Jump to content

உயிர் வளர்க்கும் திருமந்திரம்


Recommended Posts

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 01: யாக்கையில் தொடங்கி காக்கை

 

உயிர் என்னும் சொல் ‘உய்’ என்னும் வேரிலிருந்து தோன்றியதாகக் கணக்கு. உய்தல் என்றால் வாழ்தல் என்று பொருள். ‘உய், உய்’ என்னும் சீழ்க்கை ஒலியோடு மூச்சிழுப்பு நிகழ்கிறது. மூச்சிழுத்தல்தான் ஒருவர் வாழ்ந்திருப்பதற்கான அடையாளம். மூச்சிழுக்கும் செயலுக்கு உயிர்த்தல் என்று பெயர். பெருமூச்சு விடுவதை நெட்டுயிர்த்தல் (நீளமாக உயிர்த்தல்) என்று சொல்வது இப்போது அற்றுப் போய்விட்ட வழக்கு. பிராண வாயு என்று வடமொழி குறிப்பது தமிழில் உயிர் வளி என்று வழங்கப்படும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது மூச்சிழுத்து வாழ்ந்திருப்பது எதுவோ அது உயிர்.

உய்தல் என்ற சொல்லுக்குக் கடைத்தேறுதல் என்றும் பொருள். கடைத்தேறுதல் என்றால் விடுதலை பெறுதல். இந்த அடிப்படையில் பார்க்கும்போது உய்வடையத்தக்கது எதுவோ, அதாவது விடுதலை பெறத்தக்கது எதுவோ அது உயிர். மூச்சிழுத்து வாழ்தல் என்ற நடைமுறை பற்றி வந்த பெயராக இருந்தாலும் சரி, விடுதலை பெறுதல் என்ற இலக்கு பற்றி வந்த பெயராக இருந்தாலும் சரி, உயிர் என்ற பெயர் உயிருக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. நல்லது.

இப்போது ஒரு கேள்வி எழும்: உயிர் ஏன் விடுதலை பெற வேண்டும்? ஏனென்றால் அது கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. எதனால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது? உடம்பால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. கட்டுவதால் உடம்புக்கு யாக்கை என்று பெயர்.

‘யாக்கை நிலையாமை’ திருமந்திரத்தின் ஓர் அதிகாரத் தலைப்பு. அதில் இடம்பெறும் பாடல் இது:

சீக்கை விளைந்தது; செய்வினை மூட்டுஇற்ற;

ஆக்கை பிரிந்தது; அலகு பழுத்தது;

மூக்கினில் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்

காக்கைக் குப்பலி காட்டிய வாறே (திருமந்திரம், 147)

நெஞ்சில் சளி கட்டிக்கொண்டது; உய் உய்யென்ற ஒலியோடு மூக்கின் வழியாகச் சென்று வந்துகொண்டிருந்த சீழ்க்கை ஒலி மூச்சடைப்பின் காரணமாக இப்போது ஆவென்று திறந்து கிடக்கும் வாய் வழியாகச் செல்லத் தொடங்கிவிட்டது. உடம்பு செயல்படுவதற்கு வாட்டமாக இதுவரையிலும் மடங்கியும் நிமிர்ந்தும் எழுப்பி நிறுத்திய மூட்டுகள் இற்றுப்போய்த் தங்கள் இசிவை இழந்து விறைத்துக்கொண்டன. எலும்புகளோ, சுக்குபோலச் சுருங்கிப்போன வயதான உடம்பின் எளிய சுமையையும் தாங்க முடியாமல் வலுவிழந்து இளகிப் போயின. உயிரை அதுவரையிலும் இறுக்கமாகக் கட்டி வைத்திருந்த உடம்பின் கட்டுமானம், தளர்ந்து, கட்டுவிட்டுப் போயிற்று. அதுவரையிலும் விளைந்து கொண்டிருந்த சீழ்க்கை ஒலி இப்போது விளையாமல் போனதைப் பற்றிச் சுற்றி நின்றவர்கள் ஐயம் கொண்டார்கள்; கிடப்பில் கிடந்தவரின் மூக்கில் கைவைத்துப் பார்த்தார்கள்; ஐயம் தெளிந்தார்கள்; முடிந்தது கதை என்று முட்டாக்குப் போட்டு மூடினார்கள். காட்டுக்குக் கொண்டுபோய்ச் சுட்டார்கள் அல்லது இட்டார்கள். நீத்தார் கடன் என்று காக்கைக்குப் பிண்டம் வைத்துக் கணக்கை முடித்தார்கள். காக்கைக்கே (காப்பதற்கே) வந்தேன் என்றானாம் ஒருவன். ஆமாம், நீ காக்கைக்கே (காக்கைக்குப் பிண்டம் செலுத்தும்பொருட்டும் காக்கையால் கொத்தித் தின்னப்படும் பொருட்டுமே) வந்தாய் என்றானாம் மற்றொருவன். யாக்கையில் தொடங்கிக் காக்கையில் முடிகிறது எல்லாம்.

 

உடலின் நிலையற்ற தன்மை

உயிரைத் தனக்குள் யாத்துக்கொள்வதால் உடம்புக்குப் பெயர் யாக்கை என்றால், உயிரைத் தனக்குள் குடி இருத்திக் கொள்வதனால் உடம்புக்குக் கூடு என்றும் குடம்பை என்றும் பெயர்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு (குறள் 338)

என்பது வள்ளுவம். உடம்புக்கும் உயிருக்கும் இடையில் இருக்கிற தொடர்பு முட்டை ஓட்டுக்கும் அதன் உள்ளிருக்கும் பறவைக் குஞ்சுக்கும் இடையிலான தொடர்பைப் போன்றது. ஓடு பறவையை அடைத்து வைத்திருக்கிறது. பக்குவம் பெற்ற நாளில் ஓட்டுக் கூட்டை உடைத்துக்கொண்டு பறவைக் குஞ்சு வெளியேறுகிறது.

 

அஞ்சாமல் கூடுவிட்டு வா

“ஓட்டோடு கொண்டிருக்கும் பழக்கக் கதகதப்பு காரணமாக ஓட்டை உடைத்துப் போக மனமில்லாமல் ஒருவேளை என் ஆவி மறுகினாலும் மறுகும். அப்போது என் ஆத்தாள் அபிராமி! என் முன் வந்து, ‘உனக்கு நான் புகல்! அஞ்சாமல் கூடு விட்டு வா!’ என்று உன் வளைக்கை அமைத்து எனக்கு அருளி, என்னை விடுவி!” என்று அபிராமியை வேண்டுகிறார் அபிராமி பட்டர். அடைத்துக் கட்டுவதற்குப் பயன்படுவதால் உடம்பைப் பை என்று சொல்வது சித்தர் வழக்கம்.

காயப்பை ஒன்று; சரக்குப் பலஉள;

மாயப்பை ஒன்றுஉண்டு; மற்றுமோர் பைஉண்டு;

காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்

மாயப்பை மண்ணா மயங்கிய வாறே

(திருமந்திரம் 2122)

பலசரக்குக் கடையில் பலசரக்கு வாங்கிப் பையில் இட்டுக்கொண்டு வருகிறோம். வீட்டுக்கு வந்ததும் பையை அவிழ்த்துச் சரக்கைப் பிரிக்கிறோம்; பயன் கொள்கிறோம். ஆனால் நம்மில் ஒவ்வொருவரிடமும் காயப்பை என்று ஒரு பை இருக்கிறது. அதனுள் பலசரக்கும் இருக்கிறது. அந்தப் பையை நாம் பிரித்ததும் இல்லை; உள்ளிருக்கும் பலசரக்கைப் பயன்கொண்டதும் இல்லை. காயப்பை நம்மைப் பொறுத்தவரை உள்ளீடு ஒன்றுமில்லாத மாயப் பை. காயப் பைக்குள் இருப்பதையே அறியாதவர்களே! காயப் பை என்கிற மாயப் பைக்குள் மற்றுமொரு பை இருப்பதை அறிவீர்களா? அதனுள் ஒளிந்திருப்பது என்ன என்று ஏதேனும் குறிப்பு உண்டா உங்களுக்கு? ஐயன்மீர்! ஒருவேளை நீங்கள் இவ்வளவு காலம் தேடித் திரிந்தது அதுவாகவும் இருக்கலாம். பையிருப்பு என்ன என்பது பையைப் பிரித்துப் பார்த்தால்தானே தெரியும்? பிரித்துப் பார்ப்பதற்குள் காயப்பைக்குள் நின்ற கள்வன் போகும் காலம் வந்தது என்று புறப்பட்டுவிட்டால் என் செய்வீர்கள்? மாயப் பை என்று நினைத்தது பயன்கொள்ளப்படாமலே மண்ணாகிப் போகும். அறியும் வழி தெரியாமல் மயங்கி இருந்ததுதான் மிச்சம் என்றாகும்.

 

இது யார் வேலை?

மானுட வாழ்வு என்ன வாழ்வு என்றால், கட்டுமானத்துக்குள் சிக்குவதற்கும் கட்டவிழ்ந்து வெளியேறுவதற்கும் இடைப்பட்ட வாழ்வே மானுட வாழ்வு என்க. எனில் ஓர் உயிரைக் கட்டுமானத்துக்குள் பற்றுவிப்பதும் கட்டவிழ்த்து அதை முற்றுவிப்பதும் யார் வேலை?

உடல் என்னும் கட்டுமானத்துக்குள் உயிரைச் சிக்க வைக்கிறவன் இறைவன். கட்டுமானத்துக்குள் சிக்கிச் சீரழிந்து, தடுமாறி இறுதியில் அறிவன அறிந்து, தன் சீர் உணர்ந்து, பக்குவம் பெற்று வரும்போது, உயிரின் கட்டவிழ்த்து அதை முற்றுவிக்கிறவனும் இறைவன். உய்வு தேடி அலையும் உயிருக்கு உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி அதை உய்யக் கொண்டான் இறைவன். ‘வடசொல் மட்டுமே அவனை உணர்த்தும் என்பார் அறிக: திருமூலரின் தமிழ்ச் செய்கை தொடர்ந்து காண்போம்.

(தொடர்ந்து உயிர் வளர்ப்போம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19721681.ece

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தொடர், தொடர்ந்து பகிருங்கள் உயிரை வளர்த்து காக்கைக்கு  விடுகிறோம்....!   tw_blush:

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 2: தலைப்படும் மறைபொருள்

 

 
shutterstock59314528%20Convertedcol

தென்ன தலைப்படும் மறைபொருள்? புலனாகும் பொருள், புலனாகாப் பொருள் என்று பொருள் (substance) இரண்டு தன்மை உடையது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களில் ஏதோ ஒன்றின் வரம்பில் சிக்கிக் காட்சிப்படும் பருப்பொருள் புலனாகும் பொருள். ஐம்புலன் வரம்புக்கு அப்பாற்பட்டு, காட்சிக்கு அப்பால் மறைந்து நிற்கும் அருப்பொருள் புலனாகாப் பொருள். இந்தப் புலனாகாப் பொருள்தான் மறைபொருள் என்று வழங்கப்படுகிறது.

பார்த்த பொருளை இன்னதென்று வரையறை செய்துவிடலாம். ஆனால் பார்க்காத பொருளை, புலன்களுக்கும் புலன்கள் வழி வந்த அறிவுக்கும் அப்பால் நிற்கிற பொருளை, இன்னதென்று எப்படிச் சொல்வது? பெயரும் இல்லை, உருவமும் இல்லை என்று மொட்டையாக நிற்கிற ஒன்றுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்; எத்தகைய உருவம் வேண்டுமானாலும் கற்பித்துக் கொள்ளலாந்தானே?

ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றும்இல்லாற்கு ஆயிரம்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ

(திருவாசகம்,

திருத்தெள்ளேணம், 1)

என்று அவ்வாறு கற்பித்துக் கொள்வதற்கு உரிமமும் வழங்கிவிடுகிறார் மாணிக்கவாசகர். அது, தான் ஆகலாம்; தனது ஆகலாம்; தான்-நான் என்று வேறுபாடு காட்டாத அந்தரம் ஆகலாம். அது அப்பால். அதற்கும் அப்பால். அப்பாலுக்கும் அப்பால். அதைத் தேவே என்று சொன்னாலுந்தான் என்ன பிழை? சொல்கிறார் வள்ளலார்.

...தானாகித் தனதாகித் தான்-நான் காட்டா

அந்தரமாய், அப்பாலாய், அதற்குஅப் பாலாய்,

அப்பாலுக்கு அப்பாலாய் அமர்ந்த தேவே.

(திருவருட்பா, முதல் திருமுறை, மகாதேவமாலை, 21)

சிலர் கடவுள் என்றும் இறைவன் என்றும்கூட அதனைச் சொல்கிறார்கள். இன்னதென்று அறிந்திராத ஒன்றை என்ன பெயரிட்டு அழைப்பது என்கிற மயக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். பெயரில் என்ன இருக்கிறது? ஆனால் அதைப் பற்றிக்கொண்டால் பிழைக்கலாம், கடைத்தேறலாம் என்றெல்லாம் வேறு சொல்கிறார்களே? எனில், அது இருக்கிறதா இல்லையா? இருக்கிறதென்றால் என்ன தன்மையில் இருக்கிறது? என்ன செய்துகொண்டிருக்கிறது? அதன் இருப்புக்கு என்ன நோக்கம்? யார் கண்டார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்வது? கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!

...இன்றே என்னின் இன்றே ஆம்;

உளதுஎன்று உரைக்கின் உளதே ஆம்;

நன்றே நம்பி குடி வாழ்க்கை!

நமக்கிங்கு என்னோ பிழைப்பம்மா!

(கம்ப இராமாயணம், யுத்தகாண்டம், கடவுள் வாழ்த்து)

-என்கிறான் கம்பன். இல்லை என்றால் இல்லை; இருக்கிறது என்றால் இருக்கிறது. நாம் நம்புகிற ஒன்றின் நிலைமை இதுதான் என்றால், அதைப் பற்றிக்கொண்டு எவ்வாறு நாம் உய்வடைந்து பிழைக்க?

 

பார்க்கத் தவறிவிட்ட நுண்மை

இதுவரையிலும் அறிந்திராத மறைபொருள் என்றாலும் தேட்டத்தை நாம் விட்டுவிடுவதில்லை. தெரியாதவற்றைத் தேடுவதுதான் அறிவு. இன்னதென்று தெரியாத மறைபொருளை என்னவென்று தெரிந்துகொள்வது? தெரிந்து கொள்வதற்குப் புலன்கள் பயன்படாதென்றால் வேறு எதன் வழியாகத் தெளிந்துகொள்வது? தேடிக்கொண்டே இருக்கிறோம். மறைபொருளைத் தலைப்படுதல் என்பது இதுதான்.

பார்க்காத பொருள் மட்டுந்தான் மறைபொருள் என்றில்லை; நாளும் நாள் பார்த்துப் பழகிய பொருள்களிலும்கூட நாம் இதுவரை பார்க்கத் தவறிவிட்ட நுண்மை இருக்கிறது. வெளிப்படப் புலனாகும் பகுதி மட்டுமே ஒன்றைப் பொருள் ஆக்காது; அந்த ஒன்றுக்குள் வெளிப்படாமல் மறைந்திருக்கும் பக்கமும் சேர்ந்துதான் அதனைப் பொருள் ஆக்கும். மாமல்லபுரத்திலிருக்கும் வெண்ணெய் உருண்டைப் பாறை என்பது பாறையின் வெளிப்பட்டுத் தெரியும் உருண்டைப் பகுதி மட்டுமல்ல; வெளிப்படாமல், இன்னும் யாராலும் புரட்டிப் பார்க்கப்படாமல் இருக்கும் அதன் அடிப்பகுதியும்தான்; குடைந்து பார்க்கப்படாமல் இருக்கும் அதன் உட்பகுதியும்தான். எந்த ஒன்றையும் உள்ளும் புறமுமாக முற்றாகப் பார்க்காமல் ‘பார்த்துவிட்டேன், நான் அறிவேன்’ என்று குதிப்பது அறியாமை.

உண்மை என்பது உளதாகும் தன்மை. உள்ளவற்றை உள்ளவாறு அறிதலே உண்மையை அறிதல். பார்த்தவை மட்டுமே உண்மை; பார்க்காதவை எல்லாம் பொய் என்று போதிய விசாரணையின்றி மட்டையடியாகச் சொல்லிவிட முடியாது; பார்த்தவற்றில் சில பொய்யாகவும் இருக்கலாம்; பார்க்காதவற்றில் சில உண்மையாகவும் இருக்கலாம். திருமூலர் திருமந்திரம் இவ்வாறான உண்மைகளை விளக்கி அறிக்கை இட முயல்கிறது.

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை

மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை

ஆயத்தை அச்சிவன் தன்னை அகோசர

வீயத்தை முற்றும் விளக்கிஇட் டேனே. (திருமந்திரம், 90)

ஓர் அறிதல் செயல்பாட்டில் மூன்று கூறுகள் தொடர்புடையன: அறியப்படும் பொருள், அறிதல் என்னும் செயலின் விளைவாக வருகிற அறிவு, அறிகிறவன் ஆகியன. வடமொழியில் இவை மூன்றையும் முறையே ஞேயம், ஞானம், ஞாதுரு என்பார்கள். அறியப்படும் பொருளாக அமைவன எவை என்று பார்த்தால், மூலச் சடப்பொருளாகிய மாயை, அந்த மூலச் சடப்பொருளிலிருந்து பல்வேறு சில்லுண்டிப் பொருள்களாக விரிந்து உருவாகி இருக்கிற இந்த உலகம், இந்தப் பொருட்கூட்டத்தை இயக்கும் சதிக்கூட்டம், இவற்றுக்கெல்லாம் மேலாகப் பரம்பொருளாக, அப்பாலைப் பொருளாக நிற்கிற செம்பொருட் சிவம் ஆகியவை. இவை எல்லாவற்றையும் முற்றாக விளக்கி இடவே முயன்றேன் என்று திருமூலர் வாக்குமூலம் அளிக்கிறார்.

 

தன்னுள்ளே நின்று தான்

இவற்றில் மூலச் சடப்பொருளை, அதிலிருந்து முளைத்தெழுந்த பல்வேறு சில்லுண்டிப் பொருள்களை, நுண்மையாய் நின்று இவற்றையெல்லாம் இயக்கும் சத்திக் கூட்டத்தையும்கூட அறிந்து கொண்டுவிடலாம். ஆனால் அப்பாலைப் பொருளாய், மறைபொருளாய், செம்பொருளாய் நிற்கிற ஒன்றை அறிவது எப்படி என்ற திகைப்பு உருவாகுந்தான்.

தன்னுள்ளே உலகங்கள் எவையும் தந்துஅவை

தன்னுளே நின்று தான் அவற்றுளே தங்குவான்;

பின்னிலன்; முன்னிலன்; ஒருவன்; பேர்கிலன்;

தொன்னிலை ஒருவரால் துணியற் பாலதோ?

(கம்ப இராமாயணம், இரணியன் வதை: 59)

உலகங்கள் எல்லாவற்றையும் தந்தவன் அவன்; உலகங்கள் அவனுக்குள் தங்கியிருக்கின்றன; அவன் அவ்வுலகங்களுக்குள் தங்கியிருக்கிறான். அவனுக்கு முன்னும் பின்னும் யாருமில்லை. அவன் ஒருவன். எப்போதும் நிலை பெயராதவன். அவனுடைய தொன்மை நம்மால் அறியத்தக்கதா? என்று அந்த அப்பாலைப் பொருளை அறிகிற முயற்சியையே கைவிட்டு நம்பத் தலைப்பட்டுவிடுகிற பக்தி நெறியைப்போல அல்லாமல், அறிதல் முயற்சியை ஊக்குவிக்கிறார் திருமூலர்.

செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை;

வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை;

இல்லை எனினும் பெரிதுஉளன் எம்இறை;

நல்ல அரன்நெறி நாடுமின் நீரே. (திருமந்திரம், 2103)

அறியுங்கள். எவ்வளவு தொலைவுக்கு உங்கள் அறிவு செல்லுமோ செலுத்துங்கள். எட்டிய தொலைவு என்ன, உங்களுக்குக் கிட்டிய பொருள் என்ன என்பதை மெய்யாகவே விளக்குங்கள். மறைபொருள் என்று ஒன்று இல்லை என்னும் முடிவுக்கு நீங்கள் வந்தாலும், மறைபொருள் பெரிதும் உண்டு. அதை அறியமுடியாமல் போவதற்குக் காரணம், அதனுடைய இன்மை அன்று; அறியும் முயற்சியின் போதாமை. அறியும் முயற்சியைப் போதுமானதாக ஆக்கிக் கொள்வதற்குப் பொருத்தமான நெறியை நாடுங்கள் என்று முன்னுரைத்துக்கொண்டு நெறி சொல்கிறார் திருமூலர்.

(திருமூலரைத் தொடர்வோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19767809.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 03: மயக்கம் தீர்க்கும் திருமூலன்

 

 
psF115

லருக்கும் தேவாரம், திருவாசகம் தெரிந்திருக்கும் அளவிற்குத் திருமந்திரம் தெரிந்திருக்கும் என்பதற்கில்லை. சைவ வட்டாரம் அறிந்திருக்கலாமே ஒழிய, பொதுநிலையில் திருமந்திரம் பரவலாக அறியப்பட்ட நூல் என்று சொல்ல முடியாது. சைவ மரபுமேகூடத் தேவாரம், திருவாசகம், பெரிய புராணத்தைப் போற்றிய அளவிற்குத் திருமந்திரத்தைப் போற்றிற்று என்று சொல்லத் தயக்கமாகவே உள்ளது. நல்லது. என்ன வகையான நூல் இந்தத் திருமந்திரம்?

சைவத் திருமுறை நூல்கள் 12-ல், பத்தாம் திருமுறையாக வருகிறது திருமூலர் எழுதிய திருமந்திரம். 11-ம் திருமுறை 12 பேர் தனித்தனியாகப் பாடிய, திருமுருகாற்றுப்படையை உள்ளிட்ட, சிற்றிலக்கிய வகை நூல்களின் தொகுப்பாக, 12-ம் திருமுறை திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணமாகப் பன்னிரு திருமுறை வைப்பு நிறைகிறது.

பத்தாம் திருமுறையாகிய திருமூலர் திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது. திருமந்திரத்தை அறியாதவர்களும்கூடத் திருமந்திரப் பாடல் வரிகள் சிலவற்றை அறிந்திருப்பார்கள். அவற்றில் சில:

“ஒன்றே குலமும் ஒருவனே தேவன்,” “அன்பே சிவம்,” “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்,” “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே,” “உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்,” “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்,” “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”.

 

கலக உள்ளடக்கம்

இந்த வரிகளில் ஒரு கலக முழக்கம் உள்ளொடுங்கியிருப்பதைக் காண்க. குலங்களும் கடவுளரும் தர வரிசைப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை ஒன்றாக்கியதும், இறைவனுக்கு வடிவங்கள் வழங்கிப் பூசித்து வரும் நிலையில் பூசிக்க வகையற்ற அன்பு என்னும் உள்ளத்துணர்வைக் கடவுளாக்கியதும், வரிசை முறை பார்த்தும் வாங்குகிறவர்களின் கை பார்த்துமே வழங்கி வந்த நிலையில் வரிசைமுறை பாராமல் வையத்தில் உள்ளோர் எல்லாம் வந்து வாங்கிக் கொள்க என்று கடை திறந்ததும், என்னை நன்றாகப் படைத்த இறைவன் தன்னை நன்றாகப் படைப்பதற்குத் தமிழையே தேர்ந்துகொண்டான் என்று தமிழை நிறுத்தியதும், உடம்பும் பொய், உடம்பு வாழும் உலகமும் பொய் என்று வழங்கப்பட்ட நிலையில் உடம்பை உண்மை என்றதும் உடம்பு உயிரை வளர்க்கும் கருவி என்றதும் நிறுவப்பட்ட மரபுக்கு மாற்றுச் சொல்லும் முயற்சி அல்லவா?

திருமூலர் என்கிற ஆன்மிக அடியாரின் இந்த வரிகளை மக்கள் நாவில் புழங்கும் வரிகளாகப் பரப்பியவர்கள், மரபை மறுதலித்த சுயமரியாதை இயக்கத்தினரும் அவர்களைப் போன்ற பிறரும் என்பது, இந்த வரிகளில் இருக்கும் கலக உள்ளடக்கத்துக்குச் சாட்சி அல்லவா? மரபார்ந்த சைவம் திருமந்திரத்தை ஒரு திருமுறையாக அங்கீகரித்தாலும் பெரிதாகக் கொண்டாடாமல் விட்டதற்கும், திருமந்திரத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்ததற்கும் இவை போதுமான ஆதாரங்கள் இல்லையா?

அப்படியென்றால், திருமந்திரம் எதைப் பேசுகிறது? திருமூலர் வழங்கும் நெறி என்ன? குறிப்பிட்ட நெறி ஒன்றுக்கு உடன்பட்டு அதன் வழியாக உயிரை ஒழுங்குபடுத்திச் செலுத்துவதா? அல்லது நிறுவப்பட்டுவிட்டவற்றுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டுவதா? எது திருமூலரின் மையக் கருதுகோள்?

 

பக்தி நூல் அல்ல

இறைவனுக்குப் போற்றி பாடுகிற பக்திப் பனுவல்களோடு சேர்த்து வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் திருமந்திரம் பக்திப் பனுவல் அல்ல. அது மெய்யியல் நூல். உண்மையை அறிவதும் அடைவதும் எப்படி என்பதுதான் திருமந்திரம் கருதும் கேள்வி. உண்மையைக் குறிப்பிட்ட நெறி ஒன்றின் வழியாக அறியலாம், அடையலாம் என்றால், மெத்தச் சரி. திருமூலருக்கு மறுப்பேதும் இல்லை.

பாதை இருக்கிறது; பாதைக்குப் பக்கவாட்டிலோ சில்லென்று பூத்த சிறுநெருஞ்சில் காடு இருக்கிறது. பாதை பிறழாமல் நடப்பீர்கள் என்றால் பாதங்களில், நெருஞ்சில் முள் பாயாது. பாதை பிறழ்ந்தால் பாயும். எனவே பாதை பிறழாது நடவுங்கள்.

நெறியைப் படைத்தான்;

நெருஞ்சில் படைத்தான்!

நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!

நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு

நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)

‘இதுதான் பாதை, இதுதான் பயணம்’ என்று கொள்கை வகுத்துக்கொண்ட பின்னால் பாதை மாறக் கூடாது. மாறினால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பாயுந்தானே?

சரி. இதுவரையில் பாதைக்குத் தொந்தரவில்லாமல் பக்கவாட்டில் பூத்துக் கிடந்த நெருஞ்சில் முள் இப்போது பாதையிலேயே படரத் தொடங்கிவிட்டது என்றாலோ பாதையைப் பயன்படுத்தவே முடியாதபடி முற்றாக விழுங்கிவிட்டது என்றாலோ ஒன்று முள்ளை வெட்டிப் போட்டுப் பாதையைப் பண்படுத்த வேண்டும். அல்லது இதுவரை பயணித்து வந்த பாதை பண்படாப் பாதை, இனிப் பயன்படாப் பாதை என்று பாதையைக் கைவிட்டுவிட வேண்டும். புத்தியுள்ளவர்கள் செய்யக்கூடியன இவைதாமே?

அவற்றையே செய்கிறார் திருமூலர். அப்படியான முன்னெடுப்போடு சொல்லப்பட்டவைதாம் முன்னர் சொன்ன கலக வரிகள். திருமூலர் தன்னியல்பில் உடன்பாட்டாளர்; உடன்பட வாய்ப்பில்லை என்றால் கொஞ்சமும் தயங்காத மறுதலிப்பாளர்.

திருமூலரின் உடன்பாட்டைக் கவனியுங்கள்:

ஒன்றுஅவன் தானே;

இரண்டுஅவன் இன்னருள்;

நின்றனன் மூன்றினுள்;

நான்கு உணர்ந் தான்; ஐந்து

வென்றனன்; ஆறு விரிந்தனன்;

ஏழுஉம்பர்ச்சென்றனன்;

தான்இருந் தான் உணர்ந்து எட்டே.

(திருமந்திரம், 1)

அவன் ஒன்று. அவனோடு பிரிப்பற நிற்கும் சத்தியாகிய அவனது அருள் தனிக் கணக்கென்றால் இரண்டு. படைத்தல், காத்தல், அழித்தல் என்று அவன் நிற்கும் நிலை மூன்று; அறம், பொருள், இன்பம், வீடு என்று அவன் உணர்த்துவன நான்கு; புலன்கள் ஐந்தையும் வென்றவன்; மந்திரமாக, பதமாக, வன்னமாக, புவனமாக, தத்துவமாக, கலையாக என்று ஆறாகவும் விரிந்து நின்றவன்; பிரமவுலகம், விட்டுணுவுலகம், உருத்திரவுலகம், மகேசுரவுலகம், சதாசிவவுலகம், சத்தியுலகம், சிவவுலகம் என்று ஏழு உலகங்களையும் தாண்டி அப்பாலே சென்றவன்; அவனை உணர்ந்து எட்டு(க) என்று திருமூலர் இறைவனை ‘எண்ணிப்’ பாடுகிறார்.

‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் ‘ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசைச் சுரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்’ என்னும் கண்ணதாசன் பாடலை திருமந்திரத்தின் இந்த முதற் பாடலுடன் ஒப்பிட்டுக்கொள்வார் ஒப்பிட்டுக் கொள்க.

எனவே, திருமூலர் முற்றாக மரபை மறுத்தவர் அல்லர். கலகத்தையே நெறியாகக் கொண்டவரும் அல்லர். மரபார்ந்த நெறிகளையே முன்வைக்க விரும்புகிறவர் அவர். அவற்றில் செல்ல முடிந்தவர்கள் செல்க. அதுவே நல்லது. ஏனெனில் மரபார்ந்த நெறிகள் ராசபாட்டைகள். நீங்கள் அடைய விரும்புகிற பதவிகளுக்கு அவை உங்களை இட்டுச் செல்லும். என்றாலும் நெறிகள் உங்களை அடிமைப்படுத்தும் பொறிகள் ஆகுமானால், நெறிகளை விட்டு நீங்குக. உங்கள் உள்ளத்தின்வழிச் செல்க என்று ஆபத்துக் கால ஒற்றையடிப் பாதை ஒன்றையும் காட்டி வைக்கிறார்.

ஐய மாக்கடல் ஆழ்ந்த உயிர்க்கெலாம்

கையில் ஆமல கம்எனக் காட்டுவான்

மையல் தீர்திரு மந்திரம் செப்பிய

செய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம்

-என்கிறது ‘பதி பசு பாச’ விளக்கம் என்னும் நூல். சந்தேகக் கடலில் ஆழ்ந்த உயிர்களுக்கு எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல உள்ளது விளக்குவான் —மயக்கத்தைத் தீர்க்கின்ற திருமந்திரத்தைச் செய்த திருமூலன்.

(அவனைச் சிந்திக்கலாம்.)

http://tamil.thehindu.com/society/spirituality/article19796137.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 04: அறிவு ஒன்று அநாதியே

 

 
Meditation

‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ என்று திருத்தொண்டத்தொகையில் திருமூலரைச் சிறப்பிக்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார். யார் இந்தத் திருமூலர்?

தமிழ்ச் சைவப் பக்தி மரபு கருதுகிற 63 நாயன்மார்களுள் ஒருவர். ‘பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமாகிய’ இறைவனின் இருப்பிடம் திருக்கயிலை. அங்கே இறைவனின் அருகிருந்து அருள் பெற்று வாழ்ந்திருந்த யோகியார் அவர். கூடுவிட்டுக் கூடு பாய்தல் முதலிய சித்திகள் கைவரப் பெற்றவர். திருக்கயிலாயத்தைவிட்டு நீங்கித் தமிழ் வளர்க்கப் பொதிய மலை சேர்ந்த அகத்தியரின் நண்பர். அகத்தியரைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் வட கயிலை நீங்கித் தென் பொதியை நோக்கிப் பயணம் மேற்கொள்கிறார். இடைப்பட்ட பல்வேறு சிவத்தலங்களில் வழிபட்டவாறே செல்கிறார்.

தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தனைக் கண்டு மகிழ்ந்து, திருவாவடுதுறைக்குப் போய் ஆவடு தண் துறை அரனை வணங்கிப் புறப்படும்போது காவிரிக் கரையோரக் காட்டுப்புறத்தில் ஒரு காட்சியைக் காண்கிறார்: மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூலன் என்னும் இடையன் செத்துக் கிடக்கிறான். அவன் மேய்த்து வந்த மாடுகள் அவன் உடலைச் சுற்றி அழுதுகொண்டு நிற்கின்றன. அழுதுகொண்டிருக்கும் மாடுகளின் துயரைத் தீர்க்க நினைக்கிறார் கயிலை யோகியார். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை அறிந்தவர். தன் உடலை விட்டு செத்துக் கிடக்கும் மூலன் உடலுக்குள் பாய்ந்து திருமூலராக எழுகிறார். மாடுகள் மகிழ்கின்றன. அவற்றை மேய்த்து ஊருக்குள் செலுத்துகிறார்.

மேய்க்கப் போன கணவன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று தேடி வருகிறாள் மூலனின் மனைவி. திருமூலர் இருக்குமிடம் தேடி வந்து, ‘வீட்டுக்கு வராமல் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?’ என்று அவரைத் தொட்டாள். ‘உனக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று அவர் விலகினார். அங்கிருந்த பொதுமடம் ஒன்றில் யோகத்தில் அமர்ந்தார். மனைவி ஊர் ஆட்களைத் திரட்டிக்கொண்டு வந்தாள். திருமூலரின் நிலை பார்த்த அவர்கள் ‘இவர் முற்றும் உணர்ந்து பற்றறுத்து விட்டவர்’ என்று அவளை அழைத்துக்கொண்டு அகன்றனர்.

 

இடையன் மூலனின் உடலில்

காட்டுப்புறத்தில் தான் விட்டுவந்த கயிலை யோகியின் உடலைத் தேடிப் போனார் திருமூலர். உடலைக் காணவில்லை.

தண்நிலவார் சடையார், தாம் தந்தஆ கமப் பொருளை

மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக்

கண்ணியஅத் திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க,

எண்நிறைந்த உணர்வுஉடையார், ஈசர்அருள் எனஉணர்ந்தார்.

(பெரிய புராணம், திருமூலதேவ நாயனார் புராணம், 23)

சடை புனைந்து அதில் நிலவணிந்த இறைவன், மெய்ப்பொருளை ஆகமமாக வழங்கியிருந்தான். அதுவரையில் விண்ணுக்கும் விண்மொழிக்கும் மட்டும் உரியதாக இருந்து வந்த ஆகமப் பொருளை, மண்ணுக்கும் மண்மொழியான தமிழுக்கும் திருமூலரைக்கொண்டு எட்டச் செய்ய வேண்டும் என்று திருவுளம் கொண்டான். திருமூலர் தன்னுடைய பழைய உடலுக்குள் பாய்ந்துவிட்டால் அகத்தியரைக் கண்டு குலாவிவிட்டுத் திருக்கயிலை திரும்பிவிடுவார். அப்படித் திரும்பிவிட்டால் ஆகமப் பொருள் மண்ணில் வழங்காமல் போய்விடும். ஆகவே, இறைவன் கயிலை யோகியாரின் உடலை மறைத்துவிட்டான். இது இறைவனின் திருவுளம் என்று தெளிந்த திருமூலர் இடையன் மூலனின் உடலில் திருமூலராகவே தொடர்ந்தார்.

 

திருமூலர் குறித்த இன்னொரு கதை

திருவாவடுதுறைக்குச் சென்றார். அங்கே ஓர் அரச மரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார். ‘ஒன்று அவன்தானே’ என்று தொடங்கி ஆண்டுக்கு ஒன்றாக மூவாயிரம் பாடல்கள் எழுதித் திருமந்திரமாலை ஆக்கி இறைவனுக்குப் புனைந்தார்; பின் இறைவன் திருவடி அணைந்தார் என்று திருமூலதேவ நாயனார் புராணம் சொல்கிறது.

இது இருக்க, அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம் 360 என்னும் நூலில் திருமூலரைப் பற்றி வேறொரு கதை வழங்கப்படுகிறது. திருமூலர் ஆகாயவெளியில் வந்துகொண்டிருக்கும்போது ஓர் இளவரசி மணமான மறுநாளே தன் கணவனைப் பறிகொடுத்து,

‘தச்சன் அடித்த தளம் பெரிய கட்டிலிலே

ஒக்க நெருங்கி ஒரு நாளும் இருக்கலையே;

விதி வந்தால் என்ன கொஞ்சம் விலகி வரலாகாதா?

சாவு வந்தால் என்ன கொஞ்சம் தள்ளி வரலாகாதா?’

என்று கையறு நிலையில் புலம்பிக்கொண்டிருந்தாள். அவளது துயரத்தைக் கண்டு வருந்திய திருமூலர் அவளது துயரத்தைத் தீர்க்க எண்ணித் தன் உடலை ஒளித்துவைத்துவிட்டு இறந்துகிடந்த அவளது கணவனின் உடலில் புகுந்து எழ, அனைவரும் மகிழ, கணவனும் மனைவியுமாக இன்புற்று இருந்தனர். ஒரு நாள் மோக வேகத்தில் கணவன் உண்மையைச் சொல்லிவிட, விட்டால் இவன் பழைய உடம்புக்குத் திரும்பி நம்மைவிட்டு நீங்கிப் போய்விடுவானே என்ற பதற்றத்தில் இளவரசி ஆட்களை விட்டுத் திருமூலரின் மூலப் பூத உடலைக் கண்டுபிடித்து அழித்துவிடுகிறாள். மூலப் பூத உடலைத் தேடி வந்த திருமூலர் அதைக் காணாத நிலையில், வேறு வழியில்லாமல், தான் அப்போது தங்கியிருந்த உடலிலேயே தங்கித் தவத்தைத் தொடர்ந்தார்.

 

ஒளி உடம்பை அடைவதே உயர்நிலை

இரண்டு கதைகளுக்கும் பொதுக்கூறு கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்னும் சித்தி. அதைக் குறித்துத் திருமூலர் ஏதேனும் கூறியிருக்கிறாரா என்று பார்த்தால் ஒன்றுமில்லை. திருமந்திரத்தில் ‘அட்டமாசித்தி’ என்னும் தலைப்பின்கீழ் வரும் பாடல்கள் சிலவற்றில் பரகாயம் மேவுதல் என்று குறிக்கிறார் திருமூலர்.

காயாதி பூதம் கலைகால மாயையில்

ஆயாது அகல அறிவுஒன்று அனாதியே

ஓயாப் பதிஅதன் உண்மையைக் கூடினால்

வீயாப் பரகாயம் மேவலும் ஆமே

(திருமந்திரம் 643)

‘மாயை’ என்பது ஆகாயம் முதலிய பூதங்களையும் கலை, காலம் முதலியவற்றையும் உள்ளடக்கிய சடப்பொருள். உலகமோ சடப்பொருளாகிய இந்த மாயையின் விளைபொருள். ஆகவே தோன்றி, நின்று, அழிவது; நிலையில்லாதது. நிலையில்லாத இந்த உலகத்தின் தன்மையை ஆராயாமல், அதையே நிலை என்று நம்பி, அதிலேயே அறிவு ஒன்றித் தோய்ந்து கிடக்கிறது அனாதியாகிய உயிர். சார்ந்து நிற்கத்தக்க பொருள் நிலையற்றதாகிய இந்த உலகம் அன்று; உயிரின் ஈடேற்றத்துக்காக இடையறாது இயங்கிக்கொண்டிருக்கிற இறைவன்தான்.

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு

(குறள் 351)

நிலையில்லாதவற்றை நிலையானவை என்று நம்புகிற அறியாமைதான் எல்லாச் சிடுக்குகளுக்கும் காரணமென்று வள்ளுவரும் சொல்கிறார் இல்லையா? எனவே, நிலையில்லாத பொய்ப்பொருளைவிட்டு நிலையான மெய்ப்பொருளில் தோயும்போது அழியாத ஒளியுடம்பை அடையலாம் என்பது திருமூலர் கருத்து. வள்ளலார் இந்தக் கருதுகோளை எடுத்துக்கொண்டு,

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி

உற்றேன்; எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்

பெற்றேன்; உயர்நிலை பெற்றேன்; உலகில் பிறநிலையைப்

பற்றேன்; சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினேனே

(திருவருட்பா, ஆறாம் திருமுறை, 4745)

என்று மகிழ்கிறார். வள்ளலார் பேசுகிற கல்வி இன்றைய கல்விபோல அவை நடுவே ‘நீட்’டோலை வாசிக்கும் கல்வி அல்ல; ‘தேர்வானவன் வா! தேராதவன் சா!’ என்கிற சாகத் தூண்டுகிற தம்பட்டக் கல்வி அல்ல; எல்லா உயிரும் தன் உயிர் எனவே நினைந்து இரங்கும் கருணை நெறியான சாகாக் கல்வி. அதைக் கற்றார் உயர்நிலை பெற்றார்; ஒளி உடம்பு உற்றார்.

ஒளி உடம்பை அடைவதுதான் பரகாயப் பிரவேசம்—கூடுவிட்டுக் கூடு பாய்தல். இதை அடிப்படையாக வைத்துக் கயிலை யோகியார் இடையன் மூலன் உடம்புக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார் என்று கதை செய்துவிட்டார்கள். மேய்ப்பனின் சாவுக்காக வருந்திய ஐந்தறிவு மாடுகளின் துயரைத் தீர்ப்பதற்காகக் கூடுவிட்டுக் கூடு பாயலாம் என்றால், கணவனின் சாவுக்காக வருந்திய ஆறறிவு இளவரசியின் துயரைத் தீர்ப்பதற்காக ஏன் கூடுவிட்டுக் கூடு பாயக் கூடாது என்று யாரோ கருதியதன் விளைவுதான் அதே பாணியிலான மற்றொரு கதை.

மேலும், அகத்தியரைச் சந்திக்கவே தான் கயிலையிலிருந்து தமிழகம் வந்ததாகவோ வரும் வழியில் இறந்து கிடந்த மூலனின் உடம்பில் புகுந்ததாகவோ திருமந்திரத்தின் எந்தப் பகுதியிலும் திருமூலர் குறிப்பிடவில்லை.

மாடு மேய்க்கிற இடையர்கள் ஞானம் பெற்று இடைக்காட்டுச் சித்தர்கள் ஆகமாட்டார்களா? திருமந்திரம் போன்ற மூவாயிரம் பாடல்கொண்ட நெடிய ‘நீட்’டோலை வாசிக்க மாட்டார்களா? ஞானத்தின் அளவுகோல் எப்போதும் வடக்கையே சார்ந்ததா? ஞானிகள் எப்போதும் வடவர்களா? வடக்கிருந்து வரும் ஞானிகள் இறைவனை நன்றாகத் தமிழ் செய்வார்களா என்று வெட்டியாக விசாரிப்பதை விட்டுவிட்டு, ‘யாவர்க்குமாம், யாவர்க்குமாம்’ என்று தென்னன் பெருந்துறையானாகிய திருமூலன் சமூகத்தில் உள்ள யாவர்க்கும் செலுத்திய அன்பை விசாரிப்போம்.

(விசாரணை தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19838491.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 05: பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்

 

 
Meditation

னிதப் பற்று வரவுகள் எல்லாம் வங்கிகளில் வைப்புத் தொகைகளாக இருக்கின்றன; பங்கு முதலீடுகளாக இருக்கின்றன; நகர்களுக்கு மிக அருகில், உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளுக்குப் பக்கத்தில், அதிசயிக்கத்தக்க விலையில் கால் துண்டம், காலரைக்கால் துண்டமென்று வாங்கிச் சேகரித்த மனைத் துண்டங்களாக இருக்கின்றன. வாழ்க்கை முழுவதும் பற்றுக்கோடுகளைத் தேடியே களைத்துப் போகிறோமே என்று வருந்த வேண்டாம். அதனால் ஒன்றும் குற்றமில்லை. களைத்துப் போனவர்களைப் புத்தாக்கம் செய்து பந்தயக் குதிரைகளாக ஆக்கி மீண்டும் களத்தில் இறக்கிவிடக் கைதேர்ந்த சாமியார்கள் இருக்கிறார்கள். கட்டணம் பெற்றுக்கொண்டு வாழ்க்கையைக் கற்பிப்பார்கள். முக்கால் துட்டு கூடுதலாய்க் கொடுத்தாலோ முக்தியே கொடுப்பார்கள்.

நல்லது. நாம் பற்றி வைத்துக்கொண்டிருப்பவை நமக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கக்கூடியவையா? கதை முடிய இன்னும் காலம் இருக்கிறது; வாழும் நாளுக்கு வழிகோலிக் கொள்வோம் என்று கவனமில்லாமல் இருக்கும்போது ஒரு காலையில் சடக்கென்று வந்து சொல்லிக்கொள்ளாமல் கணக்கை முடித்துவிடுகிறது சாவு.

அடப்பண்ணி வைத்தார்;

அடிசிலை உண்டார்;

மடக்கொடி யாரோடு

மந்தணம் கொண்டார்;

இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்;

கிடக்கப் படுத்தார்; கிடந்து ஒழிந்தாரே! (திருமந்திரம் 148)

அருமையாய்ச் சமைத்து வைத்துவிட்டுச் சாப்பிடக் கூப்பிட்டாள் மனைவி. வந்தவர் உண்டார். மனைவியைக் கமுக்கமாகக் கொஞ்சினார். ‘இடப் பக்கம் லேசாக வலிக்கிறது’ என்றார். ‘வாய்வுப் பிடிப்பாக இருக்கும்; சற்றுப் படுத்துக்கொள்ளுங்கள்’ என்றாள் மனைவி. படுத்தார். போய்விட்டார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இதுதான் கதி.

நாட்டுக்கு நாயகன்;

நம்ஊர்த் தலைமகன்;

காட்டுச் சிவிகைஒன்று

ஏறிக் கடைமுறை

நாட்டார்கள் பின்செல்ல

முன்னே பறைகொட்ட

நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. (திருமந்திரம் 153)

இந்த நாட்டுக்கே நாயகன்; நம் ஊரின் தலைமகன்; காலால் நடந்து அறியாதவன். ஏறினால் பல்லக்கு; இறங்கினால் அரசுக் கட்டில். புடை சூழ வருவதற்குப் படை உண்டு. வருகை அறிவிக்க முன்னே முரசொலிக்கும். போகும் வழியெல்லாம் பூச்சொரிந்து வரவேற்பார்கள். முன்னறிவிப்பில்லாமல் எங்கேயும் போகாத அவனுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் சாவு வந்தது. கிளம்பினான். நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஒன்றுமில்லை: இப்போதும் புடைசூழ ஆட்கள் வந்தார்கள்; போகும் வழியெல்லாம் பூச்சொரிந்தார்கள். மாற்றம் சிலவற்றில்தான்: பல்லக்கு, பாடை ஆகிவிட்டது; முரசு, பறை ஆகிவிட்டது. அவ்வளவே.

 

வியப்புக்குரியது எது?

‘உலகத்தில் மிகவும் வியப்புக்கு உரியது எது?’ என்ற கேட்கப்பட்டபோது தருமபுத்திரன் சொன்னான்: ‘ஒவ்வொரு நாளும் சாவைப் பார்க்கிறோம்; ஆனால், அந்தச் சாவு நமக்கும் நிகழும் என்ற நினைப்பே இல்லாமல் திரிகிறோமே, அது!’

அடையாளம் சேகரிப்பதற்காக நம்மைத் தொலைக்கிறோம்; நம்மைத் தொலைத்துச் சேகரித்த அடையாளத்தையும் பின்னர் இழக்கிறோம். இந்த நிலையாமைக் கருத்தியலைத் திருமூலர் சித்திரித்துக் காட்டுகிறார்:

ஊர்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு,

பேரினை நீக்கிப் பிணம்

என்று பேர்இட்டு,

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு,

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே. (திருமந்திரம் 145)

ஒரு பிள்ளை பிறந்தது. தங்கள் வாழ்வின் கனியாக வந்த பிள்ளைக்கு மேனி வலிக்காமல் மெத்தென்ற பஞ்சணையில் பூ இட்டுப் பூமேல் பிள்ளையை இட்டார்கள் பெற்றவர்கள். உலகுக்குப் புதிதாய் வந்திருக்கும் பிள்ளையைப் பார்க்கவும், ‘என் குலம்’ என்று அந்தப் பிள்ளையைத் தன்னுடன் ஒட்டவும் ஊரே ஒன்றுகூடியது. மந்தையில் வாழப்போகிற மாட்டுக்குத் தோலில் சூட்டுக்கோல் அடையாளமோ கொம்புகளில் வண்ணப்பூச்சு அடையாளமோ வைப்பதில்லையா? அதைப் போல மனிதப் பெருமந்தைக்குள் வாழப்போகும் அந்தப் பிள்ளைக்கு அடையாளம் கற்பித்து ஊர் ஒரு பெயர் இட்டது. ஊர் தந்த அடையாளத்தைப் பேணிக்கொண்டே அந்தப் பிள்ளை வளர்ந்தது; அடையாளத்தை நிலைநிறுத்தலே வாழ்வின் நோக்கம் என்று வாழ்ந்தது; கடைசியில் ஒரு நாள் ஊர் தந்த அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் கைவிட்டு மாண்டது. பிறந்த அன்று ஒன்றுகூடி அடையாளம் தந்த ஊர் இறந்த அன்றும் ஒன்றுகூடியது. தன் குலக் கொழுந்து ஒன்றை இழந்ததற்காக ‘ஓ’வென்று அழுதது. தான் தந்த தனி அடையாளப் பெயரைத் தானே நீக்கிப் பிணம் என்று பொதுப் பெயர் இட்டது. பிணத்தைச் சூரைப் புதர் மண்டிக் கிடக்கிற முள்ளுக் காட்டுக்குக் கொண்டு போய்ச் சுட்டது. பின்னர், நீரினில் முழுகிக் காலஞ்சென்ற குலக்கொழுந்தின் நினைவை விட்டது. அவ்வளவுதான். புடவை கிழிந்தது, போயிற்று வாழ்க்கை. ஒட்டி இருந்தவர்களுக்கு மட்டும் கூடுதலாய்க் கொஞ்ச நாள் வலிக்கும். அழுது தீர்த்துக்கொள்வார்கள்.

 

அழுவது பயன் தருமா?

அழுதால் சரியாகப் போயிற்றா? உலகத்து இயற்கை என்னவென்று அறியாமல் அழுவது பயன் தருமா? உலக இயற்கை சொல்கிறது குண்டலகேசிப் பாடல் ஒன்று:

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்

மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி

நாளும் நாள் சாகின்றோமால் நமக்குநாம் அழாதது என்னோ?

பச்சிளம் குழந்தையராக இருந்தோம். அந்தக் குழந்தைமை செத்துவிட்டது. குழந்தைமையைக் கொன்றுதான் பிள்ளையரானோம். அந்தப் பிள்ளைமை செத்துவிட்டது. பிள்ளைமையைக் கொன்றுதான் காளையரானோம். காளைத் தன்மை செத்துவிட்டது; காமவேகம் ஊட்டுகிற இளமையும் செத்துவிட்டது. இளமையைக் கொன்று மூத்தோம்; காமத்தைக் கொன்று கனிந்தோம். இதுதான் இயல்பு. பழையது சாகும். பழையதன் சாவில் புதியது பிறக்கும். புதியதும் சாகும்-குருத்தையும் குலையையும் ஈன்று வாழை தான் சாவதைப் போல. குருத்திலிருந்து வாழை, மீண்டும் வாழையிலிருந்து குருத்து என்று இது ஒரு சுழற்சி. சாவதற்காக அழுவதென்றால் அழுவது மட்டுமே வாழ்வாக இருக்கும்-ஏனென்றால், ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையாமையை நாம் உணர்ந்திருக்கிறோமா? இழப்பு நேரும்போது மட்டும் உணர்கிறோம். பின்னர், மீண்டும் பற்றுக் காட்டுக்குள் தொலைந்துபோகிறோம். என்றால் நிலையாமையை விட்டுத் தொலையாமைக்குப் போகவே முடியாதா? பற்றிலும் பதற்றத்திலும் நம் வாழ்வு தொலைந்துகொண்டே இருக்க வேண்டியதுதானா? பற்றுதான் கேடா? பற்றை விட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

பற்றுதல் நம் இயல்பு. விட்டுவிட முடியாது. என்றால் என்ன செய்வது? பற்றும் பொருளை மாற்றிக்கொண்டுவிட வேண்டியதுதான். எதைவிட்டு எதைப் பற்றுவது?

பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்;

முற்றுஅது எல்லாம் முதல்வன் அருள்பெறில்;

கிற்ற விரகில் கிளர்ஒளி வானவர்

கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. (திருமந்திரம் 298)

எதையேனும் பற்ற வேண்டும் என்றால் பரமனைப் பற்றுங்கள். முதல்வன் அருள்பெற்றால் எல்லாமே முற்றும். இதைக் கற்றவர்கள் தொலையாத பேரின்பம் பெற்றார்கள்.

இந்தப் பற்று நெறிதான் சமயங்கள் சொல்லித் தருகிற பக்திநெறி. வசப்படாமல் இருந்ததெல்லாம்கூடப் பற்றப் பற்ற வசப்படும்.

(பற்றுவோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19917538.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 06: ஆசை விடவிட ஆனந்தம்

 

 
Thirumanthiram%20Image

ற்றுதல் ‘பற்றி’ ஆகாமல் ‘பத்தி’ ஆனது எப்படி என்றால், குற்றம் குத்தம் ஆவதில்லையா? கற்றாழை கத்தாழை ஆவதில்லையா? பற்றுப் பாத்திரம் பத்துப் பாத்திரம் ஆவதில்லையா? அப்படித்தான் பற்று ‘பத்தி’ ஆகிறது.

...பத்துஉடையீர்! ஈசன் பழஅடியீர்! பாங்கு உடையீர்!

புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ?...

(திருவாசகம், திருவெம்பாவை, 3)

[பற்றுடையவர்களே! பழைய பரமசிவனின் பழம்பெரும் தொண்டர்களே! பாங்கானவர்களே! சிவக் கழகத்தில் புதிதாக உறுப்பினர் அட்டை பெற்றுச் சேர்ந்திருக்கும் புதிய தொண்டர்கள் நாங்கள்! புரியாமல் செய்பவற்றைப் பொறுத்துக்கொண்டால் ஆகாதோ?]

...பைங்கண்ஆனைக் கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச்

செங்கண்ஆளி இட்டுஇறைஞ்சும் சிங்கவேள் குன்றமே!

(திவ்வியப் பிரபந்தம், பெரிய திருமொழி, ஏழாம் பத்து, 1)

[சிவந்த கண்களை உடைய சிங்கங்கள், குளிர்ந்த கண்களை உடைய யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைக் கொண்டுவந்து படையலாக இட்டுப் பத்திமையோடு இறைஞ்சுகின்ற இடம் சிங்கவேள் குன்றம் என்கிற அகோபிலம்!]

மணிவாசகரும் திருமங்கையாழ்வாரும் பத்திபற்றிப் பாடுவதைப் பற்றிக்கொள்க.

பற்றுவது பத்தி என்றால், பற்றவைக்கிறவர் பத்தர். பொற்கொல்லருக்குப் பத்தர் என்று ஒரு பெயர். பொன்னைப் பற்றவைப்பதால் பத்தர். பொன்னைப் பொன்னில் பற்றவைக்கிறவர்கள் பொற்பத்தர்கள் என்றால், உயிர்ப் பொருளை இறைப் பொருளில் பற்றவைக்கிறவர்கள் இறைப் பத்தர்கள். வேறுபாடு ஒன்றுதான்: பொற்பத்தர்கள் பொன்னைப் பற்றவைக்கும்போது ‘ஆசு’ கொடுத்துப் பற்றவைப்பார்கள் (soldering). இறைப் பத்தர்கள் உயிரைப் பற்றவைக்கும்போது ‘ஆசு’ அறுத்துப் பற்றவைப்பார்கள்.

‘ஆசு’ என்பது உலோகங்களைப் பொருத்துவதற்காக இடையில் இடும் பொடி. பற்றவைக்கிற ஆசு என்பதால் பற்றாசு (solder). ‘ஆசு’ என்றால் குற்றம் என்றும் பொருள். பொன்னைப் பொன்னில் இணைப்பதற்குப் பொன்னையே வைக்காமல், பொன்னுக்குப் புறம்பாய், வெள்ளியும் தாமிரமும் துத்தநாகமும் கலந்த பொடியை இடுவது பொன்னின் மாற்றுக்குக் குற்றம்தானே? பாரதமே சுவச்ச பாரதமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறபோது பொன் சுவச்சப் பொன்னாக இருக்க வேண்டும் என்பதில் என்ன பிழை? என்றாலும் பொடி இடாமல் பொன் உறுதியோடு இணையாது என்பதால் ஆசுக் குற்றம் பொன்னுக்குப் பாசச் சுற்றம் ஆகிவிடுகிறது.

 

உயிருக்கு அழுக்கு ஆணவம்

பொன்னுக்கு ஆசும் பாசமும் இருப்பது சரி. ஆனால், உயிருக்கு ஆசும் பாசமும் இருப்பது சரியா? அறிவுப் பொருளான உயிரைப் பேரறிவுப் பொருளான இறையோடு இணைப்பதற்கு, அறிவுக்குப் புறம்பாய் உள்ள அழுக்கை இடையிடலாமா?

பொன்னுக்கு அழுக்கு வெள்ளி-தாமிர-துத்தநாகக் கலவை என்றால் உயிருக்கு அழுக்கு ஆணவம். ஆணவத்தை முன்னிட்டுக்கொண்டு தலைவனோடு ஒட்டிக்கொள்ள நினைத்தால் ஒட்டிக்கொள்ள முடியுமா? தலைமையோடு தங்களை ஒட்ட வைத்துக்கொண்டு, அதன் விளைவாகச் செல்வாக்கையும் தலைவன் தருகிற பதவியையும் பெற நினைக்கிறவர்கள் அனைவரும் முதலில் துறக்க வேண்டியது ஆணவத்தையே அல்லவா? தலைவனின் முன்னிலையில் ஆணவத்தைத் துறந்து, வளைந்து வளைந்து வட்டமாகவே ஆகிவிட்டவர்களுக்குத்தானே பதவி? ஆகையினால் சிவ பதவி அடைய வேண்டி இறைப் பொருளைப் பற்றிக்கொள்ள நினைக்கிற உயிர்ப் பொருள் தன்னுடைய ஆணவத்தை, அதாவது அழுக்கை, அதாவது ஆசையை அறுக்க வேண்டும்.

ஆசை அறுமின்கள்;

ஆசை அறுமின்கள்!

ஈசனோடு ஆயினும்

ஆசை அறுமின்கள்!

ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்!

ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!

(திருமந்திரம், 2615)

அழுக்கை அறுங்கள்; அழுக்கை அறுங்கள். பதவிக்காக அல்ல, ஈசனோடு சும்மா ஒட்டிக்கொள்வதற்காகத்தான் என்றாலும்கூட ஆசையை விட்டுவிடுங்கள். ஆசைப்பட்டீர்கள் என்றால், ஆசைப்பட்டதை அடையவும் அடைந்த இடத்தைப் பாதுகாத்துத் தக்கவைத்துக்கொள்ளவும் படாத பாடுபட வேண்டியிருக்கும். அது மாபெரும் துன்பம். ஆசையை விட்டீர்கள் என்றால், ஏதோ ஒன்றை அடைய வேண்டுமே என்கிற துடிப்பும் அடைந்ததைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமே என்கிற பொறுப்பும் இல்லாமல் விட்டு விடுதலையாகிவிட்ட பெரும் பேரின்பம்.

அத்தனைக்கும் ஆசைப்படச் சொல்வது உங்களை நீங்களே காணாமல் தொலைத்துவிடுகிற உலகியல் என்றால், ஆசையிலிருந்து நீங்கி, ஈசனுக்கும்கூட ஆசைப்படாமல் ஒதுங்கி, தானாய், தனியாய் நிற்பது உங்களை நீங்களே கண்டுபிடித்துக்கொள்கிற உயிரியல்.

 

ஒரு பற்றாசு தேவையில்லை

உயிர்ப் பொருள் இறைப் பொருளோடு ஒட்டிக்கொள்வது இயல்பானது. நீர் நீரோடு சேர்வதற்கு நீர்மை போதும். அறிவு அறிவோடு சேர்வதற்கு அறிவுடைமை போதும். உயிர் உயிரோடு சேர்வதற்கு உயிர்மை போதும். நீரையும் நீரையும் பற்றவைக்க, அறிவையும் அறிவையும் பற்றவைக்க, உயிரையும் உயிரையும் பற்றவைக்க, இடைப்பட்டு ஒரு பற்றாசு தேவையில்லை.

உயிருக்குத் தன்னைத் தெரியாததால், தன் வடிவம் தெரியாததால் வரும் குழப்பம் இது. உலகியல் சார்ந்தவற்றோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அத்தனைக்கும் ஆசைப்பட்டுத் தடுமாறுகிற உயிர், தன்னை அறிவு வடிவம் என்று கண்டுகொள்ளும்போது தடுமாற்றம் நீங்கி நிலைகுத்திக் கொள்கிறது.

அறிவு வடிவுஎன்று

அறியாத என்னை,

அறிவு வடிவுஎன்று

அருள்செய்தான் நந்தி;

அறிவு வடிவுஎன்று

அருளால் அறிந்தே,

அறிவு வடிவுஎன்று

அறிந்துஇருந் தேனே.

(திருமந்திரம் 2357)

என் வடிவம் என் உடம்பு என்று எண்ணியிருந்தேன். ‘அட அறிவே! உடம்பா உன் வடிவம்? அறிவுதான் உன் வடிவம்!’ என்று எனக்கு அறிவித்து என்னை அறியச் செய்தான் ஆசிரியன். நான் அறிவு, அறிவைத் தவிர வேறொன்றும் இல்லை என்று அறிந்துகொண்டு அறிவாக இருந்தேன்.

இறைவன் அறிவை அறிவிக்கும் ஆசிரியன். ஆசு இரியன். குற்றத்தைக் கெடுத்து நம்மைத் தன்னோடு பற்றவைத்துக்கொள்பவன். அவனை நந்தி என்று அழைப்பது திருமூலர் வழக்கம். நந்துதல் என்றால் பெருகுதல். நந்தி என்றால் பெருகிய நிலை. அறிவு பெருகிப் பேரறிவான நிலை. உயிர் பெருகிப் பேருயிரான நிலை.

நல்லது. பத்தியைப் பார்த்தாகிவிட்டது. இனி, முத்தி என்றால் என்ன? முற்றுவது முத்தி. முற்றுதல் என்பது முழுமை பெறுதல். மூங்கில் முற்றுவதைப் போல, தேங்காய் முற்றுவதைப் போல, கடைக்கு வருவதற்காகக் கத்தரிக்காய் முற்றுவதைப் போல, உகரம் முற்றி முற்றியலுகரமாக ஆவதைப் போல, தன்னை அறிவதும் தன்னளவில் தான் முற்றி முழுமை பெறுவதும்தான் முத்தி.

மாடத்து உளான்அலன்;

மண்டபத்தான் அலன்;

கூடத்து உளான்அலன்;

கோயில்உள் ளான்அலன்;

வேடத்து உளான்அலன்;

வேட்கைவிட் டார்நெஞ்சில்

மூடத்து உளேநின்று

முத்திதந் தானே.

