Jump to content

சாய்ந்த கோபுரங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி ச"மை"ய( நல்ல காலம் சமையல் விழா என்று மரபுமாற்றம் செய்யாமல் விட்டீங்களே..??!) விழா அல்ல. அது பண்டிகை..! விழாவுக்கும் பண்டிகைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன மிஸ்டர் சாய்ந்து கவுண்ட கோபுரம் அவர்களே..??! மரபு மாற்றம் என்று உங்கள் பித்தலாட்டங்களை எல்லாம் புதிய மரபாக மக்களுக்கு காட்ட முடியாது பாருங்கோ..!

நான் தமிழன். பச்சைத்தமிழன். நான் தீபாவளியை மிக விமர்சையாகக் கொண்டாடினேன். அதில் மகிழ்ச்சியைத் தவிர எனது தமிழன் என்ற நிலைப்பாட்டுக்கு அது எந்தப் பாதகமும் விளைவிக்கல்ல. அதாலதான் சொல்கிறேன் உங்கள் கருத்துக்களை பித்தலாட்டம் என்று. தனிநபர் தாக்குதலோ அல்ல..! இவை குறித்து நீங்கள் மீள் சிந்தனை செய்தல் அவசியம்..! :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

விழா வேறு! பண்டிகை வேறு

திருமண விழா என்பதை திருமணப் பண்டிகை என்று சொல்ல முடியாது.

பண்டிகை என்பது மதம் சார்ந்து கொண்டாடப்படும் விழா, அதாவது சமய விழா

உதாரணங்கள்

நத்தார் பண்டிகை

ரம்ளான் பண்டிகை

நெடுக்காலபோவன் சொன்னது போன்று தீபாவளியும் ஒரு பண்டிகைதான். காரணம் அதுவும் ஒரு சமய விழாதான். இந்து சமய விழா அது.

உண்மையை உணர்ந்த பச்சைத் தமிழர்கள் பொதுவாகவே தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.

அத்துடன் இந்த ஆண்டு மத நம்பிக்கையுள்ள பச்சைத் தமிழர்களும் தீபாவiளியை விமர்சையாகக் கொண்டாடியிருக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் மண்டபத்தில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களும் இம் முறை தீபாவளியை கொண்டாடவில்லை. பொதுவாக இவர்கள் சிறப்பாக தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

இவ்வாறு இம் முறை பச்சைத் தமிழர்கள் யாரும் தீபாவளியை விமர்சையாகக் கொண்டாடவில்லை.

ஆனால் ஆரிய வம்சத்தில் பிறந்ததாக தன்னை நம்புகின்ற மகிந்த ராஜபக்ஸ ஒரு திராவிடத் தலைவனை வீழ்த்தி விட்டேன் என்று மகிழ்ச்சியோடு தீபாவளியை வெகு சிறப்பாகக் கொண்டாடியாதாகக் கேள்வி!

இளங்கோ! உங்களின் ஆக்கம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. உங்களின் பணியை தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று எண்ணிப் பாருங்கள் உலகில் எந்த இனமாவது தன் இனத்துக்காரன் அழிக்கப் பட்ட நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடக் கேள்விப் பட்டு இருக்கின்றோமா? ஆனால் நம்மவர்களோ நரகாசுரன் எனும் தமிழன் இறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஒரு அசுரன் இறந்ததாக மட்டும் கொண்டாட வேண்டியது தான்.

ஏன் தமிழர்கள் என்றால் அவர்கள் எல்லாரும் தங்கமானவர்களாகத்தான் இருக்கவேண்டுமா? தமிழர்களில் அசுரர்கள் இருந்திருக்கக்கூடாதா?

இன்றைய தீபாவளிக் கொண்டாட்டத்தில் தமிழரை இழிவுபடுத்தும் விதமாக ஏதேனும் அம்சங்கள் இருக்கின்றனவா? உதாரணமாக தீபாவளி அன்று தமிழ் தேசிய உடை அணிந்த ஒருவரின் கொடும்பாவியை எரிக்கிறோமா?

ஹிட்லரை வென்றதை இன்றைக்கும் உலகமே கொண்டாடுகிறது. அது ஜேர்மனியர்களை இழிவுபடுத்தும் விழாவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மேற்படி கருத்துக்கு அடிசனலாக இன்னும் சிறுவிளக்கம்,

தமிழர் இந்தமுறை தீபாவளியை புறக்கணிப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது. அதை குறிப்பிடுவதால் தமிழர்களை தற்போதைய அவர்களின் நோக்கம் சார்ந்து ஒருமுகப்படுத்தியதாகவாவது இருந்திருக்கும். அதை விடுத்து இவ்வாறான பூச்சாண்டிக் கதைகளை கேட்டு யாரும் தீபாவளியை புறக்கணிக்கப்போவதில்லை. இவ்வாறான கருத்துக்கள் ஏற்கனவே பிரிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தை இன்னும் பல துண்டங்களாக பிரிப்பதையன்றி வேறென்னத்தைச் செய்யும்?

Link to comment
Share on other sites

ஒரு அசுரன் கொல்லப்பட்ட நாள் என்பதால் இந்த விழாவைக் கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை.

அசுர குலத்திற்காக போரிட்டு தன்னுடைய உயிரை தியாகம் செய்த ஒரு அசுர மன்னன் இறந்த நாளை அந்த அசுரனின் வழித் தோன்றல்கள் கொண்டாடுவது தவறு என்பதுதான் இங்கு வைக்கப்படும் வாதம்.

அசுரர் என்பது சுர பானம் அருந்தாதவர்களைக் குறிக்கும். ஆரியப் பண்பாடு என்பது சுர பானம் அருந்துவதுதான். ஆரியாகளின் பண்டிகை முழுவதும் சுர பானம முக்கிய இடம் பெற்றிருக்கும்.

இந்தப் பண்பாட்டை மறுத்த, தமது பண்பாட்டை காக்க முயன்றவர்களை அ'சுரர் என்று ஆரியர் குறிப்பிட்டார்கள்.

ஆரியார்களின் புராணங்களில் அசுரர்கள் செய்த தீங்குகளாக குறிப்பிடப்படுபவைகள் எவைகள் என்று பட்டியில் இட்டுப் பர்ருங்கள்

ஆரியப் பண்பாடு பரவுவதை தடுத்ததைத்தான் அசுரர்கள் செய்த தீங்குகளாக குறிப்பிட்டுள்ளார்கள்.

சிறிது ஆழமாகச் சிந்தித்தால் அசுரர்கள் யார் என்பது புரியும்.

சரி! அசுரர்கள் திராவிடர்கள் இல்லையென்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.

ஆனால் தமது மண்ணில் தமக்கு ஒவ்வாத ஒரு பண்பாடு பரவுவதை தடுத்தவர்கள், கொல்லப்பட்ட நாளை கொண்டாடுவது மனித நாகரீகத்திற்கு ஏற்றதா?

Link to comment
Share on other sites

இந்து மதத்திலேயே ஒவ்வொரு இனத்தைச்சேர்ந்தவங்க தீபாவளிக்கு ஒவ்வொரு கதையைச் சொல்லுறாங்க இதில் தமிழன் நரகாசுரன் கதை சொல்லி கொண்டாடுறான்.... சில இனத்தவருக்கு புதுவருடப் பிறப்பே தீபாவளிநாள்தான் ......எழுத்துமூலம் வரும் கதைகளே திரிபுபடுத்தப் பட்டு வாய்வழி பேசப்படும் போது அன்றையகாலத்தில் வாய்வழி மூலம் வந்த கதைகள் சொல்லவும் வேண்டுமா ..... ???

நல்லதை விடுத்து அதிலுள்ள கழிவுகளை தூக்கிப் பிடிக்காது அன்றைய புராணங்கள் இதிகாசங்கள் கூறும் கதை களின் நற்கருத்துக்களை எடுத்தியம்புவதன் மூலம் அக்கதைகளில் உள்ள இடைச்செருகல்கள் இல்லாமல் போக வழிசெய்யலாம் :wub: ஆனால் சிலபேர் கண்ணுக்கு நல்லது தெரியாது... :wub:

தீபாவளியன்று எத்தனை தமிழர் கோவிலுக்கு போய் இதனைக் கொண்டாடுகின்றார்கள் ...? :wub: கூடுதலானவர்கள் வீட்டில் பங்கிறைச்சிவாங்கி போத்தலெடுத்து புத்தாடை உடுத்து குடும்பம் ,நண்பர்கள் உறவினர், என குதூகலமாக பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள் இப்படி இருப்பதுகூட சில தமிழருக்கு பிடிக்கலையாம்.... :lol:

அத்துடன் முற்போக்குச் சிந்தனை என்று சில மிசன்களில் காசும் செளகரியங்களையும் பெற்றுக்கொண்டு இருப்பவர்கள் (தங்களை குறிப்பிடவில்லை) நம் மக்களில் (மதம் சார்)பிரிவினைகளை உண்டாக்குவதும் ...அவர்களின் கடவுள்சார் நம்பிக்கையை கொச்சைப் படுத்துவதும் எந்தவிதத்திலும் நியாயமாகப் படவில்லை ...!

Link to comment
Share on other sites

ஹிட்லரை வென்றதை இன்றைக்கும் உலகமே கொண்டாடுகிறது. அது ஜேர்மனியர்களை இழிவுபடுத்தும் விழாவா?

ஹிட்லரை வென்ற நாள் என்று ஒன்று இல்லை. ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளிலும் ஹிட்லரின் படைகளைத் தோற்கடித்த நாளை அப் போரில் உயிர் நீத்த போர் வீரர்களின் நினைவு நாளாகக் கொண்டாடப் படுகிறது. இது ஒரு சந்தோசமான பண்டிகை அல்ல.

உதாரணமாக பிரான்சில் நோர்மண்டியில் நேச நாடுகளின் தரையிறக்கத்தை துக்க நாள்போல இறந்தவர்களின் தூபிகளில் மலர் வளையம் சாத்தி அஞ்சலி செலுத்துவார்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

16. இந்தியாவின் ஈழ ஆதரவு

இந்தியா ஏன் தமிழீழத்தை ஆதரிக்க மறுக்கிறது என்ற குழப்பம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அதைப் புரிந்து கொள்வதற்கு முன் இந்திய ஆளும் கும்பல்களின் இரட்டை அரசியலை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தனித் தமிழீழத்திற்காக நாங்கள் பல்லாயிரக் கணக்கான மக்களையும் போராளிகளையும் பறி கொடுத்ததற்குப் பின்பும் ஒன்று பட்ட இலங்கை, இறையாண்மை என்றே இந்திய அதிகார வர்க்கத்தின் குரல்கள் ஒலிக்கின்றன.

கொசோவோவை ஆதாரிக்கும் இந்தியா செக்கோஸ்லோவாக்கியா பிரிந்ததை ஆதரிக்கும் இந்தியா தனக்குப் பக்கத்தில் தினம் தினம் மனித அவலத்தை சந்திக்கும் தமிழர்களைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படுவதில்லை.

பாகிஸ்தானோடு போரிட்டு வங்க தேசத்தை உருவாக்கிய இந்தியா வங்காளிகளைக் காட்டிலும் பல மடங்கு மோசமான அடக்குமுறைகளுக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்காக ஏன் ஒரு தனி நாட்டை உருவாக்கித் தரவில்லை. இந்திய அரசின் நயவஞ்சகமும் இரட்டை வேஷமும் இதிலிருந்து தெரிகிறது.

1962 இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போர் மூண்டபோது ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்பட்ட தந்தை செல்வா அவர்கள் வீதி வீதியாக நிதி சேகரித்து அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்ளால் நேரு அவர்களிடம் சேர்ப்பித்தார். அதே போன்று 1971 இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடைபெற்ற போது ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கே தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். அந்த பெருந்தன்மைகளுக்கு இந்தியா எங்களுக்கு செய்த பரிகாரங்கள் விலை மதிக்க முடியாதவை.

நம்மவர்களுக்கோ இன்னும் இந்திய மயக்கம் தீர்ந்த பாடில்லை. சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் டில்லியின் துரோக அரசியல் உங்களுக்கும் புரியும்.

தமிழீழம் தோன்றி விட்டால் தமிழ் நாட்டிலும் பிரிவினைவாதம் தொடங்கும் என்ற இந்திய மேலாதிக்கவாதிகளின் நச்சுப் பரப்புரைகளில் நம்மவர்கள் மயங்கி நிற்கிறார்கள்.

தமிழீழம் என்று ஒரு நாடு தோன்றிவிட்டால் இந்தியாவில் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையை வலுவடையைச் செய்து விடும், என்ற கருத்து பொய்யானது மட்டுமல்ல வரலாற்று முரணானதும் கூட. ஈழத்தில் தனி நாட்டுக் கோரிக்கை 1970 களின்; தொடக்கத்தில்தான் எழுப்பப் படுகிறது. அது வரைக்கும் சமஷ்டி முறையிலான தீர்வையே தமிழர்கள் எழுப்பி வந்தார்கள், அதுவும் 1949 இல்தான் சமஷ்டிக் கட்சி தொடங்கப் படுகிறது.

ஆனால் இவற்றுக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் 1938-ம் ஆண்டு தந்தை பெரியார், சோமசுந்தரப் பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்களால் ~தமிழ்நாடு தமிழருக்கே| என்ற விடுதலைக் குரல் தமிழக மண்ணில் எழுப்பப் பட்டு விட்டது. அதாவது 1941 ஆம் ஆண்டு முகமத் அலி ஜின்னா பாகிஸ்தான் பிரிவினையைக் கேருவதற்கு முன்னமே தமிழ் நாட்டு விடுதலைக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. தந்தை பெரியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் இறுதிவரைக்கும் தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். இவர்கள் யாரும் ஈழத்தைப் பார்த்து தங்கள் விடுதலைக் கோரிக்கையை எழுப்பவில்லை. எனவே தனி ஈழம் மலர்ந்தால் தமிழ் நாடும் பிரிவினைக் கோரிக்கையை எழுப்பும் என்று கூறுவது பொருத்தமற்றது.

வங்கதேசம் பிரிந்தவுடன் அதனோடு ஒட்டி இருந்த மேற்கு வங்காளம் பிரிந்து சென்றுவிடவில்லை. தமிழீழம், தமிழகம் போன்றே வங்கதேசத்திலும் மேற்கு வங்காளத்திலும் இருப்பவர்கள் ஒரே மொழி பேசும் ஓரின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டு விடுதலைப் போராட்டம் வேறு. தமிழீழ விடுதலைப் போராட்டம் வேறு. இரண்டுமே வேறு வேறு தளங்கள். தமிழ் நாட்டுப் பிரிவினைக்கு தமிழீழம் ஒரு போதும் காரணமாக இருக்காது.

தமிழீழ எழுச்சி சிங்களப் பேரினவாதத்தின் இராணுவ அடக்கு முறையால் எழுந்தது. தமிழ் நாட்டு விடுதலை எழுச்சி இந்திய வல்லதிக்கத்தின் சமூக, பொருளாதார, மற்றும் பண்பாட்டு அடக்கு முறையால் எழுந்தது. ஒன்றைப் பார்த்து ஒன்று எழவில்லை.

ஆனால் இரண்டும் காலத்தின் கட்டாயம் என்பதுடன் நூற்றுக்கு நூறு நியாமானவைகளே!

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் மிக அழகாக இப்பச் சொல்லுவார்

« சிங்களம் ஈழத்தமிழர்களுக்கு கொடுத்தது சாட்டையடி அதன் வலியை அவர்கள் நேரடியாகவே உணர்ந்து கொண்டதால் அதை எதிர்த்து போராடுகிறார்கள். ஆனால் இந்தியம் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு கொடுத்தது மயக்க ஊசி. அதனால் அவர்கள் போராட வேண்டும் என்ற உணர்வே அற்று மயங்கிக் கிடக்கிறார்கள். »

இந்திய அரசின் இரட்டை நிலை அரசியலுக்கு இன்னும் ஒன்றை உதாரணமாகக் கூறலம்.

கொலனித்துவ ஆதிக்கத்தில் இருக்கும் நாடுகளுக்கு மட்டும்தான் விடுதலை வேண்டும் ஆனால் ஒரு நாட்டில் இருக்கும் தேசிய இனங்களுக்கு விடுதலை தரவே கூடாது என ஐ.நா. அளவில் பிதற்றும் இந்தியா, திபத் சீனாவிலிருந்து பிரிவதை விடாப்பிடியாக ஆதரித்தது.

இவ்வாறு தலைக்கொரு சீயாக்காயையும் தாடிக்கொரு சீயாக்காயையும் தடவிக்கொண்டு தன்னை ஜனநாயக நாடாக காட்ட முனைகிறது.

எங்களைப் போன்றவர்கள் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்யும்போது தங்களை இந்தியர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் அதற்கு ஒத்தூதும் நம்மவர்களில் சிலரும் நாம் ஏதோ தமிழீழ விடுதலையையும் தமிழ் நாட்டு விடுதலையையம் ஒரே அலகால் அளக்க முற்படுவதாக புதுக் கரடி விடுகிறார்கள்.

நாம் எங்கே ஒரே அலகால் அளக்க நினைக்கிறோம்

இரண்டும் வேறு வேறு தளங்கள்!

நாளை தமிழீழம் மலர்ந்தால் அது ஒரு போதும் தமிழ் நாட்டு விடுதலைக்கு வழி சமைக்காது. அதேநேரம் தமிழ் நாட்டு விடுதலையின் நியாயங்கள் நூற்றுக்கு நூறு சரியானவை. அதற்கும் தமிழீழப் போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை. இந்திய அடக்கு முறை, காவேரிச் சிக்கல், பொருளாதார சமநின்மை இப்படி பல்வேறு சமுக பொருளாதார காரணிகள் உள்ளன. பிரிவினைக் கோரிக்கையை கைவிட்ட அறிஞர் அண்ணா அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 80 களில் தமிழீழத்தை ஆதரிக்க முற்பட்ட இந்தியா தற்போது அதை எதிர்ப்பது பெரும்பான்மையான தமிழர்களுக்கு ஒரு வித குழப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதையும் சுருக்கமாக விளக்க விரும்புகிறோம்

1980 களில் இந்தியவின் அயலுறவுக் கொள்கை வேறு. பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. அப்போது சோவியத் யூனியன் உலக வல்லரசாக விளங்கியது. இந்தியா தன்னை அணிசேரா நாடு என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், இந்திராகாந்தி தன்னை அணிசேரா நாடுகளின் தலைவி என்று கூறிக் கொண்டிருந்தாலும் இந்தியா சோவியத் யூனியனின் தயவோடுதான் இயங்கியது. ஜெயவர்தனே அரசு அமரிக்கச் சார்பாக இருந்ததால் துணிந்து சிங்கள அரசிற்கு எதிரான முடிவை இந்தியா எதிர்த்தது.

தற்போது நிலைமை வேறு.

இந்தியா தற்போது எப்படி மாறிவிட்டது தெரியுமா? முழுக்க முழுக்க ஒரு அமரிக்க அடிவருடியாக.

அதாவது அமதிரிக்காவிலுள்ள மாநிலங்களான அரிசோனா, கலிபோர்னியா, மிஸிஸிப்பி போன்று இந்தியாவும் ஒரு மாநிலம்தான். அமரிக்கா எந்தப் பக்கம் கையைக் காட்டுகிறதோ அந்தப் பக்கம் கையைக் கட்டிக்கொண்டு திரும்பிப் பார்க்கும் ஒரு நாடுதான் இந்தியா.

இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டு. பாரதி பாடியது போல் “கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” என்ற அடிப்படையில் அனைத்து தேசிய இனங்களுக்கும் மதிப்புக் கொடுத்து அதில் ஒரு தேசிய இனமான தமிழினத்தின் உரிமைகளை மதித்து. கடல் கடந்த ஈழத்தை ஆதரித்து உண்மையான ஜனநாயகத்தை அது பேணியிருந்தால் நாம் இந்தியாவை நேசித்திருப்போம். பாரதியோ, வ.உ.சியோ நேதாஜியோ, பகத்சிங்கோ கனவு கண்ட இந்தியா அல்ல தற்போது இருப்பது. மாறாக திலகர், அரவிந்தர், மதன் மோகன் மாளவிகா, சாவர்க்கர் போன்ற இந்து வெறியர்களின் கனவுத் தேசமாகத்தான் இன்று உருவாகியுள்ளது.

அதனால்தான் இவர்கள் மொழிவழித் தேசியத்தை எதிர்க்கிறார்கள். தமிழீழத்தை எதிர்ப்பதற்கும் இதுதான் காரணம்.

தேசிய இனங்களின் ஒட்டு மொத்த எழுச்சியும் அவர்களுக்குள் ஏற்படும் கூட்டுறவும்தான் ஏகாதிபத்தியத்தை விழுத்தும் வல்லமை படைத்தவை.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

17. தமிழர் திருமணத்தில் தாலி!

thalifb0.jpg

பி.வாசு இயக்கிய சின்னத்தம்பி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். உலக விபரம் தெரியாத கதாநாயகனை மடக்கிப் பிடித்து தனது கழுத்தில் முன்று முடிச்சு போட வைத்து விடுவாள் கதாநாயகி. அதைக் கலியாணம் என்று அறியாமல் விட்டிற்கு வந்து தாயாரிடம் விளக்கம் கேட்பான் கதாநாயகன். பந்தல் வைக்காமல் மேளம் கொட்டாமல்கூட கலியாணம் நடக்கும் ஆனால் தாலி கட்டாமல் அது நடக்காது என்பார் தாயார்.

