Jump to content

`அவரது செயலை சகிக்க முடியாமல் தயக்கத்தோடு அம்மாவிடம் சொன்னேன்'


Recommended Posts

`அவரது செயலை சகிக்க முடியாமல் தயக்கத்தோடு அம்மாவிடம் சொன்னேன்'

 
#Badtouch: 'அனைவருக்கும் பிடித்தமான சித்தப்பாவை எனக்கு பிடிக்காது...'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'சித்தப்பா தினமும் வீட்டுக்கு வருவார். அனைவரிடமும் கலகலப்பாக சிரித்துப் பேசுவார், தின்பண்டங்கள் வாங்கிவருவார். அவரை எல்லோருக்கும் பிடித்தாலும் எனக்கு அவரை ஒருதுளி கூட பிடிக்காது.'

'சித்தப்பா வீட்டுக்கு வந்ததும் அவரது மடியில் என்னை உட்கார வைத்து தொட்டுத்தொட்டு பேசுவார். மீசையால் என் முகத்தில் உரசுவார். அவர் மடியில் இருந்து எழுந்து ஓடிவிடலாம் என்று தவிப்பேன். அவரது கன்னத்தில் பளார் பளார் என்று அறைய வேண்டும், நகங்களால் பிறாண்ட வேண்டும் என்று உத்வேகம் உந்தும்.'

இதைச் சொல்லும் 23 வயது அனாமிகாவின் முகத்தில் வேதனையும், கண்ணில் சீற்றமும் பொங்குகிறது. ஏழு அல்லது எட்டு வயது சிறுமியாக இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் சுவடுகள் இப்போதும் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றன.

'குற்றவாளி அருகிலேயே இருப்பார்'

குடும்பத்திற்கு நெருங்கியவர்களாலேயே பெரும்பாலானோர், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவதே இந்தக் கொடுமையின் உச்சகட்டம்.

எதிரி, உறவினர், நண்பர் என்ற முகமூடியில் நம்மைச் சுற்றியே இருப்பதால், குழந்தைகள் சுலபமாக பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர்.

குழந்தைக்கு இதைப் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாவிட்டாலும் கூட, எப்போதாவது அதைப் பற்றிச் சொன்னால் குடும்பத்தினர் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

உருவகப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉருவகப்படம்

தீர்வு காண்பது அடுத்த கட்டம், அதை விசாரிப்பது கூட இல்லை என்பது வேதனையளிக்கிறது.

உண்மையிலேயே இதுபோன்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி புகாரளிப்பதோ, விசாரிப்பதோ அவ்வளவு கடினமானதா? நெருக்கமான உறவினரே இதுபோன்ற பலாத்காரச் செயல்களில் ஈடுபடும்போது அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் மன உளைச்சல் எப்படிப்பட்டது? அது அந்தப் பெண்ணின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன? இதுபோன்ற நிலையில் என்ன செய்வது? யாரிடம் உதவி கேட்பது?

இதுபோன்ற சில பல முக்கியமான கேள்விகளை முன்வைத்து தீர்வுக்கான தேடலுக்காக பல கோணங்களில் அலசி ஆராயும் பிபிசியின் தொடர் இது.

இந்தத் தொடரில் பெண்களும், இளம் சிறுமிகளும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், பெண்களுக்கான சட்ட உரிமைகள் மற்றும் கிடைக்கக்கூடிய உதவிகள் குறித்தும் இந்தத் தொடரில் ஆராயலாம்.

இந்தத் தொடரின் முதல் பகுதியில் அனாமிகாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சீற்றத்தையும், மனசெல்லாம் பரவிக்கிடக்கும் வலியையும் பதிவு செய்கிறோம்.

உதவி

அனாமிகா சொல்கிறார், "அவரது செயலை சகிக்க முடியாமல் போனபோது, தயக்கத்துடன் அம்மாவிடம் இதைப் பற்றிச் சொன்னேன். கெளரவ் சித்தப்பாவின் மீசை என் முகத்தில் படுவது எனக்குப் பிடிக்கவில்லை, எப்படியோ இருக்கிறது என்று சொன்னேன். வேறு எதாவது செய்தாரா என்று அம்மா கேட்டார், நான் இல்லை என்றே தலையசைத்தேன்".

#Badtouch: 'அனைவருக்கும் பிடித்தமான சித்தப்பாவை எனக்கு பிடிக்காது...'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அவர் மேலும், "அதன்பிறகு கெளரவ் சித்தாப்பாவை என்னிடம் நெருங்கவிடாமல் அம்மா பார்த்துக்கொண்டார். அவரை முன்னறையிலேயே உட்கார வைத்து பேசத் தொடங்கிவிடுவார் அம்மா. என்னைப் பற்றி சித்தப்பா விசாரித்தால், நான் படித்துக் கொண்டிருக்கிறேன் அல்லது விளையாடப் போயிருக்கிறேன் என்று சொல்லி அவரை நான் சந்திப்பதை அம்மா தவிர்த்துவிடுவார்" என்றார்.

அம்மாவுக்கு கூட அந்த விஷயம் மறந்து போயிருக்கும். ஆனால், பாலியல் துன்புறுத்தல் அல்லது அது தொடர்பான எதாவது வார்த்தைகளை கேட்கும்போது, மனதில் அழுந்திக்கிடக்கும் பழைய நினைவுகள் பீறிட்டு எழும்.

இந்த ஆதங்கமும், கோபமும் அனாமிகா என்ற ஒரு பெண்ணுடையது மட்டுமல்ல… எண்ணிக்கைக்குள் அடக்க முடியாத அளவிலான குழந்தைகள், சிறுமிகள், பதின்ம வயது பெண்கள், என எல்லா வயதை சேர்ந்தவர்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது.

உற்றார்-உறவினர்கள், சொந்த-பந்தங்கள், அண்டை-அசலார் என குடும்பத்திற்கு நெருக்கமானவர்களே பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்துவதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அனாமிகாவை அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். ஏன் தெரியுமா? அவர் சொன்னதைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வை ஏற்படுத்திக் கொடுத்தார் தாய். ஆனால், இதுபோன்ற உதவியும், ஆதரவும் மிகச்சிலருக்கே கிடைக்கிறது என்பது வேதனை.

#Badtouch: 'அனைவருக்கும் பிடித்தமான சித்தப்பாவை எனக்கு பிடிக்காது...'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

புள்ளிவிவரங்கள்

தேசிய குற்ற ஆவண பணிப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி, பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ள 3,27,394 குற்ற வழக்குகளில் பாலியல் வல்லுறவு வழக்குகள் 34,651 என்றால், 33,098 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர், குற்றவாளியை நன்கு அறிந்தவர் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல்.

பெண்களின் நலனுக்காக பணிபுரியும் 'பிரேக்த்ரூ' அமைப்பின் உயரதிகாரி பாலின் கோமேஜ், ''பேத்தியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தாத்தா, மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன், மகளை காம இச்சையுடன் அணுகிய தந்தை, சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரன்'' என கேட்பதற்கே அதிர்ச்சியளிக்கும், ஆனால் அசலான சம்பவங்களை பார்த்திருக்கிறோம் என்கிறார்.

இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி செயல்படவேண்டும்?

இதற்கும் பதிலளிக்கிறார் பாலின். ''நீங்கள் சொல்வதை குடும்பத்தினர் அலட்சியப்படுத்தினால், அவர்கள் நம்பும் வரை அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருங்கள்.''

''பலரிடம் சொல்லுங்கள். பள்ளியிலும் கல்லூரியிலும் சொல்லுங்கள். காவல் துறை அல்லது நீதிபதியிடம் சென்று உதவி கேளுங்கள். உதவி எண்களை தொடர்பு கொள்ளுங்கள். எதாவது செய்யுங்கள், ஆனால் மனதிற்குள் வைத்து புழுங்காதீர்கள்"

மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் மனநல மருத்துவர் டாக்டர் ஷ்ரவஸ்தி வெங்கடேஷ் சொல்கிறார்: "பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு கோபமும் குற்ற உணர்வும் ஏற்படுவதோடு, ஏமாற்றப்பட்டதாகவும் உணர்கிறார்கள்."