(திருமந்திரம் 2614)

முத்தி தருகிறவன் முத்திநாதன் என்று அவனை எங்கும் தேடித் திரிகிறவர்களே! முத்திநாதன் நீங்கள் தேடுகின்ற மாடத்தில் இல்லை; நீங்கள் விழுந்து தொழுகிற பீடத்தில் இல்லை; ஊர்வலம் வந்த சாமியை இறக்கிவைத்து இளைப்பாற்றி மண்டகப்படி செய்கிற மண்டபத்தில் இல்லை; கூடத்தில் இல்லை; கோயிலில் இல்லை; அவனைக் காண்பதற்காகவும் பெறுவதற்காகவும் நீங்கள் போடுகிற வேடத்தில் இல்லை. வேறு எங்கே இருக்கிறான்? முற்றிலுமாக ஆசை விட்டவர்களின் நெஞ்சில் இருக்கிறான். அப்படியென்றால் அத்தனைக்கும் ஆசைப்படுகிறவர்களின் நெஞ்சில் இல்லையா? அங்கும் இருக்கிறான். ஆனால், அங்கே அவனை ஆசை என்னும் மூடத்தனம் ஒரு போர்வையைப் போல் போர்த்தி மூடிவைத்திருக்கிறது. ஆசைப் போர்வையை உருவிவிட்டால் வெளிப்படத் துலங்கி, உங்களை முற்றச் செய்து முத்தன் ஆக்குவான்.

முத்தியை ஞானத்தை

முத்தமிழ் ஓசையை

எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை

நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குஉளன்

அத்தகு சோதி அதுவிரும் பாரே?

(திருமந்திரம் 2115)

ஈசனை வழங்குகிற முத்தியை, முத்தியை வழங்குகிற அறிவை, அறிவை வழங்குகிற முத்தமிழ் ஓசையை எப்போதும் போற்றுக. பாலில் நெய் கலந்திருப்பதைப் போல அறிவினில் அறிவாக ஈசன் கலந்து நிற்கிறான். அறிவை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா?

(அறிவைப் போற்றுவோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19961681.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 07: சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே

 

 
AI718269tmpcol

‘எ

து நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்று தொடங்குகிற கீதா சாரத்தின் சொற்றொடர்களைப் பலரும் மனப்பாடமாக அறிவார்கள். அதில் ஒரு வரி, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு’ என்பது. படித்து அறிந்த அந்த வரியைப் பகுத்து அறியவில்லை என்பதன் விளைவுதான் இன்னும் தொடர்கிற இழப்பு அச்சம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

எது எதற்குத் துணை பெறுவது என்ற கேள்வியையே ஒதுக்கிவிடுவோம். ‘மைத்துனன் துணை உண்டானால் மலை ஏறிக்கூடப் பிழைக்கலாம்’ என்று ஒரு சொலவடை உண்டல்லவா? அறிந்த களமோ அறியாத களமோ யாரேனும் ஒருவரைத் துணையாகப் பெறுவது நல்லது; பாதுகாப்பானது. ஆகவே, துணை பெற வேண்டும். சரி. யாரைத் துணையாகப் பெறுவது? நாம் இறங்கப்போகும் களத்தில் நம்மைவிடத் தெளிவான அறிவும் தேர்ச்சியும் பெற்ற ஒருவரைத்தானே துணையாகப் பெற வேண்டும்? அதுதானே பயன்தரும்?

நமக்குப் பார்வையில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். நாமோ ஓரிடத்திலிருந்து புதிதாக மற்றோர் இடத்துக்குப் போகவேண்டியிருக்கிறது. என்ன செய்யலாம்? யாரேனும் ஒருவரைத் துணையாகக் கொண்டு, அவருடைய வழிகாட்டுதலில் போகலாம். ஆனால், வழிகாட்டுவதற்காகத் துணை வருகிறவர் பார்வை உடையவராகவும் வழி தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

 

ஒளி தரும் குரு

வழிகாட்டுவதற்காக நாம் தேர்வு செய்துகொண்டவரும் நம்மைப் போலவே பார்வையற்றவராக, வழி தெரியாதவராக இருந்தார் என்றால், நாம் போக வேண்டிய புதிய இடத்துக்குப் போய்ச்சேர முடியுமா? போகிற வழியில் ஏதேனும் ஒரு குழியில் தடுமாறித் தலைகுப்புற உருள வேண்டியதுதான். எனவே, சரியான வழிகாட்டியைத் தேர்வு செய்வதென்பது மிகவும் இன்றியமையாதது—உலகியல் பாதையில் வழிகாட்டுவதற்கு மட்டுமன்று, உயிரியல் பாதையில் வழிகாட்டுவதற்கும். திருமூலர் சொல்கிறார்:

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்;

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;

குருடும் குருடும் குருட்டுஆட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவீழு மாறே

(திருமந்.1680)

குரு என்பது தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கில் இருந்துவரும் நற்றமிழ்ச் சொல். குரு என்றால் ஒளி; செம்மை; முளைப்பு. வெள்ளை வெளேரென்ற நிறமுடைய பறவையாகிய நாரையைக் ‘குருகு’ என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மையை வைத்துத்தான். இரத்தத்தைக் ‘குருதி’ என்று சொல்வது அதன் செம்மையை வைத்துத்தான். வாழையின் அடியில் கிளைத்துவரும் இளங்கன்றைக் ‘குருத்து’ என்று சொல்வது அதன் முளைப்பை வைத்துத்தான். எது ஒளியுடையதோ எது செம்மையுடையதோ எது முளைத்துப் பெருகக்கூடியதோ அது குரு. அந்த அடிப்படையில் ஒளியையும் செம்மையையும் முளைப்பையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று தன்னிலிருந்து பிறருக்குக் கடத்துகிற ஆசிரியர் ‘குரு’ ஆகிறார்.

ஒள்ளிய மலர்களுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும் மரம் குருந்த மரம். அதன் கீழ் இருந்து தனக்கு அறிவு விளக்கம் செய்த குருவைப் பாடுகிறார் மாணிக்கவாசகர்:

சோதியே, சுடரே, சூழ்ஒளி விளக்கே...

நீதியே, செல்வத் திருப்பெருந்துறையில்

நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்

ஆதியே... (திருவாசகம், அருட்பத்து, 1)

நல்லது. குரு என்பவர் ஒளி ஊட்டுகிறவர், செம்மைப்படுத்துகிறவர், முளைக்கச் செய்கிறவர். குருடு என்பவரோ ஒளி வேண்டுகிறவர்; செம்மை வேண்டுகிறவர்; முளைத்துப் பெருக வேண்டுகிறவர். இந்த வேண்டுதல்கள் நிறைவேறச் சரியான குருவைத் தேர்ந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லையா?

 

உண்மை ஞானி யார்?

காசு கொடு, கடவுளைக் காட்டுகிறேன் என்று பேசுகிற குரு, ஒளி உடைய உண்மைக் குருவா? ஆசிரமத்துக்கு வா, அமைதி பெறுவாய் என்று திருவாய்மொழிகிற குரு செம்மைக் குருவா? கடவுளைத் தேடிக் கண்டடைந்தவர் நம்மிடம் காசு கேட்பாரா? நோகாமல் நோன்பிருக்க ஆசிரமம் அமைப்பாரா? இத்தகைய குருக்கள் பின்னால் போனால் நாம் ஒளி பெறுவோமா அன்றித் திருமூலர் சொன்னதுபோலக் குழி பெறுவோமா?

உயிர் இருந்தது எவ்விடம் உடம்பு எடுப்பதன்முனம்?

உயிர் அதாவது ஏதடா? உடம்பு அதாவது ஏதடா?

உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதுடா?

உயிரினால் உடம்பு எடுத்த உண்மைஞானி சொல்லடா! (சிவவாக்கியர் பாடல்)

உடம்புக்குள் வருவதற்கு முன்னால் உயிர் எங்கே இருந்தது? உயிர் என்றால் என்ன? உடம்பு என்றால் என்ன? உயிர் ஏன் உடம்புக்குள் வந்தது? உயிரை உடம்புக்குள் இட்டது எது என்று சிவவாக்கியர் கேட்கிற கேள்விகள் நமக்கும் இருக்கின்றன. ஆசிரமத்துக்கு வா, நன்கொடை அளி, என் விடை கிடைக்கும் என்று கணக்கிட்டுப் பேசாமல் நேரடியாக விடை சொல்லி வழிநடத்துகிறவர்தான் உண்மைஞானி.

அழகாக இருக்கிறவரையும் அலங்காரமாகப் பேசுகிறவரையும் அமைதியான சூழலில் ஆசிரமம் வைத்திருப்பவரையும் குருவாகக் கொண்டுவிட முடியாது. ஏனென்றால், குருவிடம் நாம் எதிர்பார்ப்பது அழகையும் அலங்காரப் பேச்சையும் ஆசிரமத்தையும் அல்லவே, அறிவையே அல்லவா!

குருவுக்குத் தேர்வு வையுங்கள்; தேங்காயை முற்றிய தேங்காய்தானா என்று சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போலக் குருவையும் முற்றிய குருதானா என்று சுண்டிப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள் என்கிறார் விவேகானந்தர்.

ஒளி உடையவர்களைத் தேர்ந்தெடுங்கள். வாக்குக் கேட்டு வருகிறவரைத் தேர்ந்தெடுப்பதுபோலக் கண்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிட வேண்டாம் என்கிறார் திருமூலர்.

(ஒளி தேடுவோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article20003860.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 08: ஆசற்ற சற்குரு யார்?

 

 
shutterstock668588134%20Convertedcol%202

‘அ

றிவிக்க அறிதல்’ என்பது சைவ மரபில் ஒரு கருதுகோள். அதன் அடிப்படை என்னவென்றால், அறியாதவர் ஒருவர், ஒரு பொருளைத் தெளிவாக அறிய வேண்டுமானால், அதை அவருக்கு அறிவிக்க, அறிந்தவர் ஒருவர் வேண்டும். கற்பிக்கிறவர் இல்லாமல் கல்வி சாத்தியமில்லை, குரு இல்லாமல் அறிதல் சாத்தியமில்லை என்னும் கருதுகோள், சைவ நூலாகிய திருமந்திரத்தில் உள்ளது; அறிதல் செயல்பாட்டில் குருவின் பங்கை முதன்மைப்படுத்திப் பேசுகிறது. குருவைக் கடவுளுக்குச் சமமாகப் போற்றுகிறது.

ஆனால், திருக்குறளைப் போன்ற ஒரு பொதுநூல், கல்வியைப் பற்றியும் அறிவைப் பற்றியும் பேசுகிறதே தவிர, கற்பிக்கும் ஆசிரியரைப் பற்றியோ, அறிவுண்டாக்கும் குருவைப் பற்றியோ சிறப்பாக ஒன்றும் பேசவில்லை. கல்வி என்பது, பிறர் முயற்சியால் அல்ல, தன் முயற்சியால் தானே அடைவது என்ற அடிப்படையிலேயே திருக்குறள் பேசுகிறது.

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை (குறள் 414)

என்கிறது வள்ளுவம். உறுதி நூல்களைத் தானே கற்றுத் தெளியவில்லை என்றாலும், அவற்றின் பொருட்களைக் கற்று அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்க. அவ்வாறு பெற்றுக்கொண்ட அறிவு, ஒருவர் தளர்ச்சி அடையும் காலத்தில் ஊன்றுகோல் உதவுவதுபோல உதவும்.

தானே முயன்று கற்றுக்கொள்வது என்பது முதல்நிலை; அப்படிக் கற்றுக்கொள்ள முடியாவிட்டால் கற்றுக்கொண்டவர்களிடம் கேட்டுக்கொள்ளவாவது வேண்டும் என்பது இரண்டாம் நிலை.

 

திருக்குறளில் குரு வழிபாடு ஏன் இல்லை

ஆசிரியரை மறுதலித்துப் பேசவில்லை திருக்குறள்; அவ்வாறு பேசவும் முடியாது. ஆனால், திருக்குறள் ஒற்றை ஆசிரியரைக் குருவாக நிறுத்திப் பேசவில்லை. குரு, குருவின் குரு என்று வரும் குரு மரபைக் குறித்துப் பேசவில்லை. குரு என்பவர் இன்னார், அவருக்கான இலக்கணம் இது என்று குருவை வரையறை செய்கிற வேலையை அது செய்யவில்லை. யார் யாரெல்லாம் அறிவுடையவர்களோ அவர்களிடமெல்லாம் அறிவைப் பெற்றுக்கொள்க என்று பொதுமையாகத்தான் பேசுகிறது.

திருக்குறள் சமயச் சார்பற்ற பொது நூல். ஆகவே, குருவுக்குப் பொட்டிட்டுப் பூச்சூட்டிப் பூசிக்கிற வேலையைச் செய்யாமல், அறிவின் முதன்மையை உணர்த்தி, அதைப் பெறுவது உன் கடமை என்று சுட்டிக்காட்டிவிட்டு அமைதியாகக் கடந்து போகிறது.

ஆனால், திருமந்திரம் அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில், திருமந்திரம் சைவம் என்கிற சமயச் சார்பு நூல். அது வழங்கக் கருதுவது பொதுவான அறிவை அல்ல; சைவ மரபு கருதுகிற சிறப்பு அறிவை! சைவ மரபின் சிறப்பு அறிவைக் குரு என்று சொல்லிக்கொள்கிற யார் வேண்டுமானாலும் வழங்கிவிட முடியாது. சைவ மரபை அறிந்து, தெளிந்து, உணர்ந்தவர்கள் மட்டுந்தான் வழங்க முடியும்.

சைவ சமயத் தனி நாயகன் நந்தி

உய்ய வகுத்த குருநெறி ஒன்றுஉண்டு;

தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துஉய்ய

வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே (திருமந்திரம். 1567)

சைவ சமயத்தின் தனிமுதல் தலைவனாகிய இறைவன், உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உய்வு அடைவதற்காக வகுத்து வைத்த குரு நெறி ஒன்று இருக்கிறது. அந்த நெறி சிவ நெறி. சன்மார்க்கம் என்கிற சைவ அறிவு நெறி.

அறிவை வேண்டுகிறவன் அறிவு இருக்கிறவனிடம் போய்ப் பெற்றுக்கொள்ளலாம் என்று பொதுமைப்படுத்திவிட்டால் அதில் சிக்கல் இல்லை. அரசாங்கப் பள்ளியே போதுமானது. ஆனால், சிறப்பு அறிவு வேண்டும் என்றால் அதற்குரிய தனிப் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து சிறப்புப் பயிற்சி பெற வேண்டியிருக்கிறது இல்லையா?

 

பணிவில்லாதவன் பரநிந்தை செய்வோன்

குருவைத் தேர்ந்தெடுக்கிற விவகாரத்தில் யாரும் அப்படிச் சங்கடப்பட்டுவிடக் கூடாது என்பது திருமூலரின் எண்ணம். ஏனென்றால், குருவைத் தேர்ந்துகொள்வதில் விடுகிற பிழை ஒரு பிறப்பையே வீணாக்குகிற பிழை. ஆகவே, சற்குரு யார், அசற்குரு யார் என்று தெளிவாக விளக்கம் சொல்கிறார் திருமூலர்.

உணர்வுஒன்று இலாமூடன், உண்மை ஓராதான்,

கணுஇன்றி வேதஆகம நெறி காணான்,

பணிவுஒன்று இலாதோன், பரநிந்தை செய்வோன்

அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே. (திருமந்.2044)

அறிவு இருந்தாலுங்கூட, உணர்வும் ஈடுபாடும் இல்லாதவன், உண்மையை அதன் அகல நீளங்களுடன் அறிந்திராதவன், மூல நூல்களைத் திரும்பத் திரும்ப ஓதித் தலைகீழ் மனப்பாடமாக அறிந்திருந்தாலும், அவை சொல்கிற நெறி என்ன, அவற்றின் மையப் பொருள் என்ன என்பதை ஊடுருவிக் காணத் தெரியாதவன், பணிவு இல்லாதவன், தன் நெறியே பெரிது என்று பேசிப் பிற நெறிகளை ஏசுகிறவன், ஆணவத்தைக் குணமாகக் கொண்டிருப்பவன், இத்தகையவனே பொய்மைக் குருவாகிய அசற்குரு என்று அடையாளம் காட்டுகிறார் திருமூலர்.

சரி, அப்படியென்றால் உண்மைக் குருவாகிய சற்குரு யார்?

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்

நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்,

ஆசற்ற சற்குரு ஆவோன்; அறிவுஅற்றுப்

பூசற்கு இரங்குவோன் போதக் குருஅன்றே (திருமந்.2052)

அறிவைப் பெற வேண்டும் என்கிற விருப்பத்தோடு தன்னை நாடி வருகிற எளியவர்கள் உலகியல் வாழ்வின்மீது கொண்டிருக்கிற பெரும்பற்றை நீக்குகிறவன்; இறைவனை மட்டுமே ஆராய்ந்துகொண்டிருக்காமல் தன்னையும் ஆராய்ந்துகொண்டிருப்பவன்; அந்த ஆராய்ச்சி முறைமையைத் தன்னை நாடி வருகிறவர்களுக்கும் மிக்க அன்போடு கற்றுத் தருகிறவன்; அவர்களின் அழுக்குகளை இனி மீண்டும் சேர்ந்துவிடாதவாறு முற்றிலுமாக அகற்றுகிறவன்; ஆசு அற்றவன், அதாவது, எதன்மீதும் ஆசை அற்றவன் எவனோ அவனே சற்குரு.

வெளிவேடங் காட்டி, வாய்ப் பேச்சால், வலுத்த குரலால், வாதம்-எதிர்வாதத்தால் தன்னுடைய தரப்பை நிறுவிவிட முடியும் என்று கருதுகிறவன் எவனும் அறிவுள்ள குரு அல்லன் என்று உண்மையான சற்குருவையும் பொய்ம்மையான போலிக் குருவையும் அடையாளம் காட்டுகிறார் திருமூலர். இருக்கட்டும்.

கேவியட் எம்ட்டார்—Caveat emptor—என்று பழைய ஒப்பந்தச் சட்டத்தில் ஒரு கூறு உண்டு. விற்கப்படுகிற சரக்கின் தரத்துக்கு விற்பனையாளர் உறுதி (warranty) வழங்க மாட்டார்; வாங்குகிறவர்தான் எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும் என்பது அதன் பொருள் (let the buyer beware). இதில் நடக்கிற ஏமாற்று வாணிகத்தை உணர்ந்து, அரசுகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மூலமாக, விற்கப்படுகிற சரக்கின் தரத்துக்கு விற்பனையாளர் உறுதி வழங்க வேண்டும் என்று ஒழுங்கு செய்துவிட்டன.

இவ்வாறு ஒழுங்கு செய்த பின்னாலும் இந்த ஏமாற்று தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. வகைவகையான சரக்குகளை எந்தவிதமான தர உறுதிப்பாடும் இல்லாமல் விற்பனையாளர்கள் விற்பதும் அவற்றை நாம் கண்ணை மூடிக்கொண்டு வாங்குவதும் இந்த அடிப்படையிலானதுதான்.

நல்லது. தர உறுதி இல்லாத சரக்கு விற்பனைக்கும் குருமார்களுக்கும் என்ன தொடர்பு என்றால், போலிக் குருமார்கள் எந்தவிதமான தர உறுதிப்பாடும் இல்லாமல் அறிவை விற்கிறார்கள். ஒருவேளை வாங்குகிறவர்கள்தான் உறுதியாக இருக்க வேண்டுமோ? திருமூலர் சொல்கிறார்:

ஞானம் இலாதார் சடைசிகை நூல்நண்ணி

ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை

ஞானிகளாலே நரபதி சோதித்து

ஞானம் உண்டாக்குதல் நலம்ஆகும் நாட்டிற்கே (திருமந்.242)

மெய்யறிவே இல்லாத ஏமாற்றுக்காரர்கள், சடையும் தாடியும் அணியும் ஆடையுமாக வேடமிட்டு, ஞானிகள்போல நடிக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே ஞானிகள்தாமா என்று உண்மையான ஞானிகளைவிட்டு அரசாங்கம் பரிசோதிக்க வேண்டும். அவ்வாறு சோதித்து, ஒன்று அந்தப் பொய் ஞானிகளுக்கு உண்மை ஞானத்தை உண்டாக்க வேண்டும்; அல்லது அந்தப் பொய் ஞானிகளை நம்புகிற ஏமாளிகளுக்குப் போலிக் குருவின் பொய் வேடம் பற்றிய ஞானத்தை உண்டாக்க வேண்டும். இதைச் செய்தால் நாட்டுக்கு நல்லது என்கிறார் திருமூலர்.

ஞானம் என்பது நுகர்பொருளாக்கப்பட்டால் அதற்கும் நுகர்வோர் பாதுகாப்பு உருவாக்கப்பட வேண்டுந்தானே?

(ஞானம் தேடுவோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article20457846.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 09: அறத்தின் வாசனை உலவும் பொன்னுலகம்

 

 
Meditation

ர் தாமஸ் மோர் என்னும் ஆங்கிலேய மனிதநலக் கருத்தாளர், 1516-ம் ஆண்டு ‘உடோப்பியா’ (Utopia) என்று ஒரு நூலை எழுதினார். உடோப்பியா என்றால் ‘இல்லாத இடம்’ என்று பொருள். அதாவது, உண்மையில் இல்லாத, கற்பனையால் உருவாக்கப்பட்ட ஓர் இடம். தன்னுடைய கற்பனையில் தான் உருவாக்கிய தீவுக்கு ‘உடோப்பியா’ என்று பெயர் வைத்தார் தாமஸ் மோர். அந்தக் கற்பனைத் தீவில் ஒரு கற்பனைச் சமூகம் இருப்பதாகவும் அந்தக் கற்பனைச் சமூகம் அரசால், அறத்தால், சட்டத்தால், சமயத்தால், பொருளியல் நிலைகளால் ஏற்ற-இறக்கமில்லாத நிறைவாழ்வு வாழ்வதாகவும் அவர் அந்த நூலில் கற்பித்தார். அப்போதைய ஐரோப்பியச் சமூகத்தின் அரசியல்-பொருளியல் நிலைகளை, உடோப்பியா தீவில் வாழும் கற்பனைச் சமூகத்தின் (கற்பனையான) அரசியல்-பொருளியல் நிலைகளுடன் ஒப்பிட்டு, உடோப்பியச் சமூகம் எவ்வளவு உயர்ந்த, சமவாழ்வு வாழ்கிற சமூகமாக இருக்கிறது என்று அந்த நூலில் பேசினார். சமவாழ்வு வாழ்கிற அந்தக் கற்பனையான உடோப்பியச் சமூகம்போல ஐரோப்பியச் சமூகம் நிலைமாற்றம் பெற வேண்டும் என்பது அவருடைய கருத்து.

இப்படியான கற்பனைச் சமூகங்களைப் பலரும் எண்ணிப் பார்த்திருக்கிறார்கள். கிரேக்க மெய்யறிவாளரான பிளேட்டோ ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு பொதுவுடைமைச் சமூகத்தைத் தன்னுடைய கற்பனையில் உருவாக்கிப் பார்த்திருக்கிறார். காரல் மார்க்சோ ஏற்றத்தாழ்வுகளே இல்லாத, அரசு என்கிற அதிகார மையம்கூட இல்லாத ஒரு பொதுவுடைமைச் சமூகத்தைத் தர்க்கபூர்வமாகக் கருதிப் பார்த்திருக்கிறார்.

நம்முடைய நாட்டிலும் இத்தகைய

கற்பனைச் சமூகங்களைச் சிந்தித்தவர்கள் உண்டு. கம்பனுக்கு மிஞ்சிய கற்பனை உண்டா?

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;

திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;

உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;

வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

(பாலகாண்டம், நாட்டுப்படலம், 53)

கோசல நாட்டில் கொடை கொடுப்பவர்களே இல்லை; ஏனென்றால் கொடு என்று கைநீட்டிக் கேட்கிறவர்களே அங்கே இல்லை. வறுமை இருந்தால்தானே வள்ளல் தன்மை இருக்கும்? கோசல நாட்டில் உடல் வலிமையை முறுக்கிக் காட்டுகிறவர்களே இல்லை; ஏனென்றால் சண்டைக்கு வருகிறவர்களே அங்கே இல்லை. போட்டிக்காரன் இருந்தால்தானே போர் இருக்கும்? கோசல நாட்டில் உண்மையே இல்லை; ஏனென்றால் பொய் பேசுகிறவர்களே அங்கே இல்லை. பொய் என்று ஒன்றைக் குறிக்க முடிந்தால்தானே உண்மை என்று ஒன்றைக் குறிக்க முடியும்? கோசல நாட்டில் அறியாமை என்ற ஒன்றே இல்லை; ஏனென்றால் எல்லோரும் கற்றும் கேட்டும் பகுத்தும் அறிய வேண்டியவற்றைத் தெளிவாக அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அறியாமை என்று ஒன்றைச் சுட்டிக்காட்ட முடிந்தால்தானே அதற்கு எதிராக அறிவு என்று ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியும்?

 

உண்மை நிலை என்ன?

இப்படி ஒரு கனவுச் சமூகம் நமக்கு நனவிலும் வாய்க்கும் என்றால் அதைவிடப் பேறு வேறு ஏது? ஆனால், வாய்க்காது. உண்மை நிலை கம்பன் கற்பித்ததற்கு நேர்மாறு. நாம் காண்கிற சமூகத்தில், கேட்கிறவர்கள் இருக்கிற அளவுக்குக் கொடுக்கிறவர்கள் இல்லை; சண்டைக்காரர்கள் இருக்கிற அளவுக்குச் சமாதானக்காரர்கள் இல்லை; பொய்யை ஓரங்கட்டுகிற அளவுக்கு உண்மை ஊக்கம் பெறவில்லை; கற்றதையும் கேட்டதையும் பகுத்தாராய்ந்து, தான் பெற்ற அறிவைத் தன் சமூகத்துக்கும் வழங்கி, அறிவுப் பந்தம் கொளுத்தி, அறியாமை இருள் விரட்டுகிற அறிவாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.

இந்த உண்மை நிலையை உணர்ந்திருக்கிறார் திருமூலர். அவர் மெய்யுணர்வாளர்; சமய நெறியாளர். யார் யாரையும்விடச் சமய நெறியாளர்களே சமூகத்தின் நடப்பு நிலவரங்களை நன்றாக அறிவார்கள். ஏனென்றால், கீழ்மையில் அகப்பட்டுக்கொண்டவர்களைக் கடவுள் என்னும் கயிற்றால் கட்டி இழுத்து மேன்மைக்குக் கொண்டு வந்துவிடுகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் அவர்கள்.

கற்பனைச் சமூகம் கவைக்கு உதவாது என்பதால், இல்லாத சமூகத்துக்குச் செல்லாத கொள்கைகளைப் புனைந்துரைக்காமல், இருக்கிற சமூகத்துக்கு இயலக்கூடிய கொள்கைகளைப் பரிந்துரைக்கிறார் திருமூலர். அவற்றில் ஒன்று அறம் செய்தல்.

இல்லாதவர்களையும் இருக்கிறவர்களையும் சமப்படுத்துவதைப் பற்றியெல்லாம் திருமூலர் சிந்திக்கவில்லை. இருக்கிறவர் எல்லாவற்றையும் தனக்கே தனக்கென்று பொத்திவைத்துக்கொள்ளாமல் இல்லாதவர்க்கும் கொடுத்தல் என்பதையே சிந்திக்கிறார்.

ஆர்க்கும் இடுமின்;

அவர்இவர் என்னன்மின்;

பார்த்து இருந்து உண்மின்;

பழம்பொருள் போற்றன்மின்;

வேட்கை உடையீர்,

விரைந்து ஒல்லை உண்ணன்மின்;

காக்கை கரைந்து உண்ணும்

காலம் அறிமினரே

(திருமந்திரம். 250)

‘இவருக்கு இடு, அவருக்கு இடாதே,’ ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு’ என்றெல்லாம் பழைய மரபுகள் பலவாறு சொல்லும்; அவற்றையெல்லாம் போற்ற வேண்டாம். பசி என்று ஒருவர் வந்துவிட்டால் அவர் யாராக இருந்தாலும் உணவிடுங்கள்; அவர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் கணக்குப் பார்க்க வேண்டாம்.

 

காகத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்

கணக்குப் பார்ப்பதும் பாத்திரம் பார்ப்பதும் காசு பணம் கொடுக்கும் காரியத்துக்குத்தான். உணவிடும் காரியத்துக்கு அன்று. உண்ணும் நேரம் வந்துவிட்டது, பசிக்கிறது என்று சமைத்ததையெல்லாம் உண்டு தீர்த்துவிடாமல் உணவு தேடி ஆள் வருகிறதா என்று பார்த்திருந்து உண்ணுங்கள். தான் மட்டும் தனித்து உண்ணாமல் தன் கூட்டத்தையும் அழைக்கிறதே காக்கை, அதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து

(குறள் 221)

இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே கொடை. மற்ற கொடையெல்லாம் பதிலுக்கு ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொடுப்பதே ஆகும் என்கிறது குறள். குறளின் தடம் பிடித்து நடக்கிறார் திருமூலர்.

அற்று நின்றார் உண்ணும்

ஊணே அறன் என்னும்

கற்றன போதம் கமழ்பவர் மானிடர்

உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்

பற்றுவந்து உண்ணும் பயன் அறியாரே

(திருமந்திரம். 253)

பசி போக்கிக்கொள்ளும் வழியற்று நின்றார்க்கு உணவு ஊட்டுவதே அறம் என்று கற்றிருக்கிறோம். கற்ற அறிவைச் செயலுக்கும் கொண்டு வருபவரே மனிதர். கண்டு தெளிக.

பசித்திருப்பவர்கள் இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறார்களே என்று திருவள்ளுவர்க்கு ஓர் இடத்தில் கடுங்கோபம் வருகிறது.

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றியான்

(குறள் 1062)

பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்றால் இந்த உலகத்தைப் படைத்தவன் நாசமாகப் போகட்டும் என்று கடவுளையே கண்டனம் செய்துவிடுகிறார். ஆனால், திருமூலர் அப்படியெல்லாம் கோபம் கொள்வதில்லை. கடவுளை மறுத்தல், கடவுளைக் கண்டனம் செய்தல் இவையெல்லாம் திருமூலரிடத்தில் கிடையாது. மாறாக, கடவுளை அடையும் பெரும் பாதையாக அறத்தை வைக்கிறார் திருமூலர்.

...மறந்தான் வழிமுதல்

வந்திலன் ஈசன்;

அறந்தான் அறியும் அளவு

அறியாரே (திருமந்திரம்.256)

ஈசனைத் தேடி அங்குமிங்குமாக அலைகிறவர்களே! மறத்தை, வலிமையை வழியாகக் கொண்டவர்கள் எங்கு தேடினாலும் ஈசன் சிக்குவதில்லை. ஆனால், அறத்தை வழியாகக் கொண்டவர்களோ அவனைத் தேட வேண்டியதே இல்லை; அறத்தின் வாசனை பிடித்துக்கொண்டு அவனே உங்களிடம் வந்துவிடுவான். உங்களைத் தனது பொன்னுலகத்துக்கும் கொண்டுபோவான். இதை அறிய மாட்டாமல் அலைகிறீர்களே என்று வருந்துகிறார்.

இறைவனின் பொன்னுலகம் ஏற்ற இறக்கமில்லாத இடம். அதை அடைய வேண்டுகிறவர்கள் அறம் செய்க என்பது திருமூலர் கூற்று. இறைவனின் பொன்னுலகம் ‘உடோப்பியா’ இல்லையா என்றால், நல்லது, அதற்கு விடை இல்லை. கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக.

(அறம் செய்க)

http://tamil.thehindu.com/society/spirituality/article20643647.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 10: எத்துணை கொள்கின்றீர் பித்து உலகீரே?

