Jump to content

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!


Recommended Posts

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!

 

 
Heart%20-1

லப்.. டப்.. லப்.. டப்.. சத்தம் உங்கள் இடது நெஞ்சில் இருந்து வருகிறதா? இதுதான் இதயத் துடிப்பின் அற்புத ஒலி.

உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவுக்குத்தான் இதயம் இருக்கிறது. ஆனால், அதற்குள்தான் எத்தனை அதிசயங்கள்!

இதயம் ஒரு தசை வீடு. அதற்குள் எலும்புகளே இல்லை. இதயத்தின் மேலே இரண்டு அறைகள்; கீழே இரண்டு அறைகள். மேல் அறைகளுக்கு வலது ஏட்ரியம், இடது ஏட்ரியம், கீழ் அறைகளுக்கு வலது வென்ட்ரிக்கிள், இடது வென்ட்ரிக்கிள் என்று பெயர். மேல் அறைகளைவிட கீழ் அறைகளின் சுவர் கொஞ்சம் தடித்து இருக்கிறது.

நமக்கு மட்டுமில்லை, பறவைகளுக்கும் பாலூட்டிகளுக்கும் நான்கு அறைகள் கொண்ட இதயம்தான். ஆனால் ஆமை, தவளையின் இதயத்துக்கு மூன்று அறைகள்; ஒரு வென்ட்ரிக்கிள் குறைவு. மீன், ஆக்டோபஸுக்கு இரண்டு அறைகள் கொண்ட இதயம்; ஓர் ஏட்ரியம், ஒரு வென்ட்ரிக்கிள். பாம்பு, பல்லி, முதலை ஆகியவற்றுக்கு இரண்டு வென்ட்ரிக்கிள்கள் மட்டுமே! ஏட்ரியம் இல்லை. பூச்சிகளுக்கு குழாய் போன்று ஒரே ஓர் அறைதான்.

கிணற்றிலிருந்து தொட்டிக்குத் தண்ணீர் ஏற்றும் கம்ப்ரஸர் மோட்டாரைப் பார்த்திருப்பீர்கள். அதில் இரண்டு குழாய்கள் இருக்கும். ஒரு குழாயில் காற்று இருக்கும். அது தரும் அழுத்தத்தில் அடுத்த குழாய் தண்ணீரை மேலே தள்ளும். இந்த மோட்டார் மாதிரிதான் இதயமும் வேலை செய்கிறது.

Heart%20-2col

இதயம் ஓர் இரட்டை மோட்டார். எப்படி? இதயத்தின் வலது பக்க மோட்டார் உடல் ரத்தத்தைப் பெற்றுக்கொள்கிறது. இடது பக்க மோட்டார் ரத்தத்தை உடலுக்கு அனுப்பி வைக்கிறது. இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

உடலின் கீழ் பாகத்திலிருந்து கீழ்பெருஞ்சிரை எனும் ரத்தக்குழாய் வழியாகவும், மேல் பாகத்திலிருந்து மேற்பெருஞ்சிரை வழியாகவும் வலது ஏட்ரியத்துக்கு ஆக்ஸிஜன் குறைந்த அசுத்த ரத்தம் வருகிறது.

வலது, இடது நுரையீரல்களிலிருந்து தலா இரண்டு நுரையீரல் சிரைகள் வழியாக ஆக்ஸிஜன் மிகுந்த சுத்த ரத்தம், இடது ஏட்ரியத்துக்கு வரும். இதயம் துடிக்கும்போது மேலறைகள் சுருங்கும்; கீழறைகள் விரியும். அப்போது வலது ஏட்ரியத்திலிருந்து வலது வென்ட்ரிக்கிளுக்கும், இடது ஏட்ரியத்திலிருந்து இடது வென்ட்ரிக்கிளுக்கும் ரத்தம் போகும். மோட்டார் குழாயில் காற்று வருவதுபோல், இதயத்துக்கு ரத்தம் வரும் வழி இது.

Heart%20-4

இதயத்துடிப்பின் அடுத்த கட்டமாக, கீழறைகள் சுருங்கும்; மேலறைகள் விரியும். அப்போது வலது வென்ட்ரிக்கிள் ரத்தம் நுரையீரல் தமனி வழியாக நுரையீரல்களுக்குச் செல்லும். இடது வென்ட்ரிக்கிள் ரத்தம் மகாதமனி வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்லும். மோட்டார் தண்ணீரைத் தொட்டிக்குள் தள்ளுகிற மாதிரி, இதயம் ரத்தத்தை உடலுக்குள் தள்ளுகிறது.

அது சரி, வென்ட்ரிக்கிள் ரத்தம் ஏட்ரியத்துக்குள் நுழைந்துவிடாதா? இங்கு இதயத்தின் அதிசயத்தை நீங்கள் பார்க்கலாம். இதயத்திலும் கதவுகள் இருக்கின்றன. அவற்றுக்கு ‘வால்வுகள்’ என்று பெயர். இவை ஒரு பக்கமாகவே திறக்கும் அதிசயக் கதவுகள்!

வலது ஏட்ரியத்துக்கும் வென்ட்ரிக்கிளுக்கும் நடுவில் ஒரு வால்வு இருக்கிறது. அதற்கு ‘மூவிதழ் வால்வு’ என்று பெயர். இடது ஏட்ரியத்துக்கும் வென்ட்ரிக்கிளுக்கும் நடுவில் ஒரு வால்வு இருக்கிறது. அதற்கு ‘ஈரிதழ் வால்வு’ என்று பெயர். இவை கீழ்நோக்கி மட்டுமே திறப்பதால், ஏட்ரியங்கள் சுருங்கும்போது, அவற்றிலிருந்து வென்ட்ரிக்கிள்களுக்கு ரத்தம் வரும். ஆனால், வென்ட்ரிக்கிள்கள் சுருங்கும்போது இவை மூடிக்கொள்வதால், ரத்தம் ஏட்ரியங்களுக்குச் செல்ல முடியாது.

வலது வென்ட்ரிக்கிளில் நுரையீரல் சிரை புறப்படும் இடத்திலும், இடது வென்ட்ரிக்கிளில் மகாதமனி புறப்படும் இடத்திலும் வால்வுகள் உள்ளன. இவற்றுக்குப் ‘பிறைச்சந்திர வால்வுகள்’ என்று பெயர். இவை மேல்நோக்கித் திறக்கும் வால்வுகள். அதனால், வென்ட்ரிக்கிள்கள் சுருங்கும்போது, வென்ட்ரிக்கிளிலிருந்து ரத்தம் மேல் நோக்கித் தள்ளப்படுகிறது. அப்போது நுரையீரல் தமனி வழியாக நுரையீரல்களுக்கும், மகாதமனி வழியாக உடலின் பல பகுதிகளுக்கும் ரத்தம் செல்கிறது.

அதேவேளையில் ஏட்ரியங்கள் சுருங்கும்போது நுரையீரல் தமனி மற்றும் மகாதமனியிலிருந்து ரத்தம் வென்ட்ரிக்கிள்களுக்குத் திரும்பி வர முடியாது. இந்த வால்வுகள் பழைய நிலைக்கு வந்து மூடிக்கொள்வதுதான் அதற்குக் காரணம்.

heart%20-2col

இன்னோர் அதிசயமும் இதயத்தில் உண்டு. இரண்டு ஏட்ரியங்களுக்கு இடையேயும், இரண்டு வென்ட்ரிக்கிள்களுக்கு இடையேயும் சுவர் உண்டு. இதனால், இவற்றின் ரத்தம் ஒன்றுடன் மற்றொன்று கலந்துவிட முடியாது. இந்தச் சுவரில் துளை விழுந்தால் மட்டுமே கலக்கமுடியும். சிலருக்குப் பிறப்பிலேயே இதயத்தில் துளை இருப்பதாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது இந்தச் சுவரில் ஏற்படுவதுதான். இதை அறுவை சிகிச்சை செய்து சரிப்படுத்திவிடலாம்.

வலது ஏட்ரியம் – வலது வென்ட்ரிக்கிள் – நுரையீரல்கள். இந்தப் பாதைக்கு ‘நுரையீரல் ரத்த ஓட்டம்’ என்று பெயர். இடது ஏட்ரியம் – இடது வென்ட்ரிக்கிள் – உடல் பாகங்கள். இதற்கு ‘உடல் ரத்த ஓட்டம்’ என்று பெயர். எனவேதான் இதயத்தை ‘ஓர் இரட்டை மோட்டார்’ என்கிறோம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம்: இதயத்தில் ஓடும் மின்சாரம்!

 

 
Heart%20-1%202

இதயம் ஒரு மோட்டார் என்றால், அது இயங்க மின்சாரம் தேவைதானே? இதயத்துக்கு எப்படி மின்சாரம் கிடைக்கிறது?

இதயம் இயங்குவதற்குத் தேவையான மின்சாரத்தை இதயமே தயாரித்துக்கொள்கிறது! இதயத்தின் வலது ஏட்ரியத்தில் ‘சைனோ ஏட்ரியல் நோடு’ (Sino-atrial node) எனும் பகுதி உள்ளது. அங்குதான் மின்சாரம் உற்பத்தியாகிறது. மின்சாரம் பாய இணைப்புகளும் உள்ளன. அதற்குக் ‘கடத்தல் தொகுதி’ (Conduction system) என்று பெயர். இதன் வழியாகத்தான் இதயத்தில் மின்சாரம் ஓடுகிறது. எப்படி?

சைனோ ஏட்ரியல் நோடில் உற்பத்தியாகிற மின்சாரம், அங்கிருந்து ஏட்ரியாக்களுக்கும் வென்ட்ரிக்கிள்களுக்கும் நடுவில் உள்ள ‘ஏட்ரியோ வென்ட்ரிகுலர் நோடு’ (Atrio-ventricular node) எனும் பகுதிக்குச் செல்கிறது. அங்கு ‘ஹிஸ் கற்றை’ (Bundle of His) என்ற ஒரு நார்க்கற்றை இருக்கிறது. இது வலது, இடது எனப் பிரிந்து முறையே வலது வென்ட்ரிக்கிளுக்கும் இடது வென்ட்ரிக்கிளுக்கும் செல்கிறது. இந்த வழியே பாயும் மின்சாரம், இறுதியாக’ ‘பர்க்கிஞ்சி இழைகள்’ (Purkinje fibres) வழியாக இதயத்தசைகளுக்குள் பயணிக்கிறது.

இப்படி ஓடும் மின்சாரம்தான் இதயத்தைச் சுருங்கி விரிய வைக்கிறது. இதயம் ஒருமுறை சுருங்கி விரிவதை ‘இதயத் துடிப்பு’ (Heart beat) என்கிறோம். மனித இதயம் ஒரு நிமிடத்துக்குச் சராசரியாக 72 முறை துடிக்கிறது. தாயின் வயிற்றில் நான்கு வாரக் குழந்தையாக இருக்கும்போது, துடிக்க ஆரம்பிக்கும் இதயம், நம் வாழ்நாள் முழுவதும் துடிக்கிறது.

பொதுவாக, உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இதயத் துடிப்பின் எண்ணிக்கை குறையும். எடை குறைவாக இருந்தால் துடிப்பு கூடும். உதாரணமாக, நீலத் திமிங்கிலத்தின் இதயம் நிமிடத்துக்கு 10 முறை துடிக்கும். ரீங்காரச் சிட்டுக்கு நிமிடத்துக்கு 1260 தடவை துடிக்கும்.

இதயம் துடிக்கும்போது ரத்தம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் வில்லியம் ஹார்வி. இப்படி ரத்தம் ஓட ஓர் அழுத்தம் தேவை. அதை இதயம்தான் கொடுக்கிறது. அதுதான் ரத்த அழுத்தம். அதில் இரண்டு வகை உண்டு.

இதயம் சுருங்குவதை ‘சிஸ்டலி’ என்கிறோம். அப்போது ஏற்படும் அழுத்தம் மகாதமனி வழியாக எல்லாத் தமனிகளுக்கும் பரவும். அதை ‘சிஸ்டாலிக் அழுத்தம்’ என்கிறோம். இதயம் விரிவதை ‘டயஸ்டலி’ என்கிறோம். இதயத்துக்கு ரத்தம் திரும்பி வரும் நிலைமை இது. அப்போது ஏற்படும் அழுத்தம் எல்லாத் தமனிகளிலும் குறைவாக இருக்கும். அதை ‘டயஸ்டாலிக் அழுத்தம்’ என்கிறோம்.

நமக்கு 120/80 மி.மீ. மெர்குரி என்பது சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது ‘சிஸ்டாலிக் அழுத்தம்’; 80 என்பது ‘டயஸ்டாலிக் அழுத்தம்’. பாலூட்டி இனங்களில் ஒட்டகச்சிவிங்கிக்குத்தான் இயல்பான ரத்த அழுத்தமே மிக அதிகம் - 280/180 மி.மீ. மெர்குரி.

Heart%20-5
 

சராசரியாக நம் இதயத்தின் எடை 300 கிராம். யானையின் இதயம் 20 - 30 கிலோ. நீலத்திமிலங்கத்தின் இதயம் சுமார் 180 கிலோ.

இதயம் ஓய்வில்லாமல் துடிக்கிறது என்று சொன்னாலும் அதுவும் ஓய்வெடுக்கிறது. எப்படி?

ஓர் இதயத் துடிப்புக்கு இதயம் எடுத்துக்கொள்ளும் நேரம் 0.8 விநாடி. இதில் முதல் 0.1 விநாடி ஏட்ரியம் சுருங்கும் நேரம். அடுத்த 0.3 விநாடி வென்ட்ரிக்கிள் சுருங்கும் நேரம். இதைத் தொடர்ந்து இதயம் விரிய ஆரம்பிக்கிறது. இதற்கான நேரம் 0.4 விநாடி. இதுதான் இதயத்தின் ஓய்வு நேரம்.

சாதாரணமாக, இதயமானது ஒவ்வோர் இதயத் துடிப்பின்போதும் சுமார் 70 மி.லி. ரத்தத்தை உடலுக்குள் அனுப்புகிறது. இதை நிமிடத்துக்குச் சொன்னால் 5 லிட்டர். கடுமையான உடற்பயிற்சியின்போது நிமிடத்துக்கு 20 லிட்டர் வரையிலும், ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது 30 லிட்டர் வரையிலும் இது அதிகரிக்கும்.

இதயத்தின் லப்… டப்… ஒலி எப்படி ஏற்படுகிறது? இதயத் துடிப்பில் வென்ட்ரிக்கிள்கள் சுருங்கும்போது, மூவிதழ் வால்வும் ஈரிதழ் வால்வும் மூடிக்கொள்கின்றன. அப்போது ஏற்படும் சத்தம்தான் ‘லப்’. அடுத்து ஏட்ரியாக்கள் சுருங்கும்போது பிறைச்சந்திர வால்வுகள் மூடிக்கொள்கின்றன. அப்போது ஏற்படும் சத்தம் ‘டப்’. இவை மாறி மாறி நிகழ்வதால், லப்… டப்… எனும் லயத்துடன் இதயம் துடிக்கிறது.

இப்படி இதயம் துடிப்பது எதற்காக? இதயத்துக்கு வந்து சேரும் அசுத்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும்; கார்பன்டை ஆக்ஸைடு அதிகமாக இருக்கும். அதை நுரையீரல்களுக்கு அனுப்பி, கார்பன்டை ஆக்ஸைடை அதற்குக் கொடுத்துவிட்டு, பதிலாக ஆக்ஸிஜனைப் பெற்று, சுத்த ரத்தமாக மாற்றி, மீண்டும் இதயத்துக்குக் கொண்டுவந்து, உடலுக்குத் தருகிறது. அந்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் மட்டுமல்லாமல், உணவுச் சத்துகளும் உள்ளன. இதனால் உடல் இயங்குகிறது.

இதயம் செய்யும் இந்தப் பணியால்தான் நாம் உயிர் வாழ்கிறோம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் : சுவாசம் காக்கும் நுரையீரல்கள்

 

 
shutterstock417318079

நம் மார்புக்குள் வலது பக்கம் ஒன்றும் இடது பக்கம் ஒன்றுமாக இரண்டு நுரையீரல்கள் இருக்கின்றன. நுரையீரல் கூம்பு வடிவம் கொண்டது; ‘புளூரா’ எனும் இரட்டைச் சுவரால் மூடப்பட்டுள்ளது. இதன் கூர்முனை மார்பின் மேல் பகுதியில் இருக்கிறது; அகலமான அடிப்பகுதி உதரவிதானத்தில் அமர்ந்திருக்கிறது. தொட்டால் பஞ்சுபோல் மெத்தென்று இருக்கிறது. வெளிர் சிவப்பு நிறத்தில் உள்ளது.

நுரையீரலின் தொடக்கம் காற்றுக்குழாய் (Trachea). இது மார்புக்குள் வந்ததும், வலது மூச்சுக் குழாய், இடது மூச்சுக் குழாய் எனப் பிரிந்து, முறையே வலது, இடது நுரையீரல்களுக்குள் நுழைகிறது.

மரத்தின் பெரிய கிளையிலிருந்து சிறு சிறு கிளைகள் பிரிவதுபோல், மூச்சுக் குழாயிலிருந்து 23 மூச்சுச் சிறுகுழல்கள் (Bronchioles) பிரிந்து நுண்குழல்களாகின்றன. இவற்றின் முனைகளில் சிறிய காற்றுப் பைகள் (Air sacs) தொங்குகின்றன. இவற்றின் சுவர்கள் மிகவும் மெல்லியவை. எல்லாச் சுவர்களையும் விரித்தால், டென்னிஸ் மைதானத்தில் பாதி அளவு இருக்கும்!

ஒவ்வொரு காற்றுப் பையிலும் 20 வீதம் மொத்தம் 30 கோடி காற்றுக் கிடங்குகள் (Alveoli) உள்ளன. மூச்சுக் காற்றுக் குழாயில் நுழைந்து மூச்சுக் குழாய், மூச்சுச் சிறுகுழல்கள் வழியாகக் காற்றுப் பைகளுக்கு வருகிறது. இங்குதான் நுரையீரல் செய்யும் அற்புதப் பணியான ‘காற்றுப் பரிமாற்றம்’ நடைபெறுகிறது.

இதயத்தின் வலது வென்ட்ரிகிளிலிருந்து நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்கு ரத்தம் வருகிறது. நுரையீரல் தமனியும் பல கிளைகளாகப் பிரிந்து, காற்றுப் பைகளை அடையும்போது, மிகச் சிறிய தந்துகிக் குழாய்களாக (Capillaries) மாறிவிடுகிறது. இவற்றின் சுவர்களும் மெல்லியவை. காற்றுப்பைச் சுவரும் தந்துகிச் சுவரும் நெருக்கமாக ஒட்டிக்கொண்டிருப்பதால், ‘ஊடுபரவல்’ (Diffusion) முறையில் ‘காற்றுப் பரிமாற்றம்’ நிகழ்கிறது.

காற்றுக் கிடங்குகளில் உள்ள காற்றில் ஆக்ஸிஜன் மிகுந்திருக்கும். தந்துகிகளில் இருக்கும் ரத்தம் கார்பன் டை ஆக்ஸைடு மிகுந்த அசுத்த ரத்தமாக இருக்கும். காற்றுப் பையில் அடர்த்தியாக இருக்கும் ஆக்ஸிஜன் தந்துகிக்குப் பாயும். தந்துகியில் அடர்த்தியாக இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு காற்றுப் பைக்குப் பாயும். இதுதான் ‘காற்றுப் பரிமாற்றம்’. இதன் பலனால், அசுத்த ரத்தம் சுத்தமாகிறது. எனவே, இதை ‘ரத்தச் சுத்திகரிப்பு’ என்கிறோம்.

shutterstock378164275col

இப்படிச் சுத்தமான ரத்தம் நுரையீரல் சிரைகள் வழியாக இதயத்துக்குச் சென்று, அங்கிருந்து மகாதமனி வழியாக உடலின் பல பகுதிகளுக்கும் செல்கிறது. அப்போது, செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனைப் கொடுத்துவிட்டு, பதிலுக்கு அங்குள்ள கழிவுப்பொருளான கார்பன் டை ஆக்ஸைடைப் பெற்றுக்கொள்கிறது.

இப்படி அசுத்தமான ரத்தம் சிரைக்குழாய்கள் வழியாக இதயத்துக்கும், அங்கிருந்து நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்கும் வந்து மறுபடியும் சுத்தமாகிறது. இப்படி ரத்தம் சுத்தமாவதற்கும் செல்களின் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் நுரையீரலில் ‘காற்றுப் பரிமாற்றம்’ நிகழ வேண்டியது அவசியமாகிறது.

ஒருமுறை காற்றுப் பரிமாற்றம் நிகழ முக்கால் விநாடி ஆகிறது. மூச்சுக் காற்று நுரையீரலுக்குள் நுழைய ‘சுவாசம்’ எனும் செயல்பாடு நிகழ வேண்டும். பின்மூளையும் முகுளமும் இதைச் செயல்படுத்துகின்றன. சுவாசத்துக்கு மார்புக் கூட்டில் உள்ள விலாத் தசைகளும் உதரவிதானமும் உதவுகின்றன. சுவாசத்தில் உட்சுவாசம், வெளி சுவாசம் என இருவகை உண்டு.

சாதாரணமாக, உதரவிதானம் பலூன் மாதிரி மேலே எழும்பியிருக்கும். மூச்சை உள்ளிழுக்கும்போது, இது சுருங்கித் தட்டையாகிவிடும். அதேவேளையில் விலாத் தசைகளும் சுருங்கும். இவற்றின் பலனால், மார்புக் கூடு விரிந்து மேலெழும்பும். அப்போது நுரையீரலுக்குள் கொள்ளளவு அதிகரித்து, காற்றின் அழுத்தம் குறையும். எனவே, அழுத்தம் அதிகமாக இருக்கிற வளிமண்டலக் காற்று மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழையும். இதுதான் உட்சுவாசம்.

அடுத்த கட்டமாக, விலாத் தசைகள் விரியும். மார்புக் கூடு பழைய நிலைக்குத் திரும்பும். உதரவிதானம் மேலெழும்பும். இதனால் நுரையீரல் அழுத்தம் அதிகமாகும். அப்போது நுரையீரலிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடு மிகுந்த காற்று வெளியேறும். இதுதான் வெளிசுவாசம். வயதுவந்தவர்களுக்கு நிமிடத்துக்கு 14 முதல் 20 முறையும் சிறுவர்களுக்கு 18 – 30 வரை சுவாசம் நிகழ்கிறது.

ஒரு நுரையீரலுக்குள் 5 - 6 லிட்டர் காற்று கொள்ளும். மிகவும் இழுத்து மூச்சை வெளியில் விட்டால்கூட, ஒரு லிட்டர் காற்று நுரையீரலுக்குள் எப்போதும் இருக்கும். நாம் சாதாரணமாகச் சுவாசிக்கும்போது, அரை லிட்டர் காற்றையே உள்ளிழுக்கிறோம். அதே அளவில்தான் காற்றை வெளிவிடுகிறோம்.

மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகளின் சுவாசத்துக்கு நுரையீரல்கள் உதவுகின்றன. பூச்சிகளுக்கு நுரையீரல் இல்லை. காற்றுக் குழாய்கள்தாம் உண்டு. பாம்பு போன்ற ஊர்வனவற்றுக்கு உதரவிதானம் இல்லை. மூச்சை உள்ளிழுப்பதற்குத் தங்கள் உடல் தசைகளையே உபயோகிக்கின்றன. தவளை உட்பட பெரும்பாலான நீரில் வாழும் உயிரினங்கள் வாய்த் தசைகளைப் பயன்படுத்தி மூச்சை உள்ளிழுக்கின்றன. தவளை தண்ணீருக்குள் இருக்கும்போது அதன் தோல் வழியாகவும் சுவாசிக்கும் திறனுள்ளது.

பறவைகள் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து முதலில் காற்றுப் பைகளுக்குள் தள்ளுகின்றன. அதன் பிறகே நுரையீரல்களுக்கு அனுப்புகின்றன. மீன்கள் செவுள்கள் வழியாகச் சுவாசிக்கின்றன. தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனை இவை உறிஞ்சிக்கொள்கின்றன.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் : உடலுக்குள் ஒரு மிக்ஸி!

 

 
shutterstock374549551

நம் செரிமான மண்டலத்தில் மூன்றாவது உறுப்பாக இருக்கிறது, இரைப்பை. வாயில் தொடங்கி, மலத்துவாரம் வரையிலான செரிமான மண்டலம் 9 மீட்டர் நீளம் கொண்டது. நாம் சாப்பிடும் உணவு முழுமையாகச் செரிக்கப்படும் பகுதி இது.

வயிற்றுக்குள் மேல் புறத்தில், இடது பக்கத்தில், மண்ணீரலுக்கு மேலேயும், உதரவிதானத்துக்குக் கீழேயும் சற்றே படுத்த வடிவில் இருக்கிறது இரைப்பை. தொண்டையில் தொடங்கும் உணவுக்குழாய் இரைப்பையில் திறக்கிறது. முன்சிறுகுடல் இரைப்பையிலிருந்து தொடங்குகிறது.

