Jump to content

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்


Recommended Posts

உலகக்கோப்பை: ஜெர்மனி தோல்வியால் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்ற மெக்ஸிகோ! #WorldCup

 

ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்துத் தொடரின் 'F' பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. மெக்ஸிகோ மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதிய ஆட்டம் எக்கத்தரின்பூர்க் மைதானத்திலும், ஜெர்மனி மற்றும் தென் கொரியா அணிகள் ஆடிய ஆட்டம் கஸான் மைதானத்திலும் நடைபெற்றன. 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றுக்குத் தகுதிபெற இப்பிரிவில் மூன்று அணிகளுக்கு இடையேயும் கடும்போட்டி நிலவியதால், இவ்விரண்டு ஆட்டங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்பட்டன.

இரண்டு ஆட்டங்கள் முடிவுபெற்றிருந்த நிலையில், 6 புள்ளிகளுடன் மெக்ஸிகோ அணி முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற இன்றைய ஆட்டத்தில் 'டிரா' செய்தாலே போதும் என்ற நிலையில் அந்த அணி களமிறங்கியது. அதே நேரத்தில் இப்போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்வீடன் அணி களமிறங்கியது.

ஆட்டம் தொடங்கிய சில நொடிகளில் மெக்ஸிகோ ஒரு விரும்பத்தகாத வரலாற்றைப் படைத்தது. மேட்ச் தொடங்கி 13 நொடிகளே ஆனபோது மெக்ஸிகோ அணியின் கலர்டோவுக்கு, ரெஃப்ரி யெல்லோ கார்டு வழங்கினார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக விரைவில் வழங்கப்பட்ட கார்டு இதுவாகும். தொடக்கம் முதலே அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்ட போதும், இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. கோல் எதுவுமின்றி முதல்பாதி முடிவுக்கு வந்தது.

 

 

உலகக்கோப்பை : கோல் அடித்த மகிழ்ச்சியில் ஸ்வீடனின் லுட்விக் அகஸ்டின்சன்

இரண்டாம் பாதி தொடங்கியதும் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிக கோல்களைத் தடுத்த கோல் கீப்பரான மெக்ஸிகோவின் கிலெர்மோ ஓச்சோவாவின் ( Guillermo Ochoa), அரண் உடையத் தொடங்கியது. 50-வது நிமிடத்தில் கோல் கம்பத்துக்கு அருகே இருந்த ஸ்வீடனின் லுட்விக் அகஸ்டின்சன் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். ஸ்வீடன் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

60-வது நிமிடத்தில் மெக்ஸிகோ அணியின் மொரேனோ செய்த தவறால், ஸ்வீடனுக்கு பெனால்டி வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஸ்வீடன் அணியின் கேப்டன் ஆண்ட்ரே கிரான்க்விஸ்ட், இரண்டாவது கோலை அடித்தார். அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் ஸ்வீடன் அணியின் வாய்ப்பு பிரகாசமானது.

இதனால் மெக்ஸிகோ அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒருவேளை தென்கொரியா அணிக்கு எதிராக ஜெர்மனி வெற்றி பெற்றால் கோல் வித்தியாச கணக்குப்படி ஜெர்மனி அடுத்த சுற்றுக்கும், மெக்ஸிகோ லீக் போட்டிகளோடு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஸ்வீடன் மேலும் கோல் அடிக்காமல் பார்த்துக்கொள்வதோடு, ஒரு கோலாவது அடிக்க வேண்டும் என மெக்ஸிகோ அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டது.

அல்வரேஷ் அடித்த சேம் சைடு கோல்

ஸ்வீடன் வீரர்கள் மெக்ஸிகோவின் எல்லைக்குள்ளேயே வலம் வந்தனர். இந்நிலையில், 74-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணியிடமிருந்து டிஃபண்ட் செய்ய முயன்று சேம் சைடு கோல் போட்டார் மெக்ஸிகோவின் அல்வரேஷ். இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் வலுவான நிலைக்குச் சென்றது. ஆட்டநேர இறுதிவரை மெக்ஸிகோவால் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. 3-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்ற ஸ்வீடன் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதன் மூலம் ஸ்வீடன் கடைசியாகப் பங்கேற்ற நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் 'நாக்-அவுட்' சுற்றுக்குத் தகுதிபெற்று சாதனைப் படைத்திருக்கிறது.

வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் ஸ்வீடன் வீரர்கள்

மெக்ஸிகோ மற்றொரு போட்டியின் முடிவுக்காகக் காத்திருந்தது. நல்லவேளையாக நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியா வீழ்த்தியது. இதனால் இரண்டாம் இடத்துக்குப் போட்டி ஏதுமின்றி நூலிழையில் தப்பித்து 'ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்குத் தகுதிபெற்றது மெக்ஸிகோ.

https://www.vikatan.com/news/sports/129066-fifa-world-cup-match-report-sweden-beats-mexico-by-3-goals.html

Link to comment
Share on other sites

  • Replies 262
  • Created
  • Last Reply

ஃபிஃபா உலகக் கோப்பை : சாம்பியன்களுக்கு தொடரும் சாபக்கேடு ஜெர்மனியை பதம்பார்த்தது

ஜெர்மனிபடத்தின் காப்புரிமைALLSPORT/GETTY IMAGES

லீக் சுற்றில் ஜெர்மனி தோல்வி அடைந்ததன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டது.

2014ஆம் ஆண்டு உலக கோப்பை சாம்பியன் அணி தென் கொரியாவுடனான லீக் சுற்றில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடையவே, லீக் சுற்றோடு வெளியேற்றப்பட்டது. மேலும் தான் இடம்பெற்றிருக்கும் பிரிவில் மூன்றில் ஒரு போட்டியை மட்டும் வென்று கடைசி இடத்தையும் பிடித்திருக்கிறது.

இச்செய்தியின் பொருள் நடப்பு உலகக்கோப்பை சாம்பியனுக்கு தொடரும் சாபத்தில் ஜெர்மனியும் தப்பவில்லை.

குறிப்பாக 21-வது நூற்றாண்டில் இந்த சாபக்கேடு ஆதிக்கம் செலுத்திவருகிறது.

2002க்கு முன்னதாக கால்பந்து உலகக் கோப்பை சரித்திரத்தில் உலகக் கோப்பையை வென்ற அணி இரண்டு முறை மட்டுமே தனது முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

1938 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹங்கேரியை 4-2 என்ற கணக்கில் இத்தாலி வென்றது. 1942 மற்றும் 1946 ஆண்டுகளில் உலகக் கோப்பை நடைபெறவில்லை. 1950 கால்பந்து உலகக்கோப்பையில் நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. இதில் அப்போதைய நடப்பு சாம்பியன் இத்தாலி, சுவீடன், பராகுவே மற்றும் இந்தியா ஆகியவை ஒரு பிரிவில் இடம்பெற்றன.

இந்தியா உலகக்கோப்பையில் விளையாடவில்லை. இத்தாலி லீக் சுற்றில் ஒரு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியிலும் தோல்வியும் அடையவே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

முந்தைய இரண்டு உலக கோப்பைகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தபோதிலும் 1966-ல் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை பிரேசில் லீக் சுற்றோடு வெளியேறியதால் இழந்தது. 1966-ல் ஹங்கேரி மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு அடுத்தபடியாக லீக் சுற்றில் இடம்பிடித்திருந்தது பிரேசில்.

ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் நடந்த 2002 உலகக்கோப்பையில் பிரான்ஸ் முதல் ஆட்டத்திலேயே செனெகலிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. 1998 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரேசிலை 3-0 எனும் கோல் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டம் வென்றிருந்தது பிரான்ஸ். ஆனால் 2002 உலக கோப்பையில் டென்மார்க், செனெகல், உருகுவே அணிகளுக்கு அடுத்தடியாக லீக் சுற்றில் தனது பிரிவில் கடைசி இடம் பிடித்தது பிரான்ஸ்.

2010-ல் சாபக்கேடு மீண்டும் துரத்தியது. இந்த முறை இத்தாலி மாட்டிக்கொண்டது. பிரான்ஸை வீழ்த்தி 2006-ல் சாம்பியனான இத்தாலி அணி பராகுவே மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் டிரா செய்தது. மேலும் ஸ்லோவோக்கியாவுடனான போட்டியில் தோல்வியடைந்தது. இதையடுத்து லீக் சுற்றில் கடைசி இடம் பெற்று வெளியேறியது .

ஜெர்மனிபடத்தின் காப்புரிமைLUIS ACOSTA

நான்கு வருடங்கள் உருண்டோடின. இப்போது ஸ்பெயின். ஈரோ கோப்பையை இரண்டு முறை வென்று எட்டு ஆண்டுகளாக கால்பந்து உலகில் கோலோச்சிய ஸ்பெயின் அணி 2014 உலககோப்பை லீக் சுற்றில் நெதர்லாந்திடம் 1 -5 என உதை வாங்கியது. சிலியிடம் 2-0 என உதை வாங்கவே லீக் சுற்றோடு நாடு திரும்பியது.

இப்போது மீண்டும் அச்சாபக்கேடு நடந்துவிட்டது. சுவீடன், மெக்சிகோ , தென் கொரியா ஆகிய அணிகள் ஜெர்மனிக்கு மிகப்பெரிய சவால் அளிக்கக்கூடிய அணிகளாக கருதப்படவில்லை. மெக்சிகோவிடம் 0-1 என ஜெர்மனி தோற்றாலும் சுவீடனை 2-1 என வென்றதால் ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் பெரிதாக எழவில்லை.

ஆனால் தனது முந்தைய எட்டு உலக கோப்பை போட்டிகளில் ஒன்றில் கூட ஜெயிக்காத தென் கொரியா ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தது. ஜெர்மனி மீண்டெழ முயற்சிப்பதற்குள் இன்னொரு கோல் அடித்து ஜெர்மனி அணியை ரஷ்யாவில் இருந்து லீக் சுற்றோடு நாடு திரும்பச் செய்திருக்கிறது.

சாம்பியன் பட்டம் வென்ற அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பது மிகவும் கடினம் என்பதையே வரலாறு சொல்கிறது. இத்தாலி (1934- 1938) மற்றும் பிரேசில் (1958 -62) ஆண்டுகளில் மட்டுமே தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

அவர்களுடன் இணைய ஜெர்மனிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

https://www.bbc.com/tamil/sport-44636500

Link to comment
Share on other sites

போலந்துடன் இன்று மோதல்; நாக் அவுட் சுற்றில் நுழையுமா ஜப்பான்?

 

 
FBL-JPNTHNAK

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பான், போலந்து அணிகள் மோதவுள்ளன.

ரஷ்யாவின் வோல்கோகிராட் அரேனா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. ஹெச் பிரிவில் செனகல், ஜப்பான், கொலம்பியா, போலந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. போலந்து அணி ஏற்கெனவே 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறி விட்டது.

 

ஜப்பான் 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிராவைப் பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது. செனகல் அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிராவைப் பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் கொலம்பியா அணியோ இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி ஒரே ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி கண்டு அந்த அணி 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

போலந்து அணி ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு பயன் இல்லை. அதே நேரத்தில் ஜப்பான் அணி டிரா செய்தாலே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

 

செனகல் - கொலம்பியா

மற்றொரு லீக் ஆட்டத்தில் செனகல், கொலம்பியா அணிகள் மோதவுள்ளன. சமாரா நகரில் இந்த ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் செனகல் அணி டிரா செய்தாலே அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும். இதுகுறித்து செனகல் அணியின் பயிற்சியாளர் அலியோ சிஸ்ஸே கூறும்போது, “எங்கள் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக சாடியோ மானே உள்ளார். அவர் மீது எங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஆட்டத்தில் அவர் எங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவார் ” என்றார்.

அதே நேரத்தில் கொலம்பியா அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. செனகல் அணி தோல்வி கண்டு, மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜப்பானும் தோல்வி கண்டால் செனகல், ஜப்பான் ஆகிய இரண்டுமே 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது கோல் வித்தியாச அடிப்படையில் எந்த அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்பது தீர்மானிக்கப்படும். - ஏஎப்பி

http://tamil.thehindu.com/sports/article24276835.ece

Link to comment
Share on other sites

தென் கொரியாவிடம் தோற்கும் அளவுக்கு ஜெர்மனி மோசமான அணியா?- 3 காரணங்கள்

 

 
germany%20fan

ஜெர்மனி தோல்வியைத் தாங்க முடியாத அந்நாட்டு ரசிகை அழுகை. | ராய்ட்டர்ஸ்.

உலகக்கோப்பைக் கால்பந்து 2018-ன் முதல் அதிர்ச்சி இன்று நிகழ்ந்தது. வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலையில் இறங்கிய ஜெர்மனி, தென் கொரியாவிடம் கடைசி நிமிட கோல்களில் 2-0 என்று உதை வாங்கி வெளியேறியது.

1938க்குப் பிறகு ஜெர்மனி உலகக்கோப்பையிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. அதே போல் கடந்த 5 உலகக்கோப்பைத் தொடர்களில் கடந்த முறை உலகக்கோப்பை சாம்பியன்கள் முதல் சுற்றிலேயே வெளியேறிய வரலாற்றுப் பட்டியலில் ஜெர்மனியும் இடம்பெற்றது.

 
 

மெக்சிகோ அங்கு இதே பிரிவில் ஸ்வீடனிடம் 3-0 என்று படுதோல்வியடைந்தாலும் ஜெர்மனி வெளியேறியதையடுத்து மெக்சிகோவும் ஸ்விடனும் இந்தப் பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறின, ஒருவேளை ஜெர்மனி, தென் கொரியாவை வீழ்த்தியிருந்தால், நன்றாக வீழ்த்தியிருந்தால் மெக்சிகோ வெளியேறியிருக்கும், ஆகவே மெக்சிகோ அணி ஆசிய அணிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

பிரிவு எஃப்-ல் நேற்று இறுதித் தீர்ப்பு நாள். கடைசி வரை கோல் இல்லாமல் இரு அணிகளும் மோதின, ஆனால் திடீரென 2 கோல்களை தென் கொரியா அடித்தது, உலக சாம்பியன் ஜெர்மனி அதிர்ந்தது, அந்நாட்டு ரசிகர்கள் கடும் கோபாவேசமடைந்தனர், அவர்களால் நம்ப முடியவில்லை, நம் இந்த அணி இவ்வளவு மோசமா என்று அவர்களால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்ல.

அதிகம் அறியாத, இந்தப் போட்டிக்குப் பிறகு நினைவில் வைத்துக் கொள்ள முடியாத பெயர்களான யங் க்வான் கிம், ஹியூங்-மின் சன் தலா 1 கோலை அடித்து ஜெர்மனிக்கு இடுகாட்டைக் காட்டினர். வாழ்நாளில் மறக்க முடியாத உலகக்கோப்பை வெற்றி தென் கொரியாவுக்கு, மற்றொரு புறம் ஜோக்கிம் லோ அணிக்கு வலியும், அழுகையும், வருத்தங்களும் துயரங்களுமே எஞ்சியது.

ஏன் மோசமான தோல்வி?

ஜெர்மனி இந்த உலகக்கோப்பைக்கு கடந்த உலகக்கோப்பை சாம்பியனாக மட்டும் வரவில்லை, கான்பெடரேஷன் கோப்பையை வென்ற அணியாகவும் வந்தது. ஜெர்மனியின் கால்பந்து அகாடமி அமைப்பு முறை உலகமே வியந்தோதும், பொறாமைப்படும் ஓர் அமைப்பாகும். ஆனால் அதிலிருந்து ஓர் இரண்டாம் தர அணியா என்பதை மக்களால் நம்ப முடியவில்லை.

மாறாக தென் கொரியா அணி இந்த உலகக்கோப்பையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ஸ்வீடன், மெக்சிகோ அணிகளிடம் தோல்வி அடைந்தது. உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றில் கத்தார், சீனாவிடம் தோல்வி அடைந்த அணியாகும் தென் கொரியா.

germany%20playersjpg

ஜெர்மனியின் ஏமாற்ற வீரர்கள் வெர்னர், ஹம்மெல்ஸ். | கெட்டி இமேஜஸ்

 

எதிரியான டோனி குரூஸ், வீடியோ ரெஃபரல்; தண்டமான வெர்னர், ஹம்மெல்ஸ்

தென் கொரிய வீரர் கிம் யங் க்வானின் கோல் முதலில் ஆஃப் சைடு என்று அறிவிக்கப்பட்டு கோல் மறுக்கப்பட்டது. ஆனால் வீடியோ ரெஃபரல் கேட்ட போதுதான் தெரிந்தது அது ஜெர்மனி வீரர் டோனி குரூஸ்தான் அவரிடம் பந்தைக் கொடுத்தார் என்று. அன்று ஸ்வீடனுக்கு எதிராகவும் முதல் கோலை ஸ்வீடன் அடிக்கக் காரணமாக இருந்தவர் டோனி குரூஸ், ஆனால் அதனை ஈடுகட்டும் விதமாக இந்த உலகக்கோப்பையின் பேசப்படும் ஒரு கோலை கடினமான கோணத்திலிருந்து அடித்து ஜெர்மனிக்கு ஒரு வெற்றியையும் பெற்றுத்தந்தார், மீண்டும் டோனி குரூஸ் மக்களின் கோபத்துக்கு தற்போது ஆளாகியுள்ளார்.

தென் கொரியாவின் 2வது கோல் ஜெர்மனி கோல் கீப்பரின் கேலிக்கூத்தால் விளைந்ததாகும். ஜூ சே ஜோங்கின் லாங் பாஸை சன் ஹியூங் மின் துரத்திச் சென்று காலியாக இருந்த வலைக்குள் திணித்தார், கடந்த உலகக்கோப்பையில் பெரிய ஜாம்பவனாக இருந்த நியூயர் கடைசியில் காமெடியனாக இன்று மாறிவிட்டார். கடைசியில் கூட ஜெர்மனிக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது, அதனை ஹம்மெல்ஸ் வீணடித்தார். 8 அடிக்கு முன்னாள் கிடைத்த வாய்ப்பாகும் அது.

