Jump to content

நான்காம் தோட்டா


Recommended Posts

நான்காம் தோட்டா - சிறுகதை

 

 

“பாதுகாப்புடன் வாழ விரும்புபவர்கள், உயிர்வாழவே உரிமையற்றவர்கள்.”

பொக்கை வாய் அவிழ்த்துப் புன்னகை உதிர்த்தார் காந்தி. எதிராளியை வாதிட முடியாமற்செய்யும் புன்னகை; துப்பாக்கியுடன் வரும் ஒருவனை, தயங்கச்செய்யும் புன்னகை.

டெல்லி டி.ஐ.ஜி-யும், காந்தியின் உதவியாளர் கல்யாணமும் பதிலற்று நின்றிருந்தார்கள்.

நேற்று போலீஸ் சூப்பரின்டெண்டென்ட், காந்திக்குப் பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசிச் சென்றிருந்தார். காந்திக்கு அதில் விருப்பமில்லை. இது இரண்டாவது முயற்சி.

ஏற்கெனவே அல்புகர்க் சாலையில் அமைந்துள்ள‌ அந்த‌ பிர்லா இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள‌து. போலீஸ்காரர்கள் சீருடையின்றி ஆங்காங்கே திரிகிறார்கள் என்பதை காந்தி கவனித்தே இருந்தார். சந்தேகத்துக்கு இடம்கொடுக்கும் நபர்களை நிறுத்தி விசாரிக்கிறார்கள். எல்லாம் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் ஏற்பாடு.

p44a_1512466218.jpg

சென்ற வாரம் அங்கு பிரார்த்தனையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பிறகுதான் இந்த‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கை. நல்லவேளையாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை. சுவர் மட்டும் சேதாரம் ஆகியிருந்தது. பஞ்சாபி அகதி ஒருவன், காந்தியின் மீது சினமுற்று அதைச் செய்திருந்தான். போலீஸ், அவனைத் துருவிக் கொண்டிருக்கிறது.

காந்தி சொன்னார், ``அந்தப் பையனைத் துன்புறுத்தக் கூடாது. உண்மையில், நாம் அவன் மீது பரிதாபப்பட வேண்டும். அவன் தவறான வழியில் செலுத்தப் பட்டுவிட்டான், அவ்வளவுதான்.”

``பிர்லா பவனுக்கு வருபவர்களைச் சோதனையிட வேண்டும்’’ என டி.ஐ.ஜி கோரினார்.

``அதைச் செய்வதற்குப் பதில் பிரார்த்தனைக் கூட்டங்களையே நிறுத்திவிடலாமே!”
“…”
``என் வாழ்க்கை கடவுளின் கைகளில் இருக்கிறது. நான் சாக வேண்டும் என்றாகிவிட்டால், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் என்னைக் காப்பாற்ற முடியாது.”

ந்திரா காந்தி விமானநிலையத்தின் 1சி டெர்மினலில் வந்திறங்கியபோது, நீண்ட நாள் பிரிந்திருந்த காதலன்போல் புதுடெல்லிக் குளிர், சபர்மதியை இறுகத் தழுவியது. சென்னையில் விமானம் ஏறிய வேளையில் தோழமை காட்டிய‌ ஸ்லீவ்லெஸ், தற்போது துரோகியாகியிருந்தது. மடித்து வைத்திருந்த‌ ஜெர்கினை அணிந்து கொண்டாள்.

யாரோ ஓர் ஆர்வக்கோளாறு ஆசாமி உச்ச நீதிமன்றத்தில் அளித்த‌ மனு, பத்திரிகைக்காரியான அவளை 1,760 கிமீ தூரம் இழுத்துவந்திருந்தது. காந்தியின் படுகொலையில், கோட்சே தவிர, இன்னொருவன் இருக்கிறான். அதனால் வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஆளின் வாதம். பரந்துவிரிந்த‌ இந்த தேசத்தின் பெரும்பாலான பிரஜைகள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக சபர்மதியின் முதலாளி அதை அத்தனை சுலபமாக விடவில்லை.

`அரசியல்.காம்’ என்ற செய்தி வலைதளம் அது. பிரேக்கிங் நியூஸுக்கு அலையாமல் தரமான கட்டுரைகளையும் நேர்காணல்களையும் வெளியிடுகிறார்கள். ஓராண்டில் கணிசமாக வாசகர்கள் கூட, விளம்பர வருமானம்கொண்டே இயங்க முடிந்தது.

எண்பதுகளின் இறுதியில் அரசியல் செய்திகளுக்கு எனத் தனிப்பத்திரிகை தொடங்கப்பட்டபோது அதில் சேர்ந்து இதழியல் தொழிலில் நுழைந்தவர் அவள் முதலாளி. பிறகு, பல பத்திரிகைகள் மாறி, இப்போது ரிட்டையர்மென்ட் காலத்தில் இந்த வலைதள முயற்சி.

சபர்மதி, விகடன் மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சி பெற்றவள். பி.டெக் ஐடி முடித்துவிட்டு வேலை கிடைக்காம‌ல் இருந்தபோது, இந்தத் தளத்தில் நிருபர் பணியிடம் இருப்பது கேள்விப்பட்டு, விண்ணப்பித்துச் சேர்ந்துவிட்டாள். அது பெரிய நிறுவனம் எல்லாம் அல்ல. அவளைப்போல் இன்னும் மூன்று நிருபர்கள், லே அவுட் ஆர்டிஸ்ட் ஒருவர், கணக்கு வழக்கு பார்க்க ஒருவர், அலுவலக நிர்வாகத்துக்கு ஒரு பெண் என முதலாளியோடு சேர்த்தே மொத்தம் எட்டுப் பேர்தான்.  ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் தேனாம் பேட்டையிலுள்ள குறுக்கு  சந்து ஒன்றில் அலுவலகம் பிடித்திருந்தார்கள்.

ஐந்து இலக்கச் சம்பளம், மாதம் ஒருமுறை பேன்டலூனில் ஆடைகள் வாங்கவும், கிரீன் ட்ரெண்ட்ஸ் போகவும், ஹிக்கின்பாதம்ஸ் வேட்டைக்கும் சபர்மதிக்குப் போதுமானதாக இருந்தது.

``மதி, திஸ் இஸ் கெட்டிங் இன்ட்ரெஸ்டிங். ரொம்ப நாளா இவங்க சொல்லிட்டிருக்கிறதுதான். இப்ப அபெக்ஸ் கோர்ட்ல‌ பெட்டிஷன் போட்டுப் பெருசுபண்றாங்க. காந்தி அசாசினேஷன்ல இன்னொரு ஆளு இருந்தான், அவன் சுட்ட புல்லட்தான் அவரைப் பலிவாங்குச்சுன்னு. இதை விசாரிச்சு ஒரு ஸ்டோரி பண்ணலாம் நீ.”

