Jump to content

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!


Recommended Posts

உடல் எனும் இயந்திரம் 27: ரத்தத்தில் எத்தனை வகை?

 

 
Blood%20-1

ரத்தம் அனைவருக்கும் ஒரே நிறம்தான். ஆனால், ஒரே வகை கிடையாது. மனித ரத்தத்தில் இருபதுக்கும் மேற்பட்ட வகை இருக்கின்றன. அவற்றில் ஏ, பி, ஏபி, ஓ எனும் நான்கு வகைகள் மிக முக்கியமானவை.

   
 

1901-ல் ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானி கார்ல் லான்ஸ்டீனர் (Karl Landsteiner) ரத்த வகைகளைக் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு 1930-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரத்தச் சிவப்பணுக்களில் ‘ஆன்டிஜன்’ எனும் வேதிப்பொருள் இருக்கிறது. இது பெற்றோரிடமிருந்து மரபுவழியாக நமக்கு வருகிறது. ஏ, பி, எம், என் எனப் பலதரப்பட்ட ஆன்டிஜன்கள் உள்ளன. ஒரு சிவப்பணுவில் என்ன ஆன்டிஜன் உள்ளதோ, அதைப் பொறுத்து ஒருவருக்கு ரத்த வகை அமைகிறது.

சிவப்பணுக்களில் ‘ஆன்டிஜன்’ இருப்பதுபோல், ரத்த பிளாஸ்மாவில் ‘ஆன்டிபாடி’ எனும் வேதிப்பொருள் இருக்கிறது. இது ஆன்டிஜனுக்கு நேர்மறையான ஒரு வேதிப்பொருள். இதை வைத்தும் ரத்த வகை பிரிக்கப்படுகிறது.

சிவப்பணுவில் ஏ ஆன்டிஜன் இருப்பவர்கள் ஏ ரத்த வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிளாஸ்மாவில் ஆன்டி – பி ஆன்டிபாடி இருக்கும். பி ஆன்டிஜன் கொண்டவர்கள் பி ரத்த வகையினர். இவர்களுக்கு ஆன்டி – ஏ ஆன்டிபாடி இருக்கும். சிலருக்கு ஏ, பி இரண்டு ஆன்டிஜன்களும் இருக்கும்; ஆனால், எந்த வகை ஆன்டிபாடியும் இருக்காது. இவர்கள் ஏபி ரத்த வகை உடையவர்கள். இன்னும் சிலருக்கு எந்த ஆன்டிஜனும் இருக்காது. ஆனால், இரண்டு வகை ஆன்டிபாடிகளும் இருக்கும். இவர்கள் ஓ ரத்த வகையைச் சேர்ந்தவர்கள். ஏ ரத்த வகையில் ஏ1, ஏ2; ஏபி ரத்த வகையில் ஏ1பி, ஏ2பி எனத் துணை வகை உண்டு.

Blood%20-2
 

இந்த மாதிரி ரத்த வகையைப் பிரிப்பதற்கு ‘ஏபிஓ ரத்த வகை முறை’ (ABO Blood System) என்று பெயர். இதன்படி அந்தந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு அதே ரத்த வகையைச் சேர்ந்தவர்களிடமிருந்து ரத்தத்தைப் பெற்றுச் சிகிச்சை அளிக்கும் முறை அலோபதி மருத்துவத்தில் பின்பற்றப்பட்டது. ஆனால், சிலருக்கு அவர்களுடைய ரத்த வகையையே செலுத்தினாலும், பொருந்தவில்லை. என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.

கார்ல் லான்ஸ்டீனரும் அமெரிக்க விஞ்ஞானி வெய்னரும் (Weiner) இணைந்து 1937-ல் காரணம் கண்டுபிடித்தனர். சிவப்பணுக்களில் ‘ஆர்ஹெச்’ எனும் இன்னோர் ஆன்டிஜன் இருப்பது அப்போது தெரியவந்தது. இதுக்கு ‘ஆர்ஹெச் காரணி’ (Rh factor) அல்லது ‘டி-ஆன்டிஜன்’ (D-antigen) என்று பெயர். இது எல்லோருக்கும் இருக்காது. ஆகவே, இது இருப்பவர்களின் ரத்தம் ‘ஆர்ஹெச் பாசிட்டிவ்’ என்றும், இது இல்லாதவர்களின் ரத்தம் ‘ஆர்ஹெச் நெகட்டிவ்’ என்றும் பிரிக்கப்பட்டது. இந்த வகையில் ரத்தத்தை வகைப்படுத்தும் முறைக்கு ‘ஆர்.ஹெச். வகை முறை’ (Rh system) என்று பெயர். முதன்முதலில் ‘ரீசஸ்’ எனும் குரங்கு இன ரத்தத்தில் ‘ஆர்ஹெச் காரணி’ கண்டுபிடிக்கப்பட்டதால், இதற்கு ‘Rhesus factor’ என்று பெயரிட்டனர்.

 

ரத்த வகைக்கு என்ன முக்கியத்துவம்?

விபத்தில் அடிபட்டு ரத்தம் வெளியேறும்போது, சில நோய்கள் காரணமாக உடலில் ரத்த இழப்பு ஏற்படும்போது, அறுவை சிகிச்சையின்போது எனப் பல அவசர நிலைகளில் ரத்தம் செலுத்தப்பட வேண்டி வரலாம். அப்போது ரத்த வகையை மாற்றிச் செலுத்திவிடக் கூடாது. அதற்குத்தான் ரத்த வகையைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

Blood%20-4
 

பொதுவாக, ஓ நெகட்டிவ் ரத்த வகை அனைவருக்கும் பொருந்தும். ஓர் அவசரத்துக்கு இதைக் கொடுக்கலாம். இவர்களை ‘எல்லோருக்கும் உரியக் கொடையாளர்கள்’ (Universal donor) என்கிறோம். ஏபி பாசிட்டிவ் ரத்த வகை உள்ளவர்கள் எந்த வகை ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். இவர்களை ‘எல்லாம் ஏற்றுக்கொள்கிறவர்கள்’ (Universal Recipient) என அழைக்கிறோம்.

‘பாம்பே’ ரத்த வகை

மனித ரத்த வகையில் மிக அரிதான ரத்த வகையும் இருக்கின்றன. அவற்றில் ‘பாம்பே ரத்த வகை’ (Bombay blood group) முக்கியமானது. இதை முதன்முதலில் 1952-ல் மும்பையில் (அப்போதைய பாம்பே) டாக்டர் பெண்டே (Dr. Bhende) என்பவர் கண்டுபிடித்ததால் இந்தப் பெயர். அரிசி மாவு இருந்தால்தான் அதை இட்லியாகவோ, இடியாப்பமாகவோ அவிக்க முடியும். அது மாதிரிதான் ஏ, பி ஆன்டிஜன்களை உற்பத்தி செய்ய சிவப்பணுக்களில் ‘ஹெச் ஆன்டிஜன்’ இருக்க வேண்டும். இது இல்லாவிட்டால் எந்த ஆன்டிஜனும் உற்பத்தியாகாது. இவ்வாறாக ஹெச், ஏ, பி ஆன்டிஜன்களை இழந்த விசித்திரமான ரத்த வகை இது. இந்தியாவில், குறிப்பாக மும்பையில்தான் இந்த அரிதான ரத்த வகை உள்ளவர்கள் அதிகம்.

 

Blood%20-3

கார்ல் லான்ஸ்டீனர்

‘ரத்த தானம்’ தெரியுமா?

ஆரோக்கியமாக உள்ள ஒருவர் 18 வயதுக்கு மேல் 60 வயது வரைமூன்று மாதங்களுக்கு ஒருமுறை 300 மில்லி ரத்தத்தைத் தானம் செய்யலாம். இப்படித் தானம் செய்யப்பட்ட ரத்தம், இரண்டு வாரங்களுக்குள் மறுபடியும் கொடையாளர் உடலில் உற்பத்தியாகிவிடும்.

 

‘ரத்த வங்கி’ என்பது என்ன?

ஒருவர் தானம் செய்யும் ரத்தத்தைச் சேகரித்து, அணுக்களைப் பகுத்துப் பதப்படுத்தி, சேமித்து, தேவைப்படுபவர்களுக்கு வழங்கும் நிறுவனம், ரத்த வங்கி (Blood bank). ஒருமுறை தானமாகப் பெற்ற ரத்தத்தைக் குளிர்சாதனப் பெட்டியில் 4 டிகிரி செல்சியஸ் குளிர்ச்சியில் வைத்து 30 நாட்களுக்குப் பாதுகாக்கலாம். கொடையாளரின் ரத்த வகையும் அதைப் பெறுகிறவரின் ரத்த வகையும் ஒன்று போலிருக்கிறதா, அந்த ரத்தம் புதியவருக்குப் பொருந்துகிறதா எனப் ‘பொருத்தம்’ பார்த்து, ஒப்புதல் கொடுக்க வேண்டியது ரத்த வங்கியின் முக்கியப் பணி. அதன் பிறகே ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ரத்த வகை உண்டு, ஆனால், இனத்துக்கு இனம் ரத்த வகைகயின் எண்ணிக்கை வேறுபடுகிறது.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உடல் எனும் இயந்திரம் 28: உடலின் காவலர்கள்!

 

 
Blood
 

ரத்த வெள்ளணுக்களில் 5 வகை உண்டு எனப் பார்த்தோம். அவற்றில் நிணவணுக்கள் (Lymphocytes) ஒரு வகை. இவற்றில் பி நிணவணுக்கள் (B–Lymphocytes), டி நிணவணுக்கள் (T–Lymphocytes) என இரு வகை உண்டு. பி நிணவணுக்கள் (B–Lymphocytes) எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. டி நிணவணுக்களை (T–Lymphocytes) ‘தைமஸ் சுரப்பி’ (Thymus gland) உற்பத்தி செய்கிறது.

 

மனிதன் உள்ளிட்டப் பாலூட்டிகளுக்கு உடலில் உருவாகிற முதல் ‘நிணவகை உறுப்பு’ (Lymphoid organ) இதுதான். கழுத்தும் நெஞ்சும் இணைகிற இடத்தில், நெஞ்சு எலும்புக்குப் பின்புறமாகவும், மூச்சுக் குழாய்க்கு முன்புறமாகவும் இருக்கிறது, தைமஸ் சுரப்பி. பிரமிட் வடிவில் இருக்கிற இந்தச் சுரப்பி உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலோடு தொடர்புடையது; தொற்றும் நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது.

நாம் பிறக்கும்போது இதன் எடை 12 கிராம். இது 12 வயதுவரை மட்டுமே வளர்கிறது. அப்போது இதன் எடை 36 கிராம். அதன் பிறகு இது சுருங்க ஆரம்பிக்கும். வயதானவர்களுக்கு இது 10 கிராம் எடையில் இருக்கும். அதனால்தான் முதுமையில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துவிடுகிறது. மனிதரைத் தவிர மற்ற விலங்கினங்களுக்குத் தைமஸ் சுரப்பி தொடர்ச்சியாக வளர்ந்து, சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

தைமஸ் சுரப்பியில் வலது, இடது என இரண்டு மடல்கள் (Lobes) உண்டு. ஒவ்வொன்றிலும் ஏராளமான நுண்மடல்கள் (Lobules) இருக்கின்றன. இதன் அமைப்பை வெளிப் பக்கமாகப் புறணி (Coretx) என்றும், உட்பக்கமாக அகனி (Medulla) என்றும் பிரிக்கிறார்கள். புறணியில் இளம் நிணவணுக்களும், அகனியில் முதிர்ந்த நிணவணுக்களும் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ‘ஹஸல் கார்ப்பசல்ஸ்’ (Hassall’s corpuscles) எனும் சிறப்பு நிணவணுக்களும் உள்ளன.

shutterstock374718004%20Converted
இவற்றின் வேலைதான் என்ன?

தைமஸ் சுரப்பி, டி நிணவணுக்களை மட்டுமில்லாமல், ‘தைமிக் ஹார்மோன்களை’யும் (Thymic hormones) உற்பத்தி செய்கிறது. அவற்றில் முக்கியமானவை தைமுலின் (Thymulin), தைமோஸின் (Thymosin), தைமோபாய்டின் (Thymopoietin). இவைதான் பி நிணவணுக்களுக்கும் டி நிணவணுக்களுக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊட்டுகின்றன. உடலுக்குள் நோய்க்கிருமிகள் நுழையும்போது அவற்றை எதிர்க்கின்ற எதிர்ப்பொருட்களை (Anti bodies) உருவாக்கி, அந்தக் கிருமிகளை அழிக்கவும், உடலிலிருந்து வெளியேற்றவும் நிணவணுக்களுக்குப் பயிற்சி தருகின்றன. நிணவணுக்கள் ரத்தத்தில் மட்டுமில்லாமல், நிணநீர் மண்டலத்திலும் பயணம் செய்கின்றன.

அது என்ன நிணநீர் மண்டலம்?

உடலில் ரத்தச் சுற்றோட்டத்தின் ஒரு பகுதியாக நிணநீர் மண்டலம் (Lymphatic system) இருக்கிறது. இதுவும் நோய் காக்கும் காவலனாக அமைந்துள்ளது. தந்துகிகளின் தமனிப் பகுதி ரத்தம் அதிக அழுத்தத்துடன் இருக்கும் என்பதால், அந்த ரத்தத்திலிருந்து சிறிதளவு பிளாஸ்மா, நிணவணுக்கள், சில புரதங்கள், செல்களின் சில கழிவுகள், சில கரைசல் பொருள்கள் ஆகியவை தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்டு, ஒரு வெளிர் திரவமாக திசுக்களிலுள்ள செல்களுக்கு இடையே வருகிறது. இதுதான் ‘நிணநீர்’ (Lymph). நாளொன்றுக்கு 2 - 3 லிட்டர்வரை நிணநீர் சுரக்கிறது.

இது உடலில் ஆங்காங்கே சிறு சிறு நிண நாளங்களில் சேகரிக்கப்படுகிறது. சிறிய நிண நாளங்கள் ஒன்று சேர்ந்து, பெரிய நிண நாளமாக உருவாகிறது. பேருந்து செல்லும் பாதையில் பேருந்து நிறுத்தங்கள் இருப்பதைப்போல், இந்த நாளங்கள் செல்லும் பாதையில் ‘நிணக்கணுக்கள்’ (Lymph nodes) இருக்கின்றன. குறிப்பாகத் தலை, கழுத்து, அக்குள், வயிறு, தொடை இடுக்குகள் ஆகிய இடங்களில், தோலுக்கு அடியில், ஒரு பட்டாணிக் குவியல் மாதிரி காணப்படுகின்றன. உடலில் சுமார் 600 நிணக்கணுக்கள் உள்ளன. ரத்தச்சுற்றோட்டதுக்கு இல்லாத இந்தச் சிறப்புத் தகுதி நிணநீர் சுற்றோட்டத்துக்கே உரியது.

shutterstock210342457%20Converted

உடல் எங்கும் ஒரு சங்கிலித் தொடர்போல் அமைந்துள்ள நிண நாளங்கள் தாம் கொண்டுவரும் நிணநீரை அருகில் உள்ள நிணக்கணுக்களில் சேர்க்கின்றன. அந்த நிணக்கணுக்களில் இருந்து வேறு புதிய நிண நாளங்கள் புறப்படுகின்றன. அவற்றில் மறுபடியும் நிணநீர் பயணிக்கிறது. இறுதியில் இந்த நாளங்கள் வலது, இடது கழுத்துப் பட்டை எலும்பின் அடியிலுள்ள சிரைக்குழாய்களில் (Subclavian veins) இணைகின்றன. அதன் வழியே ரத்த ஓட்டத்தில் நிணநீர் கலக்கிறது.

நிண நாளங்களில் வால்வுகள் உள்ளதால், நிணநீர்ப் போக்குவரத்து ஒரு திசைப் பயணமாக இதயத்தை நோக்கியே நிகழ்கிறது. நிண நாளங்களைச் சுற்றியுள்ள தசைகளின் இயக்கத்தால் இந்தப் போக்குவரத்து சாத்தியமாகிறது. அப்போது திசுக்களிலிருந்து பாக்டீரியா மற்றும் சில நுண்ணுயிரிகளை நிணநீர் உறிஞ்சிக்கொள்கிறது. அவற்றை நிணக்கணுக்கள், மண்ணீரல், தைமஸ் ஆகிய நிணவகை உறுப்புகள் வடிகட்டி வெளியேற்றுகின்றன.

இவ்வாறு நிணநீர், நிண நாளங்கள், நிணக்கணுக்கள், தைமஸ், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை, குடல் மற்றும் சுவாச மண்டல நிணத்திசுக்கள் போன்ற நிண வகை உறுப்புகள் அனைத்தையும் கொண்டது நிணநீர் மண்டலம். நிணநீரில் கலக்கும் உடல் கழிவுகளை நீக்கி, நோய்க்கிருமிகளை அழித்து, அயல்பொருட்களை அகற்றிச் சுத்தப்படுத்தி, மீண்டும் அந்த நிணநீரை ரத்தத்துக்கு அனுப்புவது இந்த மண்டலத்தின் முக்கிய வேலை.

