Jump to content

இளைப்பது சுலபம்....//வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?... அனுபவத் தொடர்


Recommended Posts

 

இளைப்பது சுலபம்

 

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

அனுபவத் தொடர் - 24

உங்களுக்கு இதன் அடிப்படை இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உணவில் நம்மை அறிந்தும் அறியாமலும் உள்ளே போகிற கார்போஹைடிரேட் என்னும் மாவுச் சத்துதான் உடல் பெருப்பதற்குக் காரணம். இதனால்தான் உடல் இளைப்பதில் ஆர்வம் கொண்டு பேலியோவுக்கு வருகிறவர்களை ஒரு நாள் உணவை அதிகபட்சம் நாற்பது கிராம் கார்போஹைடிரேடுக்குள் அடக்கிக்கொள்ளும்படி சொல்லப்படுகிறது. உடல் பருமனுக்கு மட்டுமல்ல. நீரிழிவுக்கும் இந்த மாவுச்சத்துதான் காரணம். கார்போஹைடிரேட்டைக் குறைக்காமல், நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று சொல்லி மாத்திரைகளாக வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தால் வாழ்நாள் முழுதும் மாத்திரை தின்றுகொண்டே இருக்க வேண்டியதுதான்.
2.jpg
ஒரு கட்டத்தில் மாத்திரையும் பலன் தராமல் போய் இன்சுலின் ஊசி போட வேண்டி வரும். பிறகு அதுவே ஒரு ஊசி இரண்டாகும். இரண்டு மூன்றாகும். அளவு அதிகமாகும். என்றும் பிரச்னை தொடரும். ஆனால், சர்க்கரை நோய் என்று ரத்தப் பரிசோதனையில் தெரிந்த பின்பு டாக்டர்கள் ஏன் மாவுச் சத்து மிக்க உணவு வகைகளை நிறுத்தச் சொல்வதில்லை? பொதுவாக சர்க்கரை நோயாளிகளை அரிசி குறைவாக, காய்கறிகள் அதிகமாக உண்ணச் சொல்லி சொல்லுவார்கள். நீங்கள் ‘இட்லி சாப்பிடலாமா டாக்டர்?’ என்று கேட்டால் ‘இரண்டு இட்லி சாப்பிடுங்கள்’ என்பார். ‘பொங்கல் சாப்பிடலாமா டாக்டர்’ என்று கேட்டால் ‘ஒரு கப் சாப்பிடுங்கள்’ என்பார். இனிப்புப் பொருள்கள் மட்டும் கூடவே கூடாது என்று சொல்லுவார்.

அப்படியானால் இனிப்பில் மட்டும்தான் கார்ப் உண்டு; இட்லி,தோசையில் இல்லை என்று அர்த்தமா? அதுவல்ல விஷயம். கார்பைத் தொடவே தொடாதே என்றால் நாம் நிச்சயம் கேட்கப் போவதில்லை. எதற்கு வார்த்தை விரயம்? குறைவாகச் சாப்பிடு என்று சொல்லி விடுவார்கள். மிச்சத்துக்கு இருக்கவே இருக்கிறது மாத்திரை ஆயுள் சந்தா. ஒரு மாறுதலுக்கு அரிசியைக் குறைத்து சப்பாத்தி சாப்பிடச் சொல்லி வலியுறுத்துவார்கள். அப்படியானால் கோதுமை நல்லதா? உண்மையில் சொல்வதென்றால் அரிசியைவிட மோசமான தானியம் கோதுமை (அனைத்தைவிடவும் மோசமானது மைதா). எவ்வளவுக்கு எவ்வளவு நாம் அதிலிருந்து விலகி நிற்கிறோமோ, அவ்வளவும் நமக்கு நல்லது.

சர்க்கரை நோயாளிகளை மருத்துவர்கள் ரொட்டி சாப்பிடச் சொல்லும் காரணம், அது நமது உணவல்ல என்பதுதான். நமக்கு அதிகம் பழகாத உணவை உட்கொள்ளும்போது நாம் அளவு குறைவாக உண்போம். அளவைக் குறைப்பதன் மூலமாகவேனும் ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து வைக்க முடியாதா என்று பார்க்கத்தான் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? டாக்டர் சொல்லிவிட்டார் என்று நாலு சப்பாத்தி, ஆறு பூரி கிழங்கு என்று வளைத்துக்கட்டி விடுகிறோம். இதற்கு நான்கு இட்லி சாப்பிட்டுவிட்டுப் போவதே சாலச் சிறந்தது. நிற்க. நாம் எடைக்குறைப்பைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். சத்தமில்லாமல் சங்கதி, சர்க்கரை நோயை நோக்கி நகர்ந்துவிடுகிறது பார்த்தீர்களா?

இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பது மட்டுமல்ல காரணம், சர்க்கரை ஒரு பெருங்கடல். உட்கார்ந்து கடைய ஆரம்பித்தால் இப்போதைக்குத் தீராது. எனவே அதைச் சற்று ஒதுக்கிவிட்டு மீண்டும் எடைக்குறைப்பு விவகாரத்துக்கு வருவோம். நான் பேலியோ தொடங்கியபோதே என் மனைவியும் அதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார் என்று முன்னர் சொன்னது நினைவிருக்கும். ஆனால், எனக்கு எடை குறைந்த வேகம் வேறு, அவருக்குக் குறைந்த வேகம் வேறு. ஆரம்பித்த முதல் ஆறு மாதங்களுக்குள் எனக்கு சரசரவென்று பதினைந்து கிலோக்களுக்குமேல் குறைந்துவிட்டது. ஆனால், என்னுடன் ஆரம்பித்து, என்னைவிட உணவு ஒழுக்கம் கடைப்பிடித்துக் கொண்டிருந்த என் மனைவிக்கு மூன்று கிலோ மட்டுமே அப்போது எடை குறைந்தது. அதுவும் பிற்பாடு நின்றுவிட்டது.

மூன்று வேளையும் அவர் பேலியோ உணவுதான் உட்கொண்டார். ஒழுங்காக நடைப்பயிற்சி செய்தார். அந்தக் காலத்து ஆசார மாமி கணக்காக பேலியோ ஆசாரம் கடைப்பிடித்தும் எடை இறங்குவேனா என்று ஆட்டம் காட்டியது. இது எனக்கு முதலில் புரியவேயில்லை. இருவரும் ஒரே நாள் ஒரே மாதிரியான டயட்டைத்தான் தொடங்கினோம். இருவர் உண்டதும் ஒரே விதமான பாதாம், பன்னீர், காய்கறிகள், சீஸ், வெண்ணெய் வகையறாக்கள்தாம். இருவருமே நடைப் பயிற்சி செய்தோம். இருந்தாலும் என் மனைவிக்கு ஏன் எடை குறையவில்லை?
2a.jpg
என் மனைவி மட்டுமல்ல, எடைக்குறைப்பில் ஈடுபட நினைக்கும் பெண்கள் அனைவருக்குமே இது பொதுவான பிரச்னை என்று பின்னால் தெரிந்தது. இதுவே அசைவ பேலியோ கடைப்பிடிக்கும் பெண்கள் என்றால் (குறைந்தபட்சம் முட்டை உண்பவர்கள் என்றால்கூடப் போதும்) இவ்வளவு மோசமாக இருக்காது. ஒரு ஏழெட்டுக் கிலோ உத்தரவாதமாகக் குறைந்துவிடும். சைவத்தில்தான் சங்கடங்கள். என்ன காரணம்? விளக்குகிறேன். பொதுவாகவே நமது தசை அணுக்களுக்கிடையே சென்று தங்கும் கொழுப்பை எரிப்பதன் மூலம்தான் எடைக்குறைப்பு என்பது நிகழ்கிறது. இதில் ஆண் பெண் பேதம் கிடையாது. எல்லோருக்கும் இப்படித்தான்.

ஆனால், ஒப்பீட்டளவில் பெண்களுக்கு ஆண்களைக் காட்டிலும் தசை குறைவு. எனவே அவர்களுக்குக் கொழுப்பு அங்கு சென்று படிவதில்லை. தசை அணுக்களுக்கிடையே கொழுப்புப் படிவங்கள் இல்லாதபடியால் என்ன டயட் இருந்தாலும் எடைக்குறைப்பு அவர்களுக்கு அதிரடி வேகம் கொள்ள மறுக்கிறது. இது முதல் காரணம். இரண்டாவது காரணம், க்ரேவிங். பிறந்ததில் இருந்து நாம் மாவுச்சத்து மிக்க உணவுப் பொருள்களையே உண்டு வளர்ந்திருக்கிறோம். இப்போது சட்டென்று அதை முற்றிலும் விட்டொழித்து கொழுப்புக்கு மாறுகிறோம். ஆனால், நமது நினைவில் அது அழியாமல் அப்படியே இருக்கும். ஆஹா, இந்த மழைக்கு சூடாக ஒரு மசால்வடை சாப்பிட்டால் எப்படி இருக்கும்!

இந்த ஞாயிற்றுக்கிழமை வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டால் எப்படி இருக்கும்! ஒட்டிக்க ஒட்டிக்க ஒரு வத்தக்குழம்பு வைத்துச் சாப்பிட்டால் பிரமாதமாக இருக்குமே என்று புத்தியானது பழைய உணவையே திரும்பத் திரும்பச் சுற்றி வந்துகொண்டிருக்கும். மனக்கட்டுப்பாட்டோடு பெண்கள் இதைக் கடக்கக்கூடியவர்கள்தாம். அதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்கள் பிள்ளைகளுக்கு ரெகுலர் உணவு சமைத்துக்கொடுத்து அனுப்ப வேண்டியிருக்கிறது. கணவருக்கு லஞ்ச் கொடுக்க வேண்டியிருக்கிறது. உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காவது ஒருவாய் அள்ளி வாயில் போடவேண்டியிருக்கிறது.

இந்த ஒருவாய் விவகாரம் ஒருநாள் ஒருநாளாக, ஒவ்வொரு நாளும் தொடரும்போது உள்ளே போகும் கார்ப் அளவு நான் சொன்ன நாற்பது கிராமைத் தாண்டிப் போய்விடுகிறது (ஏனெனில் பேலியோ உணவிலேயே நாம் எடுக்கும் காய்கறிகளில் கார்ப் உண்டு. தயிர், பால் வகையறாக்களில் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). இப்படி அளவு தாண்டும் விவகாரம் தினசரி நடப்பதால் - ருசி பார்ப்பது ஒரு ஸ்பூன், இரண்டு ஸ்பூனே ஆனாலும் எடைக் குறைப்பு நிச்சயமாக நிகழாது. இன்னொரு முக்கியமான சங்கதி உண்டு. முன்பே சொன்னது போல், நமது உடல் எரிக்கும் சக்தியானது ஒன்று சர்க்கரையில் இருந்து வரவேண்டும். அல்லது கொழுப்பில் இருந்து வரவேண்டும். நாம் கொழுப்புஉணவுக்கு மாறும்போது உடல் எரிக்கத் தொடங்கும் முதல் உணவு கொழுப்புணவாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஆனால், இங்கே என்ன நிகழ்கிறது? காலை ஏழரை மணிக்குப் பிள்ளைகளுக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்கும்போது ஒரு கை அள்ளி வாயில் போட்டு ருசி பார்க்கும் சாம்பார் சாதம், ஒரு கார்ப் புதையல். அது முதலில் உள்ளே போய்விட்டால் உடல் இயந்திரம், ‘சரி இன்று வழக்கமான கார்ப் உணவுதான்; நாம் சர்க்கரையை எரித்தே சக்தி தயாரிப்போம்’ என்று முடிவு செய்துவிடும். அதன்பின் நீங்கள் என்ன உண்டாலுமே அதிலுள்ள கார்ப் மட்டுமே கணக்கில் ஏறுமே தவிர கொழுப்பெல்லாம் சேமிப்புக்குத்தான் போய்ச் சேரும். சரி, என்ன செய்யலாம்?
 

(தொடரும்)

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

 

இளைப்பது சுலபம்

 
 

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி? அனுபவத் தொடர் - 25

பெண்கள். ஆம். அவர்களைப் பற்றித்தான் பார்த்துக்கொண்டிருந்தோம். பேலியோவில் இருந்தும் அவர்களுக்கு ஏன் எடைக்குறைப்பு வேகமாக நிகழ்வதில்லை என்பதற்கான காரணங்களைப் பார்த்தோம். தசைக் கொழுப்பின்மை மற்றும் க்ரேவிங். இன்னொரு காரணமும் உண்டு. அது பெண்களுக்கே உரித்தான பிரத்தியேக ஹார்மோன் பிரச்னைகள். மாத விலக்கு சுழற்சி சார்ந்த சிக்கல்கள். நம் நாட்டுப் பெண்கள் யாரைக் கூப்பிட்டு நிறுத்தினாலும் பரிசோதனையே இல்லாமல் அவர்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருப்பதாகச் சொல்லிவிட முடியும். இதே போல் பரிசோதனையே இல்லாமல் விட்டமின் டி குறைபாடு உண்டு என்று தலையில் அடித்து சத்தியம் செய்ய முடியும். பரிசோதனை செய்து பார்த்தால் தைராய்டு பிரச்னை, PCOD பிரச்னை, டிரைகிளிசிரைட் பிரச்னை என்று வரிசையாக ஒவ்வொன்றாகத் தெரியவரும்.
3.jpg
தோற்ற அளவில் தங்களைச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்கள்கூட ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அக்கறை கொள்ளுவதில்லை என்பதே இதன் காரணம். புருஷன் ஒழுங்காகச் சாப்பிடுகிறானா, பிள்ளைகளுக்கு சத்துமிக்க உணவு சமைத்துப் போடுகிறோமா என்பதோடு அவர்களது அக்கறை முடிந்துவிடுகிறது. அவர்கள் உண்டு எஞ்சியதைச் சாப்பிட்டு தம் பொழுதைத் தீர்த்துவிடுகிறார்கள். இது தவறு. மிகப்பெரிய தவறு. பல ஆண்டுக் காலமாக உடலின்மீது இப்படி அலட்சியமாக இருந்துவருவதன் விளைவு, ஒரு கட்டத்தில் உடம்பு நாம் சொல்லுவதைக் கேட்க மறுத்துவிடுகிறது. அது நடுத்தர வயதுக்கப்பால் பல விதமான வியாதிகளாக உருக்கொண்டு உயிரை வாங்குகிறது.

குறிப்பாக எடை கூடிய பெண்கள் அனுபவிக்கும் சிரமங்கள் சொல்லத்தரமற்றவை. எடைக் குறைப்பு முயற்சியில் இறங்கும்போது, அது நினைத்த வேகத்தில் நடக்காத சூழ்நிலையில் மனத்தளவில் அவர்கள் அனுபவிக்கும் சலிப்புணர்வு அதைக் காட்டிலும் பெரிது. இந்தப் பிரச்னை தீர ஒரே வழி, பேலியோவில் இறங்கி, வாரியர் கடைப்பிடிப்பதுதான். எடைக் குறைப்பில் தீவிரமாக உள்ள பெண்கள், அது எதிர்பார்த்த வேகத்தில் குறையாமல் இருக்குமானால் பின்வரும் வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

*மிகத் தீவிர பேலியோ. ஒரு நாள் உணவில் இருபது கிராமுக்கு மேல் மாவுச் சத்து இல்லாமல் பார்த்துக்கொள்வது. அதாவது உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளுக்கு அப்பால், வேறு எந்த மாவுச் சத்துணவையும் தொடாமல் இருப்பது முக்கியம். பால் கூடாது. தயிர் கூடாது. மோர் கூடாது. பனீர், பாதாம், காய்கறிகள், வெண்ணெய், நெய், சீஸ். அவ்வளவுதான்.

*முட்டை சாப்பிடுவேன் என்னும் பெண்களுக்கு எடைக்குறைப்பு சாத்தியங்கள் அதிகம். அவர்கள் ஒருவேளை காய்கறியும் மறுவேளை முட்டையும் மட்டும் உண்டு வருவதால் எடைக்குறைப்பு விரைவில் நிகழும். மூன்று அல்லது நான்கு முட்டைகள். அப்படியே சாப்பிடுவீர்களோ, ஆம்லெட் போட்டு சாப்பிடுவீர்களோ, அது உங்கள் இஷ்டம். ஆனால், ஒருவேளைக்கு முட்டை மட்டும்.
3a.jpg
*காய்கறிகளிலேயேகூட அதிக கார்ப் இல்லாத காய்களாகத் தேர்ந்தெடுத்து உண்பது நல்லது. குறிப்பாக முட்டைக் கோஸ், புடலங்காய், பீர்க்கங்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பெங்களூர் கத்திரிக்காய் போன்றவை. வாரம் ஒருநாள் வெண்டை, கத்திரி இருந்தால் தப்பில்லை. எடை இறங்கத் தொடங்கியபின் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ளலாம் (தைராய்டு உள்ளவர்கள் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர்,ப்ராக்கோலி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்). பேலியோவில் அனுமதிக்கிறார்களே என்று கேரட், பீட் ரூட் வகையறாக்களை உண்பது தகாது. அதெல்லாம் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு எடை வந்து நின்ற பிற்பாடு ருசி பார்க்கத் தகுந்தவை மட்டுமே.

