகும்.

கொம்புத்தேனால் உடல் செய்தான்

“இறைவனின் ஒப்பற்ற அன்பு விளைவித்த இன்பத்தால் என் எலும்புகளும் உருகின; என்னுடல், கடலலை போல ஆர்ப்பரித்து ஓங்கி உயர்ந்து எழுந்து, தலைதடுமாறி வீழ்ந்து புரண்டு அலறவும், பித்தனைப் போல மயங்கி, மதக்களிப்பு அடையும் என்னைக் கண்டவர்கள், பாண்டியப் பேரரசின் முதலமைச்சருக்கு என்னவாயிற்று என்று கவலைப்படவும், ஊரார் மருளவும், என்னை நன்கு அறிந்தோர், என் நிலையைக் கேள்விப்பட்டு வியக்கவும், மதம் பிடித்த யானை தன் பாகனை மேலே ஏறவிடாமல் அங்குமிங்கும் ஓடுவதைப் போல், இறையின்ப வெள்ளத்தைத் தாங்கமுடியாமல் அரற்றி, என் ஊனுடல் நிலை தடுமாறிற்று; இந்நிலையை மாற்றி, இறையின்பம் தாங்கும் வகையில், இறைவன் என் மனதையும், என்னுடல் உறுப்புக்களையும், கொம்புத் தேனால் செய்ததைப்போன்ற இனிய சுவையுடைய நுண்ணுடம்பாய்ச் செய்தான்” என்று தன் இறையனுபவத்தை நம்மோடு பகிர்கின்றார் மணிவாசகர்.

உளையா அன்பு என்பு உருக ஓலமிட்டு

அலைகடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்

தலை தடுமாறா வீழ்ந்துபுரண்டு அலறிப்

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து

நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்

கடக்களிறு ஏற்றாத் தடம் பெருமதத்தின்

ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு

கோல் தேன் கொண்டு செய்தனன் – திருவாசகம்: அண்டப்பகுதி: 150-157

பேரின்பத்தின் பரவசநிலை

“அறிவதற்கு அரிய இறைவன், உள்ளங்கை நெல்லிக்கனி போல எனக்கு எளியவன் ஆனான்; என் இறையனுபவத்தைச் சொல்லால் விளக்கமுடியாமல் தவிக்கிறேன்; இறைவா நீ வாழ்க! முதலமைச்சராக வந்த என்னை, நீ இவ்விதம் பேரின்ப வெள்ளத்தில் இருக்கச் செய்ததை இன்னது என்றும் நான் அறியேன்! நாயேனாகிய நான் இவ்வின்பத்துக்குத் தகுதி உடையவன் அல்லேன்; இறையின்பத்தால், ‘நான்’, ‘எனது’ என்னும் பேதங்கள் செத்து ஒழிந்தன! ஒன்றுக்கும் அற்ற அடியேனுக்கு இறைவன் அருளியது எதற்காக என்று அறியேன்! இறையின்பத்தை எவ்வளவுதான் பருகினாலும், விழுங்கினாலும், ஆரா வேட்கையுடன் பொறுக்க மாட்டாமல் உள்ளேன்!” என்று பேரின்பப் பரவசத்தின் நிலையை நமக்குக் காட்டுகிறார் பெருமான்.

தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்;

சொல்லுவது அறியேன்! வாழி! முறையோ!

தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது

தெரியேன்! ஆஆ செத்தேன்! அடியேற்கு

அருளியது அறியேன்! பருகியும் ஆரேன்!

விழுங்கியும் ஒல்ல கில்லேன்!

(அண்டப்பகுதி: 162-167)

அன்பால் உடலமைத்தான்

“சொல்லால் எடுத்துக்காட்ட முடியாத இறைப்பேரின்ப அமுதம் என் உடம்பின் மயிர்க்கால்கள் தோறும் தேக்கி நிறைத்தான்; நாய் போன்ற என்னுடல் உள்ளேயே தன் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான்; என் உள்ளிருந்து, இனிய தேன் கொண்டு பாய்ச்சி நிரப்பிய அற்புதமான அமுதங்கள் கசிந்து ஒவ்வொரு எலும்பின் சிறுசிறு துளைகள்தோறும் ஏறும்படிச் செய்தான் இறைவன்; அன்பால் இடைவிடாமல் உருகும் என் உள்ளத்தையே மூலப்பொருளாகக் கொண்டு ஓர் உருவம் செய்து, அங்கு,

அன்பால் செறிந்து ஊறும் உடலை எனக்கு அமைத்தான்; நன்கு விளைந்து முற்றிய கரும்பையும், விளாங்கனியையும் வயிறார உண்ட இன்பத்தில் திளைத்திருக்கும் ஆண்யானையைப் போல, என்னையும், பேரின்பத்தில் என்றும் இருப்பதாகச் செய்தான்; பிரம்மனும் மாலும் அறியாத எம்பெருமானின் பெருங்கருணையாம் வான் தேன் என்னிடம் கலந்ததால், அருளோடு பேரின்பமும் என்னுள்ளேயே நிறையும்படி செய்தான்” என்று தன் இறையனுபவப் பேரின்பப் பகிர்வை, அற்புதமாக நிறைவுசெய்கின்றார் மணிவாசகப் பெருமான். (குரம்பை - உடல், எற்பு – எலும்பு, அள்ளூறு – செறிந்து ஊறும், ஆக்கை – உடல், கன்னல் – கரும்பு, களிறு – ஆண்யானை)

வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்

தேக்கிடச் செய்தனன்! கொடியேன் ஊன்தழை

குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே,

குரம்பைகொண்டு, இன்தேன் பாய்த்தி, நிரம்பிய

அற்புதம் ஆன அமுத தாரைகள்,

எற்புத் துளைதொறும் ஏற்றினன்! உருகுவது

உள்ளம் கொண்டு ஓர் உருச்செய்து ஆங்கு, எனக்கு

அள்ளூறு ஆக்கை அமைத்தனன்! ஒள்ளிய

கன்னல் கனிதேர் களிறு எனக் கடைமுறை

என்னையும் இருப்பது ஆக்கினன்! என்னில்

கருணை வான்தேன் கலக்க,

அருளொடு பரா அமுது ஆக்கினன்,

பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே!

(அண்டப்பகுதி: 170-182)

மணிவாசரின் இறையனுபவப் பகிர்வில், ‘கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன்’ என்ற சொற்கள் மிகமிக முக்கியமானவை; மனிதர் எவருக்கும், இறைவனை வசப்படுத்தப் பயன்படும் திருவாசகத்தின் மூலம், மணிவாசகரை, இப்பூவுலகிலே என்றும் இருப்பதாகச் செய்தான் இறைவன் என்பது இதன் உட்பொருள். இதைத் தனி அகவல் என்றே பரவசமடைவார் வள்ளலார்.

மற்றொரு முக்கியமான பகுதி ‘பிரமன் மால் அறியாப் பெற்றியோன்’ என்பது; இதன் உட்பொருள், மணிவாசகர் பெற்ற கல்வியாலோ, முதலமைச்சராக அவர் பெற்ற செல்வத்தாலோ அவருக்கு இறையருள் கிட்டவில்லை; இறைவனின் பெருங்கருணையாலேயே கிடைத்தது என்பதே. இறைவன் முப்புரம் எரித்த பேரருள் செயலை, புராணங்களிலிருந்து வேறுபட்ட, அறிவுபூர்வமான புதிய பொருளுடன், திருவாசகத்தில் மணிவாசகர் விளக்குவதை அறிய அடுத்தவாரம் வரைக் காத்திருப்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-14-கல்வியும்-செல்வமும்-கடந்த-இறைவன்/article9502093.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 15: முப்புரங்களை எரித்த சிவன்

 

 
 
 
siva_3126938f.jpg
 
 
 

திருவாசகம் முழுவதுமே மணிவாசகரின் இறைவனுபவப் பிழிவு ஆகும். மனித உடலிலேயே இறையனுபவம் பெற்ற மணிவாசகரின் ‘சொல்லால் விளக்க இயலாத’ பெருவிளக்கமே அண்டப்பகுதியில் நாம் காணும் திருவாசகம். ‘பூமியில் சிலநாள் வாழ்ந்து, பின் தில்லை வருக’ என்ற இறைவன் ஆணையிடுகிறார்; இறைவனைப் பிரிந்த பேரிழப்பு, நரகத்தினும் கொடியதாய், பேரிருளாய் மணிவாசகரைச் சூழ்ந்து வருத்தியதால் பிறந்த திருவாசகப் பதிகங்கள் நீத்தல் விண்ணப்பம், செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, வாழாப்பத்து போன்றவை. இந்தத் துன்பநிலையைக் கடந்தபின் தோன்றும் பேரின்பம் விளைவித்த திருவாசகப் பதிகங்கள் இளைய தலைமுறையை இறைத்தொண்டிலும், வழிபாட்டிலும் நெறிப்படுத்தும் திருவெம்பாவை, திருவம்மானை, திருக்கோத்தும்பி, திருப்பள்ளியெழுச்சி போன்றவை.

முடிவாக, அனைத்தையும் ஒன்றாக உணர்ந்து, பெரும்பொருளோடு ஒன்றுபட்டு அமைந்த குறைவிலாது எழுந்த நிறையனுபவத்தால் தோன்றிய திருவாசகப் பதிகங்கள் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், போற்றித் திருவகவல், அற்புதப்பத்து, பிடித்தபத்து, திருவார்த்தை, யாத்திரைப்பத்து போன்றவை.

இந்நான்கு வேறுநிலைகளின் இடைப்பட்ட நிலைகளில் விளைந்த திருப்புலம்பல், ஆசைப்பத்து, புணர்ச்சிப்பத்து போன்ற திருவாசகங்களும் உண்டு. துன்பம் மிகுதியும், இடைஇடையே இன்பவாழ்வும் கலந்த வாழ்வின் அனைத்து நிலைகளிலும், நம்மை உருக்கி, நெறிப்படுத்தும் திருவாசகங்களில் நமக்கான விடியலைக் காணலாம்.

அடியவர்கள் அனைவருக்கும் பேரின்பம

வலிமைமிக்க பழம்பெருநகர்களான முப்புரங்களையும், தன்னுடைய எழில்மிக்க அழகிய நகைப்பினாலேயே எரித்து வீழ்த்தி, இந்திரன் உள்ளிட்ட தேவர்களைக் காப்பாற்றினான் இறைவன்; அப்பேரருள் செயலைப் போன்று, இறைவன் எம்மை ஆட்கொண்டபோது, அடிமைச் சிறுவீடுகளில் வசிக்கும் தன்னுடைய அடியவர்கள் ஒருவர்கூட விடுபட்டுப் போகாமல், தன்னுடைய அருள் என்னும் பெருந்தீயினால் ஆட்கொண்டு, தன்னுடன் ஒன்றாக்கிக்கொண்டான் என்கிறார் மணிவாசகப் பெருமான்.

ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின

வீழ்வித்து ஆங்கன

அருள் பெருந்தீயின் அடியோம் அடிக்குடில

ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்

(அண்டப்பகுதி:158-161)

வடமொழி மகாபாரத்தின் அநுசாசந பர்வதத்திலும், யஜூர் வேதத்திலும், சரபோபநிடதத்திலும், மச்சபுராணம், கந்தபுராணம், லிங்கபுராணம் ஆகியவைகளிலும் காணப்படும் இறைவன் திரிபுரம் எரித்த புராணத்தின் சுருக்கம் இது. பெரும்தவம் செய்து, வித்யுமாலி, கமலாட்சன், தாரகாட்சன் ஆகிய மூன்று அசுரர்கள் இரும்பு, வெள்ளி, தங்கத்தாலான பறக்கும்திறன்கொண்ட முப்புரங்களைப் பெற்றனர்; அவைகளை, இந்திரனால் பெரும்படைக்கலங்களைக் கொண்டும் அழிக்க முடியவில்லை; தேவர்கள் அனைவரும் மகாருத்திரரைச் சரணடைந்து, முப்புரங்களை அழித்து, தங்களைக் காக்க வேண்டினர்.

மகாருத்திரர், திருமாலை அம்பாகவும், அக்கினியை அதன் பல்லாகவும், எமனை அதன் இறகாகவும், வேதங்களை வில்லாகவும், சாவித்திரியை வில்லின் நாணாகவும், தேவர்களைத் தேராகவும், நான்முகனைத் தேர்ப்பாகனாகவும் கொண்டு, மூன்று பல்லம்புகள் கொண்ட ஒரே அம்பினால் ஒரே நேரத்தில் திரிபுரங்களையும் தகனம் செய்தார். அந்த மூன்று அசுரர்களில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா முழுக்குபவராகவும் ஏற்றுக்கொண்டார்.

சைவசித்தாந்த உயிர்த்தத்துவம்

ஆணவம்(அறியாமை) என்னும் மூலமலத்தால் கட்டுண்டு செயலற்றதன்மையில் கிடக்கும் உயிர்களை மீட்கக் கருணை கொண்டான் இறைவன்; உயிர்களின் ஆணவமலத்தை நீக்க, மாயையிலிருந்து இவ்வுலகத்தையும், உயிர்கள் வாழ்வதற்கான பொறி,புலன்களுடன் கூடிய உடல்களையும் படைத்து, செயல்களைச் செய்ய வைத்து, உயிர்களின் அறிவுப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறான்.

இவ்வாறு, உயிர்களைக் கட்டிய மூன்று கட்டுகளான ஆணவம், மாயை, கன்மம் என்பவையே சைவசித்தாந்த தத்துவத்தில் ‘மும்மலங்கள்’ என அழைக்கப்படுகின்றன. மாயை, கன்மம் வழியாகப் பயணிக்கும் உயிர், தன்னை உணர்ந்து, தன் தலைவனாம் இறைவனிடம் அடைக்கலமாகிறது; இறைவன் அருளால் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களும் நீங்கி, முழுவிடுதலை அடைந்து, இறைவனுடன் இரண்டறக்கலந்து பேரின்பம் அடைகின்றது.

சித்தாந்தமும் புராணமும்

மாயையால் உருவான இந்திரியங்களுடன் (பொறி-புலன்களுடன்) கூடிய உடலை நிர்வாகம் செய்யும் உயிரே ‘இந்திரன்’ என்னும் தத்துவம். மும்மலங்களே ‘முப்புரங்கள்’ என்னும் தத்துவங்கள். முப்புரங்களின் (இந்திரியங்களின்) பிடியில் சிக்கிய இந்திரன் என்னும் உயிர் தன்னைக் காக்க இறைவனிடம் சரணடைகிறது; கருணை என்னும் அழகிய புன்னகையுடன் இறைவன் உயிரை நெருங்கி, அறியாமை உள்ளிட்ட மும்மலங்களையும் நீக்குகிறான்; இதுவே முப்புரங்கள் எரித்து அழிக்கப்படும் தத்துவம்.

மும்மலங்கள் நீங்கிய உயிர்கள் என்றும் இறைவனிடம் பேரின்பத்தில் திளைத்து நிற்கும். போர் செய்யத் தேவர்கள் செய்து கொடுத்த தேரைப் பயன்படுத்தாமல், தன்னுடைய எழில் நகைப்பினால் முப்புரங்களை சிவபெருமான் எரித்தான் என்பது, மும்மலங்களிலிருந்து விடுதலை பெற, தன் முனைப்பினால் உயிர்கள் செய்யும் புலனடக்கத் தவங்கள் பயன்படாமல்போக, இறைவனின் அருளாலேயே, உயிர்கள் மும்மலநீக்கம் பெற்றமைக்கு உவமையாயிற்று.