அதோடு, தந்துகிகளின் சுவரில் நுழைய முடியாத அளவுக்குப் பெரிதாக உள்ள உணவு மூலக்கூறுகள் நிண நாளங்களின் வழியே உடலுக்குள் செல்கின்றன. உதாரணமாக, குடலில் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படும் கொழுப்பு உணவு நிண நாளங்கள் வழியாகவே ரத்தத்தில் கலக்கிறது.
 

shutterstock649823956%20Converted
நெறிக்கட்டு என்பது என்ன?

நோய்த்தொற்று ஏற்படும்போது, உடலுக்குள் புகுந்துகொள்ளும் நோய்க் கிருமிகளோடு போராடி அவற்றை அழிப்பதற்கு நிணக்கணுக்கள் நிறைய நிணவணுக்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கின்றன. அப்போது நிணக்கணுக்கள் கோலிக்குண்டு அளவுக்குப் பெரிதாகின்றன. இதைத்தான் ‘நிணக்கணு வீக்கம்’ அல்லது ‘நெறிக்கட்டு’ என்கிறோம். உதாரணமாக, காலில் புண் வந்தால் தொடை இடுக்கில் நெறி கட்டும். நோய்க்கிருமிகளின் பாதிப்பு மிக அதிகமாக இருந்து, அது நிண நாளங்களை அடைத்துக்கொள்ளுமானால், திசுக்களில் நீர் கோத்து, வீங்கிவிடும். பாதங்களில் நோய்த்தொற்று ஏற்படும்போது கால் முழுவதும் சிவப்பு நிறத்தில் வீங்குவது இப்படித்தான்.

உடலில் புற்றுநோய் இருந்தால், அது உடலுக்குள் பரவக்கூடிய பாதைகளில் ஒன்று நிணநீர்ப் பாதை. எந்த உடற்பகுதியில் புற்றுநோய் இருக்கிறதோ. அதோடு தொடர்புடைய நிணக்கணுக்களைத் திசு ஆய்வு (Biopsy) செய்தால், புற்றுநோய் பரவியுள்ளதா என்பது தெரிந்துவிடும். உதாரணமாக, மார்பில் புற்றுநோய் இருந்தால், அக்குளில் உள்ள நிணக்கணுக்களைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள முடியும். மார்பில் புற்றுநோய் இருந்தால், அந்த நிணக்கணுக்களை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிடுகிறார்கள்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 29: உடலின் தூண்கள்

 

 

 
Bone%20-1

ஒரு கட்டிடத்துக்கு கான்கிரீட் தூண்களும் சுவர்களும் உள்ளதுபோல், உடலுக்குள் எலும்புகள் உள்ளன. இவை பார்ப்பதற்குத் தனித்தனி எலும்பாகத் தெரிந்தாலும், தனி ஓர் எலும்பால் இயங்க முடியாது. அருகிலுள்ள தசைகள், தசைநாண்கள், பிணையங்கள் (Ligaments) ஆகியவற்றுடன் இணைந்து இயங்கும் ஒரு கட்டமைப்பு இது. அதனால்தான், இதை ‘எலும்புக் கூடு’ (Skeleton) என அழைக்கிறோம். உடலுக்கு ஆதாரம் தரும் சட்டகம் என்றும் இதைக் கூறலாம். மூளை, இதயம், நுரையீரல், கண், காது, முதுகுத் தண்டுவடம் போன்ற முக்கிய உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கும் பெட்டகமாகவும் இது திகழ்கிறது.

உடலுக்கு உருவம் கொடுப்பதும் வலுவைத் தருவதும் எலும்புகளே. எலும்புகளுக்கு உடலைத் தாங்கும் உறுதி இருப்பதால்தான் நம்மால் நிற்க முடிகிறது. அதேபோல் ஓடியாடி விளையாடவும், குனிந்து நிமிர்ந்து, வளைந்து நெளிந்து செல்லவும், நடனம் ஆடவும் முடிகிறது என்றால், அதற்கு எலும்புகள் தரும் அசைவுகள்தான் காரணம். ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதும், கொழுப்பு, கால்சியம், பாஸ்பேட் சத்துகளைச் சேமிப்பதும், காது கேட்க உதவுவதும் எலும்புகளே.

   
 
Bone%20-2
 

முதுகெலும்பு உள்ள விலங்கினங்களில் எலும்பு என்பது கடினமான, விறைப்பான ஓர் இணைப்புத் திசு (Connective tissue). 20 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் இருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு இந்த எண்ணிக்கை அதிகம். ஏனெனில், அவர்களுக்குச் சில எலும்புகள் தனித்தனியாக இருக்கும். இவை பின்னர் வளர்ந்து ஒன்றுகூடி ஒரே எலும்பாக ஆகிவிடும். உதாரணம் மண்டை ஓடு. உடலிலேயே மிகப் பெரிய எலும்பு, தொடை எலும்பு (Femur). மிகச் சிறியது, அங்கவடி (Stapes).

உடலில் எலும்புகள் இருக்கும் இடம், அங்குள்ள அசைவுகள், தேவைகள், வலு ஆகியவற்றைப் பொறுத்து எலும்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்திலும் அளவிலும் உள்ளது. அதைவைத்து, எலும்புகளைக் குட்டை எலும்புகள் (Short bones), நெட்டை எலும்புகள் (Long bones), தட்டை எலும்புகள் (Flat bones), ஒழுங்கில்லாத எலும்புகள் (Irregular bones), நாண் உள்எலும்புகள் (Sesamoid bones) என வகைப்படுத்தி உள்ளனர். மணிக்கட்டு எலும்புகள் குட்டையாகவும், கை, கால் எலும்புகள் நீண்டதாகவும், நெஞ்செலும்பு (Sternum) தட்டையாகவும், முதுகெலும்பு சீரில்லாமலும் இருப்பதைக் காணலாம். முழங்கால் மூட்டுச்சில்லு எலும்பு (Kneecap) நாண் உள்எலும்புகளில் மிகப் பெரிது.

என்றாலும் நெஞ்செலும்பு, இடுப்பெலும்பு, தொடை எலும்பு போன்ற பெரிய எலும்புகள் ஒரு பொதுவான அமைப்பைப் பெற்றுள்ளன. அவை முனைப் பகுதி (Epiphysis), இணைப் பகுதி (Metaphysis), இடைப் பகுதி (Diaphysis). முனைப் பகுதியை ‘பெரியாஸ்டியம்’ (Periosteum) எனும் எலும்புச் சவ்வு போர்த்தியிருக்கிறது. இதுதான் எலும்பின் கடினமான வெளிப் பகுதி. இதில் ரத்தக்குழாய்களும் நரம்புகளும் உள்ளன. ‘எண்டாஸ்டியம்’ (Endosteum) எனும் உள் அடுக்கில் எலும்பு செல்கள் உள்ளன. விதிவிலக்காக, எலும்புகள் தொடும் இடத்தில் மட்டும் இந்தச் சவ்வுகள் இல்லை.

Bone%20-3
 

எலும்பு செல்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. மற்ற செல்களைப்போன்று செல் பிரிதல் முறையில் இவை வளர்ச்சி பெறுவதில்லை. பதிலாக, செல்களைப் புதுப்பிக்கும் முறையில் வளர்கின்றன. உதாரணமாக, குருத்தெலும்பு செல்கள் புதுப்பிக்கப்படும்போது, பழைய குருத்தெலும்பு செல்களுக்குப் பதிலாக, முழு எலும்பு செல்கள் உருவாகின்றன. இதனால் எலும்பு நீட்சி அடைகிறது.

எலும்புச் சவ்வுக்குக் கீழே எலும்பின் இரு முனைகளிலும் குருத்தெலும்பு (Cartilage) உள்ளது. அருகிலுள்ள எலும்போடு இணைகிற இணைப் பகுதி இது. மசகுத் தன்மை கொண்ட கொலாஜன் எனும் புரதம் இதில் இருக்கிறது. கொலாஜன் குருத்தெலும்புகளுக்கு வழுவழுப்புத் தன்மையைத் தருவதால், மூட்டுகள் உரசிக்கொள்ளும்போது நமக்கு வலி ஏற்படுவதில்லை.

ஓர் எலும்பானது வெளியிலிருந்து பார்ப்பதற்கு இரும்புக்கம்பி போன்று கடினப் பொருளாகத் தெரிந்தாலும், அதனுள்ளே ஒரு குழல் போன்ற பகுதியும் (Medullary cavity) உள்ளது. இதுதான் இடைப் பகுதி. இதில் ‘எலும்பு மஜ்ஜை’ (Bone marrow) உள்ளது. இது ஒரு திசுக்கூழ். ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் எலும்பு மஜ்ஜையைச் சில புற்றுநோய் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த முடியும். அதுபோல், சில புற்றுநோய்களைக் கண்டறிய எலும்பு மஜ்ஜையைப் பரிசோதிப்பதும் உண்டு.

Bone

எலும்பு மஜ்ஜையில் ‘சிவப்பு மஜ்ஜை’, ‘மஞ்சள் மஜ்ஜை’ என இருவகை உண்டு. சிவப்பு மஜ்ஜை ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. மஞ்சள் மஜ்ஜை கொழுப்பைத் தன்னிடம் சேமிக்கிறது. பிறந்த குழந்தைகளுக்குச் சிவப்பு மஜ்ஜை மட்டுமே இருக்கும். குழந்தை வளர வளர அதன் உடலில் கொழுப்பு சேரும்போது மஞ்சள் மஜ்ஜையும் உற்பத்தியாகிவிடும்.

எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் (Stem cells) இருக்கின்றன. இவைதான் உடல் செல்கள் அனைத்துக்கும் ஆதார செல்கள். இவை வளரும்போது பல்வேறு திசு செல்களாகப் பிரிகின்றன. மேலும், உடல் செல்களுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பேட், கார்பனேட் ஆகிய தாதுக்களும் எலும்புத் திசுவில் உள்ளன.

தாயின் வயிற்றில் இருக்கும் கருவில் தொடங்கி 18-லிருந்து 25 வயதுவரை எலும்புகளின் வளர்ச்சி இருக்கிறது. அதன் பின்னர் வளர்ச்சி நின்றுவிடுகிறது. எலும்பின் வளர்ச்சிக்கு உணவுச் சத்துகளும், ஹார்மோன்கள், வைட்டமின்-டி, கால்சியம் ஆகியவையும் தேவை. வைட்டமின்-டியும் கால்சியமும் குழந்தைகளுக்குக் குறைந்தால், ‘ரிக்கெட்ஸ்’ நோயும், பெரியவர்களுக்குக் குறைந்தால், ‘ஆஸ்டியோமலேசியா’ நோயும் வருகிறது. இறந்தவரின் எலும்பைப் பார்த்து அவர் ஆணா, பெண்ணா, அவரது வயது, உயரம் ஆகிய விவரங்களைக் கூறிவிட முடியும். புலன் விசாரணைக்கு இது பேருதவியாக இருக்கிறது.

வம்சாவளியில் பெறப்படும் மரபணுக்கள் எலும்பின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. அதனால்தான் குடும்பத்தில் பெற்றோர் மாதிரியே குழந்தைகளும் குட்டையாகவோ, நெட்டையாகவோ இருக்கின்றனர்.

உடலை வளைத்து, நெளித்து அசைக்கிறீர்கள். அது எப்படி முடிகிறது? அடுத்த வாரம் பார்க்கலாம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 30: அசைவுகளின் ஆதாரம்

 

 

 
shutterstock559372660%20Converted

டலை வளைத்து, நெளிக்க முடிகிறது; கை, கால்களை அசைக்க முடிகிறது என்றால், அதற்கு ‘மூட்டுகள்’ இருப்பதுதான் காரணம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் இணையும் இடம்தான், மூட்டு. குறிப்பிட்ட எலும்புகளை இணைக்கக்கூடிய இடைப்பட்ட திசு எதுவோ, அதை வைத்து மூட்டுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நார்த்திசு மூட்டு (Fibrous joint), குருத்தெலும்பு மூட்டு (Cartilaginous joint), நீர்உறை மூட்டு (Synovial joint).

 

எல்லா மூட்டுகளிலும் எல்லா அசைவுகளும் இருப்பதில்லை. சில மூட்டுகளில் அசைவே இருக்காது. உதாரணமாக, கபால மூட்டில் எந்த எலும்பையும் அசைக்க முடியாது. முகத்தில் உள்ள எலும்புகளில் கீழ்த்தாடையை மட்டும்தான் அசைக்க முடியும். உடலிலேயே அதிக அசைவு தருபவை கை, கால் மூட்டுகள்தான்.

shutterstock224001484

சில மூட்டுகளில் அசைவு ஒரே அச்சில் இருக்கும். அதற்கு ‘ஓரச்சு மூட்டு’ என்று பெயர். உதாரணம், முழங்கை. சில மூட்டுகள் இரண்டு அச்சுகளில் இயங்கும். உதாரணம், மணிக்கட்டு. பல அச்சுகளில் இயங்கும் மூட்டுகளும் உண்டு. உதாரணம், தோள்கள்.

எலும்புகள் அசையும்போது ஒன்றுக்கொன்று உரசுவதும் இல்லை; வலி ஏற்படுவதும் இல்லை. ஏன்? இணையும் எலும்புகளின் முனைகள் சற்றுத் தள்ளி இருப்பது ஒரு காரணம். அதேநேரம் அவை விலகி விடாமல் இருக்கப் பிணையங்களால் பிணைக்கப்பட்டிருப்பதும், பாதுகாப்பான உறையால் மூடப்பட்டிருப்பதும் அடுத்த காரணங்கள். இன்னொரு முக்கியமான விஷயம், எலும்புகள் இணைகிற இடத்தில் குருத்தெலும்புதான் இருக்கும். அதிலுள்ள ஜெலாட்டின் மசகுபோல் இடையில் இருப்பதால், எலும்புகள் நேரடியாக உரசிக்கொள்ள வாய்ப்பில்லை.

எலும்புகள் உடலில் அமைந்துள்ள இடத்தை வைத்து, ‘அச்சுசார் எலும்புக்கூடு’ (Axial skeleton), ‘இணையுறுப்பு எலும்புக்கூடு’ (Appendicular skeleton) எனவும் வகைப்படுத்துகின்றனர். உடலின் மத்தியில் ஓர் அச்சுபோல் இருக்கிற தலை, கழுத்து, மார்பு, முதுகு எலும்புகள் இவை. இரண்டாம் வகையில் கை, கால், தோள்பட்டை, காரை எலும்புகள் (Clavicles), இடுப்பு எலும்புகள் அடங்கும்.

தலையில் மூளையை மூடியுள்ள கபாலத்தில் 8, முகத்தில் 14 என 22 எலும்புகள் உள்ளன. ஒவ்வொரு காதிலும் 3 எலும்புகள் உள்ளன. அடிப்பக்கக் கபாலத்தில் பல துளைகள் உள்ளன. அவற்றின் வழியாகவே ரத்தக்குழாய்கள் மூளைக்குச் சென்று திரும்புகின்றன; மூளையிலிருந்து நரம்புகள் வெளிவருகின்றன. அவற்றின் மத்தியில் இருக்கும் துளைதான், பெருந்துளை (Foramen magnum). அதன் வழியாக மூளையிலிருந்து 45 செ.மீ. நீளத்தில் ஒரு கேபிள்போல் கிளம்புகிறது தண்டுவடம் (Spinal cord). இதில் மத்திய நரம்புகள் இணைந்துள்ளன.

shutterstock530379490

இது முதுகுத்தண்டுக் குழல் (Vertebral canal) வழியாக உடலுக்கு வருகிறது. ஒவ்வொரு விநாடியும் உடலின் நடவடிக்கைகளையும், தினசரி லட்சக்கணக்கான தகவல்களையும் மூளைக்கு அனுப்புவதும் பெறுவதும் தண்டுவடம்தான். முதுகுத்தண்டின் (Vertebral column) மேல்முனையில் கபாலம் அமர்ந்துள்ளது. முக எலும்புகள் பார்வை, செவிப்புலன், செரிமானம் மற்றும் சுவாச மண்டலத்துக்கு வாசல் அமைக்கின்றன.

கழுத்தில் நாக்கைத் தாங்கும் நாவடி எலும்பு (Hyoid bone) உள்ளது. உடலில் எந்த ஓர் எலும்புடனும் இணையாத எலும்பு இது ஒன்றே. குரல்வளையில் (Larynx) 9 குருத்தெலும்புகள் உள்ளன.