``செய்றேன் சார். எப்போ வேணும்?”

``அதை நீதான் சொல்லணும்.”

``ஐடி ரெய்ட்ஸ் பத்தி ஆர்ட்டிகிள் பண்ணிட்டிருக்கேன். அது முடிஞ்சதும் தர்றேன்.”

புன்னகைத்தார்.

``மதி, நான் சொல்றது இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம். டெல்லி போய் விசாரிச்சு, தகவல்கள் சேகரிச்சு எழுதணும்.”

சபர்மதிக்கு, சிரிப்பு வந்துவிட்டது. மரியாதைநிமித்தமாக அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ``சார், காந்தி செத்து எழுபது வருஷங்களாச்சு. இப்பப்போய் அங்கே என்ன கேட்கிறது? எங்கன்னு பார்க்கிறது? யாரை விசாரிக்கிறது? அப்ப‌ விசாரிச்சவங்களும், தீர்ப்பு கொடுத்தவங்களும்கூட இப்ப உயிரோடு இருக்கப்போறதில்லை.”

``பத்திரிகையாளன் நினைச்சா எல்லாத்தையும் தோண்டலாம்.”

``போலீஸைவிடவா?”

``நிச்சயமா. காரணம், பத்திரிகைக்காரன்கிட்ட முக்கியமா இருக்கிற ஒரு விஷயம் போலீஸ்காரன்கிட்ட இல்லை. க்யூரியாசிட்டி.”

``ஆனா, இந்த விஷயத்துல இது வெட்டிவேலை சார்.”

``எப்பவாவது நான் சொல்றதைக் கேட்டிருக்கியா நீ?’’

``சேச்சே, அப்படியில்லை சார். இது இன்டர்நெட் யுகம். எல்லாத் தகவல்களும் விரல்நுனியில் வந்து விழுது. அதை வெச்சே கனமான கட்டுரை ஒண்ணு எழுதிட முடியும். ஏற்கெனவே நிறைய செஞ்சுட்டாங்க. நான் புதுசா என்ன கண்டு பிடிக்கப்போறேன்?’’

``காந்தி கொலையைப் பற்றி காந்தியே எழுதியிருக்க முடியாது. அப்படி அவரே எழுதியிருந்தாவேணா, அதை ஆதாரமா எடுக்கலாம். இன்டர்நெட்ல‌ தேடிப் பார்க்கிறியா?”

``சார், டெல்லி போனா மட்டும் என்ன காந்தியேவா என்கிட்ட பேசிட‌ப்போறார்?”

``இந்த ஜெனரேஷனே டெஸ்க்டாப் ஜர்னலிசத்தில் சுகம் கண்டுருச்சு. டேபிள்லயே எல்லாம் முடியணும். ஃபீல்டுல இறங்கவே முடை. நோகாம நுங்கு திங்கணும்.”

சபர்மதி ஏதும் பேசவில்லை. பேசித் தீரும் முரண் எதுவுமில்லை, வளரவே செய்யும்.

``சரி, நாளை காலைக்குள் உன் டெசிஷனைச் சொல்லு. போக வர ஃப்ளைட் டிக்கெட் உண்டு. ஸ்டார் ஹோட்டலில் ரெண்டு நைட்டுக்கு ஸ்டே பண்ண ஏற்பாடு பண்றேன். உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னா ஜோசப்பையோ செந்திலையோ அனுப்புவேன். நீ கொஞ்சம் சென்சிபிள்னு நினைச்சுத்தான் உன்னை இதுக்கு செலெக்ட் பண்ணினேன்.”

சபர்மதிக்கு, உண்மையில் இதில் விருப்பமே இல்லை. அவர் சொல்லும் விஷயங்கள் எல்லாமே இன்று இணையத்தில் அல்லது புத்தகங்களில் தேடி எடுத்துவிடலாம், அல்லது சம்பந்தப்பட்டவர்களைத் தொலைபேசியில், மின்னஞ்சலில், தேவைப்பட்டால் ஸ்கைப்பில்கூடப் பிடித்துக் கேட்டுவிடலாம். இதற்காக‌ ஓர் ஆள் டெல்லி வரை செல்வது சிறுபிள்ளைத்தனம். அந்த நேரத்தில் உருப்படியான வேறு வேலைகள் செய்யலாம்.

எல்லாவற்றுக்குமேல் காந்தி, அவள் அரசியலுக்கு ரொம்ப‌ வேண்டியவரும் அல்லர்.

தாத்தா, சுதந்திரப் போராட்டத் தியாகி (கோவை சூலூர் விமானதளத்துக்குத் தீ வைத்த‌ வழக்கில் பெல்லாரி சிறைக்குச் சென்றவர்) என்பதால், காந்தியின் மீதான அபிமானத்தில் பேத்தி பிறந்தபோது `சபர்மதி’ எனப் பெயரிட்டது தவிர, காந்தியுடன் எந்தப் பிராப்தமுமற்ற அவள் இரவெல்லாம் யோசித்து, சம்மதம் சொன்னாள்.

ஃப்ளைட் டிக்கெட்டும் ஸ்டார் ஹோட்டலும் ஆசை காட்டின என்பது வேறு விஷயம்.

னவரி 30, 1948.

காந்தி, அன்று 3:30 மணிக்கே துயிலெழுந்தார். வழக்கத்தைவிட அது சீக்கிரம்.

சஞ்சலமுற்றவராகக் காணப்பட்டார். பிரிவினையின் ஓலங்கள், உட்கட்சி உரசல்கள் எனக் காரணங்கள் இருந்தன. அசந்து உறங்கிக்கொண்டிருந்த‌ ஆபா தவிர, எல்லோரும் அவசரமாக பிரார்த்தனைக்குத் தயாரானார்கள். பகவத் கீதை ஸ்லோகங்களை மனு வாசித்தாள். பிறகு, தனக்குப் பிடித்த‌ குஜராத்தி பஜன் ஒன்றைப் பாடச் சொன்னார் காந்தி.

``சோர்வடைகிறாயோ இல்லையோ,

ஓ மனிதா! ஓய்வெடுக்காதே, நிறுத்தாதே.

உன் போராட்டத்தை

நீ தனியொருவனாய் நிகழ்த்துகிறாய் எனில், அது தொடரட்டும்…”

மனு கண்கள் மூடி, முதிராமல் கனிந்த தன் பதின்மக் குரலில் பஜனை இசைத்தாள்.

அதன் பிறகு வெந்நீரில் தேனும் எலுமிச்சைச்சாறும் கலந்து காந்திக்குக் கொடுத்தாள். அதுவரையிலும் ஆபா எழுந்திருக்கவில்லை.