*பேலியோவில் இருந்தால் விரதங்கள் சுலபம். இந்த உணவு முறையில் பசி என்ற ஒன்று இருக்காது என்பதே காரணம். எனவே, தினசரி மூன்று வேளை உண்டே தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை. மூன்று கட்டங்களாக விரத லாபங்களை நீங்கள் எட்டிப் பிடிக்க முடியும். முதலாவது, பன்னிரண்டு மணி நேரங்களுக்குள் மூன்று உணவுகளை உண்பது. அதற்கு அப்பால் வெறும் பச்சைத் தண்ணீர் மட்டும்தான். அதாவது காலை எட்டு மணிக்கு நூறு பாதாம் சாப்பிடுகிறீர்கள் என்றால், அதோடு மதியம் ஒரு மணிக்கு காய்கறிகள். இடையே ஒன்றும் கூடாது. மீண்டும் இரவு எட்டு மணிக்குள் அடுத்த உணவை முடித்துவிட வேண்டும் (பனீர்). இடைப்பட்ட நேரத்தில் நொறுக்குத்தீனி எதுவும் வேண்டாம்.

இரண்டாம் கட்ட விரதம் என்பது, இந்த மூன்று வேளை உணவை இரு வேளைகளாகக் குறைப்பது. அதாவது எட்டு மணி நேரத்துக்குள் இரண்டு உணவுகளை முடித்துவிட்டு மிச்சமுள்ள பதினாறு மணி நேரங்களைச் சும்மா விடுவது. இது கொழுப்பை எரிப்பதற்கான அவகாசம். மூன்றாம் கட்டம் என்பதிலும் இரு வேளை உணவு உண்டு. ஆனால், நான்கு மணி நேரங்களுக்குள் அந்த இரண்டு உணவையும் முடிக்க வேண்டும். உதாரணமாக மதியம் இரண்டு மணிக்கு காய்கறியும் வெண்ணெயும் சாப்பிடுகிறீர்கள் என்றால், மாலை ஆறு மணிக்குள் பனீர் சாப்பிட்டு அன்றைய உணவை முடித்துவிட வேண்டும். இதன்மூலம் கொழுப்பை எரிப்பதற்கு நாம் உடலுக்கு இருபது மணி நேர அவகாசம் தருகிறோம்.
3b.jpg
கவனியுங்கள். உணவின் அளவை நான் குறைக்கச் சொல்லவேயில்லை. ஒரு நாளைக்குத் தேவையான 1400 - 1500 கலோரி அளவில் மாற்றமே செய்ய வேண்டாம். உண்ணும் நேரத்தைத்தான் குறைக்க வேண்டும். நீங்கள் மூன்று வேளை சாப்பிட்டாலும் சரி, இரண்டு வேளை சாப்பிட்டாலும் சரி, அல்லது ஒரே ஒரு வேளை சாப்பிடுபவரானாலும் சரி. உரிய கலோரியில் குறைபாடே கூடாது. சாப்பிடும் வேளைகளை மட்டும்தான் குறைக்க வேண்டும். உதாரணத்துக்கு என் கதையையே சொல்கிறேன். நானும் முதலில் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை உணவு என்றுதான் உணவு உட்கொள்ளும் வேளைகளைக் குறைத்தேன். ஆனால் 20:4 விண்டோ என்று சொல்லப்படும் நான்கு மணி நேரத்துக்குள் இரண்டு வேளை உணவு என்னும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. மாறாக ஒரு நாளைக்கு ஒரே ஒரு வேளை உட்கொள்வது என்று ஆரம்பித்தேன்.

இந்த ஒருவேளை உணவில் இருநூறு கிராம் பனீர் இருக்கும். கால் கிலோவுக்குக் குறையாமல் தேங்காய் போட்டுச் சமைத்த காய்கறி ஏதாவது இருக்கும். கீரை இருக்கும். ஐம்பது கிராம் வெண்ணெய் இருக்கும். சில நாள் தக்காளி சூப் அருந்துவேன். இன்னும் சில நாள் கூடுதல் கலோரி ஆனாலும் பரவாயில்லை என்று பதினைந்து இருபது கிராம் பிஸ்தா சேர்ப்பேன். அனுமதிக்கப்பட்ட பேலியோ உணவு வகைகளில் நமக்குப் பிடித்தமான அனைத்தையும் 1500 கலோரிக்குள் வரும்படி ஒரே வேளையில் சாப்பிட்டுவிடுவேன். கவனியுங்கள். இந்த 1500 கலோரி என்பதைத்தான் நீங்கள் பிரித்துப் பிரித்து இரண்டு வேளை, மூன்று வேளைகளில் உண்கிறீர்கள். நான் அதை மொத்தமாக ஒரே வேளை உண்டு முடித்து மிச்சம் உள்ள 23 மணி நேரத்தையும் கொழுப்பெரிக்கப் பயன்படுத்துகிறேன். எடைக்குறைப்பு இதனால் வேகமாக நடக்க ஆரம்பிக்கும்.
 

 

பேலியோ கிச்சன்: பனீர் சாண்ட்விச்
நிதானமாகச் சமைக்க நேரமில்லாதபோது இதை முயற்சி செய்யுங்கள். பனீரை நீள்செவ்வகத் துண்டுகளாக வெட்டி தோசைக்கல்லில் போடவும். நெய் விட்டு இரு புறமும் பிரவுன் நிறம் வரும்வரை வேகவிடவும். கார்லிக் சீஸ் என்று கடையில் கேட்டால் கிடைக்கும். அதை ஒரு கப்பில் கொட்டி வைத்துக்கொண்டு வெள்ளரி, தக்காளி, வெங்காய வட்ட நறுக்கல்களை அதில் தோய்த்து இரு பனீர்த் துண்டுகளுக்கு இடையே வைக்கவும். மேலுக்குக் கொஞ்சம் மிளகுப் பொடி தூவினால் போதும். பிரமாதமாக இருக்கும். சீஸுக்கு பதில் தக்காளித் தொக்கு தடவியும் ருசிக்கலாம்.
(தொடரும்)

- பா.ராகவன்

http://www.kungumam.co.in/

Link to comment
Share on other sites

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

 

பா.ராகவன் - 26

இந்த அத்தியாயமும் பெண்களுக்காகத்தான். பேசித் தீருகிற விஷயமா இது! எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் சென்ற வாரத்தில் ஒருநாள் என்னை போனில் அழைத்திருந்தார். அவர் பேலியோ தொடங்கிச் சில தினங்கள் ஆகியிருந்த நிலையில், தனது தலையாய பிரச்னைகளை மட்டும் உடனடியாகத் தீர்த்து வைக்க முடியுமா என்று கேட்டார். அவையாவன: என்னால் காப்பி சாப்பிடாமல் இருக்க முடிவதில்லை. தலை வெடித்துவிடும்போல் இருக்கிறது. தினமும் இரண்டு காப்பி மட்டும் சாப்பிடலாமா?
 26.jpg
காப்பிக்கு மட்டும் அரை ஸ்பூன் மட்டும் சர்க்கரை போட்டுக்கொள்ளலாமா? சைவ உணவில் ப்ரோட்டினுக்கு வழி மிகவும் குறைவாக உள்ளதே, அதற்காக சோயா சாப்பிடலாமா? சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு பனீரும் பனீர் ஜாதியைச் சேர்ந்ததுதானே? அதைச் சாப்பிடலாமா? எனக்கு வெங்காயம், பூண்டு இரண்டுமே பிடிக்காது. இவை இரண்டும் இல்லாமல் பனீரை எப்படிச் சமைப்பது? ருசியே இருக்காதே.
   
எனக்கு நீரிழிவு இருக்கிறது. சில ஹார்மோன் பிரச்னையும் இருக்கிறது. தைராய்டு மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.எனக்கு எடையும் குறைந்தாக வேண்டும். பேலியோ எப்படி உதவும் என்றே புரியவில்லை. பாதாம் சாப்பிட கஷ்டமாக இருக்கிறது. அதற்கு பதில் வேர்க்கடலை சாப்பிடலாமா? அதுவும் கொழுப்பு. அதுவும் ப்ரோட்டின். ஏன் கூடாது?
   
நடைப்பயிற்சி முக்கியம் என்கிறீர்கள். ஆனால் காலை எழுந்தால் சமைக்கவும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவுமே சரியாக இருக்கிறது. இதில் நான் எங்கே நடக்க முடியும்? மாற்று வழி இருக்கிறதா? மேற்கண்ட சந்தேகங்களும் குழப்பங்களும் பேலியோ பயிற்சி செய்யும் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கின்றன. முதலில் அதைத் தீர்த்துவிடுவோம். காப்பி. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களில் பலருக்கும் இந்தப் பிரச்னை உண்டு. காலை எழுந்ததும் ஸ்டிராங்காக ஒரு கப் காப்பி.

எதற்காக இது? உடனடிப் புத்துணர்ச்சி ஒன்று இதில் கிடைக்கிறது என்பதற்காக. காஃபின் என்பது ஒரு ‘கிட்டத்தட்ட போதை மருந்து’ என்பதும், பழகிவிட்டால் விடாது என்பதும் உடல் நலனுக்கு அத்தனை ஒன்றும் நல்லதில்லை என்றும் எத்தனையோ கோடிப்பேர் சொல்லித் தீர்த்துவிட்டார்கள். திரும்ப அதைச் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை. காப்பி சாப்பிடுவதும் வேண்டாமென்று தள்ளி வைப்பதும் அவரவர் விருப்பம்.
இங்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.
26a.jpg
நீங்கள் காப்பி பிரியர் என்றால் சாப்பிட்டுவிட்டுப் போங்கள். ஆனால், எடைக்குறைப்பு நிகழ வேண்டு மென்றால் பால் சேர்க்கக்கூடாது. காலை எழுந்ததும் பால் சேர்த்த காப்பி ஒரு தம்ளர் நீங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்வரை சத்தியமாக எடை குறையாது! மாறாக ப்ளாக் காப்பி என்கிற கடுங்காப்பி அருந்திப் பழகுங்கள். அதில் ஒரு சிட்டிகை உப்புப் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும். ஆனால், அதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்.
 
இரண்டாவது காப்பியில் அரை ஸ்பூன் மட்டும் சர்க்கரை. நான் முன்பே சொன்னதுதான். ஒரு நாளில் வயிற்றுக்குள் செல்லும் முதல் பண்டமானது கார்போஹைடிரேடாக இருக்கும்பட்சத்தில் உடல் இயந்திரம் அன்றைய பிரதான எரிபொருளாக அதைத்தான் தேர்ந்தெடுக்கும். அதன்பின் நீங்கள் என்னதான் வெண்ணெய், பாதாம் என்று சாப்பிட்டுத் தீர்த்தாலும் பிரயோசனமில்லை. கார்பில் இருந்து மட்டுமே சக்தி எடுக்கப்படும். நீங்கள் உட்கொள்ளும் மற்ற கொழுப்பெல்லாம் சேமிப்புக் கிடங்குக்குச் சென்று சேரும், இன்னும் எடை கூடும். சர்க்கரையை ஒழிக்காதவரை எடைக் குறைப்பு நிகழவே நிகழாது.
 
தீர்ந்ததா? அடுத்த பிரச்னை சோயா, நிலக்கடலை இத்தியாதி. பேலியோவில் என்னென்ன உண்ணக்கூடாது என்கிற வினாவுக்கு மிக எளிதாக ஒரு பதில் சொல்லலாம். விலங்குகள் எதையெல்லாம் உண்ணாதோ, அது எதுவும் ஆதி விலங்கான மனிதனுக்கானதும் அல்ல. நீங்கள் சோயா சாப்பிடும் முயலைக் கண்டிருக்கிறீர்களா? எந்த மாடாவது வேர்க்கடலை தின்றிருக்கிறதா? பட்டாணி சாப்பிடும் குரங்குகளைக் கண்டிருக்கிறீர்களா? பச்சைத் தாவரங்களை உண்ணும் எந்த விலங்காவது பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா?
 
தொடாது! எதெல்லாம் உடம்புக்குக் கெடுதல் என்று விலங்குகளுக்கு நம்மைவிட நன்றாகத் தெரியும் என்பதே காரணம். இதன் சூட்சுமம் எளிதானது. பரிணாம ரீதியில் பல லட்சம் ஆண்டுகளாக உயிரினங்கள் எதை உண்டனவோ, அதனடிப்படையில் நமது உணவை அமைத்துக் கொள்வதுதான் பேலியோ. விவசாயம் என்பது பத்தாயிரமாண்டுகளாக வளர்ந்து வரும் தொழில்தான். லட்சக்கணக்கான ஆண்டுகளின் பழக்கம் என்பது வேறு, பத்தாயிரமாண்டுப் பழக்கம் என்பது முற்றிலும் வேறு.

மரபணு அடிப்படையில் விவசாயம் செய்து உண்ணும் உணவுகள் நமக்கு அவ்வளவாகச் சேராது என்பதுதான் விஷயம். இத்தனை நாள் பீன்ஸ் சாப்பிடவில்லையா, சோயா சாப்பிடவில்லையா, செத்தா போய்விட்டோம் என்று கேட்பீர்களானால் என்னிடம் அதற்கு பதில் கிடையாது. பேலியோ என்பது நோயற்ற வாழ்வுக்கான ஒரு வழி. நோய்த்தன்மையை, நோய்க்கூறுகளை உருவாக்கக்கூடிய தாவரங்களை இதில் தவிர்க்கச் சொல்வார்கள். அவ்வளவுதான்.
 
சோயா டோஃபு என்பது, எண்ணெய் எடுத்தது போக மிச்சமிருக்கும் புண்ணாக்கில் இருந்து தயாரிக்கப்படுவது. ஒரு காலத்தில் இதை மாடுகளுக்குக் கொடுத்து வந்தார்கள். இதை எப்படி பனீராக்கி கல்லா கட்டத் தொடங்கினார்கள் என்று எனக்குத் தெரியாது. எண்பதுகளின் தொடக்கத்தில்தான் இது இந்தியாவுக்கு அறிமுகமானது. எத்தனை வேகமாக சந்தையைப் பிடித்துவிட்டது!
 
என்ன காரணம் என்று சிந்தித்துப் பாருங்கள். சோயா பனீர் என்பது அசப்பிலும் ருசியிலும் மாமிசம் உண்கிற உணர்வைத் தரக்கூடியது. மாமிசம் சாப்பிடாத சைவ உணவாளர்களுக்கு மறைமுகமாக அந்தத் திருப்தியைத் தரும் என்பதை மறைமுகமாக உணர்த்தி இதைக் கொண்டு வந்தார்கள். இதற்குப் பேசாமல் சிக்கன் சாப்பிட்டுவிட்டுப் போய்விடலாமே? அதுவாவது உடம்புக்கு நல்லது.
 
ஓர் அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும். பேலியோவில் எதையெல்லாம்கூடாது என்கிறார்களோ, அதிலெல்லாம் கார்போஹைடிரேட் அதிகம் இருக்கும். அல்லது வாயுப் பிரச்னையைக் கிளப்பக்கூடியதாக இருக்கும். அதுவும் இல்லாவிட்டால் ஹார்மோன் சார்ந்த சிக்கல்களை உருவாக்கக்கூடியதாக இருக்கும். சோயா உள்ளிட்ட பீன்ஸ் ரகங்கள் அனைத்துக்குமே இந்த குணம் உண்டு. இவை உணவில் அதிகரிக்குமானால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய அபாயம் உண்டு. ஆண்கள் என்றால் பெண் தன்மை கூடுகிற அபாயம். எல்லோருக்கும் நிகழ்ந்தே தீருமா என்று கேட்காதீர்கள். நமக்கு இது நடக்காதிருக்க வேண்டுமென்றால் இதை விலக்குவதுதான் வழி.

வேர்க்கடலை, பட்டாணி, பீன்ஸ், முளைகட்டிய பயிறு வகை போன்ற ரகங்கள் பேலியோவில் கூடாது என்று சொல்லப்படுவதற்கான காரணம், அவற்றிலுள்ள நீக்க முடியாத பைட்டிக் ஆசிட், வாயுத்தொல்லை ஏற்படுத்தும் காரணிகள், பெருங்குடல் வியாதிகள் பல தூண்டப்படும் அபாயம் போன்றவைதான். கவனிக்கவும். இவற்றிலும் சத்துகள் உண்டுதான். எனக்கு போன் செய்த அம்மணி சொன்னதுபோல் சோயாவிலும் ப்ரோட்டின் உண்டுதான். ஆனால், ப்ரோட்டினுக்கு ஆசைப்பட்டு இதரபல சிக்கல்களை விலைக்கு வாங்க வேண்டாம் என்பதுதான் என் பதில். அம்மணி கேட்ட வினாக்களுள் இன்னும் சிலவற்றுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது இல்லையா? அது அடுத்த அத்தியாயத்தில்.
 

(தொடரும்)


* நீங்கள் காப்பி பிரியர் என்றால் சாப்பிட்டுவிட்டுப் போங்கள். ஆனால், எடைக்குறைப்பு நிகழ வேண்டுமென்றால் பால் சேர்க்கக்கூடாது.
* சோயா டோஃபு என்பது, எண்ணெய் எடுத்தது போக மிச்சமிருக்கும் புண்ணாக்கில் இருந்து தயாரிக்கப்படுவது.