இயற்கையிலேயே உடலின் அச்சாக அமைந்திருக்கும் முதுகுத்தண்டில் 24 முள்ளெலும்புகள் (Vertebrae) உள்ளன. அவை: கழுத்தில் 7, மார்பில் 12, முதுகில் 5. தவிர, திரிகம் (Sacrum) 1, வால் எலும்பு (Coccyx) 1. முதுகுத்தண்டானது தண்டுவடத்தைப் பாதுகாக்கிறது; விலா எலும்புகளுக்கும் முதுகுத் தசைகளுக்கும் பின்புற இணைப்பிடங்களாகச் செயல்படுகிறது. ‘அட்லஸ்’ எனும் முதல் முள்ளெலும்பு கபாலத்தைத் தாங்குவது மட்டுமில்லாமல், ஓர் அச்சுபோல் இயங்குவதால், முதுகுத்தண்டில் அதிகபட்ச அசைவையும் தருகிறது. அதனால்தான் நம்மால் தலையை இரண்டு பக்கமும் திருப்ப முடிகிறது.

இதயத்துக்கும் நுரையீரல்களுக்கும் பாதுகாப்பு தருகிற மார்புக்கூட்டில் மொத்தம் 12 ஜோடி விலா எலும்புகளும் ஒரு நடு நெஞ்செலும்பும் (Sternum) உள்ளன. இவற்றில் முதல் 7 எலும்புகள் மார்ப்புக் கூட்டின் முன்புறத்தில் நடு நெஞ்செலும்புடனும் பின்புறத்தில் முதுகுத்தண்டுடனும் இணைந்துள்ளன. இவை ‘மெய் விலா எலும்புகள்’ (True ribs). 8, 9, 10-வது விலா எலும்புகள் இரண்டு பக்கமும் 7-வது விலா எலும்புடன் இணைகின்றன.

shutterstock1091285585%20Converted

இதனால் இவை ‘பொய் விலா எலும்புகள்’ (False ribs). கடைசி 2 ஜோடி விலா எலும்புகள் முதுதுகுத்தண்டில் மட்டும் இணைந்துள்ளன. முன்பக்கத்தில் தொங்குகின்றன. ஆகவே, அவை ‘தொங்கு விலா எலும்புகள்’ (Floating ribs). இவை தவிர, தோள்பட்டை எலும்பும் காரை எலும்பும் தலா ஒரு ஜோடி உள்ளது. இவை கை எலும்பை மார்புக்கூட்டுடன் இணைக்கின்றன. மார்புக்கூடு இருப்பதால்தான் நம்மால் சுவாசிக்க முடிகிறது.

ஒவ்வொரு கையிலும் 30 எலும்புகள் உள்ளன. மேல் கையில் 1, முன்கையில் 2, மணிக்கட்டில் 8, உள்ளங்கையில் 5, விரல்களில் 14. ஒவ்வொரு காலிலும் 30 எலும்புகள் உள்ளன. தொடையில் 1, காலில் 2, முழங்கால் சில்லு 1, கணுக்காலில் 7, பாதத்தில் 5, விரல்களில் 14. பாத எலும்புகள் வளைந்திருப்பது ஒரு சிறப்புத் தன்மை. இந்த அமைப்பால்தான் நம்மால் வேகமாக நடக்கவும் ஓடவும் முடிகிறது. தட்டைப்பாதம் உள்ளவர்களால் மற்றவர்களைப்போல் வேகமாக ஓட முடியாது.

குழிபோல் அமைந்திருக்கும் இடுப்பெலும்பில் 2 எலும்புகள் உள்ளன. இதில் பக்கத்துக்கு ஒன்றாகத் தொடை எலும்புகள் இணைகின்றன. பின்புறத்தில் முதுகுத்தண்டுடன் இது இணைந்துள்ளது. இடுப்பெலும்பு இயற்கையிலேயே ஆண்களுக்கு ஆழமாகவும் குறுகலாகவும் இருக்கிறது. மாறாக, இது பெண்களுக்குப் பெரிதாகவும் அகலமாகவும் இருக்கிறது. இந்த அமைப்பு இவர்களுக்குக் குழந்தைப் பிறப்புக்கு உதவுகிறது.

shutterstock119944390

பறவைகளின் எலும்புக்கூடு மனிதரின் எலும்புக்கூட்டோடு பல வழிகளில் ஒத்துப் போகிறது. ஆனால், அவை பறப்பதற்கு உதவும் விதத்தில், எலும்புகளின் எடை குறைவாக இருக்கின்றன.

முதுகெலும்புள்ள விலங்குகளைப் பொறுத்த அளவில் வால் ஒன்றைத் தவிர, மற்ற எலும்புகள் பெரும்பாலும் மனிதரோடு ஒத்துப் போகின்றன. நடப்பதில் மட்டும் சில வித்தியாசங்கள். உதாரணமாக, மனிதர்கள் பாதங்களில் நடக்கிறார்கள். நாயும் பூனையும் விரல்களில் நடக்கின்றன. குதிரையும் பன்றியும் விரல்நகங்களில் நடக்கின்றன.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 31: கழுத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி

 

 
shutterstock637291732

உடலில் உள்ள ஒன்பது முக்கிய நாளமில்லாச் சுரப்பிகளில் மிகப் பெரியது, தைராய்டு சுரப்பி (Thyroid gland). இது கழுத்தின் முன்பகுதியில் ‘ஆதாமின் ஆப்பிளுக்கு’ (Adam’s Apple) அருகில் இருக்கிறது. சரியாகச் சொன்னால், இது குரல்வளையின் கீழ்ப்பகுதி, மூச்சுக் குழாயின் (Trachea) மேற்பகுதி, இவற்றுக்கு முன்பாக, ஒட்டினாற்போல் அமைந்துள்ளது.

இது ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் இருக்கிறது. பக்கத்துக்கு ஒன்றாக, வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகளைப் போன்று இரண்டு ‘பக்க மடல்கள்’ (Lateral lobes) இருக்கின்றன. இவற்றின் நடுவில் இரண்டையும் இணைக்கிற குறுகிய பாலம்போல் ‘சந்தி’ (Isthmus) எனும் இடைத்திசு இருக்கிறது. இதிலிருந்து கூம்பு வடிவத்தில் மேல்நோக்கி ஒரு திசுச் சுரப்பி அமைந்திருக்கிறது. அது ‘கூம்பு மடல்’ (Pyramidal lobe). ஒருவரின் வயதைப் பொறுத்து தைராய்டு சுரப்பியின் எடை 15 - 30 கிராம் இருக்கும்.

 

தைராய்டு சுரப்பி இரண்டு உறைகளால் மூடப்பட்டுள்ளது. ஒன்று, ‘உண்மை உறை’ (True capsule). இது தைராய்டின் சொந்த உறை. இதற்கு வெளியில், இதைச் சுற்றியுள்ள இணைப்புத் திசுக்கள் கெட்டிப்பட்டு, ஓர் உறை போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கும். அது ‘பொய்யுறை’ (False capsule). உடலில் அதிகம் ரத்தம் பாயும் உறுப்புகளில் தைராய்டும் ஒன்று.

தைராய்டின் உள்ளே பல்லாங்குழிகள் போல் நுண்மடல்கள் (Lobules) நிறைய உள்ளன. இவற்றில் 30 லட்சம் குமிழ்ச் சுரப்பிகள் (Follicles) உள்ளன. இவற்றில் தைராய்டு கூழ்மம் (Thyroid colloid) நிரம்பி இருக்கிறது. இதில் தைரோகுளோபுலின் எனும் புரதம் இருக்கிறது. இந்தச் சுரப்பிகளைச் சுற்றியும் இடையிலும் சுத்த அணுக்கள் (Clear cells) இருக்கின்றன.

குமிழ்ச் சுரப்பிகள், மூளையின் முன் பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கப்படும் ‘தைராக்ஸின் ஊக்கி ஹார்மோ’னின் (Thyroxine Stimulating Hormone - TSH) தூண்டுதலால், தைராக்ஸின் (Thyroxine - T4), டிரை அயோடோதைரோனின் (Triiodothyronine - T3) எனும் இரண்டு முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன.

இவை சரியாகச் சுரக்கப்படுவதற்கு அயோடின் சத்து தேவை. சமையல் உப்பில் அயோடின் சேர்க்கப்படுவதற்கு இதுதான் காரணம். உணவிலிருந்து கிடைக்கும் அயோடைடை குமிழ்ச் சுரப்பிகள் ரத்தத்திலிருந்து உறிஞ்சி முதலில் அயோடினாக மாற்றுகின்றன. பின்னர், அதை தைரோகுளோபுலினில் உள்ள டைரோஸின் (Tyrosine) எனும் அமினோ அமிலத்துடன் கலந்து, இந்த ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த இரண்டும் நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தேவைப்படுகின்றன.

இவற்றின் பணிகளை இப்படிப் பட்டியலிடலாம்:

நாம் கருவில் உருவாகும் காலத்திலிருந்து உடலின் வளர்ச்சியைப் பேணுவதற்கு இந்த ஹார்மோன்கள் அதிகம் உதவுகின்றன. உடலின் எல்லாப் பகுதிகளிலும் நிகழும் வளர்சிதைமாற்றத்தைச் (Metabolism) சீராக வைத்துக்கொள்கின்றன. இதன் பலனாக, அந்தந்தத் திசுக்கள் தங்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளைப் பெற்று வளர்ந்து, சரியாகப் பணி செய்கின்றன.

thyraid
 

நரம்புத் திசு, எலும்பு, பற்களின் வளர்ச்சியில் இவற்றின் பங்கு மகத்தானது. குறிப்பாக, குழந்தைக்கு ஒரு வயது முடிவதற்குள் மூளை நரம்புகள் வளர்ச்சியடைய வேண்டியது முக்கியம். அப்போது இந்த ஹார்மோன்கள் சரியாக இருக்க வேண்டியது கட்டாயம்.

அணுக்கள் வளர்ச்சியடைதல், முதிர்ச்சியடைதல் ஆகியவற்றை இவை கவனித்துக் கொள்வதால், எலும்பு, தசை, தோல், நரம்பு என எல்லாமே சரியாக வளர்கின்றன. கருவில் வளரும்போதும், குழந்தைப் பருவத்திலும் இவை குறைந்து போனால், உடல் வளர்ச்சி குறைந்து குள்ளத்தன்மை ஏற்படும்; மனவளர்ச்சியும் அறிவாற்றலும் குறையும். இதை ‘வளர்ச்சிக்குறை நோய்’ (Cretinism) என்கிறோம்.

அடுத்து, திசுக்களின் ஆக்ஸிஜன் பயன்பாட்டையும் இவைதான் கவனித்துக்கொள்கின்றன. அதனால், சரியாகப் பசி எடுப்பது, உணவைச் சாப்பிடுவது, உணவு செரிமானம் அடைவது, உணவுச் சத்துகள் உடல் திசுக்களுக்குச் சென்றடைவது என எல்லாவற்றிலும் இவற்றின் பணி அதிகம்.

உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்ய உதவுவதும் இவைதான். தட்ப வெப்பச் சூழல்களுக்கு ஏற்ப உடலின் வெப்பத்தை இவை சமன் செய்வதால்தான், நம்மால் குளிரையும் தாங்க முடிகிறது; கோடை வெப்பத்தையும் தாங்கிக்கொள்ள முடிகிறது.

தவிரவும், கொழுப்பு உணவையும் மாவுப் பொருட்களையும் செரிக்க உதவுவது, அணுக்களின் புரதப் புத்தாக்கத்தை மேம்படுத்துவது, உடலில் நீரின் அளவைக் கட்டுப்படுத்துவது, கொலஸ்டிராலைக் குறைப்பது, இதயத் துடிப்பைக் கண்காணிப்பது, பாலுறுப்புகளின் வளர்ச்சி, செயல்பாடுகளுக்கு உதவுவது என இன்னும் நிறையப் பணிகளை இவை மேற்கொள்கின்றன.
 

shutterstock513492016

இவை சுரப்பது குறைந்து விட்டால், தைராய்டு வீங்கிவிடும். முன் கழுத்தில் இந்த வீக்கம் தெரியும். எச்சிலையோ உணவையோ விழுங்கும்போது, இது மேலும் கீழும் அசையும். இதை முன்கழுத்துக்கழலை (Goitre) என்கிறோம். இதன் காரணமாகக் ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) கோளாறு ஏற்படும். இது பெரியவர்களுக்கு ஏற்படும்போது, ‘குறை தைராய்டு நீர்க்கட்டு’ (Myxoedema) என்று அழைக்கிறோம். இது 16 வயது பெண்களை அதிகம் பாதிக்கிறது. குறைவாகச் சாப்பிட்டாலும் உடல் குண்டாவது இதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்று.

சிலருக்கு இந்த ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்துவிடும். இதுவும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை. இதற்கு ‘கிரேவ் நோய்’ (Grave’s disease) என்று பெயர். இதற்குத் தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால், இதயத்தைப் பாதிக்கும்.

இந்த ஹார்மோன்கள் முதுகெலும்புள்ள எல்லா உயிரினங்களின் வளர்ச்சிக்கும் அவசியம். உதாரணமாக, தவளைகளுக்கு இவை சுரப்பது குறைந்துவிட்டால், தலைப்பிரட்டை நிலையில் அவற்றின் வளர்ச்சி நின்றுவிடும்; முழு தவளையாக வளர முடியாது.

தைராய்டு கால்சிடோனின் (Calcitonin) எனும் ஹார்மோனையும் சுரக்கிறது. ரத்தத்தில் கால்சியத்தின் அளவு அதிகமானால், அதைக் குறைத்து சமன் செய்யும் ஹார்மோன் இது.

சரி, இப்போது தைராய்டு தெரியும். ‘பாராதைராய்டு’ தெரியுமா? அது பற்றி அடுத்த வாரம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உடல் எனும் இயந்திரம் 32: பாம்பைக் கண்டால் பயந்து ஓடுவது ஏன்?

 

 
shutterstock1012307761
 
 

தைராய்டு சுரப்பிக்குப் பின்புறத்தில் அதனோடு ஒட்டினாற்போல் அமைந்துள்ள சுரப்பிகளுக்கு ‘பாராதைராய்டு சுரப்பிகள்’ (Parathyroid glands) என்று பெயர். இவை பக்கத்துக்கு இரண்டு என மொத்தம் நான்கு சுரப்பிகள் உள்ளன. நான்கும் சேர்த்து 120 மி.கி. வரைதான் எடை இருக்கும்.

 
 

இந்தச் சுரப்பிகள் உடலில் இருப்பதை 1877-ல் முதன் முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் சுவீடனைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சேன்ட்ஸ்ட்ரோம் (Sandstrom).

இவை பார்ப்பதற்குச் சற்றே மஞ்சள் கலந்த மாநிறத்தில் ஒரு தீக்குச்சியின் தலை அளவுக்குத்தான் இருக்கின்றன. இவற்றில் ‘தலைமை அணுக்கள்’ (Chief cells), ‘உயிர்வளி அணுக்கள்’ (Oxyphil cells) என இரண்டு வகை உண்டு. அளவில் சிறிதாவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளவை தலைமை அணுக்கள். பெரிய அளவில் ஆங்காங்கே உள்ளவை ஆக்ஸிபில் அணுக்கள்.

தலைமை அணுக்கள் ‘பாராதார்மோன்’ (Parathormone) எனும் ஹார்மோனைச் சுரக்கின்றன. இது ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. இது சுரப்பது குறைந்து போனால், ரத்தத்தில் கால்சியத்தின் அளவு மிகவும் குறைந்து ‘டெட்டனி’ (Tetany) எனும் நோய் வரும். அப்போது கை, கால்களில் தசைகளும் நரம்புகளும் இழுத்துக்கொள்ளும். தசைகள் திடீரெனத் துடிக்கும். இந்தத் தொல்லைகளிலிருந்து விடுபட, கால்சியம் மிகுந்த பால் மற்றும் பால் தயாரிப்புகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

shutterstock536260612
 

 

பீனியல் சுரப்பி (Pineal gland)

மூளையில் ஒரு கூம்புபோல் அமைந்திருக்கும் சிறிய சுரப்பி இது. ஏழு வயதுவரை இது வளரும். பிறகு இதன் வளர்ச்சி குறைந்துவிடும். இதன் அணுக்களுக்கு இடையில் நிறைய கால்சியம் அயனிகள் காணப்படும். இதற்கு ‘பீக்ஷ்னியல் மணல்’ (Pineal sand) என்று பெயர்.