காந்தி சொன்னார், ``நெருங்கியவர்கள் மீதான என் செல்வாக்கே சரிந்துவருகிறது. இவற்றை எல்லாம் காண, நெடுங்காலம் கடவுள் என்னை இங்கு விட்டுவைக்க மாட்டார் என நம்புகிறேன்.”

பர்மதி முதலில் போனது, தேசிய காந்தி அருங்காட்சியகத்துக்கு. ராஜ்காட்டிலிருந்து (காந்தி சமாதி) கூப்பிடும் தூரத்தில் இருந்தது. அருங்காட்சியக இயக்குநரைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டபோது காத்திருக்கச் சொன்னார்க‌ள். அது அரசு அலுவலகம் என்பது நினைவு வ‌ர‌, மியூசியத்தைச் சுற்றிப்பார்த்துவிடுவோம் எனக் கிளம்பினாள்.

ராட்டைகள், ஆசிரமங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், காந்தியும் கஸ்தூர்பாவும் பயன்படுத்திய பொருள்கள் எனத் தனித்தனியாகப் பிரித்துக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

காந்தியின் உரைகளை அவர் குரலிலேயே இந்தியில்/ஆங்கிலத்தில் ஒலிக்கும் ஆறு தொலைபேசிகள் இருந்தன. அவற்றில் இரண்டு வேலை செய்யவில்லை என்பதைத் தவிர, அருங்காட்சியகம் முழுவதும் பொதுவான ஒரு நேர்த்தி இருந்தது. காந்தியம்!

`மார்டிர்டம் கேலரி’ என்ற பெயரில் அவரது படுகொலை தொடர்பான விஷயங்களை ஆவணப்படுத்தி யிருந்தார்கள். குருதி தோய்ந்த அவரது வேட்டி, சால்வை, அவரைச் சுட்ட தோட்டா, அவர் அஸ்தியைப் பல‌ இந்திய நதிகளில் கரைக்க எடுத்துச்சென்ற கலசங்கள் ஆகியவை இருந்தன. 9 மி.மீ. விட்டம்கொண்ட அந்தத் தோட்டா, ஒரு நூற்றாண்டின் சிறந்த மனிதனின் உயிரைப் பருகியதற்கான‌ சுவடின்றி சமத்காரம் காட்டியது.

மேலும் காத்திருப்புக்குப் பிறகு வந்த தாட்டியான ஆள் தன்னை `மியூசியம் டைரக்டர்’ என அறிமுகம் செய்துகொண்டார். வாயில் ஏதோ மென்றுகொண்டிருந்தார். எந்த நொடி வேண்டுமானாலும் எதிராளிமீது தெறிக்கலாம் என்பது மாதிரியான குதப்பல்.

சபர்மதி, தான் வந்த வேலையைச் சொன்னாள். நேர்காணல்போல் எடுத்துக்கொண்டு, பிறகு அந்தத் தகவல்களைக் கட்டுரைக்குப் பயன்படுத்திக்கொள்வதாகத் தெரிவித்தாள்.

``காந்தியைச் சுட்ட புல்லட் எல்லாம் இங்கேதான் வெச்சிருக்கீங்க இல்லையா?”

``ஆமா.”

``மொத்தம் எத்தனை?”

``மூணு.”

``ஆனா, இங்கே காட்சிக்கு ஒண்ணுதான் இருக்கு?”

``ஆமா, மீதி ரெண்டை பத்திரப்படுத்தியிருக்கோம். அது மியூசியத்தோட பிராப்பர்ட்டிதான். ஹிஸ்டாரியன்ஸ், உங்கள மாதிரி மீடியா பீப்புள் வந்து கேட்டா காட்டுவோம்.”

``நாலாவது புல்லட்னு ஒண்ணு இல்லவே இல்லையா?”

``எனக்குத் தெரிஞ்சு இல்லை.”

``ஆனா, மனு தன் டைரியில `காந்தியின் உடலைக் குளிப்பாட்ட அவரது வேட்டியைக் களைந்த‌போது, அதிலிருந்து தோட்டா ஒண்ணு விழுந்தது’னு எழுதியிருக்காங்க.”

``அது இந்த மூணுல ஒண்ணுதான்.”

``எப்படி?”

``பிர்லா ஹவுஸ்ல‌ காந்தி சுடப்பட்ட இடத்துக்குப் பின்னால் உள்ள  பூஞ்செடிகளில் போலீஸால் கண்டெடுக்கப்பட்டது முதல் தோட்டா. காந்தியை எரியூட்டிய சாம்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்டது ரெண்டாவது தோட்டா. நீ சொல்ற தோட்டா மூணாவது.”

p44b_1512466240.jpg

``அப்ப நிச்சயமா கோட்சே சுட்டதுலதான் காந்தி செத்தாரா?”

``ரெண்டடி தூரத்துல நின்னு மூணு முறை சுட்டும் 78 வயசுக் கிழவர் சாகலைன்னு நம்புறதே முட்டாள்தனம். மூணும் நெஞ்சைச் சுத்தி மூணு இன்ச் தூரத்துக்குள்ள‌.”

``காந்தியோட பாடியில எத்தனை குண்டுக்காயங்கள் இருந்துச்சு?”

``மொத்தம் அஞ்சு. மூணு காயம், குண்டு பாய்ஞ்சதால. குண்டு வெளியே வந்ததால ரெண்டு. ஒரு குண்டு உள்ளேயே தங்கிடுச்சு. அதுதான் அவர் அஸ்தியில எடுத்தது.”

``பாடியை ஏன் போஸ்ட்மார்ட்டம் செய்யலை?”

``காந்தியின் குடும்பம் அதை விரும்பலை.”

``ஆச்சர்யமா இருக்கு சார்!”

``வேற எதுவும் கேள்வி இருக்கா?”

நன்றி சொல்லி விடைபெற்றாள். அவர் வாய்க்குதப்பலைத் துப்பிய சத்தம் துரத்தியது.

தினப்படி காலை உணவான ஒரு கோப்பை ஆரஞ்சுப்பழச் சாற்றை அருந்திய பிறகு களைப்பில் உறங்கிப்போன‌ காந்தி, தானாக எழுந்து கழிவறை நோக்கி நடந்தார்.

``மிக‌ விநோதம் பாபுஜி!”

``ஏன் மனு?”

``சமீப நாள்களில் நானன்றி தனியாக எங்கும் நீங்கள் நகர்ந்ததேயில்லை.”

``அது நல்லதல்லவா! தாகூர் சொல்லியிருக்கிறார்... `தனியே நட, தனியே நட…’ ”

மனுவுக்கு, முந்தைய நாள் பிற்பகலில் நிகழ்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

பிரிவினையையொட்டிய மதக்கலவரங்களால் வீடிழந்த கிராம மக்கள் சிலர், காந்தியைச் சந்திக்க வந்திருந்தார்கள். காந்தி அவர்களை ஆற்றுப்படுத்தினார். `பழி தீர்ப்போம்!’ என்று சொன்ன ஓர் இளைஞனை அதட்டி அடக்கினார்.

