Jump to content

மாவிட்டபுரம்(ஜி உமாஜி)


Recommended Posts

நீங்கள் எந்த ஊர்?"

எளிமையான கேள்வி. ஆனால் அவ்வளவு சுலபமாகப் பதில் சொல்ல முடிவதில்லை. எனது ஊர் என்று எதைச்சொல்வது? இப்போது இருக்கும் ஊரையா? அல்லது பிறந்த ஊரையா? அதிகம் அறிந்து வளர்ந்த ஊரையா? வெளிநாடொன்றில் வாழ்பவருக்கு பெரும்பாலும் இத்தகைய சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் சமயத்தில் குழப்பமாகிவிடுகிறது. 

முதல் மழைத்துளி கிளர்த்தும் மண் வாசனையை நுகரும்போதும், பண்டிகை நாளொன்றின் விடியலின்போதும் ஊரின் நினைவுகள் எங்கு சென்றாலும் தொடர்கின்றன. எப்படியோ காற்சட்டைப் பையினுள் ஒட்டிக் கொண்டு வீடுவரும் கடற்கரை மணல் துகள்களைப் போல, எவ்வளவு முயன்றாலும் உதறமுடிவதில்லை. ஒருவகையில் ஊர் என்பது துண்டு துண்டான நினைவுகளாகவே இருக்கிறது. அது ஒரு கோவிலின் நினைவாகவோ, வீட்டின் நினைவாகவோ அல்லது ஒரு மரத்தின் நினைவாகவோகூட இருக்கலாம்.

எங்கள் வீட்டு முற்றத்தில் ஓர் 'விலாட்' மாமரம் நின்றிருந்தது. வளரிளம் பருவத்தில் நன்கு சடைத்திருந்தது. நான் பிறந்த அதே வருஷத்தில் நாட்டப்பட்ட மரம். மிக இனிப்பான பழங்கள். அந்த மண்ணுக்கேயுரிய பிரத்தியேக குணம். ஊரை விட்டு, எங்கெங்கெல்லாமோ சென்றபோதும் மாம்பழம் சாப்பிடும்போது அப்பாவுக்கு வீட்டு மாமரம் பற்றிய பேச்சு வந்துவிடும். சாப்பிடும் மாம்பழங்களிலெல்லாம் வீட்டு மரத்தின் சுவையைத் தேடிக் கொண்டிருப்பார் போலும். இப்போது பெரிய மரமாக வளர்ந்திருக்கும் என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.

அப்பாவுக்கு வீடு என்பது மரங்கள் சார்ந்தது. இருபது வருடங்கள் கடந்த நிலையில், அப்பா வீடு சென்று பார்த்துவிட்டு வந்திருந்தார். மாமரம் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. நான் சென்று பார்த்தபோது வீட்டு முற்றத்திலிருந்த மாமரத்தைக் காணவில்லை. அப்படியொரு மரம் இருந்ததற்கான எந்த அடையாளமும் இருக்கவில்லை.

மாவிட்டபுரம்! எதை விதைத்தாலும் விளையும் வளமான விவசாய பூமி. சோலையாக இருந்த ஊர். இன்னும் சிதிலமான கட்டடங்களின் எச்சங்களும், பற்றைக் காடுகளுமாக இருக்கிறது. களையிழந்து, வறண்டுபோய் புழுதிக் காற்றும், அனலாக அடிக்கும் வெயிலும், தகிக்கும் மண்ணுமாகக் கிடக்கிறது. இராணுவக் கட்டுப்பாட்டில் இருபது ஆண்டுகளிருந்த ஊர்.

சின்னஞ்சிறு வயதில் ஊரில் இருக்கும்போது அவ்வப்போது முன்னிரவில் பலாலி இராணுவத் தளத்திலிருந்து சும்மா ‘பொழுது போகாமல்’ ஷெல் அடிப்பார்கள். மூன்று ஷெல் எனில் பிரச்சினையில்லை. அதிகமானால் பதில் நடவடிக்கை எடுக்கவேண்டுமல்லவா? “ராசமணியக்கா வீட்ட போவம்” என்பார் அம்மா. அப்போது அப்பா கொழும்பிலிருந்தார். ஏரியா மக்களின் முதற்கட்ட பின்வாங்கல் நடவடிக்கை அது.