மேலும் ஜெர்மனி தடுப்பு வியூகத்தில் இருவர் சரியாக இல்லை. தாமஸ் முல்லர் இந்த உலக்கக்கோப்பையில் ஜெர்மனியின் சுமையாகத் திகழ்ந்தார், அவர் அதனால் உட்கார வைக்கப்பட்டார். நியூயர் தனது வழக்கமான டச்சில் இல்லை, அவருக்குப் பதிலாக மார்க் ஆந்த்ரே டெர்-ஸ்டீஜனை கொண்டு வந்திருக்க வேண்டும்.

மேலும் ஆட்டம் முழுதும், தென் கொரியாவை எதிர்த்தாக்குதல் நடத்த விடக்கூடாது என்பதுதான் உத்தியாக இருந்தது.

அதே போல் வெர்னர் சரியான ஸ்ட்ரைக்கர் அல்ல என்றும் கூறப்படுகிறது, அவர் வலது புறமும் இடது புறமும் செல்கிறார், இதனால் நடுவில் நல்ல ஸ்ட்ரைக்கர் இல்லை என்று நிபுணர்களால் கருதப்படுகிறது.

ஸ்வீடனுக்கு எதிராக வென்ற போட்டியில் மெசுட் ஓஸில், சமி கேடிடா ஆடவில்லை, உட்கார வைக்கப்பட்டனர், ஆனால் நேற்றைய முக்கியப் போட்டியில் இவர்களைக் கொண்டுவந்தது பயனளிக்கவில்லை. இருவரிடமும் வேகமும் இல்லை உத்வேகமும் இல்லை.

தென் கொரிய வெற்றிக்கான 3 காரணங்கள்:

தென் கொரிய வீரர்கள் யங் சன் யுன், யங் க்வான் கிம் ஆகியோர் பேக் லைனைக் கவனித்துக் கொள்ள ஃபுல் பேக் வீரர்கள் அங்கு குவிய தென் கொரிய பாக்ஸ் நெரிசலாக அமைந்து ஜெர்மனி ஊடுருவ முடியாமல் போனது. ஜெர்மனி கிராஸ்கள் அனைத்தும் பாக்ஸிற்குள் வந்தாலும் ஜெர்மனி ஸ்ட்ரைக்கர்களை கொரியா சிறபபாக மார்க் செய்தது.

தென் கொரியா ஒரு காட்டுத்தனமான கால்பந்தாட்டத்தை வெளிப்படுத்தி பயமற்ற அணுகுமுறையில் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று ஆடியதால் உத்வேகம் கூடுதலாக இருந்த்து. இந்தக் காட்டுத்தனமான கால்பந்தினால் 4 வீரர்களுக்கு மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டது. இது ஒரு உத்தியாகவே கடைபிடிக்கப்பட்டது, இது ஜெர்மனியை நிலைகுலையச் செய்தது. இப்படி ஆடும் அணியை வீழ்த்துவது கடினம்.

இரண்டாவது தென் கொரியா தனது தலைஷாட்களை அற்புதமாகக் கட்டுப்படுத்தியது ஜெர்மனி ஷாட்களை தடுத்தது, அதன் கோல் கீப்பர் சோ ஹியூன் வூ அசாதாரணமான கோல் கீப்பர். குறைந்தது 7 சேவ்களை அவர் செய்திருப்பார். மேலும் ஜெர்மனி வீரர்களை பயமற்ற முறையில் தடுத்தனர் தென் கொரிய வீரர்கள்.

மூன்றாவதாக, ஹியூங் மின் சன், சியோன் மின் மூன் ஆகிய இருவர்களும் தங்களுக்குள்ளேயே பந்தை ஒத்தைக்கு ஒத்தை ஆடி எடுத்து சென்ற போது நடுக்களத்தில் உள்ள வீரர்கள் ஜெர்மன் கோலை நோக்கி முன்னேற நிறைய நேரமும் வாய்ப்பும் இருந்தது, அப்போதெல்லாம் ஜெர்மனி பந்தை அவர்களிடமிருந்து பிடுங்க முயற்சிக்காமல் தடுக்க முயலாமல் வாளாவிருந்தது. முதல் பாதியிலேயே தென் கொரியா கோல் அடித்திருக்கும்.

தென் கொரிய கோல் கீப்பர் சோ ஹியுன் வூவின் ஒரு சேவ் மிகவும் முக்கியமானது. ஜெர்மனி வீரர் கோரெட்ஸ்கா பாக்ஸில் சுதந்திர ஜீவியாக இருந்த போது தலையால் முட்டிய ஒரு பந்து நிச்சயம் கோல்தான். ஆனால் பறந்து தடுத்தார் சோ ஹியூன்.

மேலும் ஹம்மெல்ஸ், கோம்ஸ், வெர்னர் ஆகியோரது கோல் இலக்கு முயற்சிகளையும் சோ ஹியுன் முறியடித்தார். இவரை முறியடிக்க இந்த ஜெர்மனி தரமான அணியாகத் தெரியவில்லை.

http://tamil.thehindu.com/sports/article24276837.ece

 

 

``ஃபிரெண்ட்லி மேட்ச் போல விளையாடியதால் வெளியேறியது ஜெர்மனி!’’

 

வெற்றிபெறவில்லை எனில் வெளியேறிவிடுவோம் என்ற சூழலில் அர்ஜென்டினா எப்படி விளையாடியது? அவர்கள் எவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் களத்தில் 100 சதவீதத்தைக் கொடுத்தனர். ஆனால், ஜெர்மனி…?

``ஃபிரெண்ட்லி மேட்ச் போல விளையாடியதால் வெளியேறியது ஜெர்மனி!’’ - ராவணன் #GERKOR
 

ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயினை அடுத்து ஜெர்மனியும், குரூப் சுற்றுடன் வெளியேறிய உலக சாம்பியன்கள் வரிசையில் இடம்பிடித்துவிட்டது. ஜெர்மனி – கொரியா போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிந்ததும் டிவியில் ஒரு அனாலிசஸ் போட்டார்கள். அதில், ஜெர்மனி 300 முறையும், கொரியா 40 முறையும் பந்தை டச் செய்திருந்தன. பால் பொசஷனில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்தியும் ஜெர்மனி கோல் அடிக்கவில்லை. #GERKOR

கொரியா கண்டிப்பாக முழு அளவில் தயாராக வரும் என தெரிந்ததே. ஏனெனில், கடந்த போட்டி முடிந்தபின் அவர்களது அதிபர், டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்று கொரிய அணியைச் சந்தித்தார். அந்த சந்திப்பு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. அப்போதே தெரியும் ஜெர்மனிக்கு எதிராக கொரியா அக்ரசிவாக களமிறங்கும் என்று…

#GERKOR

 

 

1998 உலகக் கோப்பை முடிந்து 2002 உலகக் கோப்பையில ஃபிரான்ஸ் எப்படி விளையாடியதோ அதேபோல, இப்போது ஜெர்மனி விளையாடுகிறது. ஜெர்மனி ஆட்டத்தில் ஒரு வேகமே இல்லை. என்னதான் பால் பொசஷனில் கில்லியாக இருந்தாலும், அட்டாக்கிங்கில், ஃபைனல் தேர்டில் எந்தளவு வாய்ப்புகளை உருவாக்குகிறோமோ, எந்தளவு வாய்ப்புகளை கன்வெர்ட் செய்கிறோமோ அதுதான் வெற்றிக்கு உதவும்.

ரொனால்டோ, மெஸ்ஸி போல ஜெர்மனி அணியில் இன்டிவிஜுவல் பிளேயரும் யாரும் இல்லை. கடந்த உலகக் கோப்பையில் ஜெர்மனி ரசிகர்கள், `எங்களிடம் ரொனால்டோ இல்லை. மெஸ்ஸி இல்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக அணியாக விளையாடினோம். வென்றோம்’ என்றார்கள். அதுதான் இப்போது பிரச்னை. ஜெர்மனி உலக சாம்பியன் என்பதால், எதிர்த்து விளையாடும் அணிகள் ஜெர்மனியின் இன் அண்ட் அவுட் எல்லாவற்றையும் பக்காவாக அலசி, பலம், பலவீனத்தைப் பிரித்து மேய்ந்து இந்த டோர்னமென்ட்டுக்கு வந்திருக்கும்.

ஜெர்மனி கோச் புது வீரர்களை அறிமுகப்படுத்தி, ஃபார்மேஷனை அடிக்கடி மாற்றி, வியூகங்களை வகுக்காதவரை, எதிரணியின் திட்டமிடல் எளிதாகவே இருக்கும். ஜெர்மனி இந்த இடத்தில் சறுக்கிவிட்டது. ஏனெனில், ஜெர்மனி அணியில் புது வீரர்கள் களமிறங்கவில்லை. பலரும் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடியவர்கள். அவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

#GERKOR

ஃபிரான்ஸ் உலகக் கோப்பை வென்றபின் புதிதாக ஓர் அணியை உருவாக்க எத்தனை வருடங்கள் ஆகியிருக்கின்றன தெரியுமா? பிரேசிலும் அதேதான். அணிக்குப் புது ரத்தம் பாய்ச்சி, அணியை ரீஅரேஞ்ச் செய்தது. ஒவ்வொரு உலகக் கோப்பைக்கும் அணியில் ஏதாவது ஒரு மாற்றம் இருக்க வேண்டும். ஏனெனில் சிறிய அணிகள் கூட, உலக சாம்பியனை எதிர்கொள்ள தயாராகவே வருகின்றன.

ஐ.எஸ்.எல் போன்ற தொடர்களிலும் கூட, ஒவ்வொரு வருடமும் எதிரணியின் பலம், பலவீனத்தை அலசி வருகிறார்கள். அப்படியிருக்க, சாம்பியன் அணி ஒவ்வொரு முறையும் தங்களை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். எளிதில் கணிக்ககக் கூடிய அளவில் இருக்கக் கூடாது. இதுதான் உலக சாம்பியன்கள் குரூப் சுற்றிலேயே வெளியேற முக்கிய காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஜெர்மனி அணியில் ஆறு மாற்றங்கள் செய்திருந்தார். எதற்காக இந்த மாற்றம் என்பது குழப்பமாகவே இருந்தது. ஆட்டமும் குழப்பமாகவே இருந்தது. பந்தை டச் செய்துகொண்டே இருந்தார்கள். பொசஷன் சதவீதமும் அதிகம் இருந்தது.

#GERKOR

ஃபுட்பாலைப் பொறுத்தவரை டிஃபன்ஸில் எப்படி இருக்கிறோம், மிட்ஃபீல்டில் எப்படி இருக்கிறோம் என்பதை விட அட்டாக்கிங்கில் எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம். ஃபைனல் தேர்டில் எவ்வளவு வேகமாக, எவ்வளவு துரிதமாக இருக்கிறோமோ அதுதான் முக்கியம். ஜெர்மனி கவுன்டர் அட்டாக்கில் கூட வேகமாக செயல்படவில்லை. `பால் எடுக்கிறாங்க, பாஸ் போடுறாங்க, ஆடுறாங்க, ஆடுறாங்க, ஆடிட்டே இருக்காங்க’ என்பதுதான், ஜெர்மனியின் ஆட்டத்தைப் பற்றிய ரசிகர்கள் கமென்ட். அவர்கள் சொல்வதைப் போல, ஜெர்மனி ஆட்டம் பார்க்க நன்றாக இருக்கிறது. ஆனால், இது உலகக் கோப்பை. அதுவும் Do or die போட்டி. ஃபிரெண்ட்லி மேட்ச் அல்ல. ஜெர்மனி ஃபிரெண்டலி மேட்ச்சைப் போலவே விளையாடியது. ப்ரி சீசனில் இப்படி ஆடினால் ஓகே. உலகக் கோப்பையில் இப்படி ஆடக் கூடாது. அதுவும் டிஃபண்டிங் சாம்பியன் இப்படி ஆடக் கூடாது.

முதல் பாதியில் ஜெர்மனி கோல் அடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏற்கெனவே சொன்னது போல, இந்த மாதிரி டோர்னமென்டகளில் ஆரம்பத்திலேயே கோல் அடிப்பது முக்கியம். இது லீக் அல்ல. உலகக் கோப்பை. ஒரு போட்டியில் தோற்றால் அதிலிருந்து மீண்டு வர நேரம் இல்லை. இங்கு ஒவ்வொரு புள்ளியும் முக்கியம். மெக்ஸிகோவுடன் தோற்றதே பெரிய பிரச்னை. குறைந்தபட்சம் டிரா செய்திருந்தாலே, இவ்வளவு சிக்கல் இருக்காது.

ஜெர்மனியின் தோல்விக்கு பயிற்சியாளரைக் குறை சொல்ல முடியாது. ஏனெனில், புதிய வீரர்கள் என்று யாருமில்லை. எல்லாருமே எதாவது ஒரு லீக்கில் விளையாடிய அனுபவம் நிறைந்தவர்கள். பலர் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடியிருக்கிறார்கள். அப்படியொரு அணி இருந்தும் தோற்றது ஏற்கத்தக்கதல்ல. தோல்விக்கு பயிற்சியாளர் மட்டுமல்ல ஒவ்வொரு வீரரும்  பொறுப்பேற்க வேண்டும். முல்லரை ஏன் பிளேயிங் லெவனில் இறக்கவில்லை எனக் குறை சொல்லலாம். முதலிரண்டு போட்டிகளில் மட்டும் முல்லர் என்ன செய்தார் என்ற கேள்வியும் எழும் அல்லவா? ஆக, பயிற்சியாளரை குறை சொல்ல முடியாது. களமிறங்கிய வீரர்கள் தங்களை நிரூபிக்கத் தவறி விட்டனர். அசால்ட்டாக இருந்து விட்டனர். அக்ரசிவ் இல்லை. Killer instinct இல்லை. அதுதான் தோல்விக்கு காரணம்.

#GERKOR

சில அணிகள் ஒரேயொரு சான்ஸ் மட்டுமே கிரியேட் செய்து, அதை கோல் அடித்திருக்கின்றன. சில அணிகள் 20 சான்ஸ் வந்தும் இருபதையும் மிஸ் செய்திருக்கின்றன. ஜெர்மனியும் இந்த வரிசையில் இணைந்து விட்டது. வெற்றி கட்டாயம் எனும்போது, முதல் பாதியிலேயே கோல் அடித்து, அடுத்து டிஃபன்ஸ் ஆடியிருக்கலாம். ஃபார்மேஷன் மாற்றியிருக்கலாம். இப்போதும் கூட 90 நிமிடங்கள் கோல் வாங்காமல், இஞ்சுரி டைமில் இரண்டு கோல்கள் வாங்கி தோற்றிருக்கிறது. ஆரம்பத்திலேயே  கோல் அடிக்காததுதான் ஜெர்மனியின் பெரும் பிரச்னை. ஒருவேளை கடந்த போட்டியைப் போல, கடைசி நிமிடத்தில் கோல் அடிக்கலாம் என நினைத்திருக்கலாம். எல்லா நேரத்திலும் அப்படிப்பட்ட வாய்ப்புகள் அமையும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், இந்தப் போட்டியில் ஜெர்மனிக்கு அதிக செட் பீஸ்கள் கிடைக்கவில்லை.

வெற்றிபெறவில்லை எனில் வெளியேறிவிடுவோம் என்ற சூழலில் அர்ஜென்டினா எப்படி விளையாடியது? அவர்கள் எவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் களத்தில் 100 சதவீதத்தைக் கொடுத்தனர். ஆனால், ஜெர்மனி…?

#GERKOR

பிரேசில், ஜெர்மனி, ஃபிரான்ஸ், அர்ஜென்டினா போன்ற பெரிய அணிகளைத்தான் எல்லா ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்த உலகக் கோப்பையில் பெரிய அணிகள் என நினைத்த எல்லா அணிகளும் கோல் வாங்குகின்றன. கோல் அடித்து குஷிப்படுத்தும் என நினைத்த அணிகள் எல்லாம் கோல் வாங்குவது சோகம். இத்தனைக்கும் இந்த அணிகள் நல்ல மிட்ஃபீல்ட், நல்ல டிஃபன்ஸ், நல்ல அட்டாக்கிங் உள்ள அணிகள். அப்படியிருந்தும் ஏன் இவ்வளவு கோல்கள் வாங்குகின்றன எனத் தெரியவில்லை. இனி வரும் போட்டிகளில் எல்லா அணிகளும் டிஃபன்ஸை வலுவாக்கும் என நினைக்கிறேன்.

https://www.vikatan.com/news/sports/129078-germany-vs-south-korea-match-analysis-by-ravanan.html

Link to comment
Share on other sites

அடுத்த சுற்றில் தேறுமா பிரேசில்?: செர்பியா அச்சுறுத்தலை எளிதில் முறியடித்தாலும் சிக்கல்கள் உள்ளன

 

 

 
brazil1

2வது கோல் அடித்த தியாகோ சில்வா, நெய்மர். | ஏ.எஃப்.பி.

உலகக்கோப்பை 2018-ன் அடுத்த சுற்றுக்கு பிரேசில் 2-0 என்று செர்பியாவை வீழ்த்தி முன்னேறினாலும் பிரேசில் அணி நன்கு நிலையூன்றிய அணியாகத் தெரியவில்லை.

ஜோஸ் பவ்லோ பாலினியோ 36வது நிமிடத்தில் கோலாக மாற்ற 68வது நிமிடத்தில் தியாகோ சில்வா வெற்றியை இன்னொரு கோல் மூலம் உறுதி செய்தார். இறுதி 16 சுற்றில் ஒருவேளை மெக்சிகோவை வெளியேற்றி ஜெர்மனி வந்திருந்தால் 2014 உலகக்கோப்பை 7-1 கோல் பேய் பிரேசில் வீர்ர்களின் முதுக்குத்தண்டில் சில்லிட வைத்திருக்கும், ஆனால் ஜெர்மனி தென் கொரியாவுக்கே லாயக்கற்ற அணியாக வெளியேறியது.

   
 

ஆகவே இறுதி 16-ல் பிரேஸில் மெக்சிகோவைச் சந்திக்கிறது, மெக்சிகோ நேற்று ஸ்வீடனிடம் 3-0 என்று தோற்றாலும், அதில் ஒரு கோல் செல்ஃப் கோல் என்றாலும் அபாயகரமான அணியே, ஆனால் பிரேசிலுக்கு மிகவும் பழக்கப்பட்ட அணி என்பதால் பிரேசில் தைரியமாக இருக்கலாம், ஆனால இது மெக்சிகோ அணிக்கும் பொருந்தும்.

