நாம் தமிழர் அரசியல் - பாகம் 2
-
Tell a friend
-
Similar Content
-
By இ.பு.ஞானப்பிரகாசன்
தமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!
ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!
ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!
கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.
இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.
இனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை! வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு!
கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.
அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.
அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
அவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.
“ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.
இனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.
விடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.
இப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.!
ஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது!
இஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி!
ஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்!
தி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை!
இன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.
இவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை! பெரியோர்களே! எங்கள் முன்னோடிகளே! வழிகாட்டிகளே! இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது!
எனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!
அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை!
தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி!
இந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!!
மலர்க தமிழீழம்!!!
பி.கு.: உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம்! எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம்! இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள்! உங்கள் கருத்தைப் பதியுங்கள்! நூலைப் பெற - https://amzn.to/2qFuL4z
படம்: நன்றி மாவீரம்.
-
By இ.பு.ஞானப்பிரகாசன்
“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.
“நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.
“உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,
“சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.
ராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது!...
ராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட!
ஆம்! ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.
அப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில்! அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா?...
**********
இல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்!...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.
“லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா!” என்றான் ராகேஷ்.
“சாரிடா! நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா!... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,
“நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா!...”
வருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,
“ராக்கி! ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே!...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,
“ஏ, ஆமாண்டா! மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.
“என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.
“என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.
“தெரியலடா! ஹாஸ்பிட்டலுக்குப் போய்க்கிட்டிருக்கும்போது அம்மா சொன்னாங்க. ‘புக் ஷெல்ப்ல ஒரு லெட்டர் வெச்சிருக்கேன். படிச்சிப் பாரு’ன்னு”.
சொல்லிக் கொண்டே உள்ளேயிருந்து ஒரு தாளைத் கொண்டு வந்தான். நான்காக மடிக்கப்பட்டிருந்த அந்தத் தாள் பார்க்கவே கொஞ்சம் பழையதாக இருந்தது. பிரித்தேன். அம்மாவின் கையெழுத்துதான். இடது மேல் மூலையில் ‘நாள்: 12.8.2010’ என்று இருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதா?! அதை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவ்வளவு உயிர் போகிற வலியிலும் படிக்கச் சொல்லி நினைவுபடுத்தியிருக்கிறார் என்றால்... வியப்போடும் புதிரோடும் நான் படிக்க ராகேஷும் அவன் மனைவியும் கேட்கத் தொடங்கினர்.
“உயிரினும் இனிய மகன் ராகேஷுக்கு, அம்மா எழுதும் முதலும் கடைசியுமான கடிதம்.
மகனே! நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் இறந்த பிறகுதான் இது உன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நீ நெருங்காத இடமான புத்தக அடுக்கினுள் ஒளித்து வைக்கிறேன்.
கடைசிக் கடிதம் என்றவுடன் அம்மா ஏதோ சொத்து பத்து எழுதி வைக்கப் போகிறாளோ என்று ஆவலை வளர்த்துக் கொள்ளாதே! இது வெறுமே என்னுடைய கடைசி விருப்பம் ஒன்றை உன்னிடம் தெரிவிக்கும் நோக்கம்தான், வேறொன்றுமில்லை. அது என்ன என்பதைத் தெரிவிக்கும் முன், ஏன் இப்படி ஒன்றைக் கேட்கிறேன் என்கிற காரணத்தைச் சொல்லி விடுகிறேன்.
சிறு வயதிலிருந்தே மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவள் நான். பள்ளியில் படிக்கும்பொழுதே கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் என வளர்ந்தவள். கல்லூரியில் இன்னும் ஒரு படி மேலே போய்த் தமிழ் இனத்துக்கான போராட்டங்களில் கூடக் கலந்து கொண்டேன்.
ஆனால், திருமணம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப் போட்டது. உன் அப்பா எனக்கு நேர் எதிர். திருமணச் சடங்கிலேயே எங்களுக்குள் முரண்பாடுகள் வேர்விடத் தொடங்கி விட்டன. நான் தமிழ் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். உன் அப்பாவும், அவர் வீட்டினரும் வழக்கமான முறைப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். மணமான பிறகு இருவரும் சேர்ந்து எங்காவது வெளியில் போவது என்றால், என் தேர்வு கவியரங்கம், மேடை நாடகம் என்று இருக்கும். உன் அப்பாவோ திரைப்படம், கடற்கரை போன்ற இடங்களுக்குத்தான் அழைத்துப் போவார். இவையெல்லாமாவது சிறு சிறு விஷயங்கள். ஆனால், பெற்ற பிள்ளையை வளர்ப்பதில் கூட உன் அப்பா ஒன்றைக் கூட என் விருப்பப்படி விடவில்லை.
நான் உனக்காக மிகவும் சிந்தித்து அழகழகாகப் பதினைந்து தமிழ்ப் பெயர்களைப் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஆனால், அவரோ ‘ஷ்’ என்கிற எழுத்தில் முடியும்படி பெயர் வைப்பதுதான் நாகரிகம் என்று சொல்லி உனக்கு ‘ராகேஷ்’ என்கிற பெயரைச் சூட்டினார். அது மட்டுமா? நீ எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாரை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற வரைக்கும் எல்லாமே அவர் விருப்பப்படியும், உன் விருப்பப்படியும்தான் இந்த வீட்டில் இதுவரை நடந்திருக்கின்றனவே தவிர, என் விருப்பப்படி ஓர் அணுவும் இங்கு அசைந்ததில்லை.
மகனே! வாழ்க்கை முழுக்க இப்படி அடுத்தவர் விருப்பப்படியே வாழ்ந்து முடித்து விட்ட எனக்கு, இறந்த பிறகாவது ஒன்றே ஒன்றை என் விருப்பப்படி நடத்தி வைப்பாயா?...
ராகேஷ்! தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளில் இன்றும் முதுமக்கள் தாழிகள் கிடைப்பது, இறந்தவர்களைப் புதைப்பதுதான் பழந்தமிழர் மரபு என்பதைக் காட்டுகிறது. எரிப்பது பிற்காலத்தில் தோன்றிய வழக்கமாக இருக்கலாம் என்பது என் கருத்து. கிறித்தவர், இஸ்லாமியர், எகிப்தியர் போன்ற உலகின் மற்ற இனங்களில் கூட இறந்த பின் புதைக்கும் வழக்கம்தான் இருக்கிறது. எனவே, பழந்தமிழ் நாட்டின் வழக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
எனவே, மகனே! நான் இறந்த பின் என்னை நெருப்பிலோ, மின்சாரத்திலோ போட்டு எரித்து விடாதே! தமிழ் வழக்கப்படி புதைத்து விடு! நான் பிறந்த இந்த மண்ணுக்கே என் உடல் அர்ப்பணமாக வேண்டும்! என் உடம்பு என் தமிழ் மண்ணுக்கே உரமாக வேண்டும்!
என்னுடைய இந்தக் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்…” - படித்து முடிப்பதற்குள்,
“அம்மா!...” எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான் ராகேஷ்.