இரைப்பை உணவு தங்கும் இடமாகவும், உணவு செரிமானம் ஆகும் இடமாகவும் செயல்படுகிறது. பெரும்பாலான பாலூட்டிகளுக்கு ஓர் அறை கொண்ட இரைப்பைதான் இருக்கிறது. அசைபோடும் விலங்குகளான பசு, எருமை, காட்டெருது, செம்மறி ஆடு, வெள்ளாடு, காளை மாடு, மான், ஒட்டகச்சிவிங்கி போன்றவற்றுக்கு நான்கு அறைகள் கொண்ட இரைப்பை இருக்கிறது. இவை அவசரப்பட்டு விழுங்கிய திட உணவை முதல் அறைக்கு அனுப்புகின்றன. பிறகு, மறுபடியும் அதை வாய்க்குக் கொண்டுவந்து அசைபோட்டு, நன்றாக மென்று, மீண்டும் இரைப்பைக்கு அனுப்புகின்றன. ஒட்டகத்துக்கு மூன்று அறைகள் கொண்ட இரைப்பை உள்ளது. பறவைகளின் இரைப்பை இரண்டு அறைகள் கொண்டது.

நம் இதயத்தைப் போலவே இரைப்பையும் ஒரு தசைக்கூடு. விரிந்து சுருங்கும் தன்மையுடையது. இரைப்பையின் உட்சுவர் ஓய்வாக இருக்கும்போது ஒரு சுருக்குப்பைபோல் மடிந்தும் சுருண்டும் இருப்பதால், அப்போது அதன் கொள்ளளவு சுமார் 50 மி.லி.தான். நாம் சாப்பிடச் சாப்பிட விரிந்து கொடுக்கும். அப்போது அதிகபட்சமாக ஒரு லிட்டர் உணவு பிடிக்கும்.

விலங்கினத்தைப் பொறுத்தும் அது சாப்பிடும் உணவைப் பொறுத்தும் இரைப்பையின் கொள்ளளவு மாறும். குதிரையின் இரைப்பை அதிகபட்சமாக 15 லிட்டர் பிடிக்கும். யானையின் இரைப்பை 70 லிட்டர்வரை கொள்ளும். பன்றியின் இரைப்பை 7.6 லிட்டர்வரை தாங்கும்.

மனித இரைப்பையில் கழுத்து (Fundus), உடல் (Body), முன்சிறுகுடல் முனை (Pylorus) என மூன்று பகுதிகள் உள்ளன. உணவுக்குழாய் இரைப்பையில் திறக்கும் இடத்துக்குக் ‘கழுத்து’ என்று பெயர். இது முன்பற்களிலிருந்து சுமார் 40 செ.மீ. தூரத்தில் உள்ளது. முன்சிறுகுடல் தொடங்கும் பகுதிக்கு ‘முன்சிறுகுடல் முனை’ என்று பெயர். இடைப்பட்ட பகுதிக்கு ‘உடல்’ என்று பெயர்.

இதன் உட்சுவரில் சுமார் 35 கோடி காஸ்டிரிக் சுரப்பிகள் உள்ளன. இவை தினமும் 2-லிருந்து 3 லிட்டர்வரை செரிமான நீரைச் சுரக்கின்றன. இதில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், பெப்சினோஜென் எனும் என்சைம், மியுசின் எனும் பிசுபிசுப்பான திரவம் ஆகியவை உள்ளன.

அமிலத்துக்கு எதையும் அரித்துச் சிதைக்கும் தன்மை இருக்கும். அப்படியானால், ஹைட்ரோகுளோரிக் அமிலமும் இரைப்பையை அரித்துப் புண்ணாக்கிவிடலாம் அல்லவா? அப்படி அரித்துவிடாமல் இரைப்பையைப் பாதுகாப்பதுதான் மியுசின் திரவம். இது இரைப்பையின் உட்பரப்பில் ஒரு பாலாடைபோல் படர்ந்து, அமிலத்தின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறது. மேலும் இது அமிலத்துடன் கலக்கும்போது, அமிலத்தின் வீரியம் குறைந்துவிடுவதால், இரைப்பையை அமிலம் அரிப்பதில்லை.

இரைப்பையின் சிறப்புத்தன்மையே அதில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரப்பதுதான். செரிமான மண்டலத்தில் இரைப்பை தவிர வேறு எங்கும் இந்த அமிலம் சுரப்பதில்லை. இந்த அமிலத்தின் பலனாகத்தான் இரைப்பையில் செரிமானப் பணி தொடங்குகிறது.

உணவுக்குழாய் வழி இரைப்பையை அடையும் உணவுப்பொருட்களுடன் ஹைட்ரோகுளோரிக் அமிலம் கலந்து, அவற்றைச் சிறுதுகள்களாக உடைக்கிறது; உணவில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கிறது. அதேநேரம் பெப்சினோஜென் என்சைமை பெப்சினாக மாற்றுகிறது. காரணம், அந்த என்சைம் பெப்சின் எனும் நிலைக்கு மாற்றப்பட்டால்தான் செரிமானப் பணியில் ஈடுபடமுடியும். புரத உணவுகளை பெப்சின் செரிக்கிறது.

இரைப்பை ஒரு மிக்ஸிபோல் வேலை செய்கிறது. உணவு இரைப்பைக்கு வந்ததும் அதன் சுவர்கள் சீரான லயத்துடன் விரிந்து சுருங்குகின்றன. இதனால் உணவுப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று நன்றாகக் கலந்துவிடுகின்றன. இந்தக் கலவையில் செரிமான நீரும் சேர்ந்துகொள்கிறது. இரைப்பையின் இயக்கங்களால் மியூசின் திரவமும் திடஉணவுடன் நன்கு கலந்துவிடுகிறது. இவற்றின் மொத்தப் பலனால் திடஉணவு கரைந்து கூழ்போலாகிறது. இதற்கு ‘கைம்’ (Chyme) என்று பெயர். இது அடுத்தகட்ட செரிமானத்துக்குத் தயாராகிறது.

இரைப்பையில் இந்த உணவு சராசரியாக நான்கு மணி நேரம் தங்கும். திரவ உணவாக இருந்தால், 40 நிமிடங்களில் இரைப்பையைவிட்டு முன்சிறுகுடலுக்குச் சென்றுவிடும். உணவில் அதிகக் கொழுப்பு இருந்தாலும், நிறைய புரதம் இருந்தாலும் அந்த உணவு இரைப்பையில் அதிக நேரம் தங்கும்.

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் : செரிமான மைதானம்

 

 
Medi%20-1col

நீண்ட குழல் போன்ற அமைப்பைக் கொண்ட சிறுகுடல் இரைப்பையின் கீழ் முனையில் தொடங்குகிறது. சுமார் 5 மீட்டர் நீளமுள்ளது. முன்சிறுகுடல் (Duodenum), நடுச்சிறுகுடல் (Jejunum), பின்சிறுகுடல் (Ileum) என மூன்று பகுதிகளைக் கொண்டது. சிறுகுடல் பெருங்குடலில் முடிகிறது.

தோட்டத்துக்குத் தண்ணீர்விடும் ரப்பர் குழாயைச் சுற்றிவைத்திருப்போம், இல்லையா? அதேபோல வயிற்றின் மத்தியப் பிரதேசத்தில் சிறுகுடல் வளைந்து நெளிந்து படுத்திருக்கிறது. இந்தக் குழாய் எல்லாப் பகுதிகளிலும் ஒன்றுபோலிருப்பதில்லை. அகலமாக ஆரம்பித்துப் போகப்போக இதன் உள்ளளவு குறுகிவிடுகிறது. இதன் வலப்பக்கம், மேற்பக்கம், இடப்பக்கம் தலைகீழாக இருக்கின்ற ‘ப’ எழுத்தைப் போல் பெருங்குடல் இருக்கிறது. இது ஒரு கோட்டைச் சுவர்போல் அமைந்து சிறுகுடலைப் பாதுகாக்கிறது.

முன்சிறுகுடல் 25 செ.மீ. நீளமுள்ளது. இது ‘C’ வடிவத்தில் உள்ளது. தொப்புளுக்கு மேல்பகுதியில் பின் முதுகைச் சார்ந்து உள்ளது. இதில்தான் கணையமும் கல்லீரலும் தொடர்புகொள்கின்றன. ஒன்றரை மீட்டர் நீளமுள்ள நடுச்சிறுகுடலும், இரண்டரை மீட்டர் நீளமுள்ள பின்சிறுகுடலும் இதன் தொடர்ச்சியாக உள்ளன.

மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கும் ஊர்வனவற்றுக்கும் உள்ளது போலவே பெரும்பாலான பறவைகளுக்கும் குடலமைப்பு உள்ளது. ஆப்பிரிக்க யானையின் குடல் நீளம் 19 மீட்டர். அசைபோடும் விலங்குகளுக்குக் குடலின் நீளம் பல மடங்கு அதிகம். இரண்டு மீட்டர் நீளமுள்ள பசுவின் குடல் நீளம் 40 மீட்டர். அதாவது, 20 மடங்கு அதிகம். நீலத் திமிங்கிலத்தின் குடல் 220 மீட்டர் நீளமுள்ளது!

சிறுகுடல் ஒரு செரிமான மைதானம். இதன் உட்பரப்பில் வட்டவடிவத்தில் நிறைய மடிப்புகள் உள்ளன. இவற்றுக்கு ‘பிளைக்கே’ (Plicae) என்று பெயர். சாலையில் வேகத்தடைகள் உள்ளதுபோல், சிறுகுடலில் இப்படி நிறைய மடிப்புகள் உள்ளதால், அதன் வழியாகப் பயணம் செய்யும் உணவுப்பொருள் வேகமாக வெளியேறிவிடாமல், மெதுவாக நின்று செல்கிறது. அப்போது செரிமானம் முழுமையாக நடைபெறுகிறது.

சிறுகுடலின் உட்பரப்பில் சுமார் 30 கோடி புடைப்புகள் உள்ளன. இவற்றுக்கு ‘விரலிகள்’ (Villi) என்று பெயர். இவைதாம் உணவுச்சத்துகளை உறிஞ்சி ரத்தத்துக்கு அனுப்புகின்றன. ஒரு விரலியின் நீளம் அதிகபட்சமாக 1.6 மி.மீ.

விரலிகளுக்கு நடுவில் உள்ள சிறுகுடல் சுவரில் நிறைய சுரப்பிகள் உள்ளன. இவை சிறிய துவாரங்களில் திறக்கின்றன. இவற்றுக்கு ‘லீபர்கூன் பள்ளங்கள்’ (Crypts of Lieberkuhn) என்று பெயர். இந்தப் பள்ளங்களில் சிறுகுடல் சுரப்பிகள் சிறுகுடல் சாற்றைச் சுரக்கின்றன.

இரைப்பையிலிருந்து உணவுக்கூழ் முன்சிறுகுடலுக்கு வருகிறது. இது இரைப்பையின் அமிலத் தன்மையுடன் இருக்கிறது. சிறுகுடல் அமிலத்தைத் தாங்காது. சிறுகுடலின் உட்சுவரில் ‘பிரன்னர் சுரப்பிகள்’ (Brunner’s glands) எனும் சிறப்புச் சுரப்பிகள் உள்ளன. இவை காரத்தன்மையுள்ள ஒரு திரவத்தைச் சுரக்கின்றன. இந்தத் திரவம் உணவுக்கூழுடன் கலந்து, அமிலத்தன்மையைச் சமன்படுத்திவிடுகிறது.

அதேநேரத்தில் சிறுகுடற்சாறு உணவுக்கூழில் உள்ள உணவுப்பொருள்களை இன்னும் சிறிய துகள்களாக உடைக்கின்றன. சிறுகுடலில் உணவுச்சத்துகள் செரிமானம் ஆவதற்கும் விரலிகள் சத்துகளை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்வதற்கும் இது உதவுகிறது.

சிறுகுடலுக்குக் கணையத்தின் சுரப்புநீர்களும் கல்லீரலின் பித்தநீர்ச் சுரப்பும் வந்துசேர்கின்றன. கல்லீரலில் கிளம்பும் கல்லீரல் நாளம் பித்தப்பைக்குச் செல்கிறது. அங்கிருந்து பித்தப்பை நாளமாக கீழிறங்கி வந்து, கணைய நாளத்தில் இணைந்து, சிறுகுடலில் திறக்கிறது. இந்தப் பாதை வழியாகப் பித்தநீரும் கணையநீரும் சிறுகுடலை அடைகின்றன. இவைதாம் உணவுக்கூழுடன் கலந்து, செரிமானப் பணியைத் தொடங்குகின்றன.

Medi%20-4col
 
Medi%20-5col

நாம் சாப்பிடுவதை ‘உணவு’ என்று பொதுவாகச் சொன்னாலும், அதில் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுஉப்புகள், தண்ணீர் என ஆறு வகை சத்துகள் உள்ளன. இவற்றைத் தனித்தனியாக உறிஞ்சி உடலுக்குள் அனுப்புவதுதான் சிறுகுடலின் வேலை. இதற்குக் குடற்சாறு, கணையநீர், பித்தநீர் ஆகிய செரிமான நீர்கள் உதவுகின்றன. தினமும் இரண்டரை லிட்டர் குடற்சாறும், ஒன்றைரை லிட்டர் கணையநீரும், அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர்வரை பித்தநீரும் சுரக்கின்றன.

குடற்சாற்றில் என்சைம்கள் குறைவு என்பதால், கணையநீரும் பித்தநீரும்தான் பெரும்பாலான செரிமானப் பணியைச் செய்கின்றன.

இவ்வாறு செரிக்கப்பட்ட உணவுக்கூறுகளைச் சிறுகுடலின் மூன்று பகுதிகளிலும் உள்ள விரலிகள் உறிஞ்சுகின்றன. விரலிகளைச் சுற்றி ரத்தத் தந்துகிக் குழாய்கள் வலைபோல் பின்னியுள்ளன. விரலிகளின் நடுவில் நிணநீர்நாளங்கள் சூழ்ந்துள்ளன. கொழுப்புச் சத்தை இவை உறிஞ்சிக்கொள்கின்றன. வைட்டமின்கள், தாதுக்கள், தண்ணீர் ஆகியவை தனித்தனியே பிரிந்து ஊடுபரவல் மூலம் நேரடியாகவே ரத்தத்தை அடைகின்றன. மற்ற சத்துகளைத் தந்துகிகள் உறிஞ்சிக்கொள்கின்றன. தினமும் சுமார் ஏழரை லிட்டர் திரவ உணவுக்கூறுகளை இவை உறிஞ்சுகின்றன. இப்படி உறிஞ்சப்பட்ட உணவுச்சத்துகள் உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் பயன்படுகின்றன.

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் : உறிஞ்சு குழல்

 

 
large%20intestine%20human%20body%20-1

சிறுகுடலின் தொடர்ச்சியாக அமைந்துள்ள பெருங்குடல் சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ளது. சிறுகுடலைப் போலவே இதிலும் பல பகுதிகள் உண்டு. சிறுகுடல் பெருங்குடலில் இணையும் பகுதிக்குப் ‘பெருங்குடல் முனை’ (Caecum) என்று பெயர். இதைத் தொடர்ந்து ஏறுகுடல் (Ascending colon), குறுக்குக் குடல் (Transverse colon), இறங்கு குடல் (Descending colon), வளைகுடல் (Sigmoid colon), மலக்குடல் (Rectum) எனப் பல பகுதிகளாகப் பெருங்குடல் பிரிந்து மலத்துவாரத்தில் முடிகிறது.

சிறுகுடலின் உள்விட்டம் குறைவாக இருக்கும். பெருங்குடலின் உள்விட்டம் அதிகமாக இருக்கும். சிறுகுடலின் வெளிச்சுவர்கள் ஒன்றுபோல் வழவழப்பாக இருக்கும். பெருங்குடலின் வெளிப்பரப்பு சில இடங்களில் உப்பியிருக்கும்; பல இடங்களில் சுருங்கி இருக்கும்; தடிமனாகவும் இருக்கும்.

தாவர உண்ணிகளில் பெருங்குடலின் நீளம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, பெருங்குடல் முனை அகலமாக இருக்கும். இறைச்சி உண்ணும் விலங்குகளுக்கு இது குறுகலாகத்தான் இருக்கும். தாவர உணவு செரிக்கப்படுவதற்குத் தாமதமாகும். மேலும் அவை முழுவதுமாகச் செரிக்கப்பட்டு உடலுக்குள் சேருவதற்குக் குடலில் நீண்ட நேரம் தங்க வேண்டியது இருக்கும். பறவைகளில் கிளிகளுக்கு மட்டும் பெருங்குடல் முனை இல்லை.

பெருங்குடலில் அமைந்திருக்கும் சுரப்பி செல்கள் தண்ணீர் மாதிரியான திரவத்தையும், மியூக்கஸ் எனும் வழுவழுப்பான திரவத்தையும் சுரக்கின்றன. செரிமான மண்டலத்தில் என்சைம்கள் சுரக்கப்படாத பகுதிகள் மொத்தம் இரண்டு. முதலாவது உணவுக்குழாய். அடுத்தது, பெருங்குடல்.

பெருங்குடலில் பாக்டீரியாக்கள் நிறைய உள்ளன. பாக்டீரியா என்றாலே கெடுதல் செய்யும் கிருமி என்றுதான் நமக்கு நினைவுக்கு வரும். இந்த பாக்டீரியாக்கள் அப்படியில்லை. இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்கள். இவை புரத உணவு செரிமானத்துக்கும் சில வைட்டமின்களின் உற்பத்திக்கும் உதவுகின்றன.

பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் ‘செல்லுலோஸ்’ எனும் உணவுப்பொருளைச் செரிக்கவும் பெருங்குடல் பாக்டீரியாக்கள் உதவுகின்றன. குதிரை, யானை, முயல் உள்ளிட்ட தாவர உண்ணிகளின் பெருங்குடல் மிக நீளமாக இருப்பதால், அவற்றின் உணவில் உள்ள ‘செல்லுலோஸ்’ எனும் நார்ப்பொருள் நன்றாகச் செரிமானம் ஆகின்றன. ஆனால், மனிதர் உள்ளிட்ட பாலூட்டிகளுக்குக் குடலில் செல்லுலோஸ் செரிக்கப்படுவதில்லை. பசு, எருது போன்ற அசைபோடும் விலங்குகளுக்கு இரைப்பையிலேயே செல்லுலோஸ் செரிக்கப்பட்டுவிடும்.

பாக்டீரியாவே இல்லாத பெருங்குடலும் நமக்கு இருக்கிறது. அது எப்போது தெரியுமா? தாயின் வயிற்றில் குழந்தையாக இருக்கும்போதும், பிறந்த உடனேயும் நம் குடலில் பாக்டீரியாக்கள் கிடையாது. அதற்குப் பிறகுதான் வளி மண்டலம் வழியாக பாக்டீரியாக்கள் குடலுக்குள் நுழைகின்றன.

பெருங்குடல் செய்யும் முக்கியமான பணி, திரவத்தை உறிஞ்சுவது. எப்படி? சிறுகுடலில் உள்ள உணவுக்கூழ் செரிக்கப்பட்டு, அதிலுள்ள சத்துகள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு உடலுக்குள் சேர்ந்ததும், மீதமுள்ள உணவு திரவக்கூழாகப் பெருங்குடலுக்கு வந்து சேரும். இதன் அளவு ஒன்றரை முதல் இரண்டு லிட்டர்வரை இருக்கும். இதில் தண்ணீர்தான் பிரதானமாக இருக்கும். இதிலிருந்து ஒன்று முதல் ஒன்றரை லிட்டர்வரை உள்ள தண்ணீரையும் உடலுக்குத் தேவையான தாதுச்சத்துகளையும் பெருங்குடல் உறிஞ்சிக்கொள்கிறது.

இவ்வாறு உறிஞ்சப்பட்ட பிறகு, மீதமுள்ள திரவக்கூழ் கெட்டிப்பட்டு, தேவையில்லாத கழிவுப் பொருளாகிறது. அதுதான் மலமாக வெளியேறுகிறது.

சரி, வாயில் போடப்பட்ட உணவு உணவுக்குழாய் வழியாக குடலுக்கு எப்படி வருகிறது? உணவால் தானாகப் பயணிக்க முடியாது. அதன் பயணத்துக்குக் குடலின் அசைவுகள் உதவுகின்றன. குடல் ஒரு குழாய் போன்று இருப்பதாகக் கூறினாலும், ரயில் பெட்டிகள்போல் பகுதிகளாகவே காணப்படுகிறது. ஒரு பகுதி சுருங்கும்போது, அதற்கு அடுத்த பகுதி விரிகிறது. இப்படி ஒவ்வொரு பகுதியும் அலை அலையாகச் சுருங்கி விரியும்போது, அதிலுள்ள உணவு அடுத்தப் பகுதிக்குத் தள்ளப்படுகிறது. இந்தச் செயலுக்குக் ‘குடலியக்கம்’ (Peristalsis) என்று பெயர். ஒரு பகுதி விரிந்து சுருங்குவதை ‘ஓர் அலை இயக்கம்’ என்கிறோம். இதற்கு 9 விநாடி ஆகிறது.

பெருங்குடல் முனையின் அடிப்பகுதியில் ஒரு நீண்ட மிளகாய் அளவில் ‘குடல்வால்’ (Vermiform Appendix) உள்ளது. உடலில் உள்ள ‘வெஸ்டீஜியல் உறுப்பு’ (Vestigial organ) இது. அதாவது, ‘உடலுக்கு உதவாத உறுப்பு’ என்று பெயர். இதில் நிறைய நிணநீர்த் திசுக்கள் உள்ளன. பல தலைமுறைகளுக்கு முன்னால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் உறுப்பாகச் செயல்பட்டது. அதன் பிறகு அந்த வேலையை உடலில் உள்ள மற்ற நிணநீர் உறுப்புகள் மேற்கொள்ளத் தொடங்கியதால், குடல்வாலின் தேவை குறைந்துவிட்டது. அதனால், இப்போது இது அளவில் சுருங்கி ‘சும்மா’ இருக்கிறது.

இறந்த பிறகு சிறுகுடல் 7 மீட்டர் நீளத்துக்கும், பெருங்குடல் ஒன்றரை மீட்டர் நீளத்துக்கும் வளர்ந்துவிடுகிறது. எப்படி? உயிரோடு இருக்கும்போது சுருக்குப்பைபோல் சுருண்டு இருக்கும் குடல் தசைகள், இறந்த பிறகு தளர்ந்து விரிந்து நீண்டுவிடுகின்றன!

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உடல் எனும் இயந்திரம் : சத்துகளை அள்ளித் தரும் வள்ளல்!

 

 
Liver%20-2

உடலின் மிகப் பெரிய சுரப்பி (Gland) கல்லீரல். வயிற்றின் மேற்புறத்தில், வலது பக்கத்தில், இலைபோல் விரிந்திருக்கும் உதரவிதானத்துக்குக் கீழே, கால் இல்லாத காளான் வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது, கல்லீரல்.

ஒன்றரை கிலோ எடையுள்ள கல்லீரல் மார்புக் கூட்டுக்குப் பின்புறம் பாதுகாப்பாகப் பதுங்கியிருக்கிறது. இதன் அடிப்பகுதியில் சிறிய வெள்ளரிப் பிஞ்சு அளவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது, பித்தப்பை (Gall badder).

கல்லீரல் ஒரு ‘முக்கோண’த் தசைப் பெட்டி. பஞ்சு மாதிரி அத்தனை மிருது! பார்ப்பதற்கு ஒரே உறுப்பாகத் தெரிந்தாலும் அமைப்பில் வலப்பக்கம் ஒன்றும் இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு பகுதிகளைக் கொண்டது.

சில விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கல்லீரலின் இந்தப் பகுதிகள் வேறுபடுகின்றன. மேலும், அசைவ உண்ணிகளில் இது அதிக எடை உள்ளதாகவும், அனைத்துண்ணிகளில் அதைவிட எடை குறைந்ததாகவும், சைவ உண்ணிகளில் மிகக் குறைந்த எடை உள்ளதாகவும் இருக்கிறது. புழுக்களுக்குக் கல்லீரல் இல்லை.

குடையை விரித்தால், அதன் மத்தியிலிருந்து கைப்பிடிக் கம்பி வெளிவருகிறதல்லவா? அதுபோலத்தான் கல்லீரலின் மத்தியப் பிரதேசத்திலிருந்து (Porta Hepatis) நான்கு அங்குல நீளத்தில் ‘பித்த நாளம்’ (Bile duct) கிளம்புகிறது. இது கீழ்நோக்கி இறங்கி, பித்தப்பையோடும், முன்சிறுகுடலோடும் (Duodenum) கல்லீரலை இணைக்கிறது.

தேன் கூட்டில் உள்ளதுபோல் பல்லாயிரக் கணக்கான ‘பல்லாங்குழிகள்’ கல்லீரலுக்குள் காணப்படுகின்றன. அவற்றுள் உள்ள கோடிக்கணக்கான ‘ஹெப்பாடிக் செல்கள்’ பித்தநீரைச் (Bile) சுரக்கின்றன. இந்தப் பித்தநீர், பித்த நாளம் வழியாகப் பித்தப்பைக்கு வந்து கொஞ்ச காலம் தங்கிவிட்டு, செரிமானத்துக்கு உதவ முன்சிறுகுடலுக்குச் செல்கிறது. உடலின் தேவைக்கேற்ப தினமும் அரை லிட்டர்வரை பித்தநீரைச் சுரக்கிறது, கல்லீரல்.

உலகில் உள்ள நிபுணர்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சரியமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது; அனுதினமும் ஐநூறுக்கும் மேற்பட்ட செயல்களைச் செய்கிறது. உதாரணத்துக்குச் சில…

அரிசிச் சோற்றில் கார்போஹைட்ரேட், பருப்பில் புரதம், இறைச்சியில் கொழுப்பு போன்றவை உள்ளன. அவற்றை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தில் கலப்பதற்குக் குடல் பிரதேசத்தில் ஏற்பாடு செய்கிறது கல்லீரல். அதேவேளை சாப்பிட்ட உணவு முழுவதும் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்துவிட்டாலும் ஆபத்து. அதைத் தவிர்க்க, தேவையான அளவுக்கு ரத்தத்துக்கு குளுக்கோஸைக் கொடுத்துவிட்டு, மீதியை கிளைக்கோஜனாக மாற்றி, தன்னிடம் சேமித்துக்கொள்கிறது. காய் கனிகளில் காணப்படும் வைட்டமின்களைக் குடலில் கிரகித்து ஊட்டச் சத்தாக மாற்றுவதும் இதே கல்லீரல்தான்.