ராசமணியக்கா வீடு பலாலி ஆமிக்காரனின் ஷெல் ரேஞ்சுக்குள் வராது என்றில்லை. எங்கள் வீட்டிலிருந்து நாலைந்து காணி தள்ளியிருந்தது. ராசமணியக்கா வீடு பாதுகாப்பு வலயமென்றோ, அங்கே ஷெல் அடிக்க மாட்டோம் என்று இராணுவம் தெரிவித்ததாகவோ தகவலில்லை. ஒருவேளை கீரிமலை வீதியால் ஆமி சுட்டுக்கொண்டு போகலாம் என்பதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடு. அதையும் தாண்டிப் பிரச்சினை பெரிதாகுமென்றால் அடுத்தகட்ட பின்வாங்கல் தளம், கொல்லங்கலட்டிப் பிள்ளையார் கோவில். ஆனால் இது எதையும் பற்றி கவலையேயில்லாமல் ஒரு குறூப் செல் அடிக்க அடிக்க இருட்டுக்குள் டோச் லைட் அடித்து செல் துண்டுகள், ரவுண்ட்ஸ் பொறுக்கிக்கொண்டிருக்கும்.

0enZ-bqIiBM6KscB8djc7TrIloUNNS8XLXLe8fsL

அது ஓர் சிவராத்திரிக்கு முதல்நாள் பின்நேரம். எண்பத்தேழாமாண்டு. வைரவர் கோவிலடிக்கு முன்னாலுள்ள பற்றைக் காட்டுக்குள் புகை வந்துகொண்டிருந்தது. யாரோ அங்கே கூடி நின்று கொண்டிருந்தார்கள். அப்போது ஹெலிக்கொப்டர் தாழ்வாகப் பறந்து வந்தது. “ஹெலி வாறான். இவங்கள் வேற நிக்கிறாங்கள் என்ன நடக்கப்போகுதோ” என்று பதட்டமாகப் பேசிக்கொண்டார்கள். ஹெலி இன்னும் தாழ்வாக வட்டமடித்தது. மெதுவாக நின்று, ஹெலியின் மூக்கு குனிந்து பார்த்த மாதிரியிருந்தது. பிறகு பறந்து போய்விட்டது. மறுநாள் அதிகாலையில் நாங்கள் முதன்முறையாக ஊரைப்பிரிந்து ஓடினோம். மூன்று மாதங்களில் திரும்பிவிட்டோம். பின்பு தொண்ணூறாமான்டிலும் பிரிந்து சென்றோம். இம்முறை நிரந்தரமாகவே பிரிந்துவிட்டோம்.

வைரவர் கோயிலிலுள்ள பெரிய ஆலமரம் அமைதியாக அசைவற்று நின்றுகொண்டிருக்கிறது. சிறுவயதில் தொற்றி ஊஞ்சலாடி மகிழ்ந்த விழுதுகள் மண்தொட்டு வேர்பற்றிப் பருத்து இறுகிப் போயிருந்தன.

கோயிலுக்கு முன்னால் பரந்து விரிந்த பெரும் திடல். தைப்பொங்கலுக்குப் பட்டம் விடுவதற்கான பரந்த வெளி. அதற்கப்பால் சிறுபற்றைக் காடு. பின்னணியில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை. கோயிலின் பக்கத்தில் சுடுகாடு. நடுவில் ஆலமரம். எங்கள் வீட்டு ஒழுங்கை முகப்பில் நின்று பார்க்க, தூரத்தில் பிரமாண்டமாக சடைத்த ஆலமரமும் கோவிலும் இருளடைந்து தெரியும். சமயங்களில் கோயிலில் பொங்கல் நெருப்புப் புகையும், சுடலையின் சுவாலையும் தெரியும்.

இன்றும் கிராமங்களில் இரவில் வைரவர் திரிவது பற்றிக் கதைகள் உண்டல்லவா? ‘சுடலைவைரவர்’ பற்றியும் அப்போது சொல்வார்கள். நடுச்சாமத்தில் சைக்கிளில் தனித்து வரும்போது மனம் பயங்கொள்ளும் நேரத்தில் சற்று முன்னால் ஒரு நாய் ஓடிவந்ததாம் என்று பேசிக் கேட்டதுண்டு. ‘தச்சன்காட்டுச் சந்தியில் இருந்து கீரிமலை, அந்தப்பக்கம் கொல்லங்கலட்டி என இடைப்பட்ட ஒரு ரேஞ்சில ஒராள் கூட வந்தாரெண்டா, அவர் எங்கடையாள் அனுப்பிவிட்ட ஆள்தான்’ என்கிற ரீதியில் பேசிக் கொள்வார்கள்.