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
 

இளைப்பது சுலபம்

 
 

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது  எப்படி - 27

நடை...
சென்ற அத்தியாயத்தில் மிச்சம் வைத்த இந்த விஷயத்தை இப்போது பார்ப்போம். நடப்பதால் என்னென்ன நன்மைகள் என்று சொல்லி நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை. நான் நடை பயின்ற கதையை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இங்கு முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அதை மட்டும் பார்க்கலாம். பேலியோவாகவே இருந்தாலும் நீங்கள் சைவ உணவு உட்கொள்பவர் என்றால், குறைந்தபட்ச நடைப்பயிற்சியேனும் தினசரி இல்லாவிட்டால் எடை குறையாது! இந்தக் குறைந்தபட்ச நடை என்பது என்னவென்று பார்க்கலாம்.
13.jpg
நீங்கள் மூச்சு வாங்க வாங்க நடக்க வேண்டாம். வியர்வை சொட்ட வேண்டாம். பத்து கிலோ மீட்டர், பதினைந்து கிலோ மீட்டர் மாரத்தான் முயற்சிகள் எல்லாம் வேண்டாம். வெறும் அரை மணி நேரம் போதும். இது அதிகாலை இருக்குமானால் சிறப்பு. அது முடியாது என்றால் எப்போது முடிகிறதோ அப்போது. என்னால் பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் முடியும்  என்பீரா? பரவாயில்லை. அதெல்லாம் இல்லை, நான் ஒரு நடுநிசி நாய்; ராத்திரி பன்னிரண்டுக்கு மேல்தான் ஓய்வு என்பீரா? அதுவும் பரவாயில்லை. நான் சொல்லுவது ஒன்றுதான். ஏதாவது ஒரு நேரம், அரைமணி நேரம்! இந்த அரைமணி நேரத்தில் என்ன பெரிதாகக் கலோரி குறைந்துவிடும்?

கண்டிப்பாக இல்லை. மிஞ்சிப் போனால் இருநூறு கலோரி இதில் எரிக்கப்படலாம். அதற்குமேல் இல்லை. நீங்கள் ஒரு மணி நேரம் நடந்தால் முன்னூறு முதல் முன்னூற்றைம்பது கலோரிகள் எரிக்கப்படும். அரை மணிக்கு அதில் பாதி. அவரவர் நடக்கும் வேகம் சார்ந்து இதில் மாறுதல்கள் இருக்கும். ஆனால், பேலியோ வலியுறுத்தும் மெதுவான நடையில் வேகத்துக்கு அத்தனை முக்கியத்துவம் கிடையாது. சாதாரணமாக நடந்தால் போதும். வியர்வை பூக்கக்கூட அவசியமில்லை. இந்த மென்நடையானது மெடபாலிசம் ஒழுங்காக இருப்பதற்கு அவசியம். இன்றைய காலகட்டத்தில் நமது வேலை என்பது பெரும்பாலும் உட்கார்ந்து செய்கிற விதமாக அமைந்துவிட்டது.

உடல் பருமன், நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னை போன்ற சிக்கல்களேகூட இந்த விதமான வாழ்க்கையின் கொடைதான். ஒரு தொழிற்சாலையில் நாளெல்லாம் நின்று, நடந்து, உடல் உழைப்பைச் செலுத்திப் பணியாற்றும் யாரும் என்னைப் போல் குண்டர்குலத் திலகமாக இருப்பதில்லை என்பதால் அவர்களுக்கு இந்த விவகாரமே அவசியமில்லை. நாம் பேசுவது பிரச்னை உள்ளவர்களை நோக்கி. அவர்களுக்கான தீர்வை நோக்கி. ஒரு அரைமணி நேர நடை என்ன செய்யும்?

* முழு உடலுக்கும் ஒரு மிதமான சுறுசுறுப்பை நம்மையறியாமல் வழங்கும். உட்கார்ந்திருப்பதால், படுத்துத் தூங்குவதால் உண்டாகும் தசைப் பிடிப்புகள், மூட்டு அடைப்புகள், கழுத்து, தோள்பட்டை வலிகளை, சிறு உபாதைகளை உடனடியாக விலக்கிவிடுகிறது.
* ரத்த ஓட்டம் சீராகிறது.
* சுவாசம் சீராகிறது.
* இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை மேம்படுகிறது.
* உள் உறுப்புகள் அனைத்தும் தன் இயல்பான வேகத்தில் இயங்க ஆரம்பிக்கின்றன.
* செரிமானம் சரியாக நடக்கிறது.
13a.jpg
இவ்வளவு லாபங்களும் அரை மணி நேரம் சும்மா காலாற நடப்பதால் கிடைக்கின்றன. அவ்வளவுதான். இதற்குமேல் செலவாகும் சுமார் இருநூறு கலோரி என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால், இந்த அனைத்தும் நடக்கிறபோதுதான் சைவ பேலியோ சரியாக வேலை செய்கிறது. இது என் அனுபவம். பேலியோ என்றல்ல; நீங்கள் எந்த டயட்டைக் கடைப்பிடித்தாலும் ஆரம்பத்தில் ஒரு ஆறேழு கிலோ சரசரவென்று இறங்கவே செய்யும். அதற்கு நீங்கள் நடக்க வேண்டாம், ஓட வேண்டாம், உடற்பயிற்சி செய்ய வேண்டாம்; ஒன்றுமே வேண்டாம். டயட்டைத் தொடங்கினாலே இந்த ஆறேழு கிலோ எடைக் குறைப்பு நிச்சயம். உடலில் உள்ள நீர் எடைதான் அது.

முதலில் இறங்குவது அதுதான். பேலியோவிலும் இப்படியே. ஆனால், இந்த எடை இழப்பு தொடர்ந்து நிகழவேண்டுமென்றால் நமது மெடபாலிசம் ஒழுங்காக இருக்க வேண்டும். என்னதான் பேலியோ உணவுகளில் கார்ப் இல்லை என்று சொன்னாலும் ‘குறைந்த அளவு உள்ளது’ என்பதே சைவத்தைப் பொறுத்த அளவில் உண்மை. பால், தயிர், மோர், வெண்ணெய், சீஸ், பனீர், நெய் இவையே சைவ பேலியோவின் முக்கிய உணவுகள். இதில் சிலருக்கு பனீர் சாப்பிட்டாலே சர்க்கரை அளவு கூடுகிறது என்று சொல்லுகிறார்கள். என்னை சிண்டைப் பிய்த்துக்கொள்ள வைத்த தகவல் இதுதான்.

பனீரில் கார்ப் கிடையாது. என்னைப் பொறுத்தவரை பால் தயிராகி, மோரானால், கார்ப் காண்டம் அதோடு முற்றும். பனீர், வெண்ணெய், நெய்யில் கார்ப் சேர்மானம் இருக்காது. அல்லது குறிப்பிடவே தகுதியற்ற வெகு சொற்ப அளவில். இருந்தாலும் சிலருக்கு பாலே ஒத்துக்கொள்ளாத உணவாக இருந்துவிடும் பட்சத்தில் பாலின் துணைப்பொருள்கள் எதுவானாலும் சிக்கல் அளிக்கக்கூடியதே - ஆனால், ரெகுலர் உணவு அளிக்கும் அளவுக்கல்ல. ஓரளவுக்கு. இம்மாதிரி சிக்கல்களினால் பேலியோவே நம்மால் முடியாது என்று சிலர் ஓடிவிடுகிறார்கள். என் கருத்து, உடல் இளைக்க வேண்டுமானால், பேலியோவைத் தவிர சிறந்த வழி வேறில்லை.
13b.jpg
ஆனால், இச்சிக்கல்களில் இருந்து காக்க அந்தக் குறைந்த நடைப் பயிற்சி உதவும். சாதாரண டயட்டிலேயே நீரிழிவு நோயாளிகளுக்கு தினசரி நடைப்பயிற்சியை மருத்துவர்கள் வலியுறுத்துவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க அது உதவும் என்பதுதான் காரணம். நீரிழிவெல்லாம் இல்லை; எடைக் குறைப்பு மட்டும்தான் தேவை என்றாலும் இந்த நடை அவசியமே. முடிந்ததா? மிச்சமிருக்கும் ஒரே விஷயம் ருசி. நானாவித உணவினங்களைச் சாப்பிட்டு வளர்ந்த தேகம் நம்முடையது. சட்டென்று வாழ்க்கை முறையையே அடியோடு மாற்றி வெறும் பாதாம், பனீர், காய்கறிகளோடு முடித்துக்கொள்வதென்றால் வாழ்க்கையே போரடித்துவிடாதா?

பெண்களின் ஆகப்பெரிய பிரச்னை இதுதான். அவர்கள் தம் வீட்டாருக்காக விதவிதமாகச் சமைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அவர்கள் சாப்பிட உட்கார்ந்தால் மட்டும் பனீர், பாதாம், காய்கறிகள். என்ன போங்காட்டம் இது என்று அந்தராத்மா அலறினால் அது நியாயமே. என்ன செய்ய? எடை குறைந்தாக வேண்டுமே? கொஞ்சம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நானும் என் மனைவியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பேலியோவில் இருக்கிறோம். வியாதி வெக்கை ஏதுமில்லாமல், ஏற்றிய எடையை சொகுசாக இறக்கி, சௌக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இந்தக் காலத்தில் ஓரிரு நாள்கள் மட்டும் வழக்கமான சாப்பாட்டைச் சாப்பிட்டிருப்போம். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும். ஆனால், அந்த உணவுக்காக என்றுமே ஏங்கியதில்லை. இது எப்படி என்றால், கொழுப்புணவு பழகிவிட்டால் கார்ப் உணவுகளின் மீதுள்ள பந்த பாசம் படிப்படியாக வடியத் தொடங்கிவிடும். ஒரு கட்டத்தில் இல்லாமலேகூடப் போய்விடும். நாம் எதைப் பழக்குகிறோமோ அதுதானே நமதாகிறது! கேவலம், மனிதன் பழக்கத்தின் அடிமை அல்லவா! நமக்கு ஆரோக்கியம் முக்கியமா, ருசி முக்கியமா என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் போதுமானது. தவிர பேலியோ உணவும் ருசியானதே.

வெறும் ஒரு பனீரை வைத்துக்கொண்டு என்னாலேயே இருபது விதமான உணவு வகைகள் சமைக்க முடியும். சமையல் கலையில் விற்பன்னர்களான மகளிரால் முடியாதா? அமாவாசை, ஏகாதசி போன்ற தினங்களில் வெங்காயம், பூண்டு சேர்க்க முடியாது என்பவர்கள்கூட வெறும் பனீரை வேகவைத்து உதிர்த்துப் போட்டு மோர்க்குழம்பு கலந்து அடிக்க முடியும். மனமிருந்தால் மார்க்கபந்து.
 

(தொடரும்)

- பா.ராகவன்

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

பா.ராகவன் - 28

இந்தத் தொடரை கவனமாகப் படித்து வரும் வாசகர்கள் அவ்வப்போது எனக்கு எழுதிக் கேட்கும் சில வினாக்களைத் தொகுத்து வந்தேன். மொத்தமாக அவற்றுக்கு இங்கே பதில் சொல்லி விடலாம் அல்லவா? சென்றவாரம் செகந்திராபாத்தில் இருந்து ஒரு வாசக நண்பர் மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தார். ‘ஐயா எனக்கு நீரிழிவு இருக்கிறது. ரத்தக் கொதிப்பு பிரச்னை இருக்கிறது. தைராய்டு இருந்து அதற்கு ஆறாண்டுகள் மாத்திரை சாப்பிட்டு, நிறுத்தியிருக்கிறேன். ஒற்றைத் தலைவலி உண்டு. முதுகுத் தண்டுவடத்தில் ஓர் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ செய்திருக்கிறேன். என் எடை 83 கிலோ. பேலியோவில் இதை எழுபதாக்க முடியுமா? என் வயது 69’.
4.jpg
இந்தக் கடிதத்துக்கு நான் எழுதிய பதில்: ‘முடியும். ஆனால், உங்களுக்கு பேலியோ சரிப்பட்டு வருமா, செய்யலாமா என்று உங்கள் டாக்டரிடம் கேளுங்கள். நான் டாக்டரல்ல...’தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்கள் எடைக்குறைப்புக்கும், சர்க்கரை நோயில் இருந்து பூரண விடுதலை பெறவும் தைரியமாக பேலியோவை நம்பி வரலாம். இதற்கு யாரையும் கேட்க அவசியமே இல்லை. ஆனால், ஐம்பதுக்கு மேற்பட்ட வயதும் தேகம் முழுதும் வியாதி வெக்கைகளையும் சேர்த்து வைத்திருப்போர் தகுந்த மருத்துவ அறிவுரை இல்லாமல் இதனைச் செய்யக்கூடாது.

ஏனெனில் உயர் கொழுப்பு என்பது விளையாடிப் பார்க்கக்கூடிய விஷயமல்ல. குறிப்பாக சைவ உணவு உட்கொள்வோர், கொஞ்சம்போல் சர்க்கரை வியாதி சகவாசமும் இருந்துவிடும்பட்சத்தில் சிறு பிழைகளும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஒரே ஓர் எளிய உதாரணம் சொல்கிறேன். சென்றமாதம் கும்பகோணத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. மிகவும் நெருங்கிய உறவினர் என்பதால் மூன்று நாள்களுக்கு அங்கேயே தங்கும்படியானது. சரி, மூன்று நாள்தானே, பேலியோவுக்கு விடுமுறையளித்துவிட்டு ரெகுலர் உணவை உட்கொள்ளலாம்; அதன்பின் இருபத்தி நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து ரத்த சர்க்கரையைக் குறைத்து மீண்டும் பேலியோவுக்கு மாறி, அதன்மூலம் சற்றுக் கூடுதல் எடை இழப்பைப் பெறலாம் என்று எண்ணினேன்.
4a.jpg
மூன்று நாள்; பன்னிரண்டு வேளை கல்யாண கார்ப் உணவு. முடிவு செய்து களத்தில் இறங்கியதால் நான் எதையுமே விட்டுவைக்கவில்லை. இனிப்புகள், எண்ணெய்யில் பொரித்த பட்சண பலகாரங்கள் தொடங்கி அனைத்தையும் ஒரு கை பார்த்தேன். கிளம்பும்போது ரயிலில் சாப்பிட ஒரு புளியோதரை பார்சலையும் எடுத்துச் செல்லத் தவறவில்லை. மொத்தம் பதிமூன்று வேளை. ஒரு குத்துமதிப்புக் கணக்கில் எப்படியும் ஒன்பதாயிரம் கலோரிகளுக்கு கார்ப் சாப்பிட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.

விளைவு, வீட்டுக்கு வந்து எடை பார்த்தபோது சரசரவென்று மூணே முக்கால் கிலோ ஏறியிருந்தேன். எனக்குத் தெரியும். இது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால், ஏறிய எடையை இறக்கவும் தெரியும் என்பதால் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை. அன்றிரவு தொடங்கி சரியாக முப்பத்தி ஆறு மணி நேரம் வாரியர் போனேன் (வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டிருப்பது). அதன்பின் குறைந்த அளவு கார்ப் உள்ள காய்கறியுடன் (புடலங்காய், கீரை) பனீர், வெண்ணெய் சாப்பிட்டு மறுநாள் உணவை நிறைவு செய்தேன்.

இப்படியே இரண்டு நாள் படு தீவிர பேலியோ உணவை மட்டும் உட்கொண்டதன் விளைவாக, ஏறிய மூணே முக்கால் கிலோவும் நான்காம் நாள் காலை இறங்கிவிட்டது. சிக்கல் எங்கே வரும் என்றால், நான் செய்த இதே காரியத்தை ஒரு சர்க்கரை நோயாளி செய்திருந்தார் என்றால் கோவிந்தா. இந்த சீட்டிங்குக்குப் பின் அவர் பெரும்பாடு பட்டிருக்க வேண்டும். இதை ஒரு ரத்த அழுத்த நோயாளி செய்திருந்தால் இன்னுமே விபரீதமாகியிருக்கக்கூடும்.

உயர் கொழுப்பும் உயர் மாவுச்சத்தும் பரம எதிரிகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இரண்டும் சேராது; சேரக்கூடாது. நீங்கள் வழக்கமான உணவை உட்கொண்டு நீண்ட நாள் உயிர் வாழலாம். நோய்கள் வந்தால் மருந்து மாத்திரை இருக்கவே இருக்கிறது. அல்லது பேலியோவுக்கு வந்து மருந்து மாத்திரைகளில் இருந்து விடுதலை கண்டு, எடையைக் குறைத்து ஆரோக்கியமாகவும் வாழலாம். இரண்டும் நமக்கு முன் உள்ள இருவேறு வாய்ப்புகள். இரண்டையும் கலக்கக்கூடாது என்பதுதான் விஷயம். கலந்தால் சிக்கல் வரும். ஆசுபத்திரிக்குப் போய் படுக்க வேண்டி வரும். அதைப் புரிந்துகொண்டுவிட வேண்டும்.
4b.jpg
அப்படியே சிக்கலாகிப் போனால்கூட தாங்கக்கூடிய வயதும் வலுவும் இருக்குமானால் சமயத்தில் தப்பித்துவிடலாம். அதனால்தான் ஐம்பது வயதுக்குட்பட்டவர்கள் தைரியமாக பேலியோவுக்கு வரலாம் என்று சொன்னேன். வயதில் மூத்தவர்கள், நோய் உபாதைகளுக்கு உட்பட்டவர்கள் மருத்துவர் உதவியின்றி இதைச் செய்வது பெரும்பிழையாகும் (வயது குறைந்தோரே கூட பேலியோ தொடங்கியதும் சர்க்கரை, ரத்த அழுத்த மாத்திரைகளை நிறுத்திவிடுகிறார்கள். இது தவறு. மருத்துவ ஆலோசனையின்றி நாமே மாத்திரைகளை நிறுத்துவது பெரும் கேடு விளைவிக்கும்). புரிந்துவிட்டதல்லவா? இனி எனக்கு வந்த வினாக்களை இங்கே தொகுக்கிறேன். இவை, இதுவரை வாசித்து வந்ததன் சாரத்தை சுருக்கமாக உணரவைக்கும் என்று நம்புகிறேன்.

