Jump to content

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!


Recommended Posts

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!

 

trichendur kovil

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா நாளை 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது.

 

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இந்தத் திருவிழாவின் தொடக்க நாளான நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்தில் நடக்கின்றன. 

trichendur soorasamharam

இத்திருவிழாவின் 2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை தினமும் காலையில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்தில் நடக்கிறது. இத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி வரும் அக்டோபர் 25-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளான அக்டோபர் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்கப் பெருமாள் - தெய்வயானை அம்பிகை தோள்மாலை மாற்றுதலும் தொடர்ந்து இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.

 

சூரசம்ஹாரத்தைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவார்கள் என்பதால் இந்த ஆண்டு 550 சிறப்பு பேருந்துகளும், 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/105339-thiruchendur-kantha-sashti-festival-start-from-tomorrow.html

Link to comment
Share on other sites

கந்தசஷ்டியின் மகிமை!

 

 
v1

முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே கந்தசஷ்டிப் பெருவிழாவாகும். சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். எனவே, சஷ்டி விழா ஆறுநாள் விழாவாகும். கச்சியப்ப சிவாசாரியரின் கந்தபுராணமும் பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன.

தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபதுமன், அவன் தம்பிகளாகிய தாருகன், சிங்கமுகன் ஆகியவர்களோடு முருகப்பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறைமீட்டு, அவர்களுக்கு ஆட்சியுரிமை தந்து, தேவருலகை வாழ வைத்த வரலாற்ரை அடிப்படையாகக் கொண்டது கந்தசஷ்டிப் பெருவிழா. கந்த பெருமானுக்கும் சூரபதுமனுக்கும் போர் நடைபெற்ற இடம் திருச்செந்தூர்.

போருக்குப்பின்னர், முருகன், இந்திரன் மகளாகிய தெய்வயானையை மணம் செய்த இடம் திருப்பரங்குன்றம். இது ஏழாம் நாள் விழா. செந்தமிழ் நாட்டில் நடைபெற்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட செந்தமிழ்க்கடவுளின் தெய்வப் பெருவிழாவே கந்தசஷ்டிப் பெருவிழா!

ஆன்மாக்களுக்கு மூன்று வகையான அழுக்குகள் உண்டு. மூலமாகிய முதல் அழுக்கே ஆணவம்.  அதையொட்டி,  ஆன்மாக்களுக்கு உண்டாகிய இரண்டு அழுக்குகள் உண்டு. அவைகள், மாயை, கன்மம் எனப்பெறும். மாயையானது உலகப்பொருள்களில் கவர்ச்சியை உண்டாக்கி ஆன்மாக்களுக்கு மோகத்தை உண்டு பண்ணும். ஞானிகளைக் கூட மயங்க வைத்துவிடும். மயக்கத்தை உண்டாக்குதலும் ஆன்மமாக்களை உலகப் பொருள்களின் மேல் பற்று ஏற்படுத்துதலும் மாயை. சூரபதுமனின் ஒரு தம்பியாக நின்ற தாருகனே மாயை மயமாக நின்று செயல்படுபவன்.

அடுத்து, அழுக்கானது கன்மம். இதுவும் இரண்டு வகையானது. நல்வினை, தீவினை என சிங்கமுகன் கன்ம மயமாக நின்றவன். மூன்றாவது மூல அழுக்கே ஆணவம். இதுவும்  நான் என்றும்; எனது என்றும் செயல்படும். சூரபதுமன் ஆணவ மயமாக நின்றவன். மூன்று அழுக்குகளும் ஆறாகப் பிரிந்து செயல்பட்டன. ஆகையால் ஆறு நாள்களில் அவைகளை அழித்து ஆன்மாக்களுக்கு உண்மை ஞானம் கொடுத்தான் கந்தன் என்பதே கந்தசஷ்டிப் பெருவிழாவின் தத்துவம்!