 

 
Meditation

பொருள் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் எந்த இன்பத்தையும் பெற முடியாது. அவ்வாறே, அருள் இல்லாதவர்கள் அவ்வுலகத்தில் எந்த இன்பத்தையும் பெற முடியாது. பொருள் இல்லாதவர்களுக்காவது, இன்றைக்கு இல்லாவிட்டாலும் பின்னாளில் என்றைக்காவது பொருள் வரும்; செல்வத்தில் பூத்து விளங்கிப் பொலிவார்கள். ஆனால், அருள் இல்லாதவர்களுக்குப் பின்னாளில் என்றைக்குமே அது வரும் வாய்ப்பில்லை; அவர்கள் விளங்கப் போவதும் இல்லை என்கிறது வள்ளுவம்.

தற்போதைய சமூக நிகழ்வுகள் அதைக் காட்டிக்கொடுக்கின்றன. பொருள் இல்லாமல் வாழ்வைத் தொடங்கியவர்கள் எப்படியோ கொஞ்சம் பொருளைப் பெறுகிறார்கள். கந்து வட்டிக்குக் கொடுக்கிறார்கள்; கசக்கிப் பிழிகிறார்கள்; இன்னும் பல்வேறு வகைகளில் பெற்ற பொருளைப் பெருக்குகிறார்கள். பெருக்கிய பொருளில் கொஞ்சத்தைக் கொடுத்துப் புகழை வாங்குகிறார்கள். இப்படியாகப் பொருள் வருகிறது; புகழ் வருகிறது; அரசாங்கத்தின் சார்புநிலைகளைப் பொறுத்து அரிதாகச் சில சமயங்களில் பிடியாணைகள்கூட வருகின்றன. ஆனால், அருள் வருமா? சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.

இருக்கட்டும். அதென்ன அருள்? அறம் விளக்கும் வள்ளுவர் அருள் விளக்காமல் விடுவாரா? அருள் என்பது அன்பின் குழந்தை. அன்பு என்பது என்ன? அருள் என்பது என்ன? தொடர்புடையவர்கள்மேல் உறுவது அன்பு; தொடர்பே இல்லாதவர்களுக்காகவும் உருகுவது அருள்.

 

இறையருள் பெற ஜீவகாருண்யம்

அருளை இறை அருள், உயிர் அருள் என்று இரண்டாக வகுக்கிறார். உயிர் அருளை ஜீவகாருண்யம் என்று அழைக்கிறார் வள்ளலார். இறையருள் பெறவேண்டுமானால் உயிர் அருள் என்ற ஜீவகாருண்யம் வேண்டும் என்கிறார்.

உடல்களால் வேறுபாடுகள் காணப்பட்டாலும் உயிர்கள் என்ற நிலையில் எந்த வேறுபாடும் இல்லை. உயிர்களுக்கு உடம்பு செய்துகொடுப்பவன் இறைவன். ஒரு தாயின் வழியாக வந்தவர்கள் எல்லோரும் உடன்பிறப்புகள் ஆவதுபோல, இறைவனின் வழியாக உடம்பெடுத்து வந்தவர்களும் உடன்பிறப்புகள்தாம்; ஒரே மாதிரியான உரிமை உடையவர்கள்தாம். உடன்பிறப்புகளில் ஒருவர் துன்பமடையும்போது மற்றவர் அதற்காக உருகுவது இயற்கை. தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும். அதுபோல, ஓர் உயிர் துன்பமடைகிறபோது, மற்றோர் உயிர் அதற்காக உருகுவதும் இயற்கையே. சிலர் அப்படி உருகுவதில்லையே என்றால், அதற்குக் காரணம் அவர்கள்மேல் அறியாமையின் அழுக்குப் படிந்திருக்கிறது; அதன் காரணமாக அவர்களது அறிவு, உணர்ச்சியில்லாமல் தடித்துப் போயிருக்கிறது. அழுக்குப் படிந்த கண்ணாடி உருவம் காட்டுவதில்லை அல்லவா?

சரி, என்ன செய்ய வேண்டும்? அறிவுதான் முதன்மையானது. ஏனென்றால் உண்மை-பொய், நல்லது-கெட்டது, நிலையானது-நிலையற்றது என்று எல்லாவற்றையும் ஒருவர்க்கு அடையாளம் காட்டுவது அறிவுதான். எனவே, அதை அடைந்தாக வேண்டும். அடையவிடாமல் தடுக்கிறது பசி. அது ஒருவருடைய குடிப் பிறப்பை அழிக்கும்; தனிச் சிறப்புகளை ஒழிக்கும்; கற்றவற்றையெல்லாம் கைவிடச் செய்யும்; வெட்கத்தை விரட்டும்; மாண்பைச் சீர்குலைக்கும் பசிப் பிணி என்னும் பாவி! அதைத் தீர்த்தவர்களின் புகழைச் சொல்வதற்கு என் நாக்குக்குத் தெம்பு கிடையாது என்கிறது மணிமேகலை.

குடிப்பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்;

நாண்அணி களையும்; மாண்எழில் சிதைக்கும்;

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவி! அது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது

(மணி., பாத்திரம் பெற்ற காதை, 76-81)

 

அதையே சொல்கிறார் வள்ளலார். நல்லது கெட்டதை வேறுபடுத்திக் காட்டுகிற நல்லறிவை அடைவதுதான் முதன்மையானது என்ற நிலையில், பசி அதை அடைய விடாமல் தடுக்கிறது என்ற நிலையில், வள்ளலார் சொல்கிறார்: ‘பசி என்ற நச்சுக் காற்று, ஒருவருடைய அறிவு என்ற விளக்கை அணைக்க முயல்கிறபோது, அவருக்கு உணவு கொடுங்கள்; அவருடைய அறிவு விளக்கு அணைந்துவிடாமல் பாதுகாத்துக் கொடுங்கள். இதுவே ஜீவகாருண்யம். இந்தத் திறவுகோலைக் கொண்டுதான் அவ்வுலகம் என்ற மேல்வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போக முடியும்; புண்ணியமூர்த்திகளை வலம் செய்தல், தீர்த்தமாடுதல், தோத்திரம் செய்தல், யாகம் செய்தல், பூசை செய்தல், ஐம்புலன்களை அடக்குதல் ஆகியவற்றினால் அன்று. சடங்குகளைச் செய்கிறவர்களுக்கு அவற்றால் சிறு பலன்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும்; ஆனால் நினைவிருக்கட்டும், மேல்வீட்டுக் கதவைத் திறக்கும் திறவுகோல் ஜீவகாருண்யம்தான்; கடவுள் வழிபாடு என்பதே ஜீவகாருண்யந்தான்’ என்று ஐயந்திரிபின்றி அறிவிக்கிறார் வள்ளலார்.

 

வள்ளலாரின் முன்னோடி திருமூலர்

வள்ளுவம், மணிமேகலை என்று ஒரு தொடர்மரபில் வருகின்ற அருள் என்ற கருதுகோளை மேலும் வளமாக்கி வள்ளலாருக்குக் கையளித்தவர் திருமூலர். வள்ளலாரின் முன்னோடி அவர். அவர் சொல்கிறார்:

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா;

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

(திருமந்திரம். 1857)

 

படம்போல எழுப்பி வைத்திருக்கிற மாடக் கோயிலின் இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், அது நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்குப் போய்ச் சேராது. ஆனால் நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்கு ஒன்று கொடுத்தால், அது படமாடக் கோயிலின் இறைவனுக்கு மிக உறுதியாய்ப் போய்ச் சேரும்.

மேற்படிப் பாடலில் ‘நம்பர்’ என்பதற்கு உரைகாரர்கள் ‘சிவனடியார்’ என்று பொருள் கொண்டிருக்கிறார்கள். வள்ளலார் அதற்கு ‘உயிர்கள்’ என்று பொருள் கொண்டிருக்கக்கூடும். ஏனென்றால், எல்லா உயிர்களும் உடன்பிறப்புகள் இல்லையா? ஆகவே நம்மவர்கள் இல்லையா?

மேற்படிப் பாட்டால் வள்ளலாரின் கருத்தைக் கெட்டிப்படுத்தும் திருமூலர் மற்றொரு பாட்டால் மிக எளிய வழிமுறையில் அந்தக் கருத்தைச் செயலாக்கும் விதத்தைக் கற்பிக்கிறார்:

 

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை;

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை;

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

(திருமந். 252)

இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை; எளிமையாகப் பச்சிலை கொடுத்து வணங்கினாலே போதும். கோபூசை செய்ய வேண்டும் என்பதில்லை, பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை; உண்ணும்போது தான் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். பதாகைகள் வைத்துப் புகழ்ந்துரை செய்து முதுகு சொறிய வேண்டும் என்பதில்லை; யாருக்கும் இன்னுரை சொன்னாலே போதும் என்று எல்லார்க்கும் இயல்கிற வழிமுறை சொல்கிறார் திருமூலர். பகட்டல்ல; பற்றுதலும் பரிதவிப்புமே கணக்கில் வரும் என்பது திருமூலர் கருத்து.

அதனால்தான் வள்ளலார் சொல்கிறார்: ‘சாத்திரங்களில் சிறந்தது திருமந்திரம்; தோத்திரங்களில் சிறந்தது திருவாசகம். இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.’ (உபதேசக் குறிப்புகள்)

எல்லாம் சரி. சட்டியில் அருள் இல்லாத வட்டிக்காரர்களைப் பற்றித் திருமூலரும் வள்ளலாரும் ஒன்றும் சொல்லவில்லையா?

திருமூலர் எழுதுகிறார்:

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன

ஒட்டிய நல்அறம் செய்யாதவர் செல்வம்

வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்

பட்டிப் பதகர் பயன் அறியாரே

(திருமந்.260)

 

எட்டி மரத்திலும்கூடத்தான் பழங்கள் பழுக்கின்றன. என்ன பயன்? யார் உண்ண முடியும்? பழுத்துப் பழுத்து உதிர வேண்டியதுதான். அறத்தின் வழியில் அருள் சேர்க்காமல், வட்டிக்கு மேல் வட்டியிட்டுப் பாவிகள் சேர்க்கும் பொருளால் யாருக்குப் பயன்? பயன் தெரியாமல் பொருள் சேர்க்கிறார்கள் முட்டாள்கள்.

அதே தடத்தில், எடுத்துக்காட்டைக்கூட மாற்றாமல் வள்ளலார் எழுதுகிறார்:

...பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர்; வயிற்றுப்பெட்டியை நிரப்பிக்கொண்டு

ஒட்டிஉள் இருந்தீர்;

பட்டினி கிடப்பவரைப் பார்க்கவும் நேரீர்;

பழம் கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்;

எட்டிபோல் வாழ்கின்றீர்;

கொட்டிபோல் கிளைத்தீர்;

எத்துணை கொள்கின்றீர் பித்து உலகீரே?

(அருட்பா, VI, உறுதிகூறல், 6)

‘கிறுக்கர்களே! இன்னும் எவ்வளவு சேர்த்தால் உங்களுக்கெல்லாம் நிறையும்?’ என்று கேட்கிறார்கள் அருளாளர்கள். இந்தக் கேள்வியை நம்மால் யாரிடமும் கேட்க முடிகிறதா? அல்லது நம்மிடந்தான் இந்தக் கேள்விக்கு விடை இருக்கிறதா?

(கேள்விகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article21085831.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 11: கல்லாத அரசனும் காலனும் ஒன்றே

shutterstock731600095

அறியாமை நம்மைக் கட்டி வைத்திருக்கிறது; அறியாமையிலிருந்து முளைத்த ஆசை நம்மைக் கட்டி வைத்திருக்கிறது; ஆசை காட்டி ஆசை காட்டியே அதிகாரம் நம்மைக் கட்டி வைத்திருக்கிறது. இப்படி, வாழ்ந்திருக்கும் காலம் முழுக்க ஏதேனும் ஒன்றால் கட்டுண்டே கிடப்பது நமக்கு இன்பம் தருவதா? கட்டறுப்பதல்லவா இன்பம் தருவது? கட்டறுத்து விடுவதுதான் கல்வி. கல்வியின் பயன் காசுண்டாக்குவதற்கு மட்டுமல்ல; கட்டறுப்பது. கல்வி சாதியைக் கட்டறுக்கும்; சமயத்தைக் கட்டறுக்கும்; அதிகாரத்தைக் கட்டறுக்கும்; ஆசையைக் கட்டறுக்கும்; அறியாமையைக் கட்டறுக்கும். இவற்றை வழிமொழிகிறார் திருமூலர்.

துணையதுவாய் வரும் தூயநல் சோதி;

துணையதுவாய் வரும் தூயநல் சொல்லாம்;

துணையதுவாய் வரும் தூயநல் கந்தம்;

துணையதுவாய் வரும் தூயநல் கல்வியே.

(திருமந்திரம் 294)

இருள் அண்டும்போது ஒளியாக வருவதும், வாதுரைக்கும்போது சொல்லாக வருவதும், பழைய வாசனைகள் கிறுகிறுக்க வைக்கும்போது அவற்றைத் தேய வைக்கும் நறுமணமாக வருவதும், எப்போதும் துணையாக வருவதும் தூய நற்கல்வியே என்கிறார்.

கல்வி என்பது அனைவருக்குமான தகுதி என்றாலும் ஆள்கிறவனுக்கு மிகக் கட்டாயமான, இன்றியாமையாத தகுதி; எனவே, கல்வியைப் பொருளதிகாரத்தில், அரசியலில் வைத்திருக்கிறது வள்ளுவம்.

திருமூலர் சொல்கிறார்:

கல்லா அரசனும் காலனும் நேர்ஒப்பர்;

கல்லா அரசனில் காலன் மிகநல்லன்;

கல்லா அரசன் அறம்ஓரான்; கொல்என்பான்;

நல்லாரைக் காலன் நணுகி நில்லானே

(திருமந்திரம் 238)

கற்று அறியாத ஆட்சியாளனும் காலனும் ஒரே தன்மை உடையவர்கள். உயிரை வாங்கிவிடுவார்கள். சொல்லப்போனால் கற்று அறியாத அரசனைக் காட்டிலும் காலன் மிகவும் நல்லவன். கற்று அறியாத அரசனுக்கு அறம் என்றால் என்னவென்று தெரியாது; யாராக இருந்தாலும் வதைத்துக் கொல் என்பான். காலனை அப்படிச் சொல்லிவிட முடியாது.

 

உண்மையை அறியாத ஆட்சியாளன்

இங்கே, கற்று அறியாத ஆட்சியாளன் என்பதற்குப் பள்ளிக் கல்வி கற்காத ஆட்சியாளன் என்று பொருள் கொள்ள வேண்டாம்; அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய இவற்றின் உண்மையை அறியாத ஆட்சியாளன் என்று கொள்க.

இப்படியெல்லாம் பொதுவாகக் கல்வியைப் பற்றித் திருமூலர் சில சொன்னாலும், திருமூலர் பேசும் கல்வி, திருக்குறளும் நாலடியும் பேசுவதுபோலப் பொதுநிலைக் கல்வி அன்று; சைவ சமயம் சார்ந்த சிறப்புக் கல்வி; சிவக் கல்வி. ‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்பது நம்மாழ்வார் திருவாய்மொழியானால், ‘கற்பார் சிவபெருமானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்பது திருமூலர் திருமந்திரம்.

குறிப்பு அறிந்தேன் உடல் உயிர்அது கூடி;

செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை;

மறிப்புஅறியாது வந்து உள்ளம் புகுந்தான்;

கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே.

(திருமந்திரம் 290)

உயிர் ஏன் உடலுக்குள் வந்தது? என்ற கேள்வி எழுந்தபோது நான் கற்றிருந்த அடிப்படைக் கல்வி அதற்கு உடனடி விடை தராமல் என் நெஞ்சைக் கறித்தது; எதிர்க்களித்தது. அதற்கு மசங்காமல் விசாரிக்கத் தொடங்கினேன். நிலையானது எது, நிலையற்றது எது, எப்போதும் துணையாக என்னோடு இருப்பது எது, எப்போது வேண்டுமானாலும் என்னைக் கைவிட்டுவிடுவது எது, பற்றிக்கொள்ளத் தகுந்தது எது, பற்றிக்கொள்ளத் தகாதது எது என்று தெளிவாகத் தொடங்கியது. இந்த அறிவை ஆய்ந்து பெற்று அதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தான் உயிர் உடலுக்குள் வந்தது என்னும் குறிப்பை இந்தத் தொடர் விசாரணையின்மூலம் நான் அறிந்தேன்.

தேவர் பிரானாகிய இறைவன் என்னோடு இருப்பதும், எனக்குள்ளே இருப்பதும் விளங்கத் தொடங்கியது. திரும்பிப் போகும் திட்டம் இல்லாது என் உள்ளத்துக்குள் புகுந்துகொண்டான் இறைவன். நாடு, நகரம், கோயில், குளங்கள் என்று நான் தேடித் திரிந்த பரம்பொருளை எனக்குள்ளேயே காட்டிய சிவக் கல்விதான் உண்மையான கல்வி. என் நெஞ்சைக் கறிக்காத கல்வி. குமட்டிக்கொண்டு எதிர்க்களிக்காத கல்வி என்று கல்விக்குச் சமய வண்ணம் பூசுகிறார் திருமூலர்.

 

கற்றபின் பற்றல்

இந்த நிலையில், சிவத்தைப் பற்றிக்கொள்ளாதவர்கள் எண்ணும் எழுத்தும் கற்றிருந்தாலும் கல்லாதவர்கள் ஆகிவிடுகிறார்கள். எண்ணும் எழுத்தும் கல்லாத வேடராகிய கண்ணப்பரைப் போன்றவர்கள் சிவத்தைப் பற்றிக்கொண்டுவிட்டதால் கற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். பற்றிக்கொள்ள விரும்புவது எது என்பதைப் பொறுத்துக் கல்வி கல்லாமை ஆகிறது; கல்லாமை கல்வியும் ஆகிறது. பற்றுவது சரிதான். ஆனால், கற்றபின் வந்த தெளிவினால் பற்றுவதா, அல்லது பற்றுவது என்று முன்முடிவினால் கற்பதா?

கற்பக் கழிமடம் அஃகும்; மடம் அஃகப்

புற்கம் தீர்ந்து இவ்வுலகின் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்

தத்துவமான நெறி படரும்; அந்நெறி

இப்பால் உலகத்து இசைநிறீஇ உப்பால்

உயர்ந்த உலகம் புகும்.

(நான்மணிக் கடிகை, 30)

கற்றால் அறியாமை நீங்கும்; அறியாமை நீங்கினால் இவ்வுலகின் தன்மை என்ன என்பது விளங்கும்; அது விளங்கினால் உண்மை என்ன என்ற தேடுதல் தொடங்கும்; அது தொடங்கினால் அறிவாளன் என்ற புகழை இந்த உலகில் நிறுத்தி, உயர்ந்த உலகத்துக்குள் புகலாம்.

எனவே, கற்றல் முதலில். பற்றல் பின்னால். வண்டிக்கு முன்னால் மாட்டைப் பூட்டுவதுதான் முறை.

(தெளிவோம் தொடர்ந்து)

http://tamil.thehindu.com/society/spirituality/article21282532.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 12: ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே

 

 
shutterstock573513640%20Convertedcol

டவுளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினால் போதும்; அந்த விவாதத்தை முழுமையான விவாதம் ஆகவிடாமல், குறுக்கே ஒரு சுவர் எழுந்து மறிக்கும். அதை நம்பிக்கை என்க. யோசிக்கும் வேளையில், கடவுளைப்பற்றித்தான் என்றில்லை; இதுதான் என்னுடைய கொள்கை, கோட்பாடு என்று நாம் வரித்துக் கொண்டுவிட்ட எதுவாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கிய அடுத்த நொடி நம்பிக்கை என்னும் சுவர் எழுந்து குறுக்கே நின்று மறிக்கும். விவாதிக்கத் தொடங்கியவர்கள் நம்பிக்கைக்கு இப்பாலும் அப்பாலும் உள்ளவர்கள் ஆவார்கள். இப்பால் உள்ளவர்கள் ஏதோ ஒன்றின் நம்பிக்கையாளர்கள்; ஆகவே விவாதிக்க மறுப்பவர்கள். அப்பால் உள்ளவர்களோ அந்த ஏதோ ஒன்றை நம்பாதவர்கள், அல்லது வேறு ஏதோ ஒன்றை நம்புகிறவர்கள், அல்லது எதையுமே நம்பாதவர்கள்; ஆகவே விவாதிக்கத் தயங்காதவர்கள்.

தாங்கள் நம்புகின்ற ஒன்றை விவாதிக்க மறுப்பதனாலேயே நம்புகிறவர்கள் எல்லோரையும் மூடர்கள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள் சிலர். அப்படிச் செய்வது சரியல்ல. நம்பும் முறைமையில் மூட நம்பிக்கை, நம்பிக்கை என்று இரண்டு உண்டு. மூட நம்பிக்கை என்பது ஒரு கருத்தின் முக மதிப்பை நினைத்தோ, அல்லது அந்தக் கருத்தை எடுத்துரைத்த நூலின் அல்லது ஆளின் முக மதிப்பை நினைத்தோ, அந்தக் கருத்தை ஆராயாமல் ஏற்றுக் கொண்டுவிடுவது. ஆனால் நம்பிக்கையை அப்படிச் சொல்லிவிட முடியாது. ஆராய்ந்து ஆராய்ந்து ஒரு கருத்தைப்பற்றி ஒரு முடிவுக்கு வருவது; இறுதி செய்யப்பட்ட அந்த முடிவை நம்பிக்கையாக்கிக் கொள்வது; பிறகு அந்த நம்பிக்கை வழிந்தோடி வற்றிப் போய்விடாமல் அதற்கு கரைகட்டி, அணைகோலி, அந்த நம்பிக்கையையே தங்கள் கைவிளக்காக வைத்துக்கொள்வது—‘போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே,’ ‘வாழ்வே போற்றி, என் வைப்பே போற்றி’ என்று தான் தேடிக் கண்டடைந்ததை மணிவாசகர் தனக்குத் துணையாக வைத்துக்கொண்டதைப்போல.

 

தெளிந்த பின் குழம்ப வேண்டாம்

அவ்வாறே, தாங்கள் நம்பாத ஒன்றை விவாதிக்க முன்வருவதனாலயே நம்பாதவர்கள் எல்லோரையும் பகுத்தறிவாளர்கள் என்று அடையாளப்படுத்தி விடுகிறார்கள் சிலர். அப்படியும் சொல்லிவிட முடியாது. நம்பிக்கையோ, நம்பிக்கை இன்மையோ, தானே பகுத்தாராயாத எதுவும் மூட நம்பிக்கைதான்—கடவுள் இருப்பாக இருந்தாலும் சரி, கடவுள் மறுப்பாக இருந்தாலும் சரி.

தேற்றித் தெளிமின்; தெளிந்தீர் கலங்கன்மின்

ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே,

மாற்றிக் களைவீர் மறுத்துஉங்கள் செல்வத்தைக்

கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே (திருமந்திரம் 172)

என்கிறார் திருமூலர். ஆற்று வெள்ளம் அகப்பட்டுக்கொண்டவரைப் புரட்டி எடுத்து அலைக்கழிப்பதுபோல, நீங்கள் கற்றுக்கொண்ட எல்லாம்—சிறுகச் சிறுகச் சேகரித்துக் கையிருப்பாக வைத்திருக்கும் எல்லாம்—செல்வம் என்று கருதுகிற எல்லாம்—உங்களை முரண்பட்ட திசைகளில் செலுத்திக் கலக்கி எடுக்கும். அலைக்கழிவை மாற்றிக் களைந்து மெல்ல நிலை கொள்ளுங்கள். எது திசை, எது வழி என்று ஆராய்ந்து தெளியுங்கள். தெளிந்த பின்னால் மீண்டும் குழம்பாதீர்கள். அந்தத் தெளிவு உங்களை ஏதோ ஒன்றின்மேல் சார்புபடுத்தும். அந்தச் சார்பு உங்களை உறுதிப்படுத்தும். அந்த உறுதி,

காலா! உனை நான் சிறுபுல் என மதிக்கிறேன்; என்தன்

கால்அருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்

(பாரதி, காலனுக்கு உரைத்தல்)

-என்று உங்களை முழங்க வைக்கும்.

எதையுமே தேற்றாமல் தேர்ந்தெடுக்கச் சொல்வதில்லை அறிவர்கள்—கடவுள் உட்பட. ‘கடவுளைப்பற்றி, உயிரைப் பற்றி, உலகத்தின் தோற்றத்தைப்பற்றி என்று எல்லாவற்றைப்பற்றியும் மறைநூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது; எனவே அங்குமிங்கும் தேடி அலைந்து கொண்டிருக்காமல் மறைநூல்களில் சொல்லப்பட்டவற்றைக் கேள்வியின்றி அப்படியே நம்புங்கள்’ என்று மறை ஓதிகள் சொன்னபோது, அவற்றை நம்பாமல் ஆராயத் தலைப்பட்டார்கள் அறிவர்கள். அதற்கு மறுப்புக் குரல் எழுப்பினார்கள் மறை ஓதிகள். அவர்களுடைய மறுப்புக் குரலைப் புறக்கணித்து, உண்மையைத் தேடி, ஆராய்ந்து, அறிவுக்கு ஏற்புடைய வகையில் அடையாளம் கண்டபிறகு, தாங்கள் கண்டுகொண்டதை நம்பத் தொடங்கினார்கள் அறிவர்கள்.

தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை,

யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்

ஓதுமின், கேள்மின், உணர்மின், உணர்ந்தபின்

ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே (திருமந்திரம் 301)

‘கடவுள் யார் தெரியுமா? தேவருக்கெல்லாம் தேவன்! அழகுக்கெல்லாம் அழகன்!’ என்றெல்லாம் உங்களுக்குச் சொல்லப்படும். ஆனால் நானோ உங்களுக்குச் சொல்கிறேன்: அவ்வாறு சொல்லப்படுகிற கடவுளை, உள்ளது உள்ளவாறு அறிந்தவர்கள் யாரென்று தேடுங்கள். அவர்கள் அறிந்தது என்னவென்று அவர்களைக் கேளுங்கள். அத்தோடு நிறைவடைந்து நம்பிவிடாமல், கடவுளைப் பேசுகிற மறை நூல்களைக் குடைந்து ஆராயுங்கள். அவற்றில் சொல்லப்பட்டவை, சொல்லாமல் விடப்பட்டவை என்று எல்லாவற்றைக் குறித்தும் கேள்வி எழுப்பிக்கொண்டு விடை தேடுங்கள். உங்கள் அறிவு தருகிற விடையை அறிந்துகொள்வதோடு நிறுத்திவிடாமல் அத்துடன் உணர்வுப்பூர்வமாய் ஒன்றி அதில் நில்லுங்கள். நீங்கள் ஓங்கி நிற்பீர்கள்.

 

ஆற்றில் கிடந்தும் துறையறியாதவர்

திருமூலர்தான் இப்படிச் சொல்கிறார் என்று கருதவேண்டாம். அறிவர்கள் எல்லோரும் இப்படியே சொல்கிறார்கள். பட்டினத்தார் சொல்வதைக் கவனியுங்கள்:

நீற்றைப் புனைந்துஎன்ன? நீராடப் போய்என்ன? நீ, மனமே,

மாற்றிப் பிறக்க வகைஅறிந்தாய் இல்லை! மாமறைநூல்

ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?

ஆற்றில் கிடந்தும் துறைஅறியாமல் அலைகின்றையே!

(பட்டினத்தார், பொது, மெய்யுணர்வு, 40)

திருநீறு பூசுவதால், காலையும் மாலையும் நீராடுவதால், மாமறை நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஏழுகோடி மந்திரத்தையும் உச்சரிப்பதால் உண்மை அறிவு கிடைத்துவிடுமா? ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டவன் கரைசேர வேண்டுமானால் துறை எங்கே இருக்கிறது என்று தலை தூக்கிப் பார்ப்பது ஒன்றுதான் வழி. மந்திரம் சொல்வதால் மாங்காய் பழுக்காது.

அதற்காக உலகியல் அறிவை அடைவதோடு எல்லாவற்றையும் அறிந்துவிட்டதாக அறிதல் முயற்சியை நிறுத்திக்கொண்டுவிட முடியாது.

அறிவுஅறிவு என்றுஅங்கு அரற்றும் உலகம்;

அறிவு அறியாமை யாரும் அறியார்;

அறிவு அறியாமை கடந்து அறிவுஆனால்,

அறிவு அறியாமை அழகியவாறே. (திருமந்திரம், 2362)

உலகியல் அறிவு மட்டுமே அறிவு என்று அரற்றிக்கொண்டும் அறிவித்துக்கொண்டும் இருக்கிறது இந்த உலகம். அதை நம்பி, வெறும் உலகியல் அறிவை மட்டுமே பெற்றுக்கொண்டு நிறைவடைந்துவிடுவது என்பது முழு அறிவைப் பெற்றதாக ஆகாது. உலகியல் அறிவு மட்டுமே அறிவு என்று நம்புவது உண்மையில் அறியாமை. இந்த அறியாமையை ஆராய்ச்சியினால் தாண்டிக் கடந்து, உலகியலுக்கு அப்பால் இருப்பதையும் அறிய முடிந்தால், முன்பு அறிவு என்று தழுவப்பட்டது அறியாமையும் ஆகலாம்; அறியாமை என்று தள்ளப்பட்டது அறிவும் ஆகலாம். ஆராய்ந்து தெளிக. அவரவர் அறிவு அவரவர்க்கு என்றாலும் அறிவது அழகுதான்.

குருட்டாம்போக்கில் ஏதோ ஒன்றை நம்புவது மூட நம்பிக்கையென்றால், அதற்கு எதிராக நிற்பது பகுத்தாராய்கிற அறிவு. பகுத்தாராய்கிற அறிவினால் ஆய்ந்து மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை என்றால், அதற்கு எதிராக நிற்பது அதே பகுத்தறிவினால் வேறொரு கோணத்தில் ஆய்ந்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நம்பிக்கை.

கடவுள் விவகாரத்தில் இங்கு நடப்பது ஒரு நம்பிக்கைக்கும் மற்றொரு நம்பிக்கைக்கும் இடையிலான முரண்பாடே அன்றி அறிவுக்கும் அறியாமைக்கும் இடையிலான மோதல் அன்று. ஆனால் இதை உணராமல் இரு குழுவினர் மோதிக்கொள்வது கடவுளறிய அறியாமைதான்.

(தொடர்ந்து அறிவோம் )

http://tamil.thehindu.com/society/spirituality/article22121932.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 13: தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே

 

 
shutterstock300934064

செல்வம் உலகியல் தேவைகளுக்கானது. தாங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியலுக்கு ஏற்பக் கூடுதலாகவோ குறைவாகவோ இந்த உலகில் வாழ வந்தவர்கள் அனைவரும் தேடியே ஆக வேண்டியது செல்வம். அறிவும் அப்படித்தான். அறிவையும் எல்லோரும் தேடித்தான் ஆக வேண்டும். செல்வத்தைப் போலவே, தாங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியலுக்கு ஏற்பக் கூடுதலாகவோ குறைவாகவோ எல்லோரும் அறிவைச் சேகரிக்கத்தான் செய்கிறார்கள். என்றபோதிலும், செல்வச் சேகரமும் அறிவுச் சேகரமும் ஒரு மாதிரியானவை அல்ல. ஏன்? செல்வச் சேகரிப்பில் தன்முயற்சி மட்டும் போதுமானதில்லை. அதில் ‘ஊழ்வினை’ என்ற கண்ணுக்குத் தெரியாத அமைப்பும் உதவ வேண்டும். ஆனால், அறிவுச் சேகரிப்பில் தன்முயற்சி மட்டுமே போதுமானது; அதில் கண்ணுக்குத் தெரியாத எந்த அமைப்பும் உதவிக்கு வருவதுமில்லை; அறிவைத் தருவதுமில்லை.