* பேலியோவில் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை ஏன் வருகிறது?
உணவில் உப்பு குறைவாக இருப்பின் மலச்சிக்கல் ஏற்படும். வெண்ணெய் அதிகம் சேர்ப்பதன்மூலம் இதைத் தவிர்க்கலாம். இன்னொன்றும் செய்யலாம். தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் (உப்புப் போட்டு) அருந்தலாம்.

* எடைக் குறைப்பு நடவடிக்கை திடீரென்று ஒருவருக்கு ஏன் நின்றுவிடுகிறது? மீண்டும் தொடங்க என்ன செய்யலாம்?
மனித உடலின் அடிப்படை இயல்புகளுள் ஒன்று, உள்ளே என்ன அனுப்பினாலும் அதை அடுத்த வேளைக்குச் சேர்த்து வைப்பது. சாதாரண உணவில் இருந்து பேலியோ உணவு முறைக்கு மாறும்போது உடல் எதிர்கொள்ளும் எதிர்பாராத அதிர்ச்சியின் விளைவாக ஆரம்பத்தில் வேகமாக எடைக்குறைப்பு நிகழும். அதன்பின் உடலுக்குக் கொழுப்புணவு பழகிவிடும். இனி நமக்கு கார்ப் இல்லை; இதுதான் என்பது தெரிந்தபிறகு, ‘நாளை இதுவும் இல்லாவிட்டால் கஷ்டப்படுவானே’ என்ற அக்கறையில் உடலானது கொழுப்பையும் சேகரித்து வைக்க ஆரம்பிக்கும். அதனால்தான் எடைக்குறைப்பு தடைபட்டுப் போகிறது.

* இதைச் சரி செய்வது எப்படி? மீண்டும் எடைக்குறைப்பு நிகழ என்ன வழி?
விரதங்களே உதவும். 16:8 விண்டோ, 23:1 விண்டோ போன்றவை வெகுவாகக் கைகொடுக்கும். கூடவே குறைந்தது ஒரு மணி நேர நடை அல்லது உடற்பயிற்சி அவசியம். பேலியோவில் அனுமதிக்கப்பட்டதே என்றாலும் நேரங்கெட்ட நேரத்தில் ஸ்நாக்ஸ் கொறிக்காதிருப்பது மிகவும் முக்கியம். ஒரு க்ரீன் டீ அல்லது ப்ளாக் காப்பிகூட (மிகக் குறைந்த, மிஞ்சினால் 2 கிராம் கார்ப்) விரதத்தைக் கெடுக்கிற காரணிதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

* எடைக் குறைப்பு முயற்சியின்போது ஒரு கட்டத்தில் நாம் உண்ணும் கொழுப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்கிறார்களே?
ஏற்கெனவே சொன்னதுபோல், நமது உடல் நாம் உண்ணும் கொழுப்புணவில் ஒரு பகுதியை தன்னியல்பாகச் சேமிக்கத் தொடங்கிவிடுகிறது. நாமும் அளவின்றிக் கொழுப்பை உண்டுகொண்டே இருந்தால் எடை ஏறாமல் வேண்டுமானால் இருக்குமே தவிர, மேலும் இறங்காது. எனவே நம் பங்குக்குக் கொஞ்சம் கொழுப்பைக் கொடுத்து, மிச்சத்தை உடல் சேமித்திருக்கும் சொத்திலிருந்து எடுத்துக்கொள்ள வழி செய்ய வேண்டும். சேமிப்பு கரைந்தால்தான் உடல் இளைக்கும்.

* கொழுப்புணவையும் குறைத்தால் பசிக்காதா?
பசி வருகிற அளவுக்கு யார் குறைக்கச் சொன்னது? உதாரணமாக ஓர் உணவோடு நீங்கள் ஐம்பது கிராம் வெண்ணெய் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அதை 20 கிராம் ஆக்குங்கள். பதிலுக்கு அதிக கார்ப் இல்லாத புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். பசியும் அடங்கும், கொழுப்பும் அளவோடு உள்ளே போகும், கார்ப் கணக்கும் உதைக்காது.
 

(தொடரும்)


* பன்னிரண்டு வேளை கல்யாண கார்ப் உணவு. விளைவு, வீட்டுக்கு வந்து எடை பார்த்தபோது சரசரவென்று மூணே முக்கால் கிலோ ஏறியிருந்தேன்.

* வயது குறைந்தோரே கூட பேலியோ தொடங்கியதும் சர்க்கரை, ரத்த அழுத்த மாத்திரைகளை நிறுத்திவிடுகிறார்கள். இது தவறு.

http://www.kungumam.co.in/

Link to comment
Share on other sites

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

 

பா.ராகவன் - 29

சென்ற வாரம் சில கேள்விகளையும் அதன் பதில்களையும் கண்டோமல்லவா? அதன் தொடர்ச்சி இது. ஒரு வரிச் சுருக்கமாக பேலியோ மனத்தில் பதிவதற்கு இது உதவும் என்று நினைக்கிறேன்.
6.jpg
வேர்க்கடலை சாப்பிடக்கூடாதா? அது என்ன பாவம் செய்தது?
வேர்க்கடலை கொட்டையினம் அல்ல. அது லெக்யூம் வகையைச் சேர்ந்தது. பேலியோவில் லெக்யூம் கிடையாது. ஆட்டோ இம்யூன் வியாதிகளைத் தூண்டுவதில் அதற்கு முக்கியப் பங்கு உண்டு. தவிர, ஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை எல்லாம் இலவச இணைப்பாகச் சேரும். எப்போதாவது ஒருமுறை ஆசைக்குச் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. ஆனால், தினமும் வேர்க்கடலை என்பது விபரீதத்தில் கொண்டு விடும். குறிப்பாக Hscrp, தைராய்ட் பிரச்னை உள்ளவர்கள் அதை மறந்துவிடுவதே நல்லது.

ஓ, சரி. ஆனால், முளை கட்டிய பயிறு வகைகள், சுண்டல் எல்லாம் ஏன் பேலியோவில் இல்லை?
இதெல்லாம் நல்லது என்றல்லவா சொல்லுவார்கள்? அவற்றில் கார்போஹைடிரேட் அதிகம். ஒரு பக்கம் உயர் கொழுப்புணவாக எடுத்துக் கொண்டு மறுபுறம் உயர் மாவுச் சத்து உணவையும் சேர்த்து உண்பது விபரீதத்தில் கொண்டு விடும். அதனால்தான் கூடாது. நீங்கள் கொழுப்பை முற்றிலும் நிறுத்திவிட்டு வெறும் சாலட், முளை கட்டிய பயிறு என்று உண்டால் பிரச்னையே இல்லை. ஆனால், அத்தகைய டயட்டை மூன்று நான்கு வாரங்களுக்குமேல் தொடர முடியாது. தொடரவும் கூடாது.

சரியாப் போச்சு. பேலியோவை மிகச் சரியாகக் கடைப்பிடிக்கும் சிலருக்கே டிரைகிளிசிரைட் கண்டபடி ஏறுவதாகச் சொல்கிறார்களே?
சேமிப்புக் கொழுப்பு கரையும்போது டிரைகிளிசிரைடாக மாறியே வெளியேறுகிறது. அது ஒரு தாற்காலிக நிலையே. கவலை வேண்டாம்.
6a.jpg
ஹோட்டலில் சாப்பிட நேரும்போது என்னதான் பேலியோ உணவாகத் தேடி உண்டாலும் எண்ணெய் சேர்மானம் இருக்குமே? அது ஆபத்து அல்லவா? என்ன செய்யலாம்?
கஷ்டம்தான். கூடியவரை எண்ணெய்ச் சேர்ப்பு அதிகமில்லாத உணவு வகையாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. பனீர் டிக்கா நல்ல சாய்ஸ். எண்ணெய் போடாமல், சும்மா க்ரில் செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்கலாம். பாலக் பனீர் வசதி. பனீர் ஃப்ரை, பனீர் புர்ஜி என்று போகும்போது எண்ணெய் நிச்சயம் இருக்கும். பனீர் டிக்கா மசாலா என்ற பெயரில் சில உணவகங்களில் பனீருக்கு எண்ணெய்க் குளியலே நிகழ்த்தித் தருவார்கள். அதெல்லாம் முற்றிலும் ஆபத்து. எண்ணெய் தவிர்ப்பது எல்லாவற்றுக்குமே நல்லது.

பூண்டை ஏன் பச்சையாக உண்ண வேண்டும்? சமைத்தால் என்ன தப்பு?
பூண்டு ஓர் உணவுப் பொருளல்ல. அது ஒரு மருந்து. பூண்டில் உள்ள Allicin நமது உடலுக்கு மிகவும் நல்லது. இது வெங்காயத்திலும் உண்டு. காரம், நெடி இரண்டுக்கும் இதுவே காரணம். இது சமைத்தால் போய்விடும். அதனால்தான் பச்சையாக உண்ண வேண்டும் என்பது.

சைவர்களுக்கு இங்கே கிடைக்கக்கூடிய காய்கறிகளே குறைவு. அதிலும் பீன்ஸ், அவரை போன்றவற்றைக் கூடாது என்கிறீர்களே? பீன்ஸ் சாப்பிட்டால் எடைக் குறைப்பு நின்றுவிடுமா?
எடைக் குறைப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இந்த ரகக் காய்கறிகள் டாக்சின்ஸ் என்பதால் மட்டுமே இவை தடுக்கப்பட்டுள்ளன (பைட்டிக் ஆசிட், லெக்டின் பிரச்னை). பீன்ஸ் ரகங்கள் சிலருக்கு சரும அலர்ஜி மற்றும் குடல் சார்ந்த பிரச்னைகளைத் தோற்றுவிக்கக்கூடியவை. அப்படி எதுவும் எனக்குக் கிடையாது என்பீரானால் அவ்வப்போது பீன்ஸ் சாப்பிடுவதில் தவறில்லை. பீன்ஸில் உள்ளது மிகக் குறைந்த (3.5) அளவு கார்ப் மட்டுமே.

கிழங்கு இனம் ஏதும் பேலியோவில் கிடையாது என்றால் வெங்காயம், பூண்டு மட்டும் ஏன்?
எடைக்குறைப்பு நிலையில் கிழங்குகள் வேண்டாம் என்று சொல்லப்படுகின்றன. மெயிண்டனன்ஸ் டயட்டில் கொஞ்சம் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை. இந்த மெயிண்டனன்ஸ் டயட் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன். ஆனால், கிழங்காகவே இருந்தாலும் வெங்காயமும் பூண்டும் உணவுப் பொருள்களல்ல. மருந்து. அதனால்தான் அவற்றைப் பச்சையாக உண்ண வேண்டும் என்று சொல்லுவது. இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களின் உள்காயங்களை இவை ஆற்றக்கூடியவை. இதனால்தான் பசு மஞ்சள் எடுக்கும்போது இவற்றைச் சேர்க்கச் சொல்வது.

சீட்டிங் ஏன் தவறு?
எந்த மனிதனும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. அறியாமையால் செய்யப்படும் தவறை எடுத்துச் சொல்லித் திருத்துவது எளிது. பேலியோவுக்கு வருவதற்கு முன் நாம் ஒரு வித உணவை உண்டுகொண்டிருந்தோம். அது கார்போஹைடிரேட் அதிகமுள்ள உணவு. இதயப் பிரச்னைகளுக்கு, ரத்த சர்க்கரை அளவுப் பிரச்னைகளுக்கு, அதிக எடைக்கு அதுவே காரணம் என்பதால், அந்த உணவை நிறுத்திவிட்டு, கொழுப்புணவுக்கு மாறினோம். கார்போஹைடிரேட் எப்படி ஒரு எரிபொருளோ, அதேபோல் கொழுப்பு ஓர் எரிபொருள். அது டீசல் என்றால் இது பெட்ரோல். இரண்டையும் கலந்து வண்டி ஓட்ட முடியுமா? ஓட்டியே தீருவேன் என்றால் வண்டிதான் கெடும். அதனால்தான் கூடாது என்று சொல்லப்படுகிறது.

சீட்டிங் தவறு என்று தெரிகிறது. ஆனால் இனிப்பு வகைகளையோ, பிடித்த பலகாரங்களையோ பார்க்கும்போது ஒரு விள்ளல் சாப்பிட்டுவிடத் தோன்றுகிறதே? கொஞ்சம் சாப்பிட்டால் கூடவா தவறு?
இதில் தவறு சரி என்று ஏதுமில்லை. நமக்கு என்ன வேண்டும் என்று முதலில் முடிவு செய்யுங்கள். எடைக் குறைப்பு அல்லது நீரிழிவில் இருந்து விடுதலை என்பது உங்கள் இலக்காக இருந்தால் கார்போஹைடிரேட்டைத் தவிர்த்தே தீரவேண்டும். அல்லது 40 கிராம் என்கிற கணக்குக்குள் கொண்டு வரவேண்டும். பலகாரத்தைப் பார்த்தாலே உண்ணவேண்டும் போலிருப்பதன் காரணம், கொழுப்பு உங்கள் உடலுக்கு இன்னும் பழகாதிருப்பது. அல்லது அது பழகவிடாமல் நீங்கள் அடிக்கடி கார்ப் உணவுகளை எடுத்துக்கொண்டிருப்பது. கொழுப்பு பழகிவிட்ட ஒருவருக்கு க்ரேவிங் இருக்காது. அப்படி இருக்கிறது என்றால் நீங்கள் இன்னும் பேலியோவுக்குள் வரவில்லை என்றே பொருள்.

பேலியோவில் முடி கொட்டுகிறதே?
பேலியோ என்றில்லை. எந்த எடைக் குறைப்பு டயட்டிலும் முடி கொட்டுவது கொஞ்சம் இருக்கும். எடைக் குறைப்பு நிற்கும்போது முடி கொட்டுவதும் நின்றுவிடும். பயோடின் போன்ற சப்ளிமென்டுகள் மூலம் இதைக் குறைக்கலாம். தகுந்த மருத்துவ அறிவுரையுடன் மேற்கொள்ள வேண்டும்.

உடல் நலம் குன்றியிருக்கும்போது, மருத்துவமனையில் இருக்கும்போது என்ன செய்வது? அப்போதும் பேலியோவைத் தொடரலாமா?
தாராளமாகத் தொடரலாம். விட்டமின் சி நிறைய உள்ள உணவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

கார்ப் ஷாக் என்பது என்ன? அது அறிவியல்பூர்வமானதா?
நூறு கிலோவுக்குமேல் எடை உள்ளவர்கள், எடைக் குறைப்பு முயற்சியாக பேலியோ பழகும்போது இதனைச் செய்வது வழக்கம். உடல் இயந்திரம் கொழுப்புணவுக்குப் பழகிவிட்ட நிலையில், திடீரென்று ஒருநாள் கொழுப்பே இல்லாமல் முற்றிலும் மாவுச் சத்து மிக்க உணவையே (வழக்கமான சாதம், சாம்பார், ரசம் உணவு) எடுத்துவிட்டு, மறுநாள் முதல் சட்டென்று 24 மணி நேரம், 48 மணி நேரம் வாரியர் விரதம் இருப்பார்கள்.

இந்த விரத காலத்தில், முதல் நாள் உண்ட கார்ப் உணவு சீக்கிரம் செரித்து, வயிறு பசியில் துடிக்கும். ஏனெனில், கார்ப் உணவின் இயல்பே நான்கு மணி நேரத்தில் பசிக்கச் செய்வது. கொழுப்புணவு பசியைக் கொடுக்காது. அப்படிப் பசிக்கிற போதும் ஏதும் உண்ணாமல் வெறும் தண்ணீரைக் குடித்துக்கொண்டிருந்தால், உடலானது ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை எரித்து சக்தியை அளிக்கும். சேமிப்புக் கொழுப்பு கரைவதால் எடைக் குறைப்பு நிகழும். இதையே கார்ப் ஷாக் என்பார்கள்.

இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாமா?
சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் இதனைக் கண்டிப்பாக மேற்கொள்ளக் கூடாது. இளைஞர்கள் செய்யலாம். இது ஓர் உத்திதானே தவிர, அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதல்ல. வெஜ் பேலியோவில் கார்ப் ஷாக் அதிகப் பலன் தருவதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவம் (நான் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். பெரிய எடை இழப்பு இல்லை).
 