இதில் உள்ள அணுக்கள் ‘மெலடோனின்’ எனும் ஹார்மோனைச் சுரக்கின்றன. உடலுக்குள் ஒரு கடிகாரம் இருக்கிறது. அதற்கு ‘உயிர்க் கடிகாரம்’ (Biological clock) என்று பெயர். உடலில் காலை, மாலை, இரவு என நேரத்துக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலியல் செயல்பாடுகள் இந்தக் கடிகார முறைப்படி நிகழ்கின்றன. அதனால்தான் நாம் சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிட வேண்டும்; படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும்; உறங்க வேண்டிய நேரத்தில் உறங்க வேண்டும் என்று சொல்கிறோம். இந்த உயிர்க் கடிகாரத்தை ‘மெலடோனின்’தான் கட்டுப்படுத்துகிறது.

 

shutterstock657419011%20Converted
அண்ணீரகச் சுரப்பிகள்

இவை ‘அவசரக் காலச் சுரப்பிகள்’ (Emergency glands). இவற்றுக்கு ‘சுப்ரா ரீனல் சுரப்பிகள்’ (Supra renal glands) என்ற பெயரும் உண்டு. வலது பக்கம் ஒன்று, இடது பக்கம் ஒன்று எனச் சிறுநீரகத்தின் மேலாக, தொப்பிபோல் இரண்டு அண்ணீரகச் சுரப்பிகள் அமர்ந்திருக்கின்றன. இவற்றின் மொத்த எடை 10 கிராமுக்குள்தான் இருக்கும். பெண்களுக்கு இவை சற்றுப் பெரிதாக இருக்கும்.

ஒவ்வொரு சுரப்பியிலும் புறணி (Cortex), அகணி (Medulla) என இரு பகுதிகள் உண்டு. புறணி வெளிப்பக்கத்தில் உள்ளது. அகணி உள்பக்கத்தில் உள்ளது. புறணியானது அகணியைச் சூழ்ந்த மாதிரி அமைந்துள்ளது. இங்குதான் நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான பல ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்தச் சுரப்புகளை மொத்தமாக ‘கார்ட்டிகோஸ்டீராய்டுகள்’ (Corticosteroids) என்கிறோம். நமக்கு மன அழுத்தம் ஏற்படும்போது அதைத் தாங்கும் சக்தியைத் தருவது இவற்றின் முக்கிய வேலை.

புறணியில் மூன்று பாகங்கள் உள்ளன. வெளியிலிருந்து உள்ளாக அவை: 1. ஸோனா கிளாமிருலோசா (Zona glomerulosa), 2. ஸோனா ஃபேஸிகுலேட்டா (Zona Fasciculata), 3. ஸோனா ரெட்டிகுலாரிஸ் (Zona reticularis). முதலாவது பகுதியில் ‘மினரலோகார்ட்டிகாய்டுகள்’ (Mineralocorticoids) எனும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, ஆல்டோஸ்டீரோன் (Aldosterone). இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன். உடலில் தண்ணீரின் அளவைச் சமன்படுத்துவதும் இதுவே.

இரண்டாவது பகுதியில் சுரக்கப்படும் ‘குளுக்கோகார்ட்டிகாய்டுகள்’ (Glucocorticoids) எனும் ஹார்மோன்களில் ‘கார்ட்டிசால்’ முக்கியமானது. இது அவசரமான, பரப்பான சூழல்களில் உடலைச் சரியாகச் செயல்பட வைக்கும் ஹார்மோன். உடலில் எங்காவது அழற்சி தோன்றுமானால், அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இதற்கு உண்டு. மூன்றாவது பகுதியில் ஆன்ட்ரோஜன் (Androgen), ஈஸ்ட்ரோஜன் (Oestrogen) எனும் பாலுணர்வு ஹார்மோன்கள் சிறிதளவு சுரக்கின்றன.

அகணிப் பகுதியில் ‘கேட்டகாலமின்கள்’ (Catecholamines) எனும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை அட்ரீனலின் (Adrenaline), நார் அட்ரீனலின் (Nor adrenaline) ஹார்மோன்கள். இவை எபிநெப்ரின் (Epinephrine), நார் எபிநெப்ரின் (Nor epinephrine) என்றும் அழைக்கப்படுகின்றன. அட்ரீனலின் ஹார்மோன் இதயத் துடிப்பு, தசை இயக்கம், நரம்புகள் இயக்கம், ரத்தக்குழாய் இயக்கம், சுவாசம், பார்வைத் திறன், போன்ற பலதரப்பட்ட பணிகளுக்கு நம்மைத் தயாராக்குகிறது. கொழுப்பு, மாவுச் சத்து ஆகியவற்றின் வளர்சிதை மாற்றப் பணிகளைப் பேணுவதும் ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்துவதும் இதுவே. திரையிலோ, நேரிலோ ஏதாவது ஒரு பயங்கரத்தைப் பார்க்கும்போது உடல் புல்லரிக்கிறது அல்லவா? அதற்குக் காரணம் இந்த ஹார்மோன் அப்போது அதிகமாகச் சுரப்பதுதான்.

shutterstock797352022%20Converted

இதுபோல், சண்டை (Fight), ஓட்டம் (Flight), பயம் (Fright) ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் உடல் ஆற்ற வேண்டிய விரைவான செயல்பாடுகளுக்குத் தயார் செய்வதும் இந்த ஹார்மோன்தான். உதாரணத்துக்கு, பாம்பைக் கண்டால் பயந்து ஓடுகிறீர்கள்; கோபம் வந்தால் சண்டை போடுகிறீர்கள். அப்போது இந்த ஹார்மோன்தான் அதிகமாகச் சுரந்து உடலியக்கங்களைச் செயல்படுத்துகிறது. ஆகவே இதற்கு ‘3F ஹார்மோன்’ என்று ஒரு பெயர் உண்டு.

நார் அட்ரீனலின் ஹார்மோன் இதயத் தமனிக் குழாய்களைத் தவிர மற்ற எல்லாத் தமனிக் குழாய்களையும் சுருங்க வைத்து, உடலில் ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. மனிதருக்கும் நாய் போன்ற சில விலங்குகளுக்கும் அட்ரீனலின் ஹார்மோன்தான் பிரதானம். பூனைக்கு மட்டும் நார் அட்ரீனலின் ஹார்மோன் பிரதானமாக வேலை செய்கிறது. மேலும் நாம் குழந்தையாகத் தாயின் வயிற்றில் வளரும்போது, நார் அட்ரீனலின் ஹார்மோன் மட்டுமே சுரக்கிறது. அட்ரீனலின் அப்போது சுரப்பதில்லை. நாம் பிறந்த பின்புதான் அது சுரக்கத் தொடங்குகிறது.

சரி, ஹார்மோன் சுரப்பிகளுக்கு எல்லாம் தலைவன் யார் தெரியுமா? அடுத்த வாரம் பார்க்கலாம்.

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 33: சுரப்பிகளின் தலைவன்

 

 
surappijpg

உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றைத் தூண்டிச் செயல்படுத்துவதற்கும்  ‘பிட்யூட்டரி சுரப்பி’ (Pituitary gland) இருக்கிறது. நாளமில்லாச் சுரப்பிகளுக்கு எல்லாம் தலைவன் (Master gland) இது.

மூளையின் அடிப்புறத்தில் கபாலத்தின் மத்தியில் ஸ்பீனாய்டு (Sphenoid) எனும் எலும்பு இருக்கிறது. அதில் உள்ள சிறு பள்ளத்தில் இது மிகவும் பாதுகாப்பாக அமைந்திருக்கிறது. இதற்கு ‘ஹைப்போபிஸிஸ்’ (Hypophysis) என்ற பெயரும் உண்டு.

 

மரத்தில் பழம் தொங்குவதைப்போலத்தான் இது மூளையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதை மூளையின் முக்கியப் பகுதியான ‘ஹைப்போதலாமஸு’டன் இணைக்கும் காம்புக்கு ‘இன்ஃபண்டிபுலம்’ (Infundibulum) என்று பெயர்.

அளவுக்கும் ஆற்றலுக்கும் தொடர்பில்லை என்று சொல்வதற்குச் சிறந்த உதாரணம் இது. அரை கிராம் எடையில் ஒரு பச்சைப் பட்டாணி அளவுக்குத்தான் இது இருக்கிறது. ஆனால், இது செய்யும் பணிகளோ பிரமிக்க வைக்கின்றன.

அமைப்பு ரீதியாக இந்தச் சுரப்பி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. 1. முன்பகுதி அடினோஹைப்போபிஸிஸ் (Adenohypophysis). 2. பின்பகுதி நியூரோஹைப்போபிஸிஸ் (Neurohypophysis). முதலாவதில் சுரப்பித் திசுக்கள் உள்ளன. இரண்டாவதில் நரம்புத் திசுக்கள் உள்ளன.

இதன் செயல்பாட்டை வைத்துப் பார்த்தால், மூன்று பகுதிகள் உள்ளன. 1. முன் மடல், 2. இடை மடல், 3. பின் மடல். முன்மடல் முக்கியமான இரண்டு ஹார்மோன்களையும் நான்கு ஊக்குவிப்பு ஹார்மோன்களையும் சுரக்கிறது. அவை: 1. வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone) அல்லது ‘ஸொமேடோட்ரோடிபின்’ (Somatotrophin).  2. புரோலாக்டின் (Prolactin). 3. தைராய்டு ஊக்குவிப்பு ஹார்மோன் (TSH). 4. கார்ட்டிகோட்ரோபின் (Corticotrophin). 5. ஃபாலிக்கிள் ஊக்குவிப்பு ஹார்மோன் (FSH). 6. லூட்டினைஸிங் ஹார்மோன் (LH).

எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி உள்ளிட்ட உடலின் மொத்த வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது வளர்ச்சி ஹார்மோன். குறிப்பாக, ஒருவரின் உயரத்தையும் அதற்கான உடலமைப்பையும் கவனித்துக்கொள்வது இதுதான். விதிவிலக்காக, மூளை வளர்ச்சி, முடி வளர்ச்சி, பாலுறுப்பு வளர்ச்சி இந்த மூன்றையும் இது கவனிப்பதில்லை.

உணவில் உள்ள மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, தாதுச்சத்து ஆகியவற்றைத் திசுக்களில் முறையாக வளர்சிதைமாற்றம் அடையச் செய்து உடலின் வளர்ச்சியை இது பேணுகிறது. இதன் சுரப்பு குறைந்தால் ‘குள்ளத்தன்மை’யும் (Dwarfism), சுரப்பு அதீதமானால் ‘நெட்டைத்தன்மை’யும் (Gigantism) ஏற்படுகின்றன.

புரோலாக்டின் ஹார்மோன் பெண்களுக்கு மார்பக வளர்ச்சியைக் கவனிக்கிறது. பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுகிறது. தைராய்டு ஊக்குவிப்பு ஹார்மோன் தைராய்டு சுரப்பியைத் தூண்டி, தைராக்ஸின் (Thyroxine), டிரைஅயோடோதைரோனின் (Triiodothyronine) எனும் இரண்டு முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்க வைக்கிறது.

கார்ட்டிகோட்ரோபின் அண்ணீரகச் சுரப்பிகளைத் (Adrenal glands) தூண்டி கார்ட்டிகோஸ்டீராய்டுகள், பாலுணர்வு ஹார்மோன்களைச் சுரக்க வைக்கிறது. ஃபாலிக்கிள் ஊக்குவிப்பு ஹார்மோனும் லூட்டினைஸிங் ஹார்மோனும் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன.

இடை மடலில் மெலனோசைட் ஊக்குவிப்பு ஹார்மோன் (MSH) சுரக்கிறது. இது கார்ட்டிகோட்ரோபின் துணையுடன் தோலில் மெலனின் அணுக்களின் உற்பத்தியைக் கவனித்துக்கொள்கிறது. இதனால்தான் நம் தோலின் நிறம் கறுப்பாக இருக்கிறது.

அடுத்தது, பின் மடல். இதில் நேரடியாக எந்த ஹார்மோனும் சுரக்கப்படவில்லை. ஹைப்போதலாமஸில் சுரக்கிற வஸோபிரஸின், ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் இங்கு சேமிக்கப்பட்டு இதன் வழியாக வெளியேறுகின்றன. வஸோபிரஸின் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ளும் முக்கிய ஹார்மோன். இது உடலுக்குத் தேவையான உப்புகளைச் சிறுநீரகம் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலில் தண்ணீரின் அளவைச் சமநிலைப்படுத்துகிறது.

ரத்தத்தில் உள்ள வேதிப்பொருள்களின் அளவைச் சீராக்குகிறது. சிறுநீர் வெளியேறும் அளவையும் அதன் தன்மையையும் ஒழுங்குபடுத்துகிறது. இதன் சுரப்பு குறைந்தால், ‘சர்க்கரையில்லா நீரிழிவு’ (Diabetes insipidus) ஏற்படுகிறது. ஆக்ஸிடோஸின் ஹார்மோன் பெண்களுக்குப் பிரசவம் ஆவதிலும், தாய்ப்பால் வெளியேறும் அளவைக் கட்டுப்படுத்துவதிலும் பங்களிக்கிறது.

உடலில் எந்த ஒரு ஹார்மோனும் ஒரே சீராகச் சுரந்தால்தான் ஆரோக்கியம் சிறக்கும். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று கூறுவது ஹார்மோன் சுரப்புகளுக்கு மிகவும் பொருந்தும். இந்தச் சுரப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உடலில் ஓர் அமைப்பு இருக்கிறது. ‘ஹைப்போதலாமஸ் - ஹைப்போபிஸிஸ் அச்சு’ என்பது அதன் பெயர்.

தலைமை அதிகாரி, மேலாளர், ஊழியர்கள் ஆகியோர் வேலை பார்க்கும் ஓர் ஏற்றுமதி நிறுவனத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இங்கு தலைமை அதிகாரி மேலதிகாரியிடம் சொல்வதை, மேலதிகாரி ஊழியர்கள் மூலம் மேற்கொள்கிறார் அல்லவா? அந்த மாதிரிதான் இந்த அமைப்பும் வேலை செய்கிறது.

உதாரணத்துக்கு, ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்றுமதி செய்வதற்குச் சரக்கு இல்லை எனும் தகவல் தலைமை அதிகாரிக்குச் சென்றதும், அவர் சரக்கை உற்பத்தி செய்ய மேலாளருக்குக் கட்டளையிடுகிறார். மேலாளர் ஊழியர்களுக்கு அந்தப் பணியைப் பிரித்துத் தருகிறார். ஊழியர்கள் சரக்கை உற்பத்தி செய்கிறார்கள். இதேபோன்று, உடலில் ஹார்மோன்கள் குறையும்போது, அந்தத் தகவல் முதலில் ‘தலைமை அதிகாரி’ ஹைப்போதலாமஸுக்குச் செல்லும். உடனே அது சில விடுவிப்பு ஹார்மோன்களை (Releasing hormones) வெளிவிடும். அவை பிட்யூட்டரி எனும் மேலாளரிடம் வந்து, ஊக்குவிப்பு ஹார்மோன்களைச் சுரக்கச் செய்யும்.

பிறகு அவை நாளமில்லாச் சுரப்பிகள் எனும் ஊழியர்களிடம் சென்று தேவையான ஹார்மோன்களைச் சுரக்கச் செய்யும். இவை தேவைக்குச் சுரந்ததும், ‘இனி சரக்குத் தேவையில்லை’ என்று சொல்வதைப்போல், ‘ஹார்மோன் சுரப்பு போதும்’ என்னும் தகவல் ஹைப்போதலாமஸுக்கு வரும். உடனே, விடுவிப்பு ஹார்மோன்கள் சுரப்பதை அது நிறுத்திவிடும். இதன் விளைவால், மற்ற சுரப்பிகளும் அந்தந்த ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திக்கொள்ளும். அதன் பிறகு ஹார்மோன் தேவைப்பட்டதும், ஹைப்போதலாமஸ் ஆணைப்படி இந்தச் சுழற்சி மீண்டும் ஆரம்பிக்கும்.

இப்படி, ஒரு துல்லியமான சுழற்சியாக, நுட்பமான அச்சில் நாளமில்லாச் சுரப்பிகள் நம் உடலில் பணி செய்கின்றன. இந்தச் செயல்பாட்டுக்கு ‘எதிர் பின்னூட்ட முறை’ (Negative feed back system) என்று பெயர்.

பிட்யூட்டரி சுரப்பி தலைவனாகவே இருந்தாலும் ஹைப்போதலாமஸ் எனும் தலைமை அதிகாரியின் ஆணைப்படிதான் இயங்குகிறது. இதன் காரணமாக நரம்பு மண்டலத்தையும் நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தையும் இணைக்கும் பாலமாக ஹைப்போதலாமஸ் இருக்கிறது.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

https://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 34: தசைகளுக்கு நினைவாற்றல் உண்டா?