 

முயற்சியின்றி அறிவு இல்லை

மகாபாரதக் கிளைக் கதை ஒன்றில் யவக்கிரீதன் என்ற ஒரு முட்டாள் கதாபாத்திரமுண்டு. தன்னை இகழ்கிறவர்கள் எல்லோரும் பாராட்டும்வகையில் தான் ஒரு அறிவாளியாகிவிட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அறிவை வேண்டித் தவம் செய்தான். தவத்தை மெச்சி இந்திரன் வந்தான். ‘என்ன வேண்டும்?’ என்றான். யவக்கிரீதன் ‘அறிவு வேண்டும்’ என்றான். ‘அறிவு என்பது நீயாக முயன்று பெறுவது; என் வரத்தினால் அது வருவதில்லை’ என்று சொல்லி இந்திரன் போய்விட்டான். ‘அறிவு வரம் பெறுவதற்கு இன்னும் கடுமையாகத் தவம் செய்ய வேண்டும் போலிருக்கிறது’ என்று எண்ணியவாறே ஆற்றங்கரையில் நடந்துகொண்டிருந்தான் யவக்கிரீதன். ஆற்றங்கரையில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவர் கரையிலிருந்த மணலைக் கையால் அள்ளி ஆற்றுக்குள் வீசிக்கொண்டிருந்தார். ‘என்ன செய்கிறீர்கள்?’ என்றான் யவக்கிரீதன். ‘ஆற்றுக்குக் குறுக்கே அணை கட்டுகிறேன்’ என்றார் பெரியவர். யவக்கிரீதன் சிரித்தான்: ‘ஆற்றுக்குள் இறங்காமல் அணை கட்ட முடியுமா? அதுவும் மணலைக் கொண்டு? அதுவும் கையால் அள்ளி?’ என்று கேலி செய்தான். ‘அறிவைப் பெறுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், அதை வரத்தால் பெற்றுவிடலாம் என்று நீ நினைக்கும்போது, ஆற்றுக்குள் இறங்காமலே அணை கட்டிவிடலாம் என்று நான் நினைப்பது மட்டும் தவறாகுமா?’ என்று கேட்டுவிட்டுப் போனார் பெரியவர். அறிவு கண்ணுக்குத் தெரியாத அமைப்புகளால் அருளப்படுவதில்லை. தன்முயற்சியால் தெளியப்படுவது.

 

பேய் அறிவு எது?

செல்வத்தைச் சிறு செல்வம், பெருஞ் செல்வம் என்று வகைப்படுத்தலாம். அவ்வாறே அறிவையும் சிற்றறிவு, பேரறிவு என்று வகைப்படுத்தலாம். என்றபோதிலும், செல்வப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் ஒரே மாதிரியானவை அல்ல. ஏன்? செல்வப் பெருக்கம் அளவைப் பொறுத்தது. குறைய வைத்திருந்தால் சிறுசெல்வம்; நிறைய வைத்திருந்தால் பெருஞ்செல்வம். ஆனால், அறிவுப் பெருக்கத்தை அப்படிச் சொல்ல முடியாது. செய்திகளை அறிந்து வைத்திருக்கிறவன்தான் அறிவாளி என்றால் விநாடி வினா நிகழ்ச்சிகளில் நிறைய விடை சொல்கிறவர்களே பேரறிவாளிகள் என்று ஆகிவிடும். அறிவு என்பது அளவைப் பொறுத்ததில்லை; தன்மையைப் பொறுத்தது. அறிந்து வைத்திருக்கும் செய்திகளின் எண்ணிக்கை கணக்கில்லை; அறிந்து வைத்திருப்பது எதை என்பதுதான் கணக்கு.

நல்லது. எதை அறிந்து வைத்திருந்தால் அறிவு எனலாம்?

...தன்னை அறிவது அறிவாம் அஃதுஅன்றிப்

பின்னை அறிவது பேய்அறிவு ஆகுமே

(திருமந்திரம் 2318)

- என்று அடையாளம் காட்டுகிறார் திருமூலர். தன்னையே தான் அறிந்து வைத்திருக்கிற அறிவுதான் அறிவு; தன்னை அறிகிற வேலையை விட்டுவிட்டு மற்றவற்றையெல்லாம் அறிகிற அறிவு பேய் அறிவு. அதென்ன பேய் அறிவு? பேய்கள் நிலைகொள்ளாமல் உழலும்; அலையும்; தவிக்கும். அவற்றுக்கு ஏதேனும் ஒரு பிடிமானத்தில் தங்களை நங்கூரம் இட்டு நிறுத்திக்கொள்ளத் தெரியாது. அதைப் போல, கண்டதையெல்லாம் அறிந்து, அறிந்ததை எல்லாம் தனக்கே உரித்தாக்கிக்கொள்ள நினைத்து அத்தனைக்கும் ஆசைப்பட்டு, அவற்றை அடைய நினைத்துப் பின்னால் ஓடி நடந்து, கிடைத்துவிட்டால் நுகர்ந்து சலித்து, கிடைக்காவிட்டால் வருந்தி இளைத்து, அறிய வேண்டியது எதை, மேலும் அலைபாயாமல் தன்னை நங்கூரம் இட்டு நிறுத்திக்கொள்வது எதில் என்று புரியாமல் தடுமாறி நிற்பது பேய் அறிவு.

தன்னை அறியவேணும் அகப்பேய்!

சாராமல் சார வேணும்!

பின்னை அறிவதுஎலாம் அகப்பேய்,

பேய்அறிவு ஆகுமடி!

(அகப்பேய்ச் சித்தர், 78)

என்று கருத்து மாறாமல், சொல் மாறாமல் திருமந்திரத்தை வழிமொழிகிறார் அகப்பேய்ச் சித்தர்.

தன்னை அறிந்து இன்பம்

உற வெண்ணிலாவே – ஒரு

தந்திரம்நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே

(திருவருட்பா, 2ஆம் திருமுறை)

என்று ‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் ஒருவரான’ வள்ளலாரும் உடன்படுகிறார்.

தன்னை அறிதலை இன்னும் நியாயப்படுத்தி அழுத்துகிறார் திருமூலர்:

தன்னை அறியத் தனக்கு

ஒரு கேடு இல்லை;

தன்னை அறியாமல் தானே

கெடுகின்றான்;

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்,

தன்னையே அர்ச்சிக்கத் தான்இருந் தானே.

(திருமந்திரம் 2355)

ஒருவர் தனக்கு வெளியில் உள்ள பொருட்களையெல்லாம் அறிவதைப் போலவே தன்னையும் அறிந்திருக்க வேண்டாமா? அறிதல் என்ற செயல்பாட்டைப் புறத்தில் உள்ள பொருட்களிலிருந்து தொடங்கினாலும், அறியும் பொருளாகிய தன்னையும் அதில் உட்படுத்திக்கொள்ள வேண்டாமா? ‘என்னைப் பத்தி நீ என்ன நினைக்கிற?’ என்று அடுத்தவரிடம் கேட்பவர் அடி முட்டாள் இல்லையா? தன்னையே தன்னுடைய குறைநிறைகளோடு தனக்குத் தெரியாதென்றால் பிறரையும் பிறவற்றையும் நான் அறிவதிலும் அறிக்கையிடுவதிலும் என்ன முழுமை இருக்க முடியும்? என் நிறையை நான் அறியாததால் அல்லவா மற்றவரைப் பெரியவராக எண்ணி அவர் காலில் விழுந்து வணங்குகிறேன்? என் குறையை நான் அறியாததால் அல்லவா மற்றவரைச் சிறியவராக எண்ணி அவரை என் காலில் விழச் செய்கிறேன்?

கருத்தை மேலும் கெட்டிப்படுத்துகிறார் திருமூலர்:

தானே தனக்குப் பகைவனும்

நட்டானும்;

தானே தனக்கு மறுமையும்

இம்மையும்;

தானே தான்செய்த

வினைப்பயன் துய்ப்பானும்;

தானே தனக்குத்

தலைவனும் ஆமே.

(திருமந்திரம், 2228)

அறிந்தவர்கள் சிலரைப் பகைவர்கள் என்றும் சிலரை நண்பர்கள் என்றும் குறித்து வைத்திருக்கிறவர்களே, நீங்கள் அறிக: உங்களுக்கு நீங்களே பகைவர்; உங்களுக்கு நீங்களே நண்பர். இப்பிறப்பில் நான் இவ்வாறு இருக்கக் காரணம் இது, மறுபிறப்பில் நான் வேறொன்றாய்ப் பிறக்க வழிசெய்வது இது என்று கணக்குப் பார்க்கிறவர்களே, நீங்கள் அறிக: இப்பிறப்பில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, மறுபிறப்பில் என்னவாக ஆகப் போகிறீர்களோ, அனைத்துக்கும் காரணம் நீங்களே. அதற்கான வினையைச் செய்தவரும் நீங்களே; அந்த வினையின் பயனை நுகர்பவரும் நீங்களே. ஆகவே, மரியாதைக்குரியவர்களே! உங்களுக்கு ஆணையிடுகிற, உங்களைச் செயல்படுத்துகிற தலைவர் நீங்களே. அதை அறியாமல் பிறரைத் திட்டாதீர்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

எனவே, கேடு என்பது தன்னை அறியாதிருப்பது. நன்மை என்பது தன்னை அறிவது. தன்னை அறிக. தன்னை அறியும் அறிவை அறிக. அறிந்துவிட்டால், போற்றுவதும் போற்றப்படுவதும் தூற்றுவதும் தூற்றப்படுவதும் என்று எல்லாமும் தனக்குள்ளே இருப்பது விளங்கும். தன்மதிப்பென்னும் சுயமரியாதை, தன்னை அறிவதிலிருந்தே முளைக்கிறது.

(அறிதல் விகாசம் பெறும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article22358370.ece

Link to comment
Share on other sites

  • 1 month later...

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 14: அற்புதக் கூத்தனை யார் அறிவாரோ?

 

 
shutterstock367847876%20Convertedbw

கோயில் என்றாலே சைவத்தில் சிதம்பரந்தான். சிதம்பரத்துக்கென்ன அத்தனை சிறப்பு? இறைவனை உருவமாகவும் (கூத்தன்), அருவுருவமாகவும் (இலிங்கம்) மட்டுமல்லாது, அருவமாகவும் (சிற்றம்பல வெளியாகிய சிதம்பர இரகசியம்), வடிவநிலைப்படுத்தப்பட்ட ஒரு மெய்யியற் கொள்கையாகவும்கூட (கூத்தன் வடிவத்தில் சித்தாந்தப் பெருங்கொள்கை) காட்ட முனைகிற இடம் அது என்பதால் சிதம்பரம் சிறப்பு.

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்

சொற்பதம்ஆம் அந்தச் சுந்தரக் கூத்தனைப்

பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை

அற்புதக் கூத்தனை யார்அறி வாரே? (திருமந்திரம் 2723)

என்று திருமூலர் விசாரிக்கும் தென்தில்லை மன்றாடியை, அணிதில்லைச் சிற்றம்பலவனை அனைவரும் அறியவே விரும்புகிறார்கள். ஆனால் அறியும் வழி எது?

நந்தனார் போக விரும்பிய தலம் தில்லைச் சிற்றம்பலம். வேதியரிடத்தில் தொண்டூழியம் செய்த நந்தனார் சிதம்பரம் போக வேண்டி ஆண்டையாகிய வேதியரிடம் அனுமதி கேட்க, வேதியர் மறுக்க, நந்தனார் மன்றாட, வேதியர் நந்தனாரை வேலையில் முடுக்கிவிட, இறையருளால் நந்தனார் வேலையை முடித்துவிட, வேதியர் மலைத்துப் போகிறார்.

படித்தும் என்ன எங்கள் வேதம் – அதில்

பார்த்ததுஇல்லை இந்தப் பகவன்நல் கீதம்

எடுத்துச் சொன்னாய்சிவ போதம் – அது

ஏற்காமல் போச்சுது என்பிடி வாதம் (நந்தனார் சரித்திரக் கீர்த்தனை)

‘நந்தா, வேதம் படித்தும் நான் காணாத இறைவனை, வேதம் படிக்காத நீ கண்டிருக்கிறாய். கண்ட இறைவனைக் காட்டு எனக்கும்’ என்கிறார்.

ஐயே மெத்தக் கடினம் – உமக்குஅடிமை

ஐயே மெத்தக் கடினம்!

என்று தொடங்குகிறார் நந்தனார். அடிமைத் தொண்டூழியம் செய்வது எவ்வளவு கடினம் பாருங்கள். ‘வேலையைக் காட்டு’ என்றால் காட்ட முடியும்; ‘கடவுளையும் காட்டு’ என்றால் காட்ட முடியுமோ?

என்றாலும் நந்தனார் காட்ட முயல்கிறார்:

...மானஅபிமானம் விட்டுத் தான்ஆகி நின்றவர்க்குச்

சேனாதி பதிபோலே ஞானாதி பதிஉண்டு

பாருமே! கட்டிக் காருமே! உள்ளே சேருமே! அது பூருமே!...

‘மானாபிமானம் விட்டுத் தான் ஆகி நிற்றல்’

என்பதுதான் நந்தனார் கண்டுகொண்ட வழி.

மானாபிமானம் விடுதல் என்பதென்ன?

ஒரு காரியத்தைச் செய்கிறோம். அதைச் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதற்காக மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், கருமமே கண்ணாகி, நம்மை மறந்து அதில் தலைப்படுகிறோம். அதைக் காணும் உலகம், பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்காமல் காரியத்தையே பார்த்துக்கொண்டு பேயாய்த் திரிவதாகப் பழிக்கும். சிலவேளை சிரிக்கும். ஆனால் கருமமே கண்ணானவர்களுக்கு அதைக் குறித்து நாணம் இருக்காது. அவர்கள் மானாபிமானம் விட்டவர்கள்.

 

தான் ஆகி நிற்றல் என்பதென்ன?

உலகம் நமக்கு உருவேற்றிக்கொண்டே இருக்கிறது. உலகம் உருவேற்றியவாறு உண்கிறோம்; உடுக்கிறோம்; உழைக்கிறோம். ஆதிக்கம் செய்ய வேண்டிய இடங்களையும் அடங்கி இருக்க வேண்டிய இடங்களையும் உலகம் நமக்குக் கற்பித்து வைத்திருக்கிறது. கற்பித்தவாறு செய்கிறோமா என்று நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. நம் வசத்தில் நாம் இல்லை. உலகத்தின் அதிகார வசத்தில் இருக்கிறோம். நம் வசத்துக்கு நாம் மீளுதலே விடுதலை; தன் வசத்தில் ஒருவர் இருத்தலே தான் ஆகி நிற்றல்.

இவ்வாறு மானாபிமானம் விட்டுத் தன் அறிவைப் பற்றித் தான் ஆகி நின்றவர்களின் உள்ளத்துக்குள் அறிவின் தலைவனாகிய ஞானாதிபதி தானே ‘பூந்து’ நுழைகிறான்.

திருமூலர் சொல்கிறார்:

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்

தன்னினில் தன்னை அறியத் தலைப்படும்

தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்

தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே (திருமந்திரம், 2349)

தன்னைத் தன் பிம்பத்தின்வழியாகவும், தன்னைப் பின்தொடர்கிறவர்களுடைய கருத்தின் வழியாகவும், இன்ன பிற ஊடகங்களின் வழியாகவும் அறிய முயலாமல், தன்னைத் தன் வழியாகவே அறிய முயல்கிறவன்தான் தலைவன். தனக்குத் தானே தலைவன் ஆதல்தான் ஆன்மிகம். தனக்கே தான் தலைவனாக இல்லாதபோது, தன்னைப் பிறருக்குத் தலைவனாக முன்வைத்துக்கொள்ளுதல் அரசியல். ஆன்மீகம் வேறு; அரசியல் வேறு. தனக்குள்ளேயே தன்னை அறிகிறவன் இறைவனைத் தேடிக் காடுமலை திரியாமல் தனக்குள்ளேயே கடவுளைக் கண்டுகொள்வான். தன்னிலே தன்னைக் கண்டுகொள்ள முடியாதவன் தலைவனும் ஆக மாட்டான்; கடவுளையும் காண மாட்டான்.

 

அகத்தில் இருப்பவனுக்கு என்ன வேண்டும்

கடவுள் தன்னிலிருந்து வேறானவன் என்று கருதி அவனைப் புறத்தில் தேடுகிறார்கள். கண்டுபிடித்துவிட்டதாகக் கருதிச் சிலை வடித்துக்கொள்கிறார்கள். கற்சிலை செய்துகொண்டது போக உற்சவரும் செய்துகொள்கிறார்கள். உற்சவருக்கு ஐம்பொன்னில் திருமேனி வடிக்கத் தங்கத்தைக் கொடை வழங்குகிறார்கள். கொடை கொடுத்த தங்கம் திருடுபோகிறது; ஆனாலும் கடவுள் திருடுபோவதில்லை. ஏனென்றால் திருடுபோகும் இடத்தில் கடவுள் இல்லை. இறைவன் இருக்குமிடம் சொல்கிறார் திருமூலர்:

தான்என்று அவன்என்று இரண்டாகும் தத்துவம்;

தான்என்று அவன்என்று இரண்டும் தனில்கண்டு,

தான்என்ற பூவை அவன்அடி சாத்தினால்

நான்என்று அவன்என்கை நல்லதொன்று அன்றே. (திருமந்திரம் 1607)

தான் (உயிர்) என்றும், அவன் (இறைவன்) என்றும் இரண்டு பொருள்கள். தான் இருப்பது உடம்பில்; இறைவன் இருப்பது வெளியில் என்று கருத வேண்டாம். தன்னிலேயே இருக்கிறான் அவன். எனக்குள்ளே இருக்கிற இறைவனுக்கு நான் ஏதெனும் வழங்கிப் பூஜை செய்ய வேண்டாமா? புறத்தில் இருக்கிற இறைவனாக இருந்தால் தங்கம் வழங்கலாம். அகத்தில் இருக்கும் இறைவனுக்கு என்ன வழங்குவேன்? என்று மயங்க வேண்டாம். உங்களையே இறைவனுக்குப் பூவாக்கிச் சாத்திக்கொள்ளுங்கள். உங்களையே பூவாக்கிச் சாத்திக்கொண்டபிறகு நான் என்று சொல்லிக்கொள்ள நீங்கள் ஏது மிச்சம்?

‘வான் கெட்டாலும் தான் கெடாத தலைவனுக்கு என்னையே நான் படைத்துக்கொண்டபோது, ஊன் கெட்டேன்; ஊனுக்குள் உட்கார்ந்திருந்த உயிர் கெட்டேன்; உணர்வு கெட்டேன்; உணர்வுக்கு ஊற்றான உள்ளம் கெட்டேன்; அனைத்துக்கும் தளமான நான் கெட்டேன்’ என்று தெள்ளேணம் கொட்டுகிறார் மாணிக்கவாசகர். (திருவாசகம், திருத்தெள்ளேணம், 18)

வெங்காயத்தை உரித்தபிறகு வெங்காயம் இல்லை; உரித்தவன் மட்டுமே இருப்பதைப்போல, தன்னை மறந்து, தலைவன் தாளைத் தலைப்பட்டுவிட்ட பிறகு, தான் இல்லை; இறைவனே இருக்கிறான். திருமூலர் பாடுகிறார்:

எங்கும் திருமேனி; எங்கும் சிவசத்தி;

எங்கும் சிதம்பரம்; எங்கும் திருநட்டம்;

எங்கும் சிவமாய் இருத்தலால், எங்கெங்கும்

தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டுஅதே. (திருமந்திரம் 2722)

உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் இருக்கிற எல்லாம் இறைத் திருமேனிதான். இயங்குகிற எல்லாம் சிவசத்திதான். பார்க்கின்ற வெளியெல்லாம் சிதம்பரந்தான். ஆடுகிற எல்லாம் திருக்கூத்துத்தான். பார்க்கும் இடம் எங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தமாய்ப் பரமசிவம். திருமேனி செய்யத் தங்கக் கொடை தேவையில்லை.

திருமூலர் வந்து சேர்ந்த இந்த இடத்துக்கே நந்தனாரையும் கொண்டு வந்து சேர்க்கிறார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார்.

ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை. ‘மானாபிமானம் இன்றித் தானாகி நின்றவர்க்கு ஞானாதிபதி உண்டு பாருமே! உள்ளே சேருமே!’ என்று சிதம்பரத்துக்குப் போகாமல் தனக்குள்ளேயே இறைவனைக் காணும் வித்தையை நந்தனார் வழியாக வேதியருக்குக் கற்றுக்கொடுத்த கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனாரை மட்டும் ஏன் சிதம்பரத்துக்கு அனுப்பினார்? கோபாலகிருஷ்ண பாரதியாரின் வரிகளிலேயே சொல்வதென்றால்,

இதைக் கண்டாரும் கிடையாது! விண்டாரும் சொன்னதில்லை!

(பகிர்வு தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article22418645.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 15: குருவாய் வருவாய் அருள்வாய்

 

sivanjpg

எது ‘மிகக் கடினம்’ என்று பலராலும் சொல்லப்படுகிறதோ, ‘ஆமாம், கடினம்தான்’ என்று கேட்கிறவர்களாலும் நம்பப்படுகிறதோ, அதற்கு இடைத்தரகுகள் உருவாகிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு தேவைக்காக அரசை அணுக வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதிகார வட்டத்தோடு தொடர்பில்லாத எளிய மக்கள் அரசை அணுகுவது எளிதான செயல் இல்லை என்று நம்முடைய புத்தியில் செதுக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்வோம்? இயல்பாக இடைத்தரகர்களை அணுகுவோம்.

இடைத்தரகர்கள் மூன்று வகை: முதலாவது வகை, நம்மிடம் பெற வேண்டியதைப் பெற்றுக்கொண்டு, நமக்கு வர வேண்டியதைப் பெற்றுத் தருகிற ‘நேர்மையாளர்கள்.’ இரண்டாவது வகை, நம்மிடம் பெற வேண்டியதைப் பெற்றுக்கொண்டு, நமக்கு வர வேண்டியதைப் பெற்றுத் தராமல் ஏய்த்துவிடுகிற ஏமாற்றுக்காரர்கள். மூன்றாவது வகை, நம்முடைய கோரிக்கை நியாயமானது என்பதை விளங்கிக்கொண்டு, நம்மிடம் எதையுமே பெற்றுக்கொள்ளாமல், நாம் பெற வேண்டியவற்றைப் பெற்றுத்தருகிற சேவையாளர்கள்; செல்வாக்குப் பெறுவது என்பதே பொதுச்சேவை செய்ய மட்டுந்தான் என்று கருதுகிறவர்கள். இந்த மூன்று வகையினரில் முதல் வகையினரும் இரண்டாம் வகையினரும் கணிசமான அளவினர். மூன்றாம் வகையினர் அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய உயிரினமாகிக்கொண்டிருக்கிறார்கள்.

 

வானம் என்ன அத்தனை எளிதா?

இருக்கட்டும். எடுத்துக்காட்டுவதை நிறுத்திக்கொண்டு நம் விவகாரத்துக்கு வருவோம். நாம் பெற வேண்டுவது எதை? கடவுளை! அரசாங்கத்தை அணுகும் செயலே அரிது என்றால், கடவுளை அணுகும் செயல் என்ன எளிதோ?

தான்என்ற ஆணவத்தை நீக்க மாட்டார்;

சண்டாளக் கோபத்தைத் தள்ள மாட்டார்;

ஊன்என்ற சுகபோகம் ஒழிக்க மாட்டார்;

உற்றுநின்ற சையோகம் விடுக்க மாட்டார்;

பான்என்ற ஞானவெள்ளம் உண்ண மாட்டார்;

பதறாமல் மவுனத்தே இருக்க மாட்டார்;

வான்என்ற பொருள்என்ன எளிதோ மைந்தா?

மகத்தான மனம்அடங்க எய்யும் காணே!

-என்று கடவுளை அடையும் செயலின் எளிமையின்மையைப் பாடுகிறார் கைலாயக் கம்பளிச் சட்டைமுனி என்ற சித்தர். ஆணவம், கோபம், சுகபோகம், காமம் எதையும் தள்ள மாட்டீர்கள்; அடைய வேண்டிய ஞானம் எது என்பதை உணர மாட்டீர்கள்; சும்மா இருந்து சொல்லறுக்கவும் மாட்டீர்கள்; ஆனால், வானம் மட்டும் எங்களுக்கு வசப்பட வேண்டும் என்று வேண்டுவீர்கள். வானம் என்ற பொருள் என்ன அவ்வளவு எளிதா? ஏறாத ஏணியிட்டு எட்டாத உயரமெல்லாம் எட்டச் சொல்லும் ஆசைமனம் அடங்கட்டும்; வானம் தானாகக் கிட்டி வரும்.

நல்லது. ஐயத்திலிருந்து விடுபட்டுத் தெளிந்தவர்களுக்கு வையத்தைக் காட்டிலும் வானமே பக்கத்தில் இருக்கிறதென்று வள்ளுவரும் சொல்லுகிறார்தான். என்றாலும் ஐயங்களிலிருந்து விடுபட்டுத் தெளிதல் என்பதென்ன எளிதான செயலா? இல்லைதான். ஐயத்திலிருந்து தானாகவே நீங்குவது என்பது நடக்கவே இயலாத செயலில்லை என்றாலும், தக்க துணை இன்றிச் செய்யக் கடினமான செயல்தான். எனவே, எளியவர்கள் இடைத்தரகு வேண்டுவது நியாயம்தான். ஐயம் தெளியாமல் அயர்ந்து நிற்கும் எளிய உயிர்களுக்கும் கடவுளுக்கும் நடுவில் கைகாட்டி மரமாக நின்று திசைகாட்டிச் செலுத்துவிக்கும் குருமார் தேவைதான்.

 

சரியான குருவுக்கு அடையாளங்கள்

பிறகென்ன? கடவுளைக் கண்டுகொள்ளும் செயல் எளிதாகிவிடும் இல்லையா? ஆகாது. ஏன்? கடவுளைக் கண்டு சொல்லும் சரியான குருவைத் தேர்ந்துகொள்வது கடினமாகிவிடுகிறது இல்லையா? சரியான குருவுக்குச் சில அடையாளங்கள் சொல்கிறார் திருமூலர்:

குருஎன் பவனே வேதஆகமம் கூறும்

பரஇன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து

ஒருசிந்தை இன்றி உயர்பாசம் நீக்கி

வரும்நல் குரவன்பால் வைக்கலும் ஆமே. (திருமந்திரம் 2057)

குரு என்பவன், பற்றுதலை அறுத்தவன்; சிவயோகத்தைத் தன் வழிமுறையாகக் கொண்டவன்; எண்ணுவதற்கும் அடைவதற்கும் ஏதுமில்லாத நிலையில் எண்ணங்களே இல்லாமல் இருப்பவன்; சமய நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் பேரின்பத்தில் திளைத்து வாழ்பவன்; அவனிடம் நீங்கள் நம்பிக்கை வைக்கலாம்.

அவ்வாறு நம்பிக்கை வைத்து அவன் வழிச் சென்றால் அவன் நமக்குச் செய்வதென்ன?

தவிரவைத் தான்வினை, தன்அடி யார்கோள்;

தவிரவைத் தான்சிரத் தொடுதன் பாதம்;

தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்;

தவிரவைத் தான்பிற வித்துயர் தானே. (திருமந்திரம் 2050)

‘இறைவனைப் போற்றுவது என் கொள்கை; போற்றாதவர்களும் மறுப்பவர்களும் ஒழிக’ என்று மூடத்தனமாய்க் கொள்கை பேசி, அந்த மூடக் கொள்கையை மேலும் முன்னெடுக்கும் வகையில் வசவு, மிரட்டல், அடிதடி போன்ற அடாவடி வினைகளுக்குத் துணியும் கடியவர்களான அடியவர்களை நெறிப்படுத்தி, அவர்களின் மூடத்தனத்தைத் தவிர்ப்பான். சாவைக் குறித்த அச்சத்தை விலக்குவான். சாவைப் பற்றி அச்சம் தவிர்ந்துபோகும்போது, ‘பிறவி ஒரு துன்பம்’ என்ற எதிர்நிலைக் கருத்து தானாகவே தகர்ந்து போகும். அறிவின்மையை, அடாவடியை, சாவச்சத்தை, வாழ்வின் துன்பத்தை என்று எல்லாவற்றையும் தவிர்த்தவன் திருவடி நம் தலைமேல் வைத்தான். அதைக் கொள்ளலாம்; பிழையில்லை.

தனை மறந்த தொண்டால், நமை நினைக்கச் செய்யும் அத்தகைய குரு ஒருவர் கிடைக்கும் நிலையில்,

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்றே

-என்று ஔவை சொன்ன மூதுரைபோல,

தெளிவு குருவின் திருமேனி காண்டல்;

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்;

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்;

தெளிவு குருஉருச் சிந்தித்தல் தானே (திருமந்திரம் 139)

-என்று இருந்துவிடலாம். ஆனால், சிக்கல் என்னவென்றால், கைமாறாக ஏதும் கோராமல், அரசுக்கும் எளியவர்களுக்கும் நடுவில் நின்று, தன் செல்வாக்கால் சேவை செய்யும் செய்யும் மூன்றாவது வகை இடைத்தரகர்களைப்போலவே, கடவுளைக் கண்டு சொல்லும் உண்மைக் குருமார்களும் அரிதிலும் அரிதாகிவிட்டார்கள். இருபாலரையும் திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி இளைத்த கதைதான்.

அரிதிலும் அரிதாக இருக்கிற ஒன்றைக் கடவுளாகவே காண்பதும் கருதுவதும் வழக்கந்தானே? அந்த அடிப்படையில் குருவையே சிவமாக்கிவிடுகிறார் திருமூலர். அல்லது, எளிய மனிதக் குருக்களால் இத்தகைய செந்நிலையை எய்த முடியாது என்பதால் சிவனே குருவாக வந்தான் என்று வைத்துக்கொண்டாலும் பொருந்துந்தான்.

குருவே சிவம்எனக் கூறினன் நந்தி;

குருவே சிவம்என் பதுகுறித்து ஓரார்;

குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்;

குருவே உரைஉணர்வு அற்றதோர் கோவே. (திருமந்திரம் 1581)

குருதான் சிவம் அல்லது சிவம்தான் குரு. அறிக. இறைவனே குருவாக வருவான் என்னும் கருதுகோளைத் திருமூலர் மட்டுந்தான் முன்வைக்கிறாரா? பிறரும் வைக்கிறார்கள்.

...அருபரத்து ஒருவன் அவனியில் வந்து

குருபரன் ஆகி அருளிய பெருமை...

-என்று திருவாசகத்தின் போற்றித் திருவகவலில் மணிவாசகர் புல்லரிக்கிறார்.

...குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில்

திருவடி வைத்துத் திறம் இது பொருள் என...

-உணர்த்தியதாக வினாயகர் அகவலில் ஔவை கிறுகிறுக்கிறாள்.

...குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

-என்று கந்தர் அனுபூதியில் குகனையே குருவாக வரச்சொல்லி விண்ணப்பம் போடுகிறார் அருணகிரிநாதர்.

தமிழ்ப் பக்தி இயக்கத்தின் மாபெரும் அருளாளர்களும் காணாததைக் கண்டவர்களுமான இவர்களுடைய இத்தகைய வேண்டுதல்களும் முன்வைப்புகளும் ஆசாபாசங்களுக்குத் தாங்கள் இரையாகி அடிமைத்தனத்துக்குப் பக்தர்களை இரையாக்கும் மனிதக் குருக்களின் மேலான நம்பிக்கையை மறுதலிக்கின்றனவோ?

இந்த ஐயத்தைத் தெளிவிக்க எந்தக் குருவும் முன்வர மாட்டார். நம் அறிவுக்கு எட்டிய வகையில் நாமே தெளிவித்துக்கொள்ள வேண்டியதுதான்.

http://tamil.thehindu.com/society/spirituality/article22461468.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 16: அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

 

 
thirumoolarjpg

பல்லாயிரம் பேர் நம்புகிற, மதிக்கிற, வழிபடுகிற தெய்வத்தை யாரேனும் வசை பாடுவார்களா? சூடும் சொல் அல்லாது சுடும் சொல் சொல்வார்களா? சொல்வார்கள். சொல்லால் அடித்த கதைகள் மட்டும் அல்ல; கல்லால் அடித்த கதைகளும் சைவத்தில் உண்டு.