``பழிவாங்கலுக்கு முடிவே இல்லை மகனே. கண்ணுக்குக் கண் என்பது உலகையே குருடாக்கும். ஒருவரது தவற்றுக்கு வேறு யாரையோ தண்டித்தல் என்ன நியாயம்?”

சட்டென வெகுண்ட அந்த இளைஞன் வெடித்துப் பேசினான், ``இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் எங்கள் கைகளைக் கட்டிப்போட்டீர்கள். இப்படித்தான் எங்களை முழுமையாக அழித்தொழித்து விட்டீர்கள். இந்த தேசத்தை, இதன் அரசியலை விட்டுவிட்டு, எங்கேனும் இமயமலைப் பக்கம் போய்விடுங்களேன்.”

உடன் வந்திருந்தவர்கள் அவனை அடக்கி, அமைதிப்படுத்தி அழைத்துப் போனார்கள்.

மனு அந்தச் சொற்களில் அதிர்ந்திருந்தாள். காந்தி நெடுநேரம் பேசாமல் யோசனையில் இருந்தார். அன்று இரவு உறங்கப்போகும் முன் மனுவிடம் காந்தி சொன்னார், ``இவர்களின் அழுகுரல் கடவுளின் ஆணை போன்றது. இது எனக்கான மரண ஓலை!”

``புல்ஷிட்” சொன்ன‌ சௌரப் மிஸ்ரா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியர். நவீன‌ இந்திய வரலாறு அவரது ஆர்வம். முதலாளிக்கு நண்பர் என்ற வகையில் சபர்மதிக்கு நேரம் ஒதுக்கியிருந்தார். வார இறுதி என்பதால், பல்கலைக்கழகத்தில் அல்லாமல் அவரது வீட்டுக்கே வரச் சொல்லியிருந்தார்.

`` `காந்தியைச் சுட்ட துப்பாக்கி `எம்1934 பெரெட்டா.’ செமி ஆட்டோமேட்டிக் மாடல். அதன் சீரியல் நம்பர் 606824. அதே சீரியல் நம்பரில் இன்னொரு துப்பாக்கியும் இருக்கு’ன்னு காந்தி கேஸை ரீஓப்பன் பண்ணக் கேட்கிற ஆள், சுப்ரீம் கோர்ட் மனுவில் சொல்லியிருக்கார். அது பத்திச் சொல்லுங்க” என்ற கேள்விக்குத்தான் அப்படிச் சொன்னார்.

``அது ஒண்ணும் நாட்டுத்துப்பாக்கி இல்லை. இட்டாலியன் மேட். ராணுவத்துக்கு ஆயுதம் செய்றவங்க. சீரியல் நம்பர் டூப்ளிகேட் ஆக வாய்ப்பே இல்லை.”

``அப்புறம் இப்படி ஒரு தியரி எப்படி வந்திருக்கும்?”

``606824 சீரியல் நம்பர்கொண்ட‌ துப்பாக்கி ஒண்ணுதான். காந்தியைச் சுட்ட அன்னிக்கு கோட்சேகிட்ட இருந்து அதை சீஸ் பண்ணினாங்க. விசாரணை முடிஞ்சு தீர்ப்பு வந்ததும் நேஷனல் காந்தி மியூசியத்துக்கு அதைக் குடுத்துட்டாங்க. அங்கே அதுக்கு டூப்ளிகேட் தயார்பண்ணி காட்சிக்கு வெச்சிருக்காங்க. ஒரிஜினலை பத்திரப்படுத்தியிருக்காங்க. அந்த வகையில வேணும்னா ரெண்டு துப்பாக்கின்னு சொல்லலாம்.”

``கோட்சேவுக்கு எப்படி அந்தத் துப்பாக்கி கிடைச்சது?”

``காந்தி கொலைக்கு ரெண்டு நாள் முன்ன வரை, கோட்சே குரூப்புக்குக் கிடைச்ச துப்பாக்கி எதுவுமே சரியா வேலை செய்யலை. அதனாலதான் ஜனவரி 20 அன்னிக்கு, கையில துப்பாக்கி இருந்தும் அவங்களால‌ அவரைக் கொல்ல முடியலை. நல்லதா ஒரு துப்பாக்கி தேடிட்டிருந்தாங்க. தத்தாத்ரேயா பார்ச்சூர்னு ஒரு டாக்டர். குவாலியர்ல ரைட் விங் பாலிட்டிக்ஸ்ல‌ பெரிய கை. அவர்கிட்ட பெரெட்டா துப்பாக்கி இருக்குன்னு கேள்விப்பட்டு, கோட்சே குரூப் அவர் வீட்டுக்குப் போனாங்க. தன் துப்பாக்கியை அவர் கொடுக்கலை. கங்காதர் தண்டவதேன்னு ஒருத்தன்கிட்ட துப்பாக்கி ஏற்பாடு பண்ணச் சொன்னார். கடைசியில் ஜெகதீஷ் பிரசாத் கோயல்னு கள்ளத்துப்பாக்கி வியாபாரி மூலமா இந்த பெரெட்டா கிடைச்சது. ஐந்நூறு ரூபாய் கொடுத்து வாங்கியிருக்காங்க‌.”

``பார்ச்சூர் வெச்சிருந்த‌ பெரெட்டாவுக்கும் காந்தி கொலைக்கும் சம்பந்தமில்லையா?”

``இல்லை. காந்தி கொலைக்கு அப்புறம் பார்ச்சூரை விசாரிக்கப்போன போலீஸ், அவர் வீட்டுல இருந்த பெரெட்டாவைக் கைப்பற்றினாங்க. அதோட சீரியல் நம்பர் 719791.”

``அப்படின்னா நாலாவது தோட்டாங்கிறதே இல்லையா?”

``இருக்கு. குவாலியர்ல‌ பார்ச்சூர் வீட்டுத் தோட்டத்துல‌ சுடப்பட்ட ஒரு தோட்டாவை போலீஸ் எடுத்தாங்க. தண்டவதே, கோட்சேவுக்கு முதலில் வேற துப்பாக்கிதான் ஏற்பாடு செஞ்சு, அதைத் தோட்டத்துல வெச்சுச் சுட்டு டெமோ காட்டியிருக்கான். அடுத்து கோட்சே ட்ரை பண்ணினப்ப, அது ஒழுங்கா சுடலை. அதனாலதான் தண்டவதே துப்பாக்கி தேடி அடுத்து ஜெகதீஷ் பிரசாத் கோயல்கிட்ட போனான்.”

``அதாவது, அந்தத் தோட்டாவுக்கும் காந்தி கொலைக்கும் சம்பந்தம் இல்லை?”

``ஆமா!”