அறிவுசால் முதலமைச்சராய் இருந்த மணிவாசகர் இறைவனிடம் பெற்ற ஞானத்தால், திரிபுர தகனம் என்னும் முப்புரம் எரித்த புராணத்தின் தத்துவப்பொருளை உவமை காட்டி, அடியவர்கள் அனைவரும் அருள்பெற்றதை எவ்வளவு எளிதாக சொல்லிச் செல்கிறார் என்று வியக்கிறோம். தத்துவத்தை விளக்குவதற்காக உவமையாக எழுந்த புராணங்களில், கால ஓட்டத்தில் அறிவுக்குப் புறம்பான கற்பனைகள் பல கலந்து மக்களிடையே வழங்கிவரலாயின; திருவாசகத்தில், இப்புராணங்களுக்கான தத்துவவிளக்கங்கள், பகுத்தறிவுக்கு ஏற்ற உவமைகளுடன், தகுந்த இடங்களில் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.

உலகச் சிற்றின்பங்களினால் விளையும் தீங்குகளை எடுத்துக்காட்டி, இச்சோதனைகளுக்கு இடையில் இறைவன் தம்மைக் கைவிடாமல் ஆதரிக்க விண்ணப்பம் செய்யும் மணிவாசகரின் திருவாசகங்கள், சாமானியரான நமக்காகப் பிறந்தவை; அத்திருவாசகத் தேன் சுவைக்கக் காத்திருப்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-15-முப்புரங்களை-எரித்த-சிவன்/article9514990.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 16: சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

siva

இறையனுபவப் பேரின்பம் சொல்லால் விளக்க இயலாதது; ஏனெனில், மனிதஉடலில் வாழும் எவருக்கும் அது வாய்ப்பதில்லை; வாய்த்த அருளாளர்கள் யாரும் நமக்குச் சொல்லால் விளக்கியதில்லை; மனித உடலிலேயே தாம் பெற்ற இறையனுபவப் பேரின்பத்தைப் பெருவிளக்கமாக அண்டப் பகுதியில் நமக்குத் தந்தார் மணிவாசகர்.

மனித குலத்துக்கான இறைநெறி

இம்மாமனிதரைக் கொண்டே மனித குலத்துக்கு இறைநெறி வழிகாட்ட கருணை கொண்ட இறைவன், ‘பூமியில் சிலநாள் வாழ்ந்து, பின் தில்லை வருக’ என்று பணிக்கிறார். மாபெரும் இறையனுபவக் கண்ணைக் கொடுத்துவிட்டு, அந்தக் கண்ணைப் பிடுங்கிக்கொண்டும் போய்விட்டான் இறைவன். பிறவியிலேயே பார்வையற்றவனுக்குக் கண்ணைத் தந்த பின், கண்ணைப் பறித்தால் எவ்வளவு துன்பப்படுவான்? இறைவனைப் பிரிந்த பேரிழப்பு, நரகத்தைவிடக் கொடியதாக, பேரிருளாக, மணிவாசகரை வருத்தியது. உலக வாழ்வில், உடல் சார்ந்த உலகச் சிற்றின்பங்கள் தம்மை விடாது துரத்துமே என்ற பெருங்கவலை மணிவாசகரை வாட்டியது.

குழந்தையின் நலன் கருதித்தான், பெற்றோர் தம் குழந்தையைப் பிரிந்து, பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள். இறைவன், தான் ஆட்கொண்ட மணிவாசகரைப் பிரிந்து, உலக வாழ்வுக்கூடத்துக்கு அனுப்பியது, மனித குலத்தின் நலம் கருதியதுதான்; மணிவாசகரின் நலன் கருதி அன்று. மனிதக் குழந்தைகளின் அழுகை, காலத்தில் கரைந்து மறைந்து போகும்; மணிவாசகக் குழந்தையின் அழுகை காலத்தை வென்று, எங்கும் நிறைந்து, நமக்கான ‘இறைநெறி ஆற்றுப்படை’ திருவாசகமாக என்றும் நிற்கும்.

ஊனுருக்கும் திருவாசகம்

மார்பிலும், தோளிலும் உறவாடித் தாய், தந்தை அன்பில் தோய்ந்த குழந்தை, பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அழுது முறையிடுகிறது; ஆட்கொள்ளப்பட்டு, இறைவனின் பேரன்பில் தோய்ந்த மணிவாசகர், இறையின்பத்தைத் தவிர்த்த உடல் வாழ்வில் தமக்குச் சிறிதும் பற்றுதல் இல்லை என்றும் இவ்வுலகில் தம்மால் வாழ இயலாது என்றும் இறைவனிடம் முறையிட்டுக் கல் மனமும் கசிந்துருகும் வண்ணம் அழுது அரற்றுகிறார்; வாழாப்பத்து என்னும் பத்துத் திருவாசகங்கள் திருப்பெருந்துறையில் பிறந்தன; நம் ஊனையும், உயிரையும் உருக்குகின்றன; நமக்கான ஆன்ம விடுதலையையும் தருகின்றன.

யாரிடம் நொந்துகொள்வது

இப்பிரபஞ்சம் முழுவதும், அதற்கு அப்பாலும் நீ ஒருவனே பரந்தும்-விரிந்தும்,உள்ளும்-புறமும், ஒளித்தும்-வெளிப்பட்டும் இருக்கிறாய்; ஆயினும் உன்னை அறிந்தவர் யாரையும் நான் காண்கிலேன்; ஆகையினால், நீ என்னை ஆட்கொண்ட பின், பூவுலகில் இருத்திச் சென்றதை நான் யாரிடம் சொல்லி நொந்து கொள்வது? நான் இறைப்பேரின்ப வாழ்வு வாழ்ந்ததை யாருக்கு எடுத்துச் சொல்வது? அப்படி நான் எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்கு என் நிலைமை புரிந்துகொள்ள முடியாததாகவே இருக்கும்; ஏனென்றால், அவர்கள் அறிந்திராத ‘இறைப் பேரின்பம்’ என்பதை அவர்கள் அறிந்த ‘உலகியல் இன்பங்களை’க் காட்டித்தான் நான் விளக்க இயலும்; இறையின்பத்தின் வேட்கை அவர்கள் அறியாத ஒன்றாகையால், என் பரிதாப நிலையை உலகோர் அறிய மாட்டார்கள். எம்மைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய சிவபுரத்து அரசர்பெருமானார் நீவீரே அருளவில்லையானால், இனி இக்கடல் சூழ்ந்த உலகில் வாழ்தல் எம்மால் இயலாது என்பதை அறிந்து கொள்ளும்; ஆகையினால், எம்மை உன் திருவடிக் கண் வருக என்று அருள் புரிய வேண்டும் என்று உருகி வேண்டுகிறார் மணிவாசகனார்.

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய்

சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால்

வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே. (திருவாசகம்:வாழாப்பத்து-1)

நீ என்னை ஆட்கொண்டதால் நான் உன் உடைமை; எனது நன்மை தீமைகள் அனைத்தும் உனது; அவை குறித்து நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை; உன் திருவடியைத் தவிர எனக்கு வேறு பற்றுக்கள் இல்லை; நீ அருளாமல் என்னைப் புறக்கணித்தால், உன்னைக் குறை கூறுவதையும் நான் உன்னிடம் மட்டுமே கூற இயலும் என்கிறார் மணிவாசகர்.

மணிவாசகர் ‘ஆண்ட நீ அருளிலையானால், ஆரொடு நோகேன்! ஆர்க்கெடுத்து உரைக்கேன்!’ என்று அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தொழுவனோ! பிறரைத் துதிப்பனோ!

வாழாப்பத்துப் பதிகத்தின் இறுதிப் பாட்டில், “குற்றமற்ற தொன்மையான புகழையுடைய உமையம்மையின் பங்கனே! இளங்காளையை ஊர்தியாகவுடையவனே! செழுமையாகிய பிறையை அணிந்தவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையுறை சிவனே! உன்னையன்றி வேறு ஒரு பற்றுக்கோடும் எனக்கு இல்லை; நீ என்னை ஆண்டுகொண்டதால் என் உடல், மொழி, மனம் மூன்றும் உன் உடைமை; ஆகையால், பிறரைத் தலையால் வணங்குவதும், வாயால் வாழ்த்துவதும், எனக்குத் துணை என்று மனத்தால் நினைப்பதும் என்னால் இயலுமா என்று நீயே சொல்வாயாக! இவ்வுலகத்தில் நான் வாழ மாட்டேன்! ஆகவே, வருக என்று நீ உடனே அருள் புரிய வேண்டும்”, என்று, தம்மை உலக வாழ்வில் நீடிக்கச் செய்தல் வேண்டாம் என்னும் விண்ணப்பத்தை வெளிப்படுத்துகிறார் மணிவாசகர்.

பழுதில்தொல் புகழாள் பங்க நீயல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்

செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே! திருப்பெருந்துறையுறை சிவனே!

தொழுவனோ! பிறரைத் துதிப்பனோ! எனக்கோர் துணையென நினைவனோ! சொல்லாய்!

மழவிடையானே! வாழ்கிலேன் கண்டாய்! வருக என்றருள் புரியாயே. – (திருவாசகம்:வாழாப்பத்து-10)

‘மற்று நான் பற்றிலேன் கண்டாய்’ என்னும் திருவாசக அடியின் தாக்கமாக, தமிழறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தாமெழுதிய ஒரு நூலுக்கு, ‘மற்றுப் பற்றில்லாத மக்கள் பற்றாளர் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு சமர்ப்பணம்’ என்று குறித்துள்ளார். ‘கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்; கல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம்’ என்று கவியரசர் கண்ணதானின் காதல் கவிதையிலும் திருவாசகம் ஊடுருவி நிற்கின்றது. தமிழ்ப் படைப்பாளிகளின், தமிழ் மக்களின் உணர்வோடு கலந்து உருக்கும் தன்மை கொண்டது திருவாசக மொழி.

இவ்வுலகில் தாம் வாழ இயலாமைக்கு மேலும் ஐந்து முக்கியக் காரணங்களைக் கூறும் மணிவாசகரின் திருவாசகங்கள் இலக்கியச் சுவையும், பக்திச் சுவையும் கலந்து தேனாய்த் தித்திப்பன; சாமானியரான நம்மை ஆட்கொள்ளும் தன்மையுடையன; அத்திருவாசகத் தேனைத் தொடர்ந்து சுவைக்கலாம்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-16-சிவபுரத்து-அரசே-திருப்பெருந்துறை-உறை-சிவனே/article9529149.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வான்கலந்த மாணிக்கவாசகம் 17: ஊடுவது உன்னோடும் உவப்பதும் உன்னை

 

 
sivan

இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்த பெருமைக்குரிய திருமால் பாடிப்புகழும் சிவபெருமானின் திருவடிகளைத் தவிர எனக்கு வேறு பற்று ஒன்றும் இல்லை என்று தம் பற்று-இன்மை எதைக் குறித்தது என்று மிகத்தெளிவாக இப்பாடலில் குறிப்பிடுகிறார் மணிவாசகர்.

தேடிவந்து ஆட்கொண்ட சிவபெருமான்

அது மட்டுமல்ல; இன்னும் ஒரு முக்கியமான செய்தியை மிக அழுத்தமாக இறைவனிடம் கூறி நியாயம் கேட்கிறார்: ‘சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! பாண்டிய நாட்டு முதலமைச்சர் என்னும் முறையில், படைகளுக்குக் குதிரைகள் வாங்குவதற்கே நான் திருப்பெருந்துறை வந்தேன்; உன்னைத் தேடி நான் வரவில்லை; மறைபயில் அந்தணன் வடிவில் குருவாகத் தோன்றி, நீதான் என்னைத் தேடிவந்து ஆண்டுகொண்டாய்!

இறைப்பேரின்பம் நீயாக எனக்குத் தந்த கொடையே தவிர, நான் கேட்டு வாங்கிய வரம் அன்று; ஆகவே, நான் பிணங்குவதும் உன்னோடுதான்; மகிழ்வதும் உன்னைத்தான்! என் உயிருக்கு உறுதியைத் தரும் உன் திருவடிப் பேற்றை மட்டுமே நான் விரும்புகிறேன் என்பதை உனக்கு நான் உணர்த்த விரும்புகிறேன்; உன் பிரிவினால் நான் வாடியிருக்கிறேன். இவ்வுலகத்தில் நான் வாழ மாட்டேன்! என்னை வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!” என்று உறுதிபடக் கூறுகின்றார் மணிவாசகர்.

பாடி மால் புகழும் பாதமே அல்லால், பற்றுநான் மற்றிலேன் கண்டாய்!

தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே! திருப்பெருந்துறையுறை சிவனே!

ஊடுவது உன்னோடு! உவப்பதும் உன்னை! உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி!

வாடினேன் இங்கு! வாழ்கிலேன் கண்டாய்! வருக என்று அருள் புரியாயே!

– (திருவாசகம்:வாழாப்பத்து-3)

மணிவாசகரின் மனஉறுதி

தலைவியிடம் வலியச் சென்று தன் காதலைத் தெரிவித்த தலைவன் பிரிந்து சென்றால் தலைவி ஊடல் கொள்கிறாள். உரிமை உள்ள தலைவனிடம்தானே ஊடல் கொள்ள முடியும்? ஏனென்றால், ஊடலின் காரணங்களை அறிந்து போக்க வேண்டியவன் இங்கு தன்னைத் தேடி வந்து ஆண்ட தலைவனாகிய இறைவனே ஆவான்; இதையே ‘ஊடுவது உன்னோடு’ என்றார். தன்னை உடையவனாகக் கொண்ட அத்தகைய உரிமையாளனைக் கண்ட பொழுதுதான் மகிழ்ச்சியும் தோன்றும்.

ஆகையால், ‘உவப்பதும் உன்னை’ என்றார். உடல் நலத்தைக் காட்டிலும், உயிர் நலத்தை இறைவனிடம் வலியுறுத்தவே ‘உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி’ என்றார் மணிவாசகர். வாடிய பயிருக்கு நீர் ஊற்றி, வாட்டம்தீர்த்து வளர்ப்பதுபோலத் தனக்கு அருள்புரிய வேண்டும் என்று குறிக்கவே, ‘வாடினேன்; இங்கு வாழ்கிலேன், வருக என்றருள் புரியாய்’ என்றார்.

மணிவாசகரும் பாரதியும்

இத்திருவாசகப் பாடல் தரும் நெகிழ்வை, பாரதியின் ‘கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்’ என்ற பாடல் கொண்டுள்ளது. இறைவனிடம் நேரடியாக வழக்குரைக்கும் மணிவாசகரைப் போல் அல்லாது, தோழிமூலம் தன் தலைவன்(இறைவன்) கண்ணனுக்குத் தூது அனுப்புகிறாள் தலைவி. இப்பாட்டில் தம்மை ஆட்கொண்ட கண்ணனிடம் தம் எண்ண ஓட்டத்தை மட்டும் சற்று கூறிவிட்டு வந்துவிடு; பிறகு, ஏதாவது செய்துகொள்ளலாம் என்று தோழியிடம் கெஞ்சுகிறாள் தலைவி.