அவ்வப்போது ஊருக்குச்செல்லும்போது, புதிதுபுதிதாக அனுபவங்கள், ஊர்ப்புதினங்கள். ஊர் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. திரும்புமா என்றும் தெரியவில்லை. அருகாக காங்கேசன்துறை, தையிட்டி, மயிலிட்டி, வசாவிளான் உட்பட இன்னும் தம் சொந்த மண்ணை ஒருமுறை பார்க்கக்கூட அனுமதிக்கப்படாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அரசபடைகள் வசம் இருக்கின்றன.அவ்வப்போது சிறுபகுதியாக விடுவிக்கிறார்கள். அதைவிடப் படையினர், 'நாங்கள் இதுவரை அனுமதித்த இடங்களிலேயே மக்கள் முழுமையாகக் குடியிருக்கவோ, பராமரிக்கவோ செய்யவில்லையே?' என்று நியாயமாக(?!) கேள்வி கேட்கிறார்களாம். எல்லாமே வளமான மண் கொண்ட விவசாய நிலங்கள். அங்கு செல்ல வேண்டுமென்று இருபத்தேழு வருடங்களாகக் காத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

கீரிமலை வீதியில் வாளித்தொழிற்சாலை ஒன்றிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தபோது 'யாரோ' இரும்பு கழற்றிக்கொண்டிருந்தார்கள். முன்பு உரிமையாளர் அதற்காக வந்தபோது படையினர் அனுமதிக்கவில்லையாம் என்றார்கள். காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலை ஒவ்வொருமுறையும் அளவில் சிறியதாகிக் கொண்டே வருவது போலொரு பிரமை. ‘யாரோ’ இரும்பு கழற்றி விற்கிறார்களாம் என்றார்கள். தவிர, சீமெந்துத் தொழிற்சாலை விரைவில் இயங்கப் போவதாகத் தீவிர நம்பிக்கை தெரிவித்தார்கள் சிலர். இப்படியாக ‘யாரோ’ என்னென்னமோ செய்கிறார்களாம்.

உரிமையாளர்கள் வந்து திருத்தப்படாத வீடுகள், காணிகள் பற்றி அவ்வப்போது இராணுவம் வந்து அக்கறையாக விசாரித்துச் செல்வார்களாம். ‘பார்த்தீனியம்’ போன்ற களைகளை அகற்றுவது தொடர்பாகப் பேசியபோது போலீஸ் தெரிவித்த ஒரு 'யோசனை' முக்கியமானது. 'இதுவரை ஆட்கள் வராத, புலம்பெயர்ந்தவர்களின் காணிகளைத் நாம் பொறுப்பேற்றுத் திருத்தி வைத்திருக்கிறோம். உரிமையாளர்கள் வந்ததும், மீளப் பெறலாம்' என்பதே அது.

அரசபடைகள் இன்றுவரை 'பொறுப்பேற்று' வைத்திருக்கும் காணிகள் பற்றிய அனுபவமே நம் மக்களுக்குப் போதுமானதல்லவா? ஆனால், இராணுவத்தினர் கவலை வேறுமாதிரியானதாம். வெளிநாட்டுக்காரர்கள், சுற்றுலாப் பிரயாணிகள் வீதியால் செல்லும்போது இந்தமாதிரி இருப்பது நன்றாக இல்லை என அபிப்பிராயப்பட்டார்களாம். ஒருமுறை திடீரென வீதியை அண்டியிருந்த கட்டடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்களைச் செப்பனிட்டிருக்கிறார்கள். யாரோ வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வந்திருந்தார்களாம். இப்படியாகத் துப்பாக்கிச் சன்னத்துளைகளுக்கு செப்பனிட்டுவிட்டால், இங்கே போரினால் எந்தப்பாதிப்பும் இடம்பெறவில்லை என நம்பும் யாரோ இருக்கிறார்கள் எனத்தெரிகிறது.