இதைவிட உச்சக் கட்டம் ஒன்று கே. பாக்கியராஜ் இயக்கிய அந்த ஏழு நாட்கள் திரைப் படத்தில் வரும். படத்தின் கதாநாயகியை அவளது காதலனிடமிருந்து பிரித்து வேறு ஒருவனுக்கு கட்டி வைத்து விடுவார்கள். அவனோடு வாழப் பிடிக்காத கதாநாயகி நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்று தப்பி விடுவாள். தன் காதலனைத் துறந்து கணவனோடு வாழப் பிடிக்காத நாயகி கணவன் தாலியை அறுக்க முற்படும்போது மட்டும் கதறித் துடித்து, அழுது ஆராற்றி, விம்மி வெதும்பி இறுதியாக கணவனுக்காக அல்ல அந்த கயிறு ஒன்றுக்காகவே கணவனோடு வாழத்தொடங்குவாள்.

காதலைக் காட்டிலும் இந்தத் திரைப் படங்கள் தாலிக்குக் கொடுக்கும் மகத்துவம் கொஞ்ச நஞ்ச மல்ல. திரைப் படங்களில் குறைந்த அளவு குழந்தைகள் ஆடைகளோடு கதாநாயகிகளை நடிக்க வைக்கும் இயக்குனர்கள் தாலி விடயத்தில் மட்டும் மகா புண்ணியவான்களாக மாறி விடுகிறார்கள்.

நான் அறிந்தவரை ஒளிப்பதிவாளர் ஏ.வின்சன்ட் இயக்கிய ‘துலாபாரம்’ என்ற திரைப் படத்தில்தான் தாலியில்லாமல் தமிழ் மறையான திருக்குறளை ஓதி மாலை மாற்றி நடைபெறும் திருமணம் காட்டப் படுகிறது. தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ போன்ற திரைப் படங்களில் கூட புரோகிதம் தவிர்க்கப் பட்டாலும் தாலிகட்டுவது தவிர்க்கப் படவில்லை.

திரைப் படங்களில் மட்டுமல்ல தமிழர்களின் அன்றாட வாழ்க்கையிலும் தாலி பிரிக்கப் படமுடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. தாலியோடு கூடவே பக்க வாத்தியங்கள் போன்று ஏராளமான மூடநம்பிக்கைகள் அதோடு இணைக்கப் பட்டுவிட்டன. தாலியில் போடப் படும் மூன்று முடிச்சுக்களானது முதல் முடிச்சு கணவனுக்கு அடங்கியவள் என்றும் இரண்டாம் முடிச்சு கணவனின் பெற்றோருக்கு அடங்கியவள் என்றும் மூன்றாம் முடிச்சு கடவுளுக்கு அடங்கியவள் என்றும் விளக்கமளிக்கப் படுகிறது. நம்மவர் திருமணங்களிலோ முடிச்சு நட்டாக மாறிவிட்டதால் முதல் திருகல் கணவனுக்கு அடங்கியவள் என்றும் இரண்டாம் திருகல் கணவனின் பெற்றோருக்கு அடங்கியவள் என்றும் மூன்றாம் திருகல் கடவுளுக்கு அடங்கியவள் என்றும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

எல்லாம் சரி தாலி ஓர் அடையாளச் சின்னம் என்றால் ஆண்களுக்கு என்ன அடையாளம் இருக்கிறது?! தாலி கட்டாமல் இறுதிவரைக்கும் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வாழும் தம்பதிகள் இருக்கின்றனர். ஒழுக்கமும் கட்டுப்பாடும் உண்மையான அன்பிலும் நேர்மையிலும்தான் தங்கியிருக்கிறதே தவிர தாலியில் அல்ல.

இல்வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் அறங்கள் எவ்வளவோ இருக்க வெறும் மஞ்சளும் தங்கமும்தான் ஆணையும் பெண்ணையும் பிணைத்து வைத்திருக்கிறது என்பது பகுத்தறிவற்ற விதிகளேயன்றி வேறல்ல.

தவிரவும் தற்போதெல்லாம் விழாக்களுக்கு செல்வதற்குத்தான் பெண்கள் அடைபட்டுக்கிடக்கும் தாலிக்கு விடுதலை அளிக்கிறார்கள். தாலிதான் பெண்களுக்கு வேலி என்பார்கள் ஆனால் அதை அணிந்து கொண்டு வெளியில் செல்லும் பெண்கள் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது. யாராவாது கொள்ளையடித்துக் கொண்டு போய்விடுவார்களா என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். இங்கு தாலி பெண்களுக்கு வேலி என்பது போய் பெண்கள்தான் தாலிக்கு வேலியாக மாறுகிறார்கள்.

இந்தளவு தூரம் தமிழர் வாழ்வில் ஐக்கியமாகிவிட்ட தாலிக்கும் தமிழர் திருமணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சங்க இலக்கியங்களை ஆராயும் பொழுது தாலி என்ற சொல் பெண்ணுக்கு அணிவிக்கும் ஒன்றாக எந்த இடத்திலும் குறிப்பிடப் படவில்லை.

சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் தமிழர் திருமணத்திற்குச் சான்றாக இரண்டு படல்கள் உள்ளன.

‘உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை’ என்று தொடங்கும் 86 ஆவது பாடலும் ‘மைப்புறப் புழுக்கி னெய்க்கனி வெண்சோறு’ எனத் தொடங்கும் 136 ஆவது பாடலும் எது தமிழர் திருமணம் என்பதை நமக்கு தெரியப் படுத்துகின்றன.

இவ்விரு பாடல்களையும் ஆராயுங்கால், தற்போது தமிழர் வீட்டுத் திருமணங்களில் நடைபெறும் மூடச்சடங்குகள் எதுவும் இல்லை. பெண்களை இழிவு படுத்தும் மந்திரங்களோ, கன்னிகாதானம் என்ற பெயரில் பெண்களை தாரைவார்க்கும் காட்சிகளோ இல்லை. குறிப்பாகத் தாலி என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. மாறாக அன்பும் அறமும் உற்றார் பெற்றாரின் நல்வாழ்த்தும் இயற்கை அழகும்தான் அங்கு அங்கம் வகிக்கின்றன.

தாலி என்ற சொல் பழந் தமிழர் இலக்கியங்களில் வருகிறது ஆனால் அவை திருமணத்தோடு தொடர்பு படுத்தி வரவில்லை. தவிரவும் அது பெண்கள் அணியும் ஒன்றாக எந்த இடத்திலம் குறிப்பிடப் படவில்லை.

‘முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!

பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி, (அகநானூறு 54)’

‘அவன் கண்ணி! தார்பூண்டு,

தாலி களைந்தன்றும் இலனே (புறநானூறு 77)’

போன்ற பாடல்களில், தாலி என்ற சொல் ஆண்குழந்தைக்கு அணிவிக்கும் ஒன்றாகவே கூறப்பட்டிருக்கிறது. இதனை ஐம்படைத்தாலி என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சங்க இலக்கியங்களை மேலும் ஆராயும்பொழுது

‘புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு 54)’

‘புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு 374)’

போன்ற பாடல்களில் தாலியானது ஆண் அணியும் ஒன்றாகவே குறிப்பிடப் பட்டிருக்கிறது. தாலி இடம் பெற்ற சங்கப் பாடல்களை உற்று நோக்கும்போது தாலி என்ற சொல்லானது போர்க்களக் காட்சிகளை விளக்கும் போது பயன் படுத்தப் பட்டிருக்கின்றனவே தவிர திருமணக் காட்சிகளில் அல்ல. குறிப்பாக புறநானுற்றின் 77 ஆவது பாடல், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பகைவரை வீழ்த்தி விட்டு நின்ற காட்சியை விளக்கும் போது பாடப் பட்ட பாடலாகும். சிறுவயதில் கட்டிய ஐம்படைத்தாலியை இன்னும் களையாமல் இருக்கிறானே என்பது போல் அமைகின்றது அந்தப் பாடலின் வரி.

12 ஆம் நூற்றாண்டில் சேக்கிழாரல் எழுதப்பட்ட பெரிய புராணத்திலும்

‘இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து’

என்ற பாடல் வரியில் தாலி என்பது ஆண் இடுப்பில் அணியும் ஒன்றாகவே கூறப்பட்டுள்ளது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றாகப் பாடும் ஆண்டாளின் பாடல்களில் கூட தாலியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

இன்னும் ஒரு வியப்பிற்குரிய செய்தி என்னவென்றால் தமிழர்கள் மத்தியில் பிராமணர்களால் நடத்தி வைக்கப் படும் புரோகித் திருமணம் வழக்கத்தில் வந்த பின்பும் தாலி முறை வரவில்லை. தமிழர் முறைக்கு மாறாக பார்ப்பனரின் நால் வருண முறைப்படி செய்யப் படும் புரோகித திருமண முறை முதன் முதலாக சிலப்பதிகாரக் காப்பியத்தில்தான் குறிப்பிடப் படுகிறது. ஆனால் அதில் கூட தாலி என்ற சொல் இடம் பெறவில்லை. தாலி கட்டும் பழக்கம் இளங்கோவடிகள் காலத்திலும் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.

சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியிலும் ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றான சூளாமணியிலும் தமிழர் திருமண முறைக்கு மாறான வைதீகத் திருமண மரபுகள் சொல்லப் படுகின்றன ஆனால் தாலியைப் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை.

1954 ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தனது தென்றல் இதழில் தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்ற கருத்துப் போரைத் தொடக்கினார். பல தமிழறிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், பெரும்புலவர் மதுரை முதலியார், ஆய்வறிஞர் இராசமாணிக்கனார் போன்றவர்கள் பழந் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் பழக்கம் இல்லை என அடித்துக் கூறினர்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டளவில் மொகாலயர்களின் படை எடுப்பு நடைபெற்ற பொழுது அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு பெண்கள் தாலி அணியத் தொடங்கினார்கள் என்று ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவேளை திருமணமாகத பெண்கள் கூட தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அப்படி ஒரு கயிற்றை வெளியில் தெரியும் விதமா போட்டிருக்கலாம் என்ற ஐயமும் இங்கு எழுகிறது. எது எப்படி இருப்பினும் திருமணத்தின்போது பெண் கழுத்தில் தாலி கட்டுவது என்பது மிக பிற்பட்ட காலத்தில், புகுத்தப்பட்ட ஒர் அடையாளமே. அதற்கும் தமிழர் திருமணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

18. சேலை கட்டும் பெண்ணிற்குத்தான் வாசம் உண்டா!

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பிரபல நடிகைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது நான் தமிழ்நாட்டில்தான் தங்கியிருந்தேன். அதுவும் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த் தேசியவாதிகளின் பாசறையில் தங்கியிருந்ததால் அது தொடர்பான மோதல்களை நேரடியாக அறியக் கூடியதாக இருந்தது. அதே தமிழ் தேசியப் பாசறையில் இருந்து அந்த நடிகைக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுப்பப் பட்டன. ஆனால் பெற்றோலில் எரியும் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தால் அதன் வெப்பம் எவ்வாறு தண்ணீரை ஒரு நொடியில் ஆவியாக மாற்றி விடுமோ அந்த நிலைதான் அந்தக் கருத்துக்களுக்கும் ஏற்பட்டது. ஈழத்தமிழர் ஆதரவு, தமிழ் வழிக் கல்வி போன்ற தளங்களில் ஒருமித்து நின்ற அந்தத் தோழர்கள் இந்த இடத்தில் நேருக்கு நேர் முரண்பட்டதையும் அறிய நேர்ந்தது. தமிழ்த் தேசியத்திற்குள்ளேயே இருக்கும் வலதுசாரித் தனத்தையும் இடது சாரித்தனத்தையும் அப்போதுதான் நேரடியாக உணர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

தமிழீழ விடுதலை, தமிழ் வழிக் கல்வி போன்ற உயர்ந்த விடயங்களை ஆதரித்து போராடும் நீங்கள் இந்த அற்ப விடயத்திற்காக உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டுமா என்ற கேள்வியை அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தோழர் ஒருவரைக் கேட்டேன். எனது கேள்வி அவரை சற்று கோபப் படுத்திவிட்டது என்பதை உணர்ந்தேன். இருப்பினும் ஈழத்தமிழர்களின்பால் அன்பும் மதிப்பும் கொண்ட அவர் போன்றவர்களை எதிர்ப்பதற்கு மனமற்று இருந்ததால் மௌனமாக இருப்பது மேல் என தொடர்ந்து எதுவும் கூறமல் இருந்து விட்டேன் இருப்பினும் அவர்களின் குறிப்பிட்ட அந்தப் போராட்டத்தில் என் போன்றவர்களுக்கு உடன்பாடில்லை. அதே கால கட்டத்தில்தான் தமிழ் நாட்டிற்குச் சொந்தமான ஒகேனக்கல் என்ற சுற்றுலா மையத்தை கன்னடர்கள் கைப்பற்றும் முயற்சி நடந்தது. இந்தத் தமிழ்த் தேசியவாதிகள் அதி முக்கியமான இந்த விடயத்தை விட்டு விட்டு முக்கியமில்லாத வேறு ஒன்றிற்காக போராடிக் கொண்டிருக்கிறார்களே என்ற வருத்தமும் எங்களைப் போன்றவர்களுக்கு எழுந்தது.

நீண்ட நெடுங்கதைகளில் கிளைக் கதைகளாக சில குறுங்கதைகள் வருவது போன்று அந்தப் போராட்டத்தில் இன்னுமொரு குறும் போராட்டம் ஓர் இடத்தில் நடை பெற்றது. நடிகைகளுக்கு சேலை வழங்கும் போராட்டம்தான் அது. அந்தப் போராட்டத்திற்கான விளக்கமும் அப்போது அளிக்கப் பட்டது. நடிகைகள் தமிழ் படங்களில் தமிழ் பண்பாடான சேலையை கட்டுவதில்லையாம் அதை உணர வைப்பதற்குத்தான் இந்தப் போராட்டமாம். உடுத்திய ஒரே ஆடையும் கிழிந்த நிலையில் இருக்கும் ஏழைப் பெண்களுக்கு அவைகளை கொடுத்திருந்தால் மனம் மகிழ்ந்திருக்கும். அது மட்டுமல்ல, ஆடை விலக்கல் காட்சிகளுக்கும் பாலியல் பலாத்காரக் காட்சிகளுக்கும் மிக மிக ஏதுவான ஆடை சேலைதான் என இயக்குனர்களான ஆண் திலகங்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கும் நிலையில் வெறும் நடிகைகளை மட்டும் குறைகூற முடியுமா?

இது போன்ற நிகழ்வுகள் மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் நான் சந்திக்கும் நண்பர்கள் பலரிடம் சேலை தொடர்பன பண்பாட்டு மயக்கம் இருந்து வருவதைப் பார்க்கிறேன். சேலை கட்டுவது கூடாது என்பது எனது வாதமல்ல. அது அதனைக் கட்டும் பெண்களின் விருப்பம் சார்ந்தது. மற்றிவர்கள் அதில் தலையிடத் தேவையில்லை. அழகுணர்ச்சி காரணமாக சேலையை பரிந்துரைப்பதையும் தவறென்று கூறமுடியாது. இதுதான் தமிழர் பண்பாடு என்று உரைக்கும்போதுதான் இடிக்கிறது. அதிலும் தங்களை வேட்டியிலிருந்து மேற்கத்திய உடைக்குள் மாற்றிக்கொண்ட ஆண்கள் இவ்வாறு பண்பாட்டுக் கூச்சல் போடும்போதுதான் இன்னும் இடிக்கிறது.

இதுதான் தமிழர் உடை என்று நாம் எதையும் வரையறுத்து கூற முடியாது. 'உண்பதும் நாழி உடுப்பதும் இரண்டே (புறநானூறு 189)' என்ற பாடலில் பழந்தமிழரின் உடை எவ்வகையானது எனத் தெரிகிறது. இருபாலருக்கும் பொதுவாகவே அது பொருந்துகிறது. இதன்படி பெண்கள் இடுப்பிலும் தோளிலும் இரு வேறு துண்டுகளை அணிந்து வந்திருக்கிறர்கள் என்றே கருத முடிகிறது. சிலப்பதிகாரத்திற்கு முற்பட்ட இலக்கியங்களில் மார்புக் கச்சை அணிந்ததற்கான சான்றுகளும் இல்லை. தற்போது பெண்கள் அணியும் சேலை போன்ற ஒன்றை அணிந்ததாகவும் எந்தச் சான்றுகளும் இல்லை.

அதற்கு பிற்பட்ட காலத்தில் புடவை என்ற நீளமான ஆடை பழக்கத்தில் வருகிறது. பாஞ்சாலி கதையில் வரும் துகில் எனப்படும் நீண்ட ஒற்றை ஆடையையே இது குறிக்கிறது. ஆனால் அதை ஆண்களும் அணிந்திருக்கிறார்கள் என்பதையும் இலக்கியங்களில் குறிப்பிடுகின்றன. திருநாவுக்கரசு நாயனார் சமண மடத்தை விட்டு வெளியேறும்போது

‘மெய் தருவான் நெறி அடைவார் வெண்புடைவை மெய்சூழ (1326-2)’

என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார். இவைகளை தற்போது ஆண்கள் அணிவது கிடையாது. தற்போது பெண்கள் சேலை அணியும்போது உடுத்தும் இரவிக்கை எனப்படும் மேலாடையானது மிகப் பிற்பட்ட காலத்தில்தான் நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக 15 ஆம் நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசு உருவாகியது. விஜய நகரப் பேரரசு தெலுங்கர்களின் அரசு. அதன் தாக்கத்தால் தமிழர்களின் உடையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இரவிக்கை எனப்படும் சொல்லும் தெலுங்குச் சொல்லே ஆகும். அதற்குப் பின்னர்தான் இரவிக்கை அணியும் பழக்கம் ஏற்பட்டது. விஜயநகரத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு என்று பலர் வினவலாம். ஓர் உண்மையை நாம் விளங்கிக் கொள்வது நல்லது. ஈழத் தமிழர்கள் மீது நடத்தப் பட்ட இராணுவப் படையெடுப்பு தமிழ் நாட்டுத் தமிழர்களை நேரடியாகத் தக்கியதில்லை. ஆனால் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மீது நடத்தப் பட்ட பண்பாட்டுப் படையெடுப்புக்களும் பிற மொழித் தாக்கங்களும் ஈழத் தமிழர்களையும் பாதித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் அன்றைய தமிழ் பெண்கள் இரவிக்கை அணிந்ததாக வரலாறு இல்லை. ஈழத்தில் சென்ற நூற்றாண்டின் தொடக்கம்வரை பெண்கள் இரவிக்கை அணியவில்லை. தமிழ் நாட்டின் சில கிராமங்களில் இன்னும் இந்தப் பழக்கம் இருக்கிறது. அதனைப்போன்று உள்ளாடையாக அணியும் பாவடையும் சென்ற நூற்றாண்டின்போதுதான் பழக்கத்திற்கு வந்திருக்கிறது. தெலுங்கர்களின் இறக்குமதியான இரவிக்கையை அணியமால் இருப்பதுதான் தமிழர் பண்பாடு என்ற முட்டாள்தனமான வாதத்தை நாம் இங்கு வைக்கவில்லை, அல்லது உடுப்பது இரண்டே என்ற புறநானூற்று வரிகளை பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படைவாதக் கருத்துக்களையும் சொல்லவில்லை. நாம் இங்கு விளக்க முயற்சிப்பது, உடை என்பது காலத்திற்கு ஏற்றவாறு மாற்றத்தை சந்தித்திருக்கிறது என்பதைத்தான். பட்டுச் சேலை என நாம் மங்களகரமாக முழங்குகிறோம் ஆனால் அந்தப் பட்டு கூட சீனர்களின் இறக்குமதிதான்.

அதனைப்போன்று ஆண்கள் வேட்டி உடுத்தும் போது அணியும் தைத்த மேலாடையும் ஐரோப்பியர்கள் மற்றும் அரேபியர்களின் வணிகத் தொடர்புகளால் ஏற்பட்டவையே. இன்று நாம் எதனைத் தமிழர் உடை என்று வரிசைப் படுத்துகிறோமோ அதில் பல அந்நிய கலப்புக்கள் உள்ளதை மறுக்க முடியாது.

காலநிலை வசதிக்கேற்றவாறு மனிதர்கள் உடை உடுத்திக் கொள்வது வழக்கம். தமிழர்கள் செறிந்து வாழ்ந்த ஈழமும் தமிழகமும் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள வெப்பமண்டலப் பகுதிகள். அதற்கு ஏற்றவாறு அவர்களின் உடை இருந்தது. வியர்வையை உறிஞ்சக் கூடய பருத்தி ஆடைகளை அவர்கள் அணிந்தார்கள் ‘பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன (125)’ என பெண்கள் பருத்தி நூல் நூற்ற செய்தியை புறநானூறு தெரிவிக்கிறது. அதைப்போன்று பனிபடர்ந்த வெளி நாடுகளில் அதற்கு ஏற்றவாறு உடுத்துகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் நம் தமிழ்ப் பெண்களும் அதற்கு ஏற்றவாறு ‘ஜீன்ஸ்’ போன்ற உடைகளை உடுத்துகிறார்கள். கோடைகாலங்களில் உடைகளை குறைத்துக் கொள்வதும் காலநிலை வசதிக்கேற்பவே. அதனைக் கண்டு பண்பாடு போகிறது எனப் பதறுவது பத்தாம் பசலித் தனமாக பிற்போக்குத்தனங்களே.