"பல சமயங்களில் பாலியல் துன்புறுத்தல் நடந்த பல ஆண்டுகளுக்கு பிறகும் அதிலிருந்து முழுமையாக வெளிவரமுடியாமல் தவிக்கும் பெண்களையும் பார்த்திருக்கிறேன். அது போன்ற சமயங்களில் மனநல ஆலோசகர்களிடம் பேசுவது உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது."

பாலின் கோமேஜ் சொல்கிறார், ''பல நேரங்களில் குற்றத்திற்கு எதிராக குரல் எழுப்ப விரும்பினாலும், சட்டம் மற்றும் பிற உதவிகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் மனதை மூடி மெளனியாக இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது''.

 

http://www.bbc.com/tamil/india-40664992

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் சிலர் இப்படிச் செய்யினம் என்று வைச்சுக் கொள்வோம்..

சில பெண்கள் ஆண் பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்வதை குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை...

அந்தப் பெண்ணின் தலைமுடி என்னில் படுகிறது.. அது எனக்குப் பிடிக்கவில்லை..

அந்தப் பெண்ணின் சேலை தலைப்பு என்னில் முட்டுகிறது அது எனக்குப் பிடிக்கவில்லை...

அந்தப் பெண்ணின் மாராப்பு அவிழ்ந்து விழுகிறது அது எனக்குப் பிடிக்கவில்லை..

அந்தப் பெண்ணின் பிஸ்டம் என்னை இடிக்கிறது அது எனக்குப் பிடிக்கவில்லை..

அந்த பெண் என்னை மடியில் இருத்தி வைச்சு.. கொஞ்சுகிறாள்.. தடவுகிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை..

அந்தப் பெண் எனக்கு முன்னாள்.. உடை களைகிறாள்.. அணிகிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை..

அந்தப் பெண் எனக்கு முன்னாள் குட்டைப்பாவாடையோடு குந்துகிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை..

அந்தப் பெண் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறாள்.. இல்ல பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை...

அந்தப் பெண் நெரிசலில் என்னை வேண்டும் என்றே உரசுகிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை..

அந்தப் பெண் என் தலைமுடிகளில் கைகோர்த்து விளையாடுகிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை..

அந்தப் பெண் என்னை மடியில் இருத்தி வைச்சு மார்பால் இடிக்கிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை..

அந்தப் பெண் என்னை பிடிச்சு வைச்சு என் அந்தரங்கத்தில் கொஞ்சுகிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை...

அந்தப் பெண் என்னை முதுகுக்கு சோப்பு போடச் சொல்கிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை..

அந்தப் பெண் என்னை கொக்கி கொழுவச் சொல்கிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை...

அந்தப் பெண் என்னை நுள்ளி விளையாடுகிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை..

அந்தப் பெண் நான் உச்சா போவதை ரசிக்கிறாள்.. அது எனக்குப் பிடிக்கவில்லை..

அவளது செயலை சகிக்க முடியாது நான் அப்பாவிடம் சொன்னேன்.. என்றும் எழுதலாம் தலைப்பிடலாம் தானே..??!

இப்படி எத்தனையோ பிடிக்கவில்லைகள்.. ஆண் பிள்ளைகள் சார்பிலும் பதியப்பட வேண்டி இருக்குது தானே.. இவை நடக்கவில்லை என்று யாராவது பதியட்டும் பார்க்கலாம். இவையும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தானே....???! 

அதேன்.. ஆண்கள் சிறுவர்கள் பெண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படும் போது.. அவை பாலியல் துஷ்பிரயோகமாகப் பதியப்படுவதில்லை.. பார்க்கப்படுவதில்லை..????!

இதற்கும் இப்போ விடை தேட வேண்டி உள்ளது. :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கி கொழுவுதல் என்றால் என்ன? கொக்கி குமார் என கேள்விப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

`அவன் சீண்டிய விதம் ஏதோ தவறு நடப்பதை உணர்த்தியது; நினைத்தாலே அவமானமாக இருக்கும்'

 
பெண்கள்படத்தின் காப்புரிமைRISHIJA

'எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது, ஒரு பையன் என்னை தவறான எண்ணத்துடன் சீண்டினான். அதற்கு முன்பு, ஆண் அல்லது பெண்ணின் தொடுதலில் வித்தியாசம் இருக்கும் என்பதே எனக்குத் தெரியாது.'

தவறான தொடுதல்கள் பற்றி பெண்கள் தங்கள் நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் இரண்டாம் பகுதி.

இவ்வளவு பழைய சம்பவம் எப்படி நினைவில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இதுபோன்ற தவறான தொடுகைகள், மனதில் பசுமரத்தாணியாக வடுக்களை ஏற்படுத்திவிடுகிறது.

ஆனால், தவறு செய்தவனுக்கு இதுகுறித்த நினைவோ அல்லது குற்ற உணர்வோ இருக்குமா?

சிறுமியான எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பக்கத்து வீட்டில் இருந்த பையன் என்னை கட்டாயப்படுத்தினான். ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை. எதோ தவறாக நடக்கிறது என்று மட்டுமே புரிந்தது. நான் அண்ணா என்று அழைத்த அவன் அப்போது ஆறாவதோ அல்லது ஏழாவது வகுப்போ படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் காலை நேரம், விளையாடிக் கொண்டிருந்த என்னை அழைத்து மடியில் வைத்துக் கொண்டான். எனது உள்ளாடைக்குள் கைகளை விட்டு சீண்டினான். முதலில் விளையாட்டு மும்முரத்தில் எனக்கு அது தெரியவில்லை. ஆனால் வித்தியாசமாக உணர்ந்தேன். அவன் வேண்டுமென்றே என்னை கிள்ளுகிறான், சீண்டுகிறான் என்றே தோன்றியது. சிறிது நேரத்தில் எதோ தவறாக நடக்கிறது என்று மட்டும் புரிந்தது.

உடனே அவன் மடியில் இருந்து எழுந்து வீட்டிற்குள் ஓடிவிட்டேன். அன்று மதிய உணவு வேளையிலும் அவன் வீட்டுற்கு வந்தான். ஒருவர் வீட்டில் மற்றவர் சாப்பிடுவது சகஜமாகவே இருந்தது.

பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அவனை பார்க்கக்கூடாது, பேசக்கூடாது என்று நினைத்தேன். எதோ ஒரு பொருளை திருடிவிட்டது போன்றும், எங்கள் இருவருக்கும் இடையே எதோ ரகசியம் இருப்பது போன்றும் தோன்றியது.

இதை அம்மாவிடமோ, வேறு யாரிடமோ சொல்ல பயமாக இருந்தது. நல்லவேளையாக சில நாட்களிலேயே நாங்கள் வேறொரு இடத்திற்கு குடி பெயர்ந்துவிட்டோம். அதன்பிறகு அவனை பார்க்கவேயில்லை.

அவன் சீண்டிய விதம் எதோ தவறு நடப்பதை மனதிற்கு உணர்த்தியது. ஆனால், அப்போது சரியாக புரியாவிட்டாலும், அந்த சம்பவத்தை நினைத்தால், அவமானமாகவும், பயமாகவும் இருக்கும்.

வளர்ந்தபிறகே அந்த சீண்டலின் அர்த்தம் புரிந்தது. அதைப் பற்றி நினைக்கக்கூடாது என்று நினைப்பேன். ஆனால், மறக்க வேண்டியவற்றை அடிக்கடி நினைவுபடுத்தி காயத்தை ஆறவிடாமல் செய்கிறது மனம்.

அதன்பிறகு யாரவது ஒரு ஆண் என்னை சற்று உற்றுப் பார்த்தாலும், தேவையில்லாமல் அருகில் வந்தாலும் மனதில் ஒருவிதமான அச்ச உணர்வும், விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டு உடல் இறுகிப்போய் நிற்பேன். அதுவரை குழந்தையாக இருந்த என்னை அந்த ஒரு சம்பவம், ரகசியத்தை காக்கும் மனமுதிர்ச்சி கொண்டவளாக மாற்றிவிட்டது. பறிபோனது என் குழந்தைப்பருவம்…

சாலையில் நடக்கும்போது சீண்டல்

சீண்டல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நான் பத்தாவது படிக்கும் போது இரண்டாவது சம்பவம் நடந்தது. பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்தபோது ஒருவன் அருகில் வந்து என்னை பின்புறமாக தட்டிவிட்டு, எதுவுமே நடக்காதது போல நடந்துக் கொண்டேயிருந்தான்.