“என்னடா? டேய்! என்னாச்சுடா?” என நான் அவனை உலுக்க,
“இப்பதாண்டா அம்மாவை கிரெமெடோரியத்துல வெச்சு எரிச்சுட்டு வந்துருக்கேன்” என்றான் அவன்.
“அடப்பாவி! என்னடா இப்பிடி பண்ணிட்டே! நான் வர்ற வரைக்கும் ஏண்டா வெயிட் பண்ணிட்டிருந்தே? முன்னாடியே இந்த லெட்டரை படிச்சுப் பார்த்துருக்கலாம்ல?”
“என்னடா பேசறே? எனக்குத்தான் தமிழ் படிக்க வராதுன்னு தெரியும்ல! சின்ன வயசுலேர்ந்து சி.பி.எஸ்.சி-ல படிச்சு வளர்ந்தவன்; செகண்ட் லேங்க்வேஜ் இந்தி; தமிழ் தேர்டு லேங்க்வேஜ்தான். வர்ஷாவுக்கும் தமிழ் தெரியாது. வேற யார் படிக்கறது? அப்பிடியும் ஸ்டார்ட்டிங்கை கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படிச்சுப் பார்த்தேன். ஏதோ பர்சனலா எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சுது. அதைப் போய் வேற யார்கிட்டயாவது படிக்க சொல்ல முடியுமா? எனக்கு அப்புறம் நீதானே அவங்களுக்கு பையன் மாதிரி? அதனாலதான் வெயிட் பண்ணோம். ஆனா, இப்பிடி ஒரு விஷயத்தை சொல்லி இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடா” என்றவன்,
“அம்மா! தமிழ் படிக்க தெரியாததனானால உன் கடைசி ஆசைய கூட ஃபுல்ஃபில் பண்ண முடியாமப் போயிட்டேனேம்மா!...” என்று கதறி அழ, கண்ணீர் கொட்டும் விழிகளோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த அழுகை இந்த ஒரு ராகேஷோடு ஓயாது என்று தோன்றியது.
❀ ❀ ❀ ❀ ❀
(நான் திண்ணை இதழில் ௨௪-௧௦-௨௦௧௬ அன்று எழுதியது. #StopHindiImpositionமுதலான சிட்டைகள் மூலம் உலகை அதிர வைத்த தமிழ்ச் சூறாவளிகள் அனைவர்க்கும் இப்படைப்பு காணிக்கையாகுக).
படம்: நன்றி ஓவியர் இளையராஜா - https://agasivapputhamizh.blogspot.com/2019/06/thaaimoli.html
-
By இசைக்கலைஞன்
சமகால நிகழ்வுகள் குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களின் செவ்வி!
-
By இசைக்கலைஞன்
5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்
கே.கே.மகேஷ்
Share சீமான் | படம்: வி.எம்.மணிநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன்.
எந்த இலக்கோடு போட்டியிடுகிறீர்கள்?
நாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பாகவே இந்த இடைத்தேர்தலைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தத் தொகுதி களுக்கான தொடக்கமாக இத்தொகுதி இருக்கும். நாங்கள் வென்றால் ஆட்சி மாறாதுதான். ஆனால், இதுவரையில் இந்த நிலத்தில் இருந்த அரசியலே மாறிவிடும்.
ஆட்சிக்கு வர முடியாதவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாகத்தான் இருக்கும்.. சீமானின் பேச்சு அத்தகையது என்கிறார்களே?
சரி, ஆட்சிக்கு வர முடியாததால் நான் அரசியல் பேசுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம். நான் பேசுகிற விஷயங்களை எல்லாம் நிறைவேற்றி, எனக்கு அரசியல் செய்ய இடமே இல்லாமல் செய்துவிட வேண்டியதுதானே? ‘நாங்கள் வந்தால்…’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘நாங்கள் வந்தால்’ என்று பேச வேண்டியது நான்தானே ஒழிய, அவர்கள் அல்ல. அவர்கள் புதிதாக இனிமேல்தான் ஆட்சிக்கு வரப்போகிறார்களா?
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி எதையுமே செய்யவில்லை என்கிறீர்களா?
எதையும் முழுமையாகச் செய்ய வில்லை என்கிறேன். ‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். பயிற்று மொழி, ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி எதிலாவது தமிழ் இருக்கிறதா? சமூகநீதி, இடஒதுக்கீடு, பெரிய பெரிய பாலங்கள், கட்டிடங்கள் எல்லாம் தங்கள் சாதனை என்பார்கள். பிறமொழி பேசுவோருக்கும் தமிழகத்தில் இடஒதுக்கீடு கொடுத்தார்களே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களில் பெரும்பான்மையாக வாழ்கிற என் தமிழ் மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்களா? தெலுங்கு வருடப் பிறப்புக்கும், ஓணத்துக்கும் இங்கே விடுமுறை தந்தவர்கள், எத்தனை மாநிலங்களில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை வாங்கித் தந்திருக்கிறார்கள்? எத்தனை பொதுத் தொகுதியில் இதுவரையில் தாழ்த்தப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி யிருக்கிறார்கள்? உடனே, ‘உங்களை எல்லாம் படிக்க வைத்ததே நாங்கள் தான்’ என்பார்கள். ஊரெங்கும் பள்ளிக் கூடங்களைக் கட்டிய காமராஜரே இப்படிச் சொல்லிக் காட்டியதில்லை.
அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது.. மகிழ்ச்சியா?
சின்னத்தால் மட்டுமே ஒரு கட்சி வெற்றி பெறுவதில்லை என்பது உண்மை யென்றால், இரட்டை இலைக்காக ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? அண்ணாவும், எம்ஜிஆரும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த சின்னம், அரசு நலத் திட்டங்களில் எல்லாம் போட்டுப் பிரபலப்படுத்திக் கொண்ட சின்னங்கள் உதயசூரியனும், இரட்டை இலையும். 60 ஆண்டுகளாக ஒரே சின்னத்தை வைத்திருப்பவர்களும், 6 நாட்களுக்கு முன்பு சின்னம் பெற்றவர்களும் சமமான போட்டியாளர்களா?
மார்க்ஸிஸ்ட் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வாங்குவோம் என்று பேராசிரியர் அருணனுடன் நீங்கள் போட்ட சவால் இப்போதும் தொடர்கிறதா?