சரி, இத்தனை சத்துகளையும் வைத்துக்கொண்டு என்னதான் செய்கிறது கல்லீரல்?

இரண்டு சக்கர வாகனத்தில் கார்ப்புரேட்டர் செய்யும் பணியைத்தான் உடலில் கல்லீரல் செய்கிறது. பெட்ரோலை எரிசக்தியாக மாற்றி, ஓட்டும் சக்தியாகக் கொடுப்பது கார்ப்புரேட்டரின் பணி. அதைப் போலவே உணவில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து, உடலுக்கு உதவும் சக்தியாக மாற்றித் தருகிறது கல்லீரல்.

உடலின் அவசரத்துக்கும் ஆபத்துக்கும் அயராமல் சத்துகளை அள்ளித் தரும் வள்ளல், கல்லீரல்! வறுமை, பஞ்சம், உண்ணாவிரதம் போன்ற காலங்களில் பலர் மாதக்கணக்கில்கூட சாப்பிடாமல் இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படுவது உண்டு. அப்போது அவர்களுக்கு நாட்கணக்கில் சக்தியைத் தருமளவுக்கு கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துகள் கிடைக்காது. இதுபோன்ற நேரத்தில் உடலில் படிந்திருக்கும் கொழுப்பிலிருந்து சத்தை எடுத்து குளுக்கோஸாக மாற்றி உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க வழிசெய்து, உயிர் காக்கும் போராளியாக உருமாறுகிறது கல்லீரல்.

Liver%20-1

சாப்பிட்ட உணவு மட்டுமல்ல, விழுங்கிய மாத்திரை, சுவாசித்த புகை, தலைக்குத் தேய்த்த தைலம், குடித்த மது... இப்படி எல்லாமே கல்லீரலுக்குத்தான் செல்கிறது.

ரசாயனங்களைத் தனித்தனியாகப் பிரித்து நல்லது எது, கெட்டது எது எனத் தெரிந்து, மாத்திரை, மருந்து போன்ற நல்லதைச் செயல்பட வைக்கிறது. புகை, மது போன்ற கெட்டதைச் செயலிழக்கச் செய்கிறது.

உடலில் எங்காவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் ஒன்றிரண்டு நிமிடங்களில் ரத்தம் வருவது நின்று விடுகிறதல்லவா? இதற்குக் கல்லீரல் தயாரிக்கும் ‘புரோத்திராம்பின்’ என்ற ரசாயனம்தான் காரணம்.

ரத்த அணுக்களின் ஆயுட்காலம் முடியும்போது, அவை மண்ணீரலுக்கு (Spleen) வந்து அழிகின்றன. அப்போது ‘பிலிருபின்’ என்ற நச்சுப்பொருள் வெளிவருகிறது. இது ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருந்தால் காமாலை ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தாகிவிடும். எனவே, அதைப் பக்குவப்படுத்தி, பித்த உப்புகளாக மாற்றிச் சிறுநீரிலும் மலத்திலும் ‘பத்திரமாக’ அனுப்பிவைக்கிறது கல்லீரல். இதன் பலனால் ரத்தம் சுத்தமாகிறது.

இவை மட்டுமா? கல்லீரலுக்கே உரித்தான தனி குணம் எது தெரியுமா? தனக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும் ஆரம்பத்தில் அதை வெளிக்காட்டாது. தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, முடிந்தவரை செயல்படுகிற அளவற்ற ஆற்றல் நம் உடலில் கல்லீரலுக்கு மட்டுமே உண்டு.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் : இரட்டைச் சுரப்பி

 

 
shutterstock572310313

கல்லீரல் மாதிரியான மற்றொரு சுரப்பி, கணையம். இது, இரைப்பைக்கு நேர் கீழாக, வயிற்றின் இடதுபுறத்தில், வாழை இலை வடிவத்தில் குறுக்காகப் படுத்திருக்கிறது. 12 முதல் 15 செ.மீ. வரை நீளம் உடையது. இதன் எடை அதிகபட்சமாக 100 கிராம் இருக்கும். உடலில் கணையம் இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் ஹீரோபிளஸ் (Herophilus) எனும் கிரேக்க மருத்துவர்.

கணையம் தலை, உடல், வால், கழுத்து என நான்கு பகுதிகளைக் கொண்டது. இதன் ஊசி வால் வயிற்றின் இடதுபுறம் இருக்கிறது; அகன்ற தலை வலதுபுறம் சிறுகுடலுக்கு அருகில் இருக்கிறது. இரண்டுக்கும் இடையில் உடல் இருக்கிறது. தலையும் உடலும் சேருகிற பகுதிக்குக் கழுத்து என்று பெயர். தலையிலிருந்து கிளம்பும் கணைய நாளம், பித்தப்பையிலிருந்து வரும் பித்த நாளத்துடன் இணைந்து சிறுகுடலுடன் இணைகிறது.

shutterstock639596095

கணையம் ஓர் இரட்டைச் சுரப்பி. இதைக் கலப்புச் சுரப்பி (Mixed gland) என்றும் கூறுவார்கள். செரிமானத்தை இயக்கும் ‘நாளமுள்ள சுரப்பி’யாகவும், ஹார்மோன்களைச் சுரக்கும் ‘நாளமில்லாச் சுரப்பி’யாகவும் இயங்குகிறது. ஏதாவது ஒரு நாளம் வழியாக உடலில் ஓரிடத்தில் சுரக்கப்படும் நீரானது, இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றால், அது நாளமுள்ளது.

நீர் சுரந்து ரத்தத்தில் நேரடியாகக் கலந்து விடுகிறது என்றால், அது நாளம் இல்லாதது. இந்த இரண்டு வகைச் சுரப்பிகளும் ஒருங்கே இணைந்துள்ள ஓர் ஆச்சர்ய உறுப்பு கணையம் மட்டுமே!

ஒரு தேனடையைப்போல் இருக்கிற கணையத்தின் ‘அசினார்’ செல்கள் செரிமான நீரைச் சுரக்கின்றன. அந்த நீர் கணைய நாளம் வழியாகச் சிறுகுடலை அடைகிறது. ஆழ்கடலின் நடுவே பனிப்பாறைகள் மிதக்கிற மாதிரி கணையத்தின் நடுநடுவே ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ தெரிகின்றன. அவற்றில் ஆல்பா, பீட்டா, டெல்ட்டா எனும் செல்கள் இருக்கின்றன.

ஆல்பா செல்கள் குளுக்ககானையும், பீட்டா செல்கள் இன்சுலினையும், டெல்ட்டா செல்கள் சொமொஸ்டோடேடின் ஹார்மோனையும் சுரக்கின்றன. அந்தச் சுரப்புகள் நேரடியாக ரத்தத்தில் கலந்து விடுகின்றன.

கணையம், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் செரிமான நீரைச் சுரக்கிறது. இதில் செரிமானத்துக்கு உதவும் என்சைம்களும் தாதுக்களும் ஏராளமாக உள்ளன. கணையம், என்சைம்களைச் சுரப்பதோடு நின்றுவிடுவதில்லை; மிகச் சிறந்த சென்சாராகவும் செயல்படுகிறது!

கணைய என்சைம்கள் அளவுக்கு அதிகமாகச் சுரந்தாலும் ஆபத்து; நிறைய நேரம் கணையத்தில் தேங்கினாலும் கெடுதல். எனவே, சாப்பிடும் உணவைப் பொறுத்து செரிமான நீரைச் சுரக்கிறது, கணையம். எவ்வளவு உணவு இரைப்பையில் இருந்து குடலுக்கு வருகிறது என்பதை மோப்பம் பிடித்து, அதற்குத் தேவையான என்சைம்களை ‘அளந்து’ அனுப்புகிறது. உணவு எப்போது சிறுகுடலுக்கு வருகிறதோ, அந்த நேரத்தில் கணையச் சுரப்பும் மிகச் சரியாக அங்கு வந்துவிடுகிறது. அவ்வளவு நேர்த்தி!

நீங்கள் சாப்பிடுவது இட்லி, தோசை என்றால், கணையம் அதை சென்சார் செய்து அமிலேஸ் என்சைமைச் சுரக்கும். பருப்புச் சோறு என்றால் டிரிப்சின் என்சைமையும், இறைச்சி என்றால் லைப்பேஸ் என்சைமையும் தேர்ந்தெடுத்துச் சுரக்கும். மாவுச்சத்து குளுக்கோஸாகவும், புரதச்சத்து அமினோ அமிலமாகவும், கொழுப்புச்சத்து கொழுப்பு அமிலமாகவும் கல்லீரலுக்குப் போகும். அங்கே அவை உடலுக்குத் தேவையான சக்தியாக மாறும்.

shutterstock310254305

கணையமானது செரிமானச் சேவகன் மட்டுமல்ல; குடலைப் பாதுகாப்புக்கும் ஃபயர் சர்வீஸும்தான்! சாப்பிட்ட உணவில் அமிலத் தன்மை அதிகம் என்றால், பைகார்பனேட் அயனிகளை அள்ளிக்கொண்டு வந்து, அந்த அமிலத் தீயை அணைத்துவிடும். இதனால், சிறுகுடல் சுவர்கள் அழிவின் விளிம்பிலிருந்து தப்பித்துவிடும். கணையம் மட்டும் இந்த வேலையைச் செய்ய மறுத்தால், நீங்கள் குடிக்கும் நூறு மில்லி எலுமிச்சைச் சாறு மட்டுமே குடலில் பெரிய ஓட்டையைப் போட்டுவிடும்.

இன்சுலின் ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. குளுக்ககான், ரத்தத்தில் சர்க்கரை குறையும்போது, ஏற்கெனவே கல்லீரல் சேமித்துள்ள மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றிலிருந்து குளுக்கோஸை எடுத்து வந்து ரத்தத்தில் சேர்க்கிறது.

இந்த இரண்டு ஹார்மோன்களும் ஒன்றுக்கு ஒன்று புரிந்து செயல்படுவதால், ரத்தச் சர்க்கரை சரியாக இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தால் கணையம் பாதிக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது இந்தச் சீரான இயக்கம் தடுமாறுகிறது; நீரிழிவு ஏற்படுகிறது.

(இன்னும் அறிவோம்)

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உடல் எனும் இயந்திரம் 9: கழிவுத் தொழிற்சாலை

 

 
Medical%20-%204col

சிறுநீரகம் வயிற்றில் உள்ள ஒரு வடிகட்டி! இரைப்பைக்குப் பின்புறம், முதுகெலும்பின் வலதுபுறம் ஒன்றும் இடதுபுறம் ஒன்றுமாக இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அவரை விதை வடிவத்தில், சுமார் 150 கிராம் எடையில், 12 செ.மீ. நீளத்தில், 6 செ.மீ. அகலத்தில், 3 செ.மீ. தடிமனில் உள்ளது. வயிற்றின் வலது பக்கத்தில் கல்லீரல் இருப்பதால், வலது சிறுநீரகம் சற்றே கீழிறங்கி இருக்கிறது.

பாலூட்டும் உயிரினங்கள் பெரும்பாலானவற்றுக்குச் சிறுநீரகத்தின் அமைப்பு ஒன்றுபோலவே உள்ளது. எடையில் மட்டும்தான் வித்தியாசம். யானை சிறுநீரகத்தின் எடை சுமார் 3 கிலோ. நீலத்திமிங்கலத்தின் சிறுநீரகம் 225 கிலோவரை இருக்கும்.

சிறுநீரகத்தில் கார்டெக்ஸ், மெடுல்லா, பெல்விஸ் என மூன்று பகுதிகள் உள்ளன. சிறுநீரகத்தின் குவிந்த வெளிப்பகுதிக்கு கார்டெக்ஸ், நடுவில் உள்ளது மெடுல்லா. அதைத் தொடர்ந்து ‘பெல்விஸ்’ (Renal pelvis) எனும் குழிவான பகுதி உள்ளது. அதில் நிறைய குழாய்கள் திறக்கின்றன. அவற்றுக்கு ‘காலிசெஸ்’ (Calyces) என்று பெயர்.

சிறுநீரை உற்பத்தி செய்வது சிறுநீரகத்தின் முக்கியப் பணி. இதற்கு ‘நெஃப்ரான்கள்’ (Nephrons) உதவுகின்றன. இவைதான் சிறுநீரகத்தின் துப்புரவுப் பணியாளர்கள். இவை மெடுல்லாவில் உள்ள பிரமிட்களில் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் 10 லட்சம் நெஃப்ரான்கள் இருக்கின்றன. ஏராளமான முடிச்சுகளுடன் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் இந்த நெஃப்ரான்கள் எல்லாவற்றையும் நேராக இழுத்து, இணைத்தால், சுமார் 60 கி.மீ. நீளமுள்ள தொலைபேசி வயர்போல் காணப்படும்.

ஒவ்வொரு நெஃப்ரானிலும் உள்ள தலைப்பகுதிக்கு ‘பௌமன் கிண்ணம்’ (Bowman’s capsule) என்று பெயர். சிறுநீரகத்துக்கு வரும் சுத்த ரத்தக் குழாயின் (Renal artery) கிளை ஒன்று (Afferent arteriole) இதற்குள் நுழைகிறது. அது கிளைவிட்டுக் கிளைவிட்டுச் சிறிதானதும் மறுபடியும் புதிய கிளைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய குழாயாக (Efferent arteriole) உருவமெடுத்து வெளியேறுகிறது. பின்னர் அது தந்துகிகளாகப் பிரிந்து, சிறுநீரகச் சிரையாக (Renal vein) உருமாறி, பொது ரத்த ஓட்டத்தில் இணைகிறது.

இந்தக் கிண்ணத்திலுள்ள ரத்தக்குழாய்ப் பின்னலுக்கு ’கிளாமிருலஸ்’ (Glomerulus) என்று பெயர். ‘பௌமன் கிண்ணம்’ மற்றும் ’கிளாமிருலஸ்’ இணந்துள்ள பகுதிக்கு ‘மல்பிஜியன் பாடி’ (Malpighian body) என்று பெயர். இதுதான் சிறுநீரகத்தின் உண்மையான வடிகட்டி.

ஒவ்வொரு பௌமன் கிண்ணத்திலிருந்தும் ஒரு சிறுநீரகச் சிறுகுழாய் (Renal tubule) கிளம்புகிறது. இதில் உறிஞ்சும் பகுதி, ஹென்லே லூப், சுரக்கும் பகுதி எனப் பல பகுதிகள் உண்டு. மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளைப் போலத்தான் இந்த சிறுநீரகக் குழாய்களும் வளைந்து வளைந்து செல்லும். பல நெஃப்ரான்களின் சிறுநீரகச் சிறுகுழாய்கள் கடைசியில் ஒன்றுசேரும்போது ஒரு சேகரிப்புக் குழாய் (Collecting tubules) உருவாகும். இப்படிப் பல சேகரிப்புக் குழாய்கள் காலிசெஸ் பகுதிக்கு வந்து பெல்விஸில் திறக்கின்றன.

பெல்விஸில் இருந்து 25 செ.மீ. நீளத்தில் 3 மி.மீ. விட்டத்தில் ஒரு சிறுநீர்க் குழாய் (Ureter) புறப்படுகிறது. இவ்வாறு இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் தலா ஒரு சிறுநீர்க் குழாய் புறப்பட்டு அடிவயிற்றில் இருக்கும் சிறுநீர்ப்பையை (Urinary bladder) அடைகிறது. சிறுநீர்ப்பை, சிறுநீர்த் துவாரம் உள்ள சிறுநீர்த் தாரையில் இணைந்துள்ளது.

 

Medical%20-5
சரி, சிறுநீர் பிரிவது எப்படி?

உடலில் ஓடும் ரத்தத்தில் நிமிடத்துக்கு ஒன்றேகால் லிட்டர் சிறுநீரகத்துக்குப் போகிறது. இதிலிருந்து நிமிடத்துக்கு 125 மி.லி. சிறுநீர் (GFR) ஆரம்பத்தில் பிரிக்கப்படுகிறது. இது அப்படியே சிறுநீராக வெளியேறுவதில்லை. நெஃப்ரான் செய்யும் முக்கிய வேலையே இனிமேல்தான் ஆரம்பமாகிறது.

இந்த வேலையை நகராட்சியில் ஏரித் தண்ணீரை ஒரு தொட்டியில் சேகரித்துப் பல கட்டங்களில் வடிகட்டி சுத்தப்படுத்துகிறார்களே, அதோடு ஒப்பிடலாம். ஒருநாளில் சுமார் 1,500 லிட்டர் ரத்தம் இவ்வாறு வடிகட்டப்பட்டுச் சுத்தமாகிறது.

ஆரம்பச் சிறுநீர் என்பது தரைத் தொட்டியில் சேகரிக்கப்பட்ட ஏரித் தண்ணீர்போல் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும். நல்லவை எல்லாம் சிறுநீரில் போய்விட்டால், அடுத்த ஐந்தாம் நிமிடத்தில் தலைசுற்றி மயங்கிவிடுவோம். இதைத் தடுப்பதற்காக அடுத்த வேலையை ஆரம்பிக்கிறது நெஃப்ரான். இதனுள் சிறுநீர் பயணிக்கும்போது, குளுக்கோஸ், சோடியம், பொட்டாசியம் போன்ற தேவையானவற்றை உறிஞ்சி உடலுக்கே திரும்பவும் தந்துவிடுகிறது. யூரியா, யூரிக் அமிலம் போன்ற கழிவுகளைத் தண்ணீருடன் கலந்து சிறுநீர்ப் பைக்கு அனுப்புகிறது. இதுதான் சிறுநீர்.

நெஃப்ரான்களின் வழியே ஆரம்பச் சிறுநீர் வரும்போது, உடலுக்குப் பயன்படும் சத்துகள் முழுவதும் மறுபடியும் உடலுக்குக் கிடைத்துவிடுவதால்தான், உடலில் அயனிகளின் அளவு சமச்சீராக இருக்கிறது; தண்ணீரின் அளவும் சரியாக இருக்கிறது. ரத்தம் உடலுக்குள் ஒரே அளவாகச் சுற்றிவருவதற்கும், ரத்த அழுத்தம் சரியாக இருப்பதற்கும் இந்தச் சமச்சீர் அளவுகள் முக்கியம்.

இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து நாளொன்றுக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. இது சீறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது. இரண்டு சிறுநீரகங்களுக்கும் சேர்த்து ஒரு பைதான். இதில் சுமார் அரை லிட்டர் சிறுநீர் பிடிக்கும். எல்லா விலங்குகளுக்கும் சிறுநீர்ப்பை உண்டு. பறவைகளுக்கு மட்டும் இது இல்லை. யானையின் சிறுநீர்ப்பையில் அதிகபட்சமாக 18 லிட்டர் சிறுநீர் கொள்ளும். திமிங்கிலம் ஒரு நாளில் 300 லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.

(இன்னும் அறிவோம்)

http://tamil.thehindu.com

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உடல் எனும் இயந்திரம் 10: நோய்களைத் தடுக்கும் மண்ணீரல்

 

 
Spleen%20-1

உடலில் ரத்த அணுக்களோடும் ‘நோய்ப் பாதுகாப்பு மண்டலம்’ என அழைக்கப்படும் நிணநீர் மண்டலத்தோடும் நெருங்கியத் தொடர்புகொண்டுள்ள உறுப்பு, மண்ணீரல் (Spleen). இது, மேல் வயிற்றின் இடது பக்கத்தில், உதரவிதானத்துக்குக் கீழே இருக்கிறது. இதற்கு முன்புறம் இரைப்பையும் பின்புறம் சிறுநீரகமும் இருக்கின்றன.

இதன் நீளம் சுமார் 12 செ.மீ. அகலம் சுமார் 7 செ.மீ. எடை 150 கிராம். இது பார்ப்பதற்கு மாநிறத்தில் குழி விழுந்த மாங்காய் மாதிரி இருக்கிறது. குழி விழுந்த பகுதி வழியாக ரத்தக் குழாய்கள் உள்ளே சென்று வெளியில் வருகின்றன.

உடலில் உள்ள மிகப் பெரிய நிணத்திசு உறுப்பு (Lymphatic organ) இதுவே. இதன் மேற்புறத்தில் கடினமான நார்த்திசுவாலான உறை (Capsule) ஒன்று இருக்கிறது. இதிலிருந்து நிறையத் திசுச் சுவர்கள் உள்நோக்கிச் சென்று மண்ணீரலைப் பல பகுதிகளாகப் பிரிக்கின்றன. தண்ணீர்த் தொட்டிகள்போல் காணப்படும் இந்தப் பகுதிகளுக்கு ‘நுண்ணறைகள்’ (Lobules) என்று பெயர். இவை பஞ்சுபோல் மென்மையாக இருக்கும்.

இவற்றில் மண்ணீரல் கூழ் (Splenic pulp) இருக்கிறது. இது சிவப்புக்கூழ் (Red pulp), வெண்கூழ் (White pulp) என இரு வகைப்படும். சிவப்புக்கூழில் ரத்த அணுக்கள், நச்சுகளை விழுங்கும் தன்மை கொண்ட மேக்ரோபேஜ் அணுக்கள், அழிக்கப்பட்டுவிட்ட வயது முதிர்ந்த ரத்தச் சிவப்பணுக்கள் ஆகியவை காணப்படுகின்றன. இங்குதான் ரத்தச் சிவப்பணுக்களும் தட்டணுக்களும் சேமிக்கப்படுகின்றன.

வெண்கூழில் நிணத்திசுக்களின் தொகுப்பு மட்டுமே காணப்படுகிறது. இதன் மையப் பகுதியில் நிணவணுக்கள் (Lymphocytes) எனும் ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகின்றன. இவைதான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கருவில் வளரும் குழந்தைக்கு அதன் மண்ணீரலில்தான் ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியாகின்றன. பிறப்புக்குப் பிறகு, அவை எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன. என்றாலும், அவ்வாறு உருவாகும் ரத்தச் சிவப்பணுக்கள் பக்குவமடைந்து முழு அணுக்களாக உருவெடுப்பது மண்ணீரலில்தான்!

அதுபோல் உடலில் ரத்தம் சேமிக்கப்படும் ஒரே இடம் மண்ணீரல் மட்டுமே. உடலில் எங்காவது அடிபட்டு, காயம் ஏற்பட்டு, ரத்தம் அதிகமாக வெளியேறும்போது அதை ஈடுகட்ட இதில் சேமிக்கப்படும் ரத்தம் உடனடியாக உடலுக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது; இதன் மூலம் உயிருக்கு ஏற்பட இருக்கும் ஆபத்து தவிர்க்கப்படுகிறது.

மண்ணீரலை ‘நோய்த் தடுப்பு மண்டலத்தின் தலைவன்’ என்று சொல்வதுண்டு. காரணம், நமக்கே தெரியாமல் பல நோய்களிலிருந்து அனுதினமும் நம்மைக் காக்கின்ற பணிகளை ஓய்வில்லாமல் செய்துகொண்டிருக்கும் அரிய உறுப்பு மண்ணீரல்தான்.

உடலில் ரத்தத்தை வடிகட்டும் உறுப்பாகவும் இது திகழ்கிறது. எப்படி? நோய்ப் பாதுகாப்பில் பங்கேற்கும் ‘வலைப்பின்னல் உள்ளுறை மண்டலம்’ (Reticulo endothelial system) நம் உடலில் நான்கு இடங்களில் இருக்கிறது. அவற்றில் ஒன்று மண்ணீரல். இந்த வலைப்பின்னல் அணுக்கள் ரத்தத்தில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை வடிகட்டிக்கொண்டே இருப்பதால் நமக்கு நோய்ப் பாதுகாப்பு கிடைக்கிறது. இது மட்டும் உடலில் நிகழவில்லை என்றால், நமக்கு தினமும் ஏதாவது ஒரு நோய் வந்து படுத்திவிடும்.

உடலில் உருவாகும் நச்சுகள், உடலுக்குத் தேவைஇல்லாத அந்நியப் பொருள்கள், உடலுக்கு ஒவ்வாத புரதங்கள், நுண்கிருமிகள், வயதான ரத்த அணுக்கள் ஆகியவை நம் ரத்தத்தில் எந்த நேரமும் சுற்றிக்கொண்டிருக்கும். இவை எல்லாமே நமக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றையெல்லாம் மண்ணீரலில் உள்ள மேக்ரோபேஜ் அணுக்கள் விழுங்கி அழித்துவிடுகின்றன. இதனால் நமக்கு நோய்கள் வருவது இயல்பாகவே தடுக்கப்படுகிறது.

ரத்தச் சிவப்பணுக்களின் சராசரி ஆயுட்காலம் 120 நாட்கள். காலாவதியாகிவிட்ட இந்த அணுக்கள் ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருந்தால், நோய்கள் ஏற்படுவது உறுதி. எனவே இவை அழிக்கப்பட வேண்டியது கட்டாயம். இந்தப் பணியை மேற்கொள்வதும் மண்ணீரல்தான். 120 நாட்களைக் கடந்துவிட்ட சிவப்பணுக்கள் மண்ணீரலில் உடைக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி மூலம் புதிய சிவப்பணுக்களை உருவாக்க எலும்பு மஜ்ஜையில் மறுபடியும் பயன்படுத்தப்படுகின்றன. அப்போது உருவாகும் பிலிருபின் எனும் நச்சுப்பொருளைக் கல்லீரலுக்கு அனுப்பி சிறுநீரிலும் மலத்திலும் வெளியேற்றி விடுகிறது, மண்ணீரல்.