நான் அவனைப் பார்த்து கத்தினேன், ஆனால் அவன் அதைக் கண்டுக்கொள்ளாமல், தனது நண்பர்களுடன் இயல்பாக நடந்துச் சென்றான். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

இந்த சம்பவத்திற்கு பிறகு, நான் ஒரு வாரம் பள்ளிக்கு செல்லவில்லை. பிறகு பள்ளிக்கு செல்லும்போது, வேறு வழியாகவே செல்வேன்.

இதுபற்றி என் தோழியிடம் சொன்னபோது, ''நீ என்ன அழகு ராணியா?'' என்று கேலி செய்தாள். அவளது இந்த முட்டாள்தனமான பதில், இதைப்பற்றி வெளியே பேசவிடாமல் தடுத்துவிட்டது.

ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு வேறு சிலரிடம் பேசியபோது, அவர்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருந்ததை தெரிந்துக்கொண்டேன்.

இதுபோன்ற பிரச்சனைகளை பொதுத்தளத்தில் பேசவேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதுதான் தோன்றியது. எனது பெயரை மறைக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். இதனால் மற்றவர்களுக்கும் வெளிப்படையாக பேசும் தைரியம் ஏற்படும்.

இதுபோன்ற பிரச்சனைகளை பேச குழந்தைகளையும் ஊக்குவிக்கவேண்டும்.

http://www.bbc.com/tamil/india-40686445

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, colomban said:

கொக்கி கொழுவுதல் என்றால் என்ன? கொக்கி குமார் என கேள்விப்பட்டுள்ளேன்.

Image result for Unhook Bra

Image result for Unhook Bra

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் 
வெற்றி பெற தகுதி உடையவர்களை 
மரியாதை நிமித்தமாக 
கொக்கி குமார் என்று அழைப்பார்கள். 

1.jpg

Link to comment
Share on other sites

`அது `ரேப்' என்று சொல்ல முடியாவிட்டாலும், குறைத்து மதிப்பிட முடியாத வன்கொடுமை'

(தவறான தொடுதல்கள் பற்றி பெண்கள் தங்கள் நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் மூன்றாம் பகுதி.)
காதலர்கள்படத்தின் காப்புரிமைJAY DIRECTO/AFP/GETTY IMAGES

''சிறுவயது கதைகள், உறவினர்கள், அண்டை வீட்டினருடன் பேசி மகிழ்ந்த விசயங்கள், கேலி பேச்சுக்கள், வேடிக்கை விளையாட்டுகள் பற்றி மற்றவர்கள் பேசும்போது மனதில் இனம் புரியாத பீதி ஏற்படும். பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருங்கள் என்று கத்தவேண்டும் என்று தோன்றும். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நான் மட்டுமே துரதிருஷ்டசாலி, இனிமையான குழந்தைப் பருவமே இல்லாமல் போய்விட்டது என்று தாழ்வு மனப்பான்மையால் குறுகிப் போவேன்''

(தவறான தொடுதல்கள் பற்றி பெண்கள் தங்கள் நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் மூன்றாம் பகுதி.)

இப்படிச் சொல்லும் தீபாவின் வார்த்தைகளே அவரது துயரத்தின் ஆழத்தை பிரதிபலிக்கிறது. 26 வயது தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஆறு வயதில் நடைபெற்ற சம்பவத்தை இருபது ஆண்டுகளுக்கு பிறகும் நினைவில் வைத்திருக்கிறார்.

''அவன் பக்கத்து வீட்டில் வசித்தவன். நெரிசலான குடியிருப்புப் பகுதியில் இருந்த நாங்கள், அக்கம்-பக்கத்தில் குடியிருப்பவர்களை உறவினர்களை விட அதிகமாகவே நினைப்போம். என் அம்மாவை அவன் அண்ணி என்று கூப்பிடுவான். இரவில் படுப்பதற்கு மட்டும்தான் வீட்டிற்கு வருவோம், எந்த வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாலும், அங்கேயே சாப்பாடு கிடைத்துவிடும். நம் வீடு, பக்கத்து வீடு என்ற வித்தியாசமே கிடையாது. அளவுகடந்த நம்பிக்கை கேள்விகளையும் சந்தேகங்களையும் மழுங்கடித்துவிடுகிறது, அனைவரையும் நம்பச் செய்கிறது.''

உருவகப்படம்படத்தின் காப்புரிமைAFP

சைக்கிளில் வைத்து ரவுண்ட் அடிக்கிறேன் என்று அவன் என்னை கூட்டிக் சென்றபோது தொடங்கியது பாலியல் ரீதியான தொடுகைகள் என்று சொல்கிறார் தீபா. ''என்னை மடியில் உட்கார வைப்பதோ, கன்னத்தை கிள்ளுவதோ முத்தம் கொடுப்பதோ தவறாக தோன்றியதே இல்லை. இரண்டு வீட்டு பெரியவர்கள் முன்பும் அவன் வழக்கமாக செய்வதுதான் இது. அவர்களுக்கே தவறாக தோன்றாத ஒரு விசயம், எனக்கோ, என்னைவிட சில வயதுகளே அதிகமான அவனுக்கும் தவறாக தெரியாததில் ஆச்சர்யம் இல்லை. குழந்தையை கொஞ்சுவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான்.''

தீபா வருத்தத்துடன் சொல்கிறார், ''ஆனால் என்னிடம் அவன் தவறாக நடந்துக் கொண்டான். யாரும் இல்லாமல் தனியாக இருக்கும்போது மிகவும் தவறாக நடந்துக் கொண்டான் என்பது வளர்ந்த பிறகுதான் புரிந்தது. அதை 'ரேப்' என்று சொல்ல முடியாவிட்டாலும், அதைவிட குறைவாக மதிப்பிட முடியாத அளவிலான வன்கொடுமைதான்.

எனக்கு அது பிடிக்காவிட்டாலும், நான் அழுதாலும் தவறாக எதுவுமே நடக்கவில்லை என்றும், தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்தும் எப்படியாவது சமாதானப்படுத்திவிடுவான். எல்லாரும் அப்படித்தான் நடந்துக் கொள்வார்கள் என்றும் சொல்வான். நண்பர்கள் என்றால் இப்படித்தான், 'நெருக்கமான நண்பர்கள்' என்று இதைத்தான் சொல்வார்கள் என்றும் சொல்வான்.'

குழந்தை வன்கொடுமை நிறுத்துக -பதாகைபடத்தின் காப்புரிமைHANNAH PETERS/GETTY IMAGES

'அவன் என் உடலை தவறாக பயன்படுத்துவான், இதைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் சொல்வான், 'சைக்கிளில் வைத்து ரவுண்ட்' என்ற வார்த்தை என்னை அமைதியாக்கிவிடும்.'

இது நீண்டநாட்களாக தொடர்ந்தாலும், 'நெருங்கிய நண்பன்' சொன்னதை நம்பிய தீபா, இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

இது எனது வாழ்க்கையில் ஒரு இயல்பான நிகழ்வாகிவிட்டது. அவனிடம் இருந்து விலக முயன்றாலும், எதாவது ஒரு காரணம் சொல்லி என்னுடனே இருப்பான். அவனுடைய அண்ணன் ஒருநாள் அவர்களது வீட்டில் தனியாக இருந்தார்.

அவரும் என்னுடன் நன்றாகவே பேசுவார், விளையாடுவார். 'நெருங்கிய நண்பன்' போலவே அவன் அண்ணனும் நண்பர் தானே? அவருடனும் அப்படித்தான் விளையாடவேண்டும் என்று எனக்கு ஏன் எதற்கு தோன்றியது என்றே தெரியவில்லை. அவன் முன் இருப்பது போலவே உள்ளாடையை கழற்றிவிட்டு அவர் முன் நின்றேன். ஆனால், அவரோ, என்னை கடுமையாக திட்டி, துரத்திவிட்டார். அப்போதுதான் 'நெருங்கிய நண்பன்' என்னிடம் நடந்துகொள்வது தவறா? என்று தோன்றியது.'