``இன்னொரு விஷயம் நியூஸ்பேப்பர் ஆதாரங்கள். `டைம்ஸ் ஆஃப் இந்தியா’, `The Dawn’, `லோக்சட்டா’ மாதிரியான சில பத்திரிகைகள் `நான்கு குண்டுகள்’னு செய்தி போட்டிருக்காங்க.”

``அதே சமயம் `நியூயார்க் டைம்ஸ்’, `வாஷிங்டன் போஸ்ட்’, `தி டெய்லி டெலகிராப்’ மாதிரி நிறைய பத்திரிகைகள் `மூணு குண்டு’னும் எழுதினாங்க‌. வரலாறுங்கிறது அங்கும் இங்கும் கிறுக்கப்பட்ட சில வரிகளை ஆதாரமா வெச்சு எழுதப்படுறதில்லை.”

``காந்தி படுகொலைக்கு அடுத்த நாள் `தி இந்து’ பத்திரிகை வெளியிட்ட புகைப்படம் ஒண்ணு இருக்கு. அதுல நாலு குண்டுக்காயங்கள் காந்தி நெஞ்சுல தெரியுதே.”

``சரியா பாருங்க. அதுல மூணுதான் குண்டுக்காயம். இன்னொண்ணு ரத்தக்கறை. பக்கத்துல‌ இன்னொரு சின்ன ரத்தக்கறையும் தெரியும். அஞ்சாவது தோட்டாவா?”

``சரி, இத்தாலித் துப்பாக்கி எப்படி இந்தியா வந்துச்சு?”

``அந்த மாடல் முசோலினியோட ஆர்மிக்காக‌ பெரெட்டா கம்பெனி தயாரிச்சது. வடக்கு ஆப்பிரிக்கா அபிசினியாவில் இத்தாலியப் படைகள், பிரிட்டிஷ் படையோட‌ (ஃபோர்த் குவாலியர் இன்ஃபான்ட்ரி) மோதினப்ப தோத்து, சரண்டர் ஆனாங்க. அதுக்கு அடையாளமா இந்தத் துப்பாக்கியை லெஃப்டினன்ட் கர்னல் ஜோஷிகிட்ட‌ குடுத்தாங்க. போர் முடிஞ்சு அவர் குவாலியர் திரும்பினார். அப்படித்தான் துப்பாக்கி இங்கே வந்துச்சு.”

``ஆனா, அது எப்படிக் கள்ள மார்க்கெட்டுக்குப் போச்சு?”

``தெரியலை.”

``தண்டவதேவைப் பிடிச்சு விசாரிச்சாங்களா?”

``அவன் போலீஸில் கடைசிவரை சிக்கவேயில்லை.”

``பார்ச்சூர்?”

“அவர் அப்ப பிரிட்டிஷ் சிட்டிசன். அதனால அவரை ஒண்ணும் பண்ண முடியலை.”

``அப்ப‌ ஜெகதீஷ் பிரசாத் கோயல்?”

``அவனை இந்த கேஸ்ல‌ அக்யூஸ்டாவே போலீஸ் சேர்க்கலை.”

``ஏன்?”

``தெரியாது.”

``அந்த பெரெட்டா துப்பாக்கியில‌ எத்தனை குண்டுகள் போட முடியும்?”

``மொத்தம் ஏழு ரவுண்டு சுடலாம்.”

``கோட்சே துப்பாக்கி வாங்கினபோது எத்தனை குண்டுகள் இருந்துச்சு?”

``முழுக்க லோட் பண்ணித்தான் குடுத்திருக்காங்க. பார்ச்சூர் சாட்சி இருக்கு.”

``கொலைக்குப் பிறகு துப்பாக்கியைக் கைப்பற்றினப்போ?”

``நாலு குண்டு இருந்துச்சு.”

``அப்ப மூணு தடவை சுட்டான்கிற‌ கணக்கு சரியா வருது.”

``ஆமா... எனக்கு அதுல எப்பவும் சந்தேகம் இல்லை.”

``ஸ்பாட்ல கோட்சேகிட்ட இருந்து துப்பாக்கியைக் கைப்பற்றியது யாரு?”

``ஹெர்பெர்ட் டாம் ரீனர்னு யூ.எஸ் எம்பசி அதிகாரி ஒருத்தர்.”

``அவர் வாக்குமூலம் இருக்கா?”

``அவர் இந்த கேஸ்ல விட்னெஸே இல்லை.”

``ஏன்?”

``தெரியலை.”

``இந்த விஷயத்துல சுருக்கமா உங்க ஸ்டேண்ட் என்ன?”

``கபூர் கமிஷன் மூணு வருஷம் உழைச்சுச் சொன்ன முடிவுகளை நம்புறேன்.”

``ஃபைன், கேஸோட எஃப்.ஐ.ஆர், சார்ஜ்ஷீட் எல்லாம் பார்க்கணுமே.”

``துக்ளக் ரோடு போலீஸ் ஸ்டேஷன்லதான் கேஸ் பதிவாச்சு. அங்கே போனா கிடைக்கலாம். ஆனா, அதுல புதுசா என்ன கிடைக்கப்போகுது? ஃபன்னி.”

``தெரியலை. ஆனா, பார்க்கணும். தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்.”

ண்ணாநோன்பின் உப‌ பலனாக‌ காந்திக்கு இருமல் மோசமானது. பென்சிலின் போன்ற மேற்கத்திய வைத்திய முறைகளை அவர் நம்புவதில்லை. அதற்குப் பதிலாக, பனை வெல்லத்துடன் பொடித்த கிராம்பு சேர்த்து எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். அன்று காலை கிராம்புப்பொடி தீர்ந்துபோயிருந்தது. அதனால் மனு அவருடன் காலை நடைக்குச் செல்லாமல் அதைச் செய்யும் வேலையில் ஈடுபட்டாள்.

``இரவு விழும் முன் என்ன நடக்கும் என யாருக்குத் தெரியும் மனு? நான் உயிருடன் இருப்பேனோ என்னவோ! ஒருவேளை இருப்பின், செய்துகொள்ளலாம். இப்போது வா!”

p44c_1512466276.jpg

காந்தியின் சொற்கள் சுட, மனு அவசரமாக வந்து அவரை அணைத்தபடி நடந்தாள்.

பிரிட்டிஷ் காலத்துக் கட்டடம் என்பது, துக்ளக் சாலை காவல் நிலையத்தில் நுழையும்போதே புலப்பட்டது. பியூட்டி பார்லரிலிருந்து வெளியே வரும் கிழவிபோல் காலம் ஈந்திருந்த‌ சிதிலங்களை, சமகாலப் பயன்பாட்டுக்குச் சீர்செய்ய முயன்றிருந்தார்கள்.