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்

கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் ..

எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்

- பின்னர்

ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!

- மகாகவி பாரதியார்

பாரதியிடம் காணும் மணிவாசகரின் உறுதி

தோழி தூது செல்ல சம்மதித்ததும், தலைவியின் வார்த்தைகளில் தன்னைப் பிரிந்த தலைவனிடம் கொண்ட கடும்கோபம் பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது. உடனடியாகக் கண்ணன் என்னை அடைய வரவில்லை என்றால், அனைவரும் கண்ணனைத் தூற்றும் வகையில், ஆற்றங்கரையில் முன்னம் ஒருநாள் எம்மைத் தனியாக அழைத்துப் பேசிய ஆசைமொழிகளை எல்லாம் ஊரெங்கும் முரசு கொட்டி அறிவித்துவிடுவேன் என்று கண்டிப்பாகக் கூறிவிடு என்று பொங்கி எழுகிறாள் தலைவி.

ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை

அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்

தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று

சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!

- மகாகவி பாரதியார்

கண்ணனைப் பற்றிக் கடவுளிடம் பாரதி முறையீடு

பின்பு, கோபம் சற்றே தணிந்த தலைவி, “எப்பொழுதும் அந்தப் பாவி கண்ணனையே நினைந்து, நினைந்து என் உள்ளம் மறுகி மறுகி உருகுகின்றது. அதனால், அவன் எப்பொழுது என்னை

வந்து சேர்வான் என்பதை இறுதியாக ஒரு முறை கேட்டுச் சொல் தோழி! அவன் வரவில்லை என்றால், பின், நான் முறையிட, தெய்வம் இருக்குதடி! பார்த்துக்கொள்ளலாம்” என்கிறாள் தலைவி தோழியிடம்.

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்

நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்

தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்

பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!

- மகாகவி பாரதியார்

கடவுளைப் பற்றிய முறையீடு

கண்ணனைப் பற்றிக் கடவுளிடம் மேல்முறையீடு செய்யும் உரிமை தந்த பலத்தில் வீரம் உரைக்கிறாள் பாரதி பாடலின் தலைவி. இங்கு மணிவாசகர் வழக்குரைப்பதோ மேல்முறையீட்டுக்கே வழியில்லாத முழுமுதற் கடவுளிடம்; எனவேதான், ‘ஊடுவதும் உன்னோடு, உவப்பதும் உன்னை’ என்று சிவபெருமானிடமே தன் வழக்கைப் பதிவு செய்கிறார் மணிவாசகர்.

மணிவாசகரும் கம்பனும்

“இங்கு, உன்னைப் பிரிந்து வாழும் பிரிவைக் காட்டிலும் என்னைச் சுடுமோ கொடுங்காட்டில் வாழும் வாழ்க்கை?” (ஈண்டு, நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள். – கம்பராமாயணம்:1917) என்று ராமபிரானிடம் வழக்குரைக்கிறாள் கம்பனின் சீதை. கம்பனின் இந்தக் கவிதைக்கு உரமாக இருந்தது “என் தலைவனே! பெருங்காட்டில் வாழ்வது எனக்குக் கடினமாக இருக்குமென்று நீ சொன்னால், உன்னைப் பிரிந்து தனியாக வாழும் வீட்டுவாழ்க்கை எனக்கு இனிமையாக இருக்குமோ?” என்னும் குறுந்தொகைப் பாடல்.

பெருங்காடு இன்னாஎன்றீராயின்,

இனியவோ பெரும

தமியேற்கு மனையே’

- குறுந்தொகை:124

திருவாசகத் தேனைச் சுவைக்கும்போது, தமிழ்ச் சோலையில் பூத்த அதற்கு இணையான படைப்புகளையும் ஒப்பு நோக்கினால், சுவையும், இனிமையும் மென்மேலும் பெருகுகின்றன. வாழாப்பத்தில் இன்னும் சில மணிவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-17-ஊடுவது-உன்னோடும்-உவப்பதும்-உன்னை/article9544951.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வான்கலந்த மாணிக்கவாசகம் 18: பொன்னே திகழும் திருமேனி எந்தாய்

 

 
sivan

சிவபெருமானைத் ‘தலைவா’ என்றழைத்தார் மணிவாசகர். வருங்காலத்தில் யாரும் யாரையும் ‘தலைவா’ என்றழைக்கும் அவலங்கள் நடக்கும் என்பதை மணிவாசகர் உணர்ந்திருந்தாரோ என்னவோ? இறைவனை வெறுமனே தலைவா என்று அழைக்காமல், “தன்மை பிறரால் அறியாத தலைவா!” என்னும் அடைமொழியுடன் ஒரு அற்புதமான திருவாசகம் அருளினார். இத்திருவாசகத்தில் உலகத் தலைவர்களுக்கும், இறைவனாகிய தலைவனுக்குமான வேறுபாடுகளை வெகுஅழகாக விளக்கியுள்ளார்.

உலகத் தலைவரின் தன்மை

உலகத் தலைவரின் தன்மை முழுவதும் அவர் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வெளிப்படையாகத் தெரியும். விரும்பி உண்ணும் உணவு, விருப்பமான உடை, நிறங்கள், எந்த நேரம் எங்கே இருப்பார், யார் பரிந்துரை செய்தால் அவரிடம் காரியம் சாதிக்க முடியும் போன்ற அத்தலைவரின் குணம், செயல்கள் அனைத்தும் அவரின் கடைநிலைத் தொண்டனுக்கும் தெரியும். ஆனால் அத்தலைவருக்கோ, தன்னுடைய மக்கள், தொண்டர்களைப் பற்றியும், அவர்தம் குணம், செயல்கள் பற்றியும் எதுவும் தெரியாது.

இறைவனாம் தலைவனின் தன்மை

இறைவனின் தொண்டர்களுக்கோ, தம் தலைவன் எப்படி இருப்பான்; எப்போது தோன்றுவான்; எங்ஙனம் அருள்வான்; எங்கு இருக்கிறான் போன்ற தன்மைகள், சிறப்பு விவரங்கள் எதுவும் தெரியாது. ஆனால், இறைவனாகிய தலைவனோ, தன் தொண்டர்கள், மக்கள் அனைவரின் குணங்கள், செயல்கள் உள்ளிட்ட அனைத்துத் தன்மைகளையும், விவரங்களையும் நன்றாக முழுவதும் அறிவான்; ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதற்கேற்ப ஒவ்வொரு உயிரின் உள்நின்று உணர்பவன் இறைவன். இந்த நுட்பத்தையே ‘தன்மை பிறரால் அறியாத தலைவா’ என்று இறைவனுக்குச் சிறப்பு இலக்கணமாகக் குறிப்பிட்டார் மணிவாசகர்.

ஆட்கொண்டபின் புறமே போகவிடுவாயோ?

தம்மை ஆட்கொண்ட தலைவனாம் இறைவனுக்கு ஏற்ற அடியவருக்கு வேண்டிய பண்புகள் தம்மிடம் சிறிதும் இல்லை என்று வருந்தினார் மணிவாசகர்; பிறப்பினால் இழிந்த நாய், நன்றி என்னும் குணத்தால் உயர்ந்தது. தம்மை ஆட்கொண்ட இறைவனுக்கு நன்றியுடையவனாக இருக்கும் பண்புகூட இல்லாத (புன்மை) சிறுமையுடையவன் என்று உணர்த்தவே “பொல்லா நாயான புன்மையேனை” என்ற சொற்களால் குறிப்பிட்டார்.

“எனக்குத் தகுதி இல்லை என்பதால் ஆட்கொள்ளாமல் விட்டிருந்தால் ஒரு கேள்வியும் இல்லை! தகுதி இல்லாவிட்டாலும், உன்னுடைய பேரருள் காரணமாக என்னை ஆட்கொண்ட பெருமை உடையவன் நீ! அந்தப் பெருமைக்கு இழுக்கு வராமல் என்னைப் புறம் போக விட மாட்டாய்” என்பதைக் குறிப்பால் சொல்லவே “ஐயா! ஆண்டு, புறமே போக விடுவாயோ?” என்றார். “அவ்வாறு நீ என்னைக் கைவிடுவாயானால்,எனக்கு வேறு கதி இல்லை! பொன்மயமான திருமேனியை உடைய என் தந்தையே! எங்கே நான் அடைக்கலம் புகுவேன்?”, என்று இறைவனிடம் உருகி முறையிடுகின்றார் பெருமான். இறைவனை உருக்கிய இத்திருவாசகத் தேன் நம் கண்களைக் குளமாக்குகின்றது.

தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாயான

புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ?

என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்! எம்பெருமான்!

பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே!

– திருவாசகம்:திருச்சதகம்:59.

தலைவனாகும் தகுதி

பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் தனக்கு நேர்ந்த துன்பங்களாக எண்ணி, அவ்வுயிர்களைக் காப்பாற்றா விட்டால் ஒருவன் தான் பெற்றுள்ள அறிவினால் ஆகக்கூடிய பயன் ஒன்றுமில்லை என்பது வள்ளுவம். நான், எனது என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து, பாதிக்கப்பட்டோர் யாருக்காகவும், அந்தப் பாதிப்பு தனக்கே ஏற்பட்டதென்று வருந்தி அழுகின்றவனே மனிதன்; அவனே தலைவனாவதற்கும் தகுதியானவன் என்று கவியரசு கண்ணதாசனின் ஒரு கவிதை அழகாக வரையறுக்கின்றது:

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ...

யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்!

வையத்துள் சகமனிதர்களுக்காகத் தொண்டுசெய்து வாழ்வாங்கு வாழ்ந்தவனே வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறான் என்பது வள்ளுவர் கருத்து.

பொய்த் தெய்வங்கள்

தகுதியற்றவர்களைத் தெய்வமாகவும், தலைவராகவும் ஏற்றுக்கொள்ளும் அறியாமைப் போக்கைக் கண்டு மனம் பதைத்து நொந்த மணிவாசகர், வண்டினத்தின் அரசனான அரச வண்டைத் தன் தலைவனிடம் தூது விடுகின்றார்: “அரச வண்டே! ‘அந்தத் தேவர்களுக்கெல்லாம் தேவரான அவரே கடவுள்’ என்று கடவுள் அல்லாத பொய்யர்களை எல்லாம் கடவுள் என்று புலம்புகின்ற மக்கள் நிறைந்தது இவ்வுலகம்; உலகப் பற்று சிறிதுமின்றி, என்னுடைய பற்றுகள் அனைத்தும் நீங்கும்படிக்கு, நான் உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கிற உண்மையே வடிவான தேவர்பிரானிடம் போய் என் நிலையைச் சொல்வாய்” என்றார்.

அத்தேவர் தேவர் அவர்தேவர் - என்று இங்ஙன்

பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே

பத்தேதும் இல்லாது என் பற்றுஅற நான் பற்றி நின்ற

மெய்த்தேவர் தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ.

( திருவாசகம்: திருக்கோத்தும்பீ)

(கோத்தும்பீ - அரச வண்டே! பத்தேதும் இல்லாது - உலகப்பற்று சிறிதுமின்றி)

இறைவன் அல்லாத ஒருவரைக் கடவுள் என்பதும், நிரந்தரத் தலைவர் என்பதும், காரியம் சாதித்துக் கொள்வதற்காகக் கூறப்படும் பொய் உபசாரமே என்று சொல்லவே, ‘பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே’ என்றார்.

உலகப் பற்றை விடுவதற்கு இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை, ‘பத்தேதும் இல்லாது என் பற்றுஅற நான் பற்றி நின்ற மெய்த்தேவர்’ என்றார். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்பது வள்ளுவர் வாக்கு.

மனிதன் தெய்வமாதல்

உயிர்களின் அறியாமையைப் போக்கவே, அவற்றுக்கு உடல், உலகம் போன்றவைகளைப் படைத்து, அவைகளுடன் வாழ்கிறான் இறைவன்; உயிர்கள் தம்மை உணர்ந்து, தம் தலைவனாகிய இறைவனை அழைக்கும்போது வெளிவந்து ஆட்கொண்டு அருள்கிறான். வேண்டுதல், வேண்டாமை இன்றி, அனைவருக்கும் அருளும் இறைவனே உண்மையில் உயிர்களின் தலைவனாவான். “தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா” என்ற கவியரசு கண்ணதாசனின் வாக்குப்படி, இறையனுபவத்தைத் தாமும் அறிந்து, உலகுக்கும் சொன்ன மணிவாசகர் நம் தலைவராவார்.

வாழாப்பத்தில் இன்னும் சில மணிவாசகங்களை அடுத்த வாரம் மீண்டும் சுவைப்போம்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-18-பொன்னே-திகழும்-திருமேனி-எந்தாய்/article9555303.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 19: ஐம்புலன்களும் சிவமயம்

 

 
shivan

இவ்வுலகில் தம்மால் ஏன் வாழ இயலாது என்பதைத் தேர்ந்த வழக்கறிஞரின் தெளிவுடன் நீதியின் தலைவன் இறைவனிடம் விண்ணப்பிக்கின்றார் மணிவாசகர். ‘வாழ்கிலேன் கண்டாய்’ என்று இப்பதிகப் பாடல்கள் நெடுகிலும் வருவதால் ‘வாழாப்பத்து’ என்ற பெயருடன் இது விளங்குகிறது.

இறைவனைக் கட்டும் கயிறு

“வம்பனான என்னை ஆண்டுகொண்ட மாணிக்க மணிபோல் ஒளிவீசும் இறைவனே! எனக்கு உன் திருவடியைத் தவிர வேறு பற்று ஒன்றும் இல்லை! தேவர்களும் அறிய முடியாதவனே! மூவுலகையும் ஊடுருவி செந்தீ உருவில் நின்ற சிவபெருமானே! சிவபுரத்து அரசே! என்னை ஆளும் எம்பெருமானே! உயிர்த் தொகுதிகளில் தலைசிறந்தவர் காக்கும் கடவுள் திருமால்; அடுத்தவர் படைக்கும் தேவன் நான்முகன்; இவர்களே ‘தான்’ என்னும் அகந்தையால் பாதிக்கப்பட்டனர்; ‘அன்பு’ என்னும் உணர்வு இறந்து, உனது அடி முடி காண முடியாமல் தவித்தனர்; எத்தகுதியுமற்ற வம்பனான என்னால் இவ்வுலகில் வாழ்ந்து எப்படி உன்னை அடைய இயலும்? எனவே, என்னை வா என்று கூவி அழைத்துக்கொண்டு அருள்வாயாக!” என்று உள்ளமுருகி வேண்டுகின்றார் மணிவாசகர்.

வம்பனேன் தன்னை ஆண்ட மாமணியே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்!

உம்பரும் அறியா ஒருவனே! இருவர்க்கு உணர்வு இறந்து, உலகம் ஊடுருவும்

செம் பெருமானே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!

எம்பெருமானே! என்னை ஆள்வானே! என்னை, நீ கூவிக்கொண்டருளே!

(திருவாசகம்:வாழாப்பத்து-2)

சிற்றறிவைக் கடந்து நிற்கும் வாலறிவனாம் இறைவனை ‘அன்பு’ என்னும் உணர்வுக் கயிற்றால் மட்டுமே கட்ட முடியும். ஆனால், எளியனான தமக்கு அத்தகைய ‘அன்பு’ வயப்படுமோ என்று அஞ்சினார் மணிவாசகர்.