கம்யூனிஸ்ட்டுகள் நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்றோ, அவர் களுடன்தான் எங்கள் போட்டி என்றோ நான் கூறவில்லை. அடிப் படையில், நானும் ஒரு கம்யூனிஸ்ட். ஈழத் தமிழர், கச்சத்தீவு, அணுஉலை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அவர்களின் செயல்பாடு மண்ணுக்கேற்ற மார்க்ஸியமாக இல்லை. நாங்கள் அதனைச் சரியாக முன்னெடுக்கிறோம். தமிழ்ப் பிள்ளைகள் நல்ல முடிவெடுப் பார்கள்!
http://tamil.thehindu.com/opinion/reporter-page/5-கேள்விகள்-5-பதில்கள்-எங்கள்-வெற்றி-அரசியலையே-மாற்றும்-சீமான்-நாம்-தமிழர்-கட்சி-தலைவர்/article9625763.ece#comments
-
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
ரஷ்யாவின் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் நவல்னியின் மனைவி உட்பட மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மிக முக்கிய அரசியல் எதிரியான எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடு தழுவிய ரீதியான ஆர்ப்பாட்டங்களின் போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சனிக்கிழமை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த தகவலை ரஷ்யாவின் அரசியல் தடுப்புக் காவல்களைக் கணக்கிடும் ஒரு குழு உறுதிப்படுத்தியுள்ளது. மொஸ்கோவின் நகர மையத்தில் உள்ள புஷ்கின் சதுக்கத்திலும் அதைச் சுற்றியும் 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், அங்கு பொலிசாருடன் மோதல்கள் வெடித்தன. இதன் விளைவாக தடியடி தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டனர். அது மாத்திரமன்றி பலர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பஸ்கள் மற்றும் தடுப்புக்காவல் லொறிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் நவல்னியின் மனைவி யூலியாவும் உள்ளடங்குவார். பொலிசார் இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை சதுக்கத்திலிருந்து வெளியேற்றினர். ஆயிரக்கணக்கானோர் பின்னர் ஒரு கிலோமீட்டர் (அரை மைல்) தொலைவில் உள்ள ஒரு இடத்தில் மீண்டும் அணிதிரண்டனர். அவர்களில் பலர் கலைக்கப்படுவதற்கு முன்பாக காவல்துறையினர் மீது பனிப்பந்துகளை வீசினர். பின்னர் சிலர் நவல்னி சிறை வைக்கப்பட்டுள்ள சிறை அருகே போராட்டத்திற்கு சென்றனர். காவல்துறையினர் அங்கு தீர்மானிக்கப்படாத எண்ணிக்கையிலான கைதுகளை மேற்கொண்டனர். ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி ரஷ்யாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மொஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக இருந்ததுடன், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜேர்மன் முன்வந்தது. உடனே ரஷ்ய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜேர்மன் நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளானதாக ஜேர்மன் வைத்தியர்கள் தெரிவித்தனர். தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார். தொடர் சிகிச்சையால் அலெக்ஸி நவல்னி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து சில நாட்களுக்கு ஜேர்மனிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தன்மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் புட்டின் மீதே குற்றம் சுமத்தின. இதற்கிடையே, கொடிய விஷத்தால் தாக்குதலில் இருந்து மீண்ட நவல்னி தான் மீண்டும் ரஷ்யாவுக்கு செல்வதாக அறிவித்தார். அதன்படி, ஜேர்மனில் இருந்து விமானம் மூலம் கடந்த 18 ஆம் திகதி ரஷ்ய தலைநகர் மொஸ்கோ வந்தடைந்த அவரை, விமான நிலையத்தில் ரஷ்ய பொலிஸார் கைது செய்தனர். இந் நிலையிலேயே நவல்னியை விடுதலை செய்யக் கோரி தலைநகர் மொஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது ஆயிர்க்கணக்கான ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/99043 -
By கிருபன் · பதியப்பட்டது
ஜெனிவாவில் இரட்டை நன்மை: சுமந்திரன் எம்.பி பிரத்தியேக செவ்வி..! (நேர்காணல் ஆர்.ராம்) •புதிய பிரேரணையை இலங்கை நிராகரித்தால் அதன் சர்வதேச உறவில் முறிவுகள் ஏற்படும் •வடமாகாண சபையின் ஐ.நா.வுக்கான தீர்மானம் இனப்படுகொலையை வலியுறுத்தவில்லை •சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவதானது முரண்பாடான விடயமாகவே இருக்கும் •குறைந்தபட்ச சாத்தியப்பாடுகளுடனனேயே குற்றவியல் நீதிமன்றுக்கான முயற்சி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மீள எடுப்பதால் அதனை உயரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைப்பதோடு, பேரவையினுள் இலங்கை பற்றிய புதிய தீர்மானமும் தடையின்றி நிறைவேற்றப்பட்டு சர்வதேச மேற்பார்வை தொடர்ந்தும் நீடித்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இது எமக்கு இரட்டை நன்மையை அளிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூன்று கூட்டுக்கள் ஒன்றிணைந்து ஜெனிவா மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது வரையில் பின்னடித்த விடயங்கள் சிலவற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றதே? பதில்:- கூட்டமைப்பு பின்னடித்த விடயங்கள் என்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள். கேள்வி:- இனப்படுகொலை நடைபெற்றமை மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை தான் கூறுகின்றேன்? பதில்:- அவ்வாறில்லை. நான் 2013 ஆண்டில் முதன்முதலாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது ஒரு ‘இனப்படுகொலை’ என்று குறிப்பிட்டு இலங்கைப் பாராளுமன்றத்திலே உரையாற்றியிருந்தேன். அது பகிரங்கமாக கூறப்பட்டதொன்று தானே. கேள்வி:- நீங்கள் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தாலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அல்லது தீர்மானங்களில் இனப்படுகொலை என்பதை வலியுறுத்தவில்லையல்லவா? பதில்:- முதன் முதலாக 2011 ஆண்டு மார்ச் 31ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆணையின் பிரகாரம் இலங்கை பற்றிய மூன்று நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. செயலாளர் நாயகம் அந்த அறிக்கையை செப்டெம்பரில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த அறிக்கையில் ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படவில்லை. ‘துன்புறுத்தல்கள்’ என்ற சொற்பதமே உள்ளது. அதில் ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதத்தினை பயன்படுத்தாமை தொடர்பில் நாம் நீண்ட நேரம் அவர்களுடன் விவாதித்தோம். அச்சமயத்தில், ‘இனப்படுகொலை’ என்பதற்கான ‘நோக்கு’ மற்றும் ‘குற்றவியல்’ ரீதியான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமை, அத்துடன் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்பது நீண்டகாலமாக நடைபெறுவதால் அதனை குறிப்பிட்டு கூறி உள்ளீர்க்க முடியாமை தொடர்பில் எமக்கு தெளிவு படுத்தினார்கள். 