செர்பிய அணி வீரர்கள் கடைசியில் களைப்படைந்து ஆடினர், 60-லிருந்து 64-65 நிமிடங்கள் வரைக்கும் பிரேஸில் கோல் அருகே கடும் குடைச்சலைக் கொடுத்தனர் செர்பிய அணியினர் வேறு நல்ல ஸ்ட்ரைக்கர்கள் உள்ள அணியாக இருந்திருந்தால் 2 கோல்கள் விழுந்திருக்கும், ஆனால் பிரேசிலின் தடுப்பாட்டம் அந்தக் கட்டத்தில் சிறப்பாக இருந்தது.

marcelojpg

காயமடைந்து வெளியேறிய மார்செலோ. | ஏ.எப்.பி.

 

உணர்ச்சிவயப்படும் பிரேசில் வீரர்களுக்கு களத்தில் அழுகை எந்த அளவுக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதையும், நெய்மரிடம் உலகக்கோப்பையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட மாட்டாது என்றும் கூறிவிடுவது நல்லது.

2வது நிமிடத்திலேயே நடுக்களத்தில் பந்தை எடுத்துக் கொண்டு வேகம் காட்டினார். இரண்டு வீரர்களைக் கடந்து கூட்டினியோவை ஷாட்டுக்காக செட் அப் செய்தார். பாக்சின் ஓரத்திலிருந்து கூட்டினியோ அடித்தார், ஆனால் ஜீஸஸ் அதனை தெரியாமல் மறித்தார். 9வது நிமிடத்தில் மார்செலோவுக்கு காயம் ஏற்பட்டு வெளியேறினார், பிரேசில் பின்னடைவு கண்டது. 34வது நிமிடத்தில் செர்பிய வீரர் மிட்ரோவிச் செய்த கோல் நோக்கிய முயற்சி கோல்வலைக்கு மேலே சென்றது.

அப்போதுதான் பிரேசிலின் எதிர்த்தாக்குதலில் பாலினியோ முதல் கோலை அடித்தார். கூட்டினியோ அருமையாக பந்தை எடுத்து வந்து பாலினியோவை செட் செய்ய அவர் செய்த அருமையான, துல்லியமான பாஸை பாலினியோ கொஞ்சம் பவுன்ஸ் ஆனாலும் முன்னேறி வந்த கோல்கீப்பரைத் தாண்டி கோலுக்குள் திணித்தார். 1-0.

பிரேசில் சில நேரங்களில் நன்றாக ஆடியது, சில நேரங்களில் தொழில் நேர்த்தியில்லாமல் ஆடியது, ஆனால் பாஸ்களின் அழகு என்றால் அது பிரேசில்தான். அது நேற்றும் தொடர்ந்த்து. நெய்மர் அதிகம் பந்துடன் டச்சில் இருந்தார், 7 முறை கோல் நோக்கி ஷாட் அடித்தார், ஆனால் வேறொரு பிரேசில் அணியாக இருந்திருந்தால், நெய்மரே உடற்தகுதியுடன் இருந்திருந்தால் 2-3 கோல்களை அவரே அடித்திருப்பார். ஆனாலும் நெய்மரின் நாடகீயம் தொடர்ந்தது. லேசாக அவரைச் சீண்டியதற்கு சைடு லைன் அருகே ஒன்று அல்லது 2 கரணங்கள்தான் அந்த ஃபவுலுக்குச் சாத்தியம், ஆனால் அவர் 8 கரணங்கள் அடித்து பெரிய நாடகமாடினார், ஆனால் இப்போது உலகம் புரிந்து கொண்டுவிட்டது நெய்மரை. பிரேசில் நிர்வாகம்தான் அவரின் நாடகீய சேஷ்டைகளைக் கட்டுப்படுத்தப் பணிக்க வேண்டும். இது அவரைப் பலவீனமாக்குவதோடு அணியையும் பலவீனமாக்குகிறது.

பிரேசிலின் பிரச்சினைகளும் வலுவும்:

பிரேசிலை இதுவரை பார்த்த அளவில் சுவிஸ் அணியுடன் ட்ரா, பிறகு கோஸ்டா ரிகாவுக்கு எதிரான வெற்றி, நேற்று செர்பியாவுக்கு எதிரான வெற்றி ஆகிய 3 போட்டிகளையும் பார்த்த பிறகு மையக்களத்தில் நிறைய இடைவெளிகள் உள்ளது தெரிந்தது. இதேபோன்ற பலவீனத்தை ஜெர்மனியிடம் மெக்சிகோவும் நேற்று தென் கொரியாவும் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் அந்த அணி அடுத்த நாக் அவுட்டில் மெக்சிகோவைத்தான் சந்திக்கிறது.

paulingojpg

படம். | கெட்டி இமேஜஸ்.

 

நெய்மர், கேப்ரியல் ஜீஸஸ், வில்லியன், ராபர்டோ ஃபெர்மினோ, மார்செலோ என்று தாக்குதல் தெரிவு நிறைய பிரேசிலிடம் உள்ளது. பிரேசில் வீரர்கள் பந்தை கிராஸ் செய்வதில் சற்றே சோடைபோயுள்ளனர். அணியின் பயிற்சியாளர் டீட்டே முக்கோண அமைப்பில் பந்தை ஷார்ட் பாஸ்களாகக் கொண்டு செல்ல பணித்துள்ளார். பிரேசில் அணியின் காலங்க்காலமான அச்சுறுத்தல் இடது புறத்தாக்குதல்தான் ஆனால் அது தற்போது சற்றே பலவீனமடைந்துள்ளது. இடது புறம் மார்செலோ டைட்டாக ஆடுவதில்லை. அதே போல் மிராண்டா மற்றும் பாலினியோ தாக்குதல் நிலையிலிருந்து அபாயகர வீரர்கள். நெய்மர், கூட்டினியோ ஏற்கெனவே சில மின்னல்களைக் காட்டியுள்ளனர், ஆனாலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணிச்சேர்க்கையோ, உத்தியோ, இன்னும் பிரேசிலுக்குக் கைகூடவில்லை.

பயிற்சியாளர் டீட்டேவின் அபார பயிற்சி மற்றும் உத்தியைச் சரியாகக் கடைபிடித்தால் ஒருவேளை பிரேசில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பே பிரகாசமாக உள்ளது, இருந்தாலும் நம்பிக்கையுடன் கூற முடியவில்லை, எப்போது வேண்டுமானாலும் அதிர்ச்சி ஏற்படலாம் என்ற நிலையே உள்ளது.

http://tamil.thehindu.com/sports/article24278910.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

மஞ்சள் கார்டில் சறுக்கியது செனகல்- நாக்அவுட்டுக்கு முன்னேறியது ஜப்பான்

செனகலை விட இரண்டு மஞ்சள் அட்டை குறைவாக பெற்றிருந்ததால் அதிர்ஷ்டத்தால் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஜப்பான். #WorldCup2018

 
எல்லோ கார்டில் சறுக்கியது செனகல்- நாக்அவுட்டுக்கு முன்னேறியது ஜப்பான்
 
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. ‘எச்’ பிரிவில் எந்த அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது என்பதை உறுதி செய்யும் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் ஜப்பான் - போலந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் போலந்து 1-0 என வெற்றி பெற்றது. அதேவேளையில் இந்த பிரிவில் இடம்பிடித்துள்ள கொலம்பியா - செனகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என வெற்றி பெற்றது.

இதனால் ஜப்பான், செனகல் அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிரா மூலம் தலா நான்கு புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தது. இதனால் எந்த அணி அதிக கோல் அடித்தது என்று பார்க்கப்பட்டது. அப்போது இரண்டு அணிகளுமே நான்கு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. இதனால் எந்த அணி அதிக கோல் வாங்கியது என பார்த்தபோது, இரு அணிகளும் தலா நான்கு கோல்கள் வாங்கியிருந்தன.

201806282155494615_1_senegal1-s._L_styvpf.jpg

இதனால் கோல் அடிப்படையிலும் இரு அணிகள் சமநிலை பெற்றிருந்தன. இதனால் ஒழுங்கு நடவடிக்கையில் யார் சிறந்த அணி என்பது பார்க்கப்பட்டது. இதில் செனகலுக்கு சறுக்கல் ஏற்பட்டது. செனகல் 6 எல்லோ கார்டு பெற்றிருந்தது. ஆனால் ஜப்பான் 4 எல்லோ கார்டுதான் பெற்றிருந்தது.

இதனால் அதிர்ஷ்டம் மூலம் ஜப்பான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/28215549/1173239/senegal-two-more-yellow-card-affected-knockout-round.vpf

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணம்: குழு பி
 
 
 

- ச. விமல்

image_9c66433825.jpg

உலகக்கிண்ண தொடரில் இம்முறை இந்தக் குழுதான் அதிக விறுவிறுப்பை தந்தது என இப்போதே கூறிவிடலாம் போலுள்ளது. என்னவொரு நாடகம் நடந்து முடிந்தது எனக் கூறக்கூடியதாக அமைந்தது. சிறிய அணிகள் என்று எந்த அணியையும் கணிப்பிட முடியாது என்பதற்கு இந்தக் குழுவின் போட்டி முடிவுகள் உதாரணமாக அமைந்தன. ஐரோப்பிய சம்பியன் போர்த்துக்கல் அணி மற்றும் உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான முன்னாள் சம்பியன் ஸ்பெய்ன் ஆகிய அணிகளை ஈரான் மற்றும் மொராக்கோ ஆகிய அணிகள் ஆட்டம் காண வைத்தன. போட்டி நிறைவடைய சில நிமிடங்களே மீதமிருந்த வேளையில் ஸ்பெய்ன் அணி வெளியேறிவிடுமோ என்ற சூழ்நிலை உருவாகி மீண்டும் குழு நிலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்கள்.

பலமான போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய அணிகள் இரண்டாவது போட்டிகள் நிறைவடைந்ததும் அடுத்து சுற்றுக்கு தெரிவாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. மொராக்கோ அணி இரண்டாவது போட்டியுடன் தங்கள் இரண்டாம் சுற்று வாய்ப்பை இழந்தது. ஆனால் ஈரான் அணி மொராக்கோ அணியினை வெற்றி பெற்றதன் மூலம் அவர்களுக்கான வாய்ப்பை தக்க வைத்திருந்தார்கள்.. ஆனாலும் ஈரான் அணியினால் போர்த்துக்கல் அணியினை வெற்றி பெற முடியுமென யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதேவேளையில் ஸ்பெய்ன் அணி தோல்வியடைய வேண்டும். ஸ்பெய்ன் தோல்வியடைந்து ஈரான் சமநிலையில் நிறைவு செய்தால் ஈரானுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நிலையும் காணப்பட்டது. ஆனால் இவை நடப்பதற்கு சாத்தியமற்ற விடயமாக நம்பப்பட்டது. இருந்தாலும் போட்டியின் 90 வது நிமிடத்தில் அந்த நிலை ஏற்பட்டது.  இருப்பினும் ஸ்பெய்ன் அணியின் இறுதி நேர கோல் அவர்களை காப்பாற்றியது.

மொரோக்கோ மற்றும் ஸ்பெய்ன் அணிகளுக்கிடையிலான போட்டி 81வது நிமிடம் வரை சமநிலையில் சென்றது. அதிலிருந்து அடுத்த ஒன்பது நிமிடங்களுக்கு மொரோக்கோ அணி 2-1 என்ற முன்னிலையை தக்க வைத்துக்கொண்டது. மறுபுறத்தில் நடைபெற்ற போட்டியில் 90 வது நிமிடத்தில் கிடைத்த பனால்டி உதை மூலம் ஈரான் அணி போர்த்துக்கல் அணியுடன் சமநிலை முடிவினை பெற்றது. ஸ்பெய்ன் அணியின் நிலை இப்போது கேள்விக்கிடமாகிவிடுமோ என்ற நிலையில் இரண்டு நிமிடங்களில் ஸ்பெய்ன் அணி கோல் அடித்தது. ஆனால் மத்தியஸ்தர் அதனை ஓப் சைட் கோல் என கூறிவிட்டார். ஆனால் மீள் பரிசீலனையில் அது கோலாக அறிவிக்கப்பட ஸ்பெய்ன் அணி சமநிலை முடிவினை பெற்றுக் கொண்டது. இந்த இரண்டு போட்டிகளிலும் சமநிலை முடிவு கிடைக்கப்பெற்றது. ஆனால் ஈரான் மற்றும், மொரோக்கோ அணிகள் விளையாடிய விதம் மிகவும் அபாரமாக அமைந்தது. அதிலும் ஈரான் அணி போர்த்துக்கல் அணியுடன் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக காணப்பட்டது. கடுமையாக போராடியிருந்தார்கள்.

ஸ்பெய்ன் அணி குழு B இல் முதலிடத்தை பெற்றுள்ளது. சம புள்ளிகளை போர்த்துக்கல் அணியுடன் பெற்றது. கோல் வித்தியாசமும் சமனாகவே காணப்பட்டது. கூடுதலான கோல்கள் அடித்த அணி என்ற அடிப்படையில் முதலிடத்தை பெற்றுள்ளார்கள். ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் அணிகளுக்கிடையிலான முதற் போட்டியும் மிகவும் விறுவிறுப்பானதாக காணப்பட்டது. 3-3 என்ற சமநிலை முடிவு கிடைத்தது. ஸ்பெய்ன் அணியின் வீரர்கள் இணைந்து கோல்களை அடிக்க, உலகின் தலை சிறந்த வீரரான நான் சும்மாவா என்றது போல கிறிஸ்டியானோ ரொனால்டோ தனித்து மூன்று கோல்களை அடித்து போட்டியினை சமன் செய்தார். ஸ்பெய்ன் அணி ஈரான் அணிக்கு ஒரு கோலை மாத்திரமே அடிக்க முடிந்தது. ஈரான் அணி அந்தளவுக்கு சிறப்பாக விளையாடியது.

போர்த்துக்கல் அணி மொரோக்கோ அணியுடன் 1-0 என வெற்றி பெற்றுக்கொண்டது. போர்த்துக்கல் அணிக்கு இந்த வெற்றியும் போராட்டமான வெற்றியாகவே அமைந்தது. இலகுவாக அமையவில்லை. ஆக இந்தக் குழுவின் போட்டிகளை பார்க்கும் போது நான்கு அணிகளுமே சமபல அணிகளாகவே தென்படுகின்றன. இந்த குழுவில் ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் அணிகள் வெற்றிகளை பெற கஷ்டப்பட்டது, குழு A இன் அணிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். குழு A இல் முதலிடத்தை பெற்றுள்ள உருகுவே அணி போர்த்துக்கல் அணியுடன் ஒப்பிடும் போது பலம் குறைவான அணி. ஆனால் அவர்கள் முதல் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்கள். எனவே தற்போதைய நிலையில் பார்க்கும் போது உருகுவே அணி பலமான அணியாக காணப்படுகிறது. தரப்படுத்தல்களில் போர்த்துக்கல் அணி நான்காமிடத்திலும், உருகுவே அணி பதின்நான்காமிடத்திலும் காணப்படுகின்றன. குழு நிலை போட்டிகள் நிறைவடைந்த பின்னர் இன்றைய நிலையில் பந்தயக்காரர்கள் போர்த்துக்கல் அணிக்கு உலக கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை ஒன்பதாமிடத்திலும், உருகுவே அணிக்கு பத்தாமிடத்திலும் வழங்கியுள்ளார்கள். எனவே போர்த்துக்கல் அணியின் நிலையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாம் சுற்று மோதல் மிகவும் கடுமையாக இருக்கும். ஒரு அணி மட்டுமே வெல்ல முடியுமென்ற நிலையில் பலமான ஒரு அணி உலகக்கிண்ணத்தை விட்டு வெளியேறப்போகிறது என்பது மட்டும் உண்மை. ஆனால்  உலகின் தலை சிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய காலத்தில் நல்ல முறையில் சாதிக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு நான்காமிடத்தை பெற்றுக்கொண்டார்கள். அடுத்த உலக கிண்ண தொடரில் இரண்டாம் சுற்றுடன் வெளியேறினார்கள். கடந்த முறை முதல் சுற்றுடன் வெளியேறினார்கள். எனவே இம்முறை ரொனால்டோ அந்த நிலைமையை மாற்ற கடுமையாக போராடுவார் என நம்பலாம்.

ஸ்பெய்ன் மற்றும் ரஸ்சியா அணிகளுக்கிடையிலான இரண்டாம் சுற்றுப் போட்டி என பார்க்கும் போது ஸ்பெய்ன் அணிக்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்த குழு நிலை போட்டிகளில் இவர்கள் தடுமாறிய போதும் பந்தயக்ககாரர்கள் உலகக்கிண்ணத்தை வெற்றி பெற வாய்ப்புள்ள முதல் நாடக ஸ்பெயினை தரமுயர்த்தியுள்ளார்கள். உலகக்கிண்ணம் ஆரம்பிக்க முன்னர் மூன்றாமிட வாய்ப்பே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ரஸ்சியா அணி போராடக்கூடிய பலமான அணியாக காணப்பட்ட போதும், உருகுவே அணியுடன் அவர்கள் அடைந்த 0-3 என்ற தோல்வி அவர்கள் ஸ்பெய்ன் அணிக்கு பெரும் சவாலாக அமைய மாட்டர்கள் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் நாட்டில் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளோம் என்று நம்பிக்கை, மொரோக்கோ அணி ஸ்பெய்ன் அணியை தடுமாற வைத்தது, எனவே எங்களாலும் முடியும் என்ற நம்பிக்கை போன்றவை ரஸ்சியா அணிக்கு பலத்தை வழங்க ஸ்பெய்ன் அணிக்கு சவால்களாக அமையும். தரப்படுத்தல்களில் ஸ்பெய்ன் அணியின் இடம் 10. ரஸ்சியாவின் இடம் 70. இந்த நிலையினை பார்க்கும் போது ஸ்பெய்ன் அணி இந்த போட்டியில் தோல்வியினை சந்திக்குமென கூற முடியுமா?