இந்த மூன்று அழுக்குகளிலிருந்து நீங்கிய மனிதனின் ஆன்மா இறைவனடி சேர்ந்து இன்புற்றிருக்கும். உலகமும் உலகப் பொருள்களும் இறைவன் படைப்புகள் என்று உணர்ந்தால் மாயையிலிருந்து விடுபடலாம். தீவினைகள் எப்போதும் செய்யக்கூடாது. நல்வினைகளைச் செய்யும்போது அவைகள் நம் முயற்சியென்று கருதாமல் அவைகளை இறைவன் நம் மூலமாகச் செய்விக்கிறான் என்று உணர வேண்டும். அப்போது நல்வினைப்பயன் நம்மைச் சாராது. மறுபிறப்பும் ஏற்படாது. அற வாழ்க்கையை மேற்கொண்டு, எப்போதும் இறைவனைச் சிந்தித்து எல்லா நிகழ்வுகளும் அவனால் நிகழ்கின்றன என்று கருதினால் ஆணவத்திலிருந்து விடுபடலாம்.

இத்தத்துவத்தை நம் கையிலுள்ள ஐந்து விரல்கள் மூலம் அறியலாம். மேலும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் சின்முத்திரை இந்தத் தத்துவத்தைக் குறிக்கும்.இறைவனுக்குத் தேங்காய் படைப்பதும் இத் தத்துவத்தைக் குறிக்கும். 

கந்தபெருமான் சூரபதுமனை வென்று, அவனைத் தன் மயில் வாகனமாகவும் சேவற்கொடியாகவும் மாற்றினான். சிங்கமுகா சூரன் உமையம்மையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.
- செ.வே. சதாநந்தன்
 

http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/20/கந்தசஷ்டியின்-மகிமை-2792866.html

Link to comment
Share on other sites

‘சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும்...’ - உடலையும் மனதையும் மேம்படுத்தும் கந்த சஷ்டி விரதம்!

 
 

ழகன் என்றும், தமிழ்க் கடவுள் என்றும், தகப்பன் சாமி என்றும் எல்லோராலும் கொண்டாடப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த விரதம் சஷ்டி விரதம். குறிப்பாக ஐப்பசி மாதம் அமாவாசையை ஒட்டி வரும் கந்த சஷ்டி விரதம், மிகவும் விசேஷமானது. அது மட்டுமல்ல, சிறப்பான பலன்களைத் தரும் ஒப்பற்ற விரதமும் கூட. ஐப்பசி மாதம் கந்த சஷ்டி தினத்தில்தான் முருகப் பெருமான், தன் அவதாரத்துக்குக் காரணமான சூரபத்மனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி நடந்தது. முருகப் பெருமானின் சூரசம்ஹாரம் தனிச் சிறப்பு கொண்டது. ஆம். முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அவனையே மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். 

திருசெந்தூர் முருகன்

 

முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்வதற்குக் காரணமான சூரபத்மனின் பின்னணிதான் என்ன?

சூரபத்மன் என்பவன் சிவபெருமானைக் குறித்து தவம் இருந்து வழிபட்டான். தரிசனம் தந்த இறைவனிடம்தான் இறவாமலிருக்க வரம் கேட்டான். ஆனால், பிறப்பவர் யாவரும் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி என்று சிவபெருமான் கூறவே, பெண்ணின் கருவில் உருவாகாத ஒருவனின் கரத்தால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே வரம் தந்து மறைந்தார்.

தான் பெற்ற வரத்தின் காரணமாக தேவர்களையும் முனிவர்களையும் உலகத்து வாழ் மக்களையும் கொடுமைப்படுத்தினான். அவனுடைய கொடுமை தாங்க முடியாமல் தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு பிரார்த்தித்தனர். அவர்களுடைய பிரார்த்தனைக்கு இறங்கி சிவபெருமான், தம் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப்பெருமானைத் தோற்றுவித்தார். தேவர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோரின் துன்பம் நீக்க, சூரபத்மனை வேலவன் சம்ஹரித்த நாளே ஐப்பசி மாத சஷ்டி தினம். இந்த நாளில் தீமைகள் விலகி மங்கலம் உண்டானதால் சஷ்டி விரதம் முக்கிய விரத நாளாக போற்றப்படுகிறது. இந்த சஷ்டி விரதத்தின் முக்கியத்துவம், பலன்கள் பற்றி அறிந்துகொள்ள ஆன்மிக எழுத்தாளர் வலையப்பேட்டை கிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்டோம்.