2012ஆம் ஆண்டில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது, ‘பிரகடனத் தீர்மானத்தினையே’ செய்தது. அதன் பின்னர் 2012, 2013ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறே குறிப்பிட்டிருந்தன. அரசாங்கம் அதனை முன்னெடுக்காததன் காரணத்தினாலேயே 2014இல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் மூலமாக சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு அமைவாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கை பற்றி ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடைய அவலுவலகத்தினால் விசாரணை அறிக்கை 2015 செப்டெம்பர் 16ஆம் திகதி ஜெனிவாவில் வெளியிடப்பட்டது. இதிலும் ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படவில்லை. குறித்த அறிக்கை வெளியிடப்பட்டபோது, பத்திரிகையாளர் ஒருவர் இனப்படுகொலை சொற்பதம் இடம்பெறாமை குறித்து கேள்வி எழுப்பிய சமயம் உயர்ஸ்தானிகர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹ{சைன், “போதுமான ஆதரங்கள் இல்லாமையாலேயே அச்சொற்பதத்தினை பயன்படுத்தவில்லை” என்று குறிப்பிட்டார். நாம் சமூகவியல் சார்ந்து இனப்படுகொலை என்று குறிப்பிட்டாலும் குற்றவியல் அடிப்படையில் அதற்கான சான்றுகள் அப்போது போதுமானதாக இருக்கவில்லை. கேள்வி:- 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலும் அவ்விடயம் இருக்கவில்லையே? பதில்:- 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் இலங்கை அரசாங்கத்தினது இணை அனுசரணையை பெற்றுக்கொண்டதாகும். ஏற்கனவே ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதத்தினை பயன்படுத்துவதில் உள்ள நிலைமைகளை நாம் புரிந்து கொண்டிருந்தோம். முன்னதாக வெளியான ஐ.நா.வின் இரண்டு அறிக்கைகளில் அச்சொற்பதம் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் அச்சொற்பதத்தினை பயன்படுத்திவிட்டு பின்னர் அதனை நிரூபிக்க முடியாது போனால் அது எமக்கு பலத்த பின்னடைவுகளையே ஏற்படுத்தும். அதன் காரணத்தினால் தான், நாம் இனப்படுகொலை, மனிதாபிமானச் சட்ட மீறல்கள், துன்புறுத்தல்கள், போர்க்குற்றங்கள், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் என்று தனித்தனியாக வகைப்படுத்தாது பொதுவாக ‘சர்வதேசச் சட்ட மீறல்கள்’ என்ற சொற்பதத்தினை ஒரு ‘உத்தியாக’ பயன்படுத்தி இருந்தோம். கேள்வி:- சட்ட நுட்பங்கள் அறிந்தவரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து வடக்கு மாகாண சபையில் 2015 பெப்ரவரி 10இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இனப்படுகொலைச் சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதே? பதில்:- அந்த தீர்மானத்தினை அனைவரும் இனப்படுகொலைத் தீர்மானம் என்றே கூறுகின்றார்கள். அந்த தீர்மானத்தின் இறுதிப்பகுதியை மிகக் கவனமாக அவதானித்தால், அதில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்பது ‘சர்வதேச குற்றங்களில் ஒன்றாக இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை’ ஆகவே அது வருங்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றே அத்தீர்மானம் நிறைவடைகிறது. அந்த தீர்மானம் இலங்கையில் நடந்தது ‘சர்வதேச குற்றங்கள் இல்லை’ என்ற செய்தியையே ஐ.நா.வுக்கு வழங்கியுள்ளது. அவ்விதமான எமது பலவீனங்களை எடுத்துக் காட்டும் வகையிலும் மக்களுக்கு நன்மை கிடைக்காத முறையிலும் நாம் செயற்படவில்லை. கேள்வி:- நீண்டகாலமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறிவந்த நீங்கள் பொது ஆவணத்தில் அவ்விடயம் உள்வாங்கப்படுவதற்கு எவ்வாறு இணக்கம் தெரிவித்தீர்கள்? பதில்:- கடந்த 10வருடங்களாக மனித உரிமைகள் பேரவை ஊடான முயற்சியில் பொறுப்புக்கூறல் செய்யப்படவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஐ.நா.தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி வாக்குறுதிகளை அளித்தாலும் உள்நாட்டில் எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நாடுகளை கட்டுப்படுத்தாது. சம்பந்தப்பட்ட நாடு இணங்கினால் மட்டுமே பொறுப்புக்கூறல் தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தலாம். அதுவே மனித உரிமைகள் பேரவையின் அமைப்பு முறைமையாகும். அந்த அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் கடந்த செப்டம்பர் கூட்டத்தொடரில் ஐ.நா.தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்து விட்டது. அதன் பின்னர், பொறுப்புக்கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையில் வைத்திருப்பதால் பயனில்லை. ஆகவே தான் அதனை அங்கிருந்து மீளெடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளது. கேள்வி:- இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முடியும் என்ற நம்பிக்கை உங்களிடத்தில் உள்ளதா? பதில்:- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மூன்று வழிகளே உள்ளன. முதலாவது, ‘ரோம்’ சாசனத்தில் சம்பந்தப்பட்ட நாடு கைச்சாத்திட்டிருக்க வேண்டும். ஆனால் இலங்கை அதில் கையொப்பமிடவில்லை. இரண்டாவது, சம்பந்தப்பட்ட நாடு இணங்கி குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறைக்கு முகங்கொடுக்க வேண்டும். இலங்கை அவ்விதமான இணக்கத்தை ஒருபோதும் தெரிவிக்கப்போவதில்லை. மூன்றாவது ஐ.நா.பாதுகாப்புச் சபையின் ஊடாக பரிந்துரைக்கப்பட வேண்டும். இதுவொன்றே எமக்குள்ள ஒரேவழியாகும். ஆனால் இதில் வீட்டோ அதிகாரத்தினைக் கொண்டுள்ள ரஷ்யா, சீனா இலங்கையை காப்பாற்றும் என்பதே எனது தர்க்கமாகும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இவ்விதமான விடயங்களில் சீனா வீட்டோவை பயன்படுத்தாது இருந்துள்ளதாக பொது ஆவணத் தயாரிப்பு கலந்துரையாடல்களின் போது எனது நிலைப்பாட்டுக்கு எதிரான தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சாத்தியமில்லை என்று எதிர்மறையாக சிந்திப்பதை விடவும் ஒரு சதவீதமேனும் உள்ள சாத்திய வழியில் முயற்சித்துப்பார்ப்போம் என்ற நிலைப்பாடு உடையவர்களின் முயற்சிக்கும் கருத்துக்கும் குறுக்கே நிற்பதற்கு நான் விரும்பவில்லை. அதனாலேயே சம்மதம் தெரிவித்தேன். அவ்விதமான முயற்சி வெற்றி பெற்றால் அதனை மனதார வரவேற்கும் முதல் நபரும் நானே. கேள்வி:- மனித உரிமைகள் பேரவையில் இருந்து பொறுப்புக்கூறல் விடயம் மீள எடுக்கப்படும் பட்சத்தில் அடுத்த கட்டச் செயற்பாடுகள் என்ன? பதில்:- பொறுப்புக்கூறல் மீளவும் எடுக்கப்பட்டு அதனை மீண்டும் ஐ.