தற்போது சேலைகளிலும் பல கவர்ச்சிகரமான சேலைகள் வந்துவிட்டன. நவ நாகரீகம் கருதி இளம் பெண்கள் அதனை விரும்பி அணிகிறார்கள். அதுவும் அவர்களின் விருப்பம் சார்ந்தது. அதனையும் சிலர் பண்பாட்டு தளத்தில் நின்று குறை காண்கிறார்கள். அதே நேரம் சேலை அணியும் பெண்கள் பிற்போக்கானவர்கள் ஜீன்ஸ் அணியும் பெண்கள் முற்போக்கானவர்கள் என்ற அபத்தமான வாதத்தையும் நாம் இங்கு வைக்கவில்லை. முற்போக்கு, பிற்போக்கு போன்றவையும் பெண்விடுதலை என்பதும் சேலையில் தங்கியிருக்கவில்லை. நாம் இங்கு கூறிக் கொள்ள முனைவது நாகரீகமாற்றத்திற்கும் காலநிலை வசதிக்கும் ஏற்றவாறு உடைகளை மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதைத்தான். மேலும் வலியுறுத்திக் கூறிக்கொள்வது என்னவெனில் தமிழரின் மொழிப்பற்று, தேசியப் பற்று, விடுதலைப் பற்று போன்றவைகள் சேலையிலும் வேட்டியிலும் பொட்டிலும் பூவிலும் தங்கியிருக்கவில்லை என்பதைத்தான்.

தமிழ் பற்றாளரும் தமிழீழ விடுதலை ஆதரவாளருமான சுபவீ அவர்கள் இதுநாள் வரையிலும் தான் திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போதுகூட வேட்டி அணிந்ததில்லை என்றும் அதனால் பலர் குறைபட்டுக் கொண்டனர் என்றும் கூறியிருந்தார். தமிழீழத்தில் அரசியல் துறையில் இருக்கும் பெண்கள்கூட அவர்களின் வேலை வசதிக்கு ஏற்றவாறு மேற்கத்திய உடைகளைத்தான் அணிந்து கொள்கிறார்கள்.

இந்த உலகில் உடை, நடை, நாடு, நகரம், கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம் என அனைத்துமே மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டுதான் முன்னேறியிருக்கின்றன. மாற்றம் என்பது மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளுக்கும் தேவையான ஒன்று. மத அடிப்படைவாதிகள் கடைப்பிடிக்கும் வெறித்தனமாக கொள்கைகளை நாம் தமிழின் பெயரால் கடைப்பிடிக்கக் கூடாது. தனக்குள்ளேயே பல மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டதுதான் நம்முடைய தமிழ் மொழி. இலக்கணங்களும் தமிழ் எழுத்துருக்களுமே மாற்றியமைக்கப் பட்டுள்ளன.

பேராசான் கார்ல் மார்க்சின் வரிதான் நினைவுக்கு வருகிறது. ஆம், மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நெடுங்கதைகளில் கிளைக் கதைகளாக சில குறுங்கதைகள் வருவது போன்று அந்தப் போராட்டத்தில் இன்னுமொரு குறும் போராட்டம் ஓர் இடத்தில் நடை பெற்றது. நடிகைகளுக்கு சேலை வழங்கும் போராட்டம்தான் அது. அந்தப் போராட்டத்திற்கான விளக்கமும் அப்போது அளிக்கப் பட்டது. நடிகைகள் தமிழ் படங்களில் தமிழ் பண்பாடான சேலையை கட்டுவதில்லையாம் அதை உணர வைப்பதற்குத்தான் இந்தப் போராட்டமாம். உடுத்திய ஒரே ஆடையும் கிழிந்த நிலையில் இருக்கும் ஏழைப் பெண்களுக்கு அவைகளை கொடுத்திருந்தால் மனம் மகிழ்ந்திருக்கும். அது மட்டுமல்ல, ஆடை விலக்கல் காட்சிகளுக்கும் பாலியல் பலாத்காரக் காட்சிகளுக்கும் மிக மிக ஏதுவான ஆடை சேலைதான் என இயக்குனர்களான ஆண் திலகங்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கும் நிலையில் வெறும் நடிகைகளை மட்டும் குறைகூற முடியுமா?

என்னங்க! எந்த நடிகையாவது தான் சேலையணிந்து நடிக்க மாட்டேன் என வம்புபண்ணியதுண்டா? இவர்கள் விலாசம் மாறி சேலையைக் கொண்டுபோய் நடிகைக்கு கொடுத்தால் அது எப்படிச் சரியாகும். அவர்கள் கொடுத்திருக்க வேண்டியது விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குனருக்கே.

சென்ற 1975ம் ஆண்டளவில்கூட சாதாரணமாக ஓர்ஈழத்துப் பெண் தனது பெண்குழந்தை வளர்ந்து வர,வர இயல்பாகவே தனது ஆடை,அலங்கார, மற்றும் அணிமணிகளில் ஒவ்வொன்றாகக் குறைத்துக்கொண்டு வருவது வழமையானது. இப்படியே போய் குழந்தை பருவமடைந்து, பின் திருமணமாகி பிள்ளைபெற்று அந்தப் பேரப்பிள்ளையும் வளர்ந்து குமராவரும்போது இந்தப் பெண் தான் இரவிக்கையணிவதைக்கூட விட்டிருப்பாள். இதை நாம் பரவலாக எல்லாக் கிராமங்களிலும் காணலாம்.

இவர்களுக்காகவே நல்ல நீலம், பச்சைகளில் ஓரங்குல கரைமட்டும் பொன் வண்ணத்தில் வைத்து லங்காச் சீலையென எல்லாப் புடவைக்கடைகளிலும் கிடைக்கும். வீடுகளுக்கும் வியாபாரிமார் கொண்டுவருவர்.

சந்தைகளில் வியாபாரம் செய்யும் ஆச்சிமார்கூட இச் சீலைகளில் அழகாக பின் கெசுவம் வைத்துக் கட்டிக்கொண்டு முன்னால் மார்பைமறைத்து நன்றாகச் சுற்றிக் கட்டியிருப்பர். நன்றி இளங்கோ. வாழ்த்துகள்... .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது சில கருத்துகளில் நான் உடன்படவில்லையாயினும் அதைப் பதிவிடப் போதுமான தரவுகள் என்னிடம் இல்லாததாலும் மேலும் முக்கியமாக நேரமின்மையாலுமே அவற்றைத் தவிர்த்து விடுகின்றேன். மற்றும்படி சாய்ந்த கோபுரம் நன்று!!!! :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவுக்கு நன்றி சுவி

நீங்கள் உடன் படாத விடயங்களை சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

19. சைவமும் தமிழும்

"எந்த நூலானாலும் குற்றமிருக்குமானால் அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது. நமக்கு கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைகொண்டு ஆராய்வோம், கடவுள் எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழையிருக்குமானால் அதனையும் தள்ள வேண்டியதுதான்... பெரியபுராணத்தில் கூறப்படும் மனுஸ்மிருதி இப்பொழுது உள்ளதுதான் எனக்கூறினால் சேக்கிழாருக்கும் பிராமணருக்கும் சம்பந்தம்முண்டென்று கூறுவதைத் தவிர வேறென்ன செய்வது? வேதத்தில் பிழைகள் இருக்கலாம் திருத்தவேண்டியதுதான். சைவத்திலும் அப்படியேதான்" - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்

அப்போது எனக்கு சுமார் ஏழு வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். சைவ சமயப் பாடப்புத்தகத்தில் வரும் கதைகளை விரும்பிப் படிப்பது வழக்கம். அதுவும் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு முன் அவற்றைப் படித்துக் கட்டுவதில் சற்று கூடுதல் விருப்பம். ஏனெனில் பாடப் புத்தகங்களில் இல்லாத சைவம் தொடர்பான மேலதிகக் கதைகளை அவர்கள் சுவைபடச் சொல்லுவார்கள். ஒரு நாள் வீட்டிலிருந்த எனது உறவினர் ஒருவரிடம் அவ்வாறு படித்துக்காட்டிக் கொண்டிருந்தேன். அவரும் சைவத்தைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் சைவ சமயம் நல்ல சமயம் என்றால் கெட்ட சமயம் எது தாத்தா என கேட்டேன். அவர் சமணம் என பதிலளித்தார். அவரது பதில் அந்த வயதில் எனக்குள் எந்த விதமான மாற்றுக் கருத்தையும் ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. இன்று அவர் போன்றவர்களால் தூற்றப் பட்ட சமணம் எத்தகைய உயர்ந்த கோட்பாடுகளை தமிழர்களுக்கு கற்பித்திருக்கிறது என்பதனை நினைத்துப் பார்க்கிறேன்.

நம்மில் பலர் பக்தி, சமயநம்பிக்கை போன்ற வட்டத்திற்குள் வாழ்பவர்கள். பக்தியும் சமயநம்பிக்கையம் உணர்ச்சியின் பாற்பட்டவை. அதன் விளைவாக தன் சமயமே சிறந்தது என்ற கருத்தும் அவர்களுக்கு வந்து விடுகிறது. தங்களின் சமய நூல்களில் கூறப்பட்டவைகளை எவ்வித ஆய்விற்கும் உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். அனைத்து சமயத்தினருக்கும் இது பொருந்தும். சமய நூல்கள் மீது விமர்சனங்களை வைத்தால் சீறி விழுவார்கள். அந்த அடிப்படைவாதம்தான் சகிப்புத்தன்மையற்ற வெறியாக ஒரு சிலருக்கு மாறுகிறது. இந்த வட்டத்திற்குள்ளிருந்து விடுபட்டு சமயச் சார்பு அற்று, அறிவுத் தளத்திலிருந்து நாம் சமயங்களை ஆராய்ந்தால் பல உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியும். நாம் தழுவியிருக்கும் சமயங்களில் உள்ள குறைபாடுகளும் நமக்கு புரியும். அப்படி ஒரு தளத்திலிருந்து தமிழர் தழுவிய சமயங்களை ஆராய்ந்த போதுதான் ஒர் உண்மையைத் தெரிந்து கொண்டேன்.

சைவமும் தமிழும் என்றும் சைவம்தான் தமிழை வளர்த்தது என்றும் நம்மில் பலர் பெருமையாக முழங்குகின்றனர். தமிழின் இனிமையை மாணிக்கவாசகர், சேக்கிழார் போன்ற சைவப் புலவர்கள் தங்கள் பாடல்களில் உணர்த்தியிருக்கின்றனர் என்பது உண்மைதான் ஆனால் அவர்களின் நோக்கம் சைவத்தை உயர்த்தும் பொருட்டு இருந்ததேயன்றி தமிழை உயர்த்தும் பொருட்டு அல்ல. உண்மையில் தமிழ் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியச் சிறப்பிற்கும் இலக்கணச் செழுமைக்கும் சமணத்துறவிகள் ஆற்றிய பங்கு அளப் பெரியது. சமணர்கள் படைத்த தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்பிற்குக் காரணம் அவைகள் சைவ இலக்கியங்கள் போன்று தனிப்பட்ட சமய உயர்வை வெளிக்காட்டமால் மொழி நலன், சமூக நலன் போன்றவற்றை வெளிக்காட்டி நிற்பதேயாகும். சமணம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளுக்கு முன் தமிழர்களின் சமயம் எது என்பதைப் பார்ப்போம்.

இதுதான் தமிழர்களின் சமயம் என்று நாம் எதனையும் வரையறுத்துக் கூறிவிட முடியாது. ஒவ்வொரு கால கட்டத்திலிலும் அவர்கள் ஒவ்வொன்றை பின்பற்றியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

கடவுள் மனிதனைப் படைத்தானா இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் இத்தனையாயிரம் கடவுள்களையும் மனிதன்தான் படைத்தான் என்பதை மறுக்க முடியாது. தாங்கள் வாழ்ந்த மரபு, நாகரிகம், பழக்கவழக்கத்திற்கு ஏற்ப அவர்களின் கடவுள்களும் இருந்திருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தை எடுத்துக் கொண்டால்; அன்றைய சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்ததால் பெண்தெய்வ வழிபாடே முதன்மை வகித்தது. தமிழர்களின் மிகத் தொன்மையான வழிபாடாக நாம் இதைக் கருதலாம். பண்டைய தமிழ் இலக்கியங்கள் இதையே கொற்றவை எனக் குறிப்பிடுகின்றன. இன்று நமக்கு கிடைத்திருக்கும் தமிழ் நூல்களில் மிகவும் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில் தமிழர்களால் வணங்கப்பட்ட தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. முருகன், கொற்றவை, திருமால், ஞாயிறு போன்ற தெய்வங்களை தமிழர் வழிபட்டனர் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

உண்மை என்னவென்றால் அதில் சிவ வழிபாடு எந்த இடத்திலும் இல்லை. தொல்காப்பியத்தில் உள்ள "சேயோன் மேய மைவரை உலக" என்ற வரியில் வரும் சேயோன் என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். உண்மையில் அந்த வரி சிவனைக் குறிக்கவில்லை. அது முருகனைக் குறிப்பதாகாகும். முருகன் சிவனின் மகன்தானே ஆதலால் அவரும் சைவக் கடவுள்தானே என சிலர் நினைக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல. தொல்காப்பியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. அதில் குறிஞ்சி நில மக்களின் தலையாய தொழில் வேட்டையாடுவது. அவர்களின் தெய்வமாகவே முருகன் என்பவர் குறிப்பிடப் பட்டிருக்கிறார். பிற்காலத்தில் புனையப் பட்ட புராணங்கள் எங்கிருந்தோ வந்த வாதாபி கணபதிக்கு அவரை தம்பியாக்கியது போல்தான் முருகன் சிவனுக்குப் பிள்ளையாக்கப்பட்டார். சிவனைப் பற்றிய குறிப்புகள் முதன் முதலாக கடைச் சங்ககாலத்து நூல்களில்தான் குறிப்பிடப் படுகிறது. இருப்பினும் அப்போது சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சைவம் என்ற பெயரில் ஒரு சமயம் இயங்கவில்லை.

அடுத்து தமிழர் வழிபாடுகளில் நடுகல் வழிபாடு மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றது. களத்தில் வீரச் சாவை தழுவிக் கொண்ட மறவர்களின் நினைவாக நடுகல் நடும் வழிபாட்டையே இது குறிக்கிறது. ஆனால் அந்த வழிபாடுகள் சமய மரபுகளாக அடையாளம் காணப்படவில்லை.

சங்க இலக்கியங்களை மிக நுணுக்கமாக ஆராயும் பொழுது பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் கபாலிகம், வைதீகம், ஆசிவகம் என மூன்று வகையான சமயங்கள் குறிப்பிடப் படுகின்றன. இதில் ஆசிவகம் எனப்படுவது தமிழர்கள் தழுவிய சமயங்களில் மிகத் தொன்மையான சமயமாக கருதப் படுகிறது. ஆம் சைவத்தை தமிழர்கள் தழுவிக்கொள்ளும் முன்பே ஆசிவகத்தை பெருவாரியான தமிழர்கள் தழுவிக்கொண்டு விட்டார்கள். கடவுள் மறுப்பு, வருணாசிரம எதிர்ப்பு, வேத எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளைக் கொண்ட ஒன்றாகவே ஆசிவகம் விளங்கியிருக்கிறது. ‘அண்ணலம் பெருந்தவத்து ஆசிவகம்’ என சிலப்பதிகாரமும் கூறுகிறது. ஒரு காலத்தில் தமிழர்களால் போற்றித் தழுவப்பட்ட ஆசிவகம் இன்று அழிந்து போய்விட்டது.

தமிழர்களின் மதமாக வருணிக்கப் படும் சைவம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நிறுவனப் படுத்தப் படுகிறது. பெருவாரியான தமிழர்கள் அதற்குப் பின்னர்தான் அதனைத் தழுவிக் கொண்டார்கள். ஆசிவகத்திற்குப் பின்னும் சைவத்திற்கு முன்னும் இருந்த இடைப்பட்ட காலத்தில் பெருவாரியான தமிழர்களால் தழுவப்பட்டு மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்த இரு பெரும் சமயங்கள்தாம் பௌத்தமும் சமணமும். பௌத்தத்தையும் சமணத்தையும் பின்னாளில் வந்தவர்கள் மதமாக வரித்துக் கொண்டாலும் உண்மையில் அவை மதங்கள் அல்ல. அவை கடவுளை அடிப்படையாகக் கொள்ளாமல் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. வன்முறைக்கு எதிரானவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பௌத்தமும் சமணமும் தமிழர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவியது. மணிமேகலை, குண்டலகேசி போன்றவைகள் தமிழில் தோன்றிய பௌத்த இலக்கியங்களே. தமிழ்க் காப்பியமான மணிகேலைக்கு நிகரான ஒரு பௌத்த நெறிக் காப்பியம் வேறு எந்த மொழிகளிலும் இல்லை எனலாம்.

பௌத்தத்தைக் காட்டிலும் தமிழோடு மிக அதிகமாக தொடர்புற்றிருந்த ஒன்றாக சமணம் கருதப் படுகிறது. தமிழர்கள் மத்தியில் சைவம் எழுச்சிபெறத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை பார்த்தால் அதன் காலம் சுமார் 1400 ஆண்டுகள், ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் தனிப்பெரும் சமயமாக சமணம் விளங்கியிருக்கிறது. தமிழ் மொழிக்கு புது இரத்தம் பாய்ச்சியவர்கள் சமணத் துறவிகளே. தமிழ் மொழியின் இலக்கணங்களை எல்லாம் வகுத்தவர்களும் அவர்கள்தாம். இன்று தமிழர்களால் போற்றப் படும் பெருவாரியான நூல்களைப் படைத்தவர்களும் அவர்களே.

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் போன்ற தமிழ் இலக்கிய கருவூலங்களில் சமணர்களின் பங்குதான் மிக அதிகமாக உள்ளது. தமிழ் தேசியக் காப்பியம் என மீனாட்சிசுந்தரானார், ம.பொ.சி., அண்ணா, கலைஞர், கழக கைலாசபதி மற்றும் பல தமிழறிஞர்களால் போற்றப் பட்ட சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் ஒரு சமணத் துறவி. அதே ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவர் ஒரு சமணத் துறவி. இன்று நாம் தமிழ் மொழிக்கு எந்த இலக்கணத்தை பயன் படுத்துகிறோமோ நன்னூல் எனும் அந்த தமிழ் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் ஒரு சமணர். நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என திருக்குறளோடு இணைத்துப் போற்றப் படும் நாலடியாரை எழுதிய நூற்றவரும் சமணத்துறவிகளே. ஐம்பெருங் காப்பியங்களைப் போல் ஐஞ்சிறுங்காப்பியங்கள் தமிழில் உள்ளன அவையாவன உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி. இவை ஐந்தையும் படைத்தவர்கள் சமணர்களே. மேலும் வளையாபதி, ஏலாதி, பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம், பெருங்கதை என அவர்கள் படைத்த தமிழ் இலக்கியங்களின் பட்டியல் நீளுகின்றன.

இவ்வளவு ஏன் தமிழர்களின் மாபெரும் செல்வமான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் தழுவியிதும் சமணமாகத்தான் இருந்திருக்க முடியும் என தமிழாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சென்ற நூற்றாண்டின் சிறந்த தமிழாராய்ச்சியாளர்களில் ஒருவரான எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் வள்ளுவர் சமணரே என தனது ஆய்வுகளில் நிறுவியுள்ளார். அவரது கருத்தை ஒட்டி சமகால கட்டுரையாளரும் தீவிர இடது சாரி முற்போக்காளராகக் கருதப் படும் அ.மார்க்ஸ் மற்றும் கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றவர்கள் வள்ளுவர் சமணரே என்பதை அண்மையில் நிறுவியிருக்கின்றனர்.

சமணம் தமிழ் மண்ணில்தோன்றிய மார்க்கம் அல்ல. அது தோன்றியது வடநாட்டில்தான். ஆகையால் தமிழ் இலக்கியங்களை படைத்தவர்களும் தமிழ் மண்ணிற்கு அந்நியமானவர்கள் என்று நாயன்மாரல் விதைக்கப் பட்ட கருத்தை நம்புகிறவர்கள் இன்றும் உள்ளனர். அந்தச் சமணர்கள் வேறு யாருமிலர் பச்சைத் தமிழர்களே! இன்னும் ஒரு முக்கியமான விடயத்தை நாம் அவதானிக்கலாம். சைவர்களால் படைக்கப் பட்ட இலக்கியங்களில் சமணத்திற்கு எதிரான காழ்புணர்ச்சி பல இடங்களில் காணப் படுகிறது. பெரிய புராணத்தில் அது மிக அதிகமாகவே காணப் படுகிறது. சமணத் துறவிகளிகளின் படைப்புக்களிலோ அவை இருக்கவில்லை.

சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் சமயப் பொதுவுடமை அங்கே நிலவுகிறது. தன் சமயத்தை புகழ்ந்து இன்னொரு சமயத்தை இகழும் தன்மை இளங்கோவடிகளிடத்தில் காணப்படவில்லை. சமண சமயத்தைச் சேர்ந்த கண்ணகிக்கு சைவ சமயத்தை சேர்ந்த சேரன் செங்குட்டுவன் சிலை எழுப்பினான் அதிலும் தமிழைப் பழித்த கனகன், விசயன் என்ற வடநாட்டு மன்னர்களை போரிட்டு வென்று, இமயத்தில் இருந்து கல்லெடுத்து அதனை தமிழைப் பழித்த தருக்கர்களின் தலையில் சுமக்க வைத்து கண்ணகிக்கு சிலை எழுப்பினான் என்ற செய்தியை இளங்கோவடிகள் வருணிக்கும்போது சமய உணர்வுகள் பின் தள்ளப் பட்டு தமிழ் உணர்வே மேலோங்கி நிற்கின்றது.

தேவாரம் திருவாசகம் போன்றவற்றை நாம் சைவ இலக்கியங்கள் என வகைப் படுத்த முடியும். ஆனால் சிலப்பதிகாரம், நன்னூல், சீவக சிந்தாமணி போன்ற நூல்களை நாம் சமண இலக்கியங்கள் என வகைப் படுத்த முடியாது. அவற்றை சமண இலக்கியங்கள் என்று சொல்வதைக் காட்டிலும் சமணத் துறவிகள் படைத்த தமிழ் இலக்கியங்கள் என்பதே சரியானது. சமணம் கற்பித்த அன்பு, அறம், சமத்துவம் போன்ற கொள்கைகளை அவர்கள் தமிழ் இலக்கியங்களில் வலியுறுத்தினாலும் அவை சமூக நன்மையின் அடிப்படையில்தான் சொல்லப்பட்டிருக்கின்றனவே தவிர தனிப் பட்ட சமய உயர்வைக் குறிக்கவில்லை. சைவர்களின் இலக்கியங்கள் பக்தி மார்க்கத்திற்குள் முடங்கிவிட்டன. அறிவியல், அணுவியல், கணிதம், மருத்துவம் என சமணர்களின் இலக்கியங்கள் பல கூறுகளைத் தொட்டது. நீதியியல் எனப் படும் புது இயல் அவர்களால்தான் தமிழுக்கு அறிமுகப் படுத்தப் படுகிறது. புலால் உண்ணுவதும் மது அருந்துவதும் பரத்தையர் தொடர்பும் சங்க இலக்கியங்களில்கூட கண்டிக்கப் படவில்லை அவற்றைக் கடுமையாகக் கண்டித்தவர்கள் சமணத் துறவிகளே.

தமிழர்களின் கல்வி மேம்பாட்டிற்கு சமணத்தின் பங்கு அளப்பெரியது. பிறப்புக்கு ஒரு நீதி என்ற வைதீக மதம் (இந்த வைதீக மதம்தான் பின்னாளில் இந்து மதமாக நீட்சி பெற்றது.) கற்பித்த வேதாந்தங்களை மறுத்து கல்வியை அனைவருக்கும் சமமாக்கியவர்கள் அவர்களே. ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவதைப்போல் சமணத் துறவிகள் கல்வியையே தானமாக வழங்கினார்கள். அச்சு இயந்திரம் இல்லாத அந்தக் காலத்தில் ஓலைச் சுவடிகளில் எழுதுவது என்பது மிகக் கடினமாக பணியாகும். நேரமும் பொருளும் மிக அதிகமாக விரயமாகும். இருப்பினும் ஆயிரக்கணக்கான பிரதிகளை கைகளாலேயே எழுதி அவற்றை பலருக்கு தானமாக வழங்கினார்கள். கல்வி கற்கும் இடத்தை இன்றும் நாங்கள் பள்ளிக்கூடம் என்கிறோம் அந்தப் பள்ளி என்ற சொல் சமணத் துறவிகள் தங்கியிருந்த மடமாகிய ‘பள்ளி’ என்பதில் இருந்து வந்த ஒன்றாகும். அதனைப்போன்று ஓளடததானமும் அவர்களால் வழங்கப்பட்டு வந்தது. தங்களது மடங்களில் இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார்கள். இவ்வாறு தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய செல்வாக்குடன் வாழ்ந்த சமணம் இன்று தமிழகத்தில் அற்ப சொற்ப எச்சங்களுடன்தான் எஞ்சி நிற்கின்றது. ஈழத்தில் அதுவும் இல்லை. இதன் மாபெரும் வீழ்சிக்கு என்ன காரணம்?

நடைமுறை வாழ்விற்கு சற்றும் பொருந்தாத கடுமையான துறவறத்தை வலியுறுத்தியதுதான் காரணம் என பலர் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. சமணம் இல்லறத்தை துறவறத்திற்கு இணையாக சேர்த்துப் போற்றிய ஒரு மார்க்கம். அ.மார்க்ஸ், கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றவர்களின் கருத்துப்படி வள்ளுவரை ஒரு சமணராகக் கருதுவோமானால் அவரது காமத்துப்பாலானது கண்களால் ஏற்படும் பார்வை மயக்கத்திலிருந்து உடலால் ஏற்படும் கலவி மயக்கம் வரை இல்லற வாழ்வின் எந்த சுகத்தையுமே விட்டு வைக்கவில்லை. திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணியானது காதல் இன்பம் சொட்டும் ஒரு காவியம். அது உள இன்பத்தை மட்டும் விளக்கவில்லை உடல் இன்பத்தையும் சேர்த்துத்தான் விளக்குகிறது. சமணத் துறவிகள் வெள்ளாடை அணிந்து வந்தனர். அவர்களிலும் மிகக் குறிப்பிட்ட சிலரே துறவறத்தின் அதி உச்ச நிலையாக, ஆடைகூட மிகை என அதனையும் துறந்தனர். நமது தமிழ்ப் புலவர்களான இளங்கோவடிகள், திருத்தக்கதேவர், பவணந்தி முனிவர் போன்றவர்கள் அப்படி ஓர் அதி உச்சத் துறவை மேற்கொண்டார்கள் என்பதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. மற்றும்படி சமணத்தைத் தழுவியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் துறவே சரணம் என்று வாழ்க்கையைத் தொலைக்கவில்லை. திருமணம் முடித்து குடும்பம், குழந்தைகள், காதல், பாசம், ஆடல், பாடல் என வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்துச் சென்றவர்கள்தாம்.

அப்படியானால் சமணத்தின் வீழ்ச்சிக்கு என்னதான் காரணம்? அது திட்டமிட்டு அழிக்கப் பட்டது என்பதுதான் உண்மை. அந்த அழிப்புப் படலங்கள்தான் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களில் விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளன. சைவத்தைத் தழைத்தோங்கச் செய்வதற்காக சமணத்தைத் தழுவியிருந்த எண்ணாயிரம் தமிழர்கள் துடிக்கத் துடிக்க கழுவில் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப் பட்டனர். சமணர்கள் மட்டுமல்ல அவர்களது இலக்கியக் கருவூலங்கள் அனல் புனல் வாதம் என்ற பெயரில் அழித்தொழிக்கப் பட்டன. இவை பெரிய புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள். அவற்றுள் குறிப்பிடப்படாமல் துடைத்துத் தள்ளப்பட்ட சமணர்களும் அவர்களின் இலக்கியங்களும் ஏராளம். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நாலடியார் போன்றவைகள் தப்பிப் பிழைத்ததே பெரிய விடயம்.

சமணப் பள்ளிகள் இடிக்கப் பட்டன, அவர்களது நிலபுலன்கள் கவரப்பட்டன, யானைகளைக் கொண்டு அவர்களது தலைகள் இடறப்பட்டன. சமணத்தை அழிப்பதற்கு சைவம் எவ்வாறு ஆவேசத்துடன் இருந்திருக்கிறது என்பதை சைவ அடியார்களின் பதிகங்களே நமக்கு சான்று தருகின்றன.

"பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேயமண் தெண்ணற் கற்பழிக்கத் திருவுளமே" - திருஞான சம்பந்தர்

"அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் சிரங்களை சிந்தவாது செயத் திருவுள்ளமே" - திருஞான சம்பந்தர்

"குண்டரைக் கூறையின்றித் திரியும் சமண சாக்கிப்பேய்’’ - சுந்தர மூர்த்தி நாயனார்

"புலையறம் பேசும் புத்த சமணர்களின் தலையறுக்க வேண்டி நின் தாழ் பணிந்தேனே". - சேக்கிழார்

"விருது பகரும் வெஞ்சொல் சமணர் வஞ்சகச் சாளுக்கியர்" - மாணிக்கவாசகர்

சமணத்தின் மீது சைவம் காட்டிய இத்தகைய காழ்புணர்ச்சிக்கு என்ன காரணம்? சமணம் வேதங்களையும் யாகங்களையும் அடியோடு மறுத்துரைத்ததுதான் காரணம். அப்படி மறுத்துரைப்பதற்கு அவைகளில் என்னதான் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அவற்றுள்தான் எல்லாமே இருக்கிறது. வேதங்கள் பிறவி ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தன, உழைக்கும் மக்களை உதறித்தள்ளி உழைக்காமல் பூணூலையும் தர்ப்பைப் புல்லையும் காவித்திரியும் கூட்டத்திற்கு முழு உரிமைகளையும் அளித்தன. யாகங்களில் வளர்க்கப்படும் ஓமத்தீயில் உயிர்கள் வெட்டிப் பலியிடப் பட்டன. சைவம் இவைகளை ஏற்றுக் கொண்டது. சமணம் இவைகளைக் கண்டித்தது. இந்த ஒரு காரணத்திற்காகத்தான் சமணம் துடைத்துத் தள்ளப்பட்டது.

சமணம் ஒருவேளை தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்திருக்குமேயானால் அது கற்பித்த சமத்துவத்தின் விளைவாக தமிழர்கள் மத்தியில் சாதிகள் இல்லாமல் போயிருந்திருக்கக் கூடும். ஏனெனில் சுமார் 14 நூற்றாண்டுகளாக தமிழ் மண்ணில் தழைத்தோங்கியிருக்கும் சைவம் சாதியத்திற்கு எதிராக எந்த விதிகளையும் வகுக்கவில்லை. பிறிவி ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் பார்ப்பனியத்தை அது ஏற்றுக் கொண்டது. ஆதனால்தான் இந்து மதம் பார்ப்பன ஆதிக்கத்திற்கு வழி வகுத்தது போல் சைவமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. சைவம் பார்ப்பனியத்தை உள்வாங்கிக் கொண்டதால் சைவமும்; வேதமதமாகிய இந்து மதமும் ஒன்றென்றோ அல்லது வரலாற்று அடிப்படையில் இரண்டிற்கும் தொடர்பு உண்டு என்றோ கூறமுடியாது. வேதமதத்தை எதிர்து நின்ற பௌத்தத்தையும் சமணத்தையும் சைவம் எதிர்த்ததால் அதுவும் இந்து மதத்தின் பிரிவுகளில் ஒன்று என்று கதை கட்டி விடப் பட்டது. பின்னாள்களில் அதற்கு ஏற்றவாறு புராணக் கதைகளும் புனைந்து விடப்பட்டன.

என்னதான் சைவம் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டாலும் பார்ப்பன மேலாதிக்கமானது சைவத் திருமுறைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான் தமிழன் கட்டிய கோவில்களில் தமிழனின் தாய் மொழியை புறந்தள்ளி புரியாத மொழியான சமஸ்கிருதத்தில் பூசை செய்யும் அவலம் தொடர்கின்றது. சைவம் பார்ப்பனியத்தையும் பிறவி ஏற்றத் தாழ்வுகளையும் ஏற்றுக் கொண்ட ஒன்றுதான் என்பதை தமிழறிஞரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பலோட்டியவருமான வ.உ.சிதம்பரனார் அவர்களும் வெளிப்படுத்தியிருக்கிறார். வ.உ.சி. பின்வருமாறு கூறுகிறார்.

"எந்த நூலானாலும் குற்றமிருக்குமானால் அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது. நமக்கு கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைகொண்டு ஆராய்வோம், கடவுள் எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழையிருக்குமானால் அதனையும் தள்ள வேண்டியதுதான்... பெரியபுராணத்தில் கூறப்படும் மனுஸ்மிருதி இப்பொழுது உள்ளதுதான் எனக்கூறினால் சேக்கிழாருக்கும் பிராமணருக்கும் சம்பந்தம்முண்டென்று கூறுவதைத் தவிர வேறென்ன செய்வது? வேதத்தில் பிழைகள் இருக்கலாம் திருத்தவேண்டியதுதான். சைவத்திலும் அப்படியேதான்"

வ.உ.சி நாத்திகரல்ல சைவப் பராம்பரியத்திலிருந்து வந்தவர்தான். சைவத்தின் குறைகளை அவரும் வெளிக்காட்டியுள்ளார்.

சைவம் உயிர்க் கொலைகளை அன்று ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறியும்போது நம்மில் பலர் அதிர்ச்சி அடையவே செய்வார்கள் ஏனெனில் இன்றைய காலத்தில் சைவம் என்றால் அது மச்சம் மாமிசம் தவிர்த்த ஒன்றாகவே கருதப்படுகிறது. புலாலை கடுமையாக மறுக்கும் ஒன்றாகவே அது இன்று காட்டப்பட்டு வருகிறது. சைவத்திற்குள் இந்த மறுமலர்ச்சி எப்படி ஏற்பட்டது?

சமணத்தின்மீது சைவம் மேற்கொண்ட கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து சமணத்தைத் தழுவியிருந்த பல தமிழர்கள் சைவர்களாக மாறினர். இருப்பினும் அவர்கள் சமணக் கொள்கைகளைக் கைவிடவில்லை. அந்தக் கொள்கைகள் நாளடைவில் சைவத்திற்குள் புகுந்தன. மிகைப் படுத்தப் பட்ட செய்தியாகத் தோன்றினாலும் அதுதான் உண்மை. ஏனெனில் சங்க காலத்தில் தமிழர்களால் வணங்கப் பட்ட முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு ஆடு, கோழி போன்றவைகள் உணவாகப் படைக்கப் பட்டுள்ளன என்பதை சங்க இலக்கியங்களே எடுத்துக் காட்டுகின்றன. ஊன் உண்ணாமை என்பது சமணம் வகுத்த கொள்கையே. கொல்லாமை என்பது பௌத்தம் மற்றும் சமணத்தின் உயிர் நாடிக் கோட்பாடுகள். அதிலும் கொல்லாமையோடு சேர்த்து ஊன் உண்ணாமையையும் மிக அதிகமாக வலியுறுத்தியது சமணம் மட்டுமே. மேலும் பௌத்தத்தைக் காட்டிலும் சமணம் பல ஆண்டுகள் தொன்மையானது. இதிலிருந்து இந்தக் கோட்பாடானது சமணம் கற்பித்த ஒன்றுதான் என்பது தெளிவாகிறது.

மேலும் ஒரு உண்மையை நாம் விளங்கிக் கொள்வது நல்லது. காய்கறி உணவானது சமணம் செழிப்புற்றிருந்த காலத்தில் சைவ உணவு என அழைக்கப் படவில்லை. அப்போது மரக்கறி உணவானது ஆருகத உணவு என்றே அழைக்கப் பட்டது. இந்த ஆருகதம் எனப்படுவது சமணத்தின் மற்றுமொரு பெயர் ஆகும். சைவ இலக்கியங்கள் சமணர்களை அருகர் எனப் பழித்ததும் இதே பொருளில்தான். இதே மரக்கறி உணவை இன்றும் ஒரு சிலர் ஆராத உணவு என்று அழைப்பதை நாம் அறியலாம். இது ஆருகாதம் என்பதின் திரிபேயாகும்.

இவ்வாறு தமிழர் வாழ்வில் அவர்தம் கல்வி, இலக்கியம், பண்பாடு, உணவுப் பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் சமணத்தின் பங்கு மிக அதிகமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

சைவம்தான் தமிழரின் சமயம் என்று ஆண்டாண்டு காலம் கூறி வந்த கருத்தை மறுத்துரைப்பதால் சமணம்தான் தமிழரின் சமயம் என நாம் இங்கு கூற வரவில்லை. தமிழரின் அடையாளத்தை நாம் சமயத்தோடு பிணைத்து விடக் கூடாது என்பதைதான் இங்கு எடுத்து இயம்புகின்றோம். தமிழர்களுக்குத் தமிழ்தான் அடையாளம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமயத்தை அவர்கள் பின் பற்றி இருக்கிறார்கள். அவ்வாறு பின் பற்றிய சமயங்களில் சமணத்தின் பங்கு போற்றுதலுக்குரியது. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதிய கிறிஸ்தவப் பாதிரியாரும் மேலை நாட்டு அறிஞருமான கால்டுவேல் அவர்கள் பின்வருமாறு கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

‘சமணர்களின் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம்’.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20. கஷ்மீர் யாருக்குச் சொந்தம்?

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலண்டனில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அந்த இரு பெண்களும் அறிமுகமானார்கள். அதில் ஒருவரை தமிழ்ப் பெண் என ஊகிக் முடிந்தாலும் வழக்கமாக எல்லோரும் கேட்கும் எந்த நாடு என்ற கேள்வியைக் கேட்டேன். அவர் சிறிலங்கா என்றார். அவருடைய தோழியாக இருக்கும் மற்ற பெண்ணிடம் வட இந்தியச் சாயல் இருந்ததால் இந்தியாவா எனக் கேட்டேன். அவர் இல்லை என்று தலை ஆட்டினார். பாகிஸ்தான்... என இழுத்தேன் அதற்கும் இல்லை என்றார். உங்களால் ஊகிக்கவே முடியாது என்றார். நானும் விட்டுக் கொடுக்காமல், ஒரு வேளை ஆபிரிக்க நாடுகளில் புலம் பெயர்ந்த இந்தியராக இருக்கலாம் என நினைத்து கென்யா, தென்னாபிரிக்கா, உகண்ட.... என என் பட்டியலை நீட்டினேன் அவர் ஒவ்வொன்றையும் மறுத்தார். நானும் ஒரு வித குழப்பமான எதிர்பார்ப்புடன் நீங்களே கூறிவிடுங்கள் என்றேன். கஷ்மீர் என அவரிடமிருந்து பதில் வந்தது. ஒரு கணம் அதிர்ந்தேன். கஷ்மீர் சிக்கலைப் பற்றி ஏற்கனவே ஓரளவிற்கு அறிந்து கொண்டிருந்தாலும் அது ஒரு மதம் சார்ந்த போராட்டம் என்று பலர் கருதுவதைப் போலவே நானும் எண்ணியிருந்தேன்.

அதற்கு இந்தியச் சார்பு ஊடகங்கள் விதைத்து விட்ட கருத்தும் ஒரு காரணமாகும். கஷ்மீர் இந்தியாவுக்குத்தான் சொந்தம் அதற்குள் பாகிஸ்தான் புகுந்து அத்து மீறுகிறது என்ற கருத்து நம்மவர்கள் மத்தியிலும் நிலவுகிறது. இயக்குனர் மணிரத்தினத்தின் ரோஜா, உயிரே போன்ற திரைப்படங்களும் இது போன்ற இந்தியத் தேசியவாதக் கருத்தை விதைக்கும் விதமாகவே அமைந்திருந்தன.

அந்தப் பெண்ணுடனான நீண்ட உரையாடலுக்குப் பின் அது தொடர்பான செய்திகளைத் தேடிப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் அந்தப் பெண்ணின் பதில் எவ்வளவு சரியானது என்பதைத் தெரிந்து கொண்டேன். அந்தப் பெண்ணின் பதிலில் இருந்த தெளிவு தனது நாட்டைச் சிறிலங்கா என்று கூறய அவரின் தோழியாகிய அந்தத் தமிழச்சிக்கு இல்லையே என்ற வருத்தமும் மேலிட்டது.

கஷ்மீர் யாருக்குச் சொந்தம்? நிச்சயமாக அது இந்தியாவுக்குச் சொந்தமில்லை, அப்படியானால் பாகிஸ்தானுக்குச் சொந்தமா? அதுவும் இல்லை. அது கஷ்மீர் வாழ் மக்களுக்குச் சொந்தம். தாங்கள் இந்தியாவோடு சேர்ந்திருப்பதா இல்லை பாகிஸ்தானோடு சேர்ந்திருப்பதா அல்லது பிரிந்து சென்று தனியரசை அமைப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் கஷ்மீர் மண்ணின் மக்கள்தானே தவிர வல்லாதிக்க அரசுகள் அல்ல.

இந்தியா என்பதே வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப் பட்ட ஒரு செயற்கையான பூகோளக் கட்டமைப்பு, ஆனால் கஷ்மீரோ அந்த வெள்ளையர் காலத்தில்கூட இந்தியாவோடு சேர்ந்திருக்கவில்லை என்பதுதான் அடிப்படை உண்மை. அது மட்டுமல்ல இன்று இந்தியத் தேசியவாதிகளாலும் இந்து அடிப்படைவாதிகளாலும் கஷ்மீர் பிரச்சனையானது இஸ்லாமிய பயங்கரவாதம் என்றும் பாகிஸ்தான் தீவிரவாதம் என்றும் மலினப் படுத்தப் பட்டு வருகிறது. உண்மையில் கஷ்மீர் பிரச்சனையானது மத நல்லிணக்கத்தோடுகூடிய சுயநிர்ணைய உரிமைப் போராட்டமாவே தோற்றம் பெற்றது.