குழந்தைகளுக்கு பாதுகாப்புபடத்தின் காப்புரிமைHANNAH PETERS/GETTY IMAGES

'நெருங்கிய நண்பன்' குடும்பம் சில நாட்களில் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள். தீபா அதன்பிறகு நிம்மதியாக இருந்தாராம்.

'நம்பிக்கை மீது ஏற்பட்ட அவநம்பிக்கை'

'நெருங்கிய நண்பன்' வீட்டில் இருந்த அனைவரும் தன்மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்று கூறும் தீபா, அனைவரின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாக சொல்கிறார். எனவே 'நெருங்கிய நண்பன்' தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி யாரிடமாவது சொல்லியிருந்தாலும், அது எடுபட்டிருக்குமா, தவறு தன்மீதே திருப்பப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் தற்போதும் தனக்கு இருப்பதாகவே நம்புகிறார் தீபா.

'தவறு நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்ட பிறகுகூட, சகோதரன், சகோதரிகள், அம்மா, அப்பா, என குடும்பத்தில் யாரிடமும் இதைப் பற்றி சொல்ல தைரியம் வரவில்லை, இனி மேலும்கூட, சிறுவயது நினைவுகளை அவர்களிடம் பகிர்ந்துக் கொள்வேனா என்றும் தெரியவில்லை. குற்றம் செய்தவனைவிட, பாதிக்கப்பட்ட நானே இலக்கு வைக்கப்படுவேன் என்று தோன்றுவதால், யாரிடமும் நம்பிக்கை இல்லை, அவநம்பிக்கையே ஏற்படுகிறது' என்று சொல்கிறார் தீபா.

அதற்குபிறகு தனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை என்றும், அதற்கு காரணம் யாரையும் முழுமையாக நம்ப தான் விரும்பவில்லை என்று கூறும் தீபா, ஏமற்றப்படுவேன் என்ற அச்சத்தினால் தனிமையிலேயே இருப்பதாகவும் வருத்தப்படுகிறார்.

மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் உள்ளுக்குள் இருந்து எதிர்பாராத நேரத்தில் வெளிப்படும் சீற்றம் பிறரை தன்னிடம் இருந்து விலக்கிவிடுவதையும் உணர்ந்திருப்பதாக தீபா சொல்கிறார்.

'எய்ட்ஸ்' வந்திருக்குமோ என்ற பயம் திடீரென்று வந்துவிட்டதாம். அதனால், அதற்கான பரிசோதனைகளை செய்தபிறகு பாதிப்பில்லை என்று தெரிந்த பிறகே மனம் நிம்மதியானதாம்.

உருவகப்படம்படத்தின் காப்புரிமைAFP Image captionஉருவகப்படம்

'திருமணத்திலும் சிக்கல்'

திருமணப் பேச்சு எழுந்தபோது, அதற்கு தீபா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாராம். யாருக்கும் எதுவுமே தெரியாத நிலையில், குடும்பத்தினரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டாலும், சிறுவயதில் நடந்த விசயங்கள் எப்போதாவது தெரியவந்தால் என்ன ஆகும் என்ற அச்சம் இருந்தது.

ஆனால், எதையும் மறைக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். வாழ்க்கை முழுவதும் குற்ற உணர்வுடன் போராடத் தயாராக இல்லை என்பதால், கணவரிடம் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். என் கணவர் விவேகமானவர்.

'உன் சிறு வயதில், விவரம் தெரியாத வயதில் நடந்த சம்பவங்களுக்கு எந்தவிதத்திலும் நீ பொறுப்பில்லை, இயல்பாக இரு, எந்தவித குற்ற உணர்வும் தேவையில்லை' என்று சொல்லி தேற்றினார் என் கணவர்.

மனதிற்குள் நடுக்கம் இருந்தாலும், குற்ற உணர்ச்சி இருந்தாலும், மற்றவர்கள் முன் இயல்பாய் இருப்பதுபோல் நடிப்பதுதான் பெரிய சவாலாக இருந்தது என்கிறார் தீபா. ஆனால் தனக்கு உலகிலேயே சிறந்த மனிதன் கணவனாக கிடைத்ததாக ஆனந்தமடைகிறார்.

ஆனால், சில நேரங்களில் தவறு எதுவும் நடக்காவிட்டாலும், அப்படி நடக்கிறதோ என்ற அச்சத்தால், இப்போதும் சில சமயத்தில் அசாதாரணமாக நடந்துக் கொள்வதாக சொல்கிறார் தீபா. இதை சொல்வதும், கேட்பதும் எளிது, ஆனால் அனுபவித்தவர்களுக்குத்தான் வலியை உணரமுடியும் என்கிறார் தீபா.

உருவகப்படம்படத்தின் காப்புரிமைAFP

'குடும்பத்தினரே தடுக்கமுடியும்'

சிறு குழந்தைகள் சந்திக்கும் பாலியல் சீண்டல்களை குடும்பத்தினரால்தான் தடுக்கமுடியும் என்று சொல்லும் தீபா, மனதில் படுவதை பயமில்லாமல் பேசுவதற்கு குழந்தைகளை ஊக்குவிக்கவேண்டும். எதையும் மறைக்காமல் சொல்லிவிடும் இயல்பு கொண்ட குழந்தை, வீட்டினரிடம் சொல்லிவிடும் என்ற அச்சத்தால் யாரும் தவறாக நடந்து கொள்ளமாட்டார்கள். இதுபோன்ற சம்பவங்களில் அச்சப்படுபவர்களே அதிகமாக இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்கிறார் தீபா.

குழந்தைகள் விளையாடுவதை பெரியவர்கள் தொடர்ந்து கண்காணித்தால் இதுபோன்ற வன்கொடுமைகள் தவிர்க்கப்படும் என்கிறார் தீபா. மருத்துவர்களிடம் ஆலோசனை எடுத்துக் கொண்டாரா என்று கேட்டதற்கு இல்லை என்பதே அவரது பதிலாக இருக்கிறது.

மனநல ஆலோசகரிடம் சென்றால், ஏன் எதற்கு என்று அனைவருக்கும், குறிப்பாக குடும்பத்தினருக்கு பதில் சொல்லவேண்டும். நமக்கு நடந்ததை வெளியில் சொன்னால் பச்சாதாபத்தோடு கேட்கும் அனைவரும், பிறகு நாளடைவில் நம்மை கேலிப் பொருளாக்கிவிடுவார்கள். இப்போது கூட எனது பெயரை மறைத்துக் கொண்டுதான், அறியாத வயதில் எனக்கு ஏற்பட்ட கொடுமையை பகிர்ந்துக் கொள்ளமுடிகிறது.

குழந்தைகள் பலவற்றை வெளிப்படையாக சொல்வதில்லை. அவர்களுக்கு சரி-தவறு பற்றிய புரிதல் இருக்காது. ஆனால், அவர்கள் சொல்வதை பெரியவர்கள் கூர்ந்து கவனித்தால், தவறு நடந்திருப்பதை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம், அது அந்த குழந்தையின் வாழ்க்கை முழுவதும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.

எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. ஆனால், எனக்கு குழந்தைகள் பிறந்தால், அவர்களை நான் கவனமாக வளர்ப்பேன், எனக்கு நடந்தது போன்ற எந்தவொரு கொடுமையும் நடக்காமல் பார்த்துக்கொள்வேன். குழந்தை சொல்லும் எல்லாவற்றையும் நம்புவேன், என்னிடம் எதைவேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேச ஊக்குவிப்பேன்' என்று உறுதியுடன் சொல்கிறார் தீபா.

http://www.bbc.com/tamil/global-40694386

Link to comment
Share on other sites

`அந்த அருவருக்கத்தக்க சம்பவத்தால் அன்பு, உறவு என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது'

`அந்த அறுவறுக்கத்தக்க சம்பவத்தால் அன்பு, உறவு என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது'படத்தின் காப்புரிமைMANAN VATSYAYANA/AFP/GETTY IMAGES

ரோஷ்னி, 22 வயது (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

(தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பெண்கள் பகிர்ந்து கொள்ளும் தொடரின் நான்காம் பகுதி.)