எதிரிப் படைகள் நாட்டுக்குள் நுழையும்போது, நம் ராணுவ சிப்பாய்கள் யுத்தம் செய்து, அவர்களை விரட்டுவதுபோல், உடலுக்குள் வேண்டாத புரதங்கள் நுழையும்போது, மண்ணீரல் நிணவணுக்களை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இவை எதிரணுக்களை (Antibodies) உருவாக்கி, புரதங்களோடு போராடி, அவற்றைச் செயலிழக்கச் செய்கின்றன. இதனாலும் நம் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 11: கோட்டைச் சுவர்

shutterstock527618650

செரிமான மண்டலத்தின் கோட்டைச் சுவர் வாய். இதில் உதடுகள், பற்கள், நாக்கு, உள்நாக்கு, அண்ணம், கன்னம், உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஆகியன அடங்கும். இந்தக் ‘கோட்டைச் சுவர்’ தேவைக்குத் திறந்து மூடுவதால்தான், காற்றில் கலந்துள்ள மாசு, ஈ, கொசு, எறும்பு, பூச்சி போன்ற ‘எதிரிகள்’ வாய்க்குள் நுழைவது தடுக்கப்படுகிறது.

திரவ உணவை உறிஞ்சிக் குடிக்க உதடுகள் உதவுகின்றன. குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சுவதன் மூலம் மனிதனின் முதல் செரிமான இயக்கத்தை இவைதான் ஆரம்பித்துவைக்கின்றன. குடிக்கும்போது தம்ளரைத் தாங்கவும், கன்னம், நாக்கு, பற்கள் ஆகியவற்றின் துணையுடன் உணவை மெல்லவும், அரைக்கவும் இவை உதவுகின்றன. நன்றாகப் பேசவும் பாடவும் உதடுகளின் உதவி கட்டாயம். உதடுகள் இல்லாவிட்டால் நாகஸ்வரம் வாசிக்க முடியாது.

shutterstock53357935

நமக்கு 32 பற்கள் இருக்கின்றன. இவை நிரந்தரப் பற்கள். சிறு குழந்தையாக இருக்கும்போது முளைத்து, பிறகு விழுந்துவிடும் பற்கள் ‘பால் பற்கள்’ (Milk teeth). இவை வாயின் கீழே 10, மேலே 10 என மொத்தம் 20 இருக்கும்.

குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும்போது ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கி, இரண்டரை வயதுக்குள் எல்லாப் பற்களும் முளைத்துவிடும். பிறகு, 5 வயதில் விழத் தொடங்கி, 13 வயதுக்குள் எல்லாப் பால்பற்களும் விழுந்துவிடும். அந்த இடத்தில் புதிதாக முளைக்கும் பற்கள், ‘நிரந்தப் பற்கள்’. இவை ஏழு வயதில் முளைக்கத் தொடங்கும். மேலே 16, கீழே 16 என மொத்தம் 32 பற்கள் இருக்கும். இவற்றின் அமைப்பையும் பயன்பாட்டையும் வைத்து நான்கு வகையாகப் பிரித்துள்ளனர்.

ஒவ்வொரு வரிசையிலும் நடுவில், முன்பக்கம் இருக்கும் நான்கு பற்கள் ‘வெட்டுப் பற்கள்’ (Incisors). இவற்றையடுத்து, பக்கத்துக்கு ஒன்றாக, சிறிது கூர்மையாக இருப்பவை, கோரைப் பற்கள் (Canines). ஒவ்வொரு பக்கத்திலும் கோரைப் பல்லுக்கு அடுத்ததாக, அகலமாக இருக்கும் 2 பற்கள், முன் கடைவாய்ப் பற்கள் (Pre molars); அவற்றுக்குப் பின் இருக்கும் அகலமான 3 பற்கள், பின் கடைவாய்ப் பற்கள் (Molars).

ஒவ்வொரு பக்கத்திலும் கடைசிக் கடைவாய்ப் பல் 15 வயதுக்கு மேல்தான் முளைக்கத் தொடங்கும். அவை ‘அறிவுப் பற்கள்’ (Wisdom teeth) .

ஒவ்வொரு பல்லிலும் வெண்நிறத்தில் வெளியில் தெரியும் பகுதி ‘மகுடம்’ (Crown). ஈறுக்குள் புதைந்திருக்கும் பகுதி வேர் (Root). பல்லின் மகுடத்துக்கும் வேருக்கும் நடுவில் உள்ளது, கழுத்து. பற்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேர்களைக் கொண்டுள்ளன. மேல் வரிசைப் பற்களை மேல் தாடை எலும்பும், கீழ் வரிசைப் பற்களை கீழ்த் தாடை எலும்பும் தாங்கிக்கொள்கின்றன. தாடை எலும்பில் உள்ள குழிகளில்தான் பற்கள் புதைந்துள்ளன.

shutterstock102833417%20Convertedcol

தாடையில் பல் திசுவைத் தக்கவைக்கும் பணியையும், உணவைக் கடிக்கும்போது ஏற்படும் அழுத்தத்தைத் தாங்கிப் பற்களைப் பாதுகாக்கும் பணியையும் ‘பல் புறத்திசுப் பிணையம்’ (Periodontal ligament) மேற்கொள்கிறது.

ஈறின் அடிப்பாகத்திலிருந்து, ஒவ்வொரு பல்லின் நடுவிலும் நரம்புகளும் ரத்தக் குழாய்களும் ஓடுகின்றன. இந்தப் பகுதிக்குக் ‘கூழ்’ (Pulp) என்று பெயர். இதைச் சுற்றி ‘பல் திசு’ (Dentine) எனும் கடினமான பகுதி உள்ளது. அதற்கும் வெளியில் பல்லுக்கு ஓர் உறைபோல் உள்ளது, எனாமல் (Enamel) எனும் பற்சிப்பி. பல்லுக்கு வெண்நிறம் தருவது இதுதான். பல்லின் வேர்ப் பகுதியும் பல் திசுவும் எலும்புத் தன்மை கொண்ட ‘பற்காரை’யால் (Cementum) மூடப்பட்டுள்ளது. எனாமல் சூழ்ந்த பற்சிகரம்தான் நம் உடலிலேயே மிகவும் கடினமான பகுதி.

ஊன் உண்ணும் உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் வெட்டுப் பற்கள்தான் உணவைக் கடிக்கும் பற்கள். கூர்மையான கோரைப் பற்கள் உணவைக் கிழிப்பதற்குப் பயன்படுகின்றன. முன் கடைவாய்ப் பற்களும் கடைவாய்ப் பற்களும் உணவை அரைக்க உதவுகின்றன.

தாவர உண்ணிகளுக்குத் தாவர உணவைப் பிடிப்பதற்கும் உரிப்பதற்கும் ஏற்றவகையில் வெட்டுப் பற்கள் மிகக் கூர்மையாக இருக்கின்றன; கடைவாய்ப் பற்கள் மிக அகலமாகவும் சமதளமாகவும் இருக்கின்றன.

யானையின் தந்தம் உண்மையில் பல்தான். உயிரினங்களிலேயே அதிக எண்ணிக்கையில் பற்களைக் கொண்டது, நத்தை. இது 15,000 நுண்பற்களைக் (Micro teeth) கொண்டுள்ளது. உலகிலேயே ‘லிம்பெட்’ (Limpet) எனும் கடல் நத்தையின் பல்தான் அதிக பலம் கொண்டது. முயலின் பற்கள் எப்போதும் வளர்ந்துகொண்டிருக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. வெள்ளாடு பிறக்கும்போதே 8 பற்களுடன் பிறக்கிறது. பறவைகளுக்குப் பற்கள் இல்லை; பதிலாக, அலகு இருக்கிறது.

shutterstock108708641%20Convertedcol

புலி உள்ளிட்ட பூனையினத்தைச் சேர்ந்த விலங்கினங்களுக்குக் கடைவாய்ப் பற்கள் சிறிதாகவும் கூர்மையாகவும் இருக்கும். சுறா மீன்களுக்குப் பற்கள் பலமுறை விழுந்து முளைத்துக்கொண்டிருக்கும். அவ்வாறு அதன் வாழ்நாளில் மொத்தம் 50,000 பற்கள் முளைத்திருக்கும். டால்பின்களுக்கு 200 பற்கள் இருக்கும்.

திமிங்கிலங்களில் பற்கள் உள்ளவை, பற்கள் இல்லாதவை என இரு வகை உண்டு. விலங்குகளிலேயே அதிக நீளம் கொண்ட கோரைப் பற்களைக் கொண்டது, சிறுத்தைப் புலி. அதன் நீளம் இரண்டு அங்குலம்.

நாக்கு மற்றும் உமிழ்நீர்ச் சுரப்பிகள் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 12: நோய் காட்டும் கண்ணாடி!

 

 
shutterstock8238214%20Convertedcol

நாக்கு என்பது நம் வாய்த்தளத்தில் அமைந்துள்ள தசையாலான உறுப்பு. இதயம், கல்லீரல் போன்று உடலில் எலும்புகள் இல்லாத மற்றோர் உறுப்பு இது. விலங்கினங்களில் விதிவிலக்காக, பறவைகளின் நாக்கில் மட்டும் சிறு எலும்பு இருக்கிறது.

இது ‘குரல்வளை மூடி’ (Epiglottis)யில் ஆரம்பித்து வாயின் முனையில் முடிகிறது. இது நுனி நாக்கு, உடல் நாக்கு, பின் நாக்கு என மூன்று பகுதிகளைக் கொண்டது. நாக்கின் உடல் பகுதி இணையச் சவ்வுடனும் (Frenulum), வேர் போலிருக்கும் பின் பகுதி ஹயாட் எலும்பிலும் (Hyoid bone) இணைந்துள்ளன. இணைய சவ்வானது நாக்கை வாய்த்தளத்தில் இணைக்கிறது. நுனி நாக்கு மட்டும் எதிலும் ஒட்டாமல் இயங்குகிறது. இதன் மூன்றில் ஒரு பகுதி மேல் அண்ணத்தை நோக்கியும், மீதிப் பகுதி தொண்டையைப் பார்த்தும் இருக்கிறது.

நாக்கின் நீளம் ஆணுக்குச் சராசரியாக 8.5 செ.மீ.; பெண்ணுக்கு 8 செ.மீ. உலகிலேயே அதிக நீளமுள்ள நாக்கைப் பெற்றிருப்பவர், அமெரிக்காவைச் சேர்ந்த நிக் ஸ்டோபெர்ல் (Nick Stoeberl). இவருடைய நாக்கின் நீளம் 10.1 செ.மீ. இது ஒரு கின்னஸ் சாதனை.

ஓர் ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். எப்போதும் ஈரமாக இருக்கும். பார்ப்பதற்கு ஒரே தசையால் உருவானதுபோல் தெரிந்தாலும், அமைப்பு ரீதியில் இது எட்டு தசைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தசைகள் நான்கு உள் இயக்கத் தசைகள் (Intrinsic muscles), நான்கு வெளி இயக்கத் தசைகள் (Extrinsic muscles) என இரு பிரிவுகளாக உள்ளன. உள் இயக்கத் தசைகள் எலும்போடு இணையாதவை. வெளி இயக்கத் தசைகள் எலும்போடு இணைந்துள்ளவை.

shutterstock8563645%20Convertedcol

நாக்கின் வடிவம் நம் உச்சரிப்பைப் பொறுத்து மாறும் தன்மையுடையது. குதிரைக்கும் நாய்க்கும் இதன் வடிவம் U போலிருக்கிறது. எருது, பன்றி, செம்மறி ஆடு ஆகியவற்றின் நாக்கு V வடிவத்தில் இருக்கிறது.

நாக்கு நமக்குச் செய்யும் முக்கியமான பணி, பலதரப்பட்ட சுவைகளை உணர்த்துவது. அதோடு பற்களின் துணையுடன் திட உணவை மெல்வது, விழுங்குவது, திரவ உணவை அருந்துவது, வாயில் உள்ளதைத் துப்புவது ஆகிய உணவு இயக்கங்களுக்கும் இது உதவுகிறது. பேசுவதற்கும் பாடுவதற்கும் நாக்கு மிகவும் அவசியம். விலங்கினங்களில் கிளியின் நாக்கு மட்டும் மனிதர்களைப்போல் குரல் எழுப்பும் தன்மை கொண்டது. அதனால்தான் ‘கிளி பேசுகிறது’ என்கிறோம். மேலும், நாக்கு பற்களைச் சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

பல்வேறு விலங்குகள் தங்கள் நாக்கைச் சுவையை அறிவதற்கும், உணவை உறிஞ்சிக்கொள்ளவும் மட்டுமல்லாமல், வேறு பல பணிகளுக்கும் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, நாய், பூனைகளின் நாக்கு உடலைத் தேய்த்துச் சுத்தம் செய்துகொள்ள உதவுகிறது. பாம்புகளின் நாக்கு வாசனையைச் சேகரித்து, உணர்வுறுப்புகளுக்கு அனுப்பி, இரை இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்கிறது. தவளை, பச்சோந்தி, அலங்கு, எறும்புத்தின்னி போன்றவை தங்கள் நீண்ட நாக்கைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கின்றன. ரீங்காரச் சிட்டுகள் (Humming birds) தாவரங்களிலிருந்து தேனை உறிஞ்சுவதற்குத் தங்கள் நாக்கைப் பயன்படுத்துகின்றன.

நாக்கின் மேற்புறம் மியூக்கஸ் எனும் சளிப்படலத்தால் மூடப்பட்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான அரும்புகள் (Papillae) வேர்போல் புதைந்துள்ளன. இவற்றில் 3,000 முதல் 10,000 வரை சுவை அரும்புகள் (Taste buds) குடியுள்ளன. இவை பல நரம்புப் பின்னல்கள் வாயிலாக மூளையுடன் இணைந்துள்ளன. இதன் பலனால், இவை உணவில் உள்ள இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு எனும் நான்கு முக்கியச் சுவைகளை நமக்கு உணர்த்துகின்றன.

‘யுமாமி’ (Umami) எனும் பெயரிலும் ஒரு சுவை உணர்வை ஜப்பானியர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். குறிப்பாகச் சொன்னால், சோயா சாஸில் இருப்பது போன்ற மிகுந்த புளிப்புச் சுவை கொண்ட ஒரு வகை சுவை உணர்வு இது. ‘மோனோசோடியம் குளுட்டமேட்’ (Monosodium glutamate) எனும் வேதிப்பொருளில் இந்தச் சுவை உள்ளது.

இனிப்புச் சுவை நுனி நாக்கிலும், கசப்புச் சுவை நாக்கின் பின்புறத்திலும், உப்புச் சுவையும் புளிப்புச் சுவையும் நாக்கின் இரண்டு பக்கவாட்டிலும் மிகுதியாக உணரப்படுகின்றன என்றுதான் காலங்காலமாக பள்ளிப் பாடங்களில் கற்றுத்தரப்படுகிறது.

ஆனால், ‘உணவில் உள்ள எல்லா சுவைகளையும் நாக்கின் எல்லாப் பகுதிகளும் நமக்கு உணர்த்தக் கூடியவைதான்’ என்று 1974-ல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் வெர்ஜினியா கோலிங்க்ஸ் (Virginia Collings) நிரூபித்துள்ளார். மேலும், சுவை அரும்புகள் நாக்கின் மேற்புறம் மட்டுமல்லாமல், வாயின் மேற்புறமுள்ள மென் அண்ணத்திலும், உள் கன்னத்திலும், நாக்கின் அடியிலும், உதட்டிலும் இருக்கின்றன என்று இவர் உறுதிசெய்துள்ளார்.

shutterstock1019127655%20Convertedcol

ஆரோக்கியமாக உள்ள ஓர் உடலில் களைப்பே அறியாத உறுப்பு என்றால், அது நாக்கு மட்டுமே!

நாக்கை ‘ஒரு நோய் காட்டும் கண்ணாடி’ என்றும் கூறலாம். இதன் மேற்பரப்பில் காணப்படும் நிறம், மாவு போன்ற படிவங்களை வைத்து ரத்தசோகை போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடு, டைபாய்டு, பூஞ்சைத் தொற்று, மஞ்சள் காமாலை போன்ற பலதரப்பட்ட தொற்றுநோய்கள், புற்றுநோயையும் கணிக்க முடியும்.

மனித விரல் ரேகைகளைப் போலவே ஒருவரின் நாக்கின் நுண்பகுதிகள் (Tongue prints) தனித்தன்மையைப் பெற்றுள்ளவை. இதனால், ஒருவருக்கு இருக்கின்ற நாக்கைப்போல அடுத்தவர்களுக்கு இருக்காது. இந்தத் தன்மையைப் பயன்படுத்தி, மனிதர்களை அடையாளம் காண முடியும்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 13: செரிமானத்தின் தொடக்க விழா!

 

 
salivajpg

உணவின் முதல் செரிமானம் வாய்க்குழியில் தொடங்குகிறது. அதற்கு உமிழ்நீர் (Saliva) உதவுகிறது. உமிழ்நீரைச் சுரப்பது உமிழ்நீர்ச் சுரப்பிகள். நமக்கு மூன்று ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகள் உள்ளன. செவிமுன் சுரப்பி, தாடை அடிச்சுரப்பி, நாக்கு அடிச்சுரப்பி. இவை ஒவ்வொன்றும் அமைப்பிலும் பணியிலும் தனித்தன்மை வாய்ந்தவை.

ஒவ்வொரு காதுக்குக் கீழாகவும் முன்புறமாகவும் கீழ்த்தாடையின் பின்புறமாகவும் மொத்தம் இரண்டு ‘செவிமுன் சுரப்பிகள்’ (Parotid glands) உள்ளன. இவைதான் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் மிகப் பெரியவை. தலா 25 கிராம் எடை கொண்டவை. ஆனாலும், இவை சுரக்கிற உமிழ்நீரின் அளவு 20 சதவீதம்தான்.

கீழ்த்தாடையின் இருபுறத்திலும் பக்கத்துக்கு ஒன்றாக இருப்பது, ‘தாடை அடிச்சுரப்பி’ (Sub mandibular gland). இதன் எடை 10 கிராம். இந்தச் சுரப்பிகள்தான் அதிக அளவில் உமிழ்நீரைச் சுரக்கின்றன. அதாவது, 70 சதவீதம்.

நாக்கின் அடிப்பகுதியில் இருப்பவை ‘நாக்கு அடிச்சுரப்பிகள்’ (Sub lingual glands). இவை மிகச் சிறிய உமிழ்நீர்ச் சுரப்பிகள். தலா 3 கிராம் எடை கொண்டவை. இவை சுரக்கிற உமிழ்நீரின் அளவு 5 சதவீதம் மட்டுமே. இந்த முதன்மை உமிழ்நீர்ச் சுரப்பிகளைத் தவிர, வாய்க்குள் கன்னம், அண்ணம், உதடு, நாக்கின் கீழ்ப்பகுதி ஆகியவற்றிலும் மிகச் சிறிய உமிழ்நீர்ச் சுரப்பிகள் 800 லிருந்து 1,000 வரை உள்ளன.

உமிழ்நீர்ச் சுரப்பிகள் பார்ப்பதற்கு ஒவ்வொன்றும் ஒரு திராட்சைக் குலைபோலிருக்கும். அவற்றில் குழிபோன்ற பகுதிகள் (Lobules) ஆயிரக்கணக்கில் இருக்கும். அசினார் செல்கள் சூழ்ந்திருக்கும். இவை தினமும் ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை உமிழ்நீரைச் சுரக்கின்றன. உமிழ்நீர்க் குழாய்கள் உமிழ்நீரை வாய்க்குழிக்கு எடுத்துச் செல்கின்றன.

விலங்குகளுக்கு உமிழ்நீரின் அளவு அதிகம். தினமும் சுமாராக குதிரை 40 லிட்டர், பன்றி 15 லிட்டர், மாடு 110 முதல் 180 லிட்டர் வீதம் உமிழ்நீரைச் சுரக்கின்றன.

உமிழ்நீர் என்பது வாய்க்குள் எப்போதும் இருக்கும் நிறமற்ற அடர்த்தியான திரவம். இதில் 99.5 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. மீதியில் 0.2 சதவீதம் சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் போன்ற தாதுகள் அடங்கும்; 0.3 சதவீதம் மியூசின் எனும் சளி போன்ற பொருள், அமிலேஸ், லிப்பேஸ், லைசோசைம் ஆகிய நொதிகள், லேக்டோஃபெரின் எனும் நுண்மத்தடை பொருள், பற்களைப் பாதுகாக்கும் சில வகை புரதங்கள் ஆகியன அடங்கும்.

உமிழ்நீர் எப்படிச் சுரக்கிறது?

மூளையில் முகுளம் (Medulla), மூளைத் தண்டு (Brain stem), பெருமூளைப் புறணி (Cerebral cortex) எனும் பகுதிகள் உள்ளன. இவைதாம் உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றன. நாம் சாப்பிட நினைத்தவுடன், உணவைப் பார்த்த மாத்திரத்தில், வாசனை மூக்கைத் துளைத்தவுடன் அல்லது சாப்பிடும் நேரத்தில், நாக்கிலும் மூக்கிலும் உள்ள உணர்வு நரம்புகள் தூண்டப்படுகின்றன. இந்த சமிக்ஞைகள் உள்நோக்கு நரம்புகள் (Afferent nerves) வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. உடனே, மூளையானது வெளிநோக்கு நரம்புகள் (Efferent nerves) வழியாக உமிழ்நீர்ச் சுரப்பிகளுக்கு சமிக்ஞைகள் அனுப்பி உமிழ்நீரைச் சுரக்கச் செய்கிறது.

அதேநேரம், உணவு இல்லாதபோதும் நிமிடத்துக்கு 0.25 மி.லி. எனும் அளவில் உமிழ்நீர் வாய்க்குள் சுரந்துகொண்டுதான் இருக்கிறது. பொதுவாக, பகலில் உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கிறது; இரவில் குறைவாகச் சுரக்கிறது. இதயம் துடிப்பதைப்போலவே, உமிழ்நீர் சுரப்பதும் ஓர் அனிச்சைச் செயலே.

உணவுச் செரிமானம் எனும் ‘திருவிழா’வை வாய்க்குள் தொடங்கிவைப்பது உமிழ்நீர்தான். முதலில் நாம் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் கலந்து, அதைக் கரைக்கிறது. பிறகு, அது மெல்லப்படும்போது கவளமாக மாறுகிறது. அப்போது மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) உணவை அமிலேஸ் செரிக்கிறது; கொழுப்பு உணவை லிப்பேஸ் செரிக்கிறது. இந்த உணவுக் கவளம் இரைப்பைக்குச் செல்லும்போது, அங்கும் செரிமானம் ஆவது எளிதாகிவிடுகிறது. எனவேதான், சாப்பிடும்போது, ‘நன்றாக மென்று சாப்பிட வேண்டும்’ என்று சொல்கிறோம்.

உமிழ்நீருக்கு உணவைச் செரிப்பது மட்டுமல்லாமல், வாயை எப்போதும் ஈரமாக வைத்துக்கொள்வது, பேசுவதைச் சுலபமாக்குவது, பற்சிதைவைத் தடுப்பது எனப் பல பணிகள் உண்டு. உமிழ்நீரிலுள்ள மியூசின் ஒரு மசகுபோல் செயல்பட்டு நாம் மெல்வதையும் விழுங்குவதையும் எளிதாக்குகிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்து போவதை நமக்குத் தெரிவிப்பதும் உமிழ்நீர்தான். தாகத்தை ஏற்படுத்தித் தண்ணீர் அருந்தவைத்து உடலில் அயனிகளின் சமநிலையைத் தக்கவைத்துக்கொள்கிறது.

மேலும், இது பற்களையும் ஈறுகளையும் சுத்தப்படுத்துகிறது; நாக்கில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்கிறது. வாய் நாற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது. உமிழ்நீரிலுள்ள லைசோசைம் வாய்க்குள் நுழையும் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை அழிக்கிறது. பாக்டீரியா நுண்மங்களை லேக்டோஃபெரின் தடை செய்கிறது. உணவில் அமிலச்சத்து அதிகமென்றால், உடனே உமிழ்நீரிலுள்ள பைகார்பனேட் அயனிகள் அந்த அமிலத்தை நீர்த்துப் போகச் செய்கின்றன. இதன் பலனால், உணவுக்குழாய் புண்ணாவது தடுக்கப்படுகிறது.

பெரும்பாலான விலங்கினங்களின் உமிழ்நீரச் சுரப்பிகள் மனிதரைப் போலவேதான் காணப்படுகின்றன. பூச்சி இனங்களில் மட்டும் சில மாற்றங்கள் தெரிகின்றன. உதாரணமாக, பட்டுப்பூச்சிகள் பட்டு இழையைச் சுரக்கின்றன. சில பறவைகள் கூடு கட்டுவதற்குத் தேவையான பிசினைச் சுரக்கின்றன. டிரோசோபிலா பூச்சியின் உமிழ்நீர்ச் சுரப்பியில் பாலிட்டீன் குரோமோசோம் உள்ளது.