 

 
udaljpg

உடலுக்கு உருவம் கொடுப்பதற்கு எலும்புகளும் அவற்றோடு இணைந்த தசைகளும் உதவுகின்றன. மனித உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் இருக்கின்றன. ஒரு தசையை எலும்போடு இணைப்பதற்குத் தசைநாண் (Tendon), பிணையம் (Ligament), திசுப்பட்டை (Aponeurosis), மசகுப்பை (Bursa), மூட்டுப்படலம் (Synovial sheath) ஆகியவையும் உள்ளன. எலும்பு தவிர, தசையோடு இணைந்துள்ள இவை அனைத்தும் சேர்ந்ததுதான், ‘தசை மண்டலம்’ (Muscular system).

தசைகளில் சட்டகத் தசை (Skeletal muscle), மென் தசை (Smooth muscle), இதயத் தசை (Cardiac muscle) என மூன்று வகை உண்டு. எலும்போடு இணைந்து அசைவுகளுக்கு உதவும் தசைகள், சட்டகத் தசைகள். உதாரணம், கை, கால், கழுத்து, வயிறு, முதுகுத் தசைகள். எலும்போடு இணையாத தசைகள், மென் தசைகள். உதாரணம், குடல் தசைகள், ரத்தக்குழாய் தசைகள்.

 

இதயத் தசை இதயத்தில் மட்டுமே உள்ளது. இது நம் ‘உயிர் காக்கும் தசை’. உடலில் உயிர் இருக்கும்வரை ஓய்வில்லாமல் இயங்கும் தனித்தன்மையுள்ள ஒரே தசை இது மட்டுமே. இதற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இதயம் துடிப்பதற்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக் கொடுப்பதும் இதுதான்! உடலில் வேறு எந்தத் தசையிலும் மின்சாரம் தயாராவதில்லை.

தசைகள் இயங்கும் முறையைப் பொறுத்து இயக்குத் தசைகள் (Voluntary muscle), இயங்குத் தசைகள் (Involuntary muscle) எனவும் பிரிக்கின்றனர். முதலாவதை நம் விருப்பத்துக்கு இயக்க முடியும். சட்டகத் தசைகள் எல்லாமே இயக்குத் தசைகள்தான். நடக்க விரும்பினால் நடக்கவும், உட்கார விரும்பினால் உட்காரவும் இவற்றை நம்மால் இயக்க இயலும். ஆனால், மென் தசைகளும் இதயத் தசைகளும் அப்படி இல்லை; இவை நம் விருப்பத்துக்குக் கட்டுப்படாதவை; மூளையின் கட்டளைப்படி இயங்குபவை. இதனால் இவை இரண்டும் இயங்கு தசைகள்.

சட்டகத் தசை ஒவ்வொன்றிலும் தொடக்க முனை (Origin), செருகு முனை (Insertion), தசைத் திரள் (Muscle belly) என மூன்று பகுதிகள் உண்டு. பெரும்பாலான தசைகள் எலும்பு மூட்டுகளில்தான் இணைகின்றன. ஓர் எலும்பு அசையும்போது, அங்குள்ள தசையின் செருகு முனைதான் அசையும்; தொடக்க முனை அசையாது.

உடல் எடையில் 40% தசைகளின் எடை. உடலிலேயே மிக நீண்ட தசை ‘தொடை மடக்குத் தசை’ (Sartorius). இது இடுப்பிலிருந்து முழங்காலுக்கு வருகிறது. காதில் உள்ள ‘ஸ்டெபிடியஸ்’ (Stapedius) தசை உடலிலேயே மிகச் சிறியது. உடலில் மிக அதிகம் பலம் கொண்ட தசை தாடையில் உள்ள மெல்லுதசை (Masseter). ‘பிட்டப் பெருந்தசை’ (Gluteus maximus) உடலிலேயே மிகப் பெரியது; ‘பக்க முதுகுத் தசை’ (Latissimus dorsi ) மிக அகன்றது. சட்டகத் தசைகளில் பெரும்பாலானவை எலும்பில் இரு முனைகளில் இணையும். விதிவிலக்காக, நாக்குத் தசைகள் மட்டும் ‘ஹயாட்’ எலும்பின் (Hyoid bone) ஒரு முனையில்தான் இணைகின்றன.

சரி, தசைகளின் வேலை என்ன?

நிற்பதற்கு, நடப்பதற்கு, குனிவதற்கு, ஓடுவதற்கு, ஆடுவதற்கு, தூக்குவதற்கு எனப் பலதரப்பட்ட அசைவுகளுக்கும், உடல் அமைப்புக்கும் தசைகள் உதவுகின்றன. தசைகளால்தான் இடம்பெயர்தல் நமக்குச் சாத்தியமாகிறது. இவை எலும்புகளையும் உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கின்றன; இதயத் துடிப்பு, ரத்தச் சுற்றோட்டம், செரிமானம், குழந்தை பிறப்பு போன்றவற்றுக்கு ஆதாரமாகத் திகழ்கின்றன; ஐம்புலன்களுக்கும் பயன்படுகின்றன; உடலில் வெப்பத்தை உண்டாக்குகின்றன; உடலிலிருந்து கழிவுவை வெளியேற்றவும் உதவுகின்றன.

தனி ஒரு தசையால் எந்த ஓர் அசைவையும் செயல்படுத்த முடியாது. உதாரணமாக, கோபம், சோகம், புன்னகை, சிரிப்பு, வியப்பு என 12 வகையான பாவனைகளை முகம் காட்டுகிறது. புன்னகை புரிய 13லிருந்து 17 தசைகளும், கோபத்துக்கு 43 தசைகளும் இயங்குகின்றன. அதுபோல் உணவை மெல்வதற்கு 4 முதன்மைத் தசைகளும் 7 துணைத் தசைகளும் உதவுகின்றன. இப்படி ஒவ்வொரு உடல் அசைவுக்கும் பல தசைகள் இணைந்து செயல்படுகின்றன.

தசை எப்படி இயங்குகிறது?

தசை ஒவ்வொன்றும் பல தசை இழைகளால் (Muscle fibres) உருவாகிறது. ஓர் இழையின் நீளம் 3 - 5 செ.மீ. இது ஒரு தசையிழைப் படலத்தால் (Sarcolemma) போர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தசை இழையிலும் ‘தசை இழைக்கூழ்’ (Sarcoplasm) உள்ளது. அதில் 4 – 20 தசை ‘நுண்ணிழைகள்’ (Myofibrils) உள்ளன. இதில் நிறைய ‘இயங்கு இழைகள்’ (Sarcomere) இருக்கின்றன. அவற்றில் ஆக்டின் (Actin), மயோசின் (Myosin) எனும் புரதங்கள் உள்ளன. இவைதான் தசை இயக்கத்துக்கு உதவுகின்றன.

மூளையிலிருந்து வருகிற மத்திய நரம்பின் முனைகள் தசைகளில் புதைந்திருக்கின்றன. இந்த முனைகள் தசைகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதில்லை. தசைக்கும் நரம்பு முனைக்கும் நடுவில் சிறிய இடைவெளி இருக்கிறது. இது ‘நரம்புச் சந்தி’ (Synapse). மூளையிலிருந்து தசை இயக்கத்துக்கு ‘இயக்கு நரம்பு’ (Motor nerve) மூலம் கட்டளை வருகிறது.

அப்போது நரம்புச் சந்தியில் ‘அசிட்டைல்கோலின்’ (Acetylcholine) எனும் நரம்புக் கடத்தி சுரக்கிறது. இது தசை முழுவதும் பரவி, அங்குள்ள ஆக்டினையும் மயோசினையும் தூண்டி தசை இயக்கத்தைச் செயல்படுத்துகிறது. இப்படியான இயக்கத்தின்போது ஒருபுறம் தசை சுருங்கும்; எதிர்ப்புறத்தில் உள்ள தசை விரியும். உதாரணமாக, கையை மடக்க வேண்டுமானால், கையின் முன் தசைகள் சுருங்கும்; பின் தசைகள் விரியும்.

ஒன்று தெரியுமா? மூளைக்கு மட்டும்தான் நினைவாற்றல் உண்டு என்றில்லை. தசைகளுக்கும் அது உண்டு. தொடர்ச்சியாகத் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால், அவற்றைத் தசைகள் நினைவில் கொண்டு, அந்த இயக்கங்களை விரைவாகச் செய்து முடிக்கும். விளையாட்டில் பயிற்சி பெற்ற வீரர்கள்தான் பதக்கங்களை வெல்கிறார்கள். அதற்குக் காரணம் தசைகளின் இந்த நினைவாற்றல்தான்! மேலும், தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் உடல் நலனையும் காக்கும்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 35: தகவல் தடங்கள்

 

 
udaljpg

அலைபேசிக் கண்டுபிடிப்புக்கு முன்னால், உலக அளவில் தகவல் தொடர்புக்குப் பிரதான மார்க்கமாகத் தொலைபேசித் தடங்களே இருந்தன. கம்பி மூலம் மக்களைத் தொடர்புகொள்ள வைக்கும் இந்தத் தடங்கள் இப்போதும் இருக்கின்றன. இவற்றைத் ‘தொலைதொடர்புத் தகவல்துறை’ நிர்வகிக்கிறது. இதுபோலவே நம் உடலிலும் தகவல்களைக் கடத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் ‘நரம்பு மண்டலம்’ இருக்கிறது. அதில் நரம்புகள் எனும் தடங்கள் நிறைய இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் தலைமைச் செயலகமாகத் திகழும் மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

உடலில் எந்த ஒரு செயலும் மூளையின் கட்டளைப்படியே நிகழ்கிறது. ஒரு செயலைச் செய்வதற்கு, மூளையிலிருந்து ஓர் உறுப்புக்கு அல்லது அதனோடு இணைந்த திசுக்களுக்குத் தகவல் வருவதால் அந்தச் செயல் நடைமுறைக்கு வருகிறது.

 

தொலைபேசி முனைகளைத் தொலைபேசிக் கம்பிகள் இணைக்கும்போது, பரஸ்பரம் இருவர் தொலைபேசியில் பேசிக்கொள்ள முடிகிறது. அதேபோல் மூளையையும் உடல் உறுப்புகளையும் நரம்புகள் இணைப்பதால்தான் தகவல்கள் பரிமாறப்பட்டுச் செயல்கள் சாத்தியமாகின்றன.

நரம்பு மண்டலம் எது?

மூளையும் அதைச் சார்ந்த நரம்புகளும் இணைந்தது நரம்பு மண்டலம். மனிதருக்கு மத்திய நரம்பு மண்டலம் (Central nervous system), புறநரம்பு மண்டலம் (Peripheral nervous system) என இருவகை உண்டு. மூளையிலும் தண்டுவடத்திலும் (Spinal cord) இருக்கும் நரம்புகள் மத்திய நரம்பு மண்டலத்தைச் சேர்ந்தவை. இந்த இரண்டு உறுப்புகளிலிருந்து உடலை நோக்கி வெளியில் வரும் நரம்புகள் புறநரம்பு மண்டலத்தைச் சேர்ந்தவை.

மூளைத் தண்டிலிருந்து (Brain stem) வெளியேறும் புறநரம்புகள் கபால நரம்புகள் (Cranial nerves). இவை 12 ஜோடி. தண்டுவடத்திலிருந்து வெளிவரும் புறநரம்புகள் தண்டுவட நரம்புகள் (Spinal nerves). இவை 31 ஜோடி. இந்த இருவகை நரம்புகளும் தொலைபேசிக் கம்பிகளைப்போல இரு வழிப்பாதை கொண்டவை. உடலில் உண்டாகும் தூண்டல்கள் இவற்றின் வழியாக மூளைக்குச் செல்கின்றன. மூளையில் ஏற்படும் எதிர்வினைகள் கட்டளைகளாக மறுபடியும் இந்த நரம்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவற்றுக்கு ஏற்றபடி உடலில் திசுக்கள், தசைகள், உறுப்புகள், சுரப்பிகள் ஆகியவை வினைபுரிகின்றன.

புறநரம்பு மண்டலத்தில் தனிச்சிறப்பு கொண்ட நரம்பு மண்டலம் ஒன்று இருக்கிறது. அது ‘தானியங்கி நரம்பு மண்டலம்’ (Autonomous nervous system). இதில் உள்ள நரம்புகள் உடலுக்குள் நிகழும் இதயத் துடிப்பு, சுவாசம், செரிமானம், ரத்த ஓட்டம், பார்வை போன்ற இன்றியமையாத இயக்கங்களையும் சுரப்பிகளையும் செயல்படுத்துகின்றன.

இவற்றில் பரிவு நரம்புகள் (Sympathetic nerves), இணைப் பரிவு நரம்புகள் (Para sympathetic nerves) என இருவகை உண்டு. உடலியக்கங்களைத் தூண்டுவதும், துரிதப்படுத்துவதும் பரிவு நரம்புகள். உதாரணமாக, நாம் ஓடும்போது இதயம் வேகமாகத் துடிப்பதற்கும், வேகவேகமாக மூச்சு விடுவதற்கும் பரிவு நரம்புகளின் தூண்டுதலே காரணம். மாறாக, இந்த இயக்கங்களைக் குறைப்பதும் கட்டுப்படுத்துவதும் இணைப் பரிவு நரம்புகளின் பணி. உதாரணம்: ஓடி முடித்ததும் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்குத் திரும்புவது; சுவாசம் சீராக நிகழ்வது.

சரி, நரம்பு என்பது எப்படி இருக்கும்?

ஒவ்வொரு நரம்பும் பார்ப்பதற்கு கேபிள் வயர்போல் பல நரம்பிழைகளின் (Nerve fibers) தொகுப்பாக இருக்கிறது. ஒரு நரம்பிழையில் ஏராளமான நரம்பணுக்கள் (Neurons) உள்ளன. நரம்பின் அமைப்புக்கும் செயலுக்கும் அடிப்படையாகத் திகழ்கிறது நரம்பணு. ஒரு நரம்பணுவின் நீளம் 10 மைக்ரான். மூளையிலும் மற்ற நரம்புகளிலும் உள்ள நரம்பணுக்களின் மொத்த எண்ணிக்கை 10,000 கோடி. ஒரு கணக்குக்கு இவற்றை நீளவாக்கில் இணைத்தால் அது 1000 கி.மீ. தூரம்வரை செல்லும்.

ஒவ்வொரு நரம்பணுவுக்கும் மற்ற இடங்களிலிருந்து தகவல்கள் வந்து சேர வேண்டும். அதேபோன்று ஒவ்வொரு நரம்பணுவில் இருந்தும் தகவல்கள் வெளியில் செல்ல வேண்டும். இதற்காக ஒவ்வொரு நரம்பணுவிலும் வேரிழை (Axon), உடற்பகுதி (Cell body), குற்றிழைகள் (Dendrites) என மூன்று பகுதிகள் உள்ளன.

நரம்பணுவின் ஒரு பக்கத்தில் மரக்கிளைகள்போல் நீட்டிக்கொண்டிருப்பவைக் ‘குற்றிழைகள்’. நரம்பணுவுக்குத் தகவல் வந்து சேரும் பகுதி இது. இதன் எதிர்ப் பகுதி நீண்ட ஓர் இழையாகப் பாயும். அதன் முனை பார்ப்பதற்கு ஒரு கவட்டையைப்போல் பிரிந்திருக்கும். அது ‘வேரிழை’. அதன் வழியாகத் தகவல் வெளியில் செல்கிறது. அதை ‘நரம்பிழை’ என்றும் அழைப்பது உண்டு. இது ஒரு நரம்புறையால் (Myelination) மூடப்பட்டிருக்கும். இதன் நடுநடுவில் பல குழிகள் (Nodes of Ranvier) இருக்கும். அந்தக் குழிகளில் மட்டும் உறை இருக்காது.

குற்றிழைக்கும் வேரிழைக்கும் நடுவில் இருப்பது உடற்பகுதி. இதில் உட்கரு இருக்கும். இது ஒரு செல் உறையால் போர்த்தப்பட்டிருக்கும். பொதுவாக, உடலில் மற்ற செல்கள் அழியுமானால், மறுபடியும் அவை வளர்ந்துவிடும். ஆனால், நரம்பின் பகுதிகள் அழிந்துவிட்டால் மறுபடியும் வளராது. இது நரம்புக்கே உரித்தான தனித்தன்மை. அதனால்தான் உடலில் ஏற்படும் நரம்பு நோய்களில் பலவற்றை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை.

ஒரு நரம்பணுவில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றிழைகள் இருக்கலாம். ஆனால், வேரிழை ஒன்று மட்டுமே இருக்கும். நரம்பணுவில் ஒற்றைக்கொம்பு நரம்பணு (Unipolar neuron), இரட்டைக் கொம்பு நரம்பணு (Bipolar neuron), பல கொம்பு நரம்பணு (Multipolar neuron) என மூன்று வகை உண்டு.

