நாம் தமிழர் அரசியல் - பாகம் 2
-
Tell a friend
-
Similar Content
-
By இ.பு.ஞானப்பிரகாசன்
தமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!
ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!
ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!
கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.
இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.
இனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை! வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு!
கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.
அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.
அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
அவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.
“ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.
இனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.
விடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.
இப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.!
ஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது!
இஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி!
ஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்!
தி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை!
இன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.
இவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை! பெரியோர்களே! எங்கள் முன்னோடிகளே! வழிகாட்டிகளே! இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது!
எனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!
அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை!
தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி!
இந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!!
மலர்க தமிழீழம்!!!
பி.கு.: உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம்! எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம்! இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள்! உங்கள் கருத்தைப் பதியுங்கள்! நூலைப் பெற - https://amzn.to/2qFuL4z
படம்: நன்றி மாவீரம்.
-
By இ.பு.ஞானப்பிரகாசன்
“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.
“நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.
“உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,
“சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.
ராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது!...
ராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட!
ஆம்! ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.
அப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில்! அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா?...
**********
இல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்!...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.
“லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா!” என்றான் ராகேஷ்.
“சாரிடா! நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா!... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,
“நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா!...”
வருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,
“ராக்கி! ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே!...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,
“ஏ, ஆமாண்டா! மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.
“என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.
“என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.
“தெரியலடா! ஹாஸ்பிட்டலுக்குப் போய்க்கிட்டிருக்கும்போது அம்மா சொன்னாங்க. ‘புக் ஷெல்ப்ல ஒரு லெட்டர் வெச்சிருக்கேன். படிச்சிப் பாரு’ன்னு”.
சொல்லிக் கொண்டே உள்ளேயிருந்து ஒரு தாளைத் கொண்டு வந்தான். நான்காக மடிக்கப்பட்டிருந்த அந்தத் தாள் பார்க்கவே கொஞ்சம் பழையதாக இருந்தது. பிரித்தேன். அம்மாவின் கையெழுத்துதான். இடது மேல் மூலையில் ‘நாள்: 12.8.2010’ என்று இருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதா?! அதை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவ்வளவு உயிர் போகிற வலியிலும் படிக்கச் சொல்லி நினைவுபடுத்தியிருக்கிறார் என்றால்... வியப்போடும் புதிரோடும் நான் படிக்க ராகேஷும் அவன் மனைவியும் கேட்கத் தொடங்கினர்.
“உயிரினும் இனிய மகன் ராகேஷுக்கு, அம்மா எழுதும் முதலும் கடைசியுமான கடிதம்.
மகனே! நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் இறந்த பிறகுதான் இது உன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நீ நெருங்காத இடமான புத்தக அடுக்கினுள் ஒளித்து வைக்கிறேன்.
கடைசிக் கடிதம் என்றவுடன் அம்மா ஏதோ சொத்து பத்து எழுதி வைக்கப் போகிறாளோ என்று ஆவலை வளர்த்துக் கொள்ளாதே! இது வெறுமே என்னுடைய கடைசி விருப்பம் ஒன்றை உன்னிடம் தெரிவிக்கும் நோக்கம்தான், வேறொன்றுமில்லை. அது என்ன என்பதைத் தெரிவிக்கும் முன், ஏன் இப்படி ஒன்றைக் கேட்கிறேன் என்கிற காரணத்தைச் சொல்லி விடுகிறேன்.
சிறு வயதிலிருந்தே மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவள் நான். பள்ளியில் படிக்கும்பொழுதே கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் என வளர்ந்தவள். கல்லூரியில் இன்னும் ஒரு படி மேலே போய்த் தமிழ் இனத்துக்கான போராட்டங்களில் கூடக் கலந்து கொண்டேன்.