நா.செயலாளர் நாயகத்திடம் அனுப்புமாறு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரைக் கோரியுள்ளோம். ஏனென்றால் அவரே இலங்கை விடயத்தினை மனித உரிமைகள் பேரவைக்கு 2011இல் அனுப்பி வைத்தவர். அவர் அனுப்பி வைத்த விடயம் பத்து ஆண்டுகளாக எந்த முன்னேற்றத்தினையும் எட்வில்லை என்ற செய்தியையும் அவருக்கே மீள அனுப்பி வைப்பதன் ஊடாக தெரிவிக்க முடியும். மேலும் மனித உரிமைகள் பேரவையாலோ அல்லது உயர்ஸ்தானிகராலோ இந்த விடயத்தினை நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த முடியாது. ஆகவே செயலாளர் நாயகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் பொதுச்சபையில் இந்த விடயத்தினை விவாதித்து தீர்மானம் எடுத்தே அவரால் சாத்தியமான பொறிமுறைகளில் ஒன்றை பரிந்துரைக்கலாம். உதாரணமாக, கூறுவதென்றால் பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் அவரால் அனுப்பபடலாம். அல்லது, சிரியா விடயத்திற்காக பொதுச்சபையால் உருவாக்கப்பட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையைப் போன்தொரு கட்டமைப்பை உருவாக்கலாம். நாம் அனுப்பி வைத்துள்ள ஆவணத்தில் சிரியாவை ஒத்தபொறிமுறையை உதாரணமாக கூறியுள்ளமைக்கு காரணம் என்னவென்றால், பொறுப்புக்கூறல் விடயத்தினை நீதிமன்ற படிமுறைக்குள் கொண்டு செல்வதற்காகவே. அவ்விதம் பரிந்துரைக்கும் கட்டமைப்பு செயற்படுவதற்காக ஒருவருட கால அவகாசம் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளோம். கேள்வி:- இதில் மியன்மார் பொறிமுறைகள் ஒரு உதாரணமாக உள்ளீர்க்காமைக்கான காரணம் என்ன? பதில்:- மியன்மார் விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையே அந்தப்பொறிமுறையை உருவாக்கியுள்ளது. நாங்கள் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையிலிருந்து மீள எடுப்பதற்கான கோரிக்கையை முதலில் விடுத்துவிட்டு பின்னர் அதே ஆவணத்தில் மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறிமுறையை கோருவதானது முன்னுக்குப்பின் முரண்பாடாக இருக்கும் என்பதால் தான் அப்பொறிமுறையை உள்வாங்கவில்லை. கேள்வி:- இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க முடியாதென கூறியுள்ளதே? பதில்:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணை நாடுகள் இறுதி தருணத்திலும் இலங்கை அரசாங்கத்தினை மார்ச் மாதம் நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு அனுசரணை அளிக்குமாறு கோரியிருந்தன. எனினும் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. அது உண்மையிலேயே எமக்கு சாதகமான விடயம் தான். ஏனென்றால் இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்குவதாக இணை அனுசரணை நாடுகளிடத்தில் சம்மதம் தெரிவித்திருந்தால் அரசாங்கம் விரும்புகின்ற வகையிலேயே நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைந்திருப்பதற்கே அதிக சாத்தியங்கள் இருந்தன. அத்தோடு இம்முறை பாதிக்கப்பட்ட எமது தரப்புக்கு சாதகமான நிலைமைகள் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இல்லை. பொறுப்புக்கூறல் பரிந்துரைகளுடன் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றுவதே மிகச் சவாலான விடயமாகவே உள்ளது. குறிப்பாக பொறுப்புக்கூறலுடன் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் தருணத்தில் அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாக இருக்கின்றது. ஆனால், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை நாம் பேரவையிலிருந்து மீள எடுக்கும் கோரிக்கையை முன்வைத்திருப்பதன் மூலம், இலங்கை தொடர்பான பிரேரணையை நிறைவேற்றும் நாடுகளுக்கும் நன்மையே ஏற்பட்டுள்ளது. அதாவது பொறுப்புக்கூறல் விடயங்கள் இல்லாத தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்காக உறுப்பு நாடுகளின் ஆதரவினைப் பெறுவதில் கடினமான நிலைமைகள் இருக்கப்போவதில்லை. அவை தயக்கங்களையும் தெரிவிக்காது. ஆகவே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் எமக்கு இம்முறை இரட்டை நன்மையே ஏற்படப்போகின்றது. முதலாவது பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து மீள எடுத்து உயரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டாவது, இலங்கை பற்றி தீர்மானமும் தடையின்றி மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சர்வதேச மேற்பார்வையுடன் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்கவுள்ளது. கேள்வி:- இலங்கை அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐ.நா.வில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தினையும் நிராகரித்தால் என்னவாகும்? பதில்:- இலங்கை அரசாங்கம் அவ்வாறு கூறினாலும் கடந்த ஐ.நா.தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான சில கட்டமைப்புக்களை இன்மும் வைத்திருக்கின்றன. அவற்றை வினைத்திறனாக செயற்பட இடமளிக்காது விட்டாலும் ஐ.நா.விற்கு காண்பிப்பதற்காக அவ்வாறே வைத்துள்ளன. மேலும் இம்முறை இலங்கைக்கான பொறுப்புக்கூறல் விடயம் இல்லாத தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதற்கு எந்தவிதமான நியாயங்களும் இல்லை. அவ்வாறு நிராகரிக்கின்றபோது, ஒரே நேரத்தில் மேற்குலநாடுகள் உள்ளிட்ட முக்கியமான நாடுகளைப் பகைத்துக்கொள்ள அல்லது இருதரப்பு உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டிய நிலைமையே ஏற்படும். அவ்விதமான நிலைப்பாடொன்றை இந்த அரசாங்கம் எடுப்பதற்கு விரும்பாது. கேள்வி:- வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையை ஐ.நா.வுக்கான பொது ஆவணத்தில் நீங்கள் உள்ளீர்க்க விரும்பாமைக்கான காரணம் என்ன? பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஐ.நா.