1947 ஆம் ஆண்டு இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது. பாகிஸ்தான் என்ற புதிய நாடும் அன்றுதான் உருவாகியது. அப்போது கஷ்மீரானது இரு நாடுகளுடன் சேராமல் தனியாகவே இருந்தது. கஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்களாக இருப்பினும் அவர்களுள் இந்துக்களும் இருக்கின்றனர். ஏன் அவர்களில் பௌத்தர்களும் இருக்கின்றனர். இவ்வாறு முஸ்லீம், இந்து, பௌத்தம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் கஷ்மீரிகள் என்ற உணர்வுடனேயே அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

தன்னை அடக்கி வைத்திருந்த பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற இந்தியா அந்த ஈரம் காய்வதற்குள் இன்னொரு தேசிய இனத்தின் நாடான கஷ்மீரை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயற்சித்தது. 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியப் படைகள் கஷ்மீருக்குள் நுழைந்து முன்றில் இரண்டு பகுதியை தனது வசமாக்கின. இதனைக் கண்டு பொறுக்க முடியாத பாகிஸ்தான் எஞ்சியிருந்த மூன்றிலொரு பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. விளைவு கஷ்மீர் இரண்டாகத் துண்டாடப் பட்டது. கஷ்மீரிகள் என்ற உணர்வோடு வாழ்ந்த அந்த மக்கள் இந்தியார்கள் என்றும் பாகிஸ்தானியர்கள் என்றும் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டனர். இரு நாட்டு எல்லைகளுக்குமிடையில் LOC (Line of Control) எனப்படும் எல்லைக் கோடு கஷ்மீரில் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் நடந்தது என்ன தெரியுமா? குடும்ப உறவுகளே பிரித்துத் தள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக, நினைத்தவுடன் கால் நடையாகவே போய்வரும் தூரத்திலிருந்த அண்ணனின் குடும்பம் இந்தியர்கள் என்றும் தங்கையின் குடும்பம் பாகிஸ்தானியர்கள் என்றும் மாறின. கூப்பிடும் தொலைவிலிருக்கும் தன் தங்கையைப் பார்க்கவேண்டும் என்றால் அண்ணன் பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்தியத் தலைநகருக்குச் சென்று விசா எடுத்து பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

கஷ்மீர் தனக்குத்தான் சொந்தம் என்று கூறிக்கொள்ளும் இந்தியா அதை நியாயப் படுத்துவதற்காக அப்போது (1947 இல்) கஷ்மீரின் மன்னராக இருந்த ஹரிசிங் என்பவர் கஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் நோக்கோடு செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தை காரணம் காட்டுகிறது. உண்மையில் இந்த இணைப்பு தற்காலிகமானது. கஷ்மீர் மக்கள் இதைத் துளியளவேனும் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பெற்றன் இந்த இணைப்பைத் தற்காலிகம் என்று ஒத்துக் கொண்டதுடன் கஷ்மீர் மக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வாக்கெடுப்பு (Pடநடிளைஉவைந) நடத்தி இந்தியாவுடன் சேர்ந்திருப்பதா இல்லையா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் வரையறுத்தார். அன்றைய இந்தியத் தலைவர்களான காந்தியடிகள் மற்றும் ஜவகர்லால் நேரு போன்றவர்களும் இதனை ஏற்றுக் கொண்டனர்.

அடுத்த ஆண்டில் அதாவது 1948 இல் இந்தப் பிரச்சனை ஐ.நா. மன்றம் வரை சென்றது. ஐ.நாவும் உலக நியதிக்கேற்ப வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் இன்றுவரை அந்த வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மேலை நாடுகளில் நடைபெறும் இதுபோன்ற வாக்கெடுப்புக்களை இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறுவதில்லை என்று சிலர் வாதிடுகின்றனர். அதிலும் உண்மை இல்லை அதே கால கட்டத்தில் நடந்த ‘யுனகத் பிரச்சனைக்கு’ இந்தியாவே முன்னின்று வாக்கெடுப்பை நடத்தியது.

‘யுனகத்’ என்பது தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியாகும். அதன் அப்போதைய மன்னர் நவாப் அதனை பாகில்தானோடு இணைத்தார். இந்த இணைப்பை ஏற்றுக் கொள்ளாமல் இந்தியா தனது படைகளை அனுப்பி அதே 1947 இல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதனைக் கண்டு பாகிஸ்தான் வெகுண்டது. யுனகத்தில் உள்ளவர்கள் இந்தியச் சார்பு கொண்ட இந்துக்கள் என்பதைத் தெரிந்து கொண்ட இந்தியா தாமாகவே முன்வந்து வாக்கெடுப்பை நடத்தியது. முடிவுகள் இந்தியா எதிர்பார்த்த வண்ணம் அதற்குச் சாதகமாகவே அமைந்தன. ஆனால் கஷ்மீரிலோ அதற்கு நேர் எதிராக இன்றுவரை நடந்து கொள்ளுகிறது. பல உள்நாட்டு வெளிநாட்டு சிக்கல்களில் தலைக்கொரு சியாக்காயையும் தாடிக்கொரு சியாக்காயையும் பூசிக் கொள்ளும் இந்தியா கஷ்மீர் யுனகத் பிரச்சனைகளிலும் அவ்வாறே நடந்து கொண்டது.

இந்திய அரசினால் வஞ்சிக்கப் பட்ட கஷ்மீர் மக்கள் கொரில்லாப் போர் வழியாக தங்கள் நாட்டை மீட்டெடுக்க முடிவுசெய்தனர். இதன் அடிப்படையில்தான் கஷ்மீரின் முக்கிய பிரிவினைவாத அமைப்பான JKLF (Jammu Kashmir Liberation Front) எனப்படும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி தோற்றுவிக்கப் பட்டது. 1977 ஆம் ஆண்டு மே 29 ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்கத்தில் அமானுல்லா கான் மற்றும் மக்பூல் பாத் என்பவர்களால் இது தோற்றுவிக்கப் பட்டது. இதன் அடிப்படை நோக்கம் இந்தியாவாலும் பாகிஸ்தானாலும் கைப்பற்றபட்ட கஷ்மீர் நிலப்பரப்புக்களை மீட்டெடுத்து அவற்றை ஒன்றாக இணைத்து 1947 இற்கு முன்பு இருந்த கஷ்மீரை உருவாக்குவதே. இந்த இயக்கம் தோற்றம் பெறும் போதே தங்களின் நோக்கம் தேசிய விடுதலையேயன்றி இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்ல என்பதையும் தெளிவு படுத்தியிருந்தது.

மதச் சார்பின்மையையும் தேசிய இனவிடுதலையையும் முன்வைத்த கஷ்மீர் மக்களின் கோரிக்கையானது இந்தியாவுக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் பிடிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கேட்டது ஒட்டு மொத்த கஷ்மீரின் விடுதலை. இந்தியாவைப் போன்று கஷ்மீரை தன் வசமாக்கிக் கொள்ளவே அதுவும் விரும்பியது. போதையில் இருப்பவர்களுக்கு கள்ளை ஊற்றிக் கொடுப்பது போல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து இந்தியாவுக்கு எதிராகக் களமிறக்கி விட்டது. இதன் உச்சக் கட்டமாக 1989 ஆம் ஆண்டு ‘ஹிஸ்புல் முஜாஹிடின்’ என்ற இராணுவ அமைப்பை பாகிஸ்தான் தோற்றுவித்தது. மத அடிப்படைவாதம் கொண்ட இந்த அமைப்பானது மதநல்லிணக்கம் கொண்ட ‘JKLF’ போன்ற விடுதலை அமைப்புக்களை ஓரம் கட்டி இன்று சுயநிர்ணைய உரிமைப் போரை ‘ஜிகாத்’ எனப்படும் புனிதப் போராக மாற்றி வருகிறது.

அதை எதிர்க்கிறோம் என்ற பெயரில் செயல் படும் இந்திய இராணுவத்தினரின் அடக்கு முறையால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் பட்டு வருகின்றனர். இது ஒரு வகை அடக்கு முறை என்றால் அங்கு காலுன்றியிருக்கும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த மதவாதிகளின் அடக்கு முறை வேறு வகையாக உள்ளது. இஸ்லாமிய சட்டத்தை மீறுபவர்கள் ஈவிரக்கமின்றி நடத்தப் படுகின்றனர். ஆக இந்தியாவின் இந்து அடிப்படைவாதிகளால் வளர்த்துவிடப் பட்ட இந்தியத் தேசியவாதத்திற்கும் பாகிஸ்தான் வளர்த்துவிட்ட இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் நடுவில் கஷ்மீர் மக்களின் வாழ்வு தொடரும் துயரமாக நீள்கிறது.

மக்களின் நலனை முன்வைக்காத அல்லது அதனை புறக்கணிக்கும் தேசியங்கள் எத்தகையவையாக இருப்பினும் வறட்டுத்தனமாக போலித் தேசியங்களே. அத்தகைய தேசியவாதங்கள்தாம் பிற இனங்கள் மீது படை எடுத்து தங்கள் அதிகார வெறியை நிலை நாட்ட முயற்சிக்கின்றன. இந்திய ஆளும் வர்க்கத்தின் அத்தகையே ஒரு தேசியமே இன்று கஷ்மீரை மயான பூமியாக மாற்றி வருகிறது. பாகிஸ்தானின் பங்கு இருந்தாலும் அதனைத் தொடக்கி வைத்த பெருமை இந்தியாவையே சேரும். உலகில் மதவாதம் காவு கொண்ட மனித உயிர்களைக் காட்டிலும் தேசியவாதம் காவு கொண்ட மனித உயிர்கள் அதிகமாகவே தெரிகின்றன.

மதவெறி அருவருப்பானது என்பதை உணர்ந்திருக்கிறோம் ஆனால் தேசியவெறி அதனைக் காட்டிலும் அருவருப்பானது.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

21. கற்பு

கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மையைக் குறிக்கவே பயன்படுகின்றன. கற்பழித்தல், கற்புக்கரசி போன்ற சொற்பதங்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை. சுயிந என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் பதம் வன்புணர்ச்சியே (பாலியல் வல்லுறவு) தவிர கற்பழித்தல் அல்ல. கற்பழித்தல் என்ற சொல்லாடல் முழுக்க முழுக்கத் தவறானது. கற்பை எது வரைக்கும் அழிக்கமுடியும் என்று கேட்டால் யாரிடமும் தெளிவான பதில் இல்லை. பெண்ணின் கன்னித்தன்மையை பலவந்தமாகப் பறிப்பதற்குப் பெயர்தான் கற்பழித்தல் என்றால் ஏற்கனவே கன்னித்தன்மையை இழந்த பெண்ணைப் பலவந்தப் படுத்துவதை என்ன பெயர் சொல்லி அழைப்பது? அல்லது பெண்ணின் உடலியல் ஒழுக்கம்தான் கற்பு என்றால் ஒரு பெண் அவளது விருப்பத்திற்கு மாறாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டால் அப்பெண்ணை கற்பிழந்த பெண் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? எனவே ஒரு பெண்ணை, அவள் மனைவியாக இருந்தாலும், காதலியாக இருந்தாலும் அவளது விருப்பத்திற்கு மீறி பலாத்காரப் படுத்தி உடலுறவு கொண்டால் சட்டப்படி குற்றமாகும் என்பதுடன் சம்பந்தப்பட்ட ஆணுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப் படவேண்டும் என்பதே சரியானதும் நியாயமானதுமாகும். அதே சமயம் ஒரு பெண் பாலியல் வல்லுறவு என்ற மிருகத்தனத்திற்கு உட்படுத்தப்பட்டால் அதற்காக வாழ்வை முடித்துக் கொள்ளாமல் தனக்கு நேர்ந்த அவமானத்தை மறந்து ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவதே வரவேற்கத்தக்கதாகும்.

தமிழர்களின் கற்பு நிலை பற்றி பண்டைய தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகள் வியப்பை அளிக்கின்றன. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகின்றன. இருப்பினும் காதல் சுதந்திரமும் காதலுக்கு அடுத்த களவியலும் மிக அழகாக விளக்கப் பட்டுள்ளன. ஒருவருக்கொருவர் மனத்தைப் பறிகொடுத்த ஆணும் பெண்ணும் திருமணம் முடிக்க முன் உறவு கொள்வதை, (Premarital Sex)) இக் காதலும் களவொழுக்கமும் நியாயப் படுத்துகின்றன. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் உள்ள களவியலில் திருமணத்திற்கு முந்திய உடலுறவுச் சுதந்திரம் விளக்கப் பட்டிருக்கிறது. திருக்குறளில் உள்ள காமத்துப் பாலில்

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்

என்ற குறள் காதல் சுதந்திரத்தை நியாயப் படுத்துகிறது. அதே காமத்துப் பாலில் உள்ள கற்பியல் தொடர்பான குறட்பாக்கள்; காதல் துணையின் பிரிவால் ஏற்படும் உளம், உடல் சார்ந்த விரகதாபத்தையும் தலைவன் தலைவிக்கிடையே இருக்கும் ஆழமான அன்பையும் விளக்கும் விதமாகவே அமைந்திருக்கின்றனவே தவிர பிறவிப் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தவில்லை. பெண்ணியவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப் படும்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யனப் பெய்யும் மழை

என்ற குறளுக்கு, பரிமேலழகர் போன்றவர்கள் "தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்குபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்" என்ற கருத்துப்படி பிற்போக்குத் தன்மையுடன் உரை தீட்டியுள்ளனர். ஆனால் அதன் உண்மைப் பொருள் பாhவேந்தர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் உரை எழுதியதைப்போல் "தொழு என்ற சொல் பின்பற்றுதல்” என்றும் “பெய்யனப் பெய்யும் மழை என்றால் பெய்த இடத்தில்" என்றும் பொருள்படும் எனவே பெண்ணானவள் மழையைப் போன்றவள். மழை எவ்வாறு பூமியை வளப்படுத்துகிறதோ அவ்வாறு தன் வாழ்க்கைத் துணைவனை வளப்படுத்துபவள் பெண் என்பதே அக்குறளின் பொருள். இங்கே வள்ளுவரும் ஒரு பெண்ணியவாதியாகவே தென்படுகிறார். அடுத்து வள்ளுவர் கூறும் அடக்கம் என்பது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தலைக்கனம் கொள்வது தவறு என்று சொல்கிறதே தவிர பெண்மீதான சமூக ஒடுக்குமுறையை நியாயப் படுத்திக் கூறவில்லை. வள்ளுவர் ஒழுக்கத்தை பெண்களுக்கு மட்டும் வலியுறுத்தவில்லை. ‘பிறனில் விழையாமை’ என்ற அதிகாரத்தில் ஆண்களுக்கும் வலியுறுத்துகிறார்.

சங்க இலக்கியங்களில் உள்ள குறுந்தொகை, அகநாநூறு போன்றவற்றிலும் திருமணத்திற்கு முந்திய உறவு பல இடங்களில் கூறப் பட்டுள்ளன. மனத்தால் இணைந்த ஆணும் பெண்ணும் திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழும் முறையை (ஊழnஉரடிiயெபந) தமிழிலக்கியங்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கின்றன. இவற்றை எல்லாம் எண்ணும்போது பண்டைய தமிழ் இனம் எந்தளவிற்கு காதல் சுதந்திரத்துடன் வாழ்ந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆண் புலவர்கள் மட்டுமல்ல சங்க காலத்துப் பெண்பாற் புலவர்களான ஒளவையார், வெள்ளி வீதியார் போன்றவர்களும் ஆண்களுக்கு நிகராக அரசியல் சமூகக் கருத்துக்களுடன் காதல், களவியல் செய்திகளை எல்லாம் தங்கள் பாடல்களில் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கின்றனர்

தமிழர்கள் மத்தியில் இடைப்பட்ட காலத்தில் புகுத்தப்பட்டதுதான் பிறவிப் பெண்ணடிமைத்தனம் அதை நாம் பிடித்துவைத்துக் கொண்டு பெண்களின் கற்பை எடைபோடுகின்றோம். ஆண் சம்பந்தப் படாமல் தவறு நடக்குமா? அப்படி நடந்தால் அதில் தங்களுக்கும் தொடர்பு உள்ளது என்ற நியாயமான குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் பெண்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது எந்த வகையில் நியாயம்? படுக்கை அறையில் இரத்தக் கறையைத்தேடும் ஆண்களுக்கு, பெண்கள் உடற்பயிற்சி, நீச்சல், கராத்தே போன்றவற்றில் ஈடுபடுவது ஏமாற்றத்தையே தருகிறது. கற்பு உடல் தொடர்புள்ள ஒன்றாக இருந்தாலும் அல்லது உள்ளம் தொடர்புள்ள ஒன்றாக இருந்தாலும் கற்பு என்பது பாரதி எழுதியைப் போல்

“கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்" எனும் நிலைப் பாடே சரியானது,”

அதே நேரம் மனித வாழ்வில் ஒழக்கம் இன்றியமையாததாக இருப்பினும் சூழ்நிலை காரணமாக தவறு ஏற்பட்டு ஒருவேளை சம்பந்தப் பட்ட ஆணும் பெண்ணும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டு, நிரந்தரமாக பிரிய வேண்டி வந்தால் நடந்ததை மறந்து விட்டு இன்னொரு வாழ்க்கையைத் தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை. அதே சமயம் பாலியல் கல்வியும், பாதுகாப்பான உறவுக்கான கருத்தடை முறைகளும் பாலியல் நோய்களைத் தடுப்பதற்கு இன்றியமையாதவை. பத்தாம் பசலித்தனமான பல்லவிகளைப் பாடி பிற்போக்குத் தனங்களை விதைத்தால், விதைப்பவர்கள் தங்களைக் கலாச்சாரக் காவலர்கள் என்று தம்பட்டம் அடிக்க உதவுமே தவிர, அதிகரித்து வரும் பால்வினை நோய்களைத் தடுக்க நிச்சயம் உதவப் போவதில்லை.

தமிழ் பண்பாட்டைக் காட்டிப் பெண்கள் மீது மதவாத ஆதிக்கத்தையும் மரபு வழி மடமையையும் திணிப்பதற்கு, நமது தமிழ்தாய், பிரம்மா உருவாக்கிய சரஸ்வதியோ, சிவனார் கொண்டையில் செருகிக் கொண்ட கங்கா தேவியோ, ஆதாமின் விலா எலும்பில் இருந்து உருவான ஏவாளோ அல்ல. அவள் எத்தனையோ பண்பாட்டுப் படை எடுப்புக்களைத் தாண்டி மொழி ஆதிக்கங்களை எதிர் கொண்டு நமக்கு முகத்தையும் முகவரியையும் தந்து நாளை முடிசூடும் நன்னாளை எதிர்பார்த்து நிற்பவள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

22. வள்ளுவர் ஓர் இந்துவா?

valluvarvasukicx8.jpg

காலஞ் சென்ற கவியரசர் கண்ணதாசன் அவர்கள், தனது அர்த்தமுள்ள இந்து மதம் இரண்டாம் பகுதியில் 'வள்ளுவர் ஓர் இந்து' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். திருவள்ளுவர் பயன்படுத்திய வேண்டுதல் வேண்டாமை, இருள் சேர் இருவினையும் சேரா இறைவன், வானுறையும் தெய்வம் போன்ற சொல்லாடல்களை வைத்து வள்ளுவர் ஓர் இந்து என்ற முடிவுக்கு வருகிறார். இறுதியில் தமிழரான வள்ளுவர் ஓர் இந்து, இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே என்று அந்தக் கட்டுரையை முடிக்கின்றார். கவியரசர் கண்ணதாசனைப் போன்று பல தமிழர்கள் இந்து மதம் நமது மதம் என்ற அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். மூழ்கிக் கிடப்பதோடு மட்டுமல்லாது, மதச்சார்பற்ற நமது பெருந்தமிழ்ப் புலவர் வள்ளுவரை இந்துவாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் ஈடு இணையற்ற தமிழ் நூலான திருக்குறளை இந்து மத நூலாக எண்ணத் துணிகின்றனர். ஆனால் நமது வள்ளுவப் பெருந்தகையோ இந்து மதத்தையும், அதனை இயக்கும் கருவியான பார்ப்பனியத்தையும், இந்து மதத்தின் ஆணிவேராக விளங்கும் வருணாசிரம தர்மத்தையும், மற்றும் இந்து மதத்தின் மூடப் பழக்கவழக்கங்களையும் தனது குறட்பாக்கள் வழியாக சாட்டையடி கொடுப்பதுபோல் கடுமையாகச் சாடுகிறார்.

இந்து மதத்திற்கு அடிப்படையாக விளங்குபவை ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள். மற்றும் பகவத்கீதை, மனு தர்மம், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவைகள் புனித நூல்களாகக் கருதப் படுகின்றன. இவைகளை அலசி ஆராய்ந்தால் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது, பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் வருணாசிரம தர்மம். குறிப்பாக பகவத்கீதையும் மனுதர்மமும் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் என்றும் மனிதப் பிறவிகளில் அவனே உயர்ந்தவன் என்றும் பெண்களும் சூத்திரர்களும் தாழ்ந்தவர்கள் என்றும் உரைக்கிறது.

(மனுதர்மம் அத்தியாயம் 1 சூத்திரம் 31 – பகவத்கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)

நமது வள்ளுவரோ இதைக் கடுமையாக மறுத்து

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972)

பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையால் மட்டுமே வேறுபாடு காண முடியும். என்கிறார்.