ஆனால், திருமணம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப் போட்டது. உன் அப்பா எனக்கு நேர் எதிர். திருமணச் சடங்கிலேயே எங்களுக்குள் முரண்பாடுகள் வேர்விடத் தொடங்கி விட்டன. நான் தமிழ் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். உன் அப்பாவும், அவர் வீட்டினரும் வழக்கமான முறைப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். மணமான பிறகு இருவரும் சேர்ந்து எங்காவது வெளியில் போவது என்றால், என் தேர்வு கவியரங்கம், மேடை நாடகம் என்று இருக்கும். உன் அப்பாவோ திரைப்படம், கடற்கரை போன்ற இடங்களுக்குத்தான் அழைத்துப் போவார். இவையெல்லாமாவது சிறு சிறு விஷயங்கள். ஆனால், பெற்ற பிள்ளையை வளர்ப்பதில் கூட உன் அப்பா ஒன்றைக் கூட என் விருப்பப்படி விடவில்லை.
நான் உனக்காக மிகவும் சிந்தித்து அழகழகாகப் பதினைந்து தமிழ்ப் பெயர்களைப் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஆனால், அவரோ ‘ஷ்’ என்கிற எழுத்தில் முடியும்படி பெயர் வைப்பதுதான் நாகரிகம் என்று சொல்லி உனக்கு ‘ராகேஷ்’ என்கிற பெயரைச் சூட்டினார். அது மட்டுமா? நீ எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாரை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற வரைக்கும் எல்லாமே அவர் விருப்பப்படியும், உன் விருப்பப்படியும்தான் இந்த வீட்டில் இதுவரை நடந்திருக்கின்றனவே தவிர, என் விருப்பப்படி ஓர் அணுவும் இங்கு அசைந்ததில்லை.
மகனே! வாழ்க்கை முழுக்க இப்படி அடுத்தவர் விருப்பப்படியே வாழ்ந்து முடித்து விட்ட எனக்கு, இறந்த பிறகாவது ஒன்றே ஒன்றை என் விருப்பப்படி நடத்தி வைப்பாயா?...
ராகேஷ்! தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளில் இன்றும் முதுமக்கள் தாழிகள் கிடைப்பது, இறந்தவர்களைப் புதைப்பதுதான் பழந்தமிழர் மரபு என்பதைக் காட்டுகிறது. எரிப்பது பிற்காலத்தில் தோன்றிய வழக்கமாக இருக்கலாம் என்பது என் கருத்து. கிறித்தவர், இஸ்லாமியர், எகிப்தியர் போன்ற உலகின் மற்ற இனங்களில் கூட இறந்த பின் புதைக்கும் வழக்கம்தான் இருக்கிறது. எனவே, பழந்தமிழ் நாட்டின் வழக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
எனவே, மகனே! நான் இறந்த பின் என்னை நெருப்பிலோ, மின்சாரத்திலோ போட்டு எரித்து விடாதே! தமிழ் வழக்கப்படி புதைத்து விடு! நான் பிறந்த இந்த மண்ணுக்கே என் உடல் அர்ப்பணமாக வேண்டும்! என் உடம்பு என் தமிழ் மண்ணுக்கே உரமாக வேண்டும்!
என்னுடைய இந்தக் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்…” - படித்து முடிப்பதற்குள்,
“அம்மா!...” எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான் ராகேஷ்.
“என்னடா? டேய்! என்னாச்சுடா?” என நான் அவனை உலுக்க,
“இப்பதாண்டா அம்மாவை கிரெமெடோரியத்துல வெச்சு எரிச்சுட்டு வந்துருக்கேன்” என்றான் அவன்.
“அடப்பாவி! என்னடா இப்பிடி பண்ணிட்டே! நான் வர்ற வரைக்கும் ஏண்டா வெயிட் பண்ணிட்டிருந்தே? முன்னாடியே இந்த லெட்டரை படிச்சுப் பார்த்துருக்கலாம்ல?”