ஒழுக்கமில்லாத புலன்கள்

“இனிய பண்ணிசைமொழி பேசும் உமையம்மையின் பங்கனே! உன்னைத் தவிர வேறுபற்று இல்லாதவன் நான்! என்னை உண்மையாகவே நனவில் ஆட்கொண்டருளியவனே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! உன் அருளால் என்னை ஆட்கொண்டு திருவடிப் பேறு நல்கிய நீ, இவ்வுலகில் யாருடன் வாழச் சொல்கிறாய் என்பதைச் சற்றே எண்ணிப் பார்! உன் திருவடி காண, ‘எண்ணம், உடல், வாய், மூக்கு, செவி, கண்’ ஆகிய பொறி புலன்கள் எப்போதாவது எனக்கு உதவியதுண்டா? என்னைத் தீயவழியில் கொண்டுபோவதையே தொழிலாகக் கொண்ட இவைகளை, நினது திருவடிச் சிந்தனையில் ஈடுபடுத்தி, என்னால் மண்ணுலகில் வாழவே முடியாதைய்யா! எப்படியாவது என்னை வருக என்று அழைத்துக்கொண்டு அருள் செய்வாயாக!” என்று கல் மனமும் கரையுமாறு உருகி வேண்டி நின்றார் பெருமான்.

பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்!

திண்ணமே ஆண்டாய்! சிவபுரத்தரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!

எண்ணமே, உடல்,வாய், மூக்கொடு, செவி, கண், என்று இவை நின் கணே வைத்து

மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்! வருக! என்று அருள் புரியாயே!

(திருவாசகம்:வாழாப்பத்து-5)

இறைவனை அடைவதற்கு உடல், அகப்புறக் கருவிகள் தடையாக உள்ளன என்பதைத் திருச்சதகம் 79-ம் திருவாசகத்தில் பெருமான் அற்புதமாக விளக்குகின்றார். “ஐயனே! உலகியலிலேயே செல்கின்ற சிந்தை, செயல், கேள்வி, சொல் ஆகியவற்றுடன் எப்போதும் கூட்டணி கொண்டவை சிறப்பில்லாத ஐம்பொறிகள்; இவைகளால், முற்காலத்தில், உன்னை அடைந்திடாத மூடனாகிய நான், தீயில் வெந்து இறந்தேனில்லை; என் மனம் நாணி, நெஞ்சு வெடிக்கவில்லை; எம் தந்தையாகிய உன்னை அடைய விரும்பி, இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்” என்று பரிதவிப்புடன் தன்னையே நொந்துகொள்கிறார் பெருமான்.

சிந்தை, செய்கை, கேள்வி, வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால்,

முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்!

வெந்து, ஐயா! விழுந்திலேன்! என் உள்ளம் வெள்கி விண்டிலேன்!

எந்தை ஆய நின்னை, இன்னம் எய்தல் உற்று இருப்பனே!

(திருவாசகம்:திருச்சதகம்- 83)

ஐம்புலன்களும், சிந்தை முதலிய கருவிகளும் இவ்வுலகத்தில் உள்ள பொருள்களைப் பற்றிக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து அறிவதற்கே உதவுகின்றன; அவை இறைவனை அடைவதற்குத் துணையாக இல்லாமல், தடையாகவே உள்ளன; எனவே, ‘அவற்றால் நின்னை எய்திடாத மூர்க்கனேன்' என்றார். இறைவனை அடையாமல் வாழ்ந்து பயனில்லை என்பதை, ‘வெந்து விழுந்திலேன்' என்றும், 'உள்ளம் விண்டிலேன்' என்றார். இறைவன் மணிவாசகரை ஆட்கொண்டமையால், இறைவனை எப்படியாவது மீண்டும் அடைந்தே தீரவேண்டும் என்ற உறுதியுடன் வாழ்வதை, ‘நின்னை இன்னம் எய்தலுற்றிருப்பனே' என்றும் கூறினார்.

கடமை தவறிய மனம்

ஆண்டு கொள்வதற்கு முந்தைய காலங்களில், சிந்தை முதலிய கருவிகளால் இறைவனைப் பற்றும் அறிவு தமக்கு இல்லை என்பதை ‘எய்திடாத மூர்க்கனேன்’ என்றார். மனமே எல்லாக் கருவி-கரணங்களுக்கும் மூலம்; தன்னுடன், ஐம்பொறிகள்-ஐம்புலன்கள் உள்ளிட்ட மற்ற கருவிகளையும் இறைவழியில் செலுத்தும் கடமை மனதுக்கு உண்டு; தீய உலகியலில் தானும் சென்று, மற்றைய கருவிகளையும் தீய வழியில் செலுத்தியமைக்காகக் கடமை தவறிய மனம் வெட்கப்பட்டு, உடைந்து அழிய வேண்டும். அவ்வாறு தம் மனம் நாணமுற்று அழியவில்லையே என்று வெதும்பும் மணிவாசகர் ‘என் உள்ளம் வெள்கி விண்டிலேன்’ என்று வருந்துகிறார்.

உடலின் கடமையாகிய இறைவனைத் தொழுதல், வணங்குதல் போன்றவைகளைச் செய்யாமைக்காக உடலை நெருப்பில் வீழ்த்தாது வீணாக இருக்கிறேன் என்பதை, ‘வெந்து, ஐயா, விழுந்திலேன்’ என்றார் பெருமான். மனம் உடைந்து அழிவதும், உடல் வெந்து அழிவதும் கடமை தவறியமைக்காகச் செய்யும் கழுவாய் (பிராயச்சித்தம்) ஆகும்.

ஒரு குழந்தை, தன் தந்தையை அடைவதற்கு இவ்வளவு துன்பம் அடைதல் தகுமா என்பதைக் குறிக்கவே ‘எந்தையான நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே’ என்றார்.

சிவார்ப்பணம் என்பது

ஐம்புலன்களையும் சிவமயமாகக் கண்டார் வரகுணத்தேவர் என்னும் சிவனடியார். உதிர்ந்து கிடந்த வேப்பங்கனிகளைச் சிவலிங்க வடிவங்களாகக் கண்டார். குளத்தில் உள்ள தவளைகளின் ஒலியை சிவபெருமானைப் போற்றிப் பாடும் துதிப்பாடல்களாகக் கேட்டார். உள்ளம் நெகிழ்ந்து, உதிர்ந்த அவ்வேப்பங் கனிகளுக்கு எல்லாம் விதானம் அமைத்தார். தவளைகளின் ஒலி வந்த அக்குளத்துக்குக் காசும், பொன்னும், மலரும் தூவி வழிபட்டார். இந்நிகழ்வைப் பட்டினத்தடிகள் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் காணலாம்.

ஏழை ஒருவன் பசித்திருந்தால், சிவபெருமானே பசித்திருந்ததாக எண்ணித் தொண்டு செய்யும் மனமே சிவார்ப்பணம் ஆகும். ஒரு சிவஞானி, உலகில் நுகரும் ஐம்புல இன்பங்களையும் சிவார்ப்பணம் செய்தல் வேண்டும். இவ்வாறு, உலகியல் தொடர்பான ஐம்புலன்களையும் இறைவனுக்குச் சமர்ப்பித்துவிட்டு, சிவமயமாக அப்புலன்களை மாற்றிக் கொள்ளுவதே ஐம்புலன்களால் இறைவனை அடைதலாகும் என்பதைச் சொல்வதே இத்திருவாசகங்கள்.

நம் ஊனை உருக்கி, இறையொளி தந்த திருவாசகத்தேன் சுளைகளைச் சுவைத்தோம். இன்னும் சில மணிவாசகங்களை அடுத்த வாரம் மீண்டும் சுவைப்போம்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-19-ஐம்புலன்களும்-சிவமயம்/article9575759.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 20: நமக்குள்ளே ஆடும் இறைவன்

sivan

இறைச்சிந்தனை என்பது நடமாடும் கோயில்களான சக உயிர்களுக்குச் செய்யும் தொண்டு. துளியும் இறைச்சிந்தனையின்றி, ‘நான், எனது’ என்று பெரும்பகுதி வாழ்நாளைக் கழித்துவிட்டோர் பலர்; இவர்களுக்கும் இறையருள்(முத்தி) கிடைக்கும் என்ற நம்பிக்கை தருவது ‘அதிசயப்பத்து’ என்னும் இப்பதிகம்.

வழிகாட்டும் துருவநட்சத்திரம்

‘வாழ்கிலேன் கண்டாய்’ என்று இறைவனைப் பிரிந்த துயரம் பொறுக்க இயலாமல் மணிவாசகர் தன்னை மறந்து அழுது, உருகிப் பாடிய திருவாசகங்கள் நம் உள்ளத்தை உருக்குவனவாக உள்ளன. தம் கண்ணசைவில் எதனையும் ஏவல் கொள்ளும் முதலமைச்சராக, சகல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தவர் மணிவாசகர்; ஒருவேளை, ஏழ்மையில் வாழும் கடினமான துறவு வாழ்வு பொறுக்க முடியாமல் ‘வாழ்கிலேன்’ என்று இறைவனிடம் முறையிட்டாரோ என்ற கேள்வி எழுவதும் இயல்புதானே! இக்கேள்விக்கான மணிவாசகரின் பதில், துருவ நட்சத்திரமாக நமக்கு வழிகாட்டுகின்றது.

ஏழ்மை எதனால்?

பொருட்செல்வம் இல்லாதவன் இவ்வுலகில் மட்டுமே ஏழை. இறைவனின் திருநாமமாகிய ஐந்தெழுத்தை எண்ணாமல் வாழ்ந்துவிட்டதால், பேரின்ப அருட்செல்வத்தை இழந்து, தாம் ஏழ்மை அடைந்ததாக வருந்துகிறார் மணிவாசகப் பெருமான். “எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்! என் ஏழைமை அதனாலே!” என்பதே அற்புதமான அத்திருவாசக வரிகள்.

“இறைவன் திருவடியைப் புகழும் செல்வமே உண்மையான செல்வம்” என்னும் பொருள்தரும் “செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே” என்று திருஞானசம்பந்தர் அருளிய தமிழ்மறை இதை உறுதி செய்கின்றது. நிலைத்த அருட்செல்வத்தைப் பெற, சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருநாமத்தையும், திருவடியையும் எப்போதும் வணங்கும் எண்ணம் நமக்கு ஏற்படவேண்டும்.

தினமும் ஐந்துமுறை இறைவனைத் தொழவேண்டும் என்னும் இசுலாமியச் சிந்தனையும், வாரத்தில் ‘ஞாயிறு’ என்னும் ஒரு நாளையாவது இறைச்சிந்தனைக்காகவே வைக்கவேண்டும் என்னும் கிறித்துவச் சிந்தனையும் எவ்வளவு அற்புதமான வழிகாட்டல்கள்! இறைச்சிந்தனையாம் மல்லிகை எத்தோட்டத்தில் மலர்ந்தாலும் தரும் மணம் ஒன்றல்லவா!

இறைவனின் திருவருள் பெற, பயன் கருதாத இறைத்தொண்டாம் நல்வினைகள் செய்திருக்கவேண்டும்; அதற்கு வழிகாட்டும் அருட்கலைகளை அறிந்த ஞானிகளோடும் தாம் சேரவில்லை; அத்தகைய பேறு தமக்கு இல்லை; மண்ணுலகிலே பிறந்து, தொண்டு செய்யாமல் வெற்று வாழ்க்கை வாழ்ந்து, இறந்து மண்ணோடு மண்ணாய்ப் போவதற்கே தமக்குத் தகுதி உள்ளது; இருந்தும், சிறப்பு மிக்க அண்ணல் இறைவன், தகுதியற்ற தம்மையும் ஆண்டுகொண்டு, இறையடியவர்களுடன் சேர்த்துக்கொண்ட அதிசயத்தை விளக்க, ‘அதிசயம் கண்டாமே’ என்று உருகுகிறார் பெருமான் மணிவாசகர்.

எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்! என் ஏழைமை அதனாலே!

நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு, நல் வினை நயவாதே!

மண்ணிலே பிறந்து, இறந்து, மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை!

அண்ணல், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

(திருவாசகம்:அதிசயப்பத்து-6)

இதுவரை வீணான வாழ்நாளை எண்ணி வருந்தாமல், எஞ்சியுள்ள வாழ்நாளில் இறையருளைப் பெற இயலும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையைத் தரும் நமக்கான திருவாசகம் இது.

இறைத்தமிழ் திருவாசகம்

எதிர்பாராததும், நினைப்புக்கு அப்பாற்பட்டு நடப்பதையுமே அதிசயம் என்போம். வாதவூரார் முதலமைச்சர் பதவியைத் துறந்து மணிவாசகரானது அதிசயம்; மணிவாசகருக்காக, நரிகளைப் பரிகளாக்கியதும், இறைவனே கொற்றாளாக வந்து, பிட்டுக்கு மண் சுமந்ததும் பெரும் அதிசயமாகும். இதுவரை நாம் அனுபவித்த இயல், இசை, நாடகம் என்னும் முப்பரிமாண முத்தமிழ், என்புருக்கித் தேனூறும் திருவாசக இன்பத்தமிழாக அமைந்து ‘இறைத்தமிழ்’ என்னும் நான்காம் பரிமாணத்தைப் பெற்றதும் அதிசயம் தானே!

இறைவனே எழுத்தனானான்

திருவாசகத்தின் இறைத்தமிழில் மயங்கி, இறைவனே தன் கையால் திருவாசகத்தைப் படியெடுத்து வைத்துக்கொண்டான்; எதற்காக? ‘இறைவனின் பேரூழிக்காலத் தனிமைக்குத் துணையாக’ என்பார் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார்.

கடையூழி வரும் தனிமை கழிக்க அன்றோ அம்பலத்தின்

உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே! – தமிழ்த்தாய் வாழ்த்து.

இறைவனை ‘நீதியே’ என்றழைத்தார் மணிவாசகர்; “வேண்டுதல்-வேண்டாமை இல்லாது, அனைத்து உயிர்களையும் மக்களாகப் பாவித்து, சமமாகக் கருதுதல் நீதி! அவரவருக்கு உரியன கிடைக்குமாறு செய்தல் நீதி! எடுப்பதும் கொடுப்பதும் அதிகமில்லாமலும் குறைவில்லாமலும் நடப்பது நீதி! இன்ப துன்பங்களில் பாதிக்கப்படாமல் ஒரு நிலையாய் நிற்பது நீதி! நீதியே உலகத்தின் இயங்கு முறைகளை உருவாக்குகின்றது. அரச நீதிகள் தவறினாலும், இயற்கையாய் அமைந்த நீதிகள் ஒருபோதும் தவறியதில்லை!” என்று நீதியை வரையறுப்பார் தவத்திரு.குன்றக்குடி அடிகளார்.

இறைநீதியும் மனிதநீதியும்

“ஆதிகால மனித வாழ்க்கையில் கூட்டு வாழ்க்கையும், கூட்டு உழைப்பும் இருந்தது; ஆக்கிரமிப்போ, சுரண்டல்களோ இல்லாத நீதி இருந்தது. ‘கடவுளுடன் பேரம் பேசும் பரிகார முறைகள்’ அறிவு வளர்ந்த மனிதர்களால் உருவாக்கப்பட்டது; அவை பாவச்செயல்களைப் பெருக்கின; ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்று இயற்கை நியதிகளையும், நீதியையும் மாற்றும் சட்டங்களை உருவாக்கினான் மனிதன்; அதையும் வளைத்து மாற்றத் தயங்குவதில்லை” என்பார் அடிகளார்.