நம்பி ஆரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனார் சைவக் குரவர் நால்வரில் ஒருவர்; தேவாரம் பாடிய மூவரில் ஒருவர். திருமுனைப்பாடி நாட்டில் தோன்றித் தீந்தமிழ் பாடிய இருவருள் ஒருவர்; ‘வன்தொண்டன்’ என்று இறைவனால் அழைக்கப்பட்ட ஒரே ஒருவர். இந்தச் சுந்தரருக்குத் திருமணம் நிகழ இருந்தது. தாலி கட்டப் போகும் நேரத்தில் வயதான வேதியர் ஒருவர் வந்தார். ‘தம்பி, நிறுத்து! நீ எனக்கு அடிமை!’ என்றார். சுந்தரர் வெகுண்டார். ‘அந்தணர்கள் வேறொரு அந்தணர்க்கு அடிமையாகும் வழக்கம் உண்டா? இப்படி ஒருவன் பேசி இன்றுதான் கேட்கிறோம்! பிதற்றுகிறான் பித்தன்!’ என்று வேதியரை வைதார்.

‘பித்தன், பேயன் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்! வழக்கைத் திசை திருப்பாமல் பேச வேண்டியதைப் பேசு; செய்ய வேண்டுவதைச் செய்!’ என்றார் வேதியர். பிறகு வழக்கு ஊராரால் நாட்டாண்மை செய்யப்பட்டு, வழக்குக்கு உரிய ஆவண ஆதாரங்கள் காட்டப்பட்டு, வேதியருக்குச் சுந்தரர் அடிமைதான் என்று தீர்ப்புரைக்கப்பட்டு, சுந்தரர் வேதியருக்கு அடிமைப்பட்டு, வேதியராக வந்தவர் வேறு யாரும் அல்லர் இறைவர்தாம் என்று சுந்தரரால் உணரப்பட்டபோது, ‘என்னிடமே வம்பு செய்த முரட்டுத் தொண்டா! என்னைப் பாடு’ என்றான் இறைவன்.

‘நின்றது நிற்கப் பாடச் சொன்னால் என்ன பாடுவேன்?’ என்று திகைத்தார் சுந்தரர். ‘அன்பில் புரண்டு வருகிற சொல்லெல்லாம் பாட்டுத்தான். வைத சொல்லெல்லாம் வாழ்த்துத்தான். பித்தன் என்று என்னை வைதாய் அல்லவா? வைத சொல்லாலேயே வாழ்த்து’ என்றான் இறைவன். ‘பித்தா, பிறைசூடி, பெருமானே, அருளாளா’ என்று விளித்துப் பாடி இறைவனோடான தன் தொடர்பைப் புதுப்பித்துக்கொள்கிறார் சுந்தரர்.

 

நன்றாக இருங்கள்

வந்தவன் இறைவன் என்று தெரியாததால் திட்டினார்; தெரிந்திருந்திருந்தால் திட்டியிருக்க மாட்டார் என்பவர்கள் காண்க: இறைவனை நன்கு அறிந்த பின்னும் இறைவனைத் திட்டுகிறார் சுந்தரர். ஒருவரிடம் ஓர் உதவி கேட்டுப் போகிறோம் என்று வையுங்கள். ஏதோ காரணத்தால் பற்றி அவர் செய்யாமல் விட்டுவிட்டார்.

நமக்குக் கோபம் வருகிறது. உரிமையும் தகுதியும் உடைய நமக்குச் செய்யாமல் விட்டுவிட்டாரே? அதற்காக ‘எனக்கு உதவாத நீ நாசமாய்ப் போ’ என்று அவரை வெளிப்படத் திட்ட முடிகிறதா? இல்லை. ‘நல்லது; வாழ்க வளமுடன்!’ என்று வாழ்த்திவிட்டு வந்துவிடுவதில்லையா? இந்த வாழ்த்து, ஒருவரை வையாமல் வைகிற வேலை இல்லையா? அந்த வேலையைச் செய்கிறார் சுந்தரர்:

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்

பிறரை வேண்டாதே

மூளாத் தீப்போல் உள்ளே கனன்று

முகத்தால் மிகவாடி

ஆளாய் இருக்கும் அடியவர் தங்கள்

அல்லல் சொன்னக்கால்

வாளாங்கு இருப்பீர்! திருவாரூரீர்!

வாழ்ந்து போதீரே! (சுந்தரர் தேவாரம், 7:95:1)

‘நான் உங்கள் ஆளில்லையா? துன்பத்தால் நொந்து போயிருக்கிறேன் இல்லையா? என் துன்பத்தை முறையிட்ட பிறகுமா சும்மா இருப்பீர்கள்? நன்றாக இருங்கள் திருவாரூர்க்காரரே!’

சுந்தரரைப்போலக் கடவுளைச் சொல்லால் அடித்தவர் மட்டுந்தான் உண்டென்று கருத வேண்டாம்; கல்லால் அடித்தவரும் உண்டு. அவர் பெயர் சாக்கிய நாயனார். பவுத்த மதத்தைத் தழுவித் துறவியானவர். அவர் காலம் பவுத்தத்துக்கும் சமணத்துக்கும் மாற்றாகச் சைவம் செல்வாக்குப் பெறத் தொடங்கியிருந்த காலம். சைவம் சொன்னவை சாக்கிய நாயனாருக்குச் சம்மதமாக இருந்தன. ஆனால், பவுத்தத் துறவுநெறியில் இருந்துகொண்டு சைவத்துக்கு வெளிப்படையாக ஆதரவு காட்ட முடியாத நிலை. என்றாலும் மனம் ஈடுபட்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் தான் போகும்வழியில் இருந்த சிவலிங்கத்தின்மீது கல்லொன்றை எடுத்து எறிந்து, தான் மலரைத்தான் எறிந்ததாகக் கற்பித்துக் கொண்டார்; அதை மலராகவே கருதி ஏற்றுக்கொண்டான் இறைவன்.

கல்லாலே எறிந்ததுவும் அன்பான படிகாணில்

வில்வேடர் செருப்படியும் திருமுடியில் மேவிற்றால்,

நல்லார்மற்று அவர்செய்கை அன்பாலே நயந்துஅதனை

அல்லாதார் கல்என்பார் அரனார்க்குஅது அலர்ஆமால். (பெரிய புராணம், 3649)

திண்ணப்பன் என்ற கண்ணப்பன் அவனது செருப்புக் காலைத் தூக்கித் தன் தலைமேல் வைத்ததையே பிழையாகக் கருதாத கடவுள், கல்லையா கோளாறு சொல்லிவிடுவார்? மடையர்களுக்குத்தான் அவை செருப்பும் கல்லும்; கடவுளுக்கு அவை அன்புமலர்கள்.

 

குணம் காணவும் தெரிய வேண்டும்

மனிதர்களிடத்தில் குறைகள் இருக்கும்தான்; இடம்தெரியாமல் சிலர் பேசிவிடுவதும் செய்துவிடுவதும் இயற்கைதான். அதற்காகக் குற்றங்களையே கண்டுகொண்டிருக்கக் கூடாது; குணம் காணவும் தெரிய வேண்டும். ஆடு பிழுக்கை இடுகிறது. பிழுக்கை இட்ட இடத்திலேயே படுத்துக்கொள்கிறது. பால்மடுவில் பிழுக்கை ஒட்டியிருக்குந்தான். பால் கறக்கப் போகிறவன் ஆட்டுப் பிழுக்கையை வாரிப்போட்டுப் பால்மடுவைக் கழுவிப் பால் கறந்து குடிப்பதில்லையா? பால்மடுவில் பிழுக்கை பட்டுவிட்டது என்பதற்காகப் பால்மடுவை வெட்டச் சொல்கிறவன் முட்டாள் இல்லையா?

...பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்!

பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்...

(சுந்தரர் தேவாரம், 7:54:1)

திருமூலர் சொல்கிறார்:

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்

உகந்துஅருள் செய்திடும் உத்தம நாதன்

கொழுந்துஅன்பு செய்துஅருள் கூரவல் லார்க்கு

மகிழ்ந்துஅன்பு செய்யும் மருள்அது ஆமே.

(திருமந்திரம் 280)

எந்த ஒன்றும் இகழ்கிறவர்களுக்குக் கிடைக்காது; புகழ்கிறவர்களுக்குத்தான் கிடைக்கும் என்பது உலக வழக்கம். எனவே, ஒன்றை அடைய நினைக்கிறவர்கள் அதைப் புகழ்வார்கள். தங்கள் புகழ்ச்சி தகுதியானதுதானா என்பது அவர்களுக்குப் பொருட்டே இல்லை. தன் தேவை நிறைவேற வேண்டும்; தான் நினைத்ததைப் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவலாதிக்காரர்கள் நடந்துகொள்கிற முறை கண்மூடிப் புகழ்தல்; போற்றுதல். ஆனால், எந்த ஒன்றையும் பொருட்டாக நினைக்காதவர்கள், எதுவுமே கிடைக்காதென்றாலும் புகழ வேண்டியதைப் புகழ்வார்கள்; கையிருப்பைக்கூட இழக்க நேரிடும் என்றாலும் இகழ வேண்டியதை இகழ்வார்கள்.

இகழ்ந்தவர்கள் இழந்ததென்ன, புகழ்ந்தவர்கள் பெற்றதென்ன என்பதையெல்லாம் ஈசன் அறிவான். வழங்கும் காலம் வரும்போது வரிசைமுறை நோக்கி வழங்க வேண்டியதை வழங்குவான். இறைவனின் கணக்கில் நீங்கள் புகழ்ந்தீர்களா, இகழ்ந்தீர்களா என்பதில்லை; எதைச் செய்திருந்தாலும் அதை உள்ளன்போடும் உயிர் அருளோடும் செய்தீர்களா என்பதுதான். அன்பு என்றால் அப்படி ஒரு கிறுக்கு கடவுளுக்கு.

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு

உணர்ச்சிஇல் லாது குலாவி உலாவி

அணைத்தலும் இன்பம் அதுஇது ஆமே

(திருமந்திரம் 283)

ஆண்-பெண் கலத்தலில் அறிவு அழிந்துபோய் அன்பு என்ற உணர்ச்சி மட்டுமே எஞ்சி நிற்பதைப் போலவே, இறைவன்-உயிர் கலத்தலிலும் அறிவு பின்னிலை எடுத்து, அன்பு முன்னிலை எடுக்கும். அறிவினால் அணைகட்டிப் பாதுகாக்கப்பட்ட அன்பு ஒரு கட்டத்தில் கரைகடந்து பெருகி, அன்பு என்பது ஓர் உணர்ச்சி என்ற நிலை மழுங்கி, அன்பே தானாகி, தானே காணாமல்போன நிலை உருவாகும்.

அன்பு சிவம்இரண்டு என்பர் அறிவிலார்;

அன்பே சிவம்ஆவது ஆரும் அறிகிலார்;

அன்பே சிவம்ஆவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்துஇருந் தாரே. (திருமந்திரம் 270)

தேடப்படும் பொருளும் அன்புதான்; தேடும் வழியும் அன்புதான்; தேடும் பொருளும் அன்புதான்; தேடிக் கண்டடைந்த நொடியில் தான் அற்றுத் தானாகப்போவதும் அன்புதான். அன்பும் சிவமும் வேறுவேறு என்கிறவர்களே, அறிக: சிவம் என்பது அன்பு; அன்புதான் சிவம். சிவமாகுங்கள் அன்பர்களே!

http://tamil.thehindu.com/society/spirituality/article22518874.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 17: அகத்துள் திரும்புதல்தான் தவம்

 

 
Sadhu

வம் என்பதென்ன? உலகத்தைத் துறந்து காட்டுக்குப் போதல், ஊணையும் உறக்கத்தையும் குறைத்தல், உடலை வறட்டுதல், தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் சரி, ஏது நடந்தாலும் சரி என்று எதையும் கருத்தில் கொள்ளாது தியானத்தில் மூழ்கியிருத்தல், தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், தூய்மை பேணுதல், மந்திரங்கள் ஓதுதல்—இவையெல்லாந்தான் தவம் என்று நமக்குத் தோன்றும்.

ஆனால், மெய்யான தவத்துக்கு இவையெல்லாம் தேவையே இல்லை என்கிறார் திருமூலர்.

கத்தவும் வேண்டாம்,

கருத்துஅறிந்து ஆறினால்;

சத்தமும் வேண்டாம்,

சமாதிகை கூடினால்;

சுத்தமும் வேண்டாம்,

துடக்குஅற்று நிற்றலால்;

சித்தமும் வேண்டாம்,

செயல்அற்று இருக்கிலே.

(திருமந்திரம் 1634)

ஆன்மிகப் பாதையில் பயணம் புறப்பட்டவர்கள் ஆன்மிகத்தின் தொடக்கப் பாடங்களைக் கற்பிக்கும் நூல்களின் உட்கருத்தை உண்மையாகவே அறிந்திருந்தால், அவற்றைப் போற்றிப் பாடி முழங்க வேண்டியதில்லை; மனம் அடங்கும் நிலைபெற்றுவிட்டவர்கள் வீடுபேற்றுக்காக மந்திரம் முணுமுணுக்க வேண்டியதில்லை; அகத்தில் படிந்திருக்கிற அழுக்கை அகற்றிக்கொண்டுவிட்டவர்கள் புறத்தில் திரண்டிருக்கிற அழுக்கைக் கண்டு அருவருக்கத் தேவையில்லை; ஏதேனும் ஒன்று பற்றி எப்போதும் இரைந்துகொண்டே இருக்கிற உள்ளத்தை ஓய்ப்பதும், தறிகெட்டுத் தலை விரித்தாடுகிற தன்முனைப்பைச் சாய்ப்பதும்தான் அவர்கள் செய்ய வேண்டுவது. சுருங்கச் சொன்னால், தன்முனைப்புச் செயல்களை அறுத்தடிப்பதுதான் தவம். அந்தத் தவத்தை எப்படிச் செய்வது?

சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்

மாத்திரைப் போது மறித்து

உள்ளே நோக்குமின்;

பார்த்தஅப் பார்வை

பசுமரத்து ஆணிபோல்

ஆர்த்த பிறவி அகலவிட்டு ஓடுமே

(திருமந்திரம் 1631)

நூல்களை மேற்கோள் காட்டிப் பேசுவதில் நமக்குப் பிரியம் கூடுதல். மேற்கோள்கள் நம் அறிவின் பரப்பைப் பிறருக்குப் புலப்படுத்துகின்றன என்று பொதுவில் கருதியிருக்கிறோம். துறவிகள் என்றும் தவசிகள் என்றும் தங்களைச் சொல்லிக்கொள்கிறவர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.

...வடமொழியிலே

வல்லான் ஒருத்தன்

வரவும் திராவிடத்திலே

வந்ததாய் விவகரிப்பேன்;

வல்லதமிழ் அறிஞர்வரின்

அங்ஙனே வடமொழியில்

வசனங்கள் சிறிது புகல்வேன்;

வெல்லாமல் எவரையும்

மருட்டிவிட வகைவந்த

வித்தை என் முத்தி தருமோ?

(தாயுமானவர் பாடல்கள், சித்தர் கணம், 10)

-என்று மெய்யான துறவியும் தவசியுமான தாயுமானவரே தன் நிலை சொல்லிப் புலம்புகிறார். ‘வடமொழி அறிஞன் வந்தால், தமிழில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா என்று கதைப்பேன். தமிழ் அறிஞன் வந்தாலோ, வடமொழியில் சில வசனங்கள் பேசி அவனைக் கிறுகிறுக்க வைப்பேன். நான் உட்பட யாருமே என்னை வென்றுவிடாமல் எல்லோரையும் மருட்டுகிற வித்தையில் நான் விற்பன்னன்; ஆனால், நூல் பல கற்று நான் வசப்படுத்தி வைத்திருக்கும் இந்த வித்தை எனக்கு விடுதலையைத் தருமா?’ என்று கவலையோடு அகத்தாய்வு செய்கிறார் தாயுமானவர்.

 

கெட்டிக்காரத்தனத்தை ஏறக்கட்டுங்கள்

அதற்குத்தான் முன்னர் சொன்ன திருமந்திரப் பாட்டில் விடை தருகிறார் வித்தகச் சித்தர் கணத்தின் தலைமைச் சித்தரான திருமூலர்: எதற்கெடுத்தாலும் சாத்திரத்தை மேற்கோள் காட்டிப் பேசுவது ஒரு கெட்டிக்காரத்தனம். நீங்கள் வெல்ல வேண்டியவற்றை அது வென்று தராது. ஆகையினால் அந்தக் கெட்டிக்காரத்தனத்தை ஏறக்கட்டுங்கள். புறத்திலேயே ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் கண்ணையும் கருத்தையும் மறித்து, அகத்துக்குத் திருப்பி, நொடிப் பொழுதளவு உங்களுக்குள் பாருங்கள்.

மரத்துக்குப் புறத்திருந்த ஆணியை மரத்துக்குள் அடித்து இறக்கிய பிறகு மரம் ஆணியைப் பற்றிக்கொள்வதுபோலவும் ஆணி மரத்துக்குள் குத்திக்கொள்வதுபோலவும், அகத்துக்குள் இறக்குகிற பார்வையை அகம் பற்றிக்கொள்ளும். அதன் பிறகு, எதற்கெடுத்தாலும் முழங்குவதும் முரணுவதுமாக இருக்கும் உங்கள் ஆரவார இயல்பு உங்களைவிட்டு அகன்று ஓடும். நீங்கள் ஒடுங்குவீர்கள். இவ்வாறு உள்ளுக்குள் திரும்புதல்தான் தவம்.

தவம் என்னும் சொல் ‘தவ்’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. ‘தவ்’ என்னும் வேர்ச்சொல் சுருங்குதல் என்னும் பொருளுடையது. ‘தவ்’ என்பதோடு அகரம் சேர்ந்து ‘தவ’ என்றாகிப் பின் ‘தவம்’ என்றாயிற்று. புறத்தைச் சுருக்கி அகத்தைப் பெருக்குதல் தவம்.

தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளுதலும், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருத்தலுந்தான் தவம். அதை விட்டுவிட்டுத் தன்னை வருத்திக்கொண்டு சடங்கு வழியில் செல்வது தவம் ஆகாது. திருமூலர் சொல்கிறார்:

என்பே விறகா இறைச்சி

அறுத்துஇட்டுப்

பொன்போல் கனலில்

பொரிய வறுப்பினும்

அன்போடு உருகி

அகம்குழை வார்க்குஅன்றி

என்பொன் மணியினை

எய்தஒண் ணாதே.

(திருமந்திரம் 272)

நம் எலும்பையே விறகாக்கி, நம் சதையையே இறைச்சியாக்கி, அதைப் பொன்னிறமாக வறுத்து மொறுமொறுப்பாய்ப் படையலிட்டாலும் கடவுளை அடைந்துவிட முடியாது. வேறு எவ்வாறு அடைய முடியும்? அன்பினால் உருகி அகம் குழைந்தால் அடையலாம்.

 

அகம் குழையுங்கள்

அகம் குழையவும் அன்புருகவும் யார் கற்றுத் தர முடியும்? நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம். வேண்டுமானால் இருப்பதைப் பெருக்கிக்கொள்ளலாம். அப்படிப் பெருக்கிக்கொள்வது தவம். அதற்கு மற்ற உயிர்களோடு கூடியிருக்க வேண்டும்.

 

கூடித் தவம்செய்து

 

கண்டேன் குரைகழல்;

தேடித் தவம்செய்து

கண்டேன் சிவகதி;

வாடித் தவம்செய்வதுஏது?

அவம்; இவைகளைந்து

ஊடில் பலஉல கோர்எத் தவரே?

(திருமந்திரம் 1636)

பிறரோடு கூடியிருந்து தவம் செய்தேன்; திருவடியைக் கண்டுகொண்டேன். பிறருக்கான நன்மையையும் தேடித் தவம் செய்தேன்; சிவகதியையே கண்டுகொண்டேன். தனியாக இருந்து வாடித் தவம் செய்வதால் என்ன பயன்? அது வீண். பிறரோடு கூடுதல், பிறருக்காகவும் தேடுதல், இவற்றை விட்டுவிட்டுத் தவம் செய்கிறேன் என்று சொல்கிறவர்கள் என்ன தவம் செய்வார்களோ?

துறவுக்கும் தவத்துக்கும் உலகத்தில் மதிப்பு மிகுதி. தவவேடம் கொண்டவர்களில் சிலர் அறியாமை மிக்கவர்களாக இருந்தாலும், வேடத்தைக் கருதியும் பீடத்தைக் கருதியும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவது பொது வழக்கம். வேடம் வழங்கும் பாதுகாப்பைக் கருதி, துறவைப் போர்வையாகப் போர்த்திக்கொண்டு அதற்குள் மறைந்து ஒழுகுபவர்கள் பலர். புரண்டு படுக்கையில் போர்வை கலைவதுபோல, மிரட்டிப் பேசுகையில் வேடம் கலைந்து அவர்கள் வெளிப்பட்டுவிடுகிறார்கள்.

ஞானம்இ லார்வேடம்

பூண்டும் நரகத்தர்;

ஞானம்உள் ளார்வேடம்

இன்றெனில் நன்முத்தர்;

ஞானம்உள தாக

வேண்டுவோர் நக்கன்பால்

ஞானம்உள வேடம்

நண்ணிநிற் போரே.

(திருமந்திரம் 1668)

அறிவு வாய்க்கப் பெறாதவர்கள், தவவேடம் பூண்டிருந்தாலும் துன்பத்தில் உழல்வார்கள்; அறிவு வாய்க்கப் பெற்றவர்களோ, வேடமே பூணாவிட்டாலும் விடுதலையில் திளைப்பார்கள். அறிவு வாய்த்திருத்தல்தான் தவவேடம். உடையும் சின்னங்களும் வாய்த்திருப்பதன்று. செம்பொருட் சிவனுக்கு உடையுண்டா? வேடம் உண்டா? அவன் உடையே உடுத்தாத நக்கன் அல்லவா? திசைகளையே ஆடையாக உடுத்த திகம்பரன் அல்லவா? எனவே, மதிசூடிய அம்மணனாகிய அவனிடம் வேண்டுகிறவர்கள் அறிவைத்தான் வேண்ட வேண்டுமே அன்றி, ஆடையை அன்று.

இன்பமாகக் கும்மாளம் போடலாம் என்று ஆற்றில் இறங்கியவன் ஆற்றில் முதலை கிடப்பதைக் கண்டு அஞ்சிக் காட்டுக்குள் ஓடினானாம்; அங்கே குட்டிபோட்ட கரடி ஒன்று கடுஞ்சினத்தோடு அவனை எதிர்கொண்டு பிறாண்டியதாம். உலகத்துக்குப் பயந்து துறவுக்குப் போனவர்கள் துறவுக்குப் பயந்தால் எங்கே போவார்கள்? துறவு சோற்றுத்துறை அல்லவே? வீடுபேற்றுத் துறை அல்லவா?

 

ஆற்றில் கிடந்த

முதலைகண்டு அஞ்சிப்போய்

ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட

அதன்ஒக்கும்;

நோற்றுத் தவம்செய்யார்

நூல் அறி யாதவர்

சோற்றுக்கு நின்று

சுழல்கின்ற வாறே.

(திருமந்திரம், 1642)

தவம் செய்கிற கூர் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் தவம் கைவசப்படும். மற்றவர்கள் தங்களைத் தவசிகள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அவர்களிடம் தவம் இருக்காது. அவம்தான் இருக்கும்.

(திருமந்திர அறிவு தொடரும் )

http://tamil.thehindu.com/society/spirituality/article22617738.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 18: தள்ளுவன தள்ளி பின் அமைக

 

 
shutterstock636214676

‘ச

மயம்’ என்ற சொல் ‘சமை’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. சமை என்றால் சமைத்தல் என்று பொருள். சமைத்தல் என்றால் ஆக்குதல், நிரப்புதல், பக்குவப்படுத்துதல், பூக்கச் செய்தல், முழுமைப்படுத்துதல் என்று பொருள். காட்டுவிலங்காக இருந்தவனை மனிதனாக ஆக்கி, அவனுடைய பொக்கைகளை நிரப்பி, தன்னையே எண்ணிக்கொண்டிருக்காமல் உடன்வாழும் மனிதர்களைப் பற்றியும் எண்ணிப் பார்க்கச் செய்து அவனைப் பக்குவப்படுத்தி, அன்பால் பூக்கச் செய்து, முழுமைப்படுத்தித் தெய்வநிலைக்கு ஏற்றுவது எதுவோ அது சமயம்.

வையகத்தில் வாழ்கிறவன், விலங்குகளைப் போல வாழாமல், வாழ வேண்டிய வழிமுறைகளில் வாழ்ந்தால் தெய்வமாகவே மதிக்கப்படுவான் என்று வள்ளுவரும் சொல்கிறார், இல்லையா? வாழ வேண்டிய வழிமுறைகளை வகைதொகைப்படுத்திக் கொடுப்பது சமயம்.

நல்லது. ‘சமயம்’ என்ற சொல் ‘சமை’ என்பதிலிருந்து வந்தது. ‘சமை’ என்ற சொல் எதிலிருந்து வந்தது? ‘அமை’ என்பதிலிருந்து வந்தது. அமை என்றால் ‘ஆக்கு’ என்று பொருள். ஆக்குதல் என்பது குற்றம் களைந்து செம்மைப்படுத்துதல். சோறு ஆக்குகிறோம், இல்லையா? அரிசியில் கிடக்கிற கல்லும் குறுநொய்யும் ஆகிய குற்றத்தைக் களைந்து, அரிசியை உண்ணும் பதத்துக்கு ஆக்கினால் அது சோறு ஆகிறது, இல்லையா? அரிசியைச் சோறாக்குவது சமையல். மனிதனைத் தெய்வநிலைப்படுத்துவது சமயம்.

இப்போதெல்லாம் ஆக்குதல் போன்ற குறிப்புச் சொற்களால் பேசாமல், ‘சாதம் வச்சேன், குழம்பு செஞ்சேன், பொரியல் பண்ணேன்’ என்று பொதுச்சொற்களால் பேசுகிறார்கள் புதுத் தமிழர்கள். அவ்வாறு அவர்கள் வைத்ததால், செய்ததால், பண்ணியதால் இழந்தது ‘ஆக்குதல்’ என்ற ஒற்றைக் குறிப்புச் சொல்லையன்று; மனிதன் தன் நிலை உயர்ந்து தெய்வமாகத் தக்கவன் என்ற சமயக் கருதுகோளை!

 

உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள்

சமைத்தலில் எப்படி ஆய்தல் (கீரையை ஆய்தல்), களைதல் (கல், குறுநொய் களைதல்), தேர்தல் (பிஞ்சுக் காய் தேர்தல்), பின் ஆக்குதல் (சமைத்தல்) என்ற ஒழுங்குமுறை அமைகிறதோ, அவ்வாறே சமயத்திலும் ஆய்தல், களைதல், தேர்தல், பின் ஆதல் என்ற ஒழுங்குமுறை அமையும்.

சமயம் என்பது தமிழில் மட்டுந்தான் இவ்வாறு வரையறை செய்யப்படுகிறது என்று கருத வேண்டாம். சமயத்தைக் குறிக்கிற ஆங்கிலச் சொல்லான Religion என்பதற்கு வேர்தேடிப் போனாலும் ஏறத்தாழ இப்படி ஒன்றுதான் சொல்லப்படுகிறது. Religion என்ற சொல்லுக்கு மூலம் relegere—re+legere—‘மீண்டும் படி’ என்று அதற்குப் பொருள்.

உங்களுக்குச் சொல்லப்படுவதைக் கேட்டுக்கொள்வதோடு அறிதல் முடிந்துவிட்டது என்று நினைத்துப் பேசாமல் இருந்துவிடாதீர்கள். சொல்லப்பட்டதை ஆராயுங்கள்; பொருந்தாதவற்றைக் களையுங்கள்; ஏற்புடையவற்றைத் தேர்ந்துகொள்ளுங்கள்; இவ்வாறு தொகுத்துப் பின் உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள்.

சரி. இவற்றையெல்லாம் இங்கே சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றால், திருமூலர் சொல்கிறார். சொல்லப்பட்டவற்றை அப்படியே வாங்கிக்கொண்டு அமைந்துவிடாமல் அவற்றைக் கேள்வி கேட்டு, ஆராய்ந்து, கொள்பவை கொண்டு, தள்ளுவன தள்ளிப் பின் அமைக என்கிறார்.

அறம் கேட்டும், அந்தணர் வாய்மொழி கேட்டும்,

மறம் கேட்டும், வானவர் மந்திரம் கேட்டும்,

புறம் கேட்டும், பொன்னுரை மேனிஎம் ஈசன்

திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே. (திருமந்திரம் 300)

கேட்பது என்பது சும்மா கேட்பது அல்ல; கேள்வி கேட்பது. கேட்டுக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்—அறத்தை, அந்தணர் வாய்மொழியை, வானவர் மந்திரத்தை! அவற்றைக் கேட்பதோடு வேலை முடிந்தது என்று விலகிவிடாமல் மறத்தையும் கேளுங்கள். மறம் கேட்பது என்பதென்ன? அறத்தின் வழிப்பட்டு அடங்கி அன்பு செலுத்துபவர்கள் இருப்பார்கள். அறம் என்று பேசப்படுவதை மீறி அதிரடியாக அன்பு செலுத்துகிறவர்களும் இருப்பார்கள்தாமே?

ஒரு தீமையை ஒழிப்பதற்காக அறவழியில் போராடுகிறவர்கள் சமூகத்தின்மேல் அன்புடையவர்கள் என்றால், அதே தீமையை ஒழிப்பதற்காக மறவழியில் அதிரடியாகப் போராடுகிறவர்களும் சமூகத்தின்மேல் அன்புடையவர்கள்தாமே? செயலின் விளைவுகளில் வீக்கதூக்கம் இருக்கலாமே தவிர, செயலுக்கு அடிப்படையான சமூக அன்பில் வீக்கதூக்கம் இருப்பதில்லையே? எனவே, அந்த வழிமுறையையும் கேட்டுத் தெளியுங்கள். அத்தோடு நிறுத்திக்கொண்டுவிடாமல் புறம் கேளுங்கள்.

புறம் கேட்பது என்பதென்ன? உங்களில் படிந்து வரும் கருத்துக்கு முரணாக, உங்கள் கருத்தைக் குற்றம் சொல்லி, அதை மறுதலிக்கும்விதமாகப் பேசப்படும் எதிர்க்கருத்து. உங்களுக்குள் படியத் தொடங்கியிருக்கும் கருத்தை உரசிப் பார்த்துக்கொள்வதற்கு எதிர்க் கருத்தையும் கேட்டுத் தெளிய வேண்டாமா? எனவே கேளுங்கள். இப்போது நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் கருத்தின் திறத்தைச் சீர் தூக்கிப் பாருங்கள். வர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டதாக அமைந்து கொள்ளுங்கள்.

 

கடவுள் வசப்பட மாட்டார்

இதென்ன மடத்தனம்? ஏற்கெனவே எல்லாவற்றையும் கற்றும் கேட்டும் ஆராய்ந்தும் தெளிந்தவர்கள் சொல்கிறார்கள். பிறகென்ன? அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அமைவதை விட்டுவிட்டு, நாமும் ஏன் கேள்விகேட்டு அமைய வேண்டும்? அது வெட்டி வேலையில்லையா? என்றால், திருமூலர் சொல்கிறார்:

சிறியார் மணல்சோற்றில் தேக்கிடு மாபோல்,

செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்,

குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை

அறியாது இருந்தார் அவர்ஆவர் அன்றே! (திருமந்திரம் 306)

சின்னப் பிள்ளைகள் மணல்வீடு கட்டி விளையாடும்போது, தலைவியாகப் பாத்திரம் வகிக்கும் பிள்ளை மணலைச் சோறாக இட, தலைவனாகப் பாத்திரம் வகிக்கும் பிள்ளை அந்த மணலைச் சோறாகவே கற்பித்துக்கொண்டு உண்பதாகப் பாவித்து ஏப்பமும் விடும். அது பாவனையே அன்றி உண்மையன்று. அவ்வாறே, மெய்ப்பொருளை மற்றவர்கள் கண்டுசொன்னார்கள்; நான் கேட்டேன்; அவ்வாறு கேட்டதே நான் கண்டுகொண்டதற்குச் சமம் என்று ஒருவர் சொல்வாரேயானால், அது பேதமையே அல்லவா? பாவனையே அல்லவா?