ஆரியர்களின் மனுதர்மம் புலால் உண்பதை அனுமதிக்கிறது. பசுக்களை யாகத்தில் வெட்டிப் பலியிடவேண்டும் என்றும் யாகத்தில் படைக்கப் பட்ட பசு இறைச்சியை உண்பது தெய்வீகச் செயல் என்றும் உரைக்கிறது. (மனுதர்மம் அத்தியாயம் 5 சூத்திரம் 27 30 35 39). இந்து மதத்தின் மிக முக்கிய நூலான பகவத்கீதை கொலை செய்வதையும் நியாயப் படுத்துகிறது. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக பார்ப்பனரான நாதுராம் கோட்சேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது அவர் கீதை காட்டும் இந்து தர்மப்படி காந்தியைக் கொலை செய்தது நியாயமே என்று கூறினார். இந்து மதம் நரபலிக்கும் நியாயம் கற்பிக்கிறது. மகாபாரதத்தில் குருட்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அருச்சுனனின் புதல்வர்களில் ஒருவனான அரவானை கண்ணன் நரபலியிட்டதாக குறிப்பிருக்கிறது.

தமிழர்களின் திருக்குறளோ புலால் உண்பதையும் கொலை செய்வதையும் வன்மையாகக் கண்டிக்கிறது.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும். (குறள் 260)

புலால் உண்ணாதவர்களையும் அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும் என்கிறது. மற்றுமொரு குறள்

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை. (குறள் 327)

தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது என்றுரைக்கிறது.

புராணங்கள் இந்து மதத்தின் அடிப்படை வேர்கள். புராணங்களில் வரும் கதாபாத்திரங்களே இந்து மதத்தில் கடவுள்களாக விளங்குகின்றன. புராணங்கள் இல்லை என்றால் இந்து மதமும் இல்லை கடவுள்களும் இல்லை என்று கூறும் அளவிற்கு புராணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்புராணங்கள் தேவர்-அசுரர் போராட்டாத்தையே முக்கிய கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றன. இவற்றை பின்னாள்களில் ஆய்வு செய்த பல வரலாற்று ஆசிரியர்கள் தேவர்-அசுரர் போராட்டங்கள் அந்நாள்களில் நடந்த ஆரியர்-திராவிடர் போராட்டங்களையே குறிப்பதாக எழுதியுள்ளார்கள். புராணங்கள் புனையப்பட்ட அன்றைய காலகட்டத்தில் தென்னாட்டில் வாழ்ந்த தமிழர்களே திராவிடர்களாகக் கருதப்பட்டார்கள். திராவிடம் என்ற சொல் தமிழிலிருந்து திரிபுற்ற ஒன்றே (தமிழ்-தமிள-த்ரமிள-த்ரமிட-திரபிட-திராவிட) என்பதை பாவாணர், மு.வரதராசனார் போன்ற அறிஞர் பெருமக்கள் தங்களின் நூல்களில் விளக்கியுள்ளனர். அந்தத் தமிழர்களையே அசுரர்களாகவும் அவர்கள் எதிர்த்த ஆரியர்களைத் தேவர்களாகவும் தங்களின் புராணங்களில் சித்தரித்திருக்கின்றனர். நல்லவர்களான தேவர்களைக் (ஆரியர்கள்) காக்க தீயவர்களான அசுரர்களை (தமிழர்கள்) கடவுள் அழித்தார் என்று பொருள் பட புராணங்களைப் புனைந்தார்கள்.

இவற்றை அறிந்த நமது வள்ளுவர் தனது குறள் ஒன்றின் வழியாக ஆரியர்களின் இனவெறிக்கு சாட்டையடி கொடுக்கின்றார்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான் (குறள் 1073)

தேவர்கள் (ஆரியர்கள்) மனம் போன போக்கில் தீய செயல்களைச் செய்யும் கயவர்களுக்குச் சமமானவர்கள் என்கிறார்.

பொதுவாக, உலகத்திற்குத் தேவையான நீதிக் கருத்துக்களை எழுத முன்வந்த திருவள்ளுவருக்கு இது போன்ற குறள் எழுத வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது. ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட இன இழிவை தமிழரான வள்ளுவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே எய்யப் பட்ட அம்பை எடுத்து எய்தவன் மேல் எய்வது போல் தேவர் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஆரியரைக் கயவர் எனக் கடுமையாகச் சாடுகிறார்.

பொதுவாக அன்றைய காலத்தில் பார்ப்பனர்களுடைய தோற்றம் தமிழர்களிடமிருந்து முற்றிலும் மாறு பட்டிருந்தது. தலைமுடியை முன்புறம் நன்றாக மழித்து பின்புறம் தலைமுடியை நீட்டி குதிரை வால் போன்று வளர்த்திருப்பார்கள். வள்ளுவர் இதையும் மறுக்கிறார்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்த தொழித்து விடின் (குறள் 280)

உலகம் பழிக்கக் கூடிய தீய செயல்கனை செய்யாமல் விட்டாலே போதும் மழித்தல் நீட்டல் போன்ற புறத் தோற்றங்கள் தேவையில்லை என்கிறார்;. இக்குறளை ஆழ்ந்து நோக்கினால் புறத் தோற்றத்தின் வழியாகத் தங்களை வேறுபடுத்திக் காட்டும் பார்ப்பனர்கள் உலகம் பழிக்கும் செயல்களைப் புரிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இந்து மத புராண இதிகாசங்களில் வேள்விகளும் யாகங்களும் புனிதச் செயல்களாக விளக்கப் பட்டிருக்கும். வானம் பொய்த்து விட்டால் யாகம் செய்து மழையை வரவழைப்பது போன்ற மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கும். வான் சிறப்பை பாட வந்த வள்ளுவர் இந்த மூட வழக்கத்தை மறுக்கிறார்.

சிறப்போடு புசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (குறள் 18)

வானமே பொய்த்து விடும்போது அதன் பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப் படுபவர்களுக்கு வழிபாடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என்கிறார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் சொரிந்து உண்ணாமை நன்று (குறள் 259)

எனும் குறளில், நெய் போன்ற பொருள்களை தீயிலிட்டு யாகங்களும் வேள்விகளும் செய்வதை விட உயிர்களைக் கொன்று தின்னாமையையே உயர்ந்தது என்கிறார்.

இந்துத்துவம் என்பது பார்ப்பனியத்தை நிலை நிறுத்த முயற்சிக்கும் மதக் கட்டமைப்பு. வேதங்கள் உபநிடதங்கள் முதல் கொண்டு புராண இதிகாசங்கள் வரை அனைத்துமே பார்ப்பனர்களின் ஆதிக்க வெறியையே வெளிக்காட்டுகின்றன. பிராமணர்களை உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கும் பகவத்கீதையும் மனுதர்மமும் தனிமனித ஒழுக்கத்தைக் காட்டிலும் வருணாசிரம முறைப்படி பிராமணர்களின் தொழிலான வேதம் ஓதுதலையே முக்கிய கடமையாகக் கூறுகின்றன. பிராமணன் ஒருவன் ஒழுக்கத்திலிருந்து தவறினாலும் வேதம் ஓதுதலில் இருந்து தவறக் கூடாது என்று அவை வெளிப்படையாகவே கூறுகின்றன. என்ன விந்தை! பகவத்கீதையிலும் மனுதர்மத்திலும் சொல்லப் பட்ட கருத்தை திருவள்ளுவர் ஒரு வரி பிசகாமல் அப்படியே மறுத்துரைக்கிறார்.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (குறள் 134)

பார்ப்பனன் ஒருவன் கற்றதை (வேதம்) மறந்துவிட்டால் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் ஒழுக்கத்திலிருந்து தவறினால் அவன் என்றும் இழிமகனே.

வள்ளுவரின் இந்தக் குறளை உற்று நோக்கினால் ஓர் உண்மை தெளிவாகப் புலனாகிறது. தனது 1330 குறட்பாக்களில் இந்த ஒரு குறளில் மட்டும்தான் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன் படுத்தியுள்ளார். தமிழரான வள்ளுவர் தனது நூலை அகரம் என்ற சொல்லிலிருந்து தொடங்குவதின் வழியாக தன்னைத் தமிழரென வெளிக் காட்டிக் கொள்கிறார். இருந்த போதிலும் தமிழ் தமிழர் போன்ற சொற்களை அவர் எந்த இடத்திலும் பயன் படுத்தவில்லை. நாட்டைப் பற்றி குறள் தீட்டிய அவர் தன்னுடைய நாட்டைப் பற்றி கூறவில்லை. மன்னர்களைப் பற்றிக் குறள் தீட்டிய அவர் சேர சோழ பாண்டியர் என்ற முடியுடை மூவேந்தர்களைப் பற்றிக் கூறவில்லை. தான்னுடைய நூல் தமிழர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உலகளாவிய நோக்கமே அதற்குக் காரணம். அப்பேர்ப் பட்ட உயரிய எண்ணம் கொண்ட வள்ளுவர் தேவர் பார்ப்பான் போன்ற சொற்களின் வழியாக ஆரியக் கருத்துக்களை எதிர்க்கவும் மறுக்கவும் துணிந்திருக்கிறார் என்றால் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான ஆரியர்களுடைய வேதங்களும் புராண இதிகாசங்களும் வள்ளுவருக்கு ஓருவித சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

திருவள்ளுவர் அறவாழி அந்தணன், அந்தணர் என்போர் அறவோர், என்றெல்லாம் அந்தணர்களை உயர்த்திப் பாடியிருக்கிறாரே எனவே பிராமணர்களின் உயர்வை அவரும் ஒத்துக் கொண்டிருக்கிறார் என்று தமிழர்களில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வள்ளுவர் அந்தணர் என்ற சொல்லை பிராமணர்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தவில்லை. இந்து மத நூல்களில் வரும் பிராமணர் என்ற சொல்லை வள்ளுவர் எந்த இடத்திலும் பயன் படுத்தவில்லை. எனெனில் பிராமணர் என்ற சொல்லின் பொருளே பிறவி உயர்வைக் வெளிக்காட்டுகிறது. பிறப்பினால் வரும் உயர்வை வள்ளுவர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிராமணர்களைக் குறிப்பதற்கு அவர் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர் மட்டுமல்ல வள்ளுவருக்குப் பின் தமிழ் இலக்கிய உலகில் சிறப்பான இடத்தைப் பெற்ற இளங்கோவடிகளும் தனது சிலப்பதிகாரத்தில் பிராமணர்களைக் குறிக்கும் இடத்தில்

மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிட……………….

என பார்ப்பான் என்ற சொல்லையே பயன் படுத்தியுள்ளார். எனவே பிராமணர்களைத் தமிழ்ப் புலவர்கள் பார்ப்பான் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர அந்தணர் என்று அல்ல. திருவள்ளுவர் அந்தணர் என்ற சொல்லை மூன்று குறள்களில் பயன் படுத்தியுள்ளார்.

அறவாழி அந்தணன் தாழ்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது (குறள் 8)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை புண்டொழுக லான் (குறள் 30)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல் (குறள் 543)

இந்த மூன்று இடங்களிலும் வள்ளுவர் அந்தணர் என்ற சொல்லை அறத்தோடு தொடர்பு படுத்தியே கூறியுள்ளார். எனவே நெஞ்சு நிறைந்த அன்போடு மனித சமூகத்திற்கு அரும்பணியாற்றிய அறவோர் அனைவரும் வள்ளுவர் மொழியில் அந்தணர்களே. அந்த வகையில் பார்ப்பனர் அல்லாதவர்களான புத்தர், சோக்ரடீஸ், வள்ளலார், அன்னை தெரசா, நைட்டிங்கேல், பெரியார், அண்ணா, தியாகி தீலீபன், அன்னை பூபதி அனைவரும் அந்தணர்களே. பார்ப்பனச் சமூகத்தில் பிறந்தாலும் பார்ப்பனியத் தன்மைகளை விட்டொழித்து அறநெறிப்படி வாழ்ந்தால் அவர்களை அந்தணர் என்றழைப்பதில் தவறில்லை ஆனால், வேள்வித் தீயில் உயிர்களைப் பலியிட்ட பார்ப்பனர்கள் முதற் கொண்டு இருபதாம் நூற்றாண்டிலும் வருணாசிரம தர்மத்தைக் கட்டிக்காத்த காஞ்சிப் பெரியவர் என்று அழைக்கப் பட்ட காலஞ் சென்ற சந்திர சேகரேந்திர சரஸ்வதி, சங்கர ராமன் கொலைவழக்கில் கைது செய்யப் பட்ட ஜெயந்திர சரஸ்வதி வகையறாக்களை அந்தணர் என்று அழைத்தால் அதைவிடக் கேலிக்கூத்து வேறொன்றும் இல்லை. வள்ளுவர் குறிப்பிடும் அந்தணர் என்ற சொல் குணத்தைக் குறிக்கும் சொல்லே அன்றி குலத்தைக் குறிக்கும் சொல் அல்ல.

இந்துப் புராண இதிகாசங்களிலும் துதி பாடல்களிலும் கடவுளர்களின் அற்புதங்கள் கதை கட்டிவிடப்பட்டுள்ளன. மகாபாரதமும் தன் பங்கிற்கு பாண்டவர்களின் வெற்றிக்கு அருச்சுனன், பீமன், அபிமன்யு, போன்றவர்களின் வீரத்தை முக்கிய காரணமாகக் காட்டாமல் கண்ணனின் அருளையே முக்கியமாகக் காட்டுகிறது. தனிமனிதனுடைய வீரமும் முயற்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு கடவுள் தன்மைகள் முக்கியப் படுத்தப் பட்டிருக்கும். வள்ளுவரின் திருக்குறளோ இதற்கு நேர் எதிரான கருத்தைக் கூறுகிறது.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும். (குறள் 619)

கடவுள் அருளைக் காட்டிலும் முயற்சியுடன் உடலை வருத்தி உழைத்தால் உழைப்புக்கேற்ற வெற்றியைத் தரும் எனப் பொருள் படும் படி வள்ளுவர் தீட்டிய குறளானது கடவுளைப் பின்னுக்குத் தள்ளி முயற்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது.

இந்து மதம் உடலை வருத்தி உழைக்காமல் பிறரிடமிருந்து யாசகம் பெற்று வயிறு வளர்க்க உதவும் புரோகிதத் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுகிறது. திருக்குறளோ நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த ஏர் புட்டி உழும் உழவர்களின் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுவதுடன் உலக மக்கள் உழவுத் தொழிலை நம்பித்தான் வாழ்கிறார்கள் என்கிறது. இதோ அந்தக் குறள்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை (குறள் 1031)

தமிழரின் மறையான திருக்குறள் நெடுகிலும் இந்துத்துவ எதிர்ப்புக் கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே வள்ளுவர் ஓர் இந்துவாக நிச்சயம் இருக்க முடியாது. வள்ளுவர் ஏதாவது ஒரு சமயத்தைத் தழுவி இருந்திருப்பாரேயானால் அது பெரும்பாலும் சமண சமயமாகத்தான் இருந்திருக்க முடியும். ஏனெனில் வள்ளுவரின் ஆரிய எதிர்ப்புக் கருத்துக்களும் அவர் வலியுறுத்திய அறக் கோட்பாடுகளும் சமணம் மற்றும் பௌத்தக் கருத்துக்களோடு ஒன்றியே காணப்படுபின்றன. பௌத்தத்தைக் காட்டிலும் வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழோடு அதிகம் தொடர்பு கொண்டிருந்த சமயம் சமணமாகவே கருதப் படுகிறது. திருக்குறளுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றப் படும் நீதி நூலான நாலடியாரை எழுதிய நூற்றுவரும் சமணத் துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திய இளங்கோவடிகள் ஒரு சமணத் துறவி என்பது சிலப்பதிகாரக் காப்பியத்தைப் படிக்கும்போது தெரிகிறது. ஆனால் வள்ளுவப் பெருந்தகையோ தன்னை ஒரு சமணராக வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவர் மதச்சார்பற்றவர். மனிதர், மானுடம் போற்றியவர் அதுவே அவரது சிறப்பு.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

23. கோடம்பாக்கத்தின் ஒஸ்கார் கனவு

தமிழ் சினிமாவிற்கு ஒஸ்கார் விருது கிடைக்காதா என்ற ஏக்கம் கோடம்பாக்கத்து குருவிகளுக்கு தீராதா தாகமாகவிருக்கிறது. பல படங்கள் அனுப்பப் பட்டுள்ளன ஆனால் ஒன்றுக்கும் விருது கிடைக்கவில்லை. இந்திய அளவில் பார்க்கப் போனால் 1957 ஆம் ஆண்டு வெளியாகிய ‘மதர் இந்தியா’ என்ற ஒரேயொரு இந்திப் படம் மட்டும்தான் ஓஸ்கார் விருதைப் பெற்றுள்ளது. தமிழ் திரையுலகத்தை எடுத்துக் கொண்டால் முதன் முதலாக ஏ.சி. திரிலோகச்சந்தர் இயக்கி, சிவாஜி கணேசன் நடித்த தெய்வமகனை அனுப்பினார்கள். பொதுவாக ஏதார்த்தப் படங்கள், மக்களின் சமூக நிலைகளை, அவர்களின் வாழ்க்கை அவலங்களை இயல்பான கதையம்சம் மற்றும் நடிப்பில் வெளிக்காட்டி நிற்கும் படங்களே உலக சினிமா வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன. மிகை நடிப்பும் கூடவே ‘காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழிபோகும் என்று யாரோ சொன்னார்’ போன்ற ஆடல், பாடல், மசாலாக்களுடன் கூடிய தெய்வ மகனை அனுப்பினார்கள். படம் விருதைத் தட்டவில்லை.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் ஷங்கரின் அக்மார்க் மிட்நைற் மசாலாவான இந்தியனை அனுப்பினார்கள். அதுவும் வெறும் கையோடு திரும்பி வந்தது. இந்தியனைப் பார்த்து விழிகளை விரித்த நம்மில் பலருக்கோ வியப்பும் ஏமாற்றமும். இந்தியனே பெற முடியவில்லையே வேறு எந்தப் படம்தான் பெற முடியும் என நம்மவர்களில் பலரே அப்போது பேசிக்கொண்டார்கள். ஒரு விதத்தில் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஓஸ்கார் விருதை நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என பல துறைகளுக்கும் கொடுப்பார்கள். ஆனால் அந்த விருதுகள் அமரிக்க அதாவது ஹொலிவூட் திரைப்படங்களுக்கு மட்டும்தான் கொடுப்பார்கள். அத்தோடு சிறந்த பிற மொழித் திரைப்படமாக வருடத்திற்கு ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து விருது கொடுப்பார்கள். அப்படிப் பார்க்கும் போது அங்கு போட்டிக்கு வந்திருக்கும் பிற மொழிப் படங்களோடு ஒப்பிடுகையில் கோடம்பாக்கம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இங்கு ஒரு முக்கியமா விடயம் என்னவெனில் உலக அளவில் திரைப்படங்களுக்காக கொடுக்கப்படும் உயரிய விருது ஒஸ்கார் அல்ல. அது பிரான்சு நாட்டில் நடைபெறும் கேன்ஸ் விருதாகும். இது பலருக்கு தெரிவதில்லை. அந்த வகையில் அண்மையில் இயக்குனர் அமீரின் பருத்தி வீரன் கேன்ஸ் வீருதைப் பெற்றிருக்கிறது.

தமிழில் சிறந்த எதார்த்தப் படங்கள் வரவேயில்லையா எனக் கேட்கலாம் வந்திருக்கின்றன. மிக நல்ல திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன ஆனால் அவற்றுள் பல உலக அளவில்கூட அல்ல தமிழர்கள் மத்தியில் கூட அறிய முடியாமல் போய்விட்டன. ‘ஏழை படும் பாடு’ என்றொரு படத்தை கே.ராம்நாத் எடுத்திருந்தார். 1951 இல் வெளியாகியது. புகழ் பெற்ற பிரன்ச்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோவின் கதையை தனது நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி மிக அற்புதமாக எடுத்திருந்தார் ராம்நாத். மரபை மீறிய ஒரு திரைப்படமாக அது வெளிவந்தது. அதே ராம்நாத் 1954 இல் மனிதன் என்று ஒரு படத்தைக் கொடுத்தார் (ரஜினியை வைத்து எஸ்.பி. முத்துராமன் இயக்கிய மனிதன் வேறு. அந்தப் படம் இந்தப் பட்டியலுக்குள் வராது). அன்றைய காலத்தில் கூட எத்தனைபேர் இவற்றைப் பார்த்திருப்பார்கள் எனத் தெரியாது.

வீணை வித்துவான் எஸ். பாலச்சந்தர் (கே.பாலச்சந்தர் அல்ல, அவர் வேறு இவர் வேறு) அந்த நாள் என்றொரு படத்தைக் கொடுத்தார். சிவாஜி கணேசன் பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் தொடக்கத்தில் துப்பாக்கி ஒன்று வெடித்து கதாநாயகன் இறந்து விடுவான். அந்த நிகழ்வு எப்படி நடந்தது என பலரது பார்வையில் படம் நீளும். பாடல்கள் எதுவும் இல்லாது வெளிவந்த முதல் தமிழ் திரைப் படம் இதுவாகும்.

புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் தி. ஜானகி ராமன் எழுதிய ‘நாலு வேலி நிலம்’ என்ற கதையை நடிகர் சகஸ்ரநாமம் திரைப் படமாகத் தயாரித்தார். முத்துராமன் தேவிகா ஆகியோர் நடித்திருந்தனர். அதுவும் கையைச் சுட்டுக் கொண்டது. இயக்குனர் சிறிதரின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த ஏ.வின்சன்ட் ‘துலாபாரம்’ என்றொரு படத்தைத் தந்தார். முழுக்க முழுக்க யதார்த்தப் படம் எனக் கூறாவிட்டாலும் அதற்கான பாதையை கோடிட்டுக் காட்டியது. பலரது மனத்தை நெகிழ வைத்த திரைப் படம் அது. ஓரளவிற்கு நன்றாக ஓடினாலும் இது போன்ற திரைப்படங்கள் தொடந்து வரவில்லை. கோடம்பாக்கம் வழக்கம் போல் எம்.ஜி.ஆர் பாணி சிவாஜி பாணி எனத் தன்னை குறுக்கிக் கொண்டது.

1964 ஆம் ஆண்டு ஜெயகாந்தன் ‘உன்னைப் போல் ஒருவன்’ என்றோரு படத்தை எடுத்தார். சேரி மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. உலகப் புகழ் பெற்ற வங்காள இயக்குனர்கள் சத்யஜித்ரே மிருணாள் சென் போன்றவர்கள் வியந்து பாராட்டிய தமிழ்த் திரைப்படம் இது. ஆனால், அந்தக் காலத்தில் ஒரு விழுக்காடு தமிழர்கள் கூட இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்களோ தெரியாது.

இந்த நிலைமை எழுபதுகளின் இறுதியில் சற்று மாற்றம் பெற்றது. அப்போதிருந்த காலம் ஓரளவிற்கு யாதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்ட காலமாகையால் மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டன. கவிதையை கமராவாலும் வடிக்கமுடியும் என்பதை மகேந்திரன் மெய்ப்பித்துக் காட்டினார். ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ தமிழில் வெளி வந்த மிகச் சிறந்த படங்களுள் ஒன்று. து. ராமமூர்த்தியின் கதையை ஜெயபாரதி குடிசை என்ற திரைப் படமாக எடுத்தார். பிச்சைக் காரர்களின் வாழ்க்கையை வைத்து பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் ‘எச்சில் இரவுகள்’ என்றொரு படத்தை எடுத்தார். மற்றும் துரையின் ‘பசி’, எண்பதுகளின் இறுதியில் பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் போன்ற படங்கள் வெளி வந்தன. இந்தப் பட்டியலில் இடம் பெறாத இன்னும் சில திரைப் படங்கள் உள்ளன. வாழ்வியலை மிக அழகாகக் இவை படம் பிடித்துக் காட்டியிருந்தன. இருப்பினும் அரசியல் கோமாளித்தனங்களும், நம்ப முடியாத கதையமைப்புக்களும், மிகைப் படுத்தப்பட்ட கதாநாயத் தன்மைகளும், கதா நாயகர்களின் விடலைத் தனமான பேச்சுக்களும் தமிழ் திரையை விழுங்கிக் கொண்டன. கூடவே தாம்தூம் எனக் குதிப்பதும், கோணங்கிச் சேட்டைகள் செய்வதும், கீழ்த்தரமான சொற்களால் அடுத்தவனைத் திட்டுவதும் நகைச் சுவை என்ற பெயரில் அரங்கேறின. கமரா நெறியாள்கை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் மேடை நாடகத்தை படம் பிடப்பதுபோல் நடிக நடிகையர்களை படம் பிடத்துத் தள்ளினார்கள். விளைவு கோடம்பாக்கமும் இது போன்ற படங்களை வைத்து தனது சந்தைப் பொருளாதாரத்தை விரிவாக்கிக் கொண்டது.

தமிழ் சமூகத்தில் கதைகளுக்கு பஞ்சமில்லை, கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் மிகச் சிறந்த நடிக நடிகையர்கள் பலர் இருக்கின்றார்கள். மிகை நடிப்பிலே தூள் பறக்க விட்ட சிவாஜி கணேசன் அவர்களுக்கு எதார்த்த நடிப்பு தெரியாமலிருக்கவில்லை. ஒரு தடைவை சிவாஜி கணேசன் நடித்ததை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நகைச்சுவை நடிகருக்கு எரிச்சல் வந்தது. ஏன் தேவைக்கு அதிகமாக மிகைப் படுத்தி நடிக்கின்றீர்கள் என சிவாஜிகணேசனிடமே அலுத்துக் கொண்டார் அந்த நகைச்சுவை நடிகர். உடனே சிவாஜி கணேசன் அதே காட்சியை மிக இயல்பாக நடித்துக் காட்ட அந்த நகைச்சுவை நடிகருக்கோ வியப்பை அடக்க முடியவில்லை. இவ்வளவு எதார்த்தமாக அற்புதமாக நடிக்கும் நீங்கள் ஏன் அவ்வாறு செய்வதில்லை எனக் கேட்ட போது அதற்கு சிவாஜி கணேசன் என்னிடம் இருந்து மிகை நடிப்புத்தான் எதிர் பார்க்கப் படுகிறது அதைக் கொடுக்க வேண்டியது எனது கடமை எனப் பதிலளித்தார். எனவே இங்கே தவறு நடிகர்களில் இல்லை. இது போன்ற செயற்கையான கற்பிதங்களாலேதான் உலகம் எதிர்பார்க்கும் எதார்த்த சினிமா தமிழ் சூழலில் வளர முடியாமல் போய்விட்டது. மலையாள இயக்குனரான அடூர் கோபால கிருஷ்ணன் போன்றவர்கள் உலகப் புகழ் பெற்ற அளவிற்கு சிறிதரோ, பாராதிராஜாவோ, மகேந்திரனோ புகழ் பெற முடியாமல் போனதற்கும் இதுதான் காரணம்.

இங்கே நம்மில் பலருக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஈழத்தில் ஆயரிரமாயிரம் கதைகள் குவிந்து போயிருக்கின்றன. குறிப்பாக போராட்டம் தொடர்பான கதைகளும், அந்த மண்ணில் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வுகளும் ஏராளம் இருக்கின்றன. இது போன்ற போராட்டங்கள் நடை பெற்ற நாடுகளில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த இயக்குனர்கள் எடுத்த படங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தன. நாமும் அவ்வாறு செய்யலாம் அவ்வாறு செய்யும்போது நாம் ஒரு விடயத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆம் கோடம்பாக்கத்து பாணியை நிராகரிக்க வேண்டும். ஏனெனில் கோடம்பாக்கம் பிதாமகன், அழகி, பருத்திவீரனை நோக்கிப் போகவில்லை மாறாக சிவாஜி, போக்கிரி குருவி எனக் கரடி விட்டுக் கொண்டிருக்கிறது. முன்பு இரு திலகங்களின் ரசிகர்களின் அடிபாடுகள் கமல்-ரஜினி எனத் தொடர்ந்து தற்போது சுப்ரீம் ஸ்டார், அல்டிமேற் ஸ்டார், கொன்கிறீற் ஸ்டார், கிறினைற் ஸ்டார் எனப் புறப்பட்டிருக்கின்றன. அவர்கள் கோடியில் புரள இவர்கள் அவர்களுக்காக கொடிக் கம்பம் நட்டு சில்லறையாகிறார்கள். நாம் அவர்களின் பாணியைத்தான் நிராகரிக்க வேண்டும் அவர்களையே அல்ல. எங்களது பாணியில் அவர்களைப் பயன் படுத்த முயலவேண்டும். அவர்களின் நட்பும் பக்க பலமும் தேவை என்பதை மறந்து விட முடியாது. முக்கியமாக இன்றைய இளம் நடிகர்களின் கோமாளித்தனங்களுக்கு ரசிகர்களாக இருப்பதை முதலில் நிறுத்தவேண்டும். இவர்களின் படங்களைப் பார்க்கும் போது ஒன்று மட்டும் நினைவிற்கு வருகிறது. இவர்களை கொண்டு போய் உண்மையான களத்தில் இறக்கினால் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடிவருவார்கள். புலத்தில் வாழும் ஈழத் தமிழரது கலைப்படைப்புக்களைப் பார்க்கும்போது கோடம்பாக்கம் போன்றே இவர்களும் அரைத்த மாவை அரைத்துக் கொண்டும் துவைத்த துணியைத் துவைத்துக் கொண்டும்தான் அவர்களைப் போலவே ‘பஞ்ச் டயலொக்’ விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலும் அதே பாணி ஒரு வேறுபாடும் இல்லை.

1960 வரை இலங்கையில் சிங்கள சினிமா தமிழ்நாட்டைச் சார்ந்தே இயங்கி வந்தது. மிஸ். மாலினி (நடிகர் ஜெமினி கணேசனின் முதல் படம்) போன்ற திரைப்படங்கள் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சக்கைபோடு போட்டிருக்கின்றன. அதன் பின்னர் சிங்கள திரையுலகம் விழித்துக் கொண்டு தனக்கென தனிப் பாணியை வரித்துக் கொண்டது. 1964 ஆம் ஆண்டு மார்ரின் விக்கிரமசிங்காவின் கம்பெரலிய (தமிழில் கிராமப் பிறழ்வு) எனும் கதையை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் என்பவர் அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார். சிங்களத் திரைப் பட வரலாற்றில் பெரும் மைல்கல்லாக அது அமைந்தது. அந்த நேரத்தில் இந்தியத் திரைப்படங்களுக்கே கிடைக்காத உலகப் புகழ் இதற்குக் கிடைத்தது. பல விருதுகளை அள்ளிக் குவித்தது. இதை எதற்கு இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் இந்தியப் பாணியை பின்பற்றாமல் ஈழத் தமிழர் நாம், நமக்காக ஒரு பாணியை நல்ல முறையில் வரித்துக் கொண்டோம் என்றால் இன்று ஈரானியப் படங்கள் உலகப் புகழைப் பெற்றது போல் எதிர்காலத்தில் நாமும் பெற வாய்ப்பிருக்கிறது.

Link to comment
Share on other sites

இளங்கோ கோடம்பாக்கத்து இயக்குனர்களே நாங்கள் ஒஸ்கார் வாங்கப்போறம் எண்டு கதைவிட்டுக்கொண்டிருக்கும்ப

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

24. குங்குமம் ஏன் வரவில்லை?!!!!

இந்தப் பதிவு ஒரு விசித்திரமான மனிதரைப் பற்றியது. அவர் மீது நம் ஈழத் தமிழ்க் குடிப் பெருமக்கள் சிலருக்கு ஒரு வேளை பலர் என்றுகூட சொல்லலாம் அளவு கடந்த ஒரு விசித்திரமான பக்தி இருக்கிறது. ஒரு காலத்தில் அவர் மீது எனக்கும் ஒரு வித பக்தி மயக்கம் இருந்து வந்தது. அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு ஆடிப் பாடித்திரிந்த அந்த நாள்களில் பக்தி அடிப்படையிலும் சமய அடிப்படையிலும் இருவர் என் மனதில் ஆழப் பதிந்திருந்தனர். ஒருவர் ஆறுமுக நாவலர் மற்றவர் அந்த விசித்திரமான மனிதர். சாய்ந்த கோபுரங்கள் என்ற இந்தப் பதிவில் நாவலரைப் பற்றி எழுத வேண்டிய தேவை எனக்கிருக்கவில்லை. ஏனெனில் நாவலரைப் பற்றி ஒரு கோபுரத்தை நான் என் மனதிற்குள் கட்டி எழுப்பவில்லை. அவர்மீது ஒரு வித மதிப்பு இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் அதில் கீறல்கள் விழுந்து விட்டன. நாவலர் சமயவாதி என்பதால் அந்தக் கீறல்கள் விழவில்லை. சமயவாதியாக இருப்பினும் தமிழ்க் கடல் மறைமலையடிகள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு எள்ளளவும் குறையவில்லை. காரணம் அவருடைய விரிந்து பரந்த ஆழமான தமிழ்ப் புலமையும் தனித் தமிழ்ப் பற்றும்தான். நாவலரின் தமிழ்ப் புலமையும் அவ்வாறு வியந்து போற்றத் தக்க ஒன்றே. ஆனால் அவரது சாதி ஆணவமும் ஒடுக்கப் பட்ட மக்களின் மீது அவர் காட்டிய காழ்ப்புணர்ச்சியும் அவரைக் கீழான இடத்திற்குத் தள்ளி விட்டது. இதற்கு மேல் நான் நாவலரைப் பற்றி எழுதப் போவதில்லை. ஆனால் சிறுவயதில் நான் மனத்திற்குள் கோபுரமாகக் கட்டி குடமுழுக்குச் செய்து கும்பிட்ட அந்த குறிப்பிட்ட மனிதரைப் பற்றி எழுதுவதற்கு பல இருக்கின்றன. தமிழர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பு அற்றவராயினும் வாழும் தெய்வமாக நம்மவர்கள் மத்தியிலும்கூட பெருவிருட்சமாக வளர்ந்து நிற்பவர் அவர். இத்தனைக்கும் அந்த மனிதர் சுவாமி விவேகானந்தர் போல் எழுச்சி மிக்க பேச்சாளர் அல்ல. ஓஷோவைப் (ரஜ்னீஷ்) போன்று ஆழ்ந்த தத்துவ ஞானியும் அல்ல ராமகிருஷ்ண பரமஹன்சரைப் போல் முற்றும் துறந்த ஒருவரும் அல்ல. ஆனால் இவர்கள் யாருக்கும் கிடைக்காத பேரும் புகழும் பணமும் பகட்டும் அந்தஸ்தும் அரசியல் செல்வாக்கும் அந்த மனிதருக்கு மலைபோல் கிடைத்திருக்கின்றன. புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன் அவர்தான் பகவான் அருள்மிகு சத்திய சாயி பாபா.

1988 அல்லது 1989 என்று நினைக்கின்றேன். அந்தக் கால கட்டத்தில் அவர் என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்தார். யாழ் நகரில் நான் வாழ்ந்த வீட்டிற்கு அருகாமையில் சாயிபாபா பக்தர் ஒருவரின் வீட்டிற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் பஜனை பாடுவதற்காகச் செல்வதுண்டு. சில வேளைகளில் அறுசுவை விருந்தும் தடபுடலாக அங்கு நடைபெறும். திடீரென்று ஒரு நாள் அந்தப் பக்தர் எங்கள் எல்லாரையும் அவசர அவசரமாக அழைத்தார். மாபெரும் அதிசயத்தைக் காட்டப்போவதாகக் கூறி எங்களை அழைத்துச் சென்றார். அவரது விட்டுக்குள் சாயிபாபாவின் படங்கள் பல உள்ளன. கை, கால்கள் என சாயிபாபாவின் உறுப்புக்களுக்கும் தனித் தனியே படங்கள் இருந்தன. ஓடிச் சென்று அந்தப் படங்களைப் பார்த்தால் எங்களால் வியப்பை அடக்க முடியவில்லை. திருநீறும் குங்குமம் அந்தப் படங்களில் இருந்து வெளிவந்திருந்தன.

அடுத்த நாள் ஒரு பொதுக் குழுக் கூட்டம் அந்த வீட்டில் ஏற்பாடாகியது. சிறப்புரையாற்றுவதற்கு வேட்டியும் வண்ண மயமான சால்வையும் அணிந்த ஒரு பெரிய மனிதர் வந்திருந்தார். குங்குமம் வெளிவந்ததற்கான காரணத்தை அவையோர் முன் விளக்கினார். எங்களுக்குத் தெரியாமல் சாயிபாபாவே நேரில் வந்து குங்குமத்தையும் திருநீற்றையும் தூவி விட்டுச் சென்றுவிடுகிறாராம். அம்மாடி! தலை சுற்றாத குறை. ஏனக்கோ பக்தி முன்பை விட பல மடங்கு கூடியது. அப்போது நான் மிகவும் சிறுவன். சிறுவனுக்கு எதற்கு பெரிய படம் என நினைத்தேனோ என்னவோ என் வயதிற்கு ஏற்றவாறு சாய் பாபாவின் ஒரு சிறிய படத்தை வாங்கி எங்கள் வீட்டுச் சாமி அறையில் வைத்திருந்தேன். நாள் தவறாமல் கும்பிட்டேன் எதற்காகத் தெரியுமா குங்குமத்தை வரவழைப்பதற்காக! வரவேயில்லை. எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளி நெருங்கிய உறவினர் ஒருவரின் விடு உள்ளது. அவர்கள் பெரியவர்கள் பெரிய சாயிபாபா படத்தை வைத்திருந்தனர். அங்கு போய்ப் பார்த்தேன் அங்கேயிருந்த படத்திலும் குங்குமமோ திருநீறோ வரவில்லை. அங்கேயிருந்தவர்களைக் கூப்பிட்டு காரணத்தைக் கேட்டேன். நமது பக்தியில்தான் குறை. நாம் நம்மை மறந்து கும்பிட வேண்டும் அப்பத்தான் குங்குமம் வரும் என்றார் அவர். கூடவே குங்குமம் வந்த வீட்டுக்காரரான அந்த பக்தரை உதாரணமாகக் காட்டினார். நான் அதை மெய்யாகவே நம்பினேன். மனத்தை ஒரு முகப் படுத்தி, அம்மம்மா விட்டிற்கு வரும்போதெல்லாம் செய்து கொண்டுவரும் எள்ளுருண்டையை நினைக்காமல், அம்மா ஆசையாய் செய்து தரும் இராசவள்ளிக் கிழங்கை நினைக்காமல் பக்கத்து வீட்டு அக்கமார் ஆசையாய் வாங்கித்தரும் ஐஸ்கிரீமை நினைக்காமல், எனக்கு சிறுவயதில் பாடம் சொல்லித் தந்த எங்களின் வகுப்பு டீச்சரை நினைக்காமல் சாயி பாபாவை நினைத்துக் கொண்டு கும்பிட்டேன். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய என மாணிக்கவாசகர் சிவபெருமானை வேண்டி நின்றது போல் நானும் சாயிபாபாவை வேண்டி நின்றேன். அந்தோ பரிதாபம்! குங்குமமோ திருநீறோ வரவேயில்லை. நான் நம்பிக்கை இழக்கவில்லை தினம் தினம் பக்தியால் உருகினேன் கடைசி வரை வரவேயல்லை. அந்த வயதில் இதற்கான காரணம் தெரிந்திருக்குமா என்ன? என் பக்தியில்தான் குறையோ என எண்ணி அழுதவாறே இருந்து விட்டேன்.

சாயிபாபா என்ற அந்தக் கோபுரம் எனக்கு இறைநம்பிக்கையும் சமய நம்பிக்கையும் இருந்த காலத்திலேயே சாய்ந்து விழுந்து விட்டது. 1993 என்று நினைக்கிறேன். சாயிபாபாவின் ஆசிரமத்திலிருந்த நான்கு பேர் சாயிபாபாவைக் கொல்ல கத்தியுடன் நுழைந்திருக்கிறார்கள். காவல் துறையினர் அவர்களை சுட்டுக் கொன்றது. அப்போது ஏன் அந்த நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்தது.

90 களின் இறுதிப் பகுதியில் ஒரு நாள் பிரான்சிலுள்ள புத்தகக் கடை ஒன்றில் ‘The Dark Side of Sai Baba’ என்ற ஆங்கில நூலை பார்க்க நேரிட்டது. சாயிபாபாவின் முன்னாள் சீடர் ஒருவர் எழுதியது. சாயிபாபவைப் பற்றி பல விடயங்கள் எழுதப் பட்டிருந்தன. குறிப்பாக ஓரினச் சேர்க்கையில் அவருக்கு இருந்த அதீத மோகம் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஒரு வேளை புரட்டாக இருக்கலாம் என எண்ணினேன். இருப்பினும் மனம் அமைதி கொள்ளவில்லை. அவரைப் பற்றிய செய்திகளைத் திரட்டத்தொடங்கியபோது அதிர்ச்சியளிக்கும் பல விடயங்கள் தெரியத் தொடங்கின.

சத்திய நாரயணன் ராஜு என்ற இயற்பெயர் கொண்ட இவர், சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் கால் பதிக்க முயன்றார். அப்போது பகுத்தறிவுவாதியும் மனோதத்துவ மருத்துவருமான ஆபிரகாம் கோவூர் இவரை கருத்துப் போருக்கு அழைத்தார். சாயி பாபா போகவில்லை. கோவுரும் விடவில்லை. இந்த விடயத்தில் கோவூர் ஈவிரக்கமற்ற பகுத்தறிவுவாதி. சாயிபாபாவை ஓட ஓட விரட்டினார். தமிழ் நாட்டில் கால் பதிக்க முயன்ற சாயிபாபா கோவூருக்குப் பயந்து ஆந்திராவிலுள்ள புட்டபர்த்தியில் நிரந்தரமாகத் தங்கி ஒர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார்.

இன்று சாயிபாபா எதனால் இமாலயப் புகழைப் பெற்றாரோ அவரது அந்த அற்புதச் சித்து விளையாட்டுக்களை அவருக்கே தெரியாமல் படம் பிடித்து வெளி உலகத்திற்கு அம்பலப் படுத்தியுள்ளது http://www.exbaba.com/ என்ற இணையத்தளம். மேலும் அவரது ஆசிரமத்தில் நடந்த கொலைகள் குறிப்பாக வெளிநாட்டுப் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டதை எல்லாம் சான்றுகளுடன் வெளிக்காட்டியுள்ளது மேற்படி இணையத்தளம். குன்றக்குடி அடிகளார், விவேகானந்தர், வள்ளலார் போன்று அன்பையும் மனித நேயத்தையும் வளர்த்த இறையியலாளர்களுடன் ஒப்பிடும்போது சாயிபாபா என்பவர் அவர்களிடமிருந்து வெகு தூரம் தள்ளி நிற்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். வெறும் மந்திர வித்தையைக் காட்டி மக்களை ஏய்க்கும் ஒருவராகவே அவர் தென்படுகிறார். உண்மையான ஓர் ஆன்மீகத் துறவி எதற்காக சித்து விளையாட்டை கற்க வேண்டும் என்பதுதான் அப்போது எழுந்த அடுத்த கேள்வி.