நாய்க்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லை. எனவே, உடல் வெப்பத்தைத் தணிக்க நாய்க்கு உமிழ்நீர்தான் உதவுகிறது. நாய்கள் நாக்கைத் தொங்கப்போடுவதற்கு இதுதான் காரணம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உடல் எனும் இயந்திரம் 14: வாய்க்குள் குகை

 

 
shutterstock417077221%201%20Convertedcol

வாய்க்குள் குகைபோல் அமைந்திருக்கிறது, தொண்டை (Pharynx). மூக்கு, வாய் இவற்றின் பின்பகுதிகள் இணையுமிடம் இது. உணவுக் குழாயின் தொடக்கமும் இதுதான்.

காண்பதற்குக் குழல் போன்றிருக்கும் தொண்டை, நாம் உண்ணும் உணவை வாயிலிருந்து உணவுக்குழாய்க்குத் தள்ளுகிறது; அதோடு, மூச்சுக்கும் பேச்சுக்கும் தேவையான காற்றுப்பாதையாகவும் செயல்படுகிறது.

ணவை விழுங்கும்போது, அண்ணமும் உள்நாக்கும் சிறதளவு மேலெழும்புகின்றன. அப்போது ‘தொண்டை இணையுறுப்பு’ சுருங்குகிறது. உணவுக் கவளம் தொண்டைக்குள் சரியாகச் செல்லவும், காற்றுப்பாதை அதற்குத் தடை செய்யாமல் இருக்கவும், இது உதவுகிறது. அடுத்ததாகத் தொண்டையில் இருக்கும் குறுக்குத் தசைகள் சுருங்குகின்றன. இதன் பலனால், உணவுக் கவளம் உணவுக்குழாய்க்குள் தள்ளப்படுகிறது.

மனிதத் தொண்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மூக்கின் பின்பகுதி இணையும் இடம் மூக்குத் தொண்டை (Nasopharynx); வாயின் பின்பகுதி இணையும் இடம் வாய்த் தொண்டை (Oropharynx) குரல்வளை உள்ள கீழ்ப் பகுதி குரல்வளைத் தொண்டை (Laryngopharynx).

தொண்டை ஆறு தசைகளால் ஆனது. இவற்றுள் மூன்று தசைகள் நெடுக்குத் தசைகளாகவும், மூன்று தசைகள் குறுக்குத் தசைகளாகவும் அமைந்துள்ளன. வாய்த் தொண்டையும் மூக்குத் தொண்டையும் இணையும் இடத்தில் ‘தொண்டை இணையுறுப்பு’ (Pharyngeal isthmus) உள்ளது.

shutterstock379477804%20Convertedcol
ணவை விழுங்கும்போது, அண்ணமும் உள்நாக்கும் சிறதளவு மேலெழும்புகின்றன. அப்போது ‘தொண்டை இணையுறுப்பு’ சுருங்குகிறது. உணவுக் கவளம் தொண்டைக்குள் சரியாகச் செல்லவும், காற்றுப்பாதை அதற்குத் தடை செய்யாமல் இருக்கவும், இது உதவுகிறது. அடுத்ததாகத் தொண்டையில் இருக்கும் குறுக்குத் தசைகள் சுருங்குகின்றன. இதன் பலனால், உணவுக் கவளம் உணவுக்குழாய்க்குள் தள்ளப்படுகிறது.

தொண்டையும் உணவுக்குழாயும் இணையும் இடத்தில், மூச்சுக்குழாய் முன்பக்கமாகவும், உணவுக்குழாய் பின்பக்கமாகவும் தனித்தனியாக அமைந்துள்ளன. அதனால்தான் உணவானது உணவுக்குழாய்க்குள்ளும், காற்றானது மூச்சுக்குழாய்க்குள்ளும் தனித்தனியாகச் செல்கின்றன.

வாயின் பின்பகுதி தொண்டையுடன் சேருமிடத்தில், அண்ணத்தின் கீழ், வாயின் இரு ஓரங்களிலும் உள்ள பள்ளங்களில் ‘டான்சில்கள்’ இருக்கின்றன.

டான்சில் என்பது நிணத்திசு; நோய்ப் பாதுகாப்புக்குத் தேவையானது. தொண்டைப் பகுதியைச் சுற்றி நிறைய டான்சில்கள் உள்ளன. தொண்டையை ஒரு குகை எனச் சொன்னோமல்லவா? அந்தக் குகையின் வாசலில், கீழ்ப்பகுதியாக நாக்கும், மேல் பகுதியாக அண்ணமும் உள்நாக்கும் உள்ளன. இதன் பக்கவாட்டில் இருபுறமும் வாய்ச் சுவர்கள் உள்ளன. உள்நாக்கைக் கடந்து சென்றால், உள்ளே இன்னொரு பகுதி ஒரு கூரைபோல் இருக்கிறது. இது தொண்டையின் பின்பகுதி.

இந்தக் குகை வாசலின் இருபக்கச் சுவர்களில் உள்ள நிணத்திசுக்களுக்கு அண்ண டான்சில்கள் என்று பெயர். நாக்கின் மேல் பகுதியில் சிறிதளவே இருக்கும் நிணத்திசுக்கள், நாக்கு டான்சில்கள். தொண்டையின் கூரையில் இருப்பவை, தொண்டை டான்சில்கள். மேலும், மூக்கின் பின்பகுதி தொண்டையுடன் இணைகிற இடத்தில் அடினாய்டு டான்சில் உள்ளது.

டான்சில்களின் வேலை என்ன?

வாய் வழியாக வரும் உணவிலும், தண்ணீரிலும், மூக்கு வழியாக வரும் காற்றிலும் நமக்குத் தெரியாமல் எண்ணற்ற கிருமிகள் உடலுக்குள் நுழையப் பார்க்கும். அவ்வாறான நோய்க் கிருமிகளையும் உடலுக்கு ஒவ்வாத வேற்றுப் பொருள்களையும் அடையாளம் கண்டு, அவற்றுடன் போராடி, அவற்றை வெளியேற்றும் அரும்பணியை டான்சில்கள் மேற்கொள்கின்றன. இதனால்தான், டான்சில்களை ‘நோய்ப் பாதுகாப்புப் படைகள்’ என்று சொல்கிறோம்.

இது எப்படிச் சாத்தியப்படுகிறது?

டான்சில்கள் கூர்மையான சென்சார்களாகச் செயல்படுவது ஒரு முக்கியக் காரணம். அதாவது, உடலுக்கு ஒவ்வாத அந்நியப் பொருள்கள் நுழைவதாக அவற்றுக்குச் சந்தேகம் வருமானால், உடனடியாக, அவற்றிலிருந்து சிறு ‘சாம்பிள்’ எடுத்து ஆராய்ந்து, அது குறித்த தகவல்களை மூளைக்கு அனுப்பி, உடலுக்குள் அவற்றை அனுப்பலாமா, வேண்டாமா எனக் கேட்கின்றன. அனுப்பக் கூடாது என்றால், உடனடியாக அவற்றை அழித்து வெளியேற்றி விடுகின்றன.

ஒரு வாயிற்காவலர் அலுவலகத்துக்கு வரும் புதிய நபரைத் தீர விசாரித்து, அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் ‘இன்ன மாதிரியான ஆள் வந்திருக்கிறார்; உள்ளே அனுப்பலாமா?’ என அலைபேசியில் கேட்டு உள்ளே அனுப்புவதைப் போலத்தான் டான்சில்களும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, பலதரப்பட்ட நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உதவுவதற்குதான் இயற்கை நம் தொண்டையில் பலதரப்பட்ட டான்சில்களை அமைத்துள்ளது.

குழந்தைகளுக்கு டான்சில்கள் எளிதில் வீங்கிவிடுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன் தெரியுமா? டான்சில்கள் நோய்க் கிருமிகளை ஆராயும்போது, அந்தக் கிருமிகள் மிகவும் பலம் வாய்ந்தவைகளாக இருக்குமானால், முதலில் டான்சில்கள் அந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்டுவிடும். அதன் விளைவால், வாய்ச் சுவர்களில் உள்ள டான்சில்கள் வீங்கிவிடும். காய்ச்சல், தொண்டை வலி, உணவை விழுங்குவதில் சிரமம், காது வலி, கழுத்தில் நெறிக்கட்டுதல் போன்ற தொல்லைகள் ஏற்படும்.

shutterstock13071421%20Convertedcol

முதல்முறையாக டான்சில்கள் வீங்கும்போது, சரியான சிகிச்சை பெற்றுக்கொள்பவர்களுக்கும், தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறவர்களுக்கும் டான்சில்கள் மீண்டும் வீங்குவதில்லை. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களுக்கும், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பண்டங்கள், குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து உடனே சாப்பிடப்படும் பதார்த்தங்கள் போன்றவற்றால், டான்சில்களின் ரத்தக்குழாய்கள் சுருங்கிவிட, அவற்றின் நோய்ப் பாதுகாப்புத் தன்மையும் குறைந்துவிடும்.

அப்போது கிருமிகளுக்குக் கொண்டாட்டமாகி, அடிக்கடி டான்சில்களைப் பதம் பார்க்கும். அதன் விளைவால், டான்சில்கள் அடிக்கடி வீங்கித் தொல்லை கொடுக்கும். அப்போது, அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

இந்தப் பாதிப்பு பெரும்பாலும் குழந்தைகளுக்கே ஏற்படுவதால், பெற்றோர் பயந்துபோவார்கள். குழந்தைக்கு டான்சில் அறுவைசிகிச்சை தேவையா, இல்லையா என்று குழம்பிப் போவார்கள். ஆனால் அடிக்கடி தொல்லை கொடுக்கும் டான்சில் வீக்கத்துக்கு, அறுவை சிகிச்சைதான் தீர்வு.

அப்படியானால் டான்சில் நீக்கத்துக்குப் பிறகு குழந்தைக்கு நோய்ப் பாதுகாப்பு எப்படிக் கிடைக்கும்? குழந்தைக்கு ஐந்து வயதுவரைக்கும்தான் நோய்ப் பாதுகாப்பில் டான்சில்கள் முக்கியமாக ஈடுபடுகின்றன. அதற்குப் பிறகு உடலிலுள்ள மற்ற நிணத்திசுக்கள் அந்தப் பாதுகாப்புப் பணியைப் பகிர்ந்துகொள்கின்றன. எனவே, டான்சில்களை அகற்றிய பிறகும், குழந்தைக்கு எப்போதும்போல் நோய்ப் பாதுகாப்பு கிடைக்கும். பயப்படத் தேவையில்லை.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உடல் எனும் இயந்திரம் 15: குரல் பெட்டி

 

 
shutterstock120863443

பேசுவதற்கு, பாடுவதற்கு, கத்துவதற்கு, கதறுவதற்கு, இருமுவதற்கு எனக் குரல் தொடர்பான எல்லாச் செயல்களுக்கும் துணை நிற்பது, ‘குரல் பெட்டி’ (Voice box). மருத்துவத்தில் குரல்வளை (Larynx) என்று பெயர். இதன் வழியாகத்தான் நுரையீரலுக்குக் காற்று செல்கிறது.

தொண்டையின் மத்தியப் பாகத்தில், உணவுக்குழாயும் மூச்சுக்குழாயும் தொடங்கும் இடத்தில், தொண்டைக்கு முன்பக்கத்தில், மூச்சுக்குழாயின் ‘வாசற்கதவு’போல் குரல்வளை இருக்கிறது. இந்தக் கதவு திறக்கப்படும்போது V வடிவத் துளையை ஏற்படுத்துகிறது. இதற்குக் ‘குரல்வளைத் துளை’ (Glottis) என்று பெயர்.

இதன் இருப்பிடத்தை உடலின் வெளிப்பக்கத்தில் இருந்தும் அறியலாம். பெரியவர்களின் கழுத்தில், முன்பக்கத்தில், மையக்கோட்டில், ஒரு முக்கோண மேடு துருத்திக்கொண்டு தெரியுமே, அதுதான் குரல்வளை உள்ள பகுதி. இதை ‘ஆதாமின் ஆப்பிள்’ (Adam’s Apple) என்றும் கூறுகிறார்கள். இது ஆண்களுக்குப் பெரிதாகவும், பெண்களுக்குச் சிறிதாகவும் இருப்பதால், ஆண்களுக்கு மட்டுமே இது வெளிப்பக்கத்தில் தெரியும்; பெண்களுக்குத் தெரியாது.

shutterstock250113988%20Convertedcol

குரல்வளையானது குருத்தெலும்புகள் (Cartilages), பிணையங்கள் (Ligaments), தசைகள் (Muscles) ஆகியவற்றால் பின்னப்பட்டுள்ள சிறு உறுப்பு. ‘ஹையாட்’ எலும்பு ‘ (Hyoid bone) இதைத் தாங்கிக்கொள்கிறது. பார்ப்பதற்கு டிபன் பாக்ஸ் மாதிரியான வட்ட வடிவப் பெட்டி இது! இலைபோலிருக்கும் குரல்வளை மூடி (Epiglottis) இதை மூடிக்கொள்கிறது. இதற்குக் கீழ்த் தட்டு இல்லை. இதன் கீழ் முனை உள்ளீடு இல்லாமல் குழாய்போல் தொடர்கிறது. அதுதான் மூச்சுக் குழாய் (Trachea).

குரல்வளை மூடியைத் திறந்து பார்த்தால், வீணையில் நாண்கள் இருப்பதைப்போல், குரல்வளையின் பக்கவாட்டுச் சுவர்களில், வலப்பக்கம் ஒன்றும், இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு குரல் நாண்கள் (Vocal cords) இருக்கின்றன. குரல்வளைத் தசைகளால் (Vocalis) ஆன இவைதாம் நமக்குக் குரல் தரும் கொடையாளர்கள்.

குரல் நாண்கள் இரண்டு நிலைகளில் இருக்கும். இரண்டும் அருகருகே ஒட்டி இருப்பது ஒரு நிலை. இது குரல் நாண்களின் மூடிய நிலை. இரண்டும் தள்ளி இருப்பது அடுத்த நிலை. இது அவற்றின் அகன்ற நிலை. நாம் சாதாரணமாக மூச்சுவிடும்போது இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையில், அதாவது, பாதித் திறந்த நிலையில் அவை இருக்கின்றன.

அவற்றின் நிலைகளைக் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது. மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் சாதாரணமாக உள்ளிழுக்கப்படும் காற்று, தொண்டை வழியாக வரும்போது, குரல்வளை மூடித் திறக்கிறது. அப்போது குரல் நாண்கள் பாதி திறந்திருப்பதால், காற்று மூச்சுக்குழாய்க்குள் செல்கிறது. இது உட்சுவாசம் (Inspiration).

அதுபோல், நுரையீரல்களிலிருந்து வெளிவரும் காற்று, குரல்வளையைக் கடந்து தொண்டை, மூக்கு, வாய் வழியாக வெளியில் செல்கிறது. இது ‘வெளி சுவாசம்’ (Expiration). இது நம்மை அறியாமலேயே ஒவ்வொரு நொடியும் இயல்பாக நடந்துகொண்டிருக்கும். நாம் இழுத்து மூச்சுவிடும்போது, குரல்நாண்கள் நன்கு அகன்று, நிறைய காற்றை உள்ளே விடுகின்றன.

குரல் எழுவதற்குக் குரல் நாண்கள் இருந்தால் மட்டும் போதாது. சுவாசக் காற்றும் தேவை. காரணம், குரல் எழுவது என்பது புல்லாங்குழல் தத்துவத்தில் நிகழ்கிறது. எப்படிப் புல்லாங்குழலில் காற்றை ஊதும்போது, அதன் துளைகளை விரல்களால் மூடித் திறந்து காற்றின் அளவை மாற்றும்போது இசை பிறக்கிறதோ, அதுபோலவே குரல்வளை வழியாக காற்று வெளியில் வரும்போது, குரல் நாண்கள் அசைந்து காற்றுக்கு வழிவிடும் விதத்தைப் பொறுத்து, ஓசை எழுகிறது. நாக்கு, அண்ணம் மற்றும் உதடுகள் அந்த ஓசையை மாற்றியமைக்கும்போது பேச்சாகவும், பாட்டாகவும், அழுகையாகவும், அலறலாகவும் நமக்குக் கேட்கிறது.

shutterstock730210615%20Convertedcol

பொதுவாக, குரல்நாண்களின் நீளம், அவற்றின் நிலைகள் ஆகியவற்றைப் பொறுத்து குரலின் அடர்த்தி, தன்மை மாறும். பதின்பருவத்துக்குப் பிறகு ஆண்களுக்குக் குரல்நாண்களின் நீளம் அதிகம். எனவே, அவர்களுக்குக் குரல் கனமாக இருக்கிறது. பெண்களுக்கு இவற்றின் நீளம் சிறிது குறைவு. எனவே, அவர்களுக்குக் குரல் மென்மையாக இருக்கிறது.

அதிகமாகக் கத்திப் பேசினால், குரல் நாண்கள் அதிரும். அப்போது குரல் கரகரப்பாகும். அதுபோல், குரல் நாண்களில் கிருமி, சளி போன்ற அந்நியப்பொருள்கள் உறுத்திக்கொண்டே இருந்தால், அவற்றில் அழற்சி ஏற்பட்டால், அவை வேகமாக அசையும். அப்போது நுரையீரலிலிருந்து காற்று, சளி போன்றவை வேகமாக வெளியேறும். அதுதான் இருமல்.

சரி, தொண்டை வழியாகத்தானே உணவு, தண்ணீர் உள்ளே செல்கிறது. அது குரல்வளையைத் தாண்டி மூச்சுக்குழலுக்குள் சென்றுவிட்டால் என்ன ஆகும்? மூச்சுக்குழாய் அடைத்துக் கொள்ளும்; மூச்சு விடமுடியாது. பயப்படாதீர்கள். அப்படி ஆகாமல் குரல்வளை மூடி தடுத்துவிடுகிறது.

உணவோ தண்ணீரோ உள்ளே வரும்போது, குரல்வளை மூடி குரல்வளையை நன்றாக மூடிக்கொள்கிறது. குரல் நாண்கள் முழுவதுமாக மூடிய நிலையில் இருக்கின்றன. மூச்சுக்குழாய்க்குள் அவை நுழைய வழி இல்லை. அதனால், திறந்திருக்கும் உணவுக்குழாய்க்குள் அவை சென்றுவிடுகின்றன.

மிகவும் அவசரமாகவோ, பேசிக்கொண்டோ சாப்பிட்டால், குரல்வளை மூடி பாதி திறந்த நிலையில் இருக்கும். அப்போது உணவோ தண்ணீரோ குரல்வளைக்குள் வந்து, மூச்சுக்குழாய்க்குள் நுழைந்துவிடும். உடனே ஓர் அனிச்சைச்செயல்போல் இருமல் தொடங்கிவிடும். இதைத்தான் ‘புரை ஏறுதல்’ என்கிறோம். இதைத் தவிர்க்கவே ‘சாப்பிடும்போது பேசக்கூடாது; அவசரமாகச் சாப்பிடக்கூடாது’ என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான பாலூட்டிகளுக்குக் குரல்வளை ஒன்றுபோலவே இருக்கிறது; அளவு மட்டும் மாறுகிறது. பறவைகளுக்குக் குரல்வளையில் குரல் எழுப்புவதில்லை. ‘சிரின்ஸ்’ (Syrinx) எனும் உறுப்புதான் குரல் எழுப்புகிறது.

(இன்னும் அறிவோம்)
 கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 17: ஆஹா, என்ன வாசனை!

shutterstock511851832%20Convertedcol

நாம் உயிர் வாழத் தேவையான சுவாசத்துக்கும் காற்றில் மிதந்து வரும் வாசனையை முகர்வதற்கும் மூக்குப் பயன்படுகிறது. விழிகளில் கண்ணீர் நிரம்பியதும், மூக்கின் வழியாகவும் வெளியேறும். நீண்ட நேரம் அழும்போது மூக்கின் வழியாக வெளியேறுவது சளி அல்ல, கண்ணீர்.

பேச்சுக்கும் மூக்குக்கும் தொடர்பிருக்கிறது. நாம் பேசும் ஒலிக்குச் சரியான வடிவம் கொடுக்க, தொண்டையின் குரல்வளை மட்டும் போதாது. மூக்கும் அதைச் சார்ந்த சைனஸ் அறைகளின் பங்களிப்பும் காரணம்.

மூக்கில் வெளிப் பக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும் முக்கோணக் கூம்பு ‘புறநாசி’ (External Nose). இதில் இரண்டு ‘புறநாசித் துவாரங்கள்’ (External Nostrils) உள்ளன. புறநாசியின் கீழ்ப் பகுதி குருத்தெலும்புகளால் ஆனது. ஆகவேதான் புறநாசியை விரல்களால் அசைக்கவும் இழுக்கவும் முடிகிறது. எலும்புகளால் ஆன மேல் பாகம் ‘நாசி முதுகு’ (Dorsum Nasi). நாம் சுவாசிக்கும் காற்று புறநாசி வழியாகத்தான் நுரையீரலுக்குள் சென்று வருகிறது. இந்த வகையில் மூக்கு ஒரு சுவாச உறுப்பாகச் செயல்படுகிறது.

நாசித் துவாரத்துக்குள் நுழைந்தால், அங்கு காணப்படுவது ‘உள் முன்நாசி’ (Nasal Vestibule). இங்கு சிறிய முடிகள் அசைந்து கொண்டிருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமி, தூசு, துகள், துரும்புகளை வடிகட்டிச் சுத்தப்படுத்தி நுரையீரலுக்கு அனுப்புவது இவற்றின் வேலை. இவ்வாறு தினமும் 500 கன அடிக் காற்றை இவை சுத்தம் செய்து அனுப்புகின்றன.

இங்கு சங்கு போன்ற அமைப்பில் மூன்று ‘தடுப்பெலும்புகள்’ (Turbinates) உள்ளன. இவற்றை ‘மியூக்கஸ் மெம்பிரேன்’ எனும் மென்மையான சவ்வுப் படலம் மூடியுள்ளது. இது நிறமற்ற ஒரு திரவத்தைச் சுரந்தபடி உள்ளது. தினமும் ஒரு லிட்டர் திரவம் இவ்வாறு சுரக்கிறது. இது ஏறத்தாழ ஏர்கண்டிஷனர் மாதிரி செயல்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றைக் குளிர்வித்து, உடலுக்கு இதமான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்புகிறது. வெளிக்காற்றின் வெப்பநிலை மிக அதிக அளவில் இருந்து, அது அப்படியே உள்ளே போனால், நுரையீரல்கள் பாதிக்கப்படும்.

வைரஸ் கிருமிகள் மூக்கினுள் நுழைந்தால் அவற்றை வெளியே தள்ள இந்தத் திரவம் அதிகமாகச் சுரக்கும். அப்போது மூக்கிலிருந்து நீர் கொட்டும். அதுதான் ஜலதோஷம். பெரிய தூசியோ துகளோ உள்ளே நுழைந்தால், வேகமான வெளி சுவாசத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, அவற்றை வெளியில் தள்ளும். அதுதான் தும்மல்.

shutterstock53916586

மூக்கின் உள்பகுதி கூரையில் வாசனையை முகரும் பகுதி உள்ளது. 2.5 செ.மீ. சதுர அளவே உள்ள இந்தச் சிறுபகுதிதான் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை உணரவைக்கிறது. பாலூட்டிகளில் முகரும் சக்தி மிக அதிகமாகக் கொண்டது, கரடி; நம்மைவிட 2,100 மடங்கு அதிகம். சுறா, அந்துப்பூச்சி, நாய், பாம்பு, எலிக்கும் முகரும் சக்தி அதிகம். நாய்க்கு முகரும் சக்தி நம்மைவிட 100 மடங்கு அதிகம். அதனால்தான் வேட்டைக்கும் திருடர்களைக் கண்டுபிடிக்கவும் நாயைப் பயன்படுத்துகிறோம்.

சாதாரணமாக, விலங்குகள் தங்கள் உணவைத் தேடுவதற்கும், எதிராளிகளின் நடமாட்டத்தைத் தெரிந்துகொள்வதற்கும் முகரும் சக்தியைப் பயன்படுத்திக்கொள்கின்றன. பெரும்பாலான பறவைகளுக்கு முகரும் சக்தி அவ்வளவாக இல்லை. ஆனால், கழுகு, கிவி, கிளி சில கடற்பறவைகளுக்கு முகரும் சக்தி அதிகம்.

புறநாசித் துவாரத்தில் விரல் விட்டால், ஒரு குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதி ‘மூக்குப் பெட்டி’ (Nasal box). இது முன் பக்கம் புறநாசித் துவாரங்களில் திறக்கிற மாதிரி, பின்பக்கம் தொண்டைக்குள்ளும் இரு துவாரங்கள் வழியாகத் திறக்கிறது. அதுதான் சுவாசப் பாதை. மூக்குப் பெட்டகத்தின் முழு நீளத்துக்கும் நடுவில் ‘மூக்கு இடைச் சுவர்’ (Nasal septum) உள்ளது. இது மூக்குப் பெட்டகத்தை வலது, இடது என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இந்தச் சுவரின் கீழ்ப் பகுதியில் வலது, இடது இரண்டு புறங்களிலும் விரல் நுழைகிற இடத்தில் ‘லிட்டில் பகுதி’ (Little's area) உள்ளது. இது மிகவும் நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேரும் இடம். இதை லேசாகச் சீண்டினாலே ரத்தம் கசிந்துவிடும்; ‘சில்லு மூக்கு’ (Epistaxis) என்று இதைச் சொல்வதுண்டு.