வுக்கான பொது ஆவணத்தில் கையொப்பமிட்ட ஏனைய கூட்டுக் கட்சிகளாக இருந்தாலும் சரி, ஐக்கிய இலங்கைக்குள்ளேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. அதேநேரம், அதிகாரங்கள் அதியுச்சமாக பகிரப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. சர்வஜன வாக்கெடுப்பு என்பது பிரிந்து செல்லுதலை மையப்படுத்தியதாகும். அதிகாரப்பகிர்வினை கோரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்களத் தரப்புக்கள் நாட்டை பிரிக்கப்போகின்றோம் என்றே பிரசாரம் செய்கின்றன. அவ்வாறான நிலையில் சர்வஜன வாக்கெடுப்பையும் கோரினால் அவர்கள் செய்யும் பிரசாரம் உண்மையாகிவிடும். மேலும் நாமும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தமையும் பொய்யாகிவிடும். அதன் காரணமாகவே அவ்விடயம் உள்ளீர்க்கப்படவில்லை. கேள்வி:- இறுதியாக, ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் பிறிதொரு குழு நியமிக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே தற்போது இவ்விதமான குழுவை நியமித்து சர்வதேசத்திற்கு போலியானதொரு தோற்றப்பட்டை வெளிப்படுத்த முனைகின்றது. அந்தக் குழுவை நாம் எள்ளளவும் நம்பவில்லை. அதுவெறுமனே கண்துடைப்பு செயற்பாடாகும். இதனை சர்வதேச நாடுகளும் நன்கு அறியும். https://www.virakesari.lk/article/99060 -
By கிருபன் · பதியப்பட்டது
ஆணைக்குழு ‘உத்தி’ (ஆர்.ராம்) ஜெனிவா நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று’ நியமிக்கப்படும் என்று கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார். சரியாக 72 மணிநேர இடைவெளியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் ‘அதியுத்தமனாரின்’ ஆணைப்படி மூவர் அடங்கிய ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை’ வர்த்தமானி அறித்தலை வெளியிட்டு நியமித்திருக்கின்றார் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர. உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோரே அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்’ உறுப்பினர்கள் ஆவர். இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடத்தில், அ.மனித உரிமை மீறல்கள் தொடர்பாக புலனாய்வு செய்வதற்காக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் மூலம் நடத்தப்பட்ட புலனாய்வுகளின்போது பாரதூரமான வகையிலான மனித உரிமை மீறல்கள், பாரதூரமான அளவில் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுதல்கள் மற்றும் வேறு அவ்வாறான பாரதூரமான குற்றங்கள் தொடர்பாக கண்டறியபப்பட்டுள்ளதா என்பதையும், ஆ.விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களினால் பாரதூரமான அளவில் மனித உரிமை மீறல்கள், பாரதூரமான அளவில் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் அவ்வாறான தவறுகள் தொடர்பாகக் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் யாது என்பதனை இனங்காணுதல் மற்றும் சொல்லப்பட்ட விடயங்கள் தொடரப்பாக செயற்பட்ட விதம் குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், இ.பரிந்துரைகள் தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கமைய இதுவரை செயற்பட்டுள்ள விதம் மற்றும் தற்போதைய அரச கொள்கைகளுக்கமைய மேலும் அப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிகைள் என்பதையும் உ. மேற்குறிப்பிடப்பட்ட (ஆ) மற்றும் (இ) இன் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது தொடர்பாக மேற்பார்வைசெய்தல், ஆகிய நான்கு பிரதான பணிகள் ஆறுமாத கால அவகாசத்துடன் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தான் இத்தகைய விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. “ஜெனிவா தீர்மானத்திலிருந்து வெளியேறுகின்றோம் என்றும் அழுத்தங்கள் அதிகரித்தால் இலங்கையின் இறைமையையும், படைவீரர்களையும் பாதுகாப்பதற்காக சர்வதேச அமைப்புக்களிலிருந்து வெளியேறும் கடினமான தீர்மானத்தினையும் எடுக்கத் தயங்கப்போவதில்லை” என்று அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய தான் தற்போது ஆணைக்குழுவை நியமிப்பதற்கு ஆணை வழங்கியிருக்கிறார். எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு அனுசரணை அளிக்குமாறு ஐ.நா. இணை அனுசரணை நாடுகள் கோரியபோதும் அதனை ‘துடுக்காக’ நிராகரித்து விட்டுத்தான் ஆணைக்குழு அறிவிப்பைச் செய்திருக்கின்றார் கோட்டாபய. இம்முறை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மீளப்பெற்று அதனை மீண்டும் ஐ.நா.செயலாளர் நாயகத்திடம் அனுப்பி வைக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பின் ஆணைபெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக ஐ.நா.உறுப்பு நாடுகளிடத்தில் கோரியுள்ளன. பாதிக்கப்பட்ட தரப்பே இவ்வாறான கோரிக்கையை விடுத்துள்ள நிலையில் ஐ.நா உறுப்பு நாடுகள் ‘வலிந்து’ பொறுப்புக்கூறல் விடயத்தினை ‘கடினமான’ நிலையில் தாம் கொண்டு வரும் தீர்மானத்தில் வைத்திருக்கப்போவதில்லை. ஆகவே இலங்கை தொடர்பான புதிய தீர்மானமானது, பொறுப்புக்கூறலை வலியுறுத்தாததாகவே இருக்கப்போகின்றது. அத்தகையதொரு தீர்மானத்தினை பார்த்து கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் அச்சமடைகின்றது என்பதும் அத்தீர்மானத்தினை சமாளிப்பதற்கு இத்தகையதொரு ஆணைக்குழுவை நியமிக்கின்றது என்பதும் வேடிக்கையானதாக இருக்கின்றது. மேலும், இந்த விசாரணை ஆணைக்குழுவானது தனது பணிகளை நிரல்படுத்திக் கொண்டு ஒன்றிரண்டு அடிகளை முன் வைக்கும் போதே மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் நிறைவுறும் தறுவாயை எட்டிவிடும் என்பதையும் இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது. அப்படியானால், இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதன் நோக்கம் சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் குறிப்பிட்டதைப் போன்று ‘வெறுமனே கண்துடைப்புக்கானது” தான். ராஜபக்ஷவினர் தமது ஆட்சிக்காலத்தில் (கடந்த ஆட்சிக்காலத்திலும் சரி, தற்போதைய காலத்திலும் சரி) ஜனாதிபதிக்குள்ள விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் பிரகாரம் எண்ணற்ற ஆணைக்குழுக்களை நியமிப்பதொன்றும் புதிய விடயமல்ல. தற்போதைய ஜனாதிபதியின் தமையனார் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் 2005-2010 ஆண்டு வரையிலான முதலாம் அத்தியாயத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி நிஷங்க உதலாகம தலைமையில் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து இடம்பெற்ற 5மாணவர்கள் படுகொலை, மூதூர் தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை உட்பட 16 சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு அந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டது. பின்னர், போர் வெற்றியுடன் அரியாசனம் ஏறிய மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது அத்தியாயத்தில், 2002 சமாதான பேச்சுவார்த்தை முதல் 2009 மே இறுதிக் கட்டப் போர் வரை நடந்த நிகழ்வுகளையும் தோல்விகளையும் முரண்பாடுகளையும் விசாரணை செய்து ‘மீள நிகழாமையை’ தடுப்பதற்காக 2010ஆம் ஆண்டில் மே மாதம் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு நியமிக்கப்பட்டது. அடுத்து, 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அது 2014 ஆம் ஆண்டு ஜூலை வரை விசாரணைக்கான காலம் விரிவுபடுத்தப்பட்டது. இதனைவிடவும், அரசியல் தீர்வுக்காக சர்வகட்சிக்குழு உட்பட இதர துணைக்குழுக்கள் பலவும் ‘விரிவுபடுத்தப்பட்ட அதிகார எல்லைவரை’ சென்று நியமிக்கப்பட்டிருந்தன. அனைத்து ஆணைக்குழுக்களும் அறிக்கைகளை சமர்பித்தன. ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் கையளிக்கப்பட்டதன் பின்னரான விளைவுகள் ஒன்றாகவே இருந்தது. ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என்று அறிவதற்காக ‘ஆணைக்குழுவை’ நியமிக்க வேண்டிய நிலைமையே நீடித்தது. இந்த நிலைமைகள் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அவநம்பிக்கையை வலுக்கச் செய்ததோடு, உள்நாட்டில் தமக்கு ‘நீதி, நியாயம்’ ஒருபோதும் கிடைக்காது என்ற இறுதி முடிவையும் எடுப்பதற்கு வித்திட்டது. மேலும், 2012ஆம் ஆண்டு செப்டெம்பரிலும், 2013ஆம் ஆண்டு மார்ச்சிலும் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்ற பிரகனடமே செய்யப்பட்டுள்ளது. 2007-2009 வரையில் ஐ.நா.வின்.வதிவிடப்பிரதிநிதியாக இருந்த கலாநிதி.தயான் ஜயதிலக்க, பதவிக்காலம் நிறைவடைந்து திரும்பியதும், “ஜெனிவாவில் அடுத்துவரும் காலப்பகுதியில் ஏற்படவுள்ள நெருக்கடிகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து மீள்வதற்காக ஐ.நா.வின் 2012, 2013 தீர்மானங்களுக்கு அமைவாக, கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்தவிடத்தில் தான் நேரடியாக வலியுறுத்திய போது அதனை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்றும் ஆனால் அவரை சுற்றியிருந்தவர்கள் (தற்போது அதியுச்ச ‘அதிகாரபீடத்தில்’ உள்ளவர்கள்) அதற்கு இடமளிக்கவில்லை என்றும் கூறுகின்றார். அவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளவர்களால், நிலைபேறான சமாதானம், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மற்றும் மனித வள அபிவிருத்தியை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட முகவராண்மைகளோடு ஒத்துழைப்புடன் செயற்படுவது என்ற அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் ‘ஆட்சி தரத்தை உயர்த்துவதற்காக’ தற்போதைய ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை என்பது வெளிப்படை. வெறுமனே சர்வதேசத்துடனான கண்ணாமூச்சி விளையாட்டில் தமையனாரின் வழியில் அதியுத்தமனாரும் பின்பற்றும் ஒரு ‘உத்தியே’ இந்த ஆணைக்குழு நியமனம். https://www.virakesari.lk/article/99057 -
ஒன்றை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்..நான்இங்கு யாழ்களத்தில் அடிபடவும் ..தமிழர்களை பிளவுபடுத்தவும் வரவில்லை..இதுபோன்றநடவடிக்கைகள். தமிழ்ஈழம் மலர்வதைப்பாதிக்கும்..இலங்கையில் போர் முடியும்வரை ,இலங்கையிலும், வெளிநாடுகளிலும் புலிகள் தவிர மற்றவர்கள் போராடுவது தடுக்கப்பட்டிருந்தது..இலங்கையிலுள்ளவர்கள் , புலிகளால் ,தமிழ்தேசியகூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுவிட்டார்கள்....வெளிநாடுகளில் எந்தவொருயமைப்பும் பெரிதாக வளர்ச்சியடையவில்லை..மக்கள் ஆதரவில்லை. மற்றவர்களை,நாங்கள் நினைத்தநேரம் போராடு எனக்கூறமுடியாது ..என்னெனில் எவரும் அவர்களுக்கு பங்களிப்பு செய்ததுகிடையாது..ஆனல். புலிகளுக்கு பெரும்பாலன தமிழ்மக்கள் பங்களிப்பு செய்திருக்கிறர்கள்..புலிகள்பற்றிகேள்வி கேட்க்கவும் கருத்துகூறவும் அந்தமக்களுக்குயுரிமையுண்டு..தற்போது தமிழ்ஈழத்தில். புலிகள் இயங்கவில்லை. இங்கு காசுசேர்த்தவர்களாலும் ,முன்பு செய்த போராட்டம்போல்..இப்போ செய்யமுடியாது..ஆனால் அவர்களால் செய்யமுடியும் அவர்கள்தான் செய்யவும் வேண்டும்..நான் இங்கு வந்திருத்தகாலத்தில் இங்கே புளட்க்கு நல்லதரவு இருந்தது..அவர்கள இலங்கையில் செயல்பபடததால் ஆதரவையிழந்துவிட்டார்கள்..புலிகள் செயல்பட்டதால்.ஆதரவு பெருகியது..இதிலிருந்து தெரிவதுயாதுவெனில்...தமிழ்ஈழத்தில் எவர்போராடினாலும். அவர்களுக்கு வெளிநாட்டிலுள்ள தமிழர் ஆதரவுவழங்குவார்கள்..யாரகயிருந்தலும் போராடுவதற்க்கு எண்ணவும்,சிந்திக்கவும்,விரும்பவும்,முயற்ச்சிக்கவும்..வேண்டும் மக்கள் ஆதரவும் வேண்டும் .இப்போ மக்கள் ஆதரவு பெறுவது மிகக்கடினம் என்னெனில்..நம்பிக்கையில்லை...நிதிமோசடிசெய்தல்...தங்களுக்குள்ளடிபடுதல். பழையனுபவம்...இப்படி பலகாரணமுண்டு..
-
By உடையார் · பதியப்பட்டது
`கிச்சன், ராஜ்ஜியம் அல்ல; சிறை!' - நம் குடும்பங்களுக்கு #TheGreatIndianKitchen சொல்வது என்ன? Guest Contributor #GreatIndianKitchen பலரும் நினைப்பது போல இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் மட்டுமல்ல, ஆணாதிக்கத்திற்குத் துணை நிற்கும் பெண்களுக்குமான படமாகவும் இருக்கிறது. மலையாள இயக்குநர் `ஜோ பேபி’ இயக்கி Neestream தளத்தில் வெளியாகியிருக்கும் The Great Indian Kitchen திரைப்படம், சமூக வலைதளங்களில் பரவலாக விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. படத்திற்கு பெண்கள் தரப்பிலிருந்து தொடர் ஆதரவும் ஆண்கள் மீது குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகின்றன. குடும்பத்தோடு பார்ப்பதற்கேற்ற படமாக இருந்தாலும் படம் பார்க்கும்போது அம்மாவோ, மனைவியோ `இப்ப தெரியுதா என் அருமை' என்று கடைவாயில் இடிப்பதற்கான அபாயங்கள் இருப்பதால் ஆண்கள் இந்தப் படத்தைப் பார்க்க அஞ்சுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன! 