(தொடரும்)

http://www.kungumam.co.in/

Link to comment
Share on other sites

 

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 
 

- பா.ராகவன் 30

என் நண்பர் ஒருவர் சர்க்கரை நோயில் இருந்து விடுபட விரும்பி பேலியோவுக்கு வந்தார். சர்க்கரை நோய்தான் அவரது பிரச்னையே தவிர, எடை அல்ல. அதாவது அவர் உயரத்துக்கு ஏற்ற சரியான எடையில் இருப்பவர். குண்டு கிடையாது. தொப்பை கிடையாது. நீரிழிவு மட்டும்தான் சிக்கல். அவரை ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்லி, பேலியோவில் இழுத்துப் போட்டேன். ஆரம்பித்த ஏழெட்டு தினங்களில் அவரது ரத்த சர்க்கரை அளவு சீராகக் குறைய ஆரம்பித்து வெகு விரைவில் சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை முற்றிலும் நிறுத்திவிட்டார். அவருக்கும் சந்தோஷம், அவரது மனைவிக்கும் இது பரம சந்தோஷம்.
8.jpg
ஆனால், என்னவாயிற்று என்றால் நீரிழிவில் இருந்து விடுபட்டதோடுகூட அவரது எடையிலும் கணிசமான சரிவு ஏற்பட்டிருந்தது. பேலியோவில் எடைக்குறைப்பு இல்லாமல் இருக்காது என்பதுதான் காரணம். நண்பர் ஒருநாள் என்னை போனில் அழைத்தார். சர்க்கரை வியாதி மருந்துகளில் இருந்து விடுபட்டுவிட்டேன். ஆனால், அநியாயத்துக்கு ஒல்லியாகிவிட்டேனே, மறுபடியும் எப்படி நான் இழந்த எடையைத் திரும்பப் பெறுவது என்று கேட்டார். நான் அவருக்கு இரண்டு உபாயங்கள் சொன்னேன். வாரம் இரண்டு நாள் உருளைக்கிழங்கு சமைத்துச் சாப்பிடுவது முதலாவது. இன்னும் இரண்டு நாள் ஆப்பிள் பழம் சாப்பிடுவது.

கவனிக்கவும். உருளைக்கிழங்கும் பேலியோவில் கிடையாது; ஆப்பிளும் பேலியோவில் கிடையாது. இரண்டுமே எக்கச்சக்கமாக கார்ப் கொண்டவை. அதிலும் ஆப்பிளில் நேரடி சர்க்கரையே உண்டு. இருந்தாலும் அவரை இரண்டு நாள் மட்டும் இதனைச் செய்யச் சொன்னேன். எண்ணி இரு வாரங்களில் அவரது எடை இரண்டரைக் கிலோ ஏறியது. இன்னும் இரு வாரங்கள் இதையே செய்தார். மேலும் ஒன்றரைக் கிலோ ஏறியது. இவ்வளவுதான் விஷயம். 7க்கு மேல் இருந்த அவரது HbA1C அளவு 5.3க்குக் குறைந்து வந்திருந்ததால், இந்த ஆப்பிள் உபயத்தில் மீண்டும் சற்று ஏறும் என்று எனக்குத் தெரியும்.
8a.jpg
இருப்பினும் பெரிய அளவில் ஏறாது என்று நினைத்தேன். ஏனெனில் வாரத்துக்கு இரண்டுதானே? அப்படி மீண்டும் எகிறி அடித்தால் இருக்கவே இருக்கிறது முழுப் பேலியோ. அவர் கேட்ட எடை அதிகரிப்புக்கு இது உதவுகிறதா என்று பார்க்கவே இந்த உபாயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே இன்னொன்றையும் சேர்த்துச் சொன்னேன், ‘நீங்கள் ஒரு பரிசோதனை எலி. ஏடாகூடம் ஏதேனும் நிகழ்ந்தாலும் பயப்படாமல் சமாளிக்கத் தயாராக வேண்டும்...’அவர் ஒப்புக்கொண்டதால் இதனைச் செய்து பார்க்க முடிந்தது. அவர் எதிர்பார்த்த எடை ஏற்றம் நிகழவும் செய்தது.

இது ஒரு வரியில் புரியவேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். வாரத்துக்கு இரண்டு நாள் உருளைக்கிழங்கு பொரியலும் இரண்டு ஆப்பிள் பழங்களும் சாப்பிட்டால் போதும். ஜல்லென்று எடை ஏறும். எனவே, எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் இவற்றின் பக்கம் திரும்பாதிருப்பது அவசியம் என்பது இதன் உள்ளுறை பொருள். நிற்க. இதனைச் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. பேலியோ ஆரம்பித்து போதிய எடைக்குறைப்பு நடந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நூறு கிலோவில் இருந்து எழுபத்தி ஐந்து கிலோவுக்கு வந்துவிட்டீர்கள். இதற்குமேல் எடைக்குறைப்பு வேண்டாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால், குறைந்த எடை மீண்டும் ஏறிவிடவும் கூடாது.

அதே சமயம் இதுநாள் வரை உண்ணாதிருந்தவற்றை அவ்வப்போதாவது உண்டு பார்த்தால் என்ன என்கிற நப்பாசை. யாருக்குத்தான் இராது? ஒன்றும் தப்பில்லை. ஆனால், எதைச் சாப்பிடுவது, எதை தொடவே கூடாது என்று ஒரு கணக்கு இருக்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். நீங்கள் நூறு கிலோவுக்கு மேல் எடை இருந்து இறங்கியிருந்தாலோ, நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்து மாத்திரை சாப்பிட்டு, பேலியோவுக்குப் பின் அதை நிறுத்தியிருந்தாலோ - உங்களுக்கு வேறு வழியே இல்லை. வாழ்நாள் முழுதும் பேலியோ உணவு முறையிலேயேதான் இருந்தாக வேண்டும்.

அப்போதுதான் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும், உடம்பு எடையும் ஏறாதிருக்கும். ஒரு எண்பது, தொண்ணூறு கிலோக்கள் வரை ஏறி, அங்கிருந்து எழுபது, எழுபத்தி ஐந்துக்கு இறங்கியிருந்தீர்கள் என்றால் கொஞ்சம் எல்லை தாண்டிச் செல்லலாம். இதைத்தான் ‘மெயிண்டனன்ஸ் பேலியோ’ என்பார்கள். அதாவது, இறங்கி வந்த எடையை அதே இடத்தில் நிறுத்தி வைப்பது. அதனோடு கூடச் சற்று பழைய உணவுகளையும் அவ்வப்போது ருசி பார்ப்பது. உதாரணமாக, மெயிண்டனன்ஸ் பேலியோவில் நீங்கள் சுமார் நாற்பது கிராம் வரை கைக்குத்தல் அரிசி சேர்த்துக்கொள்ள முடியும். கேரளத்து குண்டு அரிசி சேர்க்கலாம். இந்த நாற்பது கிராம் அரிசி என்பது தாராளமாக ஒரு கப் சாதமாகும்.
8b.jpg
அதில் உங்கள் இஷ்டத்துக்கு சாம்பாரோ ரசமோ கலந்து அடிக்கலாம். ஆனால், கஞ்சி வடித்த சாதமாக இருக்கவேண்டும். குக்கர் சாதம் கூடாது. அடுத்தபடியாக, பழங்கள். மெயிண்டனன்ஸ் டயட்டில் நீங்கள் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடலாம். சிறியதாக ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டாலும் தப்பில்லை. சற்றே காய்வாட்டாகப் பப்பாளி சாப்பிடலாம். அத்திப்பழம் சாப்பிடலாம். ஆஹா பழம் சாப்பிடலாம் என்றால் நேற்று வரை காயாகக் கடிக்கவே முடியாத கொய்யாவைத் தின்று கொண்டிருந்தோமே, இன்று கொய்யாப்பழம் சாப்பிடலாமா என்றால் கூடாது!

மா, பலா, வாழை, கொய்யாவெல்லாம் அதிக இனிப்பு கொண்ட பழ வகைகள். இவை என்றுமே ஆபத்து. சர்க்கரை வியாதி இருந்து சரியாகியிருக்குமானால் கண்டிப்பாக இந்தப் பழங்களும் கூடாது. ஒருவேளை மேற்சொன்ன நாற்பது கிராம் அரிசியுடன் வழக்கமான குழம்பு ரச சாப்பாடு சாப்பிட்டாலும் மற்ற இரு வேளைகளிலும் பேலியோ உணவுகளான பாதாம், பனீர் போன்றவற்றையே தொடர வேண்டும். இப்படிச் செய்தால் எடை மீண்டும் ஏறாதிருக்கும். அதே சமயம் ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். என்னைக் கேட்டால், மெயிண்டனன்ஸ் டயட்டில் இருப்பவர்கள் வாரம் ஒருமுறை 20:4 வாரியர் விரதம் மேற்கொள்வது மிகவும் நல்லது.

என்ன டயட்டில் இருந்தாலும் கண்டிப்பாகத் தவிர்த்தே தீரவேண்டியவை என்று சிலது இருக்கின்றன. அதில் முக்கியமானது கோதுமை. சப்பாத்தி, பூரி தொடங்கி கோதுமையின் சகலபாடி வஸ்து வான மைதாவை மூலப்பொருளாகக் கொண்ட பரோட்டா வரை வடக்கில் இருந்து வந்த எதையும் திரும்பிக்கூடப் பார்க்காதீர்கள். பிட்சா, பர்கரெல்லாம் எந்நாளும் வேண்டாம். தப்பித்தவறி ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிட்டுவிடுகிறீர்கள் என்றால், மறக்காமல் எட்டு கிலோ மீட்டர் நடந்துவிடுங்கள். முடிந்தது ஜோலி. ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

நமது முன்னோர் இப்படியெல்லாம் கணக்குப் போட்டா சாப்பிட்டிருப்பார்கள்? அரிசிச் சோறுதான். கிழங்குகள் இருக்கும், இனிப்பு இருக்கும், எல்லாம்தான் இருக்கும். ஆனாலும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தார்கள். நமக்கு மட்டும் ஏன் இந்தப் பிரச்னை? கொஞ்சம் தின்றாலே ஏன் உடல் பருத்துவிடுகிறது? என்றால், இன்றைய நமது வாழ்க்கை முறைதான் காரணம். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை நாம் உட்கார்ந்து செலவழிக்கிறோம். உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் போய்விடுகிறது. நான் ஒரு நாளில் குறைந்தது பதினெட்டு மணி நேரங்கள் உட்கார்ந்து வேலை செய்கிறேன். முதுகுவலி, இடுப்பு வலி, முழங்கால் வலி என்று மூலைக்கு மூலை வலியுற்பத்தி நிகழ்கிறது.

தின்பது, உட்கார்ந்து வேலை செய்வது, படுத்துத் தூங்குவது என்று இருந்தால் உடம்பு பெருக்காமல் என்ன செய்யும்? அதற்குத்தான் பேலியோ. நமது முன்னோர்கள் தின்ற அளவுக்கு உழைக்கவும் செய்ததால் (குறைந்தது அந்நாள்களில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடம் செல்ல நடந்தாவது போவார்கள். ஆட்டோ ஏது? கால் டாக்சி ஏது?) ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆக, உடலுழைப்பு குறைந்துவிட்டதால்தான் நமக்கு எடைப் பிரச்னை, பிற வியாதிகளின் பிரச்னைகள். என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவேன், ஆனால் ஒரு நாளைக்குக் குறைந்தது பதினையாயிரம் ஸ்டெப்ஸ் நடந்துவிடுகிறேன் என்று சொல்லுங்கள்! உங்களுக்கு பேலியோவே வேண்டாம்!
 

(தொடரும்)

http://www.kungumam.co.in/

Link to comment
Share on other sites

 

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

பா.ராகவன்

நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் என்னைச் சந்தித்த பல ‘குங்குமம்’ வாசக நண்பர்கள் இந்தத் தொடரைப் படிக்கிற ஆவேசத்தில் பேலியோ தொடங்கிவிட்டதாக, ஒரு சில கிலோ எடை குறைந்துவிட்டதாகச் சொன்னார்கள். அவர்கள் அத்தனை பேரிடமும் நான் தவறாமல் கேட்ட முதல் வினா, ‘ரத்தப் பரிசோதனை செய்தபின் ஆரம்பித்தீர்களா?’ என்பதுதான். சிலர் சரியாகச் செய்திருந்தார்கள். ரத்தப் பரிசோதனை செய்து, டாக்டர் அல்லது டயட்டீஷியனிடம் காட்டி அவர்களது ஆலோசனையின்படி பேலியோவைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்தார்கள். ஆனால், பெரும்பாலானோர், இதைப் படித்ததே போதும் என்ற முடிவில் பாதாம், பனீர் என்று அடித்து ஆடத் தொடங்கிவிட்டிருந்ததை அறிந்தேன்.
5.jpg
கொஞ்சம் கலவரமாக இருந்தது. இந்தத் தொடரின் ஆரம்பத்தில் சொன்னதை இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறேன். பேலியோ டயட் என்பது விளையாட்டல்ல. அப்படித்தான் நினைப்பேன் என்பீர்களானால், உடலோடு விளையாடுவது பெரும் அபாயம். இதனால் வரக்கூடிய பக்க, பின் விளைவுகள் யாருக்கு என்னவாக இருக்கும் என்று தெரியாது. தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதைச் செய்யக்கூடாது என்பதை மீண்டும் சொல்லிவிடுகிறேன். சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் இருந்து ஒரு பெண்மணி என்னை போனில் அழைத்தார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. அவருக்கும் என்னைத் தெரியாது. ‘குங்கும’த்தில் படித்துவிட்டு யாரிடமோ நம்பர் கேட்டுப் பெற்று கூப்பிட்டிருந்தார்.

விஷயம் இதுதான். இந்தத் தொடர் கொடுத்த உத்வேகத்தில் அவர் எந்த மருத்துவப் பரிசோதனையும் செய்யாமல் பேலியோவை ஆரம்பித்திருக்கிறார். ஒன்றிரண்டு கிலோ எடையும் குறைந்திருக்கிறது. நன்றி சொல்லத்தான் அவர் அழைத்தார் என்றாலும் எனக்கு அடி வயிற்றைக் கலக்கியது. ‘அம்மா, நீங்கள் ரத்தப் பரிசோதனை செய்தீர்களா?’ என்று கேட்டேன்.‘இல்லை...’‘உங்களுக்கு சர்க்கரை வியாதி உண்டா?’‘இருந்தது. ஆறு வருடங்கள் மாத்திரை சாப்பிட்டேன். போரடித்து நான்கு மாதங்களுக்கு முன்நிறுத்திவிட்டேன்...’‘ரத்தக்கொதிப்பு உண்டா?‘இருக்கிறது...’‘தைராய்டு?’

‘ஓ... அதற்  கும் தினசரி காலை ஒரு மாத்திரை எடுத்துக்கொள்கிறேனே!’‘உத்தமம். நீங்கள் பேலியோவில் என்ன சாப்பிடுகிறீர்கள்?’‘காலை நூறு பாதாம். மதியம் காலிஃப்ளவர் சாதம். இரவு பனீர். இடையே பால் காப்பி, கொய்யா, சீஸ்...’‘சுத்தம். போய் மீண்டும் தைராய்டு டெஸ்ட் எடுத்துப் பாருங்கள். அளவு எகிறியிருந்தால் கம்பெனி பொறுப்பாகாது’ என்று சொன்னேன். தைராய்டு மாத்திரை உண்பவர்கள் பேலியோவில் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கலி போன்ற காய்கறிகளை அறவே தவிர்க்க வேண்டும். நட்ஸே சில பேருக்குச் சேராமல் போகும். அதேபோல் சர்க்கரை நோய் இருந்து பேலியோவுக்கு வருபவர்கள், பேலியோவைத் தொடர்ந்தாலும் சர்க்கரைக்கான மாத்திரையை நிறுத்தக்கூடாது - குறிப்பிட்ட காலம் வரை.
5a.jpg
அந்தக் காலம் என்றைக்குக் காலாவதியாகும் என்பது டாக்டருக்குத்தான் தெரியுமே தவிர நமக்கல்ல. என்னைக் கேட்டால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் (பேலியோவில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும்) பாலைத் தவிர்ப்பது அவசியம் என்பேன். பொதுவான சில பண்டங்களைப் பற்றியும் அவற்றின் பலன்களைப் பற்றியும் அறிந்துகொண்டு நமக்கு நாமே டயட் தொடங்குவது பெரும் ஆபத்து. பலன் ஓரளவு இருக்கும்தான். ஆனால், பக்க விளைவுகள் அவசியம் இருக்கும். அதனால்தான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். ரத்தப் பரிசோதனை செய்யாமல், தகுந்த மருத்துவ ஆலோசனையில்லாமல் பேலியோ பக்கம் வந்துவிடாதீர்கள்.