`இந்திரா காந்தி கொலை வழக்கைக்கூட அங்கேதான் விசாரித்தார்கள்’ என அதன் செஞ்சுவரில் பதிக்கப்பட்ட வெண்கல்லில் பொறிக்கப்பட்ட குறுவரலாறு சொன்னது.

பத்திரிகையாளர் என்று அறிமுகம் செய்துகொண்டவுடன் ``இந்திரா காந்தி பற்றிய ஆவணங்கள் வேண்டுமா? மகாத்மாவுடையதா...’’ என ஆர்வம்காட்டினார் ஸ்டேஷன் ரைட்டர். அது ஒரு குட்டிச் சுற்றுலாத்தலமாக இருந்துவருகிறது எனப் புரிந்தது.

எஃப்.ஐ.ஆர் காப்பி கேட்டாள். 68 என்ற எண் கொண்ட‌ காந்தி படுகொலையின் முதல் தகவல் அறிக்கை, உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது.  உதட்டைப் பிதுக்கியபடி, அதை வாசிக்க‌ ரைட்டரின் உதவியைக் கோரினாள். பிழைகளுடன் மொழிபெயர்க்கப்பட்டிருந்த  எஃப்.ஐ.ஆரை ஆங்கிலத்தில் வாசித்தார் ரைட்டர். 

``… Narayan Vinayak Godse, stepped closer and fired three shots from a pistol at the Mahatma from barely 2/3 feet distance which hit the Mahatma in his stomach and chest and blood started flowing.”

மூன்று முறை சுட்டதாகத்தான் இதிலும் பதிவாகியிருக்கிறது. நிகழ்வை நேரில் கண்ட சாட்சியான‌ நந்த்லால் மேத்தா என்கிற குஜராத்தியின் வாக்குமூலம் அது.

``கோட்சே தவிர அன்னிக்கு காந்தியை வேற யாரும் சுட்டிருக்க வாய்ப்பு உண்டா?”

``அன்னிக்கு பிர்லா ஹவுஸ் பிரேயர்ல‌ முந்நூறு பேருக்குமேல‌ இருந்தாங்க. இன்னொருத்தன் சுட்டுட்டு அவங்களை மீறித் தப்பிச்சுட்டான்கிறதை நம்ப முடியலை.”

``கொலையில் பங்கேற்ற நாராயண் ஆப்தேவும் விஷ்ணு கார்கரேவும் அன்னிக்கு அங்கே வந்துட்டு தப்பிச்சாங்க இல்லையா? பிற்பாடுதானே அவங்களைப் பிடிக்க முடிஞ்சது?”

``இல்லை, அவங்க நேரடியா கொலையில் பங்கேற்கலைதானே? அவங்க கோட்சேகூட வந்தாங்க. அவ்வளவுதான். சுட்டது கோட்சேதான். அவனைப் பிடிச்சுட்டாங்க. அதே மாதிரி இன்னும் ஒருத்தன் சுட்டிருந்தா அவனையும் பிடிச்சிருப்பாங்கனு சொல்றேன்.”

``கோட்சேவைப் பிடிச்சது யாரு?”

``ரகு நாயக்னு பிர்லா ஹவுஸ்ல‌ தோட்டக்காரனா இருந்தவன்.”

``அவனைப் பத்தி கூடுதல் தகவல் ஏதும் இருக்கா?”

``அவன்தான் காந்தியின் அறையைப் பராமரிச்சு வந்தவன். காந்திக்கு ஆட்டுப்பால் குடுத்துட்டிருந்ததும் அவன்தான். அதுக்குமேல வேற‌ ஏதும் தகவல் இல்லை.”

``இப்ப உயிரோடு இருக்கானா?”

``இல்லை, செத்துட்டான். 1983-லேயே.”

``காந்தியோட பாடிகார்டுனு யாருமே இல்லையா?”

``இருந்தார். ஏ.என்.பாட்டியானு ஒரு போலீஸ்காரர் மஃப்டியில் எப்பவும் காந்திகூடவே இருந்தார். ஜனவரி 20 குண்டுவெடிப்புக்குப் பிறகு எடுத்த நடவடிக்கை இது.”

``அவரை மீறியா கோட்சே சுட்டான்?”

``இல்லை. அன்னிக்கு அவர் அங்கே இல்லை. வேற இடத்தில் டியூட்டி.”

``ஏன் அப்படி... யார் இதை முடிவெடுத்தது?”

``தெரியாது.”

``ஒரு முக்கியமான கேஸ்ல நிறைய `தெரியாது’ இருக்குதே!”

ரைட்டர் மண்டையைச் சொறிந்தார். அவருடைய எல்லை அவ்வளவுதான்.

``காந்தி சடலத்தின் வேட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குண்டு பத்திச் சொல்லுங்க‌.”

``காந்தியின் கடைசி மகன் தேவ்தாஸ் காந்திதான் இங்கே வந்து அந்த மூணாவது புல்லட்டைக் கொடுத்தார். மனு அதை அவர்கிட்ட கொடுத்திருக்காங்க‌.”

``இங்கேன்னா இந்த ஸ்டேஷனா?”

``ஆமா. அப்ப கோட்சேவை அரெஸ்ட் பண்ணி துக்ளக் ரோடு ஸ்டேஷன்ல‌தான் வெச்சிருந்தாங்க. தேவ்தாஸ் வந்தப்போ அவரைப் பார்க்கணும்னு கலாட்டா பண்ணியிருக்கான் கோட்சே. ஆனா, போலீஸ் விடலை. என்ன பேச நினைச்சானோ!”

கேஸ் சார்ஜ்ஷீட் பார்க்க வேண்டும் எனக் கேட்டபோது, எல்லாக் கோப்புகளையும் தேசிய ஆவணக்காப்பகத்தில் முன்பே ஒப்படைத்துவிட்டதாகச் சொன்னார்கள்.

தியம் `லைஃப்’ சஞ்சிகையின் பிரபல  புகைப்படக் கலைஞரான மார்க்கரெட் வைட் காந்தியை நேர்காணல் செய்ய வந்திருந்தார்.

``நீங்கள் 125 வயது வரை வாழ்வேன் என‌ எப்போதும் சொல்லி வந்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையைத் தருவது எது?”

``அந்த நம்பிக்கை இப்போது இல்லை.”

``ஏன்?”

``உலகின் பயங்கர நிகழ்வுகளைக் காண்கையில், இந்த இருளில் வாழ விரும்பவில்லை.”

ன்பத் மற்றும் ராஜ்பத் சாலைகள் இணையும் புள்ளியில், நேஷனல் ஆர்க்கைவ்ஸ் ஆஃப் இந்தியா அமைந்திருந்தது. காந்தி கொலை வழக்கு தொடர்பான சில அரசு ஆவணங்களை அங்கே பார்த்தாள் சபர்மதி. டெல்லி போலீஸ் வழக்கு விசாரணையை முடித்தபிறகு எழுதிய‌ ஃபைனல் சார்ஜ்ஷீட்டைக் கேட்டாள். அடுத்து ``கோட்சேவுக்குத் தூக்குத்தண்டனை வழங்கிய வடக்கு டெல்லி செங்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவைப் பார்க்க வேண்டும்’’ எனக் கேட்டாள். இரண்டுமே அங்கே இல்லை.