ஒருவகையில், இங்கே பெரிதாக எந்தச்சண்டைகளும் இடம்பெறவில்லை என்பது உண்மைதான். தொண்ணூறாம் ஆண்டில் பலாலியிலிருந்து முன்னேறிய இராணுவம், சில நாட்களில் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. பிறகென்ன செய்வது? வீட்டுக் கூரைகளை, மரங்கள் ஒன்றுவிடாமல் அகற்றியது. கதவுகள், யன்னல்கள், நிலைகளோடு உடைத்தெடுத்தது. நீர்வளத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற நோக்கத்திலோ என்னவோ இருந்த கிணறுகளை எல்லாம் புல்டோசர் கொண்டு மூடியது. எந்தக் காணிக்கும் மதிற்சுவர், எல்லை கிடையாது. அடையாளமே காணமுடியாதவாறு பல வீடுகளை இடித்துத் தள்ளியது. எல்லாமே பின்னர் இராணுவம் பொழுது போகாமல் செய்த 'மக்கள் சேவை'. எங்கள் வீட்டில் சுவாமியறை யன்னலைப் பத்திரமாகப் பெயர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, சுவரில் புதிதாக ஒரு பெரிய கதவு உருவாகியிருந்தது. ஒரு எலக்ரிக்கல் ஸ்விட்ச்சையோ, சிறு வயர்த்துண்டையோ கூட விட்டுவைக்காமல் மிகக் கவனமாகப் பெயர்த்தெடுத்ததில், ஓர் 'இராணுவ ஒழுங்கு' தெரிந்தது.

_1v911LpZaL1l0iUmk1DkUFM-rgw30vjP3b4qHNXமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்! யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கோயில் அடையாளமாகவிருக்கும். கோவில்கள் தொடர்பில் சொல்லப்படுகிற கதைகள் சுவாரசியமானவை. ‘மா’ என்றால் குதிரை. மாருதப்புரவீகவல்லி என்கிற சோழ இளவரசிக்குக் குதிரை முகம் நீங்கப் பெற்றதால் ‘மாவிட்டபுரம்’ எனும் பெயர் வந்ததாம்.

திசையுக்கிர சோழன் என்பவனின் மகளான மாருதப்புரவீகவல்லி தனக்கிருந்த வியாதியைப் போக்க தீர்த்த யாத்திரைகள் மேற்கொண்டிருக்கிறாள். அதன்பிரகாரம் கீரிமலைக்குச் சென்றபோது, அங்கே நகுல முனிவரைத் சந்தித்திருக்கிறாள். நகுல முனிவருக்கு கீரிமுகம் இருந்து குணமாகியிருந்தது. அவரது வழிகாட்டுதலில் தொடர்ந்து சிலகாலம் தீர்த்தமாடி வழிபட, குதிரை முகம் நீங்கி அழகியாகிவிட்டாள். அவள் தங்கியிருந்த கோயிற்கடவை என்கிற குறிச்சிக்கு மாவிட்டபுரம் எனப் பெயரிட்டு, அங்கே இருந்த முருகன் கோவிலை பெரிதாகக் கட்ட ஆரம்பிக்கிறாள். அவள் தந்தை, முருகன் விக்கிரகம் உள்ளிட்ட தேவையான பொருட்களுடன் தில்லை மூவாயிரவருள் ஒருவரைத் தீட்சிதராகவும் அனுப்பிவைத்ததாகச் சொல்லப்படுகிறது. காங்கேயன் என்கிற முருகன் விக்கிரகம் வந்திறங்கிய அந்தத் துறைமுகத்திற்குக் காங்கேசன்துறை எனப்பெயர். இது எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

போர்த்துக்கேயர் காலத்தில் கோவில் இடிக்கப்பட்டது. விக்கிரகங்களை கிணற்றுக்குள் போட்டுப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இப்போதுள்ள கோவில் ஒல்லாந்தர் காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒரு கோட்டைபோல கருங்கல் சுற்றுமதில்களுடன் இருந்த கோவிலை இடித்து அந்தக் கற்களைக் கொண்டுபோய்க் கடற்கோட்டை கட்டியதாகவும் சொல்வோருண்டு. செங்கை ஆழியானின் கதையொன்றிலும் இப்படி எழுதியிருந்தார்.