இறைநீதியோ, வேண்டுதல் வேண்டாமை இன்றி, அனைவருக்கும் பொதுவானது. அறிவின் தலைவன் நான்முகன்; செல்வத்தின் தலைவன் திருமால்; நீதியே வடிவான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் இவ்விருவரின் அறிவாலோ, செல்வத்தாலோ காணமுடியவில்லை. இதை “பங்கயத்து அயனும், மால் அறியா நீதியே” என அருட்பத்து ஒன்றாம் பாடலில் அருளினார் மணிவாசகர்.

முதலமைச்சராக அரசாணையை நிறைவேற்றும் கடமையில், நீதி சாராதவைகளும் அடக்கம். குதிரைகள் வரும் என்று அரசனுக்குச் செய்தி சொன்னதும் நீதிக்கு முரணானது. இவையெல்லாம் மணிவாசகரின் சிந்தனையைப் பாதித்த விடயங்கள்; எனவே, “நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்” என்றார்.

தாம் நீதியைச் சார்ந்து நடக்கும் இறையன்பர்களுடன் உறவு கொண்டிருந்தால், அவர்கள் தம்மை நீதி தவறாத தொண்டுநெறிக்கு வழிகாட்டியிருப்பார்கள்; அவ்வாறும் தாம் நடக்கவில்லை என்பதை “நினைப்பவரோடும் கூடேன்” என்றார். நீதி சாராத வாழ்க்கை, தீ வினைகளை ஈட்டி, பிறந்து இறந்து உழலும் நிலையையே தரும்; இதை “ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை” என்னும் திருவாசகவரி உணர்த்துகிறது.

தாயின் கருணை

அத்தகைய கீழ்நிலையை அடைந்துவிட்ட தம்மைக் காக்க தொடக்கம் முடிவு அற்ற (அநாதி) நிரந்தமாய் உள்ள இறைவன், ஆதியானான்; அம்மையப்பனாக வந்து ‘என் அடியான்' என்று அறிவித்து ஆட்கொண்டான்; தன் அடியவருடன் கூட்டி அதிசயம் நிகழ்வித்தான் என்றார் மணிவாசகர்.

நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்! நினைப்பவரொடும் கூடேன்!

ஏதமே பிறந்து, இறந்து, உழல்வேன் தனை, ‘என் அடியான்’ என்று

பாதி மாதொடும் கூடிய பரம்பரன்! நிரந்தரமாய் நின்ற

ஆதி! ஆண்டு, தன் அடியரில் கூட்டிய, அதிசயம் கண்டாமே!

(திருவாசகம்: அதிசயப்பத்து-2)

நீதி தவறி வாழ்ந்ததை மன்னிக்கும் கருணை அன்னைக்கே உரிய பண்பு; இதைக் குறிப்பிடவே, “பாதி மாதுடன் கூடிய பரம்பரன்” என்றார் பெருமான்.

சக மனிதனை நேசிப்பது; போற்றுவது; தொண்டு செய்வது; பிறர் பொருளைக் கவராமல் இருப்பது; பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புவது; இவையே நீதியான இறைவனை அடைய, முறையான வாழ்க்கை நெறிகள்; இவைகளைச் சிக்கெனக் கடைப்பிடித்து முழுவிடுதலை (முத்தி) என்னும் நிலைப்பேறு பெறுக! என்கிறது இத்திருவாசகம்.

நம்முள்ளே ஆடும் இறைவனின் ஆனந்தக் கூத்தைத் தரிசிக்கும் தேர்ந்த மணிவாசகங்களை அடுத்த வாரம் சுவைக்கலாம்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-20-நமக்குள்ளே-ஆடும்-இறைவன்/article9565276.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 21: நானோ இதற்கு நாயகமே

 

 
sivan

திருப்பெருந்துறையில் மணிவாசகரை ஆட்கொண்டார் இறைவன்; இறையின்பத்தில் திளைத்த மணிவாசகர் தம்மை மறந்தார்; பகல் இரவாவதும் மறந்தார்; தாம் பாண்டிய நாட்டின் முதலமைச்சர் என்பதையும் மறந்தார்; பாண்டிய மன்னனுக்காகக் குதிரைகள் வாங்கவே பொன் கொண்டுவந்ததையும் மறந்தார்; எத்தனைக் காலம் அப்படியிருந்தாரோ தெரியவில்லை; கொண்டுவந்த பொன்னும் காப்பாரில்லாமல் கரைந்தது; குதிரைகள் எப்போது வரும் என்ற பாண்டிய மன்னனின் ஓலையைக் கண்டதும் துணுக்குற்றார்; இறைவனிடம் சென்று முறையிட்டார்; இறைவன் ஆணைப்படி, “ஆவணி மூல நன்னாளில் குதிரைகள் வரும்” என்று பதில் ஓலை அனுப்பினார்.

குதிரைகளுடன் தான் பின்னே வருவதாகவும், முன்சென்று அரசனுக்குச் சொல்லும்படியும் இறைவன் மணிவாசகரைப் பணித்தான். மணிவாசகர் வந்து பல நாட்கள் ஆனபின்னும் குதிரைகள் வரவில்லை; கோபங்கொண்டு, மணிவாசகரைக் கொடுஞ்சிறையிலிட்டான் மன்னன். இறைவனின் கருணையை நினைத்து, திருவருள் துணை கொண்டு, துன்பங்களைப் பொறுத்தார் மணிவாசகர்.

நன்றும் பிழையும் நீயே செய்வாய்!

கடமை தவறாத முதலமைச்சரான மணிவாசகர், இறைவன் ஆட்கொண்ட பின் கடமை தவறியதற்கு இறைவனே பொறுப்பு! இதை இறைவனும் அறிவான்; இத்திருவிளையாடலை மணிவாசகரின் ஒரு அற்புதமான திருவாசகம் நமக்கு அறிவிக்கின்றது. “குன்றுபோல் என்றும் மாறாத தன்மை கொண்ட இறைவனே! ஆட்கொண்ட அன்றே என் ஆவியையும், உடலையும், உடைமை அனைத்தையும் நீ ஏற்றுக் கொண்டுவிட்டாயே! இன்று எனக்கென ஓர் இடையூறு எப்படி வரும்? எட்டுத் தோள்களும், முக்கண்களும் உடைய எம்மானே! நானே உன் உடைமை என்பதால் என் செயல் என்று எதுவுமில்லை; நன்றே செய்வாய்! பிழை செய்வாய்! அனைத்தும் சிவார்ப்பணம்! நானோ இச்செயல்களின் நாயகன்?” என்றார் மணிவாசகர் உறுதியுடன்.

அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ!

இன்றோர் இடையூறு எனக்குண்டோ! எண்தோள் முக்கண் எம்மானே!

நன்றே செய்வாய்! பிழைசெய்வாய்! நானோ இதற்கு நாயகமே!!

(திருவாசகம்: குழைத்தபத்து-7)

கொண்டுவந்த பொன்னுக்கு, குதிரைகள் வாங்க விடாமல் செய்த இத்திருவிளையாடல் மூலம் இறைவன் மனிதகுலத்துக்குச் சொல்லும் முக்கியச் செய்தி “இப்பூமியின் வளங்கள் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்காகத் தரப்பட்டவை; அவ்வளங்களைக் கொண்டு குதிரைகள் உள்ளிட்ட படைபலங்கள் பெருக்கி, பிறநாடுகளின் மீது படையெடுத்து அமைதியை அழிப்பதும், அவர்தம் பொருட்களைக் கவர்வதும் நீதியற்ற செயல்கள்” என்பதே!

பட்டினிச்சாவு கண்டும் சிந்தை கலங்காதோர்

பல நாடுகளில் சக மனிதர்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும்போது, ராணுவத் தளவாடங்களை வாங்க, உலகப் பொருளா தாரத்தின் பெரும்பகுதி செலவிடப்படுவது கொடுமை! அநீதி! மனித குல மேம்பாட்டுக்கான அறிவியல் தொழில்நுட்பத்தை ராணுவ ஆயுதங்களையும், போர் முறைகளையும் கூர்செய்யப் பயன்படுத்து கிறோம்; நாடு, தேசபக்தி என்ற பெயர்களால் மனித குலம் செய்யும் பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் இது. பிளவுபடாத இந்தியாவின் ஒருகுடும்பத்து மனிதர்கள், விடுதலை, மதம், தேசபக்தி என்ற பெயர்களில் ஒருவருக்கு ஒருவர் பகையாளியானார்கள். மனிதருக்குள் அன்பென்னும் பூப்பூத்தால், ஆயுதங்கள் வாங்கும் பணத்தில், பசிப்பிணி போக்கும் தொண்டாக மலர்ந்திருப்பார்கள்.

நீதிமறந்த மனிதகுலம்

அறிவு வளர்ந்ததாகப் பீற்றிக்கொள்ளும் மனித குலம் அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் என பூமிக்குச் செய்யும் பேரழிவைச் சொல்லி மாளாது; இனக்குழுக்களாக இயற்கையோடு வாழ்ந்த மனிதன், இப்புவியில் யானை முதல் எறும்பு வரையான அனைத்து உயிர்களின் வாழும் உரிமையையைக் காத்து வாழ்ந்தான். இறைவனின் திருவிளையாடல்கள், இயற்கை நீதியை மறந்த மனித குலத்தை நெறிப்படுத்தவே என்பதை உணர்வோம்.

தவறே செய்யாத மணிவாசகரை ஆட்கொண்டு, பொதுப்பணத்தைக் காக்கும் கடமையிலிருந்து தவறச் செய்தான் இறைவன்; இதற்கு அவனே பொறுப்பு என்பதால்தான் குதிரைகள் வரும் என்று ஓலை அனுப்புமாறு மணிவாசகரைப் பணித்தான் இறைவன்.

நீதிக்குத் தலைவணங்கிய இறைவன்

தான் ஆட்கொண்ட மணிவாசகரைப் பொதுப்பணத்தைக் கையாடிய குற்றத்துக்காக பாண்டியன் சிறையிலிட்டபோது, இறைவன் உடனே குதிரைகள் கொண்டுவந்து காப்பாற்ற வில்லை; அரச நீதியின்படி, தவறுக்கான தண்டனையை மணிவாசகர் அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டான். நரிகளை ஏன் குதிரைகளாக்கிக் கொண்டுவந்தான் இறைவன் என்பதைச் சிந்திப்போம்.

கடமையை நிறைவேற்றிய இறைவன்

மன்னன் பொதுப் பணத்தின் காவலன் மட்டுமே! பொதுப்பணம், மக்களுக்கான நலப்பணிகள் செய்யவே தவிர, மண்ணாசை கொண்டு போர் செய்ய அன்று. இதை உணர்த்தவே, நரிகளைக் குதிரைகளாக்கிக் கொடுத்தான். மணிக்கணக்காக வெகுவிரைவாகச் செல்லும் திறன் கொண்ட குதிரைகள் மனிதனுக்கு எளிதில் கட்டுப்படுகின்றன; ஆனால், தந்திர குணம் கொண்ட நரிகளை மனிதனால் பழக்கப்படுத்தவே முடியாது. எனவேதான் உண்மையான குதிரைகளுக்குப் பதிலாக நரிகளைக் குதிரைகளாக்கிக் கொடுத்தான் இறைவன். குதிரைகளை மன்னனிடம் ஒப்படைத்துக் கயிறு மாற்றியதுடன் குதிரைகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் முடிந்துவிட்டது; தான் ஆட்கொண்ட மணிவாசகரின் கடமையை இறைவன் நிறைவேற்றிவிட்டான்.

நீதி தவறிய மன்னன்

குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி ஓடியதும், மன்னன் சிந்தித்திருக்க வேண்டும்; பரிப்பாகனாக வந்தவன் இறைவனே என்பதை அறிந்திருக்க வேண்டும்; மண்ணாசையால் மக்களை அழிக்க முயலும் தன் தவறை உணர்ந்திருக்க வேண்டும்.

மாறாக, மணிவாசகரைக் கடும் வெயிலில் வைகை மணலில் நிற்கவைத்துக் கொடுமை செய்தான் மன்னன். உடனே பெருமழை பொழியவைத்து, வைகை ஆற்றில் பெருவெள்ளம் பொங்கச் செய்தான் இறைவன். வைகை ஆற்றின் கரை உடைந்து மதுரை வெள்ளக்காடாகியது; வீட்டுக்கொருவர் வந்து வைகைக்கரை உடைப்பைச் சரிசெய்ய ஆணையிட்டான் மன்னன்.

பிட்டுக்கு மண் சுமந்தான்

பிட்டு விற்கும் மூதாட்டி வந்தியின் கூலியாளாய் வந்த இறைவன், மண்சுமக்கும் வேலையை முடிக்காதது கண்ட பாண்டிய மன்னன் பிரம்பால் இறைவனின் முதுகில் ஓங்கி அடித்தான். இறைவனின் முதுகில் பட்டஅடி, மன்னன் உள்ளிட்ட வாழும் அனைவரின் முதுகிலும் அடிபட்டது; அனைத்து உயிர்களிலும் இறைவனே கலந்துள்ளான் என்பதையும், அனைத்து உயிர்களின் நலனுக்கும் ஆள்பவனே பொறுப்பு என்பதையும் உணர்த்தியது இத்திருவிளையாடல். பட்ட அடியால், மன்னன் உள்ளிட்ட அனைவரும் தம்முள்ளே ஆடும் இறைவனின் ஆனந்தக்கூத்தைத் தரிசித்தனர்!

புண் சுமந்த பொன்மேனி

“அம்மையை ஒரு பாகத்தில் சுமந்த எம்பெருமான் திருப்பெருந்துறையான், இனிய பண்ணிசை சுமந்த பாடல்களைப் பரிசாகப் படைத்து அருள்கின்றவன்; விண்ணளவு புகழ் கொண்ட விரிந்து பரந்த இப்பிரபஞ்ச மண்டலத்துக்கு ஈசன்; நெற்றிக்கண் உடைய கடவுள், மனிதர்களின் பாவங்களைப் போக்கக் கலிகால மதுரையின் மண்ணைத் தன் தோளில் சுமந்தான்; ஏழை மூதாட்டி வந்தி கொடுத்த பிட்டைக் கூலியாகக்கொண்டு, மன்னன் கொடுத்த அடியை வாங்கிக்கொண்டு, மனிதர்களின் பாவங்களைப் போக்கத் தன் பொன்மேனியில் புண் சுமந்த தியாகத்தைப் பாடி அம்மானை ஆடுவோம்” என்று இறைவனின் ஆனந்தக் கூத்தை, அம்மானை விளையாடும் சிறுமிகளுடன் பாடி நம்மையெல்லாம் பேரானந்தக் களிப்பில் ஆழ்த்துகின்றார் பெருமான்.

பண்சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்

பெண்சுமந்த பாகத்தன்! பெம்மான் பெருந்துறையான்!

விண்சுமந்த கீர்த்தி! வியன்மண்டலத்து ஈசன்!

கண்சுமந்த நெற்றிக் கடவுள்! கலிமதுரை

மண்சுமந்து, கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு,

புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்!