ஒரு நரம்பணுவின் குற்றிழைகள் அருகிலிருக்கும் வேரிழையோடு இணைந்திருக்கும். அதன் வேரி்ழை எதிர்ப்புறத்தில் இருக்கும் வேறொரு குற்றிழையுடன் இணைந்திருக்கும். இரண்டுக்கும் நடுவில் ‘நரம்புச் சந்தி’ (Synapse) எனும் சிறிய இடைவெளி இருக்கும். அதுதான் தகவல் பரிமாறும் பகுதி. இப்படி ஒரு சங்கிலிப் பின்னல்போல் நரம்புகள் நம் உடல் முழுவதிலும் அமைந்திருப்பதால், மூளையில் புறப்படும் தகவல் கால் விரல் நுனிக்கு எளிதாக வந்து சேர்கிறது.

நரம்புகளில் தகவல் செல்லும் வேகம் சாதாரணமாக ஒரு நொடிக்கு 100 மீட்டர்; அவசரத்துக்கு நொடிக்கு 180 மீட்டர். இது எப்படிச் சாத்தியம்? அது அடுத்த வாரம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 36: ருசி தெரிவது எப்படி?

 

 
udaljpg

கண்களை மூடிக்கொண்டால்கூட, கையில் ஓரிடத்தில் தொட்டால், அந்தத் தொடு உணர்ச்சியைப் புரிந்துகொண்டு, எந்த இடத்தில் தொடப்பட்டது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. உணவின் ருசியை உணர முடிகிறது. அதுபோல் காலில் முள் குத்தினால், காலை விருட்டென்று இழுத்துக்கொள்கிறோம். கையில் தீ சுட்டால் கையை வேகமாக விலக்கிக்கொள்கிறோம். இவை எல்லாம் எப்படிச் சாத்தியமாகின்றன?

தொடுதல், ருசி போன்ற சாதாரண தகவல்களும், குத்துதல், சுடுதல் போன்ற அவசரத் தகவல்களும் தண்டுவடத்துக்கும் மூளைக்கும் செல்வதாலும், அங்கிருந்து தகவல்கள் மீண்டும் உடலின் பல பாகங்களுக்கும் வருவதாலும்தான் சாத்தியமாகின்றன. இப்படியான தகவல்கள் உடலுக்குள் நரம்புகள் வழியாகவே சென்றுவருகின்றன.

 

தொடுதல், கிள்ளுதல் போன்ற புறத்தூண்டல்களுக்கு, பசி, ருசி போன்ற அகத்தூண்டல்களுக்கு வினைபுரியும் ஆற்றலும், அவற்றைக் கடத்தும் திறனும் நரம்புகளுக்கு இருப்பதால்தான் உடலில் தகவல் பரிமாற்றம் இயல்பாக நிகழ்கிறது. அதே வேளையில் இந்தத் தூண்டல்களுக்குத் தொடர்ச்சியாக வினைபுரியாமல், அடுத்தடுத்தத் தூண்டல்களுக்கு நடுவில் நரம்புகள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்வதால், அவை சோர்வடையாமல் இயங்குவதும் சாத்தியமாகிறது.

இப்படித் தகவல் பறிமாற்றத்துக்கு உதவும் நரம்புகளில் உணர்வு நரம்புகள் (Sensory nerves), இயக்க நரம்புகள் (Motor nerves) என இரண்டு வகை உண்டு. உணர்வு நரம்புகள் உடலில் ஓரிடத்தில் உருவாகும் தகவல்களை மூளைக்குக் கொண்டு செல்கின்றன. இயக்க நரம்புகள் மூளையில் ஏற்படும் தகவல்களை உடலுக்குக் கொண்டு வருகின்றன. இதேபோல் உணர்வுகளைப் பெற்று, உணர்வு நரம்புகளுக்குத் தருவதற்கு உணர்வு அணுக்கள் (Sensory neurons) இருக்கின்றன. உடலுறுப்புகளை இயக்குவதற்கான தகவல்களை இயக்க நரம்புகளிடமிருந்து பெறுதற்கு இயக்க அணுக்கள் (Motor neurons) இருக்கின்றன.

இந்த அமைப்புகள் பல விதமாகத் தகவல்களைப் பரிமாறுகின்றன. உதாரணமாக, உணவு சாப்பிடுதலும், முள் குத்துதலும் நம்மைப் பொறுத்தவரை இரண்டு செயல்பாடுகள். ஆனால், அவற்றின் இயக்கத்துக்கு உடலில் தகவல் பரிமாறப்படும் தடங்கள் வெவ்வேறானவை.

எப்படி?

ருசியை உணரும் உணர்வு அணுக்கள் நாக்கில் சுவை மொட்டுகளில் இருக்கின்றன. இவை ருசியை உணர்ந்து அதை ஒரு தகவலாக உணர்வு நரம்புகளுக்குக் கடத்துகின்றன. அவை ருசி உணர்வுக்கான மூன்றுவித கபால நரம்புகள் வழியாக அதை மூளைக்கு எடுத்துச் செல்கி்ன்றன. மூளை அந்த ருசியை உணர்ந்து சொல்கிறது. அது நமக்குப் பிடித்த ருசியாக இருந்தால், இன்னும் அதிகம் சாப்பிடத் தோன்றுகிறது.

உடனே அந்தத் தகவல் மூளையிலிருந்து இயக்க நரம்புகள் வழியாக உமிழ்நீர்ச் சுரப்பிகளுக்கு வருகிறது. அதன் பலனாக உமிழ்நீர் அதிகம் சுரக்கிறது. நாம் விரும்பும் உணவை இன்னும் அதிகமாகச் சாப்பிடுகிறோம். இந்தச் செயல் இயல்பாக நாம் உணர்ந்தும் அறிந்தும் செய்வது. இதற்கான நரம்புப் பாதை இப்படி இருக்கிறது: ‘நாக்கு சுவை மொட்டுகள் - சுவை உணர்வு அணு – உணர்வு நரம்பு - கபால நரம்புகள் - மூளை - இயக்க நரம்பு - இயக்க அணு - உமிழ்நீர்ச் சுரப்பி இயக்கம்’. இதற்கான தகவல் மையம், மூளை.

இதுபோல் உடலில் ஏற்படும் அசைவுகள், எழுதுதல், படித்தல் போன்றவற்றின் உணர்வுகள் தண்டுவடத்தின் வழியாக மூளை வரை சென்று பதிலைப் பெற்றுத் திரும்பும். இதில் பயணம் செய்யும் தகவல் சாதாரணமானதால், அதன் வேகமும் சாதாரணமாகவே இருக்கிறது.

udal%202jpg

அதேநேரம் ஒரு முள் நம் காலில் குத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தகவல் அதிவேகத்தில் செல்லும். ஏனெனில், இது ஓர் அவசரத் தகவல். இந்தப் பாதை ஒரு தனிப் பாதை. முள் குத்தும் தகவலை காலில் உள்ள உணர்வு அணுக்கள் பெற்று உணர்வு நரம்புகளுக்கு அனுப்புகின்றன. அவை தண்டுவட நரம்புகள் வழியாக, அதைத் தண்டுவடத்துக்கு எடுத்துச் செல்கின்றன.

ஆனால், இது மூளைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. காரணம், தகவல் தண்டுவடத்துக்கு வந்து சேர்ந்ததும், ‘இது மூளைவரைக்கும் சென்றால் பதில் கிடைக்கத் தாமதமாகிவிடும்!’ என்று தண்டுவடம் நினைத்து, மூளை எடுக்க வேண்டிய முடிவைத் தானே எடுத்து, ‘காலை இழுத்துக்கொள்ளுங்கள்’ என்று கால் தசைகளுக்குத் தகவலை அனுப்புகிறது. இது இயக்க நரம்புகள் வழியாகக் கால் தசைகளின் இயக்க அணுக்களுக்குச் செல்கிறது. இயக்க அணுக்கள் கால் தசையை அசைக்கச் செய்கின்றன. உடனே நாம் காலை இழுத்துக்கொள்கிறோம்.

இப்படி ஒரு தகவல் மூளைக்குச் செல்லாமல், தண்டுவடத்துக்குச் சென்றதும் திரும்புகிறது என்றால், அந்த நரம்புப் பாதைக்கு ‘அனிச்சை வளைவு’ (Reflex Arc) என்று பெயர். ‘தசை உணர்ச்சி - உணர்வு அணு - உணர்வு நரம்பு - தண்டுவட நரம்பு - தண்டுவடம் - இயக்க நரம்பு - இயக்க அணு - தசை இயக்கம்’ என்று செல்லும் சிறப்புப் பாதை இது. இதற்குரிய தகவல் மையம், தண்டுவடம்.

முள் குத்தியவுடன் நாம் காலை எடுக்க வேண்டும் என்று யோசிப்பதற்கு முன்பாகவே, தண்டுவடம் தன்னிச்சையாக அவசர முடிவெடுத்து, தன்னாலேயே காலை எடுக்க வைப்பதால், இந்தச் செயலுக்கு ‘அனிச்சைச் செயல்’ (Reflex action) என்று பெயர்.

நரம்பு எப்படித் தகவலைக் கடத்துகிறது?

‘மூளையிலிருந்து காலை அசைக்க வேண்டும்’ என்று ஒரு தகவல் காலுக்கு வருகிறது என வைத்துக்கொள்வோம். அப்போது இயக்க நரம்பணுக்களில் ஏற்படும் சோடியம், பொட்டாசியம் அயனிகளின் பரிமாற்றத்தால் மின்சக்தி உற்பத்தியாகிறது. மின்வேதி மாற்றங்களால் நிகழும் இந்த விளைவுக்குச் ‘செயலூட்டத் திறன்’ (Action potential) என்று பெயர்.

பொத்தானைத் தட்டியதும், மின்கம்பியில் மின்சாரம் பயணித்து மின்விளக்கு எரிவதுபோல் நரம்பிழைகளில் இந்தத் திறன் ஒரு தகவலாகக் கடத்தப்படுகிறது. அது கால் தசைக்குச் சென்றதும் அசிட்டைல்கோலின் எனும் நரம்புக் கடத்தியின் உதவியுடன் அங்குள்ள புரதங்களைத் தூண்டி தசை இயக்கத்தைச் செயல்படுத்துகிறது. அப்போது நம்மால் காலை அசைக்க முடிகிறது.

நரம்புறையால் (Myelination) மூடப்பட்டிருக்கும் நரம்பிழைகளில் தகவல்கள் மிக வேகமாக செல்லும். எனவே மீன், முட்டை, இறைச்சி, பால், வாழைப்பழம், வால்நட், காலிபிளவர், கீரை, போன்ற உணவுகளைச் சாப்பிட்டால் நரம்புகள் நலம் பெறும்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 37: உடலின் தலைமைச் செயலகம்!

 

 
udaljpg

உடலின் உச்சியில் இருக்கிறது, மூளை. உடலில் உள்ள செல்கள் எல்லாமே நரம்புகள் மூலம் மூளையுடன் இணைந்துள்ளன. அவற்றின் வழியாக 24 மணி நேரமும் உடலில் இருந்து மூளைக்குத் தகவல்கள் செல்வதும், மூளை அந்தத் தகவல்களை ஒரு தேர்ந்த கணினிபோல் உடனடியாக அலசி, ஆராய்ந்து, உடல் பகுதிகளுக்குத் தகுந்த பதில்களை அனுப்புவதும் நடைபெற்றுக்கொண்டே இருப்பதால்தான், உடலின் உள்/வெளி இயக்கங்களும் உயிர் வாழ்தலும் சாத்தியப்படுகின்றன.

உடலில் எந்த ஒரு செயலும் மூளை/அதோடு இணைந்த தண்டுவடத்தின் கட்டளைப்படிதான் நிகழ்கிறது. அதனால்தான் மூளையை உடலின் ‘தலைமைச் செயலகம்’ என்கிறோம். அதோடு, முக்கியமானத் தகவல்களைத் தன்னிடம் சேமித்துக்கொள்ளும் திறன் மூளைக்கு இருப்பதால், நினைவாற்றலை வளர்ப்பதும், கற்றுக்கொள்ளும் ஆற்றலைப் பெருக்குவதும், அறிவுத் திறனை மேம்படுத்துவதும் நம்மால் முடிகிறது.

 

இவை தவிர, மூளை நம் எண்ணங்களின் மையமாகவும் இருக்கிறது. நமக்குள் உண்டாகும் ஆனந்தம், அழுகை, சிரிப்பு, வியப்பு, கவலை, கோபம் போன்ற பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கும் மனநிலைகளுக்கும் மூளைதான் காரணம். மனித மூளைக்குப் பேச்சுத் திறனும், சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் உள்ளதால்தான் முதுகெலும்புள்ள மற்ற விலங்குகளிலிருந்து முன்னேறிய உயிரினமாக மனித இனம் கருதப்படுகிறது.

பூச்சிகள், புழுக்கள் போன்ற முதுகெலும்பு இல்லாத உயிரினங்களுக்கு ‘மூளை’ எனத் தனி ஓர் உறுப்பு இல்லை. பதிலாக, ‘நரம்பு முடிச்சுகள்’ (Ganglia) அவற்றின் உடலியக்கங்களை முறைப்படுத்துகின்றன; கட்டுப்படுத்துகின்றன. அந்த உயிரினங்களில் ஆக்டோபஸுக்கு மட்டுமே ஓரளவு வளர்ச்சி பெற்ற மூளை இருக்கிறது. பாலூட்டிகளில் பரிணாம வளர்ச்சிப்படி மனித மூளைக்கு அடுத்தபடியாக சிம்பன்ஸி, கொரில்லா போன்ற வாலில்லா குரங்குகளுக்கும், டால்பின் மற்றும் திமிங்கிலத்துக்கும் உயர் வளர்ச்சி பெற்ற மூளை இருக்கிறது.

மூளையின் அளவு என்ன?

பிறக்கும் குழந்தைக்கு மூளையின் எடை அரை கிலோவுக்கும் குறைவாகவே இருக்கிறது. பெரியவர்களுக்குச் சராசரியாக 1.4 கிலோ. நம் உடல் எடையோடு ஒப்பிடும்போது இது 2 சதவீதம்தான். ஆனால், உடல் மொத்தமும் பயன்படுத்தும் ஆக்ஸிஜன் அளவில் 20% மூளையின் செயல்பாடுகளுக்குத் தேவை. காரணம், அவ்வளவு வேலை! விலங்குகளில் திமிங்கிலத்தின் (Sperm whale) மூளைதான் அதிக எடை கொண்டது, 7.8 கிலோ! ஆனால், அதன் உடல் எடையில் இது 0.06% மட்டுமே.

மூளையின் அளவு ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு  அளவு சற்றே குறைவு. ஆனால், அவர்களின் மூளையில் நரம்பணுக்கள் மிக நெருக்கமாக இருப்பதால், ஆண்களைவிடப் பெண்களுக்கு 10% நரம்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகம். ஒருவருடைய மூளையின் கனத்துக்கும் புத்திசாலித் தனத்துக்கும் தொடர்பில்லை. அப்படி இருந்தால், உலகில் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருந்திருக்க வேண்டும். காரணம், மனிதர்களில் அவர்களின் மூளைதான் அதிக கனம்.

மூளை எப்படி இருக்கும்?

ஒரு தலைப்பாகைபோல் காணப்படுகிற மூளை ஊதா கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும் (Greyish pink). இதன் மேற்பரப்பு ஒரே தளமாக இல்லாமல், கசங்கிய துணிபோல் மடிப்பு மடிப்பாகவும், பாளம் பாளமாகவும் இருக்கிறது. இந்த மடிப்புகளில் ஓர் ஒழுங்கு இருப்பதில்லை. இவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை. இந்த மடிப்புகளால் மூளையின் பரப்பளவு அதிகமாவது ஒரு நன்மை. மேலும், இந்த மடிப்புகளை வைத்து மூளையை வலது, இடது என இரண்டு பாதியாகவும், அந்த இரண்டு பாதிகளை முன் பக்கம், பின் பக்கம், இரண்டு பக்கப் பகுதிகள் என நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது.

‘கபாலம்’ (Cranium) எனும் மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கிறது, மூளை. என்றாலும், நாட்டில் முக்கியத் தலைவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பு கொடுப்பதுபோல், மூளைக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. இப்படி மூளையைப் போர்த்திப் பாதுகாக்கிற உறைகளுக்கு ‘மூளையுறைகள்’ (Meninges) என்பது பொதுவான பெயர்.

udal%202jpg
 

அவற்றுக்கு வன்வெளிச்சவ்வு (Dura mater), சிலந்தியுருச் சவ்வு (Arachnoid mater), மென்உள்சவ்வு (Pia mater) எனத் தனிப் பெயர்களும் உண்டு. வன்வெளிச்சவ்வு கபாலத்தை ஒட்டியும் மூளையின் வெளியுறையாகவும் அமைந்துள்ளது. மென்உள்சவ்வு மூளையின் உட்பகுதியைப் போர்த்தியுள்ளது.