அங்கே பொறுப்பிலிருந்த அழகான, ஆனால் மீசையற்ற‌ இளைஞனிடம் கேட்டாள், ``அப்ப‌ இரண்டாம் துப்பாக்கி, நான்காம் தோட்டா இதெல்லாமே பொய்தானா?”

``எல்லாம் கற்பனை. அப்படியெல்லாம் சொல்வதன் பின்னால் தனிமனித கவன ஈர்ப்போ, அரசியல் உள்நோக்கங்களோதான் இருக்கின்றன. பட், ப்ளீஸ் டோன்ட் க்வோட் மீ.”

முந்தைய தினம் நிகழ்ந்த சம்பவம் ஒன்று, மனுவின் மனதில் ஓடியது. இந்திரா, தன் நான்கு வயது மகன் ராஜீவுடன் காந்தியைப் பார்க்க வந்தார். கொணர்ந்த மலர்களை காந்தியின் கால்களில் வைத்தான் சிறுவன். தீன்மூர்த்தி பவனின் நந்த‌வனத்தில் அவனே பறித்துச் சேகரித்தது.

காந்தி அவனை அள்ளி மடியில் அமர்த்திக்கொண்டு, ``நீ இதைச் செய்யக் கூடாது. இறந்தவர்களின் கால்களில்தான் ஒருவர் பூ வைப்பார்.”

றைக்குத் திரும்பியபோது சபர்மதி மிகவும் களைத்திருந்தாள். தலை, ஒருபுறமாக வலித்தது. மிதமான சூட்டில் நீர் வழியவிட்டு நெடுநேரம் ஜக்கூஸியில் கிடந்தாள். மதிய உணவுக்குப் பிறகு ஹோட்டலை செக் அவுட் செய்தாள். இரவு 10 மணிக்குத்தான் ஃப்ளைட். அதுவரை என்ன செய்வது என யோசித்தபோது, காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட‌ இடத்தைப் பார்க்கவே இல்லை என்று உறைத்தது.

மாலை, வல்லபபாய் படேல் தன் மகள் மணியுடன் காந்தியைச் சந்திக்க வந்தார். அரசில் நேருவுக்கும் அவருக்குமான முரண்கள் முற்றியிருந்தன. 5 மணிக்கு சந்திப்பு முடிந்து படேல் கிளம்பவேண்டியது. ஆனால் 5:10 ஆகியும் உரையாடல் நீடித்தது.

பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என்பதை ஆபா சைகையில் காட்டியதைக் காந்தி கவனிக்கவில்லை. மனு, மணியிடம் கண்கள் காட்டி `தாமதமாகிவிட்டது’ என்றாள். புரிந்துகொண்ட மணி, படேலிடம் அதைக் கிசுகிசுக்க‌, அவர் விடை பெற்றெழுந்தார்.

காந்தியைச் சந்திக்க, கதியவாரிலிருந்து முக்கியத் தலைவர்களான யூ.என்.தேபரும் ராசிக்லால் பரேக்கும் காத்திருந்தனர். மனு, அதை காந்திக்குத் தெரியப்படுத்தினாள்.

``பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பிறகு பார்க்கிறேன் என அவர்களிடம் சொல். அதுவும் நான் உயிரோடு இருந்தால்…”

மனுவுக்குத் திக்கென்றது. இரும்பு மனிதரான படேலே அந்தச் சொற்களில் ஆடிப்போனார்.

டெல்லியின் பெண்மைமிக்க குளிர், செந்தரையில் பரவிப் பிரதிபலித்து, பாதங்களில் சில்லிட்டது. காந்தி இறுதியாக நடந்த பாதையில் பாத அடையாளங்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். பரதன் வாங்கிச் சென்ற ராமனின் பாதரட்சைபோல் அவை ஒவ்வொன்றும் காட்சியளித்தது. சபர்மதி அதை அடியொற்றி நடந்து சிலிர்த்தாள்.

பிர்லா ஹவுஸ் `காந்தி ஸ்ம்ரிதி’ ஆகிவிட்டது. அந்தச் சாலையின் பெயரே இப்போது `தீஸ் ஜனவரி மார்க்’தான். தோட்டத்தில் காந்தி சுடப்பட்ட‌ இட‌த்தில் சிறு மண்டபம் எழுப்பியிருந்தார்கள். அந்த‌ ஞாயிறு மாலையிலும் அங்கே கூட்டமே இல்லை. சென்னை காந்தி மண்டபம்போல் ஆகாத வரை சந்தோஷம்தான் என எண்ணிக் கொண்டாள்.

முக்கால் காற்சட்டை அணிந்து தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த‌வ‌ர், `காலணியைக் கழற்றிவிட்டுப் போ’ என்று சைகையால் சொன்னார். தன் முகத்தைப் பார்த்து இந்தி தெரியாதவள் என்று தீர்மானித்திருக்க வேண்டும். செருப்பைப் பிரிந்து நடந்தாள்.

மண்டபத்தின் முன் ஒரு மூதாட்டி மண்டியிட்டுக் கண்கள் மூடியிருந்தாள். அழுதுகொண்டிருக் கிறாளோ எனத் தோன்றியது. எப்படியும் எண்பது வயதிருக்கும். அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், மெள்ள அடி எடுத்து வைத்து மண்டபத்தைச் சுற்றி வந்தாள். சற்று நேரம் நின்று பார்த்தாள். கிழவி கண் திறப்பதாகத் தெரியவில்லை.

பொறுமையிழந்து நகர எத்தனித்தபோது, ``எனக்காகக் காத்திருக்கிறாயா பெண்ணே?”

திடுக்கிட்ட சபர்மதி சன்னமாகச் சங்கடப்பட்டாள். இன்னும் அவள் கண் திறக்கவில்லை.

``இல்ல… சும்மாதான்…”

இப்போது கண் திறந்து இவள் பக்கம் திரும்பிப் புன்னகைத்தாள், எழுந்துகொண்டாள்.