2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி வியாழக்கிழமை சாயிபாபாவின் ஆசிரமத்திலிருந்து அந்த அறிவிப்பு வந்தது. மாலை 6 மணியிலிருந்து 7 மணிவரை நிலவில் சாயிபாபாவின் முகம் தெரியப்போகிறதாம் பல்லாயிரக்கணக்கான சாயிபாபா பக்தர்கள் ஐதராபாத் விமான நிலயத்திற்கு அருகில் திரண்டனர். சாயிபாபாவின் அற்புதங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமையப் போகும் அந்த மாபெரும் அதிசயத்தைக் காண்பதற்காக. இறுதியாக மேகம் நிலவை மறைக்க ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் பக்தர்கள். ஒரு வேளை முகில் மறைத்திருக்காவிட்டால் பகவான் காட்சியளித்திருந்திருப்பா போலும். அந்த நேரம் சீடர் சத்திய சாயிபாபா தனது குரு சீரடி சாயி பாபாவை அழைத்திருக்கவேண்டியதுதானே அவர் வந்து முகிலை விலத்தியிருப்பார். அல்லது குடியரசுத்தலைவர் ஆனதும் தன்னிடம் வந்து ஆசி பெற்றுச் சென்ற அப்துல் கலாமை கூப்பிட்டிருந்தால் ரொக்கற்றை விட்டு முகிலைக் கலைத்திருப்பார்.

இறுதியாக ஒரு கேள்வி எழுந்தது. அன்று நான் வைத்திருந்த படத்தில் குங்குமம் வரவில்லை மாறாக சாயிபாபாவின் தலைமைப் பக்தர்கள் என்போரின் வீட்டில் குங்குமமும் திருநீறும் கொட்டோ கொட்டென்று கொட்டின. இதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன் காரணம் எதுவாக இருக்க முடியும்? சாயிபாபாக்களின் ஈழத்து ஏஜண்டுகள் யாருக்கும் தெரியாமல் கடையிலிருந்து பொட்டலத்தை வாங்கித் தூவி விட்டு நமது காதில் பூவை அல்ல பூசணிக்காயையே சுற்றி இருக்கிறார்கள். இதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழண்டு போன நட்டுக்கள் விரைவில் பூட்டித்தரப்படும். தொடர்பு கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

25. கடவுளைத் தேடி…………

"நாங்கள் கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்கள் இல்லை. கடவுள் இல்லையே என்று கவலைப் படும் நாத்திகர்கள். இன்னும் சொல்லப் போனால் கடவுள் என்று ஒருவர் இருக்கக் கூடாதா என்று ஏங்கும் நாத்திகர்கள். "

இப்போதெல்லாம் நாத்திகம் பேசுவது ஒரு வித நாகரிகமா இந்தக் காலத்து இளசுகளுக்கு போய்விட்டது என்று அலுத்துக் கொண்டே என்னிடம் கூறினார் ஒருவர். நாத்திகம் பொல்லாதது என்றார் மற்றொருவர். நாத்திகர்களை ஏதோ திரைப்படங்களில் வரும் வில்லன்களைப் பார்ப்பது போல் பார்க்கும் மனோபாவமும் ஒரு சிலருக்கு இருக்கின்றன. ஒரு விடயத்தை இவர்கள் எல்லோரும் வசதியாக மறந்து விட்டார்கள். நாத்திகம் இன்று நேற்று தொடங்கியது அல்ல. உண்மை என்னவெனில் கடவுள் இருக்கிறார் என்ற கருத்து இந்த உலகத்தில் தோற்றம் பெறும்போதே கடவுள் இல்லை என்ற கருத்தும் தோற்றம் பெற்றுவிட்டது. கடவுள் மறுப்பாளர்கள் கி.மு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கிறார்கள். வெறும் வரட்டுத்த தத்துவத்தின் அடிப்படையில் நாத்திகம் தோன்றி விடவில்லை. சிந்தனையின் வளர்ச்சிப் போக்கில்தான் அதுவும் பரிணாமித்திருக்கிறது. உலகப் புகழ் பெற்ற கிரேக்கத் தத்துவ ஞானிகளான பிளாட்டோ, அரிஸ்டோட்டில், சோக்ரடீஸ் போன்றவர்கள் கடவுள் மறுப்பாளர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். மார்க்சியத்தின் பொருள் முதல்வாதக் கோட்பாடு கடவுளை மறுக்கிறது.

தத்துவஞானிகள் பொதுவாக கருத்து முதல்வாதிகளாகவும் பொருள் முதல்வாதிகளாகவும் இருப்பார்கள். தத்துவத்தின் அடிப்படையே இந்த இரண்டிலும்தான் தங்கியுள்ளது. அன்று முதல் இன்று வரை இந்த இரண்டிற்கும் கருத்துப் போர் நடைபெற்ற வண்ணம் உள்ளது. சரியான முடிவு இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் எங்களைப் போன்றவர்களின் அறிவு பொருள்முதல்வாதத்தையே ஏற்றுக் கொள்கிறது. முதலில் கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்றால் என்னவென்று பார்ப்போம்.

இந்த உலகம் கடவுளால் படைக்கப் பட்டது, அவனின்றி அணுவும் அசையாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், குறிப்பிட்ட அந்தக் கருத்தை வைத்து பின்னப்பட்ட வாதமே கருத்து முதல்வாதம்.

பொருள் முதல்வாதம் பொருளை அடிப்படையாகக் கொண்டது. அழகானா மலரைப் பார்க்காமல் அது அழகானது என்ற கருத்துத் தோன்ற முடியாது. இனிமையான பாடலைக் கேட்காமல் அது இனிமையானது என அறிய முடியாது. நமது உடலை ஐம்புலன்கள் இயக்குகின்றன. அந்த ஐம்புலன்களையும் மூளை இயக்குகின்றது. காதலுக்கு இதயத்தை குறியீடாகக் காட்டுவது முற்றிலும் தவறானது. காதல் உணர்வென்பது முழுக்க முழுக்க மூளையின் வெளிப்பாடே. அந்தக் கருத்து எவ்வாறு மூளையில் ஏற்பட்டது. ஏதாவது ஒரு திடப் பொருளைப் பார்த்தபின்தானே. திடப் பொருள் என்றால் என்ன? மரம், கோவில், விமானம், நான், நீங்கள், ஐஸ்வர்யாராய் என எல்லாமே திடப் பொருட்கள்தான். பெண் என்ற திடப் பொருளைப் பார்த்தபின்தான் ஆண் என்ற திடப்பொருளுக்கு காதல் தோன்றுகிறது. பார்க்காமல் தோன்றும் காதல்கூட அந்தத் திடப்பொருள் தொடர்பாக ஏதாவது ஒன்றை அறிந்த பின்தான் ஏற்படுகிறது. எது எப்படிப் பார்த்தாலும் பொருள்தான் முதல் வருகின்றது.

சரி இனி விசயத்திற்கு வருவோம். கடவுள், ஆன்மா போன்றவை திடப் பொருட்கள் அல்ல. புலன்களால் அவற்றை உணர முடியாது. மனத்திற்குள் ஏற்பட்ட கருத்தையும் அதன்பால் ஏற்பட்ட பக்தியையும் வைத்துத்தான் நாம் நமது நம்பிக்கையை வளத்து வருகிறோம்.

உலகம் வெறும் திடப் பொருட்களால் மட்டும் ஆகவில்லை. திடப் பொருள் சக்தி, இந்த இரண்டையும் கொண்டே உலகம் இயங்குகின்றது. சக்தி என்றதும் யாரும் ஓம் சக்தியயோ பராசக்தியையே நினைக்கவேண்டாம். நாம் குறிப்பிடுவது இயக்கவியல் எனப்படும் அந்தச் சக்தியை. நியூட்டனின் முதலாவது விதிப்படி ஒரு திடப்பொருளின் மீது அசைவியக்கம் இல்லை என்றால் அது எந்த மாற்றத்திற்கு உள்ளாகாமல் அப்படியே இருக்கும். பேருந்து என்ற திடப்பொருள் இயங்குகிறது. அந்த இயக்கம் எங்கிருந்து பெறப்படுகிறது மனிதன் எனும் இன்னுமொரு திடப்பொருளில் இருந்துதான் அது பெறப் படுகிறது. அந்தப் பேருந்தை மனிதன் பாவிக்காமல் விட்டால் அது அப்படியே இருந்து விடப் போவதில்லை. அப்போதும் அந்தப் பேருந்தில் மாற்றம் ஏற்படத்தான் செய்கிறது. அதன் வடிவம் மங்கி அது துருப்பிடிக்கிறது. இது ஒரு இரசாயன மாற்றம் அந்த மாற்றம் எங்கிருந்து பெறப் படுகிறது? குறிப்பிட்ட அந்தப் பொருளில் இருந்துதான் பெறப்படுகிறது, அதாவது இயக்கம் என்பது ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு ஊட்டப் படுகிறதே தவிர பொருள் இல்லாத ஒன்றிலிருந்து ஊட்டப் படவில்லை.

இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் இயங்குகிறது. ஒரு பொருளை அழிக்கவோ ஆக்கவோ முடியாதென்பது விதி. அதன் வடிவம் மாறுகிறதே தவிர அது அழிக்கப்படுவதில்லை. மரக் கட்டையை எடுத்துக் கொண்டால், வெட்டித் துண்டுகளாக்கலாம் எரித்துச் சாம்பலாக்கலாம். இங்கு வடிவம்தான் மாறுகிறதே தவிர அது அழிபடவில்லை.

எந்த ஒரு கருத்தும் பொருள் இல்லாமல் தோற்றம் பெறுவதில்லை. கருத்தா பொருளா என்ற வாதத்தில் நமது அறிவிற்கு எட்டியவரை பொருளே முதலில் தெரிகிறது. கருத்து உற்பத்தியாகும் முளை என்பது என்ன? அதுவும் ஒரு பொருள்தானே. எனவே பொருள்தான் முதலானது என்பது தெளிவாகிறது. இந்தப் பிரபஞ்சத்தையும் நாம் அவ்வாறுதான் பார்க்கிறோம். இந்தப் பிரபஞ்சத்திற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. இதன் வடிவம் மாறுமே தவிர இது அழிவற்றது. நிலமை இவ்வாறு இருக்க இதை யார் தோற்றுவித்தார் என்ற கேள்வி தேவையற்றதாகவே எங்களுக்குப் படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற சொற்றாடர்கள் எங்களுக்கு அபத்தமாகவே படுகின்றன.

இல்லை இது கடவுளால் படைக்கப் பட்டது. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார், ஆதியும் அவர்தான் அந்தமும் அவர்தான், அனைத்திற்கும் அவர்தான் காரணம் என்றால் அதனை மெய்பிக்கட்டும். ஏற்றுக் கொள்வதற்கு எங்களைப் போன்றவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நாங்கள் கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்கள் இல்லை. கடவுள் இல்லையே என்று கவலைப் படும் நாத்திகர்கள். இன்னும் சொல்லப் போனால் கடவுள் என்று ஒருவர் இருக்கக் கூடாதா என்று ஏங்கும் நாத்திகர்கள்.

நாத்திகனாக வாழ்வதென்பது அவ்வளவு எளிதல்ல. இறை நம்பிக்கையாளர்கள் தவறு செய்தால் அதனை மன்னிக்கச் சொல்லி கடவுளிடம் வேண்டுவார்கள். அவர்களின் நம்பிக்கையின் படி அவர்களுக்கு பிரயச்சித்தம் உண்டு. நாத்திகர்களுக்கு என்ன இருக்கிறது. தவறே செய்யாமல் இருப்பதுதான் அதற்கான ஒரே பிரயச்சித்தம். மீறி தவறு செய்தால் அவ்வளவு எளிதில் அவர்களால் மீண்டுவிட முடியாது.

நாத்திகர்கள் மேல் வைக்கப் படும் எந்தக் குற்றச் சாட்டும் அடிப்படையில் நியாயமற்றவை. கடவுள் இருக்கிறார் என்று ஆத்திகர்களில் கருத்துப் படிபார்த்தாலும், குறிப்பிட்ட அந்தக் கருத்தை மறுப்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கு உரிமை இருக்கிறதென்றால் அதனை மறுப்பதற்கும் உரிமை இருக்கிறது. இந்த இடத்தில் மற்றுமொரு வரலாற்று உண்மையைக் கூற வேண்டும். கடவுளை மறுத்த பகுத்தறிவுவாதிகளில் பெரும் பாலோரை நாம் அவதானிப்போமானால் அவர்கள் அனைவரும் சமூக சீர்திருத்தவாதிகளாகவே தென்படுகின்றனர். கடவுளை அவர்கள் எதிர்க்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இல்லாத ஒன்றை எதிர்ப்பதற்கு அவர்கள் மூடர்கள் அல்ல. ஆதிக்கவாதிகளின் கைப்பாவையாக கடவுள் என்ற கருத்து பரப்பப் பட்டதுதான் அவர்களின் கோபத்திற்கும் போராட்டத்திற்கும் காரணம். சோக்ரடீஸ், புத்தர் முதற்கொண்டு இங்கர்சால், பெரியார் போன்றவர்களின் வரலாறுகளைப் படித்தால் இந்த உண்மை விளங்கும்.

குறிப்பாக பச்சை நாத்திகர் அதுவும் ஈவிரக்கம் கொஞ்சமும் அற்ற நாத்திகர் என பலரால் வசை பாடப்படும் தந்தை பெரியரின் வரலாற்றை ஆராய்ந்தால் பல வியப்புக்கள் காத்திருக்கின்றன. பார்ப்பான் பஞ்சமன் என்ற சாதிப் பாகுபாட்டை ஒழிப்பதற்காக அவர் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். அப்போது தனது இயக்கத்தின் ஏடாகா அவர் குடியரசு நாளிதழை தொடங்கியபோது, “எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக” என்றே எழுதுகிறார். சாதியையும் பிறவிப் பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்த அவர் அப்போது கடவுளில் கைவைக்கவில்லை. சாதிகளைக் கற்பிக்கும் வருணாசிரமத்தத்துவம் இந்து மதத்தின் ஆணிவேர் என்பதை அவர் அறிய நேர்ந்த போது அதனை எதிர்க்கிறார். அந்தத் தத்துவங்கள் புண்ணிய ஏடுகளின் பொன் போன்ற கோட்பாடுகள் என பலர் உரைத்தபோது, அந்த புண்ணிய ஏடுகளையே கொளுத்தவேண்டும் என்கிறார். இல்லை இல்லை அந்த புண்ணிய ஏடுகள் கடவுளால் படைக்கப் பட்டவை என்ற போது, “என்னடா பெரிய வெங்காயக் கடவுள், அவனையே ஒழியுங்கடா” என்கிறார். ஆம் பெரியார்கூட நேரடியாக கடவுள் மறுப்பாளராக மாறவில்லை. சாதியை ஒழிக்க முற்பட்ட அவருக்கு கடவுளைக் காட்டி பேய்காட்ட வெளிக்கிட்டனர் ஆதிக் சாதியினர். அதன்பின் பொருள் முதல்வாதக் கோட்பாடுகளைப் படித்து பெரியார் தத்துவ அடிப்படையில் நாத்திகராக மாறினார் என்பது வேறு. ஆனால் அவர் போராட வெளிக்கிட்ட தொடக்கத்தில் அவரது நோக்கம் சாதி ஒழிப்பே தவிர கடவுள் மறுப்பு அல்ல. அவர் மட்டுமல்ல, " Light Houses are more helpful than Churches" என்ற பென்சாமின் பிராங்க்ளின் என்பவரை எத்தனையோ வாய்கள் சபித்திருக்கும். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர் பிறந்திருந்தால் அவருக்கு மரணதண்டனைகூட தரப்பட்டிருக்கும். அவர் யாரை எல்லாம் எதிர்த்தாரோ அவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை ஆனால் அவர் கண்டுபிடித்த பென்சிலின் என்ற மருந்து பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது.

இவ்வாறு உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளர்களின் கடவுள் மறுப்பானது மனித நேயத்தை மறைமுகமாகக் கொண்டிருக்கிறது என்பதனை மறந்துவிட முடியாது. நாத்திகனை வைத்து எழுதப்பட்ட ஒர் ஆங்கிலக் கவிதை நினைவிற்கு வருகிறது. கடவுளை நேசிக்கும் மனிதர்களின் பட்டியலில் அவன் பெயர் இல்லை. ஆனால் கடவுள் நேசிக்கும் மனிதர்களின் பட்டியலில் அவன் பெயர் முதலிடத்தில் இருக்கிறது காரணம் அவன் மனிதர்களை நேசிக்கிறான். நாத்திகன் என்றால் கடவுள் மறுப்பாளன் என்பார்கள் என் போன்றவர்களைக் கேட்டால் அவனுக்கும் கடவுள் இருக்கிறது என்றே கூறுவேன் ஏன் அவனுக்கு மதமும் இருக்கிறது. ஆம் அன்புதான் அவனது கடவுள் மனிதநேயமே அவனது மதம்.

நிறைவாக........

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்த சாய்ந்த கோபுரங்கள் என்ற இந்த அனுபவப் பதிவை நிறைவு செய்யும் நேரம் வந்து விட்டது. இதில் நான் குறிப்பிட்ட சில விடயங்கள் பலரது மனத்தைக் காயப்படுத்தியிருக்கலாம். நண்பர்களே உண்மை என்றும் கசப்பானது. இவற்றை நான் முதன் முதலாக அறிய நேர்ந்தபோது எனக்கும் கசக்கத்தான் செய்தது. இத்தொடரில் எந்த விதமான திரிபுவாதத்தையும் நான் வைக்கவில்லை. நான் அறிந்து கொண்ட உண்மைகளை அப்படியே வெளியிட்டேன். பொதுவாக எல்லோரும் கேட்ட ஒரு கேள்விக்கு இப்போது நான் பதிலளிக்கின்றேன். பிற மதங்களை விட்டு விட்டு இந்து மதத்தை மட்டும் தாக்குவது நியாயமா என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். மேலை நாட்டு பகுத்தறிவாளர்களான இங்கர்சால், டார்வின், பென்சாமின் பிராங்க்ளின் போன்றவர்கள் இந்து மதத்தை எதிர்க்காமல் ஏன் கிறிஸ்தவ மதத்தை எதிர்த்தார்கள் என்று கேட்பது போல்தான் இந்தக் கேள்வியும் உள்ளது.

ஒருவர் வாழும் சமூகத்தை எந்த மதம் பாழ்படுத்தியதோ அதைத்தான் அவர்கள் முதல் எதிர்ப்பார்கள். மேலும் சாதிகளற்ற தமிழ்ச் சமூகத்தில் சாதிய இழிவை இந்து மதம்தான் கற்பித்தது. அது கற்பித்த நான்கு சாதிகள்தான் நாற்பதாய் நானூறாய் கிளை பரப்பி நிற்கின்றன. அனைத்து கிறிஸ்தவர்களும் பைபிள் படிக்க வேண்டும் என்ற கிறிஸ்தவத்திற்கும், அனைத்து முஸ்லீம்களும் குர்ரான் படிக்கவேண்டும் என்ற இஸ்லாத்திற்கும் பிராமணன் மட்டும்தான் வேதம் படிக்க வேண்டும் சூத்திரன் வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற இந்து மதத்திற்கும் எத்துணை பெரிய வேறுபாடு. தமிழ்ச் சமூகத்தில் தோன்றிய பகுத்தறிவாளர்கள் இந்து மதத்தை குறிவைத்துத் தாக்கியதற்கு இதுதான் காரணம். ஒருவரின் மனம் புண்படும் என்பதற்காக உண்மையை உரைக்காமல் இருக்க முடியாது. உண்மை முன்று நிலைகளைக் கடக்கிறது. முதலில் அது நகைப்புக்கிடமாகவும் அடுத்து அது மிகத் தீவிரமான எதிர்ப்புக்குள்ளாகும் விதமாகவும் இறுதியில் தெளிந்த மனதுடன் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் அமைகிறது என்று இந்தத் தொடரின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட ஜேர்மன் நாட்டு தத்துவமேதை ஆர்தர் ஸ்கோபென்கார் கூறிய வாரிகளை மீண்டும் நினைவு படுத்தி இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

பல எதிர்ப்புக்களை எதிர்கொண்ட போதிலும் இப்பதிவை தொடர்ந்து எழுத வைத்த ஒருபேப்பர் நிர்வாகக் குழுவினருக்கும், வாசித்த தமிழ் நெஞ்சங்களுக்கும், தங்களின் கருத்துக்களைப் பதித்து என்னை ஊக்கப் படுத்திய அன்புறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை நன்றி கூறி விடைபெறுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்தில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அன்பிற்கினிய தோழர்கள் ரசிகை, புத்தன், கௌதமன், நெடுக்காலபோவான், தூயா, சாத்திரி, ஓவியன், லிசான், சுவி, கர்ணன், ஜமுனா, கந்தப்பு, சுகன், தேவன், ஜனனி, சபேசன், பண்டிதர், கௌரிபாலன், இணையவன், பொன்னையா ஆகிய அனைவருக்கும் வாசித்த தமிழ் உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.