சிறுவயதில் நான் பார்த்ததிலிருந்து கோவில் நிறைய மாறிவிட்டது. தொண்ணூறாம் ஆண்டில் விமானக் குண்டுவீச்சுக்களால் சிதைவடைந்த கோவில் மண்டபங்கள் சில திருத்தப்பட்டிருக்கின்றன. கோவிலோடு சேர்ந்திருந்த யாத்திரீகர் தங்கும் மடங்கள் இருந்த அடையாளம் இல்லாமல் முற்றாக அகற்றப்பட்டிருக்கின்றன. மீளத் திருத்தும் பணிகளில் பழமையான சிற்பங்கள் நிறைந்த கருங்கல் மண்டபத்தின் வெடிப்படைந்த பகுதிகள் அகற்றப்பட்டு, சீமெந்து கட்டடமாக, புதிய கோவில் போல மாறிவிட்டது. முருகனின் தங்க விக்கிரகம், வெள்ளிக் கொடித்தம்பம் உட்பட பல காணாமல் போய்விட்டதாம். மிகப்பெரிய சப்பரம், தேர்கள் இப்போதில்லை.

கீழ்ப்பீடம் தவிர, மேலே தேர்ச்சீலை போர்த்தப்பட்ட ஐந்து தேர்கள். அதில் பெரியதேர் மட்டும் அரைகுறையாக எஞ்சியிருந்தது - சில வருடங்களுக்கு முன்னர். ஆறுமுகசுவாமி தேரைப் பெரிய தேர் என்பார்கள். மிக நுண்ணிய, அபூர்வமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இருந்த தேர் என்று நம் ஊருக்கு சம்பந்தமில்லாதவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதற்கு மஹோத்ரரதம் என்று பெயராம். அந்தத்தேர் இப்போது உருக்குலைந்து இப்போது ஒன்றுமில்லாமல் போய்விட்டது. கோவிலுக்கு வரும் சிங்களவர்கள் ‘ஞாபகார்த்தமாக’தேர்ச் சிற்பங்களை ஆளுக்கொன்றாகப் பிடுங்கிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட விளைவு என்கிறார்கள்.

தேர்முட்டியோடு சேர்ந்து அருகில் வாசகசாலை. பள்ளிக்குப் போகையில் பார்த்துச் செல்வதோடு சரி. அப்பாவின் இளம்பிராயத்தில் அந்தத் தேரடி வாசகசாலையில்தான் நண்பர்கள் சந்தித்துக்கொள்வது வழக்கமாம். முதன்முறை ஊருக்கு 'வால்வ்' ரேடியோ அங்கேதான் வந்திருந்ததாம். நம் வளரிளம் பருவத்தில் ஊரின் வாசக சாலைகளுக்கும், கோவில்த் தேர்முட்டிகளிலும் தனியான ஓர் இடமுண்டு. அது எனக்கு சொந்த ஊரில் கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல, அரண்மனை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. 'பொன்னியின் செல்வன்' வாசித்தபோது நம்மூர் அரண்மனையும் ஞாபகம் வந்தது.

கீரிமலை வீதியிலிருந்து சக்திவேல் தாத்தா வீட்டுக்குப் பக்கத்தால் செல்லும் ஒழுங்கை, வண்டில்ப்பாதை போலிருக்கும். இருமருங்கும் சிறு பற்றைகளும் மரங்களும் அடர்ந்திருக்கும். அதனூடாகச் செல்கையில் அங்கேசற்றுப் பள்ளமான பகுதி. அங்கேதான் அரசியின் அரண்மனை அமைந்திருந்ததாம். வடவளக்குளம் என்று சொல்வார்கள். அப்பா இளைஞனாக இருந்த காலத்தில் அரண்மனை அத்திவாரத்தின் எச்சங்கள் இருந்ததைப் பார்த்திருக்கிறார். ஒழுங்கைக்கு அருகில் மற்றையபக்கம் ஒரு வேட்டை மண்டபமும் அமைந்திருந்ததாம். முருகன் கீரிமலைக்குத் தீர்த்தமாடச் செல்லும்போது, வந்து தங்கியிருக்கும் இளைப்பாறும் மண்டபமாம் அது. அப்பாவின் சின்னவயதில் அந்த நடைமுறை இருந்து, பின்பு வழக்கொழிந்திருக்கிறது.