– திருவாசகம்:திருவம்மானை-8

பாண்டிய மன்னன் மணிவாசகரிடம், தன் பிழை பொறுத்து, மீண்டும் முதலமைச்ச ராகப் பணிஏற்க வேண்டினான். மன்னனை வாழ்த்திய மணிவாசகர் திருப்பெருந்துறைக்கு இறைப்பணி செய்ய விடுக்குமாறு வேண்டி, அவ்வண்ணமே விடைபெற்றார்.

இத்திருவாசகத்தில் தாம் கலந்து, மணிவாசகரின் மனநிலையை எண்ணிக் கரைந்த வள்ளல் பெருமானின் அருட்பாக்களை அடுத்த வாரம் சுவைக்கலாம்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-21-நானோ-இதற்கு-நாயகமே/article9585214.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 22: அச்சமே இல்லாத வேதமாகிய குதிரை

 

 
manikka

“புண்சுமந்த பொன்மேனி பாடுதும் காண்! அம்மானாய்” என்று முடியும் திருவம்மானைப்பாடல் வடலூர் வள்ளல் இராமலிங்க சுவாமிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட திருவாசகம். ‘சுமந்த’ என்ற மணிவார்த்தையை அடியாகக் கொண்டே, மணிவாசகரைப் போற்றிப் பாடிய ‘ஆளுடையஅடிகள் அருள்மாலை’ப் பதிகத்தின் ஒன்பதாவது திருவருட்பா அமைந்துள்ளது.

மணிவாசகருக்காகப் புண்சுமந்தான்

மாதொருபாகனாம் எம்பெருமான் நரிகளைப் பரிகளாக்கினான்; குதிரைச் சேவகன் என்று அனைவரும் எண்ணும்படி மதுரை மாநகரெங்கும் குதிரையின் மேலேறி வலம்வந்து, பாண்டிய மன்னனிடம் அக்குதிரைகளை ஒப்படைத்தான்; வைகை நதியில் பிட்டுக்கு மண் சுமந்து நின்று, பாண்டிய மன்னன் மாறன் பிரம்படியால் தன் பொன்மேனியில் புண் சுமந்தான்; இவ்விரண்டு அற்புதங்களையும் இறைவன் நிகழ்த்தியது புண்ணியனான உமக்காக அல்லவா? என்று மணிவாசகரிடம் உருகிக் கேட்கிறார் வள்ளல் பெருமான்.

பெண்சுமந்த பாகப் பெருமான், ஒருமாமேல்

எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும்! வைகைநதி

மண்சுமந்து நின்றதும்! ஓர் மாறன் பிரம்படியால்

புண்சுமந்து கொண்டதும்! நின் பொருட்டு அன்றோ புண்ணியனே!

- திருவருட்பா:3265

இறைவன், மதுரை மக்கள் அனைவரும் குதிரைச் சேவகன் என்று எண்ணும்படியாக வந்தான் என்பதை ‘எண்சுமந்த’ என்றார் வள்ளல் பெருமான். இறைவன், மணிவாசகருக்காகக் குதிரைச் சேவகனாகி, மண் சுமந்து, புண் சுமந்தது ஏன்? எப்போதும் நம்முள்ளே உறையும் இறைவனின் தன்மைகளை, என்புருக்கும் மணிவாசகத்தால் விளக்கி, மனிதர்களின் பாவங்களைக் கழுவி, வீடுபேறு தரும் திருவாசகத்தைத் தரப்போகும் வள்ளல் அல்லவா மணிவாசகர்?

இடிபட்டது வள்ளலாரின் நெஞ்சம்

இராமலிங்க வள்ளலின் சிந்தை, காலச்சக்கரத்தைப் பின்னுக்குத் தள்ளி, விடாத வான்மழையால் வைகை வெள்ளம் புகுந்த மதுரைக்குச் சென்றது. மணிவாசகருக்காக இறைவன் கூலியாளாய் வருகின்றான்; வானளவு பெருமை கொண்ட வைகையின் கரை உடைப்பை அடைக்க, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி படுகின்றான்; இறைவனின் பொன்போன்ற திருமேனி புண்பட்டுப் போகின்றது; கண்டதும் நெஞ்சில் இடிபட்டு மூச்சற்று விழுந்தார் வள்ளலார். நினைவு திரும்பியதும், ‘இந்நிகழ்வைச் சிந்தையில் கண்ட என் நெஞ்சம் இடிபட்டுப் போனதே! நேரில் கண்ட வாதவூரர் மணிவாசகப் பெருமானின் தூய நெஞ்சம் என்ன பாடுபட்டதோ’என்று எண்ணிக் கலங்கினார் வள்ளல் பெருமான்; ஓர் அற்புதமான திருவருட்பா உதயமாயிற்று!

வன்பட்ட கூடலில், வான்பட்ட வையை வரம்பிட்ட, நின்

பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில், புவிநடையாம்

துன்பட்ட வீரர், அந்தோ! வாதவூரர் தம் தூய நெஞ்சம்

என்பட்டதோ! இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே!

- திருவருட்பா:2251.

வன்நெஞ்சக் கூடல்

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலாரின் உள்ளம் மணிவாசகரின் துயரைத் தாங்குமா? ‘வன்பட்ட கூடல்’ என்பதற்கு ‘வைகை வெள்ளப் பெருக்கால் எளிதில் கரையாத வன்மைமிக்க கூடல்நகர் மதுரை’ என்பதே வெளிப்படையான பொருள். ஆயினும், வள்ளல் பெருமானின் மனநிலையை நோக்கும்போது, ஒருவேளை, 'வைகை மணல்வெளியில், கடும் உச்சிவெயிலில் மணிவாசகரை நிற்கவைத்து மன்னன் வன்கொடுமை செய்ததைக் கண்டும் நெஞ்சுருகாத வன்னெஞ்ச மக்களைக் கொண்ட கூடல்நகர் மதுரை' என்ற பொருளில் பாடியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.

துன்பம் வென்ற வீரர்

புவிநடை என்னும் உலக நடைமுறை எளிதில் வெற்றிபெற முடியாதது; மனத்தை மயக்கும் ஆசைகளால், சுற்றிச் சுற்றி உயிரின் அறிவை விளங்கவிடாமல் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது. புவிநடையை வெற்றிகொண்ட வீரர் மணிவாசகர் என்பதை 'புவிநடையாம் துன்பு அட்ட(வென்ற) வீரர்' என்கிறார் வள்ளலார். இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படிபட்டுப் புண் சுமந்த காட்சியை மனக்கண்ணால் காண இறைவன் அருளியதால், வள்ளலாரிடம் மேற்கண்ட திருவருட்பா உதித்தது.

வணிகத்தில் நேர்மை

குதிரைக்கெனக் கொண்டு சென்ற பொன் திருக்கோயில் திருப்பணியில் செலவானது; பெற்ற பொன்னுக்கு ஈடுகட்ட, நரிகளைப் பரிகளாக்கினான் சிவபெருமான்; இறைவன் தந்த குதிரைகளின் அழகைக் கண்டு மகிழ்ந்த பாண்டியன், மீண்டும் ஒரு பொன்முடிப்பைப் பரிசாகத் தந்தான்; குதிரைகளுக்காக ஏற்கனவே பொன்பெற்றுக் கொண்டதால், குதிரைச் சேவகனாக வந்த இறைவன், பாண்டியன் தந்த பொன்னை(கனகம்) வாங்க மறுத்துவிட்டான். தம் பொருட்டே மண்சுமந்தான் என்பதை மணிவாசகரே திருவாசகத்தினுள் பதிவுசெய்த சான்றுகள் திருவாசகம் கீர்த்தித்திருவகவல் 35-40, 44-47 வரிகளில் காணலாம்.

பாண்டியன் தனக்குப் பரிமா விற்று,

ஈண்டு கனகம் இசையப் பெறா(அ)து,

ஆண்டான்! எம்கோன் அருள்வழி இருப்ப!

(திருவாசகம்: கீர்த்தித்திருவகவல்:38-40.)

அடியார் குற்றம் நீக்கினான்

தமக்கு ஏற்பட்ட குற்றப் பழியை நீக்கவே குதிரைச் சேவகனாக வந்தான் இறைவன் என்பதையும் திருவாசகத்திலேயே குறிப்பிடுகின்றார் மணிவாசகர்.

பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்

கொற்றக் குதிரையின் மேல் வந்தருளித் தன் அடியார்

குற்றங்கள் நீக்கிக் குணம் கொண்டு கோதாட்டிச்

சுற்றிய சுற்றத் தொடர் அறுப்பான்”

(திருவாசகம்: திருவம்மானை.20)

நரிகளைக் குதிரைகளாக்கிக் கொணர்ந்த இறைவன், தானும் ஒரு நரிக் குதிரையில்தான் வந்தானோ என்ற ஐயம்தீர, வேதங்களைக் குதிரையாக்கி அதன்மேல் வந்தார் என்றார் வள்ளலார். இறைவன் குதிரைச் சேவகனாகி வந்தபோது கண்ட பூங்கொடி இடையுடைய பெண்கள் அவரது கண்கொள்ளாப் பேரழகை வியந்து தம்மையும் மறந்து பாடித் துதித்தனர். இறைவனின் இத்திருக்காட்சியை

புரவியின் மேல் வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார்

மரவியல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே

(திருவாசகம்: திருப்பாண்டிப்பதிகம்.20)

என்று அழகுறச் சொல்கின்றது திருவாசகம். இறைவனே அழகிய குதிரைச் சேவகனாக திருக்கோலம் கொண்டு, சேவடியால் குதிரையின் மேலேறி, மக்கள் அனைவரும் காண, மதுரை மாநகரெங்கும் வலம்வந்து காட்சிதந்தான்.

கனவிலாவது காட்டுக

அத்திருக்காட்சியைக் காணப் பெருவிருப்பு கொண்டு விண்ணப்பிக்கின்றார் வள்ளலார். ஆனால், இறைவன் பரிப்பாகனாக வந்த திருக்காட்சி காணக் கிடைக்கவில்லை. “இறைவா! என் பிறவிநோய் நீங்கிட, என் கனவிலாவது உன் அழகிய குதிரைச் சேவகன் திருக்கோலத்தைக் காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்யும் அழகிய திருவருட்பா பூத்தது.

திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு, அன்று தென்னன் முன்னே,

வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற

ஒருவாத கோலத்து ஒருவா! அக்கோலத்தை உள்குளிர்ந்தே

கருவாத நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவினிலே

(திருவருட்பா:2304.)

பாண்டியன் கண்காணக் குதிரைச் சேவகனாக வந்ததை, “தென்னன் முன்னே” என்றார் வள்ளலார். நரிக்குதிரைகளில் ஒன்றல்ல சிவபெருமான் ஏறிவந்த குதிரை; மிக உயர்ந்தவகைக் குதிரையானாலும், சிறிய நிழல் கண்டால் வெருண்டு கலையும் இயல்புடையதாகவே இருக்கும்; ஆனால், சிவபிரான் ஏறிவந்த குதிரை, “அச்சமே இல்லாத வேதமாகிய குதிரை” என்று “வெருவா வைதிகப் பாய்பரி” என்றார் வள்ளலார். ‘என்றென்றும் நிலைபெற்ற ஒப்பற்ற இறைவனின் திருக்கோலமே குதிரைமேல் காட்சியளித்தது’ என்பதை “ஒருவாத கோலத்து ஒருவா!” எனச் சிறப்பிக்கின்றார். கருவாதம் என்றால் பிறவி நோய்.

கண் படுமோ!

ஏன் கனவில் காட்ட விண்ணப்பம் செய்கின்றார்? பாதமலர் அழகினை நேரில் கண்டால் தம் கண்ணே பட்டுவிடும் என்று அஞ்சினார் வள்ளலார்.

பண் ஏறும் மொழி அடியார் பரவி வாழ்த்தும்

பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கில்

கண் ஏறு படும் என்றோ கனவிலேனும்

காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ!

(திருவருட்பா:103)

கருணைக் கடல் வள்ளலாரின் வழிபடுநூல் திருவாசகம். தில்லை அம்பலக்கூத்தனின் அழகைக் கண்டு, அருளில் தோய்ந்த கருணைத் திருவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-22-அச்சமே-இல்லாத-வேதமாகிய-குதிரை/article9595852.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 23: அன்பும் காதலும் பல மைல்கள் பயணிக்கும்

 

sivan

தில்லை அம்பலக்கூத்தனின் ஆனந்தக்கூத்தின் அழகைக் கண்டு, அருளில் தோய்ந்து, பேரானந்தத்தில் திளைத்த கருணைத் தேன் திருவாசகங்கள் பத்தும் கண்டபத்து என்ற தலைப்பிலும், பதிகத்தின் உட்பொருள் ‘நிருத்த தரிசனம்’ என்றும் குறிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன.

தில்லையில் எல்லையில்லா ஆனந்தம்

தில்லை நடராசப்பெருமானின் ஆனந்தக்கூத்தைக் காண்கின்றார்; எல்லையில்லாத பேரானந்தம் அடைகிறார். திருப்பெருந்துறையில் குருவாக வந்தவன் இக்கூத்தபிரானே என்பதைக் கண்டவுடனே உணர்கிறார். உடனிருந்த சிவனடியார்களிடம், “அன்பர்களே! இந்திரியங்கள் தரும் உலகச் சிற்றின்பங்களில் மயங்கித் திரிவது, பிறப்பின் பயனை அடையாமல் இறந்துபோவதற்கே காரணமாகிவிடுகிறது; அப்படி இறந்து, அந்தரத்தில் பலகாலம் திரிந்து, மீளமுடியாத கடும் நரகத்தில் விழ இருந்தேன் நான்; சிவபெருமான் என்சிந்தனையைத் தெளிவித்து, என் சீவனைச் சிவமாக்கி என்னை ஆட்கொண்டான்; திருப்பெருந்துறையில் எல்லையற்ற பேரானந்தம் தந்த சிவபெருமானை, இந்த அழகிய தில்லையம்பலத்தில் முடிவில்லாத ஆனந்தநடராசனாகக் கண்டுகொண்டேன்”, என்றார் மணிவாசகர்.

இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணமாய்,

அந்தரமே திரிந்து போய், அருநரகில் வீழ்வேற்குச்

சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி, எனையாண்ட

அந்தமிலா ஆனந்தம், அணிகொள்தில்லை கண்டேனே!

(திருவாசகம்-கண்டபத்து:1)

இந்திரியங்கள் என்பவை யாவை?