“என்னடா பேசறே? எனக்குத்தான் தமிழ் படிக்க வராதுன்னு தெரியும்ல! சின்ன வயசுலேர்ந்து சி.பி.எஸ்.சி-ல படிச்சு வளர்ந்தவன்; செகண்ட் லேங்க்வேஜ் இந்தி; தமிழ் தேர்டு லேங்க்வேஜ்தான். வர்ஷாவுக்கும் தமிழ் தெரியாது. வேற யார் படிக்கறது? அப்பிடியும் ஸ்டார்ட்டிங்கை கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படிச்சுப் பார்த்தேன். ஏதோ பர்சனலா எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சுது. அதைப் போய் வேற யார்கிட்டயாவது படிக்க சொல்ல முடியுமா? எனக்கு அப்புறம் நீதானே அவங்களுக்கு பையன் மாதிரி? அதனாலதான் வெயிட் பண்ணோம். ஆனா, இப்பிடி ஒரு விஷயத்தை சொல்லி இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடா” என்றவன்,
“அம்மா! தமிழ் படிக்க தெரியாததனானால உன் கடைசி ஆசைய கூட ஃபுல்ஃபில் பண்ண முடியாமப் போயிட்டேனேம்மா!...” என்று கதறி அழ, கண்ணீர் கொட்டும் விழிகளோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த அழுகை இந்த ஒரு ராகேஷோடு ஓயாது என்று தோன்றியது.
❀ ❀ ❀ ❀ ❀
(நான் திண்ணை இதழில் ௨௪-௧௦-௨௦௧௬ அன்று எழுதியது. #StopHindiImpositionமுதலான சிட்டைகள் மூலம் உலகை அதிர வைத்த தமிழ்ச் சூறாவளிகள் அனைவர்க்கும் இப்படைப்பு காணிக்கையாகுக).
படம்: நன்றி ஓவியர் இளையராஜா - https://agasivapputhamizh.blogspot.com/2019/06/thaaimoli.html
-
By இசைக்கலைஞன்
சமகால நிகழ்வுகள் குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களின் செவ்வி!
-
By இசைக்கலைஞன்
5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்
கே.கே.மகேஷ்
Share சீமான் | படம்: வி.எம்.மணிநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன்.
எந்த இலக்கோடு போட்டியிடுகிறீர்கள்?
நாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பாகவே இந்த இடைத்தேர்தலைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தத் தொகுதி களுக்கான தொடக்கமாக இத்தொகுதி இருக்கும். நாங்கள் வென்றால் ஆட்சி மாறாதுதான். ஆனால், இதுவரையில் இந்த நிலத்தில் இருந்த அரசியலே மாறிவிடும்.
ஆட்சிக்கு வர முடியாதவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாகத்தான் இருக்கும்.. சீமானின் பேச்சு அத்தகையது என்கிறார்களே?
சரி, ஆட்சிக்கு வர முடியாததால் நான் அரசியல் பேசுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம். நான் பேசுகிற விஷயங்களை எல்லாம் நிறைவேற்றி, எனக்கு அரசியல் செய்ய இடமே இல்லாமல் செய்துவிட வேண்டியதுதானே? ‘நாங்கள் வந்தால்…’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘நாங்கள் வந்தால்’ என்று பேச வேண்டியது நான்தானே ஒழிய, அவர்கள் அல்ல. அவர்கள் புதிதாக இனிமேல்தான் ஆட்சிக்கு வரப்போகிறார்களா?
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சி எதையுமே செய்யவில்லை என்கிறீர்களா?
எதையும் முழுமையாகச் செய்ய வில்லை என்கிறேன். ‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். பயிற்று மொழி, ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி எதிலாவது தமிழ் இருக்கிறதா? சமூகநீதி, இடஒதுக்கீடு, பெரிய பெரிய பாலங்கள், கட்டிடங்கள் எல்லாம் தங்கள் சாதனை என்பார்கள். பிறமொழி பேசுவோருக்கும் தமிழகத்தில் இடஒதுக்கீடு கொடுத்தார்களே, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களில் பெரும்பான்மையாக வாழ்கிற என் தமிழ் மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்களா? தெலுங்கு வருடப் பிறப்புக்கும், ஓணத்துக்கும் இங்கே விடுமுறை தந்தவர்கள், எத்தனை மாநிலங்களில் தமிழர் திருநாளுக்கு விடுமுறை வாங்கித் தந்திருக்கிறார்கள்? எத்தனை பொதுத் தொகுதியில் இதுவரையில் தாழ்த்தப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி யிருக்கிறார்கள்? உடனே, ‘உங்களை எல்லாம் படிக்க வைத்ததே நாங்கள் தான்’ என்பார்கள். ஊரெங்கும் பள்ளிக் கூடங்களைக் கட்டிய காமராஜரே இப்படிச் சொல்லிக் காட்டியதில்லை.
அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது.. மகிழ்ச்சியா?