குழந்தைப் பருவம் விளையாட்டுத்தனமும், குறும்பும் நிறைந்தது. சிரித்து கலகலப்பாக இருக்கவேண்டிய அந்தப் பருவத்தில் சந்தித்த ஓர் அசம்பாவிதம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

பல ஆண்டுகள் ஆனபோதிலும், அந்த அருவருக்கத்தக்க சம்பவத்தால் ஏற்பட்ட மனத்தடைகளில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறேன். விளைவு? அன்பு, உறவுகள், திருமணம் என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது.

எனக்கு 11-12 வயது இருக்கும்போது, வெளியூரில் இருந்து படிப்பதற்காக வந்த அவன், பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தான்.

என் குடும்பத்தினருக்கு அவன் மீது நல்ல அபிப்ராயம், அவனை முழுமையாக நம்பினார்கள். நானும், என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியும் அவனிடம் டியூஷன் படித்தோம். டெஸ்டில் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற என்னை, ஒரு நீண்ட பதிலை மனப்பாடம் செய்யச் சொன்னான். ஆனால் தம்பிக்கு கொடுத்த பதிலோ சுலபமானது.

பதிலை, தம்பி விரைவில் மனப்பாடம் செய்து சொல்லிவிட்டான். தம்பியை வீட்டுக்கு அனுப்பிய அவன், ரோஷ்னி பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்பித்த பிறகுதான் வருவாள் என்று வீட்டில் சொல்லச் சொன்னான்.

பிறகு, நாங்கள் இருவர் மட்டுமே அறையில் இருந்தோம். மனப்பாடம் செய்வதில் மும்முரமாக இருந்த நான், தலை நிமிர்ந்தபோது, அதிர்ந்து போனேன். தனது 'பேண்ட்டின் ஜிப்பை நீக்கி, அந்தரங்க உறுப்பை காட்டினான், என் உடலின் பல பாகங்களை வேண்டுமென்றே தொட்டான், சீண்டினான். எனக்கு பிடிக்கவில்லை`.

உருவகப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

பயந்துபோய், அழத் தொடங்கிவிட்டேன். என்னை சமதானப்படுத்த சாம-தான-தண்டம் என பலமுறைகளையும் பயன்படுத்தினான் அந்த மிருகம். 'வீட்டில் இதைப்பற்றி எதாவது சொன்னால், மதிப்பெண் குறைவாக வாங்கியதால், திட்டினேன், அதனால் பழிபோடுகிறாள் ரோஷ்னி என்று சொல்லுவேன், பிறகு செமையாக அடிவிழும்' என்று பயமுறுத்தினான்.

நான் தொடர்ந்து அழுது கொண்டேயிருந்தேன். கட்டுப்படுத்தவே முடியவில்லை. என்னை வீட்டில் கொண்டுபோய் விட்ட அவன், 'மதிப்பெண் குறைவாக வாங்கியதால், திட்டியதாகவும், பதிலை மனப்பாடம் செய்யச் சொன்னபோது, அதையும் சரியாக செய்யாததால், கடுமையாக திட்டியதால் தொடர்ந்து அழுகிறாள்' என்று சொல்லிவிட்டான்.

கண்மூடிய குழந்தைபடத்தின் காப்புரிமைAFP

அதிர்ச்சியும், அழுகையும் சேர்ந்து எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. நலம் விசாரிப்பதற்காக வருவதுபோன்று, தினமும் வீட்டுக்கு வந்து, அவனது கயமைத்தனம் வெளிப்பட்டதா என்று நோட்டமிடுவான். ஆனால் நான் யாரிடமும் எதையும் சொல்லவில்லை.

எனக்கு மனரீதியாக பெரும் உளைச்சல் ஏற்பட்டது. என்னுடைய சொந்த அண்ணன் முன் வருவதைக்கூட தவிர்த்தேன். நான் பெரியவளான பிறகே, எனக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தீவிரம் புரிந்தது.

சில நாட்களில் அவன் வீட்டைக் காலி செய்துவிட்டு, வேறு ஊருக்கு போய்விட்டான். ஆனால், இப்போதும் அவன் நினைவு வந்தால், வருத்தமும், ஆத்திரமும் வருகிறது.

சுமன், 33 வயது (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

இரு கைகள்படத்தின் காப்புரிமைMONEY SHARMA/AFP/GETTY IMAGES

நான்காவது அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, நடந்த சம்பவம் இது. வழக்கம்போல, பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு சென்றிருந்தோம்.

கிராமத்தில் பாட்டி தனியாக வசிப்பவர் என்பதால் நான்கு சகோதர, சகோதரிகள் குடும்பமாக அங்கு சென்றால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும், அங்கு செல்வது அனைவருக்கும் பிடித்தமானது.

பாட்டி வீட்டுக்கு அருகிலேயே சிறிய தாத்தாவின் வீடு இருந்தது. அவர்கள் வீட்டுக்கு சென்று, அங்குள்ள பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவோம், தொலைக்காட்சி பார்ப்போம், வேடிக்கையாக பொழுதுபோகும்.

ஒரு நாள் இரவு நேரம், மின்சாரம் இல்லை, காற்று அனல் அடித்தது. உள்ளே படுக்கவே முடியவில்லை. வெளியில் விரித்துப் படுக்கலாம் என்றால் அனைவருக்கும் தேவையான அளவு பாய்கள் இல்லை. எனவே, சின்ன தாத்தா வீட்டில் படுக்கச் சொல்லி அங்கு அனுப்பினார்கள். அன்று அவர்கள் வீட்டில் வேறு யாருமே இல்லை.

என்னை பாயில் படுத்துக்கொள்ள சொன்ன அவர், புத்தகப்பிரியையான எனக்கு சில புத்தகங்களை கொடுத்து, உரக்க படிக்கச் சொன்னார்.

உருவகப்படம்படத்தின் காப்புரிமைMONEY SHARMA/AFP/GETTY IMAGES Image captionகோப்புப்படம்

அந்த கதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி, அங்கிருந்து படிக்கச் சொன்னார். நான் உரக்கப் படிப்பதில் திறமையானவள் என்பதை காண்பிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் உடனே படிக்கத் தொடங்கிவிட்டேன்.

படிக்கும்போது, 'பிரா' என்ற வார்த்தை வந்தது. அப்போது அவர், "பிரா என்றால் என்ன தெரியுமா? உன் அம்மா போடுகிறாளா?" என்று கேட்டுக்கொண்டே, கைகளை என் மேல்சட்டைக்குள் விட்டு தடவத் தொடங்கிவிட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், ஏதோ தவறு என்று மட்டும் உள்ளுணர்வு சொன்னது. புத்தகத்தை தூக்கி வீசிய நான், அவரது கையைத் தட்டிவிட்டு, எழுந்து ஓடினேன். என்னை பின்தொடர்ந்து அவரும் ஓடிவந்தார்.

 

ஓடிவருவதற்கு தைரியம் இருந்த எனக்கு, இதைப் பற்றி வேறு யாரிடமும் சொல்ல தைரியம் இல்லை. அவர் அனைவராலும் மதிக்கப்பட்ட தாத்தா ஆயிற்றே! எனக்கு விவரம் தெரிந்த பிறகு, 'இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை தங்கையும் புரிந்து கொள்ளட்டும்' என்பதற்காக அவளிடம் இதைப் பற்றி சொல்லிவிட்டேன்.

தனது சித்தப்பாவின் உண்மை ஸ்வரூபத்தைப் பற்றி அம்மாவிடம் நான் சொல்லவேயில்லை. ஏன் தெரியுமா? 'நான் அழுதுகொண்டு ஓடிவந்த அந்த இரவுவேளையில், எதற்காக அழுகிறாய் சுமன்?' என்று என் அம்மா ஒரு வார்த்தைக்கூட கேட்கவேயில்லை!

http://www.bbc.com/tamil/global-40711825

Link to comment
Share on other sites

'அந்த கொடுமையை அக்குழந்தை எத்தனை நாள் பொறுத்து கொண்டிருந்தாளோ?'