இந்த இரண்டுக்கும் இடையில் சிலந்தியுருச் சவ்வு இருக்கிறது. இந்த மூன்று சவ்வுகளும் மூளையை மட்டுமல்லாமல், தண்டுவடத்தையும் போர்த்திப் பாதுகாக்கின்றன.

நாட்டில் மாநில முதல்வருக்குச் சிறப்புப் பாதுகாப்பு உள்ளதுபோல் மூளைக்கும் உண்டு. சிலந்தியுருச் சவ்வுக்கும் மென்உள்சவ்வுக்கும் நடுவில் ‘சிலந்தியுருச் சவ்வு இடைவெளி’ (Subarachnoid space) இருக்கிறது. அதில் ‘மூளைத் தண்டுவடத் திரவம்’ (Cerebrospinal fluid) பயணிக்கிறது.

இது ஒரு குஷன்போல் அமைந்து, தலையில் லேசாக அடிபடும்போது வலுவான கபால எலும்பால் மென்மையான மூளைத் திசுக்கள் அமுக்கப்படுவதைத் தடுத்து, மூளையின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

அடுத்து, பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற மிக முக்கியத் தலைவர்களுக்கு ராணுவப் பாதுகாப்பு தரப்படுவதைப்போல் மூளைக்கும் தனிச் சிறப்புப் பாதுகாப்பு கிடைக்கிறது. அதற்கு ‘மூளை ரத்த வேலி’ (Blood brain barrier) என்று பெயர்.

மூளைக்கு ரத்தம் கொடுக்கும் தந்துகிகளில் (Capillaries) மட்டுமே காணப்படும் ஒரு சிறப்பு ஏற்பாடு இது. எப்படி? இங்குள்ள செல்கள் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளதால், மற்ற தந்துகிகளில் ரத்தப் பொருட்கள் கடத்தப்படுவதுபோல் அவ்வளவு எளிதாக இங்கே கடத்த முடியாது.

இந்த அமைப்பானது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன், தண்ணீர், சில வாயுக்கள், ஊட்டச் சத்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே மூளைக்குள் அனுப்பும். மூளையைப் பாதிக்கிற பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள், நச்சுப் பொருட்கள், அந்நியப் பொருட்கள் போன்றவற்றைச் சாமானியமாக மூளைக்குள் நுழைய விடாது.

மூளைக்குள் சதா நுழையும் இன்னும் பல ஆபத்தான பொருட்களையும் இது சல்லடைபோல் வடிகட்டிவிடும். இதன் பலனால், மூளைக்கு ஏற்படக்கூடிய பல பாதிப்புகள் தாமாகவே குறைந்துவிடும். எனவேதான் இதை மூளைக்குக் கிடைத்துள்ள ‘ராணுவப் பாதுகாப்பு’ என்கிறோம்.

மருத்துவர்கள் மூளையை முன் மூளை (Forebrain), நடு மூளை (Midbrain), பின் மூளை (Hindbrain) என மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கின்றனர். ஏன்? எதற்கு? அடுத்த வாரம் தெரிந்துகொள்வோம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

https://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 38: அறிவு தரும் அமைச்சகம்!

 

 
udaljpg

மனித மூளையைத் ‘தலைமைச் செயலகம்’ என்று சொன்னோம். ஒரு தலைமைச் செயலகத்தில் அரசுப் பணிகளைக் கவனிப்பதற்குத் தனித்தனியாகப் பல்வேறு அமைச்சகங்கள் இருப்பதைப்போல், உடலில் நிகழும் பலதரப்பட்ட செயல்பாடுகளைக் கவனிக்கவும் கட்டுப்படுத்தவும் மூளையில் தனித்தனி அமைப்புகள் இருக்கின்றன.

அப்படி, மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் ‘ஆறாம் அறிவு’ உள்ளிட்ட உடலின் மேம்பட்ட இயக்கங்களைக் கவனிப்பதற்கு ஓர் ‘அமைச்சகம்’ உள்ளது. அதுதான் ‘முன் மூளை’ (Forebrain) என்று அழைக்கப்படும் பெருமூளை (Cerebrum). இதுவே மூளையில் 85% இடத்தை அடைத்துக்கொண்டுள்ள மிகப் பெரிய பகுதி. தலாமஸ் (Thalamus), ஹைப்போதலாமஸ் (Hypothalamus) என இன்னும் இரண்டு பகுதிகளும் இதில் உண்டு.

 

ஒரு பெரிய பப்பாளிப் பழத்தை இரண்டாக வெட்டியதுபோல், பெருமூளையானது வலது பக்கம் ஒன்று, இடது பக்கம் ஒன்று என இரண்டு அரைக்கோளங்களாக உள்ளது. மூளையின் அடிப்புறத்தில், நான்கு அங்குல நீளத்தில் இருக்கும் ஒரு நரம்புப் பட்டை (Corpus callosum) இந்த இரண்டையும் இணைக்கிறது.

இதன் வழியாகவே வலது மூளையிலிருந்து கிளம்பும் நரம்புகள் உடலின் இடது பக்கத்துக்கும், இடது மூளையிலிருந்து கிளம்பும் நரம்புகள் உடலின் வலது பக்கத்துக்கும் தடம் மாறிச் செல்கின்றன, இதன் பலனால், உடலின் இடது பக்கத்தைப் பெருமூளையின் வலது அரைக்கோளமும், வலது பக்கத்தை இடது அரைக்கோளமும் கட்டுப்படுத்துகின்றன.

அதுபோல், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது அரைக்கோளமும், வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடது அரைக்கோளமும் முன்னின்று பணி செய்கின்றன. இடது மூளை எந்த ஒரு செயலையும் பகுப்பாய்வு செய்து பார்க்கிறது. கற்பனை வளத்தைப் பயன்படுத்திப் படைப்பாக்கத்தை ஊக்கப்படுத்துகிறது, வலது மூளை.

பெருமூளையின் ஒவ்வோர் அரைக்கோளமும் முன் மடல் (Frontal lobe), பின் மடல் (Occipital lobe), பக்க மடல் (Parietal lobe), பொட்டு மடல் (Temporal lobe) என நான்கு சுளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெருமூளையைக் குறுக்காகப் பார்த்தால், மரத்துக்குப் பட்டை இருப்பதுபோல் ‘பெருமூளைப் புறணி’ (Cerebral cortex) எனும் வெளிப்பகுதி இருக்கிறது. கால் அங்குலத்துக்கும் குறைவாகவே இதன் கனம் இருக்கும்; பார்ப்பதற்கு மடிப்பு மடிப்பாக இருக்கும்.

இந்த மடிப்புக்கு ‘மூளை மடிப்புச் சுருள்’ (Gyrus) என்றும், மடிப்புகளுக்கு இடையில் இருக்கிற குழிக்கு ‘மூளைப் பள்ளம்’ (Sulcus) என்றும் பெயர். இந்த மடிப்புகளால் மூளைக்குள் செயல்படக்கூடிய பகுதியின் பரப்பு அதிகரிக்கிறது. இந்த மெல்லிய வெளிப்பகுதிக்குக் கீழே உள்ளது ‘பெருமூளை அகணி’ (Cerebral medulla).

பெருமூளையில் சாம்பல் பொருள் (Gray matter), வெண் பொருள் (White matter) என இரண்டு வகை நரம்புத் திசுக்கள் உள்ளன. சாம்பல் பொருள் புறணியிலும், வெண் பொருள் அகணியிலும் காணப்படுகின்றன. இவை தண்டுவடத்திலும் இருக்கின்றன. மேலும், நரம்பணுக்களில் நரம்புறை உள்ள வேரிழைகளில் (Axons), வெண் பொருளும், நரம்புறை இல்லாதவற்றில் சாம்பல் பொருளும் உள்ளன.

பெருமூளைக்குள் ஆயிரம் கோடி நரம்பணுக்களும் 16,000 கி.மீ. நரம்பு நூல்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இங்குள்ள நரம்பணுக்களைச் சுற்றி ஐந்து வகை ‘கோந்து அணுக்கள்’ (Glial cells) உள்ளன. இவற்றின் எண்ணிக்கை நரம்பணுக்களைவிடப் பல மடங்கு அதிகம். இவை நரம்பணுக்களுக்குத் தேவையான உணவைத் தருவதோடு பாதுகாப்பையும் தருகின்றன.

மூளைக்குள் நரம்பணுக்கள் இல்லாத இடங்களும் உண்டு. அவை ‘மூளை உட்குழிகள்’ (Ventricles). ஒன்றுக்கொன்று தொடர்புடைய 4 குழிப்பகுதிகள் இவை. இவற்றில் முதன்மையான இரண்டு குழிகள் பெருமூளையிலும், மூன்றாவது தலாமஸிலும், நான்காவது பின் மூளையிலும் அமைந்துள்ளன.

இவற்றின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்தக் குழிகளில் காணப்படும் ‘கோராய்டு பின்னல் அணுக்க’ளில் (Choroid plexus) தினமும் சராசரியாக 550 மி.லி. தண்டுவடத் திரவம் (CSF) சுரக்கிறது. இதில் 150 மி.லி. மட்டும் நம் நரம்பு மண்டலத்தில் எப்போதும் நிலையாக இருக்கிறது; தண்ணீரில் மிதக்கும் பந்துபோல மூளை இதில் மிதந்துகொண்டிருப்பதால், திடீர் அதிர்வுகள் மூளையைப் பாதிப்பதைத் தடுத்துப் பாதுகாப்பு தருகிறது.

ஓர் அமைச்சகத்தில் செயலர், உதவிச் செயலர், இயக்குநர், இணை இயக்குநர் எனப் பலரும் பணிகளைப் பிரித்துப் பார்ப்பதைப்போல, பெருமூளை எனும் அமைச்சகத்திலும் பார்வைக்கு, பேச்சுக்கு, மூச்சுக்கு, வாசனைக்கு, செவிஉணர்வுக்கு, நடையோட்டத்துக்கு என ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் தனித்தனிப் பணிமையம் உள்ளது. அவை ஒவ்வொன்றும் தனக்குரிய பணிகளை மட்டும் செய்கின்றன.

idam%202jpg

பெருமூளையின் முன் மடலில் புத்திசாலித்தனத்துக்கான பணிமையம் உள்ளது. சிந்தனா சக்தி, பகுத்தறிதல், ஆராய்ச்சி உள்ளிட்ட ‘ஆறாம் அறிவு’ தரும் பணிமையம் இது. தனிமனித நடத்தையும் ஆளுமையும் இதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.

நாம் உணர்ந்து செய்யும் கை, கால் அசைவுகள் போன்ற தசை இயக்கங்களைக் கவனிக்க ‘பிராட்மேன் பகுதி’ (Brodmann area) உள்ளது. ஒரு செயலைச் செய்ய முடிவெடுத்தல், திட்டமிடுதல், அதில் கவனம் செலுத்துதல், பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகியவையும் முன் மடலின் கட்டளைப்படியே நிகழ்கின்றன. பேச்சை உருவாக்குவதற்கு என்றே ’புரோக்கா பகுதி’ (Broca’s area) உள்ளது.

தொடுதல், வெப்பம், வலி ஆகிய உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்குப் பக்க மடல் உதவுகிறது. பார்க்கும் பொருள்களின் பிம்பங்களையும் வண்ணங்களையும் தெரிந்துகொள்வதற்குப் பின் மடல் தேவைப்படுகிறது. ஒலிகளைக் கேட்டு உணர்வதற்கும், மொழி மற்றும் வார்த்தைகளைப் புரிந்து கொள்வதற்கும் பொட்டு மடலில் உள்ள ‘வெர்னிக் பகுதி’ (Wernicke’s area) துணை செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நம் நினைவாற்றலுக்கு ஆதாரமாக இருப்பதும் பொட்டு மடல்தான்.

பொதுவாக, நாம் ஒரு பிரச்சினையை அமைச்சரிடம் தெரிவிக்க வேண்டுமானால், முதலில் அவரது உதவியாளரிடம் அனுமதி பெற வேண்டும். நாம் யார், எதற்காக வந்திருக்கிறோம் என்பது போன்ற விவரங்களை உதவியாளர் தெரிந்துகொண்ட பின்னரே அமைச்சரைச் சந்திக்க அனுமதிப்பார். இந்த மாதிரியான ஓர் ஏற்பாடு நம் மூளையிலும் உள்ளது.

பார்வை, செவி உணர்வு, தொடுஉணர்வு போன்ற முக்கியத் தகவல்கள் நேரடியாக அவற்றின் முதன்மைப் பணிமையங்களுக்குச் (Primary areas) செல்லாது. மாறாக, அவற்றுக்குரிய இணைமையங்களுக்குச் (Associated areas) செல்லும். அவை அந்தத் தகவல்களைப் பிரித்து, ஆராய்ந்து, பழைய நினைவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, திருப்தி அடைந்தால் மட்டுமே முதன்மைப் பணிமையத்துக்கு அனுப்பி பதில் பெறும்.

இதன் பலனால், தேவையற்ற தகவல்களுக்குப் பெருமூளை பதில் கொடுப்பது தவிர்க்கப்படும். மூளையின் வேலைப்பளு குறையும்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உடல் எனும் இயந்திரம் 39: மூளைக்குள் ஒரு தொலைபேசி நிலையம்!

 

 
udaljpg

முன் மூளை எனும் பெருமூளையைத் தெரிந்துகொண்டோம். நடுமூளை (Mid brain) என்பது பெருமூளைக்கு அடியிலும், தண்டுவடத்துக்கு மேல்முனையிலும் அமைந்துள்ளது. பின் மூளை (Hind brain) என்பது நடு மூளைக்கு அடியில் ஒளிந்திருக்கும் சிறுமூளை (Cerebellum), மூளைப் பாலம் (Pons), முகுளம் (Medulla oblongata) ஆகிய அமைப்புகள் கொண்ட பகுதி.

நடுமூளை, மூளைப் பாலம், முகுளம் ஆகிய பகுதிகள் கொண்டது, ‘மூளைத்தண்டு’ (Brain stem). பெருமூளைக்கு உதவ, அதற்கு அடியில் மூளைத்தண்டுக்கு மேல் முனையில் தலாமஸும் ஹைப்போதலாமஸும் உள்ளன. அதோடு பிட்யூட்டரி சுரப்பியும் பைனியல் சுரப்பியும் இங்குதான் இருக்கின்றன.

 

நமக்கு ஒரு ஜோடி தலாமஸ் இருக்கிறது. இது, உடல் உணர்ச்சிகளைத் தொகுத்தும் பகுத்தும் உணரக்கூடிய பகுதி. இது மட்டும் இல்லையென்றால், பெருமூளை ரொம்பவே குழம்பிப் போகும். இதை மூளைக்குள் இருக்கும் ஒரு ‘தொலைபேசி நிலையம்’ என்று வர்ணிக்கலாம்.

எப்படி ஒரு தொலைபேசி நிலையத்திற்கு வந்து சேரும் அழைப்புகள் பகுக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, அவை செல்ல வேண்டிய தொலைபேசி எண்களுக்குச் சரியாக அனுப்பப்படுகின்றனவோ, அதுமாதிரி நம் புலன்களிலிருந்து தலாமஸுக்கு வரும் செய்திகள் அனைத்தும் அலசப்பட்டு கண்ணுக்கு, காதுக்கு, ருசிக்கு, தொடுதலுக்கு எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, பெருமூளையின் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. உதாரணமாக, தோழி தொடுவதை ரசிக்கிறீர்கள்; தம்பி கிள்ளும்போது ‘ஸ்..ஆ.. வலிக்கிறது’ என்கிறீர்கள்.

இந்த இரண்டையும் வித்தியாசப்படுத்திக் காண்பிப்பது தலாமஸ்தான். நம்மை சுயநினைவுடனும் எச்சரிக்கை உணர்வுடனும் இருக்க வைப்பது, பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது எல்லாமே தலாமஸ் செய்யும் வேலைதான். தலாமஸ் மட்டும் வேலை நிறுத்தம் செய்துவிட்டது என்றால், ‘கோமா’ எனும் ஆழ்நிலை மயக்கத்துக்குச் சென்று விடுவோம்.

தலாமஸுக்கும் மூளைத்தண்டுக்கும் நடுவில் ஒரு ஜோடி ‘ஹைப்போதலாமஸ்’ ஒளிந்திருக்கிறது. இது ஒரு வாதுமை அளவில்தான் இருக்கிறது. ஆனால், இதுதான் மூளையிலேயே மிகவும் துடிப்பானது. உடலின் உயிர்க்கடிகாரம் இங்குதான் உள்ளது. இது தானியங்கு நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் தண்ணீரின் அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது.