சின்னத்தால் மட்டுமே ஒரு கட்சி வெற்றி பெறுவதில்லை என்பது உண்மை யென்றால், இரட்டை இலைக்காக ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? அண்ணாவும், எம்ஜிஆரும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த சின்னம், அரசு நலத் திட்டங்களில் எல்லாம் போட்டுப் பிரபலப்படுத்திக் கொண்ட சின்னங்கள் உதயசூரியனும், இரட்டை இலையும். 60 ஆண்டுகளாக ஒரே சின்னத்தை வைத்திருப்பவர்களும், 6 நாட்களுக்கு முன்பு சின்னம் பெற்றவர்களும் சமமான போட்டியாளர்களா?
மார்க்ஸிஸ்ட் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வாங்குவோம் என்று பேராசிரியர் அருணனுடன் நீங்கள் போட்ட சவால் இப்போதும் தொடர்கிறதா?
கம்யூனிஸ்ட்டுகள் நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்றோ, அவர் களுடன்தான் எங்கள் போட்டி என்றோ நான் கூறவில்லை. அடிப் படையில், நானும் ஒரு கம்யூனிஸ்ட். ஈழத் தமிழர், கச்சத்தீவு, அணுஉலை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அவர்களின் செயல்பாடு மண்ணுக்கேற்ற மார்க்ஸியமாக இல்லை. நாங்கள் அதனைச் சரியாக முன்னெடுக்கிறோம். தமிழ்ப் பிள்ளைகள் நல்ல முடிவெடுப் பார்கள்!
http://tamil.thehindu.com/opinion/reporter-page/5-கேள்விகள்-5-பதில்கள்-எங்கள்-வெற்றி-அரசியலையே-மாற்றும்-சீமான்-நாம்-தமிழர்-கட்சி-தலைவர்/article9625763.ece#comments
-
-
Topics
-
0
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
பல காலத்தின் பின் பார்ப்பமென்று 5 குடும்பம் போனம், சேதுபதியின் நடிப்புதான் ஆறுதல் பரிசாக கிடைத்திச்சு😊 இங்கு ஒரு வருடத்திற்கு மேல் வழமையாக இயங்கி கொண்டிருக்கு, வெளி நாடுகள் போவதுதான் கட்டுப்பாடு
-
By உடையார் · பதியப்பட்டது
கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; ஜோ பைடன் திட்டம் உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.138 லட்சத்து 811 கோடியாகும். இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) நிதியுதவி பெறுவார்கள் என ஜோ பைடன் தெரிவித்தார். மேலும் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு வாரம் தோறும் வழங்கப்படும் நிவாரண தொகை 300 டாலரில் (சுமார் ரூ.21 ஆயிரம்) இருந்து 400 (சுமார் ரூ.29 ஆயிரம்) டாலராக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/16065648/Corona-vulnerability-Rs-1-lakh-financial-assistance.vpf -
By உடையார் · பதியப்பட்டது
புதிய ஐ.நா தீர்மானத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ் 87 Views எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் பல நகர்வுகளை சிறீலங்காவும், தமிழர் தரப்புக்களும் முன்னெடுத்துவரும் நிலையில், இந்தியாவும் தனது கவனத்தை திருப்பியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் சிறீலங்கா வந்து சென்ற பின்னர், தற்போது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் சிறீலங்காவுக்கு 3 நாள் பயணமாக வந்து சென்றுள்ளார். அமெரிக்காவை எதிர்க்கும் நிலைக்கு சிறீலங்கா சென்றதுடன், சீனாவுடன் நெருங்கி வருவதை தொடர்ந்து, இந்தியா தனது நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. எனினும் சிறீலங்கா அரசை அரவணைத்து செல்லும் தனது நிலையில் இருந்து தற்போதும் இந்தியா விலகவில்லை என்பதே ஜெய்சங்கரின் பயணத்தின் முடிவாக உள்ளது. என்றுமில்லாதவாறு பல தமிழ் கட்சிகளை அவர் சந்தித்துள்ள போதும், தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை சிறீலங்கா அரசிடம் விட்டுச் சென்றதும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. சிறீலங்கா மீது ஒரு தீர்மானத்தை பிரித்தானியா தலைமையில் அமெரிக்கா கொண்டுவரத் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பில் இந்தியா என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது பற்றி அறிந்துகொள்ள சிறீலங்கா அரசு முயன்றுவருவதுடன், இந்தியாவுடன் நட்பை பாராட்டவும் முற்பட்டு வருகின்றது. முன்வைக்கப்படும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்காது; ஆனால் அதனை ஆதரிக்கவும் செய்யாது; எனினும் அதனை நீர்த்துப்போகச் செய்யும் சாத்தியங்கள் அதிகமுள்ளது என்ற நிலைப்பாடே