 

(தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பெண்கள் பகிர்ந்து கொள்ளும் தொடரின் ஐந்தாம் பகுதி.)

 
 
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள்படத்தின் காப்புரிமைMONEY SHARMA/AFP/GETTY IMAGES

 

நமக்கு நடந்த விஷயங்களை நினைவுகூர்வது இயல்பானதே. ஆனால், பிறருக்கு நடந்த அசம்பாவிதங்களையும் மறக்கமுடியாமல் தவிப்போம்.

அம்பிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நேயரின் அனுபவம் இது.

யார் என்றே நான் அறியாத ஒரு குழந்தைக்கு நிகழ்ந்த கொடுமையை என்னால் எப்போதும் மறக்கமுடியாது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. அலகாபாதில் நெரிசலான பகுதியில் இருந்த என் சகோதரியின் காலியாக இருந்த வீட்டில், இரண்டு சிநேகிதிகளுடன் தங்கி படித்து வந்தேன்.

 

ஒரு பெரிய வீட்டை பாகம் பிரித்தபோது, கிடைத்த பாகத்தில், கீழே ஒரு பெரிய அறையும், அதன்மேல் மூன்று அறைகளும் கட்டி வசிப்பதற்கு ஏற்றதாக மாற்றியிருந்தார்கள். என்னுடன் தங்கியிருந்த இரண்டு பேரும் விடுமுறைக்கு தங்கள் கிராமத்திற்கு சென்று விட்டார்கள்.

நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்வதற்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்திருந்தேன். அதனால் கிராமத்திற்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டேன். வீட்டுக்கு அருகில் குடிசைப்பகுதிகள் இருந்தன, அதில் ஏழை கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் வசித்துவந்தார்கள்.

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள்படத்தின் காப்புரிமைAFP

அன்று மாலையில், நான் மொட்டை மாடியில் நடந்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஒன்றரை முதல் இரண்டு வயது இருக்கும் ஒரு குழந்தையுடன் 25-30 வயது இளைஞன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

நான் குழந்தையின் குறும்பையும், விளையாட்டையும் ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தக் குழந்தைக்கு, இளைஞன் நன்றாக தெரிந்தவன் என்பது குழந்தையின் இணக்கத்தில் இருந்து புரிந்துக் கொண்டேன். நான் இருந்த இடத்தில் இருந்து அவர்களைப் பார்க்கமுடியும். ஆனால், அவர்கள் அங்கிருந்து பார்த்தால் என்னை பார்க்க முடியாது.

திடீரென்று அந்த மனிதன், குழந்தையை மடியில் உட்கார வைத்துக்கொண்டான். சிறிது நேரத்திற்கு குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான், பிறகு குழந்தையை அழைத்துச் சென்று, ஒரு ஓரத்தில் நிற்கவைத்து, ஆண்குறியால் தேய்க்கத் தொடங்கினான்.

நான் இதை எழுதுவது அதிகபிரசங்கித்தனமாக தோன்றலாம், ஆனால் இது அவசியம் என்று நான் நினைக்கிறேன். குழந்தைகளை பிறரை நம்பி ஒப்படைக்கும் பெற்றோர்கள் பலமுறை யோசிக்கவேண்டும். மனித மனதின் வக்கிரம் பெரும்பாலும் தனிமையில்தான் வெளிப்படுகிறது.

அந்தக் குழந்தை அம்மா… அம்மா என்று அழுதபோதிலும், அந்த மனிதன் குழந்தையை விடவில்லை. சிறிது நேரம் கழித்து அவன் விடுவித்தபிறகு, குழந்தை முன்புபோலவே சிரித்து விளையாடத் தொடங்கிவிட்டது.

இந்த சம்பவத்தைப் பார்த்ததும் முதலில் எனக்கு ஏற்பட்டது அச்சம்தான். யாரிடமும் இதைப்பற்றி சொல்லவில்லை. அந்த மனிதனைப் பற்றி யாரிடமாவது புகார் சொன்னால், அவன் என்னை குறிவைத்தால் என்ன செய்வது என்றுதான் தோன்றியது.

என்னுடைய சுயநல கண்ணோட்டத்தினால், நான் வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், மனதின் உறுத்தல் அடங்கவில்லை.

அந்தக் குழந்தைக்காக நான் எதாவது செய்திருக்கவேண்டும். நான் முயற்சி செய்திருந்தால், அந்தக் குழந்தைக்கு நிவாரணம் கிடைத்திருக்கலாம், அந்தக் குழந்தை எத்தனை நாள் அந்தக் கொடுமையை அனுபவித்ததோ தெரியவில்லை என்று வருத்தமாக இருக்கும். கண் முன்னே நடக்கும் தவறை தட்டிக் கேட்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

சரோஜாவின் கதை

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள்படத்தின் காப்புரிமைAFP

சரோஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பிபிசிக்காக எழுதி அனுப்பியிருக்கிறார்.

"இதுபோன்ற துயரமான அனுபவங்களை நானும் சந்தித்திருக்கிறேன். என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறவுமுறையில் எனக்கு சித்தப்பா. 12 வயதாக இருந்த என்னை, ஒரு முறை அல்ல, பலமுறை அவர் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.''

''என்னை உடல்ரீதியாக துன்புறுத்தி, மனரீதியான பாதிப்பையும் ஏற்படுத்திய அந்த கயவன், உலகின் முன் மதரீதியான பிரசாரங்களை செய்யும் பிரபலர் என்பது மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது. நான் சொன்னதை பெற்றோர்கள் கூட நம்பவில்லை என்பதுதான் எனக்கு அதிக வருத்தம் தந்தது. இந்த அத்துமீறலை நான் வெளிப்படையாக சொல்கிறேன் என்று சொன்னபோது, குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிடாதே என்று தடுத்துவிட்டார்கள்.''

''பெற்றவர்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் என்ன? என் காதலரிடம் (இப்போது கணவர்) எனக்கு நடந்த கொடுமையைப் பற்றிச் சொன்னேன். அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் என்னை சமாதானப்படுத்தினார். இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று சொல்லி, திருமணம் செய்துக்கொண்டார். பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுவது, துன்புறுத்துவது, தங்களுடைய கேவலமான இச்சைகளைத் தீர்த்துக்கொள்வது, எல்லாம் அந்த பெண்ணை நன்கு அறிந்தவர்களே என்ற கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.''

''ஓப்ரா வின்ஃப்ரேவை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு, உள்ளுக்குள் தொடர்ந்து வலிக்கும் இந்த சம்பவத்தை, பகிர்ந்துக் கொள்கிறேன். எனக்கு நடந்த கொடுமைக்கு நான் எந்தவிதத்திலும் காரணம் இல்லை என்று தொடர்ந்து எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்கிறேன். செய்யாத தவறுக்கு எனக்கு நானே ஏன் தண்டை கொடுத்துக் கொள்ளவேண்டும்? தவறு செய்தவனை உலகம் குருவாக கொண்டாடுவதுதான் எரிச்சலடையச் செய்கிறது. நிலைமை மாறும் என்று நம்புகிறேன். நடக்கும் தவறுகளுக்கு, பாதிக்கப்பட்ட பெண்களையே தண்டிக்கும் போக்கும் மாறவேண்டும்.''

http://www.bbc.com/tamil/india-40719608

Link to comment
Share on other sites

‘பாலியல் ரீதியாக துன்புறுத்தியது சகோதரனே’ - அதிரவைக்கும் ஆணின் கதை

தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் ஆறாவது பகுதி. 
தவறான தொடுதல்படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionஅதுல் குமார் சிங்

தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் ஆறாவது பகுதி. இளைஞர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறோம். தனது பெயரை வெளிப்படையாக தெரிவிக்கலாம் என்று தைரியமாக சொல்கிறார் அதுல்குமார்.

என் பெயர் அதுல்குமார். முதன்முதலாக இந்த விசயத்தை வெளிப்படையாக பேசுகிறேன். ஆனால், மனதில் படிந்துவிட்ட கசப்பான நினைவுகளை மாற்றுவதற்கு பலகாலம் ஆனது. பல ஆண்டு மனப்போராட்டத்திற்கு பின்னர், 2016-ஆம் ஆண்டில்தான் மிகுந்த மனதைரியத்துடன் அவனுடைய முகத்தை நேரடியாக, பார்த்தேன்.