ஐந்தாவது உலக கிண்ண தொடரில் விளையாடியுள்ள மொரோக்கோ அணியின் விளையாட்டு சிறப்பாக அமைந்ததிருந்தது. இவர்கள் ஏற்கனவே ஒரு  தடவை இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்கள். பலமான ஸ்பெய்ன் அணியுடன் சமநிலை முடிவு என்பது நல்ல பெறுதியே. ஈரான் அணியுடன் இவர்களால் வெற்றி பெறமுடியவில்லை.

ஈரான் அணிக்கு இந்த உலகக் கிண்ணம் சிறப்பான உலகக்கிண்ணமென கூற முடியும்.  ஐந்தாவது உலகக்கிண்ண தொடரில் விளையாடியுள்ள இவர்கள்,  இந்த உலகக்கிண்ண தொடரில்தான் ஒரு வெற்றி மற்றும் ஒரு சமநிலை முடிவினை பெற்றுள்ளார்கள். அதுவும் பலமான அணிகளுடன் என்பது முக்கியமானது. ஆசிய அணியொன்று வளர்ச்சிப்பாதையில் வருகின்றது. இவ்வாறே இவர்கள் தொடர்ந்தும் சிறப்பாக விளையாடினாள் அடுத்த உலக கிண்ண தொடர் கட்டாரில் நடைபெறும் போது இன்னமும் முன்னேற்றங்களை காண முடியும்.

 

போட்டி முடிவுகள்

 

மொரோக்கோ                         0-1          ஈரான்

போர்த்துக்கல்                          3-3          ஸ்பெய்ன்

போர்த்துக்கல்                          1-0          மொரோக்கோ

ஈரான்                                                0-1         ஸ்பெய்ன்

ஸ்பெய்ன்                                     2-2          மொரோக்கோ

போர்த்துக்கல்                          1-1          ஈரான்

 

புள்ளிப்பட்டியல்

 

 

 

ஸ்பெய்ன்                                     3              1              2              0              6              5              1              5

போர்த்துக்கல்                          3              1              2              0              5              4              1              5

ஈரான்                                               3              1              1              1              2              2              0              4

மொரோக்கோ                         3              0              1              2              2              4              -2            1

(அணி, போட்டிகள், வெற்றி,சமநிலை, தோல்வி, அடித்த கோல்கள், வாங்கிய கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)

 

இரண்டாம் சுற்றுப் போட்டிகள்

30 ஜூன்  2018 - 11.30 PM - உருகுவே எதிர் போர்த்துக்கல்

01 ஜூலை  2018 - 7.30 PM - ரஸ்சியா எதிர் ஸ்பெய்ன்

http://www.tamilmirror.lk/sports-articles/உலகக்-கிண்ணம்-குழு-பி/139-218208

Link to comment
Share on other sites

பாய்ஸ் ஆர் பேக்... செனகலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்ற கொலம்பியா! #WorldCup

 

கொலம்பியாவின் டிஃபன்ஸ் சிறப்பாக இருந்தது. அதையும் மீறி ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தும் கொலம்பியா கோல்கீப்பர் ஒஸ்பினாவைத் தாண்டி, செனகல் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்துத் தொடரின் 'H' பிரிவில் கொலம்பியா மற்றும் செனகல் இடையிலான முக்கியமான ஆட்டம் சமாரா அரங்கத்தில் நடைபெற்றது.

இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன், நான்கு புள்ளிகளுடன் செனகல் புள்ளிப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் இருந்தது. இன்றைய போட்டியை 'டிரா' செய்தாலே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற செனகல் அணிக்கு வாய்ப்பிருந்தது. ஒரு போட்டியில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றிருந்த கொலம்பியா, மூன்று புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் இருந்தது. எனவே, இன்றைய போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் கொலம்பியா களமிறங்கியது.

கொலம்பியா மற்றும் செனகல் ரசிகர்கள்

 

 

கொலம்பியா ரசிகர்கள் ‘Vamos Colombia' (Come on Colombia) பாடலைப்பாடி வீரர்களை உற்சாகப்படுத்தினர். செனகல் ரசிகர்கள், அவர்களின் பாரம்பர்ய இசைக்கருவிகளை  இசைத்தும், இம்பாலா நடனமாடியும் அரங்கை அதிரவைத்தனர்.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து செனகல் அணி அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டது. கொலம்பியாவின் டிஃபன்ஸ் சிறப்பாக இருந்தது. அதையும் மீறி ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தும், கொலம்பியா கோல் கீப்பர் ஒஸ்பினாவைத் தாண்டி, செனகல் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. கொலம்பியா அணிக்கு அவ்வப்போது 'ஃப்ரீ கிக்' வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த அணியாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

17-வது நிமிடத்தில், கொலம்பியாவின் பாக்ஸுக்குள் பந்தை விரட்டிச்சென்றபோது, கொலம்பிய டிஃபண்டர் மோதி, மனே கீழே விழுந்தார். செனகல் அணி பெனால்ட்டி வாய்ப்பு கேட்டது. ஆனால், வீடியோ ஃபுட்டேஜை பார்வையிட்ட ரெஃப்ரி, பெனால்ட்டி வாய்ப்பு தரவில்லை. முதல்பாதியிலேயே (31-வது நிமிடத்தில்) கொலம்பியாவின் நட்சத்திர வீரர் ராட்ரிகஸுக்குப் பதிலாக லூயிஸ் முரியல் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்டார். இதனால், கொலம்பியாவின் மிட் ஃபீல்டில் தொய்வு ஏற்பட்டது. இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், 0-0 என்ற நிலையில் முதல்பாதி முடிவுக்குவந்தது.

ஹெட்டர் கோல் அடிக்கும் கொலம்பியா வீரர் மினா

இரண்டாவது பாதி தொடங்கியதிலிருந்து இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. நிறைய 'ஃப்ரீ கிக்' வாய்ப்புகளும், கார்னர் வாய்ப்புகளும் இரு அணிகளின் கோல் கீப்பர்களால் எளிதாகத் தடுக்கப்பட்டன. ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில், கார்னரிலிருந்து குவிண்டாரோ அடித்த பந்தை ஹெட்டர் கோலாக்கி அசத்தினார், கொலம்பியா அணியின் மினா. இதனால், 1-0 என்ற நிலையில் கொலம்பியா முன்னிலை பெற்றது.

ஆட்டத்தை டிரா செய்தாக செனகல் அணி கடுமையாகப் போராடியது. ஆனால், கொலம்பியா அணியின் கோல் கீப்பர் ஒஸ்பினோ, பல்வேறு வாய்ப்புகளைத் தடுத்து அசத்தினார். ஆட்ட நேர இறுதிவரை செனகல் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 1-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வென்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றுக்குத் தகுதிபெற்றது கொலம்பியா.

சோகத்தில் செனகல் வீரர்கள்

இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில், போலந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது. ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் 4 புள்ளிகள் பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இடையே கோல் வித்தியாசம் எதுவும் இல்லை. இந்நிலையில், இந்த உலகக்கோப்பைத் தொடரில் செனகல் அணியைவிட குறைவான யெல்லோ கார்டுகள் பெற்றிருந்ததால், டை-பிரேக்கர் முறையில் ஜப்பான் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது.

https://www.vikatan.com/news/tamilnadu/129170-fifa-world-cup-match-report-colombia-qualifies-for-round-of-16-by-beating-senegal.html

Link to comment
Share on other sites

போலந்துடன் தோல்வி... - ஃபேர் பிளேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஜப்பான்! #WorldCup

 

உலகக்கோப்பை H பிரிவில், ஜப்பான், போலந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் போலந்து அணி வெற்றிபெற்றது. அந்த அணியின் பெட்னரக், சர்வதேசப் போட்டிகளில் தன் முதல் கோலை அடித்து, இந்த உலகக் கோப்பையில் போலந்துக்கு முதல் வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

போலாந்து

ஜப்பான் அணி, இந்தப் போட்டிக்கு 6 மாற்றங்களைச் செய்திருந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தொடரை விட்டு வெளியேறிவிட்டதால், போலந்து அணியும் ஸ்டார்ட்டிங் லெவனில் 5 மாற்றங்கள் செய்திருந்தது. டிரா செய்தாலே அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்குமென்பதால், ஜப்பான் அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. ஆட்டத்தின் தொடக்கத்தில், இரண்டு அணிகளும் பால் பொசஷனை இழந்துகொண்டே இருந்தன. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில், ஜப்பான் அணிக்குக் கிடைத்த வாய்ப்பு நூலிழையில் நழுவியது. ஜப்பான் வீரர் கொடுத்த  கிராஸை ஒகசாகி ஹெடிங் செய்ய, அது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றது. அடுத்த நிமிடத்திலேயே மூடோ அடித்த ஷாட்டைத் தடுத்தார் போலந்து கோல்கீப்பர் ஃபேபியான்ஸ்கி. 

 

 

ஒருபுறம் ஜப்பான் அட்டாக் செய்துகொண்டிருக்க, மறுபுறம் போலந்து மிகமோசமாக விளையாடியது. ஒரு நல்ல மூவ் கூட இல்லை. தொடர்ச்சியாக பொசஷனை இழந்துகொண்டே இருந்தது. போலந்து மோசமாக ஆடியதால், ஜப்பான் அணியும் பெரிதாக கஷ்டப்படவில்லை. அதனால், ஆட்டம் ரொம்பவே சுமாராக இருந்தது. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில், போலந்து வீரர்களின் முயற்சியை ஜப்பான் கோல்கீப்பர் கவாஷிமா சிறப்பாகச் செயல்பட்டுத் தடுத்தார். 35-வது நிமிடத்திற்கு மேல்தான் இரு அணிகளும் கொஞ்சமேனும் வேகமாக ஆடின. இரண்டு அணிகளும் தொடர்ந்து அட்டாக் செய்தாலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால் முதல் பாதி, கோல் ஏதும் இல்லாமல் 0-0 என முடிவுக்குவந்தது. 

 

 

போலாந்து - ஜப்பான்

இரண்டாவது பாதியில், ஜப்பான் அணி இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியது.  குறிப்பாக மூடோ, போலந்துக்கு அடிக்கடி சிக்கல் ஏற்படுத்தினார். ஆனால், முதல் கோல் போட்டது என்னவோ போலந்துதான். குர்சாவா கொடுத்த பாஸை 59-வது நிமிடத்தில் கோலாக்கி, போலந்துக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் ஜேன் பட்னரக். அதனால், ஜப்பான் அணி கொஞ்சம் பதற்றத்தோடு ஆடத் தொடங்கியது. அதன்பிறகு இரு அணிகளும் அவ்வப்போது எதிரணியின் கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டன. அடுத்த கோலுக்காக சில மாற்றங்களும் செய்தன. ஆனால், அவை எதுவும் பலன் தரவில்லை. 

அதனால் 0-1 என ஜப்பான் தோல்வியுற்றது. ஜப்பான், செனகல் இரண்டு அணிகளும் 4 புள்ளிகள் பெற்றன. கோல் வித்தியாசம், அடித்த கோல்களின் எண்ணிக்கை இரண்டும் இரண்டு அணிகளுக்கும் சமமாக இருப்பதால் Fair Play (வாங்கிய கார்டுகளின் எண்ணிக்கை)யை  வைத்து ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி, அடுத்த சுற்றில் பெல்ஜியம் அல்லது இங்கிலாந்து அணியைச் சந்திக்கும். 

https://www.vikatan.com/news/sports/129169-japan-vs-senegal-match-report.html

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: ஜெர்மனி வெளியேற்றம் - ஜெர்மனி = மும்பை பல்தான்ஸ்

 

 
lkpng

ரஷ்யாவில் நடந்து உலக கோப்பை கால்பந்து போட்டியில் அடுத்து சுற்றுக்கு நுழைய,  வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலிருந்த ஜெர்மனி, தென் கொரியாவிடம் கடைசி நிமிட கோல்களில் 2-0 என்று தோல்வியை தழுவியது.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

 

 

இட்லி

‏ஜெர்மனி = மும்பை பல்தான்ஸ்

சாமானியன்  

‏என்னதான் இருந்தாலும் ஜெர்மனி இந்த அளவுக்கு மோசமா விளையாடியிருக்க கூடாது.

Newton     

‏ஜெர்மனி அணி 2014: இதுவும் கடந்து போகும்

ஜெர்மனி அணி 2018: இதுவும் கடந்து போகும்

Brazilian Bijili         

‏ஜெர்மனி ஹைலைட்ஸ் மறுபடியும் பாத்தேன். கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு ஜோச்சிம்லோ வ பாக்கும் போது. ரியல் டேலண்ட் ஹி இஸ்.    

PerúSU

‏ரஷ்யாவில் ஜெர்மனி தோற்பது முதல்முறையாக அல்ல.

 Thalapathy     

‏ஜெர்மனி பைனல்கு போகும்

நம்ம பெர்லின் சுவறுக்கு போய் மேட்ச் பாக்கலாம்...கப் அடிக்கும் போது செமய கொண்டாடலாம்னு நெனச்சன் .....இப்படி சல்லி சல்லியா நொறுக்கிடீங்கலே டா

மிஸ்டர்காளை~  

ஏன்டா ஜெர்மனி உன்ன பெரிய

ரவுடின்னு நினைச்சேன் இப்படி

பொசுக்குன்னு கொரியா கிட்ட போய்

மண்டி போட்டுட்ட....

H.Umar Farook

‏ஜெர்மனி தோற்றதை பார்க்கும் போது ஹிட்லரை தோற்கடித்த சந்தோஷம் !

புகழ்

‏கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்காத நாடு ஜெர்மனி..

போற இடம் ரஷ்யா என்பதையுணர்ந்தாவது..ஜெர்மனி இன்னும் சிறந்த தயாரிப்போடு வந்திருக்கலாம்..அவ்வ்

Madhavan.G    

‏2018 டிபண்டிங் சாம்பியனுக்கு சங்கு ஊதுற வருசம் போல ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் ஃபுட்பால் ல ஜெர்மனி அடுத்த சுத்துக்கே போக முடியாம போனது #வலி

Pirai Kannan

‏2010 ல் இத்தாலி R 16 போகலை

2014 ல் ஸ்பெயின் R16 போகலை

2018 ல் ஜெர்மனி R16 போகலை!

சகாவே

‏அவ்வளவு பெரிய ஜெர்மனி வெளியே போயிருக்கும் இந்த அர்ஜ்ஜெண்டினா நாக் அவுட்ல வந்திருப்பது,எனக்கென்னவோ மெஸிக்கு தான் உலககோப்பை போல...

Shaun™

‏ஏன்டா ஜெர்மனி

நா என்னமோ உன்ன பெரிய ரௌடின்லடா நெனச்சேன்

innocent

‏Tournament ஆரம்பிக்குற முன்னாடி உங்களுக்கு மெஸ்ஸி இருக்கலாம் ரொனால்டோ இருக்கலாம் எங்களுக்கு தான் டீமா கெத்தா இருக்குனு சொன்னவனுகளா எங்க?'!   ஜெர்மனி ஃபேன்ஸ்!

அலப்பரை

‏காட்டுல எங்க ஆயா, காட்டுக்கு வா.. காட்டுக்கு வானு கூப்டுச்சு...

போயிட்டு நாளு வருஷம் கழிச்சு வாரேன் - ஜெர்மனி    

http://tamil.thehindu.com/opinion/blogs/article24277676.ece

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணம்: குழு சி
 

- ச. விமல்

image_d30d2c6aef.jpg

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் மூன்றாவது குழுவான குழு C இன் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்தக் குழு பெரியளவில் இறுக்கமான சுவாரசியமான குழுவாக அமையவில்லை. முதலிரு போட்டிகள் நிறைவடைந்த போதே பிரான்ஸ் அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. டென்மார்க்  அணியும் கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது போன்ற நிலை காணப்பாடலும் முழுமையான தகுதியினை பெறவில்லை. அவுஸ்திரேலியா அணி பெரு அணியினை வெற்றி பெறவேண்டும். அதுவும் 3 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும். மறுபுறத்தில் டென்மார்க்  அணி சமநிலை முடிவினை பெறவேண்டும் என்ற நிலை காணப்பட்டது. இது கடினமான நிலை என்றாலும் அவுஸ்திரேலியா மற்றும் டென்மார்க்  அணிகளுக்கிடையிலான போட்டியில் சமநிலை பெறப்பட்டமையினால் பெரு அணியினை அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் போகவில்லை.

பிரான்ஸ் அணி டென்மார்க் அணியுடனான போட்டியில் சாதாரணமான நிலையில் விளையாடினார்கள். அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில் டென்மாக் அணியுடன் மிக மோசமான தோல்வியினை சந்திக்காமல் விட்டாலே முதலிடம் அவர்களுக்கு கிடைக்கும். எனவே வீரர்களை அதிகம் கஷ்டப்படுத்தாமல் சாதாரணமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு வீரர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்ற முனைப்பில் விளையாடியமையை காண முடிந்தது. பெரு மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் பெரு அணி  ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றமையினால டென்மார்க் அணியின் வாய்ப்புகள் கூட இலகுவானது. ஆனாலும் டென்மார்க் அணி இறுதி வரை போராடிய போதும் கோல்களை அடிக்க முடியவில்லை. இதேவேளை இந்த உலக கிண்ணம் ஆரம்பித்து 38வது போட்டியிலேயே கோல்கள் அற்ற முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது என்பது முக்கிய விடயம்.

பிரான்ஸ் அணி இளவயது அணியாக சிறப்பாக செயற்படுகிறது. அவுஸ்திரேலிய மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டிகள் இறுக்கமாக இருந்த போதும் தங்கள் ஆதிக்கத்துக்கள் போட்டிகளை வைத்து அழுத்தங்களின்றி போட்டிகளை வெற்றி பெற்றுக்கொண்டார்கள். இலகுவான குழு ஒன்று இவர்களுக்கு கிடைத்துவிட்டது என்றும் கூட கூறலாம்.