``குடும்பத்துடன் டெல்லிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ராஜ்காட்டுக்குச் செல்வார்கள். ஐம்பது ரூபாய் குடுத்து இன்ஸ்டன்ட் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். இந்தப் பக்கம் வர மாட்டார்கள். என்போல் முதியவர்கள்தான் வருவார்கள். காந்தி பக்தர்கள், வினோபா பாவேவால் ஈர்க்கப்பட்டவர்கள், காந்தியைவிட முரட்டு காந்தியரான மொரார்ஜி தேசாயைப் பிடித்தவர்கள் என. இளைஞர்கள் வருவது அபூர்வம். சில சமயம், பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து மாணவர்களைக் கட்டாயமாக அழைத்து வருவார்கள். டெல்லி டூரிஸத்தின் பட்டியலிலும் இது பிரதானம் அல்ல. காந்தி கொல்லப்பட்ட இடம் மதவாதம் வென்றதன் குறியீடு என்றோ, மதத் தீவிரவாதம் வெளிப்பட்டதன் சாட்சி என்றோ எண்ணி அரசுகள் மாறி மாறி மறைக்கின்றனவோ!’’

``நான் ஒரு ஜர்னலிஸ்ட். வேலை நிமித்தமாக இங்கே வந்தேன்.”

``அதுதானே பார்த்தேன்!”

நிச்சயம் அதில் ஏளனம் இருந்தது. ஆனால், மறுத்து என்ன பேச எனத் தெரியவில்லை.

``இஃப் யூ டோன்ட் மைண்ட், என்ன வேலைன்னு தெரிஞ்சுக்கலாமா?”

கிழவி  த‌ன் வேலையையும் ஏளனம் செய்வாளோ என அசூயை தோன்றினாலும் இவளிடம் நமக்கான‌ தகவல் ஏதேனும் தேறுமோ என்ற நப்பாசையும் எழுந்தது.

``காந்தி கொலையில் இரண்டாவதாக ஓர் ஆள் இருக்கிறான் என்கிறார்கள். அவன் சுட்ட தோட்டாதான் அவர் உயிரைக் குடித்ததாம். அதை விசாரித்து எழுத வந்தேன்.”

வாய்விட்டுச் சிரித்தாள் கிழவி, ``நாம் இங்கே சந்திக்க நேர்ந்தது ஆச்சர்யம்தான்.”

``ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

``காந்தி சுடப்பட்டபோது நான் இங்கேதான் இருந்தேன். பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒருத்தியாக என் தந்தையின் தோளின் மீதேறி நின்றிருந்தேன். அப்போது எனக்கு ஐந்து வயது. என் தந்தை அப்போதெல்லாம் வாரம் ஒருமுறையேனும் இங்கே பிரார்த்தனைக்கு வந்துவிடுவார். காந்தியைப் பார்க்க‌, அவர் பேசுவதைக் கேட்க.”

`கிழவி பொய் சொல்கிறாளோ’ என முளைத்த சந்தேகத்தை மீறி சபர்மதி பரபரத்தாள்.

``என் தேடலுக்கு உங்ககிட்ட ஏதேனும் தகவல் இருக்கா?”

``மூன்று குண்டுகள் சுடப்பட்டதாகத்தான் என் ஞாபகம். நினைவில் பதிந்திருப்பதைவிட வரலாற்றில் எழுதப்பட்டவற்றைப் படித்துப் படித்து, அவையே பதிந்துவிட்டன.”

``இறக்கும்போது காந்தி `ஹே ராம்’னு சொன்னாரா?”

``அப்போது ஒரே கூச்சல், குழப்பம், களேபரம். ஒன்றுமே தெளிவில்லை. அப்போது நான் சின்னப்பெண் வேறயா. பயந்துபோனேன். அதனால சரியா சொல்ல முடியலை.”

ஏமாற்றமாகக் கிழவியைப் பார்த்தாள் சபர்மதி.

``ஆனா ஒரு விஷயம், அவர் விரும்பினதுபோலத்தான் அவரோட சாவு இருந்துச்சு.”

``எப்படிச் சொல்கிறீர்கள்?”

``இறப்பதற்கு ரெண்டு நாள் முன் பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் அதைப் பேசினார். `நான் நோய் வந்து இறந்தால், நீங்கள் வீட்டுக்கூரை மீதேறி நான் ஒரு பொய்யான மகாத்மா எனச் சொல்ல வேண்டும். அப்போதுதான் என் ஆன்மா எங்கு இருந்தாலும் அமைதியடையும். ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்து அல்லது ஒருவரால் சுடப்பட்டு வெற்று மார்பில் தோட்டாக்கள் வாங்கி, ராமனின் பெயரை உச்சரித்தபடி மரணித்தால்தான் நீங்கள் என்னை ஓர் உண்மையான மகாத்மா என்று சொல்ல வேண்டும்.’
``…”
``அவர் மகாத்மா ஆக விரும்பினார் என்றுதான் தோன்றுகிறது. அதனால் உள்ளூர இப்படியான ஒரு மரணத்தையே எதிர்பார்த்திருந்தார். அதற்காக‌க் காத்திருந்தார்.”

திடுக்கிட்டாள் சபர்மதி. திரும்பும் வழியெங்கும் திரும்பத் திரும்ப அந்தச் சொற்களையே யோசித்துக்கொண்டிருந்தாள். டெல்லி வந்த வேலை முடிந்ததுபோல் தோன்றியது.

டேல் கிளம்பியதும் கழிவறைக்குச் சென்று வந்த காந்தி, பிரார்த்தனைக் கூட்டத்துக்கு 15 நிமிடம் தாமதமாகிவிட்டதை உணர்ந்தார். மனுவையும் ஆபாவையும் தன் இருபுறங்களிலும் ஊன்றுகோலாக்கி, கூட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

p44d_1512466293.jpg

``இன்று தாமதமாகிவிட்டது. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது எனத் தெரியாதா? நீங்கள்தான் என் கடிகாரம். என் நேரத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியவர்கள்.”

மனு மெள்ளச் சொன்னாள், ``முக்கியப் பேச்சு என்பதால் முறிக்கத் துணியவில்லை.”

``ஒரு செவிலியின் கடமை, சரியான நேரத்தில் நோயாளிக்கு மருந்து தருவதுதான். அது தாமதமானால் நோயாளி இறந்துபோகவும் கூடும்.”

``இன்று முழுக்க மரணம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் பாபுஜி. என் மனம் சஞ்சலம்கொள்கிறது. ஏற்கெனவே உங்கள் உயிரைக் குறிவைத்திருக்கிறார்கள்.”

``மனு, என் மகளே! ஒன்றைப் புரிந்துகொள். என் அனுமதியின்றி யாரும் என்னைக் கொல்ல‌ முடியாது. என் விருப்பப்படிதான் என் மரணம் நிகழும்” எனச் சிரித்தார் காந்தி.

உடம்பெங்கும் ஓர் அதிர்ச்சி ஓடியது மனுவுக்கு. குருக்ஷேத்திரத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கும் காட்சி, மனதில் வாணமாகத் தெறித்தழிந்தது.

காந்தி இடுப்பில் கட்டியிருந்த இங்கர்சால் கடிகாரத்தின் முள்கள் 5:17 எனக் காட்டின‌.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.