நாங்கள் பார்த்தபோது போது மண்டபமில்லை. அரண்மனை இருந்த பகுதிக்குச் சென்றதில்லை. ஆனால் எங்கள் மத்தியிலும் கதைகள் இருந்தன. கீரிமலையில் ஒரு கிருஷ்ணன் கோவிலுண்டு. கீரிமலை, காங்கேசன்துறைக் கடற்கரை வீதியில் கடலோடு ஒட்டி சற்று உயரமான பாறைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்திருந்தது. கோவிலுக்குச் சற்றுத்தள்ளி ஒரு குகை இருக்கிறது என்பார்கள். அந்தக் குகையிலிருந்து ஒரு சுரங்கப்பாதை அரசியின் அரண்மனைவரை போகுமாம். போய்ப்பார்த்த மாதிரியே சொல்வார்கள். அம்புலிமாமாவில் அப்போது ‘கொள்ளைக்கார இளவரசன்’ என்றொரு கதை வந்தது. மந்திரியின் சதியிலிருந்து மன்னன் தீவட்டியைப் பிடித்துக்கொண்டு சுரங்கப்பாதை வழியே தப்பியோடுவான். அதைப்பார்த்து புனைந்த கதையாக இருக்கக்கூடும்.

சிறுவயதில் நான் பார்த்த கோவிலுக்கும், என் அப்பா தன் இளமைக்காலத்தில் பார்த்த கோவிலுக்கும் வித்தியாசங்களிருந்தது. முன்புறம் தேர்முட்டிக்கு எதிராக ஒரு தீர்த்தக் கேணி அமைந்திருந்தது. கோபுர வாசல் அருகாக ஒரு தீர்த்தக் கேணி இருந்தது. பின்பு அதையெல்லாம் மூடிவிட்டார்களாம். வீதியோரம் ஒரு மலையாளத் தேநீர்க் கடையும் இருந்ததாம். கோபுரவாசலின் மற்றைய பக்கம் நந்தவனத்திற்குள் ஒரு டீசல் இயந்திரம் வைத்து கோவில் வளாகம் இரவில் மின்விளக்குகளால் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இது யாழ்ப்பாணத்திற்கு மின்சாரம் வருவதற்கு முன்பே அப்பாவின் நினைவு தெரிந்த காலம் முதலே வழக்கத்திலிருந்ததாம்.

கோவிலில் திருத்தவேலைகள் பலவருடங்களாகத் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. வாழ்ந்துகெட்ட மனிதர் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். வாழ்ந்துகெட்ட ஊர்கள் பல இருக்கின்றன எமது தேசத்தில். கோவில்களும்!

நாம் எப்போதோ பிரிந்து சென்ற, நம் நினைவில் தங்கிவிட்ட ஊரைப் பின்பு ஒருபோதும் காணக்கிடைப்பதில்லை. நம் நினைவில் உறைந்துபோய்க் கிடைக்கும் ஊர் என்பதுநாம் கடைசியாகப் பார்த்த காட்சியின் சட்டகமாகப் பதிந்து போயிருக்கிறது. அதை அப்படியே வைத்துக்கொண்டு அலைகிறோம். நான் இறுதியாக எங்கள் வீட்டைப் பார்த்ததுதான் எங்கள் வீடு.

அப்போதுதான் நிலம்தெளிய ஆரம்பித்திருந்தது. வீட்டு கேற்றடியிலிருந்து உள்ளே பார்த்தபோது நடைபாதையோரமாக ஏராளமாக உதிர்ந்த ரோஜாப்பூக்கள் கொட்டிக்கிடந்தது. ஆங்காங்கே வாழைப்பழத் தோலும்! முற்றத்திலிருந்த விலாட் மாமரம் தலைகொள்ளாமல் பூத்திருந்தது. நாங்கள் வீட்டை விட்டு வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. எங்கள் பகுதியில் இயக்க அக்காக்கள் நிலைகொண்டிருந்ததாகப் பேசிக்கொண்டார்கள். திரும்பிப் போகும்போது, உள்ளே போய்ப் பார்க்கலாம் என்றார் அப்பா. இப்போது நாங்கள் வந்தது கோவில் தேர்த்திருவிழாவுக்காகத்தான். எனக்கு அதுதான் முக்கியமாகப்பட்டது. எங்கள் வீட்டை ‘யாரோ’ போல பார்த்துக்கொண்டிருந்தோம். கடைசியாக எங்கள் வீடு அப்போதுதான் வீடாக இருந்தது.