பிரான்ஸ் அணிக்கு அடுத்த சுற்றுப் போட்டி ஆர்ஜன்டீனா அணியுடன் கிடைத்துள்ளது. குழு D இல் ஆர்ஜன்டீனா  அணி இரண்டாமிடத்தை பெற்றுள்ள போதும்  பலமான அணி. ஆனால் அவர்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தடுமாறியுளார்கள் என்பது பிரான்ஸ் அணிக்கு பலத்தினை வழங்கும். கடந்த உலகக்கிண்ண தொடரில் காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி இம்முறை அதனை தாண்டி செல்ல முயற்சிக்கும். மற்றைய அணிகள் போன்று மிகப் பெரிய பெயர் சொல்லும் நட்சத்திரங்கள் பிரான்ஸ் அணியில் இல்லை. அவர்கள் அதிகமாக நம்புவது அன்டோனி கிரைஸ்மன் என்ற வீரரை. ஆக்ரோஷமற்ற சாதுவான முகம். ஆனால் இவரின் விளையாட்டு மிகவும் சிறப்பானது. எதிர்காலத்தில் உலகின் சிறந்த வீரராக வருவார் என நம்பப்படுபவர். இந்த உலக கிண்ண தொடரில் தனது அணிக்கான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து தான் உலகின் சிறந்த வீரர்களுக்குள் முன்னணி வரிசைக்கு வந்துவிட்டேன் என்பதனை நிரூபிப்பாரா என பார்க்கலாம்.

பிரான்ஸ் அணி ஏழாமிடத்திலும், ஆராஜன்டீனா அணி ஐந்தாமிடத்திலும் தரப்படுத்தல்களில் காணப்படுகின்றன. பந்தயக்காரர்கள் பிரான்ஸ் அணிக்கான வெற்றி வாய்ப்புகளை அதிகம் வழங்கியுள்ளார்கள். உலகக்கிண்ணத்தை வெற்றி பெற வாய்ப்புள்ள ஆறாவது நாடாக பிரான்ஸ் அணியும், எட்டாவது நாடாக ஆர்ஜன்டீனா அணியும் பந்தயக்காரர்களினால் தரப்படுத்தப்பட்டுள்ளன.  ஆனால் இவர்கள் வழங்கியுள்ள நிகழ்தகவுகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இறுக்கமான போட்டியினை எதிர்பார்க்க முடியும்.

டென்மார்க் அணி முதற் போட்டியில் பெரு அணியினை வெற்றி பெற்றுக் கொண்டது. இதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பினை இலகுபடுத்திக் கொண்டவர்கள் அடுத்த அவுஸ்திரேலியா அணியுடன் வெற்றி பெற முடியாமல் போனமையினால் இவர்களின் இரண்டாம் சுற்று தெரிவில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் முதல் சுற்றின் மூன்றாம் கட்டப் போட்டிகளின் முடிவுகளின் படி அடுத்த சுற்று வாய்ப்பு கிடைத்து விட்டது.  ஐந்தாவது உலகக்கிண்ணத்தில் விளையாடும் டென்மார்க் அணி நான்காவது தடவையாக இரண்டாம் சுற்றில் விளையாடவுள்ளது. 98 ஆம் ஆண்டு காலிறுதி வரை முன்னேறினார்கள். இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ள இவர்கள் அடுத்த சுற்றுடன் வெளியேறிவிடுவார்கள் என நமபகமாக சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுளள்து. அதற்கு காரணம் குழு D இல் முதலிடம் பெற்றுள்ள குரேஷியா அணி. இவர்களின் வெற்றிகளின் பின்னர் இவர்களுக்கான உலகக்கிண்ண வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆகையால் டென்மார்க் அணி குரேஷியா அணியினை வெற்றி பெற மிகப்பெரியளவில் போராட்டம் நடாத்த வேண்டும்.

1980 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் இம்முறை உலகக்கிண்ணத்துக்கு தென்னைமரிக்க கண்டத்திலிருந்து தகுதி பெற்ற பெரு அணி அவுஸ்திரேலியா அணியுடன் 2-0 என ஆறுதல் வெற்றி ஒன்றினை பெற்றுக்கொண்டார்கள், இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக காணப்பட்டன. அதன் மூலம் அவுஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகளுக்கிடையில் அடுத்த சுற்றுக்கு போட்டி உருவாகும் என்ற நிலை காணப்பட்ட போதும் பெரு அணியின் சிறப்பான விளையாட்டும் வெற்றியும் அந்த நிலையினை இல்லாமல் செய்தது. உலகக்கிண்ண தொடரில் ஐந்தாவது வெற்றியாக இந்த வெற்றி அவர்களுக்கு அமைந்து. நீண்ட இடைவேளைக்கு பின்னர் இவர்கள் விளையாடிமையினால் இவர்கள் பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஆனால் இவர்கள் தரப்பப்படுத்தல்களில் பதினோராமிடத்திலுள்ள அணி. எனவே இவர்கள் இன்னமும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும்.

அவுஸ்திரேலியா அணி 12 ஆமிட அணியான டென்மார்க் அணியினை சமன் செய்ததன் மூலம் பலமான அணியாக தங்களை வெளிக்காட்டினார்கள். முதல் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் கடுமையாக போராடினார்கள்.தங்கள் வீரர் ஒருவரின் காலில் பட்ட பந்து மூலமாகவே பிரான்ஸ் அணிக்கான இரண்டாவது கோல் வாய்ப்பினை வழங்கினார்கள். நல்ல அணியாக பலமான அணியாக தென்பட்ட அவர்களினால் டென்மார்க் அணியுடன் போட்டியினை சமன் செய்ய முடிந்தது. இவ்வாறு பலமாக விளையாடியவர்கள் பெரு அணியுடன் தோல்வியடைவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கவில்லை. இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பினை அவுஸ்திரேலியா அணி இழந்துவிட்டதாகவே கூற முடியும். தரப்படுத்தல்களில் 36ஆறாமிடத்திலுள்ள அணியொன்று இவ்வளவு சிறப்பாக விளையாடியுள்ளது என்பதுபோற்றப்படக் கூடிய விடயமே.

 

போட்டி முடிவுகள்

பிரான்ஸ்                                      Vs                           அவுஸ்திரேலியா                   2 - 1

பெரு                                                                  vs                            டென்மார்க்                                 0 - 1

டென்மார்க்                                 vs                            அவுஸ்திரேலியா                   1 - 1

பிரான்ஸ்                                       vs                            பெரு                                                  1 - 0

அவுஸ்திரேலியா                   vs                            பெரு                                                  0 - 2

டென்மார்க்                                 vs                            பிரான்ஸ்                                       0 - 0

 

 

புள்ளிப்பட்டியல்

1 பிரான்ஸ்                                    3              2              1              0              3              1              2              7

2 டென்மார்க்                              3              1              2              0              2              1              1              5

3 பெரு                                               3              1              0              2              2              2              0              3

4 அவுஸ்திரேலியா                3              0              1              2              2              5              -3            1

 

இரண்டாம் சுற்றுப் போட்டிகள்

ஜூன்  30 - 19: 30, ஆர்ஜன்டீனா எதிர்  பிரன்ஸ்

ஜூலை 01 - 21.30 ,  டென்மார்க் Vs குரேஷியா

http://www.tamilmirror.lk/sports-articles/உலகக்-கிண்ணம்-குழு-சி/139-218274

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணம்: குழு டி
 
 

- ச. விமல்

image_c27602ed89.jpg

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இம்முறை இலகுவான குழு என எதிர்பார்க்கப்பட்டு, கடினமான குழுவாகவும், சுவாரசியமான குழுவாகவும் மாறிய குழு, குழு,  D. இந்த நிலைக்கு முழுக்க முழுக்க காரணம் ஆர்ஜன்டீனா அணியும், லியோனல் மெஸ்ஸியுமே. ஆராஜன்டீனா அணி இந்தக் குழுவில் இலகுவாக  வெற்றி பெற்று முதலிடத்தை பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் இறுதியில் மிகப் பெரிய அழுத்தத்துக்கு மத்தியில் தட்டு தடுமாறி இரண்டாம் சுற்றுக்கு தெரிவானார்கள். இரண்டாம் சுற்றுக்கு தெரிவாக போராட வேண்டும் என்ற நிலையில் காணப்பட்ட குரேஷியா அணி, மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. அதிலும் ஆராஜன்டீனா அணியுடன் 3-0 என்ற மிகப்பெரிய வெற்றியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுக்கொண்டார்கள்.  

ஜூகோஸ்லாவியா நாட்டிலிருந்து பிரிந்து தனி நாடக மாறிய பின்னர் 1998 ஆம் ஆண்டு குரேஷியா அணி உலகக்கிண்ண தொடரில் காலபதித்தது. முதல் உலகக்கிண்ண தொடரில் மூன்றாமிடம் வரை சென்றவர்கள், அதன் பின்னர் விளையாடிய மூன்று தொடர்களில் முதல் சுற்றுடன் வெளியேறினார்கள். இம்முறை இரண்டாவது தடவையாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்முறையே இவர்கள் முதல் சுற்றின் மூன்று போட்டிகளிலும் முதற் தடவையாக வெற்றி பெற்றுள்ளார்கள். 1998 ஆம் ஆண்டு முதல் சுற்றில் ஆர்ஜன்டீனா அணியிடம் இவர்கள் தோல்வியினை சந்தித்திருந்தார். இம்முறை அதற்கான பதிலடியினை வழங்கிவிட்டனர். குழு நிலையில் முதலிடத்தை பெற்றுள்ளமையினால், டென்மார்க் அணியினை இரண்டாம் சுற்றில் சந்திக்கவுள்ளார்கள். டென்மார்க் அணி தரப்படுத்தல்களில் பன்னிரண்டாமிடத்திலுள்ளது. குரேஷியா அணி இருபதாமிடத்திலுள்ளது. இந்த நிலையினை பார்த்தால் டென்மார்க் அணி பலமானது. ஆனால் முதல் சுற்றில் குரேஷியா அணி 7-1 என்ற மொத்த கோல் பெறுதியினை கொண்டுள்ளமையினால் இவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்ற நம்பிக்கைக்கு வர முடியும். அவர்கள் விளையாடும் விதம் இம்முறை உலகக்கிண்ணத்தை வெற்றி பெற வாய்ப்புள்ள ஒரு நாடாக இவர்களையும் கருதலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குரேஷியா அணி உலகக்கிண்ணத்தை வெற்றி பெற வாய்ப்புள்ள ஏழாவது அணியாக தற்போது பந்தயக்காரர்களினால் தரப்படுத்தப்பட்டுளள்து. டென்மார்க் அணி பலமான குரேஷியா அணிக்கு எந்தளவுக்கு சவால்களை வழங்குவார்கள் என்பதனை போட்டியின் போதே பார்க்க முடியும்.

ஆர்ஜன்டீனா அணி பலமான அணியாக உலகக்கிண்ணத்தில் களமிறங்கியது. ஆனால் அவர்கள் தடுமாறிய விதம் அவர்கள் மீது அவநம்பிக்கயை ஏற்படுத்தியுள்ளது. பந்தயக்காரர்கள் கூட இவர்களுக்கான வெற்றி வாய்ப்பினை குறைத்துள்ளார்கள். முதற் போட்டியில் உலகக்கிண்ண அறிமுகத்தை மேற்கொண்ட ஐஸ்லாந்து அணியிடம் தடுமாறி 1-1 என்ற சமநிலையில் போட்டியினை நிறைவு செய்தார்கள். மெஸ்ஸி பனால்டி உதையினை தவறவிட்டார். அதுவே ஆர்ஜன்டீனா அணிக்கான முதலாவது அடியாக விழுந்தது. அந்த பனால்டி உதை கோலாக மாறியிருந்தால் சிலவேளைகளில் அணியின் ஒட்டுமொத்த நிலையும் மாறிப்போயிருக்கும். ஏற்பட்ட  அழுத்தத்திலிருந்து அவர்கள் முழுமையாக இன்னமும் விடுபடவில்லை. நைஜீரியா அணியுடன் இறுதி நேரத்தில் கோலை வழங்கி பின்னர் மிகவும் போராடி கோலடித்து வெற்றி பெற்றுக்கொண்டார்கள். எவ்வாறோ அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிட்டால் அழுத்தங்கள் குறையும். ஆனால் பிரான்ஸ் அணி அடுத்த சுற்றில் என்னும் போது இலகுவான அணிகளுடன் தடுமாறியவர்கள் எவ்வாறு பிரான்ஸ் அணியினை எதிர்கொள்வார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஆர்ஜன்டீனா அணியின் விளையாடும் வீரர்கள் முதலிரு போட்டிகளிலும் சரியாக அமையவில்லை என்பது மிகவும் வெளிப்படையாக தென்பட்டது. ஆனால் மூன்றாவது போட்டியில் அணி சிறப்பான கட்டமைப்புள்ள அணியாக தென்பட்டது. அந்த நிலை உருவாகிவிட்டால் அணி பலமான நிலைக்கு வந்துவிட்டது என நம்பலாம். அதன் காரணமாகவே நைஜீரியா அணியுடன் போராடி இரண்டாவது கோலை அடிக்க முடிந்தது. பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்டீனா அணிகளுக்கிடையிலான போட்டி 50-50 நிலையுள்ள போட்டியாக கருத முடியும். ஆக இரண்டாம் சுற்றில் மிகவும் விறுவிறுப்பான போட்டியாக இந்த போட்டியினை கருத முடியும்.

நைஜிரியா அணி இம்முறை சிறப்பாக விளையாடியுள்ளார்கள். ஆர்ஜன்டீனா அணியுடன் சமநிலை முடிவினை பெற்றால் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிடலாமென்ற  நிலையில் ஆர்ஜன்டீனா அணியுடன் விளையாடினார்கள்.  ஆர்ஜன்டீனா அணி 1-0 என்ற முன்னிலயினை பெற்றாலும், 51வது நிமிடத்தில் அடித்த பனால்டி கோல் மூலம் போட்டி  சமநிலைக்கு வந்தது. அதே நிலையை தக்க வைக்க அவர்கள் போராடிய போதும் ஆர்ஜன்டீனா அணி 86 வது நிமிடத்தில் அடித்த இரண்டாவது கோல் மூலமாக நான்காவது தடவையாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் அவர்களது கனவு இல்லாமல் போனது. ஐஸ்லாந்து அணியினை 2-0 என வெற்றி பெற்றுக்கொண்டார்கள். குரேஷியா அணியினை இவர்களால் இலகுவாக எதிர்கொள்ளமுடியவில்லை.

ஐஸ்லாந்து அணி முதல் போட்டியில் ஆர்ஜன்டீனா அணியுடன் சமநிலை முடிவினை பெற்றுக்கொண்டார்கள். இதுவே அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி என கூற முடியும். வெறும் மூன்றரை லட்சம் மக்கள் தொகை உள்ள நாடு முதற் தடவையாக உலககிண்ண தொடருக்கு தகுதி பெற்று கால்பந்தின் வல்லரசு நாடு ஒன்றை சமன் செய்வது ஒன்றும் இலகுவான காரியமல்ல. அதனை செய்துள்ளார்கள். இந்த நம்பிக்கை எதிர்வரும் காலங்களில்  அவர்கள் உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாட உதவும் என நம்பலாம். ஆனால் முதற் போட்டியில் சிறப்பாக விளையாடிய இவர்களினால் அடுத்த நைஜிரியா அணியின் போட்டியில் அவ்வாறு விளையாட முடியவில்லை.   பலமான குரேஷியா அணிக்கெதிராக இவர்களினால் சிறப்பாக விளையாட முடிந்தது. போட்டியினை சமன் செய்யும் வாய்ப்பினை 90வது நிமிடத்தில் தவறவிட்டார்கள். பலமான இரண்டு அணிகளுக்கு பெரும் சவாலாக விளங்கிய இவர்கள் நைஜீரியா  அணியுடன் வெற்றி பெற்றிருந்தால் அவர்களின் நிலை இன்னமும் உயர்ந்திருக்கும். எதிர்காலத்தில் இவர்களை பலமான நாடாக நம்பலாம் என்ற நிலையினை உருவாக்கியுளார்கள்.

 

போட்டி முடிவுகள்

ஆர்ஜன்டீனா                             vs                           ஐஸ்லாந்து                                   1 - 1

குரேஷியா                                   vs                           நைஜீரியா                                    2 - 0

 ஆர்ஜன்டீனா                           vs                            குரேஷியா                                  0 - 3

நைஜீரியா                                    vs                            ஐஸ்லாந்து                                   2 - 0

ஐஸ்லாந்து                                   vs                            குரேஷியா                                   1 - 2

நைஜீரியா                                    vs                            ஆர்ஜன்டீனா                            1 – 2

 

புள்ளி விபரம்

1 குரோஷியா                            3              3              0              0              7              1              6              9

2 அர்ஜென்டினா                     3              1              1              1              3              5              -2            4

3 நைஜீரியா                                3              1              0              2              3              4              -1            3

4 ஐஸ்லாந்து                               3             0              1              2              2              5              -3            1

(அணி, போட்டிகள், வெற்றி,சமநிலை, தோல்வி, அடித்த கோல்கள், வாங்கிய கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)

 

 

இரண்டாம் சுற்றுப் போட்டிகள்

ஜூன்  30 - 19: 30, ஆர்ஜன்டீனா எதிர்  பிரன்ஸ்

ஜூலை 01 - 21.30 ,  டென்மார்க் Vs குரேஷியா

http://www.tamilmirror.lk/sports-articles/உலகக்-கிண்ணம்-குழு-டி/139-218275

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்றில் 6 முன்னாள் சாம்பியன்கள்

 
அ-அ+

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற ஆறு அணிகள் தகுதிபெற்றுள்ளன. #FIFAWorldCup2018 #FIFA2018 #KnockOutStage

 
 
 
 
உலகக்கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்றில் 6 முன்னாள் சாம்பியன்கள்
 
 
மாஸ்கோ: 
 
21வது ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரின் லீக் பிரிவின் முடிவில் 16 அணிகள் அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இத்தொடரின் லீக் ஆட்டங்கள் 14-ம் தேதி தொடங்கி, நேற்று முடிவடைந்தது. 
 
லீக் போட்டிகளின் முடிவில், ‘ஏ’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘பி’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘சி’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘டி’ பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, ‘ஈ’ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, ‘எஃப்’ பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ‘ஜி’ பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, ‘எச்’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 
 
201806290556496111_1_fifaquarters._L_styvpf.jpg
 
இதன்மூலம் முன்னாள் உலக சாம்பியன்களான பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய ஆறு அணிகள் இந்த முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த உலகக்கோப்பையில் ‘எஃப்’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியனான ஜெர்மனி மூன்று லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன், பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ள இத்தாலி அணி உலகக்கோப்பைக்கு தகுதிபெறவில்லை.
 