முற்றுமுழுதான பரிசோதனை இல்லாவிட்டாலும் கீழ்க்கண்ட பரிசோதனைகளாவது மிகவும் அவசியம்:
கொழுப்பு பரிசோதனைகள் (Lipid Profile).
மாரடைப்புக் காரணிகள் (Cardiac Markers).
கல்லீரல் பரிசோதனை (Liver Profile).
சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனை (Kidney Profile).
இரும்புச் சத்துப் பரிசோதனை.
தைராய்டு பரிசோதனை.
நீரிழிவுப் பரிசோதனை.
கணையப் பரிசோதனை (Pancreas Profile).
வைட்டமின் பரிசோதனை (Vitamin Profile, D, B12 மட்டுமாவது).
முழு ரத்த விவரத் தொகுப்பு (Hemogram).
சிறுநீர் பரிசோதனை.
மஞ்சள் காமாலை பரிசோதனை.5b.jpg

மேற்கண்ட அனைத்துப் பரிசோதனைகளையும் ஒரே ஒரு ரத்த சாம்பிளில் முடித்துவிட முடியும். பரிசோதனைக்கு ரத்தம் கொடுக்கும் முன் பன்னிரண்டு மணி நேரம் உண்ணாதிருக்க வேண்டும் என்பது முக்கியம். பயந்துவிட வேண்டாம். முதல் நாள் இரவு எட்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு மறு நாள் காலை எட்டு மணிக்கு ரத்தம் கொடுத்தால் முடிந்தது. நடுவே தண்ணீரைத் தவிர வேறெதுவும் உள்ளே போகக்கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தால் போதும்.

எதற்காக இந்தப் பரிசோதனைகள்?
நமக்கே தெரியாமல் நமது உடலில் சில வியாதிகள் இருக்கலாம். தனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்றே தெரியாமல் ஐம்பது வயது வரை ஜாலியாக இருந்த சில மனிதர்களை நான் அறிவேன். தைராய்டு இருப்பது தெரியாமல் இந்த பேலியோ பரிசோதனையின்போது தெரியவந்து அதிர்ந்த பெண்மணி ஒருவரையும் அறிவேன். கணையம் சார்ந்த பிரச்னைகள், சிறுநீரகப் பிரச்னைகள், விட்டமின் குறைபாடு உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். இவர்கள், முற்று முழுதாகத் தமது உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்போது உடல் இயந்திரம் அதை ஏற்பதில் நிறைய சண்டித்தனம் செய்யும். சிலருக்கு விபரீதமாக ஏதாவது நிகழ்ந்துவிடலாம்.

ஆனால், நமது குறைபாடுகளைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப டயட்டில் தேவையான சில மாற்றங்களைச் செய்துகொண்டுவிடும் பட்சத்தில், ரிசல்ட் சரியாக இருக்கும்; பிரச்னைகளையும் சரி செய்வது சுலபம். எனக்கு எந்த வியாதியும் இல்லை; நான் நார்மலாக இருக்கிறேன் என்று பெரும்பாலானவர்கள் சொல்லுவார்கள். அப்படி இருப்பது நல்லதே. நமக்குத் தெரியாமல் என்னவாவது இருந்து தொலைத்தால் என்ன செய்வது என்பதே என் கவலை. அவர்களுக்காகத்தான் இந்தக் குறிப்பு. முக்கியமாக நாற்பது வயதைக் கடந்தவர்கள் வருடமொரு முறை மேற்சொன்ன பரிசோதனைகளை (பேலியோவுக்கு வராவிட்டாலுமே) செய்து பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

எடைக்குறைப்புக்காக பேலியோவுக்கு வருகிறவர்கள் இதைச் செய்யாமல், டாக்டரிடம் காட்டி ஆலோசனை பெறாமல் வருவது அறவே கூடாது. இத்தனை ஒழுக்கமாக எல்லாப் பரிசோதனைகளையும் செய்து பேலியோவுக்கு வந்து, கண்டதைத் தின்னாமல் ஒழுங்காக டயட் கடைப்பிடித்து எடை குறைப்போருக்கே சமயத்தில் சில சிக்கல்கள் வரும். குறிப்பாக சைவ உணவுக்காரர்களுக்கு புரதப் போதாமை உண்டாகும். விட்டமின் குறைபாடுகள் (முன்பே இருந்தாலும்) பெரிதாகத் தலைதூக்கும். சமயத்தில் சுருண்டு படுத்துத் தூங்கத் தோன்றும்.

என்னடா வாழ்க்கை என்று சலிப்புத் தட்டும். இம்மாதிரித் தருணங்களில் சில சப்ளிமெண்டுகளின் தேவை உண்டாகும். குறிப்பிட்ட காலத்துக்கு அவற்றை ஒழுங்காக எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும். எடைக் குறைப்பு என்பது எளிய விஷயமல்ல. மூலிகை மில்க் ஷேக் குடித்து நாலு வாரத்தில் ஆறு கிலோ குறைந்தது என்று சொல்லும் பலரை நான் அறிவேன். பின்னாளில் இவர்கள் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு டாக்டருக்குக் கொட்டிக்கொடுக்க நேர்ந்த அவலக் கதைகளையும் அறிவேன். எந்தப் பிரச்னையும் வராமல் என்றென்றும் நலமாக வாழ்வதற்கான ஒரு வழியே பேலியோ. இதற்காகவாவது கொஞ்சம் மெனக்கெடலாம் அல்லவா? இனி அந்த சப்ளிமெண்டுகளைப் பற்றிப் பார்ப்போம்.
 

(தொடரும்)

http://www.kungumam.co.in/

Link to comment
Share on other sites

 
 

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 
 

பா.ராகவன் - 32

எடைக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐந்நூறு கலோரி அளவுக்குச் சாப்பிடலாம் என்று பார்த்தோம். இதில் மாவுச் சத்துள்ள உணவுப் பொருள்கள் அதிகபட்சம் நாற்பது கிராமுக்குள் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்வது நல்லது என்று பார்த்தோம். அந்த நாற்பது கிராமுமே காய்கறிகளில் இருந்துதான் வரவேண்டும்; தானியங்களில் இருந்தோ பழங்களில் இருந்தோ அல்ல என்று பார்த்தோம். நெய், வெண்ணெய், பனீர் மற்றும் பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் இனங்களில் இருந்து சைவ உணவாளர்கள் கொழுப்புச் சத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தோம். இவ்வளவையும் பார்த்துவிட்டு வைட்டமின்கள் மற்றும் மினரல்களைப் பற்றிப் பார்க்காதிருக்கலாமா?
3.jpg
நான் ஒரு வேள்வி போலச் சாப்பிட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்த கார்ப், கொழுப்பு, வைட்டமின் வகையறாக்களைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. நாக்குக்குப் பிடித்தால், அதன் பெயர் உணவு. அவ்வளவுதான். பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒன்றும் பெரிய தப்பில்லை. ஆனால், நடுத்தர வயதைக் கடக்கும்போது உடம்பானது சற்று சண்டித்தனம் செய்ய ஆரம்பிக்கும். மிகவும் எளிதாக, அடிக்கடி சோர்வு என்பதில் ஆரம்பிக்கும். அப்புறம், நடந்தால் முட்டி வலிக்கும், மூச்சு வாங்கும். காலை பத்து மணிக்கு ஆபீசுக்குப் போய் உட்கார்ந்ததும் ஒரு அரை மணி தூங்கினால் தேவலாம் போலிருக்கும்.

பேப்பர் படித்தால் எழுத்துகள் சரக்கடித்துவிட்டு வந்து உட்கார்ந்தாற்போல நடுங்கித் தெரியும். திடீரென்று பல் சொத்தை உண்டாகும். ஒன்றுமே இல்லாவிட்டாலும், உடல் சற்றுத் தளர்ந்துவிட்டாற்போல சமயத்தில் தோன்றும். இன்னதுதான் என்றில்லை. எல்லாமே எல்லோருக்கும் இருக்கும் என்பதும் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் வரலாம். வயதானால் வரத்தானே செய்யும் என்பீர்களானால் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், வயதானாலும் வலு குன்றாதிருக்க வழிகள் உள்ளன என்பதைச் சொல்லிவிட வேண்டுமல்லவா? மேற்படி திடீர் இம்சைகளின் காரணம், வைட்டமின் மற்றும் மினரல் குறைபாடுகள். இவை ஏன் ஏற்படுகின்றன என்றால் எனக்குத் தெரியாது. மிக எளிய பதிலாக ஒன்றைச் சொல்லலாம்.
3a.jpg
நாம் உட்கொள்ளும் உணவில் போதிய நுண் ஊட்டச்சத்துகள் குறைவாக இருப்பதால் வரலாம். பேலியோ என்றில்லை. எந்த டயட் முறையானாலும் சிலவற்றைக் கழித்துக் கட்டி, வேறு சில உணவுப் பொருள்களை மட்டுமே தொடர்ந்து எடுப்பதன்மூலம்தான் எடைக்குறைப்பு நிகழ்கிறது. இப்படிக் கழித்துக் கட்டும் சங்கதிகளில் சில சத்து களும் இருக்கும். அது நமக்குக் கிடைக்காது போய்விடும். பேலியோவையே எடுத்துக்கொள்வோம். இதில் நமக்குப் பழங்கள் கிடையாது. ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் நிறைய சத்துகள் உண்டு. என்ன பிரச்னை என்றால் சத்துகளைக் காட்டிலும் சர்க்கரை அவற்றில் அதிகம் என்பதால் - அது எடைக் குறைப்புக்கு ஜென்ம விரோதி என்பதால் - பேலியோவில் அவற்றைத் தவிர்க்கச் சொல்லுவார்கள்.

இதில் இழக்கும் சத்துகளை நாம் வேறு எதில் பெறுவது? உருளைக் கிழங்கை எடுத்துக்கொள்ளுங்கள். வைட்டமின் சி, பி6, மக்னீசியம், பொட்டாசியம் என்று எவ்வளவோ சத்து இதில் உண்டு. ஆனால், நூறு கிராம் உருளைக்கிழங்கில் பதினேழு கிராம் கார்போஹைடிரேட்டும் உண்டு. உலகில் எந்த ஜீவராசியாவது வெறும் நூறு கிராம் உருளைக்கிழங்கோடு நிறுத்திக்கொள்ளுமா? சமைக்கிற விதத்தில் சமைத்தால் குறைந்தது அரைக்கிலோ சரக்கு உள்ளே போய்விடும். இதனாலேயே பேலியோவில் உருளைக்கிழங்கு கூடாது (வெங்காயம், பூண்டு தவிர நிலத்துக்கு அடியில் விளையும் எதுவுமே கூடாது. போனால் போகிறது, கேரட், முள்ளங்கி). அரிசியில்கூட ஐந்து சதம் வைட்டமின் பி6 இருக்கிறது தெரியுமா?

உட்கார்ந்து கூகுள் செய்து பாருங்கள். நாம் என்னவெல்லாம் சாப்பிடுகிறோம், எது எதில் இருந்து என்னென்ன வைட்டமின்களும் மினரல்களும் நமக்குக் கிடைக்கின்றன என்பது தெரியவரும். இந்த நுண் ஊட்டச்சத்துகள் குறையும்போது உடம்பு கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பிக்கும். பெரிய பரிசோதனைகளே வேண்டாம். நம்மாலேயே தளர்ச்சியை உணர முடியும். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் சப்ளிமெண்டுகள் மூலம் இந்த வைட்டமின் குறைபாடுகளைச் சரிக்கட்ட முடியும். கார்ப் அளவுக்கு, கொழுப்பளவுக்கு இதெல்லாம் மிக அதிகம் தேவைப்படுகிற சரக்கில்லைதான். ஆனாலும் தேவை, தேவைதான். உதாரணமாக, உங்களுக்கு அடிக்கடி கை கால்கள் மரத்துப் போகிற மாதிரி தெரிகிறதா? தூங்கும்போது கால் ஆடுசதையில் குறக்களி பிடித்துக்கொண்டு படுத்துகிறதா?

சந்தேகமேயில்லை, மக்னீசியம் குறைபாடு. இரண்டே வழிகள்தான் இதற்கு உண்டு. ஒன்று, உண்ணும் உணவில் மக்னீசியம் அதிகம் இருக்க வேண்டும். அல்லது மக்னீசியம் சப்ளிமெண்டை டாக்டரிடம் கேட்டுச் சாப்பிட வேண்டும். சைவ பேலியோவில் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தால் தன்னால் சரியாகிவிடும். ஏனென்றால் பாதாம் ஒரு மக்னீசியக் கடல். அப்படியும் போதவில்லை என்றால் சப்ளிமெண்டைத் தவிர வேறு வழியில்லை. நமது பெண்களுக்கு சர்வ நிச்சயமாக இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கும். பரிசோதனையே இல்லாமல் இதனைச் சொல்ல முடியும். அதே போல் ஆண்கள் பெண்கள் பேதமே இல்லாமல் நகர்ப்புற வாசிகள் அனைவருக்கும் வைட்டமின் டி குறைபாடு இருக்கும். இதற்கும் பரிசோதனை அவசியமில்லை.
3b.jpg
பி12 குறைபாடு பலருக்கு நேரும். இதெல்லாமே நமது வாழ்வு முறை சார்ந்த சிக்கல்கள். ஒவ்வொரு வேளை உணவிலும் என்னென்ன நுண் ஊட்டச் சத்துகள் உள்ளன என்று கணக்குப் போட்டா உண்ண முடியும்? இதற்குத்தான் சப்ளிமெண்டுகள் உதவும். என்ன ஒன்றென்றால் எந்த வைட்டமின் சப்ளிமெண்டையும் டாக்டர் ஆலோசனை இல்லாமல் எடுக்கக்கூடாது. குறிப்பாக எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கும்போது நம் இஷ்டத்துக்குக் கண்டதை எடுப்பது பேஜாராகும். முறைப்படி ரத்தப் பரிசோதனை செய்யும்போது நமக்கு என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்பது தெரியவரும். உணவின்மூலம் எதையெதைச் சரிக்கட்ட முடியும், எது எதற்கு சப்ளிமெண்டுகள் அவசியத் தேவை என்பதை அப்போதுதான் அறிய முடியும்.

எந்த ஓர் எடைக்குறைப்பு டயட்டிலும் ஆரம்பக்கட்டத்தில் தலை முடி கொட்டுவது நிகழும். பயந்துவிடாதீர்கள். இதற்கும் பயோடின் சப்ளிமெண்ட் உண்டு. என்ன ஒன்று, இந்த சப்ளிமெண்ட் வகையறாக்களெல்லாம் வாடகைத்தாய் மாதிரிதான். உணவின் மூலம் கிட்டாத எந்த ஒரு நுண் ஊட்டச்சத்தும் மாத்திரை வடிவில் உள்ளே போகும்போது அத்தனை முழுமையான பலன் தரும் என்று சொல்ல முடியாது. நீங்கள் நிறைய ஆண்ட்டி பயாடிக்குகள் எடுப்பவராகவோ, மது அருந்துபவராகவோ இருந்தால் இந்த சப்ளிமெண்டுகளாலும் பிரயோஜனம் இருக்காது என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும். ஒரு சம்பவம் சொல்ல வேண்டும். நாலைந்து மாதங்களுக்கு முன் ‘பூனைக்கதை’ என்று ஒரு நாவல் எழுத ஆரம்பித்தேன்.

என் வழக்கமான பணிகளுக்கு அப்பால் தினசரி பத்து மணிநேர எழுத்து வேலை. நாலைந்து நாள் ஒழுங்காக எழுதினேன். அதன்பின் முடியாமல் போய்விட்டது. கடும் அசதி. உட்கார முடியாத உபாதை. பிரசவக்காரி போல ஒரு இடுப்பு வலி. இதைவிட என்னால் நம்ப முடியாத வியப்பு என்னவென்றால் பேலியோ தொடங்கிய நாளாக எனக்குப் பசியே கிடையாது. தினமும் ஒருவேளை உணவு மட்டும்தான். ஆனால், நாவல் வேலை தொடங்கியதில் இருந்து பிசாசு போலப் பசித்தது. முன்னர் ரெகுலர் கார்ப் உணவில் இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படி.

இது ஏதடா பேஜாராயிருக்கிறதே என்று கவலையாகிவிட்டது. வேலை கெடக்கூடாது; அதே சமயம் டயட்டில் இருந்தும் விலகக்கூடாது. என்ன செய்யலாம்? குடும்ப மருத்துவரிடம் போய்க் கலந்தாலோசித்து ஒரு கோர்ஸ் பி12 இஞ்செக்‌ஷன் எடுத்துக்கொண்டேன். ஒருவேளை உணவை இருவேளையாக்கினேன். வைட்டமின் டிக்கு சப்ளிமெண்ட் எடுத்தேன். தீர்ந்தது. உடம்பும் சொன்ன பேச்சைக் கேட்டது, நாவலையும் குறிப்பிட்ட காலத்தில் எழுதி முடித்தேன். என் தனிப்பட்ட அனுபவம், நுண் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் பெரும்பாலும் நமது பணிச்சுமை அதிகரிக்கும்போதுதான் தெரியவரும்!
 