அன்றைய தேர்த்திருவிழா வழமையானது போலில்லை. கீரிமலை வீதி நெடுகவும் ஏராளமான விசேட பேரூந்துகள் நிறுத்தப்பட்டிருக்கவில்லை. வீதியை நிறைத்திருக்கும் சனக்கூட்டம் இல்லை. களையிழந்த வீடுகள். முன்னெப்போதும் இந்த நேரத்தில் திருவிழாவுக்கு வந்ததில்லை. காலை ஏழு மணிக்கு பெரிய தேர் தெற்கு வீதிக்கு வந்துவிட்டிருக்கும்.கோபுரவாசல் கடந்து வடக்கு வீதிக்குப் போய் தேர் இருப்புக்கு வர, பன்னிரண்டு மணியாகிவிடும். நான்காவதாக இழுக்கப்படும் பெரிய தேரில் ஆறுமுகசுவாமி, மனைவிகள் தவிர, நிறைய அர்ச்சகர்கள், நாதஸ்வரம், தவில் வாசிப்பவர்கள், அர்ச்சகர்ளுக்கு உதவியாக இளைஞர்கள், சிறுவர்கள் என்று ஒரு பெரிய கும்பலே வீற்றிருப்பார்கள். பெரியதேரில் ஏறித் தொங்கிக்கொண்டு போகவேண்டும் என்றொரு திழுவிழாக்கால இலட்சியம் ஒன்று அப்போது வந்துபோகும். விதவிதமான, ஏராளமான காவடிகள் வரும். தேரைப் போலவே கார்த்திகைத் திருவிழா காவடிகளின் திருவிழாவாக இருக்கும்.

ஆறுமுகசுவாமி வாசலூடாக கோவிலுக்குள் நுழைந்தபோது, யாக பூசை நடைபெற்றுக்கொண்டிருந்தது. உள்வீதியில் பிள்ளையாரைக் கும்பிட்டுக்கொண்டு வெளியே வந்து தேர்முட்டியின் படிக்கட்டுகளில் ஏறி நின்றுகொண்டேன். அன்றுதான் குறைவான கூட்டமாக இருந்திருக்க வேண்டும். சுவாமி தேரிலேறுவதை அதற்குமுன்பு ஒரு முறையேனும் பார்க்க முடிந்ததில்லை. பிள்ளையார் முதலில் வந்து தேரிலேறும்போது, தூக்குக்காவடியொன்று வந்ததிருந்தது. ஆறுமுகசுவாமி தேரிலேறுவதை மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும் ஆரவாரத்துக்கிடையில் பெரிய தேர் அசைந்து நகர்ந்தது. கோவிலில் ஐந்து தேர்கள் ஓடிய இறுதி நாளாக அன்றையநாள் இருந்தது.

பாலர் பள்ளியிலிருந்து நாங்கள் உருண்டு புரண்டு விளையாடிய முருகன் கோயிலின் வெண்மணல் வீதியால் வந்து, சந்தி கடந்து கீரிமலை வீதிக்கு இறங்கினேன். முதன்முதல் வீட்டில் நடைபயின்று வெளியுலகத்திற்கான என் சொந்தப் பயணம் ஆரம்பித்தது இந்த வீதியில்தான். அநேகமாக அது ஒரு மாலை வேளையாக இருக்கக்கூடும். முதன்முதல் சைக்கிள் ஓட்டிப் பழகியது, விழுந்து எழுந்தது, புறங்கையில் சிராய்த்துக் கொண்டது இதே வீதியில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தமாலைப் பொழுதில்தான். பள்ளி முடிந்து விளையாடிக் கொண்டே வரும்போது ஒரு சிறு இலந்தைக்காடு. பக்கத்திலேயே புளியமரங்கள். புளியம்பழம் ஆய்ந்து தின்றது, வாத்தியார் வீட்டுக் கொய்யாப்பழம் சாப்பிட்டது, அப்பன் மாமா கடையில் ஐஸ்பழம் குடித்தது, கண்ணாடித் தாத்தாவுடன் கதை பேசியது எல்லாமே இதே வீதியில்தான்.

எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு அங்கமாக திகழ்ந்த, ஒரு சாட்சியாகவே கூட இருந்து பார்த்துக் கொண்டிருந்த, பயணிக்கும் ஒவ்வொருவராலும் பதியப்பட்ட வாழ்வியல் அனுபவங்களைத் தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கின்ற வீதி. தன் ஜீவனை இழந்து, மீண்டும் உயிர் துளிர்க்குமா எனச் சந்தேகம் கொள்ளவைக்கும் அமைதியுடன், மழை பொய்த்துப்போன பூமியின் வற்றிப் போன ஆறுபோல காய்ந்து கிடந்தது.

இந்தவீதியை இயல்பாக, இறுதியாகப் பார்த்த மாலைப்பொழுது அழகானதாயிருந்தது. குளிர்மையான காற்று வீசிக் கொண்டிருந்தது.

dfDpysWx6XxH4VyYdNX3dezhSAzGmuDkUH2Zo3Yjஅன்றைய நாள் ஒரு அசௌகரியமான அமைதியையும், அமைதியின்மையையும் ஒருங்கே கொண்டிருந்தது. நாளை சண்டை தொடங்கிவிடும் என்று பேசிக்கொண்டார்கள். யாரிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல் என்று தெரியவில்லை. சிலர் நம்பினார்கள். சிலர் முழுதாக நம்பவில்லை. அன்று எமக்குப் பாடசாலை அரை நேரத்தோடு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். மதியநேரம், வீதியில் வீட்டு வாயில்களில் கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பா வீட்டுச் சாமான்களை ஏற்றுவதற்கு லான்ட் மாஸ்டருக்குச் சொல்லியிருந்தார். கடந்தமுறை எதையும் எடுத்துக்கொள்ளாமல் அப்படியே ஓடிச்சென்ற அனுபவத்திலிருந்து இந்த முன்னேற்பாடு.

பின்னேரம். அப்பன் மாமா கடையில் ஐஸ்சொக் குடிக்க, என்னுடைய சிறிய சொப்பர் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீதிக்கு இறங்கினேன். வாசலில் லான்ட் மாஸ்டர் வந்து நின்றது. கீரிமலை வீதி. நாலே முக்காலுக்கு சீமெந்து ஆலையின் சங்கு ஒலித்தவுடன் வீடு செல்லும் ஊழியர்களால் மிகப்பரபரப்பாக ஆகிவிடக்கூடிய அந்தச்சாலை அமைதியாக இருந்தது.

திரும்பும்போது மாவிட்டபுரம் சந்தி நோக்கி சென்றேன். வாளி ஃபக்டரி தாண்டியதும், கோபுரம் தோன்றி நெருங்கியது. நெருக்கடியான காங்கேசன்துறை வீதியில் என் சைக்கிள் பயணத்திற்கு அனுமதியிருக்கவில்லை. அத்திக்கந்தையா கடையடியில் சைக்கிளைத் திருப்பினேன்.

கடைக்கு அருகில் ஒரு இராணுவ ட்ரக் வண்டி நின்றிருந்தது. ட்ரக்கின் பின்பகுதியில் மூடிய அரைக்கதவில் அமர்ந்திருந்த டி ஷர்ட் அணிந்த ஆமிக்காரன் கீழே எட்டிப் பார்த்துக் கதைத்துக்கொண்டிருந்தான். கீழே சைக்கிளில் அமர்ந்தபடி, ஒற்றைக்கையால் ட்ரக்கில் கையை ஊன்றியபடி ஒருவர், முன்னால சைக்கிள் பாரில் அமர்ந்தபடி ஒருவர் என இரண்டு இயக்க அண்ணன்மார். மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நாளை ஆரம்பிக்கப்போகும் சண்டை குறித்து அவர்களுக்கும் தெரிந்திருக்கக்கூடும். அது பற்றிய சாயல் ஏதுமில்லாமல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது. ஊரின் அன்றைய மாலைப்பொழுது மிக அழகானதாயிருந்தது!

http://www.4tamilmedia.com/special/yard/9616-2017-12-11-06-03-51

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.