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு சாம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. 2006-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இத்தாலி, 2010-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2010-ம் ஆண்டு வென்ற ஸ்பெயின், 2014-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2014-ம் ஆண்டு வென்ற ஜெர்மனி, இந்தாண்டு முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. முன்னதாக 1998-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ், 2002-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நாக்-அவுட் சுற்று போட்டிகள் நாளை தொடங்குகின்றன. நாளை நடைபெறும் போட்டிகளில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா, உருகுவே - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் வெல்லும் அணிகள் முதல் காலிறுதி போட்டியில் மோதி கொள்ளும். #FIFAWorldCup2018 #FIFA2018 #KnockOutStage

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/29055649/1173286/FIFA-World-Cup-6-Previous-tournament-Champions-in.vpf

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணம்: குழு எவ்
 
 

- ச. விமல்

image_d2bf804e37.jpg

2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் அதிருப்தியை தந்த குழுவாக இந்த குழு மாறிப்போனது. நடப்பு உலக சம்பியன் ஜேர்மனி அணி தங்கள் உலகக்கிண்ண வரலாற்றில் முதற் தடவையாக முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். குழு நிலையில் இறுதியிடத்தை பெற்று வெளியேறியுள்ளார்கள். இம்முறை உலகக்கிண்ணத்தை வெற்றி பெறும் வாய்ப்புள்ள முதல் நாடக கணிக்கப்பட்டது ஜேர்மனி. அதுமட்டுமல்லாமல் தரப்படுத்தல்களில் முதலிடத்தில் காணப்படுகிறார்கள். ஐரோப்பிய வலைய தெரிவுகாண் போட்டிகளின் முழுமையான போட்டிகளையும் வெற்றி பெற்று உலகக்கிண்ணத்துக்கு தெரிவான அணி. ஏன் இப்படி நடந்தது? பதில் இல்லையென்றே கூற முடியும்.

ஆரம்ப போட்டியில் மெக்சிகோ அணியுடன் 0-1 என தோல்வியடைந்தார்கள். ஜேர்மனி அணியின் நிறைவு செய்து வைத்தல் சரியாக அமையவில்லை. மூன்று போட்டிகளிலும் பந்து அவர்கள் பக்கமாகவே இருந்தது. பந்துகளை கோல் நோக்கி நகர்த்துதல் போதுமானதாக அமையவில்லை. அடித்த பந்துகள் கோல் கமபங்களை தாண்டி சென்றமை ஜேர்மனி அணியின் மூன்று போட்டிகளிலும் பார்க்கக்கூடியதாக அமைந்தது. மெக்சிகோ அணியுடனான போட்டியில் ஜேர்மனி அணி சிறப்பாக விளையாடிய போதும் ஜேர்மனி அணி தமக்கு கிடைத்தை வாய்ப்புகளை சரியாக பாவிக்க தவறவிட்டார்கள்.

குழு F இல் முதலிடத்தை பெற்றுக்கொண்ட சுவீடன் அணியினை ஜேர்மனி அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஜேர்மனி அணியின் ஆக்ரோஷமான விளையாட்டை பார்க்க முடிந்தது. முதற் போட்டியில், துரதிஷ்டம் தோற்று போனார்கள் என பார்த்தால் தென் கொரியா அணியுடன் 0-2 என தோற்ற விதம் பற்றி சொல்வது கடினமே. தென் கொரியா அணி சிறப்பாக விளையாடியது. ஜேர்மனியின் இறுதி நேர தாக்கும் வியூகம் இந்தப் போட்டியில் மிக வேகமாக காணப்பட்டது. ஆனால் அந்த தாக்குதல்கள் கோல்களை பெற்றுக் கொடுக்கவில்லை. ஜேர்மனி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமானவர் தென் கொரியா அணியின் கோல் காப்பாளர் கியூவின் வூ சூ. நிச்சயமான பல கோல்களை இவர் தடுத்திருந்தார். 

ஜேர்மனி அணி என்ற பெயர் இருந்தாலும் அண்மைக்காலமாக இவர்கள் நல்ல முறையில் விளையாடவில்லை என்றாலே அவர்களின் வெளியேற்றம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளலாம். நல்ல முறையில் உள்ள அணி. சிறப்பாக விளையாடிவரும் அணி திடீரென இவ்வாறு தோல்விகளை சந்தித்து வெளியறுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஏமாற்றம் தருவது. ஜேர்மனி அணி பொதுவாக உலக ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை கொண்ட அணி. அதிக ரசிகர்களை கொண்ட அணி. எப்போதும் நல்ல முறையில் விளையாடும் அணி. இறுதியாக விளையாடிய போட்டியில் தோல்வியடைந்தும் கூட ஒரு மஞ்சள் அட்டை கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இப்படியான நல்ல அணியொன்று வெளியேறியிருப்பது இந்த உலக கிண்ண தொடரின் விறுவிறுப்பை கொஞ்சமாவது குறைவடையைச் செய்யும் என்பதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

குழு F இல் சுவீடன் அணி முதலிடம் பெற்றுக்கொண்டது. சுவீடன் அணி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகளை கொண்ட அணியாகவே காணப்பட்டது. உலகக்கிண்ண தெரிவுகாண் போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தே உலகக் கிண்ண வாய்ப்பை பெற்றார்கள் . இரண்டு பலமான அணிகளின் வெளியேற்றத்துக்கு காரணமானவர்கள்  இலகுவாக விட்டுவிடுவார்களா? ஜேர்மனி அணியிடம் தோல்வியை சந்தித்தாலும் மெக்சிகோ மற்றும் தென் கொரியா அணிகளை வெற்றி பெற்றுக்கொண்டார்கள். சுவீடன் அணி உலகக்கிண்ணத்தை வெற்றி பெறாவிட்டாலும் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். எனவே இம்முறை இவர்கள் இன்னமும் முன்னேற்றங்களை சந்திக்கும் வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. சுவீடன் அணி சுவிற்சலாந்து அணியினையே இரண்டாம் சுற்றில் சந்திக்கப்போகிறார்கள். எனவே இரண்டு அணிகளது பலமென பார்க்கும் போது சுவீடன் அணி ஓரளவு முன்னிலையில் தென்படுகிறது. பந்தயக்காரர்கள் கிட்டத்தட்ட சம வாய்ப்புகளை வழங்கியுள்ள போதும் சுவிற்சலாந்து அணிக்கு சிறியளவு முன்னிலை கொடுத்துள்ளார்கள். தரப்படுத்தல்கள் என பார்க்கும் போது சுவிற்சலாந்து அணி ஆறாமிடத்திலும், சுவீடன் அணி இருபத்துநான்காமிடத்த்திலும் காணப்படுகின்றன. "அட போங்கப்பா தரப்பப்படுத்தல்கள் எல்லாம் இங்க செல்லாது" எனவும் சொல்ல வேறு தோன்றுகிறது. இரண்டு ஐரோப்பிய நாடுகள் மோதப்போகின்றன. யார் காலிறுதியினை தொடப்போகிறார்கள் என்பதனை போட்டி முடிவேசொல்லும். இவர்கள்தான் வெல்வார்கள் என அடித்து சொல்வது கடினமே.

1994 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் விளையாடி வரும் மெக்சிகோ அணி இம்முறையும் அந்த வாய்ப்பை பெற்றுள்ளது. கொரியா அணியின் வெற்றியின் மூலமே இந்த வாய்ப்பை இவர்கள் பெற்றுக்கொண்டார்கள். சுவீடன் அணியுடன் 3-0 என்ற கோல் கணக்கில் காணப்பட்ட வேளையில் ஜேர்மனி அணி 1 கோல் வித்தியாசத்தில் வென்றால் மெக்சிகோ வெளியே என்ற அழுத்தமான நிலையிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். கொரியா மற்றும் ஜேர்மனி அணிகளின் உதவியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளார்கள். ஆனால் அடுத்த சுற்றை இவர்கள் இம்முறையும் தாண்ட மாட்டார்கள் என கூற முடியும். பிரேசில் அணியினை அடுத்த இரண்டாம் சுற்றில் சந்திக்கவுள்ளார்கள். இருப்பினும் இந்த உலகக்கிண்ணத்தில் இதுதான் நடக்குமென கூறுவது கடினமாகவே உள்ளது. நடைப்பவை எல்லாம் எதிர்பார்ப்புகளுக்கு தலைகீழாக நடப்பதனால் மெக்சிகோ அணி வெற்றி பெற்று மூன்றாவது தடவையாக காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இம்முறை விளையாடும் மெக்சிகோ அணி கடந்த கால அணிகளிலும் பார்க்க பலமான அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் சுற்று வாய்ப்பை தென் கொரியா அணி இழந்தாலும் இந்த உலகக்கிண்ணத்தில்  தங்கள் பெயரை பதிவு செய்து வெளியேறியுள்ளார்கள். ஆசிய வலையத்திலிருந்து தெரிவான தென் கொரியா அணி 1986 ஆம் ஆண்டு முதல் உலகக்கிண்ண தொடார்களில் விளையாடி  வருகிறார்கள். சுவீடன் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொரு கோல் வித்தியாசத்திலேயே தோல்விகளை சந்திதித்தார்கள். முன் வரிசை வீரர்கள் பந்துகளை கோல் கம்பத்தை நோக்கி தூரத்திலிருந்த்து குறி வைத்து உதைப்பது குறைவாக காணப்பட்டது. இது கூட அவர்களின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது. பந்துகளை வெட்டி எடுத்து கோல் கம்பத்துக்கு அருகில் கொண்டு சென்று கோலடிக்க முயன்றார்கள். அதனால் மற்றைய அணிகள் அவர்களை இலகுவாக தடுத்துவிட்டார்கள். ஒரு சமநிலை முடிவினை பெற்றிருந்தால் அடுத்த சுற்று வாய்ப்பு நிச்சசயம் கிடைத்திருக்குமென கூற முடியும். பலமான அணிகளை இவ்வளவு சிறப்பாக எதிர்கொண்டதே இவர்களின் வெற்றியென கூற முடியும்.

 

புள்ளிப்பட்டியல்

1 ஸ்வீடன்                                       3              2              0              1              5              2              3              6

2 மெக்ஸிகோ                            3              2              0              1              3              4              -1            6

3 தென் கொரியா                   3              1              0              2              3              3              0              3

4 ஜேர்மனி                                    3              1              0              2              2              4              -2            3

(அணி, போட்டிகள், வெற்றி,சமநிலை, தோல்வி, அடித்த கோல்கள், வாங்கிய கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)

 

போட்டி முடிவுகள்

ஜேர்மனி                                        vs            மெக்சிகோ                 0 - 1

தென் கொரியா                       vs           ஸ்வீடன்                         0-1

தென் கொரியா                      vs            மெக்சிகோ                  1 - 2

ஜேர்மனி                                        vs            ஸ்வீடன்                          2 - 1

மெக்ஸிக்கோ                           Vs           ஸ்வீடன்                         0 - 3

தென் கொரியா                      vs            ஜேர்மனி                        2 – 0

 

இரண்டாம் சுற்றுப் போட்டிகள்

ஜூலை 02 - 19.30, பிரேசில் எதிர் மெக்சிகோ

ஜூலை 03 - 19.30, சுவீடன் எதிர் சுவிற்சலாந்து

http://www.tamilmirror.lk/sports-articles/உலகக்-கிண்ணம்-குழு-எவ்/139-218276

Link to comment
Share on other sites

40 ஆண்டு கால போராட்டம்... உலகக் கோப்பையில் வெற்றியைப் பதிவுசெய்த துனிசியா!

 

ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பைத் தொடரின் குரூப் ' G' பிரிவில், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு நுழைந்துவிட்ட நிலையில், இன்னும் ஒரு போட்டியில் கூட வெல்லாத பனாமா மற்றும் துனிசியா அணிகள் தங்களின் முதல் வெற்றிக்காக இன்று போட்டியிட்டன.

கோல் அடித்த மகிழ்ச்சியில் துனிசியா வீரர் வாபி காஸ்ரி

33-வது நிமிடத்தில் துனிசிய வீரர் ஓன் கோல் அடிக்க 'வெற்றி நமதே!' என்று சுற்றிக்கொண்டிருந்த பனாமாவுக்கு, இரண்டாம் பாதி இடியை இறக்கிவிட்டது. இரண்டாம் பாதியில் தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து, உலகக்கோப்பையில் தனது வெற்றியைப் பதிவுசெய்துவிட்டது துனிசியா. உலகக்கோப்பையில் அந்த அணி முதல்முறையாகப் பங்கேற்ற 1978-ம் ஆண்டு மெக்ஸிகோவுடன் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. அதன் பிறகு 40 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பைப் போட்டியில் துனிசியாவுக்குக் கிடைக்கும் வெற்றி இதுவாகும்.

 

 

வரலாற்று வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் துனிசியா வீரர்கள்

துனிசியாவின் ஆட்டத்தை ஒப்பிடும்போது இந்தப் போட்டியில் பனாமா பிளேயர்கள் நன்றாக ஒருங்கிணைந்து விளையாடினார்கள். இரண்டாம் பாதி தொடங்குவதற்கு முன்புவரை பனாமாவுக்கு வெற்றி என்ற நம்பிக்கையே இருந்தது. இரண்டாம் பாதி தொடங்கிய 6-வது நிமிடம் பென் யூசெஃப் கோல் போஸ்ட்டுக்கு அருகே இருந்து கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். பெல்ஜியம் அணியுடன் நடைபெற்ற போட்டியில் கோல் அடித்த வாபி காஸ்ரி, 66-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து துனிசியாவை வெற்றிப்பாதைக்குக் கொண்டுசென்றார். கடைசி வரை கோல் போட்டு மேட்சை சமன் செய்யப் போராடிய பனாமாவால், கோல் எதுவும் அடிக்க முடியாமல் தோல்வியுற்றது. கால்பந்து உலகக்கோப்பையில் முதல்முறையாகக் கலந்துகொண்ட பனாமா வெற்றியைப் பதிவு செய்யாமலேயே லீக் போட்டிகளோடு வெளியேறியது.

https://www.vikatan.com/news/tamilnadu/129179-fifa-world-cup-2018-tunisia-records-their-first-world-cup-win-after-40-years-by-beating-panama.html

Link to comment
Share on other sites

நடுவர்கள் தீர்ப்பா அளித்தார்கள்? முற்றிலும் அநீதி: மொராக்கோ கால்பந்து அணி கடுமையான புகார்

 

 
sppain2jpg

ஸ்பெயினுக்கு எதிராக ஆஃப் சைடு தீர்ப்பை ரெஃபர் செய்த போது எதிர்க்கும் மொராக்கோ அணி. | படம்: ஏ.எஃப்.பி.

மொராக்கோ ராயல் கால்பந்து கூட்டமைப்பு உலகக்கோப்பை 2018-ல் தங்களுக்கு இழைக்கப்பட்ட நடுவர் தீர்ப்பு அநீதிகள் குறித்து உலகக்கால்பந்து கூட்டமைப்பிடம் புகார் அளித்துள்ளது.

மொராக்கோ கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவர் ஃபவுஸி லெக்யா, நடுவர்களின் அநீதியான பிழைகள்தான் தங்கள் அணி ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுடன் நாடு திரும்ப நேரிட்டது. வீடியோ ரெஃபரல் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் நடுவர்கள் தீர்ப்பு எதிரணிக்கே சாதகமாக அமைந்தது என்று கடும் புகார் எழுப்பியுள்ளனர்.

 

பிரிவு பி-யில் ஈரான், போர்ச்சுகள், ஸ்பெயின் அணிகளுடன் மொராக்கோ விளையாடியது. இதில் ஈரான் அணிக்கு எதிராக கடைசியில் துரதிர்ஷடவசமாக மொராக்கோ வீரர் தங்கள் கோலுக்குள்ளேயே அடிக்க முதல் தோல்வி ஏற்பட்டது, ஆனால் போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய அணிகளுக்கு எதிராக கடும் சவால் அளித்தது மொராக்கோ.

“எங்கள் நாட்டு அணி, நடுவர்கள் தீர்ப்பினால் பெற்ற அநீதிகளையும், எரிச்சலையும் வெளிப்படுத்த விரும்புகிறோம். நடுவர்கள் பிழையினால் எங்கள் அணி 2018 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

இந்த நடுவர் தீர்ப்பு பிழைகளின் கடுமை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது, போர்ச்சுக்கல், ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக வீடியோ ரெஃப்ரல் எதிரணியினருக்குச் சாதகமாகவே பயன்படுத்தப்பட்டது” என்று கூறி தவறுகளை பட்டியலிட்டுள்ளது.

போர்ச்சுக்கலுக்கு எதிராக 0-1 என்று தோல்வி தழுவிய மொராக்கோ ஸ்பெயினுக்கு எதிராக 2-2 என்று ட்ரா செய்தது.

என்ன நடந்ததோ அது எங்களின் பொறுப்பான கவலைகளை அதிகரித்துள்ளது, மேலும் இத்தகைய அநீதிகள் தொடர்ந்தால் ஃபிபா மீதான எதிர்மறை விளைவுகளையே அது ஏற்படுத்தும், கால்பந்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும்.

ஆகவே தலைவர் கியானி இன்ஃபாண்டினோ இது குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உலகக்கோப்பைகளில் நீதியுடன் நடுவர்கள் செயல்படுவதை உறுதி செய்து அநீதிகள் சரி செய்யப்பட்டு சம வாய்ப்புகள் உள்ளவாறு தொடர்கள் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கடிதத்தில் தெரிவித்தார்.

போர்ச்சுக்கலுக்கு எதிராக பெனால்டி கிக் கொடுக்காதது:

amrabatjpgjpg

மொராக்கோ வீரர் அம்ராபட்டை கீழே தள்ளிய போர்ச்சுகலின் கிரைரோ. பெனால்டி கிடைக்கவில்லை, | படம்.| ஏ.பி.