சிறீலங்காவின் தரப்பில் உள்ளது. எனினும் ஆசியாவின் நேட்டோ எனப்படும் அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்திரேலியா இணைந்துள்ள குவாட் என்ற பாதுகாப்பு கூட்டணியானது, சீனாவின் வளர்ச்சிக்கு எதிரானது. அது சிறீலங்காவுக்கு அனுகூலமானது அல்ல. இந்த நிலையில் தான் நேபாள பயணத்தின் போது சிறீலங்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் காட்டமான கருத்து ஒன்றை இந்திய பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார். இந்திய அதிகாரிகளின் தொடர் சிறீலங்கா பயணத்தின் நோக்கம் என்பது, தமிழர் தரப்பு மேற்குலகத்துடன் அல்லது அனைத்துலக சமூகத்துடன் நெருங்கிவிடக் கூடாது என்பதை முதன்மையாகக் கொண்டதாகவே அவதானிகளால் நோக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடர் தொடர்பில் தமிழ்த் தரப்பு முன்னரைவிட அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ஏறத்தான 250இற்கு மேற்பட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பிரித்தானிய பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் இந்த வாரம் அனுப்பியுள்ளன. பிரித்தானியா தலைமை தாங்கும் இந்த தீர்மானமானது, முன்னைய தீர்மானத்தை போல் இல்லாது காத்திரமாக இருக்க வேண்டும் என்பது கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், சிறீலங்காவினை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவது தொடர்பில் பின்வரும் விடயங்களை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து, அதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்துலக ஈழத்தமிழர் மனித உரிமை மையத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் முக்கிய பகுதிகள் வருமாறு: கடந்தகால நடவடிக்கைகளின் விளைவாக தமிழ் மக்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். ஐ.நா தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறியது என்பது இந்த நம்பிக்கையை முற்றாக சீரழித்துள்ளது. 30/1 தீர்மானம் என்பது நீர்த்துப்போகச் செய்யப்பட்ட ஒன்று. கலப்பு நீதிமன்ற விசாரணைகள் வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்தபோதும், தீர்மானத்தில் திட்டமிட்ட ரீதியில் அது உள்ளடக்கப்படவில்லை. எனினும் உள்ளக விசாரணைகள் மூலம் சிறீலங்காவில் யாரும் நீதி விசாரணைகளுக்கு உட்படவில்லை. நீதியை நிலைநாட்டுவதற்கு உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஆணைக்குழுவின் 40 ஆவது கூட்டத்தொடரிலும், அதன் தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை. இந்த நிலையில் தான் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையை அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை ஆணைக்குழு பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றனர். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நீதியை பெற்றுத்தரும் என்பதில் நம்பிக்கையில்லை. எனவே இந்த தீர்மானத்தின் மீது அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் தேவை. இதுவே போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் நீதி கிடைக்காது தவிக்கும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும். தீர்மானம் தொடர்பில் சிறீலங்கா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அது தொடர்பில் அனைத்துலக பொறிமுறை ஒன்று தொடர்பில் உறுப்பு நாடுகள் சிந்திக்க வேண்டும் என 36 மற்றும் 37 ஆவது கூட்டத்தொடரில் ஆணையாளர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஏனைய ஐ.நா அறிக்கைகள் தொடர்பில் அனைத்துலக நடவடிக்கை தேவை என்பதையே நாம் இங்கு வலியுறுத்துகிறோம். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் உள்ளக விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கை (பெற்றி அறிக்கை 2012) என்பன அனைத்துலக நாடுகளை ஒருங்கிணைத்து அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையை விடுப்பது தொடர்பில் ஆணையாளருக்கு அதிகாரத்தை வழங்க வல்லது. 1948 ஆம் ஆண்டு ஐ.நாவினால் அமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தில் சிறீலங்காவும் ஒரு அங்கத்துவ நாடு. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் அங்கத்துவ நாடுகளில் இடம்பெறும் இனப்படுகொலை தொடர்பில் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் விசாரணைகளை மேற்கொண்டு தண்டனைகளை வழங்க முடியும் என்பதை சிறீலங்கா நினைவில் கொள்ள வேண்டும். ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற பதம் இல்லை. அதில் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணக்கான பரிந்துரைகளே உள்ளன. ஆனால் நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் அது இனப்படுகொலையாக மாறலாம் என 2015 ஆம் ஆண்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தை வெளியிட்ட பின் பேசிய ஆணையாளர் செயிட் அல் குசைன் தெரிவித்திருந்தார். எனவே விசாரணைகளில் கிடைக்கும் ஆதாரங்களை ஐ.நா ஆணைக்குழு அனைத்துலக நீதிமன்ற விசாரணக்கு பரிந்துரை செய்ய முடியும். சிறீலங்காவில் ஒரு இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதா அல்லது அதனை மேற்கொள்ள அரசு முற்பட்டு வருகின்றதா என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. உயர் அரச அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைவாக பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக மற்றும் அரசியல் கற்கைகளுக்கான பேராசிரியர் டாமியன் கின்ஸ்பெரி தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களை அழித்துவருவதாகவும், ஆனால் அங்கு வாழும் தமிழ் மக்கள் சுயஉரிமைகளுடன் வழ உரிமை உடையவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2020 இடம்பெற்ற 43 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட ஆணையாளரின் அறிக்கையில் சிறீலங்காவில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய தீர்மானத்தில் பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும். ஐ.நா பாதுகாப்புச்சபை போன்ற அமைப்புக்களுடன் இணைந்து மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படுவதுடன் சிறீலங்கா மீதான அனைத்துலக விசாரணக்கும் கோரிக்கை விடுக்க வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான ஆலோசகர் ஒருவரை நியமித்து சிறீலங்காவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், அங்குள்ள தடையங்கள் மற்றும் சாட்சியங்களையும் பாதுகாக்க வேண்டும். போர்க்குற்ற விசாரணகனை மேற்கொள்ள சிறீலங்கா அரசு மறுத்து வருவதற்கு எதிராக அங்கத்துவ நாடுகள் தமது எதிர்ப்புக்களை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணைக்குழு அதன் அங்கத்துவ நாடுகளிடம் விடுக்க வேண்டும். மறுக்கப்படும் நீதி அங்கு மேலும் வன்முறைகளை உருவாக்கலாம். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதுபோல, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்கா இணைய வேண்டும். உறுப்பு நாடுகள் அனைத்துல நீதி பொறிமுறைகளை சிறீலங்கா மீது நடைமுறைப்படுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் குழு போன்ற குழுங்களும் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறீலங்காவில் இடம்பெறும் தற்போதைய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சிறப்பு தூதுவர் நியமிக்கப்பட வேண்டும். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதைப் போல வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்து பொதுமக்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். அதனை அனைத்துலக சுயாதீன அதிகாரி மேற்பார்வை செய்ய வேண்டும். முன்னைய குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளாது விட்டால், அது மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா வெளியேறியுள்ள நிலையில், சிறீலங்கா மீது அனைத்துலக நீதி விசாரணைகளை கொண்டுவருவது தொடர்பில் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழ் மக்களிடம் ஏற்பட்டுவரும் மாற்றம் என்பது இந்துசமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டியில் அவர்கள் ஒரு புறக்கணிக்க முடியாத சக்திகளாகி விடுவார்களோ என்ற அச்சத்தை இந்தியாவுக்கு தோற்றுவித்துள்ளது. எனவே எதிர்வரும் நாட்களில் நாம் பல மாற்றங்களை பார்க்கலாம். அதனை எதிர்கொள்ள தமிழ் சமூகம் தன்னை தயார்படுத்த வேண்டியதே தற்போதைய தேவையாக உள்ளது. https://www.ilakku.org/?p=39540
Recommended Posts