என்னை பயமுயறுத்திக் கொண்டே இருப்பான். நான் செல்லும் வழியில் இருப்பான் என்று தோன்றினால், வேறு வழியாக சென்றுவிடுவேன். வீட்டுக்கு வந்திருப்பது தெரிந்தால், வீட்டிற்கு போகவே பிடிக்காது. குடும்பத்தினர் முன் பார்த்தால், மரியாதை காட்டவேண்டும், அதை நான் மனதார வெறுத்தேன். அவனைப் பற்றி மனதில் வெறுப்புணர்வே மண்டிக்கிடந்தது.

ஒளிந்து விளையாடும் விளையாட்டு

தவறான தொடுதல் Image captionகோப்புப்படம்

நான் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவன். வீட்டில் எப்போதும் வேடிக்கையும், விளையாட்டுமாக இருக்கும். பெரியவர்கள் பல விசயங்களை கற்றுக் கொடுத்தாலும், முக்கியமான ஒரு விசயத்தை சொல்லிக் கொடுக்கவில்லை. நான் சிறுவனாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. எப்போது நடந்தது என்று நினைவில்லை என்றாலும், நான் பள்ளிக்குச் செல்லவே தொடங்காத பருவத்தில் சித்ரவதை ஆரம்பித்தது.

எனக்கு ஒன்றுவிட்ட சகோதாரர்கள் இருவர். ஒருவர். ஒருவன் கூட்டுக்குடும்பமாக எங்கள் வீட்டிலேயே இருந்தான். மற்றொருவன் எங்கள் தெருவிலேயே வேறொரு வீட்டில் குடியிருந்தான்.

ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் விளையாட்டின் போக்கு மாறியது. கடைசியில் ஒளிந்து விளையாடத் தொடங்கினோம்.

நானும், ஒன்றுவிட்ட அண்ணனும் மொட்டை மாடியில் இருந்த ஒரு அறையில் சென்று ஒளிந்துக் கொண்டோம். அங்கு ஒரு படுக்கை, தலையணை, போர்வை எல்லாம் இருந்த்து. யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க, கனமான போர்வைக்குள் ஒளிந்துக்கொண்டோம்.

தம்பி வருவான், எங்களை கண்டுபிடித்துவிடுவான் என்று நான் விளையாட்டு நினைப்பில் மூழ்கியிருந்தேன்.

சிறிது நேரத்தில் அண்ணன், என் மேல் படுத்துக்கொண்டு என்னவோ செய்தான். கண்டபடி தொட்டான். அவனை தள்ளிவிட முயன்றேன், அவன் வலுவாக பிடித்துக் கொண்டிருந்தான். பிடியில் இருந்து விலக எனக்கு பலம் போதவில்லை.

சிறிது நேரத்தில் அவன் எழுந்து போய்விட்டான். நான் வாந்தியெடுக்கத் தொடங்கினேன். முகமெல்லாம் சிவந்துவிட்டது.

வாயை மூடச் சொல்லி கன்னத்தில் விழுந்தது பளார்

தவறான தொடுதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நான் படியில் இருந்து இறங்கிவரும்போது, இயல்பாகவேயில்லை. என்ன நடந்தது என்றே எனக்கு புரியவில்லை. ஆனால், அடிப்பதற்கான புது வழி இது என்றே தோன்றியது.

வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அண்ணன் அடித்துவிட்டான் என்பதை சொல்லவேண்டும் என்று அத்தையிடம் விரிவாக சொல்ல முயன்றேன். பளார் என்று கன்னத்தில் அறைவிட்டு, 'கண்டபடி உளறாதே, ஒருவர் மற்றவர் மீது கோள்மூட்டுவதே வேலையாகிவிட்டது' என்று திட்டினார்கள். அதிர்ந்து போய்விட்டேன். வேறு யாரிடம் சொன்னாலும் மற்றொரு கன்னமும் பழுத்துவிடும் என்று பயந்தேன்.

ஆனால், சித்திரவதை அத்துடன் முடியவில்லை. அண்ணன் மற்றொரு சகோதரனிடமும் இதைப் பற்றி சொல்லியிருப்பான் போல. ஏனெனில் அவனும் அடுத்த சில நாட்களில் என்னிடம் மூத்த சகோதரனைப் போலவே நடந்துக்கொண்டான்.

அவனிடம் இருந்து தப்பிப்பது சுலபமாகவே இருந்தது. அவன் எங்கள் வீட்டிற்கு அருகில்தான் இருந்தான். ஆனால் வீட்டில் என்னுடனேயே எப்போதும் இருந்த மூத்தவனின் கையில் தனியாக சிக்கும் வாய்ப்புகள் இருந்தன.

ஒருநாள் அவன் என் ஆடைகளை களைந்து துன்புறுத்திக் கொண்டிருந்தபோது, அதிருஷ்டவசமாக மாமா அங்கு வந்துவிட்டார். அவனை கன்னாபின்னாவென்று திட்ட்த் தொடங்கிவிட்டார்.

மாமாவின் கைங்கர்யம்

மாமா என்ன சொன்னார், என்ன செய்தார் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. அதற்கு பிறகு எனக்கு நடந்த கொடுமைகள் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் எனது தன்மானமும், நம்பிக்கையும் அடிபட்டுவிட்டது. மற்றவர்கள் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டது.

இப்போது நான் கிராமத்தில் இல்லை, தொலைவில் உள்ள நகரில் வசிக்கிறேன். கல்லூரி படிப்பு முடிக்கும்வரை சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம் மனதில் இருந்தது. இதுபோன்ற மனவேதனைக்கு பலர் ஆளாகியிருப்பதை தெரிந்துக்கொண்டேன்.

சிறுபிள்ளைகளுக்கு நேரிடும் வன்கொடுமை, மனப்பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படவேண்டும் என்றுதான் இதை பகிர்ந்துக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு நல்ல விசயங்கள் செய்வதை மட்டும் கற்றுக்கொடுக்காதீர்கள், எதை செய்யக்கூடாது என்பதற்கான அறிவுறுத்தல்களையும் ஊட்டி வளருங்கள்.

நெருப்பைத் தொட்டால் சுடும், பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது, "தவறான தொடுகை மற்றவர்களை பெரிய அளவில் பாதிக்கும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது".

http://www.bbc.com/tamil/global-40744161

Link to comment
Share on other sites

'சாக்லெட் தந்த சித்தப்பா, என்னை மாமா என்று கூப்பிட சொன்னால், அதை மறக்கமுடியுமா?'

தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் ஏழாம் பகுதி.
BadTouchபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் ஏழாம் பகுதி. இந்தத்தொடரில் குறிப்பிடப்பட்ட அனாமிகா, தீபா, அதுல் என்பவை வெறும் பெயர்கள் மட்டும் அல்ல. சமூகத்தின் பிரதிநிதிகள். குழந்தைப் பருவத்தில் பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்த புரிதல் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். விவரம் புரிந்த பிறகே அதன் தாக்கங்களை உணர்கின்றனர்.

தவறான சம்பவங்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் நம்மை ஆட்கொண்டு, ஆட்டுவிக்கும். மனம் வருத்தப்பட்டு ஒருவிதமான மன அழுத்தமும், மனச்சோர்வும் ஏற்படும், சில சமயங்களில் மனதில் வன்முறையும், ஆவேசமும் கிளர்ந்தெழும். சிறுபிராயத்து நினைவுகள் மனநிம்மதியை சீர்குலைக்கும்.

'சித்தப்பா சாக்லெட்டும், தின்பண்டமும் கொடுத்து என்னை மாமா என்று கூப்பிடச் சொன்னால், அதை மறக்கமுடியுமா?'

சிறு குழந்தைகளுக்கு எல்லா விசயங்களும் சொல்லவேண்டாம், அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று பெரியவர்கள் திரை போட்டுவிடுகின்றனர். குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்ல, கண்மூடித்தனமான நம்பிக்கையும் பாசமுமே காரணங்களாகிறது. தவறு நடப்பது தெரியவந்தாலும், தவறிழைப்பவர் நெருங்கியவர்களாக இருப்பதாலும், அவப்பெயர் ஏற்படும் அச்சத்தினாலும் மறைத்துவிடுகின்றனர்.