 

26வது நிமிடத்தில் அம்ராபட் ஒரு லாங் பாஸை எடுத்து ராஃபேல் கிரைரோவைத் தாண்டி எடுத்துச் சென்று போர்ச்சுகல் பாக்சிற்குள் சென்றார், ஆனால் கிரைரோ அவருக்குக் கடும் நெருக்கடி கொடுக்க கீழே விழுந்தார், மொராக்கோ அணி பெனால்டி கிக் எதிர்பார்த்தது, மீண்டுமொரு தருணம் வீடியோ ரெஃபரலைப் பயன்படுத்தாமல் ஆட்டம் கடந்து சென்றது.

ரீப்ளேயில் போர்ச்சுகல் வீரர் கிரைரோ, மொராக்கோவின் அம்ராபட்டின் சட்டையைப் பிடித்து கடுமையாக இழுத்தது தெரிந்தது. ஆனால் அம்ராபட்டும் கிரைரோவின் கால்சட்டையைப் பற்றியதும் தெரிந்தது. இது கொடுக்கப்பட்டிருந்தால் உலகக்கோப்பையின் கதியே மாறியிருக்கும்.

ஸ்பெயினுக்கு எதிரான நடுவர் தீர்ப்புப் பிழைகள்:

மொராக்கோ 14ம் நிமிடத்தில் காலித் பூட்டைப் மூலம் முதல் கோலை அடிக்க ஸ்பெயின் அணி அலார்கன் இஸ்கோ மூலம் 19வது நிமிடத்தில் சமன் செய்தது, ஆனால் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் யூசெஃப் என் நெஸிரி எதிர்பாராதவிதமாக ஒரு கோலை அடிக்க மொராக்கோ 2-1 என்று முன்னிலை பெற்றது.

92வது நிமிடத்தில் 1-2 என்று பின் தங்கிய நிலையில் ஸ்பெயின் வீரர் இயாகோ ஆஸ்பாஸ் ஒரு கோலை அடிக்க, ஆட்டம் முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில் நடுவர் ஆஃப் சைடு, கோல் இல்லை என்று தீர்ப்பளித்தார். ஸ்பெயினின் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வர ஸ்டேடியமே திக் திக் என்று வீடியோ நடுவரின் முடிவு என்னவாக இருக்கும் என்று கைகளைத் தேய்த்தபடி, நகங்களை கடித்தபடி காத்திருந்தன. வீடியோ நடுவர் ஆஃப்சைடு இல்லை என்று தீர்ப்பளிக்க ஸ்பெயினின் கடைசி நிமிட கோல் 2-2 என்று மொராக்கோவுடன் ஒரு ட்ராவை ஏற்படுத்தியது, இதே இந்த கடைசி நிமிட வீடியோ ரெஃபரலால் ட்ரா ஆனதையடுத்து கடுப்பான மொராக்கோவின் நார்டின் அம்ராபட், “வீடியோ ரெஃபரல் ஒரு புல்ஷிட்” என்று திட்டினார்.

இந்த ஆட்டத்தில் நிறைய முறை நடுவர் தீர்ப்புகள் ஸ்பெயினுக்குச் சாதகமாக இருந்ததை பிற கால்பந்தாட்ட ஊடகங்களும் சுட்டிக்காட்டின.

இந்நிலையில் மொராக்கோ அதிகாரபூர்வ புகார் அளித்துள்ளது. ஒரு நல்ல அணி அநீதியான தீர்ப்புகளினால் வெளியேறியது கால்பந்தாட்டத்துக்கு பேரிழப்புதான்.

http://tamil.thehindu.com/sports/article24289635.ece

Link to comment
Share on other sites

நாளை நொக்அவுட் சுற்று ஆரம்பம் : காலிறுதிக்குள் நுழையும் அணிகள் எவை ?

 

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாம் சுற்று நேற்றுடன் நிறைவுபெற்றுள்ள நிலையில், இரண்டாம் சுற்று நாளை ஆரம்பமாகின்றது.

5ac5d53f15e9f95be648bceb.jpg

முன்னாள் சம்பியன்களாக ஆர்ஜன்டீனாவும் பிரான்ஸும் முதலாவது நொக் அவுட் போட்டியில் நாளை மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் போர்த்துக்கலை உருகுவே எதிர்த்தாடுகின்றது.

21ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி கடந்த 14 ஆம் திகதி ரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

‘லீக்’ சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நொக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

maxresdefault.jpg

நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் உருகுவே, ரஷ்யா (ஏ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி பிரிவு), பிரான்ஸ், டென்மார்க் (சி பிரிவு), குரோஷியா, ஆர்ஜென்டீனா (டி பிரிவு), பிரேசில், சுவிற்சர்லாந்து (இ பிரிவு), சுவீடன், மெக்சிகோ (எப் பிரிவு), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி பிரிவு), கொலம்பியா, ஜப்பான் (எச் பிரிவு) ஆகிய 16 அணிகள் ‘நொக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

சவுதிஅரேபியா, எகிப்து (ஏ பிரிவு), ஈரான், மொராக்கோ (பி பிரிவு), பெரு, அவுஸ்திரேலியா (சி பிரிவு), நைஜீரியா, ஐஸ்லாந்து (டி பிரிவு), செர்பியா, கோஸ்டாரிகா (இ பிரிவு), தென் கொரியா, ஜெர்மனி (எப் பிரிவு), துனிசியா, பனாமா (ஜி பிரிவு), செனகல், போலந்து (எச் பிரிவு), ஆகிய 16 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

இன்று ஓய்வு நாளாகும் இந்நிலையில், நாளை நொக் அவுட் சுற்றுக்கள் தொடங்கவுள்ளன. ‘சி’ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ள பிரான்ஸ் மற்றும் ‘டி’ பிரிவில் 2-ஸ்ரீ ஆவது இடத்தை பிடித்த ஆர்ஜன்டீனா ஆகிய அணிகள் முதல் போட்டியில் மோதவுள்ளன. இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30-க்கு தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FIFA-World-Cup-2018-Uruguay-Vs-Portugal-

 

நாளை நடைபெறும் 2 ஆவது போட்டியில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த உருகுவே மற்றும் ‘பி’ பிரிவில் 2ஆவது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் மோதுகின்றன.

அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை நொக் அவுட் சுற்றுக்கள் நடைபெறவுள்ளன. கால்இறுதி போட்டிகள்  6 ஆம் திகதி மற்றும் 7 ஆம் திகதிகளிலும், அரை இறுதி போட்டிகள் 10 மற்றும் 11 ஆம் திகதிகளிலும், 3 ஆவது இடத்திற்கான போட்டி 14 ஆம் திகதியும் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இறுதி போட்டி அடுத்த மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/35746

Link to comment
Share on other sites

ஆச்சர்யங்களும் சர்ச்சைகளும்: உலகக் கோப்பை முதல் சுற்றின் முக்கிய அம்சங்கள்!

 

 
Argentina_nigeria1_(4)

 

ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் நேற்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ளன. இதையடுத்து பிரான்சு, ஆர்ஜென்டீனா, போர்ச்சுகல், உருகுவே, ஸ்பெயின், ரஷியா, குரோஷியா, டென்மார்க், பிரேஸில், மெக்ஸிகோ, பெல்ஜியம், ஜப்பான், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, கொலம்பியா, இங்கிலாந்து ஆகிய 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

முதல் சுற்றும் நாக் அவுட்டும்: முக்கிய அம்சங்கள்

* நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற 16 அணிகளில் ஆறு அணிகள் உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றவை. 

பிரேஸில் - 5 
ஆர்ஜென்டீனா - 2
உருகுவே - 2
ஃபிரான்ஸ் - 1
இங்கிலாந்து - 1
ஸ்பெயின் - 1

* முதல் சுற்றில் அதிக கோல்கள் அடித்த அணி: 

பெல்ஜியம் - 9
இங்கிலாந்து/ரஷியா - 8    
குரோஸியா - 7

முதல் சுற்றில் அதிக கோல்கள் விட்டுக்கொடுத்த அணி:

பனாமா - 11
துனிசியா - 8
சவுதி அரேபியா - 7

* முதல் சுற்றில் உருகுவே மட்டுமே இதுவரை ஒரு கோலும் விட்டுக் கொடுக்கவில்லை. ஃபிரான்ஸ், டென்மார்க், குரோஸியா, பிரேஸில் ஆகிய அணிகள் 1 கோல் மட்டுமே விட்டுக் கொடுத்தவை. 

* முதல் சுற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள்

ஹென்றி கேன் (இங்கிலாந்து) - 5 கோல்கள் ( 2 ஆட்டங்கள்)
ரொமலு லுகாகு (பெல்ஜியம்) - 4 கோல்கள் ( 2 ஆட்டங்கள்)
கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுகல்) - 4 கோல்கள் (3 ஆட்டங்கள்)
டெனிஸ் செரிஷெவ் (ரஷியா) - 3 கோல்கள் ( 3 ஆட்டங்கள்)
டியகோ கோஸ்டா (ஸ்பெயின்) - 3 கோல்கள் ( 3 ஆட்டங்கள்)

* முதல் சுற்றில் சிறப்பாக ஆடிய அணிகள் அதாவது 3 ஆட்டங்களில் வென்று முழுப்புள்ளிகளையும் (9 புள்ளிகள்) பெற்ற அணிகள்:  

உருகுவே, குரோஸியா, பெல்ஜியம்: 3 வெற்றிகள், 9 புள்ளிகள். 

குறைந்த புள்ளிகளுடன் நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற அணிகள்:

ஆர்ஜென்டீனா - 4 புள்ளிகள்
ஜப்பான் - 4 புள்ளிகள்

ஆதிக்கம் செலுத்தும் கண்டங்கள்

* நாக் அவுட்டுக்கு 10 ஐரோப்பிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட 14 அணிகளில் 4 மட்டுமே வெளியேறியுள்ளன. 

பெல்ஜியம், குரோஸியா, டென்மார்க், இங்கிலாந்து, ஃபிரான்ஸ், போர்ச்சுகல், ரஷியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து ஆகிய 10 ஐரோப்பிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, செர்பியா ஆகிய 4 ஐரோப்பிய அணிகள் வெளியேறியுள்ளன.

* கால்பந்து உலகக் கோப்பைக்கு எப்போதுமே தனி வண்ணம் அளிப்பவர்கள், தென் அமெரிக்க வீரர்கள். இந்தமுறை கலந்துகொண்ட 5 அணிகளில் நான்கு அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளன. 

ஆர்ஜென்டீனா, பிரேஸில், கொலம்பியா, உருகுவே ஆகிய நான்கு தென் அமெரிக்க அணிகள் தகுதி பெற்ற நிலையில் பெரு மட்டும் வெளியேறியுள்ளது. 

* ஆசிய அணிகளின் பங்களிப்பு எப்போதுமே கால்பந்தின் வளர்ச்சியாகப் பார்க்கப்படும். இந்தமுறை 5 அணிகள் தகுதி பெற்றதில் ஒரே ஓர் அணி மட்டுமே நாக் அவுட்டுக்குச் சென்றுள்ளது. அதாவது தென் அமெரிக்க நிலைக்கு இது அப்படியே தலைகீழ்.

ஜப்பான் மட்டுமே தகுதி பெற, ஈரான், சவுதி அரேபியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா (ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் ஓர் அங்கம்) ஆகிய ஆசிய அணிகள் வெளியேறியுள்ளன.

* வட அமெரிக்க நாடுகளில் ஒரு நாடு மட்டுமே அடுத்தச் சுற்றுக்குச் செல்கிறது.

கோஸ்டா ரிகா, பனாமா ஆகிய வட அமெரிக்க நாடுகள் வெளியேறியுள்ளன. மெக்ஸிகோ மட்டுமே நாக் அவுட்டில் விளையாடுகிறது. 

* உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிர்ச்சிய ஏற்படுத்துவதில் ஆப்பிரிக்க நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால் இந்தமுறை மிகப்பெரிய ஏமாற்றம்.

எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, செனகல், துனிசியா என ஐந்து ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்றதில் ஒன்றுகூட காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. 1982-க்குப் பிறகு இப்போதுதான் எந்தவொரு ஆப்பிரிக்க அணியும் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இது மிகப்பெரிய விவாதமாக உருவாகியுள்ளது.

நீயா நானா போட்டியின் வரலாறு

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்குபெறும் அணிகள் இதற்கு முன்பு உலகக் கோப்பையில் மோதியபோது நடந்தது என்ன?

* போர்ச்சுகல் vs உருகுவே, ஸ்பெயின் vs ரஷியா, குரோஷியா vs டென்மார்க், ஸ்வீடன் vs ஸ்விட்சர்லாந்து - இதுவரை உலகக் கோப்பைப் போட்டியில் இந்த அணிகள் மோதிக்கொள்ளவேயில்லை. முதல்முறையாக மோதவுள்ளதால் கடுமையான போட்டிக்குப் பஞ்சம் இருக்காது. 

பிரான்சு vs ஆர்ஜென்டீனா - இருமுறை மோதியதில் ஆர்ஜென்டீனாவே வென்றுள்ளது.

பிரேஸில் vs மெக்ஸிகோ - 4 ஆட்டங்களில் மூன்றில் பிரேஸில் வென்றுள்ளது.

பெல்ஜியம் vs ஜப்பான் - ஒருமுறை மோதிய ஆட்டம் டிரா ஆகியுள்ளது.

கொலம்பியா vs இங்கிலாந்து - ஒருமுறை மோதிய ஆட்டத்தை இங்கிலாந்து வென்றது.

இதர அம்சங்கள்

* குரூப் ஹெச் பிரிவில் ஜப்பான், செனகல் ஆகிய இரு அணிகளும் ஒரு புதிரான நிலையை  நேற்று உருவாக்கின. இதனால் முதல் சுற்று பரபரப்புடனும் சர்ச்சையுடனும் முடிந்தது.

இரு அணிகளும் 4 புள்ளிகளுடன் 4 கோல்களை அடித்து 4 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளன. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிய ஆட்டமும் சமனில் முடிந்தது. இப்படி எல்லாமே சம அளவில் இருந்ததால் நன்னடத்தை விதிகளின்படி, செனகல் ஆறு மஞ்சள் அட்டைகள் பெற்றிருந்த நிலையில் 4 மஞ்சள் அட்டைகள் மட்டுமே பெற்ற ஜப்பான் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுபோல தகுதி பெற்ற முதல் அணி என்கிற பெருமையை அடைந்துள்ளது ஜப்பான் அணி. தனது கடைசி ஆட்டத்தில் கடைசி 10 நிமிடங்களில் இதனை அறிந்த ஜப்பான் வீரர்கள் கோலடிக்க முயற்சி செய்யாமல் தற்காப்பு உத்தியுடன் விளையாடியது பார்வையாளர்களை வெறுப்பேறியது. உலகக் கோப்பைப் போட்டியில் இதுபோல ஓர் அணி எவ்வித லட்சியமும் இன்றி விளையாடுவது இழுக்கு என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.     

* முதல் சுற்றில் எகிப்து vs சவுதி அரேபியா, துனிசியா vs பனாமா ஆகிய இரு ஆட்டங்கள் மட்டுமே நாக் அவுட்டுக்குப் பயன்படாத ஆட்டங்கள். மற்றபடி இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து அணிகளும் குறைந்தது 2 கோல்களையாவது அடித்தன. உலகக் கோப்பை வரலாற்றில் இது முதல்முறை.

சவுதி அரேபியா, எகிப்து, போலந்து, ஈரான், மொராக்கோ, டென்மார்க், பெரு, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா, ஜெர்மனி, பனாமா ஆகிய 13 அணிகள் இந்தப் போட்டியில் குறைந்த கோல்கள் அடித்தவை. அனைத்துமே 2 கோல்கள் அடித்தன. இதில் டென்மார்க் மட்டும் 2
கோல்கள் மட்டுமே அடித்தாலும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

* நாளை முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்று தொடங்குகிறது. அதன் அட்டவணை:

Suarez_Uruguay_(3).jpg

காலிறுதிக்கு முந்தைய சுற்று

ஜூன் 30 

பிரான்சு vs ஆர்ஜென்டீனா (இந்திய நேரம் இரவு 7.30 மணி)
போர்ச்சுகல் vs உருகுவே (இரவு 11.30 மணி)

ஜூலை 1

ஸ்பெயின் vs ரஷியா (இரவு 7.30 மணி)
குரோஷியா vs டென்மார்க் (இரவு 11.30 மணி)

ஜூலை 2

பிரேஸில் vs மெக்ஸிகோ (இரவு 7.30 மணி)
பெல்ஜியம் vs ஜப்பான் (இரவு 11.30 மணி)

ஜூலை 3

ஸ்வீடன் vs ஸ்விட்சர்லாந்து (இரவு 7.30 மணி)
கொலம்பியா vs இங்கிலாந்து (இரவு 11.30 மணி)

இதன்பிறகு காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 6 முதல் தொடங்குகின்றன.

http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/29/winners-losers-trends-from-the-world-cups-first-round-2949863--2.html

Link to comment
Share on other sites

உலககோப்பை கால்பந்து: இரண்டாம் சுற்றில் எந்த அணி யாருடன் மோதுகிறது?

உலககோப்பை கால்பந்தில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இரண்டாவது சுற்று இன்று முதல் தொடங்கவுள்ளது. கடந்த உலககோப்பையை வென்ற ஜெர்மனி லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

லியோனல் மெஸ்ஸிபடத்தின் காப்புரிமைJUAN MABROMATA

மொத்தம் 32 நாடுகள் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ளன. எட்டு பிரிவுகளில் இருந்து தலா இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

குரூப் ஏ :-

உருகுவே, ரஷ்யா, சௌதி அரேபியா, எகிப்து ஆகிய அணிகள் இடம்பெற்ற ஏ பிரிவில் உருகுவே, ரஷ்யா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. எகிப்து மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. சௌதி அரேபியா அணி எகிப்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ரஷ்ய அணி சௌதியை 5-0 என வென்றது குறிப்பிடத்தக்கது.