‘மெய், வாய், கண், மூக்கு, செவி’ என்னும் ஐம்பொறிகளும், அவைகளுக்கான ‘தொடுவுணர்ச்சி, சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல்’ என்னும் ஐம்புலன்களும் சேர்ந்தது ஐந்தறிவு ஆகும். ஐந்தறிவுடன், மனிதகுலத்துக்கு மட்டுமே உரிய ‘மனம், புத்தி, சித்தம், அகங்காரம்’ என்னும் அகக்கருவிகளையும் சேர்த்து இந்திரியங்கள் என அழைக்கப்படுகின்றன. மனித உடலில் வாழும் உயிர்கள் அனைத்தும் இந்த இந்திரியங்களின் ஆளுகைக்கு எளிதில் அடிமையாகிவிடுகின்றன.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

(தொல்காப்பியம்:மரபியல்:571)

கண்கள் காண்பதைக் காது அறியாது. காது கேட்டதை கண்களோ நாவோ அறிவதில்லை. எனவே அறிவுக்கருவிகளாகிய இவை வெறும் கேமரா, மைக் போன்ற பொறிகள்; கண்டதையோ உண்டதையோ கேட்டதையோ தெரியப்படுத்துவன(புலப்படுத்துவன) ஐந்து புலன்கள். மூளையில் இப்புலன்களுக்கென்று தனித்தனி இடங்கள் உண்டு. இப்புலன்களிலிருந்து வரும் தகவல்களை உணர்வுகளாக மாற்றி ஒருங்கிணைத்து அறியும் கருவியே மனம். மனம் என்ற அகக்கருவியையே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்காக விரிப்பர்.

‘புத்தி’ என்பது கண்டதையோ கேட்டதையோ ‘இன்னதென்று அறியும்’ மனத்தின் பகுதி. (பிறந்தது முதல் கண் முதலிய ஐம்பொறிகளால் அறிந்தது, அனுபவத்தில் கற்றது, பள்ளியில் படித்தது போன்ற அனைத்தும் ‘புத்தி'யில் பதிவாகியுள்ளது.)

‘சித்தம்’ என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவி. புலன்களால் அறிந்ததை, புத்தி தரும் தகவலின் அடிப்படையில், இது, இப்படி, ஏன் என்று முடிவு செய்வது சித்தம். வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பது; எப்படிச் செய்யலாம் என்று திட்டமிடுவது என்பன ‘சித்த'த்தின் வேலைகள்.

‘அகங்காரம்’ என்பது 'நான்', ‘எனது' என்ற உணர்வுடன் மனம், புத்தி, சித்தம் மூன்றையும் இயக்குவது. ‘இந்திரிய வயம் மயங்குதல்’ என்பது இந்திரியங்கள் மூலம் ஈட்டும் நிலையற்ற பொருட்களையும், நுகரும் அற்ப சுகங்கள் மட்டுமே வாழ்வு என்றும் வாழ்வின் பயன் என்று எண்ணுதல்; நன்றாக உண்டு, உடுத்து, உறங்குவது மட்டுமே வாழ்வின் நோக்கம் என்று எண்ணுதல்; இவ்வுலகில் ஈட்டும் பொருள்கொண்டு அனைத்தையும் பெற இயலும் என்று நம்புதல் ஆகியவையே ‘இந்திரிய வயம் மயங்குதல்’ எனப்படும்.

அன்பு ஒன்றே நமக்கான வெற்றி

இந்திரியவயம் மயங்கி இறப்பவர்கள் பலரும் கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவியை வீணடித்துவிட்டோம் என்று அறியாமலேயே இப்பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கித் தவிக்கின்றனர். ‘மனிதவாழ்வில் நாம் பிறருக்குச் செலுத்தும் அன்பு ஒன்றே நமக்கான வெற்றியாகும்’ என்று உயிர்பிரியுமுன்னர் கூறிச்சென்றார் புற்றுநோயால் மரணமடைந்த, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ்.

“எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம், புகழ், செல்வாக்கு எல்லாமே பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்கின்றன. கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும் இருக்கும் அன்பை உணரச்செய்யும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்; அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்” ஸ்டீவ் ஜாப்ஸ் மனிதகுலத்துக்கு தந்த ஆப்பிள் ஐ-ஃபோனைக் காட்டிலும், இப்பொன்மொழிகள் பன்மடங்கு உயர்ந்தவை.

அன்பை விதைத்தால் அருளைப் பெறலாம்

இறைவன் வாழும் நடமாடும் கோயில்களான ஏழைகளுக்குச் செய்யும் ஈகை, திருக்கோயில் இறைவனுக்குச் சென்றடையும் என்கிறது திருமந்திரம். “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்”, என்று விவிலியம் கூறும். ஈகையை நாற்பதுநாட்கள் 'ரமலான்’ என்னும் ஈகைத் திருவிழாவாக இசுலாம் கொண்டாடும்.

இத்தகைய தெளிவையே ‘சிந்தைதனைத் தெளிவித்து’ என்றார் மணிவாசகர். சிவபெருமான் தந்த ‘சிந்தனையின் தெளிவு’, அனைத்து உயிர்களிடத்தும் ‘அன்பு’ செலுத்தும் பாங்கை மணிவாசகருக்குத் தந்தது. இவ்வாறு, மணிவாசகரை அன்பினால் சிவமாக்கி, திருப்பெருந்துறையில் ஆண்டுகொண்ட சிவபெருமான் தந்த எல்லையற்ற ஆனந்தத்தை அழகிய தில்லையில் கண்டார் மணிவாசகர்.

தன்னை அறிய உதவும் பகுத்தறிவு

இந்திரியங்களின் நன்மை, தீமைகளைப் பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு! பகுத்தறிவு பெற்ற உயிர் முதலில் தன்னை அறியும்! தன்னை அறிதல் என்பது, தான் வாழும் மனிதவுடல் நிலையற்றது; உடலுக்கான வாழ்நாள் முடிந்ததும் அழியக்கூடியது; வாழ்வைப் பயனுள்ள வகையில் வாழ்ந்து, கற்றதனால் வரும் பயனாக, வாலறிவன் இறைவனின் திருவடிகளைத் தொழுது, ஈகையாம் இறைத்தொண்டு செய்து (வீடுபேறு) முத்தியைப் பெறவேண்டும் என்பதாகும்.

இறைவனைக் காண இந்திரியம் வெல்க!

கூத்தபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை மனிவாசகரைப்போல் நம்மால் ஏன் உணர முடிவதில்லை? நாம் அனைவரும் இந்திரியவயம் மயங்கிக் கிடப்பதால்தான்.

மனிதனைத் தவிர்த்த மற்ற உயிரினங்களுக்கு ‘மனம், புத்தி, சித்தம், அகங்காரம்’ என்னும் அகக் கருவிகள் இல்லை; எனவே, அவைகளுக்கு ‘இந்திரிய வயம் மயங்குதல்’ என்னும் சிக்கல் இல்லை. ஓரறிவு கொண்ட புல், மரம் போன்ற தாவரங்கள் தொடங்கி ஐந்தறிவு கொண்ட விலங்குகள் வரை பொறி புலன்களால் மட்டுமே துன்புறுகின்றன; ஆனால் மயக்கம் அடைவதில்லை. இந்திரிய வயம் மயங்கிய மனிதனோ, வல்வினைகளைச் செய்து, அவ்வினைகளின் பயனாக விளையும் துன்பங்களில் அவதிப்படுகிறான். இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் தேனான திருவாசகங்களை அடுத்தவாரம் சுவைப்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-23-அன்பும்-காதலும்-பல-மைல்கள்-பயணிக்கும்/article9606276.ece

Link to comment
Share on other sites

வான்கலந்த மாணிக்கவாசகம் 24: தில்லை அம்பலத்தே கண்டேனே

 

 
ivan

“மனிதன் அல்லாத உயிரினங்களுக்கு ஏன் ‘மனம்’ இல்லை என்றீர்கள்? நாய் மகிழ்ச்சியில் வாலைக் குழைக்கிறது; பயத்தில் வாலைக் கால்களுக்கிடையில் புதைக்கிறது; கோபத்தில் வாலை நிமிர்த்திக் குரைக்கிறது; நாய்க்கு மனம் இருப்பதால்தானே இவ்வளவும் சாத்தியம்”. என்று சில அன்பர்கள் வினவினர்.

விலங்குகளுக்கு ஏன் ‘மனம்’ இல்லை?

ஐந்து பொறி-புலன்கள் வழியாக உள்ளே வரும் தகவல்களைப் பெற்று (Input), ஏற்கனவே புத்தி என்னும் மூளைப்பதிவில் (Memory) உள்ள தகவல்களின் அடிப்படையில் நல்லது, கெட்டது, இது-இன்னது, செய், நட, பேசு (OutPut) என்று தீர்மானிக்கும் கருவியே(Processing-CPU) ‘மனம்' என்றால், அத்தகைய ‘கணினி' போன்ற மனம் எல்லா உயிரினங்களுக்கும் உண்டு என்று சொல்லிவிடலாம்.

தொல்காப்பியர் சொல்லும் ‘மனம்' என்பது - மேற்கூறிய செயல்களுடன், மனமே ஒரு அறி-புலனாகவும் (Input), ஒரு சிந்திக்கும் பொறியாகவும், சிந்தனையில் கிடைத்த தகவலை மீள்-புலனாகப் (FeedBack Input) பயன்படுத்தும் செயல் அமைப்பாகவும், மனிதன் செய்யும் வினைகளுக்குச் சாட்சியாகவும் (மனசாட்சி) இருந்து, செய்தது சரி/சரியன்று என்ற உணர்வையும் தருவது; இத்தகைய மனம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது.

மற்ற உயிரினங்கள், வாழ்க்கைக்கு நேரடியாக சம்பந்தப்படாத எதைக் குறித்தும் சிந்திப்பதில்லை. விலங்குகள் பசித்தால் இரைதேடும்; களைப் புற்றால் உறங்கும்; முழுவதும் புறஉணர்வு களைச் சார்ந்தே உயிரினங்களின் செயலும், அறிவும் அமைகின்றன. விலங்குகளின் செயல்களுக்கு நேரடியான காரணம் மட்டுமே இருக்கும். என்னதான் புத்திசாலித்தனமான உயிரினமாக இருந்தாலும், அதன் எல்லை மிகக் குறுகியது.

செயலும் வினையும்

செயலுக்கும் வினைக்கும் உள்ள வேறுபாட்டை அறிவோம். செயல் என்பது தானாகவோ, பசி, தாகம் போன்ற இயற்கை உந்துசக்திகளால் ஏவப்பட்டோ செய்யப்படுபவை. வினை என்பது ‘நான் செய்கிறேன்' என்ற உணர்வுடன் செய்யப்படுபவை.

இதயம் இயங்குவது, சுவாசிப்பது, உறங்குவது, உண்பது, காண்பது போன்றவை அனைத்து உயிரினங்களும் செய்யும் செயல்கள். விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் தங்கள் வாழ்நாளில் செயல்கள் மட்டுமே செய்கின்றன; வினைகள் செய்வதில்லை. ஒரு புலி தன் உணவுக்காக மட்டுமே வேட்டையாடுகிறது. அது பசியால் தூண்டப்பட்ட ஒரு செயல்; அவ்வளவுதான். அதே புலி, நான்கு தலைமுறைக்கும் சேர்த்து வேட்டையாடினால் வினை செய்கிறது என்று சொல்லலாம்.

பிறப்பை நீக்கிய இறைவன்

“வினையினால் உண்டாகிய பிறவியாகிய துன்பத்தில் சிக்கி, இறைவனாகிய உன்னைச் சற்றும் நினையாமலேயே தளர்வடைந்து இருக்கும் என்னை, மிகப் பெரிதும் ஆட்கொண்டு என் பிறவித்தளையை நீக்கிய ஒப்பிலாப் பெருமானை, எல்லா உலகங்களும் வணங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்’ என்றார் மணிவாசகர்.

‘வினைப்பிறவி’ என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்

தனை சிறிதும் நினையாதே, தளர்வு எய்திக் கிடப்பேனை!

எனைப்பெரிதும் ஆட்கொண்டு, என் பிறப்பு அறுத்த இணை இலியை,

அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே!

( திருவாசகம்:கண்டபத்து:2)

வினையினால் வந்த பிறப்பையும், முன்வினைகளையும் மணிவாசகருக்கு, இறைவன் குருவாய் வந்து நீக்கியருளினான். வினை உள்ளபோது, இறைவனை அறியும் அறிவு இல்லை. வினை நீங்கியபோது, இறைவனை அறியும் அறிவு விளங்கிற்று.

வாதவூரரும் மாணிக்கவாசகரும்

முதலமைச்சர் வாதவூரருக்கும், இறைவன் சிவமாக்கி ஆட்கொண்ட மணிவாசகருக்கும் இடையில் ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்ப்போம். உடல் இருவருக்கும் ஒன்றே! வாதவூரரின் கருவி-கரணங்கள் (பொறி-புலன்கள்) அவரை மயக்கி நரகத்தை நோக்கிச் செலுத்தின. குருவாக வந்து சிவபெருமான், வாதவூரரின் கருவி-கரணங்களை மாற்றி, ஆண்டுகொண்டு, சிவமாக்கியதால் மணிவாசகரானார்.

பிறர் கண்களுக்குச் சிலையாகக் காட்சிதரும் தில்லை நடராசர், சிவமான மணிவாசகரின் கருவி-கரணங்களுக்கு ஆனந்தக்கூத்தனாகக் காட்சி அருளினார். பரவசமடைந்த மணிவாசகர் 'சிவமாக்கி எனை ஆண்ட அந்தமிலா ஆனந்தம்' எனப் பாடுகின்றார்.

வினைப்பயனால் உடல்பிறவி

உயிரினங்களின் உடல்பிறவிகள், அந்தந்த உயிர்களின் முன்வினைப் பயனாகக் கிடைத்தவையே என்கிறது இந்தியத் தத்துவமரபு. மனிதர்கள் பிறந்து இறப்பதற்கும், விலங்குகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்கள் பிறந்து இறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். மற்ற உயிரினங்கள், வினைப்பிறவியை நுகர்கின்றன; புதியவினைகளை ஈட்டுவதில்லை; பொறி-புலன் சார்ந்த செயல்களை மட்டுமே செய்கின்றன. மனிதகுலம் மட்டுமே புதிய வினைகளைச் செய்கின்றன.

கடைக்கோடி மனிதன் முதல், கல்வி-செல்வம்-அதிகாரம் என்று உச்சம் தொட்ட முதலமைச்சர் வாதவூரர் உள்ளிட்டோர், முன்வினைப்பயனால் மனிதப்பிறவிகள் பெற்றனர்; இந்திரியவயம் மயங்கி, இவ்வுலக இன்ப-துன்பங்களிலேயே உழல்கின்றனர்; மேலும் மேலும் வினைகளைச் செய்து, பிறவியின் பயனை அறியாமலும் உணராமலும் இறந்து போகின்றனர்.

அன்னதானம், கல்விக்கொடை, பொருள்கொடை போன்றவை நல்வினைகள்; கொலை, களவு, பொய்கூறுதல் போன்றவை தீவினைகள்; இவ்வினைகளை 'நான் செய்கிறேன்' என்ற உணர்வுடன் செய்பவர்கள் மனிதர்களே.

மண்ணும் மனிதரும் பயனுற...

புல் முதல் மரங்கள் உள்ளிட்ட தாவரங்கள், தொடுவுணர்வு என்னும் ஓரறிவு மட்டுமே கொண்டவை; நன்மையையே செய்பவை; ஒரே இடத்தில் நிலையாக வாழ்பவை; தங்கள் உணவைத் தாங்களே உற்பத்தி செய்பவை; ஈரறிவு முதல் ஐந்தறிவு பெற்ற உயிரினங்கள், விலங்குகள், ஆறறிவு கொண்ட மனிதகுலம் ஆகியன வெளியேற்றும் கரியமிலவாயுவையும், கழிவுநீர்களையும் உட்கொள்கின்றன; அவைகள் உண்ண தானியங்கள், கீரைவகைகள், கிழங்குகள், பழங்கள் போன்றவற்றைத் தந்து, உயிர்வாழ ஆக்சிஜனையும்(உயிர்வளி) தருகின்றன. ஓரறிவுத் தாவரத்தின் இச்சிறப்பு, ஈரறிவு முதல் ஆறறிவு கொண்ட எவ்வுயிரினத்துக்கும் இல்லை.