😉😁 #GreatIndianKitchen அப்படியென்ன அபாயகரமான கதை? படத்தில் கதை என்று தனியாய் எதுவுமில்லை. க்ளைமாக்ஸ் தவிர்த்து எஞ்சிய படம் முழுவதும் நம் வீட்டிலும், அக்கம்பக்கத்து வீடுகளிலும் நடக்கும் காட்சிகள்தான். நிமிஷா சஜயனும், சூரஜ் வெஞ்சரமுடுவும் கணவன் மனைவியாக நடித்திருக்கும் இந்தப் படம், `பிக் பாஸ்’ பார்ப்பது போல, அவர்களின் அன்றாட வாழ்க்கையை தினமும் பார்ப்பது போன்றதோர் உணர்வைக் கொடுக்கிறது. மணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் நிமிஷா, காலையில் தூங்கி எழுகிறார். தேநீரில் தொடங்கி காலை மதியம் இரவு என நாள் முழுக்க மூன்று வேளையும் மாமியார் துணையோடு விதவிதமாய் சமைத்து கணவனுக்கும் மாமனாருக்கும் பரிமாறுகிறார். அவர்கள் உண்ட மிச்சங்களையும் சமைத்த பாத்திரங்களையும் கழுவுகிறார். இரவு உறங்கி, மறுநாள் காலை எழுந்து, தேநீரில் தொடங்கி காலை மதியம் இரவு என சமைக்கிறார். பாத்திரங்களை தூய்மை செய்கிறார். மறுநாள் காலை எழுந்து திரும்பவும் மூன்று வேளை சமைத்து, பாத்திரம் கழுவி இரவில் அடுக்களையைத் தூய்மை செய்கிறார். மறுநாளும் அதையே செய்கிறார். இதை திரும்பத் திரும்பப் படிக்கும் போதும், திரைப்படத்தில் இதே காட்சிகளை திரும்பத் திரும்பப் பார்க்கும் போதும் நமக்கு ஒரு சலிப்பு தட்டுகிறதில்லையா? அந்த சலிப்புதான் படத்தின் மையப்புள்ளி. திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கே அலுப்பாயிருக்கும் விஷயங்களை, நாள் கணக்கில் வருடக்கணக்கில் ஓயாமல் செய்து கொண்டேயிருக்கும் வீட்டுப் பெண்களுக்கு அது எவ்வளவு சலிப்பாய் இருக்கும்? ஒரு குடும்பத்தில் சமையலும் வீட்டு வேலைகளும் பெண்களுக்கு மட்டுமே உரியவையா என்று யோசிக்க வைப்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம். #GreatIndianKitchen படத்தில் வில்லன்கள், சதிகாரர்கள் என்று எவருமில்லை. மருமகளைக் கொடுமைப்படுத்தும் மாமியாரோ, சிகரெட்டால் சூடு வைக்கும் கொடூர கணவனோ இல்லை. ஆனால் காட்சிக்கு காட்சி வன்முறை ஒளிந்திருக்கிறது. கதாநாயகன் அலுவலகம் செல்லும் முன்பாக மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுச் செல்லும் அன்பான கணவன்தான். ஒரு சாயலில், நம்முடையதே போல அழகான, அன்பான, பாரம்பர்யமும் பண்பாடும் கொண்ட, ஊருக்குள் மரியாதையான குடும்பம்தான் அது. ஆனால் உற்று கவனித்தால் மட்டுமே அந்த மரியாதை, குடும்பம் என்ற அமைப்பிற்கும் அதன் தலைவர்களான ஆண்களுக்கும் மட்டுமே உரியது, பெண்கள் அவ்வமைப்பின் அடிமட்ட உறுப்பினர்களாகவோ அல்லது அடிமைகளாகவோதான் இருக்கிறார்கள் என்ற உண்மை கண்களுக்குப் புலப்படுகிறது. படத்தில் மாமனாராக உடல் வலுவற்ற மெலிந்த ஒரு முதியவர் இருக்கிறார். நாள் முழுக்க ஈஸிசேரில் அமர்ந்து பேப்பர் படிக்கிறார். போனில் வாட்ஸ்அப் பார்க்கிறார். இறைவழிபாடு செய்கிறார். மருமகளை வாய்நிறைய `மகளே’ என்றழைக்கிறார். எவருக்கும் மனதால் கூட எந்தத் தீங்கும் நினைக்காத நல்ல மனிதராகக் கூட இருக்கலாம். குடும்ப உயர்வுக்காக, மகனை படித்து ஆளாக்குவதற்காக ஓடி ஓடி உழைத்தவர் வயதான காலத்தில் இப்படி நிம்மதியாக வாழ்வது நியாயம்தானே? அவருக்கு வீட்டில் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள்தான். மிக்ஸியில் சட்னி அரைத்தால் ருசிப்பதில்லை. அம்மிதான் ருசி! குக்கரில் சாதம் வைத்தால் பிடிக்காது. அதை மட்டும் விறகடுப்பில் பாத்திரத்தில் சமைக்க வேண்டும். அவருடைய துணிகளை மட்டுமாவது வாஷிங்மெஷினில் போடாமல் கையில் துவைக்க வேண்டும். நேற்று வைத்த குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்து இன்று சூடு பண்ணிக் கொடுக்கக் கூடாது. காலையில் பிரஷையும் டூத் பேஸ்டையும் யாராவது கொண்டு வந்து கையில் கொடுக்க வேண்டும். அவர் வெளியே கிளம்பும்போது, குரல் கொடுத்ததும் யாராவது செருப்பைக் கொண்டு வந்து காலருகே வைத்தால் போதும். அவரே போட்டுக் கொள்வார். வீட்டுப் பெண் வேலைக்குப் போவது அவருடைய கவுரவத்திற்கு அத்தனை பொருத்தமாக இல்லை. பெண்கள் குடும்பத்தை நன்றாக கவனித்து குழந்தைகளை சான்றோர்களாய் வளர்த்து ஆளாக்குவதே பிரதம மந்திரிகளின் பதவிக்கு நிகரானது என்பது அவர் கருத்து. #GreatIndianKitchen இவ்வளவுதானே? ஒரு குடும்பத் தலைவர் இதைக் கூட எதிர்பார்க்கக் கூடாதா? என்றால், ``கூடாது” என்பது தான் இப்படம் உரக்கக் கூறும் பதில். 60 வயதில் தான் எடுத்துக் கொள்ளும் ஓய்வை, தன் மனைவி எத்தனை வயதில் எடுத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனை ஆண்களுக்கு வருவதே இல்லை. `என் வீடு என் உரிமை’ என்று குடித்த இடத்திலேயே காபி டம்ளரையும், மேசை மீது உணவுண்ட மிச்சங்களையும், கண்ட இடத்தில் அழுக்குத் துணிகளையும், படுக்கையின் மீது ஈரத்துண்டையும் போட்டு வைக்கும் ஆண்களுக்கு அந்த வீட்டின் தூய்மையிலும் ஒழுங்கிலும் தனக்கும் பங்கிருக்கிறது எனத் தோன்றுவதில்லை. ஒரு குடும்பத்திற்குள் புதிதாய் நுழையும் பெண்ணிடம், ``இது எங்க வீடு. இங்க நீ இருக்கணும்னா நாங்க சொல்றபடிதான் இருக்கணும்” என்று சொல்வதற்கும், ``இது உன் வீடும்மா. இதோட நல்லதும் கெட்டதும் உன்னோட பொறுப்பு. இங்க எல்லாத்தையும் நீதான் பார்த்துக்கணும்” என்று சொல்வதற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. சொல்லும் தொனிதான் மாறுகிறதே தவிர செய்யும் வேலை ஒன்றுதான். The Great Indian Kitchen மலையாளத்திற்குப் புதிதாக இருக்கலாம். தமிழில் எழுத்தாளர் அம்பை எழுதிய, ``வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற அபாரமான சிறுகதை இந்தியக் குடும்பங்களில் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதை பல வருடங்களுக்கு முன்னரே முன்மொழிந்திருக்கிறது. ``ஒளியற்ற, ஜன்னல் அற்ற குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால் போல், ஆதிக்கக் கரங்கள் நீண்டு வளைத்துப் போட்டன. கால்கள் இறுக்க இறுக்கக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள். நாலா புறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்து கொண்டு அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகள் எடுத்தனர்.” #GreatIndianKitchen என்று அந்தச் சிறுகதை காரசாரமாய் சாடியிருப்பதைத்தான் இங்கே 100 நிமிடங்களில் ஓடும் காட்சிகளாய் மாற்றியிருக்கிறார்கள். பலரும் நினைப்பது போல இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் மட்டுமல்ல, ஆணாதிக்கத்திற்குத் துணை நிற்கும் பெண்களுக்குமான படமாகவும் இருக்கிறது. பெண்கள் தங்களை கிச்சன் குயின்களாக முடிசூட்டிக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் வரையில், ``அவருக்கு சகலத்துக்கும் நான் வேணும். தானா சுடு தண்ணி கூட வெச்சுக்கத் தெரியாது” என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் வரையில், குடும்பம் என்ற அமைப்பு அட்டைப்பூச்சி போல அவர்கள் மேல் ஒட்டிக் கொண்டு ரத்தத்தை உறிஞ்சுவதைத் தடுக்க முடியாது.
-
Recommended Posts