(தொடரும்)

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

 

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

பா.ராகவன்

அன்புள்ள பாரா, வணக்கம். ‘குங்கும’த்தில் நீங்கள் எழுதி வரும் ‘இளைப்பது சுலபம்’ தொடரை முதல் வாரத்தில் இருந்து தவறாமல் படித்து வருகின்றேன். முதல் மூன்று நான்கு அத்தியாயங்களிலேயே இதன்பால் ஈர்க்கப்பட்டு, நானும் இதை கடைப்பிடிக்க முடிவு செய்து, ரத்தப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அட்வைஸ்படி பேலியோ டயட்டினைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன் (நான் சுத்த சைவம்). நீங்கள் சொல்லியிருந்தபடியே இரண்டு வாரங்களில் எனக்கு எடைக்குறைப்பு நிகழ ஆரம்பித்தது. அது வேகமாகவும் நடந்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. ஒன்றரை மாதத்தில் எனக்கு ஏழு கிலோ வரை எடை குறைந்துவிட்டது. ஆனால் ஒரு சிக்கல். பல்வேறு குடும்பக் காரணங்களால் என்னால் பேலியோவினைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியவில்லை.
4.jpg
எனவே, இறங்கிய ஏழு கிலோவுடன் அப்படியே விட்டுவிட்டு, பழையபடி அரிசிச் சாப்பாட்டுக்கு மாறிவிட்டேன். என் எடை ஏறியிருக்குமா என்று தெரியவில்லை. எடை போட்டுப் பார்க்க அச்சமாக இருக்கின்றது. நிச்சயம் ஏறித்தான் இருக்கும் அல்லவா? இப்போது மீண்டும் பேலியோவினைத் துவங்க ஆசையாக இருக்கிறது. செய்யலாம் அல்லவா? தங்கள் அன்புள்ள தட்சிணாமூர்த்தி சிவசங்கரன், திட்டக்குடி. (குங்குமம் வாசகர்) மேற்படி மின்னஞ்சல் எனக்குக் கடந்த வாரம் வந்தது. நண்பரின் அனுமதியுடன் அதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். மிக முக்கியமானதொரு காரணத்துக்காக. இந்தக் கடிதத்தில் உள்ளது போன்ற பிரச்னை பேலியோவுக்கு வருகிற பலபேருக்கு நேர்வதைக் காண்கிறேன்.

வீட்டாரின் ஒத்துழைப்பு இல்லாமல் பாதியில் நிறுத்துவது, அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்ய நேர்ந்து, அங்கே பேலியோ உணவு கிடைக்காமல் நிறுத்திவிடுவது, யாராவது கொழுப்பு சாப்பிட்டால் மரணம் சீக்கிரம் வரும் என்று பயமுறுத்தி நிறுத்த வைப்பது, நமக்கே போரடித்து பாதியில் நிறுத்துவது என்று பேலியோவில் இருந்து வெளியேற ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் அவசியம் இருக்கும் ஆனால், குறுகிய காலத்தில் இந்த உணவு முறை கொடுக்கிற நல்ல பலன்களை ருசி பார்த்ததன் விளைவாக, மீண்டும் இதைத் தொடர்ந்தால் என்ன என்கிற நப்பாசையும் கூடவே வரும். சுருக்கமாக இப்படித் தொகுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட அளவு எடை குறையும்வரை பேலியோ உணவு முறையைக் கடைப்பிடிப்பது.
4a.jpg
சரி போதும் என்று ஒரு பிரேக் விட்டு, இட்லி பூரி பரோட்டா லட்டு ஜாங்கிரி ஜிலேபிகளில் சங்கமமாகிவிடுவது. இறங்கிய எடை மீண்டும் ஏறிவிடும். அப்போது மீண்டும் கொஞ்ச நாளைக்கு பேலியோ. எடை குறைந்தபின் மீண்டும் வழக்கமான கார்ப் உணவுகள். இப்படி வாழ்நாள் முழுதும் காடாறு மாதம் நாடாறு மாதம் என்று மாறி மாறி வாழ்ந்துகொண்டால்தான் என்ன? இது என்ன தாலி கட்டிய பெண்டாட்டியா? இதற்கு மட்டுமே விசுவாசமாக இறுதி வரை இருந்துவிட்டுப் போக வேண்டுமென்பதற்கு? அநேகமாக தினமும் யாராவது என்னிடம் இப்படிக் கேட்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் சொல்லுகிற பதில் ஒன்றுதான். எதில் வேண்டுமானாலும் விளையாடுங்கள். உடல் ஆரோக்கியத்தோடு மட்டும் வேண்டாம்!

நாம் நன்றாக இருக்கிறவரை நமக்கும் சரி, நம்மைச் சார்ந்தவர்களுக்கும் சரி; எந்தப் பிரச்னையும் இல்லை. உடல் ஆரோக்கியமாக இருந்துவிடுகிற பட்சத்தில் என்ன ஆட்டம் வேண்டுமானாலும் ஆடிப் பார்க்கலாம். ஆனால், அந்த வண்டி எப்போது படுக்கும் என்று சொல்ல முடியாது. ஒரேயடியாகப் படுத்தால்கூடப் பிரச்னை குறைவு. மக்கர் செய்தபடி மூச்சிறைத்துத்தான் ஓடுவேன் என்று சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தால் தீர்ந்தது கதை. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பேலியோ என்பது டயட் அல்ல. இது ஓர் உணவு முறை. நம்முடைய அரிசிச் சாப்பாடு, வடக்கத்திக்காரர்களின் ரொட்டிச் சாப்பாடு எல்லாம் எவ்வாறு வேறு வேறு உணவு முறைகளாக இருக்கின்றனவோ, அது போல இதுவும் ஓர் உணவு முறை.

பேலியோவுக்கும் மற்ற உணவு முறைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்றவற்றில் கொழுப்பு இருக்காது. கார்போஹைடிரேட் மட்டும் இருக்கும். கொழுப்பு என்பது அவற்றில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். பேலியோவில் கொழுப்பு மட்டும்தான் உணவு. கார்போ ஹைடிரேட் என்னும் மாவுச் சத்து இதில் வேறு வழியில்லாமல் தற்செயலாக உள்ளே வருகிற வஸ்து மட்டுமே. சிக்கல், கொழுப்பும் கார்பும் பரம எதிரிகள் என்பது. இரண்டையும் ஒரே சமயத்தில் அதிக அளவு உட்கொள்வதோ, இரண்டையும் மாறி மாறி உட்கொள்வதோ வெகு விரைவில் உடல் ஆரோக்கியத்தைப் படுக்கையில் கொண்டு தள்ளிவிடும். ஒன்று கொழுப்புணவின்மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பக்கமே இருங்கள். அல்லது எப்போதும் உண்ணும் உணவையே தொடருங்கள்.
4b.jpg
அதில் ஆரோக்கியக் கேடு ஏதாவது உண்டானால் இருக்கவே இருக்கிறார் டாக்டர், இருக்கவே இருக்கிறது மருந்து மாத்திரைகள். நான் சொல்லுவது புரிகிறதா? இதில் கொஞ்ச நாள், அதில் கொஞ்ச நாள் என்பது பேலியோவுக்கு சுத்தமாக ஒத்து வராது. பேலியோ ஆரம்பித்து விட்டால் வாழ்நாள் முழுதும் பேலியோதான். ஆனால், பேலியோவில் இருக்கிறவர்களும் கொஞ்சம் அரிசிச் சாப்பாடு சேர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னீர்களே என்று கேட்பீர்கள். ஆம். மெயிண்டனன்ஸ் பேலியோவில் அரிசி உண்டுதான். உருளைக் கிழங்கு, பழங்கள்கூட உண்டு. ஆனால் எக்கட்டத்திலும் இதில் கோதுமை கிடையாது, மைதா, மக்காச்சோளம் உள்ளிட்ட வேறெந்த தானியமும் கிடையாது. எண்ணெய் வகை (செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் தவிர) அறவே கிடையாது. சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, தேன் உள்ளிட்ட எந்தவிதமான இனிப்பும் கிடையாது.

எடைக்குறைப்பு பேலியோவுக்குள் நாற்பது கிராம் கார்போஹைடிரேட் அனுமதிக்கப்படுகிறது என்றால், குறைந்த எடை ஏறாமலும் மேலும் இறங்காமலும் ஒரே சீராக ஓரிடத்தில் நிற்பதற்கு மேலும் பத்துப் பதினைந்து கிராம் கார்ப் எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான் இதன் பொருளே தவிர, பேலியோ - கார்ப் சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று இதைப் புரிந்துகொள்ளுவது தகாது. படு பயங்கரமான எடை ஏற்றம், சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு போன்ற சிக்கல்களைத் தவிர்த்துவிட்டு வாழ விரும்பினால் உணவில் கார்போஹைடிரேட்டின் அளவைக் குறைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை. அதற்கு பதிலாகக் கொழுப்பை உணவாக்குவது பேலியோ.

கொழுப்பை முதன்மைச் சத்தாக்கி, மாவுப் பொருள்களைக் கணிசமாகக் குறைத்து, சமயத்தில் அறவே இல்லாமலாக்கிவிடுவதன் மூலம் நோய்க் காரணியின் வேரைப் பிடுங்கி எடுத்து விடுகிறது பேலியோ. அந்த விதத்தில் எடைக் குறைப்பு என்பதே பேலியோவில் ஒரு பக்க விளைவுதான்!இந்த அடிப்படை புரிந்துவிட்டால், கொஞ்ச நாள் பேலியோ, கொஞ்ச நாள் சாதா உணவு என்று மாறி மாறிச் சாப்பிட்டுப் பார்க்க ஆசை வராது. சாப்பாடு கூட ஓகே. இன்னொரு விஷயம்தான் ரொம்பப் படுத்துகிறது என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்லத் தயங்கி, மென்று விழுங்கி அரைகுறையாகக் கொட்டிக் கிளறி, புலம்பிவிட்டு ஓடிவிடுகிறவர்கள் அநேகம் பேர்.
4c.jpg
அதுவும் நான் புழங்கும் கலைத்துறையில் பேலியோவின் அவசியம் உணர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் இருக்கிறார்கள். அதே சமயம் நமது வாழ்க்கை முறைக்கு இது ஒத்துவருமா என்கிற சந்தேகம் அவர்கள் அத்தனை பேருக்குமே உண்டு. அவர்கள் பிரச்னை என்று கருதுவது, குடி!‘யோவ், சோறில்லாமகூட இருந்துடுவேன். ஆனா, சரக்கடிக்காம முடியாது. கொழுப்பு சாப்ட்டு சரக்கடிச்சா என்னாகும்? உடனே செத்துருவனா? அத மட்டும் இல்லைன்னு சொல்லு, நாளைலேருந்து நான் பேலியோ!’ என்றார் ஒளிப்பதிவாளரான என் நண்பர் ஒருவர்.ஒரு வரியில் சொல்லிவிடக் கூடிய பதிலா அது? அடுத்த வாரம் விரிவாகச் சொல்லுகிறேன்.
 

(தொடரும்)

http://kungumam.co.in

Link to comment
Share on other sites

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 

பா.ராகவன் - 34

சரக்கு. இந்தத் தொடரின் ஆக முக்கியமான அத்தியாயம் இதுவாகத்தான் இருக்கும் என்று சென்ற வார அத்தியாயம் வரை விடாமல் வாசித்துவந்த என் நண்பர் ஒருவர் சொன்னார். நான் அப்படிக் கருதவில்லை. உடல் நலனில் அக்கறை என்ற ஒன்று உருவாகிவிட்டால் யாராக இருந்தாலும் மதுவில் இருந்து தள்ளி நிற்பார்கள். அதற்கு பேலியோவுக்குத்தான் வர வேண்டும் என்பதில்லை. ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். தோராயமாகக் கணக்குப் போட்டால்கூட மதுவின் வயது குறைந்தது ஐயாயிரம் ஆண்டுகள். மனிதன் சமைத்துச் சாப்பிட ஆரம்பிக்கும்போதே குடித்து ருசிக்கவும் ஆரம்பித்தவன். நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் நமது மண்ணில் இருந்த சுரா மற்றும் சோம பானத்தில் தொடங்கினால்,
2.jpg
கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு அது பீராகவும் விஸ்கியாகவும் ரம்மாகவும் மற்றதாகவும் சாதி பிரிந்து ஆளத் தொடங்கிய கதை மிகப் பெரிது. அப்படி இருக்கும்போது, இந்நேரம் அது நமது உடலுக்குப் பழகியிருக்க வேண்டுமல்லவா? சிக்கல் மிக்க திரவமாக இன்னமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கக்கூடாதல்லவா? ஏன் அப்படி ஆகவில்லை? தவிரவும், உலகின் எந்த ஓர் எடைக்குறைப்பு உணவு முறையிலும் மது இல்லை என்பதைக் கவனியுங்கள். ‘சும்மா எப்பவாவது கொஞ்சம் சாப்ட்டுக்கலாம்’ என்பதெல்லாம் சர்வதேச ஃப்ராடு சமூகத் திரிப்புகள்.

உயிருக்கு உலை என்று தெரிந்தேதான் மனிதன் ஆதி முதல் குடித்தும் வருகிறான். பேலியோ போன்ற உணவு முறை பயில்பவர்களுக்குக் குடிப்பழக்கமும் இருந்தால் இந்த உலை சீக்கிரம் வைக்கப்படும் அபாயம் இருப்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதுமானது. இது ஏன் இப்படி என்று சொல்லுகிறேன். பேலியோ என்பது குறைந்த, மிகக் குறைந்த கார்போஹைடிரேட் மற்றும் அதிக, மிக அதிகக் கொழுப்பையும், அளவான புரதச் சத்தையும் (உங்கள் எடை எவ்வளவோ அவ்வளவு கிராம் ப்ரோட்டின் - ஒவ்வொரு நாள் உணவிலும்) சேர்த்து எடுக்கச் சொல்லுகிற ஒரு டயட். இந்த உணவு முறைக்கு உடல் இயந்திரம் பழகும்போது ரத்த சர்க்கரை அளவு ஒரு கட்டுக்குள் வருகிறது.

ஓர் உதாரணம் சொன்னால் புரியும் என்று நினைக்கிறேன். நான் பேலியோவுக்கு வருவதற்கு முன் எனது ஃபாஸ்டிங் ரத்த சர்க்கரை அளவு சுமார் 115 - 125 இருக்கும். சாப்பிட்ட பின் எடுத்துப் பார்த்தால் 150 - 160 இருக்கும். ரொம்ப பயப்படும் விதமான அளவு இல்லைதான். ஆனால், இது சரியான அளவும் இல்லை. இது எந்நாளும் எனக்குக் குறைந்ததில்லை. ஆனால், பேலியோ ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குப் பின் ஒரு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது எனக்கு மிகவும் வியப்பாகிப் போனது. உண்ணாதபோது ரத்த சர்க்கரை அளவு 80. உண்டு முடித்து இரண்டு மணி நேரங்களுக்குப் பின் 85. வியப்பு மட்டுமல்ல. இது எனக்கு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது.

எனவே போதிய இடைவெளியில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ரத்த சர்க்கரை அளவை மட்டும் எடுத்துப் பார்த்தேன். ரேண்டமாகவும் ஒன்றிரண்டு முறை செய்து பார்த்தபோதும் இந்த 80 - 85 எல்லையைத் தாண்டவேயில்லை. புரிகிறதா? கார்போஹைடிரேட்டைக் குறைத்து, கொழுப்பை அதிகரித்து உண்ணும்போது ரத்த சர்க்கரை கட்டுக்குள் வந்துவிடுகிறது. ரத்த சர்க்கரை எல்லை மீறாதபோது உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்பு சேர்வதில்லை; நீரிழிவுடன் கூட உடல் பருமன் பிரச்னையும் படிப்படியாகத் தீரத் தொடங்குகிறது. இதுவே குடிப்பவர் அல்லது குடிகாரர் அல்லது குடி நோயாளி என்றால் அவரது ஈரலுக்கு குடியை ப்ராசஸ் செய்வது தவிர வேறு வேலை பார்க்கவே நேரம் இருக்காது.

ஏனென்றால் ஈரலின் சுபாவம் அப்படி. ஒரு மணி நேரத்துக்கு, மிஞ்சிப் போனால் பதினைந்து மில்லி கிராம் ஆல்கஹாலை மட்டுமே ஈரலால் ப்ராசஸ் செய்ய முடியும். என்றால் ஒரு குவார்ட்டர் அடித்து முடித்தவரின் ஈரல், அதை சுத்திகரித்துவிட்டு அடுத்த வேலைக்கு வர எவ்வளவு நேரமாகும் என்று யோசித்துப் பாருங்கள். இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் என்னதான் நல்ல கொழுப்பு சாப்பிட்டாலும், வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த காய்கறிகளை, நட்ஸை உண்டாலும் பிரயோசனமில்லை. ஈரல் அதையெல்லாம் திரும்பிக்கூடப் பார்க்காது. உண்ட அனைத்தும் தண்டத்துக்கு வெளியேதான் போகும்.