மூக்குக்கு இரண்டு பக்கமும் நான்கு ஜோடி சைனஸ் இருக்கின்றன. இவை மூக்கைச் சுற்றி சில எலும்புகளில் இருக்கும் காற்றடைத்த குழிகள். முன் நெற்றியில் எலும்புக்குப் பின்னால் ‘ஃபிரான்டல் சைனஸ்’ (Frontal sinus) உள்ளது. சற்றுக் கீழே மூக்குக்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட இடத்தில் இருப்பது, ‘எத்மாய்டு சைனஸ்’ (Ethmoid sinus). மூக்குக்குப் பின்புறம் மூளையை ஒட்டி உள்ளது, ‘ஸ்பீனாய்டு சைனஸ்’ (Sphenoid sinus). கன்னத்தில் இரு பக்கமும் பிரதானமாக இருப்பது, ‘மேக்ஸிலரி சைனஸ்’ (Maxillary sinus). இவை எல்லாமே சிறு துளைகள் வழியாக மூக்குப் பெட்டியுடன் தொடர்பில் உள்ளன.

சைனஸின் வேலை என்ன?

முகத்திலுள்ள எலும்புகளின் எடையைக் குறைப்பது இவற்றின் முக்கியமான வேலை. முகம் முழுவதும் எலும்புகளாகவே இருந்தால் மிகவும் கனமாக இருக்குமல்லவா? அந்தக் கனத்தைக் குறைப்பதில் சைனஸ்கள் உதவுகின்றன. எலும்புக் குழிகளுக்குள் காற்று புகுந்துகொள்வதால், அவற்றின் எடை குறைந்துவிடுகிறது.

கண்களுக்கும் மூளையின் அடிப் பகுதிக்கும் காற்றடைத்த மெத்தை மாதிரி இருந்து உதவுவது இவற்றின் அடுத்த வேலை. இவை தொண்டையோடும் தொடர்பு கொண்டுள்ளதால், நாம் எழுப்பும் குரலுக்குச் சரியான ஒலி வடிவம் தருகின்றன; குரலுக்கு வலு சேர்க்கின்றன. மிகவும் குளிர்ச்சியான காற்று மூக்கில் நுழைந்தால் அதை வெப்பப்படுத்தி, உள்ளே அனுப்புவதும் இவைதான்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 18: ஒலி வாங்கி

 

 
shutterstock710514844%20Convertedcol
shutterstock388155205%20Convertedcol
shutterstock1035300910%20Convertedcol
shutterstock478692337%20Convertedcol
shutterstock481705537%20Convertedcol
shutterstock710514844%20Convertedcol
shutterstock388155205%20Convertedcol

ஒலிகளைக் கேட்டு உணர்வதற்கும் உடலைச் சமநிலையில் வைத்துக்கொள்வதற்கும் நமக்குக் காதுகள் பயன்படுகின்றன. விலங்குகளுக்கு இந்தப் பயன்களோடு எதிரிகளின் நடமாட்டத்தை உணர்ந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் காட்டாற்று வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை ஆபத்துகளை அறிந்துகொண்டு அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கும் காதுகள் பயன்படுகின்றன.

சில விலங்குகள், பறவைகள் கூவுவது, அகவுவது, அலறுவது, பிளிறுவது போன்ற பலதரப்பட்ட ஒலிகளை எழுப்பித் தமக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. வௌவால் ஒலி அலைகளை அனுப்பி, எதிரொலிகளை உணர்ந்து, பயணப் பாதையை அமைத்துக்கொள்கிறது.

காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என மூன்று பகுதிகள் உண்டு. வெளியில் தெரிவது குருத்தெலும்பால் ஆன ‘செவிமடல்’ (Pinna). இது மூன்று சிறிய தசைகளால் தலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மையத்தில் ஒரு துளை. இதிலிருந்து 2.5 செ.மீ. நீளத்தில் ஒரு குழல் உள்ளுக்குள் செல்கிறது. இது ‘செவிக்குழல்’ (Ear canal). செவிமடலும் செவிக்குழலும் சேர்ந்ததுதான் வெளிக்காது. இது ஓர் ‘ஒலி வாங்கி’. சுற்றி இருக்கும் சத்தத்தைச் சேகரித்துக் காதுக்குள் அனுப்பிவைக்கிறது.

வெளிக்காதின் தனித்தன்மை பல விலங்குகளை அடையாளம் காண உதவுகிறது. மாடுகள் உள்ளிட்ட பல விலங்குகள் ஒலி அலைகளைச் சேகரித்து உணர்வதற்குத் தம் காதுகளை அசைத்துக்கொண்டே இருக்கின்றன. பூனை, நாய், நரி, குதிரை, முயல் போன்ற விலங்குகள் தங்களின் வெளிக்காதுகளை ஒலி வரும் திசை நோக்கித் திருப்பி, ஒலியின் தன்மையை உடனே தெரிந்துகொள்ளும் திறனுடையவை.

வெட்டுக்கிளி போன்ற சில பூச்சிகளுக்குக் காலில் காதுகள் இருக்கின்றன. மீன், தவளை, கழுகுக்கு வெளிக்காது இல்லை. ஆப்பிரிக்க யானைகளுக்கு வெளிக்காதின் அகலம் 1.2 மீட்டர்வரை இருக்கும்.

காதுக்குள் செவிக்குழல் முடியும் இடத்தில், ஒரு செ.மீ. அகலத்தில், மெல்லிய சவ்வால் இறுக்கிக் கட்டப்பட்ட மேளம் போன்ற பகுதி ஒன்று உள்ளது. அதுதான் ‘செவிப்பறை’ (Ear drum). காது சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை பாதுகாப்பாக இருக்க வேண்டும். செவிக்குழலில் சின்னச் சின்ன முடிகளும் ‘மெழுகு'ச் சுரப்பிகளும் (Ceremonious glands) உள்ளன. இந்தச் சுரப்பிகள் மெழுகு போன்ற திரவத்தைச் சுரக்கின்றன. இது உலர்ந்து குரும்பியாக (Ear wax) மாறுகிறது. காதுக்குள் நுழையும் தூசு/பூச்சி/அந்நியப் பொருள்கள் செவிப்பறையைப் பாதிப்பதை இங்குள்ள முடிகளும் குரும்பியும் தடுக்கின்றன.

செவிப்பறைக்கு அடுத்து உட்பக்கமாக இருக்கும் குழி போன்ற சிறிய அறைதான், நடுக்காது. இங்கு செவிப்பறையை ஒட்டிக்கொண்டு சிறு எலும்பு உள்ளது. இது சுத்தி எலும்பு (Malleus). இதை ஒட்டி இன்னும் ஒரு சிறு எலும்பு உள்ளது. அது பட்டை எலும்பு (Incus). பட்டை எலும்போடு ஒட்டிக்கொண்டிருக்கும் மூன்றாவது எலும்பு, அங்கவடி (Stapes). இந்த எலும்புக்கு ஒரு சிறப்பு உண்டு. இதுதான் உடலிலேயே மிகச் சிறிய எலும்பு. 2.5 மி.மீ. நீளமுள்ளது. இதைப் பிணைத்திருக்கும் ‘ஸ்டெபிடியஸ்’ (Stapedius) தசைதான் உடலிலேயே மிகச் சிறிய தசை; ஒரு மி.மீ. நீளமுள்ளது.

நடுக்காதிலிருந்து தொண்டை வரைக்கும் ‘நடுச் செவிக்குழல்’ (Eustachian tube) எனும் குழாய் செல்கிறது. வெளிக்காதுக்கும் நடுக்காதுக்கும் இடையில் காற்றின் அழுத்தம் சரியாக இருந்தால்தான் காது நன்றாகக் கேட்கும். அதற்கு நடுச் செவிக்குழல் உதவுகிறது. காது அடைத்துக்கொள்கிறது என்று சொல்வீர்கள் அல்லவா? உண்மையில் காது அடைத்துக்கொள்வதில்லை! தொண்டை யிலிருந்து வரும் சளி போன்ற திரவத்தால் இந்தக் குழாய்தான் அடைத்துக்கொள்கிறது. அதனால் நடுக்காதில் காற்றழுத்தம் அதிகமாகி, காது அடைப்பதுபோல் தோன்றுகிறது. விமானம் தரையிலிருந்து எழும்போது நமக்குக் காது அடைப்பதும் இதனால்தான்.

நடுக்காதுக்கு அடுத்திருப்பது, உள்காது. இது கபாலத்தில் பொட்டெலும்பில் (Temporal bone) புதைந்துள்ளது. உள்காதானது வெஸ்டிபியூல் (Vestibule), அரைவட்டக் குழல்கள் (Semicircular canals), ‘காக்ளியா' (Cochlea) எனும் மூன்று சிக்கலான அமைப்புக்களைக் கொண்டது. காக்ளியா காது கேட்க உதவுகிறது. வெஸ்டிபியூல், அரைவட்டக் குழல்கள் உடலைச் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகின்றன.

இந்த மூன்றில் நடுவில் இருப்பது வெஸ்டிபியூல். இது 5 மி.மீ. நீளமுள்ள வட்டவடிவக் குழல். இங்கு யுட்ரிக்கிள் (Utricle), சாக்யுல் (Saccule) என்று இரண்டு பைகள் உள்ளன. இவற்றில் முடி போன்ற இழை அணுக்கள் (Hair cells) நிறைய உள்ளன. இவை மூளையிலிருந்து வரும் செவிநரம்புடன் (Auditory nerve) இணைந்துள்ளன. வெஸ்டிபியூலில் நீள்வட்டச் சன்னலும் (Oval window), இதற்குக் கீழே வட்டச் சன்னலும் (Round window) இருக்கின்றன. இவை நடுக்காதின் அங்கவடி எலும்புடன் இணைந்துள்ளன.

வெஸ்டிபியூலின் பின்பக்கத்தில் இருப்பவை, மூன்று அரைவட்டக் குழல்கள். இவை ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாக இருக்கின்றன. இவற்றில் பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகை திரவங்கள் உள்ளன. இவை வெஸ்டிபியூலில் உள்ள யுட்ரிக்கிள், சாக்யுல் (Saccule) பைகளுக்கு வந்து சேர்கின்றன. நாம் நடக்கும்போது, ஓடும்போது, குனியும்போது இந்தத் திரவங்கள் அசைகின்றன. அந்த அசைவுகளை இங்குள்ள இழை அணுக்கள் மின்சமிக்ஞைகளாக மூளைக்கு அனுப்பிவைக்க, மூளை அவற்றைப் பரிசீலித்து உடலைச் சமநிலைப்படுத்துகிறது.

வெஸ்டிபியூலுக்கு முன்புறம் காக்ளியா இருக்கிறது.

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 19: காது கேட்கும் ரகசியம்!

 

 
shutterstock772668130%20Convertedcol

காக்ளியா முன்பக்கமாக நடுக்காதின் அங்கவடி எலும்புடனும் பின்பக்கத்தில் மூளையிலிருந்து காதுக்கு வரும் செவிநரம்புடனும் இணைந்துள்ளது. இது வெளிப்பக்கம் பார்ப்பதற்கு ஒரு நத்தை ஓடுபோலிருக்கிறது. உள்ளுக்குள் பார்த்தால், திரவத்தால் நிரப்பப்பட்ட ஒரு சுருள் குழாயாக இருக்கிறது. அரைவட்டக் குழல்களில் இருந்தவைபோல் இங்கும் பெரிலிம்ப், எண்டோலிம்ப் திரவங்கள் உள்ளன. இரண்டுக்கும் இடையில் ‘அடிப்படலம்’ (Basilar membrane) உள்ளது. இதில் ‘கார்ட்டி உறுப்பு’ (Organ of Corti) உள்ளது. காக்ளியாவில் கேட்கும் சக்தி கொண்ட பகுதி இதுதான். இங்கு 20,000-க்கும் மேற்பட்ட இழை அணுக்கள் (Hair cells) இருக்கின்றன. இவைதான் காக்ளியாவை செவிநரம்பு மூலம் மூளையுடன் இணைக்கின்றன.

   

 

காது கேட்பது எப்படி?

ஒலி எழும்பும்போது அதன் ஒலி அலைகள் செவிக்குழல் வழியாக நுழைந்து செவிப்பறையில் மோதும். அப்போது செவிப்பறை அதிரும். இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டை, அங்கவடி எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழையும். அப்போது இந்த எலும்புகளும் அதிரும். விநாடிக்கு 20,000 முறை அதிர்ந்து ஒலியின் அளவைப் பெருக்குகின்ற ஒலி பெருக்கிகள் இவையே.

shutterstock1014019735%20Convertedcol
 

அடுத்ததாக, இந்த ஒலி அதிர்வுகள் காக்ளியாவின் முன்பகுதியான நீள்வட்டச் சன்னலை அடைகின்றன. இந்தச் சன்னலுக்குப் பின்னால்தான் பெரிலிம்ப், எண்டோலிம்ப் திரவங்கள் உள்ளன. இவற்றில் எண்டோலிம்ப் திரவத்தின்மீது அதிர்வுகள் கடத்தப்படுகின்றன. அப்போது இந்தத் திரவங்களில் மிதந்து கொண்டிருக்கும் இழை அணுக்கள் தூண்டப்படுகின்றன. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவிநரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு அவை இனம் பிரிக்கப்பட்டு, நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்பதை மூளை சொல்கிறது.

ஒரு பொருள் அதிர்வதால் ஒலி அலைகள் உண்டாகின்றன. பொதுவாக, 20 Hz லிருந்து 20000 Hz வரையிலான ஒலி அதிர்வுகளை நம்மால் கேட்க முடியும். அதிர்வு எண்ணிக்கை அதிகமானால், சத்தம் குறையும்; குறைவான எண்ணிக்கை என்றால், சத்தம் பலமாக இருக்கும். வழக்கத்தில் ஒலியின் அளவை டெசிபல் முறையில் அளக்கிறார்கள். உதாரணமாக, சிறிய விசும்பல் 20 டெசிபல். முணுமுணுப்பு 30 டெசிபல். உரையாடல் 60 டெசிபல். இடிச்சத்தம் 120 டெசிபல். ஜெட் விமானச் சத்தம் 130 டெசிபல். வெடிச்சத்தம் 140 டெசிபல். ராக்கெட் புறப்படும்போது 200 டெசிபல்.

80-லிருந்து 120 டெசிபல்வரை ஒலி நம் காதுக்குள் நுழைந்தால் பிரச்சினை இல்லை. இது 130 டெசிபல் அளவைக் கடந்துவிட்டால் காது கேட்பதைப் பாதிக்கும். அதனால்தான் சத்தமாகப் பேசாதீர்கள்; அதிக சத்தமுள்ள இடங்களுக்குச் செல்லாதீர்கள் என்கிறார்கள்.

shutterstock33801415%20Convertedcol
 

நீலத்திமிங்கிலம் எழுப்பும் சத்தம்தான் விலங்குகளிலேயே மிகவும் பலமானது; 188 டெசிபல். வவ்வால், அந்துப்பூச்சி (Wax Moth) யானை, ஆந்தை, நாய், பூனை, புறா, எலி, டால்பின், குதிரை ஆகியவை மெல்லிய சத்தத்தையும் கேட்கும் திறனுடையவை.

செவிப்புலன் அமைப்பு உயிரினத்தைப் பொறுத்து மாறுகிறது. மனிதன் உள்ளிட்டப் பாலூட்டிகளுக்கு மட்டுமே செவிமடல் உண்டு. தவளைக்குச் செவிமடல் இல்லை; கண்ணுக்குப் பின்னால் செவிப்பறை மட்டும் உள்ளது. மீன்களுக்குச் செவிமடலும் இல்லை; செவிப்பறையும் இல்லை; உள்காது மட்டுமே இருக்கிறது. பாம்புக்குச் செவிப்பறை இல்லை.

 

காது ஏன் கேட்பதில்லை?

காது கேட்கவில்லை என்றால் அதற்குக் காரணம் இரண்டு இடங்களில் ஏற்படலாம். ஒன்று, நடுக்காது, மற்றொன்று, உள்காது. நடுக்காதில் நீர் கோத்துக்கொண்டிருந்தால், அடிக்கடி தொற்று ஏற்பட்டால், காதில் சீழ் வடிந்தால், அங்கு அழற்சி ஏற்பட்டு, எலும்புகள் ஒன்றோடொன்று ஒட்டி உறைந்துவிடும். அவற்றால் அசைய முடியாது. அப்போது சத்தத்தின் அதிர்வுகளை அவை கடத்த முடியாது. இதனால், சரியாகக் காது கேட்காது. இந்த நிலைமையைச் சரி செய்துவிடலாம்.

சில குழந்தைகளுக்கு உள்காதில் பிறவியிலேயே இழை அணுக்கள் இருக்காது. இதனால் காது கேட்காது. இவர்களுக்கு 'காக்ளியர் இம்பிளான்ட்' எனும் கருவியைப் பொருத்தும் நவீன சிகிச்சை கைகொடுக்கிறது. வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் சில நோய்கள், எடுத்துக்கொள்ளும் மருந்துகள், முதுமை, அதிக இரைச்சல் போன்ற காரணங்களால் இழை அணுக்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது. செவிநரம்பிலும் பாதிப்பு இருக்கலாம். அப்போதும் காது கேட்காது.

 

காது குடைவது நல்லதா?

குழந்தைகளுக்குக் காதில் சேரும் குரும்பிதான் அதிகம் தொல்லை தரும். வழக்கத்தில், அது தானாகவே வெளியில் வந்துவிடும். ஆனால், நடைமுறையில் பட்ஸ் கொண்டு அதை எடுக்க முயல்கிறோம். இதனால், செவிப்பறை புண்ணாகிவிடும். இன்னும் பலருக்குக் காது குடைவது ஒரு பழக்கமாகவே உள்ளது. ஊக்கு, ஹேர்பின், பேனா, பென்சில், தீக்குச்சி, சாவி என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இந்தப் பழக்கம் நீடித்தால், செவிப்பறை பழுதடைந்து, காது கேட்காமல் போகும்.

shutterstock776888836%20Convertedcol

 

குரும்பியை அகற்றுவது எப்படி?

குரும்பியை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், மூன்று வழிகளில் அகற்றலாம். நம் கண்ணுக்கு எளிதில் தெரியும்படி உருண்டையாகத் திரண்டிருக்கும் குரும்பியை ஊக்கு கொண்டு அகற்றிவிடலாம். சிலருக்குக் காதின் உள்புறமாகக் குரும்பி ஒட்டிக்கொண்டிருக்கும். இவர்களின் காதில் இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் விட்டால், குரும்பி அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும். என்றாலும், நாள்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. இதற்கு மருத்துவர்தான் உதவ வேண்டும்.

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர்,

பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உடல் எனும் இயந்திரம் 20: இயற்கை கேமரா!

 

 
shutterstock109564340

உடலில் உள்ள ‘கேமரா‘ கண். உலகின் அதிசயங்களைக் காண உதவும் கண்ணாடி. கண்ணில் 15% தான் வெளியில் தெரிகிறது; மீதி 85% கபாலத்தில் உள்ள கண்குழியில் (Orbit) பாதுகாப்பாகப் புதைந்துள்ளது.

கண்ணைப் பார்த்ததும் ஐந்து பகுதிகள் உடனே தெரியும். புருவம், இமை, கண்ணில் வெண் நிறப் பகுதி, கறுப்பு வட்டம், அதில் ஓர் ஓட்டை. புருவங்கள்தான் கண்ணுக்கு முதல்நிலைக் காவலர்கள்: நெற்றி வியர்வை கண்ணுக்குள் போய்விடாதபடி பார்த்துக்கொள்கின்றன. தூசி, துகள், பூச்சி போன்றவை கண்ணுக்குள் விழுந்துவிடாமல் தடுப்பதற்காக ஏற்பட்டவை இமைகள். கண்ணில் காற்று பட்டு ஈரப்பசை உலர்ந்துவிடாமல் இருப்பதற்குக் கண்களைச் சிமிட்டுகிறோம். அதிக வெளிச்சம் கண்ணுக்குள் நுழையும்போது இமைகள் மூடி கண்ணைக் காப்பாற்றுகின்றன. இரவில் நாம் தூங்கும்போது அந்நியப் பொருள் எதுவும் கண்களைப் பாதித்துவிடாதபடி இமைகள் மூடிக்கொள்கின்றன.

சிறிய கோழி முட்டைபோல் காணப்படும் கண்ணுக்கு ‘விழிக்கோளம்’ (Eye ball) என்பதுதான் சரியான பெயர். ஆறு வகைத் தசைகள் விழிக்கோளத்தைத் தாங்கிக்கொள்கின்றன. விழிகளைப் பக்கவாட்டிலும் மேலும் கீழும் சுழற்றுவதற்கு இந்தத் தசைகளே உதவுகின்றன.

சுமார் 25 மி.மீ. விட்டமே உள்ள நம் விழிக்கோளம், மூன்றடுக்குப் படலத்தால் ஆனது. ‘வெண்விழி’ (Sclera) மேலடுக்கு. ‘விழிக்கரும்படலம்’ (Choroid) நடு அடுக்கு. ‘விழித்திரை’ (Retina) உள்ளடுக்கு. கண்ணின் முன்பக்கத்தில் காணப்படும் வெண்விழியானது ‘விழிவெண்படலம்’ (Conjunctiva), ‘கார்னியா’ (Cornea) என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

கண்ணில் வெள்ளையாகத் தெரிவது, விழிவெண்படலம். இமைக்கு உட்புறத்திலும் இது படர்ந்துள்ளது. வெண்விழியின் மீது ஒரு போர்வைபோல் மூடியுள்ள மெல்லிய சவ்வு இது; கண்ணுக்குப் பாதுகாப்பு தருகிறது. இதில் சுரக்கும் ‘மியூக்கஸ்’ திரவம் கண்ணை ஈரமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கண்ணின் மையத்தில் கறுப்பாகவும் வட்டமாகவும் தெரிவது ‘கருவிழி’ (Iris). விழிக்கரும்படலத்தின் தொடர்ச்சி இது. இதில் உள்ள ரத்தக்குழாய்கள்தான் கண்ணுக்கு ரத்தம் கொடுக்கின்றன.

shutterstock141161560%20Convertedcol
 

கைக்கடிகாரத்தை மூடியிருக்கும் கண்ணாடிபோல் கருவிழியை மூடியிருக்கும் சவ்வு, ‘கார்னியா’. வெளியிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை வரவேற்கும் ‘நுழைவாயில்’ இது. இதற்கு நிறம் கிடையாது. இதில் ரத்தக்குழாய்களும் இல்லை. இதனால், ஒளிக்கதிர்கள் எளிதாகக் கண்ணுக்குள் நுழைய முடிகிறது. வெண்விழியில், விழிவெண்படலமும் கார்னியாவும் இணைகின்ற வட்டப் பகுதி, ‘விழிச்சந்தி’ (Limbus).

கண்ணுக்கு நிறம் தருவது கார்னியா இல்லை. இதற்குப் பின்புறம் உள்ள கருவிழியின் நிறம்தான் கார்னியா வழியாகத் தெரிகிறது. கருவிழியானது கறுப்பு, நீலம், பச்சை, மாநிறம்… என ஏதேனும் ஒரு நிறத்தில் அமைந்திருக்கும். கருவிழி கறுப்பாக இருந்தால், கறுப்பு விழிகள். அது நீல நிறத்தில் இருந்தால், ‘நீல விழிகள்’. இந்தியர்களுக்குப் பெரும்பாலும் கறுப்பு நிறக் கண்கள்தான்.

கார்னியாவில் கருவிழிக்கு நடுவில் வட்ட வடிவில் ஓர் ஓட்டை தெரிகிறது, பாருங்கள். அது ‘விழிப்பாவை’ (Pupil). இது எப்போதும் ஒரே அளவாக இருக்காது. உள்ளே நுழைகிற ஒளிக்கதிர்களின் அடர்த்தியைப் பொறுத்து இது சுருங்கி விரியும் தன்மையுடையது. இதனால் விழிப்பாவையின் அளவும் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகலாம்.

அதிக வெளிச்சத்தில் விழிப்பாவைச் சிறிதாகச் சுருங்கிக்கொள்ளும். வெளிச்சம் குறைந்த நேரத்திலும், இருட்டாக இருக்கும்போதும் அது பெரிதாக விரிந்து கொடுக்கும். தாங்க முடியாத அளவுக்கு ஒளி கண்ணுக்குள் நுழையும்போது, கண்ணின் பாதுகாப்பு கருதி, ஓர் அனிச்சைச்செயலாக இமைகள் கண்களை மூடிக்கொள்ளும். நண்பகலில் சூரியனைப் பார்க்கச் சிரமப்படுவது இதனால்தான்.

 

கண்ணீர் ஏன் சுரக்கிறது?

கண்ணின் இயக்கத்துக்குக் கண்ணில் சரியான அளவில் ஈரப்பசை இருக்க வேண்டும். கண்களை நாம் திறந்து வைத்திருக்கும்போது, காற்று பட்டு கண்கள் உலர்ந்துவிடும். அல்லது காற்றில் வரும் தூசு, துரும்பு, கிருமி என ஏதாவது பட்டு கண்களைப் பாதிக்கும். இந்த நிலைமைகளைத் தவிர்க்கவே கண்களில் கண்ணீர் சுரக்கிறது.

shutterstock673168258%20Convertedcol

கண்ணீரானது ஒரு மசகுபோல் வேலை செய்து கண்களை எப்போதும் ஈரமாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்வதால், இமைகளை நாம் மூடித் திறப்பது எளிதாகிறது. மேலும், அது கண்ணில் படும் அந்நியப் பொருட்களை உடனுக்குடன் அகற்றிவிடுகிறது. கண்ணீரில் உள்ள ‘லைசோசைம்’ என்சைம் அந்நியப் பொருள்களோடு ஒட்டிக்கொண்டுவரும் கிருமிகளைக் கண்ணுக்குள் நுழையவிடாமல் தடுத்துவிடுகிறது. கார்னியாவுக்குத் தேவையான ஆக்ஸிஜனைத் தருவதும் கண்ணீரே.