தானே ஆய்ந்து தெளிய வேண்டிய ஒன்றை, யாரும் சுட்டிக்காட்டி அறிவிக்க முடியாத ஒன்றை, யாரோ சுட்டிக்காட்டினார்கள், நானும் அறிந்துவிட்டேன் என்று ஒருவர் பேசுவாரேயானால், அவர் அறியாதவரே அல்லவா? பிள்ளைகள் விளையாட்டு மகிழ்ச்சிக்காகப் பொய்யை மெய்போலப் பாவித்துக்கொள்ளலாம். சமய நெறியில் நிற்பவர்களும் அப்படிப் பாவித்துக்கொண்டால் கடவுள் கைவசப்பட்டுவிடுவாரா?

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து

ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது

வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்

இழுக்குஇன்றி எண்ணிலி காலம் அதாமே. (திருமந்திரம் 305)

கற்று அறிய வேண்டியதை ஐயம் திரிபு அறக் கேள்வி கேட்டுத் தெளிவாக அறிய வேண்டும். அவ்வாறு தேர்ந்து தெளிந்துகொண்ட உண்மைநெறியில் வழுக்காமல் நிற்க வேண்டும். இந்திரன் வழுக்கி விழுந்து அசிங்கப்பட்ட கதை தெரியும் அல்லவா? மெய்யான நெறியைப் பெற்று, வழுக்காமல் அதில் அமைந்து நின்றவர்கள் முற்றும் நிறைந்துவிட்டவர்கள்; பக்குவமாகச் சமைந்துவிட்டவர்கள்.

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்;

இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்;

மகிழநின்று ஆதியை ஓதி உணராக்

கழியநின் றார்க்குஒரு கற்பசு ஆமே. (திருமந்திரம் 308)

சமய நெறியின் இலக்காக நிற்கிற கடவுளை, ‘மிகப் பழைய ஆள், உலகத்தையும் நம்மையும் உருவாக்கியதே கடவுள்தான்’ என்று சிலர் புகழ்கிறார்கள். ‘என்ன பெரிய கடவுள்? இல்லாததைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள் மனிதர்கள்’ என்று சிலர் இகழ்கிறார்கள். மகிழ்கிறவர்கள் மகிழட்டும்; இகழ்கிறவர்கள் இகழட்டும்.

நானோ உங்களுக்குச் சொல்கிறேன்: ஆராயுங்கள்; தள்ளுங்கள்; தெளியுங்கள்; கொள்ளுங்கள். அவ்வாறு ஆராய்ந்து கொள்பவர்களுக்குக் கடவுள் என்னும் கருதுகோள் ஒரு காராம்பசு. ஆராயாமலே கண்டுகொண்டதாகக் குதியாட்டம் போடுபவர்களுக்குக் கடவுள் ஒரு கற்பசு. கறப்பதாக நினைத்துக்கொண்டு காம்புகளை இழுக்கலாமே ஒழியப் பால் வராது.

கற்பசுக்களைக் கறக்க முயல்கிறவர்கள்தாம் உலகத்தில் கணக்கின்றி இருக்கிறார்கள். பதுக்கி வைத்திருக்கும் காட்டுவிலங்காண்டித்தனத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தி ஆட்டம் காட்டுகிறார்கள். சமயங்கள் மனிதனைச் சமைத்து அவனைத் தெய்வநிலைக்கு உயர்த்த முடியாமல் போக என்ன காரணம்? சமயங்களுக்குத் திறம் போதவில்லையா அல்லது மனிதர்களுக்கு உண்மையை அறிய வேண்டும் என்கிற முயற்சி போதவில்லையா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

(இருளில் வெளிச்சம் படும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article22687160.ece

Link to comment
Share on other sites

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

குருடும் குருடும் குருட்டுஆட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவீழு மாறே

(திருமந்.1680)

 

குரு  என்னும் சொல்,  கு+ரு   என பகுபடும்.

ரு - இருள்

கு - நீக்குதல்

அதன்படி, “குரு” என்பவர் அறியாமை என்னும் பேரிருளை நீக்குபவர் என பொருள்படும்.

அதாவது,   ” எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று தன்னிலிருந்து பிறருக்குக் கடத்துகிற ஆசிரியர் ‘குரு’ ஆகிறார்” என்பது தவறாகும்.

ஒரு மாணவனின் அஞ்ஞான இருளை போக்குபவரே குரு. இங்கு எழுதிய இரு விடயங்களுக்குள்ளும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. திருமந்திரம் பொருட்செறிவு மிகுந்த பொக்கிஷம். அதன் ரசத்தை பருகுவதற்கு நுண்ணறிவு மிகமுக்கியம். வெறுமனே தமிழ் விரித்தெழுதல் பயன் தரா. 

நுணுகி ஆராய்ந்து பாருங்கள் நண்பர்களே.

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 19: எதிர்நிலை எடுத்த திருமூலர்

 

 
shutterstock350032907

பதின்பருவத்தில் இருக்கிற பிள்ளைகள், ஏதேனும் ஒரு செயலைக் கவனக்குறைவின் காரணமாக ஒழுங்காகச் செய்யாமல் குழப்பிவிடும்போது, ‘இன்னும் சின்னப் பிள்ளையா நீ? இவ்வளவு வளர்ந்தும் பொறுப்பு வரவில்லையே?’ என்று வீட்டார் கடிந்துகொள்வார்கள். பெற்றவர்கள், பொறுப்பு என்னும் தலைச்சுமையைப் பிள்ளைகள்மேல் சுமத்தத் தொடங்கும் பருவம் அது. சுமத்தத்தான் வேண்டும்; பழக்கத்தான் வேண்டும். அவ்வாறு பொறுப்பைப் பழக்கிவிடாத பெற்றோரைப் பின்னாளில் பிள்ளைகளே திட்டக்கூடும். சான்றாக இந்தப் பழம் பாடல்:

அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும்

ஆடையும் ஆதரவாக்

கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும்

என்னைக் குறித்ததுஅல்லால்,

துள்ளித் திரிகின்ற காலத்தில்

என்றன் துடுக்குஅடக்கிப்

பள்ளிக்கு வைத்தில னேதந்தை

ஆகிய பெரும் பாதகனே.

என் தந்தை எனக்கு அள்ளி அள்ளிப் பணம் கொடுத்தார். புத்தாடை வாங்கிக் கொடுத்தார். பெற்றது பிள்ளை அல்ல, மூவரும் தேவரும் காணாத பெரும்பேறு என்று என்னைத் தலைமேல் வைத்துக் கொண்டாடினார். நானும் துள்ளித் திரிந்தேன். என் துடுக்கை அடக்கவில்லை; என்னை முடிவெடுக்கப் பழக்கவில்லை; எதற்கும் பொறுப்பேற்க முடுக்கவில்லை; ஒட்டியும் முட்டியும் வாழ வசக்கவில்லை. அடப் பாதகத் தந்தையே! வெறும் கொள்ளிக்கும் கடனுக்குந்தானா என்னைப் பிள்ளையென்று பெற்றாய்?

ஒரு பயணம் போக வேண்டியிருக்கிறது. பாதை தெரியாதவர் ஒருவர்; பாதை தெரிந்தவர் ஒருவர். பாதை தெரியாதவர் புறப்படத் தயங்குகிறார். ‘நான் இருக்கிறேன்; உன்னைப் பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு போவது என் பொறுப்பு! பிறகென்ன அச்சம்? வா!’ என்று துணிவூட்டித் தெரிந்தவர் தெரியாதவரை அழைத்துக்கொண்டு போகிறார்.

காட்டுப் பாதையில் பாதிவழி போனதும், ‘சற்று நில்! இதோ வந்துவிடுகிறேன்!’ என்று சொல்லிவிட்டுத் தெரிந்தவர் காணாமல் போய்விட்டால், தெரியாதவர் என்ன செய்வார்? எங்கே போவார்? பாதை தெரியவில்லை; ‘பாதம் வகுத்ததுதான் பாதை’ என்று போகத் துணிவில்லை; புலி வருமோ நரி வருமோ அன்றி யானைதான் வருமோ என்று நின்ற இடத்திலேயே நிலைகுத்தச் செய்கிறது அச்சம். புறநானூறு சிறப்பாகச் சித்திரிக்கிறது:

‘ஐயோ’ எனில்யான்

புலிஅஞ் சுவலே!

அணைத்தனன் கொளினே,

அகன்மார்பு எடுக்கல்லேன்!

என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை

இன்னாது உற்ற அறன்இல் கூற்றே!

நிரைவளை முன்கை பற்றி

வரைநிழல் சேர்கம்! நடத்திசின் சிறிதே!

(புறநானூறு, 255)

கணவனோடு காட்டுவழியில் வந்தாள் ஒருத்தி. அழைத்துக்கொண்டு வந்த கணவன் பாதிவழியில் திடீரென்று செத்துப் போனான். ஓங்கிய பெருங்காடு. மனைவி கலங்குகிறாள்; பிணத்திடம் புலம்புகிறாள்: ‘ஐயோ’ என்று கத்தினால் குரல் கேட்டுப் புலி வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. உன்னை மெல்ல அணைத்துத் தூக்கிக்கொண்டு போய்விடலாம் என்று பார்த்தால், உன் உடலைச் சுமக்கும் வலு எனக்கில்லை. உன்னை விட்டுப் போகவும் முடியாது; உன்னோடு சேர்ந்து சாகவும் முடியாது. என்ன செய்வேன்? முடிவெடுத்துப் பழகாத நான் என்ன முடிவெடுப்பேன்?

பொறுப்பேற்றுப் பழகாத நான் எப்படிப் பொறுப்பேற்பேன்? நடுக்காட்டில் வந்த இந்த விதி கொஞ்சம் தள்ளிக் காடு கடந்தபின் வந்திருக்கலாகாதா? விதிக்கு அறம் என்றால் என்னவென்றே தெரியாதா? தெரிந்திருந்தால் என்னை இப்படிப் பதைக்கச் செய்திருக்குமா? எனக்கு நேர்ந்த பதைபதைப்பு இந்தத் துயரத்தை என்மேல் சுமத்திய விதிக்கும் நேரட்டும்.

ஐயா, என் வளையல்களை வேண்டுமானால் கொஞ்சம் பின்னுக்கு இழுத்து ஒதுக்கிக்கொள்கிறேன்; என் முன்கையைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து வந்துவிடுகிறாயா? அச்சமூட்டுகிற இந்தக் காட்டைக் கடந்துவிடுவோம்?

 

நான் உன் கையில் பிள்ளை

மனிதர்கள் கடவுளைச் சிக்கெனப் பற்றிக்கொள்ளும் இடம் இதுதான். உலகம் காடுபோல அடர்ந்து கிடக்கிறது. பாதைபோல் ஏதோ தெரிகிறது. பாதைதானா? தெரியாது. பாதைதான் என்றால், எங்கே செல்லும் இந்தப் பாதை? தெரியாது. பாதையின் முடிவில் இருப்பது, பெறப்போவது வாழ்வா சாவா? தெரியாது. துணிந்து போகிறேன். கடவுளே, நான் உன் கையில் பிள்ளை; உனக்கே அடைக்கலம். இனி நான் செய்யும் எதுவும் என் பொறுப்பில்லை; உன் பொறுப்பு என்று துணியும் இடம் இது.

அன்றே என்தன் ஆவியும்

உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய்! என்னைஆட்

கொண்டபோதே கொண்டிலையோ?

இன்றுஓர் இடையூறு எனக்குஉண்டோ?

எண்தோள் முக்கண் எம்மானே!

நன்றே செய்வாய், பிழைசெய்வாய்!

நானோ இதற்கு நாயகமே?

(திருவாசகம், குழைத்த பத்து, 7)

‘இறைவா! உன்னைச் சரணடைந்தபோதே நான் உன்னுடைய ஆளாகிவிடவில்லையா? என்னுடைய ஆவி, உடல், உடைமை எல்லாம் உன்னுடையது ஆகிவிடவில்லையா? இனி எதற்கும் நான் பொறுப்பேற்க முடியுமா? நல்லதோ பொல்லதோ, எனக்குப் பொறுப்பு நீயே அல்லவா?’ என்று தன் பொறுப்பைத் துறக்கிறார் மணிவாசகர்.

 

கடவுளைப் பொறுப்பாக்குதல்

சட்டவியலில் ‘பகரப் பொறுப்புரிமை’ (vicarious liability) என்று ஒன்று பேசப்படும். ஒருவர் செய்யும் செயல்களுக்கான பொறுப்புரிமை, செய்தவரைச் சாராமல் செய்தவருக்குப் பகரமாக நிற்கும் வேறொருவரைச் சாரும் என்பது பகரப் பொறுப்புரிமை. வேலையாள் செய்யும் திமிர்த்தனம் முதலாளியைப் பாதிப்பது மாதிரி, தொண்டன் செய்யும் அடாவடி தலைவனைப் பாதிப்பது மாதிரி, குட்டி குரைத்தது நாய் தலையிலே விழுந்த மாதிரி, பக்தன் அடுத்துச் செய்ததும் அடாது செய்ததும் என்று எல்லாமே கடவுள் தலையிலே வந்து விழும்.

எது நடந்தாலும் அது கடவுள் செயல் என்று கருதுவது பக்தி மரபின் வழக்கம். அதுவரையில் கெட்டிதட்டி இறுகிக் கிடந்த ஏரிக்கரை திடீரென்று உடைந்து வெள்ளம் வெளியேறினால்—கடவுள் செயல்; பல்லாண்டுகளாக விழுதுவிட்டுப் பழுதில்லாமல் பரவிநின்ற மரம் திடீரென்று எரிந்தால்—கடவுள் செயல்; நூற்றாண்டுகளாகச் சிறந்து நிமிர்ந்திருந்த கோயில் மண்டபம் திடீரெனச் சிதைந்து விழுந்தால்—கடவுள் செயல். கல்லாப் பிழை, கருதாப் பிழை, வாய்திறந்து சொல்லாப் பிழை என்று எல்லாப் பிழைகளுக்கும் கடவுளைப் பொறுப்பாக்கி விலகுவார்கள் பக்தர்கள்.

பொறுப்பேற்றல் எப்போதுமே கடினமானதாகத்தான் இருக்கிறது. அதனால் அவ்வப்போது பொறுப்புத் துறப்பை அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள் மனிதர்கள்—சில சமயங்களில் உடனுறை மனிதர்களிடம்; சில சமயங்களில் கடவுளிடமே.

ஆனால், கடவுளைத் தனக்குப் பகரப் பொறுப்பாளி ஆக்குவது திருமூலருக்கு உவப்பான வழியாகத் தெரியவில்லை. எனக்கு எது நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பென்று முழங்குகிறார்:

ஆறுஇட்ட நுண்மணல் ஆறே சுமவாதே

கூறிட்டுக் கொண்டு சுமந்துஅறி வார்இல்லை;

நீறுஇட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்

பேறுஇட்டுஎன் உள்ளம் பிரியகி லாவே.

(திருமந்திரம் 2849)

மலையையும் பாறையையும் நிலத்தையும் அறுத்துக்கொண்டு ஓடிவருகிற ஆறு ஓடும்போக்கில் மணலை உருவாக்குகிறது. அடித்து வரப்பட்ட மணலைச் சில இடங்களில் மொத்தித் தள்ளி மேடாக்குகிறது; சில இடங்களில் அரித்தோடிப் பள்ளமாக்குகிறது. மேடோ பள்ளமோ, அதற்குப் பொறுப்பேற்று அந்த மணலைச் சுமப்பது யார்?

மணலை இட்ட ஆறேதான். அவ்வாறு இல்லாமல் ஆற்றுக்குப் பதிலாக அந்த மணலைக் கூறு போட்டுக்கொண்டு சுமப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வாறே என் செயலால் விளைந்த நல்லதோ பொல்லதோ, அதற்கு நான்தான் பொறுப்பேற்க வேண்டுமே அல்லாது, வேறொருவரைப் பொறுப்பாக்க முடியாது—கடவுளைக்கூட.

என் செயல்களில் கடவுளை எனக்குத் துணையாகக் கொள்ளலாமே ஒழிய, என் செயல்களுக்குக் கடவுளையே பகரப் பொறுப்பாக்க முடியாது என்று பக்தி மரபின் நிலைக்கு எதிர்நிலை எடுக்கிறார் திருமூலர்.

(அறிதல் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article22758804.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 20: நம் செயலென எதுவும் உண்டா?

 

 
kovalan

‘நம் செயல்களுக்கு யார் பொறுப்பு?’ என்பது சமய, மெய்யியல் மரபுகளில் ஒரு பெருவழக்காக உரையாடப்பட்டிருக்கிறது. இதற்கென்ன வழக்கு? நம் செயல்களுக்கு நாம்தானே பொறுப்பு? வேறு யார் பொறுப்பாக முடியும்? எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒருவரை அடிக்கிறீர்கள். அதற்கு யாரைப் பொறுப்பாக்குவார்கள்? அடித்த உங்களையா அல்லது நீங்கள் அடிக்கும்போது உங்களுக்குப் பக்கத்தில் நின்றிருந்தவரையா? ‘எளிய செய்தியில்லையா? அடித்த என்னைத்தானே பொறுப்பாக்குவார்கள்?’

சரியாகவோ அன்றிப் பிழையாகவோ நீங்கள் ஒன்றை அறிகிறீர்கள். அதைக் குறித்துச் சரியாகவோ அன்றிப் பிழையாகவோ ஒரு கருத்து கொள்கிறீர்கள்; சரியாகவும் பிழையாகவும் உங்களில் சேகரமாகும் கருத்துகள் உங்கள் அறிவைத் தொகுக்கின்றன. தொகுக்கப்பட்ட இந்த அறிவுக்கு யார் பொறுப்பாளி? ‘இதென்ன கேள்வி? தொகுத்துக்கொண்ட நான்தானே பொறுப்பாளி?’

ஏதோ ஒன்றை அடையக் கருதி அதற்காக முயல்கிறீர்கள். தீவிரமான, தவம் என்று சொல்லத்தக்க முயற்சி. இறுதியில் நீங்கள் வெல்லவும் கூடும்; தோற்கவும் நேரிடலாம். வெற்றி, தோல்விகள் இருக்கட்டும்; முயற்சி யாருடையது? ‘வெற்றி தோல்விகளை நுகர்பவனும் நான்; முயற்சியும் எனதே!’

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை

நிலைகலக்கிக் கீழ்இடு வானும், நிலையினும்

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்

தலையாகச் செய்வானும் தான். (நாலடியார், 248)

வாழ்க்கையில் ஒருவன் நல்ல நிலையை அடைவதற்கும், அந்த நல்ல நிலை குலைந்து கீழ்மைநிலை பெறுவதற்கும், இப்போதிருக்கும் நல்ல நிலையைக் காட்டிலும் இன்னும் சிறந்தநிலை அடைவதற்கும், தலைமைநிலை பெறுவதற்கும் யார் காரணம்? தானேதான் காரணம். தன்னைப் புகழ்மணம் வீசும் பூமாலையாக்கிக் கொள்கிறவனும் தான்; தன்னைப் பிய்த்துப் போட்டுக் குப்பைக்கூளமாக்கிக் கொள்கிறவனும் தான். எல்லாமே தான்தான்—என்று நாலடியாரும் சொல்லவில்லையா? சொல்கிறதுதான். என்றாலும் இன்னொரு பக்கம்,

நானேயோ தவம் செய்தேன்?

சிவாயநம எனப் பெற்றேன்?

தேனாய்,இன் அமுதமுமாய்,

தித்திக்கும் சிவபெருமான்,

தானேவந்து எனதுஉள்ளம்

புகுந்து, அடியேற்கு அருள்செய்தான்

ஊன்ஆரும் உயிர்வாழ்க்கை

ஒறுத்துஅன்றே வெறுத்திடவே!

(திருவாசகம், திருஏசறவு, 10)

உடலின்வழியாக மட்டுமே உயிர் வாழ்கிற, சுகந்தேடும் இந்த வாழ்வை வெறுத்தேன்; உடற்சுகம் குறைத்தேன்; உயிர்ச்சிவம் பெருக்கினேன்; ஆனால், இவற்றையெல்லாம் நானா செய்தேன்? எனதா என் தவம்? எனதா என் முயற்சி? எனதா என் அடைவு? எல்லாம் சிவனுடையதே அல்லவா? என் முயற்சி ஏதும் இல்லாமல், தானாகவே வந்தான்; உள்ளம் குடிகொண்டான்; அருள் செய்தான். எனவே, என் தவம் போற்றி அல்ல; என் சிவம் போற்றி! என்கிறதே மணிவாசகம்?

 

பட்டினத்தார் என்ன செய்தார்?

இவ்வாறு, தன் அறிவு, தன் முயற்சி, தன் தவம் என்று எல்லாவற்றையும் வேறொருவருக்கு நீரூற்றித் தானஞ் செய்துவிடுவது சரியா?

பத்திரகிரியான் என்றொரு மன்னன். ஒரு நாள் அவனுடைய மாளிகையில் நகைகள் களவாடப்பட்டன. பெருங்களவு. களவாடியவர்கள் களிப்பில் திளைத்தார்கள். களவைப் பங்கமில்லாமல் நடத்திக்கொடுத்த கடவுளுக்கும் ஒரு பங்கைக் கொடுத்துக் களவில் கடவுளையே பங்காளியாக்கிவிடுவது என்பது இப்போது மட்டுமல்ல; களவாடுகிறவர்களுக்கு எப்போதுமே வழக்கம். அந்த வழக்கப்படி, காட்டின் விளிம்பிலிருந்த கோயிலின் முற்றத்தில் நகைகளைப் பங்கிட்டார்கள்; கடவுளின் பங்குக்கு ஒரு மணிமாலை.

அவரவர் பங்குகளை எடுத்துக்கொண்டவர்கள் கடவுளின் பங்கைக் கோயிலின் உள்ளே கல்லாய் இருந்த கடவுளை நோக்கி வீசிவிட்டுக் கிளம்பினார்கள். வீசிய மாலை, கடவுளை எழுதிய கல்லின்மேல் விழவில்லை; அங்கே உடற்சுகம் அறுத்து உயிர்ச்சிவத்தில் திளைத்திருந்த பட்டினத்தாரின்மேல் விழுந்தது. கள்வர்களைத் தேடிப் படையாட்கள் வந்தார்கள்; பட்டினத்தாரையும் அவர்மேல் கிடந்த மணிமாலையையும் கண்டார்கள். பட்டினத்தாரை அடித்து எழுப்பி மாளிகைக்குக் கொண்டுபோனார்கள்.

‘மணிமாலை இங்கே, மற்ற நகைகள் எங்கே?’ என்று மன்னன் விசாரித்தான். பட்டினத்தார் தெரியாதென்றார். சினந்த மன்னன் பட்டினத்தாரைக் கழுவேற்றச் சொன்னான். என்ன செய்வார் பட்டினத்தார்? பாடினார்:

என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை; இனித் தெய்வமே!

உன்செய லேஎன்று உணரப்பெற் றேன்இந்த ஊன்எடுத்த

பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை! பிறப்பதற்கு

முன்செய்த தீவினை யோஇங்ஙன் வந்து மூண்டதுவே?

(பட்டினத்தார், பொது, 22)

நானா இதைச் செய்தேன்? இந்த இப்பிறப்பில் நான் செய்யாத செயலுக்கு, என்மேல் வந்து விடிகிறதே அதன் விளைவு? விளங்கிக்கொள்ள முடியவில்லை! ஒருவேளை, நான் பிறப்பதற்கு முன் நிகழ்ந்த ஏதோ ஒரு வினையின் விளைவோ? அப்படித்தான் என்றால், அது என் காட்சிக்கும் அறிவுக்கும் எட்டாதது அல்லவோ? எனக்குத் தொடர்பில்லாத ஒன்றில், என் அறிவுக்கு எட்டாமல் நடந்த ஒன்றில், பொறுப்பேற்பதற்கும் பொறுப்புத் துறப்பதற்கும் பிடிமானம் ஏதும் உண்டோ? எனவே தெய்வமே! இனி நடக்கத்தக்கது எதுவோ அது நடக்கட்டும்!—என்று நெஞ்சோடு புலம்புகிறார் பட்டினத்தார்.

பட்டினத்தாருக்கு நிகழ்ந்ததுதான் கோவலனுக்கும் நிகழ்ந்தது. அதே மாதிரியான திருட்டு நகைக் குற்றச்சாட்டு. அதே மாதிரியான மூடப் படையாட்கள்; அதே மாதிரியான பொறுமையில்லாத மன்னன்; ஏறத்தாழ அதே மாதிரியான தண்டனை. வேறுபாடுகள் மிகச் சில: பட்டினத்தாரிடம் கண்டெடுத்த நகை மன்னனுக்குச் சொந்தமான திருட்டு நகை; கோவலனிடம் இருந்த நகை கண்ணகியின் சொந்த நகை. சைவராகிய பட்டினத்தார் கடைசியில் ‘தெய்வமே’ என்று பாடி, இறையருள் பெற்றுக் கழுமரம் பற்றியெரியப் பிழைத்துக்கொண்டார். சமணனான கோவலன் தனக்கு அருள ஒரு தெய்வமில்லாமல், பொட்டலில் வெட்டுப்பட்டுச் செத்துப்போனான்.

 

யார் பொறுப்பு?

கதைகளை விட்டுக் கேள்விகளுக்கு வருவோம்: கோயிலில் தியானத்தில் அமர்வது ஒரு குற்றமா? அதற்குத் தண்டனை திருட்டுப்பழியும் கழுவேற்றமுமா? மனைவி, மனமொப்பித் தந்த அவளது சொந்த நகையை, ஆள் தெரியாமல் விற்க முயன்றது ஒரு குற்றமா? அதற்குத் தண்டனை திருட்டுப்பழியும் தலை வெட்டுப்படுதலுமா? இப்படியெல்லாம் நிகழப்போகிறது என்று தெரிந்திருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருப்பார்களா? இவற்றையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகே செயலாற்ற வேண்டும் என்பது இயலக்கூடியதா?

நல்லது. இப்போது மைய வழக்குரைக்குத் திரும்புவோம். உங்களுக்கு நிகழ்கின்றவற்றுக்கு, உங்களால் நிகழ்கின்றவற்றுக்கு, யார் பொறுப்பு? நீங்கள் மட்டுமேதானா? நீங்களுமா? நீங்கள் இல்லவே இல்லையா? குழப்பம்! தெளிய வைக்கத் திருமூலர் ஏதும் சொல்கிறாரா?

தான்முன்னம் செய்த விதிவழி தான்அல்லால்,

வான்முன்னம் செய்துஅங்கு வைத்ததோர் மாட்டில்லை;

கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று

நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆனதே (திருமந்திரம் 2848)

நான் என்ன கொஞ்சநஞ்ச வினைகளா செய்திருக்கிறேன்? இப்பிறப்பில், முற்பிறப்புகளில் என்று செய்து குவித்திருக்கிறேன். அவற்றில் ஒரு பகுதியைத்தான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். எனவே, எனக்கு நிகழ்கின்றவற்றுக்கு, என்னால் நிகழ்கின்றவற்றுக்கு யார் பொறுப்பு என்று கேட்பீர்களேயானால், நானே பொறுப்பு. என் வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு நொடியும், ஏன், நான் நின்றிருக்கும் நிலம் முதற்கொண்டு எல்லாமே என் வினைகளால் நானே செதுக்கியவை.

அல்லாமல் வானத்தில் இருக்கிற ஏதோ ஒன்று என் வாழ்க்கையைச் செதுக்கியது என்பீர்களேயானால், அன்பர்களே, அதை ஒப்ப முடியாது!—என்று நிலைபாடு மாறாமல் அடித்துச் சொல்கிறார் திருமூலர். அப்படியென்றால் பட்டினத்தார்களுக்கும் கோவலன்மாருக்கும் என்ன விடை? சிக்கல்தான்!

அறஞ்சார்ந்த விடயங்களில் திருமூலரின் முன்னோடியான திருவள்ளுவரிடம் வழக்கு போனபோது,

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும் (குறள் 169)

ஒருவனுடைய வினைதான் அவனை உருவாக்கும் என்றால், தீயவன் வாழ்கிறான்; நல்லவன் தாழ்கிறானே? ஏன்? ஆராயத்தான் வேண்டும் என்கிறார் வள்ளுவர். வழக்கை இன்னும் விரித்து விசாரிக்க வேண்டியிருக்கிறது.

(விசாரணை தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article22822671.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 21: ஊழின் கைப்பிள்ளைகளா நாம்?

 

 
shutterstock326554064

‘கோளாறு’ என்று ஒரு தமிழ்ச்சொல். ‘என்னப்பா கோளாறாப் பேசுற?’ ‘பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு; காரியந்தான் ரொம்பக் கோளாறா இருக்கு!’ ‘கோளாறு புடிச்ச ஆளா இருப்பான் போலருக்கு!’ என்று கோளாற்றுக்குப் பயன்பாட்டுச் சான்றுகள் காட்டலாம். செரிமானக் கோளாறு, தொழில்நுட்பக் கோளாறு போன்ற பயன்பாடுகளும் உண்டு.

தீர்வில்லாமல் இழுத்துக்கொண்டே போகிற சிக்கலைத் தீர்ப்பதற்கு நுட்பமான யோசனை சொல்கிறவரை மதுரை வட்டாரத்தில் ‘கோளாறு சொல்கிறவர்’ என்பார்கள். ‘ஏப்பா, இதுக்கு நான் ஒரு கோளாறு சொல்றேன்; கேக்குறியா?’

கோளாறு ‘சீர்குலைவு’ என்றும், கோளாறு சொல்லுதல் ‘சீர்குலைவைச் சமன் செய்வதற்கான யோசனை’ என்றும் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் கோளாறு என்கிற சொல் இன்னாளில் அடைந்திருக்கிற பொருள் வழக்குகள். முன்னாளில் கோளாறும் கோளாறு சொல்லுதலும் வேறு பொருள் வழக்குடையவை.

கோளாறு என்பது கோள்+ஆறு. கோள் என்பது ஒன்பது கோள்கள்; ஆறு என்பது வழி. கோள்களின் இயக்கமே கோளாறு. கோளாற்றை வடமொழியில் சொல்ல விரும்பினால் அது ‘கிரகச்சாரம்’. தமிழையும் வடமொழியையும் கலந்து மணிப்பிரவாளம் ஆக்கிக் ‘கோட்சாரம்’ செய்து அதைக் ‘கோச்சாரம்’ என்று வழங்குவர் சோசியர்.

இதைப் பற்றி இங்கென்ன விளக்கம் என்பார் நிற்க: உங்களுக்கு நிகழ்கின்றவற்றுக்கு, உங்களால் நிகழ்கின்றவற்றுக்கு யார் பொறுப்பு? நீங்கள் மட்டுந்தானா? நீங்களுமா? நீங்கள் இல்லவே இல்லையா என்னும் விசாரணையின் ஒரு பகுதி இது.

 

ஆசீவகம் என்னும் தமிழ்ச் சமயம்

நிகழ்கின்றவை எல்லாவற்றுக்கும் பொறுப்பு கோள்களின் ஆட்டம் என்கிறது ஆசீவகம் என்கிற, பரவி அறியப்படாத தமிழ்ச் சமயம். அதற்குச் சான்றாகப் பேராசிரியர் க.நெடுஞ்செழியனின் சங்க காலத் தமிழர் சமயம் என்னும் நூலில் கீழ்க்கண்ட குறள்கள் காட்டப்படுகின்றன:

நவக்கோள் கூடி நடத்தும் மாண்பு

உவப்பின் நிகழ்ச்சி அது.