உடல் வெப்பம், பசி, தாகம், உறக்கம், ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பல உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதற்கு ஏதாவது பாதிப்பு வந்தால், நமக்குப் பசிக்காது; தாகம் எடுக்காது. அதுபோல், உடலுக்குக் காய்ச்சல் வந்தால், இந்தப் பகுதி தன் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம். இவை மட்டுமல்லாமல், பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டிவிட்டு, பலதரப்பட்ட ஹார்மோன்களையும் சுரக்கச் செய்வதும் இதுதான்.

பெருமூளைக்கு அடிப்புறத்தில் தலாமஸுக்கு அருகில் ‘அடிவார நரம்பு முடிச்சுகள்’ (Basal ganglia) உள்ளன. இவை கண் அசைவு, கற்றல் திறன், அறிவு சார்ந்த நிலை போன்ற பலவற்றைக் கவனிப்பது மட்டுமின்றி விரல்களில் ஏற்படும் நுட்பமான அசைவுகளையும் கட்டுப்படுத்துகின்றன.

உதாரணமாக, கையில் பேனா பிடிப்பது, எழுதுவது, வரைவது போன்ற அசைவுகளைக் கவனிப்பது இவைதான். இவற்றில் பாதிப்பு ஏற்படுமானால், டம்ளரைக் கூடப் பிடிக்க முடியாத அளவுக்குக் கை விரல்களில் நடுக்கம் ஏற்படும். தாத்தா, பாட்டிகளுக்கு ‘உதறுவாதம்’ (Parkinson’s disease) வருவது இப்படித்தான்.

நடுமூளை என்பது பெருமூளை, தலாமஸ், ஹைப்போதலாமஸ் மற்றும் அதனடியில் இருக்கும் மூளையின் மற்ற பகுதிகளையும் இணைக்கிற பாலமாக இருக்கிறது. மூளையின் மூன்று பகுதிகளில் மிகவும் சிறியது இதுதான். இது தன்னிச்சையாகச் சில செயல்களைக் கட்டுப்படுத்தக் கூடியதுதான் என்றாலும் பார்வைக்கும் செவி உணர்வுக்கும் அதிகம் உதவுகிறது.

முக்கியமாக, நாம் பேருந்திலும் ரயிலிலும் பயணம் செய்யும்போது எதிரில் நகரும் காட்சிகளைப் பார்ப்பதற்கு ஏற்ப கண்ணில் ‘விழிப்பாவை’யின் (Pupil) அளவைக் கட்டுப்படுத்தி அந்தக் காட்சிகளை நமக்குத் தெரிவிப்பது இதுதான்.

சிறுமூளை என்பது பின்மூளையில் பெருமூளைக்கு அடிப்புறத்தில் இருக்கிறது. இது பார்ப்பதற்குக் குடுமிபோல் இருக்கிறது. இதுவும் பெருமூளைபோல் வலது, இடது என இரண்டு அரைக்கோளங்களைக் கொண்டுள்ளது. இதனுள்ளும் வலது பக்க நரம்புகள் இடது பக்கத்துக்கும் இடது பக்க நரம்புகள் வலது பக்கத்துக்கும் தடம் மாறிச் செல்கின்றன.

நாம் நிமிர்ந்து நிற்கிறோம்; நடை தள்ளாடாமல் நேர்கோட்டில் நடக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் சிறுமூளைதான். இது தசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதால் சாத்தியப்படுகிறது. ஒரே நேரத்தில் பல தசைகள் இயங்கும்போது, அவற்றை ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து செயல்பட வைப்பதும் சிறுமூளைதான். உதாரணமாக, ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் ஓடும்போது கை, கால் தசைகள் மட்டுமல்லாமல், மார்புத் தசைகளும் வயிற்றுத் தசைகளும் வேகமாக இயங்க வேண்டும். அந்த இயக்கத்தைக் கவனிப்பது சிறுமூளை.

மூளைத்தண்டின் கடைசிப் பகுதி, முகுளம். ஆனாலும், நாம் உயிர் வாழத் தேவையான இதயத் துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம், குடலியக்கம் போன்ற அதிமுக்கியமான உடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது இதுதான். உணவை மெல்லுதல், விழுங்குதல், உமிழ்நீர் சுரத்தல், இருமல், தும்மல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் சிறப்பு மையங்களும் இதில்தான் உள்ளன.

உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலோ, தலைசுற்றல் வந்தாலோ வாந்தி ஏற்படுகிறது அல்லவா? அது ஏன்? வாந்திக்கான சிறப்பு மையம் முகுளத்தில்தான் உள்ளது. ‘உணவோ, நஞ்சோ, குடலில் இருப்பது வெளியேறினால்தான் நல்லது’ என வயிறு மூளைக்குத் தகவல் தெரிவித்தால், அது முகுளத்தில் உள்ள வாந்தி மையத்தைத் தூண்டி வாந்தி ஏற்படச் செய்கிறது.

மூளைப் பாலம் என்பது நடுமூளையையும் முகுளத்தையும் இணைக்கிற நரம்புப் பாதை. அதோடு சிறுமூளையின் இரண்டு அரைக்கோளங்களையும் இதுதான் இணைக்கிறது; உறக்கத்துக்கும் சுவாசத்துக்கும் துணைபுரிகிறது.

எல்லாவற்றுக்கும் உள்ளே, மூளைத்தண்டுக்குள் முகுளத்திலிருந்து நடுமூளைவரை ‘ரெட்டிகுலர் அமைப்பு’ உள்ளது. ‘நாம் உறங்கும்போதும் விழித்திருக்கிற காவலாளி’ என்று இதைச் சொல்லலாம். ஏனெனில், நம்மை உறங்க வைப்பதும், உறக்கத்தைக் கட்டுப்படுத்தி விழிக்க வைப்பதும் இதுதான்.

மூளையிலிருந்து உடலுக்குச் செல்லும் 12 ஜோடி கபால நரம்புகளில் வாசனைக்கும் பார்வைக்குமான கபால நரம்புகள் மட்டும் பெருமூளையில் இருந்து கிளம்புகின்றன. மீதி 10 ஜோடி நரம்புகள் மூளைத் தண்டிலிருந்துதான் கிளம்புகின்றன.

லிம்பிக் சிஸ்டம், ஹிப்போகாம்பஸ், அமிக்டாலா… இவை எல்லாம் என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.

(அடுத்த வாரம் நிறைவடையும்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உடல் எனும் இயந்திரம் 40: உயிர் எங்கே இருக்கிறது?

 

 
Desktopjpg

‘நினைவாற்றல்’ என்பது மூளை செய்யும் விந்தை; சரியாகப் புலப்படாத புதிர்! இன்னும் இது குறித்து நாம் முழுமையாக அறியவில்லை. இதுவரை தெரிந்தவரை, பெரும்பாலான நினைவுகள் பெருமூளையில்தான் பதிவாகின்றன. அதற்குத் துணைபுரிய ஹிப்போகாம்பஸ், அமிக்டாலா அடங்கிய ‘லிம்பிக் சிஸ்டம்’ என்ற அமைப்பும் மூளையில் உள்ளது. நினைவாற்றலுக்கும் அறிவாற்றலுக்கும் ஆதாரமாக இருப்பது இதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நினைவாற்றலில் ‘குறுகிய கால நினைவாற்றல்’ (Short term memory), ‘நீண்ட நாள் நினைவாற்றல்’ (Long term memory), ‘திறமை சார்ந்த நினைவாற்றல்’ (Skill memory) என மூன்று விதம் உண்டு. நம் புலன்களிலிருந்து வரும் செய்திகளை லிம்பிக் சிஸ்டம் வரவேற்று, பெருமூளையின் முன்பகுதிக்கு அனுப்புகிறது. அந்தச் செய்திகளைப் பெருமூளை ஒலியாகவோ, காட்சியாகவோ, உணர்வாகவோ தற்காலிகமாகச் சேமித்துக்கொள்கிறது.

 

ஒரே நேரத்தில் 7 செய்திகள் சுமார் ஒரு நிமிட நேரத்துக்கு இங்கே தங்குகின்றன. புதிய செய்திகள் நுழையும்போது பழையவை அழிகின்றன. உதாரணமாக, காலையில் படித்தது நினைவில் இருக்கிறது; முதல் நாள் படித்தது நினைவில் இல்லை. இது, குறுகிய கால நினைவாற்றல்.

அதேநேரத்தில் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தால், அதே விஷயத்தை அதிக காலம் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. இது, நீண்ட நாள் நினைவாற்றல். உதாரணமாக, பரீட்சைக்குப் படித்தது மறக்காமல் இருக்கிறது. ஒரு தூண்டுதல் மூலம் பழைய நினைவுகளைத் திரும்பப் பெறவும் முடிகிறது. ‘புத்தகக் காட்சி’ என்றதும், முன்பு ஒருமுறை புத்தகக் காட்சிக்குச் சென்றதும், போட்டிகளில் பரிசு பெற்றதும், ஆசிரியர் பாராட்டியதும் ஒரு சங்கிலித் தொடர்போல் நினைவுக்கு வருவது இந்த நினைவாற்றலுக்கு உதாரணம். சந்தோஷமான / துக்கமான சம்பவங்கள் ஆயுள் முழுவதும் நினைவில் நிற்பதும் இப்படித்தான்.

‘திறமை சார்ந்த நினைவாற்றல்’ சற்றே வித்தியாசமானது. இதற்குச் சிறுமூளைதான் சிறப்பு மையம். சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவது, வீணை, கிடார் போன்ற இசைக் கருவிகள் வாசிப்பது, நீச்சலடிப்பது, டைப் செய்வது போன்றவை இதற்குச் சில உதாரணங்கள். ‘தசைகளுக்கு நினைவாற்றல் உண்டு’ என்று எழுதியிருந்தேன். மேற்சொன்ன திறமைகளில் பெரும்பாலும் தசைகள்தான் பயிற்சி பெறுகின்றன. அங்குள்ள நரம்பணுக்கள் அந்தப் பயிற்சியை நினைவுகொள்கின்றன.

அந்த நிகழ்வின் ஆரம்பத்தில் மட்டும் தசைகள் மூளையிலிருந்து ஆணையைப் பெறுகின்றன. தொடர்ச்சியாக அங்கிருந்து ஆணைகள் வரவேண்டும் என்று எதிர்பார்க்காமல் தாமாகவே அந்தச் செயல்களைத் தொடர்கின்றன. அதனால்தான் பேசிக்கொண்டே சைக்கிள் ஓட்டவும், கண்களைக் கட்டிக்கொண்டு அந்தரத்தில் கயிற்றின் மேல் நடக்கவும் முடிகிறது. இப்படிச் சொன்னால் இது இன்னும் நன்றாக விளங்கும்: நீச்சல் பயிற்சி பெறாத ஒருவர் நீச்சலடிக்க விரும்பினாலும், உடனே அவரால் நீச்சலடிக்க முடியாது. அவருடைய தசைகளுக்குப் பயிற்சி சார்ந்த நினைவு இல்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

அறிவு என்பது என்ன?

முந்தைய அனுபவத்தையும், அதனால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பையும் பலனையும் நினைவில் கொண்டு, அதன்படி நடந்துகொள்வதுதான் ‘அறிவு’. உதாரணமாக, ‘பாம்பு கடித்துவிடும்’ என்கிற அறிவு நமக்கு ஹிப்போகாம்பஸில் ஏற்படுகிறது. அடுத்தமுறை பாம்பைப் பார்த்ததும் அச்சப்படுகிறோம்; தப்பி ஓடப் பார்க்கிறோம் அல்லது அதை விரட்டுகிறோம். இவற்றைக் கவனித்துக்கொள்வது அமிக்டாலா.

மறதி என்றால் என்ன?

மூளை சில விஷயங்களைத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்துகொள்கிறது; பல விஷயங்களை ஒதுக்கிவிடுகிறது. இதுதான் மறதிக்கு அடிப்படை. நம் பெயர், முகம், முகவரி போன்ற தேவையான விஷயங்களை மூளை எளிதில் மறப்பதில்லை. அதுபோல் நாம் விரும்பிச் செய்யும் செயல்களை மூளை தன்னிடம் எப்போதும் போட்டுக் கொள்கிறது. ஈடுபாடு இல்லாமல் செய்யும் செயல்களை அது விட்டுவிடுகிறது. அதனால்தான் ‘கஷ்டப்பட்டுப் படிப்பதைவிட இஷ்டப்பட்டுப் படிப்பவர்களுக்குப் பாடங்கள் மறப்பதில்லை!’ என்கிறார்கள்.

அடுத்தது, தூக்கம். உடல் செல்களின் ஓய்வுக்கும் புதுப்பித் தலுக்கும் புத்துணர்வுக்கும் 8 மணி நேரத் தூக்கம் தினமும் அவசியம். இரவு வந்ததும், கண்களில் இருந்து ரெட்டிகுலர் அமைப்புக்குச் செய்தி போகிறது. அது ஹைப்போதலாமஸில் உள்ள உயிர்க்கடிகாரம் மூலம் பீனியல் சுரப்பிக்குத் தகவல் அனுப்புகிறது. அது ‘மெலட்டோனின்’ ஹார்மோனைச் சுரக்கிறது. இது மூளையின் பெரும்பாலான மின்தூண்டல்களைத் தற்காலிகமாக அணைத்துவிடுகிறது. உடனே நம் கண்கள் சொருக, தூக்கம் ஆட்கொள்கிறது.

தூக்கத்தில், ‘விழி அசைவு இல்லாத் தூக்கம்’ (Non-rapid eye movement sleep - NREM Sleep), ‘வேகவிழி அசைவுத் தூக்கம்’ (Rapid eye movement sleep - REM Sleep) என இருவகை உண்டு. நாம் தூங்கும்போது இவை மாறி மாறி வரும். முதலாவது ஆரம்பநிலைத் தூக்கம். இரண்டாவது ஆழ்நிலைத் தூக்கம்.

கனவு ஏற்படுவது எப்படி?

வாழ்வின் நிகழ்வுகளோடு அவரவருக்கு ஏற்படும் அனுபவங்களின் பதிவுகளே கனவுகள். பெரும்பாலும் ஆழ்ந்த தூக்கத்தில்தான் கனவுகள் வரும். ஆனாலும், ஆரம்பநிலைத் தூக்கத்திலும் அவை வரலாம். விடியற்காலையில் ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவுகள் மறுநாள் நினைவுக்கு வரும். ஆரம்பநிலைத் தூக்கத்தில் உண்டாகிற கனவுகள் நினைவில் பதியாது; மறந்து விடும்.

உயிர் எங்கே இருக்கிறது?

மூளையில் இருக்கிறது! சுவாசமும் நாடித்துடிப்பும் நின்று போவதை ‘இதய இறப்பு’ (Cardiac death) என்கிறோம். மூளை செயலிழந்து போவதை ‘மூளை இறப்பு’ (Brain death) என்கிறோம். மூளை இறந்துவிட்டால், இதயம் துடித்தாலும் பலன் இல்லை. அதனால்தான் விபத்துகளில் மூளை இறப்புக்கு ஆளானவர்களின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண், தோல் போன்ற முக்கிய உறுப்புகளைத் தேவையானவர்களுக்குக் கொடுத்துக் காப்பாற்றுகிறார்கள். ஆகவே, உடலில் உயிர் இருக்கும் இடம் மூளை.

இத்தகைய மகத்துவம் வாய்ந்த மூளையைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையல்லவா?

சுய சுத்தம் மற்றும் சூழல் காத்தல் வழியாக நோய்த்தொற்றுகளைத் தவிர்த்தல்;

ஆரோக்கியமான உணவு முறை, நாள்தோறும் உடற்பயிற்சி இவற்றின் மூலம் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடற்பருமன், இதய நோய் போன்றவற்றை ஓரங்கட்டுதல்;

வாசித்தல், கற்றல், புதிர்க் கணக்குப் போடுதல் போன்ற பயிற்சிகளைக் கொடுத்து மூளைத் திறனை வளர்த்தல்;

மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் இருத்தல்; இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்துகொள்ளுதல் ஆகிய முன்னெச்சரிக்கைகளைக் கையாண்டால், மூளைக்குச் சிறந்த பாதுகாப்பு கிடைக்கும். அப்போது அது உற்சாகமாக உழைக்கும். அதன் பலனால், நம் ஆரோக்கியம் மேம்படும்.

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • 6 months later...

வாழ்க வளமுடன். 

அற்புதமான கட்டுரைகள் 

ஆயிரம்தான் சித்தர்கள் சொன்னார்கள் ஞானி சொன்னார்கள் என்று சொன்னாலும் ஒரே ஒரு அறிவியல் பெயரில் சொன்னால் போதும் நம் மக்களுக்கு ஆரவம் பற்றிக்கொள்கிறது .

இங்குள்ள விரிவான கட்டுரைகள் வாசித்துக்கொண்டு இருக்கிறேன் .தரவுகளை விட அதன் சுவாரஸ்ய எழுத்து நடை வாசிக்கத் தூண்டுகிறது .மிக்க நன்றி . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.