 

கண்ணீர் எப்படிச் சுரக்கிறது?

கண்ணீரைச் சுரப்பது, கண்ணீர்ச் சுரப்பிகள். ஒவ்வொரு கண்ணிலும் மேற்புறத்தில் ஒரு கண்ணீர்ச் சுரப்பி (Lacrimal gland) உள்ளது. இது சில சொட்டுக் கண்ணீரை எப்போதும் சுரந்துகொண்டிருக்கும். சாதாரணமாக ஒரு நாள் முழுவதும் சுமார் ஒரு மில்லி கண்ணீர்தான் சுரக்கிறது. ஆனால், கண்ணில் உறுத்தல் ஏற்பட்டாலோ, உணர்ச்சி வேகத்தில் அழுதாலோ அதிகமாகக் கண்ணீர் சுரக்கும்.

கண்ணீர்ச் சுரப்பிகள் மட்டுமல்லாமல் விழிவெண்படலத்திலும் இமைகளிலும் உள்ள துணைச் சுரப்பிகளும் சிறிதளவு கண்ணீரைச் சுரக்கின்றன. இப்படிச் சுரந்த கண்ணீரானது மூக்கின் அருகாமைக்கு வருகிறது. அங்கிருந்து இரண்டு சிறு குழாய்கள் புறப்பட்டு, பின் ஒன்று சேர்ந்து, கண்ணீர்ப் பையில் (Lacrimal sac) முடிகிறது. இதிலிருந்து ஒரு குழாய் புறப்பட்டு மூக்கினுள் முடிகிறது. இவ்வாறு உருவான ‘கண்ணீர்ப் பாதை’ வழியாக கண்ணீர் வெளியேறுகிறது. சாதாரணமாகச் சில சொட்டுக் கண்ணீர் மூக்கினுள் வரும்போது நமக்குத் தெரியாது. ஆனால், அதிகமாக அழும்போது மூக்கிலிருந்து நீர் கொட்டும்; மூக்கு அடைத்துக்கொள்ளும்.

கண்களை கேமராவுடன் ஒப்பிடுகிறோமே, அது ஏன்? அடுத்த வாரம் பார்ப்போம்.

(இன்னும் அறிவோம்)

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 21: பார்வை கிடைப்பது எப்படி?

 

 
shutterstock1010422933%20Convertedcol

கருவிழிக்குப் பின்னால் சிறிய மாத்திரை அளவில் ‘விழியாடி’ (Lens) உள்ளது. பார்வைப் புலன் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பது இதுதான். விழியாடியை ‘சிலியரி பாடி’ (Ciliary body) எனும் தசைப் பகுதி மேலும் கீழும் தாங்கிப் பிடித்துள்ளது. ‘பிணைய நார்கள்’ (Suspensory ligaments) சிலியரி பாடியை விழியாடியோடு இணைக்கின்றன.

சிலியரி பாடி தண்ணீர் போன்ற திரவத்தைச் சுரக்கிறது. இதற்கு 'முன்கண் திரவம்' (Aqueous humor) என்று பெயர். இது விழியாடிக்கும் கார்னியாவுக்கும் நடுவில் பரவியுள்ளது. கார்னியா, விழிப்பாவை, விழியாடி உள்ளிட்டப் பகுதிகளுக்குத் தேவையான உணவுச்சத்துகளை விநியோகிக்கவும், கண்ணுக்குள் உருவாகும் கழிவுகளை அகற்றவும் இது தேவைப்படுகிறது.

விழியாடிக்குப் பல சிறப்புத் தன்மைகள் உண்டு. இது ஜெல்லி போன்ற புரதப் பொருளால் ஆனது. இது ஓர் இரட்டைக் குவியாடி (Biconvex). தனக்குள் வரும் ஒளிக்கதிர்களைப் பிம்பங்களாக மாற்றி விழித்திரையில் விழச் செய்கிறது. கார்னியாவைப்போல் இதிலும் ரத்தக்குழாய்கள் இல்லை. எனவே, இதன் வழியாக ஒளி ஊடுருவிச் செல்வது எளிதாகிறது. உள்ளுக்குள் நுழையும் ஒளிக்கு ஏற்பவும், பார்க்கும் பொருளின் தூரத்துக்கு ஏற்பவும் விழியாடி தட்டையாகி, தன் நீள அகலங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. இந்தச் செயலுக்குப் ‘பார்வைத் தகவமைப்பு’ (Accommodation) என்று பெயர். சிலியரி பாடி தசைகள் (Ciliary muscles) பார்வைத் தகவமைப்புக்கு உதவுகின்றன. இந்தச் செயலால்தான் அருகில் இருக்கும் புத்தகத்தையும் படிக்க முடிகிறது; தூரத்தில் பறக்கும் பறவையையும் பார்க்க முடிகிறது.

விழியாடிக்குப் பின்னால், விழிக்கோளத்தின் உட்புறத்தில் வெங்காயச் சருகுபோல் விழித்திரை (Retina) உள்ளது; பத்து படலங்களால் ஆனது. மிக நுண்ணிய பிம்பத்தையும் உணரக்கூடிய திறனுள்ளது. இங்கு குச்சிகள் (Rods), கூம்புகள் (Cones) என இருவகை ஒளி ஏற்பிகள் (Photoreceptors) உள்ளன. மொத்தம் 12 கோடி குச்சிகள், 60 லட்சம் கூம்புகள். இவை விழித்திரையில் விழும் பிம்பங்களை உறிஞ்சி, மின்தூண்டல்களாக மாற்றி பார்வை கிடைக்க உதவுகின்றன. குச்சிகள், இருட்டிலும் குறைந்த வெளிச்சத்திலும் பார்வை தருகின்றன. கூம்புகள், நாம் பார்க்கும் பொருட்களின் நிறங்களைத் தெரிவிக்கின்றன; பகலில் பார்வை தருகின்றன.

விழித்திரையின் மையப்பகுதி, ஒளிக்குவியம் (Macula). இது மஞ்சள் நிறத்தில் இருப்பதால், 'மஞ்சள் புள்ளி' (Yellow spot) என்றும் இதை அழைப்பதுண்டு. இங்கு 'ஃபோவியா' (Fovea) எனும் குழி உள்ளது. இங்குதான் கூம்புகள் மிகவும் அடர்த்தியாக உள்ளன. இதனால் இது பகலில் பார்வையைத் துல்லியமாக உணரச் செய்கிறது; நிறங்களையும் அறியச் செய்கிறது. புத்தகம் வாசிப்பது, வாகனம் ஓட்டுவது, ஊசியில் நூல் கோப்பது, கணினியில் பணி செய்வது போன்ற நுட்பமான பணிகளைச் செய்வதற்கு இதுதான் உதவுகிறது.

விழித்திரையில் ஒளிக்குவியத்துக்குக் கீழே 'விழிவட்டு' (Optic disc) உள்ளது. இதைக் 'குருட்டுப் புள்ளி' (Blind spot) என்றும் அழைக்கின்றனர். விழித்திரையில் ஒளி ஏற்பிகள் இல்லாத பகுதி இது என்பதால், ஒளியை இங்கு உணர இயலாது. விழிவட்டிலிருந்து ஒரு கண் நரம்பு (Optic nerve) கிளம்பி, மூளையில் இணைகிறது. விழியாடிக்கும் விழித்திரைக்கும் நடுவில் முட்டையின் வெள்ளைக்கருபோல் கொழகொழப்பான திரவம் ‘பின்கண் திரவம்’ (Vitreous humor) சுரக்கிறது. இது கண்ணின் கோள அமைப்பைக் கட்டமைக்கிறது.

 

பார்வை கிடைப்பது எப்படி?

பார்க்கிற பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கார்னியாவைத் துளைத்து, விழிப்பாவை வழியாக விழியாடி மீது விழுகின்றன. இது குவியாடி என்பதால், ஒளிக்கதிர்களைக் குவித்து விழித்திரையில் விழச் செய்கிறது. அப்போது அங்கு தலைகீழ் பிம்பம் உண்டாகிறது. விழித்திரையில் உள்ள ஒளி ஏற்பிகள் பிம்பத்தின் வடிவம், நிறம், ஒளிக்கதிரின் அடர்த்தி போன்ற பல செய்திகளைச் சேகரித்து, மின்தூண்டல்களாக மாற்றி, பார்வை நரம்பு வழியாக மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் மூளைக்குக் கடத்துகின்றன. அங்கு அந்தக் காட்சி பகுக்கப்பட்டு, நாம் பார்க்கும் பொருள் எது என்பதை மூளை தெரிவிக்கிறது. இதற்கு மூளை எடுத்துக்கொள்ளும் நேரம் 0.15 விநாடி மட்டுமே!
 

shutterstock496599244%20Convertedcol

கண்ணின் அமைப்பைப் பழைய காலத்து கேமராவுடன் ஒப்பிடுவது வழக்கம். என்ன காரணம்? கேமராவில் ஒரு குவியாடி உள்ளதுபோல், கண்ணில் விழியாடி உள்ளது. கேமராவில் பிம்பம் விழுவதற்கு ஃபிலிம் உள்ளதுபோல், கண்ணில் விழித்திரை உள்ளது. கேமராவில் ஒளிக்கதிர்கள் நுழைய ஒரு ‘துளைவெளி’ (Aperture) உள்ளதுபோல, கண்ணில் விழிப்பாவை உள்ளது. கேமராவில் பிம்பம் தலைகீழாகவே விழுகிறது. நம் கண்ணிலும் அப்படியே!

கண்ணில்லாத உயிரினம், புழு. பொதுவாக, இரை மேயும் விலங்குகளுக்குக் கண்கள் பக்கவாட்டில் இருக்கின்றன. ஆந்தைக்கும் சில காட்டு விலங்குகளுக்கும் இருட்டில் நம்மைவிடப் பார்க்கும் சக்தி அதிகம். கழுகு 4 கி.மீ. தொலைவில் இருக்கும் தன் இரையைத் தெரிந்துகொள்ளும் சக்தி படைத்தது.

நிறங்களைப் பிரித்துப் பார்க்கும் சக்தி நமக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும், சில பறவைகளுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் வரம். மற்ற உயிரினங்கள் கறுப்பு – வெள்ளையில்தான் பார்க்கின்றன. பூனையின் கருவிழி இடது பக்கம் ஒரு நிறத்திலும் வலது பக்கம் வேறு நிறத்திலும் இருக்கும். ஒட்டகம் போன்ற சில விலங்குகளுக்கும் பெரும்பாலான பறவைகளுக்கும் மூன்று இமைகள் இருக்கின்றன. மூன்றாவது இமைக்கு ‘நிக்டிடேடிங் மெம்பரேன்’ (Nictitating membrane) என்று பெயர்.

ஆந்தை போன்ற பறவைகளுக்கும் பூனை போன்ற விலங்குகளுக்கும் கண்ணில் விழியாடிக்குப் பின்புறம் ஒளியைப் பிரதிபலிக்கும் படலம் ஒன்று இருக்கிறது. இதனால்தான் அவற்றின் கண்கள் இருட்டில் ஒளிர்கின்றன.

(இன்னும் அறிவோம்)

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உடல் எனும் இயந்திரம் 22: நோய் காட்டும் கண்ணாடி

shutterstock569250625

விரலுக்கு ஒரு கவசம்போல் அமைந்துள்ளது நகம். இது ‘கெரட்டின்’ (Keratin) எனும் புரதப்பொருளால் ஆனது. பளிச்சென்று தெரியும் வழுவழுப்பான பகுதிதான் நகத்தின் உறுதியான பாகம். இதற்குள் நரம்புகளோ, ரத்தக்குழாய்களோ இல்லை. இந்த வெளிநகத்துக்கு அடியில் ரத்த ஓட்டம் உள்ள திசுக்களால் ஆன ஒரு படுக்கை இருக்கிறது. இது நகத் தளம் (Nail bed). நகத்துக்கு உணவும் உணர்வும் உயிரும் தருகிற ஓர் உயிர்ப் படுக்கை இது.

விரலில் தோலும் நகமும் இணையும் இடத்துக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர் (Nail bud). இதுதான் நகத்தை முளைக்க வைக்கிறது. இந்த இடத்தில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் உள்ளன. இதனால், இந்தப் பகுதியை அழுத்தினாலே வலிக்கும். இங்குள்ள செல்கள் வளரும்போது, பழைய செல்கள் முன்னால் தள்ளப்படுகின்றன. இந்தச் செல்கள் நகத்தளத்தைக் கடந்து வளரும்போது, அவற்றுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நகத்தளத்தின் தொடர்பை இழந்துவிடுவதால், வெள்ளையாக மாறுகின்றன. இந்தப் பகுதியில் ரத்தக்குழாய்களும் இல்லை; நரம்புகளும் இல்லை என்பதால், இந்தப் பகுதி இறந்துவிடும். இதனால்தான் நுனி நகத்தை வெட்டும்போது நமக்கு வலிப்பதில்லை.

 

அடுத்ததாக, நகத்தைச் சுற்றி ‘U’ வடிவத் தோல் அமைப்பு (Nail fold) உள்ளது. நகத்தின் அடியில் காணப்படும் பிறை போன்ற அமைப்பு ‘லுனுலா’ (Lunula). நகத்துடன் இணைந்த தோல் பகுதி ‘எபோநைகியம்’ (Eponychium). நகத்தைச் சுற்றியுள்ள உள்தோல், ‘பெரியோநைகியம்’ (Perionychium). நகத்தைச் சுற்றியுள்ள மேல்தோலுக்குக் ‘கியூட்டிக்கிள்’ (Cuticle) என்று பெயர். இந்த அமைப்புகள் அனைத்தும் கைவிரலுக்கும் கால் விரலுக்கும் பொதுவாகவே இருக்கின்றன.

ஒரு நகம் முழுதாக வளர்வதற்கு நான்கிலிருந்து எட்டு மாதங்கள்வரை எடுத்துக்கொள்ளும். கால் விரல் நகங்களைவிட கை விரல் நகங்கள் வேகமாக வளரும். அதிலும் கோடை காலத்தில் மிகவும் வேகமாக வளரும். கைவிரல் நகம் மாதத்துக்கு சுமார் இரண்டு மி.மீ. வளரும். கால் விரல் நகம் மாதத்துக்கு ஒரு மி.மீ.வரை வளரும். முப்பது வயதுவரை நகத்தின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். அதற்குப் பிறகு குறைந்துவிடும். தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருப்பது, சத்துக் குறைபாடு, சில வகை மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவது, முதுமை போன்ற காரணங்களால் நகத்தின் வளர்ச்சி குறையலாம். நகத்தின் வேலை என்ன என்று கேட்டால், நாம் அதிகமாகப் பயன்படுத்தும் விரல்களின் முனைகளைப் பாதுகாப்பது. அத்தோடு சிறிய பொருள்களை எடுக்கவும், துருவிப் பார்க்கவும் நகங்கள் பயன்படுகின்றன.

‘பளிங்குபோல கெடுத்ததைக் காட்டும் நகம்’ என்று சொல்லும் அளவுக்கு நகம் ஒரு நோய் காட்டும் கண்ணாடி. ஐம்பதுக்கும் மேற்பட்ட நோய்களை இது நமக்குக் காட்டிக்கொடுத்து விடும்.

சிலர் நகத்தை வெட்டுகிறேன் என்று நகத்தை ஒட்ட வெட்டிவிடுவார்கள். இன்னும் சிலர் நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருப்பார்கள். இதுபோன்று செய்வதால், நகத்தில் பாக்டீரியா நுண்கிருமிகள் நுழைந்து புண்ணாக்கிவிடும். இதுதான் நகச்சுத்தி (Paronychia). நகத்தை நகவெட்டியால் வெட்டினால், நகத்துக்கு வரும் பல ஆபத்துகளைத் தவிர்த்துவிடலாம்.

நகம் சொத்தை ஆகிறதே, ஏன்?

நகத்தின் அழகைக் கெடுக்கும் நோய் நகப்படை அல்லது நகச் சொத்தை (Fungal Nail). டிரைக்கோபைட்டன் ரூப்ரம் (Trichophyton rubrum) எனும் பூஞ்சைக் கிருமிகளால் ஏற்படும் இந்த நோய், கை விரல்களைவிட கால் விரல்களையே அதிகமாகப் பாதிக்கும். குறிப்பாக, தண்ணீரிலேயே விரல்கள் ஊறிக்கொண்டிருந்தால், இந்த நோய் வரும் சாத்தியம் அதிகம்.

கைவிரல் நகங்கள் வெள்ளை நிறத்தில் ஸ்பூன்போல குழிவிழுந்து (Koilonychia) தோன்றும். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படுமானால், இதுபோன்று நகங்கள் காணப்படும். கைவிரல் நகங்கள் கிளிமூக்கு’ போல வீங்கிக்கொள்வதும் உண்டு. இதை ‘கிளப்பிங் நெய்ல்ஸ்’ (Clubbing nails) என்று சொல்கிறார்கள். இதயக் கோளாறு, நுரையீரல் கோளாறு, குடல் நோய், கல்லீரல் நோய், பிறவிக் கோளாறு, இதயஉறை அழற்சி நோய், புற்றுநோய், செரிமானக் கோளாறு ஆகிய உடலில் மறைந்திருக்கும் எட்டு நோய்களை வெளிக்காட்டும் ஒரு முக்கியமான அறிகுறி இது.

shutterstock69268609%20Convertedcol
 

நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலோ அல்லது வெள்ளையாகவோ இருந்து, கீழ்ப்பகுதி மாநிறத்தில் இருக்குமானால் அது சிறுநீரக நோய் இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறி. நகம் நீல நிறத்துக்கு மாறியிருந்தால், அது ரத்த ஓட்டம் சரியில்லை என்பதைக் காட்டுகிறது.

குழந்தைகளுக்கு இதயத்தில் பிரச்சினை இருந்தால், நகங்கள் நீல நிறத்தில் தோன்றும். நகம் முழுவதுமே மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலைக்கான அறிகுறி. உடலில் கால்சியம், வைட்டமின், புரதம், இரும்புச்சத்து போன்ற சத்துகள் குறைந்தால், நகத்தின் குறுக்கே அழுத்தமான வெள்ளைக்கோடுகளோ வெள்ளைப் புள்ளிகளோ தோன்றுவதுண்டு.

விலங்குகளின் கொம்புகளும் பறவைகளின் அலகுகளும் நம் நகத்தைப் போன்று வளர்பவைதான். பிற உயிரினங்களைக் கொன்று தின்னும் கழுகு போன்ற பறவைகளின் கால் பாதங்களில் மிக நீண்ட கூர்மையான நகங்கள் (Talons) இருக்கும். விலங்குகளில் மான் கொம்பு மட்டும் சற்றே வித்தியாசமாக வளர்ந்திருக்கும். ஆடு, மாடு, குதிரை, ஒட்டகம் முதலிய விலங்குகளுக்குக் குளம்பு (Hoofs) எனப்படும் காலின் அடிப்பகுதி நகங்களைப்போல் கடினத் தன்மையுடன் இருக்கும்.

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 23: உடலின் கவசம்

 

 
shutterstock615456185

உடலைப் போர்த்தியிருக்கும் தோல்தான் உடலிலேயே மிகப் பெரிய உறுப்பு. உடலின் எடையில் சுமார் 15 சதவீதம் தோலின் எடை. அறுபது வயதுடைய ஒருவரின் தோல் மொத்தத்தையும் விரித்தால், அது 2 சதுர மீட்டர் பரப்பாக இருக்கும். இதன் தடிமன் இடத்துக்கு இடம் மாறுபடும். சில இடங்களில் ஒன்றரை மில்லி மீட்டர் மெல்லியதாகவும், சில இடங்களில் 6 அல்லது 7 மில்லி மீட்டர் அளவுக்குத் தடிமனாகவும் இருக்கிறது.

 

‘மேல்தோல்’ (Epidermis), ‘நடுத்தோல்’ (Dermis), ‘உள்தோல்’ (Hypodermis) எனும் மூன்றடுக்குப் படலத்தால் ஆனது நமது தோல். உடலின் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கும் கவசமாக மேல்தோல் இருக்கிறது. சுற்றுச் சூழலிலிருந்து வெயில், மழை, கிருமி என்று எது தீண்டினாலும் அது உடலைப் பாதிக்காமல் தடுப்பதில் தோல் முன்னிலை வகிக்கிறது.

உடலின் வெப்பத்தைச் சரிப்படுத்துவதும் தொடுவுணர்வுக்குத் தோள் கொடுப்பதும் இதுதான். வியர்வை மூலம் உடலுக்கு வேண்டாத கழிவுகளை வெளியேற்றும் உறுப்பாகவும் இது செயல்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து ‘வைட்டமின்- டி’யைத் தயாரித்துக் கொடுக்கிறது.

shutterstock174446576%20Convertedcol

மேல்தோல் ஐந்து படலங்களால் ஆனது. ஒவ்வொன்றும் ‘கெரட்டின்’ (Keratin) செல்களால் ஆனது. இதன் மேற்பரப்பில் பழைய செல்களே இருக்கும். இதன் அடிப்பரப்பில் புதிய செல்கள் பிறந்து, மேற்பரப்பு நோக்கி வந்துகொண்டிருக்கும். இவை மேற்பரப்புக்கு வந்து சேர்ந்ததும் உயிரிழந்த செல்களாக மாறிவிடும்.

இப்படி இறந்துபோன செல்கள் நாம் குளிக்கும்போதும், உடை மாற்றும்போதும் உதிர்ந்துவிடும். இவ்வாறு ஒரு கெரட்டின் செல் உருவாகி உதிர்வதற்கு 35-லிருந்து 45 நாட்கள்வரை ஆகிறது. எழுபது வயதுவரை வாழும் ஒருவரின் உடலிலிருந்து அவரது வாழ்நாளில் மொத்தம் சுமார் 18 கிலோ செல்கள் உதிர்வதாகச் சொல்லப்படுகிறது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலுமாக’ கெரட்டின் செல்கள் இருப்பதால்தான் நம் தோல் பார்ப்பதற்கு எப்போதும் புதிதாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது.

உடலில் அழுத்தம் தாங்கும் பகுதிகளில் கெரட்டின் செல்கள் மிக அதிகமாக இருக்கின்றன. உதாரணமாக, உடல் எடை முழுவதையும் தாங்கும் உள்ளங்கால்களிலும், அடிக்கடி வேலை செய்கிற, பொருட்களைத் தூக்குகிற உள்ளங்கைகளிலும் கெரட்டின் செல்கள் மிக அதிகமாக காணப்படுகின்றன. அதனால்தான் அங்கு தோல் தடிமனாக இருக்கிறது.

மேல்தோலில்தான் நம் தோலுக்கு நிறம் தருகிற ‘மெலனின்’ (Melanin) எனும் நிறமிகள் உள்ளன. இவற்றை ‘மெலனோசைட்’ (Melanocyte) எனும் செல்கள் சுரக்கின்றன. இந்த நிறமிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால், தோலின் நிறம் கறுப்பு; கொஞ்சம் குறைவாக இருந்தால் மாநிறம்; மிகவும் குறைவாக இருந்தால் வெள்ளை நிறம்.

shutterstock661154740

தோலின் மேற்பரப்பில் நிறைய வியர்வைத் துவாரங்கள் உள்ளன. வியர்வைச் சுரப்பி உள்தோலில் தொடங்கி நடுத்தோல் வழியாக மேல்தோலுக்கு வந்து வியர்வைத் துவாரத்தில் முடிகிறது. இது நம் உடலுக்குள் இருக்கும் இயற்கை கூலர்.

வெயில் அதிகரிக்கும் போதெல்லாம் இந்தச் சுரப்பிதான் வியர்வையை அதிகமாகச் சுரக்கச் செய்கிறது. வியர்வை ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தைத் தோலிலிருந்து எடுத்துக்கொள்வதால், உடல் சூடு குறைந்து சமநிலை அடைகிறது. வியர்வை மூலம் உடல் கழிவுகளையும் அகற்றுகிறது.

உடலில் சுமார் 30 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. இவை எக்கிரின் (Eccrine glands), அபோகிரின் (Apocrine glands) என இரு வகைப்படும். முதலாவது உடல் முழுவதும் உள்ளவை.

இரண்டாவது வகை அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் காணப்படுபவை. விலங்குகளில் நாய்க்கும் பூனைக்கும் வியர்வைச் சுரப்பிகள் இல்லை.

நடுத்தோலில் ‘கொலாஜென்’ எனும் பசை போன்ற புரதப்பொருளும், ‘எலாஸ்டின்’ என்ற புரதப்பொருளும் உள்ளன. இவை தோலை மிருதுவாக வைத்துக்கொள்ளவும், தோலுக்கு மீள்தன்மையைக் கொடுக்கவும் உதவுகின்றன. வயதாக ஆக எலாஸ்டின் அளவு குறைந்துவிடுவதால், தாத்தா, பாட்டிகளுக்குத் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
 

shutterstock24507898%20Convertedcol

தோல் பளபளப்பாக இருப்பதற்கு, தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் (Sebaceous glands) தான் காரணம். இந்தச் சுரப்பிகள் மட்டும் இல்லா விட்டால், உடலில் எண்ணெய்ப் பசையே இருக்காது. உடல் முழுவதும் தோல் வறண்டு போகும். வெயில் காலத்தில் பாளம் பாளமாக வெடித்துவிடும்.