இது தவிர இலவச இணைப்பாக ஈரலில் கொழுப்பு நிறைய சேர ஆரம்பித்து புதிய சிக்கலுக்கு வழி வகுக்கும். ஃபேட்டி லிவர் என்று இதைச் சொல்லுவார்கள். இது முற்றிப் போனால் (சிரோசிஸ்) மரணம் நிச்சயம் என்பது மருத்துவ முடிவு. ரத்த சர்க்கரைப் பிரச்னை மட்டுமில்லாமல், மதுவானது உங்கள் ரத்த அழுத்தத்தையும் தாறுமாறாக்கக் கூடியது. இது இதயத்துக்கு நல்லதல்ல. இதயத்தின் அளவேகூட வழக்கமான அளவைக் காட்டிலும் இதனால் விரிவடையும் என்பார்கள். ஒரு பக்கம் கொழுப்பை அதிக அளவு உட்கொண்டு இன்னொரு பக்கம் இதயத்தைக் குறி வைத்துத் தாக்குவதையே இலக்காக வைத்திருக்கும் மதுவையும் சேர்த்து அருந்தினால் என்னாகும்?
2a.jpg
என்னுடைய பல நண்பர்கள் இந்தக் காரணத்தாலேயே அவசியம் இருந்தும் பேலியோவுக்கு வர யோசிக்கிறார்கள். ஒரு நாளைக்கு ரெண்டு பெக் மட்டும்கூட சாப்பிடக் கூடாதா? வாரம் ஒரு முறை மட்டும் குடித்தால் தப்பா? பார்ட்டிகளில் அதைத் தவிர்க்க முடியாதே என்று டிசைன் டிசைனாக வருத்தப்படுவார்கள் கூடாது என்பது மட்டும்தான் பதில். உடலோடு விளையாடுவது அபாயகரமானது. அதுவும் நடுத்தர வயதைக் கடந்தவர்கள் இம்மாதிரி சேட்டைகள் பக்கம் திரும்பாதிருப்பதே நல்லது. நீங்கள் வழக்கமான அரிசிச் சாப்பாடு, பரோட்டா, முட்டை போண்டா, பாதாம் அல்வா, மசால் தோசை சாப்பிட்டு, குடிக்கவும் செய்து உடல் நலன் குன்றி மருத்துவமனைக்குப் போய்ப் படுத்தால் குடிதான் பிரச்னை என்று உலகம் புரிந்துகொள்ளும்.

இதுவே, பேலியோவில் இருந்து குடித்து உடம்புக்கு முடியாமல் போய் விழுந்தால் அநியாயத்துக்குக் கொழுப்பின்மீது பழி போடுவார்கள். பேலியோவில் உயிரை வாங்கும் கெட்ட கொழுப்பு என்பது அறவே கிடையாது என்பதையெல்லாம் சமூகம் சிந்திக்காது. ஒன்று சொல்லுவேன். குடிக்கத் தோன்றாவிட்டால் நான் ஏன் குடிக்கப் போகிறேன் என்று கேட்பவராக இருந்தால் தைரியமாக பேலியோவுக்கு வரலாம்! ஏனென்றால் உள்ளே போகும் சரக்கு எதுவானாலும், அதைத் திரும்பத் திரும்பக் கேட்கும் ‘க்ரேவிங்’ என்பது கார்போஹைடிரேட்டில் மட்டும்தான் உண்டு. கொழுப்புணவுக்கு மாறியபின் இந்த க்ரேவிங் அடியோடு இருக்காது. எதைக் கண்டாலும் சாப்பிட வேண்டும்போல் தோன்றவே தோன்றாது.

பசித்தால் மட்டுமே உண்ணத் தோன்றும். இதன் அடிப்படையில் குடிப்பழக்கம் மறப்பதற்கு பேலியோ உதவும். அதுவும் நம் ஆட்களைச் சொல்லுங்கள்! ஆல்கஹால் செய்கிற உபத்திரவம் பத்தாது என்று சைட் டிஷ்ஷாக எத்தனை விதமான பதார்த்தங்களை உள்ளே தள்ளுவார்கள்! என் நண்பர் ஒருவர் ஒவ்வொரு வாய் மதுவுக்கும் முந்திரி பக்கோடாவைத் தக்காளிச் சட்னியில் தோய்த்துத் தோய்த்துத் துணையாக உள்ளே அனுப்புவார். சேட்டுக்கடையில் இனிப்பு பூந்தி வாங்கி வந்து வைத்துக்கொண்டு, அதில் கைமுறுக்கை நொறுக்கிப் போட்டு அள்ளி அள்ளி விழுங்கும் பெருங்குடி மகன் ஒருவரையும் அறிவேன்.

எல்லா கெட்டதுகளையும் ஒன்றாகச் சேர்த்து ருசிக்கும்போது நமது வயதைச் சிறிது சிறிதாக நாம் குறைத்துக்கொள்கிறோம். அப்புறம், சிறிய வயதில் போய்ச் சேர்ந்தான் என்ற பட்டத்தை வாங்கிக்கொள்கிறோம். எனவே, பேலியோவில் மது கண்டிப்பாக இல்லை. தவிரவும் ஆல்கஹால் என்பது எந்த விதத்திலும் கொழுப்பு டயட்டோடு ஒட்டவே ஒட்டாது. இதைப் பரிபூரணமாக அறிந்து, உணர்ந்துகொண்டவர்கள் மட்டுமே இந்த டயட்டைக் கடைப்பிடிக்கலாம்! முடியாது; நான் குடிக்கத்தான் செய்வேன் என்பீர்களானால் பேலியோ உங்களுக்கு வேண்டாம். ஓடிவிடுங்கள்.
 

(அடுத்த வாரம் நிறைவுறும்)

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

 

இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

 
 

பா.ராகவன் - 35

‘தெனாலி’ படத்தில் கமல் ஒரு பத்துப் பதினைந்து பயங்களைப் பட்டியலிடுவார். அது அவருக்கு மட்டுமான பிரத்தியேக பயங்கள். ஒரு மாறுதலுக்கு, உலக மக்கள் அத்தனை பேருக்குமான பொதுவான பயங்கள் என்று பட்டியலிட்டுப் பார்த்தால், கொழுப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வந்துவிடும் என்பது அதில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடும். இதில் மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் பல மருத்துவர்களே இதைச் சொல்லுவார்கள். ‘இட்லி சாப்பிடுங்கள், தோசை சாப்பிடுங்கள், அளவோடு பூரி சப்பாத்தி சாப்பிடுங்கள், ஒரு வடை சாப்பிட்டால் தப்பில்லை’
2.jpg
என்றெல்லாம் சொல்லும் மருத்துவர்கள் யாரும் ‘பாதாம் சாப்பிடுங்கள், வால்நட் சாப்பிடுங்கள், வெண்ணெய் சாப்பிடுங்கள்’ என்று சொல்லுவதில்லை. டாக்டர்களுக்குத் தெரியாதா, இந்த நல்ல கொழுப்பு உணவுகள் எதுவும் இதயத்தை பாதிக்காது என்பது? எச்டிஎல் அறுபது அறுபத்தி ஐந்துக்குப் போனால் ஆயுசு அபிவிருத்திக்கு அது ஆரம்பப்புள்ளி என்பதை அவர்கள் அறியமாட்டார்களா? டிரை கிளிசிரைட் என்னும் கெட்ட கொலஸ்டிராலும் சிறிய எல்டிஎல் அணுக்களும் மட்டும்தான் இதய நோய்களுக்கான காரணி என்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியும். மேற்சொன்ன பாதாம் உள்ளிட்ட நட்ஸிலோ வெண்ணெய், பனீர் போன்ற பால் பொருள்களிலோ இந்த கெட்ட சங்காத்தமே கிடையாதே.

இருந்தாலும் மருத்துவர்கள் ஏன் இந்த உணவு முறையைப் பரிந்துரைப்பதில்லை என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான்! நாம் இதை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.  ஒரு பக்கம் பாதாம், பனீர், வெண்ணெய் என்று வளைத்துக் கட்டிவிட்டு மறுபக்கம் பரோட்டா, பானிபூரி கசுமாலங்களையும் கபளீகரம் செய்வோம். ஒருவேளை வழக்கமான சாப்பாடு, மறுவேளை பேலியோ என்று நமக்கு நாமே ஒரு நூதன டயட் அமைத்துக்கொண்டுவிடுவோம். இப்படிக் கலந்து அடித்தால் கண்டிப்பாக சிக்கல் வரும். எதற்கு ரிஸ்க் என்பதால்தான் மருத்துவர்கள் குறை மாவு நிறை கொழுப்பு டயட்டை யாருக்கும் பரிந்துரைப்பதில்லை.
2a.jpg
கொலஸ்டிரால் எண்ணிக்கை அதிகம் என்று உங்கள் ரிப்போர்ட் காட்டினால் இதனாலேயேதான் கண்ணை மூடிக்கொண்டு கொழுப்பு ஐட்டங்களைச் சாப்பிடாதீர்கள் என்கிறார்கள். உண்மையில், உங்கள் கொலஸ்டிரால் பிரச்னை தீரவேண்டுமானால் பேலியோதான் தலைசிறந்த வழி! நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்டதை அழித்தொழிக்கிற சூத்திரம் இது. இன்னொன்றையும் நீங்கள் டாக்டர்களிடம் கவனித்திருக்கலாம். யாராவது உடம்பு இளைக்க வேண்டும் என்று கேட்டால் காய்கறி நிறைய சாப்பிட்டு, சாப்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லிவிடுவார்கள். சர்க்கரை வியாதியஸ்தர்கள் என்றாலும் இதேதான். சாப்பிடுகிற அனைத்தையும் அளவு குறைக்கச் சொல்வதோடு நிறுத்திக்கொள்வார்கள்.

உயிரோடு விளையாடக்கூடாதல்லவா? அந்த பயம்தான். தவிரவும் மருத்துவத் துறை என்பது மருந்து மாத்திரை பிசினசுடன் தொடர்புடையது. எல்லோரும் பேலியோவுக்கு வந்து சர்க்கரை வியாதியே இல்லாது போய்விட்டால் மருந்துக் கம்பெனிகள் என்னாகும்? அதை நம்பிய டாக்டர் பிழைப்புதான் என்னாகும்? ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். சாப்பிடுகிற உணவில் (ஒருநாளில்) முப்பது முதல் நாற்பது கிராம் அளவுக்குள் கார்போஹைடிரேட்டை சுருக்கிவிட முடியுமானால் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு சர்க்கரை நோய் வராது. ஏற்கெனவே இருந்தாலும் காணாமல் போய்விடும். மருந்தில்லாமல் சௌக்கியமாக வாழலாம்.

ஃபேஸ்புக்கில் இயங்கி வரும் ‘ஆரோக்கியம் நல்வாழ்வு’ என்னும் பேலியோ குழுமம் இதை ஆயிரக்கணக்கான சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைத்து வெற்றியும் கண்டிருக்கிறது. ராஜா ஏகாம்பரம், ஹரிஹரன், அருண்குமார், தயானந்த் சக்ரவர்த்தி, ஃபரூக் அப்துல்லா, பிரகாஷ், சுமதி ராஜா, தரங்கிணி, ப்ரூனோ, கார்த்திக் ராஜா என்று இந்தக் குழுமத்துக்குள் இயங்கும் தொழில்முறை மருத்துவர்களும் சரி; நியாண்டர் செல்வன், சிவராம் ஜெகதீசன், சங்கர்ஜி போன்ற தன்னார்வலர்களும் சரி;  பேலியோவால் தாங்கள் பலனடைந்ததைக் கண்டபின்பே மக்களுக்கு இதைப் பரிந்துரை செய்ய ஆரம்பித்தார்கள்.

உலகில் எத்தனையோ எடைக்குறைப்பு டயட்கள் உள்ளன. பேலியோவுக்கும் அவற்றுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுதான். பேலியோ என்பது எடைக்குறைப்புக்கானது மட்டுமல்ல. ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்வுக்கு அஸ்திவாரம் இடக்கூடிய உணவு முறை இது. சர்க்கரை நோய் இல்லாமல், ரத்த அழுத்த நோய் இல்லாமல், கொலஸ்டிரால் பிரச்னை இல்லாமல், இதர பல இம்சைகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். பொள்ளாச்சியில் வசிக்கும் டாக்டர் சுமதி ராஜா இந்த உணவு முறையைப் பயன்படுத்தி, உடல் பருமனாலும் பிசிஓடி பிரச்னையாலும் பாதிக்கப்பட்டு, நீண்ட நாள் குழந்தைப் பேறில்லாமல் இருக்கும் பெண்களுக்கு, குழந்தை பிறக்கவே வழி செய்திருக்கிறார்.
2b.jpg
பேலியோவின் சாத்தியங்கள் இன்னமும்கூட முழுமையாகக் கண்டறியப்படவில்லை என்றபோதிலும் இந்தளவு பலன் தருகிற இன்னொரு உணவு முறை வேறு கிடையாது என்பேன். கச்சாமுச்சாவென்று கண்டதைத் தின்று உடல் பருத்து, ஆரம்பக்கட்ட சர்க்கரை வியாதியும், உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும் சேர்ந்து படாதபாடு பட்டுக்கொண்டிருந்தேன். ஒரு தீர்மானத்தோடு பேலியோ பழக ஆரம்பித்து கார்ப் உணவுகளை அறவே தவிர்த்து, வெறும் கொழுப்பாகச் சாப்பிட ஆரம்பித்ததன் விளைவு, இன்றைக்கு வியாதிகளிடம் இருந்து விடுதலை கண்டு சௌக்கியமாக இருக்கிறேன்!

ஒரு நடமாடும் பூதமாக இருந்தவன் நாளை நயன்தாராவுடன் போட்டியிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு இளைக்கவும் முடிந்திருக்கிறது. ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நான் முட்டையைத் தொட்டுக்கூடப் பார்த்திராத முழுச் சைவ சாப்பாட்டாளன். சைவ பேலியோவில் இளைப்பது கொஞ்சம் மெதுவாகத்தான் நடக்கும். மட்டுமல்லாமல், அதிகபட்சம் இதில் முப்பது கிலோ வரைதான் எளிதாக உடல் எடை குறைக்க முடியும். அதற்குமேலும் இளைக்க வேண்டுமானால், நடை, ஓட்டம், நீச்சல், உடற்பயிற்சி என்று கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், முப்பது வரை குறைப்பதற்குப் பெரிய பிரயத்தனங்கள் வேண்டாம்.

அது தானாகவே நிகழ்ந்துவிடும். இதுவே அசைவம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு நூறு கிலோ வரையிலும்கூட எடைக் குறைப்பு சாத்தியம் என்பேன். அப்படிச் செய்து சாதித்தவர்கள் இருக்கிறார்கள். நூற்றைம்பது கிலோக்காரர்கள், நூற்றுத் தொண்ணூறு கிலோக்காரர்கள் எத்தனையோ பேர் இன்று எழுபதிலும் எண்பதிலும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். விஷயம் எளிது. காய்கறிகளில் உள்ள குறைந்தபட்ச கார்போஹைடிரேட்கூட முட்டை மற்றும் மாமிசங்களில் கிடையாது. கார்பைக் குறைத்தால் எடை குறைந்துவிடும். அவ்வளவுதான். ஒரு முறையான, முழுமையான ரத்தப் பரிசோதனை.

பேலியோவும் அறிந்த டாக்டர்களிடம் அதைக் காட்டி உங்கள் உடலுக்கு, அதன் தன்மைக்கு, உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருக்குமானால் அதற்கேற்ற தேவைகள் - மாறுதல்களுடன் கூடிய உணவுப் பரிந்துரையைப் பெற்று ஆரம்பித்தால் போதுமானது. சும்மா இந்தத் தொடரைப் படித்ததே போதும் என்று முடிவு செய்து நாளையே பாதாம், பனீர், வெண்ணெய் என்று இறங்கிவிடக் கூடாது என்பதால் இதைச் சொல்லுகிறேன்.

நானெல்லாம் எக்காலத்திலும் இளைத்து ஸ்லிம் ஆக வாய்ப்பே இல்லை என்று என் நண்பர்கள் சொல்லுவார்கள். நானேகூட அப்படித்தான் நினைத்திருந்தேன்.
ஆனால், முடிந்தது. ஒரு கடைந்தெடுத்த முழுச் சோம்பேறியும், வக்கணையிலும் ருசியிலும் ஒரு இம்மியும் குறையாமல் மட்டுமே உண்ண விரும்புகிறவனும் எதைச் சாப்பிட்டாலும் ஏராளமாக மட்டுமே சாப்பிடுகிறவனுமாக இருந்த என்னாலேயே இது முடிந்திருக்கிறது என்றால் உங்களாலா முடியாது?
கண்டிப்பாக முடியும். வாழ்த்துகள்.

சில தகவல்கள்

* ஃபேஸ்புக்கில் இயங்கும் பேலியோ குழும முகவரி:
http://www.facebook.com/group/tamilhealth
* பேலியோவுக்கு வரும்முன் அவசியம் படித்து அறியவேண்டிய புத்தகங்கள்:
1.பேலியோ டயட் - நியாண்டர் செல்வன்
2.உன்னை வெல்வேன் நீரிழிவே - சிவராம் ஜகதீசன்
3.பேலியோ சந்தேக நிவாரணி - சங்கர்ஜி
4.பேலியோ - சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை - சவடன் பாலசுந்தரன்
5.வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள் - பா.ராகவன்
6.பேலியோ வழி ஆரோக்கியம் 2.0 - டாக்டர் ஃபரூக் அப்துல்லா
ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான பேலியோ தொடர்பான புத்தகங்கள் உள்ளன. அமேசானில் தேடுங்கள்.
 

(முற்றும்)

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.