குரூப் பி :-

இரான் மற்றும் மொரோக்கோ அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இந்த பிரிவில் இருந்து ஸ்பெயின் போர்ச்சுகல் அணிகள் தலா ஒரு வெற்றி மற்றும் இரண்டு டிரா ஆகியவற்றோடு ஐந்து புள்ளிகளை பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. மொரோக்கோ அணி இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் டிராவும் செய்து கடைசி இடத்தை பிடித்திருக்கிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

குரூப் சி

பிரான்ஸ் அணி இரண்டு வெற்றி ஒரு டிரா என ஏழு புள்ளிகளுடன் எளிதாக அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றது. பெரு அணி ஆஸ்திரேலியாவை 2-0 என வென்றது எனினும் மற்ற இரண்டு போட்டிகளில் தோற்றதால் லீக் சுற்றுவது வெளியேறுகிறது. ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட வெல்லமுடியாமல் இப்பிரிவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. டென்மார்க் அணி ஒரு வெற்றி மற்றும் இரண்டு டிராவுடன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

குரூப் டி

குரோஷியா, அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய அணிகள் இப்பிரிவில் இடம்பெற்றன.

குரோஷியாவுடனான ஆட்டத்தில் அர்ஜென்டினா 0-3 என்ற கோல்கணக்கில் தோற்றது . முன்னதாக ஐஸ்லாந்துடனான ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்கவே ஆட்டம் சமநிலையில் முடிந்திருந்தது. நைஜீரியாவுடனான முன்றாவது போட்டியில் 2-1 என வென்று அடுத்தச் சுற்றுக்குள் நுழைந்தது மெஸ்ஸி அணி.

குரோஷியா மூன்று போட்டிகளிலும் வென்றதால் அடுத்த சுற்றுக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றது.

குரூப் ஈ

பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகள் ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. பிரேசில் இரண்டில் வென்றும் சுவிட்சர்லாந்து அணி செர்பியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றி கண்டும் அடுத்தச் சுற்றுக்குள் நுழைந்தன.

கோஸ்டாரிக்கா, செர்பியா வெளியேறின.

குரூப் எஃப்

சுவீடனும் மெக்சிகோவும் தலா இரண்டு போட்டிகளில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற, தென் கொரியாவும் ஜெர்மனியும் லீக் சுற்றோடு நாடு திரும்புகின்றன .

2014 உலககோப்பை சாம்பியன் ஜெர்மனி இம்முறை ஒரு போட்டியில் வென்று தென் கொரியா மற்றும் மெக்சிகோ ஆகிய அணிகளிடம் தோல்வி கண்டு லீக் சுற்றில் கடைசி இடம் பிடித்தது.

கால்பந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

குரூப் ஜி

இங்கிலாந்தும் பெல்ஜியமும் எளிதாக அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன . எனினும் லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்தை பெல்ஜியம் வென்றது.

துனீஷியா மற்றும் பனாமா அணிகள் வெளியேற்றப்பட்டன

குரூப் ஹெச்

கடும் போட்டி நடந்த இந்த பிரிவில் ஜப்பான் கொலம்பியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. செனகலும் போலந்தும் வெளியேறின.

கொலம்பியா மூன்றில் இரண்டு வென்று ஜப்பானுடன் தோல்வியைச் சந்தித்து ஆறு புள்ளிகளுடன் இப்பிரிவில் இருந்து அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

கொலம்பியாவை வென்ற ஜப்பான் அணி செனெகளுடனான போட்டியில் 2-2 என டிரா செய்தது. நேற்று நடந்த போட்டியில் போலந்து ஜப்பானை 1-0 என்ற கணக்கில் வென்றது.

போலந்து அணி ஒரு வெற்றி இரண்டு தோல்விகளுடன் ஹெச் பிரிவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

கால்பந்து உலகக்கோப்பையில் இந்தியா கோல் போடுவது எப்போது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரண்டாவது சுற்றில் யார் யாருடன் மோதுகிறார்கள்?

சனிக்கிழமையில் இருந்து இரண்டாவது சுற்று துவங்குகிறது. பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. உருகுவே போர்ச்சுகலை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் வெல்லும் அணிகள் ஜூலை ஆறு அன்று நடக்கவிருக்கும் காலிறுதி போட்டியில் பங்கேற்கவுள்ளன.

ஞாயற்று கிழமை நடக்கும் போட்டியில் ஸ்பெயினும் ரஷ்யாவும் ஒரு போட்டியில் மோதுகின்றன மற்றொரு போட்டியில் குரோஷியாவும் டென்மார்க்கும் மோதும். இந்த போட்டிகளில் வெல்லும் அணிகள் காலிறுதியில் கால் வைக்கும்.

திங்கள் கிழமை (ஜூலை 2) அன்று நடக்கும் போட்டியில் பிரேசில் மற்றும் மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பெல்ஜியமும் ஜப்பானும் மோதவுள்ளன.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) அன்று இங்கிலாந்தும் கொலம்பியாவும் ஒரு போட்டியிலும், சுவீடனும் ஸ்விட்சர்லாந்தும் ஒரு போட்டியிலும் மோதவுள்ளன. இந்த இரண்டு போட்டிகளில் வெல்லும் அணிகள் ஜூலை 7 அன்று நடக்கும் காலிறுதி போட்டியில் மோதும்.

https://www.bbc.com/tamil/sport-44661737

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை: முதல் சுற்றின் முடிவில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியல்!

 

 
Ronaldo_portugal_(5)

 

ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் நேற்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ளன. 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

இதையடுத்து முதல் சுற்றின் முடிவில் அதிக கோல்கள் அடித்த வீர்களின் பட்டியல்:

 வரிசை   எண்             வீரர்  ஆட்டங்கள்  கோல்கள் 
 1.  ஹென்றி கேன்   (இங்கிலாந்து)  2   5
 2.  ரொமலு லுகாகு   (பெல்ஜியம்)  2  4
 3.  கிறிஸ்டியனோ   ரொனால்டோ   (போர்ச்சுகல்)  3  4
 4.  டெனிஸ் செரிஷெவ்   (ரஷியா)  3  3
 5.  டியகோ கோஸ்டா     (ஸ்பெயின்)  3  3

 

Harry_KANE_(england)1.jpg ஹென்றி கேன்
Romelu_LUKAKU_1.jpg ரொமலு லுகாகு
Ronaldo_12_(2)11.jpg கிறிஸ்டியனோ   ரொனால்டோ
russai1.jpg டெனிஸ் செரிஷெவ் 
Diego_Costa_(spain1).jpg டியகோ கோஸ்டா

http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/29/most-goals-2949811.html

Link to comment
Share on other sites

உருகுவேயை சமாளிக்குமா போர்ச்சுக்கல்?- வெளியேறப்போவது யார்?

 

 

30CHPMUCRISTIANORONALDO2
30CHPMUCRISTIANORONALDO

கிறிஸ்டியானோ ரொனால்டோ   -  AFP

30CHPMUCRISTIANORONALDO2
30CHPMUCRISTIANORONALDO

கிறிஸ்டியானோ ரொனால்டோ   -  AFP

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றின் 2-வது ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - உருகுவே அணிகள் இன்று சோச்சி நகரில் மோதுகின்றன.

உருகுவே, போர்ச்சுக்கல் ஆகிய இரு அணிகளும் லீக் சுற்றில் தோல்வியடையாமல் நாக் அவுட் சுற்றில் கால்பதித்துள்ளது. அதிலும் உருகுவே அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் ஏ பிரிவில் ஆதிக்கம் செலுத்திய அந்த அணி 9 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பையில் எதிரணியிடம் கோல் வாங்காத ஒரே அணி உருகுவேதான். தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் எகிப்து அணியை வீழ்த்திய நிலையில் அடுத்த ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 1-0 தோற்கடித்திருந்தது உருகுவே அணி.

 
 

இதன் பின்னர் கடைசி ஆட்டத்தில் போட்டியை நடத்திய ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. சவுதி அரேபியா, ரஷ்யா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரரான லூயிஸ் சுவாரஸ் கோல் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 101 ஆட்டங்களில் 53 கோல்கள் அடித்துள்ள அவர், உருகுவே அணியை கால் இறுதிக்கு அழைத்துச் செல்வதில் முனைப்பு காட்டக்கூடும். லூயிஸ் சுவாரஸுடன், எடிசன் கவானியும் அணியின் அசுர பலமாக உள்ளார். இவர்களுடன் நடுகளத்தில் ரோட்ரிகோ பென்டன்குர், லூகாஸ் டொர்ரிரா, மார்டீஸ் வெசினோ பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். சென்ட்ரல் டிபன்ஸில் இன்றைய ஆட்டத்தில் கேப்டன் காடினுடன் கிம்மென்ஸ் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி தனது முதல் ஆட்டத்தை பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு எதிராக 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. இதைத் தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் மொராக்கோ அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்த நிலையில் கடைசி ஆட்டத்தில் ஈரான் அணியை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

இதன் மூலம் 5 புள்ளிகளுடன் பி பிரிவில் போர்ச்சுக்கல் அணி 2-வது இடத்தை பிடித்திருந்தது. ஸ்பெயின் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்திருந்த ரொனால்டோ, மொராக்கோ அணிக்கு எதிராகவும் கோல் அடித்து அசத்தியிருந்தார். 153 ஆட்டங்களில் 85 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ மீண்டும் ஒரு முறை கோல் வேட்டை நடத்தைக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்னார்டோ சில்வா, கோன்கலோ குயிடஸ் ஆகியோரும் அணியில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். இரு அணிகளுமே தாக்குதல் ஆட்டத்தை ஆயுதமாக மேற்கொள்ளும் திறன் கொண்டவை. இதனால் வெற்றி பெற கடுமையான போட்டி நிலவக்கூடும்.

 

நேருக்கு நேர்

உருகுவே - போர்ச்சுக்கல் அணிகள் இதுவரை இரு முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் போர்ச்சுக்கல் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 1972-ம் ஆண்டு இரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்திருந்தது. அதேவேளையில் 1966-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி 3-0 என்ற கோல்கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியிருந்தது.

http://tamil.thehindu.com/sports/article24297374.ece

Link to comment
Share on other sites

கால் இறுதி முனைப்பில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா: பிரான்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

30CHPMUMESSI2

கிரீஸ்மான்   -  AFP

30CHPMUMESSI2

மெஸ்ஸி   -  AFP

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் இன்று அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் சுற்றுகளின் முடிவில் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. கால் இறுதிக்கு முந்தைய சுற்றான இதில் இன்று கஸான் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

 
 

லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தத் தொடரை சிறப்பான முறையில் தொடங்கவில்லை. லீக் சுற்றில் டி பிரிவில் இடம் பெற்ற அர்ஜென்டினா முதல் ஆட்டத்தை அறிமுக அணியான ஐஸ்லாந்துக்கு எதிராக 1-1 என டிரா செய்தது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி, பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிட்டது கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இதைத் தொடர்ந்து குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என படுதோல்வி கண்டது.

எனினும் கடைசி லீக் ஆட்டத்தில் நைஜீரியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் தனது பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. நைஜீரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி, மார்கஸ் ரோஜோ கோல் அடித்திருந்தனர். 5 முறை பிபா விருதை வென்றுள்ள மெஸ்ஸி, மீண்டும் பார்முக்கு திரும்பி கோல் கணக்கை தொடங்கி உள்ளது அர்ஜென்டினா அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. அதேவேளையில் தற்காப்பு ஆட்டத்தை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது அர்ஜென்டினா அணி.

லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் 5 கோல்களை வாங்கியுள்ளது அர்ஜென்டினா. அதிலும் குரோஷியாவுக்கு எதிராக மட்டும் 3 கோல்களை பெற்றது. தற்காப்பு மிட்பீல்டரான ஜேவியர் மஸ்செரானோ தனது சிறந்த பங்களிப்பை செய்யவில்லை. இன்றைய ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர்களான கிளியான் மாபே, உஸ்மான் டெம்ப்ளே ஆகியோரது வேகத்தை சமாளிக்க அர்ஜென்டினா மெனக்கெட வேண்டியதிருக்கும். கோன்ஸாலா ஹிகுவெய்ன், ஏஞ்சல் டி மரியா, அகுரோ, எவர் பனேகா ஆகியோர் மெஸ்ஸிக்கு பக்கபலமாக உதவும் பட்சத்தில் அர்ஜென்டினா அணி கால் இறுதியில் கால்பதிப்பதில் எந்தவித சிரமமும் இருக்காது.

பிரான்ஸ் அணி லீக் சுற்றில் இரு வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று சி பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கிலும், பெரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி, டென்மார்க் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்திருந்தது. ஒட்டுமொத்தத்தில் அந்த அணி தோல்வியை சந்திக்காமல் நாக் அவுட் சுற்றில் கால்பதித்துள்ளது.

நாக் அவுட் சுற்றில் நுழைந்துள்ள போதிலும் பிரான்ஸ் அணி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான ஆட்டத்தை இன்னும் மேற்கொள்ளவில்லை. லீக் சுற்றின் 3 ஆட்டங்களிலும் அந்த அணி 3 கோல்கள் மட்டுமே அடித்துள்ளது. அதிலும் ஒரு கோல் எதிரணி வீரரால் அடிக்கப்பட்ட ஓன் கோல், மற்றொன்று பெனால்டி கிக்கில் கிடைத்தது. அதேவேளையில் தற்காப்பு ஆட்ட வியூகத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ள பிரான்ஸ் ஒரு கோலை மட்டுமே வாங்கி உள்ளது. இந்த கோலும் பெனால்டி கிக் வாய்ப்பில் எதிரணியினரால் அடிக்கப்பட்டதுதான். 1998-ல் சாம்பியன் பட்டம் வென்ற போதும் பிரான்ஸ் அணி இதுபோன்று தற்காப்பு ஆட்டத்தில் அதீத பலத்துடன் காணப்பட்டது.

நட்சத்திர வீரரான கிரீஸ்மான் இந்தத் தொடரில் ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளார். அதுவும் பெனால்டி கிக் மூலமே அந்த கோலை அடித்திருந்தார். 2016-ம் ஆண்டு யூரோ கோப்பையில் 6 கோல்கள் அடித்த நிலையில் 7 கோல்கள் அடிக்க உதவி செய்த அவர், இம்முறை உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்றில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அணியின் நம்பிக்கை நட்சதிரங்களாக திகழும் கிளியான் மாபே, பால் போக்பா, உஸ்மான் டெம்ப்ளே, நபில் ஃபகீர், ஆலிவர் கிரவுடு ஆகியோர் கூடுதல் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் அர்ஜென்டினா அணிக்கு கடும் சவால் கொடுக்கலாம்.

 

நேருக்கு நேர்

அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் இதுவரை சர்வதேச அளவில் 11 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் அர்ஜென்டினா 6 ஆட்டங்களிலும், பிரான்ஸ் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன. கடைசியாக இரு அணிகள் கடந்த 2009-ம் ஆண்டு நட்புரீதியிலான ஆட்டத்தில் மோதின.

இதில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது 3-வது முறை. இதற்கு முன்னர் 1930-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கிலும், 1978-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 2-1 என்ற கோல் கணக்கிலும் பிரான்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.

http://tamil.thehindu.com/sports/article24297364.ece

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து - நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #ARGFRA #ArgentinavsFrance

 
 
 
 
உலக கோப்பை கால்பந்து - நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்
 
ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.
 
இதற்கிடையே, 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று இரவு தொடங்கின. இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் மற்றும் ’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோதின.
 
201806302142362258_1_arg-2._L_styvpf.jpg
 
ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். பிரான்ஸ் அணியின் அண்டோனி கிரிஸ்மான் 13வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ஜெண்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து நாக் அவுட் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்சும் அர்ஜெண்டினாவும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தது.
 
201806302142362258_2_2018-06-30T152508Z_2047259020_RC15DF4B8170_RTRMADP_3_SOCCER-WORLDCUP-FRA-ARG._L_styvpf.jpg
 
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் காப்ரிய்ல் மர்கோடா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
 
இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அணியின் பெஞ்சமின் பவார்ட் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து பிரான்ஸ் அணியின் மபாப்பி 64 மற்றும் 68-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
 
கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் அர்ஜெண்டினா வீரர் செர்ஜியோ அகுரோ ஒரு கோல் அடித்தார்.
  
201806302142362258_3_2018-06-30T155649Z_368399904_RC1D70C9DA00_RTRMADP_3_SOCCER-WORLDCUP-FRA-ARG._L_styvpf.jpg
 
இதையடுத்து, பிரான்ஸ் அணி அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. லியோன் மெஸ்சியின் உலக கோப்பை கனவு தகர்ந்தது. #ARGFRA #WorldCup #ArgentinavsFrance #LionelMessi #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/30212534/1173615/france-beat-argentina-43-in-world-cup-football.vpf

Link to comment
Share on other sites

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே

 

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்ற இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் போர்ச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வீழ்த்தியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR

 
 
 
 
ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே
 
 
மாஸ்கோ:
 
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. நேற்று நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ், அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.
 
இந்நிலையில், இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், முன்னாள் சாம்பியனான உருகுவேவை எதிர்கொண்டது. இதில் தோல்வியடையும் அணி தொடரைவிட்டு வெளியேறும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
 
தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.  
 
201807010125329328_1_urugoal1._L_styvpf.jpg
 
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் போர்ட்டுகல் வீரர் பெப்பே கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.
 
201807010125329328_2_porgoal1._L_styvpf.jpg
 
அதன்பின் 62-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இது இந்த ஆட்டத்தில் அவர் அடித்த இரண்டாவது கோலாகும். இதனால் உருகுவே அணி மீண்டும் 2-1 என முன்னிலை பெற்றது.
 
201807010125329328_3_urugoal2._L_styvpf.jpg
 
அதைத்தொடர்ந்து இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்கப்படாததால் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ் அணி, அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/01012533/1173630/FIFA-World-Cup-Uruguay-beat-Portugal-by-21.vpf

Link to comment
Share on other sites

உருகுவே அணியில் சுவாரஸ் கோல் அடிக்கும் போது தான் உருகுவே அணி வெல்லும் என்றும் கவானி கோல் அடிக்கும் போது அந்த அணி அநேகமாக தோற்கும்  என்றும் இவை கடந்த காலத்தை அடிப்படையாக கொண்டு சொல்லப்பட்டது. ஆனால் இன்று கவானியில் இரண்டு கோல்கள் மூலம் அடுத்த சுற்றுக்கு உருகுவே அணி முன்னேறுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.