நம்பிக்கை மோசடி

கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மிகவும் அதிகரித்துவிட்டதாக, உத்தரப்பிரதேச மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையின் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் விபா சொல்கிறார்.

பெற்றோர் இல்லாத நிலையில், உறவினர்களின் வீட்டில் வசிக்கும் குழந்தைகளே அதிக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுவதாக கூறும் விபா, அந்த சூழ்நிலையில் தனக்கு நிகழும் கொடுமைகளை குழந்தை யாரிடமும் பகிர முடியாத நிலையில் ஆதரவற்று அமைதியாக இருப்பதாக கூறுகிறார்.

BadTouchபடத்தின் காப்புரிமைAFP

நம்பமுடியாத ஆனால் உண்மைச் சம்பவங்களை பார்க்கும்போது, உறவுகளின்மீதே நம்பிக்கையற்றுப் போவதாக விபா வருத்தப்படுகிறார். ஆனால் இவற்றை தடுக்கமுடியும் என்றும், தேவை கூடுதல் கண்காணிப்பு மட்டுமே என்கிறார்.

இது சமூக பொறுப்பு என்று கூறும் அரசு அதிகாரி விபா, ஒரு குழந்தை இயல்பாக இல்லை என்றோ, கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவோ தோன்றினால் உடனே 1098 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறுகிறார்.

குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் என்றால் என்ன?

குழந்தைகள் மீது துஷ்பிரயோகம் என்பதற்கான விளக்கத்தை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பணியாற்றும் எஃப்.எக்ஸ்.வி இந்தியா தொண்டு நிறுவன திட்ட மேலாளர்சத்ய பிரகாஷ்.

பொதுவாக உடலுறவை மட்டுமே பாலியல் துன்புறுத்தலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர். ஆனால் அது சரியல்ல. 2012ஆம் ஆண்டின், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி, குழந்தைகளை பாலியல் ரீதியாக தொடுவது, துன்புறுத்துவது, சீண்டுவது, அவர்கள் முன் ஆபாசமாக நடந்துக்கொள்வது, ஆபாசப் படங்களை காட்டுவது, ஆபாசமாக பேசுவது உட்பட பல செயல்கள் குற்றங்கள்.

எப்போது வேண்டுமானாலும் இதுபோன்ற கொடுமைகள் குழந்தைகளுக்கு நிகழலாம். குழந்தைக்கு முற்றிலுமாக பாதுகாப்பளிக்கும் இடம் எது? வீடா? அவசியம் இல்லை. வீடு, அக்கம்-பக்கம், பள்ளி, பொதுஇடம் என எங்கும் எப்போதும் குழந்தைகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஒரே வழி என்கிறார் சத்யபிரகாஷ். தற்காத்துக் கொள்வதே மிகச்சிறந்த வழி என்னும்போது, அதற்கு முதலில் தொடுகைகளை இனம் காண சொல்லிக் கொடுக்கவேண்டும். 'குட் டச்', 'பேட் டச்' என்றால் என்ன? யாராவது தவறாக தொட்டால் என்ன செய்யவேண்டும் என்பவற்றை குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் கற்பிக்கவேண்டும்.

BadTouchபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தக் கோணத்திலும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அரசு முகமைகள், அரசுசாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என பல தரப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு தேவை.

1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை சொல்லாம் என்பதை சத்யபிரகாஷும் சுட்டிக்காட்டுகிறார். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு முதலில் மனோதத்துவ ரீதியிலான ஆலோசனைகள் வழங்கவேண்டும். மருத்துவ உதவிகளுக்கான தேவை இருந்தாலும் அதையும் செய்யவேண்டும்.

தங்களிடம் வரும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளித்த பிறகு, குழந்தை நல தங்கும் விடுதிகளுக்கு அனுப்ப்படுவார்கள். அப்போது அவர்கள் எதிர்காலத்தை எந்தவிதமான சூழலையும் எதிர்கொள்ளும் மன உறுதியை பெறுவார்கள்.

சட்ட உதவி கிடைக்கும்

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. ஆனால் பொதுவாக சட்ட நடவடிக்கைகள் என்றாலே பின் வாங்கும் போக்கே காணப்படுகிறது. சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் குழந்தைகளுக்கு தேவையான அனைத்துவிதமான பாதுகாப்பும் வழங்கப்படும். இதுபோன்ற வழக்குகளில், குற்றம் சாட்டியவர், தனக்கு கொடுமை இழைக்கப்பட்டதை நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை. மாறாக, குற்றம் சாட்டப்பட்டவரே, தான் குற்றம் இழைக்கவில்லை என்று நிரூபிக்க்க் கடமைப்பட்டவர்.

குழந்தைகளின் பிரச்சனை புரிந்து கொள்வது

குழந்தைகளுக்கு சரி-தவறு பற்றி தெரியாத நிலையில் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்/சீண்டல்களை எப்படி தெரிந்துக்கொள்வது?

இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் குழ்ந்தைகள் மற்றவர்களிடம் இருந்து விலகியிருக்க விரும்புவார்கள் என்று சொல்கிறார் மனநல ஆலோசகர் நீதூ ராணா. சிலரை கண்டாலே பயப்படுவது, அவர்களிடம் செல்வதற்கு மறுப்பது போன்றவற்றை கவனிக்கவேண்டும். அருகிலிருக்கும் கடைக்கு போவதற்கே குழந்தை பயப்படும்.

இதைத்தவிர, அந்தரங்க உறுப்புகளில் வலி ஏற்படுவதாக சொன்னால், அதை உடனடியாக கவனிக்கவேண்டும். சில சமயங்களில் குழந்தை எதையும் வெளியில் சொல்லாமல், மறைக்கத் தொடங்கிவிடும். அம்மா குளிக்க வைக்க வந்தாலோ, எண்ணெய் பூச வந்தாலோ மறுப்பு சொல்வது, குளிக்கும்போதும் ஆடையை கழற்ற மறுப்பது போன்ற குழந்தைகளின் நடத்தை மாற்றங்களை பெற்றோர் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

BadTouchபடத்தின் காப்புரிமைAFP

குழந்தை பாதிக்கப்பட்டிருப்பதை நீங்களாகவே தெரிந்துக் கொண்டால், முதலில் ஆறுதல் சொல்லுங்கள், நம்பிக்கையூட்டுங்கள். அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதை புரிய வையுங்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடிப்படைத் தேவை தேவை, ஆறுதல், மன அமைதி, நம்பிக்கை.

குழந்தைக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டதும், சிறிய சிறிய விசயங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள். அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். நீங்களாக தெரிந்துக் கொள்ளாமல் குழந்தையே உங்களிடம் வந்து தனக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொன்னால், அவர்களின் அச்சத்தை அகற்றி, பாதிப்பு ஏற்படுத்துபவர்களிடமிருந்து விலக்கி வையுங்கள்.

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது அவர்களின் மழலையையும், குழந்தைத்தன்மையையும் மாசுபடுத்தி, மாறா வடுக்களாக மனதில் பதிந்துவிடுகிறது. நீதூ ராணாவின் கருத்துப்படி, பெரியவர்களானதும் அந்தக் குழந்தைகள் மன அழுத்தத்தால், மனச்சோர்வால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிலருக்கு ஆளுமைத் தொடர்பான கோளாறு (personality disorder) ஏற்படுகிறது. உறவுகளில் பிரச்சனை ஏற்படும். சிலரது தாம்பத்ய உறவுகள் இயல்பாக இருக்காது. இறுதியில் வாழ்க்கையே போர்க்களமாகிவிடும்.

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும், இந்த விசயத்தில் விழிப்புணர்வு ஏற்படவேண்டியதும், அதை பரவலாக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். விழிப்புணர்வு என்று சொல்வது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும்தான்! இல்லாவிட்டால், மழலைப்பருவ நினைவுகள் மீளாத்துயராக மாறி, காரணமே தெரியாத பிரச்ச்சனைகளுக்கும், சிக்கல்களுக்கும் உருவாகும்.

http://www.bbc.com/tamil/india-40764548

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.