சஷ்டி விரதம்

“விரதங்கள் எல்லாமே மனதை ஒருமுகப்படுத்தத்தான் ஞானிகளால் உருவாக்கப்பட்டது. விரதம் என்றாலே 'வரிக்கப்படுவது' அல்லது 'மேற்கொள்வது' என்றுதான் அர்த்தம். மனம் போனபடி செல்லும் புலன்களை அடக்கத்தான் இந்த விரதங்கள் பயன்படுகின்றன. மனதினை அடக்க ஒரு நல்ல வழி உண்டி சுருக்குதல்தான். அதிலும் விரத நாள்களில் உண்டியை நீக்குதல் இன்னும் சிறப்பானது. வாகனங்களுக்கு ஓய்வு கொடுத்து பழுது பார்ப்பது போல, உடலின் உள்ளுறுப்புகளுக்கும் இந்த விரதங்கள் நன்மை செய்கின்றன. ஞானியர்கள், யோகியர் எல்லாம் இந்த விரதங்களால்தான் சிறப்பினை அடைந்தார்கள். பசித்த நிலையில் அவர்களின் தேஜஸ் மெருகேறி தெய்வ நிலையினை பெற்றார்கள். அதனாலேதான் அவர்களைக் கண்டவுடன் நாம் வணங்குகிறோம். விரதங்களால் உடல், மனம் கட்டுப்படும். இதனால் நோய்கள் குறையும். ஆயுள் பெருகும். எல்லா வளங்களையும் விரதம் இருந்தால் பெறலாம் என்று சொன்னது இதற்காகத்தான்.

விரதங்களில் வார விரதம், நாள் விரதம், பட்ச விரதம் என்று மூன்று வகை உண்டு. வியாழன், சனி போன்ற ஏதாவது ஒரு நாள் இருக்கும் விரதம் வார விரதம் எனப்படும். மாதத்தின் ஏதாவது ஒரு நாள் உதாரணமாக அமாவாசை, பௌர்ணமி தினத்தில் விரதம் இருப்பது நாள் விரதம். மாதத்தின் இரு நாள்கள் ஏதாவது ஒரு திதியில் உதாரணமாக சஷ்டி, பிரதோஷம் நாள்களில் இருப்பது பட்ச விரதம் எனப்படுகிறது. இதில் சஷ்டி விரதம் சிறப்பானது. 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்'  என்ற பழமொழியின் உண்மையான விளக்கமே சஷ்டியில் விரதம் இருந்தால் அகமென்னும் பை சிறப்பானதாக மாறும் என்பதுதான். இன்னொருவகையில் கூடச் சொல்லலாம். பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் விரதம் இருந்தால் அவர்களின் அகமென்னும் கருப்பையில் கரு வரும். இப்படிச் சிறப்புமிக்க சஷ்டி விரதம் காலம் காலமாக நம்மிடம் இருந்து வருகிறது. ஐப்பசி மாதம் தீபாவளி கழிந்த பிரதமை நாளில் தொடங்கும் இந்த சஷ்டி விரதம் ஆறு நாள்கள் கடைப்பிடிக்கப்பட்டு சஷ்டி நாளில் முடியும். அதுவே கந்த சஷ்டி விரதம் எனப்படுகிறது.

சூர சம்ஹாரம்

சூரனை முருகப்பெருமான் வதைத்த நாளோடு இந்த விரதம் முடிகிறது. ஐப்பசி மாத சஷ்டியில் தொடங்கி ஒரு முழு ஆண்டில் வரும் 24 சஷ்டியிலும் விரதமிருப்பது நல்லது. முடியாதவர்கள் இந்த ஐப்பசி சஷ்டி விரதம் இருக்கலாம். ஆனால் ஆறு நாள்களுமே விரதம் இருப்பதுதான் முக்கியமானது. காலையில் எழுந்து தூய்மையாகி, திருநீறிட்டு, வடக்கிலோ, தெற்கிலோ அமர்ந்து முருகப்பெருமானை தியானிக்க வேண்டும். பின்னர் பூஜையறையில் முருகனை ஆராதித்து வழிபட வேண்டும். அப்போது நைவேத்தியமாக நெய்யில் செய்த மோதகம் வைப்பது விசேஷம். சஷ்டி விரத ஆறு நாள்களிலும் உண்ணாமல் இருப்பதுதான் நல்லது. எச்சில்கூட விழுங்காமல் இந்த விரதம் இருப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். மறைந்த கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளின் தாயார் தனது 90 வயதிலும் இந்த விரதத்தை கடுமையாகக் கடைப்பிடித்தார் என்று அவரே கூறியிருக்கிறார்.