ஆய கோள்கள் ஆட்டம் அதுவே

காய நிகழ்ச்சி எனல்.

நன்றும் தீதும் நவக்கோள் ஆட்டம்

என்று உணர்வது அது.

தோற்ற ஒடுக்கம் யாவும் கோள்கள்

ஆற்ற செயல்என்று உணர்.

- மனித வாழ்வின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒன்பது கோள்கள் கூடி நடத்தும் நிகழ்ச்சிகளின் விளைவே ஆகும். உலக இயக்கம் என்பதே கோள்களின் இயக்கந்தான். மனித வாழ்வில் ஏற்படும் நன்மையும் தீமையும் எல்லாம் ஒன்பது கோள்களின் ஆட்டத்தால் வருவனவே ஆகும். உலகம் உள்ளிட்ட அனைத்தும் தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்கும் காரணம் கோள்களின் செயல்பாடே ஆகும்.

ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து

அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று

வெள்ளி வாரத்து ஒள்எரி உண்ண

உரைசால் மதுரையோடு

அரைசு கேடுஉறும் எனும்

உரையும் உண்டே நிரைதொடி யோயே

(சிலம்பு. 23: 133-137)

-ஆடி மாதம், தேய்பிறை எட்டாம் நாள், கார்த்திகை மீன் சேர்ந்த வெள்ளிக் கிழமை மதுரையின் அரசு கெடும், மதுரை தீப்பற்றி எரியும் என்பதாக வானியல் குறிப்பு ஒன்று உண்டு என்று மதுராபதித் தெய்வம் மதுரையைக் கொளுத்திய கண்ணகிக்குச் சொல்கிறது. கோள்களின் இயக்கத்தைக் கணித்து நடக்கப்போவதை உரைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு இது சான்றாகக் காட்டப்படுகிறது. அதனால்தான்,

தாளாளன் என்பான்

கடன்படா வாழ்பவன்;

வேளாளன் என்பான் விருந்து

இருக்க உண்ணாதான்;

கோளாளன் என்பான் மறவாதான்;

இம்மூவர் கேள்ஆக வாழ்தல் இனிது

(திரிகடுகம், 12)

-தாளாளன் என்பவன் முயற்சி உள்ளவன்; தானே தனக்கும் பிறர்க்கும் வேண்டியதைச் செய்துகொள்வானே ஒழிய, பிறர் தனக்குச் செய்து, தான் அவர்க்குக் கடன்பட்டு வாழ ஒப்பமாட்டான். வேளாளன் என்பவன் பிறர்க்கென வாழும் உதவியாளன்; விருந்தாக வந்தவர் இருக்கத் தான்மட்டும் தனித்து உண்ண மாட்டான். கோளாளன் என்பவன் கோள்களின் இயக்கவிதிகளைக் கற்று அறிந்தவன்; என்ன கேடு வந்தாலும் அவற்றை மறவாதவன். ஆகவே இவர்கள் மூன்று பேருடனும் நட்போடு வாழ்வது நல்லது என்று அறிவுரைக்கிறது திரிகடுகம்.

 

இது காரணம் என்றால், இதுவே காரியம்

கோள்களின் இயக்கவிதிகளை அறிந்த கோளாளன் என்பவன் முதிராத இயற்பியலாளன் (physicist). ‘இது காரணம் என்றால் இதுவே காரியம்’ என்று தர்க்கபூர்வமாய்ச் சொல்ல முயன்றவன். இயற்கையின் இயங்குவிதிகளுக்கு அப்பாற்பட்டு ஏதும் நடந்துவிட முடியாது என்று அறுதியிட்டவன். பரிகாரம் செய்தோ, காணிக்கை தந்தோ, நடக்கவேண்டிய எதையும் யாரும் தடம் புரட்டிவிட முடியாது என்று இறுகி நின்றவன்.

பரிகாரங்களும் காணிக்கைகளும், பிழை செய்தவன் தன்னைத் திருத்திக்கொள்ளவும், வருவதை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் பெறவும், ‘நான்’ என்னும் ஆணவம் குறைக்கவுமான, மனம் திரும்பும் நடவடிக்கைகளாக வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய, அதற்குக் கூடுதலாய் எதையும் பெற்றுத்தர முடியாது.

எழுதிச் செல்லும் விதியின்கை

எழுதி எழுதி மேற்செல்லும்.

தொழுது கெஞ்சி நின்றாலும்

சூழ்ச்சி பலவும் செய்தாலும்

வழுவிப் பின்னால் நீங்கிஒரு

வார்த்தை யேனும் மாற்றிடுமோ?

அழுத கண்ணீர் ஆறுஎல்லாம்

அதில்ஓர் எழுத்தை அழித்திடுமோ?

-என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் உமர் கய்யாமின் பாடல் ஒன்று. அழுதாலும் தொழுதாலும், சூழ்ச்சியே செய்தாலும், இயங்குவிதி தன்போக்கில் இயங்கும். மாற்றவோ தடுக்கவோ முடியாது.

கோளாறு சொன்னவர்கள் கெடுபிடியாகச் சொல்கிறார்கள்; கருணை மனுப் போட்டாலும் கதைக்கு ஆகாது என அருளே இல்லாமல் பேசுகிறார்கள் என்று கருதியவர்கள், கோளாறு சொன்னவர்களைக் கண்டு கசந்தார்கள்; இழித்துரைத்தார்கள். கோளாறான ஆள், கோள் சொல்லி என்கிற சொற்கள் இழிந்தது இப்படித்தான்.

இந்தக் கோள் சொல்லிகள், கோளாறுக்கு ‘விதி’ என்றும் ‘ஊழ்’ என்றும் பெயர் வைத்தார்கள். ஒரு நூல்கண்டை உருட்டிவிட்டால் நூலின் நீளம் இடங்கொடுக்கும்வரை அது நீள்வதைப்போல, இயற்கைவிதிகள் இடங்கொடுக்கும் அளவிற்குள் மனிதர்கள் செயல்படலாம்.

கல்பொருது இரங்கும்

மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல்

ஆருயிர் முறைவழிப் படூஉம்...

(புறம். 192)

என்கிறார் கணியன் பூங்குன்றனார். பெருங்கற்களைக்கூட அடித்துப் புரட்டிக்கொண்டு போகிறது வெள்ளம்; அதில் அகப்பட்டுக்கொண்ட ஓர் எளிய தெப்பம், நீர் போகும் வழியில் தானும் போவதே அல்லாமல் வேறென்ன செய்யும்? உயிருக்கும் அதுதான். காகித ஓடம் கடலலைமீது போவதுபோலே, விதி போகும் வழியில் போகவேண்டியதுதான்.

விதி நம்மைக்கொண்டு செய்விப்பதைத்தான் நாம் செய்கிறோம் என்றால், நமக்கு எந்தச் செயலுரிமையும் கிடையாதா? கட்டற்று நம் போக்குக்கு ஏதும் செய்ய முடியாதா? ஊழ் நம்மைப் பிணிக்கும் என்றால், ஊழின் கைப்பிள்ளைகளா நாம் என்று மலைக்கும்போது, ‘ஊழின் கைப்பிள்ளைகள் அல்லர், நாம் கடவுளின் கைப்பிள்ளைகள்; கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்று எழுகிறார் திருமூலர்:

வான்நின்று இடிக்கில்என்?

மாகடல் பொங்கில்என்?

கான்நின்ற செந்தீக் கலந்து

உடல் வேகில்என்?

தான்ஒன்றி மாருதம்

சண்டம் அடிக்கில்என்?

நான்ஒன்றி நாதனை

நாடுவன் நானே.

திருமந்திரம் 2850)

வானம் இடிந்து மண்டையில் விழுந்தாலும் என்ன? பெருங்கடல் பொங்கி என்னையே விழுங்கினாலும் என்ன? காட்டுச் செந்தீ என் தேக்குமரத் தேகத்தைத் தீயச் செய்தாலும் என்ன? மெல்லிதாகத் தவழ்ந்த தென்றல் சூறையாகிப் புரட்டி அடித்தாலுந்தான் என்ன? ஒன்றும் சிக்கலில்லை. என் அப்பன் எனக்குப் பாதுகாப்பு.

நூல் பிடித்தாற்போல நேராக வந்துகொண்டிருந்த வண்டியை இடக்குமுடக்கான கொண்டை ஊசி வளைவு ஒன்றில் ஒடித்துத் திருப்புகிறார் திருமூலர். எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்றவர் இப்போது கடவுளைப் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறாரே? முரண்படுகிறாரோ திருமூலர்?

(விசாரணை தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article22889861.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 22: அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

 

 

நிகழ்கின்ற எல்லாவற்றுக்கும் பொறுப்பு கோள்களின் ஆட்டமும் ஐம்பெரும் பூதத்து இயற்கையுந்தான்; அவற்றின் இயங்கு விதிகளுக்குத் தப்பி ஏதும் நிகழ்ந்துவிட முடியாது என்கிறது ஒரு தரப்பு.

வானம் துளங்கில்என்? மண்கம்பம் ஆகில்என்? மால்வரையும்

தானம் துளங்கித் தலைதடு மாறில்என்? தண்கடலும்

மீனம் படில்என்? விரிசுடர் வீழில்என்? வேலைநஞ்சுஉண்டு

ஊனம்ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே

(அப்பர் தேவாரம், IV:112:8)

-என்று எதிராடுகிறது மற்றொரு தரப்பு. வானமே இடிந்து விழுந்தாலும் என்ன? நிலமே நடுநடுங்கிக் கிடுகிடுத்தாலும் என்ன? மலைகளெல்லாம் நிலைகுலைந்து தலைகீழாய்ப் போனாலும் என்ன? மீன்கள்கூட வாழத் தகாததாய்க் கடல் தன் குணம் மாறினாலும் என்ன? செஞ்சுடர்க் கதிரும் வண்ண நிலவும் சிதறித் தெறித்தாலுந்தான் என்ன? கடல் கக்கிய நஞ்சை உண்ட பிறகும் ஒரு கோளாறும் இல்லாமல் இருக்கிற ஒருவனுக்கு ஆட்பட்டு நிற்கிற உத்தமர்கள் இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டார்கள்.

மேலை அளவை இயலில் (Western Logic) தருக்கமுறை கற்பிக்கும்போது ஓர் எடுத்துக்காட்டோடு கற்பிப்பார்கள்:

நஞ்சு உண்டவர்கள் எல்லோரும் சாவார்கள்;

இவன் நஞ்சு உண்டிருக்கிறான்;

எனவே இவன் சாவான்.

நஞ்சு சாவைத் தரும் என்றால் நஞ்சுண்டவன் யாராக இருந்தாலும் சாக வேண்டும். இங்கோ ஒருவன் கடலின் நஞ்சும் பாம்பின் நஞ்சுமான ஆலகால நஞ்சை ஒருசேர உண்ட பிறகும் ஊனம் ஒன்றுமில்லாமல் இருக்கிறான். அப்படியென்றால் ‘கோளாறு’ என்று சொல்லப்படுகிற இயற்கையின் இயங்கு விதிகள் பலிக்கவில்லை என்றுதானே பொருள்?

ஊனமில்லாமல் தப்பிப் பிழைத்தவன் இயங்கு விதிகளுக்கு அப்பாற்பட்டவன் என்றுதானே பொருள்? இயற்கையின் இயங்குவிதிகளை ஒருவன் தனக்காக வெல்ல முடியுமென்றால், தன்னையே நம்பியிருக்கிற பிறருக்காகவும் அவற்றை வென்றுதர அவனால்முடியுந்தானே ? அத்தகைய தலைவனுடைய ஆட்கள் நாங்கள்; ஆகவே எங்களுக்கு அச்சமில்லை என்கிறார் அப்பர் திருநாவுக்கரசர்.

சூழும் அரவத் துகிலும், துகில்கிழி கோவணக் கீளும்,

யாழின் மொழியவள் அஞ்ச, அஞ்சாது அருவரை போன்ற

வேழம் உரித்த நிலையும், விரிபொழில் வீரட்டம் சூழ்ந்து

தாழும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்.

அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

(அப்பர் தேவாரம், IV:2:9)

அரவத்தையே ஆடை மாதிரிப் போர்த்திக்கொண்டவன்; துணியைக் கிழித்துக் கோவணமாக உடுத்திக்கொண்டவன்; மலை போன்றதொரு யானை எதைக் குறித்தும் அஞ்சாமல் வந்து மோதியபோது, அதைக் கொன்று அதன் தோலை உரித்தவன்; கங்கையை அணிந்த கங்காதரன் என்று சொல்கிறீர்களே, அவன் கங்கைக் கரையில்தான் கங்காதரன்; எங்கள் திருவதிகையை ஒட்டி ஓடும் கெடிலக் கரையிலோ கெடிலம் அணிந்த கெடிலாதரன்; நாங்கள் அவனுடைய அடியார்கள்; எனவே, எதைக் கண்டும் நாங்கள் அஞ்சுவதுமில்லை; எங்களை அச்சுறுத்துமாறு வருவதும் ஏதுமில்லை.

 

ஆசீவகர்களின் அடையாளம் யானை

இங்கே, யானையைக் கொன்று தோலுரித்தார் சிவனார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ‘கோள்களும் அவற்றின் இயங்குவிதிகளும் வலிமையானவை’ என்று பேசுகிற ஆசீவகர்களின் அடையாளச் சின்னம் யானை; அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து, அதற்குள் தான் புகுந்துகொண்டு, யானைத்தோல் போர்த்த சிவமாகிறார் சிவனார்—என்றால் ஆசீவகத்தின் ‘ஊழ்’ என்ற கருதுகோளைச் சைவம் ‘சிவம்’ என்ற கருதுகோளைக்கொண்டு இடம்பெயர்த்துப் பொருள் மாறாட்டம் செய்கிறது எனலாம்.

இது ஒரு கருத்தியல் அதிகாரப் பெயர்ச்சி. ஒரு கருத்து காலூன்றி அரசாண்டு கொண்டிருக்கும் இடத்தில், அதன் சாயலையே போர்த்திக்கொண்டு மற்றொரு கருத்து அரசாளச் செய்கிற முயற்சி. எளிமையாக இப்படிக் கருதிப் பார்க்கலாம்: மக்களிடம் செல்வாக்குப் பெற்ற கொள்கைக் கட்டமைப்பு ஒன்றை முன்வைத்து, ஒரு மாநிலத்தை அரை நூற்றாண்டுக் காலமாக, இடையறாமல் ஆள்கிறது ஓர் இயக்கம் என்று வையுங்கள்; அந்த இயக்கத்தை அகற்றித் தன் ஆட்சியை நிலைநிறுத்த விரும்புகிறது அதற்கு நேர்மாறான மற்றொரு இயக்கம். என்ன செய்யும்?

மக்களிடம் செல்வாக்குப் பூண்ட அந்தக் கொள்கையின் சாயலைத் தானும் தன்மீது அள்ளிப் பூசித் தன் உண்மை நிறத்தை மறைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயலும். சான்றாக, மொழியின்மீது உணர்ச்சிகரமான ஈடுபாடு கொண்டவர்கள் மாநிலத்தின் மக்கள் என்க. ஆட்சியை விரும்பும் மாற்று இயக்கத்துக்காரர்களின் மொழிக்கொள்கையோ முற்றிலும் வேறானதும், முரணானதும் என்க.

இருந்தபோதிலும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக, தங்களுடைய முரண்பாட்டு மொழிக்கொள்கையை மறைத்துக்கொண்டு, மாநில மொழியை விதந்து பேசுவார்கள்; மாநில மக்கள் மொழியின்மேல் கொண்டிருக்கிற அளப்பரிய ஈடுபாட்டைப் பாராட்டுவார்கள். இப்படியாக, மக்கள் விரும்பும் முகமூடியை இட்டுக்கொண்டு அதிகாரம் பெறப் பையவே முயல்வார்கள்.

ஊழை இடம்பெயர்ப்பவர்

யாருக்கும் இரங்காத, எவருக்கும் பின்செல்லாத, முகம் பார்த்து விதி மாற்றிக்கொள்ளாத ஊழை அதிகாரத்திலிருந்து இடம்பெயர்த்து, வேண்டி வந்தவர்க்கு இரங்குகிற, முன்பின் பார்த்துச் செய்கிற, நச்சினார்க்கு இனிய சிவன் வந்து அதிகாரத்தில் உட்கார்ந்துகொள்கிறார். தேவையென்றால் கோள்களின் ஆட்டத்தை நிறுத்திவைப்பார்; விலக்கிவிடுவார்; பிழைபடவும் வைப்பார்.

வேய்உறு தோளிபங்கன், விடம்உண்ட கண்டன்,

மிகநல்ல வீணைதடவி,

மாசறு திங்கள், கங்கை முடிமேல் அணிந்துஎன்

உளமே புகுந்த அதனால்,

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி,

சனி, பாம்புஇரண்டும்உடனே,

ஆசுஅறு நல்லநல்ல, அவை நல்லநல்ல,

அடியார் அவர்க்கு மிகவே.

(சம்பந்தர் தேவாரம் II:85:1)

-என்று வெளிப்படப் பாடுகிறார் திருஞான சம்பந்தர். மூங்கிலைப் போன்ற தோளுடையவளைத் தன் பாகமாகக்கொண்டவன், நஞ்சுண்டவன், வீணை தடவுகிறவன், நிலவையும் கங்கையையும் முடிமேல் அணிந்தவன், அவன் என் உள்ளத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய இந்தக் கோள்கள் என்னை என்ன செய்துவிட முடியும்? ஒன்பது கோள்களும் அட்டூழிய, அராஜகங்கள் செய்யக்கூடியவைதாம் என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால் இந்த அட்டூழியம், அராஜகமெல்லாம் நடுநின்ற நாயகனாகிய தலைவனை நம்பாதவர்களுக்கு மட்டுந்தான்; நம்புகின்றவர்களுக்கு அவை செய்வது அட்டூழியமன்று; தொண்டூழியம்.

‘சட்டம் தன்போக்கில் செயல்படும்’ என்பது நம் நாட்டில் அரசியலார் அடிக்கடி உதிர்க்கும் திருவாசகம். தன்போக்கில் இயங்க வேண்டிய சட்டம், குற்றவாளிகள் அனைவரையும் சமமாகக் கருதிக் கொட்டடியில் அடைத்து வைக்க வேண்டிய சட்டம், அதிகாரத் தரப்பினர் அடைபடும்போது மட்டும் கொட்டடிக் கம்பிகளை நெளித்துக்கொடுத்து அவர்களைத் தப்புவிப்பதில்லையா?

காட்டாற்று வெள்ளம்போலத் தன்போக்கில் அடித்துக்கொண்டு போகும் ஊழுக்கு இறைவனைக்கொண்டு அணைகட்டி, அப்பருக்கும் சம்பந்தருக்கும் அடியெடுத்துக் கொடுத்தவர் திருமூலர்.

ஆனை துரத்தில்என்? அம்புஊடு அறுக்கில்என்?

கானத்து உழுவை கலந்து வளைக்கில்என்?

ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த

ஞானத்து உழவினை நான்உழு வேனே.

(திருமந்திரம் 2851)

யானை என்னை அச்சுறுத்தித் துரத்தினாலும் என்ன? அம்பு என்னைத் துளைத்து அறுத்தாலும் என்ன? காட்டுப்புலி என்னை வழிமறித்தாலுந்தான் என்ன? கவலையில்லை. நீ மட்டும் எந்த வகையில் வேறானவன் என்று கேட்பீர்களேயானால், ஐயன்மீர்! நானும் உங்களைப் போல ஊரில்தான் வாழ்கிறேன்; ஆனால், நான் வாழும் ஊர் நீங்கள் வாழும் ஊரன்று. நானும் உங்களைப் போல உழுதுதான் பிழைக்கிறேன்; ஆனால், நான் உழும் உழவு நீங்கள் உழும் உழவன்று. எந்த ஊர் என்பவரே, என் ஊர் மெய்யூர்; அங்கேதான் இறைவனும் இருக்கிறான். எவ்வுழவு என்பவரே, என் உழவு அறிவுழவு; அதில் என்னைக் கைபழக்குகிறான் இறைவன்.

தன் வினையை, தன் முயற்சியைக் கைவிட்டுவிடாமல், இறைவனையும் உள்ளே இழுத்துக்கொண்டு, வினைக்கும் ஊழுக்கும் இடைநிலை காண முயல்கிறாரா திருமூலர்?

(அறிவோம் இன்னும்)

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 23: திரள்வினைக்குத் தெய்வம் பொறுப்பு

 

 
shutterstock72213334
 
 

‘ஊழ்’ என்பது நாம் அறியமுடியாமல், நம்மைமீறித் தன்போக்கில் நிகழ்ந்து, அதற்குள் நம்மையும் அமிழ்த்திவிடுகிற நிகழ்வுகளின் திரட்சி. ஊழை விளங்கிக்கொள்ள இதைக் கருதலாம்: ‘தமிழ்நாட்டு ஆற்றில், அதுவும் சென்னையில் ஓடுகிற ஒரு சிற்றாற்றில் தண்ணீரா வரப்போகிறது?’ என்று ஆற்றங்கரையோரம் குடிசை கட்டி வாழ்ந்திருந்தார்கள் எளியவர்கள். மழை பொய்த்த மாநிலத்தில் இதுவரை அறிந்திராத பெருமழைக் காலம் ஒன்று வந்தது. நகருக்கு நீர் வழங்கும் பேரேரிகள் சட்டுச்சட்டென்று நிரம்பித் ததும்பின. அகாலத்தில் தண்ணீரைத் திறந்தார்கள். சிற்றாறு சட்டென்று காட்டாறாயிற்று. கரைபுரண்ட வெள்ளம், கரையோரத்தில் குடியிருந்தவர்களின் வாழ்வாதாரத்தை ஓர் இரவில் அடித்துப் புரட்டியது. ஆட்கள் போயினர்; ஆடுமாடுகள் போயின; சான்றிதழ்த் தாள்கள் போயின; சம்பளம் போயிற்று; சாக்கடை ஓரத்திலும் பூத்துக்கிடந்த வாழ்க்கை ஒரே இரவில் தானும் சாக்கடை ஆயிற்று.

நிகழ்ந்தவற்றுக்கு யார் பொறுப்பு? எந்தத் தனியாளின் தனி வினை இது? யாரைச் சொல்லமுடியும்? கருதியிராத பெருமழை—எதிர்பாராத நீர்ப்பெருக்கு—ஏதேதோ காரணங்களால் அகற்ற முடியாத ஆக்கிரமிப்புகள்—அடைபட்ட நீர்வழிகள்—அதிகாரமில்லாப் பொறியாளர்—உயர்மட்டத்திலோ அவசரத்தை உணரத் தெரியாத அசட்டை—உணர்ந்தபோதோ தானே முடிவெடுக்க முடியா பலவீனம்—முடிவெடுக்கும் அதிகார மையத்தைத் தொடர்புகொள்ளவோ அச்சம்—காலம் தாழ்ந்துவந்த ஆணை—அளவிறந்த தண்ணீர்—அழிவோ அழிவு—எல்லாம் விதி—என்பதுதான் ஊழ்.

அழிவுக்கு மட்டுந்தான் ஊழ் காரணமாக இருக்கும் என்று கருதவேண்டாம். ஆக்கத்துக்கும் காரணமாக இருக்கும். ஓர் இடத்தைப் பெறுவதற்காகத் தகுதியுடையவர்கள் பல பேர் தவஞ்செய்து கிடக்கும்போது, யானை மாலையிட்டதுபோல, இடையில் வந்த யாரோ ஒருவர்க்கு அந்த இடம் கிடைப்பதும் ஊழ்தான். போவதற்குக் காரணமாக இருக்கிற ஊழ் போகூழ்; ஆவதற்குக் காரணமாக இருக்கிற ஊழ் ஆகூழ்.

 

திரள்வினைக்கு யார் பொறுப்பு?

ஒரு நிகழ்வுக்கு, ஏதேனும் ஒன்றை அல்லது ஒருவரை மட்டும் பொறுப்பாக்க முடியும் என்றால், அது அந்த ஒன்றின் அல்லது ஒருவரின் தனி வினை. எதைப் பொறுப்பாக்குவது, யாரைப் பொறுப்பாக்குவது என்றே தெரியாத வகையில் உலகத்து இயற்கை, பல பேரின் கூட்டுவினைகள், காலம், இடம், தற்செயல்போன்ற ஏராளமான காரணிகள் ஒன்றுதிரண்டு நிகழ்ந்தால், அது ஊழ். தனி வினைக்குத் தனி ஆள் பொறுப்பு; திரள்வினைக்கு யார் பொறுப்பு? தனியாட்கள் யாரும் பொறுப்பில்லை. ‘எல்லாம் கோளாறு; நேரம் சரி இல்லை; விதிப் பயன்’ என்று ஆற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் அப்படி ஆற்றிக்கொள்ள முடியவில்லை. ஞானிகள் வேண்டுமானால் தன் நெஞ்சோடு தானே பேசிக்கொள்ளலாம்:

...பேயோ? எங்கும் திரிந்துஓடிப் பேணா என்பைப் பேணுகின்ற

நாயோ, மனமே நீ?

(திருவருட்பா, V:19:4)

‘ஏ நெஞ்சமே! நீ என்ன நிலைகெட்டு அலையும் பேயா? இல்லை, எங்கெங்கோ தேடித் திரிந்து, கடைசியில் சாரமும் சதையுமில்லாத வெறும் எலும்பைக் கௌவிக்கொண்டு வரும் நாயா? சீச்சீ! சற்றுச் சும்மா இருக்கமாட்டாயா நீ?’ என்று வள்ளலாரைப்போல நெஞ்சைக் கடிந்துகொள்ளலாம்.

...பொம்ம

லாட்டம் என்றே இரு உடலை! அடர்ந்த சந்தைக்

கூட்டம் என்றே இரு சுற்றத்தை! வாழ்வைக் குடம்கவிழ்நீர்

ஓட்டம் என்றே இரு! நெஞ்சே! உனக்கு உபதேசம் இதே!

(பட்டினத்தார், பொது, 21)

‘பொம்மலாட்டத்தில் கயிற்றை இழுக்கிறவன் இழுப்பதை நிறுத்தும்வரை பொம்மை ஆடும்; அதைப் போலத்தான் உடல். சந்தை நடக்கும்வரை கூடி நிற்கும் கூட்டம், சந்தை முடியும்போது கலைந்துவிடும்; அதைப்போலத்தான் சுற்றம். கவிழ்ந்த குடத்திலிருந்து வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் நீர், இருப்புத் தீர்ந்து குடம் காலியாகும்வரைக்கும் ஓடும்; அதைப்போலத்தான் வாழ்வு. ஆட்டம் போட்டு அலைக்கழியும் நெஞ்சே! உனக்கு இதுதான் உபதேசம்! பொறுமிக்கொண்டே இருக்காமல் அமைதியாக இரு!’ என்று பட்டினத்தாரைப் போல நெஞ்சுக்கு உபதேசம் வழங்கலாம்.

 

ஊழுக்குப் பெயர் தெய்வம்

இவ்வாறு தன் நெஞ்சோடு தானே பேசித் தன்னைத் தானே அடக்கிக்கொள்ளுதல் அறிவர்களுக்குச் சாத்தியமாகலாம். நம்மைப் போன்ற எளியவர்களுக்கு அது சாத்தியமா? தன்னிடமே தான் புலம்புவதைவிட முன்னிலைப்பட்ட ஒன்றிடம் புலம்புவது எளிதில்லையா? சுமை உள்ளுக்குள்ளேயே இருந்து நெஞ்சடைக்காமல் வெளியில் இறங்குவது நிலைமையை எளிதாக்கும் இல்லையா? அதற்கு என்ன செய்யலாம்? ஊழ் என்கிற திரட்சியை வடிவநிலைப்படுத்தி, அதைத் தெய்வமாக்கி விட்டால்? ஊழுக்குத் தொல்காப்பியர் கொடுத்த பெயர்களில் தெய்வம் என்பதும் ஒன்று.

காலம், உலகம், உயிரே, உடம்பே,

பால்வரை தெய்வம், வினையே, பூதம்...

(தொல்காப்பியம்,

சொல்லதிகாரம், கிளவியாக்கம், 57)

இந்த நூற்பாவில் வரும் ‘பால்வரை தெய்வம்’ என்பது ஊழ். ஊழின் இடத்தில் சமய வழிப்பட்டவர்கள் அவரவர் தெய்வங்களை வைத்துக்கொண்டார்கள். நடக்கின்ற எல்லா வற்றுக்கும் தெய்வமே காரணம் என்று கருதத் தலைப்பட்டார்கள்.

...ஐயா! நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டில்,

உய்வார்கள் உய்யும் வகைஎல்லாம் உய்ந்தொழிந்தோம்;

எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்!

(திருவாசகம், திருவெம்பாவை. 11)

‘தெய்வமே! எங்களை உருட்டிப் புரட்டி நீ விளையாடுகிற விளையாட்டில் படவேண்டிய எல்லாப் பாடுகளையும் பட்டுவிட்டோம். இனிமேலும் படுத்தாமல் எங்களைக் காப்பாற்று’ என்று வேண்டி வழிபட்டார்கள்.

ஊழ் என்பது தானாகவே தன்போக்கில் நிகழக்கூடிய ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் பிடரியில் தலைவர்களை உட்கார வைத்தார்கள் மக்கள். பிறகு தலைவர்களே அதை நடத்துவதாகக் கருதிக்கொண்டு தலைவர்களை வழிபடத் தொடங்கினார்கள். கோளாறுகள் வந்தபோது, ‘அமைப்பு சரியில்லை; தலைமையை மாற்றினால் அமைப்பு சரியாகும்’ என்று தலைமைக்குத் தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு சிலர் வந்தார்கள். சிக்கலே system-த்தை முன்னிலைப்படுத்தாமல் தலைவர்களை முன்னிலைப்படுத்துவதுதான் என்று அவர்கள் அறிவார்களா? System கெட்டுப்போவதைப் பற்றித் திருமூலரும் பேசுகிறார்:

கூடு கெடின்மற்றுஓர் கூடுசெய் வான்உளன்;

நாடு கெடினும் நமர்கெடு வார்இல்லை;

வீடு கெடின்மற்றுஓர் வீடுபுக்கால் ஒக்கும்;

பாடுஅது நந்தி பரிசுஅறி வார்க்கே.

(திருமந்திரம் 2852)

உடம்பாகிய கூடு கெட்டுப்போனாலும் ஒன்றும் பிழையில்லை; வேறு ஓர் உடம்பு கிடைக்கும். பெரிய இனத்தவர் சிறிய இனத்தவரை வாழவிடாமல் அடித்து நாட்டைக் கெடுத்தாலும், நம்முடைய ஆட்கள் வாழ்வதற்கு வேறொரு நாடு கிடைக்கும். குடியிருக்கிற வீடு கெட்டுப்போனாலும் ஒன்றும் குடி முழுகிவிடாது; வேறொரு வீடு கிடைக்கும். யோசித்துப் பார்த்தால், சிவனைச் சரண் புகுந்தவர்களுக்கு எதுவும் பெரிய பாடில்லை; இருக்கிற அமைப்பு கெட்டுப்போனாலும் அவன் வேறு ஓர் அமைப்பை மாற்றி வழங்குவான் என்கிறார் திருமூலர்.

‘ஆறு உருவாக்கிய மண்ணுக்கு ஆறுதான் பொறுப்பு’ என்றும் ‘நான் செய்த செயலுக்கு நான்தான் பொறுப்பு’ என்றும் வீறார்ந்து பேசிய திருமூலர், ஊழ் என்கிற அதிகாரத்தின் கடைசிப் பாட்டில் கடவுளைச் சரண்புகுந்ததன் காரணம் என்ன என்று கேட்போருக்கு: தன் வினைக்குத் தான் பொறுப்பு; திரள்வினைக்குத் தெய்வம் பொறுப்பு.

(விடைகள் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article23244524.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.