ஆணோ, பெண்ணோ பருவ வயதில் முகப்பரு வருவதற்கு இந்த எண்ணெய்ச் சுரப்பிகள் அடைத்துக்கொள்வதுதான் காரணம். இவை நடுத்தோலில் இருக்கின்றன. ‘சீபம்’ என்ற கொழுப்பு எண்ணெயைச் சுரக்கின்றன. உடலில் கை, உள்ளங்கை, பாதம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்தச் சுரப்பிகள் இருக்கின்றன.

நடுத்தோலில் ரத்தக் குழாய்கள், நரம்புகள், நார்த்திசுக்கள் நிறைய உள்ளன. இங்குள்ள ரோமக்காலிலிருந்து (Hair Follicle) முடி முளைத்து மேல்தோலுக்கு வருகிறது.

அடித்தோலில் கொழுப்புத் திசுப் படலம் உள்ளது. இது ஓர் அதிர்வு தாங்கியாகவும், வெப்பத்தைத் தாங்கும் படலமாகவும் செயல்படுகிறது. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு இங்குதான் சேமிக்கப்படுகிறது.

பிற உயிரினங்களைப் பொறுத்தவரை, அவை வாழும் சூழலுக்கு ஏற்ப தோலின் தன்மை, நிறம் போன்றவை மாறுகின்றன. இதற்குப் பச்சோந்தி சிறந்த உதாரணம். பெரும்பாலான விலங்குகளின் தோலில் நிறைய முடி இருக்கிறது. பறவைகளுக்கு இறகுகளும் மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்குத் தோலில் எலும்போடு இணைந்த செதில்களும் இருக்கின்றன. பாம்பு, பல்லி போன்ற ஊர்வனவற்றுக்கு மெல்லிய செதில்களும் பல வண்ணத் தோலும் இருக்கின்றன. ஆமைக்கு ஓடு இருக்கிறது.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 24: தலைமுடி

shutterstock365084879%20Convertedcol

 

 

ஆதிகாலத்தில் ஆடை இல்லாத மனிதன் கடுமையான குளிர், வெயில், காற்று போன்ற சூழல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், கீழே விழும்போது காயம் படாமல் தப்பித்துக்கொள்ளவும் உருவானதுதான் முடி.

 

மனிதன் ஆடையை அணியத் தொடங்கிய பிறகு முடியின் தேவை குறைந்துபோனது. ஒரு காலத்தில் உடல் முழுவதும் முடியிருந்த மனிதனுக்கு, தற்போது தலையில் மட்டுமே அடர்த்தியாக உள்ளது. பதின்பருவ உடலில் சுமார் 50 லட்சம் முடிகள் இருக்கின்றன. இதில் 10 லட்சம் முடிகள் கழுத்துக்கு மேல் இருக்கின்றன. இமை, புருவம், காது, மூக்கு, அந்தரங்க உறுப்புக்குள் இருக்கும் முடிகள் தூசு, கிருமி, பூச்சி போன்றவை சென்றுவிடாதபடி தடுக்கின்றன.

முடி என்பது ஒரு புரத இழை. சருமத்துக்கு வெளியில் நாம் பார்க்கும் பகுதி ‘முடித்தண்டு’ (Shaft). தோலின் அடிப்பகுதியில் புதைந்திருக்கிறது ‘முடி வேர்’ (Root). இதன் கீழ்ப்பகுதியில் ‘முடிக்குமிழ்’ (Hair bulb) உள்ளது. இதிலுள்ள செல்களிலிருந்து முடிக்கால் (Hair Follicle) முளைத்து, சருமத்தை நோக்கி வளர்கிறது. இதுதான் முடித்தண்டாகச் சருமத்துக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது. முடித்தண்டில் ரத்தக்குழாய்களோ நரம்புகளோ இல்லை என்பதால், முடியை வெட்டும்போது நமக்கு வலிப்பதில்லை.

shutterstock274358651%20Convertedcol

முடியானது மொத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டது. ‘க்யூட்டிக்கிள்’ (Cuticle) என்பது வெளிப்பகுதி. இது ‘கெரட்டின்’ எனும் செல்களால் ஆனது. இதில் பல படலங்கள் உண்டு. இது எத்தனை படலங்களால் ஆனது என்பதைப் பொறுத்து ஒருவருடைய முடியின் கனம் மாறுகிறது. ‘கார்டெக்ஸ்’ (Cortex) என்பது நடுப்பகுதி. இதில்தான் ‘மெலனின்’ எனும் நிறமிப் பொருள் உள்ளது. முடி கருகருவென்று இருந்தால், அந்த முடியில் மெலனின் அதிகமாகவும் அடர்த்தியாகவும் இருக்கிறது என்று அர்த்தம். முடிக்கு மிருதுத்தன்மையைக் கொடுப்பதும் வளையும் தன்மையைத் தருவதும் இந்தப் பகுதிதான். மெலனின் குறைந்தால், முடி நரைக்கிறது.

‘மெடுல்லா’ (Medulla) என்பது உள்பகுதி. இதன் அடியில்தான் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஹார்மோன் போன்றவற்றை வழங்குகின்ற ரத்தக் குழாய்களும், தொடு உணர்வைத் தருகின்ற நரம்புகளும் இருக்கின்றன. நடுத்தோலில் முடியைச் சுற்றி இருக்கும் எண்ணெய்ச் சுரப்பிகள் முடியைப் பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கின்றன. முடி நிமிர்ந்திருக்க ‘எரெக்டார் பைலை’ (Arrector pili) தசைகள் பயன்படுகின்றன.

 

முடி எப்படி வளர்கிறது?

ஒரு செடி வளர்வதைப்போல் முடி தொடர்ச்சியாக வளர்வதில்லை. முடியின் வளர்ச்சி மூன்று பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம். ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லி மீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள்வரை நீடிக்கும். அடுத்தது ‘கெட்டாஜன்’ (Catagen). இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். தலையில் இருக்கும் முடியின் ஆயுள் அதிகபட்சம் 94 வாரங்கள். வயதானவர்களுக்கு இது 17 வாரங்களுக்குக் குறைந்துவிடும்.

தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. பெண்கள் தலை சீவும்போது 20 முடிகள்வரை கழிந்தால் கவலைப்பட வேண்டாம். இதற்கு மேல் முடி உதிர்கிறது என்றால் அதைக் கவனிக்க வேண்டும்.

shutterstock711069928%20Convertedcol

பெரும்பாலான விலங்குகளுக்கு முடியானது கரடுமுரடாகவும், அடர்த்தியாகவும் இருக்கிறது. அவற்றின் முடிகளுக்குத் தொடுவுணர்வு உண்டு. இதன் பலனாக அவை இருட்டான இடங்களுக்கும் செல்ல முடிகிறது. பல விலங்குகளுக்கு அவை வாழும் சூழலுக்கு ஏற்ற வகையில் முடியின் நிறம் அமைந்துள்ளது. இது எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. விலங்குகளில் முள்ளம்பன்றியின் முடி மட்டும் தனித்துவமானது. நீண்ட முட்களாக உள்ளது.

 

தலைமுடி உதிர்வது ஏன்?

முடி வளர்வதற்கு புரதம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், அயோடின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பயாட்டின், வைட்டமின் – சி சத்துகள் தேவை. இவற்றில் ஏதேனும் ஒரு சத்து குறைந்தாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு, உதிரத் தொடங்கிவிடும். டைபாய்டு, மன அழுத்தம் போன்ற நோய்கள், சில மருந்துகள், ஹார்மோன் குறைபாடுகள் காரணமாகவும் தலைமுடி உதிர்கிறது.

குளித்த பின் ஈரம் காய்வதற்குள் தலை வாருதல், வீரியம் மிகுந்த அல்லது தரம் குறைந்த ஷாம்பூகளைப் பயன்படுத்துதல், அடிக்கடி முடியை பிளீச் செய்தல், தரமற்ற தலைச்சாயங்களைப் பூசுதல், கடினமான சீப்புகளைப் பயன்படுத்துதல், ஹேர் டிரையரை அதிகமாகப் பயன்படுத்துதல், தலைமுடியை இறுக்கமாகக் கட்டுதல் போன்றவை தலைமுடி உதிர்வதற்கு முக்கியக் காரணம்.

அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், பால் பொருள்கள், முழுத் தானியங்கள், சோயாபீன்ஸ், காளான், ஆரஞ்சு, முந்திரி, பாதாம், வாழைப்பழம், மீன், ஈரல் போன்ற உணவு வகைகளைச் சேர்த்துக்கொண்டால் தலைமுடி நன்கு வளரும்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உடல் எனும் இயந்திரம் 25: உடலில் பாயும் நதி

 

 
bloodjpg

டலில் ஓடும் ரத்தக்குழாய்களை நிலத்தில் பாயும் நதிக்கு ஒப்பிடலாம். எப்படி நதியானது ஏரியாக, குளமாக, சிறு ஓடையாகப் பிரிந்து, தான் ஓடும் இடங்களில் எல்லாம் நீரைப் பாய்ச்சி, நிலத்தை வளப்படுத்துகிறது. அதுபோல நம் உடலில் ஓடும் ரத்தக்குழாய்களும் தாம் செல்லும் உறுப்புகளுக்கு எல்லாம் ரத்தம் கொடுத்து, அவற்றின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

 

ரத்தம் பாயும் பாதைகள்தான் ரத்தக்குழாய்கள். மனிதருக்கு ரத்தக்குழாய்களின் மொத்த நீளம் சுமார் 1,60,000 கி.மீ. ரத்தக்குழாயால் தனித்து இயங்க முடியாது. இதயம், நுரையீரல்கள், ரத்தம் ஆகியவற்றுடன் இணைந்து ரத்தச் சுற்றோட்டத்தை (Circulatory System) உருவாக்கி, அதன் மூலமே இயங்குகிறது. மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கு நுரையீரல் சுற்றோட்டம் (Pulmonary circulation), மண்டலச் சுற்றோட்டம் (Systemic circulation) என இரட்டைச் சுற்றோட்டங்கள் உள்ளன. மீன் போன்ற நீர் வாழினங்களுக்கு ஒற்றைச் சுற்றோட்டம் மட்டுமே உள்ளது. சில வகைப் புழுக்களுக்கு ரத்தக்குழாய்களே இல்லை.

நுரையீரல் சுற்றோட்டத்தில் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. வலது இதயத்திலிருந்து அசுத்த ரத்தம் இரண்டு நுரையீரல் தமனிகள் (Pulmonary arteries) வழியாக நுரையீரல்களுக்குச் சென்று, சுத்திகரிக்கப்பட்டு, சுத்த ரத்தமாக மாறி, நான்கு நுரையீரல் சிரைகள் (Pulmonary veins) வழியாக மீண்டும் இடது இதயத்துக்கு வந்து சேர்கிறது.

மண்டலச் சுற்றோட்டத்தில் உணவுப் பகிர்தலும் கழிவு அகற்றலும் நிகழ்கின்றன. இடது இதயத்தில் தொடங்கும் ரத்தக்குழாய் சுத்த ரத்தத்தைச் சுமந்து கொண்டு, நுரையீரல் நீங்கலாக, உடல் முழுவதும் கொடுத்துவிட்டு, அங்கிருந்து அசுத்தத்தைக் கொண்டுவந்து, வலது இதயத்துக்குத் தருகிறது. இந்தப் பயணத்தின்போது தன்னிடமுள்ள சில கழிவுகளை, நுரையீரல், சிறுநீரகம், தோல் வழியாகவும் வெளியேற்றுகிறது. இதனால்தான் உடல் எப்போதும் சீராக இயங்க முடிகிறது.

ரத்தக்குழாயானது தமனி (Artery), சிரை (Vein), தந்துகிகள் (Capillaries) என மூன்று பிரிவுகளில் அமைந்துள்ளது. ‘ஆக்ஸிஜன் மிகுந்த சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்வது தமனிகள். விதிவிலக்காக, நுரையீரல் தமனிகள் மட்டும் கார்பன் - டை – ஆக்ஸைடு மிகுந்த அசுத்த ரத்தத்தைச் சுமக்கின்றன.

தமனிக் குழாய் உள்ளிருந்து வெளிப் பக்கமாக உள்பாளம் (Tunica intima), நடுப்பாளம் (Tunica media), வெளிப்பாளம் (Tunica adventitia) என மூன்றடுக்குச் சுவர்களால் ஆனது. நடுப்பாளத்தில் மீள்திசுக்கள் (Elastic tissues) அதிகம். இதன் பலனாக, தமனிகளுக்கு மீள்தன்மை (Elasticity) கிடைக்கிறது. தமனிகளின் சிறப்பு இந்த மீள்தன்மையில்தான் உள்ளது. இதயத்திலிருந்து வெளிவரும் அழுத்தம் மிகுந்த ரத்தம் தமனிகளைப் பாதிக்காமலிருக்க, இந்த மீள்தன்மை தேவைப்படுகிறது. தமனிகளில் வால்வுகள் இல்லை. எனவே, இதயம் தரும் விசையில் தமனியில் பாய்கிற ரத்தம் எவ்விதத் தடையுமின்றி, உறுப்புகளுக்குள் சென்றடைகிறது. தமனிகளில் ரத்தம் பாய்வதைப் பரிசோதிப்பதுதான் ‘நாடி’ (Pulse) பார்ப்பது.

shutterstock468603398

சராசரியாக ஒரு தமனியின் தடிமன் 1 மி.மீ., உள்விட்டம் 4 மி.மீ.. இடது இதயத்தில் கிளம்பும் மகாதமனிதான் (Aorta) உடலிலேயே மிகப் பெரிய ரத்தக் குழாய். இதன் தடிமன் 2 மி.மீ., உள்விட்டம் 2.5 செ.மீ. இது உடலுக்குள் செல்லும்போது, கழுத்து, மூளை, கைகள், நெஞ்சு, வயிறு, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இடுப்பு, கால்களுக்கு என்று தனித்தனி குறுந்தமனிகளாகப் பிரிகிறது. இப்படி ஒவ்வோர் உறுப்பிலும் நுழையும் குறுந்தமனிகள் நூலிழைபோல் மெலிந்து நுண்தமனிகளாகிப் (Arterioles) பின்னர் தந்துகி வலைப்பின்னல்களாகக் கிளைவிட்டு, திசுக்களுக்கு இடையில் ஊடுருவுகின்றன.

ரத்தத்தில் வரும் உணவுச் சத்துகள், ஆக்ஸிஜன், ஹார்மோன்கள் முதலியவை தந்துகிகளின் மெல்லியச் சுவர்கள் வழியாகக் கசிந்து உடல் செல்களுக்குச் செல்கின்றன; அப்போது அங்கு சேர்ந்திருக்கும் கார்பன் - டை – ஆக்ஸைடு, உப்பு போன்ற கழிவுகளைத் தந்துகிகள் பெற்றுக்கொள்கின்றன. சுத்த ரத்தம் அசுத்த ரத்தமாவது இப்படித்தான்.

சிரை என்பது அசுத்த ரத்தத்தை இதயத்துக்கு எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய். விதிவிலக்காக, நுரையீரல் சிரைகள் (Pulmonary veins) மட்டும் சுத்த ரத்தத்தை இதயத்துக்குக் கொண்டு வருகின்றன. சிரைகளுக்கும் மூன்றடுக்குச் சுவர் உண்டு. ஆனால், நடுப்பாளத்தில் திசுக்களின் கனம் குறைவு என்பதால், தமனியைவிட சிரைக்குழாய் மிக மெல்லியது. ஒரு சிரையின் தடிமன் 0.5 மி.மீ., உள்விட்டம் 5 மி.மீ.

தமனிச் சுற்றும் சிரைச் சுற்றும் சந்திக்கிற இடம்தான் தந்துகிகள். பல தந்துகிகள் இணைந்து, நூலிழைகள் போன்ற நுண்சிரைகளைத் (Venules) தோற்றுவிக்கின்றன. நுண்சிரைகள் ஒன்றிணைந்து சிரைகளை உருவாக்குகின்றன. தந்துகிகளின் அசுத்த ரத்தம், நுண்சிரை, சிரை எனும் பாதையில் பயணித்து, இறுதியில் பெருஞ்சிரைகளை (Vena cava) அடைகிறது. தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றில் உள்ள சிரைக்குழாய்கள் இணைந்து மேற்பெருஞ்சிரையாகவும் (Superior vena cava), இதயத்துக்குக் கீழே உள்ள சிரைகள் இணைந்து கீழ்ப்பெருஞ்சிரையாகவும் (Inferior vena cava) உருவெடுத்து, வலது இதயத்துக்கு வருகின்றன. உடலில் உள்ள சிரைக்குழாய்களில் மிகப் பெரியவை இவை இரண்டும்தான்.

சிரைகளின் சிறப்புத் தன்மை வால்வுகளைக் கொண்டிருப்பது. இவை இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்வதால், புவிஈர்ப்பு விசை காரணமாக, ரத்தம் பின்னோக்கிப் பாய்வதைத் தடுக்கவும், இதயத்தை நோக்கி ஒரே திசையில் செல்லவும் வால்வுகள் பயன்படுகின்றன. விதிவிலக்காக மூளை, நெஞ்சு, வயிறு ஆகிய இடங்களில் சிரைகளுக்கு வால்வுகள் இல்லை. இவற்றில் மீள்திசுக்களும் இல்லை என்பதால் மீள்தன்மையும் இல்லை. இவை சுயமாகவும் இயங்க முடியாது; சுற்றியுள்ள தசைகளின் இயக்கத்தால்தான் சிரைகளின் வழியே ரத்தம் செல்கிறது.

உடலிலுள்ள தமனிகளில் மிக முக்கியமானவை இதயத் தமனிகள் (Coronary arteries). இவை மகாதமனியின் கிளைகள். இவை இதயத் தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. கொழுப்புப் பொருளாலோ, ரத்தக்கட்டியாலோ இவை அடைத்துக்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதுபோல் மூளைக்கு ரத்தம் கொடுப்பது பெருமூளைத் தமனிகள் (Cerebral arteries). இவை பாதிக்கப்படும்போது, பக்கவாதம் (Stroke) உண்டாகிறது.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 26: உயிர்த் திரவம்

 

 
Blood%20-2

த்தமும் ஓர் உடல் உறுப்புதான். மற்ற உறுப்புகள் எல்லாமே திட உறுப்புகள் என்றால், ரத்தம் மட்டும் திரவ உறுப்பு. நம் உடலின் எடையில் 8 % ரத்தத்தின் எடை. ரத்தத்தின் நிறம் எல்லோருக்கும் சிவப்புதான்.

   
 

ரத்தம் நம் உயிர் காக்கும் திரவம். 70 கிலோ எடையுள்ள ஒருவரின் உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. காஷ்மீர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற காற்றழுத்தம் குறைந்த மலைப் பிரதேசங்களில் வசிப்போருக்கு 2 லிட்டர் ரத்தம் வரை கூடுதலாக இருக்கும். இவர்களுக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு இயல்பாகவே குறைவாக இருக்கும். அப்போது அவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை ஈடுகட்ட ரத்தம் கூடுதலாக இருக்கிறது.

ரத்தத்தில் 55 % பிளாஸ்மா திரவம் உள்ளது. மீதி ரத்த அணுக்கள். பிளாஸ்மாவில் 90 % தண்ணீர். ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு, உணவுச் சத்துகள், தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்புப் புரதங்கள், ஹார்மோன்கள், உடல் கழிவுகள் போன்றவை பிளாஸ்மாவில் மிதந்துகொண்டிருக்கும் மற்ற பொருள்கள்.

இதயத் துடிப்பு கொடுக்கும் விசையாலும், தசைகள் தரும் அழுத்தம் காரணமாகவும் ரத்தம் உடல் எங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறது. பார்ப்பதற்குத் திரவமாகத் தெரிந்தாலும், ரத்தத்தில் திடப்பொருள்களும் இருக்கின்றன. அவை ‘ரத்த அணுக்கள்’. சிவப்பணுக்கள் (Erythrocytes), வெள்ளணுக்கள் (Leucocytes), தட்டணுக்கள் (Platelets) என மொத்தம் மூன்று வகை.

Blood%20-1
 

சிவப்பணுக்கள்தான் ரத்தத்துக்குச் சிவப்பு நிறத்தைத் தருகின்றன. இவற்றில் இருக்கும் ‘ஹீமோகுளோபின்’ எனும் இரும்பு மிகுந்த புரதப்பொருள் சிவப்பாக இருப்பதால்தான், ரத்தமும் சிவப்பாக இருக்கிறது. உடல் பாகங்களுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்வதும், நுரையீரல் வழியாக கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்ற உதவுவதும் ஹீமோகுளோபின் செய்யும் முக்கியமான வேலைகள். சாதாரணமாக ஒருவருக்கு இதன் அளவு 100 மில்லி ரத்தத்தில் 15 கிராம்வரை இருக்க வேண்டும்.

ஒரு சிவப்பணுவானது சிறிதாக, வட்டமாக, இருபுறமும் குழிந்து, அணுக்கரு (Nucleus) இல்லாமல் இருக்கும். இவை தொடர்ந்து எலும்பு மஜ்ஜையில் (Bone marrow) பல்வேறு கட்டங்களில் வளர்ந்து ரத்தச்சுற்றோட்டத்துக்கு வரும். முழு வளர்ச்சி பெற்ற சிவப்பணுக்கள் 120 நாட்கள்வரை உயிர்வாழும். அதற்குப் பிறகு இவை மண்ணீரலிலும் கல்லீரலிலும் அழிக்கப்படும். 18 வயதைக் கடந்த ஆண்களின் ரத்தத்தில் ஒரு கன மி.மீ.க்கு சுமார் 52 லட்சம் சிவப்பணுக்கள் இருக்கும். இது பெண்களுக்கு 45 லட்சம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும், சிவப்பணு எண்ணிக்கையும் குறைவதை ‘ரத்தசோகை’ (Anaemia) என்கிறோம். ரத்தசோகை இருந்தால் சீ்க்கிரம் சோர்வடைந்து விடுவீர்கள்; படிப்பில் கவனம் குறையும்.

Blood%20cir

உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தருபவை வெள்ளணுக்கள். இவை நோய்த் தொற்றுகளிலிருந்து நம்மைக் காக்கின்றன. இவற்றில் அணுக்கரு இருக்கிறது. ஆனால், ஹீமோகுளோபின் இல்லை. ஆகவே, இவற்றுக்கு நிறமில்லை. நோய் எதிர்ப்புப் பொருள்களை (Antibodies) உற்பத்தி செய்வது, இறந்த உடல் செல்களை உட்கொண்டு அழிப்பது, ரத்தம் உடலுக்குள் உறைவதைத் தடுப்பது போன்றவை வெள்ளணுக்கள் செய்யும் முக்கியப் பணிகள். ஒரு கன மி.மீ. ரத்தத்தில் சாதாரணமாக 4,000 முதல் 11,000 வரை வெள்ளணுக்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 5 வகை உண்டு. நோய்களின் தாக்கத்தாலும் புற்றுநோய் பாதிப்பினாலும் வெள்ளணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அடுத்தது, தட்டணுக்கள். இவற்றின் எண்ணிக்கை ஒரு கன மி.மீ. ரத்தத்தில் 1.5 முதல் 4 லட்சம்வரை இருக்கும். ஒரு தட்டணு அதிகபட்சமாக 10 நாட்களுக்குத்தான் உயிரோடு இருக்கும். உடலில் அடிபட்டு ரத்தம் கசியும்போது சிறிது நேரத்தில் ரத்தம் உறைந்து போகிறதல்லவா? அதற்குக் காரணம் இந்தத் தட்டணுக்கள்தான். இவை உடலில் காயம்பட்ட இடத்தில் ஃபைப்ரின் இழைகளை உற்பத்தி செய்து, கசியும் ரத்தக்குழாயை ஒரு பசைபோல் மூடிவிடும். இதனால் ரத்தக்கசிவு நின்றுவிடும். இப்படி உடலில் ரத்தம் வீணாகாமல் தடுப்பதில் தட்டணுக்களின் பங்கு மகத்தானது. ரத்தம் உறைவதற்கு மொத்தம் 13 பொருட்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் ரத்தம் உறையாது. டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களால் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்போது உடலெங்கும் ரத்தக்கசிவு ஏற்படும்.

 

ரத்தம் என்ன செய்கிறது?

ரத்த ஓட்டத்தின் மூலம் ஆக்ஸிஜனை உடல் எங்கும் பகிர்ந்தளிக்கிறது. கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. திசுக்களுக்குத் தேவையான உணவுச் சத்துகளையும் ஹார்மோன்களையும் எடுத்துச் செல்கிறது. உடல் கழிவுகளை அகற்றுகிறது. உடலின் வெப்பத்தைச் சீராக்குகிறது. உடலுக்குள் தண்ணீரின் அளவைச் சமப்படுத்துகிறது. ரத்தம் உறைவதற்கு உதவுகிறது. அமிலக் காரத் தன்மையை நடுநிலையில் வைத்துக்கொள்கிறது. நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.

Blood%20-3b

வெள்ளணுக்கள்

 

உங்களுக்கு ஏதாவது உடல்நலக் குறைவு இருந்தால், சில துளி ரத்தம் எடுத்துப் பரிசோதிக்கிறார்கள் அல்லவா? அப்போது ரத்த அணுக்களின் அமைப்பு, எண்ணிக்கை, கனம், சர்க்கரை, யூரியா, கொழுப்பு, ஹார்மோன் போன்றவற்றின் அளவுகள், மலேரியா, காசநோய் போன்றவற்றுக்கான கிருமிகள், இன்ன பிற பரிசோதனைகளைச் செய்து, உடல் உறுப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன, எந்த நோய் உள்ளது என்பதை மருத்துவர்கள் அறிந்துகொள்கிறார்கள். நோய் இருந்தால், தகுந்த சிகிச்சை அளிக்கிறார்கள்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.