கந்த சஷ்டி விரதம்

 

முடியவே முடியாத பட்சத்தில் விரத நாளில் ஒரேயொரு முறை மட்டும் ஆறு மிளகும், ஆறு கை அளவும் நீரும் எடுத்துக்கொள்ளலாம். மிளகு வயிற்றில் அமிலக்கோளாறு வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் அதை எடுத்துக்கொள்ளலாம். ஆறு நாளும் விரதமிருந்து ஏழாவது நாளில் சிறப்பான பூஜைகளை மேற்கொண்டு அடியார்களுக்கு உணவிட்டு 'மகேஸ்வர பூஜை' மேற்கொள்ள வேண்டும். ஆறு நாள்களும் உண்ணாமல், உறங்காமல் விரதமிருந்து ஏழாவது நாளில் கடலில் நீராடி விட்டே விரதம் கைவிடும் பக்தர்களைத் திருச்செந்தூரில் இன்றும் காணலாம். உடலையும் மனதையும் சீராக்கும் கந்த சஷ்டி விரதம் 20-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை வருகிறது. இந்த நாளில் முடிந்த வரை உண்ணாநோன்பிருந்து எல்லாம் வல்ல முருகப்பெருமானின் ஆசியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

http://www.vikatan.com/news/spirituality/105343-sashti-fasting-protect-the-body-and-mind.html

Link to comment
Share on other sites

நல்லூரில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி உற்சவம்

 
 
நல்லூரில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி உற்சவம்
 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற கந்த சஷ்டி உற்சவத்தின் இராண்டாம் நாள் காட்சிகள்.

yyy.pngdfgfgg.pngggghgh.pngghy.pngu87898.pngytyy.png

http://newuthayan.com/story/39451.html

Link to comment
Share on other sites

கந்த சஷ்டி விரதம் இப்படித்தான்!

 
 
murugan1

நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். ஏனென்றால்... சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்! 

சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.

இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் இன்னும் சிறப்பு பெறுகிறது. சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து, இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை அனைவரும் அறிந்ததுதான்.

சூரபத்மனை முருகப் பெருமான் முற்றிலும் வதம் செய்யாமல்மயிலாக வந்தபோது  சேவலாக வந்த போது கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.

முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயினி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.

murugan

சிவ – பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை.  எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால் தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, ‘நான்’ என்னும் அகங்காரம் சேவலாகவும், ‘எனது’ என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகப் பெருமான என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

பேரனைச் சுமக்க தாத்தாவிற்கு கஷ்டமா என்ன? அதனால் தான் மயில் வாகனமாக மாறி, பேரனைச் சுமந்தார் தாத்தா சூரபத்மன்.

சூரபத்மனின் ஆணவத்தை அழிப்பதற்கென்றே அவதரித்தவர் முருகக் கடவுள்.

இந்த சிவமைந்தன் முற்பிறவியில் பிரம்மதேவனின் மைந்தனாக பிரம்மஞானி சனக்குமாரர் என்ற பெயர் தாங்கி முக்காலம் அறிந்த ஞானியாகத் திகழ்ந்தார் என்றும் விவரிக்கிறது புராணம்.

ஒரு முறை, சூரர்களைப் போரிட்டு வதம் செய்வது போல் கனவு கண்டார். அதனை தன் தந்தையான பிரம்மாவிடம், ‘தந்தையே! நான் சேனாதிபதியாக நின்று அசுரர்களை வதம் செய்வதாகக் கனவு கண்டேன்’ என்று சொன்னார். அதற்கு அவர், ‘சனத்குமாரா, உன் கனவு பலிக்கும். ஆனால், நீ பிரம்மஞானியாக இருப்பதால் இந்தப் பிறவியில் அது இயலாத காரியம். அடுத்த பிறவியில் உனக்கு அந்தப் பாக்கியம் கிட்டும்’ என்றார்.

முருகப் பெருமானின் அவதாரத்தை முன்னிட்டு சிவனாரும் உமையவளும் சனத்குமாரரைக் காண வந்தார்கள். தியானத்தில் இருந்த சனத்குமாரர் தியானம் முடிவடைந்ததும் தன் முன் சிவனும் பார்வதியும் நிற்பதைக் கண்டு வணங்கினார்.

அப்போது பரமேஸ்வரன் ‘மகனே. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார். அதற்கு சனத்குமாரர், ‘நீங்கள் ஒன்றும் எனக்கு வரம் தர வேண்டாம் உங்களுக்கு வேண்டுமானால் நான் வரம் தருகிறேன், கேளுங்கள்’ என்றார். இதைக் கேட்டு கோபம் கொள்ளவில்லை சிவனார். “நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்” என்று வரம் கேட்டார்.

சனத்குமாரரும், “உங்கள் விருப்பப்படியே உங்கள் அருளால் உங்களுக்கு மகனாகப் பிறப்பேன்” என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, “உம் அருளால் மகனாகப் பிறப்பேன் என்றால், என் பங்கு ஒன்றுமில்லாதது போல் தெரிகிறதே” என்றாள்.

“ஆம். கர்ப்பவாசத்தில் தோன்றப் போவதில்லை. எனவே, அருள் கூர்ந்து தங்கள் கணவரின் அருள் பார்வையால் நான் அவதரிக்கும்படி செய்யுங்கள்” என்றார். பார்வதியும், “சரி, உன் விருப்பம் போல் நடக்கும்” என ஆசீர்வதித்தாள்.

காலங்கள் கடந்தன. பஸ்மாசுரனைக் கொல்ல சிவபெருமான் மகா விஷ்ணுவுடன் சென்றபோது, பார்வதி தனித்திருப்பதை அறிந்த பஸ்மாசுரன் பார்வதியைத் தேடி வந்தான். தன் கணவனைப் பிரிந்த சோகத்தில் உருகிக் கொண்டிருந்த உமையவள், பஸ்மாசுரன் வருவதை அறிந்து அவனிடமிருந்து தப்பிக்க பொய்கையாக மாறினாள்.அது தான் சரவணப் பொய்கை எனப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் பஸ்மாசுரன் எரிந்து சாம்பல் ஆனதும், பரமசிவன் கயிலாயம் வரும் வழியில் பார்வதி பொய்கையாக மாறி இருப்பதைக் கண்டு, இது தான் தக்க தருணம் என்று தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை அந்தப் பொய்கையில் விழும்படி செய்தார்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு குழந் தைகளாக தாமரை மலர்கள் மேல் எழுந்தருளின.  அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் போற்றினார்கள். இதனைக் கண்ட பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி ஒன்றாக்கினாள். அந்தக் குழந்தையே ஆறுமுகம் கொண்ட சரவணன் என்கிற முருகப் பெருமான். இப்படித்தான் சனத்குமாரர் முருகக் கடவுளாக அவதரித்தார். சூரபத்ம வதமும் நிகழ்ந்தது. தேவர்களும் மகிழ்ந்தனர்.

இதன் காரணமாகத்தான் ஐப்பசி மாதம் வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. சஷ்டி திதி அன்று சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூர் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

கந்த சஷ்டி வேளையில் விரதம் இருந்து கந்தனை வணங்கி மகிழ்வார்கள் முருக பக்தர்கள்.

கந்த சஷ்டி விரத நியமங்கள்:

murugan

தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.

இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.

ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.

ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

http://tamil.thehindu.com/society/spirituality/article19887332.ece

Link to comment
Share on other sites

சிட்னி முருகன் ஆலயத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூரசம்கார நிகழ்வு (சூரன் போர்).

திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா - பக்தர்கள் தரிசனம் ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.