செயல்கள் நிகழ்த்தும் மற்ற உயிரினங்கள் இயற்கைக்கும், உலகுக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்து இறப்பவை. அவைகளில் பல இம்மண் பயனுற வாழ்பவை; தாம் இவ்வுலகில் நுகர்வதற்கும் மேலாகவே பிறஉயிரினங்களுக்குக் கொடுத்து வாழ்பவை.

உலகை அழிக்கும் மனித இனம்

அனைத்து உயிர்களும் பிறப்பினால் சமமே என்றார் வள்ளுவர்! எடுத்த உடல்பிறவியால் அவை செய்யும் தொழில்கள் வேறுபடுவதால், அவைகளின் சிறப்புகள் வேறுபடுகின்றன என்ற பொருளில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்று அறிவுறுத்தினார்.

பேராசை கொண்ட மனிதகுலம், வள்ளுவரின் அறிவுரையைப் புறம்தள்ளியது; இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியால், வளர்ச்சி என்ற பெயரில் இவ்வுலகின் இயற்கை வளங்களைச் சுரண்டி வருகிறது; சுற்றுச் சூழலை நாசமாக்கி, இப்பூமியையே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக ஆக்கிக்கொண்டிருக்கின்றது; மற்ற உயிரினங்களை ஏய்த்தும் அழித்தும் வாழ்வதால், அவற்றுக்கு மிகுந்த கடன்பட்டிருக்கிறான் மனிதன்.

‘வினைப்பிறவி’ என்ற வேதனையிலிருந்து விடுபட . . .

பகுத்தறிவு கொண்ட மனிதன், வினைகளை ஈட்டாமல், இறைவனை அடையவேண்டும்; மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தாமல், தன் உழைப்பால் பொருள் ஈட்ட வேண்டும்; பெற்ற பொருளைக் கொண்டு, ஈகை என்னும் உயிர்க்கருணைத் தொண்டு செய்ய வேண்டும். உழைத்து ஈட்டிய பொருளின் பயன், உழைக்க இயலாமல் துன்பப்படுவோர்க்குத் தருவதற்கே என்பது குறள்நெறி. அத்தகைய நெறியை ‘வேளாண்மை செய்தல்' என்றே குறித்தார் வள்ளுவர். ‘அன்பு’ விதை விதைப்பவனே, ‘இறைவனின் அருள்' என்னும் விளைவை அறுவடை செய்வான்.

‘வினைப்பிறவி என்கின்ற வேதனை’யிலிருந்து மீள்வதற்கு வழி இறைச்சிந்தனை. உழைத்துப் பொருள் ஈட்டி, அப்பொருளைப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அன்பே சிவமாகும்; நம்மைக் கட்டுகளிலிருந்து விடுவிக்க உதவும் நெறியையும், துன்பத்திலிருந்து விடுபடும் வழியையும் விளக்கும் தேன் திருவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.


(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-24-தில்லை-அம்பலத்தே-கண்டேனே/article9617454.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வான்கலந்த மாணிக்கவாசகம் 25: கற்ற கல்வி எனக்கு வீடுபேறு தருமோ

 

 
vasagam

‘கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேனை’ என்று தம்மையே நொந்துகொள்கிறார் மணிவாசகர். ஒருவன் ஏதேனும் தவறு செய்தால், ‘படித்தவன் செய்கின்ற காரியமா இது?’ என்று பெரியவர்கள் கடிந்துகொள்வதைக் காண்கிறோம்; ஏனெனில், ‘படிப்பு’ என்பதே ‘அறத்தை’ உள்ளீடாகக் கொண்ட கல்வி; ’படித்தவன்’ அறவழியில் பொறுப்புடன் நடப்பான் என்ற எதிர்பார்ப்பினால் வந்த சொற்கள் அவை.

வாழ்வியல் அறங்களின் விளைநிலமே பள்ளிக் கல்வி

ஒரு நாட்டின் கல்விமுறை, அன்பையும், பண்பாட்டையும் உள்ளீடாகக் கொண்ட அறிவு, திறன்கள், மதிநுட்பம், ஆராய்ச்சி, தொழில் என்பவற்றில் ஒளிவீசும் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும். இந்த உள்ளீடுகள் இல்லாத கல்வி, சமூகப் பொறுப்பில்லாத தலைமுறையையே உருவாக்கும். ஒருவனை மனிதனாகப் பண்படுத்தும், அடிப்படை வாழ்வியல் அறங்களைக் கற்றுக்கொடுக்கும் விளைநிலமே பள்ளிக் கல்வி. ‘அன்பு’, ‘அறம்’ என்னும் விதைகளை விதைக்காமல், பண்பாடு என்னும் விளைச்சலை எதிர்பார்க்கிறோம்.

வறட்டு வணிகக்களங்களான கல்வி முறை!

இன்றைய கல்விமுறை எதைக் கற்றுக்கொடுக்கிறது? பத்தாண்டுகள் ஆங்கில மொழி, தாய்மொழி, கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் இணைந்த சமூகவியல் கல்வி; இரண்டு ஆண்டுகள் கல்லூரிப் படிப்புக்குத் தேவையான மேல்நிலைக் கல்வி. இதில் தாய்மொழிக்குப் பதில் வேற்றுமொழி படிப்போர் பலர்.

பொருள் ஈட்டும் வேலைவாய்ப்பை மட்டுமே குறியாய்க் கொண்டது, தற்போதைய கல்விமுறை. இக்கட்டமைப்பில் அன்பு, அறம், பண்பாடு ஆகிய கூறுகள் இல்லாமையால் நெகிழ்வுத் தன்மையற்று இறுகிப்போய்விட்டது. பாடத்திட்டத்திலிருந்தே கேள்விகள்; அதற்கேற்ற பதில்கள், மதிப்பெண்கள், பட்டங்கள் என்று சுருங்கிவிட்ட கல்வி தரும் அறிவைக் ‘கல்லாத புல்லறிவு’ எனலாம்.

இதன் விளைவாகத் தேடல், புதியன கற்கும் ஆர்வம், படைப்பாற்றல், கேள்வி கேட்டல், கண்டுபிடிப்புகள் போன்றவை வற்றிப்போன, வறட்டு வணிகக் களங்களாகக் கல்வி நிறுவனங்கள் மாறிவிட்டன.

முற்றறிவு பெறவே நான் பிறந்தேன்

ஆணவம் என்னும் அறியாமையில் கிடந்த உயிருக்கு அறிவு தரவே, அறிவுப் பொறி, புலன்களுடன் கூடிய உடலைத் தந்தான் இறைவன்; உயிர் உடலில் வாழவும், அன்பைக் கற்றுக்கொள்ளவும், அனைத்து வளங்களுடன் கூடிய உலகை உருவாக்கித் தந்தான். உயிர் என்னும் மாணவன், மனிதஉடல் என்னும் தங்கும் விடுதிக்கு, உலகு என்னும் பல்கலைக்கழகத்தில் ‘தன்னை அறிதல்’ என்னும் நூறு ஆண்டுக் கால முற்றறிவுப் பட்டம் பெற வருகிறது.

உயிர் தன்னை அறியவும், பிற உயிர்கள்பால் அன்பு செலுத்தவும், தன் தலைவனை அறியவும், களம் அமைத்தவன் இறைவன். அத்தகைய பெருங்கருணையாளனின் திருவடிகளில் நன்றி செலுத்துதல் என்பதை உயிர் அறியாவிட்டால், கற்றதனால் ஒரு பயனுமில்லை என்பது தமிழ் மறை. (‘கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்!’ – திருக்குறள்-2).

கல்லாத-புல்லறிவு நீக்கிய இறைவன்

இறைவனை அறியாத ‘கல்லாத புல்லறிவில்’ ஆழ்ந்து கடையவனாகி, நாய்போல் தாம் இழிநிலையடைந்திருந்ததாக வருந்தினார் மணிவாசகர்; திருப்பெருந்துறை இறைவன், மணிவாசகரைத் திருத்தி வல்லவனாக்கினான்; இறைவனின் திருவருள் பெற்றுப் பொலிந்திருக்கும்படி, அங்கிருந்த அடியவர் பலரும் காண, மணிவாசகருடைய உயிர்அறிவைப் பிடித்துள்ள பசுபாசமாம் அறியாமை (ஆணவம்), பழவினைகள்(கன்மம்), மாயை என்னும் மும்மலங்களையும் நீக்கியருளினான்; அத்திருப்பெருந்துறை இறைவனையே, ‘எல்லோரும் வந்து வணங்கும் ஆனந்தக்கூத்தனாக’த் தில்லையம்பலத்தில் கண்டதாகக் கூறுகிறார் மணிவாசகர்.

கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேனை!

வல்லாளனாய் வந்து, வனப்பு எய்தி இருக்கும் வண்ணம்!

பல்லோரும் காண எந்தன் பசு-பாசம் அறுத்தானை!

எல்லோரும் இறைஞ்சும் தில்லை |

அம்பலத்தே கண்டேனே!

( திருவாசகம்:31:4)

இங்கு வனப்பு எய்துதல் என்றது ‘சீவன் சிவமாதல்’ என்னும் திருவருள் ஆகும்; புல்லறிவுபெற்ற தம்மை அறிவுடையவனாக்கி அருளிய இறைவனின் கருணையை இவ்வாறு போற்றினார் மணிவாசகர்.

பொருளற்ற கல்வி என்னும் பல கடல்களிலிருந்தும் தாம் தப்பிப்பிழைத்ததை

‘கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்

(திருவாசகம்:4:38')

என்று போற்றித் திருவகவலில் பதிவுசெய்துள்ளார்.

புல்லறிவு கற்றோரைவிடக் கல்லாதவர்களே நல்லவர்கள்!

புல்லறிவு கற்றோர், தாம் அறிவு பெற்றோம் எனத் தலைக்கனம் ஏறித் திரிவர். இவர்தம் குற்றத்தைத் தம் குற்றமாகப் பாவித்து, கற்றும் அறிவில்லாத தம்மைவிடக் கல்லாதவர்களே நல்லவர்கள் என்று பாடியுள்ளார் தாயுமானசுவாமிகள்.

“நூல்களைக் கற்றும், கற்றபடி நடக்கும் அறிவில்லாத என்விதியை என்னவென்று சொல்லுவேன்! விதிவழி நடக்கும் என் அறிவினை என்னவென்று சொல்லுவேன்! வீடுபேறு தரும் இறைஞான நீதியை நல்லவர்கள் சொன்னால், அதைவிடக் கர்மமே முக்கியம் என்று நிலைநாட்டுவேன்; கர்மத்தின் சிறப்பைப் பேசுவோரிடம் ஞானமே சிறப்புடையது என்பேன்! வடமொழி வல்லுநர்கள் கருத்தைத் தமிழ் மறைநூல்கள் கொண்டு மறுப்பேன்! நல்ல தமிழறிஞரைக் கண்டால், சில வடமொழி வசனங்களைக் கூறி மிரளச் செய்வேன்! இப்படி எவரையும் மிரளச்செய்யும் நான் கற்ற கல்வி எனக்கு வீடுபேறு தருமோ?” என்றார் தாயுமானசுவாமிகள்.

கல்லாத பேர்களே நல்லவர்கள்! நல்லவர்கள்! கற்றும் அறிவில்லாத என்

கர்மத்தை என் சொல்கேன்! மதியை என் சொல்லுகேன்! கைவல்ய ஞானநீதி

நல்லோர் உரைக்கிலோ, ‘கர்மம் முக்கியம்’ என்று நாட்டுவேன்! கர்மம் ஒருவன்

நாட்டினாலோ, பழைய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன்! வடமொழியிலே

வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே வந்ததாக விவகரிப்பேன்!

வல்ல தமிழறிஞர் வரின், அங்ஙனே வடமொழியில் வசனங்கள் சிறிது புகல்வேன்!

வெல்லாமல் எவரையும் மருட்டிவிட, வகைவந்த வித்தை என் முத்தி தருமோ?

(தாயுமானசுவாமிகள்)

கற்றவர்கள் சிலர், இவ்வாறு தம் கல்வியறிவுத் திறமை குறித்து, தலைக்கனம் கொண்டு அலைவதை எக்காலத்தும் காணலாம். ‘சகல ஆகமப் பண்டிதர்’ என்பதில் தலைக்கனம்

கொண்டவர் சகலாகமப் பண்டிதர். மெய்கண்டார், சந்தானக் குரவர்கள் நால்வரில் முதல்வர்; சைவ சித்தாந்த சாத்திர நூல் சிவஞானபோதம் அருளியவர். தம் மழலைப் பருவத்திலே மாணவர்களுக்கு மெய்கண்டார் அருள் உபதேசம் செய்வதைக் கேள்விப்பட்டு மெய்கண்டாரின் வீட்டுக்குச் சென்றார் சகலாகமப் பண்டிதர்.

ஆணவத்தின் சொரூபம்

‘ஆணவம்’ குறித்து விளக்கிய மெய் கண்டாரிடம், ‘ஆணவத்தில் சொரூபம் யாது?’ என்று பண்டிதர் வினவ, தமது திருவிரலால் அவரையே சுட்டிக் காட்டினார் மெய்கண்டார். பிழை பொறுக்கத் திருவடியில் வீழ்ந்து வணங்கிய பண்டிதருக்கு சிவ தீட்சை தந்து, அருணந்தி சிவாச்சாரியார் எனும் ஞானப் பெயரிட்டு மெய்யு

ஞானமிலாப் பொல்லாக் கல்வி!

தாயுமானவர், மணிவாசகர் போன்ற குற்றமற்ற ஞானியர், குற்றமுள்ள மனிதர்களின் குறைகளைத் தம்முடையதாகக் கருதி, இறைவனிடம் அவர் நிலையில் நின்று, குறை நீக்க வேண்டிக்கொள்வர். இந்நெறி, ‘அறிவினால் ஆவது உண்டோ! பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை’ என்று தமிழ் மறை வகுத்த ஞானியர் நெறி. ஞானத்தைத் தராத கல்வியைப் ‘பொல்லாக் கல்வி’ என்றார் மணிவாசகர்; அப்பொல்லாக் கல்வியால், வீண் செருக்குற்று, அழுக்கடைந்த மனத்தைக் கொண்ட தமக்கு அடைக்கலம் தருமாறு வேண்டுகிறார்.

அதனால், கல்லாத புல்லறிவு நீங்கிச் சிவஞானம் பெறுவோம். விலங்குகளைத் தாக்காத, மனிதனை மட்டுமே தாக்கிச்சுழற்றி, உள்ளிழுத்துப் படுபாதாளத்தில் அழுத்தும் நோய் எது என்பதையும், அதிலிருந்து விடுவிக்க வழி கூறும் தேன் திருவாசகத்தையும் அடுத்த வாரம் சுவைப்போம்.

 
(வாசகம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/வான்கலந்த-மாணிக்கவாசகம்-25-கற்ற-கல்வி-எனக்கு-வீடுபேறு-தருமோ/article9649912.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.