Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டு தாயகம் சென்றிருந்தபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நானும் கணவனும் மினி பஸ்சிலோ அல்லது பேருந்திலோ யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய தேவை இருந்துகொண்டிருந்தது. போய் வரும் நேரங்களில்  அக்கம் பக்கம் புதினம் பார்ப்பது வழமைதானே. சில வேலைகளில் கூடப் பயணம் செய்வோரைப் பார்க்கும்போது அட எமது மக்கள் இத்தனை அழகாய் ஆடை அணிகிறார்களே என்பதற்கும் அப்பால் நான் இன்னும் கொஞ்சம் நல்ல உடுப்புகளாகக் கொண்டு வந்திருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றாமல் இருந்ததில்லை.

அன்று என்னவோ எனக்கு கோண்டாவிலுக்குக் கிட்டவே பின் இருக்கை ஒன்றில் இடம் கிடைத்து விட்டது. இடம் கிடைத்த நின்மதியில் எல்லோரையும் அராய முற்பட்டேன். நான் மற்றவகளின் ஆடைகளைஎல்லாம் பார்த்துவிட்டு காலில் என்ன அணிந்துள்ளனர் எனப் பார்க்கத் தொடங்கினேன். இளம் ஆண்கள் வெளிநாடு போலவே நல்ல சப்பாத்துக்களை அணிந்திருந்தனர். பல இளம் பெண்கள் அழகான சாண்டில்ஸ் அணிந்து நாகரீகமாகவே தெரிந்தனர். ஒன்று இரண்டு பேர்தான் செருப்பு.  ஒரு இளம் பெண் வயது ஒரு இருபத்தைந்துள் இருக்கும்,  எனக்கு முன்னே நின்றிருந்தார். அவரின் காலைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காலில் அவர் எதுவும் அணிந்திருக்கவில்லை. என்னை அறியாமல் எனக்கு அவர்மேல் இரக்கம் ஏற்பட்டது.

நான் வேம்படியில் படித்த காலத்தில், யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் கிரிக்கற் போட்டி ஒன்று மத்திய கல்லூரி மைதானத்தில் நடந்தது. அதைப் பார்ப்பதற்கும் எமக்குப் பிடித்தவர்களுக்கு உர்சாகமூட்டுவதர்க்காகவும் நானும் என் நண்பிகளும் சென்றிருந்தோம். போட்டி முடிவடைந்த பின் சுபாஸ் கபேக்குப் போய் நாங்கள் ரோல்சும் ஐஸ்கிறீமும் உண்டுவிட்டு வெளியே வர என் சாண்டில் அறுந்துவிட்டது. சாண்டில்சைப் போட்டுக்கொண்டு மேற்கொண்டு நடக்கவே முடியவில்லை. சாதாரணமாக் பள்ளிக்கு சப்பாத்தே அணிவதால் இப்படியான நிலை முன்பு ஏற்பட்டதுமில்லை. பயங்கார வெய்யில்வேறு. அதைவிட அந்த டவுனுக்குள்ள செருப்பின்றி நடப்பது என்றால் என் கவுரவம் என்ன ஆவது? என்னை சைட் அடிக்கும் பெடியள் கூட பஸ்ஸிலோ ரோட்டிலோ காணலாம் என்ற எண்ணமே பீதியைக் கிளப்பியது.

எல்லோரும் நன்றாக உண்டதில் யார் கையிலும் புதிய செருப்புக் கூட வாங்கப் பணமும் இல்லை. வேற வழி இல்லையடி சாண்டில்சை கையில தூக்கு என்றாள் ஒருத்தி. அன்றுதான் நான்வேறு யாரையும் ஏறிட்டுப் பார்க்காது தலை குனிந்து வீடுவரை வந்தது. அதுவும் பஸ்ஸில் சனக்கூட்டத்தில் மற்றவர் செருப்போ சப்பாத்தோ  என் காலில் படாமலிருக்க நான் பட்ட பாடு இந்த நேரத்திலும் என் கண்முன்னே வந்தது.

பாவம் இந்தப் பெண் கோண்டாவிலில் ஏறும் போதே செருப்பு அணியாமல்தான் ஏறியுள்ளார் போல என்று எண்ணியபடி  யாழ்ப்பான பஸ்ரான்ட் வரை அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டே வந்தேன். நிறுத்தம் வந்ததும் அந்தப் பெண் விரைவாக இறங்கி நடக்கத் தொடங்கினார். செருப்புப் போட்டிருந்தாலும் சுடும் வெய்யிலில் வெறுங்காலுடன் ஆவர் நடப்பதைப் பார்க்க மனம் எதோ செய்தது. தூரத்தில் பஸ்ரான்ட் ஓரத்தில் காலணிகளை வைத்து விற்றுக் கொண்டிருப்பது  என் கண்ணுக்குத் தெரிய விரைந்து சென்று அப் பெண்ணை அண்மித்தேன். அவர் அந்தக் கடையின் பக்கம் சென்று ஒரு செருப்பை  எடுத்து விலை கேட்டுக்கொண்டிருந்தார்.  கடைக்காரன் முந்நூறு ரூபாய்கள்  என்று சொல்ல, அந்தப் பெண் விலை கூட என்று கூறியபடி செருப்பை போட்டுவிட்டு நகரத் தொடங்கினார். 

தங்கச்சி குறை நினைக்காதைங்க. நான் உங்களுக்கு வாங்கித் தாறன். நீங்கள் நல்லதா ஒண்டை எடுங்கோ என்றேன் நான். ஒரு நிமிடம் என்னைப் பாத்தவர் பின் செருப்புகளை ஆராய்ந்துவிட்டு ஒரு குதி உயர்ந்த  சாண்டில்சை எடுத்துப் போட்டுப் பார்த்தார். அவருக்கு அளவு சரியாகப் பொருந்தியிருக்க கடைகாறனைப் பார்த்து இதையே எடுக்கிறன் என்றார். நான் கடைகாரரின் பக்கம் திரும்பி எவ்வளவு என்று கேட்டதற்கு 850 என்று பதில் வந்தது. காசை எடுத்துக் குடுத்துவிட்டு கடைக்காரர் தரும் மிச்சக் காசை வாங்கி கைப்பையில் வைத்துவிட்டுத் திரும்பினால் அந்தப் பெண் தூரத்தில் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது.

 

Link to comment
Share on other sites

இதை இப்படிப் பார்க்கலாம் என்று தோன்றுகின்றது:

அச்சமூகத்தில், ஒரு வறிய பெண்ணிற்கு, அவள் கேட்காமலேயே உதவி செய்யவருபவர்கள் ஏதோ ஒரு உள்ளார்;ந்த எதிர்பார்புடனேயே அவ்வுதவியினைச் செய்கிறார்கள் போலும். உதவிசெய்தவர்கள் எதிர்பார்க்கும் கைமாறு பல சமயத்தில் அவர்கள் செய்த உதிவியின் பெறுமதியினைக் கர்ட்டிலும் அதிக பெறுமதியுடையதாய் இருக்கிறது போலும். ஓருவேளை, இதனால் சலித்துப் போன ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக, அந்தப் பெண் தன்னையும் பாதுகாத்துக் கொண்டு வருகின்ற உதிவியினையும் பெற்றுக்கொள்ளும் வாழ்வாதாரத்திற்கு அவசியமான பக்குவத்தைப் பெற்றுள்ளாள் என்பதாகக் கூட இருக்காலாம். அப்படியிருப்பின், இதைப் பார்க்கையில் உளம் மகிழ்கிறது. அவளின் நடைமுறை முற்றுமுழுதான முற்போக்குத் தனம்.

நீங்கள் கூட அவளிற்கு வெறும் 850 ரூபா செருப்பை வாங்கிக்கொடுத்து விட்டு அவள் கைமாறாக உங்களை நன்றி மழையில் நனைப்பாள் என்றே உள்ளுர அந்தரங்கமாக நினைத்திருக்கிறீர்கள். அதனால் தான் அவள் ஏதும் கூறாது நடந்து போனமை உங்களிற்குள் உறுத்தியது. நன்றி சார்ந்த எதிர்பார்பு இருந்திராவிடின் அவள் கடந்து சென்றது பதிந்தே இருக்காது. இங்கு நன்றி எதிர்பார்ப்பது நாகரிகமனாதா?

எதற்காக அவளிற்கு நீங்கள் செருப்பு வாங்கிக் கொடுத்தீர்கள் என்பதற்கு சரியாக காரணம் கூறியிருக்கிறீர்கள். அவள் நிலையில் ஒருநாள் நீங்கள் இருந்திருந்தமை உங்களிற்கு அவளின் சிரமத்தைப் புரிய உதவியது. அன்றைக்கு அந்த ஒரு பொழுதில் நீங்களும் உங்கள் நண்பிகளும் செருப்பு வாங்கும் பணமற்றிருந்த ஏழைகள். அந்தக் கணத்தில் உங்களிற்கு யாராவது செருப்பு வாங்க்கிக் கொடுத்திருப்பின் நிச்சயம் நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால் வாங்கிக் கொடுத்தவர் நீங்கள் தன்னை ஒரு ஆபத்பாண்டவர் அனாதை ரட்சகர் என்று பார்;க்கவேண்டும் என்ற எண்ணத்தில் அதை வாங்கிக்குடுத்திருப்பின், வெறுங்கால் சூட்டைக் காட்டிலும் அவர் கொடுத்த செருப்பு உங்கள் காலைச் சுட்டிருக்கும். நன்றி கூறுவது நாகரிகம் என்றால், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தப் பெண்ணின் விடயத்தில் அவளிற்குச் செருப்பைக் கொடுத்துவிட்டு அவளின் நன்றி மழையினை எதிர்பார்ப்பது அநாகரிகம்—அது அவளைச் சிறுமைப் படுத்தி, அவள் வறுமையினைக் கோடிட்டுக்காட்டும் பக்கவிளைவிற்கே வளி வகுக்கும். 

இந்த இடத்தில், நன்றிக்கு உரித்தான செயல் எவ்வாறிருக்கும் என்றால், செருப்பைப் பெற்றுக் கொடுத்தது யாரென்றே அப்பெண்ணிற்குத் தெரியாது, கடைக்காரரிடன் செருப்பைக் கொடுக்குமாறு கூறிப் பணத்தைக் கொடுத்து விட்டு அவள் பார்க்கு முன்னே நகர்ந்து விடுவது. உண்மையான நன்றிக்குரிய சந்தர்ப்பத்தில் நீங்கள் அந்தப் பெண்ணைப் பார்த்து 'என்னது இவள் நன்றிகூறாது; செல்கிறாளே' என நினைத்ததற்குப் பதில், அவள் 'நான் எவ்வாறு; நன்றிகூறுவது என்று உங்களைத் தேடியிருப்பாள்'. 

உதிவி செய்பவர்கள் பலனை எதிர்பார்த்துச் செய்யின் அது உதிவியே இல்லை. மாறாக அது ஒருவகை அடிமை பிடிப்பு என்பது எனது தாழ்மையான கருத்து.

நிச்சயமாக உதவிசெய்யும் மனப்பான்மை ஒரு இதயசுத்தியான கணத்தில் தான் பிறக்கிறத. துரதிஸ்ரவசமாக, பல சந்தர்ப்பங்களில், பல நல்லவர்கள் தங்களை அறியாது தப்பிழைத்து விடுகிறார்கள். உங்கள்பதிவு நிச்சயம் பலரிற்கு தங்களை ஆராய உதவி செய்யும். நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தங்கச்சி குறை நினைக்காதைங்க. நான் உங்களுக்கு வாங்கித் தாறன். நீங்கள் நல்லதா ஒண்டை எடுங்கோ என்றேன் நான். ஒரு நிமிடம் என்னைப் பாத்தவர் பின் செருப்புகளை ஆராய்ந்துவிட்டு ஒரு குதி உயர்ந்த  சாண்டில்சை எடுத்துப் போட்டுப் பார்த்தார். அவருக்கு அளவு சரியாகப் பொருந்தியிருக்க கடைகாறனைப் பார்த்து இதையே எடுக்கிறன் என்றார். நான் கடைகாரரின் பக்கம் திரும்பி எவ்வளவு என்று கேட்டதற்கு 850 என்று பதில் வந்தது. காசை எடுத்துக் குடுத்துவிட்டு கடைக்காரர் தரும் மிச்சக் காசை வாங்கி கைப்பையில் வைத்துவிட்டுத் திரும்பினால் அந்தப் பெண் தூரத்தில் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது.

மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் எத்தனையோ பேர் ஊரில் இருக்கிறார்கள்.நீங்கள் ஒன்றைத் தான் கண்டு உங்கள் மனம் நிறைவாக வாங்கிக் கொடுத்துள்ளீர்கள்.  

அவரும் மறுக்காமல் வாங்கியுள்ளார்.இருவருக்கும் அவரவர் தேவை முடிந்தது.நானாக இருந்தால் வலிந்து போய் செய்திருக்கமாட்டேன்.அந்தளவில் உங்களுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைக்கு தேரும், மயிலுக்குப் போர்வையும் தந்தார்கள் முன்னோர்கள். இங்கே வெறும் காலுக்கு செருப்பு தந்தார் சுமேரியர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்ததால் ஏதோ ஒரு வேகத்தில் வாங்கிக் குடுத்த செருப்பை பறித்து விடுவீர்களோ பக்கத்தில் அவர் வேற உங்களை முறைச்சுக் கொண்டு நின்றிருப்பார் அதனால் மிரண்டு ஓடியிருக்கலாம் என்று நினைக்கிறன்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Innumoruvan said:

 

நீங்கள் கூட அவளிற்கு வெறும் 850 ரூபா செருப்பை வாங்கிக்கொடுத்து விட்டு அவள் கைமாறாக உங்களை நன்றி மழையில் நனைப்பாள் என்றே உள்ளுர அந்தரங்கமாக நினைத்திருக்கிறீர்கள். அதனால் தான் அவள் ஏதும் கூறாது நடந்து போனமை உங்களிற்குள் உறுத்தியது. நன்றி சார்ந்த எதிர்பார்பு இருந்திராவிடின் அவள் கடந்து சென்றது பதிந்தே இருக்காது. இங்கு நன்றி எதிர்பார்ப்பது நாகரிகமனாதா?

 

இன்னுமொருவன் ................

நடைபாதையில் வேகமாக நாம் சென்று கொண்டு இருக்கும்போது ஒருவர்மீது முட்டினாலோ...

பொது இடங்களில் தும்மினாலோ கொட்டாவிவிட்டாலோ...

கழிப்பறைக்குள்போகும்போது ஒரு துப்பரவு பணியாளர் அங்கே மொப் பண்ணிக்கொண்டிருந்தால் உடனே  என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேட்கும் பழக்கத்தில் வாழ பழகியதாலோ...

இன்னும் ஒருபடி மேலேபோய் சொல்லபோனால்.. 

தமிழனாய் பிறந்து தமிழனாகவே தாயகத்தில் வாழ்ந்திருந்தாலும் , எதிரே வரும்  என்  இனத்தவனுக்கு ‘’வணக்கம்’’ என்று சொல்வதுகூட வெளிநாட்டுக்கு வந்தபின்னரே பழகியதாலோ...என்னமோ... 

நாகரிகங்கள் பலவகைப்படும்!

நன்றியும்  மன்னிப்பும் என்பது ஒரு எதிர்பார்ப்பல்ல , அது ஒருவகை பண்பாடு என்பதை நாமில் பலர் இங்கேதான் கற்றுக்கொண்டிருக்கிறோம்!

இது மெசொபொத்தேமியா சுமேரியர் அக்காவின்  அங்கலாய்ப்பாகவும், சிறு ஏமாற்றமாகவும்கூட இருக்கலாம்!

னால் அந்த எதிர்பார்ப்பு தவறில்லை, தப்பு செய்யும்போது தயங்காமல் மன்னிப்பு கேட்பதும், உதவி செய்பவர்களுக்கு உடனடியாக நன்றி சொல்ல பழகிக்குவதும், ஒரு வகை மனிதநாகரிகம்.. அது உலகம் மட்டுமல்ல ..

உலகத்துள் உள்ளடங்கும் தாயகத்தில் இருப்பவர்களும் உடனடியாக பழகவேண்டிய பழக்கம்!

உங்கள் கவலையில் தவறில்லை MS அக்கா...

 வாழ்வின் சிறு நெருக்கடியில் இருக்கும் எமக்கு, உதவுகின்ற மனிதருக்கு நாம் சிறு நன்றியாவது சொல்லாமல்போனால்...

நாங்கள் வாழ்வோம்.. ஆனால்.நாகரிகம் செத்துபோகும்...சின்னதாய் காயபடுத்தும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில போரட்டம் நடந்தபோது ஆக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க வெளிநாட்டுக்கு ஓடிப்போய் வசதியாக வாழ்ந்து திரும்ப ஹொலிடே வருபவர்கள் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவவேண்டிய கடப்பாட்டில் இருப்பவர்கள் என்பதால்தான் நன்றி சொல்லாமல் போனார் போலிருக்கு?

Link to comment
Share on other sites

3 hours ago, valavan said:

இன்னுமொருவன் ................

நடைபாதையில் வேகமாக நாம் சென்று கொண்டு இருக்கும்போது ஒருவர்மீது முட்டினாலோ...

பொது இடங்களில் தும்மினாலோ கொட்டாவிவிட்டாலோ...

கழிப்பறைக்குள்போகும்போது ஒரு துப்பரவு பணியாளர் அங்கே மொப் பண்ணிக்கொண்டிருந்தால் உடனே  என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேட்கும் பழக்கத்தில் வாழ பழகியதாலோ...

இன்னும் ஒருபடி மேலேபோய் சொல்லபோனால்.. 

தமிழனாய் பிறந்து தமிழனாகவே தாயகத்தில் வாழ்ந்திருந்தாலும் , எதிரே வரும்  என்  இனத்தவனுக்கு ‘’வணக்கம்’’ என்று சொல்வதுகூட வெளிநாட்டுக்கு வந்தபின்னரே பழகியதாலோ...என்னமோ... 

நாகரிகங்கள் பலவகைப்படும்!

நன்றியும்  மன்னிப்பும் என்பது ஒரு எதிர்பார்ப்பல்ல , அது ஒருவகை பண்பாடு என்பதை நாமில் பலர் இங்கேதான் கற்றுக்கொண்டிருக்கிறோம்!

 

 

நன்றியறிதல் தமிழன் வெளிநாடுவந்து கற்றுக்கொண்ட விடயமல்ல. இங்கு நன்றியுணர்விற்கெதிராக எவரும் பேசவில்லை. மனித நாகரிகம் பூமி முழுவதும் பொதுமையுடன் தான் கொட்டிக்கிடக்கிறது.

நிஜமான நன்றிக்குரிய தருணங்களில், கொடுத்தவர் மனதில் நன்றி கேட்கும் எண்ணத்திற்கு இடமின்றி மனது; நிறைந்திருக்கும். ஆனால் பெற்றவரிற்கோ நன்றியறியாது இருக்கமுடியாது. இதயசுத்தியான தருணங்கள் இயல்பாகவே இருக்கின்றன. இதில் பாடப்புத்தகங்களிற்கு அவசியமே இல்லை.

பசியியில் வாடியவனிற்கு உணவைக் கொடுத்து விட்டு, அவனது அலகைப் பிடித்து நன்றி கேட்பதோ, அல்லது 'எங்கப்பன் ஆத்மா சாந்தியடையணும் அந்தியேட்டிக்கு வா' வென்று அழைத்து உணவளிப்பதோ நன்றியறிதலோடு தொடர்புடையனவல்ல.

இந்தக் கதையில் கூட, உதவும் மனப்பான்மை இதயசுத்தியாக சித்தரிக்கப்படுமேயாயின், கொதிக்கும் வெயிலில் செருப்பணிந்து நடக்கும் அந்த இழையவளின் கால் மட்டுமே செருப்பைக் கொடுத்தவரின் இதயத்தைப்போல் வாசகரின் இதயத்திலும் முடிவில் நிறைத்திருக்கும். 'அவள் செருப்பணிந்து தீ மிதிக்கையில், பாலளித்த அன்னை போன்று என் இதயம் நிறைய, நேரம் மறந்து அவள் தத்துநடை பாத்து நின்றேன்' என்றவகையில் கதை முடிவடைந்திருக்கும்...

மேலே கூறியவை நன்றியறிதல் சார்ந்த உணர்ச்சி நிலை வியாக்கியானம். தமிழர் நன்றியினை வாயால் கூறுவதற்கப்பால் உடல் மொழி மற்றும் இன்னோரன்ன விடயங்கயில் நன்றியறிபவர்கள். இது தமிழர் பாரம்பரியம். அப்படியிருக்கையில் அந்தப் பெண் நன்றிகூறாது சென்றதில்;, அதுவும் குறிப்பாக 350 செருப்பை விட்டு 850 செருப்பெடுத்து வெடுக்கென்று நடந்து போனதிலும் நிறைய அரசியல் விமாச்சனம் வெளிப்படுகிறது. ஒரு சமூகமாக அதை உள்வாங்க வேண்டியது நமது கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

ஊரில போரட்டம் நடந்தபோது ஆக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க வெளிநாட்டுக்கு ஓடிப்போய் வசதியாக வாழ்ந்து திரும்ப ஹொலிடே வருபவர்கள் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவவேண்டிய கடப்பாட்டில் இருப்பவர்கள் என்பதால்தான் நன்றி சொல்லாமல் போனார் போலிருக்கு?

வெளிநாட்டில் இருந்து   அவர் வந்தவர் என்று அவர் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்?

தாயகத்திலிருந்து தப்பியோடியவர்களெல்லாம் தப்பியோடி வசதியாய் வாழ்பவர்களல்ல, பலர் அங்கிருக்கும்போது சிறுநொடியில் மரணத்தில் இருந்து தப்பியவர்கள்.

தப்பி வந்தவர்களெல்லாம் உதவவேண்டும் என்ற கடப்பாடு எந்த சட்டத்திலும் இருக்கவில்லை, எந்த அரசுகளும் சொல்லவில்லை, இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்லபோனால் இன்றுவரை அது ஒருவகை குற்றமாக பார்க்கப்பட்டு வெளிநாட்டு நீதிமன்றங்கள் போராட்டத்துக்கு உதவியவர்களை உள்ளே தள்ளுகிறது.

உயிர்பயம் என்ற ஒன்றைதவிர , மூச்சிரைக்க மூச்சிரைக்க ஓடிவந்த எமது போராட்டத்தையோ, மக்களையோ யாரும் கைகொடுத்து தூக்கிவிடவில்லை ...எம்மைதவிர.

தப்பியோடியவர்களெல்லாம் பல கிளைகளாய் பிரிந்தவர்கள்தான், ஆனால் வேர்களையும்,மரங்களையும் மறந்தவர்களல்ல, அதனால்தான் உள்ளூர் தமிழர்களை சமாளிக்க தெரிந்த கோத்தபாய,மஹிந்த,மற்றும் சிங்கள கோஷ்டிகள் புலம்பெயர்ந்தவர்களை எப்படி சமாளிக்க என்று தெரியாமல் தவிக்கிறான்.

பெற்றால் வளர்க்கத்தானே வேண்டும் என்பதற்காக வளர்த்த அம்மா அப்பாவிற்கு நன்றியுடன் இருக்கும் பழக்கம் ...இல்லாமல் போகலாம் தப்பில்லை என்பதை நியாயபடுத்துகிறீர்கள் நீங்கள், ஆனால் அது நியாயமாக பலருக்கு தெரிய வாய்ப்பில்லை!

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவும் மனிதர்களிடம்கூட சிறு குறை கண்டுபிடிக்கலாம் என்பதுகூட சிக்கலான சிந்தனைதான்!

அந்த காசில் குடும்பத்துடன் யாழ்நகர குளிரூட்டப்பட்ட குளிர்பான கடையொன்றில் ஐஸ்கிறீமும், ரோல்ஸ்சும் சாப்பிட்டு போயிருந்தால், எவர்தான்  என்ன கேள்வி கேட்டிருக்க முடியும்?

15 minutes ago, Innumoruvan said:

 

மேலே கூறியவை நன்றியறிதல் சார்ந்த உணர்ச்சி நிலை வியாக்கியானம். தமிழர் நன்றியினை வாயால் கூறுவதற்கப்பால் உடல் மொழி மற்றும் இன்னோரன்ன விடயங்கயில் நன்றியறிபவர்கள். இது தமிழர் பாரம்பரியம். அப்படியிருக்கையில் அந்தப் பெண் நன்றிகூறாது சென்றதில்;, அதுவும் குறிப்பாக 350 செருப்பை விட்டு 850 செருப்பெடுத்து வெடுக்கென்று நடந்து போனதிலும் நிறைய அரசியல் விமாச்சனம் வெளிப்படுகிறது. ஒரு சமூகமாக அதை உள்வாங்க வேண்டியது நமது கடமை.

நன்றியும், நன்றியறிதலும் அனைத்து இடங்களிலும் தேவைப்படுவதில்லை என்று சொல்கிறீர்கள்,  ஒருவருக்கு சரியென்று படும் விஷயத்தை அது தவறென்று நாம் மறுக்கும்போது நிறைய நேரமும்,முயற்சிகளும் கருத்து பகிர்தலும் தேவைப்படும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வெளிநாட்டில் இருந்து போகும்போது ஸ்ரிக்கர் ஒட்டாமல் போனாலும் நடையுடை பாவனையிலேயே இலகுவாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். இது சாரம் கட்டிக்கொண்டு உள்ளூர்க்காரன் மாதிரி நடக்க முனைந்த என் அனுபவத்தில் கண்டது.

எதையும், நன்றி உட்பட, யாரிடமும் எதிர்பார்க்கக்கூடாது. அதுபோல வயதுபோன காலத்தில் எங்களைப் பாதுகாப்பார்கள் என்று பிள்ளைகளை வளர்க்கும் காலம் மாறிக்கொண்டு வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வெளிநாட்டில் இருந்து போகும்போது ஸ்ரிக்கர் ஒட்டாமல் போனாலும் நடையுடை பாவனையிலேயே இலகுவாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். இது சாரம் கட்டிக்கொண்டு உள்ளூர்க்காரன் மாதிரி நடக்க முனைந்த என் அனுபவத்தில் கண்டது.

வெளிநாட்டுகாரரையும் உள்நாட்டுகாரரையும் கண்டறிய சுலபமான வழி

வெளிநாட்டுகாரர் ஒரு கைதொலைபேசியுடன் திரிவார்கள்

உள்நாட்டுகாரர்கள் இரண்டு கைதொலைபேசி வைத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த, பச்சை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி. என்னிடம் போதிய பச்சையின்மையால் எல்லோருக்கும் போட முடியவில்லை மன்னிக்க.

இன்னுமொருவன் உங்கள் வருகைக்கும் காத்திரமான விமர்சனத்துக்கும் நன்றி. நான் அந்தப் பெண் நன்றி கூறுவார் என எதிர்ப்பார்த்துச் செய்யவில்லையாயினும் என் அடி மனதில் நீங்கள் கூறுவதுபோன்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். அதை எப்படித் தவறு என்று கூறமுடியும் ?

தாயகத்தில் நிற ஒரு மாதத்தில் நடைபெற்ற இருப்பதில் ஒரு நிகழ்வுதான் இது. வெறும் 850 என்று ஏன் கூறுகிறீகள் என்று புரியவில்லை.

On 18/02/2018 at 10:29 PM, Innumoruvan said:

நீங்கள் கூட அவளிற்கு வெறும் 850 ரூபா செருப்பை வாங்கிக்கொடுத்து விட்டு அவள் கைமாறாக உங்களை நன்றி மழையில் நனைப்பாள் என்றே உள்ளுர அந்தரங்கமாக நினைத்திருக்கிறீர்கள். அதனால் தான் அவள் ஏதும் கூறாது நடந்து போனமை உங்களிற்குள் உறுத்தியது. நன்றி சார்ந்த எதிர்பார்பு இருந்திராவிடின் அவள் கடந்து சென்றது பதிந்தே இருக்காது. இங்கு நன்றி எதிர்பார்ப்பது நாகரிகமனாதா?

எதற்காக அவளிற்கு நீங்கள் செருப்பு வாங்கிக் கொடுத்தீர்கள் என்பதற்கு சரியாக காரணம் கூறியிருக்கிறீர்கள். அவள் நிலையில் ஒருநாள் நீங்கள் இருந்திருந்தமை உங்களிற்கு அவளின் சிரமத்தைப் புரிய உதவியது. அன்றைக்கு அந்த ஒரு பொழுதில் நீங்களும் உங்கள் நண்பிகளும் செருப்பு வாங்கும் பணமற்றிருந்த ஏழைகள். அந்தக் கணத்தில் உங்களிற்கு யாராவது செருப்பு வாங்க்கிக் கொடுத்திருப்பின் நிச்சயம் நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள்.

இந்த இடத்தில், நன்றிக்கு உரித்தான செயல் எவ்வாறிருக்கும் என்றால், செருப்பைப் பெற்றுக் கொடுத்தது யாரென்றே அப்பெண்ணிற்குத் தெரியாது, கடைக்காரரிடன் செருப்பைக் கொடுக்குமாறு கூறிப் பணத்தைக் கொடுத்து விட்டு அவள் பார்க்கு முன்னே நகர்ந்து விடுவது. உண்மையான நன்றிக்குரிய சந்தர்ப்பத்தில் நீங்கள் அந்தப் பெண்ணைப் பார்த்து 'என்னது இவள் நன்றிகூறாது; செல்கிறாளே' என நினைத்ததற்குப் பதில், அவள் 'நான் எவ்வாறு; நன்றிகூறுவது என்று உங்களைத் தேடியிருப்பாள்'. 

உதிவி செய்பவர்கள் பலனை எதிர்பார்த்துச் செய்யின் அது உதிவியே இல்லை. மாறாக அது ஒருவகை அடிமை பிடிப்பு என்பது எனது தாழ்மையான கருத்து.

நிச்சயமாக உதவிசெய்யும் மனப்பான்மை ஒரு இதயசுத்தியான கணத்தில் தான் பிறக்கிறத. துரதிஸ்ரவசமாக, பல சந்தர்ப்பங்களில், பல நல்லவர்கள் தங்களை அறியாது தப்பிழைத்து விடுகிறார்கள். உங்கள்பதிவு நிச்சயம் பலரிற்கு தங்களை ஆராய உதவி செய்யும். நன்றிகள்.

பணத்தைக் கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு எப்படி அந்நாட்டில் நம்பிச் செல்ல முடியும். நீங்கள் அங்கு சென்று சாதாரண மக்களுடன் பழகவில்லைப் போல் இருக்கு. வெளிநாட்ட்டுக் காரரிடம் எப்பிடி எவ்வளவைக் கறக்க முடியுமோ அவ்வளவைக் கறந்துவிடவேண்டும் என்பதே அங்குள்ள பலரின் செய்கையாக இருக்கிறது.

நான் அன்று அந்தப் பெண்ணைப் பார்த்தபோது உண்மையில் என் செருப்பு அறுந்த நினைவே எனக்கு இல்லை என்றால் நம்பவா போகிறீர்கள்.

உதவி செய்பவர்கள் பலனை எதிர் பார்த்துச் செய்யின் அது உதவியே இல்லையாயின் உதவிசெய்பவரிடம் உதவியை எதிர்பார்ப்பதும், எதிர்பார்க்காது கிடைக்கும் உதவிக்கு ஒரு இன்முகம் காட்டல் கூட இல்லையெனில் நீங்கள் கூட மனத்தால் இந்தப்பெண் நன்றி கூறவில்லை என்று நினைக்கத்தான் செய்வீர்கள் அதுதான் உலக இயல்பு. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/02/2018 at 11:03 PM, ஈழப்பிரியன் said:

மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் எத்தனையோ பேர் ஊரில் இருக்கிறார்கள்.நீங்கள் ஒன்றைத் தான் கண்டு உங்கள் மனம் நிறைவாக வாங்கிக் கொடுத்துள்ளீர்கள்.  

அவரும் மறுக்காமல் வாங்கியுள்ளார்.இருவருக்கும் அவரவர் தேவை முடிந்தது.நானாக இருந்தால் வலிந்து போய் செய்திருக்கமாட்டேன்.அந்தளவில் உங்களுக்கு பாராட்டுக்கள்.

எனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களில் இருவும் ஒன்றே.

On 19/02/2018 at 5:06 PM, valavan said:

இன்னுமொருவன் ................

 

இது மெசொபொத்தேமியா சுமேரியர் அக்காவின்  அங்கலாய்ப்பாகவும், சிறு ஏமாற்றமாகவும்கூட இருக்கலாம்!

னால் அந்த எதிர்பார்ப்பு தவறில்லை, தப்பு செய்யும்போது தயங்காமல் மன்னிப்பு கேட்பதும், உதவி செய்பவர்களுக்கு உடனடியாக நன்றி சொல்ல பழகிக்குவதும், ஒரு வகை மனிதநாகரிகம்.. அது உலகம் மட்டுமல்ல ..

 

வளவன் இது எனது அங்கலாய்ப்பு அல்ல. என் அனுபவங்களை எல்லாம் ஒன்றாகக் கொட்டித் தீர்க்கவேண்டும் என்ற ஆதங்கத்தின் சிறு துளி தான் இது.

On 19/02/2018 at 10:59 PM, கிருபன் said:

 வெளிநாட்டில் இருந்து போகும்போது ஸ்ரிக்கர் ஒட்டாமல் போனாலும் நடையுடை பாவனையிலேயே இலகுவாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். இது சாரம் கட்டிக்கொண்டு உள்ளூர்க்காரன் மாதிரி நடக்க முனைந்த என் அனுபவத்தில் கண்டது.

எதையும், நன்றி உட்பட, யாரிடமும் எதிர்பார்க்கக்கூடாது. அதுபோல வயதுபோன காலத்தில் எங்களைப் பாதுகாப்பார்கள் என்று பிள்ளைகளை வளர்க்கும் காலம் மாறிக்கொண்டு வருகின்றது.

நான் 2003 போனபோது இப்படியான மாற்றங்கள் மனித மனங்களில் இல்லை. மிகச் சாதாரணமாகத்தான் நானும்கனவரும் அங்கு திரிந்தோம். ஆனாலும் ஏதோவொன்று எம்மைக் காடிக்கொடுத்துவிடுகிறது.

On 20/02/2018 at 1:07 AM, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டுகாரரையும் உள்நாட்டுகாரரையும் கண்டறிய சுலபமான வழி

வெளிநாட்டுகாரர் ஒரு கைதொலைபேசியுடன் திரிவார்கள்

உள்நாட்டுகாரர்கள் இரண்டு கைதொலைபேசி வைத்திருப்பார்கள்.

உண்மைதான் ஈழப்பிரியன். நாம் தான் பிச்சைக்கார்ர்கள் அங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/02/2018 at 9:36 AM, Kavi arunasalam said:

முல்லைக்கு தேரும், மயிலுக்குப் போர்வையும் தந்தார்கள் முன்னோர்கள். இங்கே வெறும் காலுக்கு செருப்பு தந்தார் சுமேரியர்.

ம்க்கும் தந்தார்.

Link to comment
Share on other sites

நான் சுமேயின் இடத்தில் இருந்திருந்தாலும் ஒரு சிறு புன்னகையையோ அல்லது ஒரு நன்றியுணர்வுடன் கூடிய ஒரு பார்வையையோ எதிர்பார்த்து இருப்பேன். நன்றியை எதிர்பார்க்காமல் இருப்பது மகான்களின் உணர்வாக இருக்கலாம், ஆனால் நன்றியை எதிர்பார்ப்பது சாதாரண மனிதர்களுக்குண்டான இயல்பு. இந்த உலகில் எத்தனையோ நல்ல விடயங்கள் இப்படியான சாதாரண மனிதர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசயம் இப்பத்தான் ஓடீ வெளிச்சுது.

அக்கா சொல்லாத கதயும் உங்க இருக்குதே...

பெடிச்சீண்ட தேப்பன் தான், சுமேய சைற் அடிச்சு சுழட்டினவர்...

அது ஓரு காலம்.

பெட்டய பார்த்தோன அடையாளம் தெரிஞ்சுட்டுது..... பின்ன ஓரு பாசம் வராதோ....

பழைய ஞாபகங்கள்.....

காசை கொடுத்துட்டு...... சும்மா... இருந்திருந்தால்.... நன்றி கிடைத்திருக்கும்.....

‘கொப்பர்...... எப்படி இருக்கிறார் பிள்ள...’ம்.... ‘அந்த காலத்தில... சைக்கிள்ள சிமாட்டா வந்தார் எண்டா..... நாங்க...வெருண்டு கொண்டு நிப்பமெல்லே‘...

எண்டு சொல்லி... திரும்பினால்.... பெட்ட கோவத்தில திரும்பியும் பாராம போட்டுது... :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

நான் சுமேயின் இடத்தில் இருந்திருந்தாலும் ஒரு சிறு புன்னகையையோ அல்லது ஒரு நன்றியுணர்வுடன் கூடிய ஒரு பார்வையையோ எதிர்பார்த்து இருப்பேன். நன்றியை எதிர்பார்க்காமல் இருப்பது மகான்களின் உணர்வாக இருக்கலாம், ஆனால் நன்றியை எதிர்பார்ப்பது சாதாரண மனிதர்களுக்குண்டான இயல்பு. இந்த உலகில் எத்தனையோ நல்ல விடயங்கள் இப்படியான சாதாரண மனிதர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.

நன்றி நிழலி

4 minutes ago, Nathamuni said:

விசயம் இப்பத்தான் ஓடீ வெளிச்சுது.

அக்கா சொல்லாத கதயும் உங்க இருக்குதே...

பெடிச்சீண்ட தேப்பன் தான், சுமேய சைற் அடிச்சு சுழட்டினவர்...

அது ஓரு காலம்.

பெட்டய பார்த்தோன அடையாளம் தெரிஞ்சுட்டுது..... பின்ன ஓரு பாசம் வராதோ....

பழைய ஞாபகங்கள்.....

காசை கொடுத்துட்டு...... சும்மா... இருந்திருந்தால்.... நன்றி கிடைத்திருக்கும்.....

‘கொப்பர்...... எப்படி இருக்கிறார் பிள்ள...’ம்.... ‘அந்த காலத்தில... சைக்கிள்ள சிமாட்டா வந்தார் எண்டா..... ‘...எண்டு சொல்லி... திரும்பினால்.... பெட்ட கோவத்தில திரும்பியும் பாராம போட்டுது... :grin: 

 

 

 

 

 

அட பாவியளே எங்கை இருந்து கிளம்பி வாறீங்கள் ???? நல்லாய் இருப்பியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2018 at 1:07 AM, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டுகாரரையும் உள்நாட்டுகாரரையும் கண்டறிய சுலபமான வழி

வெளிநாட்டுகாரர் ஒரு கைதொலைபேசியுடன் திரிவார்கள்

உள்நாட்டுகாரர்கள் இரண்டு கைதொலைபேசி வைத்திருப்பார்கள்.

நான் ரெண்டு. ஓண்டு லோக்கல்.... அத கொற்ஸ்பொட்டா பாவிச்சு.... உங்கத்தயான் போனுக்கு கனக்சனை கொடுத்தால்.... உங்கத்தயான் டேற்ரா கட்டணத்த மிச்சம் பிடிக்கலாம்.

Link to comment
Share on other sites

On 2/18/2018 at 6:11 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடைக்காரன் முந்நூறு ரூபாய்கள்  என்று சொல்ல, அந்தப் பெண் விலை கூட என்று கூறியபடி செருப்பை போட்டுவிட்டு நகரத் தொடங்கினார். 

தங்கச்சி குறை நினைக்காதைங்க. நான் உங்களுக்கு வாங்கித் தாறன். நீங்கள் நல்லதா ஒண்டை எடுங்கோ என்றேன் நான். ஒரு நிமிடம் என்னைப் பாத்தவர் பின் செருப்புகளை ஆராய்ந்துவிட்டு ஒரு குதி உயர்ந்த  சாண்டில்சை எடுத்துப் போட்டுப் பார்த்தார். அவருக்கு அளவு சரியாகப் பொருந்தியிருக்க கடைகாறனைப் பார்த்து இதையே எடுக்கிறன் என்றார். நான் கடைகாரரின் பக்கம் திரும்பி எவ்வளவு என்று கேட்டதற்கு 850 என்று பதில் வந்தது. காசை எடுத்துக் குடுத்துவிட்டு கடைக்காரர் தரும் மிச்சக் காசை வாங்கி கைப்பையில் வைத்துவிட்டுத் திரும்பினால் அந்தப் பெண் தூரத்தில் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது.

 

முன்நூறு ருபாய்க்கு வாங்க முடியாத சூழலில் நீங்களாக முன்வந்து நல்லதா ஒன்றை எடுங்கோ என்று சொல்லும்போது விலை கூடியதை எடுத்துவிட்டார்.. நன்றி கூறவில்லை என்று உங்களுக்கு சங்கடம் இருப்பது போல் அவருக்கும் இந்த சம்பவம் சங்கடமாக இருந்திருக்கலாம்.. ஆனால் அந்த செருப்பு அவரிடம் உள்ளவரை மனதுள் உங்களுக்கு நன்றி சொல்வர் என்றே நினைக்கின்றேன்.  எமது சமூகத்தில் பலவிதமான இறுக்கமான இயல்புகள் பண்பாட்டுதளத்தில் இருக்கின்றது அதனால் நீங்கள் உதவ முன்வந்ததை அவர் ஏற்றுக்கொண்டதே உங்கள் காரியத்துக்கான நன்றி என்றே கருதமுடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

நான் சுமேயின் இடத்தில் இருந்திருந்தாலும் ஒரு சிறு புன்னகையையோ அல்லது ஒரு நன்றியுணர்வுடன் கூடிய ஒரு பார்வையையோ எதிர்பார்த்து இருப்பேன். நன்றியை எதிர்பார்க்காமல் இருப்பது மகான்களின் உணர்வாக இருக்கலாம், ஆனால் நன்றியை எதிர்பார்ப்பது சாதாரண மனிதர்களுக்குண்டான இயல்புஇந்த உலகில் எத்தனையோ நல்ல விடயங்கள் இப்படியான சாதாரண மனிதர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.

  emot502.gif    harcelem1.gif

14 minutes ago, சண்டமாருதன் said:

முன்நூறு ருபாய்க்கு வாங்க முடியாத சூழலில் நீங்களாக முன்வந்து நல்லதா ஒன்றை எடுங்கோ என்று சொல்லும்போது விலை கூடியதை எடுத்துவிட்டார்.. நன்றி கூறவில்லை என்று உங்களுக்கு சங்கடம் இருப்பது போல் அவருக்கும் இந்த சம்பவம் சங்கடமாக இருந்திருக்கலாம்.. ஆனால் அந்த செருப்பு அவரிடம் உள்ளவரை மனதுள் உங்களுக்கு நன்றி சொல்வர் என்றே நினைக்கின்றேன்.  எமது சமூகத்தில் பலவிதமான இறுக்கமான இயல்புகள் பண்பாட்டுதளத்தில் இருக்கின்றது அதனால் நீங்கள் உதவ முன்வந்ததை அவர் ஏற்றுக்கொண்டதே உங்கள் காரியத்துக்கான நன்றி என்றே கருதமுடியும். 

levitation.gifvil-mygod.gif

இங்கேயே மனிதரும், மகானை நோக்கி(?) நகர்பவரும் உள்ளனரே..! vil-cornes.gif

நிகழ்வு ஒன்று, அணுகும் பார்வையில் எவ்வளவு வேறுபாடுகள்..?  you.gif

14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ம்க்கும் தந்தார்.

2mains.gif  ஏனம்மா.. இவ்வளவு சலிப்பு..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை வாய்பேசத் தெரியாதவாராகவும் இருக்கலாம் அல்லது அவசர அலுவலாகவும் இருக்கலாம்.  

Link to comment
Share on other sites

"சில வேலைகளில் கூடப் பயணம் செய்வோரைப் பார்க்கும்போது அட எமது மக்கள் இத்தனை அழகாய் ஆடை அணிகிறார்களே என்பதற்கும் அப்பால் நான் இன்னும் கொஞ்சம் நல்ல உடுப்புகளாகக் கொண்டு வந்திருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றாமல் இருந்ததில்லை.

"நான் வேம்படியில் படித்த காலத்தில், யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் கிரிக்கற் போட்டி ஒன்று மத்திய கல்லூரி மைதானத்தில் நடந்தது. அதைப் பார்ப்பதற்கும் எமக்குப் பிடித்தவர்களுக்கு உர்சாகமூட்டுவதர்க்காகவும் நானும் என் நண்பிகளும் சென்றிருந்தோம். போட்டி முடிவடைந்த பின் சுபாஸ் கபேக்குப் போய் நாங்கள் ரோல்சும் ஐஸ்கிறீமும் உண்டுவிட்டு வெளியே வர என் சாண்டில் அறுந்துவிட்டது. சாண்டில்சைப் போட்டுக்கொண்டு மேற்கொண்டு நடக்கவே முடியவில்லை. சாதாரணமாக் பள்ளிக்கு சப்பாத்தே அணிவதால் இப்படியான நிலை முன்பு ஏற்பட்டதுமில்லை. பயங்கார வெய்யில்வேறு. அதைவிட அந்த டவுனுக்குள்ள செருப்பின்றி நடப்பது என்றால் என் கவுரவம் என்ன ஆவது? என்னை சைட் அடிக்கும் பெடியள் கூட பஸ்ஸிலோ ரோட்டிலோ காணலாம் என்ற எண்ணமே பீதியைக் கிளப்பியது."

 

உங்கள் படோபாகார, தம்பட்ட எண்ணங்களுடன், ஒரு இளம் பெண்ணுக்கு தேவையில்லாமல் உதவி செய்தால், அந்த இளம் பெண் மற்றவர்களிடத்தில் இருந்து உதவியை பெறும்போது எவ்வளவு அவமானப்படுவாள், தயவு செய்து எனது மக்களை கோழைகளாக்காதீர். இப்படியான சந்தர்பங்களில், குறைந்தது உங்களுக்கு எனது உதவி தேவையா என்று கேட்டுவிட்டு செய்யுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசயத்தினை எழுதி, நமது பார்வையினை உள்வாங்கி, உங்கள் அடுத்த கதைக்கு தயாராகும்.... எழுத்தாரரின் சிந்தனையின் திறமை வெளிப்படுகிறது.

அதேவேளை.... இந்த விடயத்தினை.... சற்று வித்தியாசமாக பார்ப்போமா....

முன்பின் தெரியாத ஒரு பெண்மணிக்கு.... ஒரு இளம் பெண் மீது கரிசனை வருகிறது என்றால் உங்களுக்கு இருக்கும் பார்வை வேறு.... அந்த பெண்ணின் பார்வை வேறு.

அந்த பெண்ணின் நிலையில் இருந்து யாரும் சிந்தித்ததாக, எழுதியதாக தெரியவில்லையே...

எத்தனை படம் பார்க்கிறோம்.... எதனை விடயங்கள் வாசிக்கிறோம்...

யாரிந்த பெண்.. எதற்க்காக எனக்கு, ....சாதாரணமான என்றால் பரவாயில்லை..... விலை கூடிய காலணியினை வாங்குகின்றா..... அவரது நோக்கம் என்ன....

முக்கியமாக..... நான் பாதுகாப்பாக இருப்பேனா என்றல்லவா நினைத்து இருப்பார்?

நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன்.... எழுத்தாளர் என்ற வகையில் புரிந்து இருப்பீர்கள்...

வெளிப்படையாக சொல்வதானால்.... கோவிக்காமல்.... சிந்தியங்கள்....

சட்ட ரீதி இல்லா.... சேவைத்தொழில் செய்யும் அம்மணிகள்.... புதிய பெண்களை வலைக்குள் இழுப்பது.... இவ்வகையான உத்திகள் மூலம் தான் என்பதை அந்த பெண் அறிந்து இருக்கலாமே என்பது உங்களுக்கு தோன்ற வில்லையா.... 

(மன்னிக்க வேண்டும்... நீங்கள் உதவி செய்ததாக நினைக்கலாம்... ஆனால்... மேடம் அல்லது ஆண்டி என்று அழைக்கப் படும் அம்மணிகள் இவ்வகையான உதவிகள், பரிசுகள் மூலம் தான் அறிமுகத்தினை உருவாக்குகின்றனர்)

உங்கள் மகளுக்கு இவ்வாறான ஒரு நிலைமையில்.... எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை சொல்லி இருப்பீர்களே... அதனையே அந்தப் பெண்ணின் தாயாரும் சொல்லி கொடுத்து இருக்கலாம் இல்லையா.

இங்கே நன்றிக்கு முன்னாள், பெண் தனது பாதுகாப்பு முக்கியம் என நினைத்து இருக்கலாம் அல்லவா.

ஆகவே நான் சொல்ல வருவது என்னெவெனில்... அந்தப் பெண்ணுக்கு.... நீங்கள் ஒரு 'மேடம்' ஆக தோன்றி இருக்கலாம்.... அந்த சாத்தியத்தினை மறுத்தால்.... நன்றி சொல்லவில்லை என்ற கோபம் வருவது நியாயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

  emot502.gif    harcelem1.gif

levitation.gifvil-mygod.gif

இங்கேயே மனிதரும், மகானை நோக்கி(?) நகர்பவரும் உள்ளனரே..! vil-cornes.gif

நிகழ்வு ஒன்று, அணுகும் பார்வையில் எவ்வளவு வேறுபாடுகள்..?  you.gif

2mains.gif  ஏனம்மா.. இவ்வளவு சலிப்பு..?

நான் இப்பதிவைப் போடும்போது இத்தனை விதமானவிமர்சனங்க்களை எதிர்பார்க்கவே இல்லை.

சலிப்பு மனிதர்களுக்கு வருவதுதானே அண்ணா.

14 hours ago, கந்தப்பு said:

ஒரு வேளை வாய்பேசத் தெரியாதவாராகவும் இருக்கலாம் அல்லது அவசர அலுவலாகவும் இருக்கலாம்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Knowthyself said:

"சில வேலைகளில் கூடப் பயணம் செய்வோரைப் பார்க்கும்போது அட எமது மக்கள் இத்தனை அழகாய் ஆடை அணிகிறார்களே என்பதற்கும் அப்பால் நான் இன்னும் கொஞ்சம் நல்ல உடுப்புகளாகக் கொண்டு வந்திருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றாமல் இருந்ததில்லை.

"நான் வேம்படியில் படித்த காலத்தில், யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் கிரிக்கற் போட்டி ஒன்று மத்திய கல்லூரி மைதானத்தில் நடந்தது. அதைப் பார்ப்பதற்கும் எமக்குப் பிடித்தவர்களுக்கு உர்சாகமூட்டுவதர்க்காகவும் நானும் என் நண்பிகளும் சென்றிருந்தோம். போட்டி முடிவடைந்த பின் சுபாஸ் கபேக்குப் போய் நாங்கள் ரோல்சும் ஐஸ்கிறீமும் உண்டுவிட்டு வெளியே வர என் சாண்டில் அறுந்துவிட்டது. சாண்டில்சைப் போட்டுக்கொண்டு மேற்கொண்டு நடக்கவே முடியவில்லை. சாதாரணமாக் பள்ளிக்கு சப்பாத்தே அணிவதால் இப்படியான நிலை முன்பு ஏற்பட்டதுமில்லை. பயங்கார வெய்யில்வேறு. அதைவிட அந்த டவுனுக்குள்ள செருப்பின்றி நடப்பது என்றால் என் கவுரவம் என்ன ஆவது? என்னை சைட் அடிக்கும் பெடியள் கூட பஸ்ஸிலோ ரோட்டிலோ காணலாம் என்ற எண்ணமே பீதியைக் கிளப்பியது."

 

உங்கள் படோபாகார, தம்பட்ட எண்ணங்களுடன், ஒரு இளம் பெண்ணுக்கு தேவையில்லாமல் உதவி செய்தால், அந்த இளம் பெண் மற்றவர்களிடத்தில் இருந்து உதவியை பெறும்போது எவ்வளவு அவமானப்படுவாள், தயவு செய்து எனது மக்களை கோழைகளாக்காதீர். இப்படியான சந்தர்பங்களில், குறைந்தது உங்களுக்கு எனது உதவி தேவையா என்று கேட்டுவிட்டு செய்யுங்கள்.

 

இதில் நான் நடந்ததைத்தான் எழுதியுள்ளேனே தவிர மற்றவர்கள் என்னைப்பற்றி உயர்வாக என்ன வேண்டும் என்று பொய்யும் புனைவுமாக எழுதவில்லை. இத்தனை பேருக்குத் தோன்றாமல் உங்களுக்கு மட்டும் நான் தம்பட்டம் அடிப்பது போன்று இருக்கிறது என்றால் நீங்கள் எனக்கு எதிராக அல்லது என்னை மட்டம் தட்டவேண்டும் என்னும் நோக்கமே அதில் தெரிகிறது. அதற்காக எனக்கு உங்களிடம் கோபமே வரவில்லை. tw_blush:

வந்து நின்று ஒரு மாதம் பார்த்ததிலேயே அங்கு உள்ளவர்கள் பற்றி நன்கு தெரிந்து விட்டது.

சியவேளை நீங்கள் பெண்ணாக இருந்தால் இரண்டாவது பந்தியில் கடைசியில் நான் எழுதியிருப்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். நீங்கள் தான் ஒளிந்தே இருக்கிறீர்களே. உங்கள் பெயரையாவது மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி வையுங்கள். நான் என்ன சொல்ல ????

கடைசிப் பந்தியில் நீங்கள் எழுதியிருப்பதை வாசிக்க உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா ?????

ஆனாலும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

10 hours ago, Nathamuni said:

ஒரு விசயத்தினை எழுதி, நமது பார்வையினை உள்வாங்கி, உங்கள் அடுத்த கதைக்கு தயாராகும்.... எழுத்தாரரின் சிந்தனையின் திறமை வெளிப்படுகிறது.

அதேவேளை.... இந்த விடயத்தினை.... சற்று வித்தியாசமாக பார்ப்போமா....

முன்பின் தெரியாத ஒரு பெண்மணிக்கு.... ஒரு இளம் பெண் மீது கரிசனை வருகிறது என்றால் உங்களுக்கு இருக்கும் பார்வை வேறு.... அந்த பெண்ணின் பார்வை வேறு.

அந்த பெண்ணின் நிலையில் இருந்து யாரும் சிந்தித்ததாக, எழுதியதாக தெரியவில்லையே...

எத்தனை படம் பார்க்கிறோம்.... எதனை விடயங்கள் வாசிக்கிறோம்...

யாரிந்த பெண்.. எதற்க்காக எனக்கு, ....சாதாரணமான என்றால் பரவாயில்லை..... விலை கூடிய காலணியினை வாங்குகின்றா..... அவரது நோக்கம் என்ன....

முக்கியமாக..... நான் பாதுகாப்பாக இருப்பேனா என்றல்லவா நினைத்து இருப்பார்?

நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன்.... எழுத்தாளர் என்ற வகையில் புரிந்து இருப்பீர்கள்...

வெளிப்படையாக சொல்வதானால்.... கோவிக்காமல்.... சிந்தியங்கள்....

சட்ட ரீதி இல்லா.... சேவைத்தொழில் செய்யும் அம்மணிகள்.... புதிய பெண்களை வலைக்குள் இழுப்பது.... இவ்வகையான உத்திகள் மூலம் தான் என்பதை அந்த பெண் அறிந்து இருக்கலாமே என்பது உங்களுக்கு தோன்ற வில்லையா.... 

(மன்னிக்க வேண்டும்... நீங்கள் உதவி செய்ததாக நினைக்கலாம்... ஆனால்... மேடம் அல்லது ஆண்டி என்று அழைக்கப் படும் அம்மணிகள் இவ்வகையான உதவிகள், பரிசுகள் மூலம் தான் அறிமுகத்தினை உருவாக்குகின்றனர்)

உங்கள் மகளுக்கு இவ்வாறான ஒரு நிலைமையில்.... எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை சொல்லி இருப்பீர்களே... அதனையே அந்தப் பெண்ணின் தாயாரும் சொல்லி கொடுத்து இருக்கலாம் இல்லையா.

இங்கே நன்றிக்கு முன்னாள், பெண் தனது பாதுகாப்பு முக்கியம் என நினைத்து இருக்கலாம் அல்லவா.

ஆகவே நான் சொல்ல வருவது என்னெவெனில்... அந்தப் பெண்ணுக்கு.... நீங்கள் ஒரு 'மேடம்' ஆக தோன்றி இருக்கலாம்.... அந்த சாத்தியத்தினை மறுத்தால்.... நன்றி சொல்லவில்லை என்ற கோபம் வருவது நியாயம்.

இதில் கோபப்பட என்ன இருக்கு நாதமுனி? நீங்கள் கூறியது போலும் அங்கு நடக்கலாம் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை. நான் இதில் கோபப்பட்டதாக எங்குமே கூறவில்லை. இதில் பதிவு போடும் வரை ஏன் அப்பெண் அப்பிடிச் செய்தார் என்னும் கேள்வி மட்டுமே இருந்துகொண்டிருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.