Jump to content

கிறிஸ்துவின் தானியங்கள்: இறை வார்த்தை என்னும் விதை


Recommended Posts

கிறிஸ்துவின் தானியங்கள் 1: இறை வார்த்தை என்னும் விதை

 

 
Bible%20Story%20Image

யேசு ஒரு போதகராகப் புகழ்பெற்றிருந்த நாட்கள் அவை. வீட்டைவிட்டு வெளியே போய்க் கடலோரமாக அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட மக்கள், கூட்டமாக அங்கே திரண்டுவந்து நெருக்கியடித்தனர். உடனடியாக அவர் ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்று, அவர் பேசப்போகும் வார்த்தைகளைக் கேட்பதற்காக, காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டார்கள். அலைகள் சலசலப்பைக் குறைத்தன. கடற்காகங்கள் கரைவதை மறந்தன. அப்போது இயேசு விதைப்பவரின் கதையைக் கூறினார்.

 

விவசாயி தூவிய விதைகள்

“ஒரு விவசாயி விதைக்கச் சென்றார். அவர் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன. வேறு சில விதைகள் மண் அதிகம் இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் அவற்றால் வேர்பிடிக்க முடியவில்லை. அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கிக் காய்ந்துபோயின. இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த நிலத்தில் விழுந்தன. ஆனால், அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன. அவர் தூவிய மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தரத் தொடங்கின. அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும் பலன் தந்தன. நான் கூறிய உவமையைக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்று சொன்னவர், சற்று இடைவெளிவிட்டு அந்தக் கதைக்கான உள்ளர்த்தத்தையும் எடுத்துரைத்தார்.

 

விதை, நிலம், விளைச்சல்

“விதைக்கிறவர் பற்றிய உவமையின் அர்த்தத்தைக் கவனித்துக் கேளுங்கள். பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர் பரலோகத் தந்தையின் அரசாங்கத்தைப் பற்றிய இறைச் செய்தியைக் கேட்டும், அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. ஏனென்றால், பொல்லாதவன் வந்து அவருடைய மனதில் விதைக்கப்பட்டவற்றைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். பாறைகளின் மேல் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது இறை வார்த்தைகளைக் கேட்டு உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அவன் தன் மனதில் அவற்றை ஆழமாகப் பதியவைத்துக்கொள்வதில்லை. முட்புதருக்கு இடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது இறை வார்த்தைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையால் அவ்வார்த்தைகளைத் தன்னுள் இருத்தி வைத்து அவற்றின்படி நடக்காதவனைக் குறிக்கிறது. எனவே, இறை வார்த்தை அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை.”

நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? “அவ்விதை இறை வார்த்தைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் 100 மடங்கும் சில சமயம் 60 மடங்கும் சில சமயம் 30 மடங்கும் பலன் தருகிறான்” என்று விளக்கினார்.

இவ்வாறு விதைப்பவரைக் கடவுளாகிய பரலோகத் தந்தையாகவும், அவர்தரும் வார்த்தைகளை விதைகளாகவும், அவற்றை ஏந்திக்கொள்ளும் நிலமாக மனிதர்களையும், இறை வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையை விளைச்சலாகவும் இயேசு இந்த உவமைக் கதையின் வழியாகச் சுட்டிக்காட்டினார்.

 

கதைகளே இயேசுவின் ஊடகம்

‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது’ என்று கூறுகிறது விவிலியம். அதன்படி இறைமகன் இயேசு, கதைகளின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அவர் தந்தையாகிய கடவுளைப் பற்றி, அவருடைய அரசாங்கத்தைப் பற்றிப் புரியாத போதனைகள் செய்ய விரும்பவில்லை. கதைகள், உவமைகள் வழியே இறை உலகை அவர் எளிமையாக அறிமுகப்படுத்தினார்.

சீடர்கள் அவரிடம் வந்து, “ ஏன் மக்களிடம் உவமைகளால் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றுக்கொள்வான். ஆனால், இல்லாதவர்களிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் பார்த்தும் பார்க்காதவர்களாகவும், கேட்டும் கேட்காதவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான், நான் அவர்களிடம் உவமைகளின் மூலம் பேசுகிறேன். இந்த மக்கள் கண்களால் பார்க்காமலும் காதுகளால் கேட்காமலும் மனதால் உணராமலும் இருக்கும்படி, அவர்களுடைய இதயம் இறுகிப்போயிருக்கிறது. இவர்கள் தங்கள் காதால் மந்தமாய்க் கேட்கிறார்கள், தங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.

இயேசு, இந்த உவமைக் கதையின் இறுதியில் ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத்தேயு 13:9) என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார். “ நான் கூறிய உவமையைக் கூர்ந்து கவனியுங்கள்” என்பதே இதன் பொருள்.

தொடரும்..

http://tamil.thehindu.com/society/spirituality/article19796209.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள்: அறுவடை நாளுக்காகக் காத்திருக்கும் விவசாயி

shutterstock503387434

 

எறும்புக்கும் இதயத்தைக் கொடுத்தவர் கடவுள். உலகின் முதலும் முடிவுமான உன்னதப் படைப்பாளி அவரே. அவரது ஆட்சி நிரந்தரமானது. சிறந்த ஆட்சியும் அதுவே. கடவுள் கூறும் இறைவார்த்தைகள், விதைகள் போன்றவை. அவற்றை இதயமெனும் நிலங்களில் ஏந்திக்கொள்ளும் மனிதர்கள், நல்ல கனி தரும் மரம்போல் பூமியிலும் பிறகு வானுலகிலும் மதிக்கப்படுவார்கள் என்று இறையாட்சியை எடுத்துக் கூறுகிறது விவிலியம். இறைமகனாகிய இயேசு, தம் தந்தையின் ஆட்சியைக் குறித்து தன்னைப் பின்தொடரும் சாமானிய மக்களுக்கு எளிய உவமைகள் வழியாக எடுத்துக்கூறினார். அவற்றில் ‘அறுவடை நாள்’ எனும் உவமை முக்கியமானது. அதற்குமுன் அவர் கூறிய இரு சிறு உவமைகளைக் கடந்து அறுவடை நாளுக்குப் பயணிப்போம்.

 

புதையலும் முத்தும்

இயேசு அப்போது கலிலேயா பகுதியில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். ‘கடவுளின் அரசாங்கம் குறித்துக் கூறுகிறீர்களே, அது எப்படிப்பட்டது’ என மக்கள் கூட்டத்திலிருந்து சிலர் கேட்டனர். அதற்கு இயேசு, “ புதையலைத் தேடிக்கொண்டிருந்த ஒருவர், மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அது புதையல் என்று அவருக்கு உறுதியாய்த் தெரிந்தது. உடன் அதைப் பத்திரமாய் மூடிவைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய், தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.” என்றார். அடுத்து அவர், “ வணிகர் ஒருவர் சிறந்த முத்துகளைத் தேடிச் செல்கிறார். அப்போது விலை உயர்ந்த முத்து ஒன்றைக் கண்டார். உடன் அவர் போய்த் தமக்குள்ள அனைத்தையும் விற்று, அதை வாங்கிக்கொண்டார். தந்தையின் அரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.” என்றார்.

 

களைகள் எப்படி வளர்ந்தன

பின்னர் கடவுளை நல்ல விதைகளைப் பூமியில் விதைக்கும் விவசாயியாக உருவகப்படுத்தி, இயேசு வேறொரு உவமையை மக்களுக்குச் சொன்னார்: “ வானுலக அரசாங்கம், நல்ல விதையைத் தன் வயலில் விதைத்த ஒருவரைப் போல் இருக்கிறதென்று சொல்லலாம். நல்ல விதைகள் தூவப்பட்ட வயலைக் காவல் காத்துக்கொண்டிருந்த ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவருடைய எதிரி வந்து கோதுமைப் பயிர்களுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர்கள் வளர்ந்து கதிர்விட்டபோது, பயிர்களைப்போல் தோற்றம் காட்டிய களைகளும் வளர்ந்திருந்தன. அதனால், அந்த மனிதருடைய ஊழியர்கள் அவரிடம் வந்து, “எஜமானே, நீங்கள் வயலில் நல்ல விதையைத்தானே விதைத்தீர்கள். அப்படியிருக்கும்போது, களைகள் எப்படி வளர்ந்தன?” என்று கேட்டார்கள். உடன் அவர் “இது எதிரியின் வேலை” என்றார். அதற்கு ஊழியர்கள், “நாங்கள் போய் களைகளைப் பிடுங்கிப் எறியட்டுமா?” என்று கேட்டார்கள். அப்போது அவர், “வேண்டாம், அப்படிச் செய்யாதீர்கள்; களைகளைப் பிடுங்கும்போது தெரியாமல் கோதுமைப் பயிர்களையும் பிடுங்கி விடுவீர்கள். அதனால் அறுவடைநாள் வரும்வரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும். அறுவடைநாள் அன்று, அறுவடை செய்கிறவர்களிடம், முதலில் களைகளைப் பிடுங்கி அவற்றை எரித்துவிடுவதற்காகக் கட்டுகளாகக் கட்டுங்கள், அதன் பின்பு கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேருங்கள் என்று சொல்வேன்” என்றார். இந்த உவமையைக் கேட்ட மக்கள் மனத்தெளிவு பெற்றவர்களாக முகம் மலர்ந்தனர். ஆனால் சீடர்களோ புரிந்தும் புரியாதவர்களைப்போல நின்றனர்.

 

நல்ல விதைகள் யாவர்?

அதன்பின்பு இயேசு அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது சீடர்கள் அனைவரும் அவரருகே வந்து அமர்ந்து “ஆண்டவரே, கோதுமை வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு மேலும் விளக்கிக் கூறுங்கள்" என்று கேட்டனர். புன்முறுவலோடு அவர்களுக்கு விளக்கத் தொடங்கினார்.

“இந்த உலகம்தான் வயல். நல்ல விதைகள், கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கும் அவரது ஆட்சிக்கு உட்பட்ட மக்கள். மானிட மகன் நல்ல விதைகளை விதைக்கிறார். களைகளை விதைக்கும் பகைவன், தீயோனாகிய சாத்தான். அறுவடை, உலகின் முடிவு. அறுவடை செய்வோர் கடவுளின் ஊழியர்களாகிய வானதூதர்கள். எவ்வாறு களைகளைத் தனியே பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார், அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள். பின் அவர்களை நெருப்புச் சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளிவீசுவார்கள். கேட்கச் செவியுள்ளோர் இதைக் கேட்கட்டும்” என்றார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article19838475.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள் 03: எது சிறந்த வாழ்க்கை?

 
 
 
 
shutterstock639262468

 

கடவுள் வழங்கிய திருச்சட்டங்களைக் கற்று, அவற்றைத் தொழுகைக் கூடங்களில் போதிப்பவர்களை ‘திருச்சட்ட வல்லுநர்’ என்று யூத மக்கள் அழைத்தனர். மக்களுக்கு போதிக்கிறோம் என்ற கர்வத்துடன் வலம் வந்த இவர்களுக்கு, இயேசுவின் மீது பொறாமை இருந்தது. இயேசுவின் புகழ் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த நாட்களில் தொழுகைக் கூடங்களுக்கு வரவேண்டிய மக்கள், இயேசு போதிக்கும் இடங்களில் குவிந்தார்கள். இதனால் ஏட்டுச்சுரைக்காய்களாக இருந்த திருச்சட்ட வல்லுநர்கள், இயேசுவிடம் இடக்கு மடக்காகக் கேள்விகளைக் கேட்டு அவரைத் தோற்கடிக்க நினைத்தனர். உள்நோக்கத்துடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இயேசு கதையுடன் கூறிய பதில்களால் அவர்கள் மனம் மாறி இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.

 

முடிவில்லாத வாழ்க்கை

இயேசுவின் காலத்தில் யூதர்கள், மதத் தலைவர்கள், குருக்கள் ஆகியோரால் வெறுக்கப்பட்ட மக்களாக சமாரியர்கள் வாழ்ந்துவந்தனர். இயேசுவோ எல்லோரையும்போல் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்த அவர்களை வெறுக்கவோ ஒதுக்கவோ கூடாது என்பதைத் தன் வாழ்வின் வழியே எடுத்துக்காட்டினார். அனைவரும் கடவுளின் குழந்தைகளே என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இயேசுவை மடக்க நினைத்து அவரை நெருங்கி வந்த திருச்சட்ட வல்லுநர் ஒருவர் இயேசுவைப் பார்த்து “ போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? ” என்று கேட்டார். அதற்கு அவர், “திருச்சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது, நீங்கள் என்ன வாசித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது திருச்சட்ட வல்லுநர், “ ‘உங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தையின் மேல் உங்கள் முழு மனதோடு அன்பு காட்ட வேண்டும்’ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல சக மனிதர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது”என்றார். உடன் இயேசு, “சரியாகச் சொன்னீர்கள்; அப்படியே செய்துகொண்டிருங்கள்; அப்போது உங்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்”என்று சொன்னார்.

 

நல்ல சமாரியன்

ஆனால் அந்தத் திருச்சட்ட வல்லுநர், தன்னை ஒரு நீதிமான் எனக் காட்டிக்கொள்வதற்காக, “ நான் அன்பு காட்ட வேண்டிய அந்த சக மனிதர்கள் உண்மையில் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு ஒரு கதையைக் கூறினார்.

“ஒருவன் எருசலேம் நகரத்திலிருந்து கீழ்நோக்கி எரிக்கோ நகரத்துக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்போது, திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டான். அவர்கள் அவனிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு, அவனை பலமாகத் தாக்கி, கிட்டத்தட்டச் சாகும் நிலையில் குற்றுயிராக விட்டுவிட்டுப் போனார்கள். அந்தச் சமயத்தில் ஆலய குரு ஒருவர் தற்செயலாக அந்த வழியில் வந்துகொண்டிருந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவனைப் பார்த்தபின், எதிர்ப்பக்கமாகப் போய்விட்டார். ஒரு லேவியர் அந்த வழியில் வந்தார். மதகுருவைப் போலவே அவரும் கண்டும் காணதவரைப்போல் நடந்துகொண்டார். ஆனால், அந்த வழியில் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அவனைப் பார்த்தபோது மனம் உருகினார். அவன் பக்கத்தில் போய், அவனுடைய காயங்கள்மேல் எண்ணெய்யையும் திராட்சைரச மதுவையும் ஊற்றி, அவற்றுக்குக் கட்டுப்போட்டார். பின்பு, அவனைத் தன்னுடைய கழுதையின் மேல் ஏற்றி, ஒரு சத்திரத்துக்குக் கூட்டிக்கொண்டுபோய்க் கவனித்துக்கொண்டார்.

அடுத்த நாள் அங்கிருந்து புறப்படும்முன் இரண்டு தினாரியூ பணத்தை எடுத்து சத்திரக்காரரின் கையில் கொடுத்து, ‘இவனைக் கவனித்துக்கொள்ளுங்கள்; இதற்குமேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னார். அப்படியென்றால், இந்த மூன்று பேரில், திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டவனிடம் உண்மையிலேயே அன்பு காட்டியவர் யாரென்று நினைக்கிறீர்கள்?” என்று இயேசு கதையின் முடிவில் கேட்டார். அதற்குத் திருச்சட்ட வல்லுநர், “அவனிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டவர்தான்”என்று சொன்னார். அப்போது இயேசு, “நீங்களும் போய் அதேபோல் நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.

 

திகைத்த சீடர்கள்

சக மனிதரிடம் பாரபட்சமும் வெறுப்பும் இல்லாமல் அன்பு காட்டுவதே சிறந்த வாழ்க்கை என்பதை விளக்கவே இயேசு இந்த உவமைக் கதையைப் பயன்படுத்தினார். கதை கூறியதோடு நின்றுவிடாமல் தாம் சொன்னதைச் செயலிலும் காட்டினார் இயேசு. தொழுநோயாளியாக இருந்த ஒரு சமாரியனைக் குணப்படுத்தினார். தன்னை நோக்கி ஆர்வத்துடன் நாடிவந்த சமாரியர்களுக்கு அவர் போதித்தார். ஒரு சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தியபின் அவளிடம் மனம்விட்டு உரையாடினார். யூதப்பெண், சாமரியப்பெண் என்ற பாகுபாடு இல்லாமல் பெண்களுக்கு போதித்தார். பொது இடங்களில் எந்தப் பெண்ணுடனும், அது நெருங்கிய உறவுக்காரப் பெண்ணாக இருந்தாலும் சரி, எந்த ஆணும் பேசக் கூடாது என்பதில் யூத ரபிக்கள் கறாராக இருந்தார்கள். இப்படிப்பட்ட பின்தங்கிய சூழ்நிலையில் ஒரு சமாரியப் பெண்ணிடம் இயேசு பேசுவதைப் பார்த்து அவரது சீடர்களே திகைத்துப்போனார்கள்.

http://tamil.thehindu.com/society/spirituality/article19917486.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள் 04: பறவைகளைவிட நாம் சிறந்தவர்கள்!

 

 
shutterstock268972070%201

நாளைய தினம் என்பது எதிர்காலம். அதற்காகச் சேமித்து வைப்பது இன்றைய வாழ்க்கைமுறையில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இயேசு வாழ்ந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இதேநிலைதான். ஆள்பவர்களுக்கு மண், பொன், பெண், புகழ் மீது ஆசை என்றால் குடிகளுக்கோ பொன், பொருள், பொக்கிஷங்களைச் சேர்த்துவைப்பதில் ஆசை. பொருள் மீது வைக்கும் ஆசையைக் கடவுள் மீது வைத்துப்பார்; அதுவே திருட முடியாத ‘பொக்கிஷம்’ என்கிறார் இயேசு. கடற்கரையில் அவர் போதனை செய்துகொண்டிருந்தபோது திரளான உயர்தட்டு யூதர்கள் அவர் பேசுவதைக் கவனிப்பதற்காக வந்திருந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் செல்வந்தர்களுக்கு இணையாக அன்றாட வாழ்க்கைப் பாட்டைக் குறித்துக் கவலை கொள்கிற ஏழை யூதர்களும் இருந்தார்கள். இயேசு பேசத் தொடங்கினார்.

 

உடலின் விளக்கு கண்கள்

“பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள். ஏனென்றால், இங்கே பூச்சிகளும் துருவும் அவற்றை அழித்துவிடும்; திருடர்களும் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். அதனால், பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சிகளோ துருவோ அவற்றை அழிக்க முடியாது. திருடர்களால் அதைத் திருட முடியாது. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்.

கண்களே உடலுக்கு விளக்கு. உங்கள் கண்கள் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும். ஆனால், உங்கள் கண்கள் எல்லாவற்றையும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால், உங்கள் முழு உடலும் இருளாய் இருக்கும். உங்களுக்குள் இருக்கும் ஒளி உண்மையில் இருளாக இருந்தால், அது எப்பேர்பட்ட இருளாக இருக்கும்!

 

வானத்துப் பறவைகள்

அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் அதிக முக்கியம் இல்லையா? வானத்துப் பறவைகளைக் கூர்ந்து பாருங்கள். அவை நம்மைப் போல் விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை. ஏன், களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை. ஆனாலும், உங்கள் பரலோகத் தந்தை அவற்றுக்கு உணவு அளிக்கிறார். பறவைகளைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா? கவலைப்படுவதால் உங்களில் யாருக்காவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியையாவது கூட்ட முடியுமா? அப்படியிருக்க ஏன் உடைக்காகக் கவலைப்படுகிறீர்கள்?

லில்லிப் பூக்கள் வளருவதைக் கவனித்துப் பாருங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதும் இல்லை; ஆனால் செல்வச்செழிப்பில் மிதந்த சாலமோன்கூட இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்த முடிந்ததா? இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல்போகும் காட்டுச் செடிகளுக்கே இவ்வளவு அழகான உடையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால், உங்களுக்குக் கொடுக்க மாட்டாரா? அதனால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுத்துவோம் என்று ஒருபோதும் கவலைப்படாதீர்கள். இவை அனைத்தும் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்.” என்று அவர் கூறியபோது அங்கிருந்த செல்வந்தர்கள், ஏழைகள் ஆகிய அனைவரது முகத்தில் மட்டுமல்ல; சீடர்களின் கண்களும் உடலின் விளக்குபோல் ஒளிர்ந்தன.

 

பயம் தேவையில்லை

இன்னொருமுறை அன்றைய ரோமை ஆட்சியாளர்களையும் மதத்தின் பெயரால் மக்களை பாவிகளாக்கி வைத்திருந்த யூதப் பழமைவாத மதக்குருமார்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் எனத் தன் சீடர்களுக்கு அறிவுறுத்தும்போது, “ பரலோகத் தந்தைக்கு மட்டுமே பயப்படுங்கள். குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள்தானே? ஆனால், அவற்றில் ஒன்றைக்கூடக் கடவுள் மறப்பதில்லை. உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. பயப்படாதீர்கள்; சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்” என்றார்.

பறவைகள், செடிகள், புல் பூண்டு, பூச்சிகள் என உலக உயிர்கள் அனைத்தின் தேவைகளையும் பரலோகத் தந்தையாகிய யகோவா தன் பொறுப்பில் எத்தனை அழகாகக் கவனித்துக்கொள்கிறார் என்பதை சொன்ன இயேசு, “பறவைகளைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா?” என்று தம் சீடர்களுக்கும் மக்களுக்கும் எடுத்துக் கூறினார். இயேசுவின் உவமைகள் இன்னும் மனித இனத்துக்கு உயிர்ப்புள்ள உணவாக இருக்கின்றன.

பறவைகளுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் கடவுள், மனிதர்களுடைய தேவைகளை இன்னும் நன்றாகக் கவனித்துக்கொள்வார். இயேசுவின் திட்டவட்டமான பார்வை இது. இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம் என மனித குலத்தைப் பார்த்து அவர் கூறுகிறார்.

(தானியங்கள் பெருகும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article19961695.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள் 05: பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்

 

 
shutterstock452827405

உலகின் அனைத்து மொழிகளிலும் அணிநயம் எனும் மொழிக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாகக் கவிதையிலும் இசைப் பாடல்களிலும் போதனைகளிலும் படைப்பாளியின் கற்பனை மற்றும் மனதின் விசாலத் தன்மைக்கு ஏற்ப அவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இறைமகன் இயேசுவைப் பொறுத்தவரை பல அணிகளைத் தனது போதனைகள், உவமைக் கதைகளில் பயன்படுத்தியிருக்கிறார்.

எதையும் மிகையாகக் கூறாமல் உள்ளதை உள்ளவாறு கூறும் இயல்பு நவிற்சி அணியைப் பயன்படுத்துவதில் இயேசு தலைசிறந்து விளங்கினார். அதனால்தான் இயேசுவின் பேச்சு எளிய மக்களுக்கு அத்தனை ஆதர்சமாக இருந்துள்ளது. இயேசுவின் உவமைக் கதைகள் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை உருவாக்குபவை.

இயேசுவின் புகழ்பெற்றதும் முதன்மையான போதனைகளில் ஒன்றாகவும் பைபிள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்படுவது ‘மலைப் பிரசங்கம்’. இயேசுவின் 12 முதன்மைச் சீடர்களில் ஒருவரான மத்தேயு எழுதிய நற்செய்தி புத்தகத்தில் அதிகாரம் 5 முதல் 7 வரையில் இயேசுவின் ‘மலைப் பிரசங்கம்’ இடம்பெற்றுள்ளது. பல்வேறு கிறிஸ்தவ மதப்பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடவுளாகிய யகோவா அளித்த பத்துக் கட்டளைகளுக்கு இயேசு அளித்த விரிவான விளக்கமாக அவரது மலைப் பிரசங்கத்தைக் கருதுகிறார்கள். இதனால் கிறிஸ்தவத்தின் அடிப்படையான ஆன்மிக நம்பிக்கைகளை இயேசுவின் மலைப் பிரசங்கம் பெற்றிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

 

குன்றின் மீது அமர்ந்த நாயகன்

இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது, மலைக்குன்றின்மேல் ஏறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து சீடர்கள் அவர் அருகில் வந்து அமர்ந்தனர். இப்போது, பாறை இடுக்குகளிலிருந்து புறப்பட்டுவரும் நீரூற்றைப் போல அவர் போதனைகளைப் பொழியத் தொடங்கினார்.

“ஆன்மிக விஷயங்களில் பசியோடு இருக்கிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது. துக்கப்படுகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள், அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும். நீதியின் மேல் பசி,தாகமுள்ளவர்கள் மகிழ்ச்சியானவர்கள்; அவர்களுக்கு நீதி கிடைக்கும். இரக்கம் காட்டுகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள், ஏனென்றால், அவர்களுக்கு இரக்கம் கிடைக்கும். சமாதானத்தை விரும்புகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள் ஏனென்றால், அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள். நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.

நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பு அதன் சுவையை இழந்தால், அதற்கு எப்படி மீண்டும் சுவை சேர்க்க முடியும்? வீட்டுக்கு வெளியே கொட்டப்பட்டு, மனிதர்களால் மிதிக்கப்படுமே தவிர வேறு எதற்கும் அது உதவாது. நீங்கள் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கிற நகரம் மறைந்திருக்க முடியாது.

மக்கள் விளக்கைக் கொளுத்தி அதைக் கூடையால் மூடி வைக்க மாட்டார்கள், விளக்குத்தண்டின் மேல்தான் வைப்பார்கள்; அப்போது, வீட்டிலிருக்கிற எல்லாருக்கும் அது வெளிச்சம் தரும். அதைப் போலவே, உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள், அப்போது, உங்களுடைய நல்ல செயல்களைக் கண்டு, பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.”

 

கொலையும் துரோகமும்

“கொலை செய்யக் கூடாது. கொலை செய்கிற எவனும் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். தந்தையின் ஆலயத்துக்கு வந்து அங்கே உங்கள் நன்றியைப் பலியாகச் செலுத்த வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மேல் ஏதாவது மனவருத்தம் இருப்பது நினைவுக்கு வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்துக்கு முன்னால் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

உங்கள்மேல் ஒருவன் வழக்கு போட்டால், நீதிமன்றத்துக்குப் போகும் வழியிலேயே அவனோடு சீக்கிரமாகச் சமாதானம் செய்துகொள்ளுங்கள்; இல்லையென்றால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான், நீதிபதி உங்களைக் காவலாளியிடம் ஒப்படைப்பார், பின்பு நீங்கள் சிறையில் தள்ளப்படுவீர்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அங்கிருந்து வரும்போது சல்லிக்காசுகூட உங்கள் கையில் மிஞ்சாது.

உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணை இச்சை உணர்வோடு பார்ப்பவன் அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான்.

நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாம். உங்கள் தலையில் இருக்கிற ஒரு முடியைக்கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ முடியாது. நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும். இதற்கு மிஞ்சிச் சொல்லப்படும் எதுவும் பொல்லாதவனிடமிருந்தே வருகிறது.”

 

பழிக்குப் பழி தீர்வல்ல

“‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் நான் சொல்கிறேன், அக்கிரமக்காரனோடு சண்டைக்கு நிற்காதீர்கள்; யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டுங்கள். ஒருவன் உங்கள்மேல் வழக்கு போட்டு உங்கள் உள்ளங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், உங்கள் மேலங்கியையும் அவனுக்குக் கொடுத்துவிடுங்கள். அதிகாரத்தில் இருக்கிற ஒருவர் ஏதோவொரு வேலைக்காக ஒரு மைல் தூரம் வரச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்தினால், அவருடன் இரண்டு மைல் தூரம் போங்கள்.

உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க வருகிறவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளாதீர்கள். எதிரியை வெறுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது, உங்களுடைய பரலோகத் தந்தைக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள். ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்கவைக்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழையைப் பெய்ய வைக்கிறார்.

உங்கள்மேல் அன்பு காட்டுகிறவர்களிடம் மட்டுமே நீங்கள் அன்பு காட்டினால், அதனால் என்ன பயன்? வரி வசூலிப்பவர்களும் அப்படித்தானே செய்கிறார்கள்? உங்கள் சகோதரர்களுக்கு மட்டுமே வாழ்த்துச் சொன்னால் அதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? உலக மக்களும் அப்படித்தானே செய்கிறார்கள்? அதனால், உங்கள் பரலோகத் தந்தை பரிபூரணராக இருப்பது போலவே நீங்களும் பரிபூரணராக இருக்க வேண்டும்” என்று நீண்ட போதனைகளைப் பொழிந்தார்.

(உவமைகள் பெருகும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article20003847.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள் 06: பாறையின் மீது வீட்டைக் கட்டியவன்

 
16chsrschrist11

கரங்களில் இருக்கிற மக்களுக்கு மட்டும் இயேசு வழிகாட்டவில்லை. கிராமம் கிராமாகப் பலநூறு கிலோமீட்டர் நடந்து சென்று போதனை செய்தார். தன் போதனையைக் கேட்டு, அதை ஏற்றுக்கொண்ட அனைவரையுமே தனது வழியைப் பின்பற்றும் சீடர்கள் என்று அடையாளப்படுத்தினார். தன்னைப் பின்தொடர்ந்த 12 சீடர்களைப் பார்த்து “ நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீடர்களாக்கி, பரலோகத் தந்தையின் பெயராலும், அவருடைய மகனின் பெயராலும், அவருடைய சக்தியின் பெயராலும் திருமுழுக்கு கொடுத்து, அவர்களது பாவங்களைக் கழுவி, புதிய மனிதர்களாக்குங்கள்.

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். இதோ, இந்த சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரையிலும் எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். அதனால்தான் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை ‘சீடத்துவ வாழ்வு’ என்று கூறுகிறார்கள்.

 

அன்பே வெற்றிக்கான ஆணிவேர்

சரி, இயேசு குறிப்பிடும் சீடத்துவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? விவிலியத்தின் கொரிந்தியர் புத்தகம் 1:13-ல் எழுதப்பட்டுள்ள வசனம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ‘அன்பானது பொறுமையும் கருணையும் கொண்டது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது, தீங்கைக் கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல் உண்மையைக் குறித்து சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்’ என்பது கொரிந்தியர் வசனம்.

தனது மலைப் பிரசங்கத்தில் இயேசு விரிவாக எடுத்துக்கூறிய வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிற யாரும் சிறந்த சீடத்துவ வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு சக மனிதர்கள் மீது நிபந்தனையற்ற அன்பைக் காட்டுவதன் மூலம் முன்மாதிரியாக நம்மை மாற்றிக்கொள்வது மிக முக்கியமானது. நாம் எவ்வளவு தவறுகள் செய்தாலும் பரலோகத் தந்தையாகிய யகோவா பொறுமையாக இருக்கிறார். மீண்டும் மீண்டும் நமக்குக் கருணை காட்டுகிறார்.

அதேபோல் நாமும் சக மனிதர்களுக்குக் கருணை காட்ட வேண்டும். அவர்கள் தவறு செய்யும்போது, யோசிக்காமல் பேசும்போது, கோபப்படும்போது நாம் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும். அதற்கு அன்பு தேவை, அப்போதுதான் சிறந்த சீடராக விளங்க முடியும் என்று இயேசு தன் சீடர்களிடம் அறிவுறுத்தினார்.

 

நாம் நீதிபதிகள் அல்ல

தன்னை நாடிவந்து புதுவாழ்க்கை வாழ வழிகேட்டவர்களிடமும் இதுபற்றி இயேசு விளக்கினார். “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள். மற்றவர்களை நீங்கள் எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்.

உங்கள் கண்ணில் இருக்கிற உத்திரத்தைக் கவனிக்காமல் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை ஏன் பார்க்கிறீர்கள்? உங்கள் கண்ணில் மரக்கட்டை இருக்கும்போது நீங்கள் உங்கள் சகோதரனிடம், ‘உன் கண்ணில் இருக்கிற தூசியை எடுக்கட்டுமா’ என்று எப்படிக் கேட்க முடியும்? முதலில் உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள், அப்போதுதான் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.” என்று கூறி நாம் நீதிபதிகள்போல் யாரையும் தீர்ப்பிடத் தேவையில்லை என்று கூறினார்.

 

தட்டுங்கள்… கேளுங்கள்

அன்பை மட்டுமே பொழிந்து மற்றவர்களைத் தீர்ப்பிடாமல் வாழ்ந்தால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடுமா என்றால், அவை மட்டுமே போதாது என்கிறார் இயேசு. ‘தேடல்’ வாழ்க்கையின் மிக முக்கியச் செயல்பாடு என்பதையும் அவர் எடுத்துக்கூறத் தவறவில்லை.

“கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான், தேடுகிற ஒவ்வொருவனும் கண்டுபிடிக்கிறான், தட்டுகிற ஒவ்வொருவனுக்கும் திறக்கப்படும்.

உங்களில் யாராவது தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பீர்களா, மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தந்தை தன்னிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள்.” என்ற இயேசு, சிறந்த சீடத்துவ வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களைப் பாறையின் மீது வீட்டைக் கட்டிய புத்திமான் என்று கூறினார்.

 

பாறையின் மீது வீட்டைக் கட்டியவன்

“மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். பெருமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கரக் காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை.

ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் இடப்பட்டிருந்தது. அதேநேரம், நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டும் அவற்றின்படி நடக்காதவன் மணல்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாத மனுஷனைப் போல் இருக்கிறான். பெருமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கரக் காற்றடித்து, அந்த வீட்டைத் தாக்கியபோது, அது இடிந்து தரைமட்டமானது” என்று சொன்னார்.

சிறந்த சீடத்துவ வாழ்வு குறித்து இயேசு இந்த விஷயங்களைச் சொல்லி முடித்தபோது, அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து அங்கே மக்கள் அசந்துபோனார்கள். ஏனென்றால், அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கனமான விஷயங்களையும் மக்களின் மொழியில் அவர் பேசியதுதான்.

http://tamil.thehindu.com/society/spirituality/article20457443.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள் 07: மரம் அதன் கனியால் அறியப்படும்

jesus%20walking%20on%20water

இன்றைய இஸ்ரேல் தேசம் இயேசுவின் காலத்தில் பல்வேறு பகுதிகளாக இருந்தது. அவற்றில் யூதேயா, கலிலேயா ஆகியவை முக்கியமான பகுதிகள். யூதேயாவின் முக்கியப் பட்டணம் எருசலேம். கலிலேயாவின் முக்கியப் பட்டணம் கப்பர்நகூம். தனது முப்பதாம் வயதில் தொடங்கி, கொல்லப்படும்வரை மூன்று ஆண்டுகள் இறை ஊழியத்தில் ஈடுபட்ட இயேசு, முதல் இரண்டு ஆண்டுகளை கலிலேயாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகமாகச் செலவிட்டார் என்பதை விவிலியத்தின் நற்செய்தி புத்தகங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. கலிலேயாவின் முக்கிய அடையாளமாக அதன் கடல் இருந்தது. அந்தக் கடலில் அடிக்கடி பயணித்த இயேசு, அது புயல், மழையால் கொந்தளித்தபோது அதை அடக்கினார், அதன்மீது நடந்துவந்தார். இயேசுவைத் தேடிவந்து அதன் கடற்கரையில் அடிக்கடி குழுமிய மக்களுக்குப் படகில் இருந்தபடி போதித்தார். அவரைப் பின்பற்றிய அவரின் தொடக்ககால சீடர்கள் கலியேயா கடலில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்தவர்கள்.

 

இயேசுவின் பட்டணம்

அப்படிப்பட்ட கலிலேயா கடலின் கிழக்குக் கரையில் அமைந்திருந்த கப்பர்நகூமை இயேசுவின் பட்டணம் என்கிறது விவிலியம். ஆம்! இயேசுவின் பட்டணத்துக்கு அருகில்தான் அவர் பிறந்து வளர்ந்த நாசரேத் என்ற சிற்றூர் இருக்கிறது. இயேசு, தனது அன்னையின் வேண்டுகோளை ஏற்று, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய கானா என்ற ஊர் கப்பர்நகூமுக்கு மிக அருகில் உள்ளது. அதன் அருகிலுள்ள நாயீனில்தான் இயேசு ஒரு விதவையின் இறந்த மகனுக்கு உயிர்கொடுத்தார். வீட்டை மறந்து, தன் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த ஐயாயிரம் மக்களுக்கு அவர் உணவளித்த இடமும் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவனுக்கு இயேசு கண்ணொளி தந்த இடமுமான பெத்சாயிதா கப்பர்நகூம் அருகிலேயே உள்ளது. இயேசுவின் போதனைகளுக்கும் அருள் அடையாளங்களாக அவர் செய்த அற்புதங்களுக்கும் மையமாக கலிலேயா கடற்கரைப் பகுதியும் கப்பர்நகூமும் விளங்கின.

 

சொந்த ஊரில் இகழ்ச்சி

அறிஞர்கள், கலைஞர்கள், ஞானிகள், இறைத்தூதர்கள் என யாராக இருப்பினும் சொந்த ஊரில் அவர்கள் சந்தித்த எதிர்ப்புகளும், இன்னல்களும் ஏராளம். சொந்த ஊரில் அங்கீகாரத்துக்குப் பதிலாக தூற்றல்களையே அதிகமாக எதிர்கொண்டார்கள். இயேசுவுக்கு இவை மிக அதிகமாகவே நடந்தன.

ஒருமுறை இயேசு, கலிலேயா கடலின் மேற்குக் கரையில் போதித்துவிட்டுப் படகில் ஏறி, கடலைக் கடந்து தன்னுடைய சொந்தப் பட்டணமான கப்பர்நகூமை அடைந்தார். அப்போது சிலர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனைப் படுக்கையோடு அவரிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “மகனே துணிவுடன் இரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன” என்று கூறினார். அப்போது இயேசுவின் மீது மிகுந்த கோபத்துடன் இருந்த உள்ளூர் சமய அறிஞர்கள் சிலர், “இவர் தெய்வ நிந்தனை செய்கிறார்”என்று முணுமுணுத்தனர்.

இயேசு அவர்களுடைய எண்ணங்களைப் புரிந்துகொண்டு, “உங்கள் இதயத்தில் ஏன் பொல்லாதவற்றை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று சொல்வது எளிதா, ‘எழுந்து நட’ என்று சொல்வது எளிதா? பூமியில் பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் மனித குமாரனுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக” என்று கூறிவிட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ” என்று சொன்னார். அவனும் எழுந்து தன்னுடைய வீட்டுக்குப் போனான். இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் பயந்துபோனார்கள்; இப்படிப்பட்ட அதிகாரத்தை இயேசுவுக்கு கொடுத்த கடவுளை அவர்கள் மகிமைப்படுத்தினார்கள்.

 

மருத்துவரின் தேவை

பிறகு இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருந்தபோது வரி வசூலிக்கும் அலுவலகத்தில் மத்தேயு என்ற ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு கூறியதும் உடனே மத்தேயு எழுந்து அவரைப் பின்பற்றிப் போனார். பின்பு, மத்தேயுவின் வீட்டில் இயேசு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது வரி வசூலிப்பவர்கள், பாவிகள் எனப் பலரும் அங்கே வந்து இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த சமய அதிகாரம் கொண்ட பரிசேயர்கள், இயேசுவின் சீடர்களைப் பார்த்து “உங்கள் போதகர் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறார்?” என்று சத்தமாகக் கேட்டார்கள். அது அவருடைய காதில் விழுந்தபோது, “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை. அதனால், ‘பலியை அல்ல; இரக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன்’என்று சொல்லப்பட்டதன் அர்த்தத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள். நீதிமான்களை அல்ல: பாவிகளைத்தான் நான் மீட்க வந்தேன்” என்று சொன்னார்.

 

நல்ல கனி தராத மரம்

இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார், எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்கினார். பெரும் திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய மனம் உருகியது. மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அதிகார வர்க்கத்தால் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள். அவர்கள் போலி இறைவாக்கினரிடமும் பணம் பிடுங்கும் சமயவாதிகளிடமும் மாட்டிக்கொண்டு தங்கள் துன்பங்கள் தீர்ந்துவிடாதா என்று ஏங்கினார்கள். அவர்களிடம் ‘போலிகள்’ குறித்த விழிப்புணர்வை இயேசு உருவாக்கினார்.

“ போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். ஒவ்வொரு மரமும் அதனதன் கனியால் அறியப்படும். போலி இறைவாக்கினரை அவர்களின் செயல்களைக்கொண்டே அறிந்துகொள்வீர்கள். நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். மரம் அதன் கனியால் அறியப்படும். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியாது. அதைப் போல, செயல்களைக்கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அதிகாரத் தொனியுடன் கற்பித்தார் இறைமகன்.

http://tamil.thehindu.com/society/spirituality/article20643853.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள் 08: கடவுளின் அரசுக்குள் யார் நுழைவார்கள்?

shutterstock268971953

கலிலேயாவிலிருந்து புறப்பட்டு, யோர்தான் நதியைக் கடந்து யூதேயாவின் எல்லைப் பகுதிகளுக்குப் போய் மக்கள் மத்தியில் போதனை செய்தார் இயேசு. அவரது புகழ் ஏற்கெனவே பரவியிருந்ததால் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். தன்னை நாடிவந்த அனைவரையும் அவர் குணமாக்கினார். இயேசுவின் பின்னால் திரளான மக்கள் செல்வதைக் கண்ட யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பரிசேயர்கள், மக்களின் முன்பாக இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டே அவரைத் தவறானவர் என நிறுவ முயன்றுவந்தனர்.

ஒரு கிராமத்தில் இயேசு மக்கள் மத்தியில் இருந்தபோது பரிசேயர்கள் அவரிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் இயேசுவிடம், “ தன் மனைவியை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒருவர் விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “கடவுள், தொடக்கத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? அதன் காரணமாகவே, மனிதன் தன்னுடைய தாய், தந்தையை விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே உடலாக இருப்பார்கள் என்று ‘அவர்’ சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? அதன்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள். அதனால், கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருப்பாராக” என்று கூறினார்.

 

இயேசு கூறிய பதில்

உடனே அந்தப் பரிசேயர், “ அப்படியானால், விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஏன் கூறினார்?” என்று கேட்டு இயேசுவை மடக்கினார். அதற்கு இயேசு, “உங்களுடைய இதயம் இறுகிப்போயிருந்த காரணத்தால்தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய அவர் அனுமதித்தார். ஆனால், தொடக்கத்திலிருந்து அவ்வாறு இல்லை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன், முறைகேடான உறவுகொள்கிறான்” என்று சொன்னார். இயேசு இப்படிக் கூறியதும் பதில் ஏதும் கூறாமல், அவரைத் தொடர்ந்து சோதிக்க முடியாமல் பரிசேயர்கள் கிளம்பிச் சென்றனர்.

பரிசேயர்கள் நகர்ந்துசென்றதும் சீடர்கள் இயேசுவிடம், “திருமண பந்தம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்று கூறினார்கள். அதற்கு அவர், “ திருமணம் செய்யாமல் இருக்கும் வரம் பெற்றவர்களைத் தவிர வேறு யாராலும் நீங்கள் கூறுவதுபோல் நடக்க முடியாது. சிலர் பிறவிக் குறைபாட்டால் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்; வேறு சிலர் மனிதர்களால் அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; இன்னும் சிலர் பரலோக அரசாங்கத்துக்காகத் தங்களையே அர்ப்பணித்து, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்” எனத் துறவறம் குறித்துத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

 

பரலோக சாம்ராஜ்யம் குழந்தைகளுக்காக

இயேசுவிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக சின்னப்பிள்ளைகளைக் கிராமத்தார் அழைத்துவந்தனர். ஆனால், இயேசுவின் சீடர்களோ சிறார்களை இயேசுவின் அருகில் விடாமல் தடுத்தனர். எதற்காகப் பிள்ளைகளை இங்கே கூட்டிக்கொண்டு வந்தீர்கள் என்று கடிந்துகொண்டனர். இதனால் அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் நெருக்கடியும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைக் கண்ட இயேசு தன் சீடர்களை நோக்கி, “சின்னப் பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள்; இப்படிப்பட்டவர்களுக்கே பரலோக அரசாங்கம் சொந்தமாகும்” என்று கூறினார். அதன் பின், அந்தச் சிறார்களை வாஞ்சையுடன் தன் அருகில் அழைத்து அமர்த்திக்கொண்டார். ஒரு சிறுகுழந்தையைத் தூக்கி அணைத்துக்கொண்டார், தன் கரங்களால் அங்கிருந்த சிறார்கள் அனைவரையும் ஆசீர்வதித்த பின்னரே, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அப்போது அவ்வூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இயேசுவிடம் ஓடிவந்து, “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அவர், “முடிவில்லாத வாழ்வைப் பெற விரும்பினால், கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடி” என்று அவனிடம் கூறினார். “எந்தக் கட்டளைகளை?” என்று அவன் ஆவலுடன் கேட்டான். இயேசு அவனிடம், “கொலை செய்யக் கூடாது, மனைவிக்குத் துரோகம் செய்யக் கூடாது, திருடக் கூடாது, பொய்சாட்சி சொல்லக் கூடாது, உன் தாய், தந்தைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும், உன்னை நீ நேசிப்பதுபோல மற்றவர்களை நேசி ஆகிய கட்டளைகளை” என்று கூறினார். அதற்கு அந்த இளைஞன், “இவை அனைத்தையும் நான் ஏற்கெனவே கடைப்பிடித்து வருகிறேன்; என்னிடம் இன்னும் என்ன குறை இருக்கிறது?” என்று இயேசுவை நோக்கி தன் கரங்களைக் குவித்துக் கேட்டான். அதற்கு இயேசு, “ நீ குறையில்லாதவனாக இருக்க விரும்பினால், போய் உன் சொத்துகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா, அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்” என்று கூறினார். இதைக் கேட்டு அந்த இளைஞன் துக்கத்தோடு திரும்பிப் போனான். ஏனென்றால், அவனிடம் நிறைய சொத்துகள் இருந்தன. இயேசு தன் சீடர்களிடம் திரும்பி, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்” என்றார்.

 

யாருக்கு மீட்சி

அவருடைய சீடர்கள் இதைக் கேட்டு மிகவும் ஆச்சரியத்தோடு, “அப்படியானால், யார்தான் மீட்பைப் பெற முடியும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுடைய முகத்தைப் பார்த்து, “மனிதர்களால் இது முடியாது, ஆனால் கடவுளால் எல்லாமே முடியும்” என்று சொன்னார்.

அப்போது அவரின் சீடரான பேதுரு, “இதோ நாங்கள் அனைவரும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களைப் பின்பற்றி வந்திருக்கிறோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?”என்று கேட்டார். அதற்கு இயேசு மறுமொழியாக, “ உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என் பெயருக்காக வீடுகளையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ அப்பாவையோ அம்மாவையோ பிள்ளைகளையோ நிலங்களையோ தியாகம் செய்கிற எல்லாருக்கும் அதைவிட நூறு மடங்கு அதிகமாகக் கிடைக்கும், முடிவில்லாத வாழ்வும் கிடைக்கும். ஆனால், முந்தியவர்களில் பலர் பிந்தியவர்களாகவும், பிந்தியவர்களில் பலர் முந்தியவர்களாகவும் ஆவார்கள்.” என்றார்.

(சாம்ராஜ்யம் விரியும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article21085598.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: இரக்கத்தையே நான் விரும்புகிறேன்

 

 
07chsrschrist11

உலகைப் படைத்த கடவுளாகிய யகோவா தனது பூமியில் அனைத்து படைப்புகளையும் உருவாக்க ஆறு தினங்கள் எடுத்துக்கொண்டார். ஏழாம் நாள், அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார் என விவிலியம் கூறுகிறது. அந்த நாளைப் புனித நாளாக யூதர்கள் பின்பற்றத் தொடங்கினர். ஆறுநாட்கள் உழைத்த அவர்கள் ஏழாம் நாளான ஓய்வுநாளில் எந்த வேலையிலும் ஈடுபடாமல் கடவுளை நினைவுகூர்ந்தனர். கிறிஸ்தவ சமய மரபில் ஞாயிறு வழிபாடு உருவானதன் அடிப்படை இதுதான். ஓய்வுநாளின் புனிதத்தை இயேசுவும் அவரது சீடர்களும் மீறியதாக பரிசேயர்கள் குற்றம் சாட்டினார்கள். இயேசு வெட்கித் தலைகுனியும்படியான விளக்கத்தை அவர்களுக்குப் பதிலாகத் தந்தார்.

 

பசியும் பலியும்

யூதேயாவில் அவர் நற்செய்தி ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஓர் ஓய்வுநாளில் இயேசு தன்னுடைய சீடர்களோடு வயல் வழியாக நடந்துபோனார். அப்போது, அவருடைய சீடர்களுக்குப் பசியெடுத்தது. அதனால் வயல்களில் முற்றிய கதிர்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தனர். அவர்கள் மீது குற்றம் காண, இயேசுவையும் சீடர்களையும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த பரிசேயர்கள் அதைப் பார்த்தனர். பதற்றம் அடைந்தவர்களைப்போல் இயேசுவின் அருகில் வந்து குரலை உயர்த்தி, “ஓய்வுநாளில் செய்யக்கூடாத காரியத்தை உமது சீடர்கள் செய்கிறார்களே!? நீர் கண்டிக்க மாட்டீரா?” என்று அவரிடம் கேட்டார்கள்.

அதற்கு இயேசு, “முன்னோராகிய தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் பசியெடுத்தபோது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் வாசிக்கவில்லையா? அவர் கடவுளுடைய வீட்டுக்குள் போய், குருமார்களைத் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளை தன் ஆட்களோடு சேர்ந்து சாப்பிட்டாரே..

அதுமட்டுமல்ல, ஆலயத்தில் இருக்கிற குருமார்கள் ஓய்வுநாட்களில் வேலை செய்தாலும் குற்றமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைப் பற்றித் திருச்சட்டத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிட மேலானவர் இங்கே இருக்கிறார். ‘விலங்குகளின் ரத்த பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகிறேன் என்று பரலோகத் தந்தையாகிய அவர் கூறியிருப்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், குற்றமற்றவர்களை இப்படி கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள்.

ஏனென்றால், மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கு எஜமானாக இருக்கிறார்” என்று கூறினார். இதைக் கேட்டு எதுவும் பேசமுடியாதவர்களாக பரிசேயர்கள் குமைந்தபடி அங்கிருந்து அகன்று அவரையும் அவரது சீடர்களையும் கண்காணித்தபடி இருந்தனர்.

 

ஓய்வு நாளில் அற்புதம்

பின்பு, இயேசு அங்கிருந்து புறப்பட்டு ஜெபக்கூடம் ஒன்றுக்குச் சென்றார். அங்கே சூம்பிய கையுடைய ஒருவன் இருந்தான். அவன் குணம்பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற தவிப்புடன் இயேசுவை நெருங்கினான். அவனது தவிப்பை இயேசு உணர்ந்தார். அப்போது மக்கள் கூட்டத்துடன் கலந்திருந்த பரிசேயர்களில் சிலர், இயேசுவின் மேல் குற்றம் சுமத்த இது நல்ல சந்தர்ப்பம் என்ற எண்ணத்தோடு, “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா? ”என்று அவர் குணமாக்கும் முன்பே கேட்டார்கள்.

அதற்கு அவர், “உங்களில் யாருக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டால், அதை வெளியே தூக்கிவிடாமல் இருப்பீர்களா? அப்படியானால், ஆட்டைவிட மனிதன் எவ்வளவு மதிப்புள்ளவன். அதனால், ஓய்வுநாளில் நல்ல காரியத்தைச் செய்வது சரிதான்” என்று சொன்னார். பின்பு, சூம்பிய கையுடையவனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” என்றார். அவன் நீட்டியவுடன், அந்தக் கை குணமாகி, அவனுடைய இன்னொரு கையைப் போல் ஆனது. பரிசேயர்கள் இந்த அற்புதத்தைக் கண்டு மனம் புழுங்கி வெளியேறினார்கள்.

இனியும் இவரை விட்டு வைக்கக்கூடாது என்று இயேசுக் கொலை செய்யச் சதித்திட்டம் போட்டார்கள். இதைத் தெரிந்துகொண்டு அந்த இடத்தைவிட்டு இயேசு தன் சீடர்களுடன் கிளம்பிப் போனார். நோய்வாய்ப்பட்டிருந்த நிறைய பேர் அவர் பின்னால் போனார்கள். அவர்கள் எல்லோரையும் இயேசு குணமாக்கினார்.

 

மீண்டும் குற்றச்சாட்டு

இன்னொருமுறை பரிசேயர்கள் சிலரும் நியாயப் பிரமாணப் போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்திருந்த அவர்கள், இயேசுவிடம், “நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீடர்கள் ஏன் பின்பற்றுவதில்லை; உணவு உண்பதற்கு முன் உமது சீடர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களிடம் “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படி எதிர்பார்க்கும் நீங்கள், ஏன் தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். உங்களைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:, ‘இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை. அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!’ ”. இயேசுவின் இந்தக் கடும் விமர்சனத்தை பொறுக்கமுடியாமல் பரிசேயர்களும் நியாயப்பிரமாண போதகர்களும் எருசலேம் நகரத்துக்குத் திரும்பிச் சென்றனர்.

 

சொற்கள் உருவாக்கும் மாசு

அவர்கள் சென்றதும் இயேசு மக்களைத் தன்னருகில் அழைத்து, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். ஒருவனது வாய்க்குள்ளே போகிற உணவு, அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார். பின்னர், சீடர்கள் இயேசுவிடம் வந்து, ‘நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாகியிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா’ என்று கேட்டார்கள்.

அதற்கு இயேசு, “பரலோகத்தில் இருக்கும் நம் தந்தையால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். பார்வையற்றவர்கள் பார்வையற்றவர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு பார்வையற்றவன் மற்றொரு பார்வையற்றவனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார். அப்பொழுது பேதுரு, “வார்த்தைகள் குறித்து நீர் மக்களுக்குச் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்”என்று கேட்டார்.

அதற்கு இயேசு,“புரிந்துகொள்வதில் இன்னமுமா சிரமம்? ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு, அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலைவிட்டு வெளியேறுகிறது. ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல், துன்புறுத்துதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article21282133.ece

Link to comment
Share on other sites

On 12.1.2018 at 7:40 PM, Kavallur Kanmani said:

தொடருங்கள் நவீனன். பபிர்வுக்கு நன்றி

 

 

கிறிஸ்துவின் தானியங்கள்: கடைசியில் சென்று அமருங்கள்

 

 
14chsrschrist%202

இயேசுவின் காலத்தில், யூதர்கள் பெரும்பான்மையாக வசித்துவந்த யூதேயா பகுதி, ரோமாபுரிப் பேரரசுக்குட்பட்ட ஒரு மாநிலமாக இருந்தது. பொதுவாழ்க்கையில் நீதிப் பரிபாலனம் செய்யும் உரிமையை, ரோமாபுரி அரசு யூதர்களுக்கே வழங்கியிருந்தது. அவ்வகையில் ஒவ்வொரு பெரிய ஊரிலும் யூதர்களால் நடத்தப்படும் உள்ளூர் நீதிமன்றங்கள் செயல்பட்டுவந்தன. ஆனால், பெரிய வழக்குகள் யூதேயாவின் தலைநகராக இருந்த எருசலேமின் தலைமை நியாயச் சங்கத்துக்கு கொண்டுவரப்பட்டன. இந்த நியாயச் சங்கத்தை யூதர்களின் உச்ச நீதிமன்றம் என்கிறார்கள் பைபிள் ஆராய்ச்சியாளர்கள். வழக்குகளைத் தீர்ப்பது மட்டுமல்ல; யூதத் திருசட்டத்துக்கு விளக்கம் தருவதிலும் தலைமை நியாயச் சங்கத்தின் முடிவே இறுதியானது. இதனால் யூதர்கள் தலைமை நியாயச் சங்கத்தின் அதிகாரத்துக்கு ஒருமனதாகக் கட்டுப்பட்டார்கள்.

 

இயேசுவை எதிரியாகப் பார்த்தவர்கள்

எருசலேமில் இருந்த யூத தேவாலயத்தின் மன்றத்தில் தலைமை நியாயசங்கம் செயல்பட்டுவந்தது. 71 உறுப்பினர்களைக் கொண்ட நியாயச் சங்கத்துக்கு, யூத மதத்தின் தலைமைக் குருவே தலைவராக இருந்தார். மதமும் ஆட்சிநிர்வாகமும் கலந்திருந்த நியாயச் சங்கத்தில் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தைத் தங்கள் வசம் வைத்திருந்த சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்கள் குருமார் வகுப்பைச் சேர்ந்த பிரபுக்களாகவும், உயர்குடியினராகவும் இருந்தனர். இவர்கள் இயேசுவின் புரட்சிகரமான போதனைகளை ஏற்கவில்லை. அவரை எதிரியாகப் பார்த்தனர். மற்றவர்களுக்கு முன்பாகத் தங்களை நீதிமான்களாகக் காட்டிக்கொள்ள பரிசேயர்கள் முயற்சி செய்தார்கள். சமூக அடுக்கில் முதன்மையான நிலையையும் பெரிய பட்டங்களையும் விரும்பினார்கள்.

ஆனால், இயேசு அவர்களைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “ மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எல்லாக் காரியங்களையும் செய்கிறார்கள்; தாங்கள் அணியும் வேதாகம தாயத்துகளை அகலமாக்குகிறார்கள்; தங்கள் அங்கிகளின் ஓரங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபக்கூடங்களில் முன்வரிசை இருக்கைகளையுமே விரும்புகிறார்கள்; அதோடு, சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும், தங்களை ‘ரப்பீ’ என்று அழைக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்கள்.” என்று பரிசேயர்களின் போலித்தனங்களைப் பட்டியலிட்டு விமர்சித்தார்.

யூத மதப் பழமைவாதிகளாக இருந்த இவர்களிடம் தாழ்மை என்பது மருந்துக்குக் கூட காணப்படவில்லை. இவர்களுக்கு நேர்மாறாக இயேசு போதித்த வாழ்க்கை நெறிகளும் செயல்களின் வழியே அவர் காட்டிய முன்மாதிரிகளும் அவரைப் பரிபூரண ஞானகுருவாக சாமானிய மக்கள் ஏற்றுக்கொள்ள காரணமாக அமைந்தன. ஒருமுறை அவரை “ நல்ல போதகரே” என்று ஒருவர் அழைத்தார். அப்போது இயேசு, “ என்னை ஏன் நல்லவன் என்று அழைக்கிறாய்; கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் என ஒருவரும் இங்கு இல்லை” என்று சொன்னார். மற்றொரு தருணத்தில், தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி மனத்தாழ்மையாய் இருக்கக் கற்றுக்கொடுத்தார்.

 

எண்ணங்களைப் படிப்பவர்

பரிசேயர்கள், சதுசேயர்களின் வாழ்க்கை முறையை இயேசு கடுமையாகச் சாடிய நிலையில் அவர்களில் சிலர், இயேசுவின் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை உணர்ந்து, அவரை மதிக்கத் தொடங்கினர். இன்னும் சிலர் இயேசுவை மீட்பராகவும் ஏற்றுக்கொண்டர். இயேசு தனது வீட்டில் அடிவைத்து, ஒருவேளை உணவு அருந்தினால் தனது வீட்டுக்கு மீட்பு உண்டாகும் என நம்பினார்கள். இப்படி மனம் திருந்திய பலர் இயேசுவை தங்கள் வீட்டுக்கு வருகைதருமாறு அழைத்தனர்.

இவ்வாறு ஓய்வுநாள் ஒன்றில் மனந்திருந்திய பரிசேயர்களின் தலைவர் ஒருவருடைய வீட்டுக்கு விருந்து சாப்பிட இயேசு போனார். அங்கிருந்தவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். நீர்க்கோவை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இயேசுவுக்கு முன்னால் போய் நின்றார். அவர் எதற்காக தன்முன்னால் வந்து நிற்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட இயேசு அவரை அந்தக் கணமே குணமாக்கியதாகக் கூறப்படுகிறது.

 

பந்தியில் முதன்மையான இடம்

அந்த பரிசேயர் தலைவர் வீட்டின் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அடித்துப் பிடித்து மிக முக்கியமான இடங்களைத் தேர்ந்தெடுப்பதை அவர் கவனித்தபோது இயேசு அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்; “யாராவது உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்தால், மிக முக்கியமான இடத்தில் போய் உட்காராதீர்கள். ஏனென்றால், உங்களைவிட முக்கியமான நபரும் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கலாம்.

உங்களையும் அவரையும் அழைத்தவர் உங்களிடம் வந்து, ‘இவருக்கு இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள்’ என்று சொல்வார். அப்போது, நீங்கள் அவமானத்தோடு கடைசி இடத்துக்கு எழுந்து போக வேண்டியிருக்கும். அதனால் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் விருந்தில், கடைசி இடத்தில் போய் உட்காருங்கள்; உங்களை அழைத்தவர் வந்து, ‘நண்பரே, முன்னால் வந்து உட்காருங்கள்’ என்று சொல்வார். அப்போது, மற்ற விருந்தினர்கள்முன் உங்களுக்குக் கவுரவமாக இருக்கும். தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்றார்.

பின்பு, தன்னை விருந்துக்கு அழைத்தவரிடம், “ நீங்கள் மதிய உணவுக்கோ அல்லது இரவு உணவுக்கோ விருந்து கொடுக்கும்போது, உங்கள் நண்பர்களையோ சகோதரர்களையோ சொந்தக்காரர்களையோ அக்கம்பக்கத்தில் இருக்கிற பணக்காரர்களையோ அழைக்காதீர்கள். அப்படி அழைத்தால் ஒருவேளை, பதிலுக்கு அவர்களும் உங்களை எப்போதாவது அழைக்கலாம். அது உங்களுக்குக் கைமாறு செய்வதுபோல் ஆகிவிடும். அதனால் விருந்து கொடுக்கும்போது, ஏழைகளையும் உடல் பலவீனமானவர்களையும் அழையுங்கள், அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது. அதற்கான கைமாறு நீதிமான்கள் உயிரோடு எழுப்பப்படும்போது உங்களுக்குக் கிடைக்கும்” என்று கூறினார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article21628159.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: உன் நம்பிக்கையோ சிறியது

 

 
Jesus

இயேசுவுக்கு யோர்தான் நதியில் திருமுழுக்குக் கொடுத்த தீர்க்கதரிசி யோவானை, கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது கொலை செய்தான். யோவானின் உடலைப்பெற்று அடக்கம் செய்த அவரது சீடர்கள், யோவான் கொல்லப்பட்ட செய்தியை இயேசுவிடம் வந்து கூறினார்கள். யோவானுக்கு நேர்ந்ததைக் கேள்வியுற்ற இயேசு மிகவும் மனம் வருந்தி, யாருமற்ற ஒரு தனியிடத்திற்குத் தன்னந்தனியே ஒரு படகில் புறப்பட்டுச் சென்றார். இயேசு, புறப்பட்டுச் சென்றதை மக்கள் கேள்விப்பட்டனர்.

எனவே, அவர்களும் தங்கள் நகரங்களை விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு சென்ற இடத்துக்கு அவர்கள் தரை வழியே சென்றனர். இயேசு அங்கு வந்து சேர்ந்தபோது, ஏராளமான மக்கள் தனக்கு முன்பாக அங்கே வந்து குழுமியிருப்பதைக் கண்டார். அவர்களுக்காக மனமிறங்கிய இயேசு, அங்கிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார்.

 

நீங்களே அவர்களுக்கு உணவளியுங்கள்

அன்று பிற்பகல், இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்து, “மனிதர்கள் யாரும் இந்த இடத்தில் வசிக்கவில்லை. இன்னும் ஒருமணி நேரத்தில் பொழுதும் சாய்ந்துவிடும். எனவே மக்களைத் திருப்பி அனுப்புங்கள். அப்பொழுதுதான் அவர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று வீடுகளை அடையமுடியும். அவர்களுக்கான உணவும் பிரச்சினையாக இருக்காது” என்று சொன்னார்கள். அதற்கு இயேசு, “ மக்களை உடனே இங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள் என நீங்கள் கூறவேண்டிய அவசியமில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்” என்று பதிலளித்தார்.

அதற்குச் சீடர்கள், “ஆனால், நம்மிடம் ஐந்து ரொட்டிகளும் இரண்டு மீன்களும் தானே உள்ளன” என்று பதில் சொன்னார்கள். உடனே இயேசு, “அந்த ரொட்டிகளையும் மீன்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார். பிறகு, அங்கிருந்த மக்களை இயேசு புல்வெளியில் அமரச் சொன்னார். ஐந்து ரொட்டிகளும் இரண்டு மீன்களும் இருந்த பரிமாறும் தட்டுக்களைக் கையிலெடுத்து உயர்த்திப் பிடித்த இயேசு, வானத்தைப் பார்த்து அந்த உணவுக்காகத் தந்தைக்கு நன்றி கூறிப் பிரார்த்தனை செய்தார். பின்னர் அந்த ரொட்டிகளில் ஒன்றை எடுத்து பகிர்ந்து உண்பதின் அடையாளமாக அதைச் சரிசமமாகப் பிய்த்துத் தட்டில் வைத்தார்.

பின்னர் அந்தத் தட்டுகளை தரையில் வைத்தபோது அவை நிறைந்திருந்தன. அங்கே நிகழ்ந்ததைக் கண்ட சீடர்கள் மக்களுக்கு பரிமாறத் தொடங்கினார்கள். மக்கள் அனைவரும் திருப்தியாக உண்டார்கள். முதியவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று அங்கே திரண்டு வந்திருந்த சுமார் ஐயாயிரம் ஆண்கள் உணவு உண்டனர். அவர்கள் உண்டு முடித்தது போகப் பரிமாறும் தட்டுகளில் மீதியிருந்த ரொட்டித் துண்டுகளை பன்னிரெண்டு கூடைகள் நிறைய சீடர்கள் சேகரித்தார்கள்.

 

பேதுருவின் நம்பிக்கை

பிறகு இயேசு தமது சீடர்களைப் படகில் ஏறச் சொன்னார். தான் பின்னர் வருவதாகக் கூறி தனக்கு முன்பு ஏரியின் மறுகரைக்குப் படகை செலுத்தும்படி கூறினார். பின்னர் வருவதாக மக்களிடம் கூறி விடை பெற்றுக்கொண்ட இயேசு, அவர்களை அனுப்பிய பின்பு ஒரு குன்றின்மீது ஏறினார். தனியே பிரார்த்தனை செய்வதற்காக இயேசு அங்கு சென்றார். அச்சமயம் சீடர்கள் புறப்பட்டுச்சென்ற படகு ஏரியில் வெகு தொலைவு சென்றிருந்தது. அப்போது ஏரியில் பலத்த சூறைக்காற்று வீசத் தொடங்கியது. இதனால் படகு அலைகளினால் கடும் தள்ளாட்டத்துக்கு உள்ளானது. படகு சென்ற திசைக்கு எதிராகக் கடும் சூறைக் காற்று வீசியதால் சீடர்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாயினர்.

அதிகாலை, மூன்று மணியிலிருந்து அதிகாலை ஆறு மணிவரை இயேசுவின் சீடர்கள் காற்றின் அலைக்கழிப்பால் படகிலேயே இருந்தனர். அப்போது இயேசு தண்ணீரின்மேல் நடந்து அவர்களிடம் வந்தார். தண்ணீரின் மேல் அவர் நடந்துவருவதைக் கண்ட சீடர்கள் மிகவும் பயந்து நடுங்கினார்கள். “அது நிச்சயமாக ஒரு ஆவிதான்” என்று அவர்கள் பயத்தில் அலறினார்கள். உடனே இயேசு அவர்களிடம், “பயப்படாதீர்கள் நான் தான். உங்கள் போதகர்தான்” என்று கூறினார். படகிலிருந்து சிறிது தூரத்தில் தண்ணீரின்மேல் இயேசுவைக் கண்டு பயம் தெளிந்த பேதுரு, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம் “வா, உன்னால் முடியும் பேதுரு” என்று கூறினார். பின்னர், பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீரின் மேல் இயேசுவை நோக்கி நடந்தார். ஆனால், தண்ணீரின்மேல் சில அடிகள் நடந்து சென்றபொழுது காற்றடிப்பதையும் அலைகள் புரள்வதையும் கண்டார். பயந்து போன பேதுரு, நீரில் மூழ்கித் தத்தளிக்க ஆரம்பித்தார். உடனே பேதுரு, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று உயிர் பயத்தில் அலறினார். உடனே இயேசு தமது கையால் பேதுருவைப் பற்றித் தூக்கினார். இயேசு அவரிடம்,, “உன் நம்பிக்கை சிறியதாக இருந்தது. நீ ஏன் சந்தேகம் கொண்டாய்?” என்று கேட்டார். பேதுரு வெட்கத்தால் முகம் வாடினார்.

பின்னர் பேதுருவை இயேசு படகில் ஏற்றிவிட்டு அவரும் ஏறியபின் காற்று அமைதியடைந்தது. அதன் பிறகு படகிலிருந்த சீடர்கள் இயேசுவை வணங்கி,, “உண்மையிலேயே நீர் கடவுளின் மகன்”. என்று அவரை அணைத்துக்கொண்டனர். அவர்கள் ஏரியைக் கடந்து, கெனசெரேத்து என்ற இடத்தை அடைந்தார்கள்.

அங்கிருந்த மக்கள் இயேசுவைக் கண்டதும் ஓடிவந்து குழுமிக்கொண்டனர். இன்னும் பலர் அப்பிரதேசத்தைச் சுற்றியிருந்த மற்றவர்களிடம் சென்று இயேசு வந்திருப்பதைக் கூறினார்கள். நோயாளிகள் அனைவரையும் இயேசுவிடம் அழைத்துவந்தனர். அவரது மேலாடையைத் தொடுவதற்கு அனுமதி பெற்று, இயேசுவின் மேலாடையைத் தொட்ட அனைவரும் குணமடைந்தனர்.

http://tamil.thehindu.com/society/spirituality/article22418661.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: ஒரு மீனின் வயிற்றுக்குள் இருந்தார்

 

 
jesus-resurrected

இயேசு, கடவுளின் சக்தியால் அற்புதங்களைச் செய்கிறார் என்பதை யூத மதத் தலைவர்களும் வேத அறிஞர்களாகத் தங்களைக் கருதிக்கொண்ட பரிசேயர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். கடவுளின் சக்தியைக்கொண்டு நல்ல செயல்களை மட்டுமே செய்ய முடியும் என்பதை அவர்கள் உணரவில்லை. அதனால் இயேசு, “நீங்கள் நல்ல மரமாக இருந்தால் நல்ல கனியைக் கொடுப்பீர்கள்; கெட்ட மரமாக இருந்தால் கெட்ட கனியைக் கொடுப்பீர்கள்; ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கனியைக் கொண்டே அறிந்துகொள்ளலாம்” என்கிறார். ஆனால், அப்படியும் அவர்கள் மனம் திருந்தவில்லை. மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிவரும் தங்களின் பிழைப்புக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று இயேசுவின் வளர்ச்சியைக் கண்டு பயந்தார்கள். இயேசுவை எந்த வகையிலாவது குற்றமுள்ளவராகக் காட்டி அவரை எப்படியாவது தண்டித்துவிட விரும்பினார்கள்.

 

எங்கள் முன்பாக ஓர் அற்புதம் செய்

இயேசு ஏற்கெனவே பல அற்புதங்களைச் செய்திருந்தார். ஆனால், யூத மதத் தலைவர்களுக்கும் பரிசேயர்களுக்கும் அவை போதுமானவையாக இல்லை. இத்தனைக்கும் அவர் அற்புதங்கள் செய்வதை அவர்களே நேரில் பார்த்திருக்கிறார்கள். இருந்தும் இயேசுவைச் சோதிப்பதற்காக சில யூதத் தலைவர்களும் பரிசேயர்களும் அடங்கிய குழுவினர் அவரிடம் வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “ நீர் கடவுளின் மகன் என்பதை நிரூபிக்க எங்கள் முன்பாக அற்புதம் ஒன்றை நிகழ்த்திக் காட்டும். அதையே நாங்கள் அடையாளமாகக் கொள்கிறோம்” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “சூரியன் மறைவதை நீங்கள் காணும்பொழுது, காலநிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். செவ்வானமாயிருந்தால், நல்ல காலநிலை என்கிறீர்கள். உதயத்தில் வானம் இருண்டும் சிவந்துமிருந்தால், மழை பெய்யும் என்கிறீர்கள். இவை காலநிலையின் அறிகுறிகள். அதைப் போலவே, தற்போது நடப்பவற்றை நீங்கள் கண்டு வருகிறீர்கள். இவையும் அறிகுறிகளே. ஆனால், இவற்றின் பொருளை நீங்கள் அறியவில்லை. தீயவர்களும் பாவிகளும் அற்புதங்களை அறிகுறிகளாகத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு, ‘யோனா’வின் அடையாளத்தையன்றி வேறெந்த அடையாளமும் கிடைக்காது” என்று கூறினார். பின் இயேசு அவர்களை விட்டு அகன்றார். இயேசு யோனாவின் அடையாளம் என்று கூறியதன் பொருளை அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

 

மீனின் வயிறும் கல்லறையும்

‘யோனா’ அடையாளம் என்பதை பரிசேயர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக வேதத்திலிருந்து யோனாவின் வாழ்க்கையை அவர் எடுத்துச் சொன்னார். ‘இரவு பகலாக மூன்று தினங்கள் யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் இருந்தார். அதைப் போலவே இறைமகனாகிய இயேசுவும் இரவு பகலாக மூன்று நாட்களுக்குக் கல்லறைக்குள் இருப்பார்’ என்கிறார். யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கியது. பிறகு, இறந்து உயிர்த்தெழுந்ததைப் போல அதன் வயிற்றிலிருந்து யோனா உயிருடன் வெளியே வந்தார். அதைப் போல, தானும் இறந்த, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்படப்போவதாக இயேசு கூறினார். அதைப் போலவே இயேசு பிற்பாடு உயிர்த்தெழுந்தபோது, இந்த ‘யோனாவின் அடையாளத்தை’ யூதத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மனம் மாறவும் இல்லை.

http://tamil.thehindu.com/society/spirituality/article22461481.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: வெள்ளிக்காசும் ஓர் ஆடும்

 

 
25chsrschrist%202

குடிமை வரி என்பது இயேசுவின் காலத்தில் ஏழைகளை மிகவும் வாட்டக்கூடியதாக இருந்தது. அரசனுக்கு வரி செலுத்தாமல் யாரும் வாழ முடியாது. இதனால் வரிவசூல் செய்யும் ஊழியர்கள் ஏழைகளிடம் கடுமையாக நடந்துகொண்டனர். வரி கட்ட முடியாதவர்களைக் கடுஞ்சொற்களால் வசை பாடுவது, கசையடி கொடுப்பது என நெறி தவறிய முறையில்தான் அவர்கள் நடந்துகொண்டனர். இதனால் அவர்கள் குற்றவுணர்வுடன் வாழ்ந்து வந்தனர். குற்ற உணர்வு அழுத்த பலர் வரி வசூலிக்கும் வேலையை விட்டுவிட நினைத்தனர். ஆனால், அதற்கு ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை.

இதனால் பரம்பரையாக வரிவாங்குபவர்கள் தங்களைப் பாவிகளாக் கருதிக்கொண்டனர். எனவே, இயேசுவின் போதனைகளைக் கேட்க பாவிகளும் வரிவசூலிப்போரும் அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயர்களும் யூத மறைநூல் அறிஞர்களும் இதைக் கண்டு, “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவு அருந்துகிறாரே”என்று முணுமுணுத்தனர்.

 

காணாமல்போன வெள்ளிக் காசு

அப்போது அவர், தம்மை நாடி வந்தவர்களுக்குத் தொடர்ச்சியாக மூன்று உவமைகளைக் கூறினார். “ இல்லத் தலைவி ஒருவரிடம் பத்துத் திராக்மா வெள்ளி நாணயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று காணாமல் போய்விட்டது. அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி, வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடினார்.

அதைக் கண்டுபிடித்ததும், அவர் தன் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, “ என்னோடு மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஏனெனில் காணாமல் போன எனது திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்று கூறுவார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். மானிட மகன் பாவிகளை மீட்கவே வந்தார்” என்றார்.

 

காணாமல்போன ஆடு

இயேசு இரண்டாம் உவமையைக் கூறினார். “ உங்களில் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமல்போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு, காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் வரை அதைத் தேடி அலையமாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அக்கம் பக்கத்து வீட்டினரையும் அழைத்து, ‘என்னோடு மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஏனெனில் காணாமல்போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.

அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து வானுலகில் பெரு மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவ்வாறே இவர்களில் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே நம் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

 

உவமைகள் வழியே

இரண்டு உவமைகளில் வெள்ளி நாணயம், ஆடு ஆகியவை காணாமல் போய்விடுகின்றன. ஆட்டைத் தொலைத்த மேய்ப்பன், “ எனது 100 ஆடுகளில் ஒன்றுதானே காணாமல்போனது, இன்னும் எனக்கு 99 ஆடுகள் இருக்கின்றனவே, காணாமல்போன ஒன்று இல்லாவிட்டால் எனக்கு எந்தப் பெரிய இழப்பில்லை” என்று கூறவில்லை. அதேபோல் அந்த இல்லத் தலைவி, “ என்னிடம்தான் இன்னும் 9 வெள்ளிக்காசுகள் இருக்கின்றனவே காணாமல்போன ஒரேயொரு திராக்மா பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? ” என்று கேட்கவில்லை. மாறாக மேய்ப்பன் தன்னிடம் ஒரேவொரு ஆடு மட்டுமே இருப்பதாக எண்ணி, காணாமற்போன அந்த ஆட்டுக்காகக் கல்லிலும் முள்ளிலும் தேடி அலைந்தான்.

இல்லத்தலைவியும் தன்னிடம் வேறு திராக்மாக்களே இல்லை என்பதுபோல் காணாமற்போன அந்த ஒரு காசுக்காக வருத்தப்பட்டு கையில் விளக்கை ஏற்றிக்கொண்டு பொறுப்புடன் அதைத் தேடி எடுத்தார்.

இந்த இரண்டு உவமைகளுக்குப் பின்னும் இயேசு சொன்ன உறுதியான வார்த்தைகள் “மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து வானுலகில் பெரு மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” ஆகவே, மேய்ப்பனின் அக்கறையும் அந்த இல்லத் தலைவியின் அக்கறையும் கடவுளாகிய பரலோகத் தந்தையின் அக்கறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. கடவுள், மனிதர்கள் மீதான தன் அக்கறையையும் அன்பையும் தன் மகன் இயேசுவின் வழியாக வெளிப்படுத்தியதை இந்த இரு உவமைகளும் நமக்குச் சுட்டுகின்றன. மூன்றாம் உவமை தரும் செய்தி இன்னும் நெருக்கமானது. அதை அடுத்த வாரம் காண்போம்.

(தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article22518940.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள்: 77 தடவை மன்னிக்க வேண்டும்

 

 
01chsrschrist111%202

கடவுள் மனிதர்களின் மீது கொண்ட அன்பைச் சுட்டிக்காட்டவும் பாவக்குழியிலிருந்து மீண்டு வருகிற மனிதர்களை அவர் எப்படி அரவணைத்து ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் எடுத்துக்காட்டவும் ஊதாரி மகனின் கதையைத் தன் சீடர்களுக்குக் கூறினார்.

 

தீவனம்கூடக் கிடைக்கவில்லை

“ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். இளைய மகன் தன்னுடைய அப்பாவிடம் வந்து, ‘தந்தையே, சொத்தில் எனக்குச் சேர வேண்டிய பங்கை இப்போதே பிரித்துக் கொடுத்துவிடுங்கள்’ என்று கேட்டான். அதனால், அவர் தன்னுடைய சொத்துகளைப் பிரித்து அவனுக்குரியதைக் கொடுத்தார். சில நாட்கள் கடந்தன. அந்த இளைய மகன் தனக்குப் பாகமாகக் கிடைத்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போனான்.

அங்கே அவன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்தான். அப்போது அந்தத் தேசம் முழுவதும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அவன் வறுமையில் வாடினான். அதனால் ஒருவரிடம் போய் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். அவர் தன்னுடைய பன்றிகளை மேய்க்கச் சொல்லி அவனைத் தன்னுடைய வயல்களுக்கு அனுப்பினார். பன்றித் தீவனம் சாப்பிட்டாவது தன் வயிற்றை நிரப்ப அவன் ஏங்கினான். ஆனால், அவனுக்கு யாரும் எதையும் கொடுக்கவில்லை.

 

தகுதியை இழந்தேன்

அவனுக்குப் புத்தி வந்தபோது, ‘என் தந்தையின் வீட்டில் எத்தனையோ வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வயிறார சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, நான் இங்கே பசியால் செத்துக்கொண்டிருக்கிறேன்! அதனால் நான் என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன். உங்கள் மகன் என்று சொல்வதற்குக்கூட இனி எனக்குத் தகுதியில்லை. உங்களுடைய வேலையாட்களில் ஒருவனாக என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று கேட்பேன்’ எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, தன் தந்தையிடம் புறப்பட்டுப் போனான். அவன் சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்தபோதே அவனுடைய அப்பா அவனைப் பார்த்துவிட்டார்.

கண்கள் பஞ்சடைந்து, கிழிந்துபோயிருந்த அங்கியை அணிந்தபடி, காலணிகள் இல்லாத பாதங்களோடு தளர்ந்த நடையுடன் வந்துகொண்டிருந்த அவனது தோற்றத்தைக் கண்டு அவருடைய மனம் உருகியது. ஓடிப்போய் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். அப்போது அவன், ‘அப்பா, கடவுளுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன். உங்கள் மகன் என்று சொல்வதற்குக்கூட இனி எனக்குத் தகுதியில்லை. என்னை உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னான்.

ஆனால், அவனுடைய அப்பா தன் வேலையாட்களை நோக்கி, ‘விரைந்து சென்று முதல்தரமான அங்கியைக் கொண்டுவந்து இவனுக்கு அணிவியுங்கள். இவனுடைய விரலில் மோதிரத்தையும் கால்களுக்குச் செருப்பையும் அணிவியுங்கள். கொழுத்த கன்றுக்குட்டியைக் கொண்டுவந்து சமையுங்கள். நாம் சாப்பிட்டுக் கொண்டாடுவோம். ஏனென்றால், என்னுடைய மகன் செத்துப்போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துவிட்டான்; காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான்’ என்று சொன்னார். இதைகேட்டு மகிழ்ந்த வேலைக்காரர்கள் அவர் கூறியபடியே செய்தார்கள். மனம் திருந்தி வந்த ஊதாரி மகனின் வருகை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கினார்கள்.

 

மூத்த மகனின் கோபம்

ஊதாரி மகன் வீட்டுக்குத் திரும்பி வந்த நேரத்தில் அவருடைய மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குப் பக்கத்தில் வந்துகொண்டிருந்தபோது, ஆடல்,பாடலின் சத்தத்தைக் கேட்டான். அதனால், வேலைக்காரர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, என்ன நடக்கிறது என்று கேட்டான். அதற்கு அவன், ‘உங்கள் தம்பி திரும்பி வந்துவிட்டார். அவர் பத்திரமாக வீடு வந்துவிட்டதால் உங்கள் தந்தை கொழுத்த கன்றுக்குட்டியை அடித்து விருந்து வைத்திருக்கிறார்’ என்று சொன்னான். அதைக் கேட்டு அவனுக்குக் கடுமையான கோபம் வந்தது. வீட்டுக்குள் போகவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்போது, அவனுடைய தந்தை வெளியே வந்து, மூத்த மகனைக் கெஞ்சி அழைத்தார். அதற்கு அவன் தன்னுடைய தந்தையிடம், ‘இத்தனை ஆண்டுகளாக நான் உங்களுக்காகப் பாடுபட்டு வேலை செய்திருக்கிறேன், உங்கள் பேச்சைத் தட்டியதே இல்லை. இருந்தாலும், என் நண்பர்களோடு விருந்து கொண்டாட இதுவரை நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக்கூடக் கொடுத்ததில்லை. ஆனால், தீய வழியில் உல்லாசமாகத் தன் நாட்களைச் செலவழித்து உங்கள் சொத்துகளை வீணாக்கினான். அவன் வந்தவுடன் அவனுக்காகக் கொழுத்த கன்றுக்குட்டியை அடித்து விருந்து வைத்திருக்கிறீர்கள்’ என்று சொன்னான். அதற்கு அவர், ‘மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய்; என்னிடம் இருப்பவையெல்லாம் உன்னுடையவைதான். ஆனால், உன் தம்பி செத்துப்போயிருந்தான்; இப்போது உயிரோடு வந்துவிட்டான். காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான். இந்த மகிழ்வை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?’ என்று கேட்டார்” என்றார்.

 

கடவுளின் அன்பு

உலக நடைமுறைப்படி தந்தை இறந்த பிறகே சொத்தைப் பிரித்துத் தரும்படி கேட்பார்கள். ஆனால், அப்பா உயிரோடு இருக்கும்போதே இளையமகன் சொத்தைப் பிரித்துக் கேட்டான். சொத்து கிடைத்ததும் சுதந்திரமாக வாழ நினைத்த அவன் மனம்போனபோக்கில் வாழ்ந்து ஊதாரியாக மாறினான். பாவக் குப்பையில் உழன்றான். பன்றிகள் அசுத்தமானவை என்று யூதத் திருச்சட்டம் கற்பித்திருக்கிறது. ஆனால், தன் இழிநிலையான வாழ்க்கையால் அவன் பன்றிகளை மேய்க்கவும் அவற்றின் உணவுக்காக ஏங்கவும் வேண்டிய சூழ்நிலை உருவானது. அதுவும் கிடைக்காத நிலை வந்தபோது அவன் வாழ்க்கையின் யதார்த்தம் அவனது முகத்தில் அறைகிறது. அப்போது அவன் மனம் திருந்துகிறான். என் தந்தையின் வீட்டில் ஓர் ஊழியனாகவாவது சேர்ந்துகொள்வேன் என்று முடிவெடுத்து அவன் திரும்பி வந்தபோது அவனுடைய அப்பா என்ன செய்வார்? ‘நீ என் அவமானம்’ என்று கூறி அவனைக் கடிந்துகொண்டு, அவனை நிராகரித்து அடித்து விரட்டினாரா? இல்லை, அவனைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். காணாமல் போன மகன் கிடைத்துவிட்டான் என்று விருந்து வைத்து மகிழ்ந்தார். மனம் திருந்தி வருகிற பாவிகளிடம் கடவுளாகிய தந்தை காட்டுகிற அணுகுமுறையை ஊதாரி மகன் கதையின் மூலம் இயேசு எடுத்துக்காட்டுகிறார்.

இந்தக் கதையைக் கேட்டபோது பேதுரு இயேசுவை நோக்கி “ எஜமானே, எனக்கு விரோதமாக என் சகோதரன் பாவம் செய்தால் நான் எத்தனை தடவை அவனை மன்னிக்க வேண்டும்? ஏழு தடவையா?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “ஏழு தடவை அல்ல, 77 தடவை என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article22617726.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: உங்களைக் காட்டும் கண்ணாடி

 

 
yesujpg

கடவுளைக் காண முடியாது. ஆனால், அவருடன் பேச முடியும். அவருக்கும் நமக்குமான ஒரே பாலம் பிரார்த்தனை. வீட்டில் இருந்தபடியே கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பதற்கும் அவரது பிரசன்னமும் அருளும் வழிந்தோடும் ஆலயம் தேடிச் சென்று பிரார்த்திப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை ஒவ்வொரு சமயத்தினரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். யூதர்கள் காலை, மதியம், மாலை என மூன்று முறை பிரார்த்தனை செய்வதை அன்றாட ஆன்மிகக் கடமையாகக் கொண்டிருந்தனர்.

யூதர்கள் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்தனை செய்வது கடவுளை விரைவாகச் சென்றடையும் வழி என்று நம்பினார்கள். அதற்காக பரலோகத் தந்தைக்குப் பிரம்மாண்டமான ஆலயத்தை எழுப்பினார்கள். பலி செலுத்தவும் பிரார்த்தனைக்காகவும் ஆலயத்தில் குவிந்துவிடுவது அவர்களது வழக்கமாக இருந்தது.

ஆண்டுக்கு ஒருமுறை வரும் பாவமன்னிப்பு நாளில் அதுவரை செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி அனைவரும் நோன்பிருக்க வேண்டும் என அறிவுறுத்தியது யூதத் திருச்சட்டம். ஆனால், கடவுளின் அருளைச் சிறப்பாகப் பெறுவதற்காகப் பலர் திங்கள், வியாழன் என வாரத்தில் இரு தினங்கள் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும் எருசலேமில், மக்கள் பொருட்களை வாங்கச் சந்தைகளில் முண்டியடிப்பார்கள்.

அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை ‘தசம பாக’மாக ஆலயத்துக்குக் கொடுக்க வேண்டுமென்று யூதர்களின் இணைச்சட்டம் (14:22), கூறுகிறது. இதைப் பின்பற்றிவந்த யூதர்கள், இதுபோன்ற பாரம்பரிய ஆலயச் சடங்குகளை ஏழைகளும் மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பிரார்த்தனை செய்வது, தசமபாகம் தருவது, பலிசெலுத்துவது ஆகியவற்றை ஆரவாரத்துடன் படாடோபமாகச் செய்து ஆலயத்தின் அமைதியைக் கெடுத்து வந்தார்கள்.

தாங்கள் நோன்பிருப்பது தெரிய வேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள். அதேபோல் கொடுக்கத் தேவையில்லாத விளைபொருட்களிலும் பத்திலொரு பங்கைக் கொடுத்தார்கள். கடவுள் காரியத்தில் இப்படி விளம்பரப் பிரியர்களாக இருந்த பரிசேயர்களை முன்வைத்து இயேசு கூறிய உவமை; நம் தந்தையைத் தொடர்புகொள்ளப் பிரார்த்தனை என்ற உறவுப் பாலத்தை எத்தனை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது.

 

இருவரில் யார் ஏற்புடையவர்?

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்குபவர்களை விமர்சிக்கும்விதமாக இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்ட, கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிவசூலிப்பவர். பரிசேயர் ஆலய வாசலில் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் உரத்த குரலில் வேண்டினார்: ‘கடவுளே, கொள்ளையர், நேர்மையற்றோர், பாலியல் தொழில் செய்வோர் போலவோ இல்லாதது குறித்து நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் எல்லா வருவாயிலிருந்தும் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்’ என்று ஜெபித்தார்.

ஆனால், வரிவசூலிப்பவர் தொலைவில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று கடவுளுக்கு மட்டுமே கேட்கும் தன் மனக்குரல் கொண்டு ஜெபித்தார். இந்த இருவரில் பரிசேயரல்ல, வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.

 

பிரார்த்தனை எனும் கண்ணாடி

பரிசேயர் ஆலய வாசலில் நின்றபடி பிரார்த்தனை என்ற பெயரால் உரத்துச் சொன்ன அனைத்தையும் உண்மையிலே அவர் கடைப்பிடித்தார். தினமும் பிரார்த்தனை செய்தார், வாரம் இருமுறை நோன்பிருந்தார், பத்தில் ஒரு பங்கை ஆலயத்துக்குக் கொடுத்தார். ஆனால், பிரார்த்தனை என்பது தான் செய்வதைச் சொல்வது அல்ல, தன்னைப் புகழுவதும் அல்ல, அல்லது தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுவதும் அல்ல.

மாறாக, பிரார்த்தனை என்பது கடவுளைப் புகழ்வது, கடவுளோடு நெருங்கிவர அவர் துணையை நாடுவது, நிறைவாழ்வை நோக்கிய தொடர்ச்சியான தேடல் என்பதை பரிசேயர் மறந்துவிடுகிறார். பிரார்த்தனை என்பது கடவுளுக்கும் எனக்கும் உள்ள தனிப்பட்ட உறவு. அதன் வழியே கடவுள் என் மனம் எனும் கண்ணாடியில் இருப்பது அனைத்தையும் காண்கிறார்.

இயேசு தன் பூமி வாழ்வில் கடவுளாகிய தந்தையிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை இருமுறை தன் சீடர்களுக்கும் மக்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார். பிரார்த்தனை என்பது எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு இருக்கக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டிய இயேசு, சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, “ பிதாவே இவர்களை மன்னியும், ஏனெனில் இவர் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று தன் மரணத்தை விரும்பிய எதிரிகளை மன்னிக்கும்படி தன் தந்தையிடம் கோரினார்.

இது எத்தனை உன்னதமான தாழ்ச்சி. ஒருவர் தம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு எளிதான போதனைதான். ஆனால், அதைக் கடைப்பிடிக்கும்போதுதான் நமக்கும் இயேசுவின் மேன்மை புரியத் தொடங்குகிறது.

(கிறிஸ்துவின் தானியங்கள் செழிக்கும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article22687112.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானியங்கள் இதயத்தில் நிறைகின்றன....மேலும் தாருங்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: இறைமகனின் பாலைவன நாட்கள்

 

 
Christ

நேற்று விபூதிப் புதன். தவக்காலத்தின் முதல் நாள். கடவுளின் அருளைப் பெறவும் அவருடன் உறவைப் புதுப்பித்துக்கொள்ளவும் அரிய வாய்ப்பை வழங்கும் காலமே தவக்காலம். “நீ மண்ணாய் இருக்கிறாய். நீ மண்ணுக்கே திரும்புவாய்” எனும் விவிலியத்தின் தொடக்க வாசகங்களை எடுத்துக் கூறி நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவை அடையாளத்தை வரைந்து இறையாசி வழங்கும் வழிபாட்டுடன் தவக்காலத்தின் முதல் நாளாக விபூதி புதன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

விபூதி புதனுக்கு முன்வரும் திங்கள்கிழமையைத் தூய திங்கள் என்றழைத்து அன்றே தவக் காலத்துக்கான தயாரிப்பைத் தொடங்கிவிடுகிறார்கள். கிறிஸ்தவம் என்றில்லாமல் இந்தியப் பண்பாட்டு மரபில் சைவ, வைணவ, சமண, பௌத்த, பகாய் சமயங்களில் மட்டுமின்றி உலகின் தொன்மையான யூத மரபிலும் அதன் தொடர்ச்சியாக உருவான கிறிஸ்தவ, இஸ்லாமிய மரபிலும் நோன்பிருந்து உடலையும் மனதையும் தயாரிக்கும் தவமுயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

சோதனைக்காரனின் தோல்வி

கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை, விபூதி புதன் முதல் உயிர்ப்பு ஞாயிறு வரையிலான 46 நாட்களையும் இயேசுவை முன்னுதாரணமாகக் கொண்டு தங்கள் வாழ்வைக் கடவுளுக்கு உகந்ததாக மாற்றும் தவமுயற்சியாகப் பின்பற்றிவருகிறார்கள் கிறிஸ்தவர்கள். இயேசு தனது ஆன்மிக வாழ்வைத் தொடங்கும்முன் அவரது 30-வது வயதில் யோர்தான் நதியில் யோவானிடம் ஞானஸ்தானம் பெறுகிறார். அதன் பின்னர் கடவுளுடைய சக்தி அவரை யூதேயா பாலைவனத்துக்கு வழிநடத்திச் செல்கிறது.

பாலைநிலத்தில் இயேசு 40 நாட்கள் இரவும் பகலும் அலைந்து திரிகிறார். தன்னைக் கடவுள் இந்த உலகுக்கு அனுப்பிவைத்த காரணத்தை மனதில் ஏந்தி அவர் தியானித்தார். இந்தப் புவி வாழ்வில் அவர் எதிர்கொள்ளவிருந்த எல்லாக் காரியங்களுக்காகவும் அவர் தன்னைத் தயாரித்துக்கொள்கிறார்.

அந்த 40 நாட்களும் அவர் எதுவும் சாப்பிடவில்லை. 40-ம் நாள் முடிவில் பசி அவரை வாட்டியெடுத்தது. 40 நாட்கள் தவத்தின் இறுதிக் கட்டத்திலாவது அவரைத் தோல்வி அடையச் செய்வதற்காக சோதனைக்காரனாகிய சாத்தான் அங்கே வருகிறான். அப்போது இயேசுவிடம் வந்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்றான். அதற்கு இயேசு, உணவால் மட்டுமல்ல, கடவுளின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனிதன் உயிர் வாழ்வான் என எழுதப்பட்டிருக்கிறதே என்று பதில் கூறினார்.

பாலை நிலத்தில் பனியைப் போல் மன்னா உணவைப் பொழியச் செய்த கடவுளின் மகனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தி இருக்கிறது. எனினும், தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்காக அதைப் பயன்படுத்துவது தவறு என்பது இயேசுவுக்குத் தெரியும். அதனால் சாத்தான் சொன்னதைச் செய்ய அவர் மறுத்துவிடுகிறார்.

 

தந்தையைச் சோதிப்பது தவறு

சாத்தான் அடுத்து பரிசுத்த நகரத்துக்கு இயேசுவைக் கொண்டுபோய், ஆலயத்தின் உயரமான இடத்தில் அவரை நிற்கவைத்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், கீழே குதி; ‘அவர் உன்னைக் குறித்து தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னான். அதற்கு இயேசு, “ ‘உன் கடவுளாகிய தந்தையைச் சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனவும் எழுதப்பட்டிருக்கிறதே” என்று பதில் கூறினார்.

இறைமகன் குறித்து தீர்க்கதரிசனங்களால் நிறைந்திருந்த வேத வார்த்தைகளை வைத்து இயேசுவை மயக்க நினைத்த சாத்தான் இயேசுவின் பதிலால் வெட்கிப்போனான். சாத்தானின் புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு இயேசு மயங்கவில்லை; சாகசம் செய்து பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அப்படிச் செய்து கடவுளாகிய தன் தந்தையைச் சோதிப்பது தவறு என்று வேதவசனங்களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.

ஆனால், சாத்தான் அவரை விடுவதாக இல்லை. மிக மிக உயரமான ஒரு மலைக்கு இயேசுவைக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காட்டி, “நீ ஒரேயொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய பரலோகத் தந்தையை மட்டுமே வணங்க வேண்டும். அவர் ஒருவருக்குத்தான் தூய்மையான சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே”என்று சொன்னார். இப்போது சாத்தான் தோல்வியுடன் அவரைவிட்டு விலகிப் போனான்.

 

மீண்டும் தரப்படும் வாய்ப்பு

இயேசுவுக்குச் சாத்தான் வைத்த சோதனைகளிலிருந்தும், சோதனைக்காரனாகிய அவனுக்கு அவர் கொடுத்த பதில்களிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியத் தருணமாக தவக் காலம் இருக்கிறது. சாத்தானைத் தீய குணங்களின் தூண்டுதல் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், இயேசுவின் பாலைவன தவவாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து சாத்தான் என்பவன் நம் கண்களுக்குத் தெரியாத கடவுளின் படைப்பைக் கெடுக்கிற ஒருவன் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அது மட்டுமல்ல; பூமியில் உள்ள அதிகார மையங்களில் பெரும்பான்மையானவை சாத்தானின் கைகளில் இயங்குகின்றன என்பதையும் அவற்றை அவன் எப்படி ஆட்டிப்படைக்கிறான் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். உலக ராஜ்ஜியங்களில் பல அவன் கையில் இல்லை என்றால், அவன் எப்படி இயேசுவுக்கு இவற்றைத் தருவதாகச் சொல்லியிருக்க முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரே ஒருமுறை தன்னை வணங்கினால், உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் தருவதாக இயேசுவிடம் கூறி சாத்தான் ஆசை காட்டினான். அதைப் போலவே அவன் நமக்கும் ஆசை காட்டலாம். சொத்துகளை, சுகங்களை, பதவிகளை, அதிகாரத்தை, அந்தஸ்தைக் காட்டி நமக்கு அவன் வலை விரிக்கலாம்.

சாத்தான் என்னதான் ஆசை காட்டினாலும், இயேசுவைப் போல நாம் கடவுளுக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும். இதுதான் தவக்காலத்தில் நம்மைச் சீரமைத்துக்கொள்ள மீண்டும் தரப்படும் அரிய சந்தர்ப்பம்.

உடலும் மனமும் ஒரே நிலையில் செயல்பட ஒன்றித்து வாழ்வதற்காக இறைதுணை வேண்டிப் பிரார்த்தனை செய்தல், வயிற்றுக்கு உணவு அளிக்காமல் காயவிட்டு தவம் செய்தல், தேவையற்ற நுகர்வுத் தவிர்ப்புகளைச் செய்தல், நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்குப் பகிர்தல் என்பன தவக்காலத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/society/spirituality/article22758777.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள்: உலகின் ஒரே நீதிபதி

 

 
22chsrsjesus

சுயவிமர்சனம் என்பதில் நம் யாருக்குமே அக்கறை இல்லை. அதற்குக் காரணம் அனைவரும் தம்மை மட்டுமே நிறைகள் கொண்ட மனிதராக நினைத்துக்கொள்வதுதான். இதனால் தம் குறைகளை விட்டுவிட்டு மற்றவரை விமர்சிப்பதிலும் அவர்களுக்குத் தீர்ப்பு எழுதுவதிலும் இன்பம் காண்பது நம் இயல்பாகவே மாறிவிட்டது.

பல நேரத்தில் இது சரியான அணுகுமுறை போலவும் சில நேரம் மட்டுமே இது தவறு என்பதுபோலவும் உணர்கிறோம். மற்றவர்களை விமர்சிப்பதிலும் அவர்களைப் பற்றி இறுதி முடிவுக்கு வருவது பற்றியும் கடவுளின் அணுகுமுறை என்ன? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு, தற்போது தவக்காலத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

“யாருக்கும் தீர்ப்பளிக்க மாட்டேன், யாரையும் கண்டனம் செய்ய மாட்டேன்” என்ற தீர்மானத்தை எடுத்துக்கொள்ள இதுவே நல்ல தருணம். ஏனெனில், கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் வைத்து யாருடைய செயலையும் நாம் மதிப்பிட முடியாது.

 

உண்மையை அறிந்த ஒருவர்

அடுத்தவரைப் பற்றிக் கிண்டலாகவோ புறமோ பேசுகிற பழக்கம் பலரிடமும் இருக்கிறது. குறிப்பாக, மற்றவர்களது தனிப்பட்ட வாழ்வு, அதில் உள்ள நிறை குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் போக்கு நம் மனதைக் கவ்விக்கொண்டிருக்கும் ஒரு நோயாகவே இருக்கிறது. இப்படிப் பேசும் நேரத்தில் நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுகிறோம், கண்டிக்கிறோம். இப்படிப் பேசுவது இறை வார்த்தைக்கு எதிரானது என்பதை உணர கிறிஸ்துவின் வார்த்தைகள் வாய்ப்பளிக்கின்றன.

“அவரது வேலை சரியில்லை” என்றோ “அவருக்கும் இவருக்கும் ஒரு மறைமுக ஒப்பந்தம் இருக்கிறது” என்றோ “இந்தச் செல்வாக்கும் பணமும் இப்படித்தான் வந்திருக்கும்” என்றோ நாம் ஆதாரமில்லாமல் பேசுகின்ற பேச்சுகள் அனைத்துமே சக மனிதர்கள் மீது நாம் சுமத்துகின்ற தீர்ப்புகளாகவும் மற்றவர்கள் மீதான அவமதிப்பதாகவும் இருக்கின்றன.

இறைவன் ஒருவரே உண்மையை அறிவார். மனித மனங்களின் ஆழத்தை அறிந்தவர் அவரே. இதை உணர்ந்து, “பிறரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்” என்னும் உன்னதமான வாழ்வியல் உண்மையை இயேசு எடுத்துக்காட்டினார். இதை விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் லூக்கா எழுதிய நற்செய்தியில் கிறிஸ்துவின் வார்த்தைகள் தானியங்களாக மின்னுவதைக் காணுங்கள்.

 

உலகின் நீதிபதி ஒருவரே

தீர்ப்பிடுதல் கடவுளுடைய பணி. அது மனிதர்களின் பணி அல்ல. இந்த உலகத்தைப் படைத்தவர் கடவுள். இந்த உலகத்துக்குப் படியளக்கிறவர் கடவுள். இந்த உலகத்தின் சொந்தக்காரர் கடவுள். நமக்கு வாழ்வு என்ற கொடையைக் கொடுத்தவர் கடவுள். எனவே, நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுவது வாழ்வியல் அறம் அல்ல.

நாம் தீர்ப்பிட்டால், தேவையில்லாமல் கடவுள் செய்ய வேண்டிய செயலைச் செய்கிறோம். மனிதர்களாகிய நாம் ஒருவரின் செயல்களை அடிப்படையாக வைத்துத் தீர்ப்பு சொல்கிறோம். ஆனால், ஒருவரின் செயல்களை வைத்துச் சொல்வது, உண்மையான தீர்ப்பாக இருக்க முடியாது.

ஒருவர் உள்ளத்தில் வஞ்சக எண்ணம் வைத்துக்கொண்டு, வெளியே நல்லது செய்வதுபோல நடிக்கலாம். மனிதர்களாகிய நமக்கு ஒருவரின் உள்ளத்தை ஊடுருவிப்பார்க்கும் ஆற்றல் கடவுளால் கொடுக்கப்படவில்லை. ஆனால், கடவுள் அனைவரது உள்ளத்தையும் உற்றுப் பார்க்கிறார். அதன் அடிப்படையில் அவர் ஒருவரைத் தீர்ப்பிடுகிறார். இதுதான் முழுமையான, நியாயமான தீர்ப்பாக இருக்க முடியும்.

கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழ நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து உதவ வேண்டுமே தவிர, அவர்களைக் கண்டனத்துக்கு உள்ளாக்குவது கடவுளின் சித்தத்துக்கு எதிரானது. நிறை, குறைகளோடு வாழும் நம்மை சக மனிதர்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிற நாம், மற்றவர் குறைகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களைத் தீர்ப்பிடாமல், அவர் அந்தக் குறைபாட்டிலிருந்து மீண்டுவர உதவுவதுதான் சிறந்த வழிகாட்டியான வாழ்வாக இருக்கும்.

http://tamil.thehindu.com/society/spirituality/article22822683.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் இறைவா 

"நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 

அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?" 

என்ற வார்த்தையின் படி மற்றவரை நியாயம் தீர்க்காமல் எஙகளை நாங்கள் இத்த‌வக்காலத்தில் சுயபரிசோதனை செய்ய உதவி செய்யும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: எது அதிகாரம், எது ஆன்மிகம்?

 

 
shutterstock249194809

எருசலேமில் தோன்றி மறைந்த இறைவாக்கினர்களில் முக்கியமானவர் எசாயா. சமயம் என்ற பெயரால் எசாயாவின் காலத்திலும் மக்களை மிகவும் துன்புறுத்தி அவர்களைக் கீழ்நிலையில் அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதியினராக இருந்த மதத் தலைவர்கள் வைத்திருந்தனர். இது குறித்து இறைவாக்கினர் எசாயா தனது காலத்தில் இப்படி வருந்தி எழுதினார்.

‘எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், கடவுளுக்கு எதிராய்த் தீய வழியில் வாழ்ந்த சோதோம் கொமோரா நகரங்களை நினைவுபடுத்துகிறவர்களாய் இருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவி சாயுங்கள். உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமையை விட்டொழியுங்கள்; நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்கிறார் ஆண்டவர்; “உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்; ரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப் போல் அவை வெண்மையாகும். மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்” என்று எச்சரிக்கிறார்.

 

மத்தேயு எழுதிய நற்செய்தி

எசாயா காலத்தில் இருந்த நிலை, இயேசுவின் காலத்திலும் நீடித்ததை அவர் வார்த்தைகளில் இருந்தே நாம் தெரிந்துகொள்ள முடியும். மதம் என்ற பெயரால் அதிகாரத்தில் இருந்தவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், அவர்களை முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் இயேசு கண்டிப்புடன் எடுத்துக் கூறியிருக்கிறார். இதை மத்தேயு எழுதிய நற்செய்தியில் வாசிக்கலாம் (மத்தேயு 23: 1-12).

அக்காலத்தில் இயேசு, மக்கள் கூட்டத்தையும் தம் சீடர்களையும் பார்த்துக் கூறினார், “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்.

ஆனால், அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமக்க முடியாத சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால், அவர்கள் அதைத் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ‘போதகரே’ என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

ஆனால், நீங்கள் அவர்களை ‘போதகரே’ என அழைக்க வேண்டாம். ஏனெனில், உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதர, சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் என இவர்களை அழைக்க வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.” என்றார்.

 

இன்றும் தொடரும் யதார்த்தம்

அன்று இருந்தது போலவே அடிமை வர்க்கம், ஆளும் வர்க்கம் ஆகிய இரண்டுவிதமான வர்க்கங்கள் இன்றைய நவீன உலகிலும் இருக்கின்றன. முடியாட்சியில் அரசர்கள், மக்களைத் தங்களது அடிமைகளாக எண்ணினர். அதிகாரவர்க்கத்தினருக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் குடிமக்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தாலும் காட்சிகள் இன்னும் பெரிதாக மாறவே இல்லை.

shutterstock73393228

அதிகாரத்தில் அமரும் வாய்ப்பை மக்கள் தரும்போது அவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பும் பணியும் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பதற்கு அல்ல, அது மக்களுக்கு நன்மை செய்வதற்குப் பயன்படுத்தப்படுவது. சமூகத்தையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த, கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும் என்று இயேசு தனது போதனையின் வழியாகச் சுட்டிக்காட்டுகிறார்.

அதேபோல சமயம் என்பது கடவுளுடனான உறவு மட்டுமல்ல; மனிதர்களுடனான உறவும்கூட. சமயம் என்ற பெயரில் பரிசேயர்களும் சதுசேயர்களும் செய்த அக்கிரமங்களை இயேசு கடுமையாகச் சாடினார். பள்ளத்திலே வீழ்ந்து கிடக்கிற மக்களைத் தூக்கிவிடுவதாக, சோர்வுற்ற மக்களைத் தேற்றுவதாக சமயம் இருக்க வேண்டும்.

அவர்கள் மேலும் தடுமாறுவதற்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது. சமயம் என்பது அடிமைத்தளையை உடைத்தெறிந்து விடுதலை தருவதாக அமைய வேண்டும். அவர்களை அடிமைச் சிறைக்குள் அடைப்பதாக இருக்கக் கூடாது. எப்படியெல்லாம் சமயம் இருக்கக் கூடாதோ, அப்படியெல்லாம் அதிகார வர்க்கத்தினர் சமயத்தைத் தங்கள் கைப்பாவையாக்கியிருந்தனர். இந்தத் தவறான கண்ணோட்டத்தைத்தான் இயேசு உடைத்தார். அவர்களை விமர்சித்தார். இதற்காக அவர்களால் கொல்லப்படுவோம் என்பதை அறிந்தே இயேசு இந்தப் பணியைச் செய்தார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article23435344.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: புயலுக்குத் தப்ப முடியுமா?

 

 
shutterstock96526867

யோர்தான் நதியும் கலிலேயா கடலும் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான நீர்நிலைகள். யூதேயா வனப்பகுதியில் உருவாகும் யோர்தான் நதியின் ஒரு கிளை கலிலேயா கடலில் கலக்கிறது. கலிலேயா மலைப்பகுதியில் உள்ள நாசரேத் என்னும் சிறு நகரத்தில்தான் இயேசு வளர்ந்தார். இந்தச் சிறிய நகரம் கலிலேயா கடல் என்ற பரந்து விரிந்த பெரிய ஏரிக்கு மேற்கே இருக்கிறது. கலிலேயா கடலில் மீன்பிடிப்பதையே தங்கள் ஜீவாதாரத் தொழிலாகச் செய்துகொண்டிருந்த சீமோன், அந்திரேயா யாக்கோபு, யோவான் ஆகிய நால்வரையும் அழைத்து, “வாருங்கள் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குகிறேன்” என்று ஆசீர்வதித்து சீடர்களாகச் சேர்த்துக்கொண்டார். கலிலேயா கடற்கரையின் ஓரத்தில் அசைந்தாடிக்கொண்டிருக்கும் படகில் அமர்ந்தபடி மக்களுக்கு இயேசு போதித்திருக்கிறார்.

 

தனிமைப் பயணம்

இப்படிப்பட்ட கலிலேயா கடலில் அடிக்கடி பயணம் செய்து அக்கரையில் இருந்த கப்பர்நாகூம் என்ற நகரத்துக்கு இயேசு தன் சீடர்களோடு சென்று வந்ததை விவிலியம் சுட்டிக்காட்டுகிறது. அப்படித்தான் கலிலேயா கடலில் சீடர்களை ஒருமுறை தனியாக பெத்சயிதா என்ற ஊருக்குச் செல்லும்படி அனுப்பிவைத்தார். ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் வைத்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்து இயேசு அற்புதம் செய்த நாளில் தன் தந்தையாகிய கடவுளிடம் தனித்திருந்து பிரார்த்தனைசெய்த இயேசு, சீடர்களை முன்னதாகச் செல்லுமாறு பணித்தார். தங்கள் போதகர் இல்லாமல் தனியே பயணித்த சீடர்கள் கலிலேயா கடலில் புயலை எதிர்கொண்டனர். அந்தக் கடலில் மீன்பிடித்து வாழ்ந்த வகையில் நான்கு சீடர்கள் திடீர் சூறைக்காற்றையும் புயலையும் பலமுறை எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால், கடவுளின் அதிகாரத்தில் இயங்கும் இயற்கையை எதிர்த்து சாமானிய மனிதர்களால் என்ன செய்துவிட முடியும். எதிர் காற்று கடும் சூறைக்காற்றாக மாறி வீசியதால், துடுப்புகளை வலிக்க அவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்று மாற்கு எழுதியிருக்கிறார்.

 

மந்தமான இதயம்

அப்போது சூறைக்காற்று புயல்போல் வீசியதால் படகைச் செலுத்த முடியாமல் சீடர்கள் திணறினார்கள்; இயேசு அதைத் தன் மனக்கண்ணால் கண்டு, சுமார் நான்காம் யாமத்தில் கடல்மேல் நடந்து அவர்களை நோக்கி வந்தார்; ஆனால், அவர்களைக் கடந்துபோவதுபோல் போனார். அவர் கடல்மேல் நடந்து வருவதை அவர்கள் பார்த்தபோது, “ஏதோ மாய உருவம்!” என்று நினைத்து அலறினார்கள். எல்லாருமே அவரைப் பார்த்துக் கலக்கமடைந்தார்கள். உடனே அவர், “தைரியமாக இருங்கள், நான்தான், பயப்படாதீர்கள்”என்று சொன்னார். பின்பு அவர்களுடன் படகில் ஏறினார், அப்போது காற்று அடங்கியது. அதைப் பார்த்து அவர்கள் மிகவும் பிரமித்தார்கள். ரொட்டிகளை வரவழைத்தவரால் இந்த அற்புதத்தையும் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாதபடி அவர்களுடைய இதயம் மந்தமாகவே இருந்தது (மாற்கு 6:48-52).

 

அமைதியாக இரு!

இயேசு கடலில் நடந்துவந்து சீடர்களின் கலக்கத்தைப் போக்கிய சம்பவத்துக்கு முன்னர் கலிலேயா கடல் பட்டணத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்ததை மாற்குவே பதிவு செய்திருக்கிறார். கடுகு விதை உவமையைக் கூறி பிரசங்கித்த நாளில் மாலையில் இயேசு தன் சீடர்களோடு கப்பர்நகூம் நகரத்துக்குப் படகில் பயணித்துக்கொண்டிருக்கிறார். அவரது படகைப் பின்தொடர்ந்து வேறு சில படகுகளும் வந்துகொண்டிருந்தன. அப்போது பயங்கரமான புயற்காற்று வீச ஆரம்பித்தது; படகு கிட்டத்தட்ட மூழ்கும் நிலையில் இருந்தது.

ஆனால், அவர் படகின் பின்புறத்தில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அதனால், அவர்கள் அவரை எழுப்பி, “போதகரே, நாம் சாகப்போகிறோம்! உங்களுக்குக் கவலையே இல்லையா?” என்று பதற்றமும் பரிதவிப்புமாகக் கேட்டார்கள். அப்போது, அவர் எழுந்து காற்றை அதட்டினார்; கடலைப் பார்த்து, “ஆழியே அமைதியாக இரு!” என்று சொன்னார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டானது. அதன் பின்பு, “ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள், இன்னும் உங்களுக்கு விசுவாசம் வரவில்லையா?” என்று அவர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் பீதியடைந்து, “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும்கூட இவருக்கு அடங்கிவிடுகின்றனவே!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

 

வாழ்க்கையில் வீசும் புயல்

இயேசுவின் காலத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட இப்பேர்பட்ட அற்புதமான அருள் அடையாளங்களைப் பார்க்கும் வாய்ப்பு இன்று நமக்குக் கிடைப்பதில்லை. இன்று மிகவும் ஆபத்தான காலத்தில் வாழ்ந்துவரும் சாமானிய மனிதர்களாகிய நாம் இயற்கைச் சீற்றங்களை எதிர்த்துப் போராட முடியாமல் துவண்டுபோகிறோம். அவ்வளவு ஏன், நம் சொந்த வாழ்க்கையில் இழப்பு, பிரிவு, வேதனை, நோய் எனும் புயல்கள் அடித்துவிட்டால் துவண்டுபோய்விடுகிறோம். ஆனால் இந்தப் புயலை எதிர்கொள்ள இயேசு நமக்குக் கற்றுத்தந்திருக்கிறார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” என்கிறார். புயலுக்கு நடுவிலும் பயணிக்க முடியும் விசுவாசம் வை, பதற்றமடையாதே என்கிறார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article23599971.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மீகமான தொடர்.....தொடருங்கள்.....!   tw_blush:

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள்: அழியாத உணவுக்கு உழையுங்கள்

 

 
bible

ஆன்மிகப் பசிக்கு உணவளித்தவர் மட்டுமல்ல; தன்னையே உணவாகவும் கொடுத்த முன்மாதிரியே இயேசு. அவர் இந்த பூமியில் மனிதனாக வாழ்ந்த காலத்தில் தன்னைப் பின்பற்றி வந்த மக்களுக்கு தொடர்ந்து ஆன்மிக உணவளித்தார். ஒருமுறை அவர் தன்னை நாடி வந்த மக்களை நோக்கி, “ உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்.

உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!” என்று கூறினார். ஆன்மிகப் பசி என்ன என்பதுபற்றி அந்த மக்கள் புரிந்துகொள்ளவில்லை.

 

பெத்சாயிதா கிராமத்தில்

அது கி.பி. 32-ம் ஆண்டு. யூதர்களின் பாஸ்கா பண்டிகைக்குச் சற்றுமுன் இயேசு நிகழ்த்திய அற்புதம் இது.(மத்தேயு 14:14-21) கலிலேயா கடலுக்கு வடக்கேயுள்ள பெத்சாயிதா என்ற கிராமத்தில் இயேசு தன் சீடர்களோடு தங்கியிருந்தபோது நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் குடும்பம் குடும்பமாக இயேசுவின் போதனையைக் கேட்க குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என ஐயாயிரம்பேர் திரண்டுவிட்டனர். இயேசுவின் போதனைகளில் மூழ்கியிருந்த மக்கள் நேரம் போனதை உணரவில்லை.

சூரியன் மறைய ஆயத்தமாகிக்கொண்டிருந்த நேரத்தில் சீடர்கள் இயேசுவிடம் வந்து “கூட்டத்தாரை அனுப்பிவிடுங்கள். கிராமங்களுக்குப் போய் அவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடட்டும்”என்று சொல்கிறார்கள். ஆனால் இயேசு, “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்”என்கிறார். அதைக் கேட்ட சீடர்கள் பயந்துபோய், “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் இருக்கின்றன” என்பதை அவரிடம் சொன்னார்கள்.

 

சிலரைக் கொண்டு பலருக்கு

ஆனால், இயேசு அஞ்சவில்லை. தன்னை நம்பி வந்த மக்களின்மேல் இரக்கப்பட்ட இயேசு, தம் சீடர்களிடம் சொல்லி பசும்புல் தரையில் வரிசையாக மக்களை உட்கார வைக்கிறார். பின்னர் அந்த ஐந்து அப்பத்தையும் மீன் துண்டுகளையும் வானை நோக்கி உயர்த்திப் பிடித்து தன் தந்தையை நோக்கி ஜெபம் செய்துவிட்டு ரொட்டியைப் பிட்டு, மீன்களைப் பங்கிடுகிறார். பிறகு, அந்த உணவை மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடர்களிடம் கொடுக்கிறார். தன் சீடர்கள் சிலரே எனினும் அவர்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவை அளிக்கிறார். அனைவரும் திருப்தியாகச் சாப்பிட்ட பிறகும் ஏராளமான உணவு மீந்திருந்தது.

 

இயேசுவைத் தேடிய மக்கள்

இப்போது யோவான் எழுதிய நற்செய்திப் புத்தகத்தில் ஆறாம் அத்தியாயத்தில் வசனங்கள் 22 முதல் 29 வரையில் வாசித்துப் பாருங்கள். “இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களேயன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.

அப்போது, இயேசு கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்துக்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடி அக்கரையில் இருந்த கப்பர்நாகூம் என்ற நகரத்துக்குச் சென்றனர்.

அங்கே கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நீங்கள் வரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில், தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்றார்.

 

இயேசுவின் கவலையும் வருத்தமும்

தங்கள் வயிற்றுக்காக உணவைத் தேடி அலைகிற மக்கள் கூட்டத்தைப் பார்த்து, இயேசு பரிதாபப்படுகிறார். அவர்கள் பசியால் இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, பெரும் மக்கள் திரளுக்கு உணவளித்த தனது அற்புதத்தின் பொருளை அறிந்து கொள்ளாமல், வெறுமனே பசியாற்றுவதற்காகத் தன்னைத் தேடி வருகிறார்களே என்ற கவலையும் ஆதங்கமும்தான்.

இயேசுவின் நோக்கம் உடற்பசியை ஆற்றுவது மட்டுமல்ல, மக்களின் ஆன்மிகப் பசியைப் போக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆன்மிகப் பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும்தான், தணிக்க முடியும். அதை அறிந்துகொள்ளாமல் மக்கள் இருக்கிறார்களே என்பதுதான் இயேசுவின் வருத்தத்துக்கான காரணம்.

http://tamil.thehindu.com/society/spirituality/article23757318.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள்: இறைவனின் ஆட்சியை உணருங்கள்

 

 
10chsrschrist111

பக்தியில் முற்றிப்போனவர்களுக்குக்கூட ஒருநாள் இந்தச் சந்தேகம் தோன்றும்! கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதுதான் அந்தச் சந்தேகம். இன்னும் சிலர் வாழ்நாள் முழுவதும் கடவுளைக் கண்டுவிட முடியாதா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பார்கள். கடவுள் இருக்கிறார் என்றால் எங்கே இருக்கிறார்? உண்மையிலேயே அவர் இருக்கிறார் என்பதற்கு இந்த உலகில் காணப்படும் தீர்க்கமான ஆதாரங்கள் என்ன என்றெல்லாம் தேடிக்கொண்டிருப்பார்கள். கடவுள் பற்றி சந்தேகம் மனித உள்ளத்தில் எழக்கூடியது இயல்பானதுதான். ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதும் காரணங்களை, விளக்கங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

 

 

சீடரின் சந்தேகம்

பரலோகத் தந்தை தந்த பத்துக் கட்டளைகளை மீறாமல் வாழும் வழிமுறைகளை மக்களுக்குப் போதனையாக வழங்கினார். அவர் அரும்பெரும் அற்புதச் செயல்கள் பலவும் புரிந்தார். அவருடைய சொற்களும் செயல்களும் கடவுளின் மாட்சியையும் இந்த உலகத்தின் மீதான அவரது ஆட்சியையும் மக்களுக்கு எடுத்துக்காட்டின. அப்படியிருந்தும் இயேசுவோடுகூட இருந்து அவரைப் பின்தொடர்ந்து சென்ற சீடர்கள் இயேசுவின் போதனைகளை நேரடியாகக் கேட்டார்கள். அவர் புரிந்த அற்புதச் செயல்களை அருகிலிருந்து கண்ணாரக் கண்டார்கள். எனவே, அவர்கள் இயேசு யார் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், சீடர்கள் சிலர் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அவருடைய முதன்மையான சீடர்களில் ஒருவரான பிலிப்புவின் கூற்று வெளிப்படுத்துகிறது. அவர் இயேசுவைப் பார்த்து “ கடவுளாகிய தந்தையை எங்களுக்குக் காட்டும்” என்று கேட்டார்.

 

தந்தையை அடையும் வழி

புனித யோவான் எழுதிய நற்செய்திப் புத்தகம் அதிகாரம் 14-ல் 6 முதல்14 வரையிலான வசனங்களை வாசித்தால் பிலிப்புவுக்கு இயேசு எடுத்துகாட்டிய உண்மை புலப்பட்டுவிடும்.

அக்காலத்தில் தோமாவை நோக்கி இயேசு கூறியது: “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்” என்றார். அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு இப்போது பிலிப்பை நோக்கி: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உன்னோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பதே ஆகும். அப்படியிருக்க, தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று கேட்கிறாயே..? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை.

என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில், நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்” என்றார்.

 

நம்பிக்கையே அஸ்திவாரம்

கடவுளாகிய தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவை பிலிப்பு புரிந்துகொள்ளவில்லை. தந்தை வேறு, இயேசு வேறு என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால், பிலிப்புவின் தவறான பார்வையை இயேசு திருத்தினார். தந்தையால் அனுப்பப்பட்டு இயேசு இவ்வுலகுக்கு வந்தவர்; இந்த உண்மை மனித அறிவுக்கு எட்டாததாகத் தெரியலாம். ஆனால், இயேசுவின் சொற்களைக் கேட்டு, அவரிடத்தில் நம்பிக்கை கொள்வோர் அவர் எடுத்துக்காட்டிய இந்த உண்மையை ஏற்றுக்கொள்வார்கள். இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு நம்பிக்கையே அஸ்திவாரம்.

தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு எந்த அளவு நெருக்கமானது என்றால் “என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்” என இயேசுகூறுகிறார். இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டால் இயேசு நமக்குக் காட்டுகின்ற வழியே கடவுள் நமக்கு அளிக்கின்ற வாழ்வுமுறை என்பதைக் கண்டறிவோம். அப்போது இயேசுவின் தந்தையும் நம் தந்தையுமாகிய கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மைத் தம்மோடு எந்நாளும் நிலைவாழ்வில் பங்குபெறச் செய்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்வோம். இந்த நம்பிக்கை நமக்கு இருப்பதால் இயேசுவின் பெயரால் கேட்பதை அவர் செய்வார் என்னும் உறுதி நமக்கு உண்டு. இத்தகைய உறுதியை நமக்கு அளிப்பவர் இயேசு.

 

நமக்கான பாடம்

இயேசுவிடம் சந்தேகம் எழுப்பிய பிலிப்புவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உண்டு. கடவுளாகிய தந்தையின் மீது கொண்ட ஆர்வத்தின் விளைவாக அவரது மறுவடிவமாகத் தன் அருகிலேயே இருந்த இயேசுவை பிலிப்பு உணரத் தவறிவிட்டார். “அனைத்துக்கும் மேலாக இறையாட்சியைத் தேடுங்கள், மற்ற அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” என்று மொழிந்த இயேசுவின் சொற்கள் இந்த இடத்தில் இன்னும் பொருத்தமானவை. இறையாட்சி என்பது கடவுள் காட்டிய வழியில் வாழ்வது. அப்படி வாழ்ந்தால் பிலிப்பைப் போல் சந்தேகங்கள் நமக்கு எழ வாய்ப்பில்லை.

http://tamil.thehindu